S. Ramakrishnan's Blog, page 48
November 24, 2023
மயூ பதிப்பகம்
எழுத்தாளர் ஜா.தீபா மயூ என்ற பெயரில் புதிய பதிப்பகம் ஒன்றைத் துவங்குகிறார். இன்று அதற்கான தொடக்கவிழா நடைபெறுகிறது.
மயூ பதிப்பகம் சார்பில் அவரது ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘மாபெரும் சபை’ என்கிற தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் குறித்த நூலும் வெளியாகின்றன
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

 
  November 23, 2023
எழுத்தாளனின் உலகம்
எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட தொகுப்பில் the Paris Review Interviews (WRITERS AT WORK) தொகுதிகளுக்கு இணையே கிடையாது. என்னிடம் 9 தொகுதிகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதன் ஒரு தொகுதியை எடுத்துப் படிப்பேன்.

எழுத்தாளர்களை நேர்காணல் செய்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து வாசித்துள்ளார்கள். எது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொகுதி சிறந்த உதாரணம்.
நேர்காணலின் போது எழுத்தாளரின் வீடு எப்படியிருந்தது. அவர் என்ன உடை உடுத்தியிருந்தார். அவரது அன்றாட உலகம் எப்படியிருக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக அவதானித்து எழுதியிருக்கிறார்கள். சம்பிரதாயமான கேள்விகள் எதுவும் கிடையாது. எழுத்தாளரின் ஆளுமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும்படியான கேள்விகள். தன்னியல்பாக எழுத்தாளர்கள் தரும் பதில். அதில் வெளிப்படும் அபாரமான பார்வைகள். இதுவே இந்த நேர்காணல்களின் சிறப்பு.
பாரீஸ் ரிவியூ 1953 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. பாரீஸ் ரிவியூவில் தனது நேர்காணல் வெளியாவது இன்று வரை எழுத்தாளரின் கனவு என்றே சொல்வேன்.
ஒரு தொகுதியில் 14 முதல் 1 6 எழுத்தாளர்கள் வரை இடம்பெறுகிறார்கள். எழுத்தாளரின் கையெழுத்துப்பிரதியும் மாதிரிக்காக இதில் இடம்பெறுகிறது. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிய ஒருவரைக் கூட அதில் காண முடியாது.
இந்த நேர்காணல்கள் ஏன் முக்கியமாகின்றன. இவை எழுத்தாளனின் தேடலையும் அவன் உருவான விதத்தையும் இலக்கியம் சாராத பிறதுறைகள் குறித்த அவனது எண்ணங்களையும், பாதித்த புத்தகங்கள், ஆளுமைகள் பற்றியும் பகிர்ந்து கொள்வதால் வாசகர்களுக்கு எழுத்தாளரையும் அவரது படைப்புகளையும் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு எழுத்தின் நுட்பங்களையும் ரகசியங்களையும் கற்றுத் தருகிறது.
நேர்காணலை சிறிய ரிக்கார்டர் மூலம் பதிவு செய்து எழுதுவதால் ஒரு வார்த்தை கூட மாறிவிட வாய்ப்பிருப்பதில்லை. இதில் இடம்பெற்றுள்ள பலரும் நோபல் பரிசு பெற்றவர்கள். ஆனால் இந்த பரிசைப் பெறுவதற்கு முன்பு நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்போது நோபல் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில்கள் வியப்பளிக்கின்றன.

Poetry existed before writing. Essentially, it is a verbal art, that enters us not only through our eyes and understanding but through our ears as well. Poetry is something spoken and heard. It’s also something we see and write. என்று ஆக்டோவியோ பாஸ் தனது ஒரு பதிலில் கூறுகிறார்
இது போலவே மரியோ வர்காஸ் லோசாவிடம் கேட்கப்பட்ட கேள்வி .
INTERVIEWER: Do you choose the subjects of your books or do they choose you?
VARGAS LLOSA: As far as I’m concerned, I believe the subject chooses the writer. I’ve always had the feeling that certain stories imposed themselves on me; I couldn’t ignore them, because in some obscure way, they related to some kind of fundamental experience—I can’t teally say how.
இது கவிஞர் ராபர்ட் பிராஸ்டின் பதில்
Frost: I never write except with a writing board. I’ve never had a table in my life. And I use all sorts of things. Write on the sole of my shoe.
•••••
November 22, 2023
இரண்டு பயணங்கள்
நிலம் கேட்டது கடல் சொன்னது வாசிப்பனுபவம்
மீ. சித்ரா ராஜம்.

ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது ,புல்லினும் சிறியது ஆகிய இரண்டு பெரிய கட்டுரைகளை உடையது இந்த நூல். தேசாந்திரியான எஸ்.ரா ஜப்பானியப் பயணத்தின் போது தான் கண்ட ஹிரோஷிமாவையும், ஹீரோஷிமாவின் மீது குண்டுமழை பொழிந்து நிர்மூலமாக்கிய அமெரிக்காவின் வால்டன் குளத்தோடு இயைந்த தோரோவின் இயற்கை வாழ்வியலையும் நம்மோடு பகிர்கிறார்.
ஜப்பானிய மக்களின் நன்றி தெரிவித்தல், பொது இடங்களில் நடக்கும் பண்பு, தேசப்பற்று, மொழிப்பற்று ஆகிய விழுமியங்களை விளக்குகிறார்.
1252ஆம் ஆண்டுச் செய்யப்பட்ட kamakura diabutsu என்ற வெண்கலச்சிலை , Hasedara கோவில் ஆகியவற்றில் தனது மனது விம்மிய அனுபவங்களை நமக்கும் கடத்துகிறார்.
ஜப்பானின் முக்கியப் பிரச்சனை தற்கொலை. மன வெறுமை தாங்காமல் திங்கள்கிழமை அலுவலகம் கிளம்பும் காலை 8 மணி அளவில் யாரோ ஒருவர் மின்சார ரயிலின் முன்னே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். தனது இறப்பின் வழியே அர்த்தமற்ற இந்த நகர வாழ்க்கையைச் சற்று நேரம் நிறுத்தி வைத்த சந்தோஷம் இந்த மனிதனுக்குக் கிடைக்கிறதாம்.
“நான் மூச்சு விடுகையில் மார்பிலிருந்து வரும் சத்தம் தனிமையானதாக இருக்கிறது
குளிர் காற்றை விடவும்”
தகுபொகு இஷிகாவா என்ற ஜப்பானியக் கவிஞரின் கவிதையை எனக்கு ஞாபகப்படுத்தியது.
ஜப்பானிய வரலாற்றின் ரத்தம் சொட்டிய பக்கங்கள் , ஜப்பான் பேரரசரை மக்கள் கடவுளாகக் கருதுவது, ஜப்பானியர்களின் இயற்கை வழிபாடு,அனமி என்ற சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தைக் கொண்டாடும் விழா ,ஜப்பானியரின் ரயில் பயணங்கள் ,அவர்களின் உணவு முறைகள் , இரண்டாம் உலகப் போரில் யுத்த விதிகளை மீறிய ஜப்பான் எனப் பல தகவல்களை நமக்குச் சுவாரசியமாகச் சொல்கிறார்.
சாமுராய்கள் எதிரிகளிடம் சிக்கினால் Harakiri என்ற முறையில் Tanto கத்தியைக் கொண்டு இடமிருந்து வலமாக வயிற்றில் வெட்டி இறந்து போகிறார்களாம்.
நம் நாட்டிலும் போர்களில் அரசனுக்காகத் தன்னைப் பலி கொடுத்தவர்கள் வீரர்களாகப் போற்றப்பட்டார்கள். நம் தமிழ்நாட்டில் கூட நவகண்டம் என்னும் பெயரில் தன்னைப் பலி கொடுத்தவர்கள் உண்டு என்ற செய்தி நினைவுக்கு வந்தது. சமூக நோக்கத்தோடு தற்கொலை செய்து கொண்டவர்களைப் போற்றிப் புகழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் இருக்கிறது.ஆனால் ஒரு கூட்டுநன்மைக்காகத் தற்கொலை செய்து கொண்டவர்களில் இருந்து இன்று உறவுச் சிக்கல்களால் தனிமையால் தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம்.
ஹிரோஷிமாவில் போடப்பட்ட லிட்டில் பாய், நாகசாகியில் போடப்பட்ட ஃபேட்மேன் அணுகுண்டுகள் பற்றிய செய்திகள் ,சந்தோஷமாக விடிந்த காலை ,மக்களைத் துயரத்தின் விளிம்பிற்குத் தள்ளிய கோரம், தீப்பற்றி எரியும் உடலுடன் அலறியபடியே ஓடிய மக்கள்,அணுக்கதிர் பாதிப்பினால் நான்கு தலைமுறைகளாக ஊனமாகப் பிறக்கும் குழந்தைகள் ,ஹிரோஷிமாவை மீட்டெடுத்த மக்கள் உழைப்பின் உன்னதம்,அணு வீச்சில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களும் வாழ்நாள் முழுவதும் வலியால் துடிக்கும் அவலம் இவற்றை எஸ்.ரா விவரிக்கும் பொழுது நம்மை அறியாமல் கண் கலங்குகிறது.
ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா சமாதான நினைவகத்தில்(Hiroshima Peace Memorial) எறியும் அணையாத தீபம், சமாதானத்தைச் சொல்லும் மணி , அணு விபத்து குறித்த மாபெரும் காட்சிக்கூடம் ஆகியவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
அணு விபத்தினால் பாதிக்கப்பட்டு டஞ்சோ எனப்படும் காகிதக் கொக்குகளைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம்பிய சடாகோ சசாக்கி என்ற சிறுமியின் நினைவிடம்,அணுவீச்சுக்கு உள்ளாகி சிதிலமான கோள வடிவ கட்டிடம், குண்டுவெடிப்புக்கு முன்பான ஹீரோஷிமாவின் காட்சி அமைப்பு ,ஆகஸ்ட் 6 காலை 8 :15 க்கு உறைந்து போன கடிகாரம் ,உடல் உருகி கரிந்து கரிக்கட்டை போலான உடல்கள்,அணு விபத்தில் உடைந்தும் சிதறியும் கருகியும் போன பொருட்கள் போரின் கோரத்தாண்டவத்தைக் காட்சிப்படுத்துகின்றன.
நினைவகத்தைப் பார்வையிட்ட நாள் மற்றும் நேரத்தை தனது புத்தகங்களில் அங்குள்ள அரக்க சீல் கொண்டு எஸ்.ரா பதித்துக் கொள்ளும் பொழுது அவரின் வார்த்தைகளின் வழி அவரோடு பயணித்த நமது மனங்களிலும் அக்கணம் கனமாகப் பதிகிறது.
சமாதானத்தின் அடையாளமாக அங்கே அடிக்கப்படும் மணி நமது மனங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
புல்லினும் சிறியது என்ற இந்தக் கட்டுரையும் முதல் கட்டுரை போலவே மிகவும் ஆழமானது.காந்தியின் குருவான Henry David Thoreau இயற்கையோடு இணைந்த தனது அனுபவங்களை Walden or life in the woods என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.தோரோவின் எழுத்தின் வழியே வால்டர் குளம் உலகப் புகழ் பெற்றிருக்கிறது. தோரோவின் வீடு அவருடைய நினைவுப் பொருட்களோடு பராமரிக்கப்படுகிறது. தோரோவின் இளமைக் காலம்,எல்லன் என்ற பெண் மேல் வந்த காதல் , எமர்சன் உடனான அவருடைய நட்பும் விலக்கமும், தோரோவின் வீட்டுச் சூழல், இயற்கையோடு இயைந்த அவரது தற்சார்பு வாழ்வியல்,நடைப்பயிற்சி ஒரு மெய்த்தேடலாக ,ஒரு தியானமாகப் பரிணமிக்கும் நயம் எல்லாவற்றையும் சுவாரசியமாகச் சொல்கிறார் எஸ்.ரா.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி,புத்தர் ,காந்தி,J.K இவர்கள் நடையைப் பற்றிய தகவல்களும் புத்தகத்தில் உண்டு.
நடத்தல் ஒரு பிரார்த்தனை. வெர்னர் ஹெர்சாக் என்ற புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் தனது தோழியும் திரைப்பட ஆராய்ச்சியாளருமான லோட்டி எய்ஸ்னர் 78 வயதில் பாரிஸில் மரணப்படுக்கையில் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து அவர் நலம் பெற ம்யூனிச் நகரில் இருந்து பாரிஸ் வரை நடந்தே வந்திருக்கிறார். அந்த மூன்று வார கால அனுபவத்தை “ஆஃப் வாக்கிங் இன் ஐஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார் .நட்பின் வலிமை எத்தகையது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.சிறப்பு என்னவென்றால் ஹெர்சாக்கின் நடைபயணம் லோட்டி எய்ஸ்னருக்குப் புதுவாழ்வு தந்து தனது 87 வது வயது வரை அவர் உயிர் வாழ்ந்தார்.இதைப் படிக்கும் பொழுது பிரார்த்தனைக்காகத் திருப்பதி, பழனி போன்ற கோவில்களுக்கு நடந்து செல்வது நம் நாட்டிலும் மரபாய் இருப்பது நினைவுக்கு வந்தது.
உலகெங்கிலும் உளவியல் சிக்கல்களைப் போலவே மானுட நம்பிக்கைகளும் அன்பும் ஒன்றுதான் என்ற நியதி இதன் மூலம் நமக்குப் புரிபடுகிறது. நடை நம் ஆரோக்கியத்திற்கான மருந்து மட்டுமல்ல ஆன்மாவிற்கான மருந்தும் கூட.
இயற்கை முன்பு மானுட வாழ்க்கை புல்லினும் சிறியது என்பதை நம்மையும் உணரச் செய்யும் அருமையான கட்டுரை.
எஸ்ராவின் எல்லாப் படைப்புகளைப் போலவே இந்தப் புத்தகத்திலும் old path white clouds: walking in the foot steps of Buddha -Thich Nhat Hanh ,Walking -thoreau,Sadako and the thousand paper cranes,Hiroshima போன்ற புத்தகப் பரிந்துரைகளும்
The bridge on the river kwai,seven samurai,kagemusha, Way போன்ற சுவாரசியமான திரைப்படப் பரிந்துரைகளும் உண்டு.
இந்த இரு பயணக் கட்டுரைகள் மூலம் கால இயந்திரத்தில் ஏற்றி யுத்த கால ஹிரோஷிமாவிற்கும் தோரோவின் வால்டனுக்கும் நம்மைக் கூட்டிச் செல்கிறார் தேசாந்திரி எஸ்.ரா
November 20, 2023
நூலக வாரவிழா
தூத்துக்குடியில் தேசிய நூலக வார விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சியைத் துவங்கி வைத்து உரையாற்றினேன். நூலகர் ராம்சங்கர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்
மாலையில் பொது நிகழ்வு. இடைவிடாத மழைக்குள்ளும் அரங்கு நிரம்ப வாசகர்கள் வந்திருந்தார்கள்.

நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணப்பு செய்த நூலக மனிதர்கள் இயக்கத்தின் பொன். மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பியர்ல் ஷிப்பிங் நிர்வாக இயக்குநர் எட்வின் சாமுவேல். எழுத்தாளர் முஹம்மது யூசுப்பிற்கு அன்பும் நன்றியும்.
November 17, 2023
தூத்துக்குடியில்
நவம்பர் 19 ஞாயிறு மாலை தூத்துக்குடியில் நடைபெறும் தேசிய நூலக வாரவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
இதனை நூலக மனிதர்கள் இயக்கமும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
 
  November 16, 2023
விசித்திரக் கனவு
சத்யஜித் ரேயின் நாயக் படத்தில் மறக்க முடியாத காட்சி ஒன்றுள்ளது. சினிமா நடிகரான அரிந்தமின் கனவது. கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயில் பயணத்தின் போது அந்தக் கனவு வருகிறது.

கலையா அல்லது பணம் சம்பாதிப்பதா என்று இரண்டு பாதைகள் நாடக நடிகரான அரிந்தமின் முன்னால் இருந்தன. அவன் பணம் சம்பாதிப்பதைத் தேர்வு செய்கிறான். புகழும் பணமும் கிடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். தனது குருவின் ஆணையை மீறி சினிமாவிற்குச் செல்கிறான்.
அவன் ஆசைப்பட்டது போலவே பெரும்புகழும் பணமும் சேர்கின்றன. திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மாறுகிறான். ஆனால் மனதிற்குள் தான் ஒரு தோற்றுப் போன நாடகக் கலைஞனாக உணருகிறான். தனிமையை அனுபவிக்கிறான்.

படத்தில் வரும் கனவுக் காட்சியில் குவியல் குவியலாகப் பணம் கொட்டிக்கிடக்கும் பணமேட்டினைக் காணுகிறோம். கரன்சி நோட்டுகள் காற்றில் பறக்கின்றன, பணக்குவியல் நடுவில் புன்னகையுடன் அரிந்தம் நடந்து செல்கிறான். ஆசையாகப் பணத்தை அள்ளிக் கொள்கிறான். காற்றில் வீசி மகிழ்கிறான்.
ஆனால் இந்தப் பணமேடு சட்டெனப் புதைமேடு போல மாறுகிறது. எலும்புக்கூடு கை ஒன்று தொலைபேசியை ஏந்தியிருக்கிறது. டெலிபோன் மணி விடாமல் ஒலிக்கிறது. எலும்புக்கைகள அவனை அழைக்கின்றன. புதைகுழி போலப் பணம் அவனை இழுத்துக் கொள்கிறது. விடுபடப் போராடுகிறான். ஆனால் பயனில்லை. பணம் அவனைச் சீராக விழுங்குகிறது.
அங்கே தோன்றும் குருவான சங்கர் தாவை நோக்கி தன்னைக் காப்பாற்றும்படி கதறுகிறான். அவர் உதவி செய்வதில்லை. வணிக வெற்றிக்காகத் தனது கலைத்திறனை விற்றுவிட்ட குற்ற உணர்ச்சியே அவனை விழுங்குகிறது. இந்தக் காட்சியைச் சர்ரியலிச ஓவியம் போல அழகாக ரே உருவாக்கியிருக்கிறார். அரிந்தம் அக் கனவிலிருந்து விழித்துக் கொள்ளும் போதும் நினைவிலிருந்து பயம் அகல மறுக்கிறது.
பெரும்புகழும் பணமும் இருந்தாலும் இயல்பாக உறக்கம் வராமல் அரிந்தம் தவிக்கிறான். தூக்கமாத்திரையின் உதவியால் தான் உறங்குகிறான். ஆயினும் நல்ல தூக்கம் கிடைப்பதில்லை. பயணத்திலும் அரிந்தம் குடிக்கிறான். தனது பிம்பம் கலைந்துவிடாமல் பாதுகாக்கிறான்.

ரயில் பயணத்தின் ஊடே அரிந்தம் அதிதி இருவருக்குமான நட்பு அழகாக வெளிப்படுகிறது. அவனது கடந்தகாலத்தை அதிதி நினைவுபடுத்துகிறாள். பயண வழியெங்கும் அரிந்தமைக் காண ரசிகர்கள் திரண்டிருப்பதைக் காணுகிறாள். அவன் திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் நடித்துக் கொண்டேயிருக்கிறான். கேமிரா இல்லாத அந்த நடிப்பைக் கண்டு அதிதி பரிதாபம் கொள்கிறாள்.
அரிந்தம் புகழ்வெளிச்சத்திலிருந்து விடுபட விரும்பதை உணருகிறாள். ஆனால் அது எளிதானதில்லை. ரயில் டெல்லியை அடைந்ததும் ரசிகர்கள் திரண்டுவந்து மாலை அணிவித்து அவனைக் கொண்டாடுகிறார்கள். அரிந்தம் மீண்டும் நட்சத்திரமாகி விடுகிறான்.
அரிந்தமின் கனவு அவனது இன்றைய வாழ்க்கையின் அடையாளம். தொலைபேசி மணியொலிப்பதும், எலும்புக்கைகள் நீளுவதும் அவனது இப்போதைய திரையுலக வாழ்க்கை.
அவன் சினிமாவிற்குள் நுழைந்த போது கதாநாயகனாக இருந்த நடிகர் தற்போது படம் எதுவும் கிடைக்காமல் கஷ்ட ஜீவனத்திலிருக்கிறார். குடிப்பதற்குப் பணம் வாங்க அரிந்தமைத் தேடி வருகிறார். அவரைத் தான் வென்றுவிட்டதை உணர்த்தும் விதமாகவே அவருக்குப் பணம் தருகிறான். அவரது வீழ்ச்சி அரிந்தமிற்கான மறைமுக எச்சரிக்கை போலவே உள்ளது.
அரிந்தம் ரயிலில் ஏறும் போது கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறான். அது பாதுகாப்பு உணர்வின் அடையாளம். அதிதியோடு உரையாடும் போது அந்தக் கண்ணாடியை அகற்றிவிடுகிறான். அவள் முன்பு இயல்பாக நடந்து கொள்கிறான். இயல்பாகப் பேசுகிறான். சின்னஞ்சிறு ரயில் நிலையத்தில் இறங்கி தேநீர் அருந்துகிறான். அவனது விடுபடல் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.
ரயில் பயணமும் நினைவின் பயணமும் இரு சரடுகளாகப் பின்னிச் செல்கின்றன. அரிந்தம் தனது கடந்தகாலத்தை உண்மையாக அதிதியிடம் விவரிக்கிறான் அதில் அவனது தவறுகள். ரகசியங்கள் வெளிப்படுகின்றன. மனம் திறந்து எல்லாவற்றையும் அதிதியிடம் பகிர்ந்து கொண்டதே போதும் என்று நினைக்கிறான். நிகழ்வுலகம் அவனை மீண்டும் நட்சத்திரமாக்கிவிடுகிறது. வெள்ளித்திரையின் கடவுளாக நடமாடத் துவங்குகிறான்.
1966ல் இப்படம் வெளியாகியிருக்கிறது. நட்சத்திரங்களுக்குப் பின்னால் இருக்கும் இருளை உலகம் கண்டுகொள்வதில்லை . அந்த இருளில் மறைந்திருக்கும் உண்மைகளையே சத்யஜித்ரே நமக்கு அடையாளம் காட்டுகிறார்.
November 15, 2023
பறக்கும் சுடர்கள்
நூல்வனம் பதிப்பகம் புத்தகத் தயாரிப்பில் முன்னோடியானது. மணிகண்டன் மிகவும் கலை நேர்த்தியாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது

அவரது சமீபத்திய வெளியீடு ரூமி கவிதைகள். தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் கவிஞர் க. மோகனரங்கன்.


ஈரோட்டைச் சேர்ந்த க.மோகனரங்கன் சிறந்த கவிஞர், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். ஜென் கவிதைகளாக இருந்தாலும் சமகால உலகக் கவிதைகளாக இருந்தாலும் அதனை ஆழ்ந்து புரிந்து கொள்வதுடன் அதே கவித்துவத்தைத் தமிழிலும் கொண்டு வருபவர். அவரது மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள கவிதைத்தொகுப்புகளை விரும்பி வாசித்திருக்கிறேன்.

கவிதை என்பது நடனம். புனைகதை என்பது நடத்தல் என்கிறார் கவிஞர் பால் வலேரி. ரூமியை வாசிக்கும் போது அந்த நடனத்தை முழுமையாகக் காணுகிறோம். இது ஒரு வகை சூஃபி நடனம். சுழன்றாடுவதன் வழியே பரவசத்தை அடைவது. சொற்களைக் கொண்டு அந்த மாயநடனத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் ரூமி
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் சத்யமூர்த்தி ரூமி கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்து அழகான பதிப்பாக வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நூலைக் காணுகிறேன்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மௌலானா ஜலாலுத்தீன் ரூமி பாரசீகத்தின் நிகரற்ற கவிஞர். சூஃபி ஞானி. இவரது கவிதைகள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன.
தமிழிலும் ரூமியின் கவிதைகள் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. ரூமியின் கவிதைகள் தோற்ற அளவில் எளிமையானவை போலத் தோன்றக்கூடியவை. ஆனால் அந்த எளிமை ஏமாற்றக்கூடியது. அவை ஆழ்ந்த தத்துவார்த்தமும் கவித்துவ உச்சமும் கொண்டவை.
நான் ரூமியின் கவிதைகளைச் சிறகுள்ள சுடர்கள் என்றே சொல்வேன். ரூமி சொற்களைச் சுடர்களாக்குகிறார். கவிதையை வாசிப்பதன் வழியே அந்தச் சுடர்கள் நம் அகவெளியில் பறந்தலைகின்றன.
ரூமி கவிதைகள் நூலிற்குத் துணைத்தலைப்பாக இதயங்களின் உதவியாளர் என்று பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் மோகனரங்கன். ரூமி நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துகிறார். மகிழ்ச்சியால் நிரப்புகிறார். ரூமி தன்னை இதயத்தின் விவசாயி என்றே அழைத்துக் கொள்கிறார்.
இந்த நூலில் ரூமியின் வாழ்வினை விவரிக்கும் அழகான வண்ண ஒவியங்களை இணைத்திருக்கிறார்கள். இது கவிதை நூலிற்குக் கூடுதல் அழகு தருகிறது. அத்தோடு ரூமி வாழ்ந்த காலத்தையும் நினைவு கொள்ள வைக்கிறது.
உடைந்த இதயம்
கடவுள் உற்று நோக்கும் இடம் என்று ஒரு கவிதையில் ரூமி எழுதியிருக்கிறார்.
உடைந்த இதயம் எப்போதும் அமைதியானது. அதன் துயரை கடவுளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். கடவுளின் வேலை பேரன்பும் கருணையும் கொண்டு உடைந்த இதயத்தைச் சரி செய்வது தானே.
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் போது இகவாழ்வு என்ற சொல்லை மோகனரங்கன் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஒரு சொல்லின் வழியே ரூமி தமிழ் மெய்யியல் கவிதைமரபின் தொடர்ச்சியாக மாறிவிடுகிறார். இது தான் சிறந்த மொழிபெயர்ப்பாளரின் அடையாளம்.
மண்டியிட்டு மண்ணை முத்தமிட
நூற்றுக்கும் அதிகமான வழிகள் உண்டு
என்ற ரூமியின் கவிதையினை வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலில் வரும் மிஷ்கின் நினைவிற்கு வந்து போகிறான். அவன் மண்ணை முத்தமிட்டு உலகின் பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்கிறான். மண்ணை முத்தமிடுவது என்பதை மரணம் என்கிறார்கள். பூமியில் வாழும் போது மனிதன் மண்ணை முத்தமிடுவதில்லை..மரணம் மனிதனையும் ஒரு விதையாக மாற்றுகிறது..
இன்னொரு கவிதையில் பரவசம் என்பதை ஒரு மொழியாக ரூமி குறிப்பிடுகிறார். ஆம், பரவசத்தின் போது சொற்கள் தேவையற்றுப் போகின்றன. பரவசம் உலகை எடையற்றுப் போகச் செய்கிறது. நாம் பரவசத்திற்காக ஏங்கிக் கொண்டேயிருக்கிறோம் பெர்சியாவில் நடைபெறும். சூஃபி நடனம் பரவசத்தையே மையமாகக் கொண்டது. அந்த நடனத்தின் வழியே ஞானத்தை பெறுகிறார்கள்.
உனக்கொரு கண்ணாடியைக்
கொண்டு வந்துள்ளேன்
உன்னைப் பார்த்து
என்னை நினைவு கொள்
என்கிறது ரூமியின் இன்னொரு கவிதை
கண்ணாடி ரூமி கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகிறது. கண்ணாடியை தரிசனத்தின் அடையாளமாகவும் ஆசையின் வடிவமாகவும் குறிப்பிடுகிறார். தனக்கென நினைவுகள் அற்ற கண்ணாடி தான் மற்றவரை நினைவுபடுத்துகிறது என்பது விசித்திரமே.
நினைவும் மறதியும் ரூமி அடைக்கலமாகும் இடங்கள். நினைவுபடுத்தபடவும் விரும்புகிறார். மறதிக்குள் புதைந்துபோய்விடவும் விரும்புகிறார். இரண்டும் காதலால் மட்டுமே சாத்தியம். முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து எழுதப்பட்டவை ரூமியின் கவிதைகள். இந்தக் காதற்பாடல்கள் உடலைத் தாண்டிய காதலைப்பாடுகின்றன.
நமது வாழ்வு மிகச்சிறியது. அர்த்தமற்ற ஆசைகளால் நிரம்பியது. நம் வாழ்வை கடவுளிடம் சரணடையச் செய்வதன் மூலம் சிறப்பாக்கிக் கொள்ள முடியும். அகவிழிப்பே இதற்கான பாதை என்கிறார் ரூமி.
ரோஜாவிடம்
அதன் இதழ்களை மலரச் செய்திட
என்ன சொல்லப்பட்டதோ
அது இங்கே
எனது இதயத்திலும்
என்னிடம் உரைக்கபட்டது
என்கிறார் ரூமி. ரோஜா என்பது நித்யத்துவத்தின் அடையாளம். ரோஜாவை மனிதன் தனது கட்டளையால் மலரச் செய்துவிட முடியாது. கடவுள் சொன்ன ரகசியமே அதை மலரச் செய்கிறது. அந்த ரகசியத்தை அறிவதே ஞானமார்க்கம். அதையே தனது கவிதைகளின் வழியே ரூமி உணர வைக்கிறார்
சூஃபியானவர்
வேட்டைக்காரன் ஒருவனைப் போல
வேட்டையாடுவதைத் தேர்ந்தெடுத்து
மானின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறார்
அந்தச் சுவடுகளின் வரைபடத்தைக் கொண்டு
அதன் பாதையைக் கண்டறிய
அவர் முனைகிறார்
ஆனால் மெய்யாகவே
அந்த மான் தான்
அவருக்கு வழி காட்டுகிறது
சூஃபி ஞானத்தைச் சிறப்பாக விளக்கும் கவிதையிது.
மானைப் பின்தொடரும் வேட்டைக்காரனைப் போலவே சொற்களைத் துரத்திச் சென்று முடிவில் அதனாலே வழிகாட்டப்படுகிறார் ரூமி. கவிதை என்பது புள்ளிகளை உதிர்த்தபடி செல்லும் மாயமானில்லையா. அதைத் துரத்திச் செல்பவன் ஒரு புள்ளியில் தானும் மானாகிவிடுகிறான் என்பது தான் நிஜமோ.
ரூமியின் கவிதைகளைச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள கவிஞர் க. மோகனரங்கனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
•••
November 14, 2023
வாசகர்களின் அன்பு
கேரளாவின் கோட்டயத்திலிருந்து டி.எம்.சந்திரசேகரன் என்பவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. கூகுள் உதவியால் மொழியாக்கம் செய்து படித்தேன்.
மலையாளத்தில் வெளியாகியுள்ள எனது உப பாண்டவம் நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார்.

உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பது மின்னஞ்சல்களுக்கு மேல் வந்திருக்கும். பெரும்பான்மை மலையாளத்தில்.
தங்களின் பாராட்டினை எழுத்தாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்ற மலையாள வாசகர்களின் பண்பை எண்ணி வியந்து போனேன்
மகாபாரதம் மீது மலையாளிகளுக்கு உள்ள விருப்பம் ஆச்சரியமானது. மரபாகத் தொடரக்கூடியது. கேரளாவின் கலைவடிவங்களில் மகாபாரதம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உள்ள தெருக்கூத்து தென் மாவட்டங்களில் கிடையாது. மகாபாரதம் சார்ந்த சிற்பங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் யுதிஷ்ட்ரன் சிற்பத்தைக் கண்டதில்லை. அர்ச்சுனன் சிற்பமே அதிகம் காணப்படுகிறது. பல்லவ மன்னர்கள் மகாபாரதம் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவில் மகாபாரதம் சார்ந்த கலைகள் பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த மாத்ருபூமி ஆசிரியர் கே.சி. நாராயணனைச் சந்தித்து உரையாடிய போது அவர் மகாபாரதம் பற்றி MAHABHARATHAM: ORU SWATHANTHRA SOFTWARE எனப் புதிய கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். இப்படி மகாபாரதம் சார்ந்து புதிய புனைவுகள். கவிதைகள், ஆய்வுகள் மலையாளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
உப பாண்டவம் எனது முதல் நாவல். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியோடு பல்வேறு பதிப்பகங்களில் ஏறி இறங்கிய நாட்கள் நினைவிற்கு வருகின்றன. எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. கேலியும் கிண்டலும் செய்தார்கள். புறக்கணிப்பின் உச்சத்தில் நண்பர்களின் உதவியோடு நானே நாவலை வெளியிட்டேன். அப்போது விருதுநகரில் குடியிருந்தேன். என் வீட்டு முகவரிக்கு மணியார்டரில் பணம் அனுப்பி நாவலைப் பெற்றுக் கொண்டவர்கள் அதிகம். ஒரே ஆண்டில் இரண்டு பதிப்புகள் விற்பனையாகின. தமிழ் வாசகர்கள் என் நாவலின் மீது காட்டிய அன்பும் ஆதரவும் என்றும் நன்றிக்குரியது.
தற்போது உப பாண்டவம் நாவலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இன்று உப பாண்டவம் கேரள மண்ணில் வாசிக்கப்படுவதும் பாராட்டுப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பாக மொழியாக்கம் செய்த கே.எஸ்.வெங்கடாசலம். மற்றும் இதனை வெளியிட்டுள்ள DC புக்ஸ் நிறுவனத்திற்கு மனம் நிறைந்த நன்றி.
விருதுநகர் புத்தகத் திருவிழாவில்
விருதுநகர் புத்தகத் திருவிழா நவம்பர் 16 முதல் 27 வரை நடைபெறுகிறது
நவம்பர் 18 சனிக்கிழமை மாலை விருதுநகர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்.
 
  November 12, 2023
தினமணி தீபாவளி மலரில்
தினமணி தீபாவளி மலர் 2023ல் எனது சிறுகதை வெளியாகியுள்ளது.

 
  S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


