S. Ramakrishnan's Blog, page 48

November 2, 2023

வேரும் விழுதும்

எழுத்தாளர் க.சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்தவர். பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்று டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர். கலைமகள் இதழில் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார் இவரது வேரும் விழும் நாவலை வாசகர் வட்டம் 1970ல் வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலை எட்டு ஆண்டுகள் எழுதியிருக்கிறார். எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. தி. ஜானகிராமனின் நண்பராக இருந்தவர் சுப்ரமணியன். ஜானகிராமன் இதனைப் படித்துப் பாராட்டி வாசகர் வட்டம் மூலம் நாவலை வெளியிடச் செய்திருக்கிறார். இந்த ஒரே ஒரு நாவலை மட்டுமே சுப்ரமணியன் எழுதியிருக்கிறார்.

நாவலின் துவக்கத்தில் ஒரு மரமும் நதியும் பேசிக் கொள்கின்றன. கவித்துவமான உரையாடலது. அந்த உரையாடலிலே சுப்ரமணியன் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுகிறார். திடீரென ஏற்பட்ட பூகம்பம் காரணமாக நதியின் போக்கு மாறிவிடுகிறது. மரம் விழுந்து வெறும் கட்டையாகிவிடுகிறது. மரமும் நதியும் மனிதர்களைப் பற்றித் தான் பேசிக் கொள்கின்றன. தங்கள் வாழ்க்கையை விடவும் மனிதர்களின் மீது தான் அவற்றிற்கு ஈடுபாடு அதிகம்.

வேர் இல்லாவிட்டால் விழுதுகள் இல்லை என்று பீடிகையில் சுப்ரமணியன் குறிப்பிடுகிறார். பிறப்பும் இறப்பும் குறியீடாக மாறுகிறது.

கதையின் நாயகன் ஒரு என்ஜினியர். அதுவும் நதி நீரை தடுத்து அணை கட்ட முயலும் என்ஜினியர். நதியின் போக்கை தன்னால் மாற்றவும் தடுக்கவும் முடியும் என்று நினைப்பவர். ஆனால் அவர் நினைத்தபடி நடக்க முடிகிறதா என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது.

காலத்தின் விசித்திர நகர்வை யார் அறிய முடியும். எதிர்பாராமையின் கைகள் உருட்டும் பகடை தான் நாவல் என்பது போலவே பீடிகை எழுதப்பட்டிருக்கிறது.

சிறுநகரவாசியின் கதையை விவரிக்கும் இந்த நாவலின் முதல் பகுதி இப்படி ஆரம்பிக்கிறது

நான் கிராமத்தில் பிறந்தவன் அல்ல. கிராமவாழ்க்கையின் இனிமையைப் பற்றி ஆசிரியர்கள் எழுதுவதெல்லாம் மிகைப்படுத்தபட்ட பொய்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எப்பொழுதும் எனக்குண்டு

இந்திய மொழிகளில் கிராமத்து வாழ்க்கையை வியந்தோதும் நாவல்கள் ஐம்பது அறுபதுகளில் நிறைய வெளியாகின. நகர வாழ்க்கை என்பதே ஏமாற்று. மோசடிகளின் உலகம் என்பது போன்ற பொதுபார்வையும் அன்றிருந்தது. அதற்கு மாற்றகவே இப்படி நாவலை துவக்குகிறார் சுப்ரமணியன்.

சிறுநகர வாழ்க்கை தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. இவ்வளவிற்கும் நிறையச் சிறுநகரங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதற்கெனத் தனித்துவமான வாழ்க்கையும் வேகமும் இருக்கின்றன. அவை முழுமையாக இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை.

வாழ்க்கையில் அநேகமாக அதே முகங்களைத் தான் திரும்பத் திரும்பக்காண்கிறோம், அதே காரியத்தைத் தான் மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஆனால் அதைச் செய்யும் போது நாம் அலுத்துப் போவது கிடையாது. ஒரு மூலையில் உட்கார்ந்து அவற்றைப் பற்றி நினைத்தால் தான் அலுப்புத் தட்டுகிறது.

என்கிறார் சுப்ரமணியன். உண்மை. புதிய முகங்கள். புதிய அனுபவங்களைப் பெரும்பான்மையினர் விரும்புவதில்லை. பயணத்தின் மீதான பயத்திற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

எனக்குத் தெரிந்த ஒருவர் லண்டனில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அத்தனை வருஷங்களிலும் அவர் தனது வீடு அலுவலகம் நாலைந்து வீதிகள் இவற்றைத் தாண்டி எதையும் பார்க்கவில்லை. எவரோடும் நட்பாகப் பழகவில்லை. கிராமத்தில் இருந்தால் சிறிய வட்டத்திற்குள் வாழ்க்கை அடங்கிவிடும் என்பார்கள். பெரிய நகரில் வசித்தாலும் இப்படிச் சிறிய வட்டத்திற்குள் வாழுகிறவர்கள் அதிகமிருக்கிறார்கள். பாதுகாப்பான தனது சொந்தஉலகை விட்டு வெளியே செல்லவும் பழகவும் தயக்கமும் பயமும் காரணம்.

நாவலின் நாயகன் அரசாங்க அலுவலகத்தில் என்ஜினியராகப் பணியாற்றுகிறான். அதுவும் அணைக்கட்டு மராமத்துப் பணியில். பரலியாற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என்று அரசு முடிவு செய்கிறது. இப்படி அணைகட்டினால் அதற்காக 150 கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டியது வரும். மேக்கூர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற இரண்டு வருஷமாகும். மூன்று கோடி செலவாகும் என்று மதிப்பிடுகிறார்கள். ஆனால் இத்தனை கிராமங்களை அழித்து அணை கட்டப்பட வேண்டுமா என்ற குற்றவுணர்வு நாயகனுக்கு ஏற்படுகிறது. அது அரசாங்க திட்டம் என்றாலும் அறிந்தே தான் இதற்கு உடந்தையாக இருக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்.

பரலியாற்றின் அழகினையும் ஆற்றுப்பாசன  கிராமங்களின் வளத்தையும் சிறப்பாக எழுதியிருக்கிறார். குழுமணி ரயில் நிலையமும் ஸ்டேஷன் மாஸ்டர் ராயரும், ரயில் நிலையத்திற்கு போகும் பாதையும் கண்முன்னே விரியும்படியாக அபூர்வமான அழகுடன் எழுதப்பட்டிருக்கின்றன.

தெருவில் சினிமா வண்டி செல்வதைப் பற்றிச் சுப்ரமணியன் நாவலின் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். சினிமா விளம்பரத்திற்காக வீதிவீதியாகச் செல்லும் அந்த வண்டியில் நோட்டிஸ் கொடுப்பார்கள். அந்த வண்டியின் பின்னால் சிறுவர்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம். இன்று அந்தச் சினிமா வண்டியில்லை. சினிமா பேனர் வரையும் அபூர்வமான ஒவியர்கள் காலத்தின் சுழலில் மறைந்துவிட்டார்கள்.

நாவலின் நாயகன் இரவில் வரும் குடுகுடுப்பாண்டியை ஒரு முறை பகலில் கடைத்தெருவில் வைத்து பார்க்கிறார். குடுகுடுப்பைக்காரன் பற்றி இருந்த பயம் அந்த நொடியில் மறைந்து போகிறது,

சாமி மாடு கொண்டு வருபவனின் மாடு ஏன் எப்போதும் குள்ளமாக இருக்கிறது என்று ஒரு இடத்தில் கேட்கிறார் நானும் சாமி மாட்டினைப் பார்க்கும் போது இப்படி நினைத்திருக்கிறேன்.. சாமி மாட்டின் கழுத்திலுள்ள மணி. கழுத்தைச் சுற்றியுள்ள பழைய துணிகள். அந்த மாடு தலையாட்டும் விதம் என அந்தக் காட்சியை நாலைந்து வரிகளுக்குள் அழகான சித்திரமாக வரைந்திருக்கிறார்..

சோப்புசீப்பு விற்பவன். பிளாஸ்டிக் பொருள் விற்பவன். குரங்காட்டி, கரடி வித்தைகாட்டுகிறவன். பழைய காலக் கடிகாரம் வைத்துள்ள முதியவர், காய்கறிகாரனிடம் பேரம் பேசும் கிழவி. பேருந்து பயணிகளின் இயல்பான உரையாடல்கள். குழுமணி என்ற தனது சொந்த ஊருக்குச் செல்லும் பயணம் என அந்தக் காலம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து அந்த உலகிற்குள் நாம் நடமாடத் துவங்கிவிடுகிறோம்.

குழுமணியில் பெரியப்பா ஊர்மக்களை அழைத்து வந்த தனது அண்ணன் மகன் பெருமைகளைச் சொல்லும் காட்சியும், சீப் என்ஜினியருடன் நடக்கும் உரையாடலும், மந்திரியோடு நடக்கும் ஆலோசனைக் கூட்டமும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.

தன்னைச் சுற்றிய வாழ்க்கையின் வேகத்தையும் அதைத் துரத்தியோடும் மனிதர்களையும். சிலரது போலித்தனமான வாழ்க்கையினையும் காணும் நாயகன் தான் அவற்றிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்த்தியபடியே இருக்கிறான்.

சுப்ரமணியனின் கதை சொல்லும் விதம் மற்றும் அவரது மொழி சிறப்பானது. நாவலின் ஊடாக வந்து போகும் அத்தனை சிறுகதாபாத்திரங்களும் முழுமையானவர்களாக எழுதப்பட்டிருக்கிறார்கள்.. தனித்துவம் கொண்டிருக்கிறார்கள். நாவல் முழுவதும் கதை சொல்லி நம்மை அருகில் அமரவைத்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார்.

கடந்தகாலத்தின் மீது எந்தச் சாய்மானமும் இல்லாமல் நிகழ்கால வாழ்வில் காலூன்றியபடி வாழ்வை விசாரணை செய்யும் இந்த நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் தனித்துவமானது.

இந்த நாவலை சிறுவாணி வாசகர் வட்டம் அழகாக மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2023 04:07

October 31, 2023

ரேடியோ நாடகம்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை ரேடியோ நாடகமாகத் தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சென்னை வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறார்கள்.

இந்தச் சிறுகதை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

காந்தியை மையமாகக் கொண்ட தமிழ் சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் தலைப்புக் கதையாகவும் இடம் பெற்றுள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2023 04:06

புதிய சிறுகதை

இந்து தமிழ் தீபாவளி மலர் 2023ல் எனது புதிய சிறுகதை அவரது நாட்கள் வெளியாகியுள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2023 03:44

October 30, 2023

சந்தோஷத்தின் பெயரால்

Wang Xuebo இயக்கிய KNIFE IN THE CLEAR WATER  2016ல் வெளியானது. ஷி ஷுகிங்கின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

சீனாவின் வடமேற்கு நிங்சியா மாகாணத்திலுள்ள சிறிய கிராமம். அங்குள்ள விவசாயி மா ஜிஷானின் மனைவி இறந்துவிடுகிறாள். அவருக்கான இறுதி நிகழ்வில் படம் துவங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் மா ஜிஷான் தனியே அமைதியாக நடந்து செல்கிறார்.  தனது துயரை அவர் வெளிக்காட்டுவதில்லை.

இறந்த மனைவிற்கான நாற்பதாம் நாள் சடங்கில் அவர்களின் எருதைப் பலி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். இந்த ஆசை அவரது மகன் யெல் குபாவிடமிருந்து பிறக்கிறது. ஆனால் மா ஜிஷானுக்கு எருதைப் பலி கொடுப்பதில் விருப்பமில்லை

அவர் எருதைத் தனது மகனைப் போல வளர்த்து வருகிறார். மகனின் ஆசையும் இமாமின் விருப்பமும் எருதைப் பலி கொடுப்பது என்று உறுதியானதும் வேறுவழியின்றி மாஜிஷான் ஏற்றுக் கொள்கிறார்.  அந்த முடிவு எல்லோரையும் சந்தோஷப்படுத்துகிறது. ஆனால் அவர் குற்றவுணர்வில் அலைக்கழிக்கபடுகிறார்.

தன்னைப் பலி கொடுக்கப் போகிறார்கள் என்று உணர்ந்து கொண்டது போல எருது திடீரென உண்பதை நிறுத்திவிடுகிறது. இது மா ஜிஷானுக்குள் குற்றவுணர்வை அதிகரிக்கிறது. ஒரு ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு ஆன்மாவை இழக்க வேண்டுமா என்ற கேள்வி அவருக்குள் எழுகிறது.

படத்தின் ஒரு காட்சியில் தனது மனைவி வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார் மா ஜிஷான் . அங்கே நண்பர் கால் எலும்பு முறிந்த நிலையில் படுக்கையில் கிடக்கிறார். வீட்டின் வறுமையான சூழலைப் பற்றி நண்பரின் மனைவி கவலையோடு சொல்கிறார்.

தனது மனைவி கைமாற்றாக வாங்கிய பணத்தை அவளிடம் தருகிறார். வீட்டுக் கஷ்டத்திற்கு அந்தப் பணம் பெரிதும் உதவும் என அதை ஏற்றுக் கொள்கிறாள். அத்தோடு மா ஜிஷானின் மனைவி எப்போது அப் பணத்தை கடன் வாங்கினார் என்று பழைய சம்பவம் ஒன்றை விவரிக்கிறார். அது அழகான சிறுகதை போலச் சொல்லப்படுகிறது. இறந்தவர்கள் உலகிலிருந்து மறைந்துவிட்டாலும் சிலரது நினைவில் என்றும் அழியாத சித்திரமாகத் தங்கிவிடுகிறார்கள். அதை மா ஜிஷான் நன்றாக உணருகிறார்.

இரவில் அவர்களின் வீடு தேடி வரும் இமாமிற்கு மா ஜிஷான் உணவளிக்கும் காட்சி அழகானது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் விதமும் அவர்களுக்குள் உள்ள நட்பும் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.

எருதுக்கு வயதாகிவிட்டது. அதனால் இனி பிரயோசனமில்லை ஆகவே பலி கொடுத்துவிடுவோம் என்று மகன் வாதிடுகிறான். அது உண்மையில்லை. எருதால் இன்னமும் வேலை செய்ய முடியும் என்கிறார் மா ஜிஷான். தந்தையின் விருப்பம் இருந்தால் மட்டுமே அதைப் பலி கொடுப்போம் என்று முடிவை அவர் வசம் தள்ளுகிறான் மகன். அவரால் மறுக்க முடியவில்லை. சம்மதிக்கிறார். ஆனால் அவர் மனைவி உயிரோடு இருந்திருந்தால் இப்படி எருதை பலி கொடுக்க சம்மதித்து இருக்க மாட்டாள் என்று அவருக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் சந்தோஷத்தின் பெயரில் நாம் அறிந்தே தவறு செய்கிறோம் என உணர்கிறோம்.

வாழ்க்கை ஒன்றைப் பறித்தவுடன் நேசிக்கும் இன்னொன்றையும் ஏன் பறிக்க முற்படுகிறது துயரத்தின் அளவு நீளும் போது நாம் நிலை குலைந்து விடுகிறோம். கத்தி தானே எவரையும் கொல்வதில்லை. அதை பயன்படுத்தும் மனிதனே கத்தியை ஆயுதமாக்குகிறான். கொலை புரிகிறான். தெளிந்த நீருக்குள் கிடக்கும் கத்தி ஒரு குறியீடு. நீருக்குள் அமிழ்ந்திருக்கும் கூழாங்கல் போல கத்தி அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால் அது கொலைக்கருவியாகும் போது விழித்துக் கொள்கிறது.

படத்தின் இயக்குநர் வாங் ஜிபோ ரஷ்ய இயக்குநர் தார்க்கோவெஸ்கியின் பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார். நிலக்காட்சிகள் கதாபாத்திரங்களின் மனநிலையின் வெளிவடிவமாக விரிவு கொள்கின்றன. இரவுக்காட்சிகள் மிக நேர்த்தியான அழகுடன் படமாக்கபட்டுள்ளன.

நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள், விரிந்து பரந்த அழகிய நிலவெளி. ஹுய் முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, மையப்பிரச்சனையை விட்டு விலகாத திரைக்கதை என அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஊரில் இருந்து விவசாயத்தைத் தொடருவதா அல்லது நகரத்திற்குப் பிழைப்பு தேடி போய்விடுவதா என்ற கேள்வி படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.

மா ஜிஷான் துவக்க காட்சியிலிருந்தே மிகவும் நிதானமாக நடந்து கொள்கிறார். மனைவியின் கல்லறையில் படிந்துள்ள தூசிகளை அவர் துடைக்கும் விதம். மனக்குழப்பத்திலிருந்து விடுபடப் பிரார்த்தனை செய்யும் பாங்கு. எருதை எதிர்கொள்ளும் போதெல்லாம் அவரது கண்களில் வெளிப்படும் குற்றவுணர்வு. வீட்டில் குளிக்கும் காட்சியில் கூட அவர் காட்டும் நிதானம் கவனிக்க வேண்டியது.

எருதைக் கொல்வதா, வேண்டாமா என்ற பிரச்சனையைப் பேச முற்படும் திரைப்படம் நாம் நினைவுகளால் வழிநடத்தப்படுகிறோம் என்பதையும், வாழ்வின் நிலையாமையைப் பற்றியும் பேசத் துவங்குகிறது. அதுவே படத்திற்குத் தனியழகை உருவாக்குகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2023 02:16

October 29, 2023

கிதார் இசைக்கும் துறவி

விகடன் தீபாவளி மலரில் வெனியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.

கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார்.

பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் எனது புதிய சிறுகதை தொகுப்பு வெளியாகிறது.

மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2023 05:54

மதுரையில் ராபர்டோ ரோசலினி

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் நாயகராகக் கொண்டாடப்படுகிறவர் ராபர்டோ ரோசலினி. ரோம் ஓபன் சிட்டி, பைசான். ஸ்ட்ரோம்போலி போன்ற படங்களை இயக்கியவர்.

இவர் இந்தியாவினைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். India, Matri Bhumi என்ற அந்த ஆவணப்படத்தில் தமிழகத்தின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில் காட்சிகள். வீதியில் யானை வருவது. காந்தி கிராமத்தின் செயல்பாடுகள். காவிரி ஆறு. ஸ்ரீரங்கம் போன்றவை மிக அழகாகப் படமாக்கபட்டுள்ளன. இன்று அந்தக் காட்சிகளைக் காணும் போது வியப்பாக இருக்கிறது.

ராபர்டோ ரோசலினியின் தமிழக வருகையைப் பற்றி யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.

UNDER HER SPELL என்ற தலைப்பில் DILEEP PADGAONKAR ரோசலினியின் இந்திய வருகை மற்றும் அவர் எடுத்த ஆவணப்படம் பற்றிச் சிறப்பான புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் அபூர்வமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன

**

ரோசலினி மீது பெருமதிப்புக் கொண்ட நடிகை இங்கிரிட் பெர்க்மன் தானாக முன்வந்து அவரது படத்தில் நடித்தார். ரோசெலினியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் இங்கிரிட் நடித்திருக்கிறார். பின்பு இங்கிரிட்டை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரோசலினி.

1956-ல் ஹாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பை ஏற்று இங்கிரிட் பெர்க்மன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அது ரோசலினிக்குப் பிடிக்கவில்லை. அவர்களின் திருமணஉறவில் விரிசல் ஏற்பட்டது. பிரிந்து வாழ்வது என முடிவு செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் இந்தியப்பிரதமர் நேருவைச் சந்தித்தார் ரோசலினி. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை. மாற்றங்களை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையைப் பகிர்ந்து கொண்டார்.

நேரு உடனடியாக அந்த விருப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். வெளியுறவுத்துறையைச் சேர்ந்த ராகவன் பிள்ளை ரோசலினியோடு தொடர்பு கொண்டு அவரது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். ராகவன் பிள்ளையைப் பற்றி ரோசலினி மிக உயர்வாக எழுதியிருக்கிறார்.

ரோசலினி இந்த ஆவணப்படத்திற்கு எழுதுவதற்காகப் பிரெஞ்சு இயக்குநர் த்ரூபோவை அழைத்தார். ஒராண்டு காலம் தன்னால் இந்தியாவில் வந்து தங்கியிருக்க முடியாது என்று த்ரூபோ மறுத்துவிட்டார். ரோசலினி இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்பு படப்பிடிப்பிற்கான இடங்கள். மற்றும் இரண்டு ஒளிப்பதிவாளர்கள். உதவியாளர்கள் எனக் குழு பயணம் புறப்பட்டது.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் தமிழகத்திலுள்ள கலைகள் கோவில்கள் மற்றும் இயற்கை வளங்கள். காந்தி கிராமத்தின் செயல்பாடுகளைப் படமாக்க விரும்பினார்கள்.

காந்தியக் கனவாகக் கருதப்படும் காந்தி கிராமத்தினை விரிவாகப் படமாக்க விரும்பினார். ரோசலினி இதற்காகப் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டுப் பயணம் செய்தார். படப்பிடிப்புக் குழுவினர்கள் முன்னதாக ரயிலில் பயணம் செய்து மதுரை வந்து சேர்ந்திருந்தார்கள்.

மோசமான இந்திய சாலைகள் பற்றிப் புலம்பிக் கொண்டே வந்தார் ரோசலினி. பின்னிரவில் திண்டுக்கல் அருகே அவர்கள் கார் பழுதாகி நின்றுவிட்டது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. விடியும் வரை அங்கே காத்திருக்க வேண்டியது தான் என்று டிரைவர் தெரிவித்தார். ரோசலின் ஆத்திரத்தில் அனைவரையும் திட்டி தீர்த்துவிட்டார்.

மதுரைக்குக் காரைக் கொண்டு சென்றால் மட்டுமே பழுது பார்க்க முடியும். என்ன செய்வது எனத் தெரியாமல் இருளில் தவித்தார்கள். அப்போது ஒரு லாரி அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. உடனே அதைக் கையைக் காட்டி நிறுத்தி உதவி கேட்டார்கள்.

தான் மதுரைப் பக்கம் போகவில்லை. ஆகவே தன்னால் உதவி செய்ய முடியாது என்று லாரி டிரைவர் மறுத்துவிட்டார். பணம் தருவதாகச் சொன்ன போதும் அவர் ஏற்கவில்லை. அத்தோடு தனக்கு நேரமாகிவிட்டது என்று லாரியை கிளப்பினார்.

இதனால் ஆத்திரமான ரோசலினி அந்த டிரைவரை இத்தாலிய மொழியில் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினார். புறப்பட்ட லாரி அப்படியே நின்றது.

தலையை வெளியே நீட்டி லாரி டிரைவர் அது போலத் தானும் இத்தாலியில் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினார். தன்னை ஒருவன் திட்டுகிறானே எனக் கோபம் அடையாமல் இத்தாலிய மொழியில் பேசுகிறான் என்று ஆசையாக அவனை நோக்கி ஒடினார் ரோசலினி.

அந்த லாரி டிரைவர் தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போது ஜெர்மனி யுத்த களத்தில் கலந்து கொண்டதாகவும் பிடிபட்டுப் போர்கைதியாக இருந்த போது இத்தாலிய மொழி கற்றுக் கொண்டதாகவும் சொன்னார். ரோசலினி ஆச்சரியத்துடன் அவரைக் கட்டிக் கொண்டு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்

லாரி டிரைவர் அந்தக் காரை ஒரு கயிற்றில் இணைத்து மதுரைக்குக் கொண்டு சென்றார். மதுரையில் கார் பழுது நீக்க எவ்வளவு நேரமாகும் என்று ரோசலினி விசாரித்தபோது நாலைந்து மணி நேரம் ஆகும் என்றார்கள். அதற்குள் நிச்சயம் சரி செய்ய முடியாது. குறைந்தது ஒரு நாளாகிவிடும் என்று ரோசலினி நினைத்தார். ஆகவே மாற்று ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் இரண்டு மணி நேரத்தில் காரை சரிசெய்து கொடுத்துவிட்டார்கள்.

இந்தியாவை இப்போது தான் புரிந்து கொண்டேன். இங்கே அசாத்திய திறமைசாலிகள் இருக்கிறார்கள். நிச்சயம் இந்தக் காரை இத்தாலியில் பழுது நீக்க ஒரு நாளாகியிருக்கும். இங்கே இரண்டே மணி நேரத்தில் சரி செய்துவிட்டார்கள் என்று ரோசலினி பாராட்டினார். அத்தோடு இந்தியாவில் எவரையும் தோற்றத்தை வைத்து மதிப்பட முடியாது. இத்தாலி தெரிந்த டிரைவர் போல அவர் பார்க்க எளிமையாக இருக்ககூடும் என்றும் தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்

அதுவரை படித்தும் கேட்டும் அறிந்து வைத்திருந்த இந்தியாவைப் பற்றிய எண்ணங்களை அவரது பயணமும் நேரடி அனுபவமும் மாற்றி அமைத்தன. அந்த மாற்றத்தை அவரது ஆவணப்படத்தில் வெளிப்படையாகக் காண முடிகிறது.

இந்தியாவை இணைக்கும் பண்பாட்டுக் கூறுகளை, கலைகளை, மக்களின் எளிய வாழ்க்கையை. இயற்கையின் வனப்பை, பன்முகத்தன்மை கொண்ட இந்திய வாழ்க்கை முறையை அவர் சரியாக உள்வாங்கியிருக்கிறார். படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்

ரோசலினியின் ஆவணப்படத்திற்குத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர் போர்க்கார். கிட்டு எனும் எம்.வி. கிருஷ்ணசாமி திரைப்படப் பிரிவில் பணிபுரிந்தவர். அவர் இத்தாலிக்கு சென்று ரோசலினியை சந்தித்து இத்தாலிய படப்பிடிப்பில் கலந்து கொண்டு அனுபவம் பெற்றவர். அவர் இந்தியாவில் ஆவணப்படம் எடுக்கும் பணியில் ரோசலினியோடு முழுமையாக உடனிருந்து பணியாற்றினார். இவர்களுடன் மும்பையில் பிரெஞ்சு கற்பித்த, ஜீன் ஹெர்மன் என்ற பேராசிரியரும் இணைந்து கொண்டார்.

சாந்திநிகேதனில் பயின்ற, இந்தியக்கலைகள் மற்றும் இசை அறிந்த சோனாலி தாஸ்குப்தா இந்த ஆவணப்படத்தில் இணைந்து கொண்டார். சோனாலி திருமணமானவர் அவரது கணவர் ஹரிசதன் தாஸ்குப்தா திரைப்படத் தயாரிப்பாளர். அவர்களுக்கு ஒரு மகனிருந்தான்.

அழகியான சோனாலியை பார்த்த மாத்திரம் ரோசலினி காதலிக்கத் துவங்கிவிட்டார். அப்போது அவருக்கு வயது 52. இந்தக் காதலைப் பற்றி பத்திரிக்கைகள் மிக மோசமாக எழுதின. சோனாலி இந்தியாவை விட்டு போக முடியாதபடி அவரது பாஸ்போர்ட் முடக்கபட்டது. நேருவின் தலையிட்டால் அப்பிரச்சனை தீர்க்கப்பட்டது. பின்னாளில் அவர்கள் திருமணமும் செய்து கொண்டார்கள். ரோசலினி இறந்த போது அவரது பழைய காதலிகள் மனைவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதை த்ரூபா தனது ஒரு படத்தின் துவக்க காட்சியாக வைத்திருக்கிறார்

நேருவின் ஆலோசனைப் படி பௌத்தம் தொடர்பான இடங்களில் அதிகம் கவனம் செலுத்தினார் ரோசலினி. நாளந்தாவினை படமாக்கினார். டெல்லி, மும்பை, ஒரிசா கர்நாடகா மத்திய பிரதேசம் வங்காளம், பீகார், என்று விரிவான பயணம் மேற்கொண்டு படமாக்கியிருக்கிறார். மைசூர் காடுகளில் யானையைப் படம்பிடித்திருக்கிறார். இந்தப் பயணத்தின் வழியே அவர் இந்தியாவை நெருக்கமாக அறிந்து கொண்டிருக்கிறார்.

மார்ச் 5ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மதுரை வந்தடைந்த படக்குழுவினர் அன்று நாள் முழுவதும் மதுரையைப் படம்பிடித்திருக்கிறார்கள். பாவைக் கூத்து எனப்படும் நிழல் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துபவர்களைக் கண்டுபிடித்து அவற்றைப் படமாக்கியிருக்கிறார்கள்.

ரோசலினி கோபத்தில் மிக மோசமாகத் திட்டக் கூடியவர். இதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருந்தது. இந்த வசைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிட்டு ஒரு நாள் பாதி வழியில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டு என்னால் இனிமேல் பணியாற்ற முடியாது. உங்களுக்குத் தெரிந்த வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டார். அடுத்து நடந்த சம்பவம் கிட்டுவை கலங்க வைத்துவிட்டது.

தனது தவற்றை உணர்ந்த ரோசலினி சப்தமாக அழத்துவங்கினார்.. கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் காட்சி கிட்டுவின் மனதை இளக்கியது. மீண்டும் இணைந்து பணியாற்றத் துவங்கினார்

இந்த ஆவணப்படத்தின் போது ஒவியர் எம் எப் ஹுசைன். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து ஒவியங்கள் வரைந்திருக்கிறார்.

இந்தியாவைப் பற்றி மேற்குலகம் கொண்டிருந்த பிம்பங்களுக்கு மாற்றாக இந்தியாவின் உண்மையான முகத்தைத் தான் காட்ட விரும்புவதாக ரோசலினி தெரிவித்தார். அந்த எண்ணம் இந்த ஆவணப்படத்தில் முழுமையாக வெளிப்படவில்லை. ஆனால் இந்தியா குறித்த புதிய புரிதலை இந்தப் படம் உருவாக்குகிறது என்பது உண்மையே

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2023 00:32

October 26, 2023

கே.ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள்.

மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜின் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்பு மலர் ஒன்றை மலையாளத்தில் கொண்டு வருகிறார்கள்.

அந்த மலரில் கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.

நண்பர் ஷாஜி இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2023 04:02

October 25, 2023

துறவியும் காதலனும்

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவல்கள் யாவும் இரண்டு முக்கியச் சரடுகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று துறவின் பாதை. மற்றது கலையின் பாதை. இரண்டும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும். துறவும் கலையும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வேட்கையினையும் ஹெஸ்ஸே தொடர்ந்து முன்வைக்கிறார். தனது நாவல்களில் நட்பினை முதன்மையான உறவாகக் கொண்டாடுகிறார் ஹெஸ்ஸே.

ஞானத்தை அடையும் முன்பு சித்தார்த்தா உலகியல் இன்பங்களில் திளைக்கிறான். ஆனால் கோவிந்தன் துறவின் பாதையில் சென்று இயற்கையிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறான். இரண்டு பாதைகளும் சந்தித்துக் கொள்ளும் இடம் முக்கியமானது.

சித்தார்த்தா தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு மாதநாவலாகக் கூட வெளியாகியிருக்கிறது. இந்தியில் திரைப்படமாக எடுக்கபட்டிருக்கிறது. ஆயினும் அந்த நாவலை விடவும் நார்சிசஸ் மற்றும் கோல்ட்மண்ட் மிகச் சிறந்தது என்பேன். கலை மற்றும் துறவு வாழ்வு குறித்துத் தீவிரமான கேள்விகளை நாவல் முன்வைக்கிறது.

1930ல் வெளியான நாவலிது. ஹெஸ்ஸேயின் மூன்றாவது நாவல்.

வாழ்வின் உண்மையான அர்த்தம் எதுவென்ற கேள்விக்கு இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்களை முன்னுதாரணமாக காட்டுகிறார். சீனாவின் யின் மற்றும் யாங் போல சமமான இருபகுதிகள். பிரிக்க முடியாதவை.

நார்சிசஸ் கிரேக்க தொன்மத்தில் வரும் கதாபாத்திரம். தொன்மத்தின் படி அவன் சுயமோகம் கொண்டவன். ஆனால் நாவலில் இந்த அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். சிந்தனையாளன். தீவிர எண்ணங்களால் வழிநடத்தப்படுகிறவன். ஆன்மீக வழிகாட்டி போல நடந்து கொள்கிறான்.

கோல்ட்மண்டிற்கு உணர்ச்சிகளே முக்கியம். அவன் எதையும் தீவிரமாக, முழுமையான ஈடுபாட்டுடன் செய்கிறான். இன்பத்தைத் தேடி செல்வது போலவே துன்பத்தையும் தேடி ஏற்கிறான். முடிவில்லாத காதலே அவனது வாழ்க்கைப் பாதை..

நார்சிசஸ் இளமையைத் தனது அகத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சமாகக் கருதி மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறான். காதலோ, காமமோ. குடியோ கொண்டாட்டங்களோ எதுவும் அவனிடம் இல்லை. இவற்றைத் தீமையாக நினைக்கவில்லை. வெறுத்து ஒதுக்கவில்லை. அந்த இன்பங்கள் தனக்கானதில்லை என்று நம்புகிறான். விலகிச் செல்கிறான்.

ஒருவகையில் அவன் வயதில் மட்டுமே இளமையானவன். மனதளவில் முதிர்ச்சியானவன். ஞானியைப் போலவே நடந்து கொள்கிறான்.

கோல்ட்மண்ட் கலையின் வழியே உன்னதங்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறான். சிற்பியிடம் கலை பயிலும் போது அதை முழுமையாக வெளிப்படுத்துகிறான்.

நார்சிசஸ் பிறர் துன்பத்திற்காக வருந்தக்கூடியன். துறவு என்பதைச் சுயநலமற்ற பொறுப்புணர்வு என்று நம்புகிறவன். நண்பனின் மீட்சிக்காக எதையும் செய்ய முற்படுகிறான்.

வெளித்தோற்றத்தில் எதிரெதிர் துருவமாகத் தெரியும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கிறார்கள். இரண்டு சமநிலையற்ற இயல்புகள் ஒன்று சேர்ந்திருப்பதன் அடையாளம் போலவே அவர்கள் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள்

நாவலின் துவக்கத்தில் கோல்ட்மண்ட்டை அவனது தந்தை வட ஜெர்மனியிலுள்ள மடாலயத்தில் கல்வி கற்க விட்டுச் செல்கிறார்.

கத்தோலிக மடாலயத்திற்குச் சொந்தமான மரியாப்ரான் உறைவிடப்பள்ளியது.

இந்தப் பள்ளியில் ஹெர்மன் ஹெஸ்ஸே படித்திருக்கிறார். ஆகவே பள்ளி வளாகத்தைத் துல்லியமாக விவரித்துள்ளார்.

முதல் ஐம்பது பக்கங்கள் மரியப்ரான்னில் அவர்கள் இருவரும் எப்படிச் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாகப் பழகுகிறார்கள் என்பது விவரிக்கபடுகிறது. அதில் கோல்ட்மண்ட் தனது குதிரையைச் சந்தித்து விடைபெறுவது சிறப்பான பகுதி

மடாலயத்தின் கட்டுப்பாடுகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. விதிகளை மீறி நடந்து கொள்கிறான், மடாலயத்திலுள்ள பெரிய பையன்கள் இரவில் வளாகத்தை விட்டு வெளியே அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்கிறார்கள். , அங்கு அவர்கள் மது அருந்திவிட்டு ஒரு விவசாயியின் அழகான மகளுடன் அரட்டையடிக்கிறார்கள். இதைப் பற்றிக் கண்டிக்கும் நார்சிசஸிடம் மதகுரு போலப் பேசாதே என்று கோவித்துக் கொள்கிறான். அவர்களின் உரையாடலின் போது கோல்ட்மண்டின் இதயத்திற்குள் ஒரு ஏவாள் ஒளிந்திருக்கிறாள் என்பதை நார்சிசஸ் கண்டு கொள்கிறான்.

கோல்ட்மண்ட் ஜிப்ஸி லிசா மீது காதல் கொள்கிறான். அவள் பின்னாடி நாடோடியாக அலைகிறான். . செல்லும் இடங்களில் எல்லாம் கோல்ட்மண்ட் பெண்களால் விரும்பப்படுகிறான் அவனைக் காதலிப்பதில் பெண்களுக்குள் போட்டி நடக்கிறது. காதலின் காரணமாகவே தண்டிக்கபடுகிறான்.

பிளேக்கின் போது மரணத்தை அருகில் சந்திக்கிறான். பிரசவ வலியால் துடிக்கும் பெண்ணைக் காணுகிறான். கோல்ட்மண்ட் உருமாறிக் கொண்டேயிருக்கிறான். வாழ்க்கை எங்கும் எதிலும் நின்றுவிட அனுமதிக்கவில்லை. சந்தோஷத்தை அதிகமாக அனுபவிக்கும் அவன் மறுநிமிஷமே வேதனைக்குள் தள்ளப்படவும் செய்கிறான். அவமானங்களை அவன் பெரிதாக நினைக்கவில்லை. முடிவில் போக்கிடமின்றி துரத்தப்பட்டு வீழ்ச்சி அடைகிறான்.

சிற்பக்கலை பயிலும் போது தான் காதலித்த பெண்களின் ஒட்டுமொத்த நினைவையும் ஒன்றாக்கிச் சிற்பம் செய்ய முயலுகிறான் கோல்ட்மண்ட். அது விசித்திரமான அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

சிற்பி வீட்டிலும் அவனது காதலே முக்கியப் பிரச்சனையாகத் தலை தூக்குகிறது. கடைசி வரை சுதந்திர மனிதனாக நடந்து கொள்கிறான். முடிவில்லாத கோல்ட்மண்ட்டின் காதலை ஆன்மாவிற்கும் உடலிற்கும் இடையே நடக்கும் போராட்டமாக ஹெஸ்ஸே சித்தரிக்கிறார்.

அவர்களின் விசித்திரமான நட்பு குறித்து நாவலின் ஒரிடத்தில் உரையாடுகிறார்கள். அதில் நிலமும் கடலும் போல என்றொரு உவமை வருகிறது. அது உண்மையே. நார்சிசஸ் நிலம் போல அமைதியாக இருக்கிறான். கோல்ட்மண்ட் கடல் போலக் கொந்தளிக்கிறான்.

” We are sun and moon, dear friend; we are sea and land. It is not our purpose to become each other; it is to recognize each other, to learn to see the other and honor him for what he is: each the other’s opposite and complement.”

பிறந்தவுடன் தாயை இழந்துவிடுகிறான் கோல்ட்மண்ட். நாவல் முழுவதும் அவன் தாயைத் தேடுகிறான். அவன் காதலிக்கும் பெண்களுக்குள் தாயின் அன்பிருப்பதாக உணருகிறான். நாவலின் முடிவில் தாயின் வடிவமாக நார்சிசஸ் இருப்பதை அறிந்து கொண்டு அவனிடமே அடைக்கலமாகிறான்.

‘நான் இறப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன், காரணம் நான் என் அம்மாவிடம் திரும்பிச் செல்கிறேன் என்பது எனது நம்பிக்கை அல்லது என் கனவு, மரணம் எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் என நம்புகிறேன் – என் முதல் பெண் அளித்த மகிழ்ச்சியைப் போல என்கிறான் கோல்ட்மண்ட்

ஹெஸ்ஸேயிடம் வெளிப்படும் கவித்துவமான உரையாடல்கள் நாவலுக்குத் தனி அழகைத் தருகின்றன.

நாவலில் உயர்வான லட்சிய வாழ்வினை வாழும் நார்சிசஸை விடவும் அலைந்து திரிந்து தன்னை அழிந்து கொண்ட கலைஞனாக வாழும் கோல்ட்மண்ட்டே அதிகம் கவருகிறான் .

இந்த இருவரில் நாம் யாராக இருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள் நாவல் எழுப்புகிறது. சிலருக்கு நாம் நார்சிசஸாக இருக்கிறோம். சிலரிடம் நாம் கோல்ட்மண்ட்டாக நடந்து கொள்கிறோம். உண்மையில் இந்த இருவரும் நமக்குள்ளே இருக்கிறார்கள். வெளிப்படும் இடமும் தருணமும் தான் மாறிக் கொண்டேயிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2023 03:17

October 23, 2023

ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள்

ரஷ்ய இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை.

புஷ்கின் துவங்கி இன்று முக்கியக் கவியாக விளங்கும் வேரா பாவ்லோவா வரை இதில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2023 03:38

October 21, 2023

நிமித்தம் / ஆங்கிலத்தில்

எனது நாவல் நிமித்தம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் சந்திரமௌலி இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்த நாவல் வெளியாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2023 23:19

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.