S. Ramakrishnan's Blog, page 45

December 11, 2023

உதவிக்கரம்

மழை வெள்ளத்தால் எனது பதிப்பகத்திற்கு ஏற்பட்டுள்ள இடர் அறிந்து உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி

நனைந்த புத்தகங்களை உலர வைத்துக் கொண்டிருக்கிறோம். முழுவதும் நனைந்து போய் கிழிந்த நிலைக்கு வந்தவற்றை ஒன்றும் செய்ய இயலவில்லை.

அடுத்த சில நாட்களுக்கு உலர்த்தும் பணி தொடரும். அதன்பிறகு இதனை மறுபடி அச்சகத்திற்கு அனுப்பி அட்டை மற்றும் பைண்டிங் சரி செய்யப் போகிறேன். புத்தகங்களை முடிந்தவரை சரிசெய்த பிறகே தேவையானவர்களுக்கு அனுப்பித் தர இயலும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2023 03:10

December 6, 2023

நீளும் நட்புக்கரங்கள்

நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தற்காலிகமாகப் புத்தகங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளோம்.

ஈரமான புத்தகங்களை உலர்த்தும் பணி நடக்கிறது. இந்தப் புத்தகங்களை வாங்கிக் கொள்வதாகப் பல்வேறு நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய அமைப்பினர், பள்ளி நிர்வாகிகள் முன்வந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.


மழைக்குள்ளாகப் புத்தகங்களைக் காப்பாற்ற துணை நின்ற நண்பர்களுக்குத் தீராத நன்றிகள். எனது நிலையைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்லியும் உதவிகள் புரிந்தும் வரும் வாசகர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

நீளும் நட்புக்கரங்களே என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. இத்தனை ஆண்டுகாலம் நான் எழுதிச் சம்பாதித்திருப்பது இந்த அன்பைத் தான். இது போதும் எனக்கு.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2023 22:35

December 4, 2023

புத்தகங்களை இழந்தோம்

நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.  காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து கொண்டே போனது. புத்தகங்களை இடம் மாற்ற இயலவில்லை. ஏராளமான புத்தகங்கள் நனைந்து வீணாகிப்போகின.

கண்ணீரோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்களுக்கு பெரியது. இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருக்க கூடும். மீதமுள்ள புத்தகங்களைக் காப்பாற்றி கொண்டு வந்து வீடு முழுவதும் நிரப்பியிருக்கிறோம்.

நேற்று முழுவதும் வீட்டிற்குள்ளும் தண்ணீர் வரும் நிலை. இரண்டு படிகள் தண்ணீரில் முழ்கிவிட்டன. மின்சாரமில்லை. இணைய தொடர்பில்லை. எவரையும் உதவி கேட்டு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆயினும் அருகிலுள்ள நண்பர்கள் ஒடியோடி வந்து புத்தகங்களைக் காப்பாற்ற உறுதுணை செய்தார்கள்.

மழை நின்ற இன்றும் மின்சாரமில்லை. வீட்டைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.  கண்முன்னே புத்தகங்களை இழப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இத்தனை ஆண்டுகாலம் எழுதிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் வங்கி கடன் உதவியாலும் தான்  தேசாந்திரி பதிப்பகம் துவங்கினோம். உங்கள் ஆதரவால் வெற்றிகரமாகவே நடத்தினோம். ஆனால் நேற்றைய மழை எங்களை வேரோடு சாய்த்து விட்டது.  

புத்தகக் குடோனுக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். ஆனால் இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாத நிலை.

நெருக்கடியான சூழலில் ஈரமான புத்தகங்களுக்கு நடுவே கண் கலங்கி அமர்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்த உலகம் புத்தகங்களும் வாசகர்களும் மட்டும் தான். அவர்கள் மீண்டும் என்னை மீட்பார்கள் என்ற நம்பிகையோடு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2023 23:34

December 2, 2023

நூலகத்திற்குள் ஒரு பயணம்

Libraries are mankind’s common memory – Umberto Eco

Umberto Eco – A Library of the World ஆவணப்படம் உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றியும் புத்தக வாசிப்பு குறித்த அவரது எண்ணங்களையும் கொண்டுள்ளது

இந்த ஆவணப்படத்தில் ஈகோவின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் கொண்ட நூலகத்தைக் காணுகிறோம். தனிநபர் சேமிப்பில் உலகின் பெரிய நூலகங்களில் இதுவும் ஒன்று. இதில் அரிய நூல்கள் தனியே வைக்கப்பட்டிருக்கின்றன.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அரிய நூல்களைத் தேடிச் சேகரித்தவர் ஈகோ. அவரது சேமிப்பில் ரசவாதம் துவங்கி அழிந்து போன மொழிகள் வரை பல்வேறு துறைகள் சார்ந்த விசித்திரமான நூல்கள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மின்புத்தகங்கள் வந்துவிட்டாலும் தனக்குக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களே பிடித்தமானது என்கிறார். குறிப்பாகப் புத்தகங்களைத் தொடும் உணர்வு பற்றி அவர் குறிப்பிடுவது முக்கியமானது. தான் தொழில்நுட்பத்திற்கு எதிரானவனில்லை. ஆனால் அதைத் தொந்தரவாகவே நினைக்கிறேன் என்று சொல்லும் ஈகோ தன்னிடம் ஒரு செல்போன் இருக்கிறது. அதை ஒரு அடையாளத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறேன். பெரும்பாலும் அணைக்கபட்டேயிருக்கும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.

ஐநூறு வருஷங்களுக்கு முன்பு அச்சிடப்பட்ட புத்தகங்களை இன்று கையில் எடுத்து வாசிக்க முடியும். ஆனால் தொழில்நுட்பம் மாறிக் கொண்டேயிருப்பதால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மின் புத்தகங்களில் பலவற்றை இன்று திறந்து படிக்க முடியவில்லை. பார்மெட் மாறிவிட்டிருக்கிறது. அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு இது போன்ற அப்டேட் செய்ய வேண்டிய பிரச்சனையில்லை என்கிறார்.

ஈகோவின் பேரன் இந்த ஆவணப்படத்தில் தனது தாத்தாவைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் சிறப்பானவை. அவர் தனக்குப் பரிசாகக் கொடுத்த புத்தகம் பற்றி நன்றியோடு நினைவுகூறும் அவன் தனக்குப் புத்தகம் படிப்பதில் ஆர்வமேயில்லை என்கிறான். இந்தத் தலைமுறையின் குரல் இதுவே. ஆனாலும் தாத்தாவின் சேமிப்பிலுள்ள புத்தகங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் தான் உணர்ந்துள்ளதாகச் சொல்கிறான்.

ஈகோவின் நூலகத்தில் அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரைப்பற்றிய புத்தகங்களும் வரிசை வரிசையாக இடம்பெற்றுள்ளன.

உம்பெர்தோ ஈகோ கடந்த ஆண்டுத் தனது 84வது வயதில் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்கள். அந்தக் கூட்டம் தன்னை உள்ளே நுழைய விடவில்லை. வரிசையில் வரும்படி சொன்னார்கள் என்கிறார் ஈகோவின் மனைவி.

அவரது நூலகத்தில் அரிய புத்தகங்களுக்கென்றே தனியறையிருக்கிறது. அந்த அறைக்குள் அமர்ந்து படிக்கப் பெரிய மேஜை. நாற்காலிகள். அங்கே ஈகோ புத்தகம் படித்து முடித்தவுடன் புல்லாங்குழல் வாசிப்பது வழக்கம் என்று அவரது புல்லாங்குழலை அடையாளம் காட்டுகிறார்கள். அரிய புத்தகங்களும் புல்லாங்குழலும் இணையும் இடத்தை ரசித்துப் பார்த்தேன்.

இந்த ஆவணப்படத்தில் அதானசியஸ் கிர்ச்சர் (Athanasius Kircher) என்ற 17 ஆம் நூற்றாண்டு இறையியல் அறிஞரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவர் எல்லாத் துறைகள் சார்ந்தும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தவறான விளக்கத்தை ஆர்வத்துடன் எழுதியவர் என்று ஆவணப்படத்தில் அவரை அறிமுகப்படுத்துவது சிறப்பானது.

தனக்கு ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கு ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை வருடங்கள் எழுதுவதற்காகச் செலவிடுவதை ரசித்து அனுபவிக்கிறேன். அவசரமாக ஒரு நாவலை எழுதக்கூடாது என்று அறிவுரை தருகிறார் ஈகோ.

இவரைப் போலவே நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான யோசே ஸரமாகோவும் ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் எனத் தொடர்ச்சியாக எழுதினால் போதும். ஒரு நாவல் முடிந்துவிடும். என்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத வேண்டும் நினைப்பவன் பேராசை கொண்டவன் என்றும் கேலி செய்கிறார்.

உம்பர்டோ ஈகோவை மிகவும் பாதித்த நவீன எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் ஈகோ தனது இரண்டு புத்தகங்கள் அவருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். அத்தோடு தனது மகனுக்கு ஸ்டெஃபனோ என்று ஜாய்ஸின் கதாபாத்திரப் பெயரை வைத்திருக்கிறார். அத்தோடு யுலிஸஸ் மற்றும் ஃபின்னெகன்ஸ் வேக்கின் அரிய பதிப்புகளைச் சேகரித்து வைத்திருக்கிறார்.

தனது Name of the Rose நாவலை ஜனவரி 5ம் தேதி எழுதி முடித்தார் ஈகோ.ஆகவே அவரது மற்ற நாவல்களை எழுதும் போதும் அதை ஜனவரி 5ம் தேதி முடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இப்படியான விசித்திர நம்பிக்கைகள் தேவை தான் என்றும் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அது போலவே இரவில் சில பக்கங்களாவது நாவல் வாசிப்பது தனக்கு வழக்கம். அது புதிய கனவினை உருவாக்கக் கூடியது என்றும் சொல்கிறார். நோயுற்ற நாட்களில் மனதிற்கு ஆறுதலாக இருப்பது மீள் வாசிப்பே. அதுவும் செவ்வியல் நாவல்களை வாசிக்கும் போது விரைவாகக் குணமடைவதாக உணர்கிறேன் என்கிறார்

அவரிடம் இரண்டு நூலகங்கள் உள்ளன. ஒன்று நகரிலுள்ள அவரது வீட்டில் மற்றொன்று அவரது கிராமப்புற வீட்டில். இரண்டு பிரதிகள் உள்ள புத்தகங்களில் ஒன்றைக் கிராமத்து வீட்டிலுள்ள நூலகத்திற்கு அனுப்பிவிடுவேன். அப்படியே அங்கே இருபதாயிரம் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன என்கிறார். ஈகோவின் நகைச்சுவை உணர்வு அபாரமானது. அது குறித்த கேள்விக்கு அவரது பதில் இதுவே

Not taking yourself too seriously and not taking others too seriously.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2023 04:18

November 30, 2023

ஷேக்ஸ்பியரின் பெயரால்

இந்தியாவைக் கதைக்களனாகக் கொண்டு MERCHANT IVORY தயாரிப்பில் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கபட்டுள்ளன. அவற்றில் மிகச்சிறந்த படமாக ஷேக்ஸ்பியர் வாலாவைக் கருதுவேன். 1965 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் திரைக்கதையை எழுதியர் ஆங்கில எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜப்வாலா. சசிகபூர் மதுர் ஜாஃப்ரி முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள் இப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்துள்ளார். சுப்ரதா மித்ராவின் அற்புதமான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர்கள் ஏற்பாடும் செய்யும் விருந்து மற்றும் விழாக்களில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தவறாமல் இடம்பெற்றன.

இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நிகழ்த்துவற்காகவே தனியான நாடகக்குழுக்கள் இயங்கின. இப்படமும் அப்படியான ஒரு நாடகக் குழுவினைப் பற்றியதே. பக்கிங்ஹாம் பிளேயர்ஸ் என்று அழைக்கப்படும் டோனி பக்கிங்ஹாம் மற்றும் அவரது மனைவி கார்லா, மகள் லிசி ஷேக்ஸ்பியர் நாடகக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

காலனிய ஆட்சிக்குப் பின்பு ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது. மகாராஜாக்களின் ஆதரவை நம்பியே நாடகம் நிகழ்த்த வேண்டிய கட்டாயம்.

இன்னொரு புறம் சினிமாவின் வருகையால் ஏற்பட்ட மாற்றம். சினிமா நடிப்பை ஏற்றுக் கொள்ளாத நாடக உலகின் மரபான மதிப்பீடுகள் இவற்றை அழகான பின்னிச் செல்கிறது திரைப்படம்.

படத்தின் துவக்கத்தில் பக்கிங்ஹாம்ஸ் குழுவினர் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிமுகப்படுத்துகிறார்கள்.. அவர்கள் ஒரு மஹாராஜாவைச் சந்திக்கிறார்கள், அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியபடியே உரையாடுகிறார்கள். பின்னர் மகாராஜாவின் முன்னால் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். விசித்திரமான பின்புலத்தில் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.

அடுத்த நாடக நிகழ்விற்காக அங்கிருந்து இரண்டு நெரிசலான வாகனங்களில் புறப்படுகிறார்கள். வழியில் அவர்களின் கார்களில் ஒன்று பழுதடைகிறது, அவர்களுக்குப் பணக்கார இளைஞனான சஞ்சு உதவி செய்கிறான்.

நாடக குழுவிலிருந்த லிசியின் அழகியில் ஈர்க்கப்படுகிறான், லிசியின் அடுத்த மேடை நிகழ்ச்சியைப் பார்ப்பதாக உறுதியளிக்கிறான். ஒரு நாள் பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை காணச் செல்கிறார்கள். அங்கே நடிகை மஞ்சுளா அறிமுகமாகிறாள். அவளுக்கும் சஞ்சுவிற்கும் முன்னதாக உறவு இருக்கிறது. ஆயினும் சஞ்சு லிசியிடம் காதல் கொள்கிறான் அவர்கள் நெருக்கமாகப் பழகுகிறார்கள். மஞ்சுளாவின் ஊமை வேலைக்காரன், சஞ்சுவும் லிசியும் கட்டித்தழுவுவதைக் கண்டதாகச் சைகை மொழியில் அவளிடம் தெரிவிக்கிறான். இதனால் ஆத்திரமான மஞ்சுளா லிசியைத் தேடிச் சென்று சண்டையிடுகிறாள்.

ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தைப் பக்கிங்ஹாம்ஸ் நிகழ்த்துவதைப் பார்க்க மஞ்சுளாவை சஞ்சு அழைத்துச் செல்கிறான், அங்கே வேண்டுமென்றே மஞ்சுளா குழப்பத்தை ஏற்படுத்துகிறாள். இதனால் லிசி ஆத்திரம் கொள்கிறாள். தங்கள் மகளுக்கும் சஞ்சுவிற்குமான காதல் குறித்து டோனியும் கிளாராவும் கவலைப்படுகிறார்கள், சஞ்சுவின் காதல் நிறைவேறியதா என்பதே படத்தின் பிற்பகுதி.

நாடகக் குழுவினர் சிம்லாவில் தங்கியிருக்கும் காட்சிகள் சிறப்பானவை. மூடுபனியும் பைன் மரங்கள் அடர்ந்த சாலையும் கண்ணிலே உறைந்து விடுகின்றன.

தி ஹவுஸ்ஹோல்டர் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஐவரி சசிகபூரின் மனைவி ஜெனிபர் கெண்டலுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவளது பெற்றோர்கள் நடத்தும் நாடகக்குழு மற்றும் அவர்களின் நாடகப்பயணம் பற்றி அறிந்து கொண்டார். இந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கலாம் என்று ஐவரி விரும்பினார். கெண்டல் குடும்பத்தின் குறிப்பேடுகளை மையமாக் கொண்டு ரூத் ப்ராவர் ஜப்வாலா திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

பிளேபாய் கதாபாத்திரமான சஞ்சுவாக சசிகபூர் சிறப்பாக நடித்திருக்கிறார். சினிமா நடிகை மஞ்சுளாவாக நடித்திருப்பவர் மதுர் ஜாஃப்ரி.

வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவர் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளையும் நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தையும் பற்றி படம் பேசுகிறது.

1953 இல் கெண்டல் குடும்பத்தினர் இந்தியாவை விட்டு வெளியேறினாலும், ஐவரி தனது திரைப்படத்தை 1965 இல் நடப்பதாக உருவாக்கினார். காரணம் அப்போது தான் காலனிய மயக்கம் தீர்ந்து இந்தியர்களின் ரசனையில் புதிய மாற்றம் உருவாகியிருந்த்து. ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட காலனிய சின்னங்களில் இந்தியர்கள் ஆர்வம் இழந்து போயிருந்தார்கள்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மேடையேற்ற வேண்டும் என்று டோனி பக்கிங்ஹாம் விரும்புகிறார். நடிப்பும் கூட விக்டோரியன் பாணியில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார். இந்தியப் பார்வையாளர்கள் ரசனை மிக்கவர்கள். இதனை ஏற்றுக் கொண்டு கொண்டாடுவார்கள் என்று ஆழமாக நம்புகிறார். அப்படியான கடந்த கால நினைவுகளும் அவருக்குள் இருக்கின்றன. ஆனால் காலமாற்றம் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அதன் மூல வடிவில் ஏற்றுக் கொள்ளத் தயராகயில்லை. அது போன்ற நாடக முயற்சி சலிப்பூட்டுவதாக உணருகிறார்கள். படத்திலும் ஒரு காட்சியில் அது போன்ற விமர்சனம் முன்வைக்கபடுகிறது.

இந்திய நாடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய உத்பல் தத் ஷேக்ஸ்பியரை நம் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார். படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

பார்வையாளர்கள் மாறத் தொடங்கியவுடன் மரபான நாடக முயற்சிகள் கைவிடப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. ஷேக்ஸ்பியர் விசுவாசிகளுக்கு இது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மையான நிலை என்று படம் சுட்டிக்காட்டுகிறது. படத்தில் டோனி பக்கிங்ஹாம் அதனை நன்கு உணர்ந்து கொள்கிறார். ஆனால் அதை மனதளவில் ஏற்க முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தியா என்பதே ஒரு நாடகமேடை தான். இந்த மாற்றங்களை லிசி புரிந்து கொள்கிறாள். ஏற்றுக் கொள்கிறாள். அவள் அடுத்த தலைமுறையின் அடையாளம்.

All the world is a stage and we are merely players என்று ஷேக்ஸ்பியர் சொன்னது டோனி பக்கிங்ஹாமிற்கும் பொருந்தக்கூடியதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2023 05:01

November 27, 2023

கேள்விகள் ஆயிரம்

தேனி சுந்தர்

சிரிக்கும் வகுப்பறை நூலை வாசித்தேன். ஒரு குழந்தையின் பார்வையில் எழுகின்ற கேள்விகள் ஆயிரம்.. நாம் எதிர்பார்க்காத திசைகளில் இருந்து சிந்திப்பார்கள். அப்படியான பல கேள்விகளை இந்நூலில் காண முடிந்தது.

ராத்திரி விடியாமலேயே நீண்டு போய்க் கொண்டிருந்தால்..? ஏன் கைக்குக் கை என்று பெயர் வந்தது? பள்ளிக்கூடம் என்ற ஒன்றை யார் முதலில் உருவாக்கினார்கள்? பள்ளிக்கூடங்கள் எல்லாம் ஒரே நாளில் காணாமல் போனால் எப்படி இருக்கும்? பள்ளிக் கூடங்களில் எதற்காக இவ்வளவு பெரிய கதவுகள்? ஆசிரியர்கள் சொல்லச் சொல்ல இந்தப் பென்சில்கள் ஏன் தானே எழுதிக் கொள்வதில்லை? ஒரு வருடத்திற்கு ஒரு வகுப்பு படிக்க வேண்டும் என்று யார் முடிவு செய்தது? 1ஆம் வகுப்பு , அதற்கடுத்து 11 ஆம் வகுப்பு, அதற்கடுத்து 111ஆம் வகுப்பு, அதற்குப் பிறகு 1111 ஆம் வகுப்பு என்று ஏன் மாற்றக் கூடாது?? கரப்பான் பூச்சி இரவில் என்ன செய்து கொண்டிருக்கும்? அதற்குக் குளிருமா? குளிராதா? பள்ளிகள் ஏன் இரவில் நடப்பதில்லை?

– இப்படி ஒரு நூறு கேள்விகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாமே ரசிக்கவும் சிந்திக்கவுமானவை…

விதவிதமான தண்டனைகள் தருவதற்கென ஆய்வுகள் நடத்தி, அதைப் பலகட்டமாகப் பரிசோதித்துப் பள்ளி முதலாளிகளுக்கும் பெற்றோருக்கும் விற்பனை செய்கிற “அக்ரமா பள்ளி” என்கிற தண்டனைப் பள்ளி இறுதியில் “சுதந்திர பள்ளியாக” மாறுவது சிறப்பு.

சயனகிரி தண்டனைப் பள்ளியில் கொண்டு சேர்க்கப் படும் திவாகர் குறித்துத் தொடங்கும் கதையில் ரூபன், திப்பு உள்ளிட்ட நண்பர்கள் சேர்ந்ததும் சுவாரசியம் கூடுகிறது. அப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப் படும் தண்டனைகள் கடுமையானவை. கொடூரமானவை. அப்படியான சூழலில் அடிக்கும் போது வலி தெரியாமல் இருக்க உதவும் ஜெல்லி குறித்த தகவல் ஒரு திருப்பு முனையாக வந்து கதையில் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் நிறைவில் ஒட்டு மொத்த கல்வியின் வலிகளையும் தீர்க்கிற வழியைச் சொல்லி நிறைவு பெறுகிறது கதை..! எது கல்வி? எப்படியான கல்வி வேண்டும் என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்த “சிரிக்கும் வகுப்பறை..!”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2023 23:37

ஆங்கிலச் சிறுகதைத்தொகுப்பு / விமர்சனம்

The Man Who Walked Backwards and Other Stories, by S. Ramakrishnan.

Translated from the original Tamil by Prabha Sridevan. Published by Orient Black Swan

Review by Aparna Karthikeyan

If I had a chance to meet one character from any of the books I read, I’d pick Thekkan. He is No Ordinary Thief, as the title tells us upfront. He is a savant. But not the way you’d imagine. He can communicate with dogs and trees. And befriends and heals them. But his extraordinary gift becomes a great burden when he reads the oppressive future of young girls. He’s torn and tormented, and what he decides to dowith – and about – his superpower elevates the story.

Thekkan’s is one of the 18 stories, spread over 181 pages, spanning four continents and at least three generations, and the most unexpected set of people within thecovers of any book. That’s my one-line summary of S. Ramakrishnan’s brilliant short story collection,The Man Who Walked Backwards, translated beautifully into Englishby Prabha Sridevan.

Gandhi and Gautama; the man who built a house with a hundred windows, the clerk who counted pigeons; the woman who swam, the one who ran away; and the one who imagined a family for herself and washed real clothes for the husband and children who existed only in her mind, all because her father kept pointing out she was already 34… Ramakrishnan sets a tall mandate for himself – to write about the inner lives of women. ‘As a creator’ he tells us in his note, ‘I want to understand her and people like her in whose hearts lies a universal love fashioning a sea, a mountain, a waterfall and a forest – all within themselves. It is them that I write about.’

It is that inner world that is captivating, in story after story. And nowhere is it as powerful as the one where Susila, the heroine who had her hand broken for going In Search of Gandhi. She is a young bride, with a husband who loved – no, lusted – for her body. Her mind does not interest him. Did he even know she has a fertile one? He only cares about her womb. When she takes off to Wardha, to meet Gandhi, he is furious. And in this poignant story, layered with meaning, Ramakrishnan foregrounds the freedom struggle – within Susila, within the country – and places it along the salt country. The personal and political come together in Marakannam,Tuticorin and then, fittingly, Vedaranyam, the heart of the Satyagraha in the south,from where Susila departs. Her search takes her to a different country, from where her son begins his. 

In the Rain Dairy, it is the deluge that unites a father and son. Travelling from Madurai to Seattle – where the rain is masculine and virile – it is an outward and inward journey, the gauge measuring not just the precipitation, but also intimacy.Ramakrishnan makes excellent use of objects – whether it is a rain gauge, a pair of dolls or a lock of hair (and the dramatic and chilling backstory of that clump), taking the everyday and the ordinary and infuses it with magic. Nothing is more ordinary than, perhaps, the much-derided pigeons. In Ramakrishnan’s story, they fly into the soul of a government office clerk. Without this little eccentricity, he is just one more cog in a gigantic wheel, doing the same job for over thirty years, until “unbeknownst to them, their face, body and actions are slowly transformed, and increasingly come to resemble those old government office desks.” It’s a devastating description – implying a stodgy life, too heavy to move. But then, Ramakrishnan contrasts it with an unbearable lightness, filling the scenes with feathers and wings, until it’s tempting to look out of the window, and count pigeons…

Many of Ramakrishnan’s stories are filled with movement. Walking backwards and swimming are the obvious ones. But quickly, he goes beyond the physical and restless movements. Much of it happens on the inside. Characters change, evolve and mature; there is a quiet resignation in some, and a quiet acceptance in others. Aren’t they similar, you might wonder. Ramakrishnan shows you how they are different, and that fine line that divides the two emotions is where women live.

Like the heroine in Amma’s last swim. The mother – we learn her name is Rukmani only when her husband hurls the word across the water, until then she is just Amma – swims away her anger and frustration. The water does not trap her; marriage does. Her last swim is the longest. And one that fills the protagonist – her child – with terror for years. When the family leaves the village, she loses her coping mechanism, her private therapy sessions, if you will. And she remains ‘inscrutable, half-known, half-unknown… like those dark waters.’

The highpoint of this collection is, within the short span of each story, the reader gets to know the characters. And feel a great love, hate, anger… and a great fear. In The Smell of Kerosene, Ramakrishnan builds the tension over nine pages, unpacking the anatomy of a caste conflict. Travelling from villages to towns, from forbidden islands to tea estates on a hill (where darkness is true and deep unlike in the city,

“where light kept leaking into the night like sunlight through an umbrella with holes”), he describes places and people with deft brush strokes.

Nowhere is his victory – and that of the elegant translation – greater than in the story of a poem. Sitridazh. “How lovely is this word, ‘sitridazh’! Sounds like a wild flower. But sitridazh is really like a small brook.” And it is in this story, which cleverly retains the original Tamil title, that his skill as a short story writer shines. Unfolding in a small room, where Rilke and Sangam poetry collide, Ramakrishnan serves deep uncomfortable truths with tea. “A family,” he notes, “will accept a drunkard, but not a poet”. “Tamil culture has a heritage of two thousand years of poetry, but you cannot sell two thousand copies of a Tamil poet’s book. That is the reality.”

The joy of this collection is the beautiful translation. I read it in English, and in my head, I heard it in Tamil. Prabha Sridevan’s language is perfectly in sync with the Tamil landscape, the lives of the speakers, and the cadence and rhythm of their speech. “I am a thief. I am like a thorn shrub myself. Maybe that is why I am able to sense the lives of other plants just by touching them.” Similarly – as a judge earlier

and now a translator – Prabha Sridevan too can sense the lives of other people. And bring them to life in another tongue.

“No one pays heed to their voices that weep silently,” notes Ramakrishnan, in the author’s note. “I take their side. I share their sorrows with the world. I argue their case before my readers.”

He’s won the case…with some help from a judge.

Thanks :

BTL -December issue 2023

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2023 20:13

November 24, 2023

மயூ பதிப்பகம்

எழுத்தாளர் ஜா.தீபா மயூ என்ற பெயரில் புதிய பதிப்பகம் ஒன்றைத் துவங்குகிறார். இன்று அதற்கான தொடக்கவிழா நடைபெறுகிறது.

மயூ பதிப்பகம் சார்பில் அவரது ‘மறைமுகம்’ சிறுகதைத் தொகுப்பும், ‘மாபெரும் சபை’ என்கிற தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் குறித்த நூலும் வெளியாகின்றன

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 24, 2023 19:10

November 23, 2023

எழுத்தாளனின் உலகம்

எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட தொகுப்பில் the Paris Review Interviews (WRITERS AT WORK) தொகுதிகளுக்கு இணையே கிடையாது. என்னிடம் 9 தொகுதிகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதன் ஒரு தொகுதியை எடுத்துப் படிப்பேன்.

எழுத்தாளர்களை நேர்காணல் செய்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து வாசித்துள்ளார்கள். எது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொகுதி சிறந்த உதாரணம்.

நேர்காணலின் போது எழுத்தாளரின் வீடு எப்படியிருந்தது. அவர் என்ன உடை உடுத்தியிருந்தார். அவரது அன்றாட உலகம் எப்படியிருக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக அவதானித்து எழுதியிருக்கிறார்கள். சம்பிரதாயமான கேள்விகள் எதுவும் கிடையாது. எழுத்தாளரின் ஆளுமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும்படியான கேள்விகள். தன்னியல்பாக எழுத்தாளர்கள் தரும் பதில். அதில் வெளிப்படும் அபாரமான பார்வைகள். இதுவே இந்த நேர்காணல்களின் சிறப்பு.

பாரீஸ் ரிவியூ 1953 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. பாரீஸ் ரிவியூவில் தனது நேர்காணல் வெளியாவது இன்று வரை எழுத்தாளரின் கனவு என்றே சொல்வேன்.

ஒரு தொகுதியில் 14 முதல் 1 6 எழுத்தாளர்கள் வரை இடம்பெறுகிறார்கள். எழுத்தாளரின் கையெழுத்துப்பிரதியும் மாதிரிக்காக இதில் இடம்பெறுகிறது. அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிய ஒருவரைக் கூட அதில் காண முடியாது.

இந்த நேர்காணல்கள் ஏன் முக்கியமாகின்றன. இவை எழுத்தாளனின் தேடலையும் அவன் உருவான விதத்தையும் இலக்கியம் சாராத பிறதுறைகள் குறித்த அவனது எண்ணங்களையும், பாதித்த புத்தகங்கள், ஆளுமைகள் பற்றியும் பகிர்ந்து கொள்வதால் வாசகர்களுக்கு எழுத்தாளரையும் அவரது படைப்புகளையும் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுகிறது. குறிப்பாக இளம் படைப்பாளிகளுக்கு எழுத்தின் நுட்பங்களையும் ரகசியங்களையும் கற்றுத் தருகிறது.

நேர்காணலை சிறிய ரிக்கார்டர் மூலம் பதிவு செய்து எழுதுவதால் ஒரு வார்த்தை கூட மாறிவிட வாய்ப்பிருப்பதில்லை. இதில் இடம்பெற்றுள்ள பலரும் நோபல் பரிசு பெற்றவர்கள். ஆனால் இந்த பரிசைப் பெறுவதற்கு முன்பு நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்போது நோபல் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில்கள் வியப்பளிக்கின்றன.

Poetry existed before writing. Essentially, it is a verbal art, that enters us not only through our eyes and understanding but through our ears as well. Poetry is something spoken and heard. It’s also something we see and write. என்று ஆக்டோவியோ பாஸ் தனது ஒரு பதிலில் கூறுகிறார்

இது போலவே மரியோ வர்காஸ் லோசாவிடம் கேட்கப்பட்ட கேள்வி .

INTERVIEWER: Do you choose the subjects of your books or do they choose you?

VARGAS LLOSA: As far as I’m concerned, I believe the subject chooses the writer. I’ve always had the feeling that certain stories imposed themselves on me; I couldn’t ignore them, because in some obscure way, they related to some kind of fundamental experience—I can’t teally say how.

இது கவிஞர் ராபர்ட் பிராஸ்டின் பதில்

Frost: I never write except with a writing board. I’ve never had a table in my life. And I use all sorts of things. Write on the sole of my shoe.

•••••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2023 05:45

November 22, 2023

இரண்டு பயணங்கள்

நிலம் கேட்டது கடல் சொன்னது வாசிப்பனுபவம்

மீ. சித்ரா ராஜம்.

ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது ,புல்லினும் சிறியது ஆகிய இரண்டு பெரிய கட்டுரைகளை உடையது இந்த நூல். தேசாந்திரியான எஸ்.ரா ஜப்பானியப் பயணத்தின் போது தான் கண்ட ஹிரோஷிமாவையும், ஹீரோஷிமாவின் மீது குண்டுமழை பொழிந்து நிர்மூலமாக்கிய அமெரிக்காவின் வால்டன் குளத்தோடு இயைந்த தோரோவின் இயற்கை வாழ்வியலையும் நம்மோடு பகிர்கிறார்.

ஜப்பானிய மக்களின் நன்றி தெரிவித்தல், பொது இடங்களில் நடக்கும் பண்பு, தேசப்பற்று, மொழிப்பற்று ஆகிய விழுமியங்களை விளக்குகிறார்.

1252ஆம் ஆண்டுச் செய்யப்பட்ட kamakura diabutsu என்ற வெண்கலச்சிலை , Hasedara கோவில் ஆகியவற்றில் தனது மனது விம்மிய அனுபவங்களை நமக்கும் கடத்துகிறார்.

ஜப்பானின் முக்கியப் பிரச்சனை தற்கொலை. மன வெறுமை தாங்காமல் திங்கள்கிழமை அலுவலகம் கிளம்பும் காலை 8 மணி அளவில் யாரோ ஒருவர் மின்சார ரயிலின் முன்னே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். தனது இறப்பின் வழியே அர்த்தமற்ற இந்த நகர வாழ்க்கையைச் சற்று நேரம் நிறுத்தி வைத்த சந்தோஷம் இந்த மனிதனுக்குக் கிடைக்கிறதாம்.

“நான் மூச்சு விடுகையில் மார்பிலிருந்து வரும் சத்தம் தனிமையானதாக இருக்கிறது

குளிர் காற்றை விடவும்”

தகுபொகு இஷிகாவா என்ற ஜப்பானியக் கவிஞரின் கவிதையை எனக்கு ஞாபகப்படுத்தியது.

ஜப்பானிய வரலாற்றின் ரத்தம் சொட்டிய பக்கங்கள் , ஜப்பான் பேரரசரை மக்கள் கடவுளாகக் கருதுவது, ஜப்பானியர்களின் இயற்கை வழிபாடு,அனமி என்ற சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தைக் கொண்டாடும் விழா ,ஜப்பானியரின் ரயில் பயணங்கள் ,அவர்களின் உணவு முறைகள் , இரண்டாம் உலகப் போரில் யுத்த விதிகளை மீறிய ஜப்பான் எனப் பல தகவல்களை நமக்குச் சுவாரசியமாகச் சொல்கிறார்.

சாமுராய்கள் எதிரிகளிடம் சிக்கினால் Harakiri என்ற முறையில் Tanto கத்தியைக் கொண்டு இடமிருந்து வலமாக வயிற்றில் வெட்டி இறந்து போகிறார்களாம்.

நம் நாட்டிலும் போர்களில் அரசனுக்காகத் தன்னைப் பலி கொடுத்தவர்கள் வீரர்களாகப் போற்றப்பட்டார்கள். நம் தமிழ்நாட்டில் கூட நவகண்டம் என்னும் பெயரில் தன்னைப் பலி கொடுத்தவர்கள் உண்டு என்ற செய்தி நினைவுக்கு வந்தது. சமூக நோக்கத்தோடு தற்கொலை செய்து கொண்டவர்களைப் போற்றிப் புகழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் இருக்கிறது.ஆனால் ஒரு கூட்டுநன்மைக்காகத் தற்கொலை செய்து கொண்டவர்களில் இருந்து இன்று உறவுச் சிக்கல்களால் தனிமையால் தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம்.

ஹிரோஷிமாவில் போடப்பட்ட லிட்டில் பாய், நாகசாகியில் போடப்பட்ட ஃபேட்மேன் அணுகுண்டுகள் பற்றிய செய்திகள் ,சந்தோஷமாக விடிந்த காலை ,மக்களைத் துயரத்தின் விளிம்பிற்குத் தள்ளிய கோரம், தீப்பற்றி எரியும் உடலுடன் அலறியபடியே ஓடிய மக்கள்,அணுக்கதிர் பாதிப்பினால் நான்கு தலைமுறைகளாக ஊனமாகப் பிறக்கும் குழந்தைகள் ,ஹிரோஷிமாவை மீட்டெடுத்த மக்கள் உழைப்பின் உன்னதம்,அணு வீச்சில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களும் வாழ்நாள் முழுவதும் வலியால் துடிக்கும் அவலம் இவற்றை எஸ்.ரா விவரிக்கும் பொழுது நம்மை அறியாமல் கண் கலங்குகிறது.

ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹிரோஷிமா சமாதான நினைவகத்தில்(Hiroshima Peace Memorial) எறியும் அணையாத தீபம், சமாதானத்தைச் சொல்லும் மணி , அணு விபத்து குறித்த மாபெரும் காட்சிக்கூடம் ஆகியவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அணு விபத்தினால் பாதிக்கப்பட்டு டஞ்சோ எனப்படும் காகிதக் கொக்குகளைச் செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம் என்று நம்பிய சடாகோ சசாக்கி என்ற சிறுமியின் நினைவிடம்,அணுவீச்சுக்கு உள்ளாகி சிதிலமான கோள வடிவ கட்டிடம், குண்டுவெடிப்புக்கு முன்பான ஹீரோஷிமாவின் காட்சி அமைப்பு ,ஆகஸ்ட் 6 காலை 8 :15 க்கு உறைந்து போன கடிகாரம் ,உடல் உருகி கரிந்து கரிக்கட்டை போலான உடல்கள்,அணு விபத்தில் உடைந்தும் சிதறியும் கருகியும் போன பொருட்கள் போரின் கோரத்தாண்டவத்தைக் காட்சிப்படுத்துகின்றன.

நினைவகத்தைப் பார்வையிட்ட நாள் மற்றும் நேரத்தை தனது புத்தகங்களில் அங்குள்ள அரக்க சீல் கொண்டு எஸ்.ரா பதித்துக் கொள்ளும் பொழுது அவரின் வார்த்தைகளின் வழி அவரோடு பயணித்த நமது மனங்களிலும் அக்கணம் கனமாகப் பதிகிறது.

சமாதானத்தின் அடையாளமாக அங்கே அடிக்கப்படும் மணி நமது மனங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

புல்லினும் சிறியது என்ற இந்தக் கட்டுரையும் முதல் கட்டுரை போலவே மிகவும் ஆழமானது.காந்தியின் குருவான Henry David Thoreau இயற்கையோடு இணைந்த தனது அனுபவங்களை Walden or life in the woods என்ற புத்தகமாக எழுதியுள்ளார்.தோரோவின் எழுத்தின் வழியே வால்டர் குளம் உலகப் புகழ் பெற்றிருக்கிறது. தோரோவின் வீடு அவருடைய நினைவுப் பொருட்களோடு பராமரிக்கப்படுகிறது. தோரோவின் இளமைக் காலம்,எல்லன் என்ற பெண் மேல் வந்த காதல் , எமர்சன் உடனான அவருடைய நட்பும் விலக்கமும், தோரோவின் வீட்டுச் சூழல், இயற்கையோடு இயைந்த அவரது தற்சார்பு வாழ்வியல்,நடைப்பயிற்சி ஒரு மெய்த்தேடலாக ,ஒரு தியானமாகப் பரிணமிக்கும் நயம் எல்லாவற்றையும் சுவாரசியமாகச் சொல்கிறார் எஸ்.ரா.

எழுத்தாளர் சுந்தர ராமசாமி,புத்தர் ,காந்தி,J.K இவர்கள் நடையைப் பற்றிய தகவல்களும் புத்தகத்தில் உண்டு.

நடத்தல் ஒரு பிரார்த்தனை. வெர்னர் ஹெர்சாக் என்ற புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் தனது தோழியும் திரைப்பட ஆராய்ச்சியாளருமான லோட்டி எய்ஸ்னர் 78 வயதில் பாரிஸில் மரணப்படுக்கையில் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து அவர் நலம் பெற ம்யூனிச் நகரில் இருந்து பாரிஸ் வரை நடந்தே வந்திருக்கிறார். அந்த மூன்று வார கால அனுபவத்தை “ஆஃப் வாக்கிங் இன் ஐஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார் .நட்பின் வலிமை எத்தகையது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.சிறப்பு என்னவென்றால் ஹெர்சாக்கின் நடைபயணம் லோட்டி எய்ஸ்னருக்குப் புதுவாழ்வு தந்து தனது 87 வது வயது வரை அவர் உயிர் வாழ்ந்தார்.இதைப் படிக்கும் பொழுது பிரார்த்தனைக்காகத் திருப்பதி, பழனி போன்ற கோவில்களுக்கு நடந்து செல்வது நம் நாட்டிலும் மரபாய் இருப்பது நினைவுக்கு வந்தது.

உலகெங்கிலும் உளவியல் சிக்கல்களைப் போலவே மானுட நம்பிக்கைகளும் அன்பும் ஒன்றுதான் என்ற நியதி இதன் மூலம் நமக்குப் புரிபடுகிறது. நடை நம் ஆரோக்கியத்திற்கான மருந்து மட்டுமல்ல ஆன்மாவிற்கான மருந்தும் கூட.

இயற்கை முன்பு மானுட வாழ்க்கை புல்லினும் சிறியது என்பதை நம்மையும் உணரச் செய்யும் அருமையான கட்டுரை.

எஸ்ராவின் எல்லாப் படைப்புகளைப் போலவே இந்தப் புத்தகத்திலும் old path white clouds: walking in the foot steps of Buddha -Thich Nhat Hanh ,Walking -thoreau,Sadako and the thousand paper cranes,Hiroshima போன்ற புத்தகப் பரிந்துரைகளும்

The bridge on the river kwai,seven samurai,kagemusha, Way போன்ற சுவாரசியமான திரைப்படப் பரிந்துரைகளும் உண்டு.

இந்த இரு பயணக் கட்டுரைகள் மூலம் கால இயந்திரத்தில் ஏற்றி யுத்த கால ஹிரோஷிமாவிற்கும் தோரோவின் வால்டனுக்கும் நம்மைக் கூட்டிச் செல்கிறார் தேசாந்திரி எஸ்.ரா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 22, 2023 06:08

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.