S. Ramakrishnan's Blog, page 47
November 8, 2023
எலியின் பாஸ்வேர்ட் – ஆங்கிலத்தில்
எலியின் பாஸ்வேர்ட் என்ற எனது சிறார் நூலை சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.

தூத்துக்குடியில்
தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் பொன். மாரியப்பன் மாவட்ட மைய நூலகத்துடன் இணைந்து வாசகர் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார்.
தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
நவம்பர் 19 ஞாயிறு மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.


November 7, 2023
அ.கி.கோபாலன்
முனைவர் மு.வளர்மதி எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் நூலில் அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது
••


வங்க மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் அ.கி.ஜெயராமன் . இவர் சரத்சந்திரரின் நூல்களை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1941 ல் அ.கி. ஜெயராமன் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.
அ.கி. ஜெயராமனின் உடன் பிறந்த சகோதரர் அ.கி.கோபாலன் . இவர் நோபல் பரிசு பெற்ற படைப்புகளைத் தமிழில் வெளியிடுவதற்கென்று ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார், அதன் பெயர் தமிழ்ச்சுடர் நிலையம்
அ.கி. ஜெயராமன் முதலில் சென்னைக்கு வந்து உணவகம் ஒன்றில் சர்வராகச் சேர்ந்து பணியாற்றினார். டி.எஸ். சொக்கலிங்கத்தின் நட்பால் நிறைய நூல்களையும் , இதழ்களையும் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார் . இவருடைய சகோதரரான அ.கி.கோபாலனும் சில காலம் உணவகம் ஒன்றில் பணியாற்றிய பிறகு நவயுகப் பிரசுராலாயத்தின் புத்தகங்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டார் .
1942 ஆம் ஆண்டின் இறுதியில் திருவல்லிக்கேணியில் ஜோதி புக் ஸ்டால் தொடங்கினார் அங்கே பல்வேறு இலக்கிய இதழ்கள் விற்கப்பட்டன. அதை வாங்க வரும் எழுத்தாளர்களுடன் கோபாலனுக்கு நெருக்கமான நட்பு ஏற்படவே, ஜோதி புக் ஸ்டால் இலக்கிய மையமாக உருமாறியது.. இந்த நட்பே பின்னாளில் அவர் பதிப்பகம் தொடங்கி நடத்தக் காரணமாக அமைந்தது
ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி 1947 நள்ளிரவு 12 மணிக்கு நாடு சுதந்திரமடைந்தபோது , தமிழ்ச்சுடர் நிலையம் பதிப்பகம் துவங்கப்பட்டது.
சர்வதேசக் கதைகள் எனும் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டின் புகழ்பெற்ற கதைகள் அல்லது நோபல் பரிசு பெற்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து ஜோதி நிலைய வெளியீடாக வெளியிட்டு வந்தார்கள்.
இந்தப் பதிப்பு முயற்சிகளைப் பற்றிக் கோபாலன் இப்படிக் கூறுகிறார்.
“புத்தகங்கள் பதிப்பிக்கும் போது கடன் வாங்கித்தான் பப்ளிஷ் செய்தேன் . பேப்பர் வாங்குமிடத்தில், அச்சடிக்கும் அச்சகத்தில் கடன் .. பிராட்வேயில் இருக்கும் தாம்ஸன்பிரஸ்ஸில் தான் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. மொழிபெயர்ப்பு நாவல்கள் நிறையப் போட்டேன் . குறிப்பாக நோபல் பரிசு பெற்ற நாவல்கள் . இதற்கெல்லாம் காரணமானவர் க.நா.சு. சிறந்த வெளிநாட்டு இலக்கியங்கள் எடுத்துச் சொன்னவர் அவர்தான் . இருவருமாகச் சேர்ந்து ஹிக்கின்பாதம்ஸ் செல்வோம் வருஷத்திற்கு மூன்று முறை தான் அங்கு நோபல் பரிசு நாவல்கள் பார்சலில் வரும் . எங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவோம்
ஒரு பக்கம் மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தால் ஒரு ரூபாய் என்று பேசிக் கொண்டு மொழிபெயர்ப்புப் பணிகளைத் துவங்கினோம் . க,நா.சு . வெ. சந்தானம் , ரத்தினம் ஆகியோரும் த.நா.குமாரசாமி , த.நா. சேனாபதி- தி.ஜானகிராமன் போன்றோரும் மொழிபெயர்ப்புச் செய்து கொடுத்தார்கள்.
அந்தக் காலத்தில் அன்னாகரீனா நாவலை பரிசுப்பதிப்பாக வெளியிட்டோம். அன்னா கரீனா 800 பக்கங்கள் . விலை ஏழு ரூபாய் , எட்டணா. பரிசுப்பதிப்பு இரண்டு தனி வால்யூம்கள் சேர்ந்து விலை ரூ 12.க்கு விற்கப்பட்டது.
நார்வே நாட்டு நாவலான ‘நிலவளம் ‘, அன்பு வழி ( ஸ்வீடிஷ் ), தபால்காரன் , தாசியும் , தபசியும் (பிரஞ்சு), அன்னாகரீனா, புத்துயிர் , ரோம் நகரப் பெண் ( இத்தாலி அன்னை (ருஷ்யா ), சித்தார்த்தன் ( ஜெர்மன் ), கடலும் கிழவனும் , திமிங்கில வேட்டை , அவமானச் சின்னம் ( அமெரிக்கா)….போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களை வெளியிட்டிருக்கிறோம்.
‘இறவாத புகழுடைய நூல்களும் நோபல் பரிசு நாவல்களும் ‘ என்று விளம்பரம் செய்வோம்…
பெரிய பெரிய வால்யூம்களாகப் புத்தகம் இருக்கும் . ஆனால் தூக்கிப் பார்த்தால் கனமாக இருக்காது . ஆன்டிக்’ பேப்பர் அல்லது ஃபெதர் பேப்பர் என்று சொல்வார்கள் . அந்த மெல்லிய தாளில் அச்சிட்டேன்“. என்று கோபாலன் குறிப்பிடுகிறார்.
••
இத்தனை அரிய நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்த அ.கி.கோபாலனின் சிறிய புகைப்படம் கூடக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஏதாவது பழைய இலக்கிய இதழ்களில் அவரது புகைப்படம் கிடைத்தால் அதை இணையத்தில் பகிர வேண்டுகிறேன்.

நன்றி
தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள்
முனைவர் மு.வளர்மதி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
November 6, 2023
சொல் தரும் வெளிச்சம்
கனடாவில் வசிக்கும் நாடகக் கலைஞர், கல்வியாளர், க. நவம் 54 ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து எனினும் நான் எழுகின்றேன் என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார்.

இந்தக் கவிதைகளின் பொதுத்தன்மையாக இருப்பது சுதந்திர வேட்கையும் சமாதானத்திற்கான குரலுமாகும். லாங்ஸ்ரன் ஹியூஸ் துவங்கி யாங் வான் லி வரையான சிறந்த கவிஞர்களின் முக்கியக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்வது மிகவும் சவாலானது. கவிதையில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை அளிக்கிறது. அதற்கு நிகரான தமிழ்சொல்லைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.
நவம் கவிதைகளை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். புலம் பெயர்ந்து வாழுபவர் என்பதால் வாழ்வின் துயரை, வலிகளை வெளிப்படுத்தும் கவிதைகளையே அதிகம் தேர்வு செய்திருக்கிறார். ஆயினும் அந்தக் கவிதைகளில் மாற்றத்திற்கான நம்பிக்கையும் புது வெளிச்சமும் காணக்கிடைக்கின்றன.

May Mad March days
bring a change of fortune
என்ற கவிதை வரிகளை நவம் இப்படி மொழிபெயர்க்கிறார்
மனம் பிசகிய மார்ச் மாதநாட்கள்
சிலருக்கு
அதிர்ஷ்டத்தைத் தரக்கூடும்
எவ்வளவு அழகாக மனம்பிசகிய என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார் பாருங்கள். மொழிபெயர்ப்பை வியக்கும் அதே தருணத்தில் தமிழ்மொழி எவ்வளவு நுண்மையான சொற்களைக் கொண்டிருக்கிறது என்றும் வியந்து போனேன்.
இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை நெயோமி ஷிஹப் நைமி எழுதியது
அராபியர்கள் சொல்வார்கள்
அந்நியன் ஒருவன்
உங்கள் வாசலில் தோன்றுகையில்
அவனுக்கு மூன்று நாள் உணவூட்டுங்கள்
அவன் யாரெனவும்
எங்கிருந்து வருகிறானெனவும்
எங்குச் செல்கிறானெனவும் வினவும் முன்னர்.
அப்போது தான்
அவன் விடையளிக்க
போதுமான தெம்பு பெறுவான்
அல்லது
அதற்குள் நீங்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிடுவீர்கள்
அதனைப் பொருட்படுத்தாத அளவுக்கு,
நாம் அதற்கே திரும்பிப் போவோம்
சோறா ? பைன் மர விதையா ?
இதோ
செஞ்சரிகைப் பட்டுத் தலையணையை எடுத்துக் கொள்
என் பிள்ளை உனது குதிரைக்குத்
தண்ணீர் பரிமாறுவான்
••
இந்தக் கவிதை விவரிக்கும் நட்புணர்வும் அன்பும் நம் காலத்திற்குத் தேவையானது. மூலத்திற்கு மிக நெருக்கமாக, அதே கவித்துவ மொழியோடு தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
Strength என்ற சொல்லுக்கு வலிமை வலு, சக்தி, பலம். என்று பல்வேறு பொருள் தருகிறது அகராதி. நவம் கவிதைக்குப் பொருத்தமாகத் தெம்பு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அவருக்குள் ஒரு கவிஞன் இருப்பதன் அடையாளமாகவே இந்த மொழிபெயர்ப்பைக் காணுகிறேன்.
நூலை மிகவும் அழகாகத் தயாரித்திருக்கிறார்கள் . நான்காவது பரிமாணம் இதனை வெளியிட்டிருக்கிறது. கவிதைகளின் ஆங்கில மூலத்தையும் கொடுத்திருப்பது பாராட்டிற்குரியது.
சிறந்த கவிதைகளைத் தேர்வு செய்து நேர்த்தியாக மொழியாக்கம் செய்துள்ள நவத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
••
வாழ்வின் அர்த்தம்.
மீ. சித்ரா ராஜம்
புத்தகம் : முறிந்த பாலம் ஆசிரியர் : தோர்ன்டன் ஒயில்டெர்
தமிழாக்கம் : ரா . நடராசன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 144

தோர்ன்டன் வைல்டரின் காலத்தை விஞ்சிய செவ்வியல் படைப்பான, “தி பிரிட்ஜ் ஆஃப் சான் லூயிஸ் ரே” யின் தமிழாக்கம் ‘ முறிந்த பாலம்’. என் ஆதர்ச எழுத்தாளர் எஸ்.ரா வின் பரிந்துரையின் பேரில் இப்புத்தகத்தை நான் படித்தேன்.
எந்த மொழியானாலும், இனமானாலும், காலகட்டமானாலும் மானுடத்தின் அடிப்படை பிரச்சனைகள், மனோவியல், அவை எழுப்பும் கேள்விகள் எல்லாம் ஒன்றுதான்.
மனித விதி மற்றும் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மானுடத்தின் ஆழமான நுணுக்கங்களை ஆராயும் ஒரு தலைசிறந்த இலக்கிய படைப்பு முறிந்த பாலம். 18 ஆம் நூற்றாண்டில் பெரு நாட்டின் பிண்ணனியில் அமைக்கப்பட்ட இந்த நாவல், சான் லூயிஸ் ரே பாலம் முறிந்த சோகத்துடன் தொடங்குகிறது.
வைல்டர் முறிந்த பாலத்தின் வழியாக 18 ஆம் நூற்றாண்டின் லிமா நகரத்தை முழுமையாக உயிர்ப்பிக்கிறார்.லிமா ஸ்பானிஷ் நாடகம் மற்றும் இலக்கியத்துடன் துடிப்பான நகரமாக இருக்கிறது.
கஸ்கோவையும் லிமாவையும் இணைக்கும் பாலம் முறிந்ததின் விளைவாக அதைக் கடக்கும் ஐந்து நபர்கள் இறந்து போகிறார்கள். துறவியான சகோதரர் ஜூனிபர், இந்த குறிப்பிட்ட மக்கள் மட்டும் ஏன் இத்தகைய விதியைச் சந்தித்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள , விதியின் மர்மமான செயல்பாடுகளை அவிழ்ப்பதற்கானத் தேடலைத் தொடங்குகிறார்.
வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய ஒரு பரந்த தத்துவ விசாரணையை இப்புத்தகம் பிரதிபலிக்கிறது.
டோனா மரியா, டோனா கிளாரா, பெபிட்டா,பையோ மாமன் , எஸ்டெபன் , மான்யு வெல், கேப்டன் அல்வாரடோ, துறவியம்மா, பெரிச்சோல் போன்ற கவனமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம், வைல்டர் மனித இயல்பின் சிக்கலான அடுக்குகளை ஆராய்ந்து, அவர்களின் பாதிப்புகள், ஆசைகள், அன்பு மற்றும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறார்.
வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாதது போன்ற இவர்களின் மாய வாழ்க்கை எப்படி நுட்பமான மற்றும் ஆழமான வழிகளில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறார். வாழ்க்கையில் தனிப்பட்ட அர்த்தம் இல்லை, மற்றவர்களுடனான நமது தொடர்புகளில் மட்டுமே அர்த்தம் உள்ளது,நம் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இப்புத்தகம் நமக்கு நினைவூட்டுகிறது. என்னில் நீடித்தத் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம்.
கதை ஒரு நேர் கோட்டில் தொடரவில்லை,முக்கியப் புள்ளியான பாலத்தைச் சுற்றி வட்டங்களில் சுழல்கிறது. ஒரு கதாபாத்திரத்தின் உள் உரையாடல்களின் வழியே கதை மாந்தர்கள் இணைக்கப்பட்டுள்ள உத்தி சிறப்பாக உள்ளது.
பெற்ற மகளான டோனா கிளாரா தாயின் அளவுக்கதிமான அன்பை வெறுக்கிறாள். அவளுக்கு டோனா மேரியா எழுதும் கடிதங்கள் நிராகரி கரிகப்பட்ட அன்பின் சாட்சியாக பொலிகின்றன.மகளின் அன்புக்காக ஏங்கும் டோனா மேரியா, பெண்கள் தம் தாய்மாரை விரும்புகின்ற விண்ணுலகத்தை தனக்கு அளிக்குமாறு கடவுளிடம் வேண்டி நின்றாள்.மகளுக்கு கடிதம் எழுதும் நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் மது அருந்தி தன்னை மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் டோனாமேரியா.
தன் மகள் கர்ப்பமுற்றிருக்கிறாள் என அறிந்து கிளக்கம்பக்குவா நகரத்துக்கு புனித யாத்திரை போகிறாள்.தனக்கு உதவிகரமாக இருக்கும் சிறுமி பெப்பிட்டாவின் தன்னை வளர்த்த டெல்பிலார் அம்மையாருக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்து அதில் உள்ள உள்ளார்ந்த போலித்தனமற்ற அன்பை தரிசித்து மனம் மாறுகிறாள்.அடுத்த இரண்டு நாட்களில் கிளக்சம்பக்குவாவில் இருந்து லிமா நகருக்கு திரும்பும் சமயத்தில் தான் பாலம் உடைந்து இருவரும் மரணித்துப் போகிறார்கள்.
மான்யுவெல்லும் எஸ்தெபனும் ரெட்டையர்கள். தாய் தந்தை இல்லாதவர்கள். இருவருக்கும் இடையே பேசாமலேயே புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அலாதியான பிணைப்பு இருக்கிறது .மான்யுவெல் பெரிச்சோல் என்னும் நாடகமாது மேல் ஈர்ப்புக் கொள்கிறான் .இது தன்னையும் மான்யு வெல்லையும் பிரித்து விடும் என்று எஸ்தபென் வருத்தமுறுகிறான்.மான்யுவெல் அடிபட்டு சிகிச்சை பெறும் அரை மயக்க நிலையில் அவன் மனம் எஸ்தபனுக்கும் பெரிச்சோலுக்கும் இடையே அல்லாடுவதையும் அவன் உதிர்க்கும் வார்த்தைகள் எஸ்தபெனைக் காயப்படுத்துவதையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர். தன்னை விட்டு வெகு தூரம் சென்று விடுவானோ என அஞ்சி மான்யுவெல் எஸ்தபனைப் பிடித்து அணைத்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறான். தமையனுக்காக பெரிச்சோலை வர சொல்லலாமா அதனால் அவன் மனம் சாந்தமடையுமா என்று எண்ணுகிறான் எஸ்த பென்.குணமடையாமல் மான்யுவெல் இறந்துவிட மனப்பிறழ்ச்சியுறுகிறான் எஸ்தபன். எல்லோரிடத்திலும் தன்னை மான்யுவெல் ஆகவே வெளிக்காட்டி கொள்கிறான் . தங்கள் மீது அன்பாயிருந்த அல்வராடோ மாலுமியிடம் மட்டும் தன் பெயரைச் சொல்கிறான்.அவருடன் லிமாவிற்கு கிளம்பிப் போகும் போது பாலம் விழுந்து இறந்து போகிறான்.
என்னை மிகவும் பாதித்த கதை இது. காதலைக் கொண்டாடும் கதைகளுக்கு இடையில் இரு சகோதரர்களுக்கான அன்பை , அவர்கள் பிறர் அன்பிற்காக ஏங்குவதை, தமக்கு கிட்டாத அன்பை அவர்கள் பிறர் மீது காட்டுவதை , தம்மை வளர்த்த தலைமை துறவி அம்மையின் இழப்பை புரிந்து கொள்ளும் நல்மனதை, தற்கொலைக்கு முயலும் வலியை, தமையனை இழந்து இரவு தூங்கவே முடியாமல் ,உழைப்பின் மூலமாக தன்னை கரைத்து கொள்ள முயலும் தவிப்பை என இக்கதை நுட்பமாய் விவரிப்பது ஏராளம்.நான் தனியாக இருக்கிறேன் தனியாக இருக்கிறேன் தனியாக இருக்கிறேன் என்ற எஸ்தபனின் அலறல் என் காதுகளில் ஒலிக்கிறது. நம்மை நாமே கொல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். நமக்கு அக் காரியம் செய்ய அனுமதி கிடையாது . ஆனால் தீப்பிடித்து எரிகிற வீட்டில் குதித்தால் அது தற்கொலையாகாது என்று தன் தமையன் இறந்தபின் பிறரை காப்பாற்றும் போர்வையில் தற்கொலைக்கும் முயல்கிறான் எஸ்த பென்.கண் பூக்காமல் , மனம் கனக்காமல் இக்கதையைக் கடக்க முடியவில்லை. ஒரு அமைதியையும் அமைதியின்மையையும் ஒருங்கே தந்த சித்தரிப்பு இது.
பையோ மாமனுக்கும் பெரிச்சோலுக்குமான உறவு விசித்திரமானது. கலைகள் இடத்து மாறாத பற்று கொண்ட பயோ மாமன் நாடகக் கணிகை பெரிச்சோலின் புறக்கணிப்பையும் மீறி அவளிடம் மிகுந்த அன்பு கொண்டிருக்கிறான்.அவளுடைய மகனான நோய்வாய்பட்ட டான் ஜெய்மியை வளர்க்கும் பொறுப்பை ஏற்று லிமா நகரத்திற்குச் செல்லும் வழியில் பாலம் உடைந்து இருவரும் இறந்து போகிறார்கள்.
ஆறு வருடங்கள் ஆராய்ந்து ஜூனிப்பர் துறவி வெளியிட்ட புத்தகம் மதவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு புத்தகத்தோடு எரிக்கப்படுகிறார். இவர்கள் எல்லோருடைய மரணமுமே அவரவர்களுக்கான விடுதலை என்பதை நம்மால் உணர முடிகிறது.
தப்பிப்பிழைத்து இழப்பின் துக்கங்களை உணரும் கதாபாத்திரங்கள் அழுத்தமானவை. அவர்களின் ஆழமான மனமாற்றத்தின் தருணங்களை புரிந்து கொள்ள முடிகிறது.டோனா கிளாரா தன் தாயின் அன்பை உணர்கிறாள். பெரிச்சோல் பையோ மாமனின் மாசற்ற அன்பை நினைத்து வருந்துகிறாள். துறவியம்மை பெபிட்டாவையும் எஸ்த பெனையும் நினைக்கிறாள். ஒருவர் மீதுள்ள வெறுப்போ, காட்டப்படாத அன்போ அவர்களின் மரணத்திற்கு பிறகு பேரன்பாக மாறி இருப்போரை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குகிறது. இது நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும், பிறர் நம்மை நடத்தும் விதத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டியதின் அவசியத்தை சிந்திக்க வைக்கிறது.
விரைவில் நாம் பூமியை விட்டு வெளியேறிவிடுவோம் சிறிது நேரம் நேசிக்கப்படுவோம், மறக்கப்படுவோம். ஆனால் அன்பு போதுமானதாக இருந்திருக்கும். வாழ்வோரின் உலகத்திற்கும் இறந்தவர்களின் உலகத்திற்கும் இணைப்பு பாலம் அன்பு மட்டுமே. வாழ்வின் பொருளே அன்பு தான் என்ற துறவியம்மையின் கூற்றோடு இக்கதை நிறைகிறது. வாழ்க்கை மற்றும் இறப்பு, விதியின் கணிக்க முடியாத தன்மை மற்றும் சுதந்திர விருப்பத்தின் (Free Will) அடிப்படை கேள்விகள் , மனிதஅனுபவத்தின் விவரிக்க முடியாத தன்மை ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்க வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது இப்புத்தகம். வைல்டரின் நேர்த்தியான உரைநடை, மற்றும் கவிதையான விவரிப்பு மானுடத்தைப் பிணைக்கும் சிக்கலான இணைப்புகளின் ஓவியத்தை வாசகர்களையே வரையத் தூண்டுகிறது.இரக்கம், பச்சாதாபம் , அன்பு மற்றும் மற்றவர்களுடன் நாம் வளர்க்கும் உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் இந்த இணைப்புகள் நாம் ஆரம்பத்தில் உணர்வது போல் இல்லாமல் ஆழமாக இருக்கிறது.அன்பு, இழப்பு மற்றும் விதி ஒன்றாக இணைந்த வாழ்க்கையின் சிக்கலான திரைச்சீலையைப் மெதுவாக அகற்றி நம் அகத்தைத் திறக்கிறது.
நம் வாழ்க்கையை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தனிப்பட்டதாகவும் உணரும் நாம் உண்மையில், ஒருபோதும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத வழிகளில் மற்றவர்களுடன் இணைந்திருக்கிறோம் என்ற உண்மையை மலர்த்துகிறது.
நமது பயணத்தை வழிநடத்தும் புள்ளியை நோக்கிய தேடலுக்கும், வாழ்க்கை மற்றும் உறவுகளின் உள் அர்த்தங்களை உணர்வதற்கும், உள்ளார்ந்த சுய பிரதிபலிப்புக்கும் தூண்டும் மகத்தான படைப்பு.
நன்றி : வாசிப்பை நேசிப்போம்
November 5, 2023
அவரது நாட்கள்
இந்து தமிழ் தீபாவளி மலர் 2023ல் வெளியாகியுள்ள எனது சிறுகதை அவரது நாட்கள் குறித்து சிறந்த அறிமுகவுரையை வழங்கியுள்ளார் அஞ்சனா. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
விமர்சனம்
ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள எனது சிறுகதை தொகுப்பிற்கான மதிப்பீடு

The Man Who Walked Backwards and Other Stories
Divya Shankar
I love the little randomness that a collection of stories, in most cases, grants me. When I began this collection with the 13th story from a total of 18 stories, I didn’t know my first impression would be strong enough, lasting beyond the moment to pull me easily through the whole book. Maybe it’s the story’s title ‘The Rain Diary’ that won my attention because I wanted to read about the rain that evaded my city during this monsoon. Through a conversation between a husband and wife on a rainy day, a myriad of emotions & thoughts that rain evokes in us and the little life lessons it teaches us are delicately outlined in this story which is also about a strained father-son relationship. The man here scrupulously avoids his father’s traits retaining just one of his habits – recording the rainfall meticulously in every city he resides in & maintaining the figures in a diary; this act works as a bridge in their relationship and opens up vital secrets. A certain tenderness is stamped all over in the writing in this story and in many that precede & follow it.
An array of interesting characters here- a woman who swims to vent out her frustration, a man who insists he will marry only in a library, a man who walks backwards with a steely resolve & casual ease, a man who builds a mansion atop a hill for everything but humans to inhabit, a thief whose touch heals dogs and trees, a near-retirement govt office clerk who gets a fresh lease of life observing pigeons – the oddities of these characters are often an expression of their silent protest against the society that forces them to conform to its norms. At times, their protests turn vain and they are cast into the moulds safely set aside for them.
The Man who Walked Backwards and other stories by S Ramakrishnan, translated from Tamil by Prabha Sridevan, portrays ordinary lives that shift a little something in us readers by bringing alive a vague memory or a forgotten twang of pain.
November 3, 2023
கதைகள் நூறு
இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தி

நன்றி
தி இந்து தமிழ் நாளிதழ்
அன்னாவும் அரசரும்.
வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.

மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம்.
சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV என்றும் அழைக்கப்படும் சயாமின் மன்னர் மோங்கட் 1851 முதல் 1868 வரை ஆட்சி செய்தார். படத்தில் சித்தரிக்கப்பட்டது போல அவர் மேற்கத்தியக் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பிரிட்டன். பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தனது அரசாங்க உறவுகளை விரிவுபடுத்தினார்.

மன்னர் குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக வருகிறாள் அன்னா ஓவன்ஸ். கணவனை இழந்த அன்னா தனது மகன் லூயிஸுடன் பாங்காக் வந்தடைகிறாள். துறைமுகத்தில் அவரை வரவேற்க வரும் அமைச்சர் அவள் அரண்மனைக்குள் தங்க வேண்டும் என்கிறார்.
மன்னர் தனக்குத் தனி வீடு ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி தந்திருப்பதாகச் சொல்லி அரண்மனைக்கு வர மறுக்கிறாள் அன்னா. காரணம் தன்னையும் அந்தப்புர பெண்ணாக மாற்றிவிடுவாரோ என்ற பயம்.
இதைக் கேட்ட அமைச்சர் கோவித்துக் கொண்டு போய்விடுகிறார். மறுநாள் அன்னா தானே அரண்மனைக்குச் செல்கிறாள். அமைச்சரிடம் மன்னிப்பு கேட்கிறாள். மன்னரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்கிறாள். அது உடனடியாக இயலாத காரணம் எனும் அமைச்சர் அவளை அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைக்கிறார்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு மன்னரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. தர்பார் மண்டபத்திற்கு அவளை அழைத்துச் செல்லும் போது மன்னரின் முன்பாகச் சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும் என்பதில் துவங்கி மன்னரின் தலைக்கு மேலாக நமது தலை ஒரு போதும் உயர்ந்திருக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விளக்குகிறார்கள். அங்கே அவள் காணும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.
தன்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று அன்னா மறுக்கிறாள். அன்று மன்னர் எவரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அவளைத் தடுத்துவிடுகிறார்கள். ஆனால் அவள் வேகமாக மன்னரின் முன்பாகச் சென்று தான் ஆசிரியர் வேலைக்காக வந்துள்ளதாகச் சொல்கிறாள்.
அவளது தோற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்ட மன்னர் அவளிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அன்னா துடுக்கு தனமாகப் பதில் சொல்கிறாள். அந்தப் பதில்கள் மன்னருக்குப் பிடித்துவிடுகின்றன.
அவளை உடனடியாக வேலையில் சேரும்படி சொல்கிறார். அவளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர உத்தரவிடுகிறார்.

அவள் தனக்குத் தனி வீடு ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். அதை மன்னர் ஏற்க மறுக்கிறார்
மன்னருக்கு நிறைய மனைவிகள். 67 பிள்ளைகள். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க அரண்மனைக்குள்ளே சிறிய பள்ளியைத் துவங்குகிறாள். ஆங்கிலம் பேசத் தெரிந்த ராணி தியாங் அவளுக்கு உதவி செய்கிறாள்.
அரண்மனை வாழ்க்கை என்பது தங்கக் கூண்டில் வசிப்பது போலிருக்கிறது. தனக்குத் தனி வீடு வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறாள். இது மன்னருக்கு எரிச்சலை உருவாக்குகிறது.. மீன் விற்கும் சந்தையில் மோசமான ஒரு வீட்டை ஒதுக்கித் தருகிறார். அதற்கு அரண்மனையே பரவாயில்லை என்று அன்னா அங்கேயே தங்கிக் கொள்கிறாள்.
சயாம் மன்னர் மோங்கட் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். உலக மாற்றங்கள் யாவையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். நிறையப் படிக்கக் கூடியவர். அவர் தான் படித்த விஷயங்கள் குறித்து அன்னாவிடம் விவாதிக்கிறார். அவள் தைரியமாக மன்னரோடு உரையாடுகிறாள். அவருக்குப் பிடிக்காத விஷயங்களைக் கூட வெளிப்படையாகப் பேசுகிறாள்.ஒரு நாள் அரண்மனையில் அடிமைப்பெண் ஒருத்தி சங்கிலியால் கட்டப்பட்டுத் தண்டிக்கப்படுவதை அன்னா காணுகிறாள். அடிமைப் பெண்ணை விடுவிக்க வேண்டி மன்னரிடம் மன்றாடுகிறாள். அவளை விடுவிக்கக் கூடாது என்று இளையராணி உத்தரவிடுகிறாள். தனது குடும்பப் பிரச்சனையில் அன்னா தலையிடக் கூடாது என்று மன்னரும் கோவித்துக் கொள்கிறார்.
அது அன்னாவினை வேதனைப்படுத்துகிறது. தான் வேலையை விட்டு நின்று விடப்போவதாகச் சொல்கிறாள். மன்னர் அவளது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொண்டு அடிமைப் பெண்ணை விடுதலை செய்கிறார்
சயாம் மன்னர் மோங்கட் நாகரீகமற்றவர். மோசமான ஆட்சி நடத்துகிறவர் என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. தான் அப்படியானவர் இல்லை என்று நிரூபிக்க அரண்மனையில் பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
அதற்காகப் பிரிட்டனிலிருந்து ஆங்கிலக் கனவான்களை அழைக்கிறார். அந்தப்புரத்திலுள்ள தனது மனைவிகளை ஐரோப்பிய பாணியில் ஆடை அணியச் செய்து, மேலைநாட்டுப் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தரும்படி அன்னாவிற்கு உத்தரவிடுகிறார்அந்த விருந்தில் மன்னர் மிகவும் பதற்றமாக நடந்து கொள்கிறார். எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். முள்கரண்டி கத்தி வைத்துச் சாப்பிடுவதற்கு அவர் பழகும் காட்சி வேடிக்கையானது
அன்று சயாம் வரலாற்றுப் பெருமை கொண்ட நாடு, பண்பாட்டில் சிறந்த மன்னர் ஆட்சி செய்கிறார் என்பதை விருந்தினர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
விருந்து வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்த அன்னா அதன்பிறகு மன்னரின் ஆலோசகர் போலச் செயல்படத் துவங்குகிறாள். ஒரு நாள் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் சண்டை போட யானைகள் கிடையாது என்று சொல்கிறாள்
உடனே மன்னர் தனது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு யானைகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லி ஆபிரகாம் லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அவரது அன்பைப் புரிந்து கொண்டு லிங்கனிடமிருந்து நன்றி கடிதம் வருகிறது
தாமஸ் ஆர் டிரவுட்மன் யானைகளும் அரசர்களும் என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார்.( Elephants and Kings: An Environmental History- Trautmann) இந்தியாவில் ஏன் யானைகள் இவ்வளவு புகழ்பெற்றிருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். படத்தில் மோங்கட் அமெரிக்காவிற்கு யானைக்குட்டிகளை அனுப்பி வைக்க நினைக்கும் காட்சியைப் பார்த்தபோது இந்தப் புத்தகமே நினைவிற்கு வந்தது. உண்மையில் படித்தில் வரும் கடிதம் லிங்கனுக்கு எழுதப்பட்டதில்லை. படத்தில் லிங்கன் சொல்வது போன்று வரும் வசனமும் அவர் சொன்னதில்லை.
இளையராணி துப்திம் தனது பழைய காதலனுடன் இப்போதும் நெருங்கிப் பழகுகிறாள் என்பதை அறிந்து கொண்ட மன்னர் அவளைத் தண்டிக்கிறார். அதை அன்னாவால் ஏற்க முடியவில்லை. துப்திமிற்காகப் பரிந்து பேசி மன்னரின் கோபத்திற்கு ஆளாகிறாள். இந்தப் பிரச்சனையில் அவள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.
தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை யாரும் உண்மையாகத் தன்னிடம் தெரிவிப்பதில்லை. அன்னா ஒருத்தியே உண்மையாக நடந்து கொள்கிறாள் என்பதை இறுதியில் மன்னர் உணர்ந்து கொள்கிறார்.
அரங்க அமைப்பும் உடைகளும் அரண்மனை வாசிகளின் இயல்பும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ராணி தியாங் தனது வாழ்க்கையை அடையாளப்படுத்தும் ஓவியங்களை அன்னாவிடம் காட்டி விளக்கும் காட்சி சிறப்பானது.

படத்தில் நம்மைப் பெரிதும் கவருபவர் மன்னர் மோங்கட். அவரது உடை, நடத்தை, பேசும்விதம், செயல்கள் நிஜமான மன்னர் இப்படித்தான் நடந்திருப்பார் என்பது போலிருக்கிறது. Rex Harrison சிறப்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக நள்ளிரவில் அவர் அன்னாவை அழைத்துப் பைபிளில் உள்ள விஷயம் பற்றிய சந்தேகத்தைக் கேட்பது. அமைச்சருடன் தேசத்தின் எதிர்காலம் பற்றி விவாதிப்பது. தான் இறுதியாக அன்னாவின் முன்பு தனது மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொல்வது என மன்னர் மோங்கட் மறக்க முடியாத கதாபாத்திரமாக ஒளிருகிறார்.
உண்மை சம்பவத்திலிருந்து இந்த நாவலை மார்க்ரெட் லாண்டன் எழுதியிருக்கிறார். நிஜமான அன்னா இந்தியாவைச் சேர்ந்தவர். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண். படத்தில் அவள் இங்கிலாந்தைச் சேர்ந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். வரலாற்று நிகழ்வுகளுடன் நிறையப் புனைவை சேர்த்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
The King and I என்ற பெயரில் இதே படம் 1958ல் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது. 2018ல் The King and I என்று புதிய வடிவில் Gary Halvorson& Bartlett Sher இயக்கத்தில் இசை நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல இடங்களில் பிரிட்டிஷ் மகாராணி மற்றும் இங்கிலாந்தின் பண்பாடு குறித்து பெருமை பேசுகிறது படம். உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவர்கள் தாங்கள் என்று பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள். அது அன்னா வழியாக நிறையவே வெளிப்படுகிறது.
கறுப்பு வெள்ளைப்படங்களுக்கே உரித்தான அழகுடன் சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்தர் மில்லர் அது போலவே அரண்மனை, தர்பார் மண்டபம். சந்தை என அரங்க அமைப்புகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.
வழக்கமான கதை போல மன்னருக்கும் அன்னாவிற்கும் இடையில் காதல் ஏற்படவில்லை. அவள் கடைசி வரை பள்ளி ஆசிரியராகவே இருக்கிறாள். மன்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறார் முடிவில் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். இதுவரை யாரிடமும் எதற்காகவும் மன்னர் மன்னிப்பு கேட்டதில்லை என்கிறார் அமைச்சர். அது தான் அன்னாவின் வெற்றி.
November 2, 2023
இரவுக் காவலாளியின் தனிமை
எனது இரவுக் காவலாளியின் தனிமை சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் டாக்டர் சந்திரமௌலி

S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
