S. Ramakrishnan's Blog, page 51

October 10, 2023

இடக்கை நாவல் குறித்து

எனது இடக்கை நாவல் The Final Solitude என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

ஸீரோ டிகிரி இதனை வெளியிட்டுள்ளது. ப்ரீதம் சக்ரவர்த்தி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த நாவலைப் பாராட்டி OPEN MAGAZINE ல் மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீரா எழுதியுள்ள குறிப்பு

I consider The Final Solitude originally written in Tamil by S Ramakrishnan a bold and ambitious experiment in theme and craft. It is an intelligent effort to illustrate the times we are living in using the stories from a distant past.

இணைப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2023 05:35

October 9, 2023

தனித்த சொற்கள்

ஆலன் பேடன், ஜேம்ஸ் ஜாய்ஸ், யுவான் ருல்ஃபோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், கவிஞர் லி பெய், நாட்சுமே சோசெகி, போஹுமில் ஹரபால், ஹன்னா தியாப்,.ஹென்ரிக் போல், ஃபொ்னான்டோ ஸோரன்டினோ என நீளும் உலக இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தனித்த சொற்கள்.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்த நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியாகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2023 04:49

மகனே உலகம்

ராஜசேகர்

மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலை படித்தேன். ஒரு சிறந்த நாவலை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இந்நாவலை படிக்கும்பொழுது ரஷ்யாவில் வாழ்வது போல உணர்ந்தேன். லியோடால்ஸ்டாய் தவறுகளைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவும் சக மனிதனை நேசிக்கும் ஒரு புனிதராகவும் என் கண் முன்னே நிற்கிறார்.

சோபியா தன் கணவனுக்கும் அவன் காதலிக்கும் நடுவே பாசப் போராளியாக நிமிர்ந்து நிற்கிறாள்.

அக்ஸின்யா தன் மகனுக்கும் காதலனுக்கும் நடுவே உரிமையில்லாத காதலியாக மகனே உலகம் எனும் அவலத்தாயாகப் புதைந்து கிடக்கிறாள்.சோபியாவிற்கும் அக்ஸின்யாவிற்கும் இடையேயான உறவு அதிகார வர்க்கத்திற்கும் பாட்டாளி மக்களுக்குமான பெரும் இடைவெளியாக இருக்கிறது.

திமோஃபி தன் தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் உரிமை கோராத மகனாக மனதில் தங்கிவிடுகிறார். முட்டாள் டிமிட்ரி நமக்கு முட்டாள் இவானை நினைவுபடுத்துகிறார்.

அதிகாரம் ஒரு நன்மையையும் மக்களுக்குச் செய்யாது செய்பவனையும் விடாது என்பது எனக்குப் பிடித்தமான பதிவு. மண்டியிடுங்கள் தந்தையே என்று நினைத்தவனை அவன் தாயின் முன் மண்டியிடச்செய்தது சிறப்பு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2023 04:31

October 8, 2023

தோற்றம் சொல்லாத உண்மை

நான் பார்த்து ரசித்த சர்வதேசத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு தோற்றம் சொல்லாத உண்மை.

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

சென்னையில் டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2023 00:01

October 7, 2023

கவிஞனும் கவிதையும்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கவிஞனும் கவிதையும் என்ற தலைப்பில் வெளியாகிறது

டிசம்பர் 25 அன்று இந்த நூல் வெளியிடப்படுகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் தமிழ் மற்றும் அயல்மொழிக் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 04:30

கடைசி சாட்சியம்.

GORBACHEV. HEAVEN என்ற மிகையில் கோர்பசேவ் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவரது கடைசி வருஷங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆவணப்படம் உலகிற்குத் தேவை என்று ஒரு காட்சியில் அவரே குறிப்பிடுகிறார்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கோர்பசேவ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரது அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து போனது என்றார்கள். இந்த ஆவணப்படத்தில் அவர் குறித்த விமர்சனங்களை நேரடியாகக் கேட்கிறார்கள். மிகவும் வெளிப்படையாகக் கோர்பசேவ் பதில் சொல்கிறார். அதில் வெளிப்படும் உறுதி மற்றும் தனது நிலைப்பாடு மீது கொண்டுள்ள நம்பிக்கை சிறப்பாக வெளிப்படுகிறது.

சோவியத் காலத்தில் கோர்பசேவ் பற்றிச் சித்தரிக்கப்பட்ட பிம்பத்திற்கும் இந்த ஆவணப்படத்திற்கும் நிறைய இடைவெளியிருக்கிறது. மாஸ்கோவிற்கு வெளியே பாதுகாப்பு வேலிகளுக்கு நடுவே உள்ள தனி வீட்டில் சில பணியாளர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பேத்திகள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். ஒன்றிரண்டு உறவினர்கள் மட்டும் தன்னோடு இந்த வீட்டில் இருப்பதாகச் சொல்கிறார். அவரது தோற்றம் கைவிடப்பட்ட கிங் லியரை நினைவுபடுத்துகிறது.

89 வயதான கோர்பசேவ் நடப்பதற்குச் சிரமப்படுகிறார். நிறைய மாத்திரைகளை விழுங்குகிறார். தனது மனைவியின் கல்லறைக்கு அருகே தனக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அவரது தைரியம் மற்றும் உறுதியான குரல் ஆச்சரியமளிக்கிறது. படத்தின் ஒரு இடத்திலும் அவர் சுய இரக்கத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாகக் கட்டளையிடுகிறார். வேடிக்கையாகப் பேசுகிறார். ருசித்து உண்ணுகிறார். உடற்சிரமங்களைத் தாங்கிக் கொண்டு பயணம் செய்கிறார்.

இயக்குநர் விட்டலி மான்ஸ்கியின் குழுவினர் சிறப்பாக அவரது தினசரி வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் கோபத்தில் கெட்டவார்த்தை பேசுகிறார் கோர்பசேவ். அதை அவர்கள் நீக்கவில்லை. அவரே அதை அடுத்த காட்சியில் உணர்ந்து கொண்டும் விடுகிறார்.

கோர்பசேவ் தன் மனதிலிருந்து கவிதைகளைச் சொல்லுவது அழகான காட்சி. இளமை முதலே தனக்குக் கவிதையில் தீவிரமான ஈடுபாடு எனச் சொல்லும் அவர் அன்றாடம் காலையில் முகச்சவரம் செய்து கொள்ளும் போது பாடுவேன் என்று சொல்லி தனக்குப் பிடித்த கவிதைகளைப் பாடுகிறார். கவிதைகளை அவர் உணர்ந்து சொல்லும் விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

படத்தில் அவர் தனது மனைவி ரைசா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உணர்ச்சிப்பூர்வமானது. இன்னொரு காட்சியில் அவரது வாழ்க்கையை நாடகமாக நிகழ்த்த விரும்பிய குழுவினர் அவரைச் சந்தித்து உண்மை நிகழ்வுகளைக் கேட்டு அறிந்து கொள்கிறார்கள். அப்போது அவர் தனது கடந்தகாலத்தைச் சுவைபட விவரிக்கிறார். குறிப்பாக அவரது காதல் மற்றும் முதல் முத்தம் பற்றிச் சொல்கிறார்.

கோர்பசேவ் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், 1953-ல் தன்னுடன் பயின்ற மாணவியான ரைசாவைத் திருமணம் செய்துகொண்டார். ரைசா தன்னை விட்டு ஒரு நாள் கூடப் பிரிந்தது கிடையாது. அவரது மறைவிற்குப் பிறகு தான் மிகவும் தனிமையாக உணருவதாகச் சொல்கிறார் கோர்பசேவ்.

தனது எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கும் போது கோபம் கொள்வதில்லை. அழுத்தமான தனது நிலைப்பாட்டினை முன்வைக்கிறார்.

லிதுவேனியா நிகழ்வு பற்றிய கேள்விக்கு அவரது பதிலை ஏற்றுக் கொள்ள முடியாமல் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்பவர் சொல்கிறார். “நான் செய்தது சரிதான் என்று நினைக்கிறேன்… நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்புகிறீர்களா?” எனக் கேட்கிறார் கோர்பசேவ்.

2020ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மிகையில் கோர்பசேவ் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே தொலைக்காட்சியில் ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதைக் காணுகிறார். விருந்து நடைபெறுகிறது. தனது பழைய நாட்களைப் பற்றியும் மாறிவிட்ட இன்றைய சூழல் பற்றியும் விவரிக்கிறார்.

மான்ஸ்கி பழைய புகைப்படங்கள். ஆவணக்காட்சிகள் எதையும் படத்தின் பயன்படுத்தவில்லை. அது தான் இந்தப் படத்தினைத் தனித்துவமாக்குகிறது. கடந்தகாலத்தின் நேரடி சாட்சியாகக் கோர்பசேவை அடையாளம் காட்டுகிறார். சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கோர்பசேவ் தவிர்த்துவிடுகிறார். அதை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பானது.

இந்த ஆவணப்படத்தைக் கனடாவில் வசிக்கும் எனது நண்பர் மூர்த்தியைக் காணும்படி சொன்னேன். அவர் ரஷ்யாவில் படித்தவர். ஒருமுறை கோர்பசேவைச் சந்தித்திருக்கிறார்.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்து முடித்தபோது கண்ணீர் வந்துவிட்டது என்று மூர்த்தித் தொலைபேசியில் தெரிவித்தார். எனக்கு இந்த ஆவணப்படம் பார்க்கும் போது கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நாவலான The General in His Labyrinth நினைவிற்கு வந்தபடியே இருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 04:24

October 5, 2023

மாஸ்கோவின் மணியோசை

ரஷ்ய இலக்கியங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை

இந்த நூல் டிசம்பர் 25 அன்று வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.

ரஷ்ய இலக்கியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த அறிமுகத்தை வழங்கும்.

கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின், கோகோல், லியோ டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், லேர்மன்தேவ், குப்ரின், ஆன்டன் செகாவ். கொரலன்கோ,இவான் கோன்சரோவ், சிங்கிஸ் ஐத்மாதவ், ஐசக் பேபல், மாக்சிம் கார்க்கி, போரிஸ் பாஸ்டர்நாக், பாஸீ அலீயெவா ,அலெக்சாண்டர் பிளாக்,அன்னா அக்மதோவா, நினா இவனோவ்னா ,வேரா பாவ்லோவா என ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளிகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2023 06:22

October 4, 2023

கிதார் இசைக்கும் துறவி

எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கிதார் இசைக்கும் துறவி டிசம்பர் 25 ல் வெளியாகிறது.

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2023 03:17

October 3, 2023

காதலின் கண்கள்

டச்சு ஓவியர் வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் (Jan Gerritsz. van Bronchorst ) கிரேக்கத் தெய்வமான ஜீயஸ் தனது காதலியைப் பசுவாக உருமாற்றிய காட்சியை ஓவியமாக வரைந்திருக்கிறார்.

ஜீயஸ் இடி மின்னல், மழை மற்றும் காற்றின் தேவன். , நிரந்தரக் காதலனான ஜீயஸ் அழகான பெண்கள் தனிமையில் இருப்பதைக் கண்டால் உடனே மேகவடிவில் அவர் முன்பு தோன்றி மயக்கிவிடுவார். அதிலும் கருமேக வடிவம் கொண்டு வட்டமிடுவது வழக்கம்

இதனை அறிந்து வைத்திருந்த ஜீயஸின் மனைவி ஹீரா அவரைக் கண்காணிக்க எப்போதும் ஆள் அனுப்பி வைத்திருப்பார்.

ஐயோ நதிக் கடவுள்களில் ஒருவரான இனாச்சஸின் மகள். அழகான இளம்பெண். ஜீயஸ் மேக வடிவத்தை எடுத்து அவளைச் சூழ்ந்து தன்னைக் காதலிக்கும் படி மன்றாடினார். அவளும் காதலை ஏற்றுக் கொண்டாள். இதை அறிந்த ஹீரா கோபத்துடன் அங்கே வரவே அயோவை ஒரு பசுவாக உருமாற்றிவிடுகிறார் ஜீயஸ்.

அந்தப் பசுவை மந்தையோடு சேர்த்துவிடுவதன் மூலம் தனது கள்ளக்காதலை மறைத்துக் கொள்ள நினைக்கிறார் ஜீயஸ். அயோவை பசுவாக்கிவிட்டதை அறிந்த ஹீரா அதைத் தனக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்கிறாள்

தனது மனைவியின் பொறாமையை அறிந்த போதும் ஜீயஸால் அவளது கோரிக்கையை மறுக்க முடியவில்லை, தயக்கத்துடன் பசுவை அவளிடம் ஒப்படைக்கிறார்

தனது மந்தையில் பசுவை அடைத்து அதைக் காவல்காக்க நூறு கண்கள் கொண்ட நாயான ஆர்கஸ் பனோப்டெஸை நியமிக்கிறாள் ஹீரா. அந்தக் கண்காணிப்பிலிருந்து தனது காதலியை மீட்க மகன் ஹெர்மஸின் உதவியை நாடுகிறான் ஜீயஸ்.

அவன் தனது புல்லாங்குழலினை இசைத்துக் கதை சொல்லவே அதில் ஆர்கஸ் மயங்கி உறங்கிவிடுகிறது. அந்தத் தருணத்தில் ஆர்கஸை கொன்றுவிடுகிறார்கள். தனது விசுவாசியான ஆர்கஸின் மரணத்தைத் தாங்க முடியாத ஹீரா அதன் நூறு கண்களைத் தனக்குப் பிடித்த பறவையான மயிலின் வால் பகுதிக்கு மாற்றிவிட்டார். அப்படித் தான் மயில்தோகையில் கண்கள் தோன்றின என்கிறார்கள்.

அங்கிருந்து தப்பிய ஐயோ பசு வடிவிலே நாடு விட்டு நாடு அலைந்து கொண்டிருந்தார். தனது பயணத்தில் அவள் ஜீயஸால் சங்கிலியால் பிணைக்கப்பட்ட பிரோமிதியஸை சந்திக்கிறாள். . மனிதக்குலத்திற்கு நெருப்பைத் திருடிக் கொடுத்ததற்காகப் பிரோமிதியஸ் தண்டிக்கப்பட்டிருந்தான்.

அதுவும் ஒரு பாறைகளில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான். அவனது ஈரலைக் கொத்தித் தின்பதற்குத் தினமும் ஒரு கழுகு வரும். இதனால் தினம் தினம் நரக வேதனையை அடைந்து கொண்டிருந்தான்.பிரோமிதியஸை சந்தித்த அயோ தனது மீட்சியைப் பற்றிக் கேட்கிறாள். ஒரு நாள் அவள் தனது மனித உருவைத் திரும்பப் பெறுவார், அவளது சந்ததிகளில் ஒருவர் தன்னை விடுவிப்பார் என்று பிரோமிதியஸ் முன்னறிவிப்பு செய்கிறார்

பல வருடங்கள் அலைந்து திரிந்த அயோ இறுதியில் எகிப்தை அடைந்தாள். அங்கே ஜீயஸ் அவளுக்கு மீண்டும் மனித உருவத்தைக் கொடுத்தார். அவருடன் வாழ்ந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள் அயோ.

கிரேக்கத் தொன்மத்திலுள்ள ஜீயஸ் அயோ காதலை வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் மிகச்சிறப்பான ஓவியமாக வரைந்திருக்கிறார்.

பசுவின் தோற்றம் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். குறிப்பாகப் பசுவின் நிறம். அதன் முக அமைப்பு , வளைந்த கொம்பு. காது ரோமங்கள், குறிப்பாகக் கண்கள் அபாரமான அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன. பசுவின் கண்களில் வெளிப்படுவது அயோவின் காதலே.

அது போலவே ஜீயஸ் சாய்ந்து அமர்ந்துள்ள கோலம். கால் பாதங்களின் அழகு, வயிற்றுத்தசை மடிப்புகள். ஹீராவின் விரல்களுக்கான இடைவெளி. ஆடையின் வனப்பு, திறந்த மார்பகம். வானத்து மேகங்கள். என ஓவியம் பேரழகுடன் வரையப்பட்டிருக்கிறது.

இதில் இரண்டு மயில்களை வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் வரைந்திருக்கிறார். ஆசையின் அடையாளமாகவே மயில் எப்போதும் வரையப்படுகிறது. சில நேரம் அது ரகசிய ஆசை என்றும் அர்த்தப்படுத்தப்படுகிறது. ஜீயஸ் பார்வையும் ஹீராவின் பார்வையும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனது காதலை தடுக்க முடியவில்லை என்பது போல ஹீராவின் பார்வை உணர்த்துகிறது.

ஹீரா திருமணத்தின் தெய்வம். திருமண உறவைக் காப்பதே அவளது முதன்மையான வேலை. ஆனால் அவளுடைய மணவாழ்க்கையே சிக்கலாக இருக்கிறது.

பசுவாக மாற்றப்பட்ட அயோவின் கதை விசித்திரமானது. அவள் ரகசியக் காதலின் காரணமாகத் தண்டிக்கபடுகிறாள்.

1656ல் வரையப்பட்ட இந்த ஓவியம் நெதர்லாந்து உட்ரெக்ட் அருங்காட்சியகத்திலுள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2023 04:17

சிறந்த பத்து

பெடரல் இணையதளம் சமீபத்தில் வெளியான சிறந்த பத்து ஆங்கில மொழியாக்க நூல்களைப் பட்டியலிட்டுள்ளது.

அதில் எனது சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு THE MAN WHO WALKED BACKWARDS AND OTHER STORIES இடம் பெற்றுள்ளது.

Ten recent titles in translation that you must add to your TBR list

இணைப்பு

https://thefederal.com/category/features/international-translation-day-2023-10-new-books-you-must-not-miss-97166

Courtesy: the federal.com online magazine

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2023 00:15

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.