S. Ramakrishnan's Blog, page 50
November 3, 2023
கதைகள் நூறு
இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தி

நன்றி
தி இந்து தமிழ் நாளிதழ்
அன்னாவும் அரசரும்.
வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது.

மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம்.
சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV என்றும் அழைக்கப்படும் சயாமின் மன்னர் மோங்கட் 1851 முதல் 1868 வரை ஆட்சி செய்தார். படத்தில் சித்தரிக்கப்பட்டது போல அவர் மேற்கத்தியக் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பிரிட்டன். பிரான்ஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தனது அரசாங்க உறவுகளை விரிவுபடுத்தினார்.
 \
\மன்னர் குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக வருகிறாள் அன்னா ஓவன்ஸ். கணவனை இழந்த அன்னா தனது மகன் லூயிஸுடன் பாங்காக் வந்தடைகிறாள். துறைமுகத்தில் அவரை வரவேற்க வரும் அமைச்சர் அவள் அரண்மனைக்குள் தங்க வேண்டும் என்கிறார்.
மன்னர் தனக்குத் தனி வீடு ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி தந்திருப்பதாகச் சொல்லி அரண்மனைக்கு வர மறுக்கிறாள் அன்னா. காரணம் தன்னையும் அந்தப்புர பெண்ணாக மாற்றிவிடுவாரோ என்ற பயம்.
இதைக் கேட்ட அமைச்சர் கோவித்துக் கொண்டு போய்விடுகிறார். மறுநாள் அன்னா தானே அரண்மனைக்குச் செல்கிறாள். அமைச்சரிடம் மன்னிப்பு கேட்கிறாள். மன்னரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்கிறாள். அது உடனடியாக இயலாத காரணம் எனும் அமைச்சர் அவளை அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைக்கிறார்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு மன்னரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. தர்பார் மண்டபத்திற்கு அவளை அழைத்துச் செல்லும் போது மன்னரின் முன்பாகச் சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும் என்பதில் துவங்கி மன்னரின் தலைக்கு மேலாக நமது தலை ஒரு போதும் உயர்ந்திருக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விளக்குகிறார்கள். அங்கே அவள் காணும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.
தன்னால் அப்படி நடந்து கொள்ள முடியாது என்று அன்னா மறுக்கிறாள். அன்று மன்னர் எவரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அவளைத் தடுத்துவிடுகிறார்கள். ஆனால் அவள் வேகமாக மன்னரின் முன்பாகச் சென்று தான் ஆசிரியர் வேலைக்காக வந்துள்ளதாகச் சொல்கிறாள்.
அவளது தோற்றத்தைக் கண்டு சந்தேகம் கொண்ட மன்னர் அவளிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அன்னா துடுக்கு தனமாகப் பதில் சொல்கிறாள். அந்தப் பதில்கள் மன்னருக்குப் பிடித்துவிடுகின்றன.
அவளை உடனடியாக வேலையில் சேரும்படி சொல்கிறார். அவளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர உத்தரவிடுகிறார்.

அவள் தனக்குத் தனி வீடு ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறாள். அதை மன்னர் ஏற்க மறுக்கிறார்
மன்னருக்கு நிறைய மனைவிகள். 67 பிள்ளைகள். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க அரண்மனைக்குள்ளே சிறிய பள்ளியைத் துவங்குகிறாள். ஆங்கிலம் பேசத் தெரிந்த ராணி தியாங் அவளுக்கு உதவி செய்கிறாள்.
அரண்மனை வாழ்க்கை என்பது தங்கக் கூண்டில் வசிப்பது போலிருக்கிறது. தனக்குத் தனி வீடு வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறாள். இது மன்னருக்கு எரிச்சலை உருவாக்குகிறது.. மீன் விற்கும் சந்தையில் மோசமான ஒரு வீட்டை ஒதுக்கித் தருகிறார். அதற்கு அரண்மனையே பரவாயில்லை என்று அன்னா அங்கேயே தங்கிக் கொள்கிறாள்.
சயாம் மன்னர் மோங்கட் அறிவியலில் ஆர்வம் கொண்டவர். உலக மாற்றங்கள் யாவையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். நிறையப் படிக்கக் கூடியவர். அவர் தான் படித்த விஷயங்கள் குறித்து அன்னாவிடம் விவாதிக்கிறார். அவள் தைரியமாக மன்னரோடு உரையாடுகிறாள். அவருக்குப் பிடிக்காத விஷயங்களைக் கூட வெளிப்படையாகப் பேசுகிறாள்.ஒரு நாள் அரண்மனையில் அடிமைப்பெண் ஒருத்தி சங்கிலியால் கட்டப்பட்டுத் தண்டிக்கப்படுவதை அன்னா காணுகிறாள். அடிமைப் பெண்ணை விடுவிக்க வேண்டி மன்னரிடம் மன்றாடுகிறாள். அவளை விடுவிக்கக் கூடாது என்று இளையராணி உத்தரவிடுகிறாள். தனது குடும்பப் பிரச்சனையில் அன்னா தலையிடக் கூடாது என்று மன்னரும் கோவித்துக் கொள்கிறார்.
அது அன்னாவினை வேதனைப்படுத்துகிறது. தான் வேலையை விட்டு நின்று விடப்போவதாகச் சொல்கிறாள். மன்னர் அவளது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொண்டு அடிமைப் பெண்ணை விடுதலை செய்கிறார்
சயாம் மன்னர் மோங்கட் நாகரீகமற்றவர். மோசமான ஆட்சி நடத்துகிறவர் என்று ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகின்றன. தான் அப்படியானவர் இல்லை என்று நிரூபிக்க அரண்மனையில் பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.
அதற்காகப் பிரிட்டனிலிருந்து ஆங்கிலக் கனவான்களை அழைக்கிறார். அந்தப்புரத்திலுள்ள தனது மனைவிகளை ஐரோப்பிய பாணியில் ஆடை அணியச் செய்து, மேலைநாட்டுப் பழக்க வழக்கங்களைக் கற்றுத் தரும்படி அன்னாவிற்கு உத்தரவிடுகிறார்அந்த விருந்தில் மன்னர் மிகவும் பதற்றமாக நடந்து கொள்கிறார். எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். முள்கரண்டி கத்தி வைத்துச் சாப்பிடுவதற்கு அவர் பழகும் காட்சி வேடிக்கையானது
அன்று சயாம் வரலாற்றுப் பெருமை கொண்ட நாடு, பண்பாட்டில் சிறந்த மன்னர் ஆட்சி செய்கிறார் என்பதை விருந்தினர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
விருந்து வெற்றியடைய முக்கியக் காரணமாக இருந்த அன்னா அதன்பிறகு மன்னரின் ஆலோசகர் போலச் செயல்படத் துவங்குகிறாள். ஒரு நாள் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் சண்டை போட யானைகள் கிடையாது என்று சொல்கிறாள்
உடனே மன்னர் தனது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு யானைகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லி ஆபிரகாம் லிங்கனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அவரது அன்பைப் புரிந்து கொண்டு லிங்கனிடமிருந்து நன்றி கடிதம் வருகிறது
தாமஸ் ஆர் டிரவுட்மன் யானைகளும் அரசர்களும் என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார்.( Elephants and Kings: An Environmental History- Trautmann) இந்தியாவில் ஏன் யானைகள் இவ்வளவு புகழ்பெற்றிருக்கின்றன என்பதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். படத்தில் மோங்கட் அமெரிக்காவிற்கு யானைக்குட்டிகளை அனுப்பி வைக்க நினைக்கும் காட்சியைப் பார்த்தபோது இந்தப் புத்தகமே நினைவிற்கு வந்தது. உண்மையில் படித்தில் வரும் கடிதம் லிங்கனுக்கு எழுதப்பட்டதில்லை. படத்தில் லிங்கன் சொல்வது போன்று வரும் வசனமும் அவர் சொன்னதில்லை.
இளையராணி துப்திம் தனது பழைய காதலனுடன் இப்போதும் நெருங்கிப் பழகுகிறாள் என்பதை அறிந்து கொண்ட மன்னர் அவளைத் தண்டிக்கிறார். அதை அன்னாவால் ஏற்க முடியவில்லை. துப்திமிற்காகப் பரிந்து பேசி மன்னரின் கோபத்திற்கு ஆளாகிறாள். இந்தப் பிரச்சனையில் அவள் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.
தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை யாரும் உண்மையாகத் தன்னிடம் தெரிவிப்பதில்லை. அன்னா ஒருத்தியே உண்மையாக நடந்து கொள்கிறாள் என்பதை இறுதியில் மன்னர் உணர்ந்து கொள்கிறார்.
அரங்க அமைப்பும் உடைகளும் அரண்மனை வாசிகளின் இயல்பும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ராணி தியாங் தனது வாழ்க்கையை அடையாளப்படுத்தும் ஓவியங்களை அன்னாவிடம் காட்டி விளக்கும் காட்சி சிறப்பானது.

படத்தில் நம்மைப் பெரிதும் கவருபவர் மன்னர் மோங்கட். அவரது உடை, நடத்தை, பேசும்விதம், செயல்கள் நிஜமான மன்னர் இப்படித்தான் நடந்திருப்பார் என்பது போலிருக்கிறது. Rex Harrison சிறப்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக நள்ளிரவில் அவர் அன்னாவை அழைத்துப் பைபிளில் உள்ள விஷயம் பற்றிய சந்தேகத்தைக் கேட்பது. அமைச்சருடன் தேசத்தின் எதிர்காலம் பற்றி விவாதிப்பது. தான் இறுதியாக அன்னாவின் முன்பு தனது மனதிலுள்ளதை வெளிப்படையாகச் சொல்வது என மன்னர் மோங்கட் மறக்க முடியாத கதாபாத்திரமாக ஒளிருகிறார்.
உண்மை சம்பவத்திலிருந்து இந்த நாவலை மார்க்ரெட் லாண்டன் எழுதியிருக்கிறார். நிஜமான அன்னா இந்தியாவைச் சேர்ந்தவர். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண். படத்தில் அவள் இங்கிலாந்தைச் சேர்ந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். வரலாற்று நிகழ்வுகளுடன் நிறையப் புனைவை சேர்த்துப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
The King and I என்ற பெயரில் இதே படம் 1958ல் மீண்டும் எடுக்கப்பட்டிருக்கிறது. 2018ல் The King and I என்று புதிய வடிவில் Gary Halvorson& Bartlett Sher இயக்கத்தில் இசை நாடகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல இடங்களில் பிரிட்டிஷ் மகாராணி மற்றும் இங்கிலாந்தின் பண்பாடு குறித்து பெருமை பேசுகிறது படம். உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவர்கள் தாங்கள் என்று பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள். அது அன்னா வழியாக நிறையவே வெளிப்படுகிறது.
கறுப்பு வெள்ளைப்படங்களுக்கே உரித்தான அழகுடன் சிறப்பான ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்தர் மில்லர் அது போலவே அரண்மனை, தர்பார் மண்டபம். சந்தை என அரங்க அமைப்புகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.
வழக்கமான கதை போல மன்னருக்கும் அன்னாவிற்கும் இடையில் காதல் ஏற்படவில்லை. அவள் கடைசி வரை பள்ளி ஆசிரியராகவே இருக்கிறாள். மன்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறார் முடிவில் அவளிடம் மன்னிப்பு கேட்கிறார். இதுவரை யாரிடமும் எதற்காகவும் மன்னர் மன்னிப்பு கேட்டதில்லை என்கிறார் அமைச்சர். அது தான் அன்னாவின் வெற்றி.
November 2, 2023
இரவுக் காவலாளியின் தனிமை
எனது இரவுக் காவலாளியின் தனிமை சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் டாக்டர் சந்திரமௌலி
 
  வேரும் விழுதும்
எழுத்தாளர் க.சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்தவர். பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்று டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர். கலைமகள் இதழில் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார் இவரது வேரும் விழும் நாவலை வாசகர் வட்டம் 1970ல் வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலை எட்டு ஆண்டுகள் எழுதியிருக்கிறார். எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. தி. ஜானகிராமனின் நண்பராக இருந்தவர் சுப்ரமணியன். ஜானகிராமன் இதனைப் படித்துப் பாராட்டி வாசகர் வட்டம் மூலம் நாவலை வெளியிடச் செய்திருக்கிறார். இந்த ஒரே ஒரு நாவலை மட்டுமே சுப்ரமணியன் எழுதியிருக்கிறார்.

நாவலின் துவக்கத்தில் ஒரு மரமும் நதியும் பேசிக் கொள்கின்றன. கவித்துவமான உரையாடலது. அந்த உரையாடலிலே சுப்ரமணியன் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுகிறார். திடீரென ஏற்பட்ட பூகம்பம் காரணமாக நதியின் போக்கு மாறிவிடுகிறது. மரம் விழுந்து வெறும் கட்டையாகிவிடுகிறது. மரமும் நதியும் மனிதர்களைப் பற்றித் தான் பேசிக் கொள்கின்றன. தங்கள் வாழ்க்கையை விடவும் மனிதர்களின் மீது தான் அவற்றிற்கு ஈடுபாடு அதிகம்.
வேர் இல்லாவிட்டால் விழுதுகள் இல்லை என்று பீடிகையில் சுப்ரமணியன் குறிப்பிடுகிறார். பிறப்பும் இறப்பும் குறியீடாக மாறுகிறது.
கதையின் நாயகன் ஒரு என்ஜினியர். அதுவும் நதி நீரை தடுத்து அணை கட்ட முயலும் என்ஜினியர். நதியின் போக்கை தன்னால் மாற்றவும் தடுக்கவும் முடியும் என்று நினைப்பவர். ஆனால் அவர் நினைத்தபடி நடக்க முடிகிறதா என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது.
காலத்தின் விசித்திர நகர்வை யார் அறிய முடியும். எதிர்பாராமையின் கைகள் உருட்டும் பகடை தான் நாவல் என்பது போலவே பீடிகை எழுதப்பட்டிருக்கிறது.
சிறுநகரவாசியின் கதையை விவரிக்கும் இந்த நாவலின் முதல் பகுதி இப்படி ஆரம்பிக்கிறது
நான் கிராமத்தில் பிறந்தவன் அல்ல. கிராமவாழ்க்கையின் இனிமையைப் பற்றி ஆசிரியர்கள் எழுதுவதெல்லாம் மிகைப்படுத்தபட்ட பொய்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எப்பொழுதும் எனக்குண்டு
இந்திய மொழிகளில் கிராமத்து வாழ்க்கையை வியந்தோதும் நாவல்கள் ஐம்பது அறுபதுகளில் நிறைய வெளியாகின. நகர வாழ்க்கை என்பதே ஏமாற்று. மோசடிகளின் உலகம் என்பது போன்ற பொதுபார்வையும் அன்றிருந்தது. அதற்கு மாற்றகவே இப்படி நாவலை துவக்குகிறார் சுப்ரமணியன்.
சிறுநகர வாழ்க்கை தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. இவ்வளவிற்கும் நிறையச் சிறுநகரங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதற்கெனத் தனித்துவமான வாழ்க்கையும் வேகமும் இருக்கின்றன. அவை முழுமையாக இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை.
வாழ்க்கையில் அநேகமாக அதே முகங்களைத் தான் திரும்பத் திரும்பக்காண்கிறோம், அதே காரியத்தைத் தான் மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஆனால் அதைச் செய்யும் போது நாம் அலுத்துப் போவது கிடையாது. ஒரு மூலையில் உட்கார்ந்து அவற்றைப் பற்றி நினைத்தால் தான் அலுப்புத் தட்டுகிறது.
என்கிறார் சுப்ரமணியன். உண்மை. புதிய முகங்கள். புதிய அனுபவங்களைப் பெரும்பான்மையினர் விரும்புவதில்லை. பயணத்தின் மீதான பயத்திற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
எனக்குத் தெரிந்த ஒருவர் லண்டனில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அத்தனை வருஷங்களிலும் அவர் தனது வீடு அலுவலகம் நாலைந்து வீதிகள் இவற்றைத் தாண்டி எதையும் பார்க்கவில்லை. எவரோடும் நட்பாகப் பழகவில்லை. கிராமத்தில் இருந்தால் சிறிய வட்டத்திற்குள் வாழ்க்கை அடங்கிவிடும் என்பார்கள். பெரிய நகரில் வசித்தாலும் இப்படிச் சிறிய வட்டத்திற்குள் வாழுகிறவர்கள் அதிகமிருக்கிறார்கள். பாதுகாப்பான தனது சொந்தஉலகை விட்டு வெளியே செல்லவும் பழகவும் தயக்கமும் பயமும் காரணம்.
நாவலின் நாயகன் அரசாங்க அலுவலகத்தில் என்ஜினியராகப் பணியாற்றுகிறான். அதுவும் அணைக்கட்டு மராமத்துப் பணியில். பரலியாற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என்று அரசு முடிவு செய்கிறது. இப்படி அணைகட்டினால் அதற்காக 150 கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டியது வரும். மேக்கூர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற இரண்டு வருஷமாகும். மூன்று கோடி செலவாகும் என்று மதிப்பிடுகிறார்கள். ஆனால் இத்தனை கிராமங்களை அழித்து அணை கட்டப்பட வேண்டுமா என்ற குற்றவுணர்வு நாயகனுக்கு ஏற்படுகிறது. அது அரசாங்க திட்டம் என்றாலும் அறிந்தே தான் இதற்கு உடந்தையாக இருக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்.
பரலியாற்றின் அழகினையும் ஆற்றுப்பாசன கிராமங்களின் வளத்தையும் சிறப்பாக எழுதியிருக்கிறார். குழுமணி ரயில் நிலையமும் ஸ்டேஷன் மாஸ்டர் ராயரும், ரயில் நிலையத்திற்கு போகும் பாதையும் கண்முன்னே விரியும்படியாக அபூர்வமான அழகுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
தெருவில் சினிமா வண்டி செல்வதைப் பற்றிச் சுப்ரமணியன் நாவலின் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். சினிமா விளம்பரத்திற்காக வீதிவீதியாகச் செல்லும் அந்த வண்டியில் நோட்டிஸ் கொடுப்பார்கள். அந்த வண்டியின் பின்னால் சிறுவர்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம். இன்று அந்தச் சினிமா வண்டியில்லை. சினிமா பேனர் வரையும் அபூர்வமான ஒவியர்கள் காலத்தின் சுழலில் மறைந்துவிட்டார்கள்.
நாவலின் நாயகன் இரவில் வரும் குடுகுடுப்பாண்டியை ஒரு முறை பகலில் கடைத்தெருவில் வைத்து பார்க்கிறார். குடுகுடுப்பைக்காரன் பற்றி இருந்த பயம் அந்த நொடியில் மறைந்து போகிறது,
சாமி மாடு கொண்டு வருபவனின் மாடு ஏன் எப்போதும் குள்ளமாக இருக்கிறது என்று ஒரு இடத்தில் கேட்கிறார் நானும் சாமி மாட்டினைப் பார்க்கும் போது இப்படி நினைத்திருக்கிறேன்.. சாமி மாட்டின் கழுத்திலுள்ள மணி. கழுத்தைச் சுற்றியுள்ள பழைய துணிகள். அந்த மாடு தலையாட்டும் விதம் என அந்தக் காட்சியை நாலைந்து வரிகளுக்குள் அழகான சித்திரமாக வரைந்திருக்கிறார்..
சோப்புசீப்பு விற்பவன். பிளாஸ்டிக் பொருள் விற்பவன். குரங்காட்டி, கரடி வித்தைகாட்டுகிறவன். பழைய காலக் கடிகாரம் வைத்துள்ள முதியவர், காய்கறிகாரனிடம் பேரம் பேசும் கிழவி. பேருந்து பயணிகளின் இயல்பான உரையாடல்கள். குழுமணி என்ற தனது சொந்த ஊருக்குச் செல்லும் பயணம் என அந்தக் காலம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து அந்த உலகிற்குள் நாம் நடமாடத் துவங்கிவிடுகிறோம்.
குழுமணியில் பெரியப்பா ஊர்மக்களை அழைத்து வந்த தனது அண்ணன் மகன் பெருமைகளைச் சொல்லும் காட்சியும், சீப் என்ஜினியருடன் நடக்கும் உரையாடலும், மந்திரியோடு நடக்கும் ஆலோசனைக் கூட்டமும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.
தன்னைச் சுற்றிய வாழ்க்கையின் வேகத்தையும் அதைத் துரத்தியோடும் மனிதர்களையும். சிலரது போலித்தனமான வாழ்க்கையினையும் காணும் நாயகன் தான் அவற்றிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்த்தியபடியே இருக்கிறான்.
சுப்ரமணியனின் கதை சொல்லும் விதம் மற்றும் அவரது மொழி சிறப்பானது. நாவலின் ஊடாக வந்து போகும் அத்தனை சிறுகதாபாத்திரங்களும் முழுமையானவர்களாக எழுதப்பட்டிருக்கிறார்கள்.. தனித்துவம் கொண்டிருக்கிறார்கள். நாவல் முழுவதும் கதை சொல்லி நம்மை அருகில் அமரவைத்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார்.
கடந்தகாலத்தின் மீது எந்தச் சாய்மானமும் இல்லாமல் நிகழ்கால வாழ்வில் காலூன்றியபடி வாழ்வை விசாரணை செய்யும் இந்த நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் தனித்துவமானது.
இந்த நாவலை சிறுவாணி வாசகர் வட்டம் அழகாக மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.
••
October 31, 2023
ரேடியோ நாடகம்
எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை ரேடியோ நாடகமாகத் தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சென்னை வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறார்கள்.
இந்தச் சிறுகதை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
காந்தியை மையமாகக் கொண்ட தமிழ் சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் தலைப்புக் கதையாகவும் இடம் பெற்றுள்ளது.
 
  புதிய சிறுகதை
இந்து தமிழ் தீபாவளி மலர் 2023ல் எனது புதிய சிறுகதை அவரது நாட்கள் வெளியாகியுள்ளது.
 
  October 30, 2023
சந்தோஷத்தின் பெயரால்
Wang Xuebo இயக்கிய KNIFE IN THE CLEAR WATER 2016ல் வெளியானது. ஷி ஷுகிங்கின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

சீனாவின் வடமேற்கு நிங்சியா மாகாணத்திலுள்ள சிறிய கிராமம். அங்குள்ள விவசாயி மா ஜிஷானின் மனைவி இறந்துவிடுகிறாள். அவருக்கான இறுதி நிகழ்வில் படம் துவங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் மா ஜிஷான் தனியே அமைதியாக நடந்து செல்கிறார். தனது துயரை அவர் வெளிக்காட்டுவதில்லை.
இறந்த மனைவிற்கான நாற்பதாம் நாள் சடங்கில் அவர்களின் எருதைப் பலி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். இந்த ஆசை அவரது மகன் யெல் குபாவிடமிருந்து பிறக்கிறது. ஆனால் மா ஜிஷானுக்கு எருதைப் பலி கொடுப்பதில் விருப்பமில்லை
அவர் எருதைத் தனது மகனைப் போல வளர்த்து வருகிறார். மகனின் ஆசையும் இமாமின் விருப்பமும் எருதைப் பலி கொடுப்பது என்று உறுதியானதும் வேறுவழியின்றி மாஜிஷான் ஏற்றுக் கொள்கிறார். அந்த முடிவு எல்லோரையும் சந்தோஷப்படுத்துகிறது. ஆனால் அவர் குற்றவுணர்வில் அலைக்கழிக்கபடுகிறார்.
தன்னைப் பலி கொடுக்கப் போகிறார்கள் என்று உணர்ந்து கொண்டது போல எருது திடீரென உண்பதை நிறுத்திவிடுகிறது. இது மா ஜிஷானுக்குள் குற்றவுணர்வை அதிகரிக்கிறது. ஒரு ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு ஆன்மாவை இழக்க வேண்டுமா என்ற கேள்வி அவருக்குள் எழுகிறது.

படத்தின் ஒரு காட்சியில் தனது மனைவி வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார் மா ஜிஷான் . அங்கே நண்பர் கால் எலும்பு முறிந்த நிலையில் படுக்கையில் கிடக்கிறார். வீட்டின் வறுமையான சூழலைப் பற்றி நண்பரின் மனைவி கவலையோடு சொல்கிறார்.
தனது மனைவி கைமாற்றாக வாங்கிய பணத்தை அவளிடம் தருகிறார். வீட்டுக் கஷ்டத்திற்கு அந்தப் பணம் பெரிதும் உதவும் என அதை ஏற்றுக் கொள்கிறாள். அத்தோடு மா ஜிஷானின் மனைவி எப்போது அப் பணத்தை கடன் வாங்கினார் என்று பழைய சம்பவம் ஒன்றை விவரிக்கிறார். அது அழகான சிறுகதை போலச் சொல்லப்படுகிறது. இறந்தவர்கள் உலகிலிருந்து மறைந்துவிட்டாலும் சிலரது நினைவில் என்றும் அழியாத சித்திரமாகத் தங்கிவிடுகிறார்கள். அதை மா ஜிஷான் நன்றாக உணருகிறார்.
இரவில் அவர்களின் வீடு தேடி வரும் இமாமிற்கு மா ஜிஷான் உணவளிக்கும் காட்சி அழகானது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் விதமும் அவர்களுக்குள் உள்ள நட்பும் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.
எருதுக்கு வயதாகிவிட்டது. அதனால் இனி பிரயோசனமில்லை ஆகவே பலி கொடுத்துவிடுவோம் என்று மகன் வாதிடுகிறான். அது உண்மையில்லை. எருதால் இன்னமும் வேலை செய்ய முடியும் என்கிறார் மா ஜிஷான். தந்தையின் விருப்பம் இருந்தால் மட்டுமே அதைப் பலி கொடுப்போம் என்று முடிவை அவர் வசம் தள்ளுகிறான் மகன். அவரால் மறுக்க முடியவில்லை. சம்மதிக்கிறார். ஆனால் அவர் மனைவி உயிரோடு இருந்திருந்தால் இப்படி எருதை பலி கொடுக்க சம்மதித்து இருக்க மாட்டாள் என்று அவருக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் சந்தோஷத்தின் பெயரில் நாம் அறிந்தே தவறு செய்கிறோம் என உணர்கிறோம்.
வாழ்க்கை ஒன்றைப் பறித்தவுடன் நேசிக்கும் இன்னொன்றையும் ஏன் பறிக்க முற்படுகிறது துயரத்தின் அளவு நீளும் போது நாம் நிலை குலைந்து விடுகிறோம். கத்தி தானே எவரையும் கொல்வதில்லை. அதை பயன்படுத்தும் மனிதனே கத்தியை ஆயுதமாக்குகிறான். கொலை புரிகிறான். தெளிந்த நீருக்குள் கிடக்கும் கத்தி ஒரு குறியீடு. நீருக்குள் அமிழ்ந்திருக்கும் கூழாங்கல் போல கத்தி அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால் அது கொலைக்கருவியாகும் போது விழித்துக் கொள்கிறது.

படத்தின் இயக்குநர் வாங் ஜிபோ ரஷ்ய இயக்குநர் தார்க்கோவெஸ்கியின் பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார். நிலக்காட்சிகள் கதாபாத்திரங்களின் மனநிலையின் வெளிவடிவமாக விரிவு கொள்கின்றன. இரவுக்காட்சிகள் மிக நேர்த்தியான அழகுடன் படமாக்கபட்டுள்ளன.
நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள், விரிந்து பரந்த அழகிய நிலவெளி. ஹுய் முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, மையப்பிரச்சனையை விட்டு விலகாத திரைக்கதை என அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஊரில் இருந்து விவசாயத்தைத் தொடருவதா அல்லது நகரத்திற்குப் பிழைப்பு தேடி போய்விடுவதா என்ற கேள்வி படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.
மா ஜிஷான் துவக்க காட்சியிலிருந்தே மிகவும் நிதானமாக நடந்து கொள்கிறார். மனைவியின் கல்லறையில் படிந்துள்ள தூசிகளை அவர் துடைக்கும் விதம். மனக்குழப்பத்திலிருந்து விடுபடப் பிரார்த்தனை செய்யும் பாங்கு. எருதை எதிர்கொள்ளும் போதெல்லாம் அவரது கண்களில் வெளிப்படும் குற்றவுணர்வு. வீட்டில் குளிக்கும் காட்சியில் கூட அவர் காட்டும் நிதானம் கவனிக்க வேண்டியது.
எருதைக் கொல்வதா, வேண்டாமா என்ற பிரச்சனையைப் பேச முற்படும் திரைப்படம் நாம் நினைவுகளால் வழிநடத்தப்படுகிறோம் என்பதையும், வாழ்வின் நிலையாமையைப் பற்றியும் பேசத் துவங்குகிறது. அதுவே படத்திற்குத் தனியழகை உருவாக்குகிறது.
October 29, 2023
கிதார் இசைக்கும் துறவி
விகடன் தீபாவளி மலரில் வெனியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.

கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார்.

பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் எனது புதிய சிறுகதை தொகுப்பு வெளியாகிறது.
மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
மதுரையில் ராபர்டோ ரோசலினி
இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் நாயகராகக் கொண்டாடப்படுகிறவர் ராபர்டோ ரோசலினி. ரோம் ஓபன் சிட்டி, பைசான். ஸ்ட்ரோம்போலி போன்ற படங்களை இயக்கியவர்.

இவர் இந்தியாவினைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். India, Matri Bhumi என்ற அந்த ஆவணப்படத்தில் தமிழகத்தின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில் காட்சிகள். வீதியில் யானை வருவது. காந்தி கிராமத்தின் செயல்பாடுகள். காவிரி ஆறு. ஸ்ரீரங்கம் போன்றவை மிக அழகாகப் படமாக்கபட்டுள்ளன. இன்று அந்தக் காட்சிகளைக் காணும் போது வியப்பாக இருக்கிறது.
ராபர்டோ ரோசலினியின் தமிழக வருகையைப் பற்றி யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.
UNDER HER SPELL என்ற தலைப்பில் DILEEP PADGAONKAR ரோசலினியின் இந்திய வருகை மற்றும் அவர் எடுத்த ஆவணப்படம் பற்றிச் சிறப்பான புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் அபூர்வமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன
**

ரோசலினி மீது பெருமதிப்புக் கொண்ட நடிகை இங்கிரிட் பெர்க்மன் தானாக முன்வந்து அவரது படத்தில் நடித்தார். ரோசெலினியின் இயக்கத்தில் ஐந்து படங்களில் இங்கிரிட் நடித்திருக்கிறார். பின்பு இங்கிரிட்டை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரோசலினி.
1956-ல் ஹாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பை ஏற்று இங்கிரிட் பெர்க்மன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அது ரோசலினிக்குப் பிடிக்கவில்லை. அவர்களின் திருமணஉறவில் விரிசல் ஏற்பட்டது. பிரிந்து வாழ்வது என முடிவு செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் இந்தியப்பிரதமர் நேருவைச் சந்தித்தார் ரோசலினி. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியை. மாற்றங்களை ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையைப் பகிர்ந்து கொண்டார்.
நேரு உடனடியாக அந்த விருப்பத்தை ஏற்றுக்கொண்டு இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். வெளியுறவுத்துறையைச் சேர்ந்த ராகவன் பிள்ளை ரோசலினியோடு தொடர்பு கொண்டு அவரது வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். ராகவன் பிள்ளையைப் பற்றி ரோசலினி மிக உயர்வாக எழுதியிருக்கிறார்.

ரோசலினி இந்த ஆவணப்படத்திற்கு எழுதுவதற்காகப் பிரெஞ்சு இயக்குநர் த்ரூபோவை அழைத்தார். ஒராண்டு காலம் தன்னால் இந்தியாவில் வந்து தங்கியிருக்க முடியாது என்று த்ரூபோ மறுத்துவிட்டார். ரோசலினி இந்தியா முழுவதும் பயணம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டார். பின்பு படப்பிடிப்பிற்கான இடங்கள். மற்றும் இரண்டு ஒளிப்பதிவாளர்கள். உதவியாளர்கள் எனக் குழு பயணம் புறப்பட்டது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர்கள் தமிழகத்திலுள்ள கலைகள் கோவில்கள் மற்றும் இயற்கை வளங்கள். காந்தி கிராமத்தின் செயல்பாடுகளைப் படமாக்க விரும்பினார்கள்.

காந்தியக் கனவாகக் கருதப்படும் காந்தி கிராமத்தினை விரிவாகப் படமாக்க விரும்பினார். ரோசலினி இதற்காகப் பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்டுப் பயணம் செய்தார். படப்பிடிப்புக் குழுவினர்கள் முன்னதாக ரயிலில் பயணம் செய்து மதுரை வந்து சேர்ந்திருந்தார்கள்.
மோசமான இந்திய சாலைகள் பற்றிப் புலம்பிக் கொண்டே வந்தார் ரோசலினி. பின்னிரவில் திண்டுக்கல் அருகே அவர்கள் கார் பழுதாகி நின்றுவிட்டது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. விடியும் வரை அங்கே காத்திருக்க வேண்டியது தான் என்று டிரைவர் தெரிவித்தார். ரோசலின் ஆத்திரத்தில் அனைவரையும் திட்டி தீர்த்துவிட்டார்.
மதுரைக்குக் காரைக் கொண்டு சென்றால் மட்டுமே பழுது பார்க்க முடியும். என்ன செய்வது எனத் தெரியாமல் இருளில் தவித்தார்கள். அப்போது ஒரு லாரி அவர்களை நோக்கி வருவது தெரிந்தது. உடனே அதைக் கையைக் காட்டி நிறுத்தி உதவி கேட்டார்கள்.

தான் மதுரைப் பக்கம் போகவில்லை. ஆகவே தன்னால் உதவி செய்ய முடியாது என்று லாரி டிரைவர் மறுத்துவிட்டார். பணம் தருவதாகச் சொன்ன போதும் அவர் ஏற்கவில்லை. அத்தோடு தனக்கு நேரமாகிவிட்டது என்று லாரியை கிளப்பினார்.
இதனால் ஆத்திரமான ரோசலினி அந்த டிரைவரை இத்தாலிய மொழியில் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினார். புறப்பட்ட லாரி அப்படியே நின்றது.
தலையை வெளியே நீட்டி லாரி டிரைவர் அது போலத் தானும் இத்தாலியில் மிக மோசமான கெட்டவார்த்தைகளால் திட்டினார். தன்னை ஒருவன் திட்டுகிறானே எனக் கோபம் அடையாமல் இத்தாலிய மொழியில் பேசுகிறான் என்று ஆசையாக அவனை நோக்கி ஒடினார் ரோசலினி.
அந்த லாரி டிரைவர் தான் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய போது ஜெர்மனி யுத்த களத்தில் கலந்து கொண்டதாகவும் பிடிபட்டுப் போர்கைதியாக இருந்த போது இத்தாலிய மொழி கற்றுக் கொண்டதாகவும் சொன்னார். ரோசலினி ஆச்சரியத்துடன் அவரைக் கட்டிக் கொண்டு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்
லாரி டிரைவர் அந்தக் காரை ஒரு கயிற்றில் இணைத்து மதுரைக்குக் கொண்டு சென்றார். மதுரையில் கார் பழுது நீக்க எவ்வளவு நேரமாகும் என்று ரோசலினி விசாரித்தபோது நாலைந்து மணி நேரம் ஆகும் என்றார்கள். அதற்குள் நிச்சயம் சரி செய்ய முடியாது. குறைந்தது ஒரு நாளாகிவிடும் என்று ரோசலினி நினைத்தார். ஆகவே மாற்று ஏற்பாடுகளைச் செய்யும்படி உத்தரவிட்டார். ஆனால் இரண்டு மணி நேரத்தில் காரை சரிசெய்து கொடுத்துவிட்டார்கள்.
இந்தியாவை இப்போது தான் புரிந்து கொண்டேன். இங்கே அசாத்திய திறமைசாலிகள் இருக்கிறார்கள். நிச்சயம் இந்தக் காரை இத்தாலியில் பழுது நீக்க ஒரு நாளாகியிருக்கும். இங்கே இரண்டே மணி நேரத்தில் சரி செய்துவிட்டார்கள் என்று ரோசலினி பாராட்டினார். அத்தோடு இந்தியாவில் எவரையும் தோற்றத்தை வைத்து மதிப்பட முடியாது. இத்தாலி தெரிந்த டிரைவர் போல அவர் பார்க்க எளிமையாக இருக்ககூடும் என்றும் தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்
அதுவரை படித்தும் கேட்டும் அறிந்து வைத்திருந்த இந்தியாவைப் பற்றிய எண்ணங்களை அவரது பயணமும் நேரடி அனுபவமும் மாற்றி அமைத்தன. அந்த மாற்றத்தை அவரது ஆவணப்படத்தில் வெளிப்படையாகக் காண முடிகிறது.
இந்தியாவை இணைக்கும் பண்பாட்டுக் கூறுகளை, கலைகளை, மக்களின் எளிய வாழ்க்கையை. இயற்கையின் வனப்பை, பன்முகத்தன்மை கொண்ட இந்திய வாழ்க்கை முறையை அவர் சரியாக உள்வாங்கியிருக்கிறார். படத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்
ரோசலினியின் ஆவணப்படத்திற்குத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர் போர்க்கார். கிட்டு எனும் எம்.வி. கிருஷ்ணசாமி திரைப்படப் பிரிவில் பணிபுரிந்தவர். அவர் இத்தாலிக்கு சென்று ரோசலினியை சந்தித்து இத்தாலிய படப்பிடிப்பில் கலந்து கொண்டு அனுபவம் பெற்றவர். அவர் இந்தியாவில் ஆவணப்படம் எடுக்கும் பணியில் ரோசலினியோடு முழுமையாக உடனிருந்து பணியாற்றினார். இவர்களுடன் மும்பையில் பிரெஞ்சு கற்பித்த, ஜீன் ஹெர்மன் என்ற பேராசிரியரும் இணைந்து கொண்டார்.
சாந்திநிகேதனில் பயின்ற, இந்தியக்கலைகள் மற்றும் இசை அறிந்த சோனாலி தாஸ்குப்தா இந்த ஆவணப்படத்தில் இணைந்து கொண்டார். சோனாலி திருமணமானவர் அவரது கணவர் ஹரிசதன் தாஸ்குப்தா திரைப்படத் தயாரிப்பாளர். அவர்களுக்கு ஒரு மகனிருந்தான்.

அழகியான சோனாலியை பார்த்த மாத்திரம் ரோசலினி காதலிக்கத் துவங்கிவிட்டார். அப்போது அவருக்கு வயது 52. இந்தக் காதலைப் பற்றி பத்திரிக்கைகள் மிக மோசமாக எழுதின. சோனாலி இந்தியாவை விட்டு போக முடியாதபடி அவரது பாஸ்போர்ட் முடக்கபட்டது. நேருவின் தலையிட்டால் அப்பிரச்சனை தீர்க்கப்பட்டது. பின்னாளில் அவர்கள் திருமணமும் செய்து கொண்டார்கள். ரோசலினி இறந்த போது அவரது பழைய காதலிகள் மனைவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இதை த்ரூபா தனது ஒரு படத்தின் துவக்க காட்சியாக வைத்திருக்கிறார்
நேருவின் ஆலோசனைப் படி பௌத்தம் தொடர்பான இடங்களில் அதிகம் கவனம் செலுத்தினார் ரோசலினி. நாளந்தாவினை படமாக்கினார். டெல்லி, மும்பை, ஒரிசா கர்நாடகா மத்திய பிரதேசம் வங்காளம், பீகார், என்று விரிவான பயணம் மேற்கொண்டு படமாக்கியிருக்கிறார். மைசூர் காடுகளில் யானையைப் படம்பிடித்திருக்கிறார். இந்தப் பயணத்தின் வழியே அவர் இந்தியாவை நெருக்கமாக அறிந்து கொண்டிருக்கிறார்.
மார்ச் 5ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மதுரை வந்தடைந்த படக்குழுவினர் அன்று நாள் முழுவதும் மதுரையைப் படம்பிடித்திருக்கிறார்கள். பாவைக் கூத்து எனப்படும் நிழல் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துபவர்களைக் கண்டுபிடித்து அவற்றைப் படமாக்கியிருக்கிறார்கள்.
ரோசலினி கோபத்தில் மிக மோசமாகத் திட்டக் கூடியவர். இதனால் அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருந்தது. இந்த வசைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிட்டு ஒரு நாள் பாதி வழியில் காரை நிறுத்தி இறங்கிக் கொண்டு என்னால் இனிமேல் பணியாற்ற முடியாது. உங்களுக்குத் தெரிந்த வழியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கையை விரித்துவிட்டார். அடுத்து நடந்த சம்பவம் கிட்டுவை கலங்க வைத்துவிட்டது.
தனது தவற்றை உணர்ந்த ரோசலினி சப்தமாக அழத்துவங்கினார்.. கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தக் காட்சி கிட்டுவின் மனதை இளக்கியது. மீண்டும் இணைந்து பணியாற்றத் துவங்கினார்
இந்த ஆவணப்படத்தின் போது ஒவியர் எம் எப் ஹுசைன். படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து ஒவியங்கள் வரைந்திருக்கிறார்.
இந்தியாவைப் பற்றி மேற்குலகம் கொண்டிருந்த பிம்பங்களுக்கு மாற்றாக இந்தியாவின் உண்மையான முகத்தைத் தான் காட்ட விரும்புவதாக ரோசலினி தெரிவித்தார். அந்த எண்ணம் இந்த ஆவணப்படத்தில் முழுமையாக வெளிப்படவில்லை. ஆனால் இந்தியா குறித்த புதிய புரிதலை இந்தப் படம் உருவாக்குகிறது என்பது உண்மையே
October 26, 2023
கே.ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள்.
மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜின் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்பு மலர் ஒன்றை மலையாளத்தில் கொண்டு வருகிறார்கள்.

அந்த மலரில் கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.
நண்பர் ஷாஜி இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
**
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


