S. Ramakrishnan's Blog, page 50

October 14, 2023

எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -3

அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2023 20:38

எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -2

அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2023 20:35

எஸ்.ரா கதைகள் -நூறு – பங்கேற்றவர்கள் -1

அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் நூறு நிகழ்வில் பங்குபெற்றவர்களின் பட்டியல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2023 20:31

எஸ்.ரா கதைகள் -நூறு

எஸ் ரா கதைகள் -நூறு என எனது சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இணைய வழியாக நடைபெற்ற இந்த அறிமுக உரைகள் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளன. ‘

இதுவரை நூறு சிறுகதைகளுக்கும் மேலாகவே அறிமுகவுரை நிகழ்த்தியுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள். எழுத்தாளர்கள் துவங்கி பள்ளி மாணவி வரை இதில் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெரிய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டிய நிகழ்வை அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் வழியே நடத்திக் காட்டி சாதனை புரிந்துள்ளார் பேராசிரியர் வினோத். அவருக்கும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம் அமைப்பிற்கும், நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

இப்படி ஒரு நிகழ்வு இதுவரை எந்தப் படைப்பாளிக்கும் நடந்ததில்லை. அதுவும் நூறு சிறுகதைகளை வாசகர்களே தேர்வு செய்து அறிமுகம் செய்வது பாராட்டிற்குரிய செயல். எனது முதல் சிறுகதைத்தொகுப்பிலிருந்து சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு வரை வாசித்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.

சிறுகதை படிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று பொதுவெளியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது பொய் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்திருக்கிறது.

நல்ல சிறுகதைகளைத் தேடிப்படிப்பதோடு அதை சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கைக் குரிய செயல்பாடு. இந்த நிகழ்வில் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டு உரையாற்றி யிருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையே அது வெளிப்படுத்துகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இந்த உரைகள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு யூடியூப் சேனலில் தனிவரிசையாக வெளியிடப்படும்.

இன்று மாலை இணைய வழியே நடைபெறும் நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

Topic: எஸ்.ரா கதைகள் -100

Time : 4pm
Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/74619738004?pwd=EiAaxrgfwgNGkbxh5FbaLDjlAW3NVR.1
Meeting ID: 746 1973 8004 Passcode: 5Qu0uT

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2023 20:19

கடலோடு சண்டையிடும் மீன்

சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கடலோடு சண்டையிடும் மீன்.

கடலோடு சண்டையிடும் மீன், நீளநாக்கு, பம்பாழபம், லாலி பாலே என சிறுவெளியீடுகளாக வந்த நான்கு சிறார்கதைகளைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம்.

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2023 00:41

சிறுபத்திரிக்கையின் குரல்


Little Magazine Voices வங்காளத்திலுள்ள சிறுபத்திரிக்கைக் கலாச்சாரம் பற்றிய ஆவணப்படம். வங்காளத்தில் நிலவும் சிறுபத்திரிக்கைச் சூழல் அதன் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள். புத்தகக் கடைகள் பற்றிய இந்த ஆவணப்படம் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது.

குறிப்பாக சமகால வங்காள இலக்கியம் மற்றும் அறிவுசார் பண்பாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது .

தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிக்கைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. மிகச்சிறந்த படைப்பாளிகள் சிறுபத்திரிக்கையிலிருந்து உருவானவர்களே. சிறந்த மொழிபெயர்ப்புகள். புனைகதைகள். கவிதைகளை சிறுபத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதனை நடத்திய எழுத்தாளர்கள் நண்பர்களின் பொருளாதார உதவியோடு இதழை நடத்தி நஷ்டப்பட்டார்கள். ஆனால் அவர்களின் வழியே தான் இலக்கியத்தின் புதிய பாதை உருவாக்கபட்டது.

நான் எழுத வந்த காலத்தில் சிறுபத்திரிக்கைகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன. நானே அட்சரம் என்ற சிறுபத்திரிக்கையை நடத்தியிருக்கிறேன். இந்த ஆவணப்படம் அந்த நாட்களை நினைவுபடுத்தியது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2023 00:33

October 13, 2023

அரவான் புதிய பதிப்பு

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது அரவான் நாடகத்தொகுப்பு புதிய பதிப்பாக வெளியாகிறது

அரவான் நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாடகம் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 13, 2023 01:21

October 12, 2023

மதுரை புத்தகத் திருவிழாவில்

மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

அரங்கம் எண் – 72

வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.

புகைப்படங்கள்

நன்றி : Shruti Ilakkiyam

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 12, 2023 22:13

October 11, 2023

ஓடிய கால்கள்

அடிடாஸ். பூமா இரண்டும் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனங்கள். டாஸ்லர் சகோதரர்கள் எனப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ஃப் மற்றும் ருடால்ஃப் சகோதரர்கள் பிரிந்து இந்த நிறுவனங்களை உருவாக்கினார்கள்.

இவர்கள் எப்படி விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணி தயாரிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். எவ்வாறு புகழ்பெற்றார்கள். எதன் காரணமாக இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அந்தப் பிரிவிற்குப் பின்பு எப்படித் தனக்கெனத் தனி நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதை அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

That’s The Name Of The Game! – Adidas vs. Puma என்ற இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆலிவர் டோமெங்கட்

ஜெர்மனியின் ஹெர்சோஜெனாராச்சிலுள்ள எளிய குடும்பத்தில் பிறந்தவர். ருடால்ஃப் , அவரது தம்பி அடோல்ஃப்.

காலணி தயாரிப்பில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் குடும்பமது. ஆகவே விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணியை உருவாக்க வேண்டும் என்று அடோல்ஃப் கனவு கண்டார..

இதற்கான புதிய மாடலைத் தானாக உருவாக்கினார். அவரிடம் பொருளாதார வசதியில்லை. எவரது உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே தானாக உருவாக்கிய இயந்திரங்களுடன் காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவரைப் புரிந்து கொள்ளாமல் ஊர்மக்கள் ஏளனம் செய்தார்கள்.

தம்பியின் ஆர்வத்திற்கு உதவி செய்ய முன் வந்த ருடால்ஃப் தான் பார்த்துக் கொண்டிருந்த விற்பனை பிரதி வேலையை உதறிவிட்டு புதிய காலணி உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் துவங்குகிறார். இந்த நிறுவனத்தில் தயாரிப்பு பணிகளை அடோல்ஃப் கவனித்துக் கொள்ள வேண்டும். விற்பனை பகுதியை ருடால்ஃ பார்த்துக் கொள்வார் என முடிவு செய்து கொள்கிறார்கள்.

1919ல் அவர்களின் புதிய நிறுவனம் துவங்கப்படுகிறது. அவர்கள் உருவாக்கிய சிறப்புகாலணியை அணிந்து கொண்டு 1936 ஒலிம்பிக்கில் தடகள வீர்ர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனால் நிறுவனம் புகழ்பெறத் துவங்குகிறது. இந் நிலையில் ருடால்ஃப் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.

ஜெர்மனியில் நாஜி எழுச்சி பெற்று வரும் காலமது. ஆகவே ராணுவ அதிகாரிகளின் உதவியைப் பெற்று ருடால்ஃப் தனது நிறுவனத்தைப் பெரியதாக வளர்த்தெடுக்கிறான். பணமும் புகழும் வந்து சேர்கின்றன.

அடோல்ஃப் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் நிறுவனப் பணிகளில் ஈடுபடத் துவங்கி ருடால்ஃப்பிற்கு நெருக்கமாகிறாள். அவர்களுக்குள் கள்ள உறவு இருக்கிறது எனக் கண்டறியும் ருடால்ஃப்பின் மனைவி அவரிடம் கோவித்துக் கொள்கிறாள். அந்த உறவை பற்றி அடோல்ஃப்பிற்கு எதுவும் தெரியாது

இந்நிலையில் ஓட்டப்பந்தய வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் அடோல்ஃப் உருவாக்கி தந்த காலணியை அணிந்து கொண்டு ஒடி ஒலிம்பிக்கில் வெற்றி பெறுகிறார். இது ஜெர்மன் ராணுவ தலைமைக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. இந்தக் காலணியைத் தயாரித்த ருடால்ஃப் நிறுவனத்தை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. இருவரது மனைவியும் அந்தப் பிரிவை பெரிதாக்குகிறார்கள். பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.

எப்படியாவது நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராணுவ தலைமையை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறார்கள்.

காலணி தயாரிப்பை நிறுத்திவிட்டு அவர்கள் ராணுவ தளவாடங்களைத் தயாரித்துத் தர வேண்டும் என்கிறார் ராணுவ அதிகாரி. ருடால்ஃப் மன்றாடவே ஆறாயிரம் ராணுவ வீர்ர்களுக்கான தோல் காலணிகள் தயாரிக்கும் ஆர்டர் அவர்களுக்குத் தரப்படுகிறது. ராணுவத்திற்கான காலணி தயாரிப்பில் அடோல்ஃப் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே அவர்கள் தயாரிப்புத் தரமற்றது என ராணுவத்தால் நிராகரிக்கபடுகிறது.

அண்ணன் தம்பி உறவில் விரிசல் ஏற்படுகிறது. இருவரும் சண்டை போடுகிறார்கள். போர்ச் சூழல் உருவாகவே ருடால்ப் ஜெர்மன் இராணுவத்தில் சேர்கிறார். அவர்களின் காலணித் தொழிற்சாலை ஆயுத தொழிற்சாலையாக மாற்றப்படுகிறது.

போர் முடிந்த பிறகு, ருடால்ப் சொந்த ஊர் திரும்புகிறார். நிலைமை உருமாறிப் போயிருக்கிறது. இனி என்ன செய்வது என அவருக்குத் தெரியவில்லை. சகோதரர்கள் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டுகிறார்கள். கசப்பான உறவோடு ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

முடிவில் அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரிப்பது என முடிவு செய்கிறார்கள். பெரும்பகுதி ஊழியர்களைத் தன் வசமாக்கிக் கொள்கிறான் ருடால்ப். இருப்பவர்களைக் கொண்டு புதிய தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுகிறான் அடோல்ஃப்

ருடால்ஃப் உருவாக்கியது பூமா. அடோல்ஃப் உருவாக்கியது அடிடாஸ். இரண்டு நிறுவனங்களுக்குள் போட்டி உருவாகிறது. யார் எந்தக் கிளப்பை சொந்தமாக்கிக் கொள்வது எனப் போட்டியிடுகிறார்கள். அடோல்ஃப் தனது காலணிகளுக்கு எனத் தனி முத்திரையாக மூன்று கோடுகளை வடிவமைக்கிறான். ருடால்ஃப் தனது அதிநவீன விற்பனை அணுகுமுறையால் பெரிய வீர்ர்களைத் தனதாக்கிக் கொள்கிறான்.

இந்த மோதலின் உச்சமாக ஜெர்மன் கால்பந்தாட்ட வீர்ர்கள் எந்தக் காலணியை அணிவது என்ற போட்டி உருவாகிறது. இதற்காக ஜெர்மன் கோச் ருடால்ஃப்பை தேடி வந்து பேசுகிறார். கமிஷன் அதிகம் கேட்கிறார். ருடால்ஃப் இதனை மறுத்துவிடுகிறான். ஆனால் அடோல்ஃப் ஏற்றுக் கொள்கிறான். அவனது நிறுவனம் உருவாக்கிய காலணியை அணிந்து கொண்டு ஜெர்மன் கால்பந்தாட்ட அணி விளையாடுகிறது. உலகக் கோப்பையை வெல்கிறது. அடோல்ஃ புகழின் உச்சிக்குச் செல்கிறான்

படம் அதிலிருந்து தான் துவங்குகிறது. அங்கே தான் நிறைவுபெறுகிறது. தனது தம்பியின் வெற்றியை பாராட்டி அண்ணன் ருடால்ஃப் ஒரு வாழ்த்து அட்டையைச் சொருகிச் செல்வது சிறப்பான காட்சி

அது போலவே தாங்களால் ஜெர்மன் கால்பந்தாட்ட அணியின் கோச்சை சந்திக்க முடியாது என ருடால்ஃப் தோற்று திரும்பும் போது அவரே தேடி வந்து ஒப்பந்தம் செய்து கொள்வது அரியதொரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

1948 இல் ருடால்ஃ பூமாவை நிறுவினார் 1949ல், அடால்ஃப் அடிடாஸை நிறுவினார். இரண்டு நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி இன்றும் குறையவில்லை. இரண்டும் விஸ்வரூப வளர்ச்சி கொண்டு நிற்கின்றன.

தொழிற்போட்டி வீட்டிற்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குச் சாட்சியமாக உள்ளது ருடால்பின் மனைவி அடோல்ஃப் மனைவியைக் குற்றம் சாட்டுவது. அந்தக்காட்சியில் குழந்தைகள் ஒளிந்திருந்து பெற்றோர் பேசுவதைக் கேட்கிறார்கள். அதிர்ச்சியான தகவலைக் கேட்டு பையன் அழுகிறான். அவனைத் தேடி வந்து அடால்ஃப் அணைத்துக் கொள்கிறான். உணர்ச்சிப்பூர்வமான காட்சியது

காலணி தயாரிப்பு நிறுவனத்திற்குள் இருந்த இனவெறி. அன்றைய ஜெர்மானிய போர்சூழல். ராணுவத்தின் அதிகார வெறி. நம்பிக்கை இழந்த பணியாளர்கள் என அந்தக் காலகட்டத்தைச் சிறப்பாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்

காலணிகளில் எந்த ஒன்றை பிரித்துவிட்டாலும் மற்றொன்றை பயன்படுத்த முடியாது. உறவு அப்படியானதில்லை போலும். இங்கே சகோதர்கள் ஒரே துறையில் இரண்டு பாதையில் பயணிக்கிறார்கள். இருவரும் வெற்றி பெறுகிறார்கள். கடைசி வரை இணையவேயில்லை.

1974 இல் ருடால்ஃப் இறந்தார், அதைத் தொடர்ந்து அடோல்ஃப் 1978 இல் இறந்து போனார், இருவரது கல்லறையும் எதிரெதிராக உள்ளன. இரண்டு குடும்பங்களுக்குள் இன்றும் உறவு மலரவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2023 05:11

October 10, 2023

நகரங்களே சாட்சி

சிறந்த ஆசியத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நகரங்களே சாட்சி

டிசம்பர் 25ல் சென்னையில் வெளியாகிறது

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2023 05:38

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.