S. Ramakrishnan's Blog, page 54

September 6, 2023

நகரங்களே சாட்சி

Ancient Egypt by Train with Alice Roberts என்ற பயணத்தொடரைப் பார்த்தேன். ஆலிஸ் ராபர்ட்ஸ் பண்டைய எகிப்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்காக நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்கிறார்.

மருத்துவரான ஆலிஸ் ராபர்ட்ஸ் சவுத் வேல்ஸிலுள்ள தேசிய சுகாதாரச் சேவையில் இளம் மருத்துவராக பதினெட்டு மாதங்கள் பணியாற்றினார். பின்பு 1998 இல் மருத்துவத்துறையை வெளியேறி பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். தற்போது தொலைக்காட்சிக்கான அறிவியல் மற்றும் வரலாற்று ஆவணப்படங்களின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

எகிப்தில் முதல் இரயில் பாதை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது, இது கெய்ரோவை அலெக்ஸாண்ட்ரியாவுடன் இணைக்கிறது. 1902 ஆம் ஆண்டு வரை முதல் இந்த ரயிலில் உறங்கும் படுக்கைகள் கிடையாது, அதன்பிறகே படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் லக்சர், அஸ்வான் மற்றும் போர்ட்சைட் போன்ற எகிப்தின் பிற இடங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டன. 1950களில் உல்லாச பயணங்களின் வருகை அதிகமானதால் ரயிலில் ஆடம்பர வசதிகள் அறிமுகமாகின. மதுக்கூடம் மற்றும் உணவகங்களுடன் கூடிய சொகுசு ரயில் சேவை உருவானது.

1970 களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சொகுசுரயில் சேவை நிறுத்தப்பட்டது. 1980 களில் எகிப்திய அரசாங்கம் நவீன வசதிகள் கொண்ட ரயில்களை மீண்டும் அறிமுகம் செய்து வைத்தது. இன்று கெய்ரோவிலிருந்து அஸ்வான், லக்சர், அலெக்ஸாண்ட்ரியா மற்றும் பிற இடங்களுக்கு ரயில் மூலம் பயணம் செய்வது எளிதானது.

இந்த ஆவணப்படம் விதவிதமான சிறிய பெரிய ரயில் நிலையங்கள். ரயில் பயணங்களையும் பேரழகுமிக்கப் பயணக்காட்சிகளையும் ஒரு தளத்தில் விவரிக்கிறது. இன்னொரு தளத்தில் வரலாற்றுச் சாட்சியங்களாக உள்ள பழைய நகரங்கள் இன்று எப்படியுள்ளன. உலகெங்குமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான காரணங்கள் எவை என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

மூவாயிரம் மைல்களுக்கு மேலான இந்த ரயில் பயணத்தின் வழியாக நாம் எகிப்தின் முக்கியத் தொல்பொருள் தளங்களைக் காணுகிறோம். இடிந்த நகரங்களே இன்று வரலாற்றின் சாட்சியமாக நிற்கின்றன. இது போன்ற வரலாற்று சின்னங்களைப் பார்வையிட இளைஞர்கள் குறைவாகவே வருகை தருகிறார்கள். படத்தில் காட்டப்படும் பயணிகளில் அதிகமும் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள். அல்லது முதியவர்கள். இன்று எகிப்து தனது வரலாற்று முகத்தை மறந்து நவீன வாழ்க்கையின் அடையாளங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பண்பாட்டில், கலையில் அதன் அடையாளங்களை இழக்கவில்லை. பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது

எகிப்திய தொல்பொருள் ஆய்வின் முன்னோடியாகக் கருதப்படும் அமெலியா எட்வர்ட்ஸ் பற்றியும், அவரது எகிப்திய பயண அனுபவங்களை விவரிக்கும் புகழ்பெற்ற நூலான A Thousand Miles Up the Nile பற்றியும் ஆலிஸ் ராபர்ட்ஸ் விவரிக்கிறார். அத்தோடு அந்தப் புத்தகத்தைத் தனது கையிலே வைத்துப் படித்துக் கொண்டு செல்கிறார்

அமெலியா எட்வர்ட்ஸ் ஒரு ஆங்கில நாவலாசிரியர். தொல்பொருள் ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 1882 இல் எகிப்து ஆய்வு நிதியத்தை இணைந்து நிறுவியவர்.

1874ல் அமெலியா எகிப்துக்குச் சுற்றுப்பயணம் செய்தார். நீண்ட படகு பயணத்தை மேற்கொண்ட அவர் எகிப்தின் நினைவுச்சின்னங்கள் அழிந்து வருவதைக் கண்டு அதை மீட்பதற்கான முயற்சிகளைத் துவங்கினார். அறிவியல் பூர்வமான பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்த முனைந்ததோடு எகிப்தின் தொன்மைச் சிறப்புகள் குறித்து விரிவாக எழுதவும் பேசவும் துவங்கினார். இதனால் பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கபட்டதோடு அவை முக்கியச் சுற்றுலா மையங்களாகவும் உருமாறின. 1882ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் படைகளால் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டது. அதன்பிறகு பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். கல்லறையில் பாதுகாக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை அவர்கள் கொள்ளை அடித்துச் சென்றார்கள் என்றொரு குற்றச்சாட்டு இன்று முன்வைக்கப்படுகிறது.

 நைல் பயணத்தின் முழு அனுபவத்தையும் ஒரே வரியில் சொல்வதென்றால் ஒரு கழுதைச் சவாரி மற்றும் இடிபாடுகளை நோக்கிய படகு பயணம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் அமெலியா.

நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பற்றி ஒருவர் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறாரோ அதை வைத்துத் தான் அவரால் இந்த இடிபாடுகளை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும் எனும் அமெலியா தனது பயண அனுபவத்தினைத் துல்லியமாக விவரித்திருக்கிறார்

இந்த ஆவணப்படத்தில் நான்கு எபிசோடுகளில் எகிப்தின் வரலாறு மற்றும் இன்றைய வாழ்க்கை குறித்து எளிமையாக விவரித்துவிடுகிறார்கள்.அது ஒரு நல்ல அறிமுகம் என்றே சொல்வேன்

இந்த ஆவணப்படத்தில் ஆலீஸ் உடன் நாமும் ரயிலில் பயணம் செய்கிறோம். ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெயிலில் நடக்கிறோம். பிரமிடுகளில் ஏறி இறங்குகிறோம். சுரங்கப் பாதைகளுக்குள் நடந்து செல்கிறோம். வரலாற்றுப் பயணம் என்ற போது தனது தனிப்பட்ட ஆசைகள் விருப்பங்களையும் ஆலீஸ் பகிர்ந்து கொள்கிறார்.

முதல் பகுதியில் அவரது பயணம் அலெக்ஸாண்ட்ரியாவில் தொடங்கி, கிளியோபாட்ராவின் மாளிகையைத் தேடுகிறார் , எங்கே கிளியோபாட்ரா இறந்து போயிருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர் ஒரு இடத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அத்தோடு அடிமையாக இருந்த ஒருவர் எப்படிச் சுல்தானாகி தனது சொந்த சமாதியைக் கட்டியெழுப்பினார் என்பதை அறிந்து கொள்கிறார்.

இரண்டாவது பகுதியில் பாரோ குஃபுவின் கல்லறையைப் பார்க்கச் செல்கிறார். குஃபு எகிப்தின் மிகப்பெரிய பிரமிடு ஆகும்,  இது கிசாவில் அமைந்துள்ளது வரலாற்றாசிரியர்கள் இது கிமு 2560 இல் கட்டப்பட்டதாக நம்புகிறார்கள் இந்த பிரமிடு 455 மீட்டர் உயரம் உள்ளது

எகிப்தின் பிரமிடுகளில் உள்ள சுரங்கப்பாதைகள்  மர்மமானவை பிரமிடின் சுரங்கப்பாதையில் அவர் நடந்து செல்லும் போது கேமிரா அவரை நிழல் போல பின்தொடருகிறது.

அடுத்த பயணம் லக்சர் நோக்கியது. அங்கே துட்டன்காமூனின் கல்லறை மற்றும் மம்மியைப் பார்வையிடுகிறார்.

எகிப்தின் 13-வது மன்னனான துட்டன்காமூன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமூன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனதாக சொல்கிறார்கள். ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறான். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் லக்சர் நகரத்தில் துட்டன்காமூனின் கல்லறையைக் கண்டுபிடித்தார். கல்லறை உள்ள அறையை ஒட்டி புதையலும் கண்டறியப்பட்டது. இதில் 5,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன. அவற்றில் பாதி இறுதிச்சடங்கில் அளிக்கப்படும் இயற்கைப் பொருட்களாகும்

2005-ஆம் ஆண்டில் துட்டன்காமூனின் மம்மியை லேசர் மூலம் ஆய்வு செய்த போது அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அத்தோடு அவன் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கலாம் என்றும் அறிய வந்தது.

நான்காவது பகுதியில் அஸ்வானில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, ஃபிலே கோயிலைக் காணப் படகில் செல்கிறார்.

அஸ்வான் தெற்கு எகிப்தில் உள்ள நகரமாகும்.  எகிப்தின் முக்கிய வணிக மையமாகவும், சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் வெளியே பழங்கால எகிப்திய நாகரிகத்தின் சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. அஸ்வான் அணை நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது.  ஃபிலே கோவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் ஊடாகப் பண்டைய எகிப்திய வாழ்க்கை முறை. விவசாயம். நகர உருவாக்கம் உணவுப்பண்பாடு இவற்றை விளக்குகிறார். அத்தோடு இன்றைய வாழ்க்கை முறை, வணிக அங்காடிகள். மதவழிபாட்டு முறைகள். சடங்குகள் மற்றும் பயணிகளுக்கான உல்லாச விடுதிகளைப் பற்றியும் பேசுகிறார்.

கெய்ரோவின் புகழ்பெற்ற கார்பெட் பஜார். அங்கு விற்கப்படும் பாரசீக மற்றும் சிரிய தரைவிரிப்புகள், பிரார்த்தனை-கம்பளங்களைக் காணுகிறோம். காபியின் மணமும் பூவேலைப்பாடு கொண்ட துணிகள் விற்கும் கடைகள். குறுகலான சந்துகள். அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகள். சாலையோர ஓவியர்கள். வெள்ளிப்பொருட்கள் விற்கும் அங்காடி எனக் கெய்ரோவிற்குள் நாமே சுற்றி அலைகிறோம் கெய்ரோவில் பல சிறப்புப் பஜார்களும் உள்ளன; ஸ்வீட் மீட் பஜார், பழைய பொருட்கள் விற்கும் பஜார். புகையிலை பஜார்; வாள் மற்றும் ஆயுதங்கள் விற்கும் கடைகள். தொப்பி வாசனைத் திரவியம் விற்கும் கடைகள். என வரலாற்றின் தொடர்ச்சியாக விளங்கும் அங்காடிகளை இன்றும் காண முடிகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2023 05:05

September 1, 2023

டாவின்சி- கலையும் வாழ்வும்

வான்கோ, பிக்காசோ, லியோனார்டோ டாவின்சி இந்த மூவர் குறித்தும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் அல்லது திரைப்படம் வெளியாகிறது. புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் மற்றும் தொலைக்காட்சியால் உருவாக்கபடும் இந்தப் படங்கள் உலகெங்கும் திரையிடப்படுகின்றன. பெரும்வரவேற்பைப் பெறுகின்றன.

கார்செஸ் லம்பேர்ட் இயக்கிய I, Leonardo 2019ல் வெளியானது. இப்படம் டாவின்சியின் அறிவியல் ஈடுபாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டாவின்சியின் கோட்டுச்சித்திரங்கள் பற்றியும் அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தவர்கள் யார். அவர்களுடன் டாவின்சிக்கு எத்தகைய உறவு இருந்தது என்பது குறித்தும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மனித உடலின் வடிவத்தையும் அழகினையும் டாவின்சி ஆழ்ந்து ரசித்து வரைந்திருக்கிறார். ஒரு நபரின் உடலமைப்பை உண்மையாகச் சித்தரிக்க, முதலில் ஒரு மனிதனின் தசைகள் மற்றும் எலும்புக்கூடு எவ்வாறு அமைந்துள்ளது. எப்படி ஒன்றாகப் பொருந்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் டாவின்சி. ஆகவே உடலின் இயக்கம் மற்றும் உடற்கட்டுமானம், நரம்புகள், எலும்புகளின் இயல்பு பற்றிய அவரது புரிதல் வியப்பளிக்கிறது

லியோனார்டோ டா வின்சி பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக இருந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பணம் ஈட்டுவதை விடவும் கலையின் உன்னத நிலையை அடைவதற்காகவே போராடியிருக்கிறார். டாவின்சி தனது தந்தையைப் பற்றிச் சில குறிப்புகள் எழுதியிருக்கிறார். ஆனால் தாயைப் பற்றி அதிகம் பேசவில்லை. தாய் தனியே வாழ்ந்து வந்தார். ஆகவே அவர் பெரும்பாலும் தனது தந்தையின் குடும்பத்துடன் வளர்ந்ததாகத் தெரிகிறது,

இப்படத்தின் ஒரு காட்சியில் அவர் தனது தாயை நினைவுகூறுகிறார். டாவின்சியின் அம்மா அடிதட்டு வகுப்பை சேர்ந்தவர். தந்தை ஒரு வழக்கறிஞர். டாவின்சி பிறந்தபிறகே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பு பிறந்த பிள்ளைகளைக் கள்ளக்குழந்தைகளாக அன்றைய சமூகம் கருதியது. ஆகவே அவர் தனது தாயைப் பற்றிப் பொதுவெளியில் அதிகம் பகிரவில்லை.

புளோரன்ஸில் வசித்த ஓவியரும் சிற்பியுமான ஆண்ட்ரியா டெல் வெரோச்சியோவிடம் டாவின்சி கலைகள் கற்றுக் கொண்ட நாட்களைப் படம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது. அந்தக் கலைக்கூடத்தில் சேர்ந்த போது அவரது வயது 14. டாவின்சி இடது கைப் பழக்கம் உடையவர்.

பத்து ஆண்டுகள் வெரோச்சியிடம் கலைபயின்றிருக்கிறார். இயற்கையைப் பற்றிய அவரது ஆய்வைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவியாக வரைதல், இருந்திருக்கிறது. அவரது ஆர்வமும், அறிவுப் பசியும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் கவனம் கொள்ளச் செய்திருக்கின்றன

டாவின்சி மீது நம்பிக்கை கொண்டிருந்த போதும் அவரை வெரோச்சி புரிந்து கொள்ளவில்லை.. கடைசி விருந்து ஓவியத்தை வரைவதற்கு முன்பு இதை உலகின் உன்னதமான ஒவியமாக வரைந்து முடித்துவிட்டால் தனது திராட்சை தோட்டத்தைப் பரிசாகத் தருவதாகச் சொன்னார் வெரோச்சி. தன் மனதில் அந்த ஓவியம் முழுமையடையாமல் தன்னால் சுவரில் வரைய முடியாது என்று உறுதியாகச் சொன்னார் டாவின்சி.

வெரோச்சி கலைக்கூடத்தில் பெற்ற பயிற்சிகள் தான் பின்பு அவரை ஒப்பற்ற ஓவியராக ஒளிரச் செய்தது. இந்தத் திரைப்படத்தில் கடைசிவிருந்து ஒவியத்தைத் தனது மனதில் டாவின்சி எப்படி உருவாக்கினார் என்பதையும் யூதாஸின் முகத்திற்கான மாடலைத்தேடி அன்றாடம் சந்தையில் சுற்றி அலைந்தார் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான முகங்களைக் கடந்த பிறகு தனக்கான யூதாஸின் முகத்தினை டாவின்சி கண்டுபிடித்திருக்கிறார்.

தனது சீடர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சொன்னதைக் கேட்டுச் சீடர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையே கடைசி விருந்து ஓவியம் சித்தரிக்கிறது. இயேசுவின் சீடர்களின் முகங்கள் மற்றும் அதன் கோணம். உணவு மேஜையில் உள்ள ரொட்டித் துண்டுகள். இயேசுவின் முகபாவம், அவரது சீடர்களுக்குள் உள்ள நெருக்கம் மற்றும் கவலை, திகைப்பு. எனத் துல்லியமாக உணர்ச்சிகளைச் சித்தரித்துள்ளார் டாவின்சி. இதற்கான ஒத்திகையை அவர் தொடர்ந்து மேற்கொள்வதையும் அவரே இயேசுவாக மாறி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதையும் படத்தில் காணமுடிகிறது.

டாவின்சியின் அறிவு தீர்க்கமானது. அவர் பறக்கும் இயந்திரங்கள், ஒரு வகைக் கவச போர் வாகனம், சூரிய சக்தி இயந்திரம் எனப் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை வரைந்திருக்கிறார். இது போலவே உடற்கூறியல், சிவில் இன்ஜினியரிங், புவியியல், ஒளியியல் மற்றும் கட்டிடக்கலையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் அழகு குறித்த தனது பார்வையை டாவின்சி வெளிப்படுத்துகிறார். குறிப்பிட்ட கோணம் அழகை முழுமையாக்குகிறது என்று சொல்கிறார். அதைக் கேட்ட இளம் பெண் காலத்ததால் அழகும் காதலும் அழிக்கபட்டுவிடும் என்கிறாள். அதற்குச் சிரித்தபடியே கலை அழகை நிரந்தரமாக்கிவிடும் என்று சொல்கிறார் டாவின்சி. அவர் அழகு எனச் சொல்வது புற அழகினை மட்டுமில்லை. உலகம் அருவெருப்புக் கொண்டு ஒதுக்குகிற விஷயங்களில் அவர் அழகினைக் கண்டார். உடலின் தசைகளையும் நரம்புகளையும் அழகின் வடிவமாகக் கருதினார்.

இளமை மற்றும் முதுமை, அழகு மற்றும் அசிங்கத்திற்கு இடையிலான வேறுபாடுகளை அவரைப் போல ஆராய்ந்தவரில்லை. ஒரே உடலில் துயரமும் மகிழ்ச்சியும் இரு தலைகள் கொண்டிருப்பதாக ஒரு ஒவியத்தை வரைந்திருக்கிறார். அந்தப் புரிதல் முக்கியமானது. கர்ப்பத்திலுள்ள சிசுவின் தோற்றம் மற்றும் இயக்கங்களை அவர் வரைந்துள்ள விதம் பிரமிக்க வைக்கிறது.

லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டவர் கலைவிமர்சகர் கென்னத் கிளார்க். டாவின்சியின் ஓவியங்களை ஆராய்வதிலே தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். டாவின்சி பற்றி விரிவான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். டாவின்சியின் புகழ்பெற்ற ஒவியங்கள் குறித்த கென்னத் கிளார்க்கின் பார்வைகள் முக்கியமானவை. கலைஞர்களின் குறிக்கோள் வெளிப்புறத் தோற்றத்தை வரைவது மட்டுமல்ல, அவர்களின் உள் எண்ணங்களையும் வெளிப்படுத்த வேண்டும். அதை டாவின்சி சிறப்பாகச் செய்திருக்கிறார் என்கிறார் கென்னத் கிளார்க்

லியோனார்டோவின் பல உருவப்படங்களில், ஒரு நிறம் எந்த இடத்தில் முடிவடைகிறது, மற்றொன்று எந்தப் புள்ளியில் தொடங்குகிறது என்று சொல்வது சாத்தியமற்றது இந்தக் காரணத்திற்காக, லியோனார்டோ “தெளிவற்ற” முகபாவனையை உருவாக்கினார். தெளிவற்ற வெளிப்பாடுகளில் ஒரு நிலையான தோற்றமயக்கம் ஏற்படுகிறது. இந்த நோக்கத்திற்காக “ஸ்ஃபுமாடோ” (புகை போல மறைந்து போவதற்கான இத்தாலிய வார்த்தை) நுட்பத்தை உருவாக்கினார். இந்த நுட்பம் லியோனார்டோவால் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அதை அவர் சரியாகப் பயன்படுத்தினார்.. மேம்படுத்தினார் என்பதே நிஜம்.

மிலனில் உள்ள சாண்டா மரியா டெல்லே கிரேசியின் சுவரில் கடைசி விருந்து ஓவியத்தை டாவின்சி வரைந்திருக்கிறார். லியோனார்டோ இந்த ஒவியம் மனதின் இயக்கங்களைக் காட்சியாகச் சித்தரிக்கிறது. மேசையின் எதிர் பக்கத்தில் வரையப்பட்ட யூதாஸ், மற்ற அப்போஸ்தலர்களிடமிருந்து அவரது நிழல் முகத்தால் தனித்துத் தெரிகிறார்.

கட்டிடக் கலைக்காக உருவாக்கபட்ட கோல்டன் ரேஷியோ எனப்படும் கோட்பாட்டினை தனது ஒவியங்களில் டாவின்சி பயன்படுத்தியிருக்கிறார் . லியனார்டோ சரியான கண்ணோட்டத்துடன் காட்சிகளை வரைவதற்கு உதவும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். இந்த இயந்திரம் பெர்ஸ்பெக்டோகிராஃப் என்று அழைக்கப்பட்டது, கேமிராவின் முன்னோடி என இதைச் சொல்லலாம். லியோனார்டோ தான் ஓவியம் வரைய விரும்பிய காட்சியின் முன் கண்ணாடிக்கருவியை வைத்து அதன் துளை வழியாகப் பார்த்து, காட்சியின் வெளிப்புறத்தை கண்ணாடி துண்டில் வரைவது வழக்கம். இப்படத்தில் அந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.

லியோனார்டோ டாவின்சி தண்ணீரை “இயற்கையின் வாகனம்” என்று அழைக்கிறார். நமது உடலுக்கு இரத்தம் எப்படி ஆதாரமாக இருக்கிறதோ அது போலவே உலகிற்குத் தண்ணீர் ஆதாரமாக இருக்கிறது. ஆகவே லியோனார்டோவின் பல ஓவியங்கள் தண்ணீரைக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் ஒரு காட்சியில் அடுப்பில் தண்ணீர் சூடாகிக் கொதித்துக் கொண்டிருக்கிறது. தண்ணீரை ஒடுக்குவதற்காக நெருப்பு அதனைச் சூடேற்றுகிறது எனக் கதை போல டாவின்சி சொல்கிறார். முடிவில் தண்ணீர் பொங்கி வழிந்து நெருப்பை அணைத்துவிடுகிறது. அதைக்கண்டு உற்சாகமாகி தண்ணீர் தான் எப்போதும் வெல்கிறது என்கிறார் டாவின்சி.

அவர் திரவ இயக்கவியலைப் புரிந்து கொள்ள விரும்பினார்: நீர் செல்லும் வழி. ஓட்டம், வேகம், வெள்ள மேலாண்மை மற்றும் சுழல்கள் குறித்து ஆராய்ந்திருக்கிறார். நீர்பொறிகளை உருவாக்கியிருக்கிறார். அதன்வழியே நவீன நீர் பொறியியல் துறைக்குப் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார், தண்ணீரில் நடக்கத் தனித்துவமான காலணிகளைக் கூட உருவாக்கினார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

ஜியான் கியாகோமோ கப்ரோட்டி எனும் பத்து வயது சிறுவன் டாவின்சியின் கலைக்கூடத்தில் உதவியாளராக வந்து சேர்ந்தான். அவனைத் தனது மாடலாக வைத்து ஓவியங்கள் வரைந்திருக்கிறார். டாவின்சியின் கலைக்கூடத்திலிருந்த சில்லறைக்காசுகளை அவன் திருடிச் சென்றுவிடுவது வழக்கம். ஆனாலும் அவனது தோற்றம் மற்றும் முகபாவத்திற்காகப் பல காலம் தனது உதவியாளராக வைத்திருந்தார். சலாய் என்று அவனை அன்போடு அழைத்தார். Saint John The Baptist ஒவியத்திற்கான மாடலாக இருந்து சலாய் தான். டாவின்சி அவனது தோற்றத்தை மட்டுமின்றி ஆன்மாவையும் தனது ஒவியத்தில் சிறப்பாக வரைந்திருக்கிறார். படத்தில் இந்தக் காட்சியை வரையும் போது அவன் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். டாவின்சி அவனைக் கோவிப்பதில்லை. மாறாக அவனுக்குத் தான் எதை வரைகிறேன் என்று புரிய வைக்கிறார்.

[image error]

இப்படத்தில் டாவின்சியின் பன்முகத்தன்மை முழுமையாக வெளிப்படுத்தபட்டுள்ளது. நிலையற்ற, மாறும் மன நிலைகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை டாவின்சி ஆராயும் விதம் படத்தின் தனிச்சிறப்பு என்பேன். தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் அரங்க அமைப்புகள் படத்திற்குக் கூடுதல் அழகு தருகின்றன. ஒரே குறை டாவின்சியாக நடித்தவர் செயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்பதே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2023 22:07

ஐசக் பேபலின் மாப்பசான்

A well-thought-out story doesn’t need to resemble real life. Life itself tries with all its might to resemble a well-crafted story. – Isaac Babel

ஆன்டன் செகாவைப் போலவே சிறுகதைகளில் தனித்துவமும் மொழிநுட்பமும் கொண்ட படைப்பாளி ஐசக் பேபல். சிறந்த ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் பேபல் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

Guy De Maupassant கதை 1932ல் வெளியானது. இக்கதையைத் தமிழில் செங்கதிர் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் – கதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஐசக் பேபலின் அன்றைய மனநிலை இக்கதையில் வரும் மாப்பசானின் மனநிலையைப் போன்றிருந்திருக்கிறது. 1916 நடக்கும் இக்கதை எழுத்தின் மீது விருப்பம் கொண்ட, வருவாய் எதுவுமில்லாத இளைஞன் ஒருவன் விவரிப்பது போலவே துவங்குகிறது.

அவன் மொழியியல் அறிஞரான அலெக்ஸி கசான்ட்சேவ்வின் நண்பன். அலெக்ஸி அன்று ரஷ்யாவில் புகழ்பெற்றிருந்த பிளாஸ்கோ இபானிஸின் ஸ்பானிஷ் நாவல்களை மொழிபெயர்த்து வந்தார். கசான்ட்சேவ் ஸ்பெயினுக்கு ஒருமுறை கூடச் சென்றதில்லை, ஆனால் அவரது முழு உள்ளமும் ஸ்பெயின் மீதான அன்பால் நிரம்பி வழிந்தது – அவர் ஸ்பானிஷ் கோட்டைகள், பூங்காக்கள் மற்றும் நதிகள் அனைத்தையும் அறிந்திருந்தார்.

வழக்கறிஞர் பெண்டர்ஸ்கி பதிப்பகம் ஒன்றை நடத்துகிறார் அவரது மனைவி ரைசா மாப்பசானின் படைப்புகளை ரஷ்யனில் மொழிபெயர்க்க முயலுகிறார். ரைசாவிற்கு உதவி செய்வதற்காக இளைஞனைச் சிபாரிசு செய்கிறார் அலெக்ஸி.

இளைஞன் ரைசாவின் மோசமான மொழிபெயர்ப்பைத் திருத்தி சரி செய்கிறான். அவனது மொழி வளம் மற்றும் எழுத்துநடையைக் கண்டு வியக்கும் ரைசா நெருங்கிப் பழகுகிறாள்.

மாப்பசானை மொழிபெயர்க்கும் போது இளைஞன் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறான். அவரது வாழ்க்கை வரலாறு அதிர்ச்சி அளிக்கிறது. உலகையே தனது கதைகளால் மகிழ்ச்சிப்படுத்திய மாப்பசான் மனநலம் பாதிக்கப்பட்டு விலங்கினைப் போல மிக மோசமான நிலையில் மனநலக்காப்பகத்தில் இருந்த உண்மையை அறிந்து கொள்ளும் போது திடுக்கிட்டுப் போகிறான்.

பேபலின் இக்கதை மாப்பசானை சுற்றிப்பின்னப்பட்டதில்லை. அது இளைஞன் மற்றும் ரைசாவின் உறவு பற்றியதே. ஆனால் கதையின் இறுதியில் மாப்பசானின் வாழ்க்கை குறியீடு போலவே விவரிக்கப்படுகிறது

சிறுவயது முதலே நோயுற்றவர் மாப்பசான் என்பதும் அவர் பிரெஞ்சு எழுத்தாளர் பிளாபெரின் உறவினர் என்பதும், பார்வை இழப்பின் ஊடாகவும் தனது மீட்சிக்கான வழியாக அவர் கதைகளை எழுதினார் என்பதையும் அறிந்து கொள்ளும் போது இளைஞனைப் போலவே நாமும் திகைத்துப் போகிறோம்

பேபல் ஏன் இது போன்ற கனன்று எரியும் கலைஞனின் அகத்தைப் பற்றிய கதையை எழுதினார். காரணம் அவரது சொந்த வாழ்க்கைச் சூழல் நிராகரிப்பு மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்தது.

கதையில் வரும் இளைஞன் தனது அறைக்குத் திரும்பிய பிறகு கனவு காணத்துவங்குகிறது. அந்தக் கனவு பாலுறவிற்காக ஏங்கும் அவனது ஆழ்மனதின் ஆசை. அதுவும் பேபலின் சொந்தவாழ்க்கையின் சாட்சியம் போலவே எழுதப்பட்டிருக்கிறது.

ரைசா ஏன் மாப்பசான் கதைகளில் ஆர்வம் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உயர்குடி வாழ்க்கை. சலிப்பூட்டுகிறது. மாப்பசானின் கதாபாத்திரங்களின் விசித்திரம் மற்றும் மீறல்கள் அவளைக் கவருகிறது. ஒரு வகையில் உயர்குடி மக்களின் ஆன்மீக வறுமையைப் பற்றிப் பேசுகிறது இக்கதை.

தனது வாழ்நாளில் மாப்பசான் எழுதிக் குவித்திருக்கிறார். அவை 29 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. அந்தத் தொகுதிகளைச் சைரா தனது வீட்டில் வைத்திருக்கிறாள். பீட்டர்ஸ்பர்க் சூரியனின் உருகும் விரல்கள் பைண்ட் செய்யப்பட்ட மாப்பசான் தொகுதிகளின் முதுகெலும்புகளைத் தொட்டன என்று கவித்துவமாக எழுதுகிறார் பேபல்.

கதையின் துவக்கத்திலே மாப்பசான் தான் எனது வாழ்வின் ஒரே கனவு என்று ரைசா சொல்கிறாள். அவளது மொழிபெயர்ப்பில் கதை உயிரற்றுக் கிடக்கிறது. அதைச் சரிசெய்யும் போது மாப்பசான் எழுத்தின் அழகியலை இளைஞன் முழுவதுமாக உணருகிறான்.

அந்தக் கதையின் ஒரு இடத்தில் இளைஞன் குடித்துவிட்டு டால்ஸ்டாயை கேலி செய்கிறான். அது உண்மையிலே பேபல் வாழ்வில் நடந்த சம்பவம். அவர் நடனத்திற்குப் பிறகு கதையைப் படித்துவிட்டு இது போல டால்ஸ்டாயை கேலி செய்திருக்கிறார்.

மாப்பசான் பிறக்கும் போதே சிபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயிற்கு இருந்த நோயது. அந்தக் காலத்தில் சிபிலிஸ் மோசமான பால்வினை நோய். தலைவலியும் நரம்புக் கோளாறும் கொண்ட அவர் தீவிரமாக எழுதினார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குப் பார்வைக் குறைவு ஏற்பட்டது. நலிவடையும் தனது உடலுக்கு எதிராக வெறித்தனமாகச் செயல்பட்டார். மனப்பிறழ்விற்கு ஆளாகி , தனது நாற்பதாவது வயதில் தொண்டையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்தவெள்ளத்தில் கிடந்தவரைக் காப்பாற்றினார்கள். உயிர்பிழைத்த அவரை மனநல விடுதியில் சேர்த்தனர். அங்கு அவர் நான்கு கால்களிலும் தவழ்ந்து விலங்காக மாறிப்போனார். மீளமுடியாத மனப்பிறழ்வால் நாற்பத்திரண்டு வயதில் மாப்பசான் இறந்து போனார்.

பேபலின் சிறுகதை மூன்று தளங்கள் கொண்டிருக்கிறது. ஒன்று அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இருந்த வரவேற்பு. இதன் அடையாளமாகவே ஸ்பானிய நாவலை கசான்ட்சேவ் ஆசையாக மொழிபெயர்ப்பு செய்கிறார். சைரா மாப்பசானை மொழியாக்கம் செய்ய முயலுகிறார்.

,இரண்டாவது தளம் வேலையற்ற இளைஞன் பணக்கார பெண்ணிற்கு உதவி செய்வதன் வழியே தனது கனவுகளை நனவாக்கிக் கொள்வது. அது கதையில் அழகாக வெளிப்படுகிறது

மூன்றாவது மாப்பசானின் வாழ்வும் இந்த கதையில் நடைபெறும் நிகழ்வும் சந்திக்கும் புள்ளி. சைராவும் இளைஞனும் போதையில் ஒன்று சேருகிறார்கள். அந்த நிகழ்வே மாப்பசானின் கதை போல மாறுகிறது. கற்பனையிலிருந்து பிறக்கும் நிஜம் என்று அதை சொல்லலாம்.

பணக்கார வீட்டின் சூழல், அங்கே நடக்கும் இரவு உணவு. அதில் எழும் கேலிப்பேச்சுகள், விலை உயர்ந்த மதுவை பற்றி சைரா பெருமை பேசும் இடம் என பேபலின் எழுத்து மினுமினுக்கிறது.

15 மே 1939 இல், ஐசக் பேபல் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் லுபியாங்கா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது கையெழுத்துப் பிரதி கொண்ட கோப்புகள் , 11 குறிப்பேடுகள் மற்றும் ஏழு டயரிகளைப் பறிமுதல் செய்யப்பட்டன அதில் நிறையக் கதைகளும் இரண்டு நாடகங்கள், திரைப்பட ஸ்கிரிப்டுகள் இருந்தன “

பேபல் சோவியத்-எதிர்ப்புக் குற்றச்சாட்டில் கைதியாகி எட்டு மாத சிறைவாசத்தின் பின்பு அதே சிறைச்சாலையில் கொல்லப்பட்டார்.. “பயங்கரவாத சதியில் உறுப்பினராக இருந்ததற்காகவும், பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரிய அரசாங்கங்களுக்கு உளவு பார்த்ததற்காகவும்” தண்டிக்கப்பட்டார் என அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

1894 இல் ஒடேசாவிலுள்ள யூத குடும்பத்தில் பிறந்த பேபல், புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் வளர்ந்தார், அந்த நாட்களில் “ரஷ்யன்” என்ற சொல் யூதர்களை விலக்கியது, மேலும் நாடு முழுவதும் யூதவெறுப்பு மேலோங்கியிருந்தது. யூதர்கள் அதிகம் வசித்த ஒடேசா பகுதியில் வளர்ந்த பேபல் இளவயதிலே இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது முதல் கதையை 1913 இல் வெளியிட்டார், மாக்சிம் கார்க்கியால் பாராட்டு பெற்ற பேபல் பின்னாளில் அவரது நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தார்.

1920 இல் போர் செய்தியாளராகப் பணியாற்றினார். சோவியத்-போலந்து போரின் அனுபவங்களின் அடிப்படையில் பேபல் எழுதிய கதைகள் ரெட் கேவல்ரி எனத் தனித்தொகுப்பாக வெளியாகியுள்ளது

ஆங்கிலம், ஜெர்மன். பிரெஞ்சு உள்ளிட்ட எட்டு மொழிகள் அறிந்தவர் பேபல். ஆகவே அந்நாளில் வெளியான சர்வதேச படைப்புகள் யாவையும் விரும்பி வாசித்திருக்கிறார்.

 பேபலின் மொழிநடை கவித்துவமானது. தேர்ந்த ஓவியரைப் போலக் காட்சிகளைக் கண்முன்னே சித்தரிக்கக்கூடியவர். செகாவின் பாணியைச் சேர்ந்த கதைகளை அதிகம் எழுதியிருக்கிறார். ஆனால் செகாவிடம் காணமுடியாத இருண்மையைப் பேபலிடம் காணமுடிகிறது. கதை தன்னைத்தானே சொல்ல வேண்டும் என விரும்பியவர் பேபல் அவரது கதைகளில் குழந்தைகளின் சிறிய உலகம் பிரபஞ்சத்தின் பெரிய உணர்ச்சி நிலையுடன் இணைவு கொள்கிறது

மிக நுணுக்கமான விவரங்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் பேபல் தனது சொந்த அனுபவத்தினை ஆழமானதாக வெளிப்படுத்த முயலுகிறார், அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சொந்த யதார்த்தத்திற்கும் மனதில் உருவாகும் கற்பனைக்கும் இடையே ஊசலாடுகிறார்கள்.

அவரது விருப்பத்திற்குரிய படைப்பாளி கைய் டே மாப்பசான். அவரது சிறுகதைகளை ஆதர்சமாகக் கொண்டே தனது படைப்புகளைப் பேபல் எழுதிவந்தார். மனிதர்களின் இழிநிலை, ஊழல் மற்றும் யுத்த கால வன்முறையை மாப்பசான் போல எழுதியவரில்லை என்கிறார் பேபல்

பேபல் இரண்டே சிறுகதைத் தொகுப்புகளையும் சில நாடகங்களையும் திரைக்கதைகளையும் மட்டுமே தனது வாழ்நாளில் வெளியிட்டுள்ளார். அவரது வெளிவராத படைப்புகள் தற்போது தொகுக்கப்பட்டு முழுத்தொகுப்பாக வெளியாகியுள்ளன. ஒடேசாவில் பேபலிற்கு தற்போது நினைவுச்சின்னம் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றும் உலகெங்கும் அதிகம் வாசிக்கபடும் ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராக ஐசக் பேபல் இருக்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2023 08:06

August 31, 2023

சாராவின் பொய்கள்

ஃபர்னூஷ் சமாதி இயக்கிய 180 Degree Rule 2020ல் வெளியானது. இப்படம் அஸ்கர் ஃபர்ஹாதியின் A Separation பாதிப்பில் உருவானது என்று தெரிகிறது. இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள்.

தெஹ்ரானில் வசிக்கும் பள்ளி ஆசிரியையான சாரா பள்ளியில் நன்மதிப்பு பெற்றவர். படத்தின் துவக்கத்திலே வகுப்பறையில் தற்கொலைக்கு முயலும் மாணவியைக் காப்பாற்றி விசாரணை மேற்கொள்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பிரச்சனையை வேறு எவரும் அறியாதபடி மாணவியின் அம்மாவை வரவழைத்துப் பேசி சரிசெய்கிறாள்.

சாராவின் கணவர் ஹமேட் கண்டிப்பானவர். தனது விருப்பப்படி மட்டுமே சாரா நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறவர். அவர்களின் ஒரே மகள் ராஹா. வீட்டில் சாராவும் ஹமேட்டும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

வடக்கு ஈரானில் நடைபெறும் சாராவின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர், .ஆனால் எதிர்பாராத வேலை காரணமாக ஹமேட் வெளியூர் செல்ல வேண்டியதாகிறது. ஆகவே திருமணத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறான்.

சாராவிற்குத் தனது குடும்ப விசேசத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. அத்தோடு திருமணக் கொண்டாட்டத்தில் மணமகளின் தோழியாக இருப்பதற்காகத் தனது ஐந்து வயது மகள் ராஹாவுக்கு ஒரு அழகான ஆடையை வாங்கியிருந்தாள். ஆகவே அம்மாவும் மகளும் திருமணத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

கணவனுக்குத் தெரியாமல் திருமணத்திற்குச் சென்று வருவது என முடிவு செய்து காரில் மகளுடன் புறப்படுகிறாள். அந்தப்பயணத்தின் வழியே வடக்கு ஈரானின் அழகு வெளிப்படுகிறது. அத்தோடு சாராவின் தைரியம் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் தன்மையும் உணர்த்தப்படுகிறது

திருமணம் ஒரு வனவிடுதியில் நடைபெறுகிறது. சாரா திருமணத்தில் கலந்து கொள்கிறாள். அவளது பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்திக்கிறாள். மகிழ்ச்சியாக ஆடல் பாடல் விருந்து நடைபெறுகிறது. விடுதி அறை ஒன்றில் தங்குகிறாள். அந்த அறையின் கண்ணாடி ஜன்னலில் ஒரு பறவை நேரடியாக மோதிக் கொண்டு விழுகிறது. அந்தக் காட்சி படத்தின் திசைமாற்றத்தை சொல்லும் முக்கியமான காட்சியாகும்.

அறையின் ஏசியிலிருந்து கசிந்த நச்சுக் காற்றால் மூச்சுத்திணறி மகள் ராஹா இறந்துவிடுகிறாள். இந்த அதிர்ச்சியைச் சாராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புலம்பியபடியே மகளின் உடலைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறாள். திருமண வீடே நிலைகுலைந்து போகிறது.

ஒரு பக்கம் மகளின் மரணம். இன்னொரு பக்கம் கணவனிடம் இதை எப்படிச் சொல்வது எனத் தெரியாத தடுமாற்றம். சாரா அதிர்ந்து போகிறாள். முடிவில் கணவனிடம் பொய் சொல்வது எனத் தீர்மானிக்கிறாள். இந்த முடிவு அவளது வாழ்க்கையினைப் புரட்டிப் போடுகிறது.

சாராவின் பொய் அம்பலமாகி அதன் வழியே குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கதையை விட்டு கிளை பிரிந்து போகின்றன.

இந்தக் கதைகளின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரும் எதையாவது மறைக்கிறார்கள். அது வெளிப்படும் போது பாதிப்பு மோசமாகி விடுகிறது..

சாரா திருமண வீட்டில் தனது பெற்றோர்களைச் சந்திப்பது. அங்கே நடைபெறும் திருமண நிகழ்வுகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இழப்பு மற்றும் துயர உணர்வைச் சாரா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வீட்டுக்குள் நடக்கும் அதிகாரப் போராட்டம், மாணவிகளின் உலகம். எதிர்பாராத விபத்து. பொய் உருவாக்கும் பிரச்சனைகள் என நான்கு சரடுகளைப் பின்னிச் செல்லும் கதை பாதிக்குப்பின்பு தொய்வடைந்துவிடுகிறது. முடிவில் வழக்கமான ஈரானியப்படங்களின் வரிசையில் நீதிமன்ற நாடகம் போல மாறிவிடுகிறது.

உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2023 04:14

August 29, 2023

நூலகமே உலகம்

உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றி ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டக் காட்சியே வியப்பூட்டுகிறது. ஈகோவின் நூலகத்தில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நூலகத்திற்கு அவர் நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியாகிப் பரபரப்பானது.

ஈகோவின் மறைவிற்குப் பிறகு இந்த நூலகம் குறித்து விரிவாக ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள்


Umberto Eco: A Library of the World

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2023 05:47

August 28, 2023

அவனது மௌனமும் அவளது மௌனமும்

புதிய குறுங்கதை

புத்தக வாசிப்பும் அது பற்றிய பேச்சுமே அவர்களுக்குள் காதலை உருவாக்கியது. ஆசை ஆசையாகப் புத்தகங்களைப் பரிசளித்துக் கொண்டார்கள். பின்பு அவர்களுக்குத் திருமணமானது. மணவாழ்க்கையை துவங்கிய புதிதில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

தாங்கள் வாங்கும் புதிய புத்தகத்தின் முதல் பக்கத்தை அவன் படித்தால் அவள் இரண்டாவது பக்கத்தைச் சப்தமாகப் படிக்க வேண்டும். இப்படி ஒரே புத்தகத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள்.

இருவருக்கும் விருப்பமான நாவல் ஒன்றை வாங்கினார்கள். அதன் ஒற்றைப் படையான பக்கங்களை அவனும் இரட்டைப்படையான பக்கங்களை அவளுமாகச் சேர்ந்து படித்தார்கள். இருவரால் படிக்கப்படும் போது புத்தகம் இறகுப்பந்தாட்டம் போலாகி விடுகிறது. அல்லது இருவரால் எழுதப்பட்டது போலாகிறது.

சில மாதங்களில் அவர்களின் திருமண வாழ்வில் சிறிய சண்டைகளும் கோபதாபங்களும் உருவாகின. இதைப் போக்கிக் கொள்ளப் புதிய ஊர்களுக்குப் பயணம் செய்தார்கள். நிறைய சினிமா பார்த்தார்கள். விதவிதமான உணவு வகைகளை ருசித்தார்கள். அப்படியும் சேர்ந்து படிப்பது போன்ற நெருக்கத்தை வேறு எதிலும் உணரவில்லை.

அவனுக்குக் கோபம் வந்த நாளில், நாவலின் ஒற்றைப்படையான பக்கத்தைப் படிக்க மறுத்தான். அவள் தனியே இரட்டைப் படையான பக்கத்தை வாசித்தாள். கதையின் விடுபடல் மனதை உறுத்தியது. ஆனாலும் முந்தைய பக்கத்தைப் படிக்க விரும்பவில்லை

இது போல அவளுக்குச் சலிப்பூட்டிய நாளில் தனது பக்கத்தை உரத்து வாசிக்காமல் மௌனமாக மனதிற்குள் படித்தாள். அவளது மௌனத்தை ஏற்றுக் கொண்டவன் போல அவனும் மௌனமாக வாசித்தான். இரண்டு மௌனங்கள் ஒன்று சேரும் போது அது பெரிய மௌனமாகுமா. அல்லது எடை மிகுந்துவிடுமா. அவனது மௌனமும் அவளது மௌனமும் ஒன்றா என்ன.

ஒரு நாள் அவன் வேண்டுமென்றே நாவலின் பக்க எண்களைப் பேனாவால் அடித்துத் திருத்தினான். இப்போது நான்காம் பக்கம் ஐந்தாம் பக்கமானது.. அதன்படி அவளது பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டான்.

அதை ஏற்காத அவள் தனது பக்கங்களுக்கு எல்லாம் ஆரஞ்சு வண்ணத்தில் வட்டமிட்டாள்.

அவன் தனது பக்கங்களுக்குக் கீழே தனது கையால் எழுதி சிறிய துண்டு காகிதம் ஒன்றை ஒட்டினான். அவள் தனது பக்கங்களில் உள்ள வினைச் சொற்கள் யாவையும் நீக்கினாள்.

அவன் தனது பக்கத்தில் ஒரு நாயின் படத்தை வரைந்தான். அவள் தனது பக்கத்தில் ஒரு பறவையின் படத்தை வரைந்தாள். நாயும் பறவையும் ஸ்நேகமாகவே நடந்து கொண்டன.

பின்பு ஒரு இரவு அவன் நாவலின் ஒற்றைப்படையான பக்கங்களைக் கிழித்து எறிந்தான். இரட்டைப் படையான பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த நாவலை தனக்கான முழு நாவலாக அவள் வைத்துக் கொண்டாள். பின்பு அவர்கள் சேர்ந்து படிக்கவில்லை.

ஆனால் சில வாரங்களில் அவள் கர்ப்பம் தரித்தாள். பின்பு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . அவர்கள் மகிழ்ச்சியாக முடியும் நாவலைப் வாழத் துவங்கினார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2023 04:01

August 27, 2023

மார்டின் லூதர் கிங்

இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற ”I have a dream” உரை குறித்து எழுதியுள்ளேன். 1963 ஆண்டு இதே ஆகஸ்ட் 28ம் தேதி தான் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 27, 2023 22:42

August 25, 2023

உறக்கத்தின் குகையில் யார் வசிக்கிறார்கள்

புதிய குறுங்கதை

மருத்துவமனையின் கட்டிலில் அமர்ந்திருந்த அந்தச் சிறுமி கேட்டாள்

“டாக்டர். உறக்கத்தின் குகையில் யார் வசிக்கிறார்கள். “

என்ன கேள்வியிது. பன்னிரண்டு வயது சிறுமியால் எப்படி இவ்வாறு யோசிக்க முடிகிறது என்ற வியப்புடன் டாக்டர் அவளிடம் திரும்பக் கேட்டார்

“எனக்குத் தெரியவில்லை. உறக்கத்திற்குச் சொந்தமாக வீடு இருக்குமா என்ன“

அவள் அதை மறுப்பது போலச் சொன்னாள்

“உறக்கத்தின் இருப்பிடம் வீடில்லை. அது ஒரு குகை. உறக்கத்தின் வயதை நாம் கண்டறிய முடியாது. சூரியன் வெளிச்சத்தைப் பரவவிடுவது போல உறக்கம் தனது ஈரத்தால் நம்மை அணைத்துக் கொள்கிறது. “

“நீ கவிதையைப் போலப் பேசுகிறாய். உனக்கு எதற்காக இந்தச் சந்தேகம் வந்தது“

“எங்கள் பள்ளியில் ஒரு பாடலை படித்திருக்கிறோம். அதில் பகலில் உறக்கம் தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்விடும் என்று சொல்லியிருந்தார்கள். அது உண்மையா டாக்டர். “

“நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பகலில் உறங்குகிறவர்கள் இருக்கிறார்களே“

“அது வேறு தூக்கம். இரவில் வருவது வேறு. எனக்கு என்னவோ உறக்கத்தின் வீட்டில் அதன் மகனோ மகளோ இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. உறக்கம் என்பது ஒரு அன்னை. “

அவளது அழகான கற்பனையை ரசித்தபடியே டாக்டர் சொன்னார்

“உறக்கத்தின் மகள் எப்போதும் உறங்கிக் கொண்டேயிருப்பாளா“

“இல்லை. உறங்கவே மாட்டாள். உறக்கம் என்பது விநோதமான திரவம். தூக்கத்தில் நம் உடல் படகாகிவிடுகிறது. அது செல்லும் திசையை நாம் கணிக்க முடியாது. உறக்கம் எப்போதும் கால்பாதம் வழியாகத் தான் உடலிற்குள் நுழைகிறது. உங்களுக்குத் தெரியும் தானே“

அவளது பேச்சில் மயங்கியபடியே கேட்டார்

“உனக்கு நன்றாகத் தூக்கம் வருகிறதா“

“பாறையில் வெயில் அடிப்பது போல வெளியே உறங்குவது போலிருக்கிறேன். உள்ளே உறங்கவேயில்லை. “

“அதற்குக் காரணம் உனது நினைவுகள். அது மெல்ல வடிந்துவிடும். பின்பு உன்னால் ஆழ்ந்து தூங்க முடியும். நலமாகி விடுவாய்“

“ஜன்னலுக்குப் பின்புறம் நின்று கொண்டு தெருவை வேடிக்கை பார்க்கும் சிறுமியைப் போலத் தூக்கம் என்னை விட்டு விலகி நிற்கிறது. நான் அதன் கண்களை, கைகளைப் பார்க்கிறேன். ஆனால் என்னை நெருங்கிவரவில்லை“

“நீ நிறைய யோசிக்கிறாய். கற்பனை செய்கிறாய். அது குழப்பத்தை அதிகமாக்கிவிடும்“

அவள் சிரித்தாள். பின்பு கைகளால் தலையைக் கோதியபடியே சொன்னாள்

“உறக்கத்திற்கும் பசியிருக்கிறது. அது நம் நினைவுகளைச் சாப்பிட்டுக் கொள்கிறது“

டாக்டரும் அதைக் கேட்டுச் சிரித்தார். பின்பு அவளிடம் சொன்னார்

“உன்னோடு பேசிக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. ஆனால் எனக்கு நேரமில்லை“.

உடல் முழுவதும் காயங்களும் சிக்கு பிடித்த தலையும் சிவந்த கண்களும் கொண்ட அந்தச் சிறுமி அந்தத் தேசத்திற்கு அகதியாக வந்திருந்தாள். அகதிகளை ரகசியமாக ஏற்றிவரும் கப்பல் ஒன்றில் ஒளிந்துவந்த அவளுக்கு ஆறு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் அடித்தது. கண்களைத் திறக்கவேயில்லை. ஒரு நாள் அவளது உடல் விறைத்துப் போனது. அவள் இறந்துவிட்டதாக நினைத்துக் கடலில் வீசினார்கள். ஆனால் அவள் பிழைத்துக் கொண்டாள். எத்தனை இரவுபகல்கள் கடலில் மிதந்தாள் என்று தெரியவில்லை. ஆனால் மீனவன் ஒருவனால் காப்பாற்றப்பட்ட போது அவள் நினைவிழந்து போயிருந்தாள். அவளைக் கடலோர காவல்படையினர் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். நினைவு மீண்ட போதும் அவள் கடலில் மிதப்பது போலவே உணர்ந்தாள். மருத்துவர்கள் அவளைக் குணப்படுத்தப் போராடினார்கள். பின்பு அவளது தாய்மொழியில் உரையாடத் தெரிந்த மருத்துவரை சிகிச்சை செய்ய அழைத்து வந்தார்கள். அவள் வேகமாகக் குணமாகி வரத்துவங்கினாள்.

அதன் பிறகான நாட்களில் அவளது கவித்துவமான பேச்சு வயதை மீறியதாக இருந்தது. சில சமயம் அவள் தனது தலையணையோடு உரையாடினாள். சில நேரம் மருத்துவமனை சுவர்களுடன் பேசினாள்.

சில நாட்களுக்குப் பின்பு மருத்துவர் அவளுக்கு ஒரு நோட்டும் பேனாவும் கொண்டு வந்து கொடுத்தபடியே சொன்னார்

“எழுத துவங்கினால் நீயே உறக்கத்தின் குகையில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடுவாய். “

அவள் ஆசையாக அந்த நோட்டை வாங்கிக் கொண்டாள். அதன்பிறகு அவள் மருத்துவரோடோ, தலையணையுடனோ பேசவில்லை. மௌனமானாள். மிகவும் அமைதியாகிவிட்டாளாக மாறினாள். அவளது நோட்டில் நிறைய எழுதியிருந்தாள். அதை யாருக்கும் படிக்கத் தரவேயில்லை. பின்பு ஒரு நாள் அவள் குணமடைந்து முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அன்று டாக்டரிடம் சொன்னாள்

“உறக்கம் ஒரு ஓவியன் டாக்டர். அது நம் உடலில் அற்புதங்களை வரைந்துவிட்டுப் போகிறது. உறக்கத்தின் குகையில் யாருமேயில்லை. அது எப்போதும் தனியாகவே இருக்கிறது. “

அவளது பேச்சைப் போலவே நடந்து செல்லும் அழகும் தனித்துவமாக இருந்தது. டாக்டர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2023 21:03

தஸ்தாயெவ்ஸ்கி எனும் சூதாடி

சூதாடி நாவலை(The Gambler) எழுத பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு விருப்பமேயில்லை. கட்டாயத்தின் பெயரால் தான் அந்த நாவலை எழுதினார். அதுவும் ஒரு மாத காலத்திற்குள் எழுதித் தர வேண்டும் என்று பதிப்பாளர் ஸ்டெல்லோவ்ஸ்கி ஏற்படுத்திய நெருக்கடியே நாவலை எழுத வைத்தது. ஒருவேளை இதை எழுதித் தராமல் போயிருந்தால் கடனுக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறைபட நேரிடும் என்ற அச்சம் அவரை விரைவாக எழுத வைத்தது.

இன்று எழுத்தாளர்கள் தங்களின் புதிய நாவலை எழுதுவதற்கு இயற்கையான இடங்களைத்தேடிச் செல்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதும் புகழ்பெற்ற நாவலாசிரியர்கள் கோடிக்கணக்கில் முன்பணம் வாங்கிக் கொண்டு தனித்தீவிலோ, எழுத்தாளர் உறைவிடத்திலோ அமர்ந்து நாவலை எழுதி முடிக்கிறார்கள். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியோ கடன்காரனின் நெருக்கடிக்குப் பயந்து தனது நாவலை எழுதியிருக்கிறார். இதற்காக அன்னா என்ற இளம்பெண்ணை உதவியாளராக வைத்துக் கொண்டார். சூதாடி நாவல் பெரிய இலக்கிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவருக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணையை ஏற்படுத்திக் கொடுத்தது

சூதாடி நாவலை இப்போது வாசிக்கும் போதும் அதன் தொடர்ச்சியற்ற தன்மையை, தாவலை உணர முடிகிறது. அவரது நாவல்களில் மிகவும் கட்டுக்கோப்பானது கரமசோவ் சகோதரர்கள். அதற்கு அடுத்த நிலையில் இடியட். பிற நாவல்கள் சற்றே தளர்வான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. அலெக்சி இவானவிச் வழியாகத் தஸ்தாயெவ்ஸ்கி சூதாட்டத்தின் உளவியலை விசாரணை செய்கிறார்.

1866ல் இந்த நாவலை எழுதிய போதும் சூதாட்டத்தை முன்வைத்து ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு முன்னதாகவே இருந்தது. 1863 இல் இந்த நாவலுக்கான சிறுகுறிப்பை எழுதியிருக்கிறார். 1859ல் சூதாடி நாவல் பற்றிய எண்ணத்தைத் தனது டயரியில் எழுதியிருக்கிறார். ஆகவே இந்த நாவலுக்கான விதை முன்னதாகவே அவரிடமிருந்திருக்கிறது.

இந்த நாவலை எப்போது வாசிக்கும் போதும் மனதில் புஷ்கினின் The Queen of Spades சிறுகதையே வந்து போகிறது. இரண்டிற்கும் நெருக்கமான ஒற்றுமைகள் இருக்கின்றன. புஷ்கின் கதையில் வரும் மேஜிக் தஸ்தாயெவ்ஸ்கியிடம் இல்லை.

அபோலினாரியா சுஸ்லோவா எனும் இளம்பெண்ணுடன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்ட காதல் மற்றும் நெருக்கத்தை இந்த நாவலில் மாற்று வடிவமாகக் காணமுடிகிறது. போலினா எழுதிய டயரிக்குறிப்பில் இந்த நாவலின் நிஜ நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன

ரூலெட்டன்பர்க் என்ற கற்பனையான நகரை தஸ்தாயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கிறார். சூதாட்டத்திற்கென்றே பிரத்யேக நகரம் இருப்பது வியப்பளிக்கிறது. ரூலெட்பலகையில் எண்களுடன் எழுத்துகளும் காணப்படுகின்றன. ஒருவன் தான் பந்தயம் வைக்க வேண்டிய எண்களைக் குறிக்க இரண்டு எழுத்துகளைச் சொல்லலாம். எண்கள் சங்கேதம் போலப் பயன்படுகின்றன என்று நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

சூதாட்டத்திற்கும் காதலுக்கும் இடையே ஒருவன் ஊசலாடுவதையே நாவலில் வெளிப்படுத்துகிறார். Three Loves of Dostoevsky என்றொரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. அதில் தஸ்தாயெவ்ஸ்கியின் மூன்று காதலிகளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள். அதில் போலினாவின் காதலும் விவரிக்கபட்டுள்ளது

பாரீஸிலிருந்த போலினாவைக் காணுவதற்காகப் பயணம் மேற்கொண்டார் தஸ்தாயெவ்ஸ்கி. அதற்கு முன்பாக மே 1863 இல் தஸ்தாயெவ்ஸ்கி நடத்தி வந்த பத்திரிகை மூடப்பட்டது. கடன் சுமையிலிருந்து விடுபடப் போராடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் சூதாடுவதற்காகவே வைஸ்பேடன் மற்றும் பேடன்-பேடனில் உள்ள சூதாட்டவிடுதிகளுக்குச் சென்றார். வைஸ்பேடனில் சூதாடி 10,400 பிராங்குகளை வென்றார் . அந்த அதிர்ஷ்டமே அவரைத் திரும்பத் திரும்பச் சூதாட வைத்தது.

சூதில் வென்ற பணத்தில் பாதியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வசித்த அவரது மனைவியின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். பாடன்பாடனில் சூதாடி நிறையப் பணத்தை இழந்தார். தனக்காகக் காத்திருக்கும் காதலி போலினாவைக் காணுவதற்காகப் பாரிஸிற்குச் சென்றார். அங்கே அவள் வேறு காதலனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். தஸ்தாயெவ்ஸ்கி தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என்று கடிதம் எழுதினாள். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவளைக் காணச் சென்று அவமானப்பட்டார். காதலில் தோற்ற மனநிலையே அவரை மீண்டும் சூதாட்டவிடுதிக்குக் கொண்டு சென்றது.

ஒரு போதும் தன்னால் பெரும்செல்வத்தை அடைய முடியாது என்று அறிந்த போதும் தஸ்தாயெவ்ஸ்கி ஏன் தொடர்ந்து சூதாடுகிறார். பாடன்பாடனிலிருந்த காசினோவில் அவர் சூதாடியதைப் பற்றிய குறிப்புகளை வாசிக்கும் போது விடுபடமுடியாத போதையைப் போலவே சூதாட்டம் அவரைப் பற்றிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது

மகாபாரதத்தில் வரும் யுதிஷ்ட்ரன் அறிந்தே சூதாடுகிறான். தோற்றுப் போகிறான். அவனால் பாதியில் விளையாட்டிலிருந்து எழுந்து கொள்ள முடியவில்லை. அதே மனநிலை தான் தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தனது கடனிலிருந்து விடுபடுவதற்கு அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புகிறார். அதற்குச் சூதாட்டமே இலக்காக நினைக்கிறார்.

சூதாட்டவிடுதிக்குள் நுழைந்தவுடன் அவர் நிழல் போலாகிவிடுகிறார். கடந்தகாலம் தான் அவரைச் சூதாட அழைத்துப் போகிறது. தோற்று திரும்பும் போது அவரது நிழல்கூட அவரைக் கேலி செய்கிறது. சூதாட்ட மேசைகளில் இரட்சிப்பிற்கு இடமில்லை. அங்கே அவர் தனது விதியுடனே சூதாடுகிறார்.

ரூலெட் எனப்படும் சூதாட்டம் 17 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது பண்டைய சீன பலகைவிளையாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று நம்புகிறார்கள், அதில் 37 விலங்குகளின் உருவங்களை மொத்தம் 666 எண்கள் கொண்ட ஒரு மாயச் சதுரத்தில் அடக்கியிருந்தார்கள்

இந்த விளையாட்டு டொமினிகன் துறவிகளால் ஐரோப்பாவிற்கு, சிறிய மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தபட்டது. சதுரத்தை ஒரு வட்டமாக மாற்றியவர்கள் துறவிகளே

அந்தக் காலத்தில் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் இது சட்டவிரோதமாகக் கருதப்பட்டது. சில நாடுகளில் இதற்காகவே புதிய சூதாட்டச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன,

மொனாக்கோவின் இளவரசர் சார்லஸ் தனது கடன்பிரச்சனையிலிருந்து மீளுவதற்காக ரூலெட்டைப் பிரபலமாக்கினார். இதன்காரணமாக மொனாக்கோவில் பல சூதாட்ட அரங்குகளைத் திறந்தார். பிரபுகள் மற்றும் உயர்தட்டு மக்களின் சூதாட்டமாக ரூலெட் மாறியது.

ரூலெட்டின் சுழலும் பலகை எந்த எண்ணில் வந்து நிற்கும் என்ற ரகசியங்களைப் பெறுவதற்காகப் பிசாசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் என்ற கதையும் அப்போது தான் உருவானது. உண்மையில் இந்த ரூலெட் விளையாட்டு தான் பிசாசு. அது ஒருவரை பிடித்துக் கொண்டுவிட்டால் அதிலிருந்து விடுபடவே முடியாது.

ஃபிராங்கோயிஸ் மற்றும் லூயிஸ் பிளாங்க் என்ற இரண்டு சூதாடிகள் தான் ரூலெட்டின் பெரும் வெற்றியாளராக இருந்தார்கள். அப்போது பிரான்சில் ரூலெட் சட்டவிரோதமான விளையாட்டாக அறிவிக்கபட்டிருந்தது. ஆகவே அவர்கள் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்குச் சென்று, அங்கு ரூலெட் விளையாட்டை அறிமுகப்படுத்தினார்கள்.  ரூலெட் வழியாக நிறையப் பணம் சம்பாதித்தார்கள்.

அலெக்ஸி சூதில் வென்ற பணத்துடன் வரும் போது போலினா தன்னைப் பணம் கொடுத்து வாங்க விரும்புகிறானா என்று கோவித்துக் கொள்கிறாள். அந்தப் பணத்தை அவன் முகத்திலே வீசி எறிகிறாள். சுயமரியாதையின் முன்பு பணம் தோற்றுப்போகிறது என்பதை வாசகனால் உணரமுடிகிறது.

கேசினோவில் சூதாடுகிறவர்களில் பலர் அது தரும் உச்சகட்ட விளைவிற்காகவே விளையாடுகிறார்கள். அது ஒருவகைக் காமத்தூண்டுதல். அலெக்ஸி அதை நாவலின் ஒரு இடத்தில் விவரிக்கிறான். சூதாட்டப்பலகைக்குக் கடந்த காலம் கிடையாது. கடந்தகால வெற்றிகளைக் கொண்டு இன்றைய வெற்றியை அடைய முடியாது. அது போலவே யார் பந்தயம் வைக்கிறார்கள் என்பதும் சூதில் முக்கியமில்லை. நொடிக்கு நொடி மாறும் எண்களின் முன்பு அமர்ந்திருக்கிறவனின் நிலை துப்பாக்கி முனையில் அமர்ந்திருப்பவனைப் போன்றதே. சூதாடுகிறவன் குறைவான பகுத்தறிவையும் ஏராளமான ரகசிய நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறான்.

நாவலில் வரும் ஜெனரல். பாட்டி. மற்றும் அலெக்ஸி மூவரும் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் வெற்றிபெறுகிறர்கள். பின்பு அதே சூதாட்டத்தில் தங்களுடைய மொத்த‌ சொத்துக்களையும் இழக்கிறார்கள். இதில் ஜெனரல் மற்றும் அலெக்ஸியை சூதாட்டம் நோக்கி கொண்டு செல்வது அவர்களின் காதலே

அலெக்ஸி ரஷ்ய ஜெனரலின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராகப் பணியாற்றுகிறான். ஜெனரலின் சகோதரர் மகள் போலினாவைக் காதலிக்கிறான். ஜெனரல் மனைவியை இழந்தவர். அவரது பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டு அதே வீட்டில் வாழ்ந்து வருகிறாள் போலினா. ஜெனரல் தனது கடனிலிருந்து மீட்க பாட்டி இறந்தவுடன் பணம் வரும் எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் அவர் பிளாஞ்சேயைக் காதலிக்கிறாள். அவள் பணத்திற்காகவே அவரைக் காதலிக்கிறாள். பாட்டியிடமிருந்து பணம் வரவில்லை. ஆனால் பாட்டியே நேரில் வந்துவிடுகிறாள். அவள் சூதாட ஆரம்பிக்கிறாள். அதில் பெரும்பொருளைத் தோற்கிறாள். எது பாட்டியை சூதில் சிக்க வைக்கிறது.

காதலின் பொருட்டே அலெக்ஸி சூதாடச் செல்கிறான். இரண்டு லட்சம் ரூபிள் வெற்றிப் பெறுகிறான். சூதில் வெல்லும் அலெக்ஸியை பிளாஞ்சே ஏமாற்றுகிறாள். முடிவில் காதலுக்காகவே மீண்டும் சூதாடுகிறான் அலெக்ஸி. நாவலின் அடிநாதமாக ஒலிப்பது அலெக்ஸியின் தவிப்பே. பணத்தால் மட்டுமே உறவுகள் ஏற்படுகின்றன என்ற உண்மையைத் தஸ்தாயெவ்ஸ்கி உணர்ந்திருக்கிறார். நிஜமான அன்பையும் நேசத்தையும் தேடி அலைகிறார். சூதாடி நாவலின் வடிவம் ரூலெட் பலகை போலவே மாறிமாறிச் சுழல்கிறது.

தஸ்தாயெவ்ஸ்கியின் சூதாட்டம் பற்றிய அவதானிப்புகள் நுண்மையானவை. சூதாட்ட அரங்கின் துல்லியமான விவரிப்பு. அங்கு வரும் நபர்களின் நடத்தை. போலித்தனமான பாவனைகளை நுட்பமாக எழுதியிருக்கிறார். சூதாட்ட மாயை ஒருவரை எப்படி விழுங்கிவிடுகிறது என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார். சூதாடித் தோற்ற ஒருவர் மறுநாள் திரும்ப வருவதற்கு என்ன காரணம் என்பதையும் சொல்கிறார். அது போல வென்றவர்கள் தன்னால் மறுநாளும் வெல்ல முடியும் என்று கற்பனை செய்து கொள்வதைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அதிர்ஷ்டம் , துரதிர்ஷ்டம் எனத் தராசின் தட்டுகள் மாறி மாறி உயர்வதும் தாழ்வதும் பற்றி எழுதும் போது அது சூதின் கதையாக மட்டுமில்லை. மாறாக உலகம் தர மறுத்த அதிர்ஷ்டத்தை ஒருவன் தானே உருவாக்கிக் கொள்ள எத்தனிக்கும்  கடவுளுக்கு எதிரான சவாலாகவும் தோன்றுகிறது.

அன்னா தனது நாட்குறிப்பில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு இருந்த சூதாட்டப்பித்துப் பற்றி எழுதியிருக்கிறார். அவர்களுக்குத் திருமணமான புதிதில் மேற்கொண்ட ஐரோப்பிய பயணத்தில் தஸ்தாயெவ்ஸ்கி எவ்வாறு தினமும் சூதாடச் சென்றார் என்பதையும் பணத்தைத் தோற்றுத் திரும்பும் போது அவருக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வையும் எழுதியிருக்கிறார் குறிப்பாகச் சூதாடப் பணமில்லாத போது தனது குளிர்காலக் கோட், பூட்ஸ் மற்றும் கடிகாரத்தை அடகு வைக்கத் தயங்கவில்லை என்பதைக் குறிப்பிடுகிறார். அவளுடைய திருமண ஆடையும் கூட அடமானம் வைத்திருக்கிறார். இவான் துர்கனேவிடம் கடன் வாங்கிச் சூதாடியிருக்கிறார். கையில் பணமில்லாமல் சூதாட்ட அரங்கிலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்.

சூதாட்டம் இல்லாமல் போயிருந்தால் தஸ்தாயெவ்ஸ்கி ஒருபோதும் தஸ்தாயெவ்ஸ்கியாக மாறியிருக்க மாட்டார் என்று ஓவியர் பிளெச்மேன் கூறுகிறார். அது உண்மையே

சூதாட்டம் என்பது வெறும் விளையாட்டில்லை அது நிச்சயமின்மையின் முன் அமர்ந்திருத்தல். வெற்றி அல்லது தோல்வி என்பதற்கு மேலாக அது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அதிர்ஷ்டம் தவிர்க்க முடியாமல் மாறிவிடும் என்பது மாயையான நம்பிக்கை.. நாவலில் சூது எனும் “பைத்தியக்காரத்தனமான அபாயத்தை” அலெக்ஸி அறிந்தே தொடுகிறான்.

நாவலில் வரும் அலெக்ஸி வழியாகத் தஸ்தாயெவ்ஸ்கி தனது சொந்த வாழ்வின் அனுபவங்களைத் துல்லியமாகப் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் இவை ஒருவரின் வாக்குமூலமாக மட்டும் சுருங்கிவிடாமல் கலை நேர்த்தியுடன், உளவியல் விசாரணையென உருவாக்கியிருப்பது நாவலுக்குத் தனித்துவத்தை ஏற்படுத்துகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 25, 2023 02:44

August 24, 2023

அறிமுகவிழா

எனது சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்க நூல் The Man Who Walked Backwards and Other Stories ஒரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிமுகவிழா ஒன்றினை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். இந்நூலை பிரபாஸ்ரீதேவன் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

The Man Who Walked Backwards and Other Stories is an anthology of eighteen short stories by S. Ramakrishnan, the popular and critically acclaimed master of modern Tamil writing.

The stories in this collection are a celebration of eccentricities: they feature characters who defy conventions, and who listen to their inner selves instead of conforming to familial and societal norms.

There is the mother who swims endlessly to escape domesticity and abuse; an exceptional father and husband who leaves on a quest for selfhood; the thief who heals dogs and trees; the government clerk who goes around town counting pigeons; the man who walks only backwards; the estate-owner who builds a house with a hundred windows on a hilltop, but not for anyone to live in; the father and the son who measure rain; the forgotten poet who is despised by his own family; and many others whom the world does not understand.

In this lively English translation by Prabha Sridevan that highlights the evocative nature of Ramakrishnan’s writings, the stories remind us that in the midst of the real and the everyday, there is place for myth and magic as well.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2023 20:06

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.