S. Ramakrishnan's Blog, page 58

July 18, 2023

சஞ்சாரம் காமிக்ஸ்

கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பூபதி எனது சஞ்சாரம் நாவலின் ஒரு பகுதியை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருப்பதாக விரிவுரையாளரும் நண்பருமான கோ.வில்வநாதன் தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பூபதியை நேரில் காண வேண்டும் என அழைத்து வரச் சொன்னேன். சில தினங்களுக்குப் பிறகு எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள்.

திரைப்படங்களுக்கான ஸ்டோரி போர்ட் வரைவதில் முனைப்புடன் செயல்படுகிறார் பூபதி

தனது விருப்பத்திற்காக சஞ்சாரம் நாவலின் முதல் அத்தியாயத்தை காமிக்ஸ் வடிவில் உருவாக்கியிருக்கிறார்.

மிக அழகான ஓவியங்கள். கருப்பு கோவிலையும் அங்கு நடக்கும் விழாவையும் நன்றாக வரைந்திருக்கிறார்

நாவல் முழுவதையும் காமிக்ஸாக உருவாக்கினால் பெரிய புத்தகமாக வரும். விலை அதிகமாகிவிடும். ஆகவே அதை 100 பக்க அளவில் காமிக்ஸ் புத்தகமாகக் கொண்டுவரலாம் என ஆலோசனை செய்தோம்.

தமிழில் நேரடியாக காமிக்ஸ் கொண்டு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய மாங்கா போல ஒரு காமிக்ஸ் புத்தகம் ஒன்றை உருவாக்க முனைந்தோம். அது முழுமையடையவில்லை.

ஆகவே சஞ்சாரம் நாவலைக் காமிக்ஸ் வடிவில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் இப்போது துளிர்விடத் துவங்கியுள்ளது.

மாதிரி ஓவியங்கள். 1மாதிரி ஓவியங்கள். 2மாதிரி ஓவியங்கள். 3மாதிரி ஓவியங்கள். 5

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2023 04:53

July 17, 2023

சிலைகள் சொல்லும் உண்மை

சோழநாட்டில் பௌத்தம் பரவியிருந்த வரலாறு மற்றும் புத்தர் சிலைகள் குறித்து நீண்டகாலமாக ஆய்வு செய்து வருபவர் முனைவர் ஜம்புலிங்கம்.

இவரது களப்பணியின் காரணமாக அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் போன்ற ஊர்களில் அரிய புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன.

ஜம்புலிங்கம் தனது முப்பது ஆண்டுகாலப் பௌத்த ஆய்வின் தொகுப்பாகச் சோழநாட்டில் பௌத்தம் என்ற நூலை எழுதியுள்ளார். அழகிய புகைப்படங்களுடன் கெட்டி அட்டையில் நேர்த்தியாக இந்நூலை புது எழுத்துப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது

தமிழ்நாட்டில் சமணம் மற்றும் பௌத்தம் தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. தமிழ்நாட்டில் செயல்பட்ட பௌத்த பல்கலைகழங்கள் மற்றும் விகாரைகள் குறித்த விரிவான ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்படவில்லை.

புத்த படிமங்களின் உருவாக்கம் மற்றும் பௌத்த கலைக்கோட்பாடுகள், மடாலயங்கள் செயல்பட்டவிதம், அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள். பிக்குணிகளின் வாழ்க்கை, மருத்துவத்துறைக்குப் பௌத்தம் அளித்த பங்களிப்பு என நாம் ஆய்வு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

இந்நூல் இரண்டு விதங்களில் முக்கியமானது. ஒன்று இதில் இடம்பெற்றுள்ள அரிய புத்தர் சிலைகளின் புகைப்படங்கள், இரண்டாவது சிலைகள் குறித்த துல்லியமான தரவுகள்.

இச்சிலைகள் நிகரற்ற அழகுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் புத்தரின் தியான கோலம் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது. பரவாய் புத்தர் சிலையைப் பாருங்கள். எவ்வளவு கம்பீரம். முகத்தில் எத்தனை சாந்தம். எல்லாப் புத்தர் சிலைகளிலும் கண்களும் சாந்த முகமும், தோளின் நேர்த்தியும், கால்களை மடக்கி அமர்ந்துள்ள விதமும் அபூர்வமான அழகுடன் நம்மை மயக்குகின்றன. பெரும்பான்மை புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்திலே காணப்படுகின்றன. எந்த நூற்றாண்டு சிலை என்ற விபரம் மட்டும் இதில் காணப்படவில்லை. அதையும் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக இருக்கும்.

ஆயிரவேல் அயிலூர் புத்தர் சிலையைக் காணும் போது அஜந்தா புத்தர் நினைவிற்கு வருகிறார். உள்ளிக்கோட்டை புத்தர் பெண்மை கலந்த முகத்துடன் நீண்டகாதுகளுடன் அபாரமான கலைநேர்த்தியுடன் காணப்படுகிறார்.. திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலை வயலின் நடுவே காணப்படுகிறது. புஷ்பவனம் புத்தர் முகத்தில் வெளிப்படும் புன்னகை நிகரில்லாதது. பேரழகு மிக்க இந்தச் சிலைகளை அதன் பெருமை அறியாமல் சிதைத்திருக்கிறார்களே என்று வருத்தமும் கோபமும் ஏற்படவும் செய்கிறது

பெரும்பான்மை சிலைகள் கிராமத்தில் கிடைத்திருக்கின்றன. இது தமிழகத்தில் பௌத்தம் எந்த அளவிற்கு வேர் ஊன்றி வளர்ந்திருக்கிறது என்பதன் சாட்சியமாக உள்ளது

புத்தரைக் கடவுளாக ஏற்றுக் கொண்டு பாதபீடிகையை வணங்க வழிகாட்டியது மகாயான பௌத்தம். இதன் சாட்சியமாகவே திருக்குறளில் கடவுளின் வடிவமாகத் திருவடி குறிப்பிடப்படுகிறது என்கிறார் ஜம்புலிங்கம். அது போலவே புத்தர் பிறந்தவுடன் அவரது பாதங்கள் நிலத்தில் படவில்லை. தாமரை மலர்கள் தோன்றி பாதங்களைத் தாங்கிக் கொண்டன. அதன் அடையாளமாகவே மலர் மிசை ஏகினான் என்கிறார் வள்ளுவர் என்றும் சொல்கிறர் ஜம்புலிங்கம். களப்பணியில் மட்டுமின்றி இலக்கியத்திலும் பௌத்தம் தொடர்பான விஷயங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவது பாராட்டிற்குரியது.

சோழநாட்டில் மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் இது போன்று பௌத்த ஆய்வுகள் விரிவாக நடைபெறவும் ஆவணப்படுத்தப்படவும் வேண்டும். அதற்கான முன்னோடி முயற்சியாகவே இந்நூலைக் கருதுகிறேன்.

புத்தர் சிலைகளைத் தேடி அலைந்த அவரது பயணத்தையும். சிலைகளின் காலம் மற்றும் தனித்துவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்த முறை பற்றியும் ஜம்புலிங்கம் விரிவாக எழுத வேண்டும். அது இளம் ஆய்வாளருக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது எனது எண்ணம்.

பௌத்த ஆய்வில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள முனைவர் பா. ஜம்புலிங்கத்திற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

சோழ நாட்டில் பௌத்தம், பக். ‎222; ‎ரூ. 1000
‎படிமம் வெளியீடு, ‎காவேரிப்பட்டினம் ‎(கிருஷ்ணகிரி)
தொலைபேசி ‎98426 ‎47101.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2023 04:45

July 16, 2023

கொரோனா காலத்து நாவல்கள்

கொரோனா காலத்தில் உலகெங்கும் மூன்று புத்தகங்கள் விரும்பி வாசிக்கப்பட்டன. ஒன்று Albert Camus எழுதிய The Plague நாவல் மற்றொன்று Daniel Defoe எழுதிய A Journal of the Plague Year மூன்றாவது jose saramago எழுதிய blindness நாவல்.

பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் ஏன் இதை வாசிக்க விரும்பினார்கள் என்பது குறித்து இப்போது நிறையக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாகி வருகின்றன.

நெருக்கடியான காலத்தில் மக்கள் என்ன புத்தகத்தை வாசிக்கத் தேர்வு செய்கிறார்கள் என்பது முக்கியமானது.

 கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த பலரும் சினிமா, பாடல் என்று கேளிக்கையிலே நேரத்தைக் கழித்தனர்.  ஆனால் அது ஒரு புள்ளியில் சலிப்பை உருவாக்கியது. மனதின் அடியாழத்தில் தோன்றும் அச்சத்தை அது போக்கவில்லை. ஆகவே அவசரமாகப் புத்தகங்களை நோக்கி நகர்ந்தார்கள். வீட்டில் வைத்திருந்த புத்தகங்களை மறுவாசிப்புச் செய்தார்கள். இணையத்தில் தேடி தரவிறக்கம் செய்தார்கள்.

சிலரால் ஒரு பக்கம் கூடப் படிக்க முடியவில்லை. சிலர் ஆசையாக விரும்பிய புத்தகங்களை வாசித்தார்கள். அப்படி வாசித்தவர்களில் பெரும்பான்மையினர் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டார்கள்.

கொரோனா  காலத்தில் தமிழில் எந்தப் புத்தகம் அதிகம் வாசிக்கப்பட்டது என்ற புள்ளிவிபரம் நமக்குக் தெரியவில்லை.

நான் அதிகமும் கவிதையும் சரித்திர நூல்களையும் கிரேக்க நாடகங்களையும் வாசித்தேன். செவ்வியல் நாவல்களை மறுவாசிப்புச் செய்தேன். கிரேக்க நாடகங்கள் எழுப்பிய கேள்விகளும் அது கவனப்படுத்திய விஷயங்களும் மனதை உற்சாகம் கொள்ள வைத்தன.

தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் கவனப்படுத்திய இந்த மூன்று நாவல்களை மறுவாசிப்பு செய்யலாம் என்ற விருப்பம் உருவாகவேயில்லை.  

உண்மையில் அந்த மூன்று நாவல்களும் சராசரி வாசகருக்கு ஏமாற்றமே அளித்திருக்க கூடும். காரணம் அவை குறியீட்டுத் தன்மை கொண்டவை. நோயை பற்றி பேசுவதன்  வழியே சமூகத்தை ஆராய்கின்றன.

கொரோனாவிற்கு முன்பு வரை இந்த நாவல்கள் இலக்கிய வாசகரால் மட்டுமே வாசிக்கப்பட்டன. இவ்வளவு பெரிய கவனத்தைப் பெறவில்லை. ஆனால் திடீரென இந்த நாவல்கள் பரபரப்பான விற்பனை பொருளாகின.

மூன்று நாவல்களும் வேறுவேறு காலங்களில் வெளியானவை. வேறு பண்பாட்டுத் தளங்களைக் கொண்டவை. டேனியல் டீபோவின் நாவல் மார்ச் 1722 இல் வெளியானது

இந்த நாவல் 1665 ஆம் ஆண்டில் லண்டனில் ஏற்பட்ட பிளேக் பாதிப்பு பற்றியது.

லண்டனை பிளேக் தாக்கிய போது டீபோவிற்கு ஐந்து வயது மட்டுமே. அவர் பின்னாளில் பிளேக் பற்றிய செய்திகளைச் சேகரித்துத் துல்லியமாக நாவலில் எழுதியிருக்கிறார். வரலாற்று உண்மைகளைப் புனைவாக மாற்றுவதில் முன்னோடி நாவலது.

1665 மற்றும் 1666 ஆம் ஆண்டுகளில் லண்டன் பிளேக் பாதிப்பிற்கு உள்ளானது. 18 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பாதிப்பில் ஒரு லட்சம் பேர் இறந்து போனார்கள். அன்றைய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியது

லண்டனின் சுற்றுப்புறங்களில் பிளேக் பரவிய விதம், அதை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இறந்த உடல்களை அப்புறப்படுத்த ஆள் இல்லாமல் கிடந்த சூழல். சடலங்கள் ஏற்றப்பட்ட வண்டிகளின் பயணம் போன்றவற்றை நாவல் துல்லியமாக விவரிக்கிறது. பத்திரிக்கை செய்திகள் மற்றும் நேரடி அனுபவ பகிர்வுகளை ஒன்றிணைத்து டீபோ இதனை எழுதியிருக்கிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மருத்துவம் மற்றும் அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் நாவல் கவனப்படுத்துகிறது.  குறிப்பாக தடுப்பூசியின் அறிமுகம் மற்றும் அதன் நம்பகத்தன்மை உழைக்கும் மக்களுக்கான மருத்துவம். நோய்த்தொற்றைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் போன்றவற்றை பேசுகிறது

அது போலவே ஆல்பெர் காம்யூவின் பிளேக் நாவல் 1849 ஆம் ஆண்டில் ஓரானின் மக்கள்தொகையில் பெரும் பகுதியைக் கொன்ற பிளேக் பற்றியது.  நெருக்கடியான சூழ்நிலையில் மனிதன் எவ்வாறு நடந்துகொள்வான் என்பதையே காம்யூ பேசுகிறார். நோய் நம்மை நிகழ்காலத்தில் மட்டுமே வாழச்செய்கிறது. கடந்தகால நினைவுகளை மருந்து போலாக்கிவிடுகிறது. எதிர்காலம்  குறித்த நிச்சயமின்மையை உருவாக்குகிறது. இருத்தலின் தீவிரத்தையே நாவல் கவனப்படுத்துகிறது.

உலக அளவில் பிளேக் நோயின் பாதிப்பு குறித்து நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்தியாவிலும் பிளேக் பாதிப்பு குறித்த இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் பெரும்பான்மை அனுபவப் பதிவுகளாக மட்டுமே உள்ளன.

இந்த மூன்று நாவல்களுடன் ஒப்பிடும் போது பொக்காசியோ எழுதிய டெக்கமரான் கதைகள் நினைவிற்கு வருகின்றன. பிளேக் நோயிலிருந்து தப்பிக்க ஒரு குழு பயணம் செல்கிறார்கள். வழியில் பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கின்றனர். இவ்வாறு நூறு கதைகள் கொண்டதாக டெக்கமரான் எழுதப்பட்டுள்ளது.

கதை என்பது மீட்சியின் பாதையா அல்லது நினைவின் பரிமாற்றமா என்றால் இரண்டுமே என்கிறது டெக்கமரான். கதை சொல்வது என்பதே நினைவுகளைக் காப்பாற்றுவது தான். உயிர்த்திருப்பதன் அடையாளமாகக் கதை சொல்வதைக் காணுகிறார் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். 

பிளேக்கில் இறந்தவர்களின் நினைவுகளை டீபோ ஆவணப்படுத்துவது போலக் காம்யூ ஆவணப்படுத்தவில்லை. மாறாக நோயின் பின்னால் உள்ள திரைகளை ஆராய்கிறார்.

இந்த இரண்டு நாவலோடு சரமாகோ எழுதிய பார்வையின்மை நாவல் இணைந்து கொண்டது தான் ஆச்சரியம். அந்த நாவல் முற்றிலும் மாறுபட்ட கதைக்களன் கொண்டது. எழுத்துமுறையும் வேறுபட்டது. இந்த நாவல்

1995 ல் வெளியானது.. இதே பெயரில் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. பெயரிடப்படாத நகரத்தில் கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் பார்வையிழப்பினைப் பேசும் இந்நாவல் மக்களிடம் பரவும் பீதியையும் அரசின் அடக்குமுறை மற்றும் திறமையற்ற நடவடிக்கைகளையும் விவரிக்கிறது, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தினால் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என அரசு நினைக்கிறது. ஆனால் அது சாத்தியமாகவில்லைஒழுக்கச் சீர்கேடு, மற்றும் சமூகச் சரிவுக்கான உருவகமாகவே பார்வையிழப்பினை சரமாகோ பயன்படுத்தியிருக்கிறார்.

கொரோனா காலத்திலே இந்த மூன்று நாவல்களின் புதிய பதிப்புகள் வெளியாகின. மூடப்பட்டிருந்த புத்தகக் கடைகளின் வெளியே இந்தப் புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். முககவசம் அணிந்த வாசகர்கள் அதை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பெட்டியில் பணம் போட்டுச் சென்ற காட்சியை காணொளியில் பார்த்திருக்கிறேன்.

மூன்று நாவல்களில் அதன் எழுத்தாளர்கள் நேரடியாகக் கண்ட நிகழ்வை எழுதவில்லை. நோயை ஒரு குறியீடாகவே கருதினார்கள். நினைவுகளின் வழியே கதையை விவரிக்கவே முயலுகிறார்கள். மூவரும் இதை விடச்சிறந்த நாவலை எழுதியிருக்கிறார்கள். ஆனால் காலம் குறிப்பிட்ட சூழலில் இந்த மூன்று நாவல்களையும் உயர்த்திப்பிடித்திருக்கிறது. மறுவாசிப்புச் செய்ய வைத்திருக்கிறது.

உலகெங்கும் இன்று எழுதப்படும் நாவல்கள் இதிகாசம் போன்று பல்வேறு சரடுகளைப் பின்னிச் செல்லும் கதைசொல்லலைக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் விசித்திர நிகழ்வுகளை. அறியப்படாத, அல்லது அடையாளம் இழந்த மனிதனின் வாழ்வை முதன்மைப்படுத்துகின்றன. சர்வதேச விருதுகளைப் பெறும் நாவல்களே அதன் சாட்சி.

உண்மைக்கும் புனைவிற்குமான இடைவெளியை டீபோ கடந்து சென்றிருக்கிறார். அவரது நாவலில் எது உண்மை எது புனைவு என்று நாம் பிரித்து அறிய முடியாது. அது தான் நாவலாசிரியரின் முன்பாக இன்றுள்ள சவால். அந்த வகையில் சர்வதேச அளவில் இன்றைய நாவல்கள் புனைவின் சாத்தியங்களை விரிவுபடுத்திக் கொண்டே செல்கின்றன. தமிழ் நாவல்களும் அதை நோக்கியே நகர வேண்டும்.

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2023 06:27

July 15, 2023

தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில்

19.7.2023 புதன்கிழமை மாலை தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்

தலைப்பு : எழுத்தின் பாதை

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 15, 2023 21:15

July 13, 2023

ரோஜா மற்றும் பட்டாம்பூச்சி

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது மேஜிகல் ரியலிச எழுத்திற்காகப் புகழ்பெற்றவர். அவரது நாவல்களை விடவும் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சிறுகதைகளில் அவர் உருவாக்கிக் காட்டும் அற்புதங்கள் நிகரில்லாதவை.

1970ல் வெளியான அவரது சிறுகதை. DEATH CONSTANT BEYOND LOVE. இப்போது வாசிக்கும் போதும் வியக்கவைக்கிறது

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் சிறுகதையில் அரிய 3சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்

இந்தக் கதை தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் நாற்பத்திரண்டு வயதான செனட்டர் ஒனேசிமோ சான்செஸ் பற்றியது. அவர் இறப்பதற்குப் பதினொரு நாட்களுக்கு முன்பு கதை நிகழுகிறது. துல்லியமான காலக்குறிப்பின் வழியே வாசிப்பவரை நம்ப வைப்பது அவரது உத்தி.

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒனேசிமோ செல்லும் ஊரில் ஒரு ரோஜாப்பூ கூடக் கிடையாது. ரோஜா இல்லாத இடம் என்பது அழகான குறியீடு. அவர் ஒரு ரோஜாப்பூவை கோட்டில் அணிந்து செல்கிறார். அது வெக்கையால் வாடிப்போகாமல் இருக்கத் தண்ணீர் டம்ளரில் மிதக்க விடுகிறார். உண்மையில் அவருக்குள்ளிருக்கும் காதல் தான் அந்த ரோஜாவாகச் சுட்டப்படுகிறது. அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளவே ஒனேசிமோ முயலுகிறார்.

லத்தீன் அமெரிக்க அரசியலுக்கும் இந்திய அரசியலுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. குறிப்பாகத் தேர்தல் பிரச்சாரங்களைப் பற்றிப் படிக்கும் போது நம் ஊரில் தேர்தல் நடப்பது போலவேயிருக்கிறது.

மொகலாய ஓவியங்களில் மன்னர்கள் கையில் ரோஜாப்பூவை ஏந்தியிருப்பார்கள். அது நித்யத்துவத்தின் அடையாளம். இக்கதையிலும் மரணத்தை வெல்லும் மலராகவே ரோஜா இடம்பெறுகிறது

பிரச்சாரத்தின் நடுவே அவரது ஆட்கள் காகித பறவைகளைச் செய்து பறக்கவிடுகிறார்கள். அது நிஜப்பறவைகள் போலவே பறந்து போகிறது. உண்மையில் அவரது வாக்குறுதிகள் தான் அந்தக் காகிதப்பறவைகள். அது உலகிற்கு நிஜப்பறவைகள் போலக் காட்சிதருகின்றன.

தனக்கான ரோஜாவை செனட்டர் கண்டறிவதே கதையின் முக்கியத் தருணம்.

தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே செனட்டர் தன வாழ்வில் இதுவரை காணாத அழகி ஒருத்தியை காணுகிறார். அவளது பெயர் லாரா ஃபரினா. அவளது தந்தை ஒரு கோரிக்கையை நிறைவேற்றும்படி அவளை செனட்டரிடம் அனுப்பி வைக்கிறார். அந்த அழகியிடம் மயங்கிவிடும் செனட்டர் அவளுடன் நெருக்கமாகிறார். அவளுடன் உடலுறவு கொள்ள முயலும் போது லாரா ஃபரினா அணிந்துள்ள கற்புக்கவசம் தடுக்கிறது. அதன் சாவியைப் பெண்ணின் தந்தை வைத்திருக்கிறான். கோரிக்கை நிறைவேறினால் மட்டுமே சாவியைத் தருவதாகச் சொல்கிறான். அந்தச் சாவியே வேண்டாம் எனக் கூறும் செனட்டர் அவளுடன் சும்மா இருப்பதே போதும் என அணைத்துக் கொள்கிறார்.

அந்த விடுபடல் முக்கியமான இடம். உலகம் அறிந்திராத ஒனேசிமோவை அவள் அறிந்து கொள்கிறாள்.

ஒனேசிமோ பிரச்சாரத்திற்குச் செல்லும் ஊர் ஒரு காலத்தில் கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கான உல்லாசத் தளமாக இருந்தது, அங்கே நடைபெறும் தேர்தல் பேரணி, ஒனேசிமோ வரும் குளிரூட்டப்பட்ட கார். அவரது சில்க் சட்டை, ஓய்வெடுக்கும் வீடு, வெக்கையான நிலவெளி, கழுதை ஒன்றில் தொடையில் தேர்தல் பிரச்சார வாசகம் எழுதிவிடுவது. ஒனேசிமோவின் காவலர்கள். அனலாய் எரியும் சூரியன் என யாவும் துல்லியமாக எழுதப்பட்டிருக்கிறது

ஒனேசிமோ காலண்டர் காகிதத்தைக் கிழித்து ஒரு பட்டாம்பூச்சி செய்கிறார். அந்தப் பட்டாம்பூச்சி காற்றில் பறந்து வெளியே செல்கிறது. காகித பட்டாம்பூச்சி வெளியே வருவதை லாரா ஃபரினா பார்க்கிறாள். அவளைப் பொருத்தவரை அது ஒனேசிமாவின் அடையாளம். அந்த சந்திப்பு தான் அவளிடம் பரிவை ஏற்படுத்துகிறது.

மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலிலும் பட்டாம்பூச்சிகள் வரும் காட்சி இருக்கிறது.

மரணத்தைக் காதல் வென்றுவிடும் எனக்கூறும் இக்கதையில் உடலின்பங்களைக் கடந்து ஒருவன் அசாதாரண அழகு கொண்ட பெண்ணிடம் அடைக்கலமாகிறான். அவளைக் குழந்தை எனக்கருதும் ஒனேசிமோ முடிவில் தானே குழந்தையாகிறார்

ஐந்து குழந்தைகளின் தந்தையாக உள்ள ஒனேசிமோ ஏன் அன்பிற்காக ஏங்குகிறார். மரணம் தான் உண்மையான காரணம். சாவின் சுவடுகளே அந்தத் தவிப்பை உருவாக்குகிறது. குடும்பம் அவரைக் கைவிட்டதாக உணருகிறார். தன்னை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பெண்ணிற்காக ஏங்குகிறார். அது கடைசியில் நிறைவேறுகிறது.

அகிரா குரசோவாவின் இகிரு திரைப்படத்தின் நாயகன் ஒரு நாள் இது போலத் தனது மரணத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அதுவரை தொடர்ந்த அவனது சலிப்பூட்டும் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முயலுகிறான். பொது விஷயங்களில் ஈடுபடத் துவங்கி மெல்ல நீதி கேட்கிறவனாக மாறுகிறான். இக்கதை அதன் மாற்று வடிவம் போலப் பொதுவாழ்வில் உள்ள ஒருவன் மரணத்தின் முன்னிலையில் காதலிடம் அடைக்கலமாகிறான்.

மார்க்வெஸ் நினைவுகளால் தூண்டப்பட்டே கதைகளை எழுதுகிறார். அவரது நினைவுகள் தனிநபருடையது மட்டுமில்லை. பூர்வ குடி இந்தியர்கள் மற்றும் அவரது கிராமவாசிகளின் நினைவுகளையும் ஒன்று சேர்த்து எழுதுகிறார். இக்கதையிலும் அதுவே நிகழுகிறது.

மார்க்வெஸ் தான் எழுதும் அறையில் எப்போதும் மஞ்சள் ரோஜா இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். அது போன்ற ஒரு நம்பிக்கை தான் செனட்டரிடம் வெளிப்படுகிறது.

இதே கதையின் இன்னொரு வடிவம் போலத் தான் அவரது இறுதி நாவலான Memories of My Melancholy Whores எழுதப்பட்டிருக்கிறது. அதில் வரும் முதியவர் பதின்வயது பெண்ணோடு உடலின்பத்தைத் தாண்டிய நட்பினை உருவாக்குகிறார். நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் The House of the Sleeping Beauties நாவலின் பாதிப்பில் இதை எழுதியதை மார்க்வெஸே ஒத்துக் கொள்கிறார். ஆனால் இந்தக் கருப்பொருள் குறித்த வேட்கையை 1970களில் எழுதிய சிறுகதையிலே காணமுடிகிறது

கதையின் மையப்பொருள் தேர்தல் பிரச்சாரம் என்றாலும் கதை அதை இரண்டாம் நிலை கருப்பொருளாகவே கையாளுகிறது. உண்மையில் தேர்தல் பிரச்சாரம் கேலிக்கூத்தாகவே சித்தரிக்கப்படுகிறது.

செனட்டர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதியாக இல்லாமல் போவதே கதையின் சுவாரஸ்யம்.

மார்கஸ் அரேலியஸ் எழுதிய Meditations பற்றிய குறிப்பு இக்கதையில் இடம் பெறுகிறது. தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அதுவென்று மார்க்வெஸ் தனது நேர்காணலிலும் குறிப்பிடுகிறார்

மரணம் என்பது இயற்கையின் மர்மம்; அது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. எனக்கூறும் மார்கஸ் அரேலியஸ் அழகு என்பதைக் குறித்துப் பல்வேறு நிலைகளில் வரையறை செய்கிறார். அத்தோடு To love only what happens, what was destined. No greater harmony. எனக் குறிப்பிடுகிறார். இதைப் புரிந்து கொள்ளும் போது கதையில் வரும் காதலை நாம் வேறுவிதமாக உணர முடியும்.

உண்மையில் செனட்டர் மரத்திலிருந்து உதிரும் பூவைப் போலிருக்கிறார். வீழும் மலர்கள் எதையோ முணுமுணுக்கின்றன. உலகம் அதைக் கேட்பதேயில்லை.

லாரா ஃபரினா தந்தையின் வேண்டுகோளை ஏன் ஏற்றுக் கொள்கிறாள். அவளது கடந்தகாலம் என்ன என்று எதுவும் கதையில் விவரிக்கப்படுவதில்லை. அது வாசகரால் கற்பனை செய்து கொள்ளபட வேண்டியது.

நுண்ணோவியங்கள் வரைவது போல நுணுக்கமாகத் தகவல்களைத் தருவதே மார்க்வெஸின் சிறப்பு. இந்தக் கதை ரோஜா, மற்றும் பட்டாம்பூச்சி வழியே தன் மாயத்தை நிகழ்த்திவிடுகிறது.

••  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2023 03:19

பெயரில்லாத நாயகன்

எத்தனை முறை பார்த்தாலும் வியப்புக் குறையாத திரைப்படங்களை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி. ஏழு திரைப்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் என்ற தனிவகைச் சினிமாவை உருவாக்கியவர் செர்ஜியோ லியோனி.

அவரது காட்சிக்கோணங்களும் ,இசையைப் பயன்படுத்தும் விதமும், பரபரப்பான கதைத்திருப்புகளும் மறக்கமுடியாதவை. எவரது நிர்ப்பந்தத்திற்கும் கட்டுப்படாமல் நான் படங்களை இயக்கக்கூடியவன் என்கிறார் செர்ஜியோ. இவரது தந்தையும் ஒரு திரைப்பட இயக்குநரே.

முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். இவரும் இசையமைப்பாளர் எனியோ மோரிகோனும் பள்ளி நண்பர்கள். இவர்கள் இணைந்து உருவாக்கிய திரைப்படங்கள் உன்னதமானவை

எனியோ மோரிகோன் திரையிசை பற்றி இப்படத்தில் குறிப்பிடுவது முக்கியமானது. ஒரு காட்சியில் கதாபாத்திரம் வெளிப்படையாகப் பேசாத விஷயத்தை இசை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை அழகாக விவரிக்கிறார்.

செர்ஜியோ லியோனி பற்றிய ஆவணப்படமானSergio Leone: The Italian Who Invented America 2022ல் வெளியானது. பிரான்செஸ்கோ ஜிப்பல் இதனை இயக்கியுள்ளார். வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தில் செர்ஜியோவின் பிள்ளைகள் அவரைப் பற்றி நினைவுகூறும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படப்பிடிப்பில் குழந்தையாகக் கலந்து கொண்ட நாட்கள் துவங்கி அவரது திரை வாழ்க்கை அதன் வெற்றிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்பு Once Upon a Time in America படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் வரை அவர்கள் நினைவு கொண்டது உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் தாங்கள் செர்ஜியோ லியோனியிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டோம், அவரைப் போல இன்னொரு இயக்குநர் உருவாக முடியாது என்கிறார்கள்.

செர்ஜியோ லியோனியின் நாயகர்களுக்குப் பெயர் கிடையாது. அவர்கள் அடையாளப்பெயரிலே அறியப்படுகிறார்கள். அவர்களுக்கெனச் சொந்த உலகம் இருக்காது. துப்பாக்கி போல அவனும் ஒரு கருவி மட்டுமே. ஆனால் அவன் ஒரு இசைக்கும் துப்பாக்கி போலச் செயல்படுகிறான். ஆம். அவனது துப்பாக்கியிலிருந்து எழுவது வியப்பூட்டும் இசையே. படத்தில் அவன் அதிகம் பேசுவதில்லை. எதற்கும் பயப்படுவதில்லை. ஒரு இடத்தில் தங்கிவிடுவதுமில்லை. அவன் நிரந்தரப் பயணி போலவே செயல்படுகிறன.

கிளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் டி நிரோ மார்ட்டின் ஸ்கோர்செஸி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், க்வென்டின் டரான்டினோ, ஃபிராங்க் மில்லர், டேரன் அரோனோஃப்ஸ்கி, ஆகியோர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

ஏன் இன்றும் செர்ஜியோ லியோனி முக்கியமான இயக்குநராகக் கருதப்படுகிறார் என்பது குறித்தே படம் பேசுகிறது.

அவரது திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட விதம் மற்றும் வெஸ்டர்ன் சினிமாவின் நுணுக்கங்கள் குறித்து ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்

லெனின்கிராடு முற்றுகை குறித்து ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று செர்ஜியோ லியோனி ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. அந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் படமாக்க விரும்பிய முறை பற்றி இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்கள்.

Once Upon a Time in the West துவக்கக்காட்சியை வியந்து பேசும் இயக்குநர்கள் அது போன்ற ஒரு தலைப்பு காட்சி இதுவரை எந்தப்படத்திலும் இடம்பெறவில்லை என்கிறார்கள். அது உண்மையே.

குதிரைகளின் குளம்பொலி மற்றும் துப்பாக்கிச் சண்டை, பாம்வெடிப்பது போன்றவற்றிற்கான சிறப்பு ஒலிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை இன்னொரு காட்சியில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் வணிக சந்தை அவரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. Once Upon a Time in America படத்தின் நீளம் அதிகமாகவுள்ளது என்று தயாரிப்பாளர்கள் நேரத்தைக் குறைத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது லியோனிக்கு பிடிக்கவில்லை. இப்போது அப்படத்தின் Uncut Version வெளியாகியுள்ளது. 4 மணி நேரம் 10 நிமிஷம் கொண்ட அந்தப்படம் தரும் அனுபவம் நிகரில்லாதது.

செர்ஜியோ லியோனி மறைந்து முப்பது ஆண்டு நிறைவானதைக் குறிக்கும் வகையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது

ஜுலை 13 .2023

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2023 01:21

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 28 வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் உரையாற்றுகிறேன்.

தலைப்பு : புத்தகத்தின் கைகள்.

இடம் : நகர் மன்றம் புதுக்கோட்டை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 13, 2023 00:03

July 11, 2023

டார்வினின் வருகை

கவிஞர் ஞானக்கூத்தன் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் வருவது போல எனது பள்ளி நாட்களில் அறிவியல் பாடம் நடத்தும் போது எலும்புக் கூடு ஒன்றை வகுப்பறைக்குக் கொண்டுவருவார்கள்.

அந்த எலும்புக்கூடு மனிதன் யார் என்று தெரியாது. அவனது கைகால்களின் எலும்புகளைக் காட்டி ஆசிரியர் டார்வின் தியரியை விளக்கிச் சொல்லுவார். வகுப்பு முடிந்தவுடன் எலும்பு கூட்டை கொண்டு போய்ச் சயின்ஸ் லேப் உள்ளிருந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்துவிடுவார்கள்.

காரிடாரில் எலும்புக்கூடு போவதைக் காண வேடிக்கையாக இருக்கும்.

வகுப்பறைக்குள் டார்வின் சிந்தனைகள் நுழைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. இன்று பரிணாமக் கோட்பாடு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. டார்வினின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகி மரபணு ஆய்வுகள் வழியே பரிணாமத்தை விளக்குகிறார்கள். இன்று பரிணாமவியலில் நடந்துள்ள பாய்ச்சல் நினைத்துப் பார்க்க முடியாதது.

ஆனால் டார்வின் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தது எளிதாகயில்லை. மத நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை மீறியே டார்வின் கோட்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளியில் கற்பித்தார்கள். இதற்காக அறிவியல் ஆசிரியர்கள் கேலி செய்யப்பட்ட்டார்கள். தண்டிக்கபட்டார்கள். நீதி விசாரணை நடைபெற்றிருக்கிறது.

அப்படியான ஒரு நீதி விசாரணையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே Inherit the Wind திரைப்படம்.

ஆசிரியர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம்.

அமெரிக்காவில் 1925ம் ஆண்டு ஜான் டி. ஸ்கோப்ஸ் என்ற பள்ளி ஆசிரியர் வகுப்பில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டினை கற்பித்த காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் மாநில சட்டத்தை மீறியதற்காகவும் தெய்வ நிந்தனைக்காகவும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது

இந்த வழக்கில் இருதரப்பிலும் இரண்டு முக்கியப் பிரபல வழக்கறிஞர்கள் பங்கேற்றார்கள். பரிணாமக் கோட்பாடு சரியா. தவறா அதை வகுப்பில் கற்பிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே Inherit the Wind திரைப்படம். ஜெரோம் லாரன்ஸ் மற்றும் ராபர்ட் எட்வின் லீயின் நாடகத்தைத் தழுவி, ஸ்டான்லி கிராமரால் உருவாக்கபட்டுள்ளது.

வகுப்பறை சுதந்திரம் குறித்து பேசும் இப்படம் ஆசிரியர் எதைக் கற்பிக்க வேண்டும் எதை கற்பிக்க கூடாது என்பதை யார் முடிவு செய்வது ஏன் மதம் இதில் தலையிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

அமெரிக்காவின் ஹில்ஸ்போரோ நகரிலுள்ள பள்ளி ஒன்றில்  ஆசிரியர் டார்வினை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது  காவலர்கள் உள்ளே நுழைந்து கைது செய்கிறார்கள். ஆசிரியருக்கு வால் இருக்கிறதா என்று கேலி பேசுகிறார்கள். ஆசிரியரின் செயலை நகரமக்கள் கண்டிக்கிறார்கள். அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வழக்கு விசாரணையில் இரண்டு முக்கிய வழக்கறிஞர்கள் எதிரெதிராக களம் இறங்குகிறார்கள். மதமும் அறிவியலும் நேரடியாக மோதிக் கொள்ளும் நீதிமன்ற வாதங்கள் அபாரமாகவுள்ளன.

வழக்கறிஞர் டிரம்மண்ட் ஒரு காட்சியில் “fanaticism and ignorance is forever busy, and needs feeding. என்று சொல்கிறார். அது இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.

அடிப்படைவாதத்தை நேரடியாகக் கேள்வி கேட்கும் படம் என்ற விதத்தில் இப்படம் முன்னோடியானது. அறிவியல் உண்மைகளை எவராலும் மறைத்துவிட முடியாது என்பதற்கு இப்படமே சாட்சியம்.

ஸ்பென்சர் டிரேசியின் நடிப்பு மற்றும் எர்னஸ்ட் லாஸ்லோவின் ஒளிப்பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2023 01:26

July 9, 2023

புதிய சிறுகதை

வல்லினம் கலை இலக்கிய இதழில் எனது புதிய சிறுகதை வகுப்பறையில் ஒரு திமிங்கலம் வெளியாகியுள்ளது.

இணைப்பு :

வகுப்பறையில் ஒரு திமிங்கலம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2023 04:12

July 7, 2023

காந்தி /உரை

அமரர் அ.ராமசாமி எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூல் அறிமுகவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்டு நூல் குறித்து உரையாற்றினேன்

 •  1 comment  •  flag
Share on Twitter
Published on July 07, 2023 23:06

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.