S. Ramakrishnan's Blog, page 59
July 6, 2023
வெர்மீரின் முகம்
ஜோஹன்னஸ் வெர்மீரின் ஒவியங்கள் இன்று பெற்றுள்ள புகழை அவர் வாழும் நாளில் பெறவில்லை. இதுவரை அவரது 34 ஓவியங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ள அவற்றை ஒரு சேர கண்காட்சியாக வைக்க முயலுகிறார்கள். அது குறித்த ஆவணப்படமே close to vermeer. இதனை சுசான் ரேஸின் இயக்கியுள்ளார்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பணியாற்றும் ஜார்ஜ் வெபர். தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு மிகப்பெரிய வெர்மீர் கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனவு காணுகிறார்.
இதற்காக வெர்மீரின் ஒவியங்கள் இடம்பெற்றுள்ள பல்வேறு மியூசியங்களைத் தொடர்பு கொண்டு அனுமதி கேட்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகயில்லை. பலரும் வெர்மீரின் ஒவியங்களை கடனாக அளிக்க மறுக்கிறார்கள். தங்கள் அருங்காட்சியகத்தின் விலைமதிப்பில்லாத சொத்து வெர்மீரின் ஒவியம் என்று விளக்குகிறார்கள். இந்த ஒவியங்களை சேகரிக்க முனையும் அவரது திட்டமிடலும் பயணமும் தான் படத்தின் மையப்பொருள்.

வெர்மீர் தனது 43வது வயதில் இறந்துவிட்டார். அவர் எப்படியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அவர் தனது சுயஉருவப்படம் எதையும் வரையவில்லை. அவரது சமகாலத்தை சேர்ந்த ரெம்ப்ராண்ட் எண்பது சுய உருவப்படங்களை வரைந்திருக்கிறார். ஆகவே அவரது தோற்றம் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. வெர்மீரின் குடும்பம் மற்றும் வாழ்க்கை சூழல் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.



மற்ற ஒவியர்களைப் போல வெளிப்புறக்காட்சிகளை வெர்மீர் வரையவில்லை. அவரது வீட்டின் அறைகள் தான் ஒவியக்களமாக இருக்கிறது. தினசரி நிகழ்வுகளை தான் வரைந்திருக்கிறார். அதிலும் ஒரு ஒவியத்தில் அவர் படம் வரையும் காட்சி சித்தரிக்கபடுகிறது. அதில் வெர்மீரின் முதுகு மட்டுமே நமக்குத் தெரிகிறது. இந்த முதுகை வைத்து வெர்மீர் ஏன் ஒரு பெண்ணாக இருக்க கூடாது என்ற கேள்வியை இப்படத்தில் ஒரு ஆய்வாளர் எழுப்புகிறார்.
வெர்மீர் யாரிடம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், யாருக்கெல்லாம் கற்றுக் கொடுத்தார் என்று தெரியவில்லை, ஆகவே புதிராக உள்ள வெர்மீரின் வாழ்க்கையை இன்றும் ஆராய்ந்தபடி இருக்கிறார்கள்.
இந்த ஆவணப்படம் வெர்மீரின் சிறப்புகளை விவரிப்பதுடன் அவரது கலைவாழ்வின் புதிரையும் அவிழ்க்க முயலுகிறது
தனது சமகாலத்தவரிடமிருந்து வேறுபட்டு தனக்கான தனித்துவ பாணியை வெர்மீர் உருவாக்கிக் கொண்டவிதம் ஆச்சரியமளிக்கிறது. இன்று அந்த ஒவியங்கள் காலத்தின் சாட்சியமாக காட்சிதருகின்றன. வெர்மீரின் முகம் எப்படியிருக்கும் என நமக்கு தெரியாது. ஆனால் அவர் வரைந்துள்ள பெண் முகங்கள் அலாதியான அழகுடன், அமைதியுடன் இருப்பதை காண முடிகிறது.
வெர்மீர் கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி தனது ஒவியங்களை வரைந்திருக்கிறார் என்பதை ஒரு காட்சியின் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஆய்வாளர்கள். கலைவிமர்சகர்கள் படத்தில் வெர்மீரின் ஒவியங்கள் பெற்றுள்ள புகழையும் அதன் தனித்துவத்தையும் பற்றி விரிவாக உரையாடுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வெபர் லண்டனில் பள்ளி மாணவனாக இருந்தபோது வெர்மீரின் ஓவியத்தை முதன்முதலில் பார்த்த அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாக விவரித்துள்ளார். அந்த வியப்பு அசலானது. பேச முடியாதபடி அவருக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்து எழுகின்றன.
வெர்மீரின் ஒவியத்தை பெரிதாக்கி ஆராய்கிறார்கள். குறிப்பாக அவரது வண்ணப்பூச்சில் உள்ள சிறு விரிசல்கள், நிழலான தூரிகைகள், நுணுக்கங்களை காட்டுகிறார்கள்.
பல்வேறு அருங்காட்சியகங்களிலிருந்து கடனாகப் பெற்ற வெர்மீர் ஒவியங்களை எப்படி காட்சிப்படுத்துகிறார்கள் என்பதையும் துல்லியமாக காட்டுகிறார்கள். .
மக்கள் பார்வைக்காக கண்காட்சி திறக்கபடுவதுடன் படம் நிறைவு பெறுகிறது. இந்த ஆவணப்படத்தில் ஓவியங்களின் வழியே நாம் வெர்மீரை நெருங்கிச் செல்கிறோம். வண்ணங்கள் அவரது குரலாக வெளிப்படுகின்றன.
இந்த கண்காட்சியை காண இரண்டு நாட்களில் 450,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன என்பது இதுவரை இல்லாத சாதனை.
July 4, 2023
சொல்வனம்- 300
தமிழ் இணைய இதழ்களில் முதன்மையானது சொல்வனம். சர்வதேச இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும். சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து வெளியிடுவதிலும் சொல்வனம் சிறப்பாகப் பங்களித்து வருகிறது. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

சொல்வனம் 300ஆம் இதழ் : புதிய எழுத்துகளும் புதுப் புத்தகங்களும் குறித்த சிறப்பிதழாக வெளிவருகிறது.
இம்முறை இளம் எழுத்தாளர்கள், புது எழுத்து முறைகள், தமிழின் அடுத்தக் கட்டப் பாய்ச்சல்களை முன்வைக்கும் முகமாக 300வது இதழை இளம் படைப்பாளிகளைக் கவனப்படுத்தும் இதழாக வெளியிடுகிறார்கள்.
புது எழுத்தாளர்கள், எழுத்து முறைகளைக் கவனப்படுத்துவதே இதன் முதன்மையான நோக்கம்.
2000க்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த கட்டுரைகள், விமர்சனங்களை வரவேற்கிறார்கள்.
விருப்பமான படைப்பாளிகள். வாசகர்கள் இதற்கான தங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்
படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
July 3, 2023
உப பாண்டவம் / மலையாள மொழிபெயர்ப்பு
எனது உப பாண்டவம் நாவல் மலையாளத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே.எஸ்.வெங்கடாசலம். DC புக்ஸ் வெளியிட்டுள்ளார்கள்.
குறுகிய காலத்தில் இதன் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது என்ற மகிழ்ச்சியை வெங்கடாசலம் பகிர்ந்து கொண்டார்.
அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

ஜுலை 3 2023.
இசைக்க மறந்த உறவு
கிரில் செரிப்ரெனிகோவ் எழுதி இயக்கிய TCHAIKOVSKY’S WIFE 2022ல் வெளியானது.
இப்படம் புகழ்பெற்ற ரஷ்ய இசைக்கலைஞர் சைகோவ்ஸ்கியின் திருமண வாழ்க்கையைப் பற்றியது. 1893 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் படம் துவங்குகிறது,

அன்டோனினா தனது கணவர் சைகோவ்ஸ்கியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் – நெரிசல் நிறைந்த மாளிகையின் இரண்டாவது மாடிக்குத் தடுமாறிச் செல்கிறாள். அங்கிருந்தவர்களால் அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் பார்க்கப்படுகிறாள்.
அங்கே இறந்த கிடந்த சைகோவ்ஸ்கி எழுந்துவந்து அவள் மீது கோபம் கொண்டு வெளியே துரத்துவதாகக் கற்பனை செய்கிறாள். அந்த அளவிற்கு அவர்களுக்குள் என்ன நடந்தது. ஏன் அவளைச் சைக்கோவ்ஸ்கி வெறுக்கிறார் என்பதையே படம் விவரிக்கிறது.

இளம்பெண்ணான அன்டோனினா பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். பாடகி அனஸ்தேசியா குவோஸ்டோவா வீட்டில் நடைபெறும் ஒரு விருந்தில் அவள் ரஷ்யாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான சைகோவ்ஸ்கியை முதன்முறையாகச் சந்திக்கிறாள். அவரது இசை மற்றும் அழகில் மயங்கிக் காதலிக்கத் துவங்குகிறாள். சைகோவ்ஸ்கியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை
விடாப்பிடியாக அன்டோனினா அவரைப் பின்தொடருகிறாள். சைகோவ்ஸ்கி நடத்தும் இசைப்பள்ளியில் இணைந்து இசை கற்கிறாள் அதற்கு ஒரே காரணம் அவரது அருகில் இருக்க முடியும் என்பதே.

கடன் தொல்லையில் அவதிப்படும் சைகோவ்ஸ்கி அதிலிருந்து மீளுவதற்காக அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். மாஸ்கோவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள். விருப்பமில்லாத அந்தத் திருமண வாழ்க்கை கசப்பாகிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள்.
புதுமணத் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போதே அவர்களுக்கு இடையிலுள்ள இடைவெளி துல்லியமாகத் தெரிந்துவிடுகிறது. அழகான காட்சியது.
அன்டோனினா தனது தேனிலவுக்குச் செல்லும் ரயிலில் எதிர்பாராமல் ரஷ்ய இளவரசரைச் சந்திக்கிறாள். அவர் சைகோவ்ஸ்கியின் நண்பர் என்பதால் என்ன செய்து சைகோவ்ஸ்கியை மயக்கினாய். எப்படித் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார் என்று அன்டோனினாவிடம் வியப்புடன் கேட்கிறார்.

அவர்களுக்குத் தெரிந்த ஒரு உண்மை அப்போது அன்டோனினாவிற்குத் தெரியவில்லை. சைகோவ்ஸ்கி அவளைப் புறக்கணிப்பதற்கான உண்மைக்காரணம் அவர் ஒரினசேர்க்கையாளர் என்பதைப் பின்னர் அறிந்து கொள்கிறாள்..இம்பீரியல் ரஷ்யாவில் விவாகரத்து பெற வேண்டும் என்றால் மன்னரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆகவே சைகோவ்ஸ்கியால் அவளை விவாகரத்துச் செய்ய இயலவில்லை. மேலும் கள்ளத்தொடர்பு இருக்கிறது என்று சாட்சியங்களுடன் நிரூபணம் செய்தால் மட்டுமே விவாகரத்து கிடைக்கும் என்ற நிலை இருந்தது- ஆகவே சைகோவ்ஸ்கி அவளை விவாகரத்துச் செய்யாமல் தனித்து வாழத் துவங்கினார். சைகோவ்ஸ்கிக்கு நரம்பு தளர்ச்சி இருப்பதால் அவளுடன் சேர்ந்து வாழவோ மீண்டும் அவளைப் பார்க்கவோ வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவர் தனது வாழ்நாள் முழுவதும் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் அளித்து வந்தார்.

சைகோவ்ஸ்கியை விட்டு விலகி தனியே வாழ்ந்த அன்டோனினா வழக்கறிஞரான அலெக்ஸாண்ட்ரோவிச் ஷ்லிகோவ் என்பவருடன் பழகி மூன்று குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். அப்போது சைகோவ்ஸ்கிக்கு விவாகரத்துக்கான சட்டப்பூர்வமான காரணங்கள் இருந்தாலும், அவர் அதை விரும்பவில்லை..
வாழ்நாள் முழுவதும் அவமதிப்பைச் சந்தித்து வந்த அன்டோனினா வாழ்நாளின் கடைசி இருபது வருடங்களை மனநலக் காப்பகத்தில் கழித்திருக்கிறார். படத்தில் அன்டோனினாவின் தனிமை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தப்படுகிறது.
சைகோவ்ஸ்கி தனது மனைவியை ஒருபோதும் காதலிக்கவில்லை, தனது ஓரினச்சேர்க்கையை மறைக்க அவளை ஒரு கவசமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள்
இதே உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு 1971ல் தி மியூசிக் லவர்ஸ் என்றொரு படம் வெளியாகியுள்ளது
சைகோவ்ஸ்கியின் இசையுடன் இணைந்து அலைபாய்கிறது கேமிரா. 19ம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கையைக் கலைநயத்துடன் காட்சிகள் சித்தரிக்கின்றன

இப்படம் உண்மைக்கு மாறாக அன்டோனினாவை சித்தரிக்கிறது. சைகோவ்ஸ்கியின் சகோதரர் அனடோலி எழுதிய நாட்குறிப்புகள் வேறுவிதமாக உள்ளன என்கின்றன ரஷ்யப் பத்திரிக்கைகள்.
சைகோவ்ஸ்கியின் வாழ்வில் நடந்த வேதனைகளின் சிறுசாயல் கூட அவரது இசையில் வெளிப்படவில்லை. சைகோவ்ஸ்கியின் இசையை நிறையவே கேட்டிருக்கிறேன். மனதை உற்சாகம் கொள்ள வைக்கும் உன்னத சங்கீதமது.
சைகோவ்ஸ்கியின் மனைவி திரைப்படம் ஆன்டன் செகாவின் சிறுகதையைப் போலிருக்கிறது. அன்டோனினா போன்ற பெண்களைச் செகாவ் கதையில் காண முடியும். சில வேளைகளில் பெர்க்மென் திரைப்படம் போலவும் உணர முடிகிறது. ரஷ்ய இலக்கியம் அதிகம் பொருந்தாத திருமண வாழ்க்கையைப் பற்றியே பேசுகிறது. இப்படமும் அந்த வரிசையில் தான் சேருகிறது.
July 1, 2023
தமிழ்நாட்டில் காந்தி
அமரர் அ. இராமசாமி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவர் எழுதிய தமிழ்நாட்டில் காந்தி நூலின் சிறப்புப் பதிப்பு வெளியாகிறது. சந்தியா பதிப்பகம் இந்நூலினை வெளியிடுகிறார்கள்.
இதன் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
இடம் : தக்கர்பாபா வித்யாலயம். தி. நகர் சென்னை.
நாள் : ஜுலை 7. மாலை ஆறுமணி

June 27, 2023
பற்றிக் கொள்ளும் கைகள்
ஓல்ஸ் சானின் இயக்கிய உக்ரேனியத் திரைப்படம் The Guide. 2014ல் வெளியானது.

படத்தின் முன்னோட்டத்தைக் காணும் போது Ivan’s Childhood திரைப்படம் ஞாபகம் வந்தது. நேற்று படம் பார்த்து முடித்தபோது தார்கோவெஸ்கியின் பாதிப்பில் உருவான படம் என்பதை நன்றாகவே உணர முடிந்தது.
1930களின் தொடக்கத்தில் படம் நடக்கிறது. உக்ரேனிய வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தின் கதையைப் படம் சொல்கிறது.
உக்ரேனின் கார்கிவ் நகரில் கூட்டுப்பண்ணை விவசாயத்திற்காகப் புதிய டிராக்டர் தொழிற்சாலை கட்ட முயலுகிறார்கள். இந்தப் பணியில் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட அமெரிக்க என்ஜினியர் மைக்கேல் ஷாம்ராக் இணைந்து கொள்கிறார்.

மைக்கேல் அழகியான நடிகை ஓல்காவைக் காதலிக்கிறார். ஆனால் ராணுவ அதிகாரி விளாடிமிரும் ஒல்காவைக் காதலிக்கிறான். அவள் விளாதிமிரின் காதலை நிராகரித்துவிடுகிறாள் ஆகவே மைக்கேலை ஏதாவது சதிவலையில் சிக்கவைக்க நினைக்கிறான் விளாதிமிர்.

முதல் டிராக்டரின் வெளியீட்டின் போது, உக்ரேனிய குடியரசின் தலைவர்களில் ஒருவர் ஸ்டாலின் அரசால் திட்டமிடப்பட்டுள்ள ரகசிய ஆவணங்களை மைக்கேலிடம் கொடுத்து, மாஸ்கோவில் பணிபுரியும் கரேத் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரிடம் ஒப்படைக்கும்படி சொல்கிறார். அரசின் அழைப்பினை ஏற்று மாஸ்கோ புறப்படும் மைக்கேல் அதனைப் புத்தகம் ஒன்றில் மறைத்துக் கொண்டு செல்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மைக்கேலை ரயிலில் மடக்கி கொலை செய்கிறான் விளாதிமிர். பத்து வயதான பீட்டர் தந்தையின் கொலைக்குச் சாட்சியாகிறான் மைக்கேல் வைத்திருந்த ரகசிய ஆவணத்தை விளாதிமிர் தேடுகிறான். ஆனால் ரகசிய ஆவணங்களுடன் பீட்டர் தப்பிச் சென்றுவிடுகிறான். துரத்தப்படும் அவனது பயணமே படத்தின் மையக்கதை.

தப்பியோடும் பீட்டர் ரயிலில் உக்ரேனின் பாரம்பரிய இசைக்கருவியான பாண்டுரா வாசிக்கும் பார்வையற்ற இவான் கோச்செர்காவினை சந்திக்கிறான். அவர் பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்.
இவான் போலவே நாட்டுப்புற இசைக்கலைஞர்களான கோப்சார்களை ஒடுக்குவதற்காக ஸ்டாலின் அரசு முனைகிறது. அவர்கள் நாடெங்கும் துரத்தப்படுகிறார்கள். இவான் கோச்செர்காவுக்கு வழிகாட்டியாகப் பீட்டர் மாறுகிறான். இருவரும் இணைந்து பயணிக்கிறார்கள். பீட்டரை தேடும் காவலர்கள் அவர்களைத் துரத்துகிறார்கள்.

இவானுக்கும் பீட்டருக்குமான நட்பும், அவர்கள் தப்பிச் செல்லும் பயணமும் சிறப்பாக உள்ளன. குறிப்பாகப் பார்வையில்லாதவர்களின் உலகை பீட்டர் உணர்ந்து கொள்ளும் தருணமும், தன்னைத் தாக்க வரும் முரட்டுப் பையன்களை அவன் எதிர்கொள்ளும் விதமும், சிகரெட் மடித்துத் தரும் காகிதம் ஒன்றில் வெளியாகியுள்ள தந்தை பற்றிய செய்தியை பீட்டர் அறிவதும் சிறப்பான காட்சிகள்.
பிளெமிஷ் ஓவியர் செபாஸ்டியன் விராங்க்ஸ் வரைந்த பார்வையற்றவர்களின் பயணம் பற்றிய ஓவியத்தின் திரைவடிவம் போலவே ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.

1934 ஆம் ஆண்டுக் குளிர்காலத்தில், பார்வையற்ற இவான் கோச்செர்கா மற்ற கோப்சார்களுடன் கார்கிவ் அருகே தூக்கிலிடப்படுகிறார். அந்தச் சோக சம்பவங்களுக்குப் பீட்டர் மட்டுமே வாழும் சாட்சியாக இருக்கிறான்.

உக்ரைன் முழுவதிலும் இருந்து உண்மையான பார்வையற்ற கோப்சார்களைப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
கிழக்கு உக்ரைனின் அற்புதமான நிலப்பரப்பின் வழியே அவர்கள் கடந்து செல்லும் காட்சிகளும் துயர இசையும் மனதைத் தொடுகின்றன
.
June 26, 2023
உறுபசி- மலையாளத்தில்
எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகியுள்ளது. தீப்பசி என்ற தலைப்பில் லோகோஸ் புக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது. எடமன் ராஜன் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

பண்பாட்டின் பயணம்
R பாலகிருஷ்ணன் IAS எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூல் குறித்த அறிமுகவிழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
களம் இலக்கிய அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பரை ஆற்றினேன்.
அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது







Thanks
Shruti Ilakkiyam
June 21, 2023
டாலியின் வினோத உலகம்
“I am not strange. I am just not normal.” ― Salvador Dalí
ஓவியர் சல்வடோர் டாலியின் வாழ்க்கையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Daliland. மேரி ஹாரன் இயக்கியுள்ளார். பென்கிங்ஸ்லி டாலியாக நடித்திருக்கிறார். மிகப்பொருத்தமான தேர்வு. 1970களில் நடக்கும் கதை. தனது சர்ரியலிச ஓவியங்களால் மிகப்பெரும் புகழை அடைந்தவர் டாலி.

கரப்பான்பூச்சி மீசையும் விசித்திரமான ஒப்பனைகளும் கொண்ட டாலி தனது ஒவியங்களைப் போலவே வாழ்க்கையிலும் கனவுலகில் சஞ்சரித்தார். அவரது ஆடம்பர வாழ்க்கை ஒழுக்க வரம்புகளை மீறியதாக இருந்தது. அவர் நடத்தும் விருந்திற்கான கட்டணங்களை செலுத்துவதைத் தவிர்க்க, காசோலைகளின் பின்புறத்தில் வரைவது வழக்கம். அந்த ஓவியம் பெரும்தொகைக்கு விற்பனையாகும் . படத்திலும் அப்படி ஒரு காட்சி இடம்பெறுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் வேறு எந்த ஓவியரையும் விட அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டவர் டாலி. அவர் எப்போதும் ஒரு பரபரப்பை உருவாக்க விரும்பினார், விளம்பரமும் பணமும் டாலிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது,

ஆண்டுதோறும் டாலி தனது மனைவி காலாவுடன் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தங்குவது வழக்கம். அதிலும் ஒரு குறிப்பிட்ட அறையில் தான் தங்குவார். 1973 ஆம் ஆண்டில் அப்படியான வருகையின் போது ஜேம்ஸ் அவரது உதவியாளராகப் பணியாற்றுகிறான். அவனது பார்வையில் டாலியின் வாழ்க்கையும் கொண்டாட்டங்களும் குழப்பங்களும் படத்தில் விவரிக்கப்படுகின்றன.
டாலியின் ஓவியங்களை விற்பனை செய்யும் நியூயார்க் கேலரி ஒன்றில் பணியாற்றுகிறான் ஜேம்ஸ். ஒரு நாள் அவனிடம் கொஞ்சம் பணத்தைத் தரும் உரிமையாளர் அதை ரெஜிஸ் ஹோட்டலில் தங்கியுள்ள டாலியின் மனைவி காலாவிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அவன் கலைக்கல்லூரியின் பயின்றவன். பாதியில் படிப்பை விட்டுக் கேலரியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். ஆகவே டாலியின் ஓவியங்களை நன்கு அறிவான். அவர் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தான்.

டாலியை சந்திக்கும் ஆசையில் அந்த ஹோட்டலுக்குச் செல்கிறான். இளமையான ஜேம்ஸைக் காணும் காலா அவனது அழகில் மயங்கி இரவு நடக்கும் விருந்திற்கு அழைக்கிறாள்.
ஐம்பது வயதைக் கடந்த அவளுக்கு இளம் பையன்களைப் பிடிக்கும் என்கிறார் டாலியின் மேலாளர். ஜேம்ஸ் அன்றிரவு விருந்திற்குப் போகிறான். வினோதமான அலங்காரம் செய்து கொண்டு டாலி விருந்திற்கு வருகிறார்.. அறை முழுவதும் இளம்பெண்கள். குடி, இசை, நடனம், பாலுறவு எனக் களியாட்டம் இரவெல்லாம் நீள்கிறது. டாலியின் விருந்திற்கு வந்த ஒரு இளம்பெண்ணுடன் ஜேம்ஸ் உடலுறவு கொள்கிறான். அதைத் திரைக்குப் பின்பாக ஒளிந்திருந்து காணுகிறார் டாலி. அவருக்கு இது போல ரகசிய இச்சைகளில் நாட்டம் அதிகம் என்பதை அறிந்து கொள்கிறான்.

மறுநாள் அவர்களின் கேலரிக்கு வரும் டாலிக்கு அவரது விதவிதமான கையெழுத்துக்களைக் கொண்ட ஆல்பம் ஒன்றை பரிசாகத் தருகிறான் ஜேம்ஸ். இதில் மனம்மகிழ்ந்த டாலி அவனைத் தனது உதவியாளராக வரும்படி அழைக்கிறார். அன்றிலிருந்து ஜேம்ஸ் டாலியின் உதவியாளராகப் பணியாற்றத் துவங்குகிறான்.
டாலி மற்றும் காலாவின் வாழ்க்கைவினோதங்களை அருகிலிருந்து காணும் ஜேம்ஸ் அதை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியாமல் குழப்பமடைகிறான்.
டாலியின் இளமைப்பருவம் மற்றும் காலாவை காதலித்த நாட்கள் பற்றிய நினைவுகளை அவர் வழியாகவே அறிந்து கொள்கிறான்.
எழுபது வயதான டாலி சாவு தன்னைத் துரத்துவதைக் கண்டு பயப்படுகிறார். எப்போதும் இளமையானவர் போலக் காட்டிக் கொள்ள ஒப்பனை செய்து கொள்கிறார். இளம்பெண்களுடன் உல்லாசமாகக் கழிக்கிறார். அவர் நடுங்கும் கைகளுடன் ஒப்பனை செய்யும் காட்சி படத்திலிருக்கிறது.
நியூயார்க்கில் நடைபெற இருக்கும் கண்காட்சிக்கு தேவையான ஓவியங்களை டாலி வரைகிறாரா எனக் கண்காணிக்கும்படி அனுப்பி வைக்கபட்ட ஜேம்ஸ், அங்கே நடைபெறும் பார்ட்டி, செக்ஸ் மற்றும் போதை மருந்து கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தடுமாறுகிறான்

டாலியின் புகழைப் பணமாக மாற்றுகிறாள் காலா. அவரது ஓவியங்களை விற்பனை செய்வதிலும் அவருக்குப் புதிய இன்பங்களை அறிமுகம் செய்வதிலும் தொடர்ந்து ஈடுபடுகிறாள். காலாவின் தீராத பணப் பசியை ஜேம்ஸ் அறிந்து கொள்கிறான். அதே நேரம் டாலி ஒரு குழந்தையைப் போல அவளிடம் நடந்து கொள்வதையும் காணுகிறான். அவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதை உணருகிறான்.
காலாவின் உண்மையான பெயர் ஹெலினா இவனோவ்னா டியாகோனோவா. அவர் டாலியை விடப் பத்து வயது மூத்தவர், கவிஞர் பால் எலுவார்டையும் திருமணம் செய்து கொண்டிருந்தார். டாலி அவளை முதன்முறையாகக் கண்டதும் காதல் கொண்டுவிட்டார். காலா தன்னை மீட்க வந்த தேவதை என்று நம்பினார். காலாவும் தனது கணவரைப் பிரிந்து டாலியுடன் வாழத் துவங்கினார். பின்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். டாலி தனது ஓவியங்களில் காலாவின் பெயரையும் சேர்த்து எழுத ஆரம்பித்தார். டாலியின் ஒவியங்களை நிராகரித்த கேலரிகளுடன் காலா போராடி அவரது ஓவியங்களை விற்பனை செய்ய வைத்தார். டாலியின் புகழுக்குக் காலா முக்கியக் காரணமாக விளங்கினார்.
டாலி 1968 ஆம் ஆண்டில் காலாவிற்காகப் புபோல் நகரில் ஒரு கோட்டையை விலைக்கு வாங்கினார். அங்கே அவளது அனுமதி இன்றி டாலியே செல்ல முடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அக்கோட்டையில் காலா தனது இளங்காதலர்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தார்
முதுமையின் காரணமாகக் கைநடுக்கம் ஏற்பட்டு டாலியால் ஓவியம் வரைய இயலாமல் போனது. ஆயினும் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக நிறையப் பணம் தேவைப்பட்டது. இதனால் வெற்றுக் கேன்வாஸ்களில் கையொப்பமிடும்படி அவரைக் காலா வற்புறுத்தினார் . டாலி நிறைய வெற்றுக் கேன்வாஸ்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவற்றை வேறு ஓவியர்கள் மூலம் வரையச் செய்து போலி ஓவியங்களாகக் காலா விற்றிருக்கிறார்.
மருத்துவரின் ஆலோசனையின்றிக் காலா தானாகக் கொடுத்த மருந்துகள் டாலிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தின. அவர் பார்கின்சன் நோயால் பீடிக்கபட்டார். ஐம்பத்து மூன்று வருடங்கள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள்
ஜூன் 10, 1982 இல் கடுமையான காய்ச்சலால் காலா இறந்தார். அவரது உடல் புபோல் கோட்டையினுள் அடக்கம் செய்யப்பட்டது.
காலா இறந்தபிறகு டாலி வெளியுலகத் தொடர்புகளை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். காலாவின் பெயரை எவரும் சொல்வதைக் கூடத் தடை செய்தார். டாலி தனது 84வது வயதில் ஸ்பெயினில் உள்ள ஃபிகுராஸ் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாகக் காலமானார்.

இப்படம் டாலி மற்றும் காலாவின் வாழ்க்கையைச் சுற்றியே நகர்வதால் அவரது அபாரமான ஒவியத்திறமை அதற்குப் பின்னுள்ள மனநிலை. சர்ரியலிஸ்டுகளின் நட்பு வட்டம். ஹாலிவுட்டில் டாலி பணியாற்றியது குறித்து அதிகம் இடம்பெறவில்லை.
எழுபதுகளின் காலகட்டத்தை படம் சிறப்பாக மறுஉருவாக்கம் செய்துள்ளது. தேர்ந்த ஒளிப்பதிவு. கலை இயக்கம், காலாவாக நடித்துள்ள பார்பரா சுகோவாவின் நடிப்பு படத்தின் சிறப்புகள்.
டாலியின் மேதமையை விடவும் அவரது விசித்திரமான நடவடிக்கைகளைப் படம் அதிகம் கவனப்படுத்தியதால் கோமாளி போலவே அவரை உணருகிறோம்.
ஆனால் பல ஆண்டுகளாக, டாலி வெவ்வேறு ஊடகங்களில் பரிசோதனை செய்த உண்மையான கலைஞராக இருந்திருக்கிறார், டாலியின் பெயரைக் குறிப்பிடாமல் சர்ரியலிசத்தைப் பற்றிப் பேசுவது சாத்தியமற்றது. டாலியின் நேர்காணல்கள் மற்றும் அவர் பற்றிய புத்தகங்களை வாசிக்கும் போது அவரது ஆளுமையைச் சரியாக அறிந்து கொள்ள முடியும்.

The Persistence of Memory போன்ற நிகரில்லாத ஓவியத்தை வரைந்தவர் தான் டாலி என்பதே நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது.
June 19, 2023
சிரிக்கும் பந்து
மதார் எழுதிய ஆறு கவிதைகள் மே மாத சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளன. இளங்கவிகளில் மதார் முக்கியமானவர். திருநெல்வேலியில் வசிக்கிறார். இவரது வெயில் பறந்தது நல்லதொரு கவிதைத் தொகுப்பு.

சமீபமாக இவரது கவிதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மதார் எழுதும் கவிதைகளின் மையப்பொருள் சிறார்களின் உலகம். அவரது கவிதைகளில் விளையாட்டு தொடர்ந்து இடம்பெறுகிறது.
சொல்வனத்தில் வெளியாகியுள்ள கவிதைகளிலும் முதல் கவிதை பலூனைப் பற்றியதே. இந்த ஆறு கவிதைகளும் தனித்துவமானவை. புதிய அனுபவத்தையும் பரவசத்தையும் தருகின்றன.
ஒவ்வொரு கவிஞனும் தனக்கென ஒரு உலகைக் கொண்டிருக்கிறான். அது அவனாக உருவாக்கிக் கொண்டது. அதில் எது அகம் எது புறம் எனப் பிரிக்க முடியாது. அவனது கவிதை இயக்கம் உலகின் இயக்கத்தோடு சேர்ந்து இயங்காதது.
மதார் தனது கவிதை ஒன்றில் அழுகையை விழுங்கும் குழந்தையின் உலகை எழுதியிருக்கிறார். அம்மா சிரி என்கிறாள். தொண்டைக்குள் இனித்தது என்று அடுத்தவரி நீள்கிறது.
அழுகையின் ருசியை அறிய முற்படுகிறவன். சிரிப்பின் ருசியை அறிந்து கொள்கிறான். அழுகையும் சிரிப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவையில்லை போலும்.
அம்மா அழுகையை விழுங்கச் சொல்லும் போது அது ஒரு உணவுப் பொருளாகி விடுகிறது. அழுகையைச் சிரிப்பை குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளைப் போலவே பயன்படுத்துகிறார்கள். இரண்டும் நினைவுகள் அற்றது. எளிதில் மறைந்து போகக்கூடியது. ஆனால் பெரியவர்கள் உலகில் அழுகை கனமானது. சிரிப்பு எடையற்றது. தன்னை ஏமாற்றிக் கொள்வதுடன் உலகையும் ஏமாற்ற சிரிப்பு உதவுகிறது. அழுகை என்பது வேண்டுதல். மொழியால் பகிர முடியாத போது அழுகை வெளிப்படுகிறது.
மதாரின் கவிதையில் வரும் குழந்தையை விடவும் அம்மாவே என்னை அதிகம் யோசிக்க வைக்கிறாள். அவள் ஏன் அழுகையை விழுங்கச் சொல்கிறாள். அழுகையை குடித்து வளர்ந்தவள் என்பதாலா.

••
மதாரின் *முழுதாகக் கரைந்த ரப்பர்* கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இக்கவிதை கடந்து செல்லும் காட்சிகள் மறைவதை ஒரு ரப்பர் அழிப்பதாகக் கற்பனை செய்கிறது. எழுத்துக்களை மட்டுமே அழிக்கும் ரப்பரை அறிந்த நாம் காட்சிகளை அழிக்கும் ரப்பரைக் காணுகிறோம். ஆனால் அந்த ரப்பரால் காட்சிகளை முழுமையாக அழிக்க முடியவில்லை. அழிப்பதும் மீள்வதும் ஒரு விளையாட்டாகி விடுகிறது.
சிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு வெளியே உள்ள மரங்களை, கட்டிடங்களை இப்படி அழிரப்பர் மூலம் அழிக்கப் பார்த்திருக்கிறோம். கவிதை பள்ளிவயதின் நினைவுகளுக்குள் நம்மைக் கொண்டு செல்கிறது. கவிதை வெறும் நினைவேக்கமாக இல்லாமல் இன்றைய வாழ்வின் புதிராக மாறிவிடுகிறது. கவிதையின் முடிவில் லாரி முட்டி மோதிப் பார்த்து உதிர்ந்தன சில இலைகள் என்பதில் மெல்லிய கேலி வெளிப்படுகிறது. இந்தக் கேலியே கவிதையை உயர்வதானதாக்குகிறது. .
மதார் கவிதைகள் பூக்களைப் போல எடையற்றுக் காணப்படுகின்றன. சிறிய சந்தோஷங்களைத் தேடிக் காணவும் களிக்கவும் கூடிய கவிஞராக இருக்கிறார். அவர் தினசரி வாழ்வின் இயக்கத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்கிறார். ஆனால் அதில் முழுமையாகக் கரைந்துவிடுவதில்லை. அழிக்கமுடியாத மரம் போல மீண்டுவிடுகிறார்.
ஒரு பலூனுக்குள் இன்னொரு பலூன் இருப்பதைப் பற்றிய கவிதை அற்புதமானது. அது பலூனை உயிருள்ளதாக்குகிறது. இதயபலூன் என்பது ஒரு குறியீடாகிவிடுகிறது.
•••
பலூனுக்குள்
ஒரு பலூன்
இருப்பதைக் கண்டேன்
இதய வடிவ
குட்டி பலூன்
பெரிய பலூன்
குதித்தால்
குட்டி பலூனும்
குதிக்கிறது
பெரிய பலூன்
பறந்தால்
இதயப் பலூனும்
பறக்கிறது
பெரிய பலூனுக்குள்
துடிக்கும்
இதயப் பலூன்
யாருடைய காதல்
பெரிய பலூனுக்குள்
துடிக்கும்
குட்டி பலூன்
எத்தனை மாதம்
இதயப் பலூனை
பெரிய பலூன்
எப்படிப் பிரசவிக்கும்
பெரிய பலூனை
இதயப் பலூன்
எப்படி
அம்மா
என்றழைக்கும்
நான்
கவலையோடே
பெரிய பலூனுக்குள்
மிதக்கும்
இதயப் பலூனைப்
பார்க்கிறேன்
கவலையற்று
ஆனந்தமாய்க் குதிக்கிறது
அது
அதன்
உலகத்தில்தான்
ஏற்கெனவே
பிறந்துவிட்டதே
•••
*முழுதாகக் கரைந்த ரப்பர்*
ஒரு மரம் நிற்கிறது
அதைக் கடந்து
ஒரு பேருந்து செல்கிறது
அழிரப்பரைப் போல்
மரம் அழியவே இல்லை
டூவீலர்கள்
சென்று பார்க்கின்றன
மரம் நிற்கிறது
அதே இடத்தில்
சாலையின் இருமருங்கும்
வாகனங்கள்
மாறிமாறி
அழித்துப் பார்க்கின்றன
அழிவதாய் இல்லை மரம்
ஒரு லாரி
முட்டி மோதிப் பார்த்தது
உதிர்ந்தன
சில இலைகள்
••
வெயில் பறந்தது என்ற மதாரின் முதற்தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது. அந்தத் தொகுப்பில் வெயிலை பறவையாக்கியது பிடித்திருந்தது.
வெயில் பறந்தது தொகுப்பில் பந்து என்றொரு கவிதையிருக்கிறது. மிகச்சிறப்பான கவிதையது.
பந்து
எங்கிருந்தோ
ஒரு பந்து வந்து
கைகளில் விழுந்தது
விரிந்த மைதானத்தின்
நட்ட நடு வெளியில்
நிற்கும் எனக்கு
இப்பந்தின் உரிமையாளர்
குறித்து அறிவது
அரிதான காரியம்
யாருடைய பெயரும்
எந்தவொரு விதமான
மை கிறுக்கல்களும் கூட
இப்பந்தின் உடம்பில் இல்லை
தான் இன்னொருக்குச் சொந்தம்
என்று அறிவித்துக் கொள்ளாத
பந்து
பூமியைப் போலவே
இருந்தது
உள்ளங்கையில்
பொதிந்திருந்த பந்து
ஒருமுறை
ஒரேயொரு முறை
சிரித்தது.
இக்கவிதை சிறார்களின் விளையாட்டுக்காட்சியை விவரிக்கத் துவங்கி மெல்ல பூமியை சிறிய பந்தாக்கி நமது கைகளில் தந்துவிடுகிறது. பந்தின் சிரிப்பு தான் கவிதையின் உச்சம். பந்து ஒருமுறை மட்டுமே சிரிக்கிறது. இவ்வளவு அடி உதைக்குப் பிறகும் பந்து சிரிக்கவே செய்கிறது. தானே வந்து கையில் விழும் பந்து போன்றது தான் பூமியில் நமது பிறப்பும். பந்தை சிரிக்க வைப்பவன் கவிஞன் மட்டுமே.
இசைக்கருவி எதுவுமின்றி வெறுமனே விரலால் உதட்டினைத் தட்டித்தட்டி பிர்பிர் என இசை எழுப்பும் சிறுவன் அடையும் மகிழ்ச்சியைப் போன்றதே மதாரின் கவிதைகள். கனவிற்கும் கவலைக்கும் இடையில் ஊடாடுகிறது அவரது கவிதையுலகம். எளிமையும் நிதானமும் கொண்ட இக்கவிதைகள் வெயிலோடு சேர்ந்து நம்மையும் பறக்க வைக்கின்றன.
••
நன்றி
சொல்வனம் இணைய இதழ்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
