S. Ramakrishnan's Blog, page 55
August 24, 2023
குழப்பம் எனும் நெருப்பு
கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசான்ஸ்சாகிஸ் வாழ்வினை விவரிக்கும் kazantzakis என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017ல் வெளியானது. இதனை யானிஸ் ஸ்மரக்டிஸ் இயக்கியுள்ளார்.

துறவியின் இதயமும் கலைஞனின் கண்களும் கொண்டவர் கசான்ஸ்சாகிஸ். இப்படம் அவரது படைப்புகள் உருவான விதம் மற்றும் அவரது ஆளுமையை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. குறிப்பாக இயேசு மற்றும் புத்தர் குறித்த அவரது புரிதலும் பார்வைகளும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கசான்ஸ்சாகிஸ். தனது நாடகம் ஒன்றில் சீனாவின் யாங்சி ஆறும் புத்தரும் ஒன்று தான் என்கிறார்

தனது கிரேக்க அடையாளங்களைப் பெருமிதமாக எண்ணும் கசான்ஸ்சாகிஸ் விடுதலை உணர்வும் இன்பங்களைத் தேடும் ஆசையும் கிரேக்கர்களின் அடிப்படை இயல்பு. அதுவே தன்னையும் இயக்குகிறது என்கிறார்.
Report to Greco என்ற கசான்ஸ்சாகிஸின் சுயசரிதை நாவலை அடிப்படையாக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னுரையில் பயணங்களும் கனவுகளுமே தன்னை உருவாக்கியதாகச் சொல்கிறார். கிறிஸ்துவத் திருச்சபை அவரது The Last Temptation of Christ நாவல் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதைத் தடைசெய்யப் போராடியது. அவரையே சாத்தானின் உருவமாகவும் சித்தரித்தார்கள். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அகக்கொந்தளிப்பிலும் தீராத ஆன்மீகப் போராட்டத்தில் இருந்தவர் கசான்ஸ்சாகிஸ். முடிவில் கௌதம புத்தரைத் தனது மீட்சிக்கான வழிகாட்டியாக அறிவித்துக் கொண்டார்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியும் காஃப்காவும் இணைந்து உருவானவர் போலிருக்கிறார் கசான்ஸ்சாகிஸ். அவர் ஒன்பது முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆல்பெர் காம்யூவிற்கு நோபல் பரிசு கிடைத்த ஆண்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவருக்கு விருது கிடைக்காமல் போனது
படம் மருத்துவமனையில் துவங்குகிறது. சீனா சென்று திரும்பிய கசான்ஸ்சாகிஸின் வலதுகரம் செயலற்றுப் போகிறது. இனி எப்படி எழுத முடியும் என்ற பயம் அவரை வேதனைக்குள்ளாக்குகிறது. முடிக்கப்படாத தனது படைப்பு குறித்துக் கவலை கொள்கிறார். பிளாஷ்பேக் மூலம் அவரது கடந்தகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது
1920-30களில் படம் நடக்கிறது. கசான்ஸ்சாகிஸின் பால்யகாலம். அவரது காதல் வாழ்க்கை. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, ருமேனியா, எகிப்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் சீனா என நீளும் அவரது முடிவில்லாத பயணங்கள். கவிஞர் ஏஞ்சலோஸ் சிகெலியானோஸ் உடன் ஏற்பட்ட நட்பு. ஜோர்பாவை சந்தித்த காலம் என அவரது வாழ்வின் பல்வேறு அடுக்குகளைப் படம் விவரிக்கிறது.
“During my entire life one word always tormented and scourged me, the word ascent“. என்று கசான்ஸ்சாகிஸ் எழுதியிருக்கிறார். ஏற்றமும் வீழ்ச்சியுமே அவரது படைப்புகளைப் புரிந்து கொள்வதற்கான சாவிகள். கனவில் சஞ்சரிப்பவர் போல பல காட்சிகளில் கசான்ஸ்சாகிஸ் நடந்து கொள்கிறார்.
கவிஞர் ஏஞ்சலோஸ் சிகெலியானோஸை முதன்முறையாகச் சந்திக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் அழகானது. கசான்ஸ்சாகிஸ் தொடர்ந்து கனவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு மயங்கிவிடுகிறார். முடிவு எடுக்க முடியாத குழப்பம். அதீத உணர்ச்சி கொந்தளிப்பு. காதலின் தீவிரம் என அவரது ஆளுமையின் சிதறல் நிஜமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கசான்ஸ்சாகிஸின் தந்தை மூர்க்கமானவர். அவரது மூதாதையர்கள் கடற்கொள்ளையர்களாக இருந்தவர்கள். அவர்கள் செய்த குற்றத்திற்குத் தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனக் கசான்ஸ்சாகிஸ் நினைக்கிறார். தந்தையின் கோபம். கெடுபிடி. போதனைகள் அவரை நடுங்க வைக்கின்றன. ஒரு காட்சியில் அவரைத் தந்தை தரதரவென இழுத்துக் கொண்டு செல்கிறார். அப்போது பலியிட இழுத்துச் செல்லும் ஆட்டுக்குட்டி போலவே கசான்ஸ்சாகிஸ் நடந்து கொள்கிறார்.
தந்தை அவரைக் கல்லறையின் முன்பு மண்டியிட வைத்து மரணத்தைக் கண்டு பயப்படுகிறாயா என்று கோபமாகக் கேட்கிறார். ஆமாம் என்று குரல் நடுங்கச் சொல்கிறார் கசான்ஸ்சாகிஸ். மரணம் என்பது ஒரு கழுதை. அதில் ஏறி நாம் சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம், பயப்படாதே என்கிறார் தந்தை.தனது தந்தையின் பிடியிலிருந்து விடுபட முடியாத மனிதராகவே கசான்ஸ்சாகிஸ் வாழ்ந்திருக்கிறார். ஒரு காட்சியில் தந்தை இறந்துவிட்டதாகத் தந்தி வருகிறது. அப்போது தான் விடுதலை பெற்ற மனிதனாக உணர்வதாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

சட்டமும் தத்துவமும் பயின்ற கசான்ஸ்சாகிஸ் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டிருந்தார். இளமையில் மெய்த்தேடல் குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் அவரை ஆக்கிரமித்தன. அந்தக் குழப்பங்களே அவரைப் படைப்பாளியாக்கின. சொந்த வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளும் வேதனையும் அவரை நிலைகுலையச் செய்த போது எழுத்தின் வழியே அவர் மீட்சியைக் கண்டறிந்தார். எழுத்து ஒரு வலிநிவாரணி போலச் செயல்பட்டிருக்கிறது.
ஜெர்மனியில் இருந்த காலத்தில் யூதப்பெண்ணைக் காதலித்து அவளது காதலின் பொருட்டு ரஷ்யா செல்கிறார். கம்யூனிசம் மீது நம்பிக்கை கொண்டிருந்த போதும் ஸ்டாலின் ஆட்சியும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களும் பிடிக்கவில்லை. ரஷ்ய நிலப்பரப்பின் ஊடாக நீண்ட பயணம் செய்து அதன் நிகரற்ற அழகினை எழுதியிருக்கிறார்.

கசான்ஸ்சாகிஸ் 1924 இல் எலெனி சமியோவை சந்தித்தார். அவரது எழுத்துப்பணிக்கு உறுதுணை செய்ய முன்வந்தார் எலெனி. அந்த நட்பு பின்பு காதலாக மாறியது. இந்த நிகழ்வு அப்படியே தஸ்தாயெவ்ஸ்கிக்கும் அன்னாவிற்குமான காதலை நினைவுபடுத்துகிறது
எலெனியிடம் கிரேக்க கடல் மற்றும் காதல் பற்றிக் கசான்ஸ்சாகிஸ் பேசும் இடம் அழகானது.
கசான்ஸ்சாகிஸ் தனது வாழ்வில் தற்செயலவாகச் சந்தித்த ஒரு மனிதர் வழியாக அவரது புகழ்பெற்ற Zorba the Greek நாவல் எப்படி உருவானது எனப் படத்தில் காட்டுகிறார்கள். நாவலில் வரும் ஜோர்பா இன்னும் நெருக்கமாக, உணர்வுப்பூர்வமாக இருந்தார். படத்தில் ஜோர்பா சரியாகச் சித்தரிக்கப்படவில்லை.
மனிதன் சுதந்திரமானவன். எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் மீறியவன். கொண்டாட்டத்தை வாழ்வின் நோக்கமாகக் கொண்டவன். இசையும் நடனமும் அவனை இயக்குகின்றன என்கிறான் ஜோர்பா. அதை உணரும் இளம் எழுத்தாளன் தனது கையெழுத்துப்பிரதியைக் காற்றில் பறக்கவிடுகிறான். அந்தக் காட்சி படத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

கசான்ஸ்சாகிஸின் எழுத்து கிரேக்க இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவும் அதே நேரம் நவீனத்துவத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. இன்று அவரது நாவலை நவீனத்துவத்திற்கு எதிரான பின்நவீனத்துவப் படைப்பு என்று கருதுகிறவர்களும் உண்டு. ஒடிஸியஸ் மற்றும் கிறிஸ்து ஆகியோரின் உருவத்திலும் சாயலிலும் புதிய மாற்றத்தை உருவாக்கிக் காட்டினார். கடந்தகால மௌனத்திடம் கேள்விகளை எழுப்பியதோடு அதற்கான பதிலையும் முன்மொழிந்தார். அந்த வகையில் தனது தனது சொந்த எழுத்தைத் தொன்மமாக மாற்றியவர் கசான்ஸ்சாகிஸ். குழப்பம் எனும் நெருப்பே அவரை வழிநடத்துகிறது. சில நேரங்களில் அந்த நெருப்பு அவரைச் சுடுகிறது. சில தருணங்களில் உலகின் இடர்களிலிருந்து அவரை மீட்கிறது.

இன்று உலகம் முழுவதும் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவல்களைப் போலவே, கசான்ட்சாகிஸின் நாவல்களைப் படிப்பதும் மெய் தேடலின் வழியாகவே அறியப்படுகிறது. இருவரும் கலைக்கும் ஞானத்திற்குமான இடைவெளியை, ஊடாட்டத்தை, இணைவைப் பேசுகிறார்கள். இந்தியாவை மெய்தேடலின் தாயகமாக கருதுகிறார்கள். புத்தரைக் கொண்டாடுகிறார்கள்.
இப்படம் உணர்ச்சிப்பூர்வமாகக் கசான்ஸ்சாகிஸின் ஆளுமையைச் சித்தரிப்பதில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. வாசிப்பின் வழியாக மட்டுமே அவரது ஆழ்ந்த தேடல்களை, புரிதலை நாம் அறிந்து கொள்ள முடியும்.
August 23, 2023
குறுங்கதை- ஆங்கிலத்தில்
எனது இரண்டு குறுங்கதைகள் பிரண்ட்லைன் இதழில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்ப்பு செய்தவர் மாலினி சேஷாத்ரி.

‘They fell silent’
Amirthavarshini was the first to notice it. When she was cooking, a large spoon slipped off the stand and fell to the floor. There was no sound. How could such a large spoon fall on the floor and not produce any sound at all? How could it fall as noiselessly as a feather? Puzzled, she picked up another spoon and dropped it deliberately on the floor. Silence. Now totally baffled, she took out the heavy spoon that anchored the tiffin carrier. She lifted it and let it fall from a height. It landed as silently as a drop of water.
Like a curious child, she picked up spoons of different kinds and tried dropping them one at a time. She even went out on the balcony and tossed a spoon onto the street below to check for a noise on impact. Nothing. No sound out of any of the spoon falls.
In utter confusion by now, she half-hesitantly telephoned her friend Vasantha and told her about her discovery. Vasantha was dismissive and uninterested. So what, she asked. But Varshini persistently asked her to try, and so Vasantha picked up a spoon in her kitchen and dropped it. No sound, she reported.
By that evening, Varshini, had checked with her mother, friends in different parts of the town and quite a few others. It turned out that this phenomenon was not confined to her home or even her town. In all the houses, in all the towns and cities, spoons fell noiselessly to the floor. What had happened to all the spoons? Children lose their voices when a viral fever is raging. Did something similar happen to spoons? Or were spoons under a curse of some kind?
The clatter of a spoon falling to the floor is meant to capture one’s immediate attention, like a child’s cry. Why did the spoons lose their voices, what could be the reason? She could not accept it as something normal. When her husband returned home from his office that evening, she shared her concern with him. She also told her children about it.
Their uniform response was: “So what if they don’t make a noise? They’re only spoons. What does it matter?”
There is something unique about one’s relationship with spoons, quite distinct from all other kinds of ladles. After sipping honey from a spoon, for instance, she loved to keep licking the empty spoon. Oh, I wish I could just chew up and swallow this spoon, she would think. Once, on his return from a trip to Pondicherry, her husband had brought back chocolates shaped like spoons. When they were stirred into a cup of milk, they melted to make chocolate milk. “Hey, look, we’re drinking spoons,” the children called out gleefully as they gulped the chocolate milk.
To Varshini, any spoon was like a small hungry girl holding out her hand pleadingly. Does the teaspoon in the salt jar recognise the taste of salt? In the adult world of rice ladles, sambar ladles, dosai ladles… all those ladles with their long handles… spoons are just tiny innocent girls.
That night she grieved for the spoons. Late in the night she even got up and tried dropping a spoon again, just to be sure. Again no sound.
She realised that the small things of the world were beginning to lose their individuality, their voice. When the world is indifferent to so many human voices being throttled, is it likely to care about the silence of spoons?
Poor Varshini, what can she do about this? Except to go to the temple tomorrow and send up a special prayer for spoons.
***
Selected by mini krishnan and translated by malini seshadri
Thanks : Frontline Magazine
இந்தக் கதை உள்ளிட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு கர்னலின் நாற்காலி என்ற தலைப்பில் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

August 20, 2023
கதவைத் தட்டிய கதை
குறுங்கதை
தனது வீட்டுக்கதவைத் தட்டிய கதையைப் பற்றி அந்தக் கவிஞன் எழுதியிருந்தான்.
புதுடெல்லியின் குளிர்கால இரவு ஒன்றில் அவனது வீட்டினைக் கதை தட்டியது. தொலைதூரத்திலிருந்து வந்த விருந்தாளியை வரவேற்பது போலக் கதையை வரவேற்றான். கதை ஒரு முதியவரின் தோற்றத்திலிருந்தது. கிழிந்த சட்டை, கவலை படிந்த முகம், கதைக்கு உறுதியான கால்களும் கைகளும் இருந்தன. கதை மூச்சுவிட்டுக் கொண்டுமிருந்தது. கதையின் கண்கள் மட்டும் தொல்சுடரென ஜொலித்தன.

“நீண்ட தூரம் பயணம் செய்திருப்பீர்கள் போலிருக்கிறதே“ என்று கேட்டான்
“கதைகள் நடந்த தூரத்தை கணக்கிட முடியாது“ என்றது கதை
“நான் ஒரு கவிஞன். நீங்கள் முகவரி மாறி வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்“ என்றான்
“ஒரு காலத்தில் கவிஞர்கள் கதையோடு நெருக்கமாக இருந்தார்கள். இப்போது ஏன் கதைகளைக் கைவிட்டீர்கள்“ என்று கேட்டது அக் கதை
“அதற்குத் தான் நிறையக் கதாசிரியர்கள் வந்துவிட்டார்களே“ என்றான் கவிஞன்.
“கவிதையில் வசிப்பது குகையில் வசிப்பதைப் போலப் புராதனமானது, பாதுகாப்பானது“ என்றது கதை.
“இந்த நகரில் அன்றாடம் நான் சில கதைகளைக் காணுகிறேன். கதாபாத்திரமாக நடந்து கொள்பவர்களுடன் உரையாடுகிறேன். சண்டையிடுகிறேன் ,ஆனால் கதைகளோடு நான் நெருக்கமாகயில்லை. கதைகளைக் கையாளுவது எனக்குச் சிரமமானது“ என்றான் கவிஞன்.
“நீ ஒரு கதையாக மாறிக் கொண்டேயிருக்கிறாய். அதனால் தான் உன்னைத் தேடி வந்தேன்“ என்றது கதை.
“நானே அதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். முடிவில்லாத கதை ஒன்றைப் போலிருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக நான் வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது“.
“நீ பிறந்ததே ஒரு கதை. அன்னையைப் பறி கொடுத்து மாமா வீட்டில் வளர்ந்தது ஒரு கதை. தந்தையை வெறுத்தது ஒரு கதை. ஊரைவிட்டு ஒடிவந்தது, காதலித்தது. கைவிட்டது. தற்கொலைக்கு முயன்றது என நீ கதைகளால் ஆனவன். “
“நான் கதைகளிலிருந்து விடுபட விரும்புகிறேன். கதையாகிவிட்டால் எல்லாமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கவிதைகள் அப்படியில்லை. ஒரு வரியைக் கூட உலகம் எளிதாக ஏற்றுக் கொள்ளாது. கவிதை என்பது எதிர்ப்பின் வடிவம்“ .
“நான் உனது பால்ய ஸ்நேகிதன், அதை மறந்துவிடாதே. நாம் ஒரு கோப்பை தேநீரையாவது பகிர்ந்து கொள்வோம்“ என்றது கதை
அவன் கதைக்காகத் தேநீர் தயாரிக்கச் சமையலறைக்குச் சென்றான். கெட்டிலில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கும் நேரத்தில் அவன் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டான்
அவனது அலுவலகத்தில் எவரும் அவனைக் கவிஞன் என்று அறிந்திருக்கவில்லை. அவனது மனைவி, பிள்ளைகள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சொந்த கிராமத்தில் வசித்தார்கள். ஆண்டிற்கு ஒருமுறையோ இருமுறையோ ஊருக்குப் போய்வருவதுண்டு.
அவன் தனது குக்கிராமத்தை கவிதை எழுதுவதற்கான இடமாகக் கருதவில்லை. அங்கேயே வசித்தால் தான் கவிஞனாக இருக்க முடியாது என்று நம்பினான். அவனது கவிதைகளில் ஒருவரியை கூட அவனது மகளோ, மகனோ அறிந்திருக்கவில்லை. அவனுக்கு நண்பர்கள் குறைவு. அவனது அறைத்தேடி வந்து குடிப்பவர்கள் மனதில் அவனைப் பற்றி நல்ல அபிப்ராயமில்லை.
நகரமும் அதன் அலைக்கழிப்பும் உதிரி மனிதர்களும் தனிமையும் துயரமும் தான் கவிதை எழுதும் சூழலைத் தருவதாக நம்பினான். அவனது கவிதைகளில் எரியும் சுடர் கறுப்பு நிறத்திலிருந்தது. நம் காலத்தில் கவிஞனாக வாழுவது சாபம் என்று அவன் நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தான்.
அவனால் சொற்களுக்குள் ஒளிந்து கொள்வதைத் தவிர உலகை நேர் கொள்ள முடியவில்லை.அவன் உண்மையில் ஒரு ஒவியனாக இருக்கவே ஆசைப்பட்டான். கவிதை எழுதும் போது தான் ஓவியனாகிவிடுவதாக நம்பினான்.
உலகின் சகல பொருட்களின் மீதும் தூசி படிவதைப் போலத் தன்மீதும் காலத்தின் தூசி படிவதை உணர்ந்திருந்தான். உண்மையில் தூசி என்பது நிசப்தத்தின் அடையாளம். அது புறக்கணிப்பினை உணர்த்துகிறது என்பதையும் அறிந்திருந்தான்
முப்பது ஆண்டுகளில் அவன் ஐந்து கவிதை தொகுதிகள் வெளியிட்டிருந்தான். அதுவும் சின்னஞ்சிறிய புத்தகங்கள். எந்தப் புத்தகமும் இரண்டாம் பதிப்பு வரவில்லை. அவன் பென்சிலால் கவிதைகள் எழுதும் கவிஞன். உலகம் அதிநவீனமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் போது அவன் ரகசியமான துளை ஒன்றின் வழியே கடந்தகாலத்தின் ஆரவராமில்லாத பொழுதுகளில் வாழ்ந்து கொண்டிருந்தான். பள்ளி வயது புகைப்படங்களுக்குப் பதிலாகப் பள்ளி வயதில் அணிந்த சட்டையை இப்போதும் பாதுகாத்து வைத்திருந்தான். நட்சத்திரங்களை விடவும் அதன்பின்னுள்ள இருளை அதிகம் நேசித்தான். பொருட்களின் மீது நினைவுபடிந்து எடைகூடிவிடுவதை அறிந்திருந்தான். தான் ஒரு நகரும் படிக்கட்டு என்பது போல உணர்ந்தான். தனது வாழ்க்கை பிரிட்ஜிற்குள் எரியும் சிறுவிளக்கைப் போல அமைதியானது. குளிர்ச்சியானது. அநாதியானது என்று நம்பினான்.
தேநீர் கெட்டில் கொதித்துக் கொண்டிருந்தது. இரண்டு கோப்பைகளில் அவன் தேநீரை நிரப்பி எடுத்துக் கொண்டு நடந்தான். வரவேற்பறையில் கதையில்லை. அது வந்து போனதன் அடையாளமாகத் தான் அணிந்திருந்த கிழிந்த சட்டையை விட்டுச் சென்றிருந்தது.
பழைய துணிகள் எதைத் தொட்டாலும் அது கதை சொல்லத் துவங்கிவிடுவதை அவன் உணர்ந்தான்.
கிழிந்த சட்டை உலகின் அபூர்வமான மலர் ஒன்றைப் போல அவன் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.
••
August 19, 2023
வேட்டைக்காரனின் மனைவி
ஆன்டன் செகாவின் வேட்டைக்காரன் (THE HUNTSMAN) சிறுகதை 1885ல் வெளியானது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலரும் தேர்வு செய்துள்ள கதையிது. அளவில் சிறிய கதையே.

ஆனால் அதில் தான் எத்தனை மடிப்புகள். நுணுக்கங்கள். ஆன்டன் செகாவை ஏன் சிறுகதையின் மாஸ்டர் என்று கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம். கதை யெகோர் என்ற வேட்டைக்காரனைப் பற்றியது. அவன் ஒருநாள் நாட்டுப்புற சாலையில் நடந்து செல்லும்போது, தற்செயலாகத் தனது பிரிந்த மனைவி பெலகேயாவைச் சந்திக்கிறான்.
வேட்டைக்காரனைப் பற்றிய இக்கதையின் ஆதாரமாக இருப்பது பகலின் மௌனம்.
உறைந்து போன நண்பகல். வானத்தில் ஒரு மேகம் கூட இல்லை. . . . வெயிலில் புல் அமைதியற்ற, நம்பிக்கையற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது எனக் கதை துவங்குகிறது.
யெகோர் நாற்பது வயதானவன், உயரமானவன்,, குறுகலான தோள்கள் கொண்ட சிவப்புச் சட்டை அணிந்த மனிதன். பெரிய பூட்ஸ் அணிந்திருக்கிறான். இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருக்கிறான். வெள்ளை தொப்பித் தலையில் காணப்படுகிறது. என அவனது தோற்றம் துல்லியமாக விவரிக்கப்படுகிறது.

வேட்டைக்காரர்கள் மௌனமானவர்கள். நிதானமாகக் காத்திருக்கக்கூடியவர்கள். அதிலும் யெகோர் தனக்கு வேட்டையைத் தவிர வாழ்க்கையில்லை என்று நினைப்பவன். அதை ஒரு கலையாகக் கருதுகிறான்.
அவன் நடந்து வரும் சாலையில் சப்தமேயில்லை. விலங்குகளின் ஓசை கூட இல்லாத பெரும் நிசப்தம். சட்டென அவனது பெயரைச் சொல்லி யாரோ அழைப்பது போலக் கேட்கிறது. திரும்பிப்; பார்க்கிறான். அவனது மனைவி பெலகேயா நிற்கிறாள். அவள் வானிலிருந்து பறந்து வந்துவிட்டவளைப் போலத் தோன்றுகிறாள்.அந்தச் சந்திப்பு ஒரு தேவதையும் மனிதனும் சந்தித்துக் கொள்வது போன்றது தான் என்பதற்காக இதை எழுதினாரா என்று தெரியவில்லை.
அவர்களுக்குத் திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் யெகோர் மனைவியோடு வாழவில்லை. அந்தத் திருமணமே குடிபோதையிலிருந்த அவனுக்கு எஜமான் செய்து வைத்த நாடகம்.
பெலகேயா ஏன் தன்னைத் திருமணம் செய்து கொண்டான் என்று அவனுக்குப் புரியவில்லை. அது அவளது அதிர்ஷ்டம் என நினைக்கிறான். அவளுடன் இணைந்து வாழ அவனுக்கு விருப்பமில்லாமல் பிரிந்துவிடுகிறான். ஆண்டுகள் கடந்த போதும் பெலகேயாவிற்கு அவன் மீதான அன்பு மாறவேயில்லை. அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள். எப்போதாவது சும்மா தனது வீட்டிற்கு வந்து போய் இருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறாள்.

அவர்களின் இந்தத் திடீர் சந்திப்பு வசீகரமாக கதையில் விரிகிறது. அவளைத் தனது பயண வழியில் சந்திப்போம் என யெகோர் நினைக்கவேயில்லை. ஆகவே தற்செயலாகப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவளுடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
சில வருஷங்களுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அவளது குடிசைக்குத் தண்ணீர் குடிக்க யெகோர் வந்திருந்தான். அதுவும் போதையில், அப்போது அவளைத் திட்டி அடித்துவிட்டுச் சென்றுவிட்டான். அதன்பிறகு அவனைக் காணவில்லை அவள் கண்கள் சோர்வடைந்து விடுமளவு அவனைத் தேடிச் சலித்துவிட்டாள். காண முடியவில்லை. பிரிவு நீள்கிறது. ஆனால் அவளது ஆசை பலித்துவிட்டது போல அவனைச் சாலையில் தற்செயலாக காணுகிறாள்.
அவள் ஏன் அங்கே வந்தாள் என்று சந்தேகத்துடன் யெகோர் கேட்கிறான். ஒரு வேளை அவள் தான் வருவதை அறிந்திருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்குள்ளிருக்கிறது. காட்டுவேலைக்கு வரும் பெண்களுடன் தானும் வந்ததாகச் சொல்கிறாள்.. அவள் கடினமான உழைப்பாளி என்று பாராட்டுகிறான் யெகோர். அவனைப் பார்த்ததே போதும் எனச் சந்தோஷம் அடைகிறாள்.
தேவதாரு மரங்களுக்கு இடையிலுள்ள நிழலில் கொஞ்ச நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு போகலாமே என்கிறாள் பெலகேயா. அந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறான். அத்தோடு நீயும் உட்கார் என்று அவளையும் அருகில் அமரச் சொல்கிறான். அந்தப் பதிலுக்குள் அவள் மீதான அன்பு சிறுதுளியாக வெளிப்படுகிறது
பெலகேயா அதைக் கேட்டுச் சிரிக்கிறாள். மகிழ்ச்சியில் அவளது முகம் நிறம் மாறுகிறது. அவர்களுக்குள் பேச எதுவுமில்லை. இரண்டு நிமிஷங்கள் மௌனத்தில் கழிகிறது.உண்மையில் அவள் தான் அந்த நிழல். தருவின் நிழல் மௌனமாகத் தனது குளிர்ச்சியைப் பகிர்வது போல அவள் அருகிலிருப்பதன் வழியே அன்பை வெளிப்படுத்துகிறாள்.
அவன் தன்னால் ஒரு சிறந்த கணவனாக இருக்க முடியாது என்று சொல்கிறான். அத்தோடு அந்தத் திருமணமே ஒரு ஏமாற்று நாடகம் என்று குற்றம் சாட்டுகிறான்.
பெலகேயா அவனைக் குற்றம் சாட்டுவதில்லை. அவனுக்காகத் தான் காத்திருப்பதை உணர்த்துகிறாள். அவள் இப்போதும் அவனது மனைவி தான் என்பதை நினைவுபடுத்துகிறாள்.
அவனோ தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை. தான் சாதாரண வேட்டைக்காரனில்லை என்று பெருமை பேசுகிறான். தன் மீது எஜமானரே பொறாமை கொள்கிறான் என்கிறான்.
பெலகேயாவிற்கு அவன் வேட்டைக்காரனோ, குதிரை வண்டிக்காரனோ யார் என்பது முக்கியமில்லை. அவன் தனது கணவன். தன்னைப் புரிந்து கொள்ளாதவன். நிர்கதியில் தன்னை விட்டுச் சென்றவன். ஆனாலும் நேசத்துக்குரியவன்.
அவனது தன்னிலை விளக்கத்தைக் கேட்டு பெலகேயா அழுகிறாள். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று கேட்கிறான் யெகோர். புரிவதாகத் தலையாட்டுகிறாள். அழும் போது நான் சொல்வது புரியாது என்று யெகோர் கோவித்துக் கொள்கிறான்
அழும் போது மற்றவர் சொல்வது புரியாது என்ற வாசகம் உண்மையே. ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக மாறிய பின்பு எதற்கு வேண்டும் நியாய நியதிகள்
அவன் முன்னால் அழுவதன் வழியே தனது அன்பை வெளிக்காட்டுகிறாள் ப அதை யெகோர் புரிந்து கொள்ளவில்லை. வேட்டை அவனை உணர்ச்சியற்ற மனிதனாக மாற்றியிருக்கிறது. அவனது ஆர்வமற்ற பதில்களின் மூலம், அவளிடமிருந்து விலகிக் கொள்ள முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது
அவர்கள் பேச்சற்ற மௌனத்தில் உறைகிறார்கள். . நீண்ட மௌனம் அப்போது. யெகோர் ஆகாசத்தில் மூன்று காட்டு வாத்துகள் பறந்து போவதைக் காணுகிறான் அவை நீண்ட தூரம் பறந்து மூன்று புள்ளிகளாக மாறுகின்றன. காட்டிற்கு அப்பால் வெகு தொலைவில் மூழ்கிப்போன பிறகே கண்களைத் திரும்புகிறான்.

அந்தக் காட்சி கதைக்குத் தனியழகை உருவாக்குகிறது. தேர்ந்த கலைஞனால் தான் இது போன்ற ஒன்றை எழுத இயலும். இது வெறும் புறச்சித்தரிப்பு மட்டுமில்லை. மனநிலையின் வெளிப்பாடு.
அந்தக் காட்டுவாத்துகள் அவனுக்குள் எதையோ நினைவூட்டுகின்றன. அதன்பிறகே அவன் பெலகேயாவிடம் அவள் எப்படி வாழுகிறாள் என்று கேட்கிறான்.
அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் யாரோ இரண்டு அறியாதவர்களுக்குள் நடக்கும் உரையாடல் போலவே இருக்கிறது. அதுவும் பாதியில் அறுபட்டுப் போகிறது. மீண்டும் மௌனமாகிறார்கள்.
அறுவடை செய்யப்பட்ட நிலத்திலிருந்து ஒரு மென்மையான பாடல் மிதந்து வருகிறது. அவர்களுக்குள் நடைபெற்றிருக்க வேண்டிய நெருக்கமான உரையாடலுக்குப் பதிலாக வெளியுலகின் இனிமைகள் அவர்களை ஆற்றுப்படுத்துகின்றன.
எப்போது வீட்டிற்கு வருவீர்கள் எனக் கடைசியாக. ஒருமுறை கேட்கிறாள். அவனோ நிதானமாக வரவே மாட்டேன் என்று சொல்லிப் புறப்படுகிறான். சாலையில் செல்லும் அவனது அழகான தோற்றத்தை, உடைகளைத் தொப்பியை ரசித்துப் பார்த்தபடியே நிற்கிறாள்.
இதை வாசிக்கையில் எனது மனதில் காட்டுவாத்துகளை யெகோர் பார்த்த காட்சி நினைவில் வந்து போனது.
அவன் கம்பீரமாக தனது துப்பாக்கியோடு நாயுடன் நடந்து செல்கிறான். உயரமான, ஒல்லியான அவனது கவனமற்ற நடையை, அசையும் தோள்பட்டைகளை, கண் இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறாள்.
அந்தப் பார்வை அவனைத் தொடுகிறது. தழுவிக் கொள்கிறது.. நேரில் அணைத்துக் கொள்ள முடியாத கணவனைப் பார்வையாலே அணைத்துக் கொள்கிறாள் பெலகேயா.
அதை உணர்ந்தவன் போலத் திரும்பிப் பார்க்கிறான் அவளிடம் ஏதாவது சொல்ல விரும்புவதைப் போலிருக்கிறது அவனது பார்வை. பெலகேயா அவனருகில் செல்கிறாள். கசங்கிய ரூபிள் நோட்டை அவளிடம் கொடுத்துவிட்டு வேகமாக நடந்து போகிறான்.
“குட்பை, யெகோர் விளாசிச்,” என்கிறாள் பெலகேயா.
நீண்டு செல்லும் சாலையில் செல்லும் அவனது உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். அப்படியும் மனது கேட்கவில்லை. பெருவிரலை ஊன்றி எக்கி நின்று தொலைவில் அவனது தொப்பித் தெரிகிறதா என்று பார்க்க நிற்பதுடன் கதை முடிகிறது.
பெருவிரலை ஊன்றி எக்கி நிற்பதை எழுதியதன் மூலம் அவளது தூய அன்பை முழுமையாக வாசகனுக்குக் கடத்துகிறார் செகாவ்.
எவ்வித உறவும் தேவையில்லை என்று நினைக்கும் யெகோர் ஏன் அவளுக்குப் பணம் கொடுக்கிறான். தன்னைக் கண்டுகொள்ளாத யெகோர் மீது ஏன் இவ்வளவு அன்பு காட்டுகிறாள் பெலகேயா. அவர்கள் திரும்பச் சந்திப்பார்களா எனத் தெரியாது.
வேட்டைக்காரனுக்குப் பரிசாக மான்குட்டி கிடைத்தது போன்றது தான் இந்த உறவா.
கதையில் வரும் மௌனம் சந்திப்பின் போது ஏற்பட்ட மௌனமில்லை. அது பிரிவால் உருவாகி வளர்ந்த மௌனம். அதை எளிதில் கலைக்க முடியாது. அமைதியான அசைவற்ற நிலை கதையின் கித்தான் போலிருக்கிறது. அதில் தான் வேட்டைக்காரனையும் அவனது மனைவியின் உருவத்தையும் செகாவ் வரைந்திருக்கிறார். நகை வேலை செய்கிறவர்கள் காதணியில் நுணுக்கமாக மலர்களை உருவாக்குவார்கள். அது போன்ற கலைநுணுக்கமே இக்கதையை இன்றும் கொண்டாடச் செய்கிறது.
August 18, 2023
எவரெஸ்ட் எனும் கனவு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் பற்றி எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை சாகசப்பயணமாகவே தோன்றும். ஆனால் ‘மை எவரெஸ்ட்’ முற்றிலும் மாறுபட்ட படம். கார்ல் வூட்ஸ் இயக்கியுள்ள இப்படம் உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டது

இங்கிலாந்தைச் சேர்ந்த மாக்ஸ் ஸ்டெய்ன்டன் பர்ஃபிட் Cerebal Palsy யால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வாழுகிறார்
ஸ்டெய்ன்டன் தனது நீண்ட காலக் கனவாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைக் கொண்டிருக்கிறார். அவரது இந்தப் பயணத்தினை எப்படித் திட்டமிடுகிறார்கள். எவரெஸ்ட் நோக்கி எப்படிப் பயணம் மேற்கொள்கிறார்கள். என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்
தனது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மாக்ஸ் தொலைவிலிருந்து இமயமலையைக் காணும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

குதிரை சவாரி செய்வதில் மாக்ஸிற்குள்ள விருப்பம் மற்றும் இரண்டு பேர் துணையின்றி நடக்க இயலாத சூழ்நிலையிலும் அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் அவரது மனவலிமையைக் காட்டுகின்றன.
மாக்ஸ் தனது குழுவோடு எவரெஸ்ட் பேஸ் கேம் பாதையில் குதிரையில் பயணம் செய்கிறார். மாக்ஸின் உடல் கட்டுப்பாட்டினை இழந்துவிடுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஆனாலும் உறுதியான மனம் அவரைத் தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. தனது வலியைத் தாண்டி சவாலைத் தொடரவே முனைகிறார். ஆனால் பாதியில் பயணம் முடிந்துவிடுகிறது.

இங்கிலாந்து திரும்பிய பிறகு, யாருக்கு நிரூபணம் செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டோம் என்ற கேள்வியை மாக்ஸே படத்தின் இறுதியில் எழுப்புகிறார்.
மாக்ஸ் ஸ்டெய்ன்டனின் குடும்பம் காட்டும் அக்கறை. அவரது பயணத்திற்கான வழிகாட்டிகளின் அன்பு. இரண்டும் இணைந்து அவருக்கு வாழ்வின் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கின்றன.
August 17, 2023
தந்தையெனும் வெளிச்சம்
சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் அழகு நிலா தனது தந்தையைக் குறித்து அப்பன் என்ற நூலை எழுதியிருக்கிறார். நூல்வனம் பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்

காஃப்காவில் துவங்கி புதுமைப்பித்தன் வரை தந்தையோடு பிணக்கும் மோதலும் கொண்ட படைப்பாளிகளே அதிகம். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாடின் கோடிமர் காஃப்காவின் தந்தையின் கோணத்தில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அது தந்தையின் மனதைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதன் வெளிப்பாடு.
தந்தையைப் பற்றி எப்போது நினைக்கும் போது ஷேக்ஸ்பியரின் லியர் அரசனே நினைவிற்கு வருகிறார். லியர் தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என மூன்று மகளிடமும் கேட்கிறார். மூன்று பதில்கள் கிடைக்கின்றன. கார்டிலியா தான் உண்மையான பதிலைச் சொல்கிறாள். இதே கேள்வியை மகன்களிடம் கேட்டிருந்தால் லியர் வேறு பதிலைப் பெற்றிருப்பார்.
தமிழ் இலக்கியத்தில் தாய்க் கொண்டாடப்படும் அளவிற்குத் தந்தை கொண்டாடப்படவில்லை. சங்கக் கவிதைகளை வாசிக்கும் போது இந்தக் குறையை ஆழமாக உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக மகளின் காதலைப் பற்றிச் சங்க காலத் தந்தை என்ன நினைத்தான் என்பது அரிதாகவே பதிவாகியுள்ளது.

அழகு நிலா தனது தந்தையின் ஆளுமையை அழகான கோட்டுச்சித்திரமாக, உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவு செய்திருக்கிறார். பஞ்சாட்சரம் எனும் தஞ்சை மண்ணின் மனிதர் நம் கண்முன்னே உருக் கொள்ளத் துவங்குகிறார். அவரது குரலை நாம் கேட்க முடிகிறது. முரட்டு மீசையுள்ள கம்பீரமான அந்த மனிதருக்குள் அன்பின் ஊற்று கசிந்து கொண்டேயிருக்கிறது. மகளின் நினைவிலிருந்து வெளிப்படும் தந்தையின் ஆளுமை வியப்பூட்டுகிறது
தமிழ் குடும்பத்தில் தந்தை தான் மையம். அவரைச் சுற்றியே வீடு இயங்குகிறது எல்லா முடிவுகளை அவரே எடுப்பது வழக்கம். அப்பாவிற்கு என்ன பிடிக்கும் என்பதே வீட்டின் விருப்பம். அப்பாவின் கோபம். அப்பாவின் அடி, அப்பாவின் கட்டுப்பாடுகள் இவற்றை பையன் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மகள் ஏற்றுக் கொள்வதுடன் தந்தையைப் புரிந்து கொண்டும் விடுகிறார்.
தந்தையின் அன்பு மொழியற்றது. அது உணவாக, பயணமாக, உடையாக, உருமாறி வெளிப்படுகிறது.. அழகு நிலா அவற்றை முழுமையாக அனுபவித்து எழுதியிருக்கிறார்.
பெரும்பான்மையான தந்தைகள் தனது மகளைத் தாயின் மறுவடிவமாக நினைக்கிறார்கள். தாயி என்று மகளை அழைக்கும் தந்தைகளை அறிவேன்.
பஞ்சாட்சரம் தான் கட்டிய புதுவீட்டில் மனைவி பிள்ளைகளின் பெயரைக் கல்வெட்டில் பொறிக்கிறார். அந்த வெளிப்பாடு அவரது நிகரற்ற அன்பின் அடையாளமாகிறது.
அழகுநிலா தனது தந்தையின் குடி, கோபம். சாதிய மனப்பாங்கு என நிறைகுறைகளை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தந்தையின் பசியைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரை முக்கியமானது.
தந்தையைப் பற்றிய நினைவுகளின் வழியே தனது சொந்த ஊரையும், தான் உருவாகி வந்த விதம் பற்றியும் அழகாக எழுதியிருக்கிறார். அப்பனை பற்றிய புத்தகமாக விரிந்தாலும் நூலை வாசித்து முடிக்கும் போது எனக்கு அழகுநிலாவின் அம்மா தான் முக்கியமாகப் படுகிறார். தந்தையின் நிழலுக்குள் அவர் மறைந்திருப்பதைக் காண முடிகிறது.
மீன் சாப்பிடுவதில் விருப்பம் கொண்ட அழகுநிலாவின் தந்தையைப் பற்றி வாசிக்கும் போது பிரபஞ்சன் மீன் சிறுகதையில் வரும் அவரது தந்தையின் நினைவு வந்து போனது
.’ஒடம்பு என்னுமோ காலைலேந்து ஒரு மாரியா இருக்கு… சளி புடிச்சிருக்கு… மத்தியானம் காரமீனு வாங்கியாந்து மொளவ கொஞ்சம் அதிகமாப் போட்டுக் கொழம்பு வையி.. எனக் கிராமணி கதையில் சொல்லுவார்.
‘காரை மீனு எங்க கிடைக்குது’ என மனைவி ஆனந்தாயி சலித்துக் கொள்ளும் போது ‘காரமீனு இல்லன்னா கெழங்கா மீனு கெடைக்காமையா பூடும்… பாரு… கெழங்கானும் கெடைக்கல்லேன்னா இருக்கவே இருக்குச் சுதும்பு… வாங்கி நல்லா தளத் தளன்னு காரம்மா வய்யி… சுதும்பு மீன் வறுத்துப்பூடாத… நெத்திலி கெடைச்சா வாங்கிக்கினு வந்து நெறைய இஞ்சி, பூண்டெல்லாம் வச்சி புட்டு வெயி… நல்லாயிருக்கும். ‘. என்பார் கிராமணி. இது வெறும் ருசி மட்டுமில்லை. வாழ்வின் மீதான பற்று உணவாக மாறியிருப்பதன் அடையாளம். அந்தக் குரல் அப்பனில் வரும் பஞ்சாட்சரத்தின் குரலாகவே எனக்குள் ஒலித்தது.
அழகு நிலாவின் எழுத்தில் நுட்பமும் அழகும் கைகூடிவந்திருக்கிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
நீள மறுக்கும் கை
இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா இயக்கிய உம்பர்தோ டி திரைப்படம் வறுமையான சூழலில் வாழும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் உலகைச் சித்தரிக்கிறது. டி சிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை விடவும் சிறந்த படமிது.

உம்பர்டோ டியால் வாடகை தர இயலவில்லை. நிறையக் கடன். அவருக்குத் துணையாக இருப்பது ஒரு நாய்க்குட்டி மட்டுமே. அவர் இல்லாத நேரத்தில் அவரது அறையைக் காம தம்பதிக்கு மணி நேரத்திற்கு வாடகைக்கு விடுகிறாள் வீட்டு உரிமையாளர்.
உடல்நலமற்று மருத்துவமனை போய்த் திரும்பும் போது அவரது குடியிருப்பு இடிக்கப்படுகிறது. அறைச்சுவரில் பெரிய ஒட்டை காணப்படுகிறது. அது அவரது வாழ்வின் சாட்சியம் போலவேயிருக்கிறது.

இந்தப் படத்தில் இரண்டு மறக்க முடியாத காட்சிகள் உள்ளன. ஒன்று உச்சபட்ச வறுமையில் உம்பர்த்தோ ஒரு காட்சியில் பிச்சை எடுப்பது என முடிவு செய்கிறார். அதற்காகச் சாலையில் போகிறவர்களை நோக்கி கையை நீட்ட விரும்புகிறார். ஆனால் அவரது கை நீள மறுக்கிறது. தயக்கத்துடன் நடுக்கத்துடன் கையை முன்நீட்ட முயலுகிறார். நடுங்கும் கைகளை நீட்டி யாசிக்க இயலவில்லை. வேறுவழியின்றித் தனது நாய்க்குட்டியின் கையில் தொப்பியைக் கொடுத்து யாசிக்க முனைகிறார். அப்போது தெரிந்தவர் வந்துவிடவே அதை ஒரு விளையாட்டு என்று சொல்லிச் சமாளிக்கிறார். கண்ணீர் வரவழைக்கும் காட்சியது

பிச்சையெடுத்தாவது வாழ்வோம் என ஒருவன் நினைத்தாலும் அவனது கைகள் தானே நீளுவதில்லை போலும். அந்தக் கைகள் இத்தனை ஆண்டுக்காலம் அவன் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியமாக இருக்கின்றன. அவை எளிதாக யாசகம் கேட்டு முன் நீளுவதில்லை.
முதுமையில் ஏன் ஒருவனை உலகம் கைவிடுகிறது. அவரது கடந்தகால வாழ்க்கையோ, குடும்பமோ, உறவுகளோ எதுவும் படத்தில் விவரிக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த கால நினைவுகள் அவரை வழிநடத்துவதை நம்மால் உணர முடிகிறது
உம்பர்த்தோ தன்னோடு வேலை செய்த ஒரு நண்பரைப் பார்க்கச் செல்கிறார். அலுவலகம் விட்டு வெளியே வரும் அந்த நபர் அவரை உதாசீனப்படுத்துகிறார். கொஞ்ச தூரம் பேசிக் கொண்டு நடக்கலாம் என்று சொல்கிறார் உம்பர்த்தோ. அதற்கு மட்டுமே அந்த நபர் சம்மதிக்கிறார். அந்த நடையின் ஊடாகத் தனது வறுமையை, அவலத்தை நண்பருக்குப் புரிய வைக்க முயலுகிறார். வாய்விட்டு ஒரு காபி குடிக்கலாமா என்று கூடக் கேட்கிறார். நண்பர் அவரது நிலையைப் புரிந்து கொண்ட போதும் உதவி செய்ய முன்வரவில்லை. ஒரு காபி வாங்கித் தரக்கூட மனதின்றி நடந்து கொள்கிறார். இது தான் உலகம். வறுமையான மனிதனை இப்படித் தான் உலகம் நடத்தும் என்று டிசிகா சொல்கிறார். படம் வெளியாகி எழுபது ஆண்டுகள் ஆன போதும் இந்தக் காட்சி மாறவேயில்லை.

அவரது ஒரே துணையாக உள்ள நாய்க்குட்டியைத் தெருவில் அலைகிறது என நாய்பிடிப்பவர்கள் பிடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அதை மீட்கச் செல்லும் உம்பர்த்தோ கண்ணில் சொந்த மகனைத் தேடும் தந்தையின் அன்பே வெளிப்படுகிறது
படத்தின் முடிவில் இத்தனை அன்பாக நேசித்த அந்த நாய்க்குட்டியை தன்னால் வைத்துக் காப்பாற்ற முடியாது என உணர்ந்த உம்பர்த்தோ அதைத் தொலைத்துவிட முயல்கிறார். மனம் துவளும் காட்சியது.
யாராவது அந்த நாய்க்குட்டியை ஆசையாக வீட்டில் வைத்துக் காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்குகிறார். தெரிந்த ஒரு சிறுமிக்குப் பரிசாகத் தர முன் வருகிறார். ஆனால் அவளது தாதி அதை ஏற்க மறுக்கிறாள்.
விரக்தியின் உச்சத்தில், உம்பர்தோ நாயைத் தனது கைகளில் எடுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள ரயில் பாதையின் குறுக்கே செல்கிறார். நாயை அணைத்தபடியே நிற்கிறார். ரயில் பாய்ந்து வருகிறது. நாய் அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டு தப்பிக்கத் தாவுகிறது. உண்மையில் அந்த நாய்க்குட்டி தான் அவரது உயிரைக் காப்பாற்றுகிறது. உயிர் தப்பிய நாய்க்குட்டி அவரது புறக்கணிப்பை முற்றிலும் உணர்ந்துவிடுகிறது. இனி அவரோடு வாழத் தேவையில்லை என விலகிப் போகிறது.அவர் மனம் மாறி அதைத் திரும்ப அழைக்கும் போதும் நாய்க்குட்டி திரும்புவதில்லை. அது இனி அவரது நாயில்லை. அவரைப் போலவே கைவிடப்பட்ட இன்னொரு உயிர்.
பணமும் வசதிகளும் இல்லாமல் போனால் கூட மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் நேசிக்கத் துணையில்லாமல் போனால் அந்த வாழ்க்கை மரணத்திற்குச் சமமானதே.

அறிந்தவர்கள் முன்பாகத் தனது அவல நிலையை மறைத்துக் கொள்ளவே உம்பர்த்தோ முயலுகிறார். பொய்யாக நடிக்கிறார். ஆனால் அவர்கள் தான் அவரை அதிகம் அவமானப்படுத்துகிறார்கள். கைவிடுகிறார்கள்.
உலகம் ஒருவனைக் கைவிடும் போது அவனது உருவம் சிறியதாகிவிடுகிறது. அவன் வசிக்கும் நகரம் சுருங்கிப் போகிறது. அவனது வயது திடீரென மிக அதிகமாகிவிடுகிறது. அவன் தனக்குத் தானே பேசிக் கொள்ளவும் முடியாமல் போகிறான்.
படத்தின் துவக்கக் காட்சியில் தங்களின் ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி முதியோர்களின் போராடுகிறார்கள். அந்தக் கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறை முயல்கிறது. அந்தப் போராட்டத்தில் ஒருவராக உம்பர்தோ டி காணப்படுகிறார். அவரும் காவலர்களுக்குப் பயந்து ஒடி ஒளிந்து கொள்கிறார். படத்தில் உம்பர்த்தோ தனது அழகான கடிகாரம் மற்றும் சில புத்தகங்களை விற்கிறார். இரண்டும் இனி அவரது வாழ்விற்குத் தேவையில்லை. நகரம் கைவிடப்ப;டடவர்களால் நிரம்பியது என்கிறார் டிசிகா. அது மாறவேயில்லை. இல்லாதவர்களே ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள். உதவிக்கரம் நீட்டுகிறார்கள். குறைந்தபட்ச சந்தோஷத்தை பெரிதாக நினைக்கிறார்கள்.
படத்திலிருந்து நாய்க்குட்டியை நீக்கிவிட்டால் படம் இத்தனை உயிர்ப்போடு இருக்காது. அது தான் திரைக்கதையின் பலம். படத்தில் வரும் பணிப்பெண்ணை தனது மகளைப் போல நேசிக்கிறார் உம்பர்த்தோ. மருத்துவமனைக் காட்சியில் ஒருவர் அவளைக் காட்டி உங்கள் மகளா என்று கேட்கிறார். உருவாக்கிக் கொள்வது தான் உறவுகள். இத்தனை துயரங்களுக்கு நடுவிலும் உம்பர்த்தோ யாரையும் வெறுக்கவில்லை. அது தான் அவரை மகத்தான கதாபாத்திரமாக்குகிறது.
August 14, 2023
கடல் பிரார்த்தனை
ஆங்கிலப் பேராசிரியரான திலா வர்கீஸ் கனடாவில் வசிக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தற்போது காலித் ஹுசைனியின் கவிதைத் தொகுப்பை கடல் பிரார்த்தனை எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் வாழ்வை மையமாக கொண்டு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள்
தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாக விரியும் இக்கவிதைகள் சமகாலப் பிரச்சனையைத் தொட்டு அகதி வாழ்வின் துயரைப் பேசுகின்றன.
அழகிய வண்ண ஒவியங்களுடன் இதனை மிகநேர்த்தியாக எதிர்வெளியீடு பதிப்பித்துள்ளார்கள்.
கவிதைகளை மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் மொழியாக்கம் செய்துள்ள திலா வர்கீஸிற்கு எனது வாழ்த்துகள்
காந்தியின் சாட்சி
மலையாள எழுத்தாளர் எம்.என் காரசேரி எழுதியுள்ள காந்தியின் சாட்சி என்ற நூலின் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்கிறேன். இந்த நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் குமரி எஸ். நீலகண்டன்.



ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றும் நீலகண்டன் காந்தியை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 15 என்ற நாவலை எழுதியுள்ளார்.
மதராஸ் கேரள சமாஜத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டுவிழாவில் எம்.என். காரசேரி , கே.பி. சங்கரன், கே.சி. நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த இடம் தாசபிரகாஷ் அருகிலுள்ளது.
இன்று மாலை 4 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது.
கனவில் வந்தவர்கள்
ஒரு கனவிலிருந்து தான் இங்மர் பெர்க்மென் தன்னுடைய ‘க்ரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்’ (Cries and Whispers: Ingmar Bergman) திரைப்படத்தை உருவாக்கினார் என்கிறார்கள். அது சாத்தியமே. ஒரு சிவப்பு அறையில் வெள்ளை ஆடை அணிந்த நான்கு பெண்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் தொடர் கனவு தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது

கனவில் தோன்றும் நிகழ்வுகள். காட்சிகள் விழித்தெழுந்த பின்பும் மறையாமல் நமக்குள் குமிழ் விட்டபடியே இருக்கின்றன படைப்பாளிகள் அதை உருமாற்றிப் புனைவாக்கிவிடுகிறார்கள். பெர்க்மென் திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பெர்க்மென் படங்களில் தலைப்புகள் வசீகரமானவை. குறிப்பாக இப்படத்தின் தலைப்பான Cries and Whispers பெர்க்மெனின் ஒட்டுமொத்த படைப்புலகிற்கே பொருந்தமான தலைப்பு என்பேன். வேதனை, இயலாமை, தனிமை எனும் முச்சரடுகளைக் கொண்டே அவர் தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

கர்ப்பப் புற்றுநோய் பாதித்து மரணப் படுக்கையிலுள்ள ஆக்னஸ் ஒரு குறியீடே. அவளைச் சந்திக்க வரும் சகோதரிகள் காலத்தினுள் முன்பின்னாகப் பயணிக்கிறார்கள். ஒருவகையில் அவர்கள் கனவில் ஊடுருவிச் செல்கிறார்கள். வெறுப்பும் ஏக்கமும் வெளிப்படுத்த முடியாத துயரமும் கலந்த அவர்களின் இருப்பும் துயரமும் படத்தில் நுட்பமாக வெளிப்படுகின்றன.
ஆக்னசின் மரணத்துக்குப் பிறகு சகோதரிகளின் உலகம் சரிவு கொள்கிறது. மரணத்தின் அருகில் அமர்ந்து அதை விசாரணை செய்யும் பெர்க்மென் பெண் உடலின் குரலைக் கேட்க வைக்கிறார். அவர்களின் பழங்கால வீடு. அந்த அறைகள். அவர்களின் சந்திப்பு என யாவும் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மூவரும் சலிப்பையும் கோபத்தையும் விரக்தியையும் கொண்டிருக்கிறார்கள். உடலால் சிறைப்பட்டவர்களாகத் தங்களை உணருகிறார்கள். ஆக்னசின் மரணம் அவர்களுக்கு தங்கள் வாழ்வைப் பரிசீலனை செய்து கொள்ளச் செய்கிறது.
உளவியல் நிபுணரைப் போல துயருற்ற பெண்களின் அகத்தை ஆராயும் பெர்க்மென் அதை மிகவும் உணர்வுப்பூர்வமாக திரையில் பதிவு செய்திருக்கிறார். தனது கேமிரா கோணங்கள். மற்றும் வண்ணங்களின் வழியே காட்சிகளை தீவிரமாக உணர வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
