S. Ramakrishnan's Blog, page 55
September 24, 2023
கரூர் சிந்தனை முற்றம்
கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற சிந்தனை முற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை ,திண்டுக்கல், சேலத்திலிருந்தும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.








சக்தி நர்சிங் கல்லூரி மற்றும் சிறகுகள் எப்எம் தலைவர் சிதம்பரம் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக உபசரித்தார்.
நூலகர் சிவகுமார் கரூர் மாவட்ட மைய நூலகத்தினை முன்மாதிரி நூலகமாக உருவாக்கியுள்ளார். குளிர்சாதனவசதி கொண்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
நூலகப்பணிக்கு நிறையக் கொடையாளிகள் முன்வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் நான் கலந்து கொள்ள முக்கிய காரணியாக இருந்து உதவிய நண்பர் மணிகண்டனுக்கு நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து அது குறித்த செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள். ஊடக நண்பர்கள். நூலக வாசகவட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
நிகழ்வில் தீபம் கலர்லேப் சங்கர், ஆசிரியர் முரளி, மற்றும் பரணி கல்வி குழுமம் ராமசுப்ரமணியன் ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கரூரின் தொன்மை மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினேன். நிகழ்வின் இறுதியில் வாசகர்களுடன் உரையாடல் நடைபெற்றது. நல்ல கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக டாக்டர் ரமேஷ் எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது.
September 20, 2023
தேவராஜின் உலகம்
நிமித்தம் நாவல் – வாசிப்பு அனுபவம்:
மரு. நோயல் நடேசன்

கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது, “அவன் ஒரு சகுனி” என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை.
இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என ஆராய்வது தொல்பொருள் ஆய்வாளர்களின் வேலை. அல்லது தேவை. தற்காலத்தில் அரசியல்வாதிகள் அரசியலுக்காக ராமன் பிறந்த இடம், ராவணன் வாழ்ந்த இடம் எனத் தோண்ட முனைவார்கள். இது காவியங்களை எழுதியவர்களின் கற்பனைத் திறத்தை அவமானப்படுத்தும் விடயங்கள் என்பதால் அவை நமக்குத் தேவையற்றவை.
நான் சொல்வது இந்திய இதிகாசங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. கிரேக்க இதிகாசங்களுக்கும் பொதுவானது. ராமன், அர்ச்சுனன் போன்ற இதிகாச பாத்திரங்களை, தற்காலத்தில் தங்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பவர்களாலும் மறக்க முடியாது.
அதேபோல் ஹோமரின் ஆக்கிலிஸ், ஒடிசியஸ் போன்றவர்கள் மேல் நாடுகளில் பல எழுத்தாளர்களை ஈர்த்திருக்கிறார்கள். பல வாசகர்களை கவர்ந்ததால், பெண் பாத்திரங்கள் சீதை, பாஞ்சாலி, ஹெலன் பெனிலப்பி போன்றோர் இன்னமும் எத்தனயோ பெண்களின் பெயர்களாக உலகம் முழுவதும் வலம்வருகின்றன.
இதிகாசப் பாத்திரங்களின் நடத்தைகளையும், அவர்களின் மனஉணர்வுகளையும் வார்த்தைகளையும் நாம் வாசித்து அறியும்போது, அவர்களை எங்களுக்கு அறிந்தவர்களாக உணர்கிறோம். எங்கள் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைவிட இந்த பாத்திரங்களை நாம் அறிந்துகொள்கிறோம். பாத்திரங்களை நாம் மனதார நெருங்குவதால் அவர்கள் எம்மில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். எமது மனச்சாட்சியில் பதிவாகி நிழலாக நம்மைத் தொடர்கிறார்கள். ஏன் நம்மை வழி நடத்துகிறார்கள் எனவும் சொல்லலாம்.
இதிகாசப் பாத்திரங்கள் மட்டுமல்ல, தற்போதைய நாவல் இலக்கியத்திலும் பாத்திரங்களே முக்கியமானவை. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தாக்கத்தால் குந்தவை, நந்தினி வானதி எனத் தங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்த பெற்றோரை எனக்குத் தெரியும். என்னோடு மூன்று நந்தினிகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தார்கள்.
தற்காலத்தில் நான் படித்த தென்னிந்திய நாவல்களில் என் மனதில் பதிந்திருக்கும் சில பாத்திரங்கள் உண்டு. அவைகளில் தி. ஜானகிராராமனின் யமுனாவும் அலங்காரத்தம்மாளும் மறக்கமுடியாத பாத்திரங்கள். அதேபோல் இமையத்தின் கோவேறு கழுதையில் ஆரோக்கியம் எஸ். பொன்னுத்துரையின் சடங்கில் செல்லபாக்கியம் என்பன என் நினைவில் வாழ்பவர்கள்.
நாவல் இலக்கியத்தின் அடிப்படை உண்மையைப் புரியாத பலர் எழுதும் நாவல்கள் இக்காலத்தில் சம்பவங்களின் தொகுப்பாகவே வருகின்றன. இது இக்காலத்துக்கு மட்டும் பொதுவானது அல்ல. நாவலைப் பற்றி அறிந்தவர்கள் கூட பிரசார நோக்கத்திற்காக எழுதும்போது இந்தப் பிரச்சினை வருகிறது. இதில் முக்கிய குற்றவாளிகள் சோசலிச யதார்த்தவாதமெனப் பேசிய மார்க்சிய விமர்சகர்களே. இலங்கை, இந்தியாவில் மக்கள்மீது நடத்தப்படும் ஒடுக்கு முறையை வெளிப்படுத்துவதற்காக, நடந்த சம்பவங்களைச் சித்திரித்து, அதன் மூலம் அவர்களது கொள்கை விளக்க நாவல்களை நம் முன்பாக வைப்பார்கள்.
ஆனால், அங்கு ஒரு சிறந்த பாத்திரத்தைப் படைக்க தவறியிருப்பார்கள். அதை அறிவு கெட்டதனமாக நாம் இன்றும் கொண்டாடுகின்றோம். பல ஒடுக்குமுறை, போர் சம்பவங்களை நாங்கள் பத்திரிகைகளில் படித்திருப்போம், கேட்டிருப்போம். ஒரு சம்பவத்தை மறு சம்பவம் மறக்கப் பண்ணிவிடும். புதிய போர் பழையபோரை விழுங்கிவிடும்.
நாம் கேட்டு வளர்ந்த, முப்பது வருடங்கள் நடந்த வியட்நாம் போரை வியட்நாமே தற்போது நினைப்பதில்லை. தற்போது அமெரிக்காவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வியட்நாம் இணைந்துள்ளது.
தினமும் இந்தியாவில் தலித் மக்களுக்கு நடக்கும் பல விடயங்களை தற்போது முகநூல் வழியாக அறிந்து கொள்கிறோம். இப்படியான விடயங்களை வைத்து உருவாக்கிய நாவல்களின் பெயர்கள், நாம் பார்த்த தமிழ்ப் படங்களாக அடுத்த நாள் மறந்துவிடும். அதேபோல் நமது இலங்கை நாட்டில் போர் சம்பவங்களை, இன வன்முறையை, இயக்க பிளவுகள் மற்றும் சிறைச் செய்திகளை வைத்துப் பல நாவல்கள் வந்துள்ளன. அவற்றைப் படிக்கும்போது, அவை பற்றித் தெரியாதவர்களுக்குப் புதிதாகவும், ரசனையாகவும் இருக்கும்.
தமிழக இலக்கியத் தளத்தில் புலம் பெயர்ந்த பல தமிழ் எழுத்தாளர்கள் பேசப்படுவதற்கு அதுவே காரணம். அதற்காக நடக்காத விடயங்களை எழுதியவர்களும் உண்டு. ஆனால், ஈழத்தவர்களான நமக்கு அவை பார்த்த, கேள்விப்பட்ட, பத்திரிகையில் படித்த அன்றாட சம்பவங்கள்தான். பத்திரிகையாளரான டி.பி.ஸ். ஜெயராஜ் எத்தனையோ போர் சம்பவங்களை விவரித்துக் கடந்த முப்பது வருடத்தில் தெளிவாக எழுதியுள்ளார். ஆனால், அவை இலக்கியமல்ல.
ஏன்?
அங்கு பாத்திரங்கள் இல்லை என்பதால்.
சம்பவங்களை பின்னணியாக வைத்து மறக்க முடியாத பாத்திரங்களை பலர் படைத்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் நான் படித்தது: இந்திய சுதந்திரத்தின் பின்பான பிரிவினை என்ற சம்பவத்தைப் பின்னணியாக எடுத்த போதிலும், போல்வார் மஹம்மது குன்ஹி தனது முத்துப்பாடி சனங்களின் கதையில் சாந்தப்பா என்ற அழகிய பாத்திரத்தை சித்திரித்திருப்பார். அதனை நாம் மறக்க முடியாத வகையில் படைத்திருப்பார்.
சம்பவங்களை பின்னணியாக வைத்து மறக்க முடியாத பாத்திரங்களை பலர் படைத்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் நான் படித்தது: இந்திய சுதந்திரத்தின் பின்பான பிரிவினை என்ற சம்பவத்தைப் பின்னணியாக எடுத்த போதிலும், போல்வார் மஹம்மது குன்ஹி தனது முத்துப்பாடி சனங்களின் கதையில் சாந்தப்பா என்ற அழகிய பாத்திரத்தை சித்திரித்திருப்பார். அதனை நாம் மறக்க முடியாத வகையில் படைத்திருப்பார். இதுபற்றி இவ்வளவு தூரம் விளக்கவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், நான் கானல் தேசத்தில் ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கி தற்கொலை போராளியாகப் படைத்தபோது, அது உண்மையில்லை என்று ஐபிசியில் சில பெண்கள் குத்தி முறிந்தார்கள். அது காலச்சுவடு பதிப்பித்த நாவல் என்றும், பாத்திரங்கள் கற்பனையின் உருவாக்கம் எனவும் நம்ப மறுக்கும் சமூகத்தில் நாம் மீண்டும் மீண்டும் எழுதவேண்டும்.
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நிமித்தம் நாவலில் ஒரு அரைச் செவிடனான தேவராஜ் பாத்திரம், தமிழ் நாவல் உலகில் தொடரும் பாத்திரமாக வரும் என நினைக்கிறேன். அல்லது அடிக்கடி பேசப்படவேண்டும் என விரும்புகிறேன். செவிடாக இருப்பது இவ்வளவு கடினமானதா என்று நினைக்கும் அளவுக்குப் பாத்திரத்தின் துன்பம் தொடர்கதையாக நகருகிறது.
எஸ் . ராமகிருஷ்ணன், காது கேளாதவன் சமூகத்தில் மட்டுமல்ல பாடசாலையில் நண்பர்கள், ஆசிரியர்கள் மத்தியில், இவற்றிற்கு மேலாகத் தந்தையால் மற்றும் குடும்பத்தில் சகோதரர்களால் எவ்வளவு புறக்கணிக்கப்படுகிறான் என்பதை விவரமாகச் சொல்வதன் மூலம், வாசகர்களின் மனதில் அவனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
பெண்களை இயல்பிலேயே தயாள குணம் கொண்டவர்கள் என்று நினைப்போம். ஆனால், நிமித்தம் நாவலில் வரும் பெண்கள் பல இடங்களில் அவனது காது கேட்காத தன்மையையும் அவனது காம ஆசையையும் முதலாக வைத்துச் சுரண்ட முயல்கிறார்கள். சகோதரர்கள் சொத்து, திருமணம் என்று வரும்போது செவிடனை யார் திருமணம் செய்ய முன் வருவார்கள் எனக் கேட்பதுடன், அவனுக்குப் பணம் எதற்கு என்ற கேள்வியுடன் ஏமாற்றுகிறார்கள். வெளிப்பார்வையில் சமூகத்தின் கட்டமைப்புகள், பரஸ்பர நட்பை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் சமூகம் ஒருவனுக்கு உதவி செய்வதைவிட, எப்பொழுதும் பலமானவர் பலமற்றவரை சுரண்டும் (cannibalistic) இயல்பைக் கொண்டது என்ற உண்மை இந்த நாவலின் அடிநாதமாக வருகிறது.
தேவராஜ் என்ற செவிட்டுப் பாத்திரம், அக்கால கற்பனாவாத நாவல்களில் அல்லது சினிமாவில் வரும் இலட்சிய கதாநாயகன் அல்ல. எந்த விதத்திலும் நேர்மையான பாத்திரமுமல்ல. அவன் சராசரியான மனிதன். தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தன்னை நம்புபவார்களை அவன் ஏமாற்றவும் தயங்கவில்லை. எலிப்பந்தயத்தில் (Rat race) பங்குகொள்ளும் தற்போதைய சமூகத்தில் வாழும் தேவராஜ் என்ற யதார்த்தமான பாத்திரப் படைப்பு இந்த நாவலில் முக்கியமானது.

சிறு வயதிலிருந்தே ராமசுப்பு என்ற நண்பனை மற்றும் இடையில் சந்திக்கும் சுதர்சனம் ஆசிரியர், அவரது மனைவியான ரீச்சர் மற்றும் குறுகிய காலத்தில் அச்சுத்தொழிலில் ஒன்றாகப் படித்த ஜோசப் என்பவர்களைத் தவிர மற்றவர்கள் எவரிடமுமிருந்து ஆதரவோ அன்போ கிடைக்காதவன் தேவராஜ்.
நாவலில் தேவராஜின் முக்கிய வில்லனாகத் தெரிவது அவனது தந்தையே. அவர் சிறு வயதிலிருந்து அவனது உளநிலையை நாசமாக்குகிறார். பல குடும்பங்களில் குழந்தைகளை மனரீதியில் நாசமாக்குவது பெற்றோர்களே. அவர்கள் தங்களது நினைவுகள், ஆசைகள், கனவுகளுக்கேற்ப குழந்தைகளை, எப்படி நாய் பழக்குபவன் வேட்டைக்கு காவலுக்கு துப்பறிவதற்கு எனப் பழக்கி எடுப்பதுபோல் வளர்த்தெடுக்க நினைக்கிறார்கள். அது முடியாதபோது இவன் நாசமாய் போவான் எனத் தினம் தினம் திட்டி அவனை முன்னேறவிடாமல் செய்வதற்குத் தேவையான சகல முயற்சிகளையும் எடுக்கிறார்கள்.
அன்னையால், தந்தையைத் தடுக்க முடிவதில்லை அல்லது அவர்களும் ஒரே தடத்தில் குடும்ப ஒற்றுமையைக் காக்க ஓடுகிறார்கள்.

தேவராஜின் தந்தைக்கு அடுத்து முக்கியமான பாத்திரம் பாடசாலை நண்பனான ராமசுப்பு. ஒவ்வொரு தருணத்திலும் தேவராஜுக்கு உதவுகிறான். அவனைப்போல் ஒரு நல்ல நண்பன் எல்லோர் வாழ்விலும் கிடைக்கவேண்டும் என இந்த நாவலை வாசிப்பவர்கள் நினைப்பார்கள். மேற்கூறிய மூன்று பாத்திரங்களும் முழுமையான பாத்திரங்கள். நாவலின் ஓட்டத்தை தீர்மானிப்பவர்களும் இவர்களே
தேவராஜ், பிற்காலத்தில் திருமணத்திற்கு நண்பர்களை அழைப்பதும், அவர்களில் பலர் அவனது திருமணத்தைப் புறக்கணிப்பதாகவும் எண்ணி மனங்குமைவதுடன் தொடங்கிய நாவல், பின்னோக்கி நினைவோடையாக மலர்கிறது. இதனால் ஆரம்ப வாழ்கையில் வந்த பல பாத்திரங்கள் நீண்ட ரயில் பயணத்தில் வந்த பயணிகளாக வழியில் உள்ள ரயில் நிலையங்களில் இறங்கி விடுகிறார்கள்.
செவிட்டுத்தன்மையால் தேவராஜ் புறக்கணிக்கப்படுவதாலும் மற்றவர்கள் போல் அவனது ஆசைகளை நிறைவேற்றி வாழமுடியாது ஒதுக்கப்படுவதால் அவனது மனம் பல தடவை தரையில் தவறிவிழும் கண்ணாடிப் பாத்திரமாக சிதறுவதை நாவலில் பார்க்க முடிகிறது. காமத்தின் உந்துதலால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்கான அவனது நியாயமான ஆசை தொடர்ந்தும் பல வழிகளில் பலரால் சிதைக்கப்படுகிறது. அவன் விரும்பியது அமையாது நாற்பத்தேழு வயதில் ஒரு திருமணம் அமைகிறது. அந்த திருமணத்தை ஒரு அபத்த நாடகமாக தேவராஜ் எண்ணுவதாக கதை முடிவது எனக்குப் பிடித்தமான முடிவாகும்.
நாவலில் ஒரு குறையாகப் பார்ப்பது இறுக்கமற்ற தன்மை. பெரிய பெட்டியில் பொருட்களை வைத்துத் தூக்கும்போது அவைகள் நெருக்கமற்று ஒன்றோடு ஒன்று உள்ளே மோதும் உணர்வு ஏற்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை இந்த நாவலை கையில் எடுத்து சில பக்கங்களோடு வைத்துவிட்டேன். அடுத்த வருடம் எடுத்தபோது கொஞ்சம்: முன்னேறினேன். இம்முறை இலங்கை சென்றபோது மீண்டும் ஒரு புத்தகத்தை வாங்கி பயணத்தில் வாசிக்கத் தொடங்கியபோது, புத்தகம் என்னைக் கவ்விக் கொண்டது.
படித்து முடித்தவுடன் எவ்வளவு முக்கியமான நாவலைத் தவறவிடவிருந்தேன் என நினைத்தேன். அதே வேளையில் எஸ் ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளருக்கும் செம்மைப்படுத்துவதன் அவசியம் புரிந்திருக்கும். இலங்கை தமிழகம் எங்கும் எழுதும் எழுத்தாளர்களுக்கு செம்மைப்படுத்தும் Book Editor அவசியம் என்பது எனது கருத்து.
எனது புத்தக சேகரிப்பில் இரண்டு பிரதிகள் உள்ள புத்தகங்கள் மூன்றே: வொதரிங்கைட் என்ற ஆங்கில நாவல், ஒரு புளியமரத்தின் கதை. மூன்றாவது நிமித்தம் நாவலாகும்.
*****
நன்றி
அந்திமழை இணைய இதழ்.
September 19, 2023
ஓவியக் கண்காட்சியில்
ஓவியர் ரவி பேலட்டின் ஓவியக் கண்காட்சியில் இன்று மாலை கலந்து கொள்கிறேன்

ரவி பேலட் மதுரையைச் சேர்ந்தவர். அவரது வண்ணத்தேர்வும் கோடுகளும் தனித்துவமானவை. மினிமலிசம் பாணியில் அவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. தற்போது டிஜிடல் ஓவியக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகிறார்.

September 16, 2023
பறவைகளின் வீடு
கே. பாஸ்கரன்.
பகலின் சிறகுகள் என்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையைப் படித்தேன்.

படிக்கப் படிக்க சினிமா பார்ப்பது போலவே இருந்தது. இதனை அப்படியே சினிமாவாக எடுக்கலாம்.
கொரோனா காலத்தில் கூண்டு பறவைகள் விற்கும் பெண் அத்தனை பறவைகளையும் தன்னுடைய அபார்ட்மெண்டிற்குக் கொண்டு வந்து பாதுகாக்கிறாள். கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் பறவைகளை வெறுக்கிறார்கள். அதே அடுக்குமாடிக்குடியிருப்பில் பறவைகளின் இன்னிசையைக் கேட்டு நம்பிக்கை கொள்ளும் வாட்ச்மேன் இருப்பதைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.
இந்தச் சிறு கதையில் வரும் அப்பாவைப் போலவே கொரோனா துவங்கும் போது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் நினைக்கவில்லை. அப்பா ஆட்கள் யாருமில்லாத மெரினா பீச்சிற்குப் போய் நிற்பது போல நானும் ஒரு நாள் நின்றிருந்தேன். கதையில் வரும் மகள் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறாள்.
ஒரு சிறுகதைக்குள் எத்தனை நிகழ்ச்சிகள். மகளுக்கும் அப்பாவிற்குமான அன்பு. கூண்டு பறவை விற்பவர்களின் உலகம். காதல் பறவைகளை வளர்ந்த கிழவர் கொரோனாவில் இறந்துவிட அவரது பறவையை அபார்ட்மெண்ட்வாசிகள் கொல்ல நினைப்பது எனக் கதை வளர்ந்து கொண்டே போகிறது.
பகலின் சிறகுகள் தொகுப்பில் நிறைய நல்ல சிறுகதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் பற்றிப் பத்துப் பக்கம் எழுத வேண்டும் போலிருக்கிறது.
September 14, 2023
கரூர் – உரை
கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெறும் சிந்தனைமுற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்
நாள் : செப்டம்பர் 24 ஞாயிறு
நேரம் : காலை 10.30

September 13, 2023
பழைய மனிதர்
புதிய குறுங்கதை
பூங்காவில் அந்த நபரைப் பார்த்தேன். ஐம்பது வயதிருக்கும். வெளிர் பச்சை நிற கதர் வேஷ்டி. கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கண்ணாடியின் இடது பக்கப் பிடி உடைந்திருந்தது. அதை நூலால் கட்டியிருந்தார். வழக்கமாகப் பூங்காவிற்கு வருகிறவராகத் தெரியவில்லை. இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.

அவரது கையில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது. அந்த செய்தித்தாளை விரித்து ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். பேப்பரின் முதற்பக்கத்தில் சத்தியவாணி முத்து மரணம் எனத் தலைப்பு செய்தி வெளியாகியிருந்தது. அந்தப் பெயரை எனது சிறுவயதில் கேட்டிருக்கிறேன். அமைச்சராக இருந்தவர்
அவர் இறந்த செய்தி இப்போது ஏன் வெளியாகியுள்ளது எனப்புரியாமல் பூங்காவின் சிமெண்ட் பாதையில் நடந்தேன். இரண்டாம் முறை அவரை நெருங்கி வரும் போது கவனித்தேன். அவர் கையில் வைத்திருந்தது 1999 நவம்பர் 12ம் தேதி பேப்பர்.
ஒரு பழைய பேப்பரை ஏன் இவ்வளவு சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பேப்பர் இன்று வெளியானது போல கசங்காமல் இருக்கிறதே என யோசித்தபடியே நடந்தேன்.
என்றோ நடந்து முடிந்த செய்திகளால் இன்று என்ன பயன். பொழுதுபோகாமல் படிக்கிறவர் என்றால், எதற்காக இப்படிப் பழைய நாளிதழைப் படிக்க வேண்டும். குழப்பமாக இருந்தது.
நான்காவது சுற்றின் போது அவர் பேப்பரில் வந்த சினிமா விளம்பரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். புதுக்குடித்தனம் என்ற சினிமாவிற்கான விளம்பரமது. அப்படி ஒரு படத்தைப் பற்றி நான் கேள்விப்படவேயில்லை.
வழக்கமாக நான் பத்தாயிரம் காலடிகள் நடக்கக் கூடியவன். அத்தனை சுற்று முடியும் வரை அவர் நாளிதழைப் படித்துக் கொண்டேயிருந்தார். எனது கடைசிச் சுற்று நடையின் போது அந்தப் பூங்கா, அங்குள்ள மரங்கள், சிமெண்ட் பெஞ்சுகள் எல்லாமும் இது போல நாற்பது வருஷங்களுக்கு முந்தியவை தானே. அது ஏன் பழையதாகத் தோன்றவில்லை பழைய நியூஸ் பேப்பர் படிப்பது மட்டும் கேலிக்குரியதாகத் தோன்றுகிறது எனத் தோன்றியது.
வீடு திரும்பும் வழியில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன். ஒருவேளை அவர் இன்றைய செய்திகளை விரும்பாதவராக இருக்கக் கூடும். அல்லது அவருக்கு நினைவாற்றல் மங்கிப் போயிருக்கக் கூடும். எப்படியோ உலகம் கைவிட்ட ஒன்றைக் கையில் எடுத்து ஆசையாகப் படிக்க யாரோ இருக்கிறார்கள் என்பது புரிந்தது.
அதன் மறுநாள் பூங்காவிற்குள் செல்லும் போது எனது கண்கள் அவரைத்தான் முதலில் தேடின. அவர் இன்றைக்கு வேறு ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார். இன்று படித்துக் கொண்டிருந்த செய்தித்தாள் 1986ம் ஆண்டின் ஆகஸ்டில் வெளியான செய்தித் தாள். ஆசையாக விரித்துப் படித்துக் கொண்டிருந்தார்.
இதே ஆண்டு வெளியான ஒரு நாவலை அவர் படித்துக் கொண்டிருந்தால் எனக்கு வியப்பாக இருக்காது. செய்தித்தாள் என்பது தான் பிரச்சனையே. அவருக்கு எங்கே இந்தப் பழைய நியூஸ் பேப்பர்கள் கிடைக்கின்றன. அதை ஏன் பொதுவெளியில் வைத்துப் படிக்க நினைக்கிறார்.
என்னுடன் நடைப்பயிற்சிக்கு வரும் செல்வாவிடம் அவரைப் பற்றிச் சொன்ன போது அவர் தீவிரமான குரலில் சொன்னார்.
“அந்த ஆள் சிபிசிஜடியா இருந்தாலும் இருப்பார் சார். நோட்டம் பாக்க வந்திருப்பார்.v
அதுவும் சாத்தியம் தானே. அப்படி நினைத்தவுடன் அவரை ஏறிட்டுப் பார்ப்பது அச்சம் தருவதாக மாறியது. அவர் பூங்காவில் நடப்பவர்களைப் பற்றிக் கவனம் கொள்ளவேயில்லை.
கடந்தகாலத்தின் படிகளில் இறங்கி என்றோ நடந்துமுடிந்துவிட்ட நிகழ்வுகளில் நீந்திக் கொண்டிருந்தார். உலகிற்குத் தேவையற்றுப் போன செய்திகள் சிலருக்குத் தேவையான செய்தியாக இருக்கின்றன. சிலர் ஒரு காலை கடந்தகாலத்திலும் மறுகாலை எதிர்காலத்திலும் வைத்து நடக்கிறார்கள். அவர்களுக்கு நிகழ்காலம் பொருட்டேயில்லை.
அவர் தன்னோடு மர்மத்தைக் கொண்டு வருகிறார். மர்மத்தை விரித்துப் படிக்கிறார். அவர் யார், எங்கே வீடிருக்கிறது, எதற்காக இவற்றைப் படிக்கிறார் என்ற விடை தெரிந்துவிட்டால் மர்மம் கலைந்துவிடும். அதை நான் விரும்பவில்லை
எங்கேயிருந்து எப்போது வந்தது என அறியாத குயிலின் குரல் இனிமையை நாம் ரசிப்பதில்லையா. அப்படி இந்த மனிதரும் மர்மத்துடன் இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
அவர் ஒவ்வொரு நாளும் பழைய நியூஸ் பேப்பர் படிப்பது மாறவில்லை. ஆனால் ஏன் புதிய புதிய பழைய நியூஸ் பேப்பரைப் படிக்கிறார் என்பது தான் புரியவேயில்லை.
September 12, 2023
கடவுளின் நாக்கு – உரை
பேராசிரியர் வினோத் எனது கடவுளின் நாக்கு கட்டுரைத் தொகுப்பு குறித்து ஆற்றிய அறிமுக உரை
டால்ஸ்டாயின் காலடிச்சப்தம்
யூ.ஜி.அருண்பிரசாத்
மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த விமர்சனம்.
••

எஸ்ராவின் இந்த நாவலை டால்ஸ்டாயின் பிறந்த செப்டம்பர் மாதத்தில் அவரது நினைவாக வாசிக்கத் துவங்கினேன்.
இந்த நாவல் மூலம் எஸ்ரா நம்மை ரஷ்யா அழைத்துச் செல்கிறார். பனி படர்ந்த ரஸ்யாவில் நான் பார்த்த காட்சிகள் வியப்பளிக்கின்றன . டால்ஸ்டாயிக்கு சொந்தமான யஸ்னயா போல்னயா பண்ணை, ஒரு ஆள் ஒளிந்து கொள்ளும் அளவுள்ள எல்ம் மரம், டால்ஸ்டாயின் பெரிய குடும்பம், அங்குள்ள பண்ணையில் வேலை செய்பவர்கள், வசந்த காலத்தில் அந்தப் பண்ணைக்கு வருகை தரும் ஜிப்ஸிகள், அங்குள்ள ஆப்பிள் தோட்டம், வோரன்கா ஆறு, அடர்ந்த கிரெளன்வுட் காடு என வேறு ஒரு உலகத்திற்குள் பயணித்தேன்..
ஒரு நாவலின் வழியே அந்தக் கால ரஷ்யாவிற்குள்ளே அழைத்துச் சென்றுவிட்டார் எஸ்.ரா. அது தான் நாவலின் சிறப்பு.
எழுத்தின் வழியே வாசகன் நிஜத்தில் தான் அறியாத உலகத்திற்குள் கற்பனை வழியே பயணிக்க முடியும் என்றால் அது எழுத்தாளரால் மட்டுமே சாத்தியம். அதுதான் எஸ்ரா அவர்களின் எழுத்தின் வல்லமை.
மண்டியிடுங்கள் தந்தை நாவல் வழியே நான் டால்ஸ்டாயின் காலடிச்சப்தத்தைக் கேட்டேன். அவரது சொந்த உலகத்தைப் பார்த்தேன் , டால்ஸ்டாய் காலத்து ரஷ்யாவை தெரிந்து கொண்டேன் , அவர் சமகாலத்து எழுத்தாளர்களை அறிந்தேன் , ரஷ்யாவின் இரவு பகலை மட்டுமின்றி டால்ஸ்டாய் காலத்தில் ஏற்பட்ட ரஷ்ய பஞ்சத்தினைக் கூட அறிந்து கொண்டேன்.
நாவலில் வரும் திமோபி வீட்டை விட்டு வெளியேறி சில வருடங்கள் பிறகு திரும்பி வருகிறான் . வீட்டை விட்டு வெளியேறியவன் வேறு உலகத்திற்குச் சென்று வந்தவன் முற்றிலும் மாறி விடுகிறான் புதிய மனிதனாக மாறிய அவன் பேச்சில் செயலில் மாற்றம் தெரிகிறது .
இந்த நாவலை வாசித்து டால்ஸ்டாய் வாழ்க்கை உலகத்திற்குச் சென்று வரும் வாசகனாகிய நானும் புது அனுபவம் கொள்கிறேன். என்னையும் திமோபி போலவே உணருகிறேன்.
மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் வழியே டால்ஸ்டாயை மிகவும் நெருங்கி சென்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது . எழுத்தின் வழியே இந்த நெருக்கத்தை ஏற்படுத்திய எஸ்ரா அவர்களுக்கு நன்றி
ஓவியம் சொல்லும் கதை
லண்டனிலுள்ள நேஷனல் கேலரி பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஃபிரடெரிக் வைஸ்மேன் இயக்கியுள்ளார்

இந்தக் கேலரியில் 2400 அரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. காட்சியகத்தில் உள்ள ஓவியங்களின் சிறப்பு மற்றும் அவற்றை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள் ஓவியங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார்கள்

லியனார்டோ டா வின்சியைப் பற்றிய சிறப்புக் கண்காட்சிதான் படத்தின் முக்கியப் பகுதியாக உள்ளது.
ரெம்ப்ரான்ட்டின் உருவப்படத்தை மீட்டெடுப்பவர்கள் காட்டும் கவனமும் அக்கறையும் வியப்பளிக்கிறது.
பார்வையற்றவர்கள் எவ்வாறு ஓவியத்தை ரசிப்பது என்பதற்கான சிறப்புப் பயிற்சி பற்றி ஒரு பகுதியில் விவரிக்கிறார்கள்.
கலைவழிகாட்டிகள் உதவியோடு ஓவியத்தின் மாதிரியை உருவாக்கி அதைக் கையால் தொட்டு உணர்ந்து புரிய வைப்பது பற்றி விளக்கிக் காட்டுகிறார்கள்.
இந்த ஆவணப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதி ஓவியத்திற்கும் கதை சொல்லலுக்கும் உள்ள தொடர்பு பற்றியது.
புகழ்பெற்ற எல்லா ஓவியங்களுக்குப் பின்னும் கதையிருக்கிறது. அந்தக் கதை உலகம் அறியாதது. ஓவியத்தில் இடம்பெற்றவர்கள் பற்றியோ ஓவியர் வாழ்க்கை பற்றியோ உள்ள அக்கதையைப் பார்வையாளர்களுக்குக் கலைவிமர்சகர்களும் வழிகாட்டிகளும் எடுத்துச் சொல்கிறார்கள். குறிப்பாக ரூபன்ஸின் Samson and Delilah ஓவியத்தின் தனித்துவத்தையும் அதன் பின்னுள்ள கதையினையும் விளக்குவது சிறப்பாக உள்ளது.
அருங்காட்சியகத்தின் செலவுகளைச் சமாளிக்க அதை எவ்வாறு வணிக நிறுவனங்களோடு இணைந்து சந்தைப்படுத்துவது, நிர்வாகச் செலவுகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றிய விவாதங்களும் காட்டப்படுகின்றன.

இந்த ஆவணப்படத்திற்காக 12 வாரங்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். மொத்தம் 170 மணிநேரக் காட்சிகளைப் படமாக்கி அதிலிருந்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
மூன்று மணி நேரத்திற்குள் நேஷனல் கேலரியை முழுமையாகச் சுற்றி வந்த அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது இந்த ஆவணப்படம்.
September 11, 2023
ஆறு சித்திரங்கள்
1920 களின் ரஷ்ய கவிதையுலகம் மற்றும் கவிஞர்களின் வாழ்க்கை குறித்து வாசிக்கும் போது அவர்கள் ஒரு விசித்திரக் கனவுலகில் உலவியதை அறிய முடிகிறது.

கவிஞர் விளாடிஸ்லாவ் கோடாசெவிச் அந்தக் காலக் கட்டத்தின் ஆறு முக்கியக் கவிஞர்கள் குறித்த தனது நினைவுக் குறிப்பினை NECROPOLIS என்ற நூலாக எழுதியிருக்கிறார். புஷ்கின் மட்டுமே தனது ஆதர்சம் எனும் கோடேசெவிச் அன்றைய குறியீட்டுக் கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞராக இருந்தார்.
குறியீட்டு வாதம் என்பது ஒரு தனித்துவமான கருத்தைத் தெரிவிக்க, ஒரு வார்த்தை, அல்லது பிம்பத்தைப் பயன்படுத்துவதாகும். குறிப்பாக நிறங்கள். சின்னங்கள் எப்படி அடையாளமாக மாறிவிடுகின்றன என்பதைக் குறியீட்டு வாதம் பேசியது, கலையை யதார்த்தமாகவும் யதார்த்தத்தைக் கலையாகவும் மாற்ற முயன்றது குறியீட்டுவாதம்

நூலின் முதற்கட்டுரை கவிஞர் ஆன்ட்ரி பைலியின் காதலி நினா இவனோவ்னா பெட்ரோவ்ஸ்கயா பற்றியது. கோடேசெவிச் அவரை மோசமாக விமர்சித்து எழுதிய போதும் நினாவின் துயரம் நம்மைப் பற்றிக் கொள்ளவே செய்கிறது.
பாரிஸில் புறநகரிலுள்ள சிறிய விடுதியில் பிப்ரவரி 22, 1928 இரவு நினா இவனோவ்னா பெட்ரோவ்ஸ்கயா சமையல் வாயுவைத் திறந்து விட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
மறுநாள் செய்தித்தாளில் எழுத்தாளர் நினா இவனோவ்னா மறைந்துவிட்ட செய்தி வெளியாகியிருந்த்து. அதைப் பற்றிக் குறிப்பிடும் கோடேசெவிச் அவள் எழுத்தாளரில்லை. ஆனால் அப்படித் தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டவள். அவளது கதைகள் கட்டுரைகள் எதுவும் இலக்கியதரமானவையில்லை பெரிதும் நகல் படைப்புகள்.
ஆனால் அவள் 1903 மற்றும் 1909 ஆண்டுகளுக்கு இடையில் மாஸ்கோ இலக்கிய உலகின் மையமாக விளங்கினாள். பல்வேறு கவிஞர்களுடன் நெருக்கமாகப் பழகினாள். எழுத்தாளர்கள். ஓவியர்கள் கவிஞர்கள் என்ற அவளது நட்பு பட்டியல் மிக நீண்டது. இலக்கியச் சந்திப்புகளில் அவள் மிகையான பாவனையுடன் நடித்தாள். இளம் படைப்பாளிகளிடம் பொய்யான காதல் வசனங்களைப் பேசினாள்.. இத்தனைக்கும் அவள் அழகியில்லை. சராசரியான பெண். ஆனால் அவளுக்கு எவரையும் தன்வசம் ஈர்த்துவிடும் திறமையிருந்தது.
நினாவின் உண்மையான வயது யாருக்கும் தெரியாது. அவள் தனது தனது வயதை மறைத்து வந்தாள். அவள் ஒரு அதிகாரியின் மகள். பல் மருத்துவம் படித்திருக்கிறாள். ஆனால் அதை முடிக்கவில்லை. திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்திருக்கிறது. ஆகவே அவள் கலைகளின் மீது தனது நாட்டத்தை ஏற்படுத்திக் கொண்டாள். இலக்கிய உலகில் அவளைக் காதலித்த முதல் நபர் ஆன்ட்ரி பைலி.
கோடாசெவிச்அப்போது கவிஞர் பைலி மிகவும் இளமையாக இருந்தார், தங்கச் சுருட்டை முடி, நீல நிற கண்கள், கவிதையின் மீது பித்துக் கொண்டிருந்தார். அவளைக் காதலித்த ஆன்ட்ரி பைலி அவளது அழகினைப் புகழ்ந்து கவிதை எழுதினார். அது மட்டும் அவளுக்குப் போதுமானதாகயில்லை, அவள் இளங்கவிஞர்களின் பட்டாளமே தன்னைக் காதலிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அப்படி நடக்கவும் செய்தது.
ஆனால் அதில் ஒருவர் கூட அவளை உண்மையாகக் காதலிக்கவில்லை. நினா நிறையக் குடித்தாள். போதை மருந்துகளை உட்கொண்டாள். மார்பின் அடிமையாக மாறினாள். அதனால் அவளது உடல்நிலை சீர்கெட்டது.
மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் வளர்ச்சியடையாத தங்கை நதியா அவளது பொறுப்பில் விடப்பட்டிருந்தாள். நினா ரஷ்யாவை விட்டு வெளியேறியபோது, தனது சகோதரியை தன்னுடன் அழைத்துச் சென்றார் சில காலம் பெர்லினில் வாழ்ந்தாள். ஒன்றிரண்டு நண்பர்கள் அவளுக்கு உதவினார்கள். நிரந்தரமாகப் போதையிலிருந்த அவள் தன்னை அழித்துக் கொண்டாள்.
புற்றுநோயால் நதியா இறந்தது அவளுக்குள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று சகோதரியின் சடலத்தை ஊசியால் குத்தினாள். பின்னர் அதே ஊசியால் தன்னுடைய கையையும் குத்திக் கொண்டாள்: தனது கடைசி நாட்களில் நினா பேசிய எதுவும் புரியும்படியாக இல்லை. முடிவில் அவள் தன்னை எரிவாயுவால் அழித்துக் கொண்டுவிட்டாள் என்று கோடேசெவிச் அவளது நினைவைப் பகிருகிறார்.
சொந்த வாழ்வின் வேதனைகளை மறைத்துக் கொண்டு இலக்கியத்தில் அதற்கான மீட்சியைத் தேடியவர் என்றே நினாவைப் புரிந்து கொள்கிறேன்.
கவிஞர் குமிலியோவ் மற்றும் பிளாக் குறித்து எழுதிய கட்டுரையில் இருவரது ஆளுமையும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாகக் குமிலியோவின் வீடு, விருந்தினர்களை வரவேற்கும் விதம். அவரது மனோபாவம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

1921 இல் இரண்டு மாத இடைவெளியில் கவிஞர் குமிலியோவ் மற்றும் பிளாக் இருவரும் இறந்து போனார்கள். குமிலியோவை விடப் பிளாக் ஆறு ஆண்டுகள் மூத்தவர். இருவரும்: ஒரே இலக்கியச் சகாப்தத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு கவிதை மரபில் வருபவர்கள். பிளாக் குறியீட்டு வாதக் கவிதைகளை நிராகரித்தார். கவிதை எழுதுவது தான் உண்மையான ஆன்மீகம் என்று நம்பினார். ஆனால். குமிலியோவைப் பொறுத்தவரை, கவிதை என்பது ஒரு இலக்கிய வடிவம் மட்டுமே.
பிளாக் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும். ஒரு கவிஞராக மட்டுமே இருந்தார். அவரது பேச்சிலும் எழுத்திலும் அது முழுமையாக வெளிப்பட்டது என்கிறார் இந்தத் தொகுப்பின் சிறந்த கட்டுரையாக மாக்சிம் கார்க்கி பற்றியதைச் சொல்வேன். கார்க்கி எவ்வளவு செல்வாக்குடன் இருந்தார் என்பதன் நேரடி சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது
தனது கவிதைத்தொகுப்பினை மாக்சிம் கார்க்கி படித்துப் பாராட்டியதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் பீட்டர்ஸ்பெர்க் செல்கிறார் விளாடிஸ்லாவ் கோடாசெவிச்.
கார்க்கின் வீட்டில் ஏகப்பட்ட ஆட்கள். அதில் உதவி கேட்டு வந்திருப்பவர்கள் அதிகம். தன்னைத் தேடி வருகிறவர்களின் துயரக்கதையைக் கேட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனே செய்து தருகிறவராகக் கார்க்கி இருந்தார். எவ்வளவு சிபாரிசு கடிதங்கள் கொடுத்திருப்பார் என்று கணக்கேயில்லை.
முதன்முறையாக மாக்சிம் கார்க்கியைச் சந்தித்த நாளை நினைவு கூறும் விளாடிஸ்லாவ் கோடேசெவிச் அவர் அழகான தொப்பியும் சீனப்பட்டு அங்கியும் அணிந்திருந்தார். அவர் வீட்டில் மின்சாரம் கிடையாது. மண்ணெண்ணெய் விளக்கு தான் எரிந்து கொண்டிருந்தது என்கிறார்
கார்க்கி அளவிற்கு ரஷ்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் வேறு எவருமில்லை. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் அவருக்குக் கடிதங்கள் எழுதப்பட்டன. தினமும் ஆயிரக்கணக்கான கடிதங்கள் வருவதுண்டு.
அந்த நாட்களில் ரஷ்ய கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவராக இருந்த ஜினோவியேவிற்கும் கார்க்கிக்கும் மோதல் இருந்தது. அவர் கார்க்கி மீது நடவடிக்கை எடுக்கக் காத்துக் கொண்டிருந்தார். ஒரு முறை ஜினோவியேவ் ஆணையின் பெயரில் மாக்சிம் கார்க்கி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதன் பிறகு கார்க்கி பீட்டர்ஸ்பெர்க்கை விட்டு மட்டுமல்ல, சோவியத் ரஷ்யாவையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது
அவர் ஜெர்மனி சென்றார். அங்கே ஒரு சாதாரண விடுதியில் வசித்து வந்தார். பின்பு ஸ்டாலின் ஆட்சியில் நாடு திரும்பிய பிறகு அவருக்கு அரசின் தரப்பில் வீடு ஒதுக்கப்பட்டது.
மாக்சிம் கார்க்கி ஆடம்பரமான வாழ்க்கை வாழுவதாகச் செய்தி பரவியது. அந்தச் செய்தி உண்மையில்லை. அவருக்கு ஒதுக்கிய வீடு முறையான பராமரிப்பு இன்றி இருந்த பெரிய, வசதியற்ற, புறக்கணிக்கப்பட்ட மாளிகையாகும்.
அவரது தனிப்பட்ட தேவைகள். குறைவு. ஆனால் அவர் தன்னைத் தேடி வருகிறவர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்தார் அவரிடம் உதவி கேட்க வந்த எவரையும். அவர் மறுக்கவில்லை
சாமானியர்கள் முதல் பேரரசி அலெக்ஸாண்ட்ரா வரை அவரிடம் உதவி கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். லட்சியக்கனவுகளுடன் வாழ்ந்த கார்க்கி அதே கனவுகளை எல்லோரும் காணவேண்டும் என்று விரும்பினார். வற்புறுத்தினார். அது நடக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவர் ஒரு தோல்வியுற்ற நாயகன். எந்த நம்பிக்கைகள். கனவுகள் அவரை உருவாக்கியதோ அதன் தோல்வியைக் கண்முன்னே கண்டார். அவரே நேரடியாகப் பாதிக்கப்பட்டார். தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட அத்தனை புத்தகங்களையும் கார்க்கி படித்தார். இளம் படைப்பாளிகளைக் கொண்டாடினார். அப்படி ஒருவரை இனி காண முடியாது என்கிறார் விளாடிஸ்லாவ் கோடேசெவிச்.
1921 வாக்கில் பிளாக் மூன்று வருடங்களாகக் கவிதை எதுவும் எழுதவில்லை. அவர் மாக்சிம் கார்க்கியிடம் தனது “மனிதகுலத்தின் ஞானத்தின் மீதான நம்பிக்கை” முடிந்துவிட்டதாகப் புகார் செய்தார், அதன் பின்பு பிளாக் நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவச் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அனுப்புமாறு மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை
மாக்சிம் கார்க்கி அவரது விசாவிற்காக முயன்றார். அவர் அனடோலி லுனாசார்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில் அலெக்சாண்டர் பிளாக் ரஷ்யாவின் தலைசிறந்த கவிஞர். நீங்கள் அவரை வெளிநாடு செல்ல தடை விதித்து, ஒருவேளை அவர் இறந்துவிட்டால், நீங்களும் உங்கள் தோழர்களும் அவரது மரணத்திற்குக் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
1921 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி பிளாக்கிற்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்ததால், பிளாக்கின் மனைவி அவருடன் செல்வதற்கு அனுமதி கேட்டார். லியுபோவ் டிமிட்ரிவ்னா பிளாக் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டது. அதற்குள் பிளாக் இறந்துவிட்டிருந்தார்.
ரஷ்ய வரலாற்றின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த படைப்பாளிகளின் வாழ்க்கையை மிகவும் நேர்மையாக நினைவுகூர்ந்திருக்கிறார் கோடாசெவிச்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

