S. Ramakrishnan's Blog, page 53

October 12, 2023

மதுரை புத்தகத் திருவிழாவில்

மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது

அரங்கம் எண் – 72

வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்.

புகைப்படங்கள்

நன்றி : Shruti Ilakkiyam

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 12, 2023 22:13

October 11, 2023

ஓடிய கால்கள்

அடிடாஸ். பூமா இரண்டும் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனங்கள். டாஸ்லர் சகோதரர்கள் எனப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ஃப் மற்றும் ருடால்ஃப் சகோதரர்கள் பிரிந்து இந்த நிறுவனங்களை உருவாக்கினார்கள்.

இவர்கள் எப்படி விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணி தயாரிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். எவ்வாறு புகழ்பெற்றார்கள். எதன் காரணமாக இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அந்தப் பிரிவிற்குப் பின்பு எப்படித் தனக்கெனத் தனி நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதை அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

That’s The Name Of The Game! – Adidas vs. Puma என்ற இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆலிவர் டோமெங்கட்

ஜெர்மனியின் ஹெர்சோஜெனாராச்சிலுள்ள எளிய குடும்பத்தில் பிறந்தவர். ருடால்ஃப் , அவரது தம்பி அடோல்ஃப்.

காலணி தயாரிப்பில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் குடும்பமது. ஆகவே விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணியை உருவாக்க வேண்டும் என்று அடோல்ஃப் கனவு கண்டார..

இதற்கான புதிய மாடலைத் தானாக உருவாக்கினார். அவரிடம் பொருளாதார வசதியில்லை. எவரது உதவியும் கிடைக்கவில்லை. ஆகவே தானாக உருவாக்கிய இயந்திரங்களுடன் காலணி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். அவரைப் புரிந்து கொள்ளாமல் ஊர்மக்கள் ஏளனம் செய்தார்கள்.

தம்பியின் ஆர்வத்திற்கு உதவி செய்ய முன் வந்த ருடால்ஃப் தான் பார்த்துக் கொண்டிருந்த விற்பனை பிரதி வேலையை உதறிவிட்டு புதிய காலணி உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் துவங்குகிறார். இந்த நிறுவனத்தில் தயாரிப்பு பணிகளை அடோல்ஃப் கவனித்துக் கொள்ள வேண்டும். விற்பனை பகுதியை ருடால்ஃ பார்த்துக் கொள்வார் என முடிவு செய்து கொள்கிறார்கள்.

1919ல் அவர்களின் புதிய நிறுவனம் துவங்கப்படுகிறது. அவர்கள் உருவாக்கிய சிறப்புகாலணியை அணிந்து கொண்டு 1936 ஒலிம்பிக்கில் தடகள வீர்ர்கள் வெற்றி பெறுகிறார்கள். இதனால் நிறுவனம் புகழ்பெறத் துவங்குகிறது. இந் நிலையில் ருடால்ஃப் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளையே திருமணம் செய்து கொள்கிறான்.

ஜெர்மனியில் நாஜி எழுச்சி பெற்று வரும் காலமது. ஆகவே ராணுவ அதிகாரிகளின் உதவியைப் பெற்று ருடால்ஃப் தனது நிறுவனத்தைப் பெரியதாக வளர்த்தெடுக்கிறான். பணமும் புகழும் வந்து சேர்கின்றன.

அடோல்ஃப் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் நிறுவனப் பணிகளில் ஈடுபடத் துவங்கி ருடால்ஃப்பிற்கு நெருக்கமாகிறாள். அவர்களுக்குள் கள்ள உறவு இருக்கிறது எனக் கண்டறியும் ருடால்ஃப்பின் மனைவி அவரிடம் கோவித்துக் கொள்கிறாள். அந்த உறவை பற்றி அடோல்ஃப்பிற்கு எதுவும் தெரியாது

இந்நிலையில் ஓட்டப்பந்தய வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் அடோல்ஃப் உருவாக்கி தந்த காலணியை அணிந்து கொண்டு ஒடி ஒலிம்பிக்கில் வெற்றி பெறுகிறார். இது ஜெர்மன் ராணுவ தலைமைக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. இந்தக் காலணியைத் தயாரித்த ருடால்ஃப் நிறுவனத்தை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனால் அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. இருவரது மனைவியும் அந்தப் பிரிவை பெரிதாக்குகிறார்கள். பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள்.

எப்படியாவது நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ராணுவ தலைமையை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறார்கள்.

காலணி தயாரிப்பை நிறுத்திவிட்டு அவர்கள் ராணுவ தளவாடங்களைத் தயாரித்துத் தர வேண்டும் என்கிறார் ராணுவ அதிகாரி. ருடால்ஃப் மன்றாடவே ஆறாயிரம் ராணுவ வீர்ர்களுக்கான தோல் காலணிகள் தயாரிக்கும் ஆர்டர் அவர்களுக்குத் தரப்படுகிறது. ராணுவத்திற்கான காலணி தயாரிப்பில் அடோல்ஃப் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே அவர்கள் தயாரிப்புத் தரமற்றது என ராணுவத்தால் நிராகரிக்கபடுகிறது.

அண்ணன் தம்பி உறவில் விரிசல் ஏற்படுகிறது. இருவரும் சண்டை போடுகிறார்கள். போர்ச் சூழல் உருவாகவே ருடால்ப் ஜெர்மன் இராணுவத்தில் சேர்கிறார். அவர்களின் காலணித் தொழிற்சாலை ஆயுத தொழிற்சாலையாக மாற்றப்படுகிறது.

போர் முடிந்த பிறகு, ருடால்ப் சொந்த ஊர் திரும்புகிறார். நிலைமை உருமாறிப் போயிருக்கிறது. இனி என்ன செய்வது என அவருக்குத் தெரியவில்லை. சகோதரர்கள் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டுகிறார்கள். கசப்பான உறவோடு ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.

முடிவில் அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரிப்பது என முடிவு செய்கிறார்கள். பெரும்பகுதி ஊழியர்களைத் தன் வசமாக்கிக் கொள்கிறான் ருடால்ப். இருப்பவர்களைக் கொண்டு புதிய தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுகிறான் அடோல்ஃப்

ருடால்ஃப் உருவாக்கியது பூமா. அடோல்ஃப் உருவாக்கியது அடிடாஸ். இரண்டு நிறுவனங்களுக்குள் போட்டி உருவாகிறது. யார் எந்தக் கிளப்பை சொந்தமாக்கிக் கொள்வது எனப் போட்டியிடுகிறார்கள். அடோல்ஃப் தனது காலணிகளுக்கு எனத் தனி முத்திரையாக மூன்று கோடுகளை வடிவமைக்கிறான். ருடால்ஃப் தனது அதிநவீன விற்பனை அணுகுமுறையால் பெரிய வீர்ர்களைத் தனதாக்கிக் கொள்கிறான்.

இந்த மோதலின் உச்சமாக ஜெர்மன் கால்பந்தாட்ட வீர்ர்கள் எந்தக் காலணியை அணிவது என்ற போட்டி உருவாகிறது. இதற்காக ஜெர்மன் கோச் ருடால்ஃப்பை தேடி வந்து பேசுகிறார். கமிஷன் அதிகம் கேட்கிறார். ருடால்ஃப் இதனை மறுத்துவிடுகிறான். ஆனால் அடோல்ஃப் ஏற்றுக் கொள்கிறான். அவனது நிறுவனம் உருவாக்கிய காலணியை அணிந்து கொண்டு ஜெர்மன் கால்பந்தாட்ட அணி விளையாடுகிறது. உலகக் கோப்பையை வெல்கிறது. அடோல்ஃ புகழின் உச்சிக்குச் செல்கிறான்

படம் அதிலிருந்து தான் துவங்குகிறது. அங்கே தான் நிறைவுபெறுகிறது. தனது தம்பியின் வெற்றியை பாராட்டி அண்ணன் ருடால்ஃப் ஒரு வாழ்த்து அட்டையைச் சொருகிச் செல்வது சிறப்பான காட்சி

அது போலவே தாங்களால் ஜெர்மன் கால்பந்தாட்ட அணியின் கோச்சை சந்திக்க முடியாது என ருடால்ஃப் தோற்று திரும்பும் போது அவரே தேடி வந்து ஒப்பந்தம் செய்து கொள்வது அரியதொரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

1948 இல் ருடால்ஃ பூமாவை நிறுவினார் 1949ல், அடால்ஃப் அடிடாஸை நிறுவினார். இரண்டு நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி இன்றும் குறையவில்லை. இரண்டும் விஸ்வரூப வளர்ச்சி கொண்டு நிற்கின்றன.

தொழிற்போட்டி வீட்டிற்குள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குச் சாட்சியமாக உள்ளது ருடால்பின் மனைவி அடோல்ஃப் மனைவியைக் குற்றம் சாட்டுவது. அந்தக்காட்சியில் குழந்தைகள் ஒளிந்திருந்து பெற்றோர் பேசுவதைக் கேட்கிறார்கள். அதிர்ச்சியான தகவலைக் கேட்டு பையன் அழுகிறான். அவனைத் தேடி வந்து அடால்ஃப் அணைத்துக் கொள்கிறான். உணர்ச்சிப்பூர்வமான காட்சியது

காலணி தயாரிப்பு நிறுவனத்திற்குள் இருந்த இனவெறி. அன்றைய ஜெர்மானிய போர்சூழல். ராணுவத்தின் அதிகார வெறி. நம்பிக்கை இழந்த பணியாளர்கள் என அந்தக் காலகட்டத்தைச் சிறப்பாக உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்

காலணிகளில் எந்த ஒன்றை பிரித்துவிட்டாலும் மற்றொன்றை பயன்படுத்த முடியாது. உறவு அப்படியானதில்லை போலும். இங்கே சகோதர்கள் ஒரே துறையில் இரண்டு பாதையில் பயணிக்கிறார்கள். இருவரும் வெற்றி பெறுகிறார்கள். கடைசி வரை இணையவேயில்லை.

1974 இல் ருடால்ஃப் இறந்தார், அதைத் தொடர்ந்து அடோல்ஃப் 1978 இல் இறந்து போனார், இருவரது கல்லறையும் எதிரெதிராக உள்ளன. இரண்டு குடும்பங்களுக்குள் இன்றும் உறவு மலரவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2023 05:11

October 10, 2023

நகரங்களே சாட்சி

சிறந்த ஆசியத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நகரங்களே சாட்சி

டிசம்பர் 25ல் சென்னையில் வெளியாகிறது

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2023 05:38

இடக்கை நாவல் குறித்து

எனது இடக்கை நாவல் The Final Solitude என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

ஸீரோ டிகிரி இதனை வெளியிட்டுள்ளது. ப்ரீதம் சக்ரவர்த்தி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த நாவலைப் பாராட்டி OPEN MAGAZINE ல் மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீரா எழுதியுள்ள குறிப்பு

I consider The Final Solitude originally written in Tamil by S Ramakrishnan a bold and ambitious experiment in theme and craft. It is an intelligent effort to illustrate the times we are living in using the stories from a distant past.

இணைப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2023 05:35

October 9, 2023

தனித்த சொற்கள்

ஆலன் பேடன், ஜேம்ஸ் ஜாய்ஸ், யுவான் ருல்ஃபோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், கவிஞர் லி பெய், நாட்சுமே சோசெகி, போஹுமில் ஹரபால், ஹன்னா தியாப்,.ஹென்ரிக் போல், ஃபொ்னான்டோ ஸோரன்டினோ என நீளும் உலக இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தனித்த சொற்கள்.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்த நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியாகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2023 04:49

மகனே உலகம்

ராஜசேகர்

மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலை படித்தேன். ஒரு சிறந்த நாவலை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இந்நாவலை படிக்கும்பொழுது ரஷ்யாவில் வாழ்வது போல உணர்ந்தேன். லியோடால்ஸ்டாய் தவறுகளைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவும் சக மனிதனை நேசிக்கும் ஒரு புனிதராகவும் என் கண் முன்னே நிற்கிறார்.

சோபியா தன் கணவனுக்கும் அவன் காதலிக்கும் நடுவே பாசப் போராளியாக நிமிர்ந்து நிற்கிறாள்.

அக்ஸின்யா தன் மகனுக்கும் காதலனுக்கும் நடுவே உரிமையில்லாத காதலியாக மகனே உலகம் எனும் அவலத்தாயாகப் புதைந்து கிடக்கிறாள்.சோபியாவிற்கும் அக்ஸின்யாவிற்கும் இடையேயான உறவு அதிகார வர்க்கத்திற்கும் பாட்டாளி மக்களுக்குமான பெரும் இடைவெளியாக இருக்கிறது.

திமோஃபி தன் தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் உரிமை கோராத மகனாக மனதில் தங்கிவிடுகிறார். முட்டாள் டிமிட்ரி நமக்கு முட்டாள் இவானை நினைவுபடுத்துகிறார்.

அதிகாரம் ஒரு நன்மையையும் மக்களுக்குச் செய்யாது செய்பவனையும் விடாது என்பது எனக்குப் பிடித்தமான பதிவு. மண்டியிடுங்கள் தந்தையே என்று நினைத்தவனை அவன் தாயின் முன் மண்டியிடச்செய்தது சிறப்பு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2023 04:31

October 8, 2023

தோற்றம் சொல்லாத உண்மை

நான் பார்த்து ரசித்த சர்வதேசத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு தோற்றம் சொல்லாத உண்மை.

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

சென்னையில் டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2023 00:01

October 7, 2023

கவிஞனும் கவிதையும்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கவிஞனும் கவிதையும் என்ற தலைப்பில் வெளியாகிறது

டிசம்பர் 25 அன்று இந்த நூல் வெளியிடப்படுகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

இந்தக் கட்டுரைத் தொகுப்பில் தமிழ் மற்றும் அயல்மொழிக் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 04:30

கடைசி சாட்சியம்.

GORBACHEV. HEAVEN என்ற மிகையில் கோர்பசேவ் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவரது கடைசி வருஷங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆவணப்படம் உலகிற்குத் தேவை என்று ஒரு காட்சியில் அவரே குறிப்பிடுகிறார்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கோர்பசேவ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரது அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து போனது என்றார்கள். இந்த ஆவணப்படத்தில் அவர் குறித்த விமர்சனங்களை நேரடியாகக் கேட்கிறார்கள். மிகவும் வெளிப்படையாகக் கோர்பசேவ் பதில் சொல்கிறார். அதில் வெளிப்படும் உறுதி மற்றும் தனது நிலைப்பாடு மீது கொண்டுள்ள நம்பிக்கை சிறப்பாக வெளிப்படுகிறது.

சோவியத் காலத்தில் கோர்பசேவ் பற்றிச் சித்தரிக்கப்பட்ட பிம்பத்திற்கும் இந்த ஆவணப்படத்திற்கும் நிறைய இடைவெளியிருக்கிறது. மாஸ்கோவிற்கு வெளியே பாதுகாப்பு வேலிகளுக்கு நடுவே உள்ள தனி வீட்டில் சில பணியாளர்களுடன் வாழ்ந்து வருகிறார். அவரது பேத்திகள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். ஒன்றிரண்டு உறவினர்கள் மட்டும் தன்னோடு இந்த வீட்டில் இருப்பதாகச் சொல்கிறார். அவரது தோற்றம் கைவிடப்பட்ட கிங் லியரை நினைவுபடுத்துகிறது.

89 வயதான கோர்பசேவ் நடப்பதற்குச் சிரமப்படுகிறார். நிறைய மாத்திரைகளை விழுங்குகிறார். தனது மனைவியின் கல்லறைக்கு அருகே தனக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். அவரது தைரியம் மற்றும் உறுதியான குரல் ஆச்சரியமளிக்கிறது. படத்தின் ஒரு இடத்திலும் அவர் சுய இரக்கத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாகக் கட்டளையிடுகிறார். வேடிக்கையாகப் பேசுகிறார். ருசித்து உண்ணுகிறார். உடற்சிரமங்களைத் தாங்கிக் கொண்டு பயணம் செய்கிறார்.

இயக்குநர் விட்டலி மான்ஸ்கியின் குழுவினர் சிறப்பாக அவரது தினசரி வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார்கள். ஒரு காட்சியில் கோபத்தில் கெட்டவார்த்தை பேசுகிறார் கோர்பசேவ். அதை அவர்கள் நீக்கவில்லை. அவரே அதை அடுத்த காட்சியில் உணர்ந்து கொண்டும் விடுகிறார்.

கோர்பசேவ் தன் மனதிலிருந்து கவிதைகளைச் சொல்லுவது அழகான காட்சி. இளமை முதலே தனக்குக் கவிதையில் தீவிரமான ஈடுபாடு எனச் சொல்லும் அவர் அன்றாடம் காலையில் முகச்சவரம் செய்து கொள்ளும் போது பாடுவேன் என்று சொல்லி தனக்குப் பிடித்த கவிதைகளைப் பாடுகிறார். கவிதைகளை அவர் உணர்ந்து சொல்லும் விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

படத்தில் அவர் தனது மனைவி ரைசா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது உணர்ச்சிப்பூர்வமானது. இன்னொரு காட்சியில் அவரது வாழ்க்கையை நாடகமாக நிகழ்த்த விரும்பிய குழுவினர் அவரைச் சந்தித்து உண்மை நிகழ்வுகளைக் கேட்டு அறிந்து கொள்கிறார்கள். அப்போது அவர் தனது கடந்தகாலத்தைச் சுவைபட விவரிக்கிறார். குறிப்பாக அவரது காதல் மற்றும் முதல் முத்தம் பற்றிச் சொல்கிறார்.

கோர்பசேவ் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், 1953-ல் தன்னுடன் பயின்ற மாணவியான ரைசாவைத் திருமணம் செய்துகொண்டார். ரைசா தன்னை விட்டு ஒரு நாள் கூடப் பிரிந்தது கிடையாது. அவரது மறைவிற்குப் பிறகு தான் மிகவும் தனிமையாக உணருவதாகச் சொல்கிறார் கோர்பசேவ்.

தனது எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கும் போது கோபம் கொள்வதில்லை. அழுத்தமான தனது நிலைப்பாட்டினை முன்வைக்கிறார்.

லிதுவேனியா நிகழ்வு பற்றிய கேள்விக்கு அவரது பதிலை ஏற்றுக் கொள்ள முடியாமல் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என முகத்திற்கு நேராகவே கேள்வி கேட்பவர் சொல்கிறார். “நான் செய்தது சரிதான் என்று நினைக்கிறேன்… நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு இழுக்க விரும்புகிறீர்களா?” எனக் கேட்கிறார் கோர்பசேவ்.

2020ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மிகையில் கோர்பசேவ் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே தொலைக்காட்சியில் ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வதைக் காணுகிறார். விருந்து நடைபெறுகிறது. தனது பழைய நாட்களைப் பற்றியும் மாறிவிட்ட இன்றைய சூழல் பற்றியும் விவரிக்கிறார்.

மான்ஸ்கி பழைய புகைப்படங்கள். ஆவணக்காட்சிகள் எதையும் படத்தின் பயன்படுத்தவில்லை. அது தான் இந்தப் படத்தினைத் தனித்துவமாக்குகிறது. கடந்தகாலத்தின் நேரடி சாட்சியாகக் கோர்பசேவை அடையாளம் காட்டுகிறார். சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கோர்பசேவ் தவிர்த்துவிடுகிறார். அதை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பானது.

இந்த ஆவணப்படத்தைக் கனடாவில் வசிக்கும் எனது நண்பர் மூர்த்தியைக் காணும்படி சொன்னேன். அவர் ரஷ்யாவில் படித்தவர். ஒருமுறை கோர்பசேவைச் சந்தித்திருக்கிறார்.

இந்த ஆவணப்படத்தைப் பார்த்து முடித்தபோது கண்ணீர் வந்துவிட்டது என்று மூர்த்தித் தொலைபேசியில் தெரிவித்தார். எனக்கு இந்த ஆவணப்படம் பார்க்கும் போது கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நாவலான The General in His Labyrinth நினைவிற்கு வந்தபடியே இருந்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 04:24

October 5, 2023

மாஸ்கோவின் மணியோசை

ரஷ்ய இலக்கியங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை

இந்த நூல் டிசம்பர் 25 அன்று வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.

ரஷ்ய இலக்கியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த அறிமுகத்தை வழங்கும்.

கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின், கோகோல், லியோ டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், லேர்மன்தேவ், குப்ரின், ஆன்டன் செகாவ். கொரலன்கோ,இவான் கோன்சரோவ், சிங்கிஸ் ஐத்மாதவ், ஐசக் பேபல், மாக்சிம் கார்க்கி, போரிஸ் பாஸ்டர்நாக், பாஸீ அலீயெவா ,அலெக்சாண்டர் பிளாக்,அன்னா அக்மதோவா, நினா இவனோவ்னா ,வேரா பாவ்லோவா என ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளிகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2023 06:22

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.