S. Ramakrishnan's Blog, page 52

October 2, 2023

மொழிபெயர்ப்பு விருதுகள்

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன

விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றினேன். என்னோடு பேராசிரியர் பழனி கிருஷ்ணசாமி, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள்.

இந்த விருது வழங்கும் விழா நேற்று சென்னை, ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம்.

விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

டேவிட் கிராஸ்மேன் எழுதிய ‘நிலத்தின் விளிம்புக்கு’ நாவலை மொழியாக்கம் செய்த அசதாவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல்பரிசு வழங்கப்பட்டது.

மமாங் தய் எழுதிய ‘கருங்குன்றம்’ நாவலை மொழி பெயர்த்த கண்ணையன் தட்சிணாமூர்த்தி மற்றும் சதாசிவம் எழுதிய ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ நூலை மொழியாக்கம் செய்த கமலாலயன் ஆகியோருக்கு இரண்டாம் பரிசு ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது.

தெலுங்கு எழுத்தாளர் பி.அஜய் பிரசாத் எழுதிய ‘அத்தங்கி மலை’ சிறுகதை தொகுப்பினை மொழிபெயர்த்த குப்பம் பல்கலைழகப் பேராசிரியர் க.மாரியப்பன், கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் எழுதிய ‘எனது ராணுவ நினைவலைகள் நூலை மொழியாக்கம் செய்த ப.கிருஷ்ணன், மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்’ எனக் கொரிய கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் ரவிக்குமார், ப.கல்பனா. கேரளப் பழங்குடி கவிதைகள் நூலை மொழிபெயர்த்த நிர்மால்யா ஆகியோருக்கு மூன்றாம் பரிசு இருபத்தைந்தாயிரம் வழங்கப்பட்டது,

டாக்டர் ம.மாணிக்கம் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. மொழி பெயர்ப்பு மையம் சார்பில் கவிஞர் சிற்பி வாழ்த்துரை வழங்கினார். அருட்செல்வர் நா.மகாலிங்கம் குறித்த பேருரையை  சுகிசிவம் வழங்கினார்.

இந்த விழாவில் அண்ணல் காந்தியடிகளின் ஹரிஜன் இதழ் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இதனைக் கிருங்கை சேதுபதி மற்றும் சொ. அருணன் தொகுத்துள்ளார்கள். முல்லை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 02, 2023 20:08

September 30, 2023

புத்தகங்களின் எதிர்காலம்

.

புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.? என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது

அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துவிடும். மின் புத்தகங்களே (EBOOKS)  அதிகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் எப்போதும் இருப்பார்கள். மின் புத்தகம் இன்னொரு வடிவம் மட்டுமே. அதனால் பதிப்புத் தொழில் விரிவடையுமே அன்றி முடிவிற்கு வந்துவிடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

பதிப்புத்துறையின் இன்றைய சவால்களைப் பற்றி விவாதிக்கும் படமாக ஆலிவர் அஸ்ஸாயஸ் (Olivier Assayas )இயக்கிய Non-Fiction வெளிவந்துள்ளது. படம் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் என மூவருக்குமான உறவைப் பேசுகிறது. சமீபத்தில் பார்த்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படமிது.

எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றத்தைப் போலவே பதிப்புத் துறையிலும் டிஜிட்டல் மயமாக்கம் வேகமாக நடைபெறுகிறது. இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா. அல்லது எவ்வளவு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பதிப்பாளர்கள் தீவிரமாக யோசிக்கிறார்கள். சிலர் உடனடியாக மாற்றத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துகிறார்கள். சிலர் மரபாக அச்சுப் புத்தகம் வெளியிடுவது மட்டுமே போதும் என நிறுத்திக் கொள்கிறார்கள். இதில் பதிப்பாளர் எடுக்கும் முடிவே இறுதியானது.

படத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் பிரெஞ்சு பதிப்புத்துறைக்கு மட்டுமின்றி நம் அனைவருக்கும் பொதுவானதே,

படத்தின் ஒரு காட்சியில் பதிப்புத்துறை குறித்த விவாதமேடை நடைபெறுகிறது. அதில் எக்ஸ்பிரஸோ காபி இயந்திரம் போல நாளை புத்தகம் தயாரிக்கும் இயந்திரம் வந்துவிடும். அதைப் புத்தகக் கடையில் நிறுவி விடுவார்கள். நீங்கள் எந்தப் புத்தகம் கேட்டாலும் இயந்திரம் ஐந்து நிமிஷத்தில் புத்தகத்தை அச்சிட்டுத் தந்துவிடும். அதுவும் எது போன்ற பதிப்பு வேண்டும் என்று தேர்வு செய்தால் அதே பதிப்பை அச்சிட்டுத் தந்துவிடும். சுடச்சுடப் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும் என்று ஒரு பெண் சொல்கிறார்கள். அது சாத்தியமே

இன்றே அமேசான் அச்சில் இல்லாத ஆங்கிலப் புத்தகங்களை உங்களுக்கென ஒரு பிரதி மட்டுமே அச்சிட்டுத் தருகிறது. விலை அதிகம்.

தற்போதைய POD எனப்படும் print on demand தொழில்நுட்பம் அதைச் சாத்தியப்படுத்திவிட்டது. POD இயந்திரத்தின் விலை ஜெராக்ஸ் மெஷின் அளவிற்குக் குறையும் போது படத்தில் சொல்லப்படுவது போன்ற எக்ஸ்பிரஸோ மெஷின் வந்துவிடும்.

புத்தகங்களுக்கு அதிக விலை வைக்கப்படுவதைக் குற்றச்சாட்டாக ஒருவர் சொல்லும் போது, பதிப்பாளர் அதை மறுத்து நீங்கள் குடிக்கும் காபியிலிருந்து, அணியும் உடை வரை எத்தனை மடங்கு விலை கூடியிருக்கிறது என்று ஒப்பிட்டுப் பாருங்கள். என்கிறார். அத்தோடு விலை மலிவாகக் கிடைப்பதால் மட்டும் அனைவரும் புத்தகங்களை வாங்கிவிட மாட்டார்கள். இது ஒரு போலியான குற்றச்சாட்டு என்றும் பதில் தருகிறார்.

செல்போனிலும், ஐபேடிலும் சினிமா பார்க்கும் நம் காலத்திலும் திரையரங்கங்கள் அழிந்துவிடவில்லை. மாறாகப் பெருந்திரளாக மக்கள் அரங்கிற்குச் சென்றே படம் பார்க்கிறார்கள். அச்சுப்புத்தகங்களுக்கும் அப்படியான நிலை தான் இருக்கும் என்று படத்தின் நாயகன் சொல்கிறார்.

அத்தோடு உலகெங்கும் நடைபெறும் புத்தகச் சந்தைகள் புதிய வாசகர்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதைக் காட்டுகிறது. என்றும் சொல்கிறார்

பிரான்சில் பொதுவாகப் புத்தக விற்பனை குறைந்து வருகிறது. மக்கள் புத்தகங்களை வாங்குவதை விடப் பிரபலமான எழுத்தாளர்களின் வலைப்பதிவுகள், டிவிட்டர்களை அதிகம் படிக்கிறார்கள். பின்தொடருகிறார்கள். ஆகவே புகழ்பெற்ற எழுத்தாளருக்கும் கூடப் புத்தகம் எழுதுவது மட்டும் போதுமானதாகயில்லை. அவர் சமூக ஊடகங்களில், இணையத்தில் தீவிரமாக இயங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

புத்தக விமர்சகர்களால் இனி எந்தப் புத்தகத்தினையும் டிரெண்ட் செட் செய்ய இயலாது. வாசகர்களே புத்தகங்களை அறிமுகம் மற்றும் விமசர்னம் செய்யத் துவங்கி விட்டார்கள். ஆகவே விமர்சகரின் இடமும் மதிப்பும் குறைந்து வருகிறது. மக்கள் நல்ல மதிப்புரைகளைப் படிப்பதற்குப் பதிலாக எத்தனை ஸ்டார் பெற்றுள்ளது என்பதையே அதிகம் கவனிக்கிறார்கள். நவீன கால ஹைக்கூவாக இருப்பது இன்று எழுதப்படும் டுவீட்டுகளே. எனப் படத்தில் குறிப்பிடுகிறார்கள்.

மின்புத்தகங்களை எவ்வளவு வேண்டுமானாலும் எளிதாகக் கொண்டு போகலாம் என ஒரு காட்சியில் ஒருவர் சொல்கிறார். அதற்கு ஒரு பெண் உங்கள் பயணத்திற்குத் தேவை ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் தானே, எதற்கு ஒரு நூலகத்தையே தூக்கிக் கொண்டு போக ஆசைப்படுகிறீர்கள். இத்தனை ஆண்டுகள் ஒரு புத்தகத்துடன் தான் பயணம் செய்தேன். இப்போதும் அதைத் தொடரவே விரும்புகிறேன் என்கிறார்.

அவர் சொல்வது நிஜம். நான் பயணத்தின் போது ஒன்றோ இரண்டோ புத்தகங்களைத் தான் கொண்டு செல்வேன். படித்து முடித்துவிட்டால் போகிற இடத்தில் புதிதாக ஒன்றோ இரண்டோ புத்தகம் வாங்கிக் கொள்வேன்.

இன்று உலகின் மிகப்பெரிய நூலகம் கூகுள் உருவாக்கியுள்ள இணைய நூலகம் தான். அதில் கோடிக்கணக்கில் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன .ஆகவே உள்ளூர் நூலகங்களைத் தேடி இனி நாம் போக வேண்டியதில்லை. நமது கையருகே இணைய நூலகம் விரிந்திருக்கிறது என்று படத்தின் வேறு காட்சியில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது.

அது உண்மையே ஆனால் நிஜமான நூலகத்திற்குச் செல்லும் அனுபவம் அதில் கிடைக்காதே என்று மற்றொரு கதாபாத்திரம் மறுப்புத் தெரிவிக்கிறது. நல்லதொரு உரையாடலது.

கள்ளத்தனமாகப் புத்தகங்களை அச்சிட்டு விற்பதைப் பற்றி விவாதிக்கும் போது இசை, சினிமா போலப் புத்தகங்கள் அதிகம் திருடப்படுவதில்லை. அதை இளைஞர்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதே காரணம் என இன்னொரு காட்சியில் சொல்கிறார்கள்.

எழுத்தாளர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சியில் நடத்தப்படும் விதம், எழுத்தாளர்களுக்கும் பதிப்பகத்தினருக்குமான உறவு. தனது புத்தகத்தை வெளியிட எழுத்தாளன் மேற்கொள்ளும் போராட்டங்கள் எனப் பதிப்புலகை நிஜமாக, நுண்மையாகப் படம் விவரித்துள்ளது.

தகவல்தொடர்பு சாதனங்களின் அதிவேக வளர்ச்சியானது கலாச்சார அடையாளத்தின் மீது என்ன வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயக்குநர்.

மாற்றத்தை ஒருவர் எப்படி எதிர்கொள்வது எனப் படம் எழுப்பும் கேள்வி பதிப்புத் துறைக்கானது மட்டுமில்லை. இன்றைய வாழ்க்கை முறைக்கும், அது விஸ்வரூபமாக விரித்திருக்கும் நுகர்வு பண்பாட்டிற்கும் பொருந்தக்கூடியதே

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2023 03:23

September 29, 2023

கண்களை மூடிப் பார்க்கிறேன்.

 “The Wonderful Story of Henry Sugar.” என்ற வெஸ் ஆண்டர்சனின் 40 நிமிஷக் குறும்படம் கதைக்குள் கதை என விரியும் அழகான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் ரோல்ட் டாலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சன் கதை சொல்லும் பாணியில் ஒரு விசித்திரத்தன்மை வெளிப்படுவது வழக்கம். இதில் அந்தப் பாணி புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.

சினிமாவை பல்வேறு கலைகளின் கூட்டு வடிவம் என்பதை ஆண்டர்சன் நன்கு உணர்ந்தவர். நாடகம், மேஜிக், கதை சொல்வது, இசைநிகழ்ச்சி. பொம்மலாட்டம், அனிமேஷன் எனப் பல்வேறு கலைகளின் ஒன்று கலந்த வடிவமாக, பல அடுக்கு கதைசொல்லல் முறையில் அமைந்த படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வெஸ் ஆண்டர்சன் தேர்ந்த இலக்கிய வாசகர். சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளைச் சினிமாவாக உருவாக்கியவர். இவர் ரோல்ட் டாலின் “ஃபென்டாஸ்டிக் மிஸ்டர். ஃபாக்ஸ்” கதையை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார். அது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஸ்டீபன் ஸ்வேக்கின் நாவலை The Grand Budapest Hotel என்ற படமாக எடுத்திருக்கிறார்.

படம் ரோல்ட் டாலின் எழுதும் அறையில் துவங்குகிறது. அவரது வீட்டின் மாதிரியை அசலாக அப்படியே உருவாக்கியிருக்கிறார்கள். அவர் புதிய கதை ஒன்றை எழுதுகிறார். அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரம் பற்றி விவரிக்கிறார். இது ஒரு சரடு.

ஹென்றி சுகர் ஒரு நாள் தனது வீட்டு நூலகத்தில் ஒரு புத்தகத்தைத் தற்செயலாகக் கண்டெடுத்து வாசிக்கிறார். அவர் வாசிக்கும் புத்தகமே இரண்டாவது சரடு

அவர் படிக்கும் புத்தகம் வழி இம்தாத் கான் பற்றிய காட்சிகள் விரிவடைகின்றன. இது மூன்றாவது சரடு. கிளைவிடும் கதைவழிகள் தான் படத்தின் சிறப்பே. அதை வெஸ் ஆண்டர்சன் மிகத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். பலநேரங்களில் பொம்மலாட்ட பொம்மைகள் போலக் கதாபாத்திரங்கள் நடத்தப்படுகிறார்கள். நாடக அரங்கில் மாறுவது போலக் காட்சிகள் மாறுகின்றன. கதையிலே மேஜிக் காட்சிகள் வருகின்றன. பிறாண்டலோ, பிரெக்ட்டின் நாடகம் போலவே நிஜமும் கதையும் ஒன்று கலக்கின்றன.

ஹென்றி சுகர் வழியாகக் குறுக்குவழியில் பணம் தேடும் பேராசையும் அதன் உச்சநிலையில் ஏற்படும் அபத்தமும் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக இம்தாத் கானுக்குக் கிடைத்த சக்தியைத் தானும் பெறுவதற்காக ஹென்றி மேற்கொள்ளும் முயற்சிகள். சூதாட்ட விடுதியில் அவன் நடந்து கொள்ளும் விதம், கிடைத்த பணத்தைக் காற்றில் பறக்கவிடுவது போன்றவை அழகான காட்சிகள்.

எழுத்தாளர், கதை சொல்பவர், கதாபாத்திரங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையிலான உறவு படம் முழுவதும் குடை ராட்டினம் போலச் சுழலுகிறது..

1930களின் கல்கத்தாவில் நடக்கும் பகுதி சுவாரஸ்யமானது. அதில் இம்தாத் கான் தனது கதையைச் சொல்கிறார். அவருக்குக் கண்களை மூடிக்கொண்டு பொருட்களைப் பார்க்கும் திறனிருக்கிறது.

அதைக் கேட்டு மருத்துவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர்களிடம் தனது கண்களைக் கட்டிவிடச் சொல்கிறார் இம்தாத். கண்கள் மூடப்பட்ட நிலையில் அவர் காட்சிகளைத் துல்லியமாகக் காணுகிறார். அது மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. அவருக்கு இந்த அபூர்வ சக்தி எப்படிக் கிடைத்தது என்பதை அறிந்து கொள்ள டாக்டர் சட்டர்ஜி ஆர்வம் காட்டுகிறார். அந்த ரகசியத்தை இம்தாத் விளக்குகிறார்

கண்கள் இல்லாமல் எந்த ஒன்றையும் பார்க்க முடியாது என்று உலகம் நினைக்கிறது. ஆனால் யோகசாதனைகள் மூலம் கண்களை மூடிக்கொண்டு பொருட்களைப் பார்க்கலாம் என்று இம்தாத் கண்டறிகிறார். ஒரு யோகியின் துணை கொண்டு அதில் வெற்றி பெறுகிறார்.

மருத்துவர் அவரிடம் கண்ணாக உடலின் வேறு எந்த உறுப்புச் செயல்படுகிறது என்று கேட்கும் போது தெரியவில்லை என்றே இம்தாத் பதில் சொல்கிறார்.

பெனடிக்ட் கம்பெர்பாட்ச், தேவ் படேல், பென் கிங்ஸ்லி மற்றும் ரிச்சர்ட் அயோடே எனத் தேர்ந்த நடிகர்கள். வியப்பூட்டும் அரங்க அமைப்பு. காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் எனப் புதிய திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார் வெஸ் ஆண்டர்சன்.

இந்தப் படத்தைக் காணும் போது புதுமைப்பித்தன் ஹடயோகி பற்றி எழுதிய உபதேசம் என்ற சிறுகதை நினைவிற்கு வந்தது. அதில் வரும் மருத்துவர் டாக்டர் சட்டர்ஜி போன்றே நடந்து கொள்கிறார்.

தனது அபூர்வ சக்தியைக் கொண்டு இம்தாத் பணம் சம்பாதிக்க முயலவில்லை. குற்றங்கள் எதையும் செய்யவில்லை. ஆனால் அதே சக்தியைத் தனதாக்கிக் கொள்ளும் ஹென்றி சுகர் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறான். கேசினோவில் வெற்றிபெறுகிறான். ஆனாலும் அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. முடிவில் லண்டன் தெருக்களில் பணத்தை வீசி எறிகிறான். இருவரின் வாழ்க்கையும் எதிர்பாராத முடிவைக் கொண்டிருக்கிறது.

வெஸ் ஆண்டர்சன் படங்களின் ஒளிப்பதிவு தனித்து பாராட்டபட வேண்டியது. குறிப்பாக அவர் வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம். கேமிரா நகர்வு. காட்சிகளை அடுக்கும் முறை. கோணங்கள், என தனித்துவமான பாணியைக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு காட்சித்துணுக்கைக் கண்டாலும் இது வெஸ் ஆண்டர்சன் படம் என எளிதாகச் சொல்லிவிடலாம். அப்படி அவரது முத்திரை எல்லாக் காட்சிகளிலும் இடம்பெறுகிறது.

சினிமா எனும் கலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இது போன்ற படைப்புகள் கொண்டாடப்பட வேண்டியவை. படம் பார்க்கும் நாற்பது நிமிஷங்களும் தேர்ந்த கதைசொல்லியின் முன்பாக அமர்ந்து கதை கேட்பது போல வியப்போடிருக்கிறோம். நம் கண்முன்னே கதை சொல்பவன் மாயத்தை நிகழ்த்துகிறான். நடிகர்கள் நேரடியாகக் கேமராவை பார்த்துப் பேசுகிறார்கள். அவர்களே கதை சொல்பவர்களாகவும் கதாபாத்திரங்களாகவும் மாறுகிறார்கள். ஹென்றி சுகர் நல்லவனுமில்லை. கெட்டவனுமில்லை. நாம் ஹென்றி சுகர்களின் காலத்தில் வாழுகிறோம். அதையே வெஸ் ஆண்டர்சன் நினைவூட்டுகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2023 02:56

September 28, 2023

துரோகத்தின் வெளிச்சம்

ஃபிளெமிஷ் ஓவியர் பீட்டர் பால் ரூபன்ஸ் வரைந்த சாம்சன் மற்றும் டிலீலா ஓவியம் நிகரற்ற அழகுடையது.

அந்த ஓவியத்தில் டிலீலாவின் மடியில் தலைவைத்து சாம்சன் துயில்கிறான். அப்போது அவன் தலைமயிரை துண்டிப்பதற்காகக் காட்டிக் கொடுக்கிறாள் டிலீலா. வாசலுக்கு வெளியே பெலிஸ்திய வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் டிலீலாவின் இடது கை சாம்சனின் வலது தோள்பட்டையின் மேல் உள்ளது, மறுகை விலகி இருக்கிறது. தனது செயலை முழுமனதோடு அவள் செய்யவில்லை என்பதன் அடையாளம் போலவே சித்தரிக்கபட்டுள்ளது.

டிலீலாவின் திறந்த மார்பகங்கள். குனிந்த தலை. கவிழ்ந்த பார்வை. அவளது ஆடையின் வனப்பு. ஆழ்ந்து உறங்கும் சாம்சன் திடகாத்திரமான உடற்கட்டுடன் காணப்படுகிறான். ஆனால் அவன் துயிலும் நிலை தாயின் மடியில் உறங்கும் சிறுவனைப் போலிருக்கிறது.

இந்த ஓவியத்தில் மெழுகுவர்த்தி ஏந்திய முதியவள் நிற்கிறாள். அவள் காட்டும் வெளிச்சத்தில் தான் தலைமயிரை துண்டிப்பது நடக்கிறது. அந்தச் சுடர் துரோகத்தின் வெளிச்சமாக ஒளிர்கிறது. முதியவளின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை மிகத்துல்லியமாக ரூபன்ஸ் வரைந்திருக்கிறார்.

பழைய ஏற்பாட்டுக் கதையிலிருந்த சாம்சன் டிலீலா காதலின் காட்சியை ரூபன்ஸ் வரைந்திருக்கிறார். இணையற்ற வீரனான சாம்சனின் பலம் அவனது தலைமயிரில் இருக்கிறது. அதைத் துண்டிக்கவே டிலீலா உதவி செய்கிறாள். பழைய ஏற்பாட்டில் விளக்கு ஏந்திய முதியவள் இடம்பெறவில்லை. ஆனால் அவளை வரைந்திருப்பதன் மூலம் காட்சிக்கு உயிர்கொடுத்திருக்கிறார் ரூபன்ஸ்

இத்தாலிய ஒவியர் கரவாஜியோ பாணியில் ஒளியை வரைந்திருக்கிறார். வெளியே நிற்கும் காவலர்கள் ஏந்திய மெழுகுவர்த்தியிலிருந்து வரும் வெளிச்சம் எத்தனை அழகாக இருக்கிறது. சாம்சன் கிரேக்க சிற்பம் போல உடற்கட்டுக் கொண்டிருக்கிறான். அவன் தனது இடையில் மிருகத்தோலை மட்டுமே அணிந்திருக்கிறான் டிலீலா வெள்ளை நிற ஆடையுடன் சிவப்பு நிற சாடின் ஆடையை அணிந்துள்ளார் டிலீலாவின்உ தடுகள் எதையோ சொல்ல முயலுவது போலிருக்கின்றன. அவளது பொன்னிறக் கூந்தல். ஏறிட்ட நெற்றிமேடு. மூக்கின் சிறுவளைவு, உதட்டுக்குழி, கழுத்துமடிப்பு, தளர்ந்த மார்பகங்கள். கால்விரலின் நகலட்சணம். டிலிலாவின் ரம்மியமான சிவப்பு உடை, விலையுயர்ந்த கம்பளம் மற்றும் ஊதா நிற ஆடைகள், அதே போல் மென்மையான வெளிச்சம் என அனைத்தும் மகிழ்ச்சியின் உணர்வையும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன.. பின்புலத்திலுள்ள இரண்டு கண்ணாடி குடுவைகள் மிகத்துல்லியமாக வரையப்பட்டுள்ளன. அறையின் இடதுபுறத்தில் வீனஸ் மற்றும் மன்மதன் சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனது கணவனைக் காட்டிக் கொடுக்கும் டிலீலாவின் முகத்தில் மகிழ்ச்சியில்லை. ஆனால் அவள் பின்னால் நிற்கும் முதியவள் முகத்தில் விசித்திரமான மகிழ்ச்சி தென்படுகிறது. குறிப்பாகக் கிழவின் ஒற்றைப்பல். ஒளிரும் கண்கள் சுருக்கம் விழுந்த முகம், அவளது நரைக்காத கேசம் வெளிச்சத்தைக் கையால் மறைத்து சாம்சன் தலைபக்கம் அவள் காட்டும் விதம் என முதியவள் தனித்துவமாக ஒளிருகிறாள்.

கத்திரிக்கோலுடன் நிற்கும் பெலிஸ்திய முடிதிருத்துபவன், சாம்சனின் மயிர்கற்றையை இரண்டு விரல்களால் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஏதோ கனவில் ஆழ்ந்திருப்பவன் போலச் சாம்சனின் கண்கள் சொருகியிருக்கின்றன. உறக்கத்தில் கைவிரல்கள் மடங்கியிருப்பதை வரைந்திருக்கிறார் ரூபன்ஸ். காதலும் துரோகமும் இணைந்த அந்த இரவிற்குள் நாமும் சாட்சியமாக நிற்கிறோம். இந்தக் காட்சி அமைதியானதாகத் தோன்றினாலும் அதன் அடியில் பதற்றம் மறைந்திருக்கிறது. ஒருவேளை சாம்சன் துயில் கலைந்து எழுந்துவிடுவானோ என நமக்கே தோன்றுகிறது. டிலீலா அவன் முதுகில் கைவைத்திருப்பவது உறக்கத்திலிருந்து அவன் விழித்துவிடாமல் இருக்கத்தானோ..

ரூபன்ஸ் தனித்துவமான நிறம், இயக்கம், மற்றும் ஒளியமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தனக்கென ஓவிய பாணியை உருவாக்கியவர். பதினாறாம் நூற்றாண்டினை சேர்ந்த இந்த ஓவியம் தற்போது லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் உள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2023 07:28

September 27, 2023

நூறு சிறுகதைகள் / நூறு உரைகள்

அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் எனது நூறு சிறுகதைகள் குறித்துத் தமிழ்த்துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள். வாசகர்கள் இணைய வழி உரை நிகழ்த்துகிறார்கள். இதனைப் பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்கிறார்.

இணைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

•••

விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம்.

இணைய வழி நூற்பொழிவு

17.09.2023 அன்று முதல் 20.11.2023 வரை நடைபெற உள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனின் நூறு சிறுகதைகள் என்ற தலைப்பில் நிகழ உள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏதேனும் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து பத்து நிமிடங்கள் பேச வேண்டும்.

பேச விரும்புவோர்

தாங்கள் தேர்வு செய்த கதையின் பெயரையும், தங்கள் விபரத்தையும் கீழ்க்கண்ட புலனக் குழுவில் இணைந்து பதிவிடுக.

https://chat.whatsapp.com/ITvubn6Uay4KUZtA3OKtVk

நிகழ்வு zoom செயலி வழியாக நடைபெறும். உரை youtube இல் பதிவேற்றம் செய்யப்படும். பேசியவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 27, 2023 02:16

September 26, 2023

கேலிச்சித்திரங்களின் உலகம்.

லியா வோல்சோக் இயக்கிய Very Semi-Serious ஆவணப்படம் நியூயார்க்கர் இதழில் வெளியான கேலிசித்திரங்கள் குறித்துப் பேசுகிறது.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தாங்கள் வரைந்த புதிய கேலிச்சித்திரங்களுடன் ஓவியர்கள் நியூயார்க்கர் அலுவலகம் வருவது வழக்கம். யார் வேண்டுமானாலும் தாங்கள் வரைந்த ஓவியத்துடன் வரலாம். அந்தக் கேலிச்சித்திரங்களிலிருந்து பதினைந்தை அந்த வாரத்திற்காகத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யும் பணி சவாலானது. தேர்வாளரான ராபர்ட் மான்கோஃப் அனைத்துக் கேலிச்சித்திரங்களைப் பரிசீலனை செய்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்கிறார். ஒரு கார்ட்டூனிற்கு ஆயிரம் டாலர் வரை பணம் தருகிறார்கள்.

தி நியூயார்க்கர் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களின் வரலாறு மற்றும் அதன் தேர்வு குறித்து இந்த ஆவணப்படத்தில் மான்கோஃப் விவரிக்கிறார். பல்வேறு ஓவியர்களின் அனுபவங்களும் இதில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்பு வெளியான தி நியூயார்க்கர் இதழின் அட்டையில் கேலிச்சித்திரம் இடம்பெறவில்லை. அந்த இதழில் ஒரேயொரு கேலிச்சித்திரம் மட்டுமே வெளியாகியிருக்கிறது. அதன் தொடர்ந்த வாரங்களில் எது போன்ற கேலிச்சித்திரங்களை வெளியிட்டார்கள் என்பதைப் பற்றி மான்கோஃப் விவரிப்பது சிறப்பானது.

71 வயதான மான்கோஃப், 1977 ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கரில் தனது கேலிச்சித்திரங்களை வெளியிட்டு வருகிறார், அத்தோடு 1997 ஆம் ஆண்டு முதல் கார்ட்டூன் எடிட்டராகவும் செயல்பட்டு வருகிறார்.

நியூயார்க்கர் இதழில் எது போன்ற கேலிச்சித்திரங்களை வெளியிட வேண்டும் என்பதற்குச் சில கட்டுப்பாடுகள், வழிமுறைகள் இருக்கின்றன அவற்றைத் தான் மாற்றி அமைத்ததாக மான்கோஃப் கூறுகிறார்

நியூயார்க்கின் வீதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். காரணம் அதே காட்சிகள் கார்ட்டூனிஸ்ட் பார்வையில் எப்படிக் கேலிச்சித்திரமாக உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே.

கேலிச்சித்திரம் வரைபவர்கள் நம்மில் எவரும் பார்க்காத விஷயங்களைப் பார்ப்பார்கள். கேலியாக அதைச் சித்தரிப்பார்கள். பழக்கமான காட்சிகளை விசித்திரமாக்குகிறார்கள் என்கிறார் மான்கோஃப்

மான்கோஃப்பும் அவரது மனைவியும் தங்கள் மகனின் மரணத்தை நினைவுபடுத்தும் பகுதி உணர்ச்சிப்பூர்வமானது.

கார்ட்டூனிஸ்ட்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் கருக்களைத் தேர்வு செய்யும் முறை. தொட்ர்தோல்விகள், அதிலிருந்து மீண்டு தங்கள் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல் எனக் கேலிச்சித்திரங்களுக்குப் பின்னுள்ள அறியாத உலகை படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

கேலிச்சித்திரங்களின் கீழே எழுதப்படும் ஒற்றை வரி முக்கியமானது. அதற்காகப் போட்டி நடத்துகிறார்கள். சிறந்த ஒற்றைவரியை தேர்வு செய்து பரிசு தருகிறார்கள்.

இதழின் முதல் கேலிச்சித்திரம் துவங்கி சமீபத்திய இதழின் கேலிச்சித்திரம் வரை அடைந்துள்ள மாற்றத்தை. இதழுடன் இணைந்து பணியாற்றும் ஓவியர்கள் வழியாக வெளிப்படுத்துகிறார்கள். விலங்குகளை கேலிப்பொருளாக கையாளும் முறை இத்தனை ஆண்டுகளிலும் மாறவேயில்லை என்பது வியப்பளிக்கிறது.

தி நியூ யார்க்கர் இதழில் வெளியான கேலிச்சித்திரங்களுக்கு வந்த மதம் மற்றும் அரசியல் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. கேலிச்சித்திரங்களின் வழியே வெளிப்படும் அரசியல் முக்கியமானது. சுதந்திரமான எண்ணங்களை அதில் வெளிப்படுத்தமுடியும் என்கிறார் பாப்.

சமகாலத்தைக் கேலி செய்யும் இந்தக் கேலிச்சித்திரங்கள் காலம் கடந்தும் இன்றும் அதே நகைச்சுவையை வெளிப்படுத்துகின்றன. இதில் அமெரிக்காவின் மனசாட்சி வெளிப்படுகிறது என்கிறார் ரோஸ் சாஸ்டின். அது உண்மையே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 26, 2023 20:21

September 24, 2023

காட்சிகளின் அழகியல்

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் – குறித்த அறிமுகம்

மீ. சித்ரா ராஜம்.

உலகச் சினிமாவை நேசிக்கும் பார்வையாளனுக்கும், உலகச் சினிமாவே தெரியாத சாமானியனுக்குமான அருமையான புத்தகம் .இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து எஸ்.ரா சொன்ன படங்களைத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்ததால் இந்தப் புத்தகத்தை முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

ஆயினும் ஓரிரண்டு படங்களே பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிட்டுள்ள ஒரு படத்தைக் கூடக் கடந்து செல்ல முடியாமல் ஒரு வரியையேனும் நானும் இப்பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேர்ந்த கலை நேர்த்தியுடன் ஆழமான உணர்ச்சிகள், செறிவான அழகியல் சார்ந்த படங்களை எஸ்.ரா சிறப்பாக நம் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார்.

அகிரா குரோசாவா படங்களில் அதிகம் பேசப்படாத படம் l live in fear.

அணு ஆயுத வீச்சில் ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகியில் பல லட்சம் மக்கள் அழிவிற்கு உள்ளானார்கள். அதைக் குறித்த பயம் ஜப்பானின் எளிய மனிதர்கள் மனதிலிருந்து மறையவில்லை என்பதை மிக வலிமையாகக் குரோசாவா இப்படத்தில் சொல்லி இருக்கிறார். திரைக்கதையை நுட்பங்களோடு எஸ்ரா அவர்கள் விவரிக்கும் விதம் நாம் படத்தைக் காண வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. உதாரணமாகப் படம் எங்கும் பின்புலத்தில் கேட்கும் சைரனொலி மக்களின் சிதைவுற்ற மனதின் வெளிப்பாடு. இயல்பான வாழ்வு சிதைந்து போய்ப் புறநெருக்கடிகளுக்குள் மக்கள் வாழ்கிறார்கள் என்பதைப் போர் விமானம் சீறிட்டு போகின்ற ஓசை, மிதமிஞ்சிய வெக்கை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம் ஆகியவை காலத்தின் குறியீடு , படத்தில் வரும் ஆண்கள் யாவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் இயல்பான எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள் என்பது போன்ற நுட்பங்களை ஒரு தேர்ந்த விமர்சகராகப் பதிவு செய்கிறார்.

சாமுராய்கள் என்றாலே சாவுக்கு அஞ்சாத போர் வீரர்கள் என்ற பிம்பத்தை உடைத்துத் தனது ஏழு சாமுராய்கள் படத்தில் பசித்திருக்கும் சாமுராய்களைக் காட்டுகிறார் அகிரா குரோசாவா. சாமுராய்கள் வாள்வீரர்களாகப் புகழ்பெற்றிருந்த காலத்தை விட்டுவிட்டு அவர்கள் வீழ்ச்சி அடைந்த 16ஆம் நூற்றாண்டை தனது கதைக்களமாகத் தேர்வு செய்திருக்கிறார். இப்படம் குறித்து விரிவாகவும் சிறப்பாகவும் எழுதியுள்ளார் எஸ்ரா.

Quest for fire என்ற படம் மனிதர்களுக்கும் நெருப்பிற்குமான நீண்ட உறவை பேசுகிறது.80 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதகுலம் நெருப்பைக் கைவசப்படுத்த மேற்கொண்ட போராட்டத்தின் கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்ல முடிந்திருப்பது படத்தின் வெற்றி.

மிலாஸ் ஃபோர்மனின் Amadeus திரைப்படம் ஒரு இசை காவியம். இசை மேதை மொசார்ட்டின் வாழ்வினை விவரிக்கும், இப்படம் அவரை மிகவும் வெறுத்த மூத்த இசை கலைஞரான ஆண்டோனியா சலேரியின் தற்கொலையில் துவங்கி அவர் நினைவூட்டத்தின் வழியே மொசார்ட்டின் மேதமையை வெளிப்படுத்துகிறது.

Caterpillar என்ற ஜப்பானிய திரைப்படம் போரில் கை கால்கள் வெட்டப்பட்டுத் தனது சொந்த ஊருக்கு திரும்பும் குரோகவா என்ற ஜப்பானிய ராணுவ வீரனின் காமமும், பசியும், பிணியும் ,அவன் மனைவி ஒரு பௌத்த துறவி போல அவனைச்சகித்துக் கொள்வதையும், யுத்தம் என்ற அதிகாரத்தின் கோரப் பசி போர் முனையில் உள்ள வீரர்களை விடவும் அப்பாவி பெண்களையே அதிகமாக வன்முறைக்கு உட்படுத்திச் சிதைத்து அழிக்கிறது என்பதையும் வலிமையாகச் சொல்கிறது.

A thousand years of good prayers. அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு மணவிலக்காகி தனித்து வாழும் மகளைக் காண்பதற்காகச் சீனாவில் இருந்து வரும் அவளது வயதான தந்தைக்கும் அவளுக்குமான உறவு மவுனத்தின் வழியே கவித்துவமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது .

The grocer’s son என்ற french திரைப்படம் வேனில் ஊர் ஊராகச் சென்று நடமாடும் பல சரக்கு நடத்தும் தனது அப்பா இதய நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவரைப் பார்க்க வரும் அன்டோனைப் பற்றியது.. இந்தப் படம் தனிமையின் வலியை பதிவு செய்தாலும், உறவுகள் கசந்து போன வாழ்க்கையில் பயணமும், அர்ப்பணிப்பு மிக்க வேலையுமே மீட்சி தருவதாக உள்ளன என்பதை அடையாளம் காட்டுகிறது.

இந்த நூலில் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட படங்களை விவரிக்கிறார் எஸ்.ரா.

படங்களின் ஈரம் மாறாத உரையாடல்கள், இசை, காட்சிகளின் அழகியல் என எஸ்.ரா குறிப்பிட்ட எல்லாம் என் மனதில் இன்னும் ததும்பிக் கொண்டே இருக்கின்றன.

நல்ல சினிமா எப்போதுமே உரையாடல்களை விடவும் காட்சியை அதிகம் நம்புகிறது .காட்சியின் உண்மையில் அது சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகிறது. ஒரு மௌனத்தை உருவாக்கி பார்வையாளனுக்குக் கதாபாத்திரத்தின் அகத்துயரை ,வலியை, மேன்மையை, மகிழ்ச்சியை எளிதாகப் புரிய வைக்கிறது.

அதை இங்கே எழுத்தில் காட்சிப்படுத்திய எஸ்.ராவுக்கு Hats off.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2023 23:03

கரூர் சிந்தனை முற்றம்

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற சிந்தனை முற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை ,திண்டுக்கல், சேலத்திலிருந்தும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.

சக்தி நர்சிங் கல்லூரி மற்றும் சிறகுகள் எப்எம் தலைவர் சிதம்பரம் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக உபசரித்தார். 

நூலகர் சிவகுமார் கரூர் மாவட்ட மைய நூலகத்தினை முன்மாதிரி நூலகமாக உருவாக்கியுள்ளார். குளிர்சாதனவசதி கொண்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

நூலகப்பணிக்கு நிறையக் கொடையாளிகள் முன்வந்து  பொருளுதவி செய்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வில் நான் கலந்து கொள்ள முக்கிய காரணியாக இருந்து உதவிய நண்பர் மணிகண்டனுக்கு நன்றி. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து அது குறித்த செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள். ஊடக நண்பர்கள். நூலக வாசகவட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.

நிகழ்வில் தீபம் கலர்லேப் சங்கர், ஆசிரியர் முரளி, மற்றும் பரணி கல்வி குழுமம் ராமசுப்ரமணியன் ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

கரூரின் தொன்மை மற்றும் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினேன். நிகழ்வின் இறுதியில் வாசகர்களுடன் உரையாடல் நடைபெற்றது. நல்ல கேள்விகளை எழுப்பினார்கள். குறிப்பாக டாக்டர் ரமேஷ் எழுப்பிய கேள்வி மிகவும் முக்கியமானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 24, 2023 20:32

September 20, 2023

தேவராஜின் உலகம்

நிமித்தம் நாவல் – வாசிப்பு அனுபவம்:

மரு. நோயல் நடேசன்

கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது, “அவன் ஒரு சகுனி” என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை.

இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என ஆராய்வது தொல்பொருள் ஆய்வாளர்களின் வேலை. அல்லது தேவை. தற்காலத்தில் அரசியல்வாதிகள் அரசியலுக்காக ராமன் பிறந்த இடம், ராவணன் வாழ்ந்த இடம் எனத் தோண்ட முனைவார்கள். இது காவியங்களை எழுதியவர்களின் கற்பனைத் திறத்தை அவமானப்படுத்தும் விடயங்கள் என்பதால் அவை நமக்குத் தேவையற்றவை.

நான் சொல்வது இந்திய இதிகாசங்களுக்கு மட்டும் உரித்தானதல்ல. கிரேக்க இதிகாசங்களுக்கும் பொதுவானது. ராமன், அர்ச்சுனன் போன்ற இதிகாச பாத்திரங்களை, தற்காலத்தில் தங்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பவர்களாலும் மறக்க முடியாது.

அதேபோல் ஹோமரின் ஆக்கிலிஸ், ஒடிசியஸ் போன்றவர்கள் மேல் நாடுகளில் பல எழுத்தாளர்களை ஈர்த்திருக்கிறார்கள். பல வாசகர்களை கவர்ந்ததால், பெண் பாத்திரங்கள் சீதை, பாஞ்சாலி, ஹெலன் பெனிலப்பி போன்றோர் இன்னமும் எத்தனயோ பெண்களின் பெயர்களாக உலகம் முழுவதும் வலம்வருகின்றன.

இதிகாசப் பாத்திரங்களின் நடத்தைகளையும், அவர்களின் மனஉணர்வுகளையும் வார்த்தைகளையும் நாம் வாசித்து அறியும்போது, அவர்களை எங்களுக்கு அறிந்தவர்களாக உணர்கிறோம். எங்கள் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைவிட இந்த பாத்திரங்களை நாம் அறிந்துகொள்கிறோம். பாத்திரங்களை நாம் மனதார நெருங்குவதால் அவர்கள் எம்மில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். எமது மனச்சாட்சியில் பதிவாகி நிழலாக நம்மைத் தொடர்கிறார்கள். ஏன் நம்மை வழி நடத்துகிறார்கள் எனவும் சொல்லலாம்.

இதிகாசப் பாத்திரங்கள் மட்டுமல்ல, தற்போதைய நாவல் இலக்கியத்திலும் பாத்திரங்களே முக்கியமானவை. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலின் தாக்கத்தால் குந்தவை, நந்தினி வானதி எனத் தங்கள் பெண் பிள்ளைகளுக்குப் பெயர் வைத்த பெற்றோரை எனக்குத் தெரியும். என்னோடு மூன்று நந்தினிகள் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்தார்கள்.

தற்காலத்தில் நான் படித்த தென்னிந்திய நாவல்களில் என் மனதில் பதிந்திருக்கும் சில பாத்திரங்கள் உண்டு. அவைகளில் தி. ஜானகிராராமனின் யமுனாவும் அலங்காரத்தம்மாளும் மறக்கமுடியாத பாத்திரங்கள். அதேபோல் இமையத்தின் கோவேறு கழுதையில் ஆரோக்கியம் எஸ். பொன்னுத்துரையின் சடங்கில் செல்லபாக்கியம் என்பன என் நினைவில் வாழ்பவர்கள்.

நாவல் இலக்கியத்தின் அடிப்படை உண்மையைப் புரியாத பலர் எழுதும் நாவல்கள் இக்காலத்தில் சம்பவங்களின் தொகுப்பாகவே வருகின்றன. இது இக்காலத்துக்கு மட்டும் பொதுவானது அல்ல. நாவலைப் பற்றி அறிந்தவர்கள் கூட பிரசார நோக்கத்திற்காக எழுதும்போது இந்தப் பிரச்சினை வருகிறது. இதில் முக்கிய குற்றவாளிகள் சோசலிச யதார்த்தவாதமெனப் பேசிய மார்க்சிய விமர்சகர்களே. இலங்கை, இந்தியாவில் மக்கள்மீது நடத்தப்படும் ஒடுக்கு முறையை வெளிப்படுத்துவதற்காக, நடந்த சம்பவங்களைச் சித்திரித்து, அதன் மூலம் அவர்களது கொள்கை விளக்க நாவல்களை நம் முன்பாக வைப்பார்கள்.

ஆனால், அங்கு ஒரு சிறந்த பாத்திரத்தைப் படைக்க தவறியிருப்பார்கள். அதை அறிவு கெட்டதனமாக நாம் இன்றும் கொண்டாடுகின்றோம். பல ஒடுக்குமுறை, போர் சம்பவங்களை நாங்கள் பத்திரிகைகளில் படித்திருப்போம், கேட்டிருப்போம். ஒரு சம்பவத்தை மறு சம்பவம் மறக்கப் பண்ணிவிடும். புதிய போர் பழையபோரை விழுங்கிவிடும்.

நாம் கேட்டு வளர்ந்த, முப்பது வருடங்கள் நடந்த வியட்நாம் போரை வியட்நாமே தற்போது நினைப்பதில்லை. தற்போது அமெரிக்காவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் வியட்நாம் இணைந்துள்ளது.

தினமும் இந்தியாவில் தலித் மக்களுக்கு நடக்கும் பல விடயங்களை தற்போது முகநூல் வழியாக அறிந்து கொள்கிறோம். இப்படியான விடயங்களை வைத்து உருவாக்கிய நாவல்களின் பெயர்கள், நாம் பார்த்த தமிழ்ப் படங்களாக அடுத்த நாள் மறந்துவிடும். அதேபோல் நமது இலங்கை நாட்டில் போர் சம்பவங்களை, இன வன்முறையை, இயக்க பிளவுகள் மற்றும் சிறைச் செய்திகளை வைத்துப் பல நாவல்கள் வந்துள்ளன. அவற்றைப் படிக்கும்போது, அவை பற்றித் தெரியாதவர்களுக்குப் புதிதாகவும், ரசனையாகவும் இருக்கும்.

தமிழக இலக்கியத் தளத்தில் புலம் பெயர்ந்த பல தமிழ் எழுத்தாளர்கள் பேசப்படுவதற்கு அதுவே காரணம். அதற்காக நடக்காத விடயங்களை எழுதியவர்களும் உண்டு. ஆனால், ஈழத்தவர்களான நமக்கு அவை பார்த்த, கேள்விப்பட்ட, பத்திரிகையில் படித்த அன்றாட சம்பவங்கள்தான். பத்திரிகையாளரான டி.பி.ஸ். ஜெயராஜ் எத்தனையோ போர் சம்பவங்களை விவரித்துக் கடந்த முப்பது வருடத்தில் தெளிவாக எழுதியுள்ளார். ஆனால், அவை இலக்கியமல்ல.

ஏன்?

அங்கு பாத்திரங்கள் இல்லை என்பதால்.

சம்பவங்களை பின்னணியாக வைத்து மறக்க முடியாத பாத்திரங்களை பலர் படைத்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் நான் படித்தது: இந்திய சுதந்திரத்தின் பின்பான பிரிவினை என்ற சம்பவத்தைப் பின்னணியாக எடுத்த போதிலும், போல்வார் மஹம்மது குன்ஹி தனது முத்துப்பாடி சனங்களின் கதையில் சாந்தப்பா என்ற அழகிய பாத்திரத்தை சித்திரித்திருப்பார். அதனை நாம் மறக்க முடியாத வகையில் படைத்திருப்பார்.

சம்பவங்களை பின்னணியாக வைத்து மறக்க முடியாத பாத்திரங்களை பலர் படைத்திருக்கிறார்கள். அதில் சமீபத்தில் நான் படித்தது: இந்திய சுதந்திரத்தின் பின்பான பிரிவினை என்ற சம்பவத்தைப் பின்னணியாக எடுத்த போதிலும், போல்வார் மஹம்மது குன்ஹி தனது முத்துப்பாடி சனங்களின் கதையில் சாந்தப்பா என்ற அழகிய பாத்திரத்தை சித்திரித்திருப்பார். அதனை நாம் மறக்க முடியாத வகையில் படைத்திருப்பார். இதுபற்றி இவ்வளவு தூரம் விளக்கவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், நான் கானல் தேசத்தில் ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கி தற்கொலை போராளியாகப் படைத்தபோது, அது உண்மையில்லை என்று ஐபிசியில் சில பெண்கள் குத்தி முறிந்தார்கள். அது காலச்சுவடு பதிப்பித்த நாவல் என்றும், பாத்திரங்கள் கற்பனையின் உருவாக்கம் எனவும் நம்ப மறுக்கும் சமூகத்தில் நாம் மீண்டும் மீண்டும் எழுதவேண்டும்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நிமித்தம் நாவலில் ஒரு அரைச் செவிடனான தேவராஜ் பாத்திரம், தமிழ் நாவல் உலகில் தொடரும் பாத்திரமாக வரும் என நினைக்கிறேன். அல்லது அடிக்கடி பேசப்படவேண்டும் என விரும்புகிறேன். செவிடாக இருப்பது இவ்வளவு கடினமானதா என்று நினைக்கும் அளவுக்குப் பாத்திரத்தின் துன்பம் தொடர்கதையாக நகருகிறது.

எஸ் . ராமகிருஷ்ணன், காது கேளாதவன் சமூகத்தில் மட்டுமல்ல பாடசாலையில் நண்பர்கள், ஆசிரியர்கள் மத்தியில், இவற்றிற்கு மேலாகத் தந்தையால் மற்றும் குடும்பத்தில் சகோதரர்களால் எவ்வளவு புறக்கணிக்கப்படுகிறான் என்பதை விவரமாகச் சொல்வதன் மூலம், வாசகர்களின் மனதில் அவனைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

பெண்களை இயல்பிலேயே தயாள குணம் கொண்டவர்கள் என்று நினைப்போம். ஆனால், நிமித்தம் நாவலில் வரும் பெண்கள் பல இடங்களில் அவனது காது கேட்காத தன்மையையும் அவனது காம ஆசையையும் முதலாக வைத்துச் சுரண்ட முயல்கிறார்கள். சகோதரர்கள் சொத்து, திருமணம் என்று வரும்போது செவிடனை யார் திருமணம் செய்ய முன் வருவார்கள் எனக் கேட்பதுடன், அவனுக்குப் பணம் எதற்கு என்ற கேள்வியுடன் ஏமாற்றுகிறார்கள். வெளிப்பார்வையில் சமூகத்தின் கட்டமைப்புகள், பரஸ்பர நட்பை அடிப்படையாகக் கொண்டது. அடிப்படையில் சமூகம் ஒருவனுக்கு உதவி செய்வதைவிட, எப்பொழுதும் பலமானவர் பலமற்றவரை சுரண்டும் (cannibalistic) இயல்பைக் கொண்டது என்ற உண்மை இந்த நாவலின் அடிநாதமாக வருகிறது.

தேவராஜ் என்ற செவிட்டுப் பாத்திரம், அக்கால கற்பனாவாத நாவல்களில் அல்லது சினிமாவில் வரும் இலட்சிய கதாநாயகன் அல்ல. எந்த விதத்திலும் நேர்மையான பாத்திரமுமல்ல. அவன் சராசரியான மனிதன். தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது தன்னை நம்புபவார்களை அவன் ஏமாற்றவும் தயங்கவில்லை. எலிப்பந்தயத்தில் (Rat race) பங்குகொள்ளும் தற்போதைய சமூகத்தில் வாழும் தேவராஜ் என்ற யதார்த்தமான பாத்திரப் படைப்பு இந்த நாவலில் முக்கியமானது.

சிறு வயதிலிருந்தே ராமசுப்பு என்ற நண்பனை மற்றும் இடையில் சந்திக்கும் சுதர்சனம் ஆசிரியர், அவரது மனைவியான ரீச்சர் மற்றும் குறுகிய காலத்தில் அச்சுத்தொழிலில் ஒன்றாகப் படித்த ஜோசப் என்பவர்களைத் தவிர மற்றவர்கள் எவரிடமுமிருந்து ஆதரவோ அன்போ கிடைக்காதவன் தேவராஜ்.

நாவலில் தேவராஜின் முக்கிய வில்லனாகத் தெரிவது அவனது தந்தையே. அவர் சிறு வயதிலிருந்து அவனது உளநிலையை நாசமாக்குகிறார். பல குடும்பங்களில் குழந்தைகளை மனரீதியில் நாசமாக்குவது பெற்றோர்களே. அவர்கள் தங்களது நினைவுகள், ஆசைகள், கனவுகளுக்கேற்ப குழந்தைகளை, எப்படி நாய் பழக்குபவன் வேட்டைக்கு காவலுக்கு துப்பறிவதற்கு எனப் பழக்கி எடுப்பதுபோல் வளர்த்தெடுக்க நினைக்கிறார்கள். அது முடியாதபோது இவன் நாசமாய் போவான் எனத் தினம் தினம் திட்டி அவனை முன்னேறவிடாமல் செய்வதற்குத் தேவையான சகல முயற்சிகளையும் எடுக்கிறார்கள்.

அன்னையால், தந்தையைத் தடுக்க முடிவதில்லை அல்லது அவர்களும் ஒரே தடத்தில் குடும்ப ஒற்றுமையைக் காக்க ஓடுகிறார்கள்.

தேவராஜின் தந்தைக்கு அடுத்து முக்கியமான பாத்திரம் பாடசாலை நண்பனான ராமசுப்பு. ஒவ்வொரு தருணத்திலும் தேவராஜுக்கு உதவுகிறான். அவனைப்போல் ஒரு நல்ல நண்பன் எல்லோர் வாழ்விலும் கிடைக்கவேண்டும் என இந்த நாவலை வாசிப்பவர்கள் நினைப்பார்கள். மேற்கூறிய மூன்று பாத்திரங்களும் முழுமையான பாத்திரங்கள். நாவலின் ஓட்டத்தை தீர்மானிப்பவர்களும் இவர்களே

தேவராஜ், பிற்காலத்தில் திருமணத்திற்கு நண்பர்களை அழைப்பதும், அவர்களில் பலர் அவனது திருமணத்தைப் புறக்கணிப்பதாகவும் எண்ணி மனங்குமைவதுடன் தொடங்கிய நாவல், பின்னோக்கி நினைவோடையாக மலர்கிறது. இதனால் ஆரம்ப வாழ்கையில் வந்த பல பாத்திரங்கள் நீண்ட ரயில் பயணத்தில் வந்த பயணிகளாக வழியில் உள்ள ரயில் நிலையங்களில் இறங்கி விடுகிறார்கள்.

செவிட்டுத்தன்மையால் தேவராஜ் புறக்கணிக்கப்படுவதாலும் மற்றவர்கள் போல் அவனது ஆசைகளை நிறைவேற்றி வாழமுடியாது ஒதுக்கப்படுவதால் அவனது மனம் பல தடவை தரையில் தவறிவிழும் கண்ணாடிப் பாத்திரமாக சிதறுவதை நாவலில் பார்க்க முடிகிறது. காமத்தின் உந்துதலால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்கான அவனது நியாயமான ஆசை தொடர்ந்தும் பல வழிகளில் பலரால் சிதைக்கப்படுகிறது. அவன் விரும்பியது அமையாது நாற்பத்தேழு வயதில் ஒரு திருமணம் அமைகிறது. அந்த திருமணத்தை ஒரு அபத்த நாடகமாக தேவராஜ் எண்ணுவதாக கதை முடிவது எனக்குப் பிடித்தமான முடிவாகும்.

நாவலில் ஒரு குறையாகப் பார்ப்பது இறுக்கமற்ற தன்மை. பெரிய பெட்டியில் பொருட்களை வைத்துத் தூக்கும்போது அவைகள் நெருக்கமற்று ஒன்றோடு ஒன்று உள்ளே மோதும் உணர்வு ஏற்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை இந்த நாவலை கையில் எடுத்து சில பக்கங்களோடு வைத்துவிட்டேன். அடுத்த வருடம் எடுத்தபோது கொஞ்சம்: முன்னேறினேன். இம்முறை இலங்கை சென்றபோது மீண்டும் ஒரு புத்தகத்தை வாங்கி பயணத்தில் வாசிக்கத் தொடங்கியபோது, புத்தகம் என்னைக் கவ்விக் கொண்டது.

படித்து முடித்தவுடன் எவ்வளவு முக்கியமான நாவலைத் தவறவிடவிருந்தேன் என நினைத்தேன். அதே வேளையில் எஸ் ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளருக்கும் செம்மைப்படுத்துவதன் அவசியம் புரிந்திருக்கும். இலங்கை தமிழகம் எங்கும் எழுதும் எழுத்தாளர்களுக்கு செம்மைப்படுத்தும் Book Editor அவசியம் என்பது எனது கருத்து.

எனது புத்தக சேகரிப்பில் இரண்டு பிரதிகள் உள்ள புத்தகங்கள் மூன்றே: வொதரிங்கைட் என்ற ஆங்கில நாவல், ஒரு புளியமரத்தின் கதை. மூன்றாவது நிமித்தம் நாவலாகும்.

*****

நன்றி

அந்திமழை இணைய இதழ்.

https://noelnadesan.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2023 00:46

September 19, 2023

ஓவியக் கண்காட்சியில்

ஓவியர் ரவி பேலட்டின் ஓவியக் கண்காட்சியில் இன்று மாலை கலந்து கொள்கிறேன்

ரவி பேலட் மதுரையைச் சேர்ந்தவர். அவரது வண்ணத்தேர்வும் கோடுகளும் தனித்துவமானவை. மினிமலிசம் பாணியில் அவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. தற்போது டிஜிடல் ஓவியக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2023 20:43

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.