S. Ramakrishnan's Blog, page 56
September 9, 2023
கர்னலின் நாற்காலி – அறிமுகவுரை
எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தியிருக்கிறார் முனைவர். சு.வினோத். இவர் சிவகாசியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த நிகழ்வு சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தில் நடைபெற்றிருக்கிறது.
சிறப்பாக உரையாற்றிய பேராசிரியர் வினோத்திற்கு எனது அன்பும் நன்றியும்.
இதனைக் கவனப்படுத்திய சாத்தூர் ஆறுமுகசாமிக்கு அன்பான நன்றி.

தேசாந்திரி பதிப்பகம்
ரூ 350
September 7, 2023
டால்ஸ்டாயைக் கொண்டாடுகிறார்கள்
தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்திவரும் பொன். மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயபால், அருண்பிரசாத் மற்றும் ராம்குமார் இணைந்து நூலக மனிதர்கள் என்ற வாசிப்பு இயக்கத்தை உருவாக்கியுள்ளார்கள்



இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த புத்தகங்களை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்கிறார்கள். பொது நூலகத்திற்குத் தேவையான உதவிகளை மேற்கொள்கிறார்கள். பள்ளி மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நேற்று ரஷ்ய தூதரகம் சார்பில் டெல்லியில் டால்ஸ்டாயின் 195வது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது பற்றிய செய்தியை டிவியில் கண்டேன். சென்னையில் அப்படி எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
நூலக மனிதர்கள் இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் நாளை நகர் முழுவதும் டால்ஸ்டாய் பிறந்த நாளுக்காகச் சுவரொட்டிகளை ஒட்டி அவரது நினைவைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு நான் எழுதிய மண்டியிடுங்கள் தந்தையே நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்கள்

நேற்று புத்தக வாசிப்புச் சம்பந்தமான வாசக அட்டையைத் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள்.இதற்குத் துணை நின்ற நூலகர் ராம் சங்கர் அவர்களுக்கு நன்றி
தூத்துக்குடியிலுள்ள ஒரு தேநீர் கடையிலும் வாசிப்பு அட்டை ஒட்டப்பட்டிருக்கிறது. .


பந்தலக்குடி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெயபால் அவர்கள் தலைமையில் லியோ டால்ஸ்டாய் பற்றிய கட்டுரை போட்டி நடந்துள்ளது. கட்டுரைகளை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.
அதுபோல மல்லாங்கிணறு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராம்குமார் மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை நடத்தி பரிசு வழங்கியிருக்கிறார்.

லியோ டால்ஸ்டாயின் பிறந்த நாளைக் கொண்டாடும் இவர்களை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். இலக்கிய உலகில் கூட இது போன்ற நிகழ்வு நடப்பது குறைந்து வரும் சூழலில் இவர்களின் முன்னெடுப்பு பாராட்டிற்குரியது. பொன். மாரியப்பன், ஜெயபால். ராம்குமார், அருண்பிரசாத் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.
September 6, 2023
கோமாலாவில் என்ன நடக்கிறது
மெக்சிகன் எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று. இந்நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. 122 பக்கங்கள் கொண்டது.

தேரியின் மணல்மேடுகளைப் போல நாவல் பல்வேறு மடிப்புகளைக் கொண்டிருக்கிறது. வாசிக்கையில் அந்த மடிப்புகளின் விசித்திர அழகு வியப்பூட்டுகிறது. இந்த நாவலின் பாதிப்பில் தான் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது நூற்றாண்டு காலத் தனிமை நாவலை எழுதினார் என்கிறார்கள். பெட்ரோ பரமோவின் ஒரு வாக்கியத்தைத் தனது நாவலில் மார்க்வெஸ் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்
முதல் மேஜிகல் ரியலிச நாவல் என்று கருதப்படும் இந்த நாவல் லத்தீன் அமெரிக்காவில் புதிய வகை எழுத்துமுறையை உருவாக்கியது. காலத்தின் முன்பின்னாகச் சென்று விநோதங்களை இயல்பாகவும், இயல்பை விநோதமாகவும் மாற்றிக் காட்டுகிறது
ருல்ஃபோவின் கதை சொல்லும் முறை ஆச்சரியமளிக்கிறது. கலைத்துப் போடப்பட்ட சீட்டுகள் போல நாவலில் நினைவுகள் சிதறிக்கிடக்கின்றன. கையில் கிடைத்த சீட்டுகளை நாமே அடுக்கி வரிசைப்படுத்திக் கொள்வது போலவே நினைவுகளை ஒன்று சேர்த்துக் கொள்கிறோம்
நாவல் எழுபது துண்டு துண்டான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, இந்த நாவலுக்குச் சூஸான் ஸான்டாக் எழுதிய முன்னுரை அபாரமானது. மிகக் கச்சிதமாக நாவலையும் ருல்ஃபோவின் ஆளுமையினையும் மதிப்பிடுகிறார்.

சிறந்த நாவல்கள் தனது துவக்க வரிகளால் நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளக்கூடியவை. அப்படியான ஒரு துவக்கம் தான் பெட்ரோ பராமோவிலும் காணப்படுகிறது.
நாவலின் நாயகன் யுவான் ப்ரீஷியாடோ, தனது தாயின் இறப்பிற்குப் பின்னால் தந்தையைத் தேடி கோமாலா என்ற ஊருக்குப் போகிறான். தந்தையின் பெயர் தான் பெட்ரோ பராமோ. தாயின் நினைவுகளிலிருந்து அவன் கொமாலோவைப் பற்றி அறிந்திருக்கிறான். அம்மாவின் இளமைக்காலம் அங்கே கழிந்தது. கொமாலோ இறந்தவர்கள் வாழும் ஊர் என்று அவன் அறிந்திருக்கவில்லை. அங்கே வீடுகள் காலியாக உள்ளன
உண்மையில் இரண்டு கோமாலா இருக்கிறது. கடந்தகாலத்தில் வாழும் கோமாலாவில் உயிருள்ளவர்கள் வசிக்கிறார்கள். நிகழ்காலத்தில் வாழும் கோமாலாவில் இறந்தவர்களே வசிக்கிறார்கள். இந்த விசித்திரம் தான் நாவலுக்குப் புதிய தோற்றத்தைத் தருகிறது.நாவல் பெட்ரோ பரமோவின் வாழ்க்கையைச் சுருக்கமாக மறுகட்டமைக்கிறது. அவர் வறுமையிலிருந்து விடுபட்டு கோமாலாவின் செல்வாக்கு மிக்க தலைவராக எவ்வாறு உருவானார் என்பதை படிப்படியாக அறிந்து கொள்ள முடிகிறது. கோமாலாவில் ஆவிகளின் முணுமுணுப்புகளும், உடலற்ற குரல்களும் காலியான இடத்தை நிரப்புகின்றன. நகரத்தின் வறண்ட மற்றும் வெற்று நிலப்பரப்பு மெக்ஸிகோவின் உண்மையான, தனிமைப்படுத்தப்பட்ட நிலவியலைப் பிரதிபலிக்கிறது..

ருல்ஃபோவின் கதை சொல்லும் முறை நாவலுக்கு பன்முகத்தன்மையை உருவாக்குகிறது அவர் இறந்தவர்களின் கதைகளை விவரிக்கிறார். அவை இப்போது நடப்பவை போலவே சொல்லப்படுகின்றன. ஏனெனில் கோமாலாவில் நிலத்திற்கு மேல், கீழ் என்ற பாகுபாடு கிடையாது. அங்கே நடப்பது நினைவின் நாடகம்.
நாவலில் வரும் கோமாலா பற்றிய விவரிப்புகள். வெயிலைப் பற்றி எழுதியுள்ள வரிகள். நினைவின் ஊசலாட்டத்தைத் துல்லியமாக வெளிப்படுத்தும் முறை ருல்ஃபோவின் சாதனை என்றே சொல்வேன்.
யுவான் தேடுவது தனது தந்தையான பெட்ரோ பரோமாவை ஆனால் அவன் அறிந்து கொள்வது அவனது அம்மாவின் இளமைக்காலத்தை. அவளது தோழிகளை. ஒடுக்குமுறைக்கு உள்ளான கோமாலாவின் மனிதர்களை.
பெட்ரோ பரோமாவை ஊரே வெறுக்கிறார்கள். அவன் நரகத்திற்குத் தான் போவான் என்று சபிக்கிறார்கள். உண்மையில் அவன் இறந்தபிறகு கோமாலா மொத்தமும் நரகமாக மாறிவிடுகிறது.
நாவலில் இறந்தவர்கள் பேசுகிறார்கள். நிறைவேறாத ஆசைகளுக்காக ஏங்குகிறார்கள். சண்டையிட்டுக் கொள்கிறார்கள். கல்லறைக்குள் இருந்தபடியே நட்பு கொள்கிறார்கள். பிடிக்காதவரை வெறுக்கிறார்கள். மரணத்திற்குப் பின்னும் அவர்கள் அடங்குவதில்லை. நிம்மதி கொள்வதுமில்லை இறந்தவர்களின் இத்தகைய வாழ்வினை மெக்சிகோவில் இன்றும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
ஸ்பானிய மொழியில் பரோமா என்றால் தரிசு அல்லது பாழ்நிலம் என்று பொருள். பெட்ரோ என்றால் பாறை என்று அர்த்தம். அந்தப் பெயருடைய தந்தை தனது அதிகாரத்தால் தனது ஊரையே ஆளுகிறான். அவனுக்குப் பின்பு ஊர் பாழ்நிலமாகிவிடுகிறது. நாவலின் இறுதி வரியில் அவன் பாறையைப் போலச் சரிந்து விழுகிறான்.
கோமாலாவில் என்ன நடக்கிறது என்பது புதிரானது. அந்த ஊருக்கு வரும் யுவான் தனது பயண வழியில் லாஸ் என்குவென்ட்ரோஸ் என்ற சந்திப்பில் கழுதையில் வரும் அபன்டியோ என்பவனைச் சந்திக்கிறான்.
அவனிடம் கோமாலாவிற்கு வழி கேட்கிறான். அபன்டியோ தான் அந்த வழியே செல்வதாக உடன் அழைத்துக் கொண்டு நடக்கிறான். எதற்காக யுவான் கோமாலாவிற்கு வந்திருக்கிறான் என்று அபன்டியோ கேட்கிறான்.

தனது தந்தையைத் தேடி வந்துள்ள விபரத்தைச் சொல்லும் யுவான் அவரது பெயர் பெட்ரோ பரோமா என்கிறான். இதைக் கேட்ட அபன்டியோ தானும் பெட்ரோ பரோமாவின் மகன் தான் என்று சொல்வதோடு இங்கிருப்பவர்களில் பலரும் அவரது பிள்ளைகள் தான் என்கிறான். இதை யுவானால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நாவல் முடியும் போது அந்த நிஜத்தை யுவான் புரிந்து கொள்கிறான்
கோமாலா என்பது கைவிடப்பட்ட ஊர். அங்கே யாரும் வருவதில்லை. அழுகிய ஸ்போனாரியாப் பூக்களின் நாற்றத்தால் விஷமான ஆகஸ்ட் மாத அனல்காற்று வீசும் வெயில் அடிக்கிறது. தொலைதூரத்தில் மலைத்தொடர் காணப்படுகிறது.
கோமாலா என்பது காலத்தின் கோலம் என அபன்டியோ சொல்கிறான். மொத்த நாவலையும் திறக்கும் சாவி அது தான்.
காலம் தான் கோமாலாவை இப்படியாக்கியிருக்கிறது. அது மறைவை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவேறு உலகில் மனிதர்களின் வாழ்க்கையை முன்னெடுக்கிறது.
நாவலின் துவக்கத்தில் வெயிலின் தாக்கத்தை உணர்ந்த யுவான் நல்ல வெயில் என்று சலித்துக் கொள்கிறான். ஆனால் அபன்டியோ நீங்கள் அப்படிச் சொல்லலாம். இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்கிறான். அதே நிலத்தில் வாழுகிறவர்களுக்கு வெயில் பொருட்டாகயில்லை. கோமாலா நரகத்தின் வாயில் போலிருக்கிறது என்கிறான்.
யுவான் கொமாலோவிற்குத் தங்குவதற்காக டோனா எடுவிஜஸ் என்ற பெண்ணின் வீட்டைத்தேடிப் போகிறான். அவள் அம்மாவின் தோழி. அவள் யுவானை வரவேற்கிறாள். தங்குவதற்கு அறை ஒதுக்கித் தருகிறாள். அத்தோடு அவன் வரப்போவதை டோலோரிடா சொன்னாள் என்றும் சொல்கிறாள்.
எனது அம்மா இறந்துவிட்டாரே என்று குழப்பத்துடன் யுவான் சொல்லும் போது இறந்தவர்களால் பேச முடியாது என்று நினைக்கிறாயா. டோலோரிடா எனது நீண்டகாலத்தோழி. உனது வருகையைப் பற்றி இப்போது தான் சொன்னாள் என்கிறாள்.
அவளது வீட்டினை அடையாளம் காட்டிய அபன்டியோ பற்றி யுவான் சொல்லும் போது அவன் இறந்து போய்ப பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் ஊருக்குப் புதியவர்கள் வந்தால் வழிகாட்டியாக இருக்கிறான் என்று டோனா சொல்கிறாள். விசித்திரத்தின் சுழல் பாதைக்குள் தான் நுழைந்துவிட்டதை யுவான் உணருகிறான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் செல்லும் போது டோனா அவன் தனது மகனாகப் பிறந்திருக்க வேண்டியவன். ஆனால் தனது ஒரு முடிவால் அவன் டோலோரிடாவின் மகனா பிறந்துவிட்டான் என்று பிறப்பின் புதிய ரகசியம் ஒன்றைப் பகிருகிறாள் .
அந்தப் பகுதியை வாசிக்கும் போது மகாபாரதத்தில் வரும் அம்பா அம்பாலிகா கதை நினைவிற்கு வந்தது. அதில் அம்பிகா வியாசருடன் உடலுறவு கொள்ள விரும்பாமல் தனது பணிப்பெண்ணான பராஷ்ரமியை அனுப்பி வைக்கிறாள். அந்த உறவில் பிறந்தவர் தான் விதுரன். கிட்டதட்ட அதே நிகழ்வு தான் பெட்ரோ பரோமாவிலும் நடக்கிறது. விதுரனைப் போன்றவன் தான் யுவான்.
கோமாலா விற்கு வந்த யுவான் தனது நினைவின் சுழலுக்குள் செல்கிறான். அம்மா எதற்காக அவனைக் கோமாலா அனுப்பி வைத்தாள் என்பதை நினைவு கொள்கிறான்“பெட்ரோ பரோமாவிடம் நமக்கு உரியதை மட்டுமே கேள். அவர் எனக்குக் கொடுத்திருக்க வேண்டிய ஆனால் ஒரு போதும் கொடுக்காததை மட்டுமே கேள். அவர் இத்தனை வருஷங்களாக நம்மை மறந்து இருந்ததிற்குப் பதில் சொல்ல வை“ என்கிறாள்
அவளுக்குப் பெட்ரோபரோமா இறந்து போனது தெரியாது. யுவானின் அம்மா வேண்டுவது அன்பே மட்டுமே. கோமாலாவின் அரசனைப் போல ஊரையே ஆண்டு கொண்டிருந்தவனிடம் தங்களை நிராகரித்த காரணத்தை மட்டுமே கேட்கச் சொல்கிறாள்.
பெட்ரோ பரோமா அவர்களை மட்டும் நிராகரிக்கவில்லை. அவன் காதலித்த. நெருங்கிப்பழகி குழந்தை கொடுத்த எல்லாப் பெண்களையும் அப்படித் தான் நடத்தியிருக்கிறான். அவனுக்குப் பெண்கள் ஆடையைப் போன்றவர்கள். உடுத்தி அழகு பார்த்தவுடன் வீசி எறிந்துவிடுவான். ஆனால் அவனுடன் வாழ்வதற்கு டோனாவும் ஆசைப்படுகிறாள். டோலோரிடாவும் ஆசைப்படுகிறாள். டோனாவால் தான் டோலோரிடா ஒரு இரவு பெட்ரோவுடன் கழிக்கிறாள்.

உன் அம்மா உன் பிறப்பின் ரகசியத்தை உன்னிடம் சொல்ல வெட்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறாள் டோனா. மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிப்படுவதற்காகத் தான் யுவான் கோமாலா வருகிறானோ என்றும் தோன்றுகிறது
பெட்ரோ பரோமாவின் நினைவில் டோலோரிடா இல்லை. அவன் எந்த காதலிக்கும் மதிப்பு கொடுக்கவில்லை. அவன் இச்சையால் வழிநடத்தப்படுகிறான். ஊரின் பார்வையில் அவன் மிக மோசமானவன். அவனைத் தேடி எதற்காக மகனை அனுப்பி வைக்கிறாள் டோலோரிடா. பெட்ரோ பரோமா பற்றி உலகம் அறியாத எதையோ யுவான் அறிந்து கொள்ள வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.
கோமாலாவில் வசித்தவர்களின் வாழ்க்கை விசித்திரமாகயிருக்கிறது. அந்த விசித்திரம் தான் ஊரையும் பற்றிக் கொள்கிறது. இந்த நாவலில் வரும் பாட்டி ரொகேலியா, டோனா மற்றும டோலோரிடாவின் மாற்றுவடிவங்கள் போலவே மார்க்வெஸ் நாவலில் பாட்டியும் உர்சுலாவும் இடம்பெறுகிறார்கள்.
மிகுவல் பரோமா ஒரு சிவப்பு குதிரை வைத்திருக்கிறான். அந்தக் குதிரை எப்போதும் அவனுடனிருக்கிறது. அந்தக் குதிரையும் குற்றவுணர்வில் அலைந்து கொண்டிருக்கிறது. மோசமான செயலைச் செய்துவிட்டால் விலங்குகளும் அதை நினைத்து வருந்துகின்றன என்கிறார் ருல்ஃபோ
கனவில் வரும் காட்சிகள் போலக் கோமாலாவின் நிஜம் விரிவு கொள்கிறது. யுவான் எது கனவு எது நிஜம் எனப் பிரித்து அறியமுடியாமல் குழம்பிப் போகிறான். பரோமா இறந்த போது பாதிரி அவன் நிச்சயம் நரகத்திற்குப் போவான் என்று சொல்கிறார். அவனால் மோட்சத்தை விலைக்கு வாங்க முடியாது என்றும் வாதிடுகிறார்
நாம் இறந்தவர்களால் வழிநடத்தப்படுகிறோம். அவர்கள் தங்களின் வெறுப்பை, தீராக்கோபத்தை. அநீதியை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். மரணம் ஒரு முற்றுப்புள்ளியில்லை. கோமாலாவின் இந்த நிஜம் மெக்சிகோவினைப் பற்றியது. அதன் கிறிஸ்டெரோக்களின் கலகம் பற்றியது. யுவான் ருல்ஃபோ சட்டம் பயின்றவர். தனது நாற்பத்தைந்து வயதுக்குப் பின்பே எழுத துவங்கியவர். ஒரு சிறுகதைத் தொகுப்பும் இந்த நாவலும் மட்டுமே எழுதியிருக்கிறார். மிக்க் குறைவாக எழுதி இலக்கியத்தில் பெரிய இடம் பிடித்தவர் ருல்ஃபோ. 1986 இல் ருல்ஃபோ நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்
அதைத்தான் சூஸான் ஸான்டாக் தனது முன்னுரையில் வியக்கிறார். அத்தோடு பலமுறை வாசிக்கும் தகுதியற்ற எந்த ஒரு புத்தகமும் ஒரு முறை வாசிப்பதற்கும் தகுதியற்றதே என்றும் சொல்கிறார். நான் அப்படி நினைக்கவில்லை. மாறாக ஒரு முறை வாசிப்பதும் பலமுறை வாசிப்பதும் புத்தகம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. நமது அத்தேடலை அதைத் தீர்மானிக்கிறது.
இந்த நாவலின் துவக்கம் எனக்கு எமிலி பிராண்டேயின் Wuthering Heights நாவலை நினைவுபடுத்துகிறது. அதில் வரும் மலையுச்சியில் இருந்த வீடு போன்றது தான் கோமாலா எனத் தோன்றுகிறது.
அம்மாவின் நினைவில் இருந்த கோமாலா வேறு, தான் நேரில் காணும் கோமாலா வேறு என்பதை யுவான் உணர்ந்து கொள்கிறான். ஊர் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு விதமாக உருக்கொள்கிறது. ஊரை சில மனிதர்களே நினைவுபடுத்துகிறார்கள்.தவறு தான் நாவலின் முக்கியக் குறியீடு. பல்வேறு தவறுகள் நாவலில் நடக்கின்றன. அதிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை. தவறுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு தவறும் தனக்கான வாரிசுகளை விட்டுச் செல்வதைக் காண முடிகிறது.

காமமும் அதிகாரமும் தான் கோமாலாவை ஆட்சி செய்கிறது. கோமாலாவில் யுவான் வழி தவறி வந்துவிட்டவனைப் போலவே நடத்தப்படுகிறான்.
நினைவு ஒற்றைக்குரல் கொண்டதில்லை. அது ஒரு சேர்ந்திசை என்பதை நாவலின் வழியாக நாம் புரிந்து கொள்கிறோம்
நாவல் முழுவதும் பல்வேறு குரல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம். அவை பிரித்து அறியமுடியாத ரகசியக் குரல்கள். அவை மனிதர்களின் குரல் மட்டுமில்லை.
யுவான் ருல்ஃபோ மிகச்சிறந்த கவிஞர் என்பதால் நாவல் கவித்துவத்துடன் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நாவலை தமிழில் எஸ் பாலச்சந்திரன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். விடியல் பதிப்பகம் 2001ல் வெளியிட்டுள்ளது.
கோமாலா என்பது அழிந்த ஊர் மட்டுமில்லை .அது ஒரு விசித்திரக் கனவு. அதிலிருந்து விழித்து எழுந்தவுடன் நமக்கு மிஞ்சுவது சில நினைவுகள் மட்டுமே.
••
7.9.23
நகரங்களே சாட்சி
Ancient Egypt by Train with Alice Roberts என்ற பயணத்தொடரைப் பார்த்தேன். ஆலிஸ் ராபர்ட்ஸ் பண்டைய எகிப்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவதற்காக நாடு முழுவதும் ரயிலில் பயணம் செய்கிறார்.


மருத்துவரான ஆலிஸ் ராபர்ட்ஸ் சவுத் வேல்ஸிலுள்ள தேசிய சுகாதாரச் சேவையில் இளம் மருத்துவராக பதினெட்டு மாதங்கள் பணியாற்றினார். பின்பு 1998 இல் மருத்துவத்துறையை வெளியேறி பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளரானார். தற்போது தொலைக்காட்சிக்கான அறிவியல் மற்றும் வரலாற்று ஆவணப்படங்களின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
எகிப்தில் முதல் இரயில் பாதை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது, இது கெய்ரோவை அலெக்ஸாண்ட்ரியாவுடன் இணைக்கிறது. 1902 ஆம் ஆண்டு வரை முதல் இந்த ரயிலில் உறங்கும் படுக்கைகள் கிடையாது, அதன்பிறகே படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் லக்சர், அஸ்வான் மற்றும் போர்ட்சைட் போன்ற எகிப்தின் பிற இடங்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டன. 1950களில் உல்லாச பயணங்களின் வருகை அதிகமானதால் ரயிலில் ஆடம்பர வசதிகள் அறிமுகமாகின. மதுக்கூடம் மற்றும் உணவகங்களுடன் கூடிய சொகுசு ரயில் சேவை உருவானது.
1970 களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சொகுசுரயில் சேவை நிறுத்தப்பட்டது. 1980 களில் எகிப்திய அரசாங்கம் நவீன வசதிகள் கொண்ட ரயில்களை மீண்டும் அறிமுகம் செய்து வைத்தது. இன்று கெய்ரோவிலிருந்து அஸ்வான், லக்சர், அலெக்ஸாண்ட்ரியா மற்றும் பிற இடங்களுக்கு ரயில் மூலம் பயணம் செய்வது எளிதானது.
இந்த ஆவணப்படம் விதவிதமான சிறிய பெரிய ரயில் நிலையங்கள். ரயில் பயணங்களையும் பேரழகுமிக்கப் பயணக்காட்சிகளையும் ஒரு தளத்தில் விவரிக்கிறது. இன்னொரு தளத்தில் வரலாற்றுச் சாட்சியங்களாக உள்ள பழைய நகரங்கள் இன்று எப்படியுள்ளன. உலகெங்குமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான காரணங்கள் எவை என்பதை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

மூவாயிரம் மைல்களுக்கு மேலான இந்த ரயில் பயணத்தின் வழியாக நாம் எகிப்தின் முக்கியத் தொல்பொருள் தளங்களைக் காணுகிறோம். இடிந்த நகரங்களே இன்று வரலாற்றின் சாட்சியமாக நிற்கின்றன. இது போன்ற வரலாற்று சின்னங்களைப் பார்வையிட இளைஞர்கள் குறைவாகவே வருகை தருகிறார்கள். படத்தில் காட்டப்படும் பயணிகளில் அதிகமும் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள். அல்லது முதியவர்கள். இன்று எகிப்து தனது வரலாற்று முகத்தை மறந்து நவீன வாழ்க்கையின் அடையாளங்களுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் பண்பாட்டில், கலையில் அதன் அடையாளங்களை இழக்கவில்லை. பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் காணமுடிகிறது

எகிப்திய தொல்பொருள் ஆய்வின் முன்னோடியாகக் கருதப்படும் அமெலியா எட்வர்ட்ஸ் பற்றியும், அவரது எகிப்திய பயண அனுபவங்களை விவரிக்கும் புகழ்பெற்ற நூலான A Thousand Miles Up the Nile பற்றியும் ஆலிஸ் ராபர்ட்ஸ் விவரிக்கிறார். அத்தோடு அந்தப் புத்தகத்தைத் தனது கையிலே வைத்துப் படித்துக் கொண்டு செல்கிறார்

அமெலியா எட்வர்ட்ஸ் ஒரு ஆங்கில நாவலாசிரியர். தொல்பொருள் ஆய்வில் ஆர்வம் கொண்டவர். 1882 இல் எகிப்து ஆய்வு நிதியத்தை இணைந்து நிறுவியவர்.

1874ல் அமெலியா எகிப்துக்குச் சுற்றுப்பயணம் செய்தார். நீண்ட படகு பயணத்தை மேற்கொண்ட அவர் எகிப்தின் நினைவுச்சின்னங்கள் அழிந்து வருவதைக் கண்டு அதை மீட்பதற்கான முயற்சிகளைத் துவங்கினார். அறிவியல் பூர்வமான பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்த முனைந்ததோடு எகிப்தின் தொன்மைச் சிறப்புகள் குறித்து விரிவாக எழுதவும் பேசவும் துவங்கினார். இதனால் பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கபட்டதோடு அவை முக்கியச் சுற்றுலா மையங்களாகவும் உருமாறின. 1882ஆம் ஆண்டுப் பிரிட்டிஷ் படைகளால் எகிப்து ஆக்கிரமிக்கப்பட்டது. அதன்பிறகு பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். கல்லறையில் பாதுகாக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை அவர்கள் கொள்ளை அடித்துச் சென்றார்கள் என்றொரு குற்றச்சாட்டு இன்று முன்வைக்கப்படுகிறது.
நைல் பயணத்தின் முழு அனுபவத்தையும் ஒரே வரியில் சொல்வதென்றால் ஒரு கழுதைச் சவாரி மற்றும் இடிபாடுகளை நோக்கிய படகு பயணம் என்று சொல்ல வேண்டும் என்கிறார் அமெலியா.
நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பற்றி ஒருவர் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறாரோ அதை வைத்துத் தான் அவரால் இந்த இடிபாடுகளை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும் எனும் அமெலியா தனது பயண அனுபவத்தினைத் துல்லியமாக விவரித்திருக்கிறார்
இந்த ஆவணப்படத்தில் நான்கு எபிசோடுகளில் எகிப்தின் வரலாறு மற்றும் இன்றைய வாழ்க்கை குறித்து எளிமையாக விவரித்துவிடுகிறார்கள்.அது ஒரு நல்ல அறிமுகம் என்றே சொல்வேன்
இந்த ஆவணப்படத்தில் ஆலீஸ் உடன் நாமும் ரயிலில் பயணம் செய்கிறோம். ரயில் நிலையத்தை விட்டு இறங்கி வெயிலில் நடக்கிறோம். பிரமிடுகளில் ஏறி இறங்குகிறோம். சுரங்கப் பாதைகளுக்குள் நடந்து செல்கிறோம். வரலாற்றுப் பயணம் என்ற போது தனது தனிப்பட்ட ஆசைகள் விருப்பங்களையும் ஆலீஸ் பகிர்ந்து கொள்கிறார்.
முதல் பகுதியில் அவரது பயணம் அலெக்ஸாண்ட்ரியாவில் தொடங்கி, கிளியோபாட்ராவின் மாளிகையைத் தேடுகிறார் , எங்கே கிளியோபாட்ரா இறந்து போயிருக்கக் கூடும் என்று வரலாற்று ஆய்வாளர் ஒரு இடத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அத்தோடு அடிமையாக இருந்த ஒருவர் எப்படிச் சுல்தானாகி தனது சொந்த சமாதியைக் கட்டியெழுப்பினார் என்பதை அறிந்து கொள்கிறார்.
இரண்டாவது பகுதியில் பாரோ குஃபுவின் கல்லறையைப் பார்க்கச் செல்கிறார். குஃபு எகிப்தின் மிகப்பெரிய பிரமிடு ஆகும், இது கிசாவில் அமைந்துள்ளது வரலாற்றாசிரியர்கள் இது கிமு 2560 இல் கட்டப்பட்டதாக நம்புகிறார்கள் இந்த பிரமிடு 455 மீட்டர் உயரம் உள்ளது
எகிப்தின் பிரமிடுகளில் உள்ள சுரங்கப்பாதைகள் மர்மமானவை பிரமிடின் சுரங்கப்பாதையில் அவர் நடந்து செல்லும் போது கேமிரா அவரை நிழல் போல பின்தொடருகிறது.

அடுத்த பயணம் லக்சர் நோக்கியது. அங்கே துட்டன்காமூனின் கல்லறை மற்றும் மம்மியைப் பார்வையிடுகிறார்.
எகிப்தின் 13-வது மன்னனான துட்டன்காமூன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்திய இராச்சியத்தை ஆண்டான். துட்டன்காமூன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனதாக சொல்கிறார்கள். ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறான். 1922 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர் லக்சர் நகரத்தில் துட்டன்காமூனின் கல்லறையைக் கண்டுபிடித்தார். கல்லறை உள்ள அறையை ஒட்டி புதையலும் கண்டறியப்பட்டது. இதில் 5,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன. அவற்றில் பாதி இறுதிச்சடங்கில் அளிக்கப்படும் இயற்கைப் பொருட்களாகும்
2005-ஆம் ஆண்டில் துட்டன்காமூனின் மம்மியை லேசர் மூலம் ஆய்வு செய்த போது அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அத்தோடு அவன் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போயிருக்கலாம் என்றும் அறிய வந்தது.
நான்காவது பகுதியில் அஸ்வானில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, ஃபிலே கோயிலைக் காணப் படகில் செல்கிறார்.
அஸ்வான் தெற்கு எகிப்தில் உள்ள நகரமாகும். எகிப்தின் முக்கிய வணிக மையமாகவும், சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் வெளியே பழங்கால எகிப்திய நாகரிகத்தின் சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. அஸ்வான் அணை நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. ஃபிலே கோவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் ஊடாகப் பண்டைய எகிப்திய வாழ்க்கை முறை. விவசாயம். நகர உருவாக்கம் உணவுப்பண்பாடு இவற்றை விளக்குகிறார். அத்தோடு இன்றைய வாழ்க்கை முறை, வணிக அங்காடிகள். மதவழிபாட்டு முறைகள். சடங்குகள் மற்றும் பயணிகளுக்கான உல்லாச விடுதிகளைப் பற்றியும் பேசுகிறார்.
கெய்ரோவின் புகழ்பெற்ற கார்பெட் பஜார். அங்கு விற்கப்படும் பாரசீக மற்றும் சிரிய தரைவிரிப்புகள், பிரார்த்தனை-கம்பளங்களைக் காணுகிறோம். காபியின் மணமும் பூவேலைப்பாடு கொண்ட துணிகள் விற்கும் கடைகள். குறுகலான சந்துகள். அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகள். சாலையோர ஓவியர்கள். வெள்ளிப்பொருட்கள் விற்கும் அங்காடி எனக் கெய்ரோவிற்குள் நாமே சுற்றி அலைகிறோம் கெய்ரோவில் பல சிறப்புப் பஜார்களும் உள்ளன; ஸ்வீட் மீட் பஜார், பழைய பொருட்கள் விற்கும் பஜார். புகையிலை பஜார்; வாள் மற்றும் ஆயுதங்கள் விற்கும் கடைகள். தொப்பி வாசனைத் திரவியம் விற்கும் கடைகள். என வரலாற்றின் தொடர்ச்சியாக விளங்கும் அங்காடிகளை இன்றும் காண முடிகிறது.
September 1, 2023
டாவின்சி- கலையும் வாழ்வும்
வான்கோ, பிக்காசோ, லியோனார்டோ டாவின்சி இந்த மூவர் குறித்தும் ஆண்டுக்கு ஒரு ஆவணப்படம் அல்லது திரைப்படம் வெளியாகிறது. புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் மற்றும் தொலைக்காட்சியால் உருவாக்கபடும் இந்தப் படங்கள் உலகெங்கும் திரையிடப்படுகின்றன. பெரும்வரவேற்பைப் பெறுகின்றன.

கார்செஸ் லம்பேர்ட் இயக்கிய I, Leonardo 2019ல் வெளியானது. இப்படம் டாவின்சியின் அறிவியல் ஈடுபாட்டினை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக டாவின்சியின் கோட்டுச்சித்திரங்கள் பற்றியும் அவரது ஓவியங்களுக்கு மாடலாக இருந்தவர்கள் யார். அவர்களுடன் டாவின்சிக்கு எத்தகைய உறவு இருந்தது என்பது குறித்தும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மனித உடலின் வடிவத்தையும் அழகினையும் டாவின்சி ஆழ்ந்து ரசித்து வரைந்திருக்கிறார். ஒரு நபரின் உடலமைப்பை உண்மையாகச் சித்தரிக்க, முதலில் ஒரு மனிதனின் தசைகள் மற்றும் எலும்புக்கூடு எவ்வாறு அமைந்துள்ளது. எப்படி ஒன்றாகப் பொருந்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் டாவின்சி. ஆகவே உடலின் இயக்கம் மற்றும் உடற்கட்டுமானம், நரம்புகள், எலும்புகளின் இயல்பு பற்றிய அவரது புரிதல் வியப்பளிக்கிறது

லியோனார்டோ டா வின்சி பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக இருந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பணம் ஈட்டுவதை விடவும் கலையின் உன்னத நிலையை அடைவதற்காகவே போராடியிருக்கிறார். டாவின்சி தனது தந்தையைப் பற்றிச் சில குறிப்புகள் எழுதியிருக்கிறார். ஆனால் தாயைப் பற்றி அதிகம் பேசவில்லை. தாய் தனியே வாழ்ந்து வந்தார். ஆகவே அவர் பெரும்பாலும் தனது தந்தையின் குடும்பத்துடன் வளர்ந்ததாகத் தெரிகிறது,
இப்படத்தின் ஒரு காட்சியில் அவர் தனது தாயை நினைவுகூறுகிறார். டாவின்சியின் அம்மா அடிதட்டு வகுப்பை சேர்ந்தவர். தந்தை ஒரு வழக்கறிஞர். டாவின்சி பிறந்தபிறகே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பு பிறந்த பிள்ளைகளைக் கள்ளக்குழந்தைகளாக அன்றைய சமூகம் கருதியது. ஆகவே அவர் தனது தாயைப் பற்றிப் பொதுவெளியில் அதிகம் பகிரவில்லை.
புளோரன்ஸில் வசித்த ஓவியரும் சிற்பியுமான ஆண்ட்ரியா டெல் வெரோச்சியோவிடம் டாவின்சி கலைகள் கற்றுக் கொண்ட நாட்களைப் படம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளது. அந்தக் கலைக்கூடத்தில் சேர்ந்த போது அவரது வயது 14. டாவின்சி இடது கைப் பழக்கம் உடையவர்.
பத்து ஆண்டுகள் வெரோச்சியிடம் கலைபயின்றிருக்கிறார். இயற்கையைப் பற்றிய அவரது ஆய்வைப் பதிவு செய்வதற்கான ஒரு கருவியாக வரைதல், இருந்திருக்கிறது. அவரது ஆர்வமும், அறிவுப் பசியும் தொடர்ந்து பல்வேறு துறைகளில் கவனம் கொள்ளச் செய்திருக்கின்றன

டாவின்சி மீது நம்பிக்கை கொண்டிருந்த போதும் அவரை வெரோச்சி புரிந்து கொள்ளவில்லை.. கடைசி விருந்து ஓவியத்தை வரைவதற்கு முன்பு இதை உலகின் உன்னதமான ஒவியமாக வரைந்து முடித்துவிட்டால் தனது திராட்சை தோட்டத்தைப் பரிசாகத் தருவதாகச் சொன்னார் வெரோச்சி. தன் மனதில் அந்த ஓவியம் முழுமையடையாமல் தன்னால் சுவரில் வரைய முடியாது என்று உறுதியாகச் சொன்னார் டாவின்சி.
வெரோச்சி கலைக்கூடத்தில் பெற்ற பயிற்சிகள் தான் பின்பு அவரை ஒப்பற்ற ஓவியராக ஒளிரச் செய்தது. இந்தத் திரைப்படத்தில் கடைசிவிருந்து ஒவியத்தைத் தனது மனதில் டாவின்சி எப்படி உருவாக்கினார் என்பதையும் யூதாஸின் முகத்திற்கான மாடலைத்தேடி அன்றாடம் சந்தையில் சுற்றி அலைந்தார் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான முகங்களைக் கடந்த பிறகு தனக்கான யூதாஸின் முகத்தினை டாவின்சி கண்டுபிடித்திருக்கிறார்.

தனது சீடர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சொன்னதைக் கேட்டுச் சீடர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையே கடைசி விருந்து ஓவியம் சித்தரிக்கிறது. இயேசுவின் சீடர்களின் முகங்கள் மற்றும் அதன் கோணம். உணவு மேஜையில் உள்ள ரொட்டித் துண்டுகள். இயேசுவின் முகபாவம், அவரது சீடர்களுக்குள் உள்ள நெருக்கம் மற்றும் கவலை, திகைப்பு. எனத் துல்லியமாக உணர்ச்சிகளைச் சித்தரித்துள்ளார் டாவின்சி. இதற்கான ஒத்திகையை அவர் தொடர்ந்து மேற்கொள்வதையும் அவரே இயேசுவாக மாறி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதையும் படத்தில் காணமுடிகிறது.
டாவின்சியின் அறிவு தீர்க்கமானது. அவர் பறக்கும் இயந்திரங்கள், ஒரு வகைக் கவச போர் வாகனம், சூரிய சக்தி இயந்திரம் எனப் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை வரைந்திருக்கிறார். இது போலவே உடற்கூறியல், சிவில் இன்ஜினியரிங், புவியியல், ஒளியியல் மற்றும் கட்டிடக்கலையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் ஒரு காட்சியில் அழகு குறித்த தனது பார்வையை டாவின்சி வெளிப்படுத்துகிறார். குறிப்பிட்ட கோணம் அழகை முழுமையாக்குகிறது என்று சொல்கிறார். அதைக் கேட்ட இளம் பெண் காலத்ததால் அழகும் காதலும் அழிக்கபட்டுவிடும் என்கிறாள். அதற்குச் சிரித்தபடியே கலை அழகை நிரந்தரமாக்கிவிடும் என்று சொல்கிறார் டாவின்சி. அவர் அழகு எனச் சொல்வது புற அழகினை மட்டுமில்லை. உலகம் அருவெருப்புக் கொண்டு ஒதுக்குகிற விஷயங்களில் அவர் அழகினைக் கண்டார். உடலின் தசைகளையும் நரம்புகளையும் அழகின் வடிவமாகக் கருதினார்.
இளமை மற்றும் முதுமை, அழகு மற்றும் அசிங்கத்திற்கு இடையிலான வேறுபாடுகளை அவரைப் போல ஆராய்ந்தவரில்லை. ஒரே உடலில் துயரமும் மகிழ்ச்சியும் இரு தலைகள் கொண்டிருப்பதாக ஒரு ஒவியத்தை வரைந்திருக்கிறார். அந்தப் புரிதல் முக்கியமானது. கர்ப்பத்திலுள்ள சிசுவின் தோற்றம் மற்றும் இயக்கங்களை அவர் வரைந்துள்ள விதம் பிரமிக்க வைக்கிறது.
லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை மற்றும் ஓவியங்கள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டவர் கலைவிமர்சகர் கென்னத் கிளார்க். டாவின்சியின் ஓவியங்களை ஆராய்வதிலே தனது வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். டாவின்சி பற்றி விரிவான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். டாவின்சியின் புகழ்பெற்ற ஒவியங்கள் குறித்த கென்னத் கிளார்க்கின் பார்வைகள் முக்கியமானவை. கலைஞர்களின் குறிக்கோள் வெளிப்புறத் தோற்றத்தை வரைவது மட்டுமல்ல, அவர்களின் உள் எண்ணங்களையும் வெளிப்படுத்த வேண்டும். அதை டாவின்சி சிறப்பாகச் செய்திருக்கிறார் என்கிறார் கென்னத் கிளார்க்

லியோனார்டோவின் பல உருவப்படங்களில், ஒரு நிறம் எந்த இடத்தில் முடிவடைகிறது, மற்றொன்று எந்தப் புள்ளியில் தொடங்குகிறது என்று சொல்வது சாத்தியமற்றது இந்தக் காரணத்திற்காக, லியோனார்டோ “தெளிவற்ற” முகபாவனையை உருவாக்கினார். தெளிவற்ற வெளிப்பாடுகளில் ஒரு நிலையான தோற்றமயக்கம் ஏற்படுகிறது. இந்த நோக்கத்திற்காக “ஸ்ஃபுமாடோ” (புகை போல மறைந்து போவதற்கான இத்தாலிய வார்த்தை) நுட்பத்தை உருவாக்கினார். இந்த நுட்பம் லியோனார்டோவால் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் அதை அவர் சரியாகப் பயன்படுத்தினார்.. மேம்படுத்தினார் என்பதே நிஜம்.
மிலனில் உள்ள சாண்டா மரியா டெல்லே கிரேசியின் சுவரில் கடைசி விருந்து ஓவியத்தை டாவின்சி வரைந்திருக்கிறார். லியோனார்டோ இந்த ஒவியம் மனதின் இயக்கங்களைக் காட்சியாகச் சித்தரிக்கிறது. மேசையின் எதிர் பக்கத்தில் வரையப்பட்ட யூதாஸ், மற்ற அப்போஸ்தலர்களிடமிருந்து அவரது நிழல் முகத்தால் தனித்துத் தெரிகிறார்.

கட்டிடக் கலைக்காக உருவாக்கபட்ட கோல்டன் ரேஷியோ எனப்படும் கோட்பாட்டினை தனது ஒவியங்களில் டாவின்சி பயன்படுத்தியிருக்கிறார் . லியனார்டோ சரியான கண்ணோட்டத்துடன் காட்சிகளை வரைவதற்கு உதவும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். இந்த இயந்திரம் பெர்ஸ்பெக்டோகிராஃப் என்று அழைக்கப்பட்டது, கேமிராவின் முன்னோடி என இதைச் சொல்லலாம். லியோனார்டோ தான் ஓவியம் வரைய விரும்பிய காட்சியின் முன் கண்ணாடிக்கருவியை வைத்து அதன் துளை வழியாகப் பார்த்து, காட்சியின் வெளிப்புறத்தை கண்ணாடி துண்டில் வரைவது வழக்கம். இப்படத்தில் அந்தக் காட்சி இடம்பெற்றுள்ளது.
லியோனார்டோ டாவின்சி தண்ணீரை “இயற்கையின் வாகனம்” என்று அழைக்கிறார். நமது உடலுக்கு இரத்தம் எப்படி ஆதாரமாக இருக்கிறதோ அது போலவே உலகிற்குத் தண்ணீர் ஆதாரமாக இருக்கிறது. ஆகவே லியோனார்டோவின் பல ஓவியங்கள் தண்ணீரைக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் ஒரு காட்சியில் அடுப்பில் தண்ணீர் சூடாகிக் கொதித்துக் கொண்டிருக்கிறது. தண்ணீரை ஒடுக்குவதற்காக நெருப்பு அதனைச் சூடேற்றுகிறது எனக் கதை போல டாவின்சி சொல்கிறார். முடிவில் தண்ணீர் பொங்கி வழிந்து நெருப்பை அணைத்துவிடுகிறது. அதைக்கண்டு உற்சாகமாகி தண்ணீர் தான் எப்போதும் வெல்கிறது என்கிறார் டாவின்சி.
அவர் திரவ இயக்கவியலைப் புரிந்து கொள்ள விரும்பினார்: நீர் செல்லும் வழி. ஓட்டம், வேகம், வெள்ள மேலாண்மை மற்றும் சுழல்கள் குறித்து ஆராய்ந்திருக்கிறார். நீர்பொறிகளை உருவாக்கியிருக்கிறார். அதன்வழியே நவீன நீர் பொறியியல் துறைக்குப் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார், தண்ணீரில் நடக்கத் தனித்துவமான காலணிகளைக் கூட உருவாக்கினார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

ஜியான் கியாகோமோ கப்ரோட்டி எனும் பத்து வயது சிறுவன் டாவின்சியின் கலைக்கூடத்தில் உதவியாளராக வந்து சேர்ந்தான். அவனைத் தனது மாடலாக வைத்து ஓவியங்கள் வரைந்திருக்கிறார். டாவின்சியின் கலைக்கூடத்திலிருந்த சில்லறைக்காசுகளை அவன் திருடிச் சென்றுவிடுவது வழக்கம். ஆனாலும் அவனது தோற்றம் மற்றும் முகபாவத்திற்காகப் பல காலம் தனது உதவியாளராக வைத்திருந்தார். சலாய் என்று அவனை அன்போடு அழைத்தார். Saint John The Baptist ஒவியத்திற்கான மாடலாக இருந்து சலாய் தான். டாவின்சி அவனது தோற்றத்தை மட்டுமின்றி ஆன்மாவையும் தனது ஒவியத்தில் சிறப்பாக வரைந்திருக்கிறார். படத்தில் இந்தக் காட்சியை வரையும் போது அவன் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். டாவின்சி அவனைக் கோவிப்பதில்லை. மாறாக அவனுக்குத் தான் எதை வரைகிறேன் என்று புரிய வைக்கிறார்.
[image error]இப்படத்தில் டாவின்சியின் பன்முகத்தன்மை முழுமையாக வெளிப்படுத்தபட்டுள்ளது. நிலையற்ற, மாறும் மன நிலைகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை டாவின்சி ஆராயும் விதம் படத்தின் தனிச்சிறப்பு என்பேன். தேர்ந்த ஒளிப்பதிவு மற்றும் அரங்க அமைப்புகள் படத்திற்குக் கூடுதல் அழகு தருகின்றன. ஒரே குறை டாவின்சியாக நடித்தவர் செயற்கையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார் என்பதே.
ஐசக் பேபலின் மாப்பசான்
A well-thought-out story doesn’t need to resemble real life. Life itself tries with all its might to resemble a well-crafted story. – Isaac Babel
ஆன்டன் செகாவைப் போலவே சிறுகதைகளில் தனித்துவமும் மொழிநுட்பமும் கொண்ட படைப்பாளி ஐசக் பேபல். சிறந்த ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவரான ஐசக் பேபல் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார்.

Guy De Maupassant கதை 1932ல் வெளியானது. இக்கதையைத் தமிழில் செங்கதிர் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் – கதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
ஐசக் பேபலின் அன்றைய மனநிலை இக்கதையில் வரும் மாப்பசானின் மனநிலையைப் போன்றிருந்திருக்கிறது. 1916 நடக்கும் இக்கதை எழுத்தின் மீது விருப்பம் கொண்ட, வருவாய் எதுவுமில்லாத இளைஞன் ஒருவன் விவரிப்பது போலவே துவங்குகிறது.
அவன் மொழியியல் அறிஞரான அலெக்ஸி கசான்ட்சேவ்வின் நண்பன். அலெக்ஸி அன்று ரஷ்யாவில் புகழ்பெற்றிருந்த பிளாஸ்கோ இபானிஸின் ஸ்பானிஷ் நாவல்களை மொழிபெயர்த்து வந்தார். கசான்ட்சேவ் ஸ்பெயினுக்கு ஒருமுறை கூடச் சென்றதில்லை, ஆனால் அவரது முழு உள்ளமும் ஸ்பெயின் மீதான அன்பால் நிரம்பி வழிந்தது – அவர் ஸ்பானிஷ் கோட்டைகள், பூங்காக்கள் மற்றும் நதிகள் அனைத்தையும் அறிந்திருந்தார்.
வழக்கறிஞர் பெண்டர்ஸ்கி பதிப்பகம் ஒன்றை நடத்துகிறார் அவரது மனைவி ரைசா மாப்பசானின் படைப்புகளை ரஷ்யனில் மொழிபெயர்க்க முயலுகிறார். ரைசாவிற்கு உதவி செய்வதற்காக இளைஞனைச் சிபாரிசு செய்கிறார் அலெக்ஸி.
இளைஞன் ரைசாவின் மோசமான மொழிபெயர்ப்பைத் திருத்தி சரி செய்கிறான். அவனது மொழி வளம் மற்றும் எழுத்துநடையைக் கண்டு வியக்கும் ரைசா நெருங்கிப் பழகுகிறாள்.

மாப்பசானை மொழிபெயர்க்கும் போது இளைஞன் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறான். அவரது வாழ்க்கை வரலாறு அதிர்ச்சி அளிக்கிறது. உலகையே தனது கதைகளால் மகிழ்ச்சிப்படுத்திய மாப்பசான் மனநலம் பாதிக்கப்பட்டு விலங்கினைப் போல மிக மோசமான நிலையில் மனநலக்காப்பகத்தில் இருந்த உண்மையை அறிந்து கொள்ளும் போது திடுக்கிட்டுப் போகிறான்.

பேபலின் இக்கதை மாப்பசானை சுற்றிப்பின்னப்பட்டதில்லை. அது இளைஞன் மற்றும் ரைசாவின் உறவு பற்றியதே. ஆனால் கதையின் இறுதியில் மாப்பசானின் வாழ்க்கை குறியீடு போலவே விவரிக்கப்படுகிறது
சிறுவயது முதலே நோயுற்றவர் மாப்பசான் என்பதும் அவர் பிரெஞ்சு எழுத்தாளர் பிளாபெரின் உறவினர் என்பதும், பார்வை இழப்பின் ஊடாகவும் தனது மீட்சிக்கான வழியாக அவர் கதைகளை எழுதினார் என்பதையும் அறிந்து கொள்ளும் போது இளைஞனைப் போலவே நாமும் திகைத்துப் போகிறோம்
பேபல் ஏன் இது போன்ற கனன்று எரியும் கலைஞனின் அகத்தைப் பற்றிய கதையை எழுதினார். காரணம் அவரது சொந்த வாழ்க்கைச் சூழல் நிராகரிப்பு மற்றும் அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்தது.
கதையில் வரும் இளைஞன் தனது அறைக்குத் திரும்பிய பிறகு கனவு காணத்துவங்குகிறது. அந்தக் கனவு பாலுறவிற்காக ஏங்கும் அவனது ஆழ்மனதின் ஆசை. அதுவும் பேபலின் சொந்தவாழ்க்கையின் சாட்சியம் போலவே எழுதப்பட்டிருக்கிறது.
ரைசா ஏன் மாப்பசான் கதைகளில் ஆர்வம் கொண்டிருக்கிறாள். அவளுக்கு உயர்குடி வாழ்க்கை. சலிப்பூட்டுகிறது. மாப்பசானின் கதாபாத்திரங்களின் விசித்திரம் மற்றும் மீறல்கள் அவளைக் கவருகிறது. ஒரு வகையில் உயர்குடி மக்களின் ஆன்மீக வறுமையைப் பற்றிப் பேசுகிறது இக்கதை.

தனது வாழ்நாளில் மாப்பசான் எழுதிக் குவித்திருக்கிறார். அவை 29 தொகுதிகளாக வெளியாகியுள்ளன. அந்தத் தொகுதிகளைச் சைரா தனது வீட்டில் வைத்திருக்கிறாள். பீட்டர்ஸ்பர்க் சூரியனின் உருகும் விரல்கள் பைண்ட் செய்யப்பட்ட மாப்பசான் தொகுதிகளின் முதுகெலும்புகளைத் தொட்டன என்று கவித்துவமாக எழுதுகிறார் பேபல்.
கதையின் துவக்கத்திலே மாப்பசான் தான் எனது வாழ்வின் ஒரே கனவு என்று ரைசா சொல்கிறாள். அவளது மொழிபெயர்ப்பில் கதை உயிரற்றுக் கிடக்கிறது. அதைச் சரிசெய்யும் போது மாப்பசான் எழுத்தின் அழகியலை இளைஞன் முழுவதுமாக உணருகிறான்.
அந்தக் கதையின் ஒரு இடத்தில் இளைஞன் குடித்துவிட்டு டால்ஸ்டாயை கேலி செய்கிறான். அது உண்மையிலே பேபல் வாழ்வில் நடந்த சம்பவம். அவர் நடனத்திற்குப் பிறகு கதையைப் படித்துவிட்டு இது போல டால்ஸ்டாயை கேலி செய்திருக்கிறார்.
மாப்பசான் பிறக்கும் போதே சிபிலிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தாயிற்கு இருந்த நோயது. அந்தக் காலத்தில் சிபிலிஸ் மோசமான பால்வினை நோய். தலைவலியும் நரம்புக் கோளாறும் கொண்ட அவர் தீவிரமாக எழுதினார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குப் பார்வைக் குறைவு ஏற்பட்டது. நலிவடையும் தனது உடலுக்கு எதிராக வெறித்தனமாகச் செயல்பட்டார். மனப்பிறழ்விற்கு ஆளாகி , தனது நாற்பதாவது வயதில் தொண்டையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். ரத்தவெள்ளத்தில் கிடந்தவரைக் காப்பாற்றினார்கள். உயிர்பிழைத்த அவரை மனநல விடுதியில் சேர்த்தனர். அங்கு அவர் நான்கு கால்களிலும் தவழ்ந்து விலங்காக மாறிப்போனார். மீளமுடியாத மனப்பிறழ்வால் நாற்பத்திரண்டு வயதில் மாப்பசான் இறந்து போனார்.
பேபலின் சிறுகதை மூன்று தளங்கள் கொண்டிருக்கிறது. ஒன்று அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இருந்த வரவேற்பு. இதன் அடையாளமாகவே ஸ்பானிய நாவலை கசான்ட்சேவ் ஆசையாக மொழிபெயர்ப்பு செய்கிறார். சைரா மாப்பசானை மொழியாக்கம் செய்ய முயலுகிறார்.
,இரண்டாவது தளம் வேலையற்ற இளைஞன் பணக்கார பெண்ணிற்கு உதவி செய்வதன் வழியே தனது கனவுகளை நனவாக்கிக் கொள்வது. அது கதையில் அழகாக வெளிப்படுகிறது
மூன்றாவது மாப்பசானின் வாழ்வும் இந்த கதையில் நடைபெறும் நிகழ்வும் சந்திக்கும் புள்ளி. சைராவும் இளைஞனும் போதையில் ஒன்று சேருகிறார்கள். அந்த நிகழ்வே மாப்பசானின் கதை போல மாறுகிறது. கற்பனையிலிருந்து பிறக்கும் நிஜம் என்று அதை சொல்லலாம்.
பணக்கார வீட்டின் சூழல், அங்கே நடக்கும் இரவு உணவு. அதில் எழும் கேலிப்பேச்சுகள், விலை உயர்ந்த மதுவை பற்றி சைரா பெருமை பேசும் இடம் என பேபலின் எழுத்து மினுமினுக்கிறது.

15 மே 1939 இல், ஐசக் பேபல் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் லுபியாங்கா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவரது கையெழுத்துப் பிரதி கொண்ட கோப்புகள் , 11 குறிப்பேடுகள் மற்றும் ஏழு டயரிகளைப் பறிமுதல் செய்யப்பட்டன அதில் நிறையக் கதைகளும் இரண்டு நாடகங்கள், திரைப்பட ஸ்கிரிப்டுகள் இருந்தன “
பேபல் சோவியத்-எதிர்ப்புக் குற்றச்சாட்டில் கைதியாகி எட்டு மாத சிறைவாசத்தின் பின்பு அதே சிறைச்சாலையில் கொல்லப்பட்டார்.. “பயங்கரவாத சதியில் உறுப்பினராக இருந்ததற்காகவும், பிரெஞ்சு மற்றும் ஆஸ்திரிய அரசாங்கங்களுக்கு உளவு பார்த்ததற்காகவும்” தண்டிக்கப்பட்டார் என அரசு பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
1894 இல் ஒடேசாவிலுள்ள யூத குடும்பத்தில் பிறந்த பேபல், புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் வளர்ந்தார், அந்த நாட்களில் “ரஷ்யன்” என்ற சொல் யூதர்களை விலக்கியது, மேலும் நாடு முழுவதும் யூதவெறுப்பு மேலோங்கியிருந்தது. யூதர்கள் அதிகம் வசித்த ஒடேசா பகுதியில் வளர்ந்த பேபல் இளவயதிலே இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் தனது முதல் கதையை 1913 இல் வெளியிட்டார், மாக்சிம் கார்க்கியால் பாராட்டு பெற்ற பேபல் பின்னாளில் அவரது நெருக்கமான நண்பர்களில் ஒருவராக இருந்தார்.
1920 இல் போர் செய்தியாளராகப் பணியாற்றினார். சோவியத்-போலந்து போரின் அனுபவங்களின் அடிப்படையில் பேபல் எழுதிய கதைகள் ரெட் கேவல்ரி எனத் தனித்தொகுப்பாக வெளியாகியுள்ளது

ஆங்கிலம், ஜெர்மன். பிரெஞ்சு உள்ளிட்ட எட்டு மொழிகள் அறிந்தவர் பேபல். ஆகவே அந்நாளில் வெளியான சர்வதேச படைப்புகள் யாவையும் விரும்பி வாசித்திருக்கிறார்.
பேபலின் மொழிநடை கவித்துவமானது. தேர்ந்த ஓவியரைப் போலக் காட்சிகளைக் கண்முன்னே சித்தரிக்கக்கூடியவர். செகாவின் பாணியைச் சேர்ந்த கதைகளை அதிகம் எழுதியிருக்கிறார். ஆனால் செகாவிடம் காணமுடியாத இருண்மையைப் பேபலிடம் காணமுடிகிறது. கதை தன்னைத்தானே சொல்ல வேண்டும் என விரும்பியவர் பேபல் அவரது கதைகளில் குழந்தைகளின் சிறிய உலகம் பிரபஞ்சத்தின் பெரிய உணர்ச்சி நிலையுடன் இணைவு கொள்கிறது
மிக நுணுக்கமான விவரங்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் பேபல் தனது சொந்த அனுபவத்தினை ஆழமானதாக வெளிப்படுத்த முயலுகிறார், அவரது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், சொந்த யதார்த்தத்திற்கும் மனதில் உருவாகும் கற்பனைக்கும் இடையே ஊசலாடுகிறார்கள்.

அவரது விருப்பத்திற்குரிய படைப்பாளி கைய் டே மாப்பசான். அவரது சிறுகதைகளை ஆதர்சமாகக் கொண்டே தனது படைப்புகளைப் பேபல் எழுதிவந்தார். மனிதர்களின் இழிநிலை, ஊழல் மற்றும் யுத்த கால வன்முறையை மாப்பசான் போல எழுதியவரில்லை என்கிறார் பேபல்
பேபல் இரண்டே சிறுகதைத் தொகுப்புகளையும் சில நாடகங்களையும் திரைக்கதைகளையும் மட்டுமே தனது வாழ்நாளில் வெளியிட்டுள்ளார். அவரது வெளிவராத படைப்புகள் தற்போது தொகுக்கப்பட்டு முழுத்தொகுப்பாக வெளியாகியுள்ளன. ஒடேசாவில் பேபலிற்கு தற்போது நினைவுச்சின்னம் உருவாக்கியிருக்கிறார்கள். இன்றும் உலகெங்கும் அதிகம் வாசிக்கபடும் ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராக ஐசக் பேபல் இருக்கிறார்.
August 31, 2023
சாராவின் பொய்கள்
ஃபர்னூஷ் சமாதி இயக்கிய 180 Degree Rule 2020ல் வெளியானது. இப்படம் அஸ்கர் ஃபர்ஹாதியின் A Separation பாதிப்பில் உருவானது என்று தெரிகிறது. இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள்.

தெஹ்ரானில் வசிக்கும் பள்ளி ஆசிரியையான சாரா பள்ளியில் நன்மதிப்பு பெற்றவர். படத்தின் துவக்கத்திலே வகுப்பறையில் தற்கொலைக்கு முயலும் மாணவியைக் காப்பாற்றி விசாரணை மேற்கொள்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பிரச்சனையை வேறு எவரும் அறியாதபடி மாணவியின் அம்மாவை வரவழைத்துப் பேசி சரிசெய்கிறாள்.
சாராவின் கணவர் ஹமேட் கண்டிப்பானவர். தனது விருப்பப்படி மட்டுமே சாரா நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறவர். அவர்களின் ஒரே மகள் ராஹா. வீட்டில் சாராவும் ஹமேட்டும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

வடக்கு ஈரானில் நடைபெறும் சாராவின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர், .ஆனால் எதிர்பாராத வேலை காரணமாக ஹமேட் வெளியூர் செல்ல வேண்டியதாகிறது. ஆகவே திருமணத்திற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறான்.
சாராவிற்குத் தனது குடும்ப விசேசத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. அத்தோடு திருமணக் கொண்டாட்டத்தில் மணமகளின் தோழியாக இருப்பதற்காகத் தனது ஐந்து வயது மகள் ராஹாவுக்கு ஒரு அழகான ஆடையை வாங்கியிருந்தாள். ஆகவே அம்மாவும் மகளும் திருமணத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

கணவனுக்குத் தெரியாமல் திருமணத்திற்குச் சென்று வருவது என முடிவு செய்து காரில் மகளுடன் புறப்படுகிறாள். அந்தப்பயணத்தின் வழியே வடக்கு ஈரானின் அழகு வெளிப்படுகிறது. அத்தோடு சாராவின் தைரியம் மற்றும் சுயமாக முடிவெடுக்கும் தன்மையும் உணர்த்தப்படுகிறது
திருமணம் ஒரு வனவிடுதியில் நடைபெறுகிறது. சாரா திருமணத்தில் கலந்து கொள்கிறாள். அவளது பெற்றோர் மற்றும் உறவினர்களைச் சந்திக்கிறாள். மகிழ்ச்சியாக ஆடல் பாடல் விருந்து நடைபெறுகிறது. விடுதி அறை ஒன்றில் தங்குகிறாள். அந்த அறையின் கண்ணாடி ஜன்னலில் ஒரு பறவை நேரடியாக மோதிக் கொண்டு விழுகிறது. அந்தக் காட்சி படத்தின் திசைமாற்றத்தை சொல்லும் முக்கியமான காட்சியாகும்.

அறையின் ஏசியிலிருந்து கசிந்த நச்சுக் காற்றால் மூச்சுத்திணறி மகள் ராஹா இறந்துவிடுகிறாள். இந்த அதிர்ச்சியைச் சாராவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புலம்பியபடியே மகளின் உடலைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறாள். திருமண வீடே நிலைகுலைந்து போகிறது.
ஒரு பக்கம் மகளின் மரணம். இன்னொரு பக்கம் கணவனிடம் இதை எப்படிச் சொல்வது எனத் தெரியாத தடுமாற்றம். சாரா அதிர்ந்து போகிறாள். முடிவில் கணவனிடம் பொய் சொல்வது எனத் தீர்மானிக்கிறாள். இந்த முடிவு அவளது வாழ்க்கையினைப் புரட்டிப் போடுகிறது.
சாராவின் பொய் அம்பலமாகி அதன் வழியே குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கதையை விட்டு கிளை பிரிந்து போகின்றன.
இந்தக் கதைகளின் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரும் எதையாவது மறைக்கிறார்கள். அது வெளிப்படும் போது பாதிப்பு மோசமாகி விடுகிறது..
சாரா திருமண வீட்டில் தனது பெற்றோர்களைச் சந்திப்பது. அங்கே நடைபெறும் திருமண நிகழ்வுகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இழப்பு மற்றும் துயர உணர்வைச் சாரா சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வீட்டுக்குள் நடக்கும் அதிகாரப் போராட்டம், மாணவிகளின் உலகம். எதிர்பாராத விபத்து. பொய் உருவாக்கும் பிரச்சனைகள் என நான்கு சரடுகளைப் பின்னிச் செல்லும் கதை பாதிக்குப்பின்பு தொய்வடைந்துவிடுகிறது. முடிவில் வழக்கமான ஈரானியப்படங்களின் வரிசையில் நீதிமன்ற நாடகம் போல மாறிவிடுகிறது.
உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
August 29, 2023
நூலகமே உலகம்
உம்பர்தோ ஈகோவின் பிரம்மாண்டமான நூலகம் பற்றி ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டக் காட்சியே வியப்பூட்டுகிறது. ஈகோவின் நூலகத்தில் முப்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நூலகத்திற்கு அவர் நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியாகிப் பரபரப்பானது.
ஈகோவின் மறைவிற்குப் பிறகு இந்த நூலகம் குறித்து விரிவாக ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள்
Umberto Eco: A Library of the World
August 28, 2023
அவனது மௌனமும் அவளது மௌனமும்
புதிய குறுங்கதை
புத்தக வாசிப்பும் அது பற்றிய பேச்சுமே அவர்களுக்குள் காதலை உருவாக்கியது. ஆசை ஆசையாகப் புத்தகங்களைப் பரிசளித்துக் கொண்டார்கள். பின்பு அவர்களுக்குத் திருமணமானது. மணவாழ்க்கையை துவங்கிய புதிதில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
தாங்கள் வாங்கும் புதிய புத்தகத்தின் முதல் பக்கத்தை அவன் படித்தால் அவள் இரண்டாவது பக்கத்தைச் சப்தமாகப் படிக்க வேண்டும். இப்படி ஒரே புத்தகத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் விருப்பமான நாவல் ஒன்றை வாங்கினார்கள். அதன் ஒற்றைப் படையான பக்கங்களை அவனும் இரட்டைப்படையான பக்கங்களை அவளுமாகச் சேர்ந்து படித்தார்கள். இருவரால் படிக்கப்படும் போது புத்தகம் இறகுப்பந்தாட்டம் போலாகி விடுகிறது. அல்லது இருவரால் எழுதப்பட்டது போலாகிறது.

சில மாதங்களில் அவர்களின் திருமண வாழ்வில் சிறிய சண்டைகளும் கோபதாபங்களும் உருவாகின. இதைப் போக்கிக் கொள்ளப் புதிய ஊர்களுக்குப் பயணம் செய்தார்கள். நிறைய சினிமா பார்த்தார்கள். விதவிதமான உணவு வகைகளை ருசித்தார்கள். அப்படியும் சேர்ந்து படிப்பது போன்ற நெருக்கத்தை வேறு எதிலும் உணரவில்லை.
அவனுக்குக் கோபம் வந்த நாளில், நாவலின் ஒற்றைப்படையான பக்கத்தைப் படிக்க மறுத்தான். அவள் தனியே இரட்டைப் படையான பக்கத்தை வாசித்தாள். கதையின் விடுபடல் மனதை உறுத்தியது. ஆனாலும் முந்தைய பக்கத்தைப் படிக்க விரும்பவில்லை
இது போல அவளுக்குச் சலிப்பூட்டிய நாளில் தனது பக்கத்தை உரத்து வாசிக்காமல் மௌனமாக மனதிற்குள் படித்தாள். அவளது மௌனத்தை ஏற்றுக் கொண்டவன் போல அவனும் மௌனமாக வாசித்தான். இரண்டு மௌனங்கள் ஒன்று சேரும் போது அது பெரிய மௌனமாகுமா. அல்லது எடை மிகுந்துவிடுமா. அவனது மௌனமும் அவளது மௌனமும் ஒன்றா என்ன.
ஒரு நாள் அவன் வேண்டுமென்றே நாவலின் பக்க எண்களைப் பேனாவால் அடித்துத் திருத்தினான். இப்போது நான்காம் பக்கம் ஐந்தாம் பக்கமானது.. அதன்படி அவளது பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டான்.
அதை ஏற்காத அவள் தனது பக்கங்களுக்கு எல்லாம் ஆரஞ்சு வண்ணத்தில் வட்டமிட்டாள்.
அவன் தனது பக்கங்களுக்குக் கீழே தனது கையால் எழுதி சிறிய துண்டு காகிதம் ஒன்றை ஒட்டினான். அவள் தனது பக்கங்களில் உள்ள வினைச் சொற்கள் யாவையும் நீக்கினாள்.
அவன் தனது பக்கத்தில் ஒரு நாயின் படத்தை வரைந்தான். அவள் தனது பக்கத்தில் ஒரு பறவையின் படத்தை வரைந்தாள். நாயும் பறவையும் ஸ்நேகமாகவே நடந்து கொண்டன.
பின்பு ஒரு இரவு அவன் நாவலின் ஒற்றைப்படையான பக்கங்களைக் கிழித்து எறிந்தான். இரட்டைப் படையான பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த நாவலை தனக்கான முழு நாவலாக அவள் வைத்துக் கொண்டாள். பின்பு அவர்கள் சேர்ந்து படிக்கவில்லை.
ஆனால் சில வாரங்களில் அவள் கர்ப்பம் தரித்தாள். பின்பு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . அவர்கள் மகிழ்ச்சியாக முடியும் நாவலைப் வாழத் துவங்கினார்கள்.
August 27, 2023
மார்டின் லூதர் கிங்
இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் மார்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற ”I have a dream” உரை குறித்து எழுதியுள்ளேன். 1963 ஆண்டு இதே ஆகஸ்ட் 28ம் தேதி தான் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

