S. Ramakrishnan's Blog, page 24

October 28, 2024

பயணியின் சிறகுகள்

அஹ்மது யஹ்யா அய்யாஷ்

இலக்கற்ற பயணி நூல் பற்றிய விமர்சனம்

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களுக்கு மனதை கிறங்கடிக்கும் ஆற்றல் உண்டு. எஸ்ரா வின் எழுத்துக்கள் வெறுமெனக் காகிதங்களில் அச்சிடப்பட்ட எழுத்துக்களின் குவியல் அல்ல. அவை தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் கோர்க்கப்பட்ட அழகான சரடுகள். அப்படித்தான் இலக்கற்ற பயணி எனும் பயணம் குறித்த எஸ்ரா வின் கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். பயணம் குறித்து எல்லோருக்கும் ஓர் கனவு உண்டு, எண்ணங்கள் உண்டு, திட்டங்கள் உண்டு. அவையெல்லாம் பயணங்களே அல்ல என்கிறார் எஸ்ரா. நாடோடிகள் பற்றிய சிந்தனை என் மனதில் அடிக்கடி எழுந்து பின் அடங்கும். சிலபோது நானும் சில தோழர்களிடம் நானும் நாடோடி தானே எனச் சொல்லிக் கொள்வேன். அப்படி ஒரு பிம்பத்தை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர. நாடோடிகளின் வாழ்வை நம்மால் அடையவே முடியாது. அதுபோலத்தான் பயணம் என்பதும் பயணி என்பதும் அதில் திட்டமிடல் இருக்காது / சாப்பாட்டுப் பொட்டலங்கள் அடங்கிய குவியல் நம்மிடையே இருக்காது., தேர்ந்தெடுக்கப்பட்டு, அயர்ன் செய்து மடித்து வைக்கப்பட்ட சிறு எண்ணிக்கையிலான உடைகள் இருக்காது. அன்புத் தோழர் இஸ்மாயில் காக்கா ஒருமுறை தனது சக தோழரிடம் “வீட்டை நோக்கிய பயணம் ” என்ற போஸ்ட்டுக்கு “இலக்கு வைத்து பயணித்து அடைதலோ, திரும்புதலோ பயணமே அல்ல” என்பார். அதுபோலத்தான் பயணம் என்பதைப் பற்றி எஸ்ரா குறிப்பிடும்பொழுது

“பயணம் செய்வது வேறு, சுற்றுலா செல்வது வேறு. பயணம் என்பது உலகை அறிந்து கொள்ளும், வழி சுற்றுலா என்பது பொழுதைப் போக்குவதற்கான வழி. பெரும்பான்மை சுற்றுலாக்கள் விடுமுறை கொண்டாட்டங்களே. பயணி ஒரு போதும் சுற்றுலா செல்ல விரும்புகின்றவனில்லை. அவன் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வதையோ, சுடச்சுட எழுதி, அச்சிட்டு இணையத்தில் ஏற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதையோ விரும்பாதவன். வானில் பறந்து செல்லும் பறவையின் நிழல், தண்ணீரில் பட்டுச்செல்வதைப் போலத் தன்னிருப்பை உலகின் மீது படியவிட்டுப் பறந்து போகிறவனே பயணி.” என்று எழுதுகிறார்.

எஸ்ராவின் இப்பயணக் கட்டுரைகளில் இடம்பெறுபவை என்னவெனில் “ஏரி, கடல், ஓவியம், நூலகம், சிற்பங்கள், பண்டைகாலக் கல்வெட்டுகள், பனி விழும் பிரதேசம், ரயில் பயணம் போன்றவையே. தண்ணீர் குறித்த எஸ்ரா பார்வையும், எழுத்தும் அற்புதமானது. கனடாவின் ஏரிகளைப் பற்றி எஸ்ரா மிக அற்புதுமாக எழுதியிருக்கிறார். அவை உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஏரிகளைப் பகலில் பார்ப்பதும் இரவில் பார்ப்பதும் எப்படி வேறு வேறு அனுபவங்களைத் தருமோ அதுபோலத்தான் நான்கு பருவங்களிலும் ஏரிகளைக் காண வேண்டும். அதுதான் ஏரிகளை முழுமையாகப் பார்த்ததாகச் சொல்ல முடியும் இல்லையேல் ஏரியை ஓரளவு பார்த்ததற்குச் சமம் என எஸ்ரா சொல்வார். எஸ்ராவின் இப்புத்தகத்தினைப் பெரும்பாலும் பயணங்களில்தான் வாசித்தேன். அன்பை மீட்டுகிற ஓர் பயணத்தில் கனடாவின் ஒன்டாரியா ஏரிகளைப் பற்றிப் படித்தேன். உலகின் மிக நீண்ட 1815 அடி உயரத்தில் உள்ள சிஎன் டவரிலிருந்து ஒன்டாரியா ஏரியை பார்ப்பது எவ்வளவு அலாதியானது என்பதை என்னால் உணர முடிகிறது. உயரம் என்கிற ஒன்று நம்மை வேறு ஒரு உலகிற்குக் கூட்டிச் செல்கிறது. கிட்டதிட்ட பறவை அதீத உயரத்தில் அமர்ந்து கொண்டு பறத்தலுக்குத் தயாராகும் மனநிலையை அவை ஏற்படுத்தும்.

தண்ணீர் மீதான காதல் என்பது அலாதியானது. அது ஓடும் ஆறானாலும், கொட்டும் அருவியானாலும், அடித்து ஆடும் கடலானாலும் சரியே. அதில் ஓர் கிறக்கம் இருக்கிறது. நாம் வெறுமையை உணரத் துவங்கும்போது , அவமானங்களால் விக்கித்து நிற்கும்போது , தனிமை நம்மை விழுங்கத் துவங்கும்போது இப்பிரம்மாண்டமான நீருக்குள் நம்மைப் புதைத்துக் கொள்ள வேண்டும். அது நமது வெறுமையை , அவமானங்களை, தனிமையைக் கழுவி நம்மைச் சுத்தப்படுத்தும். எழுத்தாளர் பிரபஞ்சன் குளியலை பற்றி எழுதும்போது ” பூட்டப்பட்ட அறைகளில் , தண்ணீர் ஊற்றிக் கொள்வதற்குப் பெயர் குளியல் அல்ல அது உடலைக் கழுவி கொள்வது ” என்பார். அப்படியான குளியலைப் போன்று அல்ல ஏரிகளும், கடலும் , ஆறும் நமக்குத் தருவது. நீரின் ஆன்மாக்களோடு உரையாடுவதும் பதிலுக்கு நீர் நமது உடலை வருடுவதும் தான் குளியல்.

எஸ்ரா இப்புத்தகத்தில் இரண்டு இடங்களில் ஒரே போலச் செயல்படுவார். ஒன்று கனடாவின் சிம்கோ ஏரியின் முன்பு சிறிய கல்லை எறிந்துவிட்டு இந்தக் கல் தரையை வந்தடைய இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ, அத்தனை வருடம் என் நினைவுகள் இதில் இருக்கட்டும் என்று எழுதுவார். அதுபோலவே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு முன்பு தனது சட்டைப் பையில் இருந்து ஒரு நாணயத்தை எடுத்து அருவியை நோக்கி வீசிவிட்டு

” என் கரம் தொட முடியாத அருவியை நாணயம் தொட்டு உணரட்டும். அருவியின் உள்ளே மனிதக்கரங்கள் தீண்ட முடியாமல் அந்த நாணயம் பயன்பாடு என்ற உலகில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ளட்டும். எனது வருகை அந்த நாணயத்தின் பெயரால் உறுதி செய்யப்படட்டும். அருவியைப் போல வாழ்க்கை எனக்குத் தீராச் சந்தோஷத்தை வாரி வழங்கட்டும் ” என நினைத்துக் கொண்டதாக எழுதுகிறார். எவ்வளவு அற்புதமான வரிகள் இவை. எழுத்தாளன் பிற மனிதனர்களின் ரசனைகளில் இருந்தும், சொற்களில் இருந்தும் வேறுபடும் இடம் இதுதான்.

கடலைப் பற்றி எஸ்ரா இரண்டு இடங்களில் எழுதுகிறார். ஒன்று தனுஷ்கொடி மற்றொன்று கொற்கை. இரண்டுமே தற்போது அழிவுச் சின்னங்களாகக் காட்சி தருகின்றன. தனுஷ்கொடியில் கட்டிடங்களைத் தவிர எந்த எச்சங்களும் இல்லை அதுபோலவே கொற்கையில் கடல்கூட இல்லாத நிலையில் பல கிலோமீட்டர்கள் பின்வாங்கிய கடலின் எச்சங்களைப் பற்றித் தகவல்களை எஸ்ரா தருகிறார். கடலுக்கு எப்போதுமே ஒரு வசீகரம் இருக்கிறது. சலிப்பற்ற , அலுப்பு தராத ஓர் காட்சிதான் கடல். கடலை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாக நம்மால் காணமுடியும் . கும்மிருட்டில் சிறு பிறை வெளிச்சத்தில், நட்சத்திரங்கள் சூழ காத்திரமாக அடித்து அடித்து அடங்கும் அலைகளைக் கொண்ட கடலில் முன்பு நம்மை ஒப்புக் கொடுத்து தனிமையை, வெறுமையை அதனிடம் தந்துவிட வேண்டும். அது மனதினை மயிலிறகால் தீண்டும் ஓர் உன்னதத்தை நமக்குத் தரும். கடலின் பிரம்மாண்டம் மட்டுமே நமக்குத் தெரியும். அதன் அமைதியை சாந்தத்தை யார் அறிவார்..? அறியப் போகிறார். ? கடலிடம் சென்று வெறுமெனக் கால்களை நனைத்துக் கொண்டு ஜோடிகளாகப் படங்களின் பட்டியல்களை நிரப்புவதில் எனக்குத் துளியளவும் உடன்பாடில்லை. அதன் அருகே அமர்ந்து முடிந்தமட்டும் தின்று கழித்துப் பொழுதை பாழாக்குவது அருவருப்பான ஒன்று.

கடலைப் பற்றி மாலுமியின் குறிப்பொன்றை எஸ்ரா தருகிறார் ” கடலோடு பேசவும், கடலை நேசிக்கவும் தெரியாதவனைக் கடல் ஒருபோதும் தன்னுள் அனுமதிப்பதில்லை ” .ஒரு முறை ஒரே ஒருமுறை கடலின் முன் நின்று ஓர் கால் மணிநேரம் எதுவுமே பேசாமல் உங்களை நீங்களைக் கடலிடம் ஒப்புக்கொடுத்துவிடுங்கள். பேரமைதி உங்களைத் தழுவி கொள்ளும்.

அடுத்ததாகப் பின்னிரவைப் பற்றி எஸ்ரா எழுதுகிறார். எல்லோரும் ஆழ்ந்து உறங்கும் நேரமது. இரவும் மனிதர்களை மிக நேர்த்தியாக உறங்க வைக்கும் நேரமது. பின்னிரவு எப்படிபட்டது.? எல்லோரும் விழித்திருக்க நீங்கள் மட்டும் விழித்திருக்கிறீர்கள் எனும் போது யாரிடம் அதைச் சொல்லப் போகிறீர்கள்.? யாரைப் பற்றிய நினைவுகளை அந்தப் பின்னிரவுகளில் அசைபோட போகிறீர்கள்.? எஸ்ரா ஓர் இரயில் பயணத்தில் , ஓர் மலை நகரத்தில், ஓர் பனிப் பிரதேசத்தில் பின்னிரவைப் பற்றி மிக நுட்பமாக எழுதுகிறார். பின்னிரவின் இரயில் பயணத்தில் விழித்துக் கொண்டு காற்றோடு கதைக்கிறார். மலைப் பிரதேசத்துப் பின்னிரவில் தூரத்தில் மலை உச்சியில் எங்கோ வரையப்பட்ட ஓவியம் போலக் காட்சி தரும் ஒற்றை மரத்திடம் பேசுகிறார். பனி கொட்டும் பின்னிரவில் சூரியனை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்.

நானும் நிறையப் பின்னிரவுகளில் விழித்திருந்திருக்கிறேன். ஓர் இரயில் பயணத்தில், ஓர் பதற்றமான கலவரச் சூழலில், மரணித்த சிறுவனின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னிரவு, அனாதையாய் தொழுகை விரிப்புகளில் கண்ணீர் சிந்தி கையேந்தி நிற்கும் பின்னிரவு எனப் பின்னிரவின் இரகசியம் எனக்குத் தெரியும். அது ஓர் சாந்தத்தை, என்ன வாழ்க்கை வாழுகிறாய் என்று ஓங்கி விடும் அறையை, பெரும் குற்ற உணர்ச்சியை, தாங்குவதற்குக் கரங்கலற்ற தருணத்தில் கண்ணீரை படைத்தவனிடம் ஒப்படைத்தலை என நிறையப் பின்னிரவுகள் என்னிடம் உண்டு. அதனால் தான் நான் அடிக்கடி ” இரவு என்பது வெறுமென உறங்குவதற்கானது மட்டுமல்ல. தலையணை தலைசாய்ப்பதற்கு மட்டுமானதல்ல என்பதைப் போல ” என்று எழுதி வைக்கிறேன்.

இந்த மொத்த புத்தகத்திலும் நான் மிக ரசித்த ஓர் பயணக் கட்டுரை ஒன்று இருக்கிறது அதுதான் “கூட்ஸ் பயணம் ” . நிறைய நேரம் இரயில் நிலையங்களில் இரயிலுக்காகக் காந்திருந்த போதெல்லாம் எனை கடந்து ஏராளமான கூட்ஸ் இரயில் போயிருக்கிறது. அதனைப் பார்ப்பதற்குக் கொஞ்சம் அலுப்பாக இருந்த போதிலும் கூட்ஸ் பெட்டியின் கடைசிப் பெட்டியில் திறந்த வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த இரயில்வே ஊழியரை விடாமல் பார்த்திருக்கிறேன். அதைப்பற்றியான கட்டுரை தான் கூட்ஸ் பயணம்.

உடலை வருத்திக் கொள்ளாத உழைப்புகளிலெல்லாம், பெரும்பாலும் நேரத்தை எனதாக்கி புத்தகங்களை வாசிப்பதும், கதைகளைக் கேட்பதும் உண்டு. அலுப்பையும் , சலிப்பையும் தரும் கூட்ஸ் வண்டியில் எப்படி ஒரு ஊழியரால் நீண்ட தூரம் பயணிக்க முடிகிறது. எல்லா அதிவிரைவு வண்டிகளுக்கும் வழி விட்டு ஆமை நடைபோடும் கூட்ஸ் வண்டிகளில் அந்த ஊழியர் ஒற்றை மனிதராய் அப்படி என்ன பொழுதை கழிப்பார். எஸ்ராவிற்கு அந்தக் கூட்ஸில் பயணிக்க வேண்டுமெனவும் அதில் மார்கஸிம் கார்க்கியின் இரயில் கதைகளை வாசிக்க வேண்டுமெனத் தோன்றி அந்த ஊழியரின் அனுமதியோடு கூட்ஸில் பயணிக்கத் துவங்குகிறார். பயணத்தின் முடிவில் அலுப்பும், உடலை அப்பிக் கொள்ளும் அழுக்கும்,தூசியும், இரைச்சலும் தான் மிச்சமானது. அவரால் அந்தச் சூழலில் அப்புத்தகத்தை வாசிக்கவே முடியவில்லை. ஆனாலும் ” இன்றும் எங்காவது கூட்ஸ் ரயில் போவதைப் பார்க்கும்போது கடைசிப்பெட்டி மீதே கண்கள் போகின்றன. ஏனோ அந்த வசீகரம் குறையவேயில்லை.” என்று எஸ்ரா எழுதுகிறார்.

நான் வசிக்கும் பழங்குடி கிராமத்திற்கு அருகே 50 கிலோ மீட்டருக்குள்ளே தான் ஒரிசாவின் பழங்குடி கிராமங்கள் தொடங்குகின்றன. கிட்டதட்ட இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ளவர்களும் ஒரிய மொழியைப் பேசக்கூடியவர்களே. எஸ்ரா இப்பழங்குடியினர் குறித்துத் தனது பயணக் கட்டுரைகளில் எழுதுகிறார். அவர்களது வாழ்வியல், அவர்களது அன்றாட வாழ்க்கை, அவர்கள் ஒன்றுகூடும் வாரச் சந்தை என எஸ்ராவின் குறிப்புகளை நேரடியாகக் கண்டிருக்கிறேன். பழங்குடி மக்களைக் கவருவதற்கு ஒவ்வொரு வாரச் சந்தையிலும் நகரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மலிவு விலை பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகிறது. அது குறித்து எஸ்ரா சொல்லும்போது “நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லாப் பொருட்களும் டூப்ளிகேட், அதே நேரம் பழங்குடி மக்கள் விற்பனைக்காக வைத்திருப்பவை அத்தனையும் இயற்கையாக விளைந்தவை. தங்களின் உழைப்பால் உருவான அந்தப் பொருட்களை விற்று டூப்ளிகேட் பொருள்களைப் பழங்குடிகள் வாங்கிப்போகின்ற காட்சியைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.மலிவான பிளாஸ்டிக் கலாச்சாரத்தைப் பழங்குடிவரை கொண்டு சேர்த்திருப்பது வருத்தமாக இருந்தது.” என்று எழுதுவார்.

ஒருமுறை வாரச் சந்தைக்காகச் சந்தை நடக்கும் பகுதிக்கு ஆடும் , கோழிகளும் ஏற்றப்பட்ட ஆட்டோவில் சென்றேன். சந்தையில் நானும் பங்கெடுத்திருக்கிறேன். சில பொருட்களை வாங்கியிருக்கிறேன். சிலவற்றை விற்றிருக்கிறேன். ஓர் பழங்குடிக் கிழவர் தான் வளர்த்த நாட்டுக் கோழிகளையும், சேவல்களையும் கால்களைக் கட்டி சந்தையில் கொண்டுவந்து விற்றுக் கொண்டிருந்தார். நாட்டுக் கோழிகளுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. சந்தை முடிகின்ற நேரம் அக்கிழவரை பார்த்தேன். ஓர் இறைச்சி கடையில் பிராய்லர் கோழி இறைச்சி 1/2 கிலோ , சில சாராயப் பொட்டலங்களை, காய்கறிகள், மளிகை பொருட்கள் எனத் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு தனது ஊரை நோக்கி புறம்படத் துவங்கினார். பிராய்லர் கோழிகள், மேகி நூடுல்ஸ்கள், தலைக்கு அடிக்கும் சாயங்கள், நச்சு மிகுந்த பூச்சிக் கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்கள் என நகரத்து அரக்கர்களின் கரங்கள் எப்போதோ அவர்களை அரவணைக்கத் தொடங்கிவிட்டன.

பயணங்களைப் பற்றிய எழுத்துக்களை ஓர் பயணியால் தான் சொல்ல முடியும். ஓர் பயணியும், தேர்ந்த எழுத்தாளனுமாகிய எஸ்ராவின் எழுத்துப் பணிகள் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் மென்மேலும் பெருமை சேர்க்கட்டுமாக என வாழ்த்துகிறேன். எஸ்ரா சமகால எழுத்துலகின் சிற்பி என்றால் அது மிகையல்ல.!

புத்தகம் : இலக்கற்ற பயணி

எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்

பக்கங்கள் : 184 விலை :₹175

பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்

:

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2024 07:36

October 26, 2024

அண்டா ஹால்ட்

வங்காளத்தின் புகழ்பெற்ற ராமபத சௌதுரி எழுதிய பாரதநாடு என்ற சிறுகதை முக்கியமானது.

இந்தக் கதை வங்கச்சிறுகதைகள் தொகுப்பில் உள்ளது.

இதனை சொல்வனம்  இணைய இதழில் மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள்.

••

பாரத நாடு

ராமபத சௌதுரி

தமிழாக்கம் : சு.கிருஷ்ணமூர்த்தி.

ராணுவக் குறியீட்டின்படி அந்த இடத்தின் பெயர் BF332.  அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே பிளாட்ஃபாரமும் இல்லை, டிக்கெட் கௌண்டரும் இல்லை. திடீரென்று ஒரு நாள் அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டி பளபளக்கும் முள்வேலி போடப்பட்டது. அவ்வளவுதான். இரு திசைகளிலும் போகும் ரயில்களில் எதுவுமே நிற்பதில்லை. ஒரேயொரு ஸ்பெஷல் ரயில் மட்டும் என்றாவது ஒரு நாள் காலையில் அங்கு வந்து நிற்கும். என்றைக்கு நிற்கும் என்பது எங்களுக்கு மட்டும்தான் முன்னதாகத் தெரியும். நாங்கள் என்றால் பிகாரி சமையல்காரனைச் சேர்த்து நாங்கள் ஐந்து பேர்.

ரயில் நிற்பதில்லை, ஸ்டேஷனும் இல்லை. அப்படியும் அந்த இடத்துக்கு ஒரு பெயர் கிடைத்து விட்டது. – ‘அண்டா ஹால்ட்.’ அண்டா என்றால் முட்டை. நாங்களும் அந்தப் பெயரைப் பயன்படுத்தத் துவங்கி விட்டோம்.

அருகிலிருந்த இரண்டு குன்றுகளுக்கு நடுவில் மகதோ இனத்தவர் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்தில் நிறையக் கோழிகள் வளர்க்கப்பட்டன. மகதோக்கள் அங்கிருந்து வெகு தொலைவிலிருந்த புர்க்குண்டாவில் சனிக்கிழமைதோறும் கூடும் சந்தையில் கோழிகளையும் முட்டைகளையும் விற்கப் போவார்கள். சில சமயம் சந்தையில் கோழிச் சண்டையும் நடக்கும்.

ஆனால் BF332க்கு ‘அண்டா ஹால்ட்’ என்று பெயர் வர இது காரணமல்ல. எங்களுக்கு அந்த கிராமத்து முட்டைகள் மேல் எவ்வித ஆசையும் இல்லை.

ரயில்வே இலாகா ஒரு காண்ட்ராக்டருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. அவனிடம் ஒரு டிராலி வண்டி இருந்தது. அவன் சிவப்புக் கொடி கட்டப்பட்ட அந்த ட்ராலியைத் தண்டவாளங்களின் மேல் தள்ளிக் கொண்டு வந்து அங்கு கூடை கூடையாக முட்டைகளை இறக்குவான். பிகாரி சமையல்காரன் பகோதிலால், அவற்றை இரவில் வேகவைப்பான்.  பிறகு வெந்த முட்டைகள் தோலுரிக்கப்படும் உரிக்கப்பட்ட முட்டைத் தோல் நாளடைவில் மலைபோல் குவிந்து விட்டது. இதனால்தான் அந்த இடத்துக்கு ‘அண்டா ஹால்ட்’ என்று பெயர் வந்தது.

ராணுவ மொழியில் வழங்கப்பட்ட BF332 -ல்  உள்ள BF என்ற எழுத்துக்கள் breakfast (காலையுணவு) என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கம் என்று நினைக்கிறேன்.

அப்போது ராம்கட் என்ற ஊரில் போர்க்கைதிகளின் முகாம் ஒன்றிருந்தது. அங்கு இத்தாலியப் போர்க் கைதிகள் துப்பாக்கிகளாலும் முள்வேலிகளாலும் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சில சமயம் அவர்கள் ஒரு ரயிலில் ஏற்றப்பட்டு வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் ஏன் எங்கு கொண்டு செல்லப் படுகிறார்களென்பது எங்களுக்குத் தெரியாது.

மறுநாள் காலையில் ரயில் வந்து நிற்கும் என்று எனக்குச் செய்தி வரும். முட்டைகளும் கூடவே வரும். நான் பகோதிலாலிடம் முட்டைகளைக் காட்டி , “முன்னூத்தி முப்பது காலைச் சாப்பாடு” என்று சொல்வேன்.

பகோதிலால் எண்ணி அறுநூற்றி அறுபது முட்டைகளுடன் உபரியாக இருபத்தைந்து முட்டைகள் எடுத்துக் கொள்வான். முட்டைகளில் சில அழுகிப் போயிருக்கலாம் என்பதால் உபரி முட்டைகள். பிறகு அவற்றை நன்றாக வேக வைப்பான். வெந்த முட்டைகளை மூன்று கூலிகலின் உதவியோடு தோலுரிப்பான்.

இந்த முட்டைத் தோல்கள்தான் முள்வேலிக்கு வெளியே மலையாகக் குவியும்.

காலையில் ரயில் வந்து நிற்கும். அதன் இரு திசைகளிலும் ராணுவச் சிப்பாய்கள் கீழே குதிப்பார்கள் காவலுக்காக.

பிறகு கோடுபோட்ட சிறையுடையணிந்த போர்க் கைதிகள் ரயிலிலிருந்து இறங்குவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பெரிய குவளை, ஒரு பீங்கான் தட்டு.

மூன்று கூலிகளும் இரண்டு பெரிய ட்ரம்களைக் கவிழ்த்து அவற்றை மேஜை போலப் பயன்படுத்துவார்கள். போர்க்கைதிகள் வரிசையாக அந்த ட்ரம்களைக் கடந்து போவார்கள். ஒரு கூலி ஒவ்வொரு கைதியின் குவளையிலும் சுடச் சுடக் காப்பியை ஊற்றுவான். இன்னொரு கூலி ஒவ்வொரு கைதிக்கும் இரண்டு துண்டுகள் ரொட்டி கொடுப்பான். மூன்றாவது கூலி இரண்டிரண்டு முட்டைகல் கொடுப்பான். பிறகு கைதிகள் ரயிலில் ஏறிக் கொள்வார்கள். தோளில் அடையாளப் பட்டையும் காக்கிச் சீருடையும் அணிந்த கார்டு விசில் ஊதுவான். கொடி அசையும், ரயில் புறப்பட்டு விடும்.

மகதோக்கள் யாரும் அங்கு நெருங்குவதில்லை. அவர்கள் தூரத்திலுள்ள வயல்களில் மக்காச் சோளம் விதைத்தவாறே நிமிர்ந்து நின்று இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள்.

சில சமயம் ரயில் சென்ற பிறகு நாங்கள் முகாமைப் பகோதிலாலின் பொறுப்பில் இவ்ட்டு விட்டு மகதோக்களின் கிராமத்துக்குக் காய்கறிகள் வாங்கப் போவோம். மகதோக்கள் குன்றுச் சரிவில் கடுகு, கத்தரிக்காய் பீர்க்கங்காய், பயிரிடுவார்கள்.

திடீரென்று அண்டா ஹால்ட் எல்லா ரயில்களும் நிற்குமிடமாகி விட்டது. முள்வேலிக்கும் தண்டவாளத்துக்கும் இடையிலுள்ள நிலம் செப்பனிடப்பட்டு பிளாட்ஃபாரம் போல மேடாக்கப்பட்டது.

போர்க்கைதிகளை ஏற்றி வந்த ரயில்கள் மட்டுமன்றி ராணுவத்தை ஏற்றி வந்த விசேஷ ரயில்களும் அங்கே நிற்கத் தொடங்கின. அவற்றில் காபர்டின் பேண்ட் அணிந்து கொண்டு அதன் பின்பக்கப் பையில் பணப்பை வைத்திருந்த அமெரிக்கச் சிப்பாய்கள் வந்தார்கள். ராணுவப் போலிசார் கீழே இறங்கி இங்குமங்கும் நடப்பார்கள், வேடிக்கையாகப் பேசுவார்கள். போர்க்கைதிகளைப் போலவே ராணுவச் சிப்பாய்களும் வரிசையாக நின்று ரொட்டி, காப்பி, முட்டை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறிக் கொள்வார்கள். காக்கியுடை அணிந்த ரயில் கார்ட்  கொடியை அசைத்தவாறு விசில் ஊதுவான். நான் ராணுவ மேஜரிடம் ஓடிப்போய் சப்ளை பாரத்தில் கையெழுத்து வாங்குவேன்.

ரயில் போய்விடும். எங்கு என்று எங்களுக்குத் தெரியாது.

அன்றும் அமெரிக்கச் சிப்பாய்களை ஏற்றிக் கொண்டு ரயில் வந்து நின்றது. மூன்று கூலிகளும் சிப்பாய்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்கள். சிப்பாய்கள் “முட்டை அழுகல், ரொட்டித் துண்டு காய்ஞ்சு போச்சு,’ என்று சொல்லி அவற்றை எறிந்து விடாமலிருக்கிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தான் பகோதிலால்.

அப்போது தற்செயலாக முள்வேலிப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

முல்வேலிக்குச் சற்று தூரத்தில் ஒரு மகதோச் சிறுவன் கண்களை அகல விரித்துக் கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கோவணம் மட்டுமே அணிந்திருந்தான். அவனுடைய அரைஞாணில் ஒரு உலோகத் துண்டு கட்டப்பட்டிருந்தது. ஒரு நாள் அவன் எருமைக்கன்று ஒன்றின்மேல்  சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

அந்தப் பையன் ஆச்சரியத்தோடு ரயிலையும், சிவந்த முகமுடைய அமெரிக்கச் சிப்பாய்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு சிப்பாய் அவனைப் பார்த்து ‘ஏய்!’ என்று பயமுறுத்தவும் அந்தப் பையன் அலறியடித்துக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினான். சில சிப்பாய்கள் இதைப் பார்த்து ‘ஹோ ஹோ’ வென்று சிரித்தார்கள்.

பையன் மறுபடி ஒரு நாளும் வரமாட்டான் என்று நான் நினைத்தேன்.

ஆனால் மறுதடவை ரயில் வந்து நின்ற போது அந்தப் பையன் முள்வேலிக்கு வெளியே நின்று கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவனோடு கூட அவனை விடச் சற்று பெரிய இன்னொரு பையன். பையனின் கழுத்தில் நூலில் கட்டப்பட்ட துத்தநாகத் தாயத்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. புர்க்குண்டாச் சந்தையில் இத்தகைய தாயத்துகள் குவியல் குவியலாக விற்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இவை தவிர குங்குமம், மூங்கில் கழியில் தொங்கவிடப்பட்ட பல நிற நூல்கள், கண்ணாடி மணி, பாசி மணி மாலைகள் இன்னும் பல பொருட்களும் விற்கப்படும். சில சமயம் ஒரு நாடோடி வியாபாரி கழுத்தில் நிறையப் பாசி மணி மாலைகளைப் போட்டுக் கொண்டு முழங்கால் வரை தூசியுடன் மகதோக்களின் கிராமத்துக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன்.

இரு சிறுவர்களும் முள்வேலிக்கு மறுபுறம் நின்று கொண்டு வியப்போடு அமெரிக்க சிப்பாய்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முன்பு வந்திருந்த பையனின் கண்களில் பயம். சிப்பாய் யாராவது பயமுறுத்தினால் ஓடிப் போகத் தயாராயிருந்தான் அவன்.

நான் சப்ளை ஃபாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தேன். வாய்ப்புக் கிடைக்கும்போது மேஜரைப் புகழ்ந்து காக்காய் பிடித்தேன்.  ஒரு சிப்பாய் ரயில் பெட்டியின் கதவருகில் நின்று காப்பியைக் குடித்தவாறே அந்தச் சிறுவர்கலைத் தன் பக்கத்திலிருந்த இன்னொரு சிப்பாய்க்குச் சுட்டிக்காட்டி, ‘அசிங்கம்!’ என்று சொன்னான்.

மகதோக்கள் அசிங்கம் என்று அதுவரை தோன்றியதில்லை. அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். கவண் அல்லது அம்பெறிந்து புனுகுப் பூனை வேட்டையாடுகிறார்கள். பாட்டுப் பாடுகிறார்கள், மது தயாரித்துக் குடிக்கிறார்கள், சில சமயம் வில்லின் நாண் போல நிமிர்ந்து கொண்டு எதிர்த்து நிற்கிறார்கள். கோவணமணிந்த, குச்சி போன்ற உடல் வாகு, கறுப்பு, சொர சொரப்பு-

அந்த சிப்பாய் ‘அசிங்கம்’ என்று சொல்லியது என்னை உறுத்தியது. அந்தப் பையன்கள் மேல் எனக்குக் கோபம் வந்தது.

சிப்பாய்களில் ஒருவன் ஒரு பாட்டி வரியொன்றை உரக்கப் பாடினான். சிலர் ‘ஹா ஹா’வென்று சிரித்தார்கள். ஒருவன் குவளையிலிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்து விட்டுக் கூலியைப் பார்த்துக் கண்ணடித்தான், குவளையை மறுபடி நிரப்பச் சொல்லி. இன்னும் எவ்வளவு நேரம் ரயில் நிற்க வேண்டுமென்று பார்க்க வந்த பஞ்சாபி ரயில் கார்டு மேஜருடன் மூக்கால் பேசினான்.

பிறகு விசில் ஊதியது. கொடியசைந்தது. எல்லாரும் சிவப்புப் பட்டையணிந்த ராணுவப் போலிஸ் உட்பட அவசர அவசரமாக ரயிலில் ஏறினார்கள்.

ரயில் சென்ற பிறகு மறுபடி  பழையபடி வெறுமை. மணல் வெளியில் கள்ளிச் செடி வரிசை போல முள்வேலி.

சில நாட்களுக்குப் பிறகு இன்னொரு ரயில் வந்தது. இந்த தடவை அதில் வந்தவர்கல் போர்க்கைதிகள். அவர்கள் ராம்கட்டிலிருந்து வேறெங்கோ போய்க் கொண்டிருந்தார்கள். எங்கே என்று எங்களுக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை.

அவர்கள் கோடுபோட்ட சிறையுடையை அணிந்திருந்தார்கள். அவர்கள் முகத்தில் சிரிப்பு இல்லை, அவர்களைச் சுற்றிலும் ரைஃபிள் ஏந்திய சிப்பாய்கள். எங்களுக்கும் கொஞ்சம் பயமாயிருக்கும். ஒரு போர்க்கைதி வேஷ்டி ஜிப்பா அணிந்து கொண்டு தப்ப முயன்றதாக நாங்கள் புர்க்குண்டாவில் கேள்விப்பட்டோம். நாங்கள் வங்காளிகளாதலால் மிகவும் பயப்பட்டோம்.

ரயில் சென்ற பிறகு நான் கவனித்தேன்.  முள்வேலிக்கு வெளியே அந்த இரண்டு பையன்களோடு, குட்டையான துணியணிந்து ஒரு பதினைந்து வயதுப் பெண்ணும் இரண்டு ஆண்களும் வயல் வேலையை விட்டு விட்டு வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு சிரித்தார்கல். பிறகு அருவி நீரோடுவது போல கலகலவென்று பேசிக்கொண்டே கிராமத்தை நோக்கி நடந்தார்கள்.

ஒரு நாள் அமெரிக்க சிப்பாய்கள் பிரயாணம் செய்த ரயில் ஒன்று வருவதைப் பார்த்ததும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மகதோக்கள் சுமார் பத்துப் பேர் ஓடி வந்தார்கள். ரயில் ஜன்னல் வழியே காக்கியுடையைப் பார்த்ததுமே அவர்கள் ரயில் அங்கு நிற்கும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த வழியே தினம் ஒரிரு பிரயாணி ரயில்களும்  சரக்கு ரயில்களும் போவது வழக்கம். அவை அந்த இடத்தில் நிற்பதுமில்லை, அவற்றைப் பார்த்து மகதோக்கள் ஓடி வருவதுமில்லை. எங்கள் முகாமில் காய்கறிகளும் மீனும் கொண்டு வந்து விற்க அனுப்பும்படி மகதோ கிராமத்துத் தலைவனிடம் ஒரு நாள் சொன்னேன்.

”வயல் வேலையை விட்டு வர முடியாது” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன்.

ஆனால் இப்போது மகதோக்கள் ஓடி வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது எனக்கு.

கருப்பு உடலில் கோவணம் மட்டும் அணிந்த ஆண்கள், அகலக் கட்டையான துணியுடுத்திய பெண்கள்; கிராமத்துச் சக்கிலியன் தைத்த முரட்டுச் செருப்புகள் காலில், அவர்கள் முள்வேலிக்கு வெளியே வரிசையாக நின்றார்கள்.

ரயில் வந்து நின்றது. அமெரிக்க சிப்பாய்கள் கைகளில் குவளைகளை எடுத்துக் கொண்டு திடுதிடுவென்று இறங்கினார்கள்.

அன்று அங்கே இருநூற்றுப் பதினெட்டுப் பேருக்குக் காலையுணவு தயாராகி இருந்தது.

அப்போது குளிர ஆரம்பித்து விட்டது. தொலைவில் குன்றின் மேல் பனிப்போர்வை. மரங்களும் செடிகொடிகளும் பனியால் கழுவப்பட்டுப் பச்சைப் பசேலென்று இருந்தன.

ஒரு சிப்பாய் தன் அமெரிக்கக் குரலில் இந்த இயற்கையழகை ரசித்தான்.

இன்னொருவர்ன் ரயிலுக்கு வெளியே நின்று கொண்டு முள்வேலிக்கு அப்பாலிருந்த வெட்டவெளியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு திடீரென்று அவன் குவளையை ரயில் பெட்டியின் படியின்மேல் வைத்து விட்டுத் தன் பேண்ட் பைக்குள் கையை விட்டான். பையிலிருந்து ஒரு பளபளப்பான எட்டணா நானயத்தை எடுத்து மகதோக்கள் இருந்த திசையில் எறிந்தான்.

அந்தக் காசு முள்வேலிக்கு உட்புறத்தில் தார் போடப்பட்டிருந்த தரையில் விழுந்தது. மகதோக்கள் வியப்போடு அந்தச் சிப்பாயைப் பார்த்தார்கள். கீழே கிடக்கும் நாணயத்தைப் பார்த்தார்கள், பிறகு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ரயில் சென்றபிறகு அவர்களும் போகத் தொடங்கினார்கள். நான் அவர்களிடம், “தொரை ஒங்களுக்குப் பக்‌ஷீஸ் கொடுத்திருக்கார். எடுத்துக்கிட்டுப் போங்க” என்றேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். யாரும் வந்து காசைப் பொறுக்கிக் கொள்ள முன்வரவில்லை.

நானே காசை எடுத்து மகதோக் கிழவனிடம் கொடுத்தேன். அவன் ஒன்றும் புரியாமல் என் முகத்தைப் பார்த்தான். பிறகு அவர்கள் எல்லாரும் மௌனமாக அங்கிருந்து போய் விட்டார்கள்.

முட்டைகள் சப்ளை செய்த காண்டிராக்டரிடம் வேலை பார்ப்பவன் நான். எனக்கு இந்த வேலை சற்றும் பிடிக்கவில்லை. ஜனநடமாட்டமில்லாத இடம். பிரயாணி ரயில் எதுவும் நிற்பதில்லை. முகாமில் நானும் பகோதிலாலும் மூன்று கூலிகளுந்தான். வெறும் பொட்டல் வெளி, பகலில் சூனியமான வானம், என் மனதில் சலிப்பு. மகதோக்களும் எங்களை நெருங்குவதில்லை. நானே போய் அவர்களிடமிருந்து காய்கறிகள், மீன் வாங்கி வருவேன். அவர்கள் விற்க வருவதில்லை. ஆறு மைல் தூரம் நடந்து புர்க்குண்டாச் சந்தையில் விற்கச் செல்லுகிறார்கள்.

பிறகு சில நாட்களுக்கு சிப்பாய் ரயிலோ கைதி ரயிலோ வரவில்லை.

திடீரென்று ஒரு நாள் அரைஞாணில் இரும்புத்துண்டு கட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் என்னிடம் வந்து கேட்டான், “ ரயில் வராதா, பாபு?.”

”வரும், வரும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

பையனைச் சொல்லிக் குற்றமில்லை. எங்கும் குட்டையான குன்றுகள், வறண்ட நிலம். கிராமவாசிகள் நெருக்கியடித்துக் கொண்டு பயணம் செய்யும் பஸ் ஒன்றைப் பார்ப்பதற்குக் கூட வேலமரக் காட்டைக் கடந்து நான்கு மைல் போக வேண்டும். காலை வேளையில் ஒரு பக்கமும் மாலையில் எதிர்ப்பக்கமும் போகும். பிரயாணிகள் ரயில் தன் வேகத்தைக் கூடச் சற்றும் குறைத்துக் கொள்ளாமல் அந்த இடத்தைக் கடந்து விடும். அப்படியும் நாங்கள் ரயில் பெட்டிகளின் ஜன்னல் வழியே மங்கலாகத் தெரியும் மனித முகங்களைப் பார்க்கக் கூடாரத்திலிருந்து வெளியே ஓடி வருவோம். மனிதர்களைப் பார்க்காமல் எங்களுக்குச் சலிப்பாயிருக்கும்.

ஆகவே அமெரிக்கச் சிப்பாய்கள் வருகிறார்களென்ற செய்தி கேட்டால் கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டலும் கூடவே ஓர் ஆறுதலும் தோன்றும் எங்களுக்கு.

சில நாட்களுக்குப் பிறகு சிப்பாய் ரயில் வருவதாகச் செய்தி வந்தது. மறுநாள் ரயில் வந்தது. வழக்கம்போல சிப்பாய்கள் ரயிலிலிருந்து இறங்கி முட்டை, ரொட்டி, காப்பி எடுத்துக் கொண்டார்கள்.

திடீரென்று முள்வேலிக்கு வெளியே மகதோக்களின் கூட்டம். அவர்கள் இருபது பேர் இருக்கலாம். முப்பது பேர் இருக்கலாம். முழங்கால் உயரமுள்ள குழந்தைகளைச் சேர்த்தால் மொத்தம் எவ்வளவு பேர் என்று சொல்ல முடியாது. குட்டைத் துணியுடுத்திய பெண்களும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றார்கள் அங்கே.

அவர்களைப் பார்த்து எனக்கு ஓர் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. பகோதிலாலோ கூலிகளோ மகதோ கிராமத்துக்குப் போக விரும்பினால் எனக்குப் பயமாயிருக்கும்.

அங்கே பிளாட்பாரம் இல்லை. ரயிலில் ஏறி இறங்க வசதிக்காகப் பாதையோரம் தார் போட்டுச் சற்று மேடாக்கப்பட்டிருந்தது. அமெரிக்கச் சிப்பாய்கல் காப்பியை உறிஞ்சிக் குடித்தவாறு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் மகதோக்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு சிப்பாய் பகோதிலாலை நெருங்கித் தன் பேண்ட் பையிலிருந்து பணப் பையை எடுத்தான். பிறகு அதிலிருந்து ஓர் இரண்டு ரூபாய் நோட்டை எடுத்துப் பகோதிலாலிடம் “சில்லறை இருக்கா?” என்று கேட்டான்.

சிப்பாய்கள் பொதுவாகச் சில்லறை வைத்துக் கொள்வதில்லை. கடைக்காரனிடம் ஏதாவது சாமான் வாங்கினால் அல்லது டாக்சியோட்டிக்குப் பணம் கொடுப்பதானால் கரன்ஸி நோட்டைக் கொடுத்து விடுவார்கள். “பாக்கியை நீயே வச்சுக்க” என்று சொல்லிக் கொடுத்து விடுவார்கள். நான் இதை ராஞ்சியில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

பகோதிலால் சிப்பாய்க்கு ஓரணா, இரண்டனா, நாலணா சில்லறை கொடுத்துக் கொண்டிருந்தான். அப்போது மகதோக்களின் கூட்டத்தில் இரும்புத்துண்டை அரைஞாணில் அணிந்திருந்த சிறுவன் சிரித்துக் கொண்டே கையை நீட்டி ஏதோ கேட்டான்.

பகோதிலாலிடமிருந்து சில்லறைகளை வாங்கிக் கொண்ட சிப்பாய் அவற்றை மகதோக்களிருந்த பக்கம் எறிந்தான். இதற்குள் நான் சப்ளை ஃபாரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். கார்டு விசில் ஊதி விட்டான். ரயில் ஓடத் தொடங்கியது.

நான் மகதோக்கள் பக்கம் திரும்பிப் பார்த்தேன்.

அவர்கள் சற்று நேரம் மௌனமாகக் கீழே கிடந்த சில்லறைகளைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். பிறகு திடீரென்று அரைஞாணில் இரும்புத் துண்டு கட்டியிருந்த சிறுவனும், துத்த நாகத் தாயத்து அணிந்த சிறுவனும் முள்வேலிக்குள் நுழைந்து வந்தார்கள்.

அப்போது முரட்டுச் செருப்பு அணிந்த மகதோக் கிழவன் “ஜாக்கிரதை!” என்று கத்தினான். அந்தச் சத்தத்தில் நான் கூடத் திடுக்கிட்டுப் போய் விட்டேன்.

ஆனால் இரு சிறுவர்களும் அவனுடைய எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லாச் சில்லறைகளையும் பொறுக்கிக் கொண்டு தோலுரித்த பிஞ்சுச் சோளக் கொண்டை போலச் சிரித்தார்கள். மகதோ ஆண்களும் பெண்களும் கூடவே சிரித்தார்கள்.

மகதோக் கிழவன் கோபத்துடன் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே கிராமத்துக்குப் போனான். மற்ற மகதோக்கள் தமக்குள் கலகலவென்று பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் கிராமத்துக்குத் திரும்பினார்கள்.

அவர்கல் சென்றபின் அந்த இடத்தில் மறுபடி வெறுமை, நிசப்தம். சில சமயங்களில் எனக்கு மிகவும் அலுப்பு ஏற்படும். கொஞ்சமாகத் தண்ணீரோடும் அருவி, பசுமையான வயல்கள், அவற்றில் அங்கங்கே கோவணமணிந்த கருப்பு மனிதர்கள், கண்களுக்குக் குளிர்ச்சியான காட்சி.

அவ்வப்போது சிப்பாய் ரயில் வந்து நிற்கும். சிப்பாய்கள் காலையுணவு உண்டு விட்டுப் போவார்கள். மகதோக்கள் முள்வேலிக்கு வெளியே கூட்டமாக வந்து நிற்பார்கள்.

“தொரை, பக்‌ஷீஸ்! தொரை, பக்‌ஷீஸ்!”

ஒரே சமயத்தில் பல குரல்கள்.

மேஜரிடம் ஃபாரத்தில் கையெழுத்து வாங்க வந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

அந்த இரு சிறுவர்கள் மட்டுமல்ல, சில இளைஞர்களும் கை நீட்டி பக்‌ஷீஸ் கேட்கிறார்கள். குட்டைத் துணியணிந்த வளர்ந்த பெண்ணும் கேட்கிறாள்.

முன்பொருநாள் நான் காய்கறி வாங்கக் கிராமத்துக்குப் போயிருந்த போது அவள்தான் “ரயில் எப்போ வரும்?” என்று என்னைக் கேட்டவள்.

தோளில் பட்டையணிந்த மூன்று நான்கு சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து கை நிறையச் சில்லறையை எடுத்து அவர்கள் பக்கம் எறிந்தார்கள். மகதோக்கள் ரயில் புறப்படும் வரை காத்திருக்காமல், ஒருவர் மேலொருவர் விழுந்து காசுகளைப் பொறுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவசர அவசரமாக முள்வேலிக்குள் நுழைந்து வரும்போது சிலருக்கு உடம்பில் கீறல் காயம் ஏற்பட்டது. சிலருடைய கோவணங்கள் வேலியில் சிக்கிக் கொண்டன.

ரயில் சென்றபிறகு அவர்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தேன். மகதோ கிராமத்தினரில் பாதிப்பேர் அங்கு வந்து விட்டதாகத் தோன்றியது. எல்லாருக்கும் கொஞ்சம் காசு கிடைத்து விட்டது. ஆகையால் அவர்கள் முகத்தில் சிரிப்பு.  ஆனால் எவ்வளவு தேடியும் முரட்டுச் செருப்பணிந்த அந்த மகதோக் கிழவனை மட்டும் பார்க்க முடியவில்லை. அவன் வரவில்லை. முதல் தடவை அவன் அதட்டியும் சிறுவர்கள் பொறுக்கியெடுத்த காசுகளை எறியவில்லை என்று அவனுக்குக் கோபமாயிருக்கலாம்.

கிழவன் மட்டும் இப்போது தனியே வயலில் மண்ணை வெட்டிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு எனக்கு இதமாயிருந்தது.

முகாமில் இருந்த எங்கள் ஐந்து பேருக்கு எப்படியோ பொழுது கழிந்தது. இடையிடையே சிப்பாய் ரயில் வரும், நிற்கும், போகும். மகதோக்கள்  முள்வேலிக்கு  வெளியே கூட்டமாகக் கூடி ‘தொரை, பக்‌ஷீஸ்! தொரை, பக்‌ஷீஸ்!” என்று கத்துவார்கள்.

அப்போது சில நாட்கல் மகதோக் கிழவன் வயல் வேலையை விட்டு விட்டுக் கைகளிலிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு அங்கே வேகமாக வந்து எல்லாரையும் அதட்டுவான். ஆனால் யாரும் அவனைப் பொருட்படுத்துவதில்லை. அவன் பரிதாபமாக அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பான். ஆனால் யாரும் அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை.

சிப்பாய்கள் பேண்ட் பையிலிருந்து சில்லறையை எடுத்து எறிவார்கள். மகதோக்கள் ஒருவர் மேலொருவர் குப்புற விழுந்து காசுகளைப் பொறுக்குவார்கள். காசு ‘எனக்கு, ஒனக்கு’ என்று சண்டை போட்டுக் கொள்வார்கள். இதைப் பார்த்துச் சிப்பாய்கள் ‘ஹா ஹா’ வென்று  சிரிப்பார்கள்.

இதன் பிறகு மகதோக் கிழவன் வருவதில்லை. மகதோக்களின் பிச்சைக்காரத்தனம் அவனுக்குப் பிடிப்பதில்லை, அதனால் அவன் அங்கு வருவதில்லை என்பதற்காக நான் கர்வப்பட்டேன். மகதோக்களின் நடத்தை எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களது இந்த நடத்தைக்காக நான் வெட்கப்பட்டேன். அவர்களுடைய வறுமை மிக்க தோற்றத்தைப் பார்த்துச் சிப்பாய்கள் அவர்கள் பிச்சைக்காரர்கள் என்று நினைப்பது எனக்கு மிகவும் வருத்தமளித்தது.

ஒருநாள் அவர்கள், “பக்‌ஷீஸ்! பக்‌ஷீஸ்!” என்று கத்திக் கொண்டிருந்தார்கள். ரயில் கார்டு ஜானகிநாத்துடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன். ’கிறீச், கிறீச்’ என்று ஒலியெழுப்பிய பூட்ஸ் அணிந்து என் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி தொண்டையைக் காரிக் கொண்டு ‘பிச்சைக்காரப் பசங்க’ என்று சொன்னான்.

நானும் ஜானகிநாத்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். என் முகம் அவமானத்தால் கறுத்தது. என்னால் தலை நிமிர முடியவில்லை. உள்ளூர எரிச்சல் பட்டேன். கையாலாகாத எரிச்சல்.

“பிச்சைக்காரப் பசங்க! பிச்சைக்காரப் பசங்க!”

என் கோபமெல்லாம் மகதோக்கள் மேல் திரும்பியது. ரயில் போனதும் நான் பகோதிலாலைக் கூடிக் கொண்டு போய் அவர்களை விரட்டினேன். அவர்கள் பொறுக்கிக் கொண்ட காசுகளை மடியில் செருகிக் கொண்டு சிரித்தவாறே ஓடிப் போய் விட்டார்கள்.

எனினும் மகதோக்களால் எனக்கு ஏற்பட்ட அவமான உணர்வை ஓரளவு தணித்தது ஒரு கர்வம். மகதோக் கிழவனின் உருவத்தில் அந்த கர்வம் குன்று போல என் கண் முன்னால் உயர்ந்து நின்றது.

ஒரு செய்தி கேட்டு எனக்கு ஆறுதல் ஏற்பட்டது. காண்ட்ராக்டரைச் சந்திக்க புர்க்குண்டா போனபோது நான் கேட்ட செய்தி அது. அண்டா ஹால்ட்டை மூடி விடப் போகிறார்களாம்.

கூலிகளில் இருவர் இவ்வளவு காலமாக மேஜை போலப் பயன்பட்ட இரு ட்ரம்களையும் முள்வேலிக்கு வெளியே தள்ளிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது கூலி எங்கள் கூடாரத்துக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டிருந்தான். பகோதிலால், ”ஆட்டம் க்ளோஸ், ஆட்டம் க்ளோஸ்!” என்று சொல்லியவாறு ட்ரம்களை உதைத்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று இங்கு எழுந்த அரவத்தைக் கேட்டு மகதோக்கள் ஓடி வந்தார்கள்.

நாங்கல் அவர்களை ஆச்சரியத்தோடு பார்த்தோம். ஏனோ பகோதிலால் சிரித்தான்.

இதற்குள் முள்வேலிக்கு வெளியே கூட்டம் கூடி விட்டது.

திடீரென்று விசில் ஒலி. ரயில் வரும் அரவம். ஜன்னல்களில் காக்கியுடை.

எங்களுக்கு ஒரு புறம் எரிச்சல், ஒரு புறம் வியப்பு. ரயில் வரப்போகும் செய்தியை எங்களுக்கு அனுப்பப் புர்க்குண்டா ஆபீஸ் மறந்து விட்டதா! இந்த முகாமையே எடுத்து விடப் போவதாக நாங்கள் கேள்விப்பட்டது தவறா? ரயில் நெருங்க நெருங்க ஒரு விசித்திரமான சத்தம் பலமாகக் கேட்டது. சத்தம் அல்ல, பாட்டு. ரயில் மிக அருகில் வந்தபோது சிப்பாய்களெல்லாரும் ஒன்று சேர்ந்து உரக்கப் பாடுவது கேட்டது.

நான் ஒன்றும் புரியாமல் ஒரு புறம் ரயிலைப் பார்த்தேன். இன்னொரு புறம் திரும்பி முள்வேலியைப் பார்த்தேன். அந்த நிமிஷம் மகதோக் கிழவன் மேல் என் பார்வை விழுந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு அவனும் “தொரை, பக்‌ஷீஸ்! தொரை, பக்‌ஷீஸ்!” என்று கத்திக் கொண்டிருந்தான்.

மகதோக் கிழவனும் மற்றவர்களும் பிச்சைக்காரர்கள் போல, பைத்தியம் பிடித்தவர்கள் போல கத்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்று அந்த ரயில் இங்கு நிற்கவில்லை. மற்ற பிரயாணி ரயில்களைப் போல அதுவும் அண்டாஹால்ட்டைப் புறக்கணித்து விட்டுப் போய் விட்டது. ரயில் இனி நிற்காது என்று எங்களுக்குப் புரிந்தது.

ரயில் போய் விட்டது. ஆனால் இவ்வளவு காலமாக வயல்களில் விவசாயம் செய்து கொண்டிருந்த மகதோக்கள் எல்லாரும் பிச்சைக்காரர்களாகி விட்டார்கள்.

(பாரத் வர்ஷ ஏபங் அன்யான்ய கல்ப,’ 1969)

••

சாகித்ய அகாதமி விருது பெற்ற ராமபத சௌதுரியின் பல கதைகள் திரைப்படமாகியுள்ளன.

அவரைப் பற்றிய சாகித்ய அகாதமி தயாரித்த ஆவணப்படமிது

நன்றி

சொல்வனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2024 04:48

October 25, 2024

அறியாத ரகசியம்

அப்துல் ரஹீம்

உங்களுடைய ஞாபகக் கல் என்ற சிறுகதையை படித்தேன். இந்தச் சிறுகதை பகலின் சிறகுகள் தொகுப்பில் உள்ளது.

அந்த அனுபவத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக அந்த அம்மா கல்லோடு உரையாடுவது. ஒரு மிகப்பெரிய அதிசயத்தை அவருடைய குடும்பம் சாதாரணமாகக் கையாள்வது . நான் ஒரு விஞ்ஞானி என்று சொன்னாலும் தத்துவத்தின் வழியே ஆன்மீகத்தின் வழியே அந்த அதிசயத்தை நிகழ்த்துவது. பகல் பொழுதுகளை அவள் கோர்க்கும் மலர்களாக உருவகிப்பதும் , ஆகாயம் போல ஆளுமை கொண்ட அவளைக் காலமும் சமூகமும் ஒரு வீட்டின் கூரையாக மாற்றுவதையும் நீங்கள் குறிப்பிட்டது அழகாக இருந்தது.

கதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கதையின் கடைசி வரி “அந்தப் பெயரை உலகம் அறியாமல் எனக்குள்ளாக வைத்துக் கொள்ளவேண்டும என்று ஏனோ தோன்றியது.”. அவளது மகன் அத்தனை தேடல்களுக்கும் உணர்வுப் பயணங்களுக்கும் பின் அடைந்த இந்த இடத்தைத் தான் அவனது அம்மாவும் அடைத்திருப்பாள் . கடைசிவரை பத்மலட்சுமி ஒரு அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிக்க முடியாத ஒரு ரகசியம் தான்.

இன்னும் என்னன்னவோ தோன்றுகிறது ஆனால் வார்த்தைப்படுத்த முடியவில்லை.நன்றி.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2024 04:15

October 23, 2024

எடித் ஹாமில்டன்

அமெரிக்கன் கிளாசிசிஸ்ட்: தி லைஃப் அண்ட் லவ்ஸ் ஆஃப் எடித் ஹாமில்டன் என்ற புத்தகத்தை விக்டோரியா ஹவுஸ்மேன் எழுதியிருக்கிறார்.

இது எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஹாமில்டனின் பால்ய நினைவுகள், அவரது பெற்றோர். வளர்ந்த சூழல் மற்றும் கிரேக்க இலக்கியங்கள், லத்தீன் மொழி மீது கொண்ட ஆர்வம் குறித்து விரிவாகப் பேசுகிறது

குடும்பச் சூழல் காரணமாகப் படித்து முடித்தவுடனே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது தந்தை ஒரு குடிகாரர். தாயும் சகோதரியும் நோயாளிகள். ஆசிரியராகப் பணியைத் துவங்கி ஹாமில்டன் தனது அயராத உழைப்பால் தலைமை ஆசிரியராக உயர்வு பெற்றார். 25 ஆண்டுகள் அந்தப் பணியில் நீடித்திருக்கிறார். அதன் பின்பு விருப்ப ஒய்வு பெற்றுக் கொண்டு தனக்கு விருப்பமான கிரேக்க இலக்கியங்களைத் தொன்மங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.

வாழ்க்கை எவ்வளவு கசப்பானதும் இனிமையானது என்பதைக் கிரேக்கர்கள் முழுமையாக அறிந்திருந்தனர். மகிழ்ச்சியும் துக்கமும் கிரேக்க இலக்கியத்தில் கைகோர்த்து நிற்கின்றன, ஆனால் அதில் எந்த முரண்பாடும் இல்லை. கிரேக்கர்கள் ஒரு போதும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது என்கிறார் ஹாமில்டன்.

எடித் ஹாமில்டன் தனது அறுபத்தி இரண்டு வயதில் தான் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய எடித் கிரேக்க, ரோமானிய தொன்மங்கள். இலக்கியங்கள் குறித்து ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவரது மொழியாக்கத்தில் வெளியான கிரேக்க வரலாறு மற்றும் தொன்மங்கள் பற்றிய புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.

கிரேக்கத் சிந்தனையாளர்கள் மற்றும் கடவுளரின் கதைகளை இவர் சமகால அமெரிக்க வாழ்க்கையோடு அரசியலோடு தொடர்பு படுத்தி விவாதித்தார். கிரேக்க இலக்கியங்களிடமிருந்து இன்றைய தலைமுறை என்ன கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்தார்.

சிறுவயதிலிருந்தே லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளைப் படித்திருந்த ஹாமில்டன். தனது நூல்களுக்கான ஆய்வுகளுக்காக. ஹாமில்டன் நிறையப் பயணம் செய்திருக்கிறார்,

இவரது பங்களிப்பிற்காக ஏதென்ஸின் கௌரவக் குடிமகனாகக் கௌரவிக்கபட்டார்.

இவரது The Greek Way ல் பண்டைய கிரேக்கர்களிளை உலகின் முதல் நவீன குடிமக்களாகக் குறிப்பிடுகிறார். அவர்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் உலகம் பற்றிய புரிதல்களை வியந்து எழுதியிருக்கிறார்.

கிரேக்க செவ்வியல் இலக்கியங்களை ஆழ்ந்து கற்க வேண்டும் என்பதை எடித் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதற்காகக் காரணங்களை அவர் தெளிவாகப் பட்டியலிடுகிறார்.

கிரேக்க கடவுள்கள் பற்றிய கதைகளை வெறும் தொன்மக்கதைகளாகப் பாராமல் சமகாலத்தில் நடப்பது போல அதிகாரத்திற்கு எதிரான செயல்கள் மற்றும் அடிபணிய மறுத்த நாயகர்களின் கதைகளாக அடையாளப்படுத்தினார். அதன் காரணமாகவே அமெரிக்காவில் பலராலும் விரும்பி வாசிக்கபட்டார்.

கிரேக்க சிந்தனையாளர்கள் மற்றும் செவ்வியல் எழுத்துகளை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு ஹாமில்டன் நல்ல துவக்கமாக இருப்பார் என்பதே நிஜம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2024 05:04

October 22, 2024

எழுத்தரின் சிற்பம்

பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த எழுத்தர் சிற்பம் ஒன்றுள்ளது. இது சுண்ணாம்புக்கல்லால் ஆனது.

எகிப்தில் உள்ள சக்காராவில் பிரெஞ்சு அகழ்வாய்வாளர் அகஸ்டே மரியட் டால் இந்தச் சிற்பம் கண்டறியப்பட்டது.

“சீட்டட் ஸ்க்ரைப்” என்று அழைக்கப்படும் இந்த எகிப்திய வண்ணச்சிற்பம் கல்வியறிவு மற்றும் எழுத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது

இந்த எழுத்தரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தச் சிலையை உருவாக்கிய கலைஞரின் பெயரும் தெரியவில்லை

பெரும்பாலான எகிப்திய சிற்பங்கள் நிற்கும் நிலையில் சித்தரிக்கபடுவதே வழக்கம். ஆனால் இந்த எழுத்தரின் சிலை அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.

எழுத்தர்கள் கோவில்கள் மற்றும் அரண்மனையில் பணிபுரிந்தனர். எகிப்தின் கதைகள் மற்றும் வாய்வழி மரபுகளைப் பாதுகாத்ததில் எழுத்தர்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

எகிப்திய கலையின் தலைசிறந்த படைப்பாக இச்சிற்பத்தைக் கொண்டாடுகிறார்கள்.

அவரது தோற்றத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள், நேரில் நம் முன்னே ஒரு மனிதர் அமர்ந்திருப்பது போல உயிரோட்டத்துடன் காணப்படுகிறார். இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தைய மனிதர் என்று சொல்லவே முடியாது. இன்று நாம் காணும் முகம் போலவேயிருக்கிறது.

அவரது கைகள், விரல்கள் மற்றும் விரல் நகங்கள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவரது தாடையும் காதுகளும் அவ்வளவு அழகாக உருவாக்கபட்டிருக்கின்றன. அவர் ஏன் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறார். அது தான் எழுத்தர்களின் உடையோ என்னவோ.

அவரது கண்கள் நேர்த்தியாக உருவாக்கபட்டிருக்கின்றன. அதில் ஒடும் நரம்புகள் கூடத் துல்லியமாகத் தெரிகின்றன. ஒட்டிய உதடுகள். எதையோ சொல்ல முற்படுவது போன்ற அவரது முகபாவனை. கால்களை மடித்து அமர்ந்துள்ள விதம். ஆடையின் நளினம் எனப் பேரழகுடன் சிற்பம் உருவாக்கபட்டிருக்கிறது. இந்தச் சிலையின் முதுகுப்பகுதியைப் பார்த்தால் அவர் நமது ஊரைச் சேர்ந்த மனிதரைப் போலத் தோன்றுகிறார்.

எகிப்தின் வரலாறு எழுத்தர்களால் எழுதப்பட்டது. அவர்கள் மன்னரின் விருப்பபடியே வரலாற்றை எழுதினார்கள். உண்மையைத் திரித்துக் கூறத் தயங்கியதில்லை. நாட்டில் விதிக்கபட்ட வரி மற்றும் தானியங்களின் விளைச்சல் கணக்குகள், பண்ணைகள் மற்றும் நிலங்களை நிர்வகித்தல் அரசனின் உத்தரவுகள். ஒப்பந்தங்கள் யாவும் இது போன்ற எழுத்தரால் தான் எழுதப்பட்டன.

எழுத்தர் தனது இடது கையில் பாப்பிரஸ் சுருளை வைத்திருக்கிறார். அவரது வலது கை எழுதுவதற்கான கோலைப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அதைக் காணவில்லை. அவர் மன்னரின் கட்டளையின் படி எழுதுவதற்காகக் காத்திருக்கிறார்.

எகிப்தில் பெண் எழுத்தர்களும் இருந்தார்கள் என்கிறார்கள்.

பண்டைய கடவுள்கள் மற்றும் போர்வீர்ர்களின் சிற்பத்தை விடவும் எழுத்தரின் இந்தச் சிற்பம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு தேசத்தின் நிர்வாகம் மற்றும் பண்பாட்டினை எழுத்து தீர்மானிக்கிறது என்பதன் சாட்சியமிது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2024 02:22

October 21, 2024

பயனற்றதன் பயன்கள்

பெல்ஜிய-ஆஸ்திரேலிய எழுத்தாளரான சைமன் லீஸ் சீன கலை மற்றும் இலக்கியத்தில் புகழ்பெற்ற அறிஞர். அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

இவரது கலை, இலக்கியம், வரலாறு பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே The Hall of Uselessness: Collected Essays

சீன பண்பாட்டிலிருந்து அவர் கற்றுக் கொண்ட உண்மையின் அடையாளமாகவே இந்த நூலின் தலைப்பும் வைக்கபட்டிருக்கிறது. பயனற்றதன் பயன்பாடு பற்றிய பார்வைகளை முன்வைக்கிறார்.

பிரெஞ்சு இலக்கியம் குறித்த கட்டுரைகளில் பால்சாக் பற்றியது சிறப்பாகவுள்ளது.

பால்சாக்கின் வாழ்க்கை மற்றும் எழுத்து குறித்தவிரிவான கட்டுரை அவரது சுயசரிதையின் மீதான விமர்சனமாக எழுதப்பட்டிருக்கிறது

அதில் காதல் மற்றும் புகழுக்காக மட்டுமே தான் எழுதுவதாகப் பால்சாக் சொல்கிறார். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களைப் பால்சாக் எழுதியுள்ளதை வியந்து சொல்லும் சைமன் லீஸ் அவரது காலத்தில் விக்டர் ஹியூகோவை விட அவரால் புகழ்பெற முடியவில்லை. பால்சாக் இறந்த போது அவரது பெட்டியில் 10,000 க்கும் மேற்பட்ட பெண் ரசிகர்களின் கடிதங்கள் காணப்பட்டன என்று குறிப்பிடுகிறார்.

பால்சாக்கின் குழந்தைப் பருவத்தின் கசப்பான அனுபவங்கள் மறக்க முடியாதவை. அன்னையின் புறக்கணிப்பு மற்றும் ஸ்பார்டன் போர்டிங் பள்ளியில் நடந்த கொடூரங்கள் அவரிடம் ஏற்படுத்திய பாதிப்புகளே அவரது எழுத்தில் பின்னாளில் வெளிப்பட்டன என்கிறார்.

இந்தத் தொகுப்பிலுள்ள சீனப்பண்பாடு மற்றும் கலைகள் குறித்த சைமன் லீஸின் கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. குறிப்பாக Calligraphy எனப்படும் சித்திரஎழுத்துச் சீனாவில் ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறித்த கட்டுரை விரிவான பார்வையை வழங்குகிறது. அதில் Lan ting xu, or Preface to the Orchid Pavilion, by Wang Xizhi என்ற சீனாவின் முதல் சித்திர எழுத்துப்பிரதியின் வரலாற்றையும் அது பதிப்பிக்கபட்டதன் பின்னுள்ள உண்மைகளையும் விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

பல வருடங்களாகத் தொலைந்து போய்விட்டதாக கருதப்பட்ட ஆர்க்கிட் பெவிலியன் என்ற சித்திர எழுத்துப்பிரதி ஒரு துறவியின் கையில் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள். . இதற்காகப் பியான்சாய் என்ற துறவியைத் தேடி மாறுவேஷத்தில் வந்த ஒருவர் தன்னிடம் பல்வேறு சித்திர எழுத்துகள் இருப்பதாக ஆசை காட்டுகிறார். பியான்சாய் அதை எல்லாவற்றையும் விட அரிய பிரதி தன்னிடமிருப்பதாக ஆர்க்கிட் பெவிலியன் பிரதியை தேடி எடுத்துக் காட்டுகிறார். உடனே தனது மாறுவேஷத்தை கலைத்த அரசு அதிகாரி அதனைப் பறிமுதல் செய்து அரண்மனைக்குக் கொண்டு போவதாக அறிவிக்கிறார். இந்த அதிர்ச்சியைப் பியான்சாயால் தாங்க முடியவில்லை. அவர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அதன்பிறகு அவரால் உணவு உண்ண முடியவில்லை. தொண்டையில் எந்த உணவும் இறங்க முடியாத இறுக்கம் ஏற்படுகிறது. சில மாதங்களில் அவர் இறந்தும் போனார் என்கிறார் சைமன் லீஸ். நூற்றாண்டுகளைக் கடந்து இந்த சித்திர எழுத்துப்பிரதி இன்றும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.

சீனக்கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கும் சைமன் லீஸ் சிறப்பான வழிகாட்டுதலைத் தருகிறார். குறிப்பாகச் சீனாவின் ஒவிய மரபிற்கும் கவிதைகளுக்குமான உறவையும் சிறந்த கவிஞர்கள். சிறந்த ஒவியர்களாக எப்படியிருந்தார்கள் என்பதையும் விளக்குகிறார்.

“When the Chinese build a house, they start from the roof”;

“When in mourning, they wear white”; “They write upside down, and right

to left”; “When greeting someone, they shake their own hand,” எனச் சீனர்களின் செயல்கள் மேற்குலகிலிருந்து எப்படி மாறுபட்டது. அதற்கு என்ன காரணம் என்பதையும் எடுத்து சொல்கிறார்.

சீனக்கலைகளின் ஆதாரப்புள்ளியைத் தொட்டுக்காட்டுகிறார் சைமன் லீஸ்

prime aim of their activity is the cultivation and development of their own inner life. One writes, one paints, one plays the zither in order to perfect one’s character, to attain moral fulfilment by ensuring that one’s individual humanity is in harmony with the rhythms of universal creation

மௌனவாசிப்பு ஒரு காலத்தில் எவ்வளவு அரிய விஷயமாக இருந்தது என்பதற்கு அவர் தரும் உதாரணமிது.

When Saint Augustine first met Saint Ambrose, he was amazed by the exceptional ability the latter had to read silently: when reading, his lips did not move and the written message would pass directly from the book to his mind, without the intermediary of sound. This talent was still so rare at the time that Augustine felt moved later on to make a special note of it, betraying his own puzzlement

கன்பூசியஸ் பற்றிய அவரது மதிப்பீடுகளும் பார்வைகளும் சிறப்பானவை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2024 05:12

October 16, 2024

மகிழ்ச்சியின் முகவரி

கிங் லியரின் மனைவி பெயரென்ன.?

 ஷேக்ஸ்பியர் குறிப்பிடவில்லை. ஆனால் ஒரு நாவலில் அவள் பெயர் பெர்த் என்று குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை கிங் லியரின் மனைவி இருந்திருந்தால் லியரின் கேள்வியை முட்டாள்தனமானது என்று சொல்லித் தடுத்திருப்பாள். தன்னை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று மகளிடம் தந்தை கேட்பது போல தாய் ஒரு போதும் கேட்பதில்லை. அதற்கான தேவையுமில்லை.

 அம்மாவிற்கும் மகளுக்குமான உறவு என்பது வயது வளர வளர மாறிக் கொண்டேயிருக்கிறது. மகள் ஒரு குழந்தைக்கு தாயாக மாறியதும் தனது அன்னையிடம் அதிக நெருக்கம் கொண்டுவிடுகிறாள். அது போலவே முதுமையில் அம்மாவும் மகளும் தோழிகள் போலாகிவிடுகிறார்கள்.

அம்மாவிற்கும் மகளுக்குமான உறவினை அசலான சித்தரிக்கிறது எமி டானின் நாவல் ஜாய் லக் கிளப்.. இந்த நாவலை அதே பெயரில் 1993 ஆம் ஆண்டு திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

சீனாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய நான்கு பெண்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளைப் பேசுகிறது

எமி டான் கதையில் வரும் ஜுனைப் போல அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். சீனக்குடும்பத்தை சேர்ந்தவர்.

எமி தனது தாயின் முந்தைய திருமணத்தைப் பற்றியும் அதன் வழியாகப் பிறந்த குழந்தைகள் பற்றியும் அறிந்து கொண்டார். அந்த சம்பவமே இந்த நாவலின் மையப்புள்ளி. தனது சகோதரிகளைச் சந்திக்க எமி மேற்கொண்ட சீனப் பயணத்தையே நாவலும் விவரிக்கிறது

எமிக்கும் அவரது அன்னைக்குமான உறவு கசப்பானது. இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர். எமியின் காதலனை அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. எமி சுதந்திரமாக இருக்க விரும்பினாள். அதை அவளது தாய் ஏற்கவில்லை.

நூலகத்திலிருந்து எடுத்த புத்தகங்களைத் தவிர வேறு கதை புத்தகங்கள் இல்லாத ஒரு வீட்டில்  எமி வளர்ந்தார். ஆகவே போதுமான அளவு புத்தகங்களைப் படிக்கவில்லை என்ற குற்றவுணர்வு அவருக்குள் இருந்தது.

கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில இலக்கியம் படித்தார். அது அவரது புத்தகம் படிக்கும் ஆசைக்கு வடிகாலாக அமைந்தது. தனது  சொந்த வாழ்க்கையின் உணர்வு, அனுபவங்கள் மற்றும் மனிதர்களைக் கொண்டே அவர் தனது கதைகளை உருவாக்குகிறார்.

1985 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டான் தனது முதல் நாவலான தி ஜாய் லக் கிளப்பை எழுதத் தொடங்கினார் .  இந்த நாவல் அடைந்த வெற்றி சர்வதேச அளவில் அவரைப் புகழ்பெறச் செய்தது

மகிழ்ச்சியின் முகவரியைப் போலிருக்கிறது ஜாய் லக் கிளப். உண்மையில் அதன் ஒளிரும் வெளிச்சத்தின் பின்பாக பெண்களின் வெளிப்படுத்தப்படாத துயரும் வேதனைகளும் படிந்திருக்கின்றன.

சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் இந்த நான்கு பெண்களும் , மஹ்ஜோங் விளையாடுவதற்கும், ஒன்று கூடி சாப்பிடுவதற்கும், கதைகள் பேசுவதற்கும் வழக்கமாகச் சந்திக்கிறார்கள்.

தேசம் கடந்த பெண்களின் கடந்தகால நினைவுகளையும் வலிகளையும் படம் மிகவும் அசலாகச் சித்தரிக்கிறது. குறிப்பாக அவர்களுக்குள் உள்ள பிணைப்பு மற்றும் சீனப்பண்பாட்டின் மீது கொண்டுள்ள பிடிப்பு, குடும்பத்தின் மீது கொண்ட கோபத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்கள். அமெரிக்கா சீனா என இரண்டு வேறுபட்ட பண்பாடுகளின் மோதலையும் படம் சித்தரிக்கிறது

ஜூன்  என்ற இளம்பெண்ணின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். அவள் சுயுவான் வூ என்ற பெண்ணின் மகள், சமீபத்தில் மறைந்து போன சுயுவான் நினைவைப் போற்றும் விதமாகவும் அந்த சந்திப்பு நடைபெறுகிறது. அந்த சந்திப்பின் போது சுயவான் விட்டுச் சென்ற ரகசியம் ஒன்றை  ஜூனிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவளுக்குச் சீனாவில் ஒரு சகோதரி இருக்கிறாள். அவள் சுயவான் சீனாவில் இருக்கும் போது பிறந்த பெண் என்று தெரிவிக்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகள் அம்மா மறைத்து வைத்த ரகசியத்தை தேடி ஜூன் பயணம் செய்கிறாள். அந்த பயணத்தில் அவள் அடையும் புதிய உறவும் நெருக்கமும் கண்கலங்கும் விதமாக காட்சிப்படுத்தபட்டுள்ளது.

லிண்டோவின் கதை குழந்தை இல்லாத பெண் படும் கஷ்டங்களை விவரிக்கிறது. பணக்கார பையனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறாள் லிண்டோ. அவனோ ஒரு விளையாட்டுச்சிறுவன். லிண்டோவின் மாமியார் எப்படியாவது குடும்பத்தின் வாரிசாக ஒரு ஆண்பிள்ளையை அவள் பெற்றுத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். லிண்டோ அதை எப்படி எதிர்கொள்கிறாள். எப்படி குடும்பத்தின் பிடியிலிருந்து தப்பித்து வெளியேறுகிறாள் என்பதை விளக்குகிறார்கள்

நான்கு அம்மாக்களின் கதை என்றே இப்படத்தைச் சொல்ல வேண்டும்.

உங்களின் கண்ணீர் உங்கள் துயரங்களைக் கழுவுவதில்லை. மாறாக அது  மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.. ஆகவே நீங்கள் உங்கள் கண்ணீரை விழுங்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண் சொல்கிறாள். உண்மையான அறிவுரை.

எல்லா காயங்களும் நாளடைவில் தன்னை தானே மூடிக் கொண்டுவிடுகின்றன. ஆனால் அதனுள் மறைந்திருக்கும் வலி உலகம் அறியாது என்று படத்தில் ஒரு பெண் குறிப்பிடுகிறாள்

உணவின் வழியாக, விளையாட்டின் வழியாக அவர்கள் தாங்கள் இழந்த கடந்தகாலத்தை மீட்டெடுக்கிறார்கள்  ஒரு தலைமுறைப் பெண் இன்னொரு தலைமுறைப் பெண்ணை குற்றம் சாட்டுகிறாள். அது மாறாமல் தொடர்கிறது. குடும்ப அமைப்பு பெண்ணை எப்படி ஒடுக்கி வைத்திருக்கிறது என்பதை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது. திரையில் அதை நாம் முழுமையாக உணரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரம் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான மகிழ்ச்சியை, விடுதலையைத் தானே எப்படி உருவாக்கிக் கொள்கிறார் என்பதையும் படம் காட்டுகிறது. மகள் தாயைப் புரிந்து கொள்வதுடன் அவளுடன் தோழமையுடம் பழகுவதைச் சித்தரிப்பது தான் படத்தின் தனித்துவம்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீனக்குடும்பத்தின் இளம்பெண்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள் ஆனால் பெரியவர்கள் இன்னமும் மாண்டரின் மொழியில் தான் பேசுகிறார்கள். எப்படியாவது தங்கள் பண்பாட்டுச் சிறப்புகளை, மரபுகளைப் பிள்ளைகளிடம் சேர்த்துவிட வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். பல நேரங்களில் கட்டாயப்படுத்திச் செய்ய வைக்கிறார்கள்.

சொந்த மொழி, சொந்த விளையாட்டு, சொந்த உணவின் வழியே சொந்த தேசத்தில் இருப்பது போன்ற உணர்வை அடைய நினைக்கிறார்கள்.

நான்கு பின்னிப்பிணைந்த கதைகள் வழியே ஒரு தலைமுறையின் வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாக திரையில் காணுகிறோம். இது சீனப்பண்பாட்டின் கதை மட்டுமில்லை. தமிழ் பண்பாட்டின் கதையும் இது போன்றதே. அமெரிக்க தமிழ் குடும்பங்கள் பற்றி இப்படி யாரும் எழுதவும் இல்லை.திரையில் உருவாக்கவும் இல்லை.

இப்படம் பற்றிய விமர்சனம் யாவிலும் இதைப் பார்க்கும் போது எனது அம்மாவை நினைத்துக் கொண்டேன். கண்ணீர் சிந்தினேன் என பெண்கள் எழுதியிருக்கிறார்கள். அது உண்மையான அனுபவம் என்பதை படம் பார்க்கும் போது  நீங்களே உணர்வீர்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 16, 2024 07:08

October 14, 2024

பூக்கும் பிளம்

சீன ஓவியங்கள் மற்றும் கவிதைகளுக்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது Sung Po-jen எழுதிய Guide to Capturing a Plum Blossom. இந்த நூல் கி.பி 1238 இல் வெளியிடப்பட்டது, இது உலகின் முதல் அச்சிடப்பட்ட கலைப் புத்தகமாகும்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அச்சில் இல்லாத இந்த நூலைத் தேடிக்கண்டுபிடித்து மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார் ரெட் பைன். இவர் சீன செவ்வியல் கவிதைகள் மற்றும் ஞான நூல்களை மொழியாக்கம் செய்துவருபவர்

பழைய புத்தகங்களை விற்கும் ஹாங்ச்சோவில் உள்ள ஒரு புத்தகக் கடையில் தேடியபோது இந்த பிரதி கிடைத்திருக்கிறது. . சீனாவில் நடந்த கலாச்சாரப்புரட்சியின் போது இது போன்ற நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆகவே கைவிடப்பட்ட பிரதியாகத் தூசி படிந்து கிடந்த இந்த நூல் ரெட் பைனிற்கு கிடைத்திருக்கிறது

இதனை மொழியாக்கம் செய்வதற்கு முன்பு ஆழ்ந்து புரிந்து கொள்வதற்காக , நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் ஓவியக் கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் சிலருடன் ஒன்று கூடி விவாதித்திருக்கிறார். அதன் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே மொழிபெயர்ப்பை முடித்திருக்கிறார்.

இந்த நூல் எப்படி காலத்தின் கரங்களை மீறி தப்பிப் பிழைத்து என்ற வரலாற்றையும் ரெட் பைன் தனது அறிமுகவுரையில் எழுதியிருக்கிறார்.

மீஹுவா என்று அழைக்கப்படும் பிளம் மலர்கள் பல நூற்றாண்டுகளாகச் சீன கலை மற்றும் கவிதைகளில் சித்தரிக்கப்படுகிறது

சீனாவில் பிளம் மரங்கள் பூக்கும்போது அதைப் பார்ப்பதற்காக மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அது அழகின் முழுமையாகும். தெய்வாம்சத்தின் அடையாளமாக இளஞ்சிவப்பு பிளம் மலர்கள் கருதப்படுகின்றன. பிளம் மலர்வது விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும், அழகு, தூய்மை மற்றும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மை ஆகியவற்றைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது

பேரரசர் வூவின் மகள் இளவரசி ஷோயாங் அரண்மனையின் மேற்புறத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தோட்டத்திலிருந்த ஒரு பிளம் மலர் அவளது நேர்த்தியான முகத்தில் பறந்து வந்து விழுந்தது, அது ஒரு முத்திரை போல அவளுடைய அழகை மேலும் மேம்படுத்தியது என்கிறார்கள்..

சீனர்கள் வசந்த காலத்தின் முதல் அறிகுறியாக பிளம் மரத்தைக் கருதுகிறார்கள்.வரவிருக்கும் பருவத்தைக் கணிக்க பிளம் மொட்டுகளை ஆய்வு செய்கிறார்கள். அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். குறிப்பாக மன்னர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகளை பிளம் மொட்டுகளைக் கொண்டே ஆராய்கிறார்கள்.

ஓவிய வழிகாட்டி நூல் என்றாலும் இதில் வரையும் நுட்பங்களோ பயிற்சிகளோ விவரிக்கப்படவில்லை. மாறாக சீனக் கவிதைகள் மற்றும் ஓவியத்தில் புகழ்பெற்றுள்ள. குறியீடுகள் எவ்வாறு உருவாகின. அதை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியே எழுதியிருக்கிறார்கள்

சிறிய மொக்குகள் பெரிய மொக்குகள் என பிளம் மரத்தின் மொக்குகளை பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்ப பொருள் தருகிறார்கள்

சீனாவிற்கு மிளகு ஒரு வணிகமாக பண்டமாக வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டது. சீனர்கள் மூதாதையர் ஆவிகளை அழைக்க தூபமாக மிளகை பயன்படுத்தினார்கள். கைகால்களை சூடேற்ற மிளகுசாற்றை பயன்படுத்தினார்கள். ஆகவே மிளகு எவ்வாறு குறியீடாக மாறுகிறது என்பதை சுங் போ விவரிக்கிறார். இது போலவே தேநீர் தயாரிக்கும் போது ஏற்படும் சிறிய குமிழ்களை “நண்டு கண்கள்” என்று அழைக்கிறார். இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு அரிய மூலிகையாக கருதப்பட்டிருக்கிறது.

இது போல மாதுளை அறிமுகமான விதம் மற்றும் நாரைகளின் குறியீடு, மாறும் பருவ காலங்கள். மேகம் மற்றும் சூரியன் குறித்த அடையாளங்களையும் இதில் விளக்குகிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2024 02:20

October 11, 2024

ஸ்தானிஸ்லாவ் திகாத்

போலந்து எழுத்தாளர் ஸ்தானிஸ்லாவ் திகாத் (Stanisław Dygat) எழுதிய தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி என்ற சிறுகதையைக் கவிஞர் சுகுமாரன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கல்குதிரை தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் இக்கதை வெளியாகியுள்ளது. இந்தக் கதை வெளியான நாட்களிலே தஸ்தாயெவ்ஸ்கியை இவ்வளவு வியந்து எழுதியுள்ள திகாத் வேறு என்ன சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஏதேனும் கட்டுரை அல்லது நூல் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை.

An Unknown Fragment from Dostoevsky’s Life என்ற திகாத்தின் இச்சிறுகதை The Modern Polish Mind: An Anthology இல் இடம்பெற்றுள்ளது.

போலந்து சிறுகதை தொகுதி ஒன்றில் The usher of the “Helios” movie theater என்ற அவரது இன்னொரு சிறுகதை வாசிக்கக் கிடைத்தது.

தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய அவர் ஏதும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் போலந்து இலக்கியத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் தாக்கம் பற்றிய ஆய்வு நூல் ஒன்றில் நவீன போலந்து இலக்கியத்தின் திசைமாற்றத்திற்குத் தஸ்தாயெவ்ஸ்கி முக்கியக் காரணியாக இருந்திருக்கிறார் என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.

திகாத்தின் சிறுகதையில் வானுலகின் தூதுவர் ஒரு நாள் தஸ்தாயெவ்ஸ்கி விட்டிற்கு வந்து கடவுள் அவரைச் சந்திக்க விரும்புவதாக அழைத்துப் போகிறார்.

வானில் தஸ்தாயெவ்ஸ்கி கடவுளைச் சந்திக்கிறார். உரையாடுகிறார்.

அப்போது கடவுள் தஸ்தாயெவ்ஸ்கியை புகழ்ந்து பேசிவிட்டு நீங்கள் இருண்ட விஷயங்களை மட்டுமே எழுதுகிறீர்களே. நன்மை உங்கள் கண்ணில் படவில்லையா, இந்த உலகை வெறும் ஆறே நாட்களில் சிருஷ்டித்தேன் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்… கவனக் குறைவால் ஒருவேளை பிசகுகள் நேர்ந்திருக்கலாம் என்று சொல்கிறார்.

வீடு திரும்பிய தஸ்தாயெவ்ஸ்கி இதன் காரணமாகவே கரமசோவ் சகோதரர்கள் நாவலை எழுத துவங்கினார் எனக் கதை முடிகிறது.

தஸ்தாயெவ்ஸ்கியை தீவிரமாக நேசிப்பவரால் மட்டுமே இப்படி ஒரு குறுங்கதையை எழுத முடியும். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தால் பாதிக்கப்பட்டவர் திகாத். அவரது கதைகளும் தஸ்தாயெவ்ஸ்கியின் பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன

திகாத் சொல்வது போல நன்மைக்கும் தீமைக்குமான இடத்தை, காரணத்தை, அதன் பின்னுள்ள மனித மனதின் செயல்பாடுகளை தஸ்தாயெவ்ஸ்கி கரமசோவில் விசாரணை செய்கிறார். ஆனால் அவர் கடவுளின் பக்கம் நிற்கவில்லை. மாறாக மனிதனின் தடுமாற்றங்கள் மற்றும் குற்றத்தின் பின்னுள்ள காரணிகளை கண்டறிகிறார். இன்பங்களை அனுபவிப்பது தான் வாழ்வின் பிரதான நோக்கமா. அதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டானா என கேள்வி எழுப்புகிறார். பாதர் ஜோசிமா புனிதரைப் போல சித்தரிக்கபடுகிறார். ஆனால் இறந்த பிறகு அவரது உடலில் இருந்தும் துர்நாற்றமே அடிக்கிறது. அலியோஷாவால் அதை ஏற்க முடியவில்லை.

திகாத் கரமசோவை எவ்வளவு முறை படித்திருப்பார். எதில் வியந்து போனார் என தெரியவில்லை. ஆனால் அவர் அந்த நாவலுக்கு பின்னே அதிசயம் ஒளிந்திருப்பதாக நினைக்கிறார். அதை தான் அவரது கதையும் விவரிக்கிறது.

இக்கதையில் கடவுளும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகராக இருப்பது பிடித்திருக்கிறது. அது போலவே வானுலகின் அழைப்பை தஸ்தாயெவ்ஸ்கி எளிதாக எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். திரும்பி வந்துவிடுவோம் என்று உறுதியாக நம்புகிறார். தஸ்தாயெவ்ஸ்கியிடம் கடவுள் பேசும் இடமும் சொல்லாமல் விட்ட விஷயங்களும் தான் கதையை சிறப்பாக்குகின்றன.

தி பிரதர்ஸ் கரமசோவ் நாவல் ஜனவரி 1879 முதல் நவம்பர் 1880 வரை தி ரஷியன் மெசஞ்சரில் ஒரு தொடராக வெளியிடப்பட்டது.அது வெளியான நான்கு மாதங்களுக்குள் தஸ்தாயெவ்ஸ்கி இறந்தார்.

1878 ஆம் ஆண்டு ஏப்ரலில் தி பிரதர்ஸ் கரமசோவிற்கான தனது முதல் குறிப்புகளைத் தொடங்கினார் என்கிறார்கள்

அக்டோபர் 1877 ல் தஸ்தாயெவ்ஸ்கி தனது நாட்குறிப்பில் இந்த நாவல் எழுதும் ஆசையைப் பதிவு செய்திருக்கிறார்

மே 1878 இல், தஸ்தாயெவ்ஸ்கியின் 3 வயது மகன் அலியோஷா இறந்து போனான். அந்தத் துயரம் இந்த நாவலில் மறைமுகமாக வெளிப்படுகிறது..

வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் கிரேக்க நாடகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரது நாவல்கள் திரைப்படமாக வெளியாகியுள்ளன. வார்சாவின் மொகோடோவ் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களில் ஒன்றுக்கு அவரது பெயர் வைக்கபட்டிருக்கிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2024 04:50

தொடர் பயணங்கள்

கடந்த மாதம் 25 முதல் அக்டோபர் 10 வரை இடைவிடாத பயணம். அன்றாடம் இருநூறு முதல் நானூறு கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்திருக்கிறேன். அதுவும் மலேசியா பயணம் முடித்துவிட்டுச் சென்னை திரும்பிய மறுநாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளுக்காகப் பயணம். பயணத்தின் ஊடே மழையில் நனைந்து காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. ஆயினும் ஒத்துக் கொண்ட நிகழ்வுகளைத் தவிர்க்க இயலவில்லை.

விருதுநகரில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொண்ட போது முழுமையான ஓய்வு தான் உங்களுக்கான மருந்து என்றார்.

நேற்று விமானத்தில் சென்னை வந்து இறங்கிய போதும் மழை தொடர்ந்தது

வீடு வந்து அசதியில் நீண்ட நேரம் உறங்கினேன். இன்று காலையில் எழுந்த போதும் இருமல் குறையவில்லை.

அடுத்த சில நாட்களுக்கு முழுமையான ஒய்வில் இருப்பேன்.

டிசம்பரில் வெளியாகவுள்ள எனது புதிய புத்தகங்களுக்கான இறுதிப் பணிகள் காத்திருக்கின்றன. திரைப்பட வேலைகள், டேராடூன் பயணம், அமெரிக்கப் பயணம், பிறமொழிகளில் வெளியாகவுள்ள எனது புத்தகங்களுக்கான வெளியீட்டுவிழா நிகழ்வுகள் என வரிசையாகக் காத்திருக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2024 03:26

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.