S. Ramakrishnan's Blog, page 23

November 12, 2024

தபால் பெட்டி எழுதிய கடிதம்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள புத்தகம் தபால் பெட்டி எழுதிய கடிதம்.

இக்கதை தபால்பெட்டிக்கும் ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பினைப் பேசுகிறது

ஆயிரமாயிரம் தபால்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தபால்பெட்டி தன் வாழ்நாளில் ஒரேயொரு கடிதம் எழுதுகிறது

அந்தக் கடிதம் வழியாக அதன் கடந்தகால நினைவுகள் விவரிக்கபடுகின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 12, 2024 03:01

November 10, 2024

கற்பனை அலைகள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.

எனது கட்டுரைத்தொகுப்பான கற்பனை அலைகள் உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளைப் பற்றியது.

எழுவதும் படிப்பதும் எனது இரண்டு சிறகுகள். தொடர்ந்து உலக இலக்கியத்தினை வாசித்து வருபவன் என்ற முறையில் சர்வதேச அளவிலான சமகால இலக்கியங்களையும், சிறந்த செவ்வியல் படைப்புகளையும் நான் அறிவேன். வாசிப்பின் வழியே நான் அடைந்த அனுபவத்தையும், கற்றுக் கொண்ட பாடங்களையும் இந்தக் கட்டுரைகளின் வழியே பதிவு செய்திருக்கிறேன்.

காஃப்கா, மார்க்வெஸ், கால்வினோ, ரிக்யூ, ஆன்டன் செகாவ், கவாபத்தா, மெல்வில், , நிசார் கப்பானி, ஹெஸ்ஸே, யோகோ சுஷிமா, செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, இகோர் கூஸெங்கோ, ஜான் ஃபோஸ்ஸே என உலகின் சிறந்த எழுத்தாளர்களைக் கவனப்படுத்துகிறது இக் கட்டுரைத் தொகுப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2024 22:41

பெட்ரோ பரமோ

யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பரமோ நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இப்படம் Netflix ல் காணக்கிடைக்கிறது. இதே நாவலை மையமாகக் கொண்டு கறுப்பு வெள்ளையில் உருவாக்கபட்ட படத்தைப் பார்த்திருக்கிறேன். பெட்ரோ பரமோ லத்தீன் அமெரிக்க நாவல்களில் ஒரு கிளாசிக்.

இப்படத்தின் இயக்குநர் ரோட்ரிகோ ப்ரிட்டோ ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தைக் காண ஆவலாக இருந்தேன். ருல்ஃபோவின் இந்த நாவல் 1955ம் ஆண்டு வெளியானது. இன்று வரை அந்த நாவல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

You will hear the voice of my memories stronger than the voice of my death – that is, if death ever had a voice. என்று நாவலின் ஒரு இடத்தில் யுவான் ருல்ஃபோ குறிப்பிடுகிறார். அது தான் நாவலின் திறவுகோல்

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் ஒளிப்பதிவு. அதுவும் ப்ரீசியாடோ நடந்து வரும் முதற்காட்சியில் தொலைவில் புலப்படும் கொமாலாவும் அதன் தனிமையும் வியப்பூட்டும் வகையில் படமாக்கபட்டுள்ளன. இது போலவே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தங்கும் விடுதியில் நடைபெறும் உரையாடல்களும். பெட்ரோ பரமோவின் திருமண நிகழ்வு மற்றும் இரவில் நடந்து செல்லும் காட்சி, காலமாறுதல்களின் வெளிப்பாடு என மிகச்சிறப்பாக, கவித்துவமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

நாவலுக்கு மிக உண்மையாகப் படத்தின் திரைக்கதை உருவாக்கபட்டுள்ளது. நாவலில் இடம்பெறும் வசனங்களை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பெட்ரோ பரமோ நாவலைப் படிக்காதவர்கள் கதையின் போக்கினையும் நிகழ்வுகளையும் புரிந்து கொள்வது கடினம். நாவலைப் படித்திருந்தால் கதையின் முக்கிய நிகழ்வுகள் திரையில் அற்புதமான காட்சிகளாக விரியும் அனுபவத்தை நன்றாக உணர முடியும்.

பெட்ரோ பரமோ தான் கதையின் நாயகன். ஆனால் நாவல் அவனைப்பற்றியது மட்டுமில்லை. அவனது கடந்தகாலம். திருமணம் மற்றும் காதல்கள். அதிகார வேட்கை. மதகுருவின் வாழ்க்கை. கைவிடப்பட்ட மெக்சிகன் நகரத்தின் நினைவுகள் எனப் பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது.

நாவலின் களமான கொமாலா ஒரு விசித்திரமான நிலப்பரப்பு. உண்மையில் அது நாவலில் குறியீடாகவே சித்தரிக்கப்படுகிறது. அங்கே காலம் முன்பின்னாக நகர்கிறது. இறந்தவர்கள் வீதியில் நடமாடுகிறார்கள். இயல்பாகப் பிறரோடு உரையாடுகிறார்கள். நடந்து முடிந்து போன நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நடைபெறுகின்றன. எவரது நினைவில் எந்தக் காட்சி வெளிப்படுகிறது என்ற தெரியாதபடி கதை சுழலுகிறது.

இறந்து போன தனது அம்மாவின் விருப்பபடி தான் காணாத தந்தையைத் தேடி கோமாலாவுக்கு வருகிறான் யுவான் ப்ரீசியாடோ. அங்கே அவன் காணும் காட்சிகள் சந்திக்கும் மனிதர்கள், நடைபெறும் நிகழ்வுகள் யாவும் விசித்திரமாக உள்ளன. அவன் இருவேறு உலகங்களுக்குள் சஞ்சரிக்கிறான். கொமாலா உண்மையில் இறந்தவர்களின் வசிப்பிடம், உண்மையில் அலைந்து திரியும் ஆன்மாக்களின் நிலம். நாவல் முழுவதும் கடந்த காலத்தின் எதிரொலிகளை நம்மால் கேட்க முடிகிறது. கடந்தகாலத்தின் நன்மையும் தீமையுமே இன்றைய வாழ்க்கையின் போக்கினைத் தீர்மானிக்கிறது என்பதாகவே கதை விரிவு கொள்கிறது.

தண்ணீருக்குள் அடியில் தெரியும் காட்சிகளைப் போலத் தெளிவாகத் தெரியாத அதே நேரம் உணர முடிகிற காட்சிகள் நாவலில் அதிகமுள்ளன. அவற்றைச் சினிமாவாகப் பார்க்கும் போது தெளிவாக, நேரடியாக உணருகிறோம். அது ஒன்றிரண்டு இடங்களில் ஆச்சரியத்தையும் பல நேரங்களில் ஏமாற்றத்தையுமே ஏற்படுத்துகிறது.

நாவல் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்குப் படம் ஏற்படுத்தவில்லை. காரணம் நாவலில் உள்ள கொமாலாவின் மௌனத்தை, நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள மாய உணர்வுகளை வாசிக்கும் போது நெருக்கமாகப் புரிந்து கொள்கிறோம் ஆனால் திரையில் அந்த நெருக்கம் உருவாகவில்லை.

 உதாரணத்திற்குக் கொமாலா என்பது நரகத்தின் நுரைவாயில் என்கிறது நாவல். நாம் அதைத் திரையில் உணர முடியவில்லை.

புதிர்பாதையினுள் பிரவேசிப்பது போலவே கதையினுள் நாம் பிரவேசிக்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு கதையை விவரிக்கிறார்கள். அந்தக் கதைகள் நிஜமானவை போலவும் அவர்களாக உருவாக்கிக் கொண்ட கற்பனை போலவும் இருக்கின்றன. கைவிடப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு உலகை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது போலவே காட்சிகள் நகர்கின்றன.

நாவலை விடவும் இப்படம் பெண்களைச் சித்தரித்துள்ள விதத்தில் சிறப்பாக உள்ளது. மறக்க முடியாத, தனித்துவமான முகங்கள். குறிப்பாகப் பணிப்பெண் டாமியானா, விடுதி நடத்தும் எடுவிஜஸ், சூசனா போன்றவர்கள்  நிகரற்ற அழகுடன், தனித்துவத்துடன்  வருகிறார்கள். படத்தில் கொமாலாவின் வீசும் காற்றின் குரலை துல்லியமாகக் கேட்க முடிகிறது.  படத்தின் ஒலிப்பதிவு தனித்த பாராட்டிற்குரியது.

Some villages have the smell of misfortune. You know them after one whiff of their stagnant air, stale and thin like everything old. போன்ற நாவலின் வரிகளை வாசிப்பில் தான் முழுமையாக உணர முடியும். காட்சியின் வழியே இதனை உணரச் செய்வது எளிதானதில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2024 07:24

November 8, 2024

ஒளியின் கைகள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

இந்த விழாவில் ஒளியின் கைகள் என்ற  கட்டுரைத்தொகுப்பு வெளியாகிறது. இது உலகப்புகழ் பெற்ற ஓவியங்கள் மற்றும் ஓவியர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.

ஒளி எப்போதும் தூய்மையின், கருணையின், அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அற்புதங்கள் ஒளியால் அடையாளப்படுத்தபடுகின்றன. எல்லா சமயங்களும் ஒளியைக் கொண்டாடுகின்றன.

ஒளி ஒவ்வொன்றின் தனித்தன்மையை நமக்குப் புலப்படவும் புரியவும் வைக்கிறது. இருள் என்பது குறைந்த ஒளி என்கிறார் மகாகவி பாரதி.

அன்றாடம் ஒளியின் கைகளே உலகின் காட்சிகளை வரைகிறது. இயற்கையின் வனப்பு ஒளியால் உருவானதே. பகலையும் இரவையும் இரண்டு சிற்பங்களாக்கியிருக்கிறார் மைக்கேலாஞ்சலோ, அது போலவே வான்கோ நட்சத்திரங்கள் ஒளிரும் இரவை வரைந்திருக்கிறார். இவை வெறும் காட்சிப் பதிவுகளில்லை. கலையின் உன்னதங்கள்.  ஒளியின் விரல்கள் முடிவில்லாமல் தாளமிடுகின்றன. அந்த இசையை நாம் ஓவியத்தில் முழுமையாக் கேட்கிறோம். மெய் மறந்து போகிறோம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2024 22:15

November 7, 2024

டிசம்பர் 25 – புத்தக வெளியீட்டு விழா

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24)

இந்த விழாவில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன.

இதில் கவளம் என்ற புதிய சிறுகதைத் தொகுப்பு வெளியாகவுள்ளது. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் இடம்பெற்றுள்ளன.

இலக்கியம் என்பது சாதாரண மனிதர்களிடமுள்ள அசாதாரணமானவற்றைக் கண்டுபிடிப்பது, அவற்றைச் சாதாரண வார்த்தைகளால் அசாதாரணமான அனுபவமாக மாற்றுவது என்கிறார் பாஸ்டர்நாக். இக்கதைகளும் அதையே மேற்கொள்கின்றன.

சதுரங்க விளையாட்டினைப் போலவே சிறுகதை எழுதுவதும் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டது. சதுரங்கக் கட்டமும் காய்களும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டவை. ஆனால் காய்களை நகர்த்தும் விதம் விளையாட்டு வீரனின் தனித்துவம். அப்படிச் சிறுகதையில் புதிய நகர்வுகளை உருவாக்கி, முடிவில்லாமல் விளையாடிக் கொண்டேயிருக்கலாம்.

இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் எழுதுவதென்பது ஒரு நபர் ஆடும் சதுரங்கம். இரண்டு பக்கத்தையும் ஒருவரே விளையாட வேண்டும். நாவல் எழுதுவதை விடவும் சிறுகதை எழுதுவதே எனக்கு விருப்பமானது. சவாலானது.

இந்தத் தொகுப்பிலுள்ள இரண்டு சிறுகதைகள் ஆங்கிலத்திலும் நான்கு கதைகள் மலையாளத்திலும் ஒரு கதை பிரெஞ்சிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2024 21:54

November 6, 2024

சிறார் கதைகள்

புதுக்கோட்டையிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக எனது எட்டு சிறார் நூல்களை மாணவர்கள் வாசித்து உரையாடுகிறார்கள்.

இந்த நிகழ்வு 09.11.24 சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பள்ளி முதல்வரும் எனது நண்பருமான தங்கம் மூர்த்தி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

இந்த நூல்களைப் பெற விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ளவும்

தேசாந்திரி பதிப்பகம்

டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை,

சாலிகிராமம், சென்னை-93

தொலைபேசி (044)- 23644947. 9789825280

https://www.desanthiri.com/

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2024 18:35

November 4, 2024

சில புதிர்கள்

புதிய குறுங்கதை.

அப்பாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. சில நாட்கள் தந்திமரத்தெருவில் இருந்த கோல்டன் டெய்லர்ஸ் கடையின் முன்பாகப் போய் நின்று கொள்வார். அந்த டெய்லரிடம் எந்த உடையும் அவர் தைக்கக் கொடுக்கவில்லை. ஆனால் எதற்கோ காத்திருப்பவர் போல அங்கே நின்றிருப்பார். அவரது பார்வை தையல் இயந்திரத்தின் மீது நிலைகுத்தியிருக்கும். கடைக்குள் வரும்படி டெய்லர் விஜயன் அழைத்தாலும் வர மாட்டார். அந்தக் கடையினுள் என்ன பார்க்கிறார் என்று தெரியாது. வீட்டிலிருந்து யாராவது போய் எதற்காக நிற்கிறீர்கள் என்று கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். கையைப் பிடித்து இழுத்தாலும் வர மாட்டார். காந்தத்தால் இழுக்கபடும் இரும்பு ஆணியைப் போல அந்தக் கடை அவரை இழுத்துக் கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியாத வேறு காட்சிகள் எதுவும் அவருக்குத் தெரிகிறதோ என்னவோ. அப்பா அப்படி நிற்கும் நாட்களில் விஜயன் குற்றவுணர்ச்சி கொள்வது வழக்கம். தவறுதலாக கத்தரித்துப் போட்ட பட்டுத்துணியைப் போல அப்பாவைக் காணுகிறாரோ என்னவோ. சற்றே வளைந்த கழுத்துடன் நின்றிருந்த அப்பா மறந்து போன சொல் திரும்ப நினைவிற்கு வந்துவிட்டது போலச் சில மணி நேரத்தின் பின்பு தலையை உலுக்கியபடி நல்லது என்று சொல்லுவார். என்ன நல்லது. யாருக்குச் சொல்கிறார் என்று எவருக்கும் புரியாது.

••

அம்மாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. விறகு அடுப்பு இருந்த நாட்களது. சமைக்கும் போது அடுப்பில் எரியும் நெருப்போடு பேசிக் கொண்டிருப்பாள். சில வேளைகளில் அவனே என்று நெருப்பைச் சொல்வாள். சில வேளைகளில் அவளே என்று திட்டுவாள். தீக்கொழுந்துகள் வேகமாகி சப்தமிடும் போது திடீரென ஒரு கை உப்பை அள்ளி அடுப்பில் போடுவாள். அடுப்பினுள் எதற்காக உப்பைப் போட வேண்டும் என்று தெரியாது. மங்களம் அக்கா கேட்டதற்கு நெருப்போட வாயை அடக்கணும் என்று சொல்வாள் அம்மா. உப்பால் நெருப்பின் வாயை அடக்க முடியுமா என்ன. ஆனால் அம்மா அதைக் கண்டுபிடித்திருக்கிறாள். நெருப்பை அல்ல உப்பைத் தண்டிக்கிறாள் என்பாள் மங்களம். சமைப்பவர்களுக்கு எனச் சில விசித்திர நம்பிக்கைகள் பழக்கங்கள் இருப்பது இயல்பு தானா.

••

மங்களம் அக்காவிற்கு ஒரு பழக்கமிருந்தது. அவள் படுத்திருக்கும் மரக்கட்டிலிற்குக் கிழே ஒரு ஜோடி குழந்தை காலணியைப் போட்டு வைத்திருப்பாள். குழந்தைகள் அணியும் செருப்பு கிடந்தால் கெட்ட கனவுகள் வராது என்பது அவளது நம்பிக்கை. அப்போது அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. யார் சொல்லி அப்படிச் செய்கிறாள் என்று தெரியவில்லை. மூடிவைக்கபட்ட கண்ணாடி பாட்டிலின் மீதேறிய எறும்புகள் ஏமாந்து திரும்பிப் போவது போலத் துர்கனவுகள் அக்காவின் செருப்பின் வரை வந்து அவளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிப் போகின்றன என்பது விசித்திரமாக இருந்தது.

••

தாத்தாவிற்கு ஒரு பழக்கமிருந்தது. அவரது ஒரு கண்ணில் தான் அழுகை வரும். எப்போது அவர் மனத்துயர் கொண்டாலும் அவரது வலது கண்ணில் இருந்து மட்டுமே கண்ணீர் கசியும். இடது கண்ணில் இதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் வந்ததில்லை. எப்போதோ இதைப்பற்றிக் கேட்டதற்கு இடது கண் உலகிற்கானது, வலது கண் வீட்டிற்கானது என்றார் தாத்தா. அப்படிக் கண்களைப் பிரித்துக் கொள்ள முடியுமா என்ன. தாத்தாவால் முடிந்திருக்கிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2024 18:41

பகலில் எரியும் விளக்கு

தாய் தந்தையை நினைவு கொள்வதற்குக் கட்டுரை தான் சிறந்த வடிவம். கதையில் அவர்களை இடம்பெறச் செய்தால் உணர்ச்சிப்பூர்வமாகி விடுகிறார்கள். இயல்பை விட அதிகமாகவோ, குறையாகவோ சித்தரிக்கபட்டு விடுகிறார்கள். கவிதையில் இடம்பெற்றாலோ அரூபமாகிவிடுகிறார்கள். கவிதையில் இடம் பெறும் அன்னை கவிஞனின் அன்னையாக மட்டும் இருப்பதில்லை. இலக்கிய வடிவம் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உறவினை மட்டுமே சரியாகக் கையாளுகிறது. வெளிப்படுத்துகிறது என்பது எனது எண்ணம்.

மனிதர்கள் எதை, எப்போது, எதற்காக நினைவு கொள்கிறார்கள் என்பது விநோதமானது. இறந்து போன தனது கணவரின் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்லும் டீச்சருக்கு அவள் கையில் கட்டியிருப்பது வெறும் கடிகாரமில்லை.

இது போலக் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் கட்டம் போட்ட பச்சைசட்டை ஒருவரை பல வருஷங்களுக்குப் பின்னே கொண்டு போய்விடுகிறது. குயிலின் குரலைக் கேட்கும் போதெல்லாம் மதியானத்திற்குப் போய்விடும் ஒருவரை நான் அறிவேன். இப்படி நினைவுகளுக்குள் அலைந்தபடியே இருப்பவர்கள் அதன் வழியாக நிகழ்வாழ்வை கடந்து செல்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் காலத்தினுள் திரும்பிச் செல்வதற்கான பாதை ஒன்றை தானே கண்டுபிடித்து வைத்திருக்கிறான்.

சிறுகதைகள். நாவல் போலக் கவிதை நினைவுகளைத் தொகுப்பதில்லை. அடுக்கி உருவம் கொடுப்பதில்லை. மாறாக நினைவுகளைக் கலைத்துப் போடுகிறது. எதில் நினைவு இணைக்கபட்டிருக்கிறதோ அதிலிருந்து விடுபடச் செய்து காலமற்ற ஒன்றாக மாற்ற முற்படுகிறது. அதில் வெற்றியும் பெறுகிறது.

வரலாறு எனும் நினைவுகளின் பள்ளதாக்கின் மீது பறவையாகக் கடந்து போகிறது கவிதை. கவிதையின் வேலை நினைவுபடுத்துவது தான். ஆனால் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் நினைவுபடுத்துவதில்லை. மாறாக விளக்கை ஏற்றிவைத்தவுடன் இருட்டிலிருந்த எல்லாப் பொருளும் தெரிந்துவிடுவது போலக் கவிதை எழுப்பும் நினைவு அறியாத எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வைத்துவிடுகிறது.

இஸ்ரேலின் முக்கியக் கவிஞர் எஹுதா அமிகாய். ஹீப்ருவில் எழுதப்பட்ட அவரது கவிதைகள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

இந்த வருஷம் அவரது நூற்றாண்டு துவங்கியுள்ளது. உலகெங்கும் அவரது கவிதைகள் குறித்துப் பேசுகிறார்கள். கூடி வாசிக்கிறார்கள். பல்கலைகழகங்களில் அவருக்கான கருத்தரங்குகள் நடக்கின்றன. அவர் பிறந்த ஜெர்மனியில் அவரது நினைவைப் போன்றும் மலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

??????????

அவரது கவிதைகளை விரும்பி வாசிக்கிறவன் என்ற முறையில் மானசீகமான அவரது நூற்றாண்டு நிகழ்வை எனக்குள் நிகழ்த்திக் கொண்டேன். அதாவது அவரது கவிதைகளை வாசிப்பது. அது குறித்து நண்பர்களுடன் பேசுவது. அந்த மகிழ்ச்சியைப் பலருக்கும் பகிர்ந்து கொள்வது.

கேலிசித்திரம் வரைகிறவர்கள் எவரது தோற்றத்தையும் நேரடியாகச் சித்தரிப்பதில்லை. உருவத்தை மாற்றிவிடுவார்கள். அப்படியான முயற்சியைத் தான் எஹுதா அமிகாய் தனது கவிதையில் மேற்கொள்கிறார்.

அவரது அன்னையும் தந்தையும் கவிதையில் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள். ஒரு கவிதையில் தனது அன்னையை நினைவுகூறும் போது காற்றாலை போல நான்கு கைகள் கொண்டவர் என்கிறார்.

காற்றால் சுழலும் இறக்கைகளைப் போலக் குடும்பம் தான் அவரைச் சுழல வைக்கிறது. அன்றாடத்திற்கான இரண்டு கைகளும் அதற்கு அப்பால் உள்ளவற்றைக் கையாளும் இருகைகளும் அவருக்கு உள்ளன.

வேறு கவிதை ஒன்றில் அவரது அன்னை ஒரு தீர்க்கதரிசி. ஆனால் தான் ஒரு தீர்க்கதரிசி என அறியாதவர் என்றும் சொல்கிறார். அது உண்மையே எல்லா அன்னையும் தீர்க்கதரிசிகளே. அவர்களே நமக்கு உலகத்தைச் சமைத்துக் கொடுக்கிறார்கள். கண்டித்தும், அன்பு காட்டியும் உலகின் இயல்பை. உறவின் உண்மைகளைப் புரிய வைக்க முயலுகிறார்கள். அதில் கொஞ்சமே வெற்றியடைகிறார்கள். நெற்றியில் வைக்கப்பட்ட அன்னையின் கை பிள்ளையின் உடல்நலத்தை அறிந்து கொள்கிறது. சப்தமில்லாமல் பிரார்த்தனை செய்கிறது.

அமிகாய் தனது அன்னையினைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். அது அவரது அன்னையை மட்டும் குறிக்கவில்லை. முதுமையில் நோயுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அம்மா தனது கையில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை அகற்ற விரும்புகிறார். அந்த விரல் வீங்கிக் கொண்டு வலிக்கிறது.

அதைத் தானே அகற்றுவதில்லை. அதற்குப் பிள்ளைகளிடம் அனுமதி கேட்கிறார். பிள்ளைகள் மோதிரத்தை திருகிக் கழட்ட முயலுகிறார்கள். மோதிரத்தைத் தேய்த்தால் அற்புதம் நடக்கும் என்பார்களே. அப்படி எந்த அற்புதமும் அங்கே நடக்கவில்லை என்கிறார் அமிகாய்.

முடிவில் மருத்துவர் அந்த மோதிரத்தை துண்டிக்கிறார். அப்போது அம்மா சிரிக்கிறார். பின்பு எதையோ நினைத்துக் கொண்டது போல அம்மா அழுகிறார். இரண்டையும் நிறைவாகச் செய்கிறார்.

கவிதையில் இடம்பெற்ற இந்தக் காட்சி அப்படியே ஒரு சிறுகதை. அம்மா தனது மோதிரத்தை மட்டும் கழற்றவில்லை. திருமண உறவு ஏற்படுத்திய இறுக்கத்திலிருந்தும் விடுபடுகிறார்.

அந்தக் கவிதையின் இறுதியில் அம்மா பாஸ்போர்ட்டிற்காக ஒரேயொரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால் எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை, அந்த ஊரில் இறப்புச் சான்றிதழில் போட்டோ கேட்க மாட்டார்கள் என்று கவிதை முடிகிறது.

புகைப்படம் என்பது நினைவின் புறவடிவம். பிறரால் காண முடிகிற நினைவு. ஆனால் அம்மாவின் அனுபவங்கள். கடந்து வந்த வாழ்க்கை. அதன் துயரங்கள் யாவும் அவருக்குள்ளே புதைந்துவிட்டிருக்கின்றன. உலகிற்கு அவர் வெளிக்காட்டியது குறைவே.

அது போலவே தனது தந்தையைச் சிறிய கடவுளாகச் சொல்கிறார். தந்தையின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்ட மகனாக நடந்து கொண்ட போதும் அவர் தனது தந்தையை வெறுக்கவில்லை. புகார் சொல்லவில்லை. மாறாகப் பரிகாசத்துடன் அவரது அதிகாரத்தை விமர்சனம் செய்கிறார். குடும்பத்தில் வசிக்கும் சிறிய கடவுளின் வல்லமை அவ்வளவு தானே இருக்கும்.

எஹுதா அமிகாயின் தந்தை வீட்டின் கடவுளாக இருந்தாலும் கோபம் கொள்வதில்லை. ( கோபம் கொள்ளும் நேரங்களில் மட்டுமே கடவுள் மனிதரைப் போலிருக்கிறார். நடந்து கொள்கிறார்.) மோசஸின் பத்துக் கட்டளைப் போல அவரது தந்தையும் மகனுக்குப் பத்துக்கட்டளைகளை விதிக்கிறார். இடிமின்னல் எதுவுமில்லாமல் அந்தக் கட்டளைகளைப் பிறப்பித்தார் என்று அமிகாய் கேலியாகச் சொல்கிறார். பத்துக் கட்டளைகளுடன் கூட இரண்டு கட்டளைகளையும் அப்பா சேர்த்துக் கொண்டதையும் கேலி செய்கிறார்.

எஹுதா அமிகாய் கவிதையில் வரும் அன்னையும் தந்தையும் சிறுகதையில் வரும் கதாபாத்திரங்களைப் போல முழுமையாகக் காட்சி தருகிறார்கள். ஆனால் கவிதையில் இடம்பெறும் பெயரற்ற மனிதர்கள் போல உலகிற்குப் பொதுவாகவும் மாறிவிடுகிறார்கள்.

அமிகாய் தனது மகனைப் பற்றி எழுதிய கவிதையில் தந்தையாக நேரடியாக, தெளிவாகத் தந்தையின் கவலைகளை, வேதனைகளை, ஏக்கத்தை எழுதுகிறார். அங்கே அவர் அரூபமான தந்தையாக இல்லை.

அரசியல் கவிதைகளில் வெளிப்படும் அமிகாயும், அன்றாட வாழ்வினை பற்றி எழுதும் அமிகாயும் ஒருவர் தானா என வியப்பாக இருக்கிறது. ஆனால் இரண்டிலும் எதன்மீதும் அவர் வெறுப்பை, துவேசத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாகத் தனது நிலைப்பாட்டினையும் அதன் பின்னுள்ள நியாயத்தையும் தெளிவாக விளக்குகிறார்.

என் தந்தையின் நினைவு என்பது வேலை நாளுக்கான ரொட்டித் துண்டுகள் போல வெள்ளை காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கின்றன என்கிறார் அமிகாய். ஒரு மந்திரவாதி தனது தொப்பியிலிருந்து முயலை வெளியே எடுப்பதைப் போல எளிய தனது உடலிலிருந்து அப்பா தனது அன்பை வெளிப்படுத்தினார் என்பது அபாரமான வரி. தந்தை செய்யும் எளிய அற்புதங்கள் உணரப்படாதவை. அந்த அற்புதங்களை எப்படி நடத்தினோம் என அவருக்கே தெரியாது.

ஒரு கத்தி தன்னை நோக்கி வருவதையும் தனக்குள் புகுவதையும் பற்றி ஒரு ஆப்பிள் என்ன நினைக்கும் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் எஹுதா அமிகாயின் கவிதையை வாசிக்க வேண்டும். முதுமை கனத்த இரும்பு பொருளாக மாறிவிடுவதை உணர்ந்து கொள்வதற்கு அவரை நிச்சயம் படிக்க வேண்டும்.

எஹுதா அமிகாய் ஐந்து முறை நோபல் பரிசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக நிராகரித்து விட்டார்கள். மொழிபெயர்ப்புகளின் மூலம் ஒரு கவிஞர் சர்வதேச அரங்கில் கவனம் பெறுவது என்பது சவாலானது. அதை வென்று காட்டியவர் அமிகாய்.

ஜெர்மனியில் ஒரு யூதக்குடும்பத்தில் பிறந்த அமிகாய் ஜெருசலேத்தில் வாழ்ந்தவர். ஜெருசலேம் என்பது நித்தியத்தின் கரையில் ஒரு துறைமுக நகரம் என்கிறார். தனது 11வது வயதில் 1936 இல் தனது குடும்பத்துடன் ஜெர்மனியில் இருந்து இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பயின்று சில வருடங்கள் ஆசிரியராக மேல்நிலைப் பள்ளிகளில் ஹீப்ரு கற்பித்திருக்கிறார்

பதினொரு கவிதைத் தொகுதிகள், இரண்டு நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

சலிப்பூட்டுவதாகத் தோன்றும் தினசரி வாழ்க்கையை எஹுதா அமிகாய் தனது கவிதைகளின் வழியே வியப்பூட்டுகிறார். சல்லடை ஒன்றின் வழியே ஒளியைப் பரவ விடுகிறார் என்று அவரது கவிதைகளைச் சொல்லலாம். ஆமாம். சிறிய துளைகளின் வழியே ஒளி உருவம் கொள்வது எத்தனை அழகாக இருக்கிறது. கண்ணாடியின் முன்பாக நின்றபடி ஒருவர் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொள்வது போன்ற ரகசிய சந்தோஷத்தை கவிதையின் வழியாக வெளிப்படுத்துகிறார்.

தனது பிறந்த நாளை பற்றிய அவரது நீண்ட கவிதை அபாரமானது. இவை அதிலுள்ள சில வரிகள்

நான் பிறந்தது 1924ல்.

ஒருவேளை ஒயினாக இருந்திருந்தால் அற்புதமான மதுவாகவோ அல்லது புளித்துப் போனதாகவோ இருந்திருக்கக் கூடும்.

ஒரு வேளை நாயாக இருந்திருந்தால் இந்நேரம் இறந்திருப்பேன்.

ஒரு புத்தகமாக இருந்திருந்தால் மிகுந்த மதிப்பு உள்ளதாகவோ அல்லது தூக்கி எறியப்பட்ட ஒன்றாகவோ இருந்திருக்கக் கூடும்.

ஒரு வனமாக இருந்திருந்தால் நான் இளமையாக இருந்திருப்பேன்,

ஆனால் ஒரு மனிதனாக நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்.

••

மனிதனாக இருப்பது ஏன் ஒருவருக்குச் சோர்வளிக்கிறது. நினைவுகளால் வழிநடத்தப்படுவது ஒரு காரணம். நிகழ்காலத்தின் கைகள் தன்னைப் பகடையாக மாற்றி விளையாடுவது இன்னொரு காரணம். இப்படித் தெரிந்த, தெரியாத நிகழ்வுகளால் மனிதன் தொடர்ந்து அலைக்கழிக்கபடுகிறான். மனிதர்கள் மீது உலகம் ஏற்படுத்தும் காயங்களை இலக்கியமே ஆற்றுகிறது. கவிதைகள் தன்னுடைய இயல்பிலே மருந்தாக இருக்கின்றன. போர் ஏற்படுத்திய காயங்களை. வடுக்களைக் கவிதைகளே குணமாக்கியிருக்கின்றன. மறையச் செய்திருக்கின்றன.

தான் பிறந்த அதே ஆண்டில் வேறு வேறு இடங்களில். வேறு வேறு அன்னையருக்கு பிறந்த அனைவருக்குமாகப் பிரார்த்தனை செய்கிறார் அமிகாய். அவர்களைத் தனது சொந்த உறவாகக் கருதுகிறார். அது தான் கவியின் தனித்துவம்.

கடிகாரத்திற்குள் இல்லை காலம் என்றொரு கவிதை வரியை எழுதியிருக்கிறார் அமிகாய். கடிகாரம் காலத்தை அடையாளப்படுத்துகிறது. காலம் நமக்கு வெளியே ஒருவிதமாகவும் உடலுக்குள் இன்னொரு விதமாகவும் உணரப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் காலம் ஒருவிதமாகப் படிகிறது.

மணி காட்டும் கடிகாரத்தைப் போல நாட்களின் கடிகாரமாக நாமே மாறி விடுகிறோம். மனிதர்கள் உண்மையில் நடமாடும் கடிகாரங்கள் தான். இந்தக் கடிகாரத்தில் எண்கள் எழுதப்படவில்லை. ஆனால் தலையில் வெளிப்படும் நரை என்பது கடிகாரத்தின் மணிசப்தம் போலக் காலத்தின் குரலாகவே ஒலிக்கிறது.

தனக்கு விருப்பமான கிரேக்கக் கவிஞரை நினைவு கொள்ளும் கவிதை ஒன்றில் அவர் வெளியே மருத்துவராகவும் மனதிற்குள் கவிஞராகவும் இருந்தார் என்று அமிகாய் குறிப்பிடுகிறார். இது அப்படியே ஆன்டன் செகாவிற்குப் பொருந்தக்கூடியது. அவர் வெளியே மருத்துவராகவும் உள்ளே சிறுகதை ஆசிரியராகவும் இருந்தார்.

அதே கவிதையில் வேறு ஒரு தருணத்தில் அவர் உள்ளே மருத்துவராகவும் வெளியே கவிஞராகவும் இருந்தார் என்றும் அமிகாய் குறிப்பிடுகிறார். கண்ணாடியின் முன்பக்கம் பின்பக்கம் போன்ற நிலையாக இதைக் கருத முடியாது. பந்தின் முன்பக்கம் பின்பக்கம் போலப் பிரிக்கமுடியாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.

இறந்த அரசரின் பெயருக்கு அடுத்ததாக

அவர் பிறந்த இறந்த வருஷத்தின் எண்கள்

ஒரு கோடு மட்டுமே அவற்றைப் பிரிக்கிறது.

என்றொரு கவிதையில் சொல்கிறார்.

பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடைப்பட்ட சிறிய கோடு தான் வாழ்க்கையா. அந்தக் கோட்டிற்குள் எவ்வளவு உண்மைகள் புதைந்திருக்கின்றன. அந்தக் கோடு மன்னரின் வாழ்க்கையை மட்டுமா சொல்கிறது. பிறப்பு இறப்பு இரண்டிற்கும் நடுவிலுள்ள அந்தச் சிறிய கோட்டின் விஸ்வரூபத்தைக் கவிதையே நமக்கு உணர்த்துகிறது. வாழ்வு குறித்த ஞானத்தை வெளிப்படுத்துகிறது.

சில நேரங்களில் ஒரு மனிதன்

எதையாவது எடுப்பதற்காகக் குனிகிறான்

அப்பொருள் அவன் கையிலிருந்து விழுந்தது,

அவன் நிமிரும் போது,

உலகம் மாறி வேறொன்றாகி விடுகிறது.

என்ற கவிதை வரியை வாசிப்பவர்கள் கவிஞர் தேவதச்சனை நினைவு கொள்ளாமல் எப்படியிருக்க முடியும். இருவரும் எளிய நிகழ்விற்குள் பெரிய உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

அமிகாயின் இன்னொரு கவிதையில் ஒரு பெண்பித்தன் மறதியின் வீட்டிலிருந்து இருந்து நினைவின் வீட்டிற்குச் செல்கிறான். பின்பு நினைவின் வீட்டிலிருந்து மறதியின் வீட்டிற்குத் திரும்புகிறான். காதல் என்பதே இந்த இரண்டு வீடுகளுக்கு இடையே அலைந்த பயணம் தானோ.

தொலைவில் இருந்து பார்த்தால்

எல்லாமும் அதிசயம் போல் தெரிகிறது

ஆனால் அருகில் சென்றால்

அதிசயம் கூட

அதிசயமாகத் தெரிவதில்லை.

என்று கவிஞர் குறிப்பிடும் போது இடைவெளி தான் அதிசயத்தை உருவாக்குகிறதோ என்று தோன்றுகிறது.

அவர்கள் தெருவில் ஒரு குழி தோண்டுகிறார்கள்.

ஆடை கிழிந்த அழுக்கு குடிகாரன் போல

பூமியின் அந்தரங்கம்

பொதுவெளியில் வெளிப்படுகிறது

என்ற அமிகாயின் வரிகள் சட்டென நமது பார்வையை மாற்றிவிடுகிறது. பூமியின் அந்தரங்கம் குறித்த குற்றவுணர்வினை நமக்குள் ஏற்படுத்துகிறது..

அமிகாயின் கவிதை ஒன்றில் இறந்து கிடந்த போர்வீரனின் மீது மழை பெய்கிறது. அவன் தனது முகத்தைக் கையால் மூடிக் கொள்ளவில்லை என்கிறார். போரின் துயரை இதை விடை வலிமையாக எப்படிச் சொல்ல முடியும்

அவரது கவிதையில் வேறுவேறு நபர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அந்த உரையாடல்களின் சாட்சியமாக அவர் இருக்கிறார். உரையாடலில் அவர் குறுக்கிடுவதில்லை. மாறாக அந்த உரையாடல்களைத் தனது சொந்த அனுபவத்தோடு இணைத்து புதிய அனுபவமாக மாற்றிவிடுகிறார்.

அன்பைப் பற்றிய அவரது கவிதை ஒன்றில் உடல் தான் அன்பிற்கான காரணம் என்கிறார். நமது உடல் அன்பின் கோட்டையாகவும் அன்பின் சிறைச்சாலையாகவும் மாறிவிடுகிறது. உடல் இறக்கும் போது அன்பு விடுதலையாகி விடுகிறது, நாணயங்கள் போட்டு விளையாடும் சூதாட்ட இயந்திரம் திடீரென உடைபட்டு நாணயங்கள் சிதறுவதைப் போல எனக் கவிதை முடிகிறது. இதை வாசிக்கும் போது அன்பு என்பதே உடலின் தந்திரம் தானோ, உடலின் சூதாட்டம் தான் அன்பாக உணரப்படுகிறதோ என்றும் தோன்றுகிறது.

நான் முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்

பிரார்த்தனைகள் கடவுளுக்கு முந்தியவை என்று.

பிரார்த்தனைகள் கடவுளைப் படைத்தன.

கடவுள் மனிதனைப் படைத்தார்,

மேலும் மனிதன் பிரார்த்தனைகளை உருவாக்குகிறான்

அது மனிதனைப் படைக்கும் கடவுளை உருவாக்குகிறது.

இந்தக் கவிதையில் பிரார்த்தனை பற்றி இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள, நினைத்துக் கொணடிருக்கிற யாவும் மாறிவிடுகிறது.

பிரார்த்தனைகள் தான் கடவுளைப் படைத்தன என்பது வியப்பூட்டும் வரி

உண்மையில் நாம் எதன் முன்பாகப் பிரார்த்தனை செய்கிறோமோ அப்பொருள் கடவுளாகி விடுகிறதே.

கடற்கரை மணலில்

பறவைகளின் கால்தடங்கள்,

பொருள்கள், பெயர்கள், எண்கள் மற்றும் இடங்களை

நினைவில் கொள்ள விரும்பிய

ஒருவரின் கையெழுத்துக் குறிப்புகள் போல

காலடிதடங்களை விட்டுச் சென்ற

பறவையை நான் ஒரு போதும் பார்த்ததில்லை

கடவுளைப் போலவே.

காணாத கடவுளின் காலடித்தடங்கள் தான் பூமியில் நாம் காணும் இயற்கை காட்சிகள் என்பது பரவசமளிக்கிறது. கடவுள் ஒரு பறவையைப் போன்றவர் என்று கவிதையால் மட்டுமே சொல்ல முடியும்.

உருண்டையான பழத்தை கத்தியால் உரிப்பதைப் போல,

காலத்தின் இயக்கத்தை

உணர்கிறேன நான்.

எனும் அமிகாயை இடிபாடுகளின் கவிஞன் என்று சொல்லலாம். காலத்தால் உருமாறிய இடங்களின் இடிபாடுகள் மட்டுமின்றி. உறவன் இடிபாடுகளையும் அவர் எழுதுகிறார்

ஒருவரை மறப்பதென்பது

பின்கட்டில் உள்ள விளக்கை

அணைக்க மறப்பது போன்றது

அதனால் அது அடுத்த நாள் முழுவதும்

எரிந்து கொண்டே இருக்கும்

ஆனால் பின்பு அதன் வெளிச்சமே

உங்களை நினைவில் வைக்கும்

என்ற கவிதையில் நமது கவனக்குறைவு தான் மறதிக்கான காரணம் என்கிறார். அறியாமல் செய்த தவறு என்றும் அதைக் கருதலாம். அல்லது அலட்சியமான தவறு என்றும் கருதலாம்.

எளிமையான ஒன்றைச் செய்ய மறந்ததால் ஏற்படும் விளைவுகளை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம், அச் செயல் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

பின்கட்டில் எரியும் விளக்கும் முன்கட்டில் எரியும் விளக்கும் ஒன்றல்ல. இந்தக் கவிதையில் பின்கட்டில் உள்ள விளக்கை தான் அணைக்க மறந்து போகிறார்கள். வீட்டின் கவனத்தைப் பெறாமலும் அதே நேரம் தனது பயனற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அந்த வெளிச்சம் பகலிலும் எரிந்து கொண்டேயிருக்கிறது. அந்த ஒளியென்பது அதுவரை வெளிப்பட்ட விளக்கின் ஒளியாகயில்லை. மாறாக அதற்கு எதிரான ஒளியாக மாறுகிறது. நமது தவறின், கவனக்குறைவின், கண்டுகொள்ளாமையின் அடையாளமாக மிஞ்சுகிறது வெளிச்சம்.

நாம் யாரையாவது மறக்க முயற்சித்தால், அணைய மறுக்கும் ஒளியைப் போல அவர்கள் நம்மைத் துரத்துவார்கள் என்பதையே இந்தக் கவிதை வரி உணர்த்துகிறது. இதனை இழந்த, முறிந்த காதலின் கவிதையாக இன்றைய இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள்.

துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயங்களில் சமயக் கவிதைகளைத் தாண்டி வேறு சில கவிதைகளை வாசிக்க விரும்புகிறார்கள். அப்படி இந்தக் கவிதையைத் துக்கசடங்கில் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு இக்கவிதை வெறும் காதலின் பிரிவை சொல்லும் கவிதையில்லை.

I don’t live like a poet, nor do I look like one, and I have the child in me. My escape route to childhood is always open. என்கிறார் அமிகாய். தனது தப்பிக்கும் வழியாக அவர் உருவாக்கிக் கொண்டதே கவிதை. ஆனால் அதன் வழியாக அவர் தனது பால்யத்திற்கு மட்டும் திரும்பவில்லை. விரும்புகிற வயதிற்கு, விரும்புகிற இடத்திற்குக் கவிதையின் வழியாகச் சென்று வருகிறார். காலம் மற்றும் வெளியோடு விளையாடுகிறார். உறவினுள் விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஒரே நேரத்தில் நடிகராகவும் பார்வையாளராகவும் இருக்கிறார்.

அமிகாய் தன்னை நவீன, இஸ்ரேலிய வரலாற்றின் பிரதிநிதியாக மட்டும் கருதவில்லை, மாறாக அவர் மூவாயிரம் ஆண்டுப் பழமையான யூத பாரம்பரியத்தின் சுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதே அவரது தனித்துவம்.

•••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2024 03:15

October 31, 2024

பாக்தாத்தின் திருடன்

அலெக்சாண்டர் கோர்டா தயாரித்து மைக்கேல் பாவல் இயக்கிய The Thief of Bagdad திரைப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். 1940ல் வெளியான இப்படம் இன்றும் சுவாரஸ்யம் மாறாமல் அப்படியே உள்ளது. படத்தில் அபு என்ற கதாபாத்திரமாக எலிஃபண்ட் பாய் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இந்திய நடிகர் சாபு நடித்திருக்கிறார்.

1001 அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அழகாகக் கோர்த்துத் திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். அரங்க அமைப்பும் படமாக்கப்பட்ட விதமும் இசையும் அற்புதமானது..

தமிழில் வெளிவந்த பாக்தாத் திருடன். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற படங்களும் அராபிய கதையிலிருந்து உருவானதே.

இப்படத்தின் கதை பஸ்ராவில் துவங்குகிறது. அஹ்மத் என்ற கண் தெரியாத பிச்சைக்காரன் தனது நாயுடன் வீதியில் அமர்ந்து யாசகம் கேட்கிறான். வணிகர்கள் பிச்சை போடும் நாணயங்களில் எது கள்ள நாணயம் என அவனது நாய் கண்டறிந்து சொல்லிவிடுகிறது.

சந்தையிலிருப்பவர்கள் இந்த அதியசத்தை வியப்போடு காணுகிறார்கள். ஒரு காலத்தில் அந்த நாய் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இருந்திருக்கக் கூடும் என ஒருவன் கேலி செய்கிறான்

ஒரு வணிகன் இதனை நம்ப முடியாமல் பரிசோதனை செய்தும் பார்க்கிறான். நாய் கள்ள நாணயத்தைக் கண்டுபிடித்துவிடுகிறது.

கண்தெரியாத இந்தப் பிச்சைகாரன் ஒரு காலத்தில் பாக்தாத்தின் இளவரசனாக இருந்தவன். மந்திரவாதி ஜாஃபரால் ஏமாற்றப்பட்டுப் பார்வையை இழந்திருக்கிறான் அது போலவே திருடன் அபு தான் இப்போது நாயாக மாறியிருக்கிறான் என்று கதை அவர்களின் கடந்தகாலத்தை விவரிக்கிறது.

இது போன்று சாபத்தால் உருவமாறியவர்களைப் பற்றிய கதையைக் கேட்டமாத்திரம் மனது பள்ளி வயதிற்குப் போய்விடுகிறது. அந்த வயதில் கேட்ட, படித்த கதைகள் மறப்பதேயில்லை.

ஒரு கதைக்குச் சுவையூட்டும் உப்பு என்பது இது போன்ற மாய நிகழ்வுகளே. அவை அளவாகப் பயன்படுத்தப்படும் போது கதையின் சுவை அதிகரித்துவிடுகிறது.

இந்தப் படத்திலும் நாயாக உள்ள திருடனும். பார்வையிழந்த பிச்சைக்காரனும் மந்திரவாதியால் உருமாற்றப்படுகிறார்கள் மந்திவாதி சர்வ சக்தி படைத்தவன். பேராசை கொண்டவன். மந்திரவாதி ஜாஃபரின் வருகை என்பது லண்டன் நகருக்குள் டிராகுலா வருவதைப் போலிருக்கிறது.

அதிசயங்களால் பின்னப்பட்ட கம்பளம் போன்றதே படத்தின் திரைக்கதை.

இந்தக் கதையில் வரும் அடுத்த அதிசயம் உறங்கிக் கொண்டேயிருக்கும் இளவரசி. அவளை எவராலும் உறக்கத்திலிருந்து எழுப்ப முடியவில்லை. காரணம் மந்திரவாதி அவளை ஆழ்துயிலில் வைத்திருக்கிறான். அந்த இளவரசியின் துயிலைக் கலைத்து அவளை எழுப்புவதற்காகச் செல்கிறான் அஹ்மத். அவள் கனவிற்கும் நனவிற்கும் இடையில் தடுமாறுகிறாள். படத்தின் மிக அழகான காட்சியது. எது நிஜம் என அவளால் அறிய முடியவில்லை. காதலே நிஜத்தை உணர வைக்கிறது.

மூன்றாவது அதிசயம் பறக்கும் இயந்திரக் குதிரை. மந்திரவாதி ஜாஃபர் பஸ்ராவின் சுல்தானுக்குப் பரிசாகப் பறக்கும் இயந்திரக் குதிரை ஒன்றைத் தருகிறான். அந்தக் குதிரையின் மீதேறி நகர் முழுவதும் சுற்றியலைகிறார் சுல்தான். இன்றுள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு நிகராக அன்றே இந்த மாயக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். பறக்கும் குதிரைக்கு ஈடாக அவரது மகளைத் திருமணம் செய்து தர வேண்டும் எனக் கேட்கிறான் ஜாஃபர். சுல்தானும் சம்மதிக்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை இப்பகுதி விவரிக்கிறது.

நான்காவது அதிசயம் சுல்தானைக் கொல்வதற்காக உருவாக்கபட்ட இயந்திர நடனப் பெண். இந்தியக் கடவுள் போல உருவாக்கபட்டிருக்கிறாள்..  அறிவியல்புனைகதைகளில் வருவது போன்ற கதாபாத்திரமது.

ஐந்தாவது அதிசயம் அபு வும் பூதமும் சந்திக்கும் நிகழ்வுகள். அபு பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கிக் கொண்டு உடைந்து போகிறது. வெறிச்சோடிய கடற்கரையில் அபு தனியாக எழுகிறான். அங்கே பாட்டிலில் அடைக்கபட்ட பூதம் ஒன்றை விடுவிக்கிறான். அந்தப் பூதம் அவனைக் கொல்ல முயலுகிறது. அதனிடமிருந்து எப்படித் தப்புகிறான் என்பதும், அதன் ஊடாக விவரிக்கபடும் சர்வ சக்திகள் கொண்ட மாயக்கண்ணும். அதற்காக மந்திரவாதியும். அஹ்மத்தும் மோதிக் கொள்ளும் நிகழ்வுகளும் விவரிக்கபடுகின்றன. ராட்சத சிலந்திக்கு எதிராகப் போராடும் அபுவின் காட்சி சிலிர்க்க வைக்கிறது

கடைசி அதிசயம் அபு பறக்கும் கம்பளத்தில் பறந்தபடி சாகசப்பயணம் துவங்குவது.  அபு யார் என்பதை ஞானிகள் விவரிக்கும் காட்சியும் சிறப்பானது.

The Thief of Bagdad  அராபிய இரவுக்கதையில் வரும் நிகழ்வுகளை அப்படியே படமாக்கவில்லை. மாறாகத் தேவையான கதைச்சரடுகளை, கதாபாத்திரங்களைச் தேர்வு செய்து திரைக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த மாற்றங்களை மைக்கேல் பாவல் சரியாகக் கையாண்டிருக்கிறார். அதுவே படத்தைக் காலம் தாண்டிய கலைப்படைப்பாக்கியிருக்கிறது.

அதே நேரம் மறைமுகமாகப் படத்தினுள் வெளிப்படும் காலனியப் பார்வையினையும் நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதே கதைச்சரடுகள் தமிழில் வேறுவேறு படங்களில் தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குலேபகாவலி படத்தில் பார்வையின்மையைக் குணப்படுத்தும் குலேப் என்ற மாயமலரைத் தேடிப் போகிறார்கள். இது போலப் பறக்கும் கம்பளத்தின் கதையும் அடிமைபூதம் கதையும் தமிழில் பயன்படுத்தபட்டிருக்கின்றன.

அராபிய இரவுகள் கதையைப் படிக்கும் போது நாம் அடையும் வியப்பை. சுவாரஸ்யத்தை அப்படியே படமும் தருகிறது. இதே அராபிய இரவுகள் கதையினை மையமாகக் கொண்டு வேறு சில படங்கள் ஆங்கிலத்தில் வந்துள்ளன. ஆனால் இந்தப் படத்திற்கு இணையாக இல்லை.

1930 களின் பிற்பகுதியில் பிரிட்டனில் டெக்னிக் கலர் அறிமுகமானது. அதை இப்படம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது, குறிப்பாக அரண்மனைக் காட்சிகள் மற்றும் பஸ்ரா துறைமுகத்திற்கு மந்திரவாதி ஜாஃபர் வந்து சேரும் காட்சிகள். அதில் துறைமுகத்தின் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கப்பலில் நடைபெறும் விஷயங்களைப் பேரழகுடன் படமாக்கபட்டிருக்கின்றன. பஸ்ராவில் நாம் காணும் மனிதர்களின் ஆடைகள், தலைப்பாகைகள், கடலில் காணும் விதவிதமான பாய்மரங்கள் மற்றும் வண்ணக் கொடிகள் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன, இந்தத் திரைப்படம் 1940 இல் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸிற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

இந்தப்படத்தில் கிடைத்த அனுபவத்திலிருந்து மைக்கேல் பாவல் தனக்கான தனித்துவ திரைமொழியை உருவாக்கிக் கொண்டார். அவரது Black Narcissus திரைப்படத்தில் இமயமலைச்சாரலில் உள்ள மடாலயத்தையும் மன்னரின் மாளிகை போன்ற அரங்க அமைப்பினையும் உருவாக்கியதில் அது சிறப்பாக வெளிப்பட்டது. Black Narcissus உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புகழ்பெற்ற இயக்குனர்களான பிரான்சிஸ் ஃபோர்டு கோப்போலா மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸி The Thief of Bagdad படத்தை பிரிட்டிஷ் சினிமாவின் காவியம் என்று கொண்டாடுகிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2024 06:21

October 28, 2024

நினைவின் உணவகம்.

புதிய குறுங்கதை

அந்த மலைநகரில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களைத் தணிக்கை செய்வதற்காக அவள் வந்திருந்தாள். கூட்டுறவு சங்க நிர்வாகிகளே அவளது உணவு மற்றும் தங்குமிடத்தைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் அவள் அதை ஏற்கவில்லை. அவற்றை அவளே ஏற்பாடு செய்து கொண்டாள்.

தணிக்கை செய்யச் செல்லும் இடங்களில் மதிய உணவு கிடைப்பது தான் பிரச்சனையாக இருந்தது. சங்க ஊழியர்களில் எவரேனும் அவளுக்காக உணவு வாங்கி வருவதற்காக மலைநகருக்குள் சென்று வந்தார்கள். அதை மட்டும் அவளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் சாப்பாட்டிற்கான பணத்தை அவளே கொடுத்து அனுப்பினாள்.

நேர்மையாக இருப்பதற்குப் போராட வேண்டியிருக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

அன்றைக்கு அவள் தணிக்கை செய்ய வேண்டிய கூட்டுறவு சங்கம் செயல்பட்ட இடம் பழைய பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடம். தொலைவிலிருந்து பார்க்க சிறகை விரித்துப் பறக்க காத்திருக்கும் செந்நிற பறவை போலிருந்தது

கர்னல் வில்லியம்ஸ் காலத்தில் மாட்டப்பட்ட சுவரோவியங்கள் கூட அப்படியே இருந்தன. உறுதியான அதன் படிகளில் ஏறும் போது அவள் அறியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

அன்றைக்கு மதிய உணவை வெளியே எங்காவது நடந்து போய்ச் சாப்பிட்டு வரலாம் என நினைத்துக் கொண்டாள். வெயில் வராத காரணத்தால் மணி இரண்டானதை அவள் உணரவில்லை. சோம்பல் முறித்தபடியே வெளியே வந்தபோது ஊழியர்கள் டிபன் பாக்ஸை திறந்து வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள். மடித்து உருவம் இழந்து போன சப்பாத்திகளைப் பார்ப்பது சாப்பிடும் ஆசையைப் போக்கிவிடுகிறது. எவ்வளவு நாட்கள் இப்படி டிபன் பாக்ஸில் வளைந்த ரப்பர் செருப்பு போன்ற சப்பாத்தியை கொண்டுவந்து சாப்பிட்டிருக்கிறாள் என்ற நினைவு வந்து போனது

அவள் உணவகத்தைத் தேடி மண்பாதையில் நடந்த போது தண்ணீர் குழாய் ஒன்று வெடித்து நீர் பீச்சி கொண்டிருந்தது. மலைநகரங்களில் நிசப்தம் எடைகூடி விடுவதை உணர்ந்தாள்

யூகலிப்டஸ் எண்ணெய் மற்றும் தேன் விற்கும் கடை ஒன்று கண்ணில்பட்டது. அங்கே அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண் வலதுபக்கம் திரும்பினால் உணவகம் இருப்பதாகச் சொன்னாள்.

அந்த உணவகத்திற்குப் பெயரில்லை. மரக்கதவைத் தள்ளி உள்ளே நுழைந்த போது அங்கே மூன்று மேஜைகள் இருப்பதைக் கண்டாள். ஒருவரைக் கூடக் காணவில்லை

ஒரு வேளை உணவகம் செயல்படவில்லையோ எனத் தோணியது. கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் யாரோ நடமாடுவது போலிருந்தது. அவள் “சாப்பாடு இருக்கிறதா“ எனச் சப்தமாகக் கேட்டாள். அரக்கு நிறக்கதவை தள்ளி வெளியே எட்டிப்பார்த்த நரைத்த தலை கொண்டவர் சிரித்தபடியே “இருக்கிறது…மெனுகார்டை பாருங்கள்“ என்றார்.

மேஜையில் இருந்த மெனு கார்டினை அவள் கையிலெடுத்து புரட்டினாள். அதில் உணவின் பெயர்களுக்குப் பதிலாக வெவ்வேறு வயதின் உணவுகளாகப் பட்டியல் இருந்தது.

ஐந்து வயதின் உணவு. ஆறு வயதின் உணவு. பதிமூன்று வயதின் உணவு. நாற்பத்திரெண்டு வயதின் உணவு. எழுபத்திமூன்று வயதின் உணவு என வயது வாரியாக உள்ளதே. இதை வைத்து எப்படி உணவைத் தேர்வு செய்வது எனக் குழப்பமாக இருந்தது.

கண்ணாடி டம்ளரில் சூடான வெந்நீருடன் வெளியே வந்த சமையற்காரர் அதே சிரிப்பு மாறாமல் “எந்த வயதின் உணவைத் தேர்வு செய்திருக்கிறீர்கள்“ எனக் கேட்டார்.

“இதில் எப்படித் தேர்வு செய்வது எனக் குழப்பமாக உள்ளது“ என்றாள்.

“எல்லா உணவும் வயதின் அடையாளங்கள் தான். உங்களுக்கு விருப்பமான பூரியோ, கேசரியோ, அடையோ முதன்முதலில் எப்போது அதைச் சாப்பிட்டீர்களோ அந்த வயது உணவோடு சேர்ந்துவிடுகிறது. அதே உணவைத் திரும்பச் சாப்பிடும் போதெல்லாம் நாம் அந்த வயதை திரும்ப அடைகிறோம்“ என்றார்.

அவர் சொல்வது உண்மை. இப்போதும் கூடத் தட்டில் ஆவி பறக்கும் ரவா உப்புமாவும் சீனியையும் கண்டால் உடனே பள்ளி நாட்கள் நினைவில் வந்துவிடுகிறதே.

எந்த வயதின் உணவைத் தேர்வு செய்வது எனத் தெரியாமல் அவள் மெனுக் கார்டில் கண்களை ஒடவிட்டாள்.

பின்பு அவள் தனது பனிரெண்டு வயதின் உணவை தேர்வு செய்தாள்.

காத்திருக்கும் நேரம் வரை இந்தப் புதிர்கட்டத்தை விளையாடலாம் என ஒரு அச்சிடப்பட்ட காகிதம் ஒன்றை அவர் தனது அங்கியின் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தார்.

பசியில் எளிய புதிர்கட்டங்களைப் பூர்த்திச் செய்வது கூட கடினமாக இருந்தது.

அரை மணி நேரத்தின் பின்பு அவள் முன்பாக இலையைப் போட்டுச் சூடான சாதம் வைத்தார், அதில் எண்ணெய் மிதக்கும் பூண்டுக் குழம்பு. அதுவும் பெரிய பூண்டுகள். சுட்ட அப்பளம். தேங்காய் துவையல். நிறைய வெங்காயம் போட்ட உருளைக்கிழங்கு புட்டினை வைத்தார்.

அதைப் பார்த்த மாத்திரம் கோடை விடுமுறைக்குப் பார்வதி அத்தை வீட்டிற்குப் போன போது ஆசையாகச் சாப்பிட்ட நினைவு வந்து போனது.

தனது பனிரெண்டு வயதின் அனுபவம் இவருக்கு எப்படித் தெரிந்தது எனப் புரியாமல் அவள் திகைத்தபோது

“உங்கள் பனிரெண்டு வயது இது தானா“ எனக் கேலியாகக் கேட்டார்.

அதே ருசி. இத்தனை ஆண்டுகளாக நாக்கு இதற்குத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது.

அவள் ஆசையாகச் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொள்ளும் போது சொன்னார்

“கற்கண்டு பாயாசம் இருக்கிறது. “

ஆமாம் அதுவும் அத்தை வீட்டில் சாப்பிட்டது.

இந்த மனிதரால் எப்படித் தனது பனிரெண்டு வயதை, அதன் ருசியைக் கண்டறிய முடிந்தது என வியப்பு அடங்காமல் அவள் பாயசத்தைக் குடித்தாள்.

வழக்கமாக அவள் சாப்பிடும் உணவகங்களை விடவும் பில் குறைவாக வந்திருந்தது. அதைச் செலுத்திவிட்டு வெளியே வந்த போதும் ஆச்சரியத்திலிருந்து விடுபட முடியவில்லை.

நாளை மறுபடியும் போய் இன்னொரு வயதின் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கம் உருவானது.

அவள் கூட்டுறவு சங்கத்திற்குத் திரும்பிய போது நிர்வாகி “இங்கே நல்ல சாப்பாடு கிடைக்காது“ எனச் சலித்துக் கொண்டார். “வாழ்நாளில் மறக்க முடியாத சாப்பாடு கிடைத்தது“ எனச் சொல்லியபடியே அவள் தனது வேலையைத் தொடர்ந்தாள்.

மறுநாள் மதியம் அந்த உணவகத்திற்குச் சென்ற போது பச்சை நிற ஸ்வெட்டர் அணிந்த ஒரு கிழவர் தனியே சாப்பிட அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

அவளைப் பார்த்த மாத்திரம் சமையற்காரர் “இந்த ஹோட்டலை எவராலும் மறக்க முடியாது. திரும்பத் திரும்ப வருவார்கள். எனது வாடிக்கையாளர்கள் நிரந்தரமானவர்கள்“ என்று சிரித்தார்.

இன்றைக்கு எந்த வயதின் உணவை தேர்வு செய்வது என மெனுவைப் புரட்டிக் கொண்டிருந்த போது பக்கத்து மேஜையில் இருந்த முதியவர் சொன்னார். “உணவின் வழியே வேறு வேறு வயதிற்குச் சென்று வருவது சந்தோஷம் தருகிறது. “

அதை ஏற்பது போல அவளும் தலையாட்டினாள்

“நீங்கள் எந்த வயதின் உணவை தேர்வு செய்திருக்கிறீர்கள்“ என முதியவர் கேட்டார்.

“அது ரகசியம்“ என்று சொன்னாள்.

“ஆமாம். ரகசியம் “எனச் சொல்லி முதியவர் கண்ணைச் சிமிட்டினார்.

அவளது அடிமனதில் கல்லூரியில் ஏற்பட்ட ஸ்ட்ரைக் காரணமாகத் திடீர் விடுப்பு அறிவிக்கப்பட்ட நாளில் வீடு திரும்பிய போது அம்மா செய்து கொடுத்த மிதி பாகற்காய் வறுவல். அதுவும் அதைச் சாதத்தில் பிசைந்து சாப்பிட்ட நினைவு வந்தது .

மெனு கார்டில் அந்த வயதை அவள் தேர்வு செய்தாள்.

சமையற்காரர் இன்னொரு புதிர்காகிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டுக் “காத்திருங்கள்“ என்றபடியே உள்ளே நடந்த போது அவரது பெயரைக் கேட்க விரும்பினாள்.

அந்த மர்மமும் வியப்பும் கலைய வேண்டாமே என நினைத்தபடியே அவள் மௌனமாகினாள்.

அவளது நாக்கு கசப்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்தது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2024 21:12

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.