S. Ramakrishnan's Blog, page 18

December 20, 2024

கிதார் இசைக்கும் துறவி

2024ல் கவனம் பெற்ற நூல்களின் பட்டியலை இந்து தமிழ்திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை நூல் இடம் பெற்றுள்ளது.

நன்றி. தி இந்து தமிழ் திசை நாளிதழ்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2024 22:54

December 18, 2024

சாகித்ய அகாதமி விருது

2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.


பாரதி, புதுமைப்பித்தன், வஉசி என அவரது அரிய பதிப்புப் பணிகள் மற்றும் ஆய்வுகள் சிறப்பானவை. சங்க கவிதைகளைத் தங்கப்பாவுடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறந்த வரலாற்று அறிஞர். தமிழ் பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து புதிய வெளிச்சத்தைக் காட்டியவர். அவர் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2024 20:31

December 17, 2024

அழைப்பிதழ்

டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2024 03:37

மூன்று மெய்யியல் நாவல்கள்

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் மூன்று மெய்யியல் நாவல்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

••

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள்.

இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன்.

காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணின் உடலையும் மற்றொரு ஆணின் தலையையும் நேசிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நாவலை மொழியாக்கம் செய்திருப்பவர் ரா.ஸ்ரீ.தேசிகன்.

••

அமெரிக்க எழுத்தாளர் வில்லா கேதர் எழுதிய டெத் கம்ஸ் ஃபார் தி ஆர்ச்பிஷப் நாவலின் தமிழாக்கமே அன்புப்பிடியில் இருவர்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கதை நடக்கிறது . நியூ மெக்சிகோவில் ரோமன் கத்தோலிக்க மதகுருக்களாகப் பணியாற்றும் இருவரின் வாழ்க்கையை நாவல் மிகவும் நுண்மையாகச் சித்தரிக்கிறது.

உலகின் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதனை லைஃப் இதழ் தேர்வு செய்துள்ளது. இந்த நாவலை சி. ஸ்ரீநிவாசன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

••

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை அறிவதற்கான ஆன்மீகத் தேடலில் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார். இதில் சோமர்செட் மாம் ரமண மகரிஷியை ஒரு கதாபாத்திரமாகச் சித்தரித்துள்ளார்.

1938 ஜனவரியில், சோமர்செட் மாம் திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஷ்ரமத்திற்கு வருகை தந்து பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்திருக்கிறார். அந்த அனுபவத்தின் வெளிப்பாடாகவே இந்த நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த நாவலை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

••

மாறிய தலைகள் நாவலை 1964ம் ஆண்டு தென்மொழிகள் புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. அன்புப்பிடியில் இருவர் நாவலும் ஜோதி நிலையம் சார்பில் 1961 ஆண்டு வெளியாகியுள்ளது. சோமர்செட் மாம் நாவலை அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள டாக்டர் சந்திரமௌலி புதிதாக மொழியாக்கம் செய்துள்ளார்.

உலகப்புகழ்பெற்ற மூன்று மெய்யியல் நாவல்களையும் இன்றைய வாசகர்கள் ஒரு சேர வாசிப்பதற்காகத் தேசாந்திரி பதிப்பகம் அழகிய பதிப்பாக வெளியிடுகிறது

••

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி அரங்கில் இந்த மூன்று மெய்யியல் நாவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2024 03:21

December 16, 2024

காதலின் இருவேறு பாதைகள்.

ஆஸ்திரியக் கவிஞர் இங்கேபோர்க் பாக்மென் பற்றிய திரைப்படம் ingeborg-bachmann-journey-into-the-desert. பெண் இயக்குநர் Margarethe von Trotta இயக்கியுள்ளார்.

1950-1960களில் புகழ்பெற்ற கவிஞராக விளங்கியவர் பாக்மென். 1973 இல் தனது 47 வயதில் இறந்து போனார்..

சுவிஸ் நாடக ஆசிரியர் மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் பாக்மேனுக்குமான காதலையும் அவர்களின் உறவில் ஏற்பட்ட விரிசலையும் பற்றிய இத்திரைப்படம் அன்றைய இலக்கிய உலகின் செயல்பாடுகள் மற்றும் கவிஞனின் ஆளுமையைச் சிறப்பாக விவரிக்கிறது. 1958 மற்றும் 1964 க்கு இடையில் கதையின் பெரும்பாலான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

1958 ஆம் ஆண்டுப் பாரிஸில் நடந்த முதல் சந்திப்பில் இங்கேபோர்க் பாக்மென் மீது மேக்ஸ் ஃப்ரிஷிற்கும் காதல் ஏற்படுகிறது. Seine பாலத்தில் அப்போலினேயரின் கவிதைகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளும் காட்சி அழகானது

அந்தக் காதலின் தீவிரத்தில் அவருடன் இணைந்து வாழுவதற்காகப் பாக்மென் சூரிச்சிற்கு இடம் மாறுகிறார். ஆனால் சில நாட்களிலே காதல் கசப்படைய ஆரம்பிக்கிறது. பரஸ்பரம் சண்டையிடுகிறார்கள். அங்கிருந்த நாட்களில் பாக்மென் எதையும் எழுத முடியாமல் போகிறார்.

தனது அறையில் மேக்ஸ் ஃப்ரிஷ் வேகமாக டைப் அடிக்கம் சப்தம் கேட்டு எரிச்சலாகும் பாக்மென் அவருடன் சண்டையிடுகிறார். சப்தம் இல்லாமல் டைப் செய்யும் மிஷின் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்கிறார் மேக்ஸ்

மனச்சோர்வும் தனிமையும் ஒன்று சேர அவள் இசைக்கலைஞர் ஹான்ஸ் வெர்னர் ஹென்ஸே போன்ற வேறு ஆண்களுடன் பழகுகிறார். இதை ஃப்ரிஷ்ஷால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளைச் சந்தேகிக்கத் துவங்குகிறார். இந்தச் சந்தேகம் அவளது நடத்தையைத் தீவிரமாக்குகிறது.

ஒரு உரையாடலின் போது பாக்மென் “You’ll make me unhappy, but I’ll take that risk,” என்கிறார். இது தான் படத்தின் அவரது தீவிரமான செயல்பாடுகளுக்கான ஒரே விளக்கம்.

கதை இரண்டு தளங்களில் நடக்கிறது. ஒன்று பாக்மெனின் பாலைவனப்பயணம். அதன் வழியே அவள் தனது கடந்தகால நினைவுகளுக்குள் மறுபிரவேசம் செய்கிறாள். இன்னொரு தளம் முறிந்து போன அவளது காதல் வாழ்க்கை மற்றும் குடிப்பழக்கம், இளைஞர்களுடன் ஏற்படும் பாலியல் தொடர்பு.

பாலைவனத்திற்குள் பயணம் செய்ய வேண்டும் என்ற அவளது நீண்டகாலக் கனவு நிஜமாகிறது. இளம் வாசகனும் காதலனுமான அடோல்ஃப் ஓப்பல் அவளை அழைத்துப் போகிறான்.

பாலைவன மணலில் தன்னைப் புதைக்கும்படி சொல்கிறாள் பாக்மென். அடோல்ஃப் ஓப்பல் அவளைப் புதைக்கிறான். அங்கே ஒரே நேரத்தில் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறாள். பாலைவனம் முடிவற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும் கொடூரமான மனநிலையின் அடையாளமாகவும் சித்தரிக்கபடுகிறது.

ரோம் நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் பாக்மென் கடந்தகால வடுக்களிலிருந்து விடுபட்டுக் கவிதைகள் மொழியாக்கம் செய்வதில் ஆர்வம் கொள்கிறாள். இதற்காக இத்தாலிய கவிஞர் Giuseppe Ungarettiயை சந்திக்கிறார். அவர்களின் சந்திப்பும் அப்போது நடைபெறும் உரையாடலும் அழகானவை.

தன்னைத் தேடி ரோமிற்கு வரும் மேக்ஸ் ஃப்ரிஷை அழைத்துக் கொண்டு போய்ப் புது உடைகள் வாங்கித் தரும் பாக்மென் அவரை அழைத்துக் கொண்டு விருந்திற்குப் போகும் காட்சியும் அங்கே நடைபெறும் கசப்பான நிகழ்வுகளும் இரவு வீடு திரும்பிய பிறகு மேக்ஸ் ஃப்ரிஷ் நடந்து கொள்ளும் விதமும் உண்மை நிகழ்வின் சிறப்பான படமாக்கம் என்பேன்.

மேக்ஸ் ஃப்ரிஷ் நாட்குறிப்புகளை வாசிக்கும் பேக்மேன் அதில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவற்றைத் தீயிட்டு கொளுத்துகிறார். அது அவர்களுக்குள் பிரிவை உருவாக்குகிறது. காதலில் சிறிது காலம் மட்டுமே ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவும் நடந்து கொள்ளவும் முடியும். ஆண்களும் பெண்களும் தங்களின் தவறான புரிதல், குழப்பம் அல்லது அனைத்து உறவுகளின் சீர்குலைவு ஆகியவற்றிலிருந்து விடுபடும் வரை, ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் விலகி இருப்பதே நல்லது என்கிறார் பாக்மென்.

பாக்மெனின் உணர்ச்சிகளை மேக்ஸ் ஃப்ரிஷ் புரிந்து கொள்ளவில்லை. அவள் கொந்தளிப்பான மனநிலையே எப்போதுமிருக்கிறாள். வெளியே அமைதியாகத் தோற்றம் அளிக்கும் அவள் மனதிற்குள் அலைபாய்ந்தபடி இருக்கிறாள். பாலுறவில் மிகுந்த நாட்டம் கொண்டவளாக இருக்கிறாள். ஃபிரிஷ் மீதான பாக்மெனின் காதல் அவளை ஐரோப்பா முழுவதும் ஒரு நீண்ட பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஒரு சொற்பொழிவின் போது பாக்மென் “Fascism is the first element in a relation between a man and a woman.” என்று சொல்கிறார்.

கவிதையும் அழகிய நிலக்காட்சியும், சிறப்பான நடிப்பும் கொண்ட இந்தத் திரைப்படம் தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2024 04:59

December 12, 2024

சென்னை கலை இலக்கிய விழா.

நாளை சென்னையில் நடைபெறும் கலை இலக்கிய விழாவில் எனது ஆங்கில நூலின் மொழியாக்கம் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.

The Man Who Walked Backwards and Other Stories நூலின் மொழிபெயர்ப்பாளர் நீதிநாயகம் பிரபா ஸ்ரீதேவனுடன் அனில் ஸ்ரீனிவாசன் உரையாடுகிறார்

இடம் :

Madras School Of Economics
Gandhi Mandapam Rd, Behind Government Data Center, Surya Nagar, Kotturpuram, Chennai

நேரம் : மதியம் 3 மணி.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 23:58

எமர்சன் / சிறிய அறிமுகம்.

அமெரிக்கக் கவிஞர், இயற்கையியலாளர் ரால்ப் வால்டோ எமர்சன் பற்றிச் சிறப்புரை  நிகழ்த்த இருப்பதாக அறிவித்த நாளிலிருந்து பலரும் அவரைப் பற்றி ஏன் இப்போது சிறப்புரை ஆற்றுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள்

இன்றைய வாசகர்கள் பலருக்கும் ரால்ப் வால்டோ எமர்சன் அறிமுகமாகியிருக்கவில்லை.  அவர் 200 வருஷங்களுக்கு முற்பட்டவர். எமர்சனின் முக்கியப் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

வி.ஆர்.எம் செட்டியார் மொழியாக்கம் செய்த விதியும் தன்னம்பிக்கையும் (எமர்ஸன் கட்டுரைகள்) மற்றும் அறிமுகநூலான எமர்ஸன் சிந்தனைகள் ஜெயமோகன் மொழியாக்கம் செய்த இயற்கையை அறிதல் என்ற நூலும் மட்டுமே தமிழில் வாசிக்கக் கிடைக்கிறது.

ஆனால் ஆங்கிலத்தில் எமர்சன் எழுதிய படைப்புகள் 9 தொகுதிகளாக 4000 பக்கங்களும் மேலாக உள்ளன.

எமர்சனின் உரைகள் மற்றும் கட்டுரைகள் இன்றும் பேசுபொருளாக இருக்கின்றன. எமர்சனின் வழிகாட்டுதலிலே தோரூ உருவானார். வேர்ட்ஸ்வொர்த். கால்ட்ரிஜ், விட்மன் போன்ற கவிஞர்கள் அவரது தோழர்களாக இருந்தார்கள்.

எமர்சன் முன்வைத்த ஆழ்நிலைவாதம் மற்றும் தத்துவப் பார்வைகள் குறித்துப் போர்ஹெஸ் விரிவாக எழுதியிருக்கிறார். அவர் அமெரிக்காவின் நிகரற்ற கவி என்றே எமர்சனை மதிப்பீடு செய்கிறார்

எனது கல்லூரி நாட்களில் எமர்சனை வாசித்தேன். அவரை விடவும் தோரூவிடம் அதிக நெருக்கம் கொண்டேன். அமெரிக்கா சென்ற போது தோரூ வசித்த வால்டனுக்குச் சென்று வந்தேன். கடந்த சில ஆண்டுகளாக எமர்சனைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் முன்வைக்கும் கருத்துகள். அவரது மொழிநடை மற்றும் கலை குறித்த பார்வை எனக்கு நெருக்கமாக உள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் மேலி ஆலிவர் எமர்சன் பற்றி சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில் எமர்சனின் முக்கிய அம்சம் அவர் இயற்கை மற்றும் சமூகப், பிரச்சினையின் எல்லாப் பக்கங்களையும் ஆராய்கிறார்: எளிய ஆலோசனைகளை வழங்குகிறார் – நாமே விஷயங்களைத் தேடச் சொல்கிறார். அவர் பிடிவாதமாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், நாம் எதையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்பதே என்கிறார் மேலி ஆலிவர்

நான் ஜென் வழியாக இயற்கை பற்றிய எனது புரிதலை விரிவுபடுத்திக் கொண்டவன். ஆகவே அந்த நோக்கில் எமர்சனை வாசிப்பது என அவரது முக்கியப்படைப்புகளை ஒருசேரப் படித்தேன்

எமர்சன் தனது காலகட்டத்தின் குரலாகவும் விளங்கியிருக்கிறார். ஒட்டுமொத்த மனிதவாழ்வு மற்றும் இயற்கை குறித்த ஆழ்ந்த தேடலில், ஆய்வில் ஈடுபட்டவராகவும் இருந்திருக்கிறார்

எமர்சன் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை அவரது சில பதில்கள் எனக்கு ஏற்புடையதில்லை. ஆனால் இயற்கையியலாளர். சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசியவர். அறிவார்ந்த கவிதைகள் எழுதியவர். ஆன்மவிடுதலைப் பற்றிப் பேசியவர் என்ற அவரது பன்முகத்தன்மை என்னைக் கவர்ந்தது.

எமர்சன் ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியை இன்றும் அமெரிக்காவில் காண முடிகிறது.

எமர்சனின் படைப்புகள் இயற்கை, சமயம், கலை, காலம், சுதந்திரம், மனித மதிப்பீடுகள் மற்றும் வாழ்வில் சுகதுக்கங்களை எதிர்கொள்வது. போன்றவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டவை.

இயற்கையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நாம் ஏன் கவித்துவ உணர்வு கொள்கிறோம் என்று கேட்கிறார் எமர்சன்.. பெரும்பாலான மக்கள் சூரியனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. சூரியன் குழந்தைகளின் கண்களில் மட்டுமின்றி இதயத்திலும் ஒளிர்கிறான் என்கிறார் எமர்சன். இயற்கையைப் புரிந்து கொள்வதற்கு அகவுணர்வும் புறவுணர்வும் சரியாகப் பொருந்திப் போக வேண்டும் என்கிறார்.

நேற்று மகிழ்ச்சியைத் தந்த காட்சி இன்றைக்கு ஏன் மனச்சோர்வை உருவாக்குகிறது. அப்படியானால் வெளியே காணும் இயற்கைக் காட்சிகள் தன்னளவில் மகிழ்ச்சியை உருவாக்கவில்லையா. மனிதன் தான் அப்படி உணருகிறானா என்று எமர்சன் ஆராய்கிறார்.

பண்டைய கிரேக்கர்கள் உலகத்தை {kosmos}, அழகு என்று அழைத்தனர். இயற்கையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அதன் அழகு தான் முதன்மையாகப் பேசப்படுகிறது. இயற்கை என்பதன் வரையறை என்ன. அழகு என்பது நிரந்தரமானதா எனக் கேட்கிறார் எமர்சன்

ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை நட்சத்திரங்கள் தோன்றும் என்றால் மனிதர்கள் அதை இவ்வளவு விரும்புவார்களா என்று கேட்கிறார் எமர்சன்.

கட்டிடக்கலை என்பது இசையின் உறைந்தவடிவம் என்ற கதேயி.ன் கருத்தாக்கத்தைச் சுட்டிக்காட்டும் எமர்சன், கட்டிடக் கலைஞர் ஒரு இசைக்கலைஞராக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்

கவிதை மற்றும் கலைகள் பற்றிய எமர்சனின் பார்வை தனித்துவமானது. மொழியின் ஒவ்வொரு சொல்லும் கவிதையே. அகராதியை வாசிக்கும் போது அதை உணர முடியும் என்கிறார்.

டார்வினுக்கு முன்பாகவே எமர்சன் பரிணாமக்கோட்பாடு பற்றிப் பேசியிருக்கிறார். அறிவியல்பூர்வமாகச் சிந்தனை செய்திருக்கிறார். அடிமை வணிகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். மனித வாழ்வில் மதம் மற்றும் கடவுளின் பங்கு பற்றி  விவாதித்திருக்கிறார்.

எமர்சன் பற்றிய எனது உரை இயற்கை பற்றிய நமது பார்வை எப்படி காலந்தோறும் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதையும், கலையின் நோக்கம் மற்றும் செயல்பாடு இன்று எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் மையமாகக் கொண்டு ஹெராக்ளிடஸ் ஷேக்ஸ்பியர், தோரூ, கவிஞர் வேட்ர்ஸ்வொர்த் கவிஞர் மேரி ஆலிவர், தத்துவ அறிஞர் பியுங்-சுல் ஹான். ஜப்பானிய கலைஞர் ரிக்யூ மற்றும் ஒவியர் வான்கோ வழியான தேடலாக அமையும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 07:15

கரிசல் இலக்கியத் திருவிழா

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரிசல் இலக்கியத் திருவிழா டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் சிவகாசியில் நடைபெறுகிறது. கரிசல் நிலத்தின் பண்பாடு மற்றும் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்குகளும் நிகழ்த்துகலைகளும் இணைந்த சிறப்பான விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2024 05:56

December 10, 2024

தூதுவன்

காஃப்காவின் அரசனின் தூதுவன் என்ற குறுங்கதையில் சாவுப்படுக்கையில் உள்ள மன்னர் ஒரு ரகசிய செய்தியை தெரிவிக்கத் தூதுவன் ஒருவனை வரவழைக்கிறார். அவனை அருகில் மண்டியிடச்செய்து காதோடு காதாகச் செய்தியைச் சொல்கிறார்

அவன் தான் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறானா என மன்னர் கேட்டு உறுதிபடுத்திக் கொள்கிறார்.

அந்த அறையிலிருந்து தூதுவன் வெளியேறுவதற்குள் மன்னர் இறந்துவிடுகிறார்.

ரகசிய செய்தியோடு தூதுவன் தனது பயணத்தைத் துவங்குகிறான். அரண்மனையில் திரண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி வெளியேறி போக முடியவில்லை. முட்டிமோதி தனக்கான வழியை ஏற்படுத்தி வெளியே போக முயலுகிறான். அவனது அடையாள முத்திரையைக் காட்டி வழியை உண்டாக்கி கொள்கிறான். ஆனால் முடிவில்லாத மக்களின் கூட்டத்திலிருந்து அவனால் வெளியேறி போக முடியவில்லை.

முடிவில்லாத அறைகள். முடிவில்லாத மக்கள் கூட்டம் எனத் தடை நீண்டு போய்க் கொண்டேயிருக்கிறது.

தூதுவன் தனது பலத்தைப் பயன்படுத்தி அரண்மணையின் ஒவ்வொரு அறையாகக் கடந்து வெளியேறிக் கொண்டிருக்கிறான். ஆனால் கடைசி வழியை அடைய முடியவில்லை

இந்த வெளியேறும் பயணம் முடியவேயில்லை. ஆண்டுகளாக அவன் வெளியேறி போய்க் கொண்டேயிருக்கிறான். முக்கியமான செய்தியோடு செல்லும் அவன் தனக்கான பாதையைக் கண்டுபிடிக்கப் போராடுகிறான். அந்தப் பயணம் கடைசி வரை முடிவு பெறாமல் நீள்கிறது.

பேரரசர் சொன்ன ரகசிய செய்தி என்ன.

முடிவில்லாத தடைகளைத் தாண்டி அவன் யாருக்காக அந்தசெய்தியை கொண்டு செல்கிறான்.

எதுவும் கதையில் விளக்கபடவில்லை. ஆனால் புதிர்பாதை ஒன்றில் சிக்கிக் கொண்டுவிட்ட அந்தத் தூதுவனை நம் காலத்தின் மனிதனாகக் காஃப்கா அடையாளப்படுத்துகிறார்

அந்தப் பேரரசர் இடத்தில் கடவுளை வைத்துக் கொள்வோம் என்றால் கதை இன்னொரு விதமாகப் புரிய கூடும்.

அந்தத் தூதுவனுக்குப் பெயர் கிடையாது. மன்னருக்கும் பெயர் கிடையாது. காலம் உருண்டோடும் வரியில் தான் கதை தனது இறகை விரிக்கத் துவங்குகிறது. முடிவில்லாத பயணம் குறியீட்டுதன்மையை அடைகிறது.

மன்னர்கள் இல்லாத காலத்திலும் தூதுவர்கள் தனது பணியைத் தொடருகிறார்கள். இன்று நாம் யாரோ ஒருவரின் தூதுவராக மாறிக் கொண்டிருக்கிறோம். அல்லது செயல்படுகிறோம்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2024 04:46

December 9, 2024

நான்கு புதிய நூல்கள்

எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 09, 2024 02:49

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.