S. Ramakrishnan's Blog, page 18
January 27, 2025
எனது உரை

பெரம்பலூர் 9 வது புத்தகத் திருவிழாவில் பிப்ரவரி 1 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு உரையாற்றுகிறேன்
தலைப்பு : காலம் சொல்லும் பதில்
January 24, 2025
மாயநகரின் வாசல்
மங்கை செல்வம்
ஏழுதலை நகரம் பற்றிய விமர்சனம்.

கதவுகளில் செதுக்கப்பட்டிருக்கும் மீன்கள் நீந்துவதும் அதே கதவுகளில் உள்ள எழுத்துகள் இடம் மாறுவதும் நடக்குமா என்ன? யாருமே உள்ளே செல்ல முடியாத கண்ணாடிக்காரத் தெருவில் இவை எல்லாம் நடக்கும். உலகிலேயே வயதான பருத்த ஆமை எப்படி இருக்கும்? எலிகளுக்கு பள்ளிக்கூடம் உண்டா? அங்கே என்ன பாடம் கற்பிக்கப்படும்? கடவுள்களில் பெரிய கடவுள் என்றும் சிறிய கடவுள் என்றும் உண்டா?
மதரா என்ற மாய நகரமும், அதன் மேலே ஓடும் மாய நதியும், அதில் ஒரு பகுதியான கண்ணாடிக்காரத் தெருவும், காடன் கொண்டு வந்து தந்த மானீ என்ற பறவையும் ஞலி எலியும் உயிருடன் கண் முன்னே நிற்கின்றன. இது ஒரு மாய உலகம்; அதில் உலவும் உயிர்கள் இவை என்ற நினைவே எழவில்லை
சிறாருக்கு எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் விழி விரியும் கற்பனையும் காட்சிப்படுத்தும் மொழியும் எஸ் ராமகிருஷ்ணனுக்கு வசப்பட்டிருக்கிறது. கதையை படிக்கும் பிள்ளைகள், அசிதன் உலவும் மாய நகரத்தில் தாங்களும் சேர்ந்து உலவுவார்கள். அதைத் தவிர வேறு எந்த உள்ளுறை பொருளையும் தேடப் போவதில்லை.
அதே சமயம் நிறைய கதைகள் படித்துப் பழகிய பிள்ளைகள், சிறகுகளுடன் தோன்றும் சிறுவன் பிகாவைக் காணும் தருணம் பரிணாமத்தின் புதிர் பற்றியும், காடனுக்கே மானீயைப் பற்றி அதிகம் தெரியும் என்று அசிதன் சொல்லும் போது அதன் தொனிப்பொருள் என்ன என்றும் யோசிக்கவும் செய்யலாம்.
ஏழு நாட்களும் ஏழு நிறங்களில் தோற்றமளிக்கும் நகரமும், வான் குள்ளர்களும் பெருங்கரடியுமாகத் தோன்றும் விண்மீன்கள் கொஞ்சம் அறிவியலையும், வீட்டில் வசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப கதவுகளில் மாறிக் கொண்டே இருக்கும் எழுத்துகள் மனித உளவியலையும் துணைக்கழைத்துக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. கதை முழுவதும் இதுபோன்ற கேலிகளும் கேள்விகளும், கதைசொல்லிகளின், அவர்கள் காலங்காலமாகக் கையளித்துச் செல்லும் கதைகளின் அழியாத்தன்மையும் அவற்றிலிருந்து கசியும் வெளிச்சமும் வெகு இயல்பாக விரவியிருக்கின்றன.
பெரியவர்கள் குழந்தைகளுக்கான கதையை எழுதினாலும் வாழ்வின் அனுபவங்களால் கிளைக்கும் கேள்விகளையும் பார்வைகளையும் தவிர்க்க இயலாதுதான். மில்னேயின் Winne the Pooh -வும் கென்னத் கிரகாமின் Wind in the Willows -ம் சிறாருக்காக மட்டுமே எழுதப்பட்டவையா என்ன
ஆனால், கதையின் வெவ்வேறு சம்பவங்களை இணைக்கும் மையச்சரடு பலவீனமாகத்தான் இருக்கிறது. அசிதனும், ஓரளவு மியோவும் மானீயும் தொடக்கத்திலிருந்து இறுதி வரை வருவது மட்டுமே கதையின் சம்பவங்களை இணைக்கப் போதுமானதாக இல்லை. இன்னொன்று, அசிதனை இன்னும் உற்சாகமான ஒருவனாகப் படைத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க இயலவில்லை. கொஞ்சம் சிடுசிடுப்புடன் இருக்கும் ஒருவனாகவே பல சமயங்களில் இருக்கின்றான்.
வாசிக்கையில் இன்னொன்றும் புலப்பட்டது. ஆங்கிலம் கலக்காமல் எழுதியிருக்கும் மொழி நடை சரளமாகப் படிப்பதற்கு ஏதுவாக இருந்தது.
ஏழுதலை நகரம், எஸ் ராமகிருஷ்ணன்
ஓவியங்கள் மணிவண்ணன்
சிறார் நாவல், தேசாந்திரி பதிப்பகம்
விலை 200
நிழல் உண்பதில்லை
புதிய சிறுகதை. காலம் இதழில் வெளியானது. 2025

விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடைப்பெண் சலிப்பான குரலில் சொன்னாள்.
“கவிதைப் புத்தகங்களை யாரும் வாங்குவதில்லை. இரண்டு வருஷங்களாக இந்தக் கடையில் வேலைபார்க்கிறேன். நீங்கள் தான் கவிதைப் புத்தகம் கேட்ட முதல் ஆள்“.
“எனக்கு வானத்தில் கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்“ என்றான் மதன்குமார்.
“நீங்கள் கவிஞரா“ என்று கேட்டாள் அப்பெண்
“இல்லை. கவிதை வாசகன். உங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமா. “
“ஆமாம்“ என்று தலையாட்டினாள்.
“நான் சாக்லேட்டிற்குப் பதிலாகக் கவிதைகளைச் சுவைக்கிறவன். உங்கள் கடையின் வலப்பக்க சுவரில் எழுதிப்போட்டிருக்கிறதே A thing of beauty is a joy for ever அது கூடக் கீட்ஸின் கவிதை வரி தான். “
“அது பொன்மொழியில்லையா“ எனக்கேட்டாள் கடைப்பெண்
“மொழியைப் பொன்னாக்குவது தான் கவிதை“ என்றான் மதன்குமார். அவன் குடித்துவிட்டு வந்திருக்கிறானோ எனச் சந்தேகப்படுவது போலப் பார்த்தாள் அந்தப் பெண். பின்பு எதையோ தேடுவது போலப் பாவனைச் செய்தபடியே திரும்பி நின்று கொண்டாள்.
அந்தப் புத்தகக் கடை மிகவும் சிறியது. முகப்பில் பெரிய ஸ்டேண்டில் பரபரப்பாக விற்பனையாகும் ஆங்கில நாவல்கள். அரசியல், சமூகக் கட்டுரைபுத்தகங்கள். வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தி சினிமா நடிகர் திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புத்தகத்தை ஒரு வரிசை முழுவதும் அடுக்கி வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கும் போது அவனுக்கு மொகலே ஆசாம் படம் நினைவிற்கு வந்து போனது. படம் முழுவதும் கவிதையாக வசனம் எழுதியிருப்பார்கள். சுயமுன்னேற்றப் புத்தகங்கள், வாழும்கலை பற்றிய புத்தகங்கள் இன்னொரு பக்கம் முழுவதும் அடுக்கி வைக்கபட்டிருந்தன. மலிவு விலை நாவல்களுக்கு இடையில் காமசூத்ராவின் அழகிய பதிப்பு ஒன்றும் காணப்பட்டது.
விமானநிலையத்திலிருக்கும் புத்தகக் கடைகள் யாவும் ஒன்று போலிருக்கின்றன. அவற்றில் கிடைக்கும் புத்தகங்களும் கூட.

கடையில் வேலைக்கு இருந்த பெண்ணிற்கு முப்பது வயதிருக்கக் கூடும். மெலிதான பிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி அணிந்திருந்தாள். சாம்பல் வண்ண காட்டன் சேலை. சற்றே துருத்திக் கொண்டிருந்த கழுத்து எலும்பு. கழுத்தில் ஒரு முத்துமாலை. கையில் சிவப்புக்கயிறு கட்டியிருந்தாள். அவளுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்குமா எனத் தெரியவில்லை.
பில்போடும் கம்ப்யூட்டர் அருகில் இலையோடு ஒரு கொய்யப்பழம் இருந்தது. அவள் வீட்டிலிருந்து பறித்துக் கொண்டுவந்திருக்கக் கூடும். கடையில் யார் இலையோடு கொய்யாப்பழம் விற்கிறார்கள். அந்தக் கொய்யாவைப் பார்த்தவுடன் I imagine the sun tastes like guava என்ற கவிதைவரி நினைவில் வந்து போனது. யாருடைய வரியது.
கடையை விட்டு அவன் வெளியேறிப் போய்விட்டால் நன்றாக இருக்கும் என்பது போல அந்தப் பெண் ஏறிட்டுப் பார்த்தாள். பேசிக் கொள்ள எதுவும் இல்லாத போது எரிச்சல் பீறிடத் துவங்கிவிடுகிறது. ஒருவரை வெறுக்க ஆரம்பிக்கிறோம். அதைப் புரிந்து கொண்டவன் போல மதன்குமார் அவளிடம் சொன்னான்
“இங்கிருக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு எழுத்தாளின் நிழல். ஆவி..அந்த நிழல்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். “
அந்தக் கேலியை அவள் புரிந்து கொள்ளவில்லை.
“நீங்கள் பேராசிரியரா“ என்று கேட்டாள்
“இல்லை. மருந்துக் கம்பெனி நடத்துகிறேன் “.
மருந்துக் கம்பெனி நடத்துகிற ஒருவன் ஏன் கவிதைகளைத் தேடுகிறான் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கக் கூடும். அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்
“காலையில் இருந்து இரண்டு புத்தகங்கள் தான் விற்றிருக்கிறேன்“.
“நிச்சயம் நான் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்வேன். ஆனால் எதை வாங்குவது என்று தான் தெரியவில்லை“
“நீங்கள் கதைப்புத்தகம் படிக்க மாட்டீர்களா“ என ஆதங்கமாகக் கேட்டாள்
“நாவல்கள் படிப்பேன். ஆனால் குறைவாகக் கதை உள்ள நாவல்கள் பிடிக்கும்“
அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்லை
“சின்ன நாவல்களா“ எனக் கேட்டாள்
“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. நாவலில் நிறையக் கதை இருக்கிறது. தலைவாழை இலை சாப்பாடு போல. எனக்கு அவ்வளவு கதை தேவையில்லை. அல்மாண்ட் சாக்லேட் போல ஒரேயொரு பாதம் அதைச் சுற்றி நிறையச் சாக்லேட். அப்படியான நாவல் தான் எனக்குப் பிடிக்கும்“

அவளுக்கு முழுவதும் புரியாவிட்டாலும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். சில நாட்கள் மதியம் வரை ஒருவர் கூடக் கடைக்கு வராமல் வெறுமனே உட்கார்ந்திருக்கிறாள். அதை விடவும் இப்படி ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது பரவாயில்லை என்றே அப்போது தோன்றியது
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு கைகளிலும் இரண்டு பையுடன் வந்த, பருத்த உடல் கொண்ட நடுத்தர வயது மனிதர் காலடியில் ஒரு பையை வைத்துக் கொண்டபடி அவளிடம் “புதிதாக ஏதாவது சமையல்புத்தகம் வந்திருக்கிறதா“ என்று கேட்டார்
“இடது கைப் பக்கம் பாருங்கள்“ என்று சொன்னாள்
அவர் இன்னொரு பையையும் தரையில் வைத்துவிட்டு இடுப்பை விட்டு கிழே இறங்கியிருந்த பேண்டினை உயர்த்திப் போட்டுக் கொண்டு குனிந்து அந்த அடுக்கில் இருந்த புத்தகங்களைப் புரட்டினார்.
Indian Cooking, Incredible India Cuisines, 1000 salads., book of bread, breakfast of Italy போன்ற புத்தகங்களைச் சலிப்போடு பார்த்தபடி “போலிகள் பெருகிவிட்டன“ என்று முணுமுணுத்துக் கொண்டார்.
ஏதோ கேட்கிறார் என்பது போலக் கடைப்பெண் எழுந்து அருகில் சென்று லக்னோ பிரியாணி பற்றிய புதிய புத்தகம் ஒன்றை அவரிடம் காட்டினார்.
அதை வேண்டாம் என மறுத்தபடியே “அல்வான்-இ-நேமட் புதிய மொழிபெயர்ப்பு வந்துள்ளதாகப் பேப்பரில் படித்தேன். அந்தப் புத்தகம் இருக்கிறதா“ எனக் கேட்டார்
அப்படி ஒரு பெயரைக் கூட அவள் கேள்விபட்டதில்லை. இல்லை என்று தலையாட்டினாள்

“அல்வான்-இ-நேமட் என்பது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மற்றும் ராணி நூர் ஜெஹானிற்காகத் தயாரிக்கபட்ட உணவுவகைகள் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டுப் புத்தகம். அதன் 1926ம் வருடப் பதிப்பு என்னிடமுள்ளது. புதிய பதிப்பில் பதினாறு பக்கம் கூடுதலாகச் சேர்க்கபட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்காக வாங்க வேண்டும்“ என்றார்
ஒரு பக்கம் கவிதைக்கிறுக்கன் மறுபக்கம் சாப்பாட்டு ராமன், இப்படியான ஆட்களுக்கு இடையில் ஏன் மாட்டிக் கொண்டோம் என்பது போல அந்தப் பெண் அமைதியாக நின்றிருந்தாள்.
புத்தக அடுக்கின் கடைசியில் இருந்த ஒரு புத்தகத்தைக் குனிந்து எடுக்க முயன்றார். அவரது தொப்பை தடுத்தது.
“சிறிய ஸ்டூல் இருக்கிறதா“ எனக்கேட்டார்
“ஸ்டூல் கிடையாது. நானே எடுத்துத் தருகிறேன்“ என்றபடியே அருகில் வந்து குனிந்து அந்தப் புத்தகத்தை எடுத்து அவரது கையில் கொடுத்தாள்
“நவல் நஸ்ரல்லாவின் இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அவர் ஈராக்கிய உணவு வரலாற்றாசிரியர்“ என்றபடியே அவர் புத்தகத்தை அவளிடமே கொடுத்தார்.
அவருக்கு உதவி செய்வது போல அந்தப் பெண் சொன்னாள்
“நீங்கள் கேட்ட புத்தகம் ஆன்லைனில் கிடைக்கக் கூடும்“
அவர் எரிச்சலான குரலில் சொன்னார்
“நான் ஆன்லைனில் புத்தகம் வாங்குவது கிடையாது. புத்தகக் கடைக்குப் போய் விருப்பமான புத்தகத்தைக் கையில் எடுத்துப் புரட்டி நாலைந்து பக்கம் வாசித்த பின்பு தான் வாங்குவேன். ஆன்லைனில் புத்தகம் வாங்குவது என்பது புகைப்படத்திற்கு முத்தம் கொடுப்பது போலிருக்கிறது. நிஜமான நெருக்கமில்லை“.
அவரது தேர்ந்த ஆங்கிலத்தையும் அதிலிருந்த கேலியையும் ரசித்தபடியே மதன்குமார் நின்றிருந்தான். அந்தப் பெண் இருவரையும் விட்டு விலகி தனது இருக்கைக்குச் சென்று அருகிலிருந்த பச்சை நிற பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். கம்ப்யூட்டரில் எதையோ தேடுவது போலப் பாவனைச் செய்தாள். பின்பு நெற்றியை வலதுகையால் அழுத்தித் தடவிக் கொண்டபடி பெருமூச்சிட்டாள்.
“நீங்கள் பதார்த்த குண சிந்தாமணி படித்திருக்கிறீர்களா“ என ஆங்கிலத்தில் கேட்டான் மதன்குமார்
தலையாட்டியபடியே “தேரையர் எழுதியது தானே. படித்திருக்கிறேன். பதார்த்த குண சிந்தாமணி மிகவும் நல்ல புத்தகம், நிறைய வியப்பூட்டும் செய்திகள் உள்ளன. அதில் தான் உறக்கத்தின் வகைகளைப் பற்றிப் படித்தேன். ஆயுர்வேத சம்ஹிதையிலும் இது போன்ற குறிப்புகள் இருக்கின்றன. நீங்கள் மருத்துவரா“ என்று கேட்டார் அந்த மனிதர்
“மருந்துக் கம்பெனி நடத்துகிறேன். என் பெயர் மதன்குமார்“ என்று சொன்னான்

“என்னை எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்று தெரியவில்லை. என் பெயர் முகமது கோயா, உணவைப் பற்றிப் பல வருஷங்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். என் உடம்பை பார்த்தாலே நன்றாகச் சாப்பிடுகிறவன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்“ என்றார்
தன்னைக் கேலி செய்து கொள்கிறவர்களை அவனுக்குப் பிடிக்கும். ஆகவே அவன் அவரது நகைச்சுவையை ரசித்தபடியே கேட்டான்
“எந்தப் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்கிறீர்கள்“ என்று கேட்டான்
“சொந்தச் செலவில். அதுவும் பாட்டன்பூட்டன் சம்பாதித்த சொத்தில்“ என்று சொல்லி சிரித்தார்.
“ உங்களால் தமிழ் புத்தகத்தை எப்படிப் படிக்க முடிந்தது“
“என்னால் ஒன்பது மொழிகளில் வாசிக்க முடியும். நானாகக் கற்றுக் கொண்டேன். தமிழில் என்னால் நன்றாகப் படிக்க முடியும். சில சொற்களுக்கு அர்த்தம் புரிவது தான் சிரமம். “
“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாம் இருவர் கேட்ட புத்தகங்களும் இந்தக் கடையில் இல்லை. விமான நிலையப்புத்தகக் கடைகள் ஏமாற்றம் அளிக்கின்றன“ என்றான் மதன்குமார்
“அப்படி சொல்லாதீர்கள். நான் கொச்சி விமானநிலையக்கடையில் அரியதொரு புத்தகம் வாங்கியிருக்கிறேன். அகஸ்டே எஸ்கோஃபியர் எழுதியது. அச்சில் இல்லாதது“.
“எனக்கு அப்படியான அதிர்ஷ்டம் கிடைத்ததில்லை. ஒருமுறை விமானத்தில் உடன் வந்த பயணி ஆச்சரியமாக ஆகா ஷாஹித் அலியின் கவிதைகளைப் படித்துக் கொண்டு வந்தார். சிறுவர்கள் வாசிப்பது போல ஒவ்வொரு வாக்கியமாக அவர் மெல்லிய சப்தத்தில் வாசித்துப் படித்தது எனக்குப் பிடித்திருந்தது. இடையில் ஒருமுறை என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். விமானத்தை விட்டு இறங்கும் போது அந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்துவிட்டார்“.
“இப்படித்தான் நடக்கும். அரிய புத்தகங்கள் தானே தனக்கான வாசகனை தேடி வந்துவிடும்“ என்றார்
இருவரும் கடையில் நின்று கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பதை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கடைப்பெண்
“உணவைப் பற்றி என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்“ எனக்கேட்டான் மதன்குமார்

“உண்மையைச் சொன்னால் நான் உயிரைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். அதை நேரடியாகச் செய்ய முடியாதல்லவா. அதனால் தான் உணவின் வழியே அதை நோக்கி செல்கிறேன். “
“மருத்துவம் உயிரைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறதே“
“அதை என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அப்படிச் சொல்வது கூடத் தவறு. முழுமையாக நம்ப முடியவில்லை. உயிர் பற்றி இன்னும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. “
“உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்கிறது திருமந்திரம். நீங்கள் திருமந்திரம் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா“ எனக் கேட்டான் மதன்குமார்
“என் ஆராய்ச்சியும் அது தான். உங்களுக்குக் கதை கேட்க விருப்பம் இருக்கிறதா.. எந்த ஊருக்குப் போகிறீர்கள். எத்தனை மணிக்கு விமானம்“
“சென்னை செல்கிறேன். நாலரை மணிக்கு விமானம்“
“நான் மும்பை செல்கிறேன். ஆறு மணிக்கு விமானம். நிறைய நேரமிருக்கிறது“
“இங்கே நாம் கதை பேச முடியாது. நீங்கள் எனக்காக ஒரு புத்தகம் சிபாரிசு செய்யுங்கள். அதை வாங்கிக் கொள்கிறேன். பிறகு நாம் அருகிலுள்ள ஸ்டார்பக்ஸிற்குப் போகலாம்“ என்றான் மதன்குமார்
“எனக்கும் அப்படிப் புத்தகம் நீங்கள் சொல்ல வேண்டும். “
அடுத்தச் சில நிமிடங்களில் ஆளுக்கு ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து பில் போடுவதற்காகக் கொண்டு போய்க் கொடுத்தார்கள். அந்தப் பெண் புத்தகத்தின் விலையைத் தான் முதலில் பார்த்தாள். ஒன்றின் விலை ரூபாய் 750 மற்றொன்று ரூபாய் 1350. அவள் மகிழ்ச்சியோடு பில்போட்டபடியே கேஷா, கார்டா என்று கேட்டாள்
மதன்குமார் “கேஷ்“ என்றான். அவர் “கார்ட்“ என்றார்
அவள் “இரண்டையும் ஒரே பில்லாகப் போட்டுவிட்டேன்“ என்றாள்
“அப்படியானால் நானே பணம் தந்துவிடுகிறேன்“ என்றான் மதன்குமார்
“ஸ்டார்பக்ஸ் எனது செலவு“ என்று சொல்லிச் சிரித்தார் முகமது கோயா
நீண்ட காலம் பழகிய இரண்டு நண்பர்கள் திரும்பச் சந்தித்துக் கொண்டது போல அவர்கள் நடந்து கொண்டது ஆச்சரியமளித்தது.
`இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை அவளிடம் நீட்டினான்
“சில்லறை இல்லை. நான் வாங்கி வருகிறேன்“ என்று அவள் எழுந்து கடையை விட்டு வெளியே நடந்தாள்
“சமையல் புத்தகங்களுக்கென்ற நான் ஒரு நூலகம் வைத்திருக்கிறேன். எனது சேமிப்பில் மூவாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன“ என்றார் கோயா
“சமையல் புத்தகம் எதையும் நான் படித்ததேயில்லை“ என்றான் மதன்குமார்
“அபூர்வமான சமையல்புத்தகங்களை எழுதியவர்கள் ஆண்கள். உணவுப்பண்டங்களின் பெயர்கள் எப்படி உருவானது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா. சப்பாத்தி என்ற சொல் அக்பரின் காலத்தில் எழுதப்பட்ட அயினி அக்பரியில் உள்ளது. இனிப்பு வகைகளுக்குப் பெயர் வைத்தவன் நிச்சயம் கவிஞனாகத் தானிருக்கக் கூடும். தி விண்டர்ஸ் டேல் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் அரிசி பற்றி எழுதியிருக்கிறார். ஷேக்ஸ்பியரின் காலத்தில், “சாலெட்” என்பது கலவையான கீரைகளின் உணவைக் குறிக்கும். அவர் நடிகர்களை வெங்காயம், பூண்டு சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார். 15 ஆம் நூற்றாண்டில் லண்டனில் உள்ள பெரும்பாலான தெருக்கள் அங்கு விற்கபடும் பொருட்களின் பெயரால் அழைக்கபட்டன. கேக்குகளுக்குப் பெயர் பெற்ற வூட் ஸ்ட்ரீட் இன்றும் அதன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. மன்னர்களின் வரலாற்றைப் படித்தால் உணவில் விஷமிடப்பட்டுத் தான் நிறைய இறந்து போயிருக்கிறார்கள். உணவின் கதை என்பது வரலாற்றின் இனிப்புப் பண்டம் என்றே கருதுகிறேன். “
ஆர்வமிகுதியில் அவர் கடகடவெனப் பேசிக் கொண்டேயிருந்தது வியப்பளித்தது.
“பாப்லோ நெரூதா தக்காளிக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அடுப்பில் வதக்கப்படும் தக்காளி வெங்காயத்தைத் திருமணம் செய்து கொள்வதாக ஒரு வரி இருக்கிறது. “ என்றான் மதன்குமார்
“கவிஞர்களுக்கு உணவின் ரகசியம் தெரியும். மனிதன் பூமியில் வாழத் துவங்கி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்பும் அன்புக்கும் உணவுக்கும் இடையே உள்ள பிணைப்பு மாறவேயில்லை“
“நீங்கள் உணவு பற்றிப் புத்தகம் எழுதலாமே“
“அப்படி எண்ணமேயில்லை. எனது கவனம் முழுவதும் பசியைப் புரிந்து கொள்வது தான்“
“சமையல்குறிப்புகளை ஏன் ஆவணப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு இரண்டு மணி நேர தூரத்துக்கும் இடையே உணவின் ருசியும் சமைக்கும் முறையும் மாறிவிடுகிறதே“ எனக்கேட்டான் மதன்குமார்

“இந்தியாவில் மட்டும் பல்லாயிரம் விதமான சமையல்முறைகள் இருக்கின்றன. அவற்றை எவராலும் முழுமையாகத் தொகுக்க முடியாது. உண்மையில் அது ஒரு ஞானம். சமையலின் வழியே அவர்கள் நிறையக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கால ராஜா ராணிகள் தனக்கெனத் தனியே சமையல் புத்தகம் வைத்திருந்தார்கள். அந்த ஏடுகளைப் பிறர் படிக்க முடியாது. அவை ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்குப் பரிசாக அளிக்கபட்டன. உண்மையில் அவர்கள் நித்யத்தைக் கண்டறிய முயன்றிருக்கிறார்கள். அமரத்துவம் பற்றி உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா“
“இருக்கிற வாழ்க்கையைக் கடந்து செல்வதே பெரும் சவாலாக இருக்கிறது. இதில் அமரத்துவம் பற்றி என்ன நினைப்பது“ என்று கேட்டான் மதன்குமார்
“சமையல் புத்தகங்களுக்குள் அமரத்துவம் பற்றிய ரகசியங்கள் மறைந்திருக்கின்றன. நான் ஆராய்ந்து வருகிறேன். “
“இங்கே ஏதாவது கருத்தரங்கிற்காக வந்தீர்களா“ எனக்கேட்டான் மதன்குமார்
“ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காக வந்தேன். நீங்கள் பசவபுரா என்ற ஊரைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறீர்களா“
“இல்லை“ என்று தலையாட்டினான்
“அங்கே ஒரு பெண் வசிக்கிறாள், அவளது பெயர் பார்கவி. அவளைப் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டும். நாம் ஸ்டார்பக்ஸிற்குப் போய்விடுவோம்“
புத்தகக் கடைப்பெண் சில்லறையோடு திரும்பி வந்திருந்தாள். மீதப்பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் “அடுத்த முறை கடைக்கு வாருங்கள். கவிதை புத்தகம் வாங்கி வைத்திருப்பேன்“ என்றாள். மதன்குமார் அவளுக்கு நன்றி சொல்லியபடியே அவரது பைகளில் ஒன்றை தான் வாங்கிக் கொள்ள முயன்றான். அவர் தானே கொண்டுவருவதாகச் சொல்லி இரண்டையும் தூக்கிக் கொண்டார். அவருக்காக வாங்கிய புத்தகத்தைத் தானே கையில் எடுத்துக் கொண்டபடி கடையை விட்டு வெளியே வந்தான் மதன்குமார்
ஸ்டார்பக்ஸ் நோக்கி அவர்கள் நடந்தார்கள். கோயாவின் கையில் இருந்த ஒரு பை எடை அதிகமாக இருந்தது போலும். அதை அவரது நடையில் காண முடிந்தது. அவர் மூச்சுவாங்க ஸ்டார்பக்ஸில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் மதன்குமார்
“உங்களுக்கு என்ன காபி வேண்டும்“ எனக்கேட்டார் கோயா
“நான் குடிக்கும் பில்டர் காபி இங்கே கிடைக்காது. கேப்பச்சினோ சொல்லுங்கள்“ என்றான்
அவர் கவுண்டரை நோக்கி நடந்தார். இரண்டு கேப்பச்சினோவும் சிக்கன் சாண்ட்விட்ச்சும் வரும்வரை அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. நிதானமாகத் தனது சாண்ட்விட் சாப்பிட்டபடியே சொன்னார்
“நான் ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றதாகச் சொன்னேன் இல்லையா“..
“ஆமாம் பெயர் கூடப் பார்கவி. “
“உங்களுக்கு நல்ல ஞாபக சகத்யிருக்கிறது. அந்தப் பெண் சிமோகாவில் ஒரு கார்மெண்ட் பேக்டரியில் வேலை செய்கிறாள். அவள் கடந்த ஒன்பது வருடங்களாகச் சாப்பிடாமல் உயிர்வாழுகிறாள். அந்தச் செய்தி பேப்பரில் வெளியாகியிருக்கிறது. அவளைத் தான் சந்திக்கச் சென்றிருந்தேன்“

“சாப்பிடாமல் எப்படி அவளால் உயிர் வாழ முடிகிறது“
“அதை தெரிந்து கொள்ளத்தான் அவளைச் சந்தித்தேன். அவளுக்கு இது ஒன்றும் ஆச்சரியமான விஷயமாக இல்லை. பசிப்பதில்லை என்று மட்டும் சொல்கிறாள். அவள் வேலை செய்யும் கார்மெண்ட் பேக்டரிக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பெண்கள் அவள் சாப்பிடுவதில்லை என்பதை உறுதி செய்தார்கள். நாலைந்து மருத்துவர்கள் அவளை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். அவள் எதையும் சாப்பிடாமலே உயிர் வாழுகிறாள் என்று தான் ரிப்போர்ட் வந்திருக்கிறது. “
“அது எப்படிச் சாத்தியம்“ எனக்கேட்டான் மதன்குமார்
“நான் அவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. கேட்கமாட்டேன். அவளிடம் நீ வீட்டில் சமைக்கிறாயா என்று கேட்டேன்“
அவள் “ஆமாம். ஆனால் முன்பு போல எளிதாக இல்லை. மனதிற்குப் பிடிக்காமல் செய்கிறேன்“ என்றாள்
“ஏன் அப்படிச் சொல்கிறாள்“.
“அப்படிதான் ஆகிவிடும். நான் அவளை நம்புகிறேன். “
“என்னால் நம்ப முடியவில்லை“.
“அயர்லாந்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன். அப்போது நானும் நம்பவில்லை. இப்போது நம்புகிறேன்“
“இது எப்படி நிஜமாக இருக்கும்“
“ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குறைப்பிரவசம். பிறந்த குழந்தை போதுமான எடையில்லை. அத்தோடு அக்குழந்தை அழவேயில்லை. குழந்தை அழுதால் மட்டுமே உயிர்வாழும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். அந்தக் குழந்தையை எப்படி அழ வைப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவளால் முயன்ற பல்வேறு வழிகளைச் செய்திருக்கிறாள். முடிவில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. அதன் மறுநாளில் இருந்து அவளுக்குப் பசிக்கவில்லை. இந்த ஒன்பது வருஷங்களில் எதையும் அவள் சாப்பிடவில்லை, தான் வெறும் நிழல். நிழல் எதையும் உண்பதில்லை என்று சொன்னாள் “
“எதனால் அவளுக்குப் பசியற்றுப் போனது“
“நமது பசிக்கான முதல் உணவை தாயிடமிருந்தே பெறுகிறோம். அதை அவளால் தர இயலாத குற்றவுணர்வு தான் பசியற்றுப் போகச் செய்துவிட்டது“
“அறிவியல் பூர்வமாக அப்படி நடக்காதே“ என்றான்
“அறிவியல் பூர்வமாக விவரிக்க முடியாத நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கதானே செய்கின்றன. “
“அந்தப் பெண் இயல்பாகத் தனது அன்றாடக் காரியங்களைச் செய்து கொள்கிறாளா“. எனக்கேட்டான் மதன்குமார்
“அவளுக்குக் கனவுகளே வருவதில்லை என்று மட்டும் சொன்னாள். உணவில்லாவிட்டால் கனவு வராது “
என்றபடியே முகமது கோயா தனது சாண்ட்விட்சை தின்று முடித்துக் காபியை குடித்தார். மதன்குமார் பார்கவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.
அவர் எழுந்து கழிப்பறையை நோக்கி சென்றார். திரும்பி வந்த போது அவரது முகம் மாறியிருந்தது
“இதை கதை என நினைக்கிறீர்களா“ எனக் கேட்டார்
அவன் பதில் சொல்லவில்லை
“கதையே தான். இப்படிப் பேசி பொழுதைப் போக்கவில்லை என்றால் நேரத்தை எப்படிக் கொல்வது. இந்தக் கதையைப் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். எல்லோரும் ஏமாந்து போயிருக்கிறார்கள்“ என்று புன்சிரிப்புடன் சொன்னார்.
“நீங்கள் சொன்னது நிஜமில்லையா“ எனக்கேட்டான்
“நிஜமாகத் தோன்றுகிறதா. பேசாமல் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு கதை எழுதலாம் என்று நினைக்கிறேன். விமான நிலையத்தில் நேரத்தைக் கொல்வதற்கு இப்படி எதையாவது செய்யத் தானே வேண்டியிருக்கிறது “ என்று சொல்லி சிரித்தார்.
பின்பு அவன் தனக்காக வாங்கிக் கொடுத்த புத்தகத்தின் முகப்பில் தனதுபெயரை எழுதி பைக்குள் வைத்துக் கொண்டார். தனது விமானத்திற்கு நேரமாகிவிட்டது என மதன்குமார் புறப்பட்ட போது அவர் இன்னொரு சாண்ட்விட் சாப்பிடப்போவதாகச் சொன்னார்
அவன் தனது விமானம் புறப்படும் இடம் நோக்கி வந்தான்.
நீண்ட வரிசையில் ஆட்கள் நின்றிருந்தார்கள்.
விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தபின்பு பார்கவி ஒன்பது வருஷங்கள் உணவில்லாமல் வாழும் பெண் சிமோகா என்று கூகிளில் தேடினான்.
பார்கவியின் புகைப்படம் தோன்றியது.
முகமது கோயா சொன்ன செய்தி உண்மையாக இருந்தது.
••
January 23, 2025
தெற்கின் காதல்
தான் விரும்பியவனை அடைய முடியாமல் போன பெண்ணைப் பற்றி எத்தனையோ கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் கான் வித் தி விண்ட் போல நிராகரிப்பின் வலியை, ஆழமாக, அழுத்தமாகத் தனது காலகட்ட சரித்திர நிகழ்வுகளுடன் சொன்ன கதை வேறு எதுவுமிலை.

Gone with the Wind திரைப்படத்தை ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு முறை பார்த்துவிடுவேன். எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று.
மார்க்ரெட் மிட்செல் எழுதிய இந்த நாவல் 1936ல் வெளியானது. அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளிலிருந்து இந்த நாவலை உருவாக்கியுள்ளார்.
அந்த நாட்களிலே இந்த நாவலை திரைப்படமாக்க ஐம்பதாயிரம் டாலர் பணம் கொடுத்து உரிமையைப் பெற்றிருக்கிறார் டேவிட் ஓ. செல்ஸ்னிக்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஒடக்கூடியது. ஹாலிவுட்டின் காவியம் என்றே இதனைக் குறிப்பிடுகிறார்கள். படத்தில் நான்கு இயக்குநர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். நான்காவது இயக்குநரான விக்டர் ஃப்ளெமிங் பெயரே திரையில் இடம்பெற்றுள்ளது.
மார்க்ரெட் மிட்செல் தனது வாழ்நாளில் இந்த ஒரேயொரு நாவலை மட்டுமே வெளியிட்டுள்ளார். சிறந்த நாவலுக்கான புலிட்சர் பரிசைப் பெற்ற அவர் தனது 48 வயதில் இறந்து போனார். அவரது மறைவிற்குப் பின்பு அவர் இளமையில் எழுதிய இன்னொரு நாவலும் அவரது வேறு எழுத்துகளும் வெளியிட்டப்பட்டன
There is no remedy for love but to love more என்கிறார் தோரூ. படம் முழுவதும் ஸ்கார்லெட் அதையே செய்கிறாள்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் வரலாற்றையும் அழியாத காதல்கதையினையும் இணைந்து உருவாக்கபட்ட கான் வித் தி விண்ட் இன்றளவும் அமெரிக்கச் சினிமாவின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. படத்தில் ஸ்கார்லெட் ஓ’ஹாராவாக விவியன் லீயும், ரெட் பட்லராகக் கிளார்க் கேபிளும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
அமெரிக்கச் சினிமாவின் மிகவும் பிரபலமான பெண் கதாபாத்திரமாக ஓ’ஹாராவைக் குறிப்பிடுகிறார்கள். அவள் தனது தந்தை வழியில் ஐரிஷ் வம்சாவளியைச் சார்ந்தவள். தாய் வழியில் பிரெஞ்சுப் பெண்.

1861 ஆம் ஆண்டு ஜார்ஜியா மாகாணத்தில் கதை நடக்கிறது. அப்போது ஸ்கார்லெட் ஓ’ஹாராவுக்குப் பதினாறு வயது. திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் இளம்பெண். பணக்கார பெற்றோர்களின் ஆசை மகள். புத்திசாலிப் பெண். அவளது பக்கத்து பண்ணையைச் சேர்ந்த ஆஷ்லேயைக் காதலிக்கிறாள். அங்கே நடைபெறவுள்ள விருந்திற்காகத் தயராகிக் கொண்டிருக்கிறாள்.
அவளது இரண்டு சகோதரிகள் மற்றும் கறுப்பினத்தைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண், ஸ்கார்லெட்டின் தந்தை தாய் அவர்களின் வசதியான வாழ்க்கையைப் படம் ஆரம்பக் காட்சியாகச் சித்தரிக்கிறது. அதில் அனைவரும் ஸ்கார்லெட் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறார்கள். குறிப்பாகப் பணிப்பெண் அவரைச் சாப்பிட வைக்கும் காட்சி. அதில் வெளிப்படும் பொய் கோபம் அழகானது.
அழகியான ஸ்கார்லெட் விருந்தில் தனது காதலன் ஆஷ்லேயை சந்திக்கக் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு புறப்படுகிறாள்.
ஆஷ்லே அவளுடன் நட்பாகப் பழகுகிறான். ஆனால் காதலிக்கவில்லை. ஸ்கார்லெட் அவனை ஒருதலையாகக் காதலிக்கிறாள். எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறாள்.

விருந்தில் தனக்குப் பிடித்தமான மெலனி ஹாமில்டனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆஷ்லே அறிவிக்கிறான். அதனை ஸ்கார்லெட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வருத்தமடைகிறாள். கோபம் கொள்கிறாள்.
ஆஷ்லேயிடம் நேருக்கு நேராகச் சண்டையிடுகிறாள். அவளை விடவும் மெலனி ஒரு சிறந்த மனைவியாக இருப்பாள் என ஆஷ்லே குறிப்பிடுகிறான். அவர்கள் சண்டையை ரிட் பட்லர் என்ற ஒய்வு பெற்ற ராணுவ வீர்ர் ஒளிந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர். மனைவியை இழந்த நடுத்தர வயது நபர்
எப்படியாவது ஆஷ்லேயின் திருமணம் நின்று போய்விடாதா என ஸ்கார்லெட் ஏங்குகிறாள். அந்தக் கோபத்தில் சார்லஸ் என்ற மெலனியின் சகோதரனை அவசரமாகத் திருமணம் செய்து கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு ஆஷ்லேயின் மீதான காதல் மறையவேயில்லை.
தன்னை நிராகரித்த ஆஷ்லேயை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என அவனது குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறாள். மெலனியின் நெருக்கமான தோழியாகிறாள்.
திடீரென உள்நாட்டுப் போர் துவங்குகிறது. ஆஷ்லே போருக்குப் போகிறான். ஸ்கார்லெட் ஓ’ஹாராவின் கணவனும் போருக்குப் போகிறான். போரில் அவளது கணவன் இறந்து போகிறான். ஆஷ்லே என்ன ஆனான் என்று தெரியவில்லை.
யுத்தநிதி சேகரிக்கும் நடனநிகழ்வு ஒன்றில் விதவையான அவள் ரெட் பட்லரை மறுபடியும் சந்திக்கிறாள். அவர்கள் கைகோர்த்து நடனமாடுகிறார்கள். படத்தின் மிகச்சிறப்பான காட்சியது. அப்போது ரெட் பட்லர் அவளது அழகில் மயங்குகிறான். தனது காதலை வெளிப்படுத்துகிறான். அவனைத் தான் ஒரு போதும் ஏற்க முடியாது என்று மறுக்கிறாள் ஸ்கார்லெட்
ஆனாலும் அதன்பிறகான நாட்களில் ரெட் பட்லர் அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகிறான். அவள் என்றாவது மனம் மாறுவாள் எனக் காத்திருக்கிறான்.

உள்நாட்டுப் போரில் தனது மகனை இழந்த பெற்றோரை ஸ்கார்லெட் ஓ’ஹாரா சந்திக்கும் காட்சி முக்கியமானது. இறந்து போனவர்களின் பட்டியல் வாசிக்கப்படுவது மற்றும் அந்த மைதானமெங்கும் காணப்படும் துயர முகங்கள். கேவல்கள். காயம்பட்டவர்களுக்கு அளிக்கபடும் சிகிட்சைகள். கைகால்கள் போனவர்களின் வலி. வேதனை எனப் போரின் அவலத்தைப் படம் அழுத்தமாகச் சித்தரித்துள்ளது.
போரின் காரணமாக ஏற்பட்ட தாக்குதல். இதன் காரணமான உயிர் இழப்பு என அவர்களின் இயல்பு வாழ்க்கை மாறுகிறது. பெற்றோரை இழந்து, வீட்டை இழந்து ஸ்கார்லெட் அகதி போலாகிறாள். ஆனாலும் ஆஷ்லே மீதான காதல் மறையவில்லை.
ஸ்கார்லெட்டின் வாழ்க்கை காற்றில் அடித்துச் செல்லப்பட்ட இறகைப் போலத் திசைமாறிப் போய்க் கொண்டேயிருக்கிறது. உள்நாட்டுப் போரில் அழிந்து போன தனது பண்ணைக்குத் திரும்பும் ஸ்கார்லெட் மீண்டும் பருத்தி விவசாயம் செய்வதும் இழந்த வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வதும் சிறப்பான பகுதி. நிலம் எவரையும் கைவிடுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
வசதியான வாழ்க்கையிலிருந்து எளிமையான விவசாய வாழ்க்கைக்கு ஸ்கார்லெட் திரும்புகிறாள். அவள் மனது மாறிவிட்டிருக்கும் என நாம் நினைக்கும் போது ஆஷ்லே வீடு திரும்புகிறான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு காயம்பட்ட ஆஷ்லே வீடு திரும்புவது. படத்தின் நிகரற்ற காட்சியாகும். அதன்பிறகு ஆஷ்லே மாறிவிடுகிறான்.

ஆஷ்லே வீடு திரும்பியதால் மெலனியை விடவும் ஸ்கார்லெட் அதிகச் சந்தோஷம் கொள்கிறாள். ஆஷ்லேயுடன் திரும்பவும் பழக ஆரம்பிக்கிறாள். விதவையான தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுகிறாள். ஆனால் ஆஷ்லே அவளை ஏற்கவில்லை..
மெலனியின் பிரவசத்திற்காக மருத்துவரை அழைத்துவருவது. மரணப்படுக்கையில் மெலனியை சந்தித்துப் பேசுவது, ரெட் பட்லரிடம் உதவி கேட்பதற்காகச் செல்வது போன்ற காட்சிகளில் விவியன் லீ அபாரமாக நடித்திருக்கிறார்.
ஸ்கார்லெட் அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அவளது வாழ்வை புரட்டிப் போடுகின்றன. ரெட் பட்லரின் திருமணம் மூலம் வசதியும் அந்தஸ்தும் கிடைக்கின்றன. ஆனால் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. அவர்களின் பிரம்மாண்ட வீடு. அதன் படிக்கட்டுகள். பலவந்தமாக ரெட் பட்லர் கொள்ளும் உடலுறவு. அடுத்த நாள் அவன் கேட்கும் மன்னிப்பு என அந்த வாழ்க்கை அவள் எதிர்பாராத்து. ரெட் பட்லர் விரும்பியது இது தானா என்று கேள்வி அவனுக்குள்ளாக எழுகிறது.
வெறுப்பிற்கும் நேசத்திற்கும் இடையில் ஸ்கார்லெட் ஊசலாடுகிறாள். அவளால் சரியாக முடிவு எடுக்க முடியவில்லை. வசதியால், ஆடம்பரங்களால் சந்தோஷத்தை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்கிறாள்.
தன்னைப் பிரிந்து ரெட் பட்லருடன் போன ஆசைமகள் வீடு திரும்பும் போது ஸ்கார்லெட் காட்டும் அன்பு அபூர்வமானது. அது போல ரெட் பட்லர் அவளை நிராகரித்துப் போகும் போது காட்டும் கண்ணீரும் மறக்கமுடியாதது.
ஆஷ்லேயின் நிராகரிப்பு தான் ஸ்கார்லெட்டின் வாழ்க்கையை மாற்றுகிறது. பிடிவாதமான சிறுமியைப் போலவே கடைசிவரை நடந்து கொள்கிறாள். முடிவில் எது காதல் என்ற உண்மையை உணரும் போது எல்லோராலும் கைவிடப்படுகிறாள். மறுபடியும் ஸ்கார்லெட் காத்திருக்கத் துவங்குகிறாள்.
ஒன்று சேராத காதலின் ஊடாக அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் படம் விவரிக்கிறது. மூன்றரை மணி நேரம் ஒடும் திரைப்படத்தில். ஸ்கார்லெட்டின் முழுவாழ்க்கையினையும் காணுகிறோம்.
GONE WITH THE WIND (1939)Clark Gable, Vivien Leigh
ஸ்கார்லெட் ஓ’ஹாரா தனது காலகட்டத்த பெண்களிலிருந்து மாறுபட்டவள். அவள் எதையும் வெளிப்படையாகப் பேசுகிறாள் . தனது உரிமைக்காகச் சண்டையிடுகிறாள். நெருக்கடியை தைரியமாக எதிர் கொள்கிறாள். ஆனால் காதலின் பித்து அவளைத் தடுமாற வைக்கிறது.
ஸ்கார்லெட் ஆஷ்லேயை காதலிப்பது போல மெலனி கூட அவனைக் காதலிக்கவில்லை. ஆனால் ஆஷ்லேயிற்கு மெலனியை தான் பிடித்திருக்கிறது. அது ஏன் என்று அவனிடமே ஸ்கார்லெட் கேட்கிறாள். அவனால் சரியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை.
மெலனியின் இடத்தில் தன்னை வைத்துக் கொள்ளும் ஸ்கார்லெட் ஆஷ்லேயிற்காகவே அவர்கள் குடும்பத்துடன் நெருங்கி பழகுகிறாள். உதவிகள் செய்கிறாள். . மெலனியே கூட அவளது மரணத்தின் பின்பு ஆஷ்லேயை அவள் கவனித்துக் கொள்ள வேண்டும் என வாக்குறுதியை பெறுகிறாள். . ஆனால் மெலனியின் மரணம் ஆஷ்லேயின் மனதில் ஆழமான வடுவை உருவாக்கிவிடுகிறது. அவன் தன்னால் ஒரு போதும் ஸ்கார்லெட்டை ஏற்க முடியாது என்கிறான்.
படத்தில் ஆஷ்லேவிற்குப் பல்வேறு வழிகளில் ஸ்கார்லெட் உதவுகிறாள். இதனை அறிந்தே ரெட் பட்லர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். உண்மையில் அவர்கள் திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம். ஆனால் ஸ்கார்லெட் கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தவுடன் அவனது மனது மாறிவிடுகிறது. ரெட் பட்லர் தனது மகளிடம் காட்டும் பாசம் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது.
ஜார்ஜியாவில் உள்ள தாரா என்ற இடத்திலுள்ள அவர்களின் பண்ணை ஒரு குறியீடாகவே படத்தில் மாறுகிறது. கறுப்பின மக்களைப் படம் சரியாகச் சித்தரிக்கவில்லை என்றொரு விமர்சனத்தை இன்று இப்படம் எதிர்கொள்கிறது. தெற்கின் கதையைச் சொல்லும் இப்படத்தை இயக்கிய விக்டர் ஃப்ளெமிங் தெற்கைச் சேர்ந்தவர். ஆகவே தெற்கு கூட்டணியின் வெற்றியாகவே இப்படத்தைக் கருதுகிறார்கள்.

படத்தில் குழந்தை பருவத்திலிருந்தே ஸ்கார்லெட்டை வளர்த்து வரும் பணிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்த ஹாட்டி மெக்டேனியல் தனது நடிப்பிற்காக ஆஸ்கார் விருதை வென்றார். இந்த விருதைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே.
எர்னஸ்ட் ஹாலர் படத்திற்குச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். நிலக்காட்சி ஓவியம் போலத் தோற்றமளிக்கும் பல காட்சிகள் இன்றளவும் தேர்ந்த ஒளிப்பதிவின் சாட்சியமாக உள்ளன.
பிரம்மாண்டமான அரங்க அமைப்பு. ஒப்பனை. அந்தக்கால உடைகள் என யாவும் கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கின்றன. குறிப்பாக நடனவிருந்து காட்சி மற்றும் போர்களக்காட்சிகள் சிறப்பானவை.
படத்தின் முதல்பாதி முடியும் போதே ஒரு முழுமையான படத்தைப் பார்த்த உணர்வை அடைந்துவிடுகிறோம். கதையின் அடுத்தப் பாகம் போலவே பிற்பகுதி அமைந்துள்ளது,
1940ல் வெளியான இப்படம் இன்றும் அதன் புத்துணர்வு மாறாமலிருக்கிறது.
போரும் வாழ்வும் என்ற தலைப்பு இந்தப் படத்திற்கே பொருத்தமானது.
January 21, 2025
கேளா வரம்
புதிய சிறுகதை
அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார்.
இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்..

அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான, மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். ஆரஞ்சுவண்ண போலோ டீ ஷர்ட். வெளிர் சந்தன நிற பேண்ட். இரண்டு கையிலும் மோதிரம் அணிந்திருந்தார்.
பாஸ்கரன் தனது டிராவலிங் பேக்கை கிழே தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்ததையோ, செல்போனை சார்ஜரில் போட்டதையோ அவர் கவனித்தது போலத் தெரியவில்லை.
ரயிலில் இப்போதெல்லாம் புத்தகம் படிப்பவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக மாத்திரை சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தண்ணீர் பாட்டில் கொண்டு வர மறந்து போயிருந்தான்
எதிரே இருப்பவர் வைத்துள்ள தண்ணீர் பாட்டில் கண்ணில் பட்டது.
“சார்.. மாத்திரை சாப்பிட கொஞ்சம் தண்ணி வேண்டும். எடுத்துகிடவா“ என்று கேட்டான்
எதிரேயிருந்தவர் வார இதழை விட்டுக் கண்ணை விலக்கி தலையாட்டினார். அவன் தனது பையின் சைடு ஜிப்பை திறந்து மாத்திரை அட்டையை எடுத்துக் கொண்டான்.
“தூக்கமாத்திரையா“ என எதிரே இருப்பவர் கேட்டார்
“ஆமாம். இதைப் போடாமல் என்னால் தூங்க முடியாது“ என்றான்
“நானும் அதே கேஸ் தான். ஆனால் எனக்குத் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தூங்கினால் அதிர்ஷ்டம்“
பாஸ்கர் தனது மாத்திரையை விழுங்கிவிட்டு அவரிடம் “நீங்கள் எங்கே போகிறீர்கள். மதுரைக்கா “என்று கேட்டான்
“இல்லை சிவகாசி“..
“காலை ஐந்து மணிக்கு போய்விடும். நான் அதைத் தாண்டி ராஜபாளையம் போகிறேன்“ என்றான் பாஸ்கர்
“சிவகாசி எனது அம்மாவின் ஊர். எப்போதோ சிறுவயதில் போயிருக்கிறேன். பல வருஷங்களுக்குப் பின்பு இப்போது போகிறேன்“ என்றார் அந்த நபர்
“இப்போது எங்கே இருக்கிறீர்கள்“
“கொரியாவில்“.
“என்ன வேலை“
“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடைய வேலை வரம் கொடுப்பது“
அதைக்கேட்டவுடன் தன்னை அறியாமல் புன்னகைத்தபடி பாஸ்கர் கேட்டான்
“நீங்கள் என்ன முனிவரா“
“அது போன்ற ஆள் தான். ஆனால் என் கையில் கமண்டலமோ, பெரிய தாடி மீசையோ கிடையாது. என்னால் வரம் அளிக்க முடியும்“
அதை நம்ப முடியாதவன் போலப் பாஸ்கர் சொன்னான்
“என்னால் கூடத் தான் வரமளிக்க முடியும் ஆனால் பலிக்கணுமே“
“உங்கள் கையில் உள்ள மொபைலில் அருட்பெருஞ்சேகரன் என அடித்துப் பாருங்கள். என்னைப் பற்றிப் போட்டிருப்பார்கள். “.

பாஸ்கர் உடனே தனது செல்போனில் அருட்பெருஞ்சேகரன் என டைப் செய்தான். ஆங்கிலத்திலும் கொரியாவிலும் அவரைப் பற்றிய வீடியோக்கள். செய்திகள் வந்தன. அதில் ஒரு பெரிய தொழிலதிபர் தனக்குக் கிடைத்த வரம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிய காணொளி இருந்தது.
“நிஜம் தான். இவரிடம் வரம் வாங்கியதாகத் தான் சொல்கிறார். ஒரு சாதாரண ஆளால் எப்படி வரம் கொடுக்க முடியும்“. எனப் பாஸ்கர் யோசித்தான்.
“நிறைய வீடியோ இருக்கு.. நீங்க சாமியரா“
“இல்லை. சாமானியன். “
“வரம் கொடுக்கிறது எல்லாம் கதைனு நினைச்சிட்டு இருந்தேன் . நிஜமா இந்தக் காலத்தில் ஒருவரால் வரம் கொடுக்க முடியுமா“
“வரம் கிடைக்கும்னு நம்புறவங்க இருக்காங்களே. அது எதனால் “
“எப்படியாவது கஷ்டம் தீரணும்லே“
“வரம் கொடுக்கிறதுக்கு மனசும் நம்பிக்கையும் தான் வேணும். “
“எதை வரமா கேட்டாலும் உங்களாலே தர முடியுமா“
“முடியாது. எது உண்மையான தேவையோ அதை வரமாத் தர முடியும்“
“நீங்க வரம் கொடுத்தால் எப்படிப் பலிக்கும். உங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கா “
“இருப்பதாக நான் நம்புகிறேன். என்கிட்ட வரம் கேட்பவரும் நம்புகிறார். இன்னைக்கும் சாபம் பலிக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்களே. பிறகு வரம் பலிக்கும் என்று மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்“ என்று கேட்டார்
“வரம் கொடுப்பது கடவுளின் வேலையில்லையா“
“நீங்கள் யாரையும் காதலித்தது இல்லையா. காதலித்திருந்தால் காதலியால் வரம் அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்“ என்று சொல்லி சிரித்தார்
“நீங்கள் கொடுக்குற வரம் உடனடியாகப் பலிக்குமா“
“அதை என்னால் சொல்ல முடியாது. நம்பிக்கையற்ற நீங்களும் என்னிடம் வரம் கேட்க ஆசைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே“
“அப்படியில்லை. சும்மா தெரிந்து கொள்ளக் கேட்டேன்“
“வரம் கேட்பது தவறில்லை. எதைக் கேட்பது என்பது தான் குழப்பம். அதனால் தான் மனிதர்கள் முன்பு கடவுள் தரிசனமாகிறதில்லை. “
“இப்படி திடீர்னு ரயிலில் ஒருவர் வரம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வதுனு தெரியலை“ எனச் சிரித்தான் பாஸ்கர்
“இன்னும் நிறைய நேரமிருக்கிறது. உங்களுக்கு எப்போ கேட்க தோணுதோ அப்போ கேளுங்கள்“
“உங்களால் எப்படி வரம் தர முடியுது“
“நிச்சயம் நான் கடவுள் இல்லை. ஆனால் சொற்களை நம்புகிறவன். சொல்லின் சக்தியை அறிந்தவன். அதை விளக்கி சொல்ல முடியாது. “
“வரம் கொடுப்பதற்குக் கட்டணம் கேட்பீங்களா “ எனக்கேட்டான்
“உங்களிடம் கட்டணம் கேட்க மாட்டேன். உங்கள் மகள் கீர்த்தனாவிற்கும். மனைவி சௌமியாவிற்கும் நான் தரும் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்“
“அவங்களை உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் யார். என்னோடு விளையாடுகிறீர்களா“ எனக் குழப்பத்துடன் கேட்டான் பாஸ்கரன்.
“தென்காசி கோர்ட்டில் நீங்கள் திங்கள்கிழமை சந்திக்கப் போகும் வழக்கின் எண்ணை கூட என்னால் சொல்ல முடியும். மருத்துவர் நாடி பார்ப்பது போல இதுவும் சாத்தியம் தான்“
“என்னால் நம்ப முடியவில்லை. “
“நம்ப வேண்டும் என அவசியமில்லை. பயணத்தில் அந்நியரை நம்பக் கூடாது என்று தானே பழக்கபடுத்தபட்டிருக்கிறோம்“
“நீங்கள் எத்தனை வருஷமாகக் கொரியாவில் வசிக்கிறீங்க“
“கடந்த ஆறு வருஷமா, அதற்கு முன்பு சவுத் ஆப்ரிக்காவில் இருந்தேன். அதற்கு முன்பு மாசிடோனியாவில். நிறையச் சுற்றிவிட்டேன்“
“எப்போதிலிருந்து வரம் கொடுக்கத் துவங்கினீங்க“
“பத்திரிக்கையாளர் போலக் கேட்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லும் பொய்யை உங்களுக்கும் சொல்லவா“ எனச் சிரித்தார்.
தாம்பரத்தில் மூன்றாவது நபர் ஏறி அவர்கள் அருகில் அமர்ந்தார். அவர் தனது பெட்டியை வைத்தவுடன் “படுத்துக் கொள்ள வேண்டியது தானே“ எனக் கேட்டார்
“உங்கள் இஷ்டம்“ என்று சொன்னார் பாஸ்கரின் எதிரே இருந்தவர்
“நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே வந்துவிட்டேனா“ எனக் கேட்டார் வந்த பயணி
“ஆமாம். இவர் என்னிடம் வரம் வேண்டும் என்று கேட்கிறார்“
அதை வேடிக்கையான பேச்சாக எடுத்துக் கொண்டு “யாரும் யாருக்கும் வரம் தரலாமே“ என்று சொல்லியபடி தனது படுக்கையை விரிக்க ஆரம்பித்தார் மூன்றாவது பயணி
“விளையாட்டுக்காகச் சொல்கிறார்“ என்றார் பாஸ்கர்
“ரயிலில் இப்படி விளையாடினால் தான் உண்டு. வீட்டில் முடியாதே“ என்றார் மூன்றாவது பயணி
அதைக்கேட்ட பாஸ்கர் ஆமோதிப்பது போலத் தலையசைத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொன்னவர் “எனக்கு குடும்பமே கிடையாது“ என்று சொல்லிச் சிரித்தார்
பாஸ்கர் எதிரே இருப்பவரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தனது படுக்கையை விரித்தான். வரம் கொடுப்பதாகச் சொன்னவர் தனது செல்போனில் யாருடனோ ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருந்தார். பாஸ்கர் படுத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொல்கிறாரே. பொய்யனாக இருப்பாரா. காசு பறிக்கப் போடும் பித்தலாட்டமா, இவரிடம் நாம் வரம் கேட்கலாமா. ஒரு வேளை கேட்டு நடந்துவிட்டால் நல்லது தானே. மனம் பல்வேறாகக் குழம்பிக் கொண்டிருந்தது. தூக்கமாத்திரை போட்டது கண்ணை அழுத்த ஆரம்பித்த்து. அவனை அறியாமல் உறங்கிப் போனான்.
விடிகாலை குளிரில் தூக்கம் கலைந்து எழுந்த போது எதிரே இருந்த ஆளைக் காணவில்லை. அதற்குள் சிவகாசி வந்துவிட்டதா என்ன. தனது செல்போனில் மணியைப் பார்த்தான். நான்கு தான் ஆகியிருந்தது. அந்த ஆள் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஒருவேளை வேறு ஊரில் இறங்கிவிட்டாரா எனத் தெரியவில்லை
சிவகாசியில் ரயில் நின்ற போது அவர் பிளாட்பாரத்தில் தென்படுகிறாரா எனக் கீழே இறங்கி நின்று பார்த்தான். ஆளைக் காணவில்லை
ராஜபாளையத்தில் இறங்கி தனது வீட்டிற்குப் போனபோது ரயில் பயணத்தில் சந்தித்தவரைப் பற்றிப் பாஸ்கர் யாரிடமும் சொல்லவில்லை.
அன்றிரவு மனைவி மற்றும் மகளிடம் சொன்னான்
இருவரும் ஒரே குரலில் “வரம் கேட்டிருக்க வேண்டியது தானே“ என்றார்கள்
“அவர் என்ன கடவுளா.. ரயில்ல என்னைப் போல டிக்கெட் எடுத்து வர்ற பயணி தானே. அந்த ஆள் வரம் கொடுத்தா எப்படி நடக்கும்“ எனக் கேட்டான் பாஸ்கர்
“நடந்தா நல்லது தானே. நல்ல சந்தர்ப்பத்தை வேஸ்ட் பண்ணீட்டிங்களே“ என்றாள் மனைவி
“அவரோட போன் நம்பர் வாங்குனீங்களா டாடி“ எனக்கேட்டாள் மகள்
“இல்லை“ எனத் தலையாட்டினான்
“நீங்க கேட்காட்டியும் அவரா வரம் கொடுத்து இருக்கலாம். இந்தக் காலத்துல வரம் கொடுக்க யாரு இருக்கா“ என ஆதங்கப்பட்டாள் மனைவி.
“அவர் கிட்ட என்ன வரம் கேட்குறதுனு தெரியலை“ என்றான் பாஸ்கர்
“உங்க சாமர்த்தியம் அவ்வளவு தான்“ எனச் சலித்துக் கொண்டாள் மனைவி
எவ்வளவோ கடனிருக்கிறது. மகள் கல்யாணம் பற்றிய கனவு இருக்கிறது. பெரிய கார், பங்களா வசதி என எத்தனையோ தேவைகள் இருக்கிறது. ஆனால ஏன் எதையும் கேட்க தோணவில்லை.
வரம் கேட்கிறவர்கள் பெருகி விட்ட இந்த உலகில் வரம் கொடுப்பவர்கள் ஏன் மறைந்து போனார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவரை என்றைக்காவது திரும்பப் பார்க்க நேர்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டான். ஆனால் அதைக் கேட்கலாமா வேண்டாமா என்பதில் அவனுக்குக் குழப்பமே மிஞ்சியிருந்தது.
வரம் கொடுப்பவர்
புதிய சிறுகதை
அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார்.
இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்..

அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். ஆரஞ்சுவண்ண போலோ டீ ஷர்ட். வெளிர் நிற பேண்ட். இரண்டு கையிலும் மோதிரம் அணிந்திருந்தார்.
பாஸ்கரன் தனது டிராவலிங் பேக்கை கிழே தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்ததையோ, செல்போனை சார்ஜரில் போட்டதையோ அவர் கவனித்தது போலத் தெரியவில்லை.
ரயிலில் இப்போதெல்லாம் புத்தகம் படிப்பவர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. ரயில் புறப்படுவதற்கு முன்பாக மாத்திரை சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தண்ணீர் பாட்டில் கொண்டு வர மறந்து போயிருந்தான்
எதிரே இருப்பவர் வைத்துள்ள தண்ணீர் பாட்டில் கண்ணில் பட்டது.
“சார்.. மாத்திரை சாப்பிட கொஞ்சம் தண்ணி வேண்டும். எடுத்துகிடவா“ என்று கேட்டான்
எதிரேயிருந்தவர் வார இதழை விட்டுக் கண்ணை விலக்கி தலையாட்டினார். அவன் தனது பையின் சைடு ஜிப்பை திறந்து மாத்திரை அட்டையை எடுத்துக் கொண்டான்.
“தூக்கமாத்திரையா“ என எதிரே இருப்பவர் கேட்டார்
“ஆமாம். இதைப் போடாமல் என்னால் தூங்க முடியாது“ என்றான்
“நானும் அதே கேஸ் தான். ஆனால் எனக்குத் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தூங்கினால் அதிர்ஷ்டம்“
பாஸ்கர் தனது மாத்திரையை விழுங்கிவிட்டு அவரிடம் “நீங்கள் எங்கே போகிறீர்கள். மதுரைக்கா “என்று கேட்டான்
“இல்லை சிவகாசி“..
“காலை ஐந்து மணிக்கு போய்விடும். நான் அதைத் தாண்டி ராஜபாளையம் போகிறேன்“ என்றான் பாஸ்கர்
“சிவகாசி எனது அம்மாவின் ஊர். எப்போதோ சிறுவயதில் போயிருக்கிறேன். பல வருஷங்களுக்குப் பின்பு இப்போது போகிறேன்“ என்றார் அந்த நபர்
“இப்போது எங்கே இருக்கிறீர்கள்“
“கொரியாவில்“.
“என்ன வேலை“
“அதை எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. என்னுடைய வேலை வரம் கொடுப்பது“
அதைக்கேட்டவுடன் தன்னை அறியாமல் புன்னகைத்தபடி பாஸ்கர் கேட்டான்
“நீங்கள் என்ன முனிவரா“
“அது போன்ற ஆள் தான். ஆனால் என் கையில் கமண்டலமோ, பெரிய தாடி மீசையோ கிடையாது. என்னால் வரம் அளிக்க முடியும்“
அதை நம்ப முடியாதவன் போலப் பாஸ்கர் சொன்னான்
“என்னால் கூடத் தான் வர மளிக்க முடியும் ஆனால் பலிக்கணுமே“
“உங்கள் கையில் உள்ள மொபைலில் அருட்பெருஞ்சேகரன் என அடித்துப் பாருங்கள். என்னைப் பற்றிப் போட்டிருப்பார்கள். “.

பாஸ்கர் உடனே தனது செல்போனில் அருட்பெருஞ்சேகரன் என டைப் செய்தான். ஆங்கிலத்திலும் கொரியாவிலும் அவரைப் பற்றிய வீடியோக்கள். செய்திகள் வந்தன. அதில் ஒரு பெரிய தொழிலதிபர் தனக்குக் கிடைத்த வரம் பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசிய காணொளி இருந்தது.
“நிஜம் தான். இவரிடம் வரம் வாங்கியதாகத் தான் சொல்கிறார். ஒரு சாதாரண ஆளால் எப்படி வரம் கொடுக்க முடியும்“. எனப் பாஸ்கர் யோசித்தான்.
“நிறைய வீடியோ இருக்கு.. நீங்க சாமியரா“
“இல்லை. சாமானியன். “
“வரம் கொடுக்கிறது எல்லாம் கதைனு நினைச்சிட்டு இருந்தேன் . நிஜமா இந்தக் காலத்தில் ஒருவரால் வரம் கொடுக்க முடியுமா“
“வரம் கிடைக்கும்னு நம்புறவங்க இருக்காங்களே. அது எதனால் “
“எப்படியாவது கஷ்டம் தீரணும்லே“
“வரம் கொடுக்கிறதுக்கு மனசும் நம்பிக்கையும் தான் வேணும். “
“எதை வரமா கேட்டாலும் உங்களாலே தர முடியுமா“
“முடியாது. எது உண்மையான தேவையோ அதை வரமா தர முடியும்“
“நீங்க வரம் கொடுத்தால் எப்படிப் பலிக்கும். உங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கா “
“இருப்பதாக நான் நம்புகிறேன். என்கிட்ட வரம் கேட்பவரும் நம்புகிறார். இன்னைக்கும் சாபம் பலிக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்களே. பிறகு வரம் பலிக்கும் என்று மட்டும் ஏன் நம்ப மறுக்கிறார்கள்“ என்று கேட்டார்
“வரம் கொடுப்பது கடவுளின் வேலையில்லையா“
“நீங்கள் யாரையும் காதலித்தது இல்லையா. காதலித்திருந்தால் காதலியால் வரம் அளிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள்“ என்று சொல்லி சிரித்தார்
“நீங்கள் கொடுக்குற வரம் உடனடியாகப் பலிக்குமா“
“அதை என்னால் சொல்ல முடியாது. நம்பிக்கையற்ற நீங்களும் என்னிடம் வரம் கேட்க ஆசைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே“
“அப்படியில்லை. சும்மா தெரிந்து கொள்ளக் கேட்டேன்“
“வரம் கேட்பது தவறில்லை. எதைக் கேட்பது என்பது தான் குழப்பம். அதனால் தான் மனிதர்கள் முன்பு கடவுள் தரிசனமாகிறதில்லை. “
“இப்படி திடீர்னு ரயிலில் ஒருவர் வரம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வதுனு தெரியலை“ எனச் சிரித்தான் பாஸ்கர்
“இன்னும் நிறைய நேரமிருக்கிறது. உங்களுக்கு எப்போ கேட்க தோணுதோ அப்போ கேளுங்கள்“
“உங்களால் எப்படி வரம் தர முடியுது“
“நிச்சயம் நான் கடவுள் இல்லை. ஆனால் சொற்களை நம்புகிறவன். சொல்லின் சக்தியை அறிந்தவன். அதை விளக்கி சொல்ல முடியாது. “
“வரம் கொடுப்பதற்குக் கட்டணம் கேட்பீங்களா “ எனக்கேட்டான்
“உங்களிடம் கட்டணம் கேட்க மாட்டேன். உங்கள் மகள் கீர்த்தனாவிற்கும். மனைவி சௌமியாவிற்கும் நான் தரும் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்“
“அவங்களை உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் யார். என்னோடு விளையாடுகிறீர்களா“ எனக் குழப்பத்துடன் கேட்டான் பாஸ்கரன்.
“தென்காசி கோர்ட்டில் நீங்கள் திங்கள்கிழமை சந்திக்கப் போகும் வழக்கின் எண்ணை கூட என்னால் சொல்ல முடியும். மருத்துவர் நாடி பார்ப்பது போல இதுவும் சாத்தியம் தான்“
“என்னால் நம்ப முடியவில்லை. “
“நம்ப வேண்டும் என அவசியமில்லை. பயணத்தில் அந்நியரை நம்பக் கூடாது என்று தானே பழக்கபடுத்தபட்டிருக்கிறோம்“
“நீங்கள் எத்தனை வருஷமாகக் கொரியாவில் வசிக்கிறீங்க“
“கடந்த ஆறு வருஷமா, அதற்கு முன்பு சவுத் ஆப்ரிக்காவில் இருந்தேன். அதற்கு முன்பு மாசிடோனியாவில். நிறையச் சுற்றிவிட்டேன்“
“எப்போதிலிருந்து வரம் கொடுக்கத் துவங்கினீங்க“
“பத்திரிக்கையாளர் போலக் கேட்கிறீர்கள். அவர்களுக்குச் சொல்லும் பொய்யை உங்களுக்கும் சொல்லவா“ எனச் சிரித்தார்.
தாம்பரத்தில் மூன்றாவது நபர் ஏறி அவர்கள் அருகில் அமர்ந்தார். அவர் தனது பெட்டியை வைத்தவுடன் “படுத்துக் கொள்ள வேண்டியது தானே“ எனக் கேட்டார்
“உங்கள் இஷ்டம்“ என்று சொன்னார் பாஸ்கரின் எதிரே இருந்தவர்
“நீங்கள் பேசிக் கொண்டிருப்பதற்குக் குறுக்கே வந்துவிட்டேனே“ எனக் கேட்டார் வந்த பயணி
“ஆமாம். இவர் என்னிடம் வரம் வேண்டும் என்று கேட்கிறார்“
அதை வேடிக்கையான பேச்சாக எடுத்துக் கொண்டு “யாரும் யாருக்கும் வரம் தரலாமே“ என்று சொல்லியபடி தனது படுக்கையை விரிக்க ஆரம்பித்தார் மூன்றாவது பயணி
“விளையாட்டுக்காகச் சொல்கிறார்“ என்றார் பாஸ்கர்
“ரயிலில் இப்படி விளையாடினால் தான் உண்டு. வீட்டில் முடியாதே“ என்றார் மூன்றாவது பயணி
அதைக்கேட்ட பாஸ்கர் ஆமோதிப்பது போலத் தலையசைத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொன்னவர் “எனக்கு குடும்பமே கிடையாது“ என்று சொல்லி சிரித்தார்
பாஸ்கர் எதிரே இருப்பவரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்துடன் தனது படுக்கையை விரித்தான். வரம் கொடுப்பதாகச் சொன்னவர் தனது செல்போனில் யாருடனோ ஏதோ மொழியில் பேசிக் கொண்டிருந்தார். பாஸ்கர் படுத்துக் கொண்டான்
வரம் கொடுப்பதாகச் சொல்கிறாரே. பொய்யனாக இருப்பாரா. காசு பறிக்கப் போடும் பித்தலாட்டமா, இவரிடம் நாம் வரம் கேட்கலாமா. ஒரு வேளை கேட்டு நடந்துவிட்டால் நல்லது தானே. மனம் பல்வேறாகக் குழம்பிக் கொண்டிருந்தது. தூக்கமாத்திரை போட்டது கண்ணை அழுத்த ஆரம்பித்த்து. அவனை அறியாமல் உறங்கிப் போனான்.
விடிகாலை குளிரில் தூக்கம் கலைந்து எழுந்த போது எதிரே இருந்த ஆளைக் காணவில்லை. அதற்குள் சிவகாசி வந்துவிட்டதா என்ன. தனது செல்போனில் மணியைப் பார்த்தான். நான்கு தான் ஆகியிருந்தது. அந்த ஆள் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஒருவேளை வேறு ஊரில் இறங்கிவிட்டாரா எனத் தெரியவில்லை
சிவகாசியில் ரயில் நின்ற போது அவர் பிளாட்பாரத்தில் தென்படுகிறாரா எனக் கீழே இறங்கி நின்று பார்த்தான். ஆளைக் காணவில்லை
ராஜபாளையத்தில் இறங்கி தனது வீட்டிற்குப் போனபோது ரயில் பயணத்தில் சந்தித்தவரைப் பற்றிப் பாஸ்கர் யாரிடமும் சொல்லவில்லை.
அன்றிரவு மனைவி மற்றும் மகளிடம் சொன்னான்
இருவரும் ஒரே குரலில் “வரம் கேட்டிருக்க வேண்டியது தானே“ என்றார்கள்
“அவர் என்ன கடவுளா.. ரயில்ல என்னைப் போல டிக்கெட் எடுத்து வர்ற பயணி தானே. அந்த ஆள் வரம் கொடுத்தா எப்படி நடக்கும்“ எனக் கேட்டான் பாஸ்கர்
“நடந்தா நல்லது தானே. நல்ல சந்தர்ப்பத்தை வேஸ்ட் பண்ணீட்டிங்களே“ என்றாள் மனைவி
“அவரோட போன் நம்பர் வாங்குனீங்களா டாடி“ எனக்கேட்டாள் மகள்
“இல்லை“ எனத் தலையாட்டினான்
“நீங்க கேட்காட்டியும் அவரா வரம் கொடுத்து இருக்கலாம். இந்தக் காலத்துல வரம் கொடுக்க யாரு இருக்கா“ என ஆதங்கப்பட்டாள் மனைவி.
“அவர் கிட்ட என்ன வரம் கேட்குறதுனு தெரியலை“ என்றான் பாஸ்கர்
“உங்க சாமர்த்தியம் அவ்வளவு தான்“ எனச் சலித்துக் கொண்டாள் மனைவி
எவ்வளவோ கடனிருக்கிறது. மகள் கல்யாணம் பற்றிய கனவு இருக்கிறது. பெரிய கார், பங்களா வசதி என எத்தனையோ தேவைகள் இருக்கிறது. ஆனால ஏன் எதையும் கேட்க தோணவில்லை.
வரம் கேட்கிறவர்கள் பெருகி விட்ட இந்த உலகில் வரம் கொடுப்பவர்கள் ஏன் மறைந்து போனார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவரை என்றைக்காவது திரும்பப் பார்க்க நேர்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றை தேர்வு செய்து கொண்டான். ஆனால் அதைக் கேட்கலாமா வேண்டாமா என்பதில் அவனுக்குக் குழப்பமே மிஞ்சியிருந்தது..
January 16, 2025
ரகசிய வாக்கெடுப்பு
சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களில் சர்வதேச அளவில் அதிகம் பேசப்பட்டது Conclave, எட்வர்ட் பெர்கர் இயக்கியுள்ளார். புதிய போப்பை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்ற ரகசிய வாக்கெடுப்பினை விவரிக்கிறது இந்தத் திரைப்படம்

இதே கதைக்கருவைக் கொண்டு 2006ல் கிறிஸ்டோஃப் ஷ்ரூவ் இயக்கிய The Conclave படம் வெளியாகியிருக்கிறது. அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்திருக்கிறேன். அப்படம் சில்வியஸ் ஏனியாஸ் பிக்கோலோமினி என்ற கார்டினல் எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் உருவாக்கபட்டது.
அதை விடவும் இன்றைய Conclave வாக்கெடுப்பு முறை மற்றும் அதற்குள் செயல்படும் அதிகாரப்போட்டியினைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.குறிப்பாகப் போப்பின் மறைவை ஒட்டி நடக்கும் சடங்குகள். கார்டினல்களின் வருகை. மற்றும் அவர்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள்.மோதல்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

போப்பினை தேர்வு செய்யும் உரிமை கார்டினல்களுக்கு மட்டுமே இருக்கிறது. அவர்கள் சிஸ்டைன் தேவாலயத்தில் ஒன்று கூடுகிறார்கள். புதிய போப்பாக வருவதற்கு ஆசைப்படுகிறவர் கார்டினல்களைச் சரிக்கட்டுகிறார். வழக்கமான தேர்தல்களில் நடைபெறும் ரகசிய பேரம் மற்றும் கூட்டணி இங்கேயும் உருவாக்கபடுகிறது.
இந்த ரகசிய வாக்கெடுப்பினை நடத்தும் கார்டினல் லாரன்ஸ் பார்வையில் படம் விவரிக்கபடுகிறது. அவர் போ பதவிக்கு ஆசைப்படுவதில்லை. ஆனால் அவரும் ஒரு போட்டியாளராக்கபடுகிறார்.
ரகசிய வாக்கெடுப்பில் அதிகபட்ச எண்ணிக்கை கிடைக்காத போது அந்த வாக்குசீட்டுகள் தீயிட்டு எரிக்கபடுகின்றன. அந்தக் கரும்புகை வானில் பரவுகிறது. அதை வைத்துக் கொண்டே மக்கள் போப் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்து கொள்கிறார்கள்.
எட்கர் பெர்கர் இப்படத்தினைத் துப்பறியும் கதைகளின் பாணியிலே இயக்கியிருக்கிறார். ஒவ்வொன்றாக அவிழம் பிரச்சனைகள். அதற்குள் மறைத்திருக்கும் ரகசியம். அதற்கான விடை. எனப் படம் விரிகிறது.
தீர்க்கப்படாத ரகசியம் ஒன்றின் காரணமாக ஏதோ உண்மை மறைக்கபடுவதாக உணரும் லாரன்ஸ் அதைக் கண்டறிய முயலுகிறார். உண்மை வெளியாகிறது. ஆனால் அது பார்வையாளனுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அமெரிக்கத் தேர்தல் நேரத்தில் இது போன்ற திரைப்படம் வெளியாவது தற்செயல் இல்லை. இரண்டினையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக அதிபராகத் தேர்வு செய்யப்படுகிறவரின் கடந்தகால ரகசியங்களை வெளிப்படுத்துவது. அவரது இருண்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவது தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தபடுகின்றன. அதே செயல் இப்படத்திலும் வெளிப்படுகிறது. ஆப்கான் திருச்சபையைச் சேர்ந்த கார்டினல் பற்றிய செய்திகள் மறைமுக அரசியலைக் கொண்டிருக்கின்றன.
போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை. சில்வியஸ் என்ற கார்டினல் தான் அதைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருந்தார். அதன்பிறகே இது வெளிச்சத்திற்கு வந்தது.

போப் இறந்த பிறகு, அவரது மோதிரம் விரலில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகிறது, இது ஆவணங்களில் போப்பின் முத்திரையைப் போலியாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான செயல்பாடு. அது போலவே அவரது அறை அரக்கு முத்திரை வைத்து மூடப்படுகிறது. போப்பை தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பிற்கான வாக்குசீட்டுகள். தேர்வின் இரகசியத்தைப் பேணுவதற்கான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் காட்டப்பட்டுள்ளன. வயர்லெஸ் சிக்னல் ஜாமர்கள் பொருந்துகிறார்கள். வெளியே வன்முறை நடக்கிறது.
தாமஸ் லாரன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் ரால்ப் ஃபியன்ஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆஸ்கார் விருது கிடைக்ககூடும். படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. படத்தில் திருச்சபையின் செயல்பாடுகள் சரியாகச் சித்தரிக்கப்படவில்லை, போப் தேர்வினை அகதா கிறிஸ்டியின் துப்பறியும் நாவல் போலக் காட்டியிருக்கிறார்கள் என எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இப்படம் உள்ளது. விருதுகளையும் வெல்லக்கூடும்.
போரும் மதமும் சினிமாவிற்கான எப்போதுமான கதைக்கருக்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கருப்பொருளில் படம் வெளியாகி சர்வதேச கவனத்தையும் விருதுகளையும் பெறுவது வழக்கம். அந்த வரிசையில் தான் இப்படமும் உள்ளது.
படத்தில் கார்டினல்கள் உணவருந்தும் காட்சியும் படிக்கட்டுகளில் ஏறிவரும் காட்சியும் உடைந்து சிதறும் கண்ணாடி ஜன்னலும் மறக்க முடியாதவை.
Conclave படத்தை இயக்கிய எட்வர்ட் பெர்கர் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கப்போகிறார் என்கிறார்கள். அதற்கான முன்னோட்டமாகவே இப்படம் இருக்கிறது. All Quiet on the Western Front (2022) படத்தையும் பெர்கர் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
January 14, 2025
மாற்ற முடியாத விஷயங்கள்
இஸ்ரேலிய எழுத்தாளர், அமோஸ் ஓஸின் நேர்காணல்கள் தொகுப்பு. What Makes an Apple?: Six Conversations about Writing, Love, Guilt, and Other Pleasures

இந்த நேர்காணல்களில் தனது எழுத்து, பால்யகால நினைவுகள். காதல் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நேர்காணலை எடுத்துள்ள ஷிரா ஹதாத் அமோஸை ஆழ்ந்து வாசித்துச் சரியான கேள்விகளை முன்வைக்கிறார். ஓஸின் பதில்களை ஏற்றுக் கொள்ள முடியாது என முகத்துக்கு நேராக மறுக்கிறார். அத்துடன் அவரது முந்தைய நேர்காணல்களில் சொன்ன பதிலை இடைவெட்டி நினைவுபடுத்துகிறார்.
அமோஸ் ஓஸ் பெரிதும் அசோகமித்ரனை நினைவுபடுத்துகிறார். குறிப்பாகத் தனது குடும்பம் மற்றும் அன்றாட வாழ்க்கை பற்றிய அசோகமித்ரனின் பதிவுகளில் காணப்படும் அதே கேலி. கிண்டலை ஓஸிடமும் காணமுடிகிறது.
அமோஸ் ஓஸின் ஹீப்ரு இலக்கியப் பேராசிரியராகவும் இருந்தவர். அவரது புகழ்பெற்ற நாவல் A Tale of Love and Darkness . தனது அன்னையின் தற்கொலையை மையமாகக் கொண்டு அந்த நாவலை எழுதியிருக்கிறார்.

அந்த நாவலின் ஒரு இடத்தில் சிறுவனான ஓஸ் தனது அன்னையிடம் நான் பொய் சொல்லலாமா அம்மா என்று கேட்கிறார். அம்மா அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு சில நேரங்களில் பொய் சொல்லலாம் என்கிறார். பொய் குறித்த குற்றவுணர்விலிருந்து அந்தச் சிறுவன் விடுபடுகிறான். இந்த நேர்காணலில் அமோஸ் பொய் சொல்வது படைப்பாற்றலின் முக்கிய அம்சம் என்று குறிப்பிடுகிறார்.
காதல், பாலுறவு சார்ந்த விருப்பம் பற்றி வெளிப்படையாகப் பேசும் ஒஸ் தனது பெயரை மாற்றிக் கொண்டது மற்றும் ஜெருசலேம் நகரினைப் பற்றிய நினைவுகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
ஒரு எழுத்தாளராகத் தனது அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் எழுதும் முறை அவர் குறிப்பிடுவது முக்கியமானது. தினமும் காலை நாலரை மணிக்கு எழுந்து இருண்ட வீதியில் நடைபயிற்சிக்குச் செல்லும் அவரது மாறாத பழக்கம் எழுதுவதற்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை விளக்குகிறார். தான் ஒரு போதும் அலாரம் வைத்து எழுந்து கொள்வதில்லை. விடுமுறை நாட்களில் கூட இந்தப் பழக்கம் மாறாதது என்கிறார்.
கிட்டதட்ட இது போன்ற பழக்கத்தையே ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாமியும் கைக்கொள்கிறார். எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்குவது. அதைத் தொடர்ந்து கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ஓஸ் அழுத்தமாக வலியுறுத்துகிறார்
ஒரு நாள் விடிகாலையில் அப்படி நடைபயிற்சிக்குச் செல்லும் போது ஒரு வீட்டில் எரியும் விளக்கையும் இருட்டில் நின்றபடி சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இளம்பெண்ணையும் காண்கிறார். அந்தக் காட்சி ஒரு கதையில் வருவது போலிருந்தது என்கிறார்.
அந்தப் பெண் எதற்காக இருட்டில் நிற்கிறாள். என்ன பிரச்சனை என்று அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததாகவும் கூறும் ஓஸ் அவளைப் பற்றி உடனே கதை எதையும் எழுதவில்லை. ஆனால் ஒரு நாள் அவள் நிச்சயம் என் படைப்பினுள் வெளிப்படுவாள். அப்படித் தான் நிஜவாழ்க்கை புனைவாக மாறுகிறது என்கிறார்.
ஓஸின் தந்தை, மாமனார். மைத்துனி என அவரது குடும்பத்தில் பலரும் நூலகர்கள். ஆகவே புத்தகங்களுடன் உள்ள உறவு மரபாகத் தொடரக் கூடியது என்கிறார். தான் சிறுவயதாக இருந்த போது ஒரு புத்தகமாக மாற வேண்டும் என்பதே தனது ஒரே ஆசையாக இருந்தது என்கிறார்.

தன்னைச் சுற்றி நடக்கும் இயக்கங்களை அவதானிப்பதே எழுத்தாளின் முதன்மையான வேலை. தான் மருத்துவமனையிலோ, ரயில் நிலையத்திலோ, விமான நிலையத்திலோ வரிசையில் நிற்கும்போது ஒருபோதும் செய்தித்தாளைப் படிப்பதில்லை அதற்குப் பதிலாக, மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கிறேன், சில வேளை அவர்களின் உடையைக் கவனிக்கிறேன். அவர்களின் காலணிகளைப் பார்க்கிறேன் – ஒருவர் அணிந்துள்ள காலணியை வைத்து அவரை மதிப்பிட்டுவிட முடியும். காலணிகள் எப்போதும் எனக்கு நிறையச் சொல்கின்றன என்கிறார் ஓஸ்.,
ஒரு பறவையைக் காணும் சிறுவன் அது எப்படிப் பறக்கிறது எனத் தெரிந்து கொள்ளப் பறவையைப் பிய்த்துப் பார்க்க விரும்புகிறான். உலகம் அவனைப் புரிந்து கொள்வதில்லை. கண்டிக்கிறது. குரூரம் என நினைக்கிறது. உண்மையில் அது குரூரமில்லை. தேடல். உள்ளார்ந்த ஆசை என்கிறார் அமோஸ்.
தனது வீட்டைக் கடந்து செல்லும் தனது நண்பர்களில் ஒருவர் வீட்டின் முன்பாக வந்து நின்று கலைந்த தலையைச் சீப்பால் வாறிச் சரிசெய்து கொள்வது வழக்கம். காரணம் ஒருவேளை அவரை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டியது வந்தால் கலைந்த தலையோடு இருக்கக் கூடாதில்லையா எனக் கேலியாகச் சொல்கிறார் ஓஸ்.
உண்மையில் மனிதர்கள் கதாபாத்திரங்ளாக மாற விரும்புகிறார்கள். கதாபாத்திரங்களுடன் தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறார்கள். கதாபாத்திரங்களின் பெயரை தனக்கு வைத்துப் பார்த்து ரசிக்கிறார்கள்.
எழுத்தாளர்களின் தலை பின்னால் திரும்பக் கூடியது. சாதாரண மனிதர்களால் அது இயலாது. எழுத்தாளனின் தலை எப்போதும் கடந்தகாலத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது. கடந்தகாலத்திலிருந்தே கதைகளைப் பலரும் உருவாக்குகிறார்கள். அது தனிப்பட்ட ஒருவரின் கடந்தகாலமாக இருக்கலாம் அல்லது தேசத்தின், இனத்தின், பண்பாட்டின். ஊரின், வீதியின், வரலாற்றின் கடந்தகாலமாகவும் இருக்கலாம். எழுத்தாளன் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அவசரம் படைப்பைக் கொன்றுவிடும்.
பாலுறவின் மீதான விருப்பம் பற்றிக் குறிப்பிடும் ஓஸ் difference between animal sexuality and human sexuality is the story என்கிறார். உண்மை விலங்குகளின் பாலின்ப வேட்கையில் கதை கிடையாது. மனிதர்களுக்குக் கதை வேண்டும். மனிதர்களின் பாலுறவு ஒரு கதையுடன் தொடர்புடையது. அந்தக் கதை நம் மனதினுள் ஆழப் பதிந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்பே, ஒரு குறிப்பிட்ட கதை அவர்கள் மனதில் விழித்துக் கொள்கிறது. எல்லா இன்பங்களும் கதைகளாகவே மிஞ்சுகின்றன.
பலசரக்குகடைக்காரன் தனது கடையைத் திறந்து வைத்து காத்திருப்பவன் போல எழுத்தாளனும் தனது எழுதும்மேஜையின் முன்பாக நாள் தவறாமல் அமர்ந்திருக்க வேண்டும். சில வேளை பத்துப் பக்கம் எழுத நேரிடும். சில நாட்கள் எதையும் எழுத முடியாமலும் போய்விடும். பலசரக்கு கடைக்காரன் எப்படி குற்றவுணர்வில்லாமல் காத்திருக்கிறானோ அப்படி எழுத்தாளனும் பொறுமையாகக் காத்துகிடக்கவே வேண்டும் என்கிறார் ஓஸ்
என்னை விடச் சிறப்பாக எழுதும் ஒரு எழுத்தாளன் மீது நான் பொறாமை கொள்ளக்கூடும். ஆனால் என்னை விடப் புகழ்படைத்த ஒரு எழுத்தாளன் மீது ஒரு போதும் பொறாமை கொள்ள மாட்டேன். பணமோ, புகழோ, புத்தக விற்பனையோ ஒரு எழுத்தாளனை முடிவு செய்துவிடாது. குறைவான பிரதிகள் விற்பனையாகின்றன உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் பலரை நான் அறிவேன் என்கிறார்
இந்த நேர்காணலின் ஊடாகத் தஸ்தாயெவ்ஸ்கி, வில்லியம் பாக்னர். காஃப்கா எனத் தனக்குப் பிடித்தமான இலக்கியவாதிகளைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார் ஓஸ்.
literature is actually the cousin of gossip, of the human thirst to know what is happening behind other people’s shuttered blinds, to know what their secrets are என்று ஓஸ். குறிப்பிடுவது உண்மையே.
January 12, 2025
காலம் இதழில்
கனடாவிலிருந்து வெளியாகும் காலம் இதழில் எனது புதிய சிறுகதை வெளியாகியுள்ளது

புத்தகத் திருவிழா – நன்றி
சென்னை புத்தகத் திருவிழா இனிதே நிறைவடைந்தது. நிறைய வாசகர்கள், நண்பர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. பலரும் புத்தகங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது, என் சார்பிலும் தேசாந்திரி பதிப்பகம் சார்பிலும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி,
இந்தக் கண்காட்சியினுள் ஆறு புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். அங்கே இளம் படைப்பாளிகள் பலரையும் சந்திக்க முடிந்தது சந்தோஷமளித்தது.
வெளியூர்களில் இருந்தும் வெளிநாட்டிலிருந்தும் என்னைச் சந்திக்க வந்திருந்த வாசர்களின் அன்பு நிகரற்றது. அவர்களுக்கு நன்றி.
ஸ்ருதி டிவி அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்து காணொளியாக வெளியிட்டார்கள். கபிலன், சுரேஷ் மற்றும் ஸ்ருதி டிவி ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் நன்றி
தி இந்து தமிழ்திசை நாளிதழ், தினமணி, மற்றும் தொலைக்காட்சி, இணைய இதழ்கள். யூடியூப்பர்கள், முகநூல் பதிவர்கள் எனப் பலரும் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

