S. Ramakrishnan's Blog, page 14
April 1, 2025
துயரை ஆடையாக நெய்பவள்
ஹோமரின் இதிகாசங்களான இலியட் மற்றும் ஒடிஸி ஆகிய இரண்டும் பல்வேறு முறை திரைப்படமாக்கபட்டுள்ளன.
டிராய் வீழ்ச்சிக்குப் பிறகு இத்தாக்காவின் மன்னரான ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்பும் நீண்ட கடற்பயணத்தையும் அதில் சந்தித்த இன்னல்களையும் ஒடிஸி விவரிக்கிறது

1955 இல் கிர்க் டக்ளஸ் நடித்த யுலிஸஸில் இருந்து மாறுபட்டு தி ரிட்டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது. உபெர்டோ பசோலினி இயக்கிய இந்தப் படத்தில் முந்தைய யுலிஸஸில் இருந்த கடலின் சீற்றம் மற்றும் அரக்கர்கள். சூனியக்காரிகள். போதை தரும் தாவரங்கள், நரமாமிசம் உண்பவர்களை எதிர்த்த சாகசங்கள் எதுவும் கிடையாது.
மாறாக இப்படத்தில் கடற்பயணத்தில் ஏற்பட்ட இடர்களால் உருக்குலைந்துப் போன ஒடிஸியஸ் வீழ்ச்சியுற்றவனாக இத்தாகா வந்து சேருகிறான். போரின் காரணமாகத் தனது குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த நாட்களை நினைத்து வருந்துகிறான். டிராயின் வெற்றி உண்மையில் அவனுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தரவில்லை.
இன்னொரு புறம் அவனது மனைவி பெனிலோப் கணவனின் வருகைக்காக நீண்டகாலம் காத்திருக்கிறாள். துயரை மறைத்துக் கொண்ட அவளது மனவுறுதியை படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வது எப்போதும் சினிமாவிற்கான வெற்றிகரமான கதையாகக் கருதப்படுகிறது. அதைத் தான் உபெர்டோ பசோலினியும் முதன்மைப்படுத்தியிருக்கிறார்.

ஒடிஸியஸ் இதிகாச வீரனாக மட்டுமின்றி வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து செல்லும் மனிதனின் அடையாளமாகவும் மாறிவிடுகிறான். பெனிலோப் தனித்து வாழும் பெண் எதிர்கொள்ளும் நெருக்கடியின் அடையாளமாக இருக்கிறாள். அது தான் இந்த இதிகாச கதாபாத்திரங்களை இன்றைய மனிதர்களைப் போல புரிந்து கொள்ள வைக்கிறது.
குடும்பத்தைப் பிரிந்து சென்று பல ஆண்டுகளுக்குப் பின்பு திரும்பி வருகிறவனின் மனநிலையை இந்திய இலக்கியங்கள் நிறையவே பேசியிருக்கின்றன. குறிப்பாக சாமியார் ஆவதற்காக வீட்டை விட்டுச் சென்றவன் பல ஆண்டுகளுக்கு பின்பு வீடு திரும்புவதை பல கதைகளில் காண முடிகிறது. புதுமைப்பித்தனின் கதை ஒன்றிலும் இது போன்ற நிகழ்வு சித்தரிக்கபடுகிறது
இதில் வரும் ஒடிஸியஸ் ஒரு மாவீரன். போரே அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. ஆனால் வீடு திரும்பும் போது அவன் தனக்காக காத்திருப்பவர்களின் அன்பை உணரத் துவங்குகிறான். வெறுமையும் வலியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருக்கின்றன.
இழந்த அனைத்தையும் மீண்டும் பெற தனது பலத்தை ஒடிஸியஸ் நிரூபிக்க வேண்டியுள்ளது. அதற்கான போராட்டமே படத்தின் மையக்கதை.
ஒடிஸியஸ் நிர்வாணமாக, காயமடைந்த நிலையில் இத்தாக்கா தீவில் கரையொதுங்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. ஒளிரும் கடலும் அலைகளின் சீற்றமும் அடையாளம் தெரியாத மனிதனாக மணலில் ஒதுங்கி கிடப்பதும் அத்தனை அழகாகப் படமாக்கபட்டிருக்கிறது.
இத்தாகாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசமே மன்னருக்காகக் காத்திருக்கிறது. ஆனால் காப்பற்றப்பட்ட ஒடிஸியஸ் அரண்மனைக்குச் செல்லவில்லை. தனது உடலும் மனமும் நலமடையும் வரை பாதுகாப்பாகக் குகையில் வசிக்கிறான். எதிரிகளிடமிருந்து தனது தேசத்தைக் காப்பதற்காகப் பிச்சைக்காரனாக வேடமிடுகிறான்.
போரில் ஒடிஸியஸ் இறந்துவிட்டான் என ஊரார் சொல்வதை ராணி பெனிலோப் நம்ப மறுக்கிறாள் ஒடிஸியஸ் நிச்சயம் வீடு திரும்புவான் என்று காத்திருக்கிறாள்
அவளை மறுமணம் செய்து கொள்ள விரும்பிய வீர்ர்கள் பலரும் அவளது அரண்மனையினுள் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கணவராகத் தேர்ந்தெடுக்காவிட்டால் அவளையும் இத்தாக்காவையும் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றப் போவதாக மிரட்டுகிறார்கள்.
பெனிலோப் தனது சொந்த வீட்டில் கைதியைப் போலிருக்கிறாள். தனது மகனுடன் சேர்ந்து கொண்டு அரியணையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.

பெனிலோப் தனது மாமனார் லார்ட்டஸுக்கு அளிப்பதற்காக இறுதிச் சடங்கில் சுற்றப்படும் ஒரு ஆடையை நெய்து கொண்டிருக்கிறாள். மூன்று ஆண்டுகள் அந்த நெசவுப்பணி நடக்கிறது. அந்தப் பணி முடிந்தபிறகே அவள் மறுமணம் செய்து கொள்வதாக அறிவித்திருக்கிறாள்.
பெனிலோப்பின் நெசவு எதிர்ப்பின் வடிவமாக மாறுகிறது: ஒவ்வொரு நாளும், பகலில் அந்த ஆடையை நெய்கிறாள், இரவில் நெய்த இழைகளை அவிழ்த்துப் பிரித்து விடுகிறாள். இப்படியாக அவள் தனது திருமணத்தை மூன்று ஆண்டுகள் தள்ளிப் போட்டு வருகிறாள்.
வேற்றுருவில் வந்தாலும் பணிப்பெண் ஒடிஸியஸை அடையாளம் கண்டுவிடுகிறாள். பெனிலோப்பின் காத்திருப்பையும் மனத்துயரையும் அவருக்கு உணர்த்துகிறாள். தனது வளர்ந்த மகனையும் மனைவியையும் ஒடிஸியஸ் சந்திக்கிறான். ஆனால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
ஒடிஸியஸாக ரால்ஃப் ஃபியன்னெஸ், பெனிலோப்பாக ஜூலியட் பினோ சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மரியஸ் பாண்டுருவின் ஒளிப்பதிவு அபாரமானது.
ஒடிஸியஸின் கதையை விடவும் தனது துயரத்தை ஆடையாக நெய்யும் பெனிலோப்பின் தனிமையே நம்மை அதிகம் கவருகிறது. இதிகாசத்தை இன்றும் நமக்கு நெருக்கமாக்குவது அதில் வெளிப்படும் உணர்ச்சி வெளிப்பாடும், தனித்துவமான நிகழ்வுகளுமே. அதில் ஒன்றே பெனிலோப்பின் விசித்திரமான நெசவு .
••
March 31, 2025
பிரெய்லி புத்தகம்
எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நூலை வாசித்த மாணவர்கள் நிறைய பாராட்டுக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.


இந்த நூல் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று பார்வையற்றவர்களுக்காகப் பிரெய்லி வடிவில் வெளியாகிறது. இதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய ஆடிட்டர் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி
••
March 28, 2025
சிறந்த கதை
Borderless இலக்கிய இதழ் கடந்த ஆண்டில் வெளியான படைப்புகளில் மிகச்சிறந்தவற்றைத் தேர்வு செய்து பாராட்டியிருக்கிறார்கள்
எனது The Browless Dolls சிறுகதை அதில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
இதன் மொழிபெயர்ப்பாளர் டாக்டர் சந்திரமௌலிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
March 27, 2025
இரு சகோதரர்கள்
அழிசி வலைப்பக்கத்தில் அ.கி. கோபாலன் மற்றும் அ.கி. ஜயராமன் நேர்காணலை ஸ்ரீநிவாச கோபாலன் வெளியிட்டுள்ளார்.

1995ல் புதிய பார்வையில் வெளியான இந்த நேர்காணலை எடுத்தவர் குரு. புகைப்படங்களை எடுத்தவர் சுதாகர்
ஸ்ரீநிவாச கோபாலன் இதனை மீள்பிரசுரம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
‘நிலவளம்’, ‘அன்பு வழி’ (ஸ்வீடிஷ்), ‘தபால்காரன்’, ‘தாசியும், தபசியும்’ (பிரெஞ்சு), ‘அன்னை’, ‘ரோம் நகரப் பெண்’ (இத்தாலி), ‘அன்னா கரீனா’, ‘புத்துயிர்’, ‘அன்னை’ (ருஷ்யா), ‘சித்தார்த்தன்’ (ஜெர்மன்), ‘கடலும் கிழவனும்’, ‘திமிங்கில வேட்டை’, ‘அவமானச் சின்னம்’ (அமெரிக்கா) போன்ற உலகின் சிறந்த நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தமிழ்ச்சுடர் நிலையம் மூலம் வெளியிட்டவர் அ.கி. கோபாலன்.
உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்புகள் தமிழுக்கு எப்படி வந்து சேர்ந்தன என்ற வரலாற்றை கோபாலன் இந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார். அத்துடன் வறுமையுடன் போராடிய படி எவ்வாறு பதிப்புப் பணியை மேற்கொண்டார் என்பதையும் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்
சரத் சந்திரர் நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் அ.கி. ஜெயராமன். சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் இருந்த போதும் சரத் சந்திரரை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.
இந்த இருவரின் புகைப்படங்களையும் இப்போது தான் பார்க்கிறேன். நீண்டகாலம் பழகியவர்கள் போன்ற நெருக்கம் உண்டாகிறது.
தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ந்த முன்னோடிகளைக் கொண்டாடி வரும் அழிசி ஸ்ரீநிவாச கோபாலன் மிகுந்த பாராட்டிற்குரியவர். இவரது முயற்சியால் தான் க.நா.சுவின் நூல் வடிவம் பெறாத சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ராணிதிலக் இதனை தொகுத்துள்ளார்.
இந்த நேர்காணல் ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம். அழிசி வலைப்பக்கத்திற்கு சென்று இதனை வாசிக்கலாம்.
இணைப்பு.
March 26, 2025
சால் பெல்லோ கேட்ட கதை
யூ.ஆர். அனந்தமூர்த்தியின் சுயசரிதையான Suragiல் அனந்தமூர்த்தித் தான் பழகிய எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இலக்கியச் சந்திப்புகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

அதில் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான சால் பெல்லோவை கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் வீட்டில் சந்தித்த நிகழ்வை எழுதியிருக்கிறார்.
அந்தச் சந்திப்பின் போது சால் பெல்லோ அணிந்திருந்த அழகான சட்டையைப் பாராட்டிய ராமானுஜத்தின் மனைவி மோலி இது உங்கள் பணக்கார அண்ணன் பரிசாக அளித்ததா என்று கேட்கிறார்.
தனது கோடீஸ்வர அண்ணன் ஒருமுறை அணிந்துவிட்டு தனக்கு அளிக்கும் சட்டைகளைப் பல காலமாகத் தான் அணிந்து வந்ததாகவும், தற்போது தானே தனக்கான ஆடைகளை வாங்கிக் கொள்வதாகவும் சொல்கிறார். சால்பெல்லோ ஐந்து முறை திருமணம் செய்து கொண்டவர். அதைப் பற்றியும் மோலி கேலியாகக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சந்திப்பின் போது வைக்கம் முகமது பஷீரின் பாத்துமாவின் ஆடு கதையைச் சால் பெல்லோவிடம் அனந்தமூர்த்திச் சொல்கிறார்.

கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள். அப்படி நடந்து கொள்வதற்கு அவரவர்களுக்கு என ஒரு காரணமும் இருக்கிறது. கதையில் வரும் ஆடு பஷீரின் கையெழுத்துப் பிரதிகளைத் தின்றுவிடுகிறது. இவ்வளவு குழப்பங்கள் இருந்தால் அவர்களுக்குள் வெறுப்பில்லை. இதே கதையைக் காஃப்கா எழுதியிருந்தால் அது கசப்பான துர்கனவை போலிருக்கும். ஆனால் பஷீர் மிகுந்த நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அதில் பஷீரின் பேரன்பு முழுமையாக வெளிப்படுகிறது. அதனால் நிகரற்ற கலைப்படைப்பாக மாறிவிடுகிறது என்கிறார்.
அந்தக் கதை சால் பெல்லோவிற்குப் பிடித்திருக்கிறது. பஷீரைப் பாராட்டுவதுடன் இந்தியாவில் இது போன்ற கதைகள் எவ்வளவு அழகாக எழுதப்படுகின்றன என்றும் பாராட்டுகிறார்.
ஆங்கில இலக்கியத்தில் ஊறித் திளைத்த அனந்தமூர்த்திப் பஷீரை சால் பெல்லோவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவரது எழுத்தின் எளிமை மற்றும் பேரன்பை அடையாளம் காட்டுகிறார். சால் பெல்லோவின் பால்யகாலம் பஷீரின் கதைகளில் வருவது போன்றதே. ஆகவே அவருக்கு அந்தக் கதை உடனே பிடித்துவிடுகிறது.
இந்தியக் குடும்பம் என்பது ஒரு ஆக்டோபஸ். அதன் எட்டு கைகளும் வேறு வேறு பக்கம் அலைந்து கொண்டிருப்பதே வழக்கம். ஆக்டோபஸ் தனது கைகளால் நினைவு கொள்ளக்கூடியது என்கிறார்கள். இந்தியக் குடும்பங்கள் பிரச்சனைகளால் தான் உயிர்துடிப்புடன் விளங்குகின்றன. அதன் அடையாளமாகவே பஷீரின் பாத்துமாவின் ஆடுவை உணர்கிறேன்.
இந்தியக் குடும்பத்தினுள் ஒருவன் தன்னைக் காஃப்காவாக உணர்வது எளிது. ஆனால் அவன் காஃப்காவாக நடந்து கொள்ள முடியாது. பெரும்பாலும் இந்திய காஃப்கா துறவிற்குள் சென்றுவிடுவான். அல்லது வீட்டை விட்டு ஒடிவிடுவான்.
இந்தியாவிற்கு வரும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா எனச் சால்பெல்லோவிடம் அனந்தமூர்த்திக் கேட்கிறார். இந்தியாவின் வறுமையை என்னால் காண இயலாது என்று சால் பெல்லோ பதில் அளிக்கிறார். இந்த மனப்பதிவிற்குக் காரணம் பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் துர்காவின் மரணம். அது சால் பெல்லோவின் மனதில் ஆழமாகப் பதிந்து போயிருக்கிறது. அந்த நாவல் சித்தரிக்கும் காலம் வேறு என்ற உணர்வே அவருக்கு ஏற்படவில்லை. இந்தியா பற்றிய எதிர்மறையான பிம்பம் அமெரிக்கப் படைப்பாளிகள் பலருக்கும் இருந்திருக்கிறது. அதையே சால் பெல்லோவிடம் காணுகிறோம்.

அனந்தமூர்த்தியின் புத்தகம் முழுவதும் கன்னட இலக்கியவாதிகள் பற்றிய பெருமிதமும் அதன் மரபும் நவீனத்துவமும் பற்றிய பார்வைகளும் வெளிப்படுகின்றன. கவிஞர் அடிகாவை அவர் கொண்டாடுகிறார். கன்னட எழுத்தாளர்களுக்கும் அங்குள்ள மடங்களுக்குமான உறவு விசித்திரமானது. கன்னட இலக்கியத்தினை உலக அளவில் கொண்டு சென்றதன் பின்புலத்தை அனந்தமூர்த்தியின் வரிகளில் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.
கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைகழகத் துணைவேந்தராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது பற்றிய பகுதி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. கேரள அரசு அவரை விரும்பி அழைத்துத் துணைவேந்தராக்கியிருக்கிறது. மலையாள படைப்புலகின் முக்கியப் படைப்பாளிகளுடன் அவருக்கு இருந்த நட்பு பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் ராஜீவ் காந்தியைச் சந்தித்து உரையாடியது பற்றிய பகுதி சிறப்பானது.
தனது நாவல்கள் திரைப்படமானதைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை தனக்கு முழுமையான திருப்தியை தரவில்லை என்பதை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார். தனது ரஷ்யப் பயணம் மற்றும் சீனப்பயணம் குறித்தும் விமர்சனப்பூர்வமாக எழுதியிருக்கிறார். இரண்டிலும் அவரது கோபம் முழுமையாக வெளிப்படுகிறது.
தனக்கு எதிராக நடந்து கொண்ட கன்னட எழுத்தாளர்களைப் பெயர் சொல்லி எழுதியிருப்பதோடு அவர்கள் மீது கடுமையான விமர்சனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற இந்தியாவின் உயரிய இலக்கிய அமைப்புகள் யாவிலும் அவர் பெரிய பதவிகளை வகித்திருக்கிறார். அந்த நினைவுகள் பெரிதும் கசப்பானவையாகவே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தனது படைப்புகள் மற்றும் எழுத்தின் நுட்பங்கள் பற்றிய அனந்தமூர்த்தியின் வெளிப்படையான எண்ணங்கள் முக்கியமானவை. தனது சொந்த பிரச்சனைகள், வேதனைகளை உலகிற்குச் சொல்வது மட்டும் எழுத்தாளனின் வேலையில்லை. அவன் தனது காலத்தின் குரலை கேட்கிறான். சக மனிதர்களின் வேதனைகளை, துயரை புரிந்து கொள்கிறான். அதைத் தனதாக உணர்கிறான். அவர்களுக்காகக் குரல் கொடுக்கிறான். ஒன்றை உரத்து சொல்வதை விடவும் உணரச் செய்வதே இலக்கியத்தின் முதன்மையான பணி என்று சொல்லும் அனந்தமூர்த்திக் குவெம்புவை உதாரணமாகச் சொல்கிறார்
குவெம்புவின் கதை ஒன்றில் ஒரு வீட்டில் பாகம் பிரிக்கிறார்கள். வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டாக்குகிறார்கள், விளையாட்டு சிறுவனாக இருந்த வாசுவை அழைத்து இரண்டில் ஒன்றை தொடச் சொல்கிறார்கள். அவன் எதைத் தொடுகிறானோ அது அவனது குடும்பத்திற்குரியது. அந்தச் சிறுவனின் விரல் நுனியில் குடும்பத்தின் எதிர்காலமிருக்கிறது. இந்த எதிர்பாராத சுமையைத் தாங்க முடியாமல் சிறுவன் மயங்கி விழுந்துவிடுகிறான்.
எழுத்தின் வல்லமை என்பது இது போன்ற பெரிய அனுபவங்களைச் சொற்களின் வழியே முழுமையாக உணர்த்திவிடுவதே என்கிறார். தராசின் சிறிய முள் தான் இரண்டு பக்க எடையினையும் சமமாக்குகிறது. அந்த முள்ளைப் போல வாசு சிறியதாக இருக்கிறான் என்றே அதை வாசிக்கும் போது உணர்ந்தேன்
உலகம் முழுவதும் பயணம் செய்த அனந்தமூர்த்தி தன்னை இந்தியாவின் இலக்கியப்பிரதிநிதியாகவே வெளிப்படுத்திக் கொள்கிறார். இவ்வளவு பெரிய புத்தகத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் எழுத்துலகோடு அவரது தொடர்பு சரியாக குறிப்பிடப்படவில்லை என்பது குறையே.
***
இருளுக்கும் ஒளிக்கும் இடையில்
ஜெஸ்ஸி ஐசன்பெர்க்கின் புதிய படமான ” A Real Pain” இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் இணைந்து மேற்கொள்ளும் பயணத்தை விவரிக்கிறது. அத்துடன் வாழ்க்கையைப் பற்றிய இரண்டு பார்வைகளையும் முன் வைக்கிறது. எது உண்மையான வலி என்பதை விசாரணை செய்கிறது. இயல்பான நகைச்சுவையும் தேர்ந்த நடிப்பும் கொண்ட இந்தப் படம் யூதப்படுகொலை பற்றிய இந்த தலைமுறையின் புரிதலை அழகாக வெளிப்படுத்துகிறது.

டேவிட் மற்றும் பென்ஜி இருவரும் தனது பாட்டி வாழ்ந்த பூர்வீக வீட்டைக் காணுவதற்காகப் போலந்தில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்கள். அது ஒரு நினைவுச் சுற்றுலா. ஹிட்லரின் வதை முகாமில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் நினைவிடங்களைக் காணும் பயணம். இரண்டு யூதர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் அவர்களின் குடும்ப வரலாற்றையும் கடந்தகாலத் துயர்களை எப்படிப் புரிந்து கொள்வது என்பதையும் பேசுகிறது.
நெருங்கிய உறவினர்களான டேவிட் மற்றும் பென்ஜி இப்போது பிரிந்து வாழ்கிறார்கள். பாட்டியின் கடைசி ஆசையே அவர்களை ஒன்றுசேர்க்கிறது. தங்கள் குடும்பத்தின் துயர வரலாற்றையும், சொந்த கலாச்சார வேர்களையும் தேடி அவர்கள் போலந்தில் மேற்கொள்ளும் பயணம் இருவருக்குமான உறவை ஆழமாக்குகிறது. பென்ஜி எவ்வளவு அற்புதமான மனிதன் என்பதை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது.
விமான நிலையத்திலே பென்ஜி வேறுபட்டவன். சுதந்திர மனப்பாங்கு கொண்டவன் என்பது புரிந்துவிடுகிறது. அவன் விமான நிலையப் பரிசோதனை அதிகாரிகளிடம் நடந்து கொள்ளும் விதம் நல்ல உதாரணம். அவனுக்கு நேர் எதிராகப் படபடப்பும் அவசரமும் கொண்டவன் டேவிட். தனக்குத் தானே பேசிக் கொள்கிறவன். வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறவன். ஆனால் தனக்குள் தீராத தனிமை கொண்டவன்.

பயணத்தின் ஊடாக டேவிட்டின் அகம் திறந்து கொள்கிறது. அவன் இந்நாள் வரை மறைத்து வைத்த வலிகள் வெளிப்படுகின்றன. அவற்றைப் பென்ஜி சரியாகப் புரிந்து கொள்கிறான். ஆற்றுப்படுத்துகிறான்.
எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் பென்ஜி யூத நினைவிடத்தில் சட்டென மாறிவிடுகிறான். இறந்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என வழிகாட்டி ஜேம்ஸ்க்கு கற்றுத் தருகிறான். கடந்தகாலத்தின் துயரம் என்பது வெறும் செய்தியில்லை. அது ஆறாத வடு என்பதை உணர்த்துகிறான்.
இது போல யூதப்படுகொலை நடந்த முகாம்களை, நினைவிடங்களைக் காணுவது என்பது இன்று ஒரு இன்பச்சுற்றுலா. வணிகம். அதுவும் வசதியான யூதர்கள் மேற்கொள்ளும் பயணம். இது போன்ற விசேச சுற்றுலாக்களை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதைப் படத்தில் கேலியாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

வழிகாட்டியாக வரும் இளைஞனுக்கு யூதப்படுகொலையும் அது சார்ந்த இடங்களும் அவன் படித்துத் தெரிந்து வைத்திருந்த தகவல்களே. அவற்றை மிகையான குரலில் அவன் வெளிப்படுத்தும் போது பென்ஜி கோபம் கொள்கிறான். எங்கே அவனது வழிகாட்டுதல் தேவையற்றது என்பதைப் புரிய வைக்கிறான். அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் அபாரமானது.
பயணத்தின் ஊடே பாட்டியின் வீட்டினைத் தேடி கண்டுபிடிக்கிறார்கள். அது பூட்டிக்கிடக்கிறது. அதில் யாரோ குடியிருக்கிறார்கள். தாங்கள் வந்து சென்றதன் நினைவாக அந்த வீட்டின் வாசலில் ஒரு கல்லை வைக்கிறார்கள். கல் என்பது நினைவின் உறைந்த வடிவமாகிறது. பக்கத்து வீட்டில் வசிப்பவர் அவர்களின் இச் செயலுக்காகக் கோவித்துக் கொள்கிறார். அவரது மகன் அதனைப் புரிந்து கொள்கிறான். டேவிட் மற்றும் பென்ஜி கல்லை மலராக மாற்றிய அந்தக் காட்சி என் மனதில் தங்கிவிட்டது.
பென்ஜியும் டேவிட்டும் மேற்கொள்ளும் ரயில் பயணம் அழகானது. முதல்வகுப்புப் பெட்டியில் பயணிக்கும் போது ஏற்படும் குற்ற உணர்வும், தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தைத் தவறவிட்டு மேற்கொள்ளும் பயணமும் சிறப்பானது. யூத வரலாற்றில் ரயில் என்பது ஒரு அடையாளச் சின்னம். யூதர்களைக் கூட்டம் கூட்டமாக ரயிலில் ஏற்றிக் கொண்டு போய் முகாமில் அடைத்து வன்கொலை செய்தார்கள் என்பது வரலாறு.
கடந்த காலத்தின் வலியை நாம் சுமந்து கொண்டேயிருக்க வேண்டுமா. அல்லது அதை மறந்துவிடலாமா. இன்றைய வாழ்க்கையில் நாம் பிறரது வலியை சுமக்கத் தயாராக இருக்கிறோமா. என்ற கேள்விகளைப் படம் எழுப்புகிறது.
போர் வீரர்களின் நினைவுச்சின்னத்தின் முன்பாக டேவிட் பதட்டமான மற்றும் பயபக்தியான மனநிலையைப் பேணுகையில், பென்ஜி சிலைகளுக்கு இடையில் நின்று வேடிக்கையான செல்ஃபிக்குப் போஸ் கொடுக்கிறான். வரலாற்றின் வீரம் இன்றும் வெறும் காட்சிப் பொருளே.
எந்தவொரு புதிய இடத்திலும் நண்பர்களை உருவாக்கும் முதல் நபர் பென்ஜியே ஆனால் படத்தின் முடிவில் அவன் தனது தனிமைக்கே திரும்புகிறான். அது ஊர் திரும்பும் டேவிட்டை வேதனைப்படுத்துகிறது. பயணத்தின் முடிவில் டேவிட் வீடு திரும்புவது அழகான காட்சி. பயணம் அவனைப் புதிய மனிதனாக்கியிருக்கிறது.

ஒரு காட்சியில் வதைமுகாமின் சுவரில் படிந்துள்ள விஷ வாயுவால் ஏற்பட்ட கறையைக் காண்கிறோம், . முகாமில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் செருப்புகள் நிரப்பட்ட பெட்டகத்தைக் காணுகிறோம். யூதப்படுகொலையின் துயரை அந்தக் காட்சித்துண்டுகள் முழுமையாக உணர்த்திவிடுகிறது.
பென்ஜியைப் போல வாழ்க்கையை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும், அடுத்தவருடன் பழகவும் உதவி செய்யவும் முடியும் என்பதை டேவிட் நன்றாக உணர்ந்து கொள்கிறான். மனதில் இருந்த நீண்ட கால வலியிருந்து விடைபெறுகிறான்.
இந்தப் பயணத்தில் வரும் ஒவ்வொருவரும் ஒரு வகை வலியின் அடையாளமே.
பென்ஜியால் அடுத்தவரின் துயரை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் மகிழ்ச்சிப்படுத்த முடிகிறது. அவன் தனது நிகழ்காலத்தை மகிழ்ச்சியின் நற்கணங்களாக மாற்றுகிறான். ஆனால் அவனுக்காக யாருமில்லை. குடும்பமில்லை. தனித்துச் செல்லும் பறவையைப் போலவே விடைபெறுகிறான். அது தான் உண்மையான வலி போலும்.
••
March 25, 2025
குற்றமுகங்கள் -7 நூபுரன்
மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் ரயில் சேவை ஜூலை 1, 1856 அன்று ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது. 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுச் சுமார் மூன்றரை மணி நேரம் பயணத்தின் பின்பு வாலாஜாவை அடைந்தது. ரயிலின் வரலாறு இதுவாக இருந்தாலும் ரயிலில் பிறந்த முதல் குழந்தையின் வரலாறு 1894ல் துவங்குகிறது.

நூபுரன் தான் ரயிலில் பிறந்த முதல் குழந்தை. அவனது அம்மாவின் பெயர் தனராணி. ஒடும் ரயிலில் நடந்த பிரவசமது. ரயிலில் யார் பிரவசம் பார்த்தது என்று தெரியவில்லை. ஆனால் ரயிலின் ஓசையே நூபுரன் கேட்ட முதல் சப்தம்.
ரயிலில் பிறந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் என்று பயணிகளில் ஒருவர் சொன்னார். தனராணி அதை நம்பவில்லை. ரயிலில் குழந்தை பிறந்தது அதிர்ஷ்டமில்லை என்று மட்டும் நம்பினாள்.
மாட்டுவண்டிகள் செல்வதற்கே சரியான பாதையில்லாத அவளது சொந்த கிராமமான தென்வடலில் அவனை வளர்த்தாள். ரயிலில் பிறந்த நினைவு நூபுரனுக்குள் இருந்திருக்கக் கூடும். அவன் சிறுவனாக இருந்த போது ஒரு இடத்தில் நிற்காமல் ஒடிக்கொண்டேயிருந்தான்.
தனது பத்தாவது வயதில் அவன் நேரில் ரயிலைப் பார்த்த போது அது தன்னுடைய பிறந்த வீடு என்றே உணர்ந்தான். கனத்த இரும்பின் சப்தம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. ரயிலின் கூடவே அவனும் ஒடினான். ரயிலின் வேகத்தில் இணைந்து ஒட தனக்கும் இரும்பாலான கால்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டான். ரயிலின் கரும்புகை அவனை ஏக்கம் கொள்ள வைத்தது.
ஊர் திரும்பிய நூபுரன் ரயிலைப் போலவே சப்தமிட்டான். அதன் பிந்திய நாட்களில் ரயில் நம்முடையது தானா என அம்மாவிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவனைச் சமாதானப்படுத்த அம்மா அது உன்னுடைய சொத்து என்றாள்.
நூபுரன் அதை முழுமையாக நம்பினான். தனக்குரிய ரயிலை தானே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது பதினைந்தாவது வயதில் வீட்டைவிட்டு ஒடிப் போனான்.
அதுவே அவனது முதல் ரயில் பயணம். அதன் பிறகான ஆண்டுகளில் எத்தனையோ ரயில்களில் எங்கெங்கோ பயணம் செய்துவிட்டான். எதற்கும் டிக்கெட் வாங்கியது கிடையாது. எந்த ரயில் நிலையத்திலும் இறங்கிக் கொள்வான். டிக்கெட் கேட்கும் பரிசோதகரிடம் தான் ரயிலில் பிறந்தவன் என்று வாதிடுவான்.
“உங்கப்பனா ரயிலை விட்டிருக்கிறான். தண்டம் கெட்டு“ என அவர்கள் சண்டையிடும் போது நூபுரன் வெறும் கையை விரித்துக் காட்டுவான். ரயில் தான் அவனைக் குற்றம் செய்ய வைத்தது. தனது முதல் திருட்டை அவன் நிகழ்த்தியது ரயிலில் தான்.
ரயிலில் பயணம் செய்கிறவர்கள் ஈரத்துணி தரையில் கிடப்பதைப் போல நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். பெரிய தொட்டில் ஒன்றில் உறங்கும் குழந்தையைப் போலத் தன்னை உணருகிறார்கள். ரயிலின் வேகத்தில் காற்று முகத்தில் ஏற்படுத்தும் குறுகுறுப்பின் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆண்களை விடவும் பெண்களை ரயில் அதிக சந்தோஷப்படுத்துகிறது என்பதை நூபுரன் கண்டறிந்தான்.
ரயிலில் ஏறியதும் மனிதர்கள் தன் இயல்பை மீறி நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களின் குரல் மாறிவிடுகிறது. தனது வாழ்க்கை நிகழ்வுகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளத் துவங்கிவிடுகிறார்கள். ரயில் பயணம் என்பது பலநூறு நடிகர்கள் ஒரே மேடையில் தோன்றி நடிக்கும் நாடகம்.
சில பயணிகளின் அலட்சியம் மற்றும் அதிகாரம் தான் அவர்களின் பொருளை திருடும்படியாக நூபுரனைத் தூண்டியது. பெரும்பாலும் அவன் பகலில் தான் திருடுவான். அதுவும் திருடிய பொருளோடு ஒடும் ரயிலில் இருந்து குதித்து விடுவான். அது ஒரு சாகசம். அப்படித் தாவிக் குதிக்கும் போது கவண் கல்லில் இருந்து கல் பறப்பது போன்ற இன்பத்தை அடைந்தான்.
மோதிரம், செயின், பயணப்பெட்டிகள், கூஜா, கைகடிகாரம், வெண்கல பானை, எனத் திருடிய அவன் ஒருமுறை ஜேம்ஸ் ஏ. காக்ஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் தொப்பி மற்றும் துப்பாக்கி இரண்டினையும் திருடிச் சென்றான்.
அந்த நாட்களில் ரயில்வே நிறுவனங்கள் பயணிகளின் சொத்துக்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாக்க தங்களுக்கென “வாட்ச் அண்ட் வார்டு” ஊழியர்களைக் கொண்டிருந்தன, அவர்களால் திருட்டை தடுக்க முடியவில்லை.
நூபுரன் தன்னை நித்ய ரயில் பயணியாகக் கருதினான். உறங்குவது என்றால் கூடச் சிறிய ரயில் நிலையம் ஒன்றின் கடைசி இருக்கையினையே தேர்வு செய்தான். ரயில் நிலையத்தில் கிடைக்கும் உணவிற்கு என்றே ஒரு ருசியிருக்கிறது. ரயில் நிலையக்காற்று என்றும் இருக்கிறது. அதை வேறு இடங்களில் உணர முடியாது.
இந்த நாட்களில் தன்னைப் போல ரயில் திருடர்களாக இருக்கும் பலரை அவன் கண்டுகொண்டான். அதில் இருவர் பெண்கள். அவர்கள் திருமண வீட்டிற்குப் போவது போல மிக அழகாக ஒப்பனை செய்து கொண்டு ரயிலில் ஏறுவார்கள். பயணிகளுடன் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். எவரும் அவர்களைச் சந்தேகம் கொள்ள முடியாது. உறங்கும் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகளை, கைவளையல்களைத் திருடிக் கொண்டு நழுவி விடுவார்கள்.
நூபுரன் அந்தப் பெண்களுடன் ஸ்நேகமாக இருந்தான். அவர்களில் ஒருத்தி புளிப்பு உருண்டை சாப்பிடுவதில் விருப்பம் கொண்டிருந்தாள். சிறிய உருண்டை புளியை எப்போதும் வாயில் ஒதுக்கிக் கொண்டிருப்பாள். ஒருமுறை அவன் மீதான அன்பில் அந்த எச்சில் புளி உருண்டையை நூபுரனுக்குக் கொடுத்தாள். பல்கூசும் புளிப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது அவன் முகம் போன போக்கை பார்த்து அவள் சிரித்தது நூபுரனால் மறக்க முடியவில்லை.
பணப்பெட்டி துவங்கி வரை பழக்கூடைகள் ரயிலில் பல்வேறு வகையான பொருட்கள் திருட்டுப் போனது. நூபுரன் யாரோடு இணைந்தும் திருட்டில் ஈடுபடவில்லை. திருடிய நகையைத் துளையிடப்பட்ட இளநீர் ஒன்றுக்குள் வைத்து ரயிலில் இருந்து நூபுரன் வீசி எறிந்துவிடுவான். மறுநாள் பகலில் அதை எடுத்துக் கொள்வது வழக்கம்.

மதராஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்து வழக்கு ஒன்றுக்காக ராவ் பகதூர் வேதலாசம் அடிக்கடி ரயிலில் போய் வருவதுண்டு. அவரது தலைப்பாகையில் வைரக்கல் பதிந்திருக்கும். ரயில் பயணத்திலும் அதை அணிந்திருப்பார். பயணத்தின் போது அவருடன் இரண்டு வேலையாட்கள் ஒரு கணக்குபிள்ளை உடன்வருவார்கள் பயணத்திற்கென பட்டுத் தலையணை, படுக்கை, விசிறி, வெள்ளி கூஜாவில் பசும்பால் கொண்டு வருவார்கள். ராவ் பகதூரின் வேலையாட்கள் ரயில்பெட்டியில் தரையில் தான் அமர வைக்கபட்டார்கள்.
அவரது தலைப்பாகையை நூபுரன் கொள்ளையடித்துச் சென்றது செய்திதாள்களில் கூட இடம்பெற்றது. ஒரு முறையில்லை. ஐந்து முறைகள் ராவ் பகதூர் வேதாசலத்தின் பொருட்களை நூபுரன் கொள்ளையடித்திருக்கிறான். அத்தனையும் அவரது வேறுவேறு ரயில் பயணத்தில்.
ஒரு முறை அவர் கைதுப்பாக்கியுடன் பயணம் செய்தார். காவலுக்கு நான்கு ஆட்களையும் வைத்திருந்தார். நூபுரன் எப்படித் திருடினான் என்று எவருக்கும் தெரியவில்லை. அந்த முறை அவர் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைநாண் களவு போயிருந்தது.
பாம்புப்பிடாரன் போல வந்து நூபுரன் அதைத் திருடிச் சென்றான் என்றும் அவனது மகுடிக்குள் திருடிய வெள்ளி நாணை மறைத்துக் கொண்டு விட்டான் என்றும் சொல்கிறார்கள்
வெள்ளைகார துரைகளிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ராவ்பகதூர் திருடனைத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போதும் நூபுரனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது தலைக்கு ஆயிரம் ரூபாய்த் தருவதாகக் கூட அறிவித்தார்கள்.
இந்தத் தொடர் திருட்டுகள் தனக்கு இயற்கை விடுகிற எச்சரிக்கை என்பது போல உணர்ந்த ராவ்பகதூர் தான் வழக்காடிக் கொண்டிருந்த கேஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஒன்பது வருஷங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சொத்துவழக்கு நொடித்துப் போய்க் கடனில் மூழ்கியிருந்த ஆறுமுகத்தின் பக்கம் ஜெயமாகியது.
நூபுரனை பிடிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து பனிரெண்டு துப்பாக்கி வீர்ர்கள் வரவழைக்கபட்டார்கள். அவர்கள் மாறுவேஷத்தில் பயணிகள் போல ரயிலில் சென்றார்கள். சந்தேகப்படுகிறவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தார்கள். இதில் நூபுரன் எந்த ரயிலில் வைத்து அவர்களிடம் அகப்பட்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் ரயிலில் இருந்து தப்பிக் குதிக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டான்.
இறந்து கிடந்த அவனது உடல் இரண்டு நாட்களுக்குத் தண்டவாளத்தின் ஓரத்தில் கிடந்தது. மூன்றாம் நாளில் உடலை ஒலைப்பாயில் சுருட்டி கூட்ஸ் ரயிலில் கொண்டு போனார்கள் எனக் கான்ஸ்டபிள் ஃபிரைட்மேன் தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார். அவன் ரயிலில் பிறந்தவன் என்ற தகவல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
முர்ரே ஹாமிக் மதராஸின் காவல்துறை ஆணையராக இருந்த போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கபட்டிருக்கிறது.
••
March 23, 2025
நாவல்வாசிகள்
இந்து தமிழ் திசை நாளிதழில் நாவல்வாசிகள் என்ற புதிய தொடரை ஆரம்பிக்கிறேன்.
அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
March 21, 2025
குற்றமுகங்கள் 6 லாப்பன்
1828 இல் லண்டன் காவல்துறை போலீஸ் கெஜட் என்றொரு பத்திரிகையைத் துவக்கியது அதில் இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் தேடப்படும் குற்றவாளிகளின் முழு விவரங்களைச் சித்திரங்களுடன் வெளியிட்டது. அத்துடன் விசித்திரமான குற்றங்கள் மற்றும் அது தொடர்புடைய நம்பிக்கைள். சடங்குகள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டார்கள். அக்டோபர் 1834ல் வெளியான இதழில் மதராஸ் தொடர்புடைய ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது

அது லாப்பனைப் பற்றியது.
திருடர்கள் அதிர்ஷ்டத்தை உறுதியாக நம்பினார்கள். எந்தப் பொருளை எந்த நாளில் எந்த நேரத்தில் திருட வேண்டும் எத்தனை பேர் சேர்ந்து திருட்டிற்குப் போக வேண்டும். தப்பிப் போவதாக இருந்தால் எந்தத் திசையில் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதற்காகவே அவர்கள் லாப்பனை நாடினார்கள்.
லாப்பனுக்கு எழுபது வயதிருக்கும். கோரையான தாடி. உடைந்த முன்பற்கள். மஞ்சள் படிந்த கண்கள். அவனது கைகள் சதா நடுங்கிக் கொண்டேயிருந்தன.
லாப்பன் திருடர்களுக்கான நாள்காட்டி ஒன்றினை உருவாக்கியிருந்தான். அது கிரக சஞ்சாரங்கள் மற்றும் திருடர்களின் வாய்மொழியிலிருந்து உருவாக்கபட்டது என்றார்கள்.
லாப்பன் திருடனில்லை. அவன் மதராஸ் காய்கறி சந்தையில் குப்பைகளைச் சுத்தம் செய்பவனாகத் தனது பனிரெண்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தான். சந்தை அவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. குறிப்பாக ஜனங்களை ஏமாற்றும் சிறுதந்திரங்களை, இனிப்பு பேச்சுகளை மற்றும் விநோத நம்பிக்கைகளை.
சில ஆண்டுகளிலே லாப்பன் சந்தையில் தனியே கடை போட்டுவிட்டான். அதிர்ஷ்டம் அவனுக்குத் துணை நின்றது. வியாபாரத்தில் கிடைத்த பணத்தை அங்குள்ள சிறுவணிகர்களுக்கு வட்டிக்குக் கொடுத்தான். அதிலும் வருவாய்ப் பெருகியது. லாப்பன் முதலாளி என்று அவனை அழைக்க ஆரம்பித்தார்கள். சந்தையில் ஒரு வரிசை முழுவதும் லாப்பனின் கடைகளே இருந்தன.
லாப்பன் காய்கறி சந்தைக்குள் ஒரு கோவிலைக் கட்டினான். சந்தைவாசிகள் மட்டுமின்றி வெளியிலிருந்தும் ஆட்கள் வந்து அந்தக் கோவிலை வணங்கிப் போகத் துவங்கினார்கள். சந்தை வணிகர்கள் தங்கள் முதல் விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கோவிலுக்குக் கொடுத்தார்கள். அக் கோவில் கட்டியது லாப்பனுக்குப் பெரிய புகழை உருவாக்கியது. அந்த மகிழ்ச்சியில் கோவிலுக்குத் தங்க வாகனம் வாங்கிக் கொடுத்தான் லாப்பன்.
இப்படிப் பணமும் புகழுமாக லாப்பன் இருந்த நாட்களில் லாப்பனின் மனைவி என்று சொல்லிக் கொண்டு ஒரு இளம்பெண் சந்தைக்கு வந்து கடையாட்களிடம் பணம் வசூலிக்கத் துவங்கினாள்.

பிரமிக்க வைக்கும் அழகை கொண்டிருந்த அவளைப் பார்த்து வியந்த கடைக்காரர்கள் இவளை எப்படி லாப்பன் திருமணம் செய்து கொண்டான் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவளிடம் லாப்பனுக்குத் தர வேண்டிய பணத்தைத் தந்தார்கள். அவளது நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டியில் கூடை கூடையாக மாம்பழங்களை ஏற்றினார்கள்.
அன்று மாலை லாப்பனுக்கு விஷயம் தெரிய வந்தது. தனக்குத் திருமணமே ஆகவில்லை. இது ஒரு மோசடி என லாப்பன் கொதித்துப் போனான். அந்தப் பெண் யார் என்று தேட ஆரம்பித்தான்.
அவள் காய்கறி சந்தையில் மட்டுமின்றி, ஜவுளிக்கடை, நகைகடை எனப் பல இடங்களில் லாப்பனின் பெயரைச் சொல்லி தேவையானவற்றை வாங்கிக் கொண்டு போனாள். அவளுடைய ஒளிரும் அழகையும் பேச்சின் வசீகரிக்கும் தன்மையை எல்லோரும் வியந்தார்கள்
ஆத்திரம் தாங்க முடியாத லாப்பன் அவளை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் எனத் தனது ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்களால் அந்தப் பேரழகியை கண்டறிய முடியவில்லை
ஒரு வெள்ளிக்கிழமை அவள் லாப்பன் கடையின் முன் வந்து நின்றாள். அப்படி ஒரு மயக்கும் அழகியை லாப்பன் கண்டதேயில்லை. அவள் சொல்லும் பொய்யை ஏற்றுக் கொண்டுவிடலாம் என்பது போலிருந்தது. அவள் லாப்பனிடம் கைகளை நீட்டி வீட்டிற்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டாள். லாப்பன் நீட்டிய கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான்
“உன்னை எப்போது திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்“
அவள் சிரித்தபடியே லாப்பனின் இடுப்பில் இருக்கும் மச்சத்தைப் பற்றிச் சொன்னாள். கூடவே லாப்பனை அவள் திருமணம் செய்து கொண்டதற்கான சாட்சிகளாக இருவர் தன்னோடு வந்திருப்பதாகத் தெரிவித்தாள்.
அந்த இருவர் லாப்பனின் கடைக்கு வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் லாப்பன் தங்கள் சகோதரியை எங்கே எப்போது திருமணம் செய்து கொண்டான் என்று சாட்சியம் சொன்னார்கள். சந்தை அதனை நம்பியது. லாப்பன் அந்தப் பொய்யை உண்மையாக்க விரும்பி அவளை ஊர் அறிய மனைவியாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான்.
அவள் அதற்குச் சம்மதம் தெரிவிப்பது போலக் கூடையில் இருந்த கொய்யாப்பழம் ஒன்றை பாதிக் கடித்து மீதியை அவனிடம் நீட்டினாள். லாப்பன் அந்தக் கனியை உண்டான். அது அவனது விதியை மாற்றி அமைத்தது. அந்தப் பெண் லாப்பனின் கையைப் பற்றிக் கொண்டு சந்தையிலிருந்து தனது கோச் வண்டியை நோக்கி சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். பின்பு லாப்பன் திரும்பி வரவில்லை.
எங்கே சென்றான். என்ன ஆனான் என்று தெரியவில்லை. லாப்பனின் கடைகளை அதில் வேலை செய்வதர்களே எடுத்துக் கொண்டார்கள். லாப்பன் கட்டிய கோவிலையும் கைவிட்டார்கள். சந்தை கொஞ்சம் கொஞ்சமாக லாப்பனை மறந்து போனது. புதிய வணிகர்கள் சந்தையில் தோன்றினார்கள்.

நீண்ட பல வருஷங்களுக்குப் பின்பு அந்தச் சந்தைக்கு ஒட்டி உலர்ந்து போன வயிற்றுடன் ஒரு கிழவன் வந்திருந்தான். அவன் கூட ஒரு நாய்க்குட்டி. அது லாப்பன் என எவருக்கும் தெரியவில்லை. அவன் தனது பழைய கடைகள் உருமாறியிருப்பதைப் பார்த்தான். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்றே விரும்பினான். ஆனால் சந்தையில் நாவற்பழம் விற்கும் ரஞ்சிதம் என்ற பெண் அவனை அடையாளம் கண்டுவிட்டாள். அவள் அதிர்ச்சியோடு கிழவனைப் பார்த்து சொன்னாள்
“லாப்பன் முதலாளி. “
அது தான் இல்லையென்று லாப்பன் தலையாட்டினான். ஆனால் அவள் விடவில்லை. சந்தையே கேட்கும்படி சப்தமிட்டாள். அது லாப்பன் தானா. ஏன் இப்படி உருக்குலைந்து போனான் என வியாபாரிகள் ஒன்றுகூடி அவனை வெறித்துப் பார்த்தார்கள்.
லாப்பனுடன் நெருங்கிய பழகிய மயூரன் என்ற வணிகன் மட்டும் கேட்டான்
“அந்த பெண் உன்னை ஏமாற்றிவிட்டாளா“
“இல்லை. நான் விரும்பி ஏமாந்துவிட்டேன்“.
“யார் அவள். ஏன் உன்னை இப்படிப் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டாள். “
லாப்பன் நடுங்கும் குரலில் சொன்னான்
“அது தான் எனக்கும் புரியவில்லை. எது அவளை என்னை நோக்க வர வைத்து. ஏமாற்ற வைத்தது. அவள் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவளுடன் வந்தவர்களும் திருடர்கள். நான் திருடர்களின் கூட்டத்தில் முப்பது ஆண்டுகளைச் செலவு செய்துவிட்டேன். பூனை தனது குட்டியை கவ்வி கொண்டு போவது போல அவள் என்னைக் கவ்விக் கொண்டுவிட்டாள். என்ன மயக்கம் என்று புரியவேயில்லை. சுடரை காற்று விழுங்கிக் கொள்வதைப் போல அவள் என்னை விழுங்கிக் கொண்டுவிட்டாள். என்னால் அவளிடமிருந்து விடுபடவே முடியவில்லை“
“இப்போது எப்படி வந்தாய். அவள் எங்கே“
“பத்து ஆண்டுகளுக்கு அவள் இறந்துவிட்டாள். அதுவும் கருநாகம் கடித்து“.
சாவதற்கு முன்பாக அவள் எனது கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னாள்
“நான் உயிரோடு இருக்கும் போதே ஒடிவிடு. “
அவசரமாக எழுந்து ஒடினேன். அவளது குரல் கேட்டால் கூடத் திரும்பி விடுவேனோ எனப் பயமாக இருந்தது. வட இந்தியாவில் ஊர் ஊராக ஒடிக் கொண்டேயிருந்தேன். நிற்காத ஒட்டத்தின் முடிவில் இங்கே வந்திருக்கிறேன்.
அவன் சொல்லியதைக் கேட்டு சந்தை திகைத்துப் போனது. அவன் தன்முன்னிருந்தவர்களைப் பார்த்து கேட்டான்.
“நான் ஏன் அந்தப் பெண்ணோடு கடையை விட்டு வெளியேறி போனேன். உங்களில் யாராவது பதில் சொல்லுங்கள்“.
எவரிடமும் பதில் இல்லை. லாப்பன் அதன்பிறகு சந்தையை விட்டு போகவில்லை. அங்கேயே வசிக்க ஆரம்பித்தான்.
திருடர்களோடு வாழ்ந்த அனுபவத்திலிருந்து லாப்பன் ஒரு நாட்காட்டியை உருவாக்கினான். அந்த நாட்காட்டியின் உதவியைக் கொண்டு திருடர்களின் நிமித்திகனாக உருமாறினான்.
தன்னை ஏமாற்றிய வஞ்சகம் செய்த திருடர்களுக்கு ஏன் நாள் குறித்துக் கொடுத்தபடி இருக்கிறான் என்று எவருக்கும் புரியவில்லை. அந்தப் பெண் கொடுத்த முத்தம் அவன் தலையில் விஷமாக ஏறியிருக்கிறது. அதை மாற்றவே முடியாது. லாப்பனின் விதியை அந்தப் பெண் எழுதி முடித்துவிட்டாள் என்றார்கள்.
லாப்பன் இறந்த போது அவனது பெட்டியிலிருந்த திருடர்களின் நாட்காட்டியை திறந்து பார்த்தார்கள். அது தோலில் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். அதில் எதுவும் எழுதப்படவில்லை. வெற்றுக் காகிதங்கள். லாப்பன் திருடர்களின் நாட்காட்டியை தனது மனதில் வைத்திருந்தான் என்கிறார்கள். நிஜம் தானா என்று தெரியவில்லை.
லாப்பனின் நாட்காட்டியைப் பற்றிப் போலீஸ் கெஜட்டில் எழுதிய ஜோ.மார்டின் இது முற்றிலும் கற்பனை கதையாகவும் இருக்கக் கூடும் என்கிறார். திருடர்களின் வசிப்பிடம் கதை தான் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.
••
March 17, 2025
குற்ற முகங்கள் – 5 மூன்றாந்தரன்
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் திருடர்களுக்கென ஒரு நாடக அரங்கம் மதராஸில் இருந்தது. அதன் நடிகர்கள் யாவரும் திருடர்களே. பார்வையாளர்களும் திருடர்களாகவே இருந்திருக்கக் கூடும்.
அந்த நாடகம் நடத்தப்படும் இடமும் நேரமும் ரகசியமாக அறிவிக்கபடும். அந்த இரவில் திருடர்கள் ஒன்று கூடுவார்கள். ஆண்களே பெண் வேஷமிட்டு நடித்த அந்த நாடகம் பெரும்பாலும் வேடிக்கையான கதையைக் கொண்டிருந்தது. குறிப்பாக வெள்ளைக்கார துரை மற்றும் அவரது மனைவி அல்லது காதலி பற்றிய கதைகளே நிகழ்த்தப்பட்டது.

இந்த நாடகங்களை எழுதிய நாடக ஆசிரியர் யார் எனத் தெரியவில்லை. உண்மை சம்பவங்களின் தொகுப்பாகவே அந்த நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக லெய்மன் துரையின் விருந்து என்ற நாடகம் புகழ்பெற்றது. அந்த நாடகத்தில் லெய்மன் என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஒரு நாள் தனது வீட்டிற்கு நகரிலுள்ள ஐந்து பிச்சைகாரர்களை விருந்திற்கு அழைக்கிறான்.
இந்த விருந்தில் கலந்து கொள்ளப் பிச்சைகாரர்களுக்குள் ஒரு போட்டி வைக்கிறான். அதில் வென்றவர்கள் மட்டுமே விருந்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். அப்படித் தேர்வாகி வந்த ஐந்து பிச்சைகாரர்கள் லெய்மன் துரையின் மனைவி கேத்தரின் மீது ஆசை கொண்டு, அவனைக் கட்டிப் போட்டு அவன் முன்னால் அவளிடம் ஆசை வார்த்தை பேசுகிறார்கள். லெய்மன் துரையின் மனைவியை அடைவதில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி எப்படிக் கொலையில் முடிகிறது என்பதே நாடகம்
இந்த நாடகம் முழுக்கக் கேலியும் கிண்டலும் நிரம்பியது. கேத்தரினாக நடிப்பதற்குத் தான் போட்டி. அவளைப் போலவே பூவேலைப்பாடு கொண்ட தொப்பி, கவுன் அணிந்து கையில் விசிறியோடு நடிகர் மேடைக்கு வரும் போது பார்வையாளர்கள் விசில் அடித்துக் கொண்டாடுவார்கள்.
லெய்மன் துரையின் முன்னால் அவனது மனைவியைக் காதலிப்பதில் ஏற்படும் போட்டி வேடிக்கையின் உச்சமாக இருக்கும் என்றார்கள். குடிபோதையில் கேத்தரின் ஆடும் நடனம். லெய்மன் துரையின் மீது குதிரேயற்றம் செய்யும் பிச்சைகாரனின் வேடிக்கை. அந்த வீட்டின் தாதியாக இருந்த கிழவியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகப் பிச்சைகாரன் எடுக்கும் முடிவு எனத் தொடர் சிரிப்பலையை உருவாக்கும் நாடகம் திருடர்களுக்கு மிகவும் விருப்பமானது
திருடர்கள் குடும்பக் கதைகளை விரும்புவதில்லை. காதல் கதையை விடவும் பெண்ணைத் தூக்கிச் சென்று அடையும் கதைகளை அதிகம் விரும்பினார்கள். அரசர்களின் முட்டாள்தனத்தையும், வணிகர்களின் பேராசையினையும் பற்றிய நாடகங்களே அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன.
இந்த நாடகம் எங்கே நடக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டால் கூண்டோடு திருடர்களைப் பிடித்துவிடலாம் எனக் காவல் படையினர் தேடியலைவதுண்டு. சில தடவை பொய்யாக அவர்களே ரகசியமான ஒரு இடத்தில் நாடகம் நடக்கப்போவதாக அறிவிப்பு செய்தும் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பொறியில் திருடர்கள் மாட்டவேயில்லை.
திருடர்களின் நாடகத்தில் கோமாளி கிடையாது. வெள்ளைக்கார அதிகாரி தான் கோமாளி. ஒரு காட்சியில் மேடையிலே அவன் அணிந்திருந்த ஆடைகளைப் பிடுங்கி நிர்வாணமாக ஆட விடுவார்கள். புட்டத்தில் சவுக்கடி விழும். அப்போது எழும் சிரிப்பொலி அரங்கையே உலுக்கிவிடும்.
திருடர்களின் நாடக அரங்கில் சில விநோத நடைமுறைகள் இருந்தன. அவர்கள் நடிப்பதாகச் சொல்லி மேடையிலே குடிப்பார்கள். நிஜமாகச் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒரு முறை நிஜக்கத்தியால் ஒருவனை நிஜமாகக் குத்தியதும் நடந்திருக்கிறது. பார்வையாளர்களில் ஒருவர் திடீரென நாடகத்திற்குள் பங்கேற்பதும் உண்டு. ஆபாச பேச்சுகளும் வசைகளும் அடிதடிகளும் நிறைந்த அந்த நாடகம் அவர்களுக்குப் புதுவகையான போதையாக இருந்தது
எவ்வளவு சண்டை கூச்சல்கள் வந்தாலும் நாடகம் பாதியில் நிற்காது. முழுமையாக நடந்தேறவே செய்யும். நாடகத்தின் முடிவில் அதில் சிறப்பாக நடித்த ஒருவருக்கு மூன்றாந்தரன் என்ற பட்டம் அளிக்கபடும். அவன் அந்த இரவில் நகரில் எங்கு வேண்டுமானாலும் திருடலாம். அவனைத் தவிர அன்று வேறு திருடர்கள் எவரும் திருட்டில் ஈடுபட மாட்டார்கள்.
அப்படி ஒருவன் லெய்மன் துரையாக நடித்துப் பார்வையாளர்களின் கைதட்டுகளை வாங்கி அன்றிரவு மூன்றாந்தரனாகத் தேர்வு செய்யப்பட்டான்.
அவனுக்கு இருபது வயதே ஆகியிருந்தது. கல்லால் செய்த உலக்கை போல உறுதியாக இருந்தான். வெள்ளைகாரர்கள் அணியும் கோட் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு தப்பும் தவறுமாக ஆங்கிலச் சொற்களை உளறும் போது அவனுக்கே மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தவன் தன் மனைவியைக் காதலிப்பதை லெய்மன் பாராட்டும் காட்சியில் அவன் உண்மையிலே பிச்சைக்காரனை முத்தமிட்டான். உதடினைக் கடித்துவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.

மரக்கட்டையில் செய்த சாவி ஒன்றை அவன் கையில் பரிசாகக் கொடுத்து நகரில் நீ விரும்பிய இடத்தில் விரும்பிய பொருட்களைத் திருடிக் கொள்ளலாம் என்று திருடர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.
மூன்றாந்தரன் அன்றிரவு நகரின் வீதி வீதியாகச் சுற்றியலைந்தான். பெரியதும் சிறியதுமான வீடுகள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. வானில் கலங்கிய நிலவு. எதைத் திருடுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.
வீடுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது அவனை அறியாமலே பரிவு ஏற்பட்டது.
பொம்மையின் கழுத்தில் உள்ள சங்கிலியை பறிப்பது வீரமா என்ன. இப்படி உறக்கத்திடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டு ஆழ்ந்து துயில் கொண்டுள்ள மனிதர்களின் பொருட்களை அறியாமல் திருடுவதில் என்ன சாகசமிருக்கிறது என்று யோசித்தான்.
அந்த ஊரில் உள்ள வீடுகள், கடைகள் யாவும் அவனுக்கு விளையாட்டுப் பொருட்கள் போலிருந்தன.
விடியும் வரை அவன் ஊரை சுற்றியலைந்தும் எதைத் திருடுவது தனக்கு என்ன தேவை என்று அவனால் கண்டறிய முடியவில்லை. சலிப்புற்றவனாக அந்த இரவு வேகமாக முடியட்டும் என வேகமாக நடந்தான்.
கலையாத இருளில் கடற்கரையின் மணலில் படுத்து அவன் உறங்கியும் விட்டான். நண்டு மணலில் ஊர்ந்து கொண்டிருப்பது போலப் பகலின் வெளிச்சம் மணலில் உறங்கும் அவன் மீது ஊர்ந்து கொண்டிருந்த போது அவன் திருடர்களில் ஒருவனாக எவருக்கும் தோன்றவில்லை
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

