S. Ramakrishnan's Blog, page 14

February 23, 2025

அன்றாடம் 1 நினைவின் பாடல்

அன்றாடம் ஏதோவொரு செய்தியோ, நிகழ்வோ மறக்கமுடியாதபடி மனதில் பதிந்துவிடுகிறது. சில நாட்கள் காலையில் தூங்கி எழுந்து கொள்ளும் போதே மனதில் ஒரு குறிப்பிட்ட திரைப்படப் பாடலின் வரி தோன்றி அந்தப் பாடலை கேட்க வேண்டும் என்ற ஆசையை உருவாக்குகிறது.  எதற்காக அப்பாடல் மனதில் தோன்றியது என அறிய முடியாது. ஆனால் பாடலைக் கேட்கும் போது மனது சந்தோஷம் கொள்கிறது. அப்போதேல்லாம் நிகழ்காலத்தில் ஒரு காலும் கடந்தகாலத்தில் ஒரு காலும் வைத்து நடப்பது போலவே தோன்றுகிறது.

இன்று காலையில் அப்படி தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க என்ற வரிகள் வந்து போயின. தண்ணிலவு என்ற சொல்லே குளிர்ச்சியாக இருந்தது. பாடலைக் கேட்டு முடியும் போது தாழை விழுது அசையும் காட்சி மனதில் தோன்றி மறைந்தது. மனதில் தண்ணிலவு தேனிறைக்க என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சுவைத்தபடியே இருந்தேன்.

எனது நடைப்பயிற்சியின் போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்திலுள்ள வீட்டின் பால்கனியில் கட்டிப்போடப்பட்டிருந்த நாயைக் கண்டேன். அந்த நாய் மண்தரை அறியாதது. தொட்டிச்செடியை போலவே அந்த நாயும் பால்கனியில் வளர்க்கிறது. ஆனால் தொட்டிச் செடியினைப் போல நாய் மௌனமாக இருக்க மறுக்கிறது. சாலையில் செல்லும் வாகனங்களை, பள்ளி சிறார்களை, வாக்கிங் போகிறவர்களை, பறக்கும் காகங்களைப் பார்த்து குரைத்தபடியே உள்ளது. அந்த நாயைப் பார்க்க மிகவும் பாவமாக உள்ளது. உணவு கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த நாய் பால்கனியில் வாழுகிறது. அதற்குத் தான் ஒரு நாய் என்பதே மறந்து போயிருக்கவும் கூடும். தெரு நாய்கள் எதுவும் பால்கனியில் வாழும் நாயைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை. யாரோ ஒரு வயதானவரின் துணையாக உடனிருக்கும் அந்த நாய் அந்தரத்தில் வாழுகிறது. பறவைகளைப் பார்த்துக் குரைக்கிறது பாவம். நகரம் மனிதர்களை மட்டுமில்லை நாய்களையும் அந்தரத்தில் நிறுத்தியிருக்கிறது.

••

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியனின் நேர்காணல் ஒன்றினைப் பார்த்தேன். 91 வயதைக் கடந்தவர். தனது அரசியல்வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது தான் இதுவரை பத்து லட்சம் பேருக்கும் மேலாகக் கைகுலுக்கியிருக்கிறேன் என்கிறார். நம் ஊரில் கைகுலுக்கும் பழக்கம் குறைவு. ஆனால் அரசியல்தலைவர்கள் பலருக்கும் வணக்கம் சொல்லியிருப்பார்கள். ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை என்பது இது போலப் பல்லாயிரக்கணக்கான முறை கைகூப்பி வணக்கம் செய்வது என்பது வியப்பளிக்கிறது.

எந்த அரசனும் எந்தக் கதவையும் தட்டியதேயில்லை. அதற்கான தேவையே கிடையாது. கதவை திறந்துவிட எப்போதும் சேவகர்கள் இருப்பார்கள் என்று படித்த போது அரசனைப் பற்றி எனக்குள்ளிருந்த பிம்பம் மாறியது.. அரசனின் தனிமையும் அரசனின் பயமும் சாமான்யன் அறியாதது. சாமானியனின் விலையற்ற சந்தோஷங்களைக் கொண்டவன்.

கனேடிய பிரதமர் பத்து லட்சம் கைகுலுக்கலில் எந்தக் கையை அவசரமாக உதறியிருப்பார். எந்தக் கையைப் பற்றிக் கொண்டதற்காக வருத்தப்பட்டிருப்பார். எந்தக் கைகுலுக்கல் மறையாத நினைவாக மிஞ்சியிருக்கும். எல்லாவற்றுக்கும் பின்னும் சொல்லப்படாத கதை ஒன்று ஒளிந்திருக்கிறது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2025 00:51

February 21, 2025

கற்பனை அலைகள்

இன்றைய இந்து தமிழ் நாளிதழில் கற்பனை அலைகள் குறித்த அறிமுகம் வெளியாகியுள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2025 23:36

புதுக்கோட்டையில்

பிப்ரவரி 22 சனிக்கிழமை புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அதில் மாரீஸ்வரி எனது தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை அறிமுகம் செய்து வைக்கிறார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2025 18:58

வெயில் வரைந்த ஓவியம்

புதிய சிறுகதை

சாலை ஓவியன் இறந்து கிடந்தான். அருகில் அவன் வரைந்த யானை ஒவியமிருந்தது. ஒவியனுக்கு நாற்பது வயதிருக்ககூடும். கோரையான தாடி. கழுத்துவரை நீண்ட தலைமயிர்.. அழுக்கடைந்து போன காக்கி பேண்டும், கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அவன் விழுந்துகிடந்த நிலை சாலையில் அவனே ஒவியமாகக் கிடப்பது போலிருந்தது.

பரபரப்பான மாநகரின் காலை நேரத்தில் அவனைக் கவனிக்க யாருமில்லை. பள்ளிச்சிறுவர்களில் இருவர் இறந்தவனின் அருகே குனிந்து பார்த்துவிட்டு செத்துப்போயிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். இறந்தவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பையன் தான் சவைத்துக் கொண்டிருந்த பபிள்கம்மை வாயிலிருந்து வெளியே எடுத்து இறந்தவனின் மீது ஒட்டினான்.

மற்ற சிறுவன் இறந்தவன் வரைவதற்காக வைத்த கலர் சாக்பீஸ்களில் ஒன்றை எடுத்து டவுசர் பையில் போட்டுக் கொண்டான். எதற்காகவும் இறந்தவன் கோவித்துக் கொள்ள முடியாதே என்பது போலிருந்தது அவர்களின் செய்கை.

அநேகமாக ஒவியன் இறந்தது விடிகாலையாக இருக்கக் கூடும். அவன் எப்போதும் பின்னிரவில் தான் ஓவியம் வரைவான். அதுவும் சாலையில் தபால்பெட்டி இருந்த இடத்தை ஒட்டி படம் வரைவதற்கான சட்டகம் போல ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தான். பெரும்பாலும் இயற்கை காட்சிகளையே அவன் வரைவதுண்டு. வண்ணசாக்பீஸ் கொண்டு வரைந்த ஒவியம் என்றாலும் புகைப்படத்தை விடத் துல்லியமாக இருக்கும்.

சிலர் அவசரமாகக் கடந்து செல்லும் போது ஓவியத்தை மிதித்துப் போவதும் உண்டு. அவர்களைக் கோவித்துக் கொள்ள மாட்டான்.

டெலிபோன் அலுவலகத்தில் வேலை செய்யும் சரளா என்ற கண்ணாடி அணிந்த பெண் மட்டும் அன்றாடம் அவன் வரையும் ஓவியங்களை நின்று ரசித்துப் பார்த்துவிட்டு சில்லறைக்குப் பதிலாக ஒரு சாக்லேட்டை வைத்துவிட்டுச் செல்வாள்.

ஓவியன் அந்தச் சாக்லேட்டை சாலையின் எதிர்புறத்தில் இருந்த பிளாட்பாரத்தில் வசித்த ஒரு சிறுமியிடம் கொடுப்பதற்காக அழைப்பான்.

மீனா என்ற அந்தச் சிறுமிக்கு பத்து வயதிருக்கும். கூழாங்கற்கள் போல வாளிப்பான கண்கள். வட்டமுகம். ரெட்டைச்சடை போட்டிருப்பாள். அவளது அப்பாவும் அம்மாவும் அதே சாலையில் பிச்சை எடுக்கிறவர்கள். சில நேரம் மீனாவும் சாலையில் நிற்கும் கார்களின் கதவை தட்டி கையேந்துவாள். அவர்கள் பிளாட்பாரத்திலே வசித்தார்கள்.

ஒரு மரப்பெட்டி. பத்து பனிரெண்டு அலுமினிய பாத்திரங்கள். கிழிந்து போன கம்பளி. இரண்டு போர்வைகள். யாரோ வீசி எறிந்த ஒரு தலையணை. சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி. பிளாஸ்டிக் டம்ளர். ஒரு மண்ணெண்ணெய் பம்பிங் ஸ்டவ். சினிமா போஸ்டர் ஒட்டிய தட்டி. இவ்வளவு தான் அவர்கள் வசிப்பிடம்.

மீனா ஒருத்தி தான் ஓவியனை மாமா என்று அழைப்பாள்

அவன் தரும் சாக்லேட்டை சுவைத்தபடி எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.

“ஏன் மாமா தரையில படம் வரையுறே. பேப்பர்ல வரையலாம்லே“ என்று மீனா கேட்டிருக்கிறாள்

“எனக்கு பேப்பர்ல வரைய பிடிக்காது. இந்த வெயில் மாதிரி நானும் தரையில வரைவேன். இதுக்கு ஒண்ணும் விலை கிடையாது “ என்பான் ஓவியன்

“நீங்க ஏன் படம் வரைஞ்சிகிட்டே இருக்கீங்க. வேற வேலை பாக்கலாம்லே“ என்பாள் சிறுமி

“இதான் என் வேலை. சின்னவயசில சுவத்துல கிறுக்கிட்டு இருந்தப்ப பிடிச்ச கிறுக்கு. விட மாட்டேங்குது. நீயும் படம் வரைந்து பாக்குறயா. நான் கத்து தர்றேன்“

“வேணாம் மாமா. அப்பா அடிப்பாரு.. நான் படிச்சி வேலைக்குப் போய் நிறையச் சம்பாதிக்கப் போறேன்“

“அது சரி,, படம் வரைந்தா சம்பாதிக்க முடியாதுல்லே. ஆனா சந்தோஷமா இருக்க முடியும்“

“ நீங்க எப்பவும் இதே அழுக்குச் சட்டை பேண்ட் போட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க குளிக்கவே மாட்டீங்களா “

“இப்படியிருக்கிறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.. நானும் குளிப்பேன். ஆனா.. நடுராத்திரில. அந்தா இருக்கே.. அந்தப் பார்க். அதோட கேட்டை தாண்டி குதிச்சி. தண்ணிகுழாயை திருக்கிவிட்டு ரப்பர் டியூப் வழியா அடிக்கிற தண்ணிய உடம்புல அடிச்சி ஜாலியா குளிப்பேன். “

“அய்யே.. அது செடிக்கு தண்ணிவிடுற பைப்பு. “

“நானும் செடி தான். செடி பூ பூக்குறது மாதிரி தான் படம் வரையுறது“

“சோப்பு போட மாட்டீங்களா“

“மண்ணு தான் என் சோப்பு. “

“உங்க ஊரு எது மாமா“

“மறந்து போச்சி.. “

“உங்க அப்பா அம்மா எல்லாம் எங்கே இருக்காங்க“

“வானத்துல“ என்று ஆகாசத்தை நோக்கி கைகாட்டுவான்

“நீங்க நிறையப் பீடி குடிக்கிறீங்க. உங்க கிட்ட வந்தா பீடி வாடை அடிக்குது“

“என் கோபத்தை எல்லாம் பீடி புகை வழியா வெளியே விடுறேன்.. அதெல்லாம் உனக்குப் புரியாது“

“எங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்காது. உங்க கூடப் பேசுனா திட்டும்“

“என்னை எனக்கே பிடிக்காது. நானே என்னைத் திட்டிகிடுவேன். “

அதைக்கேட்டு சிறுமி சிரித்தாள்.

ஓவியன் அவள் சிரிப்பதை ரசித்தபடியே சொல்வான்.

“நீ சிரிக்குறப்போ உன் கண்ணு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா“

“அதை நான் பாக்க முடியாதுல்லே“

“எவ்வளவு அழகா சொல்லிட்டே. நம்ம கண்ணாலே நம்மை அழகை பாத்துகிட முடியாதுல்லே“

“ஆனா கண்ணாடி பாத்தா தெரியும்லே“

“கண்ணாடி பொய் சொல்லும். உன் வலது கையை ஆட்டு கண்ணாடில இடது கையா தெரியும்“

“ஆனா முகம் அப்படி மாறாதுல்லே“

“முகம் நடிக்கும் பாப்பா.. அதுவும் கண்ணாடி முன்னாடி நிக்கும் போது முகம் பாசாங்கு பண்ணும். தூங்கும் போது தான் முகம் நிஜமா இருக்கும். யாரும் தான் தூங்குறதை தானே பாக்க முடியாதுல்லே“

“நீங்க பேசுறது ஒண்ணுமே புரியலை“

“உனக்கு நான் வரையுற படம் பிடிக்குமா“

“ரொம்பப் பிடிக்கும். அன்னைக்கு ஒரு யானை வரைந்தீங்களே. நிஜமா யானை படுத்துகிடக்கிறது மாதிரி இருந்துச்சி“

“அப்படியா. நீ அந்த யானை மேல ஏறி உட்காந்துகிட வேண்டியது தானே“

“அது நிஜ யானை இல்லையே“

“நீ தானே சொன்னே நிஜ யானை மாதிரி இருக்குனு“

“அது படம் தானே மாமா. அதுல எப்படி ஏறி உட்கார முடியும்“

“அப்போ நாளைக்கு அந்த யானை மேல நீ உட்கார்ந்து இருக்கிற மாதிரி வரைந்திருறேன். “.

“வேணாம் மாமா. அம்மா திட்டும்“

“ஆமா.. போறவர்ற ஆட்கள் உன் முகத்தை மிதிச்சிருவாங்க “

“ஏன் எப்பவும் யானையா வரயுறீங்க“

“யானையோட அழகை பாத்துகிட்டே இருக்கலாம்.. நீ காட்டுக்குள்ளே போயிருக்கியா.. “

“இல்லே“

“நிஜயானை அங்கே தான் இருக்கு“

“ஏன் கோவில்ல யானை இருக்கே“

“அது சங்கிலி போட்ட யானை. காட்டுல இருக்கிற யானை தான் நிஜ யானை“

“அதை நான் பாக்கணும்“

“நான் உன்னை அழைச்சிட்டுப் போய்க் காட்டுறேன்“

“காட்டுக்குள்ளே போனா பயமா இருக்காதா“

“ஒரு பயமும் இருக்காது. மனுசங்க தான் எப்போ என்ன செய்வாங்கன்னு தெரியாது. மிருகம் அப்படியில்லே. “

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிறுமியின் அம்மா பிளாஸ்டிக் குடம் ஒன்றில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.. அம்மாவைப் பார்த்த மறுநிமிஷம் மீனா பேச்சை துண்டித்துவிட்டு ஒடிப் போனாள்.

மீனாவின் அம்மா ஓவியனை முறைத்தபடி சப்தமாகச் சொன்னாள்

“ஒரு நா இல்லே ஒரு நா நீ என் கையாலே செருப்படி வாங்க போற பாரு…“

ஓவியன் சிரித்துக் கொண்டே “நல்லா இரு“ என அவளை வாழ்த்தினாள். காரணமேயில்லாமல் அவளுக்கு ஒவியனைப் பிடிக்கவில்லை. அது போல அவள் எவ்வளவு கோவித்துக் கொண்டாலும் ஒவியனுக்குக் கோபம் வருவதேயில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் பிளாட்பாரத்தில் வசித்த மீனாவின் குடும்பம் இடத்தைக் காலி செய்து போயிருந்தார்கள். மீனா அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை. அது வருத்தமாக இருந்தது. எங்கே போயிருப்பார்கள். ஊரைவிட்டே போய்விட்டார்களா. அந்தச் சிறுமியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். மீனாவின் விளையாட்டு பேச்சு மனதில் நிழலாடியபடி இருந்தது.

அதன்பிறகு அவனது ஒவியத்திற்குப் பரிசாகக் கிடைக்கும் சாக்லேட்டினை சாலையில் வீசி எறிந்துவிடுவான். யாருக்கும் கொடுக்கக் கூடாது. எந்த உறவும் உருவாகக் கூடாது. என்பதில் கவனமாக இருந்தான்.

அந்த ஓவியனை தேடி யாரும் வருவதில்லை. இவ்வளவு பெரிய நகரில் அவனைத் தெரிந்தவர் என யாருமில்லை.

தனக்குக் கிடைக்கும் சில்லறைகளை வைத்து அவன் வண்ணசாக்பீஸ்கள் வாங்குவான். அருகிலுள்ள கையேந்தி உணவகத்தில் சாப்பிடுவான். அபூர்வமாகச் சில நாட்கள் யாராவது அவனுக்குப் பணம் தருவதுண்டு. அப்படி ஒரு வெள்ளைக்காரன் அவன் வரைந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக நூறு ரூபாய் கொடுத்தான்.

அந்த நூறு ரூபாயில் ஒரு பலூன் பாக்கெட் வாங்கி நாள் முழுவதும் ஒவ்வொரு பலூனாக ஊதி வானில் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ஒரு ஆனந்தம். பரவசம்.

நாள் முழுவதும் தான் வரைந்த ஓவியத்தின் அருகில் அவன் உட்கார்ந்திருப்பான். மதிய நேரம் ஓவியத்தின் அருகிலே சுருண்டு படுத்துக் கொள்வான். எப்போதாவது காவலர்கள் அவனைக் கோவித்துக் கொண்டு திட்டுவார்கள்.

“படம் தானே சார் வரையுறேன்“ என்று சொல்வான்

“ரோட்டுல ஏன்டா படம் வரையுறே“. என்று காவலர் திட்டுவார்

“ரோட்டை அழகாக்குறேன் சார்.. அது தப்பா“

“தப்பில்லை. தொந்தரவு.. ஆள் நடக்கவே ரோடு பத்தமாட்டேங்குது“

“ஒரு நாளைக்கு இந்த ஊருக்கு லட்சம் பேரு புதுசா வர்றாங்களாம்“

“இந்த கணக்கை எல்லாம் கேட்டனா.. உன்னை மாதிரி வெட்டிபயகளுக்கு இந்த ஊர்ல என்ன வேலை,. நீயெல்லாம் எங்காவது காடு கரைனு போயி இருக்கலாம்லே“

“இவ்வளவு பெரிய ஊர்ல நான் ஒரு எறும்பு. என்னாலே எந்தத் தொந்தரவும் வராது சார்“

“உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சில்லறை கிடைக்குது“.

“பத்து இருபது.. கிடைக்கும். சில நாள் எதுவும் கிடைக்காமலும் போகும்“

“படம் வரையுறேனு சொல்லிட்டுக் கஞ்சா பொட்டலம் விக்கிற பய தானேடா நீ.. “

“அதெல்லாம் கிடையாது சார்.. நான் பீடி மட்டும் தான் பிடிப்பேன்“

“அதான் கெட்டவாடை அடிக்குதே.. இதை நீ சொல்லணுமாக்கும்“ என்றார் காவலர்

அதைக்கேட்டு ஒவியன் சிரித்தான். காவலர்களுக்கு அவனை நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படியான கோபம். சண்டைகள் வருவதுண்டு.

••

இறந்துகிடந்த ஒவியனின் அருகே ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வீசி சென்றான் ஒருவன். இதுவரை அவனது ஒவியங்களின் மீது தான் சில்லறைகள் சிதறிகிடக்கும். இன்றைக்கு அவனைச் சுற்றிலும் கிடந்தன.

ஒவியத்திலிருந்த யானையின் மீது சூரிய வெளிச்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சாலையில் இருந்த இன்னொரு பிச்சைக்காரன் இறந்தவனைச் சுற்றிகிடந்த நாணயங்களைச் சேகரித்துத் தனதாக்கிக் கொண்டான். யார் காவலர்களிடம் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் காவலர் வந்தபோது வெயிலேறியிருந்தது. அவனது உடலை காவலர் புரட்டிப்பார்த்தார். ஒவியனின் விரல்நகத்தில் சாக்பீஸ் துகள் ஒட்டியிருந்தது. பாதிக்கனவில் இறந்தவன் போல அவனது முகத்தில் சாந்தம். காவலர் அந்த ஓவியனின் உடலை பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

எப்போதும் அவன் ஓவியத்தை ரசிப்பதற்காக வரும் டெலிபோன் ஊழியரான சரளா அன்றைக்கும் வந்திருந்தாள். அவளால் ஓவியன் இறந்து போனதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னை மீறி கசியும் கண்களைத் துடைத்தபடியே அவள் காவலரிடம் கிரேட் ஆர்டிஸ்ட் என்றாள்

“இந்த ஆளுக்குச் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா.. எந்த ஊருனு ஏதாவது தெரியுமா“ எனக் காவலர் கேட்டார்

“எனக்கு தெரியலை சார். எனக்கு இவர் வரையுற படம் பிடிக்கும்.. நான் அவரோட ஒரு வார்த்தை கூடப் பேசுனதில்லை.. “

“நீங்க எங்க வேலை பாக்குறீங்க“

அவள் எதிரே தெரியும் டெலிபோன் அலுவலகத்தைக் கையைக் காட்டினாள்

பிறகு அவர் கேட்காமலே சொன்னாள்

“ ஏதாவது பார்ம்லே கையெழுத்து போடணும்னா. நான் போடுறேன் சார்.. ரிலேடிவ்னு என் பெயரை போட்டுக்கோங்க “

“உங்க போன் நம்பர் சொல்லுங்க“

அவள் தனது அலைபேசி எண்ணை சொல்லிக் கொண்டிருந்தாள். சாலையில் வரையப்பட்டிருந்த யானையின் கண்கள் அவளேயே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. இறந்த உடலை ஏற்றிச் செல்வதற்கான வாகனம் வந்து நின்றது. ரப்பர் செருப்பு அணிந்த ஊழியர்கள் யானை ஒவியத்தை அழித்து நடந்தபடியே ஓவியனின் விறைத்த உடலைத் தூக்கி வேனில் ஏற்றினார்கள். பாதி அழிந்த யானையின் தோற்றம் நீருக்குள் அமிழ்ந்த யானையை நினைவூட்டியது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2025 05:57

February 19, 2025

பேசும் சித்திரங்கள்

மும்பையில் சினிமா பேனர்களை வரையும் ஷேக் ரஹ்மான் என்ற ஓவியரின் வாழ்க்கையை விவரிக்கும் ஆவணப்படம் Original Copy. 2016ல் வெளியாகியுள்ளது.

இதனை ஜெர்மனியைச் சேர்ந்த ஃப்ளோரியன் ஹெய்ன்சென்-ஜியோப் மற்றும் ஜார்ஜ் ஹெய்ன்சென் இணைந்து இயக்கியுள்ளார்கள். இப்படம் சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றுள்ளது

சென்னைக்கு வந்த நாட்களில் அண்ணசாலையில் வைக்கபட்டிருந்த சினிமா பேனர்களை வியப்போடு பார்த்தபடி நடந்திருக்கிறேன். பிரம்மாண்டமான சினிமா பேனர்களை நின்று பார்த்து சுவரொட்டியிலிருந்து படத்தின் கதையை யூகித்துச் சொல்லும் ரசிகர்களை அறிவேன்.

இரவில் அந்தச் சுவரொட்டிகளின் கீழே வசிக்கும் நடைபாதை வாசிகளையும் பேனர்கள் வரைந்த ஆர்டிஸ்ட்களையும் அறிவேன். இந்த ஆவணப்படம் அந்த நினைவுகளைத் தூண்டிவிட்டது.

சினிமாவிற்குப் போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதில் பேனர்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. சாமி படங்களுக்கு வரையப்பட்ட பேனர்களுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வணங்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களுக்குப் பேனர் வைப்பதில் பெரிய போட்டியே இருந்தது. இந்தி, மலையாள, ஆங்கிலப் படங்களின் சினிமா பேனர்கள் மொழி தெரியாத மக்களையும் படம் பார்க்க வைத்தன.

மும்பையின் மையப்பகுதியில் ஆல்ஃபிரட் டாக்கீஸ் உள்ளது. அந்தத் திரையரங்கம் உருவான வரலாற்றையும் அதன் நிர்வாகி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நினைவுகளையும் இந்த ஆவணப்படம் இணைத்தே விவரிக்கிறது.

சினிமா பேனர் வரையும் ஷேக் ரஹ்மான், தியேட்டர் ஆபரேட்டர் நசீர், உரிமையாளர் நஜ்மா, தியேட்டரின் காவலாளி. அரங்க மேலாளர் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஆல்ஃபிரட் டாக்கீஸின் கதையைச் சொல்கிறார்கள்.

திரைப்படப் பேனர்களை வரைவதற்காக ஆல்ஃபிரட் டாக்கீஸிலே ஷேக் ரஹ்மான் வசிக்கிறார். அங்கே வாரம் இரண்டு படங்கள் மாற்றப்படுகின்றன. அதற்காக அவரும் அவரது குழுவினரும் பிரம்மாண்டமான பேனர்களைக் கையால் வரைகிறார்கள்.

அவர்கள் வண்ணங்களைப் பயன்படுத்தும் விதம். உருவங்களை அளவெடுத்து வரையும் தனித்துவம் மற்றும் அவர்களுக்கான அழகியல் ஆகியவற்றை ரஹ்மான் சிறப்பாக விளக்குகிறார்.

ரஹ்மானின் தந்தை மும்பையின் புகழ் பெற்ற பேனர் ஆர்டிஸ்ட். அவரது காலத்தில் எண்ணிக்கையற்ற சினிமா பேனர்களை வரைந்திருக்கிறார். பள்ளிவயதில் தந்தைக்கு உதவி செய்ய வந்த ரஹ்மான் சினிமா பேனர் மீது ஆர்வம் கொண்டு தந்தையின் உதவியாளராகப் பணியைத் துவங்கியிருக்கிறார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேனர் ஆர்டிஸ்ட்டாகத் திகழுகிறார்.

ரஹ்மானுக்குப் பிடித்தமான இந்தி சினிமா நடிகர் நடிகைகள். சினிமா பேனர் வரைவதில் அவர் உருவாக்கிய புதிய பாணி மற்றும் இளம்தலைமுறைக்கு அந்தக் கலையை அவர் கற்றுத் தரும் விதத்தைப் படம் உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கிறது.

மொகலே ஆசம் படத்தின் பேனரைக் காட்டி அதன் கதையைத் தான் எவ்வாறு ஓவியமாக வரைந்திருக்கிறேன் என ரஹ்மான் விவரிக்கும் காட்சி அபாரமானது.

திரையரங்கின் மேலாளர் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது தன்னை அறியாமல் கண்ணீர் சிந்துகிறார். அவரைப் போலவே தியேட்டர் உரிமையாளரான நஜ்மா பேகமும் தனது வாழ்வினை சினிமா எந்த அளவு பாதித்துள்ளது என்பதை உண்மையாக விவரிக்கிறார். நஷ்டத்தில் இயங்கிய போது அந்தத் தியேட்டரை மூட மனது வரவில்லை என்கிறார்.

பேனர் வரைவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தனது பிள்ளைகள் படித்தார்கள். வீட்டுவாடகை தரப்பட்டது. அன்றாடச் செலவுகள் யாவும் கவனிக்கப்பட்டன. ஆனாலும் வீட்டில் தனது மனைவி பிள்ளைகளுக்குப் பெயிண்ட் என்றாலே அலர்ஜி. வீட்டில் ஒரு சுவரொட்டி கூட வைக்க விடமாட்டார்கள். தனது இளமைக்காலப் போட்டோ, பழைய சினிமா ஸ்டில்கள், ஓவியங்கள் உள்ளிட்ட தான் வரைந்தவற்றைக் குப்பையாக நினைத்து வீசி எறிந்துவிட்டார்கள். இந்தக் கலையின் மூலம் சோறு சாப்பிடும் அவர்களுக்கே இதன் மதிப்பு தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் ஷேக் ரஹ்மான்

இது ரஹ்மானின் கதை மட்டுமில்லை. இந்தியா முழுவதும் இருந்த சினிமா பேனர் ஆர்டிஸ்ட்டுகளின் கதை. புதிய படம் வெளியாகும் நாளில் இவர்கள் வரைந்து வைத்த பேனர்களை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த ரசிகர்கள் அதனை வரைந்தவர்களை அறிந்து கொள்ளவில்லை. சினிமா ஓவியங்களை எவரும் ஆவணப்படுத்தவில்லை. சினிமா தியேட்டர் உரிமையாளர்களும் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.

இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் சினிமா தியேட்டர் ஊழியர்கள் ஒன்றாகத் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அது மறக்க முடியாத காட்சி. சினிமா தியேட்டர் என்பது ஒரு தனியுலகம். அதற்குள் உலகம் அறியாத ஒரு வாழ்க்கை தன்போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

நவீன ஓவியர்கள் பெரிய கேலரிகளில் கண்காட்சிகள் நடத்தி ஆங்கிலப் பத்திரிக்கைகளால் பாராட்டப்படும் போது அதே திறமையுள்ள பேனர் ஆர்டிஸ்ட்டுகள் கண்டுகொள்ளப்படாமல் போனது துயரமானது எனக் கோபத்துடன் சொல்கிறார் ரஹ்மான்.

சினிமா பேனர்களை வரையும் போது தனக்குக் கிடைக்கும் அகமகிழ்ச்சியே போதுமானது எனக் கூறும் ரஹ்மான் தனது பேனர்களின் மூலம் ஒடாத படத்திற்குக் கூடப் பார்வையாளர்களை வரவழைக்க முடிந்திருக்கிறது என்பதை வேடிக்கையுடன் குறிப்பிடுகிறார்.

இந்தி திரையுலம் மாறிக் கொண்டேயிருக்கிறது. புகழ்பெற்ற நடிகர்கள். இயக்குநர்கள் மக்கள் மனதில் அழியாத நினைவுச்சின்னமாக மாறியிருக்கிறார்கள். நவீன வாழ்க்கையின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் வந்தபின்பு சினிமா பேனர் போன்ற மரபான கலைகள் கைவிடப்பட்டன. அதை நம்பிய கலைஞர்கள் மறைந்து போனார்கள்.

மும்பையின் மையப்பகுதியில் இருந்தாலும் இந்தத் தியேட்டருக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. உறங்க இடமில்லாமல் தியேட்டருக்கு வரும் ஆட்கள். சினிமா பார்த்துக் கண்ணீர் சிந்தும் பெண்மணி. நகர நெருக்கடியிலிருந்து தப்பிக்கச் சினிமா தியேட்டருக்குள் தஞ்சம் புகும் மனிதர்கள் எனச் சினிமா இருளில் தன்னைக் கரைத்துக் கொள்பவர்களைப் படம் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.

பழைய சினிமா போஸ்டர் மீதே புதிய சினிமா போஸ்டரை வரைகிறார்கள். தான் ஆசையாக வரைந்த பேனரை தானே ரஹ்மான் அழிக்கிறார். அவரது பெயரை அவரே அழிக்கும் காட்சி படத்தில் உள்ளது. தங்கள் வாழ்க்கையும் அப்படிபட்டது தான் என்கிறார்.

இந்த ஆவணப்படத்தில் அவர் தனது கடந்தகால நினைவுகளைப் பேசுகிறார். வாழ்க்கை தத்துவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். உறவுகள் ஏற்படுத்திய கசப்பை பற்றி வெளிப்படையாகச் சொல்கிறார். நட்பின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கடவுளின் சினிமா தியேட்டர் தான் நமது உலகம். நமது வாழ்க்கை, அங்கே படம் ஒடுவது முடிவதேயில்லை. ஒரு படம் முடிந்தவுடன் அடுத்தப் படம் ஆரம்பமாகி விடுகிறது. முடிவில்லாமல் கடவுள் சினிமா காட்டிக் கொண்டேயிருக்கிறார் என்கிறார் ரஹ்மான்.

தான் வரைந்த சினிமா பேனரை தியேட்டரின் முன்பாக உயர்த்திக் கட்டிவிட்டு சற்றே விலகி நின்று பார்வையாளராக அதைப் பார்த்து ரசிக்கிறார் ரஹ்மான். அப்போது அவரது கண்களில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. அது தான் அவரை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2025 04:36

February 17, 2025

காமிக்ஸ் நூலகம்

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென்று சிறப்பு நூலகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்தக் காமிக்ஸ் நூலகத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சிறந்த காமிக்ஸ் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் காமிக் புத்தகங்களுடன் நான்கு தனிப்பட்ட கணினிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவிலே காமிக்ஸ் புத்தகங்களுக்கென உருவாக்கபட்ட முதல் நூலகம் இதுவே.

1972ல் சிவகாசியில் சௌந்தபாண்டியன் அவர்கள் முத்துகாமிக்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார். அவர்களின் முதல் வெளியீடு இரும்புக்கை மாயாவி. அது பெற்ற வெற்றி தமிழ் காமிக்ஸ் புத்தகங்களுக்கான புதிய வாசலைத் திறந்துவிட்டது.

இந்த ஐம்பது வருஷங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் காமிக்ஸ் நூல்கள் வெளியாகியுள்ளன. இன்று வண்ணத்தில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

உலகப் புகழ்பெற்ற காமிக்ஸ் நூல்களில் சில ஆசிய அளவில் தமிழில் மட்டுமே வெளியாகின்றன என்பது பாராட்டிற்குரியது.

சென்னை புத்தகத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ் புத்தகங்களுக்கென விற்பனை அரங்குகள் அமைக்கபடுகின்றன. வயது வேறுபாடின்றிக் காமிக்ஸ் ரசிகர்கள் விருப்பமான காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

காமிக்ஸ் புத்தகங்களுக்னெ தனியே ஒரு நூலகம் உருவாக்கபட வேண்டும் என்பது காமிக்ஸ் ரசிகர்களின் நீண்டநாள் கனவு.

அதனை நிறைவேற்றிக் காட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஐஏஎஸ் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

காமிக்ஸ் நூலகத்தினைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 15 மற்றும் 16 இரண்டு நாட்கள் சித்திரக்கதைகள் திருவிழா ராஜபாளையத்தில் நடைபெற்றது

இதில் பள்ளி மாணவர்களுக்குக் காமிக்ஸ் வரைவதற்குக் கற்றுத்தருதல். சித்திரக்கதை வாசிப்பு. முகமூடி தயாரிப்பது, டிஜிட்டில் காமிக்ஸ் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகள் தரப்பட்டன.

அத்துடன் தமிழ் சித்திரக்கதைகள் பற்றிய சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நான் தமிழ் சித்திரக்கதைகள் பற்றி உரையாற்றினேன்.

எனது பள்ளி வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் படித்த அனுபவம். தினந்தந்தியில் வரும் கன்னித்தீவு சித்திரத்தொடர், வாண்டுமாமா, மற்றும் இன்று சர்வதேச அளவில் காமிக்ஸ் புத்தகங்கள் பெற்றுள்ள முக்கியத்துவம். ஜப்பானிய மாங்கா காமிக்ஸ். அமெரிக்காவின் டிசி மற்றும் மார்வெல் காமிக்ஸ் உலகம், அதன் சூப்பர் ஹீரோக்கள் உருவான விதம். கிராபிக் நாவல்களின் எதிர்காலம். டிஜிட்டல் காமிக்ஸ் பற்றிய அறிமுகம் என விரிவாக உரையாற்றினேன்..

இளம்தலைமுறையினர் காமிக்ஸ் புத்தகங்களை ஏன் வாசிக்க வேண்டும் என்பது குறித்து ஜெயசீலன் ஐஏஎஸ் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

ஓவியரும் திரைப்பட இயக்குநருமான சிம்புதேவன் காமிக்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம் மற்றும் தனது காமிக்ஸ் புத்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சென்னை ஓவியக்கல்லூரி பேராசிரியர் வில்வம் காமிக்ஸ் புத்தகங்களின் தேவை மற்றும் அதன் எதிர்காலம் பற்றி உரையாற்றினார்.

இந்தக் கருத்தரங்களில் முத்துக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் விஜயன் கலந்து கொண்டு சிறப்பான உரையை வழங்கினார்.

வகம் காமிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் கலீல் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து வரும் உதவி பேராசிரியர் பிரபாவதி தனது ஆய்வு மற்றும் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்

வே.சங்கர் ராமு நிகழ்வில் கோமாளி வேஷமிட்டு அழகான கதை ஒன்றைச் சொல்லி அரங்கை மகிழ்வித்தார்.

இந்த நிகழ்வில் விருதுநகர் துணை ஆட்சியர் அனிதா மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் என். பிரியா ரவிச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அரங்கு நிறைந்த கூட்டம். காமிக்ஸ் புத்தகங்களைப் பற்றிக் கேட்கவும் பேசவும் மக்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு சாட்சியமாக இருந்தது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2025 00:54

February 13, 2025

கதை எனும் மருந்து

சத்யஜித் ரேயின் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட இந்தி திரைப்படம் The Storyteller . ஆனந்த் மகாதேவன் இயக்கியுள்ளார். அறிவியல்புனைகதைகள் உள்ளிட்ட பல்வேறு சிறுகதைகளை ரே எழுதியிருக்கிறார். விசித்திரமான நிகழ்வுகள். மனிதர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட அவரது சிறுகதைகள் வங்காளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ஓவியர் என்பதால் ரே கதாபாத்திரங்களைத் துல்லியமாகச் சித்தரிக்கக் கூடியவர். இந்தக் கதையில் வரும் இருவரும் தனித்துவமானவர்கள்.

வங்காளத்தில் வாழும் தாரிணி பந்தோபாத்யாயா என்ற அறுபது வயதானவர் ஒரு கதை சொல்லி. முதலாளித்துவத்தை வெறுக்கும் அவரால் எங்கேயும் வேலை செய்ய முடியவில்லை. 72 வேலைகள் மாறிவிட்டதாகச் சொல்கிறார். அவரது மகன் அரிந்தம் அமெரிக்காவில் வசிக்கிறான். அவன் தந்தையை அமெரிக்கா வந்துவிடும்படி அழைக்கிறான். ஆனால் அவருக்கு முதலாளித்துவ நாடான அமெரிக்காவைப் பிடிக்கவில்லை. பேரன் தொலைபேசியில் அழைத்துத் தனக்குக் கதை சொல்வதற்காக அமெரிக்கா வரும்படி அழைக்கிறான். அதற்காகப் போக விரும்பினாலும் கல்கத்தாவை விட்டுச் செல்ல அவரது மனது இடம் தரவில்லை.

அவர் ஒரு நாள் பத்திரிக்கையில் கதை சொல்லி தேவை என்ற ஒரு விளம்பரத்தைக் காணுகிறார். அகமதாபாத்திலுள்ள முகவரிக்கு விண்ணப்பம் செய்கிறார். நேரில் வரும்படி அவரை அழைக்கிறார்கள். பெங்காலிகள் மீன் உண்பதையும் துர்கா பூஜையினையும் எந்த நிலையிலும் விடமாட்டார்கள் எனும் தாரிணி புதிய வேலைக்காகச் சொந்த ஊரைவிட்டு அகமதாபாத் புறப்படுகிறார்.

கதை சொல்லி தேவை என்ற விளம்பரத்தை கொடுத்தவர் தொழிலதிபரான ரத்தன் கரோடியா, ஜவுளி தொழில் செய்துவருகிறார். பணக்காரர், ஐம்பது வயதானவர். அவருக்கு நீண்டகாலமாகவே தூக்கம் வர மறுக்கிறது என்பதால் சிறுவயதில் பாட்டியிடம் கதை கேட்டது போல ஒரு கதைசொல்லியை வேலைக்கு வைத்துக் கொள்ள அழைத்திருக்கிறார் என்பதைத் தாரிணி அறிந்து கொள்கிறார்.

தூக்கமின்மை என்பது பணம் படைத்தவர்களுக்கு வரும் வியாதி எனக் கேலி செய்யும் தாரிணி கதை சொல்லியாக அங்கே வேலைக்குச் சேருகிறார்

ரத்தன் கரோடியா சைவ உணவு உண்பவர். வீட்டில் அலங்காரப் பொருள் போல புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். ஆனால் எதையும் படிக்கமாட்டார். புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே அறிவு வந்துவிடும் என நம்புகிறார். அவர் படிக்கும் ஒரே புத்தகம் வரவுசெலவு கணக்குப் பேரேடு மட்டுமே .

தாரிணி தினமும் மீன் சாப்பிடக் கூடியவர். அவருக்குக் குஜராத்தி உணவு ஒத்துக் கொள்வதில்லை. ஆனாலும் வழியில்லாமல் ரத்தன் கரோடியாவிற்குக் கதை சொல்வதற்காக அந்த வீட்டில் வசிக்கிறார். தினமும் இரவு ரத்தன் அறைக்குச் சென்று அவருக்காகக் கதை சொல்கிறார். தாரிணி விடிய விடிய கதை சொன்னாலும் ரத்தனுக்கு உறக்கம் வருவதில்லை. ஆனால் தாரிணி சொல்லும் கதைகளைச் சுவாரஸ்யமாகக் கேட்கிறார். மறுநாள்காலையில் பாராட்டுகிறார்.

தனிமையில் வசிக்கும் ரத்தன் கரோடியாவின் வாழ்க்கையில் ஏதோ புதிர்கள் சிக்கல்கள், இருப்பதாக உணரும் தாரிணி அதை;ச சரி செய்யும்படி சொல்கிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது.

இதற்கிடையில் ரத்தன் வீட்டின் அருகிலுள்ள நூலகத்திற்குச் சென்று உறுப்பினராகும் தாரிணி அங்குப் பணியாற்றும் பெண்ணுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். அவளுடன் தாரிணி உரையாடும் காட்சிகள் அழகானவை.

அவள் வழியாகக் குஜராத்தியில் வெளியாகும் இதழ்கள் பற்றியும் கார்க்கி என்ற குஜராத்தி எழுத்தாளரைப் பற்றியும் அறிந்து கொள்கிறார். அந்தக் கார்க்கி வேறு யாருமில்லை ரத்தன் கரோடியா தான் என அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ரத்தன் கரோடியாவின் மறுபக்கத்தை அறிந்த தாரிணி என்ன செய்கிறார் என்பதே படத்தின் பிற்பகுதி

ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல தெரிந்த தாரிணி ஒரு வரி கூட எழுதுவதில்லை. தயக்கம். சோம்பல். மற்றும் விமர்சனத்திற்குப் பயந்து அப்படி நடந்து கொள்வதாகச் சொல்கிறார். படிப்பதில் ஆர்வமான அவர் தீவிர இலக்கியவாசகர். தாகூரை, மாக்சிம் கார்க்கியை, டால்ஸ்டாயை விரும்பி படிக்கிறார்.

அவருக்கு நேர் எதிரான கதாபாத்திரம் ரத்தன். பகட்டான மனிதர். புகழுக்காக எதையும் செய்யக்கூடியவர். தந்திரமானவர். அதே நேரம் தனது பலவீனங்களை அறிந்து வைத்திருப்பவர்.

இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களைக் கதை இணைக்கிறது. தூக்கமின்மைக்குக் கதைகள் தான் மருந்து எனத் தாரிணி சொல்கிறார். கதை கேட்கும் போது நம்மை மறந்துவிடுகிறோம். கதைகள் மருந்தாக வேலை செய்கின்றன என்பதைத் தாரிணி உணர்ந்திருக்கிறார்.

நூலகரிட்ம் தான் என்ன வேலை செய்கிறேன் என்பதை விவரிக்கும் போது உறக்கதை வரவழைப்பவர் என்றே அறிமுகம் செய்து கொள்கிறார்.

குஜராத்தி பேசத் தெரியாத வங்காளியான தாரிண எந்த மொழியில் கதையைச் சொல்கிறார் என்று தெரியவில்லை தாரிணி சொல்லும் கதைகள் அனிமேஷன் காட்சியாக விரிகின்றன. அந்தக் கதைகளில் ஒரு அற்புதமும் இல்லை. அவை குழந்தைகளுக்காகச் சொல்லப்படும் எளிய கதைகள். அதன் காரணமாகக் கதை சொல்லியின் மீது நாம் கொள்ளும் ஈர்ப்பு அவர் சொல்லும் கதைகளிடம் ஏற்படுவதில்லை.

பெங்காலிகளின் பெருமிதங்களான கம்யூனிசம், வங்காள எழுத்தாளர்கள். மகாகவி தாகூர் அவரது இசை, மீன் உணவு. துர்கா பூஜை. இவற்றையே இப்படமும் பேசுகிறது. குஜராத்தி வணிகர்களைப் படம் கேலி செய்கிறது. வங்காளத்தைப் போலவே குஜராத்தியிலும் சிறந்த எழுத்தாளர்கள். இலக்கிய மரபு இருப்பதைப் படம் சித்தரிக்கவில்லை.

உண்மையில் இப்படம் கல்கத்தா, அகமதாபாத் எனும் இரு நகரங்களின் கதை. மனைவியை இழந்து வாழ்பவருக்கும், தனியே வாழுகிறவருக்குமான உறவின் கதை. இக்கதையில் வரும் ரேவதியின் வாழ்க்கையும் கடந்தகாலமும் முழுவதும் விவரிக்கபடுவதில்லை. அது சொல்லப்படாத கதையாகவே உள்ளது.

கதையின் முக்கியத் திருப்பம் அழகானது. ஆனால் அதற்கான காரணங்களும் கதையில் அந்தத் திருப்பம் ஏற்படுத்தும் விளைவுகளும் எளிமையாக முடிந்துவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது.

வால்டர் பெஞ்சமின் தனது கதைசொல்லியைப் பற்றிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்

Boredom is the dream bird that hatches the egg of experience. A rustling in the leaves drives him away. His nesting places—the activities that are intimately associated with boredom—are already extinct in the cities and are declining in the country as well. With this the gift for listening is lost and the community of listeners disappears. For storytelling is always the art of repeating stories, and this art is lost when the stories are no longer retained. It is lost because there is no more weaving and spinning to go on while they are being listened to. The more self-forgetful the listener is, the more deeply is what he listens to impressed upon his memory. When the rhythm of work has seized him, he listens to the tales in such a way that the gift of retelling them comes to him all by itself. This, then, is the nature of the web in which the gift of storytelling is cradled. This is how today it is becoming unraveled at all its ends after being woven thousands of years ago in the ambience of the oldest forms of craftsmanship

ரேயின் இக்கதையும் இதனையே பேசுகிறது. கதை சொல்லி ஒரு விதையை மண்ணில் ஊன்றுவது போலக் கேட்பவர் மனதில் கதையை ஊன்றிவிடுகிறான்.

கதைசொல்லி என்பதும் கதையைச் சொல்பவர் என்பதும் வேறுவேறு. கதை சொல்லி மரபின் தொடர்ச்சியான கலைஞன். ஆனால் கதையைச் சொல்பவர் தான் படித்த, கேட்ட. யாரோ சொன்ன கதையை அரங்கில் சொல்கிறார். கைதட்டு பெறுகிறார்.

ஆனால் கதை சொல்லி என்பவர் தானே புதியபுதிய கதைகளை உருவாக்குபவர். தாரிணி சொல்வது போல அத்தனையும் ஒரிஜினல் கதைகள். அதை நிகழ்த்துகலை போல உயிரோட்டமாக நிகழ்த்துகிறார். தனது இனத்தின். நிலத்தின், வரலாற்றின், உறவுகளின் அழியாத நினைவுகளைக் கதைகளாக நெசவு நெய்கிறார்.

இத்திரைப்படத்தில் வரும் தாரிணி ஒரு கதை சொல்லி. அவர் வாய்மொழிக்கதை மரபில் உருவானவர்.

ஒரு காலத்தில் டிக்கன்ஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தனது கதையைத் தானே மக்களிடம் சொன்னார்கள். அதற்குப் பெரிய கூட்டம் வந்தது. கட்டணம் செலுத்தி மக்கள் கதை கேட்டார்கள். அச்சு வடிவம் வந்தபிறகு வாய்மொழிக்கதை சொல்லிகள் குறைந்து போனார்கள்.

அடில் உசேன் மற்றும் பரேஷ் ராவல் முக்கிய வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2025 19:49

February 12, 2025

எவரும் விரும்பாத கடிதம்

 “Wicked Little Letters,” மாறுபட்ட பிரிட்டிஷ் திரைப்படம். தியா ஷாராக் இயக்கிய புதிய நகைச்சுவை திரைப்படம்

துப்பறியும் கதை என்றும் சொல்லலாம். ஆனால் துப்பறியப்படும் விஷயமும் பின்புலமும் புதியது. சுவாரஸ்யமானது.

1920களில் கதை நடக்கிறது. லிட்டில்ஹாம்ப்டனில் உள்ள ஒரு வீட்டிற்குத் தபால் வருவதில் துவங்குகிறது. அந்தத் தபாலை பார்த்த மாத்திரம் வீட்டில் உள்ளவர்கள் அலறுகிறார்கள். காரணம் அது ஒரு மொட்டைக்கடிதம். அதுவும் ஆபாச வார்த்தைகளால் எழுதப்பட்ட கடிதம். அதைப் பிரித்துப் படிக்கவே சங்கடப்படுகிறார்கள்.

இப்படியான கடிதங்கள் தொடர்ந்து வருவதைத் தாங்க முடியாமல் எடித்தின் குடும்பம் காவல்துறையில் புகார் தருகிறார்கள். அவளது அப்பா தீவிரமான மதப்பற்றாளர். அம்மா கோபக்காரர். எடித்தையும் தீவிர மதநம்பிக்கை கொண்டவராக வளர்த்திருக்கிறார்கள். இளம்பெண்ணாக இருந்த போதும் அவளை ஒரு சிறுமியைப் போலவே தந்தை நடத்துகிறார்கள். கட்டுபாடுகளை விதிக்கிறார். பிறந்தநாள் விருந்து அதற்கு ஒரு உதாரணம்.

கடவுளுக்குப் பயந்து வாழும் தங்களைப் பற்றி இப்படி மோசமாக எழுதும் நபர் யாராக இருக்ககூடும் என அவர்கள் யோசிக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் ரோஸ் தான் இப்படி எழுதுகிறாள் என்று நினைத்து அவள் மீது போலீஸில் புகார் கொடுக்கிறார்கள்.

ரோஸ் ஐரீஷ் பெண். விளையாட்டுதனமானவள். போரில் கணவனை இழந்து தனியே வாழுகிறவள். தன் மகள் நான்சி மீது மிகுந்த அன்பு கொண்டவள். பக்கத்துவீட்டுக்காரர்களின் கட்டுபாடுகளைத் துச்சமென நினைப்பவள். சுதந்திரமான மனநிலை கொண்டவள்

ஆரம்ப நாட்களில் எடித் பக்கத்துவீட்டு ரோஸ் உடன் நட்பாகவே பழகுகிறாள். ஆனால் அவளது துடுக்கான பேச்சும் செயலும் எடித்திற்கு அச்சமூட்டுகின்றன. ஆகவே விலகிக் கொள்கிறாள். ரோஸ் பக்கத்துவீட்டுகார்களைப் பல்வேறுவிதமாக எரிச்சல்படுத்துகிறாள். ஆகவே ரோஸ் தான் மொட்டைகடிதம் எழுதியிருப்பாள் என எடித் சந்தேகப்படுகிறாள். அவளது தந்தை அதை உறுதியாக நம்புகிறார்.

ரோஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். காவல்துறை ரோஸை கைது செய்து சிறையில் அடைக்கிறது. ஆனாலும் மொட்டைக்கடிதம் வருவது நிற்கவில்லை. இப்போது அது போன்ற கடிதம் பலருக்கும் வரத்துவங்குகிறது. காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்துகிறது.

இதற்கிடையில் ரோஸ் ஒரு அப்பாவி என நினைக்கும் காவல்துறையைச் சேர்ந்த கிளாடிஸ் மோஸ் என்ற பெண் அதிகாரி அவளுக்கு உதவி செய்திட முன்வருகிறாள். நடந்தவற்றை அவள் விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.

மொட்டைகடிதம் எழுதுவது வேறு யாரோ என உணர்கிறாள். அவரைக் கண்டுபிடிக்க முயலுகிறாள். இந்த நிலையில் காவல்அதிகாரிக்கே வசைக் கடிதம் வந்து சேருகிறது. கடிதத்திலுள்ள கையெழுத்தை வைத்து அதை எழுதியவர் யார் எனத் தேடுகிறார்கள். முடிவில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்.

வெளித்தோற்றத்தில் அமைதியாக, வெகுளியாகத் தோற்றம் தருபவர் மனதில் இது போல வசையும் வெறுப்பும் மறைந்திருக்கக் கூடும், அவர்கள் ரகசியமாகச் செயல்படுவார்கள் என்பதைக் கதை வெளிப்படுத்துகிறது.

ஒரு மொட்டைகடிதம் இங்கிலாந்து முழுவதையும் பரபரப்பாக்குகிறது. செய்தி தாட்கள் அந்தச் செய்தியை விற்பனைப் பொருளாக்கி பெரியதாக்குவதையும் படம் அழகாக விளக்குகிறது.

கிளாடிஸ் மோஸ் காவல்துறையில் பணியாற்றும் முதல் பெண் போலீஸ் அதிகாரி . உண்மையான கதாபாத்திரத்தின் சாயலில் உருவாக்கபட்டிருக்கிறார்.

ஒரு பெண்ணைக் காவல்துறை அதிகாரியாக ஏற்க மறுக்கிறார் எடித்தின் தந்தை. அவரது வெறுப்பும் ஏளனமும் அந்தக் காலகட்ட பொதுப்புத்தியின் வெளிப்படாகவே உள்ளது

1918-1920 காலப்பகுதியில் பிரிட்டிஷ் குடும்பத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றம் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறது

ரோஸ் தனது சொந்தத் துயரங்களைக் கடந்து மகிழ்ச்சியாக வாழுகிறாள். சந்தோஷத்தைப் பரவவிடுகிறாள். ஆனால் எடித் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து தனது இயல்பை மறைத்துக் கொண்டு பிறரது சந்தோஷத்தை வெறுப்பவளாக மாறிவிடுகிறாள். குடும்ப வன்முறையின் அடையாளமே எடித். அவள் ரோஸைப் போல வாழ விரும்புகிறாள். ஆனால் அதற்கான தைரியமில்லை.

எடித்தின் தந்தை அந்தக்கால கட்ட பிரிட்டிஷ் தந்தையின் குறியீடு. அவர் அன்பை போதிக்கிறவராகவும் அடக்குமுறையை கையாளுகிறவராகவும் நடந்து கொள்கிறார்.

அன்றைய காவல்துறையின் செயல்பாடு, முதல் பெண் காவல்துறை அதிகாரி சந்திக்கும் அவமானங்கள். அவள் நடத்தப்படும் விதம் போன்றவற்றை உண்மையாக படம் சித்தரிக்கிறது.

ரோஸின் கடந்த காலம். அவளது கறுப்பினக்காதலன். அவளது மகள் ரோஸைப் புரிந்து கொள்வது, ரோஸிற்கு உதவிடும் பெண்கள், அவர்கள் வசிக்கும் வீதி, அன்றைய தபால்துறை என அக்கால உலகமும் அதன் தனித்துவமான மனிதர்களும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2025 01:01

February 9, 2025

வாழ்வின் விசித்திரங்கள்

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் புத்தகம் குறித்த விமர்சனம்

சதீஸ்குமார்,

நன்றி

தமிழ்நாடு இ பேப்பர். காம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 09, 2025 05:54

February 6, 2025

தபால்துறை விழா/ புகைப்படங்கள்

நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற விழா சிறப்பாக நடந்தேறியது.

அஞ்சல்துறை அதிகாரிகள், தபால்காரர்கள். தபால் நிலைய ஊழியர்கள், தபால்தலை சேமிப்பாளர்கள், ஊடக நண்பர்கள், என அரங்கு நிறைந்த கூட்டம். நிகழ்வை நன்றாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் அந்திமழை அசோகன் உள்ளிட்ட எனது விருப்பத்திற்குரிய இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.

தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலை தபால்காரர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆகவே அவர்கள் இந்த நூலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

நிகழ்வில் சென்னையின் பல்வேறு அஞ்சலகங்களில் பணியாற்றும் தபால்காரர்களுக்கு நூலை வணங்கினோம். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.

இதே நிகழ்வில் சென்னை பொதுதபால் அலுவலகத்தின் நிரந்தர ஓவிய தபால்முத்திரை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அதில் தபால்தலை சேகரிப்பாளர்கள் சங்க தலைவர் ரோலாண்ட்ஸ் நெல்சன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சென்னை மண்டல தபால்துறைத் தலைவர் ஜி. நடராசன் நிகழ்விற்குத் தலைமையேற்று சிறப்பான உரையை வழங்கினார். சென்னை மண்டல தபால்துறை இயக்குநர் எம்.மனோஜ், முதன்மை தபால்துறை அதிகாரி சுவாதி மதுரிமா, உதவி இயக்குநர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தபால்துறையின் சார்பில் இப்படி ஒரு விழா நடத்தி என்னைக் கௌரவப்படுத்தியதற்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்தேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 06, 2025 18:55

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.