போரும் காதலும்

ஜெர்மானிய எழுத்தாளர் எரிக் மரியா ரெமார்க்கின் A Time to Love and a Time to Die நாவல் போரின் துயர நாட்களை விவரிக்கிறது. ஹெமிங்வேயின் A Farewell to Arms நாவலைப் போன்ற கதைக்களம் கொண்டது. இதில் போர் முனையிலிருந்து வீடு திரும்பி வரும் சிப்பாய் கிரேபரின் காதலும், பெற்றோரை தேடும் அவனது இடைவிடாத பயணமும் விவரிக்கபடுகிறது.

போரை முதன்மைப்படுத்திய ஐரோப்பிய நாவல்களுக்கும் ரஷ்ய நாவல்களுக்கும் நிறைய வேறுபாடிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் போர் நாவல்களில் ஜெர்மனி மீது கடுமையான விமர்சனம் வைக்கபடுகிறது. போரை சமூகக் குற்றமாக கருதும் எண்ணம் அழுத்தமாக வெளிப்படுகிறது. ஆனால் ரஷ்யப் போர் நாவல்களில் தேசப்பற்று. வீரம். மற்றும் பெருமிதம் மேலோங்கியிருக்கிறது. அது ரஷ்ய ராணுவத் தலைமை பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைப்பதில்லை.

எரிக் மரியா ரெமார்க் முதலாம் உலகப் போரின் போது இம்பீரியல் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றியவர். போரில் குண்டுவீச்சின் காரணமாக இடது கால், வலது கை மற்றும் கழுத்தில் காயமடைந்தவர்.  இராணுவ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று  நலமடைந்திருக்கிறார். ஆகவே போர் முனையில் நடைபெறும் நிகழ்வுகளை தனது எழுத்தில் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

போருக்குப் பின்பு ஒராண்டு காலம் பள்ளி ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.  சில காலம் நூலகராகவும் பத்திரிக்கையாளராகவும் வேலை செய்த அனுபவம் அவருக்கு உண்டு

போரிலிருந்து வீடு திரும்பிய பிறகு, போரின் துயரநினைவுகளும் அவரது அன்னையின் மரணமும் அவருக்கு மிகுந்த மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த துயரிலிருந்து விடுபடவே எழுத ஆரம்பித்தார். போர் அவரது எழுத்தின் ஊற்றுக்கண்ணாக மாறியது.  

••

இரண்டு ஆண்டுகளாகத் தனது வீட்டிற்குத் திரும்பாமல் போர்முனையில் கழிக்கும் கிரேபருக்கு மூன்று வாரங்களுக்கு விடுமுறை அளிக்கபடுகிறது. அவன் தனது சொந்த ஊருக்குத் திரும்புகிறான். பெர்லின் நகரம் விமானத்தாக்குதலில் அழிக்கபட்டு சிதைந்த நிலையில் இருக்கிறது.. நேச நாடுகளின் குண்டுவீச்சு இரவும் பகலும் தொடர்கிறது.

அவனது பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவனது வீடும் நொறுக்கிக் கிடக்கிறது. அவர்கள் குடியிருந்த வீதி அடையாளம் தெரியாதபடி சிதறுண்டு போயிருக்கிறது. உயிர் பிழைத்து வெளியேறிப் போனவர்கள் தங்கள் வீட்டுக்கதவில் சில தகவல்களை ஒட்டிப் போகிறார்கள். கிரேபர் தனது பெற்றோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முனைகிறான். எதுவும் கிடைக்கவில்லை.

தனது பெற்றோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, குடும்ப மருத்துவரான டாக்டர் க்ரூஸைத் தேடிச் செல்கிறான். டாக்டர் வீட்டில் அவரது மகள் எலிசபெத் மட்டுமே வசிக்கிறாள். அவள் கிரேபரைச் சந்தேகப்படுகிறாள். ஒருவேளை நாஜி ராணுவம் இப்படி ஆள் அனுப்பிக் கண்காணிக்கிறதோ எனப் பயப்படுகிறாள். கிரேபர் தனது நோக்கத்தைச் சொன்னதும் அவள் கிரேபரைப் புரிந்து கொள்கிறாள்.

நாஜி ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்த காரணத்திற்காக டாக்டர் க்ரூஸ் கைது செய்யப்பட்டு வதைமுகாமில் அடைக்கபட்டிருக்கிறார். என்றாவது தனது தந்தை திரும்பி வரக்கூடும் என எலிசபெத் அதே வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறாள்.

தனது பெற்றோர்களுக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்த பரிசினை எலிசபெத்திற்கு அளிக்கிறன் கிரேபர். அவள் அதை ஏற்க மறுத்துவிடுகிறாள். அது கிரேபருக்கு ஆத்திரத்தை உண்டாக்குகிறது. தன்னை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் எனக் கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

அவனைப் போலவே நகரின் இடிபாடுகளுக்குள் தனது உறவுகளைத் தேடும் போர் வீர்ர்களுக்கான முகாமில் கிரேபர் தங்குகிறான். அந்த முகாமில் மனைவியை இழந்த ஒருவர் அவளைத்தேடி நகரெங்கும் அலைகிறார். கால் உடைந்த ராணுவ அதிகாரி எப்போதும் சீட்டுவிளையாடிக் கொண்டேயிருக்கிறார். கிரேபர் தனது தேடுதலை தொடர்கிறான். அப்போது நாஜிகளுக்குப் பயந்து பலரும் ரகசியமாக ஒளிந்து வாழ்வதை அறிந்து கொள்கிறான்.

ராணுவத்தில் பணியாற்றுவதால் எல்லைப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அவன் யாரிட்டும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அது போலவே தலைநகரில் என்ன நடந்தது என்பதை அவனும் அறிந்திருக்கவில்லை.

1944ல் அவனது படைப்பிரிவு உக்ரேனிய கிராமம் ஒன்றில் முகாமிடுகிறது. பனியில் இறந்து கிடந்த ஜெர்மானிய ராணுவ அதிகாரி ஒருவரின் உடலை அடையாளம் கண்டு புதைக்கிறார்கள். கிராமத்தில் போராளியாகச் சந்தேகிக்கும் உக்ரேனியர்களை ராணுவம் சுட்டுக் கொல்கிறது. அதைக் கண்டு கிரேபர் வருத்தம் அடைகிறான். அப்பாவி பொதுமக்களை ஏன் ராணுவம் வேட்டையாடுகிறது எனக் குற்றவுணர்வு கொள்கிறான். அந்த நினைவுகள் ஊர்வந்த பின்பும் அவனை அலைக்கழிக்கிறது.

எலிசபெத் சீருடைகள் தைக்கும் தொழிற்சாலையில் பணியாற்றுகிறாள். அது கட்டாயப்பணி. ராணுவத்தின் தேவைக்காக அந்தத் தொழிற்சாலை இயங்குகிறது. கிரேபரை மறுபடியும் சந்திக்கும் எலிசபெத் அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவர்களுக்குள் புதிய நட்பு உருவாகிறது.

ஒரு நாள் தற்செயலாகக் கிரேபர் தனது பழைய வகுப்புத் தோழனான ஆஸ்கார் பைண்டிங்கை சந்திக்கிறான். அவன் இப்போது நாஜி கட்சியின் பிராந்திய தலைவராக இருக்கிறான். அரண்மனை போன்ற வீடு. ஆடம்பர வசதிகள். சேவகர்கள். அவன் கிரேபரை தனது வீட்டிலே தங்கிக் கொள்ளும்படி அழைக்கிறான். நீண்ட காலத்தின் பின்பு அவனது வீட்டில் கிரேபர் சுகமாகக் குளிக்கிறான். குடிக்கிறான். தன்னால் வதைமுகாமில் இருக்கும் எவரையும் விடுதலை செய்ய முடியும் எனப் பைண்டிங் சொல்கிறான். ஆகவே டாக்டர் க்ரூஸை விடுதலை செய்வதற்குத் தன்னால் ஏதாவது செய்ய முடியுமா எனக் கிரேபர் யோசிக்கிறான்.

கிரேபரும் எலிசபெத்தும் காதலிக்கிறார்கள். கிரேபர் தனது நண்பரான முன்னாள் ராணுவ அதிகாரியிடமிருந்து அழகான சீருடையைக் கடன்வாங்கி அணிந்து கொண்டு எலிசபெத்தை உயர் ரக விடுதி ஒன்றுக்கு விருந்திற்கு அழைத்துப் போகிறான்.  போர் நடக்கும் காலம் என்பதால் ஆடம்பர விருந்துகள் தடைசெய்யப்பட்டிருந்தன. ஆயினும் ராணுவத்தினருக்காகவும் பிரபுக்களுக்காகவும் இது போன்ற உயர் ரக விடுதிகள் செயல்பட்டன.

அந்த விடுதியில் என்ன வகையான ஒயின் கிடைக்கும், எப்படி அதைப் பெற வேண்டும் என்று ராணுவ அதிகாரி அவனுக்குப் பாடம் கற்பித்திருக்கிறார். எலிசபெத் அந்த விருந்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் எதிர்பாராமல் நடக்கும் வான்வழித் தாக்குதலில் விருந்து நடக்குமிடம் நொறுங்கிப் போகிறது. பலரும் காயமடைகிறார்கள்.

அந்த விருந்தின் போது எரிக் மரியா ரெமார்க் எழுதுகிறார்

”After his years close to death the wine was now not just wine, the silver not just silver, and the music that stole into the room from somewhere not just music – they were all symbols of that other life, the life without death and destruction, the life for life’s sake that had already become almost a myth and a hopeless dream.”

தனது விடுமுறைக்காலம் முடிவதற்குள் எலிசபெத்தைத் திருமணம் செய்து கொள்ளக் கிரேபர் விரும்புகிறான். இதற்காகத் திருமணப் பதிவு மையத்திற்குப் போகிறார்கள். அங்கே நடக்கும் ரகசிய விசாரணையில் எங்கே திருமணம் நிறுத்தப்படுமோ என்ற நிலை ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் முறையாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். புதிய வாழ்க்கையைத் துவங்குகிறார்கள்.

பெர்லின் மீது நடக்கும் தொடர் விமானதாக்குதலில் அவர்களின் குடியிருப்பு நொறுங்கி போகிறது. வசிக்க வீடில்லை. இடிந்த அருங்காட்சியகம் ஒன்றில் இரவைக் கழிக்கிறார்கள். இதற்கிடையில் வதைமுகாமிலிருந்து எலிசபெத்தை நேரில் வரச் சொல்லி ஒரு கடிதம் வருகிறது. அது கிரேபரை அச்சப்படுத்துகிறது.

பாழடைந்த கட்டிடத்தில் வசித்து வரும் தனது பழைய பேராசிரியர் போல்மேனைச் சந்தித்து அக் கடிதம் குறித்து ஆலோசனை செய்கிறான் யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் என அவரும் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கிறார். ஆகவே வெளிப்படையாகப் பேச மறுக்கிறார்.

எலிசபெத்தின் கடிதத்தை மறைத்துக் கொண்டு அவனே நேரடியாக விசாரணை அலுவலகம் செல்கிறான். ஆனால் அங்கே டாக்டர் க்ரூஸின் மரணத்தை அறிந்து கொள்கிறான். அதை எலிசபெத்திற்கு அவன் தெரிவிப்பதில்லை.

கிரேபர் போர்முனைக்குத் திரும்பிப் போகிறான். இப்போது அவன் மாறியிருக்கிறான். தனது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் இருக்கிறான். அந்த முடிவு அவனை எங்கே கொண்டு செல்கிறது என்பதை நாவல் விவரிக்கிறது.

போரும் பேரழிவுமாக உள்ள இந்த உலகிற்கு ஒரு குழந்தை தேவையா. ஆகவே நாம் குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்று  சொல்கிறான் கிரேபர். இந்த உலகை இப்படியே விட்டுவிட முடியாது. அதை மாற்றுவதற்குக் குழந்தைகள் தேவை என்கிறாள் எலிசபெத்.

அந்த நம்பிக்கை எலிசபெத்தின் குரல் மட்டுமில்லை. அது தான் எரிக் மரியாவின் அடையாளம்.

வீடு திரும்பும் போது கிரேபர் தனது கடந்தகாலத்தை நினைவு கொள்கிறான். எரிக் மரியா ரெமார்க் அதை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் பாருங்கள்

“He thought of the breakfast table at home. His mother had a blue and white checked tablecloth and there had been honey and rolls and coffee with hot milk. The canary had sung and in summer the sun had shone upon the rose geraniums in the window. At that time he had often rubbed the dark green leaves between his hands smelling the strong, foreign perfume and thinking of foreign lands. Since then he had seen plenty of foreign lands but not the way he had dreamed of at that time.”

All Quiet on the Western Front நாவலின் மூலம் போரின் அவலத்தை மிகவும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் எழுதியவர் எரிக் மரியா ரிமார்க். இந்த நாவலில் போரை அதிகம் விவரிக்கவில்லை. அழிவிற்கு மத்தியில் துளிர்விடும் காதலைப் பேசுகிறார். இடிபாடுகளுக்குள் முளைத்து வரும் தாவரம் போன்றதே அந்தக் காதல். இந்த நாவலில் பேராசிரியர் போல்மென் போன்று யூதர்களைக் காப்பாற்றிய ஜெர்மனியரை சிறப்பாக அடையாளம் காட்டுகிறார். போரையும் காதலையும் சொன்னவிதத்தில் இந்த நாவல் இன்றும் முக்கியமானதே.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2025 03:59
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.