கடல் திரும்பும் திமிங்கலம்

ஈரானிய அனிமேஷன் இயக்குனர் ஹொசைன் மொலாயெமி மற்றும் ஷிரின் சோஹானி இயக்கத்தில் வெளியான இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது.

20 நிமிஷங்கள் கொண்ட இந்தப் படத்தில் உரையாடலே கிடையாது. நான்கு கதாபாத்திரங்கள்.

போரின் பாதிப்பால் மனஅழுத்தம் கொண்ட தந்தை. அவரைக் கவனித்துக் கொள்ளும் மகள். கரையொதுங்கிய ஒரு திமிங்கலம். நான்காவது கதாபாத்திரமாக இருப்பது கடல்.

இந்தப் படத்தை உருவாக்க ஆறு ஆண்டுகள் ஆனது என்கிறார் இயக்குநர். ஷிரின் சோஹானியின் தந்தை ஒரு சிப்பாய். ஈராக் போரின் காரணமாக அவரது ஒரு கண் பறிபோயிருந்தது. போரின் விளைவாகத் தீவிர மன அழுத்தம் ஏற்பட்டுச் சிகிட்சை எடுத்து வந்தார். ஆகவே அவரது சாயலில் படத்தில் வரும் கேப்டனை உருவாக்கியிருக்கிறார்கள்.

தந்தையும் மகளும் யாருமற்ற கடற்கரையொன்றில் வசிக்கிறார்கள். தந்தையின் அடக்க முடியாத கோபத்துடன் படம் துவங்குகிறது. அந்தக் கோபம் மீன் தொட்டியைச் சிதறடிக்கிறது. மகள் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். அப்போது கடற்கரையில் ஒரு திமிங்கலம் கரையொதுங்கியிருப்பதைக் காணுகிறாள்.

அதை மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்காக அதன் மீது தண்ணீர் ஊற்றுகிறாள். தந்தையோ படகில் கயிற்றைக் கட்டி திமிங்கலத்தைக் கடலுக்குள் இழுத்து செல்ல முயன்று தோல்வி அடைகிறார். திமிங்கலம் அசையவேயில்லை. அதனை வெயில் மற்றும் கடற்பறவைகளிடமிருந்து பாதுகாக்க மகள் போராடுகிறாள்.

தந்தை திமிங்கலத்தைக் கடலில் சேர்க்க புதிய வழியைக் கண்டறிகிறார். அபாயமான அந்த வழியினைச் செயல்படுத்துகிறார்.

ஹெமிங்வேயின் The Oldman and the Sea நாவலின் மறுவடிவம் போல இப்படத்தை உணர்ந்தேன். நாவலில் சாண்டியாகோ தனது தூண்டிலில் சிக்கிய மீனுடன் போராடுகிறான். இதிலோ கரையொதுங்கிய மீனை திரும்ப அனுப்பி வைக்கப் போராடுகிறார் கேப்டன். நாவலில் வரும் சிறுவனுக்குப் பதில் இதில் மகள் இடம்பெற்றிருக்கிறாள்.

கரையொதுங்கியிருக்கும் திமிங்கலம் என்பது ஒரு குறியீடு. அவர்களுக்கு வெளியே உள்ள வாழ்க்கை தான் அந்தத் திமிங்கலம். செயலற்றதாக உள்ள திமிங்கலத்தைத் தனது இயல்பு உலகிற்கு அவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கும் தேவையானது. இதனைத் தந்தை ஒருவிதமாகவும் மகள் ஒருவிதமாகவும் மேற்கொள்கிறார்கள்,

தந்தையின் கோபம் என்பது போரின் பின்விளைவு என்பதை மகள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாள். தந்தையால் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் கடந்தகாலத்தின் துர்நினைவுகளால் துரத்தப்படுகிறார். நினைவிலிருந்து இடைவெட்டி மின்னும் போர்களக் காட்சிகள் அழகாக உருவாக்கபட்டுள்ளன.

கரையொதுங்கிய திமிங்கலத்தின் மீது வெயில்படுகிறது. அதைத் தடுக்க மகள் அதன் மீது தண்ணீரைத் தெளித்துக் குளிர்ச்சிப்படுத்துகிறாள். ஈரமான துணிகளை விரிக்கிறாள். வண்ணத் துணிகளுடன் உள்ள திமிங்கலத்தின் தோற்றம் விநோதமாகவுள்ளது.

தந்தை ஒரு காட்சியில் ஆணி அடித்துப் புகைப்படம் ஒன்றை மாட்ட முயலுகிறார். அப்போது வெளிப்படும் அவரது கோபம். கடந்தகால நினைவுகள் அவரை எந்த அளவிற்குப் பாதித்துள்ளதை என்பதை நன்றாக உணர வைக்கிறது

தந்தை ஒரு சைப்ரஸ் மரத்தைப் போன்றவர், பாரசீகக் கலாச்சாரத்தில் சைப்ரஸ் வலிமை, அழியாமை மற்றும் துக்கத்தின் அடையாளமாகும்.

கடல் தந்தையின் மனநிலையை அடையாளப்படுத்துகிறது. கடலின் கொந்தளிப்பு மற்றும் அமைதி இரண்டும் அவரது வெளிப்பாடே.

படத்தின் அனிமேஷன் பிரமிக்க வைக்கிறது. இந்தத் திரைப்படம் கையால் நெய்யப்பட்ட பாரசீக கம்பளம் போன்றது என்கிறார் இயக்குநர். அது உண்மையே.

வண்ணத்தேர்வு மற்றும் கேமிரா கோணங்கள்.கதாபாத்திர வடிவாக்கம், காட்சிகள். வரையப்பட்ட விதம், அஃப்ஷின் அஸிஸியின் இசை, என யாவிலும் மிகுந்த கலை நேர்த்தியைக் காண முடிகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2025 05:12
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.