மகிழ்ச்சியின் அடையாளம்

டெட்சுகோ குரோயநாகி எழுதிய டோட்டோ சான் ஜன்னலில் ஒரு சிறுமி 1981ல் வெளியான புத்தகம் ஜப்பானில் இந்த புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

ரயில் பெட்டிகளை வகுப்பறையாகக் கொண்ட டோமாயி பள்ளியில் படித்த டோட்டோ சானின் நினைவுகளை விவரிக்கும் இந்நூல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வள்ளிநாயகம். பிரபாகரன் இணைந்து மொழிபெயர்த்துள்ளார்கள்.

இப்போது டோட்டோ சானை அனிமேஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஷின்னோசுகே யாகுவா இயக்கியுள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அவசியம் காண வேண்டிய படம்.

டோட்டோ சான் பொதுப்பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படிக்கிறாள். வகுப்பறையில் பல நூறு தடவைகள் அவள் மேஜையைத் திறந்தும் மூடவும் செய்கிறாள். அப்படிச் செய்யக்கூடாது. ஏதாவது ஒரு பொருளை வைக்கவோ, எடுப்பதாகவோ இருந்தால் மட்டுமே மேஜையைத் திறக்க வேண்டும் என அவளது ஆசிரியர் கண்டிக்கிறார்.

இப்போது டோட்டோ சான் புத்தகம் பென்சில் நோட்டு என எதையாவது உள்ளே வைக்கிறாள். அல்லது வெளியே எடுக்கிறாள். அவளுக்கு மேஜையின் வாயை திறந்து திறந்து மூடுவது சந்தோஷமளிக்கிறது. ஆனால் ஆசிரியரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலடைகிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி முதல்வரிடம் புகார் சொல்கிறார்.

இன்னொரு நாள் டோட்டோ சான் வகுப்பின் ஜன்னல் வழியாகச் சாலையில் செல்லும் வீதி இசைக்கலைஞர்களைக் காணுகிறாள். அவர்களைக் கைதட்டி அழைத்துத் தங்களுக்காகப் பாட்டு பாடும்படி வேண்டுகிறாள். அவர்களும் இன்னிசையோடு பாடுகிறார்கள். வகுப்பை மறந்து பிள்ளைகள் யாவரும் அந்த இசையைக் கேட்டு மகிழுகிறார்கள். இது ஒழுங்கீனம் என டோட்டோ சான் மீது ஆசிரியர் புகார் அளிக்கவே அவளைப் பள்ளியைவிட்டு விலக்குகிறார்கள்.

டோட்டோ சானின் அம்மா அவளைப் புதிய பள்ளியில் சேர்த்து விடுகிறாள். அது தான் ரயில் பெட்டிகளை வகுப்பறையாக் கொண்ட டோமாயி பள்ளி. படத்தில் அந்தப் பள்ளியும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளும் மிக அழகாகச் சித்தரிக்கபட்டுள்ளன.

பள்ளியின் புகைப்படம்.

குறிப்பாக டோட்டோ சான் ஆறு ரயில் பெட்டிகளைப் பார்த்தவுடன் தான் பயணம் செல்லப் போவதாக மகிழ்ச்சி அடைகிறாள். பள்ளியின் நிர்வாகி கோபயாஷியை சந்திக்கும் போது நீங்கள் பள்ளியின் நிர்வாகியா அல்லது ஸ்டேஷன் மாஸ்டரா என்று கேட்கிறாள். அதைக் கேட்டு அவர் சிரிக்கிறார். அவள் சொல்ல விரும்பிய எதையும் சொல்லலாம் எனக் கோபயாஷி அனுமதித்த உடனே அவள் கடகடவெனத் தன்னைப் பற்றிய விஷயங்களைக் கொட்டுகிறாள். அந்தச் சுதந்திரம் தான் பள்ளி எப்படிப்பட்டது என்பதன் முதற்புள்ளியாக இருக்கிறது.

இயற்கையான சூழலில், புதுமையான முறையில், அப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருகிறது. வெறும் பாடத்தை மட்டுன்றி சரிவிகித உணவை, நட்பை, கவிதையை. இசையை, குழு நடவடிக்கைகள் மூலம் இயற்கையோடு இணைந்து வாழும் முறையைக் கற்றுத் தருகிறது.

பள்ளியில் டோட்டோ சான் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கிறாள். அந்த சிரிப்பு தீராத மகிழ்ச்சியின் அடையாளம்.

இந்தப் படம் டெட்சுகோ குரோயனகியின் பள்ளி வாழ்க்கையை மிகுந்த அழகுடன் சித்தரிக்கிறது. அத்தோடு மாற்றுக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வகுப்பில் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சிறப்பாக அடையாளம் காட்டுகிறது.

JADWAL TAYANG TOTTO – 1

டோடோ சானை அவளது பெற்றோர் புரிந்து கொள்கிறார்கள். அவளைத் தண்டிக்கவோ, அடக்கி ஒடுக்கவோ அவர்கள் முனைவதில்லை. பொதுப்பள்ளியில் அவளது விருப்பங்கள் யாவும் ஒடுக்கப்படுகின்றன. அவளை ஆசிரியர் வெறுக்கிறார். அவளைப் பார்த்து மற்ற மாணவர்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று பயப்படுகிறார். அங்கே வகுப்பறை என்பது ராணுவ பயிற்சி நிலையம் போலச் செயல்படுகிறது. ஆனால் டோமாயி பள்ளியில் வகுப்பறை என்பது கற்றுக் கொள்வதற்கான சூழல். ஆகவே அது உருமாறிக் கொண்டேயிருக்கிறது. மாணவர்கள் ஒன்றிணைந்து கற்கிறார்கள். ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவி செய்யும் வழிகாட்டியாகச் செயல்படுகிறார்கள்.

டோமாயி பள்ளியை கோபயாஷி நடத்துகிறார் என்றாலும் பள்ளியினை மாணவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள். தங்கள் பள்ளிக்கான பாடலை அவர்களே உருவாக்குகிறார்கள். பிள்ளைகள் மரமேறி விளையாட பள்ளி அனுமதிக்கிறது.  இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகத் தோக்கியோவில் செயல்பட்ட டோமாயி பள்ளி யுத்தகாலத்தில் குண்டுவீச்சில் பாதிக்கபட்டு மூடப்பட்டது.

ஜப்பானிய அனிமேஷன் படங்கள் குழந்தைகள் பார்ப்பதற்காக மட்டும் உருவாக்கபடுவதில்லை. மாறாக எல்லா வயதினருக்குமான படமாகவே தயாரிக்கப்படுகின்றன.

ஹயாவோ மியாசாகியின் அனிமேஷன் படங்களைப் போல அடர்வண்ண சித்திரங்கள். விசித்திர நிகழ்வுகள். சாகசங்கள் கொண்ட கதையாக இல்லாமல் இப்படம் நீர்வண்ண ஓவியங்களைப் போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பானது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2025 04:47
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.