அன்றாடம் -2 தந்தை அறியாதவள்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அவருக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. ரகசிய உறவின் மூலம் பிறந்த அவரது மகளின் பெயர் இந்திரா கேட்டோ.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கதையை மார்க்வெஸ் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். அவருக்கு, ரோட்ரிகோ மற்றும் கோன்சாலோ என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

சுசானா கேட்டோ என்ற பத்திரிக்கையாளரை மார்க்வெஸ் ரகசியமாகக் காதலித்திருக்கிறார். அவள் வழியாகப் பிறந்த குழந்தை தான் இந்திரா.

இப்படி ஒரு மகள் இருப்பதை வாழ்நாளின் கடைசிவரை உலகம் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் மார்க்வெஸ். அவரது மறைவின் போது இப்படி ஒரு செய்தி ஊடகங்களில் அடிபட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று அவரது இரண்டு மகன்களும் மறுத்தார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸ் இறந்த பின்பு அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு இந்திராவை தங்களின் சகோதரியாக அங்கீகரித்திருக்கிறார்கள்.

மார்க்வெஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் இது போன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரது குடும்பத்தில் அப்படிக் கள்ளஉறவில் பிறந்த குழந்தை வளர்க்கபட்டது என்று மார்க்வெஸ் நினைவு கொள்கிறார். புனைவை நிஜமாக்குவது போலவே அமைந்திருக்கிறது மார்க்வெஸின் ரகசியக் காதல்.

1982 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது மார்க்வெஸை வாழ்த்திய முதல் நபர் இந்திரா காந்தி என்கிறார்கள். அதன் காரணமாகவே அவரது பெயரை தனது மகளுக்கு மார்க்வெஸ் வைத்திருக்கிறார்.

தந்தை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் என்று வெளியே சொல்ல முடியாதபடி தந்தையற்ற பெண்ணாக வளர்ந்திருக்கிறார் இந்திரா கோட்டே. தற்போது 32 வயதில் இருக்கும் இந்திரா மெக்சிகோ நகரில் ஆவணப்பட இயக்குநராக உள்ளார். அவரது முகச்சாயல் அப்படியே மார்க்வெஸ் போலிருக்கிறது. குறிப்பாகக் கண்கள் மற்றும் மூக்கு.

தான் யார் என்று உலகிற்கு அடையாளம் காட்டவில்லையே தவிரத் தன் மீது தந்தை மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்கிறார் இந்திரா.

மார்க்வெஸின் ரகசியகாதலியாக இருந்த சூசனா ஒரு பத்திரிக்கையாளர். அவர் மார்க்வெஸ் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். அந்த நாட்களில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருக்கிறது

அம்மா உயிரோடு இருக்கும்வரை இந்த உண்மையை நாங்கள் மறைத்து வைத்திருந்தோம். இப்போது இந்திரா எங்கள் குடும்ப உறுப்பினர் என்று சொல்கிறார் மார்க்வெஸின் மகன் ரோட்ரிகோ

இப்படி லியோ டால்ஸ்டாயின் கள்ளஉறவில் பிறந்த மகனான டிபோபியின் பார்வையில் டால்ஸ்டாயின் வாழ்க்கை மற்றும் அவரது குடும்பத்தின் நிகழ்வுகளைத் தான் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலாக எழுதினேன். அதில் வரும் டிமோபியும் இந்திராவும் வேறுவேறில்லை.

மார்க்வெஸ் தனக்கு ஒரு மகள் இருப்பதை ஏன் மறைத்தார். அதை வெளிப்படையாக அறிவிப்பதில் என்ன பிரச்சனை. அவர் தனது மனைவிக்குப் பயந்து அதை வெளிப்படுத்தவில்லை என்கிறார்கள். இப்படி ஒரு உறவை பற்றி அவரது மனைவி அறிந்திருக்க மாட்டார் என்பது பொய். மார்க்வெஸின் உறவினர்கள் சிலர் இந்த உறவை பற்றி எங்களுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சூசனாவைத் தேடி மார்க்வெஸ் செல்வது வழக்கம் என்கிறார் அவரது உறவினரான கேப்ரியல் எலிஜியோ. மார்க்வெஸின் வாழ்க்கை ரகசியம் அவரது புனைவைப் போலவே விசித்திரமாகவுள்ளது.

••

லியோ டால்ஸ்டாயின் சகோதரி மரியா தனது கணவனைப் பிரிந்து ஸ்வீடீஷ் காதலனுடன் வாழத் துவங்கினார். அந்த நாட்களில் விவாகரத்துக் கிடைப்பது கடினமானது. அதிலும் மரியா கள்ள உறவில் குழந்தையைப் பெற்றுக் கொண்டார் என்பது சர்ச்சையை உருவாக்கியது. தனது சகோதரிக்கு விவாகரத்து பெற்றுத் தருவதற்காக டால்ஸ்டாய் பல்வேறு சட்ட நூல்களைப் படித்தார்ர். அத்துடன் அது போன்ற வழக்கு விபரங்களை ஆராய்ந்திருக்கிறார். அவள் விவாகரத்துப் பெறுவதற்குப் பெரிதும் உதவி செய்திருக்கிறார்.

அந்தப் பாதிப்பில் தான் அன்னாகரீனினா நாவல் எழுதினார் என்கிறார்கள். அதில் அன்னா தனது கணவரை விட்டு விரான்ஸ்கியின் மீது காதல் கொள்கிறாள். கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவது அவளது முக்கியப் பிரச்சனையாக உள்ளது.

மரியா

திருமணத்திற்கு முன்பாகவே, அல்லது பின்பாகவே கள்ளஉறவில் குழந்தைகள் பிறப்பது டால்ஸ்டாய் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. அவரது தந்தை அப்படி ஒரு மகனைப் பெற்றிருக்கிறார். டால்ஸ்டாயின் சகோதரனும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பிள்ளைக்குத் தந்தையாகியிருக்கிறார். டால்ஸ்டாய் திருமணத்திற்கு முன்பாக அக்சின்யா என்ற வேலைக்காரப் பெண்ணுடன் பழகியிருக்கிறார். அவள் மூலமாக டிமோபி என்ற பையன் பிறந்திருக்கிறான். அவனைக் கடைசிவரை தனது மகனாக அவர் ஏற்கவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் மரணத்திற்குப் பின்பு அவரது மூத்த மகன் செர்ஜி டிமோபியை தங்கள் சகோதரன் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறான்.

“All human beings have three lives: public, private, and secret.” என்று சொல்கிறார் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அது அவரது சொந்த அனுபவத்திலிருந்து சொன்னது என இப்போது தெரிந்திருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2025 03:53
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.