Jeyamohan's Blog, page 18

October 31, 2025

நிஷா மன்சூர்

தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர். கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இஸ்லாமிய மெய்யியல் மற்றும் சூஃபி மெய்யியலை பயிற்றுவிக்கிறார்.

நிஷா மன்சூர் நிஷா மன்சூர் நிஷா மன்சூர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2025 11:32

மு.குலசேகரன் ஏன் விருந்தினர்?

மு.குலசேகரனின் தங்கநகைப்பாதை அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள்- கடிதம்

அன்புள்ள ஜெ

மு.குலசேகரன் இப்போது விஷ்ணுபுரம் விருந்தினராக கலந்துகொள்கிறார். இதுநாள் வரை நீங்கள் அவரைப்பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. திடீரென்று அவர் விருந்தினர் ஆகிறார். அவர் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டியதுதான் காரணம் என்ற பேச்சு இருக்கிறது. உங்கள் விளக்கம் என்ன?

ஆ. நாராயணன்

அன்புள்ள ஆ,

பேச்சுக்கள் நல்லது. எந்த வகையிலானாலும். இன்றைய அரசியல் வெறி, சினிமாவெறிக் காலகட்டத்தில் வம்புகளேகூட நல்லவைதான். (என்ன செலவானாலும் சரி, வதந்திகளைப் பரப்புங்க தோழர்!)

மு.குலசேகரன் 1991 முதல் என் நண்பர். நான் திருப்பத்தூரில் இருந்தபோது அன்றாடம் சந்தித்துக் கொண்டிருந்தோம். பல உதவிகள் செய்தவர். தொடர்ந்து தொடர்பில் இருந்தவர். 

அவர்தான் மனக்குறைப்படவேண்டும், அத்தனை அணுக்கமானவர் என்றாலும் நான் அவரை எழுத்தாளராகப் பொருட்படுத்தி எழுதியதில்லை. அவர் முக்கியமான ஓர் இலக்கிய ஆக்கத்தை உருவாக்கிய பின்பு மட்டுமே அவரை பொருட்படுத்தினேன். உண்மையில் வேண்டிய நண்பர்களிடம் மட்டுமே இத்தனை கறாராக இருக்கிறேன்.

இது அவருடைய நூலை பிரச்சாரம் செய்வதற்கான விளம்பர உத்தி என இன்னொரு கடிதம். அந்நூலை வெளியிட்டது காலச்சுவடு. நான் ஏன் அவர்கள் நூலை விளம்பரம் செய்யவேண்டும்?

நல்லது, இந்த வம்புகள் வழியாக சிலர் அவரை வாசிக்க முனைவார்கள் என்றால் இது இலக்கியப்பணியே.

ஜெ

 

 

விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள் விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி

விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த் விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 9 – யாழன் ஆதி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2025 11:32

புரவியின் காலடியோசை- நிர்மல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

டெக்ஸாஸ் நண்பர் ப்ரதீப்புடன்  ஈராறு கால்கொண்டெழும் புரவி சமீபத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதனால் மீண்டும் வாசித்தேன். அது எனக்களித்த வாசிப்பவனுவத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

ஈராறு கால்கொண்டெழும் புரவி என்னும் இந்நாவல், திருமந்திரத்தின் யோக மரபு வழியாக தன்னையறிதலை நோக்கிப் பயணிக்கும் ஓருவரின் வாழ்வைப் பேசுகின்றது. பாச ஞானம், பசு ஞானம் உடையவர்கள் வழியாக பதி ஞானம் தேடி நகரும் இப்பயணம், நவீன நாவல் வடிவில் சித்தர் மரபு இயங்குவதை காட்டுவதாகவே எனக்கு தோன்றியது.

சித்தர் என்பவர் “சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டவர்” என மரபில் சொல்வர். சப்தம் என்பது நாதம்; சப்த முடிவு என்பது நாதாந்தம். நாதம் என்பது சர்வ ஆன்மாக்களுக்கும் அறிவினை எழுப்புவித்து நிற்கும் ஞானம். இந்த ஞானத்தை மனதால் தியானித்துக் காண்பவர்களே சித்தர்கள். இந்த நாவலால் உந்தப்பட்டு திருமந்திரம் வாசிக்கையில் இந்த அறிமுகம் கிடைத்தது. ஆனால் அதை புரிந்து கொள்ள நாவல் வழங்கும் அனுபவம் உதவியது. நாவல் வாசித்து முடித்து திருமந்திர கவிதை. அதை வாசித்து முடித்து மீண்டும் நாவல். ப்ரதீப்புடன் உரையாடல். பாம்பின் வாலை விழுங்கும் பாம்பு. இது ப்ரதீப்புக்கு பிடித்த படிமம். அதை அவருடன் உரையாடுகையில் பெற்றுக் கொண்டேன்.

நாவலின் தலைப்பு திருமூலரின் இக்கவிதையிலிருந்து வருகிறது.

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்,
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்,
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்,
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே

தண்டபாணி தேசிகர் உரையின்படி, “ஈராறு கால் கொண்டெழுந்த புரவி” என்பது கங்கையும் யமுனையுமாய் உருவகிக்கப்படும் இடகலை, பிங்கலை நாடிகள் வழியே மேலெழும் குதிரைபோல் களித்தாடும் பிராணன்.

நாவலின் இறுதியில், நாவலில் பிள்ளைவாள் தன் உடலெங்கும் எழுந்த உயிரையும், அவ்வுயிரின் மையமாக எழுந்த மூலாதார பிந்துவையும், அதில் திகழ்ந்த நாதத்தையும் உணர்கிறார். அதன் பின் அவரது எண்ணமாக விரியும் காட்சிகள் கவித்துவம் மிக்கவை.

இரண்டினின் மேலே சதாசிவ நாயகி,
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்,
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்,
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே

“இரண்டது கால் கொண்டெழுகையில் ஆயிரம் சாயல்கள் ஆயிரமென எழுந்தெழுந்த அலைகளில், அவர் மீண்டும் மீண்டும் சொற்களையே அள்ளி அள்ளிக்குடித்துக்கொண்டிருந்தார்”
என்று நாவல் விவரிக்கிறது. காலம் பிறப்பில் இருந்து இறப்பு வரை அவர் சொற்களில் வாசிப்பவனுக்கு காட்சியாகின்றது. 

ஐம்பத்தி ஒன்று எழுத்து என்பது சப்தங்களின் அடிப்படை என இந்தியப் பார்வை சொல்லும். சப்தம் சொல்லாகி, வார்த்தையாகி, வாக்கியமாகி, எண்ணமாகி, பொருள் கொண்டெழும். பிள்ளைவாளுக்கு காலம் சொற்களில் திரண்டு, அவரது பேரனுபவமாய் (ஐந்தெழுத்து ) முடிகிறது. அவர் நிறைவுறுகிறார். மாம்பழம் பழுகிறது.

திருமூலரின் கலைச்சொற்களை நவீன நாவலொன்றில் காண்பது மிகவும் சுவையானது. மனதுக்கும் கைக்கும் எண்ணவோ எழுதவோ காணாத சொற்சித்திரங்கள் இங்கு மெல்லிய புன்னகை தரும் காட்சிகளாக, அன்றாட உரையாடல் வடிவங்களாக மாறுகின்றன.

திருமந்திரத்தின் ஓர் உவமை காட்சியானது எனக்கு பசுமரத்தாணி போல நின்றது.

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே

கடல்நீரில் உள்ள உவர்ப்பு சூரிய வெப்பத்தால் உப்பெனப் பெயர் பெற்று, மீண்டும் நீரில் கலந்தபோது நீரேயாவது போல ஆன்மா சிவத்தில் அடங்கும் என்ற இக்கருத்தை, நாவல் காட்சியாக்குகிறது. உப்பு இருக்கிறதா என்று காட்சியாகக் காண்கையில், கவிதை ஏற்படுத்திய உணர்வை முழுக்க சொல்லில் விரித்துக் கொள்ள முடிகிறது.

மிகுந்த காத்திரமான உணர்ச்சித் தருணங்களையும், சம்பவங்களையும் கதை கவிதை நடையில் சொல்கிறது. பஞ்சபூதங்களுடன் மானுட உயிருக்குள்ள இணைப்பைப் புரிந்துகொள்ள நாவல் பெரிதும் உதவுகிறது.

பிள்ளைவாளின் பயணம் ஒரு தொடர் கற்றல் செயலாக கதையில் வருகின்றது.

கற்றல்: வாழ்வில் கற்றுக்கொள்ள அவர் தயங்குவதே இல்லை. குருவிடம் போய் கல்வியைக் கேட்கிறார்.வாழ்தல்: கற்றதை வாழ்ந்து பார்க்கிறார்.உணர்தல்: வாழ்ந்ததில் கற்றுக்கொண்டு, அதன் போதாமையை உணர்கிறார்.மேலேறுதல்: மேலும் கற்க நகர்கிறார்.நிறைவுறுதல்: தொடர் செயலாக நகர்ந்து தன் முழுமையை நோக்கிச் சென்று நிறைவுறுகிறார்.

“ஊர்கூடி எரியிட்டு ஒருபிடிச் சாம்பலாக்கிய பிள்ளைவாளின் எச்சத்துடன், அவன் மலையேறிவந்து அந்த மாமரத்தடியில் குழியெடுத்து அதை அடக்கினான். உப்பெனக் கரைந்து உள்நீரில் ஊறி, ஆழத்து நதியையும் அதனுள் நெருப்பையும் நெருப்பெழும் வெறுமையையும் வெறுமையின் வெளியையும் பிள்ளைவாள் அறியலாகும்.”

“மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாகக் காய்த்து கனத்துத் தழைய ஆரம்பித்தது.”

என வாசிப்பவனுக்கு கேள்வியை, நிறைவை ஒரே நேரத்தில் தருகின்றது.

அஷ்டாங்க யோக மார்க்கத்தில் நிபுணத்துவம் உள்ளவர்கள் இந்த நவீன நாவலில் மேலும் நுட்பங்களை சுட்டி, மேலும் விரித்துக் கொள்ள முடியும். 

ஆனால், அது கட்டாயமில்லை. அதுபற்றி முறையான பயிற்சி இல்லாத எனக்கும் கதையுடன் ஒன்ற முடிந்தது என்பது இந்நாவலின் வெற்றி.

இந்த நாவலில் தேடலையும், தேடி அடைந்தவர் வாழ்வையும் காண முடிந்தது.

அன்புடன்

நிர்மல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2025 11:31

அத்வைதம் வேர்விடுதல்..

The presence of God in every activity. You mentioned that involvement in art, literature, and other service activities brings the presence of God into our lives.

The god nearby…

தமிழ்ச் சூழலில் ஒரு பிரம்மாண்டமான கற்பாறைக்குள் ஒரு சிறிய வேர் நுழைவது போலத்தான் இவை நுழைந்தன. தொடக்கத்தில் இந்த கட்டுரைகள் எல்லாம் ஒரு சிறு புழு போல நுழைகின்றன ,இவை நசுக்கப்பட்டு விடும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது .ஆனால் அவை வேர் என்ற எண்ணத்தை இப்போது அடைகிறேன்.

அத்வைதம் வேர்விடுதல்..
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2025 11:30

October 30, 2025

இமையமும் வேதாந்தமும்

இமையமலையில் பிரம்மசூத்திர வேதாந்த வகுப்புகளை சென்ற ஆண்டு நடத்தினேன். இமையம் எப்படி இந்திய தத்துவத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது? பனிமலைகள் அளிக்கும் வேதாந்த உணர்ச்சிதான் என்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 11:36

அமெரிக்க எழுத்தாளர்களுடன்

அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம் அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்… புத்தகத்தின் காலடித்தடம் அமெரிக்காவின் சிறுவர்களிடம் அமெரிக்காவின் தனித்தன்மைகளில் ஒன்று எந்த ஊரிலும் அந்த ஊருக்கான இலக்கியவாதிகள் உண்டு என்பதுதான். அவர்கள் ஆங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்படுகிறார்கள். உலக இலக்கியம் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு உண்டு.  ஆனால் அவர்களுக்கு தமிழ் என்ற மொழியோ, அதில் ஓர் இலக்கியமோ இருக்கும் செய்தியே தெரியாது. நண்பர் ஜெகதீஷ் மட்டும தெற்கு கரோலினா மாநிலத்தின் சார்ல்ஸ்டன் நகரில் உள்ள எழுத்தாளர் குழுமத்துடன் தொடர்பில் இருப்பவர். அவர் முயற்சியால் 27 அக்டோபர் 2025 அன்று Colleton Memorial Library Hall அரங்கத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது.

“Writer who write” என்பது அந்த அமைப்பின் பெயர். அதிலுள்ள அனைவருமே ஒரு நூலேனும் எழுதி வெளியிட்டவர்கள். சமூகவியல் முதல் புனைவிலக்கியம் வரை. அமைப்பின் தலைவி  பௌலா போட்ஸ் முதுகெலும்பில் காயம் காரணமாக நீண்டநேரம் அமர்ந்திருக்க முடியாத நிலையிலும் மகள் துணையுடன் வந்து அரைமணி நேரம் இருந்து என் படைப்புகள் பற்றி ஒரு சுருக்கமான உரையை ஆற்றினார்.

With Stephen Chadwick, author of ‘Walking with Bow and heart’

என் கதைகள் பற்றி ஜெகதீஷ்குமார் ஓர் அறிமுகத்தை அளித்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞரான ஆலன் அமெரிக்காவுக்கே உரிய கையசைவுகளுடன் Stories of the True பற்றி உரையாற்றினார். என் வாசகர் அமலனின் மகன். (அமலன் எனக்காக அபாரமான மீன்கறி கொண்டு வந்திருந்தார்) ஃப்ளாரிடாவிலிருந்து நண்பர் தேவர்பிரான் வந்திருந்தார். ஆலனின் உரை சுவாரசியமானது, அசலான கூர்ந்த அவதானிப்புகளும் கொண்டது. அவர் என் பனிமனிதன் நாவலை வாசித்துக்கேட்டிருந்தார். (பனிமனிதன் ஆங்கிலத்தில் ஜக்கர்நாட் வெளியீடாக வரவுள்ளது) அமெரிக்கக் குழந்தைகளுக்கு நூறுநாற்காலிகளும் வணங்கானும் புரிவது ஆச்சரியம் அல்லது ஆச்சரியமே இல்லை.

ஏறத்தாழ அரைமணி நேரம் அங்கே வந்திருந்த எழுத்தாளர்கள் என் கதைகள் பற்றிய தங்களுடைய உளப்பதிவை முன்வைத்தனர். பெரும்பாலும் எழுதி வைத்து வாசித்தனர். ஐந்து நிமிடங்களுக்குமேல் எவரும் வாசிக்கவில்லை. ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த கதைகளை அவர்கள் பலர் முன்னரே படித்திருந்தார்கள். அவர்களின் மதிப்பீடுகளும் கூர்மையாக இருந்தன. (சங்கரரின் கயிற்றரவு என்பதை இணையத்தில் வாசித்து தெரிந்துகொண்டு ஸ்டீபன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது)

நான் அரைமணிநேரம் பேசினேன். இன்று என் உள்ளம் விரித்து எடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு கருதான் அது. காலனியாதிக்கத்தின் தாக்கம் இன்று இந்திய சிந்தனைகளில் என்னவாக இருக்கிறது என்பது. காலனியாதிக்கத்தின் எச்சமான ஆங்கிலமே இன்று நாம் உலகுடன் தொடர்புகொள்ளும் ஊடகம், அதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அது காலனியாதிக்க மனநிலையை தன்னுள் கொண்டதும்கூட. இந்த முரண்பாடு சிக்கலானது.

காலனியாதிக்கம் இந்தியாவில் ஓர் ஆளும்வர்க்கத்தை, ஓர் உயர்குடிமரபை உருவாக்கி அதன் மொழியாக ஆங்கிலத்தை நிறுத்தியது. ஆங்கிலமே இந்தியாவின் அறிவியக்கமொழியாக, கல்விமொழியாக இருப்பதனால் கல்விகற்பதே இந்திய யதார்த்தத்தில் இருந்து ஓர் எழுத்தாளனை அகற்றுவதாக ஆகிவிட்டது. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஏறத்தாழ அனைவருமே இந்த விலக்கம் கொண்டவர்கள்.

மூன்று வகை விலக்கம். ஒன்று மிதப்பான மேட்டுக்குடித்தன்மை. மேலோட்டமான விளையாட்டுத்தன்மை. சேதன் பகத் அல்லது அமிஷ் திரிபாதி உதாரணம். அல்லது கல்வித்துறை சார்ந்த ஆய்வுத்தன்மை. உதாரணம், அமிதவ் கோஷ். அல்லது மேலைநாட்டு வாசகர்களை மட்டுமே கருத்தில்கொண்டு எழுதுவது. சல்மான் ருஷ்தி அல்லது விக்ரம் சேத்.

இந்த விசித்திர நிலைமை ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல கண்டங்களைச் சேர்ந்த இலக்கியத்துக்கு உண்டு. ஆங்கிலமே உலகுக்கான தொடர்புமொழி என்பதனால் இந்தியாவில் இருந்து உருவாகும் உயர்குடி எழுத்தே இந்திய எழுத்தாக உலகமெங்கும் சென்றடைகிறது. அந்த எழுத்து இந்தியாவின் கலாச்சார நுட்பங்கள் அற்றது. இந்தியாவுக்குரிய உணர்வுநிலைகளும் இந்தியாவிற்குரிய மெய்யான சமூகச்சிக்கல்களும் வெளிப்படாததும்கூட.

இன்னொன்றும் உண்டு, இந்த ஆங்கிலவழி இலக்கியம் ஆங்கிலத்தில் வாசிக்கும் வாசகர்களுக்காக சமைக்கப்படுவது. ஆகவே பண்பாட்டு நுட்பங்கள் குறைக்கப்படுகின்றன. மேலைவாசகர்களுக்கு புரியும் விஷயங்கள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. மேலைநாட்டு வாசகர்கள் ஏற்கனவே அறிந்த, ஏற்றுக்கொண்ட கருத்துக்கள் கொண்டவை மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. மேலைநாட்டில் இருந்து கற்கப்பட்ட உத்திகளே கையாளப்படுகின்றன. இது உண்மையில் ஒரு போலி இலக்கியம். இதை வாசிப்பது எளிது, ஆனால் இது வெறும் ‘கதை’ தான்.

நல்ல எழுத்து வாசகனுக்கு ஓர் அறைகூவலை அளிக்கும். அவன் அந்த தடையை மீறி வாசித்தாகவேண்டும். மெய்யான இந்திய இலக்கியம் மேலைவாசகன் முயன்று, பொறுமையுடன் அணுகியாகவேண்டிய ஒன்றாகவே இருக்கமுடியும். ஏன் அந்த கவனத்தை அளிக்கவேண்டும்? ஏனென்றால் நான் அந்தக் கவனத்தை அமெரிக்க- ஐரோப்பிய எழுத்துக்கு அளித்திருக்கிறேன்.

பௌலா பி.கே.போட்ஸ்

இன்றைய இலக்கியம் எந்த அளவுக்கு வட்டாரத்தன்மை கொள்கிறதோ அந்த அளவுக்கு உலகுதழுவியதாக ஆகிறது என்பது என் கருத்து. உலகம் அதையே கவனிக்கவேண்டும். ஏனென்றால் சராசரிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் உலகுக்கு எதிரான நம் கலகம் என்பது அதுதான். இலக்கியத்தின் தலையாய பணி என்பது அதுவே.

ஏறத்தாழ ஒரு மணிநேரத்துக்கு மேல் கேள்விபதில் நீடித்தது பெரும்பாலான வினாக்கள் நான் பேசிய ‘அசல்தன்மை’ ‘உள்ளூர்த்தன்மை’ ஆகியவற்றை ஒட்டியே அமைந்தன. எழுத்தாளர் ஜெரால்டைன் தெற்கு கெரேலினாவிலுள்ள தன் தனித்த வட்டாரப் பண்பைப்பற்றி சொன்னார், அதைப்பற்றி மட்டுமே எழுதவேண்டும் என்னும் எண்ணம் என் உரையின் வழியாக உருவாகியது என்றார்.

Geraldine. Auther of “Eating Pigfeet in the dark!”

ஆலன் மிக முக்கியமான இரண்டு கேள்விகளைக் கேட்டார். “எப்படி ஒருவர் தனக்கான அறம் என்பதை கண்டடைவது?” “ஒருவர் இரண்டு பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா?” இரண்டுக்கும் அவரே சொந்தமாக விடைகளைத் தேடவேண்டும் என்று நான் சொன்னேன். வாழ்நாள் முழுக்க நீடிக்கும் இத்தகைய வினாக்களில் இருந்தே எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்.

ஆலன் போல எதிர்காலத்தில் எழுதக்கூடும் என எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை அளித்த பதினைந்து இளைய தலைமுறையினரையாவது இந்தப் பயணத்தில் சந்தித்தேன். இந்த அமெரிக்கப் பயணம் ஒவ்வொரு நாளும் தீவிரமான நம்பிக்கையை, கனவை உருவாக்கிக்கொண்டே செல்கிறது.

அமெரிக்க எழுத்தாளர்களுடனான இச்சந்திப்பு ஒரு சிறிய தொடக்கம். அவர்களை என்னால் தீவிரமாக பாதிக்கமுடிகிறது என்பது எனக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. அமெரிக்காவில் பள்ளிமுதல் கல்லூரிவரை என் சொற்கள் ஆழமாகவே சென்று சேர்கின்றன என்பதை இப்பயணத்தில் உறுதிசெய்து கொண்டேன்.

இந்த அரங்குகள் ஒரு பயிற்சிக்களமும் கூட. நான் இரு வகையிலேயே இதுவரைச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். என்னால் மிகமிக இளையதலைமுறையினரிடம் எப்போதுமே தீவிரமாக தொடர்புகொள்ள முடிகிறது. பிற எழுத்தாளர்களை பாதிக்கமுடிகிறது. அது இங்கும் நிகழ்கிறது. அத்தகைய நீடித்த செல்வாக்கை எப்போதும் மிக அடித்தளத்தில் இருந்து சிறிது சிறிதாகவே உருவாக்கி எழுப்ப முடியும். ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட நிறுவனங்கள், செயல்முறைகள், ஆளுமைகள் எனக்கு பெரிதாகப் பயன்படவும் மாட்டார்கள். நானே என் வழியை உருவாக்கியாகவேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 11:35

ஆர்.வி. பதி

எழுத்தாளர், கவிஞர். சிறார் இலக்கியப்படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, என்று நுற்றிற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துள்ளார். தனது இலக்கியச் செயல்பாடுகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதினார்.

ஆர்.வி. பதி ஆர்.வி. பதி ஆர்.வி. பதி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 11:33

பே ஏரியா நிகழ்ச்சிகள் பற்றி

அன்புள்ள ஜெயமோகன்,

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நீங்கள் அமெரிக்கா வருவது பழக்கமாகி விட்டது. வாசகர் சந்திப்புகளில் மட்டும் உங்களை சந்தித்துக் கொண்டிருந்தேன். இம்முறை சாரதா /பிரசாத் வீட்டில் நடந்த சந்திப்பு, பார்ன்ஸ் அண்ட் நோபில் சந்திப்பு, நாவல் பயிற்சி வகுப்பு என்று பல நிகழ்வுகளில் உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. சென்ற வருடம் உங்கள் வாசகர் சந்திப்பிற்கு பிறகு நண்பர்கள் தொடங்கிய புத்தக வாசிப்பு குழு இன்னும் அதே உற்சாகத்துடன் சென்று கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு மாதமும் நான் சக வாசகர்களை சந்திப்பது மிக கொண்டாட்டமான நிகழ்வாக அமைகிறது. அதற்காகவும் உங்களுக்கு நன்றி. அதனை இன்னும் சிறப்புடன் நடத்த நீங்கள் அளித்த அறிவரைகளை செயல்படுத்த முயல்கிறோம்.

உலகில் தற்போதுள்ள தலை சிறந்த எழுத்தாளர்களில் நீங்கள் ஒருவர் என்று தயக்கமின்றி கூற முடியும். உங்களை போன்ற ஒருவருடன் அணுக்கமாக இருந்து, நாவல்கள் எழுதுதல் பற்றி ஒரு நாள் அருகில் இருந்து கற்க முடியும் என்பது அற்புதமான விஷயம். இப்பயிற்சி வகுப்பில் பங்கு பெற விசு அழைத்தபோது எப்படியேனும் பங்கு பெற்றிட வேண்டும் என்று எண்ணினேன். முடிந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.

நாவல் ஏன் எழுத வேண்டும் என்று தொடங்கிய வகுப்பு, நாவல் எழுதுவதில் உள்ள craft, நாவல் தொழில்நுட்பம் போன்றவற்றை தொட்டு சென்றது. வகுப்பு முழுதும் வேறு பல நாவல்களை எடுத்துக்காட்டியது உங்கள் வகுப்பை மேலும் புரிந்து கொள்ள உதவியது. 1000 பக்கம் எழுதி பாருங்கள் என்று நீங்கள் கூறியது மிகவும் சிந்திக்க வைத்தது. உங்களுடைய தொடர் பயணங்களுக்கு நடுவில் நீங்கள் இவ்வகுப்பை எடுத்ததற்கு மிக்க நன்றி. பண்டோராவின் பெட்டியை திறந்து விட்டீர்கள். பல புது நாவலாசிரியர்கள் இவ்வகுப்பு மூலம் உருவாகி வருவார்கள் என்று உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கிறேன். மேலும் பூன் முகாமில் உங்களை சந்திக்க காத்திருக்கிறோம்.

அன்புடன்,

பரத்.  

பி.கு. எங்கள் குழுமத்தில் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா நண்பர்கள் இணைய விரும்பினால், vishnupurambayarea@gmail.com முகவரிக்கு ஈமெயில் அனுப்பி குழுமத்தில் இணையலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 11:31

நுகர்வுக்கலாச்சாரமும் பாலியலும், கடிதம்

 

I listened to your video on the existence of God. Yes, it is a primitive book written by an old Nyaya Shastra exponent, but it is still relevant because it presents a more logical answer to the basic questions about God, the omnipotent, or the presence of the absolute.

What is God?

இன்றைய தலைமுறையின் பாலியல் மீறல்கள் பற்றிய உங்களுடைய காணொளியை பார்த்தேன் நான் ஆசிரியராக பணிபுரிபவன். இந்த விஷயத்தை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நுகர்வுக்கலாச்சாரமும் பாலியலும், கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 11:30

ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்

சுனீல்கிருஷ்ணன் தமிழ்விக்கி

ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.

இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?
இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?
உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?
இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.

ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.

சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.

அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள் இடமிருப்பவை

நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சி

தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி

இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய சிக்கல் செயலுக்கு உள்ளத்தைக் குவிக்கமுடியாமைதான். எந்த செயலையும் தீவிரமாகச் செய்ய முடியாத நிலை. கவனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் நிலை.தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் அவர்களுக்கானவை

தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.

உங்களுக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லையா? எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறதா? ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறதா ?மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறதா ? எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறதா?

மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.

இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.

இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.

அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு. எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

 

திரைப்பட ரசனை – உருவாக்கப் பயிற்சி

சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில்  சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே

எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.

இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.

இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.

பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.

நாள்  நவம்பர் 21 22 மற்றும் 23

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி

ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.

இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.

ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.

நாள்  நவம்பர் 28 29 மற்றும் 30

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 06:08

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.