Jeyamohan's Blog, page 22

October 22, 2025

உளக்குவிப்பு- தியானம்- நவீனப் பயிற்சி

நவீனத் தியானம் உளக்குவிப்புப் பயிற்சி

தில்லை செந்தில்பிரபு தமிழ்விக்கி

இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய சிக்கல் செயலுக்கு உள்ளத்தைக் குவிக்கமுடியாமைதான். எந்த செயலையும் தீவிரமாகச் செய்ய முடியாத நிலை. கவனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும் நிலை.தில்லை செந்தில்பிரபுவின் தியான- உளக்குவிப்புப் பயிற்சிகள் அவர்களுக்கானவை

தில்லை செந்தில்பிரபு நவீன தியானம்- உளக்குவிப்புப் பயிற்சிகளை 30 ஆண்டுகளாக அளித்து வருபவர். கோவையில் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி கல்விப்பணிகளையும் தியானப்பயிற்சிகளை அளிப்பதையும் சேவையாகச் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஏற்றுமதித் தொழில் ஆலோசகர், தொழில்முனைவோர் ஆக பணிபுரிகிறார்.

உங்களுக்கு பயிற்சியில், தொழிலில் உள்ளம் குவியவில்லையா? எப்போதும் அகம் பரபரத்துக்கொண்டே இருக்கிறதா? ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு உள்ளம் தாவிக்கொண்டிருக்கிறதா ?மிகச்சிறு காரணங்களுக்காககூட எரிச்சலும் கோபமும் உருவாகிறதா ? எப்போதும் ஓர் பதற்றநிலை, எரிச்சல் நிலை இருந்துகொண்டிருக்கிறதா?

மிக எளிதான சோதனை இது. சற்றுநேரம் தனியாக அமர்ந்தால் உங்களுக்குள் எழுவது இனிமையான, நிம்மதியான எண்ணங்களா அல்லது எரிச்சலும் கோபமும் ஊட்டும் எதிர்மறை எண்ணங்களா? எதிர்மறை எண்ணங்கள் என்றால் உங்கள் மனம் நிலையழிந்துள்ளது. ஒருமையற்று உள்ளது. இது இன்றைய நவீன வாழ்க்கை நமக்கு அளிக்கும் மிகப்பெரிய நோய். இதிலிருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியாது.

 

இந்த உளநிலைக்கு பல காரணங்கள். அன்றாடவாழ்க்கையே கடுமையான போட்டியாக ஆகியிருப்பது. மிகக்கடுமையான மன உழைப்பு இல்லாமல் வாழமுடியாத நிலை. (கடுமையான உடல் உழைப்பு உள்ளத்துக்கும்கூட நல்லது). அனைத்தையும் விட இன்று தொழில், குடும்பம் என எல்லா தளங்களிலும் அமைப்புகள் வலுவடைந்துள்ளன. நாம் வெவ்வேறு அமைப்புகள் சார்ந்து மட்டுமே வாழமுடிகிறது. அந்த அமைப்பின் அதிகாரக்கட்டுமானத்தில் ஒரு பகுதியாக நாம் அமைகிறோம். ஆகவே நம்மை எவரோ மேலிருந்து சாட்டையால் அடிக்கிறார்கள். நாம் கீழிருப்பவர்களை அடிக்கிறோம். இதுவே மனச்சோர்வை, மனச்சிதறலை உருவாக்குகிறது.

இந்தியத் தியானமுறைகளை மேலைநாட்டு உளவியல் கொள்கைகளுடன் இணைத்து மகரிஷி மகேஷ் யோகி 1970களில் நவீனத் தியானமுறையை உருவாக்கினார். அது 1950 களில் உலகப்போரின் அழிவுக்குப்பின் உருவான மனச்சோர்வுக் காலகட்டத்தில் பிறந்தவர்களின் இளையதலைமுறை உருவான காலகட்டம். வியட்நாம் போர், பல்வேறு புரட்சிகளின் தோல்வி ஆகியவற்றால் அந்த உளச்சோர்வு பெருகியது. அதை பீட் தலைமுறை என்பார்கள். ஹிப்பி இயக்கம் உருவானது. அவர்களுக்காக மகேஷ் யோகி உருவாகிய தியானமுறை அவர்களில் பெரும்பாலானவர்களை மீட்டது. அதன் வழியாக அது உலகம் முழுக்க பரவியது.

அந்த வழியில், மேலும் மேலும் நவீன உளவியல் மற்றும் நிர்வாகவியல் கொள்கைகளை இணைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட தியான முறைகள் இன்று உலகமெங்கும் உள்ளன. அந்த மரபில் வந்த தியானப்பயிற்றுநர் தில்லை செந்தில் பிரபு. எந்த தியான முறையிலும் ஆசிரியருடனான நேரடி உறவு, அவர் உங்களை அறிந்திருப்பது முக்கியமானது. ஆகவே இந்த நேரடிப்பயிற்சி அளிக்கப்படுகிறது

நாள் நவம்பர் 7, 8 மற்றும் 9விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்

ஜெயக்குமார் தமிழ் விக்கி

ஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.

நம்மில் பலருக்கும் மரபிசையை அறியவேண்டும், கேட்டு ரசிக்கவேண்டும் என்னும் ஆர்வமிருக்கும். அதற்கான முயற்சிகளைச் செய்தும் இருப்போம். ஆனால் இணையம் போன்றவை பெரும்பாலும் உதவுவதில்லை. நேரடியான வகுப்புகள் தேவை. தீவிரமான கவனத்துடன் அவ்வகுப்புகளை கவனிக்கவேண்டும். நேரடியாக ஈடுபட்டு பயிலவும் வேண்டும். அதற்காக அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்டவை இவ்வகுப்புகள்.

நாள்  அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு) 

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன் ஜெயக்குமாரின் இசை வகுப்புகள் மாய யவனிகையின் பின்னே எழுந்த மலர்த்திடல் இசை, வகுப்புகள்- கடிதம் இசைநாட்கள் மரபிசைப் பயிற்சி- கடிதம் வரவிருக்கும் நிகழ்வுகள்

 

 

ஆயுர்வேத- வாழ்க்கைமுறை அறிமுகம்

சுனீல்கிருஷ்ணன் தமிழ்விக்கி

ஒருவரிடம் அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம். ஆனால் மூன்று கேள்விகளை மேற்கொண்டு அவரிடம் கேட்கலாம்.

இயல்பான நிறைவான தூக்கம் உள்ளதா, தூங்கி எழுந்தால் புத்துணர்வாக உணர்கிறீர்களா?
இயல்பான செரிமானம் உள்ளதா? அதன்விளைவாக இயல்பான கழிவகற்றல் நிகழ்கிறதா?
உடலில் எங்கேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்கிறீர்களா? குறிப்பாகக் காலையில்?
இவற்றுக்கான பதில்களில் இருந்தே ஒருவர் தன் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிசெய்துகொள்ள முடியும்.

ஆனால் கறாராகப்பார்த்தால் பெரும்பாலானவர்களுக்கு இம்மூன்றிலும் சிக்கல் இருக்கும். சென்றகாலங்களில் நாற்பது கடந்தவர்களுக்கான சிக்கல் இது. இன்று இளமையிலேயே உருவாகி வந்துள்ளது. காரணம், இன்றைய வாழ்க்கைமுறை. இதிலுள்ள அவசரம், போட்டி ஆகியவை.

ஆயுர்வேதம் எல்லா நோய்களுக்கும் தீர்வு அளிக்கும் முறை அல்ல. ஆனால் வாழ்க்கைமுறைச்சிக்கல்களுக்கு அது நிரந்தரமான தீர்வுகளை அளிக்கும். வாழ்க்கைமுறைச் சீரமைப்பு, இயற்கையான மூலிகை மருந்துகள் வழியாக. அதற்கு முதலில் ஒருவர் தன் உடல் பற்றி ஆயுர்வேதம் சார்ந்த பார்வையை அறிந்திருக்கவேண்டும். தன்னைத்தானே மதிப்பிட அறிந்திருக்கவேண்டும். தன்னை சீரமைக்க அது அவசியம். அதன்பொருட்டே இந்தப் பயிற்சிகள்.

சுனீல் கிருஷ்ணன் முறையான ஆயுர்வேத கல்விகொண்டவர், புகழ்பெற்ற நவீன எழுத்தாளர், காந்தியவாதி.

அவருடைய வகுப்புகள் நவம்பர் 14 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கின்றன.

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

திரைப்பட ரசனை – உருவாக்கப் பயிற்சி

சினிமா மீது தீராப்பற்று கொண்டவர்கள் நாம். ஆனால் நம்மில் மிகச்சிலரே நல்ல சினிமாக்களைப் பார்த்திருக்கிறோம். மிகமிகச் சிலரே சினிமாவின் கலை என்ன என்று அறிந்திருக்கிறோம். வெறுமே சினிமாக்களைப் பார்ப்பது மட்டும் அக்கலையை அறிமுகம் செய்து அளிக்காது. உண்மையில் நிறைய படங்களைப் பார்ப்பது அந்தக் கலைக்கு எதிரான ஒரு செயலாகவே ஆகிவிடும். மனம்போன போக்கில்  சினிமா பார்ப்பவர் தேவையற்ற படங்களை ஏராளமாகப் பார்த்து ரசனையை இழப்பதும் சாத்தியமே

எந்தக் கலையையும்போலவே சினிமாவையும் முறையாக அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். சினிமக்கலையின் பெரும்படைப்புகள் என்ன, வரலாறு என்ன என்பது ஒரு வகை கல்வி. சினிமாவின் ஷாட், காட்சி, நடிப்பு படத்தொகுப்பு ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைத் தொழில்நுட்ப அறிதல் என்பது இன்னொரு வகை அறிதல். அந்த அறிதலை முறையான ஆசிரியரிடமிருந்து முறையாகக் கற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு நல்ல தொடக்கம். நல்ல சினிமாவை பார்க்க விரும்புபவர்களுக்கு மட்டுமல்ல நல்ல சினிமாக்களை உருவாக்க விரும்புபவர்களுக்கும் அவசியமான கல்வி அது.

இன்று, நாம் குறைந்த செலவில் நல்ல குறும்படங்களை உருவாக்கமுடியும். முழுநீளப்படங்களையே உருவாக்கமுடியும். சொல்லப்போனால் சிற்றிதழ் இலக்கிய இயக்கம் போலவே செலவே அற்ற சிறுசினிமா இயக்கத்தையே உருவாக்க முடியும். நமக்குத்தேவை முறையான பயிற்சி. இன்று வரும் குறும்படங்களின் சிக்கலே அவற்றில் முறையான திரைக்கலைப் பயிற்சி இன்மையின் விளைவான தேர்ச்சியின்மை தெரிகிறது என்பதுதான்.

இன்று திரைப்படக்கலை என்பது திரைப்படங்களுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. எல்லா காட்சிக்கலைகளும் திரைப்படத்தின் அழகியலும் தொழில்நுட்பமும் கொண்டவையே. ஒரு நல்ல யூடியூப் வீடியோ தயாரிப்பதற்கே அந்தக் கலைப்பயிற்சி அவசியமானது.

பல நண்பர்கள் கோரியத்ற்கிணங்க தமிழின் கலைப்பட இயக்கத்தின் முதன்மை ஆளுமைகளில் ஒருவரான திரு ஹரிஹரன் அவர்கள் வகுப்பை நடத்த ஒப்புக்கொண்டுள்ளார். ஏழாவது மனிதன் முதலிய படங்களின் இயக்குநர். நீண்டகாலம் திரைக்கலைப் பயிற்றுநர் ஆக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்.

நாள்  நவம்பர் 21 22 மற்றும் 23

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி

ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.

இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.

ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.

நாள்  நவம்பர் 28 29 மற்றும் 30

விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2025 06:53

October 21, 2025

அந்தக்குழந்தையின் பொம்மை

ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…

அமெரிக்காவில் இந்த பயணம் பெரும்பாலும் என் Stories Of The True நூலின் விற்பனையை உத்தேசித்தவை. இந்நூல் அமெரிக்காவின் இளைய தலைமுறைக் குழந்தைகளிடம் சென்றடையவேண்டும் என்பதிலும்,அது ஒரு தொடக்கமாக அமையவேண்டும் என்பதிலும் குறிப்பாக இருக்கிறேன். அடுத்தபடிதான் அது உலக இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர்வதென்பது. அதுவும் மெல்ல நிகழும். ஆகவே இம்முறை சுற்றுப்பயணங்களில் இடங்களைப் பார்க்கும் திட்டங்கள் இல்லை. ஆனால் எல்லா ஊரிலும் நிகழ்ச்சிகளின் இடைவெளியான நாட்களில் இதுவரை பார்க்காத இடங்களுக்குச் சென்றுகொண்டேதான் இருந்தோம்.

லாஸ் ஆஞ்சல்ஸில் நண்பர் ஶ்ரீராம் இல்லத்தில் தங்கியிருந்தோம். அங்கிருந்து விமானத்தில் சியாட்டில் நகருக்கு அக்டோபர் 16 அன்று வந்துசேர்ந்தோம். அக்டோபர் 18 அன்று எங்கள் சந்திப்பு நிகழ்வு. 17 அன்று நாங்கள் தங்கியிருந்த இல்லத்திற்கு மாலையில் உரையாடலுக்காக இருபது நண்பர்கள் வந்திருந்தனர். இரவு பத்து மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். அன்றுகாலைதான் எனக்கு அழகிய நினைவாக தங்கிவிட்ட ஓர் இடத்திற்குச் சென்றோம். வாஷிங்டன் மாநிலத்தின் நான்கு பெரிய பனிக்குகைகளில் ஒன்று. சியாட்டில் நகரிலிருந்து இரண்டு மணிநேர கார்ப்பயணத்தில் இருந்தது அது.

நானும் அருண்மொழியும் நண்பர் ஶ்ரீனி, சங்கர் பிரதாப், மதன் ஆகியோருடன் இரண்டு கார்களிலாக காலை ஆறுமணிக்கே கிளம்பிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஸ்டார்பக்ஸ் கடையில் காபி குடித்து காலையுணவுக்குச் சீஸ்பர்கரும் வாங்கிக்கொண்டு சாப்பிட்டபடியே சென்றோம். கார் பனிக்குகைக்கு அருகே வரைச் செல்லும். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது பனிக்குகை. இன்னும் மூன்று பனிக்குகைகள் இங்குள்ளன. அவை சற்றுத்தள்ளி இருப்பவை.

பனிக்குகை வரைக்கும் நடந்துசெல்ல மரத்தாலான பாதை அமைத்திருந்தார்கள். பாதை சீராக இருந்தமையால் இயல்பாகப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் செல்லமுடிந்தது. சுற்றிலும் இயற்கையான பைன்மரக்காடு. பைன் மரங்கள் அண்மைக்காற்றில் அப்படியே பிடுங்கப்பட்ட புல்பத்தை போல அடிப்பக்கத்தைக் காட்டியபடி பிரம்மாண்டமான நாகங்கள் போன்ற உடல்களுடன் விழுந்துகிடந்தன. சியாட்டிலில் குளிர் தொடங்கிவிட்டது. பத்து பாகை குளிர். ஆனால் நடந்தமையால் குளிர் தெரியவில்லை.

எப்போதுமே ஈரமாக இருக்கும் காட்டுக்கே உரிய பூஞ்சைகளும் ஒட்டுத்தாவரங்களும் செறிந்த அடிமரங்கள். கூம்பிலைச்செடிகள் கொண்ட தரை. ஆனால் இத்தகைய மழைக்காடுகளுக்கு இந்தியாவில் உள்ள பிரிக்கமுடியாத பின்னணி இசை- சீவிடுகளின் ரீங்காரம்- இங்கே இல்லை. ஆகவே காடு அமைதியாகவே இருப்பதுபோலத் தோன்றியது. அது அளித்த ஒருவகையான அமைதியின்மையும் இருந்தது.

உண்மையில் அமெரிக்கக் காடுகளில் ஆபத்தானவை என ஏதுமில்லை. இப்பகுதியில் நச்சுப் பாம்புகள் இல்லை. எரிச்சல் அளிக்கும் செடிகள் இல்லை. தாக்கும் விலங்குகள் எவையுமே இல்லை. இந்தியக் காடு நம் புலன்களை எச்சரிக்கையுடன் நிற்கச் செய்கிறது. ஒவ்வொரு கணத்தையும் அழுத்தம்கொண்டதாக ஆக்கிவிடுகிறது. அமெரிக்கக் காட்டில் அபாயமேதும் இல்லை என்பதனாலேயே அவற்றின் அழுத்தம் குறைந்துவிடுகிறது. தமிழின் தட்டையான விமர்சகன் சொல்வதுபோல ‘தட்டையான படைப்பு’. ஆழ்பிரதி என ஏதும் அற்றது என தோன்றிவிடுகிறது.

ஆனால் அது ஒரு மாயைதான். எந்த உயிர்ப்பரப்பும் முடிவற்ற அடுக்குகள் கொண்டதுதான். இந்தக் காட்டில் சற்றுநேரம் நின்றிருந்தால் இங்கே பெருகிச்செறிந்திருக்கும் உயிரின் முடிவின்மையைக் காணமுடியும். இங்கே ஓடைகளில் அணைகட்டும் பீவர் என்னும் கீரிவகை உண்டு. பலவகையான பறவைகள் உண்டு. பூச்சிகள் எங்கும் போல இங்கும் முடிவில்லாத வகைபேதங்களும் விசித்திரங்களும் கொண்ட முற்றிலும் வேறொரு உலகத்தை உருவாக்கியிருக்கும்.

செல்லும் வழியில் ஒரு காணொளியைப் பதிவுசெய்தேன். சிறுவர்களும் பெண்களுமாக பயணிகள் குகை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் வேலைநாளாதலால் பெரிய கூட்டம் இல்லை. அமெரிக்க வழக்கப்படி ஒவ்வொருவரும் ‘மானிங்’ என்றோ ‘நைஸ் டே’ என்றோ சொல்லி வாழ்த்திக்கொண்டு சென்றார்கள்.

பனிக்குகையைப் பார்ப்பதற்கு முன்னரே செங்குத்தான மலையைப் பார்த்துவிட்டேன். அத்தகைய செங்குத்தான மலை பனிநிலங்களில் மட்டுமே உள்ளது. அதிலும் தொன்மையான பனிநிலங்களில். இந்தியாவில் மலைச்சரிவுகள்தான் உள்ளன. இவை வாளால் வெட்டி அமைத்ததுபோல அத்தனை செங்குத்தானவை. ஏற்கனவே யோசிமிட்டி தேசியப் பூங்காவில் இத்தகைய மலைகளைப் பார்த்திருக்கிறேன். தொன்மையான பனியூழிக்காலத்தில் பூமியை மூடியிருந்த மாபெரும் பனிப்பாளங்களின் அதீத எடையால் அடியிலிருந்த பாறைகள் விரிசலிட்டு உடைந்து உருவானவை இந்த மலைகள்.

மலைக்குமேல் உறைந்த பனி உருகிய நூற்றுக்கணக்கான சிறிய ஆறுகள் விழுந்துகொண்டிருந்தன. வெள்ளிமரங்கள் போல. அல்லது மேலே நின்றிருக்கும் மாபெரும் வெள்ளி மரம் ஒன்றின் வேர்கள் போல. அவற்றில் ஒரு அருவி மிக உச்சியில் இருந்து வெண்பட்டு மேலாடை போல சரிந்திறங்கி விழும் இடத்தில் உறைந்து உருவானது இந்த பனிக்குகை. பனிப்பாளத்தை துளைத்து உருகாத நீர் வெளியே வரும் வழிதான் அது.

பனிப்பாளங்கள் கண்கூசும் கண்ணாடிப் பளபளப்புடன் செறிந்திருந்தன. அவற்றின் நடுவே நீரின் ஓசை. உள்ளே பனிப்பாளம் உடைந்து விழும் உறுமலோசை கேட்டது. அப்பகுதி முழுக்க பனியால் உடைத்து சல்லிசல்லியாக்கப்பட்ட கற்கள் பரவிய சமவெளிநிலம். அது ஏதோ அயல்கிரகத்தின் நிலப்பரப்பு என தோன்றச் செய்தது. தொலைவில் முகிலின் சாளரங்கள் வழியாக வந்த ஒளியால் ஆங்காங்கே பசுமை மிளிர்ந்த மலைகள் புன்னகைப்பதுபோல தோன்றின.

அருண்மொழி எப்போதுமே பயணங்களில் சிறுமி போல ஆகிவிடுவதுண்டு. உற்சாகம் , பாட்டு, சிலசமயங்களில் நடனம். அந்த பனிப்பாளங்களுக்குள் அவளை உள்ளே செருகி வைத்து படம் எடுத்தேன். இமையமலையில் ஏறிச்சென்று பனியைப் பார்க்கவேண்டும் என்பது அவளுடைய எப்போதைக்குமான கனவு. அதை நிறைவேற்றிக்கொண்டவள் போல பொங்கிக்கொண்டே இருந்தாள். மலைகளின்மேல் சட்டென்று ஒளி பரவியபோது ஒரு பரவசக்கூச்சல்.

நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். அத்தகைய ஓர் இடத்தின் அப்படி ஒரு தனிமை அமையும் என நான் எண்ணியிருக்கவே இல்லை. அது அத்தனை புனிதமான இடம் என தோன்றியது. இயற்கை ஒரு குழந்தைபோல தனக்குத்தானே ஏதோ செய்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அங்கே உள்ளம் அடைந்த நிறைவை, குதூகலத்தை அண்மையில் வேறெங்கும் உணர்ந்ததில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2025 11:35

அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம்

அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்…

அன்பு ஜெ

இந்த வருடம் உங்கள் வருகை பல காரணங்களால் உற்சாகம் மிகுந்ததாக இருந்தது, உங்களுடனான குழு மற்றும் தனி உரையாடல்களின் ஏற்பட்ட மனெவெழுச்சி ஒரு வாரம் ஆகியும் இன்னமும் அப்படியே இருக்கு.விமான நிலையத்தில் நட்பாய் தலையசைத்து தொடங்கிய உரையாடலிலிருந்த உங்களின் உற்சாகம் ஒட்டுவாரொட்டி போல எங்களிடம் ஒட்டி கொண்டது.அருணா அக்கா மற்றும்  உங்கள் உடனான பயணம், உரையாடல்கள் ஒரு வருடம் அசை போடப் போதும். VLC Bay Area Chapter முதல் வருட கொண்டாட்டக் கூடலில் அசோகமித்திரன் பற்றிய உரையாடலில் உங்கள் இருப்பும் கொடுத்த அறிவுறுத்தலும் தொடர்ச்சியாக வரும் நண்பர்களை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது.

இந்த பயணத்தின் உச்சமாக நான் கருதுவது பார்ன்ஸ் & நோபில் சான் மாட்டியோவில் நடந்த புத்தக வாசிப்பு உரையாடல் மற்றும் கேள்வி பதில் நிகழ்வு. நண்பர் பாலாஜியின் எற்பாட்டில் கடைசி நேரத்தில் ஒருஙகமைத்திருந்தாலும் சனிக்கிழமை காலை எத்தனை பேர் வருவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது , ஆனால் பல புதிய நண்பர்கள் வருகையும் அவர்களின் உற்சாகமும் புதிய உத்வேகத்தை கொடுத்தது. நாங்கள் உத்தேசிசத்தை விட அதிகமாகவே புத்தகம் விற்றது , கடையின் முன் பகுதியில் நமக்கு இடம் கொடுத்திருந்தார்கள் , கடைக்கு வந்தவர்கள், கூடி இருந்த நண்பர்களையும் அவர்களின் ஆர்வத்தையும் நின்று பார்த்து கொண்டு தான் போனார்கள். எல்லா எழுத்தாளர்களுக்கும் (அமெரிக்க)  ஒன்றும் இவ்வளவு கூட்டம் கூடுவதில்லை , நான் சொல்வதில் ஒன்றும் மிகையில்லை.நாம் தனிக்கூடத்தில் கூடும் கூட்டத்தை விட ஒரு அமெரிக்க புத்தகக் கடையில் கூட்டிய இந்த கூட்டத்திற்கு பயன் மதிப்பு அதிகம் என்றே எண்ணுகிறேன் 

 நம் நண்பர் பிரசாத் , சாரதா இணையரின் மகள் அஞ்சலி உங்களின் புத்தகத்திலிருந்து “one world” கதையின் ஒரு பகுதியை வாசித்து, பலகாலம் இங்கு வாழும் ஆவணமில்லா குடியேறிகள் தாங்களாகவே வெளியேற வேண்டும் என்ற கதையாடல்கள் மிகுந்து வரும் சூழலில்  கேரி டேவிஸின் லட்சிய வாதத்திற்குள்ள முக்கியத்துவத்தை குறித்து கேட்ட கேள்வி இன்றைய சூழலில் பொருத்தமானது.உங்களின் பதிலில் குறிப்பிட்ட அறிவார்ந்த ஐரோப்பா/அமெரிக்காவின் பக்கத்தை சுட்டிக்காட்டி நம்பிக்கையூட்டியது அஞ்சலி மற்றும் அவர் போன்ற இளம் வாசகர்களுக்கு இன்றைய சுற்றிலும் இருக்கும் எதிர்மறை சூழலில் உத்வேகம் கொடுத்திருக்கும் . அதை தொடர்ந்த வாசகர் கேள்விகளுக்கு பதில் அளித்து புத்தகங்களில் கையெழுத்திட்டு ஒவ்வொருவரிடம் சிறிது பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டது அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாது, சிலரின் தனிப்பேச்சில் உற்சாகம் கொப்பளித்ததை கவனிக்க முடிந்தது.சிலர் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இளைய வாசகர்கள் சிலர் உங்களிடம் உரையாடியது, அவர்கள் Stories of True படித்துவிட்டு வந்திருந்தது உண்மையிலேயே மனதுக்கு நிறைவளித்தது. அடுத்த புத்தகம் ஆங்கிலத்தில் வரும் போது வளைகுடாப் பகுதியில் சில புத்தகக் கடைகளிலாவது வாசக ஆசிரிய சந்திப்பை நடத்த முடியும் அதற்கான நண்பர் குழாம் இங்கு இருக்கும்.

நாவல் எழுத பயிற்சி என்று விசு சொன்ன போது நானெல்லாம் உங்கள் கூட ஒரு எட்டு மணி நேரம் இருக்கலாம் என்று தான் வந்தேன் ,ஆனால் நம்மளும் ஒன்று எழுதி போடலாம்ன்னு தோண வைத்து விட்டீர்கள். கண்டிப்பாக நண்பர் குழாமில் இருந்து பல நாவல்கள் நிச்சயம் வரும். அமெரிக்காவில் பல காலம் இருக்கும்  எங்களை விட அமெரிக்காவை புறவயமாகவும் அகவயமாகவும் நீங்கள் அதிகமாய் பார்த்திருப்பீர்கள் , தொடர்ந்து பயணதிலுக்கும் உங்களுக்கும், அக்காவிற்கும் இந்த பயணமும் இனிமையாக இருக்கட்டும், மீண்டும் பூன் முகாமில் சந்திக்க நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.

அன்புடன்

பத்மநாபன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2025 11:31

கரு. ஆறுமுகத்தமிழன்

எழுத்தாளர், சொற்பொழிவாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சைவ அறிஞர், பேராசிரியர். சைவ இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். இலக்கியம், மெய்யியல், அரசியல், சைவம் சார்ந்து உரை நிகழ்த்தும் பேச்சாளர்.

கரு. ஆறுமுகத்தமிழன் கரு. ஆறுமுகத்தமிழன் கரு. ஆறுமுகத்தமிழன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 21, 2025 11:31

October 20, 2025

நூலறிமுக நிகழ்வு, ராலே

ராலே நகரில் Stories of the True நூலறிமுக நிகழ்வு. அமெரிக்க நகர்களில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் நூலறிமுக நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அதே பார்ன்ஸ் ஆண்ட் நோபிள் புத்தகக்கடையில் நிகழ்வு. அக்டொபர் 24.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2025 18:20

செவ்வியலின் அணிகலன்கள்

ஒரு மரபான கோயிலைப் பார்க்கிறோம். நுணுக்கமான சிற்பச்செதுக்குகள். எவரும் சிற்பங்களை நின்று பார்ப்பதுகூட இல்லை. அப்படியென்றால் அவற்றுக்கான நோக்கம்தான் என்ன? அவை வீண் ஆடம்பரங்களா? இல்லை, அவை தத்துவார்த்தமாகவும் முக்கியமானவை. நம் அன்றாடவாழ்க்கை சார்ந்தும் முக்கியமானவை. எப்படி?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2025 11:36

இந்திய இலக்கியத்தில் வேதாந்தம்

இந்திய இலக்கியத்தில் அத்வைதத்தின் நேரடியான செல்வாக்கு பல தளங்களில் நிகழ்ந்துள்ளது. வேதாந்தம் இந்திய இலக்கியம் தோன்றும்போதே உடன் தோன்றியது. இந்திய இலக்கியத்தின் சாரமாக இருந்து கொண்டிருப்பது. மரபான உவமையை பயன்படுத்தினால், பாலும் நெய்யும் ஒன்றென உருவாவது போல என்று சொல்லலாம். இந்திய இலக்கியத்தின் பெரும்படைப்புகளான ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே வேதாந்தத்தை நோக்கிச் செல்லும் தன்மை கொண்டவை. இந்தியாவின் முதன்மைக் காவியங்கள் பலவும் அவற்றின் உச்சங்களில் வேதாந்த தரிசனத்தையே வெளிப்படுத்துகின்றன.

வேதாந்தம் முதிர்ந்து, அத்வைதம் இங்கு தோன்றி ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் ஆகிறது. அத்வைதத்தின் செல்வாக்கு அதன் பிறகு வந்த படைப்புகளில் எப்போதும் உண்டு. மரபிலக்கியத்தில் நேரடியாக தத்துவ வெளிப்பாடு என்பது அரிதாகவே நிகழ்கிறது. பௌத்த, சமணக் காவியங்களில் ஒரு பகுதி நேரடியான அறவுரையாகவே அமைவதுண்டு. அங்கே பௌத்த ,சமணக் கருத்துகள் அதன் கதாபாத்திரங்களாக வரும் பௌத்த, சமண ஞானிகளால் வெளிப்படையாகவே சொல்லப்படுவதுண்டு. மணிமேகலையில் சிலப்பதிகாரத்தில் சீவக சிந்தாமணியில் எல்லாம் சமண ,பௌத்த கருத்துகளை தெளிவாகவே பிரித்து எடுத்துவிட முடிகிறது.

ஆனால் பொதுவான பெருங்காவியங்களில் அவ்வாறு தத்துவ விவாதம் நேரடியாக நிகழ்வதில்லை. அது காவிய ஒருமைக்கு எதிரானதாகவே கருதப்பட்டது. ஆனால் காவியத்தின் பேசுபொருளாக இருக்க வேண்டிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றில் அறம், வீடு ஆகிய இரண்டையும் பேசும் சந்தர்ப்பங்களில் தத்துவ சிந்தனை பேசுபொருளாக மாறுகிறது.

அறவுரை என்பது காவியங்களில் வெவ்வேறு காவிய கதாபாத்திரங்களினூடாக வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது. அவ்வாறாக இந்தியாவின் பெருங்காவியங்களில் வெளிப்படும் தத்துவ சிந்தனை பெரும்பாலும் வேதாந்தத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. அத்வைதத்தின் மறுதரப்பாகக் கருதப்படும் வைதீகம் சார்ந்தும், மரபார்ந்த வழிபாட்டு முறைகள் சார்ந்தும் உருவாக்கப்பட்ட புராணங்களிலேயே கூட தத்துவம் என ஒன்று வெளிப்படும்போது அது வேதாந்தத்திற்கு நெருக்கமாக இருப்பதையே பார்க்கிறோம். அவ்வகையில் பதினெட்டு புராணங்களுமே வேதாந்த வெளிப்பாடு கொண்டவை என்பதை ஓர் ஆய்வாளர் கூறி விட முடியும். பிற்கால சம்ஸ்கிருதக் காவியங்களில் பெரும்பாலும் உலகியல் அதாவது சிற்றின்பம் ஓங்கி நிற்பதனால் அவற்றில் தத்துவத்தின் இடம் மிக குறைவாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆயினும் வாழ்வின் பொருள் குறித்தும், வாழ்வுக்கு அப்பால் உள்ள வாழ்க்கை குறித்தும் அக்காவியம் பேசமுற்படும் இடங்களில் எல்லாம் தத்துவம் என வெளிப்படுவது வேதாந்தமே ஆகும்.

மரபான இலக்கியங்களில் வேதாந்தம் இரண்டு வகையில் வெளிப்படுகிறது. ஒன்று கதாபாத்திரங்களின் உரையாடல் மற்றும் அறவுரைகளில். இன்னொன்று கதாபாத்திரங்களின் கட்டமைப்பு, அவர்களின் வாழ்க்கைப் பரிணாமம்  ஆகியவற்றின் வழியாக ஆசிரியர் வெளிப்படுத்தும் பார்வையினூடாக. உதாரணமாக ரகுவம்ச மகாகவியம் ரகுவின் குலத்தின் அரசர்களைச் சார்ந்த கதைகளை, பெரும்பாலும் அவர்களின் அக வாழ்க்கையை, சொல்லும் தன்மை கொண்டிருந்தாலும் கூட ஒவ்வொரு தருணத்திலும் வாழ்வின் துயரங்கள் மீட்புகள் ஆகியவற்றைப் பற்றிய தரிசனம் வேதாந்தத்திற்கு மிக நெருக்கமானதாகவே உள்ளது

ரகுவம்சத்தின் தொடக்கத்திலேயே அதை பார்க்க முடியும். திலீபனையும் சுதக்ஷிணையையும் குறித்த சித்திரத்தில் குழந்தையின்மையால் துன்பப்பட்ட அவர்கள் வசிஷ்டரை நாடிச் சென்று அவரிடம் இருந்து காமதேனு என்னும் தெய்வீகப்பசுவை மேய்க்கும் ஆணை பெற்று , அதையே தவம் எனச் செய்து காட்டில் வாழ்ந்து திலீபனை கருவறுகிறார்கள். இந்த தருணத்தில் வேதாந்தம் முன்வைக்கும் ’பற்று அறுத்தல்’. ’விடுபடுதல்’ என்னும் கூறுதான் அவர்களை நிறைவுறச் செய்து, தாயும் தந்தையும் ஆக்குகிறது என்று பார்க்க முடியும். திலீபன், சுதக்ஷிணை இருவருமே அரசுப் பொறுப்புகளில் இருந்தும், ஆடம்பரங்களில் இருந்தும் விடுபட்டு; மாடு மேய்க்கும் வாழ்க்கை ஒன்றுக்குள் செல்லும்போதுதான் அவர்களின் உள்ளம் விடுபடுகிறது, தொடர்ந்து உடல் விடுபடுகிறது,. அவர்கள் அந்தப் பசுவிடமிருந்துதான் தங்கள் பிள்ளைவரத்தையும் பெறுகிறார்கள். வேதாந்தம் முன்வைக்கும் வாழ்க்கைப் பார்வையை இங்கே உணர முடிகிறது. இத்தகைய தருணங்கள் மரபிலக்கியத்தில் ஏராளமாகவே காணப்படுகின்றன.

நவீன இலக்கியத்தில் வேதாந்தம் மிகத் தீவிரமான ஒரு செல்வாக்கை செலுத்தி இருக்கிறது. இந்தியாவின் நவீனத்தன்மையை உருவாக்கிய இந்து மறுமலர்ச்சி, தேசிய மறுமலர்ச்சி ஆகிய இரண்டுமே ஒருவகையில் வேதாந்தத்தின் கொடைகள் என்று சொல்லலாம். இந்திய வேதாந்தம் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தரினூடாக நவவேதாந்தம் என வடிவெடுத்தது. தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன் ராய், ராமகிருஷ்ணர், நாராயண குரு ஆகியோரினூடாக பல நிலைகளாக உருவாகிவந்த அந்த நவவேதாந்த அலைதான் இந்திய மறுமலர்ச்சியை சாத்தியமாக்கியது. (நவவேதாந்தம்- தமிழ்விக்கி)

இந்திய தேசிய எழுத்தாளர்கள் அல்லது மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் தொடக்க காலப் படைப்பாளிகள் அனைவருமே மூன்று முகங்கள் கொண்டவர்கள்.

1) அவர்கள் இந்திய தேசிய மறுமலர்ச்சியின் குரலாக ஒலித்தனர்

2) இந்து மத மறுமலர்ச்சி இந்து மத சீர்திருத்தம் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றின் முகங்களாகத் திகழ்ந்தனர்.

3) வேறொரு வகையில் அவர்கள் வட்டார தேசியத்தையும் உருவாக்குபவர்களாக இருந்தார்கள்.

பாரதி, வள்ளத்தோள், குவெம்பு, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு ஆகியவர்களை இந்த வரையறைக்குள் மிக எளிதாகப் பொருத்த முடியும் என்பதை பார்க்கலாம்

அவர்களின் பொதுவான அம்சமாக இருந்த  ஆன்மீகம் அல்லது தத்துவம் என்பது அத்வைதம்தான். அவகளின்  சீர்திருத்தப் பார்வை என்பது மதம் முன்வைக்கும் மூடநம்பிக்கை மற்றும் ஆசாரவாதம் ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது. பலசமயம் அவர்கள் வழிபாட்டுமுறைகளை  எல்லாம் நிராகரித்து தூய இறையனுபவத்தை மட்டுமே முன்வைத்தனர்.. அவர்கள் தீவிரமான சீர்திருத்த நோக்கம் கொண்டிருந்தார்கள், சமத்துவ பார்வை கொண்டிருந்தார்கள். அவற்றோடு இணைந்துபோகும் தன்மை கொண்டதாக இருந்தது இந்தியாவில் நவ வேந்தாந்தம் மட்டுமே.

இந்திய தேசிய படைப்பாளிகளின் இரண்டாவது நிலையில்கூட பெரும்பாலானவர்கள் நவ வேதாந்தத்திற்கு அணுக்கமானவர்களாகவே இருந்தார்கள். க.நா.சு., செல்லப்பா நகுலன், போன்றவர்களை வேதாந்தத்திற்கு அணுக்கமானவர்கள், வேதாந்தப் பார்வையை முன் வைத்தவர்கள் என்றே சொல்லிவிட முடியும். விவேகானந்தர், நாராயண குருவுக்கு அடுத்த தலைமுறை வேதாந்திகளுடன் அவர்களுக்கு அணுக்கமான தொடர்பு இருந்தது. உதாரணமாக கநாசு, நகுலன் இருவருக்குமே கேரள வேதாந்தியான ஆத்மானந்தா முக்கியமான முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நகுலன் படைப்புகளில் ராமகிருஷ்ணரின் குரல் எப்போதும் ஊடாடிக்கொண்டிருந்தது.

ஏறத்தாழ மூன்று தலைமுறைகளாக உருவாகி வந்த நவ வேதாந்தத் துறவிகள் இந்தியாவெங்கும் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்புவதிலும், கல்வி நிறுவனங்களை உருவாக்கி பொதுக் கல்வியை நிலைநாட்டுவதிலும் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார்கள். இந்திய மொழிகளின் பெரும்பாலான தொடக்ககாலப் படைப்பாளிகள் அந்த இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் அனைவரிலும் வேதாந்தம் அதாவது அத்வைதம் தீவிரமான ஒரு சிந்தனைச் செல்வாக்கை செலுத்தியுள்ளது. உதாரணமாக தமிழகத்தில் கலைக்களஞ்சியத்தை தொகுத்தவர் தொடக்ககால இலக்கிய முன்னோடியான பெரியசாமி தூரன் அத்தகைய ஓர் அத்வைத அமைப்பில் பணியாற்றியவர். அவருடைய சமகாலத்தவரும் ஒருவகையில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவருமான சுவாமி சித்பவானந்தர் தமிழகத்தில் நவவேதாந்தத்தின் முதன்மை உருவான அறியப்பட்டார். அவர்களுக்கு இடையே நல்லுறவு இருந்தது.

இவ்வாறாக இந்தியா முழுக்க அத்வைதத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் இடையே ஒரு வலுவான இணைப்பை நாம் காண முடியும். இரண்டு வகையில் அந்த இணைப்பு பிற்காலத்தில் உடைந்தது. ஒன்று நவீனத்துவம் இந்திய மொழிகளில் நுழைந்தபோது அதிலிருந்த அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்புவாத நோக்கு ஆகியவை வேதாந்தத்திற்கு எதிரானவையாக இருந்தன. தமிழில் அந்த உடைவுக்கு புதுமைப்பித்தன் முன்னோடி உதாரணம் என்று சொல்லலாம். இரண்டாவதாக இந்தியா முழுக்க உருவான மார்க்சிய அலை அடிப்படையில் வேதாந்தப் பார்வைக்கு எதிரானதாக இருந்தது. அது ஐரோப்பிய மையம் கொண்டதும், இந்திய மரபு எதிர்ப்புத் தன்மை கொண்டதுமாகவே தொடக்க காலத்தில் இருந்தது.

ஆனால் பின்னர் நவீனத்துவத்துக்குள்ளும் மார்க்சியத்துக்குள்ளும் நவவேதாந்தம் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை நுணுக்கமாக அடைந்தது. இந்தியா முழுக்க மார்க்ஸியர்கள் தங்கள் சீர்திருத்த நோக்கை நவவேதாந்தத்துடன் இணைத்து புரிந்து கொள்ளும் ஒரு போக்கு எழுந்தது. விவேகானந்தர் மார்க்ஸியர்களுக்கு ஏற்புடையவரானார். கேரளத்தில் விவேகானந்தர் பிறந்தநாளை மார்க்ஸியக் கட்சி கொண்டாடுகிறது. திட்டவட்டமான மார்க்சியர் என்று சொல்லத்தக்க ஜெயகாந்தன் விவேகானந்தரின் குரலாகவே தமிழகத்தில் ஒலித்தார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கேரளத்தில் பி.கேசவதேவ் மார்க்சியராகவும் நவ வேதாந்தியராகவும் திகழ்ந்தார்.

இந்திய இலக்கியத்தில் மரபார்ந்த கோணத்தில் நவீன கோணத்திலும் எப்போதுமே வேதாந்தம் அடிப்படையான ஒரு தரிசனமாக இருந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2025 11:35

கபிலர் குன்று

கபிலர் உயிர்விட்டதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள குன்று. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் கபிலர் குன்று உள்ளது. இங்கு கபிலர் உயிர்துறந்தார் என்றும் ஆகவே கபிலக்கல் என்னும் பாறை அவர் நினைவாக உள்ளது என்றும் கல்வெட்டுச்செய்தி ஒன்று உள்ளது.

கபிலர் குன்று கபிலர் குன்று கபிலர் குன்று – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2025 11:32

வாழ்த்துக்கள், முனைவர் ஜெயமோகன்!

கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்

அன்புள்ள ஜெ, நவராத்ரிக்கு சொந்த ஊரான கொட்டாரத்திற்கு வந்திருந்தேன். தொடர்ந்த மழையால் பச்சை கொப்பளித்து கிடந்தது ஊர். புதுப்பச்சையின் ஒளி சூடியிருந்த காலையை மேலும் அழகாக்கியது உங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் “மதிப்புறு முனைவர்” பட்டத்திற்கான அறிவிப்பு. வயதும், அனுபவமும் தற்செயல் என்ற வார்த்தையை அபத்தமாகக் காணப் பழக்கியிருக்கிறது.

பொதுவாக நீங்கள் விருதுகளை ஏற்பவரில்லை. அதிலும் குறிப்பாக அரசு மற்றும் கல்வித்துறை சார்ந்த விருதுகளை புறக்கணிப்பவராகவே இருந்து வந்துள்ளீர்கள். இடையில் பத்மஶ்ரீ விருது வந்தது. அதை கவனமாக மறுத்தீர்கள். ஒரு வாசகனாக, என் எழுத்தாளருக்கு அளிக்கப்பட்ட கௌரவம் மறுக்கப்பட்டது எனக்கு வருத்தமே. ஆனால் அதன் பின்னிருந்த எழுத்தாளனின் சுயம் அந்த கௌரவத்தை விட பெரிதானது என்ற புரிதல் அவ்வருத்தத்தை சமன் செய்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் புக் பிரம்மாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது. இயல், புக் பிரம்மா இரண்டிற்கும் ஓர் ஒப்புமை உண்டு. இரண்டுமே இலக்கிய வாசிப்புடைய வாசகர்களின் தேர்வு.

நமது கல்வித்துறையின் வாசிப்புத் தரம் மிகப் பிரசித்தமானது. அவர்கள் “Post Modernism” என்பதை “Post Mortem” என்று புரிந்து கொண்டவர்கள். இலக்கணம், கொள்கைகள், அரசியல், பண்பாடு, சாதி, இனம் சார் பிடிப்புகள் என‌ப் பல வகையான‌ ஆய்வுக் கூறுபாட்டு கருவிகள் கொண்டவர்கள். ஒருவகையில் கல்வித்துறை அப்படித்தான் செயல்பட்டாக வேண்டும். தனக்கான நெறிகளும், தரக் கட்டுப்பாடுகளும், வரையறுக்கப்பட்ட, மீள மீள நிகழ்த்த தக்க விளைவுகளும் கொண்டவை அவை. எனவே இயல்பாக ஒரு இயந்திர கதிக்குச் செல்ல விதிக்கப்பட்டவை. அதனுள் நுழையும் எவரையும் அந்த இயந்திர விதிகளுக்குள் இயல்பாகப் பொருந்திக் கொள்ளச் செய்யும் வல்லமை அதற்குண்டு. இவை இன்று நேற்று நடப்பவை அல்ல. தொன்று தொட்டே இது தான் நிலை. தண்டி தன் காவிய இலக்கண நூலான ‘காவ்யதர்ச’த்தை செய்தது காஞ்சி கடிகையில் தானே.

மற்றொரு உதாரணம், உங்களின் சமீபத்திய ‘காவியம்’ நாவலில் வரும் சாதவாகனப் பேரரசின் ‘காவியபிரதிஷ்டான’ சபை. குணாட்யரையே மொழி என்பது ஆழுள்ளத்தின் வாகனம் தான் என்ற அடிப்படையையே மறக்கடித்த பெருமை அச்சபைக்குண்டு. அவரை வெற்றி கொண்ட சர்வவர்மரையும் அப்படி ஒரு சராசரியாக்கி ‘ப்ருஹத் கதை’ எனும் காவியத்தை உதாசீனப்படுத்த வைத்தது. எனவே கல்வித்துறையின் ஏற்பு, அது அளிக்கும் விருதுகள் போன்றவற்றிலும் மேற்கூறிய சார்புகள், சாய்வுகள் இருப்பதை தவிர்க்க இயலாது. எனவே ஒரு சுயாதினமான ஒரு எழுத்தாளர் இந்த அமைப்புகளின் மீது ஒவ்வாமையோடு இருப்பது இயல்பானதே. அது தான்‌ முறையும் கூட.‌ ஏனெனில் அத்தகைய ஓர் எழுத்தாளரின் படைப்பு தான் கல்வி நிறுவனங்களை தமது அடுத்த கட்ட பரிணாமத்திற்கு கடத்தும். அன்றும், இன்றும், என்றும் இலக்கியம் கண்டதற்குத் தான் இலக்கணம்.

இந்நிலையில் ஒரு மாற்றம், தங்களின் உலகியல் சார்ந்த தேவைகளை போதிய அளவிற்கு நிறைவேற்றிய, அதற்கும் மேலாக இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்ட, இணைய கால புது வாசகர்களின் அலையால் நிகழத்துவங்கியது. முதலில் உலகியல் வெற்றிகளை உறுதிப்படுத்தும் துறைகளில் துவங்கிய இந்த வாசகர் அலை மெல்ல மெல்ல இலக்கியம் என்ற இயக்கத்தை அனைத்துத் துறைகளிலும் ஊடுருவச் செய்தது. இதன் நீட்சி கல்வித் துறையிலும் நிகழ்ந்தது. அரங்கசாமி, முனைவர். சக்தி கிருஷ்ணன் போன்றவர்கள் கல்வித்துறையில் ஈடுபடுவது ஒரு நல்ல தொடக்கம்.

தமிழகத்தில், அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் கவனம் பெற வேண்டுமெனில் முற்போக்கு என்ற பெயரில் மரபை மொத்தமாக துறந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எந்தவொரு வகையிலும் தமிழர் பண்பாடு, வரலாறு, கலை, இலக்கியம், தத்துவம் என எந்த ஒன்றும் நம் பாரத மரபோடு தொடர்புறுத்தப் பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தாக வேண்டும். எனவே நிறுவனத்தின் பெயர் துவங்கி கருத்தியல் வரை மிகக் கவனமாக பாரத மரபு தவிர்க்கப்பட்டாக வேண்டும். இந்த பின்னணியில் வைத்துப் பார்க்கையில் பொயு ஆறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தின் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட்டிருப்பதே பெரும் சாதனை தான். அதன் தாளாளர் திரு தனசேகரன் அவர்கள் தங்கள் வாசகர் என்பது இன்னும் கூடுதலான மகிழ்ச்சி.

ஒரு வகையில் இலக்கிய வாசிப்பு உடையவர்கள் கல்வித்துறையில் நுழைவது காலத்தின் கட்டாயமும் கூட. இன்று செயற்கை நுண்ணறிவு பொதுப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டிருக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவு மானுடம் கண்டடைந்த தொழில்நுட்பங்களை தானும் மானுடர் போல இயல்பாக கையாண்டு மானுடர் தரும் செயல்விளைவுகளை உருவாக்கக் கூடிய சாத்தியத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. எனவே பல துறைகளிலும், குறிப்பாக நான்‌ பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நிதர்சனம் வேறு. செயற்கை நுண்ணறிவு என்பதன் செயல்விளைவு தேவையான அளவு, திருப்திகரமாக இருக்க வேண்டுமெனில், அது என்ன செய்ய வேண்டும், அது செயல்பட வேண்டிய தளம் பற்றிய முழுமையான தகவல்கள் போன்றவற்றை முறையாக அதற்குத் தெரிவிக்க வேண்டும். எளிய, அன்றாட ஆங்கிலம் தான் அதன் மொழி. இதை “அறிவிப்பு தொழில்நுட்பம்” என்று அழைப்பர். செயற்கை நுண்ணறிவுக்குத் தரப்படும் “அறிவிப்பின்” தரத்தைப் பொறுத்து அதன் முடிவுகள் வேறுபடும். இதன் பொருள், மொழியாளுமை மிகுந்த ஒருவருக்கு அது தரும் முடிவுகளுக்கும், ஒரு சராசரி மொழித்திறன் உள்ள ஒருவருக்கு அது தரும் முடிவுகளுக்கும் பாரதூர வேறுபாடுகள் இருக்கும்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் ஆகப் பெரிய சிக்கலே இந்த இடம் தான். காலங்காலமாக நம் கல்வித்துறையும், பொது சமூகமும் மொழி என்பதை முற்றிலுமாக புறக்கணித்தே வந்துள்ளன. இன்றிருக்கும் உலகளாவிய தொழில்நுட்ப வல்லுனர்களில் தனக்கென மொழியாளுமை உள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது தான் யதார்த்தம். இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பாவிற்கும் இது தான் நிலை. மிகச் சில நாடுகளே “பகுத்தாய்வை” முன்னிறுத்தும் கல்வி முறைகளில் இருந்து “படைப்பாக்கத்தை” முன்னிறுத்தும் கல்வி முறைகளுக்கு நகரத் துவங்கியுள்ளன. சிங்கப்பூர் சிறந்த உதாரணம்.இந்நிலையில் மொழியாளுமை உருவாகி வர மிகச்சிறந்த வழி என்பது இலக்கிய வாசிப்பு மட்டுமே. அதை கல்வித்துறை நிறுவனங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் புகைப்பட குழுமங்கள், இயற்கை ஆராய்ச்சி, பறவை பார்த்தல் போன்ற ஆர்வம்சார் குழுக்கள் செயல்படத் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வாசிப்புக் குழுமங்களும் உருவாகும். மெல்ல மெல்ல இலக்கிய வாசிப்பு ஒரு துணையறிவுச் செயல்பாடாக கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறத் துவங்கும். அதற்கு முதலில் மொழி, இலக்கியம் பற்றிய ஒரு புறவயமான பார்வை அந்த கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டும். அதற்கு அது அந்த துறையின் முதன்மை பங்களிப்பாளர்களை அது அடையாளம் கண்டு மாணவர்கள் முன் வைக்க வேண்டும்.

தங்களுக்கு அளிக்கப்படவிருக்கும் இந்த பட்டம் குறைந்தபட்சம் தக்ஷஷிலா பல்கலைக்கழகத்தில் மேற்கூறிய இவை நடக்கக் கூடும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. எனவே தான் அந்த பல்கலையின் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் தங்களுக்கு வழங்கப்படுவதும், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முன்வந்திருப்பதும் நிச்சயம் தற்செயல் அல்ல என நினைக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெ.

அன்புடன்,

அருணாச்சலம் மகாராஜன்.‌

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2025 11:31

கரூர் விபத்து, அறிதல்

கரூர் சாவுகள் பற்றிய உங்கள் பார்வை உண்மை..ஒரு சமூகவியல் மாணவன் என்ற முறையில் கரூர் கூட்டத்தை ஒரு Mob என்று சமூகவியலில் கூறுவார்கள். அதாவது கட்டுக்கடங்காத கொள்கையற்ற கூட்டம் என்பார்கள்.இதை நாம் எங்கும் காணலாம்.

கரூர் விபத்து, கடிதம்

 

A Land for Buddha is a beautiful little text. The line stating that Buddha descended from the Himalayas and returned to the mountains struck me profoundly. We encounter countless texts,

The land of Budha
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 20, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.