Jeyamohan's Blog, page 20

October 28, 2025

கரூர் நிகழ்வு, கடிதம். கடலூர் சீனு

Much of the life advice in your videos emphasizes that we should find meaning in our lives through personal activities. I, too, experienced a profound sense of boredom after my retirement.

The meaning of our life

 

தமிழ் அறிவுச் சமூகம் பைசன் × டியூட் எது சமூகத்துக்கு தேவை எனும் காத்திரமான அடுத்த விவாதத்துக்குள் சென்றுவிட்டதால், இனி யாரும் இது குறித்து அக்கறைக்கொள்ளப் போவதில்லை எனவே அக்கப்போர் விட்டது என்பதால், அன்றைய கரூர் சம்பவம் குறித்து அதில் பேசப்பட்டவற்றில்  மூன்று விஷயங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கரூர் நிகழ்வு, கடிதம். கடலூர் சீனு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2025 11:30

October 27, 2025

அரசியலின்மை, அரசு, தேர்தல்

அன்புள்ள ஜெ.,

அரசியலின்மை குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கட்சியரசியல், ஜனநாயகஅரசியல், அரசியலின்மை இதுவே படிநிலை. நாம் இன்னும் கட்சியரசியலையே தாண்டவில்லை. சில நூறு வருடங்களில் ஜனநாயக அரசியல் அமைந்தாலே ஆச்சரியம். சிறந்த ஜனநாயக அமைப்புடன் விளங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நமக்கு மோசமான தலைவர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் சிஸ்டத்தின் மீது வெறுப்புற்று மக்கள் “நோட்டா” விற்கு வாக்களிப்பதோ தம்முடைய வாக்கைச் செலுத்தாமலிருப்பதோதான் (வேறு யாராவது செலுத்திவிட வாய்ப்புண்டு. அதற்கு நோட்டாவே பரவாயில்லை) அரசியலின்மையை நோக்கி எடுத்துவைக்கும் முதலடி என்று எடுத்துக்கொள்கிறேன். அப்படி ஒரு தேர்தலில் “நோட்டா” வெற்றிபெற்றால், யார் அரசமைப்பார்கள்? நீங்கள் கூறுகிற அரசாங்கம் (Government) இல்லாத அரசமைப்பு (Governance) நடைமுறையில் சாத்தியமா? இதில் நமக்கு முன்னோடி நாடுகள் ஏதும் உண்டா?அன்புடன்,கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் 

நான் பேசிக்கொண்டிருப்பது ‘அரசியலின்மை’ அல்ல. அதிகார அரசியலின் எல்லைகள் பற்றி மட்டுமே. அதற்கு மாற்றாக நுண்ணலகு அரசியல் என்ற ஒன்றை முன்வைக்கிறேன்.

அதிகார அரசியலின் இயல்புகளாக நான் சொல்வன:

அது அதிகாரநோக்கம் கொண்டிருக்கும். அந்த அதிகாரத்தை சமூகத்திலுள்ள சாதி, மதம், தொழில்குழுக்கள், வணிகக்குழுக்கள் உட்பட பல்வேறு அதிகாரச்சக்திகளை சமரசப்படுத்துவதன் வழியாகவே அடைய முடியும்.அந்த அதிகாரத்தை அடைந்தாலும் அரசாங்கம் என்பது தொடர் சமரசம் வழியாகவே செயல்பட முடியும். ஆகவே அதற்கு நிறைய எல்லைகள் உள்ளன. ‘புரட்சிகர’ ‘தலைகீழ்’ மாற்றம் எதையும் எந்த அரசும் உருவாக்க முடியாது. முழுமையான மாற்றத்துக்காக  புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றும் சக்திகள்கூட உடனடியாக பல அதிகாரச் சக்திகளுடன் சமரசம் செய்துகொள்வதையே நாம் வரலாற்றில் காண்கிறோம். ஆகவே அதிகார அரசியலில் செயல்படும் தரப்புகளின் ‘கொள்கைகளை’ நம்பி கட்சிகட்டிக் களமாடுவது அசட்டுத்தனம். அதை அரசியல் செயல்பாடு என நம்புவது அறிவின்மை. அது கட்சிகட்டி வெறுப்பிலாடும் கீழ்மை மட்டுமே. அது எந்த வகையிலும் எந்த மாற்றத்துக்கும் உதவாது. அப்படி கட்சிகட்டுவதனால் உங்களுக்கு தனிப்பட்ட லாபம் இருக்குமென்றால் அதைச் செய்வது ஒரு தொழில். அதை இலட்சியவாதச் செயல்பாடு என காட்டிக்கொள்ளவேண்டாம்

இதனால் நான் ஜனநாயகத்துக்கோ கட்சிசார்ந்த அரசியலுக்கோ தேர்தலுக்கோ எதிரானவன் அல்ல. அவை நாம் அடைந்த உரிமைகள். ஜனநாயகம் இல்லாத நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் கொண்டுள்ள ஜனநாயகத்தின் உண்மையான மதிப்பு நமக்குப் புரியும்.

ஒரு நல்ல ஜனநாயக அரசு எல்லா அதிகாரத்தரப்புகளையும் சமரசம் செய்து அதிகாரத்தில் நீடிக்கும். ஆகவே உடனடியான தடாலடி மாற்றங்களை உருவாக்க முடியாது. ஆனால் அது நல்லெண்ணம் கொண்டதாக இருக்கும் என்றால், நீண்டகால கனவுகள் கொண்டிருக்கும் என்றால், படிப்படியாக பொருளியல் வளர்ச்சியையும் சமூகமாற்றத்தையும் உண்டு பண்ண முடியும்.

இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தபின் வந்த இரண்டு ஆட்சியாளர்கள் அவ்வகையில் உண்மையான பொருளியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். ஒருவர் நேரு. இன்னொருவர் பி.வி.நரசிம்மராவ். நேரு இந்தியாவின் பொருளியலுக்கான அடிப்படைக் கட்டமைப்பை மிகக்குறைவான வரிவசூல் இருந்த காலகட்டத்திலேயே உருவாக்கினார். அவர் உருவாக்கிய அணைக்கட்டுகளே இந்தியாவில் உணவுப்பஞ்சத்தைப் போக்கின. அவர் காலகட்ட சாலைகள், துறைமுகங்களே தொழில் வளர்ச்சியை உருவாக்கின.

அதன்பின் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலம் இந்தியாவின் பொருளியலில் இருண்டகாலம் என நான் நினைக்கிறேன். கட்சிச்சார்பற்ற எவரும் அதை மறுக்கப்போவதில்லை. அதிகாரக்குறுங்குழு ஆட்சி, மைய அதிகராக்குவிப்பு ஆகியவற்றால் இந்தியப்பொருளியல் தேங்கிக்கிடந்தது.

அந்தத் தேக்கத்தை உடைத்து இந்தியாவை விடுவித்து, காலத்துக்கு உகந்த அடுத்தகட்ட பாய்ச்சலை உருவாக்கியவர் பி.வி.நரசிம்மராவ். அவருடைய சமரசங்கள் பெரியவை. சாதனைகள் இன்று கண்கூடாகத் தெரிகின்றன. இந்தியாவில் தனியார்த்துறை எழுச்சி வேலைவாய்ப்புச்சந்தையை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்கியது. இந்தியாவின் அடிப்படை வறுமை அவரால் குறைந்தது. நான் அதை கண்கூடாக கண்டுணர்ந்தவன்.

நல்ல நோக்கம் கொண்டு தொடங்கி, எதையும் முழுமையாகச் சாதிக்கமுடியாத இரு ஆட்சியாளர்கள் என்று மொரார்ஜி தேசாய் மற்றும் ராஜீவ் காந்தியைச் சொல்வேன். அவர்களின் ஆட்சிக்காலம் பலவகையான சிக்கல்களுக்கு உள்ளானது. நரசிம்மராவின் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவராக மன்மோகன் சிங் முக்கியமானவர், ஆனால் அரசியல் விருப்புறுதியற்றவர், ஆகவே சீர்திருத்தங்களில் ஊழல்படியவிட்டவர் என அவரை மதிப்பிடுகிறேன்.

இன்றைய ஆட்சியாளர் பற்றி எனக்கு பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. எனக்கு கண்கூடாகத் தெரிபவை மிகச்சிலவே. வட இந்தியாவில் நிகழ்ந்துள்ள சில மெல்லிய மாற்றங்கள். குறிப்பாக வீடு, கழிப்பறை வசதிகளில். அவை நரசிம்மராவின் சீர்திருத்தங்களின் விளைவாகக்கூட இருக்கலாம். வடகிழக்கில் நிகழ்ந்துள்ள அரசியல்மாற்றங்கள், பொருளியல் மாற்றங்கள். ஆனால் பத்தாண்டுக்கால ஆட்சிக்குச் சாதனையாகச் சொல்ல இவை போதாது என நினைக்கிறேன்.

ஆகவே ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதென்பது வாக்காளரின் கடமை. அதற்குத்தேவையான அளவு அரசு, ஆட்சி பற்றி தெரிந்திருப்பது அவசியம். அவர்களின் எல்லைகள், தகுதிகள், அவர்கள் என்ன செய்யமுடியும், என்ன செய்தார்கள் என்பது பற்றி நமக்கு ஒரு தெளிவு இருக்கவேண்டும். ஒரு யதார்த்தபுத்தி தேவை. அந்த புரிதலுடன் நமக்கான ஆட்சியாளர்களை வாக்களித்துத் தேர்வுசெய்வது நம் கடமை. அவர்கள் செய்யும் பிரச்சாரங்களை நம்பி, கொள்கைப்பிடிப்பு கட்சிச்சார்பு என நிலைபாடு எடுத்து ஆண்டுமுழுக்க கூச்சலிட்டுக்கொண்டே இருப்பது அறிவுமழுங்கிய செய்கை. அவர்களை ரட்சகர்கள், தலைவர்கள் என்றெல்லாம் நம்புவது பேதைத்தனம்.

அப்படி நம்புவதும் அதற்கேற்ப நாள்தோறும் கூச்சலிட்டுக்கொண்டே இருப்பதும் அரசியல் அல்ல, வெறும் உணர்ச்சிகர மூடத்தனம். கட்சித்தொண்டர் என்பவர் ஒருவகை அடிமை. அந்த அடிமைகளில் படித்தவர்களும் உண்டு. அவர்கள் அதை அரசியல் என நம்புகிறார்கள். அது அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு மண்டையைக்கொடுத்த அடிமைத்தனம். அதற்கு எந்த சமூகப்பங்களிப்பும் இல்லை. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

உதாரணமாக, இன்று ஒரு மாநிலத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என்றால் சாதாரணமாக பத்தாயிரம்கோடி ரூபாய் ஒரு கட்சிக்குத் தேவை. பிரச்சாரம், வாக்காளர்களுக்கு லஞ்சம் எல்லாம் சேர்த்து. ஒரு மாநில அரசு ஆட்சியில் இருக்கையில் மாநிலத்தேர்தல், மையத்தேர்தல் என இரண்டு தேர்தல்களைச் சந்திக்கவேண்டும். ஆட்சிபோகுமென்றால் மேலும் இரு தேர்தல்களை. ஆகவே நான்கு தேர்தல்களுக்கான பணம் இல்லாமல் ஆட்சியை முடிப்பது தற்கொலை.

ஆக, நாற்பதாயிரம் கோடி ரூபாயை திரட்டாமல் ஒரு மாநில அரசு பதவியிறங்க முடியாது. அந்த நிதியை முழுக்கமுழுக்க மாநிலத்தின் தொழில்துறையில் இருந்து உறிஞ்சவேண்டும். திமுக, அதிமுக எதுவானாலும். இதுவே மைய அரசுக்கும். அது பற்பல மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவேண்டும், மையத்தேர்தல்களைச் சந்திக்கவேண்டும். ஆகவே அதன் உறிஞ்சுதல் லட்சம்கோடிகளில் இருக்கும்.

இச்சூழலில் இன்று  ‘ஊழலற்ற’ ஆட்சி என ஒன்று இருக்கக்கூடுமா? அது சாத்தியமே இல்லை. ஆனால் பொதுக்கட்டுமானங்களில், மக்களுக்கான பணிகளில் நிகழும் கடைமட்டம் வரையிலான ஊழலை ஓர் அரசு கட்டுப்படுத்தலாம். அமெரிக்காவிலும் உயர்மட்ட ஊழல் உண்டு, அது பிரச்சாரத்தையே போர் என கொண்டிருக்கும் ஜனநாயகத்தில் தவிர்க்கமுடியாது. அங்கே மக்களுக்கான சேவைகளில் ஊழல் இல்லை. மொத்தக் கட்சியும் ஊழல் செய்வதில்லை.

ஆகவேதான் நான் தொண்டர்களை ஐயப்படுகிறேன். ஒரு ‘தொண்டர்கட்சி’ அதன் அத்தனை தொண்டர்களுக்கும் ஊழல்செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி அளிக்கவேண்டியுள்ளது. விளைவாக கட்சி பத்தாயிரம்கோடியை ஊழல் செய்து ஈட்டியதென்றால் கட்சித்தொண்டர்கள் பத்துமடங்கு ஈட்டிக்கொள்ளவேண்டியுள்ளது. எண்ணிப்பாருங்கள் இன்று திமுக, பாஜக போன்ற கட்சிகள் எத்தனை லட்சம் தொண்டர்களை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்தமாக ஈட்டும் வருமானம் என்ன? இந்தியாவின் மாபெரும் வேலையளிப்பு அமைப்பு ரயில்வே அல்ல, தபால்துறை அல்ல, இந்தக் கட்சிகள்தான்

கட்சித் தொண்டர்கள் என்று இந்திய அரசியலில் இல்லாமலாகிறார்களோ அன்றுதான் இங்கே பொதுச்சூழலில், மக்கள்பணிகளில் ஊழல் இல்லாமலாகும். உலகம் முழுக்க ஆரோக்கியமான ஜனநாயக அரசியலில் தொண்டர் என்னும் இந்த வர்க்கம் இல்லை.

நான் சொல்லும் கட்சியரசியல் இது. ஆட்சியை கணித்துக்கொள்ளுங்கள். குடிமகனாக நின்று வாக்களியுங்கள். அவ்வளவுதான் நம் பணி. கட்சிகள் உருவாக்கும் பிரச்சார மாயைக்கு அடிமையாகி கட்சிச்சார்பு எடுத்து அக்கட்சி என்ன செய்தாலும் ஆதரிப்பது என்னும் நிலையை எடுப்பதும், அக்கட்சியின்பொருட்டு ஆண்டுமுழுக்க வெறுப்பைக்கூச்சலிடுவதும் அறிவுத்தற்கொலை. அது அரசியலே அல்ல.

அரசியலில் ஈடுபடவேண்டும் என்றால் அது அதிகார நோக்கம் அற்ற அரசியலாக இருக்கட்டும். அது சமூகத்தில் கருத்துமாற்றத்தை நுணுக்கமாக உருவாக்கும் அரசியலாக இருக்கட்டும். அதுவே நுண்ணலகு அரசியல்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2025 11:35

நாமக்கல் கவிஞர் மரபு

பாரதிக்குப் பிந்தைய தமிழ் மரபுக்கவிதையின் இரண்டு மரபுகளில் ஒன்று. முதன்மை மரபாகக் கருதப்படுவது பாரதிதாசன் பரம்பரை. இன்னொரு மரபு நாமக்கல் கவிஞரை முதல் உதாரணமாகக் கொண்டிருந்தாலும் அவரை மையமாகக் கொண்டு ஒருங்கிணையவில்லை. சில பொதுப்பண்புகளே அவர்களை ஒரு மரபாகக் காண அடிப்படையாக உள்ளன

நாமக்கல் கவிஞர் மரபு நாமக்கல் கவிஞர் மரபு நாமக்கல் கவிஞர் மரபு – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2025 11:34

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள்- கடிதம்

அன்புள்ள ஜெ,

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்னும் சமீபத்திய நாவலை வாசித்தேன். நான்  வாசிக்கும் இவரது முதல் படைப்பு இதுதான். ஒரு படைப்பாளியை இப்படி முதல்முறையாக வாசிக்கும்போது அவர் யார் என்று தெரியாதது அளிக்கும் ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. தெரியாத ஒருவரிடம் பேசுவதுபோல உள்ளது. 

விஷ்ணுபுரம் விருதுவிழா வழியாகவே நான் புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்துகொள்கிறேன். அவர்களை மட்டுமே வாசிக்கிறேன். இது சரியா என்று ஒரு கேள்வி எனக்குள் உண்டு. ஆனால் இன்றைக்கு புத்தகத்தை தேர்வுசெய்வது என்பது ஒரு பெரிய சிக்கல். பணத்தை விட நேரம் பெரிய இழப்பு. ஆகவே ஒரு பரிந்துரை தேவை. அந்தப் பரிந்துரையாக அமைவது விஷ்ணுபுரம் நிகழ்வு.

இந்நாவல் வழியாக நான் அரிசங்கரை சமகால வாழ்க்கையின் கதைசொல்லி என்று புரிந்துகொண்டிருக்கிறேன். சமகால வாழ்க்கையின் வெறுமையையும் சலிப்பையும் அவற்றை வெல்லுவதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் எல்லா பாதைகளும் ஏற்கனவே மூடப்பட்டிருப்பதையும் சொல்லும் நாவல் இது. வாசிக்கையிலேயே ஒருவகையான சலிப்பையும் ஆனால் இப்படித்தானே நம் வாழ்க்கை இருக்கிறது என்ற உணர்வையும் அளிக்கிறது. இந்த நாவல் வழியாகச் சென்று வருவது என்பது நம்மை நாமே ஓர் உடைந்த கண்ணாடி வழியாகப் பார்ப்பதுபோன்ற அனுபவமாக அமைந்தது.

இந்நாவல் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. உண்மைகள், பொய்கள், கற்பனைகள் என்ற மூன்று தலைப்பிட்ட பகுதிகளும் இன்றைய வாழ்க்கையின் மூன்று டைமென்ஷன்கள். ஆனால் இந்தப் பிரிவினையே பொய்தான். பொய்கள் உண்மைகளும் கற்பனைகள் பொய்களுமாக ஆகலாம். இந்த பிரிவினை அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நாம் பிரித்துக்கொண்டிருப்பதுதான். 

அதேபோல இந்நாவலில் கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை. கதைநாயகன் பெயர் வெள்ளை. ஒரு நிறம். அல்லது நிறமே அற்றவன். அவன் தன் காதலியை ஆரஞ்சு என்று சொல்கிறான். வெள்ளைக்கு திருமணமாகவில்லை. பாலுறவுக்கும் காதலுக்கும் ஏங்குகிறான். ஆனால் அவனுக்கு எந்த வழிகளும் இல்லை. எல்லாமே பொய்யால் அடைக்கப்பட்டுள்ளன. அவன் செக்குமாடு போல வாழ்ந்து செத்தாகவேண்டும். ஏதாவது குற்றம் செய்தால்தான் அந்த வட்டத்தை உடைக்கமுடியும். ஆனால அந்தக்குற்றத்தையும் அவனால் கற்பனையில்தான் செய்யமுடியும்.  

பொய் என்னும் பகுதியின் அவனுடய பகற்கனவுகள் உள்ளன. கற்பனை பகுதியில் ஒரு குற்றம் உள்ளது. அந்த குற்றம் உண்மையில் நடந்ததா இல்லையா என்பது மாயமாக உள்ளது. இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தும் பிரித்தும் காட்டும் விளையாட்டு என்று இந்நாவலைச் சொல்லமுடியும். 

நான் 10 ஆண்டுகள் சென்னை மேன்ஷனில் வாழ்ந்தேன். அதில் வேலை கிடைக்காதவர்கள், கல்யாணமாகாதவர்கள், சினிமா வாய்ப்பு தேடுபவர்கள் என பலவகை. அவர்கள் மிகமிக யதார்த்தமாகப் பேசிக்கொள்வார்கள். ஆனால்  அவற்றில் எது உண்மை என்று கண்டுபிடிக்கவே முடியாது. ஏனென்றால் பொய் என்பது கற்பனைதான். கற்பனையை நம்பி அவர்கள் அதிலே வாழ்வார்கள். காதலிகள் இருக்கும். சினிமாப்பட பூஜை போடப்பட்டிருக்கும். காதலியை கொலைகூட செய்வார்கள். உண்மையில் ஒருவன் கொலைசெய்தால்கூட அந்தக் கொலையும் கற்பனையாக ஆகிவிடும். 

இன்றைய வாழ்க்கை ஒவ்வொருவரையும் கூண்டுக்குள் அடைத்து வெறும் கற்பனைகளிலேயே வாழச்செய்கிறது. சினிமா,டிவி, இன்ஸ்டா எல்லாமே கற்பனைகள்தான். அதில்தான் எல்லா வாழ்க்கையும் நிகழ்கிறது. இன்ஸ்டாவில் ஒரு பிளேபாய் ஆக இருப்பவன் நிஜத்தில் ஒரே  ஒரு பெண்ணிடம்கூட பேசாதவனாக இருப்பான். ஆனால் அவன் வாழ்வதே கற்பனையில் என்றால் அவன் வாழ்வதில்லை என எப்படிச் சொல்லமுடியும். 

இன்றைய வாழ்க்கையிலுள்ள வெறுமையையும் மீட்பின்மையையும் ஒரு வகையான காஃப்காத்தனமான விளையாட்டுடன் சொல்லும் ஒரு நல்ல படைப்பு இது. என் நண்பன் ஒருவன் 20 ஆண்டுக்கு முன் சொன்னான். “மச்சி நம்ம வாழ்க்கையே ஒரு மாஸ்டர்பேஷன்தாண்டா”. அந்த வரியே இந்நாவலையும் வரையறுக்கச் சரியான ஒன்று என்று படுகிறது.

எம்.பாஸ்கர் 

விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள் விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி

விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 5 – அழிசி ஶ்ரீனிவாசன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 6 – குணா கந்தசாமி விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த் விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்

விஷ்ணுபுரம் விருந்தினர் – 9 – யாழன் ஆதி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2025 11:31

வால்நட் கிரீக் நாவல் பயிற்சி

ஒரு இனிய நாள் 

வால்நட் க்ரீக் நாவல் பட்டறை பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், வேலை நெருக்கடி மற்றும் சாண்டா பார்பராவில் இருந்து ஆறு மணி நேர பயணம் இரண்டையும் எண்ணி குழம்பி கொண்டிருந்தேன். இரு நாள் கழித்து  வருகிறீர்களா என விசு அவர்களின் வாட்ஸாப் செய்தி கண்டதும் அதையே நிமித்தமாக கொண்டு செல்லலாம் என முடிவெடுத்தேன்.

சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து பயணத்தொடக்கம் . சனி இரவு மௌண்டைன் வியூவில் தங்கி, ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு வால்நட் க்ரீக்கில் வகுப்பு நடக்கும் இடம் வந்து சேர்ந்தேன்.  ஏற்கனேவே நண்பர்கள் பலர் ஆஜராகி இருந்தனர்.  வகுப்பு தொடங்கும் வரை சென்ற ஆண்டு பூன் முகாமில் பழக்கமான ஷங்கர், சாரதா என நண்பர்களுடன் பேசிக் கொண்டு நேரம் சென்றது. நண்பர்கள் சிலர் வகுப்புக்கான வைட் போர்டை பொருத்தி கொண்டிருக்க, அங்கிருந்த அறம் தொகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பை புரட்டி கொண்டிருக்கையில், ஜெ நுழைந்தார்.

அனைவரும் அமர, நண்பரின் குழல் இசையுடன் வகுப்பு தொடங்கியது. “ஏன் நாவல் எழுத வேண்டும்” என தொடங்கி, நாவலின் கரு (Theme), நாவலின் வகைகள் என விரிந்து சென்றது. நாவலின் “Plot” மற்றும் “Theme” இரண்டிற்குமான வித்தியாசத்தை ஒரு சினிமா உதாரணத்துடன் ஜெ விளக்கினார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் “Identity” என்ற கருவை எவ்வாறெல்லாம் விரித்து செல்ல கூடும் என காட்டினார். பின் நாவலின் திறப்பு அமைய வேண்டிய  / கூடாத விதங்கள், நாவலின் உடல் எவ்வாறு அதன் மைய வினாவை விரிக்க வேண்டும், நாவலின் முதிர்வு எவ்வாறு ஆசிரியரின் கண்டடைதலில் இருந்து வாசகன் தன்  பயணத்தை தொடங்குமாறு அமைய வேண்டும் என விளக்கிச்சென்றார். மதிய இடைவேளைக்குப் பின் “Character Arc” பற்றி சொல்லத் தொடங்கி நாவலின் ஆசிரியர் தனக்கும் கதாபாத்திரங்களுக்கும் உள்ள உறவை கையாள வேண்டிய விதம் பற்றி கூறினார். இறுதியில் நாவல் எழுதும் “Process ” பற்றி கூற வகுப்பு நிறைவடைந்தது.

வகுப்பு முடிந்த பின் அருகிருந்த புல்வெளியில் அமர்ந்து  கலகலப்பான உரையாடல். என் நீண்ட முடி குறித்த கிண்டல்கள், அருண்மொழி அவர்கள் கையாள வேண்டியிருந்த பல தரப்பான  வாசக வருகைகள், ஜெவின் மனைவி பெயர் குறித்து GroqAI  செய்த குளறுபடி என பல சிரிப்பு வெடிகள். இரவு உணவு மிகவும் அருமையாக இருந்தது. அளவுக்கு சிறிது மீறியே உண்டு விட்டு, நண்பர்களிடம் விடை பெற்று கிளம்பினேன்.

மொத்தத்தில் மிகவும் இனியதொரு நாளாக அமைந்தது. ஏற்பாடுகள் செய்த அனைத்து விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் நன்றி. இனிய நினைவுகளுடனும், நம்மாலும் ஒரு நாவல் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையுடனும் வீடு வந்து சேர்ந்தேன். 

கண்ணன் (சாண்டா பார்பரா)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2025 11:31

October 24, 2025

ஆழ்நதியைச் சென்றடைதல்

கோதாவரியின் கரையில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி இது. இலக்கியம் பற்றி பேசுவதற்கான ஓர் உருவகமாக அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். காவியம் நாவல் எழுதுவதற்காக சென்ற ஜூன் மாதம் பைதான் நகர் சென்றபோது பதிவுசெய்தது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2025 11:36

எரிமருள் வேங்கை

fire

திருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார்.

ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. ஆயிரம் பொன்னும் பெற்றேன். அய்யா, உண்மையிலேயே கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?’

ரகசியமாக தருமி சொன்னான் ‘நான் ஈட்டும் பொன்னில் பாதி இதைத்தெரிந்துகொள்வதற்காகவே கணிகையர் தெருவில் வீணாகிப்போகிறது.’ தாடிக்குள் நகைத்த நக்கீரர் சொன்னார் ‘நான் சென்ற வருடங்களில் வாசித்த அனைத்து நூல்களும் இந்த வினாவுக்கு விடைதேடித்தான்.’ ’உங்கள் முடிவென்ன புலவரே?’ என்றான் தருமி.

’உண்டு என்கிறது கவிதை. இல்லை என்கிறது அறிவு. ஆனால் விடைமீது செம்பொன் மேனியன் என அறிவின் மீதமர்ந்திருக்கிறது கவிதை. பூத்தகாடு தேன்கொண்டிருப்பதுபோல கவிதையை தேக்கியிருக்கிறது அறிவு’ ‘நீங்கள் எம்முடிவை வந்தடைந்தீர்கள்?’ ‘நான் வேழம். காட்டையே உண்ணமுடியும். தேன்சுவை அறியமுடியாது’ என்றார் நக்கீரர்.

கவிதைக்கு இருபக்கமும் இவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். சாமானியனும் அறிஞனும். இருவரும் திகைத்து நோக்குகிறார்கள். இது என்ன? நான் புழங்கும் உலகைப்பற்றியது இது, நானறிய முடியாதது என்கிறான் சாமானியன். நான் கற்ற மொழியில் இது அமைந்திருக்கிறது, ஆனால் நான் கற்கமுடியாதது என்கிறான் அறிஞன்.

இந்த மர்மமான, அற்புதமான, முற்றிலும் தேவையற்ற, சற்றும் தவிர்க்கமுடியாத விஷயத்தைப்பற்றி எத்தனையோ பேசப்பட்டிருக்கிறது. எவ்வளவோ விளக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விளக்கங்களுக்கும் மிக அண்மையில் அது நின்றுகொண்டிருக்கிறது, நிறைக்கமுடியாத இடைவெளியுடன்.

‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமம்செப்பாது கண்டது மொழிமோ
நறியியது செறிந்த செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியதும் உளவோ நீ அறியும் பூவே

என்னும் இறையனாரின் கவிதையைக்கொண்டே அதை விளக்கலாமே. காட்டை உண்ணும் யானைக்குரியதல்ல கவிதை. கொங்குதேர் வாழ்க்கை கொண்ட அஞ்சிறைத் தும்பிக்கு உடையது அது. கவிஞனுக்கு இதைவிடச் சிறந்த வரையறை இருக்கமுடியுமா என்ன? காட்டில் உள்ள மலர்களில் ஊறிய தேனை மட்டுமே அருந்தும் சுவை கொண்டது. அந்தத் தேனை நாடிச்செல்வதற்கான அழகிய சிறகுகள் கொண்டது. மலரில் அமரும் சிறகும் மலர்போலவே அமையவேண்டுமென நினைத்தவனாதலால்தானே அவனை நாம் முழுமுதல் கவிஞன் என்கிறோம்.

ஆம், வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் சாரமென ஊறும் தேன் மட்டும் போதும் அவனுக்கு. காட்டை அதன் தேன் வழியாகவே அறிய அவனால் முடியும். அந்தக்காடு அவன் வழியாகவே காய்த்துக் கனிகிறது. ஒரு செடியின் ஆன்மாவை மகரந்தமாக ஆக்கி இன்னொரு செடிக்குக் கொண்டுசெல்லக்கூடியவன் அவன் இல்லையா?

கொங்குதேர்வாழ்க்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது. காமம் செப்பாது கண்டது மொழியும் நேர்மையும் தேவை கவிஞனுக்கு. உறையுருவப்பட்ட வாளின் சமரசமின்மை. இவ்வாழ்க்கையின் அனைத்து பொய்மைகளுக்கும் அப்பால் நிற்கும் தனிமை. இதன் விருப்புவெறுப்புகளை கடந்த தூய்மை.

அந்தக்கவிஞனிடம்தான் கோரிக்கை வைக்கப்படுகிறது. செறி எயிற்று அரிவை கூந்தலை விட மணம் கொண்ட மலர் உண்டா? எனக் கேட்பவன் காதலன். அவன் அறிந்த மணம் அவனுடைய காதலியான அரிவையின் கூந்தலில் எழுவது.

அதை ‘பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?’ என்று பொதுமைப்படுத்துவதே அறிவின் இயல்பு. இந்தப்பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் இருந்தால் அது அனைத்துப்பெண்களிடமும் இருந்தாகவேண்டும் என அது வாதிடும். அதை இவன் உணர்ந்தால் அனைவரும் உணர்ந்தாகவேண்டும் என அது கோரும்.

நக்கீரரின் அறிவு கோரியது ஓர் புறவய உண்மை. மைதானத்தில் நிற்கும் உண்மை. மேடையேறிய உண்மை. அனைவரும் கேட்கும் உண்மை. அக்காதலன் கவிஞனாகிய தும்பியிடம் கோரியதோ அந்தரங்க உண்மை. அறைக்குள் நிற்கும் உண்மை. அகம் மட்டுமே அறியும் உண்மை.

ஆம் கவிதைக்கும் பிற அறிதல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். பிற அறிதல்கள் அனைத்தும் புறவயமானவை. கவிதை அகவயமானது. புறவயமான உண்மையின் நுனியில் கனிந்தூறிய அகவயமான உண்மை அது. மரத்தில் ஊறிய தேன் போல.

அந்தக்காதலன் தன் அரிவையின் கூந்தலை அள்ளி முகர்ந்து அடைந்த மனஎழுச்சியின் கணத்தில் அவன் அடையும் உச்சநிலையை கவிதை சென்று தொடுகிறது. அவன் சற்று நேரத்தில் கீழிறங்கி பொது உண்மையின் தரையை தொட்டு விடுவான். அவன் கணவனாக ஆவான். தந்தையாவான். கிழவனாவான். கவிஞன் மட்டும் அந்த உச்சகணத்தில் மட்டும் நின்றுகொண்டிருப்பான். மண்ணுக்கே வராமல் வானிலேயே வாழும் ஒரு பறவை கவிதை. மண்ணிலிருந்து எழுந்து வானைத்தொடுபவர்கள் அதைக் கண்டு மீளமுயலும் அவ்வளவுதான்.

நான் பள்ளியில் படிக்கும்போது ஐந்து மலைக்காணிப்பையன்கள் என்னுடன் படித்தனர். அவர்களும் மலையாளம்தான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தனிமொழி. அவர்களுக்கு மட்டுமே புரியும். ஆட்டிலை என்றால் ஆட்டுக்காது. பூவால் என்றால் பூவின் அல்லி. கிணறு தன்னைப்பார்த்தது என்றான் ஒருவன், நான் அவனிடம் கிணற்றில் நீர் இருக்கிறதா என்று கேட்டபோது.

அவர்களின் மொழி முற்றிலும் படிமங்களால் ஆனது. அந்தப்படிமங்கள்கூட எல்லாருக்கும் உரியவை அல்ல. அவ்வப்போது அவர்கள் உருவாக்குவது. மரத்தின் உகிர் என்று அவன் ஒருமுறை சொன்னான். அப்போதுதான் வேரை மண்ணில் கவ்வி ஊன்றி நின்ற மரத்தை ஒரு மாபெரும் பருந்தின் காலாக நான் கண்டேன். அந்தமொழி அவர்களுக்கு புரியும்.

பெரும்பாலும் கவிதையும் அப்படித்தான் இருக்கிறது. கவிஞர்கள் ஒரு தனிக்குழு போல. தமிழகம் என்னும் வகுப்பில் அந்த மாணவர்கள் ஐந்துபேரும் தனியாக இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது எங்களுடைய அதே மொழிதான். ஆனால் அது மொழிக்குள் வேறு மொழி. தனிமொழி – ஆங்கிலத்தில் மெட்டாலாங்குவேஜ் என்கிறோம்.

ஆம், கவிதை என்பது ஒரு மொழிக்குள் செயல்படும் ஒரு தனிமொழி. அதை வாசிக்க உங்களுக்கு மொழி மட்டும் தெரிந்தால் போதாது. அந்தத் தனிமொழியும் தெரிந்திருக்கவேண்டும். கடல்நீரில் ஒருசதவீதம் கனநீர் இருக்கிறது என்கிறார்கள். ஒரு எலக்டிரான் கூடுதலாக உள்ள நீர் அது. கடல் தன் ஆழத்தின் அழுத்தத்தாலும் வெம்மையாலும் அதை உருவாக்கி வைத்திருக்கிறது. அதைப்போல மொழியும் தன் ஆழத்தால் தனக்குள் ஒரு கனமொழியை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு எலக்ட்ரான் கூடுதலான மொழி. அதுதான் கவிதை.

மொழி இரண்டு வகையில் தொடர்புறுத்துகிறது. இன்னசொல்லுக்கு இன்ன பொருள் என்ற பொதுப்புரிதல் வழியாக அது தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. கண் என்றால் ஓர் உறுப்பைக்குறிக்கும் என சொல்பவரும் கேட்பவரும் அறிவர். அப்படித்தான் நாம் பேசிக்கொள்கிறோம். ஆனால் கூடவே அந்தத் திட்டவட்டத்தன்மையை கலைத்துக்கொண்டும் நாம் தொடர்புறுத்துகிறோம். நகக்கண் என்கிறோம். அகக்கண் என்கிறோம். உறுதியாகச் சொல்லமுடிபவற்றுக்கு அப்பாலுள்ள ஒன்றைச்சொல்வதற்காக உறுதியை அகற்றி சொல்லமுயல்கிறோம்.

இந்த இரண்டாவது செயல்பாடு பொதுவாக இன்றும் பழங்குடிகளிடம் அதிகம். மரத்தில் ஆயிரம் கண் என்று அவர்கள் சொல்வது பழங்களைக் குறிக்கிறது. நாகரீகமடையும்தோறும் நாம் இந்த பொருள்மயக்கத்தை முழுமையாகவே தவிர்க்கமுயல்கிறோம். சட்டம் வணிகம் அரசியல் அறிவியல் போன்றவற்றில் பொருள்மயக்குக்கே இடமில்லை.

அவ்வகையில் பார்த்தால் நாகரீகத்தின் உள்ளே உறையும் பழங்குடித்தன்மைதான் கவிதை. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் நவநாகரீக புழக்கத்தின் நடுவே அங்குள்ள ஆதிவாசி ஒருவர் தன் மாபெரும் குழல்வாத்தியத்தை இசைப்பதுபோல நம் நாகரீக வாழ்க்கையின் நடுவே ஒலிக்கிறது கவிதை.

இப்படிச் சொல்கிறேன். ஏற்கனவே இருக்கக்கூடிய அர்த்தங்கள் வழியாக பேசுவதல்ல கவிதை. புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கக்கூடியது. மொழி ஒரு கட்டுமானமாக ஆகி உறைந்துகொண்டே இருக்கிறது. மறுபக்கம் அதன் ஒரு பக்கம் உயிர்த்துடிப்புடன் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பறம்பிக்குளத்தில் ஒரு மரக் குடிலில் ஒருமுறை தங்கினேன். அதன் ஒரு கால் முருக்கமரத்தால் ஆனது. அது முளைத்து கிளைவிரித்து பூத்து நின்றது. அது மட்டும் வளர்ந்துகொண்டிருந்தது. அதுதான் மொழியில் கவிதையின் இடம்.

பழங்குடிப்பாடல்களில் இயல்பாகவே எப்போதும் கவிதை உள்ளது. கையில் உள்ள சொற்களைக்கொண்டு சொல்லமுடியாதவற்றைச் சொல்ல அவர்கள் முயல்கிறார்கள். எங்களூரின் பழங்குடிப்பாடல்

ஆனைகேறா மலையில் ஆடு கேறா மலையில்
ஆயிரம் காந்தாரி பூத்திறங்கி

என்கிறது. யானை ஏறாத மலையாக வரையாடும் ஏறாத மலையாக தெரிவது வானம். அதில் ஆயிரம் சிவந்த காந்தாரி மலர்களாக விண்மீன்கள். இது ஒரு அதீதக் கற்பனை அல்ல. உட்கார்ந்து கண்ட கனவும் அல்ல. எங்களூரின் மேற்கு மலையை கண்ணால் பார்க்கும் குழந்தைகூட இந்த அனுபவத்தை அடையும். நீலநிற அடுக்குகளாக மலைகள். மேலே கருநீல மேக அடுக்குகளும் மலைகள் போலவே தோன்றும். அந்த மலையுச்சியில் ஏறும் ஆடும் ஆனையும் அடுத்த மலையின் மேகப்பாறைகளுக்கு கீழேதான் நிற்க முடியும்!

அங்கிருந்து ஆரம்பிக்கிறது கவிதை. செவ்வியல் கவிதை அந்தப்பழங்குடிக் கவிதைக்கு மிக அருகே நிற்கக்கூடியது. அது கண்ணுக்கும் காதுக்கும் மிக அண்மையானது. கற்பனைக்குப்பதில் நேரடி அனுபவத்தில் உருவாகக்கூடியது. நம் சங்கப்பாடல்கள் அத்தகையவை. அவை ஒருபக்கம் பழங்குடிப்பாடல்களின் உடனடி அனுபவத்தளம் கொண்டவை. புலன் சார்ந்தவை, மறுபக்கம் தேர்ந்த மொழிநுட்பத்துடன் துல்லியமாகச் சொல்லப்பட்டவை.

எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட

என்று கபிலர் ஐங்குறுநூறில் பாடுகிறார். வேங்கைமரம் நெருப்பு போல பூத்திருக்கும் அனுபவத்தை நான் உண்மையிலேயே அறிந்திருக்கிறேன் . வேங்கை பூக்கும் காலம் இளவேனில். காட்டில் அப்போது காட்டுத்தீ உண்மையான அபாயம். பேச்சிப்பாறைக் காட்டில் பசுமைக்கு அப்பால் நெருப்பைக்கண்டு நான் கைகாட்டி கூவினேன். என் மாடு மேய்க்கும் துணைவர்கள் அது வேங்கை என்று சொல்லி சிரித்தனர். அந்த அனுபவத்தையே கபிலரும் அடைந்திருக்கக்கூடும்.

அதை ‘எரிமருள் வேங்கை’ என சொற்குவிதலாகச் சொல்லி முடிக்க முடிந்தமையால்தான் அவர் கவிஞர். பழங்குடிப்பாடகர்களில் இருந்து கவிஞன் பிறக்கும் தருணம் அது. அவன் சொல்லை தன்னிச்சையாகக் கையாள்பவன் அல்ல. தன் அகத்தைச் சொல்லும்பொருட்டு சொல்பயில்பவன்.

அடுத்தகட்டம் அந்தக் காட்சியை வாழ்க்கையாக விரித்துக்கொள்வது. தீ என பூத்த வேங்கையில் அமர்ந்த மயில்கள் நகைகளை அணிந்த பெண்களைப் போல தோன்றுகின்றன என இன்னொரு காட்சியில் அதை இணைக்கிறார் அவர். அக்காட்சியை வாழ்க்கைச் சித்திரம் ஒன்றுக்கு அருகே கொண்டுவருகிறார். அத்தகைய நாட்டைச்சேர்ந்தவனாகிய நீ அன்று என் தோழியின் கூந்தலில் மலர்சூட்டினாயே என்ற தோழிக்கூற்று அந்த காட்சிக்கு மேலதிகப்பொருளை அளிக்கிறது.

அது தீ போல தோன்றும், ஆனால் மலர்தான். அதைப்போல அந்த ஆண் நெருப்புதான். ஆனால் மலர் நெருப்பு. அவள் அதில் ஏறி அமர்ந்த மயில். இந்தப்பொருளேற்றம் நிகழ்ந்ததுமே ஒன்று உருவாகிறது. அதை நாம் படிமம் -. பொயட்டிக் இமேஜ் என்கிறோம். ஆனைகேறாமலை என்பது வெறும் காட்சி. எரிமருள் வேங்கை என்பது அர்த்தம் ஏற்றப்பட்ட காட்சி. ஆகவே இது படிமம். படிமம் உருவானதுமே கவிதை பிறந்துவிட்டது.

செவ்விலக்கியம் என்பது ஒரு மொழி இலக்கியத்தின் அடித்தளம். மண்ணுக்கு அடியில் உள்ள விதையும் வேரும் நிறைந்த பரப்பு போல. அதிலிருந்து முளைத்தெழுகின்றன இலக்கியத்தின் அனைத்துக்கிளைகளும்.

இவ்வாறு கவிதை உருவாகி வரும் பரிணாமத்தை நாம் நம் வரலாற்றில் காணலாம். சங்ககாலச் செவ்வியல் கவிதையில் ஒவ்வொன்றாக வந்துசேர்கிறது. முக்கியமாக பெருமதங்களின் சிந்தனைகள். சமணம், பௌத்தம், இந்து மதங்களின் சிந்தனைகள் தமிழ்க்கவிதைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்கின்றன. வாழ்க்கையின் உணர்ச்சிநிலைகளையும் இயற்கை அளிக்கும் மெய்ஞானத்தையும் இணைத்து தங்கள் கவித்தரிசனத்தை முன்வைத்த சங்கக்கவிதைகளில் பெருமதங்கள் இரு அம்சத்தை சேர்க்கின்றன. ஒன்று பொதுஅறம் அல்லது பேரறம் பற்றிய தரிசனம். இரண்டு ஒட்டுமொத்த பிரபஞ்சம் பற்றிய தரிசனம். இவ்விரண்டையும் அன்றாட வாழக்கையில் இணைக்கும்போது உருவாகும் தரிசனமே ஊழ் என்பதாகும்.

சங்கக்கவிதைக்கும் சிலப்பதிகாரத்துக்கும் இடையேயான வேறுபாடு இதுதான். சங்கக்கவிதை மானுட உறவுகளை, மோதல்களை, மரணத்தை பாடும்போது அவற்றுக்கு இப்பிரபஞ்சத்தில் என்ன இடம் என்ற வினாவை காப்பியங்கள் எழுப்பிக்கொள்கின்றன. சிலம்பின் செய்தியே ‘அரைசியல் பிழைத்தோர்க்கு கூற்றாகும் அறம்’ பற்றித்தான் இல்லையா? சங்ககாலக் கவிதைகளின் இறுதிப்பகுதியில் தென்படத்தொடங்கும் இந்த பிரபஞ்ச தரிசனம் காப்பியகாலகட்டத்தில் மிக வலுவாக நிறுவப்பட்டுவிட்டது. ’நீர்வழிப்படூஉம் புணைபோல’ வாழ்க்கை என்ற தரிசனம் அது. மனிதனை பிரபஞ்சவெளிக்கும் காலப்பெருக்குக்கும் முன் நிறுத்தி மதிப்பிடும் நோக்கும்.

இந்தக் கட்டத்தில் கவிதை என்பது மேலும் விரிவாகிறது. ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன்வைப்பதும் கவிதையே என்றாகிறது. உயர்ந்த, முழுமையான ஒரு கருத்தை சரியான சொற்களில் வெளிப்படுத்துவதும் கவிதையே என கவிதையின் அடையாளம் விரிவடைகிறது.

கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

என்ற வரி அவ்வாறுதான் கவிதையாகிறது. நம் நீதிநூல்களில் கவித்துவம் என்பது தரிசனத்தின் கவித்துவமே.

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு

என்ற வரியில் ஒரு அழகிய படிமம் உள்ளது. ஆனால் படிமமே இல்லாத கூற்றுகளும் கவிதைகளே என ஆனது இக்காலகட்டத்தில்தான்.

இவற்றை கவிதையாக்கும் அம்சம் எது? ஒரு படிமத்தை நம் அகம் விரிவாக்கிக்கொள்கிறது. அது ஒரு விதை. அதை நாம் முளைக்கவைத்து நமக்கான காடாக ஆக்கிக்கொள்கிறோம் . அதைப்போல இவ்வரிகளும் நம்முள் விரிவுகொள்ள முடியும். அவ்விரிவு கவிதைக்குரிய தனிமொழியில் நிகழ்கிறது. ஆகவேதான் இது கவிதை.

கற்றதனால் என்ன பயன் கடவுளைத்தொழாவிட்டால் என்றால் அது கவிதை அல்ல. அதிலுள்ள வாலறிவன் என்ற சொல்லே அதை கவிதையாக்குகிறது. அறிவுக்கு அறிவானவன், முதன்மை அறிவைக்கொண்டவன், அறிவேயானவன் வாலறிவன். அந்த அறிவை அறியாவிட்டால் பிற அறிவுகளால் என்ன பயன்? அதுவே அந்தக் கவிதையின் தரிசனம். அவ்வாறு விரிவடைவது பொதுமொழியில் நிகழவில்லை, கவிதையின் தனிமொழியில் நிகழ்கிறது. அந்தத் தனிமொழியை அறியாதவர்கள் கடவுளை கும்பிடாதவன் கற்றுபயனில்லை என்ற எளிய பொருளையே எடுப்பார்கள். அவர்களுக்கு அது நீதி, கவிதை அல்ல.

ஊருணியின் நீர் அந்த ஊருக்குள் பெய்யும் மழை. அந்த ஊரின் ஊற்று. அந்த ஊருணி நிறைவது மழையாலும் ஊற்றாலும். ஆகவே அது ஊருக்குச் சொந்தமானது. அவ்வாறுதான் செல்வனின் செல்வமும். அவனுடையது அல்ல அது. வானமும் மண்ணும் அவனுக்கு அளித்தது அது. ஆகவே அது ஊருக்கு உதவவேண்டும். அந்த ஞானமே பேரறிவு. அப்பேரறிவை உடையவனின் திருவே ஊருணி போல உலகாக்குவது. இந்த வாசிப்பை கவிதையின் தனிமொழி அடைந்தவனே செய்வான். அவனே கவிதைவாசகன். அவனுக்கே இது கவிதை.

மூன்றாவது வளர்ச்சிக்காலகட்டம் செவ்வியலின் முதிர்வுநிலை எனலாம். செவ்வியலின் உச்சம் என்பது இலக்கியம் வழியாக அது அடையும் உச்சப்புள்ளிதான். கவிதைகள் பலநூற்றாண்டுகளாக எழுதப்பட்டுவிட்டன. மெல்லமெல்ல கவிதைக்குரிய தனிமொழி வலுவாகவே நிலைபெற்றுவிட்டது. அந்தத் தனிமொழிக்கு இலக்கணங்களும் வகுக்கப்பட்டுவிட்டன. அதை கவிதை அழகியல் எனலாம். அதன் பின்னர் அந்த அழகியலை நுண்மைப்படுத்தும் ஒரு போக்கு ஆரம்பமாகிறது. கவிதையைக் கற்று அக்கல்வியைக்கொண்டு மேலும் மேலும் நுட்பமாக ஆக்கிக்கொண்டே செல்லும் போக்கு அது. அதுவே அவ்வழகியலின் சிகரத்தைச் சென்று தொடுகிறது. ஆங்கிலத்தில் இம்ப்ரவைசேஷன் என்று சொல்கிறார்கள். எந்தக்கலையும் அதன் அழகியல் முழுமையாக உருவானதும் நுண்மையாக்கத்தில் இறங்கும். ஏழு எட்டாம் நூற்றாண்டில், காப்பியகாலகட்டம் முடிந்தபின் தமிழில் கவிதையழகியல் முழுமை பெற்றுவிட்டது. அதன்பின் நிகழ்ந்தது நுண்மையாக்கம். அந்த நுண்மையாக்கத்தின் உச்சம் கம்பராமாயணம்.

கம்பராமாயணம் அனைத்தையும் செய்துபார்க்கிறது. படிமங்களின் கடல் அது. அறக்கூற்றுகளின் உச்சம் அது. நாடகீயத்தருணங்களின் களஞ்சியம். இங்கே கவிதை அடுத்த கட்டத்தை அடைகிறது. ஓர் உணர்ச்சி மொழியை நேரடியாகவே சந்தித்தால் அது மேலான கவிதை என்றாகிவிடுகிறது. கம்பராமாயணத்தில் அத்தகைய பல்லாயிரம் கவித்தருணங்கள்

இன்று இறந்தன நாளை இறந்தன
என்று திறம் தரும் தன்மை இதால் எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ குழை
சென்று இறங்கி மறம்தரும் செங்கணாய்

என்று ராவணன் சீதையிடம் கேட்கிறான். இன்று இறந்தன நாளை இறந்தன என்றவரியை நான் அர்த்தமே இல்லாமல் அரற்றிக்கொண்டிருந்த நாட்கள் உண்டு. அந்தவரியில் உள்ள உணர்ச்சிகரமான ஒலியிசைவு அதை பெரும் கவிதையாக்குகிறது. சொல்லச்சொல்ல அந்த உணர்ச்சி நாவிலும் நெஞ்சிலும் நிறைகிறது அதுவே அதன் கவித்துவம்.

அந்த உணர்ச்சிகரம் பக்தியுகக் கவிதைகளில் அடுத்தகட்டத்தை அடைந்தது. ஆண்டாளும் நம்மாழ்வாரும் மாணிக்கவாசகரும் எழுதிய பாடல்கள் அவற்றின் உணர்ச்சிகரத்தாலேயே மாபெரும் கவிதைகளாயின.

எறும்பிடை நாங்கூழ் என்ன புலனால் அரிப்புண்டு அலந்த
வெறும் தமியோனை விடுதி கண்டாய்!

என மாணிக்கவாசகர் பாடுகிறார். அழகிய படிமம் ஒன்று இதிலுள்ளது. எறும்புகள் நான்குபக்கமும் கடித்து இழுக்க துடிக்கும் மண்புழு போன்று புலன்களால் தன் ஆன்மா அரிப்புறுவதை சொல்கிறார். நினைக்க நினைக்க விரியும் படிமம். மண்புழு கண்ணற்றது. கைகளும் கால்களும் அற்றது.உள்ளுணர்வால் இயங்குவது. அதைச்சூழ்ந்து எறும்புகள் கவ்வி இழுக்கின்றன.

எறும்புகள் மண்புழுவை இழுப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும். ஒட்டுமொத்தமாக மண்புழு ஒரு திசை நோக்கிச் செல்லும். அவை இணைந்து இழுப்பதில்லை. அதைப்போன்றே புலன்களும். அவை இணைந்து நம்மை செலுத்துவதில்லை. அவை ஒவ்வொரு திசைக்கும் நம்மை பிய்த்துச்செல்லமுயல்கின்றன.

இந்த விரிவாக்கம் ஒரு கவிதை வாசகனால் மட்டுமே செய்யக்கூடியது. அந்த விரிவாக்கம் செய்யும் திறன் அவன் தமிழில் ஈராயிரமாண்டுகாலமாக மெல்லமெல்ல உருவாகி வந்திருக்கும் கவிதை என்னும் தனிமொழியை அறிந்ததனால் நிகழ்வது. அதைத்தான் கவிதையுணர்வு என்கிறோம்.

மெல்லமெல்ல வளரும் இந்தத் தனிமொழியின் வளர்ச்சியில் கடைசிகட்டம் என சிற்றிலக்கியங்களைச் சொல்லலாம். இக்காலகட்டத்தின் தனித்தன்மை என்பது இதில் மதம் சார்ந்த மெய்ஞானமும் மதம் சார்ந்த படிமங்களும் நிலைபெற்று கவிதைக்குள் வந்து நிறைந்தன என்பதே.

பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தர்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறை மௌலி
பெம்மான் முக்கண் சுடர்க்கிடு நல்
விருந்தே வருக!

குமர குருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலை வாசிக்கையில் முக்கண் பெருமான் தன் மூன்றாவது விழியால் பார்த்து ரசிக்கும் அழகுவிருந்து என மீனாட்சியை சொல்கிறார் என அறிபவனே கவிதைவாசகன். முக்கண் திறந்து அவர் தேவியை எரித்தார் என்ற கதையுடன் அவ்வரி இணையவேண்டும். இங்கே கவிதைவாசகன் மதக்குறியீடுகளையும் அறிந்தவனாகிறான். கவிதையின் தனிமொழிக்குள் மதத்தின் குறியீட்டு மொழியும் இணைகிறது.

இவ்வாறு நம் மரபின் கவிதை என்னும் தனிமொழி வளர்ந்து வந்துள்ளது. இயற்கையை அறியும் பழங்குடியின் தூயபிரக்ஞையாக அது இருந்தது. மொழியின் நுட்பமும் வாழ்க்கைதரிசனமும் அதில் கலந்தபோது சங்கச்செவ்வியலாகியது. பெருமதங்களின் பிரபஞ்ச தரிசனத்துடன் முயங்கி காப்பியகாலமாகியது. அறதரிசனங்கள் அதில் கலந்தன. நாடகீய உணர்ச்சிகள் வந்து இணைந்தன, பக்தியின் உணர்ச்சிப்பெருக்கு நிகழ்ந்தது. மதக்குறியீடுகள் கலந்தன. இவையனைத்தும் கலந்து உருவான ஒரு முழுமையான தனிமொழியாக அது நவீனகாலத்தில் நம்மை வந்தடைந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரும் மாற்றம் உலகசிந்தனையில் நிகழ்ந்தது. ஐரோப்பா தன் காலனியாதிக்கம் மூலம் உலகை ஒன்றாக இணைக்கத் தொடங்கியது. உலக இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் பெறத்தொடங்கின. ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு ஜெர்மன் ஸ்பானிஷ் மொழிகளில் உலகின் அனைத்து இலக்கியங்களும் வந்துசேர்ந்தன.முதல்முறையாக உலக இலக்கியம் என்ற ஒரு மன உருவகம் உருவானது. ஜெர்மானியப்பெருங்கவிஞரான கதே அச்சொல்லாட்சியை உருவாக்கினார் என்கிறார்கள்.

உலக இலக்கியம் என ஒன்று மெல்லமெல்ல திரண்டு உருவானபின் அது ஐரோப்பிய மொழிகள் வழியாக உலகமெங்கும் உள்ள இலக்கியங்களுக்குச் சென்று சேர்ந்தது. அந்த உலக இலக்கியம் பற்றிய பிரக்ஞையே நவீன இலக்கியத்தை உருவாக்கியது. சாதாரணமாக மேடைகளில் சில பேச்சாளர்கள் கத்துவதை நீங்கள் கேட்டிருக்கலாம். நவீன இலக்கியம் நவீன இலக்கியம் என்கிறீர்களே அது என்னய்யா நவீன இலக்கியம்? எல்லா இலக்கியமும் அந்தந்த காலகட்டத்துக்கு நவீன இலக்கியம்தான் என்றெல்லாம். அந்தப் பாமர வினாவுக்கான பதில் இதுதான். பதினெட்டாம் நூற்றாண்டுவரை ஒரு மொழியின் பெருங்கவிஞன் கூட அம்மொழியும் பண்பாடும் உருவாக்கும் இலக்கியப்பிரக்ஞையை மட்டுமே கொண்டிருந்தான். அவன் மரபான கவிஞன். ஒரு கவிஞனுக்கு உலக இலக்கியம் என்ற அந்த ஒட்டுமொத்தம் பற்றிய ஒரு புரிதல் இருக்குமென்றால், அதன் நீட்சியாக அவன் எழுத முற்படுவான் என்றால் அவன் நவீனக்கவிஞன்.

பாரதி நமது முதல் நவீனக்கவிஞன். அவனுக்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு வழியாக உலக இலக்கியமென்றால் என்ன என்று தெரியும். அதன் நீட்சியாகவே அவன் எழுதினான். அவன் கபிலர் கம்பன் முதலான கவிஞர்களின் வழித்தோன்றல். ஷெல்லியின் வழித்தோன்றலும்கூடத்தான். இதுதான் நவீனக்கவிஞனின் இலக்கணம். எவனுக்கு உலக இலக்கியத்தின் பின்புலம் உள்ளதோ அவனே நவீனக் கவிஞன்.

பாரதி நவீனக் கவிஞன். ஆனால் அவரது சமகாலத்தில் வாழ்ந்த மாம்பழக்கவிசிங்கராயர் நவீனக் கவிஞர் அல்ல. அவர் மரபுக்கவிஞர். பாரதிதாசன் நவீனக்கவிஞர் அல்ல. வேழவேந்தனும் முடியரசனும் சுரதாவும் நவீனக்கவிஞர்கள் அல்ல. அவர்கள் மரபார்ந்த கவிஞர்கள். அவர்களுக்கு உலக இலக்கியப்போக்குகள் தெரியாது. அவர்கள் கற்ற மரபின் வழி நின்று அவர்கள் எழுதினார்கள். இன்றும்கூட அந்தப்பிரிவினை உண்டு. இங்கு இருப்பவர்களிலேயே நவீனக்கவிஞர்கள் உண்டு, பழைய கவிஞர்களும் உண்டு. உங்களுக்கு இன்றைய உலகளாவிய கவிதைப்போக்கு தெரியுமா? உலக இலக்கியத்தின் தளத்தில் நின்று எழுதுகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் நவீனக்கவிஞர்.

பாரதிக்குப்பின் நவீனக்கவிதை ந,பிச்சமூர்த்தி வழியாக தமிழில் புதுக்கவிதை என்ற பேரில் உருவாகியது. அது வசனத்தில் எழுதப்பட்டது . இசையற்ற மரபான இலக்கணம் அற்ற கவிதை. க.நா.சு அதை புதுக்கவிதை என்று அழைத்தார் அந்த மரபே இன்றும் தமிழ் நவீனக்கவிதைப் போக்காக தொடர்கிறது.

நவீனக்கவிதையின் இயல்பு என்ன? இப்படிச் சுருக்கமாகச் சொல்கிறேனே. ஒன்று அது நம் மரபு இதுகாறும் திரட்டி எடுத்துள்ள கவிதை என்ற தனிமொழியை மேலும் முன்னெடுக்கிறது. அதாவது அது நேற்று அடைந்தவற்றை திரும்பவும் நிகழ்த்தவில்லை. அதை வளர்த்து மேலே கொண்டுசெல்ல முயல்கிறது.

சங்ககாலம் முதல் தமிழ்க்கவிதை சொல்வதல்ல, குறிப்புணர்த்தலே கவிதை என்று நம்பிவந்தது. கவிதை என்பது மறைபொருள் என வகுத்தது. இறைச்சி என்றும் அணிகள் என்றும் பெயரிட்டது. அதை அறிய கொண்டுகூட்டிப்பொருள் கொள்ளுதல் போன்ற பல வழிகளை உருவாக்கியது. அவ்வாறு சொல்லப்படாத அர்த்தங்களை சொல்மூலம் உருவாக்குவதே கவிதையின் தனிமொழி.

நவீனக்கவிதை அந்தத் தனிமொழியை முன்னெடுக்கிறது. நவீனக்கவிதை புரியவில்லை என்று சொல்லும் தமிழாசிரியர்களிடம் நான் மரபுக்கவிதை மட்டும் புரிகிறதா என்று கேட்பேன். மரபுக்கவிதை அவர்களுக்குப் புரியவில்லை, அதன் பொழிப்புரையைத்தான் அவர்கள் அறிவார்கள். புறநாநூறோ திருக்குறளோ ஒருவருக்கு உரையில்லாமல் புரியும் என்றால் புதுக்கவிதையும் புரியும். ஏனென்றால் அவர் தமிழ்க்கவிதை என்ற தனிமொழிக்குள் இருக்கிறார். பொழிப்புரைதான் புரியும் என்றால் அவருக்கு நவீனக்கவிதை புரியாது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்தொக்க கூர்த்த இடத்து

இந்தக்குறள் ஒருவனுக்குப் புரிகிறதா? பொழிப்புரை தெரிந்துவைத்திருப்பார். கொக்கு மீனுக்காக காத்திருப்பது போல சரியான தருணத்துக்காக பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் என்று அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதை நான் சொல்லவில்லை. இதில் உள்ள இரு சொற்கள் முக்கியமனாவை. கூம்பும் பருவம். கூர்த்த இடத்து. என்ன பொருள் அதற்கு? ஒரு செயலின் விளைவுகள் முனைகொள்ளும் காலகட்டத்தை கூம்பும்பருவம் என்கிறார். கதிர் கூம்பும் பருவம் காய்க்குலைகள் கூம்பும் பருவம். அது முனைகூர்ந்த கட்டத்தை கூர்த்த இடத்து என்கிறார். இந்த வார்த்தையை எவரும் சொல்லாமல் ஒருவன் அவனே அறிந்தான் என்றால் அவன் கவிதை வாசகன். அவனுக்கு புதுக்கவிதை தினத்தந்தி வாசிப்பதுபோல புரியும்.

தமிழ் நவீனக்கவிதை இவ்வாறு மரபான கவிதைமொழியை முன்னெடுக்கையில் அதற்கு உலக இலக்கியத்தின் அழகியலையும் துணைகொள்கிறது. கம்பன் நம் கவிதையைத் தீர்மானிப்பதுபோல எலியட்டும் எஸ்ராபவுண்டும் தீர்மானிக்கிறார்கள். இதுவே வேறுபாடு.

நவீனக்கவிதையின் பல முகங்களை நாம் விரிவாகவே பேசலாம். எஸ்ராபவுண்டை முன்னுதாரணமாகக் கொண்டு க.நா.சு இங்கே படிமவியலை முதன்மையான கவிதையழகியலாக முன்வைத்தார். முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லுதல், முடிந்தவரை குறிப்பால் உணர்த்துதல், எளிய நேரடி மொழியில் எழுதுதல், உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தாமலிருத்தல் ஆகிய தன்மைகளை க.நா.சு தமிழ் நவீனக்கவிதைக்கு அளித்தார்.

இந்த இலக்கணம் ஏன் வருகிறது என்றால் உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தும் இசைத்தன்மை கொண்ட கவிதையே நமக்கு அதற்குமுன் இருந்தது என்பதுதான். நவீனக்கவிதையின் இயல்பு என்பது முந்தைய பக்திக்கவிதைக்கு நேர் மாறானதாக இருந்தது. அது நேரடியாக நம் அறிவை, கற்பனையை, நுண்ணுணர்வை நோக்கி பேசியது. உணர்ச்சிகளை தவிர்த்தது. அதாவது கவிதையை சங்க இலக்கியப்பாடல்களின் நிதானமான உணர்ச்சிவெளிப்பாட்டுத்தன்மை நோக்கி கொண்டு சென்றது.

பிரமிள்

அந்த அழகியல் உருவானதுமே அதில் எது விடுபடுகிறதோ அதைச் சேர்க்கும் கவிஞன் உருவாகிவிட்டான். தமிழ்நவீனக் கவிதையில் பிரமிளின் வரவு அத்தகையது.

வழிதொறும் நிழல்வலைக்கண்ணிகள்
திசைதடுமாற்றும் ஓராயிரம் வடுக்கள்

என்னும் பிரமிளின் வரிகளை நான் பித்துப்பிடித்தவன் போல சொல்லி அலைந்ததுண்டு. என் தந்தையும் தாயும் இறந்த நாட்கள். மனம் நிலைகொள்ளாமல் பேருந்துகளில் இருந்து பேருந்துகளில் ஏறி நான் அலைந்த நாட்கள். வழிதொறும் நிழல்வலைக்கண்ணிகள் என்னை திசைதடுமாற்றிய நாட்கள். இந்த வரி என்ன சொல்கிறது? பெரிய கருத்து ஏதும் இல்லை. ஒரு படிமம். அது மொழியில் தன்னிச்சையாக நிகழும் பேரழகு அவ்வளவுதான்.

பிரமிளின் கவிதைமரபையே தமிழ்க்கவிதையில் எனக்கு உவப்பானது என்பேன். அது சிந்தனையின் தர்க்கம் மூலம் முன்னகராமல் உணர்ச்சிகரத்தை, தியானநிலையை நம்புவது. அதன் முக்கியமான வளர்ச்சிப்புள்ளியான தேவதேவனின்

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

என்றவரி எனக்கு கவிதை மட்டும் அல்ல. வாழ்க்கையின் சாரமே கவிதையாகக் கனிந்துவரும் ஒரு தருணமும் கூட. காடு தேனாகும் ஒரு பரிணாமம், மேலிருந்து அந்த வீட்டைப் பார்க்கும் சின்னஞ்சிறிய பறவை அறியும் மானுடவாழ்க்கை. ஒளி நிழல் சருகு. அவ்வளவுதான். உள்ளே அது சிரிப்பு அழுகை மரணமாக நமக்கு பொருள்படுகிறது.

ஆனால் சுகுமாரனின்

எளிமையானது உன் அன்பு
நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல

போன்ற ஒரு கவிதையின் எளிமையான ரத்தினச்சுருக்கமும் எனக்கு ஏற்புடையதேயாகும். ஈராயிரம் வருடத்தமிழ்க்கவிதை மரபு என்னென்னவோ அரிய பொருட்களை அன்புக்கு உவமையாக்கும்போது மிகமிக எளிமையான ஒன்றை, எளிமையின் மகத்துவத்தை சுட்டும் அழகிய படிமம் அது. நடுஆற்றில்தான் அன்பு தூயது. ஓரங்களில் அது கசடு கலக்கும். அது ஓடிக்கொண்டிருக்கையில் மட்டுமே தூயது – என நான் அதை விரிவாக்கம் செய்தபடியே செல்வேன்.

நவீனக்கவிதையை இருபதாண்டுகாலமாக தொடர்ந்து வாசிக்கும் எனக்கு அது தமிழின் ஈராயிரம் வருடமரபில் மிகமிகப் பொருத்தமாக இணைந்திருப்பதகவே தோன்றுகிறது. கபிலருக்கும் தேவதேவனுக்கும் நடுவே பெரிய அழகியல் வேறுபாடு ஏதும் இல்லை என்று தோன்றுகிறது. அவ்வையார் சாப்பிட்ட வழுதுணங்காய் வாட்டும் நான் என் வீட்டில் சாப்பிடும் கத்தரிக்காய் பொரியலும் ஒன்றே. எண்ணையும் கடுகும் கொஞ்சம் சேர்ந்திருக்கலாம். அவ்வளவுதான்.

சு வில்வரத்தினம்

இத்தனை படிமங்களும் உருவகங்களும் அணிகளும் உருவானபின்னரும்கூட நவீனக்கவிதை மிகநேரடியாக சொல்லும் சொல்லின் வல்லமையை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது என்பதையே நான் அதன் தனி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2025 11:35

க.நவரத்தினம்

தமிழ்ப்பண்பாட்டை பழந்தமிழ்நூல்களையும், மரபுக்கலைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்த முன்னோடிகளில் ஒருவராக க.நவரத்தினம் மதிப்பிடப்படுகிறார். தென்னிந்தியக் கலைகளின் தோற்றம், வகைபாடுகள் பற்றிய அவருடைய ஆய்வுகள் பின்னர் வந்த ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக அமைந்தன. சைவசித்தாந்தத்தை நவீனப்பார்வையுடன் மீட்டுருவாக்கம் செய்ததிலும் பங்களிப்பாற்றினார்.

க.நவரத்தினம் க.நவரத்தினம் க.நவரத்தினம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2025 11:33

நாவல் பயிற்சி நிகழ்வு, கடிதம்

அன்புள்ள ஜெ.,

நான் அக்டோபர் மாதம் வால்நட் க்ரீக், கலிபோர்னியாவில் நாவல் எழுதும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். சிறுகதை கூட எழுத நான் இதுவரை முயற்சித்ததில்லை. எனவே இந்தப் பயிற்சியில் சேர மிகவும் தயங்கினேன். மேலும் இதுபோன்ற பயிற்சிகளில், நம்மை ஏதாவது எழுதச்சொல்லி, அதை அனைவரின் முன் வைத்துக் கருத்துக் கேட்பார்களோ என்ற பயமும் இருந்தது. இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த விசு அப்படி எதுவும் நடக்காது என்று உறுதியளித்ததாலும், இவ்வகுப்பு, எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல, தீவிர வாசகனாவதற்கும் உதவும் என்றதாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வகுப்பில் சேர்ந்தேன்.

எனது தயக்கங்களுக்கும் கேள்விகளுக்குமான பதில்களை ஜெ. முதல் சில நிமிடங்களிலேயே தந்தார். நம்மிடமுள்ள தகவல்களை இணைத்து நினைவில் வைத்துக்கொள்ள அவற்றை ஒரு நாவலாக எழுதினால் மட்டுமே முடியும். தகவல்களை அப்படியே கட்டுரையாக எழுதினால் நுணுக்கமான தகவல்கள் மறைந்து போகும். இதுவே தகவல்களைக் கட்டுரையாக எழுதுவதற்கும் நாவலாக எழுதுவதற்கும் உள்ள பெரும் வேறுபாடு. நாம் நம்முடைய அன்றாட நிகழ்வுகளையே இவ்வாறு புனைவாக நாவல் வடிவில் எழுதிவைத்தால் அவை நன்றாக நினைவில் நிற்கும். இக்கருத்து என்னைப் பெரிதும் கவர்ந்தது. இவ்வகுப்பு ஒரு நாள் மட்டுமே நடப்பதால் எங்களை எதுவும் எழுதச்சொல்லப் போவதில்லை என்று ஜெ சொன்னதும் நிம்மதி அடைந்தேன். ஆனாலும் ஒரு நாவலின் கருவுக்கும் பேசுபொருளுக்கும் உண்டான வேறுபாட்டை விளக்கிவிட்டு ஏதாவது ஒரு கருவைப் பற்றி பத்து வரிகளில் எழுதச்சொன்னார். அதற்கு நான் என்னுடைய அன்றாட அலுவலக வேலையையே புனைவாகக் கருதி எழுதினேன்.

வகுப்பின் ஆரம்பத்தில் ஜெ சில விதிமுறைகளை விதித்தார். ஒன்று அவர் பேசும்போது அவரை மட்டுமே கவனிக்க வேண்டும், குறிப்பு எழுதக்கூடாது. குறிப்பு எழுதத் தனியே சில நிமிடங்கள் ஒதுக்கினார். இரண்டாவது, கேள்விகள் கேட்காமல் சொல்வதைக் கவனித்தல். முதலில் இது வித்தியாசமானதாகப்பட்டது. ஆனால் இதனால் மற்றவர்களுடைய தெளிவற்ற சிந்தனைகள் என்னைக் குழப்பாமலிருந்தன.

நாவலில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகப் பேசினார். ஆரம்பத்தில் இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்களிலிருந்தும் சிறுகதைகளிலிருந்தும் மேற்கோள் கொடுத்த ஜெ., பங்கு பெற்றவர்களின் முகக்குறிப்பறிந்து சினிமாக்களிலிருந்து குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தார். 

ஒரு மகத்தான எழுத்தாளரிடமிருந்து இவற்றைக் கற்கக் கிடைத்தது பெரும் வாய்ப்பென்றே நான் கருதுகிறேன். இந்த வகுப்பு தந்த ஊக்கத்தில் உடனடியாகச் செய்ய வேண்டியது என மூன்றை நினைத்திருக்கிறேன: தினமும் கொஞ்சம் எழுதுவது, வகுப்பில் எழுதிக்கொண்ட குறிப்புகளை விரிவாக எடுத்து எழுதுவது, மற்றும் நாங்கள் குழுவாகப் படித்த War and Peace நாவலை இப்பொழுது கற்றுக்கொண்ட கருத்துக்களுடனும், முறைகளுடனும் பொருத்திப் பார்த்து, குழுவில் விவாதிதிப்பது.

நன்றியுடன்

ரவி 

பின்குறிப்பு: சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக மாதம் தோறும் தமிழில் உள்ள சிறந்த சிறுகதைகளைப் பற்றி விவாதிக்கிறோம். விவரங்களுக்கு vishnupurambayarea@gmail.com என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2025 11:31

We are spiritually bankrupt people!

 

இன்றைக்கு நாம் பார்க்கும் கல்லூரி மாணவர்களில் கணிசமானவர்கள் உளச்சோர்வு கொண்டவர்கள். அதற்காக மருந்து சாப்பிடுபவர்கள். அந்த மருந்துக்கும் அடிமையானவர்கள். காரணம் படிப்பு ஓடவில்லை, ஆகவே எதிர்காலம் இருண்டுவிட்டது என்பதுதான். ஏன் படிப்பு ஓடவில்லை என்றால் இண்டர்நெட் அடிக்‌ஷன்.

இணையமும் இயற்கையும்

 

 

The truth is that we are not spiritual;We are spiritually bankrupt people! We are very earthly people, and we imagine that prayer for earthly things is a spiritual matter.

We are spiritually bankrupt people!
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.