Jeyamohan's Blog, page 24
October 17, 2025
மானுட மட்காக்குப்பைகள்
அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய காணொளிகளில் முதியோருக்கான ஆலோசனைகள் நிறைவே உள்ளன. உங்களிடம் பல முதியவர்கள் அதைப்பற்றி பேசி இருப்பார்கள் என்பதனால்தான் நீங்கள் இதைப் பற்றி கூடுதலாகப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக தமிழகத்தில் இந்தத் தலைப்பை இந்த கோணத்தில் பிற எவரும் பேசுவதுபோலத் தெரியவில்லை. நீங்கள் திரும்பத் திரும்ப ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுக்கான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி வருகிறீர்கள். ‘நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்களா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்த விஷயம் இன்று தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான நெரேஷனை அடைந்திருக்கிறது. அது இரண்டு பக்கம் கொண்டது. அதாவது பெற்றோரை குழந்தைகள் கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்களை முதியோர் விடுதியில் விட்டு விடக்கூடாது, முதியோர் விடுதியில் இருக்கும் பெற்றோர் மிகப் பரிதாபகரமானவர்கள், அங்கே பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டுசென்று சேர்ப்பது என்பது ஒரு பெரிய கொடுமை, இந்தியாவில் பெற்றோரை குழந்தைகள் முதியோர் விடுதிளுக்கு தள்ளிவிட்டு தங்களுடைய தொழிலை வாழ்க்கையும் பார்ப்பதற்கு வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள் – இது ஒரு பக்க நெரேஷன்.
அதேபோல பெற்றோர் தன்னுடைய இளமைக்காலத்தை முழுக்க குழந்தைகளுக்காகவே செலவழிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பெற்றோர் அனைவ்ரும் தியாகிகள் என்கிறார்கள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களாம். ஒருவர் செய்யும் தியாகமே அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறதாம். தியாகம் என்பது ஒரு உயர்ந்த பண்பு நிலையாம். இதெல்லாம் இன்னொரு பக்கம் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு நெரேஷன்களும் ஒன்றை ஒன்று சரியாக நிரப்புகின்றன. அதாவது பெற்றோர் பிள்ளைகளுக்காக வாழ வேண்டும், பிள்ளைகள் பெற்றோருக்காக வாழ வேண்டும், ஒட்டுமொத்தமாக யாரும் தங்களுக்காக வாழ கூடாது, தங்களுக்கான மகிழ்ச்சியோ லட்சியமோ கொண்டிருக்ககூடாது. அது தான் தியாகம். இதைத்தான் ஒவ்வொரு பட்டிமன்றப் பேச்சாளரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படம் சீரியல் அனைத்திலிருந்தும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை நம்பித்தான் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தார்கள். அதாவது அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று நம்ப வைக்கப்பட்டார்கள். அந்த மாதிரியான வாழ்க்கைக்காக தங்களுடைய எல்லாவற்றையும் அவர்கள் தத்தம் செய்தார்கள். விளைவாக அவர்கள் வாழவே இல்லை. பிள்ளைகளை வளர்த்து அவர்கள் கையில் இருந்து பறந்து சென்றதும் அவர்கள் முதலில் பெருமை அடைந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வாழ்க்கை இழந்துவிட்டதாகதான் உணர்கிறார்கள்.
அந்த இழப்பு உணர்வு இருந்தால் பிள்ளைகள் மேல் ஒரு மறைமுகமான கசப்பு உருவாகிறது. பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்வது பிடிக்காமல் ஆகிறது. பிள்ளைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அவர்களைப் போலவே தங்களுடைய வாழ்க்கையை தங்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமாகச் செலவழித்து இருந்தார்கள் என்றால் இவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கிறது என்பதைப் பார்ப்பது இந்தப்பெற்றோருக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை.
இன்றைய பெற்றோர் இமோஷனல் பிளாக்மெயில் செய்வதற்காக தங்களுடைய தியாகத்தை ஒரு பெரிய அடையாளமாக காட்டுகிறார்கள். தங்களுடைய தியாகத்தால்தான் பிள்ளைகள் வளர்ந்தார்கள், ஆகவே அந்த பிள்ளைகள் அதை எப்போதும் உணர்ந்து இருக்க வேண்டும், எந்த நிலையிலும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் – என்றுசொல்லும் பெற்றோர்கள் ஏராளமாக உள்ளனர். தாங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் வாழ்ந்தோம், ஆகவே தன் பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு முதியோர் ஏராளமாக உள்ளனர். ஒரு நாசகாரக் கூட்டமாக இந்தப் பெற்றோர் இன்றைக்கு மாறிவிட்டிருக்கிறார்கள்.
இந்த உண்மையை நாம் இன்று சொல்லியாக வேண்டும். ஏனெனில் இந்த உண்மை நிறைய குடும்பங்களில் வன்முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நிறைய குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. ஏனெனில் இந்தப் பெற்றோரை என்ன செய்வது என்பது அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய சவால். இந்த பெற்றோரை அவர்கள் தங்களுடன் வைத்திருக்க முடியாது. இந்த பெற்றோரை வேறு எங்காவது அனுப்பவும் முடியாது. இந்தப் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்யலாம், ஆனால் இந்தப் பெற்றோர் சொல்லும்படி வாழ்க்கை அமைத்துக் கொண்டால் இந்த நூற்றாண்டின் மொத்த வாய்ப்புகளையும் இழந்து விட வேண்டி இருக்கும். சொந்தமாக அகப்பயணமோ புறப்பயணமோ இருக்காது. சாதனைகளோ மகிழ்ச்சிகளோ இருக்காது. இன்னும் ஒரு படி மேலே சென்று இந்தப் பெற்றோர் இன்று பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையிலும் தலையிட்டு அழிக்கிறார்கள்.
இந்தச் சூழலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்காகத்தான் வாழ வேண்டும் என்று நீங்கள் சொல்வது முக்கியமானது. கடமையைச் செய்வது என்பது தியாகம் அல்ல. கடமையை செய்தாக வேண்டும். அதற்காக மொத்த வாழ்க்கையும் இழந்ததும், இழப்பதும் பிழையானது என்கிறீர்கள். அறியாமையால் அப்படி தங்கள் வாழ்க்கையை இழந்தவர்கள் அதை பிறவரிடமிருந்து திருப்பிக் கேட்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். முக்கியமான குரல் இது.
உங்கள் காணொளிகளில் ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். ‘உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்களா?’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அந்த கேள்வி முக்கியமானது .அந்த கேள்வியை முன் வைப்பதற்காக உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
(என்னுடைய பெற்றோரும் இதை படிப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆகவே இந்த கடிதத்துடன் என் பெயரை சேர்க்க வேண்டியது இல்லை)
அ
அன்புள்ள அ,
நம் சூழலில் ஒவ்வொருவரிடமும் சில மதிப்பீடுகளை மரபு ஏற்றியுள்ளது. எந்த ஒரு மரபும் நீண்டகால நாகரிகத்தின் ஊடாக சில நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, அதைச்சார்ந்த உணர்வுநிலைகளை உருவாக்கி இருக்கும். அவற்றையே நாம் விழுமியங்கள் என்று சொல்கிறோம். விழுமியங்கள் என்பவை நாம் நம்பி ஏற்க வேண்டியவை, நிறைவேற்றப்படவேண்டியவை, கைமாறப்பட வேண்டியவை.
இந்த விழுமியங்களில் முதன்மையானதாக இருப்பது தியாகம். தியாகம் என்று சொல்லை மிக விரிவான பொருளில் உலகத்தின் எல்லா நாகரிகங்களும் பயன்படுத்தி இருப்பதை பார்க்கலாம். உண்மையில் அனைத்து உயிர்க்குலங்களிலும் அது காணப்படுகிறது. தேனீக்கூட்டில் இன்னொரு பூச்சி வந்துவிட்டது என்றால் உடனடியாக அந்த பூச்சி மேல் பாய்ந்து அதை கொன்றுவிட்டு தாங்கள் உயிர்விடும் போர்த்தேனீக்களின் செயலை தியாகம் எனலாம். எறும்புகளில் பாக்டீரியாக்களில் கூட அப்படிப்பட்ட தியாகம் உள்ளது.
அந்த தியாகத்தின் ஊடாகவே அந்த ஒட்டுமொத்த அமைப்பு கட்டிக் காக்கப்படுகிறது. ஆகவே பழைய சமூகங்களில் போர்வீரனின் தியாகம் என்பது மிகப்பெரிய அளவிலே போற்றப்பட்டது. அவர்கள் நினைவு கூரப்பட்டார்கள். வழிபடப்பட்டார்கள். பண்பாடு நமக்குக் கிடைக்கும் தொடக்க காலத்திலேயே நடுகற்கள் நமக்கு உள்ளன. நவீன சமுதாயத்தை உருவாக்கிய அடிப்படை விழுமியங்களில் ஒன்று வீரத்தியாகம் என்று சொல்லலாம். இன்றும் கேள்விக்கு அப்பாற்பட்டு அது கொண்டாடப்படுகிறது.
அடுத்ததாக, ஒவ்வொரு உயிரும் அடுத்த தலைமுறைக்காக செய்யும் தியாகத்தை சொல்ல வேண்டும். ஒரு தெருநாய் குட்டி போட்டபின் ஒரு மாதத்தில் அதை பார்த்தால் தியாகம் என்பதன் மதிப்பென்ன என்று தெரியும். ஐந்து குட்டிகள் போட்ட நாய் அதன் மொத்தத் தசையையுமே குட்டிகள் உறிஞ்சி எடுத்துக் கொள்வதை உணர்ந்துதான் இருக்கின்றது. அது இரவு பகலாக உணவு தேடி, நரகலை உண்டு, அலைந்து திரிந்து மெலிந்து சொறிபிடித்து மறையும். தந்தை உருவாகி வந்த விலங்குச் சமூகங்களில் தந்தையின் தியாகமும் அதற்கிணையானது என்பதை கொரில்லாக்களில் காணலாம். பறவைகளில் கூட இருவாச்சியில் (கிரேட் ஹார்ன்பில்) தந்தையின் தியாகத்தைக் காணலாம். இத்தகைய தியாகங்கள் வழியாகவே குடும்பம் என்னும் அமைப்பு நிலை நிறுத்தப்படுகிறது.
இவ்விரு அடிப்படைத் தியாகங்களுக்கும் மேலாக ஒவ்வொரு தனிமனிதரும் செய்தாக வேண்டிய பல தியாகங்களை விழுமியங்கள் என்ற வடிவில் நம் சமூகம் நமக்கு அறிவுறுத்துகிறது. விருந்தினருக்கு உணவு ஊட்டுவது என்பது அதில் ஒரு தியாகம். மகாபாரதத்தில் ஒரு கதை. பலநாள் பட்டினி நோன்பு இருந்து உயிர்விடும் தருவாயில் சற்று உணவைப் பெற்ற ஒரு முனிவர் அங்கே வந்த இன்னொரு முனிவருக்கு விருந்தூட்டும் பொருட்டு அந்த உணவை அவருக்கு அளித்து தான் உயிர் துறக்கிறார். அந்த உணவின் மிச்சம் விழுந்த் இலையில் புரண்டதனால் ஒரு கீரி தன் உடலை பாதி பொன்னாக்கிக் கொண்டது. எஞ்சிய உடலை பொன்னாக்கும் பொருட்டு அது யுதிஷ்டிரர் அளித்த மாபெரும் வேள்வி விருந்தின் எச்சில்மேல் புரண்டது. உடல் பொன்னாகவில்லை. மாபெரும் ராஜசூய வேளவியை விட அந்த முனிவர் அளித்த எளிய கொடை பெரிது என்று மரபு கூறுகிறது.
மூன்றாவது வகைமை என்பது மாமனிதர்களின் தியாகம். தலைவர்கள் தங்கள் குடிகளுக்காக தியாகம் செய்கிறார்கள். தியாகம் வழியாகவே தலைவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். காந்தி தலைவராக ஆனது அவருடைய தியாகத்தினூடாக மட்டுமே. தலைமைப் பண்பு என்பது ஒரு பெரும் தியாகமாகவே கொள்ளப்படுகிறது. சான்றோர் தங்களுடைய அனைத்தையும் பிறருக்காக அளிப்பவர்கள் என்றும், என்பும் உடையார் பிறர்க்கு என்று அதைப் பற்றி வள்ளுவர் கூறுகிறார்.
விழுமியங்கள் மேல் அவநம்பிக்கை கொள்ளும் ஒரு சமூகம் காலப்போக்கில் தன்னுடைய கட்டுக்கோப்பை இழக்கும். ஆகவே தியாகம் என்னும் விழுமியம் என்பது நம்முடைய மரபு நமக்கு கற்பித்தது. ஆனால் இன்று வாழ்க்கைச்சூழல் மாறுவதை ஒட்டி அந்த விழுமியம் மாற்றப்படவில்லை. வாழ்க்கையின் அடிப்படை வசதிகளுக்காகவே போராடிக் கொண்டிருந்த ஒரு சூழலில் குடும்பத்துக்காக தியாகம் செய்வது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருந்தது. ஒரு குடும்பத் தலைவனின் ஒற்றை வருமானத்தில் ஏழெட்டு பேர் கொண்ட குடும்பங்கள் வாழ்ந்த ஒரு காலம் தமிழகத்தில் இருந்தது. அன்று குடும்பத் தலைவன் தனக்கென எதுவும் செய்யாமல் தன்னுடைய கடைசித் துளி உழைப்பையும் அந்த குடும்பத்திற்காக அளித்து ஒரு தியாகியாக வாழ்வது என்பது ஒரு வகையில் நியாயப்படுத்தப்பட்டது. அவர் தன் கடமையை தான் செய்கிறார், ஆனாலும் அது தவிர்க்கமுடியாத தியாகமும் கூட. அப்படி பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, அவை கொண்டாடவும் பட்டன (உதாரணம், ஆறிலிருந்து அறுபது வரை)
அந்தச்சூழல் இன்று இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்று ஒருவர் தன்னுடைய முழுவாழ்க்கையையும் குடும்பத்துக்காக அளிக்க வேண்டிய தேவை இல்லை. கடமையை முழுமையாகச் செய்தபின்னர் அவர் தனக்கெனவும் கனவும், செயலும் கொண்டிருக்க முடியும். இன்றைய குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவர்கள் குடும்பத்திற்காக மட்டுமே உயிர்வாழவேண்டிய ஒருவகை அடிமைகள் என பல நினைக்கிறார்கள்.பல குழந்தைகள் தங்கள் பெற்றோர் தங்களுக்காக மட்டுமே வாழவேண்டிய அடிமைகள் என நினைக்கிறார்கள். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்னை என்பவர் தங்களால் கடைசிச்சொட்டு வரை உறிஞ்சி எடுக்கப்படவேண்டிய ஒரு வளர்ப்பு மிருகம். தியாகம் என்னும் விழுமியம் இன்று அடிமைமுறை – இரக்கமற்ற சுரண்டல் என ஆகியுள்ளது. அதற்கு நம்மை அளிக்கவேண்டியதில்லை. இன்னொருவர் நமக்காக வாழவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றால் மிகமிகக் குரூரமான சுரண்டல் ஒன்றை நிகழ்த்துகிறோம் என்றே பொருள்.
தியாகம் உயர் விழுமியமே. ஆனால் தியாகத்தை விட பெரிய உயர்விழுமியம் என்பது ஒருவர் தன்னை அறிவார்ந்தும், ஆன்மிகமாகவும் முன்னகர்த்தி தன் ஆளுமையை முழுமை செய்துகொள்வது. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான ஆன்மிகப் பயணங்களை நம்முடைய மரபு கூறுகிறது. ஒன்று மெய்ஞானம் நோக்கிய பயணம். அறிந்தும் உணர்ந்தும் ஒருவர் தன் ஆன்மிக விடுதலை நோக்கி பயணம் செய்யவேண்டும். அந்த ஞானவழி என்பது ஒவ்வொருவருக்கும் அவரவர் தளத்தில் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. அனைத்தையும் துறந்து ஞானத்தின் பொருட்டு சமூகத்தில் இருந்தே வெளியே செல்பவர் ஓர் உச்ச நிலையில் இருக்கிறார். இல்லறத்தில் இருந்து கொண்டு, மிகச்சிறிய அளவிலேனும் தன்னை ஞானத்திற்கு ஒப்படைப்பவர் ஞானப் பாதையில் தானும் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டிருக்கிறார்.
இரண்டாவது பயணம் நற்செயல்கள் வழியாக ஒருவர் அடைவது. புண்ணியம் என அது வகுக்கப்பட்டுள்ளது. இறைச்சேவை மற்றும் மானுடச்சேவையினூடாக அடையும் விடுதலை அது. ‘யாவர்க்கும் ஆம் இறைவர்க்கொரு பச்சிலை’ என தொடங்கும் திருமூலர் பாடலின் சாரமே அதுதான். ஒவ்வொருவருக்கும் அவர் தளத்தில் செய்ய இயலும் நற்செயல், அறச்செயல் என சில உள்ளன. அவற்றை செய்தே ஆகவேண்டும்.
கடமைகள் இரண்டுவகை. உலகியல் கடமைகள் மற்றும் ஆன்மிகக்கடமைகள். நாம் உலகியல் கடமைகளை மட்டுமே செய்பவர்களாக இன்று இருக்கிறோம். அதை மட்டும் செய்தால் நாம் நல்லவர்கள் என்றும் சான்றோர்கள் என்றும் நினைக்கிறோம். நான் சந்திக்கும் ஒவ்வொரு முதியவரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தாங்கள் செய்தவற்றை தாங்கள் நிகழ்த்திய பெரிய வாழ்க்கைச் சாதனையாக கூறுகிறார்கள். அது உலகியல் கடமையைச் செய்தல் மட்டுமே. அதற்கப்பால் அவர்களுக்கென ஆன்மிகநாட்டம், அறிவுநாட்டம் ஏதும் இல்லை. அந்த வெறுமையையே பெரும்பாலானவர்கள் முதுமையில் உணர்கிறார்கள். அது கசப்பாக ஆகிறது. அதை பிள்ளைகள் மேல் சுமத்துகிறார்கள். தானும் கசந்து பிள்ளைகள் வாழ்க்கையையும் கசப்பாக ஆக்குகிறார்கள்.
இந்த ‘பயனற்ற முதியோர்’ இன்று இந்திய சமூகத்தின் மாபெரும் சுமை. நவீன நாகரீகம் உருவாக்கிய நுகர்வோர் கலாச்சாரம் இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில் குப்பைமலைகளை உருவாக்கியுள்ளது, அது உலகுக்கே பெரிய தீங்கு என்கிறார்கள். அதற்கிணையானது இந்த மானுடக்குப்பைக் குவியல். இதை எப்படி என்ன செய்வது என்பது இன்று மிகப்பெரிய சவால்தான். நவீன மருத்துவத்தின் வழியாக இந்த குப்பைகள் எளிதில் மட்காமல் நீண்டகாலம் நீடிக்கின்றன என்பது அச்சவாலை இன்னமும் கடினமாக ஆக்குகிறது.
ஜெ
கு.திருமேனி
எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிலப்பதிகாரம், கம்பராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை, நூல்களை எழுதினார். கம்பராமாயண வித்தகர் என்று போற்றப்பட்டார்.
கு.திருமேனி – தமிழ் விக்கி
கவிதைகள் அக்டோபர் இதழ்
அன்புள்ள ஜெ,
அக்டோபர் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் சென்ற இதழில் பார்கவி கவிதை வாயிலாக இசை அனுபவத்தைக் குறித்து எழுதிய ‘கடலில் ஊறும் சிறு தும்பி – 2’ கட்டுரையின் இரண்டாம் பாகம் இவ்விதழில் வெளியாகியுள்ளது. க.நா.சு. கட்டுரைத் தொடரின் பகுதியாக காரைக்கால் அம்மையார் கவிதைகள் குறித்து க.நா.சு எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கவிஞர் செல்வசங்கரனை மதார் நேர்காணல் செய்துள்ளார். வேணு வேட்ராயன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தேவதேவனின் ‘கிச்சு கிச்சு மூட்டினால்’ (If tickled…) கவிதை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது.
சில தமிழ் கவிதைகள் பகுதியில் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதாளர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் உள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு
மதார், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
அறம் அறிதல், வெண்பா
பத்து வருடங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஒன்றிரண்டு கதைகளை வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாங்கி பொக்கிசமாக வைக்க வேண்டிய படைப்பு இது என்பதால் இந்த புக்பேரில் வாங்கினேன்.
அறம் எளியவர்களின் குரல். அந்தக் குரலின் ஆழமும் அடர்த்தியும் நம் ஆன்மாவைத் தொடுபவை. சூரியனால் வெளிச்சம் வருவது போல, அறத்தால் தான் மனதில் விருட்சம் வருகிறது. ஒரு மனிதனுக்கு மனம் நிறைந்து கண்ணீர் வரும்போது வாழ்வு அவனுக்கு அர்த்தமுள்ளதாக மாறிவிடும். அப்படியொரு அர்த்தத்தை வழங்கும் பேராசான் ஜெயமோகனின் இந்த நூல்
பனிரெண்டு கதையில எது ஒசத்தி என்றால் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் ஒசத்தி தான். என்னை எப்போதும் அழ வைத்து பின் எழ வைக்கும் கதைகள் தான் அனைத்தும்!
வணங்கான் கதை
திருவிதாங்கூர் சமாஸ்தானத்தின் கீழ் அடிமைப்பட்டு யானைக்கு கீழே சாகக்கிடந்த சிறுவன் தப்பித்து ஓடுகிறான். அது வெள்ளைக்காரன் ஆட்சி. ஓட்டம் நின்று ஓட்டல் கடையில் வேலை செய்கிறான். சாணான் எனப்படும் நாடார் சாதிக்காரன் அவன். அவன் கடையில் வேலை செய்யலாம். ஆனா கடை உள்ளே போக முடியாது. அப்போதெல்லாம் சாணானைப் பாத்தாலே தீட்டுல்லா! அப்படியாப்பட்ட பையன் மார்ஷல் நேசமணி என்ற நேர்மையும் துணிச்சலும் கொண்ட வக்கீலைச் சந்திக்கிறான்.
நேசமணி சாதாரண ஆளுல்ல. திருவிங்கூர் சமாஸ்தனத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் நீதிமன்றத்துல உயர்சாதி வக்கீலுங்களுக்கு நாற்காலிகளும், நாடார் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதிவளுக்கு உட்கார குத்துப்பெஞ்சும் போட்டதை எடுத்து உடைச்ச மனுசனாக்கும். பார்கவுன்சில்ல எல்லாச் சாதிக்கும் ஒரே குவளைல தண்ணி கொடுக்க வச்ச சமுத்துவர் நேசமணி. அப்படியான நேசமணியோட ஆதரவு கிடைச்சதும் ஓட்டல் வேலை செஞ்ச அவனோட வாழ்க்கை மாறுது. கிடைச்சதெல்லாம் படிக்கான். கவர்மெண்டுக்கு எழுதுறான். அதிகாரி வேலை கிடைச்சி இலஞ்சிக்குப் போறான். ஆனா அங்குள்ள ஜமீன்தாரு, “நீ அதிகாரியா இரு எந்த மைராவதும் இரு” என்ற ரேஞ்சில் அவனை டீல் செய்கிறார். மேலும் அவர் மீது துப்பவும் செய்கிறார். சாதிப்பெயரைச் சொல்லி அடிக்கவும் செய்கிறார். ஜமீன் தாரு அடிக்கது நம்மளை இல்ல. வெள்ளைக்காரன் வேலைக்கு வச்சிருக்க அதிகாரியன்னு உணர்றார் அந்த எளியச் சாணான். அதை வச்சே ஜமீன் தாரு நிலபுலத்துல செஞ்ச ஊழலை வெளிக்கொண்டு வாரான். ஜமீன் தாரு ஆபிஸை விட்டு வெளில வந்தா கொல்லுததுக்கு ஆள் வைக்கிறாரு. 27 நாளா ஆபிஸுக்குள்ளே கிடக்காப்ல சாணான் அதிகாரி. உடனே யோசனை வந்து நேசமணிக்கு கடிதம் எழுதுதாரு. நேசமணி யானையோட வந்து இவரை யானைல உக்கார வச்சி ஜமீன் தாரு வீட்டுக்கதவை உடைச்சிட்டு உள்ள போறாரு. ஜமீன் தாரு ஆடிப்போறாரு. அதுக்குப் பிறகு அந்த அதிகாரி மூளைக்குள்ள யானை வந்துட்டாக்கும். அதை அவர் நடையிலே பாக்க முடியும். அடேயப்பா எப்பேர்ப்பட்ட வாழ்வைச் சொல்லி நெஞ்சை விம்ம வைத்த கதையிது
விழுந்தவன் எழுந்தே தீருவான்ற நிஜத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்குற கதைல்லா இது.
எத்தனை முறை வாசித்தாலும் கண்ணில் நீர்வீழ்ச்சியை கொண்டு வார கதை சோத்துக்கணக்கு கதை. கறியும் சோறும் அள்ளி அள்ளி வச்சிட்டு, காசு எவ்வளவு போட்டாலும் போதும்னு உண்டியல் வச்சி கடை நடத்துன கெத்தெல் சாகிப் கைகளை இப்ப நினைச்சாலும் பெத்த அம்மா ஞாபகத்து வருவா. அந்தக் கடையில சாப்பிட்டு உயிர் வளத்து பின் வாழ்வை வளத்த ஒருவன் பெரிய வேலையோட திரும்பி அங்க போய் பணத்தை உண்டியல்ல கொட்டும் போது எழும் சிலிர்ப்பை சொல்லால.சொல்லிட முடியாது
யானை டாக்டர் கதையிலுள்ள மனிதமும், தாயார் பாதம் கதையில உள்ள வாழ்வும், முதல் கதையான அறம் கதையிலுள்ள உள்ள கருணையும் இந்த வாசிப்பு வாழ்வுக்கு போதும். முன் வாசித்த கதைகளாயினும் இப்போதும் அதே உணர்வெழுச்சியைத் தான் தந்துது. இன்னும் பத்து வருசம் கழித்து வாசிச்சாலும் இதையே தான் தரும். கதைகளில் இருக்க வாழ்வும், தத்துவமும், உண்மையும், கருணையும் அத்தகைய உன்னதமானது
வெண்பா
Stories of the true Macmillanபறவைகளின் குழந்தைகள்
The place you developed for parallel learning is a mission that is essential for our era. Here, education has become a torture because it is a competition. In any competition, only a few can win, and all others are labeled as failures.
நான்காவது பறவைகள் பார்த்தல் வகுப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. களத்துக்கு செல்லும்போது கோவில் திருவிழா சத்தம் அதிகமாக இருந்ததால் இரண்டு முறை கார்களில் மடம் வரை சென்றோம். அங்கு நிறைய பறவைகள் பார்க்க முடிந்ததில் அனைவரும் மகிழ்ந்திருந்தனர். ஒருசில படங்களை இணைத்துள்ளேன்.
பறவைகளின் குழந்தைகள்
October 16, 2025
பனை,மித்ரன், குக்கூ…
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு வணக்கம்,
அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்களை உங்களின் இணையதளம் வழியாகவே அறிந்து கொண்டேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பனை சார் வாழ்வினை தவம் போல கொண்டிருக்கும் அவருள் இருந்தும் நான் பெற்றது அதிகம்.குறிப்பாக அவரின் பனை எழுக புத்தகம் எனக்கு பைபிள் போல அத்தனை அணுக்கமானது.
அவரின் குடும்பத்தினருடன் மிக நெருங்கி இருக்க எனக்கு வாய்ப்பு அமைந்தது.அதில் மித்ரன் எனக்கு மிக பிரியமானவன் அவனின் ஒவ்வொரு செயலும் காட்சன் பாதர் போலவே இருக்கும். பனம்பழம் ஒன்றை கையில் வைத்து இருக்கும் அவனின் புகைப்படம் என் மனதில் அப்படியே உள்ளது.
மித்ரனின் இழப்பினை அந்த மொத்த குடும்பமும் இடைவிடாத தீவிர பிரார்த்தனையில் தங்களை ஆழ்த்தி கொள்வார்கள் என சிவராஜ் அண்ணா சொன்னார்கள்.
மித்ரனின் பிறந்தநாளினை(17.10.25) அவனுள் விருட்சமான பனை எழும் நாளாக கொண்டாடுவோம் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும்.
அன்று குக்கூ நிலத்தினை ஒட்டிய ஏரிக்கரையில் ஆயிரம் பனை விதைகளை பிள்ளைகளின் கரங்கள் கொண்டு விதைக்கிறோம்.மேலும் குக்கூ காட்டுப்பள்ளியில் பனை மரக்கன்றுகளுக்கான விதை நாற்று பண்ணை ஒன்றும் துவங்க இருக்கிறோம்.
நிச்சயம் வாய்ப்பு இருக்கும் ஒவ்வொருவரும் பனை விதை ஒன்றையாவது நட்டு விட வேண்டுகிறோம். ஏனெனில் மிக குறைந்த இடம் போதும் அது வளர்வதற்கு,அரை அடி குழி போதும் நடுவதற்கு, நட்டபின் எவ்வித பராமரிப்பும் தேவை இல்லை.அந்த துளிர்ப்பில் மித்ரன் எப்போதும் நம்முடன் இருப்பான்.
புதிய நிலங்களைத் தேடிச்செல்லுங்கள்!
அண்மையில் ஒரு 106 வயது பெரியவரின் வாழ்க்கை உபதேசம் ஒன்றை இணையத்தில் கண்டேன். அவரிடம் சொல்வதற்கு ஒரே ஆலோசனைதான் உள்ளது. ‘பயணம் செய்யுங்கள். வாழ்க்கை மிகச்சிறியது. பயணம் செய்வதற்கான காலமும் மிகக்குறுகியது’. பயணத்தில் புதிய நிலக்காட்சிகளைக் காண்கிறோம். அவை வெறும் வேடிக்கைபார்த்தல் அல்ல. அவை ஆன்மிகமான அகப்பயணங்கள். ஏன்?
ரமேஷ் நினைவும் விருதுகளும்
அன்பு மிகு ஜெமோ அவர்களுக்கு வணக்கம்.
நலந்தானே..?
ரமேஷ் பிரேதனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார்.வருத்தமானது.இந்த நிலையில் எனக்குள் சில சந்தேகங்கள் அல்லது கேள்விகள்.பொதுவாகவே இதுபோன்ற இலக்கிய விருதுகள் வழங்கப்படும் முன்பு படைப்பாளி இறந்துவிட்டால் அவரின் வாரிசுக்கு அந்தப் பரிசை விருதை வழங்குவதுதானே முறை. மரபும் கூட. அவருக்கு ஒரு பொண்ணு இருக்கும்போது அந்த விருது தோகை ஏன் அவருக்கு நீங்கள் வழங்கவில்லை?
அடுத்து, இலக்கியப் பரிசு விருது என்பதே நிறைய நல்ல படைப்புகள் எழுதியவர்கள் அல்லது நிறைய எழுதியும் கவனிக்கப்படாமல் இருப்பவர்களுக்கு வழங்குவது தானே முறை. இப்படி தகுதியான எவ்வளவு எழுத்தாளர்கள் இளம் படைப்பாளிகள் உட்பட தமிழகத்தில் இருக்கிறார்கள்.
அவர்களையெல்லாம் பரிசீலிக்காமல் ஒன்றிரண்டு படைப்புகள் எழுதிய யாருக்கும் தெரியாத ஐவருக்கு ரமேஷ் பிரேதனின் ஐந்து இலட்சம் ரூபாயை ஆளுக்கு ஒரு இலட்சம் என எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன அளவுகோல் அல்லது தகுதியின் அடிப்படையில் இவர்களை வி.பு. வாசகர் வட்டம் அல்லது நீங்கள் தேர்வு செய்தீர்கள்? இவர்கள் ஆரம்பகட்ட எழுத்தாளர்கள். இன்னும் ஆகச் சிறந்த படைப்புகளை அவர்கள் இன்னும் எழுதவுமில்லை.
விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்
தங்கள் அன்புமிக்க
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.
அன்புள்ள ஃபிர்தௌஸ்
மிகத்தொலைவில், வேறொரு சூழலில், வேறொரு பெருஞ்செயலில் இருக்கிறேன். ஆனாலும் முகநூல் சர்ச்சைகளை எவரோ சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ரமேஷ் 12 ஆண்டுகள் படுக்கையில் இருந்தபோது, மூன்றுமுறை சாவின் விளிம்பை தொட்டபோது உருவாகாத அக்கறை இப்போது எழுத்தாளர்களுக்கு உருவாகியிருப்பதுகூட நல்லதுதான் என நினைக்கிறேன்.
அனைத்தும் ரமேஷின் விருப்பத்தை ஒட்டியே நிகழ்கிறது. ஆகவே அதில் மாற்றுக்கருத்து தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை. ரமேஷ் தொடர்ச்சியாக அவருடைய சாவு குறித்து சொல்லிவந்தார், நான் அவரிடம் அதைப்பேச தயங்கினேன் என்றாலும் அவர் தன் விருப்பத்தை அனைவரிடமும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். அதன்படியே அனைத்தும் செய்யப்படுகின்றன. அவருடைய இறுதிச்சடங்கு உட்பட.
அவர் மறைந்தால் விருதுத்தொகை மற்றும் அவருடைய வீடு ஒத்திக்கு எடுக்கப்பட்டதற்கு அளிக்கப்பட்ட தொகை உட்பட அனைத்தையும் கொண்டு பல்கலை ஒன்றில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு மொழியியல், சமூகவியல் மற்றும் இலக்கியத்தில் ஆய்வுசெய்யும் மாணவர் ஒருவருக்கான உதவித்தொகை வழங்கப்படவேண்டும் என்பதே அவருடைய முதல் கோரிக்கை. அல்லது விருதுத்தொகை இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படவேண்டும் என்று சொல்லியிருந்தார்.
குறிப்பாக எழுதத் தொடங்கும் படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்படவேண்டும் என்பது ரமேஷின் எண்ணம். ‘விருது வழியாக எழுத்தாளர் கவனிக்கப்படவேண்டும், கவனிக்கப்பட்ட பின் விருது எதற்கு?’ என்பது ரமேஷின் கருத்து. ‘எனக்கு 30 வயதில் விருது அளிக்கப்பட்டிருந்தால் உண்மையில் மகிழ்ந்திருப்பேன், மற்ற விருதுகள் எல்லாம் பணம் மட்டுமே’ என்று பிரபஞ்சன் விருது பெற்றதை ஒட்டி நான் வாழ்த்தியபோது குறிப்பிட்டார்.
உடனடியாக பல்கலைக்கழக அறக்கட்டளை அமைப்பது இயலாதென்பதனால் இளம்படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்படுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு புதிய நிதி கண்டடையப்பட்டு அந்த அறக்கட்டளையும் அமைக்கப்படும். அவருடைய இறுதிநாட்களில் அவருடைய சகோதரிகள் உடனிருந்தனர். அவர் தங்கியிருந்த இல்லம் அவருக்காக அவர் சகோதரியிடமிருந்து ஒத்திக்கு எடுக்கப்பட்டது. அந்த தொகை அவர்களிடமே இருக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது.
தன் படைப்புகள் எல்லாமே அச்சில் வரவேண்டும், எழுதி முடிக்கப்படாதவைகூட வெளியாகவேண்டும் என்பது அவருடைய இன்னொரு விருப்பம். (எந்தப் படைப்பையும் எழுதி முடிக்க முடியாது, ஆகவே முடிவடையாத படைப்பு என்பதும் இல்லை என்பது அவருடைய கருத்து)
*
விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நாங்கள் தொடர்ச்சியாக விருதுகள் வழங்கி வருகிறோம், படைப்பாளிகளுக்கு மேடை அமைத்து அளிக்கிறோம். முக்கியமான அனைவருக்கும் இடமளிப்போம், விருதுகளும் அளிப்போம். அவர்களில் சாதனை செய்த படைப்பாளிகள் உண்டு, சாதனை செய்யப்போகும் இளம் படைப்பாளிகளும் எப்போதும் உண்டு.
‘நிறைய நல்ல படைப்புகள் எழுதியவர்கள்’ அல்லது ‘நிறைய எழுதியும் கவனிக்கப்படாமல் இருப்பவர்கள்’ ‘தகுதியான எழுத்தாளர்கள்’, ‘இளம் படைப்பாளிகள்’ என பலரைச் சொன்னீர்கள். கண்டிப்பாக இருப்பார்கள். நாங்கள் கவனித்தவர்களில் எங்களுக்கு முக்கியமானவர்கள் என பட்டவர்களில் சிலருக்கு இப்போது விருது வழங்குகிறோம். இன்னும் பலருக்கு எதிர்காலத்தில் மேடை அமைத்து அளிப்போம், விருதுகளும் அளிப்போம். ஏனென்றால் நாங்கள் இலக்கியவாசகர்களின் பெருங்குழுமம்.
இதேபோல நீங்களும் நீங்கள் தகுதியானவர்கள் என கருதுபவர்களைப் பற்றி தொடர்ச்சியாக எழுதி முன்னிறுத்தலாமே. அனைவரும் இதைச் செய்யலாமே. எவ்வளவு நல்ல விஷயம் அது!
விஷ்ணுபுரம் விருதுகளில் விஷ்ணுபுரம் விருது, தமிழ்விக்கி– தூரன் விருது இரண்டும் சாதனை செய்த மூத்தவர்களுக்கானவை. ஆனால் குமரகுருபரன் விருது சாதனை செய்யவிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கானது. குமரகுருபரன் விருதுபெற்ற பலர் ஒரு நூல் மட்டுமே எழுதியவர்கள்.
இளம்படைப்பாளிகளுக்கான அத்தகைய பரிசுகள் உலகமெங்கும் உள்ளன. அவ்வகையிலேயே இந்த விருதுக்கும் படைப்பாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு படைப்பாளியை அவர்களின் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, பிறருக்குச் சுட்டிக் காட்டுவதே இவ்விருதுகளின் நோக்கம். அவர்கள் தொடர்ச்சியாக எழுத அது ஊக்கமாக அமையும். அவர்களை பிறர் கவனித்து, தொடர்வதற்கும் அது வழிவகுக்கும். முதல்படைப்பிலேயே அகிலன் விருது பெற்று, அவ்விருது வழியாக அறியப்பட்டவன் நான். அதன்பின் எல்லா ஆண்டுகளிலும் தேசியவிருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். இளம்படைப்பாளிகளுக்கான சம்ஸ்கிருதி சம்மான் விருது உட்பட.
விஷ்ணுபுரம் இலக்கியமேடையிலேயே எப்போதும் மிக இளம்படைப்பாளிகள் மேடையேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் எழுத வரும்போதே கவனிக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.இளம்படைப்பாளிகளை முன்னிறுத்தும் அத்தகைய விருதுகள், மேடைகள் ஏன் அவசியம் என சென்ற குமரகுருபரன் விருது விழாவிலேயே விளக்கியிருந்தேன். இதெல்லாம் இலக்கியவாசகர்களுக்கு தெரிந்தவை.
அழகியமணவாளன்இத்தகைய விருதுகளை அளிக்கும் தகுதி கொண்ட இன்னொரு அமைப்பு இன்று தமிழ்ச்சூழலில் இல்லை. எங்களுடன் விவாதிக்கும் அளவுக்கு இலக்கியத்தில் தொடர்கவனம் கொண்ட பிறரையும் நான் கண்டதில்லை. ஒருவர் இந்த விருது விஷயத்தில் கருத்து சொல்வாரென்றால் ‘நீங்கள் ஏற்கனவே படித்து விவாதித்து முன்வத்த படைப்பாளிகள் எவர்? என்பதே என் கேள்வியாக இருக்கும்.
அனைத்தையும் வாசிப்பவர்கள் அடங்கிய அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். கிட்டத்தட்ட உலகம் எங்கும் ஒரேசமயம் 30 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் இணைய அரங்குகளில் ஆண்டு முழுக்க அனைத்து இலக்கிய நூல்களையும் விவாதிப்பவர்கள் நாங்கள். அந்த கவனம் மற்றும் உரையாடலின் விளைவாகவே எழுத்தாளர்கள் விருதுகளுக்குத் தெரிவாகிறார்கள். ஆகவேதான் இந்த விருதுகள் மதிப்புள்ளவை ஆகின்றன.
எங்கள் அரங்குகளுக்கு அழைக்கப்படுபவர்களில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் என மூன்றுவகையினர் உண்டு. இந்த விருதுகளிலும் அந்த விகிதம் பேணப்பட்டுள்ளது.எங்கள் விருதுகள் பெறுபவர்களை பற்றிய கச்சிதமான அறிமுகம் தமிழ்விக்கியில் உள்ளது. அவற்றை வாசிப்பவர்கள் மட்டுமே இலக்கியம்பேசும் தகுதி கொண்டவர்கள்.
மொழியாக்கம் மற்றும் ஆய்வுத் துறைகளில் மிகமுக்கியமான தொடக்கத்தை நிகழ்த்திய இருவருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.அவர்களின் நூல்களை வாசகர் எவரும் வாசித்துப் பார்க்கலாம். அவை நீண்டகால உழைப்பின் விளைவுகள், அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட மிகமுக்கியமான தொடக்கங்கள் என்பதை அறிவுத்தகுதி கொண்டவர்கள் மறுக்கமாட்டார்கள். முகநூலில் சதா அரசியலும் சினிமாவுமாகச் சலம்பும் கூட்டம் நடுவே இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆய்வுச்செயல்பாடு என்பது மிகமிக அரிதான ஒன்று.
சஜுசஜு அ.கா.பெருமாள் அவர்களால் கண்டடையப்பட்டவர். ஆற்றுமாடன் தம்புரான் என்னும் அவருடைய நூல் இளையதலைமுறையினரால் செய்யப்பட்ட நாட்டாரியலாய்வுகளில் முதன்மையானது. கள ஆய்வின் வழியாக அசல் தரவுகளை சேகரித்து நேர்த்தியாக எழுதப்பட்ட ஆக்கம். கொட்டடிக்காரன் என்னும் அவருடைய நூல் நாட்டுப்புற தாளவாத்தியக்காரராக அவருடைய வாழ்க்கை பற்றிய சித்திரம். நாட்டாரியல் பதிவு என்னும் வகையிலும் முக்கியமானது.
அழகிய மணவாளன் இன்று கேரளத்திலும் கதகளிச் சூழலில் அறியப்பட்டவர். அவர் எழுதிய கதகளி பற்றிய கட்டுரைகள், மலையாள அழகியல் கோட்பாட்டு மொழியாக்கங்கள் மிகமுக்கியமான பங்களிப்புகள், அகழ் இதழில் அவற்றைப் பார்க்கலாம். அவருடைய நாவல் என்னும் கலைநிகழ்வு என்னும் நூல் வெளிவந்துள்ளது. கல்பற்றா நாராயணன் கட்டுரைகளின் தொகுப்பு வெளிவரவுள்ளது. கலை சார்ந்த அவருடைய பார்வையை அறிய அவருடைய பேட்டியை பார்க்க “I unconsciously longed for an alternative cultural space”
செல்வக்குமார்புனைவிலக்கியத்துறையில் ஒரு முக்கியமான படைப்பையேனும் எழுதியவர்களை தேர்வுசெய்து, அவர்களில் இருந்தே பரிசுக்குரியவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அனேகமாக வெளியாகும் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கும் விஷ்ணுபுரம் நண்பர்களின் பரிந்துரையில் இருந்தே இத்தேர்வு நிகழ்ந்தது. புனைவிலக்கியம் சார்ந்த எல்லா வகைமைகளிலும் ஒவ்வொருவர் என தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
செல்வகுமார் பேச்சிமுத்துவின் கௌளிமதம் அண்மையில் கவனிக்கப்பட்ட நாவல். வட்டாரவழக்கு சார்ந்த யதார்த்தச் சித்திரங்கள் தமிழிலக்கியத்தின் முக்கியமான புனைவு வகை. அதில் பூமணி, சோ.தர்மன், கண்மணி குணசேகரன், இமையம் வகையிலான எழுத்து இது. ராக்கம்மா என்னும் ஒரு கிராமப்பெண்ணின் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியைச் சித்தரிக்கும் படைப்பு அது. செல்வகுமார் முக்கியமான படைப்பாளி என்பதற்கான சான்று.
அசோக் ராம்ராஜ்தேவி லிங்கம் எழுதிய நெருப்புஓடு பொற்கொல்லர்களின் வாழ்க்கையை சித்தரிப்பது. சிறிய உலைக்கலம் நெருப்போடு எனப்படுகிறது. அங்கே உருகும் வாழ்க்கை என அம்மக்களின் இன்றைய நிலையைச் சித்தரிக்கும் முக்கியமான ஆக்கம் இது. பெண்களின் படைப்புகளில் வழக்கமாக உள்ள குடும்பச் சிக்கல், தன் வரலாற்றுத்தன்மை ஆகியவற்றுக்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக் களத்தின் நுணுக்கமான சித்திரங்களை அளிக்கும் இந்நாவல், அந்த தகவல்களை கவித்துவக் குறியீடுகளாக விரித்தெடுப்பதும்கூட.
தமிழில் எழுதப்படாத சமூகங்களின் வாழ்க்கை புனைவுக்குள் வருவதென்பது சென்ற கால்நூற்றாண்டாக நிகழும் குறிப்பிடத்தக்க இலக்கியப்போக்கு. ஜோ.டி.குரூஸ் போன்று அதற்கான முன்னுதாரணங்கள் பல. இன்னும் பல களங்கள் இதில் திறந்துகொள்ளவேண்டும். தேவிலிங்கத்தின் நாவல் அவ்வகையில் மிகக்குறிப்பிடத்தக்கது.
தேவி லிங்கம்தமிழில் எப்போதுமே மொழியிலும் வடிவிலும் சோதனைகள் செய்யும் எழுத்துமுறை இருந்துவந்துள்ளது. அதில் வெற்றிகளும் தோல்விகளும் உண்டு என்றாலும் அவ்வகை எழுத்து தமிழின் முக்கியமான கூறு. அதைச் சார்ந்தவை அசோக் ராம்ராஜின் ரித்னாபூரின் மழை, கடைசி அர்மீனியன் என்னும் இரு தொகுதிகளும்.
இலக்கிய வாசகர்கள் இந்நூல்களை வாசித்துப்பார்க்கலாம்.
ஜெ
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்இன்மையின் இருப்பு, கடிதம்
சங்கச் சித்திரங்கள் மறுவாசிப்பில் இருக்கிறேன். “சூனியத்தில் ஒரு இடம்” எனது நேரிடையான அனுபவமாக உள்ளது.
எனது அம்மாவின் ஊரும் மனைவியின் ஊரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதலால் அடிக்கடி பயணம் அமையும். ஆண்டாள் கோயிலின் மேலரத வீதியில் இல்லம். அங்கு இருக்கும் போதெல்லாம் தின்தோறும் கோயிலுக்கு செல்வது வழக்கம். கோயிலுக்கு செல்லும் வழியில் மடத்துத் தெருவில் யானை கொட்டில் உண்டு. இங்கு தான் கோயில் யானை பல வருடங்களாக பராமரிக்கப்பட்டது.
சென்ற வருடம் யானை பாகன் யானைக்கு செய்த சித்திரவதைகள் படம் பிடிக்கப்பட்டதால், யானை இப்பொழுது தொலைவான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மடத்து தெருவின் காலியான கொட்டில் கண்டு கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை.
தங்களது யானை கதைகளின் தாக்கமும், என்னுடைய சொந்த ஊரான கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலின் என்னைவிட 5 வயது மூத்த யானையுடன் 20 வருடங்கள் சேர்ந்து வளர்ந்த ஞாபகமும், இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காலியான கொட்டிலை நினைவுபடுத்துகிறது.
கண்கள் பனிக்க
வெங்கட்ராமன், பெங்களூரு
அன்புள்ள வெங்கட்,
அந்த இல்லாத இருப்பை உணர்தல் என்னும் அனுபவம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும். தமிழகத்தில் பலருக்கும் கட்டிடங்கள் சார்ந்தே அந்த அனுபவம். அதிலும் இடிக்கப்பட்ட திரையரங்குகள் சார்ந்து அந்த இன்மையின் இருப்பை உணர்பவர்கள் மிகுதி. யானைகள் சார்ந்து அந்த அனுபவம் இருப்பது ஒரு நல்லூழ்தான். வாழ்த்துக்கள்.
ஜெ
சங்கசித்திரங்கள் வாங்க சங்கசித்திரங்கள் -கடிதம் சங்கசித்திரங்கள் சங்கசித்திரங்கள்-விமர்சனம் சங்கசித்திரங்கள், மீண்டும்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers



