Jeyamohan's Blog, page 16

November 4, 2025

நமது சொற்கள்

வெள்ளிமலையில் பொழுதுபோகாமலிருக்கும்போது ஏதாவது கைபோனபோக்கில் படிப்பதுண்டு, அப்படிப் படித்த ஒரு நூல் கி.ரா 85, காலத்தை வென்ற கதைசொல்லி. செப்டெம்பர் 2007ல் வெளிவந்தது. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்தது.

கி.ரா என்ற பெயர் இருக்கும் ஒரு நூல் சுவாரசியமாகத்தான் இருக்கும் என ஓர் எண்ணம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அதைப் படித்து முடித்தபோது பெரும் சலிப்புதான் மிஞ்சியது.

கிராவின் 85 அகவை நிறைவை ஒட்டி வெளியானது. கி.ராவே எனக்கு அனுப்பித்தந்த நூலை அப்போது சும்மா புரட்டிப் பார்த்துவிட்டு சுவாரசியமாக ஏதும் இருக்கப்போவதில்லை என எண்ணி அப்பால் வைத்துவிட்டிருக்கிறேன். அந்த எண்ணம் பொய்க்கவில்லை. இப்போது கி.ரா இல்லை. நூல் வெளிவந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் சுவாரசியமான ஒரு வரி கூட இல்லாத நூல் இது. எழுத்தாளர்கள், வாசகர்கள் உட்பட 31 பேர் இதில் எழுதியிருக்கிறார்கள்.

நம் மரபில் பெரியவர்களைப் பற்றி ‘நாலு நல்ல வார்த்தைகள்’ சொல்லவேண்டும் என ஒரு வழக்கமுண்டு. அதையேதான் அத்தனை பேரும் கடைப்பிடித்திருக்கிறார்கள். அத்தனை கட்டுரைகளிலும் கி.ரா. பற்றி ஒரே விஷயம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அன்பானவர், வீட்டுக்குப் போனவர்களை உபசரிப்பவர், அவர் மனைவி கணவதி அம்மாள் கணவனுக்கு உகந்த துணைவி, வருபவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவார் – மொத்த நூலிலும் இது மட்டும்தான். திரும்பத் திரும்ப இது மட்டும்தான்.

சொல்லப்போனால் எவருமே கி.ராவை கவனிக்கவே இல்லை. அவருடைய பழக்கவழக்கங்கள், பேச்சுமுறை எதுவுமே எவர் நினைவிலும் இல்லை. கிரா சுவாரசியமாகப் பேசுவார் என்கிறார்கள். என்ன பேசினார் என ஒருவருக்கும் ஒரு வரிகூட சொல்வதற்கில்லை. இதுதான் ஜெயகாந்தன் பற்றியும் எழுதப்பட்டது. ‘ராத்திரி முழுக்க பேசிக்கிட்டே இருப்பார், அற்புதமா பேசுவார்’. ஆனால் என்ன பேசினார் என்பது எவருக்கும் நினைவில்லை. இந்த மூடர்களிடமா அவர் அவ்வளவு பேசினார் என்று திகைப்பாக இருக்கும். சுவர்போல எதிரில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஏன் எதுவும் இவர்கள் நினைவில் இல்லை? காரணம் இவர்கள் எவருமே அவரை அறிய, அவருடன் இருக்க அவரை நோக்கிச் சென்றவர்கள் அல்ல. அத்தனை பேருக்கும் தங்களைத் தவிர எவரும் முக்கியம் அல்ல. ஆகவே அவர்கள் அவரைக் கவனிக்கவே இல்லை. இந்நூல் முழுக்க அத்தனை கட்டுரைகளும் கிராவுக்கு தான் எவ்வளவு முக்கியமானவன் என்பதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தன்னை கிரா எப்படி உபசரித்தார், தன்னுடன் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதையே அத்தனை பேரும் எழுதியிருக்கிறார்கள்.

இவர்கள் நடுவே ஒரு கலைஞன் பிறந்து வாழ்ந்து மடிவதென்பது பெரும் அவலம்தான். அவனைச் சுற்றி அவனை எந்த வகையிலும் கலைஞனாகப் பொருட்படுத்தாத பாமரர்கள். அவர்களுக்கு கி.ரா ஒரு ‘வயசாளி’ மட்டும்தான். எந்த வயசாளியைப் பற்றியும் சொல்லும் பழகிப்போன உபச்சாரச் சொற்களை மட்டும்தான் அவரைப்பற்றியும் சொல்ல அவர்களால் முடியும்.

கி.ராவின் அத்தனை உரையாடல்களும் திகைக்கச் செய்யும் அவதானிப்பும் நுட்பங்களும் கொண்டவை. கிணறு தோண்ட இடம்பார்ப்பவர்கள் ஒரு கல்லை எடுத்து வாயில் போட்டு அதன்வழியாக இருபதடி ஆழத்தில் நீர் இருப்பதை கண்டறிந்துவிடுவது, மந்தையில் ஒரு ஆட்டின்மேல் மட்டும் உண்ணி அதிகமாக இருந்தால் அந்த ஆடு நோயுறப்போகிறது என்னும் கீதாரிகளின் கவனிப்பு, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தன் சீவாளியை தானே தயாரிக்கும் அழகு, அவர் வாசித்த நீளமான பாரிநாயனத்தில் தோடி அழகாக வெளிப்படும்போது கொஞ்சிக்குலவும் ராகங்களான செஞ்சுருட்டி போன்றவை சரியாக வராதது — ஓர் ஒன்றரை மணிநேர உரையாடலில் கி.ரா. சொன்னவை நான் பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு குறித்து வைத்தேன். கி.ரா பற்றி விரிவாகவே எழுதியுமிருக்கிறேன். பல உரையாடல்களில் பேசியுமிருக்கிறேன்.

அப்படி எத்தனையோ சொல்லலாம். கி.ரா எப்படிச் சாப்பிடுவார். (விரல்கள் மட்டுமே உணவை தொடும்) எந்த உடையை எப்படி அணிவார். பேசும்போது எப்படி அமர்வார். எப்படி சிரிப்பார். கி.ராவின் இடைச்செவலின் சித்திரம், அவருடைய வீட்டின் சித்திரம்கூட எந்தக் குறிப்பிலும் இல்லை. தேவதச்சன் சாதாரண உரையாடல்களில் கி.ரா பற்றி அழகான சித்திரங்களை அளித்திருக்கிறார். அவர் சொன்னபடி கிராமத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்ததும் சட்டை, வேட்டி இரண்டையும் கழற்றி மடித்து வைத்துவிட்டு ஒரு துண்டை கட்டிக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்கும் கிராவின் காட்சி என் கண்ணிலேயே இருக்கிறது. கி.ரா என்னும் கிராமத்து விவசாயின் அகம் வெளிப்படும் தருணம் அது. கிராவை கூர்ந்து கவனிக்கும் ஒருவரின் அகம்தான் அதை பதிவுசெய்ய முடியும்.

கி.ரா அகராதி தயாரித்த காலம் பற்றி நாலைந்துபேர் இதில் குறிப்பிடுகிறார்கள். அகராதி தயாரித்தார் என்பதற்கு மேல் அக்குறிப்புகளில் ஒன்றுமே இல்லை அவற்றில். அப்பெரும்பணியை செய்யும்போது அவர் எப்படி பணியாற்றினார், தரவுகளை எப்படி எழுதி வைத்திருந்தார் எதைப் பற்றியும் பேசப்படவில்லை. அகராதி தயாரிக்க அட்டைகளை அடுக்குவது, குறிப்பேடுகள் செய்வது என இரண்டு வழிகள் உண்டு. இரண்டில் கிரா எதை கடைப்பிடித்தார்? எவரெல்லாம் அவருக்கு உதவினார்கள்? ஒரு வரி கூட இல்லை

பெரும்பாலான கட்டுரைகளில் அதை எழுதியவர்கள் தங்களைப் பற்றியே எழுதியுள்ளனர். தங்களை கீழிறக்கி, கி.ராவை மேலேற்றி அதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த கீழிறக்கல் ஒருவகை சம்பிரதாய அடக்கம் மட்டுமே. அவர்களால் அவர்களைப் பற்றி மட்டுமே எழுத முடியும் என்பதைக் காட்டுவது அது. தன்னையும் தன் உலகையும் கடந்து எதையுமே கவனிப்பதில்லை என்பதற்கான சான்று.

கி.ரா பற்றி வழக்கமான வாயுபச்சாரங்களை அள்ளிக் குவிக்கிறார்கள் கட்டுரையாசிரியர்கள். அப்படி எழுதுவது உயர்ந்தது, நெகிழ்ச்சியானது என்றும் நம்புகிறார்கள். ஆகவே அதற்கு அப்பால் யதார்த்தமாகவோ நுணுக்கமாகவோ எவரேனும் எதையாவது சொல்லிவிட்டால் புண்பட்டும் விடுவார்கள். கிரா பீடி பிடிக்கும் தகவலைப் பதிவுசெய்து அவரை அவமானப்படுத்திவிட்டார்கள் என ஒரு கோஷ்டி கிளம்பும்.

தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையை காட்டுவது இது. முனிவர்கள், சமயக்குரவர்கள், அரசர்கள் அனைவரைப் பற்றியும் ஒரே ‘டெம்ப்ளேட்’ கதைதான். அண்மையில் மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கும் தொன்மத்தில் வாழும் அகத்தியருக்கும் ஒரே கதையைச் சொல்கிறார்கள். ராஜராஜ சோழன் சிற்பிக்கு வெற்றிலை சுருட்டிக் கொடுத்த கதையை கொஞ்சம் மாற்றி மு.கருணாநிதிக்கும் சொல்கிறார்கள். எழுத்தாளர்களுக்கான ஒரு ‘டெம்ப்ளேட்’ உருவாகியிருப்பதை இந்நூலில் காண்கிறோம்.

எத்தனை வெளிநாட்டு ஆசிரியர்களை பிற எழுத்தாளர்கள் அப்படி நுணுக்கமான சொல்லோவியங்களாக ஆக்கியிருக்கிறார்கள். ஏன், வைக்கம் முகமது பஷீர் பற்றி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. பி.கே.பாலகிருஷ்ணனின் ‘மாயாத்த சந்தியகள்’ என்னும் நூல் ஓர் அற்புதமான படைப்பிலக்கியம். தமிழில் அதற்கிணையானவை சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல்கள். சு.ராவின் நூல்கள் அவமதிப்பவை என சி.சு.செல்லப்பா, ஜி.நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, பிரமிள் அனைவரின் உறவினரும் ஆதரவாளர்களும் கொந்தளித்துவிட்டார்கள்.

ஜி.நாகராஜன் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஒரு நூல் பின்னடைவு (நாளை மற்றுமொரு நாளே. கிரியா பதிப்பு) அவரை அவமதிக்கின்றது என்று அன்று பலர் வசைபாடினர். அதில் ஜி.நாகராஜன் குடிப்பவர் என்ற தகவல் இருக்கிறதாம், ‘குடிப்பார், அதையெல்லாம் ஏன் எழுதணும்?’ என்றவகை வசைகள். அவற்றை சுந்தர ராமசாமி ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி பற்றிய என் நூல் அவருக்கு அவமதிப்பு என சு.ராவைச் சார்ந்தவர்கள் மனம்புழுங்கினர். இன்று சு.ரா பற்றிய முழுமையான நினைவோவியமாக அடுத்த தலைமுறையிடம் சென்றிருப்பது அந்நூல் மட்டுமே.

கி.ரா பற்றிய இந்நூலில் இரண்டு நுண்ணிய அவதானிப்புகள தான் உள்ளன என்பது என் மதிப்பீடு. குக்கரின் விசில் ஓசை கி.ராவுக்குப் பிடிக்காது என்பதனால் கணவதி அம்மா அதன் ‘வால்வ்’ எடையை ஒரு ஸ்பூனால் மிக மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக் எடுத்துவிடுவார்கள் என்னும் காட்சி. பீடி புகைக்கும் காலகட்டத்தில் கி.ரா பீடிகளின் நுனியை ஒரு கத்தரிக்கோலால் கச்சிதமாக நறுக்குவார், அதற்காக ஒரு கத்தரிக்கோலை மேஜைமேல் வைத்திருப்பார் என்னும் தகவல். நான் சுருக்கமாகப் பழகிய வகையிலேயே கி.ரா பற்றி அப்படி எவ்வளவோ சொல்லமுடியும். இடைச்செவலில் மேஜை மேல் ஒரு ஈர்க்குச்சி வைத்திருந்தார். ஒட்டிக்கொண்டிருக்கும் புத்தகங்களின் பக்கங்கள் கிழியாமல் அகற்றுவதற்காக. அப்படிப்பட்ட அவதானிப்புகளே ஒரு கலைஞனை, ஆளுமையை எதிர்வரும் தலைமுறைக்குக் காட்டுபவை.

கி.ரா பற்றிய நுண்ணிய அவதானிப்புகள் இக்குறிப்புகளை எழுதிய படைப்பாளிகள் பலரிடம் இருக்கும். அவற்றை அவர்கள் தேவை என்றால் பேச்சில் சொல்லவும் செய்வார்கள். ஆனால் எழுத மாட்டார்கள். சம்பிரதாயமான சொற்களை மட்டுமே சொல்வார்கள். கொஞ்சம் தனிப்பட்ட முறையில், கொஞ்சம் கூர்மையாக எதையேனும் சொல்லிவிட்டால் ‘ஆ, அவமதிப்பு!’ என்று ஒரு பாமரக்கோஷ்டி கிளம்பும் என அவர்களுக்கு தெரியும். எதற்கு வம்பு என அந்த சம்பிரதாயச் சொற்களைச் சொல்கிறார்கள். ஆனால் எழுத்தாளன் என்பவன் இந்த பாமரக்கும்பலை, (அவர்களில் பலர் பாமர எழுத்தாளர்கள் என்றாலும்) அலட்சியம் செய்ய கற்றிருக்க வேண்டாமா என்ன?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2025 10:34

ஏ.வி. மணிகண்டன்

புகைப்படக் கலைஞர், நவீனக்கலை, இலக்கிய விமர்சகர். புகைப்படக்கலை சார்ந்த புத்தகங்கள், நவீனக்கலை, இலக்கியம் சார்ந்த ரசனை விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். முழுமையறிவு அமைப்பின் சார்பில் கலைரசனை வகுப்புகளை நடத்திவருகிறார்

ஏ.வி.மணிகண்டன் ஏ.வி.மணிகண்டன் ஏ.வி.மணிகண்டன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2025 10:33

ஜெ யின் தென் கரோலினா வருகை  – அமல்

 

ஜெ எங்கள் ஊர் தென் கரோலினாவுக்கு வருவது சென்ற மாதம் தெரிந்த உடன் ஆஸ்டின் சௌந்தரிடம் ஜெயை சந்திக்க முடியுமா என்று கேட்டேன். அவரின் உதவியால் எழுத்தாளர் ஜெகதீசை தொடர்பு கொண்டால், நீங்கள் பள்ளியில் நடக்கும் விழாவில் சந்திக்க முடியாது, இன்னொரு நிகழ்வு எழுத்தாளர் சந்திப்பு நூலகத்தில் நடைபெறுகிறது, அதற்கு வேண்டுமானால் வாங்க என்றார். என் மகன் ஆலனிடம் கேட்டேன், வருகிறேன் என்றான். சரி எல்லோரும் செல்லாம் என்று ஜெகதீசிடம் நான் குடும்பத்துடன் என் மனைவி இரு மகன்கள் ஆலன் ஆல்வினுடன் வருகிறோம் என்றேன். ஆலனுக்கு கூட்டத்தில் சிறிது நேரம் பேச அனுமதி வாங்கி கொண்டேன்.  ஆலனுக்கு ஆர்வம் இருந்தாலும் பரிட்சைக்கு படிக்க வேண்டியிருந்ததால் முடியாது என்றான். பனிமனிதன் நாவலின் எழுத்தாளருடன் சந்திப்பு,  இந்த வாய்ப்பு பிறகு வராது என்று இறுதியில் வர ஒத்துக்கொண்டான். ஆல்வின் ரொபாடிக் வகுப்பு, சாரணர் வகுப்புக்கு போகவேண்டும் என்றான். ஆனாலும் எங்களுடன் வர ஒத்துக்கொண்டான். மூன்று மணியளவில் நூலகம் சென்றோம். நான்கு மணிக்கு விழா ஆரம்பித்தது. அதன் சுருக்கம்

இந்த கூட்டத்தை “ரைட்டர்ஸ் ஹூ ரைட்” குழுவின் உறுப்பினரான ஜகதீஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் ஜெயமோகன் “காணப்படாத இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றினார்பால் (குழுத் தலைவர்) நிகழ்வை ஏற்பாடு செய்வதிலும் எழுத்தாளர்களை ஆதரிப்பதிலும் முக்கிய பங்காற்றியவர் என்று பாராட்டப்பட்டார்.ஜெயமோகன் பற்றிய விவரங்களை அவர் சொன்னார்,40+ ஆண்டுகளாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்துறை எழுத்தாளர்.மகாபாரதத்தின் மகத்தான மறுகற்பனை நூலாசிரியர் (6.5 ஆண்டுகள், 25,000+ பக்கங்கள்).நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகளின் எழுத்தாளர்.விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நிறுவனர்.கிழக்கு தத்துவத்தின் ஆசிரியர், வட கரோலினாவில் வருடாந்திர வகுப்புகள் நடத்துபவர்.சமீபத்திய ஆங்கில வெளியீடு: “ஸ்டோரீஸ் ஆஃப் த ட்ரூத்” (2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஃபாரார், ஸ்ட்ராஸ் மற்றும் கிரோக்ஸ் வெளியிட்டது).இளம் வாசகர் (ஆலன் அமலோற்பவநாதன்) பேசியது“யானை டாக்டர்” கதையின் தனித்துவமான தன்மையைப் பாராட்டினார்.பனிமனிதன் (யெட்டி) பற்றிய கதையையும் ரசித்ததாகக் குறிப்பிட்டார், குழந்தைகள் கதையாக இருந்தாலும் அதன் தத்துவ ஆழத்தைப் பாராட்டினார்.ஜெர்ரி, ஸ்டீவன் போன்ற எழுத்தாளர்கள் பேசினார்கள்.

காணப்படாத இந்தியா

ஆங்கிலத்தில் பிரபலமான இந்திய எழுத்தாளர்கள் உண்மையான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. சரியான ஆங்கிலம் பேசுபவர்கள் காலனித்துவ மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், மக்கள் கூட்டத்திலிருந்து அந்நியப்பட்டவர்கள். சல்மான் ருஷ்டி, ஜும்பா லஹிரி போன்ற எழுத்தாளர்கள் உண்மையான இந்திய யதார்த்தத்தை விட மேற்கத்திய ரசனைக்கு ஏற்ப எழுதுகிறார்கள். இது காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள்) பொதுவான பிரச்சனை. ஆங்கிலம் இந்தியாவில் அதிகார மொழி, காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆங்கிலம் பேசும் மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கினர். இந்த எழுத்தாளர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிய மேற்கத்திய எழுத்தாளர்களை (E.M. ஃபோர்ஸ்டர் போன்றவர்கள்) பின்பற்றுகிறார்கள். மேற்கத்திய ஆசிரியர்கள் புத்தகங்களை தங்கள் வாசகர்களுக்கு எளிதாக்க கலாச்சார விவரங்களைத் திருத்த முயற்சிக்கிறார்கள். உதாரணமாக கிரான்டா பத்திரிகை அவரது கதையிலிருந்து பெண்வழி சமூக குறிப்புகளை அவர் மறுத்தபோதிலும் நீக்க விரும்பியது. 60 வயது வரை அவரது 320 தமிழ் புத்தகங்கள் எதுவும் மொழிபெயர்க்கப்படவில்லை. அவரது மொழிபெயர்ப்பாளர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளம் பெண்கள், அவர்கள் அவரது படைப்புகளை புதுமையானதாகக் கண்டார்கள். மேற்கத்திய கல்வி பெற்ற முக்கிய கதாபாத்திரங்கள், மேற்கத்திய மயமாக்கப்பட்ட பார்வைகள், எளிமைப்படுத்தப்பட்ட கலாச்சார குறிப்புகள், ஆங்கிலமயமாக்கப்பட்ட பெயர்களைதான் மேற்கத்திய வெளியீட்டாளர்கள் விரும்பும் கதைகள். மேற்கத்திய வாசகர்களுக்காக கலாச்சார நம்பகத்தன்மையை மாற்ற மறுக்கிறார். மேற்கத்திய பிரபலம் தேவையில்லை (ஏற்கனவே திரைப்பட வேலையிலிருந்து நிதி ரீதியாக வெற்றிகரமானவர்). மேற்கத்திய இலக்கியத்தைப் புரிந்துகொள்ள தான் நேரம் செலவிட்டதைப் போல (ஹெர்மன் மெல்வில்லைப் புரிந்துகொள்ள ஒரு வருடம் எடுத்தது) இந்திய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வாசகர்கள் நேரம் செலவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எழுத்தாளர்களுக்கு உள் மொழி மற்றும் அசல்தன்மையைப் பேணுவது முக்கியம் என்று நம்புகிறார். ஆங்கிலத்தில் பேசுவது/சிந்திப்பது ஒருவரின் கலாச்சார தன்மையை மாற்றுகிறது, பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கிறது. தனது எழுத்து நடையைப் பாதுகாக்க வேண்டுமென்றே 30 ஆண்டுகள் ஆங்கிலம் பேசுவதைத் தவிர்த்தார். அதிகமான செய்தி ஊடகங்களை பார்பதற்கு எதிராக எச்சரிக்கிறார். இது மொழியில் அரைகுறை வெளிப்பாடுகளை உருவாக்குகிறது. அசல் “உள் சுய உரையாடல்” ஐ பேணுவதை ஊக்குவிக்கிறார்.

கலாச்சார விவாதம்

பிராந்திய பேச்சுவழக்கு வேறுபாடுகள், தென் கரோலினாவில் உள்நாட்டு மற்றும் கடலோர பேச்சு முறைகள் பற்றிய விவாதம் நடந்தது. இந்தியாவில் புவியியல் மற்றும் வர்க்கத்தின் அடிப்படையில் மொழி பிரிவுகளுக்கு இணையாக வரையப்பட்டது. ஜெர்ரி சூழலைப் பொறுத்து குறியீடு மாற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

பெயர் உச்சரிப்பு மற்றும் அடையாளம்

குடியுரிமை விழாவில் தனது சரியான பெயர் உச்சரிப்பை வலியுறுத்திய ஜெர்ரியின் கதையை சொன்னார். பெயர்கள் கலாச்சார அர்த்தத்தையும் ஆன்மாவையும் சுமக்கின்றன. வெவ்வேறு கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று பெயர்களுடன் எவ்வாறு போராடுகின்றன என்ற விவாதம் நடந்தது.

  தத்துவ கற்பித்தல்

ஜெயமோகன் வட கரோலினாவில் வருடாந்திர இந்திய தத்துவம் கற்பிக்கிறார். பல்வேறு பாரம்பரியங்களில் பௌத்தம், இஸ்லாம் (சூஃபி), கிறிஸ்தவம், மேற்கத்திய தத்துவ வகுப்புகள் நடத்துகிறார். தமிழ்நாட்டில் உள்ள அவரது அமைப்பு பல தத்துவ பாரம்பரியங்களில் தொடர் வகுப்புகளை வழங்குகிறது

முக்கியமாக இவ்விழாவில் பேசியவைகள் 

இலக்கியம் மற்றும் அறிவுசார் சிந்தனையில் புதிய காலனித்துவம் வணிக வெற்றி, கலாச்சார நம்பகத்தன்மை அதிகாரமாக மொழி மற்றும் காலனித்துவ அமைப்புகளைப் பேணுவதில் அதன் பங்கு உண்மையான கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த எழுத்தாளர்களின் பொறுப்பு உள்ளூர் அசல்தன்மையும் உலகளாவிய தரப்படுத்தலும் கலாச்சார எல்லைகளைக் கடந்து பொறுமையான வாசிப்பின் முக்கியத்துவம்

ஆலனும் ஜெயும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.  குழு புகைப்படங்கள் எடுக்கப்பட்டதும் சிறிது உணவு வழங்கப்பட்டவுடன் 6 மணியளவில் விழா முடிந்தது. ஆறு மணிக்கு நூலகத்தில் இருந்து கிளம்பினோம். ஏழரைக்கு வந்து சாரணர் வகுப்பில் ஆல்வினை‌ விட்டோம். வீடு வந்த போது இரவு 8 மணி. 4 மணி நேரம் மழையில் பயணம் செய்து ஜெ யின் பேச்சைக்கேட்டது என்னைப்பொருத்தவரையில் மதிப்பு மிக்கது. 15 வருடங்களுக்கும் மேலான அவரை சந்தக்கும் என் ஆசை நிறைவேறியது. எதிர்காலத்தில் என் மகன்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.

அன்புடன் 

அமலோற்பவநாதன்(அமல்) யாகுலசாமி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2025 10:31

தம்மம்- ஒற்றைப்பலகையில்

Some people believe that the Vedas are esoteric works filled with unknowable mysticism, reserved for only a select few who possess the right to understand them. However, the reality is that ancient texts worldwide have often been shrouded in mystique, becoming the exclusive domain of a limited audience.

Learning Vedhas…

எப்படியோ அடித்துப்பிடித்துத்தான் விபாசனா வகுப்பிற்கு பயணித்தேன்.  வெள்ளிமலையேறியதும், என்னை வரவேற்றது மலை முழுதும் பூத்துக்கிடந்த அதேசெவ்வூதா தொட்டாசிணுங்கி மலர்கள் தான்.  என் வீட்டு மலர் இறைஞ்சி இருக்கிறது போலும், ஒராயிரம் மலர் சுமந்த அந்த மலை தேவதையிடம்  இவளுக்காய் வகுப்பொன்றைத் தந்துவிடு என்று

தம்மம்- ஒற்றைப்பலகையில்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2025 10:30

November 3, 2025

சாதிமறுப்புக்காக ஒரு திருமணம்!

வணக்கம் ஜெ,

இந்தக் கடிதத்தை பிரசுரித்தால் என் பெயரை நீக்கிவிடுங்கள். இல்லையேல் நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள்.

நான் ஏழு ஆண்டுகளாக சாதி பார்க்காமல் திருமணம் செய்துகொள்வதற்கு என் பெற்றோர்களிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

என் தாய், மேட்ரிமோனி தளங்களின் மூலம் கூட சாதி மறுப்பு திருமணங்கள் பெரிதளவில் நடப்பது இல்லை என்றார்; முடிந்தால் சோதித்துப் பார்க்கச் சொன்னார். அதிர்ச்சி ஊட்டும் வகையில் அவரின் கூற்று உண்மையாக உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக மேட்ரிமோனி தளங்களில் பணம் செலுத்தி எனக்கே வரன் பார்த்தேன். பலர் ‘caste no bar’ என்று போட்டிருந்தாலும் உண்மையில் சாதிக்குள் தான் வரன் பார்க்கிறார்கள். குறிப்பாக அதி நவீன பெண்கள். ஒரு நல்ல வரன் கூட அமையவில்லை.

உடல்நலம், சம்பளம், அழகு போன்றவற்றில் எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆண்கள், பெண்கள் இருவரும் கொண்ட சிறந்த நட்பு வட்டம் இருந்தும், காதல் செய்ய வாய்ப்புகள் இருந்தும்,  காதல் செய்ய விருப்பம் இல்லை. இரு பக்க பெற்றோர் சம்மதத்துடன் சாதி பார்க்காமல் ஏற்பாட்டுத் திருமணம் செய்ய கொள்ளவே விருப்பம். ஆனால் அது நடக்காது போல் தெரிகிறது.

சாதி அற்ற தமிழ்ச் சமூகத்தை உருவாக்க குறைந்தபட்சம் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதி பார்க்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதற்காவே சாதி மறுப்புத் திருமணம் செய்ய முயற்சிக்கிறேன்.

உங்கள் அறிவுரையைக் கோருகிறேன்.

அன்புள்ள அ

உங்கள் கருத்துக்கள் இளமைக்குரிய முதிர்ச்சியின்மை கொண்டவை. இளமையில் நாம் இரண்டுவகையான மாயைகளால் ஆட்கொள்ளப்படுகிறோம். ஒன்று,  நான் பிறர்போல் இல்லை என்று நமக்கும் பிறருக்கும் நிரூபிக்கவேண்டும். அதற்காக எதையாவது புதியதாகச் செய்யவேண்டும். இரண்டு, நமக்கு நம் சூழலும் மரபும் அளித்துள்ள வரையறைகளை சிறையெனக் கருதுவதும், அவற்றை உடைத்து மீறிச்செல்வதுதான் விடுதலை என கருதுவதும்.

பெரும்பாலான இளைஞர்கள் வாழ்க்கைசார்ந்த பல முடிவுகளை இந்த இரண்டு மனநிலைகளைச் சார்ந்து எடுக்கிறார்கள். வேலை, திருமணம், வாழ்க்கையிடம் என பலவற்றை. ஆனால் இளமையின் அந்த வேகம் நடைமுறை யதார்த்தத்தால் மட்டுப்படும்போது உண்மை தெரிகிறது. வாழ்க்கை இன்னொன்று என புரிகிறது. பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையில் பெரியவர்கள் கட்டாயப்படுத்தி திருமணம், வேலை எல்லாம் ஏற்பாடு செய்துவிடுவார்கள். அந்த மீறும் துடிப்பு அடங்கிவிடும். பின்னர் திரும்பிப்பார்த்து ‘நல்லவேளை தப்பித்தேன்’ என ஏங்குவார்கள்.

ஒருவர் தன் வாழ்க்கை சார்ந்த ஒரு முடிவை இரண்டு அடிப்படைகளைக் கொண்டே எடுக்கவேண்டும். 

ஒன்று, தன் இயல்பு மற்றும் அந்த இயல்புக்கேற்ப தான் கொண்டுள்ள வாழ்க்கை நோக்கு. அதையே நான் தன்னறம் என்கிறேன். நாம் மட்டுமே செய்யவேண்டிய செயல், அடையவேண்டிய இலக்கு ஆகியவை தன்னறத்தால்தான் முடிவாகின்றன. ஆகவே வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் அதையொட்டியே எடுக்கவேண்டும். 

இரண்டு, நம் சூழல் மற்றும் அதையொட்டி நமக்கிருக்கும் அடிப்படைக் கடமைகள். ஒருவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அவர்களுக்கு அவர் செய்யவேண்டிய கடமைகள் உண்டு. அவற்றை உதறி அவர் தன் தன்னறம் என்று சொல்லி ஒரு அலைந்து திரியும் வாழ்க்கையை தேர்வுசெய்ய முடியாது. 

எவரும் எந்த உறவிலும், அல்லது எந்தக் கடமையிலும் நிரந்தரமாக கட்டுண்டுவிடக்கூடாது. எவரும் இன்னொருவருக்கு தன் வாழ்க்கையை முழுமையாக அளித்துவிடவும் கூடாது. அதாவது ஒருவர் இன்னொருவருக்காக வாழ்வது போல அர்த்தமின்மை வேறில்லை. அது ஆன்மாவை அழிக்கும் செயல். எவரும் தன் அறிவார்ந்த மலர்ச்சி, ஆன்மிக முன்னகர்வு ஆகியவற்றை எந்நிலையிலும் விட்டுவிடக்கூடாது. பெற்றோருக்காகவோ பிள்ளைகளுக்காகவோ, கணவனுக்காகவோ, மனைவிக்காகவோ.

ஆனால் அடிப்படைக் கடமைகளைச் செய்தாகவேண்டும். அதாவது, அடிப்படையானவற்றை மட்டும். அவற்றைச் செய்வது அவற்றிலிருந்து விடுபடுவதற்காகவே. கடமை என்பது தார்மீகப் பொறுப்பு. எந்த பொறுப்பும் சுமை. எந்தச் சுமையும் வாழ்க்கை முழுமைக்குமானது அல்ல. எந்த பொறுப்பும் அதில் இருந்து எத்தனை முடியுமோ அத்தனை விரைவாக வெளியேறும்பொருட்டே செய்யப்படவேண்டும்.

ஆக, மேலே சொன்ன  இரண்டு அம்சங்களின் சமரசமாகவே நம் முடிவுகள் அமையவேண்டும். ஒன்று நம் தன்னறம், இன்னொன்று, நம் சூழல். அப்படித்தான் நீங்கள் உங்கள் மணம் பற்றிய முடிவை நீங்கள் எடுக்கவேண்டும்.

சாதிபாரா திருமணம் செய்யவேண்டும், சரி. ஆனால் அது மட்டுமே திருமணத்துக்கான நிபந்தனயா என்ன? உங்கள் வாழ்க்கைத்துணை பற்றி வேறு கற்பனையே உங்களுக்கு இல்லையா? திருமணம்தான் வாழ்க்கையின் ஒரே இலக்கா? வாழ்க்கையின் மையச்செயல்பாடே அதுதானா?

சாதி பாராமலிருந்தால் எந்தப்பெண்ணையும் மணப்பீர்கள் என்றால் நீங்கள் திருமண உறவு பற்றி கொண்டுள்ள சித்திரம்தான் என்ன? அது ஒரு ‘show’, அதாவது பிறருக்கான ஒரு தோற்றம், அவ்வளவுதானே? ‘நீங்கள் சாதிபாராதவர்’ சரி. அந்த தோற்றத்தை காட்டிவிட்டீர்கள். பிறகென்ன? எஞ்சிய வாழ்நாள் முழுக்க ‘நான் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டேனாக்கும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பீர்களா? அதுவா ஒருவரின் வாழ்நாள் சாதனை?

உங்கள் இயல்பு என்ன, திறன் என்ன என்று வகுத்துக்கொள்ளுங்கள். அதற்குரிய ஒரு பெருங்கனவை உங்களுக்குரிய இலக்காக வகுத்துக்கொள்ளுங்கள். தொழில், குடும்பம் ஆகியவை எல்லாம் சிறுவாழ்க்கையே. மெய்யான வாழ்க்கை, அதாவது பெரிய வாழ்க்கை என்பது உங்களுக்கான அந்த இலக்கு நோக்கிய பயணம்தான். ஒவ்வொருநாளும் சிறிதேனும் அந்த இலக்கு நோக்கிச் செல்லுங்கள். அறிவார்ந்தும், ஆன்மிகமாகவும். அதுவே வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது.

அந்த இலக்குநோக்கிய வாழ்க்கையில் உங்களுக்கு பிசிறின்றி துணையாகும் பெண்ணை, அவர் எவராயினும் மணந்துகொள்ளுங்கள். அவருடன் இணக்கமான ஓர் உறவை உருவாக்கிக்கொள்ளுங்கள். அவ்வுறவு வாழ்க்கை முழுக்க நீடிக்கவேண்டும். ஆகவே மணமாவதற்கு முன் அவருடைய இயல்பு, அறிவுத்திறன் ஆகியவை உங்கள் இயல்பு, அறிவுத்திறன் ஆகியவற்றுடன் இணைந்துசெல்லுமா என்று பாருங்கள். 

நீங்கள் சாதிமறுப்பாளர் என்றால் அந்த தேர்வின்போது சாதியை எந்தவகையிலும் ஓர் அளவுகோலாகக் கொள்ளாமலிருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் செய்யவேண்டியது. அது பெருமை அல்ல. அது ஒன்றும் ‘சமூகசேவை’யும் அல்ல. அது இயல்பான ஒரு நிகழ்வு, அவ்வளவுதான். சொல்லி அலையவேண்டிய ஒரு தனித்தகுதி அல்ல, சிறப்பான நிகழ்வும் அல்ல.

ஒருவர் திருமணம் செய்துகொள்ளவேண்டியது தன் அகவாழ்க்கையை இனிதாக, முரணற்றதாக அமைத்துக்கொள்ளும் பொருட்டுத்தான். இனிய குடும்பத்தை அடையும்பொருட்டுத்தான். குடும்பம் என்பதன் நோக்கமே அதுதான். சமூகசேவைக்காக, சமூகமாற்றத்துக்காக எல்லாம் திருமணம் செய்துகொள்வதாக நம்புவது அபத்தம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2025 10:35

தில்லை செந்தில்பிரபு

யோக, தியானப்பயிற்சியாளர். தொழில்முனைவோர். கல்விப்பணியாளர். ஆனந்த சைதன்யா தியான மையம் அமைப்பின் வழியாகவும், முழுமையறிவு அமைப்பின் வழியாகவும் தியான வகுப்புகளை நடத்தி வருகிறார்.

தில்லை செந்தில்பிரபு தில்லை செந்தில்பிரபு தில்லை செந்தில்பிரபு – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2025 10:33

நீலி- சிவகாமி சிறப்பிதழ்

அன்பு ஆசிரியருக்கு,

நீலியின் நவம்பர் 2025 இதழ் எழுத்தாளர் ப.சிவகாமி சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் ப.சிவகாமியின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அவரின் படைப்புகள் சார்ந்த கட்டுரைகளை எழுத்தாளர்கள் எம். கோபாலகிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ஸ்டாலின் ராஜாங்கம், விக்னேஷ் ஹரிஹரன், சக்திவேல், ரம்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.

அறிவியல் துறையில் பெண் ஆராய்ச்சியாளர்கள் வரிசையில் பேராசிரியர் வெங்கட்ரமணன் இந்தமுறை ரீட்டா லெவி மோந்தால்சினி பற்றி எழுதியுள்ளார். அனுராதா கிருஷ்ணசாமியின் கடவுளுக்கென ஒரு மூலை மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு குறித்து இல.சுபத்ரா எழுதியுள்ளார், கமலாதேவி சடோபாத்யாயா என்ற ஆளுமை குறித்து சித்ரா பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார். தேவரடியார்கள் குறித்த வெவ்வேறு பரிமாணங்களைத் தரும் இரு கட்டுரைகளை வீர. ராஜமாணிக்கம், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.

மொழிபெயர்ப்பு பொறுத்து எலிஃப் ஷஃபாக்–இன் பெண்ணியக் கட்டுரை ஒன்றை மதுமிதா மொழிபெயர்த்துள்ளார். சமகால தெலுங்கு பெண் எழுத்து வரிசையில் இம்முறை அவினேனி பாஸ்கர் ஸ்ரீசுதா மோதுருவின் கதையையும், சமகால உலகப்பெண் சிறுகதைகள் வரிசையில் நரேன் ரஷ்ய எழுத்தாளர் யெவ்ஜெனியா நெக்ரஸோவாவின் கதையையும் மொழிபெயர்த்துள்ளனர்.

 

நீலி இதழ்

 

நீலி குழு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2025 10:31

வளைகுடா பகுதியில்- பாலாஜி

அன்புள்ள ஜெ,

இந்த முறை சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி பிரயாணத்தின் பொழுது உங்களுடன் இருந்த மூன்று நாட்களும் மிகப்பெரும் உணர்வெழுச்சியை எனக்குள் ஏற்படுத்தியது. மனம் தொடர்ந்து ஒரு உச்சத்திலேயே அலை பாய்ந்து கொண்டிருந்தது. உங்களை ஒரு பெயராக அறிந்த அந்த நாள் முதல் ஒரு நாள் கூட உங்கள் பெயரை நினைக்காமல் கடக்காத இந்த நாள் வரை தொகுத்து கொள்ளத் தோன்றியது.

விகடன் உதவியால் முதல் அறிமுகம். உங்கள் தளம் அதிகம் புரிந்ததில்லை என்பதனாலும், மனம் அன்று குப்பைகளிலேயே உழன்றதனாலும், ஒரு இடைவெளி. மீண்டும் சாரு அவர்களின் புண்ணியத்தால் உங்கள் பக்கம் வந்தேன். இந்த முறை வாசிப்பில் சிறு முன்னேற்றம், கூடவே முயன்று வாசிக்க நினைத்ததனாலும், உங்களைப் பற்றிக் கொண்டேன். அதிலிருந்து இடரில்லை.

இந்நிலையில் உங்கள் அமெரிக்க வருகை (2009 என்று நினைவு) எனக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது. Folsom வந்திருந்த உங்களை சந்திக்க கலந்துரையாடல் நடந்த அந்த அறை வாசல் வரை வந்து, எதோ ஒரு அற்ப காரணத்துக்காக திரும்பிச் சென்றதை நினைத்து இன்று வரை வருந்துகிறேன். அப்பொழுதே அதைப் பற்றி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி புலம்பியுமிருக்கிறேன். பிறகு ஏழாம் உலகம் வாசித்து முடித்து, அந்த கொந்தளிப்பு அடங்காமல் தவித்து, அதைப்பற்றியும் உங்களுக்கு எழுதி மீண்டேன்.

2012-ல் விடுமுறையில் சென்னை வந்திருந்த பொழுது, ஜோ டி குருஸ் அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததற்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வது குறித்த செய்தி தளத்தில் கண்டு, உற்சாகத்தோடு உங்களை சந்திக்க லயோலா காலேஜ் வந்தேன். பேசுவதா இல்லையா என்ற குழப்பம் தாண்டி பேசும் துணிவு குறித்த குழப்பத்தோடு முதன் முதலில் உங்களைப் பார்த்தேன். யாருடனேயோ உரையாடிக் கொண்டிருந்த நீங்கள் தற்செயலாக திரும்பிய பொழுது உங்கள் கண்கள் என்னைத் தொட்டு மீண்டன. எனக்கு முதலில் மிகவும் வித்தியாசமாக தெரிந்தது அந்தக் பளிங்குக் கண்கள். வசீகரமாகவும் இருந்தன அதே நேரம் தள்ளி நிற்கவே தோன்றியது. இரண்டு மூன்று முறை உங்களை நெருங்க முயன்று முயற்சியைக் கைவிட்டேன்.

பிறகு 2015-ல் மீண்டும் உங்கள் அமெரிக்க விஜயம். இந்த முறை சான் ஹோஸேயில் உங்களுடன் திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களும் இருந்த நிகழ்வு. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடன் பேசத் தொடங்கி, சரளமாக அவரது நாவல்கள் தொடங்கி கட்டுரைத் தொகுப்புகள் வரை பல விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் துணிவில், நிகழ்ச்சி முடிந்து நீங்க மேடையிறங்கியவுடன் அருகில் நெருங்கினால், அதே பளிங்குக் கண்கள். பேச முடியாமல், உங்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். மேலும் சிலர் சூழ்ந்து கொண்டனர். எவரும் பேசத் தொடங்குமுன், அச்சூழலை எப்படி சரியாகப் புரிந்து கொண்டீர்களோ தெரியவில்லை. சட்டென்று இலகுவாகி, சினிமா, இயக்குனர் ஷங்கர், 2.0 என்று நீங்கள் பேச சிலர் உற்சாகமானார்கள். எதுவும் பேசத் தோன்றாமல், வாசல் வரை வந்து பிரிந்தேன். அந்த சமயத்தில் வேறு தனிப்பட்ட கூடுகைகள் நடக்கும் விவரங்கள் தெரியாமல் அப்படியே விட்டு விட்டேன்.

2016-ல் மீண்டும் ஒரு விடுமுறை. மற்றுமொரு இந்தியப் பயணம். இந்த முறை நீங்கள் காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரியில், “காந்தீயம் தோற்கும் இடங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை கேட்க வந்தேன். மேடை நிகழ்வுகள் அபாரம். உங்கள் உரை ஒரு பக்கம், சாரதா நம்பி ஆரூரனின் ஆறுமுக நாவலர் குறித்த பேச்சுக்கு உங்கள் அற்புதமான எதிர்வினை (உண்மைக்கு நெருக்கமான மற்றொரு உண்மை) இன்னொரு பக்கமுமாக அற்புதமாக அமைந்தது. நிகழ்வு முடிந்ததும் மீண்டும் உங்களை சந்திக்க காத்திருந்தேன்.

அப்பொழுது அருகில் உங்களுக்காக சுகா அவர்களும் காத்திருந்தார். அவரைப் பார்த்ததும், அவரது மூங்கில் மூச்சு படித்திருந்த பரவசத்தில், அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில், தஸ்தாயெவ்ஸ்கியின் பேனாவிலிருந்து குதித்து வந்த பாத்திரத்தைப் போல முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்தேன். எதோ ஒரு தருணத்தில் அவர் திரும்ப, சட்டென்று ஒரு உந்துதலில் எல்லாம் மறந்து சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டு அவரைத் தள்ளி நிற்க வைத்தேன்.

இந்தப் பதட்டத்தில் நான் இருக்கும்பொழுதே நீங்கள் அருகில் வந்து விட்டீர்கள். அருகில் உங்கள் பார்வை என் மேல் பட்டுத் தாண்டியது. மீண்டும் பளிங்கு. மீறி ஏதேனும் பேசலாம் என்று முடிவெடுத்த நிலையில், அங்கு புயலென நுழைந்தார் ஒருவர். உங்கள் அருகே வந்து கை குலுக்கி, கட்டியணைத்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் தான் ராம்ஜி யாஹூ என்று யாரோ சொல்ல பிறகு அறிந்தேன். பிறகு அந்தத் தருணம் கடந்தது. மீண்டும் வாசல் வரை உங்களைத் தொடர்ந்து வந்து பின் பிரிந்தேன்.

இதற்குப் பிறகு வழக்கம் போலவே உங்கள் வலைதளம் மூலம் உங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். 2020-ல் தனிமையின் புனைவுக்களியாட்டு எழுதிய நேரத்தில், வாசகர்களையும் கதைகள் எழுதக் கேட்டீர்கள். அந்த நேரத்தில், நானும் ஒரு சிறு அனுபவத்தை எழுதி அனுப்பினேன். அது சிறுகதையாகாது என்ற உண்மை தெரிந்திருந்தும் அனுப்பினேன். அதையும் வாசித்து அதன் பிரச்சினையை மூன்றே வரிகளில் கனிவாக விளக்கியதை என்றும் மறக்க முடியாது.

மீண்டும் 2022-ல் தங்களின் மற்றுமொரு அமெரிக்கப் பயணத்தில், வால்நட் கிரீக்கில் நிகழ்ந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். அங்கு தான் இப்பொழுது VLC குழுமத்தில் இருக்கும் அனைவரையும் முதலில் கண்டேன். அன்று இருந்தது ஒரு சிறு குழு, நிறைவான சந்திப்பு. அன்றும் உங்கள் கண்களைப் பார்த்து தயக்கத்தோடே நின்றிருந்தேன். ஆனால் அருகிலிருக்கும் சந்தர்ப்பம் சற்று நீண்ட நேரத்துக்கு கிடைத்தது. அதை அனுபவித்துப் பிரிந்தேன்.

ஆனால் இந்த முறை (2025) தங்களின் வருகை, ஒரு புதிய தொடக்கம். சாரதா–பிரசாத்தின் இல்லத்தில் நடந்த சந்திப்பில், அசோகமித்திரனின் கதைகளை பேசி விவாதித்தோம். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் உங்கள் பார்வையை அறிய ஆவலுடன் பார்த்திருந்தேன். மேலும், விவாதத்தில் சுற்றி அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் பேசும் போதும், உங்கள் இடத்திலிருந்து முயன்று அவர்களை கவனித்தது பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது. விவாதம் முடிந்து, எங்கள் குழுமத்திற்கு சில ஆலோசனைகளை வழங்கிய பிறகு, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து நானும் கலந்து கொண்டேன். சில கேள்விகளையும் கேட்டேன். மிகவும் உற்சாகமான முதல் நாள் சந்திப்பு.

மறுநாள் காலை 10 மணிக்கு சான் மட்டையோ Barnes & Noble புத்தகக் கடையில் இருந்த நிகழ்வில் மீண்டும் சந்திப்பு. அந்நிகழ்வு நிறைவாக, நெகிழ்வாக இருந்தது. இவ்வளவு பேர் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. குறிப்பாக புதியவர்கள் சிலர் வந்திருந்தது சந்தோஷமாக இருந்தது. இதில் நான் தனிப்பட்ட முறையில் நான் கொள்வது, என் மகன் உங்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு உங்கள் பதிலும். அன்று அவன் கேட்ட கேள்வி அவனைப் புதிதாக அறிய வைத்தது. கேள்விக்கு உங்கள் பதிலும் (“Dream in language. Become a writer.”), எனது நல்லூழ் என்றே ஏற்கிறேன். அவன் ஒருவித பரவசத்தோடு வீட்டில் சுற்றியதாக பிறகு அறிந்தேன். அதிகம் பேச நேரமில்லாமல் நான் மதியம் Folsom வந்துவிட்டேன். அங்கும் மாலையில் உங்களுடன் இருந்த சில மணி நேரம், அற்புதம் (உ. வே. சா குறித்த உரையாடல் நெகிழ்வாக இருந்தது). வீடு திரும்பும் பொழுது காரில் பத்மநாபா, ஸ்ரீ மற்றும் அவரது சகோதரர், குகன் மற்றும் சிந்து ஆகியோருடன் உங்கள் எழுத்துக்களைப் பற்றியும், இலக்கியமும், இன்ன பிற விஷயங்களையும் பேசிக்கொண்டே திரும்பினோம். முற்றிலும் மகிழ்வான நாள்.

மறுநாள் நாவல் பயிற்சிப் பட்டறை. நண்பர் பத்மநாபா கூறியது போலத்தான் நானும் உங்களுடன் நாள் முழுவதும் இருக்கலாம் என்றே கலந்து கொண்டேன். ஆனால் தொடக்கத்திலிருந்தே தெளிவான வரையறைகளுடன் கூடிய வகுப்பாக அமைத்தது, செறிவான ஒரு பயிற்சியாக இருந்தது. கரு மற்றும் பேசுபொருள் குறித்த வித்தியாசங்கள், கதையில் இருக்கக்கூடாத shift, பாத்திரங்களின் வரைவு போன்ற பல விஷயங்களை தொகுத்து அறிந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் என்னைக் கவர்ந்தது, ஒரு புகைப்படத்தில் நாவலுக்கான கருவைக் கண்ட எழுத்தாளரின் சித்திரம். அதைத் தொடர்ந்து நானும் இங்கு தெருவில் நடக்கும் போதெல்லாம் கண்களை விரித்து ஏதேனும் கதைக்கரு கிடைக்கிறதா என்று தேடி வருகிறேன். நான் உற்றுப் பார்ப்பது ஏதேனும் பிரச்சனையை கொண்டு வரலாமென்றாலும், கரு கிடைத்தால் நல்லது!

இவையெல்லாம் கடந்து, அன்று மாலை 2 மணி நேரம் உங்களுடன் பல்வேறு விஷயங்களை நெருக்கத்திலமர்ந்து கேட்டுக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தது என் வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று. இந்த மூன்று நாட்களில் உங்களிடம் இருந்து பெற்றவையெல்லாம் ஓர் வரமே. எங்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவரான உங்களிடம் நாங்கள் பெற்றுக் கொண்டது ஏராளம். இந்த செயலூக்கத்தைத் தக்க வைப்பது ஒன்றே நான் உங்களுக்குத் செலுத்தும் நன்றி.

அன்று நாவல் பயிற்சிப் பட்டறை முடிந்து விடை பெற்று, தத்துவ முகாமில் மீண்டும் உங்களை சந்திக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியில், நெஞ்சம் படபடக்க வீடு திரும்பினேன். வழியில் சட்டென்று உங்களுடன் இருந்த, இந்த மூன்று நாட்களும் அந்தப் பளிங்குக் கண்களை சந்திக்கவே இல்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

 பாலாஜி

அன்புள்ள பாலாஜி

அமெரிக்கா வருவதும், நண்பர்களைச் சந்திப்பதும் இப்போது அடிக்கடி நிகழ்வதாக ஆகிவிட்டது. உண்மையில் இந்தியாவில் நண்பர்களைச் சந்திப்பதுதான் குறைந்துவிட்டதாக புகார் சொல்கிறார்கள். இனிய நினைவுகள்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2025 10:31

ஏழாம் உலகின் கதை

உங்கள் காணொளியிலே நீங்கள் ஏழாம் உலகம்பட்டி பேசியிருந்ததை இப்போது கேட்டேன். என்னுடைய வாசிப்பில் உங்களுடைய படைப்பில் முதலானவதாக படித்தது ஏழாம் உலகம்தான். அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அப்போது கொடுத்தது.

ஏழாம் உலகின் கதை

 

I often reiterate the same points in my classes. Rationality is fundamentally a scientific perspective, grounded in clear evidence and the logic that supports it. If such evidence is absent, then it cannot be classified as science. Regardless of whether the evidence supports our viewpoint or that of the opposition, both hold equal weight.

 

What does rationality mean?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2025 10:30

November 2, 2025

நியூ ஜெர்ஸி நூலறிமுக நிகழ்வு

அமெரிக்காவிற்கு அக்டோபர் 8 அன்று வந்திறங்கினேன். தொடர்ச்சியான நூலறிமுக நிகழ்வுகளுக்குப் பின் இறுதி நிகழ்வு நியூஜெர்ஸியில் நவம்பர் 9 அன்று மதியம் 1 மணிமுதல் .பத்தாவது நிகழ்வு இது. இது நூல் உரையாடல், நூல் கையெழுத்திடல். நவம்பர் 12 அன்று ஊர்திரும்புதல். நவம்பர் 14 அன்று நாகர்கோயில்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2025 17:21

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.