Jeyamohan's Blog, page 14
November 9, 2025
சௌந்தர் ராஜன்
யோகப்பயிற்சி ஆசிரியர். பிகார் மரபு எனப்படும் சத்யானந்த யோக முறையின் முதுநிலை ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். இலக்கியத்தின் வழியாக நவீன வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அதற்கேற்ப யோகப்பயிற்சிகளை அளிக்கிறார்.
சௌந்தர் ராஜன்
சௌந்தர் ராஜன் – தமிழ் விக்கி
நேயமுகிலின் உலகம்- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்அமெரிக்க நிகழ்ச்சிகளை புகைப்படங்கள் வாயிலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உலகரங்கில் உங்களுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பும் அங்கீகாரமும் எங்கள் அனைவருக்குமானது என்றே பெருமிதம் அடைகிறோம்.சவுத் கரோலினாவில் மாபெரும் அரங்கு நிறைந்த கையடியைப் பார்க்க அத்தனை சந்தோஷமாக இருந்தது.ரத்தச் சிவப்பிலும் பசுமஞ்சளிலும் இருக்கும் மேப்பிள் மரங்கள் கொள்ளை அழகு. மரங்களுக்கு மத்தியில் அருணா இருக்கும் புகைப்படங்கள் மேலும் அழகு, ஜப்பான் ஒரு கீற்றோவியத்தில் பார்த்த அதே கலர்ஃபுல் அருணா.
இங்கே கடந்த சனிக்கிழமையன்று அருகில் முகுந்த் நாகராஜன் அவர்களின் கவிதைகளுக்கான ஓர் கூடுகை நடந்தது. கவிஞரும் மருத்துவருமான வேணு வேட்ராயன் இந்தச் சந்திப்பை ஒருங்கிணைத்தார். 20 பேர் கலந்து கொண்டோம். ஒரு குறுங்காட்டுக்குள் ஏராளமான மரங்களும், நிழலும் நிறைந்திருந்த மழலையர் பள்ளியொன்றில் சந்திப்பு நிகழ்ந்தது. முகுந்த் நாகராஜன் பெங்களூருவிலிருந்து வந்திருந்தார். அவர் கவிதைகளின் வழியே எங்களுக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த கார்த்திகாவும் நேயமுகிலும் வரவில்லை எனினும் நேயமுகில் கவிதைவடிவில் அங்கேதான் ஓடியாடிக்கொண்டிருந்தாள்.
இந்த சந்திப்பு உறுதியானதிலிருந்தே பங்கேற்பாளர்கள் அனைவரும் முகுந்த் நாகராஜனின் கவிதைதொகுப்பையும் அவாது வலைத்தளத்தையும் தொடர்ந்து வாசித்திருந்தோம்.நேயமுகில் எங்கள் எல்லோருடைய மகளுமாகியிருந்தாள்.
அவரது கவிதைகளின் எளிமையும் அதற்கு மாற்றாக அவை சுட்டும் தீவிரமானவைகளும், கல்லூரியின் இந்தப் பருவத்துக்கான கடைசி நாட்களில், அத்தனை வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு என்னை இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோசூர் செல்லவைத்தது.
முகுந்த் நாகராஜன் கவிதைகள் இழந்த பால்யத்தை, காதலை, குழந்தைமையை. மகளதிகாரத்தை. தனிமையை. இறப்பை, மொழியை, எண்களை, பெயர்களை, மழையை,சொந்த நிலத்தை, இயற்கையை, பொருள் வயின் பிரிந்திருப்பதன் துயரை, தனிமையை,கனவுகளை, நகர வாழ்வில் பொருந்திக் கொள்ள முடியாத சிக்கல்களைப் பேசுபவை.
ஒரே முறை தான்
கலவரம்
பழக்கப்பட்ட ஊரின்
முகம் மாறிப் போயிற்று .
தினம் போகும் , வரும் சாலையில்
டயர்களை எரித்துக் கொண்டிருந்தார்கள்
கோஷம் போட்டபடி .
தற்காலிக உற்சாகத்தில் ,
பாதையின் குறுக்கே விழ
மரத்தை அறுத்தது ஒரு கும்பல் .
அப்போதுதான்
முதல் தடவையாய்
அந்த மரத்தை
அங்கு பார்த்தேன் .
முதல் தடவையே கடைசித்தடவையுமானதைச் சொல்லும் இந்தக்கவிதையும் அதன் தலைப்பும் அளிக்கும் துயரம் எல்லோருக்குமானது.
அவர் கவிதைகள் காட்டும் ரயில் நிலையம், அதன் வாசலில் விற்கப்படும் பொம்மை, மால்கள், பூவிற்பவர்கள், தெருக்கள், தோசைகள், அளவுச்சாப்பாடு, குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள் மற்றும் கரப்பான்பூச்சிகளாலான அன்றாடமும் அனைவருக்குமானதுதான் என்றாலும் அதன் கவிதைத் தருணங்களைத் தவறவிட்டவர்கள் தான் அக்கவிதைகளின் வாசகர்களாயிருந்தோம் என்பதை ஒவ்வொரு கவிதையும் சொல்லிக்கொண்டே இருந்தது.இனி எந்தப்பெயர் தெரியாத ஊரின் ஹோட்டலிலும் இருக்கும் குள்ள வாஷ்பேசினும் எங்களுக்கு மிகப்பிடித்தமான தொன்றாகத்தான் இருக்கப் போகிறது.
காதலின் மகத்துவத்தை பேசிப்பேசித் தீர்க்கும் கவிதைகளுக்கு மத்தியில் இழந்த காதலும், இடம் மாறிப்போய்விட்ட சலவைக் கடையும் ஒன்றென்னும் இந்தக் கவிதை உண்மையில் ஆசுவாசமளிக்கிறது.
ஒரே நாளில்
நீ என் காதலை மறுத்த
அதே நாள் மாலை
எங்கள் தெரு சலவைக்கடை
இடம் மாறி
வெகு தொலைவுக்குச் சென்றது .
இப்படி
ஒரே நாளில்
எல்லோரும் என்னைக்
கை விட்டால் எப்படி ?
சமீபத்தில் பெங்களூருவில் மகன் தங்கி இருக்கும் வீட்டுக்குப்போனபோது வீடு தொடங்கிய இடத்திலேயே முடிந்து போனது எனக்கு பெரும் ஏமாற்றமளித்தது. காலெட்டி வைத்து நடக்கமுடியாவிட்டால் போகிறது கைவீசிக்கூட நடக்கமுடியாத இடத்தை எப்படி வீடென்பது என்று விசனப்பட்டேன். அங்கிருந்து விரைந்து ஊர் திரும்பினேன்.
முகுந்தின்
ஒரு பெட்ரூம் ஹால் கிச்சன் அவ்வளவுதானா ? v
என்னும் கவிதையும்,
தரைக்கு மேலே போய்விட்டது வாழ்க்கை , தரை இருக்கிறதா இந்த வீட்டுக்கு என்று பார்க்க குனிந்தேன் //
போன்ற கவிதைகள் நகரங்களின் அடுக்கக வாழ்வை நினைவூட்டுபவை.
எப்போதும் எதையோ சொல்லவருவது போல முகம் கொண்டிருந்த ஒருத்தி கல்யாணத்துக்கு பிறகு வைத்திருக்கும் ஊமை முகம் எனக்கு அந்தரங்கமாக துயரளித்தது. கவிழ்த்துப் போடப்பட்ட அளவுச் சாப்பாட்டின் வட்ட விளிம்பில் பிரதிபலிக்கும் தனிமையைப் பேசும் கவிதையும் அப்படித்தான்,
ஆனால் நேயமுகில் வரும் கவிதைகள் எல்லாம் நிச்சயமாக மனதிலிருந்து புன்னகைக்க வைக்கின்றன.வெண்ணெய் தின்னும் கிருஷ்ணன் சிலையோடு விளையாடுகையில் ’’வாயில் விரலை வைக்காதே கிருஷ்ணா’’ என்கிறாள் நேயமுகில் ’’சாரி நேயமுகில்’’ என்கிறான் கிருஷ்ணன். முகுந்த் நாகராஜன் பேசுகையில் ’’குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை, ஆனால் நாம் செய்வதை திருப்பிச் செய்கின்றன’’ என்றார்
வெகு காலத்துக்கு பேசப்படும் கவிதைகளை எழுதியவரும்,அமைதியே வடிவானவருமான முகுந்த் நாகராஜன் அந்த முழுநாளிலும் மொத்தம் நூறு சொற்கள் கூட பேசி இருக்க மாட்டார். சில்லிட்டிருந்த தரையில் அந்த மழலையர் பள்ளிக்குழந்தைகளின் குட்டிகுட்டிப் பாய்களைப் போட்டுக்கொண்டு நாங்களும், மாடிப்படியில் வேணுவும், ஒரு நாற்காலியில் முகுந்துமாக அமர்ந்து நாளெல்லாம் கவிதையை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது இனிய அனுபவமாக இருந்தது.
குழந்தைகளின் உலகில் நுழையமுடியாத, குழந்தைகளைப் புரிந்துகொள்ளாத பெற்றோர்களையும், குழந்தைமையை, குழந்தைகளின் தனித்தன்மையை காலடியில் தேய்த்து நசுக்கும் பள்ளிக்கூடங்களையும் அவரின் பல கவிதைகள் பேசுகின்றன.
குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் ரயிலுக்கு வழியனுப்ப அந்த குழந்தைகள் பெர்த்தில் படுத்து போர்த்திக் கொள்வதும் ஒரு குழந்தை அவர்களிடம் டிக்கெட் கேட்பதும் அவர்கள் பிரிந்து செல்லும் ரயிலும், பெரியவர்கள் அந்தப் பயணத்தை வெறும் பெரியவர்களுக்கானதாக்கி விட்டு ரயிலை பொருட்படுத்தாமலிருப்பதையும் சொல்லும் கவிதை.
’சடுக்கு மடம்’ கவிதையும் அதைப்போலத்தான். அவன் சரியாக சறுக்குமரம் என்று உச்சரிக்கையில் அவனது கள்ளமற்ற அறியாமை விலகி அவன் முதிர்ந்து விடுகிறான். சொந்தமாக விழுந்து உடைந்த கோப்பையைக் குறித்த கவிதையை வெகு நேரம் பேசினோம். முகுந்த் அப்போது ‘’fall on its own’’ குறித்து விளக்கிப் பேசுகையில் அவரது கவிதைகளில் தெரியும் முகுந்த் நாகராஜன் என்னும் எளிய மனிதரல்லாத, ஒரு தீவிரமான ஆளுமையை பார்த்தோம்.
சரவணபவனில் தன்னால் சாப்பிட முடியாத பெரிய தோசையை வாங்கிய சின்னப்பெண்ணும்,ஒருத்தனுக்கு எதுக்கு முழுதர்பூசணிப்பழமும் போன்ற கவிதைகள் காட்டும் சப்டெக்ஸ்ட் அபாரமாயிருந்தது.அம்மாவும் பெண்ணும் கடல்பண்ணி, அதன் கரையில் சிப்பி எடுத்து விளையாடும் கவிதையும் அப்படித்தான். ரெட்பலூன் கொடு’ என்றதும் திடுக்கிடும் சாமியும். தினம் கட்டுபடியாகாததால் கிணற்றில் போடப்படும் கடவுளும் இருக்கிறார்கள் இவரது கவிதைகளில்.
எனக்கு இந்தத் தொகுப்பில் மிகமிகப்பிடித்ததவை என்றால் பச்சைப்புன்னகையு , அற்றைத்திங்கள் மற்றும் நிலவில் மயங்குவது ஆகியவை.
ஹோசூரிலிருந்துதிரும்புகையில் ரயிலடிக்கு வந்து அழைத்துச் சென்ற தருணுடன் பொள்ளாச்சி வரும்வரைக்கும் நேயமுகிலின் கின்மோர் விளையாடினோம்.தருண் நேயமுகிலாகி இருக்கிறான். இப்போது தினம் பெங்களுருவில் இருந்தும் கின்மோர் விளையாடுகிறோம்.
காட்டுயானை ஒன்று வீட்டுக்குள் நுழைந்து சமாளிக்க முடியாமல் போவதும், வேலைக்கும் காலைக்குமாய் ஒரு கடி கடிக்கும் மகளும், பஸ்நம்பர் கூட தெரியாத அந்தக் குட்டி கரப்பான் பூச்சியும் வாழ்க்கை அப்படியொன்றும் சலித்துக் கொள்ளவேண்டிய ஒன்றல்ல என்று இவரது கவிதைகள் படிப்பிக்கின்றன. உலகமே பாலிஷ் போட்டது போல மேலும் மெருகேறி இருக்கிறது இப்போது.
திரும்பும் ரயில் பயணத்தில் திண்பண்டங்கள் விற்பனைச் செய்வபர்களை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு சுக்குக்காபி சுக்குக்காபி , பிரட் ஆம்லேட் பிரட் ஆம்லேட் என்று தானும் விற்றுக்கொண்டிருந்த ஒரு குட்டிப்பெண் நேயமுகிலாகத் தெரிந்தாள்.
நிகழ்ச்சி முழுநாளும் உற்சாகமாக நடந்தது நேரத்துக்கு உணவு ,தேநீர் சிற்றுண்டிகள் கிடைப்பதை சரண்யா உறுதிபடுத்தினாள். விஷ்ணுபுர நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இப்படியான ஒருங்கிணைக்கும் இயல்புகள் எல்லாம் இயற்கையாகவே வந்துவிடுகிறது என்று சரண்யாவை பார்க்கையில் நினைத்துக்கொண்டேன்.
முழுமனதாக நிகழ்ச்சியிலும் பங்கேற்பாள், இடையிடையே வரும் போன் அழைப்புக்களைக் கேட்டு உணவு தேநீரை எல்லாம் வாங்கிவைப்பாள், நிகழ்ச்சி முடிந்தபின்னர் அந்த இடத்தை தூய்மைசெய்து குப்பைகள் வெளியே கொண்டுபோய் போடப்படுவது வரைகுமேஅக்கறையாக கவனித்தாள். சரண்யாவுக்கு எங்கள் அனைவரின் சார்பிலும் நன்றியும் அன்பும்.
நிகழ்ச்சியின் துவக்கத்திலும் முடிவிலும் சின்னஞ்சிறு கிளியேவை இனிமையாக பாடிய தீபாவுக்கும், வேணு வேட்ராயனுக்கு ஒருங்கிணைப்பில் உதவிய செல்வஜெயபாரதிக்கும் நன்றி. வேணு வேட்ராயனைப் போல கண்டிப்பான ஒரு கவிஞரை நான் இதுவரை சந்தித்ததில்லை. அத்தனை பேரும் எல்லா கவிதைகளையும் வாசித்திருக்க வேண்டும், கவிதைகளை விரைவாக வாசிக்க கூடாது மெதுவாக அனுபவித்து வாசிக்க வேண்டும் என்ற கண்டிப்புடன் சொல்லி இருந்தார்.
நிகழ்ச்சியின் இடைவேளையில் என்னிடம் சிலர் தாவரவியல் குறித்து பேசத் தலைப்பட்டபோது ‘’கவிதையைப்பத்தி பேச வந்தா அதை மட்டும்தான் செய்யனும் ‘’ என்று கடிந்துகொண்டார் (வேணும்னா தாவரவியலுக்கு ஒரு அமர்வு வச்சுக்கலாம் இன்னொரு நாளைக்கு லோகமாதேவி!!!!) நல்லவேளை வேணு வேட்ராயன் பேராசிரியர் பணிக்கு வராமல் மருத்துவராக இருக்கிறார் . மாலை ஒவ்வொருவராகக் விடைபெற்றுக் கொள்கையில் ராஜேஷ் என்னும் இளைஞர் வேணுவிடம் போய் அவர் கைகளை பிடித்துக்கொண்டு ’’ரொம்ப நல்லா இருந்தது நிகழ்ச்சி, ரொம்ப சந்தோஷம். கவிதை முகாமுக்கு வந்ததும் லோகமாதேவியைச் சந்திச்சதும்’’ என்று சொல்லத்துவங்கினார். பதறிப்போன நான் தொலைவிலிருந்தே ராஜேஷ்க்கு சைகை செய்து அத்தோடு நிறுத்திக் கொள்ளச்சொன்னேன் நிறுத்திக்கொண்டார் :)
நிகழ்ச்சியை மிகக்கச்சிதமாக ஒழுங்குடனும் சுவாரஸ்யமாகவும் ஒருங்கிணைத்த வேணுவேட்ராயனுக்கு நன்றி.பிறக்கையிலேயே முகுந்த் நேயமுகில் அப்பாவாகப் பிறந்திருப்பார் என நினைத்துக்கொள்கிறேன். இந்தக் கவிதைகளின் நாயகி நேயமுகிலுக்கு கட்டிமுத்தம்.குழந்தைகளின் உலகின் கள்ளமின்மையையும் பெரியவர்களின் உலகின் பொருளின்மையையும் காட்டும் கவிதைகளுக்கும் முகுந்த் நாகராஜனுக்கு உள்ளிருக்கும் இன்னும் முதிராத அந்த சிறுவனுக்கும் என் அன்பு.
அன்புடன்
லோகமாதேவி
பூன் முகாம்- கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். பூன் முகாம் தத்துவ வகுப்பு முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் பங்கு கொண்டேன். தத்துவம் பயில்வதா, தத்துவம் பயின்றால் புரியுமா போன்ற தயக்கங்கள் இருந்தன. வகுப்பறைகளில் அமர்ந்தும் வெகுகாலம் ஆகின்றது. கவனிக்க முடியுமா? ஜுலை மாத இலைகள் போல தயக்கங்கள் மூடின.
ஆசிரியரை காண்பதும், அருகமர்வதும், விஷ்ணுபுரம் அமெரிக்க நண்பர்களை சந்திப்பதும் கொடுத்த உத்வேகத்தில் கிளம்பி தயக்கங்களை தாண்டி கிளம்பி வந்தேன்
முதல் நாள் முதல் உரையே தயக்கங்களை களைந்தது. தெளிவான, சீரான பாடத் திட்ட அமைப்பு, ஆசிரியரின் குரல், பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் போன்றவை தயக்கங்களை, இது வரை சூழ்ந்திருந்த பல புரிதல் இன்மைகளை பூன் காடுகளின் இலையுதிர்கால இலையென ஆக்கியது. புதிய இலைகள் சாத்தியமென நம்பிக்கை வந்தது.
நான்கு நாட்களும் மிக தீவிரத்துடன், அதே நேரம் இனிமையாக இருந்தது.
நன்றி.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள ஆசானுக்கு
நான் நேற்று பூன் முதல் நிலை தத்துவ முகாமில் கலந்துகொண்டேன்.
வகுப்பு, இந்திய தத்துவ மரபின் வரலாற்றுப் பின்புலம், வளர்ச்சி பற்றிய முழுமையான சித்திரத்தை அளித்தது. வேத காலத்திலிருந்து, ஆறு தரிசனங்கள், வேதாந்தம், உபநிடதங்கள், நவ–வேதாந்தம் வரை தத்துவ சிந்தனைகள் வளர்ந்து வந்த பரிமாணத்தை காட்டியது.
முன்னதாக எனக்கு அத்வைதம் மற்றும் வேதாந்தம் குறித்து சில சிதறிய புரிதல்கள் இருந்தன, இந்த வகுப்பு ஒன்றிணைந்த, ஆழமான ஒரு பார்வையை கொடுத்தது. புதிரின் பல துண்டுகள் தங்கள் இடத்தை அடைவது போல் தெளிவடைந்தன.
இதன் மூலம் தத்துவம் என்பது சிந்தனை முறை மட்டுமல்ல, மாறாக மனிதனின் அனுபவத்தை ஆழமாக்கும் ஒரு வாழ்வியல் பார்வை என்பதை உணர்த்தியது. இந்திய தர்க்கம் தத்துவத்துடன் எவ்வாறு பிணைந்திருக்கிறது என்று அறிய முடிந்தது.
மேற்கத்திய தத்துவ கருத்துகளுடன் ஆறு தரிசனங்களுக்கான ஒப்பீடுகளின் மூலம், கிழக்கு மற்றும் மேற்கு சிந்தனைகளை புரிந்துகொள்ள முடிந்தது.
இந்திய தத்துவத்தை அறிதலால், நம்முடைய சிந்தனையின் அடிப்படை வேர்களை உணர்வதிலும், நவீன உலகில் நமது நிலைப்பாட்டையும் உணர்த்தியது. இறுதியில், நம் தத்துவ மரபு நாட்டை வடிவமைத்ததின் பங்கு. எனக்கான உச்சமும் நெகிழ்வும் விவேகானந்தர் பற்றி கூறும்போது நிகழ்ந்தது. 21ஆம் நூற்றாண்டில் நம் அடையாளத்துடன் நிமிர்ந்து நிற்கும் பெருமையை அளித்தவர் அவரே.
முதலில், இரண்டாவது நிலை வகுப்பில் சேர்வது கடினமாக இருக்கும் என நினைத்து தயங்கினேன். இப்பொழுது, முதல் வகுப்பின் ஈர்ப்பு, இரண்டாவதற்கான காத்திருப்பை வரும் ஆண்டில் இன்னும் நீளமானதாக ஆக்கப்போகிறது.
என் இஷ்ட தெய்வத்தை புரிதலுடன் மேலும் அணுக வழிகாட்டியுள்ளது.
ராஜி
காணொளிகளும் உரையாடலும்
I was working in the Northeast states for more than 23 years as a central government staff member; I have a clear-cut understanding about the cultural and political scenario of those areas. The majority of the people in the Northeast are members of various tribes and lead predominantly rural lifestyles. They have no idea about the other parts of India and the world.
The realities of the Northeastஉங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து வந்தேன். கட்டுரைகளை வாசிக்கும் போது என்னுடைய பிரச்சினை அதை தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை என்பதுதான் .கட்டுரைகளை என்னால் தொகுத்துக் கொள்ள முடியவில்லை.
காணொளிகளும் உரையாடலும்November 8, 2025
அறிவு என்பது பிரிவுகள் அற்றது
இன்றைய காலகட்டத்தில் அத்வைதம் அல்லது அதைப்போன்ற ஒரு தத்துவ அடிப்படை எதற்காக தேவைப்படுகிறது? இன்றைய ஞானம் தகவல்களாக, தனித்தனி அறிவுகளாகப் பிரிந்துகிடக்கிறது. தத்துவம் மட்டுமே அவற்றை ஒற்றைப்பார்வையாக ஆக்க முடியும். அவ்வாறு ஆகாதவரை எந்த அறிவும் நடைமுறையில் பயனற்றதே.
புதிய எழுத்தாளர்களுக்கு…
எனக்கு வரும் கடிதங்களில் ஒரு பகுதி தங்களுடைய கதை, கவிதைகள் ஆகியவற்றை எனக்கு அனுப்பி கருத்து கோரும் தன்மை கொண்டவை. நிறைய படைப்புகளில் ஒரு பயில்முறைத்தன்மை அதாவது தேர்ச்சியின்மை மட்டுமே இருக்கும். தொடக்க நிலையாளர்களுக்குள்ள எல்லா சிக்கல்களும் தெரியும். அச்சிக்கல்கள் பெரும்பாலும் ஒன்றே .அவற்றுக்கு உண்மையில் நான் ஒரு நிரந்தர பதில் எழுதி வைத்திருந்து அதை அனுப்பினாலே போதுமானது, ஆனால் அப்படி ஒரு பதிலை அனுப்பக்கூடாது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் எழுதுபவர் தன்னை ஓர் தனித்த ஆளுமை என, தன் எழுத்துக்கென ஒரு தனித்தன்மை உண்டு என எண்ணுகிறார். தன் எழுத்தைப் பற்றிய குழப்பமான மதிப்பீடுகளுடன் அதை அனுப்புகிறார். தொடர்ந்து எழுதலாமா, தன் எழுத்தை பற்றி இன்னொருவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் அவர் தயங்கிக் கொண்டிருப்பது தெரியும். நானும் அத்தகைய தயக்கங்களுடன் எழுதியவன்தான். என் படைப்புகளுடன் மூத்த படைப்பாளிகளைச் சென்று பார்த்தவன். ஆகவே அந்த உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தன்னம்பிக்கையும் தயக்கமும் ஒருங்கே கலந்த ஒரு குழப்ப மனநிலை அது. அத்துடன் இலக்கிய உலகுக்குள் வரும் ஒருவரைப் பற்றி, அவர் எந்த நிலையில் எழுதினாலும், எனக்கு மதிப்பும் பிரியமும்தான் உள்ளது .
ஆனால் இந்தக் கடிதங்களுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. ஏனெனில் அனேகமாக ஒவ்வொரு நாளும் இரண்டு கடிதங்களாவது இவ்வகையில் வருகின்றன. இவை அனைத்திற்கும் நான் பதில் அளிப்பேன் என்றால் அது மட்டுமே என்னுடைய வேலையாக இருக்கும். மட்டுமல்ல, அவற்றுக்கு எளிமையான ஒற்றை வரி பதில்களை அளிக்க முடியாது. காரணம் அந்த பதில்கள் மேலும் கேள்விகளை எழுப்பும். அந்த கேள்விகளுக்கெல்லாம் மேலும் பதில்களை சொல்ல வேண்டும். குறைந்தது ஏழு எட்டு தொடர் கடிதங்கள் வழியான ஓர் உரையாடல் மட்டுமே ஒரு தெளிவை உருவாக்க முடியும். இதனால் பெரும்பாலான தருணங்களில் நான் பதிலளிப்பதை தவிர்த்து விடுகிறேன்.
அப்படி என்றால் எழுத வரும் ஒருவர் என்னதான் செய்வது? தன் படைப்பை அவர் எப்படி மதிப்பிட்டுக் கொள்வது? தனக்கான பயிற்சிகளை எப்படி அடைவது? அதற்கான வழிமுறைகள் பல உள்ளன. அதற்காகத்தான் தொடர்ச்சியாக புதிய வாசகர் சந்திப்புகளை நான் ஏற்பாடு செய்து வருகிறேன். நாவல், சிறுகதை பட்டறைகள் நடத்துகிறேன். அப்படி பல நிகழ்வுகள் இங்கே உள்ளன. அவற்றிற்கு வருபவர்கள் எல்லாம் வாசிப்பவர்களும் எழுதுபவர்களும்தான். அந்த தொடக்க ஆக்கங்களை அங்கே வாசித்து அவற்றின் மீதான மதிப்பீடுகளை முன் வைத்திருக்கிறேன். வடிவம், மொழி, உள்ளடக்கம், எழுதும் மனநிலை பற்றி விரிவாக விளக்குகிறேன்.அவற்றுக்கு வந்த பலர் இன்று அறியப்படும் எழுத்தாளராக மாறிவிட்டிருக்கிறார்கள். பலர் சிற்றிதழ்ச் செயல்பாடு போன்ற பல தளங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் புரிந்து இருக்கிறார்கள்.
இந்தவகையான சந்திப்புகள் வழியாகவே மெய்யான இலக்கியப் பயிற்சி நிகழமுடியும். மூத்த படைப்பாளிகளுடனான உரையாடல் செய்திகளை மட்டும் அளிப்பது அல்ல. அவர்களின் ஆளுமை நமக்கு முன்னுதாரணமாக ஆகிறது. அவர்களிடமிருந்து நாம் அகத்தூண்டலை, செயல்மீதான நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறோம். மானசீகமாக அவர்களின் தொடர்ச்சி என நம்மை உருவகித்துக்கொள்கிறோம். கூடவே அங்கு வரும் பிற படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்களுடன் நட்பு உருவாகிறது. அது ஓர் உரையாடற்களத்தை உருவாக்கி அளிக்கிறது.
ஆனால் இன்று எழுதும் புதியவர்கள் பெரும்பாலும் அதற்கு வருவதில்லை . அதற்கு தங்களுடைய இயல்பான தயக்கம், தங்களுடைய தகுதியின்மை பொதுவெளியில் வெளிப்பட்டுவிடும் என்ற குழப்பம் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொதுவாக இருப்பது சோம்பல்தான். அதைத்தான் பல்வேறுவகையில் திரித்துச் சொல்கிறார்கள். சோம்பல் கலைக்குரியது அல்ல. கலைஞர்கள் எல்லாம் தங்கள் கலையில் சோம்பல் அற்றவர்கள். அதன்பொருட்டு எதையும் செய்யத்துணிந்தவர்கள். சோம்பேறிகளுடன் எனக்குப் பேச்சில்லை.
அப்படி ஓர் இளைய படைப்பாளியிடம் நான் கேட்டேன். “நீங்கள் பயில்முறை எழுத்தாளராக இருக்கிறீர்கள. எந்த ஒரு கலைக்கும் அதற்கான அடிப்படைப் பயிற்சி தேவை. ஒரு விளையாட்டுக்கு, ஓர் இசைக்கருவியை வாசிப்பதற்கு நீண்டகால தொடர் பயிற்சி தேவை. ஏதேனும் ஒரு ஆசிரியர் அதைக் கற்பிக்க வேண்டும். இலக்கியத்திலும் தொடக்ககாலத்தில் மொழிப்பயிச்சி, வடிவப்பயிற்சி ஆகியவை தேவை. அவற்றை யாராவது சொல்லிக் கொடுக்க முடியும் என்றால் , தொடக்ககாலப் படைப்புகளை திருத்தி அமைக்க முடியும் என்றால் மிக எளிதாக முதல்நிலைச் சவால்களைத் தாண்டி உள்ளே செல்ல முடியும். அதற்காகத்தான் பல்வேறு பயிற்சி வகுப்புகள் இன்றைக்கு உருவாக்கப்படுகின்றன. நீங்கள் ஏதேனும் பயிற்சி வகுப்புகளில் நேரில் சென்று கலந்து கொண்டு இருக்கிறீர்களா ?”
அதற்கு அவர் சொன்னார் .”பயிற்சி வகுப்புகள் நீண்ட தொலைவில் நடக்கின்றன. என்னால் செல்ல முடியாது”
நான் “எவ்வளவு தொலைவில் நடக்கின்றன?” என்றேன்.
“ஓர் இரவு பயணம் செய்து நான் செல்ல வேண்டி இருக்கிறது. மூன்று நாள் விடுப்பு எனக்கு அலுவலகத்தில் கிடைக்காது. குடும்பச் சூழலில் இருந்து இரண்டு நாள் விலகி நிற்க முடியாது” என்றார்.
“ஆக, வாழ்க்கையில் நீங்கள் எதற்குமே வேலையையும் குடும்பத்தையும் ஓரிருநாட்கள் விட்டு விலகுவதே இல்லை. சரியா?”
“அப்படி இல்லை, தவிர்க்கமுடியாத கடமைகளுக்காக விடுமுறை எடுத்தாகவேண்டும். பயணம் செய்தாகவேண்டும்”
அதாவது எழுத்து அவருக்கு ‘தவிர்க்கக்கூடிய’ விஷயம். நான் கேட்டேன். “எழுத்து உங்களுடைய வாழ்நாள் தேடலா? எழுத்து உங்களுடைய தவமா? எழுத்து உங்களுடைய மிஷன் என்று சொல்லலாமா ?”
அவர் “ஆம் அப்படித்தான் அதற்காகத்தான் வாழ்கிறேன்” என்றபின் “ஆனால் என்னால் வேலையையும் குடும்பத்தையும் விட்டுப் போக முடியாது” என்றார்.
எனக்குச் சலிப்பு ஏற்பட்டுவிட்டது. “அதாவது மற்ற விஷயங்கள் எல்லாம் நிறைவேறியபின் நீங்கள் செய்யும் ஒரு செயல் எழுத்து. பொழுதுபோவதற்காக. கூடுதல் அங்கீகாரத்துக்காக. அப்படி அக்கறையில்லாமல் எழுதப்படும் ஒரு எழுத்தை வாசித்து நான் என்னதான் செய்யப் போகிறேன்? எதை அடையப் போகிறேன்? நான் அதில் ஏன் என் நேரத்தை, பணத்தை, கவனத்தை வீணடிக்கவேண்டும்? உங்களுடைய வாழ்க்கையின் முதன்மையான பணியாக நீங்கள் இலக்கியத்தைக் கருதும்போது , அதற்கு உங்களை அளித்திருக்கும்போது மட்டும்தான் அதற்குமேல் எனக்கு ஏதாவது மதிப்பு வருகிறது.” என்றேன்.
என்னுடைய எழுத்தை என்னுடைய வாசகர் தன் வாழ்க்கையின் வேறெந்த விஷயத்தையும் ஒத்திவைத்துப் படிக்கலாம் என்று நான் சொல்வேன். அதன்பொருட்டு அவர் முழுநேரத்தையும் ஒதுக்கலாம். பணத்தை செலவிடலாம். இது அவருக்கு பயனுள்ள செல்வம்தான். ஏனென்றால் இது என் தவம். இதன் பொருட்டு நான் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கிறேன். எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறேன். அப்படி இல்லாத ஒருவர் எழுத வேண்டாம் என்றுதான் சொல்வேன் .
அவரிடம் சொன்னேன். “பொழுதுபோக்காக, அற்ப சந்தோஷத்திற்காக, சிறுசிறு அடையாளங்களுக்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்றால் அதைச் செய்யுங்கள். அதை இலக்கியத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று எண்ணாதீர்கள். இலக்கிய அங்கீகாரம் வேண்டும் என்று கூறாதீர்கள். இலக்கியத்தின் பொருட்டு நீங்கள் கிளம்பிச் செல்ல முடியும் என்றால், இலக்கியத்தின் பொருட்டு நீங்கள் எதையேனும் இழக்க முடியும் என்றால், இலக்கியத்தின் பொருட்டு வாழ்க்கையை எடுத்து வைக்க முடியுமென்றால் மட்டும்தான் நீங்கள் எழுதுவது இலக்கியமாக இருக்க முடியும், அப்படிப்பட்டவர்கள் மட்டும் எழுதினால் போதும்”.
சேலம் சந்திப்பு
சேலம் வெண்முரசு வாசகர் வட்டம் சார்பில் நவம்பர் மாதச் சந்திப்பு நவம்பர் 10 அன்று நிகழவுள்ளது. அறிமுக உரை ஆர்.கோபிநாத். இம்முறை ஜா.ராஜகோபாலன் எழுதிய கன்னிப்படையல் என்னும் நூலின் மீதான விமர்சன வாசிப்பு நிகழும்
காட்டின் கனவு
நல்ல நாவல். அட்டகாசமான வாசிப்பனுபவம் நல்கியதோர் படைப்பு. ஜெயமோகனிடம் மொழி தண்ணீரைப்போல புழங்குகிறது எல்லாவற்றிலும் அவரால் அதை மொழியை நினைத்தபடி சொற்களாக்கிப் பிடித்துவைத்துவிட முடிகிறது. நதிபோல, காட்டாற்றைப்போல, மழையைப்போல அதன் வேகலாவகங்களில் வாசகனைத் திணறடிக்கச் செய்யும் அற்புதமான எழுத்தாளன். காடு நாவலின் கதை கிரிதன் எனும் இளைஞன் வேலை நிமித்தமாகத் தனது மாமாவிடம் வேலைக்குச் சேர்கிறான். அவர் மலையில் கல்வெர்ட் (தண்ணீர் கடந்து செல்லும் கால்வாய்) அமைக்கும் பணியைக் கான்ட்ராக்ட் எடுத்துச் செய்கிறார். அவரிடம் கிரி சூபர்வைசராகச் சேர்கிறான். அங்கே அந்தக் காட்டில் சில வருடங்கள் தங்கி இருக்கும்போது அவனுக்கு நேரும் அனுபவங்களே பெரும்பாலான நாவலின் பகுதிகள். அவனது இளம்பிராயத்து நினைவுகளும், வயதான பிறகான வாழ்க்கையும் ஊடாக காட்டில் வாழ்ந்த நினைவுகளுமாக கதை தாவித்தாவிச் செல்லும் நான் லீனியர் பாணி கதைகூறல் முறையில் எழுதப்பட்டிருக்கிறது.
வாசிக்கும்போது அது ஒரு பிரச்சனையாகவே இல்லை. அற்புதமான மகத்தான நெகிழ்ந்து திளைத்திருக்கும் சில தருணங்கள் இந்த நாவலில் உண்டு அதற்காகவும் இந்த நாவல் வாசிக்கும் அனுபவத்திற்காகவுமே இதை வாசிக்கலாம். கிரி நீலியைத் தேடிச்செல்லும் முதல் பயணத்தின் போது காட்டின் அதன் மரங்கள், பூக்கள், அந்தத்தனிமை ஆகியவற்றினூடாக எழுத்தின் மூலம் உச்சத்தில் கொண்டு போய் வாசகனை நிறுத்தும் அந்த இடம் அற்புதம். எனது வாழ்நாளில் மறக்கமுடியாது அதை.
காட்டில் போய்க்கொண்டு இருக்கும்போது அதன் பிரம்மாண்டத்தில் கரைந்துபோய் இந்த காடு வேறு நாம் வேறு என இல்லாது இக்காட்டோடு நாம் கலந்துபோய்விட மாட்டோமாவென கிரி கலங்கி நிற்கும் தருணத்தில் நாம் கிரியாக மாறி நிற்கிறோம். அந்த தருணத்தில் திளைக்கிறோம். அப்போது அவளைப் (நீலியை) பார்ப்பது கூட இனி தேவை இல்லை என்பது போன்ற ஒரு மனநிலைக்கு அவன் வந்துவிடுவான். எப்போதாவது மனிதன் இயற்கையோடு கொள்ளும் ஒரு அற்புத உறவுத்தருணம் அது.
இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மனதில் மிக ஆழமாகப்பதிந்து விட்டது. நாவலின் ஆரம்பத்தில் வரும் தொன்மக்கதை போன்ற ஒரு அமானுஷ்ய கதையில் வரும் யட்சி வன நீலியின் கதை அவளின் ஆகிருதி மனதில் அப்படியே தங்கிவிட்டது.பிறகு நாவலில் வரும் ஒரு காலத்துல் காட்டை ஆண்ட பழங்குடி மக்களின் எஞ்சியவர்களான மலையனின் மகளான நீலியின் உருவமும் கிரி எத்தனை வருணித்தாலும் அந்த யட்சி நீலியின் தணிந்த ரூபமாகவே மலையன் மகள் என் மனதில் தங்கிவிட்டாள்.
ஆரம்பத்தில் ஒரு பெரிய ஆளுமையாக நாவல் முழுக்கவே வரும் குட்டப்பன் (மேஸ்திரி ரெசாலத்தின் வலது கையாக இருந்து மலை வேலையில் முக்கியமான ஆளாக இருந்து அத்தனை வேலைகளையும் கவனித்து எல்லோருக்கும் வேளா வேலைக்கு உணவும் சமைத்துப் பரிமாறுபவன்) எனக்கு நீலிக்கு அடுத்தபடியாக மிகப்பிடித்த ஒரு கதாபாத்திரம். தேவாங்கு குட்டியை குட்டப்பனிடம் இருந்து வாங்கி வளர்த்து அதை சிறுத்தை தூக்கிக் கொண்டு போனபிறகு பைத்திமாகும் மேஸ்திரி ரெசாலம், எல்லோரிடமும் உடம்பைப் பகிர்ந்துகொள்ளும் அது குறித்து எந்த குற்றவுணர்வும் கொள்ளாத பேரழகி சினேகம்மை (சித்தாள்), தானுண்டு தன்னுடைய வேலையுண்டு என்று இருக்கும் ரெஜினாள் மேரி. பைபிளை எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டிப் படித்து குட்டப்பனால் அடிக்கடி கலாய்க்கப்படும் குரிசு,
கிரி அடிக்கடி சந்தித்துப் பேசும் மலை வேலைகளை கவனிக்கும் கலாரசிகனாகிய இஞ்சினியர் அய்யர் அவரது புத்தக வாசிப்பு மற்றும் இசை ஞானம்.சதாசிவம் மாமா ,மாமி,கிரியின் அம்மா, அம்பிகா அக்கா, நீலி, கீறைக்காதன் யானை, மிளா மான், தேவாங்கு, கெட்ட வார்த்தைகளைக் கொண்டு மனிதர்களை வெறும் குறிகளாகவே இனம்காணும் அனந்தலட்சுமி அம்மா, குரிசு ரெஜினாள்மேரியின் கணவன் இறந்த பிற்பாடு அவளோடு சேர்ந்துகொண்டு அடிவாரத்தில் செட்டிலாகிவிட அவர்களுக்கு பதிலாக வேலைக்கு வரும் இருவர் ஆபேல், ராபி இவர்கள் gay இருவரின் உறவும் மிகப் பூடகமாக குட்டப்பன் மூலம் நமக்கு சொல்லப்படுகிறது. கிரியின் மாமாவின் மனைவியோடு தொடர்பில் இருக்கும் கண்டன்புலையன், அவர்களுக்குப் பிறந்தவளும் கிரியின் மனைவியுமான வேணி, காட்டு வாழ்வின் சித்தரிப்பின்போது தொடர்ந்துகொண்டே வரும் அந்த பிரம்மாண்ட “அயனிமரம்“. அய்யருக்குப்பிறகு வேலைக்கு வரும் இஞ்சினியர் மேனன், அவரது குண்டு மனைவி, இப்படி இந்த நாவல் கதாபாத்திரங்களை பல காலம் மறக்க முடியாதென்றே நினைக்கிறேன்.
நமக்கு கனவென ஒரு வாழ்வின் மீது பித்து இருக்கும் அதை நோக்கி பயணிப்போம், அதை நாம் அடையலாம் அல்லது அடையாமல் போகலாம் ஆனால் அதை நோக்கின நமது பயணம் அல்லது நம்மை நாமே அதை நோக்கி தள்ளிச்செல்லும் ஒரு காரியம் நம்முடைய யதார்த்த வாழ்வை நகர்த்திச்செல்லும் ஒரு கிரியாஊக்கியாக இருக்கலாம்.
இன்னொன்று நமது வாழ்வில் நாம் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலம் என ஒன்றிருக்கும் பெரும்பாலோருக்கு அது இளம்பிராயத்தில் அதன் துடிப்பான உச்சத்தில் நிகழ்ந்திருக்கும். பிறகான அவர்களின் வாழ்க்கை அந்த நினைவை திரும்பத்திரும்ப மீட்டிப்பார்ப்பதாகவே அமையும். அப்படி இல்லாமல் மொத்த வாழ்வும் அட்டகாசமாக வாய்க்கப் பெற்றவர்களும் இருக்கலாம். இந்த காடு நாவலில் கிரியின் கனவு வாழ்க்கை அந்த கானகத்தில் வாழ்ந்த சில வருடங்களே. நீலியின் நினைவும், கானகத்தின் “விசும்புதோய் பசுந்தழைகளுமே,” அவனது பிற்கால வாழ்வு நகர்தலின் காரணமாக நிற்பது. கிரி தொழிலுக்கு தோதுப்பட்டவன் அல்ல, அவனால் தொழில் செய்ய இயலாது ஏனென்றால் அவனொரு கவிஞன், படைப்பாளி அவன் அப்படித்தான் இருப்பான் என்றே தோன்றியது.
நீலியை நினைத்து ஓயாமல் பிதற்றும் கிரி அவளைத் தேடித்தேடி கானகத்தில் அலைந்து திரிகிறான். அவனது பித்து நிலை கண்டு அவனுக்கு இறங்கும் நீலி அவனோடு பழகவும் செய்கிறாள். பிறகு அப்படி ஒரு தீவிர காதலைக் கண்டு அதற்கு அடிபணிகிறாள் என்றே சொல்லவேண்டும். மலை மக்களின் கட்டுப்பாடுகளை மீறி அவனைத்தேடி அர்த்தராத்திரியில் அவனது குடிலுக்கே வருகிறாள், அவனோடு் காடு மலை என அலைந்து திரிகிறாள். அவளுக்கு கிரியிடம் வேண்டியது அந்தக் காதல் மட்டும்தானா?? கிரிக்கும் அவள் ஒரு வன நீலியின் ரூபமாகத்தான் தெரிந்தாளா…?? அவளோடு சம்போகித்துவிட்டால் அந்த உறவு அப்போதே முடிந்துபோகுமென பயந்துவிட்டானா. அதனால்தான் அதை அவன் அதை முயற்சிக்கவே இல்லையா. ஒரு சிறு தங்க மூக்குத்தியை அவள் முகத்தில் வைத்துப் பார்த்தபோதே அது அவளை சாதாரண மானிடப்பெண்ணாக மாற்றிவிட்டதைக் காணச் சகிக்க முடியாத கிரி எப்படி அவளோடு துணிந்து உறவு கொள்வான். ஆகவே அதை அந்த மூக்குத்தியைக் காட்டாற்றில் விட்டெறிகிறான். அவள் சாமான்ய நிலைக்கு வருவதை அவன் ஒருபோதும் விரும்பவில்லை என்றே படுகிறது. இவன் அவளோடு உறவு கொண்டாலும் அவள் சாமான்யமாகிவிடுவாள் என்றே அதைத் தவிர்த்தான் போலும். கடைசியில் விஷக்காய்ச்சல் வந்து அவள் இறந்துவிட்டதைக் குட்டப்பன் மூலம் கேள்விப்பட்டு மூர்ச்சையடைந்து வீழ்வது அதனால்தானா. இப்படி இந்த நாவல் முழுக்கவே பலவிதமான கேள்விகளும் மனக்கொந்தளிப்புகளும் உருவாகிக்கொண்டே இருந்தது. நீலி விஷக்காய்ச்சலில் இறந்துபோனதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. அண்ணாந்து பார்த்து பிரமித்து அந்த உச்சியில் போய் நின்றால் எப்படி இருக்கும் என்று நம்மை பிரமித்துப் பார்க்கவைப்பது மலை. அங்கே வாழ்க்கை கனவெனத் திகழ்கிறது. குட்டப்பன் மூலமாக விவரிக்கப்படும் இந்த மலைகாடும் அதன் மழையும், இருளும் வினோதமான வசீகரிப்பை ஏற்படுத்துகிறது. மழையில் காடு வேறொரு நெருப்பில் எரிகிறது அதைக்காண குட்டப்பனின் கண்கள் நமக்கு வேண்டும்.
நாவலில் எனைத்திகைத்து நிற்க வைத்த தருணங்களில் சில…
கிரி நீலியைத்தேடிச்செல்லும் முதல் பயணம்,அப்போது அவன் அடையும் மன எழுச்சி,
கிரி காட்டில் மாமியை நினைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவிப்பது,
காட்டில் வழிதவறிச்சென்று பிறகு மிளாமானின் உதவியோடு மீள்வது. அப்போது கானைத்தின் திசைகள் மனிதனின் திசைஅறவை எப்படி வீழ்த்திவிடுகிறது எனும் சித்தரிப்பில் வரும் கீழ்க்கண்ட இந்தப் பகுதி அற்புதமாக இருந்தது…
“அன்று காட்டில் ஒருகணம் நிலைபதறிச் சற்றுதூரம் ஓடியதுமே நான் மிகப் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த திசையுணர்வு எங்கோ நழுவி விழுந்துவிட்டது. மூச்சிளைக்க நின்றதும் வழி தவறிவிட்டேன் என்று புரிந்துகொண்டேன். காடு என்பது ஒவ்வொரு கணமும் புதிதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம். அதேசமயம் ஒவ்வொரு இடமும் ஏற்கனவே பார்த்தது போலவும் இருக்கும். காடு திசைகள் இல்லாதது. ஏனெனில் மொத்தக் காடுமே வானம் என்ற ஒரே திசையை நோக்கி எழுந்து கொண்டிருப்பது. பெரும் மரங்கள் முதல் சிறு புற்கள் வரை கிடைத்த இடைவெளிகளையெல்லாம் நிரப்பியபடி வானம் நோக்கி எம்பிக் கொண்டிருக்கின்றன. அங்கே பக்கவாட்டில் திசை தேடும் மனிதன் அபத்தமான ஓர் அந்நியன்.”
அடுத்து நாவலில் மிளாமானின் ரூபத்தில் அந்த வன நீலி உலவுவதாக நாவலில் நிறைய இடங்களில் வருகிறது.கீறைக்காதன் எனும் பெரிய யானை வரும் இடங்களும் அட்டகாசமாக இருக்கும். அதற்கு மதம்பிடித்து காட்டில் உலவிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தை விட்டு பிரிந்துவிடுவது பிறகு காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் அது மாட்டிக்கொண்டு திணறுவதை கிரி ஏதும் செய்ய இயலாமல் பார்க்கும் காட்சி கொடூரமானது.பிற்பாடு பல ஆண்டுகள் கழித்து கிரியை தொழிலில் ஏமாற்றின அண்ணாச்சியைக் காணப் போகும்போது அங்கே கீறைக்காதனின் தலையைப் பாடம் செய்து மாட்டியிருப்பதாக ஒரு வரியில் கடந்தது போகிறது கதை .அய்யருக்குப்பிறகு வரும் இஞ்சினியர் மேனன்தான் அதை சுட்டுக்கொல்கிறார். மகன் இறந்த துக்கத்தில் மனநிலை பிறழ்ந்து ஓயாமல்கெட்ட வார்த்தைகளைப் பொழியும் அனந்தலட்சுமி அம்மாள். குட்டப்பன் வைக்கும் நாரங்கா பாயசம், கஞ்சா புகைத்துவிட்டு ரெசாலம், குட்டப்பன், ராசப்பன் அடிக்கும் கூத்துக்கள்.
ரெசாலம் ஆசையாய் வளர்க்கும் தேவாங்கு அயனி மரத்தில் ஏறிக்கொண்டு ஆட்டம் காட்டுவது, இஞ்சினியர் அய்யருக்கும், கிரிக்குமான உரையாடல்கள் அதனூடாக நாவலில் நிறைய இடங்களில் வரும் கபிலரின் (குறுந்தொகை) பாடல்கள். உண்மையில் இந்த நாவல் எனக்கு சங்க இலக்கியங்களை வாசித்தே வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. குறைந்தபட்சம் கபிலரின் குறிஞ்சிப்பாட்டையும் குறுந்தொகைப் பாடல்களையுமாவது வாசிக்க வேண்டும்.
கிரி நீலியை முதன்முறைக் கண்டவுடன் அவன் கொள்ளும் மன எழுச்சி, பிறகு அவளது குடில்முன்பு அவளுக்காக காத்திருப்பது,
மேஸ்திரி ரெசாலம், குட்டப்பன், சினேகம்மை, குரிசு, ரெஜினாள்மேரி, கானகத்தில் கல்வெர்ட் வேலை நிமித்தமாக ஒன்று சேரும் இவர்களுக்கிடையில் நிகழும் உரையாடல்கள், வேலைகள், உறவுகள், என்பதே இந்த நாவலின் பெரும்பகுதி இதற்குள் சம்பந்தமில்லாமல் வந்து மாட்டிக்கொண்டு நீலியைக்கண்டடைந்து பித்து கொண்டு மலையையும், காட்டையும், அந்த வாழ்க்கையையும் பார்த்து பிரமித்து அந்த பிரமிப்பும், ஆச்சர்யமும் தீர்வதற்குள்ளேயே அதிலிருந்து வெளியேறுபவன் கிரி.
வேணியோடு முதலிரவு முடிந்த பிறகு கிரி சுருட்டுப் புகைக்க ஆரம்பிப்பது. பிறகு வாழ்க்கை இறுதி வரை வேணியும், மகனும் வெறுத்தும் கண்டித்தும் கூட அதை விடாதிருப்பது. நாவலில் வரும் இந்த அற்புதமான வரிகள் எப்போதுமே மறக்க முடியாதவை “இந்த சுருட்டுப் புகை எனக்குள் நிரப்பும் வெற்றிடங்களை முழுக்க நான் வேறு எதை வைத்து நிரப்பிக்கொள்ள முடியும்.”
கிறிஸ்தவ மதம் அப்பொது எப்படி நகரங்களில் மெல்ல செல்வாக்கைப் பெற்றது எனும் குறிப்புகள் நாவலில் கதையோட்டத்தோடு சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் ஆங்கில மருத்துவம் நோயிகளில் இருந்து காப்பாற்றுகிறது. மறுபுறம் சாதிப்பிரச்சனையில் ஒதுக்கப்பட்ட மக்களை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்தவம் அவர்களின் வாழ்வை பொருளாதார ரீதியில் மேம்படுத்துகிறது. குரிசு அப்படித்தான் பிற்காலத்தில் மதச்சொற்பொழிவாளராகவும், ஒரு கடைக்கு ஓனராகவும் மாறிப்போய விடுகிறார்.
குட்டப்பன் ஒரு முறை கிரியிடம் யானையின் மதம்பற்றி குறிப்பிட்டு பூவின் தேனும் மணமும் ஒவ்வொரு காட்டு தெய்வமெனச் சொல்லி விளக்கும் இடம் அற்புதம். ஒரு முறை கடும் மன உளைச்சலில் கிரி பச்சை அருகே நண்பனின் வன பங்களாவில் தங்கியிருக்கும்போது ஜன்னல் வழியே பெய்யும் மழையை குறுந்தொகைப்பாடல் ஒன்றின் நினைவோடு பார்த்துக்கிடப்பது. வெறுமனே தான். அனைத்திற்கும் சாட்சியாக இருப்பதாக உணர்வுது.
அற்புதமாக வாழ்த்த கனத்தை வெறுமையின் தீவிரத்தில் உழலும்போது எண்ணிப்பார்ப்பது கொடுமையானது. அப்படி நீலியோடான ஒரு இனிமையான கனத்தை நினைத்துப்பார்த்து எத்தனை வேகமாக அவை கடந்துபோய்விட்டது என்று கிரி அடையும் மனத்தவிப்பு. அப்போது வரும் கவித்துவமான இவ்வரிகள் “இளமையே, காதலே, மனித வாழ்வின் மகத்துவங்களே, ஒளியே வானகமே, தெய்வங்களே! எத்தனை மூர்க்கமான தீர்மானத்துடன் மனிதனைக் கைவிடுகிறீர்கள் நீங்கள்” அற்புதம். நாவல் முழுக்க இப்படியான கவித்துவ வரிகள் ஏராளமாக உண்டு். ஜெயமோகன் கவிதை ஏதும் எழுதியிருக்கிறாரா என்ன?
குறிஞ்சிப்பூவைப் பார்க்க கிரியும் நீலியும் மேற்கொள்ளும் ஒரு மலைப்பயணம்.
ரெசாலத்தின் தேவாங்கை சிறுத்தை கொண்டு போன பிறகு அவர் பைத்தியமாவது, அவரை வீட்டுக்குக் கொண்டுபோய் கிரி சேர்க்கும்போது அங்கே அவன் பார்க்கும் குறைபிரசவத்தில் பிறந்த ஒரு பெண். ரெசாலத்தின் வீட்டில் இருக்கும் அவனது மாமா. சத்தமில்லாமல் கிரி அங்கிருந்து திரும்பிவிடுவது. இந்த இடம் நாவலில் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது. ரெசாலத்தின் மனைவிக்கும் கிரியின் மாமாவிற்கும் உள்ள உறவில் பிறந்த பெண்தான் அவளோ என்று தோன்றுகிறது. இதனால்தான் ரெசாலம் கடைசியில் மாமாவைக் கத்தியால் குத்திக்கொல்கிறானோ என்னவோ தெரியவில்லை.
மலையில் கானகத்தில் மேட்டர்செய்வது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல ரொம்பவும் சர்வசாதாரணமாக நிகழ கீழே நகரத்தில் அந்த ஒரே விஷயத்திற்காக அவனவன் படாதபாடு பட்டு சாகிறார்கள். அங்கே வாழ்க்கை கனவெனத் திகழ்ந்தால் கீழே யதார்த்தம் கொடூரமாக இருக்கிறது. திடீரென பரவும் விஷக்காய்ச்சலால் பாதிகப்படும் gay ஜோடிகளில் ஒருவனான ராபிக்கு விஷக்காய்ச்சல் வர அவனை மற்றவர் நெறுங்க விடாமல் தடுக்கும் ஆபேல் மலையடிவாரம் வரைத் தூக்கிக்கொண்டு நடந்தே கொண்டு வந்து சேர்ப்பது. அற்புதமான காதல் ஜோடி அவர்கள். அத்தோடு காட்டு வாழ்க்கை திசைமாறிப்போவது. குட்டப்பனும் ஆஸ்பத்திரியில் இங்கிலீஷ் டாக்டருக்கு உதவியாளாக இருந்து விடுவது.நிலியும் இறந்துவிட. அய்யர் வேலையில்இருந்து விலகப்பட்டு மோசமான பேராசைக்கார மேனன் இஞ்சினியராக வந்துவிட. கடைசியில் நீலியின் ஆவி அரற்றிக்கொண்டு பங்களாவை சுற்றி வர. மேனனின் மனைவி கிலியை மேட்டர் செய்வது. கொடுமைடா சாமி.
குட்டப்பன் அய்யர் இல்லாமல் கதையை மேற்கொண்டு படிக்க எனக்கு சுவாரஸ்யமே எழவில்லை. ஆனாலும் கதை போகிறது. மாமா இறந்துபோய் என்னென்னமோ ஆகி மனைவியால் சதா ஏசப்பட்டு மகன் கொடுத்த தைரியத்தில் வாழும் கிரி ஒரு நாள் பெட்டிக்கடை வைத்து பிழைப்பை நடத்தும் நிலைக்கு வந்து சேர்கிறான். அப்போது தற்செயலாக நண்பருன் வாழைக்குலை லோடு வாங்கும் விஷயமாகத் திரும்ப அதே மலைக்குப்போகிறான். அங்கே பல தங்கியிருக்கும்போது கானகத்தில் அவன் வேலை செய்யும்போது பல நாள் பார்த்துப்பழகின மழை பொழிகிறது.அந்த மழையினூடாக நீலியின் நினைவுகள் கிளரந்தெழுகிறது.அய்யர் அங்கே பட்டர்சாமி எனும் பேரில் ஒதுங்கி வாழ்வதை அறிந்து அவரைப்போய் பார்க்கிறான்.அவனது பல நாள் சந்தேகத்தை அவரிடம் கேட்பது.அவர் அதற்கு அளிக்கும் அற்புதமான பதில்.
நாடார், நாயர், அய்யர், மேனன் போன்ற சாதியப் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் குணாதிசியங்கள் இதுதான் எனச்சொல்வதை எப்படி எந்த பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதெனத் தெரியவில்லை. நாவலின் கடைசியில் வரும் தேவசகாயம் நாடார் கம்பராமாயணத்தில் மூழ்கி வாழ்வைக் கடந்து போகிறவர். அற்புதமான ஆத்மா. ஆனால் சதா அவரது மனைவி அவரைத்திட்டிக் கொண்டே இருக்கிறாள். கடவுளர்கள் கூட பொண்டாட்டி வசவிற்கு தப்பினவர்களில்லையே.
என்னென்னமோ யோசனைகள் மனதில் தறிக்கெட்டுப் பாய்கின்றன. இப்போது தெரிகிறது இந்த நாவல் பற்றி எழுதுவது எனக்கு குருவிதலைபனங்காய் போலவென்று. எதுவுமே முழுதாய்ச் சொல்ல முடியவில்லை இந்த நாவல் பற்றி என்கிற அங்கலாய்ப்போடு இப்போதைக்கு இதை நிறைவு செய்கிறேன். நாவல் கதையாக பல தளங்களில் தாவித்தாவிச் சென்று நிறைவடைந்தாலும் எங்குமே உறுத்தவில்லை.
நான் எழுதியிருப்பது நிச்சயம் படுசுமாராகத்தான் இருக்கும். கச்சாமுச்சா பாணியில் மன ஆவேசங்களுக்கேற்ப இந்த நாவல் பற்றி ஜெயமோகன் அவர்கள் முன்னுரையில் “காடு நாவல் நான் சென்று மீண்ட கனவு” என்கிறார். இந்த காடு வார்த்தையை எப்போது கேட்க வாசிக்க (குடுப்பினை இருந்தால்) பார்க்க நேர்ந்தாலும் இந்த நாவல் சரேலென எழுந்து நிற்கும். இதைப்பற்றி எழுத நினைத்த போது திரும்ப அந்தந்த இடங்களுக்கு நாவல. வாசிக்கும்போது நேர்ந்ததைப் போலவே திரும்பவும் கிரியோடு அலைந்து திரிந்தேன். அல்லது நானே கிரியாக மாறினேன் என்றும் சொல்லவேண்டும். மறக்க முடியத வாசிப்பனுபவம் நல்கிய நாவல்…
மகத்தான நாவலிற்கு எனது மொக்கையான எழுத்தை மன்னியுங்கள்.
November 6, 2025
நவீன வாசகன் பிரம்மசூத்திரத்தை வாசிப்பது எப்படி
பிரம்மசூத்திரம் ஒரு தொன்மையான தத்துவநூல். உலகம் முழுக்க இத்தகைய தொல்நூல்கள் நவீன வாசகர்களால் ஆழ்ந்த் பயிலப்படுகின்றன. நாம் ஏன் பயிலவேண்டும்? எப்படிப் பயிலவேண்டும்? அவற்றை பயில்வதில் இன்று நமக்குள்ள வழிகள் என்ன? அவற்றிலுள்ள சிக்கல்கள் என்னென்ன?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


