S. Ramakrishnan's Blog, page 125
June 11, 2021
லாட்சோ டிரோம்
பல்வேறு நாடுகளிலுள்ள நாடோடி இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறந்த ஆவணப்படம் லாட்சோ டிரோம்
டோனி கேட்லிஃப் இயக்கிய இந்தப் பிரெஞ்சு ஆவணப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது.
ரோமானி என்று அழைக்கப்படும் ஜிப்சிகள் உலகெங்கும் வாழுகிறார்கள். இவர்களின் பூர்வீகம் இந்தியா எனவும், 11ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் என்றும் கருதுகிறார்கள்
இந்தியாவின் தார் பாலைவனத்தில் தொடங்கி எகிப்து, துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பிரான்ஸ் வழியாக நாடோடி இசைக்குழுவினர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.
குறிப்பாக ஆரம்பக் காட்சிகளில் வரும் சிறுவனின் பாடலும் அவர்களின் பயணமும், ராஜஸ்தானில் நடைபெறும் நடனமும் மறக்கமுடியாதது. படம் முழுவதும் வெளிப்படும் மயக்கும் இசையும் .நடனமும் ,வியப்பூட்டும் வாழ்க்கை முறையும் அரிய அனுபவத்தைத் தருகிறது
நாம் இதுவரை கேட்டிராத குரல்களைத் திரையில் கேட்கும் போது பரவசம் ஏற்படுகிறது. ரோமானிகளின் வாழ்க்கை என்பதே கொண்டாட்டம் தான். இரண்டாம் உலகப்போரின் போது ரோமானிகள் துரத்தி வேட்டையாப்பட்டார்கள். அவர்களின் நாடோடி வாழ்க்கை ஒடுக்கப்பட்டது. தடைகளை மீறி பயணித்த ரோமானிகள் கொல்லப்பட்டார்கள். இந்த ஆவணப்படம் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் ரோமானிகள் சந்தோஷத்தைப் பரவவிட்டபடியே இருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.
புகைப்படம் சொல்லும் உண்மை
ஒரு புகைப்படத்தால் உலகத்தையே தன் பக்கம் திருப்ப முடியும்.
சிறந்த புகைப்படக்கலைஞர்கள் சமகாலப் பிரச்சனைகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்.
குறிப்பாக உலகப்போர் மற்றும் நாஜி இனப்படுகொலையின் குரூரங்களையும் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் பாதிப்புகளையும் உலகமறியச் செய்ததில் புகைப்படக்கலைஞர்களின் பங்கு முக்கியமானது.
இன்றும் அழிந்து வரும் கானுயிர் வாழ்க்கை மற்றும் பற்றி எரியும் சமூகப்பிரச்சினைகளைத் தேடிப் புகைப்படக்கலைஞர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணிக்கிறார்கள். தனது புகைப்படத்தின் வழியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தருகிறார்கள்.
புகைப்படம் பொய் சொல்லாது என்பார்கள். ஆனால் இன்றைய தொழில்நுட்ப உலகில் புகைப்படங்கள் தேவைக்கு ஏற்ப உருமாற்றம் அடைகின்றன. அதன் வழியே விரும்பும் பிம்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன.
அதே நேரம் சிறந்த புகைப்படக்கலைஞர்கள் இன்றும் நிகரற்ற புகைப்படங்களை எடுப்பதன் மூலம் அக்கலையின் மேன்மையை, தனித்துவத்தைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் கேமிராவின் வழியே உண்மையைப் பதிவு செய்கிறார்கள். மறைக்கப்பட்ட, உலகம் அறியாத நிஜத்தைக் கவனப்படுத்துகிறார்கள். காட்சிப்பொருளாக மாற்றுகிறார்கள்.
இந்த நூற்றாண்டின் முக்கியப் போராட்டங்கள் அத்தனையும் புகைப்படக்கலைஞர்களின் உறுதுணையோடு தான் வெற்றி பெற்றன. காட்சி ஊடகங்களின் வலிமை என்பது இந்த நூற்றாண்டின் தனித்துவம்.
ஒரு புகைப்படக்கலைஞரின் சமூகப் பொறுப்புணர்வினை விவரிக்கிறது Minamata திரைப்படம். உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படமிது.

அமெரிக்கப் புகைப்படக்கலைஞரான டபிள்யூ. யூஜின் ஸ்மித் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜானி டெப் புகைப்படக்கலைஞராக நடித்திருக்கிறார். ஆண்ட்ரூ லெவிடாஸ் இயக்கி 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமிது
மினாமாட்டாவின் கதை 1970 களில் நடைபெறுகிறது
இரண்டாம் உலகப் போரின் போது யூஜின் ஸ்மித் எடுத்த புகைப்படங்கள் மிகுந்த புகழ்பெற்றன. ஆனால் போரின் குரூரத்தை நேரில் கண்டு மனச்சோர்வு கொண்ட ஸ்மித் வெளி உலகத்துடன் தனது தொடர்புகளைத் துண்டித்துவிட்டுத் தனி அறையில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் படச்சுருள் ஒன்றின் விளம்பரத்திற்காக வரும் அய்லின் மினாமாடா பிரச்சனையில் உதவி செய்யும்படி கேட்கிறாள்.

ஜப்பானின் மினாமாட்டா பகுதியிலுள்ள சிசோ என்ற வேதியியல் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் பாதரச நச்சுத்தன்மை அதிகமிருப்பதால் மினாமாட்டா விரிகுடா முழுவதும் சீர்கேடு ஏற்படுகிறது. இங்குள்ள தண்ணீர் மற்றும் மீன்களைப் பயன்படுத்திய மக்கள் முடக்குவாதம் மற்றும் மோசான உடற்பாதிப்புகளை அடைகிறார்கள்.
கை கால்களில் உணர்வின்மை உடற்சிதைவு. பார்வை இழப்பு, மற்றும் செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது. நோய் முற்றிய நிலையில் பலரும் இறந்து போகிறார்கள். இந்த நோய் கருப்பையில் உள்ள சிசுவையும் பாதிக்கும் என்பதால் பிறக்கும் போதே குழந்தைகள் குறைபாடு உள்ளவர்களாகப் பிறக்கிறார்கள். இந்தப் பாதிப்பினை மினாமாட்டா நோய் என்று அழைக்கிறார்கள்.
1932 முதல் 1968 வரை, சிசோ நிறுவனம், கடலில் கலந்த கழிவுகள் காரணமாக ஒட்டுமொத்த விரிகுடா பகுதியும் பாதிக்கப்படுகிறது.
சிசோ தொழிற்சாலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு போராடிய போதும் எதுவும் நடக்கவில்லை. இந்தக் கொடுமையைப் பற்றி உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே யூஜின் ஸ்மித்தை ஜப்பானுக்கு வரவழைக்கிறார்கள்.

அவர் லைப் இதழின் முக்கியப் புகைப்படக்கலைஞர். சிறந்த புகைப்படங்களுக்காக விருதுகளைப் பெற்றவர்.
ஜப்பானுக்குச் செல்லும் ஸ்மித் பாதரசக் கழிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாகக் காணுகிறார். அதை எதிர்த்துப் போராடுகிறவர்கள் எவ்வாறு அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பினைக் காட்டுகிறார்கள் என்பதைக் கண்டறிகிறார். தொழிற்சாலை நிர்வாகம் காவல்துறையின் ஒத்துழைப்போடு போராட்டக்காரர்களை ஒடுக்குகிறது. அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கிறது.
இந்த நிலையில் பாதரச நச்சுத்தன்மையால் கைகால்கள் செயலற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றவர்களை ரகசியமாக உள்ளே சென்று படமெடுக்கிறார் ஸ்மித். உடற்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்துப் புகைப்படம் எடுக்கிறார். மெல்லப் பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளத் துவங்குகிறார்
அவர் ஜப்பானுக்கு வருகை தரும் முதற்காட்சியில் மதுவும் பணமும் தான் அவருக்கு முதன்மையாகத் தோன்றுகிறது. ஆனால் பாதிப்பில் மக்கள் படும் துயரைக் கண்டதும் மனது மாறிவிடுகிறது.
தொழிற்சாலை உரிமையாளர் அவரை அழைத்து நீங்கள் புகைப்படம் எடுப்பதற்குக் கூட எங்கள் நிறுவனத்தின் இரசாயனம் தான் தேவை. ஆகவே போராட்டக்காரர்களை விடுத்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள், தேவையான வசதிகளைச் செய்து தருகிறோம் என்று பெரிய தொகையை லஞ்சமாகத் தர முன்வருகிறார்.
ஆனால் ஸ்மித் போராடும் மக்களுக்கு உறுதுணையாகவே நிற்கிறார். இதனால் நிறைய நெருக்கடிகளை சந்திக்கிறார். காவலர்களால் தாக்கப்படுகிறார். ஆனால் அவரது களச்செயல்பாடுகளை எந்த நெருக்கடியாலும் முடக்க இயலவில்லை.

படத்தில் ஸ்மித்தின் தனது கேமிராவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். அதன் வலிமையைக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனத்தை அடிபணிய வைக்கிறார். அவரது புகைப்படங்களில் வெளிப்படும் உண்மை உலகின் கவனத்தை ஈர்க்கிறது
ஸ்மித்திற்கும் கைகால்கள் பாதிப்புக் கொண்ட ஒரு பதின்வயது பையனுக்கும் ஏற்படும் நட்பு அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவனால் விளையாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. மைதானத்தில் அமர்ந்தபடியே ஏக்கத்துடன் வேடிக்கை பார்க்கிறான். அவனது கையில் தனது கேமிராவை கொடுத்து விரும்பியதை எடுக்கும்படி சொல்கிறார் ஸ்மித். அவன் கேமிராவை ஆசையோடு இயக்குவது அழகான காட்சி.
கார்ப்பரேட் நிறுவனத்தின் மிரட்டலைக் கண்டு ஸ்மித் பயப்படவில்லை. உண்மையை அவர்களின் முகத்திற்கு எதிராகவே சொல்கிறார். ஒரு டாகுமெண்டரி போலவே திரைப்படம் பிரச்சனையின் மீதே குவிந்து செல்கிறது. நுட்பமாகப் போராட்டத்தின் வலிமையை உணர்த்துகிறது.
பெரிய ஸ்டுடியோ தயாரிக்கும் படங்களிலிருந்து விலகிச் செல்வதைத் தனது செயல்பாடாகக் கொண்டவர் நடிகர் ஜானி டெப், அந்தத் துணிச்சலின் அடுத்த கட்டமாக அவரே இந்தப் படத்தைத் தயாரித்து நடித்திருக்கிறார்.

ஸ்மித் அதி நவீன கேமிராவைப் பயன்படுத்துவதில்லை. தனக்குக் கிடைத்த எளிய கேமிராவைக் கொண்டு உன்னதமான புகைப்படங்களை எடுக்கிறார். ஒரு காட்சியில் ஊர்மக்கள் அனைவரும் அவரவர் கேமிராக்களைக் கொண்டு வந்து மேஜையில் போடுகிறார்கள். எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். என்ன கேமிரா என்பதை விடவும் அதை எப்படிக் கையாளப்போகிறோம். எதைப் படமாக்கப்போகிறோம் ஏன் என்பது முக்கியமானது என்பதை ஸ்மித் உணர்த்துகிறார்.
புகைப்படத்தில் பதிவாகும் தருணங்கள் உலகிலிருந்து விடைபெற்றுவிடக்கூடியவை. ஆனால் புகைப்படம் அதற்கு ஒரு நித்யதன்மையை அளிக்கிறது. அழகு என்பது காணும் கோணங்களின் வழியே உருவாகக்கூடியது என்பதைப் புரிய வைக்கிறது.
சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களையும் அவர்களின் போராட்ட வழிமுறைகளையும் படம் மிகவும் உண்மையாகச் சித்தரிக்கிறது. அந்த வகையில் இது முக்கியமான படமென்பேன்.
June 10, 2021
தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயணம்.
WINTER NOTES ON SUMMER IMPRESSIONS தஸ்தாயெவ்ஸ்கியின் ஐரோப்பியப் பயண அனுபவம் குறித்த நூலாகும்.

1862 ஆம் ஆண்டு, தஸ்தாயெவ்ஸ்கி மேற்கு ஐரோப்பாவுக்குப் பயணம் சென்றார். அப்போது அவருக்கு வயது 41. சைபீரியாவில் சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு பீட்டர்ஸ்பெர்க் திரும்பியிருந்தார். மிகுந்த மனச்சோர்வும் உடல் வேதனையும் கொண்டிருந்த அவர் அதிலிருந்து விடுபட வேண்டி நீண்ட பயணத்தை மேற்கொள்ள விரும்பினார். இதுவே அவரது முதல் வெளிநாட்டுப்பயணமாகும்.
7 ஜூன் 1862 இல் பயணத்தினை மேற்கொண்டார். இதில் , கொலோன், பெர்லின், டிரெஸ்டன், வைஸ்பேடன், பெல்ஜியம் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றார். லண்டனில், அவர் ஹெர்சன் என்ற பத்திரிக்கையாளரைச் சந்தித்து அவருடன் ஒரு வாரக் காலம் தங்கினார். பின்பு நிக்கோலே ஸ்ட்ராக்கோவுடன் இணைந்து சுவிட்சர்லாந்து வழியாகவும், டுரின், லிவோர்னோ மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட வட இத்தாலிய நகரங்கள் வழியாகவும் பயணம் செய்தார்.
இந்தப் பயணத்தில் அவர் ஒரு மாதகாலத்திற்கும் மேலாகப் பாரீஸ் நகரில் தங்கியிருந்தார். லண்டன் நகரம் அளவிற்கு அவருக்குப் பாரீஸ் பிடிக்கவில்லை. லண்டனின் அழகை வியந்து எழுதியிருக்கிறார்.

ஐரோப்பிய வாழ்க்கை மற்றும் பண்பாடு ரஷ்ய மேல்தட்டு வர்க்கத்தில் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம். தான் படித்த புத்தகங்கள் வழியாகவே அவர் ஐரோப்பியா குறித்த எண்ணங்களை உருவாக்கியிருந்தார். இந்த எண்ணங்கள் சரியானதே என்பதை அவரது பயணம் உறுதிப்படுத்தியது .
எதற்காக ரஷ்யர்கள் தங்களது சொந்தப் பண்பாட்டினை விட்டு இப்படி ஐரோப்பிய மோகம் கொண்டு அலைகிறார்கள் என்ற கேள்வியைத் தஸ்தாயெவ்ஸ்கி தொடர்ந்து எழுப்புகிறார்
பயண அனுபவத்தை விவரிக்கும் ஒன்பது கட்டுரைகள் கொண்ட நூல் என்றபோதும் இதில் பயணியின் கண்ணோட்டத்தில் புகழ்பெற்ற இடங்கள். கலைக்கூடங்கள். வரலாற்றுச் சின்னங்கள் பற்றி எதுவும் எழுதப்படவில்லை. உண்மையில் தனது புனைகதை போலவே இதிலும் தஸ்தாயெவ்ஸ்கி தானே கேள்விகளை எழுப்பித் தானே பதிலைக் கண்டுபிடிக்கிறார். அல்லது குறிப்பிட்ட சமூக வெளிப்பாட்டினை ஆராய்ந்து விவாதிக்கிறார். ரஷ்ய இலக்கியம் மற்றும் ஆளுமைகளின் நினைவுகளுடன் அவரது பயணத்தில் கண்ட அனுபவங்களும் ஒன்று சேர்ந்திருக்கின்றன.
பொதுவாக உல்லாசப் பயணிகள் தான் செல்லும் நகரிலுள்ள புகழ்மிக்க இடங்களைக் காணுவது வழக்கம். லண்டனுக்குச் செல்பவர்கள் அவசியம் St Paul தேவாலயத்திற்குச் செல்வார்கள். ஆனால் தான் லண்டனில் ஒரு வாரம் இருந்த போது அந்தத் தேவாலயத்திற்குப் போக விரும்பவில்லை என்கிறார். காரணம் அவர் ஒரு உல்லாசப்பயணியில்லை. உண்மையில் அவர் என்ன தேடுகிறார். பயணத்தின் வழியே எதைக் கண்டறிந்தார் என்ற விசாரணையைத் தனக்குத் தானே தஸ்தாயெவ்ஸ்கி நிகழ்த்திக் கொள்கிறார்.
கட்ரையின் ஊடாக நிஜமான உரையாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்படி எழுதுவது அந்த நாளில் புதுமையானது.

அவரது புனைகதைகளில் காணப்படும் மொழியின் அடர்த்தியும் கவித்துவ வெளிப்பாடும் இதில் கிடையாது. பத்திரிக்கை மொழியில் தான் எழுதியிருக்கிறார். ஆனால் பின்னாளில் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் மையம் கொண்ட சமூகப்பார்வைகள். அரசியல், சமயப் பிரச்சனைகள் இங்கே முளைவிடுவதைக் காணமுடிகிறது.
ரஷ்யப் பண்பாட்டின் மீது ஐரோப்பா செலுத்திய ஆதிக்கம் மிகப்பெரியது. ரஷ்யப் பிரபுக்கள் வீட்டிலும் விருந்திலும் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனியே பேசினார்கள். ஐரோப்பிய இலக்கியங்கள். இசை, நாடகம், உடை இவையே ரஷ்யாவில் புகழ்பெற்று விளங்கின. ஜெர்மன் இசை ஆசிரியர்களிடம் இசை கற்றுக் கொண்டார்கள். மேல்மட்டத்தில்ரஷ்யத்தன்னமையைப் புறக்கணிப்பது மேலோங்கியிருந்தது. இதனாலே அவர்கள் புஷ்கினை புறந்தள்ளினார்கள்.
இந்த விஷயத்தைத் தனது பயண அனுபவத்தின் ஊடாகத் தஸ்தாயெவ்ஸ்கி கேள்வி கேட்கிறார்.
தஸ்தாயெவ்ஸ்கி ஒரு வாரம் லண்டனிலும், மூன்று பாரீஸிலும் கழித்தார்; இந்த நகரங்களில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை அவரே ஒப்பீடு செய்கிறார். பாரீஸ் நகரில் வசித்த போது நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி ரயிலில் வெளிநாட்டுப் பயணிகளைப் போலீஸ் ரகசியமாகக் கண்காணிப்புச் செய்தார்கள்.என்று எழுதுகிறார். இது போலவே அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளர் அவரது உயரம், தலைமுடியின் நிறம். கண்களின் நிறம் மற்றும் அவரது வருகையின் நோக்கம் உள்ளிட்ட அத்தனையும் விசாரணை செய்து பதிவேட்டில் பதிந்து கொண்டார் என்பதையும் அரசாங்கத்தின் கண்காணிப்பு அதிகமிருந்தது சங்கடத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்.
ஆனால் லண்டனில் இது போன்ற அனுபவம் எதுவும் ஏற்படவில்லை. பாரீஸை விடவும் லண்டன் உயிர்ப்புடன் இயங்குகிறது. இரண்டு நகரங்களிலும் ஏழைகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பணக்காரர்கள் உல்லாசமாக வாழுகிறார்கள். ரஷ்யாவைப் போலின்றி இளம் பெண்கள் சுதந்திரமாக பாரீஸ் வீதிகளில் நடந்து போகிறார்கள். இரவில் பயமின்றித் தனித்துச் செல்கிறார்கள். இது ரஷ்யாவில் சாத்தியமில்லை என்று குறிப்பிடுகிறார். ஆனால் திருமண விஷயத்தில் பாரீஸில் வசிப்பவர்கள் மணப்பெண்ணின் வங்கிக் கணக்கும் மணமகன் வங்கிக் கணக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏற்ற தாழ்வு இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவது எளிதில்லை என்கிறார்கள். பிரெஞ்சுக்காரர்களின் சிறப்பான பண்பாக இருப்பது பாசாங்குத்தனம் என்று தஸ்தாயெவ்ஸ்கி குறிப்பிடுகிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி ஜெர்மனி வழியாகப் பயணம் செய்தார், அவர் ஒரேயொரு நாள் பெர்லினில் தங்கினார். அவரை அந்த நகரம் கவரவில்லை. அது பீட்டர்ஸ்பெர்க் போலவே இருக்கிறது. அதே நீண்ட வீதிகள். அதே வாசனை. எந்த நகரை விட்டு தப்பிவந்தேனோ அதே நகருக்குத் திரும்பி விட்டது போலிருந்தது என்று எழுதுகிறார்
கொலோன் நகரில் உள்ள புதிய பாலத்தைப் பற்றி ஊரே பெருமை பேசுவதைக் கண்டு அவர் எரிச்சலடைந்தார், அதிலும் வெளிநாட்டுக்காரர்களுக்கு மட்டும் பாலத்தைக் கடக்கக் கட்டணம் வசூலிக்கப் படுவதைப் பற்றிக் கண்டித்து எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளை தஸ்தாயெவ்ஸ்கி உரையாடுவது போன்ற ஒரு தொனியிலே எழுதியிருக்கிறார்.
இலக்கிய விஷயங்களை எழுதிவிட்டு இதற்கும் தனது பயணத்திற்கும் ஒரு தொடர்புமில்லை. ஆனால் இந்த நினைவுகளை விட்டு எப்படிப் பயண அனுபவத்தைப் பேச முடியும் என்று வாசகரை நோக்கி நேரடியாகக் கேட்கிறார். அத்துடன் ஒரு உல்லாசப்பயணி போலச் சுவாரஸ்யமாக, மிகத் துல்லியமான தகவல்களைத் தர தன்னால் முடியாது என்று ஒப்புக்கொள்கிறார்.
தனது கல்லூரி படிப்பின் போது கட்டிடக்கலை பயின்றவர் என்பதால் தஸ்தாயெவ்ஸ்கி தேவாலயத்தின் வரைபடங்களைப் பாடமாக வரைந்திருக்கிறார். நேரில் புகழ்பெற்ற தேவாலயத்தைக் காணும் போது அது மிகப்பெரிய பேப்பர் வெயிட் போலத் தோன்றியதாகச் சொல்கிறார். அப்படித் தோன்றியதற்குக் காரணம் சலிப்பான தனது மனநிலை. மற்றும் அலுப்பூட்டும் நீண்ட தூரப்பயணம் எனும் தஸ்தாயெவ்ஸ்கி திரும்பிச் செல்லும் வழியில் எத்தனை அழகாகத் தோற்றம் கொண்டிருக்கிறது என்று தேவாலயத்தை வியந்தும் போற்றுகிறார்
அவரது நாவலில் வரும் நாயகர்கள் போலவே பயணத்திலும் பதற்றமும் குழப்பமும் சுயபரிசோதனை செய்து கொள்ளும் மனிதராகவே தஸ்தாயெவ்ஸ்கி வெளிப்படுகிறார்
வார இறுதி நாட்களில் லண்டனின் வீதிகள் உழைக்கும் மக்களால் நிரம்பி வழிகிறது என்பதைக் கண்டு தஸ்தாயெவ்ஸ்கி வியப்படைகிறார், எல்லாப் பிரெஞ்சுக்காரர்களும் கச்சிதமான உடற்கட்டுக் கொண்டிருக்கிறார்கள் உல்லாசமாக வாழ விரும்புகிறார்கள். இனிப்பாகப் பேசி எந்தப் பொருளையும் உங்கள் தலையில் கட்டிவிடுவார்கள். சுதந்திரமான நகரமாக பாரீஸினை உணரவில்லை என்றும் குறிப்பிடுகிறார். டால்ஸ்டாய் தனது பயணத்திலும் இது போன்ற அபிப்ராயத்தையே பதிவு செய்திருக்கிறார்.
இந்தப் பயணம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஐரோப்பாவின் சிறப்புகளை அறிந்து கொள்ளச் செய்ததை விடவும் ரஷ்யாவினை புரிந்து கொள்ளவும் . ரஷ்யர்கள் ஏன் இப்படி அந்நியமோகம் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவின் ஆன்மாவை ஏன் எவரும் புரிந்து கொள்ளவில்லை.என்பது குறித்து அதிகம் யோசிக்கச் செய்திருக்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களைப் போல இந்தக் கட்டுரைத் தொகுப்பு புகழ்பெறவில்லை
தஸ்தாயெவ்ஸ்கி காலத்தில் இப்படி வெளிநாட்டுப் பயண அனுபவங்களை எழுதுவது விரும்பி படிக்கப்படும் விஷயம் என்பதாலே இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
எந்த ஒரு தேசத்தையும் சில நாட்கள் கண்ணில் பார்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அது ஒரு பருந்து பார்வையில் நாம்பெற்ற அனுபவத்தை மட்டுமே பதிவு செய்வதாக இருக்கும். அப்படியான ஒரு முயற்சியாகவே இதை எழுதுகிறேன் என்று தஸ்தாயெவ்ஸ்கி தனது அறிமுகவுரையிலே குறிப்பிடுகிறார்.
கையில் குறைவான பணத்துடன். இரண்டாம் தரமான விடுதிகளில் தங்கிக் கொண்டு போலீஸ் எங்கே சந்தேகப்பட்டுக் கைது செய்துவிடுவார்களோ என்ற மறைமுக அச்சத்துட்ன், தெரிந்த நண்பர்கள் உதவியோடு ஐரோப்பாவினுள் பயணம் செய்திருக்கிறார். பீட்டர்ஸ்பெர்க்கை விட்டு நீங்கி வெளிநாடு போயிருந்த போதும் அவரது மனதிலிருந்து அந்த நகரம் விலகிப்போகவில்லை. அதன் சாயல்களைப் பல இடங்களில் காணுகிறார். இரண்டு மாதங்களுக்கும் மேலான இந்தப் பயணத்தில் எங்கும் அவர் மகிழ்ச்சி அடையவில்லை. மிகுந்த உற்சாகமாக நடந்து கொள்ளவில்லை. மறக்கமுடியாத அனுபவம் எதையும் பெறவில்லை.
இன்று அதே ஐரோப்பிய நகரங்களில் தஸ்தாயெவ்ஸ்கி மாபெரும் ஆளுமையாக கொண்டாடப்படுகிறார். ஆனால் அன்று அடையாளம் தெரியாத ஒரு நபராக நிழலைப் போல அலைந்து திரிந்திருக்கிறார்.
பணம் உள்ளவர்கள் ஒரு நகரைக் காணுவதும் பணமில்லாதவன் ஒரு நகரைக் காணுவதும் ஒன்றில்லை என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி அது என்றைக்கும் உண்மையான விஷயம்
••
June 9, 2021
உலகம் அறியாத காதல்.
ரோம் நகரிலுள்ள பழைய குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் வசிக்கிறாள் அன்டோனியெட்டா. அவள் ஆறு பிள்ளைகளின் தாய். அவளது கணவன் இமானுவேல் முசோலினியின் தீவிர விசுவாசி. கட்சி உறுப்பினர். 1930 களில் ரோமில் கட்டப்பட்ட மிகப் பெரிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு ஒன்றில் அவர்கள் வாழுகிறார்கள்.

ஒரு நாள் காலை அவள் படுக்கையிலிருந்து எழுந்து தனக்கான காபியைத் தயாரித்து அருந்திக் கொண்டு பிள்ளைகள் ஒவ்வொருவராக எழுப்பிவிடுகிறாள். படுக்கையிலிருந்த கணவனை எழுப்பி நேரமாகிவிட்டது என்று துரத்துகிறாள். அவளது காபியின் மிச்சத்தைக் கணவன் அருந்துகிறான்.
பிள்ளைகள் படுக்கையை விட்டு எழுந்து கொள்ள மறுக்கிறார்கள். கண்டித்து எழுப்பிவிடுகிறாள். அவசரமாகக் குளித்துப் புதிய ஆடைகள் அணிந்து கொள்கிறார்கள். கணவன் படுக்கை அறையிலே உடற்பயிற்சி செய்கிறான். இதற்குள் அனைவருக்கும் உணவு தயாரிக்கிறாள். சாப்பிட்டு முடித்து எச்சில் கையை அவளது உடையில் துடைக்கிறான் கணவன். அவர்கள் நகரில் நடைபெறவுள்ள பேரணியைக் காண்பதற்காகக் கிளம்புகிறார்கள்.
எல்லா நாட்களையும் போலவே அதுவும் ஒரு நாள் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த நாள் மிக விசேசமானது என்பதை நாள் முடியும் போது தான் அன்டோனியெட்டா உணர்ந்து கொள்கிறாள். நாமும் உணருகிறோம்.
அன்டோனியெட்டாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமில்லை. வரலாற்றிலும் அன்று முக்கியமான நாள்.
1938 மே 6 ஆம் தேதி, ஹிட்லரும் அவரது மந்திரிகள் மற்றும் படைத்தலைவர்களான ஜோசப் கோயபல்ஸ் மற்றும் ஜோகிம் வான் ரிப்பன்ட்ரோப் உள்ளிட்டவர்கள் ரோம் வந்து அதிபர் பெனிட்டோ முசோலினியை சந்திக்கிறார்கள். மாபெரும் வரவேற்பு அளிக்கபடுகிறது.

நகரில் இத்தாலிய-ஜெர்மன் கூட்டணியின் பிரம்மாண்டமான பேரணி நடக்கிறது. ஹிட்லரும் முசோலினியும் கைகோர்த்துச் செல்வதை ரோம் நகரமே ஒன்று திரண்டு வேடிக்கை பார்க்கக் கூடுகிறது. நகரெங்கும் நாஜிக் கொடிகள். அலங்காரங்கள். ராணுவ வாகனங்கள். இந்த ராணுவ அணிவகுப்பினை பார்வையிடத் திரள் திரளாக மக்கள் கிளம்புகிறார்கள்.
அன்டோனியெட்டாவிற்கு அந்தக் கொண்டாட்டத்தில் விருப்பமில்லை. வீட்டுவேலைகளைச் செய்து முடிக்கவே அவளுக்கு நேரம் போதவில்லை. அவளது அழுக்கான அங்கியும் கலைந்த தலையும் அவள் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. பிள்ளைகள் சாப்பிட்டு மீதமாக்கிப் போன உணவைச் சாப்பிடுகிறாள். எச்சில் தட்டுகளைக் கழுவ எடுத்துப் போடுகிறாள். அவளிடம் உற்சாகமேயில்லை. சலிப்பும் அலுப்புமாக அவள் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்க்கிறாள். முசோலியின் தீவிர விசுவாசியான அவளது கணவன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர்வலத்தைக் காணச் செல்கிறான் கிளம்புகிறான்.
வீட்டில் தனித்திருக்கும் அவளுக்குப் புற உலகின் பரபரப்பு எதிலும் நாட்டமில்லை.
ஹிட்லரும் முசோலினியும் ஒன்று சேருவது வரலாற்றின் திருப்புமுனையாகக் கருதப்பட்டது. ஆகவே நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. இந்தப் பேரணியைக் காண ஒட்டுமொத்த குடியிருப்பும் போய்விட அவள் மட்டும் தனித்திருக்கிறாள். எங்கோ ரேடியோ ஒலிக்கிறது.
அன்டோனியெட்டா வளர்க்கும் மைனா கூண்டிற்குள்ளிருந்து சப்தமிடுகிறது. அந்த மைனாவிற்கு உணவு அளிப்பதற்காக கூண்டினைத் திறந்து கிண்ணத்தை வெளியே எடுக்கிறாள் அவள் உணவு கொண்டுவருவதற்குள் மைனா கூண்டினை விட்டு வெளியே பறந்து போய்விடுகிறது.

அதைப் பிடிக்கத் துரத்துகிறாள். ஆனால் மைனா பறந்து போய் அதே குடியிருப்பின் எதிர்வரிசை வீட்டில் போய் நிற்கிறது.
அங்கே ஒரு ஆள் அமர்ந்து தபால் உறைகளில் முகவரி எழுதி சீல் வைத்துக் கொண்டிருக்கிறான். அன்டோனியெட்டா அவனைச் சப்தமாக அழைக்கிறாள். அவன் அந்த அழைப்பினை கண்டுகொள்ளவேயில்லை.
அந்த ஆளின் பெயர் கேப்ரியல். நடுத்தரவயது ஆண் . அவன் சலிப்புடன் அந்த வேலை பிடிக்காமல் தபால்களை வீசி எறிந்துவிட்டு தற்கொலை செய்ய முயல்பவன் போலக் கைத்துப்பாக்கியினை எடுக்கிறான். இந்த நேரம் வெளியே. யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டுப் பதற்றமாகச் சிதறிய காகிதங்களை எடுத்து அடுக்குகிறான். கதவைத் திறக்கிறான். வாசலில் அன்டோனியெட்டா நிற்கிறாள்.
தனது மைனா பறந்து வந்துவிட்டது என்று சொல்கிறாள். அதைப்பிடிப்பதற்குக் கேப்ரியல்.உதவி செய்கிறான்
மைனா அவளது கையில் கிடைக்கிறது. மைனாவை தன் மார்பினுள் சொருகியபடியே அந்த வீட்டினை சுற்றிப் பார்க்கிறாள். அவளை இதன்முன்பு பார்த்ததில்லை என்கிறான் கேப்ரியல். அந்த அறையில் தரையில் காலடித்தடங்கள் வரையப்பட்டிருப்பதையும் அதில் எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் கண்டு அது எதற்காக என்று கேட்கிறாள். தான் நடனம் பழகுகிறேன் என்று சொல்லி அவளையும் நடனமாடச் செய்கிறான். அவள் விளையாட்டுத்தனமான அவனது செயலை ரசிக்கிறாள். அவனது அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பார்வையிடுகிறாள். வேண்டுமானால் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போகும்படி சொல்கிறான். அவள் படிக்க நேரமில்லை என்கிறாள். முதற்சந்திப்பிலே அவனது இயல்பான பேச்சு, துடிப்பான செயல் அவளைக் கவர்ந்துவிடுகிறது.

கேப்ரியல் வானொலி அறிவிப்பாளராக இருந்து அந்த வேலையிலிருந்து நீக்கப்பட்டவன். மற்றும் முசோலினியின் பாசிச சட்டங்களை எதிர்ப்பவன். ஓரின சேர்க்கையாளன் என்று குற்றம்சாட்டப்படுகிறவன், எதிர்காலத்தைப் பற்றிய குழப்பமான மனநிலையோடு சலிப்பூட்டும் வேலை செய்து கொண்டிருந்த கேப்ரியலுக்கு அவளது வருகை புத்துணர்வை ஏற்படுத்துகிறது. அவளை வசீகரிக்க வேண்டும் என்பதற்காகத் துறுதுறுவென ஓடியாடுகிறான். அவளுக்காகக் காபி தயாரித்துத் தருவதாகச் சொல்கிறான். அவள் வேண்டாம் என விடைபெறுகிறாள். இனி எப்போது நாம் சந்திக்க முடியும் என்று கேட்கவே மைனா மறுபடி பறந்து போகும் போது என்று கேலியாகச் சொல்லி விடைபெறுகிறாள்.
மைனா பறந்து போவது என்பது அவள் ஆசையின் அடையாளம் போலவேயிருக்கிறது. தனது வீட்டில் அவள் ஒரு வேலைக்காரி போலவே நடத்தப்படுகிறாள். அவளை யாரும் பொருட்படுத்துவதேயில்லை. இந்த நிலையில் தான் அந்த மைனா கூண்டிலிருந்து பறந்து போகிறது. பறவையைத் தேடிச் சென்ற அவள் புதிய மனிதனை அறிமுகம் செய்து கொள்கிறாள்.
அவள் வருவதற்கு முன்பு வரை கேப்ரியலுக்கு வாழ்க்கையில் ஒரு பற்றுமில்லை. ஆனால் அவன் அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான். அவளது வருகை அவனுக்குள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது.

ஒரு குடியிருப்பிலுள்ள இருவர் தற்செயலாகச் சந்தித்துக் கொள்வதைத் தாண்டி ஏதோ அவர்களுக்குள் நடக்கிறது. அதைத் தன் கண்களால் அபாரமாக வெளிப்படுத்துகிறார் சோபியா லாரென்.
மைனாவோடு அவள் வீடு திரும்பிய சில நிமிஷங்களுக்குள் அவளைத் தேடி வருகிறான் கேப்ரியல். அடுத்த சந்திப்புத் துவங்குகிறது. அவனை வீட்டிற்குள் அழைத்துக் காபி தயாரித்துத் தருகிறாள். அவனே காபி பொடியை அரைக்கிறான். இந்த நேரம் ஒரு வேலைக்காரி அவன் அன்டோனியெட்டா வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து கொண்டு அவனைப் பற்றி எச்சரிக்கை செய்கிறாள். அவன் ஒரு ஏமாற்றுக்காரன என்று திட்டுகிறாள். அதை அன்டோனியெட்டா கண்டுகொள்ளவேயில்லை.
அன்டோனியெட்டாவின் மகன் வைத்திருந்த விளையாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வலம் வருகிறான் கேப்ரியல். இது என்ன சிறுபிள்ளைத்தனம் என்று கேலி செய்கிறாள். அவன் ஒரு இளம் காதலன் போலவே நடந்து கொள்கிறான்.
அவனது துடிதுடிப்பு, உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்கிறது. நடுத்தர வயதை அடைந்த அவள் இளமை தன்னைவிட்டுப் போய்விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள். அது உண்மையில்லை என்பதைக் கேப்ரியல் உணர வைக்கிறான். அவளுக்குள் மெல்ல ஆசை உருவாகிறது. அவனைப் பற்றி விசாரிக்கிறாள். அவன் தனது கடந்தகாலத்தைப் பற்றிச் சொல்கிறான். தான் காதலித்த பெண்ணைப் பற்றிக் கூடச் சொல்கிறான்.
தன்னை அவன் சுற்றிவருவது காமத்தின் பொருட்டோ என நினைத்து விலகும் அன்டோனியெட்டா அவனைக் கோவித்துக் கொள்கிறாள்.
அவன் தான் அப்படி நடந்து கொள்கிறவனில்லை என்று மறுக்கிறான். வேலைக்காரி மறுபடி வரவே அவனை வெளியே ரகசியமாகப் போகும்படி அனுப்பி வைக்கிறாள்

அவர்கள் மொட்டை மாடிக்குப் போகிறார்கள். கொடியில் உலர்ந்து கொண்டிருக்கும் துணிகளை அவள் மடித்து வைக்கிறாள். அவன் துணிகளுக்குள் முகம் புதைத்து ஆசைமொழி பேசுகிறான். அவளை பலவந்தமாகக் கட்டிப்பிடித்து அணைக்க முயல்கிறான். அவள் கோபம் கொண்டு அடிக்கிறாள். அதை ரசிக்கும் கேப்ரியல் அவளிடம் மன்னிப்பு கேட்டுத் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது தவறு என்கிறான். ஊடலும் கோபமும் புரிதலும் அன்புமாக அவர்கள் தனியுலகில் சஞ்சரிக்கிறார்கள்.
வெளியே நகரில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடக்கிறது. மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள். அது வேறு உலகம். வேறுவாழ்க்கை.
கேப்ரியலைத் தேடி அவனது வீட்டிற்கு மறுபடியும் வரும் அன்டோனியெட்டா அவனிடம் கோபமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறாள். உறைந்த பனி உருகுவது போல அவர்களின் வயது கரைந்து போய் இருவரும் இளம்காதலர்கள் போலவே நடந்து கொள்கிறார்கள்.
அன்டோனியெட்டாவிடம் பதற்றமில்லை. தயக்கமில்லை. அவனுடன்மனம் விட்டுப் பழகுகிறாள். படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறாள். அதன்பிறகு அவன் அடையும் குற்றவுணர்ச்சி கூட அவளிடமில்லை. பேரணி முடிந்து ஆட்கள் வீடு திரும்புகிறார்கள். அவசர அவசரமாகத் தன் வீட்டிற்கு ஓடிவருகிறாள் அன்டோனியெட்டா.
பிள்ளைகளுடன் வீடு திரும்பும் கணவன் அந்த நாள் மறக்கமுடியாத தினம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். அவளுக்கும் அப்படியான ஒரு நாளே. அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அந்த நாளின் இரவில் அவளைக் கணவன் ஏழாவது குழந்தையைப் பெற்றுக் கொள்வோம் வா என்று படுக்கைக்கு அழைக்கிறான். அவள் தயக்கத்துடன் கேப்ரியல் வீட்டினை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறாள்.
அந்த அவர்களின் உறவு இனி என்னவாகும் என்பதை அழகான இறுதிக்காட்சியின் வழியே நிறைவு செய்கிறார்கள்
நாம் இதுவரை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சினிமா என்ற உணர்வு அப்போது தான் நமக்கு ஏற்படுகிறது

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் முக்கியத் திரைப்படமாகக் கொண்டாடப்படும் A Special Day 1977ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர். எட்டோர் ஸ்கோலா. சோபியா லாரெனும் மார்செல்லோ மாஸ்ட்ரோயானியும் நடித்திருக்கிறார்கள்.
மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்றின் மறுபக்கமாக ஒரு நடுத்தரவயது பெண்ணிற்கும் ஆணுக்கும் காதல் அரும்பி ஒரு நாளில் முடிந்துவிடுகிறது. அதிகாரத்தின் ஒன்றிணைவு ஒரு பக்கம் என்றால் அன்பின் ஒன்றிணைவு மறுபக்கம் நடக்கிறது
ஒரு நாளின் இரண்டு மடிப்புகளைத் திறந்து காட்டியதோடு எது சரி எது தவறு என்ற கேள்வியை நம்மிடமே விட்டுவிடுகிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கக் காட்சியில் ஹிட்லரின் வருகையைக் காட்டுவதற்காக அதிகாரப்பூர்வ நியூஸ் ரீல் காட்சிகளைக் காண்பிக்கிறார்கள். காரணம் நாம் திரையில் காணுவது உண்மை என்பதை உணர்த்தவே. ஹிட்லர் நிஜம் என்றால் படத்தில் நாம் காணும் காதலும் உண்மையானதே.
.ஒளிப்பதிவாளர் பாஸ்குவலினோ டி சாண்டிஸ் வீட்டுவசதிவாரிய குடியிருப்பினை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். அதன் ஜன்னல்கள் வழியே தெரியும் காட்சி. உள்ளே நுழையும் வாசல். ஆட்கள் ஒன்று கூடும் விதம்.. பேரணிக்காட்சிகள், வீட்டிற்குள் கேமிரா அவர்கள் கூடவே நிழல் போலச் செல்கிறது. மிக அழகாக அரங்க அமைப்பு மற்றும் ஒளிப்பதிவு .
அன்டோனியெட்டா லியோ டால்ஸ்டாயின் அன்னாகரீனினாவை நினைவுபடுத்துகிறாள். அன்னாவிற்கு ஒரேயொரு பையன். அவள் விரான்ஸ்கியின் வழியே தன் இளமையை அடையாளம் கண்டுகொள்வது போலவே கேப்ரியல் மூலம் அன்டோனியெட்டா தன்னை அடையாளம் கண்டுகொள்கிறாள்.
குடும்பமே அவள் மீது அதிகாரம் செலுத்துகிறது. மைனாவின் கூண்டு போலவே அவளுக்கு வீடிருக்கிறது. அதிலிருந்து ஒரேயொரு நாள் விடுபடுகிறாள். அது தற்செயலான விஷயம். காலியான அந்தக் குடியிருப்பு ஒரு சாட்சியம் போலவே இருக்கிறது
வேலைக்காரியின் வருகை அந்தக் குடியிருப்பு ஒருபோதும் அடங்கிவிடாது. யாரோ மற்றவர்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதையே சுட்டுகிறது.
அன்டோனியெட்டாவிற்குப் புத்தகம் படிக்க விருப்பமிருக்கிறது. ஆனால் குடும்பச் சுமை அதை அனுமதிக்கவில்லை. கடைசிக்காட்சியில் அவள் கேப்ரியல் கொடுத்த புத்தகத்தைப் படிக்கிறாள்.

படத்தின் ஆரம்பக் காட்சி நான்கு நிமிஷங்கள் கொண்டது அதில் அன்டோனியெட்டாவின் தினசரி வாழ்க்கை அழகாக விவரிக்கபட்டுவிடுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று அம்மாக்கள் தேவைப்படுகிறார்கள். படுக்கையறைகளைச் சுத்தம் செய்ய, மற்றவர் சமையலறையைச் சுத்தம் செய்ய, மூன்றாம் நபர் ஒரு நாள் முழுவதும் படுக்கையில் படுத்துக்கொள்ள என ஒரு காட்சியில் சொல்கிறாள். அது அவளது சலிப்பான வாழ்க்கையின் குரல்.
சோபியா லாரனுக்குப் படத்தில் மேக்கப் கிடையாது. அழுக்கான உடை. இத்தாலியத் தொழிலாளர் குடும்பத்துப் பெண்ணின் தோற்றத்தை அப்படியே உருவாக்கியிருக்கிறார்கள். சோபியா லாரெனும் மார்செல்லோ மாஸ்ட்ரோயானியும் சிறந்த திரை ஜோடிகள். இந்தப் படம் அவர்களின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம்
இத்தாலிய நியோ ரியலிசப்படங்கள் இலக்கியப்பிரதிகளைப் போலவே வாழ்க்கையைத் திரையில் நுட்பமாகச் சித்தரித்துக் காட்டுகின்றன. இதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அந்தப்படங்கள் புதுமை மாறாமல் இருக்கின்றன
•••
June 8, 2021
விட்டல்ராவின் கலைப் பார்வைகள்
கலை இலக்கியச் சங்கதிகள் என்ற விட்டல்ராவ் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். விட்டல் ராவ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், ஓவியர். கலைவிமர்சகர்.

பெங்களூரில் வசிக்கும் விட்டல்ராவ் சென்னை ஒவியக்கல்லூரியில் பயின்றவர். உலகச் சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர். தேர்ந்த இசை ரசிகர். வரலாற்றின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட இவர் தமிழகத்தின் கோட்டைகள் குறித்துச் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

இவரது போக்கிடம், நதிமூலம் காலவெளி வண்ண முகங்கள் போன்ற நாவல்கள் தனித்துவமிக்கவை. . மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தந்த அவருக்குப் போதுமான அங்கீகாரமும் கௌரவமும் இன்றுவரை அளிக்கப்படவில்லை. சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளுக்குத் தகுதியான படைப்பாளி. நுண்கலைகள் குறித்து இவர் அளவிற்குச் சிறப்பாக எழுதியவர்கள் இல்லை.
இவரது புத்தகங்களில் வாழ்வின் சில உன்னதங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான நூல்.

சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்த பழைய புத்தகக் கடைகளைப் பற்றியும் அங்கே கிடைத்த அரிய ஆங்கில இதழ்கள்.புத்தகங்கள் குறித்தும் மிக அழகாக எழுதியிருக்கிறார். பழைய புத்தகக்கடைகளின் உரிமையாளர்களைப் பற்றி இவர் எழுதியிருப்பது மிகவும் உண்மை. என் அனுபவத்தில் அதை முழுமையாக அறிந்திருக்கிறேன். அவர்கள் வெறும் புத்தக வணிகம் செய்யவில்லை. அது ஒரு சேவை. தேடி வந்து புத்தகம் கேட்பவர்களுடன் அவர்கள் கொண்டுள்ள உறவும் அன்பும் நிஜமானது.
இவரைப் போலவே பழைய புத்தகக் கடைகளைத் தேடி அலைகிறவன் என்ற முறையில் இந்த நூலை அடிக்கடி எடுத்துப் படிப்பேன். சர்வதே ஆங்கில இலக்கிய இதழ்கள். டைம், லைப் இதழ்கள் என்று எவ்வளவு இதழ்களைத் தேடி வாங்கிப் படித்து பாதுகாத்து வருகிறார் என்பது வியப்பளிக்கிறது.
புத்தகங்களை எப்படிப் பைண்டிங் செய்ய வேண்டும் என்பது பற்றி இதில் ஒரு கட்டுரை உள்ளது. அது போல ஒரு கட்டுரையை இதுவரை யாரும் எழுதியதில்லை. அந்த பைண்டிரின் வாழ்க்கை முழுமையாகக் கண்ணில் தெரிகிறது. புத்தகங்களை உயிராக நேசிக்கும் ஒருவரால் தான் அப்படி எழுத முடியும். இந்த நூலிற்கு Kusumanjali Sahitya Samman விருது கிடைத்துள்ளது.
கலை இலக்கியச் சங்கதிகள் என்ற நூலினை ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் 39 கட்டுரைகள் உள்ளன. எழுத்தாளர்கள் குறித்தும். ஓவியர்கள், சிற்பிகள் குறித்தும், தமிழ் அழகியல் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இதன் வழியே குறுக்கு வெட்டில் ஐம்பது ஆண்டுகாலத் தமிழ் இலக்கிய, கலை வெளியின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது
இந்தத் தொகுப்பில் மூன்று கட்டுரைகள் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவை.
1993ல் நானும் கோணங்கியும் எழுத்தாளர் நடைபாதை இதயனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரது நாவலை வாங்குவதற்காக வேலூரில் அவரது வீடு தேடி அலைந்தோம். ஒருவருக்கும் அவரைப் பற்றித் தெரியவில்லை.

அதன் பிறகு சென்னை பழைய புத்தகக் கடைகளில் அந்த நாவலைத் தேடி அலைந்திருக்கிறோம். இன்று வரை கண்ணில் படவேயில்லை. இந்தத் தொகுப்பில் விட்டல்ராவ் நடைபாதை இதயனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருடன் விட்டல்ராவிற்கு ஏற்பட்ட நட்பினையும் நினைவு கூர்ந்திருக்கிறார். மிக நல்ல கட்டுரை
நடைபாதை என்ற நாவலை எழுதி விகடன் போட்டியில் முதல்பரிசு பெற்றவர் இதயன். இந்த நாவல் மும்பையில் சாலையோர கடைகள் நடத்தும் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கக்கூடியது.
இதயனின் இயற்பெயர் குப்புசாமி. வேலூர் பெரிய அல்லாபுரத்தில் வசித்திருக்கிறார். கையில் காசில்லாமல் பிழைப்பு தேடி மும்பை சென்றவர் அங்கே சந்தித்த நடைபாதை வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார். சில ஆண்டுகள் இதயனும் நடைபாதைக் கடை நடத்தியிருக்கிறார். இனக்கலவரத்தில் இந்தக் கடை சூறையாடப்பட்டிருக்கிறது.
பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை மையாக வைத்துக் கிராண்ட் ரோடு என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இசையிலும் வாசிப்பிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தார் இதயன். அவரது சேமிப்பில் மிகச்சிறந்த இசைத்தட்டுகள் இருந்ததாக விட்டல்ராவ் எழுதுகிறார். ஆழ்வார்பேட்டை நியூ மைசூர் கபே மாடியில் ஒரு அறை எடுத்துத் தங்கி வாழ்ந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதவர்.
ஆரம்பக் காலத்தில் தன் எழுத்து அங்கீகரிக்கப்படவில்லை என்று புதுச் சவரப்பிளேடு ஒன்றால் தனது குரல்வளையை இதயன் அறுத்துக் கொண்டார். ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டார் என்று விட்டல்ராவ் குறிப்பிடுகிறார். அதிர்ச்சியான விஷயம். புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளனின் துயரை இதை விட வலியோடு சொல்ல முடியாது.
அசோகமித்ரனின் அபுனைவுகள் என்ற கட்டுரையில் அசோகமித்ரனிடம் வெளிப்படும் கேலி மற்றும் தீவிரத்தன்மை, நேர்மை, பொறுப்புணர்வு பற்றி விட்டல்ராவ் மிகச்சரியாக எழுதியிருக்கிறார். அசோகமித்திரனின் ஆங்கிலக் கட்டுரைகளைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது சிறப்பு.

கோவிந்தன்டே விலாசம் என்ற கட்டுரையில் சென்னையில் வசித்த மலையாள இலக்கிய ஆளுமை எம். கோவிந்தன் பற்றியும் அவருடன் தனக்கு ஏற்பட்ட நட்பினையும் பதிவுசெய்திருக்கிறார் கோவிந்தன் சமீக்ஷா இதழ் கொண்டுவந்த விதம், மற்றும் கலை இலக்கியம் குறித்த அவரது பார்வைகள், கோவிந்தனின் மகன் மணவேந்திர நாத் எடுத்த படம் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையில் எம். கோவிந்தன் மாரியப்பன் என்றொரு சிறுகதையைத் தமிழில் எழுதியிருக்கிறார். அது இதுவரை கிடைக்கவில்லை என்ற தகவலைப் பதிவு செய்திருக்கிறார்.
விட்டல்ராவ் தேர்ந்த சொற்களைக் கொண்டு சரளமாக நடையில் கட்டுரைகள் எழுதுகிறார். ஒரு கட்டுரைக்குள் எவ்வளவு அபூர்வமான தகவல்கள். நுட்பமான விஷயங்கள் என்று வியப்பாகயிருக்கிறது
மா.அரங்கநாதன் பற்றிய கட்டுரையில் அவரது கதைகள் அசலாகத் தமிழில் சிந்திக்கப்பட்டுத் தமிழின் கவிதை உரைநடை மரபில் எழுதப்பட்டிருக்கிறது , கெட்டிக்காரத்தனமற்ற சிந்தனாபூர்வ அறிவார்த்த வெளியிலிருந்து தோன்றுபவை அரங்கநாதனின் கதைகள் என்கிறார்.
இது விட்டல்ராவின் படைப்புக்களுக்கும் பொருந்தக்கூடியதே
••
கன்னடக் கதைகள்
எதிர் வெளியீடு கொண்டு வந்துள்ள வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் தொகுப்பை வாசித்தேன். கே. நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மலையாளச் சிறுகதைகள் அளவிற்குக் கன்னடச்சிறுகதைகள் தமிழுக்கு அறிமுகமாகவில்லை. ஆங்கிலத்தின் வழியே தேடி வாசிக்க ஒன்றிரண்டு புத்தகங்கள் கிடைக்கின்றன. இந்தச் சூழலில் சமகாலக் கன்னடக்கதைகள் எப்படியிருக்கின்றன என்று அறிந்து கொள்வதற்கு இது சிறந்த அறிமுகத் தொகுப்பு.
தமிழ் கதைகளோடு ஒப்பிடும் போது இந்தக் கதைகளின் களன்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்றன. பெரும்பாலும் யதார்த்த கதைகள். அதுவும் நேரடியாகச் சொல்லப்பட்ட கதைகள். கதையின் வடிவம் பற்றிய கவனம் அதிகமில்லை. உரையாடல்கள் அதிகமுள்ள இந்தக் கதைகளில் பெருநகர வாழ்க்கையின் சித்திரங்களே அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தத் தொகுப்பில் ஜயந்த் காய்கிணி எழுதிய இரண்டு சிறுகதைகளும் எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாகத் தண்ணீர் என்ற கதை மிகச்சிறப்பாக உள்ளது. ஜயந்த் காய்கிணியின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன. மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுகிறார். தண்ணீர் கதை மும்பை நகரின் பெருமழை நாட்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. நுட்பமான விவரிப்பு மற்றும் கதாபாத்திரங்களின் அசலான சித்தரிப்பு கதைக்கு வலிமை சேர்க்கிறது.
தமிழில் 1960, 1970களில் எழுதப்பட்ட சிறுகதைகள் போலவே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் காணப்படுகின்றன.
••

நல்லதம்பி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள கன்னட சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலான யாத்வஷேம் வாசித்தேன். ஹிட்லரின் நாஜி வதை முகாம்களின் விவரங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தின் உதவியோடு பிரிந்து போன தனது உறவுகளைத் தேடும் ஒரு பெண்ணின் கதை.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் யூதவெறிக்குப் பயந்து தன் தந்தையோடு பெங்களூரில் தஞ்சம் புகும் ஹ்யானா மோசஸ் என்ற பெண்ணின் கதையே மிக அழகாக எழுதியிருக்கிறார் நேமிசந்திரா.

பக்கத்து வீட்டுகாரர்களின் அன்பைப் பெற்ற ஹ்யானா அவர்களில் ஒருத்தியாக வளருகிறாள். அனிதா என அவள் பெயர் மாற்றம் அடைகிறது. அந்தக் குடும்பத்தில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறாள். தனது யூத அடையாளங்களை மறைத்துக் கொண்டு வாழும் அவள் நீண்ட காலத்தின் பிறகுத் தனது பிரிந்த குடும்ப உறவுகளைத் தேட ஆரம்பிக்கிறாள். இந்தப் பயணம் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. விரிவான ஆய்வின் மூலம் எழுதப்பட்ட இந்த நாவல் புதிய கதைவெளியை கொண்டிருக்கிறது. குறிப்பாக அனிதா தன் பிரிந்த உறவுகளை திரும்பச் சந்திக்கும் பகுதி உணர்ச்சிபூர்வமாக உள்ளது. தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழும் பெண்ணின் அகஉலகைத் துல்லியமாக நேமி சந்த்ரா எழுதியிருக்கிறார்.
சிறந்த மொழியாக்கம். நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல் போல வாசிக்கச் சரளமாக உள்ளது.
யூதப்படுகொலை வரலாற்றை மையப்படுத்தி இப்படி ஒரு நாவல் கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பது ஆச்சரியமே.
கன்னடத்திலிருந்து தமிழுக்குச் சிறந்த நூல்களை மொழியாக்கம் செய்துவரும் நல்லதம்பி மிகுந்த பாராட்டிற்குரியவர். தமிழின் சிறந்த படைப்புகளையும் இவர் கன்னடத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்.
••
கணேஷ் பாபு
சிங்கப்பூரில் வசித்து வரும் கணேஷ் பாபு தீவிர இலக்கிய வாசகர். சமகால இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். எனது படைப்புகளை தொடர்ந்து படித்து விமர்சனம் எழுதி வருபவர்.

2008-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வரும் இவர் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற சிறுகதை பயிலரங்கில் சிறந்த கதையாக இவரது கதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது
சமீபத்தில் அரூ இணைய இதழுக்காகக் கணேஷ் பாபு என்னை நேர்காணல் செய்தார். மிக விரிவான நேர்காணலிது.
கேள்விகளை அனுப்பி வைக்கும்படி அரூ ஆசிரியர் குழுவிடம் சொன்ன போது அவர்கள் ஆறுமாத காலம் எடுத்துக் கொண்டு குழுவாக எனது முக்கியப் படைப்புகள் மற்றும் இதற்கு முன் வெளிவந்துள்ள நேர்காணல்கள் அனைத்தையும் ஆழ்ந்து வாசித்து அதன்பிறகே கேள்விகளை உருவாக்கினார்கள். இப்படிச் செயல்படுவது அபூர்வமான விஷயம். இதற்கு முக்கியத் துணையாக இருந்தவர் கணேஷ்பாபு.
எனது நாவல்களையும் கதைகளையும் கட்டுரைகளையும் எவ்வளவு ஆழ்ந்து படித்திருக்கிறார் என்பது அவர் எழுப்பிய கேள்விகளிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. நல்ல வாசகரை அடையாளம் கண்டு கொள்ளும் போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. எழுத நினைத்து நான் மறந்து போன பல்வேறு விஷயங்களை அவர் நினைவு வைத்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் ஒரு நாவலின் கட்டுமானம் துவங்கி அதன் கதைசொல்லும்முறை. மொழி, கதை வழியாக வெளிப்படும் காலவோட்டம். சமூகச்சித்தரிப்பு, கதாபாத்திரங்களின் தனித்துவம் என்று அதன் பல்வேறு தளங்களைச் சரியாக உள்வாங்கிக் கொண்டு கேள்விகளை உருவாக்கியிருக்கிறார்.
கணேஷ் பாபுவைப் போன்ற சிறந்த வாசகர்களே நான் தொடர்ந்து எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறார்கள். அவருக்கு என் மனம் நிறைந்த அன்பும் பாராட்டுகளும்.
ஒரு படைப்பாளியாக அவர் இன்னும் சிறந்த படைப்புகளைத் தரட்டும் என்று வாழ்த்துகிறேன்
June 7, 2021
சிறப்பு சலுகை
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தேசாந்திரி பதிப்பகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. ஆன் லைன் விற்பனையும் உண்டு.
இந்த மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக இருபது சதவீதத் தள்ளுபடியில் அனைத்து நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்

June 6, 2021
கதையாடல்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள். அறிஞர்கள். திரைக்கலைஞர்களின் சிறந்த நேர்காணல்களைக் கொண்ட யூடியூப் சேனல் Web of Stories. இதில் இரண்டு நிமிஷங்கள் முதல் ஐந்து நிமிஷங்கள் வரை சிறுசிறு பகுதியாக நேர்காணலை எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சேனலில் பிரான்சின் முக்கிய எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமானJean-Claude Carrière நேர்காணல் உள்ளது. அவசியம் காண வேண்டிய நேர்காணலிது.
Jean-Claude Carrière – A house with a history
ஓநாயின் பயணம்
மாங்கா எனப்படும் ஜப்பானிய கிராபிக் நாவல்களை விரும்பி வாசிப்பேன். அதன் சித்திரங்களும் கதை சொல்லும் முறையும் வியப்பூட்டக்கூடியவை. இன்றைய ஹாலிவுட் சினிமாவில் இதன் தாக்கம் அதிகமிருக்கிறது. குறிப்பாக வித்தியாசமான கேமிரா கோணங்களை இந்த வகை மாங்காவிலிருந்தே உருவாக்குகிறார்கள். படக்கதை என்ற சம்பிரதாயமான வடிவத்தின் பெரிய பாய்ச்சலாகவே இது போன்ற சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகின்றன.

Lone Wolf and Cub இந்த வரிசையில் மிக முக்கியமானது. இதன் 28 தொகுதிகளையும் வைத்திருக்கிறேன். இந்தத் தொகுதியிலிருந்து ஆறு திரைப்படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சி தொடரை உருவாக்கியிருக்கிறார்கள். ஜப்பானில் மிகவும் புகழ்பெற்ற மாங்காவாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

ஜப்பானுக்குச் சென்றிருந்த போது ஒரு புத்தகக்கடைக்குப் போயிருந்தேன். அங்கே வயது வாரியாக இது போன்ற சித்திரக்கதைகளை வைத்திருக்கிறார்கள். விலை மிகவும் அதிகம். ஆனாலும் அதை மக்கள் விரும்பி வாங்கி வாசிக்கிறார்கள். ரயில் பயணத்தில் இது போன்ற சித்திரக்கதைகளை பலரும் வாசிப்பதை கண்டேன். இந்த கதைகள் கிண்டில் வடிவிலும் வாசிக்க கிடைக்கின்றன.

இளைஞர்கள் அதிகம் வாசிக்கும் சித்திரக்கதைகளில் வன்முறையும் பாலுறவு விஷயங்களும் மிக அதிகம் இடம் பெறுகின்றன. இந்தக் கதைகள் திரைப்படமாகவும் வெளியாகின்றன.
1970 ஆம் ஆண்டில் Lone Wolf and Cub மாங்காவின் முதற்தொகுதி வெளியிடப்பட்டது. கசுவோ கொய்கே உருவாக்கிய இந்தத் தொடருக்குச் சித்திரங்கள் வரைந்தவர் கோசேகி கோஜிமா.

எடோ-காலகட்ட ஜப்பானில் கதை நிகழுகிறது. சாமுராய் ஒருவனின் பழிவாங்கும் கதையை மிகச் சுவாரஸ்யமாகக் கொண்டு போகிறார்கள். அவன் தன் குழந்தையுடன் பயணம் செய்கிறான். வழியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். தாக்குதல்கள். பழிவாங்கத் துடிக்கும் குல எதிரிகள். இவற்றின் ஊடாக பௌத்த சாரம் போன்ற கருத்துக்களும் இடம்பெறுகின்றன. தனது மூன்று வயது மகன் டைகோராவைக் ஒரு தள்ளு வண்டியில் வைத்து தள்ளியபடியே பயணிக்கிறான். இந்த கதைத்தொடரில் படுகொலைகளின் சித்தரிப்பு மிக அதிகம். ஒவ்வொரு ‘சாகசமும்’ முக்கிய கதைப்போக்குடன் இணையக்கூடியது. 17 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் இயற்கை அழகு மற்றும் நம்பகமான வரலாற்று விவரங்கள் இரண்டையும் கதை வழியாகஅழகாக இணைத்திருக்கிறார்கள். இந்த சாகசப்பயணத்தின் ஊடே மாறுபட்ட கதாபாத்திரங்கள், வாழ்க்கை முறைகள் விவரிக்கபடுவதால் நாம் சாமுராய்களின் விசித்திர உலகையும் அதன் போராட்டங்களையும் துல்லியமாக அறிந்து கொள்கிறோம்

இளம் திரைப்பட இயக்குநர் இந்த மாங்காவிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது குறிப்பாக இதன் காட்சிக்கோணங்கள். ஆக்ஷன். மற்றும் காட்சிகளைத் துண்டிக்கும் விதம் தனித்துவமானது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
