S. Ramakrishnan's Blog, page 125
June 30, 2021
வேம்பலையின் மனிதர்கள்
ஜேகே
நெடுங்குருதி நாவல் குறித்த விமர்சனம்

புத்தகங்கள் எப்போதும் ஆச்சரியங்களையே நமக்கு அளிக்கின்றன. வார இறுதியில், இன்னமும் சில நாட்களில் இழுத்து மூடப்படப்போகும் புத்தகசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே எல்லா புத்தகங்களையும் கழிவு விலையில் ஐந்து டொலர்கள் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். புத்தக வரிசையில் லாகிரியின் லோ லாண்ட் இருந்தது. கைட் ரன்னர் இருந்தது. லோங்கிடியூட் இருந்தது. டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் என்று ஆதர்சர்கள் அனைவருமே, ஐந்து டொலர்களுக்குள் அடங்கியிருந்தார்கள். ஐநூறு பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். ஐம்பது பக்க புத்தகமும் ஐந்து டொலர்தான். சுற்றிவரவிருந்த அலுமாரி பூராக புத்தகங்களோடு நடுவில் நின்றபோது, இன்டர்ஸ்டெல்லரில் கருந்துளைக்குள் நிற்கின்ற நாயகன் நினைவே வந்தது.
ஒவ்வொரு புத்தகங்களையும் திறக்கையில் உள்ளே புதிதாக ஒரு உலகம் உருவாகிறது. ஏலவே இருப்பதில்லை. உருவாகிறது. எழுத்தாளர் சிருஷ்டிப்பதை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதை அடிப்படையாகக்கொண்டு அந்த உலகம் கூர்ப்படைகிறது. லாகிரியின் எழுத்துக்களைக்கொண்டு நான் படைக்கும் உலகம், இன்னொருவன் படைப்பதிலிருந்து நிச்சயம் மாறுபடவே செய்யும். நான் அந்தப்புத்தகத்தை திறக்காவிடில் அப்படி ஒரு உலகம் உருவாகாமலேயே போயிருக்கும். என் மதுமிதாவும் இன்னொருவரின் மதுமிதாவும் வேறு வேறு நபர்கள். ரத்னாவும் வேறு. கீ. ராவின் அண்ணாச்சி என் உலகத்தில் வேட்டியை மடித்துக்கட்டியிருப்பார். வெற்றிலை போடுவார். தலை வழுக்கையாக இருக்கும். உங்கள் அண்ணாச்சிக்கு நிறைய தலைமயிர் இருக்கலாம். புதுமைப்பித்தனின் செல்லம்மாள் எனக்கு நயினாதீவில் வாழும் கொழும்பர்மாமி மாதிரி இருப்பார். உங்களுக்கு வேறொருவராக இருப்பார். ஒரே நாவல். ஒரே பாத்திரங்கள். ஒரே ஊர்கள். ஆனால் உலகம் வேறு. ஒவ்வொரு நாவலுக்கும் உயிர் கொடுக்க ஒரு வாசகன் வரவேண்டியிருக்கிறான். ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு தனி உலகம்.
நெடுங்குருதி. இது என் உலகம். நான் படைத்த உலகம். எஸ். ரா மன்னிக்க;
வேம்பலை, காலவெள்ளத்தில் மெல்ல மெல்ல சிதிலமாகிவரும் கள்ளர்கள் வாழும் கிராமம். வெம்மைசூழ் ஊர். ஊரின் குணம் மக்களில் தொனிக்கிறதா அல்லது மக்களின் குணம் ஊரில் தொனிக்கிறதா என்று தெரியாதவண்ணம் வேம்பலைக்கும் அம்மக்களுக்குமிடையிலான குணாதிசயங்கள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. அது வேண்டியபொழுதில் மக்களை உள்ளே இழுக்கிறது. வேண்டாதபோது குடும்பத்தோடு காறித்துப்புகிறது. அந்த மக்கள் ஊர் ஊராக சென்று கொள்ளையடிப்பவர்கள். வேம்பலை அவர்களையே தன்னிஷ்டப்படி கொள்ளையடிக்கிறது.
அப்படி வேம்பலை தன் விருப்பப்படி பந்தாடுகின்ற குடும்பம் நாகுவினுடையது. அவனோடு சேர்ந்த மூன்று தலைமுறைகளை சொல்லுகின்ற நாவல் நெடுங்குருதி. நாகு சிறுவனாக வாழுகின்ற வேம்பலை கிராமம், வாழ்ந்துகெட்ட ஊரின் படிமானங்களோடு காட்சி அளிக்கிறது. வெயிலும் பசியும் தாகமும் ஊரை வாட்டியெடுக்கிறது. கிராமத்துக்குவரும் பரதேசிக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பது அரிதாகிறது. ஊர் வரட்சியாகும்போது மக்களும் வரட்சியடைகிறார்கள். அவர்களின் மன நிலைகளும் ஈரம் வரண்டு பாலையாகிறது. நீர் வறண்ட கிணற்றில் கிடந்த ஆமையை எடுத்து வருகிறாள் நாகுவின் தமக்கை நிலா. அதையும் களவாடி சமைத்து உண்ணும் நிலையில் ஊரவர் இருக்கிறார்கள். நாகுவின் தகப்பன், சொந்தத்தொழில் செய்வதை அவமானமாக நினைப்பவன். வேற்றூருக்கு வியாபாரம் செய்வதாகச்சென்று அங்கே அப்பாவி பக்கீரை ஏமாற்றி செருப்புகளை திருடிக்கொண்டு வந்துவிடுகிறான். ஆனால் ஊரில் செருப்பு விக்க அவனுக்கு தன்மானம் இடம் கொடுக்கவில்லை. முயல் வேட்டைக்கு செல்கிறான். எலிகளை வேட்டையாடுகிறான். செருப்புகளை தேடி வந்த அப்பாவி பக்கீரை கொல்கிறான். பக்கீரைத்தேடிவரும் மனைவியையும் பிள்ளைகளையும் வேம்பலை கிராமம் சுவீகரிக்கிறது. தனக்குகந்தபடி மாற்றியமைக்கிறது. அயலூரின் குலச்சாமி கரையடி கருப்புவைக்கூட வேம்பலை ஈர்க்கிறது. ஆனால் தன் இயல்புக்கு ஒவ்வாத நாகுவையும் அம்மாவையும் ஊரை விட்டே துரத்துகிறது.
வேம்பர்கள் தெருவின் வடக்கே ஒரு ஊமை வேம்பொன்று நிற்கிறது. பூக்காது. காய்க்காது. காற்றுக்குகூட அசையாத வேம்பு அது. அங்கே நிறைய ஆணிகள் அறைபட்டுக் கிடந்தன. வீரம்மாள் அதில் ஒன்றை பிடுங்கி வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அன்றிலிருந்து ஆரம்பிக்கிறது அவளுக்கு தரித்திரம். தாளாமல் வீரம்மாள் மீண்டும் அந்த ஆணியை மரத்திலேயே அறைவதற்கு வருகிறாள். அறைகிறாள். ஏறவேயில்லை. அடிக்க அடிக்க ஆணி எப்பன் கூட நுழையவில்லை. வளைகிறது. பலமாக அடித்தால் ஆணி ஒடிந்துவிடுகிறது. ஆனாலும் அந்த வேம்பிலே ஏலவே அடிபட்ட நிறைய ஆணிகள் இருந்தன. அவை, அந்த வேம்பின்மீது ஆணி அறைந்தால் அது என்றோ ஒருநாள் உள்ளே ஏறும் என்கின்ற நம்பிக்கையை அறைபவனுக்கு கொடுக்கிறது. வீரம்மாள் பித்துப்பிடித்து அலைகிறாள்.
வேம்பலை என்ற மொத்த கிராமுமே அந்த ஊமை வேம்புபோலத்தான். அது தன் இயல்புக்கு ஒவ்வாதவர்களை ஏற்றுக்கொள்ளாது. ஆனாலும் அதனைத்தேடி ஆராரோ அவ்வப்போது வந்துகொண்டேயிருக்கிறார்கள். கள்ளர் குடியிருப்பு, கொலை, குடி, கூத்தடிப்பு என்று வாழ்பவர்களிடம் ஏன் மற்றவர்கள் வருகிறார்கள்? எறும்புகள் கூட ஊரைவிட்டு இடம்பெயர்ந்தாலும் வேம்பலை தலைமுறை தாண்டி தப்பிநிற்கிறது. எப்படி? நாகு ஏன் அந்த பாழாய்ப்போன கிராமத்துக்கு மீள வருகிறான்? வசந்தாவுக்கு தான் ஒருநாள்கூட தங்கியிராத வேம்பலைமீதி அப்படி என்ன ஈர்ப்பு?
குடித்துவிட்டு வந்து கலாட்டா பண்ணி கன்னத்தை அடித்த கணவன், விளக்கணைத்தபின்னர் மனைவியின் மடியில் கை போடும்போது அவள் மெல்லிய சிணுங்கலோடு அவனை சுவீகரிப்பாளே. அந்த ஈர்ப்பு அது. புரிதலை, புத்தியை தாண்டிய இயல்பு அது.
வேம்பலையை நிர்மாணிப்பது என்பது கடும் சவாலான காரியமாகவிருந்தது. பரிச்சயமில்லாத கட்டமைப்பு. மனிதர்கள். குணாதிசயங்கள். கதை நடைபெறும் காலமும் குழப்பமானது. நிறைய வெயில், பனை, வேம்பு, வறுமை, வரட்சி என்கிற சில பரிச்சயமான விடயங்கள் போதவில்லை. தண்ணீருக்கு தட்டுப்பாடான கிராமத்தில் சாயக்காரர் தெருவும் இருக்கிறது. அடுத்த கிராமமும், நகரமும் எட்டா தூரத்தில் இருக்கின்றன. ஆச்சரியம் என்னவென்றால், ஊர் ஊராக சென்று களவெடுத்தாலும், வேம்பலை தனியாக குணம் மாறாமல் அப்படியே தலைமுறை தாண்டியும் இருக்கிறது. கள்ளர்கள் கிராமம் இரவில் விழித்திருக்கிறது. பகலில் உறங்குகிறது. நேர்மையில்லாமல் வாழ்தல் இயல்பாகிறது. ஏற்றுக்கோள்ளப்படுகிறது. இவற்றை வைத்து வாசகன் ஒரு ஊரை நிர்மாணிக்கவேண்டும். கொல்லன் பட்டறையில் காய்ச்சி எடுத்து அடி அடியென்று அடித்து இரும்பை கூராக்குவதுபோல எனக்குத்தெரிந்த கிராமத்தையெல்லாம் வேம்பலையாக்க முயன்றேன். முடியவில்லை.
வேம்பலை என்றில்லை. நாவலில் வருகின்ற எந்த ஊரையுமே அதன் முழுமையான வடிவத்துக்கமைய சிருஷ்டிக்க முடியவில்லை. ஒருவாறு சிருஷ்டித்துவிட்டேன் என்று நினைக்கையில் ஊரின் குணம் அப்படியே மாறிவிடும்.
ஊர் என்றில்லை. மனிதர்களும் அப்படியே. நாகுவும், அவன் தந்தையும், தாத்தாவும், ரத்னாவதியும், மல்லிகாவும், பக்கீரின் மனைவியும் அதனையே செய்கிறார்கள். அடிக்கடி சட்டையை மாற்றுகிறார்கள். அதிலும் ரத்னாவதி தனி ரகம். அவள் காதல், அவள் காமம், அவள் எண்ணங்கள் எம் முன்முடிபுகளை எல்லாம் தவிடு பொடியாக்குகின்றன. ஆதிலட்சுமி பேசும்போது அட கதைக்குள்ளேயே இன்னொரு கதை சொல்லியா? என்று ஆச்சரியப்படுத்துவாள். பூபாலனை தேடி ஊர் ஊராக அலைவீர்கள். திருமால் இன்னொரு புரியாத புதிர். எல்லோருமே முரண்பாடுகளோடு திரிகிறார்கள். அதுவே அவர்களின் இயல்பாகிறது. எஸ். ரா, அவர்களை வாழவிட்டு பின்னாலே சென்று எழுதுகின்ற நாவலோ என்னவோ. எந்தப்பாத்திரமும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்டதல்ல. பெற்று விட்டிருக்கிறார். எம்மோடு சேர்ந்து பாத்திரங்களும், ஊர்களும், படிமங்களும் வாசிப்போடு வளர்கின்றன. முடிக்கையில் நெடுங்குருதி வேறெங்கும் ஓடவில்லை, அது நம்முள் ஓடுகின்ற இரத்தமே என்பது புரியும்போது, வெம்மை சும்மா முகத்தில் அடிக்கும்.
கதையை புறவெளியிலிருந்து இப்படி உள்ளுணர்வுக்கு நகர்த்துவதற்கு எஸ். ரா நாவல் பூராவும் இன்னொரு பாத்திரத்தை உலாவவிடுகிறார். படிமம். படிமங்கள் நாவலில் முதல் வரியிலிருந்து கடைசிவரை விரவிக்கிடக்கின்றன.
நாவலின் முதல்வரியே இதுதான்.
ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோரு வயது நடந்துகொண்டிருந்தது.
இதுதான் நாவல். திருமால் தவளையோடும் மண் புழுக்களோடும் நடத்தும் உரையாடல்கள். பண்டார மகளின் உள்ளங்கை தேள். ஆதிலட்சுமியின் உலகத்தில் இறந்தவர்கள் வானில் போவார்கள். திடீரென்று புழுக்கள் ஊரை மொய்க்கும். எங்கிருந்தோ கொக்குகள் வந்து அவற்றை கொத்தித்திண்ணும். வேம்பலையில் வாழ்ந்து இறந்தவர்கள் எல்லாம் தாம் வாழ்ந்த ஊரை, அப்படியே பாழடைந்தவண்ணமே உருவாக்கி அங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இறந்தவர்களுக்கு ஒரு வேம்பலை. இருப்பவருக்கு ஒரு வேம்பலை என்று ஊர் இரண்டாகிறது. காட்சிப்படிமம். காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
கிராமம் விரிகிறது.
அல்லப்பிட்டி வீதியில், சென்றிப்பொயிண்ட் தாண்டி கொஞ்சத்தூரம் பயணம் செய்தால் வேலணைக்கு திரும்பும் வீதி வரும். அந்த வீதியில் ஒரு நூறு மீட்டர் தாண்டினால் மேற்காலே ஒரு காணியில் சிதிலமடைந்த கூரையற்ற ஒரு கல் வீடு இருக்கும். காணி முழுதும் மாரியில் மழை நீர் முட்டிவிடும். காணியின் தெற்கு எல்லையில் பெரியதொரு எல்லைப்பூவரசு பக்கத்துக்காணிமீது சரிந்து பெரிதாக வளர்ந்திருக்கும். ஒவ்வொருமுறையும் பேரூந்தில் அப்பூவரசைக்கடக்கும்போதும் அதனோடு பேசவேண்டும் என்று மனம் நச்சரவு செய்யும்.
“உனக்கு சின்ன வயசு ஞாபகம் இருக்கா. உன்னை எந்த மரத்திலயிருந்து முறிச்சு இஞ்ச கதிகாலா நட்டாங்கள்?”
பூவரசு எகத்தாளமா பதில் சொல்லும்.
“ஆ… பூவரசு மரத்திலயிருந்து”
“யாரு நட்டாங்கள்?”
“புக்கையிண்ட பெடி ரமேசு… சொத்தியா நட்டிட்டான்”
அதன் இடுப்பிலிருந்த ஆணித்தழும்புகளையும், அதற்குமேலால் கொழுத்து வளர்ந்திருந்த மொக்கு மரத்தையும் தடவியபடி கேட்பேன்.
“முள்ளுக்கம்பி அறையேக்க உனக்கு நோகேலையா?”
“நொந்துதுதான். ஆனா நான் பிடிப்பா நிக்கிறதுக்கு அது தேவையில்லையா? சரிஞ்சு விழுந்திருந்தா இத்தனைக்கு நான் விறகாகியிருப்பனே?”
“யார் வீட்டு வேலி இது?”
“முத்துலிங்கத்தாரிண்ட, செத்துப்போனார். இடுப்புல ‘ம’ எண்டு கத்தி கிழிச்சிருக்கு பாரு. அது மகேசு கிழிச்சது. இப்ப சுவீடனில இருக்கிறாள். பேரப்பிள்ளையுமாயிற்றுது”
“பெரிய குடும்பமா?”
“எட்டு பிள்ளையள். மூத்ததிண்ட கலியாணத்துக்கு அடைச்சவேலி. தெக்காலக்காணிதான் அவளுக்கு சீதனம் குடுத்தது. அதுகள் கொஞ்சநாள் இருந்திட்டு உத்தியோகம் எண்டு யாழ்ப்பாணம் போயிட்டிதுகள். ஆனா மாரி முடிய வேலி அடைக்க வந்திடுவினம். நான், எல்லைத்தடி எண்டதால தறிக்கயில்ல. ஆனா எண்ட கொப்புகளைத்தான் வெட்டி கதிகால் நடுவினம்”
“வெள்ளம் வராதா?”
“அள்ளிக்கொண்டு போயிடும். ஆனா நான் நிண்டுபிடிப்பன். அவையள் கடும்மழை எண்டால் அஞ்சாம் வட்டாரத்திலயிருந்த யோகன் மாமாவிட்ட போயிடுவினம்”
“இப்பவும் தொடிசல் இருக்கா?”
“யோகன் மாமாவும் செத்துப்போனார். குடும்பம் கனடாவுக்கு. முத்துலிங்கத்தாரிண்ட நேரடிச்சொந்தம் எதுவும் ஊரில இல்லை. சனமே இல்ல. ஆனா கட்டாக்காலி ஆடுகள் அப்பப்போ வந்து போகின்றன”
“உனக்கு அதுகளாவது துணை. நல்லம்தானே”
“அதெப்படி? வீடு முழுக்க ஆட்டுப்பீ. மகேசுண்ட பேரப்பிள்ளைகள் வந்தா கால் வைக்கவேணாமே, ஆரிட்டையாவது காசைக்குடுத்து வேலியை அடைப்பிச்சா நல்லம். இப்பிடியே போனா என்னையும் தறிச்சிடுவாங்கள். கள்ளர் கூட்டம்”
தலைமுறைமாற்றம் புறவியல்புகளையும் தோற்றங்களையும் மாற்றுகின்றன. ஆனால் மனிதர்களும் மாறவில்லை. படிமங்களும் மாறவில்லை. முதல்வரியில் எறும்பை ஊரை விட்டு அகற்றும் வேம்பலை, இறுதிவரியில் வசந்தா குடும்பத்தோடு, கொக்குக்கூட்டத்தையும் உள்ளே இழுக்கிறது. நாவலின் இறுதி வரிகள்.
விரிந்த உள்ளங்கை ரேகைகளைப்போல வேம்பலை தன் சுபாவம் அழியாமல் அப்படியே இருந்தது. கொக்குகள் நிசப்தமாக வானிலிருந்து வேம்பலையில் இறங்கிக்கொண்டிருந்தன. தொலைவில் எங்கோ மயிலின் அகவல் ஓசை விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது.
வசந்தாவின் கணவன் சேதுவுக்கும் கிட்ணாவுக்கும் பிறந்த குழந்தைக்கு “நாகு” என்று பெயர் வைக்கலாமா என வசந்தா கேட்க, அவன் சம்மதிக்கிறான். வாசிக்கும்போது சுருக்கென்றது. நாகுவை மீண்டும் வேம்பலை கொல்லப்போகிறது.
நெடுங்குருதி. நள்ளிரவின் வெக்கை.
நன்றி 
https://www.padalay.com/
வெளிச்சத்தைத் தேடி
பாவண்ணன்
– “செகாவின் மீது பனி பெய்கிறது” – விமர்சனக் கட்டுரை

(திண்ணை இணைய இதழில் வெளிவந்தது)

•••
தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நுட்பமான உறவை மனிதன் புரிந்துகொள்கிறான்.
ஒரு படைப்பை மனதார வாசித்த பிறகு மானுட குலத்தின் துக்கம் அவனுடைய துக்கமாகவும் மானுட குலத்தின் ஆனந்தம் அவனுடைய ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் சிறுவனொருவனைப்பற்றிய சிறுகதையைக் கார்க்கி எழுதியிருக்கிறார்.
பத்து வயதில் குடும்பப் பாரத்தைத் தாங்குவதற்காக எங்கோ இருக்கும் கல்கத்தா நகருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ரயில்பயணம் செய்யும் சிறுமியின் கதையைத் தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார்.
இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது நம் நெஞ்சம் கரைந்துவிடுகிறது. ஓர் இலக்கிய அனுபவம் நம்மீது செலுத்தும் ஆளுமைக்கு இந்த அடிப்படை உண்மைதான் அடையாளம். உலகம் முழுதும் இப்படிப்பட்ட எண்ணற்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒரு வாசகனுடைய கோணத்தில் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தல்ஸ்தோய், செகாவ், தஸ்தாவெஸ்கி, கார்க்கி, புஷ்கின், வான்கோ, ஹெமிங்வே, பெசோ, ஜார்ஜ் ஆர்வெல், வெர்ஜினியா வுல்•ப் என உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆளுமைகளை எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆளுமைகளின் சுருக்கமான வாழ்க்கைக்குறிப்புகள், அவர்களுடைய வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான மாற்றங்கள், எழுத்தில் அவர்கள் அடைந்த வெற்றிகள் என்பவற்றை முதல் பகுதியாகவும் அவர்களுடைய மிகச்சிறந்த ஆக்கங்களைப்பற்றிய அறிமுகம் என்பதை இரண்டாவது பகுதியாகவும் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.
நூலில் முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ள “அஸ்தபோல் ரயில் நிலையம்” உணர்ச்சிமயமான ஒரு கட்டுரை. தல்ஸ்தோயின் இறுதிக் காலத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே மனவருத்தம் உருவாகிக் கசப்பில் முடிவடைந்த காலகட்டம் அது. தன் படைப்புகளின் பதிப்புரிமையை நாட்டுக்குச் சொந்தமாக அறிவிக்கவும் தன் நிலங்களை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கவும் ஓர் உயில் எழுதிவைக்க விரும்புகிறார் தல்ஸ்தோய். ஆனால் தல்ஸ்தோயின் மனைவிக்கு அதில் உடன்பாடில்லை.
விவாதத்தால் மனம் உடைந்துபோன தல்ஸ்தோய் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். பயணத்தின் நடுவில் உடல்நலக் கோளாறின் காரணமாக அவர் இறங்கிய நிலையத்தின் பெயர்தான் அஸ்தபோல் ரயில்நிலையம். அங்குள்ள ஓய்வறையில் அவர் தங்கவைக்கப்படுகிறார். செய்தியைக் கேள்விப்பட்டு மக்கள் அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் திரண்டுவருகிறார்கள்.

தன் சொற்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக மனைவிமீது மனவருத்தம் கொண்டு பிரிந்துவருகிற தல்ஸ்தோய், மரணப்படுக்கையில் தன்னைக் காணவருகிற தன் பெண்ணைப் பார்த்து அவர் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிற தருணம் விசித்திரமானது. மனத்தின் மாறுபட்ட விசித்திரமான நிலைகளைத் தன் படைப்புகள்வழியாகக் கண்டறிந்துசொன்ன தல்ஸ்தோயின் மனமும் விசித்திரச் செயல்பாடுகளிலிருந்து விலகிநிற்க இயலவில்லை. துரதிருஷ்டவசமாக அந்த இடத்தில் அவருடைய உயிர் பிரிந்துவிடுகிறது. இச்சம்பவத்தை ஒரு சிறுகதைக்கே உரிய நுட்பத்தோடும் விவரணைகளோடும் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
செகாவின் “நாய்க்காரச் சீமாட்டி” சிறுகதையின் அனுபவத்தை எஸ்.ராமகிருஷ்ணன் முன்வைத்திருக்கும் விதம் மிகவும் நுட்பமாக உள்ளது. ஊரைச் சுற்றிப் பார்க்க வரும் சீமாட்டியின் திட்டம் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து சுற்றவேண்டும் என்பதுதான். தற்செயலாக ஒரு சம்பவத்தால் அது சாத்தியமற்றுப் போகிறது. அந்தத் திட்டத்தைக் கைவிடவும் சீமாட்டிக்கு மனமில்லை. தனிமையில் புறப்பட்டு விடுகிறாள். தனிமைக்கு ஒரு துணையாகத்தான் ஒரு நாயை அழைத்து வருகிறாள். தோளில் ஒருவர் ஒரு பாரத்தைச் சுமப்பதுபோலத் தனிமையை ஒரு பாரமாகக் கையோடு பற்றி இழுத்துவருகிறாள் அந்தச் சீமாட்டி. நாயை ஒரு படிமமாக உள்வாங்கி உரைக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சொற்கள் அக்கதையின் அனுபவத்தைக் கவித்துவம் நிறைந்ததாக மாற்றுகின்றன.
கைவிடப்படுதலும் நிராகரிப்புமே மனித வேதனைகளில் முக்கியமானது என்கிற செகாவின் குறிப்பை ஓரிடத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். செகாவின் கதைகள் இவ்விரண்டு உணர்ச்சிகளையே தொடர்ந்து வலியுறுத்துகின்றன. பனியில் நனையும் குதிரையைப் பார்த்து மனம்கலங்கி அவசரமாக வீதியில் இறங்கிய செகாவும் பனியில் நனைகிறார். இருவர்மீதும் பனி கொட்டுகிறது. குதிரை அவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. செகாவ் ஆழ்ந்த துயரத்துக்கு ஆளாகிறார்.

இந்தச் சம்பவத்தை விவரித்துச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணன் இறுதியில் கண்டுணர்ந்து எழுதிய வரிகள் மிகவும் முக்கியமானவை. “எப்போதும் செகாவ் பனியில் நனைகிறார் என்ற படிமம் என்னை வசீகரிக்கிறது. அது வெறும் குதிரையின் மீதான பரிதாபம் மட்டுமல்ல. மொழியற்ற துயரின் மீதான எழுத்தாளனின் அக்கறையான செயல்பாடு அதுவே” என்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகள். இந்த வரிகளின் அடிப்படையில் இந்த நூலின் தலைப்பு இன்னும் கூடுதலான வெளிச்சத்தில் சுடர்விடுவதைப் பார்க்கலாம்.
தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள், தல்ஸ்தோயின் நடனத்துக்குப் பிறகு கார்க்கியின் கிழவி இஸெர்கில் பாஸி அலியேவாவின் மண்கட்டியைக் காற்று அடித்துப் போகாது ஆகிய எல்லாப் படைப்புகளும் நிராசையின் வலிகளை முன்வைக்கின்றன. நிலப் பின்னணிகளோடும் காட்சிகளோடும் இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ளும்போது உருவாகும் பரவசத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொள்கிறார்.
மண்கட்டியை காற்று அடித்துப் போகாது நாவலைப்பற்றி எழுதும்போது, அந்த நாவலுக்கு அலியேவா எழுதியுள்ள முன்னுரை சிறப்பு மிகுந்த பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது. ஓர் இளம்பெண் எழுத்தாளராக மாறிய நுட்பமான கணம் அந்த முன்னுரையில் முன்வைக்கப்பட்டிருப்பதுதான் காரணம். ஒரு காட்சி மனத்தில் உருவாக்கும் பரவசத்துக்கும் அதன் வழியே மனம் மேற்கொள்ளும் பயணத்துக்கும் எல்லையே இல்லை. அலியேவா அப்போது இளம்பெண். வயதான கிழவிக்கு ஊசியில் நூல்கோர்த்துக்கொடுத்து பொழுதின் அலுப்பைப் போக்கிக்கொள்கிறாள்.

பேச்சுவாக்கில் ஒருநாள் கிழவி அவளுக்கு அழகின் ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கிறாள். உராஸ் பண்டிகையன்று விடிகாலையில் புல்வெளியில் காணப்படும் பனித்துளிகளைச் சேகரித்து முகம் கழுவிக்கொண்டால் ஒருபெண் அழகியாகிவிடுவாள் என்பதுதான் அந்த ரகசியம். அழகியாகும் ஆசையை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருந்து பண்டிகை நாளன்று அதிகாலையில் எழுந்து ஓடுகிறாள் அவள். பூக்கள் எங்கும் பனித்துளிகள். ஒரு நீலமலரின் முன்னால் மண்டியிட்டு பனித்துளிகளைச் சேகரக்கிறாள். அப்போது அருகில் ஒரு செடி வளைந்து கிடப்பதைக் காண்கிறாள்.
அதை அழுத்திக்கொண்டிருந்த கல்லைப் புரட்டிவிட்டு அதை விடுவிக்க விரும்புகிறாள். கல்லைப் புரட்டித் தள்ளியதும் அந்த இடத்திலிருந்து ஒரு நீரூற்று பொங்கி வழிகிறது. ஆச்சரியம் ததும்ப அந்த ஊற்றைக் கவனித்தபடியே இருக்கிறாள். பண்டிகை நாளில் புது ஊற்றைக் காண்பது பேரதிருஷ்டம் என்பது ஒரு நம்பிக்கை. அது தனக்கு வாய்த்திருக்கிறது என்று தன்னை மறந்து அதில் லயித்துப் போகிறாள்.
தெய்வத்தின் முன் முறையிடுவதுபோலத் தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி வேண்டிக்கொள்கிறாள். துக்கமும் ஆனந்தமும் கடந்த மனநிலையில் அவள் தன்னைத்தானே புதிய பிறவியாக உணர்கிறாள். வீட்டுக்கு வந்தவுடன் அவளது மனத்தில் சொற்கள் தாமாகவே சுரக்கின்றன. அவள் முதன்முறையாக ஒரு கவிதையை எழுதுகிறாள். ஒரு கல் புரண்டு அதன் அடியிலிருந்து நீரூற்று பொங்குவதுபோல மனத்தில் இருந்த தடை விலகி அவளுக்குள் கனவுகளும் சொற்களும் பீறிடுகிற அற்புதம் உண்டாகிறது.
இருபது தொகுதிகள் அடங்கும் அளவுக்கு அவள் கவிதைகளை எழுதுகிறாள். படைப்பைப் போலவே ஒரு படைப்பாளி உருவான விதம் பரவசம் மிகுந்ததாக உள்ளது. இந்த அற்புதக் கணத்துக்கு முக்கியத்துவம் தந்து வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்காக எஸ்.ராமகிருஷ்ணனைப் பாராட்டவேண்டும்.
மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் நாவலைப்பற்றிய அறிமுகக்கட்டுரை இந்த நூலின் முக்கியப்பகுதி என்றே சொல்லவேண்டும். கணிதத்தைச் சுவையான கதையாக மாற்றியிருக்கும் ஆசிரியரைப் பாரட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் அந்த நாவலில் வாசித்த மனஎழுச்சியூட்டும் சில வரிகளைக் குறிப்பிடுகிறார்.
நேர்மை என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நேர்க்கோடு என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. ஒவ்வொரு பறவையும் ஒரு புத்தகம். அதனுடைய பக்கங்கள் திறந்திருக்கும் சொர்க்கம். கடவுளின் இந்த நூலகத்தை அழிக்கவோ திருடவோ முயற்சிசெய்வது அசிங்கமான குற்றம் ஆகியவை முக்கியமான சில வரிகள்.

விலங்குப்பண்ணை, 1984 ஆகிய நாவல்களின் மொழியாக்கம்வழியாகத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் ஜார்ஜ் ஆர்வெல். அந்த நாவல்களைக் காட்டிலும் முக்கியமான இரண்டு கட்டுரைகளை விரிவாக முன்வைத்து அவர் இந்த நூலில் அறிமுகம் செய்யப்படுகிறார். ஆட்சி நடைமுறைகளைப் பகடி செய்கிறவராக நம் மனத்தில் பதிந்துபோயிருக்கும் ஆர்வெல் படிமத்தை எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்புகள் மாற்றிப் புதிதாக ஒரு படிமத்தை வார்த்தெடுத்துக் கொடுக்கின்றன. இந்தப் படிமம் அவரை நமக்கு இன்னும் நெருக்கமானவராக உணரவைக்கிறது. ஆர்வெலின் கட்டுரைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை இது உருவாக்குகிறது.
தன் எழுத்துகள் வழியே ஒரு படைப்பாளி ஒரு வாசகனுடைய நெஞ்சில் சிறிது வெளிச்சம் படியும்படி செய்கிறான். அந்த வெளிச்சத்தைத் துணையாகப் பற்றிக்கொண்டு வாசகன் இன்னும் இன்னும் என வெளிச்சத்தைத் தேடிப் பயணப்படுகிறான். பயணங்கள் தொடரத்தொடர நெஞ்சில் இருட்டின் அடர்த்தி மங்கிக்கொண்டே போகிறது. வாசகர்களுக்குத் துணையாக எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றியிருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது.
செகாவின் மீது பனி பெய்கிறது.
எஸ்,ராமகிருஷ்ணன்.
தேசாந்திரி பதிப்பகம்
விலை ரூ 150
நன்றி:
பாவண்ணன் – திண்ணை இணையஇதழ்
June 29, 2021
மணமகளின் காதல்
Brides என்ற கிரேக்கத் திரைப்படத்தைப் பார்த்தேன். சமகாலக் கிரேக்க திரைப்படங்கள் ஒளிப்பதிவிலும் இசையிலும் புதிய கதை சொல்லும் முறையிலும் உச்சத்தை அடைந்திருக்கின்றன. பான்டெலிஸ் வோல்காரிஸ் இயக்கிய ஐந்து படங்களை முன்னதாகப் பார்த்திருக்கிறேன்.

இதில் 2013ல் வெளியான Little England நிகரற்ற படம். கடந்த சில ஆண்டுகளில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் இதுவே. எண்பது வயதான வோல்காரிஸ் மிகச்சிறந்த படங்களை இயக்கியுள்ளார், சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கடலோடிகளின் வாழ்க்கையை மையமாக் கொண்டு கிரேக்கத்தில் நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. கடந்தகாலப் பெருமை ஒருபக்கம் நிகழ்காலக் கால நெருக்கடிகள் மறுபக்கம். இரண்டுக்கும் நடுவில் ஊசலாடும் வாழ்க்கையைக் கிரேக்க சினிமா சித்தரிக்கிறது..
Brides 1922 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. Mail-order brides என்பது சர்வதேச திருமண நிறுவனம் ஒன்று தனது ஆட்களின் மூலம் திருமணமாகாத ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம்பெண்களை அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறது. இதன்படி மணமகனின் புகைப்படத்தை மட்டும் காட்டி அவனுக்கு ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிடுகிறார்கள்.

வறுமையின் காரணமாகப் பெண்ணும் சம்மதிக்கிறாள். இந்தப் பெண்களை ஒரு கப்பலில் ஏற்றி அமெரிக்கா கொண்டு சென்று அங்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இதில் நிறைய மோசடிகள் நடப்பதும் உண்டு. உண்மையில் இது வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் என்ற போர்வையில் விற்பனை செய்வதாகும்.
படத்தின் துவக்கத்தில் கிரேக்க மற்றும் ரஷ்ய இளம் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து மணமக்களாக ஒப்பந்தம் செய்கிறார்கள்.
அதன்படி தேர்வு செய்யப்பட்ட இளம் கிரேக்க மற்றும் ரஷ்யப் பெண்கள் ஒடேசா மற்றும் ஸ்மிர்னாவிலிருந்து அமெரிக்காவுக்குக் கப்பற்பயணம் புறப்படுகிறார்கள்
எஸ்.எஸ். கிங் அலெக்சாண்டர் கப்பலில் 700 மணப்பெண்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களில் ஒருத்தியாக இருக்கிறாள் நிகி. அவள் ஒரு தையற்காரி. கிரேக்கத் தீவு சமோத்ரேஸினைச் சேர்ந்தவள் அவள் தனது குடும்பத்தின் வறுமை காரணமாக இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். அவளைச் சிகாகோவிலுள்ள ஒரு டெய்லருக்கு மணம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

எழுநூறு பெண்களில் ஒருத்தியாக அவளும் கப்பலேறுகிறாள். இந்தப் பெண்கள் கப்பலுக்காகக் காத்திருப்பதும். கப்பலில் அவர்களுக்குள் ஏற்படும் நட்பும், அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கப்பலின் மூன்றாம் வகுப்பு பயணிகளாக இந்த மணப்பெண்கள் தங்குகிறார்கள். அங்கே போதுமான வசதிகள் இல்லை. அவர்கள் மணப்பெண்கள் போல நடத்தப்படுவதில்லை
படத்தின் எண்பது சதவீதம் கப்பலில் நடக்கிறது. இந்தக் கப்பலில் புகைப்படக்கலைஞரான நார்மனும் பயணம் செய்கிறான். யுத்தமுனையில் போட்டோகிராபராக பணியாற்றிய அவன் தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் மனச்சோர்வுடன் அமெரிக்கா திரும்புகிறான். அந்தக் கப்பலில் வரும் மணப்பெண்களைப் பற்றி அறிந்தவுடன் அவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த முயல்கிறான். இதற்கு நிகி உதவி செய்கிறாள்.

கப்பலில் ஒன்றுகூடும் பெண்கள் தையல்வேலை செய்கிறார்கள். சிலர் தங்கள் புதிய கணவர்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள், சிலர் தங்களுக்குப் பிடித்த உணவைச் சமைக்கத் தயாராகிறார்கள். பொன்னிற முடி கொண்ட ஒல்கா என்ற பதின்வயது பெண்ணைக் காதலிக்கிறான் நார்மனின் உதவியாளன். அவர்களின் காதல் குறைவான காட்சிகளின் மூலம் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையைத் தாங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.
நிகிக்கும் நார்மனுக்குமான காதல் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நிகியின் தயக்கம். நார்மன் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசமாக்குவது. அவள் கப்பலிலும் தையல் தைப்பதிலே நேரத்தைக் கழிப்பதும். பிற பெண்களுக்கு அவள் செய்யும் உதவிகள், தான் விரும்பினாலும் குடும்பச் சூழல் தன் காதலை ஏற்காது என்ற புரிதல். நார்மனுக்கு தனது நினைவாகக் காதணியைக் கழட்டித் தரும் நேசம் என நிகி மறக்கமுடியாத கதாபாத்திரமாக மாறுகிறாள். மனவுறுதி மிக்கக் கிரேக்கப் பெண்ணின் அடையாளமாக இருக்கிறாள் நிகி
நார்மன் சிறந்த புகைப்படக்கலைஞராக இருந்த போதும் பத்திரிக்கைகள் அவனை அங்கீகரிக்க மறுக்கின்றன. அவன் விரக்தியோடு இந்தத் தொழிலை விட்டுவிட நினைத்தே பயணம் மேற்கொள்கிறான். ஆனால் கப்பலில் கண்ட மணப்பெண்களின் நிலை அவன் மனதை மாற்றுகிறது. திருமணம் செய்து கொள்ளப்போகிறவர் எப்படிப் பட்டவர். எங்கே வாழப்போகிறோம் என எதுவும் தெரியாமல் இத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்திருப்பது அவனை வேதனைப்படுத்துகிறது. அவர்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்கிறான்.
படத்தில் சாரோ என்ற இளம்பெண் தனது தந்தையின் கண்டிப்பினால் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்படுகிறாள். அவள் ஒரு ராணுவவீரனைக் காதலிக்கிறாள். அவனை மறந்து எப்படி யாரோ முகம் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்வது என்று வருத்தமடைகிறாள். கப்பல் தளத்தில் நின்றபடியே மணிக்கணக்காக அலைகளைப் பார்த்தபடியே இருக்கிறாள். இதன் முடிவு அதிர்ச்சி தரும் செயலாக மாறுகிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் மிகச்சிறப்பானது. ஓவியங்களின் நேர்த்தியைக் கொண்ட காட்சிகள். தனித்தன்மைமிக்க கதாபாத்திரங்கள்.மிகை நாடகமின்றி கொண்டுசெல்லப்படும் கதைப்போக்கு. அழகான முடிவு என சிறந்த அனுபவத்தை தருகிறது படம்.

ஒரு காட்சியில் புகைப்படம் எடுப்பதற்காகத் திருமண உடை அணிந்து அந்தப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து நிற்கிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. கவலை படிந்த முகம், அதில், சொல்ல முடியாத பயம் தான் வெளிப்படுகிறது. நிகி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவளை நார்மன் கட்டாயப்படுத்தவில்லை. பின்னொரு நாள் அவளாகவே புகைப்படம் எடுக்க வந்து நிற்கிறாள். அந்தக் காட்சியில் கேமிரா வழியாக அவளை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறான் நார்மன். நிகியின் புகைப்படம் கடைசியில் உலகின் சாட்சியமாக மாறி பத்திரிக்கை ஒன்றில் அட்டையில் இடம்பெறுகிறது.
எது இந்தப்படத்தை நமக்கு மிகவும் நெருக்கமாக்குகிறது. மணப்பெண்களுக்குள் நாமும் ஒருவர் போலக் கலந்துவிடுகிறோம். மிக நெருக்கமாக, உண்மையாக அவர்களின் தவிப்பை, ஏக்கத்தை. பயத்தை அறிந்து கொள்கிறோம். திருமண ஏற்பாட்டாளர்கள் இதைச் சிறந்த வணிகமாகச் செய்கிறார்கள் என்பதைக் காணும் போது நாம் எந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழவே செய்கிறது
இந்தப்படம் டைட்டானிக்கை நினைவூட்டினாலும் அதை விட நேர்த்தியாக, பல்வேறு ஊடுஇழைகள் கொண்ட அழுத்தமான கதைசொல்லுதலை முன்னெடுக்கிறது. டைட்டானிக் போலப் பிரம்மாண்டத்தை மட்டும் முதன்மைப்படுத்தவில்லை. திருமணத்தின் பெயரால் பெண்கள் விற்பனை பொருளாகக் கொண்டு செல்லப்பட்ட உண்மை வரலாற்றை துல்லியமாகப் பதிவு செய்கிறது.
இந்தக் கப்பலில் பயணம் செய்யும் கராபுலட் ரஷ்ய மணப்பெண்களை மிரட்டி தனது படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார். இதற்குக் கேப்டனில் இருந்து கப்பல் அதிகாரிகள் பலரும் துணைசெய்கிறார்கள். அவரை நிகி எதிர்க்கும் போது நிர்வாகியான பெண் இது போல ஐந்தாறு பெண்களைப் பறிகொடுத்துத் தான் மற்ற பெண்களைப் பாதுகாக்க முடியும் என்கிறாள்.
இதை நிகியால் ஏற்க முடியவில்லை. அவளுக்காக உதவி செய்யப்போகும் நார்மனை அவர் ஏளனமாகப் பார்ப்பதுடன் உங்களால் என்னை எதுவும் செய்ய இயலாது என்று சவால்விடுகிறார். அவரிடம் நார்மன் தன் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி மிகச்சிறப்பானது.
கப்பல் நியூயார்க் வந்து சேர்ந்தவுடன் மணப்பெண்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட மணமகனைத் தேடுகிறார்கள். தடுப்பின் மறுபுறம் மண்மகன்கள் கையில் மலர்களுடன் நின்று தவிக்கிறார்கள். அந்தக்காட்சி அபாரமானது. அவர்களில் தனது மணமகனாக உள்ள டெய்லரை நிகி தேடுகிறாள். அவன் நிகி இப்படியிருப்பாள என எதிர்பார்க்கவில்லை. முடிவில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் நிகிக்கு ஒரே கனவு தான் இருக்கிறது. அது நிறையச் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். தங்கைகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே. இதற்காகத் தன் ஆசைகளைக் கைவிடும் நிகி கடைசியில் நார்மனின் கடிதத்தை வாசிக்கிறாள். அவளாலும் காதலின் பிரிவைத் தாங்க முடியவில்லை. இனி நிகி நினைவுகளில் வாழத்துவங்குவாள். அது மட்டும் தான் சாத்தியம்

“என் குடும்பம் ப்ரோட்ரோமோஸுக்கு வாக்குறுதியளித்தபடி நான் நடந்து கொள்ளாவிட்டால் என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை எவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். , மேலும் எனது குடும்பத்தின் நற்பெயர் பாழாகிவிடும் என்று ஒரு காட்சியில் நிகி சொல்கிறாள். கிரேக்கக் குடும்பங்கள் நற்பெயரையும் கௌவரத்தையுமே முதன்மையாகக் கொண்டவை. அதன் குரலையே நிகி ஒலிக்கிறாள்
தீவிரமான உணர்ச்சிகள் மற்றும் சாகசத்தை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களையே பான்டெலிஸ் இயக்கிவருகிறார்.“ The love. The passion. The loneliness. The mourning. The untold truths revealed too late. The timeless topic of family relationships“. இதுவே தனது படங்களின் அடிப்படை விஷயங்கள் என்கிறார். அது உண்மை என்பதை Brides பார்க்கும் போது நாமும் உணருகிறோம்.
•••
June 28, 2021
வெளியில் ஒருவன்
எனது முதற்புத்தகம் வெளியில் ஒருவன்.

சென்னை புக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டுவர ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் தமிழ்செல்வன். அவரே கதைகளைத் தேர்வு செய்து தொகுப்பை உருவாக்கிவிட்டார். நான் பதிப்பாளரைச் சந்திக்கவேயில்லை. இப்படி ஒரு அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அந்த வகையில் அண்ணன் தமிழ்செல்வனை என்றும் நன்றியோடு நினைவு கொள்வேன்.
திருநெல்வேலியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டு அரங்கில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதற்காக என்னை அழைத்தபோது தான் புத்தகம் வெளிவரப்போகும் தகவலே எனக்குத் தெரியும்.
வெளியிட்டு விழா முடிந்து எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள். அதைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இது தான் இலக்கிய உலகிற்கான எனது பாஸ்போர்ட். கையடக்கமான கிரௌன் சைஸ். கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட அட்டை என்று தமிழ்செல்வன் சொன்னார். அப்போது அது புதுமையானது. சிறுகதைகளை அச்சில் கண்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடவும் புத்தகமாகக் கையில் கிடைக்கும் போது ஏற்படும் சந்தோஷம் தான் பெரியது.
வெளியிட்டு விழா அன்று புத்தகம் பற்றி ஒருவரும் அறிமுகவுரை ஆற்றவில்லை. இந்தப் புத்தகம் எங்கே விற்பனைக்குக் கிடைக்கும் என்று கூடத் தெரியாது. ஆனால் ஓராண்டிற்குள் புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்ததோடு பத்துக்கும் மேற்பட்ட விமர்சனக்கூட்டங்கள் நடந்தன. எழுத்தாளர் சுந்தர ராமசாமி துவங்கி அசோகமித்திரன் வரை பலரும் பாராட்டினார்கள். இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும் போது பலரும் இந்தத் தொகுப்பு பற்றிப் பாராட்டுவது மகிழ்ச்சி அளித்தது.
அந்த நாட்களில் இத்தனை விருதுகள் கிடையாது. ஒரு புத்தகம் கொண்டுவர இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். தேடிச்சென்று எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடிய காலமது. சிறுபத்திரிக்கைகளுக்குக் கதை அனுப்பினால் எப்போது வெளியாகும் என்று தெரியாது. பத்திரிக்கைகளில் எழுத்தாளரின் பேட்டி வருவது அபூர்வம்.
கதைகளை வாசித்துக் கடுமையாக விமர்சனம் செய்யும் இலக்கிய விமர்சகர்கள் இருந்தார்கள். அவர்கள் கடிதம் மூலம் மட்டுமின்றி நேரடியாக வரவழைத்தும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைப்பார்கள். அந்த நாட்களில் கோவில்பட்டி இலக்கிய சபையில் ஒரு புத்தகம் நன்மதிப்பைப் பெறுவது எளிதானதில்லை.
இந்தத் தொகுப்பைச் சந்திக்கும் போதெல்லாம் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தியவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. என் அண்ணன் மருத்துவர் வெங்கடாசலம் அவரது மாணவர். சாத்தூரிலிருந்த தனுஷ்கோடி ராமசாமி. வீடு தேடி சென்று நானும் கோணங்கியும் அடிக்கடி உரையாடுவோம். அவரைப் போல உபசரிப்பு செய்கிறவர் எவருமில்லை. மிகப் பெரிய மனதும் அன்பும் கொண்டவர்.
பேராசிரியர் மாடசாமி இந்தத் தொகுப்பினை வெகுவாகப் பாராட்டியதோடு அவரது முனைவர் பட்ட ஆய்வில் இதனைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். பரிவானது வீடு என்ற கதை அவருக்கு மிகவும் பிடித்தமானது.
திகசி, வல்லிக்கண்ணன், வண்ணதாசன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், தா.மணி எனப் பலரும் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்கள். வாரம் இரண்டு மூன்று கடிதங்கள் என வருஷம் முழுவதும் இதற்கான விமர்சனக் கடிதங்கள் வந்தபடியே இருந்தன.
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள போதும் முதற்புத்தகம் தந்த சந்தோஷத்தை வேறு எதுவும் தரவில்லை.
இந்தச் சிறுகதைத் தொகுப்பினை வாசித்த கவிஞர் மீரா எனது அடுத்த சிறுகதைத் தொகுப்பினை தானே அன்னம் சார்பில் கொண்டுவருவதாகச் சொன்னார். காட்டின் உருவம் அப்படித்தான் வெளியானது.

நீண்ட காலமாக வெளியில் ஒருவன் அச்சில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணை பதிப்பகம் சார்பில் நண்பர் யுகன் அதை மறுபதிப்புச் செய்ய விரும்பினார். அனுமதி அளித்தேன். புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதுவும் நன்றாக விற்பனையானது.
ஆண்டு தோறும் புதிய நூல்கள் வெளியாகும் போதெல்லாம் எனது முதற்தொகுப்பை கையில் எடுத்துப் பார்த்துக் கொள்வேன். சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் எனது முதற்தொகுப்பிற்கு ஒரு விமர்சனம் வெளியாகியிருந்தது. முப்பது ஆண்டுகளைக் கடந்தும் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறியிருக்கின்றன எனது இன்றைய கதைகள். பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல இந்தத் தொகுப்பு எனது கனவின் அடையாளமாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெளியில் ஒருவன் புதிய பதிப்பு வெளியாகிறது. இதனைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் அண்ணன் தமிழ்செல்வனை, சென்னைபுக்ஸ் பாலாஜியை, கோணங்கியை, முதற்கதையைக் கணையாழியில் வெளியிடத் தேர்வு செய்த எழுத்தாளர் அசோகமித்திரனை, தனுஷ்கோடி ராமசாமியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். என் இலக்கியப் பிரவேசம் அவர்களின் வழியாகவே நடந்தது.
கணையாழியில் வெளியான ஒரு விமர்சனம்
 
  நாகரீகத்தின் கதை
பிபிசி தயாரிப்பில் 1969ல் வெளியான கலைவரலாற்று தொடரான Civilisation 13 பகுதிகளைக் கொண்டது. இதற்கு இணையாக இன்று வரை ஒரு கலைவரலாற்றுத் தொடர் வெளியாகவில்லை. இந்தத் தொடர் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மிகச்சிறந்த ஒலி ஒளியில் காணக்கிடைக்கிறது.

கலைவிமர்சகர் கென்னத் கிளார்க் இத் தொடரைத் தயாரித்து வழங்கினார். அவர் ஒரு நிகரற்ற கலையாளுமை. ஓவியம், சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை குறித்த அவரது பார்வையும் ஆழ்ந்த அவதானிப்புகளும் பிரமிப்பூட்டக்கூடியவை. இந்தத் தொடருக்காகக் கென்னத் கிளார்க் எழுதிய உரை சிறு நூலாக வெளிவந்துள்ளது. தொடரின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அதைத்தேடிப் படித்திருக்கிறேன்.
கென்னத் கிளார்க் கவிதைகளின் ரசிகர். தொடர் முழுவதும் கவித்துவமான வர்ணனையை வெளிப்படுத்தியிருக்கிறார். உன்னதமான கலைப் படைப்புகளைக் காணும் போதெல்லாம் அவரது மனதிலிருந்து அதற்கு இணையான கவிதை வெளிப்படுகிறது. மேற்கத்திய கலையுலகின் தனித்துவங்களைச் சாதனைகளைச் சாமானிய மக்களும் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. இதற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக இது போன்று நிறையக் கலைவரலாற்றுத் தொடர்கள் வெளியாகின.

Nikolaus Pevsner, Ernst Gombrich, Kenneth Clark ஆகிய மூவரையும் பிரிட்டனின் நிகரற்ற கலைவிமர்சகர்களாகக் கருதுகிறார்கள். இதில் Ernst Gombrich எழுதிய The Story of Art மிக முக்கியமான கலைவரலாற்றுப் புத்தகம்.
கலைவிமர்சகர் பெர்னார்ட் பெரன்சனால் உருவாக்கப்பட்டவர் கென்னத் கிளார்க். அவர்கள் இருவரும் 1925ம் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது கிளார்க்கின் வயது 22.
அவர் டிரினிட்டி கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலை பயின்றிருந்தார். கோடை விடுமுறை ஒன்றில் அவர் நண்பர்களுடன் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டார். மேற்கத்திய கலைமரபை காணுவதே இந்தப் பயணத்தின் நோக்கம். அவர்கள் அருங்காட்சியகங்களில் சுற்றி அலைந்து சிறந்த கலைப்படைப்புகளைக் கண்டார்கள். அப்போது தான் பெரன்சனின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் கிளார்க்கின் கலையார்வத்தைப் புரிந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தியதுடன் அரிய ஓவியங்களை ஆராய்வதற்கும் உதவி செய்தார். இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
அந்த நாட்களில் பிரிட்டனில் கலைவரலாறு பாடமாக எந்தக் கல்லூரியிலும் கற்பிக்கப்படவில்லை. ஆகவே அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ தான் கலைவரலாறு படிக்க முடியும். அப்படிக் கல்வி பயிலும் படி கிளார்க்கை உத்வேகப்படுத்தினார் பெரன்சன். ஆனால் அதில் கிளார்க் ஆர்வம் காட்டவில்லை. அவர் நேரடியாகக் கலைப்பொருட்களைப் பார்வையிடவும் ஆராயவுமே அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பெரன்சனின் உதவியாளர் போல அவர் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனது அருங்காட்சியகத்தில் அவரைக் கூடவே வைத்துக் கொண்டார் பெரன்சன். அரிய ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை அறிமுகம் செய்து அதை ஆராய்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தந்தார்.

1929 ஆம் ஆண்டில், பெரன்சனுடனான இணைந்து பணியாற்றியதன் காரணமாக வின்ட்சர் கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்த லியோனார்டோ டாவின்சி ஓவியங்களின் விரிவான தொகுப்பைப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டினார் கிளார்க். இத்தோடு ராயல் அகாதமிக்காக ஓவியக்கண்காட்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்னோடியாக விளங்கினார். இங்கிலாந்து மன்னரின் சேமிப்பில் உள்ள கலைப்பொருட்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் தனி இயக்குநர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்தப் பதவி கிளார்க்கிற்கு அளிக்கப்பட்டது. பத்தாண்டுகள் அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். National Gallery இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பிபிசியின் இரண்டாவது தொலைக்காட்சி சேனலான பிபிசி 2 துவங்கப்பட்ட போது அதன் கட்டுப்பாட்டாளர் டேவிட் அட்டன்பரோ, வண்ண ஒளிபரப்பை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். வண்ண ஒளிபரப்பிற்கு ஏற்ற நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும் என்ற அவரது யோசனையின் விளைவே இந்த Civilisation தொடர். இன்றிருப்பது போல அசாத்தியமான தொழிற்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலே மிக நுணுக்கமாக, வித்தியாசமான காட்சிக்கோணங்களுடன். விவரணையுடன்,சரியான வரலாற்றுப்பார்வையுடன் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கென்னத் கிளார்க் கலைப்பொருட்களை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. அது உருவான காலகட்டம். அன்றிருந்த பண்பாட்டு நிகழ்வுகள். அரசியல் நெருக்கடிகள். கிறிஸ்துவச் சமயத்தின் தாக்கம். இதற்காகச் செலவிடப்பட்ட பொருளாதாரம், காலமாற்றத்தில் ஏற்பட்ட சிதைவுகள் என அனைத்தையும் ஒன்று சேர்த்து அறிமுகப்படுத்துகிறார்.
இருண்ட காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூறும் இந்தத் தொடருக்காக நிறையப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். பதின்மூன்று நாடுகளில் நூற்று பதினேழு இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

அபூர்வமான தகவல்கள். வரலாற்றுச் செய்திகள். அரசியல் சமய இயக்கங்களின் மோதல், கவிதைகள் மற்றும் இசை சார்ந்த விஷயங்கள் என விரிவாகப் பேசிய போதும் கென்னத் கிளார்க் தன்னை ஒரு அறிஞராக முன்னிறுத்திக் கொள்ளவில்லை. சாதாரண மனிதர்களில் ஒருவராகவே தன்னை முன்வைக்கிறார். அவர்களின் பார்வையில் எழும் கேள்விகள். சந்தேகங்களை எழுப்பி அதற்குப் பதில் சொல்லுகிறார். அவரது சிரிப்பும் வேகமான நடையும் மிகவும் வசீகரமாகயுள்ளன.
Ruskin said: “Great nations write their autobiographis in three manuscripts, the book of their deeds the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last” என்ற வாசகத்திலிருந்தே இந்த ஆவணத்தொடர் துவங்குகிறது.
ஒரு தேசம் தன் வரலாற்றைக் கலைகளின் வழியாகவே உண்மையாக அடையாளப்படுத்துகிறது. சட்டமோ, செயல்களோ காலமாற்றத்தில் மாறிவிடக்கூடும். அல்லது கைவிடப்படக்கூடும். ஆனால் கலைப்பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் காலத்தைத் தாண்டியும் அதன் பெருமையைச் சொல்வதாக இருக்கின்றன. அவை நாகரீக வளர்ச்சியின் அடையாளம். இருண்ட காலத்திலும் கூட அபூர்வமான கலைப்பொருட்கள் உருவாகியிருக்கின்றன. பண்டைய காலத்தில் சடங்குகளுக்காகச் செய்யப்பட்ட முகமூடிகள் இன்று அரிய கலைப்பொருளாகக் கருதப்படுகிறது.
அனைத்து பெரிய நாகரிகங்களும், அவற்றின் ஆரம்பக் கட்டங்களில், போரை அடிப்படையாகக் கொண்டவை. க்ளோவிஸும் அவரது வாரிசுகளும் தங்கள் எதிரிகளை வென்றது மட்டுமல்லாமல், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஆகவே போரும் பண்பாட்டு வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டன.
மிதமிஞ்சிய செல்வமே கலையாக மாறுகிறது. கலை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு தேவாலயத்தை உருவாக்க தேவையான ஆயிரக்கணக்கான பணியாளர்கள். அவர்களின் உணவு. இருப்பிடம், ஊதியம் பல ஆண்டுகளுக்குத் தரப்பட வேண்டும் என்றால் அங்கே உபரியாகச் செல்வம் இருக்க வேண்டும் என்கிறார்.
தனது வெற்றியை அடையாளப்படுத்திக் கொள்ள மன்னர்கள் பெரிய கட்டிடங்களை உருவாக்கினார்கள். கோட்டைகள். கோபுரங்களை அமைத்தார்கள். புதிய நகரங்களை உருவாக்கினார்கள். இன்னொரு புறம் கலைஞர்களுக்குள் ஏற்பட்ட போட்டி. புதுமை புதிய கலைவெளிப்பாட்டினை உருவாக்கியது. பண்பாட்டு வளர்ச்சியை யார் முடிவு செய்வது. எவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் சமயமும் அதிகாரமும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டன. இந்த வரலாற்றைப் புரிந்து கொண்டால் தான் மேற்கத்திய கலைகளைப் புரிந்து கொள்ள முடியும்

மைக்கேல் ஆஞ்சலோ, ரபேல். டாவின்சி போன்ற கலைமேதைகளின் பங்களிப்பு. பீதோவன். மொசார்ட் போன்ற இசைக்கலைஞர்களின் பங்களிப்பு. சிந்தனையாளர்கள். தத்துவவாதிகள். கவிஞர்களின் பங்களிப்பு எனக் கலையின் வேறுவேறு தளங்களை ஆராயும் கென்னத் கிளார்க். இவை ஒன்றையொன்று பாதித்து வளர்ந்தன என்பதைத் தகுந்த அடையாளங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்.
கென்னத் கிளார்க்கின் தொடர் மேற்கத்திய கலைவரலாற்றைத் தான் முதன்மையாக ஆராய்கிறது. ஆகவே இந்தியா சீனா போன்றவற்றின் கலைவரலாறு குறித்து அவர் விளக்கவேயில்லை. வரலாற்றாசிரியர்கள் பொதுவாகப் பத்தாம் நூற்றாண்டை ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டு போலவே இருண்ட காலமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அதை அரசியல் வரலாற்றின் கண்ணோட்டத்திலிருந்தும் ஆராய்கிறார்கள். ஆனால் கலையின் நோக்கிலிருந்து பார்க்கும் போது அந்தக் கண்ணோட்டம் மாறிவிடுகிறது என்கிறார்
இத்தொடரில் பிரம்மாண்டமான தேவாலயங்கள் எப்படி உருவாக்கப்பட்டன. கிறிஸ்துவை சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை, புனித பயணங்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றிய அத்தியாயம் மிகச்சிறப்பானது.
மறுமலர்ச்சிக் காலக் கட்டிடக்கலையை ஆராயும் கென்னத் கிளார்க் அவை கணிதத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக வடிவவியலினை சார்ந்தே இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாட்சியமாக உள்ள பெரிய மாளிகைகள். தேவாலயங்கள் உள்ளன என்கிறார்
போரின் காரணமாகக் கலைப்பொருட்கள் சூறையாடப்பட்டதும், அழித்தொழிக்கப்பட்டதும் துயரமானது. அரிய கலைச்செல்வங்களை அதன் மதிப்பை உணராமல் அழித்திருக்கிறார்கள். .
கிளார்க்கின் மிகவும் தீவிரமான மற்றும் தனித்துவமான அணுகுமுறை என்பது நுணுக்கமான விவரங்களை ஆராய்வதும் எடுத்துச் சொல்வதுமாகும். இந்தத் தொடரில் அவர் விளக்கிச் சொல்லும் ஓவியங்கள். சிற்பங்களில் அவ்வளவு கலைநுணுக்கங்கள் இருப்பதை அவர் சொல்லிய பிறகே நாம் அறிந்து கொள்கிறோம்.
டாவின்சியின் படைப்புகளை வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வந்த கிளார்க் அவரைப் பற்றி விரிவான புத்தகம் எழுதியிருக்கிறார். அது போலவே நிர்வாண ஓவியங்கள் சிற்பங்கள் பற்றியும் ஆய்வு நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்
ஆவணத்தொடரின் ஒரு இடத்தில் காலம் தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை, ஆனால் காட்சிக்கலைகளின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று கென்னத் கிளார்க் சொல்கிறார். மறுக்கமுடியாத உண்மை
குண்டூசியின் பயணம்
– நித்தியானந்தம்.

ஒரு குண்டூசியை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்ல முடியுமா என்று வியப்பாகவே இருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அக்கடா என்ற சிறுவர் நூலை படித்தேன். விறுவிறுப்பான கதை. நல்ல கற்பனை.
நீண்டகாலமாக யாரும் பயன்படுத்தாமல் போட்டு வைத்த ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தின் கதையே அக்கடா. ஒவ்வொரு குண்டூசியும் ஒரு இடத்தில் இருக்கிறது. அவர்களைத் தேடிப் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிறது அக்கடா. குண்டூசிகளை எல்லாம் இழுத்துக் கொள்ளும் காந்தம் ஒன்றிடம் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அக்கடா எப்படி அந்தப் பிரச்சனையிலிருந்து நண்பர்களைக் காப்பாற்றுகிறது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பாக எழுதியிருக்கிறார். அனிமேஷன் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.
பல்குத்துவதற்காக ஒருவர் குண்டூசியைப் பயன்படுத்தும் போது அதற்கு வரும் ஆத்திரம் சிரிப்பை வரவழைக்கிறது.
இந்தக் கதையைப் படித்தபிறகு குண்டூசியை நம்மால் வெறுமனே பார்க்க முடியாது. நாமும் அதோடு பேச ஆரம்பித்துவிடுவோம்.
அக்கடா
விலை ரூ 130.00
தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
(044)-23644947
desanthiripathippagam@gmail.com
June 27, 2021
வகுப்பறையின் பாடல்
சிறந்த சிறார் எழுத்தாளரான ஷெல் சில்வர்ஸ்டைன்(Shel Silverstein) எழுதிய சிறார் பாடல்களையும் கதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன். இவரைப் போலவே ரோல்ட் டாலின் (Roald Dahl) கதைகளையும் தேடிப் படித்திருக்கிறேன். இந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த சிறார் எழுத்தாளர், பாடலாசிரியர். ஆலன் ஆல்பெர்க் (Allan Ahlberg),

இவர் எழுதிய கதைகளுக்கு அவரது மனைவி ஜேனட் ஆல்பெர்க் அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார். முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஆலன். பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற இந்த கதைவரிசைகள் இன்றும் சிறார்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

சிறார் இலக்கியம் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகத் தான் தமிழில் தனிக்கவனம் உருவாகியுள்ளது. வயதுக்கு ஏற்ப ஆங்கிலத்தில் படிக்கக் கிடைப்பது போலப் பல்வகையான சிறார் கதைகள் தமிழில் இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட சிறார் நூல்களில் பெரும்பான்மை ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவற்றை சிறுவர்களால் படிக்க முடியவில்லை. குட்டி இளவரசன் போல ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யாவிலிருந்து நிறையச் சிறார்கள் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. அழகான வண்ண ஓவியங்களுடன் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன. புத்தக வடிவாக்கமே அற்புதமாக இருக்கும். இது போல மிஷா என்ற சிறார் இதழும் வெளியானது. ஆனால் இன்று அது போல முழுமையாக வண்ணத்தில் சிறார் நூல் வெளியிடப்பட வேண்டும் என்றால் அதன் விலை மிக அதிகமாகிவிடுகிறது. ஆகவே கறுப்பு வெள்ளை படங்களுடனே வெளியிடப்படுகின்றன.
நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட காமிக்ஸ் என்பதே கிடையாது. ஒன்றிரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றியடையவில்லை. மாங்கா. கிராபிக் நாவல்கள் இன்னும் அறிமுகமாவேயில்லை.
இந்த சூழலில் தமிழில் கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டிய சிறார் எழுத்தாளராக, கவிஞராக உள்ளார் ஆலன் ஆல்பெர்க்.

இவரது சிறார் பாடல்கள் அசலான கற்பனையும் கவித்துவமும் கொண்டவை. இவற்றைப் பெரியவர்களும் வாசிக்கலாம். எளிய சொற்களின் வழியே சிறார்களின் மனதை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் பாடல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் சிறப்பானவை
சிறார்களின் மனதை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இப்படியான பாடல்களை எழுத முடியும்.
அவரது பாடல்களில் பெரும்பான்மை பள்ளி அனுபவத்தையே முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்பு மற்றும் பிள்ளைகளின் விளையாட்டுத்தனம். அவர்களுக்குள் உள்ள நட்பு. பள்ளிப் பேருந்து பயண அனுபவம். மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டை, பெற்றோர்களின் கண்டிப்பு, புரியாத வகுப்பறையின் சிக்கல் போன்றவற்றையே பாடலாக்கியிருக்கிறார்.

புலி புல்லுகட்டு ஆடு என்ற புதிரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே. படகில் இந்த மூன்றையும் எப்படி ஏற்றிக் கொண்டு மறுகரை சேர்ப்பது என்ற புதிர் ஆங்கிலத்திலும் உள்ளது. அதை மையமாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
பர்க்லர் பில் மற்றும் தி ஜாலி போஸ்ட்மேன் போன்ற இவரது கதைகள் தலைமுறைகளைத் தாண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அபாரமான அழகுடன் வரையப்பட்ட முழுப்பக்க ஓவியங்களுடன் நாலைந்து வரிகளாக கதை இடம்பெறுகிறது. ஜேனட் தேர்வு செய்யும் நிறங்களும் காட்சி சித்தரிப்பும் துல்லியமும் நேர்த்தியும் கொண்டவை
Heard it in the Playground என்ற ஆலனின் பாடல் தொகுப்பு ஆரம்ப பள்ளி வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. ஆலன் ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆகவே அவரால் பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் குறும்புத்தனங்களைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதை சிறந்த பாடலாக்கியிருக்கிறார்.
நாங்கள் பதிலைத் தேடுகிறோம் என்றொரு பாடல் வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாமல் மேலும் கீழுமாக மாணவர்கள் பதிலைத் தேடுகிறார்கள். மேஜையின் இழுப்பறைக்குள் தரையில், குப்பைக்கூடைக்குள் என தேடிப்பார்க்கிறார்கள். முடிவில் அந்த பதில் ஆசிரியரின் தலைக்குள் இருக்கிறது என்பதை கண்டறிகிறார்கள். ஒரு. பதிலை மறைத்துக் கொள்ள என்ன ஒரு வசதியான இடம் என்று பாடல் நிறைவு பெறுகிறது. உண்மையில் வகுப்பில் விடை தெரியாமல் திகைக்கும் பையன் இப்படித்தான் யோசிப்பான். ஆசிரியரின் மண்டைக்குள் இருக்கும் பதிலை தன்னிடம் ஏன் தேடுகிறார் என்று சலித்துக் கொள்வான். புரியாத வகுப்பறையினைப் பற்றிய இந்தக் கவிதை எல்லா தேசங்களுக்கும் பொருந்தக்கூடியது.

இன்னொரு பாடலில் சிறுவர்கள் மீன் போல,பறவை போல, புழுக்கள் போலப் பிறந்திருந்தால் என்ன கற்றுக் கொள்வார்கள் என்பதைப் பற்றிப் பாடுகிறார்கள். அழகான கற்பனை.
Parents’ Evening என்ற கவிதையில் பள்ளியில் காத்திருக்கும் பெற்றோரின் மனநிலையும் பையனின் மனநிலையும் ஆசிரியரின் மனநிலையும் நான்கு கோணங்களில் அழகாக விளக்கப்படுகிறது
எதையுமே முழுசாக செய்து முடிக்காத பையனை வகுப்பில் ஆசிரியர்.கண்டிக்கிறாள் அவருக்கான பதிலையும் பாதியாகச் சொல்லி நிறுத்திவிடுகிறான் பையன். அவனால் அதையும் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.
நண்பன் இல்லாத அமைதியான ஒரு பையனைப் பற்றி நினைவு கொள்ளும் ஆலன் அவனது பெயர் நினைவில்லை. இவ்வளவு தனிமையிலிருந்த அவனுக்குப் பெயரேயில்லை என்கிறார்.

புதிய ஆசிரியர் வருகை தரும் போது தங்களின் பழைய ஆசிரியர் எவ்வளவு சிறப்பானவர் என்பதைப் பற்றி பிள்ளைகள் சேர்ந்து பாடும் பாடல் ஒன்றிருக்கிறது. அது பழைய ஆசிரியர்கள் மீது மாணவர்கள் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது
Goodbye, old school,
We’re going away.
Goodbye, old school,
We’re leaving today.
Goodbye to the teachers,
Goodbye to you all;
The classrooms, the cloakrooms,
The playground, the hall.
Goodbye, old school,
We’re going away.
Goodbye, old school,
We’ll miss you a lot –
The din and the dinners,
Believe it or not.
We’ll miss you, Miss,
And remember you, Sir,
When lessons have faded
And homework’s a blur.
Goodbye, old school,
We’ll miss you a lot.
Goodbye, old school,
We’ll never forget
The smell of the cloakrooms
With coats soaking wet.
The balls on the roof
And the songs on the bus
We’ll think of you –
Will you think of us?
Goodbye, old school,
We’ll never forget
இந்த பாடலை யார் படித்தாலும் அவர்கள் பள்ளியை விட்டு வந்த கடைசி நாளின் நினைவு பீறிடவே செய்யும். எத்தனை நினைவுகளை இந்த சிறிய பாட்ல் கிளறிவிடுகிறது
Kicking a Ball பாடலில் பள்ளியில் கிடைத்த வேறு எல்லா இன்பங்களையும் விடப் பந்தை உதைப்பதில் கிடைத்த சந்தோஷம் மிகப்பெரியது என்று பாடுகிறார் ஆலன். அது உண்மையே. பாடலின் முடிவில் உலகம் தான் அந்த பந்து அதை உதைத்து விளையாடுவது தான் நம் வாழ்க்கை என்று முடிக்கிறார்.
வகுப்பில் ஆசிரியரிடம் உங்களுக்குப் பிடித்த மாணவர் யார் என்று மாணவர்கள் கேட்கிறார்கள். எல்லோரையும் பிடிக்கும் என்கிறார் டீச்சர். அது உண்மையில்லை. யாரோ ஒருவரை ரொம்பவும் பிடிக்கும். அந்த மாணவர் யார் என்று கேட்கிறார்கள். அதைச் சொல்ல முடியாது என்கிறார் டீச்சர். ஒவ்வொரு மாணவனும் தன்னை ஆசிரியர் மிகவும் நேசிக்கிறார் என்றே நினைக்கிறார்கள். அந்த அன்பை நினைத்துப் பெருமை கொள்கிறார்கள்.
Slow Reader என்ற பாடலில் ஒருவன் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனி எழுத்தாகப் பிரித்துப் படிக்கிறான். அவனால் அவ்வளவு மெதுவாகத்தான் படிக்க முடிகிறது
பள்ளியில் ஒரு மீன் தொட்டி இருக்கிறது ஆனால் அதில் மீன்கள் இல்லை. ஒரு மீன் தொட்டி உள்ளது-பன்றி அடைக்கும் பட்டியிருக்கிறது ஆனால் பன்றியில்லை. பூக்குவளை இருக்கிறது ஆனால் மலர்கள் இல்லை. இது போலவே எங்கள் தலைகளும் காலியாக இருப்பதாக டீச்சர் சொல்கிறார் என்றொரு கவிதையில் மாணவன் சொல்கிறான்.
வகுப்பில் எப்போதும் சக மாணவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் ஒரு பையனை எழுப்பி டீச்சர் கோபமாகப் பாடத்தில் கேள்வி கேட்கும் போது மட்டும் ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய். வாயைத் திறந்து பேச வேண்டியது தானே என்கிறார். அவன் அதற்கும் வாயை மூடிக் கொண்டு மௌனமாக நிற்கிறான். அழகான பாடலது
இன்னொரு பாடலில் ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப்பாடங்களின் சுமையைத் தாங்க முடியாமல் இதை எழுதி வருவதால் என்ன பயன் எனக் கேலி செய்கிறான் ஒரு சிறுவன்.

எங்கப்பாவும் உங்கப்பாவும் சண்டை போட்டால் எங்க அப்பா தான் ஜெயிப்பார். எங்க அம்மாவும் உங்க அம்மாவும் சண்டை போட்டால் எங்க அம்மா தான் ஜெயிப்பார் எங்க அண்ணனோடு உங்க அண்ணன் சண்டை போட்டா காலி. எங்க தாத்தாவோட உங்க தாத்தா சண்டை போட்டா அவ்வளவு தான். முடிஞ்சா என்னோட சண்டைக்கு வா பாப்போம் என்று ஒரு பாடலில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை அழைக்கிறான். இது போன்ற ஒரு சவால் பாடலை நாங்களும் சிறுவயதில் பாடியிருக்கிறோம். எங்கோ லண்டனிலும் இதே பாடலை ஒரு சிறுவன் பாடுகிறான்.
நூறு புத்தகங்களுக்கும் மேலாக எழுதியுள்ள ஆலன் தன் மனைவியின் மரணத்திற்குப் பிறகு தனது உதவியாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு ஒவியரே. அவர்கள் இணைந்து தற்போது புதிய சிறார் நூல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் வாசிக்கும் சிறார்கள் இந்த நூல்களை அவசியம் படிக்க வேண்டும். மொழியாக்கம் செய்யப்பட்டு இந்த நூல்கள் தமிழில் வெளியானால் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதே உண்மை
••••
June 26, 2021
நீரும் நிலமும்
Lakshmanrekha என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நந்தன் சக்சேனா மற்றும் கவிதா பஹ்லி இயக்கியுள்ள இப்படம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமத்தின் நீர்வளத்தை லட்சுமன் சிங் எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் லபோடியாவினைச் சுற்றியிருந்த 58 கிராமங்களின் விதியை மாற்றியது

படத்தின் துவக்கக் காட்சியில் டெல்லியின் குடியிருப்பு ஒன்றில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்காக இயந்திரம் வருகிறது. போர் போடும் பணி துவங்குகிறது ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.. நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போய்விட்டது.
எங்கே போனது நகரின் நீர்வளம். நிலத்தடி நீர் ஏன் பெருநகரங்களில் குறைந்து கொண்டுவருகிறது என்ற கேள்வியில் துவங்கி இந்தியா முழுவதும் பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையைப் பற்றிப் படம் விவரிக்கத் துவங்குகிறது.
பாதுகாப்பான குடிநீர், விவசாயத்திற்கான தண்ணீர் மற்றும், தினசரி பயன்பாட்டிற்கான நீர் கிடைக்காமல் போய்ப் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம். இந்த அபாயத்திலிருந்து விடுபடுவதற்கு உடனடியாக நீர்வளங்களைப் பேணும் மாற்றுவழிகளை மேற்கொள்ள வேண்டும். மழை நீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தலாம். மற்றும் மரபான நீர் சேமிப்பு மற்றும் விநியோக முறைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். லக்ஷ்மன் சிங் எப்படி இதைச் சாத்தியப்படுத்தினார் என்பதை ஆராயும் பொருட்டு லபோடியா நோக்கி பயணம் நீளுகிறது

இந்தியாவின் நீர் வளங்கள் பெருமளவு அழிக்கபட்டுவிட்டன. குறிப்பாக நன்னீர் வளங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். பல பெரிய பெருநகரங்கள் தனது நீர் தேவைக்கான சுற்றியுள்ள கிராமங்களின் நீர் ஆதாரங்களை உறிஞ்சிக் கொள்கின்றன. தண்ணீர் முக்கிய வணிகப்பொருளாக மாறிவிட்டது. இன்னொரு புறம் கிராமப்புற நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. நீர் விநியோகம் முறையாக இல்லை. இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு மாற்றாக ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமம் தனது நீர்வளத்தைப் பெருக்கிக் கொண்டதுடன் புதிய காடு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இதனால் மழையற்றுப் போன காலங்களிலும் விவசாயம் முறையாக நடைபெறும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்
இந்த மாற்றத்தை லக்ஷ்மன் சிங் எப்படி நிகழ்த்தினார் என்பது ஆச்சரியமானது. சிறு விவசாயியான லக்ஷ்மன் சிங் ஒரு நாள் அனுபம் மிஸ்ராவின் ““Aaj Bhi Khare Hain Taalaab” என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறார். அந்தப் புத்தகம் மரபான நீர்வளம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்துப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு சொல்லையும் தான் ஆழ்ந்து படித்து மனதில் ஏற்றிக் கொண்டதாகக் கூறுகிறார். இந்தப் புத்தகம் தந்த உத்வேகம் தான் லக்ஷ்மன் சிங்கினை நீர்வளத்தை மீட்கும் பணியில் ஈடுபட வைத்திருக்கிறது

லபோடியா விவசாயிகளை ஒன்றுதிரட்டி தங்கள் கிராமத்தின் நீர் தேவையைத் தாங்களே உருவாக்கிக் கொண்டுவிட முடியும். அதற்கு வழியிருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். வறண்ட ராஜஸ்தான் கிராமங்களில் தண்ணீர் பிரச்சனை ஒரு புறம் என்றால் மறுபுறம் பண்பாட்டுப் பிரச்சனை. ஊரின் கோவில் குளத்தில் பெண்கள் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது. குளிக்கக் கூடாது என்ற நடைமுறையிருக்கிறது. இதனால் தண்ணீர் கஷ்டத்திலும் அவர்கள் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இது போலவே வீட்டிற்குத் தேவையான குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் கொண்டுவரவேண்டியது பெண்களின் வேலை. ஆகவே ஆண்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை. படத்தில் ஒரு பெண் ஒரு வாரத்திற்கு ஒருமுறை தான் குளிக்க முடியும் என்கிறாள். இன்னொரு காட்சியில் குறைவான தண்ணீரில் தான் குளிக்க முடிகிறது என்று ஒரு இளைஞன் அலுத்துக் கொள்கிறான்.

இந்தச் சூழலில் கிராமவாசிகளின் உழைப்பில் நீர்நிலைகளைத் தூர்வாறுகிறார்கள். புதிய கால்வாய் அமைக்கிறார்கள். மழைநீரைச் சேமிக்கப் புதிய வழிவகைச் செய்கிறார்கள். மழைக்காலம் துவங்குகிறது. மழைத்தண்ணீர் முறையாகச் சேமிக்கப்படுகிறது. இதனால் கிராமக்கிணறுகள் நிரம்புகின்றன. தரிசு நிலம் வளப்படுகிறது. புதிய மரங்களை நட்டு தோப்புகளை உருவாக்குகிறார்கள். விவசாயத்திற்கான தண்ணீர், குடிநீர் இரண்டும் ஆண்டுமுழுவதும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். விவசாயம் நன்றாக நடக்கிறது. இதனால் மாடு வளர்ப்புப் பெருகுகிறது. பால் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். லபோடியாவின் வாழ்க்கைத் தரம் உயருகிறது
இதை அறிந்த பக்கத்துக் கிராமவாசிகள் லட்சுமன் சிங்கை வரவழைக்கிறார்கள். பாடிக்கொண்டு ஒரு குழுவாக அவர்கள் அடுத்த கிராமத்திற்குப் போகிறார்கள். அங்கே மக்களை ஒன்று திரட்டி தங்கள் ஊரில் செய்த ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறார்கள். கிராமவாசி ஒருவரின் நேர்காணலில் லட்சுமன் சிங் சொல்வது எல்லாம் முட்டாள்தனம். வெறும் பகல்கனவு என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் சொன்னபடி செய்து நீர்வளம் பெருகிவிட்டபிறகு அவரை எங்கள் வழிகாட்டியாகக் கருதுகிறோம் என்கிறார்
வறட்சி நிவாரணம். வெள்ள நிவாரணம் என்று அரசு பெரும்பணத்தைச் செலவு செய்கிறது. ஆனால் ஆக்கப்பூர்வமாக நீர்வளத்தைப் பெருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே மக்களே ஒன்று சேர்ந்து இந்தப் பணியைத் துவங்கி வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம் என்கிறார் லட்சுமன் சிங்.

கிராம மக்களை ஒன்று சேர்த்து நீர் வளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது பெரிய சவாலாக இருந்தது. பலரும் அவர் தங்கள் நிலத்தை அபகரித்துவிடுவார் என்று நினைத்தார்கள். சிலரோ ஒடுக்கபட்டவர்களடன் இணைந்து கொண்டு அவர் மேற்சாதியினரை அவமதிக்கிறார் என்று கருதினார்கள். இந்திரன் தரும் கொடை தான் மழை. அந்த மழை தண்ணீரை வீணடிக்கக் கூடாது. பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஒரு கிராமதுப் பெண்

chauka system என்ற முறையில் மழைநீரைச் சேமித்து அதன் மூலம் கிராமக்கிணறுகளில் நீர்வரத்தை அதிகப்படுத்தியதோடு தரிசு நிலங்களையும் வளமிக்கதாக மாற்றியிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் கவனத்தைத் திருப்பிய சிங் அதில் வெற்றி அடைந்திருக்கிறார்.
இன்னொரு காட்சியில் லட்சுமன் சிங் வறட்சியைப் பற்றியோ பஞ்சம் பற்றியோ நாங்கள் ஒருபோதும் பயந்தது கிடையாது. அதைத் தாங்கிப் பழகிவிட்டோம். ஆனால் எதனால் வறட்சி ஏற்படுகிறது என்பதைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை என்பது தான் எனது கேள்வி. அதைத் தான் அனுபம் மிஸ்ரா புத்தகம் சிந்திக்க வைத்தது என்கிறார்.
கிராமத்தில் அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளுக்குப் புதிய பெயர் வைத்திருக்கிறார்கள். பறவைகளுக்கான காடு. எலிகளுக்கான காடு என்று சிறப்பு மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கிராமங்களில் மரம் வெட்டுவதோ, வேட்டையாடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது

மழைக்குப் பின்னர் ஈரநிலத்தில் லட்சுமணன் சிங் நடந்து செல்லும் காட்சியும், கிராமத்துக் கிணற்றில் பெண்கள் நீர் இறைக்கும் காட்சியும், ஆடு மேய்க்கும் கிழவர் சொல்லும் உண்மைகளும். கிராமத்துப் பெண்ணின் ஆதங்கமும் மறக்கமுடியாத காட்சிகள்
நீர்வளத்தைப் பறிகொடுத்துவிட்டு எப்படி உயிர்வாழப்போகிறோம். மரபான நீர் வளப் பாதுகாப்புமுறைகளை ஏன் கண்டறிந்து உயிர்கொடுக்கக் கூடாது என்றே கேள்வியை உரத்து எழுப்புகிறார் லக்ஷ்மன் சிங்.
அது நாம் அனைவரும் சேர்ந்து யோசிக்கவும் முன்னெடுக்கவும் வேண்டிய பணியாகும்.
June 24, 2021
உண்மையின் அடையாளம்
இந்து தமிழ் திசை நாளிதழில் நான் எழுதிய சிறந்த தமிழ் படங்கள் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெண்ணிற நினைவுகள் என தனி நூலாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கட்டுரை
••

ஒரு தமிழ்ப் படத்தின் தொடக்கத்தில் அந்தப் படத்தின் கதையை உருவாக்க எந்தெந்தப் புத்தகங்களெல்லாம் துணையாக இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்ட ஒரே படம் ‘சிவகங்கை சீமை’. படத்தின் டைட்டில் காட்சியில் ‘சிவகங்கை சரித்திரக் கும்மியும் அம்மானையும்’, ‘திருநெல்வேலி மானுவல்’, ‘ராமநாதபுரம் மானுவல்’, ‘மேஜர் வெல்ஷின் நாட்குறிப்பு’, ‘சென்னை வரலாறு’, கால்டுவெலின் ‘திருநெல்வேலி சரித்திரம்’, ‘மருதிருவர்’ பாரி நிலைய வெளியீடு ஆகிய புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

‘சிவகங்கை சீமை’, 1959-ல் வெளிவந்த திரைப்படமாகும். கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவிஞர் கண்ணதாசன் கதை, வசனம், பாடல்களை எழுதித் தயாரித்திருக்கிறார். படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. தமிழில் வெளியான சரித்திரப் படங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றில் வரலாற்றுப் பிரக்ஞை துளிகூட கிடையாது. அந்தக் காலகட்டத்தை உண்மையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் படமாக்கியிருப்பார்கள். ஆனால், ‘சிவகங்கை சீமை’ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாட்டார் வழக்காற்று மரபில் உள்ள ‘மருதிருவர்’ கதைகளையும் உண்மையான சரித்திர நிகழ்வுகளையும் அழகாக ஒருங்கிணைந்து கண்ணதாசன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
அத்தோடு, படமாக்கப்பட்ட நிலப்பரப்பும் அரண்மனைகளும் கற்கோட்டைகளும் ஆடை அணிகலன்களும் யுத்தக் காட்சியும் மிகவும் நம்பும்படியாக இருக்கின்றன. இந்தப் படத்தின் பல காட்சிகளில் மருதரசர்கள் மேல் சட்டை அணியாமல் பட்டு வேஷ்டி மேல் துண்டுடன் காட்சியளிக்கிறார்கள். முத்தழகுவின் அண்ணனாக வரும் பி.எஸ்.வீரப்பா மேல் சட்டை இல்லாத உடலோடுதான் படம் முழுவதும் காட்சியளிக்கிறார். பெரிய மருதுவாக நடித்துள்ள பகவதி மிக இயல்பாக, அமைதியாக, கம்பீரமாகத் தோன்றுகிறார். சின்ன மருதுவின் கண்களில் துடிப்பும் வீரமும் வெளிப்படுகிறது. படத்தில் காட்டப்படும் பெண்களும் கண்டாங்கி சேலை கட்டி, கனகாம்பரம் முல்லை மல்லிகை சூடி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

அன்றைய சிவகங்கைச் சீமை என்பது தெக்கூர், ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள்தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்தவர். அதனால், அவர் சிவகங்கைச் சீமையின் வரலாற்றை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்குவது சவால். அதன் திரைக்கதையை எழுதுவதற்கு நிறைய படிக்கவும் ஆய்வுசெய்யவும் வேண்டும். நான் அறிந்தவரை, தமிழின் எந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் நூலகம் கிடையாது. அந்தக் காலத்தில் இருந்த பெரிய ஸ்டுடியோக்களிலும்கூட ரெபரன்ஸ் நூலகம் இருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரலாற்றுப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதன் கதையை எழுதுவதற்கு உதவியாகப் புத்தகங்கள் வாங்குவதற்கோ, ஆவணக் காப்பகத்துக்குச் சென்று மூல ஆவணங்களைக் காண்பதற்கோ, வரலாற்றுச் சின்னங்களைக் காண்பதற்கோ பத்து ரூபாய்கூட சினிமாவில் செலவழிக்க மாட்டார்கள்.
‘சிவகங்கை சீமை’ படத்தைப் பார்க்கும்போது எவ்வளவு நுட்பமாகச் சிறிய விஷயங்களைக்கூட கவனித்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் கொலையாளி ஒருவனின் குறுவாள் ஒன்றை முத்தழகு கண்டுபிடித்து அது யாருடையது எனத் தேடுகிறான். அந்தக் குறுவாளின் வடிவமும் அதன் உறையும் மறவர் சீமையில் பயன்படுத்தப்பட்ட குறுவாளைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தில் வரும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார். துபாஷி ஒருவர்தான் அதை மொழிபெயர்த்துச் சொல்கிறார். குறிப்பாக, மேஜர் வெல்ஷுக்கும் மருது சகோதர்களுக்கும் இடையில் இருந்த நட்பும் அன்பும் மிக அழகாகப் படத்தில் காட்டப்படுகிறது. இதை வெல்ஷ் தனது நாட்குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார். பெயர் பொறித்த புலிநகம், கங்கணம், முத்துமாலை, கழுத்துச் சரம், கடுக்கன், கைக்காப்பு என அணிகலன்களைக்கூட சரித்திரபூர்வமாகவே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட பெரிய மருது, நாணயத்தை விரல்களால் வளைக்கக்கூடிய வலிமை கொண்டவர் என்ற தகவலை நாணயம் ஒன்றை முத்தழகு வளைத்துக்காட்டுவதாக மாற்றியிருக்கிறார்கள். அதிலும்கூட ஆற்காடு நாணயங்கள் என்றால் ஆறேழு வளைத்திருப்பேன் என முத்தழகு கூறுகிறான். ஆற்காடு அன்று ஆங்கிலேயருக்குத் துணையாக இருந்தது என்பதைக் கண்டிப்பதற்காகவே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது.
இன்னொரு காட்சியில் வீட்டில் முத்தழகுக்கு அவனது அண்ணி, வெள்ளைப் பணியாரம் பரிமாறுகிறாள். அது அந்த மண்ணுக்கே உரித்தான உணவு. வெண்கலக் கும்பாவில்தான் சாப்பிடுகிறார்கள். இன்னொரு காட்சியில் சத்திரத்துக்கு வருகிற வழிப்போக்கனுக்குப் பழைய சோறும் வெஞ்சனமும் இருக்கிறது, சாப்பிடுங்கள் என ஒருவர் உபசரிக்கிறார். வெஞ்சனம் என்ற சொல் நகரவாசிகளுக்குத் தெரியாது. வெஞ்சனம் என்பது சோற்றோடு தொட்டுக்கொள்ளும் தொடுகறிகள். “இன்னைக்கு என்ன வெஞ்சனம் வச்சே?” என்று கேட்பதே மக்கள் வழக்கு.
சரித்திர உண்மைகளை மக்கள் மனதில் பதியச்செய்வதற்காக ‘சிவகங்கை சீமை’ திரைப்படம் மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே இன்றும் அதனைத் தனித்துவமான திரைப்படமாக்குகிறது
வெண்ணிற நினைவுகள்
₹150.00
Online shopping
https://www.desanthiri.com/
தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
(044)-23644947
desanthiripathippagam@gmail.com
••
ரிதுபர்னோ கோஷின் தாகூர்
வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மகாகவி தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். Jeevan Smriti என்ற இந்த ஆவணப்படமே கோஷின் கடைசிப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் இன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது. 12 தேசிய விருதுகளை பெற்றுள்ள ரிதுபர்னோ கோஷ் கவித்துவமான சினிமாவை உருவாக்கியதில் முன்னோடி. இவர் தாகூரின் கதைகளை சிறந்த திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் தாகூரின் 150வது ஆண்டினை முன்னிட்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சத்யஜித்ரே தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை 1960ல் உருவாக்கினார். அந்தப் படம் பற்றி நான் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். அதுவும் தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது
ரே இயக்கிய படத்தின் தொடர்ச்சி போலவே இப்படத்தை ரிதுபர்னோ உருவாக்கியிருக்கிறார்.
வழக்கமான ஆவணப்படங்கள் போல நேர்காணல்கள். பழைய புகைப்படங்கள். செய்தி துண்டுகள், குடும்பத்தவர்களின் நினைவுகள் என இந்தப்படம் உருவாக்கப்படவில்லை.சுயசரிதைப் படம் போலவே உருவாக்கபட்டிருக்கிறது. தாகூரின் வாழ்க்கையை விவரிக்கும் படத்தின் இடையிழையாக ரிதுபர்னோ கோஷ் மற்றும் அவரது படக்குழுவினர் படப்பிடிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்வது. படப்பிடிப்பிற்கான களம் தேடி பயணம் செய்வது, தாகூரின் வீட்டிற்குள் செய்யும் ஏற்பாடுகள் என இருபுள்ளிகளும் அழகாக இணைந்து பயணிக்கின்றன. தாகூரின் இளமைப்பருவத்தை நேரடியாக ரிதுபர்னோ பார்வையிடும் காட்சி மிக அழகானது. காலத்தினுள் நுழைந்து நிஜத்தை காணுவது என்ற கோஷின் அணுகுமுறையே படத்தின் தனித்துவம்.

தாகூரின் வாழ்க்கை வரலாற்றைக் கால வரிசையாக இப்படம் விவரிக்கிறது என்ற போதும் வாழ்வின் முக்கியத் தருணங்களையும் அது ஏற்படுத்திய பாதிப்புகளையுமே பிரதானமாகக் கொண்டிருக்கிறது.
ரிதுபர்னோ ஆவணப்படங்கள் எதையும் இயக்கியதில்லை. ஆகவே கதைப்படம் போலவே இதையும் உருவாக்கியிருக்கிறார். நான்கு நடிகர்கள் வேறு வேறு வயதுள்ள தாகூராக நடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் விவரணை தரப்படுகிறது.
தாகூரின் முதல் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தைக் கோஷ் காட்டுகிறார். எட்டு வயதான தாகூரின் படமது. அதற்கு முன்பு எப்படியிருந்தார் என்று தெரியாது என்றே விவரணை துவங்குகிறது.

கேமிராவின் வருகையும் அது உயர் தட்டு மக்களிடம் உருவாக்கிய வரவேற்பும் இந்தத் தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பிரபுக்கள். ஜமீன்தார்கள். பெரும் வணிகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் தான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இல்லத்திருமணங்கள் தான் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தாகூரின் குடும்பம் பிரம்ம சமாஜத்தை சார்ந்தது என்பதால் பெண்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாகூர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் யாவும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்களை விடவும் அவரது படைப்பின் வழியே அவரது எண்ணங்களை, உணர்ச்சிகளை, படைப்பாற்றலை கண்டறிந்து வெளிப்படுத்தவே ரிதுபர்னோ முயல்கிறார்
தனிமை தான் தாகூரைக் கவிஞராக உருவாக்கியிருக்கிறது. சிறுவயது முதலே அவர் தனிமையைத் தீவிரமாக அனுபவித்திருக்கிறார். வாரத்தின் ஒரு நாள் தான் அம்மா அவரைக் கவனிப்பார். மற்ற நாட்களில் வேலைக்காரர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். வீட்டில் நடந்த கச்சேரிகள். வீதியில் பாடிக் கொண்டு செல்லும் யாசகர்களின் பாடல். ஒவியம், கலைகள். அரசியல், அச்சு என வீட்டிற்குள் அறிமுகமாக புதிய உலகம் அவரை உருமாற்றியிருக்கிறது.
தனது பனிரெண்டாவது வயதில் தாகூர் தனது தந்தையோடு ஒரு பயணம் மேற்கொண்டார். அது தான் அவரது முதற்பயணம். அந்தப் பயணத்தில் வழியே தான் இந்தியாவின் உண்மையான முகம் அவருக்கு அறிமுகமானது. எந்த இடத்தில் பின்னாளில் சாந்திநிகேதன் உருவாக்கப்போகிறாரோ அந்த ஷோலாப்பூருக்கு முதல்முறையாகச் சென்ற அனுபவத்தைக் கோஷ் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். வங்காள கிராமப்புற வாழ்க்கையின் இனிமையும் அழகும் மெய்மறக்கச் செய்கிறது.
அண்ணி காதம்பரி தேவியுடன் ஏற்பட்ட நெருக்கமான பழக்கம். தாகூரின் இங்கிலாந்து பயணம். தாகூரின் திருமணம் ஆகியவை முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தாகூரின் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் காதம்பரி தேவி தற்கொலை செய்து கொண்டார். அதைத் தாகூரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்களுக்குள் இருந்த ரகசியக்காதலைத் தான் சத்யஜித்ரே சாருலதா என்ற படமாக உருவாக்கினார். அது தாகூரின் சிதைந்த கூடு நாவலின் திரைவடிவமாகும்
காதம்பரி தேவியின் தற்கொலை ஏற்படுத்திய வெறுமையும் துயரமும் தான் தாகூரின் படைப்பாற்றலைத் தூண்டியது. அதன்பிறகு தான் அவர் முக்கியமான படைப்புகளை எழுத ஆரம்பித்தார். ஒருவகையில் துயரிலிருந்து விடுபடவே அவர் கவிதைகள் எழுதினார் என்கிறார்.

இது போலவே தாகூரின் அம்மா இறந்த போது அவரது தந்தை செயலற்று உறைந்து போயிருக்கும் காட்சி படத்திலிருக்கிறது. தாயின் இழப்பைத் தாங்க முடியாத தாகூர் தந்தையை வெறித்துப் பார்க்கிறார். தந்தையோ இனி தனக்கு வாழ்க்கையில் பிடிப்பேயில்லை என்பது போலச் சாய்வு நாற்காலியில் இருக்கிறார். அந்தக் காட்சி தாகூருக்குள் அழியாத பிம்பமாகப் பதிந்துவிட்டது என்றும் கோஷ் கூறுகிறார்
இந்த ஆவணப்படம் சத்யஜித்ரேயிற்குச் செய்யப்பட்ட அஞ்சலி போலவே அவரது திரைப்படத்தின் முக்கியக்காட்சிகள். ரே படம் போலவே அமைக்கப்பட்ட காட்சிகோணங்கள். நடிகர்கள். இசை கலைவெளிப்பாடு என ரிதுபர்னோ தாகூரை மட்டுமின்றிச் சத்யஜித்ரேயினையும் போற்றிக் கொண்டாடியிருக்கிறார்
தாகூரின் பிள்ளைகள் என்னவானார்கள் என்ற கேள்வி இந்தப் படம் பார்க்கும் போது எனக்குள் ஏற்பட்டது. படத்தில் அது பற்றி விரிவாக பேசப்படவில்லை.
1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருணாளி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை தாகூர் மணந்தார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். முதல் குழந்தை மதுரிலதா, இவரைப் பேலா என்று அழைத்தார்கள். தாகூரின் மகன் ரதிந்திரநாத் ஒரு கல்வியாளர். எழுத்தாளர், ஓவியர், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.
1910 ஜனவரி 27 ஆம் தேதி, ரதிந்திரநாத் தன்னை விட ஐந்து வயது குறைந்த பிரதிமா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். இது ஒரு விதவைத் திருமணம்.

பிரதிமாவுக்குப் பதினொரு வயதாக இருந்தபோது முதற் திருமணம் நடந்தது, ஆனால் அவரது கணவர் நிலநாத் சட்டோபாத்யாய் இரண்டு மாதங்களுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு விதவையாகவே வாழ்ந்து வந்தார். மறுமலர்ச்சி எண்ணங்களைக் கொண்ட தாகூர் குடும்பம் அவரை மருமகளாக ஏற்றுக் கொண்டது. அது அன்றைய வங்காளத்தில் பெரிய புரட்சிகர நிகழ்வு.
ரதிந்திரநாத் அமெரிக்காவிற்குச் சென்று விவசாயக்கல்வி படித்தவர். சில காலம் ஜெர்மனியில் உயர்படிப்புப் படித்திருக்கிறார். அவர் கல்வியிலும் கலைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.
ரவீந்திரநாத்தின் மகள்களில் ரேணுகா தேவி தனது பதின்மூன்று வயதில் இறந்துவிட்டார். இவரை ராணி என்று செல்லமாக தாகூர்அழைத்தார். 1902 இல் ரேணுகா காசநோயால் பாதிக்கப்பட்டார். அவரது மருத்துவர்களின் ஆலோசனையின்படி, தாகூர் தனது மகளை 1903 மே மாதம் இமயமலைக்கு அழைத்துச் சென்றார். மகளுக்குத் துணையாக இருந்த நாட்களில் தாகூரின் மனம் மிகவும் சோர்ந்து போயிருந்த்து. அதிலிருந்து மீளுவதற்காக நிறைய குழந்கைகளுக்கான கவிதைகளை எழுதினார்.
தன்னுடைய வாழ்நாளில் அதிகத் துயரங்களைச் சந்தித்தவர் தாகூர். 1903 செப்டம்பரில், ரேணுகா காசநோய் முற்றி இறந்து போனார். இது நடந்து ஒராண்டில் அவரது மகன் ஷமிந்திரநாத் தனது 11 வயதில் காலராவால் இறந்தான். மனைவி, மகள், மகன் என அடுத்தடுத்த மரணங்கள் தாகூரை மிகவும் வேதனையடையச் செய்தன.
ரிதுபர்னோ கோஷ் தாகூரின் உலகைப் பார்வையாளர்கள் முழுமையாக உணர வேண்டும் என்று விரும்புகிறார். அவரை ஒரு பிம்பமாக முன்னிறுத்துவதை விடவும் எது தாகூரை உருவாக்கியது எவற்றைத் தாகூர் எழுதினார் என்பதையே அடையாளப்படுத்த முயலுகிறார்.

ஒரு காட்சியில் தாகூர் ரசித்துத் தன் கவிதைகளில் எழுதிய மழைக்காலத்தைத் தானும் அனுபவிக்க வேண்டும் என ஷோலாப்பூருக்கு காரிலே ரிதுபர்னோ கோஷ் பயணம் செய்கிறார். வழியில் நல்ல மழை. பாதையில் வெள்ளம் போகிறது. அதற்குள் இறங்கி நடக்கிறார். வாகனங்கள் போக முடியாத சூழல். வேறுவழியின்றி மாற்றுப்பாதையில் பயணம் செய்கிறார்கள். தான் கவிதையின் உலகிற்குள் மழையைத் துணைக்கு அழைத்தே செல்ல விரும்புகிறேன் என்கிறார் கோஷ்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயம் எப்படித் தெரியவந்தது. அவர் அப்போது ஷோலாப்பூரில் இருந்தார். லண்டனிலிருந்து நோபல் கமிட்டி தந்தி கொடுத்திருந்தார்கள். அந்தத் தந்தியை எடுத்துக் கொண்டு ஒரு தபால்காரன் நவம்பர் மாத குளிரான காலைப் பொழுதில் கிராம சாலையில் பயணித்து அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு நோபல் பரிசை பற்றி எதுவும் தெரியாது. தந்தி வந்த நேரம் தாகூர் வீட்டில் இல்லை. அவர் தன் மகன் மற்றும் நண்பர்களுடன் வனப்பகுதிக்குக் காரில் சென்றிருந்தார். மருமகன் நாகேந்திரநாத் தபால்காரனைத் திரும்பி அனுப்பி வைத்தான். தாகூரின் கார் திரும்பி வரும்போது தபால்காரன் வழியில் அவரை மடக்கி தந்தியைக் கொடுத்திருக்கிறான். அதைப் பிரித்துப் படிக்காமல் தனது பாக்கெட்டில் திணித்து வைத்துக் கொண்டார் ரவீந்திரநாத். லண்டனிலிருந்து வந்துள்ள முக்கியமான தந்தி என்று தபால் ஊழியன் திரும்பச் சொன்னபிறகே அவர் அதைப் பிரித்துப் படித்துப் பார்த்தார்.
SWEDISH ACADEMY AWARDED YOU NOBEL PRIZE LITERATURE WIRE ACCEPTATION SWEDISH MINISTER என்ற அந்த வாசகத்தை அவரால் நம்ப முடியவில்லை. நோபல் பரிசுக்குத் தனது கவிதைத் தொகுப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதை அவர் அறிவார், என்றாலும் அந்தப் பரிசு தன்னைத் தேடி வரும் என நினைக்கவேயில்லை
சில மணி நேரத்தில் அவர் பரிசு பெற்ற செய்தி வங்காளம் முழுவதும் பரவியது. இந்திய இலக்கிய வரலாற்றில் அது மகத்தான அங்கீகாரமாக மாறியது.
தாகூரின் ஓவியங்கள் மற்றும் அவரது சர்வதேசப் பயணங்கள். சாந்தி நிகேதனில் அவர் மேற்கொண்ட முயற்சிகள். இந்திய சுதந்தரிப்போரில் அவரது பங்களிப்பு. காந்தியோடு அவருக்கு இருந்த நட்பு எனத் தாகூரின் ஆளுமையைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது
ஏன் இந்தப் படம் வெளியிடப்படவில்லை என்பது புதிரான விஷயமே. ஒருவேளை இதனை மரபான ஆவணப்படமாக ஏற்க முடியாமல் அரசு நிர்பந்தம் கொடுத்திருக்கலாம். ரிதுபர்னோ கோஷ் சிறந்த ஒளிப்பதிவு. இசை, படத்தொகுப்பு நடிப்பின் மூலம் வழக்கமான ஆவணப்படத்தின் வடிவத்தை, வெளிப்பாட்டு முறைகளைக் கடந்து சிறந்த கலைப்படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார்
ரிதுபர்னோ கோஷ் தாகூரின் கதைகளைத் தொடர்ந்து படமாக்கியவர். அவரது கடைசிப்படமாகத் தாகூரின் வாழ்க்கை வரலாறு அமைந்தது பொருத்தமானதே
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


