S. Ramakrishnan's Blog, page 123

June 28, 2021

வெளியில் ஒருவன்

எனது முதற்புத்தகம் வெளியில் ஒருவன்.

சென்னை புக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டுவர ஏற்பாடு செய்தவர் எழுத்தாளர் தமிழ்செல்வன். அவரே கதைகளைத் தேர்வு செய்து தொகுப்பை உருவாக்கிவிட்டார். நான் பதிப்பாளரைச் சந்திக்கவேயில்லை. இப்படி ஒரு அதிர்ஷ்டம் வேறு எவருக்கும் கிடைத்திருக்காது. அந்த வகையில் அண்ணன் தமிழ்செல்வனை என்றும் நன்றியோடு நினைவு கொள்வேன்.

திருநெல்வேலியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டு அரங்கில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதற்காக என்னை அழைத்தபோது தான் புத்தகம் வெளிவரப்போகும் தகவலே எனக்குத் தெரியும்.

வெளியிட்டு விழா முடிந்து எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார்கள். அதைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். இது தான் இலக்கிய உலகிற்கான எனது பாஸ்போர்ட். கையடக்கமான கிரௌன் சைஸ். கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட அட்டை என்று தமிழ்செல்வன் சொன்னார். அப்போது அது புதுமையானது. சிறுகதைகளை அச்சில் கண்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விடவும் புத்தகமாகக் கையில் கிடைக்கும் போது ஏற்படும் சந்தோஷம் தான் பெரியது.

வெளியிட்டு விழா அன்று புத்தகம் பற்றி ஒருவரும் அறிமுகவுரை ஆற்றவில்லை. இந்தப் புத்தகம் எங்கே விற்பனைக்குக் கிடைக்கும் என்று கூடத் தெரியாது. ஆனால் ஓராண்டிற்குள் புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்ததோடு பத்துக்கும் மேற்பட்ட விமர்சனக்கூட்டங்கள் நடந்தன. எழுத்தாளர் சுந்தர ராமசாமி துவங்கி அசோகமித்திரன் வரை பலரும் பாராட்டினார்கள். இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லும் போது பலரும் இந்தத் தொகுப்பு பற்றிப் பாராட்டுவது மகிழ்ச்சி அளித்தது.

அந்த நாட்களில் இத்தனை விருதுகள் கிடையாது. ஒரு புத்தகம் கொண்டுவர இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும். தேடிச்சென்று எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடிய காலமது. சிறுபத்திரிக்கைகளுக்குக் கதை அனுப்பினால் எப்போது வெளியாகும் என்று தெரியாது. பத்திரிக்கைகளில் எழுத்தாளரின் பேட்டி வருவது அபூர்வம்.

கதைகளை வாசித்துக் கடுமையாக விமர்சனம் செய்யும் இலக்கிய விமர்சகர்கள் இருந்தார்கள். அவர்கள் கடிதம் மூலம் மட்டுமின்றி நேரடியாக வரவழைத்தும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைப்பார்கள். அந்த நாட்களில் கோவில்பட்டி இலக்கிய சபையில் ஒரு புத்தகம் நன்மதிப்பைப் பெறுவது எளிதானதில்லை.

இந்தத் தொகுப்பைச் சந்திக்கும் போதெல்லாம் வியந்து பாராட்டி உற்சாகப்படுத்தியவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. என் அண்ணன் மருத்துவர் வெங்கடாசலம் அவரது மாணவர். சாத்தூரிலிருந்த தனுஷ்கோடி ராமசாமி. வீடு தேடி சென்று நானும் கோணங்கியும் அடிக்கடி உரையாடுவோம். அவரைப் போல உபசரிப்பு செய்கிறவர் எவருமில்லை. மிகப் பெரிய மனதும் அன்பும் கொண்டவர்.

பேராசிரியர் மாடசாமி இந்தத் தொகுப்பினை வெகுவாகப் பாராட்டியதோடு அவரது முனைவர் பட்ட ஆய்வில் இதனைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். பரிவானது வீடு என்ற கதை அவருக்கு மிகவும் பிடித்தமானது.

திகசி, வல்லிக்கண்ணன், வண்ணதாசன், சா.கந்தசாமி, பிரபஞ்சன், தா.மணி எனப் பலரும் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்கள். வாரம் இரண்டு மூன்று கடிதங்கள் என வருஷம் முழுவதும் இதற்கான விமர்சனக் கடிதங்கள் வந்தபடியே இருந்தன.

இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள போதும் முதற்புத்தகம் தந்த சந்தோஷத்தை வேறு எதுவும் தரவில்லை.

இந்தச் சிறுகதைத் தொகுப்பினை வாசித்த கவிஞர் மீரா எனது அடுத்த சிறுகதைத் தொகுப்பினை தானே அன்னம் சார்பில் கொண்டுவருவதாகச் சொன்னார். காட்டின் உருவம் அப்படித்தான் வெளியானது.

நீண்ட காலமாக வெளியில் ஒருவன் அச்சில் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நற்றிணை பதிப்பகம் சார்பில் நண்பர் யுகன் அதை மறுபதிப்புச் செய்ய விரும்பினார். அனுமதி அளித்தேன். புதிய பதிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதுவும் நன்றாக விற்பனையானது.

ஆண்டு தோறும் புதிய நூல்கள் வெளியாகும் போதெல்லாம் எனது முதற்தொகுப்பை கையில் எடுத்துப் பார்த்துக் கொள்வேன். சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் எனது முதற்தொகுப்பிற்கு ஒரு விமர்சனம் வெளியாகியிருந்தது. முப்பது ஆண்டுகளைக் கடந்தும் வாசிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறியிருக்கின்றன எனது இன்றைய கதைகள். பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல இந்தத் தொகுப்பு எனது கனவின் அடையாளமாக இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெளியில் ஒருவன் புதிய பதிப்பு வெளியாகிறது. இதனைத் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.

இந்தத் தருணத்தில் மீண்டும் அண்ணன் தமிழ்செல்வனை, சென்னைபுக்ஸ் பாலாஜியை, கோணங்கியை, முதற்கதையைக் கணையாழியில் வெளியிடத் தேர்வு செய்த எழுத்தாளர் அசோகமித்திரனை, தனுஷ்கோடி ராமசாமியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். என் இலக்கியப் பிரவேசம் அவர்களின் வழியாகவே நடந்தது.

கணையாழியில் வெளியான ஒரு விமர்சனம்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2021 22:43

நாகரீகத்தின் கதை

பிபிசி தயாரிப்பில் 1969ல் வெளியான கலைவரலாற்று தொடரான Civilisation 13 பகுதிகளைக் கொண்டது. இதற்கு இணையாக இன்று வரை ஒரு கலைவரலாற்றுத் தொடர் வெளியாகவில்லை. இந்தத் தொடர் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மிகச்சிறந்த ஒலி ஒளியில் காணக்கிடைக்கிறது.

கலைவிமர்சகர் கென்னத் கிளார்க் இத் தொடரைத் தயாரித்து வழங்கினார். அவர் ஒரு நிகரற்ற கலையாளுமை. ஓவியம், சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை குறித்த அவரது பார்வையும் ஆழ்ந்த அவதானிப்புகளும் பிரமிப்பூட்டக்கூடியவை. இந்தத் தொடருக்காகக் கென்னத் கிளார்க் எழுதிய உரை சிறு நூலாக வெளிவந்துள்ளது. தொடரின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அதைத்தேடிப் படித்திருக்கிறேன்.

கென்னத் கிளார்க் கவிதைகளின் ரசிகர். தொடர் முழுவதும் கவித்துவமான வர்ணனையை வெளிப்படுத்தியிருக்கிறார். உன்னதமான கலைப் படைப்புகளைக் காணும் போதெல்லாம் அவரது மனதிலிருந்து அதற்கு இணையான கவிதை வெளிப்படுகிறது. மேற்கத்திய கலையுலகின் தனித்துவங்களைச் சாதனைகளைச் சாமானிய மக்களும் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. இதற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக இது போன்று நிறையக் கலைவரலாற்றுத் தொடர்கள் வெளியாகின.

Nikolaus Pevsner, Ernst Gombrich, Kenneth Clark ஆகிய மூவரையும் பிரிட்டனின் நிகரற்ற கலைவிமர்சகர்களாகக் கருதுகிறார்கள். இதில் Ernst Gombrich எழுதிய The Story of Art மிக முக்கியமான கலைவரலாற்றுப் புத்தகம்.

கலைவிமர்சகர் பெர்னார்ட் பெரன்சனால் உருவாக்கப்பட்டவர் கென்னத் கிளார்க். அவர்கள் இருவரும் 1925ம் முதன்முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது கிளார்க்கின் வயது 22.

அவர் டிரினிட்டி கல்லூரியில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலை பயின்றிருந்தார். கோடை விடுமுறை ஒன்றில் அவர் நண்பர்களுடன் இத்தாலிக்குப் பயணம் மேற்கொண்டார். மேற்கத்திய கலைமரபை காணுவதே இந்தப் பயணத்தின் நோக்கம். அவர்கள் அருங்காட்சியகங்களில் சுற்றி அலைந்து சிறந்த கலைப்படைப்புகளைக் கண்டார்கள். அப்போது தான் பெரன்சனின் அறிமுகம் ஏற்பட்டது. அவர் கிளார்க்கின் கலையார்வத்தைப் புரிந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தியதுடன் அரிய ஓவியங்களை ஆராய்வதற்கும் உதவி செய்தார். இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

அந்த நாட்களில் பிரிட்டனில் கலைவரலாறு பாடமாக எந்தக் கல்லூரியிலும் கற்பிக்கப்படவில்லை. ஆகவே அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ தான் கலைவரலாறு படிக்க முடியும். அப்படிக் கல்வி பயிலும் படி கிளார்க்கை உத்வேகப்படுத்தினார் பெரன்சன். ஆனால் அதில் கிளார்க் ஆர்வம் காட்டவில்லை. அவர் நேரடியாகக் கலைப்பொருட்களைப் பார்வையிடவும் ஆராயவுமே அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பெரன்சனின் உதவியாளர் போல அவர் செயல்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தனது அருங்காட்சியகத்தில் அவரைக் கூடவே வைத்துக் கொண்டார் பெரன்சன். அரிய ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை அறிமுகம் செய்து அதை ஆராய்வதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தந்தார்.

1929 ஆம் ஆண்டில், பெரன்சனுடனான இணைந்து பணியாற்றியதன் காரணமாக வின்ட்சர் கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வந்த லியோனார்டோ டாவின்சி ஓவியங்களின் விரிவான தொகுப்பைப் பட்டியலிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதை வெற்றிகரமாகச் செய்து காட்டினார் கிளார்க். இத்தோடு ராயல் அகாதமிக்காக ஓவியக்கண்காட்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்னோடியாக விளங்கினார். இங்கிலாந்து மன்னரின் சேமிப்பில் உள்ள கலைப்பொருட்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் காட்சிப்படுத்தவும் தனி இயக்குநர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்தப் பதவி கிளார்க்கிற்கு அளிக்கப்பட்டது. பத்தாண்டுகள் அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். National Gallery இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

பிபிசியின் இரண்டாவது தொலைக்காட்சி சேனலான பிபிசி 2 துவங்கப்பட்ட போது அதன் கட்டுப்பாட்டாளர் டேவிட் அட்டன்பரோ, வண்ண ஒளிபரப்பை முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். வண்ண ஒளிபரப்பிற்கு ஏற்ற நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும் என்ற அவரது யோசனையின் விளைவே இந்த Civilisation தொடர். இன்றிருப்பது போல அசாத்தியமான தொழிற்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலே மிக நுணுக்கமாக, வித்தியாசமான காட்சிக்கோணங்களுடன். விவரணையுடன்,சரியான வரலாற்றுப்பார்வையுடன் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கென்னத் கிளார்க் கலைப்பொருட்களை மட்டும் அறிமுகப்படுத்துவதில்லை. அது உருவான காலகட்டம். அன்றிருந்த பண்பாட்டு நிகழ்வுகள். அரசியல் நெருக்கடிகள். கிறிஸ்துவச் சமயத்தின் தாக்கம். இதற்காகச் செலவிடப்பட்ட பொருளாதாரம், காலமாற்றத்தில் ஏற்பட்ட சிதைவுகள் என அனைத்தையும் ஒன்று சேர்த்து அறிமுகப்படுத்துகிறார்.

இருண்ட காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான நாகரீகத்தின் வளர்ச்சியைக் கூறும் இந்தத் தொடருக்காக நிறையப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். பதின்மூன்று நாடுகளில் நூற்று பதினேழு இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

அபூர்வமான தகவல்கள். வரலாற்றுச் செய்திகள். அரசியல் சமய இயக்கங்களின் மோதல், கவிதைகள் மற்றும் இசை சார்ந்த விஷயங்கள் என விரிவாகப் பேசிய போதும் கென்னத் கிளார்க் தன்னை ஒரு அறிஞராக முன்னிறுத்திக் கொள்ளவில்லை. சாதாரண மனிதர்களில் ஒருவராகவே தன்னை முன்வைக்கிறார். அவர்களின் பார்வையில் எழும் கேள்விகள். சந்தேகங்களை எழுப்பி அதற்குப் பதில் சொல்லுகிறார். அவரது சிரிப்பும் வேகமான நடையும் மிகவும் வசீகரமாகயுள்ளன.

Ruskin said: “Great nations write their autobiographis in three manuscripts, the book of their deeds the book of their words and the book of their art. Not one of these books can be understood unless we read the two others, but of the three the only trustworthy one is the last” என்ற வாசகத்திலிருந்தே இந்த ஆவணத்தொடர் துவங்குகிறது.

ஒரு தேசம் தன் வரலாற்றைக் கலைகளின் வழியாகவே உண்மையாக அடையாளப்படுத்துகிறது. சட்டமோ, செயல்களோ காலமாற்றத்தில் மாறிவிடக்கூடும். அல்லது கைவிடப்படக்கூடும். ஆனால் கலைப்பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் காலத்தைத் தாண்டியும் அதன் பெருமையைச் சொல்வதாக இருக்கின்றன. அவை நாகரீக வளர்ச்சியின் அடையாளம். இருண்ட காலத்திலும் கூட அபூர்வமான கலைப்பொருட்கள் உருவாகியிருக்கின்றன. பண்டைய காலத்தில் சடங்குகளுக்காகச் செய்யப்பட்ட முகமூடிகள் இன்று அரிய கலைப்பொருளாகக் கருதப்படுகிறது.

அனைத்து பெரிய நாகரிகங்களும், அவற்றின் ஆரம்பக் கட்டங்களில், போரை அடிப்படையாகக் கொண்டவை. க்ளோவிஸும் அவரது வாரிசுகளும் தங்கள் எதிரிகளை வென்றது மட்டுமல்லாமல், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களால்  தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஆகவே போரும் பண்பாட்டு வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டன.

மிதமிஞ்சிய செல்வமே கலையாக மாறுகிறது. கலை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு தேவாலயத்தை உருவாக்க தேவையான ஆயிரக்கணக்கான பணியாளர்கள். அவர்களின் உணவு. இருப்பிடம், ஊதியம் பல ஆண்டுகளுக்குத் தரப்பட வேண்டும் என்றால் அங்கே உபரியாகச் செல்வம் இருக்க வேண்டும் என்கிறார்.

தனது வெற்றியை அடையாளப்படுத்திக் கொள்ள மன்னர்கள் பெரிய கட்டிடங்களை உருவாக்கினார்கள். கோட்டைகள். கோபுரங்களை அமைத்தார்கள். புதிய நகரங்களை உருவாக்கினார்கள். இன்னொரு புறம் கலைஞர்களுக்குள் ஏற்பட்ட போட்டி. புதுமை புதிய கலைவெளிப்பாட்டினை உருவாக்கியது. பண்பாட்டு வளர்ச்சியை யார் முடிவு செய்வது. எவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் சமயமும் அதிகாரமும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டன. இந்த வரலாற்றைப் புரிந்து கொண்டால் தான் மேற்கத்திய கலைகளைப் புரிந்து கொள்ள முடியும்

மைக்கேல் ஆஞ்சலோ, ரபேல். டாவின்சி போன்ற கலைமேதைகளின் பங்களிப்பு. பீதோவன். மொசார்ட் போன்ற இசைக்கலைஞர்களின் பங்களிப்பு. சிந்தனையாளர்கள். தத்துவவாதிகள். கவிஞர்களின் பங்களிப்பு எனக் கலையின் வேறுவேறு தளங்களை ஆராயும் கென்னத் கிளார்க். இவை ஒன்றையொன்று பாதித்து வளர்ந்தன என்பதைத் தகுந்த அடையாளங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்.

கென்னத் கிளார்க்கின் தொடர் மேற்கத்திய கலைவரலாற்றைத் தான் முதன்மையாக ஆராய்கிறது. ஆகவே இந்தியா சீனா போன்றவற்றின் கலைவரலாறு குறித்து அவர் விளக்கவேயில்லை. வரலாற்றாசிரியர்கள் பொதுவாகப் பத்தாம் நூற்றாண்டை ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டு போலவே இருண்ட காலமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அதை அரசியல் வரலாற்றின் கண்ணோட்டத்திலிருந்தும் ஆராய்கிறார்கள். ஆனால் கலையின் நோக்கிலிருந்து பார்க்கும் போது அந்தக் கண்ணோட்டம் மாறிவிடுகிறது என்கிறார்

இத்தொடரில் பிரம்மாண்டமான தேவாலயங்கள் எப்படி உருவாக்கப்பட்டன. கிறிஸ்துவை சித்தரிக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை, புனித பயணங்கள் எவ்வாறு உருவாகின என்பதைப் பற்றிய அத்தியாயம் மிகச்சிறப்பானது.

மறுமலர்ச்சிக் காலக் கட்டிடக்கலையை ஆராயும் கென்னத் கிளார்க் அவை கணிதத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை, குறிப்பாக வடிவவியலினை சார்ந்தே இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன் சாட்சியமாக உள்ள பெரிய மாளிகைகள். தேவாலயங்கள் உள்ளன என்கிறார்

போரின் காரணமாகக் கலைப்பொருட்கள் சூறையாடப்பட்டதும், அழித்தொழிக்கப்பட்டதும் துயரமானது. அரிய கலைச்செல்வங்களை அதன் மதிப்பை உணராமல் அழித்திருக்கிறார்கள். .

கிளார்க்கின் மிகவும் தீவிரமான மற்றும் தனித்துவமான அணுகுமுறை என்பது நுணுக்கமான விவரங்களை ஆராய்வதும் எடுத்துச் சொல்வதுமாகும். இந்தத் தொடரில் அவர் விளக்கிச் சொல்லும் ஓவியங்கள். சிற்பங்களில் அவ்வளவு கலைநுணுக்கங்கள் இருப்பதை அவர் சொல்லிய பிறகே நாம் அறிந்து கொள்கிறோம்.

டாவின்சியின் படைப்புகளை வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து வந்த கிளார்க் அவரைப் பற்றி விரிவான புத்தகம் எழுதியிருக்கிறார். அது போலவே நிர்வாண ஓவியங்கள் சிற்பங்கள் பற்றியும் ஆய்வு நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்

ஆவணத்தொடரின் ஒரு இடத்தில் காலம் தன்னை வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை, ஆனால் காட்சிக்கலைகளின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று கென்னத் கிளார்க் சொல்கிறார். மறுக்கமுடியாத உண்மை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2021 05:49

குண்டூசியின் பயணம்

நித்தியானந்தம்.

ஒரு குண்டூசியை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு கதையைச் சொல்ல முடியுமா என்று வியப்பாகவே இருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அக்கடா என்ற சிறுவர் நூலை படித்தேன். விறுவிறுப்பான கதை. நல்ல கற்பனை.

நீண்டகாலமாக யாரும் பயன்படுத்தாமல் போட்டு வைத்த ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தின் கதையே அக்கடா. ஒவ்வொரு குண்டூசியும் ஒரு இடத்தில் இருக்கிறது. அவர்களைத் தேடிப் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிறது அக்கடா. குண்டூசிகளை எல்லாம் இழுத்துக் கொள்ளும் காந்தம் ஒன்றிடம் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அக்கடா எப்படி அந்தப் பிரச்சனையிலிருந்து நண்பர்களைக் காப்பாற்றுகிறது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பாக எழுதியிருக்கிறார். அனிமேஷன் படம் பார்ப்பது போலவே இருக்கிறது.

பல்குத்துவதற்காக ஒருவர் குண்டூசியைப் பயன்படுத்தும் போது அதற்கு வரும் ஆத்திரம் சிரிப்பை வரவழைக்கிறது.

இந்தக் கதையைப் படித்தபிறகு குண்டூசியை நம்மால் வெறுமனே பார்க்க முடியாது. நாமும் அதோடு பேச ஆரம்பித்துவிடுவோம்.

அக்கடா
விலை ரூ 130.00

தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
(044)-23644947
desanthiripathippagam@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 28, 2021 02:06

June 27, 2021

வகுப்பறையின் பாடல்

சிறந்த சிறார் எழுத்தாளரான ஷெல் சில்வர்ஸ்டைன்(Shel Silverstein) எழுதிய சிறார் பாடல்களையும் கதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன். இவரைப் போலவே  ரோல்ட் டாலின் (Roald Dahl) கதைகளையும் தேடிப் படித்திருக்கிறேன். இந்த வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய மிகச்சிறந்த சிறார் எழுத்தாளர், பாடலாசிரியர். ஆலன் ஆல்பெர்க் (Allan Ahlberg),

இவர் எழுதிய கதைகளுக்கு அவரது மனைவி ஜேனட் ஆல்பெர்க் அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார். முப்பது ஆண்டுகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் ஆலன். பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற இந்த கதைவரிசைகள் இன்றும் சிறார்களால் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

சிறார் இலக்கியம் குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகத் தான் தமிழில் தனிக்கவனம் உருவாகியுள்ளது. வயதுக்கு ஏற்ப ஆங்கிலத்தில் படிக்கக் கிடைப்பது போலப் பல்வகையான சிறார் கதைகள் தமிழில் இல்லை. மொழிபெயர்க்கப்பட்ட சிறார் நூல்களில் பெரும்பான்மை ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அவற்றை சிறுவர்களால் படிக்க முடியவில்லை. குட்டி இளவரசன் போல ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யாவிலிருந்து நிறையச் சிறார்கள் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டன. அழகான வண்ண ஓவியங்களுடன் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டன.  புத்தக வடிவாக்கமே அற்புதமாக இருக்கும். இது போல மிஷா என்ற சிறார் இதழும் வெளியானது. ஆனால் இன்று அது போல முழுமையாக வண்ணத்தில் சிறார் நூல் வெளியிடப்பட வேண்டும் என்றால் அதன் விலை மிக அதிகமாகிவிடுகிறது. ஆகவே கறுப்பு வெள்ளை படங்களுடனே வெளியிடப்படுகின்றன.

நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட காமிக்ஸ் என்பதே கிடையாது. ஒன்றிரண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றியடையவில்லை. மாங்கா. கிராபிக் நாவல்கள் இன்னும் அறிமுகமாவேயில்லை.

இந்த சூழலில் தமிழில் கட்டாயம் அறிமுகம் செய்ய வேண்டிய சிறார் எழுத்தாளராக, கவிஞராக உள்ளார் ஆலன் ஆல்பெர்க்.

இவரது சிறார் பாடல்கள் அசலான கற்பனையும் கவித்துவமும் கொண்டவை. இவற்றைப் பெரியவர்களும் வாசிக்கலாம். எளிய சொற்களின் வழியே சிறார்களின் மனதை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் பாடல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலும் சிறப்பானவை

சிறார்களின் மனதை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒருவரால் தான் இப்படியான பாடல்களை எழுத முடியும்.

அவரது பாடல்களில் பெரும்பான்மை பள்ளி அனுபவத்தையே முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்பு மற்றும் பிள்ளைகளின் விளையாட்டுத்தனம். அவர்களுக்குள் உள்ள நட்பு. பள்ளிப் பேருந்து பயண அனுபவம். மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டை, பெற்றோர்களின் கண்டிப்பு, புரியாத வகுப்பறையின் சிக்கல் போன்றவற்றையே பாடலாக்கியிருக்கிறார்.

புலி புல்லுகட்டு ஆடு என்ற புதிரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே. படகில் இந்த மூன்றையும் எப்படி ஏற்றிக் கொண்டு மறுகரை சேர்ப்பது என்ற புதிர் ஆங்கிலத்திலும் உள்ளது. அதை மையமாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

பர்க்லர் பில் மற்றும் தி ஜாலி போஸ்ட்மேன் போன்ற இவரது கதைகள் தலைமுறைகளைத் தாண்டி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அபாரமான அழகுடன் வரையப்பட்ட முழுப்பக்க ஓவியங்களுடன் நாலைந்து வரிகளாக கதை இடம்பெறுகிறது. ஜேனட் தேர்வு செய்யும் நிறங்களும் காட்சி சித்தரிப்பும் துல்லியமும் நேர்த்தியும் கொண்டவை

Heard it in the Playground என்ற ஆலனின் பாடல் தொகுப்பு ஆரம்ப பள்ளி வாழ்க்கை அனுபவங்களை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. ஆலன் ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆகவே அவரால் பள்ளியில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அவர்களின் குறும்புத்தனங்களைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதை சிறந்த பாடலாக்கியிருக்கிறார்.

நாங்கள் பதிலைத் தேடுகிறோம் என்றொரு பாடல் வகுப்பறையில் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரியாமல் மேலும் கீழுமாக மாணவர்கள் பதிலைத் தேடுகிறார்கள். மேஜையின் இழுப்பறைக்குள் தரையில், குப்பைக்கூடைக்குள் என தேடிப்பார்க்கிறார்கள். முடிவில் அந்த பதில் ஆசிரியரின் தலைக்குள் இருக்கிறது என்பதை கண்டறிகிறார்கள். ஒரு. பதிலை மறைத்துக் கொள்ள என்ன ஒரு வசதியான இடம் என்று பாடல் நிறைவு பெறுகிறது. உண்மையில் வகுப்பில் விடை தெரியாமல் திகைக்கும் பையன் இப்படித்தான் யோசிப்பான். ஆசிரியரின் மண்டைக்குள் இருக்கும் பதிலை தன்னிடம் ஏன் தேடுகிறார் என்று சலித்துக் கொள்வான். புரியாத வகுப்பறையினைப் பற்றிய இந்தக் கவிதை எல்லா தேசங்களுக்கும் பொருந்தக்கூடியது.

இன்னொரு பாடலில் சிறுவர்கள் மீன் போல,பறவை போல, புழுக்கள் போலப் பிறந்திருந்தால் என்ன கற்றுக் கொள்வார்கள் என்பதைப் பற்றிப் பாடுகிறார்கள். அழகான கற்பனை.

Parents’ Evening என்ற கவிதையில் பள்ளியில் காத்திருக்கும் பெற்றோரின் மனநிலையும் பையனின் மனநிலையும் ஆசிரியரின் மனநிலையும் நான்கு கோணங்களில் அழகாக விளக்கப்படுகிறது

எதையுமே முழுசாக செய்து முடிக்காத பையனை வகுப்பில் ஆசிரியர்.கண்டிக்கிறாள்  அவருக்கான பதிலையும் பாதியாகச் சொல்லி நிறுத்திவிடுகிறான் பையன். அவனால் அதையும் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.

நண்பன் இல்லாத அமைதியான ஒரு பையனைப் பற்றி நினைவு கொள்ளும் ஆலன் அவனது பெயர் நினைவில்லை. இவ்வளவு தனிமையிலிருந்த அவனுக்குப் பெயரேயில்லை என்கிறார். 

புதிய ஆசிரியர் வருகை தரும் போது தங்களின் பழைய ஆசிரியர் எவ்வளவு சிறப்பானவர் என்பதைப் பற்றி பிள்ளைகள் சேர்ந்து பாடும் பாடல் ஒன்றிருக்கிறது. அது பழைய ஆசிரியர்கள் மீது மாணவர்கள் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்துகிறது

Goodbye, old school,

We’re going away.

Goodbye, old school,

We’re leaving today.

Goodbye to the teachers,

Goodbye to you all;

The classrooms, the cloakrooms,

The playground, the hall.

Goodbye, old school,

We’re going away.

Goodbye, old school,

We’ll miss you a lot –

The din and the dinners,

Believe it or not.

We’ll miss you, Miss,

And remember you, Sir,

When lessons have faded

And homework’s a blur.

Goodbye, old school,

We’ll miss you a lot.

Goodbye, old school,

We’ll never forget

The smell of the cloakrooms

With coats soaking wet.

The balls on the roof

And the songs on the bus

We’ll think of you –

Will you think of us?

Goodbye, old school,

We’ll never forget

இந்த பாடலை யார் படித்தாலும் அவர்கள் பள்ளியை விட்டு வந்த கடைசி நாளின் நினைவு பீறிடவே செய்யும். எத்தனை நினைவுகளை இந்த சிறிய பாட்ல் கிளறிவிடுகிறது

Kicking a Ball பாடலில் பள்ளியில் கிடைத்த வேறு எல்லா இன்பங்களையும் விடப் பந்தை உதைப்பதில் கிடைத்த சந்தோஷம் மிகப்பெரியது என்று பாடுகிறார் ஆலன். அது உண்மையே. பாடலின் முடிவில் உலகம் தான் அந்த பந்து அதை உதைத்து விளையாடுவது தான் நம் வாழ்க்கை என்று முடிக்கிறார்.

வகுப்பில் ஆசிரியரிடம் உங்களுக்குப் பிடித்த மாணவர் யார் என்று மாணவர்கள் கேட்கிறார்கள். எல்லோரையும் பிடிக்கும் என்கிறார் டீச்சர். அது உண்மையில்லை. யாரோ ஒருவரை ரொம்பவும் பிடிக்கும். அந்த மாணவர் யார் என்று கேட்கிறார்கள். அதைச் சொல்ல முடியாது என்கிறார் டீச்சர். ஒவ்வொரு மாணவனும் தன்னை ஆசிரியர் மிகவும் நேசிக்கிறார் என்றே நினைக்கிறார்கள். அந்த அன்பை நினைத்துப் பெருமை கொள்கிறார்கள்.

Slow Reader என்ற பாடலில் ஒருவன் ஒவ்வொரு சொல்லையும் தனித்தனி எழுத்தாகப் பிரித்துப் படிக்கிறான். அவனால் அவ்வளவு மெதுவாகத்தான் படிக்க முடிகிறது

பள்ளியில் ஒரு மீன் தொட்டி இருக்கிறது ஆனால் அதில் மீன்கள் இல்லை. ஒரு மீன் தொட்டி உள்ளது-பன்றி அடைக்கும் பட்டியிருக்கிறது ஆனால் பன்றியில்லை. பூக்குவளை இருக்கிறது ஆனால் மலர்கள் இல்லை. இது போலவே எங்கள் தலைகளும் காலியாக இருப்பதாக டீச்சர் சொல்கிறார் என்றொரு கவிதையில் மாணவன் சொல்கிறான்.

வகுப்பில் எப்போதும் சக மாணவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் ஒரு பையனை எழுப்பி டீச்சர் கோபமாகப் பாடத்தில் கேள்வி கேட்கும் போது மட்டும் ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய். வாயைத் திறந்து பேச வேண்டியது தானே என்கிறார். அவன் அதற்கும் வாயை மூடிக் கொண்டு மௌனமாக நிற்கிறான். அழகான பாடலது

இன்னொரு பாடலில் ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப்பாடங்களின் சுமையைத் தாங்க முடியாமல் இதை எழுதி வருவதால் என்ன பயன்  எனக் கேலி செய்கிறான் ஒரு சிறுவன்.

எங்கப்பாவும் உங்கப்பாவும் சண்டை போட்டால் எங்க அப்பா தான் ஜெயிப்பார். எங்க அம்மாவும் உங்க அம்மாவும் சண்டை போட்டால் எங்க அம்மா தான் ஜெயிப்பார்  எங்க அண்ணனோடு உங்க அண்ணன் சண்டை போட்டா காலி. எங்க தாத்தாவோட உங்க தாத்தா சண்டை போட்டா அவ்வளவு தான். முடிஞ்சா என்னோட சண்டைக்கு வா பாப்போம் என்று ஒரு பாடலில் ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை அழைக்கிறான். இது போன்ற ஒரு சவால் பாடலை நாங்களும் சிறுவயதில் பாடியிருக்கிறோம். எங்கோ லண்டனிலும் இதே பாடலை ஒரு சிறுவன் பாடுகிறான்.

நூறு புத்தகங்களுக்கும் மேலாக எழுதியுள்ள ஆலன் தன் மனைவியின் மரணத்திற்குப் பிறகு தனது உதவியாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு ஒவியரே. அவர்கள் இணைந்து தற்போது புதிய சிறார் நூல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆங்கிலத்தில் வாசிக்கும் சிறார்கள் இந்த நூல்களை அவசியம் படிக்க வேண்டும். மொழியாக்கம் செய்யப்பட்டு இந்த நூல்கள் தமிழில் வெளியானால் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பதே உண்மை

••••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2021 07:29

June 26, 2021

நீரும் நிலமும்

Lakshmanrekha என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நந்தன் சக்சேனா மற்றும் கவிதா பஹ்லி இயக்கியுள்ள இப்படம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமத்தின் நீர்வளத்தை லட்சுமன் சிங் எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் லபோடியாவினைச் சுற்றியிருந்த 58 கிராமங்களின் விதியை மாற்றியது

படத்தின் துவக்கக் காட்சியில் டெல்லியின் குடியிருப்பு ஒன்றில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்காக இயந்திரம் வருகிறது. போர் போடும் பணி துவங்குகிறது ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.. நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போய்விட்டது.

எங்கே போனது நகரின் நீர்வளம். நிலத்தடி நீர் ஏன் பெருநகரங்களில் குறைந்து கொண்டுவருகிறது என்ற கேள்வியில் துவங்கி இந்தியா முழுவதும் பெருகி வரும் தண்ணீர் பிரச்சனையைப் பற்றிப் படம் விவரிக்கத் துவங்குகிறது.

பாதுகாப்பான குடிநீர், விவசாயத்திற்கான தண்ணீர் மற்றும், தினசரி பயன்பாட்டிற்கான நீர் கிடைக்காமல் போய்ப் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொள்ளக் காத்திருக்கிறோம். இந்த அபாயத்திலிருந்து விடுபடுவதற்கு உடனடியாக நீர்வளங்களைப் பேணும் மாற்றுவழிகளை மேற்கொள்ள வேண்டும். மழை நீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தலாம். மற்றும் மரபான நீர் சேமிப்பு மற்றும் விநியோக முறைகளை நாம் கைக்கொள்ள வேண்டும். லக்ஷ்மன் சிங் எப்படி இதைச் சாத்தியப்படுத்தினார் என்பதை ஆராயும் பொருட்டு லபோடியா நோக்கி பயணம் நீளுகிறது

இந்தியாவின் நீர் வளங்கள் பெருமளவு அழிக்கபட்டுவிட்டன. குறிப்பாக நன்னீர் வளங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். பல பெரிய பெருநகரங்கள் தனது நீர் தேவைக்கான சுற்றியுள்ள கிராமங்களின் நீர் ஆதாரங்களை உறிஞ்சிக் கொள்கின்றன. தண்ணீர் முக்கிய வணிகப்பொருளாக மாறிவிட்டது. இன்னொரு புறம் கிராமப்புற நீர்நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. நீர் விநியோகம் முறையாக இல்லை. இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு மாற்றாக ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமம் தனது நீர்வளத்தைப் பெருக்கிக் கொண்டதுடன் புதிய காடு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. இதனால் மழையற்றுப் போன காலங்களிலும் விவசாயம் முறையாக நடைபெறும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

இந்த மாற்றத்தை லக்ஷ்மன் சிங் எப்படி நிகழ்த்தினார் என்பது ஆச்சரியமானது. சிறு விவசாயியான லக்ஷ்மன் சிங் ஒரு நாள் அனுபம் மிஸ்ராவின் ““Aaj Bhi Khare Hain Taalaab” என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறார். அந்தப் புத்தகம் மரபான நீர்வளம் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்துப் பேசுகிறது. அதன் ஒவ்வொரு சொல்லையும் தான் ஆழ்ந்து படித்து மனதில் ஏற்றிக் கொண்டதாகக் கூறுகிறார். இந்தப் புத்தகம் தந்த உத்வேகம் தான் லக்ஷ்மன் சிங்கினை நீர்வளத்தை மீட்கும் பணியில் ஈடுபட வைத்திருக்கிறது

லபோடியா விவசாயிகளை ஒன்றுதிரட்டி தங்கள் கிராமத்தின் நீர் தேவையைத் தாங்களே உருவாக்கிக் கொண்டுவிட முடியும். அதற்கு வழியிருக்கிறது என்பதைப் புரிய வைத்திருக்கிறார். வறண்ட ராஜஸ்தான் கிராமங்களில் தண்ணீர் பிரச்சனை ஒரு புறம் என்றால் மறுபுறம் பண்பாட்டுப் பிரச்சனை. ஊரின் கோவில் குளத்தில் பெண்கள் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது. குளிக்கக் கூடாது என்ற நடைமுறையிருக்கிறது. இதனால் தண்ணீர் கஷ்டத்திலும் அவர்கள் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இது போலவே வீட்டிற்குத் தேவையான குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் கொண்டுவரவேண்டியது பெண்களின் வேலை. ஆகவே ஆண்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை. படத்தில் ஒரு பெண் ஒரு வாரத்திற்கு ஒருமுறை தான் குளிக்க முடியும் என்கிறாள். இன்னொரு காட்சியில் குறைவான தண்ணீரில் தான் குளிக்க முடிகிறது என்று ஒரு இளைஞன் அலுத்துக் கொள்கிறான்.

இந்தச் சூழலில் கிராமவாசிகளின் உழைப்பில் நீர்நிலைகளைத் தூர்வாறுகிறார்கள். புதிய கால்வாய் அமைக்கிறார்கள். மழைநீரைச் சேமிக்கப் புதிய வழிவகைச் செய்கிறார்கள். மழைக்காலம் துவங்குகிறது. மழைத்தண்ணீர் முறையாகச் சேமிக்கப்படுகிறது. இதனால் கிராமக்கிணறுகள் நிரம்புகின்றன. தரிசு நிலம் வளப்படுகிறது. புதிய மரங்களை நட்டு தோப்புகளை உருவாக்குகிறார்கள். விவசாயத்திற்கான தண்ணீர், குடிநீர் இரண்டும் ஆண்டுமுழுவதும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறார்கள். விவசாயம் நன்றாக நடக்கிறது. இதனால் மாடு வளர்ப்புப் பெருகுகிறது. பால் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். லபோடியாவின் வாழ்க்கைத் தரம் உயருகிறது

இதை அறிந்த பக்கத்துக் கிராமவாசிகள் லட்சுமன் சிங்கை வரவழைக்கிறார்கள். பாடிக்கொண்டு ஒரு குழுவாக அவர்கள் அடுத்த கிராமத்திற்குப் போகிறார்கள். அங்கே மக்களை ஒன்று திரட்டி தங்கள் ஊரில் செய்த ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறார்கள். கிராமவாசி ஒருவரின் நேர்காணலில் லட்சுமன் சிங் சொல்வது எல்லாம் முட்டாள்தனம். வெறும் பகல்கனவு என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் சொன்னபடி செய்து நீர்வளம் பெருகிவிட்டபிறகு அவரை எங்கள் வழிகாட்டியாகக் கருதுகிறோம் என்கிறார்

வறட்சி நிவாரணம். வெள்ள நிவாரணம் என்று அரசு பெரும்பணத்தைச் செலவு செய்கிறது. ஆனால் ஆக்கப்பூர்வமாக நீர்வளத்தைப் பெருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே மக்களே ஒன்று சேர்ந்து இந்தப் பணியைத் துவங்கி வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டோம் என்கிறார் லட்சுமன் சிங்.

கிராம மக்களை ஒன்று சேர்த்து நீர் வளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது பெரிய சவாலாக இருந்தது. பலரும் அவர் தங்கள் நிலத்தை அபகரித்துவிடுவார் என்று நினைத்தார்கள். சிலரோ ஒடுக்கபட்டவர்களடன் இணைந்து கொண்டு அவர் மேற்சாதியினரை அவமதிக்கிறார் என்று கருதினார்கள். இந்திரன் தரும் கொடை தான் மழை. அந்த மழை தண்ணீரை வீணடிக்கக் கூடாது. பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஒரு கிராமதுப் பெண்

chauka system என்ற முறையில் மழைநீரைச் சேமித்து அதன் மூலம் கிராமக்கிணறுகளில் நீர்வரத்தை அதிகப்படுத்தியதோடு தரிசு நிலங்களையும் வளமிக்கதாக மாற்றியிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களின் கவனத்தைத் திருப்பிய சிங் அதில் வெற்றி அடைந்திருக்கிறார்.

இன்னொரு காட்சியில் லட்சுமன் சிங் வறட்சியைப் பற்றியோ பஞ்சம் பற்றியோ நாங்கள் ஒருபோதும் பயந்தது கிடையாது. அதைத் தாங்கிப் பழகிவிட்டோம். ஆனால் எதனால் வறட்சி ஏற்படுகிறது என்பதைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை என்பது தான் எனது கேள்வி. அதைத் தான் அனுபம் மிஸ்ரா புத்தகம் சிந்திக்க வைத்தது என்கிறார்.

கிராமத்தில் அவர்கள் உருவாக்கிய நீர்நிலைகளுக்குப் புதிய பெயர் வைத்திருக்கிறார்கள். பறவைகளுக்கான காடு. எலிகளுக்கான காடு என்று சிறப்பு மண்டலங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கிராமங்களில் மரம் வெட்டுவதோ, வேட்டையாடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது

மழைக்குப் பின்னர் ஈரநிலத்தில் லட்சுமணன் சிங் நடந்து செல்லும் காட்சியும், கிராமத்துக் கிணற்றில் பெண்கள் நீர் இறைக்கும் காட்சியும், ஆடு மேய்க்கும் கிழவர் சொல்லும் உண்மைகளும். கிராமத்துப் பெண்ணின் ஆதங்கமும் மறக்கமுடியாத காட்சிகள்

நீர்வளத்தைப் பறிகொடுத்துவிட்டு எப்படி உயிர்வாழப்போகிறோம். மரபான நீர் வளப் பாதுகாப்புமுறைகளை ஏன் கண்டறிந்து உயிர்கொடுக்கக் கூடாது என்றே கேள்வியை உரத்து எழுப்புகிறார் லக்ஷ்மன் சிங்.

அது நாம் அனைவரும் சேர்ந்து யோசிக்கவும் முன்னெடுக்கவும் வேண்டிய பணியாகும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 26, 2021 02:34

June 24, 2021

உண்மையின் அடையாளம்

இந்து தமிழ் திசை நாளிதழில் நான் எழுதிய சிறந்த தமிழ் படங்கள் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெண்ணிற நினைவுகள் என தனி நூலாக வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்தத் தொகுப்பிலுள்ள ஒரு கட்டுரை

••

ஒரு தமிழ்ப் படத்தின் தொடக்கத்தில் அந்தப் படத்தின் கதையை உருவாக்க எந்தெந்தப் புத்தகங்களெல்லாம் துணையாக இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்ட ஒரே படம் ‘சிவகங்கை சீமை’. படத்தின் டைட்டில் காட்சியில் ‘சிவகங்கை சரித்திரக் கும்மியும் அம்மானையும்’, ‘திருநெல்வேலி மானுவல்’, ‘ராமநாதபுரம் மானுவல்’, ‘மேஜர் வெல்ஷின் நாட்குறிப்பு’, ‘சென்னை வரலாறு’, கால்டுவெலின் ‘திருநெல்வேலி சரித்திரம்’, ‘மருதிருவர்’ பாரி நிலைய வெளியீடு ஆகிய புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

‘சிவகங்கை சீமை’, 1959-ல் வெளிவந்த திரைப்படமாகும். கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவிஞர் கண்ணதாசன் கதை, வசனம், பாடல்களை எழுதித் தயாரித்திருக்கிறார். படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. தமிழில் வெளியான சரித்திரப் படங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றில் வரலாற்றுப் பிரக்ஞை துளிகூட கிடையாது. அந்தக் காலகட்டத்தை உண்மையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் படமாக்கியிருப்பார்கள். ஆனால், ‘சிவகங்கை சீமை’ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாட்டார் வழக்காற்று மரபில் உள்ள ‘மருதிருவர்’ கதைகளையும் உண்மையான சரித்திர நிகழ்வுகளையும் அழகாக ஒருங்கிணைந்து கண்ணதாசன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

அத்தோடு, படமாக்கப்பட்ட நிலப்பரப்பும் அரண்மனைகளும் கற்கோட்டைகளும் ஆடை அணிகலன்களும் யுத்தக் காட்சியும் மிகவும் நம்பும்படியாக இருக்கின்றன. இந்தப் படத்தின் பல காட்சிகளில் மருதரசர்கள் மேல் சட்டை அணியாமல் பட்டு வேஷ்டி மேல் துண்டுடன் காட்சியளிக்கிறார்கள். முத்தழகுவின் அண்ணனாக வரும் பி.எஸ்.வீரப்பா மேல் சட்டை இல்லாத உடலோடுதான் படம் முழுவதும் காட்சியளிக்கிறார். பெரிய மருதுவாக நடித்துள்ள பகவதி மிக இயல்பாக, அமைதியாக, கம்பீரமாகத் தோன்றுகிறார். சின்ன மருதுவின் கண்களில் துடிப்பும் வீரமும் வெளிப்படுகிறது. படத்தில் காட்டப்படும் பெண்களும் கண்டாங்கி சேலை கட்டி, கனகாம்பரம் முல்லை மல்லிகை சூடி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

அன்றைய சிவகங்கைச் சீமை என்பது தெக்கூர், ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள்தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்தவர். அதனால், அவர் சிவகங்கைச் சீமையின் வரலாற்றை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்குவது சவால். அதன் திரைக்கதையை எழுதுவதற்கு நிறைய படிக்கவும் ஆய்வுசெய்யவும் வேண்டும். நான் அறிந்தவரை, தமிழின் எந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் நூலகம் கிடையாது. அந்தக் காலத்தில் இருந்த பெரிய ஸ்டுடியோக்களிலும்கூட ரெபரன்ஸ் நூலகம் இருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரலாற்றுப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதன் கதையை எழுதுவதற்கு உதவியாகப் புத்தகங்கள் வாங்குவதற்கோ, ஆவணக் காப்பகத்துக்குச் சென்று மூல ஆவணங்களைக் காண்பதற்கோ, வரலாற்றுச் சின்னங்களைக் காண்பதற்கோ பத்து ரூபாய்கூட சினிமாவில் செலவழிக்க மாட்டார்கள்.

 ‘சிவகங்கை சீமை’ படத்தைப் பார்க்கும்போது எவ்வளவு நுட்பமாகச் சிறிய விஷயங்களைக்கூட கவனித்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் கொலையாளி ஒருவனின் குறுவாள் ஒன்றை முத்தழகு கண்டுபிடித்து அது யாருடையது எனத் தேடுகிறான். அந்தக் குறுவாளின் வடிவமும் அதன் உறையும் மறவர் சீமையில் பயன்படுத்தப்பட்ட குறுவாளைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் வரும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார். துபாஷி ஒருவர்தான் அதை மொழிபெயர்த்துச் சொல்கிறார். குறிப்பாக, மேஜர் வெல்ஷுக்கும் மருது சகோதர்களுக்கும் இடையில் இருந்த நட்பும் அன்பும் மிக அழகாகப் படத்தில் காட்டப்படுகிறது. இதை வெல்ஷ் தனது நாட்குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார். பெயர் பொறித்த புலிநகம், கங்கணம், முத்துமாலை, கழுத்துச் சரம், கடுக்கன், கைக்காப்பு என அணிகலன்களைக்கூட சரித்திரபூர்வமாகவே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட பெரிய மருது, நாணயத்தை விரல்களால் வளைக்கக்கூடிய வலிமை கொண்டவர் என்ற தகவலை நாணயம் ஒன்றை முத்தழகு வளைத்துக்காட்டுவதாக மாற்றியிருக்கிறார்கள். அதிலும்கூட ஆற்காடு நாணயங்கள் என்றால் ஆறேழு வளைத்திருப்பேன் என முத்தழகு கூறுகிறான். ஆற்காடு அன்று ஆங்கிலேயருக்குத் துணையாக இருந்தது என்பதைக் கண்டிப்பதற்காகவே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு காட்சியில் வீட்டில் முத்தழகுக்கு அவனது அண்ணி, வெள்ளைப் பணியாரம் பரிமாறுகிறாள். அது அந்த மண்ணுக்கே உரித்தான உணவு. வெண்கலக் கும்பாவில்தான் சாப்பிடுகிறார்கள். இன்னொரு காட்சியில் சத்திரத்துக்கு வருகிற வழிப்போக்கனுக்குப் பழைய சோறும் வெஞ்சனமும் இருக்கிறது, சாப்பிடுங்கள் என ஒருவர் உபசரிக்கிறார். வெஞ்சனம் என்ற சொல் நகரவாசிகளுக்குத் தெரியாது. வெஞ்சனம் என்பது சோற்றோடு தொட்டுக்கொள்ளும் தொடுகறிகள். “இன்னைக்கு என்ன வெஞ்சனம் வச்சே?” என்று கேட்பதே மக்கள் வழக்கு.

சரித்திர உண்மைகளை மக்கள் மனதில் பதியச்செய்வதற்காக ‘சிவகங்கை சீமை’ திரைப்படம் மிகவும் யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே  இன்றும் அதனைத் தனித்துவமான திரைப்படமாக்குகிறது

வெண்ணிற நினைவுகள்
₹150.00
Online shopping
https://www.desanthiri.com/
தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93
(044)-23644947
desanthiripathippagam@gmail.com

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2021 20:25

ரிதுபர்னோ கோஷின் தாகூர்

வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் மகாகவி தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். Jeevan Smriti என்ற இந்த ஆவணப்படமே கோஷின் கடைசிப்படம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஆனால் இன்று இணையத்தில் காணக்கிடைக்கிறது. 12 தேசிய விருதுகளை பெற்றுள்ள ரிதுபர்னோ கோஷ் கவித்துவமான சினிமாவை உருவாக்கியதில் முன்னோடி. இவர் தாகூரின் கதைகளை சிறந்த திரைப்படங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் தாகூரின் 150வது ஆண்டினை முன்னிட்டு மத்திய அரசின் நிதி உதவியோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதுபோலவே சத்யஜித்ரே தாகூரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை 1960ல் உருவாக்கினார். அந்தப் படம் பற்றி நான் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். அதுவும் தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது

ரே இயக்கிய படத்தின் தொடர்ச்சி போலவே இப்படத்தை ரிதுபர்னோ உருவாக்கியிருக்கிறார்.

வழக்கமான ஆவணப்படங்கள் போல நேர்காணல்கள். பழைய புகைப்படங்கள். செய்தி துண்டுகள், குடும்பத்தவர்களின் நினைவுகள் என இந்தப்படம் உருவாக்கப்படவில்லை.சுயசரிதைப் படம் போலவே உருவாக்கபட்டிருக்கிறது. தாகூரின் வாழ்க்கையை விவரிக்கும் படத்தின் இடையிழையாக ரிதுபர்னோ கோஷ் மற்றும் அவரது படக்குழுவினர் படப்பிடிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்வது. படப்பிடிப்பிற்கான களம் தேடி பயணம் செய்வது, தாகூரின் வீட்டிற்குள் செய்யும் ஏற்பாடுகள் என இருபுள்ளிகளும் அழகாக இணைந்து பயணிக்கின்றன. தாகூரின் இளமைப்பருவத்தை நேரடியாக ரிதுபர்னோ பார்வையிடும் காட்சி மிக அழகானது. காலத்தினுள் நுழைந்து நிஜத்தை காணுவது என்ற கோஷின் அணுகுமுறையே படத்தின் தனித்துவம்.

தாகூரின் வாழ்க்கை வரலாற்றைக் கால வரிசையாக இப்படம் விவரிக்கிறது என்ற போதும் வாழ்வின் முக்கியத் தருணங்களையும் அது ஏற்படுத்திய பாதிப்புகளையுமே பிரதானமாகக் கொண்டிருக்கிறது.

ரிதுபர்னோ ஆவணப்படங்கள் எதையும் இயக்கியதில்லை. ஆகவே கதைப்படம் போலவே இதையும் உருவாக்கியிருக்கிறார். நான்கு நடிகர்கள் வேறு வேறு வயதுள்ள தாகூராக நடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்திலும் வங்காளத்திலும் விவரணை தரப்படுகிறது.

தாகூரின் முதல் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தைக் கோஷ் காட்டுகிறார். எட்டு வயதான தாகூரின் படமது. அதற்கு முன்பு எப்படியிருந்தார் என்று தெரியாது என்றே விவரணை துவங்குகிறது.

கேமிராவின் வருகையும் அது உயர் தட்டு மக்களிடம் உருவாக்கிய வரவேற்பும் இந்தத் தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலப்பிரபுக்கள். ஜமீன்தார்கள். பெரும் வணிகர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் தான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் இல்லத்திருமணங்கள் தான் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தாகூரின் குடும்பம் பிரம்ம சமாஜத்தை சார்ந்தது என்பதால் பெண்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாகூர் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் யாவும் புகைப்படங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த ஆவணங்களை விடவும் அவரது படைப்பின் வழியே அவரது எண்ணங்களை, உணர்ச்சிகளை, படைப்பாற்றலை கண்டறிந்து வெளிப்படுத்தவே ரிதுபர்னோ முயல்கிறார்

தனிமை தான் தாகூரைக் கவிஞராக உருவாக்கியிருக்கிறது. சிறுவயது முதலே அவர் தனிமையைத் தீவிரமாக அனுபவித்திருக்கிறார். வாரத்தின் ஒரு நாள் தான் அம்மா அவரைக் கவனிப்பார். மற்ற நாட்களில் வேலைக்காரர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். வீட்டில் நடந்த கச்சேரிகள். வீதியில் பாடிக் கொண்டு செல்லும் யாசகர்களின் பாடல். ஒவியம், கலைகள். அரசியல், அச்சு என வீட்டிற்குள் அறிமுகமாக புதிய உலகம் அவரை உருமாற்றியிருக்கிறது.

தனது பனிரெண்டாவது வயதில் தாகூர் தனது தந்தையோடு ஒரு பயணம் மேற்கொண்டார். அது தான் அவரது முதற்பயணம். அந்தப் பயணத்தில் வழியே தான் இந்தியாவின் உண்மையான முகம் அவருக்கு அறிமுகமானது. எந்த இடத்தில் பின்னாளில் சாந்திநிகேதன் உருவாக்கப்போகிறாரோ அந்த ஷோலாப்பூருக்கு முதல்முறையாகச் சென்ற அனுபவத்தைக் கோஷ் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். வங்காள கிராமப்புற வாழ்க்கையின் இனிமையும் அழகும் மெய்மறக்கச் செய்கிறது.

அண்ணி காதம்பரி தேவியுடன் ஏற்பட்ட நெருக்கமான பழக்கம். தாகூரின் இங்கிலாந்து பயணம். தாகூரின் திருமணம் ஆகியவை முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தாகூரின் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் காதம்பரி தேவி தற்கொலை செய்து கொண்டார். அதைத் தாகூரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவர்களுக்குள் இருந்த ரகசியக்காதலைத் தான் சத்யஜித்ரே சாருலதா என்ற படமாக உருவாக்கினார். அது தாகூரின் சிதைந்த கூடு நாவலின் திரைவடிவமாகும்

காதம்பரி தேவியின் தற்கொலை ஏற்படுத்திய வெறுமையும் துயரமும் தான் தாகூரின் படைப்பாற்றலைத் தூண்டியது. அதன்பிறகு தான் அவர் முக்கியமான படைப்புகளை எழுத ஆரம்பித்தார். ஒருவகையில் துயரிலிருந்து விடுபடவே அவர் கவிதைகள் எழுதினார் என்கிறார்.

இது போலவே தாகூரின் அம்மா இறந்த போது அவரது தந்தை செயலற்று உறைந்து போயிருக்கும் காட்சி படத்திலிருக்கிறது. தாயின் இழப்பைத் தாங்க முடியாத தாகூர் தந்தையை வெறித்துப் பார்க்கிறார். தந்தையோ இனி தனக்கு வாழ்க்கையில் பிடிப்பேயில்லை என்பது போலச் சாய்வு நாற்காலியில் இருக்கிறார். அந்தக் காட்சி தாகூருக்குள் அழியாத பிம்பமாகப் பதிந்துவிட்டது என்றும் கோஷ் கூறுகிறார்

இந்த ஆவணப்படம் சத்யஜித்ரேயிற்குச் செய்யப்பட்ட அஞ்சலி போலவே அவரது திரைப்படத்தின் முக்கியக்காட்சிகள். ரே படம் போலவே அமைக்கப்பட்ட காட்சிகோணங்கள். நடிகர்கள். இசை கலைவெளிப்பாடு என ரிதுபர்னோ தாகூரை மட்டுமின்றிச் சத்யஜித்ரேயினையும் போற்றிக் கொண்டாடியிருக்கிறார்

தாகூரின் பிள்ளைகள் என்னவானார்கள் என்ற கேள்வி இந்தப் படம் பார்க்கும் போது எனக்குள் ஏற்பட்டது. படத்தில் அது பற்றி விரிவாக பேசப்படவில்லை.

1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருணாளி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை தாகூர் மணந்தார். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். முதல் குழந்தை மதுரிலதா, இவரைப் பேலா என்று அழைத்தார்கள். தாகூரின் மகன் ரதிந்திரநாத் ஒரு கல்வியாளர். எழுத்தாளர், ஓவியர், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.

1910 ஜனவரி 27 ஆம் தேதி, ரதிந்திரநாத் தன்னை விட ஐந்து வயது குறைந்த பிரதிமா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். இது ஒரு விதவைத் திருமணம்.

பிரதிமாவுக்குப் பதினொரு வயதாக இருந்தபோது முதற் திருமணம் நடந்தது, ஆனால் அவரது கணவர் நிலநாத் சட்டோபாத்யாய் இரண்டு மாதங்களுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு விதவையாகவே வாழ்ந்து வந்தார். மறுமலர்ச்சி எண்ணங்களைக் கொண்ட தாகூர் குடும்பம் அவரை  மருமகளாக ஏற்றுக் கொண்டது. அது அன்றைய வங்காளத்தில் பெரிய புரட்சிகர நிகழ்வு.

ரதிந்திரநாத் அமெரிக்காவிற்குச் சென்று விவசாயக்கல்வி படித்தவர். சில காலம் ஜெர்மனியில் உயர்படிப்புப் படித்திருக்கிறார். அவர் கல்வியிலும்  கலைகளிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

ரவீந்திரநாத்தின் மகள்களில் ரேணுகா தேவி தனது பதின்மூன்று வயதில் இறந்துவிட்டார். இவரை ராணி என்று செல்லமாக தாகூர்அழைத்தார். 1902 இல் ரேணுகா காசநோயால் பாதிக்கப்பட்டார். அவரது மருத்துவர்களின் ஆலோசனையின்படி, தாகூர் தனது மகளை 1903 மே மாதம் இமயமலைக்கு அழைத்துச் சென்றார். மகளுக்குத் துணையாக இருந்த நாட்களில் தாகூரின் மனம் மிகவும் சோர்ந்து போயிருந்த்து. அதிலிருந்து மீளுவதற்காக நிறைய குழந்கைகளுக்கான கவிதைகளை எழுதினார்.

தன்னுடைய வாழ்நாளில் அதிகத் துயரங்களைச் சந்தித்தவர் தாகூர். 1903 செப்டம்பரில், ரேணுகா காசநோய் முற்றி இறந்து போனார். இது நடந்து ஒராண்டில் அவரது மகன் ஷமிந்திரநாத் தனது 11 வயதில் காலராவால் இறந்தான். மனைவி, மகள், மகன் என அடுத்தடுத்த மரணங்கள் தாகூரை மிகவும் வேதனையடையச் செய்தன.

ரிதுபர்னோ கோஷ் தாகூரின் உலகைப் பார்வையாளர்கள் முழுமையாக உணர வேண்டும் என்று விரும்புகிறார். அவரை ஒரு பிம்பமாக முன்னிறுத்துவதை விடவும் எது தாகூரை உருவாக்கியது எவற்றைத் தாகூர் எழுதினார் என்பதையே அடையாளப்படுத்த முயலுகிறார்.

ஒரு காட்சியில் தாகூர் ரசித்துத் தன் கவிதைகளில் எழுதிய மழைக்காலத்தைத் தானும் அனுபவிக்க வேண்டும் என ஷோலாப்பூருக்கு காரிலே ரிதுபர்னோ கோஷ் பயணம் செய்கிறார். வழியில் நல்ல மழை. பாதையில் வெள்ளம் போகிறது. அதற்குள் இறங்கி நடக்கிறார். வாகனங்கள் போக முடியாத சூழல். வேறுவழியின்றி மாற்றுப்பாதையில் பயணம் செய்கிறார்கள். தான் கவிதையின் உலகிற்குள் மழையைத் துணைக்கு அழைத்தே செல்ல விரும்புகிறேன் என்கிறார் கோஷ்

தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயம் எப்படித் தெரியவந்தது. அவர் அப்போது ஷோலாப்பூரில் இருந்தார். லண்டனிலிருந்து நோபல் கமிட்டி தந்தி கொடுத்திருந்தார்கள். அந்தத் தந்தியை எடுத்துக் கொண்டு ஒரு தபால்காரன் நவம்பர் மாத குளிரான காலைப் பொழுதில் கிராம சாலையில் பயணித்து அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு நோபல் பரிசை பற்றி எதுவும் தெரியாது. தந்தி வந்த நேரம் தாகூர் வீட்டில் இல்லை. அவர் தன் மகன் மற்றும் நண்பர்களுடன் வனப்பகுதிக்குக் காரில் சென்றிருந்தார். மருமகன் நாகேந்திரநாத் தபால்காரனைத் திரும்பி அனுப்பி வைத்தான். தாகூரின் கார் திரும்பி வரும்போது தபால்காரன் வழியில் அவரை மடக்கி தந்தியைக் கொடுத்திருக்கிறான். அதைப் பிரித்துப் படிக்காமல் தனது பாக்கெட்டில் திணித்து வைத்துக் கொண்டார் ரவீந்திரநாத். லண்டனிலிருந்து வந்துள்ள முக்கியமான தந்தி என்று தபால் ஊழியன் திரும்பச் சொன்னபிறகே அவர் அதைப் பிரித்துப் படித்துப் பார்த்தார்.

SWEDISH ACADEMY AWARDED YOU NOBEL PRIZE LITERATURE WIRE ACCEPTATION SWEDISH MINISTER என்ற அந்த வாசகத்தை அவரால் நம்ப முடியவில்லை. நோபல் பரிசுக்குத் தனது கவிதைத் தொகுப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதை அவர் அறிவார், என்றாலும் அந்தப் பரிசு தன்னைத் தேடி வரும் என நினைக்கவேயில்லை

சில மணி நேரத்தில் அவர் பரிசு பெற்ற செய்தி வங்காளம் முழுவதும் பரவியது. இந்திய இலக்கிய வரலாற்றில் அது மகத்தான அங்கீகாரமாக மாறியது.

தாகூரின் ஓவியங்கள் மற்றும் அவரது சர்வதேசப் பயணங்கள். சாந்தி நிகேதனில் அவர் மேற்கொண்ட முயற்சிகள். இந்திய சுதந்தரிப்போரில் அவரது பங்களிப்பு. காந்தியோடு அவருக்கு இருந்த நட்பு எனத் தாகூரின் ஆளுமையைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது

ஏன் இந்தப் படம் வெளியிடப்படவில்லை என்பது புதிரான விஷயமே. ஒருவேளை இதனை மரபான ஆவணப்படமாக ஏற்க முடியாமல் அரசு நிர்பந்தம் கொடுத்திருக்கலாம். ரிதுபர்னோ கோஷ் சிறந்த ஒளிப்பதிவு. இசை, படத்தொகுப்பு நடிப்பின் மூலம் வழக்கமான ஆவணப்படத்தின் வடிவத்தை, வெளிப்பாட்டு முறைகளைக் கடந்து சிறந்த கலைப்படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார்

ரிதுபர்னோ கோஷ் தாகூரின் கதைகளைத் தொடர்ந்து படமாக்கியவர். அவரது கடைசிப்படமாகத் தாகூரின் வாழ்க்கை வரலாறு அமைந்தது பொருத்தமானதே

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 24, 2021 05:45

June 23, 2021

கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை

ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது

“அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி.

“பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத்

கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை கட்டியிருந்தாள். அதற்கு மேல் பச்சை நிறத்தில் ஒரு ஸ்வெட்டர். காலில் ரப்பர் செருப்புகள்.

அவளது வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் நிறைய மரங்கள் இருந்தன. அதனடியில் தான் இந்தச் சிறகு கிடந்திருக்கிறது.

லூசி பள்ளி வளாகத்திற்குள்ளாகவே இருபது வருஷமாக வசித்து வந்தாள். சொந்த ஊரை மறந்து பல காலமாகிவிட்டது. கோடைவிடுமுறையில் மாணவர்கள் எல்லோரும் போய்விட்ட பிறகும் அவள் பள்ளி வளாகத்தில் தானிருப்பாள். அவளது உலகம் அந்தப் பள்ளி மட்டும் தான்.

அவளது அக்கா ஜெசிந்தாவின் வீடு தூத்துக்குடியை ஒட்டிய கடற்கரை கிராமம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அக்கா அவசரத் தேவை என்று ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். அதைத் திரும்பிக் கொடுக்கவேயில்லை. அவளும் கேட்கவில்லை. ஆனால் அக்கா வீட்டிற்குப் போனால் அக் குற்றவுணர்வு அக்காவிடம் பீறிடும் என்பதால் ஊருக்குப் போவதைத் தவிர்த்து வந்தாள். அக்காவின் கணவர் உப்பளத்தில் வேலை செய்து வந்தார். மூன்று குழந்தைகள். சொற்ப வருமானத்தில் அக்காவால் குடும்பத்தை ஒட்ட முடியவில்லை. அவளும் உப்பளத்தில் வேலை செய்தாள்.

அக்கா தான் ஆசிரியராக விரும்பியவள். ஆனால் அப்பா இறந்தவுடன் அவளது படிப்பைப் பாதியிலே மாமா நிறுத்திவிட்டார். உறவிலே அவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். பாவம் அக்கா உழைத்துச் சலித்து ஆளே உருச்சிதைந்து போயிருந்தாள்.

தன்னிடம் அக்காவின் போட்டோ ஒன்று கூடக் கிடையாது என ஏனோ இந்தக் காலையில் லூசிக்குத் தோன்றியது.

லூசிக்கு இப்போது நாற்பத்தியாறு வயது நடந்து கொண்டிருந்தது. மாணவர்களோடு பழகுவதால் எப்போதும் இளமையாக இருப்பது போலவே தோன்றும். இனி எத்தனை வயதானால் என்ன. யார் கவலைப்பட இருக்கிறார்கள். தனிமையில் வாழும் பெண்ணிற்கு உலகம் மிகச்சிறியது தானே.

நூறு வருஷப்பழமையான பள்ளியது. இங்கிலாந்திலிருந்து வந்த ரெனீஸ் பாதிரி துவங்கியிருக்கிறார். ஒரு காலத்தில் அங்கே வேலை பார்த்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் வெள்ளைக்கார்கள். பணக்கார பிள்ளைகள் மட்டுமே அங்கே தங்கிப் படித்தார்கள். கால மாற்றத்தில் அந்தப் பள்ளி நிர்வாகம் மாறிவிட்டது. புதிய கட்டிடங்கள். வசதிகள் உருவாகியிருந்தன. நடுத்தரவர்க்க பிள்ளைகளே இப்போது அதிகம் படித்தார்கள்.

அந்தப் பள்ளியின் இசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை பெரிய இசை நிகழ்ச்சியை மாணவர்களே நடத்துவார்கள். அந்தப் பள்ளி வளாகத்தினுள் பெரிய மலர் வனமே இருந்தது. பள்ளி மாணவர்களுக்கென்றே நடத்தப்படும் பேக்கரி ஒன்றும் செயல்பட்டது. பள்ளிக்குச் சொந்தமாக ஆறு குதிரைகள் இருந்தன. துப்பாக்கி சுடுவதற்குக் கூடப் பயிற்சி கொடுத்தார்கள்.

அந்தக் கேம்பஸில் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டின் பெயர் லிட்டில் ஹெவன். அப்படி ஒரு பெயரை வைத்தவர் ரெனீஸ் பாதிரி என்பார்கள். அந்த வீடு இங்கிலாந்தின் பண்ணை வீடு போல அமைந்திருந்தது. கோடையிலும் உள்ளே முழுமையான வெளிச்சம் வராது. கணப்பு அடுப்பும் நிலவறையும் கொண்ட வீடது. பெரிய வரவேற்பறை. நான்கு படுக்கை அறைகள். சுற்றிலும் தோட்டம். அதில் நிறையப் பூச்செடிகள். பழமரங்கள்.

அவளது வீட்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு. நாற்பது ஆசிரியர்கள் குடும்பத்துடன் அங்கே தங்கியிருந்தார்கள். அவர்களும் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போய்விட்டதால் அந்த வீடுகள் பூட்டிக்கிடந்தன. தற்போது அவளைத் தவிர நான்கு காவலாளிகளும் இரண்டு தோட்டக்காரர்களும், அன்றாட வந்து செல்லும் சில பணியாளர்களும் மட்டுமே அந்த வளாகத்தினுள் இருந்தார்கள்.

கோடைக்கென்றே விசேசமான காற்றிருக்கிறது. சருகுகளில் யாரோ நடப்பது போன்ற காற்றின் ஓசை நாள் முழுவதும் கேட்டபடியே இருக்கும். சில நேரம் முயலோ, காட்டுக்கோழிகளோ ஓடுவதைக் கண்டிருக்கிறாள். கோடை விடுமுறையில் பள்ளியின் இயல்பு முற்றிலும் மாறிவிடுகிறது. ஏதோ ஒரு மடாலயத்திலிருப்பது போலவே அவள் உணர்ந்தாள்.

நிறையத் தைலமரங்கள் அடர்ந்த வளாகமது. சிவப்பு நிற கட்டிடங்கள். அழகான படிக்கட்டுகள். பெரிய தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான நூலகம். இரண்டு விளையாட்டு மைதானங்கள். நீச்சல் குளம், நான்கு விடுதிகள். ஐநூறு பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக்கூடம், பிரார்த்தனைக் கூடம் என்று நூற்றுமுப்பது ஏக்கருக்கும் மேலிருந்தது அந்தப் பள்ளி.

தபால்காரரைத் தவிர வெளியாட்கள் எவரும் இப்போது வருவதில்லை. லூசிக்கு இப்படி முழுத்தனிமையில் இருப்பது பிடித்தேயிருந்தது

அவளது கணவர் மார்டின் அதே பள்ளியில் தான் வேலை செய்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை மோசமாகி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அதன்பிறகு அவள் ஒருத்தியாகவே அந்த வீட்டில் வாழ்ந்தாள்.

இசைத்தட்டுகள் தான் அவளது ஒரே துணை. வீட்டிலிருக்கும் நேரங்களில் அவள் இசைகேட்டபடியே இருப்பாள். அதுவும் பழைய ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகளை ரிக்கார்ட் பிளேயரில் சுழலவிட்டுக் கேட்பது அவளுக்குப் பிடிக்கும். இசைத்தட்டிலிருந்து வரும் கம்பீரமான குரலின் வழியே அந்தப் பாடகர் அறைக்குள் நடனமாடுவது போலவே தோன்றும்

அவளுக்குப் பால் ராப்சனின் பாடல்களை மிகவும் பிடிக்கும். வசீகரமான குரலது. சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். ஜாஸ் இசைக்கலைஞர்களின் சங்கீதத்தைக் கேட்பது அவளுக்கு விருப்பமானது. நிறைய இசைத்தட்டுகளைச் சேகரித்து வைத்திருக்கிறாள். அதில் பாதிக்கும் மேலாகப் பார்க்கர் மாஸ்டர் கொடுத்தது.

அவர் திருமணமே செய்து கொள்ளாதவர். இசை தான் அவரது காதலி என்று சொல்லுவார். அவர் தான் பால் ராப்சனை அறிமுகம் செய்து வைத்தார். ஜாஸ் சங்கீதத்தை எப்படிக் கேட்பது என்று கற்றுத்தந்தார். தொடர்ந்து இசை கேட்கும் போது கடவுள் எவ்வளவோ இனிமைகளை மனிதனுக்காகத் தந்திருக்கிறார் என்று அவளுக்குத் தோன்றும். அதை நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்வாள்

அவளது வீட்டில் ஒரு மீன் தொட்டியிருந்தது. அதில் மூன்று தங்கமீன்கள் இருந்தன. அந்த மீன்கள் கூட இசைகேட்டு பழகி அதற்கு ஏற்ப நடனமாடின. உலகமே ஒரு பெரிய இசைக்கூடம் தானே.

••

ரங்கநாத் அந்தப் பறவையின் சிறகை அவளிடமே கொடுத்துச் சொன்னான்

“நம்ம தோட்டத்துக்கு அந்தப் பறவை திரும்பவும் வரும் மேடம் “

“அதிர்ஷ்டமிருந்தால் அதை நான் காண்பேன்“ என்றாள் லூசி

“புகைப்படம் எடுக்க முடிந்தால் எடுத்துவிடுங்கள். பள்ளி ஆல்பத்தில் ஒட்டி வைக்கலாம்“ என்றான் ரங்கநாத்

“அதுவும் நல்ல யோசனை தான். முயன்று பார்க்கிறேன்“ என்று தலையாட்டினாள்

அவர்கள் பள்ளி வளாகத்தினுள் காணப்படும் பறவைகளைப் புகைப்படம் எடுத்து ஆல்பம் ஒன்றை மாணவர்களே உருவாக்கியிருந்தார்கள். ஆகவே புதிதாகப் பறவைகளைக் கண்டால் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.

ரங்கநாத் படியில் இறங்கியபடியே அவளிடம் கேட்டான்.

“மல்லிகாவை அழைத்துக் கொண்டு டவுனுக்குப் போய்வர இருக்கிறேன். ஏதாவது வேணும் என்றால் வாங்கி வருவேன்“

“ஸ்வீட் பிரெட்டும், சால்ட் பிஸ்கட்டுகளும் வேண்டும் கூடவே ஒரு பாட்டில் தேன் “

ரங்கநாத் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது குடியிருப்பினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். மரங்களுக்கு இடையே வெயில் சரிந்து கொண்டிருந்தது

••

ரங்கநாத் அந்தப் பள்ளியின் காவலாளிகளில் ஒருவன். அவனும் அந்த வளாகத்தில் தான் தங்கியிருந்தாள். அவனது மனைவி மல்லிகா தான் லூசியின் வீட்டினை தூய்மை செய்வது, துணி துவைத்து தருவது, பாத்திரம் கழுவி வைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தாள். அவளது சம்பளத்தையும் ரங்கநாத்தே வாங்கிக் கொள்வான்

மல்லிகா கிராமத்துப் பெண். அதுவும் மைசூர் பக்கமுள்ள சிறிய கிராமம். தமிழ் பேசும் குடும்பம் தான். அவளது தாத்தா காலத்தில் அந்த ஊருக்குப் போய்த் தங்கிவிட்டார்கள். மல்லிகாவின் அப்பா அங்கே தான் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை அவள் படித்திருக்கிறாள். மாணவர்களுக்குத் திறந்தவெளியில் சினிமா திரையிடும் அன்று மல்லிகா ஆசையாக முன்வரிசையில் போய் உட்கார்ந்து கொள்வாள். டிவியில் போடும் திரைப்படங்கள் ஒன்றை விட மாட்டாள்.

லூசி வீட்டில் டிவி இருந்தது. ஆனால் அணைத்தே வைக்கப்பட்டிருக்கும். சில நாட்கள் அதைத் துடைக்கும் போது மல்லிகா கேட்பாள்

“நீங்க சினிமாவே பார்க்க மாட்டீர்களா“

“சினிமா பிடிக்காது“

“சின்ன வயசில கூடச் சினிமா பார்த்தது இல்லையா“

“சினிமா பார்க்க யாரு காசு தருவா. இதுவரைக்கும் மொத்தமே நாலு படம் பார்த்திருப்பேன். அதுவும் ஏசுநாதரைப் பற்றிய படம், “

“எனக்கெல்லாம் தினம் சினிமா பாக்கணும். சோறு இல்லாட்டி கூடக் கவலைப்பட மாட்டேன்“ என்று மெலிதாகச் சிரித்தாள்

“சினிமாவில அப்படி என்ன இருக்கு“

“அது ஒரு கனவும்மா. பாக்க பாக்க சொகமாக இருக்கும். அதைச் சொன்னாப்புரியுதும்மா “என்று சொல்லி சிரித்தாள் மல்லிகா

லூசிக்கு அது புரிந்தேயிருந்தது. அவள் நியூஸ் பேப்பரை படித்தபடியே மல்லிகாவிடம் கேட்டாள்

“லீவுக்கு ஊருக்குப் போகலையா“

“போகணும். ஆனா அவரு வேலை இருக்குனு சொல்லிட்டே இருக்கார். “

“நீங்களும் போயிட்டா நான் தனியா இருக்கணும்“

“உங்களுக்குத் தான் பயமே கிடையாதே.. இந்த ஸ்கூல்ல உங்களைப் பார்த்துத் தான் எல்லோரும் பயப்படுகிறார்கள்“

“அதெல்லாம் வெறும் நடிப்பு. உண்மையில் என்னை யாருக்கும் பிடிக்காது. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை“

மல்லிகா கழுவி வைத்த டீக்கோப்பைகளைக் கிச்சன் அலமாரியினுள் அடுக்கி வைத்துவிட்டுக் கிளம்பும் போது சொன்னாள்

“குழந்தைகள் இருந்திருந்தால் உங்களுக்கும் ஊருக்குப் போகத் தோணியிருக்கும் “

அவள் சொன்னது உண்மை. அதைக் கேட்காதவள் போலவே லூசி நின்றிருந்தாள். மல்லிகா சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சிறிய பிளாஸ்டிக் கூடையினைக் கையில் எடுத்தபடியே வெளியேறிப் போனாள்

••

குழந்தைகள் இல்லாமல் போனது வருத்தமானதே. ஒருவேளை அவள் சொன்னது போலப் பையனோ, பெண்ணோ இருந்திருந்தால் வாழ்க்கை வேறுவிதமாகியிருக்கும். அந்த வேதனையை மறப்பதற்காக மீண்டும் ஒரு இசைத்தட்டினை சுழலவிட்டாள். சாக்சபோன் இசை மனதை ஆற்றுப்படுத்துவதாக இருந்தது

••

பள்ளி வளாகத்திற்குள் சிறிய ஏரி ஒன்றிருந்தது. அதை ஒட்டிய காட்டிற்குள் காலை நேரம் நடைப்பயிற்சி செய்வது லூசிக்குப் பிடித்தமானது. குன்று போல உயர்ந்த பாறையின் மீது நின்றபடியே சில நாட்கள் மேகங்களைக் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள். எவ்வளவு நேரம் பார்த்தாலும் மேகங்கள் சலிப்பதேயில்லை.

அந்தப்பள்ளியின் முன்வாசல் முன்பு வடக்கு நோக்கி இருந்தது. அதைத் தற்போது மூடியிருந்தார்கள். அந்த வாசலில் அமைக்கப்பட்ட காவல் கோபுரம் சிதைந்த நிலையில் நின்றிருந்தது. சில நாட்கள் அதையும் தேடிப்போய்ப் பார்த்து வருவாள்.

காலத்தில் பழசாகிப் போன எல்லாப் பொருட்களும் கதைகள் கொண்டதாகி விடுகின்றன. இந்தக் கோபுரத்திற்கும் நிறையப் பேய்க் கதைகள் இருப்பதை அறிவாள். கோபுரம் பற்றி மட்டுமில்லை. அந்தப் பள்ளியில் இறந்து போன மாணவி ஒருத்தி பற்றியும் கதைகள் உலவுகின்றன. இருக்கட்டும் கதைகள் தானே ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியம்.

••

ஒவ்வொரு நாளும் முதல்வர் அறைக்குள் நுழைந்தவுடன் லூசியின் முகம் இறுக்கமாகிவிடும். அது ஒரு பழக்கம். கோபத்தில் அவள் குரல் உயரும் போது எதிரே நிற்பவர்கள் பயந்து போய்விடுவார்கள். அவளிடம் தயவோ, கருணையோ எதிர்ப்பார்க்க முடியாது. அவள் மிகவும் கண்டிப்பானவள். பொய் சொல்கிறவர்களின் குரலை வைத்தே அவளால் கண்டுபிடித்துவிட முடியும். குரலில் பொய் கலந்தவுடன் அது மாறிவிடுகிறது. போலியான பணிவு. இரக்கம். வெளிப்படுகிறது.

உண்மையில் அந்தக் கோபம் அவளுக்குக் கவசம் போலப் பயன்பட்டது. தேவையற்ற கவனத்தை, ஈர்ப்பை உருவாக்காமல் அவளைப் பாதுகாத்தது. வராந்தாவில் நடக்கும் போது வேண்டுமென்றே அவள் வேகமாக நடப்பாள். ஆசிரியர்களிடம் பேசும் போது அவர்கள் கண்களைப் பார்த்தே பேசுவாள். அவளது நுனி நாக்கு ஆங்கிலம் எவரையும் மயக்கக்கூடியது.

யோசித்துப் பார்த்தால் தன் வாழ்க்கை ஒரு நடிப்பு. அந்த நாடகத்தைப் பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடித்து வருகிறோம் என்றே லூசிக்கு தோன்றும். இதை மாற்றிக் கொள்ள முடியாது.

அந்தப் பள்ளியில் நண்பர் என்று சொல்லிக் கொள்ள அவளுக்கு இருந்த ஒரே நபர் பார்க்கர் மாஸ்டர். பள்ளியின் பியானோ ஆசிரியர். மிகச்சிறந்த இசை கலைஞர். அவரது இசைத்திறமையை உலகம் அறியவேயில்லை.

அவர் ஞாயிறு தோறும் அவள் வீட்டிற்கு வருவார். இருவரும் ஒன்றாக இசை கேட்பார்கள். மதியம் அவளுடன் சாப்பிடுவார். பின்பு ஆளுக்கு ஒரு புத்தகம் கையில் எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே படிப்பார்கள். மாலை மீண்டும் கையில் காபியுடன் இசை கேட்பார்கள்.

அவருக்குச் சூடாகக் காபி குடிப்பது பிடிக்கும். ஆவி பறக்கும் காபியைக் கையில் வைத்தபடியே அவர் இசைத்தட்டிலிருந்து எழும் பால் ராப்சனை ரசித்துக் கொண்டிருப்பார். சில நேரம் அவரது முகத்தில் வெளிப்படும் சந்தோஷம் அபூர்வமானது

அவர் ஒருவர் தான் அவளைப் பெயர் சொல்லி அழைப்பார். அவளை விடவும் வயதில் மூத்தவர் என்பதோடு நல்ல நண்பர் என்பதும் ஒரு காரணம்.

அவர் விடைபெற்றுப் போகும் போது மறக்காமல் ஒரு ஆரஞ்சு பழத்தைக் கொடுத்துவிடுவாள். எவ்வளவு நல்ல மனிதர். எதையும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. சொல்லாமலே அவள் மனத்துயரை அவர் புரிந்து கொண்டிருந்தார். பார்க்கர் மாஸ்டர் திடீரென இறந்து போனது அவளது துரதிருஷ்டம். இப்போது சில இசைத்தட்டுகளைக் கேட்கும் போது அவர் நினைவு மேலிடக் கண்ணீர் கசிய நேரிடுகிறது

••

ரங்கநாத் கொடுத்த பறவையின் இறகை தன் மேஜையில் கொண்டுவந்து போட்டபடி லூசி படிப்பதற்காக ஏதாவது ஒரு புத்தகத்தை எடுக்கத் தேடினாள். அவளுக்கு மேரி ஆலிவரின் கவிதைகளைப் பிடிக்கும். சில நேரம் அந்தக் கவிதைகளை மனப்பாடம் செய்து கொள்வதும் உண்டு. மேரி ஆலிவர் எவ்வளவு நன்றாக எழுதுகிறாள். நாமும் இப்படிக் கவிஞராகியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வாள்

கவிதைப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது மனதில் புதிதாக வந்த பறவை எப்படியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்க ஆரம்பித்தது

பறவைகளுக்குப் புதிய இடம் பற்றிய பயம் கிடையாது. இவ்வளவு பெரிய வளாகத்தில் அது ஏன் தன் வீட்டுத் தோட்டத்தைத் தேடி வந்திருக்கிறது. உலகம் பெரியது என்பதை அந்தப் பறவையின் வருகை நினைவூட்டுகிறதா.

அதைப்பற்றி நினைக்க நினைக்க மறுநாள் அந்தப் பறவையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் உருவானது.

அலமாரியிலிருந்த கேமிராவை எடுத்துத் துடைத்துச் சரி செய்து வைத்துக் கொண்டாள். ஏதாவது ஒரு விருப்பமான விஷயத்தை இப்படி மனதில் போட்டுக் கொண்டால் மனது உற்சாகமாகிவிடுகிறது. இல்லாவிட்டால் சலிப்பு தான். என்ன செய்தாலும் சில நாட்களில் சலிப்பைப் போக்கிக் கொள்ள முடியாது.

••

லூசி தந்தையை அறியாதவள். அவளுக்கு இரண்டு வயதாகும் போது அவளது தந்தை இறந்துவிட்டார். அம்மா தான் அவளையும் அக்காவையும் வளர்த்தாள். அவர்கள் மாமா வீட்டில் வசித்தார்கள். அக்காவின் படிப்பை நிறுத்திய மாமா தான் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

மாமா வீட்டில் நேரத்திற்குச் சாப்பாடு கிடைக்காது. அம்மா ஒரு வேலைக்காரி போலப் பகலிரவாக வீட்டு வேலைகள் செய்து வந்தாள். மாமா இல்லாத நேரத்தில் அத்தை அம்மாவைக் கண்டபடி திட்டுவாள். அவளது கோபம் லூசியின் மீதும் திரும்பும். லூசிக்கு மாமா வீட்டில் இருக்கப் பிடிக்கவேயில்லை.

ஒரு நாள் அம்மா லூசியிடம் சொன்னாள்

“உன்னை சிஸ்டர் மேரியோடு அனுப்பி வைக்கப் போகிறேன். இனிமேல் அவள் உன்னைப் படிப்பைக் கவனித்துக் கொள்வாள். படிப்பை தவிர உனக்கு வேறு நினைப்பே இருக்கக் கூடாது“

அம்மா சொன்னது போலவே திருநெல்வேலியில் சிஸ்டர் மேரி உதவியால் படித்தாள். விடுமுறை நாட்களில் அவள் மட்டுமே ஹாஸ்டலில் இருப்பாள். அம்மா அவள் படிப்பு முடியும் வரை அவளைத் தேடி வந்ததேயில்லை. கல்லூரி படிக்கப் பெங்களூர் போவதற்கு முன்பு அம்மாவைத் தேடிப் போய்ப் பார்த்து வந்தாள். அம்மா அவளை ஆசீர்வாதம் செய்தபடியே சொன்னாள்

“லூசி உன் எதிர்காலம் உன் கையில் தானிருக்கிறது“

எதற்காக அப்படிச் சொன்னாள் என்று தெரியவில்லை. ஆனால் அவள் கல்லூரி படிப்பு முடிவதற்குள் அம்மாவும் இறந்து போனாள்.

இருபது வயதிற்குள் வாழ்க்கையில் தனக்கு யாருமேயில்லை என்று அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்த போது அந்த ஏக்கம் ஆழமாக அவளை வாட்டியது. அப்போது தான் இமானுவேலைச் சந்தித்துப் பழகி அவரையே திருமணம் செய்து கொண்டாள். இருவருமாகத் தான் அந்த உறைவிடப் பள்ளிக்கு விண்ணப்பித்தார்கள்.. இருவருக்கும் வேலை கிடைத்தது.

••

ஏன் இதை எல்லாம் இந்த இரவில் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபடியே அவள் இரவு விளக்கின் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் பெயரறியாத பறவையின் நினைவு வந்து போனது

காலையில் அவள் தோட்டத்தில் தேடிய போதும் அந்தப் பறவையைக் காண முடியவில்லை. ஏரிவரை நடந்து போய்த் தேடிவந்தாள். அந்தப் பறவையைக் காணமுடியவில்லை

அன்று மாலை ரங்கநாத்தின் மனைவி அந்தப் பறவையைத் தன் வீட்டில் முன்னுள்ள மரத்தில் பார்த்ததாகச் சொன்னாள்

“எது மாதிரி இருந்துச்சி அந்தப் பறவை“

“வால் நீண்ட குருவி மாதிரி. ஆனா குருவியில்லை“

“நிறம்“

“சரியா சொல்லத்தெரியலை. ஆனால் மஞ்சளும் சிவப்பும்னு நினைக்கிறேன்“

“அதோட குரல் எப்படியிருந்தது“

“சின்ன பிள்ளைங்க குரல் மாதிரி இருந்துச்சி“

“நிஜமாவா“ எனக்கேட்டாள்

“ஆமா.. அந்தக் குரலை கேட்டால் ஏதோ சொல்ல வர்றது மாதிரியே இருந்துச்சிம்மா “

“எனக்கு அதைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு“

“நாம ஆசைப்பட்டா பறவை வராது. அதுவா வரணும்“

“அந்த பறவை எந்தப்பக்கம் போனது“

“கிழக்கே போனது. நாளைக்குத் திரும்ப வரும்னு நினைக்கிறேன்“

“அது வந்தா என்னைக் கூப்பிடு“ என்றாள் லூசி

“போட்டோ எடுக்கப் போறீங்களா“ எனக்கேட்டாள் மல்லிகா

“எடுக்கணும்“ என்றாள் லூசி

மல்லிகா ஆசையோடு கேட்டாள்

“என்னையும் ஒரு போட்டோ எடுத்து தருவீங்களா“

“உனக்கு எதுக்குப் போட்டோ“

“ஊர்ல எங்க அப்பாவுக்கு குடுக்க “ எனச் சந்தோஷத்துடன் சொன்னாள்.

ஆசைப்படும் தன் கண்ணில் படாமல் ஏன் அந்தப் பறவை ஒளிந்து விளையாட்டுக் காட்டுகிறது என லூசிக்கு எரிச்சலாக வந்தது.

அவளுக்கு அப்பறவையை உடனே காண வேண்டும் என்ற ஆசை அதிகமானது.  கிழக்கு நோக்கி நடந்து போக ஆரம்பித்தாள். இருட்டும் வரை ஒவ்வொரு மரமாகத் தேடியலைந்தாள். வேறு சில பறவைகளைக் கண்டாள். ஆனால் தேடும் பறவையைக் காண முடியவில்லை

அன்றிரவு வீடு திரும்பிய போது மனதில் காரணமில்லாமல் வருத்தமும் வெறுமையும் கூடியது போலிருந்தது. பறவையைப் பார்க்கமுடியாமல் போனால் என்ன. அதற்காக இப்படி வருத்தப்பட வேண்டுமா. பறவை தானே, அதற்கு எதற்காகக் கவலைப்பட வேண்டும்

திடீரென அது வெறும் பறவையில்லை. அவள் விரும்பிய சிறு விஷயம் கூட அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதன் அடையாளம் போலத் தோன்றியது. அப்படி நினைப்பு வந்தவுடன் கடந்தகாலத்தின் துயர நாட்கள் மனதை அழுத்தத் துவங்கின. அம்மா கண்ணீர் விடும் காட்சி மனதில் வந்து போனது. ஹாஸ்டல் அறையில் அழுதபடியே இருந்த நினைவுகள் பீறிட்டன. அதிலிருந்து விடுபடுவதற்காக அவளாக ஒரு காகிதத்தில் பறவை ஒன்றை வரைய ஆரம்பித்தாள்

மேஜையில் கிடந்த சிறகை வைத்துக் கொண்டு பறவை இப்படித்தானிருக்கும் என அவள் கற்பனையில் ஒரு பறவையை வரைந்தாள். அது சரியாக வரவில்லை. ஏன் இவ்வளவு பதற்றம் அடைகிறோம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

மறுநாள் ரங்கநாத் அவளைத் தேடி வந்த போது சொன்னான்

“ஒரு பறவையில்லை மேடம். ஜோடியா வந்துருக்கு. பார்த்தா வெளிநாட்டுப் பறவை மாதிரி தெரியுது. கடல் கடந்து வந்துருக்கு“

“என் கண்ணிலே படவேயில்லை“

“எவ்வளவு அழகான ஜோடி. ஒரே காதல் விளையாட்டு தான். மனுசங்க போலப் பறவைகளைப் பார்த்தவுடனே வயசைக் கண்டுபிடிக்க முடியாதுல்ல“

அவன் அப்படிக் கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது

“நீ எங்கே பார்த்தே “என்று கேட்டாள்

“சைக்கிள் ஸ்டாண்டை ஒட்டின மரத்தில்“.

“இப்போ போனா இருக்குமா“

“நான் காலையில் பார்த்தேன். எங்க போகப்போகுது. நம்ம தோட்டத்துக்கு வரத்தான் செய்யும்“

அவன் அப்படிச் சொன்னபோதும் அவளால் சமாதானம் செய்து கொள்ளமுடியவில்லை. ஆசையை அடக்க முடியாமல் கேட்டாள்

“எப்படியும் நம்ம ஸ்கூல் கேம்பஸ்க்குள்ளே தானே இருக்கும். வா. தேடிப் பார்த்துட்டு வருவோம்“

“போகலாம் மேடம்“

ரங்கநாத்துடன் பள்ளி வளாகத்தை முழுமையாகச் சுற்றி வந்த போதும் அந்தப் பறவைகள் அவள் கண்ணில் படவில்லை. அவள் சலித்துப் போனவளாகச் சொன்னாள்

“எங்கேயாவது போய்த் தொலையட்டும். இனி அந்தப் பறவையை நான் பார்க்கவே மாட்டேன்“

ரங்கநாத் அவளது கோபத்தைக் கண்டு சிரித்தான்

வீடு திரும்பி லூசி அந்தப் பறவையை மறக்க முயன்றாள். ஆனால் மனதில் அது சிறகடித்துப் பறப்பது போலவே இருந்தது. இசைத்தட்டுகளைச் சுழலவிட்ட போதும் மனது அந்த ஏமாற்றத்தையே சுற்றிவந்தது

பலருக்கும் எளிதாக நடந்துவிடுகிற சிறிய விஷயங்கள் கூடத் தனக்குக் கிடைப்பதில்லை என்ற வருத்தம் அவளை ஆழமாகப் பாதித்தது. அன்றிரவு அவள் பிரார்த்தனை செய்யும் போது ஏனோ கண்ணீர் விட்டாள்

மறுநாள் காலை அவள் தோட்டத்தில் பறவையின் விநோதமான குரல் கேட்டது. அதே பறவைகள் தான். தான் தேடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவைகள் தன் தோட்டத்திற்கே வந்து நிற்கிறது

அவளுக்கு வெளியே போய் அதைக் காண ஆசையிருந்த போதும் அதை அடக்கிக் கொண்டு வீட்டின் கண்ணாடி ஜன்னல்களைச் சாத்தி வைத்தாள். ஒருமுறை பறவையை நேரில் பார்த்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் அதை அனுமதிக்க மறுத்தவள் போல வேண்டுமென்றே தன் அறைக்குள் போய்க் கதவை தாழிட்டுக் கொண்டாள்.

மதியம் ரங்கநாத் வந்து வாசற்கதவைத் தட்டிய போது தான் வெளியே வந்தாள்

“தோட்டத்துல பறவைகள் இருதுச்சே.. பாத்தீங்களா “

“தூங்கிட்டேன். வெளியே எதையும் கவனிக்கவேயில்லை“. என்றாள்

அவள் சொல்வது பொய் என்தை ரங்கநாத் அறிந்து கொண்டவன் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

மழை வரும்போல ஒரே மேகமா இருக்கு என்றாள் லூசி

பேச்சை மாற்றுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சொன்னான்.

“மேடம்.. நாளைக்கு மல்லிகாவை கூட்டிட்டு  ஊருக்குப் போறேன். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்மா“

“உன் வேலைய யாரு பாக்குறது “எனக் கோபமாகக் கேட்டாள்

“கிட்ணன் தம்பி வந்துருக்கான். அவனைப் பாக்க சொல்லியிருக்கிறேன்“

“போயிட்டு வா.. நானும் ஊருக்குப் போகப்போகிறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்“ என்றாள், ஏன் அப்படிச் சொன்னாள் என்று அவளுக்கே புரியவில்லை.

அவள் சொன்னதை நம்பமுடியாமல் திகைத்தபடியே ரங்கநாத்  படியிறங்கி நடந்தவன் கிழக்கே தெரிந்த மேகங்களைப் பார்த்தபடிய சொன்னான்

“மேடம்,, மழை வருது.. அங்கே பாருங்க.. “

அவன் சொல்லிமுடிப்பதற்கு மழையின் முதல் துளி தரையில் இறங்கியிருந்தது

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2021 23:04

ரெட் பைனின் பயணம்

முப்பது நாட்களில் முப்பது கவிஞர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுச் சீனாவில் ரெட் பைன் பயணம் செய்த அனுபவத் தொகுப்பே Finding Them Gone. வித்தியாசமான பயணநூல். இரண்டு வேறு காலங்களுக்கு இடையே அவர் பயணம் செய்து திரும்பியதை உணர முடிகிறது

பீஜிங்கிலிருந்து தனது பயணத்தைத் துவங்கும் ரெட்பைன் மின்சார ரயிலில் சென்று கன்பூசியஸின் சொந்த ஊரை முதலில் காணத் திட்டமிடுகிறார். சீனாவின் அதிநவீன ரயில் சேவை பிரமிப்பூட்டக்கூடியது. ரயில் நிலையங்கள் விமானநிலையம் போலவே அமைக்கப்பட்டிருப்பதையும், முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் நிலையத்தின் வசதிகளையும் ரெட் பைன் வியந்து எழுதுகிறார். 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள ஊருக்கு ஐந்து மணி நேரத்தில் ரயில் போய்விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோமீட்டருக்கு மேல் வேகம் செல்கிறது ரயில். அந்த ரயில் நிலையத்தில் எல்லா வகையான அமெரிக்க உணவு வகைகளும் கிடைக்கின்றன.

ரயிலில் தரப்படும் சிற்றுண்டிகளும் கூட அமெரிக்கத் தயாரிப்புகளே என்கிறார். ரயிலில் உள்ள கழிப்பறை கூட நட்சத்திர விடுதியில் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பதைக் கூறுகிறார். மூன்று நேரப் பயணத்தின் பிறகு ரெட் பைன் இறங்கிய ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க உள்ளூர் வழிகாட்டி ஒருவர் காத்திருக்கிறார். சீனாவில் ஜென் டூரிசம் மிகவும் புகழ்பெற்றது. இது நிறைய வருமானம் தரக்கூடியது. ஆகவே இதற்கான வழிகாட்டிகள் நிறைய இருந்தார்கள்

அவரை அழைத்துச் சென்ற வழிகாட்டி கன்பூசியஸின் சொந்த ஊராக மவுண்ட் நிசானுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே கன்பூசியஸின் பிறந்த இடம், மற்றும் கைவிடப்பட்டு அவர் வளர்க்கபட்ட குகை மற்றும் அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கிய இடங்களைக் காணுகிறார். முடிவில் கன்பூசியஸின் கல்லறையைத் தேடிச் செல்கிறார். எளிமையான கல்லறை. இரண்டு நினைவு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே தான் கொண்டு போயிருந்த விஸ்கியிலிருந்து ஒரு குவளை ஊற்றி கன்பூசியஸிற்குப் படையல் வைத்து வணங்கியதோடு தானும் ஒரு குவளை மதுவை கன்பூசியஸோடு இணைந்து குடிக்கிறார்.

சீனாவில் வெளிநாட்டவர்கள் எல்லா விடுதிகளிலும் தங்க அனுமதி கிடையாது. குறிப்பிட்ட விடுதிகள் மட்டுமே அனுமதி தந்தன. ஆகவே அவரது நண்பர் மலிவான விடுதி ஒன்றில் ஒரு இரவு தங்க இடம் அமைத்துக் கொடுக்கிறார்

ஒரு பக்கம் அதிநவீன வாழ்க்கையின் காட்சிகள் மறுபக்கம் மரபான சீன நம்பிக்கைகள், வழிபாடுகள். கவிதை மரபைப் பின்தொடரும் முறை எனச் சீனாவிற்குப் பல்வேறு முகங்கள் இருப்பதை ரெட் பைன் அடையாளம் காட்டுகிறார்.

கவிஞர்களின் கல்லறைகளை முறையாகப் பாதுகாப்பதுடன் அதை ஒரு சுற்றுலா ஸ்தலமாகச் சீன அரசு மாற்றியிருப்பதை நினைவுபடுத்துகிறார் ரெட் பைன். இந்தப் பயணக்கட்டுரைகளின் ஊடாக அவர் நினைவு கொள்ளும் கவிதைகளும் இயற்கைக் காட்சிகளும் சிறப்பானவை.

இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பழங்காலச் சீனாவில் கவிதை எழுதத் தெரியாத ஒருவருக்கு அரசுப்பணி கிடைக்காது. அரசுப்பணிக்கான தேர்வின் ஒரு பகுதியாகக் கவிதை எழுதுவது இருந்த்து. ஆகவே அரசு அதிகாரிகள் கவிதைகளில் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார்கள் என்று ஒரு குறிப்பை ரெட் பைன் தெரிவிக்கிறார். அந்த நாட்களில் இருபது வயதிற்குள் அரசின் முக்கியப் பதவிக்கு வந்து விடுவார்கள். ஆகவே இன்றைய இருபது வயதும் அன்றைய இருபது வயதும் ஒன்றில்லை. அன்றைய இருபது வயதில் ஒருவனுக்குத் திருமணமாகி சமூக அந்தஸ்து கிடைத்திருக்கும் என்கிறார்.

இந்தப் பயணத்தில் லி பெய், து ஃபூ, வாங் வீ, சு துங்-பாவோ, ஹுசுவே தாவோ, சியா தாவோ, வீ யிங்-வு, ஷிஹ்-வு , ஹான்-ஷான் போன்ற முக்கியக் கவிகளின் நினைவிடத்திற்குச் சென்று வந்திருக்கிறார்.

சீனாவில் ஒருவர் தன் வயதைப் பிறந்த நாளிலிருந்து கணக்கிடுவதில்லை. புத்தாண்டு தினத்திலிருந்தே கணக்கிடுகிறார்கள் என்றொரு குறிப்பும் இதில் உள்ளது.

கவிதையை மொழியாக்கம் செய்யும் சில வார்த்தைகளைத் தான் புரிந்து கொண்ட விதமும் நேரில் அந்த இடங்களைக் காணும்போது ஏற்படும் புரிதலும் முற்றிலும் வேறுவிதமாக இருப்பதை ரெட்பைன் குறிப்பிடுகிறார். வாசிப்பின் வழியாக மட்டுமே ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. அந்த நிலக்காட்சிக்கு, வீடுகளுக்கு, மலைகளுக்கு நேரில் சென்றால் மட்டுமே கவிதையின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்

சீனாவின் முக்கியக் கவிஞர்களில், ஓ-யாங் ஹ்சியுவின் நினைவிடத்தைத் தேடிச் செல்லும் ரெட்பைன் ஓ-யாங் ஹ்சியுவின் வாழ்க்கையை விவரிக்கிறார். அவர் பல நீதிமன்றங்களில் மூத்த பதவிகளில் பணியாற்றியவர். சிறந்த நிர்வாகி, வரலாற்றாசிரியர் என்று குறிப்பிடுகிறார். இளமையில் வறுமையைச் சந்தித்த அவர் தாயின் வழிகாட்டுதலில் படித்து முன்னேறி பெரிய பதவிகளை அடைந்தார் என்கிறார்

மந்திரிக்குப் பிடிக்காத அதிகாரிகளைத் தலைநகரிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஊருக்கு மாறுதல் செய்வது அந்த நாளைய வழக்கம். சிலர் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்குக் கூட மாற்றப்பட்டார்கள். அப்படி ஓ-யாங் ஹ்சியு தண்டிக்கப்பட்டு ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு மாறுதல் செய்யப்பட்டார். சுச்சோவின் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய நாட்களில் அங்குள்ள இயற்கைக் காட்சிகளில் மெய்மறந்து போனார். அது அவரது கவிதை மனதிற்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு நாளும் புதிய ஊரை நோக்கி பயணம் செய்தபடியே இருந்த ரெட் பைன் சீனாவில் பேருந்துகள் சரியான நேரத்திற்குப் புறப்பட்டுச் சரியான நேரத்திற்குச் சென்று அடைந்துவிடும். ரயில்களில் அப்படியில்லை. தாமதம் ஏற்படுவது அதிகம் என்கிறார்

தனது பயணத்தின் ஊடே விவசாயிகள். சிறு வணிகர்கள். சிறார்களுடன் பேசி இறந்த கவிஞரின் வாரிசுகள் இப்போது எங்கே இருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக வீடு எங்கேயிருக்கிறது என்பதை ரெட் பைன் அறிந்து கொள்கிறார். இதனால் வழிகாட்டிக்குத் தெரியாத புதிய இடங்களை அவர் கண்டுபிடிக்கிறார்.

அந்தக் காலத்தில் கதை சொல்வதற்காக ஊடகமாகவே கவிதை செயல்பட்டது. ஆகவே கவிஞர்கள் கவிதைகள் வழியாகக் கதை சொன்னார்கள். இந்தக் கதைகள் காதலைப்பற்றியதாகவோ, போர்த்திறன் பற்றியதாகவே இருந்தன.

சாண்டாயிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் து ஃபூ இருபது மாதங்கள் கழித்தார், அந்த நேரத்தில் 140க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். அப்போது இருந்த அவரது வீடு காலமாற்றத்தில் இடிக்கப்பட்டுப் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நகரின் கிழக்கு வாயிலுக்கு அருகில் அந்த வீடு போல மாதிரி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறார்

குளிர் மலை எனப்படும் ஹான்-ஷானின் கவிதைகளை அவர் வசித்த குகைக்கே சென்று ரெட் பைன் வாசித்திருக்கிறார்

கவிஞர்களின் நினைவிடங்களில் சில முறையாகப் பாதுகாத்து வரப்படுகின்றன என்றும் பலரது நினைவிடங்கள் சிதைந்த நிலையில் காணப்படுவதையும் தெரிவிக்கிறார். இந்தக் கவிதைகளை இன்றைய தலைமுறை விரும்பி வாசிக்கவில்லை. அவை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தலைமுறையின் நோக்கமும் கவனமும் பணம் தேடுவதில் மட்டுமே இருக்கிறது. அவர்களுக்குத் தங்களின் கவிதை மரபை பற்றியோ, புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றியோ விருப்பமில்லை. வயதானவர்களும் ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் மட்டுமே இவை பற்றிப் பேசுகிறார்கள் என்கிறார். இந்தியாவிலும் இதே நிலை தானே.

இந்தப் பயணத்திற்கான செலவை ரெட் பைனின் பதிப்பாளர் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அத்துடன் மலிவான கட்டணத்திலுள்ள விடுதிகளில் தங்கிக் கொண்டு பேருந்திலும், ரயிலிலும் படகிலும் வேனிலும் பயணம் செய்தே சீனாவின் குறுக்கும் நெடுக்குமான ரெட் பைன் பயணித்திருக்கிறார். இது கவிதையின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பின் அடையாளமாகவே உள்ளது.

ரெட் பைன் போல ஒருவர் இந்தியா முழுவதும் சுற்றி இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் வசித்த இடங்களை, நினைவகங்களைப் பார்த்து வருவது சிறந்த கனவுப்பயணமாக அமையும். ரெட் பைன் போல ஒரு மாதகாலத்தில் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. ஓராண்டு பயணமாக முயன்றால் சாத்தியமாகக் கூடும்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2021 05:33

June 22, 2021

மீட்கப்படும் உண்மைகள்

.

The Dig என்ற புதிய பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். ஜான் பிரஸ்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு சைமன் ஸ்டோன் இயக்கிய படம்

1939 ஆம் ஆண்டு நடைபெற்ற சுட்டன் ஹூ அகழ்வாராய்ச்சியின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு இத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருப்பது வியப்பளிக்கிறது. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. படத்தொகுப்பு மற்றும் சிறந்த நடிப்பு படத்தோடு நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது. நிறைய நேரங்களில் நாம் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்த அளவு படம் நெருக்கம் தருகிறது.

உண்மையில் கதை மனித உறவுகளுக்குள் புதைந்திருக்கும் அன்பை, தனிமையை, புரிந்துணர்வை, மரபான அறிவை, ஆசைகளையே ஆய்வு செய்கிறது. வாழ்க்கை நாடகத்தில் நாம் நிறைய விஷயங்களை, ரகசியங்களை மறைத்துக் கொண்டிருக்கிறோம். அவை ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் வெளிப்படத்துவங்குகிறது. அதை எதிர்கொள்வதும் புரிந்து கொள்வதும் எளிதானதில்லை. அதைத் தான் படம் பேசுகிறது.

புற அளவில் ஆங்கிலோ சாக்சன் காலத்திய சுட்டன் ஹூ கல்லறை தளத்தைப் பற்றியதாக இருந்த போதும் அதை மட்டும் படம் கவனம் கொள்ளவில்லை.

சுட்டன் ஹூ என்பது இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள வூட்ரிட்ஜ் அருகே 6 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையிலான இரண்டு ஆங்கிலோ சாக்சன் கல்லறை தளமாகும். அதை அகழ்வாய்வு செய்யும் பணி தற்செயலாகவே துவங்கியது.

படத்தின் துவக்கத்தில் நாம் சஃபோல்க்கிலுள்ள 526 ஏக்கர் தோட்டம் ஒன்றில் ஆங்காங்கே பெரிய மண்மேடுகள் இருப்பதைக் காணுகிறோம். அதனுள் ஏதோ புதையல் இருக்கக் கூடுமென நினைக்கிறார்கள். இந்தப் பண்ணையின் உரிமையாளரான எடித் மண்மேடுகளைத் தோண்டி அதனுள் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயல்கிறாள்

எடித் தனது இருபது வயதுகளில் குடும்பத்தினருடன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார், ஆஸ்திரியா-, கிரீஸ் மற்றும் எகிப்துக்குச் சென்ற அவர் தனது பயணத்தின் போது பல்வேறு அகழ்வாராய்ச்சிகளைக் கண்டார். அந்த ஆசையின் காரணமாகவே தனது தோட்டத்திலுள்ள மண்மேட்டை ஆய்வு செய்ய விரும்பினார்.

இதற்காக அவள் பசில் பிரவுனை அழைக்கிறாள். அவர் பூமியைத் தோண்டும் கலையை மரபாக அறிந்தவர், எளிய விவசாயி. அமெச்சூர் அகழ்வாய்வாளர்.

அவருக்கு விவசாய கூலிகளுக்கான சம்பளம் தரவே எடித் முன்வருகிறாள். அவர் சம்மதிக்க மறுக்கிறார். இந்த இடத்தைத் தோண்ட வாரத்திற்கு 30 ஷில்லிங் வேண்டும் என்று கறாராகப் பேசி வேலையை ஒத்துக் கொள்கிறார். எத்தனை பேர் உதவிக்குத் தேவை எனக்கேட்கும் போது தான் ஒருவனே அதைச் செய்யமுடியும் என்கிறார். அதன்படியே பணியைத் துவங்குகிறார். மழை நாளில் அந்தப் பணியை எடித் பார்வையிடுகிறாள். என்ன அழகான காட்சி.

மண்குன்றை தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் தோண்டும் பணியின் போது பாசில் மண்ணிற்குள் சிக்கிக் கொண்டுவிடுகிறார். அவரைப் பலரும் சேர்ந்து மீட்கிறார்கள்.. அந்தக் காட்சி படத்தில் மிக உண்மையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு அவரது உதவிக்கு எடித்தின் உறவினர் ரோரி லோமாக்ஸ் வந்து சேருகிறான். துடிப்பான இளைஞன். விமானப்படையில் சேருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவன் அகழ்வாய்வு பணிகளை முழுமையாகப் படம்பிடிக்கிறான். அவனுக்கும் எடித்திற்குமான வெளிப்படாத காதல். எடித்தின் மகன் மீது பசில் கொண்ட அன்பு எனப் படத்தில் அழகான இழைகள்.

மண்மேட்டிற்குள் பழைய காலப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது. அது ஒரு மன்னரின் கல்லறை மேடு என்பதைப் பாசில் கண்டறிகிறார். அந்த உண்மையை உலகிற்கு அறிவிக்கிறாள் எடித்.

அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தைப் பொதுமக்கள் பலரும் பார்வையிடுகிறார்கள். இதை அறிந்த கலாச்சார நிறுவனங்கள் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் உடனே அந்த இடத்தைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள முயலுகின்றன.

இப்ஸ்விச் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள். அரசின் அனுமதியில்லாமல் தோண்டியது தவறு என்று வாதிடுகிறார்கள். படிக்காத விவசாயி எனப் பசிலை வேலையை விட்டுத் துரத்தி அனுப்புகிறார்கள். இதை எடித் விரும்பவில்லை. விஷயம் அவள் கையை மீறிப் போகிறது .

அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை தேசிய கலாச்சாரச் சின்னமாக அறிவித்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவுடன் ஆய்வுப் பணி கைமாறிப் போகிறது. இப்ஸ்விச்சிலிருந்து இளம் ஆய்வாளர்கள் களத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யப் பாசில் நியமிக்கப்படுகிறார்.

ஆய்வாளர்களான ஸ்டுவர்ட் மற்றும் அவரது மனைவி பெக்கி இருவருக்குள்ள உறவு. பெக்கியின் சஞ்சலங்கள் அழகாக வெளிப்படுத்தப்படுகின்றன. ரோரியுடன் அவள் கொள்ளும் காதல் நிஜமானது. அந்த அகழ்வாய்வின் வழியே அவள் தன்னை அறிந்து கொள்கிறாள்.

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் கடந்தகாலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியின் வழியாக நிகழ்கால வாழ்வின் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். மறைத்துவைக்கபட்ட ஆசைகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அது தான் படத்தின் சிறப்பு.

படத்தின் துவக்கத்தில் பணக்கார விதவை எடித் அவர்களின் சஃபோல்க் வீட்டிற்குப் பசில் பிரவுனை அழைக்கிறார். முதற்சந்திப்பிலே நாம் இருவரின் ஆளுமைகளையும் முழுமையாக அறிந்து கொண்டுவிடுகிறோம். கண்ணால் பார்த்தே அந்த நிலத்தை மதிப்பிடுகிறார் பசில். அவர் சொன்னது தான் கடைசியில் ஆய்வாளர்களால் கண்டறியப்படுகிறது. மரபான ஞானம் கொண்ட பசில் போன்றவர்கள் எந்தக் கல்லூரியிலும் போய்ப் படிக்கவில்லை. அந்த ஒரே குறையால் அவர்களின் அனுபவ அறிவை உலகம் அங்கீகரிக்க மறுக்கிறது. எடித் போர் சூழலின் ஊடாகவும் அந்த நிலத்தைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுகிறாள். உலகின் கவனம் யுத்தகளத்தை நோக்கியிருக்கும் போது அவள் வரலாற்றின் வேறு புள்ளியைக் கண்டறிய முயல்கிறாள்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்து வரும் பசிலை ஒரு நாள் தன்னோடு சாப்பிட எடித் வீட்டிற்கு அழைக்கும் காட்சி சிறப்பானது. அது போலவே உடல் நலமற்ற எடித்தை மருத்துவமனைக்குப் பசில் கொண்டு செல்லும் காட்சியும், எடித்தின் மகன் பசிலின் வீடு தேடி சைக்கிளில் வரும் காட்சியும், பெருமழையின் போது அகழ்வாய்வு நடந்த இடத்தைப் பசில் மூடி பாதுகாக்கும் காட்சியும் மறக்கமுடியாதவை.

அகழ்வாய்வுப்பணிகளின் பின்னால் உள்ள அரிய உழைப்பினை காட்சிப்படுத்தியிருப்பதுடன் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள நடக்கும் அதிகாரப் போட்டியினையும் படம் பேசுகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தத் தொல் சின்னங்களைப் பிரிட்டிஷ் ம்யூசியத்திற்கு எடித் வழங்கிவிட்டாள் என்ற தகவல் இடம்பெறுகிறது. அத்தோடு இந்தக் களப்பணியில் உதவிய பசிலின் பெயர் அதில் இடம்பெறவில்லை. சமீபமாகவே அவரது பெயரை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம்.

வரலாற்று உண்மைகள் பூமியில் புதைந்திருக்கின்றன. அவை வெளிப்படும் போது அதுவரை நாம் நம்பிவந்த தகவல்கள். எண்ணங்கள் மாற ஆரம்பிக்கின்றன. தற்போது கீழடியில் நடப்பதும் இது போன்ற பணி தான்.

உலகின் முக்கிய அகழ்வாய்வுகளைத் தனிநபர்களே முன்னெடுத்திருக்கிறார்கள். முடிவில் தான் அந்த ஆய்வு அரசின் கைவசம் சென்றிருக்கிறது. அகழ்வாய்வின் போது சேகரிக்கப்பட்ட பொருட்களை யாரிடம் வைத்திருப்பது என்ற போட்டி எல்லாக் காலத்திலும் நடந்திருக்கிறது. இன்றும் அந்த நிலை தொடரவே செய்கிறது.

வரலாற்று உண்மைகளுக்கு மிக நெருக்கமாகப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் காதலும் மட்டும் தான் படத்தின் சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்பட்டன என்கிறார் இயக்குநர். பொழுதுபோக்குச் சினிமாவில் இது போன்ற புதிய களங்கள் புதிய கதைகள் வெளிப்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2021 06:11

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.