S. Ramakrishnan's Blog, page 119

August 17, 2021

கசடதபற

நவீன தமிழ் இலக்கியத்தின் புதுக்குரலாக ஒலித்த சிறுபத்திரிக்கை கசடதபற. 1970ல் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழின் வடிவமைப்பும், செறிவான படைப்புகளும் தனிச்சிறப்பு கொண்டவை.

க்ரியா ராமகிருஷ்ணன். சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், நா.முத்துசாமி மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இதனை நடத்தினார்கள். இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் நா. கிருஷ்ணமூர்த்தி.

கசடதபற இதழில் எழுதத் துவங்கிய ஞானக்கூத்தன், நகுலன், பசுவய்யா வைத்தீஸ்வரன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், கல்யாண்ஜி, கலாப்ரியா, கங்கைகொண்டான் , சுஜாதா , இந்திரா பார்த்தசாரதி, நீல பத்மநாபன், பாலகுமாரன், அம்பை, சார்வாகன் பின்னாளில் புகழ்பெற்ற படைப்பாளியானார்கள்.

வணிக இதழ்களின் வழியே உருவான ரசனையை எதிர்த்து கலகக்குரலாக ஒலித்தது கசடதபற.. கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

கவிஞர் தேவதச்சன் ‘கசடதபற’ வழியாகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்

கசடதபற, இதழ்களை எழுத்தாளர் விமாலதித்த மாமல்லன் மின்னூலாக மாற்றி அமேஸான் தளத்தில் இலவசமாக அளித்து வருகிறார்.

இது போல முன்னதாகக் கவனம் ,ழ போன்ற சிற்றிதழ்களை அவர் இணையத்தில் பதிவேற்றிப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய இதழ்களை ஆவணப்படுத்திக் காப்பாற்ற இதுவே சிறந்தவழி.

பழைய கசடதபற இதழ்களைத் தேடி எடுத்து ஒவ்வொரு இதழாக வேர்ட் பைலாக மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வேலை எளிதானதில்லை. நேரமும் உழைப்பும் பொறுமையும் அதிகம் தேவை. மாமல்லன் தனக்குப் பிடித்தமான வேலைகளை அயராமல் செய்யக்கூடியவர். எவரிடமும் எந்தக் கைமாறும் எதிர்பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன், தீவிர அக்கறையுடன் பணியாற்றுபவர். அவர் செய்யும் இந்த மின்னூலாக்கப் பணிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய இதழ் கசடதபற.

இந்தத் தலைமுறை வாசகர்கள். படைப்பாளிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன்..

விருப்பமுள்ள அனைவரும் அமேஸான் தளத்திலிருந்து கசடதபற இதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாரம் ஒரு நாள் மட்டுமே இலவசமாக அளிக்கப்படுகிறது.. தனி இதழ் விலை ரூ49.

1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on August 17, 2021 04:28

August 16, 2021

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி- 3

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.

உங்கள் சிறுகதைகளில் ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை வடிவம் சார்ந்த பல நுட்பமான உத்திகள் இயல்பாகவே சாத்தியப்பட்டுள்ளன. ஆனால் உள்ளடக்கம் சார்ந்து பார்த்தோமென்றால் மனித மன ஏக்கங்கள், புறச்சூழல் அழுத்தங்கள், அதன் காரணமான அகவுணர்வு மாற்றங்கள் ஆகியவையே அடிநாதமாகின்றன. ஏன்?

இவைதான் என்னை உருவாக்கிய விஷயங்கள். என் ஆளுமைதானே என் எழுத்திலும் வெளிப்படும். இது என் ஒருவன் சம்பந்தபட்ட விஷயமில்லை. எழுத்தாளர்களின் பால்யகாலமும் அவர்கள் உருவான விதமும் அவர்கள் எழுத்தைப் பாதிக்கக் கூடியது. ஆனால் என் சுயவாழ்க்கையின் பாதிப்புகளை மட்டும் நான் எழுதவில்லையே. ‘நூறு கழிப்பறைகள்’ சிறுகதை நான் எழுதியதுதானே. அது சித்தரிக்கும் கழிப்பறையைப் பராமரிக்கும் உலகம் நீங்கள் சொல்வதோடு பொருந்தவில்லையே. தாவரங்களின் உரையாடலில் உள்ள விசித்திர அனுபவம் என் சொந்த வாழ்க்கையில்லையே. ‘தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்’ துவங்கி ‘சிவப்பு மச்சம்’ வரை வெளியான கதைகளில் எதுவும் என் சொந்த வாழ்க்கையை விவரிக்கவில்லையே. பொதுமைப்படுத்தி ஒன்றை மதிப்பீடு செய்வது தவறானது.

‘இடக்கை’ நாவலை வாசித்துப் பாருங்கள். அது அதிகாரத்திற்கு எதிரான குரலை ஒலிக்கிறது. நெடுங்குருதியும் அதிகாரத்திற்கு எதிரானதுதான். ஆனால் இரண்டு நாவல்களுக்குள் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்பதை வாசகரால் உணர முடியும். ‘யாமம்’ காட்டும் சென்னை இருநூறு வருஷங்களுக்கு முந்தைய உலகமில்லையா. அதை எப்படிச் சொந்த அனுபவத்தில் எழுத முடியும். நான் கற்பனையும் நிஜமான அனுபவங்களையும் ஒன்று சேர்ந்து எழுதுகிறவன். அதில் எது கற்பனை எது நிஜம் எனப் பிரிக்க முடியாது. வாசனையும் மலரையும் தனித்துப் பிரிக்க முடியுமா என்ன.

ஜப்பானிய ஆவணப்படம் ஒன்றில் சாமுராய் வாள் தயாரிப்பது பற்றிப் பார்த்தேன். தண்ணீரும் நெருப்பும்தான் வாள் தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. குளிர்ந்த தண்ணீர்தான் வாளின் கடினத்தை உருவாக்குகிறது என்று அந்தப்படத்தில் குறிப்பிடுகிறார்கள். தண்ணீர் வாளின் கடினத்தன்மையை உருவாக்குகிறது என்பது வியப்பாக இல்லையா. எழுத்தும் அப்படியானது தான்.

நீங்கள் அறிந்த அளவில் மிகுபுனைவு இலக்கிய வடிவத்தின் தன்மைகளாக எதனைச் சொல்வீர்கள்? மிகை கற்பனைகளை வரையறுக்க இயலாது எனினும் ஒன்றை மிகுபுனைவு அல்ல என்று எவ்வித எல்லைகளைக் அல்லது அளவுக்கோல்களைக் கொண்டு நிராகரிக்க முடியும்?

புனைவில் எது அளவு, எது மிக அதிகம் என்று யார் வரையறுக்க முடியும். புனைவே மாயமானதுதானே. கருப்பசாமி என்று கதாபாத்திரத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாகக் கே என்று வைத்துவிட்டால் கதாபாத்திரம் மாறிவிடுகிறது. காபி குடித்து முடித்துக் கோப்பையைக் கீழே வைத்தவுடன் அதே அளவு காபி கோப்பையில் இருந்தது என்று எழுதினால் அது மிகை என்கிறோம். ஆலீஸின் அற்புத உலகில் ஆலீஸ் சொல்கிறாள், காலியான கோப்பையில் இருந்து வெறுமையைக் குடிப்பதாக, வெறுமையில் மேலும் வெறுமையை எப்படி ஊற்றி நிரப்புவது என்று கேட்கிறாள்.

ஒரு கவிதையில் பாதி நிசப்தம் என்ற சொல்லைப் படித்தேன். பாதி நிசப்தம் என்பதை எப்படி வரையறை செய்வீர்கள். இது போலவே தேவதச்சன் தன் கவிதை ஒன்றில் கண்ணீர்த் துளியில் குடிக்கும் ராட்சசன் என்று ஒருவரை பற்றி எழுதுகிறார். அது நிஜமா, மிகை புனைவா. அவரது கவிதையிலே மத் தியானம் என மத்தியானத்தை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிறார். இந்த உடைவின் வழியே ஒரு தியானநிலை போல மதியம் உருமாறிவிடுகிறதே. யதார்த்தத்தை எப்படி இன்னதுதான் என்று வரையறை செய்ய முடியாதோ அப்படித்தான் மிகையினையும் வரையறை செய்யமுடியாது.

அறிவியல் புனைவு வாசிப்பதில் ஆர்வமில்லை என்று சொன்னீர்கள்… காரணம்?

ரே பிராட்பரி, ஆர்தர் கிளார்க், ஐசக் ஐசிமோவ் போன்றவர்களின் அறிவியல் புனைகதைகளை வாசித்திருக்கிறேன். கடந்தகாலம்தான் எனக்கு விருப்பமான உலகம்.. பெரும்பான்மை அறிவியல் கதைகள் எதிர்காலத்தைப் பற்றியது. வேறு கிரகங்கள், விண்வெளியில் உருவாகும் மாற்றங்கள், அதி நவீன தொழில்நுட்பச் சாத்தியங்களை விவரிக்கிறது. என் பிரச்சனையே பக்கத்து வீட்டு மனிதன் தனிக் கிரகம் போல வசிக்கிறான் என்பதுதான். குட்டி இளவரசனை எப்படி வகைப்படுத்துவீர்கள். அது அறிவியல் புனைகதையா? குட்டி இளவரசன் ஒரு கிரகத்தில் வசிக்கும் தெருவிளக்கு ஏற்றுகிறவனைப் பற்றிச் சொல்லுகிறான். மறக்கமுடியாத காட்சியது. அதுதான் நான் விரும்பும் எழுத்து.

சொந்த வாழ்க்கையிலே எதிர்காலம் பற்றி எனக்குப் பெரிய கனவுகள் கிடையாது. ஆகவே அறிவியல் புனைகதைகளை அவ்வளவு விரும்பி வாசிப்பதில்லை. ஆனால் ரே பிராட்ரியின் ஃபாரன்ஹீட் 451, குட்டி இளவரசன் போன்றவை எனக்கு விருப்பமான நாவல்கள். அது போன்ற புனைவு நாவலை வாசிக்க நிச்சயம் விரும்புவேன்.

“இந்த ஒரு விஷயத்தில் கோணங்கி போல நம்மால் இருக்க இயலவில்லையே!” என எஸ்.ரா ஆதங்கப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லுங்களேன்.

கோணங்கி எவரையும் சந்தித்த மறுநிமிஷம் தம்பி, மாமா, மாப்ளே என்று உறவு சொல்லி அழைத்து நெருக்கமாகிவிடுவார். எவர் வீட்டுச் சமையல் அறைக்குள்ளும் எளிதாகச் சென்று வரக்கூடியவர். என்னால் அப்படி ஒருவரோடு பழக முடியாது. உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. பாதிப் பயணத்தில் எவரையும் கழட்டிவிட்டுத் தன் போக்கில் கோணங்கி போய்விடுவார். அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதைக் கோணங்கியிடம் கற்றிருக்கிறேன். கோணங்கி போல ஏன் நான் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பேன். பயணத்திலும் என் பாதைகள் வேறு. படிப்பதிலும் எனக்கு விருப்பமான எழுத்தாளர் வேறு. நாங்கள் இணைந்து பதினைந்து ஆண்டுகள் சுற்றியிருக்கிறோம். நிறைய எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறோம். அந்த நினைவுகள் மறக்கமுடியாதவை.

‘நெடுங்குருதி’ உங்கள் மண்ணின் கதை. வேம்பலை கிராமத்தின் யதார்த்த வாழ்வின் நுண்சித்திரங்களும் மாய யதார்த்தக் கூறுகளும் முயங்கிய மாறுபட்ட தரிசனத்தை அளிக்கும் இந்த நாவல் மறக்க முடியாதது. குறிப்பாக ஆவியுடன் ஆடுபுலியாட்டம் ஆடும் சிங்கி, திகம்பரத் துறவிகளின் வருகை போன்றவற்றைச் சொல்லலாம். சமணத் துறவிகளின் வருகை இன்றுள்ள கிராமங்களிலெல்லாம் காணக்கிடைக்காத காட்சி. ‘நெடுங்குருதி’ நாவலின் மூலமாக, யதார்த்தத்தில் தொலைந்து போன இத்தகைய கிராமத்தை நினைவிலிருந்து மீண்டும் புதுப்பித்துப் புத்துயிர் அளித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா? முற்றிலுமாகச் சுபாவம் திரிந்து போன இன்றைய கிராமங்கள் தங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

இன்றைய கிராமமும் என் பால்யத்தில் கண்ட கிராமமும் வேறுவிதமானது. தெருவிளக்குகள் கூட அதிகம் இல்லாத காலமது. இருட்டு என்றால் அவ்வளவு இருட்டு. அந்த இருட்டிற்கு ஒரு வாசனையிருந்தது. வீதியிலே படுத்து உறங்கியிருக்கிறேன். அந்த வயதின் பகலும் இரவும் நீண்டது. இன்று என் சொந்த கிராமத்திற்குப் போகையில் தெரிந்த முகங்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். இரவு பதினோறு மணி வரை கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் இல்லாத ஆளேயில்லை. ஆடுமேய்க்கும் பையன் கூடச் செல்போனில் வீடியோ கேம் ஆடியபடியே ஆடுகளை மேய்க்கிறான். விவசாய வேலைகள் பெருமளவு கைவிடப்பட்டுவிட்டன. உழவுமாடுகளைக் காணமுடியவில்லை. கலப்பைகள் கண்ணை விட்டு மறைந்துவிட்டன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏன் கிராமங்கள் இத்தனை அவசரமாகத் தன் தனித்துவத்தை இழந்துவிட்டன. கிராமத்தின் அன்றைய முக்கியப் பிரச்சனை சாதி. அது ஒரு காலத்தில் அடங்கியிருந்த்து. இன்று மீண்டும் தலைதூக்கிவிட்டது.

எஙகள் ஊர் முழுவதும் வேப்பமரங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு மரம் பூக்காது. காய்க்காது. காரணம் அதற்கு ஒரு கதையிருந்தது. அது மாயமான கதை. அந்த மரத்தை நட்டுவைத்த பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். அதனால் மரம் காய்ப்பதில்லை என்றார்கள். இந்த மாயமும் நிஜமும்தான் நெடுங்குருதியில் வெளிப்படுகிறது.

உங்கள் படைப்புகளின் உள்ளடக்கம் தாண்டி வாசகர்களைப் பெருமளவு ஈர்ப்பது உங்கள் படைப்புகளுக்கு நீங்கள் இடும் தலைப்புகள். கட்டுரை, கதை, நாவல் எதுவாக இருந்தாலும் அவற்றின் கவித்துவமான தலைப்புகள் ஈர்க்கின்றன. துணையெழுத்து, நெடுங்குருதி, உறுபசி, யாமம் போன்ற தலைப்புகள் உடனடியாக நினைவில் எழுகின்றன. வசீகரமான தலைப்புகளைப் பிரக்ஞைபூர்வமாகத் தேடிச் சூட்டுகிறீர்களா அல்லது இயல்பாகவே அவை அமைந்துவிடுகின்றனவா?

ஒரு சிறுகதைக்குத் தலைப்பு வைப்பதற்காக மாதக்கணக்கில் காத்துக் கிடந்திருக்கிறேன். நாவலோ, கதையோ கட்டுரையோ எதுவாக இருந்தாலும் தலைப்பு மிக முக்கியமானது. கவித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அபூர்வமாகச் சில தலைப்புகள் உடனே தோன்றியிருக்கின்றன. நாவல்களைப் பொறுத்தவரை எழுதி முடிக்கும் வரை அதற்குத் தலைப்பு வைக்கமாட்டேன். அச்சிற்குப் போகும் முன்புதான் அதற்குத் தலைப்பு வைப்பேன்.

உண்மை. பாடப்புத்தகங்களில் நாம் கற்ற வரலாறு வேறுவிதமானது. நான் பண்பாட்டு வரலாற்றில் அதிகக் கவனம் செலுத்துகிறவன். அங்கே வரலாறு பண்பாட்டு நினைவுகளாக உருமாறியிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகள் இன்றும் வேறுவடிவில் நடைபெறுகின்றன. நான் வரலாற்றை ஒரு நீருற்று போல உணருகிறேன். தனக்குள்ளே பொங்கி வழிவதும் உயர்ந்து எழுதுவதாக இருக்கிறது.

‘சென்னையும் நானும்’ காணொளித் தொடர் சிறப்பாக அமைந்திருக்கிறது. உங்கள் துணையெழுத்துக் கட்டுரையில் சென்னையைப் பற்றி எழுதும்போது, “ஒரு கல்வெட்டைப் போன்றது ரயில் நிலையப் படிக்கட்டுகள். அதில் பதிந்துள்ள பாத வரிகளைப் படிப்பதற்கு இன்றும் வழியில்லை … நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போலச் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன் பணயமாக வைத்து ஆடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருட்கள் யாவும் காணாமல் போய்விடுகின்றன,” என்ற வரிகள் இடம்பெறுகின்றன. இன்றைய சென்னை எப்படியிருக்கிறது? இத்தனை வருடச் சென்னை வாழ்வில் மேலே இடம்பெற்ற துணையெழுத்து கட்டுரை வரிகள் அப்படியேதான் உள்ளனவா?

சென்னை எனக்குப் பிடித்தமான நகரம். இந்த நகரம்தான் என்னை எழுத்தாளனாக்கியது. என் அடையாளத்தை உருவாக்கியது. சென்னையில் அறையில்லாமல் பத்து ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்திருக்கிறேன். சென்னையின் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி அலைந்திருக்கிறேன். இந்த நகரை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் சென்னைவாசி என்று பெருமையாகச் சொல்வேன். அந்த நேசத்தின் அடையாளம் தான் ‘சென்னையும் நானும்’ காணொளித் தொடர்.

சென்னை நகரில் கனவுகளுடன் வசிப்பவர்கள் அதிகம். அந்தக் கனவுகளை நிறைவேற்றும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். தோற்றுப்போனாலும் இந்த நகரை நீங்கிப் போக மாட்டார்கள். புதிதாக யார் சென்னைக்கு வந்தாலும் நகரம் அவர்களைத் துரத்தவே செய்யும். ஆனால் விடாப்பிடியாக, உறுதியாக இந்த நகரின் மீது நம்பிக்கை கொண்டு இருந்துவிட்டால் அவருக்கான இடத்தை நகரம் உருவாக்கித் தரவே செய்யும். எத்தனையோ நல்ல நண்பர்களை இந்த நகரம் தந்திருக்கிறது. ஒரு தோழனைப் போலவே சென்னையைக் கருதுகிறேன்.

முக்கியமான உலக இலக்கியப் படைப்புகள் பெருமளவு தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், இன்றைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் தங்களுக்கு நிறைவளிக்கின்றனவா? இன்னும் தமிழில் மொழிபெயர்ப்புத் தேவைப்படும் உலக இலக்கியப் படைப்புகள் ஏதேனும் இருக்கிறதா?

மொழிபெயர்ப்புகள் நிறைய வெளியாவது ஆரோக்கியமானதே. ஆனால் வெறும் வணிகக் காரணங்களுக்காக மொழிபெயர்ப்புகள் இயந்திர ரீதியில் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மொழிபெயர்ப்பு நாவலைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அதில் மூல எழுத்தாளரின் பெயர் .இல்லை. போராடிக் கண்டுபிடித்து ஆங்கில மூலத்தை வாசித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாவலின் கடைசிப் பத்துப் பக்கங்கள் மொழிபெயர்க்கப்படவேயில்லை. அந்த மொழிபெயர்ப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்குக் கிடைத்த ஜெராக்ஸ் பிரதியில் அவ்வளவுதான் இருந்தது என்றார். ஒருவரும் அந்தத் தவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு சிறிய உதாரணம்.

இதற்கு மாறாக ஆண்டுக்கணக்கில் செலவிட்டு மொழிபெயர்ப்புச் செய்து மூலத்தோடு ஒப்பிட்டுத் திருத்தி வெளியிடுவதும் நடக்கவே செய்கிறது. க்ரியா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புகள் அதற்கு ஒரு உதாரணம்.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. அங்கீகாரமும் கிடையாது. ஆகவே பலரும் அதை இலக்கியச் சேவை என்றே செய்கிறார்கள். இன்னொரு பக்கம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்திற்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று படிக்கவே முடியாதபடி கொடுந்தமிழில் மொழியாக்கம் செய்தும் வெளியிடுகிறார்கள்.

க.நா.சுவின் மொழியாக்கங்கள் வரிக்கு வரி துல்லியமானதில்லை. ஆனால் கதையின் ஆன்மாவை மிக அழகாகக் கொண்டு வந்துவிடுகிறார். ரஷ்யாவிலிருந்து மொழியாக்கம் செய்த பூ.சோமசுந்தரம், கிருஷ்ணையா, நா, தர்மராஜன், முகமது ஷெரிப் போன்றவர்களை மிகவும் பாராட்டுவேன். இது போலவே வெ.ஸ்ரீராம், சிவக்குமார், எத்திராஜ் அகிலன், சா.தேவதாஸ், ஜி.குப்புசாமி, புவியரசு, யுவன் சந்திரசேகர், கணேஷ்ராம், செங்கதிர், சி.மோகன், ராஜகோபால், நம்பி, ரவிக்குமார், கல்பனா, நல்லதம்பி, எம்.கோபாலகிருஷ்ணன், ஜெயஸ்ரீ போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளை விரும்பிப் படிக்கிறேன். இவர்கள் பணி மிகவும் பாராட்டிற்குரியது.

சமகால இலக்கிய உலகில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகாத எழுத்தாளர் என உங்களை அழைக்கலாமா?

பெரும்பாலும் மருத்துவர்கள் சிறிய உலகில் வாழுகிறவர்கள். அவர்களுக்கு நோயிலிருந்து ஒருவரைக் குணப்படுத்தி நலமடையச் செய்வதுதான் முக்கியமானது. எழுத்தாளர்களில் நான் அந்த வகையைச் சேர்ந்தவன். எழுத்து மட்டுமே எனது வேலை. அதை மருத்துவம் போலவே நினைக்கிறேன். எழுத்துத் தாண்டிய சர்சைகள், சண்டைகளில் எனக்கு ஒரு போதும் ஈடுபாடு கிடையாது. எழுத்தாளனாக நான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் பொறுப்புணர்வைக் கற்பித்திருக்கிறார்கள். எழுத்தாளனாக என் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென இன்றும் வழிகாட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நாள் என்பது கிடைத்தற்கரிய பரிசு. அதை ஒரு போதும் வீணடிக்ககூடாது என்ற எண்ணம் கொண்டவன். அதை ஏன் சர்ச்சைகள் வீண்விவாதங்களில் வீணடிக்க வேண்டும் என்று நினைப்பேன்.

“பயணம்தான் என்னை எழுத வைத்தது,” என்று சொல்பவர் நீங்கள். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் உங்கள் பயணத் திட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என நினைக்கிறோம். ஊரடங்கு காலத்திற்குப் பின் உங்கள் பயண எல்லைகள் சுருங்கிவிடுமா?

சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு ஒரு பயணம், லண்டனுக்கு ஒரு பயணம் என்று திட்டமிட்டிருந்தேன். 2019இலேயே இதற்காகப் பணிகள் நடைபெறத் துவங்கியிருந்தன. ஏப்ரல் மற்றும் ஆகஸ்டில் செல்வதாக இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக யாவும் தடைபட்டுவிட்டது. இனி ஓராண்டிற்கு வெளிநாட்டுப் பயணங்கள் சாத்தியப்படாது. வட மாநிலங்களில் இன்னும் தொற்று அதிகமிருப்பதால் அங்கேயும் செல்ல இயலாது. சூழ்நிலை சரியானதும் மீண்டும் பயணிப்பேன்.

புதிய எழுத்தாளர்களின் சவால்கள் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சில கதைகள் திட்டமிடாமலே எழுதுபவனின் கைகளைப் பிடித்து முடிவை நோக்கி அழைத்துச் செல்கின்றன, சில கதைகள் எப்படி முட்டிப் பார்த்தாலும் நகர மறுக்கின்றன. பாதி எழுதிக் கிடப்பில் போடும் கதைகளும் நிறைய இருக்கின்றன. இவை யாவும் எழுத்துச் செயல்பாட்டில் இருக்கும் சவால்கள் என்றால், சில சமயம் எழுதுவதே சவாலாக இருக்கிறது. சோர்வு, பதட்டம், எழுதத்தான் வேண்டுமா என்ற எண்னம், writer’s block போன்றவற்றையெல்லாம் எதிர்கொள்ள உதவும் வகையில் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் எழுத்தனுபவத்திலிருந்து சில குறிப்புகள் அளிக்க இயலுமா?

நான் எழுத ஆரம்பித்த காலத்தில் ஒரு சிறுகதை பத்திரிக்கையில் வெளியாகக் குறைந்தபட்சம் ஆறுமாதம் அல்லது ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும். கதை வெளியான போதும் ஓர் எதிர்வினையும் இருக்காது. படித்தேன் என்றுகூட எவரும் சொல்லமாட்டார்கள். மூத்த எழுத்தாளர்களிடம் இருந்து பாராட்டுக் கிடைப்பது எளிதானதில்லை. காத்திருப்புதான் எழுத்தாளனின் முன்னுள்ள பெரிய சவால். அதை எதிர்கொண்டுதான் இன்று எனக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் இன்று ஓர் இளம் எழுத்தாளன் தன் முதற்கதையை எழுதியவுடன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறான். அடுத்தநாளே படித்துவிட்டீர்களா எனப் பாராட்டினை எதிர்பார்க்கிறான். கதையும் உடனே ஏதாவது ஓர் இதழில், இணையத்தில் வெளியாகிவிடுகிறது. அடுத்த நாள் எனக்கு ஏன் சாகித்ய அகாதமி விருது தர மறுக்கிறார்கள். என் படைப்புகள் குறித்து எதுவும் பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறான். சண்டை போடுகிறான். வேடிக்கையாக இருக்கிறது.

பேஸ்புக்கில் லைக் வாங்குவது போல எளிமையான விஷயமாக இலக்கியத்தை நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஒரு கதை எழுதிய உடனே என் வாசகர்கள் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிடும் துணிச்சல் ஆபத்தானது.

மிகச்சிறந்த கதைகளை, கவிதைகளை எழுதிவிட்டு அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ நல்ல படைப்பாளிகள் மௌனமாக இருக்கிறார்கள். ஆனால் இணையத்தின் வருகை எழுத்தாளர் என்ற சொல்லின் மரியாதையை மிகவும் மலினமாக்கிவிட்டது.

இன்று நிறையப் புதியவர்கள் எழுத வருவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் தான் எழுதியது மட்டுமே சிறப்பானது, தன் முன்னோடிகள் ஒன்றுமில்லை என்று அதிகாரமாக நடந்துகொள்கிறவரை என்ன செய்வது.

சென்ற ஆண்டு யாவரும் பதிப்பகம் பத்து இளம்படைப்பாளிகளின் புத்தகத்தை வெளியிட்டது. பத்து பேரையும் படித்து அவர்களைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன். அதில் ஒருவரைக்கூட எனக்கு முன்பரிச்சயம் கிடையாது. ஆனால் அவர்கள் படைப்பின் வழியேதான் அறிந்துகொண்டேன். இப்படி நான் எழுத வந்த காலத்தில் நடக்கவில்லை. என் சிறுகதை ஒன்றுக்கு சுந்தர ராமசாமி வாசகர் கடிதம் ஒன்றை சுபமங்களாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த நாளில் அது பெரிய அங்கீகாரம். இன்று அப்படியில்லை. நல்ல எழுத்து தேடிப் படித்து உடனே அங்கீகரிக்கப்படுகிறது. தமிழில் இன்று விருது பெறாத எழுத்தாளரைக் காண்பதுதான் அபூர்வம். அவ்வளவு விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைப் படிக்க வேண்டும். ஓவியம், இசை, நுண்கலைகள் எனப் பரந்த ஆர்வத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எழுத்தைத் தீவிரமாக எடிட் செய்து மேம்படுத்த வேண்டும். கதையில் வரும் தகவல்களைத் துல்லியமாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இசைக் கலைஞர்கள் எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் தினமும் சாதகம் செய்வது வழக்கம். அது எழுத்தாளர்களுக்கும் தேவையானதுதான்.

அடுத்தவரின் பாராட்டிற்காக மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள். அது போலவே எழுத ஆரம்பித்தவர்கள் எதற்காக எழுதுகிறேன், எதை எழுத விரும்புகிறேன் என்பதைத் தானே தேடி கண்டறிய வேண்டும். விரும்புவதை எல்லாம் எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.

தற்கொலை, விலைமாதர்கள், குற்றம் இந்த மூன்றைப் பற்றியே இளம் எழுத்தாளன் கதை எழுத ஆசைப்படுகிறான். இந்த மூன்றையும் எழுதுவது எளிதானதில்லை. ஆனால் இதன் கவர்ச்சி அவனை எழுதத் தூண்டுகிறது என்கிறார் ஆன்டன் செகாவ். இதைச் சொல்லி நூறு வருஷங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் மாறிவிடவில்லை.

இன்றைக்கும் நான் புதிய கதை எழுதும் முன்பு கவிஞர் தேவதச்சனிடம் அது குறித்துப் பேசுகிறேன். அவர் எனது கதைகள் கட்டுரைகளை வாசித்துத் தீவிர எதிர்வினை செய்து வருகிறார். இப்படியான ஆசான் உங்களுக்குத் தேவை. மாஸ்டர் இல்லாமல் நீங்கள் உருவாக முடியாது. யார் உங்கள் ஆசான் என்பது உங்களின் தேர்வு. நேரடியாக இப்படி உங்களுக்கு வழிகாட்டும் எழுத்தாளரைப் போல, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளரையும் உங்கள் வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். நான் ரஷ்ய எழுத்தாளர்களை அப்படி என்னுடைய மானசீக ஆசிரியர்களாக நினைக்கிறேன்.

ஒவ்வோர் ஆட்டத்திலும் டெண்டுல்கர் சதம் அடித்துவிடுவதில்லையே. சில ஆட்டங்களில் அவரும் முதல்பந்தில் அவுட்டாகியிருக்கிறார். அப்படித்தான் எழுத்தும். உங்களிடம் சிறந்த ஒன்றை எதிர்பார்ப்பது வாசகர்களின் விருப்பம். எல்லா நேரமும் அதை உங்களால் நிறைவேற்ற முடியாது என்பதே நிஜம். உங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்.

வாசகர்கள் புத்திசாலிகள். நிறைய விஷயங்களை நுட்பமாக அறிந்தவர்கள். அவர்கள் உங்களை எளிதாக அங்கீகரித்துவிட மாட்டார்கள். ஆனால் உங்களை அங்கீகரித்துவிட்டால் எளிதாக மறக்கமாட்டார்கள்.

எழுதும் போது பாதியில் நின்றுவிடுவதும், எழுத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதும் தீராத பிரச்சனைகள். இதற்குக் குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. வாசிப்புதான் இதற்கான வழிகாட்டி. சிறந்த கதைகளை, கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருந்தால் புதிய உத்வேகம் கிடைத்துவிடும்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் இந்த உலகத்தின் மீதுள்ள புகார்கள் வடிந்துவிட்டன, விரைவில் இல்லாமலே போய்விடக்கூடும் என்று சொன்னீர்கள். தற்போதைய நிலவரம் என்ன? இந்த மாற்றம்தான் முதிர்ச்சி அல்லது கனிவு என்று சொல்லப்படுகிறதா?

உலகின் மீதான புகார்கள் இருந்தபடியே தானிருக்கும். ஆனால் அதற்காகக் கோபம் கொண்டு மனதை வருத்திக் கொண்டிருக்க வேண்டாம் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். வயது நிறைய விஷயங்களைக் கற்றுத்தருகிறது. நிதானமாகச் செயல்படச் செய்கிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவி செய்கிறது. முழுநேர எழுத்தாளனாக வாழ்வதற்காக நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் மிக அதிகம். அதைப் பற்றிப் பேசியும் புகார் சொல்லியும் என்ன ஆகப்போகிறது. இது என் ஒருவனின் பிரச்சனையில்லை. நமது பண்பாடு கலையை, எழுத்தை நம்பி மட்டும் ஒருவன் வாழ முடியாது என்ற நிலையில்தானே வைத்திருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கு ஐநூறு ரூபாய் செலவு செய்யும் ஒருவன் புத்தகம் ’பி.டி.எஃப்பாக’ இலவசமாகக் கிடைக்குமா என மின்னஞ்சலில் கேட்கிறான். திருட்டுத்தனமாகக் கள்ளப்பிரதிகளை உருவாக்கிப் பகிர்ந்து தருகிறான். எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதுவும் கதை வெளியாகி ஆறுமாதம் கழித்துக் கிடைக்கும், பலநேரம் அதையும் தரமாட்டார்கள். பின்பு எப்படி முழுநேர எழுத்தாளராக வாழ்வது. நாள்பட நாள்பட மரம் உறுதியாகிக்கொண்டே வரும். எழுத்தாளனும் அப்படித்தான்…

ஒருமுறை உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த வாசகத்தை எழுதினீர்கள், “நமது கனவுகள் இந்த உலகை விடவும் பிரம்மாண்டமானவை, அதை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும்தான் நமது வேலை.” மிகுந்த உத்வேகத்தை அளித்த வரிகள். உங்களது கனவுகளை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்களா? தற்போதுள்ள கனவுகள் பற்றி?

கனவு காண்பதும் அதைப் பின்தொடர்ந்து செல்வதும்தானே வாழ்க்கை. அப்படி ஒரு கனவுதான் டால்ஸ்டாயின் வாழ்க்கையின் சில நிகழ்வுகளை விவரித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று விரும்பியதும். அதை இந்த ஆண்டு எழுதி முடித்துவிட்டேன். ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற அந்த நாவல் 2022 ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இந்த நாவலை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்ய வேலைகள் நடக்கின்றன. இது போலவே எனது ‘இடக்கை’ நாவலை செர்பிய மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். ‘யாமம்’ ஆங்கிலத்தில் வெளியாகிறது. எனது தேர்ந்தெடுக்கபட்ட சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. இப்படி நான் நீண்ட காலமாக ஆசைப்பட்ட கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்துள்ளன. ‘எனது இந்தியா’ போலக் காலனிய இந்தியா பற்றி விரிவான ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன். தமயாவும் காத்திருக்கிறாள். அது நீண்டநாள் கனவு.

****

நன்றி

அரூ இணைய இதழ் .அரூ ஆசிரியர் குழு

கணேஷ் பாபு கே.பாலமுருகன்

புகைப்படங்கள்

வசந்தகுமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2021 20:27

August 15, 2021

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி 2

(அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்)

நீங்கள் ஒவ்வொரு நாளும் வாசிப்பு மற்றும் எழுத்துக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? நடுவே சினிமாவுக்கும் எழுதுகிறீர்கள். பயணம் செல்கிறீர்கள். உலகச் சினிமாக்களைப் பார்க்கிறீர்கள். பதிப்பக வேலைகள், இதர பத்திரிக்கைகளுக்கான சிறுகதைகள், உரைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் ‘சென்னையும் நானும்’ போன்ற காணொளித் தொடர்கள். எப்படி இதைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்?

மேற்கத்திய எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி வாசித்தபோது அவர்கள் எழுதுவதற்காக, படிப்பதற்காக, பயணம் செய்வதற்காகத் தனித்தனி நேரம் ஒதுக்கிச் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். இந்தப் பழக்கத்தை என் கல்லூரி நாட்களில் இருந்தே கடைபிடிக்கத் துவங்கினேன்.

நான் தற்செயலாக எழுத வரவில்லை. எழுத்தாளன் ஆவது என்று மட்டுமே முடிவு செய்து அதற்காக என்னைத் தயார் செய்துகொண்டவன். எழுத்தை மட்டுமே நம்பி சென்னையில் வாழுபவன். முழுநேர எழுத்தாளன். அதன் சிரமங்களைச் சொன்னால் புரியாது. பொருளாதாரச் சிரமங்கள் அதிகம். ஆகவே நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று மிகக் கவனமாகச் செயல்படுவேன். படிப்பு. எழுத்து, பயணம், சிறிய நண்பர்கள் வட்டம், இது தான் எனது உலகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெகு அரிதாகவே பார்ப்பேன். இணையத்தில் தான் செய்திகளை வாசிக்கிறேன்.

Daily Rituals: How Artists Work by Mason Currey என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் எழுதினார்கள். எப்படி ஒரு நாளை வகுத்துக்கொண்டார்கள் என்று சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்கள். எழுத்தைப் போலவே எழுத்தாளர்களின் வேலை முறையும் விசித்திரமானதே.

எழுதத்துவங்கிய நாட்களில் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி காலை நாலு மணி வரை எழுதுவேன், பகலில் உறங்கிவிடுவேன். மதியம்தான் எழுவேன். பின்பு படிப்படியாக இரவில் எழுவதைக் குறைத்துக்கொண்டு காலை இரண்டு மணி நேரம், இரவு நான்கு மணி நேரம் என மாற்றிக்கொண்டேன்.

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய்த் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு ஓய்வு. அதில் வாசிப்பேன். இசை கேட்பேன். மனதில் சில நேரம் மேகமூட்டம் சூழ்ந்துவிடும். அது போன்ற தருணங்களில் உடனே பயணம் கிளம்பிவிடுவேன். நீண்ட தூர பயணங்களே எனது விருப்பம். இடிபாடுகளே என்னை வசீகரிக்கின்றன.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்னுடைய அறையில் மட்டும்தான் என்னால் எழுத இயலும். வேறு ஒரு புது இடத்தில் என்னால் ஒரு வரி எழுத இயலாது.

சிற்றிதழ்களும் வெகுஜன ஊடகங்களும் ஒன்றை ஒன்று தீண்டத் தகாதவையாகக் கருதும் சூழலைப் பற்றி உங்கள் கருத்து? இதில் மாற்றம் வேண்டுமா? என்ன செய்யலாம்?

உலகம் முழுவதும் இந்த இடைவெளி இருக்கிறது. அதை மாற்ற இயலாது. காரணம் இரண்டின் நோக்கங்களும் வேறுவேறு. ஆனால் இந்த இடைவெளி முன்பு இருந்ததை விடவும் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. எண்பதுகளில் அசோகமித்ரன், சா.கந்தசாமி, பிரபஞ்சன் கதைகள் குமுதம் விகடன் வார இதழ்களில் நிறைய வெளியாகியுள்ளன. அது மெல்ல வளர்ந்து இன்று தமிழில் எழுதும் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் வார இதழ்களில் கதையோ, கட்டுரையோ, கவிதையோ, அல்லது பத்திகளோ எழுதியிருக்கிறார்கள். சிறுபத்திரிக்கையாளர்கள்தான் அதிகமும் வார இதழ்களில் பணியாற்றுகிறார்கள். ஆகவே இந்த இடைவெளி முன்பைவிடக் குறைந்திருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு இதழ்களின் கவனமும் நோக்கமும் மாறிவிடவில்லை. அது முன்பைவிட இப்போது மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை மாற்றுவது எளிதானதில்லை.

சிறுபத்திரிக்கைகள் எப்போதும் போலத் தீவிரமாக மொழிபெயர்ப்புகள், கதை, கவிதைகள், நேர்காணல்கள் எனத் தனது தனித்துவத்துடன் இன்றும் வெளியானபடியே தான் இருக்கின்றன. இதன் மாற்றுவடிவம் போலவே இணைய இதழ்கள் வெளியாகின்றன. இணைய இதழ்களின் வருகையை நான் வரவேற்பேன். அது தரும் சுதந்திரம் மிகப்பெரியது

ஆனாலும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் வெற்று அபிப்ராயங்கள். வம்புகள். வெறுப்புகளைக் கொட்டுகிறார்கள். பொதுவெளியில் இவ்வளவு வசைகள், கேவலமான, அருவருப்பான பதிவுகளை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு காணமுடியாது. கோபமான விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் இது போன்ற தனிமனித தாக்குதல்கள். காழ்ப்புணர்ச்சிகள் வெளியானதில்லை.

காந்தியைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காந்தியைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களே மலிந்திருக்கும் இன்றைய சூழலில், அவரைக் குறித்து நேர்மறையாகவும், இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தி குறித்த கதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காந்தியை நீங்கள் எப்படி அறிமுகம் செய்துகொண்டீர்கள், உங்கள் வாழ்விலும் எழுத்திலும் காந்தியின் பாதிப்பு மற்றும் அவரை அறிந்துகொள்ள உதவும் சில முக்கியமான நூல்கள் இவற்றைப் பற்றி.

காந்தியின் மீது எப்போதுமே பெருமதிப்புக் கொண்டிருக்கிறேன். காந்தியின் பேச்சையும் எழுத்தையும் ஆழ்ந்து அறிந்திருக்கிறேன். காந்தியவாதிகள் பலருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். காந்தி குறித்துக் ‘காந்தியோடு பேசுவேன்’, ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ ஐந்து வருஷ மௌனம் என்று மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தற்போதும் ‘காந்தியின் நிழலில்’ என இணையத்தில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதி வருகிறேன். காந்தியைப் பின்தொடர்வது என்பது உண்மையைப் பின்தொடர்வதாகும். காந்தி மீதான எதிர்மறை விமர்சனங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் காந்தியைப் பற்றிப் பேசுவது எழுதுவது முக்கியமான செயல் என்று நினைக்கிறேன்.

காந்தி இன்று பொதுவெளியில் அற்பர்களால் அவமதிக்கபடுகிறார். காரணமில்லாமல் வெறுக்கப்படுகிறார். பொய்யான குற்றசாட்டுகள் அவர் மீது வைக்கப்படுகின்றன. காந்தி தன்னை ஒருபோதும் தேவதூதராகக் காட்டிக் கொள்ளவில்லை. அவரது பலவீனங்கள் யாவும் அவர் எழுதி உலகிற்குத் தெரிய வந்தவைதானே. அவர் தன்னுடைய தவறுகளை எப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். திருத்திக் கொண்டிருக்கிறார். இந்திய மக்களின் ஆன்மாவைப் புரிந்துகொண்ட மகத்தான ஆளுமையாகக் காந்தியைச் சொல்வேன்.

காந்தியின் தைரியம், பிடிவாதம், நம்பிக்கை மூன்றையும் முக்கியமானதாக நினைக்கிறேன். இந்த மூன்றும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால் அவர் கடைசி வரை தன் செயல்முறைகளில் உறுதியாக இருந்தார். பிடிவாதமாகத் தான் செய்ய நினைத்த நற்காரியங்களைச் செய்தார். தைரியமாகத் தன் கருத்துகளை வெளியிட்டார். களத்தில் செயல்பட்டார்.

காந்தி இந்தியாவிற்குக் காட்டிய வழியும் முன்னெடுப்புகளும் மகத்தானது. அதை இன்று நாம் தவறவிட்டுவிட்டோம் என்பது வருந்தக்குரியதே.

தமிழ், இந்திய மொழிகள் மட்டுமன்றி உலக இலக்கியத்திலும் சமகாலப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர் நீங்கள். தற்கால உலக இலக்கியத்தில் எம்மாதிரியான பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன? அவற்றில் எவை தமிழிலும் நிகழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?

உலகம் முழுவதுமே கதை சொல்லுதலை நோக்கியே இலக்கியம் திரும்பியிருக்கிறது. சமகால நாவல்கள் விரிவாகக் கதை சொல்லுகின்றன. தலைமுறைகளின் வாழ்க்கையை இதிகாசம் போலச் சொல்லுகின்றன.. இன்னொரு பக்கம் வரலாற்றை மீள்புனைவு செய்வது, தொன்மங்களைப் புதிய நோக்கில் எழுதுவது, அதிகாரத்திற்கு எதிராகக் குரலை ஒலிப்பது, பெருநகர வாழ்வின் தனிமையை, நெருக்கடிகளை எழுதுவது எனச் சமகால இலக்கியம் தீவிரமாகச் செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளைப் பெற்ற புத்தகங்களைப் பாருங்கள். நினைவுகளைத்தான் பிரதானமாக எழுதுகிறார்கள். தனிநபர்களின் நினைவுகள் என்று சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிடாமல் பண்பாடு, சமூகம், வரலாறு, இனப்பிரச்சனை எனப் பரந்த தளத்தில் நினைவுகளை எழுதுகிறார்கள். விசித்திரமும் யதார்த்தமும் ஒன்று கலந்த எழுத்துமுறையே உலகெங்கும் காணப்படுகிறது.

‘லிங்கன் இன் தி பார்டோ’ (Lincoln in the Bardo) என்ற அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸின் மான் புக்கர் பரிசு பெற்ற நாவல் வாழ்க்கைக்கும் மறுபிறப்புக்கும் இடையில் உள்ள இடைநிலையைப் பேசுகிறது. மாயமும் யதார்த்தமும் ஒன்று கலந்து நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் நிலத்தில் எழுதப்படாத விஷயங்கள் ஓராயிரம் உள்ளன. சங்க கால வாழ்வியலை முதன்மைப்படுத்தி நாவல் எழுதலாம், தமிழகத்திற்கு வந்த யவனர் கிரேக்க வாழ்க்கையைப் பற்றி எழுதலாம். தமிழகத்தில் இருந்த முக்கியமான இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், நாடக ஆசிரியர்கள் என எவரைப் பற்றியும் இலக்கியத்தில் விரிவாக எழுதப்படவில்லையே. மொசாம்பிக் எழுத்தாளரான Mia Couto நாவல்களைப் பாருங்கள். அளவில் சிறியது என்றாலும் எத்தனை புதியதாக இருக்கிறது. Javier Marías, Elena Ferrante, Carlos Ruiz Zafón, Alessandro Baricco, Annie Ernaux, Marilynne Robinson CeSar Aira நாவல்கள் புதிய கதைமொழியை, கதைக்களத்தைக் கொண்டிருக்கின்றன. அவை நமக்கு எதை எழுத வேண்டும் என்பதை அறிமுகம் செய்கின்றன. புதிய கதை சொல்லும் முறையை அடையாளம் காட்டுகின்றன.

உங்கள் பார்வையில் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து?

மிகச்சிறப்பாக எழுதக்கூடிய பெண்கள் நிறைய இருக்கிறார்கள். புக்கர் பரிசிற்காகப் பரிந்துரைப் பட்டியலைப் பாருங்கள். பெரும்பாலும் பெண் எழுத்தாளர்கள். அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளுக் (Louise Glück) தானே சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்றிருக்கிறார். இந்திய அளவில் நிறைய இளம் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். காத்திரமான கதைகளை, கவிதைகளை எழுதுகிறார்கள். முதல் நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளரான சல்மா லாகெர்லாவ் எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர். அவரைப் போலவே வில்லா கேதரை (Willa Cather) விரும்பி வாசித்திருக்கிறேன். மார்க்ரெட் யூரிசனாரின் (Marguerite Yourcenar) சிறுகதைகள் அற்புதமானவை. Isak Dinesen, Anna Akhmatova, Marina Tsvetaeva, Emily Dickinson, Virginia Woolf, Krishna Sobti, Mamoni Raisom Goswami, Qurratulain Hyder, இஸ்மத் சுக்தாய். அம்ரிதா ப்ரீதம், கமலாதாஸ், ஆண்டாள், வெள்ளிவீதியார், முத்துப்பழனி அம்பை, ஹெப்சிபா ஜேசுதான், கிருத்திகா, கே.ஆர். மீரா, சூடாமணி, தமிழ்செல்வி, சந்திரா, சசிகலாபாபு போன்ற படைப்பாளிகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

குடும்பம் குறித்த ஆணின் சித்திரமும் பெண்ணின் சித்தரிப்பும் வேறுவேறானவை. கிருஷ்ண சோப்தி ஞானபீட விருது பெற்ற பெண் எழுத்தாளர். அவரது நாவல்கள் பெண்ணின் காமம் குறித்துத் தீவிரமாகப் பேசுபவை. இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai) மீது நீதிமன்ற வழக்கு தொடுத்தார்கள். இன்றும் பெண்கள் எதை எழுத வேண்டும், எதை எழுதக்கூடாது என்ற பண்பாட்டு நெருக்கடிகள் இருக்கிறது. அதை எதிர்த்துப் போராடித்தான் எழுதுகிறார்கள்.

எங்கள் வாசிப்பில் இன்றைய நவீன சிறுகதைகளில் பெண்களை மையமாக வைத்து அல்லது பெண்ணின் கோணத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதியவர் நீங்கள். ‘அவரவர் ஆகாயம்’, ‘கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது’, ‘விரும்பிக் கேட்டவள்’, ‘அவளது வீடு’, ‘ஆண்கள் தெருவில் ஒரு வீடு’, ‘ஆண் மழை’, ‘பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்’, ‘சௌந்திரவல்லியின் மீசை’, ‘உனக்கு 34 வயதாகிறது’, ‘அம்மாவின் கடைசி நீச்சல்’, ‘காந்தியோடு பேசுவேன்’, ‘மழைப்பயணி’ போன்று நிறையக் கதைகளைச் சொல்லலாம். பெண்களின் உலகை இவ்வளவு நுட்பமாகவும் காத்திரமாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள். “பெண்களின் கதைகளைப் பெண்கள்தான் எழுதவேண்டும்,” என ஒரு கருத்து எழுத்துலகில் உலவுகிறது. இது குறித்து உங்கள் பார்வை?

அப்படி எந்தக் கட்டுபாடும் கிடையாது. பெண்கள் தங்களின் வலியை, உணர்ச்சிகளை எழுதும்போது இன்னும் துல்லியமாக, முழுமையாக எழுதக்கூடும். ஆனால் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, பிளாபெர்ட், துர்கனேவ் துவங்கி கூட்ஸி வரை அழுத்தமான பெண் கதாபாத்திரங்களை எழுதியவர்கள் நிறைய இருக்கிறார்களே. தமிழிலே புதுமைப்பித்தன், குபரா, ஜானகிராமன், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் கதைகளில் பெண்களின் அகம் மிகத் துல்லியமாக விவரிக்கபட்டிருக்கிறதே.

என் கதைகளில் வரும் பெண்கள் குடும்ப அமைப்பால் ஒடுக்கப்பட்டவர்கள். கடற்கன்னி வேஷமிடும் பெண்ணைப் பற்றிய ‘துயில்’ நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். எளிய கிராமத்துப் பெண்ணை ஒருவன் காட்சிப் பொருளாக்கி சம்பாதிக்கிறான். அவள் அந்தக் கடற்கன்னி உடையை அணிந்து கொண்டபிறகு மூத்திரம் பெய்யக்கூட எழுந்து போக முடியாது. அதைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது. ஷோ முடிந்து இரவில் அவள்தான் சமைக்க வேண்டும். அவளது மகனுக்குத் தன் அம்மா உண்மையில் கடலில் பிடிப்பட்ட மீனா, அல்லது நிஜமான பெண்ணா என்ற குழப்பம் உருவாகிறது. அவளுக்கே அந்த மயக்கம் உருவாகிறது. அவளது நெருக்கடியான வாழ்க்கை துயரைத்தான் துயில் விவரிக்கிறது.

‘சௌந்தரவல்லியின் மீசை’ கதையில் வரும் மாணவிக்கு லேசாக அரும்பியுள்ள மீசை மயிர்கள் தொந்தரவாக உள்ளன. கேலி செய்யப்படுகிறாள். படிப்பே நின்று போய்விடும் நிலை ஏற்படுகிறது. என் கதையில் வரும் பெண்கள் தாங்களாக மீட்சியைக் கண்டறிகிறார்கள்.

குடும்ப அமைப்பு தரும் அழுத்தத்தில் உழலும் பெண் கதாப்பாத்திரங்களின் மனவலியை நுட்பமாகப் படைத்தவர் நீங்கள். எஸ்ராவின் பெண்கள் பெரும்பாலும் குடும்ப அமைப்பில் சிதைந்தவர்களாகவோ அல்லது தனக்கான வெளியைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு ரகசியமாக அதனுள் சென்று அவ்வப்போது ஆசுவாசம் அடைபவர்களுமாகவே இருக்கிறார்களே. ஏன்?

அவ்வளவுதான் சாத்தியமாகியிருக்கிறது. புத்தகம் படிக்க மாட்டேன் என்று கணவருக்குச் சத்தியம் செய்து கொடுத்த ஒரு பெண் அவர் இறந்த பிறகும் அதே சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறார். அப்படி ஒரு பெண்ணை ஒரு முறை நான் சந்தித்தேன். யாராவது படித்துக் காட்டினால் கேட்டுக்கொள்கிறார். எது அவரை இன்றும் படிக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது. என் பாட்டி எழுபத்தைந்து வயதில் தனி ஆளாகக் காசிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். மொழி தெரியாது. கையில் காசு கிடையாது. ஆனால் எப்படியோ காசிக்குப் போய்ப் பத்து நாள் தங்கிச் சாமி கும்பிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால் அவரால் உள்ளூர் பஜாருக்குத் தனியே போக முடியாது. யாராவது துணைக்கு ஆள் போக வேண்டும். அந்தத் துணிச்சல் ஏன் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படவில்லை. அழகாகப் பாடத் தெரிந்த, நடனம் ஆடத்தெரிந்த எத்தனை பேர் திருமணத்திற்குப் பிறகு அந்தக் கலையை அப்படியே கைவிட்டிருக்கிறார்கள். என்றாவது ஆசைக்காக ரகசியமாக ஒரு பாட்டுப் பாடிக்கொள்வது மட்டும் ஏன் நடக்கிறது.

என் கதையில் வரும் பெண்கள் தங்கள் நெருக்கடியில் இருந்து விடுபடத் தாங்களே ஒரு வழியைக் கண்டுபிடித்துக்கொள்கிறார்கள். ‘அம்மாவின் கடைசி நீச்சல்’ கதையில் வரும் அம்மா கோபம் கொண்டால் நீண்ட நேரம் நீந்துகிறார். அவ்வளவுதான் அவரால் முடியும். இன்னொரு கதையில் பீங்கான் குவளையை உடைத்துவிட்டாய் என்று மனைவியைக் கணவர் மிக மோசமாகத் திட்டுகிறார். அவள் வாழ்நாள் முழுவதும் அவரை நிமிர்ந்து பார்ப்பதேயில்லை. இறந்த அவரது உடலைக்கூடக் குனிந்தே பார்க்கிறாள். இதைப் புறக்காரணங்களைக் கொண்டு மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

இலக்கியத்தைச் சினிமாவாக எடுக்கும்போது அது ஒரு போதும் இலக்கியப் படைப்பை மிஞ்சிவிட முடியாது எனத் தலையை உலுக்கிச் சொல்பவர்கள் ஒரு புறம் என்றால் சத்யஜித் ரேயின் ‘சாருலதா’ பார்த்ததில்லையா என மேதாவி சிரிப்புச் சிரிப்பவர்கள் மறு புறம் (இரண்டுமே அரூ குழுவில்தான் …) உங்கள் கருத்து என்ன?

இலக்கியத்தைச் சினிமாவாக எடுக்கும்போது மௌனவாசிப்பில் ஒருவர் அடைந்த அனுபவத்தை ஒரு போதும் தர இயலாது. ஆனால் மிகச்சிறந்த இயக்குநர்கள் நாவலில் நாம் பெற்ற அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தைத் திரையில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ‘பதேர் பாஞ்சாலி’ நாவலில் ரயிலை அபு காணும் காட்சி ஒரு அனுபவம் மட்டுமே. ரேயின் பதேர்பாஞ்சாலியில் அந்தக் காட்சி பரவசமாகிறது. டேவிட் லீன் இயக்கிய டாக்டர் ஷிவாகோ (Doctor Zhivago) பாருங்கள். நாவலை விடவும் படம் சிறப்பாக உள்ளது. இது போலவேதான் ஹிட்ச்காக் இயக்கிய திரைப்படங்கள். அந்த நாவல்களை வாசித்தால் இத்தனை திகிலும் பரபரப்பும் இருக்காது. அதே நேரம் தாரஸ் புல்பா, இடியட், கரமசோவ் சகோதரர்கள் போன்ற நாவல்கள் திரைப்படமாக வெளியாகி தோல்வியே அடைந்தன.

எந்த இலக்கியப் படைப்பினையும் அப்படியே படமாக்க முடியாது. அதைத் திரைக்கு ஏற்ப மாற்றம் செய்யும்போது இழப்புகளைத் தவிர்க்க முடியாது. அட்டன்பரோவின் காந்தி படத்தில் காந்தியின் இளமைக்காலம் குறித்து ஒரு காட்சிகூடக் கிடையாது. நேரடியாகப் படம் காந்தி சுடப்படுவதில் துவங்கித் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்யும் பிளாஷ்பே காட்சியாகித் திரும்பிவிடுகிறது.

காந்தியின் சத்தியசோதனை படித்தால் அதில் இளமைப்பருவம் எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது. ஏன் அந்தக் காட்சிகளை அட்டன்பரோ தேவையில்லை என்று நீக்கினார். இந்தியராக இருந்தால் நிச்சயம் அந்தக் காட்சிகளைக் குறைந்த அளவில் வைத்திருப்பார். ஆகவே படத்தின் இயக்குநர் யார் என்பதே அந்த இலக்கியப் படைப்பினை அவர் எப்படி வெளிப்படுத்துவார் என்பதைத் தீர்மானிக்கிறது.

தேவதாஸ் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். பலமுறை பலமொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. பிமல்ராயின் தேவதாஸ் ஒருவிதம் என்றால் நாகேஸ்வர ராவ் நடித்த தேவதாஸ் மறுவிதம். எனக்கு தெலுங்கில் உருவாக்கபட்ட தேவதாஸ் மிகவும் பிடிக்கும். அதே நேரம் அந்த நாவலைப் படித்துப் பார்த்தால் அதன் அனுபவம் வேறுவிதமானது. படம் தான் நாவலை உலகம் அறியச் செய்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தரும் அனுபவம் ஒருவிதம் என்றால் அந்த நாடகங்களை சிறந்த இயக்குநர்கள் மகத்தான கலைப்படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார்கள். Kenneth Branagh – Hamlet, Grigori Kozintsev – King Lear, Akira kurosawa – Ran, Baz Luhrmann – Romeo and Juliet பாருங்கள். எவ்வளவு சிறப்பாக உருவாக்கபட்டிருக்கின்றன என்பதை நீங்களே அறிவீர்கள்.

தொடரும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 19:35

August 14, 2021

எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்: பகுதி 1

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.(ஏப்ரல் 2021)

எஸ்.ராவின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் நண்பர் கணேஷ் பாபு நடத்திய நேர்காணல் .

அரூ குழுவின் சில கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவின் எழுத்து பயணம், வாசிப்பு, வரலாறு, பெண் கதாபாத்திரங்கள், மொழியாக்கம், உலக இலக்கியம், உலகத்தின் மீதுள்ள புகார்கள், காந்தி, கோணங்கி என நீளும் உரையாடல் கணேஷ் பாபு கொடுக்கும் அறிமுகத்துடன் துவங்குகிறது

•••.

எஸ்.ராமகிருஷ்ணன் தனியொரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஓர் இயக்கமாக வளர்ந்துள்ளவர். நடமாடும் நூலகம் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர். இன்றைய நவீன வாசகன் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அள்ளித் தரும் வற்றாத ஞான ஊற்று. உலக சினிமா, பயணம், சிறார் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள், வாசிப்பு, நாடகம் என இல்லாதது ஒன்றில்லை இவரிடம் இருந்து அறிந்துகொள்ள.

தமிழ் இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் இந்த இரண்டில் மட்டுமே மையம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் மத்தியில் இந்திய இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய எழுத்தாளர். இந்தியாவின் பிற மொழி இலக்கியங்களைக் குறித்து விரிவாக எழுதியவர். மட்டுமல்லாமல், சமகால இந்திய இலக்கியச் சிகரங்களைக் குறித்தும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர். ஒரு இலக்கியவாதியாக அனைத்து திசைகளின் சாளரங்களையும் திறந்து வைத்து விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்துக் கொண்டும் இருப்பவர்.

நவீன இலக்கியத்தில் மட்டுமே நிலைகொள்ளாமல், மரபிலக்கியங்களையும் ஆழக் கற்றவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் என இவரது மரபிலக்கிய வாசிப்பும் அவை சார்ந்து இவர் தரும் பல புதிய தகவல்களும் வியப்பினை அளிப்பவை

தன் படைப்புகளின் வழியே வரலாற்றைத் தொடர்ந்து விசாரணை செய்து அதன் இடைவெளிகளை நிரப்ப முயல்வதனாலேயே இவர் இலக்கியத்தைத் தாண்டி பண்பாட்டுப் பங்களிப்பையும் ஆற்றிச் செல்கிறார். முதல் நாவலில் மகாபாரத மீள்புனைவு, அடுத்த நாவலில் வெயில் எரியும் நிலத்தின் கள்ளர் வரலாறு, அதன் பின் சென்னையின் வரலாறு, இசைக் கலைஞர்களின் வரலாறு, டெல்லி சுல்தான்களின் வரலாறு எனத் தொடர்ச்சியாக வரலாறும், பண்பாடும், இலக்கியமும் சந்திக்கும் புள்ளிகளைத் தன் நாவல்கள் மூலம் கவனப்படுத்தியபடி இருக்கிறார்.

இவரிடம் எதைப் பேசுவது எதை விடுப்பது எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.

தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணியை போல இவரிடம் கேள்விகள் கேட்கக் கேட்க பதில்கள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. வெறும் பதில்கள் மட்டுமல்ல அவை. நமக்கான புதிய அறிதல்கள். புதிய வெளிச்சங்கள்.

••••

உங்கள் முதல் கதையான ‘பழைய தண்டவாளம்’ கதையிலிருந்து சமீபத்தில் எழுதிய ‘எளிதானது கோபம்’ வரையிலான உங்கள் பயணம் பல்வேறு திசைமாற்றங்களை உள்ளடக்கியதாக உள்ளது. யதார்த்தவாதக் கதைகளில் துவங்கிப் பின்நவீனத்துவக் கதைகளில் புதிய பாய்ச்சலை உண்டாக்கி மீண்டும் நவீன யதார்த்தமுறைக்கு மாறியிருக்கும் இப்பயணம் உங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

இதுவரை இருநூறு சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறேன். எதை எழுதுவது என்று முடிவு செய்கிறேனோ அதுவே வடிவத்தை, கதை சொல்லும் மொழியை, கதை கூறும் முறையைத் தீர்மானம் செய்கிறது. கதை எழுதும் முன்பு இதை ஓர் யதார்த்தக் கதையாக எழுதுவது அல்லது பின்நவீனத்துவக் கதையாக எழுதுவது என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். ஒரு கதை எழுதி முடிக்கப்படும்வரை என்ன மாற்றங்களை அடையும் என யாராலும் கணிக்க முடியாது.

சிறுகதை ஒன்றை எழுதி முடித்தவுடன் அதே விஷயத்தை வேறு பாணியிலும் எழுதிப் பார்ப்பேன். சில சமயம் இரண்டு வடிவத்தையும் ஒன்று சேர்ப்பேன். சில சமயம் இரண்டிலும் திருப்தியில்லாமல் மூன்றாவது விதமாக எழுதுவேன். ‘பால்யநதி’ என்ற சிறுகதையைப் பன்னிரெண்டு முறை திருத்தி எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சில பத்திகள் கூடும் அல்லது நீக்கப்படும். பெரும்பாலும் கதையை அச்சிற்கு அனுப்பும் வரை திருத்தம் செய்துகொண்டு தானிருப்பேன். அபூர்வமாகவே ஒன்றிரண்டு கதைகள் ஒரே தடவையில் எழுதி அவ்வளவுதான் என்று உணர்ந்திருக்கிறேன்.

குவார்னிகா (Guernica) வரைந்த பிகாசோதான் ஆடு ஒன்றையும் வரைந்திருக்கிறார். இரண்டிலும் அவரது முத்திரையிருக்கிறது. அவரே தன் கோடுகள் எவ்வாறு அரூபத்தை நோக்கிச்ச் செல்கிறது என்பதை வரிசையாக வரைந்தும் காட்டியிருக்கிறார்.

‘சிற்பியின் நரகம்’ எழுதிய புதுமைப்பித்தன்தான் ‘திருக்குறள் செய்த திருக்கூத்து’ சிறுகதையும் எழுதியிருக்கிறார். ‘செல்லம்மாள்’ கதையும் பெண்ணைப் பற்றியதுதான். காஞ்சனையும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் அதற்கிடையில் எவ்வளவு வேறுபாடு. பிகாசோவின் ஓவியங்களை early work, the Blue Period, the Rose Period, the African Period, Cubism, Neoclassicism, Surrealism, என வகைப்படுத்துகிறார்கள். வண்ணங்களைப் பயன்படுத்தும் விதத்திலிருந்தும் உருவங்களை வரையும் முறையிலும் இந்த மாற்றங்களைக் கண்டறிகிறார்கள். எழுத்தும் இது போன்றதே. நல்ல படைப்பாளியிடம் இது போன்ற நாலைந்து எழுத்து மாற்றங்களைக் காண முடியும், இதை ஒரு கலைஞனின் இயல்பான வளர்ச்சியாகவே நினைக்கிறேன்.

 நான் எழுத துவங்கிய எண்பதுகளில் சிறுபத்திரிக்கைச் சூழல் வலிமையாக இருந்தது. அதில் வெளியான சிறுகதைகளுக்கும் பெரிய இதழ்களில் வெளியான கதைகளுக்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரியது. அந்த நாட்களில் புதுமைப்பித்தன், வண்ணநிலவன், வண்ணதாசன், கு.அழகிரிசாமி கதைகளை மிகவும் விரும்பிப் படித்தேன். என் முதற்தொகுப்பிலுள்ள கதைகளில் அவர்களின் சாயல் இருக்கும். அந்தக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். நானும் கோணங்கியும் ஊர் ஊராகப் போய் இலக்கியவாதிகளைச் சந்தித்து லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிப் பேசினோம். விவாதித்தோம். ஓர் எழுத்தாளர் எங்களை லத்தீன் அமெரிக்க ஆவிகள் பிடித்து ஆட்டுவதாகத் திட்டி அனுப்பி வைத்தார். இன்னொருவர் எங்களைச் சந்திக்க மாட்டேன். நீங்கள் என்னைக் குழப்பிவிடுவீர்கள், அதன்பிறகு என்னால் கதை எழுத முடியாது என்று வீட்டின் வாசலோடு துரத்திவிட்டார். நாங்கள் எழுத்தாளர்கள் வீட்டுக் கதவைத் தட்டி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்டுவதை நிறுத்தவில்லை. வேடிக்கையான அனுபவங்கள். அப்போதே லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் பற்றி திருவண்ணாமலையில் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.

அந்த நாட்களில் திருவண்ணாமலைதான் எங்களின் மையம். நானும் கோணங்கியும் எந்த இரவில் பவா. செல்லதுரை வீட்டிற்குச் சென்றாலும் வரவேற்று உணவு தருவார். நாட்கணக்கில் தங்கி இலக்கியம் பேசுவோம். ‘ஸ்பானிய சிறகுகளும் வீரவாளும்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பு தயாரித்தோம். அதில் பாதி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகள். மீதி பாதி தமிழ்ச் சிறுகதைகள். இப்படி ஒரு தொகுப்பு வேறு இந்திய மொழிகளில் வெளிவந்திருக்குமா என்று தெரியாது. திருவண்ணாமலைக்கு ஜெயமோகன் வருவார். பாவண்ணன் வருவார். சுந்தர ராமசாமி வந்திருக்கிறார். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வந்திருக்கிறார். அன்றும் இன்றும் அது முக்கியமான இலக்கிய மையமாகவே இருக்கிறது.

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் புதிய கருப்பொருட்களைக் கண்டறியவும், புதிய கதை மொழியையும் கற்றுத்தந்தது. காப்காவின் ‘உருமாற்றம்’ கதையை வாசித்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அது தன் பாட்டி சொல்லும் கதையைப் போல விநோதமாக இருப்பதாகச் சொல்கிறார். அப்படித்தான் மார்க்வெஸை வாசித்தபோது நம் ஊர் கதைச் சொல்லியின் குரல் போல ஒலிப்பதாக உணர்ந்தேன். அவரது மேஜிகல் ரியலிசக் கதை சொல்லும் முறையின் மீது ஆர்வம் கொண்டு சிறுகதைகள் எழுதினேன். ‘தாவரங்களின் உரையாடல்’ கதை சுபமங்களாவில் வெளியானது. இன்று வரை அந்தக் கதை எனது முக்கியமான கதையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தக் கதையை வெளியிட்ட கோமலை இந்தத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். வேலையில்லாமல் அலைந்த என் மீது அவர் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

‘பால்யநதி’ மாறுபட்ட சிறுகதைகளைக் கொண்டது. ‘மழை மான்’ இன்னொரு விதம். இப்படி இருபது சிறுகதைத் தொகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கதை முறைகளைக் கையாண்டிருக்கிறேன். ‘நூறு கழிப்பறைகள்’ கதையை வாசித்திருக்கிறீர்களா. அது புதுவகைச் சிறுகதை. ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’, ‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’ முற்றிலும் புதியவகைச் சிறுகதைகள். ‘அவளது வீடு’ என்ற எனது சிறுகதையைப் படித்துவிட்டுச் சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் இருபதாயிரம் ரூபாய் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்தார்கள். ஒரு சிறுகதையை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்கள்.

இப்படி நான்கைந்து கதாகாலங்கள் எனக்குண்டு. அதை என் எழுத்தில் காணமுடியும். இன்று ஒரே தொகுப்பில் இந்த நான்கைந்துவிதமான எழுத்துமுறை கொண்ட கதைகளும் இடம்பெறுகின்றன.

ஒரு கதையைச் சொல்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. புதிய வழிகளை, புதிய கதை மொழியை, புதிய வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்க்கிறவனாகவே எப்போதும் இருக்கிறேன். அதே நேரம் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போலச் சிறுகதைக்கெனச் சில மாறாத வடிவங்கள் இருக்கின்றன. அதையும் அவ்வப்போது எழுதுகிறேன். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களும் தேவையாகத்தானே இருக்கின்றன.

ஒரு கதைக்குள் கதை என்று எதைச் சொல்கிறோம். நிகழ்வுகளை, அனுபவத்தை. அது பிரதிபலிக்கும் சமூக விஷயங்களைத்தானே. அதைத்தான் யதார்த்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் கதை என்பது அது மட்டுமில்லையே. இதுதான் சிறுகதை என்று எவராலும் வரையறை செய்துவிட முடியாது.

உள்ளூர் இசைக்கலைஞர் வயலினைப் பயன்படுத்தும் விதமும் நோக்கமும் வேறு. மொசார்ட் வயலினைப் பயன்படுத்தும் விதம் வேறு. ஒரே இசைக்கருவிதான், ஆனால் நீங்கள் யார் என்பதே உயர்ந்த இசையினை முடிவு செய்கிறது.

கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை, முன்பின்னான காலத்தை, நினைவுகளின் சிதறடிப்பை, ஆழமான மனவிகாரங்களை, பயத்தை, விசித்திரத்தை, விநோதமான கற்பனையைச் சொல்ல முற்படும்போது கதையின் சொல்முறை மாறிவிடுகிறது.

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை எழுதுவது சவாலான விஷயமே.

‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ தொகுப்பில் பல்வேறு விதமான பின்நவீனத்துவக் கூறுமுறைகளைக் கொண்ட கதைகள் இருந்தன. ‘ஏழு இறகுகள்’, ‘சோர் பஜார்’, ‘சாக்கியனின் பல்’, ‘நாளங்காடி பூதம்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். இப்போதும் அது போன்ற ஒரு தொகுதியைக் கொண்டுவரும் திட்டமுள்ளதா?

இந்த லாக்டவுன் நாட்களில் அப்படியான குறுங்கதைகளாக 125 கதைகளை எனது இணையதளத்தில் எழுதினேன். அந்தக் கதைகள் தற்போது ‘கர்னலின் நாற்காலி’ என்ற பெயரில் தனி நூலாக வெளிவரவுள்ளது. குறுங்கதைகள் மீது எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம். பெரும்பாலும் தீர்க்கதரிசகள், ஞானிகள், துறவிகள்தான் குறுங்கதைகளை அதிகம் சொல்லியிருக்கிறார்கள். அது ஓர் உபதேச வழி. ஆனால் அந்த வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய கதைக்கருவை, புதிய கதைமொழியை நான் முயன்று பார்த்திருக்கிறேன். ஜென் கதைகளில் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள் சிக்கல்கள் கிடையாது. பெரிய மாயமும் கிடையாது. இரண்டினையும் கலந்து ஜென் கதையின் மாற்றுவடிவம் போலச் சில குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன்.

முன்பு ‘நகுலனின் வீட்டில் யாருமில்லை’ என்று குறுங்கதைகள் மட்டுமே கொண்ட தொகுப்பினை வெளியிட்டிருக்கிறேன். அது சிறந்த வரவேற்பைப் பெற்றது.

மாயமும் யதார்த்தமும் ஒன்று சேர்ந்த சிறுகதைகளை இப்போது எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன். ‘போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்’ அப்படியான கதைதானே. ‘தண்ணீரின் திறவுகோல்’ சிறுகதையில் போர்ஹெஸ் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அமெரிக்கப் பல்கலைகழகத்தில் கவிதை வகுப்பெடுக்கும் அவரைத் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் கேள்வி கேட்கிறான். புனைவின் புதிய சாத்தியம் என்பது இது போன்றதுதானே.

நீங்கள் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு வாசிப்புத் திட்டம் தீட்டி அதைக் கண்டிப்பாகச் செயல்படுத்துபவர் என்று அறிவோம். தற்போது உங்களின் வாசிப்புத் திட்டம் என்னவாக இருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டில் என்ன படிக்கலாம் என்று ஒரு துறையை, பிரிவைத் தேர்வு செய்வேன். ஓர் ஆண்டு கிரேக்க இலக்கியம் படித்தேன். ஓர் ஆண்டு சீன இலக்கியம் படித்தேன். இன்னோர் ஆண்டு அடிப்படைத் தத்துவங்களை வாசித்தேன். இப்படிப் படிப்பதை Study என்று நான் கருதுகிறேன். கல்லூரியோடு Study முடிந்துவிடக்கூடாது என நினைப்பவன். ஆகவே வாழ்க்கை வரலாறு, பயணநூல்கள், ஜென் இலக்கியம், பௌத்த தத்துவம், ஐரோப்பிய இலக்கியம் என ஆண்டிற்கு ஒரு விஷயத்தைத் திட்டமிட்டு அதன் ஆதாரமான, அடிப்படையான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பேன். எத்தனை புத்தகம் என்று வரையறை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் முக்கியமான ஐம்பது புத்தகங்களை அந்த வகையில் படித்துவிடுவேன். இது தவிர, விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்கள், அனுப்பி வைக்கப்படும் புத்தகங்கள், கண்காட்சி தோறும் வாங்கும் புத்தகங்கள் என நிறைய வாசிப்பேன்.

எனது காரில், வீட்டில், படுக்கை அறையில், எழுதும் மேஜையில் எங்கும் புத்தகங்கள்தான். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. கிண்டில், இணையதள நூலகம் என எல்லா வழிகளிலும் படிப்பேன். மல்லாங்கிணர் என்ற சிற்றூர்வாசியான என்னைப் புத்தகங்கள்தானே இந்தப் பெரிய உலகினைப் புரிந்துகொள்ளச் செய்தது. என்னை எழுத்தாளராக்கியது.

ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் என்று நேரம் வகுத்துக்கொண்டு படிப்பதில்லை. கிடைக்கும் நேரமெல்லாம் படிப்பேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் சேர்ந்துவிட்டால் மாதம் ஒரு முறை சனி ஞாயிறு என இரு தினங்களை ஒதுக்கிச் சாப்பிடுவது படிப்பது என்று வாசிப்பிலே நாளைக் கழிப்பேன்.

பழைய புத்தகக் கடைகளை தேடிப் போவது எனக்கு விருப்பமான விஷயம். நிறைய பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். நல்ல புத்தகங்களை மிக குறைந்த விலைக்குத் தருவார்கள்.

தினமும் ஒன்றோ இரண்டோ கவிதைகள் படிப்பேன். ஒரு நாளைக்குத் தேவையான மகிழ்ச்சி அதிலிருந்து கிடைத்துவிடும்.

புத்த பிக்‌குணியின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதும் திட்டம் இருப்பதாக ஒரு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான உந்துதல் பற்றிச் சொல்லுங்கள். அந்த நாவல் எப்போது வெளிவரும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘தமயா’ என்றொரு நாவலை எழுதினேன். அது புத்தபிக்குணிகள் பற்றியது. பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது நாவல் நின்றுவிட்டது. அதை என் விருப்பத்திற்காக உடனே முடிக்க விரும்பவில்லை. ஆகவே அப்படியே விட்டுவிட்டேன். சில நாவல்களை எழுதுவதற்கு நாம் விரும்பினால் மட்டும் போதாது. அதற்கான மனநிலையும் அனுபவமும் ஞானமும் கிடைக்கும் போதுதான் எழுத முடியும். தமயாவிற்காக நானும் காத்திருக்கவே செய்கிறேன்.

‘நூலக மனிதர்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான கட்டுரைத் தொடரை தங்கள் வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நூலகத்தை மையமாக வைத்து, விசித்திரமான மனிதர்களும், விசித்திரமான அனுபவங்களும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. கிட்டத்தட்ட ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் வழங்கிய அதே அனுபவத்தை இந்தத் தொடரும் அளிக்கிறது. பத்திரிக்கைகளில் வாராவாரம் பத்தி எழுதுவதற்கும் உங்கள் தளத்திலேயே இது போன்ற சிறந்த கட்டுரைத் தொடரை வெளியிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என நினைக்கிறோம். ஒவ்வொரு வாரமும் காத்திருக்காமல் வாசகர் உடனடியாக இக்கட்டுரைகளை வாசித்து விடமுடிகிறது. உங்களுக்கும் அதிகம் எழுதுவதற்கான ஒரு வெளியை இது உருவாக்குகிறது என நம்புகிறோம். எதிர்காலத்திலும், இதைப் போன்று கட்டுரைத் தொடர்களை உங்கள் வலைத்தளத்திலேயே பிரசுரிப்பீர்களா?

விகடனில் அதிக கட்டுரைத்தொடர்கள் எழுதியது நானாகத்தான் இருக்ககூடும். சுஜாதா நிறைய தொடர்கதைகள் எழுதியிருக்கிறார். ‘கற்றதும் பெற்றதும்’ போல நீண்டகாலப் பத்தி எழுதியிருக்கிறார். ஆனால் ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘சிறிது வெளிச்சம்’, ‘கேள்விக்குறி’, ‘எனது இந்தியா’ என மாறுபட்ட பத்துக் கட்டுரைத் தொடர்களை எழுதியிருக்கிறேன். இதில் சில தொடர்கள் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகியிருக்கின்றன. ‘துணையெழுத்து’ மிகப்பெரிய அடையாளத்தை எனக்கு உருவாக்கித் தந்தது. இது போலவே தமிழ் இந்துவிலும் மூன்று கட்டுரைத்தொடர்கள் எழுதியிருக்கிறேன். இதற்கெனத் தனியே வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு வாசிப்பதற்கென்றே ‘நூலக மனிதர்கள்’, ‘காந்தியின் நிழலில்’, ‘காலைக்குறிப்புகள்’ என்று மூன்று கட்டுரைத் தொடர்களை எனது இணையத்தில் எழுதி வருகிறேன். இணையத்தில் வாசிப்பதற்கென்றே தனி வாசகர்கள் இருக்கிறார்கள். படித்துவிட்டு உடனே மின்னஞ்சல் எழுதுகிறார்கள்.

சராசரியாக ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பேருக்கும் மேலாக அந்தக் கட்டுரைகளை வாசிக்கிறார்கள். என்னுடைய இணையதளத்தில் எழுதுவது கூடுதல் சுதந்திரமாகவே உள்ளது. எனது இணையதளத்தைப் புதிதாக வடிவமைப்பு செய்துள்ளார்கள். ஆகவே புதிய தொடர்களை அதிலும் எழுதவே செய்வேன்.

‘நம் காலத்து நாவல்கள்’, ‘விழித்திருப்பவனின் இரவு’ போன்ற நூல்கள் பல்கலைக்கழகப் பாடங்களாக இடம்பெறும் தகுதிவாய்ந்தவை. உலக இலக்கியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய எவரும் இந்த நூல்களிலிருந்தே தங்கள் வாசிப்பைத் துவங்கலாம். இது போன்ற நூல்கள் எழுதுவதற்கான உந்துதல் என்ன?

நான் படித்த உலகின் சிறந்த புத்தகங்களை, எழுத்தாளர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன். என் நோக்கம் இளம்வாசகனை புதிய விஷயங்களை வாசிக்க வைப்பது மட்டுமே.

சென்ற ஆண்டுகூட விகடன் தடம் இதழில் சமகால உலகக்கவிஞர்கள் பற்றி ‘கவிதையின் கையசைப்பு’ என்ற தொடர் எழுதினேன். அது தனி நூலாக வந்துள்ளது. அதிலுள்ள கவிஞர்கள் சமகாலத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள். அவர்களின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளையும் சமயவேல் அவர்களின் உதவியோடு மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளேன்.

கொரியாவின் கோ யுன் கவிதைகளை விரும்பி வாசித்தேன். அவரை அறிமுகம் செய்து கட்டுரை எழுதினேன். இன்று அவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் கொண்டுவரப்போகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். வாசிப்பு இப்படித்தான் தொடர்செயலாக மாறும்.

‘உலகை வாசிப்போம்’, ‘மேற்கின் குரல்’, ‘நிலவழி’, ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. இவை தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிந்த ஓர் இளம்வாசகனுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து வைப்பவை. அந்த வகையில் க.நா.சுவே எனது முன்னோடி.

அவரது பரந்த வாசிப்பினை நினைத்து நினைத்து வியக்கிறேன். எப்படி அவரால் செல்மா லாகர்லெவைக் (Selma Lagerlöf) கண்டுபிடிக்க முடிந்தது. எப்படி அவரால் ரோஜர் மார்டின் தூ கார்டு (Roger Martin du Gard) எழுதிய தபால்காரனைக் (Vieille France) கண்டறிந்து மொழியாக்கம் செய்ய முடிந்தது. இன்றுள்ள எந்த வசதியும் இல்லாத நிலையில் படிப்பதற்காகவே அவர் பல நகரங்களுக்குப் போயிருக்கிறார். கிடைத்த பணத்தில் எல்லாம் புத்தகம் வாங்கியிருக்கிறார். பாரீஸிற்குச் சென்று ஆல்பெர் காம்யூவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். க.நா.சு நாம் கொண்டாட வேண்டிய மிகப்பெரும் ஆளுமை.

புதுமைப்பித்தன் தன் காலத்தின் முக்கியமான உலக எழுத்தாளர்களைத் தேடிப்படித்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். சி.சு.செல்லப்பா, க.நா.சு, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, பிரம்மராஜன் என முக்கிய படைப்பாளிகள் பலரும் உலகின் சிறந்த புத்தகங்களை வாசித்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே என் முன்னோடிகளின் வழியில்தான் நானும் செல்வதாக நினைக்கிறேன்.

இப்போது Annie Ernaux என்ற பிரெஞ்சு எழுத்தாளரை விரும்பிப் படித்து வருகிறேன். என்ன அற்புதமாக எழுதுகிறார். இவரது The Years, A Woman’s Story, A Girl’s Story முக்கியமான புத்தகங்கள். சமகாலத்தின் முக்கிய படைப்பாளி இவர். இப்படி தேடிப்படிப்பது வெறும் ஆசை மட்டுமில்லை. என்னை வளர்த்துக் கொள்ள இது போன்ற புத்தகங்களே உதவுகின்றன

தொடரும்….

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 19:23

பதினேழாவது ஆள்

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை

ராமநாதன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் புதிதாக ஒருவர் தோன்றியிருந்தார். அவர் யார். எப்படி புகைப்படத்தில் புதிதாகத் தோன்றினார் என்று வீட்டில் எவருக்கும் புரியவில்லை. அந்தப் புகைப்படம் 1986ல் எடுக்கப்பட்டது. அஜந்தா ஸ்டுடியோவில் பொங்கலுக்கு மறுநாள் எடுத்தது. சின்ன அக்கா கல்யாணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம். சுருள் முடியோடு பேரழகியாக இருக்கிறாள். அந்த புகைப்படத்தில் மொத்தம் பதினாறு பேர் இருந்தார்கள்.

ஆனால் பதினேழாவதாக ஒரு ஆள் சபரிமாமாவிற்கும் சொக்கர் அண்ணனுக்கும் நடுவில் எப்படித் தோன்றினார் என்று புரியவேயில்லை. ராமநாதன் புகைப்படத்தைச் சுவரிலிருந்து எடுத்து கிழிந்த துணியால் துடைத்துப் பார்த்தார். புதிதாகத் தோன்றியிருந்த ஆளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். ஒடுங்கிய முகம். இடது புருவத்தின் குறுக்கே வெட்டு தழும்பு இருந்தது, மெலிந்த உடல். கோடு போட்ட சட்டை. கறுப்பு பேண்ட். அப்படி ஒரு முகச்சாடை கொண்ட எவரும் தங்களின் குடும்பத்தில் கிடையாது. அப்படியானால் யார் இவன். எப்படி புகைப்படத்தில் தோன்றினான் என்று அவருக்குப் புரியவில்லை. கோவையில் வசிக்கும் சபரிமாமாவிற்கு போன் செய்து கேட்கலாம் என நினைத்தார். போனில் மாமாவின் லைன் கிடைக்கவில்லை,

ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு சபரி மாமாவிடமிருந்து போன் வந்தது. பேச்சை ஆரம்பிக்கும் “முன்பே நம்ம வீட்ல ஒரு குரூப் போட்டோ இருந்துச்சே“ என்று தான் ஆரம்பித்தார். “ஆமா“ என்று தெரியாதவர் போல கேட்டார் ராமநாதன். “அதுல புதுசா ஒரு ஆள் நிற்கிறது மாதிரி இருக்கு. பழைய போட்டோவில புது ஆள் எப்படி வர முடியும். நான் தான் இத்தனை நாள் போட்டோவை சரியாக பாக்கலையா“ என்று கேட்டார் சபரி மாமா

“அந்த ஆள் புருவத்துல தழும்பு இருக்கா“ என்று கேட்டார் ராமநாதன். “ஆமா. அது யாரு.. நமக்கு தெரிஞ்சவனா“..எனக்கேட்டார் சபரி மாமா

“எனக்கும் தெரியலை. ஆனா என் வீட்டு போட்டோவிலயும் அந்த ஆள் தோன்றியிருக்கான்“ என்றார்.

இந்த இருவர் மட்டுமில்லை. அந்த போட்டோ வைத்திருந்த ஐந்து குடும்பங்களிலும் அந்த இளைஞன் புதிதாக இணைந்திருந்தான். பகலிரவாக அவன் யாரென உறவினர்களிடம் விசாரித்தார்கள். யூகம் செய்தார்கள். பழைய ஆல்பங்களைத் தேடினார்கள். எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நாட்களில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் குடும்பத்தில் இருந்த சந்தோஷம். இளமைக்கால நினைவுகள். சொந்த ஊரில் வாழ்ந்த வாழ்க்கை பற்றி ஏக்கத்துடன் போனில் பேசிக் கொண்டார்கள். தற்கொலை செய்து கொண்ட கல்யாணி அக்காவை யாரும் இப்போது நினைப்பதில்லை என்பதைப் பற்றி குற்றவுணர்ச்சி கொண்டார்கள்.

கடைசியில் புதிதாகத் தோன்றிய இளைஞன் புகைப்படத்தில் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும், போட்டோ தானே என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவை அவர்கள் அடைந்த மறுநாள் காலை புகைப்படத்தில் இருந்த இளைஞன் மறைந்திருந்தான். அவன் உருவம் மறைந்த போது புகைப்படத்திலிருந்த கல்யாணி அக்காவும் மறைந்திருந்தாள். அது தான் ஏன் என எவருக்கும் புரியவில்லை. 

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 18:38

வாளும் மலரும்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை

சீனாவின் குயிங் வம்ச ஆட்சிக்காலத்தில் இது நடந்தது என்கிறார்கள். யுவான் ஷு என்ற அரசன் கவிதையிலும் இசையிலும் தன்னை மறந்திருந்தான். ஒரு நாள் லின் டேயு என்ற பெண் கவிஞர் அவனைத் தேடி வந்தாள். பேரழகியான அவளிடம் உன் கவிதைகளின் சிறப்பு என்னவென யுவான் ஷு கேட்டான். என் கவிதை மாயங்கள் செய்யக்கூடியது. அது உடைவாளை ஒரு மலராக மாற்றிவிடும் என்றாள். அவனால் நம்பமுடியவில்லை. அவள் ஒரு கவிதை சொன்னாள். மறுநிமிடம் அரசனின் உடைவாள் ஒரு மலராக மாறியது. ஒரு மலரைக் கையில் வைத்துக் கொண்டு எப்படிச் சண்டையிட முடியும் என்று புன்னகையுடன் கேட்டான் யுவான் ஷு. வாளால் வெல்லமுடியாததை மலரால் வெல்லமுடியும் என்றாள் லின் டேயு.

பேரழகியான அவளின் அழகிலும் கவிதையிலும் மயங்கி யுவான் அவளைக் காதலிக்கத் துவங்கினான். அவளது கவிதைகளைத் தேசமெங்கும் பாடும்படியாகக் கட்டளையிட்டான். தேசத்திலிருந்த வாள் குறுங்கத்திகள், ஈட்டிகள் யாவும் மலர்களாக உருமாறி விட்டன. உடைவாளுக்குப் பதிலாக மலர்களை ஏந்திவந்தார்கள் போர் வீரர்கள். அந்தத் தேசத்தில் போரே இல்லாமல் போனது.

லின் டேயுவின் மீது பொறாமையும் வெறுப்பும் கொண்ட மகாராணி அவளைக் கொல்வதற்காக உணவில் விஷம் கலந்தாள். ஆனால் அந்த உணவை லின் டேயு சாப்பிடவில்லை. உண்மை கண்டறியப்பட்டு மகாராணி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டாள். அவளது சகோதரன் ஜியா சிச்சுன் பழிவாங்குவதற்காக லின்டே யு ரகசியமாக ஒருவனைக் காதலிக்கிறாள் என யுவான் ஷுவை நம்ப வைக்க ஏற்பாடுகள் செய்தான். அதன் படி லின்டேயின் அறையில் ஆணின் உடைகளை ஒளித்து வைத்தான். அதைக் கண்டுபிடித்த யுவான் மனதில். சந்தேகத்தின் துளி விழுந்தது. அதன் பிறகு யுவான் அவள் கவிதைகளுக்கு வேறு பொருள் கொள்ள ஆரம்பித்தான். அவளைக் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தான்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு லின் டேயு தனது உடலில் புதிதாக மீனின் உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டாள். அது துரோகத்தின் அடையாளம் எனக் கருதிய யுவான் தன் கையாலே அவளது கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றான். சாவதற்கு முன்பு லின் டேயு ஒரு கவிதை சொன்னாள். மறுநிமிடம் அந்தத் தேசத்திலிருந்த எல்லா மலர்களும் ஆயுதங்களாக உருமாறின. கையில் கிடைத்த வாள். கட்டாரி, குறுங்கத்திகளைக் கொண்டு மக்கள் ஒருவரோடு ஒருவர் தாக்கி சண்டையிட்டு மடிந்தார்கள். யாரோ வீசி எறிந்த ஒரு மலர் குறுங்கத்தியாகி யுவான் ஷுவும் இறந்து போனான்

அதன்பிறகு லின் டேயுவின் கவிதைகளை யாரும் பாடக்கூடாது என்று அரசாங்கம் தடைவிதித்தது. சில ஆண்டுகளில் அந்தக் கவிதைகள் மக்கள் நினைவிலிருந்தும் மறைந்து போனது.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 18:33

பஷீரின் திருடன்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடில் வெளியான எனது குறுங்கதை

எத்தனையோ திருடர்களையும் போக்கிரிகளையும் பிச்சைக்காரர்களையும் சீட்டாடிகளையும் தனது கதைகளில் எழுதி மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கிறாரே பஷீர் அவர் ஏன் தன்னைப் பற்றி ஒரு கதை கூட எழுதவில்லை என்ற ஏக்கம் கள்ளன் யூசுப்பிற்கு நீண்டகாலமாக இருந்தது,

அவன் தான் வைக்கம் முகமது பஷீரின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தவன். அதில் சில்லறைக் காசுகளைத் தவிரப் பணம் ஏதுமில்லை என்று தெரிந்து அவரிடமே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தவன். அவனது திறமையைப் பாராட்டினாரே அன்றிப் பஷீர் அவனைக் கதையில் எழுதவில்லை.

அவன் இதைப்பற்றிப் பேசுவதற்காகச் சிலதடவை பஷீரை சந்தித்திருக்கிறான். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பஷீர் அவனிடம் தொழில் விருத்தியாக நடக்கிறதா என்று நலம் விசாரிப்பாரே அன்றிக் கதை எழுதுவதைப் பற்றிப் பேசவே மாட்டார். என்ன மனிதர் இவர் அற்ப திருடர்களை, மீசையில்லாத போக்கிரிகளை, பூனையைத் திருடும் அற்பர்களைப் பற்றி எழுதுகிறார். நமக்கு என்ன குறைச்சல் என்று யூசுப் அவரிடம் மாஷே என்னையும் ஒரு கதையில் நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்

அதற்குப் பஷீர் சிரித்தபடியே “சகாவே.. ஒரு திருடன் கதைக்குள் வருவது சாமானிய விஷயமில்லை. அதற்கு ஸ்பெஷலாக ஏதாவது விஷயம் இருக்க வேண்டும். “

அதைக் கேட்ட யூசுப் “என்ன செய்யணும் மாஷே.. சகா ஈஎம்எஸ் மூக்குக் கண்ணாடியைத் திருடி வரட்டுமா. இல்லை மகாராணியின் பல்செட் வேண்டுமா. ஜங்ஷனில் நிற்கும் ஜார்ஜ் மன்னர் சிலையைத் திருடிக் கொண்டு வர வேண்டுமா சொல்லுங்கள்“ என்றான்.

அதைக்கேட்ட பஷீர் “இதுவெல்லாம் சோட்டா திருடன் செய்யும் வேலை. அதைவிடப் பெரிய வேலை செய்யணும். உனக்கு முகமது முதலாளியின் சின்னமகள் சபீதாவை தெரியுமா..சுத்தமான பேரழகி. அவளது ஒரு முத்தத்தைத் திருடி வர முடியுமா.“.எனக்கேட்டார்.

அதைக் கேட்ட யூசுப் சொன்னான். “அது கஷ்டம் மாஷே. வேண்டுமானால் அவளையே தூக்கிக் கொண்டு வருகிறேன்.“

“அது கடத்தல்காரன் வேலை“ என்று மறுத்தார் பஷீர். “ஸ்ரீதரன் நாயரின் மனைவி இருக்கிறாளே.. அவளைப் பார்த்திருக்கிறாயா.. பெயர் அப்சரா. மாம்பழம் போலக் கன்னமிருக்குமே. அந்தச் சுந்தரியின் கனவுகளில் ஒன்றை திருடிக் கொண்டுவர முடியுமா“ என்று கேட்டார்.

கள்ளன் யூசுப் “கஷ்டம்“ என உதட்டைப் பிதுக்கினான். “நீ ஒரு உதவாக்கரை.. கோழி திருடும் நாராயணி இருக்கிறாளே.. தெரியும் தானே.. என் வீட்டிலே மூன்று கோழிகளைத் திருடிப் போயிருக்கிறாள். அவளது மூக்குத்தியைத் திருடி வர முடியுமா.“.எனக்கேட்டார் பஷீர்.

“அது முடியும் மாஷே. மூக்குத்தியைக் கொண்டு வந்தால் கதை எழுதுவீர்கள் தானே“

“கட்டாயம் எழுதுவேன். கோழி திருடும் நாராயணியும் கள்ளன்யூசுப்பும் என்று தலைப்பு வைக்கிறேன். போதுமா.“என்றார்.

“இது போதும். மூக்குத்தியோடு வருகிறேன். என்று சொல்லி யூசுப் சலாம் வைத்துப் போனான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு யூசுப்பை பேருந்தில் பஷீர் பார்த்தபோது உதட்டைப் பிதுக்கி இன்னும் காரியம் நடக்கவில்லை என்று ஜாடையாகச் சொன்னான். பின்பு ஒரு மழைநாளில் அவர் வீட்டிற்கு வந்து பெண்கள் விஷயத்தில் நமது திட்டங்கள் தோற்றுவிடுகிறது என்று சலித்துக் கொண்டான். இப்படியாக எட்டு மாதங்களும் பதிமூன்று நாட்களும் கடந்தபிறகு ஒரு இரவு அவன் மூக்குத்தியோடு வந்திருந்தான்.

“சபாஷ். நீ உண்மையிலே பெரிய கள்ளன் தான். யாரையும் கிட்ட நெருங்க விடாத நாராயணியின் மூக்குத்தியைத் திருடிவிட்டாயே“ என்று பாராட்டினார்.

யூசுப் தயக்கத்துடன் சொன்னான்.

“நான் திருடவில்லை மாஷே. அவளே கொடுத்துவிட்டாள்“.

“இது என்ன புதுக்கதை“ என்று கேட்டார் பஷீர். “நாராயணி வெளியே தான் நிற்கிறாள் வரச்சொல்லவா“ என்று கேட்டான் யூசுப். வரச்சொல் என்றார் பஷீர். தெருச்சண்டையில் கில்லாடியும் கோழி திருடுபவளுமான முரட்டுப் பெண் நாராயணி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வெட்கத்துடன் நின்றிருந்தாள். பஷீருக்கு விஷயம் புரிந்துவிட்டது.

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 00:20

August 11, 2021

வ. அதியமான் கவிதைகள்

சொல்வனம் இதழில் வ. அதியமான் எழுதும் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பான கவிதைகள். தனக்கான கவிதை மொழியினையும் குரலையும் கொண்டுள்ள இளங்கவிஞராக இருக்கிறார் அதியமான். இதுவரை அவரது கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் வழியே அவர் உருவாக்கும் சித்திரங்கள் எளிமையும் அழகும் கொண்டவை. மரபும் நவீனமும் இணைந்த கவிமொழியைக் கையாளுகிறார். ஒளியும் இருளும் கலந்த இந்தக் கவிதைகள் நெருக்கடிக்குள்ளும் வாழ்வின் இனிமையைப் பேசுகின்றன. ஜென் கவிதைகளில் அடையும் உணர்வுகளின் இன்னொரு நிலையைப் போலவே இந்தக் கவிதைகளை உணருகிறேன். அதியமானுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

••

ஒளிவிடும்

சின்னஞ்சிறு

கூழாங்கல்லும்

இருள் விழுங்கும்

பெருங்குன்றும்

குளிரக் குளிர

புனலாடி

அமர்ந்திருப்பது

ஒரே கரையில் தான்

••

ஒவ்வொரு

அதிகாலையிலும்

அதிசுத்தமாய்

கழுவி முடிக்கும்

என் கப்பரைக்கு

ஒவ்வொரு

அதிகாலையிலும்

எங்கோ ஓர் உலை

கொதிக்கிறது

••

முன்னமே

பிரிந்து சென்ற ஆடுகள்

குரல் கொடுப்பதும்

இல்லை

சொல் எடுப்பதும்

இல்லை

அவை மீளா பாதைகள்

என்பதறிவேன்

••

கடுந்துறவு

எதையும்

கடுகளவும்

இழப்பதில்லை

அந்தக் கிளைகள்

உலர உலர

அத்தனையும்

உதிர்க்கிறது

அவ்வளவு தான்

நுனி நாக்கு கூசும்

புளித்த காய்களை

அடி நாக்கு

இனிக்க இனிக்க

கனியாக்கி தருவது

எவனுடைய எச்சில்?

எந்தக் கவலையும்

இல்லை அதற்கு

பூத்து

காய்த்து

கனிந்து

காம்புதிர்த்தால் தான்

என்ன?

ஒரு கணமும்

ஓய்வதில்லை

தலைக்கு மேல்

வானத்தைச்

சூடிக்கொண்ட

அந்தக் கிளைகளின்

நடனம்

•••

சொல்

இன்று

ஏன்

இத்தனை

கூடுதலாக

பற்றி எரிகிறது

இந்த

நட்சத்திரங்கள்?

இருள் முழுத்த

இந்த இரவு

விடிவதற்குள்

எதையாவது

யாருக்காவது

சொல்லி

தீர்த்துவிட

அவைகளுக்கு

ஆணை

இடப்பட்டிருக்கிறதா

என்ன?

ஒரு சொல்

கொண்டு

எரிந்து

முடித்து

கரிந்து

மரிக்கவா

இத்தனை

மினுக்கும்?

••••

தோன்றாத் துணை

எந்த

ஞானியரின்

ஒளியும்

உடன் வரவில்லை

கட்டக் கடைசியாக

இந்தக் கணத்தில்

துணிந்துவிட்டேன்

தன்னந்தனியே

நானொரு

சாகரத் தோணி

என்னிலும்

நீ இன்று

துணிந்துவிட்டாய்

திருவிழாவின்

பெருந்திரளோடு

நீ அதில்

சாகசப் பயணி

••

கரும்பொன்

அந்த

சூதாடிக் கிழவனின்

மூக்குப்பொடிச்

சிமிழினை

எப்படியும்

இன்று

திறந்து பார்த்துவிட

வேண்டும்

வென்றாலும்

தோற்றாலும்

ஒரு போதும்

தாழ்வதில்லை

அவன் தலை

அவனை

நிலம் தாங்கும்

அந்த

பணயப் பொருளை

அதில் தான்

பதுக்கி

வைத்திருப்பதாக

எல்லோரும்

சொல்லிக் கொள்கிறார்கள்

அவன்

உறங்கா விழிகள்

சிறு குருவிகளின்

மழலையில்

ஒரு கணம்

நின்று

உறைகிறது

விரைந்து

எடு

ஓசை எழாது

திற திற

தேவதைகள்

கந்தர்வன்

பூதங்கள்

ஆவிகள்

எதுவும்

காணக்கிடைக்கிறதா?

எதுவுமே

இல்லையா?

பிறகு?

குன்றா

கரும்பொன்

இரவுகளை

பட்டுத் துணிபோல

சுருட்டி

வைத்திருக்கிறான்

***

யசோதா

தேகமெங்கும்

குரல் முளைத்து

கூவி நிற்கிறாய்

கொள்ளும் செவிகள்

திரும்ப வருமென

இடுப்பில் கையூன்றி

உறுதியாய்

காத்திருக்கிறாய்

அமரும் குருவியல்ல

இந்தக் கிளையில்

அத்தனையும்

பறக்கும் குருவிகள்

கரிய யமுனையில்

நாங்கள்

நர்த்தனமிட

காளிங்கன்

மட்டுமல்ல

கோபியர்களும்

துயில் கலைந்தனர்

துகில் மறந்தனர்

பீலி சூடும்

குழலோன்

சிறு குழலூதி

புவனங்களை

மேய்த்துவர

கிளம்பிவிட்டான்

அவன் நீங்காநிழல்

நாங்கள்

ஒன்று செய்

இனி உன்

வாய்ச்சொற்கள்

யாவையும்

நெய் வடியும்

அக்கார அடிசிலாக்கு

அப்போது

உன் கிளைக்கு

எங்கள் சிறகுகளை

அமர்த்துவான்

அந்த அழகன்

***

நன்றி

சொல்வனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2021 20:38

ஜெயகாந்தனுடன்

2012ல் ரஷ்யக் கலாச்சார மையம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடந்த விழாவில் ஜெயகாந்தன் அவர்களால் கௌரவிக்கப்பட்டேன். அந்தப் புகைப்படத்தை நேற்று நண்பர் தங்கப்பன் மெயிலில் அனுப்பியிருந்தார். ஜேகே அவர்களுடன் பழகிய நாட்களை நினைத்துக் கொண்டேன். அபூர்வமான மனிதர். அரிய புகைப்படம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2021 05:02

August 10, 2021

சிறிய உண்மைகள் 6 மண்டோவின் அதிசயம்

சதத் ஹசன் மண்டோவின் குறுங்கதைகளில் பெரும்பான்மை பிரிவினையின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தை முன்வைத்து எழுதப்பட்டவை. வீடு புகுந்து கொள்ளையடிப்பது. தீவைப்பது. கூட்டமாகச் சேர்ந்து அப்பாவிகளைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது போன்றவற்றை மண்டோ உண்மையாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு கதையில் ஒரு வீட்டினை கொள்ளையடிக்கக் கும்பல் ஒன்று திரண்டு போகிறார்கள். ஒரு ஆள் கதவை ஏன் தேவையில்லாமல் உடைக்கப் போகிறீர்கள். நானே திறந்துவிடுகிறேன் என்று திறந்துவிடுகிறான். இது போலவே வீட்டில் உள்ள நகை பொருட்களை எடுத்து அவர்களிடம் ஒப்படைக்கிறான். எந்தப் பொருளையும் சிதைக்க அவன் அனுமதிக்கவில்லை. பொறுப்பாக அவர்களுக்கு உதவி செய்கிறான்.

கதையின் முடிவில் நீ யார் என்று கும்பலின் தலைவன் கேட்கிறான். நான் தான் இந்த வீட்டின் உரிமையாளர் என்கிறான் அந்த ஆள்.

ஒரு ஆள் தன்வீட்டை யாரோ கொள்ளையடிக்க அமைதியாக உதவி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனது அவனுக்கு எப்படி வந்தது. ஏன் அவன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கும்பல் தன்னைக் கொன்றுவிடும் என்ற பயம் தான் அவனைப் பணிந்து போகச் செய்கிறது. அவன் உயிர்வாழ்ந்தால் இந்தச் சொத்தை, வீட்டைச் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறான். அவனது பணிவு ஒரு தந்திரம். உபாயம். ஆனால் ஒவ்வொரு பொருளை அவர்கள் அபகரித்துக் கொள்ளும் போதும் அவனுக்குள் வலித்திருக்கும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

உழைத்துச் சேர்த்து வைத்திருந்த பொருட்களை, சேமிப்பினை கண்முன்னே மௌனமாகப் பறிகொடுப்பது என்பது தாளமுடியாத வேதனை. கோபத்தை அடக்கிக் கொள்வது ஒரு கலை. அந்த மனிதனின் சிறிய முகச்சுழிப்பு கூடப் பெரிய எதிர்வினையை உருவாக்கிவிடும் என்று அறிந்திருக்கிறான். ஆகவே . யார் வீட்டையோ கொள்ளையடிப்பதற்கு உதவி செய்பவன் போல நடந்து கொள்கிறான். எதிர்ப்பு இல்லாமல் கொள்ளையடிப்பது கலவரக்கும்பலுக்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது. அவர்கள் காரணமில்லாமல் கொல்வதில் ருசி கொண்டிருக்கிறார்கள். அது தான் கலவரத்தின் நிஜமான மனநிலை.

இன்னொரு கதையில் கலவர நேரத்தில் பலரும் கிடைத்த பொருட்களைக் கொள்ளையடித்துத் தன் வீட்டில் பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். திருட்டுப் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் திருடிய பொருட்களை வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

எதையும் திருடாதவர்கள் கூடத் தங்கள் சொந்தப் பொருட்களில் ஒன்றிரண்டைத் தூக்கி எறிகிறார்கள். காரணம் அப்படிச் செய்யாவிட்டால் அரசாங்கம் நம்பாது என்பது தான்.

ஒருவன் இரண்டு மூட்டை சர்க்கரையைக் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்திருக்கிறான். அதை எப்படி வெளியே கொண்டு போவது எனத் தெரியாமல் தன்வீட்டுக் கிணற்றில் கொண்டு போய்ப் போட முயல்கிறான். ஒரு மூட்டையைக் கிணற்றில் போட்டுவிடுகிறான். மறுமூட்டையைப் போடும் போது அவனே தவறி கிணற்றினுள் விழுந்துவிடுகிறான்.

உதவி கேட்டு அவன் கூப்பாடு போட்டும் யாரும் வரவில்லை. பின்பு கிணற்றில் விழுந்துகிடந்த அவனை ஆட்கள் கண்டுபிடித்து மீட்கும் போது இறந்து போயிருந்தான். ஆனால் அந்தக் கிணற்றுத் தண்ணீர் இனிப்பாக மாறியிருந்தது.

அவ்வளவு தான் மக்கள் அந்தக் கிணற்றை வழிபடத்துவங்கிவிட்டார்கள் என்று மண்டோவின் கதை முடிகிறது.

இந்தக் கதையில் வரும் சர்க்கரை மூட்டையைத் திருடியவன் ஒரு விநோதமான ஆள். கலவர நேரத்தில் எதற்காக ஒருவன் இரண்டு மூட்டை சக்கரையைக் கொள்ளையடிக்கிறான். அதை என்ன செய்வான். விற்பதற்காக வைத்திருக்கிறானா. இல்லை ஆசை தீர இனிப்புச் செய்து சாப்பிட நினைக்கிறானா. அதைப் பற்றி மண்டோ விளக்கவில்லை. ஆனால் அவன் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற பதைபதைப்பில் சர்க்கரை மூட்டையைக் கிணற்றில் கொண்டு போய்ப் போடப்பார்க்கிறான். ஆனால் விஷயம் தலைகீழாகிவிடுகிறது.

சர்க்கரை மூட்டையால் தான் கிணற்றுத் தண்ணீர் இனிப்பானது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த அற்புதம் அவர்களுக்கு வியப்பளிக்கிறது. ஒரு கலவரத்தின் ஊடாக அற்புதம் உருவாவது கலையில் மட்டுமே சாத்தியம்.

இந்தக் கதையை வாசிக்கத் துவங்கும் போது அது இப்படி முடியும் என யூகிக்க முடியாது. அது தான் மண்டோவின் மேதமை. நெருக்கடியின் போது மனிதர்கள் நடந்து கொள்ளும் விதம் வியப்பானது. யார் எப்படி இருப்பார்கள் என்று முடிவு செய்யமுடியாது.

பிரிவினையின் போது நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் ஏராளம். வேலையாட்களே எஜமானனைக் கொன்று அவரது வீட்டை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்பதால் விரும்பிய பெண்களை அடித்துச் சித்ரவதை செய்து வன்புணர்வு கொண்டிருக்கிறார்கள். இறந்த பெண்ணின் பிணத்தோடு உடலுறவு கொண்டவனைப் பற்றியும் மண்டோ எழுதியிருக்கிறார்.

இந்தக் குறுங்கதையின் ஊடாக எதையும் திருடாதவர்கள் தன் சொந்த பொருளை வீசி எறிந்து அரசின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள் என்பதில் மண்டோவின் கேலியான விமர்சனம் வெளிப்படுகிறது.

இன்னொரு கதையில் முச்சந்தியில் உள்ள ஒரு தலைவரின் சிலையினைக் கூட்டம் ஏறி உடைக்கிறது. முகத்தில் தார் பூசுகிறது. சிலையின் கைகளைத் துண்டாடுகிறது. அப்போது கலவரக்காரர்களில் ஒருவன் தவறி கீழே விழுந்துவிடுகிறான். அடிபட்டு ரத்தம் சொட்டும் அவனைச் சிலையாக நிற்கும் தலைவரின் நினைவாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு போகிறார்கள் என்று கதை முடிகிறது.

கலவரத்தில் யாரும் எதையும் தெரிந்து செய்வதில்லை. அது ஒரு கொந்தளிப்பு. அந்த அலையின் வேகம் அவர்களை இழுத்துக் கொண்டு போகிறது.

நெருக்கடிகளின் போது மனிதர்கள் மிகுந்த சுயநலத்துடன் நடந்து கொள்வதே இயல்பு. அது போன்ற தருணங்களில் நீங்கள் காட்டும் அன்பும் உதவியும் தான் உங்களின் மேன்மையை, கருணை வெளிப்படுத்துவதாக அமையும். வயது வேறுபாடின்றி ஆண்கள் கலவரத்தில் ஒன்று போலவே பெண்களிடம் குரூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாகச் சொல்கிறார் மண்டோ.

Garm Hava என்ற எம்.எஸ்,.சத்யூ இயக்கிய படத்தில் ஒரு இஸ்லாமியக் குடும்பம் பாகிஸ்தானுக்குச் செல்ல விருப்பமின்றித் தாங்கள் பிறந்து வளர்ந்த இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள். குடும்பத்தின் தலைவரான சலீம் மிர்சாவுக்குச் சொந்தமாகக் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் வேலை செய்த பலரும் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். அத்துடன் வங்கி அவர்களுக்குக் கடன் கொடுக்க மறுக்கிறது. குடும்பத்திற்குள்ளாகவே பாகிஸ்தானுக்கு ஏன் போகக்கூடாது என்ற சச்சரவு ஏற்படுகிறது.

ஆக்ராவைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப் படம், இந்தியப் பிரிவினைக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு முஸ்லீம் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திக்கும் நெருக்கடிகளை மிகச்சிறப்பாக விவரிக்கிறது

மிர்சாவின் குடும்பம் ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறது. காந்தியின் மரணத்தின் பின்பு அமைதியும் நல்லிணக்கமும் விரைவில் திரும்பும் என்று மிர்சா நம்புகிறார்,

வங்கிகள் மற்றும் வட்டிக்கடை நடத்துபவர்கள் முஸ்லீம் வணிகர்கள் கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள். தொழிற்சாலை நடத்த நிதி வசதியின்றி நெருக்கடி ஏற்படுகிறது. இதில் அவரது வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

மிர்சாவின் சகோதரர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து போனதால் அவர்களின் பாரம்பரிய வீடு இப்போது அரசாங்கத்தின் கைக்குப் போய்விடுகிறது. இதனால் வீட்டைக் கையகப்படுத்த அரசு முயல்கிறது. மிர்சாவின் குடும்பத்தை அந்த வீட்டை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துகிறார்கள். , இதை மிர்சாவின் வயதான தாயால் ஏற்கமுடியவில்லை. வேறு வழியின்றி ஒரு வாடகை வீட்டிற்கு அவர்கள் மாறுகிறார்கள். இந்த வேதனைகளைத் தாங்கமுடியாமல் மிர்ஸாவின் தாய் மரணமடைகிறார். மிர்சா குடும்பம் காற்றில் அடித்துச் செல்லப்படும் மணல் போலாகிறது

இந்தக் கதை பிரிவினைக்குப் பின்பு இந்தியாவிலிருந்த சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது

அரசியல் காரணங்களுக்காக உண்மைகள் மறைக்கப்பட்ட போது கலையும் இலக்கியமும் தான் பிரிவினையின் துயரத்தை உண்மையாகப் பதிவு செய்திருக்கின்றன. இன்றும் அந்த அழியாத நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பார்கள். வரலாறு என்பது யாரோ எழுதிப்போன வரலாற்றுப் புத்தகமில்லை. இது போன்ற இலக்கியப் பதிவுகளே வரலாற்றின் உண்மையான சாட்சியங்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2021 05:32

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.