S. Ramakrishnan's Blog, page 117

August 14, 2021

எஸ்.ராமகிருஷ்ணன் நேர்காணல்: பகுதி 1

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.(ஏப்ரல் 2021)

எஸ்.ராவின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் நண்பர் கணேஷ் பாபு நடத்திய நேர்காணல் .

அரூ குழுவின் சில கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ராவின் எழுத்து பயணம், வாசிப்பு, வரலாறு, பெண் கதாபாத்திரங்கள், மொழியாக்கம், உலக இலக்கியம், உலகத்தின் மீதுள்ள புகார்கள், காந்தி, கோணங்கி என நீளும் உரையாடல் கணேஷ் பாபு கொடுக்கும் அறிமுகத்துடன் துவங்குகிறது

•••.

எஸ்.ராமகிருஷ்ணன் தனியொரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஓர் இயக்கமாக வளர்ந்துள்ளவர். நடமாடும் நூலகம் என்ற வார்த்தைக்கு மிகப் பொருத்தமானவர். இன்றைய நவீன வாசகன் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அள்ளித் தரும் வற்றாத ஞான ஊற்று. உலக சினிமா, பயணம், சிறார் இலக்கியம், வரலாறு, நுண்கலைகள், வாசிப்பு, நாடகம் என இல்லாதது ஒன்றில்லை இவரிடம் இருந்து அறிந்துகொள்ள.

தமிழ் இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் இந்த இரண்டில் மட்டுமே மையம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் மத்தியில் இந்திய இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய எழுத்தாளர். இந்தியாவின் பிற மொழி இலக்கியங்களைக் குறித்து விரிவாக எழுதியவர். மட்டுமல்லாமல், சமகால இந்திய இலக்கியச் சிகரங்களைக் குறித்தும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருபவர். ஒரு இலக்கியவாதியாக அனைத்து திசைகளின் சாளரங்களையும் திறந்து வைத்து விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்துக் கொண்டும் இருப்பவர்.

நவீன இலக்கியத்தில் மட்டுமே நிலைகொள்ளாமல், மரபிலக்கியங்களையும் ஆழக் கற்றவர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் என இவரது மரபிலக்கிய வாசிப்பும் அவை சார்ந்து இவர் தரும் பல புதிய தகவல்களும் வியப்பினை அளிப்பவை

தன் படைப்புகளின் வழியே வரலாற்றைத் தொடர்ந்து விசாரணை செய்து அதன் இடைவெளிகளை நிரப்ப முயல்வதனாலேயே இவர் இலக்கியத்தைத் தாண்டி பண்பாட்டுப் பங்களிப்பையும் ஆற்றிச் செல்கிறார். முதல் நாவலில் மகாபாரத மீள்புனைவு, அடுத்த நாவலில் வெயில் எரியும் நிலத்தின் கள்ளர் வரலாறு, அதன் பின் சென்னையின் வரலாறு, இசைக் கலைஞர்களின் வரலாறு, டெல்லி சுல்தான்களின் வரலாறு எனத் தொடர்ச்சியாக வரலாறும், பண்பாடும், இலக்கியமும் சந்திக்கும் புள்ளிகளைத் தன் நாவல்கள் மூலம் கவனப்படுத்தியபடி இருக்கிறார்.

இவரிடம் எதைப் பேசுவது எதை விடுப்பது எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக விடையளித்தார்.

தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணியை போல இவரிடம் கேள்விகள் கேட்கக் கேட்க பதில்கள் வந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. வெறும் பதில்கள் மட்டுமல்ல அவை. நமக்கான புதிய அறிதல்கள். புதிய வெளிச்சங்கள்.

••••

உங்கள் முதல் கதையான ‘பழைய தண்டவாளம்’ கதையிலிருந்து சமீபத்தில் எழுதிய ‘எளிதானது கோபம்’ வரையிலான உங்கள் பயணம் பல்வேறு திசைமாற்றங்களை உள்ளடக்கியதாக உள்ளது. யதார்த்தவாதக் கதைகளில் துவங்கிப் பின்நவீனத்துவக் கதைகளில் புதிய பாய்ச்சலை உண்டாக்கி மீண்டும் நவீன யதார்த்தமுறைக்கு மாறியிருக்கும் இப்பயணம் உங்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

இதுவரை இருநூறு சிறுகதைகளுக்கும் மேலாக எழுதியிருக்கிறேன். எதை எழுதுவது என்று முடிவு செய்கிறேனோ அதுவே வடிவத்தை, கதை சொல்லும் மொழியை, கதை கூறும் முறையைத் தீர்மானம் செய்கிறது. கதை எழுதும் முன்பு இதை ஓர் யதார்த்தக் கதையாக எழுதுவது அல்லது பின்நவீனத்துவக் கதையாக எழுதுவது என்று ஒரு போதும் நினைக்க மாட்டேன். ஒரு கதை எழுதி முடிக்கப்படும்வரை என்ன மாற்றங்களை அடையும் என யாராலும் கணிக்க முடியாது.

சிறுகதை ஒன்றை எழுதி முடித்தவுடன் அதே விஷயத்தை வேறு பாணியிலும் எழுதிப் பார்ப்பேன். சில சமயம் இரண்டு வடிவத்தையும் ஒன்று சேர்ப்பேன். சில சமயம் இரண்டிலும் திருப்தியில்லாமல் மூன்றாவது விதமாக எழுதுவேன். ‘பால்யநதி’ என்ற சிறுகதையைப் பன்னிரெண்டு முறை திருத்தி எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சில பத்திகள் கூடும் அல்லது நீக்கப்படும். பெரும்பாலும் கதையை அச்சிற்கு அனுப்பும் வரை திருத்தம் செய்துகொண்டு தானிருப்பேன். அபூர்வமாகவே ஒன்றிரண்டு கதைகள் ஒரே தடவையில் எழுதி அவ்வளவுதான் என்று உணர்ந்திருக்கிறேன்.

குவார்னிகா (Guernica) வரைந்த பிகாசோதான் ஆடு ஒன்றையும் வரைந்திருக்கிறார். இரண்டிலும் அவரது முத்திரையிருக்கிறது. அவரே தன் கோடுகள் எவ்வாறு அரூபத்தை நோக்கிச்ச் செல்கிறது என்பதை வரிசையாக வரைந்தும் காட்டியிருக்கிறார்.

‘சிற்பியின் நரகம்’ எழுதிய புதுமைப்பித்தன்தான் ‘திருக்குறள் செய்த திருக்கூத்து’ சிறுகதையும் எழுதியிருக்கிறார். ‘செல்லம்மாள்’ கதையும் பெண்ணைப் பற்றியதுதான். காஞ்சனையும் பெண்ணைப் பற்றியதுதான். ஆனால் அதற்கிடையில் எவ்வளவு வேறுபாடு. பிகாசோவின் ஓவியங்களை early work, the Blue Period, the Rose Period, the African Period, Cubism, Neoclassicism, Surrealism, என வகைப்படுத்துகிறார்கள். வண்ணங்களைப் பயன்படுத்தும் விதத்திலிருந்தும் உருவங்களை வரையும் முறையிலும் இந்த மாற்றங்களைக் கண்டறிகிறார்கள். எழுத்தும் இது போன்றதே. நல்ல படைப்பாளியிடம் இது போன்ற நாலைந்து எழுத்து மாற்றங்களைக் காண முடியும், இதை ஒரு கலைஞனின் இயல்பான வளர்ச்சியாகவே நினைக்கிறேன்.

 நான் எழுத துவங்கிய எண்பதுகளில் சிறுபத்திரிக்கைச் சூழல் வலிமையாக இருந்தது. அதில் வெளியான சிறுகதைகளுக்கும் பெரிய இதழ்களில் வெளியான கதைகளுக்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரியது. அந்த நாட்களில் புதுமைப்பித்தன், வண்ணநிலவன், வண்ணதாசன், கு.அழகிரிசாமி கதைகளை மிகவும் விரும்பிப் படித்தேன். என் முதற்தொகுப்பிலுள்ள கதைகளில் அவர்களின் சாயல் இருக்கும். அந்தக் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். நானும் கோணங்கியும் ஊர் ஊராகப் போய் இலக்கியவாதிகளைச் சந்தித்து லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றிப் பேசினோம். விவாதித்தோம். ஓர் எழுத்தாளர் எங்களை லத்தீன் அமெரிக்க ஆவிகள் பிடித்து ஆட்டுவதாகத் திட்டி அனுப்பி வைத்தார். இன்னொருவர் எங்களைச் சந்திக்க மாட்டேன். நீங்கள் என்னைக் குழப்பிவிடுவீர்கள், அதன்பிறகு என்னால் கதை எழுத முடியாது என்று வீட்டின் வாசலோடு துரத்திவிட்டார். நாங்கள் எழுத்தாளர்கள் வீட்டுக் கதவைத் தட்டி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி மிரட்டுவதை நிறுத்தவில்லை. வேடிக்கையான அனுபவங்கள். அப்போதே லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் பற்றி திருவண்ணாமலையில் உரை நிகழ்த்தியிருக்கிறேன்.

அந்த நாட்களில் திருவண்ணாமலைதான் எங்களின் மையம். நானும் கோணங்கியும் எந்த இரவில் பவா. செல்லதுரை வீட்டிற்குச் சென்றாலும் வரவேற்று உணவு தருவார். நாட்கணக்கில் தங்கி இலக்கியம் பேசுவோம். ‘ஸ்பானிய சிறகுகளும் வீரவாளும்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பு தயாரித்தோம். அதில் பாதி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகள். மீதி பாதி தமிழ்ச் சிறுகதைகள். இப்படி ஒரு தொகுப்பு வேறு இந்திய மொழிகளில் வெளிவந்திருக்குமா என்று தெரியாது. திருவண்ணாமலைக்கு ஜெயமோகன் வருவார். பாவண்ணன் வருவார். சுந்தர ராமசாமி வந்திருக்கிறார். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வந்திருக்கிறார். அன்றும் இன்றும் அது முக்கியமான இலக்கிய மையமாகவே இருக்கிறது.

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் புதிய கருப்பொருட்களைக் கண்டறியவும், புதிய கதை மொழியையும் கற்றுத்தந்தது. காப்காவின் ‘உருமாற்றம்’ கதையை வாசித்த கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அது தன் பாட்டி சொல்லும் கதையைப் போல விநோதமாக இருப்பதாகச் சொல்கிறார். அப்படித்தான் மார்க்வெஸை வாசித்தபோது நம் ஊர் கதைச் சொல்லியின் குரல் போல ஒலிப்பதாக உணர்ந்தேன். அவரது மேஜிகல் ரியலிசக் கதை சொல்லும் முறையின் மீது ஆர்வம் கொண்டு சிறுகதைகள் எழுதினேன். ‘தாவரங்களின் உரையாடல்’ கதை சுபமங்களாவில் வெளியானது. இன்று வரை அந்தக் கதை எனது முக்கியமான கதையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தக் கதையை வெளியிட்ட கோமலை இந்தத் தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன். வேலையில்லாமல் அலைந்த என் மீது அவர் காட்டிய அன்பு மறக்க முடியாதது.

‘பால்யநதி’ மாறுபட்ட சிறுகதைகளைக் கொண்டது. ‘மழை மான்’ இன்னொரு விதம். இப்படி இருபது சிறுகதைத் தொகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கதை முறைகளைக் கையாண்டிருக்கிறேன். ‘நூறு கழிப்பறைகள்’ கதையை வாசித்திருக்கிறீர்களா. அது புதுவகைச் சிறுகதை. ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’, ‘அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது’ முற்றிலும் புதியவகைச் சிறுகதைகள். ‘அவளது வீடு’ என்ற எனது சிறுகதையைப் படித்துவிட்டுச் சென்னையிலுள்ள ஒரு நிறுவனம் இருபதாயிரம் ரூபாய் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்தார்கள். ஒரு சிறுகதையை எப்படி வரவேற்கிறார்கள் பாருங்கள்.

இப்படி நான்கைந்து கதாகாலங்கள் எனக்குண்டு. அதை என் எழுத்தில் காணமுடியும். இன்று ஒரே தொகுப்பில் இந்த நான்கைந்துவிதமான எழுத்துமுறை கொண்ட கதைகளும் இடம்பெறுகின்றன.

ஒரு கதையைச் சொல்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன. புதிய வழிகளை, புதிய கதை மொழியை, புதிய வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்க்கிறவனாகவே எப்போதும் இருக்கிறேன். அதே நேரம் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போலச் சிறுகதைக்கெனச் சில மாறாத வடிவங்கள் இருக்கின்றன. அதையும் அவ்வப்போது எழுதுகிறேன். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களும் தேவையாகத்தானே இருக்கின்றன.

ஒரு கதைக்குள் கதை என்று எதைச் சொல்கிறோம். நிகழ்வுகளை, அனுபவத்தை. அது பிரதிபலிக்கும் சமூக விஷயங்களைத்தானே. அதைத்தான் யதார்த்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் கதை என்பது அது மட்டுமில்லையே. இதுதான் சிறுகதை என்று எவராலும் வரையறை செய்துவிட முடியாது.

உள்ளூர் இசைக்கலைஞர் வயலினைப் பயன்படுத்தும் விதமும் நோக்கமும் வேறு. மொசார்ட் வயலினைப் பயன்படுத்தும் விதம் வேறு. ஒரே இசைக்கருவிதான், ஆனால் நீங்கள் யார் என்பதே உயர்ந்த இசையினை முடிவு செய்கிறது.

கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை, முன்பின்னான காலத்தை, நினைவுகளின் சிதறடிப்பை, ஆழமான மனவிகாரங்களை, பயத்தை, விசித்திரத்தை, விநோதமான கற்பனையைச் சொல்ல முற்படும்போது கதையின் சொல்முறை மாறிவிடுகிறது.

வயதும் அனுபவமும் வாசிப்பும்தான் என் கதைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் என்பேன். நாவலை விடவும் சிறுகதையே மிகவும் சவாலான வடிவம். இன்றும் ஒரு புதிய சிறுகதை எழுதுவது சவாலான விஷயமே.

‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ தொகுப்பில் பல்வேறு விதமான பின்நவீனத்துவக் கூறுமுறைகளைக் கொண்ட கதைகள் இருந்தன. ‘ஏழு இறகுகள்’, ‘சோர் பஜார்’, ‘சாக்கியனின் பல்’, ‘நாளங்காடி பூதம்’ போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். இப்போதும் அது போன்ற ஒரு தொகுதியைக் கொண்டுவரும் திட்டமுள்ளதா?

இந்த லாக்டவுன் நாட்களில் அப்படியான குறுங்கதைகளாக 125 கதைகளை எனது இணையதளத்தில் எழுதினேன். அந்தக் கதைகள் தற்போது ‘கர்னலின் நாற்காலி’ என்ற பெயரில் தனி நூலாக வெளிவரவுள்ளது. குறுங்கதைகள் மீது எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம். பெரும்பாலும் தீர்க்கதரிசகள், ஞானிகள், துறவிகள்தான் குறுங்கதைகளை அதிகம் சொல்லியிருக்கிறார்கள். அது ஓர் உபதேச வழி. ஆனால் அந்த வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய கதைக்கருவை, புதிய கதைமொழியை நான் முயன்று பார்த்திருக்கிறேன். ஜென் கதைகளில் அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள் சிக்கல்கள் கிடையாது. பெரிய மாயமும் கிடையாது. இரண்டினையும் கலந்து ஜென் கதையின் மாற்றுவடிவம் போலச் சில குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன்.

முன்பு ‘நகுலனின் வீட்டில் யாருமில்லை’ என்று குறுங்கதைகள் மட்டுமே கொண்ட தொகுப்பினை வெளியிட்டிருக்கிறேன். அது சிறந்த வரவேற்பைப் பெற்றது.

மாயமும் யதார்த்தமும் ஒன்று சேர்ந்த சிறுகதைகளை இப்போது எழுதிக்கொண்டுதானே இருக்கிறேன். ‘போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்’ அப்படியான கதைதானே. ‘தண்ணீரின் திறவுகோல்’ சிறுகதையில் போர்ஹெஸ் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அமெரிக்கப் பல்கலைகழகத்தில் கவிதை வகுப்பெடுக்கும் அவரைத் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் கேள்வி கேட்கிறான். புனைவின் புதிய சாத்தியம் என்பது இது போன்றதுதானே.

நீங்கள் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒரு வாசிப்புத் திட்டம் தீட்டி அதைக் கண்டிப்பாகச் செயல்படுத்துபவர் என்று அறிவோம். தற்போது உங்களின் வாசிப்புத் திட்டம் என்னவாக இருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டில் என்ன படிக்கலாம் என்று ஒரு துறையை, பிரிவைத் தேர்வு செய்வேன். ஓர் ஆண்டு கிரேக்க இலக்கியம் படித்தேன். ஓர் ஆண்டு சீன இலக்கியம் படித்தேன். இன்னோர் ஆண்டு அடிப்படைத் தத்துவங்களை வாசித்தேன். இப்படிப் படிப்பதை Study என்று நான் கருதுகிறேன். கல்லூரியோடு Study முடிந்துவிடக்கூடாது என நினைப்பவன். ஆகவே வாழ்க்கை வரலாறு, பயணநூல்கள், ஜென் இலக்கியம், பௌத்த தத்துவம், ஐரோப்பிய இலக்கியம் என ஆண்டிற்கு ஒரு விஷயத்தைத் திட்டமிட்டு அதன் ஆதாரமான, அடிப்படையான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசிப்பேன். எத்தனை புத்தகம் என்று வரையறை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் முக்கியமான ஐம்பது புத்தகங்களை அந்த வகையில் படித்துவிடுவேன். இது தவிர, விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்கள், அனுப்பி வைக்கப்படும் புத்தகங்கள், கண்காட்சி தோறும் வாங்கும் புத்தகங்கள் என நிறைய வாசிப்பேன்.

எனது காரில், வீட்டில், படுக்கை அறையில், எழுதும் மேஜையில் எங்கும் புத்தகங்கள்தான். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு. கிண்டில், இணையதள நூலகம் என எல்லா வழிகளிலும் படிப்பேன். மல்லாங்கிணர் என்ற சிற்றூர்வாசியான என்னைப் புத்தகங்கள்தானே இந்தப் பெரிய உலகினைப் புரிந்துகொள்ளச் செய்தது. என்னை எழுத்தாளராக்கியது.

ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் என்று நேரம் வகுத்துக்கொண்டு படிப்பதில்லை. கிடைக்கும் நேரமெல்லாம் படிப்பேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் சேர்ந்துவிட்டால் மாதம் ஒரு முறை சனி ஞாயிறு என இரு தினங்களை ஒதுக்கிச் சாப்பிடுவது படிப்பது என்று வாசிப்பிலே நாளைக் கழிப்பேன்.

பழைய புத்தகக் கடைகளை தேடிப் போவது எனக்கு விருப்பமான விஷயம். நிறைய பழைய புத்தகக் கடைக்காரர்கள் எனது நண்பர்கள். நல்ல புத்தகங்களை மிக குறைந்த விலைக்குத் தருவார்கள்.

தினமும் ஒன்றோ இரண்டோ கவிதைகள் படிப்பேன். ஒரு நாளைக்குத் தேவையான மகிழ்ச்சி அதிலிருந்து கிடைத்துவிடும்.

புத்த பிக்‌குணியின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதும் திட்டம் இருப்பதாக ஒரு நேர்ப்பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கான உந்துதல் பற்றிச் சொல்லுங்கள். அந்த நாவல் எப்போது வெளிவரும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ‘தமயா’ என்றொரு நாவலை எழுதினேன். அது புத்தபிக்குணிகள் பற்றியது. பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது நாவல் நின்றுவிட்டது. அதை என் விருப்பத்திற்காக உடனே முடிக்க விரும்பவில்லை. ஆகவே அப்படியே விட்டுவிட்டேன். சில நாவல்களை எழுதுவதற்கு நாம் விரும்பினால் மட்டும் போதாது. அதற்கான மனநிலையும் அனுபவமும் ஞானமும் கிடைக்கும் போதுதான் எழுத முடியும். தமயாவிற்காக நானும் காத்திருக்கவே செய்கிறேன்.

‘நூலக மனிதர்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான கட்டுரைத் தொடரை தங்கள் வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நூலகத்தை மையமாக வைத்து, விசித்திரமான மனிதர்களும், விசித்திரமான அனுபவங்களும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. கிட்டத்தட்ட ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் வழங்கிய அதே அனுபவத்தை இந்தத் தொடரும் அளிக்கிறது. பத்திரிக்கைகளில் வாராவாரம் பத்தி எழுதுவதற்கும் உங்கள் தளத்திலேயே இது போன்ற சிறந்த கட்டுரைத் தொடரை வெளியிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என நினைக்கிறோம். ஒவ்வொரு வாரமும் காத்திருக்காமல் வாசகர் உடனடியாக இக்கட்டுரைகளை வாசித்து விடமுடிகிறது. உங்களுக்கும் அதிகம் எழுதுவதற்கான ஒரு வெளியை இது உருவாக்குகிறது என நம்புகிறோம். எதிர்காலத்திலும், இதைப் போன்று கட்டுரைத் தொடர்களை உங்கள் வலைத்தளத்திலேயே பிரசுரிப்பீர்களா?

விகடனில் அதிக கட்டுரைத்தொடர்கள் எழுதியது நானாகத்தான் இருக்ககூடும். சுஜாதா நிறைய தொடர்கதைகள் எழுதியிருக்கிறார். ‘கற்றதும் பெற்றதும்’ போல நீண்டகாலப் பத்தி எழுதியிருக்கிறார். ஆனால் ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘தேசாந்திரி’, ‘சிறிது வெளிச்சம்’, ‘கேள்விக்குறி’, ‘எனது இந்தியா’ என மாறுபட்ட பத்துக் கட்டுரைத் தொடர்களை எழுதியிருக்கிறேன். இதில் சில தொடர்கள் ஒன்றரை ஆண்டுகள் வெளியாகியிருக்கின்றன. ‘துணையெழுத்து’ மிகப்பெரிய அடையாளத்தை எனக்கு உருவாக்கித் தந்தது. இது போலவே தமிழ் இந்துவிலும் மூன்று கட்டுரைத்தொடர்கள் எழுதியிருக்கிறேன். இதற்கெனத் தனியே வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

லாக்டவுன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு வாசிப்பதற்கென்றே ‘நூலக மனிதர்கள்’, ‘காந்தியின் நிழலில்’, ‘காலைக்குறிப்புகள்’ என்று மூன்று கட்டுரைத் தொடர்களை எனது இணையத்தில் எழுதி வருகிறேன். இணையத்தில் வாசிப்பதற்கென்றே தனி வாசகர்கள் இருக்கிறார்கள். படித்துவிட்டு உடனே மின்னஞ்சல் எழுதுகிறார்கள்.

சராசரியாக ஒரு நாளைக்குப் பத்தாயிரம் பேருக்கும் மேலாக அந்தக் கட்டுரைகளை வாசிக்கிறார்கள். என்னுடைய இணையதளத்தில் எழுதுவது கூடுதல் சுதந்திரமாகவே உள்ளது. எனது இணையதளத்தைப் புதிதாக வடிவமைப்பு செய்துள்ளார்கள். ஆகவே புதிய தொடர்களை அதிலும் எழுதவே செய்வேன்.

‘நம் காலத்து நாவல்கள்’, ‘விழித்திருப்பவனின் இரவு’ போன்ற நூல்கள் பல்கலைக்கழகப் பாடங்களாக இடம்பெறும் தகுதிவாய்ந்தவை. உலக இலக்கியத்தை அறிந்துகொள்ளும் ஆர்வமுடைய எவரும் இந்த நூல்களிலிருந்தே தங்கள் வாசிப்பைத் துவங்கலாம். இது போன்ற நூல்கள் எழுதுவதற்கான உந்துதல் என்ன?

நான் படித்த உலகின் சிறந்த புத்தகங்களை, எழுத்தாளர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறேன். என் நோக்கம் இளம்வாசகனை புதிய விஷயங்களை வாசிக்க வைப்பது மட்டுமே.

சென்ற ஆண்டுகூட விகடன் தடம் இதழில் சமகால உலகக்கவிஞர்கள் பற்றி ‘கவிதையின் கையசைப்பு’ என்ற தொடர் எழுதினேன். அது தனி நூலாக வந்துள்ளது. அதிலுள்ள கவிஞர்கள் சமகாலத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள். அவர்களின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளையும் சமயவேல் அவர்களின் உதவியோடு மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளேன்.

கொரியாவின் கோ யுன் கவிதைகளை விரும்பி வாசித்தேன். அவரை அறிமுகம் செய்து கட்டுரை எழுதினேன். இன்று அவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தமிழில் கொண்டுவரப்போகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். வாசிப்பு இப்படித்தான் தொடர்செயலாக மாறும்.

‘உலகை வாசிப்போம்’, ‘மேற்கின் குரல்’, ‘நிலவழி’, ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என நிறைய நூல்கள் வெளியாகியுள்ளன. இவை தமிழ் மட்டுமே வாசிக்கத் தெரிந்த ஓர் இளம்வாசகனுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து வைப்பவை. அந்த வகையில் க.நா.சுவே எனது முன்னோடி.

அவரது பரந்த வாசிப்பினை நினைத்து நினைத்து வியக்கிறேன். எப்படி அவரால் செல்மா லாகர்லெவைக் (Selma Lagerlöf) கண்டுபிடிக்க முடிந்தது. எப்படி அவரால் ரோஜர் மார்டின் தூ கார்டு (Roger Martin du Gard) எழுதிய தபால்காரனைக் (Vieille France) கண்டறிந்து மொழியாக்கம் செய்ய முடிந்தது. இன்றுள்ள எந்த வசதியும் இல்லாத நிலையில் படிப்பதற்காகவே அவர் பல நகரங்களுக்குப் போயிருக்கிறார். கிடைத்த பணத்தில் எல்லாம் புத்தகம் வாங்கியிருக்கிறார். பாரீஸிற்குச் சென்று ஆல்பெர் காம்யூவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். க.நா.சு நாம் கொண்டாட வேண்டிய மிகப்பெரும் ஆளுமை.

புதுமைப்பித்தன் தன் காலத்தின் முக்கியமான உலக எழுத்தாளர்களைத் தேடிப்படித்து மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். சி.சு.செல்லப்பா, க.நா.சு, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, பிரம்மராஜன் என முக்கிய படைப்பாளிகள் பலரும் உலகின் சிறந்த புத்தகங்களை வாசித்து அறிமுகம் செய்திருக்கிறார்கள். மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆகவே என் முன்னோடிகளின் வழியில்தான் நானும் செல்வதாக நினைக்கிறேன்.

இப்போது Annie Ernaux என்ற பிரெஞ்சு எழுத்தாளரை விரும்பிப் படித்து வருகிறேன். என்ன அற்புதமாக எழுதுகிறார். இவரது The Years, A Woman’s Story, A Girl’s Story முக்கியமான புத்தகங்கள். சமகாலத்தின் முக்கிய படைப்பாளி இவர். இப்படி தேடிப்படிப்பது வெறும் ஆசை மட்டுமில்லை. என்னை வளர்த்துக் கொள்ள இது போன்ற புத்தகங்களே உதவுகின்றன

தொடரும்….

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 19:23

பதினேழாவது ஆள்

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை

ராமநாதன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் புதிதாக ஒருவர் தோன்றியிருந்தார். அவர் யார். எப்படி புகைப்படத்தில் புதிதாகத் தோன்றினார் என்று வீட்டில் எவருக்கும் புரியவில்லை. அந்தப் புகைப்படம் 1986ல் எடுக்கப்பட்டது. அஜந்தா ஸ்டுடியோவில் பொங்கலுக்கு மறுநாள் எடுத்தது. சின்ன அக்கா கல்யாணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம். சுருள் முடியோடு பேரழகியாக இருக்கிறாள். அந்த புகைப்படத்தில் மொத்தம் பதினாறு பேர் இருந்தார்கள்.

ஆனால் பதினேழாவதாக ஒரு ஆள் சபரிமாமாவிற்கும் சொக்கர் அண்ணனுக்கும் நடுவில் எப்படித் தோன்றினார் என்று புரியவேயில்லை. ராமநாதன் புகைப்படத்தைச் சுவரிலிருந்து எடுத்து கிழிந்த துணியால் துடைத்துப் பார்த்தார். புதிதாகத் தோன்றியிருந்த ஆளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். ஒடுங்கிய முகம். இடது புருவத்தின் குறுக்கே வெட்டு தழும்பு இருந்தது, மெலிந்த உடல். கோடு போட்ட சட்டை. கறுப்பு பேண்ட். அப்படி ஒரு முகச்சாடை கொண்ட எவரும் தங்களின் குடும்பத்தில் கிடையாது. அப்படியானால் யார் இவன். எப்படி புகைப்படத்தில் தோன்றினான் என்று அவருக்குப் புரியவில்லை. கோவையில் வசிக்கும் சபரிமாமாவிற்கு போன் செய்து கேட்கலாம் என நினைத்தார். போனில் மாமாவின் லைன் கிடைக்கவில்லை,

ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு சபரி மாமாவிடமிருந்து போன் வந்தது. பேச்சை ஆரம்பிக்கும் “முன்பே நம்ம வீட்ல ஒரு குரூப் போட்டோ இருந்துச்சே“ என்று தான் ஆரம்பித்தார். “ஆமா“ என்று தெரியாதவர் போல கேட்டார் ராமநாதன். “அதுல புதுசா ஒரு ஆள் நிற்கிறது மாதிரி இருக்கு. பழைய போட்டோவில புது ஆள் எப்படி வர முடியும். நான் தான் இத்தனை நாள் போட்டோவை சரியாக பாக்கலையா“ என்று கேட்டார் சபரி மாமா

“அந்த ஆள் புருவத்துல தழும்பு இருக்கா“ என்று கேட்டார் ராமநாதன். “ஆமா. அது யாரு.. நமக்கு தெரிஞ்சவனா“..எனக்கேட்டார் சபரி மாமா

“எனக்கும் தெரியலை. ஆனா என் வீட்டு போட்டோவிலயும் அந்த ஆள் தோன்றியிருக்கான்“ என்றார்.

இந்த இருவர் மட்டுமில்லை. அந்த போட்டோ வைத்திருந்த ஐந்து குடும்பங்களிலும் அந்த இளைஞன் புதிதாக இணைந்திருந்தான். பகலிரவாக அவன் யாரென உறவினர்களிடம் விசாரித்தார்கள். யூகம் செய்தார்கள். பழைய ஆல்பங்களைத் தேடினார்கள். எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நாட்களில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்தில் குடும்பத்தில் இருந்த சந்தோஷம். இளமைக்கால நினைவுகள். சொந்த ஊரில் வாழ்ந்த வாழ்க்கை பற்றி ஏக்கத்துடன் போனில் பேசிக் கொண்டார்கள். தற்கொலை செய்து கொண்ட கல்யாணி அக்காவை யாரும் இப்போது நினைப்பதில்லை என்பதைப் பற்றி குற்றவுணர்ச்சி கொண்டார்கள்.

கடைசியில் புதிதாகத் தோன்றிய இளைஞன் புகைப்படத்தில் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும், போட்டோ தானே என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவை அவர்கள் அடைந்த மறுநாள் காலை புகைப்படத்தில் இருந்த இளைஞன் மறைந்திருந்தான். அவன் உருவம் மறைந்த போது புகைப்படத்திலிருந்த கல்யாணி அக்காவும் மறைந்திருந்தாள். அது தான் ஏன் என எவருக்கும் புரியவில்லை. 

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 18:38

வாளும் மலரும்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை

சீனாவின் குயிங் வம்ச ஆட்சிக்காலத்தில் இது நடந்தது என்கிறார்கள். யுவான் ஷு என்ற அரசன் கவிதையிலும் இசையிலும் தன்னை மறந்திருந்தான். ஒரு நாள் லின் டேயு என்ற பெண் கவிஞர் அவனைத் தேடி வந்தாள். பேரழகியான அவளிடம் உன் கவிதைகளின் சிறப்பு என்னவென யுவான் ஷு கேட்டான். என் கவிதை மாயங்கள் செய்யக்கூடியது. அது உடைவாளை ஒரு மலராக மாற்றிவிடும் என்றாள். அவனால் நம்பமுடியவில்லை. அவள் ஒரு கவிதை சொன்னாள். மறுநிமிடம் அரசனின் உடைவாள் ஒரு மலராக மாறியது. ஒரு மலரைக் கையில் வைத்துக் கொண்டு எப்படிச் சண்டையிட முடியும் என்று புன்னகையுடன் கேட்டான் யுவான் ஷு. வாளால் வெல்லமுடியாததை மலரால் வெல்லமுடியும் என்றாள் லின் டேயு.

பேரழகியான அவளின் அழகிலும் கவிதையிலும் மயங்கி யுவான் அவளைக் காதலிக்கத் துவங்கினான். அவளது கவிதைகளைத் தேசமெங்கும் பாடும்படியாகக் கட்டளையிட்டான். தேசத்திலிருந்த வாள் குறுங்கத்திகள், ஈட்டிகள் யாவும் மலர்களாக உருமாறி விட்டன. உடைவாளுக்குப் பதிலாக மலர்களை ஏந்திவந்தார்கள் போர் வீரர்கள். அந்தத் தேசத்தில் போரே இல்லாமல் போனது.

லின் டேயுவின் மீது பொறாமையும் வெறுப்பும் கொண்ட மகாராணி அவளைக் கொல்வதற்காக உணவில் விஷம் கலந்தாள். ஆனால் அந்த உணவை லின் டேயு சாப்பிடவில்லை. உண்மை கண்டறியப்பட்டு மகாராணி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டாள். அவளது சகோதரன் ஜியா சிச்சுன் பழிவாங்குவதற்காக லின்டே யு ரகசியமாக ஒருவனைக் காதலிக்கிறாள் என யுவான் ஷுவை நம்ப வைக்க ஏற்பாடுகள் செய்தான். அதன் படி லின்டேயின் அறையில் ஆணின் உடைகளை ஒளித்து வைத்தான். அதைக் கண்டுபிடித்த யுவான் மனதில். சந்தேகத்தின் துளி விழுந்தது. அதன் பிறகு யுவான் அவள் கவிதைகளுக்கு வேறு பொருள் கொள்ள ஆரம்பித்தான். அவளைக் கண்காணிக்க ஆட்களை ஏற்பாடு செய்தான்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு லின் டேயு தனது உடலில் புதிதாக மீனின் உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டாள். அது துரோகத்தின் அடையாளம் எனக் கருதிய யுவான் தன் கையாலே அவளது கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றான். சாவதற்கு முன்பு லின் டேயு ஒரு கவிதை சொன்னாள். மறுநிமிடம் அந்தத் தேசத்திலிருந்த எல்லா மலர்களும் ஆயுதங்களாக உருமாறின. கையில் கிடைத்த வாள். கட்டாரி, குறுங்கத்திகளைக் கொண்டு மக்கள் ஒருவரோடு ஒருவர் தாக்கி சண்டையிட்டு மடிந்தார்கள். யாரோ வீசி எறிந்த ஒரு மலர் குறுங்கத்தியாகி யுவான் ஷுவும் இறந்து போனான்

அதன்பிறகு லின் டேயுவின் கவிதைகளை யாரும் பாடக்கூடாது என்று அரசாங்கம் தடைவிதித்தது. சில ஆண்டுகளில் அந்தக் கவிதைகள் மக்கள் நினைவிலிருந்தும் மறைந்து போனது.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 18:33

பஷீரின் திருடன்.

2021 ஆகஸ்ட் காலச்சுவடில் வெளியான எனது குறுங்கதை

எத்தனையோ திருடர்களையும் போக்கிரிகளையும் பிச்சைக்காரர்களையும் சீட்டாடிகளையும் தனது கதைகளில் எழுதி மக்கள் மனதில் நிலைபெறச் செய்திருக்கிறாரே பஷீர் அவர் ஏன் தன்னைப் பற்றி ஒரு கதை கூட எழுதவில்லை என்ற ஏக்கம் கள்ளன் யூசுப்பிற்கு நீண்டகாலமாக இருந்தது,

அவன் தான் வைக்கம் முகமது பஷீரின் பர்ஸை பிக்பாக்கெட் அடித்தவன். அதில் சில்லறைக் காசுகளைத் தவிரப் பணம் ஏதுமில்லை என்று தெரிந்து அவரிடமே திரும்பக் கொண்டு போய்க் கொடுத்தவன். அவனது திறமையைப் பாராட்டினாரே அன்றிப் பஷீர் அவனைக் கதையில் எழுதவில்லை.

அவன் இதைப்பற்றிப் பேசுவதற்காகச் சிலதடவை பஷீரை சந்தித்திருக்கிறான். ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பஷீர் அவனிடம் தொழில் விருத்தியாக நடக்கிறதா என்று நலம் விசாரிப்பாரே அன்றிக் கதை எழுதுவதைப் பற்றிப் பேசவே மாட்டார். என்ன மனிதர் இவர் அற்ப திருடர்களை, மீசையில்லாத போக்கிரிகளை, பூனையைத் திருடும் அற்பர்களைப் பற்றி எழுதுகிறார். நமக்கு என்ன குறைச்சல் என்று யூசுப் அவரிடம் மாஷே என்னையும் ஒரு கதையில் நீங்கள் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்

அதற்குப் பஷீர் சிரித்தபடியே “சகாவே.. ஒரு திருடன் கதைக்குள் வருவது சாமானிய விஷயமில்லை. அதற்கு ஸ்பெஷலாக ஏதாவது விஷயம் இருக்க வேண்டும். “

அதைக் கேட்ட யூசுப் “என்ன செய்யணும் மாஷே.. சகா ஈஎம்எஸ் மூக்குக் கண்ணாடியைத் திருடி வரட்டுமா. இல்லை மகாராணியின் பல்செட் வேண்டுமா. ஜங்ஷனில் நிற்கும் ஜார்ஜ் மன்னர் சிலையைத் திருடிக் கொண்டு வர வேண்டுமா சொல்லுங்கள்“ என்றான்.

அதைக்கேட்ட பஷீர் “இதுவெல்லாம் சோட்டா திருடன் செய்யும் வேலை. அதைவிடப் பெரிய வேலை செய்யணும். உனக்கு முகமது முதலாளியின் சின்னமகள் சபீதாவை தெரியுமா..சுத்தமான பேரழகி. அவளது ஒரு முத்தத்தைத் திருடி வர முடியுமா.“.எனக்கேட்டார்.

அதைக் கேட்ட யூசுப் சொன்னான். “அது கஷ்டம் மாஷே. வேண்டுமானால் அவளையே தூக்கிக் கொண்டு வருகிறேன்.“

“அது கடத்தல்காரன் வேலை“ என்று மறுத்தார் பஷீர். “ஸ்ரீதரன் நாயரின் மனைவி இருக்கிறாளே.. அவளைப் பார்த்திருக்கிறாயா.. பெயர் அப்சரா. மாம்பழம் போலக் கன்னமிருக்குமே. அந்தச் சுந்தரியின் கனவுகளில் ஒன்றை திருடிக் கொண்டுவர முடியுமா“ என்று கேட்டார்.

கள்ளன் யூசுப் “கஷ்டம்“ என உதட்டைப் பிதுக்கினான். “நீ ஒரு உதவாக்கரை.. கோழி திருடும் நாராயணி இருக்கிறாளே.. தெரியும் தானே.. என் வீட்டிலே மூன்று கோழிகளைத் திருடிப் போயிருக்கிறாள். அவளது மூக்குத்தியைத் திருடி வர முடியுமா.“.எனக்கேட்டார் பஷீர்.

“அது முடியும் மாஷே. மூக்குத்தியைக் கொண்டு வந்தால் கதை எழுதுவீர்கள் தானே“

“கட்டாயம் எழுதுவேன். கோழி திருடும் நாராயணியும் கள்ளன்யூசுப்பும் என்று தலைப்பு வைக்கிறேன். போதுமா.“என்றார்.

“இது போதும். மூக்குத்தியோடு வருகிறேன். என்று சொல்லி யூசுப் சலாம் வைத்துப் போனான். இரண்டு மாதங்களுக்குப் பிறகு யூசுப்பை பேருந்தில் பஷீர் பார்த்தபோது உதட்டைப் பிதுக்கி இன்னும் காரியம் நடக்கவில்லை என்று ஜாடையாகச் சொன்னான். பின்பு ஒரு மழைநாளில் அவர் வீட்டிற்கு வந்து பெண்கள் விஷயத்தில் நமது திட்டங்கள் தோற்றுவிடுகிறது என்று சலித்துக் கொண்டான். இப்படியாக எட்டு மாதங்களும் பதிமூன்று நாட்களும் கடந்தபிறகு ஒரு இரவு அவன் மூக்குத்தியோடு வந்திருந்தான்.

“சபாஷ். நீ உண்மையிலே பெரிய கள்ளன் தான். யாரையும் கிட்ட நெருங்க விடாத நாராயணியின் மூக்குத்தியைத் திருடிவிட்டாயே“ என்று பாராட்டினார்.

யூசுப் தயக்கத்துடன் சொன்னான்.

“நான் திருடவில்லை மாஷே. அவளே கொடுத்துவிட்டாள்“.

“இது என்ன புதுக்கதை“ என்று கேட்டார் பஷீர். “நாராயணி வெளியே தான் நிற்கிறாள் வரச்சொல்லவா“ என்று கேட்டான் யூசுப். வரச்சொல் என்றார் பஷீர். தெருச்சண்டையில் கில்லாடியும் கோழி திருடுபவளுமான முரட்டுப் பெண் நாராயணி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வெட்கத்துடன் நின்றிருந்தாள். பஷீருக்கு விஷயம் புரிந்துவிட்டது.

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 00:20

August 11, 2021

வ. அதியமான் கவிதைகள்

சொல்வனம் இதழில் வ. அதியமான் எழுதும் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பான கவிதைகள். தனக்கான கவிதை மொழியினையும் குரலையும் கொண்டுள்ள இளங்கவிஞராக இருக்கிறார் அதியமான். இதுவரை அவரது கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் வழியே அவர் உருவாக்கும் சித்திரங்கள் எளிமையும் அழகும் கொண்டவை. மரபும் நவீனமும் இணைந்த கவிமொழியைக் கையாளுகிறார். ஒளியும் இருளும் கலந்த இந்தக் கவிதைகள் நெருக்கடிக்குள்ளும் வாழ்வின் இனிமையைப் பேசுகின்றன. ஜென் கவிதைகளில் அடையும் உணர்வுகளின் இன்னொரு நிலையைப் போலவே இந்தக் கவிதைகளை உணருகிறேன். அதியமானுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

••

ஒளிவிடும்

சின்னஞ்சிறு

கூழாங்கல்லும்

இருள் விழுங்கும்

பெருங்குன்றும்

குளிரக் குளிர

புனலாடி

அமர்ந்திருப்பது

ஒரே கரையில் தான்

••

ஒவ்வொரு

அதிகாலையிலும்

அதிசுத்தமாய்

கழுவி முடிக்கும்

என் கப்பரைக்கு

ஒவ்வொரு

அதிகாலையிலும்

எங்கோ ஓர் உலை

கொதிக்கிறது

••

முன்னமே

பிரிந்து சென்ற ஆடுகள்

குரல் கொடுப்பதும்

இல்லை

சொல் எடுப்பதும்

இல்லை

அவை மீளா பாதைகள்

என்பதறிவேன்

••

கடுந்துறவு

எதையும்

கடுகளவும்

இழப்பதில்லை

அந்தக் கிளைகள்

உலர உலர

அத்தனையும்

உதிர்க்கிறது

அவ்வளவு தான்

நுனி நாக்கு கூசும்

புளித்த காய்களை

அடி நாக்கு

இனிக்க இனிக்க

கனியாக்கி தருவது

எவனுடைய எச்சில்?

எந்தக் கவலையும்

இல்லை அதற்கு

பூத்து

காய்த்து

கனிந்து

காம்புதிர்த்தால் தான்

என்ன?

ஒரு கணமும்

ஓய்வதில்லை

தலைக்கு மேல்

வானத்தைச்

சூடிக்கொண்ட

அந்தக் கிளைகளின்

நடனம்

•••

சொல்

இன்று

ஏன்

இத்தனை

கூடுதலாக

பற்றி எரிகிறது

இந்த

நட்சத்திரங்கள்?

இருள் முழுத்த

இந்த இரவு

விடிவதற்குள்

எதையாவது

யாருக்காவது

சொல்லி

தீர்த்துவிட

அவைகளுக்கு

ஆணை

இடப்பட்டிருக்கிறதா

என்ன?

ஒரு சொல்

கொண்டு

எரிந்து

முடித்து

கரிந்து

மரிக்கவா

இத்தனை

மினுக்கும்?

••••

தோன்றாத் துணை

எந்த

ஞானியரின்

ஒளியும்

உடன் வரவில்லை

கட்டக் கடைசியாக

இந்தக் கணத்தில்

துணிந்துவிட்டேன்

தன்னந்தனியே

நானொரு

சாகரத் தோணி

என்னிலும்

நீ இன்று

துணிந்துவிட்டாய்

திருவிழாவின்

பெருந்திரளோடு

நீ அதில்

சாகசப் பயணி

••

கரும்பொன்

அந்த

சூதாடிக் கிழவனின்

மூக்குப்பொடிச்

சிமிழினை

எப்படியும்

இன்று

திறந்து பார்த்துவிட

வேண்டும்

வென்றாலும்

தோற்றாலும்

ஒரு போதும்

தாழ்வதில்லை

அவன் தலை

அவனை

நிலம் தாங்கும்

அந்த

பணயப் பொருளை

அதில் தான்

பதுக்கி

வைத்திருப்பதாக

எல்லோரும்

சொல்லிக் கொள்கிறார்கள்

அவன்

உறங்கா விழிகள்

சிறு குருவிகளின்

மழலையில்

ஒரு கணம்

நின்று

உறைகிறது

விரைந்து

எடு

ஓசை எழாது

திற திற

தேவதைகள்

கந்தர்வன்

பூதங்கள்

ஆவிகள்

எதுவும்

காணக்கிடைக்கிறதா?

எதுவுமே

இல்லையா?

பிறகு?

குன்றா

கரும்பொன்

இரவுகளை

பட்டுத் துணிபோல

சுருட்டி

வைத்திருக்கிறான்

***

யசோதா

தேகமெங்கும்

குரல் முளைத்து

கூவி நிற்கிறாய்

கொள்ளும் செவிகள்

திரும்ப வருமென

இடுப்பில் கையூன்றி

உறுதியாய்

காத்திருக்கிறாய்

அமரும் குருவியல்ல

இந்தக் கிளையில்

அத்தனையும்

பறக்கும் குருவிகள்

கரிய யமுனையில்

நாங்கள்

நர்த்தனமிட

காளிங்கன்

மட்டுமல்ல

கோபியர்களும்

துயில் கலைந்தனர்

துகில் மறந்தனர்

பீலி சூடும்

குழலோன்

சிறு குழலூதி

புவனங்களை

மேய்த்துவர

கிளம்பிவிட்டான்

அவன் நீங்காநிழல்

நாங்கள்

ஒன்று செய்

இனி உன்

வாய்ச்சொற்கள்

யாவையும்

நெய் வடியும்

அக்கார அடிசிலாக்கு

அப்போது

உன் கிளைக்கு

எங்கள் சிறகுகளை

அமர்த்துவான்

அந்த அழகன்

***

நன்றி

சொல்வனம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2021 20:38

ஜெயகாந்தனுடன்

2012ல் ரஷ்யக் கலாச்சார மையம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடந்த விழாவில் ஜெயகாந்தன் அவர்களால் கௌரவிக்கப்பட்டேன். அந்தப் புகைப்படத்தை நேற்று நண்பர் தங்கப்பன் மெயிலில் அனுப்பியிருந்தார். ஜேகே அவர்களுடன் பழகிய நாட்களை நினைத்துக் கொண்டேன். அபூர்வமான மனிதர். அரிய புகைப்படம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2021 05:02

August 10, 2021

சிறிய உண்மைகள் 6 மண்டோவின் அதிசயம்

சதத் ஹசன் மண்டோவின் குறுங்கதைகளில் பெரும்பான்மை பிரிவினையின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தை முன்வைத்து எழுதப்பட்டவை. வீடு புகுந்து கொள்ளையடிப்பது. தீவைப்பது. கூட்டமாகச் சேர்ந்து அப்பாவிகளைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சி செய்து கொல்வது போன்றவற்றை மண்டோ உண்மையாகப் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரு கதையில் ஒரு வீட்டினை கொள்ளையடிக்கக் கும்பல் ஒன்று திரண்டு போகிறார்கள். ஒரு ஆள் கதவை ஏன் தேவையில்லாமல் உடைக்கப் போகிறீர்கள். நானே திறந்துவிடுகிறேன் என்று திறந்துவிடுகிறான். இது போலவே வீட்டில் உள்ள நகை பொருட்களை எடுத்து அவர்களிடம் ஒப்படைக்கிறான். எந்தப் பொருளையும் சிதைக்க அவன் அனுமதிக்கவில்லை. பொறுப்பாக அவர்களுக்கு உதவி செய்கிறான்.

கதையின் முடிவில் நீ யார் என்று கும்பலின் தலைவன் கேட்கிறான். நான் தான் இந்த வீட்டின் உரிமையாளர் என்கிறான் அந்த ஆள்.

ஒரு ஆள் தன்வீட்டை யாரோ கொள்ளையடிக்க அமைதியாக உதவி செய்வது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனது அவனுக்கு எப்படி வந்தது. ஏன் அவன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கும்பல் தன்னைக் கொன்றுவிடும் என்ற பயம் தான் அவனைப் பணிந்து போகச் செய்கிறது. அவன் உயிர்வாழ்ந்தால் இந்தச் சொத்தை, வீட்டைச் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறான். அவனது பணிவு ஒரு தந்திரம். உபாயம். ஆனால் ஒவ்வொரு பொருளை அவர்கள் அபகரித்துக் கொள்ளும் போதும் அவனுக்குள் வலித்திருக்கும். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

உழைத்துச் சேர்த்து வைத்திருந்த பொருட்களை, சேமிப்பினை கண்முன்னே மௌனமாகப் பறிகொடுப்பது என்பது தாளமுடியாத வேதனை. கோபத்தை அடக்கிக் கொள்வது ஒரு கலை. அந்த மனிதனின் சிறிய முகச்சுழிப்பு கூடப் பெரிய எதிர்வினையை உருவாக்கிவிடும் என்று அறிந்திருக்கிறான். ஆகவே . யார் வீட்டையோ கொள்ளையடிப்பதற்கு உதவி செய்பவன் போல நடந்து கொள்கிறான். எதிர்ப்பு இல்லாமல் கொள்ளையடிப்பது கலவரக்கும்பலுக்குச் சலிப்பு ஏற்படுத்துகிறது. அவர்கள் காரணமில்லாமல் கொல்வதில் ருசி கொண்டிருக்கிறார்கள். அது தான் கலவரத்தின் நிஜமான மனநிலை.

இன்னொரு கதையில் கலவர நேரத்தில் பலரும் கிடைத்த பொருட்களைக் கொள்ளையடித்துத் தன் வீட்டில் பதுக்கி வைத்துக் கொள்கிறார்கள். திருட்டுப் பொருட்களை வைத்திருப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் திருடிய பொருட்களை வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

எதையும் திருடாதவர்கள் கூடத் தங்கள் சொந்தப் பொருட்களில் ஒன்றிரண்டைத் தூக்கி எறிகிறார்கள். காரணம் அப்படிச் செய்யாவிட்டால் அரசாங்கம் நம்பாது என்பது தான்.

ஒருவன் இரண்டு மூட்டை சர்க்கரையைக் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்திருக்கிறான். அதை எப்படி வெளியே கொண்டு போவது எனத் தெரியாமல் தன்வீட்டுக் கிணற்றில் கொண்டு போய்ப் போட முயல்கிறான். ஒரு மூட்டையைக் கிணற்றில் போட்டுவிடுகிறான். மறுமூட்டையைப் போடும் போது அவனே தவறி கிணற்றினுள் விழுந்துவிடுகிறான்.

உதவி கேட்டு அவன் கூப்பாடு போட்டும் யாரும் வரவில்லை. பின்பு கிணற்றில் விழுந்துகிடந்த அவனை ஆட்கள் கண்டுபிடித்து மீட்கும் போது இறந்து போயிருந்தான். ஆனால் அந்தக் கிணற்றுத் தண்ணீர் இனிப்பாக மாறியிருந்தது.

அவ்வளவு தான் மக்கள் அந்தக் கிணற்றை வழிபடத்துவங்கிவிட்டார்கள் என்று மண்டோவின் கதை முடிகிறது.

இந்தக் கதையில் வரும் சர்க்கரை மூட்டையைத் திருடியவன் ஒரு விநோதமான ஆள். கலவர நேரத்தில் எதற்காக ஒருவன் இரண்டு மூட்டை சக்கரையைக் கொள்ளையடிக்கிறான். அதை என்ன செய்வான். விற்பதற்காக வைத்திருக்கிறானா. இல்லை ஆசை தீர இனிப்புச் செய்து சாப்பிட நினைக்கிறானா. அதைப் பற்றி மண்டோ விளக்கவில்லை. ஆனால் அவன் தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற பதைபதைப்பில் சர்க்கரை மூட்டையைக் கிணற்றில் கொண்டு போய்ப் போடப்பார்க்கிறான். ஆனால் விஷயம் தலைகீழாகிவிடுகிறது.

சர்க்கரை மூட்டையால் தான் கிணற்றுத் தண்ணீர் இனிப்பானது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த அற்புதம் அவர்களுக்கு வியப்பளிக்கிறது. ஒரு கலவரத்தின் ஊடாக அற்புதம் உருவாவது கலையில் மட்டுமே சாத்தியம்.

இந்தக் கதையை வாசிக்கத் துவங்கும் போது அது இப்படி முடியும் என யூகிக்க முடியாது. அது தான் மண்டோவின் மேதமை. நெருக்கடியின் போது மனிதர்கள் நடந்து கொள்ளும் விதம் வியப்பானது. யார் எப்படி இருப்பார்கள் என்று முடிவு செய்யமுடியாது.

பிரிவினையின் போது நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள் ஏராளம். வேலையாட்களே எஜமானனைக் கொன்று அவரது வீட்டை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்பதால் விரும்பிய பெண்களை அடித்துச் சித்ரவதை செய்து வன்புணர்வு கொண்டிருக்கிறார்கள். இறந்த பெண்ணின் பிணத்தோடு உடலுறவு கொண்டவனைப் பற்றியும் மண்டோ எழுதியிருக்கிறார்.

இந்தக் குறுங்கதையின் ஊடாக எதையும் திருடாதவர்கள் தன் சொந்த பொருளை வீசி எறிந்து அரசின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள் என்பதில் மண்டோவின் கேலியான விமர்சனம் வெளிப்படுகிறது.

இன்னொரு கதையில் முச்சந்தியில் உள்ள ஒரு தலைவரின் சிலையினைக் கூட்டம் ஏறி உடைக்கிறது. முகத்தில் தார் பூசுகிறது. சிலையின் கைகளைத் துண்டாடுகிறது. அப்போது கலவரக்காரர்களில் ஒருவன் தவறி கீழே விழுந்துவிடுகிறான். அடிபட்டு ரத்தம் சொட்டும் அவனைச் சிலையாக நிற்கும் தலைவரின் நினைவாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு போகிறார்கள் என்று கதை முடிகிறது.

கலவரத்தில் யாரும் எதையும் தெரிந்து செய்வதில்லை. அது ஒரு கொந்தளிப்பு. அந்த அலையின் வேகம் அவர்களை இழுத்துக் கொண்டு போகிறது.

நெருக்கடிகளின் போது மனிதர்கள் மிகுந்த சுயநலத்துடன் நடந்து கொள்வதே இயல்பு. அது போன்ற தருணங்களில் நீங்கள் காட்டும் அன்பும் உதவியும் தான் உங்களின் மேன்மையை, கருணை வெளிப்படுத்துவதாக அமையும். வயது வேறுபாடின்றி ஆண்கள் கலவரத்தில் ஒன்று போலவே பெண்களிடம் குரூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாகச் சொல்கிறார் மண்டோ.

Garm Hava என்ற எம்.எஸ்,.சத்யூ இயக்கிய படத்தில் ஒரு இஸ்லாமியக் குடும்பம் பாகிஸ்தானுக்குச் செல்ல விருப்பமின்றித் தாங்கள் பிறந்து வளர்ந்த இந்தியாவில் இருக்க விரும்புகிறார்கள். குடும்பத்தின் தலைவரான சலீம் மிர்சாவுக்குச் சொந்தமாகக் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் வேலை செய்த பலரும் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். அத்துடன் வங்கி அவர்களுக்குக் கடன் கொடுக்க மறுக்கிறது. குடும்பத்திற்குள்ளாகவே பாகிஸ்தானுக்கு ஏன் போகக்கூடாது என்ற சச்சரவு ஏற்படுகிறது.

ஆக்ராவைப் பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப் படம், இந்தியப் பிரிவினைக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு முஸ்லீம் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்திக்கும் நெருக்கடிகளை மிகச்சிறப்பாக விவரிக்கிறது

மிர்சாவின் குடும்பம் ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறது. காந்தியின் மரணத்தின் பின்பு அமைதியும் நல்லிணக்கமும் விரைவில் திரும்பும் என்று மிர்சா நம்புகிறார்,

வங்கிகள் மற்றும் வட்டிக்கடை நடத்துபவர்கள் முஸ்லீம் வணிகர்கள் கடனை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற அச்சத்தில் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள். தொழிற்சாலை நடத்த நிதி வசதியின்றி நெருக்கடி ஏற்படுகிறது. இதில் அவரது வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

மிர்சாவின் சகோதரர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து போனதால் அவர்களின் பாரம்பரிய வீடு இப்போது அரசாங்கத்தின் கைக்குப் போய்விடுகிறது. இதனால் வீட்டைக் கையகப்படுத்த அரசு முயல்கிறது. மிர்சாவின் குடும்பத்தை அந்த வீட்டை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துகிறார்கள். , இதை மிர்சாவின் வயதான தாயால் ஏற்கமுடியவில்லை. வேறு வழியின்றி ஒரு வாடகை வீட்டிற்கு அவர்கள் மாறுகிறார்கள். இந்த வேதனைகளைத் தாங்கமுடியாமல் மிர்ஸாவின் தாய் மரணமடைகிறார். மிர்சா குடும்பம் காற்றில் அடித்துச் செல்லப்படும் மணல் போலாகிறது

இந்தக் கதை பிரிவினைக்குப் பின்பு இந்தியாவிலிருந்த சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது

அரசியல் காரணங்களுக்காக உண்மைகள் மறைக்கப்பட்ட போது கலையும் இலக்கியமும் தான் பிரிவினையின் துயரத்தை உண்மையாகப் பதிவு செய்திருக்கின்றன. இன்றும் அந்த அழியாத நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேயிருக்கின்றன. வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பார்கள். வரலாறு என்பது யாரோ எழுதிப்போன வரலாற்றுப் புத்தகமில்லை. இது போன்ற இலக்கியப் பதிவுகளே வரலாற்றின் உண்மையான சாட்சியங்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2021 05:32

நான் புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதியிருக்கிறேன். ஒரு மணி நேர அளவில் நடக்கும் நாடகம்.

எனது நண்பர் கருணா பிரசாத் இதனை இயக்கவுள்ளார்.

கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை மிகச்சிறப்பாக நடித்து இயக்கியவர். மிகத் திறமையானவர்.

ஒராண்டிற்கு முன்பாக இந்த நாடகத்தை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். பெருந்தொற்றுச் சூழல் மற்றும் நாடகம் தயாரிக்கத் தேவையான பொருளாதார வசதிகள் கிடைக்காத காரணத்தால் நாடகத்தை நிகழ்த்த இயலவில்லை.

விரைவில் அந்த நாடகம் நிகழ்த்தப்படும் என நம்புகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2021 04:01

August 9, 2021

பஷீரும் தகழியும்

புனலூர் ராஜன் எடுத்த பஷீரின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறப்பான புகைப்படங்கள்.

ராஜன் ரஷ்யாவிற்கு சென்று மாஸ்கோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த USSR Institute of Cinematographyயில் மூன்று ஆண்டுகள் ஒளிப்பதிவு பயின்றவர். அன்றைய கேரள கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான திரைப்படங்களை தயாரிக்க விரும்பியது. அதன் பொருட்டே ராஜன் ரஷ்யா அனுப்பி திரைக்கலை பயின்று வந்தார். ராஜனின் மாமா கம்பிசேரி கருணாகரன் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்.

ராஜன் ஒளிப்பதிவு  படித்து முடித்து திரும்பிய போது கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாக சினிமா எடுக்கும் முடிவு கைவிடப்பட்டிருந்தது. ஆகவே கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் புகைப்படக்கலைஞராக வேலைக்கு சேர்ந்தார். அங்கே பணியாற்றியபடியே கேரளாவின் அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளை ஆவணப்படுத்த துவங்கினார். எழுத்தாளர்களைத் தேடிச் சென்று புகைப்படங்கள் எடுத்தார். அதிலும் பஷீருடன் இவருக்கு இருந்த நட்பு ஆழமானது. இவர் எடுத்த புகைப்படங்களே பத்திரிக்கைகளில் அதிகம் வெளியாகின. மிகுந்த கலைநேர்த்தியுடன் இந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பஷீர் காட்டிய ஆர்வத்தை ராஜன் இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். புனலூர் ராஜன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவரே தனது புகைப்படங்களுடன் ஒரு நூல் எழுதியிருக்கிறார்

காணொளி

கேரளாவில் எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் வீடு நினைவகமாக மாற்றபட்டு பாதுகாக்கபட்டு வருகிறது. தகழியின் செம்மீன் நாவல் சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. மிகச்சிறந்த மொழியாக்கம்.

அந்த வீடு குறித்த காணொளி.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2021 01:30

August 8, 2021

ஒலிம்பிக் வெற்றி

கடந்த பதினைந்து நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து வந்தேன். இந்தப் போட்டிகள் மனதை மிகவும் உற்சாகப்படுத்தியது. பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதுமே பெரும் மனச்சோர்வும் அச்சமும் பீடித்திருந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் இதற்கு மாற்றான நம்பிக்கையை, உத்வேகத்தை அளித்தன.

இந்தியர்கள் போட்டியில் வெல்லும் தருணங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி நிகரற்றது.  அதிலும் ஹாக்கி மற்றும் மல்யுத்த போட்டிகளில் கடைசி நிமிஷம் வரை ஏற்பட்ட பரபரப்பும் முடிவில் நாம் அடைந்த வெற்றியும் மறக்க முடியாதது.

ஒலிம்பிக் முழுவதும் இளைஞர்கள். துடிப்பான, திறமையான, உறுதியான இளைஞர்கள். அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்கக் காத்திருந்தார்கள். ஒரு கனவை எதிர்கொள்ளும் தருணமது. மைதானத்தில் அவர்கள் நடந்து வருவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அது போலவே தோற்றவர்களும் கூட தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு கம்பீரமாகத் திரும்பிச் செல்வதைக் காணும் போது பரவசமாக இருந்தது

கொட்டும் மழைக்குள்ளும் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். அவர்களில் எவரும் இந்தச் சூழலில் விளையாடுகிறோமோ என்று புலம்பவில்லை. எந்த முகத்திலும் கலக்கமில்லை.

விருதை வாங்கும் போது அவர்கள் கண்களில் கசியும் கண்ணீர் மகிழ்ச்சியால் மட்டும் ஏற்படவில்லை. எத்தனை தடைகள். புறக்கணிப்புகளைத் தாண்டி தன்னை நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் வழியே ஒரு தேசம் தலைநிமிர்கிறது. அந்தத் தேசத்தின் கடைக்கோடி மூலையில் உள்ள ஒருவருக்கு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது.

ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா.

நீரஜ் சோப்ராவின் தங்கம் இந்தியாவில் மறைந்துகிடக்கும் திறமையின் அடையாளம். ஒலிம்பிக்கிற்கு முன்னால் நீரஜ் சோப்ராவைப் பற்றியோ, ஈட்டி எறிதல் பற்றியோ ஊடகங்கள் கவனம் கொள்ளவேயில்லை. ஊடக கவனம் குவிந்திருந்த போட்டிகளில் நாம் வெற்றிபெறவில்லை. ஆனால் நீரஜ் வந்தார், வென்றார் என்பது போலத் தனது அபூர்வ சாதனையை நிகழ்த்தித் தங்கத்தைப் பெற்றுவிட்டார்.

ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ஆடியது மிகச்சிறப்பு. உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். இந்தியா ஹாக்கியில் தனது பெருமையை மீட்டுக் கொண்டுவிட்டது

பி வி சிந்து இரண்டாம் முறையாகப் பதக்கம் பெற்றிருப்பது மகிழ்ச்சியானது. ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் புதிய வரலாறு படைத்துள்ளார்.,

மல்யுத்த போட்டியில் ரவிகுமார் தஹியா மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் சிறப்பாக மோதினார்கள். வென்றார்கள். அவர்களின் வெற்றியை ஹரியானாவில் மக்கள் கொண்டாடியதைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். என்னவொரு சந்தோஷம். உற்சாகம்.

சிறப்பாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடர் நேற்று மாலை வான வேடிக்கைகளுடன் முடிவடைந்தது. பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் ஒப்படைக்கப்பட்டது. அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கொடியேந்தி வந்த போது நாங்களும் கைதட்டிக் கொண்டாடினோம்.

கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெல்லும் போது வீதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். மைதானத்தில் இனிப்பு வழங்குவார்கள். பேனர் வைப்பார்கள். அப்படியான எந்தக் கொண்டாட்டதையும் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற போது காணமுடியவில்லை என்பது வருத்தமானதே.

தடகள விளையாட்டுகளில் இந்தியாவிற்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது இந்தியாவின் கடமை.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2021 20:09

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.