S. Ramakrishnan's Blog, page 117

September 7, 2021

இதயத்திலிருந்து எழும் குரல்

எப்போது தஸ்தாயெவ்ஸ்கிக்கு தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகப் பிறந்தது என்பதைப் பற்றி Jacques Catteau புத்தகத்தில் ஒரு தகவலைப் படித்தேன்.

1837ல் பொறியியல் புகுமுக வகுப்பில் பயிலுவதற்காகத் தனது சகோதரன் மிகேலுடன் பீட்டர்ஸ்பெர்க் வந்த தஸ்தாயெவ்ஸ்கி புஷ்கின் சண்டையிட்டுக் கொல்லப்பட்ட இடத்தைக் காணச் சென்றார். சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தச் சம்பவம் நடந்தேறியது. புஷ்கின் மீது தஸ்தாயெவ்ஸ்கியும் அவரது சகோதரனும் தீராத காதல் கொண்டிருந்தார்கள். ஆகவே புஷ்கின் டூயல் சண்டை செய்த இடத்தைத் தேடிச் சென்று பார்த்தார்கள்.

அந்த நாட்களில் மிகேல் நிறையக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான். தஸ்தாயெவ்ஸ்கி தனது மனதிற்குள்ளாக ஒரு நாவலைக் கற்பனை செய்து கொண்டிருந்தார். 1839 ஆகஸ்ட் 16 தனது 17 வயதில் எழுதிய ஒரு குறிப்பில் தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி பதிவு செய்திருக்கிறார்.

நாவலாசிரியன் தன்னுடைய இதயத்திலிருந்து எழும் குரலைக் கேட்க வேண்டும். அவன் தலைக்குள் கதாபாத்திரங்கள் உலவிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படி மனதிற்குள் நாவல் வளர்ந்தபிறகே அதைக் காகிதத்தில் எழுத வேண்டும் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.

 சிக்கலான கதாபாத்திரங்களின் உளவியலைக் கூடத் தஸ்தாயெவ்ஸ்கி ஒரே மூச்சில் துல்லியமாக எழுத முடிந்ததற்கு இதுவே காரணம் என்கிறார்கள்

ஷேக்ஸ்பியர் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கி அவரது முதல் நாவலின் கதாபாத்திரங்களை ஷேக்ஸ்பியர் ஜாடையில் உருவாக்கியுள்ளார் என்கிறார் ஸ்டராட்ஸ்கி.

ஷேக்ஸ்பியரின் அவல உணர்வுகளை மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கி எடுத்துக் கொண்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. நாவல் எழுதுவதற்கான தூண்டுதலை அவருக்கு உருவாக்கியது பிரெஞ்சு இலக்கியமே. அதிலும் குறிப்பாகப் பால்சாக். அவரது நாவல்களை விரும்பி வாசித்த தஸ்தாயெவ்ஸ்கி அவரைப் போலவே தானும் நாவல் எழுத விரும்பினார்.

கனவு நிலைப்பட்ட யதார்த்தமே தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம். தன் இளமையில் ஒரு நாள் நேவா ஆற்றங்கரையில் சூரியன் மறையும் காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டெனப் பகல் மறைந்து இருள் பரவத்துவங்கிய போது அவரது மனதில் சொல்லமுடியாத ஒரு உணர்வு பீறிட்டது. தான் இதுவரை அடையாத பேருணர்வு ஒன்று தன்னை ஆக்கிரமிப்பது போல அவர் உணர்ந்தார். அந்த நிமிஷம் அவரது உடல் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இந்தத் தருணத்தின் பிறகு அவரது புற உலகம் குறித்த பார்வை மாறிவிட்டது எனலாம்.

எளிமையான எண்ணங்கள் கூட அவருக்குள் தீப்பற்றிக் கொண்டது போலத் தீவிரமான உணர்வெழுச்சியை உருவாக்கியது. ஆகவே அவர் தினசரி நிகழ்வுகளிலிருந்தே பேரனுபவங்களை உருவாக்கினார். அது தான் தஸ்தாயெவ்ஸ்கியின் பலம் என்கிறார் ஸ்டராகோவ்

தனக்குப் புத்தி பிசகிவிடும். தான் பித்தேறிப்போய்விடுவேன் என்று அவர் உள்ளுக்குள் பயந்து கொண்டேயிருந்தார். அது பற்றி அவரது குறிப்பிலும் காணமுடிகிறது. இந்த அச்சம் அவரது படைப்பினுள் வெளிப்பட்டது என்கிறார்கள். அவரது கதாபாத்திரங்கள் Burning Head and Weak Heart கொண்டவர்கள் என்கிறார் ஸ்டராகோவ். அது உண்மையே.

தன் இளமையில் தஸ்தாயெவ்ஸ்கி நிறைய வாசித்தார். ஆழ்ந்துவாசித்து அதிலேயே ஊறிக்கிடந்த காரணத்தால் அவருக்கு எழுத்தின் அடிப்படைகள் எளிதாகக் கைவசமாகின. தஸ்தாயெவ்ஸ்கி வீட்டிலிருந்த நூலகத்தைப் பற்றியும் அவர் படித்த புத்தகங்களின் கேட்லாக்கினையும் காணும் போது அவர் விரிவாகப் படித்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பொறியியல் பயின்ற போது பௌதீகம். கணிதம், வேதியியல் மற்றும் கட்டிடக்கலை. இயந்திரவியல் என அறிவியலின் பல்துறைகளையும் ஆழ்ந்து படித்திருக்கிறார். இதன் வெளிப்பாடே அவரது படைப்பில் வெளிப்படும் அறிவியல் பார்வை மற்றும் அறிவியலின் தேவை குறித்த விவாதங்கள்.

தனது ஐரோப்பிய வாழ்க்கையின் போது உலகப்புகழ் பெற்ற சிற்பங்களையும் ஓவியங்களையும் அவர் ரசித்துப் பார்த்து வியந்திருக்கிறார். இசையில் அவருக்கு இருந்த ஈடுபாடு மிக அதிகம். இசையின் வழியே தான் தனது அகம் மீட்சியுறுகிறது என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. பீதோவன். மொசார்ட், லிசட், சோபின் போன்றவர்களை விரும்பி கேட்டிருக்கிறார். இத்தாலிய ஒபராவும் அவருக்குப் பிடித்தமானது.

அடர்ந்த இருளில் தான் சுடரின் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அது போலவே தனது கதாபாத்திரங்கள் ஒளிர்வதற்கு இருண்ட பின்புலமாக அவர்களின் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று விரும்பினார். கரமசோவ் சகோதரர்களில் தந்தை மோசமான மனிதராக இருப்பது தான் பிள்ளைகளின் மீது நாம் அதிகக் கவனம் கொள்வதற்கு முக்கியக் காரணம். தேவாலயத்தின் பிரம்மாண்டமான கோபுரத்தைப் போல நாவல் அண்ணாந்து பார்க்கும் படியாக உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் கனவுகளும் யதார்த்தமும் ஒன்று கலந்து எழுதப்பட வேண்டும். அந்த வகையில் விக்டர் கியூகோவும் டிக்கன்ஸ்சும் தனது நாவலை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களே எனது ஆதர்சங்கள் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி

தினசரி வாழ்விற்குள் ஒரு புதிர் தன்மையும் மர்மமும் கலந்திருக்கிறது. மனிதர்களின் செயல்கள் எல்லாவற்றையும் காரணங்களால் விளக்கிவிட முடியாது. சில செயல்களைப் புரிந்து கொள்வது இயலவே இயலாது. இதையே தஸ்தாயெவ்ஸ்கி தனது படைப்புகளில் கவனம் கொள்கிறார்.

ரஸ்கோல்நிகோவ் கொலையைச் செய்வதற்கு முன்பாகத் துல்லியமாகத் திட்டமிடுகிறான். ஒத்திகை பார்க்கிறான். குறிப்பாகத் தனது வீட்டினை கடந்து செல்கிறவர்களின் எண்ணிக்கையைக் கூட அவன் கணக்கெடுக்கிறான். எதற்காக இந்தக் கணக்கு. தினசரி வாழ்க்கை ஒன்று போலத் தோன்றினாலும் அது ஒன்று போலவே இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் அடையாளம் போலவே வட்டிக்கடைப் பெண்ணைக் கொல்லச் சென்ற ரஸ்கோல்நிகோவ் அவளது தங்கை லிசாவெதாவையும் கொலை செய்கிறான். அது எதிர்பாராமையின் அடையாளம்

தனது வீட்டின் ஜன்னல் வழியாகக் கடந்து செல்பவர்களின் உடைகளை ரஸ்கோல்நிகோவ் அவதானித்தபடியே இருக்கிறான். பகட்டான உடை அணிந்தவர்கள் எவருமில்லை. அது தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி. ஆனாலும் மற்றவர்களின் உடையைக் காணும் போது தனது தோற்றம் குறித்துக் கவலை கொள்கிறான்

தஸ்தாயெவ்ஸ்கி துல்லியமாக அந்தப் பகுதியை விவரித்துள்ளார். அங்கு வசிக்கும் ஜெர்மானியர்கள். விளையாட்டுச் சிறுமிகள். துணிதுவைப்பவர்கள் கேரேஜ் தொழிலாளர்கள். பரத்தைகள் எனப் பலரையும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். இதன்வழியே வாசகருக்குக் கதையின் களம் துல்லியமாகக் கண்ணுக்குத் தெரிந்துவிடுகிறது. கற்பனையான கதைப்பரப்பினை உருவாக்காமல் நிஜமான பீட்டர்ஸ்பெர்க் நகரில் தனது நாயகனை உலவ விடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. அது தான் அவரது தனிச்சிறப்பு

தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவியான அன்னா தனது நாட்குறிப்பில் தங்களுக்குத் திருமணமான புதிதில் ஒரு நாள் தஸ்தாயெவ்ஸ்கி தன்னை இடிந்து போன சுவர் ஒன்றைக் காண அழைத்துப் போனதாகவும் அது ரஸ்கோல்நிகோவ் கொலைக்குப் பின்பு பொருட்களை ஒளித்து வைத்த சுவர் என்று சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். நாவலின் களத்தை எவ்வளவு நுட்பமாக அறிந்து வைத்திருக்கிறார் என்பதன் அடையாளமே இந்த நிகழ்வு

நகரமே அவரது நாவலின் மையம். கிராமிய வாழ்க்கை குறித்தோ, பண்ணையடிமைகள் பற்றியோ அவர் கவனம் கொள்ளவில்லை. அதிலும் நகரத்தில் தனக்கென அடையாளம் இல்லாமல் போனவர்களைத் தான் அவர் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்.

கனவும் குழப்பமான எண்ணங்களும் கொண்ட அவரது நாவலின் நாயகர்கள் உலகின் குற்றங்களுக்காக வருந்துகிறார்கள். தன் தவறுகளுக்கான தண்டனையைத் தானே வழங்கிக் கொள்கிறார்கள். உலகத்தால் மட்டுமின்றி உறவுகளாலும் வஞ்சிக்கப்படும் மனிதனின் நிலையைப் பற்றியே தஸ்தாயெவ்ஸ்கி எழுதுகிறார். தனது வேதனைகளைத் தான் மனிதன் நினைவில் வைத்துக் கொள்கிறான். சந்தோஷங்களை அல்ல எனும் தஸ்தாயெவ்ஸ்கி தன்னையே ஒரு பகடையாக மாற்றி உலகோடு விளையாடுகிறார்.

what is time ? time does not exist. time is numbers .time is the relationship of being to non being – – Notebook for crime and Punishment

என்ற அவரது வரி காலம் பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாகும். இந்த வரியின் மூலமே அவரது நாவல்களைப் புரிந்து கொள்ள முடியும்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2021 01:06

September 5, 2021

துயிலின் திருவிழா

ஜெ. திவாகர்

எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்பது போல இந்நாவலின் கதையோட்டம் முழுமையும் தெக்கோடு துயில் தரு மாதா கோவிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழா நோக்கியே நகர்கிறது.

எஸ்.ரா. வின் அத்தனை கதைகளிலும் முக்கிய கதாபாத்திரமாய் இடம்பெறும் வெயில்.  இக்கதையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் ஓடும் நரம்புகளாய் பின்னி பிணைந்து நம்மோடும், கதையோடும் பயணிக்கிறது வெயில்.

இந்நாவல், மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு தளம் 1870 களிலும், மற்ற இரு தளங்களும் 1982 கால கட்டத்திலும் நடப்பதாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்களில் கடற்கன்னி ஷோ நடத்தும் அழகர், அவன் மனைவி சின்னராணி, அவர்களின் கால் சற்று ஊனமான மகள் செல்வி இவர்கள் மூவரும் யாருமற்ற ஆத்திக்குளம் ரயில் நிலையத்தில் தெக்கோடு செல்வதற்கான ரயிலை எதிர்பார்த்து முகத்தில் வெயில் வழிய காத்திருப்பதிலிருந்து தொடங்குகிறது நாவல்…..

திருவிழாக்களில் ஷோ நடத்துவோரின் வாழ்க்கை, அவர்கள் படும் அவஸ்தைகள், ஒரு சாண் வயிற்றைத் தாண்டி அவர்களுக்குள்ளும் இருக்கும் மனசு என கதை விரிகிறது.

இவர்களோடு ரயிலில் நோய்மையால் பாதிக்கப்பட்ட ரோகிகள், பிச்சைக்காரர்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். தெக்கோட்டிலுள்ள துயில்தரு மாதா கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு கூட்டம் கூட்டமாய் படையெடுக்கும் வெவ்வேறு விதமான நோய்களால் பீடிக்கப்பட்ட – நோய்களை தாமே வலிய தேடி உருவாக்கிக் கொண்ட மக்களின் துயரம் நிறைந்த கதைகளை கேட்கையில், நமக்குள்ளும் ஏதோவொரு இனம் புரியாத நோய் அண்டிக் கொண்டிருப்பதைப் போல் உணர்வதிலிருந்தே நாவலுக்குள் நம்மை நூலாசிரியர் எந்த அளவு ஒன்றிப் போகச் செய்துள்ளார் என்பதை உணர முடிகிறது.

நாம் நம் உடலை எந்த அளவிற்கு பொருட்படுத்தாமல் துச்சமாய் மதித்து நோயை தாமே வரவைத்துக் கொள்கிறோம் என்பதை பல இடங்களில் கதை மாந்தர்கள் வழியே எஸ்.ரா. உணர்த்துகிறார்.

*”மனிதர்கள் தங்கள் உடலை எப்போதுமே ஒரு இயந்திரத்தைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் வரை அவர்கள் அதை கவனிப்பதேயில்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு என்று வந்துவிட்டால் உடனே பயம் கொண்டு விடுகிறார்கள்.”*

மேலும், நோய்மை என்பது நாம் பார்த்து பயந்து துயரப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வைக்கிறார்.

*”நோய் ஒரு நல்ல ஆசான். அது ஒரு மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது.”*

நாவலில் நம்மை மனம் கலங்கச் செய்யும் பாத்திரங்கள் இருவர் உண்டு. ஒருவர் கொண்டலு அக்கா.

தெக்கோடு செல்லும் நோயாளிகள் வழித் தங்கலுக்காக தங்கும் எட்டூர் மண்டபத்தில் வசிக்கும் கொண்டலு அக்கா அங்கு வரும் நோயாளிகளிடம் காட்டும் பரிவும், அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவதும், அவர்களின் புண்களில் வழியும் சீழை துடைப்பதும் அனைத்திற்கும் மேலாய் அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதுமென நாம் நேரில் காண வாய்க்காத அன்னை தெரசாவினை நினைவூட்டுகிறார்.

அதுவும் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் கூறும் வாழ்க்கை போதனைகள் தான்  இந்நூலின் உச்சமென்பேன்…..

*”நாவை அடக்கிக் கொள்ளும் போது மனதும் சேர்ந்து ஒடுங்கத் துவங்குகிறது. மனது ஒடுக்கம் கொண்டுவிட்டால் உலகின் சுமைகள் எதுவும் நம் மீது படியாது. நீர்க்குமிழ் போல நாமும் மிதக்கத் துவங்கிவிடுவோம். ஆனால், நாவைக் கட்டுவது எளிதானதில்லை”*

*”நோயாளியிடம் பரிவு கொள்ளத் தெரியாத மருத்துவரைப் போல இந்த உலகில் மோசமானவர் எவருமில்லை. மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை. அது ஒரு சேவை. கைமாறில்லாத சேவை. அது கறைபடும் போது மனிதன் மீட்சியுறவே முடியாது “*

-ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் மருத்துவமனையின் சுவர்களிலும் அவர்தம் உள்ளத்திலும் பொறித்து வைக்க வேண்டிய வைர வரிகள் இவை.

*” குடும்பத்தை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தெரியாத மனிதனால் உலகை நேசிக்க முடியாது”*

இதேபோல் இக்கதையின் மற்றுமொரு ஆகச் சிறந்த கதாபாத்திரம் ஏலன் பவர்.

எஸ்.ராவின் நாவல்களின் பெரும் பலமே அவற்றில் புனைவு எது நிஜமெது என்று அத்தனை எளிதாய் நம்மால் பிரித்தறிய இயலா வகையில் இரண்டும் டி.என்.ஏ.வில் பின்னிப் பிணைந்திருக்கும் இரட்டைச் சுருளாய் கலந்திருப்பது தான்….

இந்நாவலிலும் ஏலன் பவர் என்னும் பாத்திரம் இதைப் போன்றதே. இறை ஊழியத்திற்காய் இந்தியா வரும் ஏலன் பவர் (1873) தெக்கோடு வந்து அங்கு வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கிறார். ஆனால் அது அத்தனை எளிதாய் இல்லை. மூடப் பழக்கத்திலும், அறியாமையிலும் மூழ்கி இருக்கும் அப்பாவி மக்கள் முதலில் ஏலன் பவரை ஏற்க மறுக்கின்றனர். ஏலன் பவர் தனது ஞானத்தந்தையான லகோம்பேவிற்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாய்க் கொண்டு இக்கதாப்பாத்திரத்தை நூலாசிரியர் கட்டமைத்துள்ளார்.

இறைவனுக்கு தொண்டு செய்வதை விடவும் மக்களை நோய்மையிலிருந்து காப்பதே தமது முதல் பணி என கடமையாற்றும் ஏலன் பவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் ஏராளம். எனினும் தான் கொண்ட கொள்கைக்காய் அத்தனையும் துச்சமென தூக்கி எறிந்து தனது பாதையில் முன்னேறும் ஏலன் நமக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.

உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஓரிடத்தில் ஏலன் பவர் கூறுகையில்,

*”எல்லா நோய்களுக்கும் ஒரே தாய்தானிருக்கிறாள். அது உணவு. சரியான, தேவையான, எளிதான  உணவைக் கைக்கொள்ள தவறும்போது நோயின் கைகள் நம்மைப் பற்றிக் கொள்ளத் துவங்குகின்றன. பசியை எதிர்கொள்வதும், அதைக் கடந்து செல்வதும் எளிதானதில்லை. அது மனிதவதையில் முக்கியமானது.”*

ஏலனுக்கு லகோம்பே எழுதும் கடிதங்களில் அவளை ஊக்கப்படுத்தும் தன்னம்பிக்கை வாசகங்கள் மிளிரும்…. அவை ஏலனுக்கானது மட்டுமல்ல நமக்கும் சேர்த்தே….

*”சேவை செய்வது என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. இது தண்ணீர்த் துளிகளால் ஒரு பாறையை துளையிட விரும்புவது போன்றது. தண்ணீர்த் துளி எப்படி ஒரு பாறையைத் துளையிட முடியும் என்று கேலி செய்வார்கள். முட்டாள்தனம் என்று பரிகாசம் செய்வார்கள். நமக்கே வியர்த்தம் என்றுகூடத் தோன்றும். ஆனால் தண்ணீர்த்துளி இடைவிடாமல் ஒரே இடத்தில் சொட்டிக் கொண்டேயிருந்தால் பாறையில் நிச்சயம் ஒரு நாள் துளை விழும். அது சாத்தியமாகியிருக்கிறது. அதுவரை நீயும் காத்திரு.”*

இந்நூலைப் பற்றி பேசப் பேச, எழுத எழுத என் கைகளும், வாயும் ஓய்ந்த பாடாய் இல்லை.

இன்னமும் இந்நூல் குறித்து நான் எழுத நினைத்து எழுதாத வார்த்தைகள் நிறைய மீதமிருக்கிறது.

நூலிலிருந்து சில வரிகள் மட்டும் இறுதியாய்……

*வறுமை எல்லா அவமானங்களையும் நம்மீது சுமத்தி விடும். வறுமை எந்த வைராக்கியத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும்*

*வலியை நீ எப்போது மறைக்கத் துவங்குகிறாயோ அப்போது நீ உன்னை ஏமாற்றிக் கொள்ளத் துவங்கிறாய்*

*மனிதர்கள் தாங்கள் விரும்புவதை விடவும் வெறுப்பதைப் பற்றி தான் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்*

போதுமென்று நினைக்கிறேன்.

“சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!” என்கிறார்- பிரான்சிஸ் பேக்கன். நீங்கள் சுவைத்து மென்று ஜீரணித்து மகிழ ஏற்ற நூல் துயில்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 22:35

பாலபுரஸ்கார்

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் நூலுக்கு  சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

பாலபாரதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

புத்தகம் வெளியிட்ட வானம் மணிகண்டனுக்கு பாராட்டுகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 22:33

வீடும் உலகமும்

புதிதாக ஒரு வீட்டிற்குக் குடியேறும் போது ஏற்படும் அனுபவங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்று போலவே இருக்கின்றன.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய பிரிட்டிஷ் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அதில் ஒரு குடும்பம் புறநகர் லண்டனிலுள்ள ஒரு வீட்டிற்குப் புதிதாகக் குடியேறுகிறார்கள். அண்டை வீட்டாருடன் ஏற்படும் அறிமுகம். தெரிந்த நண்பனின் வருகை. குடும்பம் அங்கே மெதுவாக நிலை கொள்ள ஆரம்பிப்பது. அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்கள் எனக் காட்சிகளைக் காணும் போது இது போன்ற அனுபவத்தைத் தானே நான் சென்னைக்கு வந்த போதும் அடைந்தேன் என்று தோன்றியது.

ஊரும் காலமும் வேறு வேறானது. ஆனால் ஒரே அனுபவம் தான் திரும்பத் திரும்ப நடைபெறுகிறது

சினிமாவின் வழியே நம்முடைய வாழ்க்கையை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்கிறோம்.

பலநேரம் நாம் அடையமுடியாமல் போனவற்றை. சில நேரம் நாம் அடைந்த விஷயங்களின் மாற்று வடிவத்தை.

இரண்டிலும் நாம் மாறத்துவங்குகிறோம். நமது அனுபவங்கள் பொதுவெளியில் கதையாக மாறிவிடுகின்றன. அதே நேரம் எவருடைய கதையோ நமது சொந்த அனுபவமாக உட்சென்று சேகரமாகி விடுகிறது

ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்லும் This Happy Breed படம் 1944ல் வெளியானது.. இது ஒரு நாடகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டது. வெற்றிகரமான இந்த மேடைநாடகத்தை எழுதியவர் Noël Coward. இவர் புகழ்பெற்ற நாடக ஆசிரியர். இவரது  Private Lives , Brief Encounter, Blithe Spirit போன்ற நாடகங்கள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நாடகம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் கதையைச் சொல்வதுடன் இங்கிலாந்தில் நடைபெற்ற அரசியல் சமூக மாற்றங்கள் அந்தக் குடும்பத்தை எப்படிப் பாதித்தன என்பதையும் விவரிக்கிறது

டேவிட் லீன் இயக்கியுள்ள இப்படம் இரண்டு யுத்தங்களுக்கு நடுவே ஒரு வாழ்க்கையை விவரிக்கிறது.

– ஃபிராங்க், அவரது மனைவி எத்தேல், அவர்களின் மூன்று குழந்தைகள் ரெக், வி மற்றும் குயினி, அவரது சகோதரி சில்வியா மற்றும் எத்தேலின் தாய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். –

தெற்கு லண்டனின் கிளாபாமில் ஒரு வாடகைக்கு வீட்டுக்கு. ஃபிராங் குடியேறுகிறார். அது தொழிலாளர்கள் குடியிருப்பு. அவரது பக்கத்து வீட்டுக்காரர் பாப் மிட்செல்.

– ஃபிராங்க்கின் பழைய நண்பர். ஆகவே குடிவந்த முதல்நாளே அவர்களுக்குள் நல்ல நெருக்கம் உருவாகிறது.

பிராங்க ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலை செய்கிறார். வீட்டினை நிர்வாகம் செய்யும் எத்தேல் பிள்ளைகளை வளர்க்கிறார்

வீட்டில் அதிகாலை தயாரிக்கப்படும் தேநீரில் துவங்கி இரவு உணவு வரை அத்தனையும் காட்சிகளாக விரிகின்றன. வீடு தான் எத்தேலுக்கு உலகம். ஒரு செடி வளர்ந்து பூப்பது போல அந்த குடும்பம் மெல்ல வளர்ச்சி அடைகிறது.

பிள்ளைகள் வளர ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கெனத் தனி விருப்பங்களும் எண்ணங்களும் உருவாகின்றன. அது எப்படிக் குடும்பத்தில் எதிரொலிக்கிறது. விசுவாசமான பிரிட்டிஷ் குடிமக்களாக ஃபிராங்க்கின் குடும்பம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள் என்று பல்வேறு நிகழ்வுகளாக படம் விரிகின்றன.

ஆளுக்கு ஒரு ஆசையுடன் வளரும் பிள்ளைகளின் கனவுகளைப் பெற்றோர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதே மையக்கதை

சில்வியாவிற்கும் எத்தேலுக்கும் இடையில் ஏற்படும் சண்டை. குயினிக்கு நடனத்தில் ஏற்படும் விருப்பம். அவள் அந்தக் கனவினை துரத்திப் போவது. அவளைக் காதலிக்கும் இளைஞன். வீட்டை விட்டு மகள் வெளியேறிப் போய்விட்டதைத் தாங்க முடியாத பெற்றோரின் வேதனை என உணர்ச்சிப்பூர்வமாகக் கதை பின்னப்பட்டிருக்கிறது

முதற்காட்சியில் துவங்கி கடைசிக் காட்சி வரை . ஃபிராங்க் மாறுவதேயில்லை சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறார். குடும்பத் தலைவராக அவர் பொறுப்புணர்வு மிக்கவராகக் கடைசி வரை நடந்து கொள்கிறார். பிள்ளைகளின் வாழ்க்கை திசைமாறிப் போனது எத்தேலை வேதனை கொள்ளச் செய்கிறது. அவள் கயிறு அறுபட்ட பட்டம் போலாகி விடுகிறாள்.

வீட்டைவிட்டுப் போன மகள் வீடு திரும்பும் காட்சியும். நீண்ட காலத்தின் பின்பு பிராங்கும் எத்தலும் ஒன்றாக நடந்து சென்று பூங்காவில் அமர்ந்து உரையாடுவதும் அபாரமான காட்சிகள்

ரெக் மற்றும் அவரது மனைவி ஒரு கார் விபத்தில் கொல்லப்பட்டபோது, அந்த மோசமான செய்தியைச் சொல்ல ஃப்ராங்க் மற்றும் எத்தேலை தேடிவரும் காட்சியும் எதிர்பாராத துயரச்செய்தியை கேட்டு அவர்கள் கொள்ளும் வேதனையும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

. ஃபிராங்க்கின் வாழ்க்கையோடு புற உலகில் நடக்கும் மாற்றங்களையும் நாம் காணுகிறோம். 1929 ஆம் ஆண்டில் சாம் மற்றும் வி ஒரு புதிய பேசும் படத்தைத் திரையரங்கில் காணுகிறார்கள். இது போலவே குயினி சார்லஸ்டன் நடனப் போட்டியில் வெற்றி பெறுகிறாள். தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதில் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி உண்மை நிகழ்வுகளைப் பொருத்தமாகப் படம் இணைத்துக் கொண்டுள்ளது

குயினி மற்றும் அவளது சோசலிசம் பேசும் நண்பன் சாம் லீட்பிட்டர் இருவரும் உணவு மேஜையில் செய்யும் வாதமும் அதில் முதலாளித்துவம் பற்றிய சாமின் எண்ணங்களும் சிறப்பானவை அந்த விவாதமே சிறந்த வாய்ப்புகளைத் தேடி வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தைக் குயினிக்குள் உருவாக்குகிறது

திருமணத்திற்காக அந்தக் குடும்பம் தயாராகும் காட்சியில் அவர்கள் காருக்காகக் காத்திருப்பது. ஒரே வாகனத்தில் அத்தனை பேரும் பயணம் செய்வது. திருமணக் கொண்டாட்டத்தில் உற்சாகமாக ஈடுபடுவது எனப் பிராங்கின் குடும்பம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதம் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநராக டேவிட் லீனின் முதல் படம். இதற்கு முன்பு சில படங்களில் அவர் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஆனால் முழுமையான இயக்குநராக இப்படம் மூலமே அறியப்படுகிறார்

வீடும் உலகமும் என்று தாகூர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு வசீகரமானது. வீடும் உலகமும் தனித்தனியாகத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றையொன்று பாதிக்கக்கூடியது. அதையே இந்தப்படமும் அடையாளப்படுத்துகிறது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 03:33

நிகழாத சந்திப்பு

புதிய குறுங்கதை

அவன் லேடிமெக்பெத்தை எலக்ட்ரிக் ட்ரைனில் வைத்துச் சந்தித்தான்.

அவள் லேடி மெக்பெத் தானா.

ஏனோ அவளைப் பார்த்த மாத்திரம் அவள் தான் மெக்பெத்தின் மனைவி. அரசனைக் கொலை செய்யத்தூண்டிய பெண் என்று தோன்றியது

ஷேக்ஸ்பியரின் மெக்பெத் நாடகத்தை அவன் பலமுறை படித்திருக்கிறான். லேடி மெக்பெத்தின் உண்மையான பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. ஏன் ஷேக்ஸ்பியர் அவளுக்குப் பெயர் வைக்கவில்லை.

லேடி மெக்பெத் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணுகிறவள். ஒரு கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பது போலவே அவள் மெக்பெத்தை இயக்குகிறாள். அதுவும் டங்கனைக் கொல்வதற்கு அவனை தயார் செய்வது ஒரு கிளிக்கு பேசக் கற்றுக் கொடுப்பது போன்று இனிமையாக செயலாக அவளுக்குத் தோன்றுகிறது..

சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போலத் தான் மெக்பெத் நடந்து கொள்கிறான். அவள் எதற்காகக் கொலைவாளை வாங்குகிறாள். ஏன் அந்தக் கொலைக்குப் பிறகு உறக்கமற்றுப் போகிறாள். தூக்கத்திலே நடக்கிறாள்.

தூக்கத்தைப் பறிகொடுத்த பெண்கள் எல்லோரும் லேடிமெக்பெத் தானா.

மின்சார ரயிலில் எதிரில் நிற்கும் பெண்ணும் குற்றவுணர்வின் ஆழத்தில் உறைந்தவள் போலிருந்தாள். கலையாத தூக்கம் கொண்ட முகம். அவளது கண்கள் லேசாகத் திறந்து கொள்ளும் போது வெளியுலகைக் காண விருப்பமேயில்லை. அந்தப் பெண்ணின் கைகளில் சிறியதொரு கைப்பை. அதற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு கைப்பிடி.

அது கத்தியின் கைப்பிடி தானா.. இல்லை உடைந்த கரண்டியா..

லேடிமெக்பெத்தை இப்படி ரயிலில் சந்திப்பான் என அவன் ஒரு போதும் நினைத்ததில்லை.

சில பெண்கள் குடும்ப வாழ்க்கையினால் லேடிமெக்பெத்தாக உருமாறி விடுகிறார்கள்.

உண்மையில் சிறுமியாக இருந்த போது லேடி மெக்பெத் இவ்வளவு கள்ளமும் வெறுப்பும் இல்லாமல் தானே வளர்ந்திருப்பாள்.

காலை நேரத்து மின்சார ரயிலில் வழக்கத்தை விடக் கூட்டம் இரண்டு மடங்கு இருப்பது வழக்கம்.

அவசரமாக வேலைக்குச் செல்லும் முகங்கள். அதில் தெரியும் பதற்றம். நேற்றைய கோபங்கள். எரிச்சல்கள். இன்றைய ஆசைகள். அபூர்வமாக ஏதோ ஒரு பெண் அன்றைய நாளை அழகாக்குவது போல நேற்றின் சுவடே இல்லாமல் மலர்ச்சியாக வந்து சேருவாள். நறுமணம் போல அவளது வருகை அந்த ரயில் பெட்டியை சந்தோஷப்படுத்தும்.

இன்று அப்படி எவரையும் காண முடியவில்லை.

லேடிமெக்பெத் கறுப்பு நிற சால்வார் கமீஸ் அணிந்திருந்தாள். முப்பது வயதைக் கடந்திருக்கும்.

ஷேக்ஸ்பியர் காலத்தில் முப்பது வயது என்பது இளமையின் கடைசிப்படிக்கட்டு. பனிரெண்டு வயதிலே ஒரு பெண்ணின் கனவுகள் மலரத்துவங்கிவிடும். பதினாறு வயது தான் அவளது இளமையின் அடையாளம். அந்த வயதில் திருமணமாகிவிடும். லேடிமெக்பெத்தும் பதின்வயதிலே திருமணம் செய்து கொண்டிருப்பாள்.

மணவாழ்வில் வெறுமை உச்சமடையும் போது அது ஒரு ஆயுதமாகிவிடுகிறது. மெக்பெத்தின் கொலைவாள் என்பது அவள் மனைவியின் வெறுமையின் வடிவம் தானே.

மின்சார ரயிலில் நின்றிருந்த அந்தப் பெண் சோம்பல் முறித்துக் கொண்டாள். சுற்றிலும் பார்வையை ஒட்டினாள். இறுக்கமான முகத்துடன் இந்த உலகம் தனக்கானதில்லை என்பது போல வெறித்த படியே நின்றிருந்தாள்.

இரக்கத்தையும் அன்பையும் வேண்டாம் என்று உதறிச் சென்றது தான் லேடிமெக்பெத் செய்த தவறா.

அது தான் அவளது கொடுங்கனவாக உரு மாறிவிட்டதா..

அவள் தன் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள்

‘All the perfumes of Arabia will not sweeten this little hand’.

அவள் தனக்கும் ஏதாவது உத்தரவு தருவாள் என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவள் கவனித்தவள் போல ஏறிட்டாள்.. சப்தமில்லாமல் அவள் உதடுகள் எதையே சொன்னது போலிருந்தது.

என்ன உத்தரவு அது.

தந்தையைப் போல நேசிக்கும் ஒருவரை ஏன் மெக்பெத் கொன்றான். அது மனைவியின் ஆசையை நிறைவேற்ற மட்டும் தானா. டங்கனின் மனைவி உயிரோடு இருந்து உடன் வந்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்குமா.

எதிரே நிற்கும் கறுப்பு உடை அணிந்த பெண் வசீகரமாகவும் பயமாகவும் இருந்தாள்..

அவன் மெக்பெத் இல்லை. ஆனால் அவள் லேடி மெக்பெத்.

அவன் சற்றே பயத்துடன் மின்சார ரயிலின் வேகத்தில் துண்டிக்கப்படும் புறக்காட்சிகளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தான்

அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றபோது லேடிமெக்பெத் தூக்கத்தில் நடப்பவள் போலவே இறங்கி நடந்து போனாள்.

ரயில் புறப்பட்டபிறகு கவனித்தான். அவள் நின்றிருந்த இடத்தில் ஒரு கத்தி விழுந்து கிடந்தது. அது அவள் கைப்பையிலிருந்தது தானா..

அவன்  கொல்ல வேண்டிய டங்கன் யார்

மனதிற்குள்ளாக அவரைத் தேடத்துவங்கினான்

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2021 01:10

September 3, 2021

மண்ணாசை எனும் மண்ணின் குரல்

சங்கர ராமின் மண்ணாசை தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்.

அதிகம் பேசப்பபடாத ஆனால் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான நாவல். நீண்டகாலம் இந்த நாவல் அச்சில் இல்லாமல் இருந்தது. நண்பர் கால. சுப்ரமணியம் அதைத் தமிழினி மூலம் மறுபதிப்புச் செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

சங்கர ராமின் சொந்த ஊரை மையப்படுத்திய நாவல். முசிறியைச் சுற்றிய கிராமங்களின் இயல்பை. விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கை நெருக்கடிகளை மிக உண்மையாகச் சங்கரராம் எழுதியிருக்கிறார். தான் நேரில் கண்ட உண்மை நிகழ்விலிருந்து இந்த நாவலை உருவாக்கியதாகச் சங்கரராம் முன்னுரையில் சொல்கிறார். இந்த நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். பின்பு தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. நாவலின் முடிவு தான் சற்றே செயற்கையாக உள்ளது

மண்ணாசை நாவல் மிக அழகாகத் துவங்குகிறது. ஆலங்கட்டி மழையின் ஊடே சிறுவர்கள் சுற்றியலையும் காட்சி மறக்க முடியாதது..

வீரமங்கலம் என்ற, காவேரிக்கரையோரமுள்ள சிறு கிராமத்தின் கதையைத் தான் மண்ணாசை விவரிக்கிறது.

வீரமங்கலத்துக் குழந்தைகளுக்குக் காற்று, மழை என்றாலே, ஒரே கொண்டாட்டம். பயமற்று ஓடித் திரிவார்கள் அதிலும் வெயிற்காலத்தில் ஒரு புயற்காற்று அடிக்க ஆரம்பித்தாலோ, அவர்களுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. வேலனும் வள்ளியும் அவர்களின் நண்பர்களும் திடீரென வீசும் பெருங்காற்றில் மாமரங்களிடம் ஓட்டம் பிடிக்கிறார்கள். மரத்திலிருந்து பழங்கள் மாரியாய்ப் பொழிகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் தான் தூக்கமாட்டாத அளவு பழங்கள் இருந்தபோதிலும், ஒன்றுக்காவது மரங்களை விட்டுவர இஷ்டமில்லை. ஆலங்கட்டி மழையின் ஊடே அந்தச் சிறுவர்கள் மாம்பழங்களுடன் செல்வது அபூர்வமான காட்சி

வேலனும் வள்ளியும் பால்ய வயது முதல் நெருக்கமாகப் பழகுகிறார்கள். கால மாற்றத்தில் வேலனின் குடும்பம் நொடித்துப் போகிறது. அவனது வளர்ப்புத் தந்தை கடனாளி ஆகிறார். இதனால் அவர்களின் திருமணம் தடைப்படுகிறது. வேலனின் அம்மா அவன் மீது காட்டும் பாசம், கஷ்டத்தின் நடுவிலும் ஒரு சுடரைப் போல ஒளிரும் அன்பு. கடனாளியான வெங்கடாசலம் அந்த மனவருத்தத்தில் நடக்க முடியாத நோயாளி ஆவது வேலன் தலையெடுத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவது என நாவல் ஒரு எளிய குடும்பத்தின் வீழ்ச்சியை நுணுக்கமாகச் சித்தரிக்கிறது.

நாவலின் தனிச்சிறப்பு அதன் எழுத்துமுறை. வட்டார மணத்துடன். நுணுக்கமான சித்தரிப்புகளுடன் உணர்ச்சிப்பூர்வமான விவரணைகளுடன் நாவலை எழுதியிருக்கிறார். சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக உருக் கொண்டிருக்கிறார்கள்.

முசிரியின் தைப்பூசத்திற்கு வெங்கடாசலம் செல்லும் போது தெய்வத்தின் முன்னே நீண்ட நேரம் நின்று வணங்க வேண்டும் என்று நினைக்கிறார். மனதின் குறைகளைக் கடவுளிடம் சொல்லித் தீர்க்க அவ்வளவு நேரம் சன்னதியில் நிற்க வேண்டியிருக்கிறது. கிராமத்து விவசாயிகள் கோவிலுக்குப் போவது குறைவு. ஆனால் சாமி முன்பாக நீண்டநேரம் கைகூப்பி வணங்கி பிரார்த்தனை செய்வார்கள். இதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒரு காட்சியைத் தான் சங்கரராம் எழுதியிருக்கிறார்.

வீரமங்கலத்திலும் சந்தை கூடுவதும் அதற்காக வெளியூர்களிலிருந்து ஒரு பார வண்டிகள் வந்து சேருவதும் அன்றைய உலகின் அழியாச்சித்திரம். மாட்டுவண்டிகள் திரும்பிப் போகும் போது அதில் ஏறிச் செல்லும் வெங்கடாசலத்தின் பயணம். உடன் வரும் அண்ணாமலைத்தாத்தா, வீரப்பன், மதுரை எனக் கறுப்பு வெள்ளை படங்களின் நேர்த்தியான சித்தரிப்பு போல அந்தக் காட்சி மனதில் படிகிறது

நாவலில் மூன்று தளங்களைச் சங்கரராம் மையப்படுத்துகிறார். ஒன்று விவசாயக்குடும்பம் ஒன்றின் உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்கள். இரண்டாவது கங்காணிகள் ஆள்பிடித்து விற்று பணக்காரன் ஆவது. மூன்றாவது உறவினர்களால் ஏமாற்றப்பட்டு நிலத்தை இழப்பது. அதில் ஏற்படும் சண்டை. கைது, நீதிமன்ற விசாரணை என நீளும் போராட்டங்கள்.

தன்வாழ்நாளில் கோர்ட் படிக்கட்டினை மிதிக்காத விவசாயியைக் காணுவது அபூர்வம். கிராமத்து வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாகப் பொறாமை, சண்டை. கோபம். அடிதடி. வழக்குகள். இணைந்திருக்கின்றன. உறவினர்களாலும் நண்பர்களாலும் தான் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பொருட்களை இழக்கிறார்கள். சிறிய விஷயங்கள் கூடப் பெரிய பிரச்சனையாக மாறிவிடுகின்றன.

வெங்கடாசலம் போன்ற சிறுவிவசாயி நிலத்தின் மீது கொண்டுள்ள பற்று ஆழமானது. நிலத்தை இழப்பது உயிரை இழப்பது போன்றதே.

கங்காணி வேலை செய்து புதுப்பணக்காரனாக மாறிய கோவிந்தனை முசிரியில் காணுவது. கடுக்கன் தங்க சங்கிலி என அவனது மினுமினுப்பு. ஏழை எளி ஆட்களைக் கூலிகளாக விற்று அடிமையாக்குகிறான் என எரிச்சல் கொள்ளும் வெங்கடாசலத்தின் மனப்போக்கு. கங்காணி வேலனின் தந்தையைப் பற்றிச் சொல்லும் நிகழ்வு அந்த முசிறி தைப்பூசக் காட்சிகள் நுட்பமாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியாவைவிட்டு போர்னியோ தீவுக்குச் செல்லும் வேலனின் தந்தை ஒரு டச்சுப் பிரபுவின் கரும்புத்தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருக்கிறான் அவனது முதலாளி ஒரு ஐரோப்பியன் ஒருநாள், கோபவெறியில் ஒரு மேஸ்திரியை வெகு அசிங்கமாக முதலாளி திட்டிவிடுகிறான். இதனால் ஆத்திரமான மேஸ்திரி உடனே தன், இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து ஐரோப்பியனைக் குத்தப் போகிறான். வேலனின் தந்தை. அப்பாவு குறுக்கே விழுந்து தடுத்துக் காப்பாற்றுகிறான்

இதனால் முதலாளி உயிர்பிழைக்கிறார். இந்த நன்றியை மறக்காமல் தான் . போர்னியோ தீவிற்குப் போகும் போது அப்பாவுயையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறான். அங்கே இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையைக் கழிக்கிறார்கள்.. முதலாளி இறக்கும் போது அவனது சொத்து முழுவதையும் அப்பாவுவிற்கு எழுதி வைக்கிறான். பெரும் பணக்காரனாக ஊர் திரும்ப முற்படும் அப்பாவு வழியில் இறந்துவிடவே அந்தப் பணம் கஷ்டப்படும் வேலன் குடும்பத்திற்குக் கிடைக்கிறது

நாவலின் குறுக்காக வந்து செல்லும் இந்தச் சிறு நிகழ்வு வாழ்க்கை உங்களை எங்கெல்லாம் இழுத்துச் செல்லும் என்பதை அழகாகச் சுட்டிக்காட்டுகிறது. நாவலின் திருப்புமுனையாக அமைவது இந்த நிகழ்வே

மீனாட்சியிடம் வெளிப்படும் பொறாமை. அவள் வெங்கடாசலத்தின் சொத்துகளை அடைய மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் அதற்காகத் தந்திரமாக நடந்து கொள்ளும் விதம்.. வேலன் அப்பாவின் நெருக்கடியைப் புரிந்து கொண்டு மீளுவதற்கான முயற்சி செய்வது என விவசாயக் குடும்பங்களுக்குள் ஏற்படும் கொந்தளிப்புகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்.

தமிழின் சிறந்த நாவல் வரிசையில் மண்ணாசைக்கு என்றைக்கும் இடம் உண்டு.

••

சங்கரராம் பற்றி க.நா.சு எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். அவரையும் நாவலையும் புரிந்து கொள்ள முடியும்

••

சங்கரராம்

தமிழ் நாவல் இலக்கியவுலகின் முதல்வராகக் கருதப் பட வேண்டியவர் சங்கரராம் என்கிற புனை பெயரில் எழுதிய T. L. நடேசன் என்பவர். நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் தமிழ் நாவலின் இலக்கிய மறுமலர்ச்சியைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் தொடங்கி வைத்தவர் சங்கரராம். மண்ணாசை என்கிற அவர் நாவல் நாற்பது களிலும் பின்னரும் ஏற்பட்ட ஒரு நாவல் கலை வளத்துக்கு முன்னோடியாகச் செயல்பட்டது. அவரைத் தொடர்ந்து ஷண்முகசுந்தரம், நான், மற்றவர்கள் எழுதினோம்.

மண்ணாசை நாவல் கலையின் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்தது என்று சொல்ல வேண்டும். கிராமத்துக்குத் திரும்பிப்போ, நகரங்களை நம்பாதே என்று ஒரு இயக்கம் இருபதுகளிலும் முப்பதுகளிலும் தீவிரமாக இருந்தது. இதன் ஒரு கூறு மகாத்மாகாந்தியின் சிந்தனைகளையும் தொட்டது என்று சொல்லலாம். இலக்கியத்தில் இதன் முதல் நவீன ஆரம்பம் என்று நட் ஹாம்ஸனின் நிலவளத் தைச் சொல்லவேண்டும். 1919-ல் அதற்கு நோபல் இலக்கியப் பரிசு கிடைத்தது பரவலாக இந்தியாவிலும் பேசப்பட்டது என்று தெரிகிறது. பாரதியார் அந்த நாவலையும், நாவ லாசிரியர் பற்றியும், பத்திரிகாசிரியராக ஒரு குறிப்பு எழுதி யிருக்கிறார்.

இந்தக் கிராமத்துக்குத் திரும்பிப்போ’ இயக்கத்தின் செயல்பாடாகவே கே. எஸ். வேங்கடரமணியின் இரண்டு நாவல்களையும் (முருகன், கந்தன்) கவனிக்கலாம். அவை ஆங்கிலத்தில் ஏற்படுத்திய தாக்க அலைகளை விட அதிக மாகத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டபோது ஏற்படுத்தியது. (ஒரு நாவலை மொழி பெயர்த்தவர் கிருஷ்ணகுமார். இரண்டாவது நாவலை மொழி பெயர்த் தவர் ஆசிரியரே.) கே. எஸ். வேங்கடரமணியைப் பின்பற்றிச் சங்கரராம் தன் நாவலை Love of the Dust என்று ஆங்கிலத் தில் எழுதினார். குடியானவன் தன் மண்ணை நேசிக்கிற அளவு வேறு எதையும் நேசிப்பதில்லை என்கிற ஒரு அடிப்படை விஷயத்தை ஒரு மனுஷ்யப் பார்வையுடன் இந்த நாவலில் விவரித்திருக்கிறார். இதை மொழி பெயர்த்து அவரே வெளியிட்டபோது கல்கியும் மற்றவர் களும் நாவல்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒரு இலக்கியத் தரம், கலை மேன்மை சங்கரராமிடம் இருந்தது. தன்

இந்த நாவல் இப்போது படிக்கக் கிடைப்பதில்லை; அச்சில் இல்லை என்பது பற்றித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும். அது ஒரு Classic status என்று சொல்லக் கூடியதை எட்டிவிட்ட நாவல். அதைப் படிக்காதவன் எவனும் தமிழ் நாவலைப் பற்றிப் பேச லாயக்கில்லாதவன் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன், அதற்குப் பிறகு பல நாவல்களும் தொடர்கதைகளும் எழுதினார் சங்கர ராம். ஆனால் அவை அந்த முதல் நாவலின் தரத்தை எட்டியதாகச் சொல்ல இயலாது. இன்னொன்றும் கூடவே சொல்லவேண்டும். தமிழில் எழுத ஆரம்பித்தபிறகு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் எழுதவில்லை . தமிழில் எழுதுவது அவர் திருப்திக்குப் போதுமான தாக இருந்தது.

– மண்ணாசை மூன்று நாலு பதிப்புகள் கடகடவென்று வந்தன. இருந்தும் பிரசுரகர்த்தாவிடம் சண்டையிட்டுக் கொண்டு (வேறு என்ன? பணத்தைப்பற்றித்தான்) வேறு ஒருவரிடம் – நூலைப் பிரசுரிக்கத் தந்தார். அதோடு, பதிப்புகள் வருவது நின்றுவிட்டது. பிரசுரகர்த்தர்கள், ஆசிரியர்களுக்கிடையே நிலவுகிற இன்றைய நிலைப்பற்றிய வியாக்கியானமாக இதைக் கொள்ளலாம்.

நாவலாசிரியராகப் பெயர் பெற்ற சங்கரராம் பல சிறு கதைகள் எழுதியிருக்கிறார். இன்று விமரிசன ரீதியாக எனக்குத் தோன்றுவது அவர் சிறுகதையில் சாதித்த அள வுக்கு நாவல்களில் சாதிக்கவில்லை என்பது தான். இதற்குக் காரணம் தேடிக்கொண்டு வெகு தூரம் போக வேண்டிய தில்லை. மண்ணாசைக்குப் பின்னால் வந்த அவர் நாவல் கள் எல்லாமே தொடர்கதைகளாக வந்தவைதான். பத்திரிகைத் தேவையையும் பணத்தேவையையும் காரண மாகக் கொண்டு எழுதப்பட்டவை. சிறுகதைகள் உள்ளே யுள்ள உந்துதலால் எழுதப்பட்டவை.

அவர் முதன் முதலில் எழுதிய நூலும் ஒரு சிறுகதைத் தொகுப்புத்தான். ஆங்கிலத்தில் Children of the Kaveri என்று ஆறணா விலை போட்டிருந்த அந்தப் புஸ் தகத்தை எடுத்துக்கொண்டு தானே பிரசுரித்திருந்த மாதிரி தானே விற்க அவர் ஒரு நவராத்திரி லீவில் அண்ணாமலை யூனி வர்ஸிடி ஹாஸ்டலுக்கு வந்தார். ஹாஸ்டல் பையன்கள் எல்லோரும் லீவுக்கு ஊருக்குப் போயிருந்தனர். என்னைப் போல லைப்ரரியில் படிக்கிற அக்கறையுடன் நாலைந்து பேர்வழிகள் மட்டுமே இருந்தோம்.

சங்கரராமை கண்டதும் அவர் புஸ்தகத்தில் – எனக்கும் பின்னால் நேரப்போகிற கதியை நினைத்துக் கொண்டே – மூன்று பிரதிகள் கமிஷன் கழித்து ஒரு ரூபா கொடுத்து வாங்கிக் கொண்டேன். மூன்று பிரதிகள் எதற்கு?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார். நான் என் னுடைய இலக்கிய அபிலாஷைகளைச் சொன்னேன். ஓரளவுக்கு அகம்பாவத்துடன் “அப்படி ஒன்றும் எழுதுவத் தென்பது சுலபமான விஷயம் அல்ல” என்று சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டார். அந்த அகம்பாவம் எனக்குப் பிடித்திருந்தது. நன்றாக எழுதுவதென்பது, அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை தான். நன்றாக எழுதுபவர்கள் அகம்பாவம் கொள்ள நிச்சயமாக உரிமை உள்ளவர்கள் தான் என்று இன்றும்கூட 1985-ல் நினைத்துப் பார்க்கும் போதும் தோன்றுகிறது.

இது என் கல்லூரி நாட்களில் முப்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் நடந்தது. பின்னர் அவரைச் சந்தித்தபோது 1944, 1945-ல் இது பற்றி அவருக்கு நினைப்பூட்ட முயன்றேன். சந்திப்பு எனக்கு நினைவிருந்தமாதிரி அவருக்கு நினைவில்லை. ஆனால் அந்தப் புஸ்தகம் விற்கவேயில்லை. இருநூறு முந்நூறு ரூபாய் கைநஷ்டப் பட்டதோடு சரி” என்றார். இந்தத் தொகுப்பிலிருந்து 1957, 58-ல் நான் பம்பாயில் சந்தித்த Joseph Kalmer என்பவரிடம் நாலைந்து கதைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்ததும், அதற்குக் கணிசமான அளவில் சங்கரராமுக்குப் பணம் வந்தது என்றும், அது காரணமாக இன்னும் கொஞ்சம் மொழி பெயர்ப்புகள் சாத்தியமா என்று கேட்டுக்கொண்டும் சங்கர ராம் என் வாலாஜா வீட்டு மாடிக்கு வந்ததும் நினைவிருக் – கிறது.

ஒரு சமயம் பேச்சுவாக்கில் அவர் பிள்ளை குட்டிகள் குடும்பம் என்று கேட்டபோது “அதெல்லாம் சாரமில்லாத விஷயங்கள். அது பற்றிப் பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். ஏதோ தனியாக இருப்பதாகவும், ஒரு கோசாலை நடத்துவதாகவும் அதில் ஏகப்பட்ட நஷ்டம் என்றும் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுப் போனார்.

வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்று எண்ணுகிறேன். அகண்ட காவேரிக் கரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவர். சென்னையில் ஒரு விலாசம் இருந்தாலும் அதிகமாகச் சென்னையில் தங்காதவர் என்று எண்ணு கிறேன். நான் நடத்திய நூற்றுக்கணக்கான இலக்கிய நண்பர்கள் கூட்டங்களில் ஒன்றுக்குக்கூட அவர் வந்ததில்லை என்று நினைவிருக்கிறது. காரணம், விரோதமோ அல்லது அதனிடம் அவநம்பிக்கையோ அல்ல – அவர் அநேகமாகச் சென்னைக்கு வெளியே இருந்தார் என்பதுதான்.

பணத்துக்குக் கஷ்டப்படுவதைப் பற்றியும், தன் புஸ்தகங்களைப் போட்டவர்கள் சரியாகப் பணம் கொடுப்ப தில்லை என்பது பற்றியும் தாராளமாகச் சொல்லுவார். இதில் எவ்வளவு தூரம் கற்பனை, எவ்வளவு தூரம் நிஜம் என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவருடன் அவ்வளவாக நெருங்கிய பழக்கம் எனக்கு ஏற்படவில்லை.

தன் பிற்கால நாவல்களைப் பற்றி ஒரு சமயம் என் அபிப்பிராயத்தைக் கேட்டார். “மண்ணாசை நல்ல நாவல்” என்று நான் சொன்னதும் மற்றதையெல்லாம் எழுதியிருக்க வேண்டாம் என்கிறீர்களா?” என்று கேட்டார். ‘அதை எப்படி நான் சொல்ல முடியும்?” என்று பதில் சொன்னேன். அவருக்கே தன் சிறுகதைகள் பற்றிக் கேட்க நினைவில்லை.

நான் இல்லாத வேறு ஒரு சமயம் வீட்டுக்கு வந்திரு கிறார். அப்போது யாரோ ஒரு இலக்கியத் தகுதியற்ற வருக்குச் சாஹித்திய அக்காதெமி பரிசு கிடைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்த சமயம். என் மனைவி அவருக்குக் காபி கொடுத்துவிட்டு “உங்களுக்கு இன்னும் வரவில்லையே இந்தப் பரிசு?” என்று கேட்டிருக்கிறாள். வராதம்மா வராது. எனக்கெல்லாம் வராது!” என்று பதில் சொன்னாராம்..

தனக்குச் சாஹித்திய அக்காதெமி பரிசு வரவில்லையே என்று மறுதடவை என்னைச் சந்திக்கும்போது ஆதங்கப் பட்டார். “அது அவ்வளவு முக்கியமா?” என்று கேட்ட தற்குச் சற்றுத் தயங்கிவிட்டு எனக்கு உடனடியாக இப்போ கோசாலையைத் தொடர ஒரு ஐயாயிரம் வேண்டும். எங்கே போவது?” என்றார். கோசாலையை மூடிவிட்டு அந்தச் சமயம் சென்னைக்கு வந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2021 21:05

September 1, 2021

கிரா விருது

2021ம் ஆண்டுக்கான கி.ரா விருது பெறும் அன்பு நண்பர் எழுத்தாளர் கோணங்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்

நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினேன். கோணங்கியோடு பல ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றித்திரிந்த நாட்கள் நினைவில் வந்து போனது. கோணங்கி உற்சாகமாகப் பேசினார். அடுத்த வாரம் கோவில்பட்டிக்கு நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். கிரா பெயரில் கோணங்கி கௌரவிக்கப்பட்டது மிகப் பெரிய மகிழ்ச்சி.

நாளை வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.


••

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2021 04:48

August 31, 2021

மலைக்கிராமத்தின் பள்ளி

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’ நாவலை என் இருபது வயதுகளில் படித்திருக்கிறேன். மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரு பள்ளி ஆசிரியரின் கதையை விவரிக்கக்கூடியது. ஆடு மேய்ப்பவர்கள் வாழும் அந்தச் சிற்றூரில் அவர் எப்படித் தங்கி பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கிறார் என்பதை அழகாக விவரித்திருப்பார்கள்.

The Miracle (2015 film) என்ற துருக்கிப்படத்தைப் பார்த்தபோது பன்கர்வாடி தான் நினைவில் வந்தது. இப்படமும் மலைக்கிராமத்தினை தேடிச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே.

மாஹிர் எக்ரெட்மேன் ஒரு பள்ளி ஆசிரியர் .1960களில் துருக்கியின் கடலோர நகரத்தில் வசிக்கும் அவரைத் தொலைதூர மலைக்கிராமத்திற்கு மாறுதல் செய்கிறார்கள். படம் அங்கே தான் துவங்குகிறது. மனைவியும் பிள்ளைகளும் சொந்த ஊரைவிட்டு வர மறுக்கிறார்கள். போகும் இடத்தில் கடத்தல்காரர்கள் அதிகம். முரட்டு மனிதர்களால் அவர் தாக்கப்படக்கூடும் என்று பயத்தை ஏற்படுத்துகிறார்கள்

மாஹிர் துணிந்து தனது பணியை ஏற்கப் பயணம் புறப்படுகிறார். நீண்ட பயணத்தின் பிறகு மலையுச்சி ஒன்றில் இறக்கிவிடப்படுகிறார். மிக அழகான காட்சியது. அங்கிருந்து இரண்டு மலைகளைத் தாண்டிச் சென்றால் ஊரை அடையலாம் என்கிறார்கள். அவரும் மனம் தளராமல் நடக்கிறார். இடையில் ஓடும் சிற்றோடையைக் கடந்து போகிறார். மலைக்கிராமத்தை அடையும் போது ஊர்மக்கள் யாரோ போலீஸ் தங்களைக் கைது செய்ய வந்துள்ளது என நினைத்து துப்பாக்கியுடன் வளைத்துக் கொள்கிறார்கள்

மாஹிர் உண்மையைச் சொன்னவுடன் அவரை வரவேற்றுத் தங்க வைக்கிறார்கள். அப்போது தான் அந்த ஊரில் பள்ளிக்கூடமேயில்லை என்ற உண்மை தெரியவருகிறது. இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தன்னை ஏன் ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள் என்று குழம்பிப் போய்விடுகிறார். வெளியாட்கள் யாரும் வராத அந்தக் குக்கிராமத்திற்குத் தேடி வந்த ஆசிரியர் என்ற முறையில் அவரிடம் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வையுங்கள் என்று ஊர்மக்கள் கேட்கிறார்கள். தான் அங்கே தங்குவதாக இருந்தால் பெண்பிள்ளைகளையும் படிக்க அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

புதிய பள்ளி ஒன்றை அவர்களே உருவாக்கிக் கொள்வது என முடிவாகிறது. இதற்காகத் தன்னை யாரோ வழிப்பறி கொள்ளையர்கள் கடத்திவிட்டார்கள் என்பது போல நாடகம் ஆடி மனைவியிடம் பணயத்தொகை கேட்பதாகச் சொல்லி பணம் பறிக்கிறார் மாஹிர்.

அந்தப்பணத்தில் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுகிறார்கள். அந்த ஊருக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் சிற்றுந்து வரும். அது ஒன்று தான் வெளியுலகோடு உள்ள தொடர்பு. ஆண்டிற்கு எட்டு மாதங்கள் பனிமூடிவிடும். வெளியே நடக்க முடியாது. அரசாங்கம் அப்படி ஒரு ஊர் இருப்பதையே மறந்துவிட்டது என்பதே உண்மை

இந்நிலையில் மாஹிர் அந்த ஊரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதுடன் ஊரின் வளர்ச்சிக்குப் பாடுபட ஆரம்பிக்கிறார். ஊர்த்தலைவரின் இளைய மகனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது.

அவனுக்குப் பெண் பார்க்கும் விதமும் பேசிமுடிக்கும் விதமும் அற்புதம். எப்படி ஒரு பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்கிறார்கள் என்பது வியப்பாகவே உள்ளது. அந்தத் திருமணம் எளிமையாக நடைபெறுகிறது

தலைவரின் மூத்த மகன் அஜீஸ் மனவளர்ச்சியற்றவன். அவனைக் கிராமத்துப் பிள்ளைகள் கேலி செய்கிறார்கள் ஆனால் மாஹிர் அவன் மீது அன்பு கொண்டு அவனுக்காகச் சிறப்புப் பயிற்சிகள் தந்து பாடம் பயிற்றுவிக்கிறார். அவனும் ஆசையாகப் பள்ளிக்கு வருகிறான். பனிக்காலம் துவங்குகிறது. பாதைகள் மறைந்து போகின்றன. சிறார்கள் பனியில் ஆடி ஒடி விளையாடுகிறார்கள்.

ஒரு நாள் நீதிமன்ற வளாகத்தில் ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார் ஊர்த் தலைவர். இதற்கு நன்றிக்கடனாக தன் மகளை அஜீஸிற்குத் திருமணம் செய்து தருவதாகச் சொல்கிறார் அந்த மனிதர். பெண் பார்க்கப் போகிறார்கள். பேரழகியான பெண். அவளைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவள் அஜீஸை கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றுகிறாள்.

பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணி மயிலின் அன்பால் உருமாறுவது நினைவில் வந்து போனது. அஜீஸ் தன் மனைவியை மிகவும் நேசிக்கிறான். ஆனால் ஊர் இளைஞர்களோ அவனைக் கேலி செய்கிறார்கள் அவன் இயலாமையைச் சுட்டிக்காட்டி திருமணத்திற்குத் தகுதியானவனில்லை என்று வம்பு பேசுகிறார்கள்.

இதனால் மனம் உடைந்த அஜீஸ் தற்கொலை செய்து கொள்ள முனைகிறான். அவனைக் காப்பாற்றும் மாஹிர் ஆறுதல் சொல்கிறார். அவருக்குப் பணி மாறுதல் வருகிறது. ஊரைவிட்டு வெளியேறும் மாஹிர் தன்னோடு அஜீஸையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறார்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, மாஹிர் அஜீஸுடன் கிராமத்திற்குத் திரும்புகிறார். அவன் இப்போது எப்படியிருக்கிறான். அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே மீதக்கதை.

மலைக்கிராமத்தின் அழகும் அந்த மக்களின் வெகுளித்தனமான செயல்களும் தூய அன்பும் அழகாகப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து வந்த மாஹிர் மெல்ல அந்த ஊரின் மனிதனாக மாறுகிறான்.

மனவளர்ச்சியற்ற அஜீஸை திருமணம் செய்து கொண்டு மருமகளாக வந்துள்ள பெண்ணை மாமியார் அன்பாக நடத்தும் விதமும் அவர்களின் உரையாடலும் கண்ணீரை வரவழைக்கக்கூடியது.

அழகான நிலப்பரப்பு, கடந்து செல்லும் மேகங்கள். பனிபடர்ந்த ஊரின் புறவெளி , மஞ்சள் ஒளி கசியும் வீட்டின் உட்புறம் எனப் படம் முழுவதும் சிறந்த ஒளிப்பதிவு.

கிராமத்தையும் அதன் கதாபாத்திரங்களையும் சுற்றித் தொடங்கும் கதை மெல்ல அஜீஸிற்கும் ஆசிரியருக்குமான அன்பையும் அவனது திருமணத்தை முன்வைத்து நகருகிறது. .

பெண் பார்க்க செல்லும் போது தலைவரின் இளைய மகன் பெண்ணிற்கு அழகான நீல நிற கண்கள், மற்றும் சுத்தமான பற்கள் கொண்டவளாகப் பெண் இருக்க வேண்டும் என்கிறான். காரணம் படத்தில் காட்டப்பட்டுள்ள அத்தனை கதாபாத்திரங்களும் மஞ்சள் பற்கள் கொண்டவர்களே,

திருமணத்திற்கு முன்பு அந்தப் பெண்ணிற்கு .குரானின் வசனங்கள் முழுமையாகத் தெரிய வேண்டும். அவள் சமையலில் சிறந்தவளாக இருக்க வேண்டும். அவளது நடையைக் கூட அளந்து பார்க்கிறார்கள். மிகவும் சுவாரஸ்யமான காட்சி.

முதலிரவில் மணமகன் மணமகளின் அறையை அடைந்ததும், முதலில் ஒரு புறாவின் கழுத்தை உடைத்து எறிய வேண்டும். அது தான் சடங்கு. அதைக் கண்டு மணப்பெண் அலறுகிறாள். மனைவியை முதல்நாளே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவே இந்தச் சடங்கு என்கிறார்கள் கிராமவாசிகள். ஆசிரியரின் வருகையால் கிராமம் மாறத்துவங்குகிறது. புதிய நம்பிக்கைகள் உருவாகின்றன அஜீஸின் கதாபாத்திரம் மிக நுட்பமாகப் பின்னப்பட்டுள்ளது. மெர்ட் துராக் அந்தக் கதாபாத்திரத்தினை மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிறந்த கலை இயக்கம் மற்றும் இசை படத்தின் தனிச்சிறப்பு., இயக்குநர் ஒரு இசைக்கலைஞர் என்பதால் மரபான இசையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஆசிரியரின் வழியே மலைக்கிராம வாழ்க்கையினையும் அதன் தனித்துவமான நிகழ்வுகளையும் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஊர்த்தலைவரின் மௌனமும் அவர் மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடத்தும் விதமும் அற்புதமானது. குறிப்பாகத் தான் செய்த உதவிக்காக மகளைத் திருமணம் செய்த தர முன்வரும் மனிதரிடம் காட்டும் நன்றியுணர்வு மறக்கமுடியாதது.

இளையமகனுக்குப் பெண் பார்க்கப் போகும் போதே அஜீஸ் தானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் உடல் குறைபாடு கொண்ட அவனை மணக்க எவரும் முன்வரவில்லை. அந்த ஊரில் பெண் கிடைப்பது எளிதானதில்லை. அந்த ஆசையைத் தந்தை புரிந்து கொள்கிறார். திருமணம் செய்து வைக்கிறார். மகனின் சந்தோஷத்தைக் கண்டு மறைவாகக் கண்ணீர் விடுகிறார். தனக்குப் பிறகுத் தன் மகனை குளிக்க வைக்க அவன் மீது அன்பு காட்டும் ஒரு பெண் கிடைத்துவிட்டாள் என அஜீஸின் அம்மா சொல்வது சிறப்பு.

வேடிக்கையாகத் துவங்கும் படம் மெல்லத் தீவிரமாகிறது. கதை சொல்லும் விதமும் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் நாவல் படிப்பது போல அத்தனை நெருக்கத்தைத் தருகின்றன.

பன்கர்வாடியும் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாவல் அளவிற்குப் படம் சிறப்பாக இல்லை. ஆனால் இந்தப்படம் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. முழுமையான அனுபவத்தைத் தருகிறது.

படத்தைப் பார்த்தபிறகு அந்த மாய நிலவெளியை தேடிப்போய்ச் சுற்றியலைய வேண்டும் என்ற ஆசை உருவானது. நேற்றைய கனவில் அந்த முடிவற்ற மலைத்தொடரின் நடுவே உலவத் துவங்கியிருந்தேன்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2021 05:30

August 28, 2021

ஆறும் மலையும்

இரண்டு தமிழ்ப் படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இப்படங்கள் சென்ற ஆண்டில் வெளியாகியிருந்தன. அப்போது பார்க்க இயலவில்லை. சில தினங்களுக்கு முன்பாக இணையத்தில் பார்த்தேன். இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன.

கமலி from நடுக்காவேரி – ராஜசேகர் துரைசாமி இயக்கியது. அவரது முதற்படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மென்மையான காதல்கதையைப் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது.

ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் ஆசையினை இயல்பாக, நுட்பமாக விவரித்துள்ளார்கள். படம் பார்க்கிறோம் என்ற உணர்வேயில்லை. பிளஸ் டூ படிக்கும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் வாழ்க்கையை அறிந்து கொள்கிறோம் என்பது போல நிஜமாக, உண்மை நிகழ்வுகளின் வெளிப்பாடு போலப் படம் விரிகிறது.

ஐஐடி பரிட்சைக்கு எப்படித் தயார் ஆவது. அந்தக் கனவினை அடைந்த பிறகான கேம்பஸ் வாழ்க்கை, வகுப்பறைகள். கமலியின் ரகசியக் காதல். க்விஸ் போட்டிக்குச் செல்லும் ரயில் பயணம். அதில் ஏற்படும் நட்பு எனப் படம் நேர்த்தியாகக் கமலியின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கமலியாக நடித்துள்ள ஆனந்தி வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெகதீசனின் தேர்ந்த ஒளிப்பதிவு, இயல்பான நகைச்சுவை காட்சிகள். அழகம் பெருமாள். மற்றும் பிரதாப் போத்தனின் தேர்ந்த நடிப்பு. கமலியின் தோழியின் அசலான வெளிப்பாடுகள்,  எனப் படம் நிறைவான அனுபவத்தை அளிக்கிறது.

ஐஐடி கனவினையும் கவித்துவமான காதலையும் ஒன்றுசேர்ந்து தரமான திரைப்படத்தை இயக்கிய ராஜசேகருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

••••

தேன் படத்தின் துவக்ககாட்சி மெய்மறக்கச் செய்துவிட்டது. தமிழ்ப்படம் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனா என்று வியந்து போனேன். படத்தின் முப்பது நிமிஷங்கள் அபாரமானவை. இதுவரை மலைப் பிரதேச வாழ்க்கையை யாரும் இப்படிக் காட்சிப்படுத்தியதில்லை. மலையை விட்டு கீழே இறங்கி மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்வதில் துவங்கி இறுதிக் காட்சி வரை படம் பிரச்சனைகளைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. அதிகாரத்தால் அலைக்கழிக்கப்படும் நாயகனின் வலியை அழுத்தமாகச் சொல்கிறது . மருத்துவமனையில் நடக்கும் நிகழ்வுகளும் மனைவியைக் காப்பாற்ற அவன் போராடும் இடங்களும் உணர்ச்சிப்பூர்வமானவை. படத்தின் முடிவு சமீபத்தில் ஊடகங்களில் நாம் கண்டறிந்த உண்மை நிகழ்வின் சாயலைக் கொண்டிருக்கிறது.

குரங்கனி மலையை ஒட்டிய குறிஞ்சுக்குடி கிராமத்தில் மலைத்தேன் எடுக்கிறான் வேலு. ஒரு நாள் வேலுவை தேடிவந்து பூங்கொடி தனது தந்தைக்காக தேன் கேட்கிறாள். அந்தக் காட்சியில் வீட்டுவாசலில் அவள் அமர்ந்து பேசுவதும். தேன் எடுத்துக் கொண்டுவரும் வேலு அவளது தந்தையைக் காணுவதும், வழியில் செல்லும் வேலுவை வழிமறித்துப் பூங்கொடி பேசுவதும் அழகான காட்சிகள்

.அவர்களின் திருமணம் மலைவாழ் மக்களின் நம்பிக்கையால் தடைபடுகிறது. அதை மீறித் திருமணம் செய்து கொள்கிறார்கள். சந்தோஷமான வாழ்க்கையின் நடுவில் ஒரு நாள் பூங்கொடி வயிற்றுவலியால் துடிக்கிறாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனபிறகு தான் அவளது உடல்நலக்குறைவின் உண்மை காரணம் வெளிப்படுகிறது. அவளை குணமாக்கப் போராடுகிறான் வேலு.

மலைவாழ் மக்களை அரசும் அதிகாரமும் எப்படி நடத்துகிறது என்பதை அறச்சீற்றத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

வேலுவாக நடித்துள்ள தருண்குமார், பூங்கொடியாக நடித்துள்ள அபர்ணதி இருவரும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தருண்குமாரின் தோற்றமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் பாராட்டிற்குரியது. சுகுமாரின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் அழகை மாய ஒளியில் பூரணமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் உள்ள தொய்வான காட்சிகள். மிகை நடிப்பு மற்றும் சிறிய குறைகளைத் தவிர்த்தால் இது முக்கியமான படம் என்பேன்.

தனித்துவமான கதைக்களனைக் கொண்ட படத்தை உருவாக்கிய இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு மிகுந்த பாராட்டுகள்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2021 22:20

இசையே வாழ்க்கை.

பணீசுவர்நாத் ரேணு புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர். இவரது தேர்வு செய்யப்பட்ட கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேணு இளமையில் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இயங்கியவர். பின்பு கருத்துவேறுபாட்டால் விலகிச் சென்றவர். பீகாரில் வசித்த அவரது குடும்பம் ஆர்யசமாஜத்தை சேர்ந்தது. எளிய விவசாயியாக இருந்த அவரது தந்தை காந்திய வழியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். சம்பரானில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் இதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது.

பள்ளிப் படிப்பு முடிவதற்குள்ளாகவே ரேணுவின் அரசியல் ஈடுபாடு துவங்கிவிட்டது. பனாரஸில் படித்த போது முக்கிய அரசியல் தலைவர்களுடன் பழகினார். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்.

அவரது எழுத்திற்கு ஆதாரமாக அமைந்திருப்பது இசை ஆர்வம். அதிலும் குறிப்பாக நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் மற்றும் இந்துஸ்தானி இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் இசை குறித்தே அதிகம் எழுதியிருக்கிறார்

1942ல் ஏற்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரை மிகவும் பாதித்தது. இந்தப் போராட்டம் பற்றி அவரது கதை ஒன்றில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். கட்சிப்பேய் என்ற சிறுகதையில் ஒருவன் இளமையில் எப்படி அரசியல் ஆர்வம் கொள்கிறான். போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போகிறான். பின்பு அவனது வாழ்க்கை என்னவாகிறது. அவனது திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் எப்படிச் சீர்கெட்டுப் போகின்றன என்பதை மிக அழகாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான கதை.

1944ல் காசநோய் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேணுவை உடனிருந்து கவனித்துக் கொண்டார் லதிகா. அவரையே பின்பு ரேணு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.. முதல் மனைவியும் பிள்ளைகளும் அவரது சொந்த கிராமத்திலே வசித்து வந்தார்கள்

1950களுக்குப் பிறகே அவரது இலக்கிய வாழ்க்கை ஒளிரத்துவங்கியது. இருபது ஆண்டுகள் அவர் தனது முக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதி பெரும்புகழ்பெற்றார். பிரேம்சந்தின் வாரிசாகக் கருதப்பட்ட ரேணுவின் கதைகள் திரைப்படமாகவும் உருவாக்கபட்டிருக்கின்றன. ராஜ்கபூர் நடித்த Teesri Kasam இவரது கதையே. இந்த கதையும் இத்தொகுப்பிலுள்ளது. 1972 தேர்தலில் போட்டியிட்டு நாற்பதாயிரம் வாக்குகள் பெற்ற ரேணு காங்கிரஸ் பிரமுகரிடம் தோற்றுப் போனார். இதன்பிறகு அவரது உடல்நலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 1977ல் ரேணு மரணம் அடைந்தார்

ரேணுவின் சிறுகதைகளின் தனிச்சிறப்பு அபூர்வமான கதாபாத்திரங்கள். இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் மறக்கமுடியாத பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இசை தான் இந்தத் தொகுப்பின் மையப்பொருள். இசையும் இசைக்கலைஞர்களும். இசையின் மேன்மையை அறிந்த ரசிகர்களுமே அவரது கதாபாத்திரங்கள்

வறுமையில் வாடும் இசைக்கலைஞர்கள். அற்புதமான குரல் கொண்ட பாடகிகள். குஸ்தி போட்டிக்கான மேளம் வாசிப்பவரின் தனித்துவம். இசைக்கருவிகளைச் சரி செய்து தரும் ஹாராதன் மேஸ்திரியின் ஞானம். ரசூல் மியானின் மருத்துவம் எனத் தொகுப்பில்  மாறுபட்ட கதைகள்  உள்ளன.

இன்றைய உலகோடு ஒப்பிடும் போது இவை மறைந்து போன காட்சிகள். ஆனால் அழியாத நினைவுகள்.

ரேணு நேரடியாக ஒரு கதையைச் சொல்வதில்லை. ஒரு கதையைத் துவங்கி அதன் கிளைகள் போல வேறுபல கதைளை பின்னிச் செல்கிறார். ஒரு நாவல் வாசித்து முடிக்கும் போது ஏற்படும் அனுபவத்திற்கு நிகராகச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

உணர்ச்சிப்பூர்வமாகக் கதையைக் கொண்டு செல்வது தான் அவரது பலம். மிகத்துல்லியமாக உணர்ச்சிகளை எழுதியிருக்கிறார். வித விதமான பெண்கள். அவர்களின் தனித்துவமான பேச்சு, செயல்கள். ரசூல்மியானுக்கும் அவரது மனைவிக்குமான உறவு அழகாக விவரிக்கபட்டிருக்கிறது. ரசூல் மியானைப் போன்ற மனிதர்களை இனிக்காணமுடியாது.

முதற்கதை பயில்வானின் மத்தளம். இது லூட்டன்சிங் என்ற குஸ்திக்கலைஞனின் வாழ்க்கையைச் சொல்கிறது. தந்தையில்லாத லூட்டன்சிங் சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்து குஸ்தி போடுவதில் ஆர்வம் காட்டுகிறான். ஒரு நாள் சந்தையில் நடக்கும் குஸ்திப்போட்டியினைக் கண்டதும் ஆர்வம் அதிகமாகி தானும் அதில் கலந்து கொள்கிறான். மன்னர் நடத்தும் போட்டியது. பெரிய குஸ்தி வீரனுக்கு எதிராக லூட்டன் களம் இறங்க முனையும் போது மன்னர் அவன் தோல்வி அடைந்துவிடுவான் என்று பயந்து சண்டையிட வேண்டாம் என்று தடுக்கிறார். லூட்டன் கேட்பதில்லை.

அவன் மத்தளம் வாசிப்பவரின் தாளக்கட்டிற்கு ஏற்ப குஸ்தி போடுகிறான்.

சட்தா கிட்தா சட்தா கிட்தா என்ற மத்தளச்சப்தம் அஞ்சாதடா அஞ்சாதடா என அவனுக்குக் கேட்கிறது தக் தினா திரிகிட தினா என்பது வெளியே வாடா பிடியை வெட்டு என்று கேட்கிறது. இப்படியாக அவன் மத்தள ஒலியைப் பாடமாகக் கொண்டு போட்டியில் வெற்றி பெறுகிறான்.

வென்றவுடன் மன்னரிடம் ஆசி பெறுவதோடு மத்தளத்தைத் தொட்டு வணங்கி ஆசி வாங்குகிறான். அவனை மன்னர் தனது ஆஸ்தான பயில்வானாக நியமிக்கிறார். பின்பு அவன் கலந்து கொள்ளும் போட்டி எல்லாம் வெற்றி. அவனது வாழ்க்கை மாறிவிடுகிறது. பதினைந்து ஆண்டுகள் நிகரற்ற வீரனாகத் திகழுகிறான்.

ஊர்மக்களும் அவனுக்குப் போட்டிபோட்டுக் கொண்டு இனிப்புகளை இலவசமாக வழங்குகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

மனைவி இறந்துவிடவே தன் இரண்டு பிள்ளைகளையும் குஸ்திக்குப் பழக்குகிறான். இந்த நிலையில் காலம் மாறுகிறது.

அரசர் இறந்துவிடவே அவரது மகன் பதவிக்கு வருகிறான். அவன் வெளிநாட்டில் படித்தவன். நவயுக மனிதன் ஆகவே. குஸ்தி பயில்வான் லூட்டனுக்குச் செய்யும் செலவு வீண் என உணர்ந்து அவனைத் துரத்தி விடுகிறான். குஸ்தி போட்டி நடந்த மைதானம் குதிரைப் பந்தய மைதானமாக உருமாறுகிறது.

சொந்த கிராமம் திரும்பும் லூட்டன் வறுமையில் வாடுகிறான். பாதாம் பிஸ்தா எனச் சாப்பிட்டு வளர்ந்த உடலுக்கு ரொட்டியும் கஞ்சியும் போதவில்லை. அவனை ஆதரிப்பவர் எவருமில்லை. உள்ளூர் பையன்களுக்கு இலவசமாக குஸ்தி கற்றுத் தருகிறான். இதனால் ஊர்மக்கள் இரண்டுவேளை இலவசமாக உணவு அளிக்கிறார்கள். நாளடைவில் அதுவும் நின்று போகிறது. லூட்டனின் மகன்கள் கூலி வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். இருப்பதை வைத்து நாட்களை ஒட்டுகிறான் லூட்டன்.

இந்நிலையில் ஊரைக் கொள்ளை நோய் தாக்குகிறது. கண்முன்னே கிராமத்து மக்கள் மடிந்து போகிறார்கள். வறுமையில், தனிமையில் வாழும் லூட்டன் மத்தளம் வாசிப்பதன் வழியே தனது குஸ்தி போட்டி நினைவுகளைத் தீர்த்துக் கொள்கிறான். அந்த இசை தான் அவனது ஆசான். அவனது அருமருந்து.

இந்நிலையில் கொள்ளை நோய் தாக்கி ஒருநாள் அவனது மகன்கள் இறந்து போகிறார்கள். அவர்களை அடக்கம் செய்யும்போதும் லூட்டன் மத்தளம் வாசிக்கிறான்.

பின்பு ஒரு நாள் லூட்டனும் காலராவிற்குப் பலியாகிறான். அவன் உடலை அடக்கம் பண்ண ஊர்மக்கள் ஒன்றுகூடுகிறார்கள். தன் உடலை அடக்கம் செய்யும் போதும் மத்தளம் வாசிக்க வேண்டும் என்பதே லூட்டன் வைத்த கடைசிக் கோரிக்கை. அதை நிறைவேற்ற வரும் போது அவனது மேளத்தை நரிகள் கிழித்துப் போட்டிருப்பதை ஊர்மக்கள் காணுகிறார்கள் எனக் கதை முடிகிறது

லூட்டன்சிங் மறக்கமுடியாத கதாபாத்திரம். அவனுக்குப் பரிசாக அரசர் ஒரு பட்டு லங்கோடு அளித்திருக்கிறார். அதை அணிந்து கொண்டு தான் குஸ்தி போட்டியில் இறங்குகிறான். உடல் வளர்ந்த அளவிற்கு அவனுக்கு மூளை வளரவில்லை. சாப்பாடு, கொண்டாட்டம், சுகவாசியான வாழ்க்கை என எதைப்பற்றியும் கவலையின்றி அரசரின் தயவில் வாழ்ந்து வருகிறான். காலமாற்றம் அவனைக் கீழே தள்ளி மண்டியிட வைக்கிறது.

இசையும் குஸ்திப்போட்டியும் ஒன்று சேருவதன் தான் இந்தக் கதையின் தனிச்சிறப்பு. அந்த மத்தளத்தின் ஒலியின் வழியே தான் குஸ்தியின் ரகசியங்களை லூட்டன் கற்றுக் கொள்கிறான். அடித்தட்டினை சேர்ந்த அவனை ஆஸ்தான வீரனாக அரசர் நியமிக்க முற்படும்போது அதை உயர்வகுப்பு மானேஜர் எதிர்க்கிறார். அவனை அங்கீகரிக்க மறுக்கிறார். ரேணு கதைகளில் சாதிய ஒடுக்குமுறை அழுத்தமாக விவரிக்கபடுகிறது.

லூட்டன் சிங் ஒரு தோற்றுப்போன வீரன். இவனுக்கு நிகரான இன்னொரு கதாபாத்திரம் ஹாராதன் மேஸ்திரி. மூன்று புள்ளிகள் கதையில் வரும் இவர் எந்த இசைக்கருவியில் பழுது ஏற்பட்டாலும் சரிசெய்து தரும் ஞானம் கொண்டவர். அவருக்கும் ஒரு துயரமான கடந்தகாலமிருக்கிறது. அதில் வேட்டையும் சங்கீதமும் ஒன்று கலந்த ஒரு மன்னர் அறிமுகமாகிறார். பொய்மானைக் கொண்டு மான் வேட்டை நடப்பது விவரிக்கப்படுகிறது.

ஹாராதன் மேஸ்திரியைத் தேடி வந்து பெரிய இசைக்கலைஞர்கள் தங்கள் வாத்தியக்கருவிகளைச் சரிசெய்து தரும்படி கேட்கிறார்கள். காத்திருக்கிறார்கள். அந்தக் கதையில் வரும் இரண்டு பாடகிகளும் அவர்களின் இசைத்திறனும் மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கி குண்டு குளைத்த மான் தோலில் அமர்ந்து சங்கீதம் பாடுவது மறக்கமுடியாத காட்சி.

இன்னொரு கதையில் ரஸப்ரியா வாசித்து வாசித்து ஒரு மிருதங்ககாரனின் விரல்கள் வளைந்து போயிருக்கின்றன. அவனது திறமையை ஒரு பையன் அறிந்து போற்றுகிறான். உயர்சாதிப் பையன்கள் அவனை கேலி செய்கிறார்கள்.

ரஷ்ய இலக்கியங்களை முன்மாதிரியாகக் கொண்டே தனது கதைகளை எழுதினேன் என்கிறார் ரேணு. இந்தக் கதைகள் பீகார் மக்களின் வாழ்க்கையை உண்மையாக, நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த போதும் இன்றும் கதைகள் வைரமென ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது

வானிலிருந்து உதிரும் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்குவதற்குள் எரிந்து மறைந்துவிடுகிறது. இதைக் காணும் மற்ற நட்சத்திரங்கள் உனது ஒளியும் ஆற்றலும் இவ்வளவு தானா என்று பரிகாசம் செய்வதாகப் பயில்வானின் மத்தளம் கதையில் எழுதியிருக்கிறார். ரேணுவின் எழுத்துக் காலத்தைத் தாண்டி ஆற்றலுடன் புதுமை மாறாமல் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2021 01:21

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.