S. Ramakrishnan's Blog, page 113
September 26, 2021
தற்செயலின் கிளைகள்
The Bandits of Orgosolo 1961ல் வெளியான இத்தாலியத் திரைப்படம். இயக்குநர் விட்டோரியா டி சேடா இயக்கியது , பலரும் இவரது பெயரைக் கேட்ட மாத்திரம் டிசிகாவை நினைத்துக் கொள்வார்கள். அவர் வேறு இவர் வேறு. இவரும் இத்தாலிய நியோ ரியலிச இயக்குநர்களில் ஒருவரே. நிலக்காட்சியினைப் பிரதானமாகக் கொண்டு இந்தப் படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.

மத்திய தரைக்கடல் கடலில் உள்ள சார்டினியா தீவின் மையத்தில் இருக்கும் நீண்ட மலைப்பகுதியில் ஆடு மேய்க்கிறவர்கள் வாழுகிறார்கள். சிறிய கிராமங்கள். அதைச் சுற்றிலும் பெரியதும் சிறியதுமான பாறைகள் நிறைந்த மலைத்தொடர். தூரத்து ஓக் காடுகளை ஒட்டிய மேய்ச்சல் நிலம் தேடி மேய்ப்பர்கள் மந்தையோடு செல்கிறார்கள்.
படத்தின் துவக்கத்தில் மைக்கேல் மற்றும் அவனது தம்பி பெப்பேடு இருவரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஒட்டிக் கொண்டு போகிறார்கள். கையில் தேவையான ரொட்டிகள். குடிநீர் மற்றும் பாத்திரங்களுடன் ஒரு துப்பாக்கியைத் தோளில் போட்டபடியே அவர்கள் நீண்ட தூரம் நடக்கிறார்கள். வேட்டையாடிக் கிடைத்த விலங்கைச் சுட்டு உண்பது அவர்களின் வழக்கம். அவர்களின் வாழ்க்கைக்கெனத் தனி விதிகள் இருந்தன
ஒரு நாள் மைக்கேல் மலையுச்சி ஒன்றில் இரவு முகாம் அமைத்துத் தங்குகிறான். அப்போது இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் திருடப்பட்ட பன்றிகளுடன் மூன்று கொள்ளைக்காரர்கள் அங்கே வந்து சேருகிறார்கள். அவர்கள் பன்றியைச் சுட்டுச் சாப்பிடுகிறார்கள். திருடப்பட்ட இறைச்சி தனக்கு வேண்டாம் என மைக்கேல் விலகிக் கொள்கிறான். அந்தக் கொள்ளையர்கள் அங்கே தங்கி இரவை கழிக்கிறார்கள்

மறுநாள் காலை அவர்களைத் தேடி போலீஸ் வருவதைக் கண்டதும் ஒடி ஒளிகிறார்கள். சுடப்பட்ட பன்றி தலையைக் கண்டுபிடித்துவிடுவார்களே என நினைத்த மைக்கேல் அதை ஒரு இடத்தில் ஒளித்து வைக்கிறான். போலீஸ்காரர்கள் அந்த முகாமை சோதனை செய்கிறார்கள். கொள்ளையர்களுக்கு மைக்கேல் உதவுவதாகச் சந்தேகம் கொள்கிறார்கள். இந்த நிலையில் மலையுச்சியில் கொள்ளையர் இருப்பதை அறிந்து அவர்களைத் துரத்திப் போகிறார்கள். இரண்டு பக்கமும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது இதில் ஒரு காவலர் சுடப்பட்டு இறந்து போகிறார்
காவலர்களுக்குப் பயந்து மைக்கேல் தனது ஆடுகளை ஒட்டிக் கொண்டு எதிர் திசையில் தப்பித்துத் தப்பியோடுகிறான்.
போலீஸ் அவனையும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். மைக்கேல் செய்த உதவி அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. போலீஸ் கண்ணில் படாமல் ஆடுகளை ஒரு குகையில் கொண்டு போய் அடைக்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மலையை விட்டு இறங்கி உணவு சேகரிக்கச் செல்கிறான் மைக்கேல். அவன் தம்பி ஆட்டுமந்தையுடன் காவல் இருக்கிறான்

தன்னைக் காவலர்கள் கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து தம்பியிடம் ஆட்டுமந்தையை ஒப்படைத்துவிட்டுத் தலைமறைவான செல்ல முடிவு செய்கிறான்.
அவன் நினைத்தது போலவே போலீஸ் பட்டாளம் அவனைத் தேடி வருகிறது. அவர்களிடம் ஒளிந்து தப்புகிறான்
மைக்கேலின் தம்பி ஆடுகளை மலையுச்சிக்கு ஒட்டிக் கொண்டு செல்கிறான். மலையின் மறுபுறம் போய்விட்டால் தப்பிவிடலாம் என நினைக்கிறான். ஆனால் ஆடுகள் தொடர்ந்து நடந்து கால்கள் வீங்கிய நிலையில் தடுமாறி விழுகின்றன.
போலீஸ் மைக்கேலின் தம்பியை வளைத்துக் கொள்கிறது. அவர்களிடமிருந்து தம்பியைக் காப்பாற்றி ஆடுகளுடன் மலையைக் கடந்து போக முயல்கிறான் மைக்கேல். ஆனால் எதிர்பாராத விதமான சூழ்நிலை ஏற்படுகிறது.
அப்பாவியான மைக்கேல் முடிவில் கொள்ளைக்காரனாக மாறுகிறான். அதிகாரத்தின் துரத்தல் அவனை இப்படித் திருடனாக மாற்றுகிறது
மைக்கேல் இரவில் கிராமத்தைத் தேடிச் செல்வதும் மலையுச்சியில் சந்திக்கும் இன்னொரு மேய்ப்பனுடன் குடிநீருக்காகச் சண்டையிடுவதும். வெண்ணெய் மற்றும் ஆட்டு ரோமங்களைச் சேகரித்து விற்பதும் அவனுக்கு உதவி செய்யும் இளம்பெண்ணின் உதவியும் மிக அழகான காட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன

போலீசாரால் வேட்டையாடப்பட்டு, ஒர்கோசோலோவுக்குத் திரும்புவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற நிலைக்கு மைக்கேல் தள்ளப்படுவது சிறப்பாகச் சித்தரிக்கபட்டுள்ளது
படத்தின் முடிவில் இன்னொரு கதை துவங்குகிறது. இது முடிவற்ற பழிவாங்குதல் என்பதன் அடையாளத்துடன் படம் நிறைவு பெறுகிறது. எங்கோ ஒர்கோசோலோ நடந்த நிகழ்வு என்றாலும் எனது கிராமத்தையும் அங்கே ஆடுகளை ஒட்டி வரும் கீதாரிகளுக்குள் ஏற்பட்ட மோதல்களையும் படம் நினைவுபடுத்துகிறது
விட்டோரியோ டி சேட்டா 1959 ஆம் ஆண்டில் இந்தக் கதையை ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார். அதன் வெற்றியை இதை முழுநீள படமாக மாற்றியிருக்கிறது.
விட்டோரியா டி சேட்டா கதை நிகழும் நிலப்பரப்பை ஒரு கதாபாத்திரம் போலச் சித்தரித்துள்ளார். அது தான் படத்தின் சிறப்பம்சம். அந்த மலைப்பகுதி பைபிளில் வரும் நிலவெளியை நினைவுபடுத்துகிறது.
மைக்கேலுக்கும் அவனது தம்பிக்குமான உறவு அழகானது. அவன் ஆடுகளை ஒட்டிச் செல்வதாலே தன்னைப் பெரிய மனிதனாக நினைத்துக் கொள்கிறான். அவனிடம் பயமேயில்லை. தன்னால் அண்ணனைக் காப்பாற்ற முடியும் என அவன் நம்புகிறான். பிடிபடும் காட்சியில் அவன் காவலர்களிடம் நடந்து கொள்ளும் விதமும், ஆடுகள் இறக்கும் போது அவன் அடையும் பதைபதைப்பும் உணர்ச்சிப்பூர்வமானது

மலையுச்சிக்கு ஆடுகளை ஒட்டிச் செல்லும் போது அந்த நிலம் விசித்திரமான தோற்றம் கொள்கிறது. கடன்பட்ட மைக்கேலின் குடும்பமும் அவனது தாயும் சில காட்சிகளே வருகிறார்கள். ஆனால் அதற்குள்ளாகவே அவன் ஏன் இப்படித் தப்பியோட விரும்புகிறான் என்பதன் காரணத்தை அழகாக விளக்கிவிடுகிறார்கள்
உண்மையான கொள்ளையர்களைக் காவலர்களால் பிடிக்கமுடியவில்லை. அந்தக் கோபம் மைக்கேல் மீது திரும்புகிறது. அவனை வேட்டையாடத் துடிக்கிறார்கள். அவனோ தன் மீது தவறில்லை என்று நிரூபிக்க முயலுகிறான். அதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை.
மைக்கேல் இரவில் ரகசியமாகக் கிராமத்திற்குள் வரும் காட்சி எத்தனை அழகாக உள்ளது. அவனைப் பின்கட்டிற்குக் கூட்டிப் போய்ப் பேசுகிறார்கள். காவலர்கள் அறியாமல் அந்தப் பெண் தனியே செல்லுவதும் வழியில் காவலர்கள் அவளை எதிர்கொள்வதும் துல்லியமான விவரிப்புகள்.

வேட்டையில் தான் படம் துவங்குகிறது. இன்னொரு வேட்டையோடு படம் நிறைவு பெறுகிறது.
இந்தப்படம் Lonely Are the Brave என்ற கிர்க் டக்ளஸ் படத்தை நினைவுபடுத்தியது. அதிலும் இது போலக் காவல்துறையிடமிருந்து தப்பி மெக்சிகோ எல்லையிலுள்ள பாறைகள் நிறைந்த மலைப்பகுதி ஒன்றுக்கு ஜாக் பர்ன்ஸ் சென்றுவிடுவான் அவனைக் காவலர்கள் துரத்தி வருவார்கள். மலையுச்சியில் மறைந்தபடியே அவர்களை எதிர்கொள்ளுவான். நண்பனைக் காப்பாற்ற அவன் செய்த உதவி முடிவில் அவனையே காவு வாங்குவதாகக் கதை அமைந்திருக்கும். அதே பாணியில் தான் The Bandits of Orgosolo வும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படத்தினைப் போலக் கிர்க் டக்ளஸ் படத்தில் நிலக்காட்சிகள் கவித்துவமாக உருவாக்கப்படவில்லை.
மைக்கேல் தனது முடிவுகளைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுவதேயில்லை. அது தான் மேய்ப்பர் வாழ்க்கையில் அவன் கற்றுக் கொண்ட பாடம். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் போதும் அவன் தம்பியை, குடும்பத்தைக் காப்பாற்றவே முயலுகிறான். முடிவில் அவன் வாழ்க்கை திசைமாறுவதும் இதன் பொருட்டே.
மைக்கேல் தன் தம்பியிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது இனி தனது வாழ்க்கை இயல்பிற்குத் திரும்பாது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறான். வாழ்க்கை நெருக்கடி முடிவில் அவன் விரும்பாத செயலை செய்ய வைக்கிறது.
இனி அவன் தேடப்படும் குற்றவாளி மட்டுமே. அவனது எளிய வாழ்க்கை, அன்பான குடும்பம் எல்லாமும் அவனை விட்டுப் பறிபோய்விட்டது. அந்தத் துயரைப் பார்வையாளர்கள் முழுமையாக உணருகிறார்கள். அதன் காரணமாக முடிவில் அவனது செயல் குற்றமாகக் கருதப்படுவதில்லை.
ஏன் ஒருவனின் இயல்பு வாழ்க்கை அவன் செய்த உதவியால் பாதிக்கபடுகிறது. கொள்ளையர்கள் என்று அறிந்த போதும் அவன் உதவி செய்கிறான். காரணம் அவர்களுக்கு வரி கொடுக்கமுடியாமல் கொள்ளையர்களாக உருமாறியவர்கள் என்ற உண்மையை அறிந்திருப்பதே. அவன் காட்டிய அன்பு அவனது வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகிறது.
படத்தில் மைக்கேல் குற்றவாளியாக்கபடுகிறான். அதை அனைவரும் அறிந்தேயிருக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து எப்படி மீளுவது என்று எவருக்கும் தெரியவில்லை. மைக்கேல் தானே முடிவை எடுக்கிறான்.
வணிக ரீதியான திரைப்படமாக இருந்தால் இந்த மொத்த படமும் கதாநாயகனின் பிளாஷ்பேக்காக உருவாக்கபட்டிருக்கும். அப்படி செய்யாமல் இதை மட்டுமே தனித்த திரைப்படமாக்கியது தான் இயக்குநரின் கலைத்தன்மையின் அடையாளம்.
••
September 24, 2021
சினிமா பார்வையாளர்கள்
Italian Cinema Audiences என்றொரு புத்தகம் படித்தேன். 1950 -70களில் இத்தாலியின் சினிமா பார்க்கும் பழக்கம் எப்படியிருந்தது. எது போன்ற படங்கள் வரவேற்பு பெற்றன. சினிமா தியேட்டர்கள் எவ்வளவு இருந்தன. அன்று திரைப்படம் பார்த்த அனுபவம் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள். திரைப்பட விநியோகத்திலிருந்த நடைமுறைகள் இவற்றை விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இத்தாலியில் நடந்த விஷயங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய வேறுபாடில்லை.

திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பதை மிகச்சிறந்த மகிழ்ச்சியாக இத்தாலியர்கள் நினைத்தார்கள். சினிமா பாரடிஷோ திரைப்படம் பார்த்தவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அரங்கம் என்பது கனவின் உறைவிடம். அங்கே செல்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அலங்காரங்களும் தியேட்டரில் வெளிப்படும் உற்சாகமும் நிகரற்றது
எது போன்ற திரைப்படங்கள் நகரங்களில் விரும்பி பார்க்கப்பட்டன. எது போன்ற திரைப்படங்களைக் கிராமப்புற மக்கள் விரும்பி பார்த்தார்கள் என்ற விபரம் இதில் தரப்பட்டிருக்கிறது. வரலாற்றுப் படங்களை இரண்டு இடங்களிலும் மக்கள் ரசித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். திரில்லர் வகைக் கதைகள் நகரங்களில் கொண்டாடப்பட்ட அளவிற்குக் கிராமங்களில் வரவேற்பு பெறவில்லை. இரண்டிலும் முதலிடத்தில் இருந்த்து நகைச்சுவை படங்கள். அதுவும் காதலும் நகைச்சுவையும் இணைந்த படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன
இந்தச் சூழல் அப்படியே தமிழகத்திலும் இருந்தது. வரலாற்றுத் திரைப்படங்கள் இன்றும் விரும்பி பார்க்கப்படுகின்றன. காதலும் நகைச்சுவையும் கலந்த படங்களுக்கு இன்றும் பெரிய வரவேற்பு இருக்கிறது
தியேட்டர் கட்டணத்திற்காகப் பெண்கள் எவ்வாறு காசு சேர்த்து வைத்தார்கள். எந்தக் காட்சிகளுக்குப் பெண்கள் அதிகம் வந்தார்கள் என்ற புள்ளிவிவரம் முக்கியமானது. காலைக்காட்சிகளுக்கு என்றே தனியான பார்வையாளர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டிலும் அப்படித்தான்
அன்று இத்தாலியத் திரைப்படங்களை விடவும் ஹாலிவுட் படங்கள் அதிக அளவில் வசூல் செய்திருக்கின்றன புறநகர் அரங்குகளுக்கான பார்வையாளர்கள் திரையரங்கத்தில் செய்த கலாட்டா மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள். விநியோகிஸ்தர்கள். சினிமா தயாரிப்பாளர்கள் பற்றியும் துல்லியமான புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
1950களில் இத்தாலியில் பார்வையாளர்களின் ரசனையைப் பத்திரிக்கைகள் தீர்மானித்தன. சுய அனுபவத்தை எழுதுதல். கண்ணீர் கதைகள். விசித்திரமான குற்ற நிகழ்வுகள். துப்பறிதல். கடத்தல் கொலை கொள்ளை போன்ற கதைக்கருக்களை மக்கள் விரும்பி பார்த்தார்கள். இதனால் இத்தாலியப் பார்வையாளர்களின் சுவையில் பெரிய மாற்றம் உருவானது
நாட்டின் வடக்கிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் திரையரங்குகள் அதிகமிருந்தன. ஆனால் தெற்கில் அவ்வளவு திரையரங்குகள் இல்லை. இந்த உண்மை தென்மாவட்டங்களின் திரையரங்குகளோடு ஒப்பிடும் போது கிருஷ்ணகிரி தர்மபுரி பகுதிகளில் அரங்குகள் மிகவும் குறைவே.
சமூக மயமாக்கலின் ஒரு வடிவமாகப் பெண்கள் சினிமாவை அனுபவித்தவர்கள் அவர்கள் கூட்டாக வீட்டை விட்டு வெளியேறி சினிமாவிற்குச் சென்றார்கள். அது ஒரு வடிகாலாக அமைந்தது.
. திரையின் வழியே சமூக மாற்றங்களைப் புதிய நாகரீகங்களை, மோஸ்தர்களைக் கற்றுக் கொண்டார்கள். இந்தப் பிரதிபலிப்பு அவர்கள் உடையில் நடனத்தில் பேச்சில் வெளிப்பட்டது என்கிறார்கள்
Little Women என்ற படத்தில் கேத்தரின் ஹெப்பர்ன் நடித்த ‘ஜோவின் கதாபாத்திரம் பெண்களிடம் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. தானே சிந்திக்கவும் செயல்படவும் வேண்டும் என்பதை ஜோவின் வழியாகப் பெண்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்த வகையில் மாற்றத்தின் அடையாளமாக அவளைக் கருதினார்கள்.
இத்தாலிய இளம் பெண்கள் மீது சினிமா மிகுந்த செல்வாக்குச் செலுத்தியது. குறிப்பாகப் புத்தகங்களும் சினிமாவும் தான் அவர்கள் ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
சினிமா தமிழ் சமூகம் மீது செலுத்திய பாதிப்பு பற்றி இதுபோல விரிவான ஆய்வுப்பூர்வமான நூல் எழுதப்பட வேண்டும். அதன் வழியே நாம் சமூக மாற்றங்களின் உருவாக்கத்தை எளிதாகக் காண முடியும்
••
September 23, 2021
ஆனந்த விகடனில்
இன்று வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் காலப்பயணம் பற்றிய எனது சிறிய பதில் வெளியாகியுள்ளது

கண்கள் சொல்லாதது
மா. சண்முகசிவா எழுதிய ஓர் அழகியின் கதை வல்லினம் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

கதையின் வடிவமும் சொல்லப்பட்ட விஷயமும் சொல் முறையும் மிக அழகாக உள்ளது. சமீபத்தில் நான் படித்த சிறந்த கதை இதுவென்பேன்.
ஜூலியின் கதாபாத்திரம் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பாம்பைக் காண்பது போலவே இருக்கிறது. பாம்பின் கண்களை இப்படி உற்றுப் பார்த்திருக்கிறேன். அது சட்டென நம்மைக் கவ்வி இழுத்துவிடும். இந்தக் கதையில் வரும் ஜூலி துயரத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் தேவதையைப் போலிருக்கிறாள். கடந்த காலம் அவளுக்குள் துர்கனவாக உறைந்து போயிருக்கிறது. நிகழ்காலத்தை அவளாகவே வடிவமைக்கிறாள்.
மருத்துவரிடம் ஏன் அவள் உண்மைகளைச் சொல்ல விரும்புகிறாள். உண்மையில் அதுவும் ஒரு கற்பனை தான். அவள் தனக்குத் தானே கதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறாள். கதை சொல்வதன் வழியே தான் சிறுமியாக இருந்த காலத்திற்குப் போக முற்படுகிறாள்.
கண்களை ஆழ்ந்து நோக்குவதன் வழியே அவள் காலத்தின் வேறு காட்சிகளை அறிந்துவிடுகிறாள். இதனால் அவளுக்கு எதிர்காலம் குறித்த பயமில்லை. சொல்லப்போனால் எதிர்கால நிகழ்வுகள் சலிப்பாகவே தோன்றுகின்றன
அவளது கனவுகளின் விசித்திரம் தனக்குத் தானே புனைந்து கொண்டது தானா. உச்சியிலிருந்து விழுவது என்பது தான் அவளது முதன்மையான அனுபவம். அறுபட்ட சிறகுகள் கனவில் தோன்றுகின்றன. வீழ்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. ஆனால் முன் உணர முடியும் என்பார்கள். கதையிலும் அப்படித் தான் நடக்கிறது
இந்தக் கதையை வாசிக்கும் போது ஜி. நாகராஜன் டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் கதையில் வரும் தேவயானை நினைவிற்கு வந்து போகிறாள். அவளும் இப்படியான ஒரு கனவு நிலையைத் தான் அடைகிறாள். அந்த டெர்லின் ஷர்ட் அணிந்த மனிதர் கொடுத்த ஐந்து ரூபாயைத் தேடுகிறாள். அந்த புதிரான அனுபவத்தை எப்படி வகைப்படுத்துவது. தேவயானைக்கு வரும் குழப்பம் தான் இந்தக் கதையில் வரும் ஜூலிக்கும் ஏற்படுகிறது
டத்தோ ஶ்ரீயின் வீட்டிற்கு ஜூலி செல்லும் இடம் மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. அப்பாவித்தனமான கண்கள் கொண்டவள் என்று டத்தோ ஸ்ரீ அவளைப் பற்றிச் சொல்கிறார். அவளோ தான் ஒரு போதும் அவரைக் காதலித்ததில்லை என்று வெளிப்படையாகத் தெரிவிக்கிறாள். அவர்கள் கடைசியாக ஒருமுறை முத்தமிட்டுக் கொள்கிறார்கள். அந்த முத்தம் அவரது நினைவுகளைத் துடைக்கும் சிறிய காகிதம் போலவே இருக்கிறது.
இந்தக் கதையை மருத்துவக் குறிப்பு போன்ற பாணியிலே சண்முகச் சிவா எழுதியிருக்கிறார். அது தனித்தன்மை மிக்கதாக உள்ளது. சரசரவென நழுவியோடும் எழுத்து நடை. மிகையில்லாத உணர்ச்சி வெளிப்பாடு. சட்டென மாறும் கதாபாத்திரங்கள் என கதை அழகாக உருவாக்கபட்டுள்ளது.
வறுமையும், கனவுகளும். எதிர்பாராத வாழ்க்கையின் உச்சங்களும், நோயும் நினைவுகளும் என பல்வேறு ஊடுஇழைகளை ஒன்றிணைத்து நாவலின் விஸ்தாரணத்தை ஒரு சிறுகதையிலே காட்டியிருப்பது சண்முகச் சிவாவின் சிறந்த எழுத்தாற்றலுக்கு சான்று.
அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
இணைப்பு
ஓர் அழகியின் கதை
September 21, 2021
ரில்கேயின் ரோஜா
The Notebook of Malte Laurids Briggs என்ற நாவலை கவிஞர் ரெய்னர் மரியா ரில்கே எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ஒரே நாவல். கவிஞர்கள் எழுதும் நாவல்கள் வாசிக்க இனிமையானவை. இந்த நாவல் அவரது டயரிக்குறிப்பு போலவே எழுதப்பட்டிருக்கிறது. .

இருபத்தியெட்டு வயதான கவிஞனின் வெற்று நாட்களை நாவல் விவரிக்கிறது.
எதுவும் நடக்கவில்லை என்று அந்தக் கவிஞன் புலம்புகிறான். வீதியின் முடைநாற்றத்தை, தெருநாயின் குரலை, குப்பைகள் குவிந்து கிடக்கும் மூலைகளை, அவசரமான மனிதர்களை அவதானித்தபடியே தனது வீட்டு ஜன்னலில் நின்று கொண்டிருக்கிறான். படியேறி வரும் ஆளின் உரத்த சப்தம் அவனைத் தொந்தரவு செய்கிறது.
வீதியின் பரபரப்பான இயக்கம், டிராமின் வேகம். பழைய பொருட்கள் விற்கும் கடை. புத்தகக் கடைகள். வீதியில் செல்லும் இளம்பெண்கள் என அவன் தன்னைக் கடந்து செல்லும் வாழ்க்கையை விட்டேத்தியாக அவதானிக்கிறான்.
இடையில் அவனுக்குப் பிடித்தமான கவிதைகளை நினைவு கொள்கிறான். அவனது கவிதைகளைப் பற்றிப் பேசுகிறான். நாடகம் எழுதியதற்காக வருத்தம் கொள்கிறான். புஷ்கினின் நீண்ட கவிதையை மேற்கோள் காட்டுகிறான்.

ம்யூசியம் காண வரும் இளம்பெண்களின் ஆர்வம் மற்றும் பொய்யான நடிப்பினை பற்றி எழுதுகிறான். கடந்தகாலத்தில் அவன் தந்தையோடு தாத்தா வீட்டிற்கு மேற்கொண்ட பயணம் பற்றிய நினைவுகளும் தனது பாரம்பரியம் குறித்தும் அவன் பதிவு செய்கிறான்.
இந்தக் குறிப்புகளிலும் ரோஜா மலர் இடம்பெறுகிறது. மலர்களைப் பற்றி அவன் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறான்.. அன்றைய பாரீஸ் நகர வாழ்க்கையின் சித்திரங்களை ரில்கே துல்லியமாக எழுதியிருக்கிறார். பெருநகர வாழ்வின் நெருக்கடிகள், அலைக்கழிப்புகள் மற்றும் பாதுகாப்பின்மையைத் தான் நாவல் முதன்மையாகப் பேசுகிறது.
“there are people who wear the same face for years; naturally it wears out, gets dirty, splits at the seams, stretches like gloves worn during a long journey.”
என்று ஒரு இடத்தில் ரில்கே குறிப்பிடுகிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் இப்படி முகமூடி அணிந்தவர்களே. அதை அவர்கள் உணரவேயில்லை.
கனவுகளுடன் வாழும் கவிஞனுக்கு தினசரி வாழ்க்கை அர்த்தமற்றதாகவே தோன்றும். மனிதர்கள் பணம் தேடுவதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ளது அவனுக்கு அபத்தமானதாகவே படும்.
இந்த சலிப்பின் காரணமாகவே மலைப்பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் சென்று தங்கி வாழ்ந்திருக்கிறார் ரில்கே.
கவிஞர் ரெய்னர் மரியா ரில்கேவின் மரணத்திற்கு விசித்திரமான காரணம் சொல்கிறார்கள்.
பேரழகியும் ரயில்வே அதிகாரியின் மனைவியுமான நிமெட் எலோயி ஒரு நாள் அவரைக் காண வந்திருந்தார். அவரை மகிழ்ச்சிப்படுத்தத் தனது தோட்டத்திலிருந்த ரோஜா பூக்களை ரில்கே பறித்துக் கொண்டு வந்தார். அப்போது ரோஜாவின் முள் அவரது கையில் குத்திவிட்டது. இந்தக் காயம் புரையோடி கை வீங்கிவிட்டது. சிகிச்சை எதையும் செய்யாமல் விட்ட காரணத்தால் அவரது மற்றொரு கையிலும் ரத்தவோட்டம் சீர்கெட்டுப் போனது.. உடலில் ஏற்பட்ட இந்த ஒவ்வாமையின் காரணமாக அடுத்த நாள் ரில்கே இறந்து போனார்.
ரோஜாவின் முள் குத்தி ஒரு கவிஞன் இறந்து போனான் என்பதை உலகெங்கும் வியப்போடு பேசினார்கள்.
ரோஜாவை ஒரு குறியீடாக, உருவகமாக, படிமமாக ரில்கே பல்வேறு விதங்களில் பயன்படுத்தியிருக்கிறார்
ஜப்பானிய கவிதை மரபில் மலர்கள் முழுமையான அழகின் வெளிப்பாடு மற்றும் நிறைவின் அடையாளம். அதே நேரம் மலர்கள் உதிர்வதன் வழியே தன் காலவரம்பை வெளிப்படுத்துகின்றன. அழகு காலவரம்பிற்கு உட்படுத்தது என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால் கவிதையில்,ஒவியத்தில் மலர்கள் இடம்பெற்றவுடன் அவை நித்யத்துவத்தின் அடையாளமாக மாறிவிடுகின்றன.
ரோஜா மலரை சூபி மரபு ஞானவழிகாட்டியாக கருதுகிறது. கிறிஸ்தவ கண்ணோட்டத்தில், ரோஜா என்பது சொர்க்கம் மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்
ரில்கேயின் காதல்கதைகள் பிரசித்திபெற்றவை. நித்யகாதலராகவே அவர் இருந்தார். இளம்பெண்களின் ஆசைக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார். ஆகவே அவரது இந்த மரணம் காதலின் அடையாளம் போலவே கருதப்பட்டது.
ஆனால் பின்னாளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் அவருக்கு நீண்டகாலமாகவே ரத்தப்புற்றுநோய் இருந்திருக்கிறது அதை அவர் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ளவில்லை அது தான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ரரோன் தேவாலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் ரில்கேவின் கல்லறை உள்ளது. அந்த இடத்தையும் கல்லறை வாசகத்தையும் அவரே தேர்வு செய்து வைத்திருந்தார். அந்த இடம் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வாழும் கிராமமாகும்
அவரது கல்லறை வாசகத்திலும் ரோஜா இடம் பெற்றுள்ளது. அதில் உறக்கம் வேண்டாத கண் இமைகளாக எழுதியிருக்கிறார். ரோஜா இதழ்களைக் கண் இமையாக உருவகப்படுத்தியது சிறப்பு..

ரெனே கார்ல் வில்ஹெல்ம் ஜோஹன் ஜோசப் மரியா ரில்கே ப்ராக் நகரில் பிறந்தார், அவரது தந்தை இராணுவ அதிகாரியின் மகன். பத்து வயதில் ரில்கே இராணுவ அகாடமிக்கு அனுப்பப்பட்டார். மகிழ்ச்சியற்ற ஐந்து வருடங்களை அங்கே கழித்தார், 1891 இல் உடல் நலிவுற்று அங்கிருந்து வெளியேறினார்.. பின்பு 1895 இல் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயிலச் சேர்ந்தார். அதற்கு முன்பாகவே அவரது முதற்கவிதை தொகுதி வெளியாகியிருந்து.
1897 இல் மியூனிச்சில் படிக்கும் போது லூ ஆண்ட்ரியாஸ்-சலோமோ என்ற முப்பத்தாறு வயது பெண்ணைத் தீவிரமாகக் காதலித்தார். அப்போது அவருக்கு வயது 22
1900 இல் ஆண்ட்ரியாஸ்-சலோமேயுடன் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்த நாட்களில் லியோ டால்ஸ்டாயையும் ஓவியர் லியோனிட் பாஸ்டர்நாக்கையும் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். சுவிட்சர்லாந்தில் இருந்து ரில்கே எழுதிய கடிதங்கள் பாரிஸில் வசித்த ரஷ்யகவியான மரினா ஸ்வெதேவா வழியாக மாஸ்கோவில் உள்ள பாரிஸ் பாஸ்டர்நாக்கிற்கு அனுப்பி வைக்கபட்டன. இந்த மூன்று கவிஞர்களுக்கும் நெருக்கமான கடிதத் தொடர்பு இருந்தது. ரில்கேயை ரகசியமாக மரினா காதலித்தார் என்கிறார்கள். மூவரும் கவிதை குறித்து கடிதம் வழியாக தீவிரமாக விவாதித்திருக்கிறார்கள்.
1900 இல் கலைஞர்களுக்கான காலனியில் தங்கியிருந்த போது சிற்பி ஆகஸ்டே ரோடினின் மாணவி கிளாரா வெஸ்டாப்பை சந்தித்தார். அவர்கள் அடுத்த ஆண்டுத் திருமணம் செய்து கொண்டனர் . அந்தத் திருமணம் தோல்வியடைந்தது
.1902ம் ஆண்டில் சிற்பி ரோடினை சந்தித்து அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ரோடின் பற்றி சிறு நூலையும் ரில்கே எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது பாரீஸ் செல்ல முடியாமல் பெரும்பகுதியை ம்யூனிச்சில் கழித்தார்.
இருப்பிடம் இன்றிச் சுற்றியலைந்த ரில்கே இத்தாலியிலிருந்து வியன்னாவிற்கும் பின்பு அங்கிருந்து ஸ்பெயினுக்கும், துனிசியா முதல் கெய்ரோ வரையும் பயணம் செய்தார்.

புரவலர்களின் ஆதரவில் வாழ்ந்து வந்த ரில்கே ஸ்விட்சர்லாந்தில் வசித்த புரவலர் ஒருவரின் உதவியோடு அங்குள்ள சிறிய கிராமத்தில் தங்கியிருந்தார். அந்த நாட்களில் தான் அழகி நிமெட் எலோயுடன் பழக்கம் ஏற்பட்டது. அவளது அழகும் புத்திசாலித்தனமும் ரில்கேயை வெகுவாக வசீகரித்தது
தன்னைப் பாதித்த எழுத்தாளர்கள் என்ற பட்டியலில் புஷ்கின், லெர்மன்தேவ். துர்கனேவ் பெயர்களைக் குறிப்பிட்டுள்ள ரில்கே டால்ஸ்டாயை விட்டுவிட்டார். இதைப்பற்றிக் கேட்டபோது டால்ஸ்டாயின் எழுத்துத் தன்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவரது சமூகப் பண்பாட்டுச் செயல்கள் தன்னைக் கவர்ந்துள்ளன என்றார். ரஷ்ய பயணம் அவரது ஆளுமையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது.
காதலும் மரணமும் பற்றி ரில்கே நிறைய எழுதியிருக்கிறார். இந்த நாவலிலும் அதுவே பிரதானமாக வெளிப்பட்டுள்ளது
••
September 20, 2021
லூ சுனின் காதற்கடிதங்கள்
சீன எழுத்தாளர் லூ சுன் (Lu Xun) பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவரது காதல் கடிதங்கள் தனி நூலாக வெளியாகியுள்ளது என்பதைப் பற்றிய தகவலை அறிந்தேன்.

சீனாவில் லூசுனிற்கு முன்பாக யாரும் தங்கள் காதல் கடிதத்தைத் தனி நூலாக வெளியிட்டது கிடையாது. ஆகவே அந்தப் புத்தகம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதே நேரம் சில கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது
Letters Between Two என்ற அந்த புத்தகத்தை இணையத்தில் தேடிப் படித்தேன்.

தனது மாணவியும் தன்னை விடப் பதினாறு வயது குறைந்தவருமான சூ குவாங்பிங்கிற்கு லூசுன் எழுதிய கடிதங்களும் அதற்குக் குவாங்பிங் எழுதிய பதில்களும் இதில் அடங்கியுள்ளன
ஜு ஆன் என்ற பெண்ணை லூசுன் கல்லூரி நாட்களிலே திருமணம் செய்து கொண்டிருந்தார். அந்த மண உறவில் கருத்துவேறுபாடு உருவாகவே அவர் தனித்து வாழ்ந்து வந்தார்
லூ சுன் மாணவியாக இருந்த குவாங்பிங் தனது ஆசிரியர் மீது அன்பு கொண்டு அவருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பக் கடிதங்களில் நலம் விசாரிப்பு மற்றும் பொது விஷயங்களைப் பற்றியே இருவரும் எழுதியிருக்கிறார்கள். மெல்ல அது காதலாக மாறி பரஸ்பரம் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளவும் அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறார்கள்
திருமணம் செய்து கொள்ளாமலே குவாங்பிங்குடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார் லூ சுன். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்திருக்கிறது. குவாங்பிங் முதற்கடிதத்தை எழுதிய போது அவரது வயது 27.
அப்போது கல்லூரி படிப்பை முடித்துப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். அவர் பள்ளியில் படித்த போது இரண்டு ஆண்டுகள் லூ சுன் பாடம் கற்பித்திருக்கிறார். அந்த நாட்களில் லூ சுனின் பேச்சும் சிந்தனைகளையும் அவரைக் கவர்ந்திருக்கின்றன.

லூ சுனின் சிறுகதைகள் புதிய கதைப்போக்கினை உருவாக்கி பெரிய வரவேற்பினை பெற்றிருந்தன. ஆகவே தனது விருப்பத்திற்குரிய ஆசிரியரும் எழுத்தாளருமான லூ சுன் மீது குவாங்பிங் ரகசியக் காதல் கொண்டிருந்தார்
குவாங்பிங்கின் குடும்பம் ஒரு காலத்தில் வசதியாக இருந்தது. அவளது தாத்தா மாகாண ஆளுநராக இருந்தவர். ஆனால் தந்தையின் காலத்தில் குடும்பம் நொடித்துப் போனது. அவளது தந்தை ஒரு சிறு வணிகர். அம்மா ஏற்றுமதி வணிகம் செய்யும் ஒருவரின் மகள்.
அந்தக் காலச் சீனாவில் இளம் பெண்களின் கால்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பாதங்களைப் பிணைத்துக் கட்டும் பழக்கம் இருந்தது. அப்படிப் பாதங்களை இறுக்கமாகக் கட்டியதால் அம்மாவின் கால்கள் ஒடுங்கிப் போய்விட்டன. ஆள் துணையில்லாமல் அவரால் நடக்க முடியாமல் ஆனது.
இதன் காரணமாகக் குவாங்பிங்கின் தந்தை தன் மகளுக்கு அப்படி கால்களைப் பிணைத்துக் கட்டும் சடங்கு செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அந்தக் காலத்தில் இருபாலர் படிக்கும் பள்ளியில் பெண்களைச் சேர்க்க அனுமதிக்கமாட்டார்கள். அதை மீறி குவாங்பிங்கை இருபாலர் பள்ளியில் படிக்க அனுமதி தந்தார் அவரது தந்தை.
இளம் மாணவியாக அவள் தனது வீட்டில் பத்திரிக்கை படிப்பதை அண்டை வீட்டார் ஒரு புறம் வியந்து பார்த்தார்கள். மறுபுறம் இது பெண்களின் தலையில் மோசமான எண்ணங்களை உருவாக்கிவிடும் என்று கண்டித்தார்கள். ..

படிப்பில் சிறந்துவிளங்கிய குவாங்பிங் பீஜிங்கில் உள்ள கல்லூரியில் படித்திருக்கிறார். இந்த நாட்களில் அவர். பத்திரிக்கையாளராக விரும்பினார்
வார மாத இதழ்களுக்குத் தனது பயணம் மற்றும் சமூகப்பிரச்சினைகள் சார்ந்து சிறுகட்டுரைகள் எழுதிவந்தார்.
லூ சுன் குடும்பமும் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப் போனது தான். அவருடன் பிறந்தவர்கள் மூவர். அவரே மூத்தவர். அந்த நாட்களில் ஜப்பானுக்குச் சென்று கல்வி பயிலுவது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட்டது. அரசின் உதவித்தொகை பெற்று ஜப்பானுக்குச் சென்று படித்தார் லூசுன்.
மருத்துவம் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவரது கவனம் மாறிப்போனது. இலக்கியமும் மொழியும் கற்றுக் கொள்ளத்துவங்கிப் படிப்பை முடிக்காமலே சீனா திரும்பினார்
பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் துவங்கி பெண்கள் பள்ளி ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அப்போது தான் குவாங்பிங்கிற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்

ரஷ்ய மற்றும் பிரெஞ்சு இலக்கியங்கள் மீது அதிக விருப்பம் கொண்டிருந்த லூசுன் அதன் முக்கியப் படைப்புகளைச் சீன மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார். தனது சிறுகதைகள் மூலம் நாடறிந்த எழுத்தாளராக மாறிய அவர் அரசியல் கட்டுரைகளையும் சமூகப்பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்துத் தொடர்ந்து எழுதி வந்தார்.
குவாங்பிங்கை காதலிக்கத் துவங்கிய பிறகு அவரது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது.
குவாங்பிங் அவரது கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து இதழ்களுக்கு அனுப்பி வைத்தார். சகோதரனுடன் பிணக்குக் கொண்டு விலகி இருந்த லூசுனுக்கு ஆறுதல் சொல்லி புதிய வாழ்க்கையை உருவாக்கித் தந்தார்
அவளது காதலின் வழியே தனது நீண்ட கால மனத்துயரை, வேதனையைத் தான் கடந்துவிட்டதாக லூ சுன் எழுதியிருக்கிறார். அவளது பிறந்தநாள் ஒன்றுக்காக ஒரு காதற்கவிதையை எழுதிப் பரிசளித்திருக்கிறார் லூசுன்.
மிதமிஞ்சிய குடி மற்றும் புகைப்பழக்கம் காரணமாக அவரது உடல்நிலை நலிவடைய நேர்ந்த போது குவாங்பிங் உடனிருந்து நலம்பெற உதவியிருக்கிறார். ஆனால் காச நோய் முற்றிய நிலையில் லூ சுன் இறந்து போனார். அதன்பிறகு அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் குவாங்பிங் தீவிர கவனம் கொண்டிருந்தார்
லூ சுனின் உற்றதுணையாக விளங்கிய போதும் குவாங்பிங் இறந்த போது அவரது உடலை லூசுன் கல்லறைக்கு அருகில் புதைக்க அனுமதிக்கவில்லை. காரணம் அவர் அவளை முறையாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே.
லூசுனின் மனைவி ஜு ஆன் ஷாக்ஸிங்கில் ஒரு தொழிலதிபரின் மகளாகப் பிறந்தவர், மற்ற பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாவின் விருப்பம் மற்றும் குடும்பக் கௌரவத்திற்காக அவளை லூசுன் திருமணம் செய்து கொண்டார். லூசுனை விடவும் மூன்று வயது மூத்தவர் ஜு ஆன். இவர்களின் திருமண உறவு நீடிக்கவில்லை.

லூ சுனின் மனைவியாக ஜு ஆன் 41 வருடங்கள் தனியாக வாழ்ந்து வந்தார்.
தனது திருமணத்திற்குப் பிறகே லூ சுன் கல்வி பயில ஜப்பான் சென்றார். வெளிநாட்டில் படிக்கும் மருமகன் என ஜு ஆன் குடும்பத்தில் அவர் ஒரு அறிவுஜீவியாகக் கருதப்பட்டார்.
சீனா திரும்பிய லூசுன் கட்டுப்பெட்டியாக இருந்த தனது மனைவியை விரும்பவில்லை. திருமணமான முதலிரவில் கூட அவர் ஒரு அறையிலும் ஜு ஆன் தனி அறையிலும் தூங்கினார்கள். அது தான் அவர்கள் குடும்பச் சம்பிரதாயம் என்று கூறப்பட்டது.
அவள் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும், நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று லூ சுன் வற்புறுத்தினார். அவள் அதை ஏற்கவில்லை. நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அவள் தயாராகயில்லை என்பதால் லூசுன் அவளை விட்டு விலகிக் கொண்டார்.
.பிரிந்து வாழ்ந்த போதும் லூசுன் அவளை விவாகரத்து செய்யவில்லை. காரணம் விவாகரத்துப் பெற்ற பெண் சமூக அந்தஸ்தை இழந்துவிடுவதோடு குடும்பத்தின் சொத்துரிமையினையும் இழந்துவிடுவாள். அப்படி அவளை நிர்கதியாக விடவேண்டாம் என நினைத்த லூசுன் அவளை விவாகரத்து செய்யவில்லை.
குவாங்பிங்குடன் வாழ்ந்த காலத்திலும் மனைவிக்கும் அவளது குடும்பத்திற்குத் தேவையான பணஉதவியை மாதந்தோறும் அனுப்பி வந்திருக்கிறார். அவரது மறைவிற்குப் பிறகு அது போலவே வருவாயில் ஒரு பகுதியை ஜு ஆனிற்குத் தவறாமல் அனுப்பி வந்தார் குவாங்பிங்., வருவாய் இல்லாத மிகக் கடினமான சூழ்நிலையிலும் கூட அந்தப் பணம் அனுப்பத் தவறவேயில்லை.
குவாங்பிங்கின் வாழ்க்கையினையும் அவளது காதல் கடிதங்களையும் வாசிக்கும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் உதவியாளராக வந்து அவரைத் திருமணம் செய்து கொண்டு சிறந்த வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னா தஸ்தாயெவ்ஸ்கி நினைவில் வந்து போகிறார்

அன்னாவிற்கும் குவாங்பிங்கிற்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. இருவரும் படித்தவர்கள். எளிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தனித்து வாழ்ந்து வந்த எழுத்தாளருக்கு உதவி செய்ய முயன்றவர்கள்.. எழுத்திலும் வாழ்க்கையிலும் மாறாத்துணையாக விளங்கியவர்கள். அன்னாவை தஸ்தாயெவ்ஸ்கி திருமணம் செய்து கொண்டார். ஆனால் லூசுன் குவாங்பிங்கை திருமணம் செய்து கொள்ளவில்லை.
குவாங்பிங்கின் முதல் கடிதம் 11 மார்ச் 1925 அன்று எழுதப்பட்டிருக்கிறது, நான்கு பக்கமுள்ள கடிதமது. முதல் பக்கம் மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் பக்கங்களில் அடித்தல் திருத்தல் கொண்டதாகக் கடிதம் உள்ளது. இதில் ஒன்றிரண்டு இடங்களில் அடிக்குறிப்புகளும் எழுதப்பட்டிருக்கின்றன.
ஏப்ரல் 1925 க்கு பிறகு குவாங்பிங் எழுதிய கடிதங்கள் மிக நீளமானவை. பக்க எண் போடப்பட்ட நாற்பது ஐம்பது பக்க கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்தக் கடிதங்களுக்கு உடனுக்கு உடனே லூசுன் பதில் எழுதியிருக்கிறார். அவளிடமிருந்து மறுகடிதம் வரத் தாமதமான போது அவரே அடுத்த கடிதங்களையும் எழுதி அனுப்பியிருக்கிறார். நாட்கணக்கில் கடிதம் வருவதற்குத் தாமதமாகும் போது தபால் துறை மீது கோபம் கொண்டிருக்கிறார்.
விடுமுறை நாளில் தபால் துறை செயல்படுவதில்லை என்பது அவரை எரிச்சல் படுத்தியிருக்கிறது. மூன்று நான்கு பகுதிகளாகக் கடிதத்தைத் தனியே பிரித்து எழுதி அனுப்பியிருக்கிறார். பெரும்பான்மை கடிதங்கள் இரவில் எழுதப்பட்டிருக்கின்றன. விடிகாலையில் அதைத் தபாலில் சேர்த்திருக்கிறார்.
இன்று எழுதப்படும் கடிதம் போல அன்புமிக்க என விளித்து எழுதப்படும் கடிதம் அந்நாளில் இல்லை. நேரடியாகப் பெண்ணின் பெயரைச் சுட்டி கடிதம் எழுதும் மரபு தான் அன்றிருந்தது.
குவாங்பிங் எழுதிய கடிதங்களை அவளது தோழி வாசித்துத் திருத்தம் செய்திருக்கிறாள். இந்தக் கடிதங்களில் அன்றைய சமகாலப்பிரச்சனைகள். பண்பாட்டு விஷயங்கள். அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள்.
பிறர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவளது பெயரின் முதல் எழுத்துகளை மட்டுமே லூசுன் பயன்படுத்தியிருக்கிறார். கடிதங்களையும் நாட்குறிப்புகளையும் அப்படியே திருத்தம் செய்யாமல் வெளியிட வேண்டும். அதில் பாசாங்கில்லாமல் எழுத்தாளரின் உண்மையான அகம் வெளிப்படுவதைக் காணமுடியும் என்கிறார் லூசுன்.
அவர் 1912 க்கு1936க்கும் இடையில் தனது நண்பர்கள். உறவினர்களுக்கு 5600 கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்த எண்ணிக்கை மிகப்பெரியது. அவரது காலத்தில் வேறு எவரும் இவ்வளவு கடிதங்கள் எழுதியதில்லை. கடிதம் எழுதுவதில் இவ்வளவு ஆர்வம் கொண்டிருந்த லூசுன் தனக்கு வரும் தேவையற்ற கடிதங்களைப் படித்தவுடனே எரித்துவிடுவார். முக்கியமான கடிதங்களைப் பாதுகாக்கத் தனியே மரப்பெட்டிகள் வைத்திருந்தார். அதில் வண்ண உறைகளில் கடிதங்களை முறையாகப் பாதுகாத்து வைத்திருந்தார்.
ஒரு நாளில் அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வருவதுண்டு. இதற்குப் பயந்து அவர் தனது வீட்டு முகவரியைத் தராமல் பதிப்பகத்தின் முகவரிக்கே கடிதங்கள் எழுதச் சொல்வதுண்டு. தனிப்பட்ட நண்பர்கள் மட்டுமே அவரது வீட்டுமுகவரிக்குக் கடிதம் எழுதினார்கள்.
தனது காதற்கடிதங்களைத் தொகுப்பாக வெளியிடுவதற்கு முன்பாகவே இதழ்களில் ஒன்றிரண்டினை வெளியிட்டு வாசகர்கள் அதற்குத் தரும் எதிர்வினையை, பாராட்டுகளைத் தெரிந்து கொண்டிருந்தார் லூசுன்.
எழுத்தாளர்கள். கலைஞர்களின் காதற்கடிதங்கள் இப்படி நூலாக வெளியாக மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாகப் பீத்தோவனின் 1812 காதற் கடிதம் எடித் வார்டனின் காதல் கடிதங்கள் ஃப்ரான்ஸ் காஃப்கா தனது காதலி ஃபெலிஸ் பவாருக்கு எழுதிய காதல் கடிதங்கள் தனி நூலாக வெளியாகியுள்ளன.
மகப்பேறுக்காகக் குவாங்பிங் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது போன்சாய் மரம் ஒன்றை வாங்கி வந்து அவளது படுக்கை அருகே வைத்திருக்கிறார் லூசுன். குழந்தையுடன் அவள் வீடு திரும்பிய போதும் வீட்டில் அவளது படுக்கை அறையில் புதிய போன்சாய் மரம் ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார். அது நித்தியமான வாழ்க்கை அமையட்டும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.
தாதியை நியமித்துக் குழந்தையைக் கவனித்துக் கொள்வதை விடுத்து அவரே குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி நினைவு கொள்ளும் போது தன்னையும் குழந்தையும் அவர் பகலிரவாக மிகுந்த நேசத்துடன் கவனித்துக் கொண்டார் என்று எழுதியிருக்கிறார் குவாங்பிங்
பத்தாண்டுகள் அவர்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். லூசுன் இறந்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு குவாங்பிங் இறந்து போனார். அவரது வாழ்க்கை லூசுனின் நூல்களை முறையாகப் பதிப்பு செய்வதிலே கழிந்து போனது.
எழுத்தாளராக லூ சுன் இன்று அறியப்படுவதற்குக் குவாங்பிங்கின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் எந்த அங்கீகாரமும் இன்றி அவர் இறந்து போனார் என்பது தான் வருத்தமானது.

சீன நவீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் லூசுன் சிறுகதைகளில் சில தமிழில் வெளியாகியுள்ளன. கே. கணேஷ் மொழியாக்கம் செய்திருக்கிறார். இதில் ஒரு பைத்தியக்காரனின் குறிப்புகள் ஆ கியூவின் உண்மைக் கதை இரண்டும் மிக முக்கியமான கதைகள்.
லூசுன் ஆவணப்படத்தில் தனது தம்பியோடு ஏற்பட்ட பிணக்கைத் தாங்க முடியாமல் ஒரே வீட்டில் வேறுவேறு வாசல்கள் வைத்துக் குடியிருந்த நாட்களைப் பற்றி லூ சுன் சொல்கிறார். அந்தப் பிரிவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவேயில்லை. வாழ்க்கை குறித்த புதிய புரிதலை அதற்குப் பிறகே அவர் உருவாக்கிக் கொண்டார்.
லூ சுனின் கதைகள் திரைப்படமாக வெளியாகியுள்ளன. நாடகமாகவும் பல்வேறு நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
தஸ்தாயெவ்ஸ்கியின் House of the Dead” போலவே “10years of Silence” என லூ சுன் எழுதியிருக்கிறார். இந்த இரண்டு தலைசிறந்த எழுத்தாளர்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் ஒப்பிடும் போது அதிசயக்கத்தக்க ஒற்றுமையைக் காண முடிகிறது. இருவரும் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் நோயினால் அவதிப்பட்டவர்கள். இருவரது வாழ்க்கையிலும் ஒரு இளம்பெண் மூலமே மீட்சி கிடைத்தது.
லூ சுனின் காதற்கடிதங்களில் காதல் மிகக் குறைவாகவே உள்ளது. சமூக அக்கறையும் எதிர்காலக் கனவுகளும் எழுத்தின் நுட்பங்களும் தான் அதிகம் பேசப்படுகின்றன.
உலகின் துயரை தனதாக்கிக் கொண்ட கலைஞனுக்கு வாழ்வில் சிறுமகிழ்ச்சியைத் தருவதற்கு முன்வந்த அன்னாவும் குவாங்பிங்க்கும் தூய அன்பின் வடிவங்களே.
நாம் எழுத்தின் மகத்துவத்தை நினைவு கொள்ளும் போது இவர்களின் மகத்தான அன்பையும் இணைத்தே நினைவு கொள்ள வேண்டும்
•••
September 18, 2021
கனவு விளையாட்டு
ஓவியர் ஹென்றி ரூசோ தனது நாற்பதாவது வயதில் தான் ஓவியம் வரையத் துவங்கினார். முறையாக ஒவியம் பயிலாமல் சுயமான முயற்சிகளின் மூலம் ஓவியராக உருமாறினார். அவரது ஓவியங்களில் வெளிப்படும் இயற்கை விசித்திரமானது. ஒரு மாயமான சூழலினை விவரிப்பதாகவே அவரது ஓவியங்கள் உருவாக்கப்பட்டன. பிகாசோவின் நண்பராக இருந்த ரூசோ தாவரங்களை மிகுந்த உயிரோட்டத்துடன் வரைந்திருந்தார்

ரூசோ 1868 இல் பாரீஸில் குடியேறினார். அடுத்த ஆண்டு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த க்ளெமென்ஸ் போய்டார்டை மணந்தார். பாரீஸின் சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பவராகப் பணியாற்றினார்; இந்த அரசாங்க பதவியிலிருந்தபடியே தான் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டார்.
அவரது கால்பந்து விளையாடுகிறவர்கள் என்ற ஓவியம் மிகச்சிறப்பானது. இந்த ஓவியத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதன் வசீகரம் குறைவதேயில்லை. குழந்தைகளின் கற்பனையைப் போல அசலாகவும் விந்தையாகவும் ஓவியங்கள் வரைந்தவர்.
வனச்சூழலை வரைவதில் ரூசோ நிகரற்றவர். சொந்தமாக அவரே சிறு காடு ஒன்றை உருவாக்கி வைத்திருந்தார் என்கிறார்கள்

1908 ஆம் ஆண்டில், முதல் சர்வதேச ரக்பி போட்டி பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே பாரீஸில் நடைபெற்றது. ரூசோ அந்த விளையாட்டினை காணச்சென்றார். போட்டி ஏற்படுத்திய மகிழ்ச்சியிலிருந்தே இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார்.
கால்பந்து வீரர்களின் தோற்றமும் உடையும் விசித்திரமாகவுள்ளது. ஏதோ கனவில் நடப்பது போலவே ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. விளையாட்டுவீரர்களின் உடற்கட்டினையும் மீசைகளையும் பாருங்கள். விளையாட்டு நடக்குமிடம் பூங்கா ஒன்றின் உட்புறம் போலிருக்கிறது. சுற்றிலும் மரங்கள். பின்புறம் ஒரு மலைத்தொடர். சூரியனோ, நிலவோ எதுவும் வரையப்படவில்லை. ஆனால் குளிர்காலத்தின் காட்சி என்பது போலப் பின்புலம் வரையப்பட்டிருக்கிறது.
விளையாடுகிறவர்களின் முகபாவங்களைப் பாருங்கள். அது விளையாட்டோடு தொடர்பில்லாத வேறு பார்வையைக் கொண்டிருக்கிறது. சிவப்பு நிற பந்து காலத்தின் அடையாளமாக வரையப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வேடமிட்ட நடிகர்களைப் போலவே விளையாட்டு வீரர்கள் தோற்றம் தருகிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நான்கு ஆண்களின் உருவம் வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியம் கால்பந்து வீரர்கள் என்று தலைப்படப்பட்டிருந்தாலும் அவர்கள் உண்மையில் ரக்பி விளையாடுகிறார்கள். நிலப்பரப்பில் உள்ள மரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அதே நேரத்தில் வானத்தில் மேகங்கள் ஒரு மர்மமான வெளிப்பாட்டினைக் கொண்டிருக்கின்றன.
கால்பந்து வீரர்களின் கோடிட்ட பைஜாமாவும் அவர்கள் முகத்திலுள்ள புன்னகையும் விசித்திரமான தோற்றத்தைத் தருகின்றன.
பாரீஸைத் தாண்டி வேறு எங்கும் பயணம் சென்றிராத ரூசோ தன் வாழ்விடத்திலிருந்தபடியே உலகின் மாற்றங்களை அவதானித்திருக்கிறார். ரக்பி விளையாட்டு புகழ்பெறத் துவங்கிய காலமது என்பதால் அதை ஆவணப்படுத்தும் விதமாக இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் என்கிறார்கள்
ரூசோவின் ஓவியத்திற்குத் தரப்படும் கலைசார்ந்த இந்த விளக்கங்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம் இந்த ஓவியத்தை எப்போது காணும் போது அதனுள் சொல்லப்படாத ஒரு கதை ஒளிந்திருப்பது போலத் தோன்றுகிறது. இந்த நால்வரில் யாருடைய கதையது. அவர்களுக்குள் என்ன உறவு. என மனம் எதையோ பின்னுகிறது. நான்கு காவலர்கள். அல்லது ராணுவ வீரர்கள் ஒன்றாக விளையாடுகிறார்கள். அல்லது நான்கு திருடர்கள் ஒரு ஓய்வு நாளில் பந்தாடுகிறார்கள் என மனது விசித்திர கற்பனைகளை நெய்கிறது. அது தான் ஓவியம் தரும் கிளர்ச்சி.
இலைகளை வரைவதில் ரூசோ தனித்துவமானவர். இந்த ஓவியத்திலும் மரத்தின் இலைகள் மிக நுட்பமாக வரையப்பட்டிருக்கின்றன. நடனம் போல அழகான இயக்கம் இந்த ஓவியத்திற்குத் தனியழகினை தருகிறது. மேகங்களை வரைவதில் எப்போதும் ரூசோவிற்கு நாட்டம் அதிகம். அதை மாயத்தோற்றம் போல வரைவார். இதிலும் அந்தத் தன்மையைக் காண முடிகிறது
கனவுத்தன்மை மிக்க ஓவியங்களே ரூசோவின் பாணி. இந்த ஓவியத்திலும் கனவு நிலையே அதற்குக் கூடுதல் அழகினை உருவாக்கித் தருகிறது.
***
September 17, 2021
சோபியாவின் இரண்டு கதைகள்
“The Kreutzer Sonata” என்ற டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதைக்கு எதிராக டால்ஸ்டாயின் மனைவி சோபியா ஒரு கதையை எழுதியிருக்கிறார். Whose Fault எனப்படும் அக்கதை போஸ்னிஷேவ்வால் சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட மனைவியின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

டால்ஸ்டாயின் கதையில் வரும் பெண் தனது சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறாள் என்று கோபம் கொண்ட சோபியா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படிச் செர்ஜி தனியேவ்,என்ற இசைக்கலைஞருடன் சோபியாவிற்கு நெருக்கம் இருந்தது அதை ரகசியக்காதலாக டால்ஸ்டாய் கருதியே இக்கதையை எழுதியிருக்கக் கூடும்.என்கிறார்கள். .
செர்ஜி தனியேவ் 1895– 97 யஸ்னயா போலியானாவில் இசை கற்பிக்க நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நாட்களில் சிறந்த இசைக்கலைஞரான சோபியாவுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.
.சோபியா தனது நாட்குறிப்பில் இந்தக் கதை குறித்து எழுதியிருக்கிறார். வாசகர்கள் எல்லோரும் இந்தக் கதையை எங்களின் சொந்த வாழ்க்கையோடு இணைத்துப் படிக்கிறார்கள். இது தவறான எண்ணத்தை உருவாக்கக் கூடும். உலகத்தின் பார்வையில் என்னை அவமானப்படுத்துவது போலவே இக்கதை எழுதப்பட்டிருக்கிறது
சோபியா “Song Without Words” “Whose Fault?” என இரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். இரண்டும் தற்போது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கக் கிடைக்கிறது.

டால்ஸ்டாயோடு ஒப்பிட இந்தக் கதை வலுவற்றதாக உள்ளது. தனது தரப்பு நியாயத்தை முதன்மைப்படுத்தவே அவர் இக்கதையை எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்தை எழுத்தில் காணமுடிகிறது.
கணவரின் கதைக்கு எதிராக மனைவி ஒரு கதையை எழுதியிருப்பது தான் இதன் சுவாரஸ்யம். டால்ஸ்டாய் தனது மனைவி கதை எழுதியிருப்பது பற்றியோ, தனக்கு எதிராக எழுதப்பட்டது குறித்தோ வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த மோதல் அவர்கள் உறவில் இடைவெளியை உருவாக்கியது உண்மை
டால்ஸ்டாயின் மகன் லெவ்வும் The Kreutzer Sonata” கதைக்கு எதிராக “Chopin’s Prelude,” என்றொரு கதையை எழுதியிருக்கிறான். தனது மகனின் கதையை வாசித்த சோபியா அவனுக்குத் திறமை போதவில்லை என்றே குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.
அலெக்ஸாண்டரா போபோஃப், தற்போது சோபியாவின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். இதில் சோபியாவிற்கும் டால்ஸ்டாயிற்குமான உறவின் விரிசலும் கசப்பான அனுபவங்களும் வெளிப்படையாக விவரிக்கப்பட்டிருக்கிறது,
இதில் வேடிக்கை என்னவென்றால் The Kreutzer Sonata” கதையைத் தனது தொகுப்பு எதிலும் டால்ஸ்டாய் சேர்த்து வெளியிடக்கூடாது என்று அரசாங்கம் தடுத்த போது அதற்கு எதிராக மன்னரை நேரில் சந்தித்து விண்ணப்பம் கொடுத்து டால்ஸ்டாய் தொகுப்பில் அந்தக் கதையை இணைக்கச் செய்தவர் சோபியா. இந்த முரண் தான் விசேசமானது.
டால்ஸ்டாயின் சர்ச்சைக்குரிய இக்கதை ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போலவே எழுதப்பட்டிருக்கிறது. போஸ்னிஷேவ் என்ற பிரபு தன் இளம்மனைவியின் ரகசியக்காதலைப் பற்றி அறிந்து அவளைக் கொலை செய்துவிடுவதே கதையின் மையம். இசைக்கலைஞரான இளைஞனுடன் தன் மனைவிக்கு ஏற்பட்ட தொடர்பை அவரால் ஏற்கமுடியவில்லை, அந்தக் கோபமே கொலைக்குக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வை சோபியா தன்னைப் பற்றிய விமர்சனமாக எடுத்துக் கொண்டார். திருமணத்திற்கு முன்பு டால்ஸ்டாயிற்கு இருந்த காதலிகள் பற்றிச் சோபியா அறிவார். திருமணத்திற்குப் பிறகும் அவரது ரகசிய காதல் தொடரவே செய்தது. அதைக் குறித்து டால்ஸ்டாய் ஒரு குற்றவுணர்வும் கொள்ளவில்லை. ஆனால் சோபியாவிற்கும் தனியேவிற்கும் இடையில் ஏற்பட்ட நட்பை அவர் வெறுத்திருக்கிறார். அதன் பிரதிபலிப்பை இந்தக் கதையில் காணமுடிகிறது
ரஷ்யத் தணிக்கை துறையினரால் இந்தக் கதை தடைசெய்யப்பட்டதோடு ஆங்கிலத்தில் வெளியான போது தபால் துறை இதை ஆபாசமான கதை என்று விநியோகம் செய்ய மறுத்தது இந்தக் காரணங்களால் கதை சிறுவெளியீடாகக் கள்ளச்சந்தையில் மிகப் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டது. புத்தகக் கடைகளில் இதை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. இந்தக் கதை ஒரு குப்பை என்று எமிலிஜோலா கடுமையான விமர்சனம் செய்தார். அத்தோடு டால்ஸ்டாய் ஒரு பழைய காலத்துறவி போலப் பேசுகிறார் என்று நேரடியாகக் கண்டனம் செய்தார்.
சோபியா எழுதிய கதை அவரது வாழ்நாளில் வெளியாகவில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகே அது வெளியிடப்பட்டது. 1994ல் இந்தக் கதை முதன்முறையாக ரஷ்யாவில் வெளியானது. அப்போது பெரிய கவனத்தைப் பெறவில்லை. 2010ல் மீண்டும் அது வெளியிடப்பட்டபோது அதற்குச் சிறப்புக் கவனம் கிடைத்தது.

சோபியாவின் கதை எனக்கு மைத்ரேயி தேவி எழுதிய.கொல்லப்படுவதில்லை. என்ற வங்க நாவலை நினைவுபடுத்தியது. தன்னைப் பற்றிப் பொய்யாகப் பிரெஞ்சில் எழுதப்பட்ட காதல்கதைக்கு மறுகதையாக இந்த நாவலை மைரேயி தேவி எழுதியிருப்பார்.
தான் படித்த செய்தி ஒன்றை நினைவில் கொண்டு தான் இந்தக் கதையை எழுதினேன் என்று டால்ஸ்டாய் தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆனால் சோபியாவிற்கு அது தனது கதையின் மறுவடிவமாகத் தோன்றியிருக்கிறது.
தன்னைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கிய அந்தக் கதைக்குச் சோபியா தான் பிழைதிருத்தம் செய்தார் என்பது வேதனையான விஷயம். அன்றைய டயரிக்குறிப்பில் கதையைப் பிழை திருத்தம் செய்யும் போது மனதில் ஆழமான வேதனை உருவானது என்று எழுதியிருக்கிறார். அந்த வலியை டால்ஸ்டாய் கண்டுகொள்ளவேயில்லை.
“:
September 16, 2021
பிகாசோவின் சாகசங்கள்
The Adventures of Picasso என்ற ஸ்வீடிஷ் சர்ரியலிஸ்ட் திரைப்படத்தைப் பார்த்தேன். டேஜ் டேனியல்சன் இயக்கியது . இந்தப் படத்திற்கு a lunatic comedy என்று துணை தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

பிகாசோவின் வாழ்க்கை வரலாற்றை நகைச்சுவையான நிகழ்வுகளாக உருவாக்கியிருக்கிறார்கள். கனவுத்தன்மை மிக்கக் காட்சிகளே படத்தின் தனிச்சிறப்பு.
ஓவியரின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்பதால் காட்சிப்படிமங்களை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். ஸ்பெயினில் பிகாசோவின் பிறப்பிலிருந்து படம் துவங்குகிறது. அவரது தந்தை மகன் பிறந்துள்ள சந்தோஷச்செய்தியைக் கூற வருவதும் அதைக் குடும்பம் சுருட்டு பிடித்தபடியே எதிர்கொள்வதும் வேடிக்கையாக உள்ளது.

டோலோரஸ் என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றப் போய்ப் பிகாசோ செய்யும் முயற்சிகள் சார்லி சாப்ளினை நினைவுபடுத்துகின்றன.
பிகாசோவின் தந்தை ஒரு ஓவியர். ஆகவே மகனை மாட்ரிட்டிலுள்ள ஒவியப்பள்ளியில் சேர்க்கிறார். அங்கே பிகாசோ நிர்வாண ஓவியங்கள் வரையப் பழகுகிறார். அவரது ஒவியத்திறமையைக் கண்டு பாராட்டும் பரிசுகளும் கிடைக்கின்றன. இந்த வெற்றியை தொடர்ந்து மகனை பாரீஸிற்கு அனுப்பி வைக்கிறார் தந்தை
ரயிலில் பாப்லோ புறப்படும் காட்சியில் ரயில் உருவாக்கப்பட்டுள்ள விதம் அபாரம். இப்படி ஒரு கற்பனையை நாம் எதிர்பார்க்க முடியாது.
தனது அம்மா டோனா மரியாவின் உருவப்படத்துடன் வீடு திரும்பும் பாப்லோவை தந்தை உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டுகிறார். திடீரென அவர் இறந்துவிடவே இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. ஆனால் அவர் உண்மையில் இறக்கவில்லை. சவப்பெட்டியிலிருந்து உயிர்பிழைத்து எழுகிறார். அபத்தநாடகம் போலவே முழுமையான காட்சியும் நடந்தேறுகிறது

பாப்லோ பாரிஸுக்கு செல்கிறார், அங்கே மொழி புரியவில்லை. மோசமான ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஓவியம் வரைகிறார். அங்கீகாரம் கிடைக்கவில்லை. வருவாயும் இல்லை. ஒரு நாள ஆப்பிள் ஒன்றை அவர் ஓவியமாக வரைவதும் தற்செயலாக அங்கே வரும் அவரது தந்தை ஆப்பிளைக் கடித்துவிடவே அந்த ஓவியத்தை க்யூபிச முறையில் பிகாசோ வரைவதும் சரியான கிண்டல்
பின்னொரு நாள் பாப்லோவின் தந்தை அவரது ஓவியம் ஒன்றைக் கண்காட்சிக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்துகிறார். அங்கே வரும் ஜெர்ட்ரூட் ஸ்டீன் மற்றும் ஆலிஸ் பி. டோக்லஸ் அதை ரசித்து விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். அவர்கள் இருவரையும் கடுமையாக கேலி செய்திருக்கிறார்கள்.
அதன்பிறகு பிகாசோ பாரிஸ் கலை உலகின் நட்சத்திரமாக உருவாகிறார்.. அன்றைய புகழ்பெற்ற ஓவியர்களுடன் நட்பு கொள்கிறார். கவிஞர் அப்போலினேர் மற்றும் ரூசோ அவருக்கு நெருக்கமான நண்பர்களாகிறார்கள்
ரூசோவிற்காக ஒரு சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்கிறார் பிகாசோ அதில் விநோதமான தோற்றங்களில் விருந்தினர்கள் வருகை தருகிறார்கள். சர்ரியலிசக் காட்சிகளில் இதற்கு நிகராகக் கண்டதேயில்லை..

முதல் உலகப்போர் ஆரம்பமாகிறது. இதில் பிகாசோ பாதிக்கப்படுகிறார். 1900ம் ஆண்டு பிறக்கும் போது வறுமையில் தனிமையில் பிகாசோ தன் அறைக்குள் அடைபட்டு நிற்கும் காட்சி படத்தில் இடம்பெறுகிறது. ஒரு நூற்றாண்டினை புரட்டிப் போட்ட கலைஞன் அந்த புத்தாண்டு துவங்கும் போது அடையாளமற்றவனாகவே இருக்கிறான்.
1918 ஆம் ஆண்டில், போர் முடிந்ததும், பாப்லோ மீண்டும் தனது தந்தையைச் சந்திக்கிறார், அவர் தலைமுடியை மீண்டும் வளர்க்கும் ஒரு புதிய ஷாம்பூவைக் கண்டுபிடித்து விற்பனை செய்து வருகிறார.. இதைப் பயன்படுத்தி பாப்லோவின் தலை வழுக்கையாகிறது. இதுவே பின்னாளையே அவரது புகழ்பெற்ற தோற்றமாக மாறுகிறது.
பாலே நடனக்குழுவிற்கான ஆடை மற்றும் அரங்க அமைக்கும் வாய்ப்பு பிகாசோவிற்குக் கிடைக்கிறது. இதற்கான லண்டன் செல்கிறார். அபத்த நிகழ்வுகளைக் கொண்ட அந்தப் பாலே வெற்றிபெறவில்லை. பிகாசோ மீண்டும் பாரீஸுக்குத் திரும்புகிறார். பின்பு அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகிறார்
அமெரிக்காவில் கலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட காலம். இதனால் கள்ளச்சந்தையில் கலைப்பொருட்கள் விற்பனையாகின்றன. பிகாசோ ரகசியமாக ஒளிந்து வாழுகிறார். ஒருநாள் ஒவிய விற்பனையின் போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்படுகிறார். அங்கிருந்தும் தப்பி ஐரோப்பா வருகிறார்
பிகாசோ எப்படி ஒவிய உலகின் அடையாள பிம்பமாக மாறினார் என்பதை வேடிக்கையும் விசித்திரமுமாக சொல்கிறார்கள்.
பிகாசோ மட்டுமின்றி அவரது சமகால ஓவியர்கள். விமர்சகர்கள். எழுத்தாளர்கள். அன்றைய அரசியல் நிகழ்வுகள் எனச் சகலத்தையும் படத்தில் கேலி செய்திருக்கிறார்கள். ரசிக்கும்படியான கேலியது. ஹிட்லரும் சர்ச்சிலும் ஒன்றாகப் படம் வரையும் காட்சி சிறப்பான கார்டூன் போலிருக்கிறது

கலை உலக செயல்பாடுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை அபத்தமான நிகழ்வாக ஆக்குவதே படத்தின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. . பிகாசோவின் விருந்திற்குப் பெரிய சிவப்பு பலூன் ஒன்றுக்குள் ஒளிந்து பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி வருவது சிறந்த உதாரணம். Gösta Ekman பிகாசோவாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் பத்து மொழிகள் பேசப்படுகிறது. ஸ்பானிஷ், பிரஞ்சு, ஸ்வீடிஷ், ஜெர்மன், பின்னிஷ், இத்தாலியன், ஆங்கிலம், ரஷ்யன், நார்வே மற்றும் லத்தீன் எனப் பிகாசோவின் பயணத்திற்கும் சந்திக்கும் மனிதர்களுக்கும் ஏற்ப மொழி மாற்றம் அடைகிறது. இதையும் பகடியாகவே உருவாக்கியிருக்கிறார்கள்.
•••
September 15, 2021
பார்வையாளர்கள் இல்லாத நாடகம்
லாக்டவுன் காரணமாக லண்டனின் நாடக அரங்குகள் செயல்படாத சென்ற ஆண்டில் பார்வையாளர்கள் இல்லாமல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து நாடகம் நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்படி நிகழ்த்தப்பட்ட ஆன்டன் செகாவின் Uncle Vanya நாடகத்தை முழுமையாக ஒளிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்த்தேன்

இந்த நாடகம் இரண்டு முறை திரைப்படமாக வெளிவந்துள்ளது. திரைப்படத்தை விடவும் மேடைநாடகத்தை அப்படியே பதிவு செய்துள்ளது சிறப்பாக இருக்கிறது.
பார்வையாளர்கள் இல்லாமல் ஒளிபரப்பாகும் கிரிக்கெட் மேட்ச் போல இதுவும் நடந்தேறியிருக்கிறது.

தேர்ந்த நடிகர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட முறை இந்த நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அந்த நாடகம் சொந்த வாழ்க்கையின் பகுதி போன்றது.
பேராசிரியர் செரப்ரியாகோவின் எஸ்டேட்டில் ஒரு இலையுதிர் பிற்பகல் பிற்பகலில் துவங்குகிறது. அந்தப் பண்ணைக்குத் தனது இளம் மனைவியுடன் வருகை தருகிறார் செரெப்ரியாகோவ். அந்த எஸ்டேட்டில் டாக்டர் ஆஸ்ட்ரோவ் பேராசிரியரின் கீல்வாதத்திற்குச் சிகிச்சையளிக்கிறார். அவரை குடும்பத்தில் ஒருவராகவே நடத்துகிறார்கள். .
செரப்ரியாகோவின் முதல்மனைவி இறந்து போய்விடவே அவர் இளம்பெண்ணான யெலினாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
பேராசிரியரின் மகள் சோபியா எனப்படும் சோன்யா இளம்பெண். அவளுக்கு டாக்டர ஆஸ்ட்ரோவ் மீது காதல். அவளது காதலை உணர்ந்த போதும் ஆஸ்ட்ரோவ் அதை ஏற்கவில்லை. அவருக்கு யெலினா மீது ஆசை.

அவளுடன் ஊரை விட்டு ஒடிவிடுவதற்கு ஆசைப்படுகிறார். அவளோ வசதியான இந்த வாழ்க்கையை விட்டுப் போக விருப்பமின்றி டாக்டரின் காதலை ஏற்கத் தயங்குகிறாள். யெலினாவின் புத்திசாலித்தனம், அழகு இரண்டும் அவளது சமரசங்களினால் ஒடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழலில் அந்த வீட்டின் காப்பாளராக உள்ள வான்யா மாமாவிற்குத் தன் வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் அதிகமாகிறது. அவருக்கு இப்போது வயது 47. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அந்தப் பண்ணையைப் பராமரித்து வருகிறார். இதனால் பேராசிரியர் நகரில் சொகுசாகச் சகல சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு வாழ முடிகிறது..
வான்யா மாமா திருமணம் செய்து கொள்ளாதவர். பெண்கள் மீது தனக்கு நாட்டமில்லை என்கிறார். அது ஒரு நடிப்பு என்று ஆஸ்ட்ரோவ் குத்திக்காட்டுகிறான். அது உண்மையே. மாமாவிற்கும் யெலினா மீது ரகசியமாகக் காதல் இருக்கிறது.
பேராசிரியரின் பண்ணையைப் பாதுகாப்பதில் தனது வாழ்க்கை வீணாகிவிட்டது. தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய மரியாதையும் பணமும் கிடைக்கவில்லை என்று வான்யா மாமா புலம்புகிறார்.

சோபியாவும் வான்யா மாமாவும் சேர்ந்து தான் எஸ்டேட்டை நிர்வாகம் செய்கிறார்கள். . பல ஆண்டுகளாக,, எஸ்டேட் வருமானத்தைப் பேராசிரியருக்கு முறையாக அனுப்பி வந்தார் மாமா வான்யா. அதற்கு அவருக்குச் சிறிய சம்பளம் மட்டுமே தரப்பட்டது
நாடகத்தின் முடிவில் பேராசிரியர் அந்த எஸ்டேட்டை விற்க விரும்புவதாகச் சொல்லும் போது வான்யா மாமா கொந்தளிக்கிறார்.
வான்யா மாமா ஒரு குறியீடு. இவரைப் போன்ற மனிதர்கள் எல்லாக் குடும்பங்களிலும் இருந்தார்கள். அவர்கள் எப்போதும் தன் வாழ்க்கை வீணாகிவிட்டதாகப் புலம்பிக் கொண்டும். தங்கள் தியாகத்தைப் பற்றித் தானே பெருமை பேசிக் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் பிரதிநிதியாகவே வான்யா மாமா உருவாக்கப்பட்டிருக்கிறார்.
நாடகத்தின் ஒரு அங்கத்தில் இந்தச் சலிப்பான வாழ்க்கை போதும் என டாக்டரும் ஊரைவிட்டு வெளியேறிப் போக முற்படுகிறார். அவரது நல்ல மனைவியாகத் தான் இருப்பேன் என்று சோன்யா மன்றாடுகிறாள். டாக்டர் குடிக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்கிறாள். அவரோ எப்படியாவது யெலினாவை அடைந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார்
செகாவின் சிறுகதைகளைப் போலவே போலித்தனமும் வீண் பெருமையும் பேசும் கதாபாத்திரங்கள். திருமணத்திற்குப் பிறகான காதல். வீழ்ச்சியின் சித்திரங்களை இந்த நாடகத்திலும் காணமுடிகிறது.
யாரும் படிக்காத ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் ஓய்வுபெற்ற பேராசிரியர் அலெக்சாண்டர் செரெப்ரியாகோவ் தன்னை அறிவாளியாக நினைக்கிறார். ஆனால் அவர் ஒரு முட்டாள் என்கிறார் வான்யா மாமா.

எல்லோரும் தங்கள் சந்தர்ப்பத்திற்காகக் காத்து கிடக்கிறார்கள். அனைவரும் சுயநலமானவர்களே. அவரவர் வட்டத்திற்குள் இருந்தபடியே உலகைக் காணுகிறார்கள். பிறரை மதிப்பிடுகிறார்கள். அந்த வீட்டிற்குள் ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் ரகசியமாக நடந்து கொள்கிறார்கள். வம்பு பேசுகிறார்கள்.
நாடகத்தின் வான்யா மாமாவாக நடித்தவர் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். நாடகம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் இல்லாத போதும் நடிகர்கள் மேடையில் வந்து நின்று காலியான அரங்கினை வணங்கினார்கள். பின்பு அவர்கள் ஒப்பனை அறைக்குச் சென்று தனது ஒப்பனையைக் கலைத்துவிட்டு அவரவர் வீடு திரும்பக் காரை நோக்கிப் போகிறார்கள்
ஆளற்ற சாலை. அடைத்துச் சாத்தப்பட்ட கடைகள். லாக்டவுன் காலத்தின் இறுக்கமான சூழல். ஆனால் இதை எல்லாம் மறந்து அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள ரஷ்ய வாழ்க்கையினை அனுபவித்து வீடு திரும்பினார்கள்
நடிகர்களின் வருகையில் துவங்கி அவர்கள் வீடு திரும்புவது வரையான காட்சிகளைப் பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது சிறந்த அரங்க அமைப்பு. ஒளியமைப்பு. இசை என முழுமையான கலை அனுபவத்தை உருவாக்குகிறார்கள்.
செகாவ் செக்கோவ் இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாடகம் 1899 இல் முதன்முறையாகக் கான்ஸ்டான்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியால் நிகழ்த்தப்பட்டது. அப்போது இந்த நாடகம் வெற்றிபெறவில்லை. எஸ்டேட் வாழ்க்கையை சொல்லும் இந்த நாடகம் முதலில் மாகாண அரங்குகளில் அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் இடம்பெற்ற மகிழ்ச்சியற்ற கதாபாத்திரங்களை மக்கள் விரும்பவில்லை
நாடகங்களை மேடையில் பார்ப்பதை விடவும் அதன் பிரதிகளை வாசிப்பதையே அதிகம் விரும்புகிறேன் என்கிறார் போர்ஹெஸ். நாடகப்பிரதிகளை வாசிக்கும் பழக்கம் நம்மிடையே இல்லை. ஆனால் கிரேக்க நாடகங்களையும். ஷேக்ஸ்பியரையும், மோலியரையும், டெனிசி வில்லியம்ஸ் நாடகங்களையும் வாசிக்கும் போது அவை மிகச்சிறந்த இலக்கியப்பிரதிகளாகவே இருக்கின்றன.
வாழ்க்கை தனக்கு அநீதி இழைத்துவிட்டது என நினைத்துப் புலம்பும் வான்யா மாமாவின் நிலை வேடிக்கையும் துயரமும் ஒருங்கே கொண்டது. அபத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது நகைச்சுவை ஒரு தப்பித்தலாகப் பயன்படுகிறது என்கிறார் செகாவ். இந்த நாடகத்திலும் அப்படியே நடைபெறுகிறது
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
