S. Ramakrishnan's Blog, page 110
November 17, 2021
காணாமல் போனவர்களின் வசிப்பிடம்
(உயிர்மை 100 வது இதழில் வெளியான சிறுகதை)

1891ம் ஆண்டு நடைபெற்ற பில்வமங்கன் கொலை வழக்கு எனப்படும் மோகன்பூர் ஜமீன்தார் கொலைவழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்டிருந்த போலீஸ் சூப்ரெண்டெண்ட் யதோத்தகாரி எழுதிய டயரிக் குறிப்புகள் அவரது மறைவிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவரது குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு நூலாக்கம் பெறுவதற்காக நவயுகம் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது.
இந்த வழக்கின் விசித்திரம் கொலையாளியாகச் சந்தேகிக்கபடும் பில்வமங்கனின் மனைவி வருணா கொலை நடந்த இரவு காணாமல் போய்விட்டார். இக் கொலைவழக்கினை விசாரிக்க நியமிக்கபட்ட போலீஸ் சூப்ரண்டெண்ட் ஜே.ஆர்.எட்வர்ட் விசாரணையின் போது காணாமல் போயிருக்கிறார்.
இது போலவே பில்வமங்கனின் பணிப்பெண். பத்திரிக்கையாளர் இந்திரநாத். படகோட்டி நாதிம், இப்படி வழக்கோடு தொடர்புடைய ஏழு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். எவரையும் பற்றி இன்றுவரை ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
வேறுவேறு காலங்களில் காணாமல் போன இவர்களுககுள் அதிசயத்தக்க சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அதிலும் மிருணாவிற்கும் யதோத்தகாரியின் மனைவி ஸ்ரீமதிக்கும் ஒன்று போலவே இடது புருவத்தின் மீது மச்சம் இருந்தது என்பதோ, அவர்கள் ஒரே கனவைப் பிறர் அறியாமல் கண்டுவந்தார்கள் என்பதோ புரிந்து கொள்ள முடியாதது
இந்த வழக்கினை விசாரிக்கச் சென்ற யதோத்தகாரி சுழலுக்குள் சிக்கி கரைந்து போனவன் போல முடிவற்ற தேடலில் தொலைந்து போனான். வீடு திரும்பாத அவனுக்காகக் காத்திருந்த ஸ்ரீமதி ஒரு பிற்பகலில் கோச் வண்டியில் எங்கோ புறப்பட்டுச் சென்றாள். எங்க சென்றாள் என்று தெரியவில்லை. அவளும் உலகின் கண்ணிலிருந்து மறைந்து போனாள்.
மகளையும் மருமகனையும் பற்றி ஒரு தகவலும் இல்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமதியின் தந்தை சடகோபன் வங்காளத்திற்குப் பயணம் செய்து மோகன்பூருக்குச் சென்ற போது அவருக்குக் கிடைத்தவை நம்பமுடியாத கதைகள் மட்டுமே.
யதோத்தகாரி வீட்டில் கிடைத்த டயரிகள். புத்தகங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மாட்டுவண்டியில் ஏற்றி காஞ்சிபுரம் கொண்டுவந்தார் சடகோபன்.
தொடர்பே இல்லாத அவருக்குள்ளும் பில்வமங்கன் கொலை வழக்கின் ஒரு துளி உறைந்து போனது. தன் வாழ்நாள் முழுவதும் அவரும் அந்தக் கொலைவழக்கின் மர்மத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டேயிருந்தார்.
தன் அறியாப்பெண் ஏன் இந்த மாயவலையினுள் மாட்டிக் கொண்டாள் என்று அவர் வருந்தினார்.
ஒரு கொலைக்குப் பின்பு எளிய பொருட்கள் கூட மர்மம் கொண்டுவிடுகின்றன. மனிதர்கள் சந்தேகத்தின் நிழலாக மாறிவிடுகிறார்கள். எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னும் ரகசியம் ஒளிந்திருப்பதாகச் சந்தேகம் உருவாகிறது. வீசி எறிந்த பொருட்கள். மறைத்துவைக்கபட்ட கடிதங்கள் என எல்லாமும் விசித்திர தோற்றம் கொள்ள ஆரம்பித்துவிடுகின்றன. ஒரு கொலை அந்த வீட்டின் இயல்பை முற்றிலும் நிறம் மாற்றிவிடுகிறது.
செய்திகளின் வழியே கொலை பிறரது பொது நினைவாக மாறிவிடுகிறது. உலகம் பில்வமங்கனை மறந்த போதும் யாரோ சிலர் அந்தக் கொலையை நினைவு கொண்டபடியே தான் இருப்பார்கள்.

தீர்க்கப்படாத வழக்குகளில் ஒன்றாக மோகன்பூர் வழக்கு இன்றைக்கும் சுட்டிக்காட்டப்படுகிறது. யார் கொன்றார்கள் என்ற உண்மை கடலில் விழுந்த மழைத்துளியையைப் போல அடையாளமற்றுப் போய்விட்டது. இனி தனித் துளியை கடலில் இருந்து கண்டுபிடித்துவிடவே முடியாது
பில்வமங்கன் கொலை வழக்குக் குறித்த தேடுதலில் ஈடுபட்டவர்கள் ஏன் காணாமல் போகிறர்கள் என்பது தீர்க்கமுடியாத புதிரே. பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் மர்மமாகக் காணாமல் போய்விடுவது போல இந்தக் கொலைவழக்கும் ஒரு பெர்முடா முக்கோணம் தானோ என்னவோ.
•••
யதோத்தகாரியின் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் மிருதுளா தனது பெரிய தாத்தாவின் டயரியை கண்டறிந்து அதை வெளியிடுவதற்காக முயற்சி செய்தாள். அப்படிதான் இந்த டயரிகள் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டன
நவயுகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பிரதாபன் எனது நண்பர் என்பதாலும் நான் ஒரு வழக்கறிஞர் என்பதாலும் இந்தக் கையெழுத்துபிரதிகளை வாசித்து முடிவு செய்யும் படி கேட்டுக் கொண்டிருந்தார்.
தீர்க்கப்படாத கிரிமினல் வழக்கு என்பதால் சுவாரஸ்யமாக இருக்கக் கூடும் என்பதாலே நான் இதை வாசித்து அபிப்ராயம் சொல்ல ஒத்துக் கொண்டேன்.
பனிரெண்டு சிறிய டயரிகளில் எழுதப்பட்ட குறிப்புகள். அநேகமாக இது கணவன் மனைவி இருவர் எழுதிய டயரிகளுடன் வருணா அல்லது பில்வமங்கன் எழுதிய டயரியாகவும் இருக்கக் கூடும்.
எல்லா டயரிகளும ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. ஒரு டயரில் இடையிடையில் எழுதப்பட்ட கவிதைகளை வைத்து அது ஸ்ரீமதியின் டயரி என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் அவள் கவிதைகளின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தவள். ஒருவேளை அவளே கவிதைகள் எழுதினாளோ என்னவோ. கணவனுக்குத் தெரியாமல் கவிதை எழுவது ஒரு குற்றமாக அன்று நினைக்கபட்டது. தெரிந்து கவிதை எழுதினால் மன்னிக்கபட முடியாத குற்றமாகக் கருதப்பட்டது. இந்த இரட்டை சிக்கலுக்குப் பயந்து ஸ்ரீமதி வேறு பெயர்களில் தன் கவிதைகளே எழுதியிருக்கக் கூடும். இந்த வழக்கிற்குத் தொடர்பில்லாத போதும் இந்தக் கவிதைகள் மிக வசீகரமாகவும் புதிராகவும் எழுத்ப்பட்டிருக்கின்றன.
பில்வம்ங்கன் கொல்லப்படுவதற்கான காரணங்கள் எதையும் இந்த டயரிகளில் இருந்து அறிந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த இளம் அதிகாரி யதோத்தகாரியை பற்றியும் அவனது மனைவி ஸ்ரீமதி பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்பேயில்லாத சில விசித்திர நிகழ்வுகளையும் மனிதர்களையும் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு என்னால் அதிலிருந்து விடுபட முடியாமல் மோகன்பூருக்கு ஒருமுறை போய்வரலாம் என்று பயணம் புறப்பட்டு விட்டேன்.
இந்தப் பயணத்தின் ஊடாக இந்த டயரியில் எழுதப்பட்ட சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
•••
நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த போதும் ஒரு கொலை என்பது முடிந்து போன விஷயமில்லை. அதன் அதிர்வு இன்னமும் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. கொலையாளியை கண்டறிந்து தண்டிக்கபட்டவுடன் உலகம் கொலையை மறந்துவிடுகிறது. ஆனால் கொலையுண்டவனின் குடும்பம் அந்த நிகழ்வை மறப்பதில்லை. வீட்டு மனிதர்களின் மனதில் சிறுவிதையைப் போல அந்த நிகழ்வு வளர்ந்து தானே சிறுசெடியாக வளர ஆரம்பிக்கிறது. வாழ்நாள் முழுவதும் அந்தச் செடியின் இலைகள் சலசலப்பதை அவர்கள் கேட்டுக் கொண்டேதானிருப்பார்கள்.
1850களில் பில்வமங்கன் லண்டனில் சென்று படித்திருக்கிறான். உண்மையில் அவனைச் சட்டம் படிப்பதற்காகத் தான் லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது பதினாறு வயது தான் நடந்து கொண்டிருந்தது. பில்வமங்கன் தந்தையின் ஆசையை நிறைவேற்றவில்லை என்பதுடன் இரவு பகலாகக் குடி பெண்கள் எனச் சுதந்திரமான வாழ்க்கை அனுபவித்தான். அந்த நாட்களில் அவனது சுருள்கேசத்தையும் அழகான தோற்றத்தையும் கண்ட பெண்கள் அவனைக் காதலிப்பதில் போட்டியிட்டார்கள். பெண்களைக் கவருவதற்காகவே அவன் நாடகங்களில் நடித்தான். பில்வமங்கன் ஏன் ஊர் திரும்பினான் என்பதற்கு ஒரு விசித்திரமான கதையைச் சொல்கிறார்கள்
•••
பூக்களை மறந்து போனவள்
பில்வமங்கன் நடித்த நாடகத்தின் பெயர் கெய்ரோ நகரத்தின் அழகி. அந்த நாடகத்தை எழுதியதும் அவனே. அந்த நாடகத்தில் கதாநாயகியாக நடித்த இசபெல் அவனைக் காதலித்தாள். இசபெல் ஆறு வயதிலே தந்தையை இழந்தவள். அவளது தாய் ஒரு நாடக நடிகை. மிகவும் வறுமையா சூழலில் வளர்ந்தவள். ஆகவே பில்வமங்கனின் பணவசதியை கண்டதும் அவனுடன் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள். ஒவ்வொரு நாளும் நாடகம் முடிந்த பிறகு அவளுடன் தான் பில்வமங்கன் தங்குவான். அவள் தனது வீட்டில் பெரிய மரக்கட்டில் கொண்டிருந்தாள். அந்தக் கட்டிலின் அடியில் ஒரு பூட்டு தொங்கவிட்டிருப்பாள். அந்தப் பூட்டினை திறந்துவிட்டால் கனவுகள் வந்துவிடும் என்று அவள் நம்பினாள்.

இது என்ன முட்டாள்தனமான நம்பிக்கை. கனவு வராமல் தடுக்கப் படுக்கையை எப்படிப் பூட்டமுடியும் என்று கேட்டான் பில்வமங்கன்.
இந்தப் படுக்கை என் பாட்டியுடையது. அவள் கனவுகளால் அலைக்கழிக்கபட்டவள். ஆகவே அதிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு பூட்டினை மாட்டியிருக்கிறாள். இதை என் அக்கா ஒருமுறை கழட்டிவிட்டாள். அடுத்தச் சில நாட்களில் அவள் துர்கனவால் நோயுற்று இறந்த போனாள். உடனே என் அம்மா பழையபடி இந்தப் பூட்டினை மாட்டிவிட்டார். இதன் சாவி எங்கேயிருக்கிறது என்று கூட இப்போது எனக்குத் தெரியாது என்றாள் இசபெல்.
இன்றிரவு அந்தப் பூட்டினை திறந்து அதே கட்டிலில் நாம் துயிலுவோம். துர்கனவுகள் நம்மைப் பீடித்துக் கொள்ளட்டும் என்றான் பில்வமங்கன். அவள் எவ்வளவோ மன்றாடியும் அவன் கேட்கவில்லை.
வீட்டின் பழைய மேஜை ஒன்றின் இழப்பறையில் இருந்து அதன் சாவியைக் கண்டறிந்து அந்தப் பூட்டினை திறந்தார்கள். அன்றிரவு இசபெல்லுடன் உறவு கொள்ளும் போது கடற்நுரையைப் போர்த்திக் கொண்டது போலிருந்தது. அவளது ஒவ்வொரு முத்தமும் ஒரு சுவை கொண்டிருந்தது. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டபோது அலையை அணைத்துக் கொள்வது போலவே இருந்தது. விடிந்து எழுந்து கொண்டபோது பில்வமங்கன் கேட்டான். உனக்குத் துர்கனவுகள் எதுவும் ஏற்பட்டதா. அவள் இல்லை எனத் தலையாட்டினாள்.
இது நடந்த மறுநாள் இரவில் அவர்கள் நாடகம் போடும் போது பூக்குவளை ஒன்றில் மலர்களை அடுக்கி வைக்கும் காட்சியில் நடிக்க வேண்டிய இசபெல் மலர்களை மறந்துவைத்துவிட்டதாகச் சொல்லி மேடையின் பின்பக்க படிகள் வெளியே அவசரமாக மலர்கள் வாங்கச் சென்றாள். நாடகத்தில் அவளது காட்சி வரும்வரை அவள் திரும்பி வரவில்லை. எங்கே போனாள் என்று தெரியாத பில்வமங்கன் அவள் இல்லாத காரணத்தால் மேரி ஆலிவரை நடிக்க வைத்து நாடகத்தை ஒருவராக முடித்து வெளியேறினான்.
அவளது வீட்டிற்குச் சென்று இசபெல் இருக்கிறாளா எனத் தேடிய போது அவள் வீட்டிற்கு வரவில்லை என்று பணிப்பெண் சொன்னாள். அப்போது படுக்கையின் அடியில் அந்தப் பூட்டுப் பூட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது. யார் இதைப் பூட்டினார்கள் என்று பில்வமங்கன் கேட்டான். அவள் தனக்குத் தெரியாது என்றாள். இசபெல் எங்கே போனாள் என்று கண்டறிய முடியவில்லை.
பூக்களை வாங்குவதற்காகச் சென்ற பெண் எங்கே போயிருப்பாள். நாடக அரங்கினை சுற்றிய மலர் விற்பனையகங்களில் விசாரித்தபோது அவள் வரவில்லை என்றே தகவல் கிடைத்தது. ஒருவேளை அவளுக்கு ஏதாவது விபத்து நடந்திருக்குமா என்று விசாரித்தான். அப்படியும் கண்டறிய முடியவில்லை. மூன்று மாத காலம் எவ்வளவோ முயன்றும் அவளைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை.
ஆனால் அதன்பிறகு ஒவ்வொரு நாளும் அவனது கனவில் அவள் தோன்ற ஆரம்பித்தாள். நாடகத்தில் வரும் அதே காட்சி போல மலர்களை மறந்துவிட்டதாகச் சொல்லி வெளியேறி செல்வாள். கனவிலும் அவளைப் பின்தொடர முடியவில்லை. இந்த ஏமாற்றம் அவனை ஆழமாகப் பாதித்தது. தான் காதலித்த பெண் ஏன் தன்னை விட்டு மறைந்து போனாள் எனப் புரியாமல் தான் அவன் லண்டனை விட்டு இந்தியா திரும்பி வந்தான் என்கிறார்கள்.
இந்த நிகழ்வினை பற்றிப் பில்வமங்கன் இரண்டு மூன்று முறை தனது டயரியில் பதிவு செய்திருக்கிறான்.
••
யதோத்தகாரியின் ஒரு குறிப்பு

காணாமல் போனவர்கள் எல்லோரும் ஒரு இடத்தில் ரகசியமாக வசித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். இந்த உலகில் காணாமல் போனவர்களுக்கான வசிப்பிடம் என்றே தனிவெளி இருக்கிறது. அதைக் காணாமல் போகாதவர்களால் கண்டறிய முடியாது. உண்மையில் அது ஒரு உலகம். எந்த நூற்றாண்டில் காணாமல் போயிருந்தாலும் அவர்கள் ஒரே இடத்திற்குத் தான் சென்று சேர்ந்திருப்பார்கள். காணாமல் போனவர்களின் வசிப்பிடம் என்பது கடலில் உள்ள தீவினைப் போலப் பூமியில் உள்ள தனிநிலம். அங்கே யாரும் யாருக்கும் தெரிந்தவர்கள் இல்லை. காணாமல் போனவர்களுக்குள் உறவு கிடையாது. அவர்கள் ஒரே பூமியில் முளைத்து அருகருகே நிற்கும் மரங்களைப் போலத் தனது சுதந்திரத்தில் தனியே வளருகிறார்கள். கண்டுபிடிக்கப்படும் வரை தான் அவர்களின் இந்த வாழ்க்கை. கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் நிறையக் கதைகளை உருவாக்கி விடுகிறார்கள். அல்லது கதைகள் காணாமல் போனவர்களின் பாதையை அழித்துவிடுகின்றன.
இந்தக் கொலை வழக்கினை விசாரிக்கத் துவங்கிய போது கொலைக்கான காரணங்களை விடவும் விசித்திரமான நிகழ்வுகள் அதிகம் இருப்பதை உணர முடிகிறது.
உண்மையில் பில்வமங்கன் சொல்வதைப் போலவே ஸ்ரீமதியும் படுக்கை அறையில் ஒரு பூட்டை வைத்திருக்கிறாள். அந்தப் பூட்டு உண்மையில் ஒரு தலையணை உறை. அந்த உறையில் இரண்டு அன்னங்கள் நீந்துகின்றன. அந்த இரண்டு அன்னங்களும் ஒன்றையொன்று பார்த்தபடியே நீந்துகின்றன. இந்த உறையைக் கொண்ட தலையணை இருக்கும்வரை துர்கனவுகள் வராது என்று அவள் நம்புகிறாள்.
ஒரு நாள் விளையாட்டாக அந்தத் தலையணை உறையை மாற்றி இரண்டு கிளிகள் கொண்ட தலையணை உறையை மாட்டிவிட்டேன். அன்றிரவு அதிசயமாக ஸ்ரீமதி படுக்கையில் உக்கிரமாக இருந்தாள். கலவியின் பின்பு உற்சாகமாகப் பாட்டுபாடினாள். காலையில் எழுந்து கொண்ட போது அவளது முகம் வெளிறிப்போயிருந்தது. அவள் எதையோ சொல்ல முயன்று சொல்லாமல் மறைத்துக் கொண்டபடியே குளிக்கச் சென்றாள்.
வீட்டின் பின்புறம் சிறிய குளம் இருந்தது. அதில் தான் அவள் குளிப்பாள். அவளுக்கு நன்றாக நீந்த தெரியும். அன்று அவள் குளக்கரையில் குளிப்பதற்காகக் கொண்டு போன உடைகளை வைத்தபடியே ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். பகல் நீண்டு சூரியன் உச்சிக்கு வரும்வரை அப்படியே இருந்திருக்கிறாள். பணிப்பெண் பயந்து போய்ப் பக்கத்து வீட்டு மொய்னாவை அழைத்துக் கொண்டு வந்த போது காரணமே இல்லாமல் அழுதிருக்கிறாள். அன்றிரவு என்னிடம் பில்வமங்கன் மனைவி அவனைக் கொல்லவில்லை. அவனைக் கொன்றது பணிப்பெண் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்
இதைப்பற்றி எல்லாம் நீ யோசிக்க வேண்டியதில்லை. மனசு சரியில்லை என்றால் கோவிலுக்குப் போய் வரச்சொன்னேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் தனியே பில்வமங்கன் மாளிகைக்குப் போய் வந்தாள் என்று கேள்விபட்ட போது அவள் மீது கோபம் தான் வந்தது. எதற்காக அங்கே போனாள் என்று கேட்டதற்கு அவள் பதில் சொல்லவேயில்லை
ஸ்ரீமதி அதன்பிறகு பகலில் வீட்டில் தனியே நடிகை போல அலங்காரம் செய்து கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறாள் என்று மொய்னா சொன்னாள். ஒரு நாள் அவளிடம் இது பற்றிக் கேட்டதற்குச் சொன்னாள்
நீங்கள் ஒயின் குடிப்பது போல எனக்கும் கொஞ்சம் மயக்கம் தேவைப்படுகிறது. அதற்குத் தான் அந்த நடிப்பு
அவளை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நீண்ட தனிமை ஒரு பெண்ணை இப்படி ஆக்கிவிடுமா என்ன.
••
பத்திரிக்கையாளர் இந்திரநாத் சொன்னவை
பில்வமங்கன் கொல்லப்படுவதற்கு முந்திய நாள் அவனது வீட்டில் ஒரு கச்சேரி நடந்திருக்கிறது. பனராசில் இருந்து வரவழைக்கபட்ட இந்துஸ்தானி பாடகர் குலாம் காதர் மற்றும் குழுவினர்கள் பாடியிருக்கிறார்கள். அந்தக் கச்சேரி இரவு ஏழு மணிக்கு துவங்கி விடிகாலை நாலு மணி வரை நடந்திருக்கிறது கடந்த சில மாதங்களாகவே பில்வமங்கன் இப்படி இரவெல்லாம் கச்சேரி கேட்டுக் கொண்டேயிருந்தான். இதற்காக நிறையப் பணம் செலவு செய்திருக்கிறான். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை வரவழைத்து பரிசுகளை வாறி வழங்கினான்
அந்தக் கச்சேரியை கேட்பதற்கு வெளியாட்கள் எவருக்கும் அனுமதியில்லை. அவன் மனைவி வருணா சில நேரங்களில் அந்த இசைககூடத்திற்கு வருவதுண்டு. இல்லாவிட்டால் அவன் ஒருவன் மட்டுமே இசையைக் கேட்டுக் கொண்டிருப்பான். நூறு தூண்கள் கொண்ட பெரிய இசைக்கூடமது. அதன் நடுவே பெரிய சிம்மாசனம் போன்ற நாற்காலி. அவன் முன்னால் பாடகர்கள் அமர்ந்து பாட சிறிய கூடம். இரவெல்லாம் ஒளிரும் எண்ணெய் விளக்குகள். கதவுகள் மூடப்பட்ட அந்த இசைக்கூடத்தில் பாடகர்கள் தன்னை மறந்து பாடுவதும் கண்களை மூடியபடி பில்வமங்கன் கேட்டுக் கொண்டிருப்பதும் விநோதமாக இருக்கும். விடிகாலை வெளிச்சம் கதவில் பட்டு கசியும் போது அவன் போதும் எனக் கைகளால் சைகை செய்து நிறுத்துவான். பிறகு பட்டாடைகள் சன்மானங்களைத் தன் கையால் கொடுத்துவிட்டு வெறித்த கண்களுடன் தள்ளாடியபடியே நடந்து செல்வான்
ஒருமுறை அவனிடம் குலாம் காதர் கேட்டார்.
“இசையில் நீங்கள் எதையோ தேடுகிறீர்கள் சாகேப்.“
“காணாமல் போனவர்களைத் தேடுகிறேன். உன்னதமான இசையின் வழியே மறைந்து போனவர்களைத் தேடிச் செல்லும் பாதை உருவாகிறது. அதன் வழியே நான் இசபெல்லை தேடிக் கொண்டிருக்கிறேன். அவள் வாங்க மறந்த மலர்களை என்னால் காண முடிகிறது. ஆனால் அவளைத் தான் காண முடியவில்லை“
அதைக் கேட்டுக் குலாம் காதர் சொன்னார்
“பாடி முடித்தபிறகு பாடல்கள் எங்கே போகிறதோ. அங்கே தான் காணாமல் போனவர்களும் போயிருப்பார்கள்“
அவர் அப்படிச் சொன்னது பில்வமங்கனுக்குப் பிடித்திருந்தது. அவன் தன் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட சங்கிலியை அவருக்குப் பரிசாக அளித்தான். பில்வமங்கனின் கடந்த காலம் அவனை ஆட்டுவித்திருக்கிறது. உண்மையில் வருணா அவனது பணத்திற்காகவே அவனுடன் வாழ்ந்திருக்கிறாள். அவளுககு ரகசிய காதலன் இருந்திருக்கிறான். படகு துறையில் அவர்கள் ரகசியமாகச் சந்தித்திருக்கிறார்கள்.
அவள் ஒரு நாள் காணாமல் போகக் கூடும் என்று பில்வமங்கன் நம்பிக் கொண்டிருந்தான். அதைத் தடுக்கவே அவளுக்குப் புதுப்புது ஆசைகளை உருவாக்கிக் கொண்டிருந்தான். ஆசைகளைக் கொண்டு எவரையும் எங்கேயும் தங்க வைத்துவிட முடியும். மிருணாவை தன்னிடமிருந்து பறித்துக் கொள்ள முயலும் அவளது காதலனை பில்வமங்கன் தான் கொலை செய்திருக்கக் கூடும். காதலனின் பிரேதத்தை ஆற்றில் கண்ட போது வருணா அதைத் தான் நினைத்திருக்கிறாள். ஒருவேளை இந்தக் கொலை அதற்கான பழிவாங்குதல் தானோ என்னவோ.
பில்வமங்கனின் மாளிகையைப் பரிசோதனை செய்வதற்காகச் சென்ற நாட்களில் தலைகீழாக உருவம் தெரியும் ஒரு நிலைக்கண்ணாடி அந்த வீட்டில் இருப்பதைக் கண்டேன். இப்படி ஒரு அதிசய கண்ணாடியை எதற்காகப் பில்வமங்கன் வாங்கி வைத்திருக்கிறான். அது தன் முன்னே நிற்பவர்களைத் தலைகீழாகத் தான் காட்டுகிறது. அப்படி ஒரு அனுபவத்தை ஒருவர் அடைவது திகைப்பானது. என்னை நானே அப்படிப் பார்த்துக் கொண்ட போது வியப்பாக இருந்தது. ஒருவேளை வருணாவை கொலை செய்ய முயன்று தான் கொலையாகிப் போய்விட்டானோ. தலைகீழ் கண்ணாடி இதைத் தான் சொல்கிறதோ. தெரியவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது.

வங்காளத்தின் பகல்பொழுது காஞ்சிபுரத்தின் பகல்பொழுதை விடவும் பெரியது. ஏன் ஒரு நாள் இவ்வளவு நீண்டதாக இருக்கிறது. இந்தக் குடியிருப்பில் எத்தனை நேரம் தனியே தூரத்து மேகங்களை வெறித்துப் பார்த்தபடியே இருப்பது.
யதோ ஏதோ ஒரு கொலை வழக்கினை விசாரிப்பதற்காகக் குதிரையில் சென்றுவிட்டான். அவனுக்குப் பில்வமங்கனை கொலை செய்தது யார் என்பது தான் உலகின் மிக முக்கியமான விஷயம். என் ஆசையை அவன் கண்டுகொள்ளவேயில்லை. இந்தப் பில்வமங்கன் ஏன் கொல்லப்பட்டான். அவன் சாகாமல் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியது இருக்காது. பேசாமல் கல்கத்தாவில் இருந்திருக்கலாம். ஆங்கில நாடகங்கள். கச்சேரிகளைப் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலை என் ஆசைகளை நாசம் செய்துவிட்டது. பேசாமல் யதோவை இங்கே விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போய்விடலாமோ என்று கூட நினைத்தாள்.
யதோத்தகாரி சாப்பாட்டு பிரியன். சாம்பாரும் புளியோதரையும், வத்தல்குழம்பும் அப்பளமும் என ருசியாகச் சமைக்க வேண்டும். அவள் போய்விட்டால் அது எப்படிக் கிடைக்கும். ஒரு வேளை அவள் ஊருக்குப் போய்விட்டால் இந்தக் கேஸ் வேண்டாம் என்று அவனே ஊருக்கு வந்துவிடவும் கூடும். இப்படி மாறி மாறி யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன
இந்தப் பில்வமங்கன் நல்லவன் தானா. நல்லவனான இருந்தால் ஏன் அவன் மனைவி அவனைக் கொலை செய்தாள். வருணாவை தேடி நிசிதாபூர் வரை யதோ போய்வந்துவிட்டான். ஒருவருக்கும் தகவல் தெரியவில்லை. எங்கே மறைந்து கொண்டுவிட்டாள் அந்தப் பேதை. பெண்கள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் பின்பு யாராலும் கண்டறிய முடியவே முடியாது. அந்தப் பெண் மீது ஏனோ வருத்தமாக இருக்கிறது.
உடைந்த துண்டுகளை ஒட்டவைத்து ஒரு பானையை உருவாக்கி விட முனைவது போலத் தான் யதோ ஒடிக் கொண்டிருக்கிறான். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குச் சொல்லப்படும் காரணங்கள் உண்மை தான் என எப்படித் தெரியும். சாட்சிகளைக் கொண்டு உண்மையை ஒரு போதும் முற்றிலும் அடையாளம் கண்டுவிட முடியாது.
பில்வமங்கன் இசையின் வழியே தொலைத்து போன தனது காதலியை தேடிக் கொண்டிருந்தான் என்று யதோ சொன்னதைக் கேட்டபோது அது சரியான வழி தானே என்றே தோன்றியது.
கவிதைகளின் வழியாகவும் இசையின் வழியாகவும் தான் உலகில் இருந்து காணாமல் போனவற்றை நாம் மீட்க முடியும். இவ்வளவு ரசனையான ஒரு மனிதன் ஏன் கொல்லப்பட்டான்.
யதோ சொன்னான். பில்வமங்கன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு எண்பது வயது இருக்கும். அவள் பில்வமங்கன் பிறந்த போதிலிருந்து அந்த வீட்டில் தான் வேலை செய்கிறாள். நீண்ட காலம் வேலை செய்கிறவர்கள் தாங்கள் அந்த வீட்டின் உறுப்பினர் என்றே நினைப்பார்கள். அவர்களுக்கு வயது மறந்து போய்விடும். அந்தப் பணிப்பெண் பில்வமங்கன் நிச்சயம் ஒரு நாள் காணாமல் போய்விடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை இந்தக் கொலை அவனைக் காணாமல் ஆக்கியது தான். வீட்டு உரிமையாளர்கள் இறந்த பிறகு பணியாளர்களுக்குத் தனியே வாழ்வது கடினமாக இருக்கும் அந்தப் பணிப்பெண்ணும் காணாமல் போய்விட்டான் என்றான் யதோ.
ஒருவேளை வருணாவும் அந்தப் பணிப்பெண்ணும் ஒன்று சேர்ந்து கொலையைச் செய்துவிட்டு தப்பியோடி விட்டார்களா. இப்படித் துப்பறிந்து பார்த்தால் என்ன. இதைச் சொன்னால் யதோ கோவித்துக் கொள்வான்.
மனிதர்கள் காணாமல் போவது மட்டும் ஏன் இவ்வளவு முக்கியமாக இருக்கிறது. இந்த உலகிலிருந்து எத்தனையே பொருட்கள். நினைவுகள் நிகழ்வுகள் காணாமல் போயிருக்கிறதே.
என்னிடமிருந்து எனது பால்யவயது காணாமல் போய்விட்டது. அதை ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாரும் இல்லாத தனிமையில் அதன் படிக்கட்டுகள் தோன்றுகின்றன. இறங்கி நடக்கத் துவங்கினால் பால்யம் வெகுதொலைவிற்குப் போய்விடுகிறதே
பருவ வயதின் கனவுகளும அதில் உலவிய அழகனும் காணாமல் போய்விட்டார்கள். மனதில் இப்போது யதோத்தகாரியின் மனைவி என்ற அடையாளம் மட்டுமே மீதமிருக்கிறது. ஒருவேளை யதோ ஒருநாள் காணாமல் போய்விட்டால் நான் அவனைத் தேட மாட்டேன். நான் காணாமல் போய்விட்டால் அவன் பதற்றமடைவான். தேடுவான். ஆனால் சில நாட்களில் அதை மறந்துவிட்டு தனது வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவான்.
காணாமல் போவது உலகில் முடிவில்லாமல் நடந்து கொண்டேயிருக்கும் தொடர் நிகழ்வு. பிறப்பு இறப்பு போல அதுவும் தவிர்க்க முடியாதது தானோ. காணாமல் போகிறவர்கள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிடுகிறார்கள். சுவரில் விரிசல் உருவாவது போல அந்த விரிசலை எளிதில் சரிசெய்துவிட முடியாது. ஒரு இடத்தில் காணாமல் போகிறவர்கள் இன்னொரு இடத்தில் தோன்றியிருப்பார்கள். தெரியாத மனிதர்கள் முன்பு நாம் காணாமல் போனவர்கள் தானே.
••
டயரிக்குறிப்பில் இருந்த செய்திகளையும் நிகழ்வுகளையும் வாசிக்கும் போது ஒரு நாவலில் அத்தியாயங்களை வாசிப்பது போலவே இருந்தது. என் பயணம் முழுவதும் அதைப்பற்றி நினைத்தபடியே வந்தேன்.
டயரியில் எழுதப்பட்டது என்பதால் அதை உண்மை என்று எப்படி நம்புவது. பெரும்பான்மையினர் டயரியில் உண்மையை எழுதுவதில்லை. இந்த டயரிக்குறிப்புகளை வைத்து எதையும் முற்றாக அறிந்துவிட முடியாது.
மோகன்பூருக்குச் சென்றபோது அவர்களில் ஒருவருக்கும் பில்வமங்கன் கொலையைப் பற்றித் தெரியவில்லை. அப்படி ஒரு மாளிகை இருந்த அடையாளமும் இல்லை. நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்தவற்றைக் கண்டவர் எவர் இருக்க முடியும். ஆனால் நினைவில் கூட அப்படியான நிகழ்வின் தடமில்லை.
கல்கத்தாவிற்கு வருகை தந்து புகழ்பெற்ற வழக்கறிஞர் நிரஞ்சன் சென்னிடம் பேசிக் கொண்டிருந்த போது அது ஒரு புகழ்பெற்ற கொலை வழக்கு. சினிமாவாகக் கூட வந்திருக்கிறது. ஆனால் யார் கொலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்
இதைப்பற்றிய டயரி குறிப்பை அவரிடம் காட்டிய போது சொன்னார்
“இறந்து போனது பில்வமங்கன் தானா என்றே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. கடந்த காலத்தின் நிகழ்வுகளைக் கதைகள் விழுங்கிவிடுகின்றன. அதன்பிறகு நாம் காண்பது கதையின் வேறுவேறு வடிவங்களையே“
“அப்படியானால் யதோத்தகாரி காணாமல் போனது. அவன் மனைவி காணாமல் போனது இப்படி ஏழு பேர் புதிராக மறைந்திருக்கிறார்களே“ என்றேன்
“இதுவும் கதையாக இருக்கலாம். ஒரு கொலையைக் கண்டுபிடிக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்றால் அதைப் பற்றிய கதைகளை அதிகம் உண்டாக்கிவிட வேண்டும். அதைத் தான் பில்வமங்கன் செய்திருக்கிறான். அல்லது யாரோ ஒரு புத்திசாலி இதை உருவாக்கியிருக்கிறான்“.
“விடைதெரியாத புதிராக இது முடிந்துவிட வேண்டியது தானா“
“என் வீட்டுக் கிணற்றில் இருந்த தண்ணீர் கோடைகாலத்தில் எங்கே காணாமல் போனது என்றே எனக்கு விடை தெரியவில்லை. இது போலக் கடந்தகாலக் கொலைகளுக்கு விடை தெரியாமல் போனால் என்ன“ என்று சொல்லி சிரித்தார் நிரஞ்சன் சென்.
அவர் சொன்னது உண்மை.. நூற்றுமுப்பது வருஷங்களுககு முன்பு நடந்த ஒரு கொலையின் முடிவால் இப்போது என்ன மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும்.
ஒருவேளை இந்த நிகழ்வில் காணாமல் போனவர்கள் ஏதோ காரணங்களால் பெயர்களை மாற்றிக் கொண்டு மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது இது மொத்தமும் ஒரு நாடகத்தின் காட்சிகள் தானோ என்னவோ.
அப்படியில்லாமல் இந்தக் கொலைவழக்கும். டயரிகளும் வங்காளத்திற்கு வேலைக்குப் போன யதோத்தகாரியின் மனைவி ஸ்ரீமதி எழுதிய கற்பனைக்கதையாகவும் இருக்கலாம் தானே
••
இரண்டு புகைப்படங்கள்
ராகவ் வெங்கடராமன் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் மிக அழகாக உள்ளன


நன்றி
ராகவ் வெங்கடராமன்
வெர்மீரின் பால் குவளை
The Milkmaid ஒவியம் 1658ல் வரையப்பட்டது என்கிறார்கள். துல்லியமாக ஆண்டினை கண்டறிய முடியவில்லை என்ற போதும் வெர்மீரின் ஒவியவரிசையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டினை முடிவு செய்திருக்கிறார்கள்.

ஓவியத்தின் அகம் காலமற்றது. இந்த ஓவியத்தில் காணப்படும் பெண் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அழியாத உருவமாக இருக்கிறாள். அவளது பால் குவளையிலிருந்து வழியும் பால் நிற்கவேயில்லை. இந்தப் பால் வடிந்து கொண்டிருக்கும் வரை உலகில் அன்பு நீடிக்கவே செய்யும் என்கிறார்கள். அது உண்மையே. வெர்மீரின் பால் குவளையை ஏந்திய பணிப்பெண்ணின் ஓவியம் ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது
இந்த ஓவியத்தில் இருக்கும் பெண் வெர்மீரின் வீட்டில் சமையல் வேலைகள் செய்கிறவள். அவளது உடையும் தோற்றமும் அக்காலப் பணிப்பெண்களை ஒத்திருக்கிறது. அவள் முன்னுள்ள மேஜையில் பல்வேறு வகையான ரொட்டிகள் உள்ளன.
அவள் தலையில் அணிந்துள்ள துணி மற்றும் அவளது உடைகள் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன. சுவரில் தொங்கும் கூடை, பெண்ணின் கவனம். குவளையிலிருந்து வடியும் பால். உடைந்த ரொட்டித்துண்டுகள். மேஜையில் கிடக்கும் துணி, கேன்வாஸின் இடது பக்கத்தில் உள்ள ஜன்னலிலிருந்து வெளிப்படும் ஒளி என இந்த ஓவியம் வியக்கத்தக்க அளவில் நுட்பமாக வரையப்பட்டிருக்கிறது.
பெண்ணின் முகத்தின் பாதி நிழல் விழுகிறது. அது தான் தனி அழகை உருவாக்குகிறது. அவளது தாழ்ந்த கண்களில் வெளிப்படும் கவனம், நிதானம், அவளுடைய சுருக்கப்பட்ட உதடுகள், பால் குவளையைத் தாங்கிய கைகளின் உறுதி முழுமையான ஈடுபாட்டின் அடையாளமாக இருக்கிறது

ரொட்டியின் மேலோடு, ரொட்டி மீது காணப்படும் விதைகள், ரொட்டி உள்ள கூடையின் பின்னப்பட்ட அழகிய கைப்பிடிகள் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பின்னுள்ள சுவர் அது எத்தகைய வீடு என்பதையும் அவர்கள் அதிக வசதியானவர்களில்லை என்பதையும் அடையாளப்படுத்துகிறது
சுவரில் காணப்படும் கறைகள், மற்றும் ஆணி, ஆணி துளை. , சுவரில் தொங்கும் பளபளப்பான பித்தளை கொள்கலன். சாளரத்தில் உள்ள கண்ணாடி பலகையின் நான்காவது வரிசையில் சிறிய விரிசல் காணப்படுகிறது. தரையில் கால்களைச் சூடு படுத்திக் கொள்ளும் பெட்டகம் உள்ளது. இது குளிர்காலத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது
கலை வரலாற்றாசிரியர் ஹாரி ராண்ட் இந்த ஓவியத்திலுள்ள பணிப்பெண் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அவரது ஆய்வின் படி படத்திலிருப்பவர் வீட்டு உரிமையாளரில்லை. அவள் ஒரு பொதுவான பணிப்பெண்.
மேல்தட்டுக் குடும்பங்களில் இது போன்ற பணிப்பெண்கள் வேலைக்கு இருப்பது வழக்கம். அவள் டச்சு ஓவன் எனப்படும் மண் கிண்ணத்தில் மெதுவாகப் பால் ஊற்றுகிறாள். உடைந்த ரொட்டித்துண்டு கலவையின் மீது பாலை சரியான முறையில் ஊற்றி அவள் புட்டிங் செய்ய முயலுகிறாள். இது டச்சுக் குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் செயற்பணியாகும்
இந்த ஓவியம் பற்றி நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. உலகில் அதிகம் பேசப்பட்ட ஓவியங்களில் ஒன்றாக இதையும் கருதுகிறார்கள்.
எனக்கு இந்த ஓவியத்தில் பிடித்த விஷயம் வற்றாது வடியும் பால். ரொட்டித்துண்டுகள் மற்றும் பணிப்பெண்ணின் கவனம். வெர்மீரின் இந்த ஓவியத்தைக் காணும் போதெல்லாம் மனதில் புத்தருக்குச் சுஜாதா கொடுத்த பால் அன்னம் நினைவில் வந்து போகிறது.
கௌதம புத்தர் தமது இறுதிக் காலம் நெருங்கும் வேளையில், தமது சீடர் ஆனந்தரிடம், தனக்கு முதலில் சுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே தமக்கு ஞானம் கிட்டியதாகச் சொல்கிறார். வெர்மீரின் புட்டிங் செய்யும் பணிப்பெண்ணும் சுஜாதாவும் வேறுவேறில்லை. அவர்கள் அர்ப்பணிப்புடன் அன்புடன் உணவைத் தயாரிக்கிறார்கள். தருகிறார்கள். வெர்மீரின் பணிப்பெண்ணின் பெயர் கூட உலகம் அறியாது. ஆனால் அவள் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் தீராத அன்பின் அடையாளமாக வெளிப்படுகிறாள். அது தான் கலையின் சிறப்பு
வெர்மீர் தனது வாழ்நாளில் மிகுந்த பொருளாதாரச் சிரமம் கொண்டிருந்தார். பேக்கரியில் ரொட்டிகளைக் கடனில் தான் வாங்கினார். அவர் இறந்த போது அவரது மனைவியும் 11 பிள்ளைகளும் வறுமையில் வாடினார்கள். இந்த ஓவியம் வரைந்த நாளில் கூட அவர் வறுமையான சூழலில் தான் இருந்திருக்கக் கூடும்.
எளிய அன்றாட நிகழ்வு ஏன் ஓவியத்தில் இத்தனை பேரனுபவமாக மாறுகிறது. அது தான் கலைஞனின் தனித்துவம். அவன் வியப்பூட்டும் காட்சிகளை வரைய விரும்புவதை விடவும் எளிய காட்சிகளை வியப்பூட்டும் வண்ணம் வரையவே ஆசை கொள்கிறான்.
வெர்மீரின் ஓவியங்களில் வெளியுலகம் ஜன்னலின் வழியே தான் அடையாளப்படுத்தப்படுகிறது. இதிலும் அந்தப் பெண்ணின் வலதுபுறம் ஒரு ஜன்னல் காணப்படுகிறது.

வெர்மீர் (Johannes Vermeer) வண்ணங்களைப் பயன்படுத்தும் முறை அபாரமானது. நிகரற்றது. நீலமும் மஞ்சளும் அவருக்கு விருப்பமான நிறங்கள். ஒளியை அவர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
ஓவியத்தைத் திரும்பத் திரும்பக் காணும் போது அந்தப் பெண் ஏதோ சொல்ல முற்படுவது போலவே உணர முடிகிறது. வெர்மீரின் பெண்கள் வசீகரமானவர்கள். முத்து காதணி அணிந்த பெண்ணை யாரால் மறக்க முடியும். ஜன்னல் முன்பாகக் கடிதம் வாசிக்கும் பெண்ணின் அழகை எப்படி மறக்கமுடியும்.
இந்திய மரபில் பால் ஆசையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் மரணத்தருவாயில் கூடப் பாலை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பால் என்பது குழந்தையின் முதல் உணவு. பாலும் ரொட்டியும் உயிர்வாழ்தலின் அடையாளங்கள்.
வெர்மீர் பிற ஓவியர்களைப் போல ஓவியம் வரைவதற்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. நிலக்காட்சிகளைத் தேடிப் போகவில்லை. அவர் தன் வீட்டினுள் இருந்தபடியே எளிய அன்றாட நிகழ்வுகளைக் கண்டறிந்து தனித்துவமான கோணத்தில் துல்லியமான சித்தரிப்பில் ஓவியமாக்கியிருக்கிறார்.
இதை வரையும் போது வெர்மீரின் மனதில் என்ன இருந்தது என்று தெரியாது. ஆனால் இதைக் காணும் போது நம் மனதில் அந்தப் பால் சொட்டி நிரம்புகிறது. நாம் பேரன்பை உணரத் துவங்குகிறோம். அர்த்தப்படுத்திக் கொள்வதும் தனதாக்கிக் கொள்வதும் கலையின் அம்சங்களே.
நான் இந்த ஓவியத்தில் வடியும் பாலை வற்றாத படைப்பாற்றலாகவே காணுகிறேன். அது வெர்மீரிடம் கடைசிவரை தீவிரமாக வெளிப்பட்டது. உண்மையான கலைஞர்கள் அத்தனை பேர்களிடமும் வற்றாமல் வழிந்தோடவே செய்கிறது. அந்த உயரிய நம்பிக்கையைத் தருகிறது என்பதால் வெர்மீரைக் கொண்டாடுகிறேன்.
••
ஆங்கிலத் தொகுப்பில்
Aleph Book Company தமிழின் முப்பது சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து THE GREATEST TAMIL STORIES EVER TOLD என ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்
சுஜாதா விஜயராகவன் மற்றும் மினி கிருஷ்ணன் இந்தத் தொகுப்பினைத் தேர்வு செய்து உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தத் தொகுப்பில் எனது சிறுகதை புறாப்பித்து இடம்பெற்றுள்ளது.
November 16, 2021
பனியில் மறையாத காலடிகள்.
ஜான் ஃபோர்டின் புகழ்பெற்ற திரைப்படமான தி சர்ச்சர்ஸ் பாதிப்பில் அதே கதையினைத் துருவப்பகுதியில் நடப்பதாகப் புதிய திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். Maliglutit (searchers) எனும் இப்படத்தை இயக்கியவர் சகரியாஸ் குனுக். 2016ல் வெளியாகியிருக்கிறது.

உலகின் முதற்குடிமக்கள் என்று அழைக்கப்படும் இனூட் பூர்வகுடிகள் துருவப்பகுதியில் வாழுகிறார்கள். உறைபனிப் பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள். உறைபனியில் பயணம் செய்வதற்கு நாய்களால் இழுக்கப்படும் வண்டியைப் பயன்படுத்துகிறார்கள்.
இப்படம் இனூட் குழுக்களுக்குள் உள்ள சண்டை, மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு தேடும் முறை. விசித்திர நம்பிக்கைகள். பனிப்பிரதேசத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் என இனூட்டுகளின் வாழ்க்கையைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளது.
1900களின் முற்பகுதியில் உறைபனிக்காலத்தில் கனேடிய ஆர்க்டிக்கின் நுனாவுட் பிரதேசத்தில். இக்லூ எனும் பனிக்குடில் ஒன்றில் கதை துவங்குகிறது. அடுத்தவன் மனைவியோடு கள்ள உறவு கொண்டிருக்கிறான் என்று ஒருவன் குற்றம்சாட்டப்படுகிறான். தவறான நடத்தை, கொலை மற்றும் குற்றச்செயல்களுக்காகக் குபக் அவுல்லா, துலிமாக் மற்றும் திமாத்தி என்ற நால்வர் இனூட் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
குவானானாவின் குடும்பம் அறிமுகமாகிறது. அவர்கள் ஒன்றுகூடி உண்ணுகிறார்கள். பிள்ளைகள் மீது அவன் கொண்டிருந்த அன்பு அந்தக் காட்சியில் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. உலர்ந்த இறைச்சியை அவர்கள் கடித்து இழுத்து சாப்பிடும் முறை வியப்பூட்டுகிறது.
நானூக் ஆப் தி நார்த் என்ற ஆவணப்படம் துருவப்பிரதேச வாழ்க்கையை நுட்பமாக ஆவணப்படுத்தியது. அதில் இது போன்ற வாழ்க்கை முறையைக் கண்டிருக்கிறேன். கனடா போயிருந்தபோது இனூட்களின் ம்யூசியத்திற்குச் சென்று அவர்கள் தொடர்பான பொருட்கள். காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் படத்தில் இந்த வாழ்க்கையை நெருக்கமாகக் காணும் போது வியப்பூட்டும் ஒரு வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடிகிறது

பனிக்காற்றின் ஓலம். உறைபனி கொண்ட மலைமுகடுகள். முடிவில்லாத பனிப்பாறைகள். பனிக்கட்டிகளைக் கொண்டே உருவாக்கப்படும் சிறிய குடில்கள். அவர்கள் நெருப்பைப் பயன்படுத்தும் விதம். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியை உலர வைத்துப் பயன்படுத்தும் முறை. உலர்ந்த மீன்களைச் சூடாக்கிச் சாப்பிடுவது. ஆவிகள் மீது நம்பிக்கை கொண்டிருப்பது, தீவினைகளைப் பற்றி முன்னறிவது என இனூட்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம் சித்தரிக்கிறது. குவானானா தனது குடும்பத்துடன் அமைதியான நாடோடி வாழ்க்கையை நடத்துகிறான்
ஒரு நாள் அவர்கள் பனிமான் வேட்டைக்குக் கிளம்புகிறார்கள். குவானானாவின் தந்தை பேரன் சிகுவையும் உடன் அழைத்துப் போகச் சொல்கிறார். எந்தப் பக்கம் வேட்டைக்குப் போக வேண்டும் என்று திசையினையும் அடையாளம் காட்டுகிறார். அவர்கள் பனிப்பிரதேசத்தில் வேட்டைக்குக் கிளம்பிப் போகிறார்கள். எதிர்பார்த்தபடி மான் கிடைக்கவில்லை. நீண்ட தூரம் போய்விடுகிறார்கள்.
அவர்கள் வீடு திரும்புவதற்குள் திடீரெனக் கரடி தாக்குவது போல அவர்கள் பனிக்குடிலைத் தாக்கும் குபக் மற்றும் அவனது மூன்று நண்பர்கள் அங்கிருந்த பொருட்களைச் சூறையாடுகிறார்கள். வீட்டிலிருந்த பெண்களைக் கடத்திப் போகிறார்கள். அவர்களை எதிர்க்கும் வயதான தந்தை தாயைக் கொன்றுவிடுகிறார்கள்.
வேட்டைமுடிந்து திரும்பும் குவானானா தனது வீடு சிதைக்கப்பட்டிருப்பதையும் தாய் தந்தையின் இறப்பையும் காணுகிறான். இதற்குக் காரணமாக இருந்த குபக்கை பழிவாங்கத் துடிக்கிறான். கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி ஏலாவையும் மகளை டகாக்கையும் மீட்க குவானானா கிளம்புகிறான்
குவானானாவுடன் அவரது மகன் சிகுவும் சறுக்கு வண்டியில் செல்கிறான்.. அடிவானம்வரை உறைந்து கிடக்கும் பனி. முடிவில்லாத பனிப்பிரதேச வெளியில் எங்கே போய்த் தேடுவது என அவர்களுக்குத் தெரியவில்லை. வான் கடவுள் அசரீரி மூலம் வழிகாட்டுகிறார்.
கடத்தப்பட்ட பெண்களை மீட்க அவர்கள் உறைபனியில் நீண்ட தூரம் செல்கிறார்கள். எங்கும் தடயமேயில்லை. ஜான் ஃபோர்டின் பிரம்மாண்டமான நிலக்காட்சிகளைப் போலவே பனிப்பிரதேசத்தின் பெருவெளியும் அதில் செல்லும் மனிதர்களும் சித்தரிக்கப்படுகிறார்கள். கண்ணை விட்டு அகலாத காட்சிகள். படம் பார்க்கும் நம் முகத்திலும் பனிக்காற்று அடிக்கிறது.
குபக் மற்றும் அவனது மூன்று நண்பர்கள் தாங்கள் கடத்திவந்த பெண்களின் கைகால்களைக் கட்டி சறுக்கு வண்டியில் கொண்டு போகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் தங்கி உணவருந்தும் போது அந்தப் பெண்களுக்கும் உணவு தருகிறார்கள். பசியில் அதை ஏற்றுக் கொண்டு எலாவும் டகாக்கும் சாப்பிடுகிறார்கள்.
குபக் ஒரு இடத்தில் பனிக்குடில் அமைத்து அங்கே இரண்டு பெண்களையும் தங்க வைக்கிறான். எலாவோடு உடலுறவு கொள்ள முயல்கிறான். அவளோ அவனை அடித்துவிரட்டுகிறாள்.
தங்களை மீட்க எப்போது வரப்போகிறார்கள் என்று தெரியாத வேதனையில் அப்பெண்கள் தாங்களே தப்பிப் போக முயல்கிறார்கள். ஆனால் பனியில் தப்பியோட முடியவில்லை. அக்காட்சி அடிபட்ட மான் தப்பியோடுவது போலவே இருக்கிறது.

குபக்கின் கூட்டாளிகள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து மீண்டும் குடிலுக்குள் கொண்டு வந்து அடைக்கிறார்கள். சித்ரவதை செய்கிறார்கள். படம் முழுவதும் குபக்கால் அந்தப் பெண்கள் விலங்குகள் போலவே நடத்தப்படுகிறார்கள்.
முடிவில் குபக்கின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் குவானானா தனது மனைவி மற்றும் மகளை மீட்கத் திட்டமிடுகிறான். அதன்படியே அவர்களை மீட்கிறான். அத்தோடு குபக் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் துப்பாக்கிச் சண்டையிட்டு அவர்களைக் கொல்கிறான். மீண்டும் குவானானாவின் புதிய வாழ்க்கை ஆரம்பமாகிறது.
ஜான் போர்ட் படத்திலிருந்து நிறைய வேறுபாடுகளை இதில் காணமுடிகிறது. சகரியாஸ் குனுக் இரண்டு பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அதை ஒருவன் தேடுகிறான் என்ற கதைக்கருவை மட்டுமே வைத்துக் கொண்டு தனக்கான திரைக்கதையைத் தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். வழிதெரியாத அந்தப் பனிப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட மனைவியை மீட்க குவானானா அலைவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது
தனது வீடு தாக்கப்பட்டிருப்பதைக் கண்ட குவானானா வேதனையோடு யார் இதைச் செய்தவர்கள் என்று கேட்கும்போது இப்படிக் குரூரமாக நடந்து கொள்ள அங்கே யார் இருக்கிறார்கள் என்ற பரிதவிப்பு வெளிப்படுகிறது.
பழிவாங்கும் கதை ஒன்றினை இயற்கையின் பிரம்மாண்டமான வெளியோடு இணைத்து உருவாக்கியிருப்பது இதன் தனிச்சிறப்பு. பசியும் காமமும் மட்டுமே அவர்களை வழிநடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல காட்சிகளில் நாம் காணுவது பனிபடர்ந்த நிலவெளியை மட்டுமே. அதன் ஊடாகச் செல்பவர்கள் எறும்பு போலச் சிறியதாகத் தோன்றுகிறார்கள். இயற்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் தங்களுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்களைத் தான் புரியவில்லை. குவானானா அதைத் தான் கேள்வி எழுப்புகிறான். அவனிடம் உள்ளத் துப்பாக்கியில் மூன்றே குண்டுகள் உள்ளன. அதை அவன் கவனமாகச் செலவு செய்ய வேண்டும். கடைசிக்காட்சியில் அவனது தோட்டா தீர்ந்த பிறகு அவனை எலா தான் மீட்கிறாள்.

படத்தில் உரையாடல்கள் மிகவும் குறைவு. குளோசப் காட்சிகள் குறைவு. குவானானா தந்தைக்கும் தாயிற்குமான உறவும் தந்தையின் ஞானமும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவன் இறந்த குழந்தையைக் கையில் ஏந்தி நிற்கும் காட்சி மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான உருவாக்கம், இயல்பான நடிப்பு. பூர்வகுடிகளின் குரலொலி போன்றவை படத்தினை சிறப்பாக்குகின்றன
படத்தில் நடித்திருப்பவர்கள் யாவரும் இனூட் சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்களே படப்பிடிப்பிலும் உதவி செய்திருக்கிறார்கள். மைனஸ் 47 °C குளிரில் படம்பிடித்திருக்கிறார்கள். தாங்க முடியாத குளிர் எலும்புகளை நடுங்க வைத்துவிட்டது என்கிறார் இயக்குநர். காட்சிகளில் அதை நாம் நன்றாகவே உணர முடிகிறது
November 15, 2021
தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு
( ‘ உப பாண்டவம் ’ நாவலை முன்வைத்து )
முனைவர் ப. சரவணன்

எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான நாவல் ‘உப பாண்டவம்’. அதன் கதைக்களம் மகாபாரதம். இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகாபாரதம் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்கும். காரணம், மகாபாரதம் இந்தியத் தொல் மரபில் நீக்கமுடியாத ஓர் அடுக்கு அடித்தளம். ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களையும் நரம்பில் கோத்த மணிகளாக மாற்றி, மணிமாலையாக உருவாக்கி, ஒளிரச் செய்வது மகாபாரதம் அன்றி வேறேது?
அத்தகைய இந்தியக் குடிமக்களை நான் இரண்டு வகையாகப் பிரிக்கிறேன். ஒருவகையினர்:– மகாபாரதத்தை முழுமையாகப் படித்தறிந்தவர்கள் அல்லது கேட்டறிந்தவர்கள். பிறிதொரு வகையினர்:– மகாபாரதக் கதையோட்டத்தையும் கதைமாந்தர்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்.
முதல்வகையினரின் நெஞ்சில் மகாபாரதம் பெருநதியென நகர்ந்து கொண்டிருக்கும். இரண்டாம் வகையினரின் மனத்தில் மகாபாரதம் பாறைக்கோட்டோவியமாக நிலைபெற்றிருக்கும்.
முதல்வகையினர் தம்முடைய லட்சிய வாழ்வில் மகாபாரதக்கதை விழுமியங்களை இயல்பாகவே பொருத்திப் பார்த்து, அவற்றுக்கு ஏற்ப வாழ்பவர்கள். இரண்டாம் வகையினர் தம் அன்றாட வாழ்வில் மகாபாரதக் கதைக் கருத்துகளையும் கதைமாந்தர்களையும் தனிநபர் எள்ளலுக்காகவோ, பொது மதிப்பீட்டுக்காகவோ பயன்படுத்துபவர்கள்.
‘உப பாண்டவம்’ நாவல், இந்த இரண்டு தரப்பினருக்கும் எந்த வகையில் உதவுகிறது என்பதை நான் விளக்க விரும்புகிறேன். அதற்காகவே இந்தக் கட்டுரை.
இந்த ‘உப பாண்டவம்’ நாவல், இரண்டு கரைகளுக்கு இடையில் ஓடும் நதியென எழுதப்பட்டுள்ளது. ஒருகரையில் முதல்வகையினரும் மறுகரையில் இரண்டாம் வகையினரும் அமர்ந்து, நதியை ரசித்து, வியந்து, அதைப் பல்வேறு வகையில் பயன்படுத்தி, அதனருகில் இளைப்பாறலாம்.
முதல்வகையினர் இந்த நாவலில் காட்டப்படும் கதைமாந்தர்களின் மனநிலைகளையும் அவற்றின் மாற்றங்களையும் அவை அடையும் ஊசலாட்டங்களையும் தாம் அறிந்துள்ள மகாபாரதத்தோடு ஒப்பிட்டும் மதிப்பிட்டும் தங்களுக்குள் விவாதத்தை உருவாக்கிக்கொள்வார்கள். அல்லது தங்களின் மனத்தோடு உரையாடிக்கொள்வார்கள். அவற்றிலிருந்து தாம் கண்டடையும் கருத்துகளைத் தம்முடைய லட்சியவாழ்வுக்கு உரமாக்கிக்கொள்வார்கள்.
இரண்டாம் வகையினர் இந்த நாவலில் வழியாகத் தாம் அறிந்து கொள்ளும் புதிய கதைமாந்தர்களைப் பற்றியும் மறுவிமர்சனத்துக்கு உள்ளாகும் தாம் அறிந்த கதைமாந்தர்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குவார்கள். அந்தச் சிந்தனையின் வெளிப்பாடாக அவர்களின் எள்ளல் வளரத் தொடங்கும்.
விமர்சனம் இல்லாமல் எள்ளல் இல்லை. ஒருவகையில் எள்ளல் என்பதேகூட ஒரு விமர்சனம்தான். இருப்பினும், முதல்வகையினர் விமர்சன நோக்கிலும் இரண்டாம் வகையினர் எள்ளல் நோக்கிலும் மகாபாரதத்தைத் தம் வாழ்நாள் முழுக்கச் சுமப்பார்கள்.

‘உப பாண்டவம்’ நாவலைத் தாங்கிப் பிடிப்பவை இரண்டு தூண்கள். ஒன்று – கதைமாந்தர், கதைநிகழ்வுகள் சார்ந்த எழுத்தாளரின் ஆழமான, கூர்மையான விமர்சனக் கருத்துகள். இரண்டு – கதைமாந்தர்களின் மனவோட்டங்களை அப்படியே நாவலின் வரிகளாக்கியுள்ள எழுத்தாளரின் எழுத்துத்திறம்.
கற்றோர், கல்லாதோ அல்லது படித்தவர், பாமரர் என்ற இரண்டு எதிர்நிலையினருக்கும் ஒரு நாவல் உவப்பானதாக இருக்கிறது என்றால், அந்த நாவலின் பெறுமதிப்பு எத்தகையதாக இருக்கும்? இத்தன்மையில் எந்த நாவலாவது தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா?
குறிப்பாக, தொல்கதையை மீட்டுருவாக்கம் செய்து எழுதப்படும் நாவல்களில் இத்தகைய சாத்தியத்தைப் பயன்படுத்தி எழுத வாய்ப்புகள் மிகுதி. ஆனால், எந்த எழுத்தாளரும் அவ்வாறு முயற்சி செய்யவில்லை. அந்த வகையில் ‘உப பாண்டவம்’ தமிழின் மிகச் சிறந்த மீட்டுருவாக்க நாவல் என்பேன்.
ஒரு மீட்டுருவாக்க நாவலைத் தூக்கி நிறுத்துவது அதுசொல்லப்பட்டிருக்கும் விதம்தான். ‘உப பாண்டவம்’ நாவலின் கதைகூறும்முறை மிகச் சிறப்பானதாக இருக்கிறது.
ஒரு தூரதேசவாதி விரிந்த இந்திய நிலப்பரப்பில் நடந்தலைகிறான். அவன் செல்லும் பாதைகள் அவனை மகாபாரதம் தொடர்புடைய நிலங்களை நோக்கியே அழைத்துச் செல்கின்றன.
அவன் எதிர்கொள்ளும் மனிதர்களும் பிற இன உயிர்களும் இயற்கையமைப்புகளும் அவனுக்கு மகாபாரதக் கதையினைப் பல்வேறு தளங்களில் நினைவூட்டுகின்றனர்.
அவன் அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்ல நினைக்கும்போது, ஒரு படகோட்டி அவனை நதியைக் கடந்து கரையேற்றிவிடுவதாகக் கூறுகிறான். நாவல் முடியும் வரை அந்தப் படகோட்டி அவனைக் கரையேற்றவில்லை. அவர்களின் பயணம் முழுக்க முழுக்க நதியின் நீரோட்டத்திலேயே இருக்கிறது.
ஆனால், அவன் அஸ்தினாபுரத்தைப் பலமுறை வலம்வந்துவிடுகிறான். மகாபாரதம் முழுவதுமாக நடந்து முடிந்த ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் சுற்றிவந்துவிடுகிறான். அவற்றுள் நிலங்களும் பெருநதிகளும் அடர்ந்த வனங்களும் பள்ளத்தாக்குகளும் மலைச்சிகரங்களும் உள்ளடங்கியுள்ளன.
இத்தகைய ஒரு பெருங்கற்பனைவெளிக்குள் வாசகரை அழைத்துச் சென்று, மகாபாரதத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடும் மிகு எள்ளலோடும் உணர்த்திக்காட்டி அவர்களைப் பெருந்திகைப்போடு திருப்பி அனுப்புகிறார் எழுத்தாளர். உப பாண்டவத்தின் வெற்றிக்கு அடிப்படையே இத்தகைய கதைகூறும்முறைதான் என்பேன்.
இந்த ‘உப பாண்டவம்’ நாவலில் இடம்பெற்றுள்ள எண்ணற்ற கதைமாந்தர்களுள் எனக்குப் பிடித்தவர்கள் மூவர்தான். மயன், சஞ்சயன், வெண்பசு வேண்டிய அந்தணர். இந்த மூவருமே வஞ்சிக்கப்பட்டவர்கள், தனியர்கள் என்ற இரண்டு கோடுகளுக்குக் கீழ் இணையத்தக்கவர்கள். இவர்கள் மூவரும்தான் ஒட்டுமொத்த நாவலின் உள்கதையோட்டத்திற்கும் ஊடுபாவாகத் திகழ்கின்றனர்.
மயன் மாயசபாவை அமைக்கவில்லை எனில், சஞ்சயன் தொலையுணர்ந்து உரைக்காவிட்டால், அந்தணர் சொல்உச்சரித்துச் சூதாடாவிட்டால் என்ற இந்த மூன்று நிலைகளையும் வாசகர்கள் தம் மனத்துள் சிந்தித்துப் பார்த்தால், இந்த உப பாண்டவத்துக்கே இந்த மூவர்தான் ‘துணைக்கால்கள்’ என்பதை உணர்வர்.
கதையில் வரும் மீநிகழ்வுகளை ஏதாவது ஒருவகையில் அமைதிகொள்ளச் செய்யும் நுட்பம் எழுத்தாளருக்குக் கைக்கூடியுள்ளது. அந்த அமைதியை வாசகர்கள் உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் உள்ளது. ப்ரீதா என்ற குந்தி நியோக முறைப்படி முதற்குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அவர் தாம் மீண்டும் கன்னியாதலைப் பற்றிச் சிந்திக்கும்போது அசரீதியாக ஒளியுருவம் குரல் கொடுக்கிறது. அந்தக் குரல்செய்தியில்தான் எழுத்தாளரின் நுட்பம் மிளிர்கிறது.
“ இந்த நிகழ்வுகள் உனக்குள் நினைவுகளாகச் சேகரமாகாது . நினைவு மட்டுமே கன்னிமையை அழிக்கக் கூடியது . நீ இஷ்ட சொப்பனத்தில் இருந்து விடுபடுவது போல இந்தக் கர்ப்பத்தின் பிறப்பு அன்று யாவும் உன் நினைவிலிருந்து மறைந்து போகும் . நீ காண்பது கனவிலிருந்து பறிக்கப்பட்ட ஒரு மலரைக் கையில் வைத்திருப்பது போல குழந்தையை வைத்திருப்பதுதான் ”
தாயை எவ்வாறு கன்னியாகக் கருதுவது? என்ற இடர்ப்பாடு துளியளவும் வாசகருக்கு ஏற்படாதவாறு இந்தக் குரல் செய்தியை அமைத்துள்ளார் எழுத்தாளர்.
முதன்மைக் கதைமாந்தரின் மனவோட்டத்தைப் பின்தொடர்ந்து வரும் வாசகருக்கு, அந்தக் கதைமாந்தர் எதிர்க்கொள்ளும் சாத்தியமற்ற ஒரு சூழல் மிரட்சியைத் தரும். அந்த இக்கட்டான சூழலை வெகு இயல்பாகத் தன் எழுத்தில் வழியாகக் கடந்துசெல்ல வைத்துவிடுகிறார் எழுத்தாளர்.
திருதராஷ்டிரனுக்கும் வைசிய பெண்ணுக்கும் பிறந்த யுயுத்சுவைப் பார்க்கச் செல்கிறார் விதுரன். அவர் தன்னுடைய பிறப்பினையும் அந்தக் குழந்தையின் பிறப்பினையும் ஒப்பிட்டுக் கொள்கிறார்.
“ விதுரனைப் போலவே பணிப்பெண்ணின் மூலமாக இன்னொரு பிள்ளை குரு வம்சத்தினுள் பிறந்திருக்கிறது . மகாமுனி வியாசருக்கும் அம்பிகாவின் பணிப் பெண்ணிற்கும் பிறந்த விதுரனின் புறக்கணிப்பும் அவமானமும் கொண்ட பாதையில் இன்னொரு சிசுவும் அதே வழியில் நடக்கப் போகிறது . அவன் நிசப்தத்தின் சுருளில் மிதந்து கொண்டிருந்தான் .
விதுரன் தன் பிறப்பைத் தானே காணச் செல்லும் மனிதனைப் போல ஆவலும் பயமும் கொண்டவனாகத் தனியே புறப்பட்டுச் சென்றான் .”
இந்தப் பகுதியில், ‘தன் பிறப்பைத் தானே காணச் செல்லும் மனிதனைப் போல’ என்ற உவமைதான் வாசகரை அந்த இக்கட்டான மனநெருக்கடியிலிருந்து தப்பிவித்து, இலகுவாக்கிவிடுகிறது. இது, இந்த எழுத்தாளரின் எழுத்து நடைச் சிறப்புக்கு மகுடமாக அமைந்துள்ளது.

ஆணின் மனவோட்டம் வேறு பெண்ணின் மனவோட்டம் வேறு. இவற்றுக்கு இடையில் பொதுவான மனித மனவோட்டம் என்பது வேறு. ஒரு மனிதன் ஆண் நிலையிலிருந்து பெண்ணிலைக்கோ அல்லது பெண் நிலையிலிருந்து ஆண் நிலைக்கோ மாறும்போது, அவருக்குள் ஏற்படும் மனவோட்டம் எத்தகையதாக இருக்கும்?.
மாற்றுருகொண்ட அர்சுணனின் மனநிலை பற்றி எழுத்தாளர்,
“ உடலின் துயரமும் போகமும் நெடிய தனிமைவெளியும் கொண்ட ஸ்திரிகளின் பகலைப் பிருக்கன்னளை ருசிக்கப் பழகிவிட்டாள் . அவளுக்கும் அந்த நிதான சுதி போதுமானதாக இருந்தது . நாட்களின் சுழற்சியில் தனது சகோதரர்களையும் வசீகரமான பாஞ்சாலியையும் விடுத்து இரு உடலாளனாக , மாவீரன் அர்ச்சுணன் தலை மாற்றி வைக்கப்பட்ட மணற்குடுவையெனப் பெண் உருவின் துகள்களைத் தன்னிடமிருந்து வடியச் செய்து கொண்டிருந்தான் .
என்று எழுதியுள்ளார்.
இன்னும் சிலர் ஆண், பெண் என்ற இரண்டு கூறுகளையும் தம் உடலில் கொண்டிருக்கிறார்களே, அவர்களின் மனவோட்டம் எத்தன்மையதாக இருக்கும்? இந்த நாவலில் உலவும் தூரதேசவாசி இரு உடலாளர்களைச் சந்திக்கும் காட்சியை விவரிக்கும் எழுத்தாளர்,
“ நான் இரு உடலாளர்களின் விசித்திர கதைகளை இந்த நிலவியலில் கேட்டேன் . உருக்களைக் கலைத்துக் கொண்டும் ஞாபகத்தைத் தன் இதயத்தில் ஏந்திய படியும் பிறக்கும் இவர்களின் சுவடுகளைப் பின்தொடர முடியாதவனாக இருந்தேன் . பெண் , ஆண் என்ற பேதம் கலைந்த இவர்கள் இரு நாவு கொண்டவர்கள் போல வேறுவேறு முனைகளில் ஒரே திரவத்தைப் பருகிக் கொண்டிருந்தார்கள் .
என்று உளவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மகாபாரதத்தின் திருப்புமுனையாக அமையும் இடம் பகடைக்களம். அதுதான் அவர்களை வனவாசத்தை நோக்கியும் பின்னர் போர்க்களம் நோக்கி அழைத்துச் செல்கிறது. அதைக் குறிப்புணர்த்தும் விதமாக அந்தக் பகடைக்களத்தைப் பற்றிய வர்ணனையில்,
“ கௌரவசபையை நிர்மாண்யம் செய்திருந்தார்கள் . வசீகரமும் அழகும் கூடிய சபையாக இருந்தது . விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்திருந்தன . யுதிஷ்ட்ரன் அரசரின் அழைப்பை ஏற்று தனது சகோதரர்களோடு வர சம்மதித்திருந்தான் . சகுனியும் துரியோதனனும் சபையின் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் யாவையும் செய்துகொண்டிருப்பதை விதுரன் கண்டு கொண்டிருந்தான் . விதுரன் மனம் முன்கூட்டியே உணர்ந்து கொண்டது . அவன் அந்த சபாவைப் பார்த்தபடியிருந்தான் . கொண்டாட்டமும் அவமானமும் இரட்டையர்போல ஒருவர் தோளில் ஒருவர் கைப்போட்டபடி அந்தச் சபையின் அலைந்து திரிவதை விதுரன் கண்டுகொண்டேயிருந்தான் .”
என்று எழுத்தாளர் காட்டியுள்ளார்.
இந்த நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சந்திப்பு என்று எடுத்துக்கொண்டால் அது அம்புப் படுக்கையிலிருக்கும் பீஷ்மருடன் கர்ணனின் சந்திப்புதான். அதில் இதுநாள் வரை ஒளித்துவைத்த அனைத்து ரகசியங்களும் கசியத் தொடங்குகின்றன.
“ ஓர் இரவில் தனியே புலம்பி சிறகடிக்கும் பட்சியென கர்ணன் அவர் எதிருக்கு வந்து சேர்ந்தான் . பீஷ்மர் தான் மனமறிந்து அவமதித்த வீரர்களில் அவனும் ஒருவன் என்பதை உணர்ந்தவர் போல நிசப்தமாக இருந்தார் . கர்ணன் தனது பிறப்பின் ரகசியம் அறிந்திருந்தான் . தன் ரகசியம் அறிந்த மனிதர் பீஷ்மர் என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது . அவர் ஸ்திரிகளின் மனோலோகம் அறிந்திருக்கக் கூடும் . பீஷ்மர் கர்ணனைத் தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்தார் . கர்ணன் அவரது அவமதிப்பை மறந்திருந்தான் . பீஷ்மர் அவனிடம் , ‘ தான் யுத்தகளம் விலக்கிவிட்டேன் . இனி , யுத்தம் உன் வசம் ’ என்றார் . கர்ணன் அப்போது , அந்த முதிய மனிதனிடம் கேட்க விரும்பியதெல்லாம் , ‘ பீஷ்மரே ! எதற்காக , எதன் பொருட்டு , நீங்கள் இத்தனை அலைக்கழிப்புக் கொள்கிறீர்கள் ?’ என்ற கேள்வியே . அவன் கேட்கும் முன்பே அவர் அதை அறிந்துகொண்டார் போலும் . அவர் கர்ணனின் கண்களை நோக்கியபடி சொன்னார் , “ வாக்கினாலே பீஷ்மர் நடமாடுகிறான் . என் வாக்கின் சுற்று வலைகள்தான் என்னை இந்த நகரத்தோடு பிணைத்திருக்கின்றன . நான் விடுபட முடியாத துயராளி ”. கர்ணன் அவரைப் புரிந்துகொண்டவன் போலச் சொன்னான் , “ இந்த அம்புப் படுக்கை உங்கள் வாழ்வின் துவக்கத்தில் இருந்தே சயனத்தில் பழகிவிட்டிருப்பீர்கள் . ரகசியங்களின் கூர்நுனிகளில்தான் இத்தனை நாட்களும் படுத்திருக்கிறீர்கள் . இந்த சரதல்பத்தின் ஓர் அம்பு நானும்தானே !”
அம்புப் படுக்கையிலிருக்கும் பீஷ்மர் கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியத்தைக் கூறுதல் புதுமையாக உள்ளது.
“ கர்ணா , நீ உன் பிறப்பால் அல்ல ; செயல்களாலே அறியப்படுபவனாகிறாய் . உன்னை அவமதிப்பது நானல்ல . உன்னைச் சுற்றிப் படர்ந்த தனிமை . ராதேயா ! நீ உன்னை எப்போதும் விலக்கிக் கொண்டே வந்திருக்கிறாய் . உன் பிரியம் அளவிட முடியாதது . உன் ஸ்நேகத்தால் பீடிக்கப்பட்ட துரியோதனன் மட்டுமே உன்னை அறிவான் . அவன் உன் பாதங்களைக் கண்டிருக்கிறான் . ராதேயா ! உன் பாதங்கள் உன் தாயின் சாயலைக் கொண்டிருக்கின்றன . அவள் பாதங்களின் மறுதோற்றம் போல உன் கால்விரல்கள் தெரிகின்றன . இதை யுதிஷ்டிரன்தான் என்னிடம் கண்டு சொன்னவன் . அவன் தன் மனத்தால் உன்னை அறிந்திருப்பான் . நீ யாருடைய மகன் என்பது ரகசியமல்ல ; அது ஒளிக்கப்பட்ட நிஜம் ”
என்று எழுத்தாளர் கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியம் முக்கியமான கதைமாந்தர்கள் அனைவருக்கும் முன்பே அறிந்த ஒன்றுதான் என்பதைப் புலப்படுத்திவிடுகிறார். கர்ணனின் பிறப்பு பற்றி அறிந்த அவர்கள் ஏன் மௌனம் காத்தனர்? அந்த ரகசியம் குந்தியின் வாய்வழியாகவே வெளிப்படட்டும் என்பதற்குத்தானா? ஆனால், நாம் இங்குக் கர்ணனின் பிறப்பு குறித்துக் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கும்போது அங்குச் சகுனி பாண்டவர் ஐவரின் பிறப்பு குறித்தும் கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தார். “பாண்டவர்கள் ஐவரும் பாண்டுவின் மகன்கள் அல்லர்; அவர்கள் குந்திபுத்திரர்கள்” என்று அவர் உரக்கக் கூவிக்கொண்டிருந்தார். விதுரர் வழக்கமான தன் சொற்திறத்தால் சகுனியின் குரலை மழுங்கச் செய்துவந்தார். அதனையும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ‘உப பாண்டவம்’ நாவலில் உப பாண்டவர்களும் உப கௌரவர்களும் இடம்பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, மகாபாரதத்தில் உதிரிக் கதைமாந்தர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர். அதுபோலவே, ‘உப பாண்டவம்’ நாவலைப் பற்றி முக்கிய எழுத்தாளர்களும் தேர்ந்த விமர்சகர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளனர். நான் அவற்றை விலக்கி, வாசகர்களும் விமர்சகர்களும், ‘இந்த நாவலைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ‘உப பாண்டவம்’ நாவல் குறித்த இவர்களின் கருத்தை உப வாசகர்களின் கருத்துக்களாகவும் உப விமர்சகர்களின் மதிப்பீடுகளாகவும் நாம் கருதலாம்.
அவந்திகா என்ற வாசகி, ‘குட்ரீடர்ஸ் டாட் காம்’ என்ற தளத்தில் 10.07.2016 ஆம் நாள் ‘உப பாண்டவம்’ பற்றிய எழுதிய குறிப்பு பின்வருமாறு:–
“ பாரதத்தில் சஞ்சயன் பக்கம் சாராதவன். சஞ்சயன் ஒரு போர்ச் சாட்சி. சஞ்சயனைப் போல ஒரு வழிப்போக்கனாய் நாமிருந்து மாயநகரான அத்தினாபுரத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் நிழலைப் போல காண நேரிட்டால் ? ஒரு வழிப்போக்கன் , அவனுடைய மன பிரதிபலிப்பு – இதைத் தாண்டிய எந்த ஆதரவையும் யாருக்கும் நீடிக்கவில்லை எஸ்.ரா. ஒரு பெரும் வெற்றியைத் தாண்டி , இந்த வெற்றியெல்லாம் மாய பிம்பம் என்னும் கோரமான வெறுமையின் முகத்தை எளிமையாகக் காட்டியுள்ளார் எஸ்.ரா. ”
நானறிந்த வரையில், ‘உப பாண்டவம்’ நாவலுக்கு எழுதப்பட்ட மிகச் சுருக்கமான, மிகத் தெளிவான குறிப்பு இது. உண்மைதான். வாசகர்கள் சஞ்சயனின் மனநிலையில் இல்லாமல் இந்த நாவலை அணுகுவது எளிதல்ல. எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் வெறுமையை, குறிப்பாக வென்றவர் மட்டுமே அறியத்தக்க அந்த வெறுமையை இந்த உப பாண்டவத்தின் வழியாக நமக்குக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
இந்த நாவலில் வரும் தூரதேசவாசியையும் அவரின் பயணத்தையும் நாம் சஞ்சயனைப்போல இருந்தால் மட்டுமே உள்வாங்கிக் கொள்ள இயலும்.
– – –
மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன்
நாகிப் மாஃபௌஸ்
(நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி) தமிழில் சா.தேவதாஸ்.

என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன், அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல் நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன்.
சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறது. அது ஃபேரோனிக் நாகரிகம். அடுத்ததிற்கு ஆயிரத்து நானூறு வயதாகிறது. அது இஸ்லாமிய நாகரிகம். உயர்ந்த அறிஞர்களான உங்களிடம் இவ்விரண்டையும் நான் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இப்போது சிலவற்றை நினைவு படுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
ஃபேரோனிக் நாகரிகத்தைப் பொறுத்தவரை, அதன் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும், உருவான பேரரசுகள் பற்றியும் பேசப்போவதில்லை. நல்ல வேளையாக இன்றைய யுகத்தின் மனசாட்சி, இவற்றைக் காலாவதியான, பெருமிதமான சங்கடத்துடன் ஒதுக்கிவிடுகிறது. முதல்முறையாகக் கடவுள் என்றதொரு சக்தியை உணர்ந்து மனிதனுக்கு ஆன்மிக உணர்வு அரும்பியதைப் பற்றியும் பேசப்போவதில்லை. இது ஒரு நீண்ட சரித்திரம், உங்களில் ஒருவர் கூடத் தீர்க்கதரிசியான மன்னன் அகெனேடனைப் பற்றி அறியாதிருக்க மாட்டீர்கள். இந்நாகரிகத்தின் கலை இலக்கியச் சாதனைகளைப் பற்றியோ, புகழ்பெற்ற அதன் அதிசயங்கள், பிரமிட்டுகள், ஸ்பிங்ஸ், கமக்கைப் பற்றியோ கூடப் பேசப்போவதில்லை. இந்நினைவுச் சின்னங்களைப் பார்த்திராதவர்கள்கூட இவற்றைப் படித்தும், இவற்றின் வடிவத்தை, பிரம்மாண்டத்தை அறிந்தும் பிரமித்திருப்பார்கள்.
எனவே ஃபேரோனிக் நாகரிகத்தை ஒரு கதையைப் போல – என் சொந்த வாழ்க்கை என்னை ஒரு கதை சொல்லியாக உருவாக்கியிருப்பதால் – அறிமுகப்படுத்தலாமென்றிருக்கிறேன். இதோ ஒரு பதிவு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வு: பண்டைய ஓலைச்சுவடி ஒன்றில் அந்தப்புரத்துப் பெண்கள் சிலருடன் தனது அரண்மனை ஊழியர்கள் சிலருக்கு தவறான தொடர்பிருப்பதை அறிந்த மன்னன் ஃபேரோ அக்கால வழக்கப்படி அவர்களுக்கு உடனடியாக மரணதண்டனை விதிக்காமல் தேர்ந்த சில அறிஞர்களை அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறான். உண்மையை அவன் அறிய வேண்டுமென்றும் அதன் பிறகே தனது தீர்ப்பை வழங்குவது நியாயமென்றும் அவ்வறிஞர்களிடம் கூறியிருக்கிறான்.
இந்த நடவடிக்கை, என் அபிப்பிராயத்தில் மாபெரும் பேரரசு ஒன்றை நிறுவியதைவிடவும், பிரமிட்களைக் கட்டியதைவிடவும், மகத்தானதாகும். அந்நாகரிகத்தின் மேன்மைக்கு, அக்காலத்தைய செல்வச் செழிப்பைவிட இதுவே சிறந்த அடையாளமாகும். தற்போது அந்த நாகரிகம் மறைந்து போய், பழங்கதையாகிவிட்டது. ஒரு நாள் அம்மா பெரும் பிரமிட்கூட மறைந்து போகலாம்; ஆனால் மனிதகுலத்திற்குச் சிந்திக்கும் திறனும், உயிர்ப்போடிருக்கும் மனசாட்சியும் உள்ளவரை சத்தியமும், நியாயமுமே நிலைத்திருக்கும்.

இவ்விரு நாகரிகங்களின் மடியில் பிறக்க வேண்டியது என் விதியாகி, இவற்றின் அமுத மருந்தி, இவற்றின் கலைகளையும், இலக்கியங்களையும் உண்டு நான் வளர்ந்தேன். அதன் பின் உங்களது செழிப்பான கலாச்சாரத்தின் தேனைப் பருகினேன். இவை எல்லாவற்றிலிருந்தும் கிடைத்த ஊக்கத்தாலும், எனது சுயகவலைகளாலும் நெகிழ்ந்த வார்த்தைகள் என்னிடமிருந்து புறப்படத் துவங்கின. மேன்மை பொருந்திய தங்கள் அகாதெமியால் இவ்வார்த்தைகள் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப் பெறும் அதிர்ஷ்டமும் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான வந்தனங்கள். என் பெயராலும், இவ்விரு நாகரிகங்களை வளர்த்த மாபெரும் ஆத்மாக்களின் பெயராலும் இருக்கட்டும்.
உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்; மூன்றாம் உலகிலிருந்து வருகிற இம் மனிதனுக்குக் கதை எழுதுவதற்கான மன நிம்மதி எப்படிக் கிடைக்கிற தென்று. நீங்கள் கருதுவது முழுக்கச் சரியே.
கடன் சுமையில் அழுந்திப் போயிருக்கிற, செலவினங்களின் அழுத்ததினால், பசியால் அல்லது ஏறக்குறைய பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிற உலகத்திலிருந்து தான் நான் வருகிறேன்.
ஆசியாவில் சிலர் வெள்ளத்தால் அழிவதைப் போல, ஆப்பரிக்காவில் மற்றவர்கள் வறட்சியால் அழிந்து கொண்டிருக்கின்றனர். தென் ஆப்பரிக்காவில் இலட்சக்கணக்கானோர் மனிதர்களாகவே மதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு, இக்காலத்திலும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனர். மேற்குக்கரையிலும், காஸாவிலும் தமது சொந்த மண்ணிலேயே – தமது தந்தையினரின், மூதாதையினரின் மண்ணிலேயே – தங்களது இருப்பைத் தொலைத்து விட்டு இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனர்.
ஆதிமனிதன் முதலில் கண்டறிந்த ஓர் அடிப்படை உரிமைக்காகத்தான் அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமது சொந்த மண்ணில், கெளரவமாக வாழ மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்கிற அடிப்படை உரிமைக்காக. இப்போராட்டத்திற்காக இத்தீரமிக்க மனிதர்கள் – ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் பதிலாகப் பெற்றது உடைந்த எலும்புகளையும், துப்பாக்கி குண்டுகளையும், சிதைக்கப்பட்ட வீடுகளையும், சிறையிலும் முகாம்களிலும் சித்திரவதைக்கப்படுவதையும் ஆகும்.
இவர்களைச் சுற்றிலும் பதினைந்து கோடி அராபியர்கள் நிகழ்வதைப் பார்த்து வேதனையிலும், கோபத்திலும் வெந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதுமே விரைவில் வெடித்துச் சிதறக்கூடிய கொந்தளிப்புப் பிரதேசமாகியிருக்கிறது. நியாய உணர்வும், அமைதிக்கான விழைவும் கொண்ட அறிவாளர்களால் மட்டுமே நிச்சயமானதொரு பிரளயத்திலிருந்து இப்பகுதியைக் காப்பாற்ற இயலும்.
ஆம், மூன்றாம் உலகத்திலிருந்து வருகிற ஒரு மனிதனுக்குக் கதைகள் எழுத மன அமைதி எப்படிக் கிடைக்கும்? அதிர்ஷ்டவசமாகக் கலை தாராளமாகவும், கருணையோடும் இருக்கிறது. பிரச்சினை களற்ற சந்தோஷங்களை மட்டும் கலை ஆகர்ஷிப்பதில்லை; துன்பத்தில் உழல்பவர்களை அது நிராகரித்து ஒதுக்குவதுமில்லை. அவரவர் நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகளை அவர்களுக்கே உரித்தானதொரு தனிமுறையில் வெளிப்படுத்திக் கொள்ளக் கலை அனுமதிக்கிறது.
நாகரிக வரலாற்றின் இந்த அதிமுக்கிய தருணத்தில் மனிதகுலத்தின் துயரக்குரல்கள் பதியப் படாமல் சூன்யமாக மரித்துப் போவதென்பதை நினைத்துப் பார்க்கவே இயலாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது. வல்லரசுகளுக்கிடையிலிருந்த பனிப்போர் முடிந்து விட்ட இப்பொழுதில் தான் உண்மையில் மனிதகுலம் முதிர்ச்சியடைந்திருக்கிறதென்று நம்மால் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது. இத்தருணத்தில் மனித மனம் தன்னிடம் பொதிந்திருக்கும் பேரழிவுக் கூறுகளையும், யுத்த வெறியையும் முற்றாகக் களைந்தெடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது விஞ்ஞானிகள், தொழிற்சாலை கழிவுகள், சுற்றுச்சூழலில் உண்டாக்கும் மாசுகளை அகற்ற முனைவைதப்போல மனித மனத்தின் அறநெறிகளில் பீடித்திருக்கும் மாசுகளையும் அகற்ற வேண்டிய கடமை அறிவு ஜீவிகளுக்கு இருக்கிறது. இந்த யுகத்தின் நல்ல எதிர்காலத்திற்குத் தேவையான தீர்க்க தரிசனமும், தீட்சண்யமான அணுகுமுறையும் நமது நாட்டின் பெருந்தலைவர் களிடமும், பொருளாதார வல்லுநர்களிடமும் தேவையென உரிமையுடன் கேட்கவேண்டியது நமது கடமையாகும்.
பண்டைக்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் தமது தேசத்திற்காக மட்டுமே கவலைப்பட்டு வந்தனர். தமக்கு எதிரான கருத்துடையவர்கள் விரோதிகளாகவும், தமது நாட்டைச் சுரண்ட வந்தவர்களாகவும் கருதிவந்தனர். தமது தற்பெருமைக்கும், தனிப்பட்ட வெற்றிகளுக்கும் தந்த முக்கியத்துவத்தை வேறெந்த மதிப்பீடுகளுக்கும் தரவில்லை. இதற்காகப் பல தர்ம நியதிகளும், மதிப்பீடுகளும் பலியிடப்பட்டன; அறமற்ற பாதைகள் நியாயப்படுத்தப்பட்டன; கணக்கற்ற ஆத்மாக்கள் அழித்தொழிக்கப்பட்டனர். பொய், ஏமாற்று, களவு, துரோகம் போன்றவை மகத்துவத்தின் அடையளாங்களாய் கோலோச்சி வந்தன.
இன்று இத்தகைய பார்வைகளை அவற்றின் அடிப்படைகளிலிருந்தே திசைதிருப்ப வேண்டிய தேவை வந்துவிட்டது. இன்றைய தேசத்தலைவர் என்பவர், அவரது உலகாளவிய பார்வையாலும், மனித குலத்தின் மேல் அவர் கொண்டிருக்கும் பொறுப்புணர்வாலும் மட்டுமே மதிப்பிடப்படுகிறார். முன்னேறிய நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளும் ஒரே குடும்பம்தான். அறிவும், ஞானமும், நாகரிகமும் பெற்றுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இதற்கான பொறுப்பு இருக்கிறது. மூன்றாம் உலகத்தின் சார்பாகக் கூறுகிறேன். அநீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். உமது தகுதிக்கேற்றதொரு பங்கினை நீங்கள் ஆற்றியேயாக வேண்டும். உலகச் சமுதாயத்தின் மேட்டுக் குடியினரான உங்களுக்கு இவ்வுலகத்தின் எத்திசையிலும் இருக்கிற மனிதரோ, தாவரமோ, மிருகமோ புரிகிற தவறுகளில் ஒரு பங்கிருக்கிறது.
உங்களது மன அமைதியை நான் குலைத்து விட்டிருந்தால் தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள் அன்பர்களே! ஆனால் மூன்றாம் உலக நாடு ஒன்றிலிருந்து வரும் ஒருவனிடமிருந்து வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? நிரப்பிவைத்திருக்கும் திரவத்தின் நிறத்தையெல்லவா கண்ணாடிக் கோப்பை பெற்றிருக்கும்? மேலும் மனிதகுலத்தின் அவலங்களை இம்மாமண்டபத்தில் – அறிவியலையும், இலக்கியத்தையும், மென்மையான மனித மதிப்பீடுகளையும் அரியணையில் அமர்த்தி அங்கீகரிக்கும் இம் மகத்தான சபையில் – உங்கள் உயர்ந்த நாகரிக சோலையில் எதிரொலிக்காமல் வேறெங்கே இக்கோரிக்கையை வெளியிடமுடியும்?‘
(அட்சரம் இதழிலிருந்து )
November 14, 2021
கருத்தரங்கில்
நேற்று நடைபெற்ற எனது படைப்புகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். காலை பத்து மணிக்குத் துவங்கிய நிகழ்வு நிறைவுபெற இரவு எட்டுமணியாகிவிட்டது. எனது படைப்புகள் குறித்துப் பேசியவர்கள் ஆழ்ந்து படித்துச் சிறப்பாக உரையாற்றினார்கள். படைப்பின் நுண்மைகளை அவர்கள் எடுத்துக்காட்டிய விதம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

காலை அமர்வில் பேசிய நீதி நாயகம் சந்துரு அவர்கள் இடக்கை நாவல் பற்றிச் சிறப்பாகப் பேசினார். எனது ஆசான் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எனது படைப்புகள் மற்றும் நான் உருவான விதம் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார்.







கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகள் யாவும் ஸ்ருதிடிவி மூலம் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.


















நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்த சுரேஷ்பிரதீப். அகரமுதல்வன். காளிபிரசாத், வசந்தபாலன். சுந்தரபுத்தன். வேல்கண்ணன், பாலைவன லாந்தர், மயிலாடுதுறை பிரபு. கடலூர் சீனு, சுரேஷ் பாபு, சௌந்தர் ராஜன், ராம்தங்கம், கவிதைக்காரன் இளங்கோ ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.
நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த யாவரும் பதிப்பகம் ஜீவ கரிகாலன். நற்றுணை கலந்துரையாடல் அமைப்பின் சௌந்தர்ராஜன். காளிபிரசாத் மற்றும் நண்பர்களுக்கு அன்பும் நன்றியும்
நிகழ்வைத் தொகுத்து வழங்கிய கவிதா ரவீந்திரனுக்கும். ஒளிப்பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ள ஸ்ருதிடிவி கபிலன் மற்றும் சுரேஷிற்கும், நிகழ்விற்காகப் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து கலந்து கொண்ட எனதருமை வாசகர்களுக்கும் மிகுந்த நன்றி
நிவேதனம் அரங்கிற்கும் சிறப்பான மதிய உணவைத் தயாரித்து வழங்கியவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நேரமின்மை காரணமாகக் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவில்லை. வேறு ஒரு நாளில் வாசகர்களுடன் கலந்துரையாடல் மட்டுமே கொண்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு விருப்பமான நண்பர்களை, வாசகர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்தது நிறைவாக இருந்தது.
November 12, 2021
ஒரு நாள் கருத்தரங்கம்
நாளை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நற்றுணை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்விப்புலங்களில் எனது படைப்புகள் குறித்த கருத்தரங்குகள் நிறையவே நடந்துள்ளன. எனது படைப்புகளை ஆராய்ந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆறு பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பொதுத்தளத்திலும் நிறைய விமர்சனக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன.
அத்தனையும் தாண்டி இந் நிகழ்வு எனக்கு விசேசமானது. இதில் உரையாற்றுகிறவர்கள் எனது அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள். தீவிர வாசகர்கள். அவர்களின் மதிப்பீடும் விமர்சனமும் முக்கியமானது.
இந்நிகழ்வை நீதிநாயகம் சந்துரு அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் என்பது பெருமைக்குரியது.
நிகழ்வு நடைபெறும் இடம்
நிவேதனம் அரங்கு.
234, வெங்கடாசலம் தெரு (, near yellow pages)
மயிலாப்பூர்
(டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக வந்தால் yellow pages bus stop வரும். அதன் பக்கத்து வீதி )
உதவிக்கு அழைக்கவும்:
90431 95217
90424 81472
நேரம் :
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
14/ 11/21
கலைஞர் பொற்கிழி விருது
நாளை (13/11/2021) மாலை பபாசி வழங்கும் கலைஞர் பொற்கிழி விருது விழா நடைபெறவுள்ளது.



கடந்த ஆண்டு விருதுவிழா நடைபெறாத காரணத்தால் 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு இணைந்து நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் 2021ம் ஆண்டிற்கான உரைநடை பிரிவில் விருது பெறுகிறேன்
நாள் 13.11.2021
நிகழ்வு நடைபெறும் இடம்
வாணி மஹால்
103 ஜி.என். செட்டி சாலை தி.நகர். சென்னை 17
நேரம் மாலை 6 மணி
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

