S. Ramakrishnan's Blog, page 112

November 2, 2021

தேர் சிற்பங்கள்

தேவகியின் தேர் என்றொரு சிறுகதையை ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கதையில் ஊர் ஊராகச் சென்று தேரைப் புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிரான்சு நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞன் தமிழகத்திலுள்ள அரிய தேர்சிற்பங்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பான். அவன் தேவகியின் ஊருக்கு வந்து தங்கிய போது நடந்த அனுபவத்தைக் கதை விவரிக்கிறது.

அதே போல தேர் சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது. சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள் என்ற அக்கட்டுரை சிறப்பானது. அதிலுள்ள புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். மிகவும் உயிரோட்டமாக சிற்பங்கள் படமாக்கபட்டிருக்கின்றன.

எனது கதை அப்படியே நிஜமானது போல உணர்ந்தேன். இந்தக் கதையை எழுதும் போது அப்படி ஒரு புகைப்படக்கலைஞர் இருப்பார் என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது.

நான் நிறைய கோவில் தேர்களைக் கண்டிருக்கிறேன். அழகான சிற்பங்கள் கொண்ட தேரை பொதுமக்கள் எவரும் காணமுடியாதபடி தகரம் அடித்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருவிழா அன்று தான் தேர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரும். தேர்சிற்பங்களைச் செய்தவர்கள் மகத்தான கலைஞர்கள். பேரழகுடன் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள்.

தேர் பார்க்கும் அனுபவத்தை வண்ணதாசனின் நிலை கதை மிக அழகாக சித்தரிக்கிறது. வெளியாகி எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் நினைவில் ஒளிரும் கதையது.

நீலமலை என்றொரு ஒரிசா நாவல் பூரி ஜெகனாதர் கோவில் தேரோட்டத்தைப் பற்றியது. சுரேந்திர மொகந்தி எழுதியிருப்பார். மிகச் சிறந்த நாவல். இப்போது அந்த நாவல் அச்சில் இல்லை. ஒரு வேளை நூலகத்தில் கிடைத்தால் படித்துப் பாருங்கள். ஒரு ரதயாத்திரையின் பின் எவ்வளவு சரித்திரம் ஒளிந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். ( Nila Saila By Surendra Mohanty )

மதுரை சித்திரை திருவிழாவிற்கும் பூரி ஜெகனாதர் கோவில் தேரோட்டத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

தேர் திருவிழாவில் தேர் பார்ப்பதற்காக வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களும், ஊரின் கொண்டாட்டமும் மனதில் பசுமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

அண்ணாந்து பார்க்கும் தேருக்கும் ஒரு நாள் தான் அலங்காரம். கொண்டாட்டம். மற்ற நாட்களில் கால்கள் கட்டப்பட்ட கழுதை மட்டுமே அதையொட்டி நின்றிருக்கும். சிறார்கள் சுற்றி விளையாடுவார்கள். சூரியன் உச்சியில் நின்று வேடிக்கை பார்க்கும். பௌர்ணமி இரவில் தனித்திருக்கும் தேரைக் காண அருகில் செல்வேன். அந்த நெருக்கம் சொல்லில் அடங்காதது. தேரின் சக்கரங்களை எப்போதும் வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன். கண் முன்னே நமது கலைச்செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. உன்னதமான விஷயங்களை போற்றிப் பாதுகாக்க நமக்குத் தெரியவில்லை.

வீதியில் தேர் வருவதைக் காண மாடியில் நின்றிருந்தவர்கள் இன்று தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக் கொண்டால் போதும் என்கிறார்கள். ஆட்கள் வடம் பிடித்து இழுத்த காலம் போய் இயந்திரம் இழுத்துவருகிறது. தேரோட்டம் என்பது ஆயிரம் நினைவுகளின் அடையாளம்.

தேர் வரும் போது வீதிகள் அகலமாகிவிடுகின்றன. தேர் சென்றவுடன் வீதி சுருங்கிவிடுகிறது.

ஒவ்வொரு தேரும் ஆயிரம் கதைகளின் பெட்டகம். நினைவில் அதன் சக்கரங்கள் உருண்டபடியே உள்ளன.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 08:05

November 1, 2021

புகையில்லாத தீச்சுடர்

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றை பி.கே. சிவகுமார் தமிழாக்கம் செய்து திண்ணை இதழில் வெளியிட்டிருக்கிறார். Commentaries on Living தொகுதியில் உள்ள சிறு கட்டுரையது. 2002ல் வெளியாகியுள்ளது

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையை மிகச் சிறப்பாக , நுட்பமாகச் சிவக்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. பி.கே.சிவக்குமாருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

சிறப்பான மொழியாக்கத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிப்பது மிக நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது.

பி.கே.சிவக்குமார் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தனியே நூலாக வெளியிடவில்லை. ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லையே என்னவோ. இந்த மொழியாக்கத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி நிறுவனமே தனி நூலாக வெளியிடலாம்.

பொறாமையைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்திச் சொல்லும் இந்தக் கட்டுரை அழகாகத் துவங்குகிறது.

எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில் , அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன.

சிறந்த புனைகதையின் துவக்க வரியைப் போலிருக்கிறது.

வெள்ளைச்சுவரின் மீது படரும் வெயிலை அவர் எவ்வளவு அழகாக வாழ்க்கையின் போக்குடன் இணைத்துவிடுகிறார் என்பதைக் கட்டுரையை வாசித்து முடிக்கும் போது உணர முடிகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் ஒவ்வொரு வரியும் ஒரு காட்சியாக விரிகிறது.

தாயின் அனுமதியோ , வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், ‘இங்கே என்ன நடக்கிறது ‘ என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார்.

எல்லாக் குழந்தைகளையும் போலவே , சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார் .

என்ற ஜேகேயின் வரியில் குழந்தையின் இயல்பு அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. உலகைக் கவனித்துக் கொண்டும் அதே நேரம் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருப்பது தான் பால்யத்தின் சிறப்பு. அந்தச் சிறுமிக்கு உலகம் புதிதாகவும் குழப்பமானதாகவும் இருக்கிறது.  இப்போது தான் விரிந்த ஒரு மலர் சூரியனைக் காணுவது போல வியப்புடன் அவரைக் காணுகிறார். தண்ணீர் ஒரு குழந்தையை எதிர்கொள்வது போலவே அவரும் எதிர்கொள்கிறார்.

ஒளி படைத்த சிறுமியின் கண்கள் – அழுவதா , சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று – என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது.

குறையேதும் இல்லாத தூய்மையும் , அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் – எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல – தவிர்க்க இயலாதவை.

எனக் கட்டுரை நீள்கிறது.

சுவரின் மீது வெயில் விழுவது என்பது வெறும் நிகழ்வில்லை. ஒரு வகை அனுபவம். ஒருவகை அடையாளம். தவிர்க்க முடியாதபடி நடக்கும் இயல்பான செயல். அதன் தாக்கத்தை நாம் உடனே கணித்துவிட முடியாது

அந்தச் சிறுமி பெறப்போகும் கல்வியும் , அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் – வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி

நுண்ணறிவின் மூலம் துயர்களை , வலிகளைக் கடந்து போய்விட முடியும் என்ற கிருஷ்ணமூர்த்தியின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.

நுண்ணறிவை எது உருவாக்குகிறது

எதன்வழியே ஒருவர் தனது நுண்ணறிவைப் பெற இயலும். மதிப்பெண்ணை மட்டுமே முதன்மையாகக் கொண்ட கல்வியால் இது சாத்தியமில்லை. வெறும் போதனைகளால் இதை சாத்தியப்படுத்த முடியாது.

புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு இவ்வுலகில் மிகவும் அரிதானது.

அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே – நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் – எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை .

எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்திப் புகையில்லாத தீச்சுடர் போன்ற அன்பு என்ற அழகிய , கவித்துவமான படிமம் ஒன்றை முன்வைக்கிறார்.

அன்பு குறித்து உலகில் இதுவரை பேசப்பட்டதெல்லாம் வெறும் புகை தானா. புகையில்லாத சுடர் ஏன் சாத்தியமாகவில்லை. அன்பு என்பது கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒரு பொருளாக ஏன் மாறியது.

அன்பெனும் சுடரின்றி , வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை எனும் கிருஷ்ணமூர்த்திப் புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தப்பட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்கனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.

இதை வாசிக்கும் போது நாம் அறிந்து கொள்வது புகையைப் பற்றியோ , சுடரைப் பற்றியோ அல்ல, மாறாக அன்பின் தூய இயல்பைப் பற்றி அறியத் துவங்குகிறோம்.

இந்தக் கட்டுரையின் வழியே நாம் புகையில்லாத தீச்சுடரைப் பற்றி எண்ணத் துவங்குகிறோம். அதை அடையாளம் காணவும் வெளிப்படுத்தவும் முயலுகிறோம்.

இந்தக் கட்டுரையில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் கிருஷ்ணமூர்த்தி மடியில் படுத்துறங்கும் முன்னறியாத அந்தச் சிறுமியின் நம்பிக்கை

அவள் ஒரு மரநிழலில் ஓய்வு கொள்வது போல அவரது இருப்பையும் இயற்கையின் அங்கமாக மாற்றிவிடுகிறாள்

மர நிழலுக்கு இளைப்பாறும் மனிதனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லையே.

இதை ஜே கிருஷ்ணமூர்த்தி நன்றாகவே உணர்ந்திருக்கிறார். வழிகாட்டுதலும் வழிகாட்டுதல் இன்றியும் சிறுமி அவரை நோக்கி வருகிறாள். அப்படித் தான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை அணுக முடியும்.

அச்சிறுமி அவரது கைகளை விரித்து வியப்புடன் பார்க்கிறாள். ஒரு மலரைக் காணும் சந்தோஷம் போலவே அந்த விளையாட்டுச் சந்தோஷமளிக்கிறது. தண்ணீர் ஒரு சிறுமியை வரவேற்பது போலவே அவரும் வரவேற்கிறார். தன்னுள் அனுமதிக்கிறார். ஒய்வில் ஒரு முழுமையை காணுகிறார்.

சுவரில் படரும் வெயிலின் காட்சி மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.

புகையில்லாத தீச்சுடரை இயற்கையிலும் கலைகளிலும் எளிதாகக் காண முடிகிறது. மனிதர்களிடம் வெளிப்படும் அன்பில் தான் புகை அதிகமாகிச் சுடர் தெரியாமல் போய்விடுகிறது. ஆனால் சிலரது அன்பில் நாம் காணுவது புகையில்லாத சுடரை. ஒரு மலர் நறுமணத்தை இயல்பாக தன்னிடமிருந்து வெளிப்படுத்துவது போல அவர்கள் அன்பின் சுடரை ஒளிரச்செய்கிறார்கள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு கவிஞனின் குரலில் பேசுவதாகவே நான் உணர்கிறேன். கட்டுரையை வாசித்து முடித்தபிறகு அந்த வெயிலும் சிறுமியும் மனதில் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 01:38

October 29, 2021

அழைப்பிதழ்

நவம்பர் 14 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகம் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் அமைப்பு இணைந்து நடத்துகிறது.

இந்த நிகழ்வு மயிலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் Yellow Pages அருகில் அமைந்துள்ளது. (234, Venkatachalam St, Dwarka Colony, Mylapore, Chennai – 600004)

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

முகக்கவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2021 22:15

36 புகைப்படங்கள்

The Last Roll Of Kodachrome என்ற ஆவணப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான ‘ஸ்டீவ் மெக்குரி’ கடைசிக் கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி 36 புகைப்படங்களை எடுப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது

படச்சுருள் தயாரிப்பில் கோடக் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. டிஜிட்டில் கேமிரா வந்தபிறகு படச்சுருளின் தேவை வெகுவாகக் குறைந்து போனதால் அந்நிறுவனம் தனது படச்சுருள் தயாரிப்பை 2009 ஜுன் 22ல் கைவிட்டது. கடைசியாக இருந்த ஒரு படச்சுருளை ஸ்டீவ் மெக்குரியிடம் கொடுத்து அவர் விரும்பும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னது நிறுவனம்.

கடைசி ரோலில் எந்த 36 காட்சிகளைப் படம் பிடிப்பது என்பது அவர் முன்னிருந்த பெரிய சவால். கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் புகைப்படங்களை எடுத்தவர் மெக்குரி. அதுவும் நேஷனல் ஜியோகிராபி இதழில் வெளியான அவரது புகழ்பெற்ற புகைப்படங்கள் கோடக்குரோமில் படம்பிடிக்கப்பட்டவையே

உண்மையில் ஒரு புகைப்படக்கலைஞருக்கு இது ஒரு அரிய பரிசு.

ஸ்டீவ் எதைத் தேர்வு செய்து படம்பிடிக்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவருடன் ஒரு படக்குழுவும் பயணம் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த 36 புகைப்படங்களை எடுப்பதற்காக 30,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறார்.

அவர் தேர்வு செய்து எடுத்த புகைப்படங்களுக்குப் பின்னால் அவரது கடந்தகாலம் ஒளிந்திருக்கிறது. அது தான் என்னை அதிகம் கவர்ந்தது. ஒரு மனிதன் தன்னுடைய நினைவில் எவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறான். மீண்டும் புகைப்படம் எடுக்கச் சொன்னால் எதைத் தேர்வு செய்வான். அதன் காரணம் என்னவென்பது எளிதில் விளக்கிச் சொல்ல முடியாத புதிரே

இந்த ஆவணப்படத்தில் ஸ்டீவ் மெக்குரி தான் எடுப்பது கடைசி 36 படங்கள் என்ற அழுத்தம் இல்லாமல் இயல்பாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். இந்தப் புகைப்படப் பயணத்தில் அவர் எடுத்த முதல் புகைப்படம் ஹாலிவுட் நட்சத்திரம் ராபர்ட் டி நீரோ. அவரை ஐந்து புகைப்படங்கள் எடுக்கிறார். உலகின் சிறந்த புகைப்படக்கலைஞராக இருந்த போதும் ஒரு கிளிக் போதும் என்று முடிவு செய்யவில்லை. சரியான கோணத்தில் இரண்டுமுறை ஒரே காட்சியைப் பதிவு செய்கிறார்

புகைப்படக்கலைஞர்களுக்கு இந்தியா காட்சிகளின் மாயநிலம். இதன் மனிதர்களும் இயற்கையும் பெருநகர வாழ்க்கையும் வியப்பூட்டுபவை. ஸ்டீவ் மெக்குரி இயற்கைக் காட்சியைப் பதிவு செய்ய முற்படவில்லை.

அவருக்குப் பிடித்தமான இந்தியாவிற்கு வருகை தந்து அமிதாப்பச்சன், அமீர்கான், நந்திதா தாஸ் , சேகர் கபூர் போன்ற திரை ஆளுமைகளைப் படம் எடுக்கிறார். இந்தத் தேர்வுகளுக்கு அவர் சரியான காரணம் சொல்வதில்லை. தாராவியில் ஒரு புகைப்படமும் ராஜஸ்தானிலுள்ள ராப்ரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழுவினரையும் படம் பிடிக்கிறார். வித்தியாசமான முகங்கள் தான் அவரைக் கவருகின்றன.

தனது 36வது புகைப்படத்தைப் பார்சனஸில் உள்ள உள்நாட்டு யுத்தத்தில் இறந்தவர்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் எடுத்திருக்கிறார்.

யோசித்துப் பார்த்தால் இந்த 36 புகைப்படங்களை எடுப்பதற்கு அவர் செலவு செய்துள்ள தொகை மிகப்பெரியது. கோடக் படச்சுருளில் அவர் எடுத்த 36 புகைப்படங்களும் டெவெலப் ஆகி வந்ததும் அதன் தனித்துவ அழகில் மயங்கி, டிஜிட்டிலை விடவும் தான் படச்சுருளில் படமாக்கவே விரும்புகிறேன் என்கிறார் மெக்குரி.

இந்த ஆவணப்படத்தின் பின்னே ஒரு திரைப்படத்திற்கான கதைக்கரு ஒளிந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சிறுநகரில் ஸ்டுடியோ நடத்தும் ஒரு வயதான போட்டோகிராபர் இது போலத் தனது கடைசி படச்சுருளில் யாரைப் படம் பிடித்தார். அதற்காக எங்கே பயணம் செய்தார் என்பதை ஒரு திரைக்கதையாக எழுதினால் அழகான படம் ஒன்றை உருவாக்க முடியும். மலையாளத்தில் இப்படியான கதைகள் தான் படமாக்கப்படுகின்றன

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2021 03:15

October 28, 2021

அஞ்சலி

பெருமதிப்பிற்குரிய தோழரும் மதுரைக்கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் இன்று காலமானார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அறிவேன். எளிமையும் நேர்மையும் கொண்ட அற்புதமான தோழர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பதவியிலிருந்தார். அந்த நாட்களில் மதுரை மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்.

நன்மாறனின் மேடைப்பேச்சில் நகைச்சுவையும் சிந்தனை தெறிப்பும் ஒன்று கலந்திருக்கும். அவரை மேடைக் கலைவாணர் என்று மக்கள் பாராட்டினார்கள்.

நல்ல இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்தவர். பலமுறை எனது கட்டுரைகளை வாசித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். எனது புத்தக விழாக்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அவர் காட்டிய அன்பும் நேசமும் நிகரற்றவை.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த நாட்களிலும், பதவியில் இல்லாத போதும் அவர் மதுரைக்குள் டவுன் பஸ்ஸிலும் ஆட்டோவிலும் தான் பயணித்தார். எளிமையான உடை. இனிமையான பேச்சு. எவரையும் ஒரு சுடுசொல் சொன்னது கிடையாது. தேநீர்க் கடைகளில் அமர்ந்து மக்கள் குறை தீர்க்கும் பண்பு. எந்த இரவிலும் அவரைத்தேடி வந்து மதுரை மக்கள் தனது குறைகளைத் தெரிவிக்க முடியும். வெளியூருக்குப் பயணம் செய்யும் போதும் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்து எளிமையின் நாயகனாக விளங்கினார்.

நன்மாறன் தனக்கென எதையும் சேர்த்து வைக்கவில்லை. கடைசி வரை. வாடகை வீட்டில் தான் குடியிருந்து வந்தார். கஷ்டமான சூழலில் கூடத் தனக்காகவோ, தனது பிள்ளைகளுக்காகவோ எவரிடமும் எந்த உதவியினையும் அவர் எதிர்பார்த்துப் போனது கிடையாது. உடல் நலிவுற்ற நிலையிலும் மதுரை அரசுப்பொது மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்கிறார். இப்படி ஒரு அரசியல் தலைவர் இருக்கமுடியுமா எனத் தமிழகமே வியக்கும்படியாக இருந்தது அவரது வாழ்க்கை.

பொதுவாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதரின் மறைவிற்கு என் கண்ணீர் அஞ்சலிகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2021 09:20

அறியப்படாத மார்க்வெஸ்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் வாழ்க்கை வரலாற்றை அவரது நண்பர்கள், ஊர்மக்கள். பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நேர்காணல் வழியாகத் தொகுத்திருக்கிறார் சில்வானா பேட்னார்ஸ்டோ.

பத்திரிக்கை ஒன்றிற்கான சிறிய நேர்காணலாகத் துவங்கி நூற்றுக்கணக்கானவர்களைத் தேடிச் சென்ற இலக்கியப் பயணமாக மாறியிருக்கிறது.

மார்க்வெஸ் தனது தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலை மரியா லூயிசா எலியோ மற்றும் ஜோமி கார்சியா அஸ்காட்டிற்குச் சமர்பணம் செய்திருக்கிறார். சில்வானா அவர்களைத் தேடிச் சென்று நேர்காணல் செய்திருக்கிறார். அவர்களின் நினைவு வழியாக மார்க்வெஸின் அறியப்படாத முகத்தைக் கண்டறிந்துள்ளார்.

Living to Tell the Tale என்ற தலைப்பில் மார்க்வெஸே தனது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியை எழுதியிருக்கிறார். ஆகவே இந்த நூலுக்கு Solitude & Company எனத் தலைப்பிட்டதாகச் சில்வானா கூறுகிறார். இந்தத் தலைப்பு தனது திரைப்பட நிறுவனம் ஒன்றுக்காக மார்க்வெஸ் வைத்திருந்த பெயர்.

மார்க்வெஸின் பிறந்த தேதி பதிவேட்டில் ஒருவிதமாகவும் உண்மையில் ஒரு விதமாகவும் உள்ளது. அந்தக் காலத்தில் பள்ளியில் சேரும்போது இப்படி வேறு ஒரு தேதி கொடுத்துச் சேர்த்துவிடுவது வழக்கம். ஆகவே உண்மையான பிறந்த தேதி எது என்பதைச் சில்வானா விசாரித்துக் கண்டறிந்துள்ளார்

தாத்தா வீட்டில் எட்டுவயது வரை மார்க்வெஸ் வளர்க்கப்பட்டவர் என்பதால் அவரது அண்டை வீட்டில் வசித்தவர்கள். அந்த ஊர்வாசிகள். தாத்தா குடும்பத்தின் நண்பர்கள் எனப் பலரையும் சில்வானா சந்தித்து உரையாடியிருக்கிறார்.

மார்க்வெஸின் தாத்தா வீட்டில் மின்சாரம் கிடையாது. அந்த நாட்களில் அரகாடகாவில் மின்சார வசதி செய்யப்படவில்லை. ஆகவே பலரும் மெழுகுவர்த்திகளையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் பயன்படுத்தினார்கள். மின்சாரம் வராத நாட்களில் வாழ்ந்தவர்களின் கற்பனையும் பயமும் விநோதமாக இருக்கும் என்கிறார் சில்வானா.

அது உண்மை என்பதை நானே உணர்ந்திருக்கிறேன்

எனது பால்யத்தில் கிராமத்தில் மின்சார வசதியில்லாத வீடுகள் நிறைய இருந்தன. எனது பள்ளி நண்பன் வீட்டில் காடா விளக்கு தான் எரிவது வழக்கம். அவனது வீட்டைத் தேடிப் போகும் போது தெரு இருண்டு போயிருக்கும். கிராமத்தினுள் கவியும் இரவு அடர்த்தியானது.

அந்த இருட்டு பழகிப் போன கண்களுடன் அதற்குள்ளாகவே வீட்டு வேலைகள் செய்வார்கள். சமையல் நடக்கும். சோறு தயாராவதற்குள் பையன்கள் உறங்கியே விடுவார்கள்.

சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் மனிதர்கள் அழகாகத் தோன்றுவார்கள். மின்சாரம் வந்தபிறகு அந்த அழகு காணாமல் போய்விட்டது.

மார்க்வெஸின் பால்ய காலம் அவரது எழுத்திற்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருக்கிறது. தாத்தாவிடம் வளரும் பிள்ளைகள் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பெற்றோருடன் வளரும் பிள்ளைகள் அனுபவிப்பதில்லை.

சேவல் சண்டையில் ஆர்வம் கொண்ட மார்க்வெஸின் தாத்தா அவரது கதையில் மறக்கமுடியாத கதாபாத்திரமாகத் தோன்றுகிறார்.

சிறுவயதில் மரங்களைப் பார்க்கும் போது அது பிரம்மாண்டமாகவும் விநோதமாகவும் தோற்றமளிக்கும். ஆனால் அதே மரங்களை இருபது வயதில் காணும் போது இதைக் கண்டா ஆச்சரியம் அடைந்தோம் என்று தோன்றும். பால்ய வயது இப்படி விநோத மயக்கங்களால் நிரம்பியது.

யானையைப் போல மார்க்வெஸ் நினைவாற்றல் கொண்டிருந்தார். அவருக்குப் பால்ய வயதில் நடந்த எல்லா நிகழ்வுகளும் துல்லியமாக நினைவிலிருந்தன என்கிறார் எட்வர்டோ மார்சலெஸ்.

மார்க்வெஸ் பார்த்த முதல் திரைப்படம் எது. அதை எங்கே பார்த்தார் என்பதைக் கூடச் சில்வானா கண்டறிந்து எழுதியிருக்கிறார். பல்வேறு நினைவின் சதுரங்களைக் கொண்டு மார்க்வெஸின் உருவத்தை உருவாக்கிக் காட்டுகிறார் சில்வானா.

மார்க்வெஸின் நாவல்களில் உள்ள குறியீடுகளைத் திறக்கும் சாவி தன்னிடம் உள்ளதாக அவரது அம்மா கூறுவது வழக்கம். காரணம் எந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தையும் நிஜத்தில் அவர் யார் என்று மார்க்வெஸின் அம்மா உடனே சொல்லிவிடுவார்.

யதார்த்தவாத கதைகளில் தான் உண்மை மனிதர்கள் அப்படியே சித்தரிக்கப்படுவது வழக்கம். ஆனால் மாய யதார்த்தக் கதைகளிலும் நிஜமான மனிதர்களே கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்கள் என்பது வியப்பானதே.

பால்சாக்கையும் வில்லியம் பாக்னரையும் விரும்பிப் படித்த மார்க்வெஸ் ரஷ்ய இலக்கியவாதிகளிடமிருந்தே சொந்த ஊரின் வாழ்க்கையை நுட்பமாகக் காணத்தெரிந்தால் அதற்குள்ளாகவே சகல விஷயங்களும் அடங்கியிருப்பதை அறிய முடியும் என்பதை அறிந்திருக்கிறார்.

உண்மையில் ஒரு திரைப்பட இயக்குநராகவே மார்க்வெஸ் விரும்பினார். பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய காலத்திலே சினிமா மீது தீவிர விருப்பம் கொண்டு திரைப்பள்ளிகளில் குறுகிய கால வகுப்பில் சேர்ந்து திரைக்கலை பயின்றிருக்கிறார். நேரடியாகத் திரைப்படங்களில் பணியாற்றியதும் உண்டு. அவரது கதைகள் படமாக்கப்பட்டதே அன்றி அவர் திரைப்பட இயக்குநராகவில்லை. ஆனால் தற்போது அவரது மகன் ஹாலிவுட்டில் திரைப்பட இயக்குநராகப் பணியாற்றுகிறார்

மார்க்வெஸின் மனைவி மெர்சிடிஸை பதின்வயதிலிருந்தே அவருக்குத் தெரிந்தது. மெர்சிடிஸிற்க்கு பதினோறு வயதாக இருந்தபோது ஒரு நாள் அவளைத் தேடி சென்றார் மார்க்வெஸ். அவள்  தந்தையின் பார்மசி ஷாப்பில் இருந்தாள். அவளிடம் நான் பெரியவனாகி உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லியிருக்கிறார்.

பதின்வயதில் துவங்கிய அந்தக் காதல் 1958ல் திருமணமாக நிறைவு பெற்றது. பாரீஸில் பத்திரிக்கையாளராக மார்க்வெஸ் வசித்த நாட்களில் அவரது அறையில் மெர்சிடிஸின் புகைப்படம் மட்டுமே இருந்திருக்கிறது. மெர்சிடிஸின் தந்தை மார்க்வெஸ் குடும்பத்தை விடவும் வசதியானவர். அவரது மூதாதையர்கள் துருக்கியில் வாழ்ந்தவர்கள். ஆகவே அந்தக் கலப்பு அவர்கள் ரத்தவழியாகத் தொடர்ந்தது.

One Hundred Years of Solitude நாவலை மார்க்வெஸ் எழுதிக் கொண்டிருந்த நாட்களில் வாரம் தோறும் தனது நண்பர் இம்மானுவேல் கார்பல்லோவை அழைத்துக் கையெழுத்துப் பிரதிகளை வாசிக்கச் செய்வது வழக்கம். அவர் தான் இந்த நாவலின் முதல் வாசகராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மார்க்வெஸ் கார்பல்லோவ சந்தித்து நாவலின் பிரதிகளைத் தந்து வாசிக்க வைத்திருக்கிறார். சிறுதிருத்தங்களைச் சொன்னதைத் தவிர வேறு எதையும் நான் சொல்லவில்லை. நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்கிறார் இமானுவேல்.

இந்த நாவலை எழுதுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் மார்க்வெஸ். அதன் உதவியைக் கொண்டே நாவலின் பல்வேறு இனங்கள். இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

One Hundred Years of Solitude நாவல் ஒரு நதியைப் போல மகாந்தோவின் நிலப்பரப்பில் ஒடிக் கொண்டிருக்கிறது. இந்த நாவலை வாசிப்பதன் வழியே நிலத்தின் தொன்மை நினைவுகளை, ஊரின் விசித்திர மனிதர்களை, காலமாற்றம் ஏற்படுத்திய அகபுற விளைவுகளைத் துல்லியமாகக் காணமுடிகிறது. மார்க்வெஸ் எழுத்தின் வழியே ஒரு மாயநதியை உருவாக்கியிருக்கிறார் என்பது தான் சாதனை என்கிறார் பாட்ரிசியா

மார்க்வெஸ் நோபல் பரிசு பெறுவதற்காக ஸ்வீடன் சென்ற போது கொலம்பியாவிலிருந்து நடனக்கலைஞர்கள். இசைக்கலைஞர்கள். நண்பர்கள் புகைப்படக்கலைஞர்கள். குடும்ப உறுப்பினர்கள் என 150 பேர் கொண்ட குழு விழாவில் கலந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்காகத் தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களின் மொத்த செலவினையும் கொலம்பியா அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது

மார்க்வெஸிற்கு நடந்த கொண்டாட்டங்களைக் கண்ட ஸ்வீடிஷ் பத்திரிக்கைகள் இதுவரை நோபல் பரிசு பெற்ற எவரும் இப்படிக் கொண்டாடப்பட்டதில்லை என்று வியந்து எழுதியிருக்கிறார்கள்.

ஒரு எழுத்தாளராக மார்க்வெஸ் போலச் சகல கௌரவமும் அங்கீகாரமும் விருதுகளும் பெற்ற இன்னொரு எழுத்தாளரைக் காணமுடியாது. இன்று அவர் லத்தீன் அமெரிக்காவின் கலாச்சாரப் பிம்பமாக மாறியிருக்கிறார். அவரது சொந்த ஊர் சுற்றுலா ஸ்தலமாக மாறியுள்ளது. உலகமெங்குமிருந்து பயணிகள் அதைத் தேடி வந்து பார்க்கிறார்கள். அவரது பிறந்தநாளில் ஒன்றுகூடி அவரது கதைகளை வாசிக்கிறார்கள்.

கொலம்பியாவின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து உலகின் ஒப்பற்ற எழுத்தாளராக உருமாறியது வரையான அவரது வாழ்க்கை பயணத்தைப் பலரது நினைவுகளின் வழியே இந்நூலில் தெரிந்து கொள்கிறோம்.

உண்மையில் அவரது நாவலை விடவும் அதிகத் திருப்பங்கள் கொண்டதாக அவரது வாழ்க்கை உள்ளது. ஏதோ ஒரு மாயக்கம்பளம் அவரைத் தாங்கிக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவரச் செய்திருக்கிறது

அரகாடகாவில் வசித்த மார்க்வெஸ் நோபல் பரிசு வரை சென்றபோது ஏன் இந்திய எழுத்தாளர்களால் முடியவில்லை. முக்கியக் காரணம் அவர்களை முன்னெடுத்துச் செல்லும் கல்வித்துறை, கலாச்சார அமைப்புகள் இல்லை. கொலம்பியா தனது தேசத்தின் முக்கியப் படைப்பாளி என மார்க்வெஸை முன்னிறுத்தியது போல இந்தியாவில் எவருக்கும் நடைபெறவில்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வசித்த லத்தீன் அமெரிக்கப் பேராசிரியர்கள். விமர்சகர்கள். மொழிபெயர்ப்பாளர்கள் இது போன்ற படைப்பாளிகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைத் தனது கடமையாகக் கருதினார்கள். முன்னணி பதிப்பகங்கள் இதற்குத் துணை நின்றன. ஆனால் இந்திய எழுத்தாளனின் எல்லை என்பது அவனது மாநிலத்தினைத் தாண்டுவதற்குள் அவனது ஆயுள் முடிந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதுகிறவர்கள் மட்டுமே சர்வதேச கவனத்தையும் விருதுகளையும் பெறமுடிகிறது.

இந்தியாவில் நோபல் பரிசிற்கு தகுதியான படைப்பாளிகள் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் கொண்டாடப்பட வேண்டிய முக்கிய படைப்புகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் சந்தையால் புத்தகங்களின் விதி தீர்மானிக்கப்படும் சூழலில் இவை அறிந்தே புறக்கணிக்கபடுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசிற்கான பட்டியலில் யார் இருக்கிறார்கள் என்று விவாதிக்கும் இந்திய ஆங்கில இதழ்கள் எந்த இந்திய எழுத்தாளர் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று எழுதுவதில்லை. யாரை தாங்கள் முன்னிறுத்துகிறோம் என்று அறிமுகம் செய்வதில்லை. தமிழில் நோபல் பரிசு பெற்றது ஒரு செய்தி மட்டுமே. அதுவும் சம்பிரதாயமான வாழ்த்துகள் மற்றும் அறிமுகத்தை தாண்டி எதுவும் நடைபெறுவதில்லை.

சீனாவும் ஜப்பானும் இது போன்ற சூழலிலிருந்த போது தானே முனைந்து தங்களின் சமகாலப் படைப்பாளிகளைச் சர்வதேச அரங்கில் கவனம்பெற பல்வேறு வழிகளைக் கையாண்டன. பெரும் தொழில் நிறுவனங்கள் இதற்கான பொருளாதார உதவிகளைச் செய்தன. இன்று சர்வதேச இலக்கிய அரங்கில் சீன ஜப்பானியப் படைப்புகள் தனியிடம் பிடித்துள்ளன. உலகின் எந்த இலக்கிய விருதாக இருந்தாலும் அதன் நெடும் பட்டியலில் சீன ஜப்பானியப் படைப்புகள் இல்லாத பட்டியலே இல்லை.

லத்தீன் அமெரிக்க முக்கியப் படைப்பாளிகள் பலரும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளர் கூட ஸ்பானிய இலக்கிய உலகிற்கு அறிமுகமாகவில்லை. அவர்கள் அறிந்த ஒரே இந்திய இலக்கிய ஆளுமை தாகூர் மட்டுமே.

One Hundred Years of Solitude நாவல் எழுதுகிற நாட்களில் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மாதம் தோறும் கடன் வாங்கி வாழ்ந்திருக்கிறார். இன்று அவருக்குக் கோடி கோடியாகச் சொத்துகள் இருக்கின்றன. சொந்தமாக ஒரு பத்திரிக்கை இருக்கிறது. நோபல் பரிசு அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. இந்தப் புத்தகத்தில் பலரும் அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

Gregory Rabassa. Edith Grossman போன்ற மொழிபெயர்ப்பாளர்களே மார்க்வெஸ் சர்வதேச அளவில் கவனம் பெறவும் நோபல் பரிசு பெறவும் முக்கியக் காரணமாக இருந்தார்கள். நமக்குத் தேவை இப்படியான மொழிபெயர்ப்பாளர்களே.

ஒரு நாவலின் விதி எழுத்தாளனின் விதியை விடவும் மர்மமானது. அது எங்கே எப்போது அங்கீகரிக்கப்படும். கொண்டாடப்படும். உயரிய கௌரவத்தைப் பெறும் என்று யாராலும் கணித்துச் சொல்லிவிடவே முடியாது. மார்க்வெஸிற்கு நடந்ததும் அது போன்றதே.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2021 02:22

October 26, 2021

புரவி – நேர்காணல்

புரவி நவம்பர் 2021 இதழில் எனது நேர்காணல் வெளியாகிறது.

இந்த நேர்காணலைச் செய்திருப்பவர் எழுத்தாளர் கமலதேவி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2021 23:11

நினைவுப் பெண்

புதிய சிறுகதை

ஹூப்ளி எக்ஸ்பிரஸில் யாரோ ஒரு பெண் தவறவிட்டதாக அந்தச் சிவப்பு நிற மணிபர்ஸை ரயில்வே காவல் நிலையத்தில் வித்யா ஒப்படைத்தபோது மார்கண்டன் ஸ்டேஷனில் இல்லை.

ஆறாவது பிளாட்பாரத்தில் கிடந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் அடிப்பதாகப் பயணிகள் புகார் செய்த காரணத்தால் அதைப் பரிசோதனை செய்யப் போயிருந்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு மரப்பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலை அவர்கள் கைப்பற்றினார்கள். அவளது தலையை மட்டும் காணவில்லை. ஆனால் உடல் மூன்றாகத் துண்டிக்கபட்ட நிலையில் ஒரு பெட்டியினுள் இருந்தது. அந்தக் கொலைக்கேஸ் பத்திரிக்கைகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கொலையைச் செய்த டாக்டர் கடைசியில் அந்தமானில் வைத்து கைது செய்யப்பட்டார். அதிலிருந்து இப்படிக் கைவிடப்பட்ட மரப்பெட்டி இருப்பதாகக் கேள்விபட்டாலே காவல்துறை எச்சரிக்கையாகி விடுவார்கள்.

மார்க்கண்டன் அந்த மரப்பெட்டியைத் திறக்கச் சொல்லி பரிசோதனை செய்த போது கெட்டுப்போன காளான்கள் டப்பா டப்பாவாக இருப்பதைக் கண்டுபிடித்தான். இதை எங்கே கொண்டு போகிறார்கள். எதற்காகக் கைவிட்டுப் போனார்கள் என்று தெரியவில்லை. குப்பையில் கொண்டு போய்க் கொட்டும்படி துப்பரவு பணியாளர்களிடம் சொல்லிவிட்டு ஸ்டேஷன் திரும்பிய போது அவனது மேஜையில் அந்தப் பர்ஸை வைக்கப்பட்டிருந்தது.

ரயிலில் காணாமல் போகும் பொருட்களைத் தேடிக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் வேலை அவனுக்கு அளிக்கப்பட்டிருந்தது. ரயில்வே காவல்துறை என்பது விசித்திரமான உலகம். பயணத்தின் ஊடே இவ்வளவு குற்றங்கள். பிரச்சனைகள் ஏற்பட முடியுமா என வியப்பாக இருக்கும்.

செல்போன். லேப்டாப். சூட்கேஸ்கள். வாட்ச். கம்மல், பைக் சாவி, மூக்கு கண்ணாடி, மாத்திரை டப்பா, வீட்டுச்சாவி, பர்ஸ், கேமிரா, குடை, கிதார், மடக்கு கத்தி, பிளாஸ்க், கூலிங்கிளாஸ், ஸ்வீட் பாக்ஸ், விளையாட்டுப் பொம்மைகள் என ஏதேதோ பொருட்கள் ரயிலில் கிடந்ததாகக் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பலர் தொலைத்த பொருளைத் திரும்பக் கேட்டு வருவதேயில்லை. விநோதமாக ஒருமுறை ஒருவரின் பல்செட் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதை யாரிடம் ஒப்படைப்பது என அவனுக்குத் தெரியவில்லை.

விலைமதிப்புள்ள பொருளை தொலைத்த சிலர் உடனே பதற்றத்துடன் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ரயில் என்பது ரகசிய கைகள் கொண்டதாகத் தோற்றம் அளிக்கும் போலும். அவர்கள் கண்களில் உடன் வந்த பயணிகள் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக மாறிவிடுவார்கள்.

அன்றாடம் ரயிலில் எண்ணிக்கையற்ற பொருட்கள் தொலைக்கப்படுகின்றன. இதில் குடையும் சாவிகளும் தான் அதிகம். சமீபத்தில் அந்த இரண்டினையும் விடச் செல்போன் அதிகம் தொலைக்கப்படுகிறது.

பயணத்தின் போது ஒருவன் தன்னைப் பற்றியே அதிகம் நினைத்துக் கொண்டிருப்பதால் தான் கொண்டுவந்த பொருளை மறந்துவிடுகிறானோ என்று மார்கண்டனுக்குத் தோன்றும்.

சிறுவயதில் வீதியில் ஏதாவது ஒரு பொருளைக் கண்டெடுத்தால் அதை அதிர்ஷ்டம் என்றே அவன் நினைத்திருந்தான். அவனுடன் படித்த தாசன் ஒரு நாள் நூறு ரூபாயைச் சாலையில் கிடந்து கண்டெடுத்தான். அதை வைத்துக் கொண்டு அவர்கள் இரண்டு ஷோ சினிமா பார்த்தார்கள். இப்ராகிம் கடையில் போய்ப் பரோட்டா சாப்பிட்டார்கள். நிறையச் சாக்லெட் வாங்கித் தின்றார்கள். அன்றிலிருந்து சாலையில் ஏதாவது பணமோ நாணயமோ கிடைக்குமா எனப் பார்த்தபடியே மார்கண்டன் நடந்திருக்கிறான். ஆனால் எதுவும் கிடைத்ததில்லை.

காவல்துறையில் வேலைக்கு வந்தபிறகு பொருளைத் தொலைத்தவர்களின் முகங்களையும் துயரக்குரல்களையும் கேட்டும் பார்த்தும் இழப்பின் வலியைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பொருட்கள் தொலைவது ஒரு மாயம். அது எப்படி நிகழுகிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திருட்டுப் போன பொருட்களின் கதை வேறு. ஆனால் தானே ஒன்றை மறந்து வைத்துவிட்டுப் போவது ஒரு மயக்கநிலை. அது யாருக்கு எப்படி ஏற்படும் என்று கண்டறியவே முடியாது. காவல்துறையில் வேலை செய்தாலும் அவனே இரண்டு முறை பைக்சாவியைத் தொலைத்திருக்கிறான். ஒருமுறை பேங்கிலே கூலிங்கிளாஸை வைத்துவிட்டுத் திரும்பியிருக்கிறான். இன்னொரு முறை வீட்டுக்கு வாங்கிப் போன ஸ்வீட் பாக்ஸை பார்மசி கடையிலே மறந்துவிட்டுப் போயிருக்கிறான். காவல்துறையில் வேலை செய்தாலும் மறதியிடமிருந்து தப்பிக்க முடியாது தானே

அன்றைக்கும் அப்படி ஒரு செல்போன். ஒரு சாவிக்கொத்து, ஒரு லெதர்பேக் என நாலைந்து பொருட்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. தனது இருபது வருஷ பணிக்காலத்தில் மார்கண்டன் வேறுவேறு ரயில் நிலையங்களில் பணியாற்றியிருக்கிறான். இதில் ஒரு நாள் கூடத் தொலைத்த பொருட்களைக் காணாமல் இருந்ததில்லை. எல்லா ஊர்களிலும் மறதி ஒன்றுபோலவே இருக்கிறது. மனிதர்கள் ஒன்று போலவே பொருட்களைத் தொலைக்கிறார்கள்.

திடீரென ஒரு பொருள் உரியவரிடமிருந்து ஒளிந்து கொண்டுவிடுகிறது. எளிய பொருட்களைக் கையாளுவது எளிது என நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. எளிய பொருட்கள் சட்டென உங்களிடமிருந்து ஒளிந்து கொண்டுவிடும். மறைந்துவிடும். கண்டுபிடிக்கவே முடியாது.

ரயிலில் தொலைத்த பொருளை உரியவரிடம் ஒப்படைக்கும் போது சிலர் அதை ஏதோ புத்தம் புதிய பொருள் போலத் திரும்பத் திரும்பப் பார்ப்பதையும் ஆசையாகத் தடவிக் கொள்வதையும் கண்டிருக்கிறான்.

மீட்கப்படும் பொருட்கள் புதிதாகிவிடுகின்றன என்பதே நிஜம். எல்லாப் பொருட்களும் மனிதர்களால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்தக்கூடியவை. பின்பு மாயக்கரம் ஒன்றை அதை அவர்களிடமிருந்து பிரித்து விடும். உருமாற்றிவிடும். அதன்பிடியிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

எந்த ரயிலில் எந்தப் பொருள் கண்டறியப்பட்டது என்பதை ஒரு பதிவேட்டில் அவர்கள் முறையாகப் பதிவு செய்தல் வேண்டும். அன்றைக்கும் ரயில் வந்த நேரம். பொருளை ஒப்படைத்தவர் பெயர், என்ன பொருள், எங்கே கிடந்தது போன்றவற்றைப் பதிவு செய்துவிட்டு ஒவ்வொரு பொருளாகப் பார்வையிட்டான்.

சில நேரம் தொலைத்த செல்போனை கண்டறிய உரியவரே தொடர்ந்து அழைப்பதுண்டு. அப்படி அன்றும் தொலைத்த செல்போனுக்கு உரியவன் அழைத்தபோது அவனை ஸ்டேஷனில் வந்து பெற்றுக் கொள்ளும்படியாகச் சொன்னான். ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த அந்தப் பயணி உடனே வருவதாகச் சொன்னான். அவனது குரலின் நடுக்கத்தை மார்கண்டனால் உணர முடிந்தது

ஹீப்ளி ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற பர்ஸை திறந்து அதிலிருக்கும் பொருட்களை வெளியே கொட்டினான். அது ஏதோ ஒரு நகைக்கடை இனாமாகக் கொடுத்த பர்ஸ். நகைக்கடையின் முத்திரையாக இருந்த மான் கொம்புகள் விரிந்ததாக இருந்தது. நான்காக மடிக்கப்பட்ட ஒரு ஐம்பது ரூபாய். ( அப்படி ரூபாய் நோட்டுகளை மடிப்பது மார்கண்டனுக்குப் பிடிக்காது. ) ஒரு ரூபாய். ஐந்து ரூபாய் நாணயங்கள். இரண்டாக மடிக்கப்பட்ட ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு. ஸ்டிக்கர் பொட்டு அட்டை, இரண்டு தலைவலி மாத்திரைகள். ஒரு விக்ஸ்டப்பா, ஹேர்பின், ஒரு பக்கம் பிள்ளையார் மறுபக்கம் சாய்பாபா படம் உள்ள சிறிய பிளாஸ்டிக் உறை. அடகுகடையின் விசிட்டிங் கார்ட், ஒரு சாக்லேட், இரண்டு ஊக்குகள் இருந்தன. நிச்சயம் இந்தப் பெண் தொலைத்த பர்ஸை தேடி வரமாட்டாள். அவளது முகவரியோ, ஏதாவது தொலைபேசி எண்ணோ கிடைக்குமா என்று பார்ப்பதற்காக அடகுகடை விசிட்டிங் கார்ட் பின்னால் பார்த்தான்.

அதில் 3600 ரூபாய் என்று பேனாவால் கிறுக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் உறையிலிருந்து சாய்பாபா, பிள்ளையார் படங்களை வெளியே எடுத்தான். இரண்டு படங்களுக்கும் நடுவே பழைய புகைப்படம் ஒன்று இரண்டாக மடிக்கப்பட்டிருந்தது.

அந்தப் புகைப்படத்தை விரித்துப் பார்த்தான். அவனால் நம்பமுடியவில்லை. அது அவனது புகைப்படம். அதுவும் கல்லூரி நாட்களில் எடுத்துக் கொண்ட புகைப்படம். எப்போது எங்கே வைத்து எடுத்தான் என்று தெரியவில்லை. ஆனால் அந்தப் புகைப்படத்தில் அவனோடு யாரோ நின்றிருக்கிறார்கள்.

அந்த ஆளைத் துண்டித்துவிட்டு தனது புகைப்படத்தை மட்டுமே அவள் வைத்துக் கொண்டிருக்கிறாள். இருபது வயதிருக்கும், கைப்பிடிச் சுவர் ஒன்றில் கைவைத்தபடியே நின்றிருக்கிறான். சிறிய தாடி, பச்சை வண்ண சைனா காலர் சட்டை, கறுப்புப் பேண்ட். குழப்பமான கண்கள். இடது கண்ணை மறைக்கும் தலைமுடி. உடன் நிற்பவன் யார், எங்கே அந்தப் புகைப்டபம் எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

இதை ஏன் இவள் தனது பர்ஸில் வைத்திருக்கிறாள். இப்படி ஒரு புகைப்படம் தன்னிடம் கூட இல்லையே. யார் அந்தப் பெண். எதற்காகத் தனது புகைப்படத்தை இத்தனை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறாள். யோசிக்க யோசிக்கக் குழப்பமாகயிருந்தது

ஹீப்ளி ரயிலில் சென்னை வந்திருக்கிறாள் என்றால் யாராக இருக்கும். அவனுக்கு நினைவு தெரிந்தவரை யாரையும் காதலிக்கவில்லை. எந்தப் பெண்ணோடும் நெருங்கிப் பழகியதுமில்லை.

கல்லூரியில் அவன் அதிகமும் விளையாட்டில் தான் கவனம் செலுத்தினான். வகுப்பு இல்லாத நேரம் பேஸ்கட் பால் ஆடுவான். அதுவும் இல்லை என்றால் மைதானத்தில் ஓடுவான். பையன்கள் கிரிக்கெட் ஆடுவதை வேடிக்கை பார்ப்பான். ஒரு போதும் நூலகத்திற்கோ, கேண்டியனுக்கோ போனதில்லை. அரட்டை அடித்ததில்லை . பெரும்பாலும் தனியே எதையோ யோசித்துக் கொண்டிருப்பான். சில வேளை தனக்குதானே பேசிக் கொண்டிருப்பதும் உண்டு.

நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போதும் நண்பனின் தங்கையோ, அக்காவோ ஏதாவது கேட்டால் ஒரு வார்த்தைக்கு மேல் பதில் சொல்ல மாட்டான். சில நேரம் அவர்களை திரையரங்கத்தில் எதிர்பாராமல் சந்திக்கும் போது கூடத் தெரியாதவன் போலவே நடந்து கொள்வான்.

படித்து முடித்த இரண்டு ஆண்டுகளில் அவன் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். ரயில்வே போலீஸில் வேலை என்பதால் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய முடியும். ஆகவே நினைத்த நேரம் சொந்த ஊருக்குப் போய் அம்மாவைப் பார்த்து வருவான். அம்மா அவனது சொந்தத்தில் உள்ள பெண்ணான சாரதாவைத் திருமணம் செய்து வைத்தாள். இரண்டு பிள்ளைகள். புரசைவாக்கத்தில் வீடு.

இப்போதும் ஸ்டேஷனில் ஏதாவது இளம்பெண்கள் புகார் கொடுக்க வந்தால் அதிகம் பேச மாட்டான். இப்படி ஒதுங்கியே இருக்கும் தன்னை எதற்காக ஒரு பெண்ணிற்குப் பிடித்திருக்கிறது. ஏன் அவள் ரகசியமாகத் தனது புகைப்படத்தைச் சாமி படங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள் என்று குழப்பமாக வந்தது.

அதே நேரம் யாரோ முகம் தெரியாத ஒரு பெண் தன்னை நேசிக்கிறாள். தனது புகைப்படத்தை ஆசையாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது மிகுந்த சந்தோஷமாகவும் இருந்தது

நம்மை நமக்குத் தெரியாமல் நேசிப்பவர்கள் இருக்கிறார் என்பது எவ்வளவு சந்தோஷம். தன் மனைவி தனது பர்ஸில் ஒரு போதும் இப்படி அவனது புகைப்படத்தை வைத்துக் கொண்டதில்லை. ஆனால் இந்தப் பெண் வைத்திருக்கிறாள்.

அந்தப் பெண் எப்படியிருப்பாள். யாராக இருக்ககூடும் என்று நினைவில் தெரிந்த முகங்களாகத் தேட ஆரம்பித்தான்.

ஒருவேளை தான் கல்லூரியில் படித்த நாட்களில் படித்தவளாக இருப்பாளோ. அப்படி இருந்தால் ஏன் அவள் தன்னிடம் ஒருமுறை கூடப் பேசியிருக்கவில்லை. இல்லை யாராவது நண்பனின் தங்கையா, இல்லை தனது வீதியில் வசித்த பெண்களில் ஒருத்தியா, சைக்கிளில் டைப்ரைட்டிங் கற்கச் செல்லும் பெண் இருந்தாளே அவள் தான் இவளா, போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்த நெளிந்த கூந்தல் கொண்ட பெண்ணா, எங்கேயிருந்து இந்தப் புகைப்படம் அவளுக்குக் கிடைத்தது

யாரென அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேஜையில் கொட்டப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் இப்போது விநோத தோற்றம் கொள்ளத் துவங்கின.

அவளுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது. விக்ஸ் டப்பா வைத்திருக்கிறாள். ஆகவே ஜலதோஷமும் பிடித்துக் கொள்கிறது. தன்னைப் போலவே அவளும் நடுத்தர வயதில் தானிருப்பாள். அடகுக்கடை ஒன்றின் விசிட்டிங் கார்டை வைத்திருக்கிறாள். நிச்சயம் கஷ்டப்படுகிறவளாக இருக்கக்கூடும். மூவாயிரத்து அறுநூறு ரூபாய்க்கு என்ன பொருளை அடமானம் வைத்திருப்பாள். வளையலாக இருக்குமோ, அல்லது மோதிரமா,

பர்ஸில் இருந்த பொருட்களைக் கொண்டு ஒரு பெண்ணின் உருவத்தை உருவாக்கும் இந்த விளையாட்டு அவனுக்குச் சுவாரஸ்யமாக இருந்தது.

தனது புகைப்படத்தைக் காவல்நிலையத்திலுள்ள யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதால் உடனே தனது பர்ஸில் வைத்துக் கொண்டான்.

அந்தப் புகைப்படம் கிடைத்தவுடன் சட்டெனத் தனது வயது கலைந்து போய்விட்டதைப் போலவே உணர்ந்தான். கல்லூரியில் படித்த நினைவுகள் நிறைவேறாத ஆசைகள். அந்த வயதில் சந்தித்த மோசமான வறுமை என மறந்து போன நினைவுகள் மீண்டும் மனதில் தோன்ற ஆரம்பித்தன

ஏதாவது வேலையாக ஊர்பக்கம் போகும்போதும் கல்லூரி பக்கம் போகத் தோன்றியதேயில்லை. உடன் படித்த நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போதும் அவன் நட்பாக உணரவேயில்லை. கல்லூரி வாழ்க்கை எல்லாம் யாரோ ஒருவனுக்கு நடந்தவை என்றே எண்ணிக் கொள்வான்

அவனிடம் பள்ளியில் படித்தபோது எடுத்த குரூப் போட்டோ ஒன்று கூடக் கிடையாது. உண்மையில் அவன் அதிகம் புகைப்படம் எடுத்துக் கொண்டதே கிடையாது. கல்யாண ஆல்பம் மட்டும் தான் அவன் வீட்டிலிருக்கிறது.

ஆனால் அவன் மனைவி நிறையக் கறுப்பு வெள்ளை புகைப்படங்களை வைத்திருந்தாள். அடிக்கடி அவற்றை எடுத்துப் பார்த்துக் கொள்வாள். மகளுக்கோ, மகனுக்கோ காட்டுவாள். எட்டு வயதில் எப்படியிருந்தேன் என்று மார்க்கண்டனுக்கு நினைவேயில்லை.

சிவப்பு பர்ஸை யார் கொண்டு வந்து கொடுத்தது என்று கான்ஸ்டபிளிடம் கேட்டான் மார்கண்டன்

“வித்யானு ஒரு பொண்ணு. போன் நம்பர் இருக்கு.. வேணுமா“

“சொல்லுங்க“ என்று அந்த நம்பரைக் குறித்துக் கொண்டான்

ஒருவேளை அவளும் இந்தப் பெண்ணும் ஒரே கம்பார்ட்மெண்டில் பயணம் செய்து வந்திருக்கக் கூடும். அவளிடம் கேட்டால் இப் பெண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து தொடர்பு கொண்டான். போன் ரிங் போனது. ஆனால் எடுக்கவில்லை. இரண்டாம் முறை அழைத்த போது அந்தப் பெண் பேசினாள்

“அன்ரிசவர்ட் கம்பார்ட்மெண்டில் கிடந்தது“ என்றாள்.

அவளுக்கும் யாருடைய பர்ஸ் என்று தெரியவில்லை. தனது புகைப்படம் வைத்திருந்த பெண் எந்த ஊரில் ரயிலில் ஏறினாள். எதற்காகச் சென்னை வந்திருக்கிறாள் என்று எதையும் மார்கண்டனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரயில்வே கேமிராவில் ஒருவேளை பதிவாகியிருக்குமா. எதற்கும் அதையும் பார்த்துவிடலாம் என்று கேமிரா அறைக்குச் சென்றான். அன்றைக்கு ரயில் நிலையத்தில் நிறையக் கூட்டம். ஏராளமான ஆட்கள். தெளிவற்ற முகங்கள். அதில் எந்தப் பெண் அவன் போட்டோ வைத்திருந்தவள் என்று அறிய முடியவில்லை

அந்தப் புகைப்படம் ஒரு சுழல் போல அவனை உள்ளே இழுத்துக் கொண்டு போகத் துவங்கியது. தன்னைப் பற்றித் தான் வைத்திருந்த பிம்பம் உண்மையில்லையா. யாரோ ஒரு பெண்ணிற்கு ஏன் தன்னைப் பிடித்திருக்கிறது. அவளை எதை ரசித்திருக்கிறாள். பழகாத பெண்ணாக இருந்தால் இப்படிப் புகைப்படத்தை ஒளித்து வைத்துக் கொள்ள மாட்டாளே. யாராக இருக்கும். நிச்சயம் அவளுக்கும் தன்னைப் போலவே திருமணமாகி இருக்கும். கணவனுக்குத் தெரியாமல் தான் இந்தப் புகைப்படத்தை வைத்துக் கொண்டிருப்பாள். நினைவின் சுழல் அவனை உள் இழுத்துக் கொண்டது.

திடீரெனக் காவல்நிலையத்தினுள் ஒரு வானவில் தோன்றியது போலிருந்தது. வெளியே நடந்து போய்ப் பிளாட்பாரக் கடையில் ஒரு டீ சாப்பிட்டான். வழக்கமாகச் சாப்பிடும் தேநீர் இன்றும் அபார சுவையுள்ளதாக இருந்தது. தொலைவில் கேட்கும் சினிமா பாடலை ரசித்துக் கேட்டான். உலகம் சட்டென எடையற்றுப் போய்விட்டது போல உணர்ந்தான்.

தான் இப்போது நடுத்தரவயதுடையவனில்லை. அதே கல்லூரி காலத்து இளைஞன். மதிய வெயிலைப் போல உக்கிரமானவன். அவனே மறந்துவிட்ட அவனை இளமைக்காலத்தை அந்தப் பெண் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள். யாரோ சிலரது நினைவில் நாம் எப்போதும் இளமையாக இருக்கிறோம்.

இவ்வளவு ஆசையுள்ள பெண் ஏன் தன்னை ஒருமுறை கூடத் தேடி வரவில்லை. எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை என யோசித்தான்.

அவளை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் கொப்பளிக்கத் துவங்கியது. அன்று வீடு திரும்பிய போது அவனது மனைவி வயதான பெண்ணாகத் தோன்றினாள். அவளது தலையில் தெரியும் ஒன்றிரண்டு நரைமயிர்கள் கூடத் துல்லியமாக அவன் கண்ணுக்குத் தெரிந்தன. மகளும் மகனும் கூட யாரோ போலிருந்தார்கள்.

அவர்களிடம் தனது கல்லூரி காலப் புகைப்படத்தைக் காட்டலாமா என்று நினைத்தான். பிறகு அது எதற்கு வேண்டாமே என்றும் மனதில் தோன்றியது.

எங்கே கிடைத்தது என்று சொல்லாமல் மகளிடம் மட்டும் காட்டலாம் எனத் நினைத்துக் கொண்டு, மகளை அருகில் அழைத்துப் பர்ஸில் இருந்த பழைய புகைப்படத்தைக் காட்டினான்

“நீயாப்பா“ என்று வியப்போடு கேட்டாள் சரண்யா

“நானே தான்“ என்றான் மார்கண்டன்

“அப்போ நிறையத் தலைமுடி இருந்திருக்கு. இப்போ தான் கொட்டிபோச்சி. வழுக்கை மண்டை“ என்று சிரித்தாள் சரண்யா

“காலேஜ்ல படிக்கிறப்போ எடுத்தபடம்“

“அப்பவும் உம்னு தான் இருந்திருக்கே“ என்று சொன்னாள் சரண்யா. பிறகு அந்தப் புகைப்படத்தைத் தன் அம்மாவிடம் கொண்டு போய்க் காட்டினாள்

சாரதா அவனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு “நல்லாயிருக்கு“ என்று ஒரு வார்த்தை தான் சொன்னாள். வேறு எதையும் கேட்கவில்லை. ஏன் இவர்களுக்குத் தனது கல்லூரி நாட்கள் பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. ஒருவேளை இந்தப் போட்டோ தன் வீட்டில் இருந்திருந்தால் ஏதோ ஒரு பழைய ஆல்பத்தில் வைத்துப் பெட்டியில் தான் போட்டிருப்பார்கள். இப்படி ஆசையாகப் பர்ஸில் வைத்திருக்க மாட்டார்கள்.

மனைவியைச் சீண்டும் விதமாக மார்கண்டன் கேட்டான்

“உன் காலேஜ் போட்டோவை காட்டு“

“அது எதுக்கு இப்போ“ என்றபடியே அவள் கேரட்டை துருவ ஆரம்பித்தாள்

“அதுல எப்படியிருக்கேனு பார்க்கணும்“ என்றான்

“இருக்கிற அழகு தான் இருக்கும்“ என்றபடியே அவள் சமையல் வேலையில் ஈடுபடத் துவங்கினாள்.

நம்மிடம் குடும்பத்தினருக்கு தெரியாத ஏதோ ஒன்றை வெளியாட்கள் கண்டறிந்துவிடுகிறார்கள். ஆராதிக்கிறார்கள். அந்தப் பழைய புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணாடி முன்பாக நின்று பார்த்தான். இரண்டுக்கும் இடையில் எவ்வளவு மாற்றங்கள். புகைப்படங்கள் காலம் கடந்து போகும்போது தான் ஒளிர ஆரம்பிக்கின்றன. இருபது வயதின் புகைப்படம் ஐம்பது வயதில் தான் ஒளிரும் படமாக மாறுகிறது. அந்தந்த வயதுகளில் புகைப்படம் சந்தோஷத்தின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் காலம் கடந்துவிட்டால் அது நினைவின் அடையாளமாக மாறிவிடுகிறது.

இவ்வளவு பெரிய சென்னை நகரில் அவள் எங்கிருப்பாள். இந்தப் புகைப்படத்தைத் தவறவிட்டதற்காக வருத்தம் அடைவாளா. அவளாகவே காவல் நிலையத்திற்கு வந்து தொலைந்த பர்ஸை பற்றிக் கேட்க கூடும் என்றும் தோன்றியது. அப்படி ஒரு சந்திப்பு நடந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

அந்தப் புகைப்படம் கிடைத்த நாளிலிருந்து அவன் மாறத்துவங்கினான். அடிக்கடி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான். பழைய நண்பர்களிடம் பேசினான். ஒருமுறை சொந்த ஊருக்குப் போய் வந்தான். நண்பர்களின் தங்கைகள் பற்றி விசாரித்தான். அவனது வீதியில் வசித்த குடும்பங்கள் இப்போது எங்கேயிருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டான். எந்த விதத்திலும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அன்றாடம் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் கிளம்பும் வரை அந்தப் பெண் வருவாளா என்று காத்திருப்பான். இரவில் பணியாற்றும் நேரங்களில் அந்தப் புகைப்படத்துடன் பிளாட்பார பெஞ்சில் உட்கார்ந்து அவளையே நினைத்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் தனது பழைய நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களுக்குத் தெரிந்த யாராவது ஹூப்ளியில் இருக்கிறார்களா என்று விசாரித்தான். ஒருவருமில்லை.

தனது கல்லூரி நாட்களில் எடுத்த புகைப்படம் ஏதாவது அவர்களிடம் இருக்கிறதா என்று கேட்டுவாங்கினான். முருகனிடம் மட்டுமே ஒரேயொரு போட்டோ இருந்தது. அது ஊட்டி டூர் போனபோது எடுத்த போட்டோ. அதில் நாலைந்து பேர் ஒன்றாக இருந்தார்கள்

பழைய புகைப்படத்தின் பின்னுள்ள சுவர் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறிய ஒரு தெரிந்த ஸ்டுடியோ ஒன்றில் கொடுத்து போட்டோவை பெரிதாக்கிக் கண்டறிய முயன்றான். அந்தச் சுவரில் ஏதோ எழுத்துகள் அழிந்த நிலையில் காணப்பட்டன. நிச்சயம் அது கல்லூரி சாலையிலிருந்த சுவர் தான். எப்போது இந்தப் போட்டோ எடுத்தோம் என்று நினைவில்லை. நமக்கு நடந்த விஷயங்கள் ஏன் இப்படி மறந்து போய்விடுகின்றன. இவற்றை எப்படி மீட்பது. தொலைந்த பொருளை மீட்பது போலத் தொலைந்த நினைவுகளை மீட்க முடியாதா. ஈரத்தை காகிதத்தால் எப்படித் தடுக்க முடியாதோ அப்படித் தான் பழைய நினைவுகளும். அது எழுவதை நாம் தடுக்கவே முடியாது.

நீண்டகாலம் ஓடாமல் நின்றிருந்த கடிகாரத்திற்கு யாரோ சாவி கொடுத்து ஓட வைத்துவிட்டதைப் போலவே அவனிருந்தான்.

பின்பு ஒரு நாள் அவளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக ஹூப்ளிக்குச் சென்றான். மழைக்காலமது. லேசான தூறல் பெய்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய ஊரில் எங்கே போய் அவளைத் தேடுவது. அவனுக்குத் தெரிந்த ஒரே முகவரி அந்த அடகுக்கடை விசிட்டிங் கார்டு மட்டும் தான். ஆகவே அந்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றான்.

நிச்சயம் அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்ணாகத் தான் இருக்கக் கூடும். அவன் போலீஸ்காரன் என்பதால் சேட் பயந்து போய்த் தனக்கு எதுவும் தெரியாது என்றார். ஒரு பெண் ஏதோ ஒரு பொருளை அடகுவைத்திருக்கிறாள். மூவாயிரத்து அறுநூறு ரூபாய் என்று சொன்னபோது பேரட்டினை புரட்டி நிறையப் பெண்களின் பெயர்களைச் சொன்னார். அதில் எந்தப் பெண் அவனது புகைப்படம் வைத்திருந்தவள். இந்தப் பெயர்களில் நடுத்தர வயது பெண் யார் என்று சேட்டிற்குத் தெரியவில்லை. அவர் எழுதிக் கொடுத்த முகவரிகளைத் தேடி ஆட்டோவில் சுற்றினான்.

யாருக்கும் அவனைத் தெரியவில்லை. அவன் தேடுகிற பெண் அவர்களில் இல்லை. ஆனாலும் ஹூப்ளியில் சுற்றித்திரிவது பிடித்திருந்தது. அந்த ஊர் அவனை நேசிக்கும் பெண் வசிக்கும் ஊர். சப்தமில்லாமல் சூரிய வெளிச்சம் வீடுகளுக்குள் நுழைந்துவிடுவது போலத் தனது வருகையும் அவள் மனதில் தானே அறியப்பட்டுவிடும் என்று நினைத்தான்.

ஒவ்வொரு வீதியாக நடக்கும் போதும் அவள் ஏதோ ஒரு கதவின் பின்னால் இருப்பது போலவே உணர்ந்தான். அவள் வரக்கூடுமோ என நினைத்து கோவிலுக்குச் சென்றான். அங்கிருந்த சிற்பங்களைக் காணும் போது அவளது நினைவாக இருந்தது. ஆசையாக ஒரு பெண் சிற்பத்தின் தலையை வருடிக் கொடுத்தான். திடீரென மழை வேகமெடுத்துப் பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையை அவளும் பார்த்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது

பின்பு அவளது மணிபர்ஸில் இருந்த நகைக் கடைக்குச் சென்று விசாரணை செய்தான். அது போன்ற பர்ஸ் இருபதாயிரம் இனாமாக வழங்கப்பட்டிருப்பதால் யார் வைத்திருப்பார்கள் என கண்டறிய முடியாது என்றார்கள். தமிழ் பெண் என்று சொன்னதால் கடைப்பையன் ஒருவனை அனுப்பி முத்துசாமி மகளா இருக்கும், அவளை கூட்டிக்கிட்டு வா என்றார்கள்.

அவள் வரும்வரை பதற்றமாகவே இருந்தான் மார்கண்டன். ஆட்டோ வந்து நின்று அதிலிருந்து இருபது வயது பெண் இறங்கினாள். நிச்சயம் இவள் இல்லை என்றானது . அவள் எதற்காக விசாரணை செய்கிறீர்கள் என்று கேட்டாள். எப்படி சொல்வது எனத் தெரியாமல் ஒரு போலீஸ் கேஸிற்காக என்று பொய் சொன்னான். அவள் சிரித்துக் கொண்டே உங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு என்றாள். அவளை அனுப்பிவிட்ட ஊர் திரும்ப ரயில் நிலையம் வந்தபோது ரயில் பெண்ணின் பின்னலிட்ட நீண்ட கூந்தலைப் போலிருந்தது.

ரயில் பயணம் என்பது வெறும் நிகழ்வில்லை. அதனுள் சில மர்மங்களும் வெளிப்படாத ரகசியங்களும் விம்மல்களும் இருக்கத்தானே செய்கின்றன. இரவெல்லாம் மழை பெய்தபடியே இருந்தது. ரயிலில் அந்தப் பெண் வைத்திருந்த புகைப்படத்தைக் கையில் வைத்தபடியே வந்தான். அரூபமாக அந்தப் பெண்ணும் அருகிலிருந்து தன்னைக் காணுவது போலவே உணர்ந்தான்.

இருண்ட மழைநாளில் சட்டென ஒரு மின்னல்வெட்டில் உலகம் கொள்ளும் பெருவெளிச்சம் போல அந்தப் புகைப்படம் மனதில் அளவில்லாத சந்தோஷத்தை உருவாக்கிவிட்டது. அதை நீடிக்கச் செய்ய முடியாது. இதுவும் நிமிஷத்தில் தோன்றி மறையும் இன்பம் தான். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டறிந்தாலும் உறவை நீடிக்க முடியாது. அது தான் நிஜம்.

சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ரயில் வந்து நின்றபோது தொலைந்து போன ஆயிரக்கணக்கான பொருட்களில் தானும் ஒருவன் என உணரத் துவங்கினான். தன்னை அவள் தொலைத்திருக்கிறாள். ஆனால் தேடிவந்து பெற்றுக் கொள்ளமாட்டாள். உரியவர்களிடம் சேராத பொருட்களைப் போலவே தானும் கைவிடப்பட்டுவிட்டோம் என்று பட்டது.

ஒருவேளை தன்னிடம் வந்து சேரட்டும் என்று விரும்பி தான் பர்ஸை ரயில் பெட்டியில் விட்டுப் போனாளா?. அவளுக்குத் தான் காவல்துறையில் வேலை செய்வது நன்றாகத் தெரியும். தெரிந்து தான் இந்த விளையாட்டினை செய்திருக்கிறாளா. ?

வீடு திரும்ப ஆட்டோவில் ஏறிய போதும் அவள் நினைவிலிருந்து விடுபட முடியவில்லை. பாலைவனத்தில் தூரத்து நட்சத்திரத்தை பார்த்தபடியே செல்லும் வழிதவறிய பயணியைப் போலிருந்தான்.

வீடு வந்து குளித்தபோது அவளைத் தன்னால் கண்டறியவே முடியாது. தானாக நடந்தால் மட்டுமே உண்டு என்று தோன்றியது. சில நேரம் வானில் வெண்புகை நீண்ட சாலை போல வளைந்து வளைந்து செல்வதைக் கண்டிருக்கிறான். அந்த வெண்புகைச்சாலையின் வழியே வானிற்குள் போக முடியுமா என்ன. அது போன்ற மயக்கம் தான் இந்தத் தேடுதலும்

இனிமேலும் அவளைத் தேடி அலைவது வேண்டாம். போதும் என்று முடிவு கொண்டவனாகத் தனது பணிக்கு ஆயுத்தமானான்.

இரண்டு நாட்கள் விடுப்பின் பின்பாக வேலைக்குப் போனபோது ரயிலில் தொலைக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்க வேண்டிய பொருட்கள் நிறையக் குவிந்திருந்தன. அந்தப் பொருட்களை முறையாகப் பதிவு செய்து உரியவரைத் தொடர்பு கொள்ளும் போது பழைய மனிதனாகத் திரும்பியிருந்தான்.

அவனது இருபது வயதில் என்ன நடந்தது. எப்படியிருந்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் முக்கியம். உலகிற்கு அதைப் பற்றிக் கவலையேயில்லை. அதை உணர்ந்தவன் போல ஆழமான பெருமூச்சைவிட்டபடியே பணியில் ஆழ்ந்து போனான்.

, கைக்கடிகாரம் அவனுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய ஒசையில் துடித்துக் கொண்டிருப்பது போல சில நாட்கள் பர்ஸில் வைத்திருந்த அந்தப் பழைய புகைப்படம் துடிப்பதாக அவனுக்குத் தோன்றும்.

அது போன்ற தருணங்களில் அது கற்பனையில்லை நிஜம் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வான்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2021 03:06

October 25, 2021

கோடுகளும் சொற்களும்

கே.எம். வாசுதேவன் நம்பூதிரி கேரளாவின் முக்கிய ஓவியர். வைக்கம் முகமது பஷீர். தகழி, கேசவதேவ். உரூபு, வி.கே.என் எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட முக்கியப் படைப்பாளிகளின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் தொடருக்கு இவர் வரைந்த மகாபாரதக் கோட்டோவியங்கள் அற்புதமானவை.

தான் பீமனின் மனநிலையை முதன்மையாகக் கொண்டு கோட்டோவியங்கள் வரைந்தேன். இந்தத் தொடருக்கு ஓவியம் வரைந்தது என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியம் என்கிறார் நம்பூதிரி. அவரும் எம்.டி.வாசுதேவன் நாயரும் சந்தித்து உரையாடும் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நம்பூதிரி தான் ஒவியம் வரைந்த விதம் பற்றி மனம் திறந்து உரையாடியிருக்கிறார்.

சென்னை ஒவியக்கல்லூரியில் ஓவியம் பயின்ற நம்பூதிரி மாத்ருபூமியில் நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் இவரை நேரில் சந்தித்து மோகன்லால் உரையாடும் காணொளி ஒன்று சமூக ஊடங்களில் வலம் வந்தது. அதில் நம்பூதிரியின் சித்திரங்களை மோகன்லால் வியந்து போற்றுகிறார். மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரம் இப்படி ஒரு ஓவியரின் வீடு தேடிச் சென்று அவரை வணங்கிப் பாராட்டி அவரது ஓவியத்தினை பெரிய விலை கொடுத்து வாங்கித் தனது புதிய வீட்டில் மாட்டி வைத்திருப்பது கலைஞனுக்குச் செய்யப்படும் சிறந்த மரியாதையாகத் தோன்றியது.

நம்பூதிரியின் கோடுகள் மாயத்தன்மை கொண்டவை. ஒரு சுழிப்பில் உணர்ச்சிகளைக் கொண்டுவரக் கூடியவர். உடலை இவர் வரையும் விதம் தனிச்சிறப்பானது. நம்பூதிரி வரைந்த பெண்கள் கோடுகளால் உருவான தேவதைகள்.

நம்பூதிரி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானியில் பிறந்தவர். .தனது வீட்டின் அருகிலுள்ள சுகாபுரம் கோவிலில் உள்ள சிற்பங்களால் கவரப்பட்டுச் சிற்பியாக வேண்டும் என்ற ஆசை கொண்டார். பின்பு சென்னையிலுள்ள அரசு நுண்கலைக் கல்லூரியில் ராய் சௌத்ரியின் கீழ் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அந்த நாட்களில் எஸ். தனபால் மற்றும் கே.சி.எஸ்.பணிக்கருடன் நெருக்கம் உருவானது. சோழமண்டலத்தில் பணிக்கரின் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். 1960 ல் மாத்ருபூமி வார இதழில் ஒவியர் மற்றும் வடிவமைப்பாளராக வேலைக்குச் சேர்ந்து 1982 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்பு சில காலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய வார இதழிலும் பணியாற்றியிருக்கிறார். நம்பூதிரி தனது ஊரையும் தான் சந்தித்த மனிதர்களையும் பற்றிய நினைவுக்குறிப்புகளா எழுதிய கட்டுரைகள் கீதா கிருஷ்ணன் குட்டியால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு Sketches: The Memoir of an Artist என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

நம்பூதிரியின் கோட்டோவியங்களுக்காகவே இந்த நூலை வாங்கினேன். தேர்ந்த எழுத்தாளரின் நுட்பத்துடன் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய சித்திரமும் எழுத்தும் அழகாக ஒன்று சேருகின்றன. மெல்லிய நகைச்சுவையோடு கூடிய எழுத்து. அழகான சிறுகதையைப் போல நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒன்றிரண்டு வரிகளில் முழுமையான தோற்றம் வெளிப்பட்டுவிடுகிறது

வீடு வீடாகச் சென்று வைத்தியம் பார்க்கும் ஆர்எம்பி டாக்டரின் வாழ்க்கையும் அவரது அக்கறையும் ஒரு திரைப்படத்திற்காகக் கதை. அப்படியே படமாக்கலாம்.  ஊரையும் மக்களையும் நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டியது தனது கடமை என்று அந்த டாக்டர் நினைக்கிறார்.  ஆரம்பத்தில் சைக்கிளில் வரத்துவங்கிய அவர் பின்பு பைக் கார் என மாறுவதும். காசே வாங்காமல் வைத்தியம் பார்ப்பதும், அவரது காரில் ஏறி கவிஞர் அக்கிதம் நம்பூதிரி வீட்டினைக் காணச் சென்ற நாளையும் பற்றி அழகாக விவரித்திருக்கிறார்.

தன் ஊரின் கோவில், திருவிழா, அதில் வரும் யானை, திருவிழாவினை  முன்னிட்டு நடக்கும் விருந்து. இசைக்கலைஞர்களின் வருகை எனக் கடந்தகாலத்தின் இனிய நினைவுகளைச் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஓவியம் பயிலுவதற்காகச் சென்னை வந்த நாட்களையும். ராய்சௌத்ரி பற்றிய குறிப்பு, நவீன சிற்பம். கட்டிடக்கலை என அறிந்து கொண்ட விதம் பற்றியும் விவரிக்கும் நம்பூதிரி தன்னை உருவாக்கியதில் சென்னைக்கு முக்கிய பங்கிருப்பதைக் கூறுகிறார்.  

செம்பை பற்றிய சொற்சித்திரம் அபூர்வமானது. மட்டஞ்சேரி இல்லத்தில் சதுரங்கம் ஆடுகிறவர்களைப் பற்றியும் அதில் மாஸ்டராக இருந்தவரைப் பற்றியும் விவரிக்கும் போது நாம் அந்தக் காட்சிகளைக் கண்ணில் பார்க்கிறோம். இல்லத் திருமணத்திற்காக நகைகளைத் துணியில் பொட்டலம் கட்டிக் கொண்டு போன கதையைச் சொல்லும் போது பஷீரை வாசிப்பது போலவே இருக்கிறது போலீஸ் கைது செய்ய வரும்போது சாவகாசமாகத் தனது காலை பூஜைகளைச் செய்து முடிக்கும் நம்பூதிரி ஒருவரைப் பற்றிய சொற்சித்திரம் மறக்கமுடியாதது.

புத்தகம் முழுவதும் நம்பூதிரியின் ஓவியங்கள் நிறைந்திருக்கின்றன. திரும்பத் திரும்ப அந்தக் கோட்டோவியங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒளிக்கற்றைகளைப் போலவே கோடுகள் வளைந்து கலைந்து செல்கின்றன.

இயக்குநர் ஜி. அரவிந்தனின் உத்தராயணம் திரைப்படத்தில் வேலை செய்த அனுபவம். முன்னணி மலையாள இதழில் பணியாற்றிய போது சந்தித்த நிகழ்வுள். கே.சி.எஸ். பணிக்கர் மற்றும் வைக்கம் முகம்மது பஷீர் பற்றிய நினைவுகள் எனச் சுவாரஸ்யமான சிறு கட்டுரைகளைக் கொண்ட நூல்.

இந்தக் கட்டுரைகளின் ஊடே அந்நாளைய எழுத்தாளர்கள். பத்திரிக்கை உலகம். கேரள வாழ்க்கையின் பல்வேறு நிலைகள். விழாக்களை அறிந்து கொள்ள முடிகிறது. கோடுகளைப் போலவே சொற்களையும் நடனமாடச் செய்திருக்கிறார் நம்பூதிரி. வெறுமனே இந்தக் கோட்டோவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் புதிய கதைகள் தானே நமக்குள் முளைவிடத் துவங்கிவிடும்.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2021 02:05

October 23, 2021

முழுநாள் கருத்தரங்கம்

எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நவம்பர் 14 ஞாயிறு (14.11.2021) சென்னை மயிலாப்பூரில் உள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறவுள்ளது. தேர்ந்த வாசகர்களே இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இந்த முழுநாள் கருத்தரங்கில் எனது சிறுகதைகள். குறுங்கதைகள், நாவல். உலக இலக்கியக் கட்டுரைகள். வரலாறு சார்ந்த கட்டுரைகள். வாழ்வியல் கட்டுரைகள். சிறார் புனைவுகள் எனப் பல்வேறு பிரிவுகளில் உரைகள் நிகழ்த்தபட இருக்கின்றன.

நிகழ்வு குறித்த முழுவிபரங்களை இரண்டு நாட்களில் வெளியிடுகிறேன்

இந்த நிகழ்வை முன்னிட்டு மாலை 4 மணிக்கு வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வின் இறுதியில் நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2021 22:58

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.