S. Ramakrishnan's Blog, page 112
October 11, 2021
தண்ணீரின் கதவுகள்
நேற்று கவிஞர் தேவதச்சனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இயற்கையை ஏன் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பேசிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் வருகிறது. உரைநடைக்கு அதில் ஏன் அவ்வளவு பெரிய கவனமில்லை என்ற பேச்சு வந்தது. அதைப்பற்றி உரையாடினோம்

கவிதையைப் பற்றிய உரையாடல்கள் என்பது பாராட்டு அல்லது நிராகரிப்பு என்ற இருநிலைகளுக்குள் இன்று சுருங்கிப் போயிருக்கிறது. ஆனால் கவிதைகளின் போக்கு மற்றும் அதன் இயல்புகள். இன்று உருவாகி வரும் மாற்றங்கள். அது மொழியில் வெளிப்படும் விதம். புதிய காட்சிப்படிமங்கள், கவிஞனின் குரல் என்று பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
முன்னறியாத ஒரு குகையினுள் பிரவேசிப்பது போலவே கவிதையினுள் பிரவேசித்து வழிகளைக் கண்டறிந்து அபூர்வ சுவரோவியங்களின் அழகில் மயங்கி புராதனமும் தற்காலமும் ஒருங்கே கூடியிருக்கும் அதன் இயல்பை உணர்ந்து இருட்டையும் வெளிச்சத்தையும் அறிய வேண்டியிருக்கிறது
ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி. அதன் முதல் சொல்வழியாகவா, அல்லது முதல் வரியின் வழியாகவா. உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது. நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை இழந்துவிடுகிறான். இடவலம் ஒன்று போலாகவிட்டதை உணருகிறான். கவிதையில் பிரவேசிக்கும் ஒருவன் கவிதையிலிருந்து அனுபவத்தைத் திரட்டிப் போவது ஒருவகை. இன்னொரு வகை எதையும் கவிதையிலிருந்து எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீரோடு கொள்ளும் உறவைப் போல நனைந்தும் நனையாமலும் உறவு கொள்வதும் கவிதை வாசிப்பே. கவிதைக்குள் நுழையும் ஒருவன் கவிதையின் வழியே சில சித்திரங்களை, சில குரல்களை, சில அனுபவங்களை, சில புதிர்களை, சில புரியாத விஷயங்களை அறிந்து கொள்கிறான். சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களைப் போல வேகமாக முடிவு வரை நோக்கிச் சறுக்கிப் போகிறான். உண்மையில் முதல் வரியும் முடிவு வரியும் மாயக்கதவுகள். கவிதையின் கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம். ஆனால் கவிதையிலிருந்து வெளியேற முடியாது.
கைகழுவுவது போலக் கவிதையிலிருந்து
வெளியேறுவது சுபலமில்லை
என்றொரு வரியை கேப்ரியல் டிமெலோவின் கவிதையில் வாசித்திருக்கிறேன்.
கவிதையினுள் உள்ள மரங்கள் மெதுவாக அசைகின்றன. நிலவு நீண்ட நேரம் ஒளிர்கிறது. மலர்களின் நிறம் மெருகேறி ஒளிர்கிறது. மேஜிக் செய்பவன் தொப்பியிலிருந்து முயலை எடுக்கும் போது முயல் ஒரு விலங்கில்லை. அது ஒரு மலரைப் போலவே தோன்றுகிறது. அப்படித் தான் கவிதையில் அன்றாட வாழ்க்கை புதியதாக மாறிவிடுகிறது.
இயற்கையை வரையறை செய்வது கவிதையின் முக்கியமான பணிகளில் ஒன்றாக உள்ளது. வியந்து போற்றுதல். அல்லது உணர்ச்சிகளை ஏற்றிச் சொல்லுதல். புதிர் தன்மை அல்லது விநோதம் கொண்டதாக அணுகுவது. இயற்கையிடம் தஞ்சம் அடைதல் அல்லது இயற்கை சக்திகளை ஆராதனை செய்தல் என்று பல்வேறு நிலைகளில் கவிதை இயற்கையைப் பற்றிப் பேசுகிறது. மெய்தேடல் கொண்ட கவிகளும் இயற்கையை விலக்கிச் செல்வதில்லை.
ரூமியின் கவிதை ஒன்றில் மாணிக்கம் தான் வேண்டாம் என்று நினைத்தாலும் சூரிய வெளிச்சத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றொரு வரி வருகிறது.

உலகின் விலைமதிப்பில்லாத மாணிக்கத்தினுள் ஒளி எளிதாக நுழைகிறது. ஒளியால் மாணிக்கம் பிரகாசமடைகிறது. உலகம் இந்த வெளிச்சத்தைப் புகழுகிறது. ஆனால் உண்மையில் இதை மாணிக்கம் விரும்புகிறதா என்று யாருக்கும் தெரியாது. மாணிக்கத்தை ஒளி அபூர்வமாக நினைப்பதில்லை. அது கடந்து செல்லும் பாதையில் மாணிக்கம் ஒரு பொருள் மட்டுமே. மாணிக்கமும் சூரிய ஒளிக்காகக் காத்துகிடப்பதில்லை. ஆனால் இரண்டும் சந்திக்கும் போது அபூர்வ வெளிச்சம் பிறக்கிறது.
உலகம் அறிந்தவற்றைக் கவிஞன் மாற்றிவிடுகிறான். அவன் இயற்கையை ஆராய முனைவதன் வழியே தன்னைத் தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். நவீன கவிதையில் இயற்கையும் தானும் வேறில்லை எனக் கவிஞன் அறிந்து கொண்டிருக்கிறான்.
இயற்கையை ஒரு நுண்ணோக்கி வழியாகக் காணுவ்து போன்ற அனுபவத்தை வேர்ட்ஸ்வெர்த் தனது கவிதைகளில் உருவாக்கினார். அதன்பிறகு உலகம் திடீரென அதிகப் பசுமையோடு அதிக அழகோடு தோன்றத்துவங்கியது. சங்க கவிதைகளையோ, அல்லது செவ்வியல் சீனக்கவிதைகளையோ வாசிக்கும் போது உலகம் மிருதுவாக, நிசப்தமாக, நெருக்கடிகள் எதுவுமற்று விடிகாலைக் காட்சிகள் போலத் தோன்றுகிறது. உண்மை அப்படியாக இருந்திருக்க முடியாது. ஆனால் புல்லாங்குழலில் நுழையும் காற்று இசையாகிவிடுவது போலக் கவிதையில் நுழையும் அன்றாடக் காட்சிகள் விநோத தோற்றம் கொண்டுவிடுகின்றன.
நிலக்காட்சி ஓவியங்களைக் காணுவது போலவே நான் செவ்வியல் கவிதைகளை வாசிக்கிறேன். இரண்டிலும் அரூபமான இயக்கமுள்ளது. தொலைவும் அண்மையும் ஒரே நேரத்தில் கண்வசமாகின்றன.
கதையை எழுதுகிறவன் இயற்கையைத் தேநீர் கோப்பையைப் போலவே பயன்படுத்துகிறான். அழகான கோப்பை தேவை தான். ஆனால் முக்கியமானது தேநீர் தான். கோப்பையின் வழியே தேநீர் தான் ருசிக்கப்படுகிறது. வாழ்க்கை அனுபவங்களை ஏந்திக் கொள்ளும் கலன் போலவே உரைநடையில் இயற்கை கையாளப்படுகிறது. காரணம் இயற்கையைத் தனித்து அறிய வேண்டியது தனது வேலையில்லை என்று கதையாசிரியன் நினைக்கிறான். அபூர்வமாக ஒரு சில படைப்பாளிகள் இயற்கையைப் பற்றி ஆழ்ந்த புரிதலை, புதிரை, கண்டுணர்தலை தனது கதைகளின் வழியே வெளிப்படுத்துகிறார்கள்.
மோபிடிக் நாவலை வாசிக்கும் எவரும் கடலை ஆராதிப்பதில்லை. மாறாகக் கேப்டன் ஆகாப்பின் மூர்ககத்தை மோபிடிக்கின் மூர்க்கத்துடன் இணைந்து புரிந்து கொள்கிறார்கள். இது போலத் தான் ஜாக் லண்டனின் கதைகளும். அதில் உறைபனியில் சிக்கி பசியால் அவதிப்படும் மனிதனே சித்தரிக்கபடுகிறான். உறை பனியின் மென்மையோ அழகோ வியந்து பேசப்படுவதில்லை. ஜப்பானியக் கவிஞர்களில் பலர் பனிக்காலத்தைக் கொண்டாடி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். ஜென் கவிதைகளில் வரும் பனி என்பது குறிப்பிட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு. சில நேரங்களில் பனி பிரிவைக் குறிக்கிறது. மரணத்தை அடையாளப்படுத்துகிறது. தற்காலிக சந்தோஷத்தைப் பேசுவதாக மாறுகிறது.
இயற்கையை இன்றைய கவிஞன் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறான் என்பது முக்கியமானது. தேவதச்சனின் சில வரிகள் இயற்கையைப் பற்றிய புதிய புரிதலை உருவாக்குகின்றன
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
••
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
••
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்
ஒரு சொட்டு தண்ணீருக்குள் ஆயிரம் சொட்டுகளைக் காண முடிவது தான் கவிஞனின் தனித்துவம். ஒரு கவிதையின் கடைசிவரியாக உள்ள இதிலிருந்து எப்படி ஒரு கவிதை வாசகன் வெளியேறிப் போக முடியும். உண்மையில் அவன் இந்த வரியின் வழியாகத் தண்ணீருக்குள் பிரவேசிக்கிறான். தண்ணீரின் கதவுகளைத் திறந்து உள்ளே செல்கிறான். ஓராயிரம் நீர்த்துளிகள் அவனை வரவேற்கக் காத்திருப்பதைக் காணுகிறான். ஒவ்வொரு துளியும் இன்னொரு கதவு. முடிவில்லாத துளிகள். முடிவில்லாத பயணம். கவிதை ஒரு போதும் முடிவதேயில்லை
••
October 9, 2021
லியுடா தேடும் உண்மை
வெனிஸ் திரைப்பட விழாவில் சிறப்புப் பரிசு பெற்றுள்ள Dear Comrades என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

சமகால ரஷ்யப் படங்கள் ஹாலிவுட் படங்களுடன் போட்டிப்போடும் விதமாகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேசச் சந்தையைக் குறித்து வைத்து உருவாக்கப்படும் இந்தப் படங்கள் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் சிறந்த கலைப்படங்களின் உருவாக்கமும் விநியோகமும் குறைந்து வருகிறது.
ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கி போன்ற சினிமா மேதைகள் உருவாக்கிய புதிய அழகியலை இளம் இயக்குநர்களில் ஒரிருவரே முன்னெடுக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் போது நிறைய இடங்களில் தார்க்கோவஸ்கியின் பாதிப்பினை உணர முடிந்தது.
1962ல் கதை நடக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் தெற்கிலுள்ள மாநகரமான நோவோச்செர்காஸ்க்கில் லியுடா வசிக்கிறாள்., நடுத்தர வயது பெண்ணான இவள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். தீவிர விசுவாசி. நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கிறாள்.

அரசின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக நாடெங்கும் விலைவாசி அதிகமாகிறது உணவுப்பொருட்களின் தட்டுப்பாடு உருவாகிறது. இந்தச் சூழலில் ஒரு நாள் காலை அவள் ரேஷனில் வழங்கப்படும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்காகச் செல்கிறாள். அந்தக் கடையின் முன்னே நிற்கும் மக்கள் கூட்டம் தள்ளுமுள்ளு செய்கிறது. கடையின் பின்பக்கம் வழியே சென்று தெரிந்த பெண் மூலம் தனக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கிக் கொள்கிறாள்.
இந்த முதற்காட்சியிலே வேண்டியவர்களுக்கு மட்டுமே எல்லாமும் கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.. லியுடாவின் மகள் அரசு போராட்டக்காரர்களுடன் நெருக்கமாக இருக்கிறாள். . அவள் அம்மாவின் அறிவுரைகளைக் கேட்பதில்லை.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடக்கும் கூட்டத்தில் உணவுப்பொருட்கள் விலையேற்றம் இப்படியே நீடித்தால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். ஆனால் அதிகாரிகளோ இது அமெரிக்காவின் சதி. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள்

இந்த நிலையில் நோவோச்செர்காஸ்க் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் ஆலையில் வேலை நிறுத்தம் ஏற்படுகிறது. தொழிற்சாலை அலுவலக்தை மக்கள் முற்றுகையிடுகிறார்கள். லியுடா உள்ளிட்ட அதிகாரிகள் தப்பிப் போக வழியில்லை. ஆகவே ராணுவம் அழைக்கப்படுகிறது. ராணுவ அதிகாரியோ மக்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது என்கிறார்.
ஆனால் சூழ்நிலை கைமீறிப்போகவே துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்டது என லியுடா உணருகிறாள். ஆனால் அதை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியவில்லை. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் எண்பது பேர் காயமடைகிறார்கள். 26 பேர் கொல்லப்படுகிறார்கள்
இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போல அதிகாரிகள் உடனடியாகச் சாட்சியங்களை அழிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கிறார்கள். இறந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார்கள். இரவோடு இரவாகத் துப்பாக்கிச் சூடு நடந்த சதுக்கத்தினைப் புதிய தார் போட்டு மறைக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின் சாட்சியாக உள்ளவர்களை மிரட்டி வாயை அடைக்கிறார்கள்
அப்படி உளவுத்துறையைச் சேர்ந்த விக்டர் லியுடா வீட்டிற்கு வந்து அவளை எச்சரிக்கை செய்கிறான். அத்துடன் அவளது மகளைப் பற்றி விசாரணை செய்கிறான். வீட்டினை சோதனையிடுகிறான். இந்தத் துப்பாக்கி சூட்டிற்குப்பிறகுத் தன் மகளைக் காணவில்லை என்று லியுடா கவலையோடு சொல்கிறாள்.

ஒருவேளை தன் மகள் ஸ்வெட்காவும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருப்பாளா என அறிந்து கொள்ளப் பிணவறைக்கு ஓடுகிறாள். அங்கே அப்படியான உடல் இல்லை. உண்மையைத் தேடும் அவளது பயணம் அன்று தான் துவங்குகிறது
லோகினோவுடன் இணைந்து லியுடா கண்டறிந்த உண்மைகள் கசப்பானவை. அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுவரை அவள் வைத்திருந்த நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப் போகின்றன. அதிகாரத்தின் உண்மையான முகத்தை அறிந்து கொள்கிறாள்
ஆரம்பத்தில் லியுடா கட்சி கூட்டத்தில் ஆதரவாகப் பேசுவதும். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நடக்கும் கூட்டத்தில் பொய் பேசமுடியாமல் கழிப்பறையில் நின்று கதறுவதும். மூடப்பட்ட நகரவாசலைக் கடந்து போக அனுமதி மறுக்கப்பட்ட போது நிர்கதியாக உணருவதும். கல்லறைத் தோட்டத்தில் நின்று துயரத்தை வெளிப்படுத்துவதும் மிகச் சிறந்த காட்சிகள்.
கறுப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். உண்மையைத் தேடும் பயணம் என்பதால் கறுப்பு வெள்ளையைத் தேர்வு செய்தேன் என்கிறார் இயக்குநர் ஆண்ட்ரி கோன்சலோவ்ஸ்கி

படத்தின் ஒன்றிரண்டு காட்சியிலே மட்டுமே தோன்றும் லியுடா தந்தை சிகரெட் பிடிப்பதும் வீட்டைவிட்டு வெளியேறாமல் ஒடுங்கியிருப்பதுமாக வாழுகிறார். துப்பாக்கிச்சூடு பற்றி அறிந்தவுடன் அவர் ஒரு பழைய கடிதம் ஒன்றை அவளிடம் படிக்கக் கொடுக்கிறார். அதில் கசாக்கியரான அவரது மாமாவும் இப்படியான ஒரு எதிர்ப்புப் போராட்டத்தில் தான் கொல்லப்பட்டார் என்பதை லியுடா அறிந்து கொள்கிறாள்.
லியுடாவின் தந்தையிடம் நடந்த நிகழ்விற்குச் சாட்சியமாக ஒரு கடிதம் உள்ளது. ஆனால் லியுடாவிடம் அது கூட இல்லை. இன்னொரு காட்சியில் காரில் அவளுடன் வரும் கல்லறை காவலாளி வாயைத் திறக்க மறுக்கிறான். எதுவும் நடக்கவில்லை. தனக்கு எதுவும் தெரியாது என்று திரும்பத் திரும்பச் சொல்கிறான். உண்மையைப் புதைத்துக் கொண்டு மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதை லியுடா நன்றாக உணர்ந்து கொள்கிறாள்.
கம்யூனிச எதிர்ப்பிற்காகவே உருவாக்கப்பட்ட படம் என்று இதைப்பற்றி ஒரு கடுமையான விமர்சனம் தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் நடந்த உண்மைகளை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதில் மறைக்க எதுவுமில்லை என்று ரஷ்ய இதழ்களே பாராட்டும் தெரிவித்திருக்கின்றன.

லியுடாவாக யூலியா வைசோட்ஸ்காயா மிகச்சிறப்பாக நடித்துள்ளார். Paweł Pawlikowski வின் Cold War படத்தினை நினைவுபடுத்தும் ஆண்ட்ரி நைடெனோவ்வின் அபாரமான ஒளிப்பதிவு.
We can express our feelings regarding the world around us either by poetic or by descriptive means. I prefer to express myself metaphorically. என்று தார்க்கோவஸ்கி கூறுகிறார். இந்தப் படமும் அப்படியான ஒரு முயற்சியைத் தான் மேற்கொண்டிருக்கிறது.
.
October 7, 2021
நோபல் பரிசு
இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

A Companion to Salman Rushdie என இவர் சல்மான் ருஷ்டி பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்திருக்கிறார். அதைப் படித்திருக்கிறேன். மற்றபடி இவரது நாவல்கள் எதையும் வாசித்ததில்லை.
இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என நேற்று வரை பத்திரிக்கைகள் கணித்த எந்தப் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை.
2005ம் ஆண்டின் புக்கர் பரிசு பட்டியலில் இவரது நாவல் இடம்பெற்றிருந்திருக்கிறது. ஆனால் விருது கிடைக்கவில்லை.

தான்சானியாவின் சான்சிபர் தீவில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியாகப் பணியாற்றுகிறார். இதுவரை பத்து நாவல்கள் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு கட்டுரை நூல் எழுதியிருக்கிறார்.
சர்வதேச அளவில் இலக்கியத்திற்கான உயரிய விருது எதையும் இதுவரை இவர் பெற்றதில்லை.
இவரது Paradise. Desertaion இரண்டு நாவல்களும் முக்கியமானவை என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது. வோலே சோயின்காவிற்கு பிறகு நோபல் விருதை வென்ற ஆப்பிரிக்க எழுத்தாளர் குர்னா ஆவார்.
உலகம் முழுவதிலுமிருந்து வரும் பரிந்துரைகளிலிருந்து இருநூறு எழுத்தாளர்களின் பெயர்களை ஆரம்ப நிலையில் தேர்வு செய்கிறோம். அதிலிருந்து இருபது பெயர் கொண்ட அடுத்த கட்ட பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஐந்து பேர் இறுதிப்பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இவர்களில் ஒருவருக்குத் தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்கிறார் எல்லன் மேட்சன்.
இவர் நோபல் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர். இது தான் வழக்கமான முறை என்றாலும் பெரும்பான்மை ஆண்டுகளில் பதிப்பகங்கள் மற்றும் இலக்கிய முகவர்களின் தலையீடு பரிசைத் தீர்மானிக்கிறது என்கிறார்கள்.
ஊடகப் பரபரப்புகள் அடங்கிய பிறகு இவரது நாவல்களைப் படித்துப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
பிரெஞ்சு எழுத்தாளர் Annie Ernaux பெயர் நோபல் இறுதிப்பட்டியலில் இருந்தது. அவரது பெரும்பான்மை படைப்புகளைப் படித்திருக்கிறேன்
நோபல் பரிசு கிடைக்காத போதும் இவர் சமகாலத்தின் மிக முக்கியப் படைப்பாளி என்பேன்.
October 6, 2021
சிறப்பு சலுகை
எனது அனைத்து நூல்களுக்கும் தேசாந்தரி பதிப்பகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
இருபது சதவீதத் தள்ளுபடியில் நீங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம்





Desanthiri Pathippagam
: D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
Phone: 044 2364 4947
Mobile 9789825280
இரண்டு மோனாலிசா
லியோனார்டோ டா வின்சி வரைந்த மோனா லிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது. இந்த ஓவியம் குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன்

The Secret Of The Mona Lisa என்ற பிபிசியின் ஆவணப்படம் ஒரு துப்பறியும் கதை போல விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது
மோனாலிசாவின் நகல்களை நாம் பார்த்திருப்போம். புகைப்படமாகவும் காலண்டர் ஓவியமாகவும் பார்த்திருப்போம். பாரிஸ் நகரத்தில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நேரில் காணும் போது நாம் அடையும் முதல் வியப்பு ஓவியம் இவ்வளவு சிறியதா என்பதே. ஒவ்வொரு ஆண்டும், ஆறு மில்லியன் மக்கள் மோனாலிசாவை பார்த்துப் போகிறார்கள்.
பாரீஸின் லூவர் ம்யூசியத்தில் இருக்கும் மோனாலிசா உண்மையில் யார். அவரை எதற்காக டாவின்சி ஓவியம் வரைந்தார். இந்த ஓவியத்தின் பின்னுள்ள அறியப்படாத வரலாற்றைத் தேடிச் செல்லும் பயணமாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோ என்ற பட்டு வணிகரின் மனைவி லிசா டெல் கியோகாண்டோவின் உருவப்படமாகக் கிபி. 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்கிறார்கள்.

ஐந்து குழந்தைகளின் தாயான லிசா முகத்தில் புன்னகை மலரச்செய்ய இசைக்கலைஞர்களையும் கோமாளிகளையும் அழைத்து வந்து டாவின்சி வேடிக்கை செய்யவைத்தார் என்கிறார்கள். இதுவும் ஒரு கற்பனை கதையாக இருக்கக்கூடும். ஆனால் மோனாலிசாவின் பார்வையும் புன்னகையும் அலாதியானது.
பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோ டாவின்சி தந்தையோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். ஒரே வீதியில் குடியிருந்திருக்கிறார். அவரது விருப்பத்தின்படியே டாவின்சி லிசாவை ஓவியம் வரைந்திருக்கிறார் என்கிறார்கள். லிசா டெல் கியோகாண்டோவின் குடியிருந்த வீதியைத் தேடிச் செல்லும் ஆண்ட்ரூ கிரஹாம்-டிக்சன் குறுகலான அந்தத் தெருவில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக லிசா வசித்த வீட்டினை அடையாளம் கண்டு கொள்கிறார். உருமாறிய இன்றைய சூழலில் அந்த இடத்தின் பழைய நினைவுகளையும் அதற்குச் சான்றாக உள்ள ஜியோர்ஜியோ வசாரி 1550ல் வெளியிடப்பட்ட லியோனார்டோ பற்றிய ஆவணங்களையும் விவரிக்கிறார் ஆண்ட்ரூ
உண்மையில் டாவின்சி ஒரு மோனாலிசா ஓவியத்தை வரையவில்லை. இரண்டு ஓவியங்களை வரைந்திருக்கிறார். லூவரில் இருப்பது இரண்டாவது ஓவியம். முதல் ஓவியம் எங்கே போனது என்ற தேடலில் இறங்குகிறார் ஆண்ட்ரூ.
2005ம் ஆண்டு ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் ஒருவரால், 1477ம் ஆண்டு ரோமனிய தத்துவவாதியான “சிசரோ” எழுதிய ஒரு தொகுதியிலிருந்து ஒரு சாட்சியம் கண்டுபிடிக்கப்பட்டது. டாவின்சின் சமகாலத்தவரான அகஸ்டினோ வெஸ்புசியின் அடிக்குறிப்பு ஒன்றில் அக்டோபர் மாதம் 1503ம் ஆண்டு, பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவியான லிசாவின் டாவின்சி வரைந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது
தேவாலயத்திலுள்ள பழைய ஏடு ஒன்றில் மோனாலிசாவின் மரணம் பற்றிய குறிப்பும் தேவாலயத்தில் நடைபெற்ற சடங்கு பற்றியும் குறிப்பிடப்படுகிறது. அந்த ஆவணத்தை ஆண்ட்ரூ கையில் எடுத்துப் பார்க்கும் போது அவரது முகத்தில் வெளிப்படும் ஆச்சரியம் நிஜமானது.

இது போலச் சிங்கப்பூரில் உள்ள தனிநபர் சேமிப்பிலிருந்த இன்னொரு மோனாலிசாவைக் காணச் செல்கிறார். அந்த ஓவியத்தின் முன் நிற்கும் போது மோனாலிசாவை காணக் கடல் கடந்து வந்திருப்பதாகச் சொல்கிறார். நிஜமான பெண்ணைத் தேடி வந்த பயணம் போலவே இருக்கிறது
இது போலவே ரஷ்யாவில் உள்ள தனிநபர் கலைசேகரிப்பில் இன்னொரு மோனாலிசா இருப்பதை அறிந்து அதைக் காணவும் செல்கிறார். இந்த ஓவியங்களில் எது உண்மையாக டாவின்சி வரைந்தது. எது நகல் என்று கண்டறிவது எளிதாகயில்லை. காரணம் இந்த ஓவியம் திருடப்பட்டிருக்கிறது. பல்வேறு ஓவியர்களால் துல்லியமாக நகல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது
இன்றுள்ள அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓவியத்தை ஆராய்ந்து எது உண்மை என்று கண்டறிகிறார்கள். மோனாலிசாவின் மர்மமான புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு உண்மைகள் புதையுண்டு இருக்கிறதா என வியப்பளிக்கிறது.
இன்னொரு பக்கம் மூல ஓவியங்களை எப்படிக் கண்டறிகிறார்கள்.. அதைத் தேடும் ஆய்வாளர்கள் எவ்வளவு சிரத்தையாக, ஆழ்ந்து ஆய்வு செய்கிறார்கள் என்பதும் முக்கியமாக உள்ளது.
பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவிடம் டாவின்சி தான் வரைந்த லிசாவின் ஓவியத்தை ஏன் ஒப்படைக்கவில்லை. முற்றுப்பெறாத அந்த ஓவியம் தற்போது எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு விடைதேடி ஆண்ட்ரூ மிக நீண்ட பயணங்களை மேற்கொள்கிறார்
பாரீஸில் இருப்பது லிசா டெல் கியோகாண்டோ எனும் மோனாலிசாவே இல்லை. அவளது சாயலில் வரையப்பட்ட வேறு ஒரு பெண். உண்மையில் பெண் கடவுள் போலவே அவள் உருவாக்கப்பட்டிருக்கிறாள்.
கியுலியானோ டி மெடிசியால் இந்த ஓவியம் வரைவதற்குப் பணிக்கப்பட்டிருக்கிறது. தனது நினைவிலிருந்து இதை டாவின்சி வரைந்திருக்கக் கூடும் முற்றிலும் புதிய முறையில் இயல்பைக் கடந்து உருவாக்கப்பட்டிருக்கும் வரைகோடுகள் வண்ணமும் இந்த ஓவியத்திற்குத் தனித்த வசீகரத்தை அளிக்கின்றன என்கிறார். மார்ட்டின் கெம்ப்

மோனாலிசா ஒவியத்தின் நீண்டகால மர்மம் என்னவென்றால், ஏன் அவர் புருவங்கள் இல்லாமல் வரையப்பட்டிருக்கிறார் என்பதே. அக்டோபர் 2007 இல், பிரெஞ்சு ஆய்வாளரான பாஸ்கல் கோட்டே, தனது அதிநவீன கேமரா மூலம் மோனாலிசாவின் முகத்தை ஆராய்ந்து அதில் டாவின்சி ஓவியத்தில் மெல்லிய புருவம் வரைந்திருக்கிறார். அது ஓவியத்தைச் சுத்தம் செய்யும் போது கவனக்குறைவாக அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். கூடுதலாக
லூவரில் உள்ள மோனாலிசா யார் என்ற விடைகாணமுடியாத கேள்விக்குப் பதிலாக அவள் மகிழ்ச்சியின் அடையாளமாக மக்களால் கருதப்படுகிறாள். உண்மையில் டாவின்சி மனிதகுலத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் அடையாளமாகவே இந்தச் சிரிப்பை வரைந்திருக்கிறார் என்கிறார்கள்
இந்த ஆவணப்படத்தில் ஒரு சிறுகுறிப்பு முக்கியமான வரலாற்று உண்மையை விளக்கச் சான்றாக மாறுவது என்னை ஈர்த்தது. “சிசரோ” எழுதிய நூலில் இடம்பெற்றுள்ள இந்தச் சிறிய குறிப்பு தான் டாவின்சி இந்த ஓவியத்தை லிசாவை மாடலாக வைத்து வரைந்திருக்கிறார் என்பதன் சாட்சியம்.
புகைப்படக்கருவி வருவதற்கு முன்பு வரை புகழ்பெற்ற ஓவியங்களைக் காண வேண்டும் என்றால் அந்த ஓவியம் உள்ள ம்யூசியத்திற்குச் சென்று காத்திருந்து நேரில் காண வேண்டும். ஆனால் புகைப்படத்தின் வருக நகல்களை உருவாக்கிவிட்டது. பல்வேறு தரத்தில் வெளியிடப்படும் நகல்களைப் பார்த்துப் பழகிய மக்கள் அசலை காணுவதில் விருப்பமற்றுப் போய்விடுகிறார்கள். ஒருவேளை அசலை நேரில் கண்டாலும் இவ்வளவு தானா என ஏமாற்றம் அடைகிறார்கள்.
இன்னொரு பக்கம் கலை வரலாற்றாசிரியர்கள். ஆய்வாளர்கள். கலைரசிகர்கள் மூல ஓவியங்களைக் காண நீண்ட பயணத்தை மேற்கொண்டு தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். அதி நவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் ஓவியங்களைப் பாதுகாப்பதும் சீரமைப்பதும் எளிதாகி வருகிறது
இந்த ஆவணப்படத்தில் இரண்டு தனிநபர் சேமிப்புகளில் உலகின் அரிய ஓவியங்களைப் பாதுகாக்கப்பட்டு வருவதைக் காட்டுகிறார்கள். கோடிகோடியாகப் பணம் கொடுத்து இப்படி அரிய கலைப்பொருட்களை வாங்கிப் பதுக்கிக் கொள்வது பெருவணிகர்களின் பொழுதுபோக்கு.
வாழ்நாளில் போதுமான வருமானமின்றிக் கடனாளியாகக் கஷ்டப்பட்டவர் டாவின்சி. ஆனால் இன்று அவரது ஓவியங்களின் மதிப்பு பலநூறு கோடிகள்.
மோனாலிசாவின் புன்னகையை விடவும் காலம் எப்படிக் கலையின் மதிப்பை உருவாக்குகிறது என்ற மர்மம் புதிரானது.
October 4, 2021
உலகில் நடந்திராத சந்திப்பு
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த செக் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படும். போஹுமில் ஹ்ரபால் எழுதிய Too Loud a Solitude என்ற சிறிய நாவலை வாசித்தேன்.. கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக இந்த நாவல் இடம் பெற்றுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

இதனை நண்பர் ஆம்பூர் அசோகன் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார். நான் போஹுமில் ஹ்ரபால் எழுதிய Dancing Lessons for the Advanced in Age முன்னதாகப் படித்திருக்கிறேன். அவரது எழுத்து மிகவும் பிடித்திருந்தது.
Too Loud a Solitude நாவல் மதுவிடுதி ஒன்றிலோ அல்லது தெருவிலோ தற்செயலாகச் சந்தித்த ஒருவரால் ஒரு கதை சொல்லப்படுவது போலவே வாசகருக்குச் சொல்லப்படுகிறது.
ஹன்டா என்ற கிழவர் தான் முக்கியக் கதாபாத்திரம். அவர் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். இடையிடையே வாசிப்பிலிருந்து தான் பெற்ற அரிய ஞானத்தை வெளிப்படுத்துகிறார். பழைய ப்ராக் நகரின் ஸ்பாலென் தெருவில் சிறிய குடியிருப்பு ஒன்றில் வாழும் ஹன்டா பியர் குடிப்பதிலும் புத்தக வாசிப்பிலும் அதிக விருப்பம் கொண்டவர். அவருக்கென உறவுகள் இல்லை. தனிமையான வாழ்க்கை, அவரது அம்மாவின் மரணத்தைப் பற்றிய பகுதியில் அம்மாவின் சாம்பலை மயானத்தில் வாங்கும் ஹன்டா புத்தகங்கள் எரிக்கப்பட்ட போது உண்டான சாம்பலுக்கும் அதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார்
பழைய காகிதங்களை வாங்கி அழித்துக் காகிதமாக்கும் வேலை செய்யும் ஹன்டா 33 ஆண்டுகளாக இந்தப் பணியினைச் செய்து வருகிறார்
குப்பை என மக்களால் வீசி எறியப்பட்ட புத்தகங்களைக் கட்டுக்கட்டாகக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. பல்வேறு அரிய நூலகங்கள் மூடப்பட்டு அங்கிருந்த புத்தகங்கள் ரயில் மூலம் வந்து இறங்குகின்றன. வேண்டாத புத்தகங்கள் என இலக்கிய நூல்களைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள்.

நாவலின் துவக்க அத்தியாயத்திலே ஹன்டா சொல்கிறார். உண்மையில் இவர்களின் செயலைக் கண்டு புத்தகங்கள் மௌனமாகச் சிரித்திருக்கும் என்கிறார். காரணம். நெருப்பால் அழிப்பதன் மூலம் புத்தகத்தை உலகிலிருந்து மறைய செய்துவிட முடியும் நினைப்பது முட்டாள்தனம். புத்தகங்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை அரூபமான தாவரம் போல நமக்குள் கிளை விரித்து வளர்கின்றன. நினைவில் வேர்விடுகின்றன என்பதே நிஜம்
புத்தகங்களை அழிக்கும் தனது வேலையை மன்னிக்கமுடியாத குற்றமாக ஹன்டா கருதுகிறார். இதனால் பழைய பேப்பர் கட்டுகளிலிருந்து கிடைக்கும் அபூர்வமான புத்தகங்களைச் சேகரித்து வீடு முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறார். அந்தப் புத்தகங்களுக்குள்ளே வாழுகிறார்.
உலகில் ஏன் புத்தகங்கள் கைவிடப்படுகின்றன. அதிலும் இப்படிச் சர்வாதிகாரம் ஏன் நூலகங்களை அழித்து மகத்தான படைப்புகளைச் சாம்பலாக்க முயலுகின்றன என்று ஹன்டா வருத்தம் கொள்கிறார்
படித்த புத்தகங்களிலிருந்து அவரது மனதில் தேங்கிய உண்மைகள். தேடல்கள் அவரது வாழ்க்கையை வழிநடத்துகின்றன. அழுக்கான தோற்றத்துடன் ஒதுங்கிய குடியிருப்பில் வாழும் அவருக்கு எழுத்தில் உருவான மனிதர்களும் எழுத்தாளர்களும் தான் தோழர்கள். . பிரபல தத்துவஞானிகள் அவருடன் கற்பனையாக விவாதிக்கிறார்கள். சாக்ரடீஸ் முதல் லாவோ-ட்ஸே, கான்ட் முதல் சார்த்தர் வரையிலான சிறந்த இலக்கியப் படைப்புகளால் அவரது வீடு நிரம்பியுள்ளது,
நாவலின் ஒரு அத்தியாயத்தில் இயேசு நாதரும் சீன ஞானியான லாவோ-ட்ஸேவும் சந்தித்துக் கொள்கிறார்கள். உரையாடுகிறார்கள். மிக முக்கியமான சந்திப்பு. உலகில் நடந்திராத அந்தச் சந்திப்பு நாவலில் நடக்கிறது. இருவரையும் ஒருங்கே சந்திக்கும் ஹன்டா அவர்களின் சந்திப்பைப் பெருமைக்குரியதாக நினைக்கிறார். புனைவின் தனித்துவமே இது போலச் சாத்தியமற்ற விஷயங்களைச் சாத்தியப்படுத்திக் காட்டுவது தானே. இயேசுவும் லாவோ-ட்ஸேவும் அருகருகில் நிற்கும் காட்சி அத்தனை அழகாக இருக்கிறது.
முப்பத்து மூன்று ஆண்டுகளாகப் பழைய காகிதங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் ஹன்டா ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதைச் சொல்கிறார். அது தான் அவரது ஒரே அடையாளம். குற்றவுணர்வு. அவர் வாசித்த புத்தகங்கள் மூலம் அவரது ஆளுமை மாறுபட்டதாக உள்ளது. உலகின் கண்களில் அந்த ஆளுமை வெளிப்படவேயில்லை
ஒரு அழகான மீன் எப்போதாவது தொழிற்சாலைகளின் வழியாக ஓடும் மாசுபட்ட நதியின் நீரில் பிரகாசிப்பது போல, பழைய காகித கட்டுகளுக்குள் ஒரு அரிய புத்தகம் எப்போதாவது தன் முதுகெலும்பைக் காட்டிக் கொண்டு பிரகாசிக்கும், , உடனே அதை மீட்டு வெளியே எடுத்துத் துடைத்து, விரித்து, முதல் வாக்கியத்தைப் படிப்பேன் அப்போது ஏற்படும் சந்தோஷம் அளவில்லாதது என்கிறார் ஹன்டா
புத்தகம் படிக்கும்போது, நான் உண்மையில் வாசிப்பதில்லை; நான் ஒரு அழகான வாக்கியத்தை என் வாய்க்குள் நுழைத்து அதை ஒரு பழச்சாறு போல உறிஞ்சுகிறேன், அல்லது மது போல் சிந்தனை கரைந்து போகும் வரை குடித்து மூளை மற்றும் இதயத்தை ஊடுருவி நரம்புகள் வழியாக ஒவ்வொரு இரத்த அணுவிற்குள்ளும் செல்கிறேன் என்று இன்னொரு இடத்தில் சொல்கிறார் ஹன்டா
புத்தகங்களுடன் இருப்பவர்கள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை எனும் ஹன்டா, அந்தி நேரத்தை மிகவும் நேசிக்கிறார். அந்த நேரத்தில் ஏதோ: முக்கியமான ஒன்று நடக்கலாம் என்ற உணர்வு அவருக்குள் எப்போதும் இருந்தது. அந்தி வேளையில் அனைத்து பொருட்களும், அனைத்து தெருக்களும் மக்களும் மிகவும் அழகாக இருக்கின்றன அந்தி ஒரு மாய வெளிச்சம் என்கிறார்.
the heavens are not humane, nor is any man with a head on his shoulders என நாவலின் ஒரு இடத்தில் ஹன்டா சொல்கிறார். சொர்க்கம் என்பது மனிதர்களுக்கான இடமில்லை என்பதை அவர் புத்தகங்களின் வழியே தான் கண்டுபிடிக்கிறார்.
அவரது வீட்டில் படுக்கை அறை துவங்கி கழிப்பறை வரை எங்கும் புத்தகங்கள் நிரம்பியிருக்கின்றன. அவரும் சில எலிகளும் அந்தப் புத்தகங்களுக்குள் ஒன்றாக வாழுகிறார்கள். தன்னையும் ஒரு எலிபோலவே அவர் நினைக்கிறார்.
இந்தக் கதையில் வரும் ஹன்டா போலவே ஹ்ரபால் பழைய காகிதம் அரைக்கும் ஆலை ஒன்றில் வேலை செய்திருக்கிறார். புத்தகங்கள் கைவிடப்படுவதையும் அழிக்கப்பட்டு கூழாக்கப்படுவதையும் தாங்கமுடியாமல் வேலையை விட்டு விலகிப் போயிருக்கிறார்.
இந்த நாவலை மூன்று மாறுபட்ட வடிவங்களில் போஹுமில் ஹ்ரபால் எழுதியிருக்கிறார். இதன் இறுதி வடிவமே நான் இன்று வாசிப்பது. புத்தகம் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கில்லை. அது ஒரு வாழ்க்கை முறை என ஹன்டா நம்புகிறார். அதை அவர் உணரும் விதம் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கிறது
தனது, 82 வயதில், பிராக்கின் புலோவ்ஸ் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் புறாக்களுக்கு உணவளிக்கும் போது ஜன்னலிலிருந்து விழுந்து ஹ்ரபால் இறந்து போனார். அவரது கதையில் வரும் நிகழ்வு போலவே அவரது வாழ்க்கையும் முடிந்து போனது துயரமானது. .
இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது
உலகம் ஒருமனிதனைக் கைவிடும் போது புத்தகங்கள் அவனை அரவணைத்துக் கொள்கின்றன. ரகசியமாக அவனுடன் பேசி உற்சாகத்தை, நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. புத்தகங்களில் நாம் வாசிக்கும் சொற்கள் அன்றாட வாழ்வில் தராத புதிய அர்த்தத்தைத் தருகின்றன. வாசித்தல் என்பதை எளிமையான விஷயமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது ஒரு விந்தை. வாசிப்பின் வழியே மனதில். நினைவில் உருவாகும் மாற்றங்களை எளிதாகச் சொல்லிவிட முடியாது
செக்கில் இப்போது ஹன்டா பெயரில் பியர் விற்பனை செய்யப்படுகிறது. அந்த அளவு இந்த நாவல் புகழ்பெற்றிருக்கிறது. குறைந்த கோடுகளில் அழகான சித்திரத்தை உருவாக்கிக் காட்டும் ஓவியனைப் போலவே போஹுமில் ஹ்ரபால் செயல்பட்டிருக்கிறார். சிறிய நாவல் என்றாலும் மறக்கமுடியாத அனுபவம் தரும் நாவலாகவே உள்ளது
••
October 2, 2021
சமையலறையில் கடவுள்
ஸ்லோவேனிய கவிஞர் பீட்டர் செமோலிக்(Peter Semolič) சமகால உலகக் கவிஞர்களில் முக்கியமானவர். அவரது நேர்காணல் ஒன்றில் கவிதை என்பது புரட்சிகரமானது. கவிதையின் வழியாகவே சமூகத்தில் மாற்றங்கள் உருவாகும் என்று பதின்வயதிலிருந்து நம்பி வருவதாகவும் அமெரிக்காவில் கவிதைகள் ஒரு நுகர்வு பொருள் போல மாறிவிட்டதைக் காணும் போது உண்மையில் கவிதையின் இடம் ஒரு சமூகத்தில் என்ன என்பது குறித்துத் தான் குழம்பிப் போய்விட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இது தீவிரமாகக் கவிதை எழுதும் சமகாலக் கவிஞர்கள் பலருக்கும் ஏற்பட்ட குழப்பமே. இந்தியா போன்ற நீண்ட கவிதைமரபு கொண்ட தேசத்தில் கவிதையின் இடம் இன்று எப்படியிருக்கிறது. இரண்டாயிரம் வருஷ கவிமரபு கொண்ட தமிழில் சமகாலக் கவிதைகள் ஏன் மிகவும் குறைவாக வாசிக்கபடுகிறது என்ற கேள்விகள் முக்கியமானவை.
கவிதை இன்று செய்யப்படும் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. செயற்கையான பிளாஸ்டிக் மலர்களைப் போல அவை மலிவு விலை பொருளாக மாற்றம் கொண்டுவிட்டன. அரிய மலர்களோ எவர் கண்ணிலும் படாமல் சூரியனுக்கு முகம் கொடுத்தபடியே தனியே காற்றுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றன. தீவிரமான தமிழ் கவிதையின் இடமும் அப்படித்தானிருக்கிறது.

ஸ்லோவேனியாவில் 19 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்லோவேனியாவின் சுதந்திரத்திற்கான தேசிய இயக்கம் வரை கவிதை முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. கவிஞர்களே தேசத்தின் முக்கிய ஆளுமையாக கருதப்பட்டார்கள்.
ஒரு எழுத்தாளன் அல்லது கலைஞனின் இடம் எது என்பது குறித்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீவிரமான சர்ச்சை நடந்து வந்திருக்கிறது. பெரும்படைப்பாளிகளாகக் கருதப்படுகிறவர்கள் அனைவரும் இதற்கான பதிலை எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி. விக்டர் கியூகோ போன்றவர்கள் கலைஞனின் இடம் குறித்துத் தீவிரமாக வாதிட்டிருக்கிறார்கள். கலை என்றால் என்ன என்பது குறித்து அன்று வெளியான புத்தகங்களைக் காணும் போது இதை நன்றாகவே உணர முடிகிறது.
அமெரிக்காவில் சந்தை தான் இலக்கியத்தின் இடத்தைத் தீர்மானிக்கிறது. சந்தைப்படுத்தபடும் வணிகப்பொருட்களில் ஒன்றாகவே இலக்கியப்பிரதியும் கருதப்படுகிறது. சந்தையில் இதன் மதிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் அது நுகர்வுப்பொருளாகவே பதிப்பாளர்களால் கருதப்படுகிறது. ஆகவே அவர்கள் எழுத்தாளர்களைப் பிம்பங்களாக, நட்சத்திரங்களாக உருவாக்கவே முயலுகிறார்கள்.
நுகர்வு பண்பாட்டில் இலக்கியம் புத்தகவாசிப்பு என்பதெல்லாம் நுகர்வின் வழியாகவே தீர்மானிக்கபடுவதாக மாறிவருகிறது. ஆனால் சந்தையால் ஒரு போதும் இலக்கியத்தின் இடத்தைத் தீர்மானம் செய்துவிட முடியாது. அதன் குறுக்கு வழிகள் மூலம் விற்பனையை அதிகப்படுத்தலாம். விருதுகள் வாங்கலாம். ஆனால் இலக்கிய அந்தஸ்தை அடைய முடியாது. சரியான இலக்கியத்தை மதிப்பீடு செய்கிறவர்கள் சிறந்த வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள். கல்விபுலத்தைச் சார்ந்த ஆய்வாளர்களே. இவர்கள் மட்டுமின்றித் தேசத்தின் பண்பாடும் அரசியலும் இலக்கியத்தினை முன்னெடுப்பதிலும் அடையாளப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது

பீட்டர் செமோலிக் இந்தப் பிரச்சனையைத் தான் தனது நேர்காணலில் முக்கியமான குறிப்பிடுகிறார்.
கவிதையைச் சந்தைப்பொருளாக ஒரு போதும் கருதமுடியாது. கவிதையின் வழியாகச் சமூக மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பது இன்று தேய்வழக்கு போலக் கருதப்பட்டாலும் அது மாறாத உண்மையே. கவிதையை அரசியல் ஆயுதமாக முன்னெடுக்கும் முறை இன்றும் தொடருகிறது. இன அழிப்பிற்கு எதிராகக் கவிதைகள் இன்றும் உண்மையை உரத்துப் பேசுகின்றன. கவிதை எழுதுவதை அரசியல் செயல்பாடாகக் கருதுகிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்
தான் கவிதையின் வழியே மாற்றங்களை உருவாக்க விரும்புகிறேன். இது தனிமனிதனின் அகத்திலோ, சமூக வெளியிலோ எங்கும் ஏற்படலாம். அந்த உயர்ந்த நோக்கமும் கனவுமே கவிஞனை தொடர்ந்து செயல்பட வைக்கிறது என்கிறார் செமோலிக்

வீடற்ற கவிஞன் தன் காதலிக்கு கவிதை ஒன்றை எழுதுவதாகச் செமோலிக் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
••
நான் வார்த்தைகளால் ஆன ஒரு வீட்டைக் கட்டுவேன்.
பெயர்ச்சொற்கள் செங்கற்களாக இருக்கும்
மற்றும் வினைச்சொற்கள் அடைப்புகளாக இருக்கும்..
உரிச்சொற்கள் கொண்டு வீட்டை
அலங்கரிப்போம்
ஜன்னல் ஓரப்
பூக்களைப் போல.
என நீளும் வரிகளுடன் சொற்களால் ஒரு வீட்டினை கட்டுவதைப் பற்றிப் பீட்டர் செமோலிக் சிறந்த கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். இதில் கடவுளைப் போல மனிதனும் பொருட்களுக்குப் பெயரிடுகிறான். ஏற்கனவே இருக்கும் பெயர்களை விலக்கி புதிய பெயர்களை வைப்பதும் புதிதாகப் பொருளை வேறு தளத்தில் வேறு அர்த்ததில் அடையாளப்படுத்துவம் கவியின் வேலை. அதையே பீட்டர் இந்தக் கவிதையில் மேற்கொள்கிறார்.
அவரது கவிதைகள் ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியன், பிரஞ்சு, ஸ்பானிஷ், போலந்து, ஹங்கேரியன், பின்னிஷ், செர்பியன், பல்கேரியன் மற்றும் மாசிடோனியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரும் ஒரு சிறந்த மொழிபெயர்பாளரே. இவர் ஆங்கிலம், பிரெஞ்சு, செர்பியன் மற்றும் குரோஷிய மொழியிலிருந்து கவிதைகளை மொழியாக்கம் செய்து வருகிறார்
இவரது கவிதைகளின் சிறப்பாக நான் உணருவது அன்றாட வாழ்க்கையிலிருந்து அபூர்வமான தருணங்களை, நிலைகளை உருவாக்கிக் காடுடுவதாகும். சமையலறையில் ஒருவன் கடவுளுடன் உரையாடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இதில் சமையலறை என்பது முக்கியமானது. அது ஒரு குறியீடு. கடவுள் பசியற்றவர். நித்யமானவர். அவரது உலகில் சமையலறை கிடையாது. மனிதர்களின் முக்கிய இடம் சமையலறை. அது இல்லாத வீடே கிடையாது. சமைப்பது என்பது வெறும் உணவு தயாரிப்பது மட்டுல்லை. அது ஒரு மனநிலையின் வெளிப்பாடு. அங்கே சலிப்புறும் ஒருவன் கடவுளுடன் உரையாடுகிறா.
இன்னொரு கவிதையில் வீடற்ற கவிஞன் சொற்களால் ஒரு வீட்டினை கட்டுகிறான். கனவுத்திரைப் போல மெல்லிய பனிமூட்டமான சூழல் அவரது கவிதைகளில் காணப்படுகிறது. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். ஆக்டோவியா பாஸின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரது பாதிப்பினை இவரது கவிதைகளில் காணமுடிகிறது.
பீட்டர் செமோலிக் கவிதைகளை வாசித்த ஆர்வத்தின் காரணமாக ஸ்லோவேனிய சமகால இலக்கியங்களைத் தேடி வாசிக்கத் துவங்கினேன். மிகச்சிறப்பாக எழுதுகிறார்கள். ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் தமிழுக்கு அறிமுகமான அளவிற்கு வேறு இலக்கியங்கள் அறிமுகமாகவில்லை. ஆனால் அவசியம் அறிமுகம் செய்யப்பட வேண்டிய படைப்புகள் ஸ்லோவேனிய இலக்கியத்தில் நிறையவே இருக்கின்றன.
குறிப்பாகத் தத்துவாதியும் லக்கானிய சிந்தனையாளருமான Slavoj Žižek, மிக முக்கியமானவர். இவரது Zizek’s Jokes: Did You Hear the One about Hegel and Negation? என்ற கம்யூனிசம் மற்றும் கிறிஸ்துவம் குறித்துப் பேசப்படும் நகைச்சுவைகள் குறித்த ஆய்வு மிகச்சிறப்பானது. இந்த நூலில் அந்த ஜோக்குகளின் பின்னுள்ள மனநிலையை, நுண்அரசியலை அழகாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
A man believes that he is a grain of seed. He is taken to a mental institution where the doctors finally convince him that he is not a grain of seed, but a man. No sooner has he left the hospital but he comes back very scared, claiming that there is a chicken outside the door and that he is afraid that the chicken will eat him. ‘Dear fellow’, says the doctor, ‘you know very well that you are not a grain of seed but a man’. ‘Of course I know that’, replies the patient,
‘but does the chicken?’
•••
The meaning of a scene can change entirely with the shift in the subjective point, as in a classic Soviet joke in which Brezhnev dies and is taken to Hell; however, since he was a great leader, he is given the privilege to be taken on a tour and select his room there. The guide
opens a door and Brezhnev sees Khruschev sitting on a sofa, passionately kissing and fondling Marilyn Monroe in his lap; he joyously exclaims: “I wouldn’t mind being in this room!” The guide snaps back: “Don’t be too eager, comrade! This is not the room in hell for Khruschev, but for Marilyn Monroe!”
Dane Zajc என்ற கவிஞரை ஸ்லோவேனிய இலக்கியத்தின் மிகச்சிறந்த கவிஞராகக் கூறுகிறார்கள்.
தனது கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது செமோலிக் தான் ஆரம்பக் காலங்களில் ஒசையால் ஈர்க்கபட்டதாகவும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிதைகள் எழுதியதாகவும் பின்பு சூழலை விவரிக்கும் விதமாகக் கவிதைகளை எழுதியதாகவும் தற்போது சமகாலப் பிரச்சனைகள். காதல் காமம் குறித்த கவிதைகளை எழுதுவதாகவும் சொல்கிறார். தனது கவிதைகள் உரைநடையினைப் போலத் தற்போது அமைகின்றன. அவை உலகின் வன்முறை துவங்கி அரசியல் வரை சகல விஷயங்களையும் பேசுகின்றன என்கிறார்
Peter Semoli č poems
FATHER
Last night
I dreamt about you,
father.
You came
into my dream
as a deer
and stood astride
a grassy
mound.
I called you
by your name,
father.
I called you
by the word: father
I said:
Look,
my eyes are
two wet flowers
by the mountain
stream.
Come,
let your warm
deer tongue
dry the dew
that fell upon
my eyes.
And you stood
as in another
world,
as in another
dream,
on a mound,
overgrown with grass.
You shook your
mighty
antlers
and vanished in the white
cloud
of no one’s
dreams.
***
MESSAGE
One day in the future
the Earth will be peopled only by peasants.
They will drive around in horse carriages
and eat vegetables.
Animals will peacefully graze alongside white roads
or lie in the shade of poplars
and chew their cud.
In the evening, villagers will sit around
a white-haired artist
sinking deep into meditation.
Out of unimaginable distances,
he will send pictures into their consciousness,
more beautiful than the most beautiful poetry.
This is not utopia.
Young men will wear white clothes
similar to kimonos.
They will sit in the grass fields
and I, coming out of the nearby barn,
still drowsy from love,
will wave to them.
Then their death
will be more quiet than the death
of a leaf or a flower.
**
AN EVENING CHAT
Sometimes, if I am bored,
I talk to God. We examine
patterns in the linoleum together,
rhythmical repetitions
on the kitchen floor.
In these shapes, I say,
you can see a bear,
and in these a kitten,
and if you ignore the cap
on this funny chap
you get a lion’s head.
Awkwardly he repeats after me:
a bear, a cat . . .
And is utterly amazed whenever he finds
the same shape next to the sideboard
or beneath the window.
Can you see this line
cutting the floor in half?
What disharmony it brings into the images.
This here could be a bison,
but it turns out merely a deformed
horse’s back.
A bison, horse’s back . . .
He spells like a child at his primer,
enraged over a black crack
that cuts the kitchen floor in half.
I point forward, towards the door into the hallway,
where the monster zone begins,
the zone of fantastical creatures without heads,
horrible freaks without bodies.
Slowly I push him out,
after all, it is late and I would like to sleep.
But when I get up at night
to have a glass of water
he is still standing at the door,
staring into a thin line
that runs from the wall to the window
like someone
who is lost in a foreign city
and does not know the language
to ask the way.
**
An Icy Rain
Blessed are gods for their immortality?
I heard Achilles’ horses cry over Patroclus,
I saw the bloody rock with which Cain
killed Abel, my father and my brother –
they lied, turned into a stone, serene
as two gigantic pebbles on a riverbank.
An icy rain above Ljubljana and my face is already
pricked to the point of bleeding, tears from the wind in my eyes.
A language without tropes, a black-and-white drawing on paper
spanning even beyond the horizon, an infinite
repetition in mirrors placed opposite each
other – they will never die, that’s for sure,
but if something doesn’t die, has it ever lived at all?
The morning coffee is pleasantly warm and the girl who
walks by – and I’ve told myself not to write
about this anymore! – is truly beautiful: a red parka
on the background of snow melting more and more, disappearing.
**
poetry plays the same role in the life of human kind as the dreams play in the life of individual. எனக் கவிஞர் எர்னஸ்டோ சபடோ சொல்கிறார். தன்னைப் பொருத்தவரை கவிதை என்பது காமத்தை போன்றது. ரகசியமானது என்கிறார்
ஸ்லோவேனிய கவிஞர் மிலன் ரூபஸ் பற்றிக் கவிதையின் கையசைப்பு நூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஸ்லோவேனிய கவிதைகளைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அதையும் வாசிக்கலாம்.
Thanks ::
poetryinternational.org
கலைஞர் பொற்கிழி விருது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சார்பில் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிதை, புனைவிலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த ஒருவருக்கும் ஒரு லட்சம் பணமும் பாராட்டு பத்திரமும் அளித்துக் கௌரவிக்கப்படுகிறது.
2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களில் உரைநடைக்காக எனக்குக் கலைஞர் பொற்கிழி விருது அறிவிக்கபட்டுள்ளது

இதற்காக வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் வாசகர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி
தேர்வு செய்யப்பட்ட விருதாளர்கள்
.அபி (கவிதை), இராசேந்திர சோழன் (புனைவிலக்கியம்), எஸ்.ராமகிருஷ்ணன் (உரைநடை), வெளி ரங்கராஜன் (நாடகம்), மருதநாயகம் (ஆங்கிலம்), நதித் சாகியா (காஷ்மீரி)
September 29, 2021
புத்தகம் சுவாசிக்கிறது
தானாஸிஸ்: நீங்கள் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போது , முந்தைய நாள் எங்கே நிறுத்தினீர்களோ அங்கிருந்தே தான் எப்பொழுதும் தொடர ஆரம்பிப்பீர்களா ?
பாவிக்: இல்லை. நான் ஒருபோதும் இந்த விதமாக எழுதுவதில்லை. வெவ்வேறான கதை நிகழ்வுகள் இருக்கின்றன. மெதுவாக அவையெல்லாம் ஒரு வரைச்சட்டகத்திற்குள் பொருந்திக் கொள்கின்றன. மனக் கணக்கு என்ற ஒன்றை மட்டும் சார்ந்து எழுதுகிறேன் –

ஒரு நாவலுக்கென அதற்கேயுரிய வாழ்க்கை இருக்கிறது (அவர் ஒரு சிறிய , பச்சை நிற நோட்டுப்புத்தகத்தைத் தனது காற்சட்டைப் பையிலிருந்து வெளியே எடுக்கிறார். அதனுடைய அட்டையின் மேல் கையால் ஏதோ எழுதி வைத்திருக்கிறார்). இது என்னுடைய புதிய புதினம். கான்ஸ்ட்டாண்ட்டி நோபிலில் கடைசிக் காதல் ( Last Love in Constatinople). இப்படித்தான் என்னுடைய புதிய நாவல் உருவாகிறது. இந்தச் சிறிய நோட்டுப் புத்தகத்தில் புதிய நாவல் தொடர்பாய் என் மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் எழுதி வைக்கிறேன் ; தவிரப் பதிவு செய்து வைக்கத்தக்க வற்றையும் எழுதி வைக்கிறேன். Dictionary of the Khazars நாவலுக்கு இது போல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நோட்டுப் புத்தகம் வைத்திருந்தேன்.
தானாஸிஸ்: இந்தச் சிறிய நோட்டுப்புத்கத்தின் ஒரு சொற்றோடரை வெற்றுத்தாள் ஒன்றில் உங்களால் எழுதிக் காட்ட முடியுமா ?
பாவிக்: ஏன் கூடாது ? இதோ – என்னுடைய வருங்காலப் புத்தகத்தின் ஒரு வாக்கியத்தை உங்களுக்குத் தந்து விட்டேன். ஒருவர் நாவலை எப்படி உருவாக்குகிறார் என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் அந்தப் புத்தகத்தின் மூச்சுக்காற்றை உணர வேண்டியது அவசியம். ஒவ்வொரு புத்தகமும் சுவாசிக்கிறது. ஒரு நாவலானது மிகச் சரியாக ஒரு குழந்தை பிறப்பதைப் போலவே உருவாகிறது. சிறிய பச்சைநிற நோட்டுப்புத்தகம் பிறக்கப்போகும் ஒரு நாவலின் கருதான். வேறெதுவுமில்லை.
தானாஸிஸ்: அது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்கிறீர்கள் ?
பாவிக்: உங்களுக்கு வாசகரை அலுப்படையச் செய்வதில் விருப்பமில்லையென்றால் நீங்கள் அவனுடைய மூளையின் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பல்வேறு மட்டங்களோடு உரையாடலை நிகழ்த்த வேண்டும். அவனுடைய அறிவு , உள்ளுணர்வு , உணர்ச்சிகள் , கற்பனைத் திறன் , அவனுடைய உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான நோக்கங்கள் ஆகிய எல்லாவற்றுடனும் உரையாட வேண்டும். , அவ்விதமாக இயங்கினால் உங்களுடைய புத்தகம் ஒரு மனிதவுயிரைப் போல் மூச்சு விடும். அதை நான் உணர்ந்திருக்கிறேன்.
தானாஸிஸ்: போர்ஹெஸ் இங்கேயிருக்கும் பட்சத்தில் அவரைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புவது எதுவாக இருக்கும் ? அவரைப் பார்த்து நீங்கள் என்ன கேட்பீர்கள் ?
பாவிக்: ஒன்றுமில்லை. அதற்குப் பதிலாய் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதே எனக்கு விருப்பமான விஷயமாக இருக்கும்.
– அட்சரம் இதழிலிருந்து
September 27, 2021
அவள் ஒரு பொம்மை.
இத்தாலிய எழுத்தாளரான தொம்மோஸொ லேண்டோல்ஃபி கோகோலின் மனைவி என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். உலகின் சிறந்த மாய யதார்த்த வகைக் கதைகளில் ஒன்றாக இக்கதை கருதப்படுகிறது. Gogol’s Wife and Other Stories என்ற தொகுப்பில் இக்கதை உள்ளது. இத்தாலியின் காப்கா என்றே லேண்டோல்ஃபியை அழைக்கிறார்கள்.

தொம்மோஸொ லேண்டோல்ஃபி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் இலக்கியம் பயின்றார், 1932 இல் கவிஞர் அன்னா அக்மதோவாவின் கவிதை பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சர்ரியலிசம் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தார். அதன் பாதிப்பை இந்தக் கதையில் காண முடிகிறது. இத்தாலிய இலக்கிய உலகினை விட்டு ஒதுங்கியே வாழ்ந்த லேண்டோல்பி அதிகம் எழுதவில்லை.
நிகோலாய் கோகோல், தஸ்தாயெவ்ஸ்கி மற்றும் புஷ்கின் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்த லேண்டோல்பி தஸ்தாயெவ்ஸ்கி போலவே சூதாட்டத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். பல பெண்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த போதும் கோகோல் திருமணம் செய்து கொள்ளவில்லை ஒரினச்சேர்க்கையாளர் என்று கருதப்பட்ட கோகோல் அதை மறைத்துக் கொண்டே வாழ்ந்து வந்தார் என்கிறார்கள். The Sexual Labyrinth of Nikolai Gogol என்றொரு புத்தகம் வெளியாகியிருக்கிறது

நாற்பத்திரெண்டே வருஷங்கள் வாழ்ந்த கோகோல் இது போல மூக்கு மட்டுமே தனியே பயணம் செய்வதாக ஒரு வியப்பூட்டும் கதையை எழுதியிருக்கிறார். கோகோலின் பேய்கதைகளும் பிரபலமானவை.
இந்தக் கதையில் கோகோல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் அவள் ஒரு ரப்பர் பலூன். தேவையான அளவுக்கு அவள் உடலை ஊதிப் பெருக்க வைத்துக் கொள்ள முடியும். பலூன் என்பதால் அவள் எடையற்றவளாக இருக்கிறாள். அவளை வெளியாட்கள் எவரும் பார்த்தது கிடையாது. எப்போதும் நிர்வாணமாக இருக்கக்கூடிய அந்தப் பலூன் உடல் கொண்டவள் உடலின்பத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறாள்.
பலூன் என்ற போதும் நிஜப்பெண்ணின் உடல் நிறமும் வாளிப்பும் அவளிடமிருந்தது. அவளது தலைமயிர் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருக்கிறது. தனக்கு எவ்விதமாகக் காண விருப்பமோ அப்படி அவளைத் தயார் செய்து கொள்வார் நிகோலாய். அவளுக்கு ஒரு பெயரும் இருந்தது. பம்ப் மூலம் காற்றடித்து அவள் உடலைப் பெரிதாக்கிக் கொள்வார்.
அவளுடன் நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளைக் கதை விவரிக்கிறது முதல் நிகழ்வில் அவள் மலஜலம் கழிக்க அவர் உதவி செய்ய வேண்டும் என்று அவள் அழைப்பதைப் பற்றியது. இரண்டாவது அவள் மீது சலிப்புற்று இனி தேவையில்லை என அழிக்க முற்படுவது பற்றியது.
காற்றடைக்கப்பட்ட பலூனாக ஒரு பெண்ணைச் சித்தரிப்பதன் மூலம் அதை ஒரு குறியீடாக மாற்றுகிறார் லேண்டோல்ஃபி. ஒரு பக்கம் கோகோலை விமர்சனம் செய்வதற்காக இப்படி ஒரு குறீயீட்டினை உருவாக்கியிருக்கிறார். இன்னொரு பக்கம் பண்பாடு ஒரு பெண்ணை எப்படி ஒடுக்கியுள்ளது என்பதை அடையாளப்படுத்தவும் இப்படி ரப்பர் பலூனாக உருவாக்கியிருக்கிறார்.
இந்தக் கதையைப் படிக்கும் போது விலா சாரங்கின் ஒரு சிறுகதை நினைவில் வந்து போனது. அதில் பாதி உடல் கொண்ட பெண் வருகிறாள். கற்பனையான தீவு ஒன்றில் மாட்டிக் கொண்ட ஒருவனின் அனுபவத்தை விவரிக்கும் கதையது.
Lars and the Real Girl. என்ற திரைப்படம் 2007ல் வெளியானது. அது இந்தக் கதையின் பாதிப்பில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பகடியான எழுத்தின் மூலம் அறியப்பட்ட கோகோலைப் பற்றி இப்படி ஒரு விசித்திரக் கதையை எழுதியிருக்கிறார் தொம்மோஸொ. இதிலும் நையாண்டி கூடுதலாகவே வெளிப்படுகிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
