S. Ramakrishnan's Blog, page 114
September 13, 2021
ராஜபாளையத்தில்
கடந்த வாரம் ஒரு திருமண நிகழ்விற்காக ராஜபாளையம் சென்றிருந்தேன். நண்பர் பொன்னுச்சாமி மாலையில் சிறிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பில் வாசிப்பு. பயணம், வரலாறு என நிறைய கேள்விகேட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் அவர்களையும் சுதந்திர சிந்தனையை சார்ந்த நரேந்திரகுமார் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பேசியது மகிழ்ச்சி தந்தது.

திருமண நிகழ்வு முடிந்தவுடன் ராஜபாளையத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர்களுடன் ஒரு தேநீர் சந்திப்பு.

திருமண நிகழ்விற்கு இடையில் இரண்டு சந்திப்புகள் இலக்கிய உரையாடல்கள் என நேரம் போனதே தெரியவில்லை. புதிதாகப் படிக்க வந்துள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடுவதன் வழியே அவர்கள் என்ன படிக்கிறார்கள். எதை நோக்கி ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஊர் திரும்பும் முன்பாக கோவில்பட்டிக்குச் சென்று கவிஞர் தேவதச்சனைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். இளம்வாசகர் ரமணா வந்திருந்தார்.
புத்தகக் கண்காட்சியில் அகிலனின் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்கினேன். அதைக் காரில் வரும்போது படித்துக் கொண்டு வந்தேன். அகிலன் புகழ்பெற்று இருந்த நாட்களில் அவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு ஆள் பலரது வீடுகளுக்கும் போய் உறவாடி, பணம் பெற்று நான் தான் அகிலன் என்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து ஏமாற்றிவந்திருக்கிறான்.

ஒரு தொழிலதிபர் வீட்டிற்கு தன் மனைவியுடன் போய் தங்கிய அந்த டூப்ளிகேட் ஆசாமி சகல சௌகரியங்களையும் மரியாதைகளையும் அனுபவித்துவிட்டு கடனாகப் பணமும் வாங்கிக் கொண்டு கிளம்பி போயிருக்கிறார்.
விஷயம் அகிலனுக்கு தெரிய வந்தவுடன் யார் இந்த மோசடிப் பேர் வழி. இவரை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்.
அந்த நாட்களில் புத்தகங்களின் அட்டையில் எழுத்தாளர் புகைப்படம் இருக்காது. ஆகவே அந்த போலியை பலரும் உண்மையான அகிலன் என்று நினைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.
இந்த ஏமாற்றுபேர் வழிக்காகவே அகிலன் தனது கதைகள். புத்தகங்களில் தனது புகைப்படத்தை போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்
நிறைய இடங்களில் ஏமாற்றிய அந்த ஆசாமி முடிவில் ஒரு நாள் மாட்டிக் கொண்டான். போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு நடந்த போது நான் தான் உண்மையான அகிலன் என்று அவரே நேரில் போய் சாட்சி சொல்லியிருக்கிறார். விநோதமான நிகழ்வு.
இதை ஏன் அகிலன் ஒரு நாவலாக எழுதவில்லை என்று தோன்றியது.
ஈரான் இயக்குநர் Abbas Kiarostami இயக்கிய Close-Up திரைப்படத்தின் கதையும் இதுவே. இந்தப் படத்தில் வருபவர் Makhmalbaf என்ற இயக்குநர் பெயரில் சுற்றித்திரியும் போலி ஆசாமி. படப்பிடிப்பிற்கான இடம் தேடுவது போல ஊர் சுற்றி ஏமாற்றுகிறான்.
அகிலன் நான்கு முறை ரஷ்யாவிற்குப் பயணம் செய்திருக்கிறார். அதைப் பற்றி கட்டுரைகள். தனி நூல் எதுவும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.
தனது சொந்த ஊரான புதுக்கோட்டை பற்றியும் அந்த சமஸ்தானம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையைப் பற்றியும் அகிலன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
•••
மெய்ம்மைத்தேடிகள்
யாமம் நாவல் வாசிப்பனுபவம்
அரவின் குமார் – மலேசியா
யாமம் நாவலின் வாசிப்பனுபம் நினைவில் இருக்கும் இரவின் மணங்களைக் கொண்டு வரச் செய்தது. மழை பெய்த நாளிரவின் மணம், வெக்கையான இரவின் மணம், இறப்பு வீட்டு இரவின் மணம் எனப் பலவகையான இரவின் மணம் நினைவிலெழுந்தது. இரவின் மணமென்பது காண்போரின் மனத்துக்கேற்ப மணத்தை அணிந்து கொள்கிறது. அப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மணத்தை அளிக்கும் இரவின் முடிவற்ற மணத்தை அணிந்து கொள்கிற மனிதர்களின் கதையாகவே யாமம் நாவல் அமைந்திருந்தது.

170 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னையின் அமிர்சாகிப் பேட்டையில் அத்தர் வியாபாரி கரீமிலிருந்து கதை தொடங்குகிறது. 15 ஆம் நூற்றாண்டில் தன்னுடைய மெய்மைத் தேடலில் இரவின் மணத்தை அளிக்கும் யாமம் அத்தரின் வழிமுறையைப் பக்கீர் ஒருவரின் வாயிலாகக் கண்டுபிடிக்கிறார் மீர் காசிம். அதிலிருந்து அவர் குடும்பத்தின் மூத்த ஆண்வாரிசுகள் தலைமுறைதோறும் யாமம் அத்தரின் செய்முறையை அடைகின்றனர். அந்தப் பின்னணியிலே, இந்தியாவில் காலனியாதிக்கம் மெல்ல காலூன்றுகிறது. ஷாஜகானின் மகள் தாராவுக்கு ஏற்பட்ட தீப்புண்ணை வடுவின்றி ஆற்றப் பயன்படும் ஆங்கில மருத்துவத்துக்கான ஈடாக கிழக்கிந்திய கம்பெனிக்கான தடையில்லா வணிக உரிமை வழங்கப்படுகிறது. பிரான்சிஸ்டேவின் மனைவி கிளாரிந்தாவுக்கான சிகிச்சை செய்த மக்களின் வாழ்விடம் பறிக்கப்பட்டு மசூலிப்பட்டணம் எழுகிறது. அதன் நீட்சியாகவே சென்னைப்பட்டிணமும் உருவாகிறது. துரோகத்தின் சாயையிலே காலனியாதிக்கம் எழுகிறது.
தனக்கு ஆண்வாரிசு இல்லாததால், தன்னோடு அத்தர் செய்முறை முடிந்துவிடும் என கரீம் அஞ்சுகிறான். மூன்றாவது மனைவியாகச் சுரையா என்கிற 15 வயது சிறுமியைத் திருமணம் புரிகிறான். குதிரைப்பந்தயத்தில் ஈடுபட்டுச் செல்வமெல்லாம் இழந்து பெருங்குடிகாரன் ஆகி தலைமுறைதோறும் தொடர்ந்த அத்தர் வணிகத்தை விட்டுக் காணாமற்போகிறான். மெய்ம்மைத் தேடலின் முடிவாகக் கிடைத்த இரவின் மணத்தை விட்டு இன்னொரு நாளிரவில் தொலைத்து விட்டுச் செல்கிறான். அவன் மனைவிகளான ரஹ்மானி, வகிதா, சுரையா ஒருவருக்கொருவர் உதவியாகத் தனியாகச் சென்னையில் ஒண்டு குடித்தனமொன்றில் வாழ்கின்றனர். அத்தர் கடையில் வேலை செய்து வந்த சந்தீபா குடும்பத்துக்கு நெருக்கமானவனாக மாறி விடுகிறான். ஏழ்மையில் இருக்கும் சந்தீபாவும் ஆதரவற்ற பெண்களும் ஒருவரையொருவர் அன்பு செலுத்துகின்றனர். சென்னையில் ஏற்படும் காலராவால் ரஹ்மானியும் சந்தீபாவும் இறந்து போகிறார்கள். ரஹ்மானியின் குழந்தையை எடுத்துக் கொண்டு வகிதாவும் சுரையாவும் தங்கள் பிறந்தகத்துக்கே திரும்புகின்றனர். பலரின் இன்பத்துக்குக் காரணமாக இருந்த அத்தரின் சாட்சியாக வாசனைத் தோட்டத்தின் செங்கல்லொன்றை மட்டும் எடுத்துக் கொண்டு உப்பள வேலைக்குச் செல்கிறாள் வகிதா.
இந்த நாவலின் கதைமாந்தர்களின் உடலிலிருக்கும் இன்பத்தின் ஊற்றை இரவின் கண் கொண்டு யாமம் திறக்கச் செய்கிறது, லண்டனுக்குப் படிக்கச் செல்லும் திருச்சிற்றம்பலம் தன் மனைவி தையலை அண்ணன் பத்ரகிரி ஆதரவில் விட்டுச் செல்கிறான். இருவரின் உடலில் இருக்கும் காமத்தின் விழைவை யாமம் வளர்த்தெடுக்கிறது. தையல்நாயகியுடன் கூடி குழந்தையும் பெறுகிறான். பத்ரகிரியின் மனைவி விசாலம் பிரிந்து செல்கிறாள். தையலின் மனத்தில் தோன்றும் குற்றவுணர்வு நோயாக மாறுகிறது. குழந்தையும் இறந்தபின் அனைத்தையும் துறந்து சித்தியின் சிதைந்து போயிருக்கும் வீட்டில் தனியனாகக் குடியேறுகிறான். யாமம் விழைவு எனும் மணத்தையே அளிக்கிறதெனலாம். பங்காளிச் சண்டையில் சொத்தைப் பாதுகாக்க போராடும் கிருஷ்ணப்ப கரையாளர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து இருந்த சொத்தையும் எலிசபெத் எனும் ஆங்கிலோ இந்திய பெண்ணுக்கு எழுதி வைக்கிறார். யாமம் அணிந்த எலிசபெத் கிடைத்த மேல்மலையைத் தேயிலைத் தோட்டமாக்குகிறாள்.
இதைத்தவிர, உலகின் மாயத்தைப் புரிந்து கொள்ள முயலும் பண்டாரத்தின் பாத்திரம் சித்தர் மரபின் நீட்சியாக இருந்தது. சிறுவயதிலே பண்டாரமாக மாறியிருக்கும் சதாசிவம் நாயொன்றில் பின்னால் அலைந்து திரிகிறார். இறைவனே நாயாக மாறி உலக விழைவுகள் அத்தனையிலும் சதாசிவத்தை அலைகழிய வைத்து மெய்ம்மைக்கான வழியைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஓரிடத்தில் திருமணம் செய்து குழந்தை பெறச் செய்த பின் அனைத்தையும் உதறச் செய்வதும், சும்மா இருக்கச் செய்து வசை வாங்கச் செய்தும் உலகியல் விழைவுகள் அத்தனையிலிருந்தும் சதாசிவத்தை விலக்கி அழைத்துச் செல்கிறது. சதாசிவத்துக்கு நேரான பாத்திரம் திருச்சிற்றம்பலத்தின் பாத்திரம். மகத்தான கணித அறிவைக் கொண்ட திருச்சிற்றம்பலம் எந்நேரமும் கணிதத்திலே மூழ்கிக் கிடக்கிறான். அத்தனையும் உதறி இரவின் முன்னால் நடந்தவற்றுக்காக அழுகிறான். சூபி மரபின் நீட்சியாக வரும் பக்கீரும் காசிமும் சித்தர் மரபின் நீட்சியாக வரும் சதாசிவமும் கணிதக்கலையின் வாயிலான மெய்ம்மை அடைய முயலும் திருச்சிற்றம்பலமும் என மெய்ம்மைத்தேடிகள் அமைந்திருக்கிறார்கள்.
காலனித்துவச் சென்னையின் செய்திகள் நாவலில் சம்பவங்களாக அமைந்திருக்கின்றன. சர்க்கஸ், காலரா, நில அளவைப்பணி, புதிய குடிகளின் வருகை, பனிக்கட்டியின் மீதான வியப்பு என சென்னையின் பின்னணி அமைந்திருக்கிறது. அந்நிய ஆட்சியில் புதிய நகரொன்று மெல்ல எழுந்து வருவதன் சித்திரம் சிறப்பாக வெளிப்படுகிறது. இரவைப் போல நிதானமான மொழியில் வரலாறின் ஒழுக்கும் மெய்ம்மைக்கான தேடலும் மனித விழைவுகளும் நாவலில் பிணைந்திருக்கிறது.
September 12, 2021
நாற்பது ஆண்டுக்கால கேள்வி
வாழும் காலத்தில் சொந்த தேசத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நாவலாசிரியன் தனது மறைவிற்குப் பிறகு உலகின் சிறந்த எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதும் அவரது நாவல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாவது புரிந்து கொள்ளமுடியாத புதிராகும்

நல்ல நாவல்கள் தனக்கான இடத்தைத் தானே தேடிக் கொள்கின்றன. யாரோ ஒரு தேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர் வாசகர், அந்த நாவலைக் கண்டுபிடித்து உலகின் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். அப்படித் தான் சண்டோர் மராயிற்கும் நடந்தது
ஹங்கேரியின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர் சண்டோர் மராய். (Sándor Márai)அவர் மறைந்து பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பே அவரது நாவல்கள் ஆங்கிலத்தில் வெளியாகின. இன்று உலகின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.
மராய் வாழும் போது ஹங்கேரியில் கம்யூனிஸ்ட்டுகள் அவரது புத்தகங்களைத் தடை செய்ததோடு நாவலின் பிரதிகளைத் தேடிப் பிடித்து அழித்தார்கள்.

இத்தாலிய எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் முயற்சியால் தான் மராயின் நாவல்கள் மறுபதிப்புக் கண்டன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட்டோ கலாஸ்ஸோ புதிய நூல்களின் மொழியாக்க உரிமைக்கான பட்டியலில் தடைசெய்யப்பட்ட தலைசிறந்த நூல் பட்டியலில் ஒரு பெயரைக் கண்டார். அதற்கு முன்பு கேள்விப்படாத பெயரது. அவர் ஹங்கேரிய நாவலாசிரியர் சண்டோர் மராய்.
அவரது நாவலைப் படிக்க விரும்பி அதன் பிரெஞ்சு மொழியாக்கப் பிரதியை வரவழைத்தார்.
வாசிக்கத் துவங்கியதுமே மராயின் மேதமையை உணரத்துவங்கினார். , மிக முக்கியமான இலக்கியப் படைப்பு என்பதை உணர்ந்து கொண்டவரா அதன் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். மராயின் எல்லா நூல்களையும் இத்தாலியில் கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினார். தொடர்ந்த முயற்சியின் பலனாக உரிமை கிடைத்தது.
இதன்பின்பு ஃப்ராங்க்ஃபர்ட் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சண்டோர் மராயின் புத்தகங்களைப் பற்றிக் கலாஸ்ஸோ சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார். இதன் பலனாக உடனடியாக ஆறு மொழிகளில் சண்டோர் மராயின் நூல்கள் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டன. அப்படித் தான் அவரது ஆங்கிலப் பதிப்பு வெளியானது.
இத்தாலி மற்றும் ஜெர்மனியில் சண்டோர் மராயின் நாவல்கள் வெளியாகி விற்பனையில் பெரிய சாதனை படைத்தன. இதன் விளைவாக இருபத்திமூன்று மொழிகளில் அவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டன
சண்டோர் மராய் 1900 இல் ஹங்கேரியில் பிறந்தவர், பத்திரிகையாளராகப் பணியாற்றிய அவர் ஃபிரான்ஸ் காஃப்கா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காஃப்காவின் படைப்புகளை ஆராய்ந்து விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். 1940களில் மராயின் நாவல்கள் விரும்பி வாசிக்கப்பட்டன.

948 இல் ஹங்கேரியில் ஏற்பட்ட கம்யூனிச ஆட்சியின் காரணமாக அவர் “முதலாளித்துவ எழுத்தாளர்” என்று கண்டனம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். மராய் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர், செல்வ செழிப்பில் வளர்ந்தவர். ஆகவே கம்யூனிஸ்ட்டுகள் அவரை முதலாளித்துவத்தின் பிரதிநிதியாகக் கருதினார்கள்
தேசத்தை விட்டு வெளியேறி இத்தாலிக்கும் பின்பு அமெரிக்காவிற்கும் சென்ற மராய் ஹங்கேரிய கம்யூனிச ஆட்சிக்கு எதிராக நேரடியாகக் குரல் கொடுக்கத் துவங்கினார். இதன் காரணமாகவே இவரது நூல்கள் தடைசெய்யப்பட்டன.
பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட இவரது நாவல்கள் இலக்கிய உலகில் அவருக்குப் புகழ்தேடி கொடுத்தன. தனிமையில் கசப்பான வாழ்க்கை அனுபவங்களுடன் வாழ்ந்த மராய் தனது 89 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது Embers நாவல் மிக முக்கியமானது. இத்தனை அடர்த்தியான, கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட நாவலைக் கண்டதில்லை. மராயின் நாவலில் பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு போட வேண்டியதாகியது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஐரோப்பிய நாவல் என்றே இதைக் குறிப்பிடுகிறார்கள்.
Embers நாவல் நீண்ட காலத்தின் பின்பு சந்தித்துக் கொள்ளும் இரண்டு நண்பர்களின் கதையைச் சொல்கிறது. ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் ஓய்வுபெற்ற ஜெனரலான ஹென்ரிக், நாற்பத்தியோரு வருடங்களுக்குப் பிறகுத் தனது நண்பன் கொன்ராட்டின் வருகைக்காகக் காத்திருக்கிறார். அவர் மலையிலுள்ள அரண்மனை போன்ற வீட்டில் வாழுகிறார்.
அவர்கள் இருவரும் இராணுவப் பள்ளியில் ஒன்றாக பயின்றவர்கள். ஒரே அறையில் தங்கியவர்கள். ஹென்ரிக் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் கொன்ராட் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். இப்படி வேறுபட்ட பின்புலம் கொண்டிருந்த போதும் இருவரும் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்கள்.
அந்த நட்பினை ஹென்ரிக்கின் குடும்பமும் ஏற்றுக் கொண்டது.
இளம் வீரர்களாக அவர்கள் வியன்னாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தார்கள். அந்த நகரின் இன்பங்களை தேடித்தேடி அனுபவித்தார்கள். வியன்னா என்பது நகரமில்லை. அது ஒரு இசை. மனதில் நிரம்பி வழியும் இசை என்கிறார் மராய்.
தனக்கு இந்த உலகிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பது போலக் கான்ராட் ஒரு துறவியைப் போல வாழுகிறான். தனது கடமையைச் சரியாக, முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்கிறான். இதனால் கான்ராட் வேகமாக வயதான தோற்றத்தை அடைகிறான். அவனது 25 வயதிலே வாசிப்பதற்குக் கண்ணாடி போட வேண்டிய தேவை ஏற்படுகிறது.
கான்ராட்டின் தோழியான கிறிஸ்டினாவை ஹென்ரிக் காதலித்தார். மூவரும் ஒன்றாகச் சுற்றினார்கள். எதிர்பாராத விதமாகக் கான்ராடின் நட்பு முறிந்து போகிறது. இதன்பிறகு அவர்கள் சந்தித்துக் கொள்ளவேயில்லை. நாற்பது வருஷங்கள் கடந்து போகின்றன. தற்போது அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
எதற்காக இந்தச் சந்திப்பு என நினி கேட்கிறாள். உண்மையை அறிந்து கொள்ள என்கிறார் ஹென்ரிக். என்ன உண்மை. எதனால் அதை அறிந்து கொள்ள முற்படுகிறார் என்று கதை வளர்க்கிறது.
இந்தச் சந்திப்பின் வழியே கடந்து போன தங்களின் வாழ்க்கையை, ஏற்பட்ட கசப்புணர்வுகளை, அவர்கள் மீண்டும் ஞாபகம் கொள்கிறார்கள். இழந்தவற்றை விசாரணை செய்கிறார்கள்.
வாழ்க்கையில் ஏன் இப்படியான நிகழ்வுகள் நடந்தேறின. ஏன் இந்த இடைவெளி உருவானது. ஏன் துரோகத்தால் நண்பர்கள் பிரிய நேரிடுகிறது என்று ஒரு இடத்தில் ஹென்ரிக் கேட்கிறார். அந்தக் கேள்வி மராயின் சொந்த வாழ்க்கையிலிருந்து எழும் கேள்வியாகும்.
கடந்தகாலத்தைச் சொற்களின் வழியாக மீட்டு எடுக்க முடியவே முடியாது. நினைவு கொள்ளவும் வருந்தவும் ஏக்கம் கொள்ளவும் மட்டுமே சொற்கள் துணை செய்கின்றன. எல்லா பதில்களும் தற்காலிக திருப்தியை தான் தருகின்றன. உண்மை என்பது சம்பவமில்லை. அதன் பின்னுள்ள மனநிலை. வெளிப்படுத்தமுடியாத உணர்வு.
இவ்வளவு தான் நம் வாழ்க்கையா. எதையோ நினைத்துக் கொண்டு உறவுகளைத் தொலைத்த நமது கடந்த காலம் மீட்க முடியாதது தானா என்று ஹென்ரிக் கேள்வி எழுப்புகிறார்.
இந்த மறுசந்திப்பின் வழியே அவர்கள் நட்பில் ஏற்பட்ட இடைவெளியை அழிக்க முயலுகிறார்கள். ஆனால் அந்த விரிசல் ஒட்டமுடியாதது என்பதை உணருகிறார்கள்.
இருவரும் அறிந்தே கிறிஸ்டினாவை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.
கடந்தகாலம் ஏற்படுத்திய குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காகவே இந்தச் சந்திப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிஞனாக விரும்பிய ஹென்ரிக் ஏன் ராணுவ அதிகாரியாக மாறினார். ஏன் கான்ராட் அவரைத் தனது வறுமையான குடும்பத்தினரைச் சந்திக்க அழைத்துச் சென்றான். பணக்காரன் ஏழை என்ற வித்தியாசங்களை நட்பு கடந்து சென்ற போதும் காதலித்த பெண் வழியே அவர்கள் ஏன் பிரிய நேர்ந்தது என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது

வாழ்க்கையில் நாம் பிறரோடு பகிர்ந்து கொள்ளவே முடியாத ரகசியங்கள் சில இருக்கின்றன. அவை நண்பர்களிடமும் பகிர முடியாதவை. ஒரு மனிதன் தன் இதயத்திற்குள் மட்டுமே புதைத்து வைத்துக் கொள்ளவேண்டிய ரகசியங்கள். அவற்றை நாம் விரும்பினாலும் வெளிப்படுத்தவே முடியாது என்று கிறிஸ்டினா சொல்வது உண்மையே.
கிறிஸ்டினா வீட்டை விட்டு வெளியேறும் போது பாதிபடித்த புத்தகத்தை விட்டுச் செல்கிறாள். அது ஒரு குறியீடே.
பணிந்து போவதை ஒரு ஒழுக்க முறையாக அதிகாரம் நம் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிறது. அது தான் பலரையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் மன்னரை தெய்வமாக நினைக்க வைக்கிறது. கட்டளைகளுக்கு அடிபணியச் செய்கிறது. தேசசேவைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தப் பலவீனத்தைப் பெரும்பான்மை மக்கள் உணரவேயில்லை என்று ஒரு இடத்தில் ஹென்ரிக் சொல்கிறான். இதுவும் மராயின் ஒப்புதல் வாக்குமூலமே
நமது ஆசைகள், கனவுகளை உலகம் ஒருபோதும் புரிந்து கொள்ளாது. நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை அந்த அளவு நேசிப்பதில்லை. புரிந்து கொள்வதில்லை. இந்த உலகம் நாம் விரும்பும் படியாக இல்லை. துரோகத்தையும் புறக்கணிப்பையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நாம் உலகை நம்புவது போல உலகம் நம்மை நம்புவதில்லை. இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்று நாவலில் ஹென்ரிக் சொல்கிறார். இவை வாழ்க்கை அனுபவத்திலிருந்து வெளிப்படும் நிதர்சனங்கள்.
நம்மை நாம் அறிந்து கொள்வதேயில்லை. நமது நிறைகுறைகளை நாம் கண்டுகொள்ளும் போது வாழ்க்கை நமக்கு பதக்கங்கள் எதையும் தந்துவிடுவதில்லை. ஆனால் இந்தத் தேடல் நமக்காக நாம் முனைந்து செய்ய வேண்டிய காரியமாகும்.
உண்மையை விடவும் அதைப்பற்றி நினைப்பு முக்கியமானது. அந்த நினைப்பு நம்மைக் குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது. மீட்சியைத் தேடச் செய்கிறது. வாழ்க்கை நம்மைப் பற்றிய தீர்ப்பை வாசிக்காவிட்டாலும் நாம் ஒன்றும் அப்பாவியில்லை என்பதை நாம் அறிந்து தானே இருக்கிறோம்.
நமது செயல்கள் யாவும் தூய்மையானவையில்லை. அதில் கசடுகளும் இருக்கத்தானே செய்கிறது.
சொற்களால் மழையின் ஈரத்தைக் காகிதத்தில் உருவாக்கிட முடியாது. ஆனால் உணரவைக்க முடியும்.
நட்பு என்பது வெறும் உறவில்லை. அது ஒரு சட்டம். அதற்கெனக் கடமைகள் இருக்கின்றன. இந்தச் சட்டம் விசித்திரமானது. ஆனால் தொன்மையானது. நட்பை உயர்வாகக் கருதாத பண்பாடே கிடையாது.
இப்படி நாவல் முழுவதும் மறக்கமுடியாத வரிகள்
ஹென்ரிக் வீட்டில் பணிபுரியும் நினிக்கு 90 வயது கடந்துவிட்டது. ஒருவர் 90யைக் கடந்தபிறகு வயதாவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஐம்பது அறுபது வயதுகளில் முதுமையைப் பற்றிக் கவலைப்பட்டதைப் போலக் கவலை கொள்வதில்லை. அவளுக்கு 90 வயது என்பதே கூட ஹென்ரிக் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவள் 75 ஆண்டுகள் அந்த வீட்டில் பணியாற்றியிருக்கிறாள். மௌனமான புன்னகையுடன் அவள் அந்த வீட்டிற்குள்ளே வளர்ந்திருக்கிறாள். அவளது திறமைகள் யாவும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. அவளுக்குச் சொந்த வாழ்க்கை என்ற ஒன்றேயில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக விருந்தாளிகள் யாரும் அந்த வீட்டிற்கு வந்ததேயில்லை. அவள் அந்த வீட்டினையும் கர்னலையும் முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறாள்.
கிறிஸ்டினாவின் மரணத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொள்ளும் போது அவளது கணவராக நீங்கள் அவளது இல்லாமையை உணரும் விதமும் ,அவளது தோழனாக நான் அந்த இன்மையை உணரும் விதமும் வேறு வேறானது. மரணம் எல்லாவற்றுக்கும் முடிவான பதிலைத் தந்துவிடுகிறது என்கிறான் கான்ராட்.
“All of a sudden the objects seemed to take on meaning, as if to prove that everything in the world acquires significance only in relation to human activity and human destiny”
என நாவலின் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. இது தான் நாவலின் திறவுகோல். நீண்டகாலத்தின் பின்பு அவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பழைய பொருட்களும் அவர்களுடன் புத்துயிர்ப்புப் பெறுகின்றன. அதே போன்ற சூழலை மறுபடியும் உருவாக்க முனைகிறார்கள்.
There are very few people whose words correspond exactly to the reality of their lives என்று நாவலின் ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது.
இப்படி மராயின் எழுத்திலும் அவரது வாழ்க்கை தன் முழுவீச்சோடு வெளிப்படுகிறது
•••
September 11, 2021
துப்பாக்கி முனையில் ஒரு பயணம்
இரண்டாம் உலகப்போரின் போது மலேயா மீது ஜப்பானியர் படையெடுத்த சமயத்தில் நடந்த உண்மை நிகழ்வினைப் பற்றிய படம் A Town Like Alice. நெவில் ஷட்டின் நாவலைப் படமாக்கியிருக்கிறார்கள்.

மலேசியாவில் வசித்த வந்த பிரிட்டிஷ்காரர்கள் 1942 இல் ஒரு நாள் ஜப்பானிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேறும்படியான சூழல் உருவாகிறது. சிங்கப்பூருக்குத் தப்பிப் போக முயல்கிறார்கள்.
கோலாலம்பூரில், ஜீன் பேஜெட் என்ற இளம்பெண் வேலை செய்த அலுவலகம் மூடப்படுகிறது. அவளது உயரதிகாரி ஹாலந்து உடனடியாக ஊரைவிட்டு வெளியேறும்படி சொல்கிறான். அவர்கள் ஒரு காரில் தப்பிப் போகிறார்கள். ஆனால் வழியில் கார் ரிப்பேராகி நின்று விடுகிறது. பிரிட்டிஷ் துருப்புகள் வந்த வேனில் அவர்கள் ஏற்றிக் கொள்ளப்படுகிறார்கள். தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்படுகிறார்கள். கப்பல் வந்தவுடன் சிங்கப்பூர் போகலாம் என்ற கனவுடன் அவர்கள் காத்திருந்த போது ஜப்பானிய ராணுவம் அவர்களைச் சுற்றி வளைக்கிறது. எதிர்ப்பவர்கள் சுடப்படுகிறார்கள்.
அங்கிருந்த ஆண்கள் தனியே பிரிக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி வதை முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்
பெண்கள் குழந்தைகள் தனியே பிரித்துக் கால்நடையாக நடத்தி அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
35 பேர் கொண்ட அந்தப் பெண்கள் குழுவின் முடிவற்ற பயணமே படத்தின் மையக்கதை.

ஜப்பானிய ராணுவ அதிகாரி அவர்களை ஐம்பது மைல் தூரம் நடந்து செல்லும்படி முதலில் கட்டளையிடுகிறார். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் துரத்தப்படுகிறார்கள். இப்படி முடிவேயில்லாமல் அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
மைல் கணக்கில் நீளும் இந்தப் பயணத்தில் கரடுமுரடான சாலையில் நடந்து செல்கிறார்கள். வழியில் குடிநீர் கிடைப்பதில்லை. நல்ல உணவு கிடைப்பதில்லை. நடந்து நடந்து கால்கள் வீங்கி களைத்து விழுகிறார்கள். அவர்களைத் துப்பாக்கி முனையில் வீரர்கள் ஆடுமாடுகள் போல அடித்து நடக்க வைக்கிறார்கள்.
கிராமப்புற சாலையில் நீண்ட தூரம் நடந்து அவர்களின் புழுதி படிந்த தோற்றம் வேதனை தருகிறது. பலருக்கும் நடக்க முடியாமல் பாதங்கள் வீங்கிப் போகின்றன. ஹாலந்தின் மனைவி நோயுற்று வழியில் இறந்து போகிறாள். அவளது கைக்குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஜீனிடம் வந்து சேருகிறது.

குழந்தையுடன் அவள் பகலிரவாக நடக்கிறாள். வழியில் குழந்தைக்குத் தேவையான பால் கிடைப்பதில்லை.. தனது உடைகளைக் காலணியை அடகு வைத்து பால் பவுடர் வாங்க முயல்கிறாள். மொழி புரியாத கடைக்காரன் பால் பவுடர் தர மறுக்கிறான். அந்தக் கடைக்காரனின் மனைவி அவளது துயரைப் புரிந்து கொண்டவள் போலப் பால்பவுடர்களைத் தருகிறாள். குழந்தையோடு அவர்கள் நடந்து ஒரு துறைமுகத்தைச் சேருகிறார்கள். அங்கே கப்பலில் அவர்களை ஏற்றிப் போக மறுக்கிறார்கள். இன்னொரு துறைமுகத்தைத் தேடி இன்னும் நூறு மைல் நடக்கிறார்கள்
டஜன் கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏழு மாத காலம் இந்த யாத்திரையை ஓய்வில்லாமல் மேற்கொள்கிறார்கள். சேறு சகதியுமான சாலையில் பெண்கள் ஊன்றுகோலுடன் நடந்து செல்லும் காட்சி மறக்க முடியாதது

பயண வழியில் ஜப்பானியர்களுக்காக லாரியை ஓட்டி வரும் போர் கைதியான இருவர் ரகசியமாக அவளுக்கு உதவி செய்கிறார்கள். உணவு மற்றும் மருந்துகளைத் திருடிக் கொடுக்கிறார்கள்.
யுத்த கைதியான பெண்கள் இறுதியாக ஒரு மலேயா கிராமம் ஒன்றை அடைகிறார்கள். நிர்க்கதியான சூழலில் தவிக்கும் ஜீனை கிராமப்புற மக்கள் ஆதரித்துத் தேவையான உணவும் உடையும் இருப்பிடமும் தந்து காப்பாற்றுகிறார்கள். அந்தக் குழுவினர் கிராமத்திலே தங்கி வாழ ஆரம்பிக்கிறார்கள்.
யுத்தம் முடிந்தபிறகு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய கிராமவாசிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து மலேசியா திரும்பும் ஜீன் கிராமவாசிகளின் அடிப்படைத் தேவையான குடிநீர் கிணறு ஒன்றை ஏற்படுத்தித் தருகிறாள்
படம் இங்கேயிருந்து தான் துவங்குகிறது. யுத்த நினைவுகளின் வழியே தான் கடந்து வந்த வேதனையான காலத்தை ஜீன் ஞாபகம் கொள்கிறாள். .

மலேயா மக்களுக்கு உதவி செய்த பிறகு அவளைக் காப்பாற்றிய சார்ஜென்ட் ஜோ ஹார்மனைத் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஜீன் அங்குள்ள வாழ்க்கை நிலையை அறிந்து கொள்கிறாள். இதன் மறுபக்கம் போல ஹார்மன் ஜீனை லண்டனில் தேடிக் கொண்டு வருகிறான். காலம் இவர்களைப் பகடையாக உருட்டி விளையாடுகிறது. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதக்கதை.
ஜீனின் மனவுறுதியும் அவள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியும் குழுவை வழிநடத்தும் தைரியமும் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பயணவழியில் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது இடிந்த கட்டிடம் அல்லது ஒரு முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். அப்படிக் கைவிடப்பட்ட மாளிகை ஒன்றில் அவர்கள் தங்கும் போது ஆசை தீர குளிக்கிறார்கள். அந்தக் காட்சியில் பெண்களிடம் வெளிப்படும் சந்தோஷம் மறக்கமுடியாதது. துரத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும் அவர்கள் நான்கு மாதங்களுக்குள் நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து போகிறார்கள். பயண வழியில் பலர் இறக்கின்றனர்.
இந்த உண்மை சம்பவம் சுமத்ராவில் நடந்திருக்கிறது. அதை மலேசியாவில் நடப்பது போல நெவில் ஷட் நாவலில் எழுதியிருக்கிறார்.
ஜப்பானிய கேப்டன் சுகமோ செய்யும் சித்ரவதைகள் குரூரமானவை. பெண்களின் நெடும்பயணத்திற்குப் பாதுகாவலனாக வரும் ஜப்பானியன் மெல்ல அவர்களைப் புரிந்து கொள்வதும் அவனது மரணமும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன

ஜப்பானிய ராணுவ அதிகாரி பார்வையிட வரும் போது அந்தப் பெண்கள் வணங்கி அவரை வரவேற்க வேண்டும் என்பது விதி. அவரது உத்தரவை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. மீறினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒரு பெண் எங்களை இப்படி எங்கே அழைத்துப் போகிறீர்கள். நீண்ட தூரம் எங்களால் நடக்க முடியாது என்கிறார். நீங்கள் இப்போது கைதிகள். நாங்கள் சொல்வது போலத் தான் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களைக் கொன்றுவிடுவேன் என்கிறான் ஜப்பானிய ராணுவ அதிகாரி. ஒரே நாளில் தங்கள் வாழ்க்கை இப்படித் திசைமாறிப்போய்விடும் என அறியாத பெண்கள் வேதனையுடன் குழந்தைகளை வெறித்துப் பார்க்கிறார்கள். எங்கே போகிறோம் எப்போது மீட்சி எனத் தெரியாத அந்தப் பயணம் யுத்தத்தின் குரூரத்தை அவர்களுக்கு முழுமையாகப் புரிய வைக்கிறது
போரில் கலந்து கொண்ட வீரர்களின் சாகசத்தையும் வீரமரணத்தையும் திரையில் கண்டுவந்த நமக்குப் போரின் இன்னொரு முகமாகப் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலையைக் காணும் போது போர் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்களின் போராடும் உணர்வு படத்தில் நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. வர்ஜீனியா மெக்கென்னா ஜீனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சேவியர் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் மனதில் வந்து போனது.. போஸ்னியப் போரின்போது செர்பியப் பெண்ணையும் அவரது கைக் குழந்தையையும் அழைத்துச் செல்லும் ராணுவ வீரனின் கதாபாத்திரம் ஜீனின் மறுவடிவம் போலத் தோன்றியது

முதற்காட்சியிலே ஜீன் அலுவலகத்திலிருந்து நேரடியாக வெளியேறிப் போகாமல் ஹாலந்தின் வீட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு இணங்க அவர்கள் வீட்டிற்குப் போகிறாள். அவள் பிறருக்காக உதவி செய்யக்கூடியவள். தனது பொறுப்புகளை அவள் ஒரு போதும் மறப்பதில்லை என்பதைத் துவக்கக் காட்சியில் சொல்லிவிடுகிறார்கள்
ஒரு ஜப்பானிய ராணுவ அதிகாரி அவளது அழகில் மயங்கி தனது ஆசைநாயகியாக இருந்துவிடும்படி அவளை அழைக்கிறான். ஜீன் அதை ஏற்க மறுக்கிறாள். வேறு ஒரு பெண் சம்மதிக்கிறாள். அவளைத் தனது ஜீப்பில் ஏற்றிக் கொண்டு அந்த அதிகாரி சந்தோஷமாகப் போகிறான். உயிர்பிழைக்க வேண்டும் என்ற ஆசை எப்படி அவனது ஆசைக்குப் பலியாகச் செய்தது என்பதைச் சிறு நிகழ்வின் வழியே உணர்த்திவிடுகிறார்கள்
நெருக்கடியின் போது தான் உண்மையான வலிமை ஒருவருக்குள்ளிருந்து வெளிப்படுகிறது. அந்த உண்மையை நாம் ஜீன் வழியாக அறிந்து கொள்கிறோம். அந்நியப்பெண்ணாக அறிமுகமாகி மெல்ல அவள் மலேயா பெண்ணாக மாறிவிடுகிறாள். இந்த மாற்றம் தோற்ற அளவில் மட்டுமின்றி மனதளவிலும் நடந்தேறுகிறது. அது தான் கதையின் தனிச்சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது
••
September 10, 2021
யானையின் சித்திரம்.
ஆ,மாதவனின் புனலும் மணலும் நாவலில் ஒரு அபூர்வமான காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் தொழில் பற்றிய இந்த நாவல் சூழலியல் பிரச்சனையை அடையாளப்படுத்திய முன்னோடி நாவலாகும். திருவனந்தபுரத்திலுள்ள கோட்டையாறு என்ற ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் அங்குசாமியின் வாழ்க்கையோடு அந்தத் தொழிலில் ஈடுபடும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை பாடுகளையும் மிக அழகாக மாதவன் எழுதியிருக்கிறார்.

இந்த நாவலில் ஆற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும் போது குளிப்பதற்காக வந்த பெண் யானை ஒன்று இந்தப் பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது. யானையின் கால் மணலில் மாட்டிக் கொண்டுவிடவே அதை மீட்க உதவி செய்ய வேண்டும் என்று பாகன் கூக்குரலிடுகிறான்
மக்கள் திரளுகிறார்கள். ஆண்யானை ஒன்றின் மூலம் கயிறு கட்டி பெண் யானையை மீட்க முயல்கிறார்கள். ஆனால் மீட்பது எளிதாகயில்லை.
ஆற்றில் குதித்து யானையின் காலடிக்குச் சென்று மணலை அகற்ற வேண்டும் என்று யோசனை சொல்கிறார்கள்.

யானையின் காலடியை நெருங்கிப்போய் மணலை அகற்ற முயன்றால் யானை மிதித்துக் கொல்லவும் கூடும். ஆகவே உயிர் போகும் ஆபத்து அதிகம். ஆயினும் துணிந்து இளைஞர் சிலர் ஆற்றில் குதித்து யானையை மீட்கிறார்கள்.
இந்தக் காட்சியினை மாதவன் மிகவும் நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

பள்ளத்தினுள் சிக்கிய யானையின் பரிதவிப்பு. மீட்பவர்களின் போராட்டம். வேடிக்கை பார்ப்பவர்களின் ஆர்வம். இந்தப் பள்ளம் இருப்பதை அறியாமல் போன பாகனின் கவலை படிந்த முகம். யானையை மீட்பதை வேடிக்கை பார்க்கும் பெண்கள், சிறார்கள் என அந்தக் காட்சி முழுமையாக ஒரு ஆவணப்படம் போலச் சித்தரிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட யானைக் காலை உதறி எழுந்து கரையேறும் போது தண்ணீரில் தடுமாறி விழுகிறது. அதில் தெறிக்கும் தண்ணீர் அங்கே நின்றிருந்தவர்களை நனைக்கிறது.
இந்தக் காட்சியினை வாசிக்கும் நம் மீதும் அந்த ஆற்றுத் தண்ணீர் அடிக்கிறது. கச்சிதமான வார்த்தைகள், தேர்ந்த நடை மூலம் அந்தக் காட்சியைக் கண்முன்னே உருக் கொள்ள வைக்கிறார் மாதவன்.
ஆற்றில் பள்ளம் ஏற்படக் காரணமாக இருந்த அங்குசாமி அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் யானை உருவாக்கிய அதிர்வில் தடுமாறி விழுந்து கையில் அடிபடுகிறார். அவரது குற்றத்திற்கான தண்டனை போலவே அந்தக் காட்சி அமைகிறது
நாவலில் மறக்கமுடியாத கதாபாத்திரம் பங்கி. அவள் அங்குசாமியின் வளர்ப்பு மகள். அவருக்குப் பங்கியைப் பிடிக்கவில்லை. அவளைப் பார்த்தாலே எரிந்து விழுகிறார். அவளோ அவரைத் தந்தையாகவே நினைக்கிறாள். அன்பு செலுத்துகிறாள். என்றாவது ஒரு நாள் தன் அன்பை அங்குசாமி புரிந்து கொள்வார் என்று நம்புகிறாள். நாவலின் முடிவில் பங்கி ஆற்றோடு போய்விடுகிறாள். சந்தோஷமே அறியாத பங்கியின் வாழ்க்கை அவலமானது. அவளது கதாபாத்திரம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பிழைப்பதற்காகக் கேரளா சென்ற அங்குசாமி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக கேரள மண்ணில் வேர் ஊன்றி அந்தஸ்து பெறுகிறார். மணல்காண்டிராக்டராக உயருகிறார் என்பதை ஒரு தளத்தில் விவரிக்கிறார் மாதவன். மற்றொரு தளத்தில் தங்கம்மையின் அழகில் மயங்கி அவளுடன் வாழுத்துவங்கி அவளது மகள் பங்கியின் வளர்ப்புத் தந்தையாகிறார் அங்குசாமி என்பதைச் சொல்கிறார்.
தங்கம்மைக்கு முன்னதாகப் போலீஸ்காரனுடன் கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்தப் போலீஸ்காரன் வாழ்ந்து இறந்து போய்விடுகிறான். அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தான் அங்குசாமிக்கு அவள் மீது ஈர்ப்பு உருவாகிறது.
பெரிய பற்களும் கோரையான தலைமுடியும், குள்ளமான தோற்றமும் கொண்ட பங்கியை பார்த்தாலே அங்குசாமிக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவளோ கடின உழைப்பாளி. தந்தையின் பணிகளுக்கு உடனிருந்து உழைக்கிறாள். அவருக்கான பணிவிடைகளைச் செய்கிறாள். தான் ஒரு போதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள் பங்கி. தாயை இழந்த அவளுக்கு வளர்ப்புத் தந்தையை விட்டால் வேறு துணை இல்லை.
யானையை மீட்கும் போது ஏற்பட்ட காயத்தில் அங்குசாமி வீட்டிலே இருக்கிறார். பங்கி அவருக்குத் தேவையான உதவிகள் அத்தனையும் செய்கிறாள். மெல்ல அவருக்குப் பங்கியின் மீதான வெறுப்புக் குறைகிறது. ஆனால் அகலவில்லை
ஆற்றின் வெள்ளம் வரும் போது அவர்கள் ஒரு நாட்டுப்படகில் போகிறார்கள். படகு கவிழ்ந்து போகிறது. உயிர்பிழைப்பதற்காகப் போராடுகிறார்கள். அப்போது அங்குசாமியின் கால்களைப் பங்கி பற்றிக் கொள்கிறாள். அவளை உதறித் தள்ளி அங்குசாமி கரையேறுகிறார். அவரது இந்தச் செயல் தான் பங்கியின் மரணத்திற்குக் காரணமாகிறது
மனிதர்கள் தங்களின் சுயலாபங்களுக்காக ஆற்றை அழிக்கிறார்கள். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை மாதவன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.
திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை நடத்தி வந்தவர் ஆ.மாதவன். இரண்டு முறை அவரை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். தனது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மூலம் வசீகரமான எழுத்தை உருவாக்கியிருந்தார் ஆ.மாதவன்.
சாலைத் தெருவின் சித்திரம் இந்த நாவலிலும் வருகிறது. சொல்லித் தீராத கதைகள் கொண்ட அந்த வீதியைத் தனது எழுத்துகளின் மூலம் அழியா சித்திரங்களாக்குகிறார் மாதவன்.
தமிழும் மலையாளமும் கலந்த நாவலின் உரையாடல்கள் இனிமையாக விளங்குகின்றன. கதாபாத்திரங்களின் நுண்மையான சித்தரிப்பும் ஆற்றின் போக்கையும் கரையோர வாழ்க்கையினையும் விவரிப்பதில் மாதவன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
புரிந்து கொள்ளப்படாத அன்பையும் உறவையும் அதிகம் எழுதியவர் ஆ.மாதவன். இந்த நாவலில் வரும் ஆறும் பாங்கியும் ஒன்று போலானவர்கள். இருவரும் உலகால் புரிந்து கொள்ளபடாதவர்கள். பயன்படுத்தப்பட்டவர்கள். இந்த நாவலை வாசிக்கும் போது மாதவனின் பாச்சி சிறுகதை மனதில் வந்து கொண்டேயிருக்கிறது. மிகச்சிறந்த கதையது. அதில் வரும் பாச்சி பாங்கியின் இன்னொரு வடிவமே
சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஆ.மாதவனின் புனலும் மணலும் என்றும் தனியிடம் கொண்டிருக்கும்.
••
September 9, 2021
நாயனக்காரர்களின் வருகை
சஞ்சாரம் நாவல் குறித்த பார்வை
மதன்குமார்
நாவலின் பெயருக்கு ஏற்றாற்போல் இதில் வரும் கலைஞர்களும் இசையும் காலமும் சஞ்சாரம் செய்வதுடன் நம்மையும் அதனுடனே கொண்டு செல்கிறது.
இன்றளவும் மங்கள இசை என்றாலும் எந்த வித கோவில் திருவிழா, திருமணம், முக்கிய நிகழ்வுகள் எதுவென்றாலும் முதலில் ஞாபகம் வருவது நாதஸ்வர இசைதான். ஆனால் நாயனக்காரர்களைக் கலைஞர்களாகவோ நாதஸ்வரத்தை இசையாகவோ இப்போதெல்லாம் கருதுவதேயில்லை என்பதே வருத்ததிற்குரிய உண்மை. இதை மையமாகக் கொண்டு தான் நாவல் சஞ்சாரமாகிறது.

நாயனக்காரர்களின் இன்ப துன்பங்கள் (இன்பங்களைக் காட்டிலும் துன்பமே அவர்களை அதிகம் சூழ்கிறது), ஏமாற்றங்கள், வாழ்க்கை முறை, சமுக நிலை, பொருளாதாரம், இதைவிட ஒரு கலைஞனாக ஒருபோதாவது அங்கீகரிக்கப்படுவோமா என்ற அவர்களுக்குள் உள்ள ஏக்கம் இதை எல்லாம் கொண்டு நாவலை செதிக்கியிருக்கிறார் எஸ்.ரா
. நாயனக்காரர்கள் எப்படி எல்லாம் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள் அரச காலத்தில் எப்படிப் பேரும் பெறுமையும் பெற்று விளங்கினார்கள் இன்று எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று முன்னும் பின்னுமாகக் காலத்தின் ஊடே சஞ்சாரமாகிறது நாவல். இதனூடே ஊரோடி பறவைகளுக்கும் நாதஸ்வர இசைக்குமான தொடர்பு, கரிசல் மண்ணிற்கு நாயனக்காரர்களின் வருகை என்று ஒரு காட்சிகளும் விரிகிறது.
இதுமட்டுமின்றிக் கரிசல் மண்ணின் இயல்புகள் பண்புகள் அங்கு வாழ்ந்த மக்களின் பழக்கவழக்கங்களின் ஒன்றான திருடனுக்கு ஏழு வீட்டு சோறு போடுவதும் இன்றைய நிலையில் மக்களின் மாற்றங்களும், கரிசல் நிலத்தில் காற்று மற்றும் வெயிலின் ஆதிக்கம், புதியரகப் பருத்தி அறிமுகமும் அதனால் விவசாயத்தில் ஏற்படும் அழிவும், அங்குக் களைகளாக உள்ள சாதிய பிரிவினைகள், ஊருக்கும் மேச்சேரிக்கும் இடையே சாமியில் தொடங்கிச் சமூகத்தில் நிலுவும் அடக்குமுறை வன்முறை பிரிவினை அதனால் எழுப்பப்படும் சுவர், குழந்தைகளின் பள்ளிகளும் எதிரெலிக்கும் சாதிய அடக்குமுறை என்று அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நாம் நேரில் காணும் உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் (கர்ணன் படத்தில் வரும் சில காட்சிகள் இதிலிருந்து தான் உருவாக்கியிருக்கிறார்களோ என்ற எண்ணம் படிக்கும் போது மேலோங்கியது). சிறு பிள்ளையாய் இருக்கும் போது சிகரெட் அட்டைகளைத் தேடி தேடி எடுத்து வைத்து விளையாடிய நினைவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்நாவல்.
நாயனக்காரர்கள் தேர்தல் நேரத்தில் எவ்வாறு எல்லாம் அலைகழிக்கப்படுகிறார்கள் எப்படி எல்லாம் அவமானம் படுத்தப்படுகிறார்கள், திருமண வீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பணத்தைத் தராமல் எப்படித் துரத்திவிடப்படுகிறார்கள், இவர்களை லண்டன் அழைத்துச் சென்று ஏமாற்றித் தரகர்கள் நன்றாக வாழ்வதையும் படிக்கும் போது சற்று மனம் கனத்துப் போகிறது. கலையை விருப்பம் இருக்கும் யார் வேண்டுமென்றாலும் கற்கலாம் என்பதற்கு ஒரு முன்னோடியாகவே நாயனக்காரர்கள் திகழ்கிறார்கள். தாழ்ந்த சமூகத்தில் பிறந்த கருப்பையா, வெளிநாட்டிலிருந்து வந்த வயிட், பார்வை இல்லாத தன்னாசி, போலியோவால் கால்கள் முடங்கிப் போன அபு என்று சாதி மதங்களைத் தாண்டி அனைவருக்கும் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள். கதையில் வரும் ஊமை ஐயர் போன்ற ரசிகர்களும் மண்ணிலே இருக்கத்தான் செய்கிறார்கள்.
கோவில் திருவிழாவில் பக்கிரியை அடித்து அவமானபடுத்தப்படுவதால் ஆத்திரம் கொண்டு அங்குள்ள ஒரு பந்தலுக்குத் தீ வைத்துவிட்டு ரத்தினத்துடன் தப்பித்து ஊர் ஊராகச் சுற்றும் இந்த நாயனக்காரர்களின் நினைவுகளின் சஞ்சாரமே இந்த நாவல்.
நாமும் கரிசல் மண்ணிலும் நாயனக்காரர்களுடனும் ‘சஞ்சாரம்’ செய்யலாம் படித்து
.
மலையாளத்தில்
பஷீரின் திருடன் என்ற எனது குறுங்கதையை ஷாஜி மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Truecopythink இணைய இதழில் இந்தக் கதை வெளியாகியுள்ளது.
நன்றி ஷாஜி.



September 7, 2021
இதயத்திலிருந்து எழும் குரல்
எப்போது தஸ்தாயெவ்ஸ்கிக்கு தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணம் முதன்முறையாகப் பிறந்தது என்பதைப் பற்றி Jacques Catteau புத்தகத்தில் ஒரு தகவலைப் படித்தேன்.

1837ல் பொறியியல் புகுமுக வகுப்பில் பயிலுவதற்காகத் தனது சகோதரன் மிகேலுடன் பீட்டர்ஸ்பெர்க் வந்த தஸ்தாயெவ்ஸ்கி புஷ்கின் சண்டையிட்டுக் கொல்லப்பட்ட இடத்தைக் காணச் சென்றார். சில மாதங்களுக்கு முன்பு தான் அந்தச் சம்பவம் நடந்தேறியது. புஷ்கின் மீது தஸ்தாயெவ்ஸ்கியும் அவரது சகோதரனும் தீராத காதல் கொண்டிருந்தார்கள். ஆகவே புஷ்கின் டூயல் சண்டை செய்த இடத்தைத் தேடிச் சென்று பார்த்தார்கள்.
அந்த நாட்களில் மிகேல் நிறையக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான். தஸ்தாயெவ்ஸ்கி தனது மனதிற்குள்ளாக ஒரு நாவலைக் கற்பனை செய்து கொண்டிருந்தார். 1839 ஆகஸ்ட் 16 தனது 17 வயதில் எழுதிய ஒரு குறிப்பில் தான் ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற எண்ணத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி பதிவு செய்திருக்கிறார்.
நாவலாசிரியன் தன்னுடைய இதயத்திலிருந்து எழும் குரலைக் கேட்க வேண்டும். அவன் தலைக்குள் கதாபாத்திரங்கள் உலவிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படி மனதிற்குள் நாவல் வளர்ந்தபிறகே அதைக் காகிதத்தில் எழுத வேண்டும் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.
சிக்கலான கதாபாத்திரங்களின் உளவியலைக் கூடத் தஸ்தாயெவ்ஸ்கி ஒரே மூச்சில் துல்லியமாக எழுத முடிந்ததற்கு இதுவே காரணம் என்கிறார்கள்

ஷேக்ஸ்பியர் மீது பெரும் விருப்பம் கொண்டிருந்த தஸ்தாயெவ்ஸ்கி அவரது முதல் நாவலின் கதாபாத்திரங்களை ஷேக்ஸ்பியர் ஜாடையில் உருவாக்கியுள்ளார் என்கிறார் ஸ்டராட்ஸ்கி.
ஷேக்ஸ்பியரின் அவல உணர்வுகளை மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கி எடுத்துக் கொண்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. நாவல் எழுதுவதற்கான தூண்டுதலை அவருக்கு உருவாக்கியது பிரெஞ்சு இலக்கியமே. அதிலும் குறிப்பாகப் பால்சாக். அவரது நாவல்களை விரும்பி வாசித்த தஸ்தாயெவ்ஸ்கி அவரைப் போலவே தானும் நாவல் எழுத விரும்பினார்.
கனவு நிலைப்பட்ட யதார்த்தமே தஸ்தாயெவ்ஸ்கியின் புனைவுலகம். தன் இளமையில் ஒரு நாள் நேவா ஆற்றங்கரையில் சூரியன் மறையும் காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டெனப் பகல் மறைந்து இருள் பரவத்துவங்கிய போது அவரது மனதில் சொல்லமுடியாத ஒரு உணர்வு பீறிட்டது. தான் இதுவரை அடையாத பேருணர்வு ஒன்று தன்னை ஆக்கிரமிப்பது போல அவர் உணர்ந்தார். அந்த நிமிஷம் அவரது உடல் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. இந்தத் தருணத்தின் பிறகு அவரது புற உலகம் குறித்த பார்வை மாறிவிட்டது எனலாம்.
எளிமையான எண்ணங்கள் கூட அவருக்குள் தீப்பற்றிக் கொண்டது போலத் தீவிரமான உணர்வெழுச்சியை உருவாக்கியது. ஆகவே அவர் தினசரி நிகழ்வுகளிலிருந்தே பேரனுபவங்களை உருவாக்கினார். அது தான் தஸ்தாயெவ்ஸ்கியின் பலம் என்கிறார் ஸ்டராகோவ்
தனக்குப் புத்தி பிசகிவிடும். தான் பித்தேறிப்போய்விடுவேன் என்று அவர் உள்ளுக்குள் பயந்து கொண்டேயிருந்தார். அது பற்றி அவரது குறிப்பிலும் காணமுடிகிறது. இந்த அச்சம் அவரது படைப்பினுள் வெளிப்பட்டது என்கிறார்கள். அவரது கதாபாத்திரங்கள் Burning Head and Weak Heart கொண்டவர்கள் என்கிறார் ஸ்டராகோவ். அது உண்மையே.
தன் இளமையில் தஸ்தாயெவ்ஸ்கி நிறைய வாசித்தார். ஆழ்ந்துவாசித்து அதிலேயே ஊறிக்கிடந்த காரணத்தால் அவருக்கு எழுத்தின் அடிப்படைகள் எளிதாகக் கைவசமாகின. தஸ்தாயெவ்ஸ்கி வீட்டிலிருந்த நூலகத்தைப் பற்றியும் அவர் படித்த புத்தகங்களின் கேட்லாக்கினையும் காணும் போது அவர் விரிவாகப் படித்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பொறியியல் பயின்ற போது பௌதீகம். கணிதம், வேதியியல் மற்றும் கட்டிடக்கலை. இயந்திரவியல் என அறிவியலின் பல்துறைகளையும் ஆழ்ந்து படித்திருக்கிறார். இதன் வெளிப்பாடே அவரது படைப்பில் வெளிப்படும் அறிவியல் பார்வை மற்றும் அறிவியலின் தேவை குறித்த விவாதங்கள்.
தனது ஐரோப்பிய வாழ்க்கையின் போது உலகப்புகழ் பெற்ற சிற்பங்களையும் ஓவியங்களையும் அவர் ரசித்துப் பார்த்து வியந்திருக்கிறார். இசையில் அவருக்கு இருந்த ஈடுபாடு மிக அதிகம். இசையின் வழியே தான் தனது அகம் மீட்சியுறுகிறது என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. பீதோவன். மொசார்ட், லிசட், சோபின் போன்றவர்களை விரும்பி கேட்டிருக்கிறார். இத்தாலிய ஒபராவும் அவருக்குப் பிடித்தமானது.
அடர்ந்த இருளில் தான் சுடரின் வெளிச்சம் பிரகாசமாக இருக்கும். அது போலவே தனது கதாபாத்திரங்கள் ஒளிர்வதற்கு இருண்ட பின்புலமாக அவர்களின் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று விரும்பினார். கரமசோவ் சகோதரர்களில் தந்தை மோசமான மனிதராக இருப்பது தான் பிள்ளைகளின் மீது நாம் அதிகக் கவனம் கொள்வதற்கு முக்கியக் காரணம். தேவாலயத்தின் பிரம்மாண்டமான கோபுரத்தைப் போல நாவல் அண்ணாந்து பார்க்கும் படியாக உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் கனவுகளும் யதார்த்தமும் ஒன்று கலந்து எழுதப்பட வேண்டும். அந்த வகையில் விக்டர் கியூகோவும் டிக்கன்ஸ்சும் தனது நாவலை மிகச்சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களே எனது ஆதர்சங்கள் என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி
தினசரி வாழ்விற்குள் ஒரு புதிர் தன்மையும் மர்மமும் கலந்திருக்கிறது. மனிதர்களின் செயல்கள் எல்லாவற்றையும் காரணங்களால் விளக்கிவிட முடியாது. சில செயல்களைப் புரிந்து கொள்வது இயலவே இயலாது. இதையே தஸ்தாயெவ்ஸ்கி தனது படைப்புகளில் கவனம் கொள்கிறார்.
ரஸ்கோல்நிகோவ் கொலையைச் செய்வதற்கு முன்பாகத் துல்லியமாகத் திட்டமிடுகிறான். ஒத்திகை பார்க்கிறான். குறிப்பாகத் தனது வீட்டினை கடந்து செல்கிறவர்களின் எண்ணிக்கையைக் கூட அவன் கணக்கெடுக்கிறான். எதற்காக இந்தக் கணக்கு. தினசரி வாழ்க்கை ஒன்று போலத் தோன்றினாலும் அது ஒன்று போலவே இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதன் அடையாளம் போலவே வட்டிக்கடைப் பெண்ணைக் கொல்லச் சென்ற ரஸ்கோல்நிகோவ் அவளது தங்கை லிசாவெதாவையும் கொலை செய்கிறான். அது எதிர்பாராமையின் அடையாளம்
தனது வீட்டின் ஜன்னல் வழியாகக் கடந்து செல்பவர்களின் உடைகளை ரஸ்கோல்நிகோவ் அவதானித்தபடியே இருக்கிறான். பகட்டான உடை அணிந்தவர்கள் எவருமில்லை. அது தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி. ஆனாலும் மற்றவர்களின் உடையைக் காணும் போது தனது தோற்றம் குறித்துக் கவலை கொள்கிறான்
தஸ்தாயெவ்ஸ்கி துல்லியமாக அந்தப் பகுதியை விவரித்துள்ளார். அங்கு வசிக்கும் ஜெர்மானியர்கள். விளையாட்டுச் சிறுமிகள். துணிதுவைப்பவர்கள் கேரேஜ் தொழிலாளர்கள். பரத்தைகள் எனப் பலரையும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். இதன்வழியே வாசகருக்குக் கதையின் களம் துல்லியமாகக் கண்ணுக்குத் தெரிந்துவிடுகிறது. கற்பனையான கதைப்பரப்பினை உருவாக்காமல் நிஜமான பீட்டர்ஸ்பெர்க் நகரில் தனது நாயகனை உலவ விடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி. அது தான் அவரது தனிச்சிறப்பு

தஸ்தாயெவ்ஸ்கியின் மனைவியான அன்னா தனது நாட்குறிப்பில் தங்களுக்குத் திருமணமான புதிதில் ஒரு நாள் தஸ்தாயெவ்ஸ்கி தன்னை இடிந்து போன சுவர் ஒன்றைக் காண அழைத்துப் போனதாகவும் அது ரஸ்கோல்நிகோவ் கொலைக்குப் பின்பு பொருட்களை ஒளித்து வைத்த சுவர் என்று சொன்னதாகவும் குறிப்பிடுகிறார். நாவலின் களத்தை எவ்வளவு நுட்பமாக அறிந்து வைத்திருக்கிறார் என்பதன் அடையாளமே இந்த நிகழ்வு
நகரமே அவரது நாவலின் மையம். கிராமிய வாழ்க்கை குறித்தோ, பண்ணையடிமைகள் பற்றியோ அவர் கவனம் கொள்ளவில்லை. அதிலும் நகரத்தில் தனக்கென அடையாளம் இல்லாமல் போனவர்களைத் தான் அவர் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்.
கனவும் குழப்பமான எண்ணங்களும் கொண்ட அவரது நாவலின் நாயகர்கள் உலகின் குற்றங்களுக்காக வருந்துகிறார்கள். தன் தவறுகளுக்கான தண்டனையைத் தானே வழங்கிக் கொள்கிறார்கள். உலகத்தால் மட்டுமின்றி உறவுகளாலும் வஞ்சிக்கப்படும் மனிதனின் நிலையைப் பற்றியே தஸ்தாயெவ்ஸ்கி எழுதுகிறார். தனது வேதனைகளைத் தான் மனிதன் நினைவில் வைத்துக் கொள்கிறான். சந்தோஷங்களை அல்ல எனும் தஸ்தாயெவ்ஸ்கி தன்னையே ஒரு பகடையாக மாற்றி உலகோடு விளையாடுகிறார்.
what is time ? time does not exist. time is numbers .time is the relationship of being to non being – – Notebook for crime and Punishment
என்ற அவரது வரி காலம் பற்றிய அவரது ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாகும். இந்த வரியின் மூலமே அவரது நாவல்களைப் புரிந்து கொள்ள முடியும்.
••
September 5, 2021
துயிலின் திருவிழா
ஜெ. திவாகர்
எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்பது போல இந்நாவலின் கதையோட்டம் முழுமையும் தெக்கோடு துயில் தரு மாதா கோவிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழா நோக்கியே நகர்கிறது.

எஸ்.ரா. வின் அத்தனை கதைகளிலும் முக்கிய கதாபாத்திரமாய் இடம்பெறும் வெயில். இக்கதையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் ஓடும் நரம்புகளாய் பின்னி பிணைந்து நம்மோடும், கதையோடும் பயணிக்கிறது வெயில்.
இந்நாவல், மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு தளம் 1870 களிலும், மற்ற இரு தளங்களும் 1982 கால கட்டத்திலும் நடப்பதாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்களில் கடற்கன்னி ஷோ நடத்தும் அழகர், அவன் மனைவி சின்னராணி, அவர்களின் கால் சற்று ஊனமான மகள் செல்வி இவர்கள் மூவரும் யாருமற்ற ஆத்திக்குளம் ரயில் நிலையத்தில் தெக்கோடு செல்வதற்கான ரயிலை எதிர்பார்த்து முகத்தில் வெயில் வழிய காத்திருப்பதிலிருந்து தொடங்குகிறது நாவல்…..
திருவிழாக்களில் ஷோ நடத்துவோரின் வாழ்க்கை, அவர்கள் படும் அவஸ்தைகள், ஒரு சாண் வயிற்றைத் தாண்டி அவர்களுக்குள்ளும் இருக்கும் மனசு என கதை விரிகிறது.
இவர்களோடு ரயிலில் நோய்மையால் பாதிக்கப்பட்ட ரோகிகள், பிச்சைக்காரர்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். தெக்கோட்டிலுள்ள துயில்தரு மாதா கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு கூட்டம் கூட்டமாய் படையெடுக்கும் வெவ்வேறு விதமான நோய்களால் பீடிக்கப்பட்ட – நோய்களை தாமே வலிய தேடி உருவாக்கிக் கொண்ட மக்களின் துயரம் நிறைந்த கதைகளை கேட்கையில், நமக்குள்ளும் ஏதோவொரு இனம் புரியாத நோய் அண்டிக் கொண்டிருப்பதைப் போல் உணர்வதிலிருந்தே நாவலுக்குள் நம்மை நூலாசிரியர் எந்த அளவு ஒன்றிப் போகச் செய்துள்ளார் என்பதை உணர முடிகிறது.
நாம் நம் உடலை எந்த அளவிற்கு பொருட்படுத்தாமல் துச்சமாய் மதித்து நோயை தாமே வரவைத்துக் கொள்கிறோம் என்பதை பல இடங்களில் கதை மாந்தர்கள் வழியே எஸ்.ரா. உணர்த்துகிறார்.
*”மனிதர்கள் தங்கள் உடலை எப்போதுமே ஒரு இயந்திரத்தைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் வரை அவர்கள் அதை கவனிப்பதேயில்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு என்று வந்துவிட்டால் உடனே பயம் கொண்டு விடுகிறார்கள்.”*
மேலும், நோய்மை என்பது நாம் பார்த்து பயந்து துயரப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வைக்கிறார்.
*”நோய் ஒரு நல்ல ஆசான். அது ஒரு மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது.”*
நாவலில் நம்மை மனம் கலங்கச் செய்யும் பாத்திரங்கள் இருவர் உண்டு. ஒருவர் கொண்டலு அக்கா.
தெக்கோடு செல்லும் நோயாளிகள் வழித் தங்கலுக்காக தங்கும் எட்டூர் மண்டபத்தில் வசிக்கும் கொண்டலு அக்கா அங்கு வரும் நோயாளிகளிடம் காட்டும் பரிவும், அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவதும், அவர்களின் புண்களில் வழியும் சீழை துடைப்பதும் அனைத்திற்கும் மேலாய் அவர்களின் சோகக் கதைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதுமென நாம் நேரில் காண வாய்க்காத அன்னை தெரசாவினை நினைவூட்டுகிறார்.
அதுவும் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் கூறும் வாழ்க்கை போதனைகள் தான் இந்நூலின் உச்சமென்பேன்…..
*”நாவை அடக்கிக் கொள்ளும் போது மனதும் சேர்ந்து ஒடுங்கத் துவங்குகிறது. மனது ஒடுக்கம் கொண்டுவிட்டால் உலகின் சுமைகள் எதுவும் நம் மீது படியாது. நீர்க்குமிழ் போல நாமும் மிதக்கத் துவங்கிவிடுவோம். ஆனால், நாவைக் கட்டுவது எளிதானதில்லை”*
*”நோயாளியிடம் பரிவு கொள்ளத் தெரியாத மருத்துவரைப் போல இந்த உலகில் மோசமானவர் எவருமில்லை. மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை. அது ஒரு சேவை. கைமாறில்லாத சேவை. அது கறைபடும் போது மனிதன் மீட்சியுறவே முடியாது “*
-ஒவ்வொரு மருத்துவரும் தங்களின் மருத்துவமனையின் சுவர்களிலும் அவர்தம் உள்ளத்திலும் பொறித்து வைக்க வேண்டிய வைர வரிகள் இவை.
*” குடும்பத்தை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தெரியாத மனிதனால் உலகை நேசிக்க முடியாது”*
இதேபோல் இக்கதையின் மற்றுமொரு ஆகச் சிறந்த கதாபாத்திரம் ஏலன் பவர்.
எஸ்.ராவின் நாவல்களின் பெரும் பலமே அவற்றில் புனைவு எது நிஜமெது என்று அத்தனை எளிதாய் நம்மால் பிரித்தறிய இயலா வகையில் இரண்டும் டி.என்.ஏ.வில் பின்னிப் பிணைந்திருக்கும் இரட்டைச் சுருளாய் கலந்திருப்பது தான்….
இந்நாவலிலும் ஏலன் பவர் என்னும் பாத்திரம் இதைப் போன்றதே. இறை ஊழியத்திற்காய் இந்தியா வரும் ஏலன் பவர் (1873) தெக்கோடு வந்து அங்கு வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கிறார். ஆனால் அது அத்தனை எளிதாய் இல்லை. மூடப் பழக்கத்திலும், அறியாமையிலும் மூழ்கி இருக்கும் அப்பாவி மக்கள் முதலில் ஏலன் பவரை ஏற்க மறுக்கின்றனர். ஏலன் பவர் தனது ஞானத்தந்தையான லகோம்பேவிற்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாய்க் கொண்டு இக்கதாப்பாத்திரத்தை நூலாசிரியர் கட்டமைத்துள்ளார்.
இறைவனுக்கு தொண்டு செய்வதை விடவும் மக்களை நோய்மையிலிருந்து காப்பதே தமது முதல் பணி என கடமையாற்றும் ஏலன் பவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் ஏராளம். எனினும் தான் கொண்ட கொள்கைக்காய் அத்தனையும் துச்சமென தூக்கி எறிந்து தனது பாதையில் முன்னேறும் ஏலன் நமக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.
உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி ஓரிடத்தில் ஏலன் பவர் கூறுகையில்,
*”எல்லா நோய்களுக்கும் ஒரே தாய்தானிருக்கிறாள். அது உணவு. சரியான, தேவையான, எளிதான உணவைக் கைக்கொள்ள தவறும்போது நோயின் கைகள் நம்மைப் பற்றிக் கொள்ளத் துவங்குகின்றன. பசியை எதிர்கொள்வதும், அதைக் கடந்து செல்வதும் எளிதானதில்லை. அது மனிதவதையில் முக்கியமானது.”*
ஏலனுக்கு லகோம்பே எழுதும் கடிதங்களில் அவளை ஊக்கப்படுத்தும் தன்னம்பிக்கை வாசகங்கள் மிளிரும்…. அவை ஏலனுக்கானது மட்டுமல்ல நமக்கும் சேர்த்தே….
*”சேவை செய்வது என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. இது தண்ணீர்த் துளிகளால் ஒரு பாறையை துளையிட விரும்புவது போன்றது. தண்ணீர்த் துளி எப்படி ஒரு பாறையைத் துளையிட முடியும் என்று கேலி செய்வார்கள். முட்டாள்தனம் என்று பரிகாசம் செய்வார்கள். நமக்கே வியர்த்தம் என்றுகூடத் தோன்றும். ஆனால் தண்ணீர்த்துளி இடைவிடாமல் ஒரே இடத்தில் சொட்டிக் கொண்டேயிருந்தால் பாறையில் நிச்சயம் ஒரு நாள் துளை விழும். அது சாத்தியமாகியிருக்கிறது. அதுவரை நீயும் காத்திரு.”*
இந்நூலைப் பற்றி பேசப் பேச, எழுத எழுத என் கைகளும், வாயும் ஓய்ந்த பாடாய் இல்லை.
இன்னமும் இந்நூல் குறித்து நான் எழுத நினைத்து எழுதாத வார்த்தைகள் நிறைய மீதமிருக்கிறது.
நூலிலிருந்து சில வரிகள் மட்டும் இறுதியாய்……
*வறுமை எல்லா அவமானங்களையும் நம்மீது சுமத்தி விடும். வறுமை எந்த வைராக்கியத்தையும் அர்த்தமற்றதாக்கிவிடும்*
*வலியை நீ எப்போது மறைக்கத் துவங்குகிறாயோ அப்போது நீ உன்னை ஏமாற்றிக் கொள்ளத் துவங்கிறாய்*
*மனிதர்கள் தாங்கள் விரும்புவதை விடவும் வெறுப்பதைப் பற்றி தான் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்*
போதுமென்று நினைக்கிறேன்.
“சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!” என்கிறார்- பிரான்சிஸ் பேக்கன். நீங்கள் சுவைத்து மென்று ஜீரணித்து மகிழ ஏற்ற நூல் துயில்.
பாலபுரஸ்கார்
எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சிறார் நூலுக்கு சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.


பாலபாரதிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
புத்தகம் வெளியிட்ட வானம் மணிகண்டனுக்கு பாராட்டுகள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
