S. Ramakrishnan's Blog, page 118
August 6, 2021
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
தமிழ் பதிப்புத்துறை வரலாற்றில் வாசகர் வட்டத்திற்குத் தனியிடம் உண்டு. அது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய பதிப்பகம். அவர் தியாகி சத்தியமூர்த்தியின் மகள். எம்.எல்.சி.யாக இருந்தவர்.

உலகத் தரம் வாய்ந்த புத்தகத் தயாரிப்பினை வாசகர்வட்டம் மேற்கொண்டிருக்கிறது. கலாஸாகரம் ராஜகோபால் வரைந்த ஒவியம் மற்றும் அட்டை வடிவமைப்பு. ஒரே அட்டை ஒவியம் தான் எல்லா நூல்களுக்கும். புத்தக விலை மிகவும் குறைவு. ஆனால் தரமான இந்தப் புத்தகங்கள் விற்காமல் போய் பெரிய நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
என்னிடமுள்ள வாசகர் வட்ட வெளியீடுகளைக் கையில் எடுத்துப் பார்க்கும் போது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கனவு ஏன் தோற்றுப் போனது என்ற கேள்வி மனதில் எழுகிறது. உண்மையில் அவர் தோற்கவில்லை. சீரழிந்த பண்பாடு அவரைக் காவு வாங்கிவிட்டது.

வாசகர்வட்டம் ஒரு முன்னோடியான அமைப்பு. அதன் மூலம் தமிழ் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போகும் கனவு கண்டார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. ஆனால் அது நிறைவேறவில்லை. ஆயிரம் பேர் ஆதரவு கொடுத்திருந்தால் வாசகர் வட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கும். வெறும் நூறு, இருநூறு பேர் மட்டுமே ஆதரவு தந்தார்கள். நூலகங்களில் அடிமாட்டு விலைக்கு புத்தகங்கள் கேட்கிறார்கள் என்று லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தர மறுத்திருக்கிறார். வாசகர்களை நம்பி நேரடியாக விற்பனை செய்ய முயன்றார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இரண்டாயிர வருஷப் பெருமை பேசும் தமிழ் இலக்கியச் சூழலில் இன்றும் ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்க கஷ்டப்படவே நேர்கிறது.

தி. ஜானகிராமன் ,கு. ப. ராஜகோபாலன், சிட்டி , நீல. பத்மநாபன் , கிருத்திகா , ஆ. மாதவன் , எம். வி. வெங்கட்ராம் , கி. ராஜநாராயணன் , விஸ்வநாத சாஸ்திரி , பி. கேசவதேவ் , சா.கந்தசாமி , லா.ச.ரா. , நரசைய்யா, சிதம்பர சுப்ரமணியன், மோகன் ராகேஷ் எனச் சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசகர்வட்டம் வெளியிட்டுள்ளது. இவர்கள் புத்தகங்களை வாங்க ஆயிரம் பேர் அன்று முன்வரவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்.
வாசகர் வட்டம் சார்பில் வெளியிடப்படும் புத்தகங்கள் குறித்து அறிந்து கொள்ள வாசகர் மடல்” என்னும் செய்தி இதழையும் நடத்தியிருக்கிறார். அதுவும் முன்னோடியான முயற்சி..
வாசகர்வட்ட வெளியீடுகளில் பல நூல்கள் தற்போது மறுபதிப்பு செய்யப்படவில்லை. அவை முறையான உரிமை பெற்று மறுபதிப்பு செய்யப்படல் வேண்டும்.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திக் குறித்து ஒரு டாகுமெண்டரி படத்தை யாராவது உருவாக்க வேண்டும். அவர் தான் தமிழின் முதல் பெண் பதிப்பாளர். பதிப்புத்துறையில் சாதனைகளை செய்தவர். அவரது பெயரால் சிறந்த பதிப்புப் பணிக்கான விருது வழங்கப்பட வேண்டும்.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியினைப் பற்றித் தென்றல் இதழில் சிறந்த கட்டுரை ஒன்றை பா.சு.ரமணன் எழுதியிருக்கிறார். அதனை மீள்பதிவு செய்கிறேன்
••
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி” – பா.சு.ரமணன்
“லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி” என்றால் தெரியாதவர்களுக்குக் கூட, “வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி” என்று சொன்னால் உடனே ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு ‘வாசகர் வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன்மூலம் பல தரமான புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் நூல் வாசிப்பு வளர்ச்சிக்கு வளம் சேர்த்தவர் இவர்.
தீரர் சத்தியமூர்த்தித் தம்பதியினருக்கு 1925, ஜூலையில் மகளாகப் பிறந்தார். தந்தை சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் பள்ளியில் படிக்கும்போதே லக்ஷ்மிக்கு சுதந்திர தாகம் வந்துவிட்டது. ஒருமுறை மகாத்மா காந்தி சமூகப் பணிக்கு நிதியுதவி கோரியபோது தம் கைவளையல்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டார். பின் அவை வெள்ளி என்பது தெரியவரவே, தந்தையிடம் சொல்லி, குடும்பச் சொத்தாக இருந்த தங்க வளையலைக் கொண்டுவந்து காந்திஜியிடம் அளித்தார். காந்திஜி மட்டுமல்லாமல், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத் எனப் பலரது அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர் லக்ஷ்மி. இளவயதிலேயே தந்தையுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சத்தியமூர்த்தி மகளை ஒரு ஆணுக்குரிய போர்க்குணத்தோடு வளர்த்தார். வீணை வாசிக்கத் தெரிந்த லக்ஷ்மிக்குக் குதிரையேற்றமும் தெரியும். ஓவியம், இசையிலும் மிகுந்த நாட்டம். ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தந்தை ‘அருமைப் புதல்விக்கு’ என்று எழுதிய புத்தகங்களை அன்பளிப்பாகத் தருவார். அது இலக்கியத் தாகத்துக்கு வித்திட்டது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எனப் பிறமொழி இலக்கியங்களைத் தேடித்தேடிப் படித்தார். இந்நிலையில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியமூர்த்திக் கைது செய்யப்பட்டார். உடல் நலிவுற்றும் அவரை ஆங்கில அரசு விடுதலை செய்யவில்லை. வேலூர், மத்திய பிரதேசம் எனச் சிறை விட்டுச் சிறை மாற்றியது. மகளைப் பார்க்கவும் அனுமதியில்லை.

கேரளத்தைச் சேர்ந்தவரும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் படித்துத் தங்கப் பதக்கம் பெற்றவருமான கிருஷ்ணமூர்த்தியுடன் லக்ஷ்மிக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. சிறையில் இருந்தபடியே, ஏப்ரல் 23, 1943 அன்று திருமணம் நிகழவேண்டும் என்று நாள் குறித்துக் கொடுத்தார் சத்தியமூர்த்தி. எக்காரணத்தைக் கொண்டும் அந்த நாளை மாற்றக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அவர் குறிப்பிட்ட அந்த நாளிலேயே திருமணம் நிகழ்ந்தது. ஆனால் அதைப் பார்க்க சத்தியமூர்த்தி இல்லை. மகளின் திருமணத்திற்கு நாள் குறித்தவர், அதற்கு முன்னரே உடல் நலிவுற்றுக் காலமானார். ஆனால், தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றினார் லக்ஷ்மி. மணமானபின் கணவருடன் கேரளத்துக்குச் சென்றார். அங்கும் அவரது சமூகப் பணி தொடர்ந்தது. தமது இல்லத்திலேயே பெண்களுக்கான இலவச மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். தவிர, பெண்கள் நலன், கல்வி, சமூகம், குழந்தை வளர்ப்பு என்று பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார். பின் தமிழகம் வந்தார்.
கிருஷ்ணமூர்த்தி. மலையாளம், ஆங்கிலம், தமிழ் எனப் பல மொழிகள் அறிந்தவர். சட்டம் பயின்றவர். எழுத்தாளரும் கூட. காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் மனைவியின் அரசியல், சமூகப் பணிகளை ஊக்குவிப்பவராக இருந்தார்.
லக்ஷ்மி, 1964 மற்றும் 1970 தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரானார். ஆனால் காங்கிரஸ் தன் கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டதால் வெறுப்புக் கொண்ட இவர், மாற்றுக் கட்சியாக ஜனதா கட்சி தோற்றுவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். தந்தை சத்தியமூர்த்தி எப்படி ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக இருந்து போராடினாரோ அவ்வாறே லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியும் நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடினார்.
1977ல் ஜனதா கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின் அரசியலிலிருந்து ஒதுங்கி, தீவிர சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். ‘சத்தியமூர்த்தி ஜனநாயக உரிமைகள் மையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கருத்தரங்குகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்.
ஏற்கனவே கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து எனப் பிரபல இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதியவர் இவர். நூலும் எழுதியிருக்கிறார். இவரது ‘ஐந்தாவது சுதந்திரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பை அக்காலத்தில் புகழ்பெற்ற பதிப்புத்துறை முன்னோடி சக்தி. வை.கோவிந்தன் வெளியிட்டிருக்கிறார். இவரது கணவரும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்துக்குக் கே.எம். பணிக்கரின் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இந்தப் பின்னணியோடு, 1964-65களில் இருவரும் ‘வாசகர் வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கினர்.
நல்ல எழுத்தாளர்களின் தரமான நூல்களை வெளியிட்டு வாசகர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பது இதன் நோக்கம். அதற்காகப் ‘புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்’ என்ற பதிப்பகத்தைத் துவக்கினர். சந்தாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25 ரூபாய் கொடுப்பவர்களுக்குச் சலுகை விலையில் நூல்கள் வழங்கப்பட்டன.
வாசகர் வட்டத்தின் முதல் வெளியீடு ராஜாஜி எழுதிய ‘சோக்ரதர்: ஆத்ம சிந்தனைகள்’ என்னும் நூல். அது 1965ல் வெளியானது. ராஜாஜியே அதை வெளியிட்டார்.
தரமான தாள், நேர்த்தியான அச்சு, உயர்தரப் பைண்டிங், முகப்போவியம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் வாசகர் வட்ட நூல்கள் தனித்து விளங்கின. முதல் நூலில் கலாசாகரம் ராஜகோபாலின் கோட்டோவியம் இடம்பெற்றது. அதையே வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்திற்கும் பயன்படுத்தினார் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. வாசகர் வட்ட நூல்களைத் தனித்து அடையாளங் காட்டின அவை. இலக்கிய வாசகர்களிடம், குறிப்பாக, இலங்கைத் தமிழரிடையே, அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து புது நூல்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல்களை நூலாகப் பிரசுரிப்பதை அவர் தவிர்த்தார். சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைத் தேடியெடுத்து வெளியிட்டார். தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’, எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, நீல. பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’, லா.ச. ராமாமிர்தத்தின் ‘அபிதா’ போன்றவை வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பெற்றன. திறமை வாய்ந்த எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களது முதல் படைப்பு வெளியாகவும் உதவியாக இருந்தார். நரசய்யாவின் ‘கடலோடி’, சா. கந்தசாமியின் ‘சாயாவனம்’ போன்றவை அப்படி வெளியானவைதாம். அதிலும் ‘சாயாவனம்’ கந்தசாமியின் முதல் நாவலாகும். அதுபோலப் ‘புனலும் மணலும்’ மாதவனின் முதல் நாவல். ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதியான ‘குயிலின் சுருதி’ வாசகர் வட்டம் மூலம் வெளியானதே! லா.ச.ராவின் ‘புத்ர’ நாவல், கிருத்திகாவின் ‘நேற்றிருந்தோம்’, நா. பார்த்தசாரதியின் ‘ஆத்மாவின் ராகங்கள்’, கி.ரா.வின் ‘கோபல்ல கிராமம்’, க.சுப்பிரமணியனின் ‘வேரும் விழுதும்’, ஆர். சண்முகச் சுந்தரத்தின் ‘மாயத்தாகம்’ போன்றவை வாசகர் வட்டம் மூலம் வெளியாகிப் புகழ் பெற்றவையே.
தன் இல்லத்தில் எழுத்தாளர்களை வரழைத்து வாசகர்-எழுத்தாளர் சந்திப்புக்களையும் நடத்தினார். ‘புக் கிளப்’ என்ற கருத்தைத் தமிழில் நனவாக்கிய முன்னோடி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திதான். வை.மு. கோதைநாயகி, தன் பதிப்பகம் மூலம் தனது நூல்களை மட்டுமே வெளியிட்டார். ஆனால் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்திப் பிறரது நூல்களைத் தயாரித்து, வெளியிட்டு, விற்பனை செய்ததனால், தமிழின் முதல் பெண் பதிப்பாளராகக் கருதப்படுகிறார். ‘வாசகர் செய்தி’ என்ற செய்தி மடல் ஒன்றையும் நடத்தினார். ‘நூலகம்’ என்ற நூலகங்களுக்கான மாத இதழையும் வெளியிட்டார்.
இவற்றில்முக்கியமானதொரு நூல் ‘நடந்தாய்; வாழி, காவேரி’ என்னும் கட்டுரை நூலாகும். காவிரி ஆற்றின் கதையோடு சமூக வாழ்க்கையும் கலந்து சொல்லப்பட்ட அந்தப் படைப்பு தி. ஜானகிராமன், சிட்டி இருவரும் இணைந்து எழுதி 1971ல் வெளியானது. காவிரி தோன்றுமிடம் தொடங்கி அது கடலில் கலக்கும் இடம்வரை உள்ள இடங்களைப்பற்றி மிக விரிவாகச் சொல்கிறது அந்நூல். ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் நேரில் சென்று தங்கள் அனுபவங்களைத் தீட்ட, நூலானது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாகப் ‘பிளாக்’ செய்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. வரலாற்று ஆவணமாகத் திகழும் அந்நூலைத் தற்போது ‘காலச்சுவடு பதிப்பகம்’ மீண்டும் வெளியிட்டுள்ளது.
இலக்கியம் தவிர, தொழில்நுட்பம், விஞ்ஞானம், மானுடவியல், வரலாறு எனப் பல்துறை நூல்கள் வாசகர் வட்டம் மூலம் வெளியாகின. லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூல் தமிழில் ‘அறிவின் அறுவடை’ என்று வெளியானது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘தமிழர் பண்பாடும் வரலாறும்’ சிட்டியின் மொழிபெயர்ப்பில் வெளியானது. டாக்டர் ராதாகிருஷ்ணனின் ‘வாழ்க்கை’, ‘இந்துமத நோக்கு’ போன்றவையும் முக்கியமானவையே. பி.ஜி.எல். சாமி எழுதிய ‘போதையின் பாதையில்’ நூல் மனிதர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதைப் பற்றிக் கூறுவது. ‘எட்வின் கண்ட பழங்குடிகள்’ மனித இன வரைவியல் நூலாகும். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பி. கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’ (மலையாளம்); விசுவநாத சாஸ்திரியின் ‘அற்பஜீவி’ (தெலுங்கு); திரிவேணியின் ‘பூனைக்கண்’ (கன்னடம்); ஆலுவாலியாவின் ‘மண்ணும் இமயமலை’ (ஆங்கிலம்); மோஹன் ராகேஷின் ‘அரையும் குறையும்’ (ஹிந்தி); டாக்டர் இரா. நாகசாமியின் ‘யாவரும் கேளிர்’ போன்றவை குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்பு நூல்களாகும். ‘அக்கரை இலக்கியம்’ என்ற தலைப்பில் இலங்கை, மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். ‘விஞ்ஞானத்தின் புதிய எல்லைகள்’, ‘இன்றைய தமிழ் இலக்கியம்’ போன்ற கட்டுரை நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. சுஜாதா கணினித் துறை பற்றி எழுதிய ‘காசளவில் ஓர் உலகம்’ என்ற நூல்தான் வாசகர் வட்டம் வெளியிட்ட கடைசி நூல்.
வாசகர் வட்டம் வெளியிட்ட மொத்த நூல்கள் 45. நாளாவட்டத்தில் சந்தாதாரர்கள் குறைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பதிப்பு நிறுத்தப்பட்டது. பதிப்புத்துறையிலிருந்து விலகிய லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, சமூகப் பணிகளில் அக்கறை காட்டினார். சத்தியமூர்த்தி நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார். ஆங்கிலத்தில் சத்தியமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். சத்தியமூர்த்தியின் கடிதங்களை இரு பெரும் தொகுப்புகளாகக் கொண்டு வந்தார். அக்கால அரசியல், சமூகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் மிகச்சிறந்த ஆவணங்களாகத் திகழும் அவை, பின்னர்ச் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரமாகத் தமிழில் வெளியாகின.
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தித் தமது 83ம் வயதில் ஜூன் 12, 2009 அன்று சென்னையில் காலமானார். சில மாதங்களிலேயே மார்ச் 06, 2011 அன்று கணவர் கிருஷ்ணமூர்த்தியும் காலமானார். லக்ஷ்மி-கிருஷ்ணமூர்த்தித் தம்பதியருக்கு மூன்று மகன்கள். நாட்டு விடுதலைக்காகவும், இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட சாதனையாளர்களில் மறக்கக்கூடாத முன்னோடி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி.
நன்றி
தென்றல் இதழ்
August 5, 2021
சூடி மறையாத சூரியன்
குறுங்கதைகள் பற்றிய வாசிப்பனுபவம்
சக்திவேல்

•••
உங்களின் பூக்களை வரையும் சிறுமி குறுங்கதை வாசித்தேன். ஓவியத்தை வரைந்து நீருற்றி வளர்க்க முயலும் சிறுமி, ஒருகட்டத்தில் சலித்து முடியாமையால் விலகி விடுகிறாள். பின்பொரு நாள், தன் ஓவியம் மாறாது நிலைப்பது என்ற உணர்தலை அறிந்தவுடன் இயற்கையோடு முரண் கொள்வதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தைச் சூடிக் கொள்கிறாள்.
அவள் வரையும் அந்தச் செடியும் மலருமான ஓவியம் என்பது இயற்கையில் ஒருகணத்தில் சுடர்ந்தொளிரும் அற்புதம் அல்லவா. நம் நினைவுகள் அப்படித் தான் இருக்கின்றன. மனிதரோ, விலங்கோ, இயற்கை நிகழ்வோ எதுவானாலும் அதன் உன்னதத்தை ஏதோவொரு கணத்தில் கண்டுவிடுகிறோம், அதன்பின் அவற்றிடம் மீள மீள அதைக் கேட்கிறோம். கிடைக்காத போது துன்புற்று ஏங்கி சலிக்கிறோம். பின்னர் என்றோ ஒருநாள் அந்தச் சிறுமியைப் போல அறிகையில் விடுதலை கொள்கிறோம். அப்படி நிகழ்வதற்கு நமக்குள்ளிருக்கும் அந்தக் கள்ளமின்மையைப் பாதுகாப்பவருக்கே அது நிகழ்கிறது.
அன்று மாறும் இயற்கையின் முன் மாறாத கனவொன்றைச் சூடி மறையாத சூரியன் என்று நிற்கிறோம். அந்தப் பிரகாசமான சூரியனைப் போன்ற கனவைத் தலைமுறைகளுக்குக் கையளித்துப் போவதற்காகத் தான் மனிதன் சிற்பம், இலக்கியம், இசை, ஓவியம் எனக் கலைகளை ஆக்கினான் எனத் தோன்றச் செய்தாள் பூக்களை வரையும் சிறுமி.
***
விளையாட்டு சிறுவன் குறுங்கதையை வாசித்தேன். வாசு என்ற சிறுவன் கள்ளன் போலிஸ் விளையாடுகிறான். யாருக்கும் தெரியாதிருக்க நெல் வைக்கும் குலுக்கையினுள் மறைந்து கொள்கிறான். தன்னை யாரும் கண்டுபிடிக்க இயலாது என மகிழ்கிறான். பின்னர் எல்லோரும் அவனை விட்டுவிட்டு விளையாடச் சென்றுவிடுகிறார்கள். வெளியே ஏறிவர முடியவில்லை. அவனது குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு மாமா மயங்கி கிடப்பவனை டார்ச்லைட் அடித்துப் பார்த்துத் தூக்கி வந்து படுக்க வைக்கிறார். காலையில் எழுந்தவன் நேராகச் சென்று குலுக்கையை ஒரு குத்து விடுகிறான். குலுக்கை ஏதோ முணுமுணுக்கிறது எனக் கதை முடிகிறது.
முதல் நோக்கில் மிக எளிய கதையாகத் தோன்றுவது. வாசித்து முடிக்கையில் முகத்தில் ஒரு புன்னகையைத் தவழச் செய்வது. நம்மில் சிலரது வாழ்வில் நடந்திருக்கவும் கூடும்படியான நிகழ்வு. ஒவ்வொரு கல்லிலும் ஒரு சிற்பம் உண்டு. அதைக் காணும் கண் உள்ள சிற்பியால் மட்டுமே சிற்பத்தை உலகுக்குக் கொண்டு வர முடியும்.
இந்தக் கதையும் அதுபோலத்தான். மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அத்தனை செயல்களும் உச்சி முனை சிகரத்தில் நின்று பார்க்கையில் வெறும் விளையாட்டு தானே. காலப் பெருவெள்ளத்தில் என்றோ ஒருநாள் எல்லாம் வானில் கரைந்து போகையில் இவற்றிற்கெல்லாம் பொருளென்று ஒன்று இருக்க முடியுமா. உண்மையில் பொருள் என்பது இங்காடுதலின் மகிழ்வாகவே இருக்க முடியும்.
மனிதர்கள் வாசுவைப் போலவே தங்கள் அகங்களை மறைத்தாடுகிறார்கள். அந்தக் குலுக்கைகள் என்றுமிருப்பவை. எதற்குள் நெல் மணி உண்டோ, அதற்குள்ளேயே தான் எலிப்புழுக்கைகளும் உள்ளன. இருளில் ஒளிவதில் ஓர் இன்பம் உண்டு. ஆனால் ஒளி காணாத இருளென்பதே நரகம் எனப் பின்னர் அறிகிறோம். அத்தனை மீட்புகளும் நமக்கப்பால் நாமறியாத போது நடப்பவை தான். அதற்கு நேசம் மிகுந்த மெய்யறிவோன் வரவேண்டியிருக்கிறது.
விடுதலைக்குப் பின் சிறுவனைப் போலத்தான் நாமும் குலுக்கையைக் குத்துவிடுகிறோம். அந்தக் குலுக்கை என்ன முணுமுணுத்திருக்கலாம். பாவம் பையன் என்று சிரித்திருக்கலாம்.. வெளியே நிற்கையில் பெரிய ஆள் போலத் தெரியலாம். உள்ளே சென்றால் தான் தெரியும்.
இதைக் குறுங்கதை என்பதை விடக் கதையாகிய கவிதை என்று சொல்லலாம். காணும் கோணத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக் காட்டும் கலைடாஸ்கோப்.
***
காலச்சுவடில் வெளியான குறுங்கதைகள் பற்றி
தருண்
உங்கள் மூன்று குறுங்கதைகள் காலச்சுவடு இதழில் வந்திருப்பதாக நேற்று உங்கள் தளத்தில் வந்தபோது அறிந்துகொண்டேன். உடனடியாகக் காலச்சுவடு இதழை வாங்கி வாசித்தேன். முதல்கதையான பதினேழாவது ஆள் படித்து முடித்தவுடன் மனம் அடுத்த கதைகளுக்குத் தாவ ஒப்புக்கொடுக்க மாட்டேங்குது. அவ்வளவு மனக்கொந்தளிப்பு வாசித்த பிறகு. நிச்சயமாகச் சொல்வேன், உலகின் தலைசிறந்த கதைகளில் ஒன்று இது. சில ஆயிரம் பக்கங்கள் கூடத் தந்து விடாத உணர்ச்சி வேகத்தை இக்குறுங்கதை எனக்கு அளித்தது.
அந்தப் புதிதாகத் தோன்றிய இளைஞன் வேறு யாரும் இல்லை கல்யாணியின் காதலன் தான். அக்குடும்பம் கல்யாணியின் காதலை புரிந்துகொள்ளவில்லை. அவ்வளவு அலட்சியம் கல்யாணியின் காதல் மேல் அவளது குடும்பத்திற்கு , எந்த அளவுக்குப் பிடிக்காது என்றால் கல்யாணி காதலிக்கும் அந்த இளைஞனை அவர்கள் பார்த்ததோ இல்லை அணுகியதோ கிடையாது. ஏன், அவர்கள் காதலைக் கூட வாழ்வில் அனுபவித்ததோ இல்லை அணுகியதோ இல்லை. அவனும் கல்யாணி இல்லாத உலகத்தில் இன்று இல்லை. அவளுடன் அரூபமாக இருக்கிறான். அரூப காலத்தில். Craft இல் இருக்கும் absurdity யும் எனக்குப் பிடித்திருந்தது. அதி அற்புதமான குறுங்கதை . நன்றி எஸ். ரா இப்படி ஒரு கதை மூலம் எங்களை நிலை இல்லாமல் ஆக்கியதற்க்கு .
•••
August 4, 2021
பண்பாட்டின் வாசல்கள்
ஞானபீடம் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளரான . உடுப்பி இராஜகோபாலாச்சாரிய அனந்தமூர்த்தி எனும் யு.ஆர். அனந்தமூர்த்தி பற்றி Ananthamurthy…Not a biography…but a hypothesis என்ற ஆவணப்படத்தைக் கிரிஸ் காசரவள்ளி இயக்கியுள்ளார்.

கடஷ்ரத்தா என்ற அனந்தமூர்த்தியின் கதையைப் படமாக்கி தனது திரை வாழ்க்கையைத் துவக்கியவர் காசரவள்ளி.
கிரிஷ் காசரவள்ளி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அவர் வாசித்த கதை கடஷ்ரத்தா. அக் கதையின் பாதிப்பைப் பல ஆண்டுகளாக அவரால் மறக்க முடியவில்லை. பூனே திரைப்படக்கல்லூரியில் படித்து முடித்துத் திரும்பிய காசரவள்ளி இக் கதையை தனது முதற்திரைப்படமாக்கினார். அது தேசிய விருது பெற்றது.
அந்த நினைவுகளுடனே இந்த ஆவணப்படத்தைத் துவக்குகிறார் காசரவள்ளி.. நீண்ட கால நட்பும் பேரன்பும் கொண்டுள்ள அனந்தமூர்த்தியின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறோம் என்ற மகிழ்ச்சி அவர் எடுத்துள்ள கவித்துவமான காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுகிறது.

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி தாலுகாவிலுள்ள மெலிகேயில் அனந்தமூர்த்தி பிறந்தார். இதற்கு அருகிலுள்ள கிராமம் தான் காசரவள்ளியுடையது.
அனந்தமூர்த்தியின் ஆரம்பக் கல்வி தூர்வாசபுரத்தில் உள்ள ஒரு சமஸ்கிருத பள்ளியில் தொடங்கியது, பின்பு மைசூரில் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்றார். பெல்லோஷிப் கிடைத்த காரணத்தால் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார். 1966 இல் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
இந்தியா திரும்பிய அனந்தமூர்த்தி 1970 இல் மைசூர் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவக்கினார். பின்பு 1987 இல் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1992ல் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியாவின் தலைவராகப் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக 1993 இல் அவர் சாகித்ய அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை வென்ற அனந்தமூர்த்தி இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இரண்டு முறை பூனே தேசிய திரைப்படப்பள்ளிக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மெலிகே என்ற அந்த பசுமையான கிராமம் மழைக்காலத்தில் பேரழகுடன் ஒளிர்கிறது. சிவப்பு ஓடு வேய்ந்த பராம்பரிய வீடுகள். மழைத்தண்ணீர் தேங்கிய வீதி. மழைக்குள்ளாகவே பள்ளிச்சிறார்கள் குடையோடு கடந்து போகிறார்கள். அனந்தமூர்த்தியின் பால்ய நினைவுகளை வாய்ஸ்ஒவர் மூலம் நேர்த்தியாக விவரிக்கப்படுகிறது..
தனது கவிதைகளையும் அந்தக் கவிதைகளின் வழியே தான் சொல்ல வந்த விஷயம் பற்றியும் அனந்தமூர்த்தி இரண்டு காட்சிகளில் விளக்குகிறார், அவரது கவிதைகள் எளிய மரபுக்கவிதையின் சாயலை கொண்டிருக்கின்றன. நவீன தமிழ்க்கவிதையோடு ஒப்பிட்டால் அவரது கவிதைகள் வானம்பாடிகளின் கவிதை போலவே இருக்கின்றன.
இலக்கியம் பண்பாடு, அரசியல், தேசியம், உலகமயமாக்கம் குறித்த பார்வைகள் எனப் பரந்த தளங்களில் இயங்கியவர். அனந்தமூர்த்தி.
அவருக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. ஒன்று ஆசிரியராக அவர் இலக்கியம் கற்பித்தது. இரண்டாவது ஒரு சிந்தனையாளராக, அறிவுஜீவியாக அவர் இந்தியப் பண்பாடு சமூகம் அரசியல் பற்றிய பார்வைகளை உருவாக்கியது. மூன்றாவது ஒரு நிர்வாகியாக அவர் துணைவேந்தர் பதவி முதல் சாகித்ய அகாதமி தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட நிர்வாகம் செய்தது. தன்னை ஒரு சோசலிஸ்டாகவே அனந்தமூர்த்தி எப்போதும் முன்னிறுத்திக் கொண்டார். காந்தியும் லோஹியாவும் அவரது ஆதர்சங்கள் என்று ஒரு நேர்காணலில் ஒரு பேராசிரியர் கூறுகிறார் அது உண்மையே.

இங்கிலாந்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் அனந்தமூர்த்திக் கன்னடத்தில் தான் தனது கதைகளை, கவிதைகளை எழுதினார். அவரது சமஸ்காரா நாவலை ஏ.கே.ராமானுஜம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
கன்னடத்தில் எழுத வேண்டும் என்று தான் முடிவு செய்தது ஒரு அரசியல் செயல்பாடு. அது வெறும் விருப்பம் மட்டுமில்லை. ஒரு வேளை கன்னடத்தில் எழுதாமல் போயிருந்தால் நிச்சயம் சம்ஸ்காராவை எழுதியிருக்க முடியாது என்கிறார் அனந்தமூர்த்தி.
இந்தியாவின் தொடர்பு மொழியாக மட்டுமே ஆங்கிலம் இருக்க முடியும். அது இந்தியாவின் பிறமொழிகளை ஏளனமாக பிராந்திய மொழிகள் எனச் சொல்வது ஏற்புடையதில்லை.
ஆங்கிலம் முன்கட்டு உலகின் மொழி என்றால் இந்தியாவின் பிற மொழிகள் பின்கட்டு உலகில் இருப்பவர்களின் மொழி. முன்கட்டில் பேசப்படும் ராமாயணமும் பின்கட்டில் பேசப்படும் ராமாயணமும் ஒன்றில்லையே.
இந்தியப் பண்பாடு என்பது இரண்டு வாசல்கள் கொண்ட வீட்டினைப் போன்றது. முன்கட்டில் ஆண்கள் உட்கார்ந்து அதிகாரம் செய்வார்கள். அரசியல் பேசுவார்கள். ஆன்மீக தேடலில் ஈடுபடுவார்கள். அந்த உலகம் கௌரவம், ஒழுக்கம், அதிகாரம் பெருமிதம், என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளக்கூடியது
ஆனால் அதே வீட்டின் பின்வாசல் என்பது பெண்களுக்கானது. எளியோருக்கானது. கிணற்றடியும் பின்கட்டு உலகமும் அந்தரங்கமான விஷயங்களைப் பேசும் இடங்கள். அங்கே உலவும் ஆண்கள், பெண்கள் ரகசியங்களைப் பேசிக் கொள்கிறார்கள். உறவுகளை விமர்சனம் செய்கிறார்கள். விலக்கபட்ட, மறைக்கபட்ட விஷயங்கள் உரையாடப்படுகின்றன. ஆகவே பின்கட்டு உலகம் சுதந்திரமானது.

முன்கட்டு உலகம் பெரிதும் பாவனைகளால் நிரம்பியது.. ஆனால் பின்கட்டு உலகம் இதற்கு மாறானது. அங்கே. பொய்யான பாவனைகள் கிடையாது. மனத்தடைகள் கிடையாது சுதந்திரமான வெளிப்பாடு அதிகம். மறைக்கபட்ட விஷயங்கள் எளிதாகப் பேசப்படும். முன்கட்டு உலகில் கண்ணீருக்கு இடம் கிடையாது. ஆனால் பின்கட்டு உலகிலோ கண்ணீரும் வேதனையும் ரகசியங்களும் இயல்பானது. நான் எப்போதும் பின்கட்டு உலகை சேர்ந்தவன் என்கிறார் அனந்தமூர்த்தி.
இந்தியாவில் எழுதப்படும் ஆங்கில இலக்கியத்தை விடவும் பலமடங்கு சிறப்பாக இந்திய மொழிகளில் எழுதும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் அதை ஆங்கில வாசகர்கள், பத்திரிக்கைகள் புரிந்து கொள்வதில்லை. அங்கீகரிப்பதில்லை. இந்தத் தீண்டாமை மனப்பான்மை மாற வேண்டும் என்கிறார் அனந்தமூர்த்தி
1954,ஹசனில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தன்னிடம் படித்த எஸ்தர் என்ற மாணவியைக் காதலித்து 1956 இல் திருமணம் செய்து கொண்டார். இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. அதை மீறி அவர்கள் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்குச் சரத் மற்றும் அனுராதா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அனந்தமூர்த்தியின் மகன் விவேக் ஷன்பேக் (சரத்) ஒரு முக்கிய எழுத்தாளர்.
அனந்தமூர்த்தியின் படைப்புகள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு பல இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. திரைப்படமாகவும் உருவாக்கபட்டுள்ளன.

சம்ஸ்காரா நாவலை வாசிக்கும் கிராமப்புறத்திலுள்ள கன்னட வாசகன் அது மாத்வா பிராமணர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது என்று உணருகிறான். அதே நாவலை வாசிக்கும் பெங்களூர்வாசி அது பிராமணர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது என நினைக்கிறான். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வாசிக்கப்படும் போது அது இந்து சமயத்தின் மீது வைக்கபடும் விமர்சனமாகக் கருதப்படுகிறது. அதே நாவல் சர்வதேச அளவில் வாசிக்கப்படும் போது இந்தியாவின் மரபை, ஞானத்தைக் கேள்விகேட்கும் நாவலாக வாசிக்கபடுகிறது. ஒரே நாவல் தான் ஆனால் அதன் தளம் மாறியதும் அந்த நாவலின் மீதான பார்வைகளும் கோணங்களும் மாறிவிடுகின்றன. இதைப்பற்றி நாம் கவனம் கொள்ள வேண்டும். நமது இலக்கியங்களின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் முற்றாக உணரவில்லை அதை ஆழ்ந்து கற்று உணர வேண்டும் என்கிறார் அனந்தமூர்த்தி
சம்ஸ்காரா நாவல் படமாக வந்த போதும் நிறைய விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் தேசிய விருது பெற்றதுடன் பல்வேறு சர்வதேச திரைப்படவிழாக்களிலும் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது
சமூக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் வைதீகமான பிராமணக் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்கின்றன அனந்தமூர்த்தியின் படைப்புகள். சாதியக்கட்டுபாடுகளை கடுமையான விமர்சனம் செய்கிறார் அனந்தமூர்த்தி.
இந்த ஆவணப்படத்தில் வயதான அனந்தமூர்த்தி நடக்கவே சிரமப்படுகிறார். அவரது குரலில் உள்ள உற்சாகம் உடலில் இல்லை. முதுமையின் தளர்வை நிறையவே காணமுடிகிறது.
நான் யு, ஆர் அனந்தமூர்த்தியை இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். இரண்டும் இலக்கியக் கருத்தரங்குகள். ஒன்று டெல்லியில் நடந்த்து. மற்றது கொச்சியில். டெல்லியில் நடந்த விழாவில் அனந்தமூர்த்தியின் உரை மிகச் செறிவாக இருந்தது. இந்தியப் பண்பாட்டில் எப்படிப் பல்வேறுவகையான மரபுகள் இருக்கின்றன இந்தியத் தொன்மங்கள் எப்படி உருவாகின்றன என்பது பற்றி விரிவாகப் பேசினார். இந்தியர்கள் ஒரே நேரத்தில் வேறுவேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னது இன்றும் நினைவில் பசுமையாக உள்ளது

இந்த ஆவணப்படத்திலும் மரபை, வைதீகத்தை, அதன் எதிர்நிலையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அனந்தமூர்த்திப் பேசியிருக்கிறார்.
இசைகேட்பதில் தன்னை மறந்து அனந்தமூர்த்தி லயிக்கும் காட்சியும், அவரது மனைவி எஸ்தரின் நேர்காணலும், அவரது பசுமையான ஊரும் மறக்கமுடியாதவை.
யு. ஆர். அனந்தமூர்த்தி தன்னை நவீனத்துவத்தின் பிரதிநிதி என்றே எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். அது சரியானதே என்பதை இந்தப்படம் தெளிவாகப் புரியவைக்கிறது
•••
August 3, 2021
முன்செல்லும் பறவை
இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவரான ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை மற்றும் தத்துவங்கள் குறித்து The Seer Who Walks Alone என ஆவணப்படம் ஒன்றை இயக்குநர்: ஜி.அரவிந்தன் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் ஜேகே உருவான விதம், மற்றும் அவரது சொற்பொழிவுகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. 1985 ஆண்டுத் தயாரிக்கப்பட்ட இப்படம் 50 நிமிஷங்கள் ஓடக்கூடியது.

சென்னையில் ஜே.கிருஷ்ணமூர்த்திப் பேசுவதைக் கேட்கத் திரளும் விதவிதமான ஆட்களையும் தரையில் அமர்ந்து உரையை ஆழ்ந்து கேட்கும் அவர்களின் ஈடுபாட்டினையும் காணும் போது வியப்பாக இருக்கிறது. புத்தர் நம் காலத்திலிருந்தால் இப்படித்தான் உரையாற்றியிருப்பார் என்று ஹக்ஸ்லி சொல்கிறார். பேச்சின் வழியே மக்களைச் சிந்திக்க வைப்பது எளிதானதில்லை. அதுவும் வாழ்க்கையின் ஆதாரமான, அரூபமான விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்வது அதை அசலாக, தெளிவாக முன்வைப்பது. எதிர்க்கருத்துகளை அனுமதித்து அதனுடன் வாதம் செய்வது என ஜே.கிருஷ்ணமூர்த்திப் பேச்சின் வழியே அதியசங்களை நிகழ்த்தியிருக்கிறார்.

எனது கல்லூரி நாட்களில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைத் தீவிரமாகப் படித்திருக்கிறேன். இன்றும் அவரைப் படிப்பது பிடிக்கும். அவரது எழுத்தில் காணப்படும் எளிமை, தெளிவு. ஞானம் நிகரற்றது. எண்பதுகளில் ஜேகேயை படித்து விவாதிக்கும் இளைஞர்கள் நிறைய இருந்தார்கள். ஜேகேயின் கருத்துகளை உள்வாங்கி ஆழமாக விவாதிப்பார்கள். இன்றோ தத்துவ ஈடுபாடு கொண்டவர்களைக் காணுவது அரிதாகிவிட்டது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைகளைக் கேட்கும் போது மெய் மறந்துவிடுகிறோம். அவரது பேச்சு ஒரு அலையைப் போல நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. நிறைய நேரங்களில் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதும் போலிருக்கிறது.
இளமையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தோற்றம் ஒரு இளவரசனைப் போலிருக்கிறது. மிக அழகான மனிதர். விவரிக்கமுடியாத ஈர்ப்பு அவரது முகத்திலிருக்கிறது. ஆழ்ந்து நோக்கும் கண்கள், புன்னகை படிந்த முகம். அழகான கேசம். பேசும்போது அவரது கைகள் லயத்துடன் அசைகின்றன. தடையில்லாத பேச்சு, ஏதோ எழுதி முடித்து வைத்த விஷயத்தைச் சொல்வது போலிருக்கிறது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல யோசிப்பதில்லை. கேட்பவரை நோக்கியே கேள்வியைத் திருப்பி விடுகிறார் கிருஷ்ணமூர்த்தி. அதுவே அவரது பலம். ஆவணப்படத்தில் கல்வி, மரணம் மற்றும் வாழ்க்கை பற்றிய அவரது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்

இந்த ஆவணப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஜே.கிருஷ்ணமூர்த்தி நீண்ட தூரம் நடந்து சென்று அந்திச் சூரியனை ரசிப்பது. இதற்காகவே திறந்த வெளியில் ஒரு இருக்கை அமைத்திருக்கிறார்கள். அங்கே அமர்ந்தபடி சூரியன் மறைவதை துளித்துளியாக ரசிக்கிறார். அப்படி என்ன சூரியனிடம் காணுகிறார் என்று கேட்கிறார்கள். தெரியவில்லை என்று புன்முறுவலுடன் பதில் சொல்கிறார். அவர் மட்டுமின்றி அவரது பள்ளி மாணவர்களும் ஒன்றுகூடி அஸ்தமனத்தை ரசிக்கிறார்.
கடற்கரையில் சூரிய அஸ்தமனம் காண்பது பேரனுபவம். நான் ஒரு முறை பாலைவனத்தின் நடுவே கண்டிருக்கிறேன். பரவசத்தில் கைகள் நடுங்கியது. ஜே.கிருஷ்ணமூர்த்தி நடப்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர். நடைக்குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதிலும் அவர் மிக வேகமாக நடக்கிறார். பாலத்தைக் கடந்து வரும் காட்சி மனதில் உறைந்து போய்விட்டது
உலகை மீட்க வந்த இரட்சகர் என்ற பெரும் பொறுப்பைத் துறந்த ஜேகே எந்த அடையாளங்களும் பதவிகளும் அதிகாரச்சுமைகளும் இல்லாமல் இருப்பதே சரியானது என எண்ணினார். அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவரை ஒரு ஆசிரியராக மட்டுமே சொல்லிக் கொள்கிறார்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் நித்யாவை அன்னி பெசன்ட் தத்து எடுத்து அமெரிக்கா அழைத்துப் போய்ப் படிக்க வைத்தார். வளர்ந்து பெரியவனாக மாறி அன்னி பெசன்ட் கனவுகளிலிருந்து விலகி தனக்கான உலகை, பாதையை ஜேகே உருவாக்கிக் கண்டார். அவர் தனது கடந்தகாலத்தை முற்றிலும் மறந்துபோனார். பெற்றோரைப் பிரிந்த ஏக்கம் அவரிடம் வெளிப்படவேயில்லை. ஒரேயொரு முறை நோயுற்ற நாளில் தெலுங்கில் ஏதோ புலம்பியதாகப் படித்திருக்கிறேன். மற்றபடி அவர் மனதில் அவரது வீடு. அப்பா அம்மா, சொந்த ஊர் மொழி எது குறித்தும் ஏக்கமில்லை. அப்படி எவ்வாறு இருக்க முடிந்தது என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன். கடந்தகாலத்தின் நிழல் இல்லாமல் ஒருவரால் வாழ முடியுமா.
ஜே.கிருஷ்ணமூர்த்தி மனிதனின் அகத்தை ஆராய்கிறார். அவனது செயல்களின் அடிப்படைக் காரணங்களை ஆராய்கிறார். சந்தோஷம். துயரம். வாழ்க்கை, மரணம், வெற்றி தோல்வி, அன்பு வெறுப்பு என்ற எதிர்நிலைகளைக் கேள்விகேட்கிறார். ஒரு நுண்ணோக்கி வழியாக ரத்தத்துளிகளை ஆராய்வது போல நமது எண்ணங்களை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார்.
அவராகத் தீர்வு தருவதில்லை. மாறாக அதை நோக்கி நம்மைக் கொண்டு செல்கிறார். யோசிக்க வைக்கிறார். முன்சொல்லும் பறவை போல வழிகாட்டுகிறார். நாம் தான் இணைந்து பறக்க வேண்டும்
முதுமையில் அவரது தோற்றத்தில் வெளிப்படும் கனிவும் வசீகரமும் அசாதாரணமானது.
ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி அமைப்பினர் நடத்திய புத்தகக்கடைக்குச் சென்று ஒரு நண்பர் தன் வீட்டில் வைத்துக் கொள்ள ஜேகேயின் புகைப்படம் வேண்டும் என்று கேட்டதற்கு அப்படிப் புகைப்படம் வைத்து அவரை வழிபடக்கூடாது. அது அவரது சிந்தனைக்கு எதிரானது என்று தர மறுத்து விட்டார்கள் என நண்பர் ஆதங்கமாகச் சொன்னார். அவர்கள் செய்தது சரியே.. ஜேகே தன்னை ஒரு பிம்பமாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்றேன்.
இந்த ஆவணப்படத்திலும் அவரை ஒரு பிம்பமாக்க அரவிந்தன் முயலவில்லை.
நீண்ட தூர நடையின் பின்பு சிறிய கதவு ஒன்றைத் திறந்து ஜேகே உள்ளே செல்லும் காட்சி ஒன்று இப்படத்திலிருக்கிறது. அது அவரது வாழ்க்கையின் குறியீடு போலவே இருக்கிறது.
அரவிந்தன் மிகச்சிறப்பாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனை ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஷாஜி. பிலிம் டிவிசன் இதை உருவாக்கியுள்ளது..
August 1, 2021
குறுங்கதைகள் விமர்சனம்
பொன் மாரியப்பன். தூத்துக்குடி.
காலச்சுவடு 2021 ஆகஸ்ட் மாத இதழ் வாங்கினேன். 21 குறுங்கதைகளில் தங்களின் 3 குறுங்கதைகள் படித்தேன். மூன்றும் வாசிப்பில் இனிமையும் மாற்றத்தையும் உருவாக்கியது. இது போன்ற குறுங்கதைகள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பேன்.
பதினேழாவது ஆள்
பழைய நிழற்படத்தைக் கொண்டு வாசிக்கும் எல்லோருடைய மனதிலும் பதினேழாவது ஆள் தோன்றி மறைகிறான்.அது தான் மனசாட்சி.
அந்த நிழற்படத்தின் பதினேழாவது தான் என்னை எழுத வைக்கிறது.ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் குரூப் போட்டோ தூசி தட்டப்படும். நினைவுகள் திரும்பத் திரும்ப ஒளித்திட வேண்டுமெனில் குரூப் போட்டோவைத் தேட வைக்கிறது.

பஷீரின் திருடன்
ஒரு கதையில் முக்கிய கதாபாத்திரமாக வேண்டும் என்றால் ஸ்பெஷலாக ஏதாவது விசயம் இருக்க வேண்டும் என்கிறார் பஷீர். இந்த கதையில் பஷீர் வருவது ஸ்பெஷலான விஷயமே. .பஷீர் பற்றி சிறப்பாகவே எழுதி இருக்கிறார் எஸ்ரா. மனிதர்களின் மனம் தினந்தினம் ஸ்பெஷலைத்தான் விரும்புகிறது. முத்தத்தைத் திருடி வர முடியுமா என்று கேட்கிறார் பஷீர். முடியாது என்றான் திருடன். பின்பு ஒரு பெண்ணின் கனவைத் திருடி வர முடியுமா? என்று பஷீர் திருடனிடம் கேட்கிறார். அதையும் திருடன் முடியாது என்றான். ஸ்ரீதரனின் மனைவி அப்சராவின் கன்னங்கள் மாம்பழம் போல இருக்கும் என்கிறார். கனவு என்பது தூக்கத்தில் அல்ல, விழித்திருக்கும் போது அல்ல வருணிப்பதும் கனவுதான். வருணிப்பதும் திருடப்பட்ட கனவு தான். கடைசியாகக் கோழி திருடும் பெண்ணின் மூக்குத்தியைத் திருட முடியுமா? எனக்கேட்கிறார். இதற்கு மட்டும் திருடன் சம்மதிக்கிறான். கடைசியில் காதலித்து நாராயணியையே திருடி விட்டான். காதலின் திருட்டினைக் கதை உணர்த்துகிறது.
வாளும் மலரும்
கவிதைகள் ஆட்சி செய்யுமா? என்றால் செய்யும் என்கிறது இந்த குறுங்கதை வாளும் மலரும் கதையில் வரும் சீன அரசன் போரை விரும்புவதில்லை. அவன் சந்திக்கும் பெண் கவிஞரோ தனது கவிதையின் மூலம் வாளை மலராக்கிவிடுகிறார். இந்த அதிசயம் தான் கதையின் சிறப்பு.
கவிதைகள் ஆயுதத்தைக் கூட மலராக மாற்றக் கூடியது அதையே கதையிலும் காணுகிறோம்.. ஒவ்வொருவரும் கவிதை எனும் மலர்களைப் பரிமாறிக்கொண்டால் அங்கு உயிர்ப்பலி இராது. வாளை ஒரு மலராக மாற்றியது பிடித்திருந்தது. இது போன்ற குறுங்கதைகளின் வழியே மனதை மேம்படுத்தும் தங்கள் பணி மேலும் தொடரட்டும்
•
July 31, 2021
அப்பாவின் கதைகள்
ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே.
– அலெக்சாந்தர் ரஸ்கின்
அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற சிறார் நூலை நா.முகம்மது செரீபு மொழியாக்கம் செய்திருக்கிறார். சுவாரஸ்யமான சிறார் நூல்.

தனது தந்தையின் பால்ய நினைவுகளைக் கேட்பதில் பிள்ளைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதுவும் பள்ளி நினைவுகளை விவரிக்க துவங்கினால் இப்படி எல்லாம் நடந்ததா என்று வியப்படைவார்கள்.
தந்தையோ, தாயோ தான் படித்த பள்ளிக்குப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் காட்ட வேண்டும். தனது பால்ய நண்பர்களைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டும். அவர்கள் உருவானவிதம் பற்றி பிள்ளைகள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த நூலில் ரஸ்கின் தனது சிறுவயது நினைவுகளைச் சுவைபட விவரித்திருக்கிறார்.

தன் மகள் சாஷா சிறுமியாக இருந்த போது அவளுக்கு அடிக்கடி ஜலதோஷம் தொண்டைவலி. காதுவலி என ஏதாவது ஒரு தொல்லை ஏற்பட்டு அவதிப்படுவாள். அதுவும் காதுவலி வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். படுக்கையில் உறங்கமுடியாமல் தவிப்பாள். அது போன்ற நேரத்தில் அவளைச் சாந்தப்படுத்த அவளுக்குச் சொல்லிய கதைகளே இந்த நூல் என்கிறார் ரஸ்கின்.
இப்போது சாஷா வளர்ந்து பெரியவளாகி விட்டாள். அவளே நான் சிறுமியாக இருந்த போது என்று கடந்த காலத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள்.
சிறுவயதில் அவள் கதை கேட்க விரும்பினால் காது வலிக்கிறது என்று பொய்யாக நடிப்பாள். அந்த ஆசையின் பொருட்டு தான் சொல்லிய கதைகள் தன் வாழ்வில் உண்மையாக நடந்தவை. எல்லா தந்தைகளும் இது போல கதைகள் கொண்டவர்கள் தான் என்கிறார் ரஸ்கின்
ஆனால் பெற்றோர்கள் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும் கிடைக்காமல் போன விஷயங்களையும் திரும்பத் திரும்ப பிள்ளைகளிடம் சொல்லும் போது அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். விலகி ஒடுகிறார்கள்
எனது நண்பர் தான் பள்ளிக்கு ஐந்து மைல் நடந்து போய் வந்த கதையை மகளிடம் பலமுறை சொல்லி சொல்லிச் சலித்துப் போக வைத்துவிட்டார். அவர் பேச முயன்றாலே மகள் உன் புராணத்தை ஆரம்பிச்சிட்டயா என்று காதைப் பொத்திக் கொண்டுவிடுவார். இப்படி பிள்ளைகளை வதைக்க கூடாது.
ஆனால் மறக்கமுடியாத நினைவுகளை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்தால் அது அவர்கள் மனதில் ஆழமான பதிந்து போய்விடும். பெரும்பான்மை பெற்றவர்கள் தனது பால்யவயதின் ஏக்கங்களைப் பிள்ளைகளின் வழியே தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அது நிறைவேறாத போது ஏமாற்றம் அடைகிறார்கள்.
ரஷ்ய எழுத்தாளரான அலெக்சாண்டர் ரஸ்கின் பெலாரஸில் பிறந்தவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய இவர் மாஸ்கோவில் வசித்துவந்தார். தனது கவிதைகள் மற்றும் கதைகளின் மூலம் ரஷ்ய இலக்கியத்தில் தனியிடம் பிடித்தவர் ரஸ்கின். When Daddy was a little boy இவரது புகழ்பெற்ற புத்தகம். இருபது மொழிகளில் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த கதைகள் யாவும் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளே. அதை சுவாரஸ்யமாக சொல்லிய விதம் பாராட்டிற்குரியது.
தனது அழகான வண்ணப்பந்து ஒன்றை அது மோதி வெடிக்கிறதா இல்லையா என பரிசோதிக்க ஒடும் காருக்குள் உருட்டிவிட்டுப் பார்க்கிறான் சிறுவன். முடிவில் பந்து வெடித்துவிடுகிறது என ரஸ்கினின் வேடிக்கையான அனுபவத்துடன் இந்த நூல் துவங்குகிறது. ஒவ்வொரு அனுபவமும் இரண்டோ மூன்றோ பக்கங்கள். அதற்குள் மறக்க முடியாத நிகழ்வுகளை ரஸ்கின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சர்க்கஸ் பார்க்கச் சென்ற ரஸ்கின் வீடு திரும்பித் தனது நாயை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் போலப் பழக்க முயன்றது நகைச்சுவையான அனுபவம். சிறுவயதில் அவருக்குப் புத்தகம் படிப்பதில் இருந்த ஆர்வம். அவர் படித்த புத்தகங்கள் பற்றி விவரிக்கிறார். இந்த ஆர்வத்தால் தானே பாடல்களைப் புனைந்து பாடும் திறமையை உருவாக்கிக் கொள்கிறார். தான் புனைந்த முதல்பாடல் எப்படியிருந்தது என்பதையும் ரஸ்கின் குறிப்பிடுகிறார்

பெரியவன் ஆனதும் என்ன ஆகப்போகிறாய் என்ற கேள்வியைச் சந்திக்காத குழந்தைகளே இந்த உலகில் கிடையாது. பள்ளியில் இந்தக் கேள்வியை கேட்டதும் பலரும் டாக்டர், கலெக்டர் என்று சொல்வார்கள். அவர்களில் எத்தனை பேர் டாக்டர் அல்லது கலெக்டர் ஆனார்கள் என்பது கேள்விகுறி. இந்தக் கேள்வியை தந்தையும் எதிர்கொள்கிறார். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் ஒரு பதில் சொல்லுகிறார். அதில் ஒருமுறை தான் ஒரு நாயாக மாற விரும்புவதாகச் சொல்கிறார். விநோதமான ஆசையில்லையா.

ஜெர்மன் படிக்க முயன்று தோற்றுப்போனது, பள்ளிக்குத் தாமதமாகப் போனது, வீட்டில் சினிமா பார்க்க கூடாது என்று தடுத்தபோது செய்த குறும்பு. ஒவியம் வரைய ஆசைப்பட்டது, காய்ச்சல் வந்து மருத்துவரைப் பார்க்க போய் பயத்தில் அவரைக் கடித்து வைத்தது என சுவாரஸ்யமான நினைவுகளை ரஸ்கின் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தக் கதைகளைப் பெற்றோர்கள் வாசித்து பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டும் வெறும் கதையைச் சொல்லாமல் ரஸ்கின் போலத் தனது பள்ளிவயது அனுபவங்களை இணைத்துச் சொல்ல வேண்டும். அது வாசிப்பை மேம்படுத்துவதுடன் அப்பா, அம்மாவைப் புரிந்து கொள்ளச் செய்யும்
இந்தக் கதையில் ரஸ்கின் சித்தரிக்கும் வாழ்க்கை இன்றில்லை. ஆனால் அந்த குறும்புதனங்கள், ஆசைகள். ஏமாற்றம், சந்தோஷம் அப்படியே சிறார்களிடம் இன்றுமிருக்கிறது. அது தான் இந்தக் கதையை நெருக்கமாக்குகிறது. இந்த கதைகளுக்கு வரையப்பட்டுள்ள ஒவியங்கள் யாவும் மிக அழகானவை. அதில் காணும் அப்பாவின் கண்ணாடி அணிந்த சித்திரமே கதை சொல்லத் துவங்கி விடுகிறது.
••
காலச்சுவடு இதழில்
இம்மாத காலச்சுவடு இதழில் எனது மூன்று குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கதை வைக்கம் முகமது பஷீரைப் பற்றியது. குறுங்கதைகளின் சிறப்பிதழாக காலச்சுவடு வெளியாகியுள்ளது.

கிருஷ்ணையா
ரஷ்ய இலக்கியங்களைத் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம். . நா. தர்மராஜன், ரகுநாதன் டி.எஸ்.சொக்கலிங்கம், பாஸ்கரன் ஆகியோரின் பணியும் பங்களிப்பும் மகத்தானது. அவற்றைப் படித்து உருவானவன் என்ற முறையில் அவர்கள் மீது பெருமதிப்பும் அன்பும் உண்டு.
இவர்களில் நா.தர்மராஜன் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஆனால் பூ.சோமசுந்தரம், கிருஷ்ணையா இருவரது பெயர்கள் மட்டுமே அறிமுகம். ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களில் அவர்களைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இடம்பெற்றிருக்காது. அவர்களின் புகைப்படத்தைக் கூட நான் கண்டதில்லை. இதில் கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம் நா. தர்மராஜன் ஆகியோர் மாஸ்கோவிற்குச் சென்று அங்கேயே தங்கி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.
எப்போது இவர்கள் ரஷ்ய மொழி கற்றுக் கொண்டார்கள்.. இவர்களின் ரஷ்ய வாழ்க்கை எப்படியிருந்தது, எப்படி மூலத்தோடு மொழிபெயர்ப்பினை ஒப்பிட்டு சரிசெய்தார்கள் என்பதைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடியவில்லை
தற்செயலாக இணையத்தில் இன்று ரா.கிருஷ்ணையா பற்றி எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி எழுதிய பதிவு ஒன்றை வாசித்தேன். அதில் கிருஷ்ணையாவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. வெண்ணிற இரவுகளை மொழியாக்கம் செய்த அந்த மனிதரை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவரது வெண்ணிற இரவுகள், புத்துயிர்ப்பு . கண் தெரியாத இசைஞன், ஆன்டன் செகாவ் சிறுகதைகள் மொழிபெயர்ப்புகளுக்கு இணையே கிடையாது. அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்ட போது வியப்பு மேலோங்கியது. தமிழ் சமூகம் மறந்து போன சிறந்த மொழிபெயர்ப்பாளரை ஆவணப்படுத்திய எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி மிகுந்த பாராட்டிற்குரியவர்.
•••
ரா.கிருஷ்ணையா

மொழிபெயர்ப்பு என்றாலே எனக்கு எப்போதும் மனதளவில் மிக நெருக்கமாக சிறு வயது முதலே நினைவில் தங்கியிருப்பவை ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்களும் சிறுகதைகளும்தான். அத்துடன் சிவப்புப் புத்தகங்கங்கள் என பரவலாக அறியப்பட்ட மார்க்ஸிய நூல்களும்.
ஆன்டன் செகாவ், மக்ஸிம் கார்க்கி, லேவ் தல்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, அலெக்சாண்டர் புஷ்கின், லெர்மந்த்தோவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ்….. இந்தப் பெயர்களைப் படிக்கும்போதும் எழுதும்போதும் மனம் புல்லரிக்கிறது. இவர்களின் ஆத்மார்த்தமான எழுத்துகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தவர்கள் மொழிபெயர்ப்பாளர்களே….
ரா.கிருஷ்ணையா, ரகுநாதன், டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், பூ.சோமசுந்தரம் என பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும். இதில் ரா.கிருஷ்ணையாவின் மொழிபெயர்ப்பு மனதுக்கு மிக நெருக்கமானதாக உணர வைக்கக் கூடியது. ‘புத்துயிர்ப்பு’ , ’வெண்ணிற இரவுகள்’ இரண்டுமே உணர்வுபூர்வமானவையும் கூட. இவை இரண்டையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர் ரா. கிருஷ்ணையா… மிக மென்மையான எழுத்தைப் போலவே அவரும் மிக மிக மென்மையானவர்தான். என்னைக் கவர்ந்த அவரைப் பற்றி மட்டுமே இன்று எழுதிவிட வேண்டுமென்று தோன்றியது.

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் 26.2.1923ல் பிறந்தவர் கிருஷ்ணையா. பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமம் அவர் பிறந்த ஊர். இவர் பிறந்தபோதே தாயார் ராஜாமணி இந்த உலகை விட்டு நீங்கவே, தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் தாயன்பு என்னவென்று தெரியாமலே வளர்ந்தவர். தந்தையார் ராமதாஸ் திருவாரூரில் வழக்கறிஞர் என்பதால் ஓரளவு வசதியான குடும்பச்சூழல். தன் ஒரே மகனைக் கண்ணும் கருத்துமாகவே அவர் வளர்த்தார்.
கிருஷ்ணையாவின் பள்ளிப் பருவம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் கழிந்தது. கல்லூரிக் காலம் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்… கல்லூரிக் காலத்தில் அரசியல் அறிமுகமானது. அவருடைய உறவினர்களான சுப்பையா, மஅயவரம் சி. நடராஜன் போன்றோர் ஈ.வெ.ரா.பெரியாரிடம் நெருக்கமாக இருந்தவர்கள். அவர்கள் இருவரும் கிருஷ்ணையாவை பெரியார் கொள்கைகள் வசம் இழுத்துச் சென்றார்கள்.
மேற்கொண்டு இளங்கலை பட்டப் படிப்பு சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் முதுகலை பொருளாதாரம் பச்சையப்பன் கல்லூரியிலும் என தொடர்ந்தது. பின்னர் சட்டக் கல்லூரியில் நிலைத்தது. இயல்பாகவே மாணவர் இயக்கங்களில் பங்கு பெற்றதன் வழியாக கம்யூனிசக் கொள்கைகளின் பால் கவர்ந்திழுக்கப்பட்டார். சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் 1946ல் சுதந்திரத்துக்கு முன்பாகவே எழுத்து அவர் வசமானது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் அரசியல் கட்டுரைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியதுடன், அவற்றை சொந்தமாகப் பிரசுரிக்கவும் ஆரம்பித்தார்.
நாடு விடுதலை பெற்ற பின், 1947 – 48 காலகட்டத்தில் ராகவன், ரெட்டி போன்ற வழக்குரைஞர்களிடம் ஜூனியராகப் பணியாற்றினார். ஆனால், அவர் வழக்குரைஞராகப் பணியாற்றியதை விட எழுத்துப் பணிகளில் ஈடுபட்டதும் தன்னை அதில் கரைத்துக் கொண்டதுமே அதிகம்.

1951 – 52 காலகட்டத்தில் தோழர் விஜய பாஸ்கரனுடன் இணைந்து ’விடிவெள்ளி’ என்னும் வார இதழை கம்யூனிசக் கொள்கைப் பிரச்சார பத்திரிகையாக நடத்தினார். 1953 – 54 காலகட்டத்தில் தோழர்கள் ஆளவந்தார், ஆர்.கே.கண்ணன் போன்றோருடன் இணைந்து ‘ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டார். இந்த நேரத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக இருந்தார் என்பது சொல்லாமலே விளங்கும். சென்னை மாகாணக் கட்சி கமிட்டியிலும் அவர் உறுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டிருந்த காலத்தில், தலைமறைவாய் இருந்த தலைவர்களுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் கூரியராக கிருஷ்ணையா மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
1954 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனிலிருந்து வெளியான Soviet Land இதழை ‘சோவியத் நாடு’ என்னும் பெயரில் தமிழில் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. அதில் பணிபுரிய அழைப்பு வந்ததை ஏற்று, கிருஷ்ணையா 9 ஆண்டுகள் டெல்லியில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். 1963 க்குப் பின் சோவியத் நாடு அலுவலகம் சென்னையில் இயங்கத் தொடங்கிய பின், சென்னையில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
அதன் பின்னர் அடுத்தக்கட்டப் பாய்ச்சலாக சோவியத் நாட்டில் இயங்கி வந்த முன்னேற்றப் பதிப்பகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிய வேண்டி வந்த அழைப்பினை ஏற்று மாஸ்கோ சென்றார். 1968 முதல் 1978 வரையிலான பத்தாண்டு காலம் என்பது கிருஷ்ணையாவுக்கு மட்டுமல்ல, இலக்கிய ஆர்வலர்களுக்கும் கூட மொழி பெயர்ப்பின் பொற்காலம் எனச் சொல்லலாம். அந்தக் காலத்தில்தான் ருஷ்ய மொழியிலும் நன்கு புலமையும் தேர்ச்சியும் பெற்றார். ருஷ்ய இலக்கியங்களை மூல மொழியிலிருந்து பெயர்க்கும் வாய்ப்பினை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான் அவருடைய மொழிபெயர்ப்பு மனதுக்கு மிக நெருக்கமானதாக அமைந்தது. இலக்கியங்களோடு மட்டும் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டவரல்ல அவர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களையும் பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் தமிழுக்குக் கொணர்ந்ததில் பெரும் பங்கு அவருக்கு இருந்தது.
சோவியத் நாடு, ரஷ்யா, அங்கு அவர் ஆற்றி வந்த பணி அனைத்துமே மனதுக்கு நெருக்கமானதாய் இருந்தபோதும், அவர் தாய் நாட்டுக்குத் திரும்பி வர வேண்டும் என்பதை விரும்பினார். அவர் பணியாற்றிய முன்னேற்றப் பதிப்பகத்தார் அவரை மேலும் சில ஆண்டுகள் பணியாற்றும்படி வற்புறுத்தியபோதும் பிடிவாதமாக அதை மறுத்து சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய மொழிபெயர்ப்புத் திறன் மற்றும் தமிழ் மொழி ஆளுமை இரண்டும் கலந்த அனுபவத்தின் வாயிலாக ஆங்கிலம் – தமிழ் அகராதி ஒன்றினை உருவாக்கும் பணியில் முழு மூச்சாக இறங்கினார். இந்த நேரத்தில் காச நோய் அவரைப் பீடித்தது. இருப்பினும் அகராதிப் பணியையும் இடைவிடாமல் செய்து வந்தார். A முதல் I வரை நிறைவு செய்திருந்தார்.

அந்த நேரத்தில், தியாகுவின் மொழிபெயர்ப்பில் மார்க்ஸின் ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு பணி நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தலைமைப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பாக்கம் செய்யும் பணியில் கிருஷ்ணையா ஈடுபட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் அவரை அழைத்தன. நோயுற்றிருந்த நிலையிலும் இப்பணியை முதன்மையாக ஏற்று ஐந்தாண்டு காலம் மூலதனம் மொழிபெயர்ப்பின் பதிப்புப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1992ல் மூலதனம் பதிப்புப் பணி முடிந்தது. அதன் பின்னர், அவர் வேறு எந்தப் பணியையும் ஏற்கவில்லை. அவரது உடல் நிலையும் சீர் கெடத் தொடங்கியது. தீவிரமான காசநோயின் பாதிப்பால், மாரடைப்பு ஏற்பட்டு 23.03.1996 அன்று பகத்சிங் நினைவு நாளில் கிருஷ்ணையாவின் உயிர் பிரிந்தது.
தன் வாழ்நாள் முழுவதையும் அவர் தான் நம்பிய மார்க்ஸியம் சார்ந்தே வாழ்ந்தார்; மறைந்தார். அவரது மொழியாக்கப் பணிகள் வழியாக நினைவுகூரப்படுகிறார்.
தோழர் ரா.கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் வெளியான நூல்கள்:
——————————————————————-
1.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை – மார்க்ஸ் – எங்கெல்ஸ்
2. என் நினைவுகளில் லெனின் – கிளாரா ஜெட்கின்
3. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீட்
4. தீச்சுடர்கள் (குழந்தைகளுக்கு லெனின் வாழ்க்கைச்
சித்திரங்கள்)
5. கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் – எங்கெல்ஸ்
6. புத்துயிர்ப்பு – லேவ் தல்ஸ்தோய்
7. வெண்ணிற இரவுகள் – தாஸ்தாயேவ்ஸ்கி
8. அந்தோன் செகாவ் – சிறுகதைகளும் குறுநாவல்களும்
9. கலையும் சமுதாய வாழ்க்கையும் – பிளெஹானவ்
10. நவரத்தினமலை – சோவியத் நாட்டுக் கதைகள்)
11. கண் தெரியாத இசைஞன் – வி.கொரெலென்கோ
12. தொழிலாளர் குடும்பம் – வி.கோத்செத்தேவ்
13. மருமகன் – வி.தெந்திரியாக்கோவ்
14. புவியகத்தின் புரியாப் புதிர்கள் – அ.மலாஹவ்
15. நமக்குள்ளிருக்கும் சைபர் நெத்தியம் – யெலெனா சபரினா
16. விளையாட்டுக் கணிதம் – யா.பெரெல்மான்
17. குல்சாரி – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
18. மூலதனம் – மார்க்ஸ் (பதிப்பாசிரியர்) – ரா.கிருஷ்ணையா
நன்றி: எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி முகநூல் பதிவிலிருந்து
நன்றி
எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி
bookday.in
கன்னடத்தில்
எனது இந்தியா கன்னடத்தில் தொடராக வெளியாகிறது. அவதி இணைய இதழில் இந்தத் தொடர் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே. நல்லதம்பி. கன்னடத்திலிருந்து தமிழுக்கு சிறந்த நூல்களை மொழியாக்கம் செய்திருப்பவர். இது போலவே தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். அவருக்கு என் அன்பும் நன்றிகளும்.

இணைப்பு
ಕೆ ನಲ್ಲತಂಬಿ ಅನುವಾದ ಸರಣಿ- ನರಿ ಬೇಟೆ

July 30, 2021
சிறிய உண்மைகள் 3 நட்சத்திரத்தின் நிழல்
தொலைவிலிருந்து பார்க்கும் போது தான் நட்சத்திரங்கள் அழகாக தெரிகின்றன. அவை தரையிறங்கி வந்துவிட்டால் அதன் மதிப்பு போய்விடும். நட்சத்திரத்திற்கும் நமக்குமான இடைவெளி தான் அதன் அழகை வியக்க வைக்கிறது.
சத்யஜித்ரேயின் நாயக் திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் அரிந்தம் முகர்ஜி (உத்தம்குமார்) டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வாங்குவதற்காக கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்கிறார்.

அந்த ரயில் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள். மற்றும் அரிந்தம் முகர்ஜியின் கடந்தகால நினைவுகளின் வழியே சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார் சத்யஜித்ரே.
இப்படத்தில் இடம்பெற்ற இரண்டு விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஒன்று நிகரற்ற பெயரும் புகழும் பணமும் இருந்த போதும் அரிந்தமிற்கு உறக்கம் வருவதில்லை. அவர் தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு தான் உறங்குகிறார்.
இவரைப் போலத் திரையுலகில் புகழ்பெற்ற சிலர் உறக்கமில்லாமல் அவதிப்படுவதை நான் அறிவேன். எவ்வளவு குடித்தாலும் அவர்களால் உறங்க முடியாது. தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு அரைமணி நேரமோ ஒரு மணிநேரமோ தூங்கமுடியும். பிறகு பின்னிரவில் விழித்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடுவார்கள். அதுவும் வெளியூர் படப்பிடிப்பாக இருந்தால் விடுதியின் வராந்தாவில் நடந்து கொண்டேயிருப்பார்கள். சிலர் இதற்காகக் காரை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் போய்வருவதுண்டு. போதுமான உறக்கமின்றித் தொடர்ந்து இருப்பதால் சிடுசிடுப்பும் கோபமும் அதிகமாகி திடீரென வன்முறையில் இறங்கி விடுவார்கள்.

அரிந்தம் ரயில் பயணத்தில் குடிக்கிறார். துர்கனவிலிருந்து எழுந்து கொள்கிறார். போதையில் அவர் தன்னிஷ்டம் போல நடந்து கொள்கிறார். உத்தரவு போடுகிறார். இந்தத் தத்தளிப்பு அழகாகப் படத்தில் இடம் பெற்றிருக்கிறது
அரிந்தம் முகர்ஜியின் இன்னொரு பிரச்சனை கடந்த கால நினைவுகள். அதுவும் நாடகமேடையிலிருந்து சினிமாவிற்குச் செல்வதை அவரது குரு சங்கர்தா அனுமதிக்காத போது அவர் சினிமாவில் கிடைக்கும் பணம் மற்றும் புகழுக்காக நாடகமேடையை விட்டு விலகி வருகிறார். அந்தக் குற்றவுணர்வு அவரை வதைக்கிறது.
அந்தக் கனவை ரே மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார். சர்ரியலிசக் காட்சியது. பணக்குவியலில் சிக்கிப் புதைந்து போகிறான் அரிந்தம். தன்னை மீட்கும்படி குருவைக் கெஞ்சுகிறான். அவர் உதவி செய்வதில்லை. முடிவில் பணத்திற்குள்ளாகவே புதைந்து போகிறான். இப்படியான குற்றவுணர்வு கொண்டவர்கள் வெகு குறைவே.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாடகத்திலிருந்து திரைப்படவுலகிற்கு நடிகர் நடிகைகள் நுழைந்த போது இந்த விவாதம் பெரிதாக இருந்த்து. இன்று சினிமாவில் நுழையும் பலரும் நாடகத்தில் நடிப்பதை ஆரம்பப் பயிற்சியாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் அப்படியான குற்றவுணர்வுகளைக் காண முடிவதில்லை. மனசாட்சியுள்ளவர்களே குற்றவுணர்வு கொள்வார்கள் என்று ரே குறிப்பிடுகிறார்.
ஆனால தேசிய நாடகப்பள்ளியை பற்றிய ஒரு ஆவணப்படத்தில் அதன் இயக்குநர் சொன்னது நினைவிற்கு வருகிறது.
தனது நாடகப்பள்ளியின் மிகச்சிறந்த நடிகர்களைச் சினிமா உலகம் விழுங்கிவிட்டது. அவர்கள் மேடையை விட்டுப் போனது பெரும் இழப்பு. சொந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நிறையப் பணமும் பெயரும் கிடைத்திருக்கலாம். ஆனால் அவர்களைச் சிறந்த மேடை நடிகர்களாகக் கொண்டுவந்த நாடகப்பள்ளிக்கு அது பெரிய இழப்பே என்கிறார். அது உண்மையே.
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர்கள் ஒரு காலத்தில் நாடகமேடையில் சிறந்த நடிகர்களாக ஒளிர்ந்தார்கள். இன்றும் சிலர் நாடகம் செய்கிறார்கள் என்ற போதும் அவர்கள் கவனம் சினிமாவின் மீது தான் குவிந்துள்ளது.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் எலியா கசன் நாடகமேடையில் நடிகராக இருந்தவர். சிறந்த பிராட்வே நாடகங்களை இயக்கியவர். அவரது கண்டுபிடிப்பு தான் மார்லன் பிராண்டோ. அவரை மேடையில் அறிமுகம் செய்து புகழ்பெற வைத்த எலியா கசன் பின்பு சினிமாவிலும் தனித்துவமிக்க நடிகராக உருவாக்கினார்.
ஒரு நேர்காணலில் பிராண்டே தனது நாடகப்பயிற்சிகளே சினிமாவில் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்தக் காரணமாக இருந்த்து என்கிறார்
ரேயின் நாயக் படத்தில் ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த நடிகர் முகுந்தா லாஹிர் தற்போது வறுமையில் வாடுவதுடன் வாய்ப்பு கேட்டு அரிந்தமைத் தேடி வருகிறார். அவருக்கு ஒரு கிளாஸ் மதுவைத் தருகிறான் அரிந்தம். அதை ரசித்துக் குடித்தபடியே ஏதாவது சிறு வேஷம் கொடுத்தால் கூடப் போதும். தான் மிகவும் வறுமையான சூழலில் இருக்கிறேன் என்று கிழவர் மன்றாடுகிறார். அவர் தான் அரிந்தமின் ஆரம்பக் காலத்தில் அவனை அவமானப்படுத்தியவர். நடிப்பில் புலி என்று பெயர் பெற்றவர். அவர் தற்போது பூனை போல ஒடுங்கி நிற்பதை அரிந்தம் காணுகிறான். காலமாற்றத்தில் இப்படியான வீழ்ச்சியற்றவர்கள் பரிதாபமான நிலையில் காத்திருப்பது மறக்கமுடியாத காட்சி. இந்த நிலை இன்றும் தொடரவே செய்கிறது.

ரயிலில் அரிந்தமை சந்திக்கும் அதிதி பெண்கள் பத்திரிக்கைக்காக அவரைப் பேட்டி காண முயல்கிறாள். ஒரு ரயில்நிலையத்தில் வெளியே கூட்டம் அரிந்தமைக் காண தள்ளுமுள்ளு செய்து கொண்டிருக்கும் போது அவர் கண்ணாடி ஜன்னலின் வழியே அதை ரசித்துக் கொண்டிருப்பதைக் காணுகிறாள். அப்போது தன்னை மறைத்துக் கொள்ள முயல்கிறாள். அரிந்தம் அவள் மீது ஈர்ப்பு கொள்கிறார். அவருடன் பேச விரும்பாத அதிதி மெல்ல அவரது சொந்த வாழ்க்கையைத் தெரிந்து கொள்கிறாள். ஆனால் அதைத் தனது பத்திரிக்கையில் எழுத விரும்பவில்லை.
புகழ் மற்றும் பணம் இருந்த போதும் அரிந்தம் மிகவும் தனிமையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறாள். உலகின் கண்களுக்கு அரிந்தம் எப்போதும் ஒரு நட்சத்திரம் மட்டுமே. அவரே நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்ள இயலாது.
பதேர்பாஞ்சாலியில் ரயிலைக் காணுவதற்காக அபுவும் துர்காவும் ஓடுகிறார்கள். புகையோடு செல்லும் ரயில் அதிசயமாகத் தோன்றுகிறது. அந்த ரயிலிலிருந்து நாயக்கில் வரும் ரயிலும் ரயில் பயணத்தையும் கணக்கில் கொண்டால் அந்த அதிசயம் கலைந்து போய் ரயிலைவிடவும் அதில் பயணம் செய்யும் மனிதர்களே வியப்பானவர்கள் என்று தோன்றுகிறது. ரயிலில் ஆளுக்கு ஒரு ஆசை. தந்திரமாக அதை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார்கள்.
வெற்றி தான் நடிகரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. வசூலில் அவர் அடையும் வெற்றியும் சொந்த வாழ்வில் அவர் அடையும் வெற்றியும் ஒன்று போல இருப்பதில்லை. இந்தச் சமநிலையற்ற தன்மையே நட்சத்திரங்களின் விதி. அதைத் தான் ரே சுட்டிக்காட்டுகிறார். அதை அதிதி சரியாகப் புரிந்து கொள்கிறாள்.
நம் வாழ்வில் சிலரிடம் உண்மையாக இருக்கவும் நடந்து கலந்து கொள்ளவும் ஆசைப்படுவோம். அரிந்தம் நடந்து கொள்வதும் அது போன்றதே.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
