புத்தரின் அடிச்சுவட்டில்
அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சிவபாதசுந்தரம் புத்தர் பிறந்த இடம் துவங்கி அவரது வாழ்வில் தொடர்புடைய முக்கிய இடங்களை நேரில் காணுவதற்காக ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அந்த பயண அனுபவத்தை கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் என்ற நூலாக எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது
புத்தர் வாழ்க்கையோடு தொடர்புடைய ஸ்தலங்கள் உத்திர பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளன. நேபாள எல்லையில் அவர் பிறந்த ஊர் உள்ளது.
கபிலவஸ்து சாரநாத், சிராவஸ்தி, வைசாலி கௌசாம்பி சங்கர்ஷ்புரம் நாலந்தா, பாடலிபுரம் குசிநகர் என நீளும் அந்தப் பயணத்தின் ஊடாக அவர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து விரிவான பயண நூலாகக் எழுதியிருக்கிறார்..
இந்தப் பயணத்தின் ஊடாக அவர் பௌத்தம் அன்று இருந்த நிலை மற்றும் இன்றுள்ள நிலை குறித்து அழகாக விளக்குகிறார் தமிழில் வெளியான சிறந்த பயண அனுபவ நூலிது.

நேபாள எல்லையிலுள்ள தௌலீவா என்ற ஊருக்குச் செல்லும் சிவபாதசுந்தரம் அங்கே கபிலவஸ்து என்ற புத்தர் பிறந்த ஊரைத் தேடுகிறார். ஊரில் யாரும் அப்படியொரு பெயரைக்கூட கேள்விப்படவில்லை.
கி,மு.563ல் கபிலவஸ்து நகரத்தின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்தார் அந்த இடம் எங்கேயிருக்கிறது எனதேடி அலைந்த போது ஒரு சாஸ்திரியை தேடிப் போய்ச் சந்திக்கிறார். அவர் தௌலீவா தான் கபிலவஸ்து. அதன் இடிபாடுகளை நானே அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன் என்று உடன் வருகிறார்.
இடிந்த நிலையில் காணப்படும் பழைய கட்டிடங்களை, புரதானச்சின்னங்களைப் பார்வையிடுகிறார் சிவபாத சுந்தரம். நேபாள அரசு இதனைச் சிறப்பாகப் பராமரிக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் எழுகிறது.
இங்கேயிருந்து துவங்கும் இவரது பயணத்தில் அன்றைய சாலைகள். மற்றும போக்குவரத்து வசதிகள். குதிரை வண்டியில் பயணம் செய்த போது ஏற்பட்ட நெருக்கடி, ராஜகிருகத்தினைத் தேடிப் போகும் போது தங்கும் விடுதியில் ஏற்பட்ட அனுபவம் ,லும்பினியில், உள்ள மாயாதேவி கோவில் எனத் தனது அனுபவத்தைச் சுவைபட எழுதியிருக்கிறார்.
புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலைக் காணச் சென்றது. பௌத்த சின்னங்கள் வழியெங்கும் இடிக்கப்பட்டு வேறு கோவில்களாக்கப்பட்ட காட்சிகள். நாலந்தா பல்கலைக்கழக இடிபாடுகள். எனப் புத்தரின் காலத்திற்கே நம்மை அழைத்துக் கொண்டு போய்விடுகிறார் சிவபாதசுந்தரம்
இந்த இடங்களில் எண்பது சதவீதம் நான் பார்த்திருக்கிறேன். நான் சென்ற நாட்களில் சாலை வசதி முன்னைவிட மேம்பட்டிருந்தது, குதிரை வண்டிகளுக்குப் பதிலாகக் காரில் போய் வர முடிந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லை.
இன்று இவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாக மாற்றபட்டுள்ள காரணத்தால் தங்குமிடம், உணவகம் போக்குவரத்து உள்ளிட்டவசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன.. ஆனால் பயணிகளை ஏமாற்றிப் பணம் பறிப்பது மட்டும் மாறவேயில்லை.
1960ல் கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் முதற்பதிப்பு வெளியாகியுள்ளது. அதன்பிறகு இரண்டாம் பதிப்பு வருவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1991ல் தான் இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. கௌதம புத்தரின் வாழ்க்கையைத் தேடிச் சென்ற பயண நூலுக்கே இது தான் கதி. இவ்வளவிற்கும் இது போன்ற பயணம் எதையும் வேறு எவரும் மேற்கொண்டு தமிழில் புத்தகம் எழுதவில்லை. நான் பயணித்த காலத்தில் இந்தப் புத்தகம் சிறந்த வழித்துணையாக இருந்தது.
எந்த வசதிகளும் இல்லாத காலத்திலே இவ்வளவு நீண்ட பயணத்தை சிவபாதசுந்தரம் மேற்கொண்டிருக்கிறார். இன்று சகல வசதிகளும் உள்ளன. பயணம் போவதற்கான மனநிலையைத் தான் பலரும் வளர்த்துக் கொள்ளவில்லை
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
