S. Ramakrishnan's Blog, page 122

July 25, 2021

நைல் நதி சாட்சிகா

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது. நைல் நதி சாட்சிகா என்ற இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பாலாஜி. இவர் சாகித்ய அகாதமிக்காக எனது சஞ்சாரம் நாவலையும் தெலுங்கில் மொழியாக்கம் செய்து வருகிறார்

Nylu nadhi sakshiga (Short Stories)
S. Ramakrishnan’s tamil stories translated by Gillella Balaji

விலை ரூ 120

தொடர்புக்கு

Desanthiri Pathippagam

: D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093

Phone: 044 2364 4947

https://www.desanthiri.com/

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 23:49

கறை படிந்த சட்டை

.Beijing Bicycle படத்தின் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்ற இயக்குநர் வாங் சியாஷுவாய் உருவாக்கியுள்ள புதிய படம் 11 Flowers. பாடகரும் ஓவியருமான ஒருவரின் பதினோறு வயது மகனைப் பற்றியது. ஹானின் தந்தை  ஓவியம் வரைவதற்காகப் பூக்குவளையில்  மலர்களை அடுக்குவதில் படம் துவங்குகிறது.

குறிப்பிட்ட கோணத்தில் மலர்களை எப்படி அவதானிப்பது என்பதை ஆரம்பக் காட்சியிலே மகனுக்குக் கற்றுத் தருகிறார் வாங் ஹானின் தந்தை.

கலாச்சாரப் புரட்சிக்குப் பின்பு குய்ஷோ மாகாணத்தில் நடக்கும் கதையிது. பள்ளியில் படிக்கும் வாங் ஹான் பெற்றோர் மற்றும் தங்கையுடன் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறான். தந்தை அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.

மூன்று நண்பர்களுடன் பள்ளிக்குச் செல்லும் வாங் ஹான் விளையாட்டுத்தனமானவன். பள்ளியில் நடைபெறும் உடற்பயிற்சியில் அவன் சிறப்பாகச் செய்வதை அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர் அவனைத் தனியே அழைத்துப் பாராட்டுகிறார். பள்ளியில் நடைபெறப்போகும் விளையாட்டு நிகழ்வு ஒன்றில் அவனை அணித்தலைவராக நியமிக்கிறார்.

இதைக்கேட்டு வாங் ஹான் சந்தோஷமடைகிறான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவன் ஒரு புதுச்சட்டை தைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கிறார்.

வாங் ஹான் தனது அம்மாவிடம் தனக்கு ஒரு புதுச்சட்டை வேண்டும் என்கிறான். அவளோ துணி வாங்குவதற்கு ரேஷன் முறை உள்ளதால் நினைத்த நேரம் வாங்கமுடியாது என்று மறுக்கிறாள். வாங் ஹான் பிடிவாதம் பிடிக்கவே அம்மா அவனுக்கு ஒரு வெள்ளை சட்டை தைத்துத் தருகிறாள்.

தனது புதுச்சட்டையை அணிந்து கொண்டு வாங் ஹான் பள்ளிக்குச் செல்லும் காட்சி மிக அழகானது. பள்ளி உடற்பயிற்சி விழாவில் பங்கேற்றுப் பாராட்டுப் பெறுகிறான் வாங் ஹான்.

அன்று பள்ளியை அடுத்த சரிவு ஒன்றில் தொழிற்சாலை அதிகாரியின் சடலம் கிடைப்பதை ஊர் மக்கள் காணுகிறார்கள். கொலை செய்தவன் அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் அண்ணன். அந்த இளைஞனை போலீஸ் தேடுகிறார்கள்.

மாலையில் தனது நண்பர்களுடன் ஆற்றங்கரையில் விளையாடுகிறான் வான் ஹான். அப்போது ரத்த காயத்துடன் ஓடிவரும் கொலையாளி அவனது புதுச்சட்டையைப் பறித்துக் கொண்டு காட்டில் மறைந்து விடுகிறான்.

புதுச்சட்டையை இழந்த வாங் ஹான் அவன் பின்னாலே ஓடுகிறான் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. . இருட்டி விடுகிறது. அழுதபடியே வீடு திரும்புகிறான். அவனது அம்மா கோபத்தில் அவனை அடிக்கிறாள். ஆற்றில் சட்டை தொலைந்துவிட்டது என்று பொய் சொல்கிறான் வாங் ஹான்

இருட்டிலே அவனை ஆற்றங்கரைக்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். இருவரும் தேடுகிறார்கள். புதுச்சட்டையைக் கண்டுபிடிக்க முடியவில்லை

மறுநாள் பகலில் அந்தக் கொலையாளியைத் தேடிப்போய்ச் சந்திக்கிறான் வான்ஹான். சிறுவனின் வேதனையைப் புரிந்து கொண்ட கொலையாளி தான் புதிய சட்டை ஒன்றை வாங்கித் தருவதாகச் சொல்கிறான். அதை வான் ஏற்க மறுக்கிறான்.

கொலையாளியின் அடிபட்ட காயத்திற்கு மருந்து போடப் பச்சிலை பறித்து வந்து கட்டுகிறான் வான். தான் காட்டில் ஒளிந்துள்ளதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்புகிறான் கொலைகாரன்

பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் அவனைப்பற்றிய சிந்தனையுடன் செல்லும் வான் இந்த ரகசியத்தைத் தன் நண்பர்களிடம் சொல்லிவிடுகிறான். அவர்கள் ஒன்றாகக் கொலைகாரன் இருக்குமிடத்தைத் தேடுகிறார்கள்.

காட்டிற்குள் சிறுவர்கள் செல்லும் காட்சியில் அவர்களின் பயமும் ஆசையும் மிக உண்மையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வாங் ஹானின் அப்பா தொழிற்சாலையில் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். இதனால் வீடே அச்சத்தில் பீடிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில் கொலையாளி ஏன் இந்தக் கொலையைச் செய்தான் என்ற உண்மை வெளிப்படுகிறது. அவனைப்பிடிக்கக் காவல்துறைக்குச் சிறுவன் வான் உதவி செய்கிறான். கொலையாளி என்ன ஆகிறான் என்பதே மீதக்கதை.

சிறுவன் வாங் ஹானின் கண்ணோட்டத்தில் முழுப்படமும் விரிகிறது. தந்தையிடம் அவன் ஓவியம் கற்றுக் கொள்வது, இரவில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து விளையாடுவது. தந்தையும் மகனும் ஓவியம் வரைவதற்காகப் பசுமையான சூழலைத்தேடிப் போவது. எதிர்பாராமல் மழையில் மாட்டிக் கொள்வது, தந்தையும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்து பாடுவது. கொலையாளியின் பக்கமுள்ள உண்மை என மறக்கமுடியாத காட்சிகளுடன் மிகுந்த நேர்த்தியாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையும் அழகான பாலமும் காட்டின் வனப்பும் தொழிலாளர் குடியிருப்பும் சிறுவர்களின் பள்ளியும் சிற்றூர் வாழ்க்கையும் மறக்கமுடியாதவை.

வெள்ளை சட்டையில் ரத்தக்கறை படிகிறது. அது ஒரு குறியீடு. கலாச்சாரப் புரட்சியின் பின்பு ஏற்பட்ட மாற்றங்களின் குறியீடு போலவே அச்சட்டை சித்தரிக்கப்படுகிறது.

கொலைகாரனின் தந்தையும் சகோதரியும் ஒரு காட்சியில் வாங் ஹானையும் அவனது தந்தையினை வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரிப்பதும் தன்னை மீறி கொலையாளியின் தந்தை வெடித்து அழுவதும் அபூர்வமான காட்சி.

நிலக்காட்சி ஓவியங்களின் சிறப்பையும் அந்த ஓவியர்களின் தனித்துவத்தையும் பற்றித் தந்தை ஒரு காட்சியில் மகனுக்கு விளக்குகிறார். நிலக்காட்சி ஓவியங்களில் காட்டப்படுவது போலவே வாங் ஹானின் கிராமம் பேரழகுடன் ஒளிருகிறது. ஆனால் அந்தச் சூழலுக்குள் கண்ணுக்குத் தெரியாத அச்சம். பகை. வன்முறை ஒளிந்து கொண்டிருக்கிறது. அதைச் சிறுவர்கள் கண்டறிகிறார்கள்.

பெரியவர்களின் உலகம் சிறுவர்களின் உலகம் என இரண்டு தளங்கள் இயங்குகின்றன. பெரியவர்களால் மனதில் உள்ளதைப் பேச முடியவில்லை. விரும்பிய பாடலைப் பாட முடியவில்லை. சூழலின் நெருக்கடியை உணர்ந்து அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் வாழுகிறார்கள். சிறுவர்களுக்கோ விரும்பிய உணவும் உடைகளும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர்கள் சுதந்திரமாக நடந்து கொள்கிறார்கள். சந்தோஷமாக ஓடியாடி விளையாடுகிறார்கள். பெரியவர்கள் பேசுவதை ஒளிந்து கேட்கிறார்கள். பெரியவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனக் குழப்பமடைகிறார்கள்.

இயக்குநரின் இளமைப்பருவத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தையே படமாக்கியிருக்கிறார். வாங் ஹானிக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் முழுமையாகப் புரிவதில்லை. ஆனால் சொல்லப்படாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறான். சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும் வெளிப்படையாக இருக்கிறது. பெரியவர்களிடம் அப்படியில்லை. அவர்கள் ரகசியமாகச் செயல்படுகிறார்கள். புதிராக நடந்து கொள்கிறார்கள்.

ஊரில் நடக்கும் சண்டை ஒன்றை சிறுவர்கள் பார்வையிடுவது முக்கியமான காட்சி. அதில் அவர்களுக்கு எதற்காக அந்த சண்டை நடக்கிறது. யார் எதிரி என்று தெரிவதில்லை. ஆனால் அவர்களுடன் சண்டையில் கலந்து கொள்கிறார்கள்.

வான் ஹானின் அம்மா அவனை மிகவும் கண்டிப்புடன் நடத்துகிறாள். கோபத்தில் அடிக்கிறாள். அதே நேரம் அவனுக்கு விருப்பமான உணவை தயாரித்து தருகிறாள். பள்ளி விட்டு வீடு திரும்பியதும் ஹான் சாப்பிடுகிறான். பிறகு இரவு வரை விளையாடுகிறான். அவன் நண்பர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வருத்தமடைகிறான்.

ஹானின் குடும்பம் கலாச்சாரப்புரட்சியின் காரணமாக இடம் மாறி குய்ஷோ மாகாணத்திற்கு வந்திருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பமில்லை. அரசின் உத்தரவு. அந்த நெருக்கடி அவர்களின் உறவில் வெளிப்படுகிறது.

டாங் சின்ஜோங்கின் சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் நெல்லி குட்டீயரின் எடிட்டிங் பிரமிக்க வைக்கிறது.

வாங் ஹான் சட்டையைப் பறிகொடுத்துவிட்டு வீடு திரும்பும் போது நம் பால்யத்தின் நினைவுகள் கொப்பளிக்கத் துவங்கிவிடுகின்றன. இப்படி அழியாத நம் பால்ய நினைவுகளை மீட்டுகிறது என்பதே இந்தப் படத்தை நெருக்கமாக்குகிறது

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 05:46

அட்டன்பரோவின் காந்தி

காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியபோது படப்பிடிப்பில் என்ன நடந்தது. எவ்வாறு அந்தப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன்.

ஒளி மற்றும் ஒலியின் தரம் மோசமாக இருந்த போதும் காந்தி திரைப்படம் குறித்த அரிய ஆவணப்பதிவு என்பதால் இதனை விரும்பிப் பார்த்தேன்.

காந்தியிடம் என்னைக் கவர்ந்த விஷயம் அவரது அறிவுத்திறன் மற்றும் நம்பிக்கை . அவர் கொண்டிருந்த லட்சியவாதம் முதன்மையானது. தனது அறிவுத்திறனை அவர் வெளிப்படுத்திய விதமும் அதை எளிய மனிதர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்திய விதமும் தனித்துவமானது என்கிறார் பென் கிங்ஸ்லி.

படத்தில் காந்தி அறிமுகமாகும் காட்சியில் அவர் கையில் ஒரு புத்தகத்தோடு தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். படிப்பு தான் காந்தியை உருவாக்கியது. வழிகாட்டியது. அதன் அடையாளம் போலவே முதற்காட்சி உருவாக்கபட்டிருக்கிறது.

இருபது வயது காந்தியில் துவங்கி 79 வயது வரையான அவரது வாழ்க்கையை எவ்வாறு திரைக்கதையாக்கினார்கள் என்பதைப் பற்றி அட்டன்பரோ சொல்கிறார். ஜாலியன் வாலா பாக் படுகொலை மற்றும் தண்டி யாத்திரை காட்சிகள். முக்கியமானவை நூற்றுக்கணக்கான ஆட்களை ஒன்று திரட்டி படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்பது வியப்பளிக்கிறது.

காந்தியைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்கும் யோசனையை ரிச்சர்ட் அட்டன்பரோவிடம் முன்வைத்தவர் மோதிலால் கோத்தாரி. அவர் ஏன் அட்டன்பரோவைத் தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால் காந்தியின் வரலாற்றை படமாக்க வேண்டும் என்று கேப்ரியல் பாஸ்கல் மற்றும்  டேவிட் லீன் முயற்சி முன்னதாக செய்தார்கள். ஆனால் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை.

காந்தி ஒரு கடவுளில்லை. புனிதரில்லை. நம்மைப் போல ஒரு மனிதர். ஆனால் அசாதாரணமான செயல்களைச் செய்தவர் என்பதைக் காட்டவே அவரைப்பற்றிய திரைப்படம் உருவாக்கப்பட்டது என்கிறார் அட்டன்பரோ.

இதற்காகச் செய்யப்பட்ட ஆய்வு மற்றும் நிதிநெருக்கடிகள். மற்றும் திரைக்கதையாக்கம். நடிகர் தேர்வு படப்பிடிப்பு அனுபவங்கள் பற்றி அட்டன்பரோ In Search of Gandhi  என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகத்திலுள்ள சில தகவல்களின் காணொளித் தொகுப்பாக இந்த ஆவணப்படம் உள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2021 00:25

July 23, 2021

நாவலின் விதி

எழுத்தாளர் ஐரின் நெமிரோவ்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ஷ் முகாமில் கொல்லப்பட்டவர். உக்ரேனிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரான்சில் வாழ்ந்தவர். பிரெஞ்சு மொழியில் எழுதினார். இவரது Suite française நாவல் அவர் மறைந்து அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மனிதர்களைப் போலவே நாவலின் விதியும் விசித்திரமானதே. எழுதப்பட்ட உடனே எல்லா நாவல்களும் வெளியாவதில்லை. சில நாவல்கள் பதிப்பகத்தாலும். எழுத்தாளரின் விருப்பமின்மை மற்றும் மனச்சோர்வினால் அப்படியே முடங்கிப் போய்விடுகின்றன. காலத்தின் வெளிச்சம் அதன் மீது எப்போதும் படும் என யாருக்கும் தெரியாது.

தன் பதின்வயதுகளிலே கவிதை எழுதத்துவங்கிய ஐரின் Suite française எழுதுவதற்கு முன்பு இரண்டு நாவல்களை எழுதியிருக்கிறார். இதில் முதலாவது நாவல் David Golder அவரது புனைப்பெயரில் வெளியானது. பதிப்பாளரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துத் தேடினார். அதன்பின்பு அது ஐரின் எழுதிய நாவல் என்று கண்டறியப்பட்டது.

புலம் பெயர்ந்த ரஷ்ய யூதர் என்ற அடையாளம் ஐரினை வாழ்நாள் முழுவதும் துரத்தியது. இந்தக் காரணத்தாலே அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை கிடைக்கவில்லை.

பிரான்ஸ் முற்போக்கு சிந்தனைகளின் கொண்ட தேசமாக இருந்த போதும் அங்கே பெண்களுக்கு வாக்குரிமை மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது. மார்க்ரெட் யூரிசனார் தான் பிரெஞ்சு அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எழுத்தாளர். நாற்பது உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பில் பெண்கள் தலைமை பொறுப்பு ஏற்க நீண்டகாலம் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் ரஷ்யாவைச் சேர்ந்த ஐரின் பிரெஞ்சில் எழுதுகிறார், அதுவும் ஒரு யூதர் என்பதை இலக்கியச் சூழல் அவரைப் பொருட்படுத்தவேயில்லை                                                

ஐரின் இந்த நாவலைச் சிறிய நோட்டு ஒன்றில் அடித்தல் திருத்தல்களுடன் எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸ் ஜெர்மன் ஆதிக்கத்திற்கு உள்ளான பாதிப்பைப் பற்றி இந்த நாவலை ஐந்து பகுதிகளாக எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இரண்டு பகுதிகளை மட்டுமே எழுதி முடிக்க முடிந்தது. இதனிடையில் கைது செய்யப்பட்டு யூதமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டார். யூதமுகாமிற்குப் போவதற்கு முன்புநாவலின் கையெழுத்துப்பிரதியை ஒரு சூட்கேஸில் மறைத்து வைத்து மகளிடம் ஒப்படைத்திருக்கிறார்

சிறுமி டெனிஸ் அந்தச் சூட்கேஸை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ரோஸ் என்ற குடும்ப நண்பரிடம் ஒப்படைத்திருக்கிறார். நீண்ட பலகாலத்தின் பின்பே அது டெனிஸின் கைக்குக் கிடைத்தது.

ஐரீனின் இரண்டாவது மகள் எலிசபெத் பதிப்புத்துறையில் ஈடுபடத் துவங்கியபோது தனது அன்னையைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுத முற்பட்டார். அப்போது ஏற்பட்ட தேடுதலின் போதே சூட்கேஸில் இருந்த நாவல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நோட்டில் காணப்பட்ட கடிதம் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைப் பார்த்த எலிசபெத் தனது அம்மா ஏதோ டயரி எழுதியிருக்கிறார் என நினைத்துப் படித்தபோது அது முடிக்கப்படாத நாவல் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த நாவலை வெளியிடுவதற்காக முயற்சிகளை மேற்கொண்டபோது அது நிறைவுபெறாத நாவல் என்பதால் பதிப்பகங்கள் வெளியிட முன்வரவில்லை. எலிசபெத்தும் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார். அவரது மறைவிற்குப் பிறகு எலிசபெத்தின் அக்கா டெனிஸால் நாவல் மறுமுறை தட்டச்சு செய்யப்பட்டு 2004ல் வெளியிடப்பட்டது

நாவல் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய விருதான Renaudot Prize பெற்றது. பின்பு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 21 மொழிகளில் இந்த நாவல் மொழியாக்கம் செய்யப்பட்டதுடன் இதன் திரைப்பட உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணம் ஐரீன் மகளுக்குக் கிடைத்தது

தன் வாழ்நாளில் ஐரீனுக்குக் கிடைக்காத கௌரவம் அவர் மறைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பின்பு கிடைத்தது. தனது தாயின் மூலம் இப்படி ஒரு அதிர்ஷ்டம் தங்களுக்குக் கிடைக்கும் என நினைக்கவேயில்லை என்கிறார்கள் டெனிஸின் குடும்பத்தினர்.

அறுபது ஆண்டுகளுக்கு முந்திய நாவல் ஒன்றை அங்கீகரித்து வெற்றிபெறச் செய்த பிரெஞ்சு இலக்கியச் சூழலை நாம் பாராட்டவேண்டும்.

1942, ஜூலை மாதம் பிரெஞ்சு காவல்துறையால் ஐரீன் கைது செய்யப்பட்டார் அவர் பிதிவியர்ஸில் உள்ள யூத முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து ஆஷ்விட்சுக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு விஷவாயு கூடத்தில் நிறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது கணவருக்கும் இது போன்ற குரூர மரணமே ஏற்பட்டது.

தான் எழுதிய நாவல் உலகின் கவனத்தைப் பெற்றுக் கொண்டாடப்படும் என அறியாமலே ஐரீன் இறந்து போனது பெரும்சோகம்.

ஐரீன் நெமிரோவ்ஸ்கி 1903 ஆம் ஆண்டில் உக்ரேனில் பிறந்தார், அவரது தந்தை லியோன் ஒரு வங்கி உரிமையாளர். ரஷ்யப்புரட்சியின் போது தங்கள் குடும்பம் பாதிக்கப்படக்கூடும் என நினைத்த லியோன் அங்கிருந்து வெளியேறி பாரீஸில் தஞ்சம் புகுந்தார். தனது பதினெட்டு வயது முதல் ஐரீன் எழுத ஆரம்பித்தார். பாரீஸில் தன் வாழ்நாளைக் கழித்த போதும் யூதர் என்பதால் அவருக்குக் குடியுரிமை கிடைக்கவில்லை.

தனது 23வது வயதில் வங்கிப்பணியில் இருந்த மைக்கேல் எப்ஸ்டீனை மணந்தார், அவர்களுக்கு இரண்டு மகள்கள்: மூத்தவர் டெனிஸ், இளையவர் எலிசபெத், ‘

சூட் ஃபிரான்சைஸ் நமிரோவ்ஸ்கியின் வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டது

இந்த நாவல் ஜெர்மன் ராணுவத்தின் ஆதிக்கத்தின் கீழ் பிரான்ஸ் கொண்டுவரப்பட்ட ஆரம்ப நாட்களை விவரிக்கிறது. பாரீஸ் நகரின் மீது ராணுவ விமானங்களின் குண்டுவீச்சினைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள்.

பஸ்ஸி என்ற சிறிய நகரில் கதை நிகழுகிறது. லூசி ஏஞ்செலியர் என்ற இளம்பெண் தனது மாமியாருடன் வாழ்ந்து வருகிறார். வசதியான குடும்பம். லூசியின் கணவன் ராணுவத்தின் பணியாற்றுகிறான்.

லூசியின் மாமியார் கறாரானவர். பண்ணையில் குடியிருப்பவர்களிடம் வாடகை வசூல் செய்வதிலும் பண்ணை வருவாயைப் பெறுவதிலும் இரக்கமின்றி நடந்து கொள்கிறார். இது லூசிக்குப் பிடிக்கவில்லை. லூசிக்கு இசையில் ஆர்வம் அதிகம் ஆனால் அவரது மாமியார் வீட்டில் இசை வாசிக்கக் கூடாது என்கிறார்.

இந்தச் சூழலில் ஜெர்மன் விமானத்தாக்குதல் நடக்கிறது. அதில் மக்கள் இடம்பெயர்ந்து போவதைக் காணுகிறாள் லூசி. அவளது நகரமும் ஜெர்மன் ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறது.

ராணுவ அதிகாரிகள் தங்களுக்கு விருப்பமான வீடுகளை ஆக்கிரமித்துக் குடியேறுகிறார்கள். அப்படி லூசியின் வீட்டின் ஒருபகுதியை . ஜெர்மனிய தளபதி புருனோ ஆக்கிரமித்துக் கொள்கிறான். அவன் ஒரு இசைக்கலைஞன். ஆகவே வீட்டில் இருக்கும் நேரங்களில் லூசியின் ப்யானோவில் இசைக்கோர்வை ஒன்றை எழுதுகிறான். அவன் எழுதுகிற இசைக்கோர்வையே Suite française

ஜெர்மன் ராணுவத்தின் பிடியில் அவர்களின் வாழ்க்கை மிகவும் நெருக்கடியாக உள்ளது. எதிரியான ஜெர்மனி ராணுவத்தினை மக்கள் வெறுக்கிறார்கள். இந்தச் சூழலில் புருனோவுடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறாள் லூசி. அதை ஊர்மக்கள் வம்பு பேசுகிறார்கள். அவளை மோசமான பெண் என்று திட்டுகிறார்கள்.

புருனோவுடன் அவள் நெருக்கமாகப் பழகுவதை மாமியாரும் கண்டிக்கிறாள். ஆனால் புருனோவின் இசைத்திறமையை உணர்ந்த லூசி அதை ரசிக்கிறான். கணவன் இல்லாத ஏக்கம் அவனுடன் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஜெர்மன் ராணுவத்திடம் பிடிபட்டு யுத்த கைதியாக மாறுகிறான் லூசியின் கணவன். அதை அவனது அம்மாவால் தாங்க முடியவில்லை.

இதற்கிடையில் பெனாய்ட் என்ற பண்ணையாளின் மனைவியை அடைய ஒரு ஜெர்மானிய அதிகாரி பல்வேறுவிதமான தொல்லைகள் தருகிறான். இதில் ஆத்திரமான பெனாய்ட் அந்த அதிகாரியைக் கொன்றுவிடவே அவனை ராணுவம் தேட ஆரம்பிக்கிறது. ராணுவத்தின் பிடியிலிருந்து பெனாய்ட்டை காப்பாற்ற லூசி அவனைத் தன் வீட்டில் மறைத்து வைக்கிறாள். பெனாய்ட்டை பிடிக்கும் பொறுப்பு புருனோ வசம் ஒப்படைக்கப்படுகிறது. பெனாய்ட்டை எப்படி லூசி காப்பாற்றினாள் என்பதே நாவலின் இறுதிப்பகுதி. ஜெர்மன் ராணுவம் அந்த நகரிலிருந்து வெளியேறுவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது

ஜெர்மன் ஆக்ரமிப்பின் போது வீடுகள் எவ்வாறு சூறையாடப்பட்டன. மக்கள் எவ்வாறு ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள் என்பதை லூசியின் மூலம் ஐரீன் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஐரீனின் எழுத்து ஆன்டன் செகாவ் மற்றும் டால்ஸ்டாயின் பாதிப்பில் உருவானது என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. இதை அவரே தனது நேர்காணலில் ஒத்துக் கொள்கிறார்.

ஐரீனுக்கும் அவரது அம்மாவிற்கும் இடையில் நல்ல உறவில்லை. வறுமையான சூழலிலிருந்த நாட்களில் ஐரீனின் பிள்ளைகள் தனது பாட்டியைத் தேடிப்போய் உதவி கேட்டபோது அவர்களைத் துரத்தி அனுப்பி வைத்தார் ஐரீனின் அம்மா. தாயோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தனது படைப்புகளில் தொடர்ந்து ஐரீன் பதிவு செய்திருக்கிறார். இந்த நாவலில் வரும் மாமியாரின் செயல்களும் அவரது அன்னையின் பிரதிபலிப்பே.

இசையின் வழியே தான் லூசியும் புருனோவும் ஒன்று சேருகிறார்கள். அவளது நினைவாகவே அவன் இசைக்கோர்வையை எழுதுகிறான்.அந்த இசைக்குறிப்புகளை அவளிடம் ஒப்படைக்கிறான். அவனைப்பற்றிய நினைவுகள் இசையாக மலருகின்றன.

ஐரீன் ரஷ்யாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பிரெஞ்சு எழுத்தாளராகவே கருதுகிறார்கள். 64 வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாவல் புத்துயிர்ப்புப் பெற்றிருக்கிறது என்பது நம்பிக்கையின் அடையாளம். நல்ல எழுத்து ஒருபோதும் கைவிடப்படாது. மறைந்து போய்விடாது. அது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே செய்யும் என்பதன் சாட்சியமாகவே இந்த நாவலைக் காண்கிறேன்

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2021 04:08

July 20, 2021

எலியின் சாகசம்

கலை கார்ல்மார்க்ஸ்

திருவாரூர்.

எலியின் பாஸ்வேர்டு நூல் பற்றிய வாசிப்பனுபவம்.

•••

நூல் : எலியின் பாஸ்வேர்டு

ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்

விலை : ரூ.35

பதிப்பகம் : தேசாந்திரி

இது குழந்தைகளுக்கான / சிறுவர், சிறுமியர்களுக்கான படைப்பு.

தொன்று தொட்டு இயங்கி வரும் உணவுச்சங்கிலியில் பாம்புக்கும் எலிக்குமான பிணைப்பில், எது பிழைக்கும் என்ற கேள்வியில், வலியதே பிழைக்கும் என்பதே விடையாய் உள்ளது. எப்படியும் இறுதியில் வெல்வது பாம்புகளாகவே உள்ளன.

உயிர்கள் தோன்றிய காலம் தொட்டே வலியது உயிர்த்திருக்கும் என்ற இயற்கையின் நியதியானது, உடல் வலிமையைக் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. காலம் செல்லச் செல்ல தொழில்நுட்பம் வளர வளர மனிதனின் சிந்தனைக்கு ஏற்ப பாதுகாப்பும் வலிமையும் மேலோங்கியது. ஒருவருக்கு ஒருவர், நாட்டுக்கு நாடு தொழில்நுட்ப போட்டி ஏற்பட தொடங்கியது. இன்றும் அது தொடர்கதையாக உள்ளது. இப்படியிருக்க இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எலிகள் எவ்வகையில் பாம்புகளிடம் இருந்து தப்பித்தன என்பதை அடிப்படையாகக் கொண்டு, குழந்தைகளையும் படிக்கின்ற மனங்களையும் கவருகின்ற வகையில் ஒர் அழகிய கற்பனை கதையாய் #எலியின்_பாஸ்வேர்டு கதையினை வடித்துள்ளார் அன்பிற்கினிய எழுத்தாளர் #எஸ்_ரா அவர்கள்.

பொதுவாக குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் பாங்கு எளிதானதல்ல என்று கூறும் #எஸ்_ரா அவர்கள், அதற்கு எதிர்மறையாக இந்தக் கதையினை மிகவும் எளிதாக கூறிச் செல்கின்றார். குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வகையில் கதையின் களங்களை நகர்த்திச் செல்கின்றார்.

இக்கதையில் எழுத்தாளர் #எஸ்_ரா  அவர்கள், பாம்பினையும் எலியையும் மையப்படுத்தியே நகர்த்திடும் தருவாயிலும், குழந்தைகளுக்கு ஏற்ற நல்லொழுக்கங்களை போதிக்கும் வகையில் பல உரையாடல்களையும் புகுத்தியுள்ளார். அவற்றை படிக்கும் பெரியோர்கள், அதனை குழந்தைகளுக்கானதாகவே மட்டும் ஏற்றுக்கொண்டு சென்று விட முடியாது. 

பாம்பிற்கும் எலிக்குமான நீண்ட நாள் பகையை தற்காலத்து தொழில்நுட்பம் கொண்டு  எலிகள் தடுத்திட முனைவதாக கூறும் #எஸ்_ரா அவர்கள், அதே தொழில்நுட்பம் அழிக்கவும் வல்லது என்பதை பாம்புகளைக் கொண்டு சுட்டிக் காட்டுகின்றார்.

சட்டங்களை இயற்றுபவர்களே அதனை இலகுவாக மீறவும் செய்கின்றார்கள் என்பதை அழகாய் சுட்டுகின்றார்.

தொழில்நுட்பம் என்பது ஆக்கத்திற்கானதே;  அழிவுக்கானது அல்ல என்ற விதையை இக்கதையின் வாயிலாக சிறார்கள் மனதில் தூவி செல்கின்றார், எழுத்தாளர் #எஸ்_ரா அவர்கள்.

ஒரு ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் எடுப்பதற்கு முழுமையான கதை அம்சம் கொண்டதாக உள்ளது, இந்த #எலியின்_பாஸ்வேர்டு.

அனைத்து தரப்பு வயதினரும் படிக்கலாம். இக்கதையினை எல்லா குழந்தைகளின் மனதிலும் விதைக்கலாம்..

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2021 19:17

July 19, 2021

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய பூவை என்ற சிறுகதையில் பேரக்கா என்ற ஒரு பெண் வருகிறாள். அவள் ஒரு அநாதை. அண்டி வாழும் அவள் மாடு மேய்க்கிறாள். பாட்டிக்குக் கைகால் பிடித்துவிடுகிறாள். அவளுக்குத் தலைமுடி சரியாக வளரவில்லை என்று மொட்டையடித்துவிடுகிறார்கள். நாலைந்து முறை இப்படிச் செய்தபிறகே அவளுக்குக் கூந்தல் வளருகிறது.

அவளது கல்யாண நாளை பற்றியதே கதை. மணப்பெண் என்பதால் அவளை அலங்கரித்துத் தலையில் பூச்சூடுகிறார்கள். இந்தப் பூவாசனை தாங்காமல் பேரக்கா மயங்கிவிடுகிறாள். காரணம் இதுவரை அவள் பூச்சூடி மகிழ்ந்தவளில்லை. சின்னஞ்சிறிய கதை. ஆனால் அபூர்வமான வெளிச்சம் ஒன்றைக் காட்டுகிறது

பூவாசம் தாங்க முடியாத பெண்ணாகப் பேரக்காள் இருக்கிறாள் என்பது வியப்புக்குரியது. தன்னைப் பற்றிய அக்கறையோ, கவனமோ அவளுக்கு ஒரு போதும் கிடையாது. வேலை வேலை என்று பிறருக்காக அவள் ஒடியோடி வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

தாயில்லாமல் வளரும் பெண்ணிற்கு ஏற்படும் பெரிய வருத்தம் தனக்கு ஜடை பின்னி பூவைத்து விட யார் இருக்கிறார்கள் என்பதே. தாயிருந்தால் நிச்சயம் பேரக்காளுக்குப் பூச்சூடி விட்டிருப்பாள். அல்லது சகோதரிகளோ, தோழிகளோ இருந்தால் ஆசையாக மலர்களைச் சூடிவிட்டிருப்பார்கள். ஆனால் யாருமற்ற பேரக்கா திருமணத்தன்று தான் முதன்முறையாக அவ்வளவு மலர்களைச் பூச்சூடுகிறாள். அதன் வாசனையை அவளால் தாங்க முடியவில்லை. வாழ்வின் கடினங்களைத் தாங்க முடிந்த அவளால் மலரின் மென்மையைத் தாங்க முடியவில்லை.

எளிய விஷயம் என்ற நினைப்பது கூடப் பலருக்கு வாழ்வில் கிடைப்பதேயில்லை. பூவிற்கும் பெண்கள் ஒருபோதும் தலை நிறையப் பூச்சூடிக் கொள்வதில்லை.

தி மகியோகா சிஸ்டர்ஸ் படத்தில் நான்கு சகோதரிகள் சகுரா மலர்கள் பூக்கும் பருவத்தில் அதைக் காண கியாத்தோவில் ஒன்றுகூடுகிறார்கள். மூன்றாவது சகோதரிக்குத் திருமணப் பேச்சு நடக்கிறது. பெரிய அக்கா ஒரு மாப்பிள்ளை பார்க்கிறாள். அதைச் சின்ன அக்காவிற்குப் பிடிக்கவில்லை. அவள் மாப்பிள்ளையின் அம்மா ஒரு பைத்தியக்காரி என்று குற்றம் சாட்டுகிறாள். சகோதரிகளுக்குள் சண்டை வருகிறது. நீ எப்போதும் இப்படிக் குற்றம் கண்டுபிடிக்கிறாள் என்று பெரிய அக்கா தனது தங்கையிடம் கோவித்துக் கொள்கிறாள். இந்தச் சண்டை சட்டென ஒரு நிமிஷத்தில் மாறி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்கிறார்கள். அத்தனை அழகான சிரிப்பு. சின்ன அக்கா சொல்கிறாய் நான் மலர்களை வேடிக்கை பார்க்க ஒன்றுகூடியிருக்கிறோம். பெரிய அக்கா சொல்கிறாள். ஆமாம் மலர்களை .

அவர்களின் சிரிப்பும் சகுரா மலர்களும் ஒன்று போலவே இருக்கின்றன. அந்தப் பெண்கள் சகுரா பூத்துள்ள பூங்காவில் உலவுகிறார்கள். மலர்கள் காற்றில் பறந்து வந்து அவர்கள் காலடியில் விழுகின்றன. அவர்கள் ஒரு மலரைக் கூடக் கையில் எடுப்பதில்லை. கண்ணால் மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். அழகு என்பது நிரந்தரமானதில்லை. அது முழுமையாக வெளிப்படும் போது காணும் ஆனந்தம் போதுமானது என்கிறார்கள். மலர்களைப் போன்றதே இளமையும். அது நீடித்து நிலைப்பதில்லை. மகியோகா சகோதரிகளில் மூத்தவள் சொல்கிறாள் காலம் கடந்து செய்யப்படும் திருமணங்கள் நீடிப்பதில்லை என்று.

கிராவின் கன்னிமை கதையில் வரும் நாச்சியார் இளமையில் அவ்வளவு அன்பாக இருக்கிறாள். வேலையாட்களுடன் அன்பாகப் பழகுகிறாள். வீட்டுக்கே விளக்காக ஒளி இருக்கிறாள்.பிறருக்கு அள்ளிக்கொடுப்பதில் ஆனந்தம் காணுகிறாள்

காட்டில் பருத்தி எடுக்கும் பெண்களும் நாச்சியாரம்மா வந்துதான் கூலி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

அவளைப் போல ஒருத்தியைக் காண முடியாது என்று ஊரே புகழுகிறது. ஆனால் இளமை மறைந்து வாழ்வின் வசந்தம் போய்விட்ட பிறகு நாச்சியார் உரு மாறிவிடுகிறாள். சிடுசிடுப்பும் கோபமும் எரிச்சலுமாக நடந்து கொள்கிறாள். வாசலில் வந்து நிற்கும் ஏகாலிக்கும் குடிமகனுக்கும் சோறுபோட முகம் சுளிக்கிறாள்

காய்ச்சலோடு கட்டிலில் விழும் ரங்கையாவை கவனிக்காமல் அவன் உடல் நலம் பற்றி ஒரு வார்த்தை கேட்காமல் கொண்டு வந்த சிட்டைக்கும் மீதிக்காசுக்கும் கணக்கு உதைக்கிற்தே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். உடைந்த கண்ணாடியை ஒட்டவைப்பது போல உருமாறிப் போன அவளை ரங்கையா பார்த்துக் கொண்டிருக்கிறான்.

நாச்சியாரு,என் பிரியே !நீ எங்கிருக்கிறாய்?” என்று கதையை முடிக்கிறார் கிரா.

தன்னிடமிருந்தே தான் தொலைவிற்குப் போய்விட்டாள் நாச்சியார். வாழ்க்கை கொடுத்த பரிசு இது தானா. அன்பும் கருணையும் கொண்ட நாச்சியாரை எது இப்படிச் சுயநலமியாக மாற்றியது. நாள்பட நாள்பட முகம் பார்க்கும் கண்ணாடி ரசமிழந்து போவது போல அவள் மாறிவிடுகிறாள். கன்னிமை தான் அவளது அன்பின் ஊற்றுக்கண் என்கிறார் கிரா

பூவை கதையில் வரும் பேரக்காளும் நாச்சியாரும் மகியோகா சகோதரிகளும் வேறுவேறு கிளைகளில் பூத்துள்ள சகுரா மலர்கள் தான்.

மார்டின் துகார்ட் எழுதிய முத்தம் என்ற கதையில் பேரக்கா போலவே ஒரு பெண் வருகிறாள். இவள் ஒரு பணிப்பெண். பிரபு ஒருவரின் வீட்டில் வேலை செய்கிறாள். பதினைந்து வயதானவள். அந்த வீட்டிற்கு விருந்தினராக வரும் இளைஞன் அவளது அழகில் மயங்கி ஆசையாகப் பேசுகிறான். அவளோ பயந்து விலகிப் போகிறாள்.

ஒரு நாள் மாலை அவளை வீட்டுத் தோட்டத்தில் பார்த்த இளைஞன் ஆசையாகக் கட்டிக் கொள்கிறான். அவளோ பயந்து உதறுகிறாள். அவன் விடாப்பிடியாக அவளை இழுத்து முத்தமிடுகிறாள். மறுநிமிஷம் அவள் மயங்கிவிடுகிறாள். அவளால் முத்தத்தின் மென்மையைத் தாங்க முடியவில்லை.

வாழ்நாளில் அன்று தான் அவள் முதல் முத்தம் பெறுகிறாள். பயந்து போன இளைஞன் அவளது மயக்கம் தெளிய வைக்கிறான். அவளிடம் மன்னிப்புக் கேட்கிறான். அவளோ சிரித்தபடியே வீட்டிற்குள் ஒடி விடுகிறாள். சில நாட்களின் பின்பு அந்த இளைஞன் தனது ஊருக்குக் கிளம்புகிறான். அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவளே தேடி வருகிறாள். இந்த முறையும் அவன் முத்தமிட்டபோது அவள் மயங்கி விழவே செய்கிறாள்.

கடினமான வீட்டுப்பணிகளைச் செய்யத் துணிவு கொண்ட அந்தப் பெண்ணிற்கு மிருதுவான முத்தம் மின்னல் வெட்டு போல மயக்கமடையச் செய்கிறது.

மார்டின் துகார்டும் கிராவும் காட்டும் பெண்கள் சந்தோஷத்தைத் தாங்க முடியாதவர்கள்.

மோசமான துயரத்தைக் கூடப் பலராலும் ஏற்றுக் கொள்ளவும் தாங்கிக் கொள்ளவும் முடிகிறது. எதிர்பாராத சந்தோஷத்தை அப்படித் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சியைக் கையாளுவது எளிதானதில்லை.

கிராவின் கதையில் பேரக்காளின் திருமணத்தை ஊர் கூடி நடத்துகிறது. இன்றைய காலத்தில் அப்படியான நிகழ்வுகள் சாத்தியமா என்று தெரியவில்லை. நகரம் கிராமம் என்ற பேதமில்லாமல் அவரவர் வாழ்க்கை அவர்களுக்கு எனச் சுருங்கிவிட்டிருக்கிறது.

In Kyoto,

hearing the cuckoo,

I long for Kyoto.

என்ற பாஷோவின் கவிதையில் தனது சொந்த ஊரான கியாத்தோவில் இருந்தபடியே குயிலின் குரலைக் கேட்கும் பாஷோ கியாத்தோவிற்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குகிறார்.

அவர் பால்யத்தில் அறிந்த கியாத்தோவும் தற்போதைய கியாத்தோவும் வேறுவேறு தானே. தனது பால்யத்தின் கண்ட காட்சிகளும். வீதிகளுக்கு அவர் மறுமுறை செல்ல விரும்புகிறார். அது சாத்தியமேயில்லை. ஆனால் அந்த ஏக்கம் தீராதது.

ஒரு குயிலின் குரல் இழந்து போன காலத்தை நினைவூட்டுகிறது. சகுரா மலர்கள் நிலையாமையை நினைவுபடுத்துகின்றன. இந்த அடையாளங்களை, அபூர்வ நிகழ்வுகளை, புரிந்து கொள்ள முடியாத ஏக்கத்தை இலக்கியம் கவனப்படுத்துகிறது.

நாச்சியாரு,என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்? என்ற கிராவின் சொற்கள் காலத்தைத் தாண்டி ஒலிக்கின்றன. திரிந்து போன பாலைப் போல அன்பும் மாறிவிடும் என்பது எவ்வளவு கசப்பான உண்மை.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 19, 2021 21:05

July 18, 2021

மலையாளத்தில்

மாத்யமம் மலையாள இதழில் எனது பஷீர் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பொன்மனை வல்சகுமார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 18, 2021 20:32

July 17, 2021

சிறிய உண்மைகள் 2

பசியின் குரல்

பசியைப் பிணி என்கிறது மணிமேகலை. அட்சயபாத்திரத்தைக் கையில் ஏந்தி உலகின் பசிப்பிணியைப் போக்குகிறாள் மணிமேகலை. இப்படி ஒரு கதாபாத்திரமோ, அட்சய பாத்திரமோ இந்தியாவின் வேறு மொழி இலக்கியங்கள் எதிலும் இடம்பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. பசியாற்றுவதைப் அறமாகக் கருதிய தமிழ்ச் சமூகம் பசியால் ஏற்படும் இன்னல்களை. வறுமையால் ஏற்பட்ட பசிக்கொடுமையின் விளைவுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

புறநானூறு படித்தால் பசியின் குரல் தான் மேலோங்கி ஒலிக்கிறது. பசியும் வறுமையும் பற்றிச் சங்க இலக்கியம் ஏராளமாகப் பதிவு செய்திருக்கிறது. பசித்த கடவுள்கள் வாழும் நிலமிது.

பசியைப் போக்குவதற்குத் துறவியான வள்ளலார் தான் அணையா அடுப்பினை உருவாக்கினார். எந்த அரசனும் இது போன்ற அறச்செயலை முன்னெடுக்கவில்லை. பசியின் குரலை இலக்கியம் ஆழ்ந்து கேட்கிறது. ஆராய்கிறது. அதற்கான தீர்வினை முன்வைக்கிறது. இலக்கியத்தின் ஆதாரக் கருப்பொருட்களில் ஒன்று பசி.

உணவு தனிமனிதனின் தேவை மட்டுமில்லை. உணவு கொடுப்பது சமூகத்தின் பொறுப்பும் கடமையுமாகும். ஒரு காலத்தில் பட்டினிச்சாவு பற்றிய செய்திகள் அதிகமிருந்தன. பட்டினிச்சாவு என்பது எவ்வளவு கொடுமையானது. பஞ்சகாலத்தில் மட்டுமில்லை வறுமையால் உணவு கிடைக்காமல் பட்டினிச்சாவு அடைந்தவர்கள் பற்றிய செய்திகள் வரலாற்றில் இருக்கிறதே. பட்டினிச்சாவு என்பது ஒரு தேசத்திற்குத் தரப்படும் எச்சரிக்கை.

பசியின் உக்கிரத்தை, தவிப்பை இன்றைய தலைமுறை அறியவில்லை என்றே சொல்வேன். பசித்த நேரம் எதுவும் கிடைக்காமல் வெறும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்ட பழைய தலைமுறையின் வாழ்க்கை இவர்களுக்கு மிகை நாடகமாகத் தோன்றக்கூடும்.

பால்யத்தில் எனது கிராமத்தில் கண்டிருக்கிறேன். அரிசிச் சோறு என்பது பலருக்கும் கனவு. எப்போதாவது தான் நெல்லுச்சோறு பொங்குவார்கள். மற்ற நாட்களில் கூழ் அல்லது கஞ்சி தான். அதுவும் சூடாகக் கிடைக்காது. இன்று நம்முடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. இலவசமாக அரிசி ரேஷனில் தரப்படுகிறது. பல நாள் பட்டினி என்ற பேச்சே இப்போது கிடையாது. உணவை வீணடிப்பதும் அதன் மதிப்பை அறியாமல் நடந்து கொள்வதும் அதிகமாகியிருக்கிறது.

ஏ.கே.ராமானுஜம் தொகுத்த இந்திய நாட்டுப்புறக்கதை புத்தகத்தில் ஒரு கன்னடக்கதை இருக்கிறது. அதில் அறிவாளியான பண்டிதன் ஒருவன் வறுமையில் வாழுகிறான். அவனுக்கு அன்றாடம் அரைவயிறு கால் வயிறு தான் உணவு கிடைக்கிறது ஒரு நாளாவது வயிறு நிறையச் சாப்பிடவே வேண்டுமென ஆசை கொண்டிருந்தான். ஆனால் அதற்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

இந்தப் பண்டிதனின் அறிவாற்றலைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர் அரண்மனைக்கு அழைக்கிறார்.

நிச்சயம் பெரிய விருந்து கிடைக்கும் எனச் சந்தோஷமாக மன்னரைக் காணச் செல்கிறான். வரவேற்று உபசரித்து விருந்து தருகிறார்கள். பெரிய இலைபோட்டு விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிட தருகிறார்கள். இன்றாவது முழு வயிறு சாப்பிட வேண்டும் என்று நினைத்து ஆசை ஆசையாகச் சாப்பிடுகிறான்.

ஆனால் பாதிச் சாப்பாட்டில் காரை உதிர்ந்து உணவில் மண் கலந்துவிடுகிறது. அப்படியே இலையை மூடி வைத்துவிட்டு ஏமாற்றத்துடன் எழுந்து கொள்கிறான். விஷயம் அறிந்த மன்னர் அடுத்த நாள் இதைவிடப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார்.

அரண்மனைக்கே வந்தாலும் நமக்கு வயிறுமுட்டசாப்பிடக் கொடுப்பினை இல்லை போலும் என நினைத்துக் கொண்டு மறுநாள் வரை காத்திருக்கிறான். மறுநாள் மிகப் பெரிய விருந்து வைக்கிறார்கள்.

இன்று சோற்றில் கல் விழுந்தாலும் மண் விழுந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட வேண்டியது தான் என அள்ளி அள்ளி வயிற்றை நிரப்புகிறான். விதவிதமான இனிப்புகளை ருசிக்கிறான்.

இவன் பசியோடு விளையாட நினைத்த பிரம்மா தானே ஒரு கல்லாக மாறி சோற்றில் கிடக்கிறார். அவரையும் சேர்த்து பண்டிதன் விழுங்கி விடுகிறான். பிரம்மா அவன் வயிற்றுக்குள் சிக்கிக் கொள்கிறார். வாழ்நாளில் அன்று தான் அவனது பசியடங்கி முழு வயிறு சாப்பிட்ட திருப்தி வருகிறது.

நிரம்பிய வயிறு சந்தோஷம் எல்லாவற்றையும் விடப் பெரியது.

சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வயிற்றுக்குள் சிறைப்பட்ட பிரம்மாவை மீட்க தேவலோகமே அவன் முன்னால் வந்து மண்டியிடுகிறது. லட்சுமியும் சரஸ்வதியும் பிரம்மாவை விட்டுவிடும்படி வேண்டுகிறார்கள். தனக்குத் தேவையான பொன்னும் பொருளும் வசதிகளும் செய்து கொடுத்தால் மட்டுமே பிரம்மாவை வெளியே விடுவேன் என்கிறான் பண்டிதன். முடிவில் எல்லாச் செல்வங்களும அவனுக்குக் கிடைக்கின்றன. வாந்தி எடுத்து பிரம்மாவை வெளியே விடுகிறான்.

வேடிக்கையான கதையாக இருந்த போதும் ஒருவனின் வயிற்றுப் பசியோடு பிரம்மா விளையாடுகிறார் என்பது ஆழமான நம்பிக்கை. இந்தப் பண்டிதனைப் போல அரைவயிறு கால் வயிறு சாப்பிட்டு நாளை கடத்துபவர்கள் இன்றுமிருக்கிறார்கள்.

இருக்கும் உணவைப் பிள்ளைகளுக்குத் தந்துவிட்டு மிச்சம் மீதி இருக்கும் உணவைச் சாப்பிடும் அம்மாக்கள் அனைவரும் இந்தப் பண்டிதனைப் போன்றவர்களே. அவனுக்காவது என்றாவது ஒரு நாள் வயிறு முட்டச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அம்மாக்களுக்கு அதுவும் கிடையாது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பசித்த வயிறு கொண்டவர்களே.

ஒரு முறை நண்பனின் அம்மா சொன்னார்

“சின்னவயசுல வீட்லே ரொம்ப வறுமை. மூணு வேளையும் சாப்பாடு கிடைக்காது. அதனால் பட்டினி கிடந்து வயிறு சுருங்கிப்போயிருச்சி தம்பி. இப்போது வசதி வந்துட்டாலும் ரெண்டு இட்லிக்கு மேலே சாப்பிட முடியலை“

இது தான் உண்மை. நீங்கள் விரும்பும் நேரத்தில் வயிறு அதை அனுமதிக்காது. இளமை பருவம் தான் பசியின் உக்கிரப் பருவம். அந்த வயதில் சாப்பிடுவதைப் போல வாழ்வின் வேறுபருவங்களில் சாப்பிட முடியாது.

கோபமும் வெறுப்பும் பசியைத் தான் ஆயுதமாகக் கையாளுகிறது. வீட்டில் சாப்பிடாமல் இருப்பது கோபத்தின் வெளிப்பாடு. வீட்டில் ஏற்பட்ட சண்டையில் கொடுத்துவிட்ட டிபன் பாக்ஸை திறந்து கூடப் பார்க்காமல் அப்படியே திரும்பிக் கொண்டுவரும் பள்ளி மாணவர்களைக் கண்டிருக்கிறேன். கோபம் ஏன் உணவின் பக்கமே திரும்புகிறது. வேறு வழியில் கோபத்தைக் காட்டினால் அதன் மதிப்பு ஏன் குறைந்துவிடுகிறது.

கோபத்தில் மட்டுமில்லை வெறுப்பிலும் உணவு தான் மையமாகிறது. வேண்டாதவர்கள் தரும் சாப்பாட்டினை யாரால் ருசித்துச் சாப்பிட முடியும்.

பந்தியில் உட்கார்ந்து இலை போட்டு இனிப்பு வைத்தபிறகு எழுந்து கொள்ளச் சொல்லிவிட்டார்கள் என்று இனி கல்யாண வீட்டில் சாப்பிடவே மாட்டேன் என்று வைராக்கியமாக இருக்கும் முத்தண்ணா என்பவரை அறிவேன். அந்த வடு ஆழமானது. இலையின் முன்னால் அமர்ந்தவனை எழுப்பி வெளியே அனுப்புவதைப் போன்ற பெரிய அவமானம் வேறில்லை.

பசியை மனிதர்களால் ஒரு போதும் வெல்ல முடியாது. தணிக்கமுடியும். கட்டுப்படுத்த முடியும் அவ்வளவே. பசி தான் மனிதனை வழிநடத்துகிறது. பசி தான் வெல்லுகிறது.

வயிற்றை மையப்படுத்திய இலக்கியங்கள் என்றே சில படைப்புகளை வகைப் படுத்துகிறார்கள். அந்த எழுத்தில் உணவு தான் கதையின் பிரதானம். விதவிதமான ருசியைப்பற்றியும், உணவின் பின்னுள்ள ரகசியம் வரலாறு நம்பிக்கை, சடங்குகள் மகிழ்ச்சியைப் பற்றி அந்தப் படைப்புகள் பேசுகின்றன. ரஷ்ய நாவல்களை வாசிக்கும் போது அவர்கள் சாப்பிடுகிற உணவு பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கும். பிரெஞ்சு கதைகளிலும் உணவு பற்றி விரிவாக எழுதுவார்கள்.

ஆடம்ஸ் ரிப் என்றொரு ஹாலிவுட் படம் பார்த்தேன். அதில் ஒரு பெண் கணவனால் ஏமாற்றப்படுகிறாள். அவள் மூன்று குழந்தைகளின் தாய். கணவன் வேறு பெண்ணோடு பழகுகிறான். வீட்டிற்கே வருவதில்லை என்பதை நினைத்துக் கவலைப்படுகிறாள். இது பற்றிக் கணவனுடன் சண்டையிடுகிறான். அவனோ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் முடங்கிக் கிட என்று அவளை அடிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள் ஒரு நாள் தனது சேமிப்புப் பணத்தில் ஒரு துப்பாக்கி வாங்குகிறாள். கணவனைக் கொல்வது என்று முடிவு செய்கிறாள்

அந்த எண்ணம் மனதில் தோன்றியவுடனே அவளுக்குள் பசி அதிகமாகிறது. துப்பாக்கியைக் கைப்பையில் மறைத்துக் கொண்டு அவனைத் தேடிப் போகிறாள். வழியில் ஒரு உணவகத்தில் விருப்பமான உணவைச் சாப்பிடுகிறாள். வயிறு நிறையச் சாப்பிட்டாலும் அவளது பசி அடங்கவில்லை. கணவன் அலுவலகத்திற்குச் சென்று அவனைச் சந்திக்கிறான். ஏன் இங்கே வந்தாள் என்று கோவித்துக் கொள்கிறான்.. மாலை வரை அவனது அலுவலகத்திலே காத்து கிடக்கிறாள். அப்போதும் பசி குறையவில்லை. அவனது அலுவலகக் கேண்டியனில் சாப்பிடுகிறாள். காபி குடிக்கிறாள். பசி தீரவேயில்லை. அது ஒரு நெருப்பு போல எரிந்து கொண்டேயிருக்கிறது

மாலை அவனைப் பின்தொடர்ந்து அவனது ஆசைநாயகியின் வீட்டிற்குப் போகிறாள். அந்த வீட்டுக்கதவைத் தட்டி உள்ளே போவதற்கு முன்பு இனிப்பு சாப்பிடுகிறாள் .வாய் நிறைய இனிப்போடு தனது துப்பாக்கியை எடுத்துச் சுடத்தெரியாமல் சுடுகிறாள். கணவன் அலறுகிறான். அவன் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்கிறது அவளைக் கைது செய்து போலீஸ் சிறையில் அடைக்கிறது

வழக்கறிஞர் அவளிடம் விசாரணை செய்யும் போது அவனைச் சுட்டபிறகும் தனது பசி அடங்கவில்லை என்கிறாள்.

அவளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபம், வெறுப்பு தான் பசியாக மாறியிருக்கிறது. அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் தான் பசியாக உருமாறுகிறது, அல்லது பசியற்றுப் போகச் செய்துவிடுகிறது . இந்தப் பசியை உணவால் தீர்க்க முடியாது. அது தானே அணையும் வரை காத்திருக்க வேண்டும்.

அந்தப் பெண் ஏன் கணவனைக் கொல்லத் துப்பாக்கியை உயர்த்தும் முன்பு இனிப்பு சாப்பிடுகிறாள். தன்னுடைய கசப்பான வாழ்க்கையை அவள் கடந்து செல்ல விரும்புகிறாள். இனிப்பு தற்காலிக விடுதலை உணர்வைத் தருகிறது. அந்த இனிப்பு அவள் இதன் முன்பு சாப்பிடாத சுவை போலிருக்கிறது. இனிப்பைச் சுவைக்கும் போது அவள் சிறுமியாகிவிட்டாள் என்பது தான் நிஜம்.

அந்தப் பெண்ணின் பசியை எப்படி வகைப்படுத்துவது. அது உடலில் தோன்றிய பசியில்லை, மனதில் உருவான பசி. மனதிற்கு உணவு அளிப்பது எப்படி. சந்தோஷத்தால் மட்டுமே மனதின் பசியை அகற்ற முடியும். தணிக்க முடியும். பூவை ஆணையிட்டு மலரச் செய்யமுடியாது என்பது போலவே ஒருவரை ஆணையிட்டுச் சந்தோஷப்படுத்த முடியாது. தானே மகிழ்ச்சி அரும்ப வேண்டும்.

பண்டிதனும் இந்தப் பெண்ணும் பசியால் தான் அவதிப்படுகிறார்கள். ஆனால் பண்டிதனின் பசி வறுமையால் ஏற்படுகிறது. இவளது பசி புறக்கணிப்பால் உருவாகிறது.

கொலையாளிகள் பலரும் கொலையைச் செய்வதற்கு முன்பு விரும்பியதைச் சாப்பிடுகிறார்கள். அது தைரியம் தருகிறது என்கிறார்கள். அது போலவே திருடர்கள் வெற்றிகரமாகத் திருடிய பிறகு கட்டாயம் சாப்பிடுவார்கள். ஒரே ஆள் ஒரே இரவில் வேறுவேறு ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட்டிருக்கிறானா என்று தான் போலீஸ் விசாரிப்பார்கள். பசி அவனைக் காட்டிக் கொடுத்துவிடும்

சில வேடிக்கையான திருடர்கள் திருடிய வீட்டில் கிடைக்கும் உணவை ருசித்துச் சாப்பிட்டுப் போனதையும், சமைத்துச் சாப்பிட்டதையும் பத்திரிக்கைகளில் படித்திருக்கிறோம் தானே.

ஜாக் லண்டனின் உயிராசை கதையில் பலநாள் பட்டினி கிடந்தவனுக்குக் கப்பலில் உணவு கிடைக்கும் போது அதைப் பதுக்கி வைத்துக் கொள்ளவே முனைகிறான். படுக்கையின் அடியில் ரொட்டி துண்டுகளை ஒளித்து வைக்கிறான். அது தான் பசித்தவனின் உக்கிர நிலை.

கிரேக்கத்தில் தொன்மத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிமோனுக்குப் பட்டினி தண்டனை விதிக்கப்படுகிறது. பசியால் வாடும் தந்தையைக் காண வரும் மகள் பெரோ அவரது பசித்துயரை தாங்க முடியாமல் அருகில் அணைத்து முலைப்பால் தருகிறாள். தந்தை மகளிடமிருந்து தாய்ப்பாலை அருந்துகிறார். தாய்மையின் முன்னால் வயது கிடையாது. தந்தை மகன் என்ற பேதமில்லை. பசியின் உக்கிரத்தை இதை விட எப்படி அழுத்தமாகச் சித்தரிக்க முடியும். இந்தக் காட்சியைக் கிரேக்கத்தில் சிற்பமாகச் செய்திருக்கிறார்கள். இன்றும் அது கருணையின் உச்சபட்ச வெளிப்பாடாகக் கருதப்படுகிறது

பசியின் முன்னால் மணிமேகலையும் பெரோவும் சகோதரிகள் போலவே தோன்றுகிறார்கள்.

வரலாறும் தத்துவமும் பேருண்மைகளை முதன்மைப்படுத்தும் சூழலில் இலக்கியம் பெரிதும் சிறிய உண்மைகளைப் பேசுகிறது. சிறிய உண்மைகளின் மீது வெளிச்சமிடுகிறது. சிறிய உண்மையின் குரலை ஓங்கி ஒலிக்கிறது.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 17, 2021 23:07

July 16, 2021

ஆயிரம் நினைவுகளின் வீடு

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பா ஜின் எழுதிய குடும்பம் என்ற நாவல் அலைகள் பதிப்பக வெளியீடாக 1999ல் வெளிவந்துள்ளது. இந்நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் நாமக்கல் சுப்ரமணியன். சிறந்த மொழியாக்கம்.

உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் இந்த நாவல் குறித்துத் தமிழில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஒன்றோ இரண்டோ விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆழ்ந்து வாசிக்கவும் பேசவும் வேண்டிய முக்கிய நாவலிது.

நவீன சீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் பா ஜின் 1920களில் ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை வழியாக நான்கு தலைமுறைகளின் கதையை நாவலில் எழுதியிருக்கிறார்.

ஒருவகையில் இது அவரது சுயசரிதை. வசதியான சீனக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் என்பதால் அவர் தன்னுடைய குடும்ப வரலாற்றை நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

1932ல் வெளியான இந்த நாவலைச் சீனர்கள் இன்றும் கொண்டாடுகிறார்கள். இந்நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாடகமாகவும் ரேடியோ நாடகமாகவும் கல்லூரி பாடமாகவும் தொடர்ந்து வாசிக்கப்படுவதற்கும் கொண்டாடப்படுவதற்கும் முக்கியக் காரணம் இந்த நாவல் புரட்சிகரச் சிந்தனைகள் கொண்ட ஒரு இளைஞனை அடையாளப்படுத்துகிறது என்பதே. ஜூகு பழமைவாதம் பேசும் குடும்பத்திலிருந்து வெளியேறி சமூக மனிதனாக மாறுகிறான். ஆகவே அவனை அன்றைய இளைஞர்கள் மிகவும் நேசித்தார்கள். ஜூகு போல நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.

மே 4, 1919 இல் பெய்ஜிங்கில் மாணவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எதிர்பாராத விதமாக வன்முறை வெடித்தது, இந்தச் சம்பவம் சீனாவில் ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. இது குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதம் உருவானது. இதன் விளைவாகச் சீனாவில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பு மேலோங்கியது. அத்துடன் ஆணாதிக்க மையமான சீன சமுதாயத்தின் அடிப்படை அலகுகள் மாற்றப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. இந்தப் பண்பாட்டு மாற்றத்தின் அதிர்வுகளையே பாஜின் தனது நாவலில் வெளிப்படுத்துகிறார்

ஒரு குடும்பத்தின் நூற்றாண்டு கால வரலாற்றைச் சொல்லும் நாவல்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் குடும்பத்தின் வீழ்ச்சியையும் அதனால் ஏற்பட்ட நெருக்கடிகளையும் விவரிக்கக்கூடியவை. பாஜினும் அப்படியான நாவலைத் தான் எழுதியிருக்கிறார்.

பாஜின் நாவல் ஐந்து முக்கியமான விஷயங்களைப் பேசுகிறது. ஒன்று குடும்பத்தின் நிர்வாக முறை. குறிப்பாக அந்தப் பொறுப்பை வீட்டின் தலைமகன் ஏற்றுக் கொள்வதும் இதனால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும் பேசுகிறது.. இரண்டாவது வீட்டின் நம்பிக்கைகள். பெருமைகள். மரபுகள் சடங்குகள் பற்றியது. மூன்றாவது குடும்பத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம், பிரசவம். மரணம் மற்றும் புதிய மாற்றங்களை, கல்வியை, காதலைப் பெண்கள் சந்திக்கும் விதமும் அதன் பிரச்சனைகளையும் விவரிக்கிறது. நாலாவது அரசியல், மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் வீட்டிற்குள் நுழையும் விதம். அதைக் குடும்பம் எதிர்கொண்ட முறை பற்றியது. ஐந்தாவது அந்தக் குடும்பத்தின் வேலையாட்கள். பல்லக்குத்தூக்கிகள். சமையல் ஆட்கள் மற்றும் அவர்களின் சமூகநிலை பற்றியது.

ஒரு குடும்பம் சிதைகிறது என்ற எஸ்எல் பைரப்பாவின் நாவல் கர்நாடக கிராமமொன்றின் கணக்குப்பிள்ளை குடும்பத்தையும் அதன் வீழ்ச்சியினையும் விவரிக்கக் கூடியது. அந்தத் தலைப்பு பாஜின் நாவலுக்கும் பொருத்தமானது. சிதைவு தான் நாவலின் மையப்பொருள்.

பாஜின் நாவலில் தலைமுடியை சிறியதாக வெட்டிக் கொள்ள விரும்பும் பெண் புதுமையின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறாள். அவளைக் குடும்பம் எதிர்க்கிறது ஊர் கேலி செய்கிறது. அவளோ பெண்ணடிமை தனத்திற்கு எதிரான செயலாக இதை நினைக்கிறாள். இது போலவே பெண்களின் கல்வி பற்றிய பழமைவாத பார்வையும் விமர்சிக்கப்படுகிறது. பெண்களும் ஆண்களும் சேர்ந்து ஒரே பள்ளியில் படிப்பது தவறானது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு பெண் இருபாலர் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படுகிறாள். எதிர்ப்பு உருவாகிறது. இந்த மாற்றங்கள் முதன்முறையாக எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதைப் பாஜின் உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பாஜின் பாரீஸில் கல்வி பயிலுவதற்காகச் சென்ற நாட்களில் ஊரின் நினைப்பும் வீட்டின் நினைப்பும் தீராத ஏக்கமாக மாறவே இந்த நாவலை எழுதத் துவங்கியிருக்கிறார். 1932ல் இந்த நாவல் வெளியானது.

கூட்டுக்குடும்பத்தின் பெரியவர் காவோ தான் கதையின் மையம். அவரது பேரன்கள் ஜூக்சின், ஜூமின், ஜூகு மூவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது.

ஜூக்சின் தனது அத்தை மகள் மீயைக் காதலிக்கிறான். ஆனால் தந்தையின் விருப்பத்தின்படி ருஜூ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். தந்தையின் இறப்பிற்குப் பிறகு வீட்டின் நிர்வாகம் அவனது கைகளுக்கு மாறுகிறது. தாத்தா அவனுக்கு வணிக நிறுவனம் ஒன்றில் வேலையும் ஒதுக்கித் தருகிறார். அந்த வேலையில் மூழ்கிப் போகும் ஜூக்சின் இழந்த காதலை நினைத்து எப்போதும் மனம் வருந்திக் கொண்டிருக்கிறான். அவனால் தாத்தாவை மீறிச் செயல்பட முடியவில்லை. ஜூக்சின் மனைவி பிரசவத்தில் இறந்து போகிறாள். கடைசிவரை ஜூக்சின் குடும்பக் கௌரவத்திற்காகப் பொய்யான வாழ்க்கையை வாழுகிறான்.

ஆனால் அவனது தம்பி ஜூமீன் உறவுக்காரப் பெண் குயினை நேசிக்கிறான்; இளையவன் ஜூகுவோடு சேர்ந்து மாணவருக்கான இதழ் ஒன்றை நடத்துகிறான், குடும்பத்தினர் அவனது காதலை ஏற்க மறுக்கும் போது ஜூகுவின் துணையால் அவளை அடைய முயல்கிறான். அவனது அரசியல் பார்வைகளை, போராட்டங்களைத் தாத்தா கண்டிக்கிறார்.

கடைசிப் பையன் ஜூகு குடும்பத்திலே வித்தியாசமானவன். வேலைக்காரர்கள் மற்றும் பல்லக்குத் தூக்குகளிடம் நெருக்கமாகப் பழகுகிறான். அன்பு செலுத்துகிறான். அரசியல் மாற்றத்தை நோக்கிய செயல்பாடுகளை முன்னெடுக்கிறான். இதனால் வீட்டின் உத்தரவுகளை அவன் பொருட்படுத்துவதில்லை. அடிமைகள் சுமக்கும் பல்லக்கில் ஏறிப் போவதை அவமானமாகக் கருதுகிறான்

அந்த வீட்டிலிருந்த பல்லக்கு தூக்குகளைப் பற்றியும் அவர்களின் ஒற்றுமை மற்றும் கடினமான வாழ்க்கை நிலையினையும் பாஜின் துல்லியமாக விவரித்திருக்கிறார். பணம் கிடைக்கிறது என்ற ஒரு காரணத்தால் அவர்கள் தங்கள் அடையாளங்களை மறந்து பல்லக்கு தூக்குகளாக வாழுகிறார்கள். நெருக்கடி எப்படி மனிதர்களை ஒன்று சேர்க்கிறது. எசமானிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் என்கிறார் பாஜின்.

ஜூகு தன் வீட்டில் வேலை செய்யும் மிங் பெங் என்ற இளம்பெண்ணைக் காதலிக்கிறான். அதை விரும்பாத தாத்தா காவோ அவளை ஒரு வயதான ஆளுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். அவள் இது பற்றி ஜூகுவிடம் பேச வரும் போது அவன் கண்டுகொள்ள மறுக்கிறான். இதனால் மனமுடைந்து மிங் பெங் தற்கொலை செய்து கொள்கிறாள்.

நாவலில் வரும் பெண்கள் அனைவரும் துயர வாழ்க்கையைத் தான் சந்திக்கிறார்கள். ருஜூ தன் கணவன் பழைய காதலியை நினைத்து ஏங்குவதை உணருகிறாள். அவளால் தன் கணவனின் மனதை மாற்ற இயலவில்லை. முடிவில் பிரசவத்தில் அவள் இறந்து போகிறாள். மிங்பெங் தற்கொலை செய்து கொள்கிறாள். திருமணம் அன்றைய சீனக்குடும்பங்களில் எவ்வளவு பெரிய நெருக்கடிகளை, பிரச்சனைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்பதை பாஜின் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார்

ஜூக்சினின் சித்தப்பா விலைமகளுடன் சுற்றுகிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார். இப்படிக் கைமீறி நடக்கும் நிகழ்வுகளால் ஏற்பட்ட குடும்பத்தின் வீழ்ச்சியைக் காவோவால் ஏற்க முடியவில்லை. ஆனால் இந்த வீழ்ச்சியை அவரால் தடுக்கவும் இயலவில்லை. சூறைக்காற்றில் மணல் அடித்துச் செல்லப்படுவது போன்ற நிலையது.

காவோ ஒரு மறக்கமுடியாத மனிதர். குடும்பத்தின் கௌரவத்தை மட்டுமே முதன்மையாக நினைப்பவர். உறுதியானவர். மனதில் நினைப்பதை வெளியே காட்டிக் கொள்ளாதவர். கண்டிப்பானவர். ஆனால் அவருக்கும் மறுபக்கமிருக்கிறது. அது அவரது மரணப்படுக்கையில் வெளிப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் அவர் எல்லோரும் ஒன்று சேர்ந்து குடித்துச் சந்தோஷமாக உணவு அருந்தும் போது இந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்காது என்பதை உணருகிறார்.

அவரது மரணத்தின் போது தனது தவறுகளை அவர் ஒத்துக் கொள்கிறார். தான் பழமைவாதம் பேசும் மனிதனில்லை என்று தெரிவிக்கிறார். மரணப்படுக்கையில் அவர் ஜூகுவை அழைத்து நல்லாசி கூறி அவனது செயல்பாடுகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்கிறார் காவோ இறந்த பிறகு, ஜூகு வீட்டைவிட்டு வெளியேறி பீஜிங் சென்று பண்பாட்டுப் புரட்சிக்கான போராட்டத்தில் இணைய முடிவெடுக்கிறான்.

குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் தலைமுறை வேறுபாடுகள் மற்றும் அவர்களின் மாறுபட்ட மனப்பான்மையை நாவல் அழுத்தமாக விவரிக்கிறது

அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் பற்றிய செய்திகள் அந்தக் குடும்பத்தினுள் நுழையும் விதம் அழகானது. குறிப்பாக. அன்றைய நாளேடுகள். இதழ்கள் அதில் வெளியான கட்டுரைகள். அதை விவாதிக்கும் குடும்பத்தவரின் இயல்பு போன்றவற்றைப் பாஜின் சிறப்பாக விவரித்திருக்கிறார்

பராம்பரியமான ஒரு கூட்டுக்குடும்பம் ஏன் சிதைகிறது என்று ஆராய்ந்தால் அதன் பழமைவாத நம்பிக்கைகள் மற்றும் இறுக்கமான ஆணாதிக்கக் குணங்களாலும் தான் என்பது புரிகிறது.

இந்த குடும்பத்தில் மேலும் தங்கியிருப்பது மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என்று ஜூகு நினைக்கிறான். அந்த மூச்சுத்திணறல் தனி ஒரு குடும்பத்தின் நிலையில்லை. அன்றைய சமூகத்தின் நிலை அதுவே.

தந்தை தான் குடும்பத்தின் அரசர். அவரது உத்தரவுகளுக்கு மறுபேச்சுக் கிடையாது. அவரது முடிவுகளை யாரும் கேள்விகேட்க முடியாது. தந்தையின் முடிவுகள் யாவும் அவரது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும். ஆனால் அதை யாரும் அவரிடம் சுட்டிக்காட்ட முடியாது. இந்த உண்மையைத் தான் பாஜின் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு குடும்ப வரலாற்றின் வழியே பழைய மரபுகளிலிருந்து விலகிச் சீனா எப்படிப் புதிய உலகில் நுழைந்தது என்பதைப் பாஜின் அழகாகச் சித்தரிக்கிறார். சீன சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஒரு நாவலின் வழியே நாம் நுண்மையாக அறிந்து கொள்ள முடிகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 16, 2021 05:07

July 14, 2021

சிறிய உண்மைகள்-1

அபுவின் சந்தோஷம்.

சத்யஜித்ரேயின் அபூர் சன்சார் படத்தில எழுத்தாளராக ஆக விரும்பும் அபு தன் நண்பனிடம் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் பெயரைச் சொல்கிறான். அது மூலத்தில் விபூதி பூஷன் எழுதியதா என்று தெரியவில்லை. ஆனால் சத்யஜித் ரேயிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்கும் என்பதை அவரது நேர்காணலில் தெரிந்து கொள்ள முடிகிறது. புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள் பலரும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களே.

அகிரா குரசேவா நேர்காணல் ஒன்றில் இடியட் நாவலைப் படமாக்கும் போது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடித்த நடிகை தான் எவ்வாறு அந்தக் காட்சியில் சிரிக்க வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்குத் தனக்கு விடை தெரியாமல் உடனே நாவலைப் புரட்டிப் படித்தபோது அந்த இடத்தில் எது போன்ற சிரிப்பு வெளிப்பட்டது எனத் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். நாவலின் நுட்பமான விஷயங்களைச் சினிமா எவ்வளவு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒரு உதாரணம் என்கிறார் குரசேவா. அவரும் தஸ்தாயெவ்ஸ்கியின் தீவிர ரசிகரே. அவர் இலக்கியத்திலிருந்தே நல்ல சினிமா உருவாக முடியும் என்கிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் பொருந்தாத திருமணங்களைப் பற்றியே அதிகம் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக அப்படியான திருமண உறவில் பெண் சந்திக்கும் பிரச்சனைகளைத் தான் எழுதுகிறார்கள். அவள் புதிய காதலுக்கு உட்படுவதும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் விவரிக்கிறார்கள். அல்லது திருமணம் செய்யாமல் ஏமாற்றப்பட்ட பெண்ணை, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ விரும்பும் பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் ஒருவர் விவாகரத்து பெற வேண்டும் என்றால் மனைவியோ, கணவனோ கள்ளக்காதலில் ஈடுபட்டதற்கான சான்றாகக் கடிதங்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டும். இப்படியான சாட்சியம் இல்லாமல் விவாகரத்து கிடைக்காது. கள்ளக்காதல் இல்லாமல் பிரிந்து போக மணமான பெண்ணோ, ஆணோ நினைத்தால் வாய்ப்பே கிடையாது. அன்னாகரீனினா நாவலில் இது பற்றி விவாதிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் மன்னர் குடும்பம் முதல் குதிரைவண்டி ஒட்டுகிறவன் குடும்பம் வரை திருமணம் தான் முக்கியப்பிரச்சனை. அது ரஷ்ய இலக்கியத்தில் தீவிரமாக வெளிப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான குடும்பத்தைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்பதால் சிக்கலான, குழப்பமும் பிரச்சனைகளும் நிறைந்த குடும்பத்தின் கதைகளை இருவரும் எழுதியிருக்கிறார்கள். நிராகரிப்பும் மன்னிப்பும் தான் இவர்களின் மையப்புள்ளி. ஆனால் இந்தக் கதைக்கருவை அவர்கள் கையாண்ட விதமும் அதற்கு ஏற்படுத்திய ஆழமும் முக்கியமானது.

டால்ஸ்டாய் இரண்டு வயதிலே அன்னையை இழந்தவர். தஸ்தாயெவ்ஸ்கியின் தந்தை படுகொலை செய்யப்பட்டவர். இப்படி இளமையில் தாயைத் தந்தையை இழந்தவர்களின் வெளிப்படாத நேசமும் ஏக்கமும் கலையில் புதிய வெளிச்சமாக, ஆழமான தரிசனமாக வெளிப்படுகிறது.

அபூர் சன்சார் படத்தில் நண்பனின் தங்கை திருமணத்திற்காக வங்காள கிராமம் ஒன்றுக்குப் படகில் செல்கிறான் அபு. அவர்கள் படகில் செல்லும் காட்சி மிக அழகானது. முதன்முறையாக நண்பனின் வீட்டிற்குச் செல்லும் போது நண்பனின் அம்மா அபுவை பார்த்த மாத்திரம் அவனை இதற்கு முன்பு பார்த்தது போலவும் ஏதோ இனம் புரியாத நெருக்கம் இருப்பதாகவும் கூறுகிறார். அது அபுவிற்கே புரியவில்லை. அன்னையின் ஆசியைப் பெறுகிறான்.

அபர்ணா என்ற அந்த மணப்பெண்ணிற்கு ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை மனநலமற்றவன் எனத் தெரிந்து திருமணம் தடையாகும் போது நண்பன் அபுவை தனது தங்கையைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறான். அபு தயங்குகிறான்.

அபுவின் உலகில் பெண்களே இல்லை. அவன் அறிந்த இரண்டே பெண்கள் அவனது துர்கா மற்றும் அவனது அம்மா.

துர்காவின் இறப்பு அவனை ஆழமாகப் பாதித்திருக்கிறது. அவன் அபர்ணாவை நண்பனுக்காகவே திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்கிறன. அந்தக் காட்சியில் குடும்பமே அவன் பதிலுக்காகக் காத்துகிடக்கிறது. சம்மதம் தெரிவிக்கும் அபு தான் சவரம் செய்துகொள்ளவில்லை. புதிய ஆடைகள் இலலையே என்கிறான். நண்பன் ஏற்பாடு செய்கிறான் திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணக்காட்சி நூற்றாண்டின் முந்தைய பண்பாட்டு அடையாளம். இந்தக் காட்சியின் முடிவில் அந்த வீட்டு மனிதனாகி விடுகிறான் அபு.

அபுவை முதன்முறையாகப் பார்க்கும் போது நண்பனின் அம்மா சொன்னது உண்மையாகிவிடுகிறது. இது போன்று சிலரது வீட்டிற்குப் போகையில் பார்த்தவுடனே நெருக்கம் ஏற்படுகிறது. நீண்டகாலம் பழகியது போல உணர்வு ஏற்படுகிறது. அவர்களும் இதை உணருகிறார்கள். இது ஏன் என்று காரணம் புரியவில்லை. ஏதோ ஒரு விடுபட்ட பந்தம் மீண்டும் ஏற்படுவது போன்ற உணர்வது. ஒன்று சேர வேண்டிய மனிதர்கள் எப்படியாவது ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். காலம் அதற்கான சூழலை வழிகளை உருவாக்கும் என்பார்கள். அது உண்மை என்றே தோன்றுகிறது.

நீண்டகாலத்தின் முன்பு ஒரு ஆப்ரிக்கக் கதையை வாசித்த நினைவு. அதில் ஒரு பெண் சாலையில் ஒருவரைச் சந்திக்கிறாள். அந்த ஆளின் சிரிப்பு அவளுக்குப் பிடித்திருக்கிறது. அச் சிரிப்பு அலாதியானது. ஒரு மலர் விரிவது போல வசீகரமானது. அந்தச் சிரிப்பை அவளால் மறக்க முடியவேயில்லை. வாழ்க்கையின் பல்வேறு கஷ்டமான சூழலின் போது அந்தச் சிரிப்பை நினைத்துக் கொள்கிறாள். அது ஆறுதல் தருகிறது. அது பேன்ற ஒரு ஆணின் சிரிப்பை அதன் பிறகு வாழ்நாளில் அவள் பார்க்கவேயில்லை. அபூர்வமான சிரிப்பு. அவளது முதுமை வரை அந்தச் சிரிப்பு அவள் கூடவே வருகிறது. கடைசிவரை அவளுக்கு அந்த மனிதன் யாரெனத் தெரியாது. ஆனால் அவனது சிரிப்பு ஒரு வெளிச்சம் போல வழிகாட்டுகிறது

இப்படிச் சிலரது சிரிப்பும் முகங்களும் பார்வையும் காலம் கடந்தும் நம்மோடு கூடவே வருகின்றன. பழைய திரைப்படங்களைக் காணும் போது அதில் வரும் கதாபாத்திரங்களில் யாரோ ஒருவர் நம் குடும்பத்தில், அல்லது உறவில் உள்ள ஒருவரை நினைவுபடுத்துவார். அப்படி நான் அதிகம் உணர்ந்திருக்கிறேன். சிலரது ஜாடை நமக்கு யாரையோ நினைவுபடுத்தும்.

அபு ஏன் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்றோ பேச வேண்டும் என்றோ சொல்லவேயில்லை. அவன் நண்பனை முழுமையாக நம்புகிறான். அந்தப் பெண்ணை அவன் திருமண மேடையில் தான் முதன்முறையாகச் சந்திக்கிறான்.

அபுவிடம் கேட்டது போல அபர்ணாவிடம் யாராவது அண்ணனின் நண்பனைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டிருப்பார்களா. அவளது முடிவைப் பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

1769 வியன்னாவில், ஆஸ்திரியாவின் பேரரசி மரியா தெரேசா தனது மகள் மரியா அன்டோனியாவிடம் அவளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. மணமகன் பிரான்சின் இளவரசன் லூயிஸ்-ஆகஸ்டே என்கிறார். மரியா இதைக் கேட்டுச் சந்தோஷம் அடைகிறாள். வருங்காலப் பிரான்சின் ராணியாக ஆகப்போவதைப் பற்றிக் கனவு காணுகிறாள்

திருமண நாளின் போது தான் மாப்பிள்ளை லூயி மனவளர்ச்சியில்லாதவர் என்பது தெரியவருகிறது. ராஜ்ஜிய உறவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்பதை அறிந்து கொள்கிறாள். தனக்கு விருப்பமில்லாத போதும் அவள் திருமணத்தை ஏற்றுக் கொள்கிறாள்.

அபர்ணாவின் கதையும் அதுவேதான். ஆனால் இளவரசியைப் போலின்றி அபர்ணா திருமணம் நின்று போய்விடுகிறது. அபு மணமகன் ஆகிறான்.

பதேர்பாஞ்சாலி நாவல் விபூதி பூஷணின் சொந்த வாழ்க்கை. அவரது மனைவி கௌரி தேவியும் இது போலவே பிரசவத்தில் இறந்து போய்விட்டார். மனைவியை இழந்த விபூதி பூஷண் அடைந்த துயரம் தான் நாவலிலும் வெளிப்படுகிறது

பதேர்பாஞ்சாலி விபூதி பூஷணின் முதல் நாவல். அதிலே எத்தனை நுட்பமாக, ஆழமாக, தனது நினைவுகளையும் வாழ்க்கையினையும் பதிவு செய்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

அபு திருமணம் செய்து கொண்டு இம்மனைவியைக் கல்கத்தாவிலுள்ள தனது அறைக்கு அழைத்துக் கொண்டு வரும் காட்சி அற்புதமானது. அதில் அபர்ணாவின் தயக்கம். கூச்சம். மெல்லிய பயம் யாவும் அழகாக வெளிப்படுகிறது. அவர்கள் படியேறிப் போகும் போது யாரும் பார்த்துவிடக் கூடாது என்று அபு நினைக்கிறான். அவனுக்குத் திருமணம் நடந்த விஷயம் யாருக்கும் தெரியாது. முடிவில் அந்தக் குடியிருப்பே ஒன்று சேர்ந்து புதுப்பெண்ணைக் காணுகிறார்கள். வியக்கிறார்கள்.

அபர்ணா அபுவின் அறையை வீடாக மாற்றுகிறாள். அதற்கு அவள் செய்யும் முதல் வேலை கிழிந்த ஜன்னல் திரைச்சீலையை மாற்றுவது. அறையை வீடாக மாற்றுவது பெண்களால் மட்டுமே இயலும். அவளது வருகை அந்த அறையை ஒளிரச் செய்கிறது. மிகக் குறைவான காட்சிகளில் அவர்களின் நெருக்கமும் காதலும் சீண்டலும் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகிறது.

அபு மிகச் சந்தோஷமாக இருந்த நாட்கள் அது மட்டுமே. பால்யத்தின் விளையாட்டுத் தனம் துர்கா இறந்த பிறகு அவனிடம் மாறிவிடுகிறது. குடையோடு அவன் வெளியேறி நடக்கிறான். அந்த வளர்ந்த மனிதன் இந்தத் திருமணத்தின் பிறகே தனது உண்மையான சந்தோஷத்தை மீட்டு எடுக்கிறான்.

அபர்ணவும் அபுவும் முதன்முறையாகத் திருமண இரவில் சந்தித்துக் கொள்ளும் போது அபர்ணா முழுமையாக அவனைப் புரிந்து கொண்டிருக்கிறாள். அதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறாள். அவர்களுக்குள் இடைவெளி உருவாகவேயில்லை.

அபு ரயிலை முதன்முறையாகக் காணுவது போலவே அபர்ணாவும் ரயிலைக் காணுகிறாள். கடந்து செல்லும் உலகின் சாட்சியமாக ரயில் இடம்பெறுகிறது. ரயில்வே டிராக்கில் அபு நடந்து வருவதும். வீட்டிலிருந்தபடியே கடந்து செல்லும் ரயிலைக் காணுவதும் மிக அழகான காட்சிகள்.

அபர்ணாவும் துர்காவும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள். இருவரிடம் நிறைய ஒற்றுமைகளைக் காண முடிகிறது. துர்கா காட்டிய அன்பினை அபர்ணாவிடமும் உணருகிறான். ஏன் அபுவின் சந்தோஷம் நிலைக்கவில்லை.

ஒவ்வொரு உறவை இழக்கும் போதும் அபு தன்னளவில் பெரிய மாற்றம் கொள்கிறான். உலகம் அவனிடம் கருணையாக நடந்து கொள்ளவில்லை. அபு காணும் கனவுகள் யாவும் கலைந்த மேகங்களாகி விடுகின்றன.

பதேர்பாஞ்சாலி நாவல் தமிழில் வெளியாகியுள்ளது. எத்தனை பேர் அதை வாசித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நாவல். படத்தில் ரே காட்டியது அந்தப் பெரும் உலகின் முக்கியக் காட்சிகளை மட்டுமே. ஆனால் உண்மையாக, நேர்மையாக அதைச் சித்தரித்திருக்கிறார்.

பதேர்பாஞ்சாலியை முதல் நாவலாக விபூதி பூஷண் எழுதியது போலவே ரேயும் தன் முதல் படமாக அதை உருவாக்கத் தேர்வு செய்திருக்கிறார். ஒரு சுடரைக் கொண்டு இன்னொரு சுடரை ஏற்றியது போன்ற பணியது.

அபூர் சன்சாரைத் தேனை ருசிப்பது போலத் துளித்துளியாக ருசிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் இப்படத்தின் இனிமை குறைவதேயில்லை

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 14, 2021 23:42

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.