S. Ramakrishnan's Blog, page 126

June 5, 2021

துணையெழுத்து – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை

புனைவுக்கும் உண்மைக்குமான ‘இடைவெளி’, ‘தொலைவு’, ‘நெருக்கம்’ என்பன, நமக்கும் வாழ்வுக்குமான தொலைவினை ஒத்தவைதான். ‘நமக்கும் வாழ்வுக்குமான இடைவெளி’ என்பது, மிகவும் நெருங்கியிருக்கும் வெகுதொலைவுதானே!

புனைவும் உண்மையும் ஒன்றையொன்று தழுவும்போதும் நாமும் வாழ்வும் ஒன்றாகிப் போகிறோம். நாமே பெரும்புனைவுதான்!. வாழ்வே பேருண்மைதான்!. ‘நமக்கும் வாழ்க்கைக்குமான உறவு’ என்பது, புனைவும் உண்மையும் கலந்த கட்டுரைக்கு நிகராது.

தான்  பெற்ற ஆகச்சிறந்த அனுபவங்களையும் பிறரின் வாழ்க்கையின் வழியாகத் தான் கண்டுணர்ந்த ‘வாழ்வியல் சிடுக்கு’களையும் இணைத்துத் தனக்கேயுரிய புனைவின் சாயல் கொண்ட எழுத்தின் ஊடாக வெளிப்படுத்தும் எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் புனைவுக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் சிறந்த சிறுகதைக்கு நிகராகவே அமைந்துவிடுகின்றது. நல்ல சிறுகதைகளில் நம் மனம் தங்கிவிடுவது இயல்புதானே?  

இவரின் பல கட்டுரைகள் புனைவுக்கட்டுரைகளாக மலர்ந்து, சிறுகதை வடிவத்துக்கும் கட்டுரை வடிவத்துக்கும் இடையில் ஊஞ்சலாடுகின்றன. அந்த ஊஞ்சலில் நம் மனம் சில நிமிடங்களாவது அமர்ந்தாடவே விழைகின்றது. அத்தகையை பல சிறுகதைக்கட்டுரைகள், கட்டுரைச் சிறுகதைகள் நிறைந்த புத்தகம்தான் ‘துணையெழுத்து’ என்ற இந்தப் புத்தகம்.  

தேர்ந்த வாசகரால்கூட எல்லாக் கட்டுரைகளையும் படித்துக் கடந்துவிட முடியாது. சில கட்டுரைகளில் அவர்களின் மனம் தங்கி, வாழ்ந்த பின்னரே கடக்கத் துணியும். 

‘ஹிரண்ய ஸ்நேகம்’ கட்டுரையில் இடம்பெறும் கூத்துக்கலைஞர் முத்து, ‘நிறமில்லாதொரு குடும்பம்’ கட்டுரையில் வீடுவீடாகச் சென்று கடன்வாங்கும் சிறுமி தேஜஸ், ‘இனி, நாம் செய்ய வேண்டியது என்ன?’ என்ற கட்டுரையில் வரும் புத்தகத் திருடர் சார்லஸ், ‘கடவுளின் சமையற்காரன்’ என்ற கட்டுரையில் மிளிரும் சமையற்காரர் திருலோகம், ‘வெப்போர்’ என்ற கட்டுரையில் அலைந்துதிரியும் ‘சேவற்கட்டு’ செல்லையா, காகிதக்கத்தி’ என்ற கட்டுரையில் எழுத்தாளருக்குச் சினத்தோடு கடிதம் எழுதும் மூர்த்தி ஆகியோருடன் சேர்ந்து வாழ்ந்த பின்னரே, அந்தக் கட்டுரைகளை நம்மால் கடந்துசெல்ல முடிகிறது.

காரணம், இவை வெறும் கட்டுரைகள் அல்ல; ஒருவகையில் மானுட வாழ்க்கையில் சிலருக்கு மட்டுமே வாய்த்துவிடும் பெருந்தருணங்கள். அவற்றை எழுத்தின் வழியாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர். இவர்களைப் பார்க்கும் போது, ‘நாம் இவர்களைப் போல இல்லை’ என்று நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளலாம்தான். ஆனால், அவர்களைப் போல நாமும் ஆக நமக்குச் சில தருணங்களே போதும். ‘வாழ்க்கை எப்போதும் நம்மைக் குப்புறக் கவிழ்த்தவே தருணம்  பார்த்துக்கொண்டிருக்கிறது’ என்பதை நாம் புரிந்து கொள்ளாமல்தான் இருக்கிறோம். அது நம்மைக் குப்புறக்கவிழ்த்தும்போது நாமும் சூதாட்டத்தில் காணாமல் போகும் கைப்பொருளாகிவிடக்கூடும்.

“நகரம் ஒரு சூதாட்ட பலகையைப் போலச் சுற்றிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன்வைத்து சூதாடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருட்கள் காணாமல் போகின்றன.”

நமது சமுதாயத்தின் ஒட்டுமொத்த மனவோட்டமே வெற்றியாளர்களைக் கொண்டாடுவதிலும் தோல்வியாளர்களைப் புறக்கணிப்பதிலும் செயல்பட்டு வருகிறது. ‘வாழ்வில்’ வெற்றி, தோல்வி என்பவைதான் என்ன?

உண்மையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? ஒரு கோல். ஒரு ரன்தானே! விளையாடத் தெரியாமலோ, தவறாக விளையாடியோ எவரும் தோற்பதில்லையே! வெற்றிபெற்றவரைவிடவும் தோற்றவரிடம்தான் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் போலிருக்கிறது. காரணம், வெற்றி விளையாட்டைப் பெருமை கொள்ளச் செய்கிறது. தோல்வி விளையாட்டைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒருமுறையாவது தோற்றவர்கள்தானே!

நாம் பிறரைப் பார்க்கும்போது அவர்கள் நம்மைவிட எல்லா வகையிலும் சிறந்தவர்களாக இருந்தால், நாம் நம்மையே தோற்றவர்களாகக் கருதிக் கொள்கிறோம். அவர்கள் நம்மைவிடப் பல வகையிலும் குறைந்தவர்களாக இருந்தால், நம்மை வெற்றிபெற்றவர்களாகக் கருதிக்கொள்கிறோம். இந்த ஒப்பீடே தவறுதானே? தோற்றவர், வெற்றிபெற்றவர் என்பது யாருடைய பார்வையில் நிர்ணயிக்கப்படுகிறது? ‘காலத்தின் பார்வை’ என ஒன்று உள்ளது. அதுதான் தீர்மானிக்க வேண்டும். அது கூறும்போது நாம் உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால், இறுதியில் காலத்தின் பார்வையே சரியான மதிப்பீடாக இருக்கும்.

உலக அளவில் நுண்நோய்சார்ந்த உயிரச்சம் பரவியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், நவீனத் தொழில்நுட்ப முறைசார்ந்த மருத்துவ முறைமைகள் எளிய மக்களின் மனங்களில் எழுப்பும் அச்ச அலைகளுக்கு அளவே இல்லை.

“உண்மையில் என்ன நடக்கிறது, நம்மைச் சுற்றி? அறியாமை தந்த பயத்தை விடவும் அதிகமாக அல்லவா இருக்கிறது நவீன மருத்துவம் தரும் பயம்! மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமாவது தனது கர்பத்தை அழித்துக்கொள்கிறதா என்ன? ஒரு கனியில் நூறு விதைகளுடன் மாதுளை வளரத்தானே செய்கிறது? உலகிலிருந்து கருணை விடைபெற்றுச் சென்று விட்டதா? உயிர் இத்தனை மலிவானதா? பயமாக இருக்கிறது.”

‘கருவாக்கம்’, ‘கருவழிப்பு’ என்பன இந்தக் காலக்கட்டத்தில்தான் மிக எளிதான கைச் செயலாகிவிட்டன. இங்குக் கருணைக்கு இடமேயில்லை.

உலக அளவில் மானுடக் கண்டுபிடிப்புகளுள் முதன்மையானவையாக இரண்டினைக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.

வாழ்வின் தராசில் யாவும் விற்பனைக்காக நிறுத்தப்படத் துவங்கிவிட்டன . நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலைபேசாமல் இருக்கிறோம் . சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும்தான் தெரியவில்லை .”

“உலகில் அன்பைவிடவும் மிருதுவான பகிர்தல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்ன? நன்றியும் நேசமும்தானே அன்பின் எளிய வெளிப்பாடுகள். கடற்பாசியைப் போல நன்றி எப்போதும் ஈரமிக்கதாகவும் நிசப்தமாகத் தன் இருப்பைக் காட்டிக்கொள்வதுமாகவே இருக்கிறது. மன்னிப்பும் நன்றியும்தான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள் என்றுகூடத் தோன்றுகிறது.”

பொருத்தருள்வதும் நன்றியுடன் இருப்பதும்தான் மனிதனின் வாழ்நாள் குறிக்கோள்களாகவும் குறிப்பாக, இன்றைய உடனடித் தேவைகளாகவும் இருக்கின்றன.

பலரும் தங்களின் பள்ளிநாட்களை அசைபோட்டு எழுதியிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னரும் தன்னுடைய பள்ளிக்குச் சென்று அந்தக் காலத்தைத் தன் மனத்தளவில் அனுபவித்துத் திரும்புவோரும் உண்டு. ஆனால், நீங்கள் படித்த பள்ளியை உங்கள் தலைமுறையினருக்குக் காட்டுங்கள் என்று யாராவது கூறியிருக்கிறார்களா?.  

சுற்றுலாத்தலங்களையும் வேடிக்கை மையங்களையும் குழந்தைகளுக்கு அழைத்துப் போய்க் காட்டுவதற்குப் பதிலாக ஒவ்வொருவரும் தமது பிள்ளைகளை ஒரு முறையாவது தான் படித்த பள்ளிக்கு அழைத்துப் போய்க் காட்ட வேண்டும் . அந்தப் பள்ளியின் மைதானத்தை , வகுப்பயிலிருந்து தெரியும் ஆகாசத்தை , பள்ளிக்கூட அணில்களை , டெஸ்க்கின் டிராயரில் சிந்திய பேனா மைக்கறையை , கைகளில் அடிவாங்கி தலைமையாசிரியரின் பிரம்பை , வகுப்பறையின் வாசனையை அவர்களும் தெரிந்துகொள்ளச் செய்ய வேண்டும் .”

செயற்கையை மட்டுமே பார்த்து வளரும் தலைமுறை செயற்கையாகவே தானே இருக்கும்!

நாம் குழந்தைகளைக் கோடைக்காலத்தில் தீம் பார்க்குகளில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சிக்கும் வடிவமைக்கப்பட்ட புல் தரைகளைக் காட்டுவதற்கும் தயாராக இருக்கிறோம். நம் வாழ்விடத்துக்கு அருகில் உள்ள வனத்தை, வனச் செல்வங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய விருப்பம் கொண்டிருக்கவில்லை.”

இந்தப் பத்தியில் அடுத்த தலைமுறையைப் பற்றிய எழுத்தாளரின் கவலை இழையோடி இருந்தாலும் நமது பொறுப்பின்மையின் மீது அவரின் சினம் படர்ந்தும் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இவரின் எழுத்துகளில் காதலையும் காதல் சார்ந்தவற்றையும் நாம் தேடித்தான் கண்டுபிடிக்க  வேண்டும். காதலைப் பற்றி எழுதுவதைவிட இந்தச் சமுதாயத்தில் மிகப் பல விஷயங்கள் அவசியத்தேவையாக இருப்பதால்தான் இவரின் எழுத்துகளில் காதல் பின்னுக்குச் சென்றுவிடுகிறது. ஆனாலும், இவர் காதல் பற்றித் தரும் சில மன அனுபவங்கள் சிலிர்ப்பைத் தருகின்றன.

தண்ணீரில் நீந்தும்போது எந்தத் திசையில் நீந்துகிறோம் என்றோ , எவ்வளவு ஆழத்தில் நீந்துகிறாம் என்றோ , எவ்வளவு தடவை கைகளை அசைத்துக் கொண்டிருந்தோம் என்றோ கணக்கிட்டுக்கொண்டா நீந்துகிறோம் ? இல்லையே ! காதலில் பேச்சும் அப்படித்தான் . அது நீராடல் போல முன்னும் பின்னுமாகப் போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருக்கிறது . தண்ணீருக்குள்ளேயே இருக்கிறோம் என்பதுதான் அதன் சுவாரஸ்யம் .”

எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளில் பெண்களின் மீதான பரிவும் பாசமும் படிந்திருக்கும். வீட்டுப் பணிகளைத் தனித்துச் செய்யும் சமையலறைப் பெண்கள், சாப்பிடக்கூட நேரமின்றிப் பணிக்குப் பறந்து கொண்டிருக்கும் அலுவலகப் பெண்கள், காதலுக்காக வதைபடும் இளம் பெண்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய பெண்கள் என எல்லாத் தரப்புப் பெண்களுக்காகவும் அவர் தன் எழுத்தின் வழியாக இந்தச் சமுதாயத்திடம் வாதாடிக்கொண்டுதான் இருக்கிறார்.

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு முறை இந்தியாவில் வீட்டு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க 2005 ஆம் ஆண்டில், ‘வீட்டு வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டம்’  இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் ஒரே வீட்டில் வசிக்கும் பெண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாழ்வில் ஒரு முறையாவது அடிவாங்காத பெண்கள் எவரது வீட்டிலாவது இருக்கிறார்களா என்ன ?”

இதற்கு முன்பாக இந்தத் தார்மீக வினாவை எந்தச் சமூக அக்கறையாளர் நம்மிடம் எழுப்பியிருக்கிறார்? அதற்காகவே, பெண்கள் இந்த எழுத்தாளரைக் கொண்டாடியே தீரவேண்டும்.

பேச்சுக்கும் மௌனத்துக்கும் ஓர் எல்லையையும் சில கட்டுப்பாடுகளையும் நமது சமுதாயம் விதித்துள்ளது. நாம் விரும்பியோ, விரும்பாமலோ அவற்றுக்குக் கட்டுப்பட்டுதான் வாழ நேர்ந்துவிடுகிறது. பேசுவதற்கு நமக்கு எத்தனை விதமான பயிற்சிகள் தேவைப்படுகிறதோ, அதைவிடக் கூடுதலான பயிற்சிகள் பேசாமல் இருப்பதற்கும் நமக்குத் தேவைப்படுகின்றன.

பாஷை மனிதரின் மகத்தான கண்டுபிடிப்பு . தண்ணீர் எப்படிப் பனியாகவும் காற்றாகவும் தண்ணீராகவும் மூன்று நிலைகளில் இருக்கிறதோ அப்படியே பேச்சும் உறைந்தும் மௌனமாகியும் சலசலத்து ஓடியும் மூன்று நிலையிலிருக்கிறது . பேச்சைக் கற்றுக்கொள்வதைப் போல மெளத்தை எளிதில்  கற்றுக்கொண்டுவிட முடியாது . பூக்கள் வாசனையால் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுபோல சொற்கள் இல்லாமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் மௌனம் .”

நமது ஆளுமையை நமது இருப்பின் வழியாகவும் செயலின் வழியாகவுமே நாம் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும்போல. நமது வெறும் பேச்சும் நீடித்த மௌனமும் எவற்றைச் சாதிக்க உதவும்? அவற்றால், நாம் அடையும் இழப்புகள்தானே மிகுதி!  

இவரின் எழுத்துகளுள் பெரும்பான்மை அவரின் தன்னனுபவம் சார்ந்து இருப்பதால், ஒருவகையில் அவை சிதறடிக்கப்பட்ட தன்வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களை ஒத்திருக்கின்றன. அவற்றுள் அவரின் புன்னகையும் கண்ணீரும் சம அளவில் கலந்தே இருக்கின்றன.

வாழ்வில் முதன் முறையாக ஒன்றும் அவமானப்படவில்லையே ! உறவினர்களால் , சொந்த மனிதர்களால் , நண்பர்களால் , குடும்ப விழாக்களில் , பண்டிகை நாட்களில் என எத்தனை முறை அவமதிக்கப்பட்டிருக்கிறேன் . உடலில் ஏற்படும் வடுக்கள் கண்ணில் தெரிவதுபோல அவமதிப்பின் வடுக்கள் தெரிவதில்லை . அது ஒன்றுதான் ஆறுதல் . ஒருவேளை அவமதிப்பின் வடுக்கள் உடலில் வெளிப்படையாகத் தெரியத் துவங்கினால் யாவரும் உடல் முழுவதும் வடுக்களோடுதான் இருப்பார்கள் என்று சுயசமாதானம் செய்துகொண்டேன் .”

‘இவரைவிட, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட எண்ணற்ற அவமானங்களைச் சுமந்தவர் எவராவது இருக்கிறாரா? இவரைப் போல இயற்கையால் வாழ்த்தப்பட்ட மனிதரை பார்த்திருக்கிறோமா?’ என்றுதான் எனக்குச் சிந்திக்கத் தோன்றியது. 

 ‘துணையெழுத்து’ என்ற இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதில் இவர் குறிப்பிட்டிருந்த பற்பல தகவல்களைப் பற்றி மனம் அசைபோடத் தொடங்கிவிட்டது. அதையும் இவரின் எழுத்துகளின் வழியாகவே சொல்வது என்றால்,

சரியாக மூடாத குழாயிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருப்பதுபோல , மனம் நிதானமாக ஒவ்வொன்றையும் யோசிக்கிறது

எனக் கூறலாம்.

‘துணையெழுத்து’ என்பது, அருகில் விழும் நிழலைப் போன்றது. இந்த உலகில் யாரும் தனித்து இல்லை. அவர்களுக்கு அவர்களின் நிழல் துணையிருக்கிறது – இந்த எழுத்தாளரின் எழுத்துகள் போலவே.

இத்தகைய எழுத்துகளைப் படித்தால், அவை படிக்கும்போது நமக்குத் தோன்றும் துணையாகவும் படித்த பின்னர்த் தோன்றாத் துணையாகவும் நம்முடனிருந்து, நம்மைச் சீர்வழியில் இயக்கும்

– – –

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2021 00:43

கடற்கரைக் காற்று

மலையாள எழுத்தாளர் சி.வி. பாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்தமான சிறந்த திரைப்படங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அது சினிமாவின் இடங்கள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா. சுவாரஸ்யமான புத்தகம். அதில் வரும் ஒரு கட்டுரையின் சிறுபகுதியை மீள்பிரசுரம் செய்கிறேன்

••

கடற்கரைக் காற்று

சி.வி. பாலகிருஷ்ணன்

தமிழில்:  ஸ்ரீபதிபத்மநாபா

••

ஒரு பத்திரிகையாளர் நடிகை ஷீலாவிடம் செம்மீன் படத்தின் கருத்தம்மா கதாபாத்திரத்தைக் குறித்துக் கேட்டார். ஷீலா இவ்வாறு பதில் சொன்னார்: ”அது கருத்தம்மாவின் படமில்லையே. செம்பன்குஞ்சுவின் படமில்லையா?”

நிஜம்தான். நுணுக்கமாகப் பார்க்கையில் செம்மீன் செம்பன்குஞ்சுவின் கதைதான். எளிய மனமுடைய ஒரு மீனவனின் வாழ்க்கை, பேராசைகள் மூலம் எப்படி இருளடைந்துபோனது என்பதைத்தான் அந்தப் படம் விவரிக்கிறது. கருத்தம்மாவோ பரீக்குட்டியோ பழனியோ எதிரிடும் துயரங்களைவிட தீவிரமானவை செம்பன்குஞ்சுவின் துயரங்கள். மலையாள சினிமாவில் நாம் கேட்டதிலேயே மிகவும் இதயத்தைத் தொடும் அழுகை, பைத்தியம் பிடித்து கடற்கரையில் அலைந்து திரியும் அந்தக் கையறுநிலைக் கிழவனின் அழுகைதான்.

செம்பன்குஞ்சு என்னும் பாத்திரப்படைப்புதான் செம்மீனை உலகளாவியதாக மாற்றுகிறது; கருத்தம்மா மற்றும் பரீக்குட்டியின் காதலினால் அல்ல. கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று வெளிநாட்டுப் பார்வையாளர்கள் கேட்டதாய்ச் சொல்கிறார்கள். அவர்களுக்கு அது புரியாதுதான். ஆழக்கடலில் மீன்பிடிக்கப் போன மீனவனின் பாதுகாப்பு, கரையிலிருக்கும் பெண்ணின் கற்பில்தான் இருக்கிறது என்னும் நம்பிக்கை அவர்களைப் பொறுத்தவரை அபத்தமான ஒன்றுதான். அவர்களுக்கு மனதைத் தொடும் அனுபவம் செம்பன்குஞ்சு செய்த பாவமும் அதன்மூலம் அவன் அடையும் தவிர்க்கமுடியாத துயரமும்தான்.

செம்பன்குஞ்சு தன் சொந்தப் படகில் மீன்பிடித்து முதன்முதலாக கரையை நெருங்கும் காட்சி திரைப்படமொழியின் உச்சபட்ச சாத்தியத்தின் சாட்சியாகிறது. படகு நிறைய மீன்களுடன் கரையை நெருங்கி வருகிற செம்பன்குஞ்சுவின் கண்களில் ஒரு அந்நிய பாவத்தைத்தான் நாம் காண்கிறோம். ரொக்கமாக நல்ல விலை கிடைக்காமல் மீன் தரமாட்டேன் என்று படகும் வலையும் வாங்க உதவி செய்த பரீக்குட்டியிடமே கறாராகச் சொல்கிற அவனுக்கு மனிதத்தன்மையே அந்நியம்தானென்பதை அவன் முகமே அறிவிக்கிறது. மீனுக்காக வந்த தன் மகள் பஞ்சமியை ஆவேசத்துடன் அவன் தள்ளி விலக்குகிறான். அப்போதே அவன் பைத்தியமாகிவிட்டான். கடற்கரைக் காற்றும் உறுமும் பெருங்கடலும் அதற்கு சாட்சியாகின்றன. அற்புதமான காட்சி அது. பல வருடங்கள் கழிந்தும் என் மனதில் அது மறையாமல் இருக்கிறது.

பதேர் பாஞ்சாலி’யில் கடைசி கட்டத்தில் இப்படியொரு காட்சி: மழை. சேப்பங்கிழங்கு செடியின் பெரிய இலையொன்றை தலைக்கு மேல் பிடித்தபடி சர்போஜயா மழையில் நடந்து வருகிறாள். குளத்துக்கு அருகேயுள்ள வழியில் ஒரு தேங்காய் விழுந்து கிடப்பது சர்போஜயாவின் கண்களில் படுகிறது. அதன் முன் நின்று படபடப்புடன் சுற்றிலும் பார்க்கிறாள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்தியபிறகு சர்போஜயா சட்டெனக் குனிந்து தேங்காயை எடுத்து சேலையால் அதை மறைத்துப் பிடித்து வீட்டை நோக்கி அவசரமாக நடக்கிறாள்.

பிபூதிபூஷன் பந்தோபாத்யாவின் நாவலிலிருந்து சத்யஜித்ரே அப்படியே எடுத்துக்கொண்ட காட்சியில்லை இது. நாவலின் பல விவரணைகளையும் அம்சங்களையும் திரைக்கதை அமைக்கும்போது விலக்கிவிட்ட ரே அவசியமென்று கருதிய சில நுணுக்கமான சித்தரிப்புகளை சேர்க்கவும் செய்தார். சர்போஜயாவின் இயலாமையை வெளிப்படுத்த ரே படமாக்கிய மிகச்சரளமான குறுங்காட்சியான இதுவும் அவைகளில் ஒன்று.

ஹரிஹரின் குடும்பத்துக்கு கொய்யாமரங்களும் பேரீச்சைகளும் மாமரங்களும் தென்னைகளும் கொண்ட ஒரு தோப்பு இருந்தது. அது கைநழுவிப் போகக் காரணமாயிருந்தது முன்னூறு ரூபாய் கடன்தான். இழந்துவிட்ட தோப்பை நினைத்து சர்போஜயாவுக்கு பெரும் வருத்தம் உண்டு. ஒரு காலத்தில் கூடைகூடையாக மாம்பழங்களும் தேங்காயும் கொய்யாப்பழங்களும் அவள் கண்முன்னாலேதானே கொண்டுபோகப்பட்டன. துர்கா ஒரு கொய்யாவைப் பறித்தாலே ஷிஜோபாவு கூவத்துவங்கிவிடுவாள்.

‘பதேர் பாஞ்சாலி’ துவங்குவதே கொய்யாப்பழம் பறித்த ஆறுவயது துர்காவை நோக்கி ஷிஜோபாவு சத்தமிடுவதிலிருந்துதான். துர்கா ஓடிவிடுகிறாள். பல வருடங்களுக்குப் பிறகு ஷிஜோபாவுவின் வீட்டிலிருந்து ஒரு நெக்லஸ் திருடுபோகும்போது துர்கா குற்றச்சாட்டுக்கு ஆளாவது தோப்பில் நடத்திய இந்தச் சிறு திருட்டுகளின் பின்னணியில்தான். ஷிஜோபாவு விசாரிப்பதற்காக துர்காவைப் பிடிக்கும்போது அவளுடைய கையில் என்னவோ இருக்கிறது. ஆவேசப்பட்டு அடிக்கக் கையை ஓங்கும் ஷிஹோ அத்தையின் பிடியிலிருந்து துர்காவை விலக்கும் சர்போஜயா அவளின் கைப்பிடிக்குள் என்னவென்று பார்க்கிறாள். உலர்ந்துபோன பழங்கள் மட்டுமே. அவை தன்னுடைய தோப்பிலிருந்து திருடப்பட்டவை என்று ஷிஜோபாவு கூறும்போது சர்போஜயா கேட்கிறாள்: எல்லாப் பழத்திலும் பேரெழுதி வைத்திருக்கிறதா என்ன? குழந்தைதானே அவள். கொஞ்சம் பழங்களை எடுத்ததை பெரிய விஷயமாக்க வேண்டுமா?

தொடர்ந்து ஷிஜோபாவு சொல்கிற அவச்சொற்கள் சர்போஜயாவை இடிபோல் தாக்குகின்றன. அவள் கோபத்தால் மூச்சு வாங்குகிறாள். பின்னணியில் துடியின் ஓசை உயரும்போது அவள் துர்காவின் முடியைப் பிடித்து இழுக்கிறாள். வயதான பிஷியாலும் அவளைத் தடுக்க முடியவில்லை. வராந்தாவில் நின்று அபு தன் அம்மாவின் கோபாவேசத்தைப் பார்க்கிறான். வலியால் துடிக்கின்ற துர்காவை வெளியே தள்ளி கதவைச் சாத்துகிறாள் சர்போஜயா. பிறகு துக்கத்துடன் அமைதியாய் விம்மி வெடிக்கும் சரபோஜயாவை நாம் பார்க்கிறோம். பிஷி கீழே உட்கார்ந்து சிதறிக்கிடக்கும் விளையாட்டு சாமான்களைப் பொறுக்கி எடுத்து துர்காவின் பெட்டியில் இடுகிறாள்.

பல காட்சிகள் கடந்தபிறகுதான் முன்னே குறிப்பிட்ட மழைக்காட்சி வருகிறது. மழையில் சேப்பஞ்செடியின் இலையை தலைக்குமேல் பிடித்தபடி சர்போஜயா வருகிறாள். கடுமையான வறுமையிலும் மிகுந்த சுயமரியாதையைப் பேணும் சர்போஜயா சுற்றுமுற்றும் பார்த்து நிலத்தில் விழுந்து கிடக்கும் தேங்காயை எடுத்து சேலைத் தலைப்பால் மறைத்துப் பிடித்து வீட்டுக்கு விரைந்து நடப்பதைப் பார்க்கையில், ஒரு நிமிடம், நம் நெஞ்சம் பதறுகிறது.

நன்றி :

சினிமாவின் இடங்கள்

சி.வி. பாலகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2021 00:35

June 3, 2021

இரண்டு ஜப்பானியர்கள்

புதிய சிறுகதை

அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது.

உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை ஒரு சுமோ பயில்வான் கூடக் கொடைக்கானலுக்கு வந்து நந்தகுமார் கண்டதில்லை. சுமோ பயில்வான்களின் சண்டையைத் தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்திருக்கிறான்.

எத்தனையோ ஜப்பானியர்கள் கொடைக்கானலுக்கு வந்து போயிருக்கிறார்கள். ஆனால் பொதுவெளியில் குடித்துப் போதை தலைக்கேறி கூச்சலிடும் ஒரு ஜப்பானியரை அவன் கண்டதில்லை. அவர்கள் சுய ஒழுக்கத்தை எப்போதும் பேணுகிறார்கள். நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பதில் தீவிரமாகயிருக்கிறார்கள்.

மேபல் விடுதி அறையிலிருந்து ரத்னபிரபாகர் போன் செய்து அந்த ஜப்பானியர்கள் டக்ளஸ் பங்களாவைப் பார்க்க விரும்புவதாகச் சொன்ன போது வெளியாட்களுக்கு இப்போது அனுமதியில்லை. இரண்டு வருஷங்களாக அனுமதி நிறுத்தப்பட்டுவிட்டது என்று தான் நந்தகுமார் சொன்னான்.

ஆனால் பிரபாகர் இவர்கள் டக்ளஸ் பங்களாவைக் காணுவதற்காக மட்டுமே ஜப்பானிலிருந்து வந்திருக்கிறார்கள். அரை மணி நேரம் போதும் என்கிறார்கள். சரியாகக் காலை ஏழு மணிக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்லி அவனைச் சம்மதிக்க வைத்தான்.

டக்ளஸ் பங்களா என்று அழைக்கப்படும் அந்த மாளிகை ஒரு வண்ணத்துப்பூச்சி ம்யூசியம். அப்படி ஒரு ம்யூசியம் இருப்பது கொடைக்கானலில் வசிக்கும் பலருக்கும் தெரியாது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எப்போதாவது அதைப் பார்வையிட வருவதுண்டு. ம்யூசியத்தைச் சுற்றிப் பார்க்க நூறு ரூபாய் கட்டணம்.

வண்ணத்துப்பூச்சிகளை நம் ஆட்களில் எவர் காசு கொடுத்துப் பார்க்கப்போகிறார்கள். சாலையோரம் தென்படும் மஞ்சள். வெள்ளை நீல வண்ணத்துப்பூச்சிகளையே யாரும் கவனித்துப் பார்ப்பதில்லை. அதன் அழகை ரசிப்பதில்லை. இந்த நிலையில் பாடம் செய்து வைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைக் காண யார் வரப்போகிறார்கள்.

பதினேழாயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி ரகங்கள் உலகில் இருக்கின்றன என்கிறார்கள். இந்த ம்யூசியத்தில் நான்காயிரம் விதமான வண்ணத்துப்பூச்சிகள் பாடம் செய்து வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய ஓவியங்களும், புத்தகங்களும் ஆராய்ச்சி குறிப்புகளும் அங்கிருந்தன.

ஜான் டக்ளஸ் தாம்சன் கண்டுபிடித்த வண்ணத்துப்பூச்சி ஒன்றுக்கு அவரது பெயரே வைத்திருக்கிறார்கள். அதையும் இந்த ம்யூசியத்தில் காணலாம்.

ஒரு மனிதனின் பெயரை எதற்காக வண்ணத்துப்பூச்சிக்கு வைக்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. பெயரில்லாத வண்ணத்துப்பூச்சிகள் என்ன செய்யும். வண்ணத்துப்பூச்சியை யார் பெயர் சொல்லி அழைப்பார்கள்.

அந்த ம்யூசியத்தின் பொறுப்பாளராக நந்தகுமாருக்கு வேலை கிடைத்தது தற்செயலானது. அவன் விலங்கியல் முதுகலை படித்துவிட்டு பெங்களூரிலுள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணி செய்து கொண்டிருந்த போது வண்ணத்துப்பூச்சிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினான். அது மெக்சிகோ வண்ணத்துப்பூச்சி ரகம் ஒன்றினைப் பற்றியது.

அந்தக் கட்டுரை லண்டனிலுள்ள ஆய்விதழ் ஒன்றில் வெளியானது. அதைப் படித்துத் தான் லாரா அவனுடன் தொடர்பு கொண்டாள்.

லாரா தாம்சன் தான் தற்போது டக்ளஸ் பங்களாவை நிர்வாகம் செய்து வருபவர். அந்த மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே ம்யூசியமாக மாற்றப்பட்டிருந்தது. மற்ற பகுதி லாராவின் உபயோகித்திற்காகப் பயன்படுத்தபட்டது. ஆண்டில் ஒரு மாதம் லாரா இந்தியா வருவார். அப்போது அந்த அறையில் தங்கிக் கொள்வதுண்டு. லாரா ஜான் டக்ளஸிற்கு என்ன உறவு என்று தெரியவில்லை. ஆனால் உயிலில் அத்தனை சொத்துகளும் அவளது பெயரில் தான் எழுதப்பட்டிருந்தது.

அவள் யாராக இருந்தாலும் நமக்கென்ன என்றே நந்தகுமார் நினைத்தான். நல்ல சம்பளத்துடன் வேலை. ம்யூசியத்தை ஒட்டிய சிறு அறை ஒன்றிலே தங்கிக் கொள்ளலாம். நல்ல சீதோஷ்ண நிலை. இந்த மூன்றும் சேர்ந்து அவனைக் கொடைக்கானலில் வேலையை ஏற்றுக் கொள்ள வைத்தன.

வேலைக்குச் சேர்ந்த சில நாட்களில் ஒருவர் கூட ம்யூசியத்திற்கு வராத போது எரிச்சலாக வந்தது. பேச்சுத்துணைக்குக் கூட ஆள் இல்லையே என்று ஏங்கினான். பாடம் செய்து வைக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டாலே வெறுப்பாக வந்தது.

பின்பு அவனாகத் தேவாலயத்தை ஒட்டி மெக்கானிக் ஷாப் வைத்துள்ள சாய் பிரசாத்துடன் நட்பு கொண்டான். அவன் வழியாகப் புதிய நண்பர்கள் உருவானார்கள். அவர்கள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ம்யூசியத்தை மூடிவிட்டு சீட்டு விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். சில நாட்கள் ஏழு மணி வரை சீட்டு தொடர்வதுண்டு. இரவில் குடி. போதையுடன் உறக்கம். சில நாட்கள் ஜீப்பில் மதுரைக்குப் போய்ச் சுற்றித் திரும்பி வருவதும் உண்டு.

மழைக்காலத்தில் ஒற்றை ஆளாகத் தங்கியிருப்பது நந்தகுமாருக்குச் சங்கடமாக இருந்தது. மழை என்றால் பேய் மழை. மரங்கள் முறிந்து விழுந்து சாலையில் போக்குவரத்து நின்றுபோகுமளவு மழை. ஜன்னல், கதவுகளை மூடி கட்டிலில் படுத்து கிடந்த போதும் காற்றின் வேகத்தில் கதவு பிய்த்து எறியப்படுமோ என்று பயமாக இருக்கும்.

குளிர்காலத்தில் மிகவும் ரம்மியாக இருக்கும். அவன் குளிரை மிகவும் ரசிப்பான். அதுவும் விடிகாலை நேரங்களில் அந்த மாளிகையை ஒட்டிய சாலையில் பனிப்புகையின் ஊடாக நடந்து செல்வது அத்தனை சுகமாகயிருக்கும். லாரா அவனது சம்பளத்தைத் தவறாமல் கொடுத்துவந்தாள். எப்போதாவது ஒரு முறை போனில் அவனுடன் பேசுவதுண்டு. எதற்காக இப்படி ஒரு ம்யூசியத்தை நடத்துகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒரு நாள் லாரா இனி பொதுமக்கள் யாரையும் ம்யூசியத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். ஆய்வாளர்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்று சொன்னாள்.

பொதுமக்கள் யார் வரப்போகிறார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டபடியே அப்படியே செய்துவிடுகிறேன் என்று நந்தகுமார் ம்யூசியத்தின் வாசலில் ஒரு அறிவிப்புப் பலகையை எழுதி வைத்தான். அதை எவரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

ஜான் டக்ளஸ் தாம்சனுக்கு எப்படி வண்ணத்துப்பூச்சிகளின் மீது ஆர்வம் உருவானது என்று தெரியவில்லை. மனிதர்களின் விசித்திரம் அவர்கள் எதில் எப்போதும் தீவிரம் கொள்வார்கள் என்று யாருக்கும் தெரியாது என்பதே.

அந்த ம்யூசியத்தில் இருந்த ஜான் டக்ளஸ் டயரியில் அவரது பயணக் குறிப்புகளும் வரைபடங்களும் இருந்தன தவிர அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்கள் அதிகமில்லை.

கிழக்கிந்திய கம்பெனியில் டாக்டராகப் பணியாற்றியவர் ஜான் டக்ளஸ் தாம்சன் தன் இருபது வயது முதல் உலகெங்கும் சுற்றியலைந்திருக்கிறார். சில காலம் அவர் சீனாவிலும் ஜப்பானிலும் மருத்துவராகப் பணியாற்றியிருக்கிறார். அதன்பிறகு மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு சித்திர எழுத்துக்கலைஞராக மாறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் ஜாவாவில் உள்ள பௌத்த மடாலயம் ஒன்றில் துறவியாகக் கழித்திருக்கிறார்.

பின்பு அங்கிருந்து வெளியேறி இலங்கையிலுள்ள குதிரைப்பண்ணை ஒன்றினை நிர்வாகம் செய்திருக்கிறார். பின்பு லண்டன் சென்று திருமணம் செய்து கொண்டு இளம்மனைவியோடு இந்தியா திரும்பி. பதினேழு ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுமதி நிர்வாகத்தினைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரது மனைவியின பெயரில் சொந்தக் கப்பல் ஒன்று இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் வணிகம் செய்தது. அதில் நிறையப் பொருள் ஈட்டினார். கல்கத்தாவில் பெரிய வீடு ஒன்று கட்டி குடியிருந்தார்.

ஜான் டக்ளஸ் கொடைக்கானலுக்கு எப்படி வந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது இறுதி ஆண்டுகள் முழுவதும் கொடைக்கானலில் கழிந்திருக்கின்றன. கையில் ஒரு வலையோடு அவர் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திப் போவதை உள்ளூர்வாசிகள் கண்டிருக்கிறார்கள். அவருக்குப் பூச்சி பிடிப்பவன் என்று தான் பட்டப்பெயர்.

இந்த மாளிகையை அவர் கட்டி நூற்றுப்பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தன. யாரெல்லாம் இதில் வசித்தார்கள் என்று தெரியவில்லை. குழந்தைகள் இருந்தது போன்ற அடையாளமேயில்லை.

ம்யூசியத்தின் நுழைவாயிலில் அவரது ஆள் உயர ஓவியம் ஒன்று இருக்கிறது. அந்த ஓவியத்தில் செம்பட்டை மயிர் கொண்ட நாயோடு அவர் நின்று கொண்டிருக்கிறார். நல்ல உயரம். கூர்மையான நாசி. சிறிய கண்கள். அவர் வைத்திருந்த தொப்பியில் ஒரு குயிலின் படம் வரையப்பட்டிருந்தது. ரசனையான மனிதராக இருந்திருக்கிறார் என்று நந்தகுமாருக்குத் தோன்றியது

பார்வையாளர்கள் வராத நாட்களில் நந்தகுமார் ம்யூசியத்திலிருந்த பழைய இதழ்களைப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பான். இன்னும் மனிதர்கள் கண்டறியாத வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. புதையல் தேடுவது போல அதைச் சிலர் தேடிக் கொண்டு தானிருக்கிறார்கள்.

நம்மைச் சுற்றி ஏராளமான உலகங்கள் தனித்தனியே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று வண்ணத்துப்பூச்சிகளின் உலகம். அதை நோக்கி ஒருவன் திரும்பிவிட்டால் அந்த உலகம் அவனை இழுத்துக் கொண்டுவிடும். இப்படி ஓராயிரம் உலகங்கள் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வேலை வீடு குழந்தைகள் சாப்பாடு தூக்கம் என்றிருக்கும் நமது உலகம் மட்டும் வாழ்க்கையில்லை. அதற்கு வெளியே அசாதாரணமாக நிறைய நடக்கவே செய்கின்றன

ஒருமுறை அந்தமானிலிருந்து வந்திருந்த ஆய்வாளர் ம்யூசியத்திலிருந்த வண்ணத்துபூச்சிகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு ஜான் டக்ளஸ் தாம்சன் இங்கிலாந்திற்குத் திரும்பிச் செல்லும் போது கடலில் நோயுற்று இறந்து போனார். அவரது உடலைக் கடலில் வீசிவிட்டார் என்ற தகவலைச் சொன்னார். பாவம். டக்ளஸ் தனது சொந்த ஊருக்குத் திரும்பாமலே இறந்து போயிருக்கிறார். கடலில் அவரது உடல் மிதப்பதைப் பற்றி நினைத்தபோது நந்தகுமாருக்கு வருத்தமாகவே இருந்தது

••

சரியாகக் காலை ஏழுமணிக்கு அந்த இரண்டு ஜப்பானியர்களும் ம்யூசியத்தின் வாசலில் நின்றிருந்தார்கள். நந்தகுமார் அப்போது தான் எழுந்திருந்தான். இன்னும் டீ கூடக் குடிக்கவில்லை. ஆனால் அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தான்.

இரண்டு ஜப்பானியர்களும் ஒன்று போலக் கறுப்பு நிற மேல்கோட்டு அணிந்திருந்தார்கள். உள்ளே வெள்ளை நிற சட்டை. சாம்பல் வண்ண பேண்ட். லெதர் பூட்ஸ்.. அவர்கள் அணிந்திருந்த கண்ணாடி கூட ஒன்றுபோலவே இருந்தது. ஒருவர் கையில் பெரிய லெதர் பை வைத்திருந்தார். மற்றவர் கோட்டில் தங்கத்தில் பறவை உருவம் பதித்த கிளிப் சொருகப்பட்டிருந்தது. அவர்களின் முகம் முழுமையான புத்துணர்ச்சியோடு இருந்தது. நந்தகுமார் அவர்களை வரவேற்றுப் பதிவேட்டில் அவர்களின் பெயர் விபரங்களை எழுதும்படி ஆங்கிலத்தில் சொன்னான்

நன்றி சொன்னபடியே இருவரில் தங்கப் பறவை கிளிப் சொருகியிருந்தவர் அழகான கையெழுத்தில் தன் பெயரை எழுதிவிட்டு  “என் பெயர் டாக்டர் வாட்னபே“ என்று அறிமுகம் செய்து கொண்டார்.

லெதர் பை வைத்திருந்தவர் அது போலவே கையெழுத்துப் போட்டுவிட்டு தன் பெயர் மசகோ டோகாவா என்று அறிமுகமானார்.

அவர்களிடம் ம்யூசியத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணத்தை வசூல் செய்துவிட்டு அவர்களின் பாஸ்போர்ட் நம்பரை பதிவு செய்தவற்காகக் கணிப்பொறியை நோக்கிச் சென்றான் நந்தகுமார்

அவர்கள் ம்யூசியத்தினுள் செல்லாமல் ஓரமாக ஏதோ யோசனையுடன் நின்றிருந்தார்கள்

“நீங்கள் உள்ளே போய் ம்யூசியத்தைச் சுற்றிப் பார்க்கலாம்“ என்றான் நந்து

“நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளைக் காண வரவில்லை“ என்று டாக்டர் வாட்னபே தாழ்ந்த குரலில் சொன்னார்

“வேறு என்ன வேண்டும்“ என்று குழப்பத்துடன் கேட்டான் நந்தகுமார்

“இங்கே ஜான் டக்ளஸ் தாம்சன் சேகரித்த கலைப்பொருட்கள் யாவும் இருக்கிறதா“

“ஆமாம். உள் அறை ஒன்றில் பூட்டி வைத்திருக்கிறோம்“

“அதை நாங்கள் பார்க்க முடியுமா“

“அதற்கு நீங்கள் முன்அனுமதி பெற வேண்டும்“

“பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டதாக அறிந்தே வந்தோம்“

“யார் சொன்னது அப்படி“ என்று கேட்டான் நந்தகுமார்

அவர்கள் ஒரு பழைய ஆங்கில வார இதழில் வெளியான கட்டுரையைக் காட்டினார்கள். அதில் அந்த ம்யூசியத்தைப் பற்றிய விபரங்களுடன் ஜான் டக்ளஸ் தாம்சஸின் கலைப்பொருட்கள் கொண்ட அலமாரிகளின் புகைப்படமும் வெளியாகியிருந்தது.

“2016ல் ஒரு திருட்டு நடந்துவிட்டது. அதன் பிறகு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை“

“நாங்கள் அந்தப் பொருட்களை ஒருமுறை கண்ணால் பார்த்தால் போதும்“

“என்னால் அனுமதிக்கமுடியாது. நீங்கள் இதன் உரிமையாளரைத் தான் தொடர்பு கொள்ள வேண்டும்“

“மூன்று முறை லாரா தாம்சனைத் தொடர்பு கொண்டோம். அவர் எங்களுக்குப் பதில் அளிக்கவில்லை. “

“அப்படியானால் உங்களை அனுமதிக்கமுடியாது. நான் ம்யூசியத்திற்கு மட்டுமே நிர்வாகி. “

“ஏழாயிரம் கிலோ மீட்டர் பயணித்து வந்திருக்கிறோம். ஒரேயொரு முறை பார்த்தால் போதும். “

“என்னால் அனுமதிக்க முடியாது. வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க விரும்பினால் சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்புங்கள்“ என்று கறாராகச் சொன்னான் நந்தகுமார்

“ஏன் கோவித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் மனது வைத்தால் எங்களுக்காக லாராவிடம் பேசி அனுமதி பெற முடியும் “

“நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாதே“

“நாங்கள் டோக்கியோ பல்கலைக்கழக கலைவரலாற்றுத் துறை ஆய்வாளர்கள். நான் முப்பது ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். இவர் ஒய்வு பெற்றுவிட்டார்“ என்று சொன்னார் மசகோ டோகாவா

அத்துடன் தனது லெதர் பையிலிருந்து நிறையப் புகைப்படங்கள். பேப்பர் கட்டிங் போன்றவற்றை எடுத்துக் காட்டினார்.

“லாரா லண்டனில் வசிக்கிறார். அவரை இப்போது தொடர்பு கொள்ள இயலாது. பாரீன் கால் பேசும் வசதி இங்கேயில்லை“

“ஒரு மெயில் அனுப்பிப் பாருங்கள்“ என்றார் டாக்டர் வாட்னபே

“லாரா உடனே பதில் தரமாட்டார். “

“நாங்கள் காத்திருக்கிறோம்“.

“அவர் உங்களை நிச்சயம் அனுமதிக்கமாட்டார். நீங்கள் கிளம்பலாம்“

“ஒருவேளை அனுமதித்தால். அது அதிர்ஷ்டம் தானே. காத்திருப்பது எங்களுக்குச் சிரமமான விஷயமில்லை“

“ஐம்பது ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்“ என்றார் டாக்டர் வாட்னபே

“இதற்கு முன்பு எப்போதாவது இங்கே வந்திருக்கிறீர்களா“

“1993ல் டாக்டர் இஷிகவா வந்திருக்கிறார். அவர் மிகப்பெரிய கலை ஆய்வாளர். இஷிகவா ஆண்டுக்கு ஒருமுறை இங்கே வருவது வழக்கம். 2015ல் இறந்துவிட்டார். அவரைக் கடைசி வரை கலைப்பொருட்களைப் பார்வையிட அனுமதிக்கவேயில்லை“ என்று வருத்தமான குரலில் சொன்னார் டாக்டர் வாட்னபே

“அது தெரிந்தும் நீங்கள் ஏன் அனுமதி பெறாமல் வந்திருக்கிறீர்கள்“

“தண்ணீர் சொட்டுச் சொட்டாக விழுந்து கல் கரைந்திருக்கிறது என்று கேள்விப்பட்டதில்லையா“ என்று சொன்னார் மசகோ டோகாவா

“வீண் நம்பிக்கை. இங்கே முறையான அனுமதி பெறாமல் எதையும் காண முடியாது. ம்யூசியம் முழுவதும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இங்கே வரும் அனைவரும் பதிவு செய்யப்படுகிறார்கள். என்னால் உங்களுக்கு உதவ முடியாது“ என்று அழுத்தமா குரலில் சொன்னான் நந்தகுமார்

“நாங்கள் ஆய்வாளர்கள். திருடர்களில்லை“ என்று பணிவாகச் சொன்னார் டாக்டர் வாட்னபே

“திருடர்கள் யாரும் பகலில் இப்படிக் கதவைத்தட்டி உள்ளே வருவதில்லை“ என்றான் நந்தகுமார்.

“எங்களுக்காக இந்த உதவியை நீங்கள் செய்ய வேண்டும். ஒருவேளை லாரா அனுமதி தர மறுத்துவிட்டால் நாங்கள் புறப்பட்டு விடுகிறோம்“.

“சரி, உங்களுக்காக மெயில் அனுப்பிப் பார்க்கிறேன். பதில் கிடைத்தால் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்“

“மேபல் ஹோட்டலுக்குத் தெரிவித்துவிடுங்கள். உடனே கிளம்பி வந்துவிடுகிறோம் “என்றார் மசகோ டோகாவா

விருப்பமில்லாமல் தலையாட்டினான் நந்தகுமார்

அவர்கள் நன்றி தெரிவித்தபடியே வாசலுக்கு வந்தார்கள். திடீரென ஏதோ மனதில் தோன்ற அவர்களிடம் “தேநீர் அருந்துகிறீர்களா“ என்று கேட்டான் நந்தகுமார்

சரியெனத் தலையாட்டினார்கள்.

“உட்காருங்கள் கொண்டுவருகிறேன்“ என்று அவன் தன் அறையை நோக்கி நடந்தான்

அவர்கள் இருவரும் இரண்டு நிழல்கள் அமர்ந்திருப்பது போல இருக்கையில் சலனமின்றி அமர்ந்திருந்தார்கள்

அவன் கொடுத்த தேநீரைக் கையில் வாங்கிக் கொண்டு மசகோ சொன்னார்

“உங்கள் அன்புக்கு நன்றி. “

அது போலவே நன்றி தெரிவித்தபடியே டாக்டர் வாட்னபே தேநீரை வாங்கிக் கொண்டார். உதட்டு நுனியில் தேநீர் கோப்பையை வைத்துச் சப்தமில்லாமல் துளித்துளியாகத் தேநீரை அவர்கள் ருசித்துக் குடிப்பதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். இதில் கூடவா இத்தனை நேர்த்தி. கவனம்.

“நீங்கள் வந்த கார் எங்கே நிற்கிறது“ என்று கேட்டான் நந்தகுமார்

“நாங்கள் விடுதியிலிருந்து நடந்தே வந்தோம். நாம் விரும்பும் விஷயம் நடக்க வேண்டும் என்றால் இப்படிப் பாதயாத்திரை செய்வது வழக்கம் தானே“ என்றார் வாட்னபே.

மேபல் விடுதியிலிருந்து இந்த ம்யூசியம் எப்படியும் பத்துகிலோ மீட்டர் இருக்கும். அவ்வளவு தூரம் விடிகாலையில் நடந்துவந்திருக்கிறார்கள். அப்படி என்ன தேடுகிறார்கள். எதற்காக இந்த வேண்டுதல் என்று புரியவில்லை.

தாம்ஸனின் கலைப்பொருட்களைப் பார்க்காமல் போகிறோமே என்ற துளி வருத்தம் கூட அவர்கள் முகத்தில் இல்லை. பள்ளிவிட்டு வீடு திரும்பும் சிறுவர்களைப் போலவே உற்சாகத்துடன் அவர்கள் மேபல் விடுதியை நோக்கி நடந்தார்கள்.

அவர்கள் சென்றபிறகு ஜான் டக்ளஸ் தாம்ஸனின் கலைப்பொருட்கள் இருந்த உள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்று நந்தகுமார் பார்வையிட்டான். சீனவிசிறிகள். வெண்கலத்தால் செய்த புத்தர் சிலை, பறவை வடிவிலான உலக்கை,கிரேக்க காதலர் சிற்பம், அஸ்டக்குகளின் தலைக்கவசம், பாபிலோனிய வெண்கலக் கண்ணாடி, டிராகன் கிண்ணம், முகலாய மதுக்கோப்பைகள். வெண்கல பதுமைகள், பிரெஞ்சு கண்ணாடி சிற்பங்கள். ஐந்து தலை நாகச்சிலை, கப்பலில் பயன்படுத்தபடும் தொலைநோக்கிகள். பழைய சுவர்கடிகாரங்கள். தாந்திரீக பதுமைகள். பௌத்த பிரார்த்தனை மணி. தந்தத்தில் செய்த அலங்காரப்பெட்டி பழைய காலத் துப்பாக்கிகள். குறுங்கத்திகள். மணற்கடிகாரம். அரபு நாட்டுச் சதுரங்கப்பலகை. ஹவாய் இறகுத் தொப்பி என விநோதமான பொருட்கள் மூன்று அலமாரிகள் நிறைய இருந்தன.

இதில் சில பொருட்களை அவனால் அடையாளம் காணவே முடியவில்லை. இதில் எதைத் தேடி அந்த ஜப்பானியர்கள் வந்திருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

ஒரு ஆராய்ச்சிக்காக முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஜப்பானியர்கள் அலைந்து கொண்டிருப்பது அவர்கள் மீது பரிவை ஏற்படுத்தியது. அன்று மாலை லாராவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். அதில் டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களைப் பற்றி மிக உயர்வாக எழுதியிருந்தான்.

மறுநாள் காலை அதே ஏழு மணிக்கு அழைப்பு மணி அடிக்கும் சப்தம் கேட்டுப் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தபோது புன்சிரிப்புடன் அதே இரண்டு ஜப்பானியர்கள் காலை வணக்கம் சொன்னார்கள்.

“லாராவிடமிருந்து பதில் வரவில்லை“ என்று தூக்க கலக்கமாகச் சொன்னான் நந்தகுமார்

“நல்லது. வளாகத்தின் நுழைவாயிலில் நிறையக் காய்ந்த சருகுகள் நிரம்பிக் கிடக்கின்றன. படிகளில் கூட ஒரே அழுக்கு. ஒரு துடைப்பானும் வாளியும் தரமுடியுமா“ என்று கேட்டார் மசகோ

“நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். சுத்தம் செய்ய ஆள் இருக்கிறார்கள்“ என்று மறுத்தான் நந்தகுமார்.

“எங்களால் முடிந்த உதவி“ என்றபடியே அவர்கள் வெளியே இருந்த இரும்பு வாளி. துடைப்பான். பெருக்குமாறு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நுழைவாயிலை நோக்கி நடந்தார்கள்

நந்தகுமாரால் அவர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பிறகு அவன் நுழைவாயில் அருகே சென்றபோது சுத்தமாகத் துடைக்கப்பட்டிருந்தது. தொட்டிச்செடிகளை வெயில்படும்படி சரியாக அடுக்கியிருந்தார்கள். தண்ணீர் குழாயின் அடியில் படிந்திருந்த பாசியைச் சுத்தமாக அகற்றியிருந்தார்கள். அவர்கள் இருவரும் பெரிய பேராசிரியர்கள் என்பது வியப்பாக இருந்தது

அன்றும் அவர்கள் நந்தகுமாருடன் தேநீர் அருந்தினார்கள். டாக்டர் வாட்னபே தயக்கத்துடன் கேட்டார்

“உங்களைச் சிரமப்படுத்துகிறோம்.இன்னொரு முறை லாராவிற்கு மெயில் அனுப்ப முடியுமா “

“நேற்று அனுப்பிய மெயிலுக்குப் பதில் இல்லை. மறுபடியும் அனுப்பினால் கோவித்துக் கொள்வார்“

“அதுவும் சரி தான். நாங்கள் காத்திருக்கிறோம்“.

என்றபடி அவர்கள் மேபல் விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஐந்து நாட்கள் இப்படி அவர்கள் காலை மாலை என்று ஏதாவது ஒரு நேரம் அவனைத் தேடி வந்து நின்றார்கள். ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு புதிய மலர்ச்செடி ஒன்றைக் கொண்டுவந்து தோட்டத்தில் நட்டுவைத்தார்கள். இன்னொரு நாள் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை மண் அள்ளிப் போட்டுச் சரிசெய்தார்கள். இன்னொரு நாள் ஒரு கட்டு ஊதுபத்தி வாங்கி வந்து ம்யூசியத்தில் ஏற்றி வைத்து நறுமணம் கமழச் செய்தார்கள். அவர்களிடம் ஏமாற்றத்தின் அடையாளமேயில்லை. காத்திருப்பின் வலியை அவர்கள் கடந்து சென்றுவிட்டார்கள். சந்தோஷமாக அதை எதிர்கொண்டார்கள்.

ஆறாம் நாளில் காலை அவர்கள் வந்த போது நந்தகுமார் சொன்னான்

“லாரா உங்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். காலையில் தான் மெயில் வந்தது. இதற்கு மேல் நீங்கள் அலைவது வீண். “

“நன்றி. நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி. அடுத்த ஆண்டு நிச்சயம் அனுமதியோடு வருவோம். “

“இதில் வருத்தமேயில்லையா“

“நாம் விரும்பும் போது மழை பெய்யுமா. அல்லது முழுநிலவு தோன்றுமா. அது நடக்கும் போது தான் நடக்கும். காத்திருக்க வேண்டியது நமது கடமை. “

“உங்களை ஏமாற்றத்துடன் அனுப்ப மனம் வரவில்லை“.

“இதில் ஏமாற்றம் ஒன்றுமில்லை. இன்னும் சில காலம் கூடுதலாகக் காத்திருக்கப்போகிறோம். அவ்வளவு தான்“

“நீங்கள் புகைப்படம் எதுவும் எடுக்கமாட்டீர்கள் என்றால் நான் ஒரு யோசனை சொல்வேன்“

“கேமிரா எதையும் நாங்கள் கொண்டுவரவில்லை. “

“நான் உங்களை ஜான் டக்ளஸின் கலைப்பொருட்கள் உள்ள அறைக்கு அழைத்துப் போகிறேன். நீங்கள் ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம்“

அதைக்கேட்டவுடன் அவர்கள் கண்கள் விரிந்தன. உடலைக் குனிந்து வணங்கி நன்றி சொன்னார்கள்

நந்தகுமார் கண்காணிப்பு கேமிராவின் இணைப்பை தற்காலிமாகத் துண்டித்துவிட்டான். பின்பு அவர்களை உள் அறைக்குள் கூட்டிச் சென்றான். அவர்கள் நிதானமாகக் கண்ணாடி அலமாரியினுள் இருந்த பொருட்கள் ஒவ்வொன்றாகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறந்த குழந்தையைக் காணும் தந்தையைப் போலிருந்தது அவர்களின் செய்கை.

மூன்றாவது அலமாரியைப் பார்த்தபோது அவர்கள் முகம் மலர்ந்தது

டாக்டர் வாட்னபே மகிழ்ச்சியோடு சொன்னார்

“இதோ இருக்கிறது“

மசகோ அதை வியப்புடன் பார்த்தபடியே “ஆஹா. அற்புதம்“ என்று வியப்பில் ஆழ்ந்து போனார். அவரது கண்கள் எவ்வளவு விரிய முடியுமோ அவ்வளவு அகன்று விரிந்தன.

அப்படி என்ன வியந்து பார்க்கிறார்கள் என்று நந்தகுமாரும் எட்டிப்பார்த்தான்

அது ஒரு பூக்குவளை. அடர்நீல வண்ணபூக்குவளை. அரையடி உயரத்திலிருந்தது. இதில் என்ன இருக்கிறது என்று இப்படி வியந்து பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை.

மசகோ தயக்கமான குரலில் கேட்டார்

“அந்த பூக்குவளையை வெளியே எடுத்து காட்ட முடியுமா“

நந்தகுமார் பூக்குவளையை வெளியே எடுத்துக் அவர்களின் கைகளில் கொடுத்தான். தெய்வ விக்ரகம் ஒன்றை வாங்கிக் கொள்வது போலப் பரவசத்துடன் அதைக் கையில் வாங்கிக் கொண்டார்கள்.

டாக்டர் வாட்னபே தனது கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு லென்ஸை எடுத்து அந்தப் பூக்குவளையை ஆராய்ந்து பார்த்தார்.

“கொக்கு முத்திரையிருக்கிறது. இது தாஷிமாவின் பூக்குவளையே தான்“

மறுநிமிஷம் அவர்கள் இருவரும் அந்தப் பூக்குவளையைத் தரையில் வைத்து அதன் முன்னால் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் கண்கள் கலங்கியிருந்தன. மூன்று முறை அவனுக்கு நன்றி சொன்னார்கள். பின்பு அந்தப் பூக்குவளையைக் கையில் எடுத்துச் சுற்றிச்சுற்றி நுட்பமாகப் பார்த்தபடியே இருந்தார்கள்

“விலை மதிப்பு மிக்கக் குவளையா“ என்று நந்தகுமார் கேட்டேன்

“இதற்கெல்லாம் விலையே கிடையாது. உலகில் இது போன்ற பூக்குவளை இன்னொன்று கிடையாது“

“என்ன சொல்கிறீர்கள்“

“இது உராசாகி தாஷிமா என்ற ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பக்கலைஞர் செய்த பூக்குவளை. இது போல மூன்றே மூன்று பூக்குவளைகளைத் தான் செய்திருக்கிறார். அதில் இரண்டு மன்னருக்குப் பரிசாக அளிக்கபட்டன. அது மன்னரின் படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்தது. மலர்கள் வெறும் அலங்காரத்திற்கானவையில்லை. அவை முழுமையின் அடையாளம். ஒவ்வொரு மலரும் ஒரு ரகசியம். மலரென்பது அசாத்தியத்தின் அழகு. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது அந்தப் பூக்குவளைகள் உள்ளிட்ட விலை மதிக்கமுடியாத பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன. தாஷிமா செய்த மூன்றாவது பூக்குவளையை அவரது மகள் அயகாவிற்குப் பரிசாக அளித்திருக்கிறார். அவள் பதிமூன்று வயதில் நோயுற்று இறந்து போகவே இந்தக் குவளையும் அவளுடன் புதைக்கப்பட்டுவிட்டது. சில காலத்தின் பின்பு அந்தப் புதைமேட்டிலிருந்து பூக்குவளையை யாரோ திருடி விற்றுவிட்டார்கள் என்று படித்திருக்கிறோம். அதன்பிறகு தாஷிமாவின் பூக்குவளையைக் கண்டறிய முடியவில்லை. இந்தத் தேடல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது . எவர் கண்ணிலும் படவில்லை. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் இதைக் கண்ணால் பார்த்துவிட்டோம். “

“அப்படி என்ன இந்தப் பூக்குவளையில் அதிசயம்“ என்று கேட்டான் நந்தகுமார்

“இந்த பூக்குவளையில் வைக்கப்படும் மலர்கள் வாடவே வாடாது. அத்தோடு மலர்கள் ஒளிரும் என்பார்கள்“.

“நிஜமா“ என்று வியப்புடன் கேட்டான்

“அது தான் தாஷிமாவின் சிறப்பு. கலையின் உச்சத்தில் அது மாயத்தை உருவாக்கவே செய்யும். நீங்கள் விரும்பினால் பரிசோதனை செய்து பார்க்கலாம். “

“இது தான் தாஷிமாவின் பூக்குவளை என்று எப்படிச் சொல்கிறீர்கள்“

“இந்தப் பறவையைப் பாருங்கள். அதன் கண்களுக்குள் ஒரு எழுத்து இருக்கிறது. அது தாஷிமாவின் மகள் பெயரைக் குறிக்கும் அடையாளம். “

பறவையின் கண்ணே மிகச்சிறியதாக இருந்தது. அதற்குள் ஒரு கோடு போல ஏதோ கிறுக்கலாகத் தெரிந்தது. வாட்னபே தனது லென்ஸை வைத்து அந்தப் பறவையின் கண்ணில் தெரியும் எழுத்தைக் காட்டினார். எழுத்தையே சித்திரமாக்கியிருந்தார்கள். எவ்வளவு மகத்தான கலைநுட்பம்

வாட்னபே மேலும் சொன்னார்

“இந்த மலர்களைப் பாருங்கள். அதில் மூன்றாவது மலரில் ஒரு இதழ் குறைவாக இருக்கும். அதுவும் தாஷிமாவின் சிறப்பு. அவரது மூன்றாவது வயதில் அவரது அம்மா இறந்து போனாள். அந்த நினைவாக அவர் உருவாக்கிய கலைப்பொருட்களில் எப்போதும் மூன்றாவது மலர் முழுமையாக இருக்காது“

“ஆச்சரியம்“ என்றான் நந்தகுமார்

“இந்த பூக்குவளை எப்படி ஜான் டக்ளஸ் தாம்சனுக்குக் கிடைத்தது என்று தெரியவில்லை. ஆனால் இதன் மதிப்பை உணராமல் அவர் ஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிறார்“ என்றார் மசகோ டோகாவா

“அது உண்மை. தாம்சனுக்கு இந்தப் பூக்குவளையினைப் பற்றித் தெரிந்திருந்தால் அது இந்நேரம் இங்கிலாந்து போயிருக்கும். ஒருவேளை ஏதாவது ம்யூசியம் விலைக்கு வாங்கியிருக்கவும் கூடும். “

“தாஷிமாவின் பூக்குவளை இங்கேயிருக்கிறது என்று உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது“

“வாரப்பத்திரிக்கையில் வந்த டக்ளஸ் ம்யூசியம் பற்றிய புகைப்படத்தில் இந்தப் பூக்குவளையை அடையாளம் கண்டு கொண்டவர் டாக்டர் இஷிகவா. அவரால் நேரில் பார்த்து உறுதி செய்யாமல் இதை உலகிற்கு அறிவிக்க முடியவில்லை. ஆகவே ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர் ஆண்டுதோறும் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். அவரது வாழ்வின் இறுதி வரை அவரால் இதைக் காண முடியவில்லை. அவரது மாணவர்கள் என்ற முறையில் நாங்கள் அதைத் தேடிக் கொண்டிருந்தோம். புத்தரின் கருணை இன்று அதைச் சாத்தியமாக்கியது. “

நந்தகுமாருக்கு அவர்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்படும் அளவிற்கு அந்தப் பூக்குவளையில் என்ன இருக்கிறது என்றே தோன்றியது. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருளாக இருந்தால் என்ன. அதற்காகக் கண்ணீர் விடுவார்களா. இப்படி ஆண்டுக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து தேடிக் கொண்டிருப்பார்களா. என்ன முட்டாள்தனமிது.

“இதன் மதிப்பு எவ்வளவு லட்சமிருக்கும்“ என்று மறுபடியும் கேட்டான் நந்தகுமார்

“இதைப் பணத்தால் மதிப்பிட நாங்கள் விரும்பவில்லை. உங்கள் குழந்தை எவ்வளவு பணம் பெறும் என்று நீங்கள் மதிப்பீடு செய்வீர்களா“ என்று கேட்டார் டாக்டர் வாட்னபே.

இது என்ன அசட்டுத்தனம். குழந்தையும் பூக்குவளையும் ஒன்றாகிவிடுமா என்ன. நந்தகுமார் அவர்களிடமிருந்த பூக்குவளையைத் தன்னுடைய கையில் வைத்துப் பார்த்தான். சாதாரணப் பழைய கலைப்பொருள். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. பாடம் செய்துவைக்கபட்ட வண்ணத்துப்பூச்சி போலத் தான் இதுவும்.

அவர்கள் மிகுந்த பணிவுடன் அவனுக்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2021 23:59

நிறைவேறும் கனவுகள்

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும்.

ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும்

மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அரசு அமைத்திருப்பதன் அடையாளமிது.

பெருந்தொற்றின் இடர் சூழ்ந்த காலத்தினுள்ளும் எழுத்தாளர்களின் நீண்ட காலக்கோரிக்கைகளை ஒரே உத்தரவில் நிறைவேற்றி எழுத்துலகை மகிழ்ச்சிப்படுத்தியது போற்றுதலுக்குரிய செயல்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2021 05:12

நினைவேறும் கனவுகள்

தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும்.

ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும்

மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அரசு அமைத்திருப்பதன் அடையாளமிது.

பெருந்தொற்றின் இடர் சூழ்ந்த காலத்தினுள்ளும் எழுத்தாளர்களின் நீண்ட காலக்கோரிக்கைகளை ஒரே உத்தரவில் நிறைவேற்றி எழுத்துலகை மகிழ்ச்சிப்படுத்தியது போற்றுதலுக்குரிய செயல்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2021 05:12

June 2, 2021

மறையாத அதிகாரம்

.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது இலங்கையின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் குறுநில மன்னர்களைப் போல மக்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரின் கதையைத் தான் Elephant Walk திரைப்படம் விவரிக்கிறது.

படம் ஜான் வைல் என்ற தேயிலைத் தோட்ட உரிமையாளர் இங்கிலாந்திற்கு வருவதில் துவங்குகிறது. அங்கே ரூத் என்ற வாடகை நூலகத்தினை நடத்தி வரும் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் வைல்.

ரூத்திற்கு இலங்கையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகவே அவள் கனவுகளுடன் புதுவாழ்க்கையைத் துவங்க இலங்கை புறப்படுகிறாள். தேனிலவு முடிந்து அவர்கள் இலங்கையில் சென்று இறங்குகிறார்கள்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தால் அவர்களை வரவேற்க கார் காத்திருக்கிறது. மலைப்பாதையில் நீண்ட பயணம். இயற்கையின் சொர்க்கமாகத் திகழும் இலங்கையினுள் அவர்கள் பயணிக்கிறார்கள். கண்டியை நோக்கி அந்தப் பயணத்தின் ஒரு இடத்தில் காட்டு யானை ஒன்று குறுக்கே வருகிறது. ரூத் பயந்துவிடுகிறாள். ஆனால் ஜான் துப்பாக்கியால் சுட்டு யானையை விரட்டியடிக்கிறான். இது போன்ற மூர்க்க விலங்குகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும். ஆனால் தேசத்தின் அடையாளம் என அதை அரசு அனுமதிக்காது என்று கோபமாகச் சொல்கிறான். ஜானின் கோபத்தைக் கண்டு ரூத் பயந்து போய்விடுகிறாள்.

பிரம்மாண்டமான மாளிகையாக உருவாக்கப்பட்டுள்ள தனது எலிஃபண்ட் வாக் பங்களாவுக்கு மனைவியை அழைத்துச் செல்கிறான். அது யானை வலசை வரும் பாதையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வீட்டில் அப்புஹாமி என்ற பொறுப்பாளர் அறிமுகமாகிறார். அப்புசாமி தான் அப்புஹாமியாகிவிட்டார் என்று தோன்றுகிறது. அவரது உடை மற்றும் ஒப்பனைகள் அவரைத் தமிழராக அடையாளம் காட்டுகிறது. படத்தின் பல காட்சியில் வேலையாட்கள் தமிழ் பேசுகிறார்கள். தேயிலை பறிப்பவர்களுடன் தமிழில் தான் கங்காணி உரையாடுகிறான்.

எலிபண்ட் வாக் என்ற மாளிகை ஒரு அடையாளம். அது பிரிட்டிஷ் அதிகாரத்தின் குறியீடு. அந்த மாளிகையில் அந்த மலையகப்பகுதியில் உள்ள வெள்ளைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். மது அருந்துகிறார்கள். ஒன்றாக விளையாடுகிறார்கள். அந்த வீடு ஒரு உல்லாச விடுதி போலவே செயல்படுகிறது

ஒரு காட்சியில் ரூத் அந்த வீட்டின் பிரம்மாண்ட சமையலறையைப் பார்வையிடுகிறாள். அதில் தான் எத்தனை விதமான உணவு வகைகள். சேமிப்பு அறையில் விதவிதமான பொருட்கள், மதுவகைகள்.

ரூத்திற்கு அந்த வீடு கிள போலச் செயல்படுவது பிடிக்கவில்லை. அதை மாற்ற முயல்கிறாள். ஆனால் ஜான் வைல் அதை விரும்பவில்லை. அவன் மனைவியைக் கோவித்துக் கொள்கிறான். வீட்டு விவகாரம் எதிலும் அவள் தலையிடக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிடுகிறான். இதில் மனமுடைந்து ரூத் கண்ணீர் விடுகிறாள்.

அந்த வீட்டின் நிர்வாகப் பொறுப்பு முழுமையாக அப்புஹாமி வசமிருக்கிறது. அவர் அந்த வீட்டில் ஒரு அறைக்குள் மட்டும் ரூத்தை அனுமதிப்பதில்லை. அது வைலின் தந்தையின் அறை. எப்போதும் அது பூட்டப்பட்டேயிருக்கிறது. அதற்குள் அப்புஹாமி ஒருவர் மட்டுமே போய் வருகிறார். உள்ளே என்ன இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள ரூத் முயல்கிறாள்.

இதற்கிடையில் வைலின் தாய் இலங்கையில் வசிக்க விரும்பவில்லை என்றும் அவள் பிரசவத்தில் இறந்து போனாள் என்பதையும் ரூத் கண்டறிகிறாள்.

அந்த மாளிகையின் ஒரு பக்கம் ஜான் வைலின் தந்தை டாம் வைலின் கல்லறை இருக்கிறது. அதை அப்புஹாமி பராமரிக்கிறார். இன்றும் டாம் வைலிற்குப் பிடித்தமான சுருட்டு, பிடித்தமான மதுவகைகள் வாங்கப்படுகின்றன.

டாம் வைல் மறைந்துவிட்ட போதும் அவரது அதிகாரம் மறையவில்லை. அவர் தான் இன்றும் அந்த வீட்டினை ஆட்சி செய்கிறார் என்பதை ரூத் நன்றாக உணர்ந்து கொள்கிறாள். அவளால் அதை ஏற்க முடியவில்லை. புதிய மாற்றங்களை உருவாக்க முனைந்து தோற்றுப்போகிறாள்.

இதற்கிடையில் விளையாட்டு ஒன்றின் போது ஜான் கால் முறிவு கொள்கிறான்

சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரை ஜான் கோவித்துக் கொள்கிறான். அவன் அப்படித்தான். அந்தக் கோபம் தந்தையிடமிருந்து உருவானது என்கிறார் டாக்டர். ரூத்திற்கு டாம் வைல் மீதான எண்ணம் மேலும் மோசமடைகிறது

இதற்கிடையில் அந்தத் தேயிலை தோட்டத்தில் வேலைசெய்யும் டிக் கார்வருடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள். அவன் தன்னோடு லண்டனுக்கு வந்துவிடும்படி அவளை அழைக்கிறான். ஆனால் ஜானை விட்டு விலக அவள் விரும்பவில்லை. ஆனாலும் ஜானின் மூர்க்கத்தைத் தாங்க முடியாமல் ஒருந நாள் அவனை விட்டு விலகி டிக் கார்வருடன் செல்ல முடிவு எடுக்கிறாள்.

இந்த நிலையில் எதிர்பாராமல் காலரா மலையகத்தைத் தாக்குகிறது. நிறையப் பேர் இறந்து போகிறார்கள். குடியிருப்புகள் காலியாகின்றன. மருத்துவச் சிகிச்சைகளுக்கான உதவிகளை ஜான் முன்னின்று செய்கிறான். ரூத் தானும் ஒரு நிவாரணப் பணியாளராகச் செயல்படுகிறாள். முடிவில் காலரா தொற்றுக் குறைகிறது.

இந்த நேரம் எதிர்பாராதபடி யானைகளின் தாக்குதல் நடக்கிறது. இதற்குக் காரணம் என்ன. அவர்கள் என்னவானார்கள் என்பதைப் படத்தின் இறுதிப்பகுதி விவரிக்கிறது

இலங்கையில் படமாக்கியிருக்கிறார்கள். மலையக வாழ்க்கையைப் பிரிட்டிஷ் கண்ணோட்டத்தில் படம் விவரிக்கிறது. அங்கு வாழ்ந்த தமிழ் மக்களின் கஷ்டங்கள் எதுவும் படத்தில் இல்லை. ஒரு காட்சியில் தோட்ட தொழிலாளர்கள் ஒன்றாக நடமாடுகிறார்கள்.. பரிசு பெறுகிறார்கள். படம் பிரிட்டிஷ் அதிகாரத்தின் காட்சிகளை முதன்மைப்படுத்தியிருக்கிறது

டிக் கார்வரை எதிர்பாராமல் ரூத் முத்தமிடும் காட்சியும் வீட்டில் ஒன்று கூடிக் குடிப்பவர்களை ரூத் துரத்தியடிக்கும் காட்சியும், சிறப்பானவை. எலிசபெத் டெய்லர் ரூத்தாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஜான் தேயிலைத் தோட்டத்தை நிர்வகிப்பதிலும், இரவில் தனது நண்பர்களுடன் குடித்துக் கொண்டாடுவதிலும் முனைப்பாக இருக்கிறான். ஆகவே ரூத் தனிமையை அதிகம் உணருகிறாள். அங்கே அவளைத் தவிர வேறு வெள்ளைக்காரப் பெண் கிடையாது. ஜானின் நண்பர்கள் பலரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சிலரது குடும்பம் இங்கிலாந்தில் இருக்கிறது. ஆகவே தானும் தோட்டப்பணிகளை நிர்வாகம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறாள். அவளால் கணவனைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

டாம் வைலின் அதிகாரம் படத்தின் இறுதியில் நிறைவு பெறுகிறது.

வழக்கமான ஒரு கதையைப் புதிய சூழலில் படமாக்கும்போது அது பார்வையாளர்களுக்குப் பிடித்தமானதாக அமையும் என்ற ஒரே நோக்கம் தான் இது போன்ற படங்கள் உருவாகக் காரணம்.

இந்தியாவில் படமாக்கப்பட்ட ஆங்கிலப் படங்களைப் போலவே இலங்கையில் படமாக்கப்பட்ட இந்தப் படமும் வெறும் பின்புலமாக மட்டுமே தேசத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. படத்தில் வரும் எலிபெண்ட் வாக் மாளிகை ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட செட். முக்கியக் காட்சிகள் யாவும் அதற்குள் தான் நடைபெறுகின்றன.

ஹாலிவுட் சினிமா அன்றும் இன்றும் தனது வணிக நோக்கத்திற்காக மட்டுமே எந்தத் தேசத்தையும் கதைக்களமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்தப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது Out of Africa படம் நினைவிற்கு வந்து போனது. அது Karen Blixen நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மிகச்சிறந்த படம்.

இது போலவே கரேன் திருமணம் நிச்சயம் செய்து கொண்டு ஆப்ரிக்கா செல்கிறாள்., அங்கே ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப்பினுள் வருங்காலக் கணவனைத் தேடுகிறாள். அவசரமாக அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். காபி தோட்டம் ஒன்றை உருவாக்க முனைகிறார்கள். அவளது பணத்தை ஊதாரிதனமாகச் செலவு செய்யும் கணவன் காபி தோட்டத்தை உருவாக்குவதை விடவும் வேட்டையில் அதிக ஈடுபாடு காட்டுகிறான். அவனிடமிருந்து பால்வினை நோய் அவளைத் தொற்றிக் கொள்கிறது. மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறாள். புதிய தோழமை கிடைக்கிறது. அவளது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைப் படம் அழகாக விவரிக்கிறது

ரூத் மற்றும் கரேன் இருவரும் ஒன்று போலக் கதாபாத்திரங்களே. ஆனால் அவர்களைக் கையாண்ட விதமும் கதையில் அவர்கள் ஆளுமை வெளிப்பட்ட விதமும் மாறுபாடானது. ரூத் கதையில் இல்லாத உண்மை கரேனிடம் இருக்கிறது. அது தான் Out of Africa படத்தைச் சிறப்பாக மாற்றுகிறது.

***

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 00:51

June 1, 2021

கதையின் வெளிச்சம்.

திருச்சியை சேர்ந்த மீ. அ. மகிழ்நிலா எட்டாம் வகுப்பு பயிலுகிறார். எனது ஏழு தலை நகரம் சிறார் நாவலுக்கு மகிழ்நிலா எழுதியுள்ள விமர்சனம்

•••

அக்கடா, கிறு கிறு வானம், ஏழு தலை நகரம் போன்ற நாவல்களையும் எழுதத் தெரிந்த புலி, தலை இல்லாத பையன்  போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். இவற்றுள் ஏழு தலை நகரம் என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தது.

ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் எனக்கு இந்தக்  கதை என் நண்பர்களின் ஞாபகத்தை ஏற்படுத்தியது.

இக்கதையில் தனது நண்பனான பிகாவை காப்பாற்ற அசிதன் எடுக்கும் முயற்சிகள் நட்பின் வலிமையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் பிகாவை காப்பாற்ற மியோ போராடுவது அவன் கண்ணாடிகார தெருவாசிகளிடம் கொண்டிருந்த நன்றி உணர்வை காட்டுகிறது.பார்சிமின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தாலும் அவன் ஊர்காரர்களின் அறிவுரைகளுக்குச் செவிசாய்த்திருந்தால் அந்த நிலை அவனுக்கு ஏற்பட்டிருக்காது. அவனது கதையோ ஆணவம் தலைக்கேறினால் என்ன ஆகும் என்பதை எடுத்துரைக்கிறது.

மானீ, அசிதன் மீதும் பிகா மீதும் கொண்ட நட்பு மனிதன் அல்லாத உயிர்களுக்கும் மனிதர்களைப் போலவே உணர்வுகள் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

வீரா என்ற கிளி தாத்தா மீது கொண்ட பாசம் இதையே காட்டுகிறது. ஒரே ஒரு கதையின் மூலம் இத்தனை கருத்துகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியுமானால் அந்தக் கதை சொல்லிகள் கூறியதைப் போல கதைகள் உண்மையிலேயே வெளிச்சத்தை உண்டாக்குகின்றன.

எப்படி ஏழு தலை நகரத்தில் அந்த வெளிச்சத்தை எந்த இருளாலும் ஒன்றும் செய்ய இயலவில்லையோ அதே போல இந்தக் கதையினால் என் மனதிற்குள் உண்டான வெளிச்சத்தை எந்த இருளாலும் எதுவும் செய்ய முடியாது. காற்றிலிருந்து வேண்டிய குரலை வடித்துக்கொள்ளலாம் என்று தாத்தா கூறியபோது அசிதனின் வியப்பை விட பல மடங்கு நான் வியந்து போனேன்.

மாயாஜால கதைகளில் அதிக விருப்பமும் ஆர்வமும் கொண்ட எனக்கு “ஏழு தலை நகரம் ” என்ற மிகப்பெரிய மாயாஜால உலகத்திற்குள் மூழ்கி போகும் வாய்ப்பை அளித்தது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 19:24

அன்னா ஸ்விர் கவிதைகள்

நான் என்னிலிருந்து வெளியே நீந்திப் போனேன்

என்னைக் கூப்பிடாதே

நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்திப் போ

நாம் நீந்திப் போய்விடுவோம், நமது உடல்களை விட்டு

கரையில்

ஒரு ஜோடி கடற்கரைச் செருப்புகள் போல

அன்னா ஸ்விர் (Anna Swir) போலந்தின் முக்கியக் கவிஞர். இவரது தந்தை ஒரு ஓவியர். ஆகவே குழந்தைப் பருவம் முழுவதும் ஒவியக்கூடத்திலே கழிந்தது. கல்லூரி படிப்பை முடித்த அன்னா சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றியிருக்கிறார். கவிதைகளுடன் குழந்தைகளுக்கான நாடகங்களும் எழுதியிருக்கிறார். நோபல் பரிசு பெற்ற கவிஞரான செஸ்வாஃப் மிவோஸ் இவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

தன்னிலிருந்து ஒருவர் வெளியேறி நீந்துவதைப் பற்றிப் பேசுகிறார் அன்னா.

பரவசமான தருணங்களில் நாம் இப்படி உணருகிறோம். அல்லது உச்சபட்ச துயரத்தில் ஒருவர் இவ்வாறு தன்னிலிருந்து நீந்தி வெளியேறுகிறார். உச்ச இன்பமோ துன்பமோ நம்மிடமிருந்து நம்மை விடுவிக்கிறது. இதில் நீந்துதல் என்பது அழகான பிரயோகம். நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்தி வா என்று அழைக்கிறார். அவர்கள் உடல்களை விட்டு நீந்திப் போக முயல்கிறார்கள். கரையில் விடப்பட்ட ஒரு ஜோடி செருப்புகள் போல என்ற இறுதி வரி கவிதையைச் சட்டென நிகழ்காலத்தினுள் பதிய வைக்கிறது.

இவரது பல்வேறு கவிதைகளில் உடல் முக்கியமான பொருள். உடலுடன் உரையாடுகிறார். உடலிருந்து வெளியேறி நீந்துகிறார். உடலை மலராக்குகிறார். நகுலன் கவிதைகளில் இது போன்ற நிலையை எழுதியிருக்கிறார்

“எல்லாமே

வெகு எளிமையாகத்தான்

இருக்கிறது

ஆனால்

“எல்லாம்” என்பதுதான்

என்ன என்று தெரியவில்லை”

என்றொரு கவிதையை நகுலன் எழுதியிருக்கிறார். இதே அனுபவத்தின் இன்னொரு நிலையை நாம் அன்னா ஸ்வேரிடம் காணமுடிகிறது

துயரத்தை ஒரு எழுதுகோலாக மாற்றியிருக்கிறார் அன்னா. அது குறித்து ஒரு கவிதை எழுதியிருக்கிறார்

••

எனது துயரம்

எனக்குப் பயன்படுகிறது

அது எனக்கு முன்னுரிமை தருகிறது

அடுத்தவர்களின் துயரத்தை எழுதுவதற்கு

எனது துயரம் ஒரு பென்சில்

அதைக் கொண்டு நான் எழுதுகிறேன்

••

இரண்டு உருளைக்கிழங்குகள் வைத்திருந்தேன்

ஒரு பெண் என்னிடம் வந்தாள்

இரண்டு உருளைக்கிழங்குகளை அவள் வாங்க விரும்பினாள்

அவளுக்குக் குழந்தைகள் இருந்தன

நான் அவளுக்கு இரண்டு உருளைக்கிழங்குகளைத் தரவில்லை

நான் மறைத்து வைத்தேன் இரண்டு உருளைக்கிழங்குகளை

எனக்கு ஒரு அம்மா இருந்தாள்

••

கவிஞர் சமயவேல் உலகின் மிகச்சிறந்த கவிஞர்களைத் தேடி வாசித்து அவர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறார். இது போன்ற புதுக்குரல்களின் வரவு நவீன தமிழ் கவிதைவெளியை செழுமைப்படுத்தும் என்பதே நிஜம்.

அன்னா ஸ்விர் கவிதைகள் அவரது மொழிபெயர்ப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியுள்ளன. கவிஞர் சமயவேலின் மொழியாக்கச் செயல்பாடு மிகுந்த பாராட்டிற்குரியது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 05:19

May 31, 2021

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள்

ஒரு சிறுகதையை ஆழ்ந்து படித்து எவ்வளவு சிறப்பாக ஆராய முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளது ஜிஃப்ரி ஹாஸன் எழுதியுள்ள இந்த விமர்சனக்கட்டுரை

இலங்கையில் வாழும் ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதைகளும் மொழிபெயர்ப்புகளும செய்து வருகிறார். பதாகை இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. பதாகைக்கும் ஜிஃப்ரி ஹாஸனுக்கும் எனது அன்பும் நன்றியும்

••••

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் – எஸ்.ரா.வின் காகிதப்பறவைகள் கதை கிளர்த்தும் சலனங்கள்

-ஜிஃப்ரி ஹாஸன் –இலங்கை

தமிழ்ச்சிறுகதையில் இருவேறுபட்ட பரிமாணங்களை மொழிசார்ந்து பரீட்சித்துப் பார்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். எளிமைக்கு மாற்றான ஓர் இறுக்கமான கதைமொழியைக் கொண்ட கதைகளையும் எழுதினார். அதேபோன்று, ஓர் அவசர வாசிப்பில் கூட வாசகன் கதையை உட்கிரகித்துக்கொள்ளும் வகையில் மிக எளிமையான மொழிக் கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார். எஸ்.ரா. வின் இந்தப் படைப்பு நுட்பம் அவரது வாசகப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்தியச் சிறுகதைகள் மிக எளிமையான மொழியில் ஆனால் வாழ்க்கையின் ஆழமான பக்கங்களையும், ஆழமான உணர்ச்சிகளையும் பேசும் முனைப்புக் கொண்டவையாக இருக்கின்றன. அதேநேரம் கடந்த காலத்தின் கவனிக்கப்படாமல் தவறிப்போன இந்திய வாழ்க்கையின் வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தை மிகைக் கற்பனைகளின்றி, மிகை அலங்காரங்களின்றி இன்றைய வாழ்க்கைக்கும் வாசக இரசனைக்கும் நெருக்கமாக நின்று பேசுகின்றன. அவரது சமீபத்திய சிறுகதையான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.

ஜேம்ஸ் ஜொய்ஸின் கதைகளில் நிகழும் நாடகீயத்தன்மையும், துயர வெளிப்பாடும் எஸ்.ரா.வின் சில கதைகளில் வெளிப்படுவது கவனிக்கத்தக்க இன்னொரு குணாம்சம். அவரது சமீபத்தியக் கதைகளில் காகிதப்பறவைகள் இலகுவில் கடந்து சென்றுவிட முடியாதபடி இந்தக் குணாதிசயத்தால் நிரம்பி நிற்கும் கதையாகத் தெரிகிறது.

மனவளர்ச்சி குன்றிய, சரளமாகப் பேச முடியாத, திக்குவாய் சிறுமியான ஸ்டெல்லாவின் மனவுலகும் வாழ்வும் பற்றிய ஓர் உயிரோட்டமான சித்திரம் அது. ஸ்டெல்லா வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. தாயற்ற பிள்ளை என்பதால் வீட்டில் சமையலுக்கு உதவியாக இருந்தாள். மனவளர்ச்சி இல்லாததால் பள்ளிக்கூடமும் செல்வதில்லை. வீடே அவளது உலகமாக இருக்கிறது. வீட்டில் வசிப்பவர்களும், வீட்டுக்கு வருபவர்களும் மட்டுமே அவளுக்கான மனிதர்கள். அதற்கு வெளியே அவளுக்கு ஒரு வாழ்க்கை இல்லை. அவளது ஒரே பொழுது போக்கு காகிதப்பறவைகள் செய்வதுதான்.

அவளது தந்தை மார்டின் ஒரு தபால்காரர். தனது பிள்ளைகள் குறித்து மிகுந்த ஏக்கம் கொண்டவர். பலசரக்குப் பொருட்கள் கொடுப்பதற்காக அவள் வீட்டுக்கு வரும் சுபாஷ்தான் அவளது நண்பன். அவளது உலகத்தைப் புரிந்துகொண்டவன். அல்லது புரிய முயற்சிப்பவன். அவன் ஸ்டெல்லா காகிதப்பறவைகள் செய்வதை அருகிலிருந்து பார்த்திருக்கிறான். அவள் செய்யும் பறவைகளை முதலில் வானத்துக்கு காட்டிவிட்டு தன்னோடு வைத்துக் கொள்வாள். சில பறவைகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கவும் செய்வாள். அவள் தன் பறவைகளை தலைமாட்டில் வைத்துக் கொண்டே உறங்கச் செல்வாள். அவள் சாப்பிடும்போது கூட தன்னோடு ஒரு காகிதப் பறவையை வைத்துக் கொண்டாள். அவளது தந்தை மார்டின் தனது வீடு பறவைகளின் ஆலயமாக மாறிவருவதை சுபாஷின் தாத்தாவிடம் சொல்வார்.

“நான் செய்த பறவைகள் என்னைப் போலவே வாய் பேசாது” என்பாள் சுபாஷிடம் தன் திக்குவாயால். இந்தத் தருணம் ஒரு துயரார்ந்த வாழ்வின் மீதான மன அதிர்வையும், கவனத்தையும் ஏற்படுத்தும் ஒரு கட்டம். ஜேம்ஸ் ஜொய்ஸ் உருவாக்கும் ஒரு துயரார்ந்த தருணத்தை ஒத்தது இது.

ஸ்டெல்லா 15 வயதாகியும் பூப்பெய்தவில்லை. ஆளும் மெலிந்து கழுத்து எலும்புகள் துருத்திக்கொண்டிருக்க சிக்குப்பிடித்த தலையோடு இருந்தாள். இந்த விவரணை வெறுமனே மனவளர்ச்சியற்ற சிறுமி குறித்த ஒரு தாழ்வான சித்திரத்தை அளிக்கக்கூடியதுதான். ஆனாலும் கதையின் மையமாக அவள் இருப்பதால் உடல்சார்ந்த இந்த விவரணம் அவளது வாழ்வு குறித்து எஸ்.ரா. ஏற்படுத்த விரும்பும் சமூக அக்கறைக்கு மிகத்தேவையான ஒன்றாக இருக்கிறது.

அதேநேரம், ஸ்டெல்லாவின் தங்கை மரியாவுக்கு அவளைப் பிடிக்காது. அவள் இந்த சமூகத்தில் எதிர்கொண்ட முதல் புறக்கணிப்பு அது. ஆனால் மரியாவோ திருடும் பழக்கம் கொண்டவளாக இருக்கிறாள். வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும், பாடசாலையிலும் என அவள் சிறு சிறு திருட்டுக்களை செய்வாள். தன் பிள்ளைகள் ஏன் இப்படி என மார்டின் அடிக்கடி அழுவார்.

ஆனால் கதையில் மரியாவின் இந்தப் பழக்கக் குறையை விடவும் ஸ்டெல்லாவின் உடல்குறைதான் கனத்த துயரமாகவும், பெரும் வலியாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டெல்லாவை தமக்கொரு சுமை என அவளது தந்தை கருதினார். மார்டின்களுக்கு ஸ்டெல்லாக்கள் சுமையாகும் போது அது ஒரு விளிம்புநிலை மனிதனின்/ மனுஷியின் மீட்சியற்ற துயரமாக மாறுகிறது. இதிலிருந்து ஸ்டெல்லாக்களையும், மார்டின்களையும் மீட்பதற்கான ஒரு அந்தரங்க எதிர்பார்ப்பு எஸ்.ராவுக்குள் இருக்கக்கூடும். வாசகனுக்குள் அந்த உணர்வு மேலிடுவது அந்த படைப்பின் கலைக்கு அப்பாலான வெற்றியாக இருக்கிறது. காகிதப்பறவைகளில் அந்த வெற்றியை நோக்கி எஸ்.ரா. நகர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு கலைஞன் தன் படைப்புகளில் சிருஷ்டிக்கும் மனிதர்கள் வெறுமனே கதையோடு முடிந்துவிடுபவர்களல்ல. கதைக்கு அப்பாலும் அவர்களது வாழ்க்கை நீட்சி பெறுகிறது. விளிம்பில் இருப்பவர்களின் துயரம் என்பது சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி மீது எழுத்தாளன் படிய விடும் ஒரு குற்றவுணர்ச்சியாகத் திரள்கிறது. அவர்களை ஏதாவது செய்வதற்கு உந்துகிறது. அதுவே ஒரு கலைஞன் தன் படைப்பு குறித்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அவன் சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாகவும், கையளிக்க விரும்பும் பணியாகவும் இருக்கிறது. துயர்படிந்து இழிவடையும் வாழ்க்கையை கலையாக மாற்றி வாசகனின் இரசனைக்கு முன்னால் நிறுத்துவது மட்டுமே ஒரு எழுத்தாளனின் நோக்கமாக இருக்க முடியாது. அதற்கு அப்பால் அந்த வாழ்வையும் வலியையும் தன்னில் உணரும் ஒரு சமூகவெளி குறித்த ஒரு மறைமுக எதிர்பார்ப்பு ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. ஸ்டெல்லாக்களினதும், மார்டின்களினதும் கண்ணீரைத் துடைப்பதற்கு அதிலிருந்து கரங்கள் எழுந்து வரும் என்ற பிரமாண்டமான ஒரு கனவும் ஒரு படைப்பாளியை உள்ளிருந்து இயக்கும் ஒரு விசையாக இருக்கிறது.

இக்கதையினூடே எஸ். ரா. விடமும் இந்தக் கனவும் எதிர்பார்ப்பும் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. மனிதர்கள் என்ற வகையில் அவரவருக்கான கனவுகளுக்கும் இருப்புக்குமான வெளி உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கதையின் மய்யப் புள்ளியாகத் தெரிகிறது.

மனித வாழ்க்கையை கூர்ந்து நோக்கி அதன் வளமான பக்கங்களைக் கொண்டாடும் ஒரு படைப்பாளி அதன் துயரமான பக்கங்கள் குறித்த புகார்களையும், ஒவ்வொரு மனிதனின் இருப்புக்குமான குரலையும் தனது கதாபாத்திரங்களின் வழியே எழுப்பிக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு வாழ்வுக்குமான அர்த்தத்தையும் அதன் வழியே வாசகன் புரிந்து கொள்கிறான். ஒரு படைப்பில் கதாபாத்திரங்களின் வழியே மனிதர்களின் வெவ்வேறுபட்ட அகவுலகத்துக்குள்ளும், வித்தியாசமான கனவுகளுக்குள்ளும் சஞ்சரித்து மொத்த மனித இயல்பையும், இருப்பையும் புரிந்துகொள்வதற்கான இயலுமையை வாசகன் வளர்த்துக் கொள்கிறான். காகிதப்பறவைகளிலும் இந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

ஸ்டெல்லா மனவளர்ச்சி இல்லாதவள் என்பதால் புற உலகு குறித்து பெரியளவு எதிர்பார்ப்புகள் அவளிடம் இல்லை. மாறாக வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடுபவளாக இருக்கிறாள். வாழ்வு குறித்து மனிதர்களுக்கு இருக்கும் கனவுகளும், புகார்களும் அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு குழந்தையின் உலகுக்கும், அவளது உலகுக்குமிடையில் அவ்வளவு பெரிய இடைவெளிகள் இல்லை. எதிர்பார்ப்புகள் தரும் வலியிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு சுதந்திர உணர்வுடன் இருத்தல் என்பது மட்டுமே வாழ்வு பற்றிய அவளது பிரக்ஞையாக இருக்கிறது. இது அவளுக்கு உரித்தான நிஜம் என்றால், அவளுக்கு வெளியேயான பிற மனிதர்களால் அவளுக்காக கட்டமைக்கப்படும் வாழ்வும், உலகும் முற்றிலும் வேறான நிஜத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவளது தந்தையான மார்டின், அவளது தங்கையான மரியா போன்ற அவளுக்கு மிகநெருக்கமானவர்களுக்கு ஸ்டெல்லாவின் வாழ்வு ஒரு பொருட்டாகவோ, அல்லது இயல்பானதாகவோ எடுத்துக்கொள்ள முடியாததாக, மிக மிகச் சுமையானதாக இருக்கிறது.

இந்தத் தருணம் கதையில் ஓரிடத்தில் ஸ்டெல்லா சுபாஷ் உரையாடலில் வெளிப்படுத்தப்படுகிறது-

“நிஜப்பறவைகளை உனக்குப் பிடிக்காதா“ என்று சுபாஷ் அவளிடம் கேட்டான்.

“நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காது“ என்றாள்.

அவளது நிஜத்துக்கும்- மற்ற மனிதர்களின் நிஜத்துக்குமிடையிலான இடைவெளியை வாசகன் உணர்ந்துகொள்ளும் தருணமாக அது இருக்கிறது.

மேலும், அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மிகப் பெரும் சமூகத்தளம் அவளது அந்த சின்ன உலகுக்கும், கற்பனையான வாழ்க்கை்குமான இடத்தை ஒருபோதும் வழங்கவே இல்லை. அவளை அங்கீகரிக்கவுமில்லை. இயல்புக்கு மாற்றான எதனது இருப்பையும் சகித்துக் கொள்ள முடியாத சமூக சூழலின் அவலத்தை எஸ்.ரா. சித்தரித்துக் காட்டுகிறார்.

ஆனால், ஸ்டெல்லா புற உலகை தனக்கு ஒரு சுமையாக ஒருபோதும் எடுத்துக்கொள்வதே இல்லை. யாரும் திட்டினால் அதற்கு எதிர்வினையாக சிரிக்க மட்டுமே செய்கிறாள். அப்போதுதான் வலி தெரியாது என்கிறாள். அவளது தங்கை மரியா ஸ்டெல்லாவைக் கடுமையாக வெறுப்பவள்.

“ஸ்டெல்லா செய்யும் பறவைகளை அவளது தங்கை மரியாவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. பலமுறை அவற்றைக் கிழித்துப்போட்டிருக்கிறாள். ஆனால் அதற்காக ஸ்டெல்லா வருத்தம் கொண்டதில்லை. மௌனமாக அவள் முன்னால் சிலுவை குறி போட்டு கர்த்தர் உன்னைப் பார்த்துக் கொள்வார் என்பது போலக் கடந்து போய்விடுவாள்”.

இதுதான் அவள் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒரு வாழ்க்கை ஒழுங்கு. சாதாரண மனிதர்களால் நெருங்க முடியாத விசித்திர உலகம் அது. சாதாரண மனிதர்களே அவள் முன்னால் தோற்றுப் போகும் ஒரு விசித்திரத் தருணம் அது.

கதையில் ஓரிடத்தில் மரியா ஸ்டெல்லாவை கத்தரிக்கோலால் கன்னத்தில் குத்திவிடுவாள். அது பாரதூரமானதாக இருந்ததால் ஒரு மாதமளவில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்துவிட்டது. இந்த நிகழ்வின் பின்னர், மரியா கொடைக்கானலிலுள்ள அவளது அத்தையின் வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். ஆனால் ஸ்டெல்லா சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தத பின் யாருடனும் பேசவில்லை. மௌனமாகவே இருக்கிறாள். அவளது மௌனம் அந்த வீடு அவள் வாழ விரும்பிய வாழ்க்கைக்கும், அவளது கனவுகளுக்கும் உரிய இடமல்ல என்பதை அவள் முதன் முதலாக உணரும் தருணமாக இருக்கிறது.

தனது வாழ்வு பிறருக்கு சுமையாக இருப்பதை உணரும் தருணத்தில் ஸ்டெல்லா ஒரு புன்னகை போன்று அல்லது காற்றில் ஒரு சிலுவைக்குறி இடுவதைப் போன்று மிக எளிமையாக வீட்டிலிருந்தும் காணமல் போய்விடுகிறாள். யாராலும் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. விரிந்து பரந்த இந்தப் பெருவெளியில் எங்கே போய் ஒளிந்து கொண்டாள் என்று மார்டினால் கண்டறியவே முடியவில்லை. வீட்டிலிருந்து அவள் காணாமல் போனாலும் கதையிலிருந்து அவள் காணாமல் போவதில்லை. ஓர் அரூபச்சித்திரமாக கதையிலும் வாசக மனதிலும் நெளிந்துகொண்டிருக்கிறாள். ஒரு கனத்த துயரமாக மனதை அழுத்தத் தொடங்குகிறாள்.

 அவள் காணாமல் போனதை, “ஒரு மனிதன் வீட்டிலிருந்து விடுபட்டுப் போய்விட்டால் உலகில் அவனைக் கண்டறிவது எளிதானதில்லை“. என்று எழுதுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ். ரா. தன் கதையின் வழியே கண்டடைந்திருக்கும் இந்தப் புள்ளி மிக எளிமையானதல்ல. விளிம்பு வாழ்க்கை குறித்த மிக ஆழமான தத்துவம் அது. தன் வீடு தனக்கான உலகம் அல்ல என மனிதர்கள் உணரும் போது அவர்கள் தங்களுக்கான இன்னொரு உலகை நோக்கி சென்றுவிடுகின்றனர். ஸ்டெல்லாவும் அத்தகையதொரு உலகை நோக்கியே சென்றிருக்கிறாள். ஆனால் அந்த உலகம் எங்கே இருக்கிறது? என்பதுதான் வாசகனை உறுத்தும் கேள்வியாக எழுகிறது.

ஆனால் வீடு இப்போது மரியாவைக் கொண்டு ஸ்டெல்லாவின் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்கிறது. மரியாவும் திருந்தி தனக்குள் ஸ்டெல்லா இல்லாத வெற்றிடத்தை ஸ்டெல்லாவைப் போன்றே தன்னைப் பாவித்துக் கொண்டு காகிதப்பறவைகள் செய்வதன் மூலம் கடக்க விரும்புகிறாள்.

ஆனாலும் எத்தகையதொரு வாழ்வையும், எத்தகையதொரு மனிதனையும் தன்னுடையதாக உணரவும், நினைத்து ஏங்கவும் என இன்னும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதும் எஸ்.ரா. வின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அவரது இந்த நம்பிக்கையின் பிரதிநிதியாக சுபாஷ் வருகிறான். கதையின் முடிவில் வரும் விவரணம் இந்த நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்கிறது-

 “சில நாட்கள் சுபாஷ் பாலத்தின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு தூரத்து தேவாலயத்தைப் பார்த்தபடியே இருப்பான்.

அந்திக் கருக்கலில் தனியே செல்லும் கொக்கினைக் காணும் போது  ஸ்டெல்லாவை நினைத்துக் கொள்வான்.

அவளது சிரித்த முகம் மனதில் தோன்றி மறையும் போது அவனை அறியாமல் கண்கள் கலங்கவே செய்யும்“

000

கதையின் இணைப்பு

காகிதப்பறவைகள்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 04:54

உப பாண்டவம்- மலையாளம்

எனது நாவல் உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. டிசி புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு மலையாளத்தில் எனது மூன்று நூல்கள் வெளியாக இருக்கின்றன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2021 01:19

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.