S. Ramakrishnan's Blog, page 126

June 23, 2021

கோடைகாலப் பறவை

புதிய சிறுகதை

ரங்கநாத் கையில் செம்மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளிட்ட சிறகொன்றை வைத்திருந்தான். நீளமான அச்சிறகு வசீகரமாகயிருந்தது

“அது என்ன பறவையின் சிறகு“ என்று கேட்டாள் லூசி.

“பெயர் தெரியவில்லை. ஆனால் இப்படியான சிறகை இப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்“ என்றான் ரங்கநாத்

கோத்தகிரியிலுள்ள உறைவிடப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றினாள் லூசி. தங்கபிரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கூர்மையான நாசி, ஐந்தரை அடிக்கும் மேலான உயரம். ஒடிசலான உடல்வாகு. அரக்கு வண்ண காட்டன் புடவை கட்டியிருந்தாள். அதற்கு மேல் பச்சை நிறத்தில் ஒரு ஸ்வெட்டர். காலில் ரப்பர் செருப்புகள்.

அவளது வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் நிறைய மரங்கள் இருந்தன. அதனடியில் தான் இந்தச் சிறகு கிடந்திருக்கிறது.

லூசி பள்ளி வளாகத்திற்குள்ளாகவே இருபது வருஷமாக வசித்து வந்தாள். சொந்த ஊரை மறந்து பல காலமாகிவிட்டது. கோடைவிடுமுறையில் மாணவர்கள் எல்லோரும் போய்விட்ட பிறகும் அவள் பள்ளி வளாகத்தில் தானிருப்பாள். அவளது உலகம் அந்தப் பள்ளி மட்டும் தான்.

அவளது அக்கா ஜெசிந்தாவின் வீடு தூத்துக்குடியை ஒட்டிய கடற்கரை கிராமம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அக்கா அவசரத் தேவை என்று ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். அதைத் திரும்பிக் கொடுக்கவேயில்லை. அவளும் கேட்கவில்லை. ஆனால் அக்கா வீட்டிற்குப் போனால் அக் குற்றவுணர்வு அக்காவிடம் பீறிடும் என்பதால் ஊருக்குப் போவதைத் தவிர்த்து வந்தாள். அக்காவின் கணவர் உப்பளத்தில் வேலை செய்து வந்தார். மூன்று குழந்தைகள். சொற்ப வருமானத்தில் அக்காவால் குடும்பத்தை ஒட்ட முடியவில்லை. அவளும் உப்பளத்தில் வேலை செய்தாள்.

அக்கா தான் ஆசிரியராக விரும்பியவள். ஆனால் அப்பா இறந்தவுடன் அவளது படிப்பைப் பாதியிலே மாமா நிறுத்திவிட்டார். உறவிலே அவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். பாவம் அக்கா உழைத்துச் சலித்து ஆளே உருச்சிதைந்து போயிருந்தாள்.

தன்னிடம் அக்காவின் போட்டோ ஒன்று கூடக் கிடையாது என ஏனோ இந்தக் காலையில் லூசிக்குத் தோன்றியது.

லூசிக்கு இப்போது நாற்பத்தியாறு வயது நடந்து கொண்டிருந்தது. மாணவர்களோடு பழகுவதால் எப்போதும் இளமையாக இருப்பது போலவே தோன்றும். இனி எத்தனை வயதானால் என்ன. யார் கவலைப்பட இருக்கிறார்கள். தனிமையில் வாழும் பெண்ணிற்கு உலகம் மிகச்சிறியது தானே.

நூறு வருஷப்பழமையான பள்ளியது. இங்கிலாந்திலிருந்து வந்த ரெனீஸ் பாதிரி துவங்கியிருக்கிறார். ஒரு காலத்தில் அங்கே வேலை பார்த்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் வெள்ளைக்கார்கள். பணக்கார பிள்ளைகள் மட்டுமே அங்கே தங்கிப் படித்தார்கள். கால மாற்றத்தில் அந்தப் பள்ளி நிர்வாகம் மாறிவிட்டது. புதிய கட்டிடங்கள். வசதிகள் உருவாகியிருந்தன. நடுத்தரவர்க்க பிள்ளைகளே இப்போது அதிகம் படித்தார்கள்.

அந்தப் பள்ளியின் இசைக்குழு மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை பெரிய இசை நிகழ்ச்சியை மாணவர்களே நடத்துவார்கள். அந்தப் பள்ளி வளாகத்தினுள் பெரிய மலர் வனமே இருந்தது. பள்ளி மாணவர்களுக்கென்றே நடத்தப்படும் பேக்கரி ஒன்றும் செயல்பட்டது. பள்ளிக்குச் சொந்தமாக ஆறு குதிரைகள் இருந்தன. துப்பாக்கி சுடுவதற்குக் கூடப் பயிற்சி கொடுத்தார்கள்.

அந்தக் கேம்பஸில் அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டின் பெயர் லிட்டில் ஹெவன். அப்படி ஒரு பெயரை வைத்தவர் ரெனீஸ் பாதிரி என்பார்கள். அந்த வீடு இங்கிலாந்தின் பண்ணை வீடு போல அமைந்திருந்தது. கோடையிலும் உள்ளே முழுமையான வெளிச்சம் வராது. கணப்பு அடுப்பும் நிலவறையும் கொண்ட வீடது. பெரிய வரவேற்பறை. நான்கு படுக்கை அறைகள். சுற்றிலும் தோட்டம். அதில் நிறையப் பூச்செடிகள். பழமரங்கள்.

அவளது வீட்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு. நாற்பது ஆசிரியர்கள் குடும்பத்துடன் அங்கே தங்கியிருந்தார்கள். அவர்களும் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போய்விட்டதால் அந்த வீடுகள் பூட்டிக்கிடந்தன. தற்போது அவளைத் தவிர நான்கு காவலாளிகளும் இரண்டு தோட்டக்காரர்களும், அன்றாட வந்து செல்லும் சில பணியாளர்களும் மட்டுமே அந்த வளாகத்தினுள் இருந்தார்கள்.

கோடைக்கென்றே விசேசமான காற்றிருக்கிறது. சருகுகளில் யாரோ நடப்பது போன்ற காற்றின் ஓசை நாள் முழுவதும் கேட்டபடியே இருக்கும். சில நேரம் முயலோ, காட்டுக்கோழிகளோ ஓடுவதைக் கண்டிருக்கிறாள். கோடை விடுமுறையில் பள்ளியின் இயல்பு முற்றிலும் மாறிவிடுகிறது. ஏதோ ஒரு மடாலயத்திலிருப்பது போலவே அவள் உணர்ந்தாள்.

நிறையத் தைலமரங்கள் அடர்ந்த வளாகமது. சிவப்பு நிற கட்டிடங்கள். அழகான படிக்கட்டுகள். பெரிய தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான நூலகம். இரண்டு விளையாட்டு மைதானங்கள். நீச்சல் குளம், நான்கு விடுதிகள். ஐநூறு பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக்கூடம், பிரார்த்தனைக் கூடம் என்று நூற்றுமுப்பது ஏக்கருக்கும் மேலிருந்தது அந்தப் பள்ளி.

தபால்காரரைத் தவிர வெளியாட்கள் எவரும் இப்போது வருவதில்லை. லூசிக்கு இப்படி முழுத்தனிமையில் இருப்பது பிடித்தேயிருந்தது

அவளது கணவர் மார்டின் அதே பள்ளியில் தான் வேலை செய்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல்நிலை மோசமாகி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அதன்பிறகு அவள் ஒருத்தியாகவே அந்த வீட்டில் வாழ்ந்தாள்.

இசைத்தட்டுகள் தான் அவளது ஒரே துணை. வீட்டிலிருக்கும் நேரங்களில் அவள் இசைகேட்டபடியே இருப்பாள். அதுவும் பழைய ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகளை ரிக்கார்ட் பிளேயரில் சுழலவிட்டுக் கேட்பது அவளுக்குப் பிடிக்கும். இசைத்தட்டிலிருந்து வரும் கம்பீரமான குரலின் வழியே அந்தப் பாடகர் அறைக்குள் நடனமாடுவது போலவே தோன்றும்

அவளுக்குப் பால் ராப்சனின் பாடல்களை மிகவும் பிடிக்கும். வசீகரமான குரலது. சில பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்பாள். ஜாஸ் இசைக்கலைஞர்களின் சங்கீதத்தைக் கேட்பது அவளுக்கு விருப்பமானது. நிறைய இசைத்தட்டுகளைச் சேகரித்து வைத்திருக்கிறாள். அதில் பாதிக்கும் மேலாகப் பார்க்கர் மாஸ்டர் கொடுத்தது.

அவர் திருமணமே செய்து கொள்ளாதவர். இசை தான் அவரது காதலி என்று சொல்லுவார். அவர் தான் பால் ராப்சனை அறிமுகம் செய்து வைத்தார். ஜாஸ் சங்கீதத்தை எப்படிக் கேட்பது என்று கற்றுத்தந்தார். தொடர்ந்து இசை கேட்கும் போது கடவுள் எவ்வளவோ இனிமைகளை மனிதனுக்காகத் தந்திருக்கிறார் என்று அவளுக்குத் தோன்றும். அதை நினைத்து கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்வாள்

அவளது வீட்டில் ஒரு மீன் தொட்டியிருந்தது. அதில் மூன்று தங்கமீன்கள் இருந்தன. அந்த மீன்கள் கூட இசைகேட்டு பழகி அதற்கு ஏற்ப நடனமாடின. உலகமே ஒரு பெரிய இசைக்கூடம் தானே.

••

ரங்கநாத் அந்தப் பறவையின் சிறகை அவளிடமே கொடுத்துச் சொன்னான்

“நம்ம தோட்டத்துக்கு அந்தப் பறவை திரும்பவும் வரும் மேடம் “

“அதிர்ஷ்டமிருந்தால் அதை நான் காண்பேன்“ என்றாள் லூசி

“புகைப்படம் எடுக்க முடிந்தால் எடுத்துவிடுங்கள். பள்ளி ஆல்பத்தில் ஒட்டி வைக்கலாம்“ என்றான் ரங்கநாத்

“அதுவும் நல்ல யோசனை தான். முயன்று பார்க்கிறேன்“ என்று தலையாட்டினாள்

அவர்கள் பள்ளி வளாகத்தினுள் காணப்படும் பறவைகளைப் புகைப்படம் எடுத்து ஆல்பம் ஒன்றை மாணவர்களே உருவாக்கியிருந்தார்கள். ஆகவே புதிதாகப் பறவைகளைக் கண்டால் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.

ரங்கநாத் படியில் இறங்கியபடியே அவளிடம் கேட்டான்.

“மல்லிகாவை அழைத்துக் கொண்டு டவுனுக்குப் போய்வர இருக்கிறேன். ஏதாவது வேணும் என்றால் வாங்கி வருவேன்“

“ஸ்வீட் பிரெட்டும், சால்ட் பிஸ்கட்டுகளும் வேண்டும் கூடவே ஒரு பாட்டில் தேன் “

ரங்கநாத் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது குடியிருப்பினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். மரங்களுக்கு இடையே வெயில் சரிந்து கொண்டிருந்தது

••

ரங்கநாத் அந்தப் பள்ளியின் காவலாளிகளில் ஒருவன். அவனும் அந்த வளாகத்தில் தான் தங்கியிருந்தாள். அவனது மனைவி மல்லிகா தான் லூசியின் வீட்டினை தூய்மை செய்வது, துணி துவைத்து தருவது, பாத்திரம் கழுவி வைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தாள். அவளது சம்பளத்தையும் ரங்கநாத்தே வாங்கிக் கொள்வான்

மல்லிகா கிராமத்துப் பெண். அதுவும் மைசூர் பக்கமுள்ள சிறிய கிராமம். தமிழ் பேசும் குடும்பம் தான். அவளது தாத்தா காலத்தில் அந்த ஊருக்குப் போய்த் தங்கிவிட்டார்கள். மல்லிகாவின் அப்பா அங்கே தான் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை அவள் படித்திருக்கிறாள். மாணவர்களுக்குத் திறந்தவெளியில் சினிமா திரையிடும் அன்று மல்லிகா ஆசையாக முன்வரிசையில் போய் உட்கார்ந்து கொள்வாள். டிவியில் போடும் திரைப்படங்கள் ஒன்றை விட மாட்டாள்.

லூசி வீட்டில் டிவி இருந்தது. ஆனால் அணைத்தே வைக்கப்பட்டிருக்கும். சில நாட்கள் அதைத் துடைக்கும் போது மல்லிகா கேட்பாள்

“நீங்க சினிமாவே பார்க்க மாட்டீர்களா“

“சினிமா பிடிக்காது“

“சின்ன வயசில கூடச் சினிமா பார்த்தது இல்லையா“

“சினிமா பார்க்க யாரு காசு தருவா. இதுவரைக்கும் மொத்தமே நாலு படம் பார்த்திருப்பேன். அதுவும் ஏசுநாதரைப் பற்றிய படம், “

“எனக்கெல்லாம் தினம் சினிமா பாக்கணும். சோறு இல்லாட்டி கூடக் கவலைப்பட மாட்டேன்“ என்று மெலிதாகச் சிரித்தாள்

“சினிமாவில அப்படி என்ன இருக்கு“

“அது ஒரு கனவும்மா. பாக்க பாக்க சொகமாக இருக்கும். அதைச் சொன்னாப்புரியுதும்மா “என்று சொல்லி சிரித்தாள் மல்லிகா

லூசிக்கு அது புரிந்தேயிருந்தது. அவள் நியூஸ் பேப்பரை படித்தபடியே மல்லிகாவிடம் கேட்டாள்

“லீவுக்கு ஊருக்குப் போகலையா“

“போகணும். ஆனா அவரு வேலை இருக்குனு சொல்லிட்டே இருக்கார். “

“நீங்களும் போயிட்டா நான் தனியா இருக்கணும்“

“உங்களுக்குத் தான் பயமே கிடையாதே.. இந்த ஸ்கூல்ல உங்களைப் பார்த்துத் தான் எல்லோரும் பயப்படுகிறார்கள்“

“அதெல்லாம் வெறும் நடிப்பு. உண்மையில் என்னை யாருக்கும் பிடிக்காது. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை“

மல்லிகா கழுவி வைத்த டீக்கோப்பைகளைக் கிச்சன் அலமாரியினுள் அடுக்கி வைத்துவிட்டுக் கிளம்பும் போது சொன்னாள்

“குழந்தைகள் இருந்திருந்தால் உங்களுக்கும் ஊருக்குப் போகத் தோணியிருக்கும் “

அவள் சொன்னது உண்மை. அதைக் கேட்காதவள் போலவே லூசி நின்றிருந்தாள். மல்லிகா சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு சிறிய பிளாஸ்டிக் கூடையினைக் கையில் எடுத்தபடியே வெளியேறிப் போனாள்

••

குழந்தைகள் இல்லாமல் போனது வருத்தமானதே. ஒருவேளை அவள் சொன்னது போலப் பையனோ, பெண்ணோ இருந்திருந்தால் வாழ்க்கை வேறுவிதமாகியிருக்கும். அந்த வேதனையை மறப்பதற்காக மீண்டும் ஒரு இசைத்தட்டினை சுழலவிட்டாள். சாக்சபோன் இசை மனதை ஆற்றுப்படுத்துவதாக இருந்தது

••

பள்ளி வளாகத்திற்குள் சிறிய ஏரி ஒன்றிருந்தது. அதை ஒட்டிய காட்டிற்குள் காலை நேரம் நடைப்பயிற்சி செய்வது லூசிக்குப் பிடித்தமானது. குன்று போல உயர்ந்த பாறையின் மீது நின்றபடியே சில நாட்கள் மேகங்களைக் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள். எவ்வளவு நேரம் பார்த்தாலும் மேகங்கள் சலிப்பதேயில்லை.

அந்தப்பள்ளியின் முன்வாசல் முன்பு வடக்கு நோக்கி இருந்தது. அதைத் தற்போது மூடியிருந்தார்கள். அந்த வாசலில் அமைக்கப்பட்ட காவல் கோபுரம் சிதைந்த நிலையில் நின்றிருந்தது. சில நாட்கள் அதையும் தேடிப்போய்ப் பார்த்து வருவாள்.

காலத்தில் பழசாகிப் போன எல்லாப் பொருட்களும் கதைகள் கொண்டதாகி விடுகின்றன. இந்தக் கோபுரத்திற்கும் நிறையப் பேய்க் கதைகள் இருப்பதை அறிவாள். கோபுரம் பற்றி மட்டுமில்லை. அந்தப் பள்ளியில் இறந்து போன மாணவி ஒருத்தி பற்றியும் கதைகள் உலவுகின்றன. இருக்கட்டும் கதைகள் தானே ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியம்.

••

ஒவ்வொரு நாளும் முதல்வர் அறைக்குள் நுழைந்தவுடன் லூசியின் முகம் இறுக்கமாகிவிடும். அது ஒரு பழக்கம். கோபத்தில் அவள் குரல் உயரும் போது எதிரே நிற்பவர்கள் பயந்து போய்விடுவார்கள். அவளிடம் தயவோ, கருணையோ எதிர்ப்பார்க்க முடியாது. அவள் மிகவும் கண்டிப்பானவள். பொய் சொல்கிறவர்களின் குரலை வைத்தே அவளால் கண்டுபிடித்துவிட முடியும். குரலில் பொய் கலந்தவுடன் அது மாறிவிடுகிறது. போலியான பணிவு. இரக்கம். வெளிப்படுகிறது.

உண்மையில் அந்தக் கோபம் அவளுக்குக் கவசம் போலப் பயன்பட்டது. தேவையற்ற கவனத்தை, ஈர்ப்பை உருவாக்காமல் அவளைப் பாதுகாத்தது. வராந்தாவில் நடக்கும் போது வேண்டுமென்றே அவள் வேகமாக நடப்பாள். ஆசிரியர்களிடம் பேசும் போது அவர்கள் கண்களைப் பார்த்தே பேசுவாள். அவளது நுனி நாக்கு ஆங்கிலம் எவரையும் மயக்கக்கூடியது.

யோசித்துப் பார்த்தால் தன் வாழ்க்கை ஒரு நடிப்பு. அந்த நாடகத்தைப் பல ஆண்டுகளாகச் சிறப்பாக நடித்து வருகிறோம் என்றே லூசிக்கு தோன்றும். இதை மாற்றிக் கொள்ள முடியாது.

அந்தப் பள்ளியில் நண்பர் என்று சொல்லிக் கொள்ள அவளுக்கு இருந்த ஒரே நபர் பார்க்கர் மாஸ்டர். பள்ளியின் பியானோ ஆசிரியர். மிகச்சிறந்த இசை கலைஞர். அவரது இசைத்திறமையை உலகம் அறியவேயில்லை.

அவர் ஞாயிறு தோறும் அவள் வீட்டிற்கு வருவார். இருவரும் ஒன்றாக இசை கேட்பார்கள். மதியம் அவளுடன் சாப்பிடுவார். பின்பு ஆளுக்கு ஒரு புத்தகம் கையில் எடுத்துக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே படிப்பார்கள். மாலை மீண்டும் கையில் காபியுடன் இசை கேட்பார்கள்.

அவருக்குச் சூடாகக் காபி குடிப்பது பிடிக்கும். ஆவி பறக்கும் காபியைக் கையில் வைத்தபடியே அவர் இசைத்தட்டிலிருந்து எழும் பால் ராப்சனை ரசித்துக் கொண்டிருப்பார். சில நேரம் அவரது முகத்தில் வெளிப்படும் சந்தோஷம் அபூர்வமானது

அவர் ஒருவர் தான் அவளைப் பெயர் சொல்லி அழைப்பார். அவளை விடவும் வயதில் மூத்தவர் என்பதோடு நல்ல நண்பர் என்பதும் ஒரு காரணம்.

அவர் விடைபெற்றுப் போகும் போது மறக்காமல் ஒரு ஆரஞ்சு பழத்தைக் கொடுத்துவிடுவாள். எவ்வளவு நல்ல மனிதர். எதையும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. சொல்லாமலே அவள் மனத்துயரை அவர் புரிந்து கொண்டிருந்தார். பார்க்கர் மாஸ்டர் திடீரென இறந்து போனது அவளது துரதிருஷ்டம். இப்போது சில இசைத்தட்டுகளைக் கேட்கும் போது அவர் நினைவு மேலிடக் கண்ணீர் கசிய நேரிடுகிறது

••

ரங்கநாத் கொடுத்த பறவையின் இறகை தன் மேஜையில் கொண்டுவந்து போட்டபடி லூசி படிப்பதற்காக ஏதாவது ஒரு புத்தகத்தை எடுக்கத் தேடினாள். அவளுக்கு மேரி ஆலிவரின் கவிதைகளைப் பிடிக்கும். சில நேரம் அந்தக் கவிதைகளை மனப்பாடம் செய்து கொள்வதும் உண்டு. மேரி ஆலிவர் எவ்வளவு நன்றாக எழுதுகிறாள். நாமும் இப்படிக் கவிஞராகியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வாள்

கவிதைப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிய போது மனதில் புதிதாக வந்த பறவை எப்படியிருக்கும் என்ற எண்ணமே மேலோங்க ஆரம்பித்தது

பறவைகளுக்குப் புதிய இடம் பற்றிய பயம் கிடையாது. இவ்வளவு பெரிய வளாகத்தில் அது ஏன் தன் வீட்டுத் தோட்டத்தைத் தேடி வந்திருக்கிறது. உலகம் பெரியது என்பதை அந்தப் பறவையின் வருகை நினைவூட்டுகிறதா.

அதைப்பற்றி நினைக்க நினைக்க மறுநாள் அந்தப் பறவையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் உருவானது.

அலமாரியிலிருந்த கேமிராவை எடுத்துத் துடைத்துச் சரி செய்து வைத்துக் கொண்டாள். ஏதாவது ஒரு விருப்பமான விஷயத்தை இப்படி மனதில் போட்டுக் கொண்டால் மனது உற்சாகமாகிவிடுகிறது. இல்லாவிட்டால் சலிப்பு தான். என்ன செய்தாலும் சில நாட்களில் சலிப்பைப் போக்கிக் கொள்ள முடியாது.

••

லூசி தந்தையை அறியாதவள். அவளுக்கு இரண்டு வயதாகும் போது அவளது தந்தை இறந்துவிட்டார். அம்மா தான் அவளையும் அக்காவையும் வளர்த்தாள். அவர்கள் மாமா வீட்டில் வசித்தார்கள். அக்காவின் படிப்பை நிறுத்திய மாமா தான் அவளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

மாமா வீட்டில் நேரத்திற்குச் சாப்பாடு கிடைக்காது. அம்மா ஒரு வேலைக்காரி போலப் பகலிரவாக வீட்டு வேலைகள் செய்து வந்தாள். மாமா இல்லாத நேரத்தில் அத்தை அம்மாவைக் கண்டபடி திட்டுவாள். அவளது கோபம் லூசியின் மீதும் திரும்பும். லூசிக்கு மாமா வீட்டில் இருக்கப் பிடிக்கவேயில்லை.

ஒரு நாள் அம்மா லூசியிடம் சொன்னாள்

“உன்னை சிஸ்டர் மேரியோடு அனுப்பி வைக்கப் போகிறேன். இனிமேல் அவள் உன்னைப் படிப்பைக் கவனித்துக் கொள்வாள். படிப்பை தவிர உனக்கு வேறு நினைப்பே இருக்கக் கூடாது“

அம்மா சொன்னது போலவே திருநெல்வேலியில் சிஸ்டர் மேரி உதவியால் படித்தாள். விடுமுறை நாட்களில் அவள் மட்டுமே ஹாஸ்டலில் இருப்பாள். அம்மா அவள் படிப்பு முடியும் வரை அவளைத் தேடி வந்ததேயில்லை. கல்லூரி படிக்கப் பெங்களூர் போவதற்கு முன்பு அம்மாவைத் தேடிப் போய்ப் பார்த்து வந்தாள். அம்மா அவளை ஆசீர்வாதம் செய்தபடியே சொன்னாள்

“லூசி உன் எதிர்காலம் உன் கையில் தானிருக்கிறது“

எதற்காக அப்படிச் சொன்னாள் என்று தெரியவில்லை. ஆனால் அவள் கல்லூரி படிப்பு முடிவதற்குள் அம்மாவும் இறந்து போனாள்.

இருபது வயதிற்குள் வாழ்க்கையில் தனக்கு யாருமேயில்லை என்று அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பித்த போது அந்த ஏக்கம் ஆழமாக அவளை வாட்டியது. அப்போது தான் இமானுவேலைச் சந்தித்துப் பழகி அவரையே திருமணம் செய்து கொண்டாள். இருவருமாகத் தான் அந்த உறைவிடப் பள்ளிக்கு விண்ணப்பித்தார்கள்.. இருவருக்கும் வேலை கிடைத்தது.

••

ஏன் இதை எல்லாம் இந்த இரவில் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தபடியே அவள் இரவு விளக்கின் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் பெயரறியாத பறவையின் நினைவு வந்து போனது

காலையில் அவள் தோட்டத்தில் தேடிய போதும் அந்தப் பறவையைக் காண முடியவில்லை. ஏரிவரை நடந்து போய்த் தேடிவந்தாள். அந்தப் பறவையைக் காணமுடியவில்லை

அன்று மாலை ரங்கநாத்தின் மனைவி அந்தப் பறவையைத் தன் வீட்டில் முன்னுள்ள மரத்தில் பார்த்ததாகச் சொன்னாள்

“எது மாதிரி இருந்துச்சி அந்தப் பறவை“

“வால் நீண்ட குருவி மாதிரி. ஆனா குருவியில்லை“

“நிறம்“

“சரியா சொல்லத்தெரியலை. ஆனால் மஞ்சளும் சிவப்பும்னு நினைக்கிறேன்“

“அதோட குரல் எப்படியிருந்தது“

“சின்ன பிள்ளைங்க குரல் மாதிரி இருந்துச்சி“

“நிஜமாவா“ எனக்கேட்டாள்

“ஆமா.. அந்தக் குரலை கேட்டால் ஏதோ சொல்ல வர்றது மாதிரியே இருந்துச்சிம்மா “

“எனக்கு அதைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு“

“நாம ஆசைப்பட்டா பறவை வராது. அதுவா வரணும்“

“அந்த பறவை எந்தப்பக்கம் போனது“

“கிழக்கே போனது. நாளைக்குத் திரும்ப வரும்னு நினைக்கிறேன்“

“அது வந்தா என்னைக் கூப்பிடு“ என்றாள் லூசி

“போட்டோ எடுக்கப் போறீங்களா“ எனக்கேட்டாள் மல்லிகா

“எடுக்கணும்“ என்றாள் லூசி

மல்லிகா ஆசையோடு கேட்டாள்

“என்னையும் ஒரு போட்டோ எடுத்து தருவீங்களா“

“உனக்கு எதுக்குப் போட்டோ“

“ஊர்ல எங்க அப்பாவுக்கு குடுக்க “ எனச் சந்தோஷத்துடன் சொன்னாள்.

ஆசைப்படும் தன் கண்ணில் படாமல் ஏன் அந்தப் பறவை ஒளிந்து விளையாட்டுக் காட்டுகிறது என லூசிக்கு எரிச்சலாக வந்தது.

அவளுக்கு அப்பறவையை உடனே காண வேண்டும் என்ற ஆசை அதிகமானது.  கிழக்கு நோக்கி நடந்து போக ஆரம்பித்தாள். இருட்டும் வரை ஒவ்வொரு மரமாகத் தேடியலைந்தாள். வேறு சில பறவைகளைக் கண்டாள். ஆனால் தேடும் பறவையைக் காண முடியவில்லை

அன்றிரவு வீடு திரும்பிய போது மனதில் காரணமில்லாமல் வருத்தமும் வெறுமையும் கூடியது போலிருந்தது. பறவையைப் பார்க்கமுடியாமல் போனால் என்ன. அதற்காக இப்படி வருத்தப்பட வேண்டுமா. பறவை தானே, அதற்கு எதற்காகக் கவலைப்பட வேண்டும்

திடீரென அது வெறும் பறவையில்லை. அவள் விரும்பிய சிறு விஷயம் கூட அவளுக்குக் கிடைக்கவில்லை என்பதன் அடையாளம் போலத் தோன்றியது. அப்படி நினைப்பு வந்தவுடன் கடந்தகாலத்தின் துயர நாட்கள் மனதை அழுத்தத் துவங்கின. அம்மா கண்ணீர் விடும் காட்சி மனதில் வந்து போனது. ஹாஸ்டல் அறையில் அழுதபடியே இருந்த நினைவுகள் பீறிட்டன. அதிலிருந்து விடுபடுவதற்காக அவளாக ஒரு காகிதத்தில் பறவை ஒன்றை வரைய ஆரம்பித்தாள்

மேஜையில் கிடந்த சிறகை வைத்துக் கொண்டு பறவை இப்படித்தானிருக்கும் என அவள் கற்பனையில் ஒரு பறவையை வரைந்தாள். அது சரியாக வரவில்லை. ஏன் இவ்வளவு பதற்றம் அடைகிறோம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

மறுநாள் ரங்கநாத் அவளைத் தேடி வந்த போது சொன்னான்

“ஒரு பறவையில்லை மேடம். ஜோடியா வந்துருக்கு. பார்த்தா வெளிநாட்டுப் பறவை மாதிரி தெரியுது. கடல் கடந்து வந்துருக்கு“

“என் கண்ணிலே படவேயில்லை“

“எவ்வளவு அழகான ஜோடி. ஒரே காதல் விளையாட்டு தான். மனுசங்க போலப் பறவைகளைப் பார்த்தவுடனே வயசைக் கண்டுபிடிக்க முடியாதுல்ல“

அவன் அப்படிக் கேட்டது அவளுக்குப் பிடித்திருந்தது

“நீ எங்கே பார்த்தே “என்று கேட்டாள்

“சைக்கிள் ஸ்டாண்டை ஒட்டின மரத்தில்“.

“இப்போ போனா இருக்குமா“

“நான் காலையில் பார்த்தேன். எங்க போகப்போகுது. நம்ம தோட்டத்துக்கு வரத்தான் செய்யும்“

அவன் அப்படிச் சொன்னபோதும் அவளால் சமாதானம் செய்து கொள்ளமுடியவில்லை. ஆசையை அடக்க முடியாமல் கேட்டாள்

“எப்படியும் நம்ம ஸ்கூல் கேம்பஸ்க்குள்ளே தானே இருக்கும். வா. தேடிப் பார்த்துட்டு வருவோம்“

“போகலாம் மேடம்“

ரங்கநாத்துடன் பள்ளி வளாகத்தை முழுமையாகச் சுற்றி வந்த போதும் அந்தப் பறவைகள் அவள் கண்ணில் படவில்லை. அவள் சலித்துப் போனவளாகச் சொன்னாள்

“எங்கேயாவது போய்த் தொலையட்டும். இனி அந்தப் பறவையை நான் பார்க்கவே மாட்டேன்“

ரங்கநாத் அவளது கோபத்தைக் கண்டு சிரித்தான்

வீடு திரும்பி லூசி அந்தப் பறவையை மறக்க முயன்றாள். ஆனால் மனதில் அது சிறகடித்துப் பறப்பது போலவே இருந்தது. இசைத்தட்டுகளைச் சுழலவிட்ட போதும் மனது அந்த ஏமாற்றத்தையே சுற்றிவந்தது

பலருக்கும் எளிதாக நடந்துவிடுகிற சிறிய விஷயங்கள் கூடத் தனக்குக் கிடைப்பதில்லை என்ற வருத்தம் அவளை ஆழமாகப் பாதித்தது. அன்றிரவு அவள் பிரார்த்தனை செய்யும் போது ஏனோ கண்ணீர் விட்டாள்

மறுநாள் காலை அவள் தோட்டத்தில் பறவையின் விநோதமான குரல் கேட்டது. அதே பறவைகள் தான். தான் தேடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பறவைகள் தன் தோட்டத்திற்கே வந்து நிற்கிறது

அவளுக்கு வெளியே போய் அதைக் காண ஆசையிருந்த போதும் அதை அடக்கிக் கொண்டு வீட்டின் கண்ணாடி ஜன்னல்களைச் சாத்தி வைத்தாள். ஒருமுறை பறவையை நேரில் பார்த்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் அதை அனுமதிக்க மறுத்தவள் போல வேண்டுமென்றே தன் அறைக்குள் போய்க் கதவை தாழிட்டுக் கொண்டாள்.

மதியம் ரங்கநாத் வந்து வாசற்கதவைத் தட்டிய போது தான் வெளியே வந்தாள்

“தோட்டத்துல பறவைகள் இருதுச்சே.. பாத்தீங்களா “

“தூங்கிட்டேன். வெளியே எதையும் கவனிக்கவேயில்லை“. என்றாள்

அவள் சொல்வது பொய் என்தை ரங்கநாத் அறிந்து கொண்டவன் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

மழை வரும்போல ஒரே மேகமா இருக்கு என்றாள் லூசி

பேச்சை மாற்றுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டவனாகச் சொன்னான்.

“மேடம்.. நாளைக்கு மல்லிகாவை கூட்டிட்டு  ஊருக்குப் போறேன். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும்மா“

“உன் வேலைய யாரு பாக்குறது “எனக் கோபமாகக் கேட்டாள்

“கிட்ணன் தம்பி வந்துருக்கான். அவனைப் பாக்க சொல்லியிருக்கிறேன்“

“போயிட்டு வா.. நானும் ஊருக்குப் போகப்போகிறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்“ என்றாள், ஏன் அப்படிச் சொன்னாள் என்று அவளுக்கே புரியவில்லை.

அவள் சொன்னதை நம்பமுடியாமல் திகைத்தபடியே ரங்கநாத்  படியிறங்கி நடந்தவன் கிழக்கே தெரிந்த மேகங்களைப் பார்த்தபடிய சொன்னான்

“மேடம்,, மழை வருது.. அங்கே பாருங்க.. “

அவன் சொல்லிமுடிப்பதற்கு மழையின் முதல் துளி தரையில் இறங்கியிருந்தது

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2021 23:04

ரெட் பைனின் பயணம்

முப்பது நாட்களில் முப்பது கவிஞர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுச் சீனாவில் ரெட் பைன் பயணம் செய்த அனுபவத் தொகுப்பே Finding Them Gone. வித்தியாசமான பயணநூல். இரண்டு வேறு காலங்களுக்கு இடையே அவர் பயணம் செய்து திரும்பியதை உணர முடிகிறது

பீஜிங்கிலிருந்து தனது பயணத்தைத் துவங்கும் ரெட்பைன் மின்சார ரயிலில் சென்று கன்பூசியஸின் சொந்த ஊரை முதலில் காணத் திட்டமிடுகிறார். சீனாவின் அதிநவீன ரயில் சேவை பிரமிப்பூட்டக்கூடியது. ரயில் நிலையங்கள் விமானநிலையம் போலவே அமைக்கப்பட்டிருப்பதையும், முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் நிலையத்தின் வசதிகளையும் ரெட் பைன் வியந்து எழுதுகிறார். 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள ஊருக்கு ஐந்து மணி நேரத்தில் ரயில் போய்விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோமீட்டருக்கு மேல் வேகம் செல்கிறது ரயில். அந்த ரயில் நிலையத்தில் எல்லா வகையான அமெரிக்க உணவு வகைகளும் கிடைக்கின்றன.

ரயிலில் தரப்படும் சிற்றுண்டிகளும் கூட அமெரிக்கத் தயாரிப்புகளே என்கிறார். ரயிலில் உள்ள கழிப்பறை கூட நட்சத்திர விடுதியில் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பதைக் கூறுகிறார். மூன்று நேரப் பயணத்தின் பிறகு ரெட் பைன் இறங்கிய ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க உள்ளூர் வழிகாட்டி ஒருவர் காத்திருக்கிறார். சீனாவில் ஜென் டூரிசம் மிகவும் புகழ்பெற்றது. இது நிறைய வருமானம் தரக்கூடியது. ஆகவே இதற்கான வழிகாட்டிகள் நிறைய இருந்தார்கள்

அவரை அழைத்துச் சென்ற வழிகாட்டி கன்பூசியஸின் சொந்த ஊராக மவுண்ட் நிசானுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே கன்பூசியஸின் பிறந்த இடம், மற்றும் கைவிடப்பட்டு அவர் வளர்க்கபட்ட குகை மற்றும் அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கிய இடங்களைக் காணுகிறார். முடிவில் கன்பூசியஸின் கல்லறையைத் தேடிச் செல்கிறார். எளிமையான கல்லறை. இரண்டு நினைவு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே தான் கொண்டு போயிருந்த விஸ்கியிலிருந்து ஒரு குவளை ஊற்றி கன்பூசியஸிற்குப் படையல் வைத்து வணங்கியதோடு தானும் ஒரு குவளை மதுவை கன்பூசியஸோடு இணைந்து குடிக்கிறார்.

சீனாவில் வெளிநாட்டவர்கள் எல்லா விடுதிகளிலும் தங்க அனுமதி கிடையாது. குறிப்பிட்ட விடுதிகள் மட்டுமே அனுமதி தந்தன. ஆகவே அவரது நண்பர் மலிவான விடுதி ஒன்றில் ஒரு இரவு தங்க இடம் அமைத்துக் கொடுக்கிறார்

ஒரு பக்கம் அதிநவீன வாழ்க்கையின் காட்சிகள் மறுபக்கம் மரபான சீன நம்பிக்கைகள், வழிபாடுகள். கவிதை மரபைப் பின்தொடரும் முறை எனச் சீனாவிற்குப் பல்வேறு முகங்கள் இருப்பதை ரெட் பைன் அடையாளம் காட்டுகிறார்.

கவிஞர்களின் கல்லறைகளை முறையாகப் பாதுகாப்பதுடன் அதை ஒரு சுற்றுலா ஸ்தலமாகச் சீன அரசு மாற்றியிருப்பதை நினைவுபடுத்துகிறார் ரெட் பைன். இந்தப் பயணக்கட்டுரைகளின் ஊடாக அவர் நினைவு கொள்ளும் கவிதைகளும் இயற்கைக் காட்சிகளும் சிறப்பானவை.

இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பழங்காலச் சீனாவில் கவிதை எழுதத் தெரியாத ஒருவருக்கு அரசுப்பணி கிடைக்காது. அரசுப்பணிக்கான தேர்வின் ஒரு பகுதியாகக் கவிதை எழுதுவது இருந்த்து. ஆகவே அரசு அதிகாரிகள் கவிதைகளில் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார்கள் என்று ஒரு குறிப்பை ரெட் பைன் தெரிவிக்கிறார். அந்த நாட்களில் இருபது வயதிற்குள் அரசின் முக்கியப் பதவிக்கு வந்து விடுவார்கள். ஆகவே இன்றைய இருபது வயதும் அன்றைய இருபது வயதும் ஒன்றில்லை. அன்றைய இருபது வயதில் ஒருவனுக்குத் திருமணமாகி சமூக அந்தஸ்து கிடைத்திருக்கும் என்கிறார்.

இந்தப் பயணத்தில் லி பெய், து ஃபூ, வாங் வீ, சு துங்-பாவோ, ஹுசுவே தாவோ, சியா தாவோ, வீ யிங்-வு, ஷிஹ்-வு , ஹான்-ஷான் போன்ற முக்கியக் கவிகளின் நினைவிடத்திற்குச் சென்று வந்திருக்கிறார்.

சீனாவில் ஒருவர் தன் வயதைப் பிறந்த நாளிலிருந்து கணக்கிடுவதில்லை. புத்தாண்டு தினத்திலிருந்தே கணக்கிடுகிறார்கள் என்றொரு குறிப்பும் இதில் உள்ளது.

கவிதையை மொழியாக்கம் செய்யும் சில வார்த்தைகளைத் தான் புரிந்து கொண்ட விதமும் நேரில் அந்த இடங்களைக் காணும்போது ஏற்படும் புரிதலும் முற்றிலும் வேறுவிதமாக இருப்பதை ரெட்பைன் குறிப்பிடுகிறார். வாசிப்பின் வழியாக மட்டுமே ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. அந்த நிலக்காட்சிக்கு, வீடுகளுக்கு, மலைகளுக்கு நேரில் சென்றால் மட்டுமே கவிதையின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்

சீனாவின் முக்கியக் கவிஞர்களில், ஓ-யாங் ஹ்சியுவின் நினைவிடத்தைத் தேடிச் செல்லும் ரெட்பைன் ஓ-யாங் ஹ்சியுவின் வாழ்க்கையை விவரிக்கிறார். அவர் பல நீதிமன்றங்களில் மூத்த பதவிகளில் பணியாற்றியவர். சிறந்த நிர்வாகி, வரலாற்றாசிரியர் என்று குறிப்பிடுகிறார். இளமையில் வறுமையைச் சந்தித்த அவர் தாயின் வழிகாட்டுதலில் படித்து முன்னேறி பெரிய பதவிகளை அடைந்தார் என்கிறார்

மந்திரிக்குப் பிடிக்காத அதிகாரிகளைத் தலைநகரிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஊருக்கு மாறுதல் செய்வது அந்த நாளைய வழக்கம். சிலர் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்குக் கூட மாற்றப்பட்டார்கள். அப்படி ஓ-யாங் ஹ்சியு தண்டிக்கப்பட்டு ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு மாறுதல் செய்யப்பட்டார். சுச்சோவின் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய நாட்களில் அங்குள்ள இயற்கைக் காட்சிகளில் மெய்மறந்து போனார். அது அவரது கவிதை மனதிற்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு நாளும் புதிய ஊரை நோக்கி பயணம் செய்தபடியே இருந்த ரெட் பைன் சீனாவில் பேருந்துகள் சரியான நேரத்திற்குப் புறப்பட்டுச் சரியான நேரத்திற்குச் சென்று அடைந்துவிடும். ரயில்களில் அப்படியில்லை. தாமதம் ஏற்படுவது அதிகம் என்கிறார்

தனது பயணத்தின் ஊடே விவசாயிகள். சிறு வணிகர்கள். சிறார்களுடன் பேசி இறந்த கவிஞரின் வாரிசுகள் இப்போது எங்கே இருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக வீடு எங்கேயிருக்கிறது என்பதை ரெட் பைன் அறிந்து கொள்கிறார். இதனால் வழிகாட்டிக்குத் தெரியாத புதிய இடங்களை அவர் கண்டுபிடிக்கிறார்.

அந்தக் காலத்தில் கதை சொல்வதற்காக ஊடகமாகவே கவிதை செயல்பட்டது. ஆகவே கவிஞர்கள் கவிதைகள் வழியாகக் கதை சொன்னார்கள். இந்தக் கதைகள் காதலைப்பற்றியதாகவோ, போர்த்திறன் பற்றியதாகவே இருந்தன.

சாண்டாயிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் து ஃபூ இருபது மாதங்கள் கழித்தார், அந்த நேரத்தில் 140க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். அப்போது இருந்த அவரது வீடு காலமாற்றத்தில் இடிக்கப்பட்டுப் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நகரின் கிழக்கு வாயிலுக்கு அருகில் அந்த வீடு போல மாதிரி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறார்

குளிர் மலை எனப்படும் ஹான்-ஷானின் கவிதைகளை அவர் வசித்த குகைக்கே சென்று ரெட் பைன் வாசித்திருக்கிறார்

கவிஞர்களின் நினைவிடங்களில் சில முறையாகப் பாதுகாத்து வரப்படுகின்றன என்றும் பலரது நினைவிடங்கள் சிதைந்த நிலையில் காணப்படுவதையும் தெரிவிக்கிறார். இந்தக் கவிதைகளை இன்றைய தலைமுறை விரும்பி வாசிக்கவில்லை. அவை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தலைமுறையின் நோக்கமும் கவனமும் பணம் தேடுவதில் மட்டுமே இருக்கிறது. அவர்களுக்குத் தங்களின் கவிதை மரபை பற்றியோ, புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றியோ விருப்பமில்லை. வயதானவர்களும் ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் மட்டுமே இவை பற்றிப் பேசுகிறார்கள் என்கிறார். இந்தியாவிலும் இதே நிலை தானே.

இந்தப் பயணத்திற்கான செலவை ரெட் பைனின் பதிப்பாளர் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அத்துடன் மலிவான கட்டணத்திலுள்ள விடுதிகளில் தங்கிக் கொண்டு பேருந்திலும், ரயிலிலும் படகிலும் வேனிலும் பயணம் செய்தே சீனாவின் குறுக்கும் நெடுக்குமான ரெட் பைன் பயணித்திருக்கிறார். இது கவிதையின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பின் அடையாளமாகவே உள்ளது.

ரெட் பைன் போல ஒருவர் இந்தியா முழுவதும் சுற்றி இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் வசித்த இடங்களை, நினைவகங்களைப் பார்த்து வருவது சிறந்த கனவுப்பயணமாக அமையும். ரெட் பைன் போல ஒரு மாதகாலத்தில் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. ஓராண்டு பயணமாக முயன்றால் சாத்தியமாகக் கூடும்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2021 05:33

June 22, 2021

மீட்கப்படும் உண்மைகள்

.

The Dig என்ற புதிய பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். ஜான் பிரஸ்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு சைமன் ஸ்டோன் இயக்கிய படம்

1939 ஆம் ஆண்டு நடைபெற்ற சுட்டன் ஹூ அகழ்வாராய்ச்சியின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு இத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஒரு திரைப்படத்தை எடுத்திருப்பது வியப்பளிக்கிறது. மிகச் சிறந்த ஒளிப்பதிவு. படத்தொகுப்பு மற்றும் சிறந்த நடிப்பு படத்தோடு நம்மை ஒன்றிப் போகச் செய்கிறது. நிறைய நேரங்களில் நாம் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்த அளவு படம் நெருக்கம் தருகிறது.

உண்மையில் கதை மனித உறவுகளுக்குள் புதைந்திருக்கும் அன்பை, தனிமையை, புரிந்துணர்வை, மரபான அறிவை, ஆசைகளையே ஆய்வு செய்கிறது. வாழ்க்கை நாடகத்தில் நாம் நிறைய விஷயங்களை, ரகசியங்களை மறைத்துக் கொண்டிருக்கிறோம். அவை ஏதோ ஒரு புள்ளியில் மீண்டும் வெளிப்படத்துவங்குகிறது. அதை எதிர்கொள்வதும் புரிந்து கொள்வதும் எளிதானதில்லை. அதைத் தான் படம் பேசுகிறது.

புற அளவில் ஆங்கிலோ சாக்சன் காலத்திய சுட்டன் ஹூ கல்லறை தளத்தைப் பற்றியதாக இருந்த போதும் அதை மட்டும் படம் கவனம் கொள்ளவில்லை.

சுட்டன் ஹூ என்பது இங்கிலாந்தின் சஃபோல்கில் உள்ள வூட்ரிட்ஜ் அருகே 6 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையிலான இரண்டு ஆங்கிலோ சாக்சன் கல்லறை தளமாகும். அதை அகழ்வாய்வு செய்யும் பணி தற்செயலாகவே துவங்கியது.

படத்தின் துவக்கத்தில் நாம் சஃபோல்க்கிலுள்ள 526 ஏக்கர் தோட்டம் ஒன்றில் ஆங்காங்கே பெரிய மண்மேடுகள் இருப்பதைக் காணுகிறோம். அதனுள் ஏதோ புதையல் இருக்கக் கூடுமென நினைக்கிறார்கள். இந்தப் பண்ணையின் உரிமையாளரான எடித் மண்மேடுகளைத் தோண்டி அதனுள் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயல்கிறாள்

எடித் தனது இருபது வயதுகளில் குடும்பத்தினருடன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார், ஆஸ்திரியா-, கிரீஸ் மற்றும் எகிப்துக்குச் சென்ற அவர் தனது பயணத்தின் போது பல்வேறு அகழ்வாராய்ச்சிகளைக் கண்டார். அந்த ஆசையின் காரணமாகவே தனது தோட்டத்திலுள்ள மண்மேட்டை ஆய்வு செய்ய விரும்பினார்.

இதற்காக அவள் பசில் பிரவுனை அழைக்கிறாள். அவர் பூமியைத் தோண்டும் கலையை மரபாக அறிந்தவர், எளிய விவசாயி. அமெச்சூர் அகழ்வாய்வாளர்.

அவருக்கு விவசாய கூலிகளுக்கான சம்பளம் தரவே எடித் முன்வருகிறாள். அவர் சம்மதிக்க மறுக்கிறார். இந்த இடத்தைத் தோண்ட வாரத்திற்கு 30 ஷில்லிங் வேண்டும் என்று கறாராகப் பேசி வேலையை ஒத்துக் கொள்கிறார். எத்தனை பேர் உதவிக்குத் தேவை எனக்கேட்கும் போது தான் ஒருவனே அதைச் செய்யமுடியும் என்கிறார். அதன்படியே பணியைத் துவங்குகிறார். மழை நாளில் அந்தப் பணியை எடித் பார்வையிடுகிறாள். என்ன அழகான காட்சி.

மண்குன்றை தோண்டத் தோண்ட ஆச்சரியங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன. ஒரு நாள் தோண்டும் பணியின் போது பாசில் மண்ணிற்குள் சிக்கிக் கொண்டுவிடுகிறார். அவரைப் பலரும் சேர்ந்து மீட்கிறார்கள்.. அந்தக் காட்சி படத்தில் மிக உண்மையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு அவரது உதவிக்கு எடித்தின் உறவினர் ரோரி லோமாக்ஸ் வந்து சேருகிறான். துடிப்பான இளைஞன். விமானப்படையில் சேருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவன் அகழ்வாய்வு பணிகளை முழுமையாகப் படம்பிடிக்கிறான். அவனுக்கும் எடித்திற்குமான வெளிப்படாத காதல். எடித்தின் மகன் மீது பசில் கொண்ட அன்பு எனப் படத்தில் அழகான இழைகள்.

மண்மேட்டிற்குள் பழைய காலப் படகு ஒன்று கண்டுபிடிக்கப்படுகிறது. அது ஒரு மன்னரின் கல்லறை மேடு என்பதைப் பாசில் கண்டறிகிறார். அந்த உண்மையை உலகிற்கு அறிவிக்கிறாள் எடித்.

அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தைப் பொதுமக்கள் பலரும் பார்வையிடுகிறார்கள். இதை அறிந்த கலாச்சார நிறுவனங்கள் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் உடனே அந்த இடத்தைக் கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள முயலுகின்றன.

இப்ஸ்விச் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் வல்லுநர்கள் வருகை தருகிறார்கள். அரசின் அனுமதியில்லாமல் தோண்டியது தவறு என்று வாதிடுகிறார்கள். படிக்காத விவசாயி எனப் பசிலை வேலையை விட்டுத் துரத்தி அனுப்புகிறார்கள். இதை எடித் விரும்பவில்லை. விஷயம் அவள் கையை மீறிப் போகிறது .

அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை தேசிய கலாச்சாரச் சின்னமாக அறிவித்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டவுடன் ஆய்வுப் பணி கைமாறிப் போகிறது. இப்ஸ்விச்சிலிருந்து இளம் ஆய்வாளர்கள் களத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யப் பாசில் நியமிக்கப்படுகிறார்.

ஆய்வாளர்களான ஸ்டுவர்ட் மற்றும் அவரது மனைவி பெக்கி இருவருக்குள்ள உறவு. பெக்கியின் சஞ்சலங்கள் அழகாக வெளிப்படுத்தப்படுகின்றன. ரோரியுடன் அவள் கொள்ளும் காதல் நிஜமானது. அந்த அகழ்வாய்வின் வழியே அவள் தன்னை அறிந்து கொள்கிறாள்.

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் கடந்தகாலத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியின் வழியாக நிகழ்கால வாழ்வின் உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். மறைத்துவைக்கபட்ட ஆசைகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அது தான் படத்தின் சிறப்பு.

படத்தின் துவக்கத்தில் பணக்கார விதவை எடித் அவர்களின் சஃபோல்க் வீட்டிற்குப் பசில் பிரவுனை அழைக்கிறார். முதற்சந்திப்பிலே நாம் இருவரின் ஆளுமைகளையும் முழுமையாக அறிந்து கொண்டுவிடுகிறோம். கண்ணால் பார்த்தே அந்த நிலத்தை மதிப்பிடுகிறார் பசில். அவர் சொன்னது தான் கடைசியில் ஆய்வாளர்களால் கண்டறியப்படுகிறது. மரபான ஞானம் கொண்ட பசில் போன்றவர்கள் எந்தக் கல்லூரியிலும் போய்ப் படிக்கவில்லை. அந்த ஒரே குறையால் அவர்களின் அனுபவ அறிவை உலகம் அங்கீகரிக்க மறுக்கிறது. எடித் போர் சூழலின் ஊடாகவும் அந்த நிலத்தைத் தோண்டும் முயற்சியில் ஈடுபடுகிறாள். உலகின் கவனம் யுத்தகளத்தை நோக்கியிருக்கும் போது அவள் வரலாற்றின் வேறு புள்ளியைக் கண்டறிய முயல்கிறாள்.

மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்து வரும் பசிலை ஒரு நாள் தன்னோடு சாப்பிட எடித் வீட்டிற்கு அழைக்கும் காட்சி சிறப்பானது. அது போலவே உடல் நலமற்ற எடித்தை மருத்துவமனைக்குப் பசில் கொண்டு செல்லும் காட்சியும், எடித்தின் மகன் பசிலின் வீடு தேடி சைக்கிளில் வரும் காட்சியும், பெருமழையின் போது அகழ்வாய்வு நடந்த இடத்தைப் பசில் மூடி பாதுகாக்கும் காட்சியும் மறக்கமுடியாதவை.

அகழ்வாய்வுப்பணிகளின் பின்னால் உள்ள அரிய உழைப்பினை காட்சிப்படுத்தியிருப்பதுடன் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள நடக்கும் அதிகாரப் போட்டியினையும் படம் பேசுகிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தத் தொல் சின்னங்களைப் பிரிட்டிஷ் ம்யூசியத்திற்கு எடித் வழங்கிவிட்டாள் என்ற தகவல் இடம்பெறுகிறது. அத்தோடு இந்தக் களப்பணியில் உதவிய பசிலின் பெயர் அதில் இடம்பெறவில்லை. சமீபமாகவே அவரது பெயரை அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம்.

வரலாற்று உண்மைகள் பூமியில் புதைந்திருக்கின்றன. அவை வெளிப்படும் போது அதுவரை நாம் நம்பிவந்த தகவல்கள். எண்ணங்கள் மாற ஆரம்பிக்கின்றன. தற்போது கீழடியில் நடப்பதும் இது போன்ற பணி தான்.

உலகின் முக்கிய அகழ்வாய்வுகளைத் தனிநபர்களே முன்னெடுத்திருக்கிறார்கள். முடிவில் தான் அந்த ஆய்வு அரசின் கைவசம் சென்றிருக்கிறது. அகழ்வாய்வின் போது சேகரிக்கப்பட்ட பொருட்களை யாரிடம் வைத்திருப்பது என்ற போட்டி எல்லாக் காலத்திலும் நடந்திருக்கிறது. இன்றும் அந்த நிலை தொடரவே செய்கிறது.

வரலாற்று உண்மைகளுக்கு மிக நெருக்கமாகப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் காதலும் மட்டும் தான் படத்தின் சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்பட்டன என்கிறார் இயக்குநர். பொழுதுபோக்குச் சினிமாவில் இது போன்ற புதிய களங்கள் புதிய கதைகள் வெளிப்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2021 06:11

June 21, 2021

ரெட் பைனின் சீனக்கவிதைகள்

சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது.

பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார்.

இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கவிஞர்களின் சங்கம் மற்றும் ஒன்று கூடி கவிதை பாடும் முறை, கவிஞரின் நினைவாக நடக்கும் விழாக்கள். கவிதை வாசிக்கும் நாள். அரச சபையில் இடம்பெற்ற கவிஞர்களின் நிலை பெண் கவிஞர்களின் வாழ்க்கை, மற்றும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டு பெற்ற அனுபவம் என மிகச் சுவாரஸ்யமான உரையைத் தந்திருக்கிறார்.

அவர் கவிதைகளை வாசிக்கும் அழகும் அதற்குத் தரும் விளக்கமும் மிக இனிமையாக உள்ளது.இந்த உரையில் ஒரு மீனவனுக்கும் கவிஞருக்குமான உரையாடல் பற்றிய பகுதி ஒன்றுள்ளது. மிகச்சிறந்த பகுதியது.

ரெட் பைன் உரையில் மூன்று விஷயங்களை முக்கியமாகக் கருதுவேன். ஒன்று சீனாவில் தொகை நூல்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய பார்வை. இரண்டாவது கவிஞர்களின் புனைபெயர்கள். மூன்றாவது கவிஞனின் வாழ்க்கையும் பார்வைகளும்.

நமது அகநானூறு, புறநானூறு போலவே சீனாவிலும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்த கவிஞர்களின் சிறந்த கவிதைகள் ஒன்று திரட்டப்பட்டுத் தொகைநூலாக அரசால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதன் முக்கியத் தேவை அரசு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது எந்தக் கவிதையை வாசிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வதே. அது போலவே வணிகச் சந்திப்புகள். மற்றும் தூரதேசம் பயணம் செய்கிறவர்கள் ஒன்று கூடும் போது இந்தக் கவிதைகளைச் சொல்லி மகிழ்வதும் இசையோடு பாடுவதும் நல்லுறவின் அடையாளமாக இருந்திருக்கும் என்கிறார்.

ஒருவகையில் கவிதை சொல்வது என்பது ஆளுமையின் அடையாளம். தனது விருப்பம் மற்றும் ரசனையை வெளிப்படுத்தச் சிறந்த கவிதை ஒன்றைச் சொல்வதை அன்றைய சீனர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். தனக்கென தனித்துவமான பார்வையும் உலகை தனது சொந்த மனவெளிப்பாட்டின் படி அணுகுவதும். மொழியை ரசவாதி போல விரும்பும் படி உருமாற்றம் செய்வதும் கவிஞனின் வேலை. அவன் இயற்கையை அப்படியே நகலெடுப்பதில்லை. கண்முன்னே தோன்றும் காட்சிகளின் வழியே அவன் காணாத உலகை,. அறியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்துகிறான். தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலவே உலகின் காட்சிகள் வழியாகவும் பார்த்துக் கொள்கிறான். கவிஞனுக்கு உலகிடம் பயமில்லை. ஆனால் அவன் உலகின் இயக்கத்திற்கு எதிர் திசையில் செல்லவே விரும்புகிறான். கவிஞனின் அகம் எதனால் விழித்துக் கொள்ளும் எதைப் புனைவு கொள்ளும் என்பது கண்டறியமுடியாத ரகசியம்.

தொகை நூலின் வழியே கவிதைகள் தேசம் முழுவதும் பரவத்துவங்கின. இது கவிதைகளைப் பண்பாட்டு செயலாக்கியது என்கிறார். அத்துடன் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கவிதை பயிலரங்குகள். பயிற்சி நிலையங்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன என்கிறார்

தொகை நூல்களின் நோக்கம் இப்படிதானிருக்ககூடும். தமிழில் புறநானூறு யாரால் தொகுக்கப்பட்டது எவர் தொகுப்பித்தவர் என்று தெரியவில்லை. அகநானூற்றினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

இந்தத் தொகை நூல்களில் இடம்பெற்ற கவிஞர்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள். எவ்வாறு தொகுப்பு முறை செய்யப்பட்டது. ஒரு கவிஞரின் எந்தக் கவிதையை எப்படித் தேர்வு செய்தார்கள், நானூறு என்ற எண்ணிக்கையை எதை வைத்து முடிவு செய்தார்கள் என்று எந்த விபரமும் கிடைக்கவில்லை. கவிஞர்களுடன் மன்னர்களின் கவிதையும் இடம்பெற்றதை அன்றைய இலக்கியச் சூழல் எப்படி எதிர்கொண்டது. தொகைநூலில் இடம்பெறாத கவிஞர்களின் எதிர்வினை எப்படியிருந்தது என்பது போன்ற கேள்விகள் ஆராய வேண்டியவை.

இது போன்ற கேள்விக்கான பதிலாகவே ரெட் பைன் சீனாவில் தொகுக்கபட்ட கவிதைகளின் தேர்வு மற்றும் பயன்பாடு பற்றிக் கூறுகிறார். பௌத்த சமயம் காரணமாகவே தொகுப்பு முயற்சிகள் உருவாகின என்று கூறுகிறார். இந்தக் கோணத்தில் தமிழையும் நாம் ஆராய வேண்டும்.

இது போலவே கவிஞர்கள் ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டார்கள். அதுவும் கவிதையின் படிமம் அல்லது உருவகத்தைத் தனது பெயராகக் கொண்டது ஏன் என்றே கேள்விக்குச் சீனாவில் கவிதை எழுதியவர்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள். எளியோர். ஆகவே அவர்கள் புனைப்பெயரை உருவாக்கிக் கொண்டார்கள் என்கிறார். அந்த நாட்களில் வேறு கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் புனைபெயர் வைத்துக் கொண்டதில்லை. இசைக்கலைஞர்கள். ஓவியர்கள், சிற்பிகள் அவர்களின் சொந்த பெயராலே தான் அறியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சீனக்கவிஞர்கள் இயற்கையின் அடையாளமாகத் தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குளிர் மலை என்பது ஒரு கவிஞனின் பெயர். ஆயிரம் மழைத்துளிகள் என்றொரு கவிஞர். தப்பியோடிய மேகம் என்பது வேறு ஒரு கவிஞரின் பெயர். இப்படிக் கவிதைகளிலிருந்தே அவர்களின் புனைபெயர்கள் உருவாகியிருக்கின்றன. தமிழிலும் இது போலவே சங்க கவிஞர்கள் தனது கவிதையின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள்.

சங்க கவிஞர்களின் பெயர்களை வாசித்துப் பாருங்கள். அணிலாடு முன்றிலார்,குப்பைக் கோழியார், நெடுவெண்ணிலவினார் மீனெறி தூண்டிலார் வெள்ளிவீதியார் கல்பொரு சிறுநுரையார் – கங்குல் வெள்ளத்தார் என எவ்வளவு கவித்துவமாக இருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது.

சீனக் கவிதைகளின் பொற்காலமாக டாங் அரச வம்சம் ஆட்சி செய்த காலத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதுமாக 2500 கவிஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியதாகவும் சீன இலக்கிய வரலாறு கூறுகிறது. இதில் துஃபு, , லீ போ, பாய் ஜுய் மூவரும் மிக முக்கியமான கவிஞர்கள், இவர்களின் கவிதைகள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

சங்க இலக்கியத்திலுள்ள பெண் கவிஞர்களைப் போலவே தன் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு சீனாவிலும் பெண் கவிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். புற உலகம் அறியாதவர்கள் என்றே இந்தக் கவிஞர்களை வகைப்படுத்துகிறார்கள். வீட்டிற்குள் இருந்தபடியே அவர்கள் உலகை அறிந்திருக்கிறார்கள். காற்றை, மழையை, நிலவை, சூரியனை. பறவைகளின் சங்கீதத்தைப் பற்றிக் கவிதை பாடியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முதுமை, நோய், தனிமை, பிரிவு. மரணம், துக்கம், துரோகம் வஞ்சகம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கு அந்தக் காலத்திலே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் பொது வெளியில் கவிஞராக உலவ முடியவில்லை. அதைப் பண்பாடு அனுமதிக்கவில்லை என்றும் ரெட் பைன் தெரிவிக்கிறார்.

ரெட்பைன் தனது உரையில் பண்டைய பெண் கவிஞர் ஒருவரின் வீடு தேடி அலைந்த சம்பவத்தை விவரிக்கிறார். முடிவில் அதைக் கண்டுபிடித்தபோது அவர் அடைந்த பரவசத்தை உரையின் போதும் அவரது முகத்தில் காணமுடிகிறது

இது போலவே பூங்காவிலிருந்த கவிஞரின் கல்லறை ஒன்றைத் தேடிய அனுபவத்தையும் மிக அழகாக விவரித்துள்ளார்.

சீனக்கவிஞர்களில் பெரும்பாலோர் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். சுற்றியலைந்து பெற்ற அனுபவத்தைச் செல்லும் இடங்கள் தோறும் கவிதை பாடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில கவிஞர்கள் அரச சபையில் மன்னரின் ஆலோசகராகவோ, நிர்வாகப் பணிகளிலோ ஈடுபட்டிருக்கிறார்கள். அரச சபை வாழ்க்கை கவிஞர்களுக்கு ஏற்றதில்லை என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் அரச சபையில் இதயத்தில் நினைப்பதை எல்லாம் உதட்டின் வழியே பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் திறந்து பேசினால் அவர்கள் உடனே நாடு கடத்தப்படுவார்கள். அரச சபையிலிருந்து நாடு கடத்தப்பட்ட கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு என்கிறார் ரெட் பைன்.

சங்க கவிதை மரபிலும் பாடிப்பரிசல் பெற அலைந்து திரியும் கவிஞர்களையே அதிகம் காண முடிகிறது. கபிலரைப் போலச் சிலர் அரசருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஔவையைப் போலச் சிலர் நீதி சொல்லியிருக்கிறார்கள்.

சீன மன்னர்களுக்குக் கவிதையிலிருந்த ஈடுபாடு என்பது கவிதை வழியாக அவர்கள் உணர்த்தும் அறத்தின் பொருட்டேயிருந்தது என்கிறார் ரெட்பைன். அது உண்மையே, அந்தக் காலத்தில் கவிதையின் வழியே தான் அறம் பேசப்பட்டது. நீதி நெறிகள் அடையாளம் காணப்பட்டன. கவிதை ஒரு ஊடகம். அதன்வழியே தான் நுண்மையான அனுபவங்கள். ஞானம் பகிரப்பட்டது. அதுவும் கவிதையில் நேரடியாக மன்னரைச் சுட்டிக்காட்ட முடியாது என்பதால் விலங்குகளை, பருவகாலத்தைச் சொல்லி அதன் வழியே மன்னருக்குச் சொல்ல வேண்டிய நீதியைப் புரிய வைத்தார்கள்.

சங்க கவிதைகளைப் போலப் பசியை, வறுமையை, இல்லாமையைச் சீனக்கவிதைகள் அதிகம் பாடவில்லை. வறுமையான சூழலை விவரிக்கும்போதும் தமிழ்க் கவிதையினைப் போலத் துயர்மிகு சித்திரமாக வெளிப்படவில்லை.

மதுவின் மயக்கத்திலே ஆழ்ந்து கிடப்பது அன்றைய கவிஞர்களின் இயல்பு. குடியைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சீனாவில் ஏராளம் இருக்கின்றன. கூடிக் குடிப்பது மட்டுமின்றி, மலையுச்சியில் அமர்ந்து நிலவோடு குடிப்பது, படகில் தனித்திருந்து குடிப்பது எனக் குடிவாழ்க்கையைக் கொண்டாடியிருக்கிறார்கள். அரசசபையில் பதவி வழங்கப்பட்ட கவிஞர்களின் ஒரே வேலை குடிப்பது மட்டும் தான், அது உண்மையைச் சொல்ல வேண்டாதபடி கவிஞனை எப்போதும் மயக்கத்தில் வைத்திருக்கும் என்கிறார் ரெட் பைன்.

இது போலவே உயர்ந்த மலைத்தொடரைத் தேடிச்சென்று சிறிய குடில் அமைத்துக் கொண்டு வாழுவதும் கவிஞனின் இயல்பாக இருந்திருக்கிறது. கவிஞர் லி பெய் திருமணம் செய்து கொண்டு இளம் மனைவியோடு வாழ்ந்த சில மாதங்களிலே இப்படி மலையில் குடில் அமைத்து தனியே தங்கி கவிதைகள் எழுதி வந்தார் என்பதையும் ரெட் பைன் நினைவுபடுத்துகிறார்.

ரெட் பைன் மானுடவியல் பயின்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உதவித்தொகை கிடைக்கிறது என்பதற்காகச் சீனமொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த ஆர்வம் வளரவே சீனத்திலிருந்து அரிய கவிதைத்தொகுப்புகள் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வருகிறார்.

சில காலம் பௌத்த மடாலயங்களில் தங்கி தியானம் கற்றுக் கொண்டதுடன் ஜென் வாழ்க்கையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தைவானில் வசித்த போது மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டிருக்கிறார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். Cold Mountain எனும் சீனக்கவியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்காக மலையுச்சியிலிருந்த சிறிய விவசாயக் கிராமம் ஒன்றுக்குப் போய்த் தங்கிக் கொண்டு எளிய விவசாயப் பணிகளை மேற்கொண்டவாறு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

சீனாவில் இவர் மேற்கொண்ட பயணங்களும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டறிந்து வெளிப்படுத்திய விதமும் அபாரமானது.

ஜாங்னான் மலைத்தொடர் மிக நீண்டது, இங்குள்ள குகைகளில் வாழும் பௌத்த துறவிகளைத் தேடி ரெட் பைன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் அவர் அடைந்த அனுபவங்களை ரோடு டு ஹெவன் என்ற நூலாக எழுதியிருக்கிறார். இதில் நிறையப் பெண் துறவிகளைச் சந்தித்து அவர்களின் தனித்துவமிக்க வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

ரெட் பைனின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது . அவரது அப்பா ஒரு வங்கி கொள்ளைக்காரர். அவரும் நண்பர்களும் வங்கி ஒன்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார்கள். துரத்தி வந்து அவர்களைக் கண்டுபிடித்த போலீசாருடன் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள்.. இதில் முழங்காலில் காயமடைந்த அவரது அப்பாவைத் தவிர மற்றவர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். ரெட் பைனின் அப்பா சிறைக்குச் சென்றார்.

தண்டனைக்காலம் முடிந்து அப்பா வெளியே வந்ததும் தான் பதுக்கி வைத்திருந்த பணத்தைக் கொண்டு டெக்சாஸில் ஹோட்டல் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கினார். அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். சில ஆண்டுகளிலே அவர் பெரும் பணக்காரராக மாறினார்.

ரெட் பைனின் குழந்தைப் பருவம் ஆடம்பரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தது. அவரது அப்பாவிற்கு அரசியலில் ஆர்வம் உருவானது. கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரானார். தேர்தலில் போட்டியிட்டார். அந்த நாட்களில் கென்னடி சகோதரர்கள் அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். தேர்தல் அரசியலில் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. ஆகவே நிறையத் தோல்விகளைச் சந்தித்தார்.

இதற்கிடையில் ரெட் பைனின் அம்மாவை அவரது அப்பா விவாகரத்துச் செய்தார், ஆகவே எல்லா வசதிகளையும் இழந்து நடுத்தர வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ரெட் பைன் ஜூனியர் கல்லூரியில் தோல்வியுற்று மன அமைதியை இழந்தார். அதன்பின்பு மூன்று ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகே பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயிலச் சென்றார்.

தைவானில் வசித்த போது சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரது ஊக்கம் காரணமாகவே சீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.

எண்பதுகளின் மத்தியில் தான் சீனா அமெரிக்கர்களைத் தன் தேசம் முழுவதும் தடையில்லாமல் பயணம் செய்ய அனுமதி தந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் சீனா முழுவதும் பயணம் செய்தார். தான் படித்து அறிந்த சீனாவின் நிலக்காட்சிகளை, மஞ்சள் நதியை நேரடியாகச் சென்று பார்த்தார்.பௌத்த துறவிகளின் மீது ஈடுபாடு கொண்டு அவர்களைத் தேடி மலைப்பிரதேசங்களில் அலைந்தார்.

ரெட் பைன் 2005ல் சீனாவில் ஒரு மாதகாலம் பயணம் செய்து முப்பது புகழ்பெற்ற கவிஞர்களின் கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அக் கல்லறையின் முன்பாக ஒரு கோப்பை ஸ்காட்ச் விஸ்கியை மலர்களுடன் படையல் செய்து வணங்கியிருக்கிறார். இந்த உரையின் போதும் சிறிய குப்பியில் வைத்திருந்த மதுவைச் சந்தோஷத்துடன் உயர்த்திப் பருகிக் கொள்கிறார்.

ரெட் பைனின் முகத்தில் காணப்படும் சந்தோஷம். உற்சாகமான பேச்சு. வேடிக்கையாகச் சொல்லும் விதம் நம்மை அவரோடு நெருக்கமாக்குகிறது. இந்த உரையைக் கேட்ட கையோடு பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதைகளின் தொகுப்பான வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை வாசித்தால் முழுமையான அனுபவத்தை நாம் பெற முடியும்.

ரெட் பைன் போலவே பயணி எனும் ஸ்ரீதரனும் சீனாவில் பணியாற்றிச் சீனமொழியை முறையாகக் கற்றுக் கொண்டு இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மிகுந்த பாராட்டிற்குரிய பணியிது.

ரெட் பைன் தேர்வு செய்து வாசிக்கும் கவிதைகளை கேட்கும் போது பெரிய ஈர்ப்பு உருவாகவில்லை. ஆனால் அதே கவிதைகளை மௌனமாக வாசித்தால் அது தரும் அனுபவம் சிறப்பாக உள்ளது.

ரெட் பைனின் முக்கிய நூல்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். அதன் துவக்கப்புள்ளியாக இந்த உரையைக் குறிப்பிடலாம்

Bill Porter/Red Pine, Poetry Readings

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 21, 2021 23:51

June 19, 2021

வாழ்வின் நிமித்தம்

திப்பு சுல்தான்

நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம்

••

நிமித்தம், நான் பல முறை படித்த புத்தகம் மட்டுமல்ல என்றெல்லாம் யாரையெல்லாம் தனிமை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் அவர்களெல்லாம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.

தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண நாளின் முன் இரவில் கதை தொடங்குகிறது. தன் திருமணத்துக்கு தன் நண்பர்களை எதிர்பார்க்கிறான். யாருமே இல்லை. மாப்பிள்ளையின் தோழர்களாக வந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டிய அவன் வயது ஒத்த சகாக்கள் எல்லாரும் அப்பாக்களாகவும் தாத்தாக்களாகவும் மாறிவிட்ட உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அவன் தன் நண்பர்களுக்காகக் காத்திருக்கிறான். எல்லோரும் காலையில் வரக்கூடும் என பொய்யாகச் சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.

அவன் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. ஜூரம் வந்து காது கேட்காமல் போனது, பாடத்தைக் கேட்க முடியாமல் ஆசிரியரிடம் அடிவாங்கியது, டமாரம் என்று சுற்றியிருப்பவர்களால் அவமானப்படுவது, ஆறுதல் தேடி அலைவது என கதை நகர்கிறது. காதலும் காமமும் ஏமாற்றங்களின் தழும்புகளாக அவனை வதைக்கின்றன.

மனோதத்துவ டாக்டரிடம் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறான் தேவராஜ். அவர் கேட்கும் கேள்விகளும் தேவராஜ் சொல்லும் பதில்களும் தத்துவச் சுவைக்குச் சான்று. டாக்டர் ஒரு வட்டம் வரையச் சொல்கிறார். தேவராஜ் வட்டம் வரையப் பிடிக்காது என்கிறான்.

ஏன் என்கிறார் டாக்டர். ‘அது எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கேயே முடிந்துவிடுகிறது. அதனால் அது பிடிப்பதில்லை’ என்கிறான்.

‘எனக்கு மேகம் பிடிக்கும். ஏனென்றால் அவை ஒன்றுபோல இன்னொன்று இருக்காது’ என்கிறான். ராமகிருஷ்ணனின் முந்தைய நாவல்களில் இருந்து வித்தியாசப்படும் எளிமையான மொழியில் சரசரவென ஓடும் நடை.

புலன் இழந்த சோகம் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கும் என்பது நாவல் முழுக்க காயம் சிந்தும் ரத்தமாக ஓடுகிறது.

நிறைய சம்பவங்கள், நிறைய மனிதர்கள். நாவலின் மிகப்பெரிய பலம் அது. சரித்திர பூர்வமாக பல செய்திகளை நாவலின் வழியே சொல்லிச் செல்கிறார். காந்தி, நேரு, இந்திரா, எமெர்ஜென்ஸி, இலங்கை யுத்தம், அகதிகளாக வந்தவர்கள் என வரலாற்றின் இழை, நாவலைக் கால் ஊன்ற வைக்கிறது.

திருமண மேடையில் வந்து அமர்கிறான் தேவராஜ். கடந்த காலத்தைவிட எதிர்காலம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறது. அந்தப் புள்ளியில் கதை முடிகிறது. உண்மையில் கதை தொடங்கும் புள்ளியோ என்ற அச்சம் நம்மையும் தாக்குகிறது.

எல்லாம் கடந்து போகும் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் குரூரமும் கலந்த வாழ்வின் நிமித்தம்.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 19, 2021 23:56

June 18, 2021

காந்தியின் பாடல்

காந்தியடிகளால் விரும்பி பாடப்பட்ட வைஷ்ணவ ஜன தோ பாடலைப் பற்றி Gandhi’s Song என்ற புதிய ஆவணப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இரவில் அந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன். மாயங்க் சாயா எழுதி இயக்கியிருக்கிறார். நேர்த்தியான ஆவணப்படம். துஷார் காந்தியின் நேர்காணல் படத்தின் தனிச்சிறப்பு.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரசிங் மேத்தாவால் எழுதப்பட்ட இந்த குஜராத்தி மொழிப்பாடல் “பிறர் படும் துயரைத் தனதெனக் கருதுபவன் எவனோ, அவனே உண்மையான வைஷ்ணவன்” என்பதை விளக்குகிறது.

இந்த ஆவணப்படம் நர்சிங் மேத்தாவின் வாழ்க்கை மற்றும் இப் பாடலின் பொருளை விளக்குவதுடன்  அதன் வரலாற்றுச் சிறப்பினையும் ஆவணப்படுத்தியிருக்கிறது.  இந்தியாவை ஒன்றிணைத்த இந்த பாடல் எவ்வாறு மதச்சார்பின்மையின் அடையாளமாக விளங்குகிறது என்பதை விவரிக்கிறார்கள்.

1907 ஆம் ஆண்டில் காந்தி தனது பிரார்த்தனையில் இந்த பாடலை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு இப்பாடல் இந்தியா எங்கும் புகழ்பெறத்துவங்கியதுடன் காந்தியின் அடையாளப் பாடலாகவும் மாறியது.

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். எம்.எஸ் பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே பாடலின் தமிழ் வடிவத்தை நாமக்கல் கவிஞர் மொழியாக்கம் செய்திருக்கிறார். அது இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்

வகுப்பேன் அதனைக் கேளுங்கள்…

பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்

பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;

உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்

உண்மை வைஷ்ணவன் அவனாகும்;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்

வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்

அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;

அவனை பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை

விளங்கி ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென

உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்

உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்

ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ

அவனே உண்மை வைஷ்ணவனாம்.

மாயையும் மோகமும் அணுகா தவனாய்

மனத்தினில் திடமுள வைராக்கியன்;

நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு

நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து

போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்

பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்

ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்

ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.

கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்

காம க்ரோதம் களைந்தவனாய்,

தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்

தரிசிப் பவரின் சந்ததிகள்

சுபமடைவார்கள்; எழுபத் தோராம்

தலைமுறை வரையில் சுகமுறுவர்;

அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்

அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.

ஆவணப்படத்தின் இணைப்பு :

https://youtu.be/-UiYwp1ZT4g

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2021 22:43

நிறங்களை இசைத்தல்

ராபர்ட் லாரன்ஸ் பின்யன் கலைவரலாற்றைப் பற்றிச் சிறந்த புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது Painting In The Far East கீழைத்தேயக் கலைகள் குறித்து மிகச் சிறந்த அறிமுகத்தைத் தருகிறது.

மேற்கத்திய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கும், சீன ஜப்பானிய ஒவியங்கள் சிற்பங்களுக்குமான அடிப்படை வேறுபாடு மற்றும் தனித்துவம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந்த நூல் பல்வேறு ஒவியக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தாகூர் இதனைச் சாந்தி நிகேதனின் ஒவியப்பள்ளியில் ஆதார நூலாகப் பயிற்றுவித்திருக்கிறார்.

பின்யனை வாசிக்கும் போது தேர்ந்த பேராசிரியரிடம் பாடம் கேட்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.

பின்யன் ஒரு ஆங்கிலக் கவிஞர் மற்றும் நாடகாசிரியர். ஆகவே மிகுந்த கவித்துவத்துடன் கலையின் நுட்பங்களை விவரித்து எழுதியிருக்கிறார்.

இங்கிலாந்தின் லான்காஸ்டரில் பிறந்த இவரது தந்தை ஒரு மதகுரு. பின்யன் தனது கல்லூரிப்படிப்பினை ஆக்ஸ்போர்டில் உள்ள டிரினிட்டி கல்லூரியிலும் படித்தார், அங்குக் கவிதைக்கான நியூடிகேட் பரிசை வென்றார். அவர் 1893 முதல் 1933 இல் ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் கலை குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதினார். அதில் கீழைத்தேயக் கலைகள் குறித்த நூல்கள் முக்கியமானவை.

பின்யன் தனது கலைகுறித்த பார்வையை உருவாக்கிக் கொள்ளப் பௌத்தம் மற்றும் கிறிஸ்துவச் சமயத்தின் வரலாற்றை ஆழ்ந்து புரிந்து கொண்டிருக்கிறார். குறிப்பாகப் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்குச் சென்ற விதம் மற்றும் அங்கிருந்து ஜப்பானில் வேரூன்றியது. காந்தாரக்கலைகளின் வரலாறு கிரேக்கத்துடன் இந்தியாவிற்கு இருந்த கலைத்தொடர்புகள் என வரலாற்றினை மையமாக் கொண்டு அதிலிருந்து இந்தக் கலைகள் எப்படி உருவாகின என்பதை அடையாளப்படுத்துகிறார்.

குறிப்பாகப் பௌத்தம் அறிமுகமாவதற்கு முன்பு சீனாவிலிருந்த ஓவியக்கலைஞர்களைப் பற்றிக் கூறும் பின்யன் அந்த ஓவியங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருந்த போதும் அதற்கெனத் தனிச்சிறப்புகள் எதுவுமில்லை. ஆனால் பௌத்த சமயத்தின் வருகை சீன ஓவியங்களுக்குப் புதுப்பரிமாணத்தை உருவாக்கின. குறிப்பாகப் புத்தரின் வாழ்க்கை எப்படிச் சீன ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கு மூலப்பொருளாக விளங்கியது என்பதை அழகாக விவரிக்கிறார்

கிறிஸ்துவச் சமயத்தின் தாக்கத்தினை எப்படி மேற்கத்திய ஓவியங்களில் துல்லியமாகக் காணமுடிகிறதோ அதற்கு இணையானது பௌத்த சமயத்தின் தாக்கம் என்கிறார்

இரண்டாம் நூற்றாண்டின் முன்பு வரை புத்தரின் உருவச்சிலைகள் செதுக்கப்படவில்லை. அதன்பிறகே புத்த வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்பத்தொகுப்புகள் உருவாக்கப்பட்டன. காந்தாரக்கலையின் வளர்ச்சியில் புத்தரின் உருவம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டது. குறிப்பாக அவரது தலையிலுள்ள சுருள் கேசம் கிரேக்கப்பாதிப்பில் உருவாக்கப்பட்டது.

மேற்கத்தியக் கலைகளுக்கும் கீழைத்தேயக் கலைகளுக்குமான அடிப்படை வேறுபாடு கலை குறித்த அதன் கண்ணோட்டத்தில் இருக்கிறது.

மனிதனை இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதும் மேற்கத்தியக் கலைகள் அவனது வெற்றிகள் மற்றும் சாதனைகள். தெய்வீகத்துடன் மனிதனுக்குள்ள உறவு மற்றும் அற்புதங்கள். மனிதனின் பாவம் மற்றும் தண்டனைகளை முதன்மையான கருப்பொருளாகக் கருதின. அதைத் துல்லியமாகச் சித்தரிப்பதைக் கலையின் நோக்கமாகக் கொண்டன.

ஆசிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் மனித உடல்கள் பிரம்மாண்டமாக்கப்படுவதில்லை.ஆனால் மேற்கத்தியச் சிற்பங்களில் உடலை மிகைப்படுத்துகிறார்கள். உடலின் பரிமாணத்தைப் பெரியதாக்கி சிற்பத்தை உருவாக்குகிறார்கள். இந்தப் பிரம்மாண்டம் காண்பவர்களை வியக்க வைக்கிறது.

கலையின் ஆதாரமாக வடிவமே கருதப்பட்டது. ஆகவே நிறங்களை விடவும் ஓவியத்தின் வடிவம் மற்றும் அதன் கருப்பொருள் தனித்துவமிக்கதாக இருக்க வேண்டும் என்று மேற்கத்திய ஓவியர்கள் விரும்பினார்கள்.

காரணம் அது போன்ற ஓவியங்களே அறிவினைத் தூண்டக்கூடியது. கலையின் முக்கியப் பணிகளில் ஒன்றாக அறிவை மகிழ்ச்சிப்படுத்தவும் வழிநடத்தவும் வேண்டும் என்று கலைஞர்கள் நினைத்தார்கள் என்கிறார் பின்யன். அது உண்மை என்பதைப் புகழ்பெற்ற மேற்கத்திய ஓவியங்களைப் பார்த்தாலே புரியக்கூடும்.

Chinese mural patterns backgrounds, Mogao caves. Before the Tang Dynasty.

ஏன் மேற்குலகம் நிறங்களை முக்கியமாகக் கருதவில்லை என்றால் நிறங்கள் பெரிதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டன. உணர்ச்சிகளை விடவும் அறிவைத் தான் கலை முக்கியமாகக் கருத வேண்டும் என்ற எண்ணம் மேற்கில் மேலோங்கியிருந்தது.

வடிவத்தினை முதன்மையாகக் கருதியதால் அதில் எல்லையற்ற பரிசோதனைகளை மேற்கத்தியக் கலைஞர்கள் செய்து வந்தார்கள். அதனால் புதிய கலைவெளிப்பாடுகளை அவர்களால் உருவாக்க முடிந்தது. கீழைத்தேய கலைகளில் வரம்பு உண்டு. மரபை மீறி ஒருவனால் செயல்படமுடியாது. எதை எல்லாம் வரையக்கூடாது என்பதினை தீர்மானமாக வரையறை செய்திருந்தார்கள். அத்துடன் கலைஞர்கள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவனது கலையே முதன்மைப்படுத்த வேண்டும் என்ற நியதியும் இருந்தது. ஆகவே மிகப்பெரிய சிற்பங்களைச் செய்தவர்கள் கூடத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

சீன ஜப்பானிய பெர்ஷிய ஒவியங்களில் வண்ணங்களே முதன்மையானது. அதுவும் வசீகரமான, அடர் வண்ணங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடியது. தனித்துவமிக்க வண்ணங்களைப் பிரயோகிப்பதன் வழியே ஓவியத்தை மகத்தான கலைப்படைப்பாக மாற்றினார்கள்.

உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு ஏற்பவே வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று ரசாயானத்தைக் கொண்டு உருவாக்கப்படும் செயற்கை வண்ணங்களை விட மேலாக அவர்களே விதவிதமான நிறங்களை உருவாக்கினார்கள். வான்கோ போன்ற ஓவிய மேதைகளே ஜப்பானிய ஓவியத்தின் வண்ணத்தைக் கண்டு மயங்கி அந்தப் பாணியைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நிறத்தைத் தேர்வு செய்வதிலும் அதைப் பயன்படுத்துவதிலும் ஓவியனின் ஆளுமை வெளிப்படுவதாகக் கீழை தேயக் கலைஞர்கள் நம்பினார்கள். அதைச் சீன ஜப்பானிய ஓவியங்களில் தெளிவாகக் காணமுடிகிறது. இசைக்கருவியை மீட்டுவது போலவே வண்ணங்களை மீட்ட வேண்டும். தேர்ந்த இசையில் வெளிப்படும் இனிமையை நிறங்களும் வழங்கும். அதை உருவாக்க கடுமையான பயிற்சிகள் அவசியம்.

சீனாவின் கலைகளே ஆசியக் கலைகளுக்கான துவக்கப்புள்ளி. அங்கே உருவாக்கப்பட்ட அழகியலே பிற நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன. சீனக்கலைகள் புத்தியைக் காட்டிலும் புலன்களை நோக்கியே விரிவு கொள்கின்றன.

பண்டைய சீன ஓவியர்கள் தீட்டிய ஓவியங்களில் வடிவப் பரிசோதனைகள் மிகக் குறைவு. ஆனால் துல்லியமான கோடுகள் மூலம் அவர்கள் ஓவியத்திற்கு ஒரு லயத்தை ஏற்படுத்தினார்கள். இந்த ஒழுங்கமைவு அபாரமானது. அது ஓவியத்தை உயிரோட்டமாக்குகிறது.

வண்ணத்தினை வெறும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தவில்லை. மாறாக வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்தவும் காட்சியின் பின்புலத்திலுள்ள சூழலை வெளிப்படுத்தவும் வண்ணம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மேற்கத்திய ஓவியர்களைப் போல சீனர்கள் மாடலை முன் வைத்து ஓவியம் வரையவில்லை. கற்பனையின் துணை கொண்டே ஓவியம் மற்றும் சிற்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள். கற்பனையின் வழியே இவ்வளவு துல்லியமாக உருவங்களை வெளிப்படுத்த முடிந்திருப்பதே அவர்களின் சிறப்பு.

சீன ஓவியங்களில் நிர்வாணத்திற்கு இடம் கிடையாது. நிர்வாணமாகப் பெண்ணை வரைவது ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயம். ஆனால் மேற்குலகில் நிர்வாண ஓவியங்களை வரைவது, அதிலும் மாறுபட்ட கோணத்தில் நிர்வாணத்தைப் பதிவு செய்வது சிறந்த கலைவெளிப்பாடாகக் கருதப்பட்டது. ஏன் உடல்களை நிர்வாணமாக வரைவதைச் சீன தடைசெய்தது. அது வெறும் கலாச்சாரத் தணிக்கை மட்டுமில்லை. பாலின்பம் சார்ந்த ஒவியங்கள் பொதுவெளிக்கானதில்லை என்ற எண்ணம் சீனாவில் மேலோங்கியிருந்தது. மேலும் பெண் உடலைக் கொண்டாடுவது கலையின் நோக்கமாகக் கருதப்படவில்லை.

கிரேக்கம் மற்றும் சீனத்தின் ஓவியக்கலை பற்றி ஒரு பழங்கதையிருக்கிறது. அதில் எந்த நாட்டின் ஓவியம் சிறந்தது என்பதை நிரூபிக்க ஒரு போட்டி நடத்தப்பட்டது. ஒரு சுவரைத் தேர்வு செய்து அதில் விதவிதமான ஓவியங்களைச் சீனர்கள் வரைந்து தள்ளினார்கள். சுவரே ஒரு மிகப்பெரிய கேன்வாஸாக மாறியது போலிருந்தது. ஆனால் கிரேக்கர்கள் அது போன்ற ஒரு சுவரினை தேய்த்துத் துடைத்து சுத்தமாக்கி அந்தச் சுவர் ஒளிரும்படி செய்தார்கள். வெறும் சுவர் சொர்க்கத்தின் மாளிகைச்சுவர் போல மின்னியது. அந்தச் சுவரின் மூலையில் ஒரேயொரு படம் வரைந்தார்கள். இரண்டினையும் பார்வையிட்ட நடுவர்கள் கிரேக்க ஓவியர்களைச் சிறந்தவர்களாகத் தேர்வு செய்தார்கள். காரணம் அவர்கள் வடிவத்தை முதன்மையாகக் கொண்டவர்கள். சுவரை அவர்கள் ஒளிரச் செய்தபிறகே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டார்கள். அது தான் கிரேக்கக் கலையின் சிறப்பு என்கிறார் பின்யன்.

சீனாவில் இது போன்ற கலைஞர்களின் விசித்திரங்கள் பற்றி நிறையக் கதைகள் விளங்குகின்றன. டிராகன் ஒன்றை உயிரோட்டமாக வரைந்த ஓவியர் ஒருவர் அதை வரைந்து முடித்தபோது டிராகன் மூச்சுவிட்டு நிஜமாக வெளிப்பட்டுச் சுவரை உடைத்து எழுந்தது என்றொரு கதையிருக்கிறது. இது கலையின் உச்சத்தில் அது நிஜமாகிவிடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

மனித வாழ்க்கையின் நிலையாமையை ஆசியக்கலைகள் சுட்டிக்காட்ட விரும்பின. ஆகவே மலர்களை வரையும் போதும் அதை மகத்தான ஒன்றாக அவர்கள் சித்தரிப்பதில்லை. மலர்கள் இயல்பாக, அழகின் முழுமையுடன் வரையப்பட்டன. ஆனால் மேற்குலகில் காணப்படுவது போல வியப்பூட்டும் விதமாக வரையப்படவில்லை.

பௌத்தம் சார்ந்த தொன்மக்கதைகள். மாயக்கதைகள். அற்புத நிகழ்வுகள் மக்கள் மனதில் வேரூன்றியிருந்த காரணத்தால் அன்றாட வாழ்க்கையின் சித்திரங்களை விடவும் இந்த மாய, விநோத உலகினை, விந்தை விலங்குகள், உருவங்களைச் சீன ஓவியர்கள் அதிகம் வரைந்திருக்கிறார்கள். சிற்பமாக உருவாக்கியிருக்கிறார்கள். பூமியில் உள்ள வாழ்க்கையைப் போன்று வானிலும் பூமிக்கடியிலும் தனித்த வாழ்க்கையிருக்கிறது. அந்த ஒளிரும் அல்லது இருண்ட வாழ்க்கையின் காட்சிகளையும் அவர்கள் சித்திரமாக்கியிருக்கிறார்கள்.

கவிஞர் Wang Wei மிகச்சிறந்த ஓவியராகவும் விளங்கினார். இவரது ஓவியங்களில் வெளிப்படும் அழகு நிகரற்றது. Han Kan போன்ற ஓவியர்கள் பிரதானமாகக் குதிரைகளை மட்டுமே வரைந்தார்கள். எனச் சீன ஓவிய வரலாற்றின் அரிய கலைஞர்கள் பலரையும் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்

நாம் ஏன் கீழைத்தேய நாடுகளின் கலைவரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் போலப் பின்யன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்தக் கலைப்படைப்புகள் குறித்தசரியான புரிதலுக்காகவும், தேவையற்ற குழப்பங்களைக் கலைக்கவும், அழகினை ஆழ்ந்து ரசிக்கவும் நாம் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கலைப்படைப்பு காலத்தை வென்று நிற்பது எதனால் என்று தெரிந்து கொள்ளாமல் அதை ரசிப்பது எப்படிச் சரியாக இருக்க முடியும் என்று கேட்கிறார்.

ஆசிய கலைபாரம்பரியத்தின் தனித்துவங்களை நாமே அறிந்து கொள்ளாமல் போனால் மேற்குலகம் எப்படிப் புரிந்து கொள்ளும் என்று பின்யன் எழுப்பிய கேள்வி முக்கியமானது. கலைகளைப் புரிந்து கொள்வதன் வழியே தான் மானுடத்தின் கனவுகளை,  கற்பனையின் வீச்சினை, மகத்தான படைப்பாற்றலைப் புரிந்து கொள்ளமுடியும். அதற்குப் பின்யன் போன்றவர்களே வழிகாட்டுகிறார்கள்.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 18, 2021 03:18

June 17, 2021

கவிதை எனும் வாள் வித்தை

லி போ (Li Po) அல்லது லி பாய் (Li Bai ) என்று அழைக்கப்படும் சீனக்கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் ஹா ஜின் The Banished Immortal என விரிவான நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான நாவலாசிரியர் ஒரு கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பது அபூர்வமான விஷயம். ஆகவே இதை விரும்பி வாசித்தேன்.

லி போ (Li Po) மற்றும் து ஃபூ (Tu Fu) இருவரும் நெருக்கமான நண்பர்கள், சீனாவின் மிகப் பெரிய கவிஞர்களில் இவர்களைக் கொண்டாடுகிறார்கள். டாங் வம்சத்தின் இந்த இரண்டு கவிஞர்களும் இரட்டையர்கள் போலவே பேசப்படுகிறார்கள். லிபோவின் கவிதைகளில் ஏற்பட்ட விருப்பம் காரணமாகவே து ஃபூ கவிதைகள் எழுதத் துவங்கியிருக்கிறார்.

லி போ ஏழாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர். தன்னுடைய இருபத்துமூன்று வயது முதல் சீனா முழுவதும் சுற்றியலைந்திருக்கிறார். இந்தத் தேடலில் இவர் தாவோயிசம் மற்றும் சீனமரபு இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

லி போ கவிஞராக உருவான விதம் இந்த நூலில் அதிகம் விவரிக்கப்படவில்லை. அவரது கவிதையின் தனித்துவம் மற்றும் இயற்கையின் மீதான புரிதல் பற்றிய பகுதிகள் குறைவே, மாறாக லிபெய் ஒரு அரசாங்க வேலையைப் பெற வேண்டி மேற்கொண்ட தொடர் முயற்சிகளும், அதன் தோல்விகளும் இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு, அலைக்கழிப்பு மற்றும் விரக்தி பற்றியுமே ஹா ஜின் அதிகம் எழுதியிருக்கிறார்.

அந்த வகையில் ஏழாம் நூற்றாண்டிலிருந்த சமூக வாழ்க்கை, அரசியல் மற்றும் ராஜசபையில் கவிதைக்கு இருந்த இடம் போன்றவை விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன

லி பாய் தன் வாழ்நாளில் அரசுப்பதவியைப் பெற முடியவேயில்லை 764 ஆண்டு ஜனவரி மாதம் புதிதாக அரியணை ஏறிய பேரரசர் டைசோங் நீதிமன்றத்தில் ஆலோசகராகப் பணியாற்ற லி பாயைத் தேர்வு செய்து ஒரு ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவை அவரிடம் நேரில் கொடுக்க அதிகாரிகள் சென்ற போது அவர் இறந்து போய் ஒராண்டுகாலம் ஆனது தெரிய வந்தது. எப்போது எப்படி இறந்தார் என்று காரணம் அறியமுடியவில்லை. அவர் மிதமிஞ்சிய போதையால் இறந்து போனார் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். வேறு சிலரோ அவர் தொண்டை அழற்சி காரணமாக நோயுற்று இறந்து போனார் என்று குறிப்பிடுகிறார்கள்

இன்று ஒரு கவிதை வாசகன் லிபெய்யை எப்படி நினைவு கொள்கிறான். அவர் கவிதையில் காட்டும் படிமங்கள். மற்றும் இயற்கை காட்சிகள் வழியாகவே அவர் நினைவு கொள்ளப்படுகிறார். குறிப்பாக நிலவை அவரைப் போல எழுதியவரில்லை. மலையின் உச்சியில் தனிமையில் அமர்ந்து கையில் மதுக்கோப்பையுடன் அவர் நிலவைத் தோழனாக்கி கவிதையில் உரையாடுகிறார்.

இன்றும் தனிமையில் தொலைவில் ஒளிரும் நிலவைக் காணும் ஒருவன் அந்த நிலவொளியின் வழியே லி பாயின் கவிதைகளை நினைவு கொள்கிறான். அவரது கவிதைகளில் நிலவு, வீடு திரும்புதலின் அடையாளமாக, நிரந்தரத் துணையாக, தனிமையில் பயணிப்பவனின் உற்ற தோழனாக இடம் பெறுகிறது.

லி பாயின் வாழ்க்கை வரலாற்றில் என்னைக் கவர்ந்த விஷயம். அவர் சிறந்த வாள்வீர்ர் மற்றும் சித்திர எழுத்துக்கலை நிபுணர் என்பதே.. இந்த இரண்டு கலைகளும் துல்லியத்திற்கு முதலிடம் தருபவை. ஆழ்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டியவை. சீனாவில் வாள் பயிற்சியை ஜென் கலையாகக் கருதுகிறார்கள். துறவிகளும் கற்றுக் கொள்கிறார்கள். மனதை ஒருமுகப்படுத்துவதுடன் வெறுமையைத் துண்டிப்பதும் வாள்வீச்சின் வழியே பெற முடியும் எனக் கருதுகிறார்கள். இது போலவே தான் சித்திர எழுத்துக்கலையும் அதில் ஒருவன் தூரிகையைக் கொண்டு மனதின் ஆழ்நிலைகளை வெளிப்படுத்துகிறான். மலர் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது போல எழுத்துத் தன்னைச் சித்திரமாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்கள்.

லி பாயின் குடும்பம் பராம்பரியமானது. அவரது தந்தையின் பெயர் லி கே. அவர் சீன மரபு இலக்கியங்களையும் தாவோயிசத்தையும் ஆழ்ந்து கற்றவர். தந்தையின் தூண்டுதலில் தான் லி பெய் கவிதைகள் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார்.

அந்த நாட்களில் அரச சபையில் கவிஞர்களுக்குப் பெரிய கௌரவமும் அங்கீகாரமும் கிடைத்தன. இசையோடு கவிதை பாடுவதை அரசர்கள் விரும்பினார்கள். ஆகவே அரசாங்க வேலைக்குச் செல்வதாக இருந்தாலும் கவிதை புனைவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும் என்று தந்தை சொன்ன அறிவுரையே அவரைக் கவிஞராக்கியது.

நீதித்துறை மற்றும் வரிவசூல் செய்யும் அரசுப் பணிக்கு அந்த நாட்களில் தனித்தேர்வுகள் இருந்தன. அதில் வெற்றி பெறுவது எளிதாகயில்லை. ஆகவே லி பாய் நிர்வாகவியல் சார்ந்த நூல்களை ஆழ்ந்து படித்தார். இளமையில் அவர் எழுதிய கவிதைகள் யாவும் அவர் ரசித்த கவிதைகளின் தாக்கத்திலிருந்தன. அந்தக் கவிதைகளை நண்பர்கள் பாராட்டிய போதும் அது அசலான அனுபவத்திலிருந்து உருவாகவில்லை என்று அவரது தந்தை கறாரான விமர்சனத்தை முன்வைத்தார். ஆகவே அசலான அனுபவத்தைத் தேடியும் வேலை தேடும் முனைப்பாகவும் அவர் நீண்ட பயணத்தைத் திட்டமிட்டார். அந்தப் பயணம் அவரது ஆளுமையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

பயண வழியில் வசித்த கவிஞர்களைச் சந்தித்து உரையாடினார். அறிஞர்களிடம் பாடம் கேட்டார். பௌத்த மடாலயங்களில் தங்கி ஞானசூத்திரங்களைப் பயின்றார்.

இந்தப் பயணத்தில் அவர் அறிஞர் ஜாவோவுடன் நெருங்கிப் பழகினார். அவர் வழியாக இராணுவ சட்டங்கள். நிர்வாகம், விவசாயம்,மருத்துவம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டார். அவரோடு இருந்த நாட்களில் தான் வாள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபாட்டு அதில் நிகரற்றவராக மாறினார்.

ஜாவோவின் வழியே மருத்துவத்தில் லி பாயிற்கு ஆர்வம் உண்டானது. மூலிகை மருந்துகளைக் கற்றுக் கொண்டார். வாழ்நாள் முழுவதும் அவர் எளியோர்களுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறார்.

லி பெய்யின் வரலாற்றை வாசிக்கும் போது ஒற்றை ஆளாக அவர் குதிரையில் பரந்த நிலவெளியில் பயணிக்கும் காட்சி மனதில் தோன்றி மறைகிறது. தன் பயணத்தில் கண்ட மாறுபட்ட நிலக்காட்சிகள். மலை ,நதி, புயல் மழை,. மற்றும் கிராமிய வாழ்க்கை மற்றும் பெரிய நகரங்களின் உல்லாச வாழ்க்கை, மதுவிடுதிகள் என்று அத்தனையும் பற்றிக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் சொந்தவாழ்க்கையின் நெருக்கடி, பிரிவு. குடும்பப் பிரச்சனைகள், அதிகாரம் தன்னை மண்டியிடச்சொல்லும் அவலம் என எதையும் அவர் கவிதைகளில் வெளிப்படுத்தவில்லை. தூய அன்பின் வெளிப்பாடாகவே அவரது கவிதைகள் காணப்படுகின்றன.

அரசாங்க வேலை கிடைக்காத சூழலில் பணக்காரப் பெண்ணான மிஸ் சூ என்பவரை லி பாய் திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்… அவளுக்கும் கவிதையில் மிகுந்த ஆர்வமிருந்தது. அவளது வீட்டில் பெரிய நூலகமிருந்தது. இந்தத் திருமணம் காரணமாக மாமனார் வழியாக அரசாங்க வேலை கிடைக்கக்கூடும் என்று நம்பினார். அதற்கான முயற்சிகள் நடந்த போதும் லி பாயிற்கு வேலை கிடைப்பது எளிதாகயில்லை. அவர் அரசாங்க உயரதிகாரிகளிடம் பணிந்து பேசாமல் அதிகாரமாக உரையாடியதே நிராகரிப்பிற்கான காரணம் என்கிறார்கள்

உங்கள் நற்பெயரை வளர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகும் என்று அவரது மனைவி நம்பிக்கையூட்டினார். இந்த முறை வேலை தேடி அவர் மூன்று ஆண்டுகள் வடதிசையில் பயணம் செய்தார். இடையிடையே பௌத்த மடாலயங்கள் தங்கி கவிதை எழுதினார். அவருக்குத் தேவையான பணஉதவிகளைச் செய்ததோடு அவர் மனைவி தொடர்ந்து கடிதங்கள் எழுதி ஊக்கப்படுத்தினார்.

எதிர்பாராத விதமாக அவரது மனைவியின் குடும்பம் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அவரது மைத்துனர் சொத்துகளைத் தனதாக்கிக் கொண்டு லி பாயின் மனைவியை வெறும் ஆளாகத் துரத்திவிட்டார். தன் பங்கிற்கு அவள் வீட்டின் நூலகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாள். விசுவாசமான பணியாளர்கள் அவளுடன் இருந்து அவளைக் கவனித்துக் கொண்டார்கள். வீடு திரும்பிய லி பாய் மனைவியைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சுகவாசஸ்தலம் ஒன்றுக்குப் பயணமானார். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தன் மகளைப் பற்றி லி பெய் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மகளின் வாழ்க்கை என்னவானது என்பதைப் பற்றி அறிய முடியவில்லை என்கிறார்கள்.

வேலை தேடுவதில் மட்டுமின்றி லி பாய் எடுத்த எல்லா முடிவுகளும் தோல்வியில் தான் முடிந்தன. அரசியல் ரீதியாக அவர் முன்னெடுத்த சார்புகளும் தவறாக முடிந்தன. இதனால் லி பெய் சிறைபிடிக்கப்பட்டார். ஊழல் மலிந்த நீதிமன்றம் அவரை நாடுகடத்தும்படி தண்டனை அளித்தது. அதன்பிறகு அவர் கவிதைகள் எழுதுவதை விட்டு போக்கிடமின்றி ஒடுங்கிப் போனார்.

கவிதையின் வழியாக நாம் காணும் லி பெய் இளமையின் துடிப்போடு காணப்படுகிறார். அவரிடம் கவலையில்லை. வருத்தமில்லை. தனிமை பற்றிய புகார் எதுவுமில்லை. ஆனால் வாழ்க்கை வரலாற்றில் வரும் லி பாய் கனவிற்கும் ஏமாற்றத்திற்கும் இடையில் ஊசலாடுகிறார். உலகெங்கும் கவிஞர்கள் வாழ்க்கை ஒன்று போலதானிருக்கிறது.

இத்தனை அலைக்கழிப்புக்கள். அவமானங்கள். புறக்கணிப்பிற்கு இடையில் எப்படி இயற்கையில் மனதைக் கரைத்துக் கொண்டு நுண்மையான கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று வியப்பாகவே இருக்கிறது

கவிஞன் உலகியல் வாழ்க்கை தரும் நெருக்கடிகளை மோசமாக எதிர்கொண்ட போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனித்த உலகில் சஞ்சரிக்ககூடியவன் என்பதன் அடையாளமாகவே லி பெயின் வாழ்க்கை உள்ளது

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 17, 2021 04:07

June 16, 2021

வீடு திரும்பிய நாட்கள்

ரஷ்ய இயக்குநர் பாவெல் லுங்கின் இயக்கிய இஸ்ரேலியத் திரைப்படம் Esau. பைபிள் கதை ஒன்றின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய எழுத்தாளர் மீர் ஷாலேவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப்படம் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேரும் போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது

“அன்றிலிருந்து இன்றுவரை மகிழ்ச்சியும் துரோகமும் ஒன்றுபோலவே இருக்கிறது“ என்று படத்தின் ஒரு காட்சியில் ஏசா குறிப்பிடுகிறார். அது தான் படத்தின் மையப்புள்ளி

குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசலும் கசப்புணர்வும் காலம் மாறினாலும் விலகிப்போய்விடுவதில்லை. . மீண்டும் ஒன்றிணையும் போது கடந்தகாலத்தின் கசப்புகள் மேலெழுந்து வரவே ஆரம்பிக்கின்றன. விட்டுக்கொடுத்துப் போவது கடந்தகாலத்தை மறந்துவிடுவது என்பது எளிதாகயில்லை. உலகோடு சமரசம் செய்து கொள்ளும் பலரும் குடும்பத்தினருடன் சமாதானம் செய்து கொள்வதில்லை.

வீட்டை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏசா ஊர் திரும்புகிறார். ஒரு தொலைபேசி அழைப்பு அவரை மறுபடி அழைத்து வருகிறது.

ஏசாவிற்கும் அவரது தந்தைக்குமான உறவு மாறவேயில்லை. நோயுற்ற அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள விரும்புகிறார் ஏசா. உண்மையில் அவரது கடைசி நாட்களில் உறுதுணையாக இருக்க விரும்புகிறார்.

ஆனால் குடும்பச் சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. புதிய பிரச்சனைகள் அவரால் உருவாக ஆரம்பிக்கின்றன

தந்தை தான் ஏசாவையும் ஜேக்கப்பையும் இணைக்கும் பாலம். பேக்கரி ஒன்றை நடத்தும் ஜேக்கப் கடின உழைப்பாளி. அவன் மனைவியை மிகவும் நேசிக்கிறான். அவளோ அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. மகள் தந்தையின் பேச்சைக் கேட்பதில்லை. தனக்கென யாருமில்லை என்றே ஜேக்கப் நினைக்கிறான். அவனது கோபம் அங்கிருந்தே பிறக்கிறது

இந்தச் சூழலில் தான் ஏசாவின் வருகை நிகழுகிறது.

படத்தின் துவக்காட்சி அபாரமானது. மாபெரும் ஆலயமணி ஒன்றைச் செய்து வண்டியில் ஏற்றி ஜெருசலம் நோக்கிக் கொண்டு செல்கிறார்கள். அந்த மணி தேவாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அந்த மணியை செய்த ரஷ்ய கிறிஸ்தவர் வாழ்க்கையில் திடீரென விநோத நோய்க்குறி ஏற்படுகிறது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவர் முடங்கிப்போகிறார். அதிலிருந்து விடுபட அவர் யூத சமயத்திற்கு மதம் மாறுகிறார். அவரது வம்சாவழியில் தான் ஏசாவின் தந்தை வருகிறார். இந்தத் துவக்கப்புள்ளி தான் கதையின் ஆதார சரடு. புதிய நம்பிக்கைக்கும் பழைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான போராட்டமாகவே இந்தப் படத்தைக் கருதலாம்.

அமெரிக்காவில் வசிக்கும் ஏசா நாற்பது வயதானவர். சமையற்கலையைப் பற்றிப் புத்தகம் எழுதிப் புகழ்பெற்றவர். ஒரு நாள் அவருக்குச் சொந்த ஊரிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. நோய்வாய்ப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகப் பூர்வீகமான இஸ்ரேலிலுள்ள தனது பராம்பரிய வீட்டிற்குத் திரும்புகிறார்.

அவர்களின் குடும்பம் நீண்டகாலமாக ஒரு பேக்கரியை நடத்துகிறது. அந்தப் பேக்கரியை தற்போது நடத்தி வருபவன் ஏசாவின் தம்பி ஜேக்கப், அவனுக்கும் ஏசாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் நீண்டகாலம் பிரிந்து வாழுகிறார்கள்.

ஏசா வருகை தந்தது ஜேக்கப்பிற்குப் பிடிக்கவில்லை. ஏசாவை பொறுப்பற்றவன் என்றே கருதுகிறான். ஆனால் ஜேக்கப்பின் மகள் ஏசாவை வரவேற்கிறாள். நட்போடு பழகுகிறாள்.

நீண்டகாலத்தின் பின்பு தன் மகன் தன்னைத் தேடி வந்துள்ளதை நினைத்து ஆபிரகாம் சந்தோஷம் கொள்கிறார்.

ஜேக்கப்பின் மனைவி லேயா நோயாளியாகப் பல காலமாக ஒரு அறையில் முடங்கிக் கிடக்கிறாள். அவளைக் குளிக்க வைப்பது முதல் உணவு ஊட்டுவது வரை அத்தனையும் ஜேக்கப் கவனித்துக் கொள்கிறான். அவள் இந்த நிலைக்கு ஆனதற்கு ஜேக்கப் காரணம் என்று மகள் நினைக்கிறாள்.

பேக்கரியில் உள்ள பணிகளுக்கு ஏசா உதவி செய்ய முயல்கிறான். அதை ஜேக்கப் விரும்பாமல் சண்டையிடுகிறான். எவ்வளவு முயன்றும் அவனை ஏசாவால் சமாதானம் செய்ய இயலவில்லை.

இவர்களுக்குள் என்ன பிரச்சனை. ஏன் இப்படிச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைப் பிளாஷ்பேக் காட்சிகள் விவரிக்கின்றன.

தனது கடந்தகால வாழ்க்கையை ஏசா ஒரு புத்தகமாக எழுதத்துவங்குகிறான். அது தான் பிளாஷ்பேக் காட்சியாக விரிவு கொள்கிறது.

மிகுந்த கவித்துவமாகப் படமாக்கபட்ட பிளாஷ்பே காட்சிகள். சிறுவயதில் ஒரே மூக்குக் கண்ணாடியை ஜேக்கப் ஏசா இருவரும் மாறி மாறி அணிந்து கொள்ள வேண்டிய சூழல். ஒருவரையொருவர் அனுசரித்துத் தான் வாழ வேண்டும். இந்தச் சூழலில் அழகியான லியாவை சந்திக்கிறார்கள். அவளுடன் பழகுவதில் அவர்களுக்குள் போட்டி நடக்கிறது.

ஏசாவுடன் லியா நெருங்கிப் பழகுகிறாள். இது ஜேக்கப்பிற்குப் பிடிக்கவில்லை. அவன் ஆத்திரமடைகிறான். லியாவிற்கு உதவிகள் செய்கிறான் ஏசா. அவளுடன் சைக்கிளில் சுற்றுகிறான். அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பிக்கிறது. ஏசாவை விடவும் ஜேக்கப் ரொட்டி சுடுவதில் திறமையானவன். ஏசாவோ படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கிறான்.

ஏசாவின் காதல் நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் ஜேக்கப். அவள் லியாவை ஏசாவிடமிருந்து பறித்துக் கொள்கிறான். ஏசாவின் நிறைவேறாத காதல் அவனை வேதனைப்படுத்துகிறது. வீட்டைவிட்டு வெளியேறி அவன் அமெரிக்கா செல்கிறான்.

அதன் பிறகு ஊரை மறந்து தன்னை ஒரு எழுத்தாளராக மாற்றிக் கொள்கிறான். அப்போதும் குடும்பத் தொழிலான ரொட்டி தயாரிப்பது பற்றியே புத்தகங்கள் எழுதுகிறான். புகழ்பெறுகிறான்.

கடந்த காலத்தின் வடுக்களுடன் நிகழ்காலத்தினை எதிர்கொள்கிறான் ஏசா. தன் தந்தையின் பிடிவாதம் மற்றும் கோபம் காரணமாகவே தாய் முடங்கிக்கிடக்கிறாள் என நினைக்கும் ஜேக்கப்பின் மகள் தந்தைக்கு எதிராக, அவருக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்கிறாள். முகத்திற்கு எதிராக வாதிடுகிறாள்.

அவள் எடுக்கும் புகைப்படங்களை ஜேக்கப் வெறுக்கிறான். ஆனால் ஏசா அவளைப் பாராட்டி உற்சாகப்படுத்துகிறார். அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறார். அவளது புகைப்படக்கண்காட்சிக்குச் செல்கிறான். இது ஜேக்கப்பை மேலும் கோபம் கொள்ளச் செய்கிறது

தன் மகளிடம் ஜேக்கப் கோபமாக நடந்து கொள்ளும் காட்சியில் அவனது இயலாமையும் அன்பும் ஒரு சேர வெளிப்படுகிறது.

லேயாவைத் திருமணம் செய்து கொண்டு இப்படி நோயாளியாக முடக்கி வைத்திருப்பதை ஏசாவால் தாங்க முடியவில்லை. ஒருநாள் அவள் அறைக்குள் சென்று அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறான். அதை ஜேக்கப்பால் ஏற்க முடியவில்லை.

தன் குடும்ப வரலாற்றை ஏசா புத்தகமாக எழுதுவதை ஜேக்கப் வெறுக்கிறான். ரகசியமாக எழுதப்பட்ட காகிதங்களைத் தேடி வாசிக்கிறான். ஆத்திரமடைகிறான். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது.

புரிந்து கொள்ளப்படாத அன்பு தான் அவர்களை இப்படி நடக்கச் செய்கிறது. மீண்டும் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படவே ஏசா புறப்படத் தயாராகிறான். ஆனால் முடிவு எதிர்பாராதவிதமாக நடக்கிறது.

பிரெட் கெலமனின் ஒளிப்பதிவு அபாரமானது. பேக்கரிக்குள் நடக்கும் காட்சிகளில் ஒளியமைப்பு ரெம்பிராண்டின் ஒவியங்களில் வெளிப்படுவது போல அத்தனை கச்சிதம்.

எல்லாக் குடும்பத்திலும் இப்படி வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத வடுக்களும் கசப்பான நினைவுகளும் இருக்கின்றன. சகோதரர்கள் இரத்தத்தால் பிணைக்கப்பட்ட போதும் நடைமுறை வாழ்க்கையால் பிரித்து வைக்கப்படவே செய்கிறார்கள். அடுத்த தலைமுறை தலையெடுத்த போதும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து பெற்றோர்கள் வெளியே வருவதேயில்லை.

குடும்ப உறவின் சிக்கல்களை மிகவும் நுட்பமாகச் சித்தரித்துள்ள விதம் இந்தப் படத்தைத் தனித்துவமாக்குகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 16, 2021 01:12

June 15, 2021

துறவின் பாதை

ரெட் பைன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் அமெரிக்க எழுத்தாளரான பில் போர்ட்டர் பௌத்தம் ஞானம் மற்றும் சீன இலக்கிய நூல்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார். குறிப்பாகத் தாவோயிசம் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதில் இவரே முன்னோடி..

1989 அவர் சீனாவில் விரிவாகப் பயணம் செய்தார். அப்போது சுங்கான் மலைகள் வழியாகப் பௌத்த துறவிகளைத் தேடி அலைந்து பெற்ற அனுபவத்தை Road to Heaven என்ற நூலாக எழுதியிருக்கிறார்.

இந்த நூல் சீனாவிலும் வெளியாகி மிகுந்த புகழ்பெற்றது. இன்றும் அந்த நூலை ஒரு வழிகாட்டியாகப் பௌத்த துறவிகள் கருதுகிறார்கள்.

ஹான்ஷான் எழுதிய குளிர்மலை கவிதைகளை ஆங்கிலத்தில் இவரே மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இதே மலைப்பகுதிக்கு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தந்து ஒரு ஆவணப்படத்தை ரெட் பைன் உருவாக்கியிருக்கிறார்.

பௌத்த துறவிகளைத் தேடிய இந்த மலைப்பயணம் மிகச்சிறந்த ஆவணப்பதிவாக உருவாக்கபட்டுள்ளது. உயர்ந்து நீண்டு செல்லும் மலையின் உச்சியில் சிறிய குடில்களை அமைத்துக் கொண்டும். குகையில் தனித்து வாழ்ந்தும் வரும் பௌத்த துறவிகளைச் சந்தித்து ரெட் பைன் உரையாடுகிறார்.

அவர்களின் தியான முறையை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை, எளிய உணவு முறைகளை, தனிமையின் மகிழ்ச்சியை அற்புதமாகச் சித்தரித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆவணப்படம் துறவின் பாதையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது

ரெட்பைனின் மனைவி தைவானைச் சேர்ந்தவர். ஆகவே மனைவியின் மூலம் அவருக்கு சீன இலக்கியம் மற்றும் பௌத்தம் மீது தீவிர ஈடுபாடு உருவானது. முறையாக பௌத்த நூல்களை பயின்று பௌத்த சமயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த ஆவணப்படத்தில் எழுபது வயதைக் கடந்த போதும் கையில் ஒரு கோலுடன் உறுதியான மனதுடன் அவர் மலையில் தனித்து அலைகிறார்.

செங்குத்தான பாதையில் ரெட் பைன் ஏறிச் செல்லும் காட்சி மனதில் பதிந்து போய்விட்டது. குறிப்பாக அஸ்தமன சூரியனின் முன்னால் அமர்ந்து துறவியோடும் பேசும் காட்சியும், பெண் துறவியோடு உரையாடுவதும். ஆள் அற்ற குடிலின் கதவை தட்டி காத்திருப்பதும் அற்புதமான காட்சிகள்.

Hermits

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 05:10

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.