S. Ramakrishnan's Blog, page 116

August 24, 2021

தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம்.

கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இவரது வாட்டர்மெலன் என்ற சிறுகதைகளின் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் படித்த மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.

கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு செய்யத் தவறிய வாழ்க்கையை அதன் அடர்த்தியோடு உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இரண்டுவிதமான அந்நிய வாழ்க்கையைப் பேசுகிறது. ஒன்று பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்குச் சென்று வாழும் இளைஞர்களின் சூழல் மற்றும் நெருக்கடிகள். ஊர் நினைவுகள். அரபு உலகில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள். அச்சமூட்டும் மனநிலை. பன்னாட்டு சமூக வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் எனப் புதிய கதைவெளியினை மையமாகக் கொண்டவை

இரண்டாவது வகைத் தமிழ்நாட்டிலிருந்து கூலித்தொழிலாளர்களாகச் சென்றவர்கள் கர்நாடகத்திலே தங்கி வாழும் போது அவர்கள் வாழ்க்கை எப்படியிருந்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறை மற்றும் மேலாதிக்கம். சடங்குகள் நம்பிக்கைகள். திருமண உறவுகள். மற்றும் மாறும் தலைமுறைகளின் அடையாளச்சிக்கல்கள். புகலிடத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். பொருளாதாரப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள்.

மலையாளச் சிறுகதைகளில் இது போன்ற அரபு தேச வாழ்க்கை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னடத்திற்கு நிச்சயம் இது புதுவகைத் திறப்பாகவே அமைந்திருக்கும். கனகராஜ் கதையை வளர்த்தெடுக்கும் முறை அழகாக உள்ளது. நினைவுகளையும் நிகழ்வினையும் அவர் அழகாகப் பின்னிச் செல்கிறார். அதிக உரையாடல்கள் கிடையாது. காட்சிகளாக விரியும் இந்த எழுத்தின் வழியே கடந்தகாலமும் நிகழ்காலமும் அழகான இணைந்து விரிகின்றன.

முதற்கதையில் பாகிஸ்தானியர்களுடன் கார் பயணம் செல்லும் போது எதிர்கொள்ளும் நெருக்கடி மெல்ல விரிவு கொண்டு அந்நிய தேசத்தில் சூழ்நிலை கைதியாக மாறும் ஒருவனின் மனநிலையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறது. இன்னொரு கதையில் சலூனில் பணியாற்றும் ஒருவர் அங்கு வரும் அரபிகளை எப்படி அடையாளம் காணுகிறார் என்ற சமகால வாழ்வியலில் துவங்கிக் கடந்த காலத்தில் நாவிதராக அழைத்துவரப்பட்ட தாத்தாவின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கிறது. காலம் மாறிய போதும் ஒடுக்குமுறை மாறவேயில்லை. கடந்தகாலத்தின் இருட்டிற்குள் ஒருவர் கைவிளக்கேந்திச் செல்வது போலவே நிகழ்வுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. பெருமாயி கிழவியை வாசிக்கையில் மாக்சிம் கார்க்கியின் கிழவி இசர்கீல் நினைவில் வந்து போகிறார். அந்த அளவு அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரமது.

இந்தக் கதைகளை வாசிக்கையில் இவை கன்னடத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் வாழ்க்கையை, புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசுவதை உணர முடிகிறது.

வார்த்தை, உயிர்மெய்யெழுத்து, இலக்கணம் போன்றவை என்ற தற்காலக் கன்னடச் சிறுகதைகளைத் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். அதில் தான் கனகராஜின் கதையை முதன்முறையாக வாசித்தேன். சிறந்த கதையது.

இந்தத் தொகுப்பில் 11 கதைகள் உள்ளன. இந்தக் கதைகளில் வெளிப்படும் மாயமும் கனவுத்தன்மையும் யதார்த்த சித்தரிப்புகளும் புதுமையானது.

: ஸ்டேட்யூ ஆஃப் லிபர்டி கதையில் ஹிந்துஸ்தானி இசை மையமாக இருக்கிறது. ஞானச் சரஸ்வதியாகக் கொண்டாடப்படும் கிஷோரி அமோன்கர் மிகச்சிறந்த பாடகி. அவரது பாடல்களை நானும் விரும்பிக் கேட்டிருக்கிறேன். இந்தக் கதையில் நியூயார்க் நகரில் ஒரு இளம்பெண் அவரை நினைவு கொள்ளும் விதம் அபாரமானது. தேர்ந்த கதைசொல்லியால் தான் அதை உருவாக்கமுடியும். கனகராஜ் அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்

புரிந்து கொள்ளப்படாத திருமண உறவின் கசப்புகளை மெல்லிய இழையாக இவரது கதைகளில் காணமுடிகிறது.

கனகராஜ் தற்போது தமிழிலும் எழுத ஆரம்பித்திருக்கிறார். பனிப்பாறை என்ற அவரது கதை காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ளது. சிறந்த கதைகளை எழுதி வரும் அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

வாட்டர்மெலன் போலப் புதிய இளம்படைப்பாளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் சிறந்த மொழியாக்கத்தைத் தந்த கே.நல்லதம்பிக்கும் அன்பும் பாராட்டுகளும்

வாட்டர்மெலன் தமிழ்வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது. கனகராஜ் பாலசுப்ரமண்யம் இன்னும் பல உயரங்களைத் தனது எழுத்தில் அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு என் நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 20:40

August 23, 2021

போராடும் தவளை

உலகின் மிகச்சிறிய தவளை – வாசிப்பனுபவம்

ந.பிரியா சபாபதி.

     ஆதிகால மனிதன் இயற்கையோடு இணைந்து அதன் போக்குடனே வாழ்ந்தான்.  மனிதர்களுடைய அறிவு, ஆணவம் விரிவடைய விரிவடைய தன் பலத்தைப் பறைசாற்றத் தொடங்கினான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்தினான். இயற்கையையும் தனதாக்கிக் கொண்டு தான்தான் இந்த அண்டத்தில் வலிமை பொருந்தியவன் என்பதை வெளிக்காட்ட போர் புரிந்தான். பிற நாட்டையும் இயற்கைச் செல்வங்களையும் தனக்கானது உரிமை கொண்டாடினான்.  நம் முன்னோர்களான இவர்களது எண்ணமானது நம்முடைய உடலுக்குள்ளும் ஓடுவதால் இப்போது வரை இயற்கையின் வேர் வரை சென்று அதை அறுத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி அறுத்துக் கொண்டிருக்கும் நமக்கு திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ‘உலகின் மிகச்சிறிய தவளை’ என்ற சிறார் நாவல் வழி பெரும் இயற்கையின் மீதும் நேசம் கொள்ளுங்கள் என  உணர்த்தியுள்ளார்.

     நான் என்றைக்குமே நம்மைத் தவிர பிற உயிரினங்களுக்குத் தலைமுறை உண்டு என்றும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதை நீர்வாழ் உயிரனங்கள் உணர்த்துகிறது. அதை உணர்த்துவதற்கான காரணத்தை நோக்கினால் செம்பியன் ஏரியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்கி அதில் தனது தொழிற்சாலையை உருவாக்க முனைவதால் ஆமை, மீன்கள், தவளை போன்றவை ஒன்று கூடிப் பேசின. ஆனால் ஒன்றின் கருத்துக்குப் பிற உயிரினங்கள் செவி சாய்க்கததால் அவற்றுக்குள் சண்டை ஏற்பட்டன.

     இதில் டம்பி என்ற  மிளகு அளவு உருவம் கொண்ட தவளை மிகுந்த முனைப்புடன் அனைவரிடமும் பேசியது. “நிச்சயம் இந்த ஏரியை நான் காப்பாற்றுவேன். மனிதர்களை எதிர்த்துப் போராடப் போகிறேன்” டம்பியின் உருவத்திற்குப் பிற தவளைகள் மதிப்பு கொடுக்காதது போன்று அதனுடைய பேச்சுக்கும் மதிப்புக் கொடுக்கவில்லை.

           அந்த உயிரினங்கள் வாழும் செம்பியன் ஏரியானது ஒரு காலத்தில் மக்களுக்குக் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்த ஏரியாக விளங்கியது. மக்கள் அந்த ஏரியினுள் நீராளி எனும் கடவுள் குடியிருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஏரியினுள் நீராளி கடவுளை மகிழ்ச்சி அடையச் செய்ய சக்கரையும் பூக்களையும் ஏரியில் போட்டு ஆடிப்பாடுவார்கள். இவையெல்லாம் செம்பியன் ஏரியானது பஸ், லாரி போன்ற வாகனங்கள் கழுவும் ஏரியாக மாறிப் போவதற்கு முன் நடைபெற்றது.

     நீர்வாழ் உயிரினங்களின் குரலினைக் கேட்க எவருமே இல்லை. இச்சூழலில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் கொண்ட அமெரிக்கக் குழு ஒன்று அந்த ஏரியைப் பார்க்க வந்தனர். இதைப் பார்த்த ‘சப்பை’ எனும் நாய் மட்டும் அவர்களின் செயல்களைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தது. காரோட்டிகள் எறிந்த கல்லால் அதற்கு வலித்தது. ஏரிக்கரை அருகே இரவெல்லாம் கிடந்தது.

     பெப்பா, சங்கா என்ற இருதவளைகள் கூடிப் பேசி முடிவெடுத்துக் கொண்டிருந்த வேளையில் நம் கதைநாயகனான டம்பி புகார் எழுதலாம் என்று யோசனை கூறியதும் மற்ற தவளைகள் அதைக் கேட்டு நகைத்தன.

     சங்கா எனும் தவளை தண்ணீரில் வாழ விருப்பமில்லாமல் அவ்விடத்தை விட்டு நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்தது. ஆனால் அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் எனத் தெரியவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளமால் சென்றது. அதனுடன் சில தவளைகளும் சென்றன.  நகரத்தின் வாகனங்களில் பல அடிப்பட்டு இறந்தன. ஒரேயொரு தவளை மட்டும் தப்பித்துப் பிழைத்து ஏரியை நோக்கிச் சென்றது. டம்பி மறுபடியும் தன் கருத்தை முன் வைத்தது. ஆனால் அந்தக் கருத்திற்கு எவரும் செவிசாய்க்கவில்லை.

     ஏரியின் மேல் அன்பு கொண்ட சப்பையிடம் டம்பி புகார் அளிக்கலாம், அந்தப் புகாரில் செம்பியன் ஏரியின் பெருமையைக் கூறலாம். அது மட்டுமல்லாது அதில் வசிக்கக் கூடிய உயிரினங்கள் பற்றியும் ஏரி மூடப்பட்டு கார் தொழிற்சாலை உருவானால் அதனால் ஏற்படப் போகும் சீர்கேட்டினையும் கூறலாம் என்றது.

     இருவரும் இணைந்து அந்த ஏரிக்கு வரும் பூனையிடம் உதவி கேட்கலாம் என்று தீர்மானித்தன. நியூட்டன் எனும் அந்தப் பூனையானது அவர்களுக்கு உதவியது. புகாரை விரிவாக எழுதிக் கொடுத்தது. மற்ற உயிரினங்கள் அதில் கைரேகைகள் பதித்தன.

     நியூட்டன், டம்பி, சப்பை மூவரும் பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்துப் புகாரை அளித்தது. அவர் அளித்த பதில் அவர்களுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் டம்பி மட்டும் தன் உறுதித்தன்மையிலிருந்து மாறாமல் இருந்தது.

     அடுத்ததாக நீதியரசரைச் சந்தித்தன. அவர் சொன்ன பதில்களிலிருந்து அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்தித்தன. மக்களின் மனசாட்சியான ஊடகத்தின் உதவியை நாடலாம் என்ற யோசனை தோன்றியதால் அங்குள்ள எடிட்டரிடம் ஏரியில் வாழக் கூடிய உயிரினங்கள் பற்றியும்  அதைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. அவரும் முடியாது எனக் கைவிரித்தார்.

     இந்தச் சூழ்நிலையில் டம்பி சேனலை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து கொண்டிருந்த பொழுது காகம் ஒன்று அதைத் துரத்தித் தின்ன முயன்று கொண்டிருந்தது. தன் நிலையைக் கூறித் தன்னுடன் செம்பியன் ஏரிக்கு வருமாறு கூறியது. டம்பி கூறியது உண்மை என்பதை அறிந்ததும் டம்பி, காகத்திடம், “ நாளை ஒரு நாள் நகரில் உள்ள எல்லாக் காகமும் வாய் ஓயாமல் கத்திக் கொண்டே பறக்க வேண்டும். நாங்களும் கூச்சலிடுவோம்” என்றது. இதற்கு மீன்களும் தவளைகளும் இசைந்தன.

     அதன்படி காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன. மனிதர்களால் அந்த இரைச்சலைத் தாங்க இயலவில்லை. தவளைகளும் கூச்சலிட ஆரம்பித்தன. வானத்தில் கருமேகங்கள் திரண்டன. இவ்வேளையில் தொலைக்காட்சியில் தோன்றி தங்களின் போராட்டத்திற்கான காரணத்தைக் கூறியது. அந்த மழை நீரை ஏரி வாங்கிக் கொண்டது. அதன் பின செம்பியன் ஏரியை விற்கக் கூடாது முடிவு செய்தது. உருவத்தில் சிறிய டம்பியின் முயற்சி வெற்றி பெற்றது.

     இக்கதையை  நான் வாசித்து முடித்த பின் இது சிறார்களுக்கான கதை மட்டும் என்று தோன்றவில்லை. அனைத்து வயதினருக்குமான கதை என்றே தோன்றியது. இடையிடையே கதைக்கு ஏற்ப வரையப்பட்ட ஓவியம் கண்ணை மட்டும் கவரவில்லை. சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தது. நீயூட்டன் எனும் பூனை என் மனம் கவர்ந்த கதாப்பாத்திரம் ஆகும். இயற்கையை அழித்தால் மனிதன் பெருந்துயருக்கு உள்ளாவான் என்பதை ஆசிரியர் மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார். குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அழகான  கதையை குழந்தைகளுக்குப் பிடித்தமான உயிரினங்களைக் கொண்டே அருமையாகக் கூறியுள்ளார். எளிய தமிழில் குழந்தைகள் பிறர் உதவியின்றி படிக்கும் தமிழில் நயம்பட கூறியுள்ளார்.

••

இந்தச் சிறார் நாவலை உள்ளடக்கி ஐந்து சிறார் கதைகள் ஒன்றாக விலங்குகள் பொய்சொல்வதில்லை என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2021 18:22

August 22, 2021

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள்

 (இந்து தமிழ்திசை நகுலன் நூற்றாண்டு சிறப்புப் பகுதியில் வெளியான கட்டுரை – 22.8.21)

நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லது எட்டுப் பெயர்களில் ஒரே நாவலின் வேறுவேறு பகுதிகளை எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம். நவீன நாவல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான வடிவம். அது மரபான நாவலைப் போல் கதையை வளர்த்தெடுத்து உச்சநிலைக்குக் கொண்டுபோவதைவிடவும் கதைவழியாகச் சுய அனுபவங்கள், நினைவுகள், பாலியல் இச்சைகள், அதன் பின்னுள்ள உளவியல், சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வின் கசப்புணர்வு, வெறுமை போன்றவற்றைப் பேசுவதாக அமைந்தது. ஆகவே, பழைய பிரம்மாண்டமான நாவல்களிலிருந்து இவை உருமாறி அளவில் சிறியதாகவும், கதாபாத்திரங்களின் நினைவுகளை இசைப்பதாகவும் எழுதப்பட்டன.

தமிழ் நாவல்கள் பெரும்பாலும் சம்பிரதாயமான நாவல் வடிவத்தையே கொண்டிருக்கின்றன. கதைக் கருவிலும், கையாளும் மொழியிலும், நிகழ்வுகளின் அடுக்குமானத்திலும் புதிய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ் நாவல் வரிசையில் நகுலனின் நாவல்கள் தனியிடம் கொண்டவை. அவர் கதையில்லாத நாவல்களை எழுதினார் என்பேன்; அதாவது, சம்பிரதாயமான நாவல்களைப் போல் கதாபாத்திரங்களின் உலகை விரித்துக்கொண்டு போவதற்கு மாற்றாக, ஆழ்ந்த மனவோட்டங்களையும் சிதறலான நினைவுகளையும் தனது மரபும் நவீனமும் இணைந்த மொழிநடையில் எழுதியிருக்கிறார். அவருடைய சொற்களிலேயே சொல்வதென்றால், சிதறுண்ட சாயைகளின் உலகையே அவர் உருவாக்கியுள்ளார். வடிவக் கட்டுப்பாடுகள், வரம்புகள் எதற்குள்ளும் அடங்காதவை நகுலனின் நாவல்கள்.

தனது நாவல்களின் வழியே அவர் அனுபவங்களை வரிசைப்படுத்துகிறார் எனலாம். பொதுவாக, இந்த வரிசைப்படுத்துதலானது காலம் மற்றும் வெளியின் வழியே முன்பின்னாக அமையும். ஆனால், நகுலன் அதைக் கலைத்துக் காலவெளியின் மயக்கத்தில், நிஜத்துக்கும் புனைவுக்குமான இடைவெளியில், இருப்புக்கும் இன்மைக்குமான ஊசலாட்டத்தில் தனது கதையைக் கட்டமைக்கிறார். அது ஒருவகைக் கொந்தளிப்பு. கிளைமீறல், மொழிவழியாக மொழிக்குள் அடங்காத அனுபவங்களைப் பதிவுசெய்யும் உன்மத்தம். ‘வாழ்வின் உச்சகட்டங்கள் நாம் நினைப்பது மாதிரியில்லை. எந்த மனிதன் வாழ்விலும் உச்சகட்டங்கள் அவன் பிறப்பதும் இறப்பதும் மட்டும்தான். ஆனால், இடையில்தான் வாழ்வு சலிக்கிறது. இந்தச் சலனத்தைத்தான் ஒரு எழுத்தாளன் சித்தரிக்கிறான்’ என ரோகிகள் நாவலில் நகுலன் குறிப்பிடுவது முக்கியமானது.

நகுலனின் நாவல்களுக்குத் தமிழில் முன்னோடி கிடையாது. ‘நவீனன் டைரி’, ‘நாய்கள்’, ‘நினைவுப்பாதை’, ‘இவர்கள்’, ‘ரோகிகள்’, ‘வாக்குமூலம்’, ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ போன்ற நாவல்கள் தனித்துவமானவை. இவற்றை ஜேம்ஸ் ஜாய்ஸ், வர்ஜீனியா வுல்ஃப் நாவல்களுடன்தான் ஒப்பிட முடியும். அதுவும் நனவோடை உத்தியின் மூலம் கதை சொல்கிறார் என்பதால் மட்டுமே. வுல்ஃபிடம் இல்லாத தத்துவத் தேடலும், ஜாய்ஸிடம் இல்லாத பரிகாசமும் நகுலனிடம் உண்டு.

நகுலன் தனது புனைவுகளை வாழ்க்கை அனுபவம், வாசித்த அனுபவம் இரண்டிலிருந்தும் உருவாக்குகிறார். இரண்டுக்குமான இடைவெளியை அழித்துவிடுகிறார். வெள்ளைக் காகிதத்தில் கட்டவிழ்த்துவிடப்படும் நிழல்கள் என்று தனது எழுத்தைப் பற்றி நகுலன் குறிப்பிடுவது முக்கியமானது. மனவோட்டங்களில் சஞ்சரிப்பது, புலன் மயக்கம், போதையில் உருவாகும் தற்காலிக மகிழ்ச்சி, நினைவின் கொந்தளிப்பு, பித்துநிலை அனுபவங்கள், வாசிப்பின் வழி பெற்ற அபூர்வ தரிசனங்கள், சாவின் மீதான விசாரணை என அவரது நாவல்களின் மையப் புள்ளிகளைப் புரிந்துகொள்ளும்போதுதான் நகுலனின் தனிச்சிறப்பை உணர முடியும்.

நாய் என்று ஒரு மனிதனைக் குறிப்பிட்டால் ஏன் அதை ஒரு வசை மொழியாகக் கருதுகிறார்கள் என்று கேள்வி எழுப்பும் நகுலன், நாய் என்பதை ஒரு தத்துவக் குறியீடாக அமைத்துக்கொண்டு, அதன் பல்வேறு வடிவங்களை, அடையாளங்களை விசாரணை செய்வதாகவே ‘நாய்கள்’ நாவலை எழுதியிருக்கிறார். ‘நாய்கள்’ நாவலில் பாரதியாரைத் தேடிக்கொண்டு நவீனன் திருவல்லிக்கேணித் தெருக்களில் சுற்றுகிறான். பாரதியைப் பற்றிய நினைவுகள், வியப்புகள் இந்தத் தேடுதலில் இடம்பெறுகின்றன. தன் அறைக்குப் போகும் வரையில் தான் பேசிக்கொண்டிருந்தது சுப்ரமணிய பாரதியுடனா அல்லது தேரையுடனா என்று நிச்சயிக்க முடியாமல் நவீனன் மனம் குழம்பிப்போய்விடுகிறான். இந்த மயக்கம் காலவெளியைக் கடந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது. நகுலனின் நாவல்களில் குழந்தைகள் அபூர்வமாகவே இடம்பெறுகிறார்கள். பெண்களும் குறைவே. அதிலும் அவரது அம்மாவைப் பற்றி வரும் நினைவுகளைத் தவிர்த்தால் சுசீலாதான் ஒரே நாயகி. சுசீலா ஒரு கற்பனைப் பெண். அவள் சொல்லில் பிறந்தவள். ஆகவே, அழிவற்றவள். காலவெளிகளைக் கடந்து சஞ்சாரம் செய்கிறாள். நகுலனின் படைப்புகளில் அழியாச்சுடரைப் போல ஒளிர்ந்தபடியே இருக்கிறாள் சுசீலா.

நகுலன் தனது மாற்று வடிவமாக நவீனனை உருவாக்குகிறார். நவீனன் ஒரு எழுத்தாளர். அந்தப் பெயரே நவீனத்துவத்தின் அடையாளம். நவீனன் தான் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள், அவர்களுடனான உறவு, அதில் ஏற்பட்ட கசப்புகளை உரையாடலின் வழியே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். யாருமற்ற தருணங்களில் தனக்குத் தானும் உரையாடிக்கொள்கிறார். தேரை, நாயர், ஹரிஹர சுப்ரமணிய அய்யர், சுலோசனா, கணபதி என நீளும் அவரது கதாபாத்திரங்களுடன் தாயுமானவர், திருவள்ளுவர், பாரதி, வர்ஜீனியா வுல்ஃப், ஜேம்ஸ் ஜாய்ஸ், தெகார்த், வால்ட் விட்மன், ராமகிருஷ்ண பரமஹம்சர் என ஆளுமைகளும் கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள்.

திரும்பிப் பார்க்கையில் காலம் ஒரு இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு கவிதை வரியை நகுலன் எழுதியிருக்கிறார். இந்த உணர்வை அவரது நாவல்களில் அதிகமும் காண முடிகிறது. இருப்பும் இன்மையுமே அவரது கதாபாத்திரங்களின் மையப் பிரச்சினை. முன்பின்னாகச் சென்றபடியே இருக்கும் ஊஞ்சலைப் போலவே எழுத்தைக் கையாள்கிறார். அனுபவங்களில் நிலைகொள்வதும் அனுபவங்களை உதறி எழுந்து பறத்தலும் என இருநிலைகளை அவரது எழுத்தில் தொடர்ந்து காண முடிகிறது.

‘நினைவுப்பாதை’ நாவலுக்கு அசோகமித்திரன் சிறப்பான முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், ‘இது அசலாகச் சதையும் ரத்தமுமாக உயிர்வாழும் ஓர் எழுத்தாளனின் நினைவுப்பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்கள் வருகிறார்கள், நினைவுகொள்ளப்படுகிறார்கள். இலக்கியவாதிகளைப் புனைவுருக்களாக்கியது நகுலனின் சாதனை’ என்கிறார். அது உண்மையே. நவீனன் என்ற படைப்பாளிக்கும் நகுலன் என்ற புனைபெயர் கொண்ட மனிதனுக்கும் இடையில் நடைபெறும் முடிவற்ற உரையாடல்தான் ‘நினைவுப்பாதை’. இந்த நினைவுப்பாதையில் மாயாரூபிணியாக ‘சுசீலா’ வெளிப்படுகிறாள்.

நகுலனின் நாவலில் இடம்பெறும் உரையாடல்கள் அன்றாடத் தளத்திலிருந்து சட்டென ஞானநிலையை நோக்கி நகர்ந்துவிடுகின்றன. கவிதையும் தத்துவமும் இணைந்து உருவான புனைவெழுத்து இவை என்பேன். எழுத்தாளனை மையக் கதாபாத்திரமாக்கியே நகுலனின் நாவல்கள் அமைந்திருக்கின்றன. அதுவும் புறக்கணிக்கப்பட்ட, அங்கீகாரமில்லாத ஒரு எழுத்தாளனின் அகத்தையே இவை வெளிப்படுத்துகின்றன. உலகம் தன்னைக் கைவிடும்போது ஒருவன் சொற்களிடம் அடைக்கலமாகிறான். படைப்பின் வழியே தன்னை மீட்டுக்கொள்ள முயல்கிறான். ஆனால், இலக்கிய உலகமும் சண்டையும் சச்சரவுகளும் பொறாமையும் அவமதிப்பும் நிறைந்ததாக இருப்பதை அறியும்போது, தானும் தன் பூனையும் நாய்களும் போதும் என ஒதுங்கிவிடுகிறான்.

தன்னையே ஒரு கதாபாத்திரமாக உணரும் எழுத்தாளனின் அவஸ்தைகளே இந்த நாவல்கள் என்று குறிப்பிடலாம். சொல்லில் சொல்ல முடியாதவற்றைப் புனைவுகளாக எழுத முயன்றதே நகுலனின் கலை. அந்த வகையில், இன்று நாம் பேசும் நான்லீனியர் நாவல்களுக்கு நகுலனே முன்னோடி

நன்றி

இந்து தமிழ் திசை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2021 18:54

பெர்க்மெனின் வீடு

Trespassing Bergman என்ற ஆவணப்படம். பெர்க்மேன் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து உலகப்புகழ் பெற்ற இயக்குநர்கள் ஃபெரோ தீவில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து பெர்க்மெனை நினைவு கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது

பெர்க்மென் தனிமையை விரும்பி ஃபெரோ தீவில் வசித்து வந்தார். அவரது வீடு எங்கேயிருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. பார்வையாளர்களை அவர் அனுமதிப்பதில்லை. ஆகவே உலகின் கண்களில் படாமல் வாழ்ந்து வந்த பெர்க்மெனின் வீட்டினையும் அவரது நூலகம் மற்றும் பணியாற்றிய அறையைக் காண்பதற்காக Alejandro Gonzalez Inarritu, Michael Haneke, John Landis, Lars von Trier, Tomas Alfredson, Daniel Espinosa, Claire Denis, Wes Craven, Ang Lee, Thomas Vinterberg, Isabella Rossellini, Harriet Andersson, Zhang Yimou, Woody Allen, Laura Dern, Francis Ford Coppola, Takeshi Kitano, Holly Hunter, Wes Anderson, Robert De Niro, Martin Scorsese, Ridley Scott, Pernilla August, Alexander Payne எனப் புகழ்பெற்ற இயக்குநர்கள் ஃபெரோ தீவிற்கு வருகை தருகிறார்கள்

உண்மையான சினிமா ரசிகருக்கு இந்த வீடு ஒரு புனித ஸ்தலம். இங்கே வருகை தந்து பெர்க்மென் அறையில் அவரது நாற்காலியில் அமர்வது என்பது மாபெரும் கனவு என்கிறார் Alejandro Gonzalez Inarritu,

இன்னொருவரோ பெர்க்மெனின் ரகசியங்களை எட்டிப்பார்ப்பது போலிருக்கிறது என்கிறார். அது உண்மையே.

தனிமையில் வாழ்ந்த பெர்க்மென் அன்றாடம் திரைப்படங்கள் பார்த்திருக்கிறார். அவரது சேமிப்பில் உலகின் முக்கியப் படங்கள் அத்தனையும் இடம்பெற்றிருக்கின்றன. இது போலவே பெர்க்மெனின் நூலகம் மிகப்பெரியது. தத்துவம் இலக்கியம் வாழ்க்கை வரலாறு என ஆழ்ந்து படித்து அவற்றைக் குறிப்புகள் எடுத்திருக்கிறார்.

பெர்க்மென் நாடகங்களை இயக்கியவர் என்பதால் நிறைய நாடகத்தொகுதிகளை வாசித்திருக்கிறார். உலகச் சினிமாவிற்கு அவரது பங்களிப்பு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி இயக்குநர்கள் பலரும் நினைவு கொள்கிறார்கள்

சாவுடன் பகடையோடும் காட்சியை உருவாக்கியது அவரது மேதமை என்கிறார் டெனிஸ். இந்தப் படத்தின் வாயிலாகப் புகழ்பெற்ற இயக்குநர்களின் அறையையும் நாம் பார்வையிடுகிறோம். சீன இயக்குநர் ஜாங் யூமூவின் அறைச் சுவரில் அவரது முக்கியப் படங்களில் சுவரொட்டிகள் அழகாகத் தொங்குகின்றன.

தனி ஒருவராகத் திரைக்கதை எழுதும் பழக்கம் கொண்டவர் என்பதால் அந்த வீட்டிலிருந்தபடியே அவர் தனது புகழ்பெற்ற திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். பெர்க்மென் எழுதியுள்ள ரகசிய குறிப்புகள். கடிதங்கள். அவர் மனைவி இறந்து போன நாளை குறித்து வைத்துள்ள எனப் படம் பெர்க்மெனின் தனிப்பட்ட உலகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.

படத்தில் என்னை வசீகரித்த விஷயம் சூரிய வெளிச்சம் படும்படியான ஒரு இடத்தில் படிப்பதற்கான நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்து பெர்க்மென் படித்திருக்கிறார் என்பதே. அங்கே அமர்ந்து புத்தகத்தை விரித்தால் சரியாகச் சூரிய வெளிச்சம் புத்தகத்தின் மீது விழுகிறது. எவ்வளவு ரசனையாகத் தனது படிக்கும் இடத்தை உருவாக்கியிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது

இது போலவே பெர்க்மென் மீது இன்றைய தலைமுறை இயக்குநர்கள் கொண்டுள்ள அன்பையும் மரியாதையும் காணும் போது அவர்கள் இளமைப் பருவம் முதல் பெர்க்மென் திரைப்படங்கள் வழியாக அவரை ஆராதனை செய்து வந்திருப்பது தெரிகிறது.

ஆஸ்கார் விருதுகளை வென்ற புகழ்பெற்ற இயக்குநர் Alejandro Gonzalez Inarritu பெர்க்மென் வீட்டிற்குள் நுழைந்து அவரது புத்தகங்கள் மற்றும் வீடியோ சேமிப்பினைக் கண்டு வியப்பதுடன் எந்த இடத்தில் பெர்க்மென் தனது படத்தை இயக்கியுள்ளார் என்பதைக் கண்டறிந்து அதே இடத்தில் அதே போன்ற ஒரு காட்சியைத் தன் செல்போனில் படமாக்குகிறார். நடிகர்கள் இல்லை. ஆனால் கற்பனையாக அதே காட்சியை அப்படியே எடுக்க முனைகிறார். பெர்க்மென் மீதான அவரது நேசத்தின் அடையாளமாக அந்தக் காட்சி உள்ளது.

மார்ட்டின் ஸ்கார்செஸி, பெர்க்மேனின் ஆரம்பகாலத் திரைப்படங்கள், குறிப்பாகச் சம்மர் வித் மோனிகா படத்தை முதன்முறையாகப் பார்த்த போது ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இயக்குநர் ஆங் லீ பெர்க்மெனை தேடிச் சென்று சந்தித்து ஆசி வாங்கும் காட்சி மறக்கமுடியாதது. அந்தக் காட்சியில் பெர்க்மென் அவரை அணைத்துக் கொள்ளும் போது ஆங்லீயின் கண்கள் கலங்குகின்றன. உண்மையான அன்பின் வெளிப்பாடு அதுவே.

ஸ்வீடனின் சிறிய தீவான ஃபாரோவில் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை. மக்கள் தொகை: 571. மட்டுமே இந்தத் தீவில் வங்கி, தபால் அலுவலகம், ஏடிஎம், ஆம்புலன்ஸ், மருத்துவர் அல்லது போலீஸ் என எதுவும் கிடையாது. ஸ்டாக்ஹோமிலிருந்து விமானம் அல்லது காரில் பயணித்து வந்து இரண்டு படகுகளில் மாறியே இந்தத் தீவை அடைய முடியும்.

இந்தத் தீவில் தான் பெர்க்மென் “The Passion of Anna,” “Shame,” “Scenes From a Marriage”), “Through a Glass Darkly” போன்ற படங்களை உருவாக்கினார். இரண்டு ஆவணப்படங்களும் இந்தத் தீவில் உருவாக்கபட்டுள்ளன.

ஃ பெரோவில் அமைந்துள்ள பெர்க்மேன் மையம் ஒரு கலாச்சாரத் தீவில் பெர்க்மென் தொடர்புடைய விஷயங்களை அடையாளம் காட்டும் பெர்க்மேன் சஃபாரி” ஒன்றையும் நிகழ்த்துகிறது. இது மட்டுமின்றிப் பெர்க்மென் குறித்த கருத்தரங்குகள், திரைப்படங்களை இந்த மையம் ஏற்பாடு செய்கிறது

இந்தத் தீவைப் போன்றதே பெர்க்மெனின் வாழ்க்கையும். பெர்க்மெனின் பலம் நடிகர்களை அவர் கையாண்ட விதம். உண்மையில் அது ஒரு வகை உளவியல் சிகிச்சை. மிக நுணுக்கமாகக் காட்சிகளைப் படமாக்கியவர். தொடர்ந்து உடல் நலக்கோளாறுகளால் அவதிப்பட்ட போதும் அவரது படைப்பாக்கம் குறையவேயில்லை என்கிறார்

பெர்க்மென் மீதான படைப்பாளிகள் அன்பை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படம் 2013ல் உருவாக்கப்பட்டுள்ளது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2021 01:18

August 21, 2021

இருவர் கண்ட ஒரே கனவு

திபெத்தின் கெக்சிலி பீடபூமியின் 16,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையே உலகின் மிக உயரமான சாலையாகும். அந்தக் கெக்சிலி சாலையில் லாரி ஒட்டிக் கொண்டு செல்கிறான் டிரைவர் ஜின்பா. ஆள் நடமாட்டமேயில்லாத நீண்ட சாலை. பழைய ஆடியோ கேசட் ஒன்றை ஒலிக்கவிட்டபடியே வண்டி ஒட்டுகிறான் ஜின்பா. கேமிரா அவன் முகத்தையே மையமிடுகிறது. சலிப்போ, கோபமோ எதுவுமில்லை. அவன் கண்கள் அடிக்கடி கயிற்றில் தொங்கும் டாலரில் உள்ள மகளின் புகைப்படத்தை நோக்குகின்றன. அந்தச் சாலையில் அவன் ஒருவன் மட்டுமே பயணம் செய்கிறான்.

எதிர்பாராதவிதமாக ஒரு செம்மறி ஆடு அவனது லாரியில் விழுந்து அடிபட்டுச் சாகிறது. ஏன் இந்த ஆடு தன் லாரியில் வந்து அடிபட்டது எனக் குற்றவுணர்வு கொள்கிறான் ஜின்பா.

செத்த ஆட்டினை லாரியில் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறான். வழியில் தற்செயலாக ஜின்பா என்ற அதே பெயருள்ள நாடோடி ஒருவனைச் சந்திக்கிறான். அவன் தன் தந்தையைக் கொன்றவனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். நாடோடியை லாரியில் ஏற்றிக் கொள்ளும் ஜின்பா அவன் மீது அதிகாரம் செலுத்துகிறான். அவனிடமே சிகரெட் வாங்கி அதைப் பற்றவைக்கவும் சொல்கிறான். தனது தவற்றை மறைத்துக் கொண்டு ஜின்பா முரட்டுதனமாக நடந்து கொள்கிறான்.

நாடோடியோ தன் தந்தையைக் கொன்ற ஆள் பக்கத்து ஊரான சனக்கில் வசிப்பதாகவும் அந்தச் சாலையில் தன்னை இறக்கிவிடும்படியாகக் கேட்டுக் கொள்கிறான். ஜின்பா அதற்கு ஒத்துக் கொள்கிறான். இருட்டில் அந்தச் சாலையில் இறக்கிவிட்டுச் செல்லும் ஜின்பா ஒரு கறிக்கடையில் நிறுத்தி முழு ஆட்டின் விலை எவ்வளவு என்று விசாரிக்கிறான். கடைக்காரன் அவன் வாங்க விரும்புகிறான் என நினைத்துக் கொண்டு ஆசையாக விலை சொல்கிறான். ஆனால் ஜின்பா மாலை வருவதாகச் சொல்லி விடைபெறுகிறான்.

மடாலயம் ஒன்றுக்குச் செல்லும் ஜின்பா இறந்து போன ஆட்டிற்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யும்படி ஒரு பௌத்த குருவிற்குக் காசு கொடுக்கிறான். அவர் பிரார்த்தனை செய்வதுடன் இறந்த ஆட்டினை கழுகிற்குப் படையல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறார். அப்போது ஒரு பிச்சைக்காரன் கழுகிற்குப் பதிலாகத் தனக்கு உணவாகத் தரலாமே என்று யாசிக்கிறான். அவனுக்கு நிறையப் பணம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லும் ஜின்பா இறந்த ஆட்டினை கழுகிற்குப் படையல் செய்கிறான். திரும்பிச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் வீட்டில் இரவு தங்குகிறான். இன்பம் அனுபவிக்கிறான்.

மறுநாள் கிளம்பும் போது அந்த நாடோடி என்ன ஆனான் என்று தெரிந்து கொள்வதற்காக அவனை இறக்கிவிட்ட சனக்கிற்க்குப் போகிறான். யாரை நாடோடி கொல்ல முயன்றானே அந்த மனிதனைச் சந்திக்கிறான். அவனுடன் பேசுகிறான். அந்த மனிதன் பயத்துடன் தன்னை அப்படி ஒருவன் வந்து சந்தித்தான். ஆனால் ஒன்று செய்யவில்லை. கண்ணீர் சிந்தியபடியே வெளியேறிப் போய்விட்டான் என்கிறான். உண்மையில் யாரை கொல்ல நாடோடி விரும்பினான் என்பது முடிவில் தெரிய வருகிறது

நாடோடியைத் தேடி ஒரு மதுவிடுதிக்கு ஜின்பா செல்லும் காட்சி அபாரமானது அந்தக் கடையை நடத்தும் பெண்ணுடன் நடக்கும் உரையாடல். கடையின் சூழல்.. அந்தக் காட்சி அப்படியே செபியா டோனுக்கு மாறி நாடோடி வந்து போன நடந்த நிகழ்வுகளைச் சொல்வது என அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே கனவை இருவர் காணுவது போலிருக்கிறது அந்தக் காட்சி.

ஆடு லாரியில் அடிபட்டு விழும் காட்சி சட்டென அதிர்ச்சியை உருவாக்குகிறது. அதிலிருந்து ஒருவன் குற்றவுணர்வில் ஊசலாடத் துவங்குகிறான். மகள் மீது பாசம் கொண்டு அவள் நினைவாக ஒரு பாடலைக் கேட்டபடியே வரும் ஜின்பா உண்மையில் முரட்டுத்தனமான மனிதனா அல்லது தோற்றம் தான் அப்படியிருக்கிறதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. அவனது தோற்றம் ஜானி டெப் போலுள்ளது. எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறான். ஒரு காட்சியில் Animals have souls, too என்று சொல்கிறான் ஜின்பா. மனிதர்களின் ஆன்மாவிற்கும் விலங்குகளின் ஆன்மாவிற்குமான வேறுபாடு பற்றியும் பேசுகிறான். இத்தனை நுண்ணுணர்வு கொண்ட ஜின்பா ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்ற புதிர் படம் முடியும் போது தான் விலகுகிறது.

இதற்கு மாறாக நாடோடியோ தோற்ற அளவில் பிச்சைக்காரன் போலிருக்கிறான். ஆனால் அவன் கொலை செய்வதற்காக அலைந்து கொண்டிருக்கிறான். அவன் வாழ்க்கையின் லட்சியமே பழிவாங்குவது தான். ஆனால் அதை அவன் கடைசிவரை நிகழ்த்துவதில்லை. அதற்குத் தன்னை அவன் தயார்ப் படுத்திக் கொள்ளவில்லை

மளிகைப்பொருட்கள் விற்கும் ஆளைத் தேடிச் செல்லும் ஜின்பாவை அந்தக் கடைக்காரனின் மனைவி வரவேற்று உபசரிக்கிறாள். அப்போதும் ஜின்பா உண்மையைச் சொல்வதில்லை. வீடு திரும்பும் கடைக்காரன் துறவி போல நடந்து கொள்கிறான். அவரிடம் ஜின்பா உண்மையைச் சொல்கிறான். இந்த மூன்று கதாபாத்திரங்களும் குறியீடுகளே. அகவிழிப்புணர்வு தான் படத்தின் மையப்புள்ளி. .

கர்மா மற்றும் விதியின் செயல்பாடுகள் பற்றிய ஒரு உவமை போன்றே இந்தப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திபெத்தியத் திரைப்பட இயக்குநரான பெமா ட்ஸெடன் இப்படத்தை மிகுந்த கவித்துவத்துடன் உருவாக்கியிருக்கிறார். லு சாங்யேவின் ஒளிப்பதிவு அபாரமானது. செர்ஜியோ லியோனின் படங்களை நினைவுபடுத்தும் ஒளிப்பதிவு. காட்சிக் கோணங்களும் வண்ணங்களும் மிகச்சிறப்பாக உள்ளன.

பௌத்த நீதிக்கதை ஒன்றை வாசிப்பது போன்ற உணர்வைத் தருகிறது படம்

மனிதனின் இருவேறு முகங்களை, இயல்புகளைச் சொல்வதற்காகத் தான் ஜின்பா என்று ஒரே பெயர் இருவருக்கும் வைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது

சினிமாவிற்குப் பெரிய கதைகள் தேவையில்லை. சிறிய கதையை அழுத்தமாகச் சொல்ல முயன்றால் அதுவே போதும் என்கிறார் பெமா ட்ஸெடன். இந்தப் படத்தைப் புகழ் பெற்ற இயக்குநர் Wong Kar Wai தயாரித்திருக்கிறார்.

மிகச்சிறந்த ஒளிப்பதிவு. இசை, படமாக்கப்பட்ட முறை இப்படத்தை மிகச்சிறந்த திரையனுபவமாக மாற்றுகிறது. உலக சினிமா அரங்கில் திபெத்திய சினிமாவின் நிகரற்ற சாதனை இப்படம் என்கிறார்கள். . அது உண்மையே.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 05:14

August 19, 2021

புத்தரின் அடிச்சுவட்டில்

அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகச் சிவபாதசுந்தரம் புத்தர் பிறந்த இடம் துவங்கி அவரது வாழ்வில் தொடர்புடைய முக்கிய இடங்களை நேரில் காணுவதற்காக ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அந்த பயண அனுபவத்தை கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் என்ற நூலாக எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தர் வாழ்க்கையோடு தொடர்புடைய ஸ்தலங்கள் உத்திர பிரதேசம் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ளன. நேபாள எல்லையில் அவர் பிறந்த ஊர் உள்ளது.

கபிலவஸ்து சாரநாத், சிராவஸ்தி, வைசாலி கௌசாம்பி சங்கர்ஷ்புரம் நாலந்தா, பாடலிபுரம் குசிநகர் என நீளும் அந்தப் பயணத்தின் ஊடாக அவர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் இணைத்து விரிவான பயண நூலாகக் எழுதியிருக்கிறார்..

இந்தப் பயணத்தின் ஊடாக அவர் பௌத்தம் அன்று இருந்த நிலை மற்றும் இன்றுள்ள நிலை குறித்து அழகாக விளக்குகிறார் தமிழில் வெளியான சிறந்த பயண அனுபவ நூலிது.

நேபாள எல்லையிலுள்ள தௌலீவா என்ற ஊருக்குச் செல்லும் சிவபாதசுந்தரம் அங்கே கபிலவஸ்து என்ற புத்தர் பிறந்த ஊரைத் தேடுகிறார். ஊரில் யாரும் அப்படியொரு பெயரைக்கூட கேள்விப்படவில்லை.

கி,மு.563ல் கபிலவஸ்து நகரத்தின் லும்பினி தோட்டத்தில் புத்தர் பிறந்தார் அந்த இடம் எங்கேயிருக்கிறது எனதேடி அலைந்த போது ஒரு சாஸ்திரியை தேடிப் போய்ச் சந்திக்கிறார். அவர் தௌலீவா தான் கபிலவஸ்து. அதன் இடிபாடுகளை நானே அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகிறேன் என்று உடன் வருகிறார்.

இடிந்த நிலையில் காணப்படும் பழைய கட்டிடங்களை, புரதானச்சின்னங்களைப் பார்வையிடுகிறார் சிவபாத சுந்தரம். நேபாள அரசு இதனைச் சிறப்பாகப் பராமரிக்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் எழுகிறது.

இங்கேயிருந்து துவங்கும் இவரது பயணத்தில் அன்றைய சாலைகள். மற்றும போக்குவரத்து வசதிகள். குதிரை வண்டியில் பயணம் செய்த போது ஏற்பட்ட நெருக்கடி, ராஜகிருகத்தினைத் தேடிப் போகும் போது தங்கும் விடுதியில் ஏற்பட்ட அனுபவம் ,லும்பினியில், உள்ள மாயாதேவி கோவில் எனத் தனது அனுபவத்தைச் சுவைபட எழுதியிருக்கிறார்.

புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலைக் காணச் சென்றது. பௌத்த சின்னங்கள் வழியெங்கும் இடிக்கப்பட்டு வேறு கோவில்களாக்கப்பட்ட காட்சிகள். நாலந்தா பல்கலைக்கழக இடிபாடுகள். எனப் புத்தரின் காலத்திற்கே நம்மை அழைத்துக் கொண்டு போய்விடுகிறார் சிவபாதசுந்தரம்

இந்த இடங்களில் எண்பது சதவீதம் நான் பார்த்திருக்கிறேன். நான் சென்ற நாட்களில் சாலை வசதி முன்னைவிட மேம்பட்டிருந்தது, குதிரை வண்டிகளுக்குப் பதிலாகக் காரில் போய் வர முடிந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லை.

இன்று இவை முக்கியச் சுற்றுலாத் தலங்களாக மாற்றபட்டுள்ள காரணத்தால் தங்குமிடம், உணவகம் போக்குவரத்து உள்ளிட்டவசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கின்றன.. ஆனால் பயணிகளை ஏமாற்றிப் பணம் பறிப்பது மட்டும் மாறவேயில்லை.

1960ல் கௌதம புத்தரின் அடிச்சுவட்டில் முதற்பதிப்பு வெளியாகியுள்ளது. அதன்பிறகு இரண்டாம் பதிப்பு வருவதற்கு முப்பது ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 1991ல் தான் இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. கௌதம புத்தரின் வாழ்க்கையைத் தேடிச் சென்ற பயண நூலுக்கே இது தான் கதி. இவ்வளவிற்கும் இது போன்ற பயணம் எதையும் வேறு எவரும் மேற்கொண்டு தமிழில் புத்தகம் எழுதவில்லை. நான் பயணித்த காலத்தில் இந்தப் புத்தகம் சிறந்த வழித்துணையாக இருந்தது.

எந்த வசதிகளும் இல்லாத காலத்திலே இவ்வளவு நீண்ட பயணத்தை சிவபாதசுந்தரம் மேற்கொண்டிருக்கிறார். இன்று சகல வசதிகளும் உள்ளன. பயணம் போவதற்கான மனநிலையைத் தான் பலரும் வளர்த்துக் கொள்ளவில்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 22:00

August 18, 2021

வேம்பலையின் நினைவுகள்

நெடுங்குருதி- வாசிப்பனுபவம்

ஏழுமலை.

வாழ்வின் நேரடி எதார்த்தத்தையும் நுட்பமான காட்சிப் படிமங்களின் சித்தரையும் கொண்டு உயிர்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட ஒரு அற்புத படைப்பு தான் நெடுங்குருதி. நாவலின் கதை வேம்பலை என்ற கிராமத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வையும் புனைவு எதார்த்தமாகச் சித்தரித்துக் காட்டும் ஒரு படைப்பு நாவலின் முதல் பகுதி ‘கோடைக்காலம் ‘ ‘காற்றடிகாலம்’ இந்த இரண்டு பகுதியுமே நாகு என்ற மைய கதாபாத்திரத்தின் வாழ்வியலோடு நாகுவின் பதின்பருவத்து அக உள சித்தரிப்பக மேலே விரிகிறது. ஊரை விட்டு வெளியே இருக்கும் புறவழிச்சாலை வழியாக எறும்புகள் சாரையாகச் செல்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் நாகு என்று தொடங்குகிறது நாவல்.

ஒரு எறும்பு ஊரை விட்டு வெளியேறிச் செல்கிறது என்றால் பெரும் பஞ்சம் வருவதற்கான குறியீட்டாக எறும்புகள் இருக்கிறது. வேம்பர்கள் களவைத் தொழிலாகக் கொண்டவர்கள் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் வேம்பர்களை அடக்குவதற்காக வெல்சி என்ற வெள்ளைய அதிகாரி வேம்பர்களை அந்த ஊரில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் தூக்கிலிடுகிறான். அந்த வேம்பு பிறகு பூக்கவோ காய்கவோ இல்லை, இதற்காகப் பதவி உயர்வு கிடைத்து வேறு இடத்திற்குச் சென்ற பிறகு மர்மமான முறையில் இறந்து போகிறான், இந்த நிகழ்வு நாவலோடு ஒட்டாமல் மெல்லிய விலகலை கொடுப்பதாகத் தோன்றுகிறது. வரலாற்றுச் செய்தியாக அது தனியாக நின்று விடுகிறது.

வேம்பலை என்ற கிராமத்தை நினைக்கும்போது மனதில் ஒட்டுமொத்த சித்திரமாகத் தோன்றுவது பக்ரீயின் மனைவி வீடு ஆதிலட்சுமி வீடு சில வேப்ப மரங்கள் இவை மட்டுமே தோன்றுகிறது நாவலில் புறவயமான காட்சி விரிப்புக்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் அந்தக் கிராமத்தில் இருந்த மற்ற குடும்பங்கள் பற்றியோ அவர்களின் தொழில் வாழ்க்கை முறை பற்றி அதிகமாக வருவதில்லை, கிராமத்திற்கும் வெளி உலகிற்கும் உள்ள உறவும் எதுவும் இல்லை, நாகுவின் ஐய்யா கொண்டு வரும் பெட்ரமாஸ் லைட் மற்றும் செருப்பு தவிர. பெட்ரமாஸ் லைட் புழக்கத்திற்கு வந்தது 1910ஆம் ஆண்டுக்குப் பிறகு கைரேகை தடைச்சட்டம் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது 1924ம் ஆண்டு நாகு இறக்கும் போது வயது 35 என வைத்துக் கொண்டால் நாவல் தொடங்கப்பட்டு 1905 ஆம் ஆண்டு முதல் நாவலின் இறுதி 1950ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம். ஏனென்றால்

நாவல் தொடங்கும் போது நாகுவின் வயது பதினொன்று என்று தொடங்குகிறது. முதல் பகுதியில் வரும் நாகு பதின்வயதின் சித்தரிப்பாக வருகிறான் இரண்டாம் பகுதியில் வரும் நாகு முற்றிலும் வேறுவகையான நாகு. இரண்டாம் பகுதியில் வரும் நாகு அலைந்து திரிபவன் ஆகவும், காமத்தின் அலைகழிப்பாகவும் சுற்றி அலைகிறான். பெரிய களவு எதிலும் ஈடுபடாத நாகு துப்புக்கூலி மட்டும் ஒரு முறை பெற்ற நாகு கைரேகை தடைச்சட்டத்தின் போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான் இது நம்மைத் திடுக்கிட்ட செய்கிறது. மொத்த வேம்பலையும் கூடப் பெரிய களவில் ஈடுபடவில்லை என்று தோன்றுகின்து.

நாகுவின் மரணத்திற்குப் பிறகு கிராம மக்கள் சாயச் செய்தார்களா என்று தெரியவில்லை. இப்படி நாவல் முழுவதும் பல மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது மரணங்கள் ஊடே காலம் நீண்டு நெளிந்து சென்று கொண்டு இருக்கிறது. நாகுவின் ஐய்யா நாவலில் முக்கியக் கதாபாத்திரம் பெரிதாக எந்தச் சண்டையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறார் பல ஆண்டுகள் கழித்து வருகிறார். திரும்பவும் பரதேசியாகப் போகிறார் ஒரு கோவிலில் நாகு அவரைக் கண்டுபிடித்து வேம்பலைக்குக் கூட்டிவருகிறான். இயலாமையும், இருப்புகொள்ளாமையும், வறுமையும் அவரை அலைக்கழிக்கிறது. பெரிதாகப் பேசப்படவில்லை என்றாலும் ஊகங்கள் வழியாக அவர் வளர்ந்து இருப்பது நம்மையும் அறியாமல் அவர் இறப்பின் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாகப் பக்கீரின் கொலையில் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றிப் பேசப்படவில்லை என்பது.

மரணத்தோடு தன் காய்களை நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கி மூலமாகத்தான் ஒரு இடத்தில் களவு வருகிறது. குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளைச் சிங்கி களவாடுவது இல்லை என்று சொல்லப்படுகிறது இதைத்தவிரக் களவை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் களவு பற்றி எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை.

அதேபோல் நாவலில் வட்டார வழக்கு மொழிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை அனைத்தும் எழுத்தாளரின் சிறந்த தனித்தன்மையுடைய மொழியின் வாயிலாகவே வெளிப்படுகிறது எந்தக் கதாபாத்திரமும் அதிகமாக உரையாடுவதே இல்லை. இது நாவளின் தனிச் சிறப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. ரத்தினா மல்லிகாவை பார்க்க வரும் இடத்தில் எந்த ஒரு உரையாடலோ ஆசிரியரின் வழியாகவோ கூடப் பேசப்படவில்லை வேம்பின் பெரும் கசப்பு மௌனத்தின் ஊடாக உறைந்து நிற்கிறது. நாவலின் நெகிழ்வான இடம் நீலாவின் சமாதியில் இருக்கு மண் புழுவை கொண்டு வந்து “வீட்டடியிலே இருந்துகோ தாயி…” என்று நாகுவின் ஐய்யா சொல்லும் இடம் இலக்கியத்தின் உச்ச தருணம்.

கோடைக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம், பனிக் காலம் என்று நாவல் நான்கு பகுதிகளாக எழுதி இருந்தாலும் அனைத்திலும் உறைவது பெரும் வெய்யில் தான், நாவல் முழுக்க வெயில் வருகிறது, அதே போல் வேம்பின் தீரா கசப்பு, கசப்பு நிறைந்த அந்த மக்களின் வாழ்வை அசைபோட்ட படி குறியீட்டுச் சித்திரமாக மனதில் பதிகிறது.

நாவலின் இரண்டாம் பகுதி நேரடியாக நவீன வாழ்க்கையைச் சித்தரிக்கிறது பேருந்து, ஹோட்டல், லாட்ஜ், சாலை, கார் என்று நவீன உலகத் தொடர்போடு விரிகிறது. வேம்பலையின் இரண்டாம் தலைமுறை திருமால், வசந்தா. காதல் கம்யூனிஸம் பற்றிப் பேசப்படுகிறது ஆனால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை வேம்பர்களின் அதே கசப்பு மிகுந்த வாழ்வே எஞ்சுகிறது. லாட்ஜ் லாட்ஜக தனிமையில் சுற்றி திரியும் ரத்தனா தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணம் மீண்டும் அதே கசப்பேறிய வாழ்வின் வெறுப்பு வெளிப்படுகிறது. ஆனால் அவள் விரும்பிப் பெற்றுக் கொண்ட திருமாலின் மீது ஏன் வெறுப்பாகவே இருந்தாள் என்பது புரியவில்லை. ரத்தினா தத்தனேரி சுடுகாட்டிற்குக் கொண்டு செல்லப்படுகிறாள் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர் மதுரையைச் சேர்ந்த ஜி நாகராஜன் தத்தனேரி சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்பட்டார், ஆகக் கதை களம் மதுரையை ஒட்டிய பகுதி என்பது உறுதியாகிறது.

வெறுமை நிறைந்த வாழ்வு, வறுமையும், துக்கமும் அன்பும், மரணமும் நிறைந்து நிற்கும் வேம்பலை அதன் முதாதையர்களின் மூச்சு காற்றும் மனிதர்களை வசியப்படுத்தித் தன்னுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியே மீண்டும் ஒரு நாகு வேம்பலை நேக்கி போகிறான் அங்கிருந்து அடுத்தத் தலைமுறையின் கதை தொடங்குகிறது. அரையப்பட்ட ஆணிகளும், காயங்களும் தன்னுள் புதைத்துக் கொண்டு மீண்டும் பூத்து காய்க்கும் அந்த வேம்பை போல அவர்கள் வாழ்வும் கசபின்றிச் செழிக்கலாம். “நெடுங்குருதி” வாழ்வின் எதார்த்த கலை இலக்கியத்தின் உச்சம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 05:18

August 17, 2021

கசடதபற

நவீன தமிழ் இலக்கியத்தின் புதுக்குரலாக ஒலித்த சிறுபத்திரிக்கை கசடதபற. 1970ல் துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளிவந்த இந்த இதழின் வடிவமைப்பும், செறிவான படைப்புகளும் தனிச்சிறப்பு கொண்டவை.

க்ரியா ராமகிருஷ்ணன். சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், நா.முத்துசாமி மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து இதனை நடத்தினார்கள். இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் நா. கிருஷ்ணமூர்த்தி.

கசடதபற இதழில் எழுதத் துவங்கிய ஞானக்கூத்தன், நகுலன், பசுவய்யா வைத்தீஸ்வரன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன், கல்யாண்ஜி, கலாப்ரியா, கங்கைகொண்டான் , சுஜாதா , இந்திரா பார்த்தசாரதி, நீல பத்மநாபன், பாலகுமாரன், அம்பை, சார்வாகன் பின்னாளில் புகழ்பெற்ற படைப்பாளியானார்கள்.

வணிக இதழ்களின் வழியே உருவான ரசனையை எதிர்த்து கலகக்குரலாக ஒலித்தது கசடதபற.. கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள்.

கவிஞர் தேவதச்சன் ‘கசடதபற’ வழியாகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்

கசடதபற, இதழ்களை எழுத்தாளர் விமாலதித்த மாமல்லன் மின்னூலாக மாற்றி அமேஸான் தளத்தில் இலவசமாக அளித்து வருகிறார்.

இது போல முன்னதாகக் கவனம் ,ழ போன்ற சிற்றிதழ்களை அவர் இணையத்தில் பதிவேற்றிப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த அரிய இதழ்களை ஆவணப்படுத்திக் காப்பாற்ற இதுவே சிறந்தவழி.

பழைய கசடதபற இதழ்களைத் தேடி எடுத்து ஒவ்வொரு இதழாக வேர்ட் பைலாக மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வேலை எளிதானதில்லை. நேரமும் உழைப்பும் பொறுமையும் அதிகம் தேவை. மாமல்லன் தனக்குப் பிடித்தமான வேலைகளை அயராமல் செய்யக்கூடியவர். எவரிடமும் எந்தக் கைமாறும் எதிர்பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன், தீவிர அக்கறையுடன் பணியாற்றுபவர். அவர் செய்யும் இந்த மின்னூலாக்கப் பணிக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய இதழ் கசடதபற.

இந்தத் தலைமுறை வாசகர்கள். படைப்பாளிகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன்..

விருப்பமுள்ள அனைவரும் அமேஸான் தளத்திலிருந்து கசடதபற இதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வாரம் ஒரு நாள் மட்டுமே இலவசமாக அளிக்கப்படுகிறது.. தனி இதழ் விலை ரூ49.

1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on August 17, 2021 04:28

August 16, 2021

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி- 3

அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்.

உங்கள் சிறுகதைகளில் ஆரம்பக் காலம் தொட்டு இன்று வரை வடிவம் சார்ந்த பல நுட்பமான உத்திகள் இயல்பாகவே சாத்தியப்பட்டுள்ளன. ஆனால் உள்ளடக்கம் சார்ந்து பார்த்தோமென்றால் மனித மன ஏக்கங்கள், புறச்சூழல் அழுத்தங்கள், அதன் காரணமான அகவுணர்வு மாற்றங்கள் ஆகியவையே அடிநாதமாகின்றன. ஏன்?

இவைதான் என்னை உருவாக்கிய விஷயங்கள். என் ஆளுமைதானே என் எழுத்திலும் வெளிப்படும். இது என் ஒருவன் சம்பந்தபட்ட விஷயமில்லை. எழுத்தாளர்களின் பால்யகாலமும் அவர்கள் உருவான விதமும் அவர்கள் எழுத்தைப் பாதிக்கக் கூடியது. ஆனால் என் சுயவாழ்க்கையின் பாதிப்புகளை மட்டும் நான் எழுதவில்லையே. ‘நூறு கழிப்பறைகள்’ சிறுகதை நான் எழுதியதுதானே. அது சித்தரிக்கும் கழிப்பறையைப் பராமரிக்கும் உலகம் நீங்கள் சொல்வதோடு பொருந்தவில்லையே. தாவரங்களின் உரையாடலில் உள்ள விசித்திர அனுபவம் என் சொந்த வாழ்க்கையில்லையே. ‘தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்’ துவங்கி ‘சிவப்பு மச்சம்’ வரை வெளியான கதைகளில் எதுவும் என் சொந்த வாழ்க்கையை விவரிக்கவில்லையே. பொதுமைப்படுத்தி ஒன்றை மதிப்பீடு செய்வது தவறானது.

‘இடக்கை’ நாவலை வாசித்துப் பாருங்கள். அது அதிகாரத்திற்கு எதிரான குரலை ஒலிக்கிறது. நெடுங்குருதியும் அதிகாரத்திற்கு எதிரானதுதான். ஆனால் இரண்டு நாவல்களுக்குள் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்பதை வாசகரால் உணர முடியும். ‘யாமம்’ காட்டும் சென்னை இருநூறு வருஷங்களுக்கு முந்தைய உலகமில்லையா. அதை எப்படிச் சொந்த அனுபவத்தில் எழுத முடியும். நான் கற்பனையும் நிஜமான அனுபவங்களையும் ஒன்று சேர்ந்து எழுதுகிறவன். அதில் எது கற்பனை எது நிஜம் எனப் பிரிக்க முடியாது. வாசனையும் மலரையும் தனித்துப் பிரிக்க முடியுமா என்ன.

ஜப்பானிய ஆவணப்படம் ஒன்றில் சாமுராய் வாள் தயாரிப்பது பற்றிப் பார்த்தேன். தண்ணீரும் நெருப்பும்தான் வாள் தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. குளிர்ந்த தண்ணீர்தான் வாளின் கடினத்தை உருவாக்குகிறது என்று அந்தப்படத்தில் குறிப்பிடுகிறார்கள். தண்ணீர் வாளின் கடினத்தன்மையை உருவாக்குகிறது என்பது வியப்பாக இல்லையா. எழுத்தும் அப்படியானது தான்.

நீங்கள் அறிந்த அளவில் மிகுபுனைவு இலக்கிய வடிவத்தின் தன்மைகளாக எதனைச் சொல்வீர்கள்? மிகை கற்பனைகளை வரையறுக்க இயலாது எனினும் ஒன்றை மிகுபுனைவு அல்ல என்று எவ்வித எல்லைகளைக் அல்லது அளவுக்கோல்களைக் கொண்டு நிராகரிக்க முடியும்?

புனைவில் எது அளவு, எது மிக அதிகம் என்று யார் வரையறுக்க முடியும். புனைவே மாயமானதுதானே. கருப்பசாமி என்று கதாபாத்திரத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாகக் கே என்று வைத்துவிட்டால் கதாபாத்திரம் மாறிவிடுகிறது. காபி குடித்து முடித்துக் கோப்பையைக் கீழே வைத்தவுடன் அதே அளவு காபி கோப்பையில் இருந்தது என்று எழுதினால் அது மிகை என்கிறோம். ஆலீஸின் அற்புத உலகில் ஆலீஸ் சொல்கிறாள், காலியான கோப்பையில் இருந்து வெறுமையைக் குடிப்பதாக, வெறுமையில் மேலும் வெறுமையை எப்படி ஊற்றி நிரப்புவது என்று கேட்கிறாள்.

ஒரு கவிதையில் பாதி நிசப்தம் என்ற சொல்லைப் படித்தேன். பாதி நிசப்தம் என்பதை எப்படி வரையறை செய்வீர்கள். இது போலவே தேவதச்சன் தன் கவிதை ஒன்றில் கண்ணீர்த் துளியில் குடிக்கும் ராட்சசன் என்று ஒருவரை பற்றி எழுதுகிறார். அது நிஜமா, மிகை புனைவா. அவரது கவிதையிலே மத் தியானம் என மத்தியானத்தை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிறார். இந்த உடைவின் வழியே ஒரு தியானநிலை போல மதியம் உருமாறிவிடுகிறதே. யதார்த்தத்தை எப்படி இன்னதுதான் என்று வரையறை செய்ய முடியாதோ அப்படித்தான் மிகையினையும் வரையறை செய்யமுடியாது.

அறிவியல் புனைவு வாசிப்பதில் ஆர்வமில்லை என்று சொன்னீர்கள்… காரணம்?

ரே பிராட்பரி, ஆர்தர் கிளார்க், ஐசக் ஐசிமோவ் போன்றவர்களின் அறிவியல் புனைகதைகளை வாசித்திருக்கிறேன். கடந்தகாலம்தான் எனக்கு விருப்பமான உலகம்.. பெரும்பான்மை அறிவியல் கதைகள் எதிர்காலத்தைப் பற்றியது. வேறு கிரகங்கள், விண்வெளியில் உருவாகும் மாற்றங்கள், அதி நவீன தொழில்நுட்பச் சாத்தியங்களை விவரிக்கிறது. என் பிரச்சனையே பக்கத்து வீட்டு மனிதன் தனிக் கிரகம் போல வசிக்கிறான் என்பதுதான். குட்டி இளவரசனை எப்படி வகைப்படுத்துவீர்கள். அது அறிவியல் புனைகதையா? குட்டி இளவரசன் ஒரு கிரகத்தில் வசிக்கும் தெருவிளக்கு ஏற்றுகிறவனைப் பற்றிச் சொல்லுகிறான். மறக்கமுடியாத காட்சியது. அதுதான் நான் விரும்பும் எழுத்து.

சொந்த வாழ்க்கையிலே எதிர்காலம் பற்றி எனக்குப் பெரிய கனவுகள் கிடையாது. ஆகவே அறிவியல் புனைகதைகளை அவ்வளவு விரும்பி வாசிப்பதில்லை. ஆனால் ரே பிராட்ரியின் ஃபாரன்ஹீட் 451, குட்டி இளவரசன் போன்றவை எனக்கு விருப்பமான நாவல்கள். அது போன்ற புனைவு நாவலை வாசிக்க நிச்சயம் விரும்புவேன்.

“இந்த ஒரு விஷயத்தில் கோணங்கி போல நம்மால் இருக்க இயலவில்லையே!” என எஸ்.ரா ஆதங்கப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்லுங்களேன்.

கோணங்கி எவரையும் சந்தித்த மறுநிமிஷம் தம்பி, மாமா, மாப்ளே என்று உறவு சொல்லி அழைத்து நெருக்கமாகிவிடுவார். எவர் வீட்டுச் சமையல் அறைக்குள்ளும் எளிதாகச் சென்று வரக்கூடியவர். என்னால் அப்படி ஒருவரோடு பழக முடியாது. உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. பாதிப் பயணத்தில் எவரையும் கழட்டிவிட்டுத் தன் போக்கில் கோணங்கி போய்விடுவார். அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதைக் கோணங்கியிடம் கற்றிருக்கிறேன். கோணங்கி போல ஏன் நான் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பேன். பயணத்திலும் என் பாதைகள் வேறு. படிப்பதிலும் எனக்கு விருப்பமான எழுத்தாளர் வேறு. நாங்கள் இணைந்து பதினைந்து ஆண்டுகள் சுற்றியிருக்கிறோம். நிறைய எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறோம். அந்த நினைவுகள் மறக்கமுடியாதவை.

‘நெடுங்குருதி’ உங்கள் மண்ணின் கதை. வேம்பலை கிராமத்தின் யதார்த்த வாழ்வின் நுண்சித்திரங்களும் மாய யதார்த்தக் கூறுகளும் முயங்கிய மாறுபட்ட தரிசனத்தை அளிக்கும் இந்த நாவல் மறக்க முடியாதது. குறிப்பாக ஆவியுடன் ஆடுபுலியாட்டம் ஆடும் சிங்கி, திகம்பரத் துறவிகளின் வருகை போன்றவற்றைச் சொல்லலாம். சமணத் துறவிகளின் வருகை இன்றுள்ள கிராமங்களிலெல்லாம் காணக்கிடைக்காத காட்சி. ‘நெடுங்குருதி’ நாவலின் மூலமாக, யதார்த்தத்தில் தொலைந்து போன இத்தகைய கிராமத்தை நினைவிலிருந்து மீண்டும் புதுப்பித்துப் புத்துயிர் அளித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா? முற்றிலுமாகச் சுபாவம் திரிந்து போன இன்றைய கிராமங்கள் தங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

இன்றைய கிராமமும் என் பால்யத்தில் கண்ட கிராமமும் வேறுவிதமானது. தெருவிளக்குகள் கூட அதிகம் இல்லாத காலமது. இருட்டு என்றால் அவ்வளவு இருட்டு. அந்த இருட்டிற்கு ஒரு வாசனையிருந்தது. வீதியிலே படுத்து உறங்கியிருக்கிறேன். அந்த வயதின் பகலும் இரவும் நீண்டது. இன்று என் சொந்த கிராமத்திற்குப் போகையில் தெரிந்த முகங்கள் மிகக் குறைவாக இருக்கிறார்கள். இரவு பதினோறு மணி வரை கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் இல்லாத ஆளேயில்லை. ஆடுமேய்க்கும் பையன் கூடச் செல்போனில் வீடியோ கேம் ஆடியபடியே ஆடுகளை மேய்க்கிறான். விவசாய வேலைகள் பெருமளவு கைவிடப்பட்டுவிட்டன. உழவுமாடுகளைக் காணமுடியவில்லை. கலப்பைகள் கண்ணை விட்டு மறைந்துவிட்டன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஏன் கிராமங்கள் இத்தனை அவசரமாகத் தன் தனித்துவத்தை இழந்துவிட்டன. கிராமத்தின் அன்றைய முக்கியப் பிரச்சனை சாதி. அது ஒரு காலத்தில் அடங்கியிருந்த்து. இன்று மீண்டும் தலைதூக்கிவிட்டது.

எஙகள் ஊர் முழுவதும் வேப்பமரங்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு மரம் பூக்காது. காய்க்காது. காரணம் அதற்கு ஒரு கதையிருந்தது. அது மாயமான கதை. அந்த மரத்தை நட்டுவைத்த பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டாள். அதனால் மரம் காய்ப்பதில்லை என்றார்கள். இந்த மாயமும் நிஜமும்தான் நெடுங்குருதியில் வெளிப்படுகிறது.

உங்கள் படைப்புகளின் உள்ளடக்கம் தாண்டி வாசகர்களைப் பெருமளவு ஈர்ப்பது உங்கள் படைப்புகளுக்கு நீங்கள் இடும் தலைப்புகள். கட்டுரை, கதை, நாவல் எதுவாக இருந்தாலும் அவற்றின் கவித்துவமான தலைப்புகள் ஈர்க்கின்றன. துணையெழுத்து, நெடுங்குருதி, உறுபசி, யாமம் போன்ற தலைப்புகள் உடனடியாக நினைவில் எழுகின்றன. வசீகரமான தலைப்புகளைப் பிரக்ஞைபூர்வமாகத் தேடிச் சூட்டுகிறீர்களா அல்லது இயல்பாகவே அவை அமைந்துவிடுகின்றனவா?

ஒரு சிறுகதைக்குத் தலைப்பு வைப்பதற்காக மாதக்கணக்கில் காத்துக் கிடந்திருக்கிறேன். நாவலோ, கதையோ கட்டுரையோ எதுவாக இருந்தாலும் தலைப்பு மிக முக்கியமானது. கவித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அபூர்வமாகச் சில தலைப்புகள் உடனே தோன்றியிருக்கின்றன. நாவல்களைப் பொறுத்தவரை எழுதி முடிக்கும் வரை அதற்குத் தலைப்பு வைக்கமாட்டேன். அச்சிற்குப் போகும் முன்புதான் அதற்குத் தலைப்பு வைப்பேன்.

உண்மை. பாடப்புத்தகங்களில் நாம் கற்ற வரலாறு வேறுவிதமானது. நான் பண்பாட்டு வரலாற்றில் அதிகக் கவனம் செலுத்துகிறவன். அங்கே வரலாறு பண்பாட்டு நினைவுகளாக உருமாறியிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகள் இன்றும் வேறுவடிவில் நடைபெறுகின்றன. நான் வரலாற்றை ஒரு நீருற்று போல உணருகிறேன். தனக்குள்ளே பொங்கி வழிவதும் உயர்ந்து எழுதுவதாக இருக்கிறது.

‘சென்னையும் நானும்’ காணொளித் தொடர் சிறப்பாக அமைந்திருக்கிறது. உங்கள் துணையெழுத்துக் கட்டுரையில் சென்னையைப் பற்றி எழுதும்போது, “ஒரு கல்வெட்டைப் போன்றது ரயில் நிலையப் படிக்கட்டுகள். அதில் பதிந்துள்ள பாத வரிகளைப் படிப்பதற்கு இன்றும் வழியில்லை … நகரம் ஒரு சூதாட்டப் பலகையைப் போலச் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் எதையோ இதன் முன் பணயமாக வைத்து ஆடத் துவங்குகிறார்கள். சுழலும் வேகத்தில் கைப்பொருட்கள் யாவும் காணாமல் போய்விடுகின்றன,” என்ற வரிகள் இடம்பெறுகின்றன. இன்றைய சென்னை எப்படியிருக்கிறது? இத்தனை வருடச் சென்னை வாழ்வில் மேலே இடம்பெற்ற துணையெழுத்து கட்டுரை வரிகள் அப்படியேதான் உள்ளனவா?

சென்னை எனக்குப் பிடித்தமான நகரம். இந்த நகரம்தான் என்னை எழுத்தாளனாக்கியது. என் அடையாளத்தை உருவாக்கியது. சென்னையில் அறையில்லாமல் பத்து ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்திருக்கிறேன். சென்னையின் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றி அலைந்திருக்கிறேன். இந்த நகரை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் சென்னைவாசி என்று பெருமையாகச் சொல்வேன். அந்த நேசத்தின் அடையாளம் தான் ‘சென்னையும் நானும்’ காணொளித் தொடர்.

சென்னை நகரில் கனவுகளுடன் வசிப்பவர்கள் அதிகம். அந்தக் கனவுகளை நிறைவேற்றும் நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். தோற்றுப்போனாலும் இந்த நகரை நீங்கிப் போக மாட்டார்கள். புதிதாக யார் சென்னைக்கு வந்தாலும் நகரம் அவர்களைத் துரத்தவே செய்யும். ஆனால் விடாப்பிடியாக, உறுதியாக இந்த நகரின் மீது நம்பிக்கை கொண்டு இருந்துவிட்டால் அவருக்கான இடத்தை நகரம் உருவாக்கித் தரவே செய்யும். எத்தனையோ நல்ல நண்பர்களை இந்த நகரம் தந்திருக்கிறது. ஒரு தோழனைப் போலவே சென்னையைக் கருதுகிறேன்.

முக்கியமான உலக இலக்கியப் படைப்புகள் பெருமளவு தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், இன்றைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் தங்களுக்கு நிறைவளிக்கின்றனவா? இன்னும் தமிழில் மொழிபெயர்ப்புத் தேவைப்படும் உலக இலக்கியப் படைப்புகள் ஏதேனும் இருக்கிறதா?

மொழிபெயர்ப்புகள் நிறைய வெளியாவது ஆரோக்கியமானதே. ஆனால் வெறும் வணிகக் காரணங்களுக்காக மொழிபெயர்ப்புகள் இயந்திர ரீதியில் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மொழிபெயர்ப்பு நாவலைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அதில் மூல எழுத்தாளரின் பெயர் .இல்லை. போராடிக் கண்டுபிடித்து ஆங்கில மூலத்தை வாசித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. நாவலின் கடைசிப் பத்துப் பக்கங்கள் மொழிபெயர்க்கப்படவேயில்லை. அந்த மொழிபெயர்ப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தனக்குக் கிடைத்த ஜெராக்ஸ் பிரதியில் அவ்வளவுதான் இருந்தது என்றார். ஒருவரும் அந்தத் தவற்றைக் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு சிறிய உதாரணம்.

இதற்கு மாறாக ஆண்டுக்கணக்கில் செலவிட்டு மொழிபெயர்ப்புச் செய்து மூலத்தோடு ஒப்பிட்டுத் திருத்தி வெளியிடுவதும் நடக்கவே செய்கிறது. க்ரியா பதிப்பகத்தின் மொழிபெயர்ப்புகள் அதற்கு ஒரு உதாரணம்.

மொழிபெயர்ப்பாளர்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. அங்கீகாரமும் கிடையாது. ஆகவே பலரும் அதை இலக்கியச் சேவை என்றே செய்கிறார்கள். இன்னொரு பக்கம் மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்திற்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று படிக்கவே முடியாதபடி கொடுந்தமிழில் மொழியாக்கம் செய்தும் வெளியிடுகிறார்கள்.

க.நா.சுவின் மொழியாக்கங்கள் வரிக்கு வரி துல்லியமானதில்லை. ஆனால் கதையின் ஆன்மாவை மிக அழகாகக் கொண்டு வந்துவிடுகிறார். ரஷ்யாவிலிருந்து மொழியாக்கம் செய்த பூ.சோமசுந்தரம், கிருஷ்ணையா, நா, தர்மராஜன், முகமது ஷெரிப் போன்றவர்களை மிகவும் பாராட்டுவேன். இது போலவே வெ.ஸ்ரீராம், சிவக்குமார், எத்திராஜ் அகிலன், சா.தேவதாஸ், ஜி.குப்புசாமி, புவியரசு, யுவன் சந்திரசேகர், கணேஷ்ராம், செங்கதிர், சி.மோகன், ராஜகோபால், நம்பி, ரவிக்குமார், கல்பனா, நல்லதம்பி, எம்.கோபாலகிருஷ்ணன், ஜெயஸ்ரீ போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளை விரும்பிப் படிக்கிறேன். இவர்கள் பணி மிகவும் பாராட்டிற்குரியது.

சமகால இலக்கிய உலகில் அதிகம் சர்ச்சைகளுக்கு உள்ளாகாத எழுத்தாளர் என உங்களை அழைக்கலாமா?

பெரும்பாலும் மருத்துவர்கள் சிறிய உலகில் வாழுகிறவர்கள். அவர்களுக்கு நோயிலிருந்து ஒருவரைக் குணப்படுத்தி நலமடையச் செய்வதுதான் முக்கியமானது. எழுத்தாளர்களில் நான் அந்த வகையைச் சேர்ந்தவன். எழுத்து மட்டுமே எனது வேலை. அதை மருத்துவம் போலவே நினைக்கிறேன். எழுத்துத் தாண்டிய சர்சைகள், சண்டைகளில் எனக்கு ஒரு போதும் ஈடுபாடு கிடையாது. எழுத்தாளனாக நான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் பொறுப்புணர்வைக் கற்பித்திருக்கிறார்கள். எழுத்தாளனாக என் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென இன்றும் வழிகாட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நாள் என்பது கிடைத்தற்கரிய பரிசு. அதை ஒரு போதும் வீணடிக்ககூடாது என்ற எண்ணம் கொண்டவன். அதை ஏன் சர்ச்சைகள் வீண்விவாதங்களில் வீணடிக்க வேண்டும் என்று நினைப்பேன்.

“பயணம்தான் என்னை எழுத வைத்தது,” என்று சொல்பவர் நீங்கள். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் உங்கள் பயணத் திட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் என நினைக்கிறோம். ஊரடங்கு காலத்திற்குப் பின் உங்கள் பயண எல்லைகள் சுருங்கிவிடுமா?

சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு ஒரு பயணம், லண்டனுக்கு ஒரு பயணம் என்று திட்டமிட்டிருந்தேன். 2019இலேயே இதற்காகப் பணிகள் நடைபெறத் துவங்கியிருந்தன. ஏப்ரல் மற்றும் ஆகஸ்டில் செல்வதாக இருந்தேன். ஆனால் கொரோனா காரணமாக யாவும் தடைபட்டுவிட்டது. இனி ஓராண்டிற்கு வெளிநாட்டுப் பயணங்கள் சாத்தியப்படாது. வட மாநிலங்களில் இன்னும் தொற்று அதிகமிருப்பதால் அங்கேயும் செல்ல இயலாது. சூழ்நிலை சரியானதும் மீண்டும் பயணிப்பேன்.

புதிய எழுத்தாளர்களின் சவால்கள் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. சில கதைகள் திட்டமிடாமலே எழுதுபவனின் கைகளைப் பிடித்து முடிவை நோக்கி அழைத்துச் செல்கின்றன, சில கதைகள் எப்படி முட்டிப் பார்த்தாலும் நகர மறுக்கின்றன. பாதி எழுதிக் கிடப்பில் போடும் கதைகளும் நிறைய இருக்கின்றன. இவை யாவும் எழுத்துச் செயல்பாட்டில் இருக்கும் சவால்கள் என்றால், சில சமயம் எழுதுவதே சவாலாக இருக்கிறது. சோர்வு, பதட்டம், எழுதத்தான் வேண்டுமா என்ற எண்னம், writer’s block போன்றவற்றையெல்லாம் எதிர்கொள்ள உதவும் வகையில் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் எழுத்தனுபவத்திலிருந்து சில குறிப்புகள் அளிக்க இயலுமா?

நான் எழுத ஆரம்பித்த காலத்தில் ஒரு சிறுகதை பத்திரிக்கையில் வெளியாகக் குறைந்தபட்சம் ஆறுமாதம் அல்லது ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும். கதை வெளியான போதும் ஓர் எதிர்வினையும் இருக்காது. படித்தேன் என்றுகூட எவரும் சொல்லமாட்டார்கள். மூத்த எழுத்தாளர்களிடம் இருந்து பாராட்டுக் கிடைப்பது எளிதானதில்லை. காத்திருப்புதான் எழுத்தாளனின் முன்னுள்ள பெரிய சவால். அதை எதிர்கொண்டுதான் இன்று எனக்கான அடையாளத்தைப் பெற்றிருக்கிறேன்.

ஆனால் இன்று ஓர் இளம் எழுத்தாளன் தன் முதற்கதையை எழுதியவுடன் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிடுகிறான். அடுத்தநாளே படித்துவிட்டீர்களா எனப் பாராட்டினை எதிர்பார்க்கிறான். கதையும் உடனே ஏதாவது ஓர் இதழில், இணையத்தில் வெளியாகிவிடுகிறது. அடுத்த நாள் எனக்கு ஏன் சாகித்ய அகாதமி விருது தர மறுக்கிறார்கள். என் படைப்புகள் குறித்து எதுவும் பேசுவதில்லையே என்று ஆதங்கப்படுகிறான். சண்டை போடுகிறான். வேடிக்கையாக இருக்கிறது.

பேஸ்புக்கில் லைக் வாங்குவது போல எளிமையான விஷயமாக இலக்கியத்தை நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. ஒரு கதை எழுதிய உடனே என் வாசகர்கள் என்று ஒருவன் பேச ஆரம்பித்துவிடும் துணிச்சல் ஆபத்தானது.

மிகச்சிறந்த கதைகளை, கவிதைகளை எழுதிவிட்டு அங்கீகாரம் இல்லாமல் எத்தனையோ நல்ல படைப்பாளிகள் மௌனமாக இருக்கிறார்கள். ஆனால் இணையத்தின் வருகை எழுத்தாளர் என்ற சொல்லின் மரியாதையை மிகவும் மலினமாக்கிவிட்டது.

இன்று நிறையப் புதியவர்கள் எழுத வருவது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் தான் எழுதியது மட்டுமே சிறப்பானது, தன் முன்னோடிகள் ஒன்றுமில்லை என்று அதிகாரமாக நடந்துகொள்கிறவரை என்ன செய்வது.

சென்ற ஆண்டு யாவரும் பதிப்பகம் பத்து இளம்படைப்பாளிகளின் புத்தகத்தை வெளியிட்டது. பத்து பேரையும் படித்து அவர்களைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினேன். அதில் ஒருவரைக்கூட எனக்கு முன்பரிச்சயம் கிடையாது. ஆனால் அவர்கள் படைப்பின் வழியேதான் அறிந்துகொண்டேன். இப்படி நான் எழுத வந்த காலத்தில் நடக்கவில்லை. என் சிறுகதை ஒன்றுக்கு சுந்தர ராமசாமி வாசகர் கடிதம் ஒன்றை சுபமங்களாவிற்கு அனுப்பி வைத்தார். அந்த நாளில் அது பெரிய அங்கீகாரம். இன்று அப்படியில்லை. நல்ல எழுத்து தேடிப் படித்து உடனே அங்கீகரிக்கப்படுகிறது. தமிழில் இன்று விருது பெறாத எழுத்தாளரைக் காண்பதுதான் அபூர்வம். அவ்வளவு விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைப் படிக்க வேண்டும். ஓவியம், இசை, நுண்கலைகள் எனப் பரந்த ஆர்வத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எழுத்தைத் தீவிரமாக எடிட் செய்து மேம்படுத்த வேண்டும். கதையில் வரும் தகவல்களைத் துல்லியமாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இசைக் கலைஞர்கள் எவ்வளவு புகழ்பெற்றிருந்தாலும் தினமும் சாதகம் செய்வது வழக்கம். அது எழுத்தாளர்களுக்கும் தேவையானதுதான்.

அடுத்தவரின் பாராட்டிற்காக மட்டும் ஒரு போதும் எழுதாதீர்கள். அது போலவே எழுத ஆரம்பித்தவர்கள் எதற்காக எழுதுகிறேன், எதை எழுத விரும்புகிறேன் என்பதைத் தானே தேடி கண்டறிய வேண்டும். விரும்புவதை எல்லாம் எழுத்தில் கொண்டுவருவது எளிதில்லை.

தற்கொலை, விலைமாதர்கள், குற்றம் இந்த மூன்றைப் பற்றியே இளம் எழுத்தாளன் கதை எழுத ஆசைப்படுகிறான். இந்த மூன்றையும் எழுதுவது எளிதானதில்லை. ஆனால் இதன் கவர்ச்சி அவனை எழுதத் தூண்டுகிறது என்கிறார் ஆன்டன் செகாவ். இதைச் சொல்லி நூறு வருஷங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இந்த ஆர்வம் மாறிவிடவில்லை.

இன்றைக்கும் நான் புதிய கதை எழுதும் முன்பு கவிஞர் தேவதச்சனிடம் அது குறித்துப் பேசுகிறேன். அவர் எனது கதைகள் கட்டுரைகளை வாசித்துத் தீவிர எதிர்வினை செய்து வருகிறார். இப்படியான ஆசான் உங்களுக்குத் தேவை. மாஸ்டர் இல்லாமல் நீங்கள் உருவாக முடியாது. யார் உங்கள் ஆசான் என்பது உங்களின் தேர்வு. நேரடியாக இப்படி உங்களுக்கு வழிகாட்டும் எழுத்தாளரைப் போல, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளரையும் உங்கள் வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். நான் ரஷ்ய எழுத்தாளர்களை அப்படி என்னுடைய மானசீக ஆசிரியர்களாக நினைக்கிறேன்.

ஒவ்வோர் ஆட்டத்திலும் டெண்டுல்கர் சதம் அடித்துவிடுவதில்லையே. சில ஆட்டங்களில் அவரும் முதல்பந்தில் அவுட்டாகியிருக்கிறார். அப்படித்தான் எழுத்தும். உங்களிடம் சிறந்த ஒன்றை எதிர்பார்ப்பது வாசகர்களின் விருப்பம். எல்லா நேரமும் அதை உங்களால் நிறைவேற்ற முடியாது என்பதே நிஜம். உங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்.

வாசகர்கள் புத்திசாலிகள். நிறைய விஷயங்களை நுட்பமாக அறிந்தவர்கள். அவர்கள் உங்களை எளிதாக அங்கீகரித்துவிட மாட்டார்கள். ஆனால் உங்களை அங்கீகரித்துவிட்டால் எளிதாக மறக்கமாட்டார்கள்.

எழுதும் போது பாதியில் நின்றுவிடுவதும், எழுத்தை எப்படிக் கொண்டு செல்வது என்பதும் தீராத பிரச்சனைகள். இதற்குக் குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. வாசிப்புதான் இதற்கான வழிகாட்டி. சிறந்த கதைகளை, கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருந்தால் புதிய உத்வேகம் கிடைத்துவிடும்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நேர்காணலில் இந்த உலகத்தின் மீதுள்ள புகார்கள் வடிந்துவிட்டன, விரைவில் இல்லாமலே போய்விடக்கூடும் என்று சொன்னீர்கள். தற்போதைய நிலவரம் என்ன? இந்த மாற்றம்தான் முதிர்ச்சி அல்லது கனிவு என்று சொல்லப்படுகிறதா?

உலகின் மீதான புகார்கள் இருந்தபடியே தானிருக்கும். ஆனால் அதற்காகக் கோபம் கொண்டு மனதை வருத்திக் கொண்டிருக்க வேண்டாம் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். வயது நிறைய விஷயங்களைக் கற்றுத்தருகிறது. நிதானமாகச் செயல்படச் செய்கிறது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவி செய்கிறது. முழுநேர எழுத்தாளனாக வாழ்வதற்காக நான் பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் மிக அதிகம். அதைப் பற்றிப் பேசியும் புகார் சொல்லியும் என்ன ஆகப்போகிறது. இது என் ஒருவனின் பிரச்சனையில்லை. நமது பண்பாடு கலையை, எழுத்தை நம்பி மட்டும் ஒருவன் வாழ முடியாது என்ற நிலையில்தானே வைத்திருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கு ஐநூறு ரூபாய் செலவு செய்யும் ஒருவன் புத்தகம் ’பி.டி.எஃப்பாக’ இலவசமாகக் கிடைக்குமா என மின்னஞ்சலில் கேட்கிறான். திருட்டுத்தனமாகக் கள்ளப்பிரதிகளை உருவாக்கிப் பகிர்ந்து தருகிறான். எழுத்தாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு கதைக்கு ஐநூறு ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம். அதுவும் கதை வெளியாகி ஆறுமாதம் கழித்துக் கிடைக்கும், பலநேரம் அதையும் தரமாட்டார்கள். பின்பு எப்படி முழுநேர எழுத்தாளராக வாழ்வது. நாள்பட நாள்பட மரம் உறுதியாகிக்கொண்டே வரும். எழுத்தாளனும் அப்படித்தான்…

ஒருமுறை உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கியபோது புத்தகத்தின் முதல் பக்கத்தில் இந்த வாசகத்தை எழுதினீர்கள், “நமது கனவுகள் இந்த உலகை விடவும் பிரம்மாண்டமானவை, அதை நம்புவதும் நடைமுறைப்படுத்துவதும்தான் நமது வேலை.” மிகுந்த உத்வேகத்தை அளித்த வரிகள். உங்களது கனவுகளை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்களா? தற்போதுள்ள கனவுகள் பற்றி?

கனவு காண்பதும் அதைப் பின்தொடர்ந்து செல்வதும்தானே வாழ்க்கை. அப்படி ஒரு கனவுதான் டால்ஸ்டாயின் வாழ்க்கையின் சில நிகழ்வுகளை விவரித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று விரும்பியதும். அதை இந்த ஆண்டு எழுதி முடித்துவிட்டேன். ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற அந்த நாவல் 2022 ஜனவரியில் வெளியாக இருக்கிறது. இந்த நாவலை ரஷ்ய மொழியிலும் மொழியாக்கம் செய்ய வேலைகள் நடக்கின்றன. இது போலவே எனது ‘இடக்கை’ நாவலை செர்பிய மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். ‘யாமம்’ ஆங்கிலத்தில் வெளியாகிறது. எனது தேர்ந்தெடுக்கபட்ட சிறுகதைகள் ஆங்கிலத்தில் வெளியாகின்றன. இப்படி நான் நீண்ட காலமாக ஆசைப்பட்ட கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற ஆரம்பித்துள்ளன. ‘எனது இந்தியா’ போலக் காலனிய இந்தியா பற்றி விரிவான ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன். தமயாவும் காத்திருக்கிறாள். அது நீண்டநாள் கனவு.

****

நன்றி

அரூ இணைய இதழ் .அரூ ஆசிரியர் குழு

கணேஷ் பாபு கே.பாலமுருகன்

புகைப்படங்கள்

வசந்தகுமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2021 20:27

August 15, 2021

எஸ் ராமகிருஷ்ணன் நேர்காணல் பகுதி 2

(அரூ இணைய இதழில் வெளியான நேர்காணல்)

நீங்கள் ஒவ்வொரு நாளும் வாசிப்பு மற்றும் எழுத்துக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? நடுவே சினிமாவுக்கும் எழுதுகிறீர்கள். பயணம் செல்கிறீர்கள். உலகச் சினிமாக்களைப் பார்க்கிறீர்கள். பதிப்பக வேலைகள், இதர பத்திரிக்கைகளுக்கான சிறுகதைகள், உரைகளுக்கான தயாரிப்புகள் மற்றும் ‘சென்னையும் நானும்’ போன்ற காணொளித் தொடர்கள். எப்படி இதைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்?

மேற்கத்திய எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி வாசித்தபோது அவர்கள் எழுதுவதற்காக, படிப்பதற்காக, பயணம் செய்வதற்காகத் தனித்தனி நேரம் ஒதுக்கிச் செயல்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். இந்தப் பழக்கத்தை என் கல்லூரி நாட்களில் இருந்தே கடைபிடிக்கத் துவங்கினேன்.

நான் தற்செயலாக எழுத வரவில்லை. எழுத்தாளன் ஆவது என்று மட்டுமே முடிவு செய்து அதற்காக என்னைத் தயார் செய்துகொண்டவன். எழுத்தை மட்டுமே நம்பி சென்னையில் வாழுபவன். முழுநேர எழுத்தாளன். அதன் சிரமங்களைச் சொன்னால் புரியாது. பொருளாதாரச் சிரமங்கள் அதிகம். ஆகவே நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று மிகக் கவனமாகச் செயல்படுவேன். படிப்பு. எழுத்து, பயணம், சிறிய நண்பர்கள் வட்டம், இது தான் எனது உலகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெகு அரிதாகவே பார்ப்பேன். இணையத்தில் தான் செய்திகளை வாசிக்கிறேன்.

Daily Rituals: How Artists Work by Mason Currey என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் எழுதினார்கள். எப்படி ஒரு நாளை வகுத்துக்கொண்டார்கள் என்று சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்கள். எழுத்தைப் போலவே எழுத்தாளர்களின் வேலை முறையும் விசித்திரமானதே.

எழுதத்துவங்கிய நாட்களில் பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி காலை நாலு மணி வரை எழுதுவேன், பகலில் உறங்கிவிடுவேன். மதியம்தான் எழுவேன். பின்பு படிப்படியாக இரவில் எழுவதைக் குறைத்துக்கொண்டு காலை இரண்டு மணி நேரம், இரவு நான்கு மணி நேரம் என மாற்றிக்கொண்டேன்.

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய்த் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு ஓய்வு. அதில் வாசிப்பேன். இசை கேட்பேன். மனதில் சில நேரம் மேகமூட்டம் சூழ்ந்துவிடும். அது போன்ற தருணங்களில் உடனே பயணம் கிளம்பிவிடுவேன். நீண்ட தூர பயணங்களே எனது விருப்பம். இடிபாடுகளே என்னை வசீகரிக்கின்றன.

வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்னுடைய அறையில் மட்டும்தான் என்னால் எழுத இயலும். வேறு ஒரு புது இடத்தில் என்னால் ஒரு வரி எழுத இயலாது.

சிற்றிதழ்களும் வெகுஜன ஊடகங்களும் ஒன்றை ஒன்று தீண்டத் தகாதவையாகக் கருதும் சூழலைப் பற்றி உங்கள் கருத்து? இதில் மாற்றம் வேண்டுமா? என்ன செய்யலாம்?

உலகம் முழுவதும் இந்த இடைவெளி இருக்கிறது. அதை மாற்ற இயலாது. காரணம் இரண்டின் நோக்கங்களும் வேறுவேறு. ஆனால் இந்த இடைவெளி முன்பு இருந்ததை விடவும் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. எண்பதுகளில் அசோகமித்ரன், சா.கந்தசாமி, பிரபஞ்சன் கதைகள் குமுதம் விகடன் வார இதழ்களில் நிறைய வெளியாகியுள்ளன. அது மெல்ல வளர்ந்து இன்று தமிழில் எழுதும் முக்கிய எழுத்தாளர்கள் அனைவரும் வார இதழ்களில் கதையோ, கட்டுரையோ, கவிதையோ, அல்லது பத்திகளோ எழுதியிருக்கிறார்கள். சிறுபத்திரிக்கையாளர்கள்தான் அதிகமும் வார இதழ்களில் பணியாற்றுகிறார்கள். ஆகவே இந்த இடைவெளி முன்பைவிடக் குறைந்திருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு இதழ்களின் கவனமும் நோக்கமும் மாறிவிடவில்லை. அது முன்பைவிட இப்போது மிகவும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை மாற்றுவது எளிதானதில்லை.

சிறுபத்திரிக்கைகள் எப்போதும் போலத் தீவிரமாக மொழிபெயர்ப்புகள், கதை, கவிதைகள், நேர்காணல்கள் எனத் தனது தனித்துவத்துடன் இன்றும் வெளியானபடியே தான் இருக்கின்றன. இதன் மாற்றுவடிவம் போலவே இணைய இதழ்கள் வெளியாகின்றன. இணைய இதழ்களின் வருகையை நான் வரவேற்பேன். அது தரும் சுதந்திரம் மிகப்பெரியது

ஆனாலும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் வெற்று அபிப்ராயங்கள். வம்புகள். வெறுப்புகளைக் கொட்டுகிறார்கள். பொதுவெளியில் இவ்வளவு வசைகள், கேவலமான, அருவருப்பான பதிவுகளை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு காணமுடியாது. கோபமான விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் இது போன்ற தனிமனித தாக்குதல்கள். காழ்ப்புணர்ச்சிகள் வெளியானதில்லை.

காந்தியைப் பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காந்தியைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களே மலிந்திருக்கும் இன்றைய சூழலில், அவரைக் குறித்து நேர்மறையாகவும், இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தி குறித்த கதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். காந்தியை நீங்கள் எப்படி அறிமுகம் செய்துகொண்டீர்கள், உங்கள் வாழ்விலும் எழுத்திலும் காந்தியின் பாதிப்பு மற்றும் அவரை அறிந்துகொள்ள உதவும் சில முக்கியமான நூல்கள் இவற்றைப் பற்றி.

காந்தியின் மீது எப்போதுமே பெருமதிப்புக் கொண்டிருக்கிறேன். காந்தியின் பேச்சையும் எழுத்தையும் ஆழ்ந்து அறிந்திருக்கிறேன். காந்தியவாதிகள் பலருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். காந்தி குறித்துக் ‘காந்தியோடு பேசுவேன்’, ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ ஐந்து வருஷ மௌனம் என்று மூன்று சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். தற்போதும் ‘காந்தியின் நிழலில்’ என இணையத்தில் ஒரு கட்டுரைத் தொடர் எழுதி வருகிறேன். காந்தியைப் பின்தொடர்வது என்பது உண்மையைப் பின்தொடர்வதாகும். காந்தி மீதான எதிர்மறை விமர்சனங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் காந்தியைப் பற்றிப் பேசுவது எழுதுவது முக்கியமான செயல் என்று நினைக்கிறேன்.

காந்தி இன்று பொதுவெளியில் அற்பர்களால் அவமதிக்கபடுகிறார். காரணமில்லாமல் வெறுக்கப்படுகிறார். பொய்யான குற்றசாட்டுகள் அவர் மீது வைக்கப்படுகின்றன. காந்தி தன்னை ஒருபோதும் தேவதூதராகக் காட்டிக் கொள்ளவில்லை. அவரது பலவீனங்கள் யாவும் அவர் எழுதி உலகிற்குத் தெரிய வந்தவைதானே. அவர் தன்னுடைய தவறுகளை எப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். திருத்திக் கொண்டிருக்கிறார். இந்திய மக்களின் ஆன்மாவைப் புரிந்துகொண்ட மகத்தான ஆளுமையாகக் காந்தியைச் சொல்வேன்.

காந்தியின் தைரியம், பிடிவாதம், நம்பிக்கை மூன்றையும் முக்கியமானதாக நினைக்கிறேன். இந்த மூன்றும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனால் அவர் கடைசி வரை தன் செயல்முறைகளில் உறுதியாக இருந்தார். பிடிவாதமாகத் தான் செய்ய நினைத்த நற்காரியங்களைச் செய்தார். தைரியமாகத் தன் கருத்துகளை வெளியிட்டார். களத்தில் செயல்பட்டார்.

காந்தி இந்தியாவிற்குக் காட்டிய வழியும் முன்னெடுப்புகளும் மகத்தானது. அதை இன்று நாம் தவறவிட்டுவிட்டோம் என்பது வருந்தக்குரியதே.

தமிழ், இந்திய மொழிகள் மட்டுமன்றி உலக இலக்கியத்திலும் சமகாலப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர் நீங்கள். தற்கால உலக இலக்கியத்தில் எம்மாதிரியான பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன? அவற்றில் எவை தமிழிலும் நிகழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?

உலகம் முழுவதுமே கதை சொல்லுதலை நோக்கியே இலக்கியம் திரும்பியிருக்கிறது. சமகால நாவல்கள் விரிவாகக் கதை சொல்லுகின்றன. தலைமுறைகளின் வாழ்க்கையை இதிகாசம் போலச் சொல்லுகின்றன.. இன்னொரு பக்கம் வரலாற்றை மீள்புனைவு செய்வது, தொன்மங்களைப் புதிய நோக்கில் எழுதுவது, அதிகாரத்திற்கு எதிராகக் குரலை ஒலிப்பது, பெருநகர வாழ்வின் தனிமையை, நெருக்கடிகளை எழுதுவது எனச் சமகால இலக்கியம் தீவிரமாகச் செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளைப் பெற்ற புத்தகங்களைப் பாருங்கள். நினைவுகளைத்தான் பிரதானமாக எழுதுகிறார்கள். தனிநபர்களின் நினைவுகள் என்று சிறிய வட்டத்திற்குள் சுருங்கிவிடாமல் பண்பாடு, சமூகம், வரலாறு, இனப்பிரச்சனை எனப் பரந்த தளத்தில் நினைவுகளை எழுதுகிறார்கள். விசித்திரமும் யதார்த்தமும் ஒன்று கலந்த எழுத்துமுறையே உலகெங்கும் காணப்படுகிறது.

‘லிங்கன் இன் தி பார்டோ’ (Lincoln in the Bardo) என்ற அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸின் மான் புக்கர் பரிசு பெற்ற நாவல் வாழ்க்கைக்கும் மறுபிறப்புக்கும் இடையில் உள்ள இடைநிலையைப் பேசுகிறது. மாயமும் யதார்த்தமும் ஒன்று கலந்து நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழ் நிலத்தில் எழுதப்படாத விஷயங்கள் ஓராயிரம் உள்ளன. சங்க கால வாழ்வியலை முதன்மைப்படுத்தி நாவல் எழுதலாம், தமிழகத்திற்கு வந்த யவனர் கிரேக்க வாழ்க்கையைப் பற்றி எழுதலாம். தமிழகத்தில் இருந்த முக்கியமான இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், நாடக ஆசிரியர்கள் என எவரைப் பற்றியும் இலக்கியத்தில் விரிவாக எழுதப்படவில்லையே. மொசாம்பிக் எழுத்தாளரான Mia Couto நாவல்களைப் பாருங்கள். அளவில் சிறியது என்றாலும் எத்தனை புதியதாக இருக்கிறது. Javier Marías, Elena Ferrante, Carlos Ruiz Zafón, Alessandro Baricco, Annie Ernaux, Marilynne Robinson CeSar Aira நாவல்கள் புதிய கதைமொழியை, கதைக்களத்தைக் கொண்டிருக்கின்றன. அவை நமக்கு எதை எழுத வேண்டும் என்பதை அறிமுகம் செய்கின்றன. புதிய கதை சொல்லும் முறையை அடையாளம் காட்டுகின்றன.

உங்கள் பார்வையில் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து?

மிகச்சிறப்பாக எழுதக்கூடிய பெண்கள் நிறைய இருக்கிறார்கள். புக்கர் பரிசிற்காகப் பரிந்துரைப் பட்டியலைப் பாருங்கள். பெரும்பாலும் பெண் எழுத்தாளர்கள். அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளுக் (Louise Glück) தானே சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்றிருக்கிறார். இந்திய அளவில் நிறைய இளம் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள். காத்திரமான கதைகளை, கவிதைகளை எழுதுகிறார்கள். முதல் நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளரான சல்மா லாகெர்லாவ் எனக்கு விருப்பமான பெண் எழுத்தாளர். அவரைப் போலவே வில்லா கேதரை (Willa Cather) விரும்பி வாசித்திருக்கிறேன். மார்க்ரெட் யூரிசனாரின் (Marguerite Yourcenar) சிறுகதைகள் அற்புதமானவை. Isak Dinesen, Anna Akhmatova, Marina Tsvetaeva, Emily Dickinson, Virginia Woolf, Krishna Sobti, Mamoni Raisom Goswami, Qurratulain Hyder, இஸ்மத் சுக்தாய். அம்ரிதா ப்ரீதம், கமலாதாஸ், ஆண்டாள், வெள்ளிவீதியார், முத்துப்பழனி அம்பை, ஹெப்சிபா ஜேசுதான், கிருத்திகா, கே.ஆர். மீரா, சூடாமணி, தமிழ்செல்வி, சந்திரா, சசிகலாபாபு போன்ற படைப்பாளிகளை விரும்பிப் படித்திருக்கிறேன்.

குடும்பம் குறித்த ஆணின் சித்திரமும் பெண்ணின் சித்தரிப்பும் வேறுவேறானவை. கிருஷ்ண சோப்தி ஞானபீட விருது பெற்ற பெண் எழுத்தாளர். அவரது நாவல்கள் பெண்ணின் காமம் குறித்துத் தீவிரமாகப் பேசுபவை. இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai) மீது நீதிமன்ற வழக்கு தொடுத்தார்கள். இன்றும் பெண்கள் எதை எழுத வேண்டும், எதை எழுதக்கூடாது என்ற பண்பாட்டு நெருக்கடிகள் இருக்கிறது. அதை எதிர்த்துப் போராடித்தான் எழுதுகிறார்கள்.

எங்கள் வாசிப்பில் இன்றைய நவீன சிறுகதைகளில் பெண்களை மையமாக வைத்து அல்லது பெண்ணின் கோணத்தில் நிறையச் சிறுகதைகள் எழுதியவர் நீங்கள். ‘அவரவர் ஆகாயம்’, ‘கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது’, ‘விரும்பிக் கேட்டவள்’, ‘அவளது வீடு’, ‘ஆண்கள் தெருவில் ஒரு வீடு’, ‘ஆண் மழை’, ‘பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள்’, ‘சௌந்திரவல்லியின் மீசை’, ‘உனக்கு 34 வயதாகிறது’, ‘அம்மாவின் கடைசி நீச்சல்’, ‘காந்தியோடு பேசுவேன்’, ‘மழைப்பயணி’ போன்று நிறையக் கதைகளைச் சொல்லலாம். பெண்களின் உலகை இவ்வளவு நுட்பமாகவும் காத்திரமாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள். “பெண்களின் கதைகளைப் பெண்கள்தான் எழுதவேண்டும்,” என ஒரு கருத்து எழுத்துலகில் உலவுகிறது. இது குறித்து உங்கள் பார்வை?

அப்படி எந்தக் கட்டுபாடும் கிடையாது. பெண்கள் தங்களின் வலியை, உணர்ச்சிகளை எழுதும்போது இன்னும் துல்லியமாக, முழுமையாக எழுதக்கூடும். ஆனால் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, பிளாபெர்ட், துர்கனேவ் துவங்கி கூட்ஸி வரை அழுத்தமான பெண் கதாபாத்திரங்களை எழுதியவர்கள் நிறைய இருக்கிறார்களே. தமிழிலே புதுமைப்பித்தன், குபரா, ஜானகிராமன், ஜி.நாகராஜன், அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் கதைகளில் பெண்களின் அகம் மிகத் துல்லியமாக விவரிக்கபட்டிருக்கிறதே.

என் கதைகளில் வரும் பெண்கள் குடும்ப அமைப்பால் ஒடுக்கப்பட்டவர்கள். கடற்கன்னி வேஷமிடும் பெண்ணைப் பற்றிய ‘துயில்’ நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். எளிய கிராமத்துப் பெண்ணை ஒருவன் காட்சிப் பொருளாக்கி சம்பாதிக்கிறான். அவள் அந்தக் கடற்கன்னி உடையை அணிந்து கொண்டபிறகு மூத்திரம் பெய்யக்கூட எழுந்து போக முடியாது. அதைப் பற்றி அவனுக்குக் கவலையே கிடையாது. ஷோ முடிந்து இரவில் அவள்தான் சமைக்க வேண்டும். அவளது மகனுக்குத் தன் அம்மா உண்மையில் கடலில் பிடிப்பட்ட மீனா, அல்லது நிஜமான பெண்ணா என்ற குழப்பம் உருவாகிறது. அவளுக்கே அந்த மயக்கம் உருவாகிறது. அவளது நெருக்கடியான வாழ்க்கை துயரைத்தான் துயில் விவரிக்கிறது.

‘சௌந்தரவல்லியின் மீசை’ கதையில் வரும் மாணவிக்கு லேசாக அரும்பியுள்ள மீசை மயிர்கள் தொந்தரவாக உள்ளன. கேலி செய்யப்படுகிறாள். படிப்பே நின்று போய்விடும் நிலை ஏற்படுகிறது. என் கதையில் வரும் பெண்கள் தாங்களாக மீட்சியைக் கண்டறிகிறார்கள்.

குடும்ப அமைப்பு தரும் அழுத்தத்தில் உழலும் பெண் கதாப்பாத்திரங்களின் மனவலியை நுட்பமாகப் படைத்தவர் நீங்கள். எஸ்ராவின் பெண்கள் பெரும்பாலும் குடும்ப அமைப்பில் சிதைந்தவர்களாகவோ அல்லது தனக்கான வெளியைத் தனக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு ரகசியமாக அதனுள் சென்று அவ்வப்போது ஆசுவாசம் அடைபவர்களுமாகவே இருக்கிறார்களே. ஏன்?

அவ்வளவுதான் சாத்தியமாகியிருக்கிறது. புத்தகம் படிக்க மாட்டேன் என்று கணவருக்குச் சத்தியம் செய்து கொடுத்த ஒரு பெண் அவர் இறந்த பிறகும் அதே சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறார். அப்படி ஒரு பெண்ணை ஒரு முறை நான் சந்தித்தேன். யாராவது படித்துக் காட்டினால் கேட்டுக்கொள்கிறார். எது அவரை இன்றும் படிக்கவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது. என் பாட்டி எழுபத்தைந்து வயதில் தனி ஆளாகக் காசிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். மொழி தெரியாது. கையில் காசு கிடையாது. ஆனால் எப்படியோ காசிக்குப் போய்ப் பத்து நாள் தங்கிச் சாமி கும்பிட்டுத் திரும்பிவிட்டார். ஆனால் அவரால் உள்ளூர் பஜாருக்குத் தனியே போக முடியாது. யாராவது துணைக்கு ஆள் போக வேண்டும். அந்தத் துணிச்சல் ஏன் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படவில்லை. அழகாகப் பாடத் தெரிந்த, நடனம் ஆடத்தெரிந்த எத்தனை பேர் திருமணத்திற்குப் பிறகு அந்தக் கலையை அப்படியே கைவிட்டிருக்கிறார்கள். என்றாவது ஆசைக்காக ரகசியமாக ஒரு பாட்டுப் பாடிக்கொள்வது மட்டும் ஏன் நடக்கிறது.

என் கதையில் வரும் பெண்கள் தங்கள் நெருக்கடியில் இருந்து விடுபடத் தாங்களே ஒரு வழியைக் கண்டுபிடித்துக்கொள்கிறார்கள். ‘அம்மாவின் கடைசி நீச்சல்’ கதையில் வரும் அம்மா கோபம் கொண்டால் நீண்ட நேரம் நீந்துகிறார். அவ்வளவுதான் அவரால் முடியும். இன்னொரு கதையில் பீங்கான் குவளையை உடைத்துவிட்டாய் என்று மனைவியைக் கணவர் மிக மோசமாகத் திட்டுகிறார். அவள் வாழ்நாள் முழுவதும் அவரை நிமிர்ந்து பார்ப்பதேயில்லை. இறந்த அவரது உடலைக்கூடக் குனிந்தே பார்க்கிறாள். இதைப் புறக்காரணங்களைக் கொண்டு மட்டும் புரிந்துகொள்ள முடியாது.

இலக்கியத்தைச் சினிமாவாக எடுக்கும்போது அது ஒரு போதும் இலக்கியப் படைப்பை மிஞ்சிவிட முடியாது எனத் தலையை உலுக்கிச் சொல்பவர்கள் ஒரு புறம் என்றால் சத்யஜித் ரேயின் ‘சாருலதா’ பார்த்ததில்லையா என மேதாவி சிரிப்புச் சிரிப்பவர்கள் மறு புறம் (இரண்டுமே அரூ குழுவில்தான் …) உங்கள் கருத்து என்ன?

இலக்கியத்தைச் சினிமாவாக எடுக்கும்போது மௌனவாசிப்பில் ஒருவர் அடைந்த அனுபவத்தை ஒரு போதும் தர இயலாது. ஆனால் மிகச்சிறந்த இயக்குநர்கள் நாவலில் நாம் பெற்ற அனுபவத்திற்கு நிகரான அனுபவத்தைத் திரையில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ‘பதேர் பாஞ்சாலி’ நாவலில் ரயிலை அபு காணும் காட்சி ஒரு அனுபவம் மட்டுமே. ரேயின் பதேர்பாஞ்சாலியில் அந்தக் காட்சி பரவசமாகிறது. டேவிட் லீன் இயக்கிய டாக்டர் ஷிவாகோ (Doctor Zhivago) பாருங்கள். நாவலை விடவும் படம் சிறப்பாக உள்ளது. இது போலவேதான் ஹிட்ச்காக் இயக்கிய திரைப்படங்கள். அந்த நாவல்களை வாசித்தால் இத்தனை திகிலும் பரபரப்பும் இருக்காது. அதே நேரம் தாரஸ் புல்பா, இடியட், கரமசோவ் சகோதரர்கள் போன்ற நாவல்கள் திரைப்படமாக வெளியாகி தோல்வியே அடைந்தன.

எந்த இலக்கியப் படைப்பினையும் அப்படியே படமாக்க முடியாது. அதைத் திரைக்கு ஏற்ப மாற்றம் செய்யும்போது இழப்புகளைத் தவிர்க்க முடியாது. அட்டன்பரோவின் காந்தி படத்தில் காந்தியின் இளமைக்காலம் குறித்து ஒரு காட்சிகூடக் கிடையாது. நேரடியாகப் படம் காந்தி சுடப்படுவதில் துவங்கித் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் பயணம் செய்யும் பிளாஷ்பே காட்சியாகித் திரும்பிவிடுகிறது.

காந்தியின் சத்தியசோதனை படித்தால் அதில் இளமைப்பருவம் எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது. ஏன் அந்தக் காட்சிகளை அட்டன்பரோ தேவையில்லை என்று நீக்கினார். இந்தியராக இருந்தால் நிச்சயம் அந்தக் காட்சிகளைக் குறைந்த அளவில் வைத்திருப்பார். ஆகவே படத்தின் இயக்குநர் யார் என்பதே அந்த இலக்கியப் படைப்பினை அவர் எப்படி வெளிப்படுத்துவார் என்பதைத் தீர்மானிக்கிறது.

தேவதாஸ் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். பலமுறை பலமொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. பிமல்ராயின் தேவதாஸ் ஒருவிதம் என்றால் நாகேஸ்வர ராவ் நடித்த தேவதாஸ் மறுவிதம். எனக்கு தெலுங்கில் உருவாக்கபட்ட தேவதாஸ் மிகவும் பிடிக்கும். அதே நேரம் அந்த நாவலைப் படித்துப் பார்த்தால் அதன் அனுபவம் வேறுவிதமானது. படம் தான் நாவலை உலகம் அறியச் செய்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தரும் அனுபவம் ஒருவிதம் என்றால் அந்த நாடகங்களை சிறந்த இயக்குநர்கள் மகத்தான கலைப்படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார்கள். Kenneth Branagh – Hamlet, Grigori Kozintsev – King Lear, Akira kurosawa – Ran, Baz Luhrmann – Romeo and Juliet பாருங்கள். எவ்வளவு சிறப்பாக உருவாக்கபட்டிருக்கின்றன என்பதை நீங்களே அறிவீர்கள்.

தொடரும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 19:35

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.