S. Ramakrishnan's Blog, page 109

November 6, 2021

நூற்றாண்டின் நினைவுகள்

Around India with a Movie Camera என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன்

பிரிட்டனின் BFI தேசிய ஆவணக் காப்பகத்திலுள்ள இந்தியா பற்றிய ஆவணப்படங்களிலிருந்து 72 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தத் தொகுப்பினை உருவாக்கியிருக்கிறார் சந்தியா சூரி. 1899ல் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் துவங்கி 1947 வரையிலான பல்வேறு வகைக் காட்சிப்பதிவுகளைத் தேடிச்சேகரித்து ஒன்றிணைத்திருக்கிறார்

இந்த ஆவணப்படத்தின் மூலம் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் எப்படி வாழ்ந்தார்கள். அன்றைய மகாராஜாக்கள் மற்றும் வைஸ்ராய்களின் ஆடம்பர வாழ்க்கை. இசை மற்றும் நடனக்கலைஞர்களின் உலகம். புலி வேட்டை, டெல்லியில் நடைபெற்ற தர்பார், மலையேற்றம், கிராமப்புற வாழ்க்கை , ஃபக்கீர்கள் மற்றும் நாடோடிகள் என நூற்றாண்டின் நினைவுகளைக் காணுகிறோம்.

அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்படிப் பார்த்தார்கள் என்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு நேரடி சாட்சியம்.

இதில் சில காட்சிகள் தமிழகத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாகப் புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரில் வசித்து வந்த வெள்ளைக்காரர்கள் எப்படித் தள்ளுவண்டியினைப் பயன்படுத்திப் பயணம் செய்தார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். ரிக்சா போல உள்ள வண்டியினைப் பின்னால் இருந்து ஆட்கள் தள்ளுகிறார்கள். அதில் ஏறிப்போகிறார்கள்.

வில்லியனூர் கோவில் முன்பாக ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு வரவேற்பு கொடுப்பதற்காகச் சதிர் நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சதிராடும் பெண்களின் கம்பீரமும் அதைக் காணும்  கிராமவாசிகளும் , உள்ளூர் பிரமுகரின் பருத்த தோற்றமும், இந்த வரவேற்பை விநோதமாகக் காணும் பிரிட்டிஷ் குடும்பத்தின் இயல்பையும் காணமுடிகிறது இது ஒரு அபூர்வமான பதிவாகும். சதிராடும் பெண்களைப் புகைப்படமாகக் கண்டிருக்கிறேன். ஆனால் ஆவணப்படமாகக் காணும் போது அவர்களை சமூகம் எப்படி நடத்தியிருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது.

வெள்ளைக்கார்களுக்கு அன்றைய உள்ளூர் பிரமுகர்கள் எவ்வளவு அடிபணிந்து போயிருக்கிறார்கள், அதிகாரிகளைச் சந்தோஷப்படுத்த என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதை இந்தக் காட்சித் தொகுப்பில் அறிய முடிகிறது. ‘

இந்தியா முழுவதுமிருந்த மகாராஜாக்களின் பகட்டான வாழ்க்கை, அவர்களைத் தேடி வரும் பிரிட்டிஷ் இளவரசனை உபசரிக்கும் விதம், தர்பாரில் பரிசுப்பொருட்களைக் காணிக்கையாக அளிப்பது, காலனிய ஆட்சியாளர்களைப் புலி வேட்டைக்கு அழைத்துப் போவது, உல்லாச நடனம், குடி விருந்து என இந்திய மேல்தட்டு வர்க்கத்தினர் எவ்வளவு தூரம் பிரிட்டிஷ் விசுவாசிகளாக இருந்தார்கள் என்பதை இந்தக் காட்சிப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன

1899ல் நாம் காணும் வாரணாசியின் தோற்றம் வியப்பூட்டுகிறது. இன்றுள்ள பரபரப்புகள் பயணிகளின் அலைமோதும் கூட்டம் எதுவுமில்லை. இடிபாடுகளுடன் உள்ள படித்துறை, காட்டாறு போல ஒடும் கங்கை. 

1906 ஆம் ஆண்டில் காணப்பட்ட அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புகள் அன்றைய தினசரி வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை காட்டுகிறது.

ஒரு பெண் வீட்டுவாசலில் தனது கைக்குழந்தையைக் குளிப்பாட்டுகிறார், மூன்று வயது சிறுமிக்கு அவளது அம்மா புடவை கட்டிவிடுகிறாள். ராஜஸ்தானில் வாள்மீது நடந்தபடியே ஒரு இசைக்கலைஞர் பாடுகிறார். அவரைப் போலவே அவரது ஆறு வயது மகனும் வாள் மீது நடந்து காட்டுகிறான்.

லடாக்கில் நடந்த ஹெமிஸ் திருவிழாவில் நடனக் கலைஞர்கள் சுழன்றாடுகிறார்கள். திறந்த வெளியில் ஒரு ஆள் சவரம் செய்கிறான், வீட்டுவாசலில் கயிற்றுக்கட்டில் போட்டு சிலர் உறங்குகிறார்கள் . திறந்தவெளியில் ஒரு குடும்பம் சமைக்கிறது, இவையெல்லாம் பிரிட்டிஷ் காரர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அவற்றை பதிவு செய்து வேடிக்கை காட்சிகள் போல லண்டனில் காட்டியிருக்கிறார்கள்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வரவேற்க 1911 இல் நடைபெற்ற டெல்லி தர்பாரும் அதற்கு வருகை தந்த இந்திய மன்னர்களும். வீரர்களின் அணிவகுப்பும் முடிசூட்டு விழாவை எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அவ்வளவு பணமும் இந்தியர்களின் செல்வம். அதை ஏகபோகமாக பிரிட்டன் மன்னரும் அவரது குடும்பமும் அனுபவித்திருக்கிறார்கள்.

இந்திய மன்னர்கள் ஒவ்வொருவரும் தகுதிக்கு ஏற்ப ஜார்ஜ் மன்னருக்கு மரியாதை செலுத்த அழைக்கப்படுகிறார்கள்.  இதில் பரோடாவின் மகாராஜா கெய்க்வாட் மன்னருக்கு முதுகுகாட்டிச் செல்கிறார். இது மாமன்னரை அவமானப்படுத்தும் செயல் எனக்கூறி கெய்க்வாட்டினை மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள்

வெள்ளைக்காரப் பெண் காலணியோடு யானையின் மீதேறுவதும். ஒட்டகத்தில் ஏறி சவாரி செய்வதும் பல்லக்கில் ஆற்றைக் கடந்து செல்வதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். சொகுசான வாழ்க்கை. எடுபிடி வேலை செய்ய நிறைய ஆட்கள். மாளிகை போல வீடு. காலனிய அதிகாரிகளின் குடும்பத்தினர் ஆடம்பர வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் அதிகாரிகளின் வேட்டைக்குத் துணை செய்யப் பழங்குடி மக்கள் ஒன்றுதிரட்டப்படுவது. காட்டிற்குள் யானையில் செல்லும் காட்சி, புலி வேட்டை, பழங்குடி மக்கள் அன்றிருந்த நிலை மற்றும் அவர்களின் வறுமை , குற்றப்பரம்பரை சட்டம்,  மதமாற்றம் எனக் காலனிய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

இந்தக் காட்சிகளின் வழியே நாம் அறிந்து கொள்ளும் ஒரே உண்மை, இந்தியாவை நாகரீகமற்ற மக்கள் வாழும் ஒரு இருண்ட உலகமாகக் காட்டவே பிரிட்டிஷ் அரசாங்கம் முயன்றிருக்கிறது என்பதே.

இன்னொரு புறம் ஆட்சியாளர்கள் எவ்வளவு சுகபோகங்களை அனுபவித்திருக்கிறார்கள். எப்படியெல்லாம் மக்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

எதற்காக இவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். 1857ல் நடந்த சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் புகைப்படம் எடுப்பதை நிர்வாகப் பணியின் ஒரு அங்கமாக மாற்றியது. குறிப்பாகச் சிப்பாய் எழுச்சியின் போது கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவ வீர்ர்கள். மற்றும் அதிகாரிகளை நினைவு கொள்ளப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இறந்த இடங்களைப் புகைப்படமாக்கி அங்கே நினைவுச்சின்னம் உருவாக்கினார்கள்.

இந்திய நிலப்பரப்பு. இயற்கை வளம். சாலை வசதிகள்.பல்வேறு இனக்குழுக்களின் வாழ்க்கை முறை, திருவிழா, விளையாட்டுகள், பிறப்பு இறப்புச் சடங்குகள். கோவில்கள். நுண்கலைகள். உணவு தயாரிக்கும் முறைகள், அன்றைய மருத்துவம் எனச் சகல விஷயங்களையும் அரசாங்கம் புகைப்படமாகவும் காணொளியாகவும் பதிவு செய்து அதிலிருந்து தங்களுக்குத் தேவையான நிர்வாக உத்திகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

இது போலவே மகாராஜாக்கள் மற்றும் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, வேட்டை, நடனவிருந்துகள். விளையாட்டு. திருமண நிகழ்வுகளை ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். மதமாற்றத்தின் முக்கிய ஆவணமாகப் புகைப்படக்கலை இருந்திருக்கிறது. இதிலும் ஒரு கிறிஸ்துவ மதமாற்ற நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது

அன்றைய இந்திய மக்களின் தோற்றம், மற்றும் செயல்பாடுகளை இன்றோடு ஒப்பிடும் போது நாம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதைக் காண முடிகிறது. எவ்வளவு சுரண்டப்பட்டிருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

காந்தியின் தண்டி யாத்திரை காட்சிகள். இயக்குநர் பிமல்ராயினைப் பற்றிய காட்சி. நவகாளி காட்சிகள் என இடைவெட்டாக வரும் அபூர்வமான சித்தரிப்புகள் இந்த ஆவணப்படத்திற்குத் தனித்தன்மை ஏற்படுத்துகின்றன..

150க்கும் மேற்பட்ட ஆவணப்பதிவுகளில் இருந்தே சந்தியா சூரி இதனை உருவாக்கியிருக்கிறார். காலனிய இந்தியாவின் உண்மை முகத்தை இப்படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 04:21

இரண்டு கிழவர்கள்

விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை

டெல்லிக்கு விமானத்தில் தான் போக வேண்டும் என்று பட்டாபிராமன் நினைத்தார். பின்பு காந்தி ஒருமுறை கூட விமானத்தில் போனதில்லையே. நாம் ஏன் காந்தி சமாதியைக் காண விமானத்தில் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே டெல்லி ரயிலில் டிக்கெட் போட்டார்.

காந்தி சமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி போகிறேன் என்று மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான். இந்த வயதான காலத்தில் எதற்காகக் காந்தி சமாதியைப் பார்க்க வேண்டும். பல முறை போய் வந்த இடம் தானே என்று கோவித்துக் கொள்ளுவான்.. ஆனால் அனுமதி கேட்டு போய் வருவதற்குத் தான் என்ன பள்ளிப்பையனா. எழுபத்துமூன்று வயதாகிவிட்டதே என்றும் பட்டாபிராமனுக்குத் தோன்றியது.

அவர் சென்னையில் தனியே வசித்துவந்தார். மகள் அமெரிக்காவில், மகன் மும்பையில். பட்டாபிராமனுக்கு உதவி செய்ய விசாலம் என்ற சமையற்காரப் பெண் இருந்தார். அவர் வீட்டுவேலைகளைப் பார்த்துக் கொண்டார்.

ஒருவேளை மனைவி இருந்திருந்தால் நிச்சயம் அவளுக்குத் தனது ஆசைகள் புரிந்திருக்கும். ஆனால் அவள் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.. பட்டாபிராமனின் கனவுகளில் அடிக்கடி காந்தி வரத்துவங்கியும் அதே ஆண்டுகள் தான் ஆகின்றன.

உண்மையை சொல்வதென்றால் ஒரே கனவு தான். திரும்பத் திரும்ப வருகிறது. காந்தியின் முன்னால் பட்டாபிராமன் அமர்ந்திருக்கிறார். காந்தி அவரிடம் ஒரு மலரைக் கொடுத்து அது வாடிவிடாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். கையில் அந்த மலரை ஏந்தியதும் அது கனமான பொருளைப் போலத் தோன்றுகிறது. சிறிய மலர் தானே எப்படி இவ்வளவு எடை இருக்கிறது என வியப்போடு பார்க்கிறார்.

காந்தி சிரித்தபடியே எல்லா மலர்களும் எடையற்று இருப்பதில்லை என்கிறார்.

அந்த மலரைக் கையில் ஏந்தியபடியே அமர்ந்திருக்கும் போது கவனம் முழுவதும் மலர் மீதே இருக்கிறது. காந்தி அந்த அறையை விட்டு எழுந்து போய்விடுகிறார். நேரம் செல்லச் செல்ல மலர் மெல்ல வாடத்துவங்குகிறது. அதைத் தன்னால் வாடாமல் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பட்டாபிராமன் சப்தம் எழுப்பும் போது கனவு கலைந்துவிடுகிறது. காந்தி மறைந்து விடுகிறார்

இது என்ன கனவு. ஏன் ஒருவனைக் காந்தி மலரைச் சுமக்கச் சொல்கிறார். பட்டாபிராமனுக்குப் புரியவேயில்லை.

பட்டாபிராமன் காந்தியைப் போலவே லண்டனில் சட்டம் படித்தார். ஆனால் வழக்கறிஞராக பணியாற்றவில்லை.. பத்திரிக்கையாளராகத் தன் வாழ்க்கையைத் துவங்கி பின்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஆசிரியராகப் பணியாற்றினார். நாலைந்து பத்திரிக்கைகள் அதே பதவி. பின்பு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவின் பெரிய பதிப்பகம் ஒன்றிலும் தலைமை ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். அந்த நாட்களில் அவருக்குப் புகழ்பெறுவதும் பணத்தைத் துரத்துவதும் தான் வாழ்க்கை..

அது எப்போது கலைந்தது என்று அவரால் கண்டறிய முடியவில்லை. ஆனால் திடீரென ஒரு நாள் அவர் பத்திரிக்கை ஆசிரியர் பணியை விட்டு விலகி முசோரியிலுள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அந்த முடிவை அவரது மனைவி புரிந்து கொண்டதுடன் இது தான் உங்களுக்குப் பொருத்தமான வேலை என்று மகிழ்ச்சியோடு சொன்னாள்.

அவர்கள் வீடு மாறி முசோரியில் ஐந்து ஆண்டுகள் வசித்தார்கள். அழகான வாழ்க்கை. பள்ளிக்கூடம் மாணவர்கள் இயற்கையான சூழல். மாலை நேரம் நீண்ட தூரம் நடப்பது. ,இசைகேட்பது என மறக்கமுடியாத நாட்கள். ஆனால் எழுதிப் பழகிய கையால் சும்மா இருக்க முடியாது. திடீரென ஒரு நாள் மும்பையில் இருந்து புதிய பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியாகப் பணியாற்ற அழைப்பு வந்தது. மறுபடியும் பத்திரிக்கைத் துறைக்கே போய்விட்டார்.

இந்த முறை அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்து தரவும் துவங்கினார். மும்பையில் வசதியான வாழ்க்கை. இரண்டு கார்கள். மேல்மட்டது உறவுகள். பார்ட்டி. என வாழ்க்கை பொன்னிறக் கனவில் மிதப்பது போலிருந்தது

ஆனால் இரண்டாயிரத்துப் பதிமூன்றில் நாசிக் செல்லும் போது ஏற்பட்ட சாலை விபத்து அவரது வாழ்க்கையை முடக்கியது. .அந்த விபத்தில் அவர் மட்டும் தான் உயிர்பிழைத்தார். உடன் வந்தவர்கள் அந்த இடத்திலே மரணம். ஒட்டுநர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இறந்து போனார். ஆனால் பட்டாபிராமனுக்குக் கழுத்து எலும்பு மிகவும் பாதிக்கப்பட்டது. தலை நிற்கவில்லை. தொடர் சிகிட்சைகளுக்குப் எழுந்து நடமாடுவதற்கு ஒரு ஆண்டுகள் ஆனது. நீண்ட நேரம் ஒரே இருக்கையில் அமர்ந்திருக்க முடியாது என்ற நிலை வந்தபோது மகனும் மகளும் அவர் வேலைக்குப் போவதைத் தடுத்துவிட்டார்கள்.

அப்போது தான் சென்னையிலிருந்த மனைவியின் பூர்வீக வீட்டிற்கு இடம் மாறினார்கள். அதன் இரண்டு ஆண்டுகளில் மனைவியும் இறந்து போனதால் அவர் தனது வீட்டிலிருந்தபடியே ஏதாவது இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார். எப்போதாவது இளம் பத்திரிக்கையாளர்கள் அவரைத் தேடி வருவார்கள். ஆலோசனை கேட்பார்கள்.

தனிமை வாழ்க்கை பழகிப்போன சூழலில் தான் திடீரென ஒரு நாள் கனவில் காந்தி தோன்ற ஆரம்பித்தார். காந்தி அவரைப் பார்த்துப் பரிகசிப்பது போலவே பட்டாபி உணர்ந்தார். அதன்பின்பு அவருக்குள் தனது கடந்த கால வாழ்க்கை குறித்த கேள்விகளும் குழப்பங்களும் அதிகமாக ஆரம்பித்தது

என்ன மலர் அது. எதற்காக அதைக் காந்தி தன் கையில் கொடுத்து வாடிப்போகாமல் இருக்கச் சொன்னார். அது தன்னைச் சோதிக்கவா. அல்லது பொறுப்புணர்வை உணர்த்தவா, அவருக்குப் புரியவில்லை.

காந்தி இப்படித்தான். யாரை எப்படிச் சோதனைகள் செய்வார் என்று யாருக்குத் தெரியும். சொந்த மனைவி பிள்ளைகளிடம் கூட இப்படித் தானே நடந்திருக்கிறார்

பட்டாபிராமன் விழித்து எழுந்து கொண்டபிறகு நீண்ட நேரம் அந்த மலரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். ஒருவேளை தனது எழுத்துப்பணி தான் அந்த மலரா. அல்லது சத்தியம் தான் ஒரு மலராக உருக் கொண்டுள்ளதா

மலர்களை வாடிவிடாமல் ஒருவன் எப்படிக் காப்பாற்ற முடியும்.. காந்தியாலும் முடியாதே. பின் ஏன் அப்படி ஒரு பொறுப்பைத் தன்னிடம் கொடுத்தார்.

அந்த மலர் ஏன் கைகளில் ஏந்தியதும் கனமாகிவிட்டது. இதைப்பற்றிக் காந்தி ஏன் பேச மறுக்கிறார். சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே பகலில் இதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்

முதுமையைத் தைரியமாக, உற்சாகமாக சந்தித்த மனிதர் காந்தி ஒருவர் தான். முதுமையில் தனது மகத்தான செயல்களைச் செய்து காட்டினார். ஒருவேளை அதைத் தான் அந்த மலர் குறிக்கிறதா.

எழுபத்தேழு வயதில் எப்படி அந்த மனிதரால் மதக்கலவரம் நடந்த நவகாளி முழுவதும் சுற்றி அலைய முடிந்தது. வயது தான் அந்த மலரா.. அதைக் காந்தி ஒருவரால் தான் கடந்து செல்ல முடிந்ததா.

தீர்க்கமுடியாத ஒரு புதிரைக் கையில் கொடுத்துப் போனது போல அதைப்பற்றியே பட்டாபிராமன் நினைத்துக் கொண்டிருப்பார்.

இருபது வயதுகளில் ஊர் ஊராகச் சுற்றுவது பிடித்திருந்தது. ஆனால் இந்த எழுபத்திரெண்டு வயதில் எவ்வளவு வேகமாக உறங்கப் போகிறோமோ அவ்வளவு நல்லது என மனது ஏங்க ஆரம்பித்திருந்தது.

பட்டாபிராமனுக்குச் சில நாட்களாகவே இடது கண்ணில் வலியிருந்தது. ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் பின்னிரவில் எழுந்து உட்கார்ந்து எழுதினார் ஒன்றிரண்டு பக்கங்களுக்கு மேல் எழுத இயலவில்லை.

யாருக்காக எழுதுகிறோம் என்ற கேள்வி அவரைத் துன்புறுத்தியது. சுயநலத்தில் ஊறிதிளைத்துப் போன சமூகத்திடம் உண்மையை எப்படிப் பேசுவது.. தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகள், வன்முறைகள். மோசடி செயல்களை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மனதில் கோபம் கொப்பளிக்கிறது. அதை அடக்கிக் கொண்டேயிருந்தால் ரத்த அழுத்தம் கூடிவிடுகிறது. அப்படியான மனநிலைக்கு எழுதுவது மட்டுமே ஆறுதல்.

அவரது மகன் அவருக்கு நேர் எதிரான விருப்பங்கள் கொண்டிருந்தான். காந்தியின் பிள்ளைகளும் அப்படிதானே இருந்தார்கள். நிதிநிர்வாகம் பற்றிய படிப்பை லண்டனில் படித்து அந்த துறையில் பெரிய வேலையை அவனே உருவாக்கிக் கொண்டான். பணம், ஷேர் மார்க்கெட், சர்வதேச சந்தை இது தான் அவனது உலகம்.

அவர் பத்திரிக்கையில் வேலை செய்து சம்பாதித்த பணம் போலப் பத்து மடங்கு அவன் ஒரு வருஷத்தில் சம்பாதித்தான். பஞ்சாபி பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். அவள் மும்பையில் வேலை செய்கிறாள் என்பதால் தான் அவனும் மும்பையில் இருக்கிறான். இல்லாவிட்டால் எப்போதோ ஐரோப்பிய நாடுகளுக்குப் போயிருப்பான். எப்படியும் அது நடக்கத்தான் போகிறது.

ஏன் பிள்ளைகள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று பட்டாபிராமனுக்குக் குழப்பமாக இருந்தது. சில நேரங்களில் சொந்தவாழ்க்கையில் தான் ஒரு தோற்றுப்போன மனிதன் என்றே உணருவார். .

அவர்களின் ஒரே மகள் அகிலா படிப்பை விட விளையாட்டில் ஆர்வம். அதுவும் டென்னிஸ் பைத்தியம். அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பிய போது அவள் சொன்னாள்

“டாடி, அடுத்தப் பத்து வருஷங்களுக்கு என்னைத் தேடாதீர்கள். உங்களிடம் சொல்லிக் கொண்டே காணாமல் போக விரும்புகிறேன். என்னை நானே கண்டறிய வேண்டியிருக்கிறது. வீட்டிற்குள் அலையும் எறும்பை போல வாழ விருப்பமில்லை. முடிந்தவரைத் தனியே சுற்றியலையப் போகிறேன். விரும்பும் போது நானே உங்களைத் தேடி வருவேன்“

இப்படி சொல்லுமளவு பெண்ணை வளர்த்திருக்கிறோம் என்பது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. அவர் மெல்லிய புன்னகையோடு சொன்னார்

“பாவம் உன் மம்மி. அவளுக்குத் திட்டுவதற்கு நீ ஒருத்தி தானே இருக்கிறாய், நீயும் போய்விட்டால் அவள் யாரோ சண்டை போடுவாள், யாரிடம் கோவித்துக் கொள்வாள். யாருக்காகக் குளோப்ஜாமுன் தயாரிப்பாள். “

அதைக் கேட்டு சிரித்த கீதா சொன்னாள்

“நான் சண்டைபோடவும் ஜாமுன் தயாரித்துக் கொடுக்கவும் என் கணவர் இருக்கிறார். நீ உன் இஷ்டம் போலக் கெட்டுத் திரி. ஆனால் எங்கள் பெயரைக் கெடுப்பதைப் போல நடந்து கொள்ளாதே அது போதும்“

“உங்கள் பெயர்கள் அவ்வளவு பலவீனமானதா. நான் மோசமாக நடந்தவுடன் கெட்டுப் போய்விடுவதற்கு. அட்வைஸ் பண்ணாத அம்மா இந்த உலகில் ஒருவர் கூடக் கிடையாது. எனக்கு அது புரியும்“ என ஆங்கிலத்தில் சொன்னாள்.

அன்றிரவு கீதாவிடம் கேட்டாள்

“அகிலா கெட்டு போய்விடுவாள் என நினைக்கிறாயா“

“ அமெரிக்காவில் கேள்விகேட்பார் இல்லாமல் சுற்றினால் கெட்டுப்போகாமல் எப்படியிருப்பாள்“

பட்டாபிராமன் . உற்சாகமாகச் சொன்னார்

“கெட்டுபோவதற்கு அமெரிக்கா போகவேண்டும் என அவசியமில்லை. சென்னையிலே நிறைய வழிகள் இருக்கிறது. அத்தனையும் அவளுக்குத் தெரியும்“

“அவள் விருப்பத்தை நான் தடுக்கவில்லை. ஆனால் அவளைப் பற்றிக் கவலைப்பட நாம் இரண்டு பேர் இருக்கிறோம் என்பதை அவள் மறந்துவிடுகிறாள்“ என்றாள் கீதா

பட்டாபிராமன். சிரித்தபடி சொன்னார்

“நன்றாகக் கவலைப்படுவோம் ஆனால் நம் கவலைகளை அவளுக்குப் பார்சல் மட்டும் பண்ணிவிடவேண்டாம்“

கீதா கோவித்துக் கொண்டாள். பட்டாபிராமன் அவள் கோபத்தை ரசித்தார்.என்ன தான் சண்டையிட்டு கொண்டாலும் தாயும் மகளும் எதிரிகளில்லை. அவர்களுக்குள் ரகசிய ஒட்டுதல் இருந்தது. திடீரென மிக நெருக்கமாகி விடுவார்கள்.

சொன்னது போலவே அகிலா அமெரிக்கா போய்விட்டாள். அவ்வப்போது மெயில் அனுப்பிவைப்பாள். சில நேரம் புகைப்படங்களும் வந்து சேரும்..

கடல்கடந்த பறவை இனி கூட்டிற்குத் திரும்பி வருமா எனத்தெரியாது. பறக்கட்டும். வானம் பெரியது தானே. சுதந்திரமாகப் பறக்கட்டும்.

எப்போதாவது ஷாப்பிங் மாலுக்குப் போகும் போது அகிலா போன்ற ஜாடையில் உள்ள பெண்களைக் காணும்போது கீதா சற்று உணர்ச்சிவசப்பட்டுப் போவாள். அவரோ. ஒவ்வொரு நாளும் காலையில் இன்றைக்கு அவளிடமிருந்து போனோ, மெயிலோ வரக்கூடும் என நினைத்துக் கொள்வார். வராத போது அந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.

ஆச்சரியமாக அன்றிரவு அவர் டெல்லி ரயிலில் ஏறி உட்கார்ந்த போது அகிலா போனில் அழைத்தாள். அமெரிக்காவில் இப்போது மணி எவ்வளவு என யோசித்தார். அகிலா தனது மெக்சிகோ பயணத்தை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது குரல் மாறியிருந்தது. பாதிப் பேச்சிலே தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. திரும்பக் கூப்பிடுவாள் என நினைத்தார். ஆனால் அழைக்கவில்லை. மனதிற்குள் அவளது குரலை திரும்ப ஒலிக்கவிட்டவாறே ரயிலில் உட்கார்ந்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்

ரயிலில் படுத்து உறங்கும் போது காந்தி கனவு வருமா எனத் தெரியவில்லை. இந்த ரயிலில் தான் ஒருவன் மட்டுமே காந்தியைக் காணச் செல்பவன். உலகம் காந்தியை வெறும் பிம்பமாக மட்டும் மாற்றிவிட்டது.

••

ரயிலில் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு அவரைப் பார்த்துப் புன்னகை செய்தான். பட்டாபிராமன் அதை ஏற்றுக் கொண்டது போலப் பதிலுக்கு லேசாகச் சிரித்தார்

டெல்லியில குளிர் ஜாஸ்தியா இருக்காம்.. நேத்து ஒன்பது டிகிரி என்றான் அந்த இளைஞன்

பட்டாபிராமன் தலையாட்டிக் கொண்டார்

“ டெல்லியில எங்க போறீங்க..“ என்று அந்த இளைஞன் கேட்டார்

“ பழைய பிரண்டு ஒருத்தைரை பார்க்க போறேன்“

“ எங்க இருக்கிறார் உங்க பிரண்ட்“

“ ராஜ்காட்ல“

“ அங்கே தான் காந்தி சமாதி இருக்கு.. “

“ அங்கே தான் போறன்“

“ காந்தி சமாதிக்கா“ என்று சந்தேகமாகக் கேட்டான் அந்த இளைஞன்

“ ஆமாம். “

“ டெல்லியில தான் ஆறு வருஷமா இருக்கேன். ஆனால் போக நேரம் கிடைக்கலை.. காந்தியவா உங்க பிரண்டுனு சொன்னீங்க“

“ ஆமா.. அவர் என்னோட பழைய பிரண்ட்.. என்னைப் போலவே அவரும் ஒரு கிழவர் தானே“

“ எதுக்காகக் காந்தி சமாதிக்கு போறீங்க “

“ காரணம் ஒண்ணுமில்லை.. அங்கே போகணும்னு மனசுல தோணிக்கிட்டே இருந்த்து, அதான் கிளம்பிட்டேன்“

“ அங்கே பாக்குறதுக்கு என்ன இருக்கு.. “

“ காந்தி தான் இருக்கிறார் என்று மெலிதாகச் சிரித்தார் பட்டாபி ராமன்

அதை அந்த இளைஞன் ரசிக்கவில்லை என்பது அவனது முகத்தில் தெரிந்தது.

“ உலகம் மாறிகிட்டு இருக்கு சார்.. உங்களை மாதிரி ஆட்கள் தான் மாறவேயில்லை“ என்றான்

ஏன் அப்படிச் சொன்னான் என்று புரியவில்லை. காந்தியைத் தேடிச் செல்வது அவ்வளவு கேலிக்குரிய விஷயமா என்ன. ஏன் அந்த இளைஞனுக்குக் காந்தி தேவையற்றவராகத் தோன்றுகிறார்.

“ காந்தியோட புத்தகம் ஏதாவது படிச்சிருக்கீங்களா“ என்று அவனிடம் கேட்டார் பட்டாபிராமன்

“ எனக்குப் பாலிடிக்ஸ்ல இன்ட்ரஸ்ட் கிடையாது சார்.. அவர் காங்கிரஸ் தானே“ என்றான்

காந்தியை அரசியல்வாதி என்று சொல்வதை அவரால் ஏற்க முடியவில்லை. அவரை எப்படி அடையாளப்படுத்துவது. அவனுடன் எப்படிப் பேச்சைத் தொடர்வது என்று புரியவில்லை.

தனது செல்போனை எடுத்துக் கொண்டு அவன் எழுந்து கதவை நோக்கி நடந்து போனான். அவனுக்குத் தன்னோடு பேச எதுவுமில்லை. யாரோ ஒரு பைத்தியக்கார கிழவன் என்று நினைத்திருப்பான். நினைக்கட்டுமே. உலகம் முதியவர்களைத் தான் அதிகம் கேலி செய்கிறது. அதில் தான் மட்டும் விதிவிலக்கா என்ன.

அந்த இளைஞன் கேட்ட கேள்வி போல ஏன் காந்தியைத் தேடிச் செல்கிறோம். கனவிற்கு விடைகாணவா. அல்லது தன் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடியா.. எதற்காக டெல்லி போகிறோம். கடந்து செல்லும் வெளிச்சத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். பிறகு படுத்துக் கொண்ட போது காந்தி ரயிலிலும் கடிதங்கள் எழுதினார். ராட்டை நூற்றார். தியானம் செய்தார் என்பது போலப் பல விஷயங்கள் மனதில் ஓட ஆரம்பித்தன.

ரயில் பயணத்தில் அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை. தனது செல்போனில் இருந்த காந்தியின் சொற்பொழிவு ஒன்றை கேட்க ஆரம்பித்தார். மெல்லிய குரல். ஆனால் அழுத்தமாகப் பேசுகிறார். இத்தனை மென்மையான குரலை வைத்துக் கொண்டு எப்படி இத்தனை லட்சம் மக்களை ஒன்று திரட்டினார். குரலின் வசீகரம் என்பது அதன் கம்பீரத்தில் இல்லையோ.

பின்பனிக்காலத்தின் இரவு என்பதால் குளிரில் விளக்கு கம்பங்கள் கூட நடுங்கிக் கொண்டிருந்தன இருளை துளைத்துக் கொண்டு ரயில் விரைந்து கொண்டிருந்தது. திறந்து வைத்துவிட்ட வாசனை திரவியபுட்டியிலிருந்து மணம் கசிந்து கொண்டேயிருப்பது போலக் குளிர்கால இரவிற்கேயுரிய விநோத வாசனை காற்றில் கலந்திருந்தது. இரண்டாம் வகுப்புக் குளிர்சாதனப்பெட்டியில் அவரது படுக்கை லோயர்பெர்த் என்பதால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டிய தேவையில்லை. இருளில் யாரோ எழுந்து கழிப்பறையை நோக்கி போனார்கள். சக்கரை நோயாளியாக இருக்கக்கூடும். நடை தளர்ந்து போயிருந்தது. அப்பர்பெர்த் ஒன்றில் ஒரு ஆள் சாய்ந்து உட்கார்ந்து தனது மடிக் கணிணியில் எதையோ படித்துக் கொண்டிருந்தார். எங்கோ இருட்டில் யாரோ சப்பாத்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மணம் வந்தது. இந்த இரவில் யாருக்குப் பசிக்கிறதோ.

ரயிலில் உறங்க முடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது அவருக்கு ஆறுதல் அளித்தது. எவரது செல்போனோ அந்த இரவில் அடித்தது. லதா மங்கேஷ்கரின் மீரா பஜன் ‘நந்த நந்தனு தித்துப் படியா ‘ என்ற பாடலை பாடியது. ரசனையுள்ள ரிங்டோன். ஆணா, பெண்ணா, யாருடைய போன் அது.

குளிர்கால இரவில் லதா மங்கேஷ்கரின் குரலை கேட்பது மயக்கமூட்டுவதாகவே இருந்தது. பாவம் பேதை மீரா காதலனை நினைத்து உருகி உருகி அழிந்து போய்விட்டாள். அந்தப் போன் அடித்துக் கொண்டேயிருந்தது. ஒருவேளை செல்போன் வைத்திருப்பவர் உறங்கியிருக்கக் கூடும்.

பின்னிரவில் யார் அழைக்கிறார்கள். என்ன அவசரம். அல்லது தன்னைப் போல வெறுமையைக் கடக்கமுடியாமல் போன் செய்கிறார்களோ என்னவோ. குளிரில் கைபிடி இரும்பு கம்பிகள் கூட ஜில்லிட்டுப் போயிருந்தன. கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டார்.

கண்ணை மூடிக் கொண்ட போது திடீரெனத் தனது சொந்த ஊரான மதுரையின் வைகை ஆற்றுப் பாலத்தின் மீது ரயில் போவது போலத் தோன்றியது. மனம் விசித்திரமானது. எங்கே இருந்தபடியே எதை நினைத்துக் கொள்கிறது என யோசித்தபடியே புரண்டு படுத்துக் கொண்டார். ரயில் வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்தது.

. நீண்ட பயணத்தின் பிறகு டெல்லி போய் இறங்கும் போது வெயில் அதிமாகவே இருந்தது. டெல்லி நகரில் வாகன நெரிசல் அதிகமாகிவிட்டது. அவரை அழைத்துச் செல்வதற்காகப் பழைய நண்பர் ரிஸ்வி வந்திருந்தார். அந்தக் காரில் ஏறிக் கொண்டதும் உடல்வலி அதிகமாக இருப்பது போல உணர்ந்தார்

ரிஸ்வி காரை மெதுவாகவே ஒட்டிக் கொண்டு சென்றார். சாந்திவிகாரில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்று வெந்நீரில் குளித்தபோது மிகுந்த களைப்பும் அசதியும் ஏற்பட்டது. பேசாமல் படுத்து உறங்கிவிடலாம் என நினைத்தார். மனதோ காந்தி சமாதிக்குபோய் விட்டு திரும்பி வந்துவிடலாம் என்று குரலிட்டது.

ரிஸ்வியின் மகள் ஸ்வப்னா தான் அவரைக் காந்தி சமாதிக்கு அழைத்துக் கொண்டு போனாள். பெண்கள் காந்தியை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவள் வழியில் தேநீர் குடிக்க ஒரு கடையில் நிறுததினாள். தனது தந்தையை அழைத்துப் போவது போலவே கையைப் பிடித்து அவரை அழைத்துக் கொண்டு போனாள். அந்த நெருக்கம் அவருக்குப் பிடித்திருந்தது.

‘ராஜ்காட் செல்லும் சாலையைப் பிடிப்பதற்குள் நிறைய இடங்களில் போக்குவரத்துத் திசைதிருப்பிவிடப்பட்டிருந்தது. டெல்லியில் எந்தச் சாலையை எப்போது மூடுவார்கள் என யாருக்கும் தெரியாது.

அவரது காரின் அருகில் நின்றிருந்த ஜாகுவார் காரை ஒட்டி வந்த பையனுக்கு இருபது வயதிருக்கக் கூடும். வெளிநாட்டுகாரை ஒட்டிக் கொண்டு போகிறான். யாராவது மந்திரியின் மகனாக இருக்ககூடும். ஒருவேளை மூத்த ஐஏஎஸ் அதிகாரி வீட்டுபிள்ளையாகவும் இருக்ககூடும். யாரிடம் தான் பணம் இல்லை.

அந்தப் பையன் வயதில் இப்படிக் கார் ஒட்டிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்ற வேண்டும் எனப் பட்டாபிராமன் ஆசைப்படவேயில்லை. மாறாகச் சதா எதையாவது படித்துக் கொண்டு, காரசாரமாக விவாதித்துக் கொண்டு காலத்தைக் கழித்திருந்தார். பைத்தியக்காரத்தனம். உண்மையில் அந்தப் பைத்தியம் இன்னமும் விடவில்லை தான். எங்கே புத்தகங்களைக் கண்டாலும் கைபரபரக்க தானே செய்கிறது. அச்சில் உள்ளதை வாசிப்பதில் அப்படி என்னதான் ஆனந்தமோ.

அந்தப் பையன் சிக்னல் விழுந்தவுடன் காரை அநாயசமாக ஒட்டிகடந்தான். பட்டாபிராமன். கார் ரிங்ரோட்டை பிடித்தபோது மேற்குவானம் வெளிறிப்போயிருப்பது தெரிந்தது. மேகங்களேயில்லை. டெல்லியில் சில நாட்கள் அபூர்வமான நிறத்தில் மேகங்கள் திரண்டிருக்கும். தங்க பாளம் போலவும் வெண்புகையில் செய்த குதிரைகள் போலவும் தெரியும். ஆனால் அன்றைக்கு உலர்ந்த வானமாகயிருந்தது. ராஜ்காட்டில் நிறையச் சுற்றுலா பயணிகள் வருவதால் பார்க்கிங்கை தொலைவாக வைத்திருந்தார்கள். அங்கே காரை நிறுத்திவிட்டு இறங்கி வரும் போது ஒரு பீகாரி குடும்பம் தரையில் உட்கார்ந்து அலுமினிய தட்டில் ரொட்டியை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

 ராஜ்காட் எங்கும் நினைவிடங்கள். ஆனாலும் காந்திக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சரண்சிங்கிற்குக் கிடைக்கவில்லை. அவரது சமாதி அருகிலே தானிருக்கிறது. பொதுமக்கள் ஏன் சரண்சிங் சமாதி பக்கம் திரும்புவதேயில்லை.

காந்தி இறந்து போய்ப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்தத் துக்கம் மறையவேயில்லை. இப்போதும் யாரோ ஒருவர் அந்தச் சமாதியில் கண்ணீர்விட்டு அழுகிறார். கண்ணீரின் வழியே காந்தியை தொட்டுவிட முடியாதா எனத் துடிக்கிறார். காந்தியின் மரணம் இந்திய வரலாற்றின் திருப்புமுனை. நம்பிக்கையின் மீது விழுந்த பலமான அடி. இன்னமும் இந்தியா அதிலிருந்து விடுபடவில்லை

பட்டாபிராமன் மெதுவாகக் காந்தி சமாதியை நோக்கி நடந்தார். அவர் முன்னே சுற்றுலா பயணிகளின் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. முக்காடு போட்ட ராஜஸ்தானியப் பெண்கள். தலைப்பாகை சுற்றிய உயரமான ஆண்கள்.. வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். பட்டாபிராமன். மெதுவாக நடந்து போனார்.

காந்தி சமாதியிலிருந்து திரும்பிய இரண்டு கிழவர்கள் தங்கள் கதர் தொப்பியை கையில் வைத்திருந்தார்கள். கதர் தொப்பி அணிந்தவர்களைக் காணுவது இப்போது அரிதாகிவிட்டது. வட மாநில அரசியல்வாதிகளில் சிலர் தான் கதர் தொப்பி அணிகிறார்கள். சாமானியர்களில் எத்தனை பேர் கதர்குல்லாவோடு காணப்படுகிறார்கள். அது வெறும் தொப்பியில்லை. ஒரு அடையாளம்.

செருப்பைக் கழட்டி போட்டுவிட்டு சலவைக்கல்லால் ஆன காந்தி சமாதியை நோக்கி பட்டாபிராமன் நடக்கத் துவங்கிய போது கண்ணாடிப்பெட்டிக்குள் எரியும் தீபம் கண்ணில் பட்டது. மஞ்சளும் சிவப்பும் வெள்ளையுமான பூக்களைக் கொண்டு சமாதியை அலங்காரம் செய்திருந்தார்கள். வைஷ்ணவ ஜனதோ பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

காந்தி சமாதியின் சுடரைக் கண்டதும் மனதிற்குள் சொல்லிக் கொண்டார்

“ நான் காந்தியோடு கைகுலுக்கப் போகிறேன். அந்தக் கிழவரின் கைகள் எனக்குத் தேவையாக இருக்கின்றன. அதன் தொடுதல் வழியாக என் துயரங்களைக் கடந்து போக விரும்புகிறேன்“.

பட்டாபிராமனை இடித்துக் கொண்டு முன்னால் போன ஒரு குடும்பம் காந்தி சமாதியை பார்த்து கையெடுத்து கும்பிட்டது. அவர்களுக்குக் காந்தியும் ஒரு தெய்வம். வேறு எப்படிக் காந்தியை புரிந்து கொள்வது.

பட்டாபிராமன் அமைதியாக அந்தச் சமாதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பூ அலங்காரங்கள். சலவைக்கற்கள் எதையும் காந்தி தன் வாழ்நாளில் வேண்டியதில்லை. ஒருவேளை அவரது ஆசான் டால்ஸ்டாயை போலத் தனது புதைமேடும் எளிமையாகப் புல் முளைத்த இடமாக இருக்க வேண்டும் எனக் காந்தியும் விரும்பியிருப்பாரோ என்னவோ.

காந்தி கொல்லப்படுவார் என இந்தியர்கள் ஒருநாளும் நம்பியதில்லை.

காந்தி ஏன் சுடப்பட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் அதன்பின்பு எந்தத் தலைவரும் துப்பாக்கிக்குண்டிற்கு இரையானதில்லையே. அதிகாரம் சிலரைத் தூக்கிலிட்டிருக்கிறது. சிலரைச் சிறையில் தள்ளி சாகடித்திருக்கிறது. ஆனால் சாமானிய மனிதன் ஒருவன் கையில் துப்பாக்கி ஏந்தி நேர்நின்று ஒரு மகத்தான மனிதரைக் கொல்வது இது தான் முதல்முறை. எப்படி இந்தச் சம்பவம் சாத்தியமானது.

காந்தியின் மரணத்துடன் சாமானிய மனிதர்களின் மீதான நம்பிக்கையும் புதையுண்டு போய்விட்டதா என்ன.

பட்டாபிராமன் அந்த நெருப்பைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்

காந்தியின் கையசைவைப் போலவே மெதுவாக அந்தத் தீபம் அசைந்து கொண்டிருந்தது.

நிதானம்.

மிக நிதானம்.

அது தான் காந்தியின் இயல்பு. ஏன் அவர் இவ்வளவு நிதானமாக எதையும் அணுகுகிறார். பரபரப்பும் உணர்ச்சி வேகமும் தானே அரசியல். அதை ஏன் இப்படிக் கனிவுடன் அமைதியுடன் அணுகினார்.

அந்த நெருப்பை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது காந்தியின் குரல் அடிமனதிலிருந்து ஒலித்தது

“பட்டாபிராமன். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகப்பொறுப்பு இருக்கிறது. அதை நான் நினைவுபடுத்து உனக்குச் சங்கடமாக இருந்தாலும் உன் பொறுப்புகளை நீ சரியாகச் செய்திருக்கிறாயா என உன்னிடமே கேட்டுக் கொள்.. பட்டாபி.. நான் இன்னும் பத்தாண்டுகள் இருந்திருந்தால் பிரிந்த இந்தியாவை ஒன்று சேர்ந்திருப்பேன். இப்போது நீ செய்ய வேண்டிய வேலையும் அது தான். “

பட்டாபிராமன் கண்களை மூடியபடியே. மனதிற்குள்ளாகவே காந்தியோடு பேசிக் கொண்டிருந்தார்.

யாரோ பின்னாலிருந்து இடித்து விலகிப் போகும்படி சொன்னார்கள். மனதில் பீறிட்ட சொற்கள் நீருக்குள் மறைந்து போகும் மீன்களெனச் சட்டென மறைந்து போயின.

ராஜ்காட்டை விட்டுக் காரில் வெளியே வந்த போது கழுகுகள் யமுனை ஆற்றின் கரையை வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். கழுகுகள் எப்போதும் டெல்லியை சுற்றிக் கொண்டு தானிருக்கின்றன.

பாவமன்னிப்பு கேட்டு திரும்பும் மனிதனைப் போலப் பட்டாபிராமன் உணர்ந்தார். அவரது மனதில் இப்போது சுமை இறங்கியிருந்தது.

காலார நடந்து புத்தகக்கடையைத் தேடினார். உணவகங்கள். ஐஸ்கீரிம் கடைகள், துணிக்கடைகள். செருப்புகடைகள் இருந்தன. புத்தகக் கடை எதையும் காணமுடியவில்லை.

கடைசியாகச் சிறிய புத்தகக் கடை கண்ணில்பட்டது. அதனுள் ஒரு வயதானவர் முக்காலி ஒன்றில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பட்டாபிராமனைக் கண்டவுடன் “என்ன புத்தகம் வேண்டும்“ எனக்கேட்டார்

“சும்மா பார்க்கிறேன“ என்றார் பட்டாபிராமன்.

.கடையாள் திரும்பவும் முக்காலியில் உட்கார்ந்து கொண்டார். கடையில் பெருமளவு துப்பறியும் நாவல்கள். பொழுதுபோக்குப் புத்தகங்களே இருந்தன. அதற்கிடையில் கபீரின் கவிதைகள் தொகுப்பு ஒன்று கண்ணில்பட்டது. கபீர் தாசை படிக்க வேண்டியது தான் என அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

கார் வரை நடந்து போய்க் காரில் உட்கார்ந்து லைட்டைப் போட்டுபுத்தகத்தைப் புரட்டினார்

“சிவுன்டி சாவல் லே சலி, பிச் மே மில் கயி தால்

கஹை கபீர் தோ ந மிலை, இக்லே தூஜி டால்“

அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு எனக் கபீர் எச்சரிக்கிறார்.

அந்த எறும்பை போலதான் தானும் இருக்கிறேனா, எறும்பாவது கண்ணில்பட்ட இரண்டை தூக்கிச் செல்லப்பார்க்கிறது. தான் இருபதைத் தூக்கிக் கொண்டு போக முயன்று தோற்றிருக்கிறேன். என்று உணர்ந்தார்.

அந்த எண்ணம் வந்தவுடன் மனது தண்ணீரில் ஊறிக்கிடந்த கம்பளி போலக் கனமாகியது. கார் பார்க்கிங் ஏரியாவை நோக்கி மெதுவாக நடந்தார்.

காந்தி சமாதியை நோக்கி ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதிலிருந்த மாணவர்கள் உற்சாகமாகச் சப்தமிட்டார்கள். அவர்களைக் கண்ட பட்டாபி ஏதோவொரு உணர்ச்சிவேகத்தில் தானும் சந்தோஷக் குரல் எழுப்பினார். சாலையில் நின்றிருந்த கான்ஸ்டபிள் வியப்போடு பட்டாபியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2021 00:14

November 5, 2021

தாகூரின் குரலில்

இந்தியாவின் தேசிய கீதத்தை மகாகவி தாகூர் பாடும் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் எழுதிய தேசியகீதத்தை அவரே பாடிக் கேட்பது அபூர்வமான தருணம். தாகூர் மெய்மறந்து பாடும் அழகும் ஜெயகே என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்வதும் மனதைத் தொடுவதாக இருந்தது.

நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்களே ஜன கண மன சேர்ந்து பாட வேண்டும். வெறுமனே உதடு அசைத்தால் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார். ஆகவே மாணவர்கள் தேசியகீதத்தை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள்.

பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டும் மாணவிகள் மேடையில் நின்று தேசியகீதம் பாடுவார்கள். அவர்கள் பாடும் போது உணர்ச்சிவேகம் கூடுதலாக வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

இன்று பெரும்பான்மை பள்ளிகளில் ஒலிப்பதிவு செய்து வைக்கபட்ட தேசியகீதமே ஒலிக்கிறது. மாணவர்கள் வெறுமனே நின்று கொண்டிருக்கிறார்கள். தனியே ஜனகணமன பாடச்சொன்னால் பலருக்கும் பாடலின் வரிகள் தெரியாது. பாடலின் பொருளோ, பாடல் தேசியகீதமாக தேர்வு செய்யப்பட்ட வரலாறோ எதுவும் தெரியாது.

தாகூர் இதை எப்படிப் பாடியிருப்பார் என்று யோசித்திருக்கிறேன். இன்று இந்தக் காணொளி மூலம் நெடுநாளைய ஆசை நிறைவேறியிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2021 23:50

துயிலின் ரகசியங்கள்

புரவி நவம்பர் இதழில் வெளியான நேர்காணல்

நேர்காணல் செய்தவர் : கமலதேவி

1.நோய்மை என்பது வாதையா, மீட்சியா என்ற கேள்வி நாவல் முழுக்கச் சுழன்று வருகிறது. வாதை என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது எவ்வகையில் மீட்சியாக வாய்ப்புள்ளது?

நோய் உடலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் அது நிறைய மாற்றங்களை மனதளவில் கொண்டு வருகிறது. நோயுற்ற தருணங்களில் நாம் வயதை இழந்து விடுகிறோம். பிறரது அன்பிற்காக ஏங்குகிறோம். நோயுறும் போதெல்லாம் கடந்தகாலத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம். நோயிலிருந்து நலமடைந்தவுடன் சில முடிவுகளை எடுத்துக் கொள்கிறோம். அது எளிய உடற்பயிற்சியாகவும் இருக்கலாம். உறவில் யாரை எங்கே எப்படி வைக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும் என்பதுமாகவும் இருக்கலாம். அதைத் தான் மீட்சி என்கிறேன். காய்ச்சலில் இருந்து விடுபட்டவுடனே உணவிற்குப் புதுருசி உருவாகிவிடுகிறதில்லையா. அது போன்றதே இந்த மீட்சி.

2.நாவலில் ஏலன் பவர், பாதிரி லாகோம்பையிடம் கேட்பது போல நோய்மையைப் பாவபுண்ணியங்களுடன் இணைத்தது என்பது நடைமுறையில் சோர்வளிக்கக்கூடியதாக இருக்கிறது. நமக்கு அப்படி ஒரு மரபு இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலகில் எல்லாச் சமயங்களும் நோய் தீர்ப்பதைத் தனது அங்கமாகக் கொணடிருக்கின்றன. அறிவியலின் வருகைக்கு முன்பு வரை கோவில்கள். தேவாலயங்கள் தர்காகள் தான் நோயாளிகளின் புகலிடம். மதம் மருத்துவத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அன்று நோய் என்பதைக் கடவுளின் சாபமாகப் புரிந்து கொண்டிருந்தார்கள். அறிவியலின் வருகை சமயத்திலிருந்து மருத்துவத்தை விலக்கியது. தனித்த அறிவுத்துறையாக மாற்றியது. தற்போது இந்த இரண்டுக்கும் நடுவில் ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. போப்பாக இருந்தாலும் உடல் நலமில்லை என்றால் மருத்துவரை அழைக்கிறார் தானே. இந்திய மருத்துவத்திற்கு நீண்ட பராம்பரியமிருக்கிறது. அது இன்று நவீனமயமாக்கபட்டிருக்கிறது. அதே நேரம் பராம்பரிய மருத்துவமுறைகளை ஆங்கில மருத்துவம் நிராகரிப்பதையும் கேலிசெய்வதையும் காண முடிகிறது. நலமடைதல் என்பது மருத்துவம் சமூகம் இரண்டும் இணைந்து செய்ய வேண்டிய பணி.

3.நாவலில் துயில்தரும் மாதாவை தேடி எண்ணிலடங்காத ரோகிகள் வந்தபடியே இருக்கிறார்கள். துயில் என்பதை உறக்கம் மற்றும் இறப்பை வேண்டிவருபவர்களா?

துயில் என்பது தற்காலிக மரணம். அதிலிருந்து நீங்கள் குறிப்பிட்ட காலஅளவில் விடுபட்டுவிடுவீர்கள். மனிதர்களைப் போலவே உலகிற்கும் துயில் தேவைப்படுகிறது. அது ஒரு ஒய்வு நிலை. விழிப்புற்றவுடன் நீங்கள் புத்துணர்வு கொள்கிறீர்கள். ஆழ்ந்த துயில் என்பது பூரண ஆரோக்கியத்தின் அடையாளம். துயிலின் வழியே உடல் தன்னைத் தானே நலப்படுத்திக் கொள்ளும். அதை நாடியே அவர்கள் துயில்தரு மாதா கோவிலுக்கு வருகிறார்கள். பண்டைய தமிழில், தூங்குதல், தூக்கம் போன்ற சொற்கள் உறக்கம் என்ற பொருளில் பயன்படுத்தபடவில்லை. நித்திரை என்பது வடமொழிச் சொல். நான் சங்க இலக்கியத்திலிருந்தே துயில் என்ற சொல்லை தேர்வு செய்தேன்.

4.சிறுவனான அழகரிலிருந்து, பாலியல்தொழிலாளியான ஜிக்கி வரை பசியும்,காமமும்,அச்சமும் அவர்களுக்குக் குடும்பமும், சமூகமும் அளிக்கும் தீராத நோயாக உள்ளது. இந்த ஆதிஉணர்வுகளுக்கு மாற்றுத் தேடித்தான் விவசாயமும்,கூட்டுவாழ்க்கையும் உருவாகியிருக்குமா?

அப்படி நினைக்கவில்லை. உலகில் முதல் மனிதன் உருவான நாளில் இருந்து இன்று வரை பசியும் காமமும் அச்சமும் தீராத பிரச்சனையாகத் தான் இருக்கின்றன. இதை ஒரு சமூகம் எப்படி அணுகுகிறது. புரிந்து கொள்கிறது. வழிகாட்டுகிறது என்பதில் தான் மாற்றங்கள் உருவாகின்றன. பண்பாடு இவற்றை ஒழுக்கவிதியாக மாற்றிவிடுகிறது. அதை மீறும் போது தண்டனை அளிக்கிறது. விவசாய வாழ்க்கையில் மனிதன் செல்வத்தைச் சேகரிக்க ஆரம்பித்தான். கால்நடைகளைப் பெருக்கிக் கொண்டான். அதனால் ஒரு சிலர் செல்வந்தர்கள் ஆனார்கள். ஆனால் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு இன்றி நோயில் மடிந்தார்கள். வறுமையை ஒரு நோயாகச் சமூகம் மாற்றிவிட்டது. அதிலிருந்து விடுபட முடியாதபடியான ஒடுக்குமுறையை அதிகாரம் தொடர்ந்து செலுத்தி வருகிறது. நோயை நாவலில் ஒரு குறியீடாகவும் சொல்லியிருக்கிறேன்.

5.உவர்ப்பு நீரில் கிடக்கும் கடற்கன்னிஎன்ற படிமம் நாவல் முழுக்க வரும் அனைத்துப் பெண்களுக்கானதாகத் தோன்றுகிறது. நம் சமூகம் பெண்ணை நடத்தும் விதமே ஒரு நோய்க்கூறான மனநிலைதான் இல்லையா?

கடற்கன்னி என்ற படிமம் பன்முகத்தன்மை கொண்டது. ஒருவிதத்தில் அது சமூகம் பெண்ணை நடத்தும் அடையாளமாகவும் கொள்ளலாம்.

6.கொண்டலு அக்கா கதாபாத்திரத்திற்கான அடிநாதமாக இருந்த நபரோ, நிகழ்வோ உண்டா?

அப்படியாருமில்லை. கற்பனையாகத் தான் உருவாக்கினேன்.

7.தனிமனிதன் என்ற சிறுஅலகும்,உலகமயம் என்ற பேரலகும் முறுக்கி நிற்கும் நடப்புக் காலத்தில் மனிதன் உணரும் பாதுகாப்பின்மை நோயாக மாறிக்கொண்டிருக்கிறது. நாம் காட்டில் வாழ்ந்த அந்தத் தனிமைக்கு, அச்சத்திற்கு,எச்சரிக்கைக்கு மீண்டும் திருப்புகிறோமா?

காட்டில் வாழ்ந்த வாழ்க்கை யாருக்கு அச்சமானது. நிலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தான். உழைப்பிலிருந்து விலகி வரவர உடல் நோயுறத் துவங்குகிறது. உடலைப் பராமரிப்பதில் அக்கறை கொள்ளாத சமூகமும், பண்பாடும் இன்று உருவாகிவிட்டது. இதற்கு முக்கியக் காரணம் நுகர்வு கலாச்சாரம். நிறைய நோய்களை நாம் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. உடல் ரீதியான நோய்களை விடவும் மனரீதியான நோய்கள் அதிகமாகிவிட்டன. அதன் பாதிப்பை குழந்தைகள் துவங்கி வயதானவர்கள் வரை காணமுடிகிறது. நோயைப் பற்றிய அச்சத்தை உருவாக்கியதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இந்தப் பெருந்தொற்று பற்றி வெளியான வாட்ஸ்செய்திகளே உதாரணம்.

8.இந்த உலகின் மீளவேமுடியாத நோய் நிர்கதி தான்என்று நாவலில் கொண்டலுஅக்கா சொல்வாள். நிர்கதியின்மையை நாம் நம் சகமனிதருக்குத் தரமுடிந்தது தானே. ஏன் நமக்கு நம்மீதே இத்தனை நம்பிக்கையிழப்பு. இது இந்தக் காலகட்டத்தின் மனநிலையா? இல்லை இது எப்போதும் மனிதகுலம் சந்தித்துக்கொண்டிருக்கும் இயல்பான நிலைதானா? இதிலிருந்து சற்றேனும் மீள்வதற்கான வழிகள்

ஒரு மனிதன் நிர்கதியை உணரும் போது உலகின் மீது நம்பிக்கையற்றவனாகி விடுகிறான். தன்னை ஏன் உலகம் கைவிட்டது என்று வருந்துகிறான். போக்கிடம் தேடியோ, மீட்சி தேடியோ அலையத் துவங்குகிறான். நிர்கதியுற்ற மனிதனை புரிந்து கொள்ளவும் அவனது குரலை உலகின் செவியில் கேட்க வைக்கவும் இலக்கியம் முயற்சிக்கிறது. மனிதன் வெறும் நிழலில்லை. அவனுக்கு உடலும் மனமும் உண்டு.  போரும், வன்முறையும் துவேசங்களும் மனிதனை வேட்டையாடிக் கொண்டேயிருக்கும் சூழலில் இதனால் பாதிக்கபடும் மனிதனுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது. அதைத் தான் தீவிர இலக்கியங்கள் முயற்சிக்கின்றன.

9. நன்மை , தீமைக்கும் , நோய் என்ற மூன்றையும் நாம் ஏன் தொடர்புபடுத்திக்கொள்கிறோம் ?

மதமும் பண்பாடும் தான் இந்தத் தொடர்பை ஏற்படுத்தியது. தீமை செய்தவன் ஒரு நாள் மோசமாக நோயுறுவான் என்ற நம்பிக்கை எல்லாத் தேசங்களிலும் இருக்கிறது. கொள்ளை நோய் போன்ற பெரும் நோய்கள் பாவத்தின் காரணமாக உருவாகின்றன என்கிறது மதம் ஆனால் உண்மையில் இதன் காரணங்கள் ஆழமாக வேர்விட்டிருக்கின்றன. சமூகக்காரணிகளை மறைத்துக் கொள்ள இது ஒரு உபாயம்.

எது நன்மை எது தீமை என்ற வரையறையை விட எது யாருக்கு நன்மை, யாருக்குத் தீமை என்றதாக இன்று கேள்வி திரும்பியிருக்கிறது. சாக்ரடீஸ் காலம் தொட்டு இனறு வரை பலரும் நன்மை தீமைகளை வரையறை செய்ய முயன்று கடைசியில் தோற்றுப் போயிருக்கிறார்கள். . ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நோயுடன் அதைத் தொடர்பு படுத்துவது மாறவேயில்லை. வேடிக்கை என்னவென்றால் மருத்துவர்களில் பலரும் இதை நம்புகிறார்கள் என்பதே.

10.தனிமை நோயாகுமா? நம் முன்னோர்கள் அதைக் கண்டடைதல் மற்றும் அமைதிக்கான பாதையாகவே பார்த்தார்கள். நாம் இயற்கையை விட்டு வெகுவாக விலகிவந்து விட்டதால் தனிமை நோயாகிவிட்டதா? நாவலில் ஒருரோகிக்கு கிடைக்கும் சேவல் ஒன்று அவன் வலியை குறைத்துவிடும்? நாம் இப்படியான ஆறுதல்களை விலகி வந்துவிட்டதால் தான் தனிமை பெருநோயாகிவிட்டதா? இதனால் வன்முறை அதிகமாகிறதா?

தனிமை என்பது நீங்கள் பிறந்தது முதல் இறப்பு வரை எப்போதும் தொடரக்கூடிய நிரந்தர நிலை. இதை ஏன் வெறுக்க வேண்டும். அஞ்ச வேண்டும். தனித்திருத்தல் என்பதும் கூடியிருந்தல் என்பது உறவுநிலைகள் மட்டுமே. தனித்திருக்கப் பயப்படுகிறவன் தனிமையைக் கண்டு பயப்படுவதாகச் சொல்கிறான். அது வேறு இதுவேறு. ஆயிரம் பேர்கள் உடனிருந்தாலும் உங்களைப் போல நீங்கள் ஒருவர் தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு நகல் கிடையாதே. நான் அதையே தனிமையாக சொல்கிறேன்.

நம்மோடு உரையாடவும் உறவாடவும் இன்னொரு நபரோ, நிறைய மனிதர்களோ தேவைப்படுகிறார்கள். அது கிடைக்காத போது வருத்தமடைகிறோம். உண்மையில் நாம் ஒரு போதும் தனித்திருக்க இயலவே இயலாது. நம்மைச் சுற்றி இயற்கையின் பேருலகம் நம்மை அரவணைத்துக் கொண்டு சதா இயங்கிக் கொண்டிருக்கிறது. கடலில் வசிக்கும் மீன் தான் தனியாக இருப்பது போல உணர்வது போன்றது தான் நாம் பேசுவதும். பேச்சுத்துணை, வாழ்க்கை துணை. அறிவுத்துணை எனப் பல்வேறு துணைகள் ஒரு மனிதனுககு தேவைப்படுகிறது. அது கிடைக்காத போது தான் ஏங்கத்துவங்குகிறான். இந்த ஏக்கம் நாளடைவில் தீராத மனக்குறையாகிவிடுகிறது.

11.உங்களின் அனைத்துப்படைப்புகளிலும் வெயில் அதன் பேசுபொருளின் அகமாய் விரிகிறது. இந்தநாவலில் நோய்மையின் வேதனையாக, வலியாக, வாதையாக வெளிப்படும் வெயில் வாசிப்பவரை தொந்தரவுக்குள்ளாக்குகிறது. உங்கள் எழுத்திற்கு வெயில் தீர்ந்து போகாத அட்சயப்பாத்திரம் போன்றது இல்லையா

நான் வெயில் குடித்து வளர்ந்தவன். வெயில் என் ரத்தஅணுக்களுக்குள் கரைந்திருக்கிறது. வேண்டும் என்றோ, அழகிற்காகவே வெயிலை எழுதுவதில்லை. சில தாவரங்கள் வெயில் கொண்ட நிலத்தில் மட்டும் தான் வாழ முடியும். நான் அப்படியான ஒருவன். என் எழுத்தில் வெயில் தான் முடிவற்று ஒடும் நதி.

12.வெயில் மனிதர்களின் அகத்தைக் கூறும் புறமாக நாவல் முழுவதும் காய்வதை வாசிக்கும் போது நாவலின் களம் சங்கஇலக்கியத்தின் பாலை சுரமாகத் தோன்றியது. தன்மக்களுக்காகக் கொற்றவை சாந்தம் கொண்டு துயில் தரும் மாதாவாக அருள எழுந்து வருகிறாள்கொண்டலுஅக்காவாகச் சேவை செய்ய வழியோரம் காத்திருக்கிறாள். நம் சங்கஇலக்கியத்தின் பாலைத்திணையின் நீட்சியாக இந்த நாவலை வாசிக்க முடிகிறது. நாவல்களத்தைக் குறிஞ்சியும் முல்லையும் சற்றே திரிந்த பாலையாக எடுத்துக்கொள்ளலாமா ?

இது உங்கள் வாசிப்பின் வெளிப்பாடு. நிலத்தின் கதையை எழுத முற்படும் போது மரபின் தொடர்ச்சி வெளிப்படுவது இயல்பு தானே.

13.அந்த மனிதர்களின் இயல்பும் புரிந்துகொள்ள மிகக்கடினமானதாக இருக்கிறது. அழகர் தன் பதின்வயதில் முதன்முதலாகப் பார்க்கும் நிர்வாண பெண்உடலை போர்த்திவிடத்தோன்றும் அவன் மனதின் ஈரமும்,பெண்உடலை அவனுக்கு அறிமுகமாக்கும் ஒருத்தியே அவன்மீது அன்னையின் வாஞ்சையுடன் இருப்பதும் என்று நாவல்முழுக்க மனிதஇயல்புகளும் புரிதலுக்குச் சிக்காததாகவே உள்ளது

மனித இயல்புகளை எவராலும் வரையறை செய்துவிட முடியாது. காமமும் பசியும் மனிதனை எந்த இழிநிலைக்கும் கொண்டு செல்லும். இந்த இரண்டும் விரும்பி அளிக்கபட வேண்டும் என மனிதன் விரும்புகிறான். இதில் ஏற்படும் நிராகரிப்பு. அலைக்கழிப்பு, ஏமாற்றங்களை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆழமான கசப்புணர்வும் கோபமும் கொண்டு எதிர்நிலை கொள்கிறான். அது குற்றமாக உருமாறுகிறது. வாழ்க்கை தேவைகள் அழகரை வழிநடத்துகின்றன. இயல்பில் அவன் உணர்ச்சிபூர்வமானவன். அவன் தன்னை உணரும் போது நாவல் முடிந்துவிடுகிறது. ரயிலுக்காக அவன் காத்திருப்பதில் துவங்கி ரயில் அவனை நோக்கி வருவதில் நாவல் நிறைவுபெறுகிறது. அழகரை போன்று தான் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள்.

14.ஏன் இப்படி ஓரிடத்தில் நிலைக்கமுடியாது வெயிலைப்போல அலைந்து திரியும் வாழ்க்கைஇந்த மனநிலைகள் எல்லாம் அந்தக் கொற்றவையின் வரண்ட மண் உருவாக்குவது தானேமண்தான் மனித இயல்புகளை நிர்ணயிப்பதாக நினைக்கிறீர்களா? பாலைநிலத்து தாவரங்களைப்போலக் கிளைகளை மறுத்து, இலைகளை முட்களாக்கிக் கொள்ளும் வாழ்க்கை

மண் தான் மனிதனை உருவாக்கிறது. எளிய வாசகமாக இருந்தாலும் அது தான் உண்மை. பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கும் இது பொருந்தும். ஊரின் இயல்பும் வேகமும் ஆசைகளும் மனிதர்களின் மீதும் படிந்துவிடுகிறது. மனிதர்கள் காற்றிலும் வேர்விட்டு வளரக்கூடிய தாவரம் போன்றவர்கள். எந்தச் சூழலிலும் அவர்களால் வாழ முடியும். அவர்களை வழிநடத்துவது கனவுகள் மற்றும் ஆசைகள். ஆசைகளின் பட்டியல் முடிவற்றது. ஆசைக்கும் அதை அடைவதற்குமான வழிகள் எளிதானதில்லை. இந்தப் போராட்டத்தில் ஒருவன் நிறைய இழக்கிறான். குறைவான மகிழ்ச்சி அடைகிறறான். இந்த நாவல் பல்வகை ஆசைகளையும் அதனால் ஏற்பட்ட வீழ்ச்சியினையும் பேசுகிறது. உலகியல் செயல்களுக்கும் நோய்களுக்குமான உறவை பேசுகிறது. மருத்துவமனைகளின் தோற்றம் பற்றி எழுதும் போது பூக்கோ மருத்துவரின் வீடும் மருத்துவமனையும் தனித்தனியாக மாறிய பிறகு அது வணிகமாகத் துவங்கிவிட்டது என்கிறார். மருத்துவத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவர் பணமுதலீடு செய்து இன்று மருத்துவமனை நடத்த முடியும். காரணம் அது ஒரு வணிகமாகக் கருதப்படுகிறது. மருத்துவம் இப்படி மாறியிருப்பது அபாயகரமானது.

15 எஸ்.ராவும் கூட அந்த மண்ணில் அவர்களுடனிருந்து கொண்டலுவாக,ஏலனாகக் கனிந்ததுதான் துயிலாக மாறியிருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த உணர்தலை பகிர முடியுமா?

ஒரு எழுத்தாளனாகத் துயில் எழுதி முடிக்கும்வரை ரோகிகளில் ஒருவனாக நானும் தெக்கோடை நோக்கிச் சென்றேன். துயில்தரு மாதாவை தரிசனம் செய்தேன். நாவலில் நான்கு வகையான பெண் அடையாளப்படுத்தபடுகிறார். ஒன்று புனிதமான துயில்தரு மாதா. இரண்டாவது கொண்டலு அக்கா என்ற அன்னையின் வடிவம். மூன்றாவது கடற்கன்னி என்ற மனைவியின் வடிவம். நான்காவது ஆலன் பவர் என்ற மகளின் வடிவம். அவள் எங்கோ பிறந்து இங்கே வந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்கிறாள். இந்த நான்கு பெண்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இன்னொரு பக்கம் ரோகிகள். அவர்கள் வலியோடு போராடுகிறார்கள். கடந்தகாலத்தின் நினைவுகளுடன் அலையாடுகிறார்கள். நோயை விடவும் உலகத்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என்பத அவர்களை அதிகம் வேதனைப்படுத்துகிறது.

16.நாவலை முதன்முறை வாசித்துமுடிக்கும்வரை என் பொதுபுத்தி இடையில் நின்று மறுதலித்துக் கொண்டே இருந்தது. நாவலை வாசித்துமுடிக்கும் போது என்னை அறியாமலேயே அந்தக் கரடுமுரடான இயல்புகள் மேல் இருந்த பார்வை கனிந்திருந்ததைப் பதட்டத்துடன் உணர்ந்தேன்தவறுகள்,குற்றங்கள் என்று கறாராக நமக்குக் கற்பிக்கப்பட்டவைகளை என்புத்தி மறுபரிசீலனை செய்யத்தொடங்கியது. குற்றங்கள் பின்உள்ள ஆதாரங்களை நாவல் நமக்குப் புரிய வைப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. எஸ்.ராவின் எழுத்தின் அடிநாதமாக இதைக் கொள்ளலாமா?

நோயை விடவும் அதைப்பற்றிய அச்சத்தால் நாம் அதிகம் பீடிக்கப்பட்டிருக்கிறோம். நோய் வந்துவிடுமோ எனப் பயந்து எதையெதையோ செய்கிறோம். நோயிற்குச் சிகிட்சை எடுக்கும் போதும் மருத்துவரிடம் நம்பிக்கை வருவதில்லை. புதிது புதிதாக மருத்துவர்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறோம். நோயிலிருந்து உடனே விடுபட வேண்டும் என்று துடிக்கிறோம். இந்த நாவல் அந்த மனத்தடைகளைக் கேள்வி கேட்கிறது. மருத்துவர்கள் உடலை ஆய்வு செய்வது போல நிதானமாக, கவனமாக அக்கறையுடன் புரிதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

17. நிலம் மாறுபாடுகளை உருவாக்க கூடியதா , ஏதோ ஒருதன்மையில் எந்த நிலமும் வாழ்வளிப்பதாகவே உள்ளது என்பதுதான் நிலத்தின் ஆதாரத்தன்மை இல்லையா ?

அந்தக் காலத்தில் காசநோய் கொண்டவர்களுக்கு இதமான சூழல் கொண்ட ஊர்களுக்குப் போய் ஒய்வெடுக்கச் சொல்வார்கள். ஆன்டன் செகாவ் காசநோயோடு போராடிய போது பேடன்பேடன் என்ற சுகவாசஸ்தலம் ஒன்றில் தங்கி சிகிட்சை பெற்றிருக்கிறார். இப்படி நிலம் மாறும் நோய் குறிகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும் என்பது பொதுவான நம்பிக்கை. உண்மையும் கூட. புதிய நிலவெளியில் வாழ முற்படுகிறவர்களில் சிலர் தான் அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். உடலும் ஒத்துப்போகிறது. பலருக்கு அது ஒவ்வாமை தான். குளிர்ச்சியான இடங்களைத் தேடி வெள்ளைக்காரர்கள் ஒடியது இப்படித் தானே. நிலத்தை இன்றைய மனிதன் புரிந்து கொள்ளவில்லை. அதன் குரலுக்கு இடமேயில்லை. நிலம் தான் கனியாகிறது. மலராகிறது. தானியமாகிறது. இதை மனிதர்கள் உபயோகப் பொருளாக மட்டுமே நினைக்கிறார்கள். இயற்கையின் கருணையை, அன்பை புரிந்து கொள்ளாத சமூகம் பேரிழப்பை சந்திக்கும் என்பதே வரலாறு.

18.இத்தனை கடும்சுரத்தின் நடுவே ஒருவர், பெயர் ஊர் எதுவும் தெரியாத ஒரு பெண்ணிற்காக வாழ்நாளின் வயோதிகம் வரை அவள் நோயின்றி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக வருகிறார்நோய்மைகளில் நிறைவான நோயாக இருக்கிறதே என்று தோன்றியது. மனிதர்களின் விசித்திரங்கள் முடிவே இல்லாதவை இல்லையா?

இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமாக மனிதர்கள் வசிக்கிறார்கள் என்றால் நூறு கோடிக்கும் மேலான விசித்திரங்கள் இருக்கின்றன என்றே அர்த்தம்

மனித விசித்திரங்களால் உருவாகும் நெருக்கடிகளும் பாதிப்புகளும் நினைத்துப் பார்க்க முடியாதவை. சிலர் வயதாக வயதாகக் கனிந்துவிடுகிறார்கள். சிலர் மூர்க்கமாகியும் விடுகிறார்கள். இந்த நாவலை வாசித்த ஒரு மனநல மருத்துவர் இதன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்ன வகையான மனநலப்பிரச்சைன உள்ளது. அதற்கு என்ன மருந்து என ஒரு பட்டியல் அனுப்பி வைத்திருந்தார். எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. நான் எழுதி மனித விசித்திரங்களைப் பற்றி மட்டுமே.

19. விருப்பு , வெறுப்பு , அச்சம் , கோபம் , தாபம் , காமம் , பணம் மனித உணர்வுகள் அனைத்துமே நோயாகும் வாய்ப்புள்ளவை என்று நாவல் உணர்த்துகிறதே ?

அடக்கிவைக்கபட்ட எல்லா உணர்ச்சிகளும் ஒருவகையில் நோயாக வெளிப்படுகின்றன. உரையாடலும் கூடி மகிழ்வதும். ஆடிப்பாடுவதும் சேர்ந்து பயணிப்பதும், சுதந்திரமாக விரும்பியதை அனுபவிப்பதும் இதற்கான வடிகாலாகக் கருதப்பட்டன. பொருளியல் தேடலில் இன்று அதிகம் அடிப்படை உணர்வுகள் ஒடுக்கபடுகின்றன. தான் சுதந்திரமாக நடத்தப்படவில்லை என்ற உணர்வு பலருக்கும் இருக்கிறது. ஒடுக்கப்படுதல் எல்லா நிலைகளிலும் நடைபெறுகிறது. அது போலவே வேலைப்பளு, அதிகார துஷ்பிரயோகம். பணத்தாசை, பேராசை இவை மனிதரிகளின் உடலையும் மனதையும் மோசமாகப் பாதிக்கிறது. வீழ்ச்சியுற்ற ஒவ்வொரு மனிதனும் சொல்வதற்கு நிறையக் கதைகள் வைத்திருக்கிறான். அதைத் தான் இந்த நாவலில் காணுகிறோம்.

20. குரூரம் என்பதை வாழ்வின் நடைமுறையாக மாற்றி வைத்திருக்கிறது இயற்கை என்று நாவலில் வரும் இடத்தை முக்கியமாக நினைக்கிறேன். இப்படியாக இருக்கும் போது மனிதர்கள் மேல் அவனுடைய செய்கைகளுக்கான பழியை முழுவதுமாகச் சுமத்த முடியாது என்றே தோன்றுகிறது

இயற்கை எப்போதும் கனிவானதில்லை. அது மூர்க்கமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். ரம்மியமான கடலில் தான் சுனாமி தோன்றுகிறது. அமைதியான பூமி தான் பூகம்பத்தில் மனிதர்களை வாறி விழுங்குகிறது. இயற்கை வளங்களை நாம் சூறையாடுகிறோம். சமயத்தில் அதுவும் நம்மைச் சூறையாடிவிடுகிறது. இயற்கையைப் புரிந்து கொள்வது காலம் காலமாக மனிதர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி. இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தும் அதில் மனிதன் முழுமையாக வெற்றி கொள்ளவில்லை. இயற்கையின் புதிர்தன்மையில் கொஞ்சம் விலகி இருக்கிறது அவ்வளவு தான். இந்த நூற்றாண்டில் இயற்கை அழிக்கப்பட்டது போல உலகில் எப்போதும் அழிக்கப்பட்டதில்லை. இதன் விளைவுகளைத் தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம்.

21. சகிப்புத்தன்மை , காத்திருப்பு என்பது இயற்கையின் மாறாத செயல். அதையே இந்த மண்ணின் மக்கள் தங்கள் இயல்புகளாகக் கொண்டுள்ளதாக நாவல் சொல்கிறது. நாவல் நெடுக இந்த ஆதாரம் தான் அவர்கள் பிழைத்திருப்பதற்கான வலிமையாகக் கொள்ளலாமா ?

உண்மை தான். விவசாயிகளைப் போலக் காத்திருப்பவர்களைக் காணவே முடியாது. அவர்களுக்கு எதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அது போலவே எளிய மனிதர்கள் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கலைப் பெரிதாக்குவதில்லை. விட்டுக் கொடுக்கிறார்கள். சகித்துக் கொள்கிறார்கள். அல்லது ஒதுங்கிக் கொள்கிறார்கள். இன்று எதற்காக இவ்வளவு பரபரப்பான வாழ்க்கையை மேற்கொள்கிறோம் என எவருக்கும் தெரியவில்லை. பாஸ்ட்பார்வேடில் சினிமா பார்ப்பது போல உள்ளது. கொஞ்சம் நிதானமாக, அமைதியாக, எளிமையாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் திண்டாடுகிறார்கள். இந்த வேகம் பரபரப்புப் பேராசை உங்களை எங்கே கொண்டு செல்லும் என்பதைத் துயிலில் காணலாம்

இந்த நாவலில் மூன்று வகை மருத்துவத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் . மதமும் மருத்துவமும் பற்றி நீண்ட விவாதமும் நடக்கிறது. விந்தையும் யதார்த்தமும் ஒன்று கலந்திருக்கிறது. ஒரு நாவல் என்பது என்வரையில் கதையை மட்டும் சொல்வதற்கான வடிவமில்லை. கதையின் வழியே பல்வேறு விஷயங்களைப் பேசவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது. அதைத் தான் துயில் செய்துள்ளதாக நினைக்கிறேன்.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2021 01:04

November 3, 2021

பனித்துளிகளைச் சேகரிப்பவள்.

இலக்கியத்தில் பதிவான சில சித்திரங்களை வாழ்நாளில் நாம் மறக்கமுடியாது. முதன்முறையாக வாசிக்கும் போது அடைந்த சந்தோஷத்தை இன்று வாசிக்கும் போதும் அந்த வரிகள் தருகின்றன.

பனித்துளிகளைச் சேகரித்து வந்து அந்தப் பனிநீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் அழகி ஆகிவிடுவாள் என நினைத்து ஒரு பேதைப் பெண் பனித்துளிகளைச் சேகரிக்கச் செல்லும் பாஸீ அலீயெவா Fazu Aliyeva நாவலில் வரும் அந்தக் காட்சி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது.

இவ்வளவு அழகான ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்த பூ. சோமசுந்தரம் மிகுந்த பாராட்டிற்குரியவர்.

ஏன் இந்த நாவலைத் தமிழ் இலக்கிய உலகம் கொண்டாடவில்லை. கவனப்படுத்தவேயில்லை. நான் நாலைந்து முறை இந்நாவலைப் பற்றி எழுதியிருக்கிறேன். இளம்படைப்பாளிகள் இதை அவசியம் வாசிக்க வேண்டும். இந்நூல் தற்போது அச்சில் இல்லை என்கிறார்கள். ஒருவேளை நூலகத்தில் கிடைக்கக் கூடும்

வாசிக்கக் கிடைக்காத நூல்களைத் தேடி நானும் கோணங்கியும் எங்கெங்கோ சுற்றியிருக்கிறோம். நூலகத்திலே அமர்ந்து படிக்க மட்டுமே கிடைக்கும் என்ற சூழலில் நாட்கணக்கில் நூலகத்திற்குச் சென்று வாசித்திருக்கிறோம். இன்று வீடு தேடி புத்தகங்கள் வந்து சேருகின்றன. ஆனால் எதை வாசிப்பது. கிடைக்காத புத்தகங்களை எப்படிக் கண்டறிவது எனப் பலருக்கும் தெரியவில்லை.

பாஸீ அலீயெவா தாகெஸ்தானின் ஒரு மலைக் கிராமத்தில் பிறந்தவர், தனது 10-11 வயதில் தனது முதல் கவிதையை எழுதினார். அது பள்ளி நாளிதழில் வெளியானது. அன்றிலிருந்து அவள் கனவு காணத்துவங்கினாள். அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது. தானே அதைக் கற்றுக் கொண்டார்.

அவருக்குப் பிடித்தமான கலைஞர் யாரெனக் கேட்டபோது மைக்கேலேஞ்சலோ பதில் சொன்னார்.. அத்தோடு. என்றாவது ஒருநாள் இத்தாலிக்குச் சென்று, டேவிட் சிற்பத்தைப் பார்த்து, சிலையின் நரம்புகளில் உண்மையான ரத்தம் ஓடுகிறதா என்பதைக் கண்டறிய விரும்புவதாகச் சொன்னார்.

பின்னாளில் தனது எழுத்தில் அப்படியான அபூர்வமான மனிதர்களைச் சிருஷ்டித்து அழியாப்புகழ் பெற்றார் அலீயெவா

••••••

பாஸீ அலீயெவா

இதெல்லாம் தொடங்கியது 1948ம் ஆண்டு இளவேனில் காலத்துக் காலைப் பனித்துளிகளுடன்… எங்கள் அண்டை வீட்டுக் கிழவி ஹலீமாத் ஊசியில் நூல் கோத்துத் தரும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். அவளுக்கு இந்த உதவியை நான் எப்போதும் உவப்புடன் செய்வேன்.

இதற்குக் கைம்மாறாக அவள் அழகின் மர்மத்தை எனக்கு அறிவித்தாள் (எங்கள் வீட்டு வராந்தாவில் மேஜை மேல் பொருத்தப்பட்டிருந்த சிறு கண்ணாடியில் நான் முகம் பார்த்துக் கொள்வதை அவள் கவனித்திருக்க வேண்டும். அவள் சொன்ன இரகசியம் இது தான்: உராஷ் பைராம் பெருநாள் அன்று பல பல வென்று விடியும் போது ஒரு கன்னிப் பெண் புல் வெளிக்கு வந்து, தூய பீங்கான் கிண்ணத்தில் பனித்துளிகளைத் திரட்டிச் சேர்த்து, அந்தப் பனி நீரால் முகத்தைக் கழுவிக்கொண்டால் அவள் அழகி ஆகிவிடுவாள்.

இதைத் தெரிந்து கொண்ட பிறகு உராஸ் பைராம் பெருநாளுக்கு முந்திய இரவு என்னால் தூங்கவே முடியவில்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா? நான் விடை கொள்ளாமல் தவிப்பதைக் கண்டு அம்மா வியப்படைந்தாள். பல்வலி என்னைத் தொல்லைப்படுத்துவதாக அவளுக்குச் சமாதானம் கூறினேன்.

வானில் விண்மீன்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கியதுமே சிறு கிண்ணத்தை மறைத்து வைத்துக்கொண்டு வெளியேறி மலை நடுவை அடைந்தேன். என் கண்கள் கூசின. சுற்றிலும் அழகழகாகக் கணக்கற்ற பூக்கள்! ஒவ்வொன்றின் இதழ் மகுடத்திலும் ததும்பத் ததும்ப நிறைந்த பனிநீர். நெடுநேரம் அவற்றைக் கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மலர்கள் மேல் இரக்கம் உண்டாயிற்று. பனிநீரை நான் வடித்துக் கொண்டால் அவற்றின் வனப்பும் தளதளப்பும் குறைந்துவிடுமே என்று தயங்கினேன். ஆனால் என் வயது பெண்கள் எல்லோரையும் விட அழகி ஆகவேண்டும் என்ற விருப்பமே முடிவில் வென்றது.

நீல மலருக்கு முன் மண்டியிட்டு அதிலிருந்த பனிநீரை ஜாக்கிரதையாகக் கிண்ணத்தில் வடித்துக் கொண்டேன். திடீரென்று பக்கத்தில் பார்த்தேன். அங்கே இன்னும் பூச்செடி ஒன்று இருந்தது. ஆனால் அது கோணலாக வளர்ந்திருந்தது. அதன் அருகே, அது தழைக்கவிடாமல் தடுத்தவாறு நீட்டியிருந்தது ஒரு பெரியகல். அந்த மலர் மன வேதனையால் தலை கவிழ்ந்தது போலவும் பனிநீரை அல்ல, கண்ணீரைச் சிந்துவது போலவும் எனக்குத் தோன்றியது. கல்லைப் புரட்டி அகற்ற முயன்றேன், ஆனால் நான் முழுபலத்துடன் கல்லை ஆட்டி அசைத்துப் பெயர்த்து நகர்த்தினேன். அக்கணமே அது முன்பு கிடந்த இடத்தில் அப்பாடா என்று பெருமூச்சு விடுவது போன்ற ஓர் ஒலி எனக்குக் கேட்டது.

குபுக்’ ‘குபுக்’ கென்ற மெல்லிய சப்தம் உண்டாயிற்று. எழில் நிறைந்த இந்த உலகைக் கண்டு பரவசம் அடைந்த தெளிந்த விழி ஒன்று என்னை நோக்குவது போல் இருந்தது. துாயக் குளிர் நீர் மலையின் மார்பகத்தில் நந்து பொங்கி வந்தது. பறகு வரவர அதிகமாகக் களகளத்துக் கொண்டு சுரந்து பெருகியது புதிய மலை காற்று. இந்தக்காட்சியைக் கண்ணாறக் காண எனக்கு வாய்த்தது. நான் வீடு திரும்பியபோது சூரியன் உயரே வந்துவிட்டது.

மலையடிவாரத்தில் என் தாயாரைக் கண்டேன். வேறெரு சமயமாயிருந்தால் அம்மாவிடமிருந்து தக்கபடி செம்மையாகக் கிடைத்திருக்கும் எனக்கு. ஆனால் இப்போது புது ஊற்று பெருகத் தொடங்கிய செய்தியைத் தூரத்திலிருந்தே அவளுக்கு அறிவித்தேன்.

நீ என்ன வேண்டிக்கொண்டாய்?” என்று கத்தினாள் அம்மா.

“நான் என்ன வேண்டிக் கொண்டிருக்க வேண்டும்?”

“புதிய ஊற்று பொங்கத் தொடங்குவதைக் காண மிகுந்த அதிர்ஷ்டசாலிகளுக்குத் தான் வாய்க்கும் என்று நான் உன்னிடம் சொல்லவில்லையா? இப்படி வாய்ப்பது நிரம்ப அபூர்வம். புது ஊற்று பெருகுவதைக் காணப் பவன் ஏதேனும் வேண்டிக்கொண்டால் அவனுடைய வேண்டுதல் பலிக்கும். இந்த வாய்ப்பை நீ நழுவ விட்டாய். வா வேகமாகப் போவோம். அங்கே இன்னும் நேரம் கடந்துவிடவில்லையோ என்னவோ!”

அம்மாவின் அருகாக நடந்தவாறு நான் வழியில் சிந்தனை செய்தேன், என்ன வேண்டிக்கொள்வது என்று. எனக்கோ, எத்தனையோ ஆசைகள் இருந்தன. நான் அழகி ஆக வேண்டும், ஆய்ஷாத்திடம் இருப்பது போன்ற குஞ்சம் வைத்த நாகரிக நீல உடை எனக்கும் இருக்க வேண்டும், முந்தாநாள் நான் ஊற்றருகே உடைத்துவிட்ட குடத்தைப் பற்றி அம்மாவுக்குத் தெரியக்கூடாது என்று எத்தனையோ ஆசைகள். ஆனால் எல்லாவற்றையும் விடத் தீவிரமான, பெரிய ஆசை அப்பா வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும் என்பது தான். அம்மா ஊற்றருகே மண்டியிட்டு. மெலிந்த கைகளை வானை நோக்கி உயர்த்தியதும் நான் கிசுகிசுத்தேன்: “ஊற்றே. என் வேண்டுதல் பலிக்கச் செய்! என் தகப்பனார் வீட்டுக்குத் திரும்பி வரட்டும்!”

“இறந்தவர்கள் 2 பிரித்து எழுவதில்லை!” என்று சொல்லி விட்டு தலை வணங்கி, “அல்லாவே, இந்த உலகில் போர்கள் மறுபடி மூள விடாதே! எங்கள் ஆண்களைக் காப்பாற்று!” என்று இறைஞ்சினாள். அகலத்திறந்த அவளுடைய சாம்பல் நிற விழிகளிலிருந்து பெருத்த கண்ணீர்த் துளிகள் சொட்டி பொங்கும் ஊற்றில் கலந்தன. என் நெஞ்சு பதைத்தது. அம்மா இவ்வளவு சோர்ந்து தளர்ந்ததை முன்பு ஒரு போதும் நான் கண்டதில்லை.

புல்வெட்டியின் அரிவாளுக்கு முன் இளம் புல் போல், “போர்” என்ற இந்தப் பயங்கரச் சொல்லுக்கு முன் அவள் நடுநடுங்கினாள். நான் அம்மாவைத் தழுவிக்கொண்டு அழுதேன். அன்று பகல் முழுவதும் என் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. முட்டை ஓட்டை உடைத்து விடுதலை பெறத் துடிக்கும் பறவை குஞ்சுபோல் நெஞ்சு படபடத்தது, ஏதோ சொல்ல ஆசை உண்டாயிற்று. என்ன என்பதுதான் எனக்கே தெரியவில்லை.

மாலையில் நான் மேஜை அருகே அமர்ந்து ஒரு கவிதையை எழுதி முடித்தேன். ‘சமாதான பதாகை” என்று அதற்கு மகுடமிட்டேன். உடனேயே தாயாருக்கும் சகோதரிக்கும் அதைப் படித்துக் காட்டினேன். அவ்வளவுதான், என் மதிப்பு “எட்ட முடியாத உயரத்துக்கு” வளர்ந்துவிட்டது.

அம்மா தன்னுடைய வெல்வெட் உடையை எனக்குப் பொருந்தும்படி மாற்றித் தைப்பதில் முனைந்தாள் (இப்படிப்பட்ட “மேதை” பழைய சீட்டி உடை அணிந்து வளைய வருவது நாகரிகக் குறைவாக அவளுக்குப்பட்டது போலும்). மறுநாள் காலையில் நான் பள்ளிக்கூடம் செல்கையில் என் தங்கை நுத்ஸலாய் சாலையில் நிற்கக் கண்டேன். அவள் ஒரு பையனுடன் சச்சரவிட்டுக் கத்திக் கொண்டிருந்தாள்: “என் வழிக்கு வந்தாயோ, தெரியும் சேதி! என் அக்காள் கவியாக்கும்!” இடை வேளையில் மேல் வகுப்பு மாணவ மாணவிகள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு வாரத்திற்கெல்லாம் என் கவிதை பள்ளிக்கூடச் சுவரொட்டிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு மலைகளில் எத்தனையோ புதிய ஊற்றுக்கள் பொங்கிப் பெருகியிருக்கின்றன. எனது எத்தனையோ கவிதைகள் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. ஆனால் பள்ளிக்கூடச் சுவரொட்டிப் பத்திரிகையில் என் கவிதை முதன் முதல் வெளியான போது எனக்கு ஏற்பட்ட பேருவகையும் பெருமையும் என் நினைவில் யாவற்றிலும் பெரிதாகவும் ஒளி வீசுவதாகவும் எப்போதும் திகழும்.

(நன்றி: ரஷ்ய பெண் எழுத்தாளரான பாஸீ அலீயெவா “மண்கட்டியை காற்று அடித்துப் போகாது” நாவலுக்கு எழுதிய முன்னுரை.)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 19:24

நிகழ்ச்சி நிரல்

எனது படைப்புலகம் குறித்து நடைபெறவுள்ள ஒரு நாள் கருத்தரங்கின் நிகழ்வு நிரல். நவம்பர் 14 காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 18:46

தீபாவளி வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2021 18:09

November 2, 2021

தேர் சிற்பங்கள்

தேவகியின் தேர் என்றொரு சிறுகதையை ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கதையில் ஊர் ஊராகச் சென்று தேரைப் புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிரான்சு நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞன் தமிழகத்திலுள்ள அரிய தேர்சிற்பங்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பான். அவன் தேவகியின் ஊருக்கு வந்து தங்கிய போது நடந்த அனுபவத்தைக் கதை விவரிக்கிறது.

அதே போல தேர் சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது. சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள் என்ற அக்கட்டுரை சிறப்பானது. அதிலுள்ள புகைப்படங்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். மிகவும் உயிரோட்டமாக சிற்பங்கள் படமாக்கபட்டிருக்கின்றன.

எனது கதை அப்படியே நிஜமானது போல உணர்ந்தேன். இந்தக் கதையை எழுதும் போது அப்படி ஒரு புகைப்படக்கலைஞர் இருப்பார் என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது.

நான் நிறைய கோவில் தேர்களைக் கண்டிருக்கிறேன். அழகான சிற்பங்கள் கொண்ட தேரை பொதுமக்கள் எவரும் காணமுடியாதபடி தகரம் அடித்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருவிழா அன்று தான் தேர் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வரும். தேர்சிற்பங்களைச் செய்தவர்கள் மகத்தான கலைஞர்கள். பேரழகுடன் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள்.

தேர் பார்க்கும் அனுபவத்தை வண்ணதாசனின் நிலை கதை மிக அழகாக சித்தரிக்கிறது. வெளியாகி எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் நினைவில் ஒளிரும் கதையது.

நீலமலை என்றொரு ஒரிசா நாவல் பூரி ஜெகனாதர் கோவில் தேரோட்டத்தைப் பற்றியது. சுரேந்திர மொகந்தி எழுதியிருப்பார். மிகச் சிறந்த நாவல். இப்போது அந்த நாவல் அச்சில் இல்லை. ஒரு வேளை நூலகத்தில் கிடைத்தால் படித்துப் பாருங்கள். ஒரு ரதயாத்திரையின் பின் எவ்வளவு சரித்திரம் ஒளிந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். ( Nila Saila By Surendra Mohanty )

மதுரை சித்திரை திருவிழாவிற்கும் பூரி ஜெகனாதர் கோவில் தேரோட்டத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.

தேர் திருவிழாவில் தேர் பார்ப்பதற்காக வெளியூர்களில் இருந்து வரும் உறவினர்களும், ஊரின் கொண்டாட்டமும் மனதில் பசுமை மாறாமல் அப்படியே இருக்கிறது.

அண்ணாந்து பார்க்கும் தேருக்கும் ஒரு நாள் தான் அலங்காரம். கொண்டாட்டம். மற்ற நாட்களில் கால்கள் கட்டப்பட்ட கழுதை மட்டுமே அதையொட்டி நின்றிருக்கும். சிறார்கள் சுற்றி விளையாடுவார்கள். சூரியன் உச்சியில் நின்று வேடிக்கை பார்க்கும். பௌர்ணமி இரவில் தனித்திருக்கும் தேரைக் காண அருகில் செல்வேன். அந்த நெருக்கம் சொல்லில் அடங்காதது. தேரின் சக்கரங்களை எப்போதும் வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன். கண் முன்னே நமது கலைச்செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. உன்னதமான விஷயங்களை போற்றிப் பாதுகாக்க நமக்குத் தெரியவில்லை.

வீதியில் தேர் வருவதைக் காண மாடியில் நின்றிருந்தவர்கள் இன்று தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக் கொண்டால் போதும் என்கிறார்கள். ஆட்கள் வடம் பிடித்து இழுத்த காலம் போய் இயந்திரம் இழுத்துவருகிறது. தேரோட்டம் என்பது ஆயிரம் நினைவுகளின் அடையாளம்.

தேர் வரும் போது வீதிகள் அகலமாகிவிடுகின்றன. தேர் சென்றவுடன் வீதி சுருங்கிவிடுகிறது.

ஒவ்வொரு தேரும் ஆயிரம் கதைகளின் பெட்டகம். நினைவில் அதன் சக்கரங்கள் உருண்டபடியே உள்ளன.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2021 08:05

November 1, 2021

புகையில்லாத தீச்சுடர்

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றை பி.கே. சிவகுமார் தமிழாக்கம் செய்து திண்ணை இதழில் வெளியிட்டிருக்கிறார். Commentaries on Living தொகுதியில் உள்ள சிறு கட்டுரையது. 2002ல் வெளியாகியுள்ளது

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையை மிகச் சிறப்பாக , நுட்பமாகச் சிவக்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. பி.கே.சிவக்குமாருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்

சிறப்பான மொழியாக்கத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிப்பது மிக நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது.

பி.கே.சிவக்குமார் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தனியே நூலாக வெளியிடவில்லை. ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லையே என்னவோ. இந்த மொழியாக்கத்தை ஜே கிருஷ்ணமூர்த்தி நிறுவனமே தனி நூலாக வெளியிடலாம்.

பொறாமையைப் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்திச் சொல்லும் இந்தக் கட்டுரை அழகாகத் துவங்குகிறது.

எதிரேயிருந்த வெள்ளைச் சுவரின் மீது வெயில் விழுந்து பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் கண் கூசுகிற வெளிச்சத்தில் , அங்கே இருந்தவர்களின் முகங்கள் தெளிவற்றும் மங்கலாகவும் தெரிந்தன.

சிறந்த புனைகதையின் துவக்க வரியைப் போலிருக்கிறது.

வெள்ளைச்சுவரின் மீது படரும் வெயிலை அவர் எவ்வளவு அழகாக வாழ்க்கையின் போக்குடன் இணைத்துவிடுகிறார் என்பதைக் கட்டுரையை வாசித்து முடிக்கும் போது உணர முடிகிறது.

கிருஷ்ணமூர்த்தியின் ஒவ்வொரு வரியும் ஒரு காட்சியாக விரிகிறது.

தாயின் அனுமதியோ , வழிகாட்டலோ இல்லாமல், ஒரு சிறு பெண் குழந்தை என் அருகே வந்து அமர்ந்து கொண்டார். பின், அக்குழந்தை விரிந்த கண்களுடன், ‘இங்கே என்ன நடக்கிறது ‘ என்கிற வினா கலந்த ஆச்சரியத்துடனும் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர், புதிதாய் நீராடி, நல்லுடையுடுத்தி, சிகையில் மலர்கள் சூடி, மிகவும் அழகாய் இருந்தார்.

எல்லாக் குழந்தைகளையும் போலவே , சுற்றி நடப்பதையெல்லாம் உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டும், ஆனால் எதையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருந்தார் .

என்ற ஜேகேயின் வரியில் குழந்தையின் இயல்பு அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. உலகைக் கவனித்துக் கொண்டும் அதே நேரம் மனதில் பதிய வைத்துக் கொள்ளாமலும் இருப்பது தான் பால்யத்தின் சிறப்பு. அந்தச் சிறுமிக்கு உலகம் புதிதாகவும் குழப்பமானதாகவும் இருக்கிறது.  இப்போது தான் விரிந்த ஒரு மலர் சூரியனைக் காணுவது போல வியப்புடன் அவரைக் காணுகிறார். தண்ணீர் ஒரு குழந்தையை எதிர்கொள்வது போலவே அவரும் எதிர்கொள்கிறார்.

ஒளி படைத்த சிறுமியின் கண்கள் – அழுவதா , சிரிப்பதா, மகிழ்வுடனும் விளையாட்டுணர்வுடனும் குதிப்பதா என்று – என்ன செய்வது என்பதறியாமல் யோசித்தன. மாறாக, அவர் என் கையை எடுத்து, உள்ளங்கையையும் விரல்களையும் சுவாரஸ்யமான ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில், தன்னைச் சுற்றி இருந்தவர்களையும், தன்னையும் மறந்தவராய், ஓய்வாக என் மடியில் தலைவைத்துத் தூங்க ஆரம்பித்தார். அவர் சிரம் அழகான வடிவுடனும், நேர்த்தியாகவும் இருந்தது.

குறையேதும் இல்லாத தூய்மையும் , அழகும் கொண்டவராய் இருந்தார் அப்பெண் குழந்தை. ஆனால், அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் போலவே, அக்குழந்தையின் எதிர்காலமும், குழப்பமானதாகவும், துன்பமயமானதாகவும் இருக்கும். அக்குழந்தைக்கு நேரப்போகும் முரண்பாடுகளும், துயர்களும் – எதிரே இருந்த சுவரின் மீது விழுந்து கொண்டிருந்த வெயில் போல – தவிர்க்க இயலாதவை.

எனக் கட்டுரை நீள்கிறது.

சுவரின் மீது வெயில் விழுவது என்பது வெறும் நிகழ்வில்லை. ஒரு வகை அனுபவம். ஒருவகை அடையாளம். தவிர்க்க முடியாதபடி நடக்கும் இயல்பான செயல். அதன் தாக்கத்தை நாம் உடனே கணித்துவிட முடியாது

அந்தச் சிறுமி பெறப்போகும் கல்வியும் , அவரை ஆட்கொள்ளப் போகும் தாக்கங்களும் – வேதனையிலிருந்தும், வலியிலிருந்தும், துயர்களிலிருந்தும் விடுதலைப் பெறத் தேவையான நுண்ணறிவு அவருக்குக் கிடைக்காவண்ணம் தடுத்துவிடும் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி

நுண்ணறிவின் மூலம் துயர்களை , வலிகளைக் கடந்து போய்விட முடியும் என்ற கிருஷ்ணமூர்த்தியின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது.

நுண்ணறிவை எது உருவாக்குகிறது

எதன்வழியே ஒருவர் தனது நுண்ணறிவைப் பெற இயலும். மதிப்பெண்ணை மட்டுமே முதன்மையாகக் கொண்ட கல்வியால் இது சாத்தியமில்லை. வெறும் போதனைகளால் இதை சாத்தியப்படுத்த முடியாது.

புகையில்லாத தீயின் சுடர் போன்ற அன்பு இவ்வுலகில் மிகவும் அரிதானது.

அன்பு என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிற புகையே – நாம் மூச்சடைத்துத் திணறும்படி, சர்வசக்தியுடன் – எங்கும் கவலையையும், கண்ணீரையும் கொண்டுவருகிறது. அந்தப் புகையினூடே தீச்சுடர் தெரிவதில்லை .

எனச் சொல்லும் கிருஷ்ணமூர்த்திப் புகையில்லாத தீச்சுடர் போன்ற அன்பு என்ற அழகிய , கவித்துவமான படிமம் ஒன்றை முன்வைக்கிறார்.

அன்பு குறித்து உலகில் இதுவரை பேசப்பட்டதெல்லாம் வெறும் புகை தானா. புகையில்லாத சுடர் ஏன் சாத்தியமாகவில்லை. அன்பு என்பது கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒரு பொருளாக ஏன் மாறியது.

அன்பெனும் சுடரின்றி , வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை எனும் கிருஷ்ணமூர்த்திப் புகையும் சுடரும் இணைந்தும் பிணைந்தும் வாழ இயலாது. தெளிந்த தீச்சுடர் ஒளியுமிழ, புகை நிறுத்தப்பட வேண்டும். இப்படிச் சொல்கிற காரணத்தால், தீச்சுடரானது புகைக்கு எதிரி இல்லை. தீச்சுடருக்கு எதிரிகள் இல்லை. புகையானது தீச்சுடர் அல்ல; அங்கனமே, புகையானது சுடரின் இருப்பைச் சொல்கிற அடையாளமும் அல்ல. ஏனெனில், புகையிலிருந்து முற்றிலும் விடுபட்டதே சுடராகும்.

இதை வாசிக்கும் போது நாம் அறிந்து கொள்வது புகையைப் பற்றியோ , சுடரைப் பற்றியோ அல்ல, மாறாக அன்பின் தூய இயல்பைப் பற்றி அறியத் துவங்குகிறோம்.

இந்தக் கட்டுரையின் வழியே நாம் புகையில்லாத தீச்சுடரைப் பற்றி எண்ணத் துவங்குகிறோம். அதை அடையாளம் காணவும் வெளிப்படுத்தவும் முயலுகிறோம்.

இந்தக் கட்டுரையில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் கிருஷ்ணமூர்த்தி மடியில் படுத்துறங்கும் முன்னறியாத அந்தச் சிறுமியின் நம்பிக்கை

அவள் ஒரு மரநிழலில் ஓய்வு கொள்வது போல அவரது இருப்பையும் இயற்கையின் அங்கமாக மாற்றிவிடுகிறாள்

மர நிழலுக்கு இளைப்பாறும் மனிதனைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லையே.

இதை ஜே கிருஷ்ணமூர்த்தி நன்றாகவே உணர்ந்திருக்கிறார். வழிகாட்டுதலும் வழிகாட்டுதல் இன்றியும் சிறுமி அவரை நோக்கி வருகிறாள். அப்படித் தான் ஜே.கிருஷ்ணமூர்த்தியை அணுக முடியும்.

அச்சிறுமி அவரது கைகளை விரித்து வியப்புடன் பார்க்கிறாள். ஒரு மலரைக் காணும் சந்தோஷம் போலவே அந்த விளையாட்டுச் சந்தோஷமளிக்கிறது. தண்ணீர் ஒரு சிறுமியை வரவேற்பது போலவே அவரும் வரவேற்கிறார். தன்னுள் அனுமதிக்கிறார். ஒய்வில் ஒரு முழுமையை காணுகிறார்.

சுவரில் படரும் வெயிலின் காட்சி மனதில் திரும்பத் திரும்பத் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.

புகையில்லாத தீச்சுடரை இயற்கையிலும் கலைகளிலும் எளிதாகக் காண முடிகிறது. மனிதர்களிடம் வெளிப்படும் அன்பில் தான் புகை அதிகமாகிச் சுடர் தெரியாமல் போய்விடுகிறது. ஆனால் சிலரது அன்பில் நாம் காணுவது புகையில்லாத சுடரை. ஒரு மலர் நறுமணத்தை இயல்பாக தன்னிடமிருந்து வெளிப்படுத்துவது போல அவர்கள் அன்பின் சுடரை ஒளிரச்செய்கிறார்கள்

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு கவிஞனின் குரலில் பேசுவதாகவே நான் உணர்கிறேன். கட்டுரையை வாசித்து முடித்தபிறகு அந்த வெயிலும் சிறுமியும் மனதில் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறார்கள்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2021 01:38

October 29, 2021

அழைப்பிதழ்

நவம்பர் 14 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகம் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் அமைப்பு இணைந்து நடத்துகிறது.

இந்த நிகழ்வு மயிலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் Yellow Pages அருகில் அமைந்துள்ளது. (234, Venkatachalam St, Dwarka Colony, Mylapore, Chennai – 600004)

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

முகக்கவசம் அணிவது அவசியம். சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2021 22:15

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.