வாசிப்பெனும் கலை

சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியாவில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டேன். அதன் முக்கிய நோக்கம் வகுப்பறையில் கவிதை கவிதை நாடகம் போன்றவற்றை எப்படிக் கற்பிப்பது என்பது குறித்து உரையாடுவதாகும். பாடமாக வைக்கப்பட்ட சிறுகதையோ, கவிதையோ, நாவலோ மாணவர்களுக்கு விருப்பமாக இருப்பதில்லை. மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே படிப்பதால் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மீதே அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் வந்துவிடுகிறது.

நான் படிக்கும் நாட்களில் துணைப்பாடமாக இருந்த சிறுகதைகளை வகுப்பில் நடத்தவே மாட்டார்கள். பரிச்சைக்கு முன்பாகப் பத்து கேள்விகளை எழுதிப்போட்டு அதை மனப்பாடம் செய்யச் சொல்லிவிடுவார்கள் அப்படிதான் ஜெயகாந்தன். புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பள்ளியில் நடத்தினார்கள். மனப்பாடம் செய்வது என்பதைத் தவிர இலக்கியத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் குறைவே.

ஆகவே பள்ளி கல்லூரி மாணவர்களில் பலரும் இந்தத் துணைப்பாடங்களை. பரிச்சைக்குப் படிக்க வேண்டிய நாவல்களைத் தவிர்த்துவிடுவார்கள். உலகெங்கும் இது தான் நிலை. இன்றும் வகுப்பறையில் ஒரு சிறுகதையை எப்படி நடத்துவதும் அந்த எழுத்தாளரை எப்படி அறிமுகம் செய்வது என்பது சவாலே.

இதைத் தான் The act of reading ஆவணப்படம் பேசுகிறது.

ஓய்வுபெற்ற உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் தன்னிடம் பதினைந்து ஆண்டுகளுக்குப் படித்த ஒரு மாணவரை மீண்டும் சந்திக்கிறார். அந்த மாணவர் படிக்கிற காலத்தில் புத்தக வாசிப்புப் பயிற்சியில் தோல்வியுற்றவர். அவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த மோபிடிக் நாவலை அவரால் படித்து மதிப்பீடு செய்ய இயலவில்லை. இன்று அந்த மாணவர் திரைக்கலை பயின்று முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளதோடு மோபிடிக் மீது மிகுந்த விருப்பம் கொண்டவராக இருக்கிறார்

ஏன் பாடமாக வைக்கப்பட்ட ஒரு நாவலை மாணவர்களால் படிக்க முடியவில்லை. வகுப்பறையில் இலக்கியம் எப்படிக் கற்பிக்கப்பட வேண்டும் வாசிப்பு ஒரு மனிதனுக்கு எவ்விதம் முக்கியமானது. அது சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியே இந்த ஆவணப்படம் பேசுகிறது

மார்க் ப்ளம்பெர்க் என்ற திரைப்பட இயக்குநர் தனது வகுப்பறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதே படத்தின் பிரதான அம்சம்.

வாசிப்பின் அவசியத்தைப் பேசும் இந்த ஆவணப்படம் இன்னொரு வகையில் மோபிடிக் நாவலைக் கொண்டாடுகிறது. ஹெர்மன் மெல்வில் பற்றியும் அவரது கடலோடி அனுபவங்களையும் நாவல் எழுதப்பட்டவிதம், அதன் கதாபாத்திரங்களின் தனித்துவம். நாவலில் வெளிப்படும் மெய் தேடல் என விரிவாக இந்நாவலை ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்கள்

ஆவணப்படத்தின் வழியே மெல்வில் ம்யூசியத்தை நாம் காணுகிறோம். அங்குள்ள புகைப்படங்களின் மூலமாக மெல்விலின் கடந்த காலம் விவரிக்கப்படுகிறது. மெல்விலின் கொள்ளுப்பேரன் பீட்டர் விட்டெமோர் நேர்காணல் செய்யப்படுகிறார். அவர் மோபிடிக்கை மதிப்பிடும் விதமும் தனது குடும்ப வரலாற்றை நினைவு கொள்வதும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

நாவல் மாரத்தான் என மோபிடிக் நாவலை அதன் தீவிரவாசகர்கள் ஒன்று கூடி வாசிக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு 141.8 வார்த்தைகள் வீதம் 25 மணி நேரத்தில் இந்த நாவலை வாசித்து முடிக்கிறார்கள்.

இது போலவே மோபிடிக்கை நாடகமாக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தையும். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கு வாசிப்பு ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஆவணப்படத்தில் அழகாக விவரித்திருக்கிறார்கள்.

Poor Herman என்ற நாடகத்தின் மூலம் மெல்வில் மற்றும் அவரது குடும்பம் குறித்த மாற்றுப்பார்வைகளை முன்வைத்த விஷயமும் படத்தில் விவாதிக்கப்படுகிறது.

1851ல் வெளியான மோபிடிக் நாவல் 150 வருஷங்களைக் கடந்து இன்றும் வாசகர்களின் விருப்பத்திற்குரிய நாவலாக விளங்குகிறது. திரைப்படமாகவும் தொலைக்காட்சி தொடராகவும் மேடை நாடகமாகவும் பலமுறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நானே மோபிடிக் பற்றி விரிவான உரை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறேன். இப்படி உலகெங்கும் மோபிடிக்கின் ரசிகர்கள் அதைக் கொண்டாடிவருகிறார்கள்

இந்த ஆவணப்படம் இன்றைய இளந்தலைமுறை இது போன்ற செவ்வியல் நாவலை எப்படி வாசிக்கிறது. புரிந்து கொள்கிறது என்பதையே முதன்மையாக விவரிக்கிறது.

society is moving from literacy to digital memory என்று படத்தின் ஒரு காட்சியில் ஜான் கிளேரி குறிப்பிடுகிறார். தேவையற்ற தகவல்களை மூளையில் குப்பையாக நிரப்பி வைத்துக் கொள்ளும் நாம் உண்மையில் வாசிப்பின் வழியே சென்ற தலைமுறை அடைந்த இன்பத்தை. முழுமையான அனுபவத்தை இழந்துவிட்டோம் என்கிறார் கிளேரி. அது உண்மையே.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 01, 2021 00:28
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.