S. Ramakrishnan's Blog, page 106

December 23, 2021

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியிடப்படவுள்ள நூல்கள்

மண்டியிடுங்கள் தந்தையே / நாவல்

விலை ரூ 350

ஐந்து வருட மௌனம் / சிறுகதை தொகுப்பு

விலை ரூ 400

காந்தியின் நிழலில் / கட்டுரைத் தொகுப்பு

விலை ரூ 220

நேற்றின் நினைவுகள் / கட்டுரைத் தொகுப்பு

விலை ரூ180

டான்டூனின் கேமிரா / சிறார் நாவல்

விலை ரூ 150

காலத்தின் சிற்றலை / உலக இலக்கியம் குறித்த கட்டுரைகள்

விலை ரூ 180

புனைவின் வரைபடம் / நேர்காணல்களின் தொகுப்பு

நூலகமனிதர்கள் / நூலக அனுபவம் குறித்த கட்டுரைகள்

விலை ரூ 220

திரையெங்கும் முகங்கள் / உலக சினிமா கட்டுரைகள்

விலை ரூ 450

சிறிய உண்மைகள் / இலக்கியக் கட்டுரைகள்

விலை ரூ 180

பத்து நூல்களும் சேர்ந்து சிறப்பு விலையாக ரூ 1900க்கு வழங்கப்படும்

தேசாந்திரி பதிப்பகத்தின் அனைத்து வெளியீடுகளையும் அங்கே பெற்றுக் கொள்ளலாம்

எல்லா நூல்களுக்கும் 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு

•••

Russian Cultural Centre
No 74, Kasturi Rangan Road, Alwarpet, Chennai – 600018,
Behind Chola Sheraton

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2021 05:37

பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நூல்

பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரெயில் முறையில் டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூல் வெளியிடப்படுகிறது.

இதனைச் சாத்தியப்படுத்தியவர் எனது நண்பர் ஆடிட்டர் சந்திரசேகர்.

தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் சார்பில் இதனைக் கொண்டுவருகிறார்கள்.

அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்

இந்த நூலும் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2021 04:37

December 21, 2021

நூலக மனிதர்கள்

பொது நூலகங்கள் குறித்தும் நூலகத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் கொண்ட புத்தகம். நூலகமனிதர்கள்

டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது

இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2021 22:49

திசை எட்டும் இதழில்

திசை எட்டும் இம்மாத இதழில் எனது சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2021 22:44

விகடன் இணையதளத்தில்

ஆனந்தவிகடன் இணையதளத்தில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது.

“கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்”-

எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்

நா.கதிர்வேலன்

தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரும் ஆண்டின் புத்தகத் திருவிழாவின் முக்கியமான புத்தகமாக இந்நாவல் வாசகர் மனம் கவரக் காத்திருக்கிறது. அதற்கான உரையாடலாக நடந்தது இந்த சந்திப்பு.

அயல் எழுத்தாளரை முன்வைத்து நாவல் எழுதத் தூண்டியது எது?

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜே.எம்.கூட்ஸி தஸ்தாயெவ்ஸ்கி பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். வர்ஜீனியா வுல்ப், சில்வியா பிளாத், ஷேக்ஸ்பியர், பாப்லோ நெரூதா போன்றவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மேற்குலகில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் அத்தகைய முயற்சிகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. டால்ஸ்டாயை ஒரு கதாபாத்திரமாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. ரஷ்ய தேசத்தின் அடையாளமாக அவரைக் கொண்டாடுகிறார்கள். டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாறு விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. அவரே டயரி எழுதியிருக்கிறார். அவரது மனைவி டயரி எழுதியிருக்கிறார். அச்சில் அவை வாசிக்கக் கிடைக்கின்றன.

டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது ஒரு நிகழ்வு என் மனதை மிகவும் பாதித்தது. அதை மையமாகக் கொண்டு டால்ஸ்டாயின் ஆளுமையை விவரிக்கும் விதமாக இந்த நாவலை எழுதியிருக்கிறேன்.

நாவலின் தலைப்பு ‘மண்டியிடுங்கள் தந்தையே.’ 250 பக்கங்கள் கொண்ட நாவலிது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.

இப்படி ரஷ்ய எழுத்தாளரை மையமாகக் கொண்டு தமிழில் வெளியாகும் முதல் நாவல் இதுதான் என்று சொல்லலாமா?

ஆமாம். தமிழில் எழுதப்பட்ட ரஷ்ய நாவல் என்றே இதை அழைக்க விரும்புகிறேன். இதுவரை தமிழில் ரஷ்ய எழுத்தாளரை மையமாகக் கொண்டு நாவல் எதுவும் வெளியானதில்லை. இதுவே முதன்முறை. இந்திய அளவில் பார்த்தாலும் டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இதுவே. ரஷ்யாவிலும் கூட நான் எழுதியுள்ள மையக்கருவில் யாரும் நாவல் எழுதவில்லை. ஆகவே இந்த நாவலின் ரஷ்ய மொழியாக்கம் விரைவில் வெளியாக இருக்கிறது. உண்மையில் இது ஒரு சர்வதேச நாவல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக `அஸ்தபோவ் ரயில் நிலையம்’ என்ற சிறுகதையை எழுதினேன். அது வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாயின் கடைசி நாட்களைப் பற்றியது. அப்போதே டால்ஸ்டாயைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்ற ஆசை உருவானது.

இந்நாவலை எழுதுவதற்காக நீங்கள் எடுத்த முன்முனைப்புகள் எவை?

சூரியன் தகிக்கும் கரிசல் மண்ணில் பிறந்து வளர்ந்த என்னால் ரஷ்யப்பனியை எப்படி எழுத முடியும். அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்ய கிராமங்களை, விவசாய வாழ்க்கையை, அன்றைய மாஸ்கோவை எழுதுவது என்பது பெரும் சவால். நான் இதுவரை ரஷ்யா சென்றதில்லை. கதைகளின் வழியே அந்த நிலம் என் மனதில் விரிந்துள்ளது. என்னைப் பீட்டர்ஸ்பெர்க் வீதியில் விட்டால் தனியே சுற்றிவர முடியும் என்று வேடிக்கையாகச் சொல்வேன். அந்த அளவு ரஷ்யாவை வாசிப்பின் வழியே அறிந்திருக்கிறேன்.

ஆனால் நான் எழுதப்போகும் களம் நூற்று முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யா. அதுவும் யாஸ்னயா போல்யானா என்ற டால்ஸ்டாயின் பண்ணை. டால்ஸ்டாய் போன்ற பன்முக ஆளுமையைக் கதாபாத்திரமாக்கும் போது நிறைய வாசிக்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டியிருந்தது. கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் புத்தகங்கள், காணொளிகள், இசை, ஆவணத்திரட்டுகள் வழியாக ரஷ்யாவை ஆழ்ந்து அறிந்து கொண்டேன். டால்ஸ்டாய் என்ன ஆடை உடுத்தியிருப்பார். அவரது காலணி என்ன நிறத்தில் இருக்கும். அவரிடம் எத்தனை குதிரைகள் இருந்தன. அவரது நாயின் பெயர் என்ன, வீட்டு அறைகளின் சுவர் எப்படியிருந்தது, அவரது மனைவி பிள்ளைகள் எப்படியிருந்தார்கள், அவர் பனியில் நடந்து செல்லும் போது சூரியன் எந்தப் பக்கம் ஒளிரும், அவரது வீட்டில் நடந்த விருந்து எப்படியிருக்கும், அவர் ஏறிச் செல்லும் குதிரை வண்டி எவ்வளவு வேகத்தில் பயணம் செய்யும் என நூற்றுக்கணக்கான தகவல்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருந்தது.

அத்தோடு அன்றைய ரஷ்ய அரசு, நிர்வாகம். சமூக மாற்றங்கள். பண்ணை அடிமைகளின் நிலை, மதச் சடங்குகள் பற்றியும் நிறைய வாசித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. இந்தத் தகவல்களைக் கேக் செய்பவன் கேக்கின் மீது க்ரீமினால் வண்ண மலர்கள் வரைவாரே அப்படிப் பயன்படுத்தியிருக்கிறேன். நாவலின் மையம் எனது கற்பனை.

நாவலின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே!

’மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்புதான் நாவலின் மையப்பொருள். டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வுதான் நாவலின் கதைக்கரு. அவரது வாழ்க்கை வரலாற்றில் இரண்டு வாக்கியங்களில் அந்த நிகழ்வு விவரிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நான் எனது கதையை உருவாக்கிக் கொண்டேன். டால்ஸ்டாய் முன்பாக அமர்ந்து சிறுவர்கள் கதை கேட்பதுபோல ஒரு புகைப்படம் இருக்கிறது. நாவலை எழுதும் நாட்களில் அந்தச் சிறுவர்களில் ஒருவனாகவே என்னை உணர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாவலை எழுதினேன். ஐந்தாறு முறை திருத்தி எழுதியிருப்பேன். லாக்டவுன் காலம் என்பதால் நிறைய நேரம் கிடைத்தது. காலை சென்னையில் எனது வீட்டின் எழுதும் அறைக்குள் நுழைந்த மறுநிமிடம் ஒரு கால இயந்திரம் என்னை டால்ஸ்டாய் பண்ணைக்கு அழைத்துப் போய்விடும். பகல் முழுவதும் ரஷ்யாவில் சுற்றிக் கொண்டிருப்பேன். டால்ஸ்டாய் குடும்பத்தில் ஒருவன் போலவே என்னையும் உணர்ந்தேன்.

நாவலை எழுதியதன் வழியே டால்ஸ்டாயை மிகவும் நெருங்கி உணர முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.

இன்றுள்ள தமிழ் நாவல்களின் போக்குகள் பற்றி உங்கள் கருத்தென்ன?

பொதுவாகத் தமிழ் நாவல்கள் தமிழ் வாழ்க்கையின் எல்லைக்குள்தான் எழுதப்படுகின்றன. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் வருகின்றன.. சொந்த அனுபவங்களைத்தான் பிரதானமாக எழுதுகிறார்கள். அது தப்பில்லை. ஆனால் புனைவின் முழுவீச்சினை காட்ட வேண்டும் என்றால் புதிய சவாலை முன்னெடுக்க வேண்டும். தமிழ் நாவலின் எல்லையை நாம் விஸ்தரிக்க வேண்டும்.

இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட் டோகலாஸ்ஸோ இந்தியாவைப் பற்றி ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதுவும் பண்டைய இந்தியாவின் தத்துவங்களை ஆராயும் விதமாக எழுதியிருக்கிறார். ஹெர்மன் ஹெஸ்ஸே, சித்தார்த்தா என்ற நாவலை 1922லே எழுதியிருக்கிறார். நாம் ஏன் தமிழில் புத்தரை மையமாகக் கொண்டு இதுவரை நாவல் எதையும் எழுதவில்லை. அல்லது பீதோவன், வான்காவை மைய கதாபாத்திரமாகக் கொண்டு ஒரு நாவலை எழுத விரும்பவில்லை.

உம்பர்தோ ஈகோவின் நாவல்கள், இதாலோகால் வினோவின் நாவல்கள். யோசே சரமாகோ நாவல்கள். லோஸாவின் நாவல்கள். போன்று புதிய கதையை, புதிய கதை மொழியைக் கொண்ட நாவல்கள் தமிழில் வரவில்லை. ஆனால் நாம் செல்ல வேண்டிய திசை அதுவே.

தமிழ் வாசகர்கள் சிறந்த படைப்புகளைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவர்கள், அங்கீகாரம் தரக்கூடியவர்கள். ப.சிங்காரம் இரண்டே நாவல்கள் தான் எழுதியிருக்கிறார். அது இந்நாள் வரை யாரும் தொடாத கதைக்களன்கள். அப்படியான திசையில் பயணம் செய்யவே நான் விரும்புகிறேன்

எப்போதும் ஒரு படைப்பாளியாக உங்களிடம் வெளிப்படும் நிதானம் அசாதாரணமானது. அதை எப்படி அடைந்தீர்கள்?

எழுத்தாளராக வேண்டும் என்று விரும்பி வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்திருக்கிறேன். எழுத்தை மட்டுமே நம்பி சென்னைக்கு வந்தேன். இந்த வாழ்க்கை புறக்கணிப்பாலும் நெருக்கடியாலும் என்னை மிகவும் வாட்டியிருக்கிறது. நிறையப் பொருளாதாரச் சிரமங்களை அனுபவித்திருக்கிறேன். அன்றும் இன்றும் குடும்பம் தந்த துணையும் நம்பிக்கையும் தான் என் நிதானத்திற்கான முக்கியக் காரணம். நல்ல ஆசான்களால் வழிநடத்தப்படுகிறேன். நல்ல நண்பர்கள் துணையிருக்கிறார்கள். என்னை முழுமையாகப் புரிந்துகொண்ட மனைவி பிள்ளைகள் உடனிருக்கிறார்கள். என்மீது அளவில்லாத அன்பு கொண்ட வாசகர்கள் நிறையவே இருக்கிறார்கள். இவர்களே என் படைப்பின் சுடரைத் தனது கரங்களால் பாதுகாத்து வருபவர்கள்.

ஆற்றின் வேகத்தில் சிக்கிப் பட்ட வேதனைகளைக் கூழாங்கல் ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை. அது தண்ணீர் உருவாக்கிய சிற்பம் போலவே தன்னைக் கருதுகிறது. கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்.

நன்றி

விகடன் இணையதளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2021 22:41

December 19, 2021

டான்டூனின் கேமரா

ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா

இந்த சிறார் நூலுக்காக அழகிய வண்ண ஓவியங்களை பிரபல ஓவியர் கே.ஜி. நரேந்திரபாபு வரைந்து கொடுத்திருக்கிறார்

டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2021 18:21

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள்

ஜார்ஜ் கேட்லின்(George Catlin) ஓவியங்களில் காணப்படும் அமெரிக்கப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது

காட்டெருமைகளைத் துரத்தி வேட்டையாடும் ஓவியத்தில் அந்த எருமைகள் ஓடிவரும் வேகமும் நிலவெளியின் பிரம்மாண்டமும் வில்லேந்தியபடியே குதிரையில் வரும் இனக்குழுவின் ஆவேசமும் பரவசமளிக்கின்றன.

கூட்டமாகக் காட்டெருமைகள் பாய்ந்து வருவதை எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். உடலை வளைத்துத் திரும்பி வில்லேந்தும் வீரனின் தோற்றமும் எருதுகளின் ஆவேசப் பாய்ச்சலும் ஒவியத்தை உயிரோட்டமாக்குகின்றன.

வேகத்தை ஓவியத்தில் கொண்டு வருவது எளிதானதில்லை. அதிலும் அகன்ற நிலவெளியின் ஊடே குதிரை வீரர்கள் காற்றில் பறக்கும் தலையோடு ஆவேசமாக எருதுகளை வேட்டையாடும் தீவிரத்தை ஓவியமாக்குவது எளிதானதில்லை. கேட்லின் இதை மிகச்சிறப்பாக வரைந்திருக்கிறார்.

எருதைத் துரத்திச்செல்லும் வீரன் அமர்ந்துள்ள குதிரை தரையில் கால் பதியவில்லை. காற்றில் செல்லும் அதன் பாய்ச்சல் ஒருபுறம் என்றால் மறுபுறம் பாய்ந்தோடும் எருதுகளின் வேகம். அதன் கால்களின் சித்தரிப்பு. திமில்களின் பாய்ச்சல். இந்த இரண்டு விசைகளும் மோதிக்கொள்ளும் போது ஏற்படும் ஒசை ஒவியத்தில் இல்லை. ஆனால் ஓவியத்தை நுண்மையாகக் காணும் ஒருவரால் அந்த ஓசையைக் கேட்க முடியும்.

அமெரிந்தியர்களின் உருவச்சித்திரங்களைக் கேட்லின் மிக அழகாக வரைந்திருக்கிறார். வெண்மேகம் என்ற இனத்தலைவரின் உருவப்படத்தினைக் காணும் போது அவர் அமர்ந்துள்ள விதத்தில் வெளிப்படும் கம்பீரமும் சிகையில் சொருகப்பட்டுள்ள பறவை இறகுகளும் கரடி நகங்களின் மாலையும் உதட்டில் வெளிப்படும் மென்சிரிப்பும் தனித்த அழகினை கொண்டிருப்பதை உணர முடிகிறது, வெண்மேகத்தின் கண்களில் கனிவு வெளிப்படுகிறது.

செவ்விந்தியர்கள் என்றாலே நாகரீகமற்றவர்கள். ரத்தம் குடிப்பவர்கள். நரமாமிசம் உண்பவர்கள், காட்டுமிராண்டிகள் என்ற பொது பிம்பம் தவறானது என்பதைக் கேட்லின் தனது இந்த ஓவியத்தின் மூலம் புரிய வைத்திருக்கிறார்.

தனது ஓவியத்தில் வண்ணங்களை அவர் பயன்படுத்தும் விதமும் தோற்றத்தை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்யும் திறமையும், உணர்ச்சிகளைச் சரியாக வெளிகொண்டு வரும் லாவகமும் நிலக்காட்சியின் பிரம்மாண்டத்தையும் ஒளிபாயும் விதத்தைக் கையாளுவதிலும் தேர்ந்த கலைஞராக வெளிப்படுகிறார்.

ஜார்ஜ் கேட்லின் சுயமாக ஒவியம் வரையக் கற்றுக் கொண்டவர். அவரது தந்தை அவரை வழக்கறிஞராக்க விரும்பினார். ஆனால் கேட்லினுக்கு அதில் ஆர்வமில்லை. தந்தையின் கட்டாயத்தால் வழக்கறிஞர் ஆன போதும் அவரது ஈடுபாடு முழுவதும் கலையின் மீதே இருந்தது.

செவ்விந்தியர்களைப் பற்றிய நிறையக் கதைகளைச் சிறுவயதில் கேட்லின் கேட்டிருக்கிறார். 1805 ஆம் ஆண்டு ஒரு நாள், தென்மத்திய நியூயார்க்கில் உள்ள சுஸ்குஹன்னா ஆற்றங்கரையில் இருந்த காட்டில் சுற்றிக் கொண்டிருந்த கேட்லன் ஒரு செவ்விந்தியனை நேருக்கு நேராகச் சந்தித்தார். அப்போது அவரது வயது ஒன்பது.

தலையில் இறகுகள் அணிந்த விசித்திரமான தோற்றத்தைக் கண்டு பயந்து ஒட முயன்றபோது அந்த மனிதன் நட்போடு கையை உயர்த்தினான். அச் செய்கை சிறுவனை மிகவும் ஈர்த்தது. அந்த மனிதனை நெருங்கி தானும் கையை நீட்டினான். அவர்கள் நட்போடு கைகுலுக்கி கொண்டார்கள். அந்தப் பூர்வகுடிமனிதன் வெளிப்படுத்திய நட்பைச் சிறுவன் கேட்லினால் மறக்க முடியவில்லை. அந்த நினைவு தான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் பூர்வகுடிகள் மீது தனிக்கவனம் கொள்ள முதற்காரணமாக அமைந்தது

1830 ஆம் ஆண்டில் கவர்னர் வில்லியம் கிளார்க்குடன் மிசிசிப்பி ஆற்றுப் பகுதியிலுள்ள செவ்விந்தியர்களைச் சந்திக்கச் சென்ற கேட்லின் அவர்களின் தனித்துவமான வாழ்க்கைமுறையின் மீது அதிகமான ஈடுபாடு கொண்டார்.

1832 மற்றும் 1837 க்கு இடையில் பூர்வகுடிகளைத் தேடி படகு, குதிரை மற்றும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டார். பல்வேறு இனத்தலைவர்களையும் அவர்களின் வேட்டை, மற்றும் கொண்டாட்டஙகளையும் ஒவியங்களாக வரையத் துவங்கினார். இன்று அந்த ஓவியங்களே அம் மக்களின் ஆவணமாக அறியப்படுகிறது.

1830 மற்றும் 1836 க்கு இடையில் ஜார்ஜ் கேட்லின் பூர்வகுடிகளைத் தேடி ஐந்து முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் பயணத்தின் ஊடாக 150 விதமான இனக்குழுக்களை நேரில் கண்டு ஒவியம் வரைந்திருக்கிறார். இருபது லட்சம் பேருக்கும் மேலாக இருந்த பூர்வகுடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி அழிக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு

முறையான பாதைகள் இல்லாத அந்த நாட்களில் பூர்வகுடிகளைத் தேடி பயணம் செய்வது ஆபத்தான செயலாகக் கருதப்பட்டது. செவ்விந்தியர்களின் வளங்களை ஏமாற்றிக் கொள்ளையிட முயன்றவர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களைக் கேட்லின் அறிந்திருந்தார். ஆனால் அவரது பயணத்தில் கண்ட நிஜம் வேறுவிதமாக இருந்தது.

“எந்த ஒரு பூர்வகுடி இந்தியனும் என்னை ஏமாற்றவில்லை. தாக்கவில்லை. என்னிடமிருந்து ஒரு ஷில்லிங் மதிப்புள்ள பொருளைக் கூடத் திருடவில்லை. மாறாக அவர்கள் நிறையப் பரிசுகளை எனக்கு அளித்தார்கள். நல்ல உணவு கொடுத்து அன்போடு நடத்தினார்கள். காட்டெருமைகளை வேட்டையாடுவதைக் காண அழைத்துப் போனார்கள். அவர்களின் கூட்டுவழிபாடுகளை நேரில் கண்டிருக்கிறேன். அவர்கள் என்னைத் தங்களில் ஒருவனாகவே நடத்தினார்கள் என்கிறார் கேட்லின். அதை அவரது ஒவியங்களின் வழியே நம்மால் உணர முடிகிறது. . .

செவ்விந்தியர்களின் அன்பைப் பெற்ற கேட்லின் அவர்களில் ஒருவராகவே உருமாறினார். பூர்வகுடி தலைவர்களை ஓவியமாக வரைவதற்கு எளிதாக ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் கேட்லினை தங்களின் தூதுவராக உணரத் துவங்கிய பிறகு ஓவியம் வரைய ஒத்துக் கொண்டார்கள்.

கொலம்பஸ் காலம் தொட்டு இந்தப் பூர்வகுடிகள் தொடர்ந்து வேட்டையாடி அழிக்கப்பட்டதே அமெரிக்க வரலாறு. தங்கள் வாழ்விடத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பூர்வகுடிகள் கடுமையாகப் போர் புரிந்தார்கள். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் அவர்களின் எழுச்சி அடங்கவில்லை.

பல்வேறு தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு அவர்களை ஒடுக்கிய வெள்ளை அரசு முடிவில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நிலத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தின் போது தான் கேட்லின் பூர்வ குடிகளைச் சந்தித்துப் பழகியது நடந்தேறியது.

அவர் தொல்குடி மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்க்கை முறை பற்றி அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தினார். கண்காட்சி வைப்பதுடன் உரைகளும் நிகழ்த்தினார்.

சிவப்பிந்தியர்கள் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது தவறான பழக்கம் என்கிறார்கள். அது உடலை பலவீனமாக்கி சாவை கொண்டுவந்துவிடும். ஆகவே மூக்கால் மட்டுமே சுவாசிக்க வேண்டும். உறக்கத்தில் கூட வாயால் சுவாசிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று கூறும் கேட்லின் பூர்வகுடிகளின் பண்பாடு பற்றி ஆராய்ந்து Shut Your Mouth என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

பூர்வகுடி மக்களில் ஒருவர் கூடக் கூன் விழுந்து காணப்படவில்லை. மனநிலை சரியில்லாதவர் என ஒருவரும் கிடையாது. எந்த இனக்குழுவிலும் கருக்கலைப்பு என்ற விஷயமே கிடையாது. பாம்பு கடித்தும் குதிரையிலிருந்து விழுந்தும் செத்துப் போனவர்களைத் தவிர நோயுற்று இறந்தவர்கள் மிகக்குறைவே.

பெரும்பாலும் பிறந்த சில நாட்களில் அல்லது ஒன்றிரண்டு வயதிற்குள் குழந்தைகள் சின்னம்மை கண்டு இறந்துபோவது நிறைய நடந்திருக்கிறது. பத்து வயதைத் தாண்டி விட்டால் பின்பு அவர்கள் நோயுற்று இறப்பதைக் காண முடியாது. முழு ஆரோக்கியத்துடன் தேர்ந்த உடல் வலுவுடன் அவர்கள் வாழுகிறார்கள்.

குழந்தைப் பேற்றின் போது ஒரு பெண் கூட இறந்து போனதாக வரலாறு கிடையாது. இது போலவே காது கேளாத ஒருவரைக் காண்பதும் அரிதே என்கிறார் கேட்லின்.

நீண்ட நடையும் ஆழ்ந்த தூக்கமுமே தங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியக் காரணம் எனும் பூர்வ குடிகள் சரியான தூக்கம் உடலை வலுப்படுத்தும் என்கிறார்கள். நல்ல தூக்கத்திற்குச் சீரான சுவாசம் அவசியம். அதைத் தாங்கள் பழக்கமாக்கி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இவரது தொடர் செயல்பாடுகளின் மூலம் தொல்குடிகளின் வாழ்க்கை முறையும் பண்பாடும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பூர்வ குடிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கவனம் பொதுவெளியில் உருவானது.

கேட்லின் ஓவியத்தில் பூர்வகுடி மக்களின் ஆடைகள், வேட்டையாடும் முறை, நம்பிக்கைகள். கொண்டாட்டங்கள். சடங்குகள் துல்லியமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதன் தனித்துவ அழகும் மூர்க்கமான வெளிப்பாடும் அசாதாரணமாகத் தோற்றம் தருகின்றன.

பூர்குடிகள் ஒன்றுகூடி செய்யும் சடங்குகளைச் சித்தரிக்கும் ஓவியத்தில் வெளிப்படும் வண்ணமும் தோற்றங்களின் சேர்ந்தியக்கமும் அபாரமாக வரையப்பட்டுள்ளன. பெண்களையும் குழந்தைகளையும் கேட்லின் அதிகம் வரையவில்லை.

அவர் அதிகம் வரைந்திருப்பது ஆண்களை. அதுவும் வேட்டையாடுகிறவர்களை, இனக்குழு தலைவர்களைத் தான் வரைந்திருக்கிறார். 300 உருவப்படங்கள் மற்றும் 175 நிலக்காட்சி ஓவியங்கள் மற்றும் சடங்கு காட்சிகளைக் ஜார்ஜ் கேட்லின் வரைந்திருக்கிறார். மஞ்சளும் நீலமும் பச்சையும் அவருக்கு விருப்பமான வண்ணங்கள். உருவங்களைத் துல்லியமாகச் சித்தரிப்பதை விடவும் அதன் தீவிரமான இயக்கத்தைக் காட்சிப்படுத்தவே கேட்லின் முயலுகிறார்.

ஓவியம் வரைவதன் மூலம் தங்களின் ஆன்மாவை ஓவியத்தில் கைப்பற்றிவிடுகிறார் கேட்லின். ஆகவே தங்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்று சியோக்ஸ் பழங்குடிகள் பயந்தார்கள். தங்களின் பாதி உடலை மட்டுமே ஓவியம் வரைந்தால் மறுபாதி உடல் செயலற்று போய்விடும் என ஒரு இனக்குழு பயந்தார்கள்.

கேட்லின் பூர்வ குடி மக்களின் வீடுகள் மற்றும் கூடாரங்கள் பற்றி நிறையத் தகவல்களை ஓவியங்களுடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் களிமண்ணால் செய்யப்பட்ட இந்தக் குடில்கள் நீர்புகாவண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு மழையினையும் இந்தக் குடில்கள் தாங்கக் கூடியவை. அது போலவே அவர்கள் பனிக்காலத்தைக் கடந்து செல்ல அமைத்திருந்த கணப்பு அடுப்புகளையும் வெப்பம் சீராகப் பரவும் முறையினையும் வியந்து எழுதியிருக்கிறார்.

தன்னால் அந்தப் பழங்குடி மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் அவர்களின் பண்பாட்டினையும் தோற்றத்தையும் இயற்கை வளத்தையும் தனது ஓவியங்கள் மூலம் காப்பாற்ற முடியும். எதிர்காலத் தலைமுறைக்கு ஆவணமாக்கிவிட முடியும் என்று கேட்லின் நம்பியிருக்கிறார். அது இன்று நிஜமாகியிருக்கிறது

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2021 06:46

December 18, 2021

மண்டியிடுங்கள் தந்தையே

டால்ஸ்டாய் நாவலுக்கான அட்டை வடிவமைப்பினை முடித்து மணிகண்டன் அனுப்பியிருந்தார். மிக நன்றாக வந்துள்ளது.

நாவலின் அட்டைப்படம் சரியாக வரவேண்டும் என்பதற்காக பத்திற்கும் மேற்பட்ட அட்டைகள் வடிவமைத்துப் பார்த்துவிட்டோம். எதுவும் என் மனதிற்கு நெருக்கமாகயில்லை

முடிவில் டால்ஸ்டாயின் இந்த படமும் அதிலுள்ள அவரது முகபாவமும் நாவலின் மையக்கதைக்கு மிக நெருக்கமாக இருந்தது. இதுவே நாவலின் அட்டை வடிவம்.

நாவல் கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகிறது

விலை ரூ 350

டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் இந்த நாவல் வெளியாகிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2021 05:43

December 17, 2021

ஜீவன் லீலா

காகா காலேல்கர் இந்திய நதிகளைத் தேடிச் சென்ற தனது பயணத்தை ஜீவன்லீலா என்ற நூலாக எழுதியிருக்கிறார். மிக முக்கியமான புத்தகம். இதைப் பற்றி நான் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன்.

நீண்டகாலமாக அச்சில் இல்லாத இந்த நூலை சாகித்ய அகாதமி மீண்டும் பதிப்பித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் ஒரு வாசகர் இதன் பிரதியை நீண்டகாலமாகத் தேடிவருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

சாகித்ய அகாதமி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த நூலைப் பெறலாம்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சாகித்ய அகாதமி அரங்கிலும் இந் நூல் கிடைக்கும்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2021 03:06

December 16, 2021

அழைப்பிதழ்

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on December 16, 2021 22:27

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.