S. Ramakrishnan's Blog, page 107

December 15, 2021

வாதவூரடிகள்

கடந்த வாரத்தில் மதுரையில் இருந்தேன்

டிசம்பர் 11 மகாகவி பாரதி பிறந்த நாள் ஆகவே எட்டயபுரம் வரை சென்று வரலாமா என்றொரு எண்ணம் தோன்றியது.

ஆனால் அன்று காலையில் எழுந்தவுடன் திருவாதவூரில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதிக்குப் போய் வரலாம் என்று தோன்றியது.

பாரதிக்கும் மாணிக்கவாசகருக்கும் நிறைய நெருக்கம் இருப்பதாகவே உணர்கிறேன்.

எனது வீட்டில் மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை வைத்திருக்கிறேன். திருவாசகம் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். அதன் கவித்துவ மேன்மையை எண்ணி வியந்து போகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு திருவாதவூர் போயிருக்கிறேன். மேலூரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அழகான சிற்றூர். அங்கே பழமையான சிவ ஆலயம் உள்ளது

பாரதி 38 வயது வாழ்ந்திருக்கிறார். மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து முக்தி அடைந்திருக்கிறார். எரிநட்சத்திரம் போன்ற வாழ்க்கை இருவருடையதும்.

மாணிக்கவாசகர் முப்பது வயதிற்குள் கவித்துவ எழுச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறார். பொன்னை உருக்கியது போலத் தமிழ் மொழியை உருக்கி வார்த்திருக்கிறார். திருவாசகத்தை வாசிக்க வாசிக்க மனதில் இசை இன்பமும் இனம் புரியாத ஆனந்தமும் நிரம்புவதை உணர்ந்திருக்கிறேன்.

மாணிக்கவாசகரின் கவிமொழியானது பாதரசம் போன்றது. அது உருண்டோடிக் கொண்டேயிருக்கும் வசீகர அழகுடையது. மாணிக்கவாசகர் எளிய சொற்களைக் கொண்டு மகத்தான அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். வெல்லப்பாகு போன்று மொழியை அவரால் பதமாக மாற்றிவிட முடிந்திருக்கிறது.

பெண்கள் பூப்பந்து விளையாடுதல், ஊஞ்சலாடுதல் அம்மானை போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருப்பொன்னூசல்ஆகிய திருப்பதிகங்களை மாணிக்கவாசகர் இயற்றியிருக்கிறார்.

இந்தப் பாடல்களை வாசிக்கும் போது அரூபமாகப் பெண்கள் தோன்றி ஆடுவதை நம்மால் உணர முடிகிறது.

தனது பதினாறு வயதில் மாணிக்கவாசகர் அமைச்சராகிவிடுகிறார். அந்த நாட்களில் அது இளைஞனின் வயது. முப்பத்திரெண்டு வயதிற்குள் அவர் முழு வாழ்க்கையை வாழ்ந்து கடந்திருக்கிறார். முதுமையான பாரதியை மனதில் நினைக்க முடியாதது போலத் தான் மாணிக்கவாசகரும்.

பாண்டிய மன்னருக்காக அவர் குதிரை வாங்கச் சென்று குருவிடம் அடைக்கலமான இடம் புதுக்கோட்டையை அடுத்த ஆவுடையார் கோவில். அங்கே உள்ள குதிரை சிற்பங்கள் நிகரற்றவை. ஆவுடையார் கோவில் சிற்பங்கள் பேரழகு மிக்கவை. அங்குள்ள சுவரோவியங்களும் கொடுங்கைகளும் உன்னதக் கலைப்படைப்புகளாகும்

திருவாதவூருக்குக் காலையில் சென்றபோது வாதபூரீசுவரர் கோவிலில் கூட்டமில்லை.. அங்கே மாணிக்கவாசகருக்குத் தனிச் சன்னதியிருக்கிறது. அங்கே ஒருவருமில்லை. சன்னதி மூடியிருந்தது.

மாணிக்கவாசகர் சன்னதி முன்பாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். தமிழின் மகத்தான கவிஞனின் முன்பாக அமர்ந்திருப்பது மனதைச் சந்தோஷப்படுத்தியது.

மெய் தேடலின் வழியே அவர் உணர்ந்த ஞானத்தைத் தனது கவிதைகளில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 9ம் நூற்றாண்டில் இது போன்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்த ஒருவர் பாண்டிய மன்னரின் அமைச்சராக மாறுவது எளிய விஷயமில்லை.

குதிரை வாங்குவதற்காக மாணிக்கவாசகர் செல்லும் பயணம் மனதில் திரைப்படம் போல ஓடுகிறது. ஒட்டகங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு படைகளும் பரிவாரங்களுடன், பல மாதங்களைக் கடந்து, திருப்பெருந்துறையென்னும், தலத்தை அடைகிறார் மாணிக்கவாசகர். அந்தக் காலத்தில் ஒட்டகங்கள் சுமை கொண்டு செல்ல மதுரையில் பயன்பட்டிருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று இரண்டு மணி நேரத்தில் போய்விடக்கூடிய ஆவுடையார் கோவிலுக்குப் போக அன்று பல நாட்கள் ஆகியிருக்கின்றன.

குரு உபதேசம் பெற்ற மாணிக்கவாசகர் துறவு கோலம் பூண்டுவிடுகிறார். திருவாதவூர் ஆலய முகப்பில் இந்தக் கோலம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நரியைப் பரியாக்கியது வியப்பூட்டும் செயல். இரவில் மீண்டும் பரிகள் நரியாகி ஊளையிட்டு மறையும் காட்சி பிரம்மாண்டமாகக் கண்ணில் தெரிகிறது. பரிமேலழகர் என்ற சொல்லே எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது. துடைத்து எடுத்த தங்கக் காசை பார்ப்பது போல அந்தப் பெயரை சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

மாணிக்கவாசகரைத் தண்டிக்கும் மன்னர் அவரைச் சுடு வெயிலில் நிறுத்துகிறான். அப்படியானால் அந்த வெயிலின் உக்கிரம் எப்படியிருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

அந்தக் காலத்தில் நிலப்பத்திரம் எழுதும் போது இதில் உள்ளபடி நடக்காவிட்டால் சித்திரை மாசம் அக்னி நட்சத்திர வெயிலில் நடக்கச் சம்மதிக்கிறேன் என்று எழுதி கையெழுத்துப் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு நிகரானது தான் மாணிக்கவாசகருக்கு அளிக்கப்பட்ட தண்டனை.

வைகையில் வெள்ளம் வந்தபோது இறைவனே பிட்டுக்கு மண் சுமந்த கதை இன்றும் மதுரையில் புட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது. மதுரை இப்படித் தொன்மங்களின் நிலமாக இருக்கிறது

என் வீட்டில் சிறுவயதிலிருந்து திருவாசகம் பாடப்படுவதைக் கேட்டிருக்கிறேன் .நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று எனது தாத்தா பாடும் போது அவரது கண்கள் கசிந்து வழிவதைக் கண்டிருக்கிறேன். ஒரு பாடலுக்காக ஏன் இப்படிக் கண்ணீர் வடிக்கிறார் என்று தோன்றும்.

ஆனால் மாணிக்கவாசகரின் சன்னதியிலிருந்த போது அந்த அனுபவத்தின் உண்மையை என்றால் நன்றாக உணர முடிந்தது.

2005ல் நானும் ஒளிப்பதிவாளர் ஜீவாவும் பாண்டிச்சேரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஒரு நாளில் இரவு இசைஞானி இளையராஜாவின் திருவாசகத்தை விடியும் வரை கேட்டுக் கொண்டேயிருந்தோம்.

அன்று அடைந்த உணர்வெழுச்சியை விவரிக்க முடியாது. பனிக்கட்டி கரைந்து உருகியோடுவது போன்ற அனுபவமாக இருந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில சிவன் கோவில்களில் ஓதுவார்கள் பண்ணோடு பாடி திருவாசகம் கேட்டிருக்கிறேன். அந்தக் குரல்கள் இன்றில்லை. கோவில் சார்ந்த இசை மெல்ல மறைந்துவிட்டது.

திருவாதவூர் கோவிலில் காலை முதலே திருவாசகம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கோவிலுக்குள் வந்து போகிறவர்கள் உதடுகளில் அந்தப் பாடல் முணுமுணுக்கப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் மாணிக்கவாசகரை நினைவு கொள்வார்கள் என்று தெரியவில்லை

நான் அன்று மாணிக்கவாசகரின் முன் அமர்ந்த தருணத்தில் மழையில் நனைவது போன்ற மகிழ்வுணர்வை அடைந்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்று ஆண்டாளை காணும் போது இத்தகைய பரவசத்தை அடைந்திருக்கிறேன்.

மதுரையை நோக்கி கார் திரும்பும் போது மனதில் திருவாசகமே ஒலித்தது

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

கவிஞர் தேவதச்சனை அலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் இந்த வரிகளை நினைவு கொண்டு போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே என்று கடவுளை வரையறை செய்வது புதுமையானது. இந்த உணர்தல் எளிதானதில்லை. என்று மாணிக்கவாசகரின் பாடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

தாயுமானவர். வள்ளலார் இருவருக்கும் மாணிக்கவாசகரே முன்னோடி என்றார்

Gateless Gate என்று ஜென் விவரிப்பதும் போக்கும் வரவும் இலாப் புண்ணியனே என்பதும் வேறு வேறில்லை என்பதைப் பற்றி பேசிக் கொண்டோம்.

உரையாடல் கோவிலில் திருமுறைகள் பாடும் ஓதுவார்கள் பற்றித் திரும்பியது.

கோவிலில் எரியும் சுடர் போன்றதே ஓதுவார்களின் குரல். மனம் கரைந்து அவர்கள் திருமுறைகள் பாடுவதைக் கேட்கும் போது புகை போல நாம் எடையற்றுப் போய்விடுகிறோம் என்றேன்

ஏழு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் உலகம் முழுவதும் இது போன்ற தீவிரமான மெய் தேடல் நடந்திருக்கிறது. பேரொளி வானில் தெரிவது போல எல்லாத் தேசங்களிலும் இது போன்ற கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை பற்றி பேசிக் கொண்டோம்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது நரியை பரியாக்கிய திருவிளையாடல் பற்றிய ஞானக்கூத்தனின் கவிதை நினைவில் வந்து போனது

விட்டுப்போன நரி

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

குதிரையாகாமல்

விட்டுப்

போனதில் ஒருவன் சாமீ

மேற்படிக்

குரலைக் கேட்டார்

மாதொரு

பாகர். குற்றம்

ஏற்பட

வியந்தார். தேவி

ஏளனம்

செய்தாள் சற்று

“வாதவூரடிகட்காக

நரிகளைத் தேர்ந்த போது

நீதியோ என்னை மட்டும்

விலக்கியச் செய்கை சாமீ!”

திருவருட்

திட்டம் பொய்த்த

தற்கொரு

ஊளைச் சான்றாம்

நரி எதிர்

உதித்துக் கீற்று

நிலாத் திகழ்

ஈசர் சொன்னார்:

நரிகளைப் பரிகளாக்கும்

திருவிளையாடல் முற்றும்

விடுபட்ட பேரை நாங்கள்

கவனிக்க மாட்டோம் போய்வா

மாணிக்கவாசகரின் காலத்திலிருந்து இன்றைய நவீன கவிதை எப்படி வளர்ந்திருக்கிறது என்பதற்கு ஞானக்கூத்தனின் கவிதையே சாட்சி. இதில் விடுபட்டுப் போன நரியின் குரல் கேட்கிறது. அது தான் நவீன வாழ்வின் அடையாளம்.

நரியைப் பரியாக்கிய அற்புத நிகழ்வில் மதுரைக்கு வந்த நரிகள் இரவில் மீண்டும் குதிரை உருவம் கலைத்து நரியாகும் போது அதற்குக் குதிரையாக இருந்ததன் நினைவுகள் இருக்காதா. ஒருவேளை அப்படிக் குதிரை நினைவுகளுடன் இருந்தால் அது. இரட்டை உயிரினமில்லையா

மதுரையில் இன்றும் நரியைப் பரியாக்கும் விளையாட்டு முடியவேயில்லை.

சமயம் சார்ந்த கவிதைகளை வாசிப்பதை இன்றைய இளம் கவிஞர்கள் தேவையற்றதாக நினைக்கிறார்கள். உண்மையில் மாணிக்கவாசகரிடம் வெளிப்படும் சொல்லாட்சியும் கவித்துவ எழுச்சியும் இசையும் இளங்கவிஞன் முனைந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றே.

சுடரில் நேற்றைய சுடர் இன்றைய சுடர் என்ற பேதம் கிடையாது. நெருப்பிற்குக் கடந்த காலமில்லை.

மாணிக்கவாசகரும் அப்படியொரு அழியாச்சுடரே

•••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2021 23:45

December 14, 2021

பெயரும் நினைவும்

அமெரிக்க உரைநடைக்கவிதையில் குறிப்பிடத்தக்கவர் ரஸல் எட்சன். இவரது கவிமொழியும் கருப்பொருட்களும் வசீகரமானவை. அபத்தமும் விசித்திரமும் கொண்ட உரைநடைக்கவிதைகளை எழுதுகிறார்.

ரஸல் எட்சனின் தந்தை ஒரு கார்டூனிஸ்ட். ஆகவே ரஸலும் இளமையில் ஒவியத்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார்.

1950 களில் கவிதைகளை வெளியிடத் தொடங்கிய எட்சன். உரைநடை கவிதைகளில் நிறையப் பரிசோதனைகள் செய்திருக்கிறார்.

GODFATHER OF THE PROSE POEM IN AMERICA என்று சிறப்பிக்கப்படும் எட்சன் Appearances, (Thing Press, 1961); A Stone Is Nobody’s, (Thing Press, 1961); The Very Thing That Happens, (New Directions, 1964); The Brain Kitchen, (Thing Press, 1965 ); What a Man Can See, (The Jargon Society, 1969); The Childhood of an Equestrian, (Harper & Row, 1973); The Tunnel: Selected Poems, (Oberlin College Press, 1994); The Tormented Mirror, (U. of Pittsburgh Press, 2000) போன்ற கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்

இவரது கவிதை ஒன்றில் ஒரு மனிதன் தனது தலையில் தலை என்று எழுதி ஒட்டிக் கொள்கிறான். இது போலவே காலில் கால் என்று எழுதிக் கொள்கிறான். தன் உடலை அதனதன் பெயர்களுடன் இணைப்பது அவனுக்கு வேடிக்கையான விளையாட்டு. அவனது தந்தையிடம் தந்தை எனப் பெயர் எழுதிமாட்ட முயல்கிறான். அவரோ தந்தை என்பது தனிநபரில்லை என்கிறார். இது போலத் தான் தாயும். வீட்டில் உணவு தயாராகிறது. அவன் உணவின் மீது டின்னர் என்று பெயர் எழுதி ஒட்டுகிறான். முடிவில் இந்தச் செயல் கடவுள் மீது கடவுள் எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும் என எழுதி ஒட்ட வேண்டும் என்பதுடன் நிறைவு பெறுகிறது.

பெயரிடுதல் என்பது நினைவு கொள்ளுதலின் முதற்படி. வித்தியாசப்படுத்துதல் பெயர்களின் வழியே தான் துவங்குகிறது. பைபிளில் ஆதாம் எல்லா உயிர்களுக்கும் பெயரிடுகிறான். கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் தனிமையின் நூற்றாண்டுகள் நாவலில் இது போலப் பொருட்களுக்குப் பெயர் மறந்து போகவே அதனதன் பெயர்களை எழுதி ஒட்டுகிறார்கள்.

பெயர்கள் மனிதர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. ஒரு பறவை தனது பெயரைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. ஒட்டகச்சிவிங்கி தன்னை ஒட்டகச்சிவிங்கி என்று நினைப்பதில்லை. அதைப் பற்றி யோசிக்காமல் ஒட்டகச்சிவிங்கியாகவே இருக்கிறது

கை, கால், கழுத்து, தலை, தந்தை தாய் என்ற பொதுப்பெயர்கள் அடையாளமாகவும் அடையாளத்திற்கு வெளியிலும் இருக்கின்றன. ஒன்றை எழுதுவது என்பது நினைவு கொள்வதன் வடிவமாகும். இந்தக் கவிதையில் வெளிப்படுத்தும் அபத்தம் நமது அடையாளங்கள் குறித்த கேள்வியை எழுப்புகின்றன

இன்னொரு கவிதையில் கல் ஒன்றை எடுத்து ஒளித்து வைக்கும் ஒருவன் கற்கள் நெடுதுயிலில் இருக்கின்றன என்கிறான். அத்தோடு எல்லாக் கற்களும் சிறைப்படுத்தப்பட்டவை என்கிறான். ஒரு கல்லிற்குத் தான் எங்கே இருக்கிறோம் என்பதைப் பற்றிய சிந்தனைகளோ, கவலைகளோ கிடையாது. நித்தியத்துவமும் கற்களும் தாயும் மகளும் போன்றவை என்றும் கவிஞன் கூறுகிறான். நமக்குத் தான் வயதாகிறது. கற்களுக்கு வயது கிடையாது. கற்களைக் கையில் எடுத்துக் கொண்டதால் அதைச் சொந்தமாக்கிவிட்டதாக எண்ண முடியாது. கற்கள் யாருக்கும் சொந்தமானவையில்லை. அது நேசிக்கப்படாத மனிதனைப் போலவே எப்போதுமிருக்கிறது என்கிறார் ரஸல் எட்சன்

இன்னொரு கவிதையில் நெருப்பு தனக்கு மிகவும் பசியாக இருப்பதைப் பற்றிப் பேசுகிறது. ஒரு மரக்கட்டையைத் தின்பதன் வழியாகத் தனது பசியை ஆற்றிக் கொள்ள முடியவில்லை என்றும். நெருப்பிற்கும் சிறு தூக்கம் உண்டு என்றும் கவிதை நீள்கிறது

தன் முன்னே நிற்பதைக் காட்ட முடியாது எனக் கண்ணாடியால் மறுக்கமுடியாது என்றொரு வரியை எட்சன் எழுதியிருக்கிறார். உதிரும் இரண்டு இலைகளைக் கையில் பிடித்துக் கொண்ட ஒருவன் தானே ஒரு மரம் என்கிறான் இன்னொரு கவிதையில்

ரஸல் எட்சனின் உலகம் கனவுவெளி போலவே இருக்கிறது. சல்வதோர் டாலியின் சர்ரியலிச ஓவியங்களைப் போலவே எட்சன் கவிதைகள் எழுதியிருக்கிறார். அன்றாட உலகில் எவையெல்லாம் பலவீனமாகக் கருதப்படுகிறதோ அவை எல்லாம் இவரது கவிதையில் பலசாலியாக மாறுகின்றன. ஒரு முயல் ஒரு மனிதனைக் கொல்கிறது. புற்கள் ஆவேசமாகச் சண்டையிடுகின்றன. அமைதியான அம்மாவின் முதுகில் ஒரு முகம் தோன்றுகிறது. மரத்தால் செய்யப்பட்ட தலை கொண்ட ஒரு மனிதன் வாழுகிறான். நிறையக் கைகள் இருந்தால் தான் ஒரு குடை போலாகிவிட முடியும் என்கிறான் வேறு ஒரு மனிதன். கடிகார முள் ஒருவனது கழுத்தை வளைத்துக் கொள்கிறது

அன்றாட உலகை விசித்திரமாக்குவதன் வழியே அது உருவாக்கிய சலிப்புத் தன்மையும் பயன்பாடும் விலகிப் போகிறது. மேலும் தினசரி வாழ்க்கைக்குள் நாம் அறியாத ரகசியங்கள். புதிர்கள். அபத்த நிகழ்வுகள் கலந்திருக்கின்றன என்பதையும் உணர முடிகிறது.

சமையலறையைத் தனது கவிதைகளில் ஒரு முக்கியக் குறியீடாக ரஸல் எட்சன் மாற்றுகிறார். நிறையக் கவிதைகளில் சமையலறையின் உலகம் முதன்மையாகச் சித்தரிக்கபடுகிறது

அது போலவே கடிகாரங்களும் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. கடிகாரம் 12 எண்களைக் கொண்டிருப்பதையும் தனக்குப் பத்து விரல்கள் மட்டுமே இருப்பதையும் ஒப்பிட்டு ஒருவன் தான் கடிகாரத்தை விடவும் குறைந்தவன் என்று நினைக்கிறான். தனது இரண்டு கண்களையும் சேர்த்துக் கொண்டால் தனக்கும் பனிரெண்டு வந்துவிடும் என்று சொல்கிறான். வேறு கவிதையில் ஒருவனின் கைக்கடிகாரம் அவனது மணிக்கட்டில் உருகிப் போகிறது

இன்னொரு கவிதையில் ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்ட எல்லாச் சொற்களும் உதிர்ந்துவிடுகின்றன. புத்தகம் வெற்றுகாகிதங்களால் உருவாக்கப்பட்டதாக மாறிவிடுகிறது. உதிர்ந்த சொற்களுடன் முற்றுப்புள்ளிகள். ஆச்சரியக்குறிகள். கேள்விக்குறிகள் யாவும் உதிர்ந்து கிடக்கின்றன. தனித்துக் கிடக்கும் ஒரு கேள்விக்குறிக்கு என்ன அர்த்தம் என்று கவிதை கேட்கிறது. அதில் வெற்றுக்காகிதங்கள் ஆபத்தானவை. அதில் எவையும் எழுதப்படக்கூடும் என்றொரு அவதானிப்பும் சொல்லப்படுகிறது

ரஸல் எட்சனை படிக்கும் போது கவிதை ஒரு மாயத்திரவம் போல எதையும் உருமாற்றிவிடுவதை உணருகிறோம். வேறு ஒரு கவிதையில் ஒரு பையன் வீட்டின் மூலையாக மாறிவிடுகிறான் என்ற வரியைப் படித்தபோது அதிலிருந்து விடுபட முடியவேயில்லை

ஒரு பொம்மை தயாரிப்பவன் தனக்கென ஒரு பொம்மை மனைவியை உருவாக்கிக் கொள்கிறான். அவளோ ஒரு பொம்மை குழந்தையைப் பெறுகிறாள். அவர்கள் ஒரு பொம்மை வீட்டில் வசிக்கிறார்கள். அங்கே சில பொம்மை ஆண்டுகள் கடந்து போகின்றன என்றொரு கவிதையிருக்கிறது.

ஒரு மனிதன் ஒரு வாகனத்தை மணந்து கொள்வதாக வேறு ஒரு கவிதை துவங்குகிறது. இந்த ஒற்றை வரியின் வழியே வாகனம் குறித்த நமது புரிதல் சட்டென மாறிவிடுகிறது.

ஒரு பெண் ஒரு கிழவரைப் பெற்றெடுத்தாள் என இன்னொரு ஒரு கவிதையில் சொல்லப்படுகிறது. ஒரு பெண் தவளையைப் பெற்றெடுக்கிறாள். கனவு ஒரு நாடகமேடை போலாகிறது. தொட்டிலில் போடப்பட்ட குழந்தை திடீரென மரத்துண்டாகிவிடுகிறது. உறக்கத்தில் ஒரு முதியவரின் உடல் அதன் எல்லைகளை அறியாமல், உருகி வழியும் மெழுகு போல. தரையில் .சொட்டுகிறது இப்படி முடிவில்லாத விசித்திரங்களின் தொகுப்பாகக் கவிதைகள் காணப்படுகின்றன

காலத்தின் அடையாளத்தை உருமாற்றுவதும் நித்தியத்துவத்தின் குரலை ஒலிப்பதையும் எட்சனின் கவிதைகளில் காணமுடிகிறது யதார்த்த உலகினையும் மொழி வழியாக உணரும் அனுபவத்தையும் எதிர்நிலை கொள்ளச்செய்யும் இவர் இரண்டிற்குமான முரணை முன்வைக்கிறார். ஆகவே இவரது கவிதைகளில் அபத்தமும் கேலியும் ஒன்று சேர்ந்து வெளிப்படுகின்றன

புனைகதை வழியாக யதார்த்தம்மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. கவிதையோ கனவு நிலையை. மனதின் ஆழ்நிலையிலிருந்து வெளிப்படும் மொழிதலை முன்னெடுக்கிறது. கவிதையால் பேச முடியாது. உணர்த்த மட்டுமே முடியும் என்கிறார் எட்சன்

POETRY IS ALWAYS LOOKING FOR A LANGUAGE BECAUSE IT IS NOT NATURAL TO LANGUAGE AS FICTION IS. என்கிறார். இந்த மதிப்பீடு தான் அவரது கவிதைகளின் ஆதாரப் புரிதல்

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2021 23:14

திரையெங்கும் முகங்கள்

உலக சினிமா குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

இத்தாலிய நியோ ரியலிசப் படங்களில் துவங்கி சென்ற ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற படங்கள் வரையான பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் இந்நூல் திரை அழகியலின் மாற்றங்களை அடையாளப்படுத்துகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2021 22:55

சிறிய உண்மைகள்

போர்ஹெஸ் தனது The Book of Sand கதையில் NEITHER THE BOOK NOR THE SAND HAS ANY BEGINNING OR END என்கிறார்

வாசிப்பின் போது சில வரிகள், சில நிகழ்வுகள். நினைவுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் பொருட்கள்.

எழுத்தின் ஆதாரங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் எனது இணையதளத்தில் வெளியானவை.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்நூல் டிசம்பர் 25 மாலை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியாகிறது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2021 22:50

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது பத்து புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சம்பிரதாயமான முறையிலிருந்து மாறுபட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

தலைமை, வாழ்த்துரை என எதுவும் கிடையாது. பத்து நூல்களுக்கும் தனி உரைகள் நிகழ்த்தப்படப்போவதில்லை

நிகழ்வின் துவக்கத்தில் புதிய நூல்களை வெளியிடுகிறோம். அன்பிற்குரியவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள்

எனது புதிய நாவலை எனது நண்பரும் தேர்ந்த இலக்கியவாசகருமான திருப்புகழ் IAS அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார்

அதைத் தொடர்ந்து நாவலின் சில பகுதிகளை நான் வாசிக்க இருக்கிறேன்

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் உருவான விதம் பற்றி அகரமுதல்வன் என்னுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்

அடுத்த அமர்வாக காந்தியின் நிழலில் நூலை காந்தி கல்வி நிலையத்தின் சரவணன் பெற்றுக் கொண்டு என்னுடன் கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்

டான்டூனின் கேமிரா என்ற சிறார் நூல் வண்ணத்தில் வெளியாகிறது. புகழ்பெற்ற ஒவியர் நரேந்திரபாபு இதற்கான ஒவியங்களை வரைந்து தந்திருக்கிறார்

நரேந்திரபாபு

இந்த நூல் பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரையில் முறையில் தனி நூலாகவும் வெளியாகிறது.

தேசாந்திரி பதிப்பகம் நடத்தும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

••••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2021 04:45

ரகசியத்தின் பாதையில்

Souad என்ற எகிப்திய படத்தைப் பெண் இயக்குநரான அய்டன் அமீன் இயக்கியுள்ளார். 2021ல் வெளியான இப்படம் ஆஸ்கார் விருதுக்கான அயல்மொழி பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

பேஸ்புக், டிக்டாக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு இளந்தலைமுறையினருக்கென ஒரு ரகசிய வாழ்க்கை உருவாகியிருக்கிறது. ஆன்லைன் வழியாகக் காதல் கொள்வதும் அதில் ஏற்படும் சிக்கல்களும் முந்தைய தலைமுறை அறியாத விஷயம்.

டீனேஜர்கள் இணையவெளியில் எவருடன் நட்பாக இருக்கிறார்கள். யாருடன் சாட் செய்கிறார்கள். எந்த வீடியோவை, புகைப்படத்தை ரசிக்கிறார்கள். எதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்ன பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார்கள். என்பதைக் குடும்பத்தினர் அறிந்து கொள்ள முடியாது. பாஸ்வேர்டுகளின் உலகை பெற்றோர்களால் புரிந்துகொள்ள முடியாது

வீடும் சமூகமும் அனுமதிக்க மறுத்த விஷயங்கள் யாவும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. மாயச்சுழல் போல ஒரு விசை அவர்களை உள்ளிழுத்துக் கொண்டுவிடுகிறது. இந்தச் சுழலுக்குள் சிக்கி மீளமுடியாதவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

அது போன்ற டீனேஜர்களில் ஒருத்தியான சோகேத்தின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. டீனேஜ் பெண்களின் அக உலகை இவ்வளவு நெருக்கமாக இதுவரை திரையில் யாரும் சித்தரித்ததில்லை. மிக உண்மையாக, நுட்பமாக உணர்ச்சிப்பூர்வமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

டீனேஜர்களை வழிநடத்துவது இணையவெளியில் பகிரப்படும் இசை, சினிமா, விளையாட்டு, விளம்பரங்களே. அவர்கள் தன்னை வேறு ஒருவராக அதில் காட்டிக் கொள்கிறார்கள். பேஸ்புக்கில் உள்ள புனைபெயர்களை வாசித்துப் பாருங்கள். அந்த விநோதம் புரியும். தன்னை தானே ரசித்துக் கொள்ளும் இவர்களின் ஆசைகளும் எதிர்பார்ப்பும் நிமிஷத்துக்கு நிமிஷம் மாறிக் கொண்டேயிருக்க கூடியது.

பெருநகரம் துவங்கி சிறு கிராமம் வரை செல்பி எடுப்பது இயல்பாகிவிட்டது. பேஸ்புக்கில் நேரம் செலவிடுவது வாடிக்கையாகிவிட்டது. உலகெங்கும் இது தான் சூழல். இந்த மாயவெளி பெண்களுக்கு புதிய சுதந்திரத்தை அளித்த அதே நேரம் அவர்களின் மீதான வன்முறைக்கருவியாகவும் மாறிவிட்டிருக்கிறது.

இப்படம் அந்த உலகை தான் பேசுகிறது. பதினாறு வயது பெண் தன் வயதை மறைத்து ஏன் யாரோ முகமறியாத ஒருவனின் நட்பை நாடுகிறாள். அவனுக்காக ஏங்குகிறாள், தற்கொலை செய்து கொள்கிறாள என்ற கேள்வியை எழுப்புகிறது

சமூக ஊடக செயல்பாட்டில் எது சரி எது தவறு என்ற நிலைப்பாட்டினை படம் எடுக்கவில்லை. மாறாக எப்படி இது போன்ற பிம்பவெளியால் இளம்பெண்கள். காவு வாங்கப்படுகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இளைஞனான அகமது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் பேஸ்புக்கில் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டும் விதவிதமான ஸ்டோரி போட்டு லைக்குகளை அள்ளிக் கொண்டும் காதல் நாயகனாக வலம் வருகிறான். அவன் அலெக்சாண்டிரியாவில் வசிக்கிறான். செல்போன் தான் அவனது உலகம். உறக்கத்திலும் அவன் கைகள் தானே போனை எடுத்துப் பேசுகின்றன. அவனுக்கு ஏராளமான பெண் தோழிகள். அவர்களுடன் அரட்டை அடிப்பதே வாழ்க்கையென இருக்கிறான்.

ஜகாசிக் என்ற சிற்றூரில் வசிக்கும் மருத்துவ மாணவியும் தீவிர மதநம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவளுமான சோகேத் பேஸ்புக் மூலம் அகமதுவின் நட்பைப் பெறுகிறாள். அவனது வீடியோக்களை ரசித்துப் பாராட்டுகிறாள். இந்த நட்பு மெல்லக் காதலாக மாறுகிறது.

அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கனவு காணுகிறாள். ஆனால் அவனோ வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதைப் பற்றி அவளுடனே பேசுகிறான். காதலியின் படங்களைப் பகிர்ந்து கொள்கிறான். அவனை எப்படியாவது தன்வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் அவனுடன் ஃபோன் செக்ஸில் கூட ஈடுபடுகிறாள். அப்படியும் நெருக்கமாகயில்லை. இதனால் ஆத்திரமாகி அவனுடன் சண்டை போடுகிறாள். தனது ரகசிய காதலை குடும்பத்தினர் அறிந்துவிடாமல் ஒளித்துக் கொள்கிறாள். அவளது தோழிகளுக்குக் கூட உண்மை தெரியக்கூடாது என நினைக்கிறாள்.

ஒரு நாள் மூன்று இளம்பெண்களும் வீட்டில் ஒன்றுகூடி ரகசிய ஆசைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது சோகேத் செக்ஸியாகப் போட்டோ எடுத்துப் பேஸ்புக்கில் போஸ்ட் போட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதற்காக அவளும் தங்கையும் ஸ்டைலாக ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துப் பகிருகிறார்கள்.

மதக்கட்டுபாடும் வீட்டின் அதிகாரமும் அவளுக்கு மூச்சுத் திணறச்செய்கின்றன. இதிலிருந்து விடுபட அவள் இணையவெளியில் சுதந்திரமாகச் சஞ்சரிக்கிறாள். டிஜிட்டல் மீடியா அவளது கனவுலகமாகிறது

மனக்குழப்பம் அதிகமான ஒரு நாளில் அகமது தன்னை நிராகரிப்பதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் சோகேத் தற்கொலை செய்துவிடுகிறாள். இந்த அதிர்ச்சியைக் குடும்பத்தினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அம்மா அழுது கரைகிறாள். அவளது தங்கை ரபாப் அக்காவின் செல்போனில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து அவளது ரகசிய வாழ்க்கையை அறிந்து கொள்கிறாள்.

அக்கா ரகசியமாகக் காதலித்த அகமதுவைக் காண அலெக்சாண்ட்ரியா புறப்படுகிறாள். அங்கே அவனுடன் ஒருநாளைச் செலவிடுகிறாள். இந்த நாளில் தன்னையே அவள் அக்காவாக உணருகிறாள். படத்தின் மிக அழகான பகுதியது

அவர்கள் ஒன்றாக ஷாப்பிங் மாலில் சுற்றுவதும். கடற்கரைப் பகுதியில் நடப்பதும், உணவகத்தில் சாப்பிடுவது. வானளாவிய கட்டிடங்கள் கொண்ட நகரத்தின் வழியாகக் காரில் பயணம் செய்வதும், பாலத்தில் நின்று வேண்டுதல் செய்வதும். முத்தம் கேட்பதும் என இழப்பின் துயரத்தை தாண்டி அவர்கள் இளம் காதலர் போலவே நடந்து கொள்கிறார்கள்.

அக்கா தன் வாழ்நாளில் சந்திக்காத அகமதுவைத் தங்கை சந்திக்கிறாள் என்பது அழகான முடிச்சு. இந்தச் சந்திப்பின் போது அகமதுவிடம் குற்றவுணர்வே இல்லை. அவனுக்குத் தெரிந்த பல பெண்களில் சோகேத்தும் ஒருத்தி. அவளது மரணத்திற்காகப் பிரார்த்தனை செய்யும் காட்சியில் கூட அவன் உண்மையாகப் பிரார்த்தனை செய்வதில்லை.

மார்க்கட்டுக்குப் போகும் போது கூடச் சோகேத்தின் அம்மா அவளது கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறாள். அந்த அளவு சோகேத் குடும்பத்திற்குள்ளாகவே வளருகிறாள். ஆனால் அதே சோகேத் பேருந்தில் உடன் வரும் பெண்ணிடம் தன்னைப் பற்றிக் கற்பனையாக ஏதோ சொல்கிறாள். தனது அடையாளத்தை வேறாகக் காட்டிக் கொள்ள முயலுகிறாள். இந்தக் குழப்பம் தான் அவளது பிரச்சனை.

சோகேத்தின் படுக்கையறையில் மூன்று பெண்களும் சேர்ந்து உரையாடுவதும் அவர்களின் அத்தை போல நடித்துக் காட்டுவதும் சிறப்பான காட்சி. சோகேத் கையிலுள்ள, ஃபோன் கேமரா என்பது அவளது அகத்தைக் காட்டும் கண்ணாடி போலாகிறது. அவள் கேமிராவுடன் பேசுகிறாள். கேமிராவிற்குத் தனது உடலைக் காட்டுகிறாள். கேமிரா முன்பு அழுகிறாள். செல்போன் கேமிரா என்பது வெறும் கருவியில்லை. அது ஒரு சாளரம். ரகசிய கதவு.

கதாபாத்திரங்களுடன் ஒருவராகக் கேமிரா கூடவே பயணிக்கிறது. நகரை அது காட்டும் அழகும். சமூக ஊடகவெளியை பிரதிபலிக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. சிறந்த இசையும் படத்தொகுப்பும் பாராட்டிற்குரியது.

இளமைப் பருவத்தின் கொந்தளிப்புகளையும் சமூக ஊடகங்களில் அது வெளிப்படும் விதத்தையும் அசலாகப் பதிவு செய்துள்ளதில் இப்படம் முக்கியமானதாகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2021 03:29

December 12, 2021

மண்டியிடுங்கள் தந்தையே

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் வெளியாகவுள்ள எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே பற்றிய காணொளி

சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2021 20:34

கார்க்கியின் பாட்டி

மாக்சிம் கார்க்கி தனது வாழ்க்கை வரலாற்றை மூன்று பகுதிகளாக எழுதியிருக்கிறார். மூன்றும் மிகச் சுவாரஸ்யமான புத்தகங்கள். இதில் எனது குழந்தைப் பருவம் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. தனது தந்தையின் மரணத்தைக் கார்க்கி எதிர்கொண்ட விதமும் பாட்டியோடு மேற்கொண்ட கப்பல் பயணத்தைப் பற்றிய நினைவுகளும் திரைப்படம் போல நம் கண்முன்னே விரிகின்றன.

கார்க்கியின் தந்தை அவரை எதற்காகவும் அழக்கூடாது என்று பழக்கியிருந்தார். ஆகவே தந்தை இறந்த போதும் அவருக்கு அழுகை வரவில்லை. ஒரு மழைநாளில் தந்தை இறந்த போது பாட்டி அவரிடம் கடைசியாகத் தந்தையை ஒரு முறை பார்த்துக் கொள். இனி அவரைப் பார்க்கவே முடியாது என்கிறார். அது ஏன் எனக் கார்க்கிக்குப் புரியவில்லை. ஏன் தனது தந்தையைச் சுற்றி இத்தனை பேர் அமர்ந்து அழுகிறார்கள். அவர் ஏன் பேசாமல் இருக்கிறார் என்று குழப்பமாக இருக்கிறது

மழையோடு தந்தையின் சவப்பெட்டியைப் புதைகுழியில் இறக்கி மண்ணைப் போட்டு மூடும் போது அந்தச் சவப்பெட்டி மீது ஒரு தவளை இருப்பதைக் கார்க்கி கவனிக்கிறார். அந்தத் தவளையும் சேர்த்து மண்ணைப் போட்டு மூடிவிடுகிறார்கள். அது தான் கார்க்கிக்கு வருத்தமாக இருக்கிறது.

அந்தத் தவளை என்னவாகும் என்று கேட்கிறார். தவளையைக் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்கிறார் பாட்டி.

முதன்முறையாக மரணத்தைச் சந்திக்கும் ஒரு சிறுவனின் மனத்தை எவ்வளவு துல்லியமாகக் கார்க்கி எழுதியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது

இது போலவே அவர்கள் நீராவிக்கப்பலில் பயணம் செய்யும் போது பாட்டி சொல்கிறார்

“தவளைகளுக்காகக் கவலைப்படுகிறாயே.. உன் அம்மா இப்போது அநாதரவாக நிற்கிறாள். இனி அவளது வாழ்க்கை என்னவாகும் என்று நினைத்துப் பார்“ என்கிறார். கார்க்கிக்கு மெல்லத் துயரத்தின் வலி புரிய ஆரம்பிக்கிறது

அவர்கள் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கார்க்கியின் தம்பி இறந்து போய்விடுகிறான். அவனது உடலை வெள்ளைத் துணியால் சுற்றி ஒரு மேஜையில் கிடத்தியிருக்கிறார்கள். பக்கத்திலிருந்து அந்த உடலைக் காணும் கார்க்கியின் பயப்படாதே என்கிறார் பாட்டி

சாராட்டாவ் என்ற இடத்தில் கப்பல் நிற்கிறது. குழந்தையின் உடலைச் சவப்பெட்டியில் ஏந்திக் கொண்டு பாட்டியே புதைக்கச் செல்கிறார். பருத்த உடல் கொண்ட அவர் மெதுவாக நடந்து செல்லும் காட்சியைக் கார்க்கி உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

அம்மாவை பாட்டி ஆறுதல்படுத்தும் விதமும் அம்மாவின் வேதனை படிந்த முகத்தையும் பற்றி கார்க்கி விவரிக்கும் போது அந்த ஈரமான கண்கள் நம் முன்னே தோன்றி மறைகின்றன.

வாழ்க்கை நெருக்கடிகளைப் பாட்டி எதிர்கொள்ளும் தைரியமும் உறுதியாக நடந்து கொள்ளும் முறையும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. பாட்டி அவருக்கு நிறையக் கதைகள் சொல்கிறார். கப்பலில் வேலை செய்கிறவர்கள் அவளது கதையைக் கேட்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.

இதயத்தை வலுப்படுத்துவதற்குக் கதைகள் தேவைப்படுகின்றன என்கிறார் பாட்டி

உண்மையான மதிப்பீடு.

பாட்டிக்கு மிகவும் நீண்ட கூந்தல். சிக்குப் பிடித்த தனது கூந்தலைச் சீப்பால் சீவி சரி செய்யப் போராடுகிறாள். இதனால் அவளது முகம் சிவந்து போகிறது

தனது நீண்ட கூந்தலைப் பற்றிப் பாட்டி சொல்வது அசலான வார்த்தைகள்..

இது ஆண்டவனுடைய விருப்பத்தால் ஏற்பட்ட தண்டனை. இளமைப்பருவத்தில் நீண்ட கூந்தலை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் முதுமையில் கூந்தலை வாரி முடிப்பதிலே பொழுது கழிந்துவிடுகிறது. இது ஒரு சாபக்கேடு போலிருக்கிறது

பாட்டியின் பேச்சும் சிரிப்பும் கதை சொல்லும் விதமும் அவளை ஒரு நண்பனைப் போலாக்கியது என்கிறார் கார்க்கி.

பாட்டி கொடுத்த தைரியமே தன்னைத் தேசம் முழுவதும் சுற்றியலைய வைத்தது. தன் எழுத்தின் ஊற்றுக்கண் பாட்டியே என்கிறார் கார்க்கி

சமையல் அறையைக் காப்பதற்கென ஒரு தெய்வம் இருப்பதாகப் பாட்டி நம்புகிறார். அது தான் உணவிற்குச் சுவையை உருவாக்குகிறது. அந்தத் தெய்வம் கோவித்துக் கொண்டுவிட்டால் வீட்டில் உணவு சமைக்க முடியாது என்கிறார்.

அவர்கள் வீடு மாறிப் போகும் போது அந்தத் தெய்வத்தைத் தன்னோடு வரும்படி பாட்டி அழைக்கிறாள். பின்பு ஒரு பெட்டியில் கடவுளையும் அழைத்துக் கொண்டு சென்றார்கள் என்கிறார் கார்க்கி

கார்க்கியின் கதைகளில் வரும் விநோதமான நிகழ்ச்சிகள்.. தைரியமான பெண் கதாபாத்திரங்கள்.. வாழ்க்கை நெருக்கடிகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதம். கஷ்டமும் போராட்டமுமான அன்றாட வாழ்க்கையின் நடுவேயும் உணவும் நடனமும் இசையுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் யாவும் பாட்டியின் வழியே அவருக்கு கிடைத்த வளங்கள்.

ஒரு எழுத்தாளன் எப்படி உருவாகிறான் என்பதை அறிந்து கொள்வதற்குக் கார்க்கியின் இந்த மூன்று தொகுதிகளும் சாட்சியமாக உள்ளன.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2021 20:32

December 8, 2021

இனிய உதயம் இதழில்

எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் பற்றி இனிய உதயம் இதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2021 20:21

உதிர்ந்த கனவுகள்

A Fortunate Man என்ற டேனிஷ் திரைப்படத்தைப் பார்த்தேன். வெளியான படம். பில்லி ஆகஸ்ட் இயக்கியிருக்கிறார்

கதை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடக்கிறது.

தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பம் ஒன்றில் பிறந்த பீட்டர் தந்தையைப் போல மதகுருவாக விரும்பாமல் பல்கலைக்கழகத்தில் சென்று பொறியியல் படிக்க விரும்புகிறான்.

இதை அவனது தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக வீட்டை விட்டுப்புறப்படும் மகனுக்கு ஒரு பாக்கெட் கடிகாரத்தைப் பரிசாகத் தருகிறார் தந்தை.

அந்தக் கடிகாரம் அவன் தவறான பாதையில் செல்வதை நினைவுபடுத்தி அவன் மனதை மாற்றும் என்கிறார்

அந்தக் கடிகாரத்தை ஏற்க மறுக்கும் மகன் அவரை எதிர்த்து வாதிடுகிறான். இதனால் ஆத்திரமான. தந்தை அவனை அடித்துவிடுகிறார். பீட்டர் குடும்பத்தை விட்டு வெளியேறிப் போகிறான்.

அவனது வெளியேற்றம் ஒரு குறியீடு போலவே காட்டப்படுகிறது. உண்மையும் அப்படியானதே. மரபான சமூகம் மற்றும் பண்பாட்டுச் சூழலிலிருந்து விடுபட்ட புதிய தலைமுறையின் அடையாளம் போலவே பீட்டர் சித்தரிக்கப்படுகிறான்.

வறுமையான சூழலில் கல்வி பயில கோபன்ஹேகனுக்கு வருகிறான். வசதியில்லாத அறை. பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி. இதற்குள் தனது புதிய கனவுகளை வளர்த்தெடுக்கிறான் பீட்டர்.

ஆனால் அவன் நினைத்தது போல வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதாகயில்லை. தந்தையிடம் துவங்கும் படம் பீட்டர் தந்தையாகி உலகைப் புரிந்து கொள்வதுடன் நிறைவு பெறுகிறது. அந்த வகையில் ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை நாம் திரையில் காணுகிறோம்

டேனிஷ் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹென்ரிக் பொன்டோப்பிடனின் நாவலைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். ஆகவே கதையின் செவ்வியல் தன்மை மிக அழகாகத் திரையிலும் வெளிப்பட்டுள்ளது.

கோபன்ஹேகனுக்குப் படிக்கச் செல்லும் பீட்டர் அங்கே நீர் மற்றும் காற்றாலையைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்கும் திட்டத்தை உருவாக்குகிறான். இதைச் செயல்படுத்தப் பலரையும் சந்திக்கிறான்.

இந்தத் திட்டம் செயல்வடிவம் கொண்டால் தேசம் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும் என்று நம்புகிறான். ஆனால் அவனுக்கு நிதியுதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில் உணவகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான். அவனது தேவைகளைப் புரிந்து கொண்டு பல்வேறு வகையிலும் அவள் உதவிகள் செய்கிறாள். ஆனால் அவளையும் தான் கடந்து செல்லும் ஒரு பாலம் போலவே பீட்டர் நினைக்கிறான்.

இந்நிலையில் ஒருநாள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இவான் சாலமோனை சந்திக்கிறான். அவனிடம் நீர்மின்சாரத்திட்டத்தைப் பற்றி விவரிக்கிறான். இதில் ஆர்வம் கொண்ட இவான் உதவி செய்ய முன்வருகிறான்

நீர்மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக வங்கி உரிமையாளர் பிலிப் சாலமனை சந்திக்க ஏற்பாடு செய்கிறான். இதற்காகப் பிலிப் சாலமன் வீட்டிற்குச் செல்லும் பீட்டர் தன்னை வசதியான குடும்பத்து ஆள் போலக் காட்டிக் கொள்ளப் புத்தாடைகள் அணிந்து செல்கிறான்.

அங்கே சாலமனின் இரண்டாவது மகளைச் சந்திக்கிறான். அவள் பீட்டர் மீது காதல் கொண்டவளாக நடந்து கொள்கிறாள். அதைத் தனக்குச் சாதமாக அவன் பயன்படுத்திக் கொள்கிறான்.

பின்னொரு முறை சாலமனின் மூத்தமகள் ஜேகோப்யை சந்திக்கிறான். அவளது அறிவாற்றலை வியந்து அவள் மீது காதல் கொள்கிறான். ஆனால் அவளை மணக்கவிரும்பும் கொண்டிருந்த யூதவணிகரான ஐபெர்ட் இதற்குத் தடையாக இருக்கிறார்.

தனது பிடிவாதமான நம்பிக்கை மற்றும் முயற்சிகளால் அவன் ஜேகோப்பை திருமணம் செய்யச் சம்மதம் பெறுகிறான். குதிரைவண்டியின் முன்னால் பீட்டர் ஒடுவது அவனது ஆளுமையின் அடையாளம். அந்தக் காட்சியில் அவன் தான் விரும்பியதை அடைய எதையும் செய்வான் என்பது தெளிவாக உணர்த்தப்படுகிறது

ஜேகோப் அவனது காதலை ஏற்றுக் கொண்டு திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் அவர்கள் யூதகுடும்பம் என்பதால் மதம் குறுக்கீடு செய்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் பீட்டரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அனுமதி கேட்கிறாள். அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது

இதற்கிடையில் பீட்டரின் நீர் மின்சக்தி திட்ட அறிக்கையை அரசின் தலைமை பொறியாளர் நிராகரித்துவிடுகிறார். இதனால் அரசின் ஒப்புதல் கிடைக்காமல் போகிறது. தற்காலிகமாக பீட்டர் ஆஸ்திரியாவிற்குச் சென்று பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.

இந்தப் பின்னடைவு அவனது கசப்புணர்வை, தனிமையை அதிகமாக்கிவிடுகிறது. இந்த நிலையில் ஒரு நாள் அவனைத் தேடி ஜேகோப் வருகிறாள். எதிர்பாராத அவளின் சந்திப்பும் அன்பும் பீட்டரை நெகிழச்செய்கிறது. இருவரும் ஒன்றாகத் தங்குகிறார்கள். உல்லாசமான நாளை கழிக்கிறார்கள்.

அந்த நாளின் போது பீட்டருக்குள் வேர்விட்டுள்ள மதவெறுப்பை அறிந்து கொள்கிறாள் ஜேகோப்.

பின்னொரு நாள் பீட்டரின் தந்தை இறந்து போன செய்தி வருகிறது. அவன் அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை. அவரது மரணம் தனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்கிறான். தந்தையின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டதாக உணரும் அவன் தாயின் நிலையை எண்ணி கண்ணீர் வடிக்கிறான்.

பீட்டரின் தேவையற்ற பிடிவாதம் காரணமாக அவனது கனவுத்திட்டம் தோற்றுப்போகிறது. உடல்நலமற்ற அவனது அம்மாவும் இறந்து போகிறாள். பீட்டர் மனம் உடைந்து போகிறான். மீளாத்துயரத்தில் கரைந்து போகிறான்.

தந்தையின் மரணம் ஏற்படுத்தாத வலியைத் தாயின் மரணம் ஏற்படுத்திவிடுகிறது. அதுவும் அம்மாவின் கடைசிக்கடிதம் அவனைத் தன்னிலை உணரச் செய்கிறது. மனம் திருந்திய மைந்தன் போலாகிவிடும் பீட்டர் நகரவாழ்க்கையை விட்டு ஒதுங்கி இயற்கையான சூழலில் தனது மரபான வேர்களைத் தேட ஆரம்பிக்கிறான்.

அம்மாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்கிறான். தந்தையின் நண்பரான மதகுருவின் ஆலோசனைப் படி தீவிரமான மதப்பற்றுக் கொள்கிறான். ஜேகோபை விலக்கி மதகுருவின் மகள் இங்கரை திருமணம் செய்ய முயல்கிறான். அவன் வாழ்க்கை திசைமாறிப் போகிறது

பீட்டரின் திருமண வாழ்க்கை எப்படியிருந்தது. அவன் கனவு நிறைவேறியதா என்பதை நோக்கி படம் நகர்கிறது

பீட்டரின் ஆளுமை தான் படத்தின் மையம். பீட்டர் பல்வேறு விதங்களில் இங்க்மர் பெர்க்மனை நினைவுபடுத்துகிறான். அவரும் இது போலத் தந்தையின் மீது ஒவ்வாமை கொண்டவரே. தந்தைக்கு எதிராகவே அவர் சினிமாவை தனது வடிவமாகத் தேர்வு செய்திருக்கிறார். பீட்டரும் பெர்க்மெனும் ஒரு புள்ளியில் தந்தையின் அகத்தைப் புரிந்து கொள்கிறார்கள்

மனக்குழப்பம் மிகுந்த ஒரு தருணத்தில் இங்கரின் தந்தையிடம் பீட்டர் புலம்பும் போது அவர் உன் மனத்துயரம் நீங்கும்வரை அழுது கொள் என்கிறார். அத்துடன் உன் குழப்பங்களுடன் நீயே போரிட வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்.

இங்கரை அவளது வீட்டில் சந்திக்கும் காட்சியும் அவளோடு காதல் கொள்வதும் அழகான காட்சிகள்

ஜேகோப் அறிவாளியான பெண். அவள் பீட்டரைப் புரிந்து கொண்டு தேவையான உதவிகள் செய்கிறாள். ஆனால் அவளைப் பீட்டர் புரிந்து கொள்ளவில்லை. அவனது தடுமாற்றங்கள். குழப்பங்கள் அவளது காதலை நிராகரிக்கிறது.

அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படும் பீட்டர் உலகியல் வாழ்க்கையில் தோற்றுப் போகிறான். இதற்கு முக்கியக் காரணம் பீட்டர் எவரையும் தனது விருப்பத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு உதறி எறிகிறான் என்பதே

சாலையோரம் உள்ள இயேசுநாதரின் சிலையினை நோக்கி ஒரு காட்சியில் பீட்டர் கேள்விகேட்கிறான். இது போலவே ஜேகோப்புடன் தனிமையில் இருக்கும் போது மரத்தால் செய்யப்பட்ட சிலையின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறான். இயேசுவை அவன் தனது தந்தையின் மாற்று வடிவம் போலவே கருதுகிறான்.

வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் போல உருவாக்கப்பட்டுள்ள இதற்குள் எத்தனை அடுக்குகள். தனித்துவமான கதாபாத்திரங்களே இதன் தனிச்சிறப்பு. அவர்களை முழுமையாகப் படம் சித்தரிக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் பீட்டருக்கு உதவி செய்யும் பணிப்பெண் அவனது கனவுகளைப் பற்றி எதையும் அறியாதவளாக அவனுக்குத் தேவையான உடற்சுகத்தை மட்டுமே தருகிறாள். அவனுக்கான பணஉதவியைச் செய்கிறாள். ஜேகோப் அவனது லட்சிய மனைவி போல நடந்து கொள்கிறாள். இங்கர் மரபான, பணிவான பெண்ணாகச் சித்தரிக்கபடுகிறாள். இங்கருடன் பீட்டர் பேசிக் கொண்டபடியே நடக்கும் காட்சியில் முன்னதாகவே அவள் தன்மீதான அவனது ஈர்ப்பினை உணர்ந்து கொண்டுவிடுகிறாள். இது போல நுட்பமான பல காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

இயற்கை ஒளியும் வண்ணங்களும் மிக அழகாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. டிர்க் ப்ரூயலின் சிறப்பான ஒளிப்பதிவு சிறந்த இசை. சிறந்த நடிப்பு எனப் படம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது

நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஹென்ரிக்கின் தந்தை இது போல ஒரு மதகுரு. ஆகவே இந்த நாவல் பெரிதும் சுயசரிதைத்தன்மை கொண்டிருக்கிறது.

நாவலைப் படமாக்கும் போது கதாபாத்திரங்களை அதன் துல்லியத்துடன் மறு உருவாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது

இயக்குநர் பில்லி ஆகஸ்ட் தனது படங்களைப் புகழ்பெற்ற நாவல்களை மையமாகக் கொண்டே உருவாக்கி வருகிறார். இந்தப்படம் சிறந்த அயல்மொழி திரைப்படமாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் விருதைப் பெறவில்லை

தான் எதிர்பார்ப்பதை உலகம் கொடுக்க வேண்டும் என்று பீட்டர் நினைக்கிறான். அது போதும் நடக்காத விஷயம் என்பதை முடிவில் அவனே உணர்ந்து கொள்கிறான்.

பீட்டர் தனது தந்தையிடம் காட்டிய கோபமும் பீட்டரின் மகன் அவனிடம் காட்டும் கோபமும் ஒன்று தான். இரண்டு தந்தைகளும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பீட்டரைப் போலின்றி அவனது மகன் தனது தந்தையின் அன்பை அழகாக வெளிப்படுத்துகிறான்.

இங்கரின் தந்தை அழகான கதாபாத்திரம். அவர் பீட்டரின் அகக் கொந்தளிப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்.

இதுபோலவே பீட்டரின் அண்ணனை ஜேகோப் சந்திக்கும் காட்சியிலும் பீட்டர் சந்திக்கும் காட்சியிலும் அண்ணன் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்வதேயில்லை. ஆனால் அவன் பீட்டர் மீது பேரன்பு கொண்டிருக்கிறான் என்பது அழகாக உணர்த்தப்படுகிறது

தனது கர்ப்பத்தை மறைத்துக்கொண்டு அம்மாவிடம் தான் வெளியூர் பயணம் செல்ல இருப்பதாகப் பணம் கேட்கும் ஜேகோப்பை அவளது அம்மா புரிந்து கொள்ளும் விதமும் நடத்தும் முறையும் படம் எவ்வளவு நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம்

பீட்டரின் முதுமையைக் காணும் போது நமக்குள் இவ்வளவு தான் வாழ்க்கையா என்ற பெருமூச்சு எழுவே செய்கிறது. ஆனால் புதிய கனவுகளுடன் ஜேகோப் அடுத்த நிலையை நோக்கி நகர்வதைக் காணும்போது வாழ்க்கையின் புதிய சாலைகள் முடிவற்றவை என்ற நம்பிக்கையும் உருவாகிறது.

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2021 19:20

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.