S. Ramakrishnan's Blog, page 105

January 5, 2022

பழகிய நாட்கள்

சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் தமிழின் அரிய நாவல்களில் ஒன்று. 1983ல் வெளியான இந்த நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ள கவிஞர் ஞானக்கூத்தன் ஒரு பத்தியில் நாவலின் மையத்தைச் சிறப்பாகச் சொல்லிவிடுகிறார்

வாழ்க்கைப் பாதையில் அவனது நண்பர்கள் மீட்கமுடியாதபடி தொலைத்துப் போய்விடுகிறார்கள். அவர்களை அவன் பார்க்கலாம், உரையாடலாம். ஆனால் அவர்களை ஒன்று சேர்த்து முன்பு இழந்த உலகைத்தை மீண்டும் கட்டிவிட முடியாது. அவர்கள் தொலைத்துப் போய்விட்டார்கள். எங்கே எப்படி என்று நுட்பமாகக் கூறுகிறது நாவல்

தன்னோடு பள்ளியில் நடித்து ஒன்றாகப் பழகிய நண்பர்களை நீண்ட காலத்தின் பின்பு ஒருவன் சந்திப்பது மகிழ்ச்சியான விஷயம். தாமோதரன் அப்படித் தான் ஒரு ஊர்வலத்தில் தற்செயலாகத் தனது பழைய நண்பன் சங்கரைச் சந்திக்கிறான். அவனைத் தேடிப் போய்த் தங்களின் பால்யகால நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

சங்கர் வழியாகப் பிற நண்பர்களைத் தேடத்துவங்கி அனைவரும் ஒன்றுகூடுகிறார்கள். பால்யத்திலிருந்த நெருக்கம் இப்போதில்லை. நினைவில் உள்ள நெருக்கம் நிஜத்தில் இல்லையே என்று ஏங்குகிறார்கள். வாழ்க்கை பாதையில் வேறுவேறு திசைகளில் சென்ற அவர்கள் பழகிய நாட்களை நினைவு கொள்கிறார்கள்.

கடந்தகாலத்தை நினைவு கொள்வது எல்லோருக்கும் மகிழ்ச்சியான விஷயமில்லை. தாமோதரன் அவர்களிடம் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. பழகிய நண்பன் என்பது அவர்களுக்கு வெறும் நினைவு மட்டும் தான்

பள்ளி நாட்களில் எதிர்காலத்தைப் பற்றிக் கண்ட கனவிற்கும் இன்றைய நிஜத்திற்குமான இடைவெளியை இந்த நாவலைப் போலச் சொன்ன படைப்பு எதுவுமில்லை. காலம் கருணையற்றது. அது ஒவ்வொருவரையும் ஒரு திசையில் பயணிக்க வைக்கிறது. பகடைக் காய்கள் போல உருட்டி விளையாடுகிறது.

பள்ளி நாட்களில் வசதியாக இருந்த ஒருவன் இப்போது குடியிருக்க வீடில்லாமல் ஒற்றை அறையில் வசிக்கிறான். அன்று கம்பீரமாக இருந்தவன் இன்று நோயாளியாக மாறியிருக்கிறான். ராணுவத்திற்குச் சென்றவனோ குடிகாரனாகத் தோற்றம் தருகிறான். இப்படி வயதின் கோலங்கள் எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகயில்லை.

பழைய நண்பர்களை மறுபடி ஒன்று சேர்ப்பது என்பது எளிதானதில்லை. ஆனால் அந்த ஏக்கம் யாரிடம் தானில்லை.

தாமோதரன் ஆசையாக அவர்கள் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் பற்றிப் பேசும் போது அப்படி ஒரு போட்டோ எடுத்துக் கொண்டது கூடச் சங்கருக்கு நினைவில்லை. வீட்டின் சுவரில் பால்யத்தின் சாட்சியமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்தைத் தாமோதரன் துல்லியமாக நினைவுபடுத்துகிறான்

ராஜா ஸ்டுடியோவில் எடுத்தபோட்டோ. அதுவும் நீயும் வேணும் குந்திகிட்டு இருப்பீங்க. நானும் ராமசாமியும் பின்னாலே நின்னுகிட்டு இருப்போம். நீ தான் பணம் குடுத்தே. போட்டோவில சிரிச்சிகிட்டு ரொம்ப நல்லா இருந்தே

அப்படியா`` எனச் சாவகாசமாகக் கேட்கிறான் சங்கர். அவன் நினைவில் அந்தக் காட்சியில்லை. யாருக்கோ நடந்தவற்றைக் கேட்பது போலவே கேட்கிறான்.

இந்த நாவலை எப்போது வாசிக்கும் போதும் மனது கரைந்துவிடுகிறது. பிரிந்து போன நண்பர்கள் மீதான ஏக்கம் மேலோங்குகிறது.

ஒருவேளை பழைய நண்பர்களைத் தேடிச் சந்தித்தாலும் தாமோதரன் உணர்வது போலவே விலகலை உணரக்கூடும். அது தான் உண்மை.

சா.கந்தசாமியின் எழுத்தில் அசாதாரண விஷயங்கள் எதுவும் கிடையாது. நேரடியாக, எளிமையாக, சின்னஞ்சிறிய சம்பவங்களும் நினைவுகளும் ஒன்று கலந்து எழுதும் நடை. ஆனால் மறக்கமுடியாத கதாபாத்திரங்களை உருவாக்கி விடுகிறார்.

இந்த நாவலில் பரிச்சையில் தோற்றுப் போன தாமோதரனை அவனது அப்பா கன்னத்திலும் காதிலும் சேர்த்து அறைகிறார்.. அடி தாங்கமுடியாமல் வலியில் கத்துகிறான். அந்த அலறல் சப்தம் அப்பாவை மேலும் கோபம் கொள்ள வைக்கிறது. இடுப்போடு சேர்த்து உதைவிடுகிறார். அப்பாவுக்கு அடி உதையைத் தவிர வேறு எதுவும் தெரியாதது. மூக்கணாம் கயிறு போட முடியாத மாட்டின் மூஞ்சியில் எட்டி உதைத்து அப்பா பணிய வைத்த நிகழ்வை விவரிக்கிறான்.

அந்த அப்பாக்களின் காலம் முடிந்துவிட்டது. இன்றைய அப்பாவிடம் அவ்வளவு மூர்க்கமில்லை. ஒருவேளை அரிதாக யாரோ ஒருவர் இன்று அப்படி நடந்து கொள்ளக்கூடும். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையான தந்தை அப்படித் தான் நடந்து கொண்டார்கள்.

நான் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பரமசிவன் என்ற மாணவன் நான்காம் வகுப்பில் பெயலாகிப் போனதை அறிந்த அவனது அப்பா பள்ளிக்குத் தேடி வந்து அகலமான பெல்டால் அவனை மைதானத்தில் ஒடஓட அடித்து மயக்கமடையச் செய்தார். அந்த நினைவு அழியாமல் இருக்கிறது. மயங்கிக் கிடந்த பையனை ஆசிரியர்கள் தான் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். இந்த அடிக்குப் பயந்து பரமசிவத்தைப் பாஸ் போட்டுவிட்டு விட்டார்கள். பரமசிவத்தின் அப்பா பெல்டை இடுப்பில் கட்டிக் கொண்டு எதுவும் நடக்காதது போலச் சைக்கிளில் திரும்பிப் போன காட்சியை மறக்கவே முடியவில்லை.

பழைய நண்பர்களைத் தற்செயலாக எங்காவது பார்த்துவிட முடியாதா என்ற ஏக்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. அதுவும் இப்போது பேஸ்புக் வந்தபிறகு தேடித்தேடி பழைய நண்பர்கள் ஒன்றுசேருகிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பழைய நட்பு மீண்டும் துளிர்ப்பதில்லை. நெருக்கம் கொள்வதில்லை.

சென்ற தலைமுறைக்குப் பழைய நண்பர்களை மீண்டும் காணுவது தற்செயலாக நடந்தால் உண்டு. அந்த ஏக்கத்தை இந்த நாவலில் கந்தசாமி மிக நுட்பமாக எழுதியிருக்கிறார்

தாமோதரன் நாவலின் ஒரு இடத்தில் சொல்கிறான்

சங்கர் உன்னை எத்தனை வருஷமாக நான் தேடிகிட்டு இருந்தேன் தெரியுமா. ரோட்டுல போகறப்ப எல்லாம் நீ தென்படுவியா, ராமு தென்படுவானா, வேணு தென்படுவானா என்று தேடிகிட்டே போவேன்.“

இதைக்கேட்டு சங்கர் சொல்லும் பதில் அதிர்ச்சியானது

அப்படியா,,,, வேடிக்கையா இருக்கே

தாமோதரன் மனதில் பசுமை மாறாமல் இருக்கும் நட்பு ஏன் சங்கர் மனதில் புகைபடிந்த சித்திரமாக இருக்கிறது.

சங்கர் தனது கடந்தகாலத்தை மறக்க விரும்புகிறான். நிகழ்கால வாழ்க்கை நெருக்கடிகளைச் சந்திக்க முடியாமல் தடுமாறுகிறான். உண்மையில் வாழ்க்கை அவனைத் தன்னுடைய போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது. இன்றைய அடையாளம் மட்டுமே அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஆனால் தாமோதரனுக்குப் பணம் வசதி வீடு மனைவி என்ற இன்றைய வாழ்க்கை போதுமானதாகயில்லை. அவன் இழந்துவிட்ட பால்ய கால நட்பினை நினைத்து ஏங்குகிறான். நினைவுப்பாதையில் நடந்து திரிகிறான்.

தற்செயலாகச் சந்தித்துக் கொண்ட இரண்டு நண்பர்களும் ஒன்றாகச் சாப்பிடச் செல்கிறார்கள். அது ஒரு மறக்கமுடியாத காட்சி.

நண்பன் வீட்டில் சிறுவயதில் சாப்பிட்டதைத் தாமோதரன் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறான். நண்பனின் அம்மா, அவரது மீன் சமையல், அதன் ருசி எல்லாமும் நினைவில் துளிர்க்கிறது பிரிந்தவர்கள் ஒன்று கூடிச் சாப்பிடும் போது உணவின் ருசி மாறிவிடுகிறது. அன்று சங்கர் நீண்டகாலத்தின் பின்பு நல்ல சாப்பாட்டு சாப்பிட்ட உணர்வை அடைகிறான்

நண்பர்களில் ஒவ்வொருவராக ஊரைப்பிரிந்து போய்விடும் போது ஏற்படும் மனவெறுமையைக் கந்தசாமி அழகாக விவரித்துள்ளார்.

முதல்ல வேணு போயிட்டான். அப்புறம் நீ. நானும் ராமுவும் என்ன பண்ணுறதுனு தெரியாமல் ஊர் சுற்றிகிட்டு இருந்தோம். மிலிட்டரிக்குஆள் எடுக்கிறாங்கன்னு கேள்விபட்டு போனோம். அதுல ராமசாமி தேர்வாகிட்டான். நான் தோத்துப் போயி அழுதுகிட்டே தனியே திரும்பி வந்தேன். எனத் தாமோதரன் சொல்லும் போது கடைசி ஒருவனாக அவன் மட்டும் ஊரில் மிஞ்சிப்போன வேதனையை நன்றாக உணரமுடிகிறது

1970-80களில் வேலை கிடைக்காதவனைப் பற்றி நிறையக் கதைகள் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று அந்தப் பிரச்சனை மெல்லிய முணுமுணுப்பாக ஒலிக்கிறதே அன்றிப் பெரிய நெருக்கடியாக எழுதப்படவில்லை.

நாவலில் தாமோதரனின் அப்பா சொல்கிறார்

கூட இருந்தவன் எல்லாம் ஒரு வேலையைத் தேடிகிட்டு போயிட்டான். நீ தீனி தின்னுகிட்டு தெருமாடு கணக்காக ஊர் சுத்திகிட்டு இருக்கே

இந்த வார்த்தைகளைக் கேட்காத இளைஞனே அந்தக் காலத்தில் இல்லை. நெற்றியில் கருங்கல் தாக்கியது போல அந்த வார்த்தைகள் பலமாகத் தாக்ககூடியது. இந்தச் சுடுசொல்லுக்குப் பயந்து சொந்த வீட்டில் சாப்பிடத் தயங்கியவர்களை அறிவேன். வீட்டை விட்டு ஓடியவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

தாமோதரன் இந்தச் சொல்லை தாங்கமுடியாமல் தான் வீட்டை விட்டு வெளியேறி தந்தையை அடிக்கக் கல்லைக் கையில் எடுக்கிறான். ஆத்திரமான தந்தை கதவை மூடிக் கொண்டுவிடுகிறார். அவன் எறிந்த கல் கதவில் பட்டுச் சிதறுகிறது

மறக்கமுடியாத காட்சியது. ஒரு காலகட்டத்தின் சாட்சியம் போல இந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன.

பிரிந்து போன காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை, மாற்றங்களைத் தாமோதரன் தெரிந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனது நண்பர்களில் எவரும் அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்வதில்லை.

நான்கு நண்பர்களின் குடும்பத்திற்கும் அவர்களின் கடந்தகாலமோ, அதன் இனிய நினைவுகளோ முக்கியமானதாகவில்லை. இன்றைய வாழ்க்கை என்ற பற்சக்கரங்களுக்குள் சிக்கி அதன் விசைக்கேற்ப அவர்கள் முன்பின்னாக இழுபடுகிறார்கள். இந்த நிஜமே போதுமானதாகயிருக்கிறது.

பாரேன் நீ பெரிய ஆளாக ஆகத்தான் போறே. அப்புறம் நாங்க எல்லாம் உன்னைத் தேடிகிட்டு வந்து வாசல்ல நிற்கப்போகிறோம். என்று கடந்தகாலத்தில் ஒருநாள் ராமசாமி சொல்கிறான்

இந்தக் கனவு யாரிடம் தான் இல்லை. ஆனால் நிஜம் அப்படியாக மாறவில்லை.

நண்பர்களில் யாரேனும் ஒருவர் இறந்து போயிருக்கக் கூடும் என நாவலின் ஆரம்பத்தில் நினைக்கிறான். அது உண்மையான தடுமாற்றம். திரும்பக் காணாத பழைய நண்பர்களின் இழப்பை எப்படி ஈடுகட்டுவது. சிலரது முகம் கூட நினைவில் இல்லையே என்ற உணர்வு நாவலின் வழியே பீறிடவே செய்கிறது

சந்தித்துக் கொள்ளாவிட்டாலும் மனதில் அந்தப் பசுமையான நினைவுகளுடனே நண்பர்கள் வாழுகிறார்கள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியாக விஷயம்.

யாரையும் மறக்காமல் நினைச்சிகிட்டு தான் இருக்கேன். சந்திக்கதான் முடியலை. வயசு ஆகிட்டா நடந்ததெல்லாம் இல்லேனு ஆகிடுமா. என்று நாவலின் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது. அது தான் உண்மை.

தாங்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை நண்பர்கள் மீண்டும் காணுவதுடன் நாவல் நிறைவுபெறுகிறது. இதைவிடச் சிறப்பாக நாவலை முடிக்க முடியாது. அந்தப் புகைப்படம் நம் அனைவரின் மனதிலும் உள்ள பால்ய நட்பின் அபூர்வமான புகைப்படம்.

பழைய கட்டிடங்களுக்கு மட்டுமே பேசும் சக்தியிருக்கிறது என்றொரு வரியைப் பிரெஞ்சு எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியிருக்கிறார்

அது பழைய புகைப்படங்களுக்கும் பொருந்தக் கூடியதே

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 23:57

வண்ணதாசனின் வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ 248 பக்கங்கள் தான். புத்தாண்டு முதல் நாள் இரவு வாசிக்கத் துவங்கி, நேற்றிரவு முடித்தேன். வழக்கத்தை விட வேகம் குறைவாக அமைந்த வாசிப்பு. ஒரு குறிப்பிட்ட நாளில் வெறும் பதினாறு பக்கங்களே வாசித்திருக்கும் படி, அன்றாடத்தின் பாரம் என் மேல் சரிந்திருந்தது.

அன்றாடம் புது வருடம் பழைய வருடம் எல்லாம் பார்ப்பதில்லையே.ஆனால் கடந்த நான்கு நாட்களும் அதன் பக்கங்களின் வரிகளாகவே இருந்தேன். ஒரு சிறிய வெளிச்சமும் சிறிய துக்கமும் சதா என் மேல் அச்சடிக்கப் பட்டிருந்தது.


இதற்கு முன்னால் பெரும்படவம் ஸ்ரீதரனின் ‘ ஒரு சங்கீர்த்தனம் போல’ என்ற நாவலை சிற்பி பாலசுப்ரமணியம் ‘ ஒரு சங்கீதம் போல’ என்று மொழியாக்கியிருந்தார். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் வாசித்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.
அது தாஸ்தாவெஸ்கி, அன்னாவின் கதை. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் டால்ஸ்டாய் , அக்ஸின்யா இருவரின் கதை. சோபியாவின் ஊடாகவும் இது அக்ஸின்யாவையே வரைகிறது. ஒரு வினோதப் புள்ளியில் அதன் ரேகைகள் கதிர் பிரிந்து அக்ஸின்யாவிடமிருந்து விலகி அது டால்ஸ்டாய் திமோஃபியின் மேல் குவிமையம் கொண்டு விடுகிறது. எந்த ஒளி குவிகிறதோ அது எப்போதும் தீப் பற்றுகிறதாகவும் வைரம் போல் அறுக்கிறதாகவும் தானே மாறிவிடுகிறது.


அக்ஸின்யாவின் புதை மேட்டில் மஞ்சள் மலர்களை வைக்கிற டால்ஸ்டாய் ஆகவும், அதில் ஒன்றை எடுத்து நெஞ்சோடு அணைத்தபடி பண்ணையை நோக்கி நடக்கும் திமோஃபி ஆகவும் நான் இருக்கிறேன்.


எனக்கும் இப்போது ஒரு சோபியா இருக்கிறாள். ஒரு அக்ஸின்யா இருக்கிறாள். எவர் எவர் இருப்பதும் தவிர்க்க முடியாததாகவே இந்த வாழ்விருக்கிறது.


சிலசமயம் நிமிர்ந்து நிற்கும்படியும், வேறு சில சமயங்களில் மண்டியிடும்படியாகவும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 00:55

January 4, 2022

இரண்டு முடிவுகள்

பஞ்சாபி எழுத்தாளரான தலீப் கௌர் டிவானாவின் இது தான் நம் வாழ்க்கை நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது.  இந்நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் தி.சா.ராஜு. நேஷனல் புக் டிரஸ்ட் 1992ல் வெளியிட்டுள்ளது. மிகச்சிறிய நாவல். 90 பக்கங்கள். விலை ரூ 21.  இன்றைக்கும் இதே மலிவு விலையில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது.

••

பஞ்சாப் கிராமம் ஒன்றில் உள்ள நாராயண் அம்லி வீட்டில் கதை துவங்குகிறது. கங்கையில் நீராடச் சென்ற நாராயண் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பானோ என்ற இளம்பெண்ணைக் காப்பாற்றித் தன்னோடு அழைத்து வந்திருக்கிறான்.

நாராயண் எப்போதும் போதையில் மூழ்கிக் கிடப்பவன். பால்ய விவாகம் செய்து கொண்டு மனைவியை இழந்தவன். தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தைக் கவனித்துக் கொண்டு நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து குடிப்பதும் வெட்டி அரட்டை அடிப்பதுமாக நாட்களைக் கடத்துகிறான்

அப்படிப்பட்ட நாராயண் திடீரென ஒரு புதுப்பெண்ணை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் பற்றி அண்டை வீட்டார் வியப்போடு பேசுகிறார்கள். இந்தப் புது மனைவி யார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் பானோ என்ற அந்தப் பெண் வந்த முதல்நாளே வீட்டு வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பிக்கிறாள்.

அவளும் கணவனைப் பறி கொடுத்தவள். ஆதரவாக இருந்த சகோதரனும் இறந்துவிடவே தற்கொலை செய்து கொள்ள எண்ணி கங்கைக்குச் சென்றவளை நாராயண் காப்பாற்றுகிறார். அவரால் புதுவாழ்க்கை கிடைக்கக்கூடும் என நம்பி வந்துவிடுகிறாள்

நாராயணின் பக்கத்து வீட்டுப் பெண் ஸந்தி அவளிடம் வந்து நலம் விசாரிக்கிறாள். அவர்கள் உரையாடல் வழியாகப் பானோவின் கடந்தகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது

அங்கேயும் குடி தான் முக்கியப் பிரச்சனையாகப் பேசப்படுகிறது. குடித்துக் குடித்துக் குடல் அரித்துப் போன தம்பியைக் காப்பாற்ற இருந்த பணத்தை எல்லாம் பானோவின் குடும்பம் செலவழிக்கிறது. ஆனால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

நாவல் முழுவதும் உரையாடல்களின் வழியே தான் நீளுகிறது. கிராமிய வாழ்க்கையை மிக யதார்த்தமாகத் தலீப் கௌர் எழுதியிருக்கிறார்.

நாராயண் தன்னை நம்பி வந்துள்ள பானோவிடம் வீட்டை ஒப்படைக்கிறார். தனக்கு அவள் வழியாக ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையைப் பகிர்ந்து கொள்கிறான்.

நாராயண் வீட்டில் பானோவிற்கு உணவும் உடையும் பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால் அவள் விரும்பியது போன்ற சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கவில்லை. அவள் மீது கொண்டுள்ள அனுதாபத்தைத் தாண்டி நாராயண் அவளை உண்மையாக நேசிக்கவில்லை என்பதைப் பானோ உணர்ந்து கொள்கிறாள்

நாராயணின் குடிகார நண்பர்கள் அவளைப் பல்வேறுவிதங்களில் தொந்தரவு செய்கிறார்கள். அவளைப் பற்றி வம்பு பேசுகிறார்கள். நாராயண் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் அவர்களைச் சமாளிக்கமுடியாமல் பானோ திண்டாடுகிறாள்.

பானோ இரண்டு உலகில் வாழ ஆரம்பிக்கிறாள். உடலளவில் அவள் நாராயணுடன் வசிக்கிறாள். ஆனால் மனதும் நினைவும் கடந்த கால வாழ்க்கையில் இருக்கிறது. இறந்து போன கணவனின் அன்பை நினைத்துக் கண்ணீர் விடுகிறாள். தனது துயரை ஆற்றுப்படுத்திக் கொள்ளச் சாவு வீட்டிற்குப் போய் ஒப்பாரி வைக்கிறாள்.

நாராயணின் பொருளாதார விஷயங்களைச் சரிசெய்ய முயலும் பானோ அதில் ஒரளவு வெற்றி பெறுகிறாள் ஆனால் நாராயணின் சகோதரி வந்து போன பின் பானோவின் வாழ்க்கையில் புதிய நெருக்கடி உருவாகிறது.

தனக்குக் குழந்தை வேண்டும் என்பதற்காக நாராயண் இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான். புதிய மனைவி வந்தவுடன் பானோ மாறிவிடுகிறாள். அவளால் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் இயந்திரம் போலவே நடந்து கொள்கிறாள். நாராயண் முடிவை மீறி உடுத்திய ஆடைகளுடன் முட்டாக்கு கூட அணியாமல் பானோ அங்கிருந்து வெளியேறிப் போவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது

பானோவின் வாழ்க்கை மட்டுமில்லை. அந்தக் கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்க்கை யாவும் ஒன்று போலதானிருக்கிறது. ஒரு பெண்ணை விலை கொடுத்து வாங்குவதைப் பெருமையாக ஆண்கள் நினைக்கிறார்கள். குழந்தை இல்லாத பெண்கள் துரத்திவிடப்படுகிறார்கள். சமைக்கவும் சுகம் தரவும் பிள்ளைகள் வளர்க்கவும் மட்டும் தான் பெண்கள் என்ற எண்ணம் கொண்ட ஆண்களின் உலகினை தலீப் கௌர் கடுமையாக விமர்சிக்கிறார்.

நாவலின் ஒரு இடத்தில் பானோ தனது துயரத்தை ஒரு பாடலாகவே பாடுகிறாள். அதில் அவள் தனது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு தனக்காகத் தனது சகோதரன் ஒருவனால் மட்டுமே உதவ முடியும் என்கிறாள். பானோவின் தந்தை அவளைப் பணத்திற்காக ஒருவருக்கு விற்க முயல்கிறார். அது தான் அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது. ஒரு துன்பத்திலிருந்து விடுபட நினைத்து இன்னொரு துன்பத்தில் சிக்கிக் கொள்கிறாள் பானோ. பெண்களுக்கு இந்த நிலை இன்றும் மாறவேயில்லை.

தலீப் கௌர் சித்தரித்துள்ள உலகம் 75 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்தக் கிராமத்தில் காகிதத்தில் பணம் அச்சிடப்படுவதைப் பற்றி வியப்போடு பேசிக் கொள்கிறார்கள். போதையின் உச்சத்தில் கிணற்றைக் கயிறு கட்டி வேறு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போக முயன்ற நிகழ்வு விவரிக்கபடுகிறது.

தன்னைக் கணவன் எப்படி ஆசையாக அழைப்பான் என்பதைப் பற்றிப் பானோ ஒருமுறை நாராயணிடம் விவரிக்கும் போது அவன் இனி ஒருபோதும் அந்த வார்த்தையை நினைவுபடுத்தாதே என்கிறான். அதற்குப் பானோ மறைந்து போனவர்களின் பேச்சு அவர்களுடன் போய்விடுவதே நல்லது என்கிறாள். அதன்பிறகு அவள் நாராயணிடம் தன் கணவனைப் பற்றிப் பேசுவதில்லை. ஆனாலும் அவன் மனதிற்குள் பயப்படுகிறான். ஒருவேளை கணவன் திரும்ப வந்து அழைத்துக் கொண்டு போய்விடுவானோ என்று கூடக் கவலைப்படுகிறான். இறந்தவர் எப்படித் திரும்பி வர முடியும் என்று பானோ கேட்கிறாள். அவன் யார் வயிற்றிலாவது பிறந்துவந்துவிட முடியும் என்கிறான் நாராயண்.

இவ்வளவு அவள் மீது ஆசை கொண்டிருந்த போதும் முடிவில் அவளை உதறி எறிய நாராயண் தயங்கவேயில்லை

குடும்பம் என்ற சிறிய உலகிற்குள் தான் எவ்வளவு சிக்கல்கள். பிரச்சனைகள். அயராத உழைப்பின் வழியே பானோ போன்றவர்கள் குடும்பத்தை நிலை நிறுத்திவிட முயல்கிறார்கள். அவள் உயர்த்திப் பிடித்த வெளிச்சத்தை நாராயண் போன்றவர்கள் நொடியில் இருள் அடையச்செய்து விடுகிறார்கள்.

பானோ தனது எதிர்காலம் பற்றி எங்குமே கவலைப்படுவதில்லை. தன் உடலை வருத்திக் கொள்வதைப் பற்றிக் கூட அவளிடம் புகாரில்லை. ஆனால் ஏன் தன்னை நாராயண் புரிந்து கொள்ளவில்லை என்பதை நினைத்தே கவலை கொள்கிறாள். வருந்துகிறாள். நடைப்பிணமாகிறாள்.

அவளுக்கு நீதி மறுக்கபடுகிறது. அவள் யாரிடமும் இதைப்பற்றி முறையிடவில்லை. மாறாக அவள் தனது பாதையைத் தானே தேர்வு செய்துகொண்டுவிடுகிறாள். அதில் அவள் அடையப்போகும் துயரங்கள் இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். ஆனால் அது அவளது தேர்வு

நாவலில் துவக்கத்தில் நாராயணை நம்பி அவனுடன் வருகிறாள். இந்த முடிவு அவள் எடுத்தது. அது போலவே நாராயணை நீங்கி வெளியேறுகிறாள். அதுவும் அவள் எடுத்த முடிவே. இந்த இரண்டுமுடிவுகளுக்குள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் உருமாறுகிறது என்பதைத் தலீப் கௌர் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

இது தான் அவள் வாழ்க்கை என்று தலீப் கௌர் சொல்லவில்லை. நம் வாழ்க்கை என்கிறார். அந்தச் சொல்லின் வழியே இந்நாவல் மொழி கடந்து என்றும் தொடரும் ஒரு பிரச்சனையின் அடையாளமாக மாறுகிறது

••

பஞ்சாப் பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றிய தலீப் கௌர் பத்மஸ்ரீ உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றவர். தனது பணி நிறைவிற்குப் பின்பும் இவர் பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள வீட்டில் வசிக்க அனுமதிக்கப்பட்டார். நோயுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட சூழலில் அவருக்கான மொத்த மருத்துவ செலவையும் பஞ்சாப் அரசே ஏற்றுக் கொண்டது. பஞ்சாப்பின் முக்கிய எழுத்தாளராக கொண்டாடப்படும் தலீப் கௌர் தனது 84 வயதில் 2020ல் காலமானார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2022 03:31

January 2, 2022

குற்றவுணர்வின் பாதை மிக நீண்டது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் Men Without Women சிறுகதைத் தொகுப்பிலுள்ளது Drive My Car சிறுகதை.

இந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு ரியுசுகே ஹமாகுச்சி இயக்கியுள்ள திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளதோடு தற்போது ஆஸ்கார் பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது

படம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் சிறுகதையைப் படித்திருந்தால் படத்தின் திரைக்கதை எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். முரகாமியின் நாவல்கள் இதற்கு முன்னதாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை. இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அதன் திரைக்கதை அமைப்பே.

சிறுகதையின் துவக்கத்தில் ஜப்பானிலுள்ள பெண் காரோட்டிகளின் மனநிலையைப் பற்றி முரகாமி விரிவாக எழுதியிருப்பார். கண்ணில் குளுகோமா வந்த நிலையில் காரோட்ட உதவி தேவை என்ற நிர்ப்பந்தம் காரணமாகவே கதையில் ஒரு பெண் காரோட்டி வேலைக்கு வருகிறார். அதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொள்வதாகவே கதை விவரிக்கிறது.

படம் சிறுகதையின் மையப்பொருளை மட்டுமே வைத்துக் கொண்டு தனக்கான ஒரு திரைவடிவத்தை உருவாக்கியிருக்கிறது. கதையில் வருவது போலப் பெண் காரோட்டிகள் பற்றிய கேலிப்பேச்சு எதுவும் படத்தில் கிடையாது.

முரகாமியின் புனைவிற்கே உரித்தான விசித்திரங்களுடன் படம் துவங்குகிறது. கஃபுகுவும் அவனது மனைவி ஓட்டேவும் உடலுறவின் போது கற்பனை கதைகளை உருவாக்குகிறார்கள். அப்படி ஒரு புனைவான பெண்ணின் கதையிலிருந்து படம் துவங்குகிறது. அந்தக் கதாபாத்திரத்தின் ரகசிய செயல்பாட்டினை எப்படி வளர்த்தெடுப்பது என்பதைப் பற்றி மறுநாள் அவர்கள் காரில் உரையாடியபடியே செல்கிறார்கள்.

தங்களின் நான்கு வயது மகளை நிமோனியாவால் இழந்த காரணத்தால் அவர்களின் குடும்ப உறவில் மெல்லிய விரிசல் உருவாகியிருக்கிறது.

ஒரு நாள் ஓட்டோ தன்னோடு பணியாற்றும் இளம் நடிகன் கோஜி தகாட்சுகியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருப்பதைக் கஃபுகு காணுகிறான். ஆனால் இதைப்பற்றி அவளுடன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

குளுகோமா காரணமாக அவனது கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்கிறான். ஏன் இந்தப் பார்வையிழப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவரால் விளக்க முடியவில்லை. மாறாக அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்கிறார். இது தான் படத்தின் மையக்குறியீடு. அவனது குடும்ப வாழ்க்கையும் இது போன்றதே.

கஃபுகு ஒரு நாள் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து சேரும்போது ஓட்டோ, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்து கிடப்பதைக் காணுகிறான். அவளது இறுதிச்சடங்கில் இளம் நடிகனைக் காணுகிறான். குற்றவுணர்வு கஃபுகுவினை வதைக்கிறது

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிரோஷிமாவிலுள்ள ஒரு நாடக நிறுவனத்திற்காக ஆன்டன் செகாவின் அங்கிள் வான்யா நாடகத்தை இயக்கச் செல்கிறான். அங்கே நீண்ட தொலைவில் உள்ள ஒரு தங்குமிடத்தினைத் தனக்காகத் தேர்வு செய்கிறான்.

அரங்கத்திலிருந்து விடுதிக்குப் போய் வருவதற்காகவே பெண் காரோட்டி உதவிக்கு நியமிக்கப்படுகிறார். மிசாகி வதாரி என்ற பெண் காரோட்டி அறிமுகமாகும் காட்சியிலிருந்து அவளது கடந்தகாலம் விவரிக்கப்படுவது வரை படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மிசாகியாக நடித்திருக்கும் Tôko Miura அற்புதமாக நடித்திருக்கிறார்.

கஃபுகுவின் கடந்தகாலம் ஒரு சரடு. அவன் மனைவிக்கும் இளம் நடிகனுக்குமான ரகசிய உறவு இன்னொரு சரடு. கஃபுகுவிற்கும் மிசாகிக்குமான உறவு மூன்றாவது இழை. நாடக ஒத்திகை மற்றும் அதில் சைகையில் உரையாடும் பெண் நான்காவது இழை இப்படிக் கதை நான்கு தனியிழைகளை அழகாகப் பின்னிப்பின்னி திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆன்டன் செகாவின் தீவிர வாசகரான முரகாமி இதில் செகாவின் நாடகத்தையும் அதற்கான ஒத்திகையினையும் மையக்கதையின் இணைநிகழ்வாக மாற்றியிருக்கிறார். படத்தின் முடிவில் வான்யாவாகக் கஃபுகுவே நடிக்க ஒத்துக் கொண்டு நாடகம் நிகழும் போது இரண்டு நிகழ்வுகளும் ஒன்று கலந்துவிடுகின்றன. நிஜம், நாடகம் என்ற இரண்டுக்குமான வேறுபாடு அழிக்க பட்டுவிடுகிறது.

இந்தப் படத்தைக் காணும் போது Driving Miss Daisy திரைப்படம் நினைவில் வந்தபடியே இருந்தது. அதுவும் ஆஸ்கார் விருது பெற்ற படமே. சிறப்பாக உருவாக்கியிருப்பார்கள். முரகாமியின் சிறுகதையில் தொட்டுக்காட்டிச் செல்லும் விஷயங்களைப் படத்தில் அழகான காட்சிகளாக மாற்றியிருக்கிறார்கள்.

தனது கார் பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே வருகிறான் கஃபுகு. அது அவனது நினைவின் புறவடிவம் போலவே ஒலிக்கிறது. இறந்து போன மனைவியின் குரலது.

காரோட்டிகளுக்கே உரித்தான நிதானத்துடன் அமைதியுடன் நடந்து கொள்ளும் மிசாகி கார் ஓட்டுவதைத் தனது மீட்சியாகக் கொண்டிருக்கிறாள் என்பது அழகான விளக்கம். படத்தின் துவக்கக் காட்சிகளில் கஃபுகு தனது கடந்தகாலத்தைப் பேச தயராகயில்லை. எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கியிருக்கவே விரும்புகிறான். ஆனால் மிசாகியின் நிதானமும் ஈடுபாடும் அவளிடம் தனது கடந்தகாலத்தைப் பற்றிப் பேச வைக்கிறது.

குற்றவுணர்வு கொண்ட இருவர் ஒரு புள்ளியில் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது. ஆளற்ற பனிப்பிரதேசத்தில் அவர்கள் நடந்து செல்வதும் மிசாகியின் பழைய வீட்டினை பார்வையிடுவதும் சிறப்பான காட்சிகள்.

கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட முடியாதவர்களை முரகாமி நிறையவே எழுதியிருக்கிறார். எது சரி எது தவறு என்பதைத் தாண்டி ஏன் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இதன் பின்னுள்ள மனநிலை என்னவென்பதையே அவர் ஆராய்கிறார். முரகாமியின் அடையாளமாகக் கருதப்படும் மேற்கத்தியச் சங்கீதம். மதுவிடுதிகள். நீண்ட பயணங்கள். கடற்கரை போன்றவை இதிலும் உண்டு.

வேறுவேறு மொழிகள் பேசும் நடிகர்களைக் கொண்டு ஆன்டன் செகாவின் நாடகத்தைக் கஃபுகு ஏன் நடத்த விரும்புகிறான். காரணம் மொழியைத் தாண்டி அடிப்படை உணர்ச்சிகள் பொதுவானது. வான்யாவின் ஆற்றாமையை எந்த மொழியில் பேசினாலும் பார்வையாளரால் உணர முடியும்.

படத்தின் துவக்கத்தில் கதை சொல்லுதல் என்பது ஒரு சடங்கு போலவே சித்தரிக்கப்படுகிறது. உடலுறவின் போது அவர்கள் கதையைப் புனைகிறார்கள். ரகசியமான செயல்களில் ஈடுபடும் ஒரு இளம்பெண்ணைப் பற்றி ஒட்டோ சொல்கிறாள். பிறர் அறியாமல் அவர்கள் வாழ்க்கையினுள் பிரவேசிப்பது என்பதைப் பற்றிய இந்தத் துவக்கம் பின்பு படத்தின் மைய நகர்வாக மாறுகிறது.

ஹிரோஷிமாவின் அழகான நிலக்காட்சிகள். நீண்டகார் பயணத்தின் போது கடந்து செல்லும் நிலவெளி. கஃபுகு தங்கியுள்ள விடுதி. அவனது சிவப்பு வண்ண கார்(red Saab 900), அவன் திரும்பி வரும்வரை இரவில் மிசாகி காத்திருக்கும் இடம் என இடமும் கதையின் அகமாக மாறியிருக்கிறது.

உண்மையை மறைத்துக் கொள்ளும் போது ஏற்படும் தடுமாற்றத்தை கஃபுகு அழகாக வெளிப்படுத்துகிறான். சைகை மொழியில் பேசும் நடிகையை நாடகத்திற்கான தேர்விற்கு அழைக்கும் போது, கஃபுகு மொழியற்ற தொடர்பு நிலையை அறிந்து கொள்கிறான். அது தான் மீட்சியின் வழி.

Drive My Car நிஜ வாழ்க்கையில் நாம் எவ்வளவு நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மேடை நடிப்பின் மூலம் வாழ்க்கையின் உண்மைகள் வெளிப்படுகின்றன என்பதையும் தேர்ந்த கலைப் படைப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. இப்படம் இன்னும் நிறைய விருதுகளை வெல்லும் என்றே தோன்றுகிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2022 04:11

December 31, 2021

லிவோச்சாவின் குற்றமனது.

தஸ்தயேவ்ஸ்கியின் மனதால் பார்க்கப்படும் லிவோச்சாவின் காதல்

த.அரவிந்தன்

`மண்டியிடுங்கள் தந்தையே’ படித்து முடித்தேன். இது ரஷ்ய நிலத்தின், டால்ஸ்டாய் நிலத்தின் நாவல். அதற்கேற்ப உறைபனியின் குளுமையைத் தாங்கி இருக்கிறது. காலமும் அதில் அமைதியாக உறைந்து கிடக்கிறது.

எல்லோரையும் போல ரஷ்ய நிலத்தின் பனியை எப்படிக் கொண்டு வரப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நாவலைப் படிக்கத் தொடங்கிய பிறகு ஒரு நிலத்தில் பெய்கிற மழையைப்போலத்தான் பனியும், அதைக் கையாளுவதற்குச் சிரமம் இருக்காது என்பதைப்போலத் தோன்றியது. அதே நேரம் நிலம் என்பது மனம் தொடர்புடையதும், அதை எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து, அதையும் உறைபனிக்கான காலணியை அணிந்ததுபோல நடந்து கடப்பதைப் பார்க்க முடிந்தது.

ரஷ்ய நிலத்தின் மனதை அறிய டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, துர்க்கனேவ், செக்காவ், கார்க்கி, ஐத்மாத்வ், குப்ரின் உள்படப் பலரின் எழுத்துகள் மண்ணின் ஈரத்தோடு கிடைக்கின்றன என்றாலும், இந்த நாவலில் டால்ஸ்டாய், அவர் பண்ணையில் வேலை செய்யும் பெண்ணும் அவரின் இளம் வயது காதலியுமான அக்ஸின்யா, இருவருக்கும் பிறந்த மகன் திமோஃபியா, மனைவி சோபியா ஆகியோரை வைத்துத் தாங்கள் ஆடியுள்ள பரமபத விளையாட்டுக்கான மனதை அறிவதற்கு டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலில் வரும் நெஹ்லூதவ், கத்யூஷாவின் மனம் ஓரளவு சற்று நெருங்கிய வண்ணம் குழைக்க உதவியிருக்கலாம் என்றாலும், அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது என்பதையும், அதிக உழைப்பைக் கோரியிருப்பதையும், நெடும் பயணத்துக்குப் பிறகு ஒரு இடத்தை அடைந்திருப்பதையும் நாவலின் ஒவ்வொரு கட்டத்திலும் உணர முடிகிறது.

டால்ஸ்டாயின் நிரந்தரக் கொண்டாட்டமாக இருப்பது எழுத்துகள்தாம் என்று தாங்கள் குறிப்பிடுவதுபோல, தங்களுக்கும் எழுத்தே நிரந்தரக் கொண்டாட்டமாக இருப்பதன் வழியேதான் இது சாத்தியப்பட்டிருக்கிறது.

ரஷ்ய ஜிப்சி பெண்கள் அலங்கார மணிகளுடன் இடையணி அணிவது, டால்ஸ்டாய்ச் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு முறை காபி குடிப்பது, யஸ்னயா போல்யானா பண்ணையில் வாயிலில் இருந்த இரண்டு காவற் கோபுரங்கள் என்று தொலைநோக்கி வழியே கோள்களை ஆராய்ச்சி செய்பவர்களைப் போல ஒவ்வொன்றாகத் தேடித்தேடி அவற்றைத் திணிப்பு இல்லாமல் உயிர் கொடுத்திருப்பது வியக்க வைக்கிறது.

`ஒரு மனிதன் எந்த வயதிலும் தான் விரும்பியபடி நடந்து கொள்ள முடியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட முடியாது. இந்த வாழ்க்கை போலித்தனமானது.’ – இந்த வரிகள்தாம் நாவலின் மைய அம்சமாக இருக்கிறது. இது 70 வயதாகும் டால்ஸ்டாயின் போலித்தனமான வாழ்க்கை மட்டுமா? எல்லோரின் வாழ்க்கையுமே ஏதோவொரு போலித்தனத்தின் அம்சமாகவும் இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கை என்பதுமே ஏதோ ஒன்றால் கட்டமைக்கப்பட்ட போலித்தனத்தின் அம்சமாகத்தான் இருக்கிறது. அதில், டால்ஸ்டாய் மட்டும் விதிவிலக்காக இருந்து எப்படித் தப்பிக்க முடியும்?

ரஷ்ய கலாசார மையத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தாங்கள் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டீர்கள். டால்ஸ்டாயின் தலைக்குப் பின்னால் இருந்த ஒளியை எடுத்துவிட்டேன் என்றீர்கள். அப்படி ஓர் ஒளியை டால்ஸ்டாய் தன் தலைக்குப் பின்னால் ஒளிரச் செய்து கொள்ளவில்லை. அது எல்லோராலும் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். ஒரு போலித்தனம்.

ஆனால், இறந்து புதைமேட்டுக்குப் போகும் வரை டால்ஸ்டாயின் மனதை அறிந்தவளாகவும், அவரின் காதலைப் புரிந்தவளாகவும் அக்ஸின்யா இருக்கிறாள். அவளையும், மகனான திமோஃபியாவையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவராக டால்ஸ்டாயும் இருக்கிறார். அப்படியெனில், இங்குக் கட்டமைக்கப்பட்ட போலித்தனமான வாழ்க்கை நெறிமுறைகள்தாம் அவர்களின் வாழ்க்கையோடு விளையாடிப் பார்க்கிறது. அப்படியுமே கூட, அந்தப் போலித்தனத்தையும் இறுதியாக டால்ஸ்டாய் உதற முற்படுகிறார். அக்ஸின்யாவின் புதைமேட்டில் மஞ்சள், சிவப்புப் பூக்களை வைத்துவிட்டு, மண்ணை வருடுவதைப் போல அவளை வருடுகிறார். அப்போது பனி விலகுவதுபோல எல்லாப் போலித்தனங்களும் விலகுகிறது. இந்தக் கட்டத்தில் உள்ளன்போடு நீங்களும் டால்ஸ்டாயின் தலைக்குப் பின்னால் ஓர் ஒளியை ஏற்றி வைத்துவிடுகிறீர்கள். அது முன்பைவிடவும் அதிகமாகவே ஒளிரச் செய்கிறது.

விழாவில் தஸ்தயேவ்ஸ்கியிடம் இருந்து மெல்ல நகர்ந்து டால்ஸ்டாயின் பக்கம் வந்துவிட்டீர்கள் என்றீர்கள். இந்த நாவல் டால்ஸ்டாய் எனும் லிவோச்சாவின் குற்ற மனதிற்குள் நுழையப் பார்க்கிறது. அதுவும் ஒரு வகையில் குற்றத்தின் மனதை ஆராய முற்படும், குற்ற உணர்ச்சியால் அலையும் மனதின் பக்கம் நிற்கும் தஸ்தயேவ்ஸ்கியின் மனம்தான் என்பதை அறிவோம். தஸ்தயேவ்ஸ்கியின் மனதால் பார்க்கும் இந்த மனமும், லிவோச்சாவின் இந்தக் காதலும் எல்லோராலும் ஏற்கப்படும்.

••••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 20:22

காதலின் நினைவில்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ (நாவல்) – வாசிப்பனுபவம்

ந. பிரியா சபாபதி, மதுரை.

காதல் எனும் அன்பானது இவ்வுலகில் பிறந்த யாரையும் விட்டுவைப்பதில்லை. அது அனைவரின் மனத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கடந்து வராதவர்கள் எவரும் இல்லை. பலர் தம் மனத்தில் எழும் அன்பினைச் சொற்களின் வழியே அன்பானவர்களின் செவிக்குள் விழச் செய்கின்றனர். பலர் அதைத் தம் மனத்திற்குள்ளேயே திரையிட்டு மறைத்து விடுகின்றனர்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’யை வாசிக்கத் தொடங்குவதற்கு முன் முழுக்க முழுக்க இது காதல் கதையைதான் மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் என எண்ணினேன். அந்த எண்ணத்தை இவரின் எழுத்து மாற்றிவிட்டது.

சூரியன் தரும் வெப்பத்தை நாம் வெயிலாகத் தான் பார்க்கிறோம். சூரியனையும் தன் வெப்பத்தையும் நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. நானும் இதுவரை அவ்வாறு பிரித்துப் பார்த்ததில்லை. குறிப்பாக, இந்த நாவலை வாசிக்கும் வரை.

“மலைப்பிரதேசங்களுக்கு வரும் சூரியன் வேறுதானோ? கரிசல் முரட்டு சூரியனின் கடைசித் தம்பி தான் இந்தச் சூரியனோ?”.

இந்த வாசித்த பின் வெளியே சென்று சூரியனை அண்ணாந்து பார்த்தேன். அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்த்தனர். இனி, எப்பொழுது சூரியனைப் பார்த்தாலும் எனக்கு இந்த வரிதான் மனத்திற்குள் நீண்டு கொண்டிருக்கும்.

இந்த நாவலின் பெரும் பகுதி கோடைக்காலக் குறிப்புகளால் நிறைந்ததுதான்.

“தொலைதூர சாலையில் தபால்காரர் மெதுவாகத் தனது சைக்கிளில் போகிறார். அவரது பையிலிருந்த கடிதங்களில் ஒன்று ஊரைப் பிரிந்தவனின் வேதனையைச் சொல்லக் கூடியது. அவன் தப்புத்தப்பான எழுத்துகளால் மனத்தை வெளிக்கொட்டியிருக்கிறான். படிக்கத் தெரியாத அவனது அம்மா அந்தப் போஸ்ட் கார்டினை வெறித்துப் பார்த்தபடி இருப்பாள். அந்தச் சொற்களின் வழியே அவனது முகம் தென்படக்கூடுமோ, என்னவோ, அந்தக் கடிதம் அம்மாவிற்கு எழுதப்பட்டிருந்தாலும் தனக்குத் தானே ஆறுதல் தேடிக் கொள்வதுதான். வெயிலால் வளர்க்கப்பட்டவர்கள் இப்படித்தானே நடந்து கொள்வார்கள்?”

“கோடைக்காலத்திற்கென்றே தனியான சுபாவமிருக்கிறது, கோடையில் எத்தனை புதிய ருசிகள். கோடையில் விளையும் பழங்கள். எப்போதும் குடிக்கும் தண்ணீர் கோடையில் புதுருசி கொண்டுவிடுகிறது. கோடையில் அபூர்வமான சில பறவைகளைக் காணமுடிகிறது. கோடயில் மட்டுமே காணப்படும் மோர்ப்பந்தல். அங்கே கிடைக்கும் கொத்துமல்லி இலைகள் மிதக்கும் மோர்.”

‘சில்விக்கும்’ ‘சுப்பிக்கும்’ இடையே அரும்பும் பதின்பருவக் காதலானது மலைப்பிரேசங்களில் விழும் பனித்துளிகளைத் தாங்கும் மலரிதழ்களைப் போன்றது.

‘காதல்’ என்பது, ‘இவரைப் பார்த்து இந்த நேரத்தில் உதிக்கும்’ என்று யாரும் கங்கணம் கட்டிக் கொண்டு எவரையும் பார்ப்பதில்லை. எப்படித் தன் மனத்தினைப் பிறர் அன்பினால் இழுக்கிறார்கள் என்பது எவருக்கும் இதுவரை பிடிபட்டதில்லை. காதலின் இயல்பும் அது போலத்தான்.

“நெருப்பு தொடாதவரை மெழுகுவர்த்தி மெளனமாகவே இருக்கிறது. நெருப்பைத் தீண்டியதும் அது தன்னுடைய சுடரால் காற்றோடு பேச ஆரம்பிக்கிறது. தன்னை அழித்துக் கொள்வதும் காதலின் இயல்பு போலும்!”

‘சுப்பியின் இயற்பெயர் ராமசுப்ரமணியம் ஆகும். அவனைச் சுப்பி எனச் செல்லமாக அழைத்தது சில்வியாதான். அன்பிற்குரியவர்களை அன்பான சொல்லால் அழைப்பது ஆனந்தம் தானே?. அந்த ஆனந்தத்தைச் சில்வி அவனுக்குக் கொடுத்தாள்.

“ப்ரியம் தானே பெயரைச் சுருக்கிக் கூப்பிடச் செய்கிறது”

இந்த உலகில் ஆணோ, பெண்ணோ இயல்பாகப் பழகத் தொடங்க முடிவதில்லை. அது அவர்களுக்குள் இருக்கும் தயக்கம்தான். அந்தத் தயக்கம் இயல்பாகவே நமது நாயகன் சுப்பிக்கும் இருந்தது. அந்தத் தயக்கத்தினை உடைக்கும் வலிமையான ஆயுதம் தான் நமது நாயகி சில்வியின் அன்பு.

“ஒரு பெண்ணோடு பழகுவது பற்றி அதுவரை எனக்கிருந்த தயக்கங்களை, வீண் கற்பனைகளை அவள் அழித்தாள். நீரோடு நீர் சேர்ந்து விடுவது போன்ற விஷயமது எனப் புரிய வைத்தாள்”.

ஆம்! அவனும் அதைப் புரிந்து கொண்டான். அவனோடு சேர்ந்து வாசகர்களும் புரிந்துகொள்ள முடிகிறது.

‘அவள் இயல்பான கிராமத்துப் பெண்ணாகவே இல்லை’ என்ற ஈர்ப்புத்தான் அவனை அவளிடம் ஈர்க்கிறது. இருந்தாலும் அவளிடம் நட்புக் கொள்வதற்குக் தயக்கம் எப்பொழுதும் அவனுக்குள் பீறிட்டு எழுகிறது. இயல்பான பதின்பருவத்து ஆணின் மனப்போராட்டங்களை எழுத்தாளர் தன் எழுத்துச் சுழிப்பில் பதித்துச் செல்லும் பொழுது, அதை வாசிக்கும் ஒவ்வொரு ஆண் வாசகரும் தன் பதின்பருவத்தைக் கண்டிப்பாகத் திருப்பிப் பார்ப்பர் என்பது மறுக்க முடியாத உண்மை.

‘தன் மனத்திற்கு நெருக்கமானவர்கள், தன் அன்பிற்குரியவர்கள் தன்னைத் தவிரப் பிறர் மீது அன்பினைச் செலுத்தக் கூடாது’ என்பது, அன்பின் உச்சக்கட்டம். அன்பினைப் பெறுபவர்களும் இதனை வெளிப்படையாக வெறுத்தாலும் மனத்திற்குள் மகிழ்ச்சியடையத்தான் செய்வார்கள். குமார் மீது கொண்ட வெறுப்பான சில்வி மீது அன்புதான். நேசம் கொண்ட பெண்ணின் கோபத்தையும் அன்பையும் தாங்கும் வலிமை ஆணுக்கு இல்லை. சுப்பிக்கும் இதே நிலைதான்.

இக்கதையில் காதல் மட்டும் காணப்படவில்லை. குடும்ப உறவுகள், சமுதாய உறவுகள், இணக்கங்கள், உரசல்கள், இயல்பான மனித குணம் அனைத்தும் கதையுடன் இரண்டறக் கலந்து செல்கிறது. மாமியார் மருமகளுக்கு மட்டும் அல்ல; மாமனார் மருமகனுக்கும் இணையே பிணக்கு வருவது இயல்பு. அந்த இயல்பானது அடிப்படை இயல்பாகக் கூட இருக்கும்.

சுப்பித் தன் தந்தையைப் பற்றிக் கூறும் பொழுது, “அவருக்கு என் அப்பாவைப் பிடிக்காது. அப்பாவும் தாத்தாவும் பேசிக்கொண்டதாக நினைவேயில்லை. அப்பாவின் குணம் அப்படி. அவர் தாத்தாவை விடவும் அதிகம் கோபம் கொண்டவர். ஒருமுறை பள்ளி மாணவர்களில் ஒருவன் கன்னத்தில் அவர் ஓங்கி அறையவே அவன் மயங்கி விழுந்துவிட்டான். ஊரே கூடிவிட்டது. நல்லவேளை, அவன் மயக்கம் தெளிந்து விட்டான். பிறகு அந்தப் பையன் பள்ளிக்கே வரவில்லை. பின்னாளில் அந்தப் பையனுக்குக் காது கேளாமல் போய்விட்டது என்றார்கள்”.

எழுத்தாளர் இந்தப் பத்தியின் வழியாகத் தந்தையின் முழு இயல்பையும் கூறிச் சென்றுள்ளார்.

சில்வி அவனின் மனத்திற்குள் முழுமையாகப் பரவிக் கிடப்பதால் தன்னை அவளாகவே பாவிக்கிறான். அதனால்தான் அவள் புரியும் அத்துணைச் செயல்களுக்கும் துணைபுரிகிறான். அவளின் மகிழ்ச்சியின் தன் மகிழ்ச்சியாகவே எண்ணிக் கொள்கிறான். அதனால்தான் எந்தப் பழி தன் மீது வந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகிறான். இது உடல் அவனை ஆட்டுவிக்கும் செயலால் நடைபெற்றதில்லை; மனமும் அன்பும் இணைந்த செயலால் இது நடைபெறுகிறது.

“திடீரென உலகம் தண்ணீரில் நனைந்த பஞ்சைப் போலச் சுருங்கிவிட்டதாகத் தோன்றியது. எதற்காக இந்தச் சில்வியா பின்னால் நான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஏன் அவள் எது சொன்னாலும் செய்கிறேன். மற்றவர்கள் கேலி செய்வதை ஏன் பெரிதாக நினைக்கவேயில்லை. யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுமே அது போன்றதுதானா என் வேலையும்?”

காலமும் குடும்பச்சூழலும் அன்பானவர்களை என்றும் இணைப்பதில்லை. நம் சுப்பிக்கும் இதே நிலைதான் ஏற்படுகிறது. காதலின் வழியால் துன்புறும் ஆணின் மனமும் நூலை விட்டுப் பிரிந்த பட்டம் போன்றது. இவன் சில்வி மீது கொண்டுள்ளது வெறும் காதல் இல்லை. அது அன்பின் மீக்கூர்ந்த நிலையாகும்.

சில்வியை வாசிக்கும் பொழுது தனித்துவமான பெண்ணாகக் காணப்படுகிறாள். தன் மனதைக் கட்டுக்குள் வைக்க இயலாத பெண்ணாகவும் காணப்படுகிறாள். சில்வியாவைச் சில்வியாகவே பார்க்கத் தெரியாதவர்களுக்கு அவள் மாறுபட்ட பிறவியாகத்தான் தோன்றினாள். பிறரைவிடத் தனித்துவத்துவமானவர்களுக்கு அவர்கள் தனிப்பிறவியாகத்தானே தோன்றும். சில்வியும் அப்படித்தான். மன அலைக்கழிப்பே அவளை அவ்வாறு செயல்படுத்த வைத்துள்ளது என்பதைச் சுப்பியைத் தவிர வேறு எவரும் அறிந்ததில்லை.

காலத்திற்கு வலிமை உண்டு. அந்தக் காலம் அவர்களை ஒன்று சேர்க்கிறது. வேறொருவரின் மனைவியாகக் கணவனை இழந்த, இன்னொருத்தியின் கணவனாக. பல நேரங்களில் வெறுமை கொண்டவர்கள் தங்களைப்போன்றே வெறுமை கொண்டவர்களைக் கண்டடைகிறார்கள். தன் வெறுமையால் அவர்களது வெறுமையைப் போக்குகிறார்கள். அதற்கு இந்தச் சமுதாயம், ‘அவர்கள் உடலால்தான் தனது வெறுமையைப் போக்குகறார்கள்’ என எண்ணிக் கொள்ளும். அவர்கள் அன்பு எனும் சொற்கள் வழியாகத் தங்களது வெறுமையைப் போக்குகிறார்கள் என்பதை உணர மறந்து விடுகிறது.

“அக்கறை காட்டுறதுக்கு ஏதாவது ஒரு உறவு வேணும். இத்தனை வருஷமாக நாம பழகிட்டு இருக்கோம். இந்த உறவுக்கு என்ன பேரு. சொல்லு. பிரண்டஷிப்பா. லவ்வா, அல்லது சின்னவயசு பழக்கமா. பெயரில்லாத உறவுகள் இருக்கத்தானே செய்யுது” என்று சில்வியா கூறுவது எத்தனை நுட்பமானது.”

‘சில்விக்கு வாழ்க்கைத்துணையாக ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கரைந்து அவளுக்கு மனத்துணையாக, ஊன்றுகோலாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் சுப்பிக்கு நாற்பதைக் கடந்த வயதில்தான் தோன்றுகிறது. ‘காதல் கரையவில்லை, மறையவில்லை; ஆனால், காதல் இல்லை’ என்பதுதான் உண்மை.

பெண்களின் ஆழ்மன உணர்வினை எழுத்தாளர் எடுத்துரைக்கும் பொழுது, “அதை எப்படிச் சொல்லுறது? ஓர் ஆண் மேல ஒரு பொண்ணுதானப்பா அக்கறை காட்ட, அன்பு செலுத்த முடியும்?ணு என் வொய்ப் நினைக்கிறா. அவளைத் தவிர வேறு யாரும் என்கிட்ட ‘அதிக அக்கறை காட்ட முடியாது’ணு நம்புறா. அதை ஏன் கெடுக்கணும்? அப்படியே இருந்துட்டு போகட்டுமே!.”

சுப்பியின் மனைவியும் தன் கணவன் மற்றொரு பெண் மீது கொண்ட ஏற்றுக் கொண்டவளாகத்தான் உள்ளாள். அவளும் போற்றுதலுக்குரியவளே.

சுப்பி, சில்வியாவின் அன்பினை வெளியுலகக் கண்ணால் பார்ப்பவர்களுக்கு அவர்கள் திருமணப் பந்தத்தில் இருந்து கொண்டே தவறான வழியில் செல்பவர்களாகத் தோன்றும். ஆனால், இருவர்களுக்கான காதலைத் தாண்டி உள்ள மனமெல்லாம் நிறைந்த அன்பினை அவர்கள் இருவரை தவிரச் சில்வியின் மகளான நான்சியால் மட்டுமே உணர முடியும்.

வாழ்வில் எல்லோருக்கும் வெறுமை சூழும் பொழுது ஒரு துணை தேவைப்படுகிறது. அந்தத் துணையானது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அதில் சுயநலம் ஒட்டிக் கொள்கிறது அல்லது வேறு ஒன்று நிறைந்திருக்கலாம். ஆனால், இக்கதையைப் பொறுத்தவரையில் அன்பு கொண்டவர்களைக் காலம் கடந்து அந்த நேசம் இணைத்து வைத்திருக்கிறது.

•••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 20:17

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற வாழ்த்துகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 19:52

அரிசி யானை- உப்பு யானை

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான விட்டல்ராவின் நதிமூலம் சுதந்திரப் போராட்ட நாட்களின் சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது. நாமக்கல் நகரை இதை விடச் சிறப்பாக யாரும் எழுதிவிட முடியாது. ஒரு ஆவணப்படம் போல நகரின் தொன்மையான வீதிகளையும் அதன் மனிதர்களையும் நாவல் அழகாகச் சித்தரித்துள்ளது. விட்டல்ராவ் ஒரு ஓவியர் என்பதால் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். எத்தனை கதாபாத்திரங்கள். மறக்கமுடியாத நிகழ்வுகள். காலத்தின் நீரோட்டம் நாவலை முன்னெடுத்துப் போகிறது

மதராஸிலிருந்த நீல் சிலையை அகற்ற வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் இந்த நாவலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இந்த நாவலின் 34 முதல் 50 பக்கம் வரை ஒரு திருமணம் விவரிக்கப்படுகிறது. இது போல விரிவாக, நுணுக்கமாகத் திருமணம் எந்தத் தமிழ் நாவலிலும் எழுதப்பட்டதில்லை. திருமணக் கொண்டாட்டத்தின் பகுதியாக நாமும் கலந்துவிடுகிறோம்.

மாத்வ குடும்பம் ஒன்றில் நடக்கும் அந்தத் திருமணத்தின் சடங்குகள் சம்பிரதாயங்கள். இருவீட்டாரின் செய்முறைகள். பரிமாறப்படும் உணவு வகைகள், ஹரிகதா நிகழ்ச்சி. தேவதாசிகளின் வருகை என முழுமையாகத் திருமண நிகழ்வை விட்டல்ராவ் பதிவு செய்திருக்கிறார்.

இந்தத் திருமண வைபவம் ஒரு காலகட்டத்தின் சாட்சியம். இதற்குள் தான் எத்தனை தளங்கள். மாறுபட்ட சடங்குகள். பெண் பார்க்கப் போவதில் துவங்கி திருமணப்பேச்சு வார்த்தை நடைபெறும் விதம். சீதன விவகாரம். தடபுடல் ராயர் அணிந்துள்ள ஆடையின் கம்பீரம். அவர்கள் குடும்பத்தின் பெருமை என அடுக்கிக் கொண்டே செல்லும் விட்டல்ராவ் திருமணக்காட்சியின் போது தனது எழுத்தாற்றலின் உச்சத்திற்குச் சென்றுவிடுகிறார்.

திருமண நிகழ்வை விவரிக்கும் போது இடைவெட்டாகத் தீவட்டிக் கொள்ளையர்களைப் பற்றிச் சிறிய குறிப்பு ஒன்றையும் எழுதியிருக்கிறார். தீவட்டி கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வருவதன் முன்பாக ஒரு ஆள்விட்டுக் கடிதம் அனுப்பி வைப்பார்களாம். சொல்லாமல் திருடுவது அவர்களின் வழக்கமில்லை என்கிறார். அந்தக் கொள்ளையர்கள் திருடப் புறப்படும் முன்பாக நாமகிரியம்மனை வேண்டிக் கொண்டு தான் புறப்படுவார்களாம். அவர்களுக்கு அம்பாளின் கடாட்சம் முழுமையாக இருந்தது கொள்ளை அடிக்கப் போன இடத்தில் பெண்களைத் தொடமாட்டார்கள். எட்டி நின்றே பேசுவார்கள். தாலியைத் திருட மாட்டார்கள் என்று சொல்லும் ஒருவர் தே ஆர் ஆனெஸ்ட் என்கிறார்.

விட்டல்ராவ் நாவலில் சொல்லியிருப்பது நிஜம் எனது சொந்த கிராமப் பகுதியிலும் இது போன்ற திருடர்கள் இருப்பதை அறிவேன். அதைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்.

மாப்பிள்ளை ராணுவத்தில் வேலை செய்தவர் ஆகவே பாஸ்ரா கிட்டா என்றே அழைக்கப்படுகிறார். பெண் இன்னமும் ருதுவடையாத சிறுமி. திருமணச் சமையலுக்காகச் சேலத்திலிருந்து ராமராவ் பட்டர் தலைமையில் சமையல்காரர்கள் வந்திருக்கிறார்கள். உதவிக்குப் பதினைந்து பேர். அதில் மூன்று பேர் கணவனை இழந்த பின்பும் சிகை எடுக்காத கேஸிகள்.

முந்திரிப்பருப்பை ஓரடி உயரமுள்ள கோபுரம் போலக் குவித்துப் பாகு கலந்து பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள். சந்தனக் கட்டையில் ஐந்து விசிறிகள் தயாரிக்கப்படுகின்றன. அதுவும் அன்னப்பட்சி போன்ற அமைப்பு கொண்ட மடக்கு விசிறி. ஜானவாச ஸ்வீட்டாகப் பதிர்பேணி.

மாப்பிள்ளை அழைப்பின் போது மணப்பெண்ணின் தாயைக் கல்யாண பெண் போல அலங்கரித்து அழைத்து வருகிறார்கள். மாப்பிள்ளை அகன்ற ஜரிகை பார்டருள்ள வேட்டிக்கு மேலே ஓபன் கோட் அணிந்து வருகிறான். தலையில் மைசூர்குல்லா.

ஜானவாச சாப்பாடு. நான்குவிதமான கோசுமல்லிகள். பாசிப்பறுப்பும் தேங்காய் துருவலுமாய் ஒன்று. கடலைப் பருப்பும் கோசுமல்லி இரண்டு வாழைப்பழக் கோசம்பரி ஒன்று வெறும் தேங்காய் கோசம்பரி ஒன்று

மணப்பெண்ணின் தாலிச்சரட்டில் தங்கத் தாலிப்பொட்டையும் தங்கக் குண்டுமணிகளையும் தேவதாசிகள் தான் கோர்த்துத் தருவது என்று சம்பிரதாயம். அதற்காகத் தேவதாசி ஒருவர் அழைத்து வரப்படுகிறார்.

திருமணத்தை நடத்தி வைக்கும் பரசுராமாச்சாரியார் விரிவாகக் கல்யாண சடங்குகளைச் செய்கிறார்.

திருமணத்தில் கதர் துணி பயன்படுத்தப் படுவது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. சீரக வெல்லம் என்றொரு சடங்கைப் பற்றி எழுதியிருக்கிறார். அழகான சித்தரிப்பு.

ஹோமத்தின் எதிரில் அரிசியைக் கொட்டிப் பரப்பி அதில் விரலால் யானை ஒன்றை வரைந்த பரசுராமாச்சாரியார் பக்கத்திலிருந்த உப்பைக் கொட்டி அதிலும் இப்படி ஒரு யானையை வரைகிறார். அவர் சொல்லிக் கொடுத்தபடியே மாப்பிள்ளை பெண்ணிடம் கேட்கிறார்

என் அரிசி யானையைத் தருகிறேன். உன் உப்பு யானையைத் தருகிறாயா.

அரிசி யானை உப்பு யானை என்ற படிமம் எத்தனை அழகானது.

திருமணம் முடிகிறது. பகல் சாப்பாடு சப்பென்று சாதாரணந்தான். காய் எதுவுமில்லை. வெறும் பருப்பு சாம்பார்

இரவு சாப்பாட்டுக்குப் போளி தயாராகிறது. போளி மீது நெய்யைக் கரண்டி கரண்டியாக ஊற்றுகிறார்கள்.

புதுமணத்தம்பதிகள் மரப்பாச்சிகளைப் போட்டுத் தாலாட்டுகிறார்கள். நாமகிரி தாயாரைச் சேவிக்கச் செல்வதுடன் திருமணம் நிறைவுபெறுகிறது.

நதிமூலம் நாவல் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் எழுந்த தமிழகத்தின் சுதந்திர அலையை மிக உண்மையாகச் சித்தரித்துள்ளது. சுதந்திர வேட்கை கொண்ட இளைஞர்கள் எப்படி ஆயுதம் ஏந்தினார்கள். கருஞ்சட்டை பேரணி எப்படி நடக்கிறது. பவானிசிங் போன்றவர்களின் வருகை. அன்றைய பிரிட்டிஷ் விசுவாசம், சட்ட மறுப்பு இயக்கம் நடைபெற்ற விதம். அன்றைய மதராஸின் தோற்றம். டிராம்களின் இயக்கம். ஆஸ்டின் கார்களின் ஒட்டம். கெனில்வொர்த் கேசில் உருவான விதம். துரையின் வாழ்க்கை என அந்தக் காலகட்டத்தை வெகு அழகாகவும், உண்மையாகவும், துல்லியமான விவரங்களோடும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்

காங்கிரஸ் மாநாட்டில் சைலண்ட் சினிமா காட்டப்போவது வியப்பூட்டும் செய்தியாகப் பரவுகிறது. முதன்முறையாக மக்கள் சினிமா காணக் கூடுகிறார்கள். நம்ம ஊருக்கு சினிமா வருமா ராயரே என ஒருவர் கேட்கிறார். தேசிய எழுச்சி ஊட்டும் பாடல்கள் கொண்ட நாடகங்களைப் போலீஸ் தலையிட்டுத் தடுக்கிறார்கள்.

தாகூர் வீடும் உலகமும் என்றோர் நாவல் எழுதியிருக்கிறார். இரண்டின் மாற்றங்களும் எப்படி ஒன்றையொன்று பாதிக்கின்றன என்பதைப் பற்றிய நாவலது. விட்டல்ராவின் நாவலும் அத்தகையதே. சமூக மாற்றங்களும் தனிநபர்களின் வாழ்க்கைப்போக்கும் ஒன்றையொன்று அணைத்தும் விலக்கியும் தனியாகவும் செல்வதை மூன்று தலைமுறைகளின் வழியே நாவல் மிக அழகாகச் சித்தரித்துள்ளது.

சுதந்திரப்போராட்ட காலத் தமிழகத்தைப் பற்றிக் குறைவான நாவல்களே எழுதப்பட்டுள்ளன. அதில் விட்டல்ராவின் நதிமூலம் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2021 00:05

December 30, 2021

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் அம்பைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ள அம்பை மும்பையில் வசிக்கிறார்.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

••

சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பாலபுரஸ்கார் விருது கவிஞர் மு. முருகேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. முருகேஷிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற நூலிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2021 19:57

December 29, 2021

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள்.

வெஸ் ஆண்டர்சன் எழுதி, இயக்கியுள்ள ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் திரைப்படம் சினிமாவின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திப் புதியதொரு அனுபவத்தைத் தருகிறது. உண்மையில் சினிமாவின் அடுத்த கட்டம் இதுவென்பேன்.

ஆண்டர்சனின் திரைமொழி ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் சிறார் கதைப்புத்தகங்களை நினைவூட்டக்கூடியது. அவருடைய பெரும்பாலான காட்சிகள் விசித்திர கதைகளைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்ச்சியைத் தரக்கூடியது. நடிகர்களின் விசித்திரமான தோற்றம் மற்றும் வெளிப்பாடு, அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவது, துள்ளலான இசை, வியப்பூட்டும் அரங்க அமைப்புகள். இவை அவரது படங்களின் விசேச அம்சங்களாகும்.

கதை சொல்வதற்கான ஊடகமாக மட்டும் சினிமாவைக் காணாமல் சினிமாவின் வழியே எதையெல்லாம் சொல்ல முடியும், காட்டமுடியும். விவாதிக்க முடியும் என்பதையே வெஸ் ஆண்டர்சன் தனது படங்களின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

நான்லீனியர் முறையில் அமைந்த இவரது படங்கள் விசித்திரமும் அபத்தமும் நிரம்பிய ஒரு உலகை சித்தரிக்கக்கூடியவை. அது பிரம்மாண்டமான ஹோட்டலாக இருந்தாலும். டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் ரயிலாக இருந்தாலும் அதை ஒரு தனியுலகமாக மாற்றி அதனுள் நடைபெறும் விநோதமான நிகழ்வுகளை மிகுந்த கவித்துவத்துடன் வெஸ் ஆண்டர்சன் சித்தரிக்கக்கூடியவர். அனிமேஷன் படங்களை இயக்கியவர் என்பதால் இந்தப் படத்தின் ஒரு பகுதி அனிமேஷனாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்பது போன்ற நிகழ்வுகளையே இவர் காட்சிகளாக்குகிறார்.

வெஸ் ஆண்டர்சனின் திரைமொழி விசேசமானது. திரையில் அவர் உருவாக்கிக் காட்டும் விசித்திர நிகழ்வுகளும் பகடியான சித்தரிப்புகளும் தனித்துவம் கொண்டிருக்கின்றன.

இந்தப் படம் ஒரு நாளிதழைப் பற்றியது. அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க்கர் இதழின் தீவிர ரசிகரான வெஸ் ஆண்டர்சன் அந்த இதழுக்குச் செலுத்திய அஞ்சலி போலவே படம் உள்ளது

ஒரு நாளிதழின் வடிவத்தை அப்படியே திரைவடிவமாகக் கொண்டிருப்பது திரைக்கதையின் புதுமை

பிரான்சின் கற்பனையான ஊரிலிருந்து வெளியாகி வரும் ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் ஆஃப் தி லிபர்ட்டி, கன்சாஸ் ஈவினிங் சன் என்ற இதழ் அதன் பத்திரிக்கையாளர்கள். ஆசிரியர் குழு அவர்களின் செயல்பாடுகளைப் படம் விவரிக்கிறது. படத்தின் இறுதியில் இந்தக் கதை எவரது எழுத்துகளின் பாதிப்பால் உருவானது என்பதற்கு நன்றி அறிவிப்பு வெளியிடுகிறார்கள்.

தி பிரெஞ்சு டிஸ்பாட் செய்தித்தாளின் ஆசிரியர் ஆர்தர் திடீரென மாரடைப்பால் இறந்து போகிறார். அவரது உயிலின் படி அந்த இதழ் அத்தோடு நிறுத்தப்படவுள்ளது. கடைசியாக ஒரு இதழை அவர்கள் தயாரிக்கிறார்கள். அதில் ஆர்தருக்கான இரங்கல் செய்தியோடு முன்பு வெளியான சில கட்டுரைகளைச் சேர்த்து வெளியிடுகிறார்கள். அந்தக் கட்டுரைகளின் திரைவடிவம் அத்தியாயமாக விரிகிறது.

சைக்கிளில் ஊர் சுற்றி அலைந்து தான் கண்டறிந்த மனிதர்களை நிகழ்வுகளை விவரிக்கும் பத்திரிக்கையாளரைப் பற்றியது முதல் பகுதி. இதில் நகரின் ஒவ்வொரு இடமும் கடந்தகாலத்தில் எப்படியிருந்தது. இன்று எப்படியுள்ளது. எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கற்பனை விவரிக்கப்படுகிறது.

நம்மைச் சுற்றிய வாழ்க்கையை அவதானிக்கும் விதமான இந்த முதற்பாதியில் இடமும் மனிதர்களும் மாறிக் கொண்டேயிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இரண்டாவது பகுதி சிறையிலிருக்கும் மோசஸ் ரோசென்தால் என்ற ஓவியரைப் பற்றியது. வான்கோ முதல் புகழ்பெற்ற பல்வேறு ஓவியர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட இந்தப் பகுதியே படத்தின் உச்சம். காட்சிக் கோணங்களும் சிறைச்சூழலில் ஓவியன் நடந்து கொள்ளும் முறையும். கலைக்கூடத்தில் நடைபெறும் விரிவுரையும் கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகிறவர்களின் ஏமாற்றுத்தனமும் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளன. மெல்ல மோசஸ் ஒரு பிம்பமாக மாற்றப்பட்டு அவர் கலக்கார ஓவியராக அடையாளப்படுத்தப்பட்டு அவரைப் பின்பற்றும் ஓவிய இயக்கம் உருவாவது அபாரம்.

முடிவில் மோசஸ் சிறைச்சுவரிலே சுவரோவியங்களை வரைகிறார். சிறைச்சுவரை எப்படிப் பாதுகாத்து வைப்பது என்ற பிரச்சனை எழுகிறது.

மூன்றாவது பகுதி மாணவர் போராட்டம் பற்றியது மாணவர்கள் போராட்டத்தைக் கேலி செய்யும் இந்தப் பகுதியில் அவர்கள் புரட்சியாக எதைக் கருதுகிறார்கள். அதற்காக எப்படிப் போராடுகிறார்கள் என்பதைப் பகடியாக விவரித்திருக்கிறார்கள். போராட்டக்குழுவின் அறிக்கையைத் தயாரிப்பதும் அதைத் திருத்தம் செய்து தருவதும் அரசியல் செயல்பாட்டின் பின்னுள்ள அபத்தமான செயல்களை வெளிப்படுத்துகிறது. வானொலி கோபுரத்தைப் பழுது நீக்கச் சென்ற ஜெஃபிரெல்லி கொல்லப்படுவதும் அவரது பிம்பம் புரட்சிகரச் செயல்பாட்டின் அடையாளமாக மாறுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.,

அடுத்தபகுதி போலீஸ் கமிஷனர் மற்றும் சமையல் கலைஞரின் உலகினை அறிமுகம் செய்கிறது. காவல்துறையினருக்கான சிறப்பு உணவு வகைகளைத் தயாரிக்கும் நெஸ்காபியர் என்ற சமையற்கலைஞர் கதாபாத்திரம் புதுமையானது. இந்தப் பகுதியில் ஆணையரின் மகன் கடத்தப்படுவதும் அவரை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகளும் நெஸ்காபியர் விஷம் கலந்த உணவை கொடுத்துப் பையனை மீட்பதும் சாகசக்கதைகளைக் கேலி செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது

இறுதிப்பகுதி ஆர்தருக்கான அஞ்சலிக்குறிப்பை எழுதுவது. அவர்கள் ஒன்றுகூடி அந்த அஞ்சலிக்குறிப்பைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தோடு நேரடியாகத் தொடர்பில்லாத போதும் சிட்டிசன் கேன் திரைப்படம் ஏனோ நினைவில் வந்தபடியே இருந்தது. அதுவும் பத்திரிக்கை உலகின் செயல்பாட்டினையும் பத்திரிக்கை உரிமையாளரின் வாழ்க்கையைப் பற்றியதும் தான்.

இந்தப் படம் ஒரு நாளிதழின் வடிவம் அந்தப் பண்பாட்டின் அடையாளமாக எப்படி உருக்கொள்கிறது என்பதையே முதன்மைப்படுத்துகிறது. எல்லாவற்றையும் சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் அசாதாரணமான விஷயம் போலப் பத்திரிக்கைகள் எழுதுகிறார்கள். உண்மைக்கும் செய்திகளுக்குமான இடைவெளி பெரியது. அவர்கள் தங்களுக்கேயுரித்தான விசித்திரமான கற்பனையுலகில் சஞ்சரிக்கிறார்கள். ஆளுமைகள் அரசியல் நுண்கலைகள் சினிமா க்ரைம் செய்திகள், உணவு விளையாட்டு எனப் பல்வேறு மசாலா தூவி செய்தியை மணக்கச் செய்கிறார்கள்.

இது போன்ற ஒரு படத்தின் மிகப்பெரிய சவால் அதைப் படமாக்குவது. அந்த வகையில் வெஸ் ஆண்டர்சன் பெரிய சாதனையைச் செய்திருக்கிறார் என்றே சொல்வேன். அரங்க அமைப்புகள். பல்வேறு சட்டகங்களைக் கொண்ட ஒளிப்பதிவு. வியப்பூட்டும் கேமிரா கோணங்கள். வரைகலை சாத்தியங்கள். அடுக்கடுக்காக விரியும் எடிட்டிங். மாறுபட்ட கதாபாத்திரங்கள் என இந்தப் படம் கதைசொல்லுதலின் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.

இப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வெல்லும் என்றே தோன்றுகிறது

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2021 23:30

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.