S. Ramakrishnan's Blog, page 108

December 8, 2021

மண்டியிடுங்கள் தந்தையே

டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு நான் எழுதியிருக்கும் புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே.

இந்த நாவல் டிசம்பர் 25 சனிக்கிழமை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படவுள்ளது

தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2021 18:11

நிமித்தம் கேட்கிறது

நிமித்தம் நாவல் குறித்த வாசிப்பு விமர்சனம்…

மஞ்சுநாத்

சப்தம் என்பது ஒரு வலுவான இருப்பு. இருப்பின் மூலமே அது தன்னை நீட்டித்துக் கொள்வகிறது. மனிதனின் வாழ்வியல் இருப்பும்கூடச் சப்தத்தினால் நிலை நிறுத்தப்படுவது வியப்பானது.

காது கேளாதவர்களுக்கு நிசப்தம் ஒரு வரமாக அமைந்திருக்கும் என்று கருதியிருந்தேன். அது தவறு. வெளிப்புற சப்தங்கள் கேட்காத போதும் பேரிரைச்சலாய் அகத்தின் குரல் அவர்களை தினம்தினம் கொன்று கொண்டிருக்கும் என்பது தான் நெருடலான உண்மை.

வெறுமையின் வேதனை வாழை குருத்திலையின் மீது பதியும் நகத்தின் கீறல் போன்றது. நிமித்தத்தின் பல அத்தியாயங்களை எழுதுகையில் எனதன்பு எஸ்ரா பலமுறை தன்னையுமறியாமல் கண்ணீர் சிந்தியிருப்பார் என்றே நினைக்கிறேன். நிமித்தம் முழுவதும் உப்பின் கரிப்பு. வாசகனின் கண்ணீரையும் அது கேட்கிறது.

மகிழ்ச்சியைவிட மனிதன் துன்பத்தைத் தனக்கு வெகு நெருக்கமாக உணர்கிறான். அதுதான் அவனுக்கு அவனையே அடையாளம் காட்டுகிறது. எஸ்.ராவின் இலக்கியம் துன்பத்தின் நிழலை உருவாக்குவதன் மூலம் நிஜத்தின் பாதையை அமைத்துத் தருகிறது.

பிழையான உடல் பெற்ற மனிதர்களை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையில் பெரிய ஊனம் உள்ளது. அகப்பிழைகள் கண்ணுக்கு தெரிவதில்லை. ஒருவேளை மனிதன் தனது அகப்பிழைகளைக் கண்டுணர வேண்டுமென்பதற்காகத் தான் இப்படி உடல்பிழை கொண்டவர்கள் பிறக்கிறார்களோ…?

செவித்திறனற்ற தேவராஜ் மீதான முதல் நிராகரிப்பு அவன் குடும்பத்திடமிருந்தும் குறிப்பாக அவன் தந்தையிடமிருந்தும் பின்பு சமூகத்திடமிருந்தும் வருகிறது. முற்கள் நிறைந்த கைகள் மூலம் நிராகரிப்பின் வலியை இந்தச் சமூகம் தொடர்ந்து அவனது மனதிலும் உடலிலும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

நிமித்தத்தின் முதல் அத்தியாயத்தைக் கடப்பதற்கு முன்பாகவே தேவராஜீன் வேதனையானது களங்கிய வண்டல் போல் நம் மனதில் தேங்கி விடுகிறது. அதன் சாரத்தில் முளைவிடும் கதைகள் ஒலியற்ற குறிப்புகளாக நம் மீது மோதி ஒளிப்புள்ளியின் மையத்திற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

தேவராஜ். வயது 47. அதாவது அவன் அவமானத்திற்குப் பழகிப்போனவன் என்பதற்கான முதல் அடையாளத்தைப் பெற்றுவிட்டான். எஸ்.ரா மனிதனுக்கு அவனது வாழ்வில் மூன்று கொண்டாட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று பிறப்பது இரண்டாவது திருமணம் மூன்றாவது இறப்பு. முதலும் கடைசியிலும் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் திருமணம் என்பது நாமறிய செய்து கொள்ளும் கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டம் தேவராஜ் வாழ்வின் பகல் கனவாக நீள்கிறது. இருப்பினும் கனவு நிஜம். அதற்கான போராட்டங்களும் வலிகளும் ஏளனங்களும் அவமானங்களும் உண்மை. இந்த உலகமும் கல்யாணம் ஆகாமல் போன பெண்களைப் பற்றித்தான் எப்போதும் கவலைப்படுகிறது.

ஒருவனின் உடல் பிழையை உதாசினப்படுத்திக் கூர்மையான வார்த்தைகள் மற்றும் பொறுப்பற்ற செயல்கள் மூலம் எவ்வளவு எளிதாகவும் அலட்சியமாகவும் கடந்து போகிறோம். சமூகத்தின் மருதாணி பூசிய விரல் நகங்களுக்குள் மற்றவர்களின் காயத்தைக் குத்திக்கிளறி ஆறாத ரணமாக்கும் குரூரம் ஒளிந்துள்ளது.

தஸ்தாயெவ்ஸ்கியின் ரஷ்ய சமூகத்தில் அவர் காலத்தில் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற தேவாலயங்களுக்குச் சென்றனர். இங்கும் நமது சமூகத்தில் பெண்கள் கோவில்களுக்குச் செல்கிறார்கள். அதனால் தான் எஸ்.ரா உறுதியாகக் கூறுகிறார். “கோவில் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பாண்மை பெண்கள் மனநோயாளி ஆகியிருப்பார்கள்.” ஆண்கள் தங்கள் மன அழுத்தத்தின் விடுதலையை மது அருந்துவதிலும் மனைவியை அடிப்பதிலும் பிள்ளைகளை உதைப்பதிலும் தீர்த்துக் கொள்கிறார்கள்.

மனித உடல் என்பது உணர்வுகளாலும் உணர்சிகளாலும் நிரம்பியது. கண் தெரியவில்லை, காது கேட்கவில்லை , வாய்ப்பேச முடியவில்லை , கை கால்கள் இயங்கவில்லை என்பதால் உணர்வுகளும் உணர்ச்சிகளும் இல்லையென்று ஆகிவிடாது. பசி எடுக்கத்தான் செய்யும், உடல் வளரும் போது தேவைகளும் மாறவே செய்கிறது, உலகம் அவர்கள் மீதும் பாலியல் அத்துமீறல்களை வன்முறைகளைத் தயங்காமல் ஏவுகிறது, அவர்கள் வாழ்விலும் நட்பு, துரோகம், காதல் , தோல்வி, அவமானம் இத்தனையும் நிகழவே செய்கிறது. அதன் எதிரொலிப்பு ஒரு இயல்பான மனிதனுக்கு எப்படியோ அப்படியே இவர்களுக்கும் பொருந்தும்.

கிராமத்தில் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அரளி விதை, எட்டிக்கொட்டை, பூச்சிக்கொல்லிகள் எனக் கசப்பானவைகளையே ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்…? அது அவர்களுக்குக் கசக்கதா என எனது சிறுவயதில் சிந்திப்பதுண்டு… வாழ்வின் பெரும்கசப்பு அவர்களது அடிநாக்கு வரை பரவியதற்கு முன்னால் இந்தச் சிறுகசப்பு அவர்களுக்குச் சாதாரணம் தான்…

தேவராஜ் எங்கே சாவு நடந்தாலும் அந்த வீட்டிற்குச் சென்று இறந்த உடலின் நெருக்கத்தில் உட்கார்ந்து கொள்வான். சாவின் மனத்தை நுகர்வது அவனுக்குப் பிடிக்கத்துவங்கியது. அந்த அழுகை, ஒப்பாரி, மலர்களின் வரிசை, துக்கம் பிடித்த முகங்கள், அசைவற்ற பிரேதம் … அன்பு மறுக்கப்படுபவர்களின் உலகம் மயானமாகி விடுகிறது. நிராகரிப்பின் ஓசை அவனது கபாலத்தின் அதிவர்வலைகளை அதிகப்படுத்தி விடுகிறது. தன்னைச் சுற்றியுள்ள ஒரு சில மனிதர்களின் அன்பு நிறைந்த அபிமானம் அவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ராமசுப்புவின் நட்புக்கூடக் கிடைக்காத தேவராஜ்கள் தான் நடைமுறையில் அதிகம்.

ஒலியை ருசிக்காத்தவனின் உயிர்ப்பின் விகாசிப்பில் எஸ்ரா பெருங்கதைகளின் சூலை திறந்து விடுகிறார். ஒரு காலத்தில் பருத்தி வணிகத்தின் மையமாகத் திகழ்ந்த கிராமம் வீழ்ந்த கதையும் , மதிப்பாக வாழ்ந்த விவசாயி சோற்றுக்கு நாதியற்றுப் போனதும், கோரத்தின் உச்சமான பஞ்சம், அகதிகளின் பரிதாபங்கள், ஆண் கிணறு பெண் கிணறு பற்றிய கதை, வெள்ளை கலயம் கதை, காற்றுக்குக் கிறுக்குப் பிடித்த கதை என மகரந்த பெருவெடிப்பில் பெருந்துயரின் வண்ணத்தை வழியவிடுகிறார்.

காசியின் கங்கை படித்துறையிலும் துயரின் வாசம் மிகுந்த அலைகளைக் காட்சிப்படுத்துகிறார். துயரம் என்பது இருப்பதில்லை. அது ஒருவரால் மற்றவருக்குள் உருவாக்கப்படுவது கடத்தப்படுவது. துயர் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கு ஒலிகள் மறுக்கப்படுகின்றன. ஒலிகள் மறுக்கப்படும் இருமைக்குள் துயர் அரிதாரம் பூசிக்கொள்கிறது.

ஒலிகள் மறுக்கப்பட்டவனின் ஒட்டு மொத்த வாழ்வும் நிமித்தமாய் நம்முன் நிற்கிறது.

**

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2021 18:03

December 6, 2021

மலைப்பாம்பின் கண்கள்

அந்திமழை டிசம்பர் இதழில் வெளியான புதிய சிறுகதை

ராகவின் கனவில் ஒரு மலைப்பாம்பு வந்தது.

அவனது முப்பதாவது வயது வரை இப்படிக் கனவில் ஒரு மலைப்பாம்பினைக் கண்டதேயில்லை. ஆனால் திருமணமாகி வந்த இந்த ஏழு மாதங்களில் பலமுறை அவனது கனவில் மலைப்பாம்பு தோன்றிவிட்டது. இதற்குக் காரணம் மிருதுளா.

அவளுக்கு மலைப்பாம்பினைப் பிடிக்கும். குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கைச் சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் என்று குழம்பியிருக்கிறான்.

அந்த மாநகரில் இருந்த உயிரியல் பூங்காவில் ஒரு கூண்டில் பனிரெண்டு அடி நீளமான மலைப்பாம்பு இருந்தது. 3செயற்கை மரம் ஒன்றையும் உருவாக்கியிருந்தார்கள். எங்கிருந்து அதைப் பிடித்துக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு ஜோடியாகப் போய். அந்த மலைப்பாம்பினை தான் முதலில் பார்த்தார்கள்.

“ராகவ், அதோட கண்ணைப் பாரேன். அதுக்குள்ளே ஏதோ ரகசியம் மினுமினுங்குது. பாடியோட டெக்சர், சுருண்டு படுத்துகிடக்கிற ஸ்டைல், அதோட ஸ்மால் மூவ்மெண்ட், எல்லாமே அசத்தலா இருக்கு.. ஐ லைக் இட்.. தூக்கி மடியில வச்சிகிடலாமானு இருக்கு என்றாள் மிருதுளா

அவனுக்கோ மலைப்பாம்பை பார்க்க உள்ளுற பயமாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் “போவோமா“ என்று கேட்டேன்

“இப்போ தானே வந்தோம்… ஏன் அவசரப்படுறே… “ என்றபடியே அவள் தடுப்புவேலியின் மிக அருகில் சென்று மலைப்பாம்பை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்படி என்ன பிடித்திருக்கிறது என அவனுக்குப் புரியவில்லை.

“ஸ்கூல்ல படிக்கும் போதே மலைப்பாம்பை டிராயிங் பண்ணி பிரைஸ் வாங்கியிருக்கேன். இது ஒண்ணும் பாய்சன் இல்லை தெரியுமில்லே“ என்றாள் மிருதுளா

“ஆனாலும் பாம்பு தானே“.. என்றான் ராகவ்

அவள் செல்போனில் பாம்பினை படம்பிடித்துக் கொண்டிருந்தாள். வேடிக்கை பார்க்க வந்த ஒரு சிறுவன் கண்களை மூடிக் கொண்டு அவனது அம்மா பின்னாடி ஒளிந்து கொண்டான்.

சும்மா பாருடா என்று அம்மா அவனை முன்னால் இழுத்துக் கொண்டிருந்தாள்.

ராகவ் அவளைத் தனியே விட்டு வெள்ளைப் புலியை காணுவதற்காக உள்ளே நடந்தான். திரும்பி வந்தபோதும் அவள் அதே இடத்தில் நின்று மலைப்பாம்பினை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் ஒரு ஐஸ்கிரீம் இருந்தது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்தபடியே அவள் அசைவற்ற பாம்பின் உடலை கண்களால் வருடிக் கொண்டிருந்தாள். அதைக் காண எரிச்சலாக வந்தது.

பொதுவாக இளம்தம்பதிகள் ஜோடியாகச் சினிமாவிற்குத் தானே போவது வழக்கம். ஆனால் மிருதுளாவிற்குச் சினிமா பார்க்க விருப்பமில்லை. அவள் தனது இருபத்தியாறு வயதிற்குள் பத்துக்கும் குறைவான படங்களைத் தான் பார்த்திருக்கிறாள்.

“சினிமா பார்க்கப் போனால் தூக்கம் வந்துவிடுகிறது“ என்று சொன்னாள்.

அவனால் அப்படி ஒரு முறை கூடச் சினிமா தியேட்டரில் தூங்க முடிந்ததில்லை.

கல்லூரி நாட்களில் தீபாவளி பொங்கல் நாளன்று ரீலிசான மூன்று திரைப்படங்களையும் தொடர்ந்து பார்ப்பது அவனது வழக்கம். அவனது ஊரில் மூன்று திரையரங்குகள் இருந்தன. அதில் வாரம் இரண்டுமுறை தான் படம் மாற்றுவார்கள். ஆகவே வாரத்திற்கு ஆறு படங்களைப் பார்த்துவிடுவான். பெரும்பாலும் செகண்ட் ஷோ சினிமா தான். அதுவும் நண்பர்களுடன். படம் விட்டு வீட்டுக்குப் போக முடியாது என்பதால் நண்பனின் வீட்டு மாடியில் போய் உறங்கி எழுந்து அப்படியே கல்லூரிக்குப் போய்விடுவான்.

இப்படிச் சினிமாவே பிடிக்காத ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்து கொண்டோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.

மிருதுளா பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் விற்பனைப்பிரிவில் பணியாற்றிவந்தாள். ஒரே பெண். அவளது அப்பா ஒரு பல் மருத்துவர். பள்ளி படிப்பை ஊட்டி கான்வென்டில் படித்திருக்கிறாள். கல்லூரி படிப்பு மணிப்பால் யுனிவர்சிட்டி. இரண்டு ஆண்டுகள் இத்தாலியில் வேலை செய்திருக்கிறாள். ஆகவே நாலைந்து மொழிகள் சரளமாகப் பேசவும் எழுதவும் முடியும். ஒன்றரை லட்ச ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறாள்.

மெட்ரிமோனியல் நிறுவனம் ஒன்றின் மூலமாகத் தான் அவள் அறிமுகம் ஆனாள். அவர்கள் இருவரும் முதன்முறையாக அமேதிஸ்ட் காபி ஷாப்பில் சந்தித்துப் பேசிய நாளில் அவளிடமிருந்த கசிந்த பெர்ப்யூம் வாசனை அவனை மயக்குவதாக இருந்தது. அன்று கறுப்பும் மஞ்சளும் கலந்த சல்வார்-கமீஸ் அணிந்திருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது.

அவளோ மிக இயல்பாக, தனது வாடிக்கையாளர்களில் ஒருவரிடம் பேசுவது போலச் சரளமாக, பொய் சிரிப்புடன் பேசினாள். அவளாகவே ஆரஞ்சு ஐஸ் டீ ஆர்டர் செய்தாள். அதை ராகவ் குடித்ததேயில்லை

“நீங்கள் ஒரே பையனா“ என்ற கேள்வியை மட்டும் அவள் இரண்டு முறை கேட்டாள்.

“ஆமாம். அப்பா கல்லூரி பேராசிரியர். அம்மா ஸ்கூல் டீச்சர்“ என்று சொன்னான்

“நல்லவேளை நீங்களும் டீச்சராகவில்லை“ என்று சொல்லி சிரித்தாள். இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று எனப்புரியவில்லை. ஸ்டார் ஹோட்டலில் அலங்கரித்து வைக்கபட்ட அன்னாசிபழத்துண்டுகளைப் பார்க்கும் போது ஏற்படும் ஆசையைப் போல அவளது வசீகர அழகின் மயக்கத்தால் அவனும் சிரித்துவைத்தான்.

அவள் வேண்டுமென்றே குரலில் குழைவினை ஏற்படுத்திப் பேசுவது போலத் தோன்றியது

“உங்கள் எடையைத் தெரிந்து கொள்ளலாமா“ என்று கேட்டான்

இப்படி எந்தப் பெண்ணும் அவனிடம் கேட்டதில்லை. சொல்லக் கூச்சமாக இருந்தது. மெதுவான குரலில் சொன்னாள்

“அறுபத்தியெட்டு“

“ஐந்து கிலோ குறைக்க வேண்டும்“ என்று புன்னகையோடு சொன்னாள்.

அவள் முன்பாக இருக்கும் போது முகத்தில் மழைதுளி விழுவது போலவே உணர்ந்தான்.

“வேறு ஏதாவது கேட்க வேண்டுமா“ என்று கேட்டபடி கண்களைச் சிமிட்டினாள்.

“ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்“ என்றான் ராகவ்

“எனக்கே தெரியும்“ என்றாள் மிருதுளா.

“நான் அதிர்ஷ்டசாலி“ என்று சொல்லி லேசாகச் சிரித்தான்

“அதை இன்னமும் நான் முடிவு செய்யவில்லை. யோசிக்க வேண்டும். நான் எதிலும் அவசரப்படுவதில்லை. நான் கொஞ்சம் வித்தியாசமானவள். என்னைப் புரிந்து கொள்வது கஷ்டம்“ என்றாள் மிருதுளா

“வித்தியாசம் என்றால் எப்படி“ என்று கேட்டான்.

அவள் சிரித்தபடியே “இப்போதே உங்களைப் பயமுறுத்தவிரும்பவில்லை. ஆனால் நான் அப்படித்தான்“ என்றாள்

பேச்சின் ஊடாக அவள் தனது சிறிய உதடுகளை நாக்கால் வருடிக் கொண்டதை கவனித்துக் கொண்டேயிருந்தான். கவர்ச்சியான உதடுகள். மேலுதடு சற்றே சிறியது போலத் தோன்றியது.

“உங்களை விட நான் ஒரு இன்ஞ் உயரம் அதிகம் என நினைக்கிறேன்“ என்றாள்.

“அப்படியா“ என வியப்போடு கேட்டபடியே “அது ஒன்றும் பிரச்சனையில்லை“ என்றான் ராகவ்

“எனக்குப் பிரச்சனையாக இருக்கும். நீங்கள் உயரமான காலணி அணிந்து கொள்ள வேண்டும்“ என்றாள்

“அதற்கென்ன“ என்று சிரித்துவைத்தான்.

“உங்களுக்குக் காரோட்டத் தெரியுமா“ எனக்கேட்டாள்

“இல்லை. பைக் மட்டும் தான் ஒட்டுவேன்“

“நான் நன்றாகக் கார் ஒட்டுவேன். வேலைக்குச் சேர்ந்தவுடனே கார் வாங்கிவிட்டேன். ஆபீஸிற்குக் காரில் தான் போகிறேன். ஐ லவ் டிரைவிங்“ என்றாள்

“அதுவும் நல்லது தான் வெளியே எங்காவது போக ஒலா புக் பண்ண வேண்டிய அவசியமில்லை“ என்றான்

அதை அவள் ரசிக்கவில்லை. நிதானமாகத் தனது கலைந்த கூந்தலை கோதிவிட்டபடியே அவள் தேநீரோடு இருந்த ஆரஞ்சு துண்டினை சுவைத்தாள்.

“என்ன கார் வைத்திருக்கிறேன் என்று கேட்க தோணவேயில்லையா“ என்று கேட்டாள்

“சாரி.. எனக்குக் காரைப் பற்றி ஒன்றுமே தெரியாது“

“ரோட்டில் கண்ணை மூடிக் கொண்டு தான் போவீர்களா“ என்று சீண்டும் குரலில் கேட்டாள்

“ஹெல்மெட் போட்டிருப்பதால் எதையும் கவனிக்கமாட்டேன்“ என்றான்

அவள் சக்கரை துண்டில் ஒன்றை தனியே எடுத்து வாயிலிட்டு ருசித்தபடியே மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை அவனுக்குள் எதையோ தேடுவது போல உணர்ந்தான். என்ன பார்க்கிறாள். அவனால் அந்த ஊடுருவலைத் தாங்க முடியவில்லை. அவள் புன்சிரிப்புடன் சொன்னாள்

“நாம் இன்னொரு முறை சந்திப்போம்“

அவள் போனபிறகும் அந்த நறுமணம் அவளது இடத்தைச் சுற்றிலும் நிரம்பியிருந்தது. அவளைப் போலவே ஒரு சக்கரைத்துண்டினை ராகவும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

அதன்பிறகு மூன்று முறை தனியே சந்தித்துப் பேசினார்கள். பிறகு தான் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் முடிவானது. வழக்கமாகத் திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணம் போலின்றிக் கடற்கரை சாலையிலுள்ள ரெசார்ட் ஒன்றில் ஆடம்பரமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. மிருதுளாவின் அப்பா நிறையச் செலவு செய்திருந்தார். ஹனிமூனிற்காக ஹவாய் தீவிற்குப் போனார்கள். விதவிதமான உணவு வகைகளை, மீன்களை அவள் விரும்பி சாப்பிட்டாள். ராகவிற்குச் சோறு கிடைக்காதா என்று ஏக்கமாக இருந்தது.

படுக்கையில் அவனை முத்தமிடும் போது கூட மிருதுளா நிதானமாக அவனது உதட்டில் தனது உதட்டினைப் பதித்தாள். அழுத்தமான முத்தம். கட்டிக் கொள்வதும் மெதுவாகவும் நீண்டதாகவும் இருந்தது. வெயில்காலத்தில் ஐஸ்கீரிம் சாப்பிடுவது போல அவசரமாகவும் குளிர்ச்சி தருவதுமாக இருந்தது அவர்களின் உடற்கூடல்.

சென்னை திரும்பிய பிறகு அவர்கள் தற்காலிகமாக மிருதுளா தங்கியிருந்த அபார்ட்மெண்டிலே சில நாட்கள் ஒன்றாக வசித்தார்கள். புதுவீடு ஒன்றை வாடகைக்குப் பிடிக்க வேண்டும் என்பதில் மிருதுளா தீவிரமாக இருந்தாள்.

புதிதாகக் கட்டப்பட்ட முப்பத்தி நான்கு அடுக்குகள் கொண்ட குடியிருப்பு ஒன்றில் முப்பத்தி நான்காவது மாடியில் ஒரு வீட்டினை வாடகைக்குப் பிடித்தாள்.

“முதற்தளமாக இருந்தால் நன்றாக இருக்குமே“ என்றான் ராகவ்

“ இருப்பதிலே மிக உயரமான இடத்தில் குடியிருக்க வேண்டும். இந்த நகரம் என் காலடிக்கு கீழே இருப்பதைக் காணுவது சந்தோஷமாக இருக்கிறது“ என்றாள்.

அவ்வளவு உயரத்தில் குடியிருப்பது அவனுக்குச் சௌகரியமாகவே இல்லை. ஒருவேளை லிப்ட் இயங்காவிட்டால் என்ன செய்வது. கண்ணாடி தடுப்பில் விரிசல் ஏற்பட்டுவிட்டால் என்ன ஆகும். காலை வெயில் ஏன் இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று மனதில் ஏதேதோ குழப்பங்கள், பயம் உருவாகிக் கொண்டேயிருந்தது.

அவளோ அன்றாடம் காலையில் கையில் காபியுடன் பால்கனியில் போய் நின்று கொண்டு விரிந்து கிடக்கும் நகரையும் காலை வெளிச்சத்தையும் ரசித்துக் கொண்டிருப்பாள். காற்று மிக வேகமாக அடிக்கும்.அதில் அவளது கூந்தல் அலையாகப் பாயும். அவனுக்கு அந்தப் பால்கனிக்கு போய் நிற்பது பிடிக்கவே பிடிக்காது.

மிருதுளா நன்றாகச் சமையல் செய்வாள். ஆனால் விரும்பினால் மட்டுமே சமைப்பாள். மற்ற நேரங்களில் ஹோட்டலில் இருந்து தான் உணவு வரவழைக்கபடும். அவள் ஒரு நாளும் அலுவலகத்திற்குத் தாமதமாகப் போனது கிடையாது. ஒய்வெடுப்பதே அவளுக்குப் பழக்கமில்லை. வீட்டிலிருந்தாலும் அங்குமிங்குமாக நடந்து கொண்டேயிருப்பாள். அவனுக்கோ அலுவலகம் விட்டுவந்தவுடன் சோபாவில் படுத்துக் கொள்ள வேண்டும். ஞாயிறு என்றால் மதியம் வரை தூங்க வேண்டும். அவள் அப்படியில்லை. எல்லா நாளும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடத் துவங்கிவிடுவாள். அழகிலும் ஆரோக்கியத்திலும் அவளுக்குக் கூடுதல் அக்கறை இருந்தது.

இரண்டு பேரும் ஒன்றாகக் காரில் கிளம்பி போவார்கள். மின்சார ரயில் நிலையத்தில் அவனை விட்டுவிட்டு அவள் தனது காரில் அலுவலகம் செல்லுவாள். ஒருமுறை கூட அவனது அலுவலகம் வரை காரில் கொண்டுவந்து விட்டதில்லை. பெரும்பாலும் அவளது வேலை முடிந்து திரும்பி வர இரவு ஒன்பது மணியாகிவிடும். அவன் ஆறுமணிக்கெல்லாம் வீடு திரும்பி விடுவான்.

அவள் வரும்வரை டிவி பார்த்துக் கொண்டிருப்பான். சில நாட்கள் அவனாக ஏதாவது சமைப்பதுண்டு. திருமண வாழ்க்கை பற்றி அவனுக்குள் இருந்த கனவுகள் யாவும் சில வாரங்களில் வடிந்து போனது. அவசரமாகப் படித்துமுடித்த புத்தகம் போலவே வாழ்க்கையை உணர்ந்தான்.

அவனுக்கு டாய்லெட்டை பயன்படுத்த தெரியவில்லை என்று ஒரு நாள் மிருதுளா சண்டைபோட்டாள். இன்னொரு நாள் பிரிட்ஜில் அவள் வைத்திருந்த சீன உணவு வாடை அடிக்கிறது என்று அவளிடம் கோபம் கொண்டு கத்தினான். சிறுசிறு சண்டைகளைத் தாண்டி அவள் அடிக்கடி அவனுக்குச் சர்ப்ரைஸ் கிப்ட் என ஏதாவது பரிசுப் பொருட்களை வாங்கித் தந்தபடியே இருந்தாள். அவனும் வாரம் தவறாமல் அவளை ஷாப்பிங் அழைத்துக் கொண்டு போனான். அவனுக்குப் பிடிக்காத உணவகத்தில் அவளுக்காகச் சாப்பிட்டான். ஒவ்வொரு செயலிலும் அவளது நிதானம் வியப்பூட்டுவதாக இருந்தது.

ஆன்லைனில் அவள் விநோதமான பொருட்களை வாங்குவது வழக்கம். ஒருநாள் நீலவெளிச்சம் பாய்ச்சும் சுவரில் பொருத்தக்கூடிய விளக்குகளை வாங்கிப் படுக்கை அறையில் மாட்டினாள். சுழலும் நீலவெளிச்சம் அறையில் நிரம்பி அறை ஒரு நீலவெளிச்சக்குளம் போலமாறியது. அதற்குள் அவள் நடமாடுவதைக் காணும் போது ஏதோ கனவில் நடப்பது போலவே இருந்தது.

இன்னொரு நாள் அவன் அலுவலக வேலையில் பரபரப்பாக இருந்த போது வீடியோ ஒன்றை அனுப்பி வைத்து உடனே பார் என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். உடனே அதை ஒடவிட்டுப் பார்த்தான்.

குரங்குக்குட்டி ஒன்றை ஒரு மலைப்பாம்பு விழுங்கும் வீடியோ . அதைக் காண சகிக்கவில்லை.

அவளுக்குப் போன் செய்து ஏன் அதை அனுப்பி வைத்தாள் என்று கோபமாகக் கேட்டான்

“அந்த மலைப்பாம்பு குரங்கை விழுங்கிட்டு எவ்வளவு சைலண்டா திரும்பி பார்க்குது பாத்தியா.. சம் திங் ஸ்ரேஞ்ச். “

“அந்த குரங்குக்குட்டி பாவமில்லையா“

“என்ன பாவம். பாம்பு அது பசிக்கு சாப்பிடுது.. இதுல என்ன தப்பு. “

“இந்த மாதிரி வீடியோ எல்லாம் இனிமே அனுப்பாதே.. இதை எல்லாம் நான் எதுக்காகப் பாக்கணும் சொல்லு“

“நான் இந்த வீடியோவை இன்னைக்கு முப்பது தடவை பாத்தேன். ஐ லைக் இட். நீ என்னோட பெட்டர் ஹாப் அதான் உனக்கு அனுப்பி வச்சேன்“

“ஸ்டுபிட்“ என்று போனை துண்டித்தான்

அதன் இரண்டு நாட்களுக்கு அவர்களுக்குள் பேச்சில்லை. அவனது கோபத்தை அவள் பொருட்படுத்துவதேயில்லை. அந்தப் புறக்கணிப்பு அவனை மேலும் ஆத்திரம் கொள்ள வைத்தது.

அந்த ஞாயிறு அன்று அவனுக்குப் பிடித்தமான உணவு வகைகளை நிறையச் செய்திருந்தாள். வேண்டுமென்றே பட்டுப் புடவை கட்டிக் கொண்டாள். நிறைய முத்தங்களைத் தந்தாள். அவள் மீதான கோபம் கரைந்து போனது.

இது நடந்த சில தினங்களுக்குப் பின்பு மிருதுளா அலுவலகம் கிளம்பும் போது அவனிடம் சொன்னாள்

“எனக்கு ஒரு பேக்கேஜ் வரும்.. அதை வாங்கிவச்சிடு.. பிரிக்க வேண்டாம்.. நான் வந்து பிரிச்சிகிடுவேன்“

“என்ன பேக்கேஜ்“ என்று கேட்டான்

“சர்ப்ரைஸ்“ என்று சிரித்தாள்.

அவள் சொன்னது போலவே ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை ஒரு ஆள் கொண்டுவந்திருந்தான். எங்கேயிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தான். தைவானில் இருந்து அனுப்பி வைக்கபட்டிருந்தது.

என்ன ஆர்டர் பண்ணியிருக்கிறாள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. ஒருவேளை அவள் கோவித்துக் கொள்ளக்கூடும் என்பதால் அதைப் பிரிக்காமலே வைத்திருந்தான்

வழக்கத்திற்கு மாறாக அன்று வீட்டுக்கு வருவதற்கு முன்பாக மிருதுளா போன்செய்து “பேக்கேஜ் வந்துவிட்டதா “என்று கேட்டாள்.

“மதியமே டெலிவரி செய்துவிட்டார்கள்“ என்றான்

“ மெக்டொனால்ட்ஸில் உனக்கு ஏதாவது வாங்கி வரவா“ என்று கேட்டாள்

இன்று சமைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவனாகச் சொன்னான்

“நீயே பாத்து வாங்கிடு. “

“உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்“ என்று கேட்டாள்

“ஸ்வீட் சாப்பிடுறதை விட்டுட்டேன்“ என்று உணர்ச்சியற்றுச் சொன்னான்

“இன்னைக்குச் சாப்பிடுறோம்“ என்றபடியே அவள் போனை துண்டித்தாள்

மிருதுளா வீடு திரும்பும் போது அவள் கையில் இரண்டு பைகள் இருந்தன. ஒன்றில் உணவு. மற்றொன்றில் நிறைய இனிப்பு வகைகள். ஒருவேளை இன்று தான் அவளது பிறந்தநாளா.. அவள் பிறந்தநாள் மே எட்டு என்று சொன்னதாக நினைவு. இன்றைக்கு என்ன விசேசம் என்று அவனால் கண்டறிய முடியவில்லை

அவள் கவனமாக அந்தப் பேக்கேஜை பிரித்தாள். உள்ளே ஆறாக மடிக்கபட்ட மலைப்பாம்பு இருந்தது. நிஜம் போலத் தோற்றமளிக்கும் ரப்பர் தயாரிப்பு. அவள் ஆசையோடு அதைத் தடவிக் கொடுத்தாள்

“தொட்டுப்பாரேன். எவ்வளவு சாப்டா இருக்கு“

“இது எதுக்கு மிருதுளா“ என்று கேட்டான்

“இதோட கூடவே ஒரு ஹேண்ட்பம்ப் குடுத்துருக்காங்க. நாம தான் காற்று அடைச்சிகிடணும்.. கொஞ்சம் ஹெல் பண்ணு“ என்றாள்

அந்த ஹேண்ட் பம்பை எடுத்து ரப்பர் மலைப்பாம்பின் உடலில் இருந்த ஒரு துளையினைத் திறந்து காற்றடித்தான். மெல்ல காற்று நிரம்பி மலைப்பாம்பின் உடல் பெரியதாக ஆரம்பித்தது. பத்தடிக்கும் அதிகமான நீளத்தில் அந்த மலைப்பாம்பு மெதுக்மெதுக்கென்ற உடலுடன் உருவெடுத்தது. அவள் அதை அப்படியே தனது தோளில் போட்டுக் கொண்டு சிரித்தாள்.

“கிட்டவா.. சேர்ந்து போட்டுகிடுவோம்“ என்றாள்

அவனுக்கு விருப்பமில்லை என்றாலும் அவள் அருகில் போய் நின்றாள். அவள் அந்தக் காற்றடைக்கப்பட்ட மலைப்பாம்பினை அவன் தோள் மீதும் போட்டாள்.

“எப்படியிருக்கு.. சில்கி டச் பீல் பண்ண முடியுதா“ என்று கேட்டாள்

“நெளுக் நெளுக்குனு என்னமோ மாதிரி இருக்கு“ எனப் பாம்பை உதற முற்பட்டான்.

“ஆன்லைன்ல தேடி தைவான்ல இருந்து வரவழைச்சேன். 300 டாலர்“ என்றாள்.

“வேஸ்ட் ஆப் மணி.. இது எதுக்கு மிரு.. எனக்குப் பிடிக்கலை“ என்றான் ராகவ்

“என்னோட பணம். நான் எப்படியும் செலவு செய்வேன். உனக்கு எது தான் பிடிக்குது.. “ என்றபடியே அவள் அந்த ரப்பர் மலைப்பாம்பினை அணைத்தபடியே சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டாள். அந்தக் கோலத்தில் அவளைக் காண அவனுக்குச் சற்று பயமாகவே இருந்தது. அவள் பாம்பின் தலையைத் தடவிவிட்டபடியே அதைத் தன் முகத்தோடு வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். பாம்பின் வால் சோபாவிற்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது

“ராகவ்.. இன்னைக்கு நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். நாம அதைச் செலிபரேட் பண்ணுவோம். “

“இதுல செலிபரேட் பண்ண என்ன இருக்கு“

“உனக்குச் சொன்னா புரியாது. நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னேன். ஐ ஆம் டிபரெண்ட்னு.. நீ தான் தலையாட்டுனே“

“அதுக்காக இப்படியா.. யாராவது வீட்ல இப்படி மலைப்பாம்பு வச்சிருப்பாங்களா“

“இது நிஜமில்லை. பொம்மை“

“ உனக்கு எதுக்குப் பொம்மை “

“நீ எதுக்காக மீன் தொட்டி வச்சிருக்கே.. உனக்கு மீனை பார்க்க பிடிக்குது.. அதை நான் ஏதாவது கேட்டனா“

“அதுவும் இதுவும் ஒண்ணா“

“ஒண்ணு தான்.. லுக் ராகவ். நாம சேர்ந்து வாழும் போது உனக்குப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் எனக்காகச் சில விஷயங்களை ஏத்துகிடதான் வேணும்.. “

“அப்படி ஒண்ணும் கட்டாயம் இல்லை“

“ நோ. பிராப்ளம்.. உன்கிட்ட பெர்மிசன் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை“ என்று சிரித்தபடியே அவள் டிவி ரிமோட்டினை ஆன் செய்து இத்தாலிய சேனல் ஒன்றை பார்க்க துவங்கினாள். அவளுக்குக் கோபம் வந்தால் இப்படித் தான் உடனே வேறு மொழியில் பேச ஆரம்பித்துவிடுவாள். வேற்றுமொழி நிகழ்ச்சிகளைப் பார்க்க துவங்கிவிடுவாள்.

ராகவ் தன் அறைக்குள் போய்க் கதவை தாழிட்டுக் கொண்டான். அவனது கோபம் வடிய நிறைய நேரமானது. ஒருவேளை படுக்கை அறைக்கே அந்த ரப்பர் மலைப்பாம்பை கொண்டுவந்துவிடுவாளோ என்று தோன்றியது. நல்லவேளை அவள் அதைச் சோபாவில் விட்டுவிட்டு எதுவும் நடக்காதவள் போலத் தனியே சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலை அவள் குளிக்கப் போகும்போது அந்த மலைப்பாம்பும் கூடவே குளியல் அறைக்குள் போனது. அதையும் ஷவரில் நனையவிட்டாள். சோப்பு நுரைகள் பூசி விளையாடினாள். ஈரமான மலைப்பாம்பினை பால்கனியில் கொண்டு வந்து உலரப் போட்டாள்

ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவன் அலுவலகம் கிளம்பினான்.

காரில் போகும்போது மிருதுளா சொன்னாள்

“நீ ஒவர் ரியாக்ட் பண்ணுறே.. அது ஒரு டாய்.. நீ வீடியோ கேம் ஆடுறதில்லையா… அது மாதிரி தான்.. அதைப் புரிஞ்சிக்கோ“..

அவன் பதில் சொல்லவில்லை. வேண்டுமென்றே அன்று அவனது அலுவலகம் வரை அவளே காரில் கொண்டுவந்து விட்டுப்போனாள். அன்று மாலை வீடு திரும்பிய போது பணிப்பெண் உலர்ந்த மலைப்பாம்பினை ஹாலின் நடுவே வைத்துப் போயிருந்தாள். அது எரிச்சலை அதிகப்படுத்தியது.

அதன் அருகில் அமர்ந்து அதை லேசாகத் தொட்டுப் பார்த்தான். நிஜபாம்பின் உடலைப் போலவே இருந்தது. ஆனால் அசையாத கண்கள். தலையினை அழுத்தினால் பிளாஸ்டிக் நாக்கு வெளியே வந்து துடித்தது. அந்தப் பாம்பினை அவளைப் போலவே தோளில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்பு போய் நின்றான். அவனது உருவம் விசித்திரமாகத் தோன்றியது. இதைப் போய் எதற்காக இவ்வளவு பணம் செலவு செய்து வாங்கியிருக்கிறாள். ஊரிலிருந்து யாராவது வந்தால் என்ன நினைப்பார்கள். அப்படி இந்த மலைப்பாம்பில் என்ன தான் இருக்கிறது.

அந்த மலைப்பாம்பில் இருந்த காற்றைப் பிடுங்கி அதை வெறும் கூடாக மாற்றினான். பின்பு அதை மடித்துச் சமையல் அறை மூலையில் கொண்டு போய்ப் போட்டான். அன்று மிருதுளா வருவதற்கு இரவு ஒன்பதரை மணியாகியது. ஹாலிற்குள் நுழைந்தவுடன் மலைப்பாம்பினை தான் தேடினாள். அதைக் காணவில்லை என்றவுடன் அவள் சப்தமாகக் கேட்டாள்

“மலைப்பாம்பை என்ன செய்தே“

“கிச்சன்ல கிடக்கு“

“காற்றைப் பிடுங்கியிருப்பியே“.. என்றபடியே கிச்சனை நோக்கி நடந்தாள்.

“ஆமாம். அதைப் பார்க்க அருவருப்பா இருக்கு..“

“அது உன்னோட பிரச்சனை. நீ இப்படிச் செய்வேனு எனக்கு நல்லா தெரியும். நீ ஒரு பெர்வர்ட்“

“இதுல பெர்வர்ஷனுக்கு என்ன இருக்கு.. யார் வீட்லயாவது இப்படி மலைப்பாம்பு வச்சிருக்காங்களா“

“யார் வச்சிருந்தாலும் வைக்காட்டியும் எனக்குப் பிரச்சனையில்லை. நான் மத்தவங்க மாதிரி கிடையாது“

“இது உன்னோட வீம்பு. “

“ஆமா. நான் அப்படித் தான்“ என்றபடியே அவள் வேண்டுமென்றே மலைப்பாம்பினை ஹேண்ட்பம்ப் கொண்டு நிறையக் காற்று அடித்துப் பெரியதாக்கினாள். வழக்கமான அதன் சைஸை விடவும் மிகப்பெரியதாகியது.

அதை ஆசையோடு அணைத்துக் கொண்டு அவள் படுக்கை அறைக்கே சென்றாள். பலமாக இசையை ஒலிக்கவிடும் சப்தம் கேட்டது. ஒருவேளை மலைப்பாம்புடன் ஆடுகிறாளா.

அன்றிரவு ராகவ் சோபாவில் உறங்கினாள். காலையில் அவள் அலுவலகம் கிளம்பும் போது வேண்டும் என்றே தன்னோடு அந்த மலைப்பாம்பினை லிப்டில் கொண்டு சென்றாள். லிப்டில் வந்த கிழவர் அவளிடம் “ரப்பர் பொம்மையா, எங்கே விற்கிறது“ என்று கேட்டார்

“ தைவான் “ என்று சொல்லி சிரித்தாள்

“நான் அஸ்ஸாம் காட்டிலே மலைப்பாம்பை நேர்ல பாத்துருக்கேன்“ என்று சிரித்தார் கிழவர்

அவள் தன் காரின் பின்சீட்டில் அந்த மலைப்பாம்பினை போட்டுக் கொண்டாள். அன்று அவனைத் தனது காரில் அழைத்துக் கொண்டு போகவில்லை. அவனாகப் பைக்கில் அலுவலகம் சென்றான். அலுவலகத்தில் வேலை செய்யவே பிடிக்கவில்லை. பகலில் அவளிடமிருந்து போன் எதுவும் வரவில்லை. ஊரிலிருந்து அம்மா போன்செய்த போது நடந்தவற்றைச் சொன்னான். அம்மா நம்பமுடியாதவள் போலக் கேட்டாள்

“ ரப்பர் பாம்பா.. அதை எதுக்குடா வாங்கினா“

“ யாருக்கு தெரியும். அவ ஒரு டைப்மா. “

“ நல்லவேளை உசிரோட பாம்பை வாங்காம போனாள்“ என்று அம்மா அதிர்ச்சியுடன் சொன்னாள்

“ அதையும் செய்வாள். எனக்கு என்ன பண்ணுறதுனு தெரியலை“

அம்மா கோபத்தில் திட்டுவது கேட்டது. அன்றிரவு அம்மாவே அப்பாவிடம் மிருதுளா வீட்டில் பேசியிருக்க வேண்டும். மறுநாள் காலை மிருதுளாவிற்கு அவளது அம்மா போன் செய்து விசாரித்தாள்

“ நமக்குள்ளே நடக்கிறதை எல்லாம் ஏன் வெளியே சொல்றே“

“ எங்க அம்மா கிட்ட தானே சொன்னேன்.. “

“நீ என்ன ஸ்கூல் பையனா.. அம்மாகிட்ட சொல்றதுக்கு.. உன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்கே.நான் என்ன லூசா“

“ஆமா.. “

“நீ எதிர்பாக்குற மாதிரி என்னாலே இருக்கமுடியாது ராகவ்“

“அதை எப்பவோ நல்லா புரிஞ்சிகிட்டேன். “

“அப்போ கண்ணையும் காதையும் மூடிகிட்டு இரு.. இன்னொரு தடவை இப்படி எங்க வீட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினே.. நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது“

“உனக்கு என்கூட இருக்கப் பிடிக்கலைன்னா.. போயிடு.. என்னை ஏன் சித்ரவதை பண்ணுறே“

“நான் ஏன் போகணும்.. நான் இங்கே தான் இருப்பேன்“

“அப்போ நான் போறேன்.. “

“அது உன் இஷ்டம்“ என்றபடியே மலைப்பாம்பை தூக்கிக் கொண்டு பால்கனிக்கு நடந்தாள். பால்கனி தடுப்பு சுவர் மீது சாய்ந்து கொண்டு பாம்பை கையில் பிடித்தபடியே காற்றில் அலையவிட்டாள். அவள் மீதான கோபத்தைக் காட்டுவதற்காக அதிகாலையிலே அலுவலகம் கிளம்பிப் போனான்.

அன்றிரவு மிகத் தாமதமாகவே வீடு திரும்பினான். வீட்டில் அவளைக் காணவில்லை. எங்கே போயிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. அடுத்த நாளும் அவள் வீடு திரும்பவில்லை என்பதால் அவளது அப்பாவிற்குப் போன் செய்தான். அவரும் போனை எடுக்கவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு மதியம் அவனுக்கு மிருதுளா போன் செய்தாள்.

“நான் முடிவு பண்ணிட்டேன். ராகவ்.. ஐ ஆம் லீவிங்“

“அது உன் இஷ்டம். “

“வீட்டுக்காக நான் இதுவரைக்கு ரெண்டு லட்சம் மேல செலவு பண்ணியிருக்கேன். நீ அதைத் திருப்பிக் குடுக்கணும்.. அந்த வீடு நான் அட்வான்ஸ் குடுத்து பிடிச்சது. அதனாலே அதைக் காலி பண்ணுறேனு சொல்லிட்டேன். நீ வேற வீடு பாத்துக்கோ.. நம்ம கல்யாணம் ஒரு பேட் ட்ரீம். அவ்வளவு தான் சொல்லமுடியும்“

எனப் போனை துண்டித்துவிட்டாள். இந்தக் கோபம் வடிந்து அவள் திரும்பிவந்துவிடுவாள் என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவள் இவ்வளவு பிடிவாதமாக நடந்து கொண்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு மறுபடி போன் செய்து திட்ட வேண்டும் போலிருந்தது. மறுபடி அழைத்த போது அவள் போனை எடுக்கவில்லை.

அன்றிரவு அவன் தன் வீட்டிற்குத் திரும்பி வரும் போது அவள் தனது உடைகள், பொருட்களைக் காலி செய்து எடுத்துப் போயிருப்பது தெரியவந்தது. ஆனால் அவள் அந்த ரப்பர் மலைப்பாம்பை எடுத்துக் கொண்டு போகவில்லை. அது ஹாலின் நடுவே தனியே கிடந்தது.

ஏன் அதை விட்டுப்போனாள். இதனால் தானே இவ்வளவு பிரச்சனையும். உண்மையில் அவள் என்ன தான் தேடுகிறாள். ஏன் அவள் விருப்பங்கள் இத்தனை விசித்திரமாக இருக்கின்றன.

அவன் ரப்பர் பாம்பினைக் காலால் எத்தினான். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை.

முரட்டுத் தனமாக ஆத்திரம் தீருமளவு அந்த மலைப்பாம்பினை ராகவ் மிதித்தான். பின்பு அதன் காற்றைப் பிடுங்கிவிட்டு பால்கனிக்கு எடுத்துச் சென்று வெளியே வீசி எறிந்தான்.

காற்றில் அந்தப் பாம்பு பறந்து போவதைப் பார்க்க அழகாகவே இருந்தது.

•••

நன்றி

அந்திமழை

ஒவியர் ராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 19:21

புனைவின் வரைபடம்

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள்.

சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொகுப்பாக புனைவின் வரைபடம் நூலை உருவாக்கியுள்ளேன்

இந்த நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

நன்றி

புகைப்படம் : வசந்தகுமாரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 18:34

காந்தியின் நிழலில்

மகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன்.

காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 18:29

நூலக மனிதர்கள்

நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த நூலகங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது

தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 06, 2021 18:24

December 5, 2021

காலத்தின் சிற்றலை

பா ஜின்., பால் வான் ஹெய்ஸே, ஐரின் நெமிரோவ்ஸ்கி ,பில்லி காலின்ஸ், ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி ஜெய் பரினி, ஷெரீப் எஸ். எல்முசா, எமிதால் மஹ்மூத், ஹெலன் ஹான்ஃப் . ஜே.டி.சாலிஞ்சர், எடுவர்டோ காலியானோ வில்லியம் சரோயன், போஹுமில் ஹ்ரபால், பீட்டர் செமோலிக் என உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2021 06:58

நேற்றின் நினைவுகள்

நகுலன். கிரா, தோப்பில் முகமது மீரான், ஆ.மாதவன், தி. ஜானகிராமன். வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு

தேசாந்திரி பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது

டிசம்பர் 25 மாலை ஆறுமணிக்கு சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2021 06:47

ஐந்து வருட மௌனம்

இந்த ஆண்டு வெளியாகவுள்ள எனது புதிய சிறுகதைத் தொகுப்பு

இதில் 25 சிறுகதைகள் உள்ளன. 350 பக்கங்களுக்கும் மேலாக உள்ள சிறுகதைத்தொகுப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாக வெளியாகிறது

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படயிருக்கிறது

இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 05, 2021 06:41

December 3, 2021

பறப்பாய் பூவிதழே

ரெயின்போ பிளவர் என்ற வாலண்டின் கதயேவ் எழுதிய ரஷ்ய சிறார் கதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பாக வாசித்தேன். அந்தக் கதையில் வரும் ஒரு காட்சி மனதை விட்டு அகலவேயில்லை. இன்று மீண்டும் அக் கதையைத் திரும்பப் படிக்க வேண்டும் போலத் தோன்றவே இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து வாசித்தேன்.

அந்தக் கதையில் கேட்டவரம் தரும் ஏழு வண்ணப்பூ ஒன்றை ஒரு சிறுமி பெறுகிறாள். அவள் அந்த இதழ்களை எப்படிப் பயன்படுத்தினாள் என்பதைக் கதை அழகாக விவரிக்கிறது

பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்

உலகத்திலுள்ள எல்லா விளையாட்டுச் சாமன்களையும் என்னுடையதாக்கு!

அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே எல்லாப் பக்கமிருந்தும் விளையாட்டுச் சாமன்கள் அவளை நோக்கி விரைந்து வரத்தொடங்கின. முதலில் வந்தவை பொம்மைகளே. அவை கண்களைச் சிமிட்டி ‘மா-மா’, ‘மா-மா’ என்று விடாமல் கூறின.

முதலில் ஷேன்யா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் சில நிமிடங்களிலேயே ஏராளமான விளையாட்டுச் சாமான்கள் வந்து வாசலையும், அவர்களது சிறிய தெருவையும், இரண்டு பெரிய நிழற்சாலைகளையும், இன்னும் பாதியளவு சதுக்கத்தையும் நிறைத்துவிட்டன. யாருமே ஒரு பொம்மையையாவது மிதிக்காமல் நடக்க முடியவில்லை. பொம்மைகள் ‘மா-மா, மா-மா!’ என்று சளசளப்பதையத் தவிர வேறு எதையும் யாருமே கேட்க முடியவில்லை.

ஐம்பது இலட்சம் பேசும் பொம்மைகள் போடும் சத்தத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குறைந்தபட்சம் அத்தனை பொம்மைகளாவது இருந்தன. இவை மாஸ்கோவிலிருந்த பொம்மைகள் மட்டுமே. லெனின்கிராட், கார்கோவ், கீவ், லிவ்யூ ஆகிய நகரங்களிலிருந்து இனிதான் வரவேண்டும். அவை சோவியத் யூனியனின் ஒவ்வொரு தெருவிலும் கிளிகளைப் போலக் கீச்சிட்டுக் கொண்டிருந்தன.

ஷேன்யா கவலைப்பட ஆரம்பித்தாள். ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டுமே. பொம்மைகளை அடுத்து உருண்டோடும் ரப்பர் பந்துகள் வந்தன. பிறகு கோலிகள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கரச் சைக்கிள்கள், விளையாடு டிராக்டர்கள் மற்றும் கார்கள். தாண்டும் கயிறுகள் பாம்புபோலத் தரையில் ஊர்ந்து வந்தன. அவை பொம்மைகளின் காலில் சிக்கி, அவற்றைப் பதற்றத்தில் மேலும் பலமாகக் கூக்குரலிடச் செய்தன.

இலட்சக்கணக்கான விளையாட்டு விமானங்களும், ஆகாயக் கப்பல்களும் கிளைடர்களும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தன. காகித பாராசூட்டுகளோ வானதிலிருந்து இறங்கி தொலைபேசி வயர்களிலும், மரங்களிலும், பனி போலச் சிக்கியிருந்தன. நகரத்தின் போக்குவரத்து முழுவதும் ஸ்தம்பித்துவிட்டது. சாலை சந்திப்புகளில் இருந்த மிலீஷியாக்காரர்கள் பக்கத்து விளக்குக் கம்பத்தில் ஏறிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.

‘நிறுத்து, நிறுத்து!’ ஷேன்யா ஓலமிட்டாள். ‘இது போதும்! எனக்கு இதற்கு மேல் எதுவும் வேண்டாம்! எனக்கு இத்தனை விளையாட்டுப் பொருட்கள் தேவையில்லை. நான் சும்மாதான் சொன்னேன். எனக்குப் பயமாயிருக்கிறது…’ அதுசரி, அவள் சொன்னதை யார் கேட்டார்கள்? விளையாட்டுச் சாமான்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. முழு நகரமும் விளையாட்டுச் சாமான்களால் நிரைந்துவிட்டது. ஷேன்யா மாடிக்கு ஓடினாள்–விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா பால்கனிக்கு ஓடினாள்–விளையாட்டுச் சாமான்கள் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா உப்பரிகைக்குச் சென்றாள்–விளையாட்டுச் சாமான்கள் அங்கும் அவளைத் தொடர்ந்தன. ஷேன்யா கூறைமேல் ஏறி அவசரம் அவசரமாக வயலட் நிற இதழைக் கிள்ளினாள். அதை வீசியெறிந்து சடுதியாகச் சொன்னாள்:

பறப்பாய், பறப்பாய் பூவிதழே

பறப்பாய் கிழக்கிருந்து மேற்கே

பின் வடக்கிருந்து தெற்கே பறந்திடுவாய்

சுற்றிப் பறந்தே திரும்பிவந்து

தரையை நீயே தொட்டிடுவாய்

நான் கேட்கும் வரத்தைத் தந்திடுவாய்

எல்லா விளையாட்டுச் சாமான்களையும் மறுபடி கடைகளுக்கே போகும்படி செய்!

அவள் இப்படிச் சொல்லி முடித்த அக்கணமே அத்தனை விளையாட்டுச் சாமான்களும் மறைந்தன. பின் ஷேன்யா ஏழு நிறப்பூவைப் பார்த்தாள். அதில் ஒரேயொரு இதழ் மட்டுமே மிச்சம் இருந்தது. ‘அடக் கடவுளே!’ அவள் சொன்னாள். ‘ஆறு இதழ்களை ஏற்கனவே உபயோகித்துவிட்டேன்; என்றாலும் அவற்றிலிருந்து ஒரு மகிழ்ச்சியையும் பெறவில்லை. நல்லது, அடுத்தத் தடவை சாமர்த்தியமாக இருப்பேன்.
•••
Thanks
சரவணன்
முழுக்கதையை வாசிக்க

http://sovietbooks.blogspot.com/2008/03/blog-post_11.html?showComment=1385513388423#c4607856352923249453

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2021 04:43

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.