சீனன் சாமி

வனம் இணைய இதழில் சித்துராஜ் பொன்ராஜ் சீனன் சாமி என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான சிறுகதை.

சிங்கப்பூர் வரலாற்றையும் கடந்த கால நினைவுகளையும் மடிப்பு மடிப்புகளாகக் கொண்டு வியப்பூட்டும் ஒரு நிகழ்வைச் சிறுகதையாக்கியிருக்கிறார்.

மலைப்பாம்ப வச்சுக் கும்பிட்டா அதிர்ஷ்டம்னு சீனனுங்க சொல்லுவானுங்க,” என்றான் வீரா என ஒருவன் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு வருவதில் கதை துவங்குகிறது.

மலைபாம்பை என்ன செய்வது என்பதைப்பற்றிய உரையாடலின் ஊடாகவே அவர்கள் நிரந்தர வேலையில்லாத மலேசிய கேஷுவல் லேபர்கள் என்பதும். சட்டவிரோதமாகக் குடியிருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.

மலைப்பாம்பு என்பது கதையில் குறியீடாக, அடையாளமாக, வரலாறாக, அதிகாரமாகக் கதையின் வழியே உருமாறிக் கொண்டேயிருக்கிறது. சித்துராஜின் மொழி சிங்கப்பூர் வாழ்விலிருந்து பிறந்த அசலான வெளிப்பாடாக உள்ளது.

இளஞ்சேரனின் கட்டைக் குரலில் புதிதாய் ஊற்றிவைத்த பீரின் அடியிலிருந்து கிளம்பும் குமிழ்களைப்போன்று கொப்புளிக்கும் நையாண்டி. என்ற வரி இதற்கொரு உதாரணம்

பிரிட்டிஷ் காரர்களால் அந்தக் காலத்தில் துறைமுகத் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்ட குடியிருப்புக்களையும் அதன் பகல் பொழுதையும் விவரிக்கும் சித்துராஜ் சட்டெனப் பயன்படாது என்று வீசி எறியப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் யாருக்கோ பயன்படுகின்றன என்பதைத் தொட்டுக் காட்டி அப்படியே உருமாறிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் உலகை விவரிக்கிறார். இந்தத் தாவல் சிறப்பானது. எழுத்தாளன் இப்படித் தான் கதையின் வழியாகத் தனது பார்வைகளைப் பேச வேண்டும்.

கதையின் ஊடாக நாம் காலனிய வரலாற்றை, தோட்ட குடியிருப்புகளை, அதன் மறக்க முடியாத இனிய நினைவுகளை, சமகால நெருக்கடிகளைக் காணுகிறோம்.

வட ஜோகூர் காடுகளில் இருவரும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி இனிப்புச் சுவையுடைய அந்த மாமிசத்தைச் சிறு கத்திகளால் அரிந்து காட்டின் நடுவிலேயே தீமுட்டி வாட்டித் தின்றிருந்த போதிலும்கூட வீரா முற்றிலும் வித்தியாசமானவன் என்று இளஞ்சேரனுக்குத் தோன்றியது என்ற வரிகளின் ஊடே ஒரு முழு வாழ்க்கையும் வந்து போகிறது.

செம்பனைத் தோட்டத்திற்குள் கனமான பூட்ஸுகளோடு ஜப்பானிய ராணுவ வீரர்கள் கறுப்பான துப்பாக்கிகளை முன்னால் நீட்டியபடி நுழையும் காட்சியைச் சட்டெனக் கதையின் போக்கிலே ஊடாட வைக்கிறார்.இந்தக் கதை ஏன் முக்கியமானது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

மறந்து போன வரலாற்றையும் பூர்வ வாழ்க்கையினையும் மலைப்பாம்பாக்கி விடுகிறார். அதே நேரம் மலைப்பாம்பு பற்றிக் கேலிகளும் நிதர்சனங்களும் அழகாக விவரிக்கப்படுகின்றன.

சீனர்கள் எதையும் விற்கக் கூடியவர்கள். தந்திரசாலிகள். அவர்கள் கதையின் முடிவில் மலைப்பாம்பைச் சீனன் சாமியாக்கிவிடுகிறார்கள்.

குடியேறிய இடங்களில் சீனர்கள் எப்படி அதிகாரத்தைத் தனதாக்கிக் கொண்டுவிடுகிறார்கள் என்பது மலைப்பாம்பின் வழியே சொல்லப்படுகிறது

கதையின் கருப்பொருள் துவங்கி கதையின் மொழி மற்றும் கதை வழியே வெளிப்படும் வரலாறு, நினைவுகள். சமகால நிகழ்வுகள். சட்டவிரோத குடியேற்றம் எனப் பல்வேறு ஊடு இழைகளைக் கொண்டு சிறப்பான கதையை எழுதியிருக்கிறார் சித்துராஜ்.

புதிய தமிழ்ச்சிறுகதையின் கதைவெளி இப்படித் தான் விரிவடைய வேண்டும். அற்புதமான கதையை எழுதிய சித்துராஜ் பொன்ராஜிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

சீனன் சாமி – சித்துராஜ் பொன்ராஜ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2021 21:01
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.