Jeyamohan's Blog, page 82
June 7, 2025
இன்று குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா
கவிஞர் சோ. விஜயகுமார் இந்த ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதை பெறுகிறார். விருதுவிழா வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.
சிறப்பு விருந்தினராக கன்னட -ஆங்கில எழுத்தாளர் வசுதேந்திரா கலந்துகொள்கிறார். நிகழ்வில் கவிஞர் போகன் சங்கர், கவிஞர் விஜயலட்சுமி ஆகியோர் பங்கெடுக்கிறார்கள்.
காலைமுதல் இலக்கிய அரங்கம் நிகழும். இந்நிகழ்வில் சிறுகதை அரங்கில் விஜய ராவணன் மற்றும் ரம்யா படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும், கவிதை அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் மற்றும் சசி இனியன் படைப்புகள் பற்றிய ஓர் உரையாடலும் நிகழ்கின்றன.
ஒரு விவாத அரங்கில் கவிதை பற்றி கவிஞர் போகன் சங்கர், வெய்யில் ஆகியோருடன் மனுஷ்யபுத்திரனும் கலந்துகொள்கிறார். வசுதேந்திராவுடன் ஓர் அமர்வும் உள்ளது.
நண்பர்கள் காலைமுதல் நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டும் என அழைக்கிறேன்
ஜெ
சோ. விஜயகுமார் தமிழ் விக்கி குமரகுருபரன் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது
சென்னை சிறுகதை அரங்கு ஐந்து பைசா வரதட்சிணை – வசுதேந்திரா விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா விருந்தினர், வசுதேந்திரா
நம்மைச்சுற்றி புன்னகை.
இரு சந்திப்புகளில் இரு கேள்விகள் நினைவுக்கு வருகின்றன. 1986 ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவர் கேட்டார். “போஸ்டர்லாம் படிப்பீங்களா?”
நான் “ஆமாம், போஸ்டர் போர்டு ஒண்ணையும் விடமாட்டேன். சின்னவயசிலே இருந்தே பழக்கம். இப்ப தனியா அதுக்காக மெனெக்கெட வேண்டாம். கண்ணு பராக்கு பாத்திட்டேதான் இருக்கும். சிரிக்கிறதுக்கு உண்டான ஒண்ணையுமே தவறவிடமாட்டேன்”
“எழுத்தாளன் ஆகிறதுக்கான முதல் தகுதி அது. கூடவே வித்தியாசமான எது காதிலே விழுந்தாலும் பதிவு பண்ணிக்கிடுறது… சமீபத்திலே அப்டி என்ன கேட்டீங்க?”
“சார், இப்ப இங்க நடந்து வாறப்ப ஒருத்தன் சொன்னான், ‘பணக்காரன் குண்டியக் காட்டினா அத கன்னம்னு நினைச்சுக்கிட்டாப் போரும்’னுட்டு… சிரிச்சுட்டேதான் வந்தேன்”
சுரா வெடித்துச் சிரித்துவிட்டார். “அபாரமான survival strategy யா இருக்கே”
பின்னர் 1995ல் சுஜாதாவைச் சந்தித்தேன். அவர் கேட்டார், “விளம்பரங்களை எல்லாம் படிப்பீங்களா?”
“ஆமா” என்றேன். “இப்பகூட சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவங்களோட தலைமுறைச் சண்டைய பாத்துக்கிட்டேதான் வந்தேன்” அவருக்குப் பரிசாக ‘மலையாள இட்சிணி வசிய தந்திரக்கலை’ என்ற நூலை பழைய நூலை கொண்டுசென்றிருந்தேன்.
“இதெல்லாம் படிப்பீங்களா?” என்றார்
“அப்டி தனியா ஆர்வமில்லை. ஆனா எல்லாத்திலேயும் ஆர்வம் உண்டு” என்றேன்.
சிரித்து “எல்லாத்தையும் பாக்கற கண்ணுதான் எழுத்தாளனோட அஸெட். வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சாப் போதும். வெளியுலகத்தை எழுதிரலாம்…” என்றார்.
என் இயல்பே வேடிக்கை பார்ப்பதுதான். இன்னது என்றில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பேன். ஆகவே ஏதாவது கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கும். விந்தையான எழுத்துப்பிழைகள். அசாதாரணமான அறிவிப்புகள். சாலைகளில் நடப்பவற்றை கொஞ்சம் விலகி நின்று பார்த்தால் அவற்றில் முடிவில்லாத வேடிக்கைகள் உண்டு. நான் நிறையவே எழுதியிருக்கிறேன்.
பார்வதிபுரம் வழியாக விடியற்காலையில் நடை. ஒரு போர்டு. Seconedend phone available. அதென்ன? ஹை எண்ட் கார் என்றெல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி ஹை எண்ட் செல்போன் உண்டா? இது இரண்டாம் வகையா? நானறியாத புதிய மொழி நாகர்கோயிலில் சந்தடிசாக்கில் உருவாகிவிட்டதா? இத்தனைக்கும் ஒருவாரம் வெளியே போய்வந்தேன், அவ்வளவுதான்.
நாகர்கோயிலில் கடைப்பெயர்களே விந்தையானவை. El Shadai என்று ஒரு கடைக்கு பெயர். இணையத்தில் தேடினால் ஸ்பானிஷ் மொழியில் கடை என்று பொருள். ’பாரேரிபொரம் சங்சன்’ எப்போது லத்தீனமேரிக்கா தொடர்பை அடைந்தது? மாய யதார்த்தம்தான் என்றாலும் ஒரு மரியாதை வேண்டாமா?
பார்வதிபுரத்தில் இப்போது நான் அதிகாலை டீ குடிக்கும் கடைக்குப் பெயர் Under de Bridge. பிரெஞ்சு நெடி. ஸ்பானிஷே வந்தபின் பிரெஞ்சுக்கு என்ன? (பழைய கருப்பட்டிக் காப்பிக்கடையில் ஒரு புதிய டீ மாஸ்டர் ஆட்டுக்காம்பை பிழிவதுபோல அதிகாலை டீயை பிழிந்து போட்டு குமட்ட வைத்தபின் அந்த போர்டை பார்த்தாலே குமட்டல் வரத்தொடங்கிவிட்டது)
இங்கே பெயர்களை எழுதும் முறை எங்களுக்கே உரியது. நாகர்கோயிலின் புகழ்பெற்ற நகைக்கடையின் பெயர் கெங்கா ஜூவல்லர்ஸ். அதென்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டபோது ’கங்கா என்பது இந்த சொல்லின் திரிபு’ என்று நான் பதில் சொன்னேன். லட்சுமி என்றும் லக்ஷ்மி என்றும் தமிழ்நாட்டார் தவறாகச் சொல்லும் லெக்ஷ்மி என்னும் சரியான பெயரில் ஒரு கடை. ஆங்கிலத்திலும் சரியாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்னொரு கடையின் பெயர் ஒரு முழு பத்தி இருந்தது. கடையின் வரலாறு, பயன்பாடு ஆகியவற்றைப் பற்றிய முழு விவரத்தையே ஏன் பெயராக வைக்கக்கூடாது? திருவனந்தபுரம் போகும் வழியில் அந்தக் காலத்தில் சாண்டீஸ் ஆண்ட் கஸின்ஸ் என்று ஒரு கடை இருந்தது, சன்ஸ் தான் இருக்கவேண்டும் என்பதில்லையே?
பார்வதிபுரம் வழியாக தினமும் காலைநடை செல்கிறேன். இன்று வரை சிரிப்பூட்ட ஏதேனும் ஒன்று சிக்காமல் திரும்ப வந்ததில்லை. இங்கே நம்மைச் சுற்றி என்னென்னவோ நடந்துகொண்டிருக்கிறது. நாம் சம்பந்தப்பட்டது மட்டும்தான் முக்கியமானது என எந்த அடிப்படையில் நம முடிவுசெய்கிறோம் என்றுதான் புரியவில்லை. நான் பார்த்தவரை ஓர் உண்மை உண்டு. நாம் சம்பந்தப்படாதவைதான் உண்மையிலெயே சுவாரசியமானவை.
ரா.ஶ்ரீ.தேசிகன்
புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுதிக்கு தேசிகன் எழுதிய முன்னுரை நவீனத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம். புதுமைப்பித்தனின் தாவிச்செல்லும் அலட்சியமான நடையும், இரக்கமற்ற நையாண்டியும், வடிவச்சோதனை முயற்சிகளும் அன்றிருந்த இலக்கியவாசகர்களால் துடுக்குத்தனமானவை என்றும், திரிபுபட்ட சுவை கொண்டவை என்றும் பார்க்கப்பட்டன. அன்றிருந்த முற்போக்குப் பார்வை கொண்டவர்கள் கூட அதை அராஜக நோக்கு கொண்ட எழுத்து, நச்சிலக்கியம் என வரையறை செய்தனர். அப்போது மரபார்ந்த பார்வைகொண்டவரும், ஆங்கிலம் வழியாக உலக இலக்கியத்தை ஆழ்ந்து கற்றவரும், மிகக்கறாரான இலக்கிய அணுகுமுறைகொண்டவருமான கல்வியாளர் ஒருவர் அளித்த முன்னுரை பரவலான ஏற்பை உருவாக்கியது. நவீனத்தமிழிலக்கிய அழகியல் தமிழில் தொடக்கம் பெற அது வழிவகுத்தது.
காவியம் – 48

பைத்தானின் சுவர்சூழ்ந்த காட்டுக்குள் கானபூதி என்னிடம் சொன்னது. “குணாட்யரிடம் நான் கதை சொன்னது பாட்னாவில் நடைபெற்ற அந்தக் குறிப்பிட்டக் குடும்பத்தின் கதைகளுக்காக அல்ல, அவை எங்கும் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பவைதான். கண்ணையும் காதையும் திறந்து வைத்திருக்கும் ஒருவன் அவற்றை எப்படியும் அறிந்துவிட முடியும். கதைகள் என்பவை கடலில் அலைகள் போல ஒரு முடிவிலியில் இருந்து வந்துகொண்டே இருப்பவை என்பதை அவன் உணர்வதற்காகவே நான் அவரிடம் அதையெல்லாம் சொன்னேன். எந்தக் கதையும் புதியது அல்ல. ஒரே கதை திரும்பத் திரும்ப நிகழ்கிறது. ஒரு கதை முற்றிலும் புதியது என்றால் ஒருபோதும் மனிதர்களால் அதை உள்வாங்கிக் கொள்ள முடியாது. அனுபவிக்காத ஒரு வாழ்க்கையை எவராலும் அறியவே முடியாது.”
நான் “இந்தக் காட்டின் தனிமையில், இரவில், நிழல்கள் சூழ நான் அறிந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையால் என்ன பயன்?” என்றேன். “நான் ஏன் வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த கேள்விகளைக் கேட்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. நான் கேட்க விரும்புவது ஒன்றை மட்டுமே. ராதிகாவைப் பற்றி. அவளுக்கு நிகழ்ந்த அநீதியைத் தவிர எதையும் என் உள்ளம் பொருட்படுத்தவே இல்லை. எங்கிருந்து எப்படி அது தொடங்கியது, எப்படியெல்லாம் அது விரிந்தது, ஏன் அவளை பலிகொண்டது என்று மட்டும்தான் நான் அறியவிரும்புகிறேன்.”
அவளைப் பற்றிப் பேசியதும் என் சீற்றம் மீண்டும் எழுந்தது. “எல்லா விளக்கங்களும் ஒரு நிகழ்வை தர்க்கபூர்வமான ஒன்றாகவோ, நிகழ்ந்தேயாக வேண்டிய ஒன்றாகவோ, இயல்பானதாகவோ சித்தரித்துவிட முயல்பவைதான். ஆனால் எத்தனை விளக்கினாலும் ஓர் அநீதியை அப்படிக் காட்டிவிட முடிவதேயில்லை” என்றேன்.
“இங்கே போர்களில் பலகோடிப் பேர் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பஞ்சங்களில் சாகவிடப்பட்டிருக்கிறார்கள். கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றது கானபூதி. “நீ வரலாறு என்று சொல்லும் பரப்பு முழுக்க பெண்கள் சிறைப்பிடிக்கப் பட்டிருக்கிறார்கள், விற்கப்பட்டிருக்கிறார்கள், கொடிய வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், கொன்று வீசப்பட்டிருக்கிறார்கள். ஒரு சாவு மிகச்சில நாட்களுக்குள் மறக்கப்படுவதாகவே இருந்திருக்கிறது. நீ ஒரே ஒரு பெண்ணின் கொலைக்கான எல்லா முடிச்சுகளையும் அவிழ்த்தாகவேண்டும் என்று நினைக்கிறாய்.”
“எனக்கு நெருக்கமானவள் இவள். நான் என் கண்முன் இவள் சாவைப் பார்த்தேன்” என்று நான் சொன்னேன். “இந்த ஒரே ஒரு பெண்ணின் சாவின் புதிர்களை மட்டும் தீர்க்கப் பார்ப்போம். எல்லா புதிர்களையும் அல்ல. அது வரலாற்றுக்குள் சென்றுகொண்டே இருக்கும் என்று எனக்குத் தெரியும். மிக நெருக்கமான கேள்விகளுக்கு மட்டுமாவது பதில் தேடுவோம்.”
“தேடி என்ன செய்யப்போகிறாய்? நீ உன் வஞ்சத்தை இழக்காதது வரை உனக்கு விடுதலை இல்லை.”
“எனக்கு விடுதலை தேவையில்லை” என்று நான் சொன்னேன். “இந்த வஞ்சம் மட்டுமே நான் அவளுக்காக இப்போது செய்யமுடிவது.”
ஆபிசாரன் “அவன் சொல்வது சரிதான். இந்த உலகில் எவருமே வஞ்சத்தைச் சுமந்து அலைவதில்லை என்பதுதான் உண்மை. சுயநலத்துக்காக வஞ்சத்தைக் கைவிடுகிறார்கள், பயந்து போய் விட்டு விலகுகிறார்கள், தன்னியல்பாகவே மறந்துவிடுகிறார்கள். இவனிடமிருக்கும் இந்த ஆறாத வஞ்சம் என்பது ஒரு வைரம் போலச் சுடர்விடுகிறது என்று எனக்குப் படுகிறது” என்றது.
“ஒருவேளை, உன் வஞ்சம் அவளுக்காக அல்ல, உனக்காகத்தான் என்று சொல்லலாமா?” என்று சக்ரவாகி கேட்டது.
நான் திகைத்து அதை திரும்பிப் பார்த்தேன்.
“அநீதி இழைக்கப்பட்டவன் நீ. நூறு தலைமுறைகளாக இழிவும் துயரும் மட்டுமே உன் குலத்திற்கு இருந்தன. நீ உன் ஞானத்தால் மேலெழுந்து வந்தபோது மீண்டும் மலக்குழியிலேயே தூக்கி வீசப்பட்டாய், இல்லையா?”
நான் பற்களை இறுகக்கடித்து, கைவிரல்களை சுருட்டிப்பிடித்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தேன்.
சூக்ஷ்மதரு “ஒருவன் தனக்காக கொள்ளும் வஞ்சம் என்பது விலங்குகளுக்குரிய உணர்வு. தனக்கு இழைக்கப்பட்டால்தான் அநீதியின் தீவிரம் ஒருவனுக்குப் புரியும் என்றால் அவன் நீதிமானா என்ன?” என்றது.
“எனக்குத் தெரியவில்லை” என்று நான் தாழ்ந்த குரலில் சொன்னேன். “நான் நீதிமான் அல்ல. நான் அறத்துக்காக போராடுபவனும் அல்ல. இந்த வஞ்சத்தைக்கூட நானே ஏந்திக்கொண்டிருக்கவில்லை. இது என்னை விடவில்லை… என் உடலில் பிடித்த தீ போல இது என்னை வதைத்து அழித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் யாரேனும் இதை அணைத்தீர்கள் என்றால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சிதான் அடைவேன்…”
இரு கைகளையும் விரித்து அழுகையுடன் உரக்கக் கத்தினேன். “யாருக்காக நான் இத்தனை வஞ்சம் கொண்டிருக்கிறேன்? ராதிகாவுக்காகவா? எனக்காகவா? என் அப்பாவுக்காகவா? இல்லை, தலைமுறை தலைமுறைகளாக மலக்குழியில் வாழ்ந்த என் முன்னோர்களுக்காகவா?” என் தலையில் வெறிகொண்டு கழியால் அறைந்தபடி புலம்பினேன். “எனக்குத் தெரியவில்லை… உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை.”
“அதற்கு விளக்கமாக நான் ஒரு கதையைச் சொல்கிறேன்” என்று கானபூதி சொன்னது.
“இல்லை, கதைகள் போதும். நான் இங்கிருந்து எங்காவது கிளம்பிச்செல்ல விரும்புகிறேன்… என் பாழடைந்த உடலுக்குள் குமுறும் ஆத்மாவுடன் அப்படியே மட்கி மண்ணில் மறைந்துவிடுகிறேன்… இதையெல்லாம் தெரிந்து நான் செய்யக்கூடுவது ஒன்றுமில்லை” நான் கழியை ஊன்றி எழுந்தேன்.
“ஒருவேளை நீ இன்னும் பழிவாங்கவேண்டியவர்கள் இருக்கலாம். அவர்கள் நுட்பமாக தப்பித்துக்கொண்டிருக்கலாம்” என்று ஆபிசாரன் சொன்னது.
நான் “யார்?” என்றேன்.
“அதை என் கதையில் சொல்கிறேன்… என்னால் கதைகளை மட்டும்தான் சொல்ல முடியும்” என்றது கானபூதி.
“சொல்” என்றபடி நான் மீண்டும் அமர்ந்தேன். கழியை என் கால்கள் மேல் வைத்துக்கொண்டேன். நிழல்கள் என்னைச் சூழ்ந்து அமர்ந்தன.
“நீண்டகாலத்திற்கு முன்பு நான் ஒருவரைக் காட்டில் கண்டேன்” என்று கானபூதி சொன்னது. “நீண்ட சடைமுடிகளும் சடைபிடித்த தாடியும் கொண்டவர். மரவுரி ஆடை அணிந்திருந்தார். வடக்கே எங்கிருந்தோ கிளம்பியவர் ஏழு காடுகளைக் கடந்து, விந்திய மலைகளை நோக்கிச் செல்லும் பயணத்தில் கோதாவரியைக் கண்டு, அதன் கரைவழியாக நடந்து என் காட்டுக்கு வந்தார். அது முன்பு அதர்வர் வந்த அதே பாதை… அதர்வரைப் போலன்றி இவர் மிக முதியவராக இருந்தார். மூப்பின் தளர்வால் இமைகள் பாதி மூடியிருந்தன. மூக்கு தளர்ந்து மீசைமேல் வளைந்திருந்தது. கைவிரல்கள் வேர்கள் போல முடிச்சுவிழுந்து ஒன்றுடனொன்று ஏறியிருந்தன.”
என் மரத்தடியில் அவர் அமர்ந்ததும் நான் அவரை வழக்கம்போல பயமுறுத்த முயன்றேன். அவர் சற்றும் பயப்படவில்லை. மாறாக திகைத்தவர் போல எழுந்து “இந்த மொழியை நான் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.
நான் அவர் முன் தோன்றினேன். “என் பெயர் கானபூதி. இந்த காட்டில் வாழும் பைசாசிகன்” என்றேன்.
“நான் எப்படி உன் மொழியை புரிந்துகொள்கிறேன்?” என்று அவர் கேட்டார்.
“உங்கள் அம்மாவோ மூதாதையோ இந்தக் காட்டில் வாழ்ந்திருக்கலாம்” என்றேன். “நான் அவர்களிடம் பேசியிருக்கலாம்…. நான் எல்லா காட்டுவாசிகளுடனும் பேசியிருப்பேன்”
“ஆமாம், என் அம்மா தெற்கிலிருந்து வந்தவள் என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். அவளுடைய உடல்வலிமை அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. அவர் அவளைப் பார்க்கும்போது அவள் தான் வேட்டையாடிக் கொன்ற ஓர் எருமையை தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள். என் அப்பா அவளை கண்டு வியந்து அவளருகே சென்றார். அவள் அவரை தாக்கவந்தபோது எதிர்த்து நின்றார். அந்திவரை அவர்கள் போரிட்டனர். இருவருமே வெல்லாதவர்கள் ஆனபோது அவர்கள் காமம் கொண்டனர். அவ்வாறுதான் நான் பிறந்தேன்” என்று அவர் சொன்னார்.
அம்மாவைப் பற்றிப் பேசியதும் மலர்ந்து , நினைவுகள் மேலெழும் விசையுடன் அவர் சொன்னார். “என் அம்மாவுடன் தெற்கில் இருந்து அவள் மேல் ஏறிக்கொண்ட ஒரு நிழல் கூடவே இருந்தது. அவ்வப்போது அவள் முற்றிலும் அந்த நிழலால் ஆட்கொள்ளப்பட்டாள். அப்போது வெறிகொண்டு அறியாத மொழியில் ஊளையிட்டு பேசினாள். நான் பிறந்த ஓராண்டிலேயே அவள் இறந்துவிட்டாள். அவளைப் பற்றி என் அப்பாதான் என்னிடம் சொன்னார்.”
நான் புன்னகைத்து “இங்கே நான் பேசும் மொழியை அவள் கேட்டிருக்கலாம். இந்த மரத்தடியிலேயே கூட அமர்ந்திருக்கலாம்” என்றேன்.
“அதனால்தான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதும் தெற்கே போகும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். என் உயிர் இந்த மரத்தடியிலேயே போகும் என்றாலும் நல்லதுதான்.”
“நீங்கள் யார்? ஏன் உயிரைவிட முடிவெடுத்தீர்கள் ?” என்று நான் கேட்டேன்.
“மரன் என்று பெயர்கொண்டவன் நான். வால்மீகி என்னும் வேட்டுவக் குலத்தில் பிறந்தவன், ஆகவே இன்று அப்பெயராலேயே அறியப்படுகிறேன்” என்று அவர் சொன்னார்.
“நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவ்வழியாகச் செல்லும் பயணிகளிடமிருந்து என் பணியாளர்களாகிய நிழல்கள் உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வந்து என்னிடம் சொன்னார்கள்” என்றேன்.
“என்ன சொன்னார்கள்?” என்று அவர் மெல்லிய குரலில் கேட்டார்.
“காலம் தன் முன்னங்கால்களை மடக்கி மண்டியிட்டு துதிக்கை தூக்கி வாழ்த்தும் மாகவிஞன் நீங்கள் என்றார்கள். ஒவ்வொரு சொல்லும் மாணிக்கமாக அமைந்த காவியம் ஒன்றை இயற்றியிருக்கிறீர்கள் என்றார்கள். கண்ணீரையும் ரத்தத்தையும் தேனாக மாற்றும் வித்தை அறிந்தவர் என்றார்கள்.”
“இன்னும் சிலர் என்ன சொன்னார்கள்?” என்று அவர் நிலத்தைப் பார்த்தபடிக் கேட்டார்.
“அவர்கள் வேடர்கள். இந்தக் காட்டில் வந்து தங்கி வேட்டையாடி உணவுண்டு உறங்கிய அவர்களின் நடுவே என் நிழல்களில் ஒன்றாகிய அபிசப்தன் இருட்டில் இலைப்பாயில் தானும் ஒருவனாக படுத்துக் கொண்டான்.” என்று நான் சொல்லத் தொடங்கினேன்
அவர்கள் மறுநாள் காலையில் கிளம்பி மேலும் தெற்கே செல்வதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் தூங்கிவிட்டிருந்தனர். அபிசப்தன் இருட்டில் “இந்தக் காட்டிலேயே நாம் ஏன் தங்கியிருக்கக் கூடாது? இங்கே விலங்குகள் அதிகமாக உள்ளன. அருகே நதி ஓடுகிறது. நாம் செல்லும் தெற்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. அங்கிருந்து நம்மைப்போன்ற நிஷாதர்கள் பிழைப்புதேடி வடக்கே வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றது.
முதியவனாகிய வேடன் ஒருவன் அப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னான். வேடர்குலமாகிய வால்மீகத்தில் பிறந்தவர் நீங்கள். புற்றுமண் எடுத்து புற்று போலவே வீடுகட்டிக்கொள்ளும் உங்கள் குலம் இப்போதைய மனுவின் முந்தையவரான த்வஸ்த மனுவில் இருந்து உருவானது என்றான். இந்திரனால் கொல்லப்பட்ட அசுரச்சக்கரவர்த்தியாகிய விருத்திரனை மூதாதையாகக் கொண்டவர்கள் நீங்கள். விரித்திரனின் வால்மீகம் என்ற நகரம் அழிந்தபிறகு நீங்கள் நூற்றெட்டு குலங்களாகச் சிதறி காட்டில் வேடர்களாக வாழ ஆரம்பித்தீர்கள்.
அந்தக் குலத்தில் பிறந்த நீங்கள் இயல்பான அறிவால் கல்வியில் மேம்பட்டவராக ஆனீர்கள். தவம் செய்து முனிவராக மாறினீர்கள். உங்களுக்கு பிராமணர்கள் மாணவர்களாக அமைந்தார்கள். பரத்வாஜன் என்னும் மாணவருடன் நீங்கள் கங்கைக்கரையில் தாமஸா என்னும் சிற்றாறில்தான் குளிப்பது வழக்கம். மிகமெல்ல செல்லும் குளிர்ந்த கரிய நீர் கொண்டது அந்த ஆறு. ஆகவே அதற்கு அப்பெயர். நீங்கள் அதன் அருகே உங்கள் ஆடைகளைக் கழற்றி பரத்வாஜனிடம் கொடுத்துவிட்டு முழுநிர்வாணமாக ஆற்றில் இறங்கப் போகும்போது அந்த நீரில் இரண்டு அன்னப்பறவைகள் கழுத்தோடு கழுத்து பிணைத்து நீராடுவதைக் கண்டீர்கள். அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றுவிட்டீர்கள்.
சட்டென்று ஒரு அம்பு வந்து ஆண்பறவையைத் தைத்தது. அது துடித்தபடி நீரில் மூழ்கியது. அதைக்கண்டு அஞ்சி சிறகடித்த பெண்பறவை நெஞ்சு உடைந்து அழுதது. அந்த ஓலத்தைக் கேட்டு மனம் கொந்தளித்து நீங்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கே ஒரு நிஷாதன் வில்லுடன் நிற்பதைக் கண்டீர்கள். கோபம் தாங்கமுடியாமல் ஒரு கை நீரை அள்ளி வீசி சாபமிட்டீர்கள். ‘மாநிஷாதப் பிரதிஷ்டா…’ என தொடங்கும் இரண்டு வரிப்பாடல்… ‘காதல்மோகம் கொண்டு மெய்மறந்திருக்கும் பறவையைக் கொன்ற காட்டுமிராண்டியே நீ இனி முடிவில்லாத காலம் நிலையற்று அலைந்து திரிவாய்’ என்றீர்கள். அந்தச் சாபத்தால் நிஷாதர்கள் எந்த இடத்திலும் நிலையாகத் தங்கமுடியாமலாகியது என்று அந்த முதியவர் சொன்னார்.
அந்த முதியவனிடம் அபிசப்தன் கேட்டது. “நம் குலத்தைச் சேர்ந்தவர் நம்மை ஏன் சாபமிடவேண்டும்? வேட்டையாடுவது நம் தொழில் என்று அவருக்குத் தெரியாதா என்ன? வேட்டையாடி உணவுதேடவில்லை என்றால் நம் குழந்தைகள் பட்டினியால் சாகும் என்று அவர் அறிந்திருக்கவில்லையா?”
அதற்கு முதியவேடன் “அவரே வேட்டையாடியவர்தான்” என்று பதில் சொன்னான்.
மேலும் சிலர் விழித்துக்கொண்டு முதியவர் சொல்லும் கதையைக் கேட்டனர்.
அபிசப்தன் கேட்டான் “எப்படி ஒருவர் அத்தனை எளிதாக வேர்களை மறக்கமுடிகிறது?”
அதற்கு முதியவர் பதில் சொன்னார். “அவர் கற்ற கல்வி அவரை மாற்றிவிட்டது. கல்வி அகங்காரத்தை அளிக்கிறது. அகங்காரம் சாமானியர்களிடமிருந்து விலக்குகிறது. வேர்கள் அழகற்றவை, மலர்களே இனியவை என நம்பச்செய்கிறது.”
“ஆமாம், நான் நிறையபேரை பார்த்துவிட்டேன்” என்று அபிசப்தன் சொன்னான்.
“அவர் தவம் செய்து உயர்குடிகளில் ஒருவராக ஆகிவிட்டார். உயர்குடிகள் அவரை தங்களுடையவர் என்று சொல்ல ஆரம்பித்தனர். மரங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு சென்று மாளிகைகளுக்கு மேல், உப்பரிகைகளில் நடுவதுபோன்றது அந்தக் கல்வி. நிலத்திற்காகவும் பெண்ணுக்காகவும் மனிதர்களை கொன்று குவிப்பது தர்மம் என்றும், அதிகம் பேரை கொன்றவன் மாவீரன் என்றும் அவரை நம்பச்செய்தது அது. அறியாத ஆயுதங்களால் காட்டில் வாழும் எளியவர்களை கொல்பவர்கள் பல்லாயிரம் ஆண்டு நிலைகொள்ளும் நகரங்களை அமைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறார். பசித்த குழந்தைகளின் உணவுக்காக ஒரு பறவையைக் கொல்பவன் முடிவில்லாக் காலம் வரை நிலமில்லாமல் அலையவேண்டும் என்று சாபம் இடுகிறார்.”
அந்த பதிலைக் கேட்டு இருட்டுக்குள் பல பெருமூச்சுகள் எழுந்தன. அதற்குள் எவரோ அபிசப்தனை அடையாளம் கண்டுவிட்டனர். “இங்கே ஒரு நிழல்தான் படுத்திருக்கிறது… அதுதான் உங்களிடம் பேசுகிறது” என்று கூச்சலிட்டனர்.
அவர்கள் பாய்ந்து எழுந்து அம்பையும் வில்லையும் எடுப்பதற்குள் அபிசப்தன் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.
அவர்கள் “யார் நீ? எதற்காக இதையெல்லாம் கேட்கிறாய்?” என்றார்கள்.
“அழியாத நிழலாகிய என் பெயர் அபிசப்தன்… நீங்கள் சொன்னவை உங்களால் மறக்கப்படலாம். உங்கள் தலைமுறைகளுக்கு தெரியாமலேயே போகலாம். நான் இருக்கும் வரை அக்கதைகள் இருக்கும். ஊழிமுடிவு வரை இங்கே நானும் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு மரத்தின் மேல் ஒரு காற்றின் சலசலப்பாக பாய்ந்து படர்ந்து அங்கிருந்து விலகினான்.
வால்மீகியிடம் நான் தொடர்ந்து சொன்னேன். “அசுரர்களையும் அரக்கர்களையும் அநீதியாகக் கொன்ற க்ஷத்ரியவர்களை புகழ்ந்து அசுரனும் அரக்கனுமாகிய நிஷாதன் எழுதிய காவியம் என்று உங்கள் நூலைப் பற்றி ஒரு தென்னகத்துக் கவிஞன் சொல்வதையும் என் நிழலாகிய விக்ருதன் கேட்டிருக்கிறான். நிஷாதனின் நாவால் பாடப்பட்டவன் என்பதனாலேயே க்ஷத்ரியனாகிய ராமன் அழியாத புகழ்பெற்றான், பாரதத்தில் அவன் பெயரை தெரியாத ஒருவர்கூட இல்லை என்று அவன் சொன்னான்.”
வால்மீகி செருமிக்கொண்டு “அவன் சொன்னது சரிதான்” என்றார். மீண்டும் செருமிக்கொண்டார். எழுந்து செல்லவிருப்பது போன்ற ஓர் அசைவு அவர் உடலில் எழுந்தது.
“நீங்களிட்ட அந்த சாபத்தில் இரண்டு சொற்கள் வரமருளும் மந்திரம் போன்றவை. இரண்டு சொற்கள் சாபங்கள். பிரதிஷ்டா என்னும் சொல்லும் காமமோகிதம் என்னும் சொல்லும் ஷத்ரியர்களுக்கு நீங்கள் அளித்த வரங்கள். மா நிஷாத என்னும் இரு சொற்கள் நீங்கள் உங்கள்மீதே போட்டுக்கொண்ட சாபம்” என்று நான் சொன்னேன். “நிலையற்று காலம் முழுக்க அலையவிதிக்கப்பட்டவர் நீங்கள்தான் அல்லவா?”
அவர் எழுந்துவிட்டார். ஏதோ சொல்லவந்தவர் போல கையைத் தூக்கியவர் தளர்த்திக் கொண்டார்.நெஞ்சு விம்மி விம்மி தணிந்தது.
நான் மேலும் ஓர் உதை விட விரும்பினேன். “சம்புகன் என்னும் சூத்திர முனிவரின் கதையை நீங்கள் கேட்டாகவேண்டும்” என்றேன்.
அவர் கண்கள் சுருங்க “யாரவன்?” என்றார்.
“நீங்கள் அறிய வாய்ப்பில்லை. அவர் சூத்திரகுடியில் பிறந்தார். தன் குடிக்குரிய தொழிலைச் செய்யாமல் இளமையிலேயே மொழியின் அழகில் ஈடுபட்டிருந்தார். செவியில் விழுந்த ஒவ்வொரு சொல்லையும் நினைவில் வைத்திருந்தார். அவற்றை இணைத்து அவரே மொழிகளை உருவாக்கிக் கற்றுக்கொண்டார்.”நான் புன்னகைத்து “உங்களைப் போலவே” என்றேன்.
வால்மீகி “உம்” என்றார்.
“பதினேழு வயதில் தன் கிராமத்தில் இருந்து கிளம்பிய சம்புகன் பிச்சையெடுத்து சுற்றியலைந்தான். சுடுகாடுகளில் இரவு தங்கினான். காட்டில் கிடைத்தவற்றை உண்டான். ஆனால் மொழிகளைக் கற்றுக்கொண்டான். நாற்பது வயதுக்குள் அவன் நூறு நூல்களை மனப்பாடம் செய்துவிட்டான்” என்று மீண்டும் கதை சொல்ல தொடங்கினேன்.
சம்புகன் தன் நினைவில் நிறைந்திருந்த பல்லாயிரம் நூல்களின் மெய்யை உணர்வதற்காக அடர்ந்த காட்டில் மரத்தின் மேல் ஒரு குடிலைக் கட்டிக்கொண்டு தங்கினான். அங்கே நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை காட்டில் சேகரித்த காய்கனிகளையும் தேனையும் உண்டு, தன் நினைவில் இருந்த ஒவ்வொரு நூலாக எடுத்து, ஒவ்வொரு சொல்லாக அறிந்து, அவற்றின் மெய்மையை விரித்துக்கொண்டே சென்றான்.
அந்நாளில் ஒருமுறை ஓர் அந்தணர் அங்கே வந்தார். தன் மகன் இறந்த துயரத்தில் இருந்த அவர் அவன் மறைந்தமைக்கு என்ன காரணம் என்று தேடிக்கொண்டிருந்தார். தொங்கும் முனிவர் என அழைக்கப்பட்ட சம்புகனைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவர் தனக்கு ஒரு பதிலைச் சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையுடன் சென்று அவனைப் பார்த்தார். சம்புகன் ஒரு சூத்திரன் என பார்வையிலேயே உணர்ந்தார். தனக்கு கைவராத ஞானம் சூத்திரனுக்கு எப்படி அமைந்தது என்று அவர் கொதித்தார்.
சீற்றத்துடன் சென்று அரசனின் அவையை அடைந்தார். அழுதபடி அந்த அரசில் அதர்மம் கொடியேறிவிட்டது என்று கூச்சலிட்டார். சூத்திரனுக்கு தவம் செய்ய தர்மத்தின் ஒப்புதல் இல்லை. தர்மத்தை மீறி தவம் செய்யும் சம்புகன் என்னும் சூத்திரனால் தர்மம் சிதைந்தமையால் தன் மகன் இறந்தான் என்று தர்மதேவனாகிய யமன் தன்னிடம் சொன்னதாகச் சொல்லி கதறினார்.
“சீற்றமடைந்த அரசன் வாளுடன் சென்று சம்புகனின் தலையைக் கொய்தான். அந்த தலையைக்கொண்டு வந்து தன் கோட்டைமுன் வைத்து பிறருக்கு எச்சரிக்கை விடுத்தான்” என்று நான் சொன்னேன். “அந்த அரசனின் பெயர் ராகவ ராமன். உங்கள் காவியத்தின் நாயகன்.”
“ராமன் அதைச் செய்யவில்லை. அது பொய்க்கதை” என்று அவர் கூச்சலிட்டார். அவர் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
“எல்லா கதைகளையும் போல அதுவும் கதை… ராமனும் நீங்களும் மறைந்து ஐம்பது தலைமுறைக்குப்பின் எழுதப்பட்டது. உங்கள் காவியத்தின் உத்தரகாண்டத்தில் சேர்க்கப்பட்டது” என்று நான் சொன்னேன்.
“அதெப்படி சேர்க்கமுடியும்? வேடன் தவம் செய்து முனிவனாகி ராமன் கதையை எழுதலாம் என்றால், அந்த காவியமே அவன் புகழுக்கு ஆதாரம் என்றால், அந்த ராமன் எப்படி தவம் செய்த சூத்திரனைக் கொல்லமுடியும்? அக்கதையைக் கேட்பவர்கள் மூடர்களா என்ன?“ என்று அவர் உடைந்த குரலில் கேட்டார்.
“ஒருவேளை நீங்கள் எழுதிய ராமன் வேறு அந்த ராமன் வேறு என்று இருக்கலாம். அதுவே உண்மையான ராமனாக இருக்கலாம். நீங்கள் அறிந்த ராமன் சீதை சொன்ன ராமன் அல்லவா? காதல்கொண்ட மனைவி அறிந்த ராமனா குடிகள் அறிந்த ராமன்? அந்தணர் போற்றும் ராமன்?”
“ஆம்” என்று வால்மீகி சொன்னார். “நானறிந்தது அவள் சொன்னதை மட்டும்தான். ஆனால் அந்த புதிய கதையை எப்படி என் காவியத்தில் சேர்க்கலாம்? அதை எப்படி என் சொல் என ஆக்கலாம்?”
“அது காவியங்களின் இயல்பு. எந்தக் காவியமும் எழுதி முடிக்கப்படுவதில்லை. நீங்கள் இயற்றிய காவியம் தலைமுறைகள் தோறும் வளரும்…” என்று நான் சொன்னேன்.
“அதற்கு நானா பொறுப்பு?”
“ஆமாம், நீங்களேதான் பொறுப்பு. காவியத்தை எழுதிவிட்டீர்கள். அதை எங்கே நிறுத்தவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை, நிறுத்தும் ஆற்றலும் இல்லை. நீங்கள் உங்கள் காலத்துக்குக் கட்டுப்பட்டவர். காவியம் காலம் கடந்தது.”
வால்மீகியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைக் கண்டேன். அவர் தொண்டையை செருமிச் செருமி அந்த அழுகையை வெல்ல முயன்றார்.
“சம்புகன் உண்மையில் சூத்திரன்கூட அல்ல. அவன் நத்தைக்குடியைச் சேர்ந்த வேடன். சிதல்புற்றுக் குடியைச் சேர்ந்த உங்கள் வேடரினத்தின் நூற்றெட்டு பிரிவுகளில் ஒன்று அது.”
“போதும்” என்று வால்மீகி சொன்னார். பின்னர் தளர்ந்தவராக அவர் மரத்தடியில் அமர்ந்தார்.
நான் அவர் அருகே அமர்ந்தேன். “உங்கள் அழியாத சொற்களால் உங்கள் இனத்தவர் காலம் காலமாக புழுவுக்குரிய வாழ்க்கையை வாழும்படிச் செய்தீர்கள்” என்றேன்.
“இல்லை, நான் எழுதிய அந்த இரட்டைவரியின் பொருள் அது அல்ல. அது வேறொரு தருணத்திற்காக நான் இயற்றிய செய்யுள்… அது வேறு” என்று வால்மீகி சொன்னார்.
“காவியம் எப்படிப் படிக்கப்படவேண்டும் என்றும் நீங்கள் சொல்லமுடியாது” என்று நான் சொன்னேன். “உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருந்தது. காவியத்தை எழுதாமலிருந்திருக்கலாம்.”
“நான் எழுதத் தொடங்கியது ராமனின் கதையை அல்ல. நான் எழுதியது பிருத்வியின் கதையை” என்று வால்மீகி சொன்னார். “நான் தொடங்கிய வரி அதர்வவேதத்தில் இருந்தது. மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய: அந்த வரியில் இருந்து நான் சென்றடைந்தது கண்ணீரில் நனைந்திருந்த அவள் முகம். மண்ணின் மகள் அவள்… நான் இயற்றியது அவள் கதையை மட்டும்தான்…“ வால்மீகி சொன்னார் “பிருத்வ்ய பிருத்வ்ய என்ற சொல்லை மட்டும் சொல்லிச் சொல்லி தவம் செய்து அவள் கண்ணீரைக் கண்டேன். அதை என்றைக்கும் என இங்கே நிலைநிறுத்திவிடவேண்டும் என்று எண்ணி அதை எழுதினேன்.”
நான் அவர் சொல்லப்போவதைக் கேட்க அமர்ந்தேன். அரிதாகவே எனக்குக் கதை சொல்பவர்கள் அமைகிறார்கள்.
(மேலும்)
விஷ்ணுபுரம் குமரகுருபரன் கவிதை அரங்கு
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது சோ.விஜயகுமாருக்கு வழங்கப்படுகிறது. விழா 8 ஜூன் 2025 அன்று காலை முதல் சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது.
இந்த அரங்கில் கவிஞர்களுடனான உரையாடல் அரங்கில் கவிஞர் றாம் சந்தோஷ் கலந்துகொள்கிறார்.
றாம் சந்தோஷ் – தமிழ்விக்கிஇணைப்புகள்
தன் கவிதையை அழவைத்து, தான் உளமாரச் சிரிக்கும் கவிஞன் றாம் சந்தோஷ் கவிதைகள் உயிர்மை றாம் சந்தோஷ் கனலி இதழ் கட்டுரைகள் றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் ‘சட்டை வண்ண யானைகள் றாம் சந்தோஷ் கவிதைகள் றாம் சந்தோஷ் இணையப்பக்கம் மூர்க்கத்தின் வேறுவேறு தேவதைகள் றாம் சந்தோஷ் உறவின் மூன்று தடையங்கள் றாம் சந்தோஷ்8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் காலை முதல் நிகழும் இலக்கிய அரங்கில் கவிஞர் சசி இனியன் கலந்துகொள்கிறார்.
சசி இனியன் தமிழ் விக்கி
பறவைத்தியானம் – சர்வா
குருஜியின் யோகா வகுப்பில் தியானமுறை பயிற்சியில் கண்களை மூடிக் கொண்டு பறவைகளின் ஓசையை கேட்கும்படி சொல்வது நினைவில் வந்தது. ஒரு படி மேலாக பறவைப் பார்த்தல் அறிமுக வகுப்பு எனக்கு பெரிய வாசலை திறந்து வைத்தது. இப்போது விடியற்காலை பறவைகளின் ஓசைகள் தான் என்னை எழுப்பிவிடுகின்றன.
I too had a prolonged doubt about literature; I used to ask myself the same question. How is it that literature does not seem to cultivate individuals and improve society?
T he use of literature- A letterJune 6, 2025
கால் மேல்
முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்துகொண்டதுதான். குரு சௌந்தர் போன்ற யோக ஆசிரியர்கள் சொல்லித்தருவதும்தான். யோகத்தில் பல வடிவங்கள் இதற்கென்றே உள்ளன. ஆனால் நான் அதையே ’சொந்தமாகக் கண்டுகொண்டு’ செய்ய ஆரம்பித்தது அண்மையில். அதாவது ஒரு ஆறு மாதத்திற்கு முன்பு.
இப்போது அறுபத்தி மூன்று ஆகிறது. அறுபத்துநான்கு நடக்கிறது என்றும் சொல்லலாம். முதுமை என்று சொல்லிக்கொள்ள தயக்கம், இந்தக் காலகட்டத்திற்கு இது முதுமை அல்ல. ஆனால் சென்ற தலைமுறை அறிஞர்களின் வரலாற்றை எழுதும்போது பெரும்பாலானவர்கள் மறைந்த வயது என்பது தெரியவருகிறது. அவர்களின் வாழ்க்கைமுறையில் இருந்து நாம் பெரிதாக மாறிவிடவில்லை.
அண்மையில் வெள்ளிமலையில் நிகழ்ந்த ஓர் உரையில் டாக்டர் தங்கவேல் (சித்தா) சொன்னார், இப்போது வாழ்நாள் கூடியிருக்கிறது. அதற்கு முதன்மைக் காரணம் மருத்துவம் என்னும் எண்ணம் மருத்துவர்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. அல்ல. முதன்மைக் காரணம் நோய் பற்றிய அறிவு உருவானதும் அது பரவலாக ஆனதும்தான்.
எனக்கு அது உடனடியாக உண்மையெனத் தெரிந்தது. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளாகத்தான் நாம் குடிநீர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு முன்பு வரை தண்ணீர் தெளிவாக இருந்தால் குடிப்போம். டீக்கடைகளில் சிமெண்ட் தொட்டிகளில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை உடனிருக்கும் பிளாஸ்டிக் மக்கில் அள்ளி எல்லாரும்தான் குடித்துக் கொண்டிருந்தோம். (தாயைப்பழித்தாலும் தண்ணியப் பழிக்கக்கூடாது)
சென்ற பத்தாண்டுகளாக, குறிப்பாக கோவிட் தொற்றுக்குப் பின்னர்தான், சுவாசநோய்கள் காற்றுவழியாகப் பரவுகின்றன என்பது பரவலாக அறியவும் ஏற்கவும்பட்டிருக்கிறது. ஒரு பஸ்ஸிலோ ரயிலிலோ எவராவது முகத்தை மூடாமல் தும்மினால் உடனே ஒதுங்கிக்கொண்டு முகம் சுளிக்கிறார்கள். வசைபாடுவதுகூட உண்டு. அண்மைக்காலம் வரை ஜலதோஷம் என்பது குளிர்ச்சியால் வரும் நோய் என்றுதான் நம்பிவந்தோம்.இப்போதும் கைமருத்துவர்கள் அதைத்தான் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் மருந்துவிற்பனையில் பாதி மழைக்கால வயிற்றுப்போக்கு, வைரல் காய்ச்சல்களுக்கான மாத்திரைகள். இன்று அவை மிகமிகக் குறைந்து விட்டிருக்கின்றன. ஆனால் வட இந்தியாவில் பார்த்தால், குறிப்பாக அண்மையில் பைத்தானில் கவனித்தேன், சகட்டுமேனிக்கு எல்லா தண்ணீரையும் குடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பொதுவெளியில் மலம் கழிப்பது இன்னும் உள்ளது என்றாலும் உக்கிரமான பிரச்சாரம் வழியாக பெரும்பகுதி குறைந்துள்ளது. வட இந்தியாவிலும் அரசு முன்னெடுத்த கழிப்பறை இயக்கம் கண்கூடான பயன்களை அளித்திருப்பதைக் காணமுடிகிறது. ஆனாலும் குடிசைகள் இருக்கும் வரை முற்றாக தவிர்க்கமுடியாது.
அதேபோன்றுதான் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வுகள். அண்மைக்காலமாக உணவு பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் பரவலாக உள்ளது. தொப்பை என்பது ஆரோக்கியம் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம். நிறைய உண்பது உடல்நலத்தைக் கெடுக்கும் என்பது படிக்காத மக்கள் வரைச் சென்று சேர்ந்துவிட்டது. நல்ல உணவு என்பது பழங்களும் காய்கறிகளும் நிறைந்தது என்று தெரியாதவர்கள் இல்லை.
அதற்கிணையான ஒரு விழிப்புணர்வு நம்முடைய அமர்தல், படுத்தல் பற்றியும் வந்தாகவேண்டும். நாம் ஒருநாளில் பெரும்பாலான நேரத்தை அமர்ந்தே செலவழிக்கிறோம். அது நம் உடல்நிலையை எப்படிப் பாதிக்கிறது என அறிவதில்லை. கூன்போட்டு அமர்வதனால் உருவாகும் மூச்சுக்குறைவு மூளைக்கு ஆக்ஸிஜனை எப்படி குறைக்கிறது, கழுத்தை நீட்டி அமர்வதனால் உருவாகும் வலிகள் என்னென்ன, நீண்டநேரம் அமர்வதன் பிழைகளால் வரும் முதுவலிகளும், மூட்டுவலிகளும் எப்படிப்பட்டவை ஆகியவை நிறைய இன்னும் பேசப்படவேண்டும்.
அதேபோல தூக்கம் சார்ந்த விழிப்புணர்வும் இன்னும் சரியாக திரளவில்லை. நல்ல தூக்கம் என்பது இயல்பாக உருவாகவேண்டியது. குறைந்தது ஐந்து மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். அதற்கு ஏழுமணி நேரம் தூங்கவேண்டும். ஆழ்ந்த தூக்கமே உண்மையில் தூக்கம். சீரான தூக்கம் என்பது ஒரே நேரத்தில் தூங்கி விழிப்பதன் வழியாகவே உருவாகும். கூகிள் வாட்ச் போன்றவை ஒரு சிறு வட்டத்தில் அந்த விழிப்புணர்ச்சியை உருவாக்குகின்றன.
இதயநோய்கள் இளம்வயதில் வருவதற்கு உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களுக்கு இணையாகவே அமர்தல் சிக்கல்களும் தூக்கச்சிக்கல்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் தூக்கம் பற்றியாவது ஓரளவு சொல்லி விளக்கிவிடலாம். அமர்தல் பிரச்சினை பற்றி விளக்குவது கடினம்.
நாளெல்லாம் அமர்ந்திருப்பவரின் கால் தொங்கவிடப்பட்ட நிலையில் உள்ளது .அங்கே செல்லும் ரத்தம் முழுக்க திரும்ப இழுக்கப்பட்டு உடலெங்கும் செல்வதில்லை. அங்கே ரத்தத் தேக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக பருமனானவர்கள், இதயத்தின் ஆற்றல் குறைந்துவரும் முதியவயதில் உள்ளவர்கள். தொங்கவிட்டுக்கொண்டே இருத்தல், நின்றுகொண்டே இருத்தலால் ரத்தக்குழாய்கள் பருத்து வெரிக்கோஸ் என்னும் சிக்கல் உருவாகிறது. இன்றைய முதிய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் உண்டு.
அனைத்துக்கும் மேலாக மூளைக்கு போதிய ரத்தம் செல்லாததனால் உருவாகும் மனக்களைப்பு முக்கியமான பிரச்சினை. அது இதனால் என நாம் அறிவதில்லை. ‘சரி ஒரு டீயைப் போடுவோம்’ என்றோ ’ஆறுதலா ஒரு சிகரெட்’ என்றோதான் நம் எண்ணம் ஓடுகிறது.
அண்மைக்காலம் வரை நான் ஒன்றரை அல்லது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை இடைவெளி விடுவதைத்தான் செய்துவந்தேன். ஒருநாளில் 10 மணி நேரம் வரை எழுதவும் வாசிக்கவும் செய்பவன். ஆகவே இடைவெளிகளில் நானே கீழே சென்று டீ போட்டு கொண்டுவந்து குடிப்பேன். மொட்டைமாடியில் ஒரு சின்ன நடைபோட்டுக் கொண்டே வந்திருக்கும் போன்களை அழைத்துப் பேசுவேன். மொட்டைமாடியை கூட்டிப்பெருக்குவதும் உண்டு. அதுவே போதுமானதாக இருந்தது.
ஆறுமாதம் முன்பு இரண்டு மணிநேர வாசிப்பு. அதுவும் வேதாந்த தத்துவம். மூளைச் சலிப்பு வந்தது. நல்ல வெயிலில் வெளியே போக முடியாமல் வீட்டுக்குள் சுற்றியபடி பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் படுக்கலாம் என்று படுத்தேன். காலடியில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதன்மேல் காலை வைத்து படுத்தேன். பத்தே நிமிடத்தில் புத்துணர்ச்சி அடைந்தேன். எழுந்து மீண்டும் வாசிக்கலானேன்.
அதையே கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கிக் கொண்டேன். காலை தூக்கி சுவர்மேல் சாய்த்து வைத்தபடி கட்டிலில் படுத்துக்கொள்வேன். மூன்று பாட்டு கேட்கும் நேரம். அல்லது ஒரு சின்னக் குறட்டை வருவது வரை ஒரு சிறு தூக்கம். மூளை களைப்பை இழந்து தெள்ளத்தெளிவாக ஆகிவிடுகிறது என்பதைக் கவனித்தேன். அமர்ந்திருக்கும்போது உருவாகும் முதுகுவலியும் இல்லை. உடலும் புத்துணர்ச்சி அடைந்தது.
இப்போது ஒருநாளில் மூன்று முறையாவது அதைச் செய்கிறேன். பத்து நிமிடம் வீதம்தான். பகல்தூக்கம் இல்லை, ஆகவே இரவில் பத்துமணிக்கே தூங்கிவிடுகிறேன். வயதானதால் உருவாவதா என நான் கண்காணித்துக் கொண்டிருந்த சிறிய மூளைக்களைப்பு அறவே இல்லை. ஆச்சரியம்தான்.
கால்களில் தேங்கும் ரத்தம் திரும்ப உடலுக்கு வருகிறது, மூளைக்கு அதிக ரத்தமும் ஆக்ஸிஜனும் செல்கிறது. அதுவே இந்த எளிய பயிற்சியின் ரகசியம். நான் இணையத்தில் வாசித்தால் உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அனைவருமே இதைச் செய்யலாம் என்று சொல்கிறார்கள். உலகம் முழுக்க இது பரிந்துரைக்கப்படுகிறது. நீண்டநேரம் கார் ஓட்டுபவர்கள் அவசியம் செய்யவேண்டிய பயிற்சியாக அமெரிக்காவில் வலியுறுத்தப்படுகிறது.
https://health.clevelandclinic.org/benefits-of-legs-up-the-wall
அஞ்சலை அம்மாள்
சுதந்திரப்போராட்ட வீரர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர். தமிழகச் சட்டமன்றத்திற்கு கடலூர் தொகுதியில் இருந்து மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காவியம் – 47

சுருங்கிய நெற்றியுடன், சற்றே தலைசாய்த்து, சிவந்த குழிகளான கண்கள் நிலைக்க அமர்ந்திருந்த குணாட்யரின் அருகே சென்று அவருடைய தோளைத் தொட்டு க்ஷிப்ரன் என்னும் நிழல் சொன்னது. “இந்தக் கதை க்ஷுத்ரம் என்னும் வகைமையைச் சேர்ந்தது. இது கசப்பே சுவையென்றாகியது. காவியம் பயின்ற தங்களுக்கு இது உவப்பானதாக இருக்க வாய்ப்பில்லை… தாங்கள் இப்போதே இக்கதையை விட்டு வெளியேறலாம்.”
“கதையில் உண்மை இருக்குமென்றால் அது உத்தம காவியம்தான்…” என்று ஆபிசாரன் சீற்றத்துடன் சொன்னது. “முத்தும் ரத்தினங்களும் பதிக்கப்பட்ட பொய்யை விட கருங்கல் போன்ற உண்மையே உயர்வானது…”
“அழகானவற்றால் இந்தப் பிரபஞ்சத்தை நிறைத்த தெய்வங்களை நாம் இகழவேண்டுமா? என்றது க்ஷிப்ரன். “மலர்கள் ஒளிரும் பொன்னிறக்காலை இனிய உள்ளமும் அகன்ற கண்களும் கொண்டவர்களுக்காகவே நிகழ்கிறது.”
ஆபிசாரன் “சேற்றிலிருந்தே எல்லா மலர்களும் முளைத்தெழவேண்டும் என்று வகுத்தவை தெய்வங்கள்தான்” என்றது. ”அந்திக்கும் காலைக்கும் நடுவே இரவு விரிந்து கிடக்கிறது.”
“இதன் கசப்பு நம்மை கசப்பானவர்கள் ஆக்குகிறது” என்றது விரூபன் என்னும் நிழல்.
ஆபிசாரன் “வேர்கள் கசப்பானவை, நஞ்சுகொண்டவை. எல்லா வேர்களும் ஏதேனும் வகையில் மருந்தாகக் கூடியவை. நஞ்சுகள் எல்லாம் அளவறிந்து உண்டால் மருந்தே” என்றது.
“…மேலும் இந்தக் கதை எங்கு நிகழ்கிறது எப்போது நிகழ்கிறது என்பதே தெளிவில்லாமலிருக்கிறது. பைத்தியம் கண்ட கனவு என்று தோன்றுகிறது” என்றது சக்ரவாகி. “எந்த இலக்கணத்திலும் அடங்காத கதையாக உள்ளது. அறம் பொருள் இன்பம் வீடு என நால்வகை புருஷார்த்தங்களில் எதுவும் இல்லாத ஒரு நிகழ்வுப்பெருக்கு… இதனால் என்ன பயன்?”
“மலைகளும் முகில்களும் போல” என்றது ஆபிசாரன்.
“இது வெறும் கழிவு…” என்றது சியாமன்.
”எல்லா கழிவுப்பொருட்களையும் பூமி விரும்புகிறது. அவற்றை உண்டு அமுதாக்கி உயிர்களுக்கு வழங்குகிறது” என்றது ஆபிசாரன்.
கானபூதி “முடிவை அவர் எடுக்கட்டும்…” என்றபின் குணாட்யரிடம் “உங்கள் பொருள் இலக்கணப்படி க்ஷுத்ரம் என்றும், அணியிலக்கணப்படி வைக்ருதம் என்றும் சொல்லப்படும் கதை இது… நீ விலகவேண்டும் என்றால் இப்போதே செய்யலாம்” என்றது.
“நான் வகுக்கப்பட்டவற்றையும் செதுக்கப்பட்டவற்றையும் அங்கே பிரதிஷ்டானபுரியில் விட்டுவிட்டே இந்தக் காட்டுக்கு வந்தேன்… கட்டற்றுப் பெருகும் எதுவும் எனக்கு உகந்தவையே” என்றார் குணாட்யர்.
”அவ்வாறென்றால் கதையைத் தொடர்கிறேன்” என்று கானபூதி சொன்னது. “பாடலிபுத்ரம் என்னும் நகரில் ஹரீந்திரநாத் தேஷ்பாண்டேயின் மனைவியாக வாழும் ருக்மிணி முதல் காம இன்பத்தை அடையும்போது அவளுக்கு நாற்பத்து நான்கு வயது தாண்டியிருந்தது என்று சொன்னேன்…”
அப்போது அவள் உடல் பருத்து, வயிறு பெருத்து, கன்னங்கள் தொங்கத் தொடங்கியிருந்தன. பால்வெண்ணிறம் கொண்ட முகமாதலால் அவள் கண்களுக்குக் கீழே கருமை படியத் தொடங்கியிருந்தது. அவள் குரல் தணிந்து கனத்துவிட்டிருந்தது. பேச்சு நிதானமாக, நெளிந்து இழைந்து செல்வதுபோல் ஒலித்தது. எப்போதும் துயரத்தில் இருப்பதுபோன்ற முகம் அவளுக்கு அமைந்தது. உதடுகளின் இருபக்கமும் கன்னக்கோடுகள் ஆழமாக இருந்தமையால் உருவானது அந்த பாவனை. அந்தக் கோடுகள் அவள் துயரத்திலேயே இருந்தமையால் உருவானவை.
ஒவ்வொரு நாளும் ஒன்றென்றே நிகழும் ஒரு வாழ்க்கையை அவள் அடைந்து விட்டிருந்தாள். அந்த வாழ்க்கை அவளுக்கு முன்னரே உருவாகி அங்கே இருந்தது. பிரபாவதி மறைந்த மறுநாள் முதல் அவள் அதில் சென்று பொருந்திக் கொண்டாள். பிரபாவதி அஸ்வத் பிறந்து ஒரு வருடம் கழித்து இறந்தாள். அந்த ஓராண்டும் அவள் முழுக்க முழுக்க அஸ்வத்தைக் கொஞ்சிக்கொண்டே இருந்தாள். ருக்மிணி பால்கொடுக்கும்போது தவிர அவனைத் தொடவே அவள் அனுமதிக்கவில்லை. அவனுக்கு மேலும் தாய்ப்பால் தேவை என்று இரண்டு வேலைக்காரர்களைக் கொண்டும் அவனுக்குப் பால்கொடுக்கச் செய்தாள்.
ருக்மிணி தன் படுக்கையறைக்குள்ளேயே இருக்கவேண்டியிருந்தது. பாலை நிறுத்தியபோது அவள் இருமடங்கு எடைகொண்டவள் ஆனாள். பிரபாவதி நோயுற்றபோதுதான் ருக்மிணியின் பொறுப்பில் வீடு வந்துசேர்ந்தது. பிரபாவதி இறந்த பதினாறாம் நாளே ஜோகினி காசிக்குச் செல்வதாகச் சொல்லி கிளம்பிச் சென்றாள். பூர்ணா தன் பேரன் ஒருவன் அழைப்பதாகச் சொல்லி கிளம்பினாள். அவர்கள் இருவரும் எவ்வளவு பணத்தை சுருட்டியிருந்தார்கள் என்று அவர்கள் சென்றபின் வேலைக்காரர்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் சென்றதை ருக்மிணி விடுதலையாக உணர்ந்தாள்.
அவள் பொறுப்பில் வீடு வந்துசேர்ந்தது அவளுக்கு முதலில் எந்தக் கிளர்ச்சியையும் அளிக்கவில்லை. அந்த வீட்டில் அவ்வாறே நீடிக்கவேண்டும் என்ற சலிப்பே இருந்தது. ஆனால் வீட்டை நடத்த நடத்த அவள் அதில் மகிழத்தொடங்கினாள். முதல்முதலாக ஒரு வேலைக்காரியை தண்டித்தபோது முதுகெலும்பு சொடுக்கி எழும் சிலிர்ப்பை அடைந்தாள். அதன்பின் வீட்டை ஆள்வதிலேயே மூழ்கிக்கிடந்தாள். தன்னால் அந்த வீடு நிகழ்வதாகவும், தான் இல்லை என்றால் ஒவ்வொன்றும் சிதறிவிடும் என்றும் எண்ணிக்கொண்டாள். அதை தானன்றி எவருமே உணர்வதில்லை என்று அடிக்கடி எண்ணி, அதைச் சொல்லவும் செய்தாள். இவை ஒவ்வொன்றும் தன் மறைந்த மாமியாரின் மனநிலைகளும் சொற்களும்தான் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.
அன்று ஹரீந்திரநாத் நன்கு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வீட்டில் குடிப்பதில்லை. தன் கடையிலிருந்து மாலைநேரம் சென்று அமர்ந்து குடிப்பதற்கான இடத்தை உருவாக்கி வைத்திருந்தார். கங்கைக்கரையோரமாக அவர் வாங்கி ஒரு காவலனின் பொறுப்பில் விட்டிருந்த ஓர் இரண்டடுக்கு ஓட்டுக் கட்டிடம். அங்கே அவருடைய நண்பர்கள் வருவார்கள். அனைவருமே குடிப்பதுண்டு. அங்கே அவர்கள் மாமிச உணவும் உண்டார்கள். மாமிச உணவு உண்டாலொழிய குடியின் தீவிரத்தை உடம்பு தாங்காது என்று பூபிந்தர் சிங் சொல்லி அவரை நம்பவைத்திருந்தார். குடி மாமிச உணவை விரைவாக எரித்து உடலுக்கு வெப்பசக்தியை அளிக்கிறது. ’மாமிசம் உண்ணும் விலங்குகளின் உடலில் வெப்பம் அதிகம்’ என்று அவர் சொன்னார். “வேண்டுமென்றால் ஒரு நாயை தொட்டுப்பார்… கங்கைக்கரையில் பைத்தியங்கள் குளிர்காலத்தில் நாய்களை கட்டிப்பிடித்தபடி தூங்குகின்றன”
முதலில் ஒவ்வாமை இருந்தாலும் மாமிச உணவு தன் உடலை வலுப்பெறச் செய்கிறது என்று ஹரீந்திரநாத் நம்பத்தொடங்கினார். ‘பிற உணவுகள் எல்லாம் உடம்புக்குள் சென்று செரித்து உடம்பால் மாமிசமாக மாற்றப்படுகின்றன. மாமிச உணவு மட்டுமே நேரடியாக நம் உடலில் மாமிசமாக மாறிவிடுகிறது’ என்று பூபிந்தர் சிங் சொன்னபோது அந்த தர்க்கம் அவருக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. குடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் கிளம்பி வெவ்வேறு பெண்களை தேடி செல்வார்கள். எப்போதுமே நண்பர்களுடன் சேர்ந்து அதற்கெல்லாம் செல்வது அவரது வழக்கம். அது தேவையில்லாத பேச்சுகளையும் பேரங்களையும் நடத்தும் பொறுப்பிலிருந்து அவரை விடுவித்தது. அத்துடன் கூட்டமாக சென்றால் தவறுசெய்கிறோம் என்ற உணர்வும் இல்லாமலாகியது.
ஹரீந்திரநாத் எந்தப்பெண்ணிடம் செல்வதென்பதை முழுக்க தன்னுடைய டிரைவர் சந்துலாலின் தேர்வுக்கே விட்டிருந்தார். சந்துலால் அதைப் பெரும்பாலும் அன்று மதியமே முடிவு செய்து அந்தப் பெண்ணுக்குத் தகவல் தெரிவித்திருப்பான். எந்த இல்லத்திற்கு அவன் கூட்டிச் செல்கிறானோ அதையொட்டி அவனுக்கு அந்தப் பெண்கள் பணம் கொடுத்தார்கள். அதன்பொருட்டு அவர்கள் அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். எந்தப் பெண்ணிடம் கூட்டிச்செல்கிறான் என்பதை ஹரீந்திரநாத்திடம் எப்போதுமே மிகுந்த வேடிக்கையாகவும், நேரடியான ஆபாசத்தன்மையுடனும் சொல்ல சந்துலாலுக்கு தெரிந்திருந்தது. ஹரீந்திரநாத்தின் ஆண்மைக்காகவும் அழகுக்காகவும் அவரை விபச்சாரிகள் விரும்புகிறார்கள் என்று அவன் சொன்னான்.
“நீங்கள் பிராமண வீர்யம் கொண்டிருக்கிறீர்கள். ஷத்ரிய சௌர்யமும் கொண்டிருக்கிறீர்கள். வீர்யசௌர்யவல்லப என்று பழங்காலத்து அரசர்களை நூல்கள் பாடுகின்றன. இரண்டு குணங்களும் கொண்டவர்கள் இந்தப் பாட்னாவிலேயே ஓரிருவர்தான். ஆகவே பெண்கள் உங்கள் மேல் அத்தனை பித்தாக இருக்கிறார்கள்” என்று அவன் சொன்னான்.
அவர் அதில் மகிழ்ந்து கைகளை காரில் இருக்கையில் ஓங்கித் தட்டி சிரித்தார். தளர்ந்த உதடுகளிலிருந்து வழிந்த எச்சிலை கைக்குட்டையால் துடைத்தபடி ”ஆனால் அவர்கள் என்னிடமிருந்து கருவுறக்கூடாது. என்னுடைய விந்து இந்தப் பெண்களிடம் வீணாகிவிடக்கூடாது” என்றார்.
“அப்படி நிகழாது. அதற்காகத்தான் நான் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு மாத்திரைகளைக் கொடுக்கிறேன். இந்த மாத்திரைகள் உங்களுக்கு வீர்யத்தை கூட்டுவதுடன் தகுதியற்ற பெண்கள் உங்கள் கருவை சுமப்பதை தடை செய்துவிடும்” என்று அவன் சொன்னான்.
பெண்களுடன் தங்கி, விடிவதற்கு முன்பு வீட்டுக்குத் திரும்பும்போது ஹரீந்திரநாத் நல்ல தூக்கத்திலிருப்பார். அவனே அவரை இடையையும் தோளையும் பிடித்து தூக்கி கொண்டு வந்து வீட்டில் அவருடைய படுக்கையில் படுக்க வைத்து கதவை மூடிவிட்டு செல்வான். பெரும்பாலும் அவன் தன் வீட்டுக்கு செல்வது விடிந்தபிறகுதான். தூங்கி எழுந்து மாலையில் தான் அவன் கடைக்கு வருவான். காலையில் ஹரீந்திரநாத்தை கடைக்கு கூட்டிச் செல்வதற்கும் பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் பிக்ரம் சிங் என்னும் வயதான கூர்க்கா டிரைவர் இருந்தார்.
அன்று மாலை சந்துலால் வராததனால் ஹரீந்திரநாத் தன் இல்லம் திரும்ப வேண்டியிருந்தது. இரவுணவை அவர் சாப்பிடும்போதே அவன் அங்கு வந்து சேர்வதாக சொல்லியிருந்தான். ஆனால் வேலைக்காரன் வாங்கிவந்த பிரியாணியை அவர் தன் நண்பருடன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது வேறெவரோ வந்து சந்துலால் தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று வீட்டுக்கு திரும்பிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் தன் நண்பரின் காரில் தன்னை வீட்டில் கொண்டு விடச்சொன்னார். வரும்போது அவர் சந்துலால் வர்ணித்த அந்தப்பெண்ணைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.
வீட்டுக்கு வந்து படுக்கைக்கு வந்தபோதும் அந்த பெண்ணைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தார். அவள் பழைய லக்னோவில் இருந்து வந்த ராஜதாசி என்று சந்துலால் சொன்னான். நவாப்களின் ரத்தம். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முகம் கொண்டவள். அந்தக் காமத்தூண்டுதலால் வேலைக்காரியை அழைத்து ருக்மிணியை அழைத்து வரச்சொன்னார்.
ருக்மிணி சலிப்பு நிறைந்த முகத்துடன் வந்து ”நான் நாளைக்கு காலை படித்துறைக்கு பூஜைக்காக போகவேண்டும்” என்று சொன்னாள்.
”போ, அதற்கென்ன…” என்று அவர் அவளைக் கையைப்பிடித்து இழுத்தார்.
அவள் அவருடைய வாயிலிருந்து வந்த அந்த மணத்தை விரும்பினாள். ஏனென்றால் இரண்டு ஆண்டுகளாகவே அவளும் சிறிதளவு மது அருந்தப் பழகியிருந்தாள். அவளுடைய பணிப்பெண் பீரு வாங்கிக்கொண்டுவந்து ரகசியமாக அளிக்கும் மது அது. அதை எப்படி நீருடன் கலக்கி இரவு தூங்குவதற்கு முன் குடிப்பதென்று பீருதான் அவளுக்குக் கற்பித்திருந்தாள். மது அருந்துவது முகலாய அரசிகளின் வழக்கமென்றும், ராஜபுதன அரசிகளும் இதை அருந்துவதுண்டு என்றும் அவள் சொன்னாள். அரசிகள் மது அருந்துவதற்கு காரணம் அவர்களின் பொறுப்பு மிக அதிகம் என்பதுதான். சாதாரண பிராமணப்பெண்கள் மது அருந்தத் தேவையில்லை, ஏனெனில் அவர்களுக்கு நோன்புகள் மட்டும்தான் இருக்கின்றன. அரசிகள் ஆட்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஆகவே அவர்களின் உடல் ஆற்றல் பெறவேண்டியிருக்கிறது. உடல் ஆற்றல் பெறவேண்டுமென்றால் அது உணவை முழுமையாக எரிக்க வேண்டும். உணவை எரிப்பதற்கான தீ உடலில் எரிந்துகொண்டே இருப்பதற்கு மது அவசியம். “யாக குண்டத்தில் நெய்யை ஊற்றுவது போலத்தான் நெஞ்சுக்குள் மதுவை ஊற்றுவது” என்று பீரு சொன்னாள்.
முதலில் தயங்கினாலும் அது முழுக்க முழுக்க பழச்சாற்றில் இருந்து எடுக்கப்படுவது என்று பீரு சொன்னபோது சிறிதளவு குடிக்க ருக்மிணி ஒப்புக்கொண்டாள். அதன்பிறகு அந்த சுவை அவளுக்குப் பிடித்துப்போயிற்று அதைவிட அதைக் குடித்துவிட்டு படுக்கும்போது உடலின் அத்தனை தசைகளும் மெல்ல மெல்ல இறுக்கங்களை இழப்பதை அவள் விரும்பி அனுபவித்தாள். தன் கால்களில் இருக்கும் ஓயாத உளைச்சல் இல்லாமலாகி, அவை உயிரழந்தவை போல தளர்ந்து கிடப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை அருந்தாதபோது கால்களில் இருக்கும் ஓயாத வலியால் தூங்க முடியாமல் அவள் புரண்டுகொண்டே இருந்தாள். தன் கால்களின் வலியைப்பற்றி அவள் பீருவிடம் சொன்னபோதுதான் முதல் முறையாக அவள் மதுவை அங்கே கொண்டுவந்தாள். “க்ஷத்ரியப் பெண்களுக்கு எல்லாம் கால்வலி இருக்கும் தேவி. ஏனென்றால் அவர்கள் நிலைகொள்பவர்கள். உறுதியாக அவர்கள் நின்றாகவேண்டும் அல்லவா?”
ஹரீந்திரநாத் அழைக்கும்போது அவள் மதுவை அருந்திவிட்டு, படுப்பதற்காக எளிய பருத்தி உடைகளை அணிந்துகொண்டிருந்தாள். அவர் அழைப்பதாகத் தெரிந்ததும் அவள் அவசரமாக தாம்பூலத்தை போட்டுக் கொண்டு அங்கே வந்தாள். அவர் அவளை இழுத்து படுக்கைக்கு கொண்டு சென்றபோது அவளும் தன் உடலெங்கும் கிளர்ச்சியை உணர்ந்தாள். அவள் அவருடன் நீண்ட இடைவேளைக்குப்பின் கொண்ட உறவு அது. அவள் அடைந்த உடல் உச்சத்தை அவர் கவனிக்கவில்லை. அவர் முழுப்போதையில் இருந்தார். அப்போது எந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருக்கிறார் என்றே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அது அவருக்குத் தெரியவில்லை என்பதனால் அவள் அதை மறைக்கவில்லை.
அவர் தூங்கத்தொடங்கிய பிறகு அவள் எழுந்து கதவைத் திறந்து சிறு உப்பரிகைக்கு சென்று இரவில் பாட்னாவின் தெரு வெளிச்சமும் புழுதியும் குப்பைகளுமாக ஓய்ந்து கிடப்பதை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்போது அந்த ஆங்கில இந்திய மருத்துவரைத்தான் அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். பெருமூச்சுவிட்டுக் கொண்டும், உதிரி உதிரியான எண்ணங்களால் அடித்துச்செல்லப்பட்டும், அங்கே நின்றிருந்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக மனம் கலங்கி அழத்தொடங்கினாள். நீண்டநேரம் மௌனமாக அழுதுகொண்டிருந்துவிட்டு, கண்களைத் துடைத்தபடி தன் படுக்கையறைக்குச் சென்று மீண்டும் சற்று மது அருந்திவிட்டு, படுத்து அந்த மயக்கத்தில் தூங்கிவிட்டாள்.
ஓராண்டுக்குப் பின்னர் ருக்மிணி அந்த ஆங்கில இந்திய டாக்டரை தற்செயலாகச் சந்தித்தாள். ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்காக அவள் உள்ளூரில் இருந்த பெரிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தாள். அங்கே அவள் வேலைக்காரி சம்பாவுடன் வந்துகொண்டிருந்தபோது எதிரில் அவர் சென்றார். அவளை விட நாலைந்து வயது குறைவானவர் என்றாலும் இளமையாகவே தெரிந்தார். பார்த்த கணமே அவள் அவரை அடையாளம் கண்டுகொண்டாள். நெஞ்சுக்குள் துள்ளும் ஓர் எலி இருப்பது போல இதயத்தை உணர்ந்தாள். மீண்டும் ஏதோ நோயைச் சொல்லி அந்த மருத்துவமனைக்கே சென்றாள். அவர் அங்கே மருத்துவராகப் பணியாற்றுவதையும், அவர் பெயர் டாக்டர் கிறிஸ்டியன் சாண்டர்ஸ் என்றும் தெரிந்துகொண்டாள்.
அவர் என்ன துறையில் சிறப்பு மருத்துவர் என்பதை அவள் எவரிடமும் விசாரிக்காமலேயே நுணுக்கமாக கவனித்துப் புரிந்துகொண்டாள். எப்போதுமே அவள் வெளியுலகுக்கு தனியாகச் சென்றதில்லை. தானாகவே ஓர் அந்நியரிடம் பேசியதில்லை. எல்லாவற்றுக்கும் வேலையாட்கள் இருந்தார்கள். எதுவுமே தனக்குத் தெரியாது என அவள் எண்ணினாள். ஆனால் அத்தனை கூர்மையாக தன்னால் எல்லாவற்றையும் செய்ய முடிகிறது என்பது அவளுக்கே ரகசியமான ஒரு மகிழ்ச்சியை அளித்தது. நாட்கணக்கில் அவள் அந்த இன்பத்தில் திளைத்தாள். விதவிதமாக வியூகங்களை அமைத்துக்கொண்டே இருந்தாள்.
இறுதியில் அவள் திட்டமிட்டு அவருடைய நோயாளியாகச் சென்றாள். அவர் அமர்ந்திருந்த அறைக்கு வெளியே வேலைக்காரியுடன் அமர்ந்திருந்தபோது அவள் மிக அமைதியாக இருந்தாள். ஆனால் அங்கு வந்து அமர்வது வரை உச்சகட்ட பதற்றம் கொண்டிருந்தாள். கிளம்பும்போது அந்த சந்திப்பைத் தவிர்த்துவிடலாமா என்றுகூட எண்ணினாள். காரில் ஏற வரும்போது ஒவ்வொரு காலடியிலும் தயக்கம் இருந்தது. காரில் ஏறி அது கிளம்பியபோது இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்பதனால் வந்த நிம்மதிதான் அவளை காப்பாற்றியது. மீண்டும் ஆஸ்பத்திரி வாசலில் அந்த பதற்றம் தொடங்கியது. மயங்கி விழுந்துவிடுவோம் என்னும் அச்சம்கூட வந்தது.
அவள் பெயர் அழைக்கப்பட்டதும் அவள் எழுந்து உள்ளே சென்றாள். நர்ஸ் அவளுடைய கோப்புகளை கொண்டுசென்று டாக்டரின் மேஜை மேல் வைத்துவிட்டு வெளியே சென்றாள். டாக்டர் அவளிடம் ஒரு முக்காலியில் அமரும்படிச் சொன்னார். அவள் அமர்ந்துகொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் தன்னை நினைவுகூர்கிறாரா என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தாள். நினைவுகூர எந்த வாய்ப்பும் இருல்லை. எத்தனையோ ஆண்டுகள் தாண்டிவிட்டிருந்தன. அந்த நாளில்கூட அவள் மனதுக்கு வெளியே ஒன்றுமே நிகழவில்லை.
வாய்ப்பே இல்லை என்னும் எண்ணம் அவளுக்குச் சோர்வை அளித்தது. ஆனால் உடனே அது ஒரு திரைபோல மறைந்துகொள்ள வசதியாக அமைந்தது. அவள் புன்னகைத்துக் கொண்டாள். அவரையே பார்த்துக்கொண்டு, தான் யோசிப்பதெல்லாம் அவருடைய சோதனையில் சிக்குமா என எண்ணிக்கொண்டாள். அவர் அவளுடைய மருத்துவக் குறிப்புகளைப் பார்த்தார். அவள் தொடர்ந்து எதையும் சாப்பிடாமல் இருந்தபோதுதான் அவளை அவர் முன்பு பார்க்கவந்தார். அப்போதும் வயிற்றுப் பிரச்சினைகளைத்தான் அவள் சொல்லியிருந்தாள்.
அவர் அவளிடம் “புண் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, பார்த்துவிடலாம்” என்றார். அவர் குழம்பியிருப்பது தெரிந்தது. அவர் அவளிடம் அங்கிருந்த உயரமான ஒடுங்கிய மேடைக்கட்டிலில் படுக்கும்படிச் சொன்னார். நர்ஸை அழைத்து அருகே நிற்கச் செய்து அவளிடம் ஒவ்வொரு பொருளாக மெல்லிய குரலில் கேட்டார். நர்ஸ் அவளுடைய சேலையை நெகிழ்த்தி அவள் வயிற்றை வெளிப்படுத்த அவர் அதன்மேல் கைவைத்து அழுத்திச் சோதனை செய்தார். அவருடைய பார்வை ஒரு கணம் திரும்பி அவள் கண்களைச் சந்தித்துச் சென்றது.
ஒருகணம்தான், அவளுக்குத் தெரிந்துவிட்டது, அவர் அவளை நினைவுகூர்ந்துவிட்டார். ஆனால் மறுகணமே தீப்பட்டதுபோல் அவள் உள்ளம் சுருங்கி அதிரத்தொடங்கியது. அவர் கண்களில் ஒவ்வாமைதான் இருந்தது. அருவருப்பா, சீற்றமா, பயமா என்று தெரியாத ஒன்று. அவள் அவர் சொல்வதற்குள்ளாகவே எழுந்து அமர்ந்துவிட்டாள். அவர் கையுறையை கழற்றியபடி விலகிச்சென்று நர்ஸிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவள் முக்காலியில் மீண்டும் சென்று அமர்ந்தபோது தரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் பேசுவது எதையும் அவள் கேட்கவில்லை.
ஆஸ்பத்திரியில் இருந்து கார் கிளம்பி, தன்மேல் காற்று பட்டபோதுதான் எத்தனை வியர்த்துக் குளிர்ந்திருக்கிறோம் என்று அவள் உணர்ந்தாள். “வேகமாகப் போ, வேகமாக போ” என்று டிரைவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தாள். கார் வேகம் கொள்ளுந்தோறும் அவள் அமைதியிழந்தாள். வீட்டுக்குத் திரும்பி தன் அறைக்குச் சென்றபோதுதான் அவளால் பாதுகாப்பாக உணரமுடிந்தது.
படுக்கையிலேயே அவள் நீண்டநேரம் அமர்ந்திருந்தாள். வெளியே சன்னல் வழியாக ஆடிக்கொண்டிருந்த வாதாம் மரத்தின் பெரிய பளபளப்பான இலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல எண்ணங்கள் நிதானமடைந்தபோது என்ன நிகழ்ந்தது என்று எண்ணிப்பார்த்தாள். ஒன்றுமே நிகழவில்லை, எல்லாமே அவளுக்குள் நிகழ்ந்து அடங்கியவை மட்டும்தான். அவளாலேயே அதை தொகுத்துச் சொல்லிக்கொள்ள முடியாது. இன்னொருவர் அவள் சொன்னாலும்கூட என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முடியாது. அவள் மீண்டும் அவரைப் பார்க்கப்போவதே இல்லை. அவர் இனி அவள் உலகிலேயே இல்லை. அஞ்சுவதற்கு ஒன்றுமே இல்லை.
அவள் அன்று நீண்டநேரம் நீராடினாள். வேறு ஆடைகளை அணிந்து கொண்டு சம்பாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றாள். அங்கே நீண்டநேரம் பூஜைகளில் கலந்துகொண்டு இருட்ட ஆரம்பித்த பிறகு திரும்பி வந்தாள். அப்போது அனைத்தையும் முழுமையாகவே கடந்துவிட்டிருந்தாள். வீடு திரும்பியதுமே வழக்கம்போல ஒரு பிரச்சினை காத்திருந்தது. வேலைக்காரிகளில் ஒருத்தி வீட்டிலிருந்த பித்தளைப் பாத்திரம் ஒன்றை திருடிக்கொண்டு செல்ல முயன்றபோது பிடிக்கப்பட்டிருந்தாள். அவளை பார்த்து சாந்தமாக, “சரி, இனி வராதே” என்று சொல்லி அனுப்பினாள். ஹரீந்திரநாத் அன்று வரமாட்டார் என்று செய்தி வந்தது.
ராதிகா அன்று இரவு எட்டுமணிக்குத்தான் வந்தாள். அவளுக்கு பேட்மின்டன் காரிலேயே பேட்மின்டன் ஆடுவதற்கான குட்டை ஆடையை அணிந்தவள் அந்த ஆடையுடனேயே களைத்துப்போய் வந்திறங்கினாள். “என்னடீ இவ்வளவு நேரம்?” என்று அவள் நெற்றியின் கலைந்த மயிரை வருடியபடி ருக்மிணி கேட்டாள்.
“முடியவேண்டுமே? நான் மட்டும் நன்றாக ஆடினால் போதுமா? பிரியா எல்லாவற்றையும் கெடுத்துவிடுவாள் போலிருக்கிறது. நான் குளித்துவிட்டு வருகிறேன். நல்ல பசி” என்று அவள் மாடிக்குச் சென்றாள்.
மாடியில் அவளுக்கு ஏதோ ஃபோன் வந்தது. அவள் உரக்கச் சிரித்துப் பேசுவது கேட்டுக்கொண்டே இருந்தது. அவள் ராதிகாவுக்கான இரவுணவை எடுத்து வைக்கும்படிச் சொன்னாள். அவளுக்கு சாப்பாட்டுக்குப் பின் இனிப்பு இருந்தேயாகவேண்டும். பாட்னாவில் சில குறிப்பிட்ட கடைகளில் கல்கத்தா இனிப்பு, குறிப்பாக ரசகுல்லா கிடைக்கும். அது அவளுக்கு மிகப்பிடித்த சுவை.
ராதிகா வந்து சாப்பிட ஆரம்பித்தபோது அவள் அப்பால் அமர்ந்துகொண்டு, தன் வழக்கப்படி பட்டுநூலால் லேஸ் பின்னியபடி அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். கல்லூரியில் எப்போதுமே அவளுக்கும் சிலருக்கும் போட்டி இருந்தது. அந்தப் போட்டியாளர்கள் எப்போதுமே அவளால் மட்டம் தட்டப்பட்டார்கள். அல்லது அதை மட்டும்தான் அவள் தன் அம்மாவிடம் சொன்னாள்.
ராதிகா இனிப்பை தின்று கைகளை நக்கியபடி “அவர்கள் என்னென்ன திட்டம் போடுகிறார்கள் என்றெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்குள்ளேயே நான் ஒற்றர்களை வைத்திருக்கிறேன். என்ன, கொஞ்சம் செலவு, அதனால் பரவாயில்லை” என்றாள்.
ருக்மிணி அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நான் கொஞ்சம் படிக்கவேண்டும். ஆனால் இப்போதே தூக்கம் வருகிறது” என்றபடி ராதிகா இரண்டு இரண்டு படிகளாக தாவி ஏறி மாடிக்குச் சென்றாள். உடனே மூன்று மூன்று படிகளாக தாவி கீழிறங்கி வந்து “என்னை நாளைக் காலை ஐந்து மணிக்கு எழுப்பச்சொல். காலையில் படிக்கிறேன். இப்போது தூக்கம் வருகிறது” என்று சொன்னபின் மேலே சென்றாள்.
ருக்மிணி அதன்பின் வேலைக்காரர்களுக்கு மறுநாளைக்குரிய ஆணைகளை அளித்துவிட்டு, பூஜையறைக்குச் சென்று வணங்கினாள். பூஜையறையில் ஃபணீந்திரநாத்தின் படத்துடன் பிரபாவதியின் படமும் இருந்தது. பிரபாவதி அந்தப் புகைப்படம் எடுக்கும்போது, அந்த கிளிக் ஓசையில் துணுக்குற்றிருக்க வேண்டும். அவள் திகைப்புடன் பார்ப்பது போலிருந்தது. அவளுடைய நிரந்தரமான முகமாக அந்த திகைப்பு நிலைகொண்டுவிட்டது. ஃபணீந்திரநாத் வழக்கம்போல சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவள் மாடிக்குச் சென்றபோது நன்றாகவே இருட்டிவிட்டது. சாலையில் வண்டிகள் ஏதும் ஓடவில்லை. காற்றில் மரங்கள் அலைபாயும் ஓசை மட்டும் கேட்டது. அவள் தன் அறை நோக்கிச் செல்லும்போது ராதிகாவின் அறை விரியத் திறந்து கிடப்பதைப் பார்த்தாள். அருகே சென்று கதவை மூடுவதற்கு முன் ராதிகாவைப் பார்த்தாள். மார்பின்மேல் ஒரு புத்தகத்துடன், இளநீல விளக்கொளியில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். சற்றே அழுத்தமான நிறத்துடன் பெரிய இமைகள் மூடியிருந்தன. உதடுகள் கொஞ்சம் திறந்து, பற்களின் கீழ்விளிம்பு தெரிய, அவள் தூங்கிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான எதிலோ ஆழ்ந்திருப்பவள் போலத் தோன்றச்செய்தது.
அலைபோன்ற ஒன்று வந்து தன்னை அறைந்துசென்றதுபோல ருக்மிணிக்குத் தோன்றியது. அந்நடுக்கம் அவள் கால்களை வலுவிழக்கச் செய்ய, சுவர்மேல் கைகளை ஊன்றிக்கொண்டாள். நடந்து தன் அறைக்குச் சென்றபோது ஓரிரு காலடிகளிலேயே அந்த அதிர்வு அகன்று, மீண்டும் இயல்பாக ஆனாள். படுக்கையில் சென்று படுத்துக்கொண்டபோது அவள் உடல் நன்றாகவே தளர்ந்துவிட்டிருந்தது. கால்களின் நரம்புப் புடைப்புகளில் உளைச்சல் எழுந்தது. கதவை மூடிவிட்டு பீரு கொடுத்த புட்டியை எடுத்து சிறிதளவு ஊற்றி நீர் கலந்து குடித்துவிட்டு படுக்கையில் படுத்தபோது அவளுக்கு அன்றைய நாள் நினைவில் இருக்கவில்லை. வேறேதோ நினைவுகள் வந்துகொண்டிருந்தன.
கானபூதி தன் வலக்கையை நோக்கி “இந்தக் கைக்குரிய கேள்வி இது” என்றது. “ருக்மிணி அன்று உறங்குவதற்கு முன் நினைத்துக்கொண்டது எதைப் பற்றி?”
“தன் மாமியாரான பிரபாவதியைப் பற்றி” என்று சொல்லி குணாட்யர் உரக்கச் சிரித்தார்.
“ஆம்” என்ற கானபூதி “இரண்டாவது கேள்வி, பூஜையறையில் இருக்கும் தன் மாமியாரின் படத்தை ருக்மிணி மெய்யாகவே வணங்கினாளா?” என்றது.
“ஆம், அதில் என்ன சந்தேகம்?” என்றார் குணாட்யர். மேலும் உரக்கச் சிரித்துக்கொண்டு “மனிதர்கள் இன்னொருவரை வணங்குவதில்லை” என்றார்.
கானபூதியும் சிரித்துவிட்டது. நிழல்கள் சிரித்துக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக்கொண்டன. இருண்ட காடு முழுக்க அந்தச் சிரிப்பு எதிரொலிகளுடன் கலந்து நிறைந்தது.
(மேலும்)
சென்னை சிறுகதை அரங்கு

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது கவிஞர் சோ. விஜயகுமாருக்கு வழங்கப்படுகிறது. விழா நிகழ்வு வரும் 8 ஜூன் 2025 அன்று கவிக்கோ அரங்கம் சென்னையில் நிகழும். காலை முதல் நிகழும் இலக்கிய அரங்கில் இரண்டு சிறுகதையாசிரியர்களின் படைப்புகள் விவாதிக்கப்படும்.
எழுத்தாளர் விஜயராவணனின் கதைகள் அரங்கில் விவாதிக்கப்படுகின்றன
விஜயராவணன் தமிழ் விக்கி பதிவு விஜயராவணன் இணைப்புகள் விஜயராவணன் படைப்புகள் அரூ இணைய இதழ் விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும் போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் இரண்டு கதைகள் விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண் : தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை அகாலம்: விஜய ராவணன் மௌன மாருதம் – விஜய ராவணன் விஜயராவணனின் *நிழற்காடு சிறுகதை தொகுப்பு* – விஜயராணி மீனாட்சி நிழற்காடு – சிறுபத்திரிக்கைகளின் தவறு நூல்நோக்கு: நிழல்களின் கதைகள்8 மே 2025 அன்று சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் எழுத்தாளர் ரம்யாவின் படைப்புகள் பேசப்படுகின்றன.
ரம்யா தமிழ் விக்கிரம்யா இணைப்புகள்
ரம்யாவின் நீலத்தாவணி சுரபி இருளில் இருந்து ரம்யா கனலி ரம்யா கதைகள் இணைப்பு ரம்யா வலைத்தளம் தூசி ரம்யா சிறுகதை ரம்யா சிறுகதைகள் வல்லினம் இதழ்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
