Jeyamohan's Blog, page 81
June 9, 2025
குமரகுருபரன் விருது விழா 2025
ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் அமைப்பைப் பொறுத்தவரை விழாக்களால் தான் அடையாளப் படுத்தப்படுகிறது. இப்போது கிட்டத்தட்ட ‘உலகெங்கும்’ என்றுகூட சொல்லமுடியும். மே மாதம் குரு நித்யா அரங்கு .(இந்த ஆண்டு அது ஜூனில் வரும் வாரம்). அடுத்து உடனே ஜூன் மாதம் குமரகுருபரன் விருது. ஜூலையில் குருபூர்ணிமா. இந்த ஆண்டு ஜூலையில் ஐரோப்பிய இலக்கிய முகாம். ஆகஸ்டில் தமிழ்விக்கி- தூரன் விருது. அக்டோபரில் அமெரிக்காவில் இலக்கியமுகாம். டிசம்பரில் விஷ்ணுபுரம் விருது. “ஜனவரி முதல் ஏப்ரல் வரை சும்மா இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது சார்” என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜூனில் இரு நிகழ்வுகள். குரு நித்யா கருத்தரங்கை ஜூனுக்கு தள்ளிவைத்தோம், அதை ஊட்டியில் நடத்தலாமென்னும் எண்ணத்துடன். அது முடியாது போனமையால் (எங்கள் நிகழ்வுகளின் எண்ணிக்கைதான் காரணம்) இரண்டு விழாக்கள் ஒரே மாதம் அமைந்துவிட்டன. இந்த ஆண்டும் ஒரு அபாரமான நண்பர்கூடுகையாக அமைந்தது.
எங்கள் நிகழ்வுகளின் இரண்டு சிறப்புகள், பொதுவாக இங்கே நிகழும் பிற விழாக்களில் இருந்து கற்றுக்கொண்டவை. ஒன்று நீளமான உரைகளுடன் நீண்ட நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துவதில்லை. உரைகளுடன் கூடிய நிகழ்வுகள் 2 மணி நேரத்திற்குள் முடியும். பகல் முழுக்க நிகழும் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களும் பங்குகொள்ளும் உரையாடல் அமர்வுகள். அவை விறுவிறுப்பாக நிகழும், உரைகள் அளிக்கும் சலிப்பு இருப்பதில்லை. இரண்டு, பங்கேற்பாளர்களின் நூல்களைப் பற்றி முன்னரே அறிவிப்போம். அவற்றை பலர் வாசித்துவிட்டு வந்திருப்பார்கள். ஆகவே விவாதம் பயனுள்ள முறையிலேயே நிகழும்.
இந்த இரு காரணங்களால் எங்கள் விழாக்களில் வாசகர் பங்கேற்பு எப்போதுமே மிகுதி. அரங்கு நிறைந்து ஒரு பகல் முழுக்க தீவிரமான இலக்கியவிவாதம் நிகழ்வது என்பது தமிழகத்தில் மிக அரிதான ஒன்று. நான் இதை அனைவருக்கும் பொதுவாகவே சொல்வேன். நம் இலக்கிய நிகழ்வுகள் வாசகர்களை கருத்தில் கொண்டவையாக அமையவேண்டும்.அவர்களுக்குச் சுவாரசியமானவையாகவும், அவர்கள் எழுந்து செல்லும்போது யோசித்துக்கொண்டுசெல்ல சிலவற்றை அளிப்பவையாகவும் அமையவேண்டும்.

இலக்கியவாசகர்கள் இலக்கிய நிகழ்வுகளால் சலிப்புற்றிருக்கிறார்கள், அவர்களை வரச்செய்யவேண்டும் என்றால் அவர்களை எண்ணியே நிகழ்வுகளை ஒருங்கிணைக்கவேண்டும் என நாம் உணர்ந்தாகவேண்டும். அதற்கான சில நெறிகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
நேரக் கட்டுப்பாட்டை மீறியும் உள்ளடக்கமில்லாமலும் பேசும் பேச்சாளர்களை தவிர்த்துவிடவேண்டும். அவர்கள் எவர் என நமக்கெல்லாமே தெரியும். காகிதங்களைப் பார்த்து நீண்டநேரம் வாசிப்பதுபோல மேடையை வீணடிக்கும் செயல் வேறு இல்லை.வீண் பேச்சுக்களை தவிர்க்கவேண்டும். ‘ஜாலியாக’ப் பேசுவது என்ற பாவனையில் பேசப்படும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அப்போது அரங்கினர் சிரித்தாலும்கூட பிறகு நேரம் வீணடிக்கப்பட்டதாகவும் உணர்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். அரங்கில் வேடிக்கை, மகிழ்ச்சி, சிறிய சீண்டல்கள் எல்லாம் இருக்கலாம். ஆனால் ஓர் உரை முழுமையாகவே அப்படி அமைந்துவிடவே கூடாது. வாசகர்கள் அறிய, சிந்திக்க ஏதேனும் இல்லாத ஓர் உரை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீளுமென்றால் அது வீண்.எக்காரணம் கொண்டும் அழைப்பிதழில் பேச்சாளர் என்று பெயர் குறிப்பிடப்படாத எவரும் பேசக்கூடாது. கேள்வி என எழுந்து பேசுபவர்கள்கூட இரண்டு நிமிடங்களுக்குமேல் பேச அனுமதிக்கப்படலாகாது. அரங்க விவாதங்கள் திசைதிருப்பப்படலாகாது. பலசமயம் மேடையில் இருக்கும் முக்கியமானவர்களை பார்த்து நிகழ்வுக்கு வருபவர்கள் சம்பந்தமே இல்லாதவர்கள் அரங்கை கையிலெடுப்பதைக் கண்டு வெறுத்துப் போகிறார்கள்.’தூண்டில் புழு மாதிரி எழுத்தாளர்களை காட்டிட்டு நாம கவ்விட்டா அவனுக பேச ஆரம்பிச்சிடறானுக’ என்று ஒரு நண்பர் ஒரு நிகழ்வு பற்றிச் சொன்னார்.நேரம் அமைப்பாளரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். தொடங்க சிலசமயம் சில நிமிடங்கள் தாமதமாகலாம். முடிப்பது சரியான நேரத்தில் நிகழவேண்டும். பங்கேற்பாளர்கள் பலர் தொலைவில் இருந்து வருபவர்கள்.குமரகுருபரன் அரங்கில் காலை பதினொரு மணிக்கெல்லாம் திரும்பிப் பார்த்தபோது அரங்கு நிறைந்திருப்பதைக் கண்டேன். இரவு ஏழரை மணிக்கு நிகழ்ச்சி முடியும் வரை அந்தத் திரள் அப்படியே இருந்தது. நடுவே அளிக்கப்பட்ட இரண்டு மணிநேர இடைவெளியில்கூட அரங்கிலும் சுற்றிலும் நின்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வு ஓர் இலக்கிய அமைப்பால் ஒருங்கிணைக்கப்படுவது. ஆனால் பங்கேற்பாளர்கள் எல்லாவகையான கருத்தியல் சார்புகளையும், இலக்கிய எண்ணங்களையும் கொண்டவர்கள் என்பதை அந்தக் கூட்டத்தைப் பார்த்தே ஒருவர் உணரமுடியும். (இல்லை, ஒரே இலக்கியக் குழுதான் இது என சொல்வீர்கள் என்றால் தமிழில் இலக்கியம் என்பதே இந்தக் குழுவுக்குள்தான் என்றுதான் பொருளாகும்) எல்லா தரப்பினரும் வந்திருந்தனர் என்பதனால் எல்லா இடங்களிலும் விவாதங்கள். காலையில் நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே விவாதங்கள் தொடங்கிவிட்டன என்று கேள்விப்பட்டேன்.
அந்த விவாதம் அரங்கில் தொடர்ந்து நடைபெற்றது. விஜயராவணன், ரம்யா அரங்கிலும் சரி; றாம் சந்தோஷ், சசி இனியன் அரங்கிலும் சரி தொடர்ச்சியாக மாறுபட்ட கோணங்களில் கேள்விகள் எழுந்தன. பெரும்பாலான கேள்விகள் ‘நாம் இதை இப்போ அரங்கு தொடங்குறதுக்கு முன்னாடியே பேசினோம்’ என்று தொடங்கின. கேள்விகளில் ஒரு பகுதி எதிர்நிலை கொண்டவையாகவும் இருந்தன. ரம்யா, விஜயராவணன், றாம் சந்தோஷ், சசி இனியன் நால்வருமே அவற்றை எதிர்கொண்டார்கள். றாம் சந்தோஷ் ஒரு வகையான மெல்லிய அங்கதத்துடன் பதில் சொன்னார். விஜய் ராவணனும், ரம்யாவும் தீவிரமாகவும் அகவயமாகவும் பதில் சொன்னார்கள். சசி இனியன் பல பதில்களை அரங்கிலேயே யோசித்து சற்று தாமதித்துப் பதில் சொன்னார்.
மனுஷ்யபுத்திரன், போகன் சங்கர், வெய்யில் ஆகியோரின் அமர்வு ஒரு தன்னியல்பான பொதுவிவாதம் எப்படி நிகழுமோ அப்படி நிகழ்ந்தது. அதில் என்ன பேசுபொருள் முதன்மைப்படும் என முன்னர் சொல்ல முடியாது. எங்கே முரண்பாடு நிகழுமென்றும் வகுக்கமுடியாது. அந்த தன்னியல்பான தன்மையே இந்தவகையான விவாதங்களின் அழகு. முரண்பாடுகள் உணர்ச்சிகரமாகக்கூட ஆகலாம், கருத்துவிவாதம் என்னும் எல்லையைக் கடக்காதவரை அவை மிக ஆக்கபூர்வமானவையே. இந்த விவாதம் அத்தகைய ஒரு நல்ல நிகழ்வு.
பேசுபொருளுக்கு சற்றே விலகி அவ்விவாதத்தில் மையம்கொண்டது ‘இளம் கவிஞர்கள் இதுவரையிலான கவிதைமரபை கல்விநீக்கம் (unlearn)செய்யவேண்டும் என்னும் வெய்யிலின் கருத்துக்கு மனுஷ்யபுத்திரன் அளித்த எதிர்வினை, போகன் அளித்த பதில், தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல் ஆகியவை. மூவருமே தெளிவாகவும் உறுதியாகவும் தங்கள் தரப்பைப் பேசினார்கள். அது வாசகர்கள் மேற்கொண்டு யோசிக்கவேண்டிய ஒரு புள்ளி. ஒவ்வொருவருக்கும் அதில் ஒரு பார்வை இருக்கலாம். அவர்கள் அதை பிறருடன் விவாதித்து வளர்க்கலாம்.
நண்பர் வசுதேந்திராவின் அரங்கு அவருடைய மோகனசாமி (தமிழில் கே.நல்லதம்பி )என்னும் நூலை ஒட்டியே பெரிதும் நிகழ்ந்தது. அவருடைய தன்வரலாற்றுத்தன்மை கொண்ட கதைகள அவை. தன்னை ஒரு பால்புதுமையினர் என அறிவித்துக்கொண்ட அவர் அதன் விளைவுகளையும், அதன் அவசியத்தையும் விரிவாகவே பேசினார். வசுதேந்திரா நடை – கூறுமுறை இரண்டிலும் அசோகமித்திரனுக்கு அணுக்கமானவர். ஆனால் விரிவான வரலாற்றுநாவல்களை இப்போது எழுதி வருகிறார். வசுதேந்திராவின் உரையாடல் இயல்பான ஒழுக்கு கொண்டதாகவும், உணர்ச்சிகரமானதாகவும் இருந்தது.
இந்த அரங்கில் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. என்னுடைய ஏழாம் உலகம் நூலின் கன்னட மொழியாக்கம் சாந்தி கே அப்பண்ணா அவர்களால் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ் கற்று, தமிழில் இருந்து தன் முதல் கன்னட மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மொழியாக்கம் மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். மேடையில் அதை வெளியிட பெற்றுக்கொண்டார்.
இன்னொரு நூல் விந்தியா என்னும் தீற்றல். ரம்யாவின் நீலி மின்னிதழ் பெண்ணிய இலக்கியத்தை முன்வைத்து வருகிறது. அதன் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மறைந்துபோன (அல்லது ரம்யாவின் பார்வையில் மறைக்கப்பட்ட) பெண் படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. நீலி பதிப்பகத்தின் முதல் நூல் இது. விந்தியா எழுதியது ஐம்பது- அறுபதுகளில். ஏறத்தாழ எழுபதாண்டுகளுக்குப் பின் அவருடைய படைப்புகள் மீண்டும் வெளியாகின்றன.
இந்த வகையான விழாக்களின் முக்கியத்துவம் பற்றி எப்போதுமே சொல்லிவருகிறேன். இவற்றில் பேசப்படும் விஷயங்களை நாம் நூல்களில் வாசிக்கலாம். அவை உடனடியாகக் காணொளியாகவும் கிடைக்கின்றன. ஆனால் நேரடி நிகழ்வு உருவாக்கும் உணர்வுநிலைகளே வேறு. அவை நாம் இலக்கியம் என்னும் ஒரு பேரியக்கத்தின் உறுப்புகள் என நமக்குக் காட்டுகின்றன. நம் கவனம் அங்கே ஒருங்கு குவிவதைப்போல எங்கும் நிகழ்வதில்லை. நட்புகளை அடைகிறோம், பேணிக்கொள்கிறோம். இலக்கியச்சூழலில் இருக்கும் எவருக்கும் இயல்பாக உருவாகும் தனிமையுணர்வும், அர்த்தமின்மை உணர்வும் இந்தவகையான சந்திப்புகளால்தான் இல்லாமலாகின்றன என்பது என் முப்பது வருட அனுபவம். இந்த இணைய அடிமை சூழலில் நாம் பிடிவாதமாக எல்லாவகையான நேர்ச்சந்திப்புகளையும், நேரடி நிகழ்வுகளையும் நிகழ்த்திக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
மாலை நிகழ்வில் சோ.விஜயகுமார் பரிசை அவருடைய அம்மா மேடைக்கு வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அவர் அம்மா உடல்நலம் குன்றியநிலையிலும் மேடையேறி விருதைப் பெற்றுக்கொண்டார். அது போகன் உள்ளிட்ட அனைவரையும் உணர்ச்சிகரமானவர்களாக ஆக்கியது. மாலைநிகழ்வை நண்பர் சிறில் அலெக்ஸ் ஒருங்கிணைத்தார்.
சரியாக ஏழரை மணிக்கு நிகழ்வு முடிந்தது. வழக்கம்போல சிறிதுநேரம் பொதுவான சந்திப்புகள், முகமன்கள், புகைப்படங்கள், விடைபெறல்கள். நிறைவான இன்னொரு விழா.
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்போது சென்னையில் இன்னொரு அமைப்பை உருவாக்கி தொடர்ச்சியாக நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். வெவ்வேறு படைப்பாளிகளை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரும் கருத்தரங்குகள் அவை. ஆகவே நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் தேர்ச்சி அடைந்துவிட்டிருக்கின்றனர். நண்பர் காளி பிரசாத் இந்நிகழ்வை முன்னின்று நடத்தினார். எல்லா முடிவுகளும் அவருடையவையே. நான் காவியம் எழுதும் உணர்வுநிலையில் இருந்தமையால் எட்டாம்தேதி காலையில்தான் நிகழ்வையே கவனித்தேன். நண்பர்கள் சண்முகம், ராஜகோபாலன், ராகவ் ஆகியோர் உடன்நின்று நிகழ்வை வெற்றிகரமானதாக்கினர்.
ஆண்டுதோறும் குமரகுருபரன் நினைவுக்காக இவ்விழாவை நிகழ்த்த ஒத்துழைக்கும் கவிதா சொர்ணவல்லிக்கும் ஒரு நன்றி சொல்லவேண்டும்.
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது வழங்குதல் நிகழ்வு. டாக்டர் நடராஜன் அவர்களின் குமரகுருபரன் நினைவு உரை. விருது ஏற்புரை
விஜயலட்சுமி உரை
போகன் சங்கர் உரை.
வசுதேந்திரா உரை
ஜெயமோகன் உரை
காவியம் – 50
(பைசாசம்.சாதவாகனர் காலம், பொமு:2, டெல்லி அருங்காட்சியகம்)
கானபூதி சொன்னது. “வான்மீகி என்னிடம் அவருடைய காவியத்தின் முழுக்கதையையும் சொன்னார். தசரதன் அடைந்த சாபத்தில் தொடங்கி, கைகேயிக்கு அவர் அளித்த வாக்குறுதி என நீண்டு, ராமனின் பிறப்பு, அவன் முடிதுறந்தது, காட்டுக்கு வந்தது, குகனைச் சந்தித்தது, சூர்ப்பனகையை அவன் கேலிசெய்தது, மாரீசனைக் கொன்றது, ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது, ஜடாயுவிடமிருந்து அச்செய்தியை ராமன் அறிந்துகொண்டது, வாலியைக் கொன்றது, வானரப்படையை திரட்டி இலங்கைமேல் படைகொண்டு சென்றது என கதை நீண்டது.”
அந்தக் கதையை அவர் சொல்லி முடித்ததும் அவர் என்னிடம் “என் காவியம் இன்று கவிஞர்களால் பாரதமெங்கும் கொண்டுசெல்லப்படுகிறது என்று அறிந்தேன். நீயும் கேட்டிருக்கலாம்.”
நான் புன்னகையுடன் அவரிடம் சொன்னேன். “நான் கதைகள் நிகழும்போதே அவற்றை உள்நுழைந்து அறியும் பைசாசிகன். என் நிழல்கள் தசரதனுடன் இருந்தன, ராமனையும் பின்தொடர்ந்தன”.
வால்மீகி பெருமூச்சுடன் “இருக்கலாம்” என்றார். “என்னால் அந்தக் கதையை எப்படி அப்படி நுணுக்கமான செய்திகளுடன் எழுதமுடிந்தது என்று வியப்படைகிறார்கள். நான் அக்கதையை சீதையிடமிருந்து கேட்டிருக்கலாமென்றால் அவளும் அவற்றில் பெரும்பகுதி நிகழ்வுகளில் உடனிருக்கவில்லை.”
“நான் இந்தவழியாகச் சென்ற தெற்குநிலத்து நிஷாத குலப்பெண் ஒருத்தியின் செவிகளில் பேசினேன். அவள் உள்ளத்தில் நான் நுழைவதற்குரிய ஒரு விரிசல் இருந்ததைக் கண்டு உள்ளே நுழைந்தேன். அவளிடம் நான் இந்தக் கதையை முழுமையாகவே சொன்னேன். அவளுடைய கனவுகளில் இருந்து அவள் பெற்ற மகனின் கனவுகளுக்கு இந்தக் கதை நேரடியாகச் சென்றது. என் மொழியை திருத்தி புரிந்துகொண்டு இக்கதையை அவன் முழுமையாக தன்னுள் இருந்து எடுத்துக்கொள்ள நீண்டநாட்களாகியது” என்று நான் சொன்னேன்.
வால்மீகி வியப்படையவில்லை. “என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் எல்லாமே எனக்கு முன்னரே தெரிந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. நான் மொழிகளைக் கற்கும்போது நான் கற்ற வேகத்தைகக் கண்டு அனைவரும் திகைத்தார்கள். ஆனால் நான் புதிதாகக் கற்கவில்லை, ஒவ்வொரு சொல்லையும் நினைவுகூர மட்டுமே செய்தேன்.”
“நான் உங்கள் காவியத்தின் மறுபக்கத்தை நான் உங்கள் மாணவராகிய லோமஹர்ஷணரின் வழியில் வந்த மூன்றாவது தலைமுறையை சேர்ந்த லோமஹர்ஷணருக்குச் சொன்னேன்” என்று நான் சொன்னேன். “அவர் உங்கள் நூலுக்கு நீட்சியாக உத்தரகாண்டம் ஒன்றை எழுதினார். அது உங்கள் நூலுக்கான மறுப்பும் கூட. ராவணனைப் பற்றி நீங்கள் எழுதியவை ஒரு பக்கம்தான். அரக்கர்குலத்துப் பேரரசருக்கு தனக்கான வரலாறும் பெருமையும் உண்டு. அவருடைய உள்ளம் வெளிப்பட்டது லோமஹர்ஷணரின் காவியத்தில்தான்.”
தொடர்ந்து, “அதன் பின் எத்தனையோ ராமாயணக் கதைகள், காலந்தோறும் ஒன்று. ஒன்று இன்னொன்றை மறுத்தும் திருத்தியும் திரித்தும் தன்னை உருவாக்கிக் கொண்டது. கதைகளுக்கு அப்படியொரு இயல்புண்டு, அவை கதைசொல்லியிடமிருந்து விலகிச்செல்லும். கதைசொல்லியைத்தான் அவை முதலில் நிராகரிக்கும்… லோமஹர்ஷணரின் காவியம் பின்னர் எப்படியெல்லாம் திரிக்கப்பட்டது என்பதையும் நான் அவருக்குச் சொன்னேன். அவர் மனம் சோர்ந்து துங்கபத்ரையின் கரையில் அமர்ந்து உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்டார்” என்று நான் சொன்னேன்.
வால்மீகி ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்.
“என்ன ஆயிற்று உங்கள் காவியத்திற்கு?” என்று நான் கேட்டேன். “கதைசொல்லத் தொடங்கினீர்கள், முடித்துவிடுங்கள்”
“அது சீதையின் கதை. ஷத்ரியர்களின் வெற்றிக்கதை அல்ல. நிஷாதர்குலத்து அன்னையின் துயரத்தின் கதை” என்று வால்மீகி சொன்னார். “அதை நான் சீதையிடம் அளித்தேன். நான் தெற்குநோக்கிய பயணம் ஒன்றை தொடங்குவதாக இருந்தேன். ஒரு காவியம் அதன் ஆசிரியனிடம் விட்டுச்செல்லும் வெறுமை என்னில் நிறைந்திருந்தது. இனி நான் அதில் செய்ய ஒன்றுமில்லை. அதை எழுதுவதற்காகத்தான் நான் இளமைமுதல் மொழியால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். என் பணியும் முடிந்தது என்று பட்டது” வான்மீகி தொடர்ந்தார்.
நான் சீதையிடம் சொன்னேன். “மகளே, இந்த சுவடிகள் உன்னிடம் இருக்கட்டும். இது உன் கதை மட்டும் அல்ல. உன் அன்னையரின் கதையும், இனி வரப்போகும் உன் மகள்களின் கதையும்கூட. அவர்கள் இங்கே வாழவேண்டும் என்றால் இந்தக்கதை இங்கே நிலைகொள்ளவேண்டும். உனக்கு நிகழ்ந்த துயரமெல்லாம் வரவிருக்கும் உன் மகள்களுக்கான விடுதலையின் பொருட்டுதான் என்று எண்ணிக்கொள். இதோ உன் கதையை பூமியெனும் தாயின் கதையாகவே நான் விரித்து எழுதியிருக்கிறேன். இந்தக் காவியத்தை நீ படித்துப்பார்.”
சீதை அந்நூலைப் பெற்றுக்கொண்டாள். அவள் அதை படித்து முடிப்பது வரை நான் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அவள் அதை பன்னிரு நாளில் படித்து முடித்தாள். என்னை அவள் தன் மகன்களை அனுப்பி அழைத்துவரச் சொன்னாள். அவளை சரயுவின் கரையில் சந்தித்தேன். அவள் முகம் தெளிந்து புன்னகை மலர்ந்திருப்பதைக் கண்டேன். சரயுவில் இரண்டு நாரைகள் விளையாடிக்கொண்டிருந்தன.
“இது என்றும் வாழும் காவியம். நானும் என் அன்னையரும் சொல்ல விரும்புவன அனைத்தையுமே சொல்லிவிட்டீர்கள். இனி நீங்களே ஆதிகவிஞர் என்று அழைக்கப்படுவீர்கள்” என்று சொல்லி அவள் தன் கையில் இருந்த மகிழமலர் ஒன்றை எனக்கு அளித்தாள்.
அதை வாங்கி என் சடைக்கொண்டையில் சூடிக்கொண்டேன். “மகளே, எவர் இந்த நூலை வரும் தலைமுறைகளுக்குக் கொண்டுசென்று சேர்க்கிறார்களோ அவர்களிடம் இதை உன்னுடைய சொல் என்று கூறிக் கையளித்துவிடு. இனி நீ செய்யத்தக்கது அதுவே” என்றேன். அன்று மாலையே நான் என் ஆசிரமத்தில் இருந்து எங்கே செல்கிறேன் என்று எவரிடமும் சொல்லாமல் கிளம்பிவிட்டேன்.
நான் பல ஆண்டுகள் பயணம் செய்தேன். பல ஊர்களிலும், காடுகளிலும் வாழ்ந்தேன். பல மலைகளையும் நதிகளையும் கடந்தேன். இயற்கையாகவே எனக்கு சமாதி அமையும் என நினைத்தேன். என் உயிர் பிடிவாதமாக உடலில் தங்கியிருந்தபோது அதன் நோக்கம்தான் என்ன என்று வியந்துகொண்டிருந்தேன். அலைந்து திரியும் கதைசொல்லிகளிடம் இருந்து பின்னர் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். அந்தச் செய்தி உண்மையா என பலரிடம் விசாரித்து உறுதிசெய்துகொண்டேன்.
நான் கிளம்பி சில ஆண்டுகளுக்குப் பின் அயோத்தியின் ராமன் அஸ்வமேத வேள்வி ஒன்றைச் செய்தான். அவனுடைய குதிரையை பிடித்துக் கட்ட பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு நாடுகளிலுள்ள எந்த அரசர்களும் துணியவில்லை. லட்சுமணனும், பரதனும் ,சத்ருக்னனும் குதிரையுடன் படைகொண்டு சென்றார்கள். அந்தக் குதிரை சரயு நதிக்கரைக்கு வந்தபோது லவனும் குசனும் அதைப் பிடித்துச் சென்றார்கள்.
அதை மீட்பதற்காக வந்த சத்ருக்னனை லவன் ஒற்றைக்கு ஒற்றைப் போருக்கு அழைத்தான். அவன் தோற்று பின்வாங்கிய செய்தியை அறிந்து பரதன் போருக்கு வந்தான். அவனும் தோற்கடிக்கப்பட்டதும் இறுதியாக லட்சுமணனும் போருக்கு வந்து தோற்றான். அவர்கள் தாங்களே கொண்டுவந்த அம்புகளை பயனபடுத்தினார்கள். லவனும் குசனும் அருகே இருந்த நாணல்களையே அம்புகளாகப் பயன்படுத்தினார்கள். அம்புகள் தீர்ந்தன, நாணல்கள் முடிவே அற்றவை. நான் கற்றுத்தந்த விற்கலைதான் அவர்களை வெல்லவைத்தது.
இறுதியாக ராமன் அவர்களுடன் போரிடுவதற்காக வந்தான். ஒற்றையர் போரில் லவனையும் குசனையும் தன் தம்பிகளால் வெல்லமுடியவில்லை என்ற செய்தியே அவனுக்கு ஒரு சந்தேகத்தை உருவாக்கியிருந்தது. லவனும் குசனும் நடந்தவற்றைச் சீதையிடம் சொன்னார்கள். சீதை தன் கையில் இருந்த நான் இயற்றிய காவியத்தை அளித்து “வருபவர் உங்கள் தந்தை. அவரை நீங்கள் தோற்கடிக்கக் கூடாது. அடிபணிந்து இந்தக் காவியத்தை அவரிடம் கொடுங்கள்” என்றாள்.
அதன்படி தங்களிடம் போருக்கு வந்த ராமனைச் சந்தித்து, காலடியை வணங்கி, லவனும் குசனும் அந்தக் காவியத்தை அளித்தனர். அதை படித்ததும் ராமன் மகிழ்ந்து அவர்களை தன் மகன்களாக ஏற்றுக்கொண்டான். அவர்கள் தன் மகன்கள் என்பதற்கு காவியத்தின் ஏற்பு போதும் என்று அவன் அறிவித்தான். அச்செய்தியை அறிவிக்க லவனும் குசனும் சீதையைத் தேடி வந்தனர். சீதை முன்னரே கிளம்பியிருந்தாள். அவர்கள் அவளுடைய காலடியை தொடர்ந்து அவளை தேடிச்சென்றார்கள். அவள் காட்டில் இருந்த மிருச்சத்வாரம் என்னும் அடியில்லாத ஆழம் கொண்ட பிலத்தில் குதித்து மறைந்துவிட்டதை அறிந்தார்கள்.
“என் காவியத்தின் தொடக்கத்தின் இரண்டு காண்டங்களையும், இறுதியின் மூன்று காண்டங்களையும் அகற்றிவிட்டு எஞ்சிய பகுதியையே சீதை தன் மகனிடம் அளித்தாள். அவள் அகற்றிய ஐந்து காண்டங்களையும் அவள் தன்னுடன் எடுத்துக்கொண்டு மண்ணுக்குள் புகுந்து மறைந்தாள்” என்று வால்மீகி சொன்னார். “நான் இயற்றிய முதல் இரு காண்டங்களில் மண்ணே முதன்மைத் தெய்வம் என்று சொல்லியிருந்தேன். அதர்வத்தின் அழியாத மெய்ஞானத்தை முன்வைத்திருந்தேன். இறுதிக்காண்டத்தில் மண்ணையும் பெண்ணையும் உடைமையாக்கி, சூதாட்டப் பொருளாக்கி விளையாடுவதன் கீழ்மையை வெளிப்படுத்தியிருந்தேன்.”
“தொடக்கமும் முடிவும் இல்லாத என் காவியம் ராமனின் வெற்றியைப் பாடும் நூல் என்றே அவனுடைய அவைப்புலவர்களுக்குத் தோன்றியது. அந்தக் காவியத்திற்கு முதலில் ஒரு நாந்தியையும் இறுதியில் ஒரு ஃபலச்சுருதியையும் சேர்த்து, இராமவிஜயம் என்று பெயரிட்டு, அவர்கள் அயோத்தியின் அவையில் அரங்கேற்றினார்கள். என் மாணவர்களில் லோமஹர்ஷணன் தவிர பிறர் அனைவரும் அந்த விழாவில் கலந்துகொண்டார்கள். அந்த காவியமே லவனையும் குசனையும் பட்டத்து இளவரசர்களாக மக்கள் ஏற்கும்படிச் செய்தது. அவர்கள் அதை ராமாயணம் என்றனர்.”
“ஆம், சீதாயணம் என்றால் சீதையின் பயணம், அது சரியான தலைப்பு. ராமாயணம் என்பது பொருந்தாத தலைப்பு அல்லவா” என்று நான் சொன்னேன். “மக்களுக்கு அதன் முதல் தலைப்பு தெரிந்திருக்கிறது என்பதற்கான சான்று அப்பெயர்தான்.”
வால்மீகி கசப்பான புன்னகையுடன் “இதோ பாரதம் முழுக்க நிஷாதர்களின் கதைகளில் அவர்களின் குலங்களை அழித்தவனைப் புகழும் இழிந்தவனாக அறியப்படுகிறேன். அந்தணர்களாலும் ஷத்ரியர்களாலும் பொய்யாகப் புகழப்படுகிறேன், ஆனால் அவர்களின் கோயில்களில் எனக்கு இன்னும் இடமில்லை” என்றார்.
“உங்கள் காவியத்தில் விடுபட்டவைதான் லோமஹர்ஷணரின் உத்தரகாண்டத்தில் உள்ளன” என்று நான் சொன்னேன். “அவருக்கு உங்கள் காவியம் உண்மையில் என்ன என்று தெரியாது. நான் அதைப்பற்றிச் சொன்ன கதைகளைத்தான் அவர் எழுதினார். ஆனால் அதை தான் எழுதியதாகச் சொல்லவில்லை. நீங்களே எழுதியதாகவும், அக்கதையை நீங்களே அவரிடம் சொன்னதாகவும் சொல்லி தன் மகனுக்குக் கற்பித்தார். அவருடைய தலைமுறைகள் வழியாக அந்தக்கதைகள் வளர்கின்றன.”
“எந்தப் பயனுமில்லை” என்று வால்மீகி சொன்னார். “என்னை எரித்துக்கொண்டே இருப்பது சீதையின் மனநிலை பற்றிய எண்ணம்தான். அவள் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி எண்ணவில்லை. தன்னைப் போன்றவர்களின் துயர் பற்றி கவலைப்படவே இல்லை. மண்ணைப் பற்றியும் கருதவில்லை. அவள் முன் இருந்த ஒரே எண்ணம் தன் மகன்கள் அரசாளவேண்டும் என்பது மட்டும்தான். அத்தனை சிறியதா தாயின் உள்ளம்? அது அத்தனை சிறிதாக இருப்பதனால்தான் இங்கே இத்தனை அநீதிகள் நிகழ்கின்றனவா?”
நான் சிரித்தபடி “என்னைக் கேட்கிறீர்களா?” என்றேன்.
“கதையில் எப்போதுமே கேள்வி உண்டு. நான் சொன்ன இந்த பெரிய கதையில் திரண்டுவந்த கேள்வி இதுதான்” என்று வால்மீகி சொன்னார்.
நான் “என்னைக் கதைசொல்லும் பிசாசு என்கிறார்கள்” என்றேன். “என்னால் எந்தத் தத்துவமும் தரிசனமும் சொல்லமுடியாது. கதையை மட்டுமே சொல்லமுடியும். நீங்கள் விரும்பினால் பதிலுக்கு நான் ஒரு கதையை மட்டும் சொல்கிறேன்.”
“சொல்” என்றார் வால்மீகி.
“இது பாடலிபுத்திரம் என்னும் நகரில், அதன் பெயர் பாட்னா என்று மருவியபின் நிகழ்ந்தது” என்று நான் சொல்லத் தொடங்கினேன். “அங்கே ஃபணீந்திரநாத் என்னும் வைதிகர் தன்னை வணிகராக ஆக்கிக் கொண்டார். அவருடைய மகன் ஹரீந்திரநாத் வணிகத்தில் மேலும் வெற்றிபெற்றார். அவர் மனைவி ருக்மிணியையும் அவர் மகன் அஸ்வத்தையும் பற்றிய கதை இது” நான் கதையை விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்க அவர் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.
ருக்மிணிக்கு அஸ்வத் நிகழ்த்திய கொலை பற்றிய செய்தியை ஹரீந்திரநாத்தான் சொன்னார். அதற்கு முன்புதான் ஹரீந்திரநாத்துக்கும் அவளுக்கும் கடுமையான பூசல் நடைபெற்றிருந்தது. அந்த சண்டை பல மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ராதிகா காசிக்குச் சென்று படிக்க முடிவெடுத்தது முதல். அந்த சண்டையின்போதுதான் ருக்மிணியின் பிடிவாதத்தையும் ஆவேசத்தையும் ஹரீந்திரநாத் முதல்முறையாகச் சந்தித்தார். முதலில் அவர் திகைத்தாலும் அதன்பிறகு அவர் மேலும் மூர்க்கம் கொண்டவராக ஆனார்.
ராதிகா மேற்படிப்பு படிப்பதை ஹரீந்திரநாத் முற்றிலும் விரும்பவில்லை. அவளை திருமணம் செய்து அனுப்ப நினைத்தார். நகரின் முக்கியமான செல்வந்தரும், வணிகவரித்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவருமான ஹரிதாஸ் தேஷ்பாண்டே அவளை தன் மகனுக்காக கேட்டார். அவன் அமெரிக்காவில் உயர்படிப்பு படித்துக்கொண்டிருந்தான். படித்த அழகான முற்போக்கான பெண் தேவை என்று சொல்லியிருந்தான். அவளைப் பற்றி அவன் அக்கா சொல்ல அவனே ராதிகா படித்த கல்லூரிக்குச் சென்று அவளைப் பார்த்தான். அவள் அப்போது பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவன் அந்த தோற்றத்தில் அவளைப் பார்தததுமே காதல்கொண்டான்.
அந்த கல்யாணம் ஹரீந்திரநாத்துக்கு மிகப்பிடித்திருந்தது. ஆனால் ராதிகா அதை உறுதியாக மறுத்துவிட்டாள். “எனக்கு எந்த பாண்டேயையும் பார்க்கவேண்டாம்” என்று உதடுகளைச் சுழித்தபடிச் சொன்னாள்.
அவளிடம் அதைச்சொன்னபோது அவள் அதை மறுப்பாள் என ருக்மிணி எதிர்பார்த்திருந்தாள். அவளுக்கு அந்த மறுப்பு ஒரு நிறைவையும் அளித்தது.
ராதிகா சொன்னதை அவள் ஹரீந்திரநாதிடம் சொன்னபோது அவர் வெறிகொண்டார். “நீதான் சரியாகச் சொல்லவில்லை… உனக்கு அவள் நன்றாக வாழ்வதில் விருப்பமில்லை…” என்று கத்தினார்.
“அப்படியென்றால் நீங்களே சொல்லுங்கள்” என்று அவள் திரும்பக் கத்தியபோது அவர் திடுக்கிட்டார். கையை ஓங்கியபடி அடிக்கச் சென்றபோது அவள் அசையாமல் உற்றுப் பார்த்தபடி நின்றாள். அவர் கை தளர்ந்தது.
அவர் சீற்றத்துடன் வெளியே சென்றார். பின்னர் தன் கணக்குப்பிள்ளையைக் கொண்டு ராதிகாவிடம் பேசவைத்தார். அவள் மறுத்தது மட்டுமல்லாமல் டாக்டரேட் படிப்பதற்காக காசிக்கு பதிவுசெய்துவிட்டதாகவும் சொன்னாள்.
அச்செய்தியை கணக்குப்பிள்ளை சொல்லிக் கேட்டதும் “அவள் இந்த வீட்டைவிட்டு வெளியே போகமாட்டாள்” என்று ஹரீந்திரநாத் கத்தினார்.
“ஏன் போனால் என்ன? அவளுடைய படிப்பு என்ன என்று அவளுக்குத்தானே தெரியும்?” என்று ருக்மிணி மகளை ஆதரித்தாள்.
“நீதான் அவளைக் கெடுக்கிறாய்… அவள் கெட்டுச்சீரழிந்தால் நீதான் பொறுப்பு” என்றார் ஹரீந்திரநாத்.
“இந்த வீட்டில் கெடுவதற்கு அவள் மட்டும்தானே மிச்சம்?” என்றாள் ருக்மிணி.
அவள் என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் திகைத்துப் பார்த்துக்கொண்டு ஹரீந்திரநாத் நிற்க அவள் அலட்சியமாகத் திரும்பிச் சென்றாள்.
அந்தச் சண்டை அவர்கள் மூவர் நடுவே தீவிரமாக நடைபெற்றது. அஸ்வத் அப்போது வெளியே வேலையில் இருந்தான், பாட்னாவுடன் தொடர்பே இல்லை. ராதிகா எதையும் பொருட்படுத்தவில்லை. அவளிடம் ஹரீந்திரநாத் “இந்த வீடும் பணமும் இல்லையென்றால் நீ யார் என்று யோசித்துப்பார்” என்றார்.
அவள் அவரிடம் “நீங்கள் வீட்டைவிட்டு வெளியே போ என்று சொன்னால் நான் அப்படியே கிளம்பிச் சென்றுவிடுவேன். அவ்வளவுதான்” என்றாள்.
அத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்று தெரிந்தாலும் ஹரீந்திரநாத் தொடர்ச்சியாக பிடிவாதம் பிடித்துச் சண்டையிட்டார். சண்டை முழுக்கவே ருக்மிணியிடம்தான். அவள் கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாகிக் கொண்டே வந்தாள்.
ஒருமுறை அவர் அவளை அறையப்போனபோது “அடியுங்கள், எல்லாம் இதற்குத்தானே முடியும்?” என்றாள்.
அவர் திகைத்து நின்று “என்னடி? என்ன சொன்னாய்? எது என்னால் முடியாது? சொல், எது முடியாது?” என்று கூச்சலிட்டார்.
அவள் உதட்டைச் சுழித்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவர் அவள் பின்னால் ஓடிச்சென்று நடுக்கூடத்தில் நின்று கெட்டவார்த்தைகள் சொல்லி கத்தினார். அவள் தன் பூஜையறைக்குச் சென்று அமர்ந்துவிட்டாள்.
அவர் அன்று மாலை நன்றாகக் குடித்துவிட்டு வந்தார். அவளை அழைத்து வசைபாடி எச்சரித்தார். அவள் அவரை ஏளனமாகப் பார்த்தபடி பேசாமல் நின்றாள். “அவள் என் மகள் அல்ல. நீ சோரம்போய் பிறந்தவள் அவள்” என்று அவர் கூவினார்.
“சரி, அதற்கென்ன?” என்று அவள் சொன்னாள்.
அவர் அவளை அடிக்க ஆரம்பிக்க அவள் அடிகளை வாங்கியபடி பேசாமல் நின்றாள். அவர் உடைந்துபோய் கட்டிலில் அமர்ந்துகொண்டு தன் தலையை தானே கையால் அறைந்தபடி “நான் சாகிறேன்… செத்து ஒழிகிறேன்” என்று கதறி அழுதார்.
ராதிகா கிளம்பிச் செல்வதை அவரால் தடுக்கமுடியவில்லை. அவள் சென்றபிறகு பணமும் அனுப்பினார். ஆனால் வேறுவிஷயங்களைச் சொல்லி அவளிடம் பூசலிடத் தொடங்கினார். தினமும் குடித்துவிட்டு வந்து ஏதேனும் ஒன்றில் தொடங்கி ,இரவு பிந்தும் வரை கத்தி கூச்சலிட்டு அழுது ஓய்ந்தார்.
ஒருநாள் இரவு “நீ ஒரு வேசி… சரியான வேசி நீ…” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்.
“சரி, நான் போகலாமா?” என்று அவள் கேட்டாள்.
“வேசி என்று சொன்னால் வேசிக்கு மட்டும்தான் கோபம் வராது” என்று ஹரீந்திரநாத் சொன்னார்.
“எனக்கு ஒன்றுமில்லை… இந்த வயதில் ஆண்கள் இப்படியெல்லாம் பேச ஆரம்பிப்பார்கள் என்று என் மாமியார் முன்னரே சொல்லியிருக்கிறார்.”
“எந்த வயதில்? சொல்லடி, எந்த வயதில்?” என்று அவர் கையை ஓங்கியபடி அவளை நோக்கி வந்தார்.
“வேசிகளை தேடிப்போகமுடியாத வயதில்… காயகல்பம் மாத்திரை ஒன்றும் பலிக்காத வயதில்… போதுமா?”
அவர் திகைத்து நின்று பின் சரமாரியாகக் கெட்டவார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார். அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.
அதன் பின் பலமாத காலம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. அவள் அவருக்கு செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்தாள். அவர் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவ்வப்போது அவர் வீட்டில் சாப்பிடாமலிருந்தார். வேண்டுமென்றே பட்டினி கிடந்தார். அவள் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவர் மிதமிஞ்சி குடிப்பதைக்கூட பொருட்படுத்தவில்லை.
அப்போதுதான் அஸ்வத் வழக்கில் சிக்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டார். அஸ்வத்தே சொல்லி அதை அவனுடைய உதவியாளனாகிய ஹரிராம் சிங் அவரிடம் அழைத்துச் சொன்னான். அதைக் கேட்டபோது முதலில் ஒரு நிம்மதிதான் ஹரீந்திரநாத்துக்கு ஏற்பட்டது. பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்ததைப் போல.
அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போதே என்ன பேசுவது என்று திட்டமிட்டு வகுத்துக்கொண்டுவிட்டார். வண்டியில் இருந்து இறங்கி ஆவேசமாக வீட்டுக்குள் சென்றபோது அவருடைய கோபம் வளர்ந்தது. “எங்கே அவள்? ஏய், ருக்மிணி” என்று கூச்சலிட்டார்.
அவள் வந்ததும் அவள் முகத்தில் காறித்துப்பியபடி “உன் மகன் செய்தது என்ன என்று தெரியுமா? என்ன செய்தான் தெரியுமா? ஒரு சாதாரணச் சிறுமி… ஒரு சிறுமியை அவன் என்ன செய்தான் தெரியுமா? கெடுத்துக் கொன்று வீசியிருக்கிறான். காமப்பேய்… அவனை தூக்கில்போடவேண்டும் என்று சொல்லிவிட்டேன். அவனை கழுவில் ஏற்றவேண்டும்… ஃபணீந்திரநாத் குடும்பத்தில் பிறந்த வாரிசு… த்தூ” என்று கொப்பளித்தார்.
அந்த உணர்ச்சிகள் அவருடையவை அல்ல. பல மாத காலமாக அவர் இருந்துவந்த கொந்தளிப்பு அப்படி அப்போது வெளிப்பட்டது. அந்த உணர்ச்சி வெளிப்பட்டதும்தான் அவரே அதை உணர்ந்தார். மேலும் அதை வளர்த்துக் கொண்டார்.
“நான் இனி உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை. ஃபணீந்திரநாத்தின் மகன் என்று நான் சொல்லிக்கொள்வதே அசிங்கம்… இப்போதே நான் சாகவேண்டும். அவ்வளவுதான்” என்று தலையில் அறைந்தபடி அழுதுகொண்டே சோபாவில் அமர்ந்தார்.
அவள் அவரைப் பார்த்தபடி நிதானமான குரலில் “அப்படி என்ன நடந்தது? போலீஸ் என்றால் ஆயிரம் பழி சொல்வார்கள். நாமே நம் பிள்ளையைப் பற்றி சொல்லக்கூடாது… அவன் அப்படிப்பட்டவன் அல்ல. எனக்குத்தெரியும்” என்றாள். அந்த நிலைபாட்டை அந்தக் கணம்தான் அவள் எடுத்திருந்தாள்.
நான் கதை கேட்டுக்கொண்டிருந்த வால்மீகியிடம் கேட்டேன். “இந்தக் கதை வக்ரோபிருசி கொண்டது, உங்களுக்குப் பிடிக்காமலிருக்கலாம்.”
“இல்லை, புதியதாகப் பிடுங்கிய கிழங்குபோல் இருக்கிறது” என்று புன்னகையுடன் வால்மீகி சொன்னார். “அழகான கிழங்கு என ஒன்று இல்லை. கிழங்குகளின் அளவுக்கு உயிர்த்துடிப்பு எந்த கனியிலும் காயிலும் இருப்பதில்லை.”
நான் கேட்டேன் “அப்படியென்றால் இந்தக் கதையில் இருந்து ஒரு கேள்வி. அதுவே உங்களுக்கான விடையும் ஆகலாம்.”
“கேள்” என்று வால்மீகி சொன்னார்.
“மனிதர்கள் எதன் அடிப்படையில் வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுக்கிறர்கள்?”
வால்மீகி சிரித்தபடி “மனிதர்கள் முடிவே எடுப்பதில்லை” என்றார்.
“சரியான பதில்” என்று நான் சொன்னேன். பாய்ந்து அவர் மடியில் ஏறி அமர்ந்து அவர் தாடியைப் பிடித்து இழுத்து முத்தமிட்டு “நீ கனிந்தவன்… நீ ஒரு ஞானி… சரியான திருடனடா நீ…” என்றேன்.
“உன் சிரிப்பையும் கண்களையும்போல அழகான எந்த மலருமில்லை இந்த பூமியில்” என்று அவர் சொன்னார். “நான் இறக்கப்போகிறேன். எனக்குத் தெரிகிறது. நீ என்னுடன் இரு.”
“சரி”
“கதை சொல்லிக்கொண்டே இரு”
“சொல்கிறேன்” என்று நான் சொன்னேன். “உங்கள் கதபாத்திரங்களிலேயெ உங்களுக்குப் பிடித்தது எது? நான் அதன் கதையை சொல்கிறேன். அவன் இங்கே இருப்பான்…”
“அனுமனின் கதையைச் சொல். சூரியனைக் கவ்வ ஆசைப்பட்ட அந்தக் குட்டிக்குரங்கின் கதை” என்றார் வால்மீகி “மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களுமே மிகையானவை, பொய்யானவை, எந்த அர்த்தமும் அற்றவை…”
“ஆம், செல்லக்குரங்கு… குட்டிக்குரங்கு … அது போல உயிர்ததும்பும் ஒன்று இந்தப் பூமிப்படைப்புகளில் உண்டா? பாடுகிறேன், தூங்குங்கள்.”
நான் அவருடைய நெஞ்சிலும் வயிற்றிலும் மென்மையாகத் தட்டியபடி குட்டிக்குரங்கின் கதையைச் சொன்னேன். அப்போது மரங்களின் மேல் நூற்றுக்கணக்கான குரங்குகள் வந்து கூடிவிட்டன. அவை என் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தன. முகம்நிறைந்த புன்னகை அப்படியே நிலைத்திருக்க ஆதிகவி மறைந்தார்.
(மேலும்)
விலக்குவது என்னும் அடிப்படை
இன்னொரு நண்பர் நிகழ்வில் தனக்கு உணவுசார்ந்த ஒரு தனிவசதி தேவை என்றார். அவருக்கும் நீங்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று செய்தி வந்தது, அவருடைய மின்னஞ்சல் தடைசெய்யப்பட்டது. இந்த கடுமை தேவையா? இந்த வகையான அமைப்பு அனைவரையும் அணைத்துக்கொண்டு செல்வதுதானே சரியானது?
Your questions about his movies are poignant; he, as usual, answers without connecting with any controversy. But people who knew his moves can understand what he meant.
Mani Ratnam- A letterJune 8, 2025
சிறுகதை, கவிதை அமர்வுகள்- காணொளிகள்
சிறுகதையாசிரியர் சந்திப்பு அமர்வு. சிறுகதையாசிரியர்களாக பரவலாக வாசிக்கப்படும் விஜய் ராவணன், ரம்யா இருவரும் வாசகர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்கள். விஜயபாரதி ஒருங்கிணைத்தார்.
இன்று எழுதிவரும் முக்கியமான இளங்கவிஞர்களான றாம் சந்தோஷ், சசி இனியன் ஆகியோருடனான சந்திப்பு. கவிஞர் ஆனந்த் குமார் ஒருங்கிணைத்தார்.
சமகால கவிதை, அயல் இலக்கியம்- இரு உரையாடல் அரங்குகள்
சமகாலக் கவிதைகளில் சமகாலம் இருக்கிறதா, இல்லை என்றால் ஏன் என்ற தலைப்பிலான உரையாடல் பல திசைகளுக்கும் நீண்டு சென்றது. போகன் சங்கர், வெயில் , மனுஷ்யபுத்திரனுடன். இன்னொரு அரங்கில் கன்னட எழுத்தாளரும் பால்புதுமையினருக்கான பேச்சாளருமான வசுதேந்திரா வாசகர்களுடன் உரையாடினார்.
மா.சின்னு
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய உரை நூல்களை எழுதினார். ‘நொய்யல் அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ தொடங்கி பல நற்பணிகளை மேற்கொண்டார். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றார்.

காவியம் – 49

கானபூதி என்னிடம் சொன்னது. “நான் என்னிடம் முனிவனாகிய வால்மீகி சொன்னவற்றை சொல்கிறேன். இங்கே ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளில் ஒரு கதை இது. ஒரு கதை என்பது ஒரு கதைக்கொத்து. எல்லாக் கதையும் அப்படித்தான்.”
“வால்மீகி சொன்ன கதை எது? அவருடைய கதையா?”
”அவர் தன் கதையில் இருந்து தொடங்கினார்” என்று கானபூதி சொல்லத் தொடங்கியது. “வால்மீக குலத்தில் மரன் என்ற பெயருடன் பிறந்த வால்மீகி ஐந்து வயது முதல் தன் தந்தையுடன் வேட்டைக்குச் செல்லத் தொடங்கியவர். தந்தையிடமிருந்து வேட்டையின் திறன்களையும், காட்டின் செய்திகளையும் அறிந்துகொண்டார். சிறந்த வேட்டைக்காரனாக அவர் வரக்கூடும் என்று அவருடைய குலத்தில் அறியப்பட்டார். ஆனால் பத்து வயதில் அவர் தனக்கே இருக்கும் ஒரு திறமையைப் பற்றி உணர்ந்துகொண்டார். அதை ஒரு விளையாட்டாக அதுவரை கருதிவந்தார், பிறரும் அவ்வாறே எண்ணினர். அது பிறரிடமில்லாத ஒரு சிறப்பு என அப்போதுதான் உணர்ந்தார்.”
மரன் குரல்களை நினைவுகொள்வதில் அவர்கள் அனைவருமே திகைத்துப்போகும் அளவுக்குத் திறமை கொண்டிருந்தான். ஒரே ஒருமுறை ஒரு குரலைக் கேட்டால் கூட எத்தனை காலம் கழித்தும் அப்படியே அந்தச் அச்சொற்களை திரும்பச் சொல்ல முடிந்தது. தனக்கு ஒரு சொல்கூட புரியாத சொற்றொடர்களைக்கூட அப்படியே திரும்ப ஒலித்தான். ஒருமுறை அவர்கள் வேட்டைக்குச் சென்றபோது மனிதக்குரல் கேட்டு பதுங்கிக் கொண்டார்கள். அவ்வழியாகச் சென்ற ஷத்ரியப் படைவீரர்கள் தொடர்ச்சியாக மாறிமாறிப் பேசிக்கொண்டு சென்றனர். அந்த மொழி அவர்கள் எவருக்கும் புரியவில்லை.
அவர்கள் திரும்பி வந்து ஷத்ரியர்கள் காட்டின் வழியாகச் சென்றதைப் பற்றியும், அவர்கள் பேசியதைப் பற்றியும் சொன்னார்கள். அவர்கள் பேசியதென்ன என்று குலப்பூசாரியான கீடர் கேட்டார். அவர்களால் சொல்லமுடியவில்லை. ஆனால் சிறுவனாகிய மரன் அந்த மொத்த உரையாடலையும் அப்படியே திரும்பச் சொன்னான். க்ஷத்ரியர்களின் மொழியை அறிந்திருந்த கீடர் அந்த உரையாடலை அவரே நின்று கேட்பதுபோல உணர்ந்தார். அருகே இருந்த கோசலநாட்டின் அரசன் அங்கே வேட்டைக்கு வரவிருப்பதாகவும், அப்பகுதியில் நீரோடைகளுக்கு அருகே அவன் தங்குவதற்கான கூடாரங்களை அமைப்பதற்குரிய இடங்களைத் தேடி அவர்கள் வந்ததாகவும் அவர் புரிந்துகொண்டார்.
அரசர்கள் வேட்டையாட வரும்போது அங்குள்ள மலைக்குடிகள் வீடுகளை கைவிட்டுவிட்டு காட்டின் ஆழத்திற்குள் சென்று மலைக்குகைகளில் பதுங்கிக் கொள்ளவேண்டும் என்பது வழக்கம். அவர்கள் சமைக்கக் கூடாது, புகை காட்டிக்கொடுத்துவிடும். கரடி அல்லது செந்நாய்களின் உலர்ந்த மலத்தை நீரில் கரைத்து தங்கள் ஆடைகளிலும் தாங்கள் செல்லும் வழியிலும் தெளித்துக்கொள்ளவில்லை என்றால் வேட்டைநாய்கள் தேடிவந்துவிடும். குழந்தைகள் அழுதாலும் கேட்காத தொலைவுக்குச் செல்லவேண்டும். குழந்தைகளுக்கு தேனை நிறையக் கொடுத்து அவர்களை தூக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும்.
அவர்கள் மலைகளில் ஊற்றுகள் உள்ள குகைகளில் பதுங்கிக்கொள்வது வழக்கம். வால்மீகி குலம் அதற்கென்று பல குகைகளை கண்டு வைத்திருந்தது. செல்லும்போது உலர்ந்த உணவு நிறைய வைத்திருக்க வேண்டும். அரசர்கள் எவ்வளவு நாட்கள் தங்குவார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அரசர்கள் வேட்டையின்போது மலைக்குடிகளையும் விலங்குகள் போலவே அம்பெய்து கொன்று வீழ்த்துவார்கள். கிராமங்களை முழுமையாகவே எரித்து அழிப்பார்கள். சில சமயம் வேட்டைக்கு வந்த வீரர்கள் அன்னையரைக் கொன்றுவிட்டு குழந்தைகளை மட்டும் பிடுங்கி கொண்டுசென்று ஊரிலுள்ள விவசாயிகளுக்கு அடிமைகளாகக் கொடுத்துவிடுவார்கள். தங்கள் அம்புத்திறனை சோதித்துப்பார்ப்பதே அவர்களை எய்து வீழ்த்தித்தான்.
அவர்கள் உடனே ஊரிலிருந்து கிளம்பினார்கள். பெண்களும் குழந்தைகளும் அடர்ந்த காட்டுக்குள் இருந்த மலைக்குகை ஒன்றுக்குள் சென்றனர். ஆண்கள் உணவுப்பொதிகளைச் சுமந்தபடி தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்கிய குடில்கள் இருப்பது தெரிந்தால் அப்பகுதியில் அவர்கள் வாழ்வது தெரிந்துவிடும் என்பதனால் சிலர் மட்டும் தங்கி சிதல்புற்றுகள் போல கட்டப்பட்டிருந்த மண்வீடுகளின் மேல் மண்ணை அள்ளிக் குவித்து, அவற்றின்மேல் புல்விதைகளைத் தூவி, நீரூற்றி முளைக்க வைத்தனர். அதன்மேல் சருகுகளையும் குவித்து, வேட்டைநாய்கள் அங்கே வராதபடி சிறுத்தை மலம் கலந்த நீரையும் தெளித்துவிட்டு வந்தனர்.
அவர்களின் மூதாதையர் வாழ்ந்த அந்தக் குகைகளுக்குள் நுணுக்கமான ஓவியங்கள் நிறைந்திருந்தன. அவர்களின் கனவுகளில் வந்துகொண்டே இருக்கும் ஓவியங்கள் அவை. அவற்றில் தெளிந்த அழகிய கண்களும், இனிய சிரிப்பும் கொண்ட ஓர் உருவம் அவர்களை நோக்கிப் பேசமுயல்வதுபோல இருந்தது, அது கனவுகளில் அவர்களுடன் பேசியது.
அவர்கள் குகைகளில் தங்கியிருக்கையில் அரசன் வேட்டையாட வருவது பற்றிய தகவல் எப்படித் தெரிந்தது என்று பேசியபோது மரன் அந்தப் பேச்சை அவர்களுக்காக பலமுறை அப்படியே திரும்பச் சொன்னான். அவர்கள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது கீடன் “இவனுக்கு மொழி நன்றாக வருகிறது” என்றார்.
“மொழி என்றால் என்ன?” என்றான் மரன்.
“இதோ வெளியே இருக்கும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக ஒரு ஓசையை பதிலாக வை. ஒவ்வொரு கல்லுக்கும் மண்ணுக்கும் ஒரு ஓசையை வை. அந்த ஓசைகளாலான ஓர் உலகம் உள்ளது. அதுதான் மொழி” என்றார் கீடர்.
மரன் மனம் மலைத்து அப்படியே அமர்ந்துவிட்டான்.
“அந்த உலகத்தைத்தான் நம் மூதாதையர் இந்தக் குகைகளுக்குள் வரைந்திருக்கிறார்கள்…” என்றார் கீடர்.
குகைக்குள் அவர்கள் எவரும் செல்வதில்லை. மரன் குகைக்குள் பிரிந்து பிரிந்து சென்றுகொண்டே இருந்த கிளைகளுக்குள் அலையத் தொடங்கினான். மொழி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான். ஒருநாள் நேருக்குநேர் பார்க்கப்போகும் ஒரு தெய்வத்தை எண்ணிக்கொள்வதுபோல. அங்கே அவன் தன்னை பிற்கால வாழ்க்கை முழுக்க தன்னை ஆட்சி செய்த தெய்வத்தை ஓவியத்தில் கண்டான், அன்றே கனவுக்குள்ளும் அதைக் கண்டுவிட்டான். அங்கே தங்கியிருந்த சில நாட்களிலேயே அவனுக்குள் பிறகு அவன் கண்டடைந்த அனைத்தும் நுழைந்து நிறைந்துவிட்டன.
ஆனால் தன்னால் பறவைகளின் ஓசைகளையோ, விலங்குகளின் ஓசைகளையோ நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை என்று அவன் அறிந்தான். தன்னுடையது மானுடமொழி மட்டுமே என்று புரிந்து கொண்டான். பிறகுதான் தன் ஆர்வம் சொற்களில் அல்ல, பொருளில் என்று உணர்ந்து கொண்டான். அதை தத்துவம் என்றும், ஞானம் என்றும் உணர்ந்துகொள்ள மேலும் பல ஆண்டுகள் ஆகியது. அதுவரை அவன் சொற்களைக் கற்றுக்கொள்வதில் பித்தாக இருந்தான். எப்போதும் ஊர்களின் விளிம்புகளிலேயே சுற்றியலைந்தான். உடலில் பச்சைநிறம் பூசிக்கொண்டு புதர்களுக்குள் அசையாது ஒளிந்திருந்து மக்கள் பேசுவதைக் கேட்டான். நிஷாதர்கள் அனுமதிக்கப்படும் சந்தைகளுக்குச் சென்று அங்கே வணிகர்கள் பேசுவதைக் கேட்டான்.
இருபத்தெட்டு வயதில் அவன் பன்னிரு மொழிகளின் எட்டு லட்சம் சொற்களை அறிந்தவனாக இருந்தான். அந்தச் சொற்கள் அவன் உள்ளத்திற்குள் குவிந்து அவன் தலையை எடைகொண்டவனாக ஆக்கின. அவனால் தலையைத் தூக்கவே முடியவில்லை. எவருடைய கண்களையும் பார்க்க முடியவில்லை. பிறரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். பேசியபோது அவன் என்ன சொல்கிறான் என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் அறியாத சொற்கள் அதில் நிறைந்திருந்தன. அவன் தனக்குத்தானே பேசிக்கொள்ளத் தொடங்கியபோது அவனை நிழல்கள் பிடித்துக்கொண்டுவிட்டன என்று அவனுடைய குலத்தவர் சொன்னார்கள்.
நிழல்களால் பிடித்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு பூசாரிகள் பலவகையான மீட்புச் சடங்குகளைச் செய்வதுண்டு. தெய்வங்களுக்குப் பலிகொடுத்து வேண்டிக்கொள்வது, நோன்புகள் நோற்கச் செய்வது, தொலைவில் இருந்த மாய ஊற்றுக்களுக்குக் கூட்டிச்சென்று நீராடவைப்பது. அனைத்துக்கும் பிறகும் மரன் சித்தம் பிறழ்ந்தவனாகவே இருந்தான். அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த சொற்களின் பெருக்கு அவன் வாயில் தன்னிச்சையாக வெளிவந்தபடியே இருந்தது. அவன் தூக்கத்திலும் பேசிக்கொள்ளலானான். ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை கைவிட்டனர்.
மரன் அந்தக்காட்டிலேயே அலைந்து திரிந்தான். கிடைக்கும் உணவுகளை உண்டான், உடல் ஓய்ந்தபோது படுத்தான். பெரும்பாலும் ஊர்களின் எல்லைகளிலேயே அவன் இருந்தான். சிலர் அவனை கல்லால் அடித்து துரத்தினார்கள். சிலர் ஏதாவது உணவை எறிந்து கொடுத்தார்கள். அவன் முடி வளர்ந்து சடையாகியது. உடலில் அணிந்திருந்த தோலாடைகள் மட்கி உடலோடு ஒட்டிக்கொண்டன. உடலில் இருந்து மட்கும் இலைகளின் வாடை எழுந்தது. அவனை மக்களில் சிலர் பைசாசிகன் என்றும் அழைக்கலாயினர்.
அந்நாட்களில் ஒருமுறை மரன் காட்டின் விளிம்பில் புதருக்குள் அமர்ந்திருந்தபோது ஒரு குரலைக் கேட்டான். அது பாடிக்கொண்டிருந்தது, ஆனால் எந்தச் சொல்லும் இல்லை. சொற்களையே கேட்டு, சொற்களில் மூழ்கியிருந்த அவன் சித்தம் அதைக்கேட்டு திகைத்தது. அதைச் சொற்களாக ஆக்கிக்கொள்ள அவன் அகம் தவித்தது. அதில் தோற்றுச் சலித்ததும் அவன் அருகே இருந்த ஒரு கல்லை எடுத்துக்கொண்டு வெறியுடன் கூச்சலிட்டபடி அந்த இசையை எழுப்பிக்கொண்டிருந்தவரை நோக்கி ஓடினான்.
நாரதமரபு என்று சொல்லப்படும் சொற்கள் இல்லாத பாடல்முறையை நாதயோகமாக பயின்றுவந்த ஒரு துறவி அவர். நாரதர் என்னும் அடைமொழியை அவர்கள் சேர்த்துக்கொள்வார்கள். சுருதநாரதர் அவன் ஓடிவருவதைப் பார்த்து பாடியபடியே புன்னகையுடன் நின்றார். அவன் அருகே வந்து அவரைப் பார்த்தபடி நின்றபின், அந்தக் கல்லை கீழே போட்டான். பிறகு குழறியகுரலில் ”அது என்ன மொழி?” என்று கேட்டான்.
அவன் நான்கு மொழியின் வெவ்வேறு சொற்களைக் கலந்து அவ்வாறு கேட்டான். நான்கு மொழியையும் அறிந்திருந்த சுருதநாரதர் “நான் பாடுவதுதான் ஆதிமொழி. கைக்குழந்தைகளின் மொழி. விலங்குகளின் மொழி, உனக்கு வலித்தாலோ, மட்டற்ற மகிழ்ச்சி அமைந்தாலோ உன் உதடுகள் பேசும் மொழியும் இதுதான். ஆற்றுப்பெருக்கு தேங்கி குளங்களாக ஆவதுபோல இந்த மொழியைத் தான் துண்டுகளாக ஆக்கி சொற்களாக மாற்றியிருக்கிறார்கள்” என்றார்.
அவன் திகைத்துப்போய் அவரைப் பார்த்தான். பின்னர் அவர் முன் பணிந்து கண்ணீருடன் “என்னைச் சொற்களில் இருந்து விடுவியுங்கள்” என்றான்.
”ஆட்கொள்ளும் எதுவும் தெய்வமே” என்று சுருதநாரதர் சொன்னார். “நீ அந்த தெய்வத்தை தவம் செய். அது உனக்கு அருளும்”
“எனக்குத் தவம் செய்யத் தெரியாதே… எனக்குக் கற்றுக்கொடுங்கள்”
“தவம் செய்யத் தெரியாத உயிர்களே இல்லை. முட்டைமேல் அமர்ந்திருக்கும் பறவைகூடத்தான் தவம் செய்கிறது. கூட்டுப்புழு தவம் செய்கிறது” என்றார் சுருதநாரதர். “உன்னைக் குவித்துக்கொள், அதுதான் தவம். ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொல். அது ஒரு சரடுபோல ஆகி அனைத்துச் சொற்களையும் கோத்து உனக்கு ஒரு சீரான மனத்தை உருவாக்கித் தரும், அதுதான் மந்திரம்”
“எந்த மந்திரம்… எனக்கு மந்திரம் உபதேசியுங்கள்” என்று மரன் கேட்டான்.
“நீ தான்தோன்றி. உனக்கு இன்னொருவர் சொல்லும் மந்திரம் தேவையில்லை. உன் செவியில் நீ கேட்ட முதல் சொல்லே உன் மந்திரம்.”
“என் அம்மா நான் கைக்குழந்தையாக இருக்கும்போது என் பெயரை என் செவியில் சொன்னாள். அதை நான் நினைவு வைத்திருக்கிறேன்…”
“அதையே சொல்” என்று சுருதநாரதர் வாழ்த்திவிட்டுச் சென்றார்.
அதன் பின் மூன்று ஆண்டுக்காலம் மரன் தன் பெயரையே இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தத் தவம் முழுமையடைந்தபோது துவர்க்கும் கனி இனிப்படைவதுபோல அவர் கனிந்தார். காட்டில் இருந்து கிளம்பி ஊர்களுக்குள் சென்றார். அவருடைய ஞானத்தால் அவர் முனிவரானார். முனிவர்களுக்கு மூலம் இல்லை என்பதனால் அவர் எவர் என்று யாரும் கேட்கவில்லை. செல்லுமிடங்களில் அவர் கேட்ட எல்லா நூல்களையும் அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சரயு நதியின் கரையில், சித்ரகூட மலைக்குச் செல்லும் வழியில் தன் ஆசிரமத்தைக் கட்டிக்கொண்டு அங்கே தங்கினார். அவருக்கு வால்மீகி முனிவர் என்ற பெயர் அமைந்துவிட்டிருந்தது. பதினெட்டு மாணவர்கள் அவருடன் இருந்தனர். அப்போது ஒருநாள் கோசலத்தை ஆட்சி செய்த தசரதனின் மகனாகிய ராகவ ராமன் தன் அரசுப்பட்டத்தை துறந்து, மனைவி சீதையுடனும் தம்பியுடனும் அவ்வழியாக சித்ரகூடம் சென்றான். அவன் வால்மீகியைப் பற்றி அறிந்து ஓர் இரவு அவருடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு அனுமதி கேட்டான். வால்மீகி அவனை விருந்தினருக்கான குடிலில் தங்கவைத்தார். அந்தியில் அவருடைய வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்டபின் அவர்கள் மறுநாள் காலையில் சித்ரகூடத்திற்குச் சென்றனர்.
பின்னர் நீண்டநாட்கள் கழித்துத்தான் அவர் சீதையைக் கண்டார். அந்த கால இடைவெளியில் நிகழ்ந்தவை எவற்றையும் அவர் அறிந்திருக்கவில்லை. ஒருநாள் அவர் தன் மாணவர்களுடன் சரயுவில் நீராடச் சென்றபோது அங்கே நாணல்களின் நடுவே ஒரு பாறையில் கருவுற்றவளவான ஒரு பெண் உடலைக் குறுக்கிக்கொண்டு, மரவுரியால் தலையை போர்த்தியபடி, அமர்ந்திருப்பதைக் கண்டார். அவள் யார் என்று பார்க்க அவர் தன் மாணவர்களை அனுப்பினார். அவர்கள் வந்து அது அயோத்தியின் அரசன் ராகவ ராமனின் மனைவி சீதை என்றும், காட்டுக்குள் வந்திருப்பதாகவும் சொன்னார்கள். அவர் பதறிப்போய் அருகே சென்று அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டுவந்து தன் ஆசிரமத்தில் தங்கச் செய்தார்.
சீதையை மனம் தேற்றி பேசவைக்க பலநாட்கள் ஆகியது. அவளிடமிருந்துதான் அவர் அனைத்தையும் தெரிந்துகொண்டார். அவள் விதேகநாட்டின் அரசரும், வேதஞானியுமாகிய ஜனகரின் வளர்ப்பு மகள். தனக்கு ஒரு மகன் இல்லாததனால் அதர்வவேத நெறிப்படி புத்ரகாமேஷ்டி வேள்வி ஒன்றைச் செய்ய எண்ணினார். அந்த வேள்வி கன்னிநிலம் ஒன்றில்தான் செய்யப்பட முடியும் என்பதனால் தொலைவில் இருந்த கோரைப்புல் செறிந்த காடு ஒன்று அதற்காகக் கண்டடையப்பட்டது. அந்நிலத்தை உழுது புரட்டும் பணியை முதல் கொழு பிடித்து அவர் தொடங்கி வைத்தபோது புதருக்குள் ஓர் அழுகுரல் கேட்டது. அவர் புதர்களுக்குள் சென்று பார்த்தபோது அங்கே பெண் ஒருத்தி குழந்தை ஒன்றைப் பெற்றபின் இறந்திருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையே தன் வேள்வியின் பயன் என்று எண்ணி அதை எடுத்துவந்து தன் மகளாக்கிக் கொண்டார்.
அந்தக் குழந்தை வராஹியை தெய்வமாக வழிபடுபவர்களும், கலப்பைக் கொழுவை குல அடையாளமாகக் கொண்டவர்களுமாகிய மிருத்திகர் என்ற தொல்குடியைச் சேர்ந்தது என்று இறந்த பெண்ணின் உடலில் இருந்த பச்சைகுத்திய அடையாளங்களில் இருந்து தெரிந்தது. கர்ப்பிணியான அவள் வழிதவறி அங்கே வந்து இறந்திருக்கிறாள். மிருத்திகர்கள் தொன்மையான அசுரகுடியைச் சேர்ந்தவர்கள். மிருத்திகாவதி என்னும் அசுரநகரம் மண்ணில் விழுந்து சிதறியபோது தெறித்த துண்டுகளில் ஒன்று தங்களுடையது என்பது அவர்களின் நம்பிக்கை. நிஷாதகுலத்தைச் சேர்ந்த அக்குழந்தையை அரசர் இளவரசியாக ஆக்கமுடியாது என்று அந்தணர்களும் அமைச்சர்களும் சொன்னார்கள்.
ஆனால் ஜனகர் வேதங்களையும் உபவேதங்களையும் கற்றவர். அவருடைய ஏழுதலைமுறை முன்னோர் அதர்வவேத அறிஞர்களாக திகழ்ந்தார்கள். அவர்களின் சபையில் வேதவிவாதங்கள் பலநூறாண்டுகளாக நடந்துவந்தன. அதர்வவேத நெறிகளின்படி அவளை தன் மகளாக ஏற்றுக்கொள்வதில் எந்த தடையும் இல்லை என்று அவர் சொன்னார். அவர் வேதத்தின் “மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:” என்ற முதல் மந்திரத்தைச் சொன்னபடி கொழுவைப் பிடித்த அதே கணத்தில்தான் குழந்தையின் அழுகையைக் கேட்டார். அதுவே அக்குழந்தை அவர் மகள் என்பதற்கான வேதங்களின் ஏற்பு என்று சொன்னார்.
சில மாதங்கள் நீண்ட அந்த விவாதம் ஜனகர் ஒரு பெரிய பூதவேள்வியை நிகழ்த்தி, அதில் தர்ப்பைப்புல்லில் இந்திரன் முதலிய தேவர்களை நேரில் வரவழைத்து, குழந்தைக்குப் பெயரிடச் செய்ததுடன் அடங்கியது. வராகியின் பெயர்களில் ஒன்றாகிய சீதா என்று அவளுக்கு பெயரிடப்பட்டது. உழுபவள் என்று அதற்குச் சொற்பொருள். வைதேகி என்றும் ஜானகி என்றும் அவள் அழைக்கப்பட்டாள். அவள் வந்துசேர்ந்தபின் ஒவ்வொரு நாளும் மழை பெய்து விதேகம் செழித்தது. அதன் கருவூலமும் களஞ்சியமும் மழைக்கால ஏரிபோல எக்கணமும் உடைந்துவிடும் என அச்சமூட்டியபடி வளர்ந்தன என்று கவிஞர்கள் பாடினார்கள்.
அவளை கோசலத்தை ஆட்சி செய்த ரகுகுலத்தைச் சேர்ந்த தசரதனின் மகன் ராமன் மணந்தான். அவனே தசரதனின் முதல்மகன் என்பதனால் தந்தைக்குப் பிறகு அவனே முடிசூட வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அரசன் கேகயத்து அரசியான தன் இரண்டாவது மனைவிக்கு அவள் மகனை முடிசூட்டுவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தான். ஆகவே இறுதிநேரத்தில் மூத்தவன் தன் தம்பியுடன் காட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. அவனுடன் சீதையும் அவன் தம்பியும் உடன் சென்றனர்.
காட்டிற்கு வந்த அவர்களைத்தான் வால்மீகி சந்தித்தார். சித்ரகூடத்தில் தங்கியிருந்த போது அவளை அரக்கர் குலத்து அரசன் ராவணன் கவர்ந்துகொண்டு சென்றான். அவள் பூமிதேவி, மண்ணை ஆற்றலுள்ளவன் கவரலாம், ஆளமுடிந்தவன் ஆளலாம் என்று அரக்கர் குலத்து அரசன் சொன்னான். அவளை அவன் காமத்திற்கு இரையாக்கவில்லை, அவள் தன் அரசியாகவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தான். மண்மகளை அவன் வென்றால்தான் அவன் வெற்றி முழுமையடையும் என்று எண்ணினான்.
அவள் அரக்கர்களின் தலைநகரமான இலங்கையில் சிறைப்பட்டிருந்த செய்தியை அறிந்து அவள் கணவன் ராமன் வானரர் என்னும் குலத்தைச் சேர்ந்த காட்டு மனிதர்களை படையாகத் திரட்டிச் சென்று, ராவணனை தோற்கடித்து அவளை மீட்டுவந்தான். அயோத்தி திரும்பிய பின் அவன் தம்பி அரியணையை விட்டுக்கொடுக்க அவன் அரசனானான். ஆனால் அவளை க்ஷத்ரிய நாட்டின் அரசியாக ஆக்க முடியாது என்று அயோத்தியின் அந்தணர்களும், சில குடித்தலைவர்களும் சொன்னார்கள். அவள் பூமியின் மகள், விண்ணிலிருந்து அவளுக்கு ஏற்பு இல்லை என்றார்கள். சூரியனின் கதிரோ, இந்திரனின் இடிமின்னலோ, அக்னியோ அவளை ஏற்கவேண்டும் என்று சொன்னார்கள். ராமன் ஓர் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்தான். அதில் விண்ணிலிருந்து இறங்கி தர்ப்பையில் பற்றிக்கொண்ட அக்னி அவளை ஏற்றுக்கொண்டு வாழ்த்தியது. அவள் அயோத்தியின் அரசி ஆனாள். அவள் துயரம் முடிவுற்றது என்று தோன்றியது.
ஆனால் அவள் கருவுற்றபோது அந்தக் கரு தங்கள் அரசனுடையதுதானா என்ற அலர் ஊரில் கிளம்பியது. இம்முறை அது எளிய குடிமக்களிடமிருந்து திரண்டு வந்தது. அவள் பல ஆண்டுகாலம் அரக்கர்களின் காவலில் இருந்தவள். அரக்கர்கள் நெறிகளை கடைப்பிடிப்பார்கள் என்று கேள்விப்பட்டதுமில்லை. அவள் பெற்றுத்தரும் குழந்தையை எப்படி அரசனாக ஏற்கமுடியும் என்றனர் மக்கள். அளிக்கப்படும் அனைத்து அழுக்குகளையும் ஏற்றுக்கொள்வது பூமி. அவள் பூமிமகள், அவள் நெறியும் அதுவே. ஆகவே அவள் பெறும் குழந்தைகள் அரசனுடைய குருதியைச் சேர்ந்தவையாக இருக்க வாய்ப்பில்லை என்றனர். அந்தச் செய்தியை அறிந்ததும் ராமன் அவளைத் துறந்து மீண்டும் காட்டுக்கு அனுப்பி விட்டான். விரும்பினால் அரக்கரோ பிறரோ அவளைக் கவர்ந்துசெல்லட்டும் என்று அவன் எண்ணினான்.
‘கண்நோய் வந்தவனுக்கு தீபம் போல அவள் அவனுக்கு ஒவ்வாமையை அளித்தாள்’ என்று வால்மீகி என்னிடம் சொன்னார். ’மண்ணையும் பொன்னையும் போலவே இந்த நகர்மக்கள் பெண்ணையும் நடத்துகிறார்கள். மண்ணை உடைமையென நினைக்காத மக்களே பெண்ணையும் மதிப்புடன் எண்ணுவார்கள். அவர்களின் குலங்களில் மட்டுமே பெண் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்’ என்றார்.
அவ்வாறுதான் சீதை வால்மீகியின் ஆசிரமத்திற்கு வந்துசேர்ந்தாள். அவள் ராமனைப் பற்றி கசந்து ஏதும் சொல்லவில்லை. தனிமையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் சரயுவில் கழுத்து பின்னி காதல்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாரைகளைப் பார்த்து நின்றபோது, ஒரு கணத்தில் அறியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பை அடைந்து விம்மி அழத்தொடங்கினாள். அருகே நின்றிருந்த வால்மீகி அதைக் கண்டார். அவள் அருகே சென்று “அழாதே மகளே, உன் துயரங்கள் முடியும்” என்றார்.
“நான் இரண்டு முறை உயிர்கொண்டு மீண்டு வந்தேன். இனி அது நிகழாது. நான் முழுமையாக இறந்துவிட்டேன்” என்று சீதை சொன்னாள்.
அவளைப் பார்த்ததும் அது உண்மை என்று வால்மீகி அறிந்தார். அவள் கண்களின் ஒளி அணைந்துவிட்டிருந்தது. உடல் வெளிறி மெலிந்திருந்தது. அவள்மேல் ஏற்கனவே சாவு வந்து படிந்துவிடிருந்தது.
அவர் அன்றிரவு நீண்டநேரம் தூங்காமலிருந்தார். பின்னர் விடியலில் சற்று தூங்கினார். அரைவிழிப்பில் அவருக்குள் தோன்றிய வரிதான் ’மாநிஷாத’ என தொடங்கும் பாடல். அதை அவர் ஓர் ஏட்டில் குறித்துப் போட்டார். ’காதலில் மயங்கிய பறவைகளில் ஒன்றை கொன்ற நீ ஊழிக்காலம் வரை நிலையிலாது அலைவாய்’ என்ற வரி எவருக்கான சாபம் என்று அவருக்குத் தெரியவில்லை. தன் நாவில் எழுந்த முதல் கவிதைவரியே சாபமாக அமைந்ததை எண்ணும்போது திகைப்படைந்தார். அதை எவரிடமும் சொல்லாமல் வைத்துக்கொண்டார்.
ஒவ்வொரு நாளும் சீதை அவருடைய ஆசிரமத்தில் நலிந்தபடியே வந்தாள். அவர் சொன்ன எந்த ஆறுதலும் அவளிடம் சென்று சேரவில்லை. அவள் கருமுதிர்ந்து இரண்டு ஆண்குழந்தைகளைப் பெற்றாள். அவர்களுக்கு லவன் என்றும் குசன் என்று பெயர் சூட்டப்பட்டது. நிஷாதர்களின் மொழியில் உப்பு என்றும் புல் என்றும் அப்பெயர்களுக்குப் பொருள். அப்பெயர்களைச் சூட்டியவள் அவளே. நிலத்தின் அழியாத உயிர் என திகழ்பவை அவை.
அக்குழந்தைகளைப் பெற்றதும் அவள் முழுமையாக அவர்களை மறந்தாள். தனக்கான சிறிய குடிலில் இரவும் பகலும் தனியாகவே இருந்தாள். எவரிடமும் எப்போதும் பேசவில்லை. எவரையும் பார்க்கவுமில்லை. அவள் எதையேனும் பார்க்கிறாளா என்றே சந்தேகமாக இருந்தது. அவள் இறந்துவிட்டபின் அவளுடைய நிழல்தான் அங்கே வாழ்கிறதா என்று அவருடைய மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். அவள் எதற்காகவோ காத்திருக்கிறாள் என்று அவருக்கு ஒரு சமயம் தோன்றியது.
வால்மீகி லவனையும் குசனையும் வளர்த்துக்கொண்டிருந்தார். அவர்களுக்காக என்றோ தான் மறந்துவிட்ட விற்கலையை நினைவுகூர்ந்து கற்பித்தார். வால்மீகிகள் மட்டுமே அறிந்த நாணல்களை அம்புகளாக்கும் வித்தையை அவர்களுக்குப் பயிற்றுவித்தார். மொழியையும் நூல்களையும் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் துடிப்பான இளைஞர்களாக வளர்ந்தார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்பதை எவரும் சொல்லக்கூடாது என்று தன் மாணவர்களிடம் ஆணையிட்டிருந்தார். அவர்களிடம் அதைச் சொல்லவேண்டியவள் அவர்களின் தாய்தான். எந்தவகையில் எப்போது சொல்லவேண்டும் என்று அவள்தான் முடிவெடுக்கவேண்டும் என்றார்.
அவர் ஒவ்வொரு நாளும் இரவில் தான் எழுதிய அந்த இரண்டுவரிக் கவிதையை நினைவுகூர்ந்தார். அதை மறந்துவிட்டு தூங்க முயன்று நெடுநேரம் விழித்திருந்தார். அதன்பின் அவர் ஒன்று கவனித்தார், சரயுவில் அதன் பிறகு நாரைகள் வந்திறங்கவே இல்லை. அது அவரிடம் விசித்திரமான ஒரு பதற்றத்தை உருவாக்கியது. அந்த அமைதியின்மை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது. அவளுடைய கண்ணீர் இந்த மண்ணில் விழுந்திருக்கிறது என்று ஒருநாள் ஓர் எண்ணம் வந்தபோது அவரால் அமர்ந்திருக்கவே முடியவில்லை.
தனியாகக் காட்டில் நீண்டதொலைவு அலையும் வழக்கம் அவரில் உருவாகியது. அது அவருக்கு தொடர்பற்ற எண்ணங்களை உருவாக்கி அகத்திலும் அலையச் செய்தது. அச்சமும் துயரமும் அளிக்கும் ஒன்றிலேயே குவிந்துவிட்ட சிந்தனையை அப்படிச் சிதறடித்துக் கொண்டபோது ஆறுதலடைந்தார். அவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது ஒரு வரி நினைவில் எழுந்தது. ‘மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’ எங்கே பயின்ற வரி என நினைவு மயங்கியது. எவரோ தலைக்குமேல் இருந்து அதை தூக்கி தன் மேல் போட்டதுபோல தோன்றியது.
எண்ணிச் சலித்து திரும்ப வந்தபோது உடல் நன்றாகக் களைத்திருந்தது. மாலைவகுப்பை நடத்தமுடியாதபடி பிந்தியிருந்தமையால் அவருடைய மாணவனாகிய ரோமஹர்ணன் அவருக்குப் பதிலாக வகுப்பை நடத்தி முடித்திருந்தான். அவர் இரவு பழங்கள் மட்டுமே உண்ணுபவர். அன்று அதை மறுத்துவிட்டு தர்ப்பைப்புல் மெத்தைமேல் படுத்துக்கொண்டார். அவருக்கு அருகே, கண்ணால் பார்த்துவிடலாம் போல அந்த வரி அமர்ந்திருந்தது. ’மாதா பூமி புத்ரோகம் பிருத்வ்ய:’
‘நாம் அவள் மைந்தர்கள்’ என்று உரக்கச் சொன்னபடி எழுந்து அமர்ந்தார். பூர்ஜமரப் பட்டையாலான சுவடியையும், வண்ணத்தூரிகையையும், மையையும் எடுத்துக்கொண்டு எழுதத் தொடங்கினார். விடியும்போது அவர் எண்பது பாடல்களை எழுதி முடித்திருந்தார். விடிந்தபின் தன் குடிலை விட்டு வெளியே வந்து எழத்தொடங்கிய சூரியனைப் பார்த்து ‘வரந்தருபவனாகிய சூரியனே இருளை அகற்றுக! உன் ஒளியால் என் புலன்களை நிரப்புக! மகத்தான சிந்தனைகள் என்னில் எழுவதாக! ஆம், என்னில் எழுவதாக!” என்று பிரார்த்தனை செய்தார்.
அன்று தொடங்கி முந்நூற்றி ஐம்பது நாட்களில் அவர் அவளுடைய கதையை எழுதி முடித்தார். அது மண்ணின் கதை. மண் வெறும் உடைமையென்றும் ஆனதன் வரலாறு. அதன் முடிவில்லாத கருணை வெறும் பொறுமை என்று புரிந்துகொண்டதன் கதை. அதர்வரின் சொல்லில் தொடங்கிய அந்தக் காவியம் சீதையின் பிறப்பு முதல் அவள் சிறுமைப்படுத்தப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, வெளிறி அழிந்துகொண்டிருந்தது வரை வந்து நிறைவடைந்தது.
அன்னையின் கண்ணீர் மண்ணில் விழுந்தபின் கிரௌஞ்சங்கள் வராமலாயின. அவற்றுக்காகவே பெய்யும் மழை பொய்த்தது. வயல்கள் வறண்டு மணல்பரப்புகளாக ஆயின. ஊற்றுகள் காய்ந்து உப்பரித்தன. விலங்குகளும் பறவைகளும் விலகிச் சென்றன. அரசர்களின் அரண்மனையிலும் வறுமை வந்து சேர்ந்தது. அவர்கள் நிமித்திகர்களிடம் கேட்டபோது பூமியின் அளவிடமுடியாத பொறுமை அகன்றுவிட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவளுடைய முலை வற்றிவிட்டது. கண்ணீரும் நின்று விட்டிருக்கிறது. அவள் அருளினாலொழிய இனி மண்ணில் மழைத்துளி விழவாய்ப்பில்லை.
தன் காவியத்தின் உச்சமாக, ஐம்பத்தாறு நாட்டின் க்ஷத்ரிய அரசர்களும் ராமன் தலைமையில் வரிசையாக வந்து தங்கள் மணிமுடி சூடிய தலைகளை சீதையின் முன் மண்பட வைத்து வணங்கி மன்னிப்பைக் கோரும் காட்சியை வால்மீகி எழுதியிருந்தார். ஆனால் சீதை மனம் இரங்கவில்லை. அந்தணர்கள் வந்து அவளைப் பணிந்து கழுவாய் செய்வதாகச் சொன்னார்கள். வைசியர்கள் தங்கள் பொன்னை முழுக்க கைவிடுவதாகச் சொல்லி அழுதார்கள். மேழிகளைத் தூக்கிக்கொண்டு விவசாயிகளும், தாகத்தால் நாக்கு வறண்டு தள்ளாடிய மாடுகளை இழுத்துக்கொண்டு ஆயர்களும் வந்தார்கள். எவரையும் அவள் பார்த்ததாகவே தெரியவில்லை.
இறுதியாக கையில் இறந்துபோன குட்டிக்குரங்கு ஒன்றை எடுத்துக்கொண்டு கவிஞன் ஒருவன் வந்தான். தாகத்தால் தவித்த அந்தக் குரங்குக்குட்டி அருகே சென்ற பாம்பின் உடலின் மினுமினுப்பை நீர் என்று நினைத்து குனிந்து நக்கியது, பாம்பால் கடிபட்டு இறந்தது. ‘அன்னையை நம்பித்தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. அன்னை மடிமேல் தான் நிற்கின்றன. அன்னை மீதான முழுமையான நம்பிக்கையால்தான் அன்னையை மறக்கின்றன. ஆனால் அன்னை கைவிட்டபின் அவை அனைத்தையுமே நம்புகின்றன’ என்றான்.
சீதை குனிந்து அந்த குரங்குக் குட்டியைப் பார்த்தாள். அவள் முகத்தில் கனிந்த புன்னகை வந்தது. அவள் அந்த குரங்குக்குட்டியை மெல்ல தொட்டபோது அது எழுந்து நின்றது. அதன் வாய் தாகத்தால் திறந்தது. அவள் அதை அருகே இழுத்து தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு முலையூட்டினாள். தாகம் மிகுந்த குரங்கு குட்டி அவள் முலைப்பாலை வேகமாக வாய்நுரைக்கக் குடித்தது.
’அசோகவனத்தின் தனிமையில் என்னை தேடிவந்தாய். நீண்டகாலத்திற்குப் பின் என்னைச் சிரிக்கவும் வைத்தாய். அன்று நான் உன்னிடம் கொண்ட கடன் இது’ என்று சீதை அதன் மெல்லிய பிடரியை வருடியபடிச் சொன்னாள். ’இந்தப் பூமியில் என் மேல் மிச்சமின்றி அன்புவைத்த வேறொருவர் இல்லை. துயரற்றவனும் துயர்நீக்குபவனும் ஆகுக.’
வால்மீகியின் காவியம் இந்த வரிகளுடன் முடிந்தது. ‘அவளுடைய முலைசுரக்கத் தொடங்கியதும் வானத்தில் மேகங்கள் திரண்டு மழைகொட்டத்தொடங்கியது.’
“சீதாயனம் முடிவில் மண்ணைப் புகழும் பன்னிரு துதிச்செய்யுள்களை தொடர்ச்சியாக கொண்டிருந்தது. வராகியை வணங்கும் தொன்மையான மக்கள் மண்ணைப் போற்றிப் பாடும் பாடல்களை ஒட்டி அமைந்த செய்யுட்கள் அவை” கானபூதி சொன்னது “ஆனால் அந்தக் காவியம் அல்ல பின்னர் நீடித்த நூல். வால்மீகி எழுதிய காவியம் இன்றில்லை.”
(மேலும்)
A virtual conversation

I am watching your videos regularly. I am an elderly man, now in my 90s. I can’t read because of an eye problem. I can listen and dream. At one point, I realized that social media was giving me negative emotions and ideas. They cater to individuals who lead a dull and prosaic life and yearn for a surge of adrenaline.
A virtual conversationருட்கர் பிரக்மான் புத்தகம் நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி.தமிழில் நாகலெட்சுமி சண்முகம் “மனித குலம் நம்பிக்கை ஊட்டும் வரலாறு.”என்ற புத்தகத்தை அறிமுகபடுத்தியதற்கும் நன்றி.
தீமை – ஒரு கடிதம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
