Jeyamohan's Blog, page 35
August 19, 2025
அத்வைதமும் விசிஷ்டாத்வைதமும்
தமிழில் அத்வைதம்- விசிஷ்டாத்வைதம் சம்பந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே என்னுடைய சிக்கல் என்னவென்றால் தமிழில் அத்வைதம் பற்றி நல்ல நூல்களே அனேகமாக இல்லை. விசிஷ்டாத்வைதம் பற்றி நிறைய நூல்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாமே வைணவ பக்தி நோக்கிலே எழுதப்பட்டுள்ளன.
அத்வைதமும் விசிஷ்டாத்வைதமும்The discussion about the relationship between religion and spirituality is a most relevant subject these days. Indeed, effectively deciphering this relationship is not an effortless task.
The religion and spiritualityபுதுவை வெண்முரசு கூடுகை 85
வணக்கம் நண்பர்களே!
புதுவையில் நடைபெறும் “வெண்முரசு” கலந்துரையாடலின் 85-வது அமர்வு, “வெய்யோன்” நூலை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 22, 2025 அன்று நடைபெறவுள்ளது.
இதில் நண்பர் சிவராமன் பேசுவார்.
நிகழ்விடம் புதுச்சேரி, வெள்ளாழர் வீதியில் உள்ள கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” ஆகும்.
நேரம் மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
வெண்முரசு வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
August 18, 2025
வைரமுத்துவும் ராமரும்
வைரமுத்துவின் கம்பராமாயண உரை விவாதமாகியுள்ளது. வைரமுத்துவை வசைபாடி கட்டுரைகளும் உரைகளும் வருகின்றன. உண்மையில் அதிலுள்ள பிரச்சினை என்ன? நான் என்ன நிலைபாடு எடுக்கிறேன்?
தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025
வழக்கம்போல தமிழ்விக்கி தூரன் விழா அமைப்பு- நிர்வாகம் முழுக்கவே ஈரோட்டு நண்பர்களால் செய்யப்பட்டது. ஈரோடு கிருஷ்ணன் வழிகாட்டுதலில் பிரபு, பாரி, சிபி, மெய்யரசு, அழகியமணவாளன் என பல நண்பர்கள் இணைந்து நடத்தினார்கள். நான் விருந்தினராக விழாநாள் அன்று காலை சென்று இறங்கினேன். விழா ஒருங்கிணைப்பு நிகழும்போது ஐரோப்பியப் பயணத்தில் இருந்தேன், ஆகவே என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொள்ளவில்லை.
ஐரோப்பாவில் இருந்து 31 ஆம் தேதி வந்தேன். வந்து ஒரு வாரத்தில், 7 ஆம் தேதி புக்பிரம்மா விழா. அங்கிருந்து 12 ஆம் தேதி நாகர்கோயில் மீண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின் 14 ஆம் தேதி மாலை ஈரோடு ரயிலில் நானும் அருண்மொழி நங்கையும் கிளம்பி மறுநாள் காலை ஐந்தரைக்கு சென்று சேர்ந்தோம். அந்தியூர் மணி, யோகேஸ்வரன் ராமநாதன் என பலர் ரயில்நிலையம் வந்திருந்தார்கள். நேராக விழா நிகழும் ராஜ்மகால் அரங்குக்குச் சென்றுவிட்டோம். அங்கே அஜிதன், தன்யா, ஜி.எஸ்.எஸ்.வி.நவின், கிருபாலட்சுமி, (அவர்களின் மகள் மானசாவும்தான்) ஆகியோருடன் தேவதேவனும் வந்து தங்கியிருந்தார்.
ஆண்டுதோறும் தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பாக கலைக்களஞ்சியத் தந்தை பெரியசாமி தூரன் நினைவாக வழங்கப்பட்டு வரும் தமிழ் விக்கி -தூரன் விருதுகள் நண்பர் வழக்கறிஞர் செந்திலின் திருமண மண்டபத்தில்தான் நிகழ்வது வழக்கம். நகரில் இருந்து சற்று தள்ளி இருக்கும் இடம். ஆகவே நகர்மக்கள் இயல்பாக வரமுடியாது. ஆனால் அந்த இடம் எங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமாகவே அளிக்கப்படுகிறது.(பராமரிப்புச் செலவு மட்டும்) எங்கள் செயல்முறையே மிகக்குறைவான செலவில் நிகழ்ச்சிகளை நடத்துவதுதான்.
நான் அறைக்குச் சென்றதுமே படுத்து ஒன்பது மணிவரை தூங்கிவிட்டேன். நிகழ்வுகள் மாலை நான்கு முதல்தான். வரும் வழியில் ஒரு காபி சாப்பிட்டிருந்தாலும்கூட நல்ல தூக்கம் வந்தது. ரயிலிலும் நன்றாகவே தூங்கியிருந்தேன். எப்படியும் கண் விழித்ததும் பேச்சும், சிரிப்பும் தொடங்கிவிடும். சக்தியை ஏற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. ஒன்பது மணிக்கு சிற்றுண்டி வந்துசேர்ந்தபோதுதான் விழித்துக்கொண்டேன்.

நண்பர்கள் வரத்தொடங்கினார்கள். உரையாடல் தொடங்கியது. இத்தகைய நிகழ்வுகளின் அழகு என்பதே அந்த உரையாடல்கள்தான். இலக்கியவாதிகள் நடுவே ஒருங்கிணைக்கப்படும் உரையாடல்கள் ஒரு வகையில் உதவியானவை, அவர்களின் இலக்கியப்புரிதலுக்கு அவை உதவும். இலக்கியவாதிகள் வாசகர்களை இயல்பாகச் சந்திக்கும் இத்தகைய நிகழ்வுகளில்தான் தங்களை எவர் வாசிக்கிறார்கள், எப்படி வாசிக்கிறார்கள் என எழுத்தாளர்கள் அறியமுடியும். வெவ்வேறு களங்களில் எழுதிக்கொண்டிருக்கும் ஆய்வாளர்களை வாசகர்கள் அறியவும், சந்திக்கவும் முடியும்.
இத்தகைய விழாக்கள்தான் இலக்கியத்தை கொண்டாட்டமாக ஆக்குபவை. நீண்டநாட்களுக்குப் பின் இத்தகைய நிகழ்வுகளைத்தான் இலக்கியவாழ்வின் சிறந்த கணங்களாக நினைவுகூர்கிறோம். அரிய சந்திப்புகள் ஒருபக்கம். முக்கியமான தொடக்கங்களை நிகழ்த்திய உரையாடல்கள் இன்னொரு பக்கம். பலசமயம் அவை நிகழும்போது அவை எத்தகைய முக்கியத்துவம் கொண்டவை என நமக்குப் புரிவதில்லை.
நான் க.நா.சுவை இப்படி ஒரு நிகழ்விலேதான் முதலில் சந்தித்தேன், உரையாடினேன். அதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.மிகமிக இளம் வயதில் இத்தகைய ஒரு நிகழ்வில்தான் பெருநாவல் என்னும் கனவை என்னிடம் பி.கே.பாலகிருஷ்ணன் உருவாக்கினார். இத்தகைய நிகழ்வுகள் வழியாகவே நாம் இலக்கியம் மீதான நம் நம்பிக்கையை உறுதிசெய்துகொள்கிறோம்.
ஆனால் இலக்கியப்படைப்புகளை எழுதும் பலருக்கு இரண்டு சிக்கல்கள் உள்ளன. ஒன்று, எதையும் அறியவோ கற்கவோ முடியாத தேக்கநிலை. இரண்டு, தாங்கள் அங்கே எப்படி மதிக்கப்படுவோம் என்னும் பதற்றம். மதிக்கப்பட மாட்டோமோ என்னும் குழப்பம். மதிக்கப்படவில்லை என்னும் சீற்றம். இக்காரணங்களால் விழாக்களைத் தவிர்ப்பவர்கள் உண்டு. அதைப்பற்றி எந்தக் கவலையும் தேவதேவனுக்கு இல்லை, அவர் மதிக்கப்படாத இடமும் இல்லை என்பதே அதற்கான பதில்.

மாலை நண்பர்களுடன் ஒரு நடையாகச் சென்று கவுண்டச்சிப்பாளையத்திலுள்ள டீக்கடையில் டீ குடித்தேன். இந்த விழாவின்போது இது ஒரு சடங்கு. இந்த ஒரே கடைதான் அமர்ந்து டீ குடிக்க பொருத்தமானது. நம் நிகழ்வுக்காலம் முழுக்க எந்நேரமும் அங்கே இலக்கியவாதிகள் சிலர் அமர்ந்து ஆவேசமாக விவாதித்துக் கொண்டும் வெடித்துச் சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் அப்படி அங்கே டீ குடிப்பது ஒருவகையான இனிய சடங்காக ஆகிவிடுகிறது. காரணம் நல்ல நினைவுகள்.
நிகழ்வுகள் மாலை நான்கு மணிக்கு தொடங்கின. மதியத்திற்கு முன்னரே இருநூறுபேர் வரை வந்துவிட்டனர். இம்முறை இருநூறுபேருக்கு தங்குமிடம் தேவைப்பட்டது. கோவை விழாவில் தங்குமிடம் கோரி பதிவுசெய்பவர்களில் இருபது முப்பதுபேர் முன்னரே தெரிவிக்காமல் வராமலிருப்பதுண்டு. அந்த இடங்களுக்கு நாம் செய்த செலவு வீணாகும். ஈரோட்டில் கிருஷ்ணன் முந்தைய விழாக்களில் அப்படி வரத்தவறியவர்களை பட்டியலிட்டு அவர்களை நீக்கப்பட்டியல் ஒன்றில் சேர்த்துக்கொண்டே இருந்தார். கோவை பட்டியலில் அப்படி தெரிவிக்காமல் இருந்தவர்களை கண்டுபிடித்து நீக்கம் செய்தார். ஆகவே பதிவுசெய்த அனைவருமே வந்துவிட்டார்கள்.
சென்ற முறை விருது பெற்ற நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர். மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்) எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்) மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்) என நண்பர்கள். தேவதேவன் , சோ.தர்மன், சுப்ரபாரதி மணியன் என மூத்த எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.
நான்கு மணிக்கு நிகழ்வு தொடங்கும்போது அரங்கு முழுமையாகவே நிறைந்திருந்தது. ஓர் ஆய்வாளர் பேசும் அரங்குக்கு முந்நூறுபேர் கண் நிறையும் தொலைவு வரை நிரம்பியிருப்பது தமிழகத்தில் இன்னொரு வாய்ப்பில்லாத காட்சி. ஆறுமுக சீதாராமன் அரங்கை சபரீஷ் வழிநடத்தினார். ஆறுமுக சீதாராமனை எஸ்.ஜே.சிவசங்கர் கௌரவித்தார்.

ஆறுமுக சீதாராமன் நாணயவியலில் இன்று தமிழகத்தின் முதன்மையான ஆளுமை. அவரும் அமைச்சர் தங்கம் தென்னரசும் இணைந்து எழுதிய தமிழகக் காசுகள் என்னும் பெருநூல் இப்போது வெளிவந்துள்ளது. ஒரு கலைக்களஞ்சியம் போன்ற பெருந்தொகுப்பு அது.
நாணயவியல் போன்ற துறைகளே வரலாற்றாய்வுக்கான அடிப்படைகளை வழங்குகின்றன. ஒரு தொல்பொருளில் மிக அதிகமாக அடையாளங்களும் எழுத்துக்களும் இருப்பது நாணயங்களிலேயே. ஆகவேதான் அவை வரலாற்றெழுத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. நாணயவியலை ஆழ்ந்து கற்பது ஒரு பக்கம். ஆனால் பொதுவாசகர்களுக்கு நாணயங்களின் உலகம் அறிமுகமிருக்கவேண்டும், அதனூடாக தான் வாழும் சமூகத்தின் ஒரு சித்திரம் அகத்தே உருவாகும்.
ஆறுமுக சீதாராமன் முதல் இருபது நிமிடங்களில் சங்ககாலத்து நாணயம் முதல் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட தொடக்ககால நாணயங்கள் வரை தமிழகத்தின் வரலாற்றை நாணயங்கள் வழியாகவே சித்தரித்தார்.அதன்பின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஒவ்வொன்றும் நம் புரிதலை வெவ்வேறு திசைகளில் திறப்பவை.
உதாரணமாக, தமிழகத்தின் தொன்மையான காசுகள் பெரும்பாலும் சதுரவடிவமானவை, ஐரோப்பியத் தொடர்பால்தான் வட்டவடிவ நாணயங்கள் உருவாயின. இது பலருக்கும் தெரியாத எளிய செய்தி. ஓர் இலக்கியவாதிக்கு இது ஒரு குறியீடாகக்கூட விரியக்கூடும்.

பல முக்கியமான கேள்விகளும், வியப்பூட்டும் பதில்களும். உதாரணமாக, பழைய நாணயங்களின் மாற்றுமதிப்பு என்ன? (நாணயங்கள் பழங்காலத்தில் அவற்றின் உலோகத்தின் சந்தை மதிப்பையே தங்கள் மதிப்பாகக் கொண்டிருந்தன, தங்கம் மற்றும் வெள்ளியாலான காசுகள் அதனால்தான் வெளியிடப்பட்டன. ஆனால் செம்புக்காசுகளின் மதிப்பு உள்ளூரில் மட்டுமே. உள்ளூர் அரசு நிர்ணயம் செய்வது அது)
எவர் நாணயங்களை வெளியிட அனுமதி இருந்தது?(பழங்காலத்தில் ஒரு மைய அரசு மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்சியாளர்களும் நாணயங்களை வெளியிட்டனர்) பழங்கால நாணயங்களில் மிகப்பெரும்பாலும் உள்ள சின்னம் எது? (வேலியிடப்பட்ட மரம். ஆட்சிமரம்). நாணயங்களிலுள்ள தேள் எதைக்குறிக்கிறது? (பிரசவத்தை).ஒரு மணிநேர அமர்வு சட்டென்று முடிந்தது போல இருந்தது.

அடுத்த அமர்வு வெ.வேதாசலம் அவர்களுடையது. வேதாசலத்தை மு.இளங்கோவன் கௌரவித்தார். அதன்பின் ஒரு பாடலும் பாடினார். வேதாசலத்தின் அமர்வை ஜி.எஸ்.எஸ்.வி.நவின் ஒருங்கிணைத்தார்.
வேதாசலத்தின் அமர்வு அமர்வு சென்ற ஆண்டும் இருந்தது. இவ்வாண்டு அவரே விருது பெறுவதனால் அவருடைய நூல்களை வாசித்துவிட்டு வந்திருந்தார்கள். ஆகவே அவருடைய நூல்களை ஒட்டி தொடர்ச்சியாக வினாக்கள் எழுந்துகொண்டிருந்தன. அவர் கைக்கொள்ளும் ஆய்வு முறைமைகள், தமிழகத்தில் சமணம் தென்னிந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே கப்பல் வழியாக நேரடியாக வட இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்பதுபோன்ற அவருடைய ஊகங்கள், பாண்டிய நாட்டு நிலமானிய முறை பற்றிய அவருடைய கணிப்புகள் என தொடர்ச்சியான விவாதம்.
வேலுதரன் ஓர் சுதந்திர தொல்லியல் ஆய்வாளர். எந்த அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. கல்வித்துறையாளரும் அல்ல. தனிப்பட்ட ஆர்வத்தால் ஆலயங்களுக்குச் செல்லத்தொடங்கி அப்படியே தொல்லியல் ஆர்வலர் ஆனார். அவருடைய பணி என்பது தொல்லியல் இடங்களை பார்த்துப் பதிவுசெய்வது மட்டுமே. குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய நெடுங்கற்கள், நடுகற்கள் போன்றவற்றை விரிவாக பதிவுசெய்துள்ளார். ஶ்ரீவித்யா அந்த அரங்கை ஒருங்கிணைத்தார்.
அவரை ஒரு வலைப்பதிவர் என்றுதாந் சொல்லவேண்டும். ஆனால் பதிவுசெய்வதேகூட இன்று முக்கியமான பணிதான். ஒவ்வொரு அரங்கிலும் இப்படி தன்னார்வத்தால் பணியாற்றுபவர்களை அறிமுகம் செய்வது எங்கள் வழக்கம். முக்கியமான காரணம், இனி வருங்காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆர்வமுள்ள அனைவரும் இப்பணியைச் செய்யலாம் என்பதனால்தான். ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய ஒரு பணி உள்ளது. இந்தியா போன்ற மாபெரும் நிலத்தில் தன்னார்வலர்கள் மூலைமுடுக்கெல்லாம் சென்று பதிவிட முடியும். தக்காணப்பீடபூமியின் பல வரலாற்றுக்கு முந்தையப் பதிவுகள் தன்னார்வலர் செய்தவை.
வேலுதரன் தமிழகத்திலுள்ள நடுகற்கள் உட்பட தொல்காலச் சின்னங்களை காட்சிகளுடன் பதிவிட்டு தொகுத்துரைத்தபின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். தொல் பண்பாட்டுடன் இன்றுள்ள பண்பாட்டின் உறவு உடபட பல சுவாரசியமான வினாக்கள் எழுந்தன. வேலுதரனை செந்தில் ஜெகந்நாதன் கௌரவித்தார். நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
மாலையில் கே.ஜி. கண்ணபிரான் வானியல் அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தினார். பொதுவாக இலக்கிய ஆர்வலர்களுக்கு அன்னியமான ஓர் உலகம் அது. ஆனால் சென்ற நூற்றாண்டு இலக்கியவாதிகள் பலர் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். சிவராம காரந்துக்கும் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவுக்கும் நல்ல பயிற்சி இருந்தது என கேள்விப்பட்டிருக்கிறேன். கே.ஜி.கண்ணபிரானை கோவைமணி கௌரவித்தார்.
இரவு 11 மணி வரை தொடர்ச்சியாக நிகழ்வுகள் இருந்தன.நான் களைப்புடன் தூங்கச் சென்றபோது 12 மணி கடந்துவிட்டிருந்தது. பேருந்துகளில் பங்கேற்பாளர்களை வெவ்வேறு தங்குமிடங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இரவு நெடுநேரம் வரை திருமணமண்டபம் முழக்கமிட்டுக்கொண்டே இருந்ததைக் கேட்டேன்.
(மேலும்)
தமிழ் ஒளி
தமிழில் தலித் இலக்கியம் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்ட தலித் இலக்கியம் தமிழ் ஒளி எழுதிய வீராயி. சென்னையில் கடும் வறுமையில் இருந்த தமிழ் ஒளி இறுதியில் புதுச்சேரியில் கொடிய வறுமையில் வாழ்ந்தார். அங்கே அவர் உளநோயால் அவதிப்பட்டதாகவும், கையில் குவளையும் ஒரு பையில் தன் படைப்புகளுமாக சாலைகளில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழ் ஒளி 29 மார்ச் 1969 ல் 41 ஆவது வயதில் மறைந்தார்.
நீலமெனும் அழகு
வெண்முரசு நாவல் வரிசையில் ஏழாவது நாவல் இந்திரநீலம். தினம் ஒரு அத்தியாயம் என்ற முறையில் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுடன் இணைந்து , தினமும் எனக்குள்ளும் ஒலிக்கவிட்டுக் கொண்டிருக்கிறேன் வெண்முரசை. ஒருநாவல் முடிந்ததும் அடுத்ததை எடுத்து வெறுமனே எனது பார்வையில்படும்படி வைத்துக்கொள்வேன். பின்பு முன்னுரைகளை வாசிக்க ஒருநாள் எடுத்து அதை என்னுள் ஓடவிட ஒருநாள் என்று போகும். அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இம்முறை இறங்கியபோது எப்போதும்போல இப்போதும் பொய்க்காது நான் கண்டது திருசூழ் பெருநிலையை அதன் மூலமாய் அறிந்தேன் கேளு சரண் மகாபாத்யாய அவர்களை.
இப்போது இந்திரநீலம் பற்றி ..
துவாரகை கண்ட இளையயாதவன் தனது துணைவியராய் ருக்மிணி , ஜாம்பவதி , சத்யபாமை, நக்னஜித்தி, மித்ரவிந்தை, லட்சுமணை , பத்ரை , காளிந்தி ஆகிய எட்டு நாயகியரை கண்டடைந்து காதல்கொண்டு தம் உள்ளம் அமர்ந்த அத்தேவியரை வான்தோய் வாயில் கொண்ட துவாரகையில் அமர்த்தும் கதைகளை சொல்வதே இந்த நாவல். எட்டு குலங்களில் இருந்து பெண்கொண்டு வரும் கதைகள் துருபத இளவரசன் திருஷ்டத்யும்னன், இளைய யாதவருக்காக தொழும்பர்குறி பெற்ற சாத்யகி இவர்கள் இருவரின் நட்பாடல்களில் நேர் உரையாடல்களாகவும் சூதர்கள் வழியாகவும் காவிய நாடகங்களின் காட்சிப்படுத்துதல்களிலும் சொல்லப்படுகிறது.
சுப்ரை நினைவிருக்க மலைமுடித்தனிமையுடன் திரௌபதியின் ஆணைப்படி உதவிகோரி துவாரகை வரும் திருஷ்டத்யும்னன் அந்த நகரின் பிரமாண்டத்தில் ஆடல்களில் பெண்களில் கவரப்படுகிறான். ஆனால் கரையாமல் கரைந்து கட்டுண்டு கிடப்பது இருவருக்காகவே ஒன்று தனது உற்ற நண்பனாய் மாறிய சாத்யகி, இன்னொருவர் தன்னை காண்பவரை மிச்சமில்லாமல் அனைத்தையும்விட்டு தன் நெஞ்சச் சிறையடைக்கும் இளையயாதவர்.
எட்டுக்குலங்களுக்கும் சென்று பெண்கொண்டுவந்த கதைகள் ஒவ்வொன்றும் அந்தந்த குலங்களின் வரலாறை அவர்களின் பண்பாட்டை , அரசியல், பொருளாதார தகுதியை என அனைத்தையும் சொல்கிறது . அதோடு மறுக்கமுடியாமல் அந்நாயகியர் துவாரகை மன்னன் மீது கொண்டுள்ள காதலையும் விவரிக்கிறது மிகைப்படுத்தாத காவியத்தன்மையுடன். பாராதவர்ஷத்தையே திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அரசு அமைத்து ஷத்ரிய தகுதி நோக்கி சென்று கொண்டிருக்கும் தலைவன் இளையயாதவன் . ஆனால் சிறிய அரசுகளில் துவாரகை கொள்ளும் மணவுறவுகள் அதற்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஆய்ந்தறிந்து பெண் கொண்டு மீள்கிறார் அவர் .
‘அவன் விரும்புவதை என்னை வைத்தே நிகழ்த்திக்கொள்கிறான் அது சில நேரங்களில் நான் விரும்பாததாக முதலில் இருந்தாலும் கூட‘ என்ற வகையில் ஒரு தருணத்தில் எப்போதும்போல சிரித்தபடி சொல்லும் பலராமர் , துவாரகையின் மூத்த அமைச்சர் அக்ரூரர், திருஷ்டத்யும்னன் , சாத்யகி போன்றவர்கள் இளையயாதவருக்கு உடன் நிற்பதுபோல காட்சியளிக்கிறார்கள் ஆனால் அவர்களும் நானே என்று காட்சிப்பிழை களைகிறார் இளையயாதவர்.
இந்தநாவலில் மைய ஆட்டத்தை நிகழ்த்துவது சத்யபாமையின் முன்னோர் சத்வ குலத்தின் வீரசேனன் சூரியனிடம் பெற்றதாக சொல்லப்படும் சியமந்தகமணி. வீரசேனரிடம் அகந்தை நிரப்பி இந்திரனை வணங்கவிடாமல் செய்தது தொடங்கி அது செய்த வினைகள் பல. சத்ராஜித்தை கர்வம்கொண்டு நடைபோட செய்து பிரசேனனை பழிவாங்கியது, பின்பு அவரும் அதன் விழைவால் கொல்லப்படுவது , சத்யபாமையை பெண்கொள்ள வந்த சேதிநாட்டரசன் சிசுபாலன் நோய்பெற்று செல்வது, இளையயாதவரின் அணுக்கர்களான அக்ரூரரை , திருதவர்மனை, ஏன் சாத்யகியைக்கூட விடவில்லை அந்த மணி. ஆனால் சாத்யகியிடம் அந்த மணி கொண்ட ஆடலை தூயநட்பு எனும் முழுபலத்துடன் எதிர்கொண்டு நிறுத்துகிறான் திருஷ்டத்யும்னன்.
காளிந்தி தவிர்த்த அரசியர்கள் எழுவரும் கொண்டுள்ளனர் ஒரு காரணத்தை மணி தனக்கே என்றுகூற. அவள் மட்டுமே சரியான பாடம் தன்தந்தையிடம் படித்ததாக சொல்கிறாள் . சாந்தர் ஒவ்வொரு அரிசியின் கையிலும் அந்த மணியை வைக்க சொல்லி இறுதியாக காளிந்தி கையில் வைக்கும்போது அது அனைவருக்கும் கூழாங்கல்லாய் காட்சி அளிக்கிறது. ‘ மகா யோகிகள் அருமணிகளைத் தொடமாட்டார்கள் , தொட்டால் அவை கூழாங்கற்களென ஆகிவிடும் என்பார் என் தந்தை‘ என்கிறாள் காளிந்தி. என் தேவியரில் எனக்கு அணுக்கமானவள் இவளே . என்னுடன் முதலில் இணைத்துப் பேசப்பட வேண்டியவள் இவளே என்கிறார் இளையயாதவர்.
அந்த அரங்கில் நடந்த உரையாடல்களில் இதுவே உச்சம் என எண்ணி முன் செல்லும் இடத்தில்
காளிந்தி கைவிரித்து முகம்பொத்தித் தலைகவிழ்ந்திருக்க , சத்யபாமை எழுந்து சென்று ‘இப்புவியில் நீயே பேரருள் பெற்றவள் இளையவளே , நீடுழி வாழ்க ! என்று சொல்ல பிற அரசியரும் எழுந்து கண்களில் நீருடன் கைகூப்ப சுபத்திரை மணியை இளைய யாதவரிடம் இருந்து பெற்று சாளரம்வழியாக வெளியே கடலில் போடுவது மற்றொரு உச்சம். அந்த நிகழ்வுகளின் பயனாய் யோகம் எதுவென அறிகிறான் திருஷ்டத்யும்னன்.
அரசியலும் சமூக அடுக்குகளும் ஊடுபாவாய் கலந்து வருகிறது இளையவர் மணம் கொண்ட எட்டுக்கதைகளிலும். ஆயர்களின் ஒவ்வொரு குடியும் அவர்களுக்கான தனிப்பெருமையை எக்கணமும் விடாது கொண்டிருப்பது மற்றும் அந்த பெருமை அவர்களை இட்டு செல்லும் பாதை. இது இன்றும் நம்மை ஊழாய் விழைவாய் தொடர்வதை உணரலாம்.
திரௌபதியின் தூதுடன் துவாரகை வரும் திருஷ்டத்யும்னன் சாத்யகியுடன் செல்லும் நகருலாக்கள் , பயணங்கள் , களியாட்டங்கள், நிகழ்த்துக்கலை மன்றங்கள், சூதர் அமர்வுகள் போன்றவை காண்பிப்பது வேறொரு உலகை. அவர்களின் உரையாடலின் ஊடாகவே இளையவர் மணம் கொண்ட கதைகள் நிகழ்கின்றன.
நகரில் அவன் கண்ட பிரமாண்டத்துக்கு நேரெதிராக காட்சி தந்து எளிமையான முறையில் திருஷ்டத்யும்னனை
வரவேற்கிறார் துவாரகை அரசர். அக்ரூரர் திருஷ்டத்யும்னன் உரையாடல் ஒரு விரிவான சித்திரத்தை எந்த பூச்சும் இல்லாமல் அரசியலில் இன்று துவாரகையின் இடமென்ன என்று சொல்லிச்செல்கிறது அதன் மையமாக வேளாண்குடி மற்றும் யாதவகுடிகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடும் .
திருஷ்டத்யும்னன் துவாரகையில் மரியாதை நிமித்தமாக அரசியர்களை தனித்தனியாக சந்திக்கிறான் . அவன் பார்வையில் அவர்கள் அனைவரும் வேறொரு தோற்றம்கொள்கின்றனர். ஏற்றத்துடனும் இறக்கத்துடனும் அழகுடனும் அறிவுடனும் என ஒவ்வொருவரும் பல வகையில் தங்களை முன்வைக்கிறார்கள். அந்த சந்திப்புக்களில் சற்றே நாம் நின்றுசெல்லத்தக்க ஒரு இடம் ஜாம்பவதி ‘கற்பதறியாமல் கற்கவேண்டுமென்பதே எங்கள் குலமுறை‘ என்று சொல்வது.
அரசியர்களையும் அரசரின் அணுக்கர்களாகிய அக்ரூரர் , கிருதவர்மர் , சாத்யகி என அனைவரையும் பகடை என ஆட்டுவிக்கிறது சியமந்தக மணி. அந்த அனைத்து அக புற ஆடல்களுக்கு சாட்சியென நிலைகொள்கிறான் திருஷ்டத்யும்னன்.
சததன்வாவின் அரசியலாடலில் கட்டுண்ட அக்ரூரர் கிருதவர்மனை எண்ணி சினம் கொண்டவேளையில் நிகழும் போரில் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் தம்வீரர்கள் அனைவரையும் இழக்கும் தருவாயில் படகில் நின்றிருக்க எஞ்சிய இருவரில் ஒருவரான முதிய வீரர் திருஷ்டத்யும்னனை பார்க்கும் பார்வை எளியவன் ஒருவனை அரசனும் அஞ்சுவான் என்பதற்கு சான்று. அதன்பிறகு வரும் இளையவர் படகில் தான் முதலில் ஏறாமல் உயிருக்கு போராடும் வீரனை ஏற்றுவது இளவரசனும் மனிதனே என்பதற்கு சான்று.
அரசியலில் நாம் ஒன்று நினைக்க தலைமையும் ஊழும் வேறொன்று நிகழ்த்தும் என்பதற்கு திருஷ்டத்யும்னன் கிருதவர்மனை கைது செய்து அழைத்துவரும் காட்சியை சொல்லலாம். அவனின் தவறுக்காகவா இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கிறோம் என அவனே அவனை கேட்டுக்கொண்டு இல்லை சத்யபாமாவின் முன் அவனை அப்படி காண்பிப்பதே தனது ஆழ்மனதின் நோக்கம் என்று விடைகாண்கிறான்.

இருவரில் ஒருவர்(கிருதவர்மன்) மிகக்கீழான நிலையில் கொண்டுவரப்பட அடுத்தவர் (அக்ரூரர் ) சத்யபாமையின் அடைக்கலத்தில் சபை நுழைகிறார். ‘அடைக்கலம் கோரியவரிடம் வணிகம் பேசக்கூடாது அது அரசியருக்கு அழகல்ல ‘ என்கிறாள் சத்யபாமா பலராமரிடம்.
சததன்வா படைகொண்டு வரக்கூடும் என்பதில் தொடங்கி இறுதிவரை ஆடலை அதன்போக்கில் விட்டுவிட்டுபின்பு மொத்தத்தையும் தனதாக்கிக்கொள்கிறார். சபையில் ஒருவேண்டா விருந்தாளியைப்போல திருஷ்டத்யும்னன் இருக்க, சத்யபாமை தன்னிடத்தை ஒருவகையில் நிறுவ என சென்றுகொண்டிருக்க, இளைய யாதவர் ஒரு நுண்ணிய செயலின்மூலம் அவர்கள் இருவரின் முனைப்பையும் சற்றே மட்டுப்படுத்துகிறார்.
மித்ரவிந்தையை பெண்கொண்டுவர இளையவர் தங்கை சுபத்திரையுடன் செல்லும்பயணம். அகச்சோர்வுறும் நேரங்களில் எல்லாம் எடுத்துவாசிக்கவேண்டிய பகுதியது ( இமையாநீலம் ஒன்பதில் ). சுபத்திரை உணர்வதாய் சில வரிகள் ‘ முதன்முறையாக இளையயாதவர் புரவியில் செல்வதில் விந்தையொன்றை அவள் கண்டாள். புரவியில் செல்பவர்கள் அதன் உடல் அசைவுக்கு ஏற்ப தங்கள் உடல் அசைவுகளைப் பொருத்திக்கொள்ளவேண்டும். அது காற்றில் ஒரு நடனம் . அவரோ மிதந்து ஒழுகிச்செல்பவர் போலிருந்தார். அப்புரவி அவர் உடலசைவுக்கென தன்னை மாற்றிக்கொண்டு சென்றது ‘ . இங்கு அவரவர் தத்தம் புரவியை எண்ணிக்கொள்ளலாம் . நாம் யாரென அறிய!
இளைய யாதவர் , பார்த்தனுடன் சென்று யமுனை ஆடி களிந்தவிழி தேடி செல்லும் பயணத்தில் பார்த்தன் அறிவது ‘தொடக்கம் எதுவும் மையமே‘ என்று. ‘சூரியனை வழிபட சியமந்தகம் எதற்கு‘ என்று சத்யபாமாவிடம் கேட்கிறார் கண்பார்வையற்று இருந்தாலும் ஒளிநோக்கும் திறன் மிகக்கொண்ட சாந்தர்.
கவிதைகள் / காதல்வரிகள் நாவலில் கொட்டிக்கிடக்கிறது என்றாலும் சில வரிகள் உவப்பாய் கூர்ந்து நோக்கி குறித்து வைக்க தூண்டிற்று .
‘இப்புவி ஓர் இனிய மதுக்கிண்ணம்‘
மன்மதனுக்கு உடலிருக்கலாகாதென்று கண்ட மூதாதை போல காமத்தை அறிந்தவன் எவருமில்லை .
விழிபூக்கும் செடிகளே பெண்ணின் உடல்களென்று சொன்ன சூதன் ஞானி
புன்னகை மாறா விழியுடையோன் ஒருவனை பெண்விரும்புதல் இயல்பு.
பட்டில் பட்டுப் பதிந்த பட்டுத்தடம்
அவர்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலை (இந்த வரிகள் துவாரகை நகரில் உள்ள பெண்களை குறித்து சொல்வது. ஆனால் நான் எனக்கு எடுத்துக்கொண்டேன் , யார் யார் மேலேல்லாமோ போட்டுப்பார்த்தேன் அப்படியே பொருந்தியது. அகாலத்தில் கணவனை இழந்த நான் கண்ட பலருக்கும் கூட அது பொருந்தியது என்றால் மிகையில்லை )
இன்றுவரை இப்புவியில் பிறந்தவர்களில் பெண்களை விடுதலை பெற்றவர்களாக மட்டுமே பார்க்கவிழையும் ஆண் அவர் ஒருவரே .சத்யபாமா கண்ணனை சந்திக்கும் தருணம் (எழுந்த நீலத்திருமுகம் ..நீயென சுட்டும் விரலென மூக்கு :) )சத்யபாமைக்கு காட்சி அளிக்கும் ஏழு தேவியர்கள் வைஷ்ணவி, மகேஸ்வரி, வராகி , சாமுண்டி , இந்திராணி, பிராமி…
ஒரு முகத்தை மட்டும் மட்டும் எண்ணி ஒரு பெயரை மட்டும் மூச்சென ஆக்கி இருப்பதன் பேரின்பத்தின் முன் அவன்கூட ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.
ஊனுடம்பு செல்லா வழிகளில் எல்லாம் உள்ளம் செல்லமுடியுமல்லவா .
மொழியிலும் காணாப்பெருவெளியிலும் எம்மைத் தவழவிடும் ஆசிரியருக்கு மிக்க நன்றி . உடன் பயணிக்கும் வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு என் அன்பு .
‘ சொல்லால் அமைந்த மரங்கள் சொல்வானத்துக்குக் கீழே சொல்மண்ணின் மேலெழுந்து சொல்மலர்களைச்சூடி நின்ற வெளியில் சொல்லேயாக பறந்தன புட்கள் . அவரன்றி பிறிதேதும் இலாத வெளியில் ‘ இருக்கிறேன் .
https://kmrvignes.blogspot.com/2025/07/blog-post.html
அன்புடன்
கே.எம்.ஆர். விக்னேஸ்
புத்தரில் அமைதல்
Nitya’s way consists of two basic elements. One is integrating music, art, and literature with spiritual philosophy. He often says that without this integration, proper learning is not possible. The second thing is learning philosophy through mind and brain.
The two priniciplesமூச்சை கவனிக்கும் பயிற்சி ஆரம்பமானது, பின்பு மெல்ல உடம்பின பாகங்களை உற்று நோக்கும் பயிற்சி தன்னை உணரும் ஆரம்ப கட்ட கல்வியின் முதல் படிக்கல்லாக உணர்ந்தேன். நீண்ட நேரம் அமர்ந்து பயிற்சி செய்ய முடியுமா என என் கேள்விக்கு முடியும் என்ற பதிலை என் உடல் எனக்கு அளித்தது.
புத்தரில் அமைதல்August 17, 2025
பறவை பார்த்தல் வகுப்புகள்.
செப்டெம்பர் இறுதி முதல் அக்டோபர் 2 வரை மாணவர்களுக்கு தசரா விடுமுறை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி. இந்த விடுமுறையில் மாணவர்களுக்கான ஒரு பறவை பார்த்தல் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம்.
அக்டோபர் 2, 3 மற்றும் 4 தேதிகளில். (வியாழன் வெள்ளி சனி) தேதிகளில் இந்நிகழ்வு நடைபெறும். ஞாயிறு ஓய்வுக்குப்பின் திங்கள் அக்டோபர் 5 பள்ளி திரும்பும் வசதிக்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய மாணவர்கள் செல்பேசி அடிமைத்தனத்திற்குள் வெகுவேகமாகச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர் விழிப்பாக இருந்தாலும் பள்ளி மற்றும் நட்புச்சூழலில் இருந்து வரும் தீவிரமான பாதிப்பை தடுக்கமுடியாது. செல்பேசி ஈடுபாடு காரணமாக எதையும் கூர்ந்து கவனிக்கமுடியாதவர்களாக, நீண்டநேரம் கவனம் நிலைக்காத பொறுமையின்மை கொண்டவர்களாக குழந்தைகள் மாறுகிறார்கள்.
இந்தச் சிக்கலுக்கு தீர்வாக முதன்மைநாடுகளில் கண்டடையப்பட்டிருப்பது ‘நேரடியான செயல்பாடுகள்’ என்பதே. கானகம் செல்லுதல், கைகளால் செய்யப்படும் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை. அவை கவனத்தை வெளிப்பக்கமாக ஈர்த்து உளக்குவிப்பை உருவாக்குகின்றன. ஆகவேதான் பல பெற்றோரின் கோரிக்கைக்கு ஏற்ப பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் வகுப்புகளை ஒருங்கிணைக்கிறோம். இது பாதுகாக்கப்பட்ட தனியார் நிலத்திலுள்ள இயற்கையான காட்டில் நிகழும் பயிற்சி. பறவைகளை எப்படிப் பார்ப்பது, எவற்றை கவனிப்பது என்னும் வகுப்புடன் நேரடிப் பயிற்சியும் அளிக்கப்படும்.
ஏற்கனவே மூன்று முறை இந்த பறவை பார்த்தல் வகுப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பங்குகொண்ட மாணவர்கள் மிகப்பெரிய மாற்றத்தை அடைவதை பெற்றோர் உணர்ந்தனர். அவர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்தமையால் மீண்டும் விடுமுறைக்காலத்தில் இந்த வகுப்புகள் நிகழ்கின்றன.
15 வயதுக்குக் குறைவான குழந்தைகளுடன் பெற்றோர் அல்லது காப்பாளர் ஒருவர் இருந்தாகவேண்டும் என்பது நிபந்தனை. பெற்றோருக்கும் கட்டணம் உண்டு, அவர்களும் வகுப்பில் அமர்வது நல்லது. மூன்றுநாட்களிலும் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும்.
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
நாள் அக்டோபர் 2, 3 மற்றும் 4 (வியாழன் ,வெள்ளி, சனி)
பறவைபார்த்தல், தாவரங்களை அறிதல் ஏன்?பறவையும் தாவரங்களும்தாவரவியல் கல்வி எப்படிப்பட்டது? பறவைத்தியானம்- சர்வா பறவைபார்த்தல், கடிதம் வானமும் பறவைகளும் குழந்தைகளுக்கு மேலும் பயிற்சிகள் பறவைகளுடன் இருத்தல் பறவையும் குழந்தைகளும் தாவரங்களும் குழந்தைகளும் தாவரங்களின் பேருலகம் தீராத இன்பங்கள் வனம், வகுப்பு- கடிதம் தாவரங்கள், கடிதம் தாவர உலகம், கடிதம் அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவைகுரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.
யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.
இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.
யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.
சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.
(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)
நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
(இந்தியதத்துவம் முதல்நிலை இடங்கள் நிறைவுற்றன)
இந்திய தத்துவம் ஐந்தாம் நிலைஇந்திய தத்துவத்தின் ஐந்தாம் நிலை வகுப்பு நிகழ்கிறது. நான்காம் நிலை முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
நாள் செப்டெம்பர் 26 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு)
தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள்
சென்ற 16 ஆகஸ்ட் 2025 அன்று ஈரோடு ராஜ்மகால் அரங்கில் இரண்டு நாட்கள் நிகழ்ந்த தமிழ்விக்கி தூரன் விருதுவிழாவில் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.
மூத்த வரலாற்றாய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர்எ.சுப்புராயலு
ஜெயமோகன் உரை
விருது பெற்ற வெ.வேதாசலம் ஏற்புரை
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும்
தமிழக மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் உங்களுக்குப் பெரும்பங்குண்டு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அரசியலின்மை பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். அரசியலற்றவர் என்று உங்களை முன்வைக்கிறீர்கள். மக்களை அரசியல்படுத்த அறிஞர்களும் களச்செயல்பாட்டாளர்களும் கடுமையாகப் போராடிவரும் சூழலில் நீங்கள் அதற்கு எதிரான எதிர்மறைச்சக்தியாக நிலைகொள்கிறீர்கள்.
அரசியல் சார்புநிலை என்பது ஒரு கீழ்நிலை அல்ல. அது ஒரு தெளிவு. நாம் எவர் என்றும் நமக்கு என்னவேண்டும் என்றும் அடையும் புரிதல் அது. அரசியல் அற்றவர்கள் என உண்மையில் எவருமே இருக்கமுடியாது. அரசியலை ஒளித்து வைத்துக்கொண்டு அரசியல் இல்லாதவர்களாக நடிக்கிறார்கள் பலர். நீங்களும் அத்தகையவர்தான்.
அரசியல் நிலைப்பாடுதான் ஒருவனின் அடையாளம். அவன் சிந்திப்பவன் என்பதற்கான சான்று அதுதான். பசப்புகளை விட்டுவிட்டு உங்கள் அரசியலை முன்வையுங்கள்.
செல்வ. அரங்கராசன்.
அன்புள்ள செல்வ அரங்கராசன்,
உங்கள் கடிதம் நம் இடதுசாரிகள் வழக்கமாக மேடையில் பேசும் வசனங்கள் மட்டுமே கொண்டது. ‘மக்களை அரசியல்படுத்துதல்’ என்று அவர்கள் சொல்வது மக்களை தங்கள் கட்சியில் சேர்ப்பதைத்தான். சேராதவர்கள் எதிரிகள். இது எல்லா அரசியல்கட்சியினரும் இன்று கொண்டிருக்கும் ஒரு நிலைபாடு. அவர்களின் ஏமாற்றம் புரிகிறது. இத்தனை ஆயிரம் கோடி பணம் செலவழித்து, இத்தனை ஊடகவல்லமையுடன் பிரச்சாரம் செய்தும் மக்களில் கணிசமானவர்கள் அவர்களுடன் சேராமலிருக்கக் கண்டு அடையும் சீற்றம் அது.
அரசியல்தரப்பினரின் பிரச்சாரங்களுக்கு நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. அது காற்றுக்கு எதிராக கம்பு சுற்றுதல். அரசியல்தரப்பினருக்குக் கேட்கும் செவி இல்லை. ஆனால் உங்கள் கருத்தை நம்பும் சிலரும் என் சூழலில் இருக்கிறார்கள் என்பதனால் அவர்களுக்காக ஒரு பதில்.
அரசியல் என்பது ஜனநாயகத்தின் ஒரு பிரிக்கமுடியாத செயல்பாடு. ஜனநாயகத்தில் நாம் வாழ்வதனால் நாம் அரசியலை அறியவும், அரசியல் சார்ந்த முடிவுகள் எடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் வாக்களிக்கவேண்டும். நம் வரிப்பணத்தை நமக்காகச் செலவழிக்கும் பொறுப்பை நாம் சிலருக்கு அளிக்கிறோம். அவர்கள் எவர் என நாம் முடிவுசெய்ய வேண்டும். அவர்கள் செய்வதைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் சரியாகச் செய்யவில்லை என்றால் பிறரை தேர்வுசெய்யவேண்டும்.இதுதான் ஜனநாயகத்தில் நாம் கொள்ளவேண்டிய அரசியல். இதை ‘ஜனநாயக அரசியல்’ என்று சொல்கிறேன்.
இந்த அரசியல் ஒவ்வொருவருக்கும் தேவை.நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முற்படாமலிருப்பதும் சரி, நாட்டில் என்ன நிகழ வேண்டும் என சிந்தித்து முடிவெடுக்காமல் பொறுப்பின்றி வாக்களிப்பதும் சரி ,மிகப்பிழையானவை. மக்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஜனநாயக அரசியலுக்குள் இல்லை என்பது உண்மை. அவர்களுக்கு இந்த அரசியலை புரியவைப்பதையே ‘மக்களை அரசியல்படுத்துதல்’ என்னும் சொல்வழியாக குறிப்பிடுகிறார்கள். மக்களை ஜனநாயகப்படுத்துதல் என்று வேண்டுமென்றாலும் சொல்லலாம்.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது கட்சியரசியல். ஏதேனும் ஒரு கட்சி சொல்வதை முழுக்க நம்புவது, கண்மூடித்தனமாக அதற்கு ஆதரவளிப்பது, உணர்ச்சிகரமான கட்சிவழிபாடு அல்லது தலைமை வழிபாடு, தன் சொந்த அடையாளமாகவே ஏதேனும் ஒரு கட்சிச்சார்பை கொண்டிருப்பது என்பதெல்லாம் அரசியல் அடிமைத்தனம் மட்டுமே. அது உண்மையில் ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது.
இப்படிச் சொல்கிறேன். ஒரு வாக்காளனாகவும், குடிமகனாகவும் நின்று ஜனநாயகத்தில் தன் கடமையை ஆற்றுபவனே உண்மையில் அரசியல்படுத்தப்பட்டவன். ஏதேனும் ஒரு தரப்புக்கு மூளையை அடகு வைத்துவிட்டவன் உண்மையில் அரசியல்நீக்கம் செய்யப்பட்ட அடிமை மட்டுமே. அவன் உண்மையான ஜனநாயகத்துக்கு எதிரானவன்.
இன்றைய சூழலைப் பாருங்கள். தூய்மைப்பணியாளர்கள் தனியாருக்குக் கையளிக்கப்பட்டு, அவர்களின் ஏற்கனவே குறைவான ஊதியமும் முக்கால் பங்காக குறைக்கப்பட்டபோது அவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். அவர்களை போலீஸ் நடவடிக்கை வழியாக அப்புறப்படுத்தியது தமிழக அரசு. அவர்களை முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. அவர் கூலி படம் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு திமுக அனுதாபி அதை நியாயப்படுத்தவேண்டும். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர் என்றால் பேசாமல் இருந்துவிடவேண்டும்.
ஆனால் திமுகவை குற்றம்சாட்டி குமுறும் பாரதிய ஜனதாக்கட்சியினர் அவர்களின் தலைவரான இந்திய பிரதமர் இதே போன்றுதான் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொண்டார் என்பதையும், அப்போது இவர்கள் அவரை நியாயப்படுத்தினார் என்பதையும் மறந்துவிடவேண்டும். இன்று திமுகவை அதிமுக விமர்சிக்கிறது. ஆனால் ஆட்சியில் இருந்தபோது அதிமுக இதையே செய்தது. அன்று இன்றைய முதல்வர் கொந்தளித்து நியாயம் கேட்டார்.
கட்சியடிமைகளுக்கு மக்கள் நலன், நாட்டு நலன் முக்கியமே அல்ல. அவர்கள் கட்சிக்கு விசுவாசமானவர்கள், கட்சி மக்களுக்கு தீங்குசெய்தால் அவர்கள் கட்சியுடன் இணைந்து மக்களை அழிக்கவே முற்படுவார்கள். ஆகவேதான் கட்சியடிமைகள் மக்கள்விரோதிகள் என்று சொல்கிறேன். ஓர் எழுத்தாளன், சிந்தனையாளன் ஒருபோதும் எந்தக் கட்சிக்கும் முழுநேர விசுவாசியாக இருக்கலாகாது என்கிறேன்.
கட்சிவிசுவாசிகளின் சார்பு நிலைகள் ஒழுக்கரீதியாகக்கூட மிகமிக ஓரம்சார்ந்தவை. என் நண்பர் கோணங்கி மேல் அவருடைய முன்னாள் நண்பர்கள் இருவர் முகநூலில் ஒரு பாலியல்குற்றச்சாட்டைச் சொன்னார்கள். கோணங்கியை முகநூலில் வசைபாடித் தள்ளினர். அவருடைய நண்பர்கள்கூட வசைபாடினார்கள். நான் அவரை அறிவேன் என்பதனால் அவரை ஆதரித்தேன். என்னையும் வசைபாடினர். சில சிற்றிதழ்கள் எங்களை வசைபாட தனி இதழ்கூட வெளியிட்டனர்.
அண்மையில் இடதுசாரியினருக்கு அணுக்கமானவராக இருந்த முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி காலமானார். அவர் ஒரு சிந்தனையாளரோ, படிப்பாளியோகூட அல்ல, இடதுசாரிக் கட்சிக்கு விசுவாசமானவர், அவ்வளவுதான். அவர் சாவை இடதுசாரிகள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வசந்திதேவியின் மகன் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வசந்திதேவி பற்றிய மிகக்மிகக் கடுமையன ஒழுக்கக் குற்றச்சாட்டுகள் அதிலிருந்தன. அவர் உண்மையான வாசிப்போ, புரிதலோ கொண்டவர் அல்ல என்பதையும் அவர் மகன் எழுதினார். அவர் ஓர் அமெரிக்கக் குடிமகன். ஓர் அஞ்சலியில்கூட உண்மையைச் சொல்வது அவர்களின் மரபு. இங்கே அது பெரிய கொந்தளிப்பை உருவாக்கியிருக்கவேண்டும். ஆனால் ஒரேயொரு இடதுசாரிகூட அதில் எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. ஆழ்ந்த மௌனம்தான்.
அரசியல்சார்பு உருவாக்கும் மனநிலை இதுதான். அறநிலைபாடு இருக்காது. பொதுப்புத்திப் புரிதலும் இருக்காது. கட்சிநிலைபாடு மட்டுமே இருக்கும். ஒருவன் ஒரு கட்சிநிலைபாட்டை எடுத்தான் என்றால் தன் சுயசிந்தனையை அழித்துக்கொள்ளவேண்டும், தனக்காகச் சிந்திக்கும் பொறுப்பை கட்சிக்கு அளித்தாக வேண்டும்.அது சிந்தனை ரீதியான சாவு. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எந்தக் கட்சிக்கும் நான் ஆதரவாளன் அல்ல. நிரந்தரமாக எதையும் ஆதரிப்பவனும் அல்ல. ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அப்படி நிரந்தரமான கட்சிச் சார்பு இல்லாமல், பிரச்சினைகளின் அடிப்படையில் நிலைபாடு எடுக்கக்கூடியவர்களாக எஞ்சும்வரைத்தான் அங்கே உண்மையான ஜனநாயகம் திகமும். ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்சியரசியலில் நம்பிக்கை கொண்டவர்களை விட மிகுதியாக இல்லாமலாகும்போது ஜனநாயகம் அழியும்.
உலகத்தில் எங்கே மெய்யான ஜனநாயகம் உள்ளதோ அங்கெல்லாம் ஜனநாயக அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களே மிகுதி. ஏதேனும் தரப்பை மூர்க்கமாக எடுக்கும் கட்சியரசியல் நம்பிக்கைகொண்டவர்கள் பெருகும் நாடுகளில் மிக விரைவாக ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் வரும். ஏனென்றால் கட்சியரசியலாளர்கள் தங்கள் கட்சியோ அரசோ என்ன செய்தாலும் அதை ஆதரிப்பார்கள். அக்கட்சியை, அத்தலைவரை சர்வாதிகாரம் நோக்கி தள்ளுவார்கள். இதற்கும் உலக அளவில் பல உதாரணங்கள் உண்டு.
எனக்கு அரசியலுண்டு, அது கட்சி அரசியல் அல்ல. ஏனென்றால் அரசு மேலிருந்து கீழ்நோக்கி அதிகாரத்தைச் செலுத்துகிறது. அந்த கீழிறங்கும் அதிகாரம் வழியாக எந்த உண்மையான மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது என நான் நினைக்கிறேன். ஆகவே அரசைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட கட்சியரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை.
எந்தக் கட்சியானாலும் சரி, அது என்னென்ன கொள்கைகளை சொல்லிக்கொண்டாலும் சரி, அதிகாரத்தை நோக்கிச் செல்லுந்தோறும் பல சமரசங்களைச் செய்துகொண்டே இருக்கும். அதிகாரத்தை அடையும்போது சமூகத்திலுள்ள வெவ்வேறு அதிகாரச் சக்திகள் நடுவே ஒரு சமரசப்புள்ளியாகவே அது இருக்கும். இன்று அதானியை எதிர்க்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது அதானியுடன் சமரசம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்பதே யதார்த்தம். நேற்று அதிமுகவை எதிர்த்த திமுக இன்று அந்த அதிகார சக்திகளுடன் தான் கூட்டுவைத்துள்ளது.
அதேபோல ஆட்சிக்கு வந்து அரசாகச் செயல்படும்போது எந்தக் கட்சியும் அதிகாரத்தின் தரப்பாகவே இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளை அப்படித்தான் கையாளும். அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் துப்புரவுப்பணியாளர்களை இப்படித்தான் கையாளமுடியும்.
நான் நம்பும் அரசியலென்பது கீழ்மட்டத்தில் செயல்படும் அரசியல். மக்களின் கருத்தை மாற்றுவதற்கான அரசியல். நுண்ணலகு அரசியல் என்று அதைச் சொல்கிறேன். அதற்கு அதிகார நோக்கம் கிடையாது. ஆட்சியை பிடிக்க முயலவில்லை. ஆகவே சமரசம் செய்வதில்லை. தான் நம்பும் கருத்தை மக்களிடம் கொண்டுசென்றபடியே இருக்கிறது அது.
மக்களின் கருத்து மாறும்போது அது ஓர் மக்கள்சக்தியாக மாறி அரசாங்கத்தை கட்டுப்படுத்தும். அரசு மக்களுக்கு அவர்கள் கோருவதைச் செய்தே ஆகவேண்டும். கீழிருந்து மேலே செல்லும் மாற்றம் இது. இதையே நான் நம்புகிறேன். சென்ற நூறாண்டுகளில் இந்தியச் சமூகத்தில் நிகழ்ந்த எல்லா மாற்றங்களும் இப்படி நுண்ணலகு அரசியலால் உருவானவை மட்டும்தான்.
காந்தி முன்வைத்த அரசியல் இதுவே.இது விறுவிறுப்பானது அல்ல. இதில் வெறுப்பும் காழ்ப்பும் கொக்கரிப்பும் இல்லை. இது கண்ணுக்கே தெரியாதது. ஆனால் இதில் ஆன்மாவை அடகுவைக்கும் கீழ்மை இல்லை. நம்பி ஏமாறும் கசப்பும் இல்லை. துளியளவு பங்களிப்பாற்றினாலும் அந்த அளவுக்கு நிறைவு அமையும்.
ஆனால் கட்சியரசியலை சார்ந்து தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளும் பலவீனர்களும், மனச்சோர்வு நோயாளிகளும் இதில் செயல்பட முடியாது. இலட்சியவாத உறுதிகொண்ட, செயலாற்றும் விசைகொண்ட, ஆற்றல்மிக்கவர்களே இதை கடைப்பிடிக்கமுடியும்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
