இரா. முருகன்'s Blog, page 29
August 20, 2023
ஏமப் பெருந்துயில் நீங்கிய ஆல்ட் சி பிரபஞ்சத்து பிரதி நீலன் வைத்தியர்
நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 28 இல் இருந்து
பிரதி நீலன் வைத்தியர் இருக்கும் பேழையின் மேல்மூடி திறந்து நூறு தேள்க் கால்கள் உள்ளே நீட்டி பிரதி நீலன் சுவாசிக்கிறாரா என்று உறுதி செய்வதுபோல் அசைந்து பெருஞ் சத்தத்தோடு மூடி திரும்பக் கவிந்து ஒரு வினாடி அதிர்ந்து மேலே கூரையாக அமர்ந்தது.
அந்த ஒலி கேட்ட பிரதி நீலன் இதெல்லாம் உணரப்படுவது தன்னால் தானா அல்லது வேறு யார்க்கோ அனுபவமாகிப் பார்வை மூலமும், வாடை, ஒலி ரூபமாகவும் தனக்குக் கடத்தப்படுகிறதா என்று புரியாமல் குழம்பினார்.
அந்த பெரும் மண்டபத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டதோடு மறுபடி இருள் திட்டுத்திட்டாகக் கவிந்தது. பிரதி நீலன் வைத்தியர் காலை உயர்த்திப் பேழையின் கூரையைத் தொட முயன்றார்.
கால் நீண்டு போனாலும் இன்னும் ஒரு முழம் அதிகமானாலும் கூரை தொட்டுவிடும் தூரமில்லைதான் என்று புலப்பட்டது. அவர் கரங்கள் பக்கவாட்டில் தடவ, அங்கே குமிழ் ஒன்று வார்த்திருப்பதை உணர முடிந்தது.
அந்தக் குமிழைக் கைப்பற்றித் திருக, பேழையின் கூரை மெல்ல உயர்ந்ததைக் காண அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. குமிழியைத் திருகியபடி இருக்க கூரை முழுக்கத் திறந்து அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டார்.
பக்கத்துப் பேழைகளில் பெருந்துயிலில் ஆணும் பெண்ணுமாக எல்லா வயதினரும் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டார். அவர் பேழையின் ஓரமாக நடக்க நடக்க கூரை வளைந்து கொடுத்தது. அடுத்த சில நொடிகளில் பேழையின் வெளியே வந்துவிட்டார்.
பெருந்துயில். இந்தச் சொல் தான் கருவி. மூடிய மனத்தைச் செதுக்கித் திறந்திருக்கிறது.
இவர் ஒரு நீலன். பிரதி நீலன் என்று சொல்கிறார்கள் இவரை. இன்னொரு நீலன் – அசல் நீலன் என்று விளிக்கப்படுகிறவர் அவர். அசல் நீலன் காஸ்மாஸ் பிரபஞ்சத்தில் வசிக்கும் தூசிக்குத் தூசி. இவர், பிரதி நீலன் ஆல்ட் எஸ் பிரபஞ்ச துகளின் துகள்.
சில நாட்களோ, ஒளியாண்டுகளோ, மாதங்களோ முன்னால், இங்கே, காஸ்மாஸ் பிரபஞ்சத்தில், அசல் நீலன் தேள்களின் ஊர்வலத்தில் படுத்துறங்கியபடி வந்ததைக் கூட்டத்தின் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார் பிரதி நீலன்.
என்ன நடக்கிறது என்று பிரதி நீலனுக்குப் புரியும் முன்பு அவர் படுத்துறங்கியபடி, ஏமத்துயிலில் ஆழ்ந்து ஊர்வலத்தில் போகிறார். அசல் நீலன் ஊர்வலப் பாடையிலிருந்து வெளியே சாடி ஒரே வினாடியில் ஏமப் பெருந்துயில் மண்டபக் கோபுரத்தின் அருகே கொண்டு செலுத்தப்படுகிறார் என்பதைப் பார்த்தபடி பிரதி நீலன் துயிலப் போகிறார்.
ஆக அசல் நீலன் இந்தக் கோலாகலத்திலிருந்து வெளியேற, பிரதி நீலனாக ஆல்ட் எஸ் பிரபஞ்சம் போக, நகல் நீலன் இதோ காஸ்மோஸ் பிரபஞ்சத்தில் ஏமப் பெருந்துயில் கண் விழித்துப் பேழையிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.
கனஜோராகப் பசித்தது. ஒரு குன்று புளிக்குழம்பு பிசைந்த சோறுண்டு ஒரு பெரிய ஊருணியையே பருகித் தாகம் தீர்த்துக் கொள்ள நாவும் வயிறும் ஏக்கம் நிறைந்த ஆர்வம் தெரிவித்தன.
பெரிய சுவர்கள் வளைந்து வளைந்து திரும்பும் ஒழுங்கைகள் மூன்று ஒன்றன்பின் ஒன்றாக எதிர்ப்பட்டு வழிவிட்ட நீடுவழிகள் திறந்திருக்க, வேகம் கூட்டி நடந்தார் பிரதி நீலன்.
அரங்கும் மண்டபமுமாக இந்தப் பகுதிக் கட்டிட அமைப்பு அலங்கரிக்கப்பட்டுமிருக்கிறது ஏன் என்று யோசிக்க, இல்லை, இது அதே கட்டிடமில்லை, அடுத்த மாளிகையைப் பேழைகளில் உறங்குவார் மண்டபத்தோடு இணைக்கும் அமைப்பு எனப் புரிந்தது.
பெரிதிலும் பெரிதான மண்டபத்துக்கு நடுவே ஒரு கிழட்டுத் தேள், உயிர் தவிர மற்ற சகல சௌகர்யங்களும் வாய்க்கப் பெற்று பிண கம்பீரமாகக் கிடந்தது.
நான்கைந்து பேழைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்த காற்று இல்லாத, புழுக்கம் மிகுந்தும் தொடர்ந்து சில்லென்ற அமைப்புமாகத் தெரிய அந்தத் தேட்சவம், என்றால் தேள் சவம், என்றால் செத்த தேள் கிடக்கும் கோலம் கண்டு அருவருத்து மூலைக்கு நடந்தார் பிரதி நீலன்.
பெரிய மேசைமேல் பழங்களும், இனிப்புகளும் அடுக்கிப் பரத்தியிருந்தது கண்டு பரபரப்போடு குவளையுண்டா குவளையில் நீருண்டா எனக் கண்கள் அலைந்திட பெரும் ஜாடியில் நிறைத்திருந்தது திராட்சை ரசம் என்று அதிநின்று எழும்பிய வாசனை சொன்னது.
கூடவே மனதை ஈர்க்கும் அடர்புளிப்புச் சுவையுண்டு என யூகிக்க வைக்கும் வாடையும் ஜாடியிலிருந்து வந்தது. நாற்காலியைச் சத்தம் வராமல் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆகாரம் செய்ய உட்கார்ந்தார் பிரதி நீலன்.
கொக்கு மாதிரி கழுத்து நீண்டிருந்த வெள்ளைப் பீங்கான் ஜாடியைச் சற்றே சாய்த்து கோப்பையில் திராட்சைச் சாற்றை வார்த்துவிட்டு, அடுமனையில் பாகம் செய்த மெல்லிய சிறு சச்சதுரப் படிவங்களான யவனர் உணவைப் பக்கத்தில் இருந்த மூடி போட்ட பீங்கான் பாத்திரத்தில் இருந்து எடுத்து அருகில் வைத்த தட்டில் இட்டார்.
அடுத்து பழக்கூழில் சீனிச் சக்கரை குழைத்து வண்ணமிட்டுக் காய்ச்சிய இனிய பதார்த்தத்தை விழுதாகத் தட்டில் ஓரமாக இட்டார். உண்ணத் தொடங்கினார்.
பழக் கூழைச் சற்று இங்கே நகர்த்துங்கள்.
கரமுரவென்று மனிதம் கலக்காத ஒரு குரல் அருகில் கேட்க, கை நடுங்க தட்டை ஏறக்குறையத் தவறவிட்டார் பிரதி நீலன் வைத்தியர்.
August 18, 2023
Shape Shifter enters the scene – Novel Thinai alladhu Sanjeevni
from chapter 27
மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது.
அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம்.
குயிலியின் நாசியில் பலமாக அறைவதாக வண்ணத்தின் நெடி இருந்தது. வானம்பாடி பேப்பர் நாப்கின்னை முகத்தைச் சுற்றி வைத்து செலபோன் டேப் வைத்து ஒட்டியிருந்தாள்.
குழலன் உடல் குயிலியின் கையைப் பிடித்து அவள் உள்ளங்கையில் தன் விரல் கொண்டு எழுத, தனியாகப் பறந்த அவன் தலை ஜன்னலுக்கு வெளியே அசைவு இருக்கிறதா எனக் கண்காணித்தபடி நிலையாக மிதந்தது.
மூன்று பேரும் மனதில் பேசிக் கொண்டிருந்தார்கள். அது பின்வருமாறு
– பெருந்தேளரின் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் சஞ்சீவினியையும் நீலனையும் கோகர்மலைப் பிரதேசத்தில் ஜாக்கிரதையாக நிலைநிறுத்தியது, அதன் மூலம் பெருந்தேளரசுக்கு குடிமக்களிடையே ஆதரவு அதிகப்படுத்தத்தான்.
இந்தச் செயலால் அவருக்கு ஏற்கனவே இருந்த ஆதரவு அதிகப்படவில்லை என்று குழலன் கணித்திருந்தான். சிறு பறவைகளாகச் சிறிது நேரம் வடிவெடுக்க முடியும் குழலனுக்கு. ஷேப் ஷிப்டிங் என்ற உருமாற்றமடையும் ஆற்றல் இயல்பிலேயே அவனுக்கு உண்டு. நிரந்தரமாக இன்னொரு தேளாக அல்லது முழு மானுடனாக உருமாற்ற முடியாதே தவிர வேறே எந்த ஜீவராசியாகவும், கொம்பன் ஆனையாகக் கூட அவன் உருவம் மாறி பத்து நிமிட நேரம் அப்படியே செயல்படுவான்.
அதே போல் ஒரு குழலன் மாறி ஒரு குருவி அல்லது ஒரு சிலந்தி வரும் என்றில்லை. ஒன்று பலவாக ஒரு குழலன் அதிகபட்சம் எட்டு அணில்களாக, எட்டு கொக்குகளாக உருமாறித் திரும்ப குழலனாக முடியும். ஆணாக மாறவேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. பெண்பாலாக, நடுப் பாலாகவும் மாற வல்லமை உடையவன் அவன்.
August 15, 2023
மிளகு பெருநாவலில் இருந்து ஒரு பயணம்
கொச்சி நெடும்பாஸ்ஸேரி விமான நிலையம் நீங்கி மங்களூர் செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரமான காலை ஆறு மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. நாலு மணி நேரம் எடுக்கும் நீண்ட பயணம் இது.
விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ அந்தச் சிறு விமானத்திலும் வெற்று இருக்கைகள் நிறைய இருந்தன.
ஜெயம்மா மங்களூருக்கு வரச்சொல்லிக் கையோடு அழைத்துப் போகும் வசந்தியும் சங்கரனும் தவிர தெரிசாவும் அவர்களோடு இருந்தாள். தெரிசாவும் கூட இருப்பது சங்கரனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அனுகூலமாக இருக்கும் என்று ஜெயம்மா கருதியது தவிர இன்னும் ஒரு திடமான காரணமும் இருந்தது.
இத்தனை வருடம் மேற்குக் கடற்கரையில் ஆலப்புழை – அம்பலப்புழையில் இருந்தாலும் தெரிசா மங்கலாபுரம் என்ற மங்களூர் போனதே இல்லை என்பது அது.
ஜெயம்மாவிடம் தெரிசா அவள் பெயருக்கு முன்னொட்டாக வரும் பிடார் என்ற பிதார் பற்றி விசாரித்தபோது பலபேர் அதை பிடாரி என்று சொல்கிறார்கள் என்று சந்தோஷத்தோடு குறிப்பிட்டாள். பிறகு, “கர்னாடகத்தின் மலைப் பிரதேசமாக மகாராஷ்டிரத்துக்கும் தெலுங்கானாவுக்கும் அருகில் இருக்கும் எல்லைப்புற மாவட்டத் தலைநகர்” என்றாள் ஜெயம்மா.
வசந்தி கையை இறுக்கமாகப் பிடித்தபடி சங்கரன் இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ள முடியாது என்று குழந்தை மாதிரி பிடிவாதம். விமானத்துக்குள் ஓட வேண்டியிருந்தது என்றால் இப்படிக் கட்டிப் போட்டபின் செய்ய முடியாது என்பது அவர் வாதம்.
‘உயிர் முக்கியமில்லியா’ என்று தெரிசாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் விசாரிப்பது போல் கேட்டபோது அவர் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும், எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தார் என்று தோன்றியது.
அவ்வப்போது இப்படி தன்னை இழந்து விடுகிறார் என்று வசந்தி தெரிசாவிடமும் ஜெயம்மாளிடமும் சொன்னாள்.
“மூச்சா வந்தா வாயைத் திறந்து சொல்லுங்கோ. இப்போ போய்ட்டு வந்துடறேளா?”
“மாட்டேன், வரலே” என்று சீட்டில் உட்கார்ந்து முன் சீட் முதுகில் செருகி இருந்த நேற்றைய பத்திரிகையைப் பிரித்தார் சங்கரன். “ஜிலேபி ஜிலேபியா போட்டிருக்கு” என்று அந்த மலையாளப் பத்திரிகையைத் திருப்பி வைத்தார் உடனே. தெரிசாவும் வசந்தியும் சிரிக்க, அட என் சமத்துக் கொடமே என்றாள் ஜெயம்மா.
“ஜெயம்மா, என் முதல் ப்ளேன் பிரயாணத்துக்கு டெல்லி சப்தர்ஜங் ஏர்போர்டுலே நீங்க தான் கொண்டு வந்து விட்டுட்டுப் போனேள். ஓர்மையுண்டோ?” என்று விசாரித்தாள் வசந்தி.
”ஓ, நன்னாவே இருக்கு. நேற்றைக்கு, கிட்டத்தட்ட முப்பத்தைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அன்னிக்கு உன் கூடவும் சங்கரன் கூடவும் கார்லே சப்தர்ஜங்குக்கு லிஃப்ட் கேட்டு சவாரி செஞ்ச ஒருத்தரை பார்த்தேன். திலீப் ராவ்ஜியோட நூற்றுப்பத்து வயசு அப்பா” என்றாள் ஜெயம்மா.
”ஆமா, நானும் அதேபடி வருஷம் முப்பத்தஞ்சு போய்த்தான் அவரை நேற்றைக்கு பிஷாரடி வைத்தியர் வீட்டிலே வச்சுப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு அவரை அங்கே பார்த்ததுமே யோசிச்சேன். பிடி கிட்டலே. அவர் கிட்டேயே கேட்டேன், எங்கேயோ பார்த்திருக்கோம் மாமான்னு.
டக்குனு சொல்லிட்டார். ஆமா, எங்க கூட ப்ளேன்லே வந்துட்டு நாக்பூர்லே இறங்கிக் காணாமல் போய்ட்டார் ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள் முந்தி” என்றாள் வசந்தி. வெகு சகஜமாக, முந்தாநாள் நடந்தமாதிரி சொன்னாள் அவள்.
”என்ன ஆச்சுன்னா, அவரை சுட்டுக் கொல்றதுக்கு கூட்டிப் போறபோது மூத்திரம் போய்” என்று ஆரம்பித்த சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி.
“கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி.
இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள்.
“தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு பழக்கம் இருக்கா?” வசந்தி கேட்டாள். ”தெரிஞ்சுக்கிட்டா போச்சு” என்று வசந்தி சங்கரனுக்கு டயாபர் போட உதவி செய்தாள் அவள். ”கூல், இனி நான் பார்த்துக்கறேன்” என்றாள்.
இரண்டு அறுபது வயசுக்காரிகள் அதே வயசு வரம்பில் ஒரு ஆணுக்கு டாய்லெட் போக இப்படி விழுந்து விழுந்து உதவி செய்வதை ஏர் ஹோஸ்டஸ்களும் ப்ளைட் பர்ஸர்களும் விநோதமாகப் பார்க்க, அவர்களிடம் சுருக்கமாக முன்கதை சொன்னாள் தெரிசா. அதற்கப்புறம் அவர்கள் பார்வையே மாறிப் போனது.
மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.
August 10, 2023
My speech at UNMESHA 2023
My two penny worth of thoughts shared in Sahitya Academy curated and conducted UNMESha 2023 international literary festival in Bhopal 3rd August to 6th August.
The topic was fantasy and science fiction . I was able to cover fantasy..
I speak from 35:00
July 29, 2023
நான் எடுத்த படம் பற்றி ராயர் காப்பி கிளப் நூலில் இருந்து
2003-இல் எழுதியது.
நான் எடுத்த ஆணவப் படம்
ஆவணப் படங்கள் எடுப்பது பற்றிப் போன வாரம் இங்கே எழுதியதைப் படித்த ஓர் அன்பர் சொன்னார் – ‘காம்கார்டரில் படம் எடுத்துக் கம்ப்யூட்டரில் மென்பொருள் கொண்டு எடிட் செய்து ஆவணப் படம் எடுக்கலாம்’.
கம்ப்யூட்டர் இருக்கு, மென்பொருள் இருக்கு. நாமும் ஒரு ஆவணப் படம் தயாரிக்கலாமே என்று யோசனை சில மாதங்கள் முன்னால் வந்தது.
அறுநூறு பவுண்ட் கொடுத்து புஷ்டியான சோனி டிஆர்வி 14 ஈ காம்கார்டர் வாங்கிக் கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஹாலிபாக்ஸ், ப்ராட்போர்ட், ஷெஃபீல்ட் போன்ற திருத்தலங்களிலும் நீண்ட விடுமுறையின் போது லண்டன் மாநகரத்தில் கென்சிங்க்டன், பிக்கடலி வளைவு, டிரபால்கர் சதுக்கம், ஈஸ்ட் ஹாம், வால்த்தம்ஸ்டோ, டவர் பிரிட்ஜ், கிளஸ்டர் ரோடு என்று சந்து பொந்து விடாமலும் அலைந்து நாலைந்து குட்டியூண்டு வீடியோ கேசட்டுகளில் எல்லாமும், எல்லாரும் அடக்கி எடுத்து வந்தேன்.
“ஹேண்டிகேம்லே எப்படிப் படம் எடுக்கறது?”
“ரொம்ப எளிசு..இந்தப் பாரு .. இப்படி”
வீட்டில் மனைவி, மக்களுக்கு விரிவுரை எடுக்க ஆயத்தமாக உட்கார ஐந்தே நிமிடத்தில் கேம்கார்டர் என் மகன் கையில்.
என் ஆணவமான ஆவணப் படக் கனவுகளுக்கு என்ன ஆச்சு?
இதுதான் –
டிரபால்கர் சதுக்கத்தில் எலிசபெத் அரசியாரின் வீரர்கள் அணிவகுத்துக் கெத்தாக நடந்து போகிறபோது சின்ன மாமனார் எங்கள் வீட்டுக் கூடத்தில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். லண்டன் பத்மநாப ஐயர் பிளைஸ்டோவில் அவர் இல்லத்தில் எனக்கும் அம்ஷன் குமாருக்கும் மஹாகவியின் ‘சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்’ பற்றிச் சுவையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஹைதராபாத் பேகம் பஜாரில் மூலக் கச்ச வேட்டி கட்டிய ஆந்திரர்கள் உயிரைத் திரணமாக மதித்து, ஆட்டோ, ஸ்கூட்டர் களேபரங்களுக்கு இடையே வாயில் புகையும் சிகரெட்டோடு வீதியைக் கடந்து போகிறார்கள். அம்ஷன் குமாரின் ‘பாதல் சர்க்கார்’ ஆவணப் படத்தைப் பற்றி யமுனா ராஜேந்திரனும் ஈழ நாடக ஆசிரியர் பாலேந்திராவும் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ராத்திரிப் பத்து மணி மாம்பலம் வெங்கட்நாராயணா தெருவில் ஸ¤ம் ஷாட்டாக, ராத்திரி வெளிச்சத்தில் ஓனிக்ஸ் ஊழியர்கள் துப்புரவு செய்கிறார்கள். கிரீன்பார்க் பாதாள ரயில் நிலையத்தில் எக்கச் சக்கக் கூட்டத்தோடு வண்டி நுழைய, நண்பர்கள் பா.ராகவனும், இகாரஸ் பிரகாஷும் நாற்காலியில் உட்கார்ந்து புன்னகை புரிகிறார்கள்.
கொஞ்சம் பொறுங்கள். இன்னும் இரண்டு காசெட் பாக்கி இருக்கிறது. நானும், வீட்டில் மற்றவர்களும் அவற்றையும் ஒரு வழி செய்த அப்புறம் சாவகாசமாக உட்கார்ந்து போஸ்ட் மார்டனிச ஆவணப்படம் தயாரித்து விடுகிறேன்.
July 27, 2023
’பேனா’ அப்புசாமி
‘பேனா’ அப்புசாமி – பெ.நா.அப்புசுவாமி என்ற அறிவியல் எழுத்தாளர்
தலைப்பாகையும், பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி, பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில் , லா பாயிண்ட்தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர் சட்டம்படித்த பெ.நா.அப்புசுவாமி.
பாக்கியம் ராமஸ்வாமி சாஸ்வதமாக்கிய அப்புசாமித் தாத்தாவுக்கும் இந்த அறிவியல் தாத்தாவுக்கும் வயதும் துறுதுறுப்பும் தான் ஒற்றுமை.
1917 ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்தகட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை லகுவாகத் தாண்டும். (தள்ளாத பிராயத்தில் தான் எழுதிய படைப்பைப் பத்திரிகைக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகத்துக்கு நடந்தபோது தான் இந்த ஜாம்பவான் காலமானார் என்று எங்கேயோ படித்த நினைவு.)
படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமைதரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல்எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
1936ல் காற்றடைத்த ராட்சச பலூன்களில் நடத்திய விண்வெளியாத்திரை பற்றி எழுதியவர், துணைக்கோள் (ஜியோ ஸ்டேஷனரிசாட்டலைட்) பற்றி 1965ல் அதே உற்சாகத்தோடு எழுதுகிறார். ‘பண்டித மோதிலால் நேருவைப் பறி கொடுத்தோமே’ என்று கிராமபோனில் கேட்டு இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நெக்குருகிக் கொண்டிருந்த போது, அந்தப் பெட்டி எப்படிப் பாடுகிறது என்று படம் வரைந்து எளிமையாக விளக்கும் அப்புசாமி, நவீன அறிவியல் கோட்பாடான மேதமை அமைப்பு (எக்ஸ்பெர்ட் சிஸ்டம்) அடிப்படையில் இயங்கும் மின்னனு மொழிபெயர்ப்பு பற்றி 1960களின் இறுதியில் தமிழில் முதலாவதாக எழுதுகிறார்.
அது மட்டுமில்லை, “நாம் வாழும் யுகம் கம்ப்யூட்டர் யுகமாகி வருகிறது” என்று அவர் கணினிப் புரட்சிக்குஇருபது வருடம் முந்திய 1969 லேயே அறிவியல் ஆருடம் சொல்லிவிடுகிறார்.
கமிட்டி போட்டுக் கலந்தாலோசித்து நத்தை வேகத்தில் ன்று தமிழில்கலைச் சொல்லாக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புசுவாமி அலட்டிக்கொள்ளாமல் ‘பொங்கியெழுகேணி’ (artesian well), நுண்துகள்கொள்கை (corpuscullar theory), அறிவுக்குறி எண்(intelligent quotient) என்று போகிற போக்கில் நல்ல தமிழ்த் தொடர்களை வீசிப் பிரமிக்க வைக்கிறார்.
“வயிற்றோட்டமும் பலவீனமும் இருப்பின் அரை அல்லது ஓர் ஆழாக்கு சாராயம் தரலாம்” என்று கள்ளுக்கடை மறியல் காலத்தில் இவர் எழுதிய கட்டுரையும் சிறிய தரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.இந்த வைத்தியம் மனிதனுக்கு இல்லை, நோய் கண்ட பசுமாட்டுக்கு.
புத்தகத்தை நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கும் உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் பாராட்டுக்குரியது.
எழுதிய ஆசிரியரின் பெயரை ஓரத்தில் போட்டுவிட்டு, தொகுப்பாசிரியரின் பெயரை அட்டையில் நடுநாயகமாக அச்சிடுவதைத் தற்போது இலக்கியத்திலிருந்து அறிவியல்நூல் பதிப்பு வரை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நூலும் இதற்கு விதிவிலக்கில்லை.
————————————————–
புத்தகம் பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்(தொகுதி – 2)
வெளியீடு – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை
கட்டுரை – இரா.முருகன் 2001
பிரசுரம் இந்தியா டுடே
July 25, 2023
நடந்தாய் வாழி ஷராவதி
மிளகு பெருநாவலில் இருந்து
அமைதியான, பரந்த வெள்ளப்பெருக்காக நிலம் தொட்டு, பிரம்மாண்டமான ஜோகு அருவியாகப் பொங்கி, உயரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை அணைத்துக் கீழே ஆவேசமாகப் பொழிந்து, குறுகிய நதிதீரங்களுக்கு இடையே சுழித்துச் சுருண்டு, உயர்ந்து, அலையடித்துக் கடந்து சென்று, கடல் தீரத்தில் நுழைந்து, சதா இரைந்து பாடும் அலைகளோடு கைகோர்த்து விளையாடி, கொஞ்சம் கொஞ்சமாக சமுத்திரத்தின் மகா இயக்கத்தில் கலந்து தனதான அடையாளம் இழந்து, ஆற்று மணலின் மெல்லிய இனிப்புச் சுவையும், தண்ணீர்த் தாவரங்கள் கொண்டுதரும் நீர்ச் சுவையும், நதிவாசனையும் துறந்து, உப்புச் சுவை மீதுர கடல்வாடை கொண்டு, ஷராவதி மறைந்து போவாள்.
நதி கடலோடு கலக்கும் கழிமுகத்துக்கு முன்னால் மடைமாற்றி வேகத்தைக் கட்டுப்படுத்தி, நீராடவும், படிகளில் அமர்ந்து கால்தொட ஆறு நனைத்துப் போகவும் நேரம் செலவிட, தண்ணீர்த்துறைகள் சந்தடி மிகுந்து பரபரப்பாக இயங்கும் நிலாநாள் காலை.
இருபத்தைந்து வருடமாக காசிரை இந்த நதி நீராடலுக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் அவளோடு பாடிக் கொண்டும், சிறுபறை கொட்டிக் கொண்டும், கலகலவென்று சிரித்துக் கொண்டும் வருகிற கன்யகைகளில் சிலர் கல்யாணமாகிக் காணாமல் போகிறார்கள். புதிதாக சின்னப்பெண்கள் சிலர் சேர்ந்து கொள்கிறார்கள். அவளை வாடி போடி என்று உரிமையோடு அழைத்தபடி கூட வந்த பெண்கள், வயதுக்கு முன் வந்து சேரும் இளம் முதுமையோடு, அவர்களின் பனிரெண்டு வயது மகளை நதிநீராட காசிரையோடு அனுப்பிவைக்கிறார்கள்.
‘அடியே காசிரை’ விளிகள் ‘அக்கா காசிரை’ ஆயின. அவை ’அத்தை காசிரை’யாகி, அதுவும் போய் ’காசிரை அம்மாளாக’, ‘காசிரை முத்தச்சி’யாகத் தேய இன்னும் நிறைய வருடங்கள் மீதி இல்லை என்பதை காசிரை அறிவாள்.
கூட வந்தவர்கள் தொலைந்து போன அந்த சோகத்தை நினைத்தால் எதற்கு நதிநீராட்டு நாளை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களுக்காக இல்லை, காசிரை தனக்காகப் போகிறாள். இனியும் அவளுக்கு கல்யாணம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அவள் அதற்காக நிலாத் தேவனை வேண்டுவதும் இல்லை.
July 20, 2023
I am invited to participate in UNMESHA 2023
UNMESHA 2023 is the annual international literary festival organized by the Ministry of Culture and Sahitya Akademy Aug 3 – Aug 6 2023 in Bhopal.
More than 550 writers and artists from various countries will be participating in the festival, taking part in panel discussions, presenting papers, book readings and cultural performances.
I’m happy to share with friends that I have been invited by Sahitya Akademy to participate in this prestigious meet and participate in a panel discussion on Fantasy and Science Fiction, among other participatory activities.
Anxious to know who are all the other Tamil writers invited and are participating.
July 18, 2023
க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ
என் ப்ளாக் வேம்பநாட்டுக் காயலில் எழுதியது –
———————————————————————–
TUESDAY, JULY 26, 2005
க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ
—————————————-
நேற்று கேரளத் தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் (அதாவது அனந்தையில்) கேரளத்தை ஆளும் ஐக்கிய ஜனாதிபத்ய முன்னணியின் கூட்டத்திற்கு முதல்வர் உம்மன் சாண்டி கொஞ்சம் தாமதமாக வந்தார். அதாவது, மதியச் சாப்பாடு எல்லாம் முடிந்தபிறகு.
“சாண்டி வந்திருக்கேன்”
பசிக் குரல்.
“ஐயோ சேட்டா, உச்சய்க்கு ஊணு எல்லாம் தீர்ந்து போச்சே”
“சரி, சாப்பாட்டுப் பாத்திரம் எங்கே? அதில் ஏதாவது மிச்ச மீதி இருந்தால் வழிச்சு எடுத்து வந்து போடுங்கப்பா”
போட்டார்கள்.
படு காஷுவலாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நின்றபடியே அந்த மிச்சம் மீதியை உண்டார் முதல்வர்.
அவ்வளவு எளிய மனிதர் சாண்டி சார்.
இந்தச் செய்திக்கு இன்றைய மாத்ருபூமி கொடுத்திருக்கும் பழமொழித் தலைப்பு – “க்ஷேத்ரபாலனு பாத்ரத்தோடெ” (கோவில் காவல்காரனுக்குச் சோற்றுச் சட்டியைச் சுரண்டித்தான் சாப்பாடு).
புகைப்படம் – நன்றி மாத்ருபூமி
RIP Umman Chandy sir
July 16, 2023
கோடையில் நினைவு வரும் மார்கழி
50 வருடம் முந்திய ஒரு மார்கழி இப்போது தகிக்கும் கோடையின் போது
நெம்பர் 40, ரெட்டைத் தெரு நாவலில் இருந்து
—————————————————————————————
குளித்துப் பசியாறி, மார்கழி மாத விசேஷப் பொருட்களான சிவன்கோவில் வெண்பொங்கல் பிரசாதமும், பெருமாள் கோவில் புளியோதரை பிரசாதமும் ஒரு பிடி பிடித்துவிட்டு நாங்கள் கூடும் இடம் முருகேசன் படக்கடை. அழகான காலண்டராக சாமி படம் கைக்குக் கிடைத்தால் தேதி பார்க்க அதை மாட்டி வைப்பது இரண்டாம் பட்சமாக இருந்த காலம் அது. அந்த வண்ணப் படங்களை மரச் சட்டத்துக்கு நடுவில் வைத்து, மேலே கண்ணாடி பொருத்தி வீபுதியும் குங்குமமுமாக வீட்டு பூஜை அறையில் குடியேற வைப்பது தலை போகிற காரியமாகக் கருதப்பட்டது. சைக்கிள்கடை ரங்கராஜு வீட்டில் எம்.ஜி.ஆர் படங்களும் இப்படி ஆராதிக்கப்பட்டன. காலண்டர்களை கண்ணாடிச் சட்டம் பொருத்தி புனிதமாக்கும் வேலை முருகேசன் படக்கடையில் நடக்கும். புதுக் காலண்டர் கிடைக்கும் ஜனவரியில் முருகேசன் கடைக்கு ஊரின் எல்லா திக்குகளில் இருந்தும் பக்திப் படையெடுப்புகள் நிகழ்வது வாடிக்கை. ஊதுபத்தி மணக்க கடைக்கே தனியான புனிதம் வந்திருக்கும் அப்போது. .
மார்கழியில் முருகேசன் கடையில் பொங்கல் வாழ்த்து விற்பனையும் மும்முரமாக இருக்கும். நடிகர் முத்துராமன் சாயலில் தலையில் முண்டாசோடு ஏர் உழவன், தலையில் பானையோடும் முகத்தில் சரோஜாதேவி சாயலோடும் நடக்கிற அவன் மனைவி, ஓரமாகச் சாய்ந்து சரிந்து பொங்கிக் கொண்டிருக்கும் பொங்கல் பானை, பின்னால் உழவு மாடுகள், கரும்பு என்று பட்டியல் வைத்துக்கொண்டு வரைந்த வார்னிஷ் வாடைப் படங்கள் எல்லாப் பொங்கல் வாழ்த்திலும் இடம் பெற்றிருக்கும். வாழ்த்தைப் பிரித்தால், வீர வள்ளுவன் சாரோ, கார்மேகம் வாத்தியாரோ எழுதிக் கொடுத்த மாதிரி கவிதையும் இல்லாமல் உரைநடையும் இல்லாமல் கலவையான மொழியில் உலகத்தில் இருக்கப்பட்ட சகலருக்கும் பொங்கல் பொங்கட்டும் என்று எட்டு வரியில் வாழ்த்தி அச்சடித்திருப்பது கண்ணில் படும். இதெல்லாம் பார்க்கவும் படிக்கவும் மூக்குக்குப் பக்கத்தில் பிடித்து வாசனை முகரவும் சவுகரியமாக இருக்குமே தவிர காசு கொடுத்து வாங்கவோ யாருக்காவது அனுப்பவோ தேவையில்லாத சமாச்சாரங்கள் என்று ரெட்டைத்தெருவில் பொதுக் கருத்து நிலவியது. ஆனாலும் அப்பாவுக்கு வருடம் தவறாமல் போஸ்ட்மேன் சின்னகிருஷ்ணன் பொங்கல் நேரத்தில் ஒரு வாழ்த்தை டெலிவரி செய்வார். நெற்குப்பை என்ற ஊரிலிருந்து அவருடைய சிநேகிதர் அனுப்பிய அந்த வாழ்த்தில் எல்லா வருடமும் ஏரிக் கரையில் நடந்து போகிற பசுமாடு தான் கண்ணில் படும். நெற்குப்பையில் அந்த ஒரு பொங்கல் வாழ்த்து மட்டும் எல்லா வருடமும் விலைக்குக் கிடைத்திருக்கலாம்.
முருகேசன் கடையில் பொங்கல் வாழ்த்துகளை ஒரு தடவை பார்வையிட்டானதும், அடுத்த வேலை. இது கிரிதரனுக்கு ஒத்தாசையாகக் கோவில் கட்டுவது.செங்கல்லையும் கருங்கல்லையும் அடுக்கி சிமிட்டி குழைத்துப் பூசி தாடிக் கொத்தனார் செய்கிற கட்டிட வேலை இல்லை. கிரிதரன் நேருபஜார் கோடியில் பெரிய ஆஸ்பத்திரியில் ஒரு கம்பவுண்டரைப் பிடித்து அவர் மூலம் காலியான கண்ணாடி சிரிஞ்சுகளை சப்ஜாடாக வாங்கி வந்திருந்தான். நானூறு ஐநூறு ஊசி மருந்துக் குப்பிகள் அவை. எல்லாவற்றையும் வென்னீரில் சுத்தமாகக் கழுவி உலர வைத்து கிரிதரன் சொன்ன வரிசையில் அடுக்கி கோவில் அமைக்க வேண்டும். கோகலே ஹால் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் கற்றுக்கொடுத்த வித்தை அது. ரொம்பவே பிகு பண்ணிக் கொண்டு எங்களையும் வேலைக்கு எடுபிடிகளாகச் சேர்த்துக் கொண்டான் அவன். ‘பொங்கலுக்கு முன்னாடி கோவில் ரெடியாகிடணும்டா’. அவன் கட்டளையை சிரமேற்கொண்டு எல்லோரும் செயல்பட்டோம். அதன் பகுதியாகத்தான் முருகேசன் கடைக்கு இப்போது வந்தது.
கண்ணாடிக் குப்பிகளை வரிசையாக ஏழெட்டு தளங்களில் அடுக்கத் தோதாக கண்ணாடிப் பட்டைகளை முருகேசன் அடி ஸ்கேலால அளந்தார். அப்புறம் ஒரு கூர்மையான கத்தியை எடுத்தார். ‘இது முனையிலே என்ன இருக்கு தெரியுமா? அசல் வைரம். அதுதான் கண்ணாடியை அறுக்கும்’. அவர் காட்டிய அந்த வைரக்கத்தியை மரியாதையோடு பார்த்தோம். மொத்தம் பனிரெண்டூ தடவை கத்தி ஏறி இறங்க, கண்ணாடிப் பலகைகள் எங்கள் கைகளை நிறைத்தன.
கண்ணாடி விழுந்துவிடாமல் பத்திரமாக ஏந்திப் பிடித்தபடி நாங்கள் நுழைந்த அடுத்த இடம் சந்திரகாந்தன் வளையல்கடை. சாயந்திரங்களிலும் ராத்திரியிலும் இங்கே நுழைய முடியாது. பெண்கள் கூட்டம் ஒரு செண்டிமீட்டர் விடாமல் ஆக்கிரமித்துக் கொண்டு வளையல் போடக் கையை நீட்டியபடி காத்திருக்கும். அதுவும் பொங்கலுக்குப் புது கண்ணாடி வளையல் வாங்க ஊர்ப் பெண்கள் திரண்டு வரும் நேரம் இது. வளைகாப்பு ஆன கிருபாகரனின் பெரிய அக்கா மாதிரி இரண்டு கைமுழுக்க கலர் கலராகக் கண்ணாடி வளையல்கள் கலகலக்க செண்பக லட்சுமி டைப் இன்ஸ்டிட்யூட்டுக்கு தட்டச்சு பழகப் போனதை நேற்றைக்குப் பார்த்தோம்.
சந்திரகாந்தன் கடையில் எங்களுக்கு வளையல் தேவையில்லை. வஜ்ரப் பசை தான் வேண்டியிருந்தது. காலி ஊசி மருந்துக் குப்பியின் அடியில் அதைத் தடவினால்தான் அது செங்குத்தாக கண்ணாடிச் சட்டத்தில் ஒட்டிக் கொண்டு நிற்கும். இப்படி நாலு வரிசை சிரிஞ்ச் தூண்களை நிறுத்தி மேலே அடுத்த கண்ணாடிச் சட்டத்தை வைத்தால் கோபுரம் ஒரு நிலை பூர்த்தியாகும். மொத்தம் ஏழு நிலை எழுப்ப வேண்டும்.
கோபுர நிர்மாணம் மும்முரமாக நடந்தபோது நல்லையா வரவு நிகழ்ந்தது. விகடன் விநியோகமாகும் நாள் அது. மாவட்டச் சிறப்பிதழ்களை ஆனந்த விகடன் வெளியிடத் தொடங்கிய காலம். தஞ்சை மாவட்டச் சிறப்பிதழாக, அமுல் பேபி மாதிரி கொழுகொழுவென்று தரையில் கிடந்த ஆனந்த விகடனை ஆசையோடு பார்த்தோம்.
ஜாக்கிரதையாகக் கை கழுவி, துடைத்து வந்து விகடனைப் பிரிக்க தஞ்சை மாவட்டத்தின் பயணம் போய் ராத்திரி நேரத்தில் ஒரு கிராமத்தில் இறங்கி வழிகேட்டது பற்றிய கட்டுரை இன்னும் நினைவில் இருக்கிறது. ‘அச்சு வெல்லம்’ என்று சொன்னால் கோபப்படும் ஒரு பெரியவரை அவருடைய மனைவி இறந்ததைச் சொல்லிக் கூப்பிட்டு வருவதாக சிறப்புச் சிறுகதை – தி.ஜானகிராமன் தேர்ந்தெடுத்தது என்று போட்டிருந்தது. அப்புறம், எம்.ஜி.ஆர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ வாழ்க்கை வரலாற்றுத் தொடர். அது கூட அந்த இதழில் தான் தொடங்கியதாக நினைவு.
இரா. முருகன்'s Blog
- இரா. முருகன்'s profile
- 25 followers

